எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

யாரோ அவன்?? யாரோ இவள்?? - கதை திரி

Lufa Novels

Moderator

யாரோ அவன்? யாரோ இவள்?

அத்தியாயம் 1


xMZSOFHuZR7ei71cpt4DK1GpiXj-oupmDaYoNhgctpn5XOGWUPVi7hj6JPaASf07Ay4Cizc3B3VorDBm-N-MkH6K3lI62kU7Buzk27AT6AK34dcueNeVFhXuRq5sJEhsQLkIH3M_lXqLufBKHzIX_kAY_3f-jaSB1LKeY8llOlHKjN1IKY20NN6Zm9wn0w




கண்ணும் கொளச் சேறி நெஞ்சே இவை என்னைத்
தின்னும் அவர்க் காணல் உற்று

நெஞ்சே! தலைவனிடம் நீயே எப்பொழுதும் செல்கின்றாய். எம்கண்களையும் அழைத்துக் கொண்டு செல். ஏன் என்றால், இவை, அவரைக் காண வேண்டும் என்ற பெரும் விருப்பத்தால், என்னை மிகவும் துன்புறுத்தும் என்று தன் நெஞ்சிடம் வேண்டுகிறாள் தலைவி.

மலைகளின் அரசியென அழைக்கப்படும் ஊட்டி என்னும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அழகிய ஊர் கோத்தகிரி. ஊட்டியை விடவும் மிக இரம்மியமான ஊர். புலர்ந்தும் புலராத அதிகாலை பொழுது பச்சை பட்டாடை அணிந்தது போல மலைகள், மலைகளைத் தொட்டு தொட்டுக் கொஞ்சிச் செல்லும் வெண்பஞ்சு மேகங்கள், பூத்துக்குலுங்கும் பூக்கள் தேனீயை ஈற்க தன் நறுமணத்தை பறப்ப, தேனை சேகரிக்கும் தேனீக்கள் இன்னிசை பாட, அதற்குப் போட்டியாகக் குயில்கள் கூவ, அவ்வப்போது இயற்கையே வெட்கப்பட்டு மூடுபனி எனும் போர்வை கொண்டு தன் அழகை மறைத்து, குளிர்க்காற்றை கொண்டு உடலில் ஊசியாய் நுழைந்து சிலிர்க்க வைத்துக் கொண்டிருந்தது.

இதை அனைத்தையும் தன் அறையில் உள்ள பால்கனியில் நின்று என்றும் போல்
இன்றும் இரசித்துக் கொண்டிருந்தவளின் கண்களில் விழுந்தது அந்தக் காட்சி. வீட்டின் பின்புறத்தில் உள்ள கொய்யா மரத்தில் ஒரு குரங்கு குட்டியுடன் அமர்ந்து அதில் உள்ள பழத்தைக் குட்டிக்கும் கொடுத்துத் தானும் சாப்பிட்டுக் கொண்டிருந்தது. தாயருகில் அமர்ந்து பாதுகாப்பாய் சாப்பிடும் அந்தக் குட்டிக்குரங்கினை ஏக்கமாகப் பார்த்துவிட்டு, பின் தலையைப் பலமாகக் குலுக்கி தன்னை மீட்டுக்கொண்டு குளியலறையில் புகுந்தாள்.

குளிருக்கு இதமான சுடுதண்ணீர் குளியல் தொட்டியில் (hot water bath tub) சூடுகுறையும் வரை கிடந்தவள் உடல் குளிரெடுக்கும் வேலை எழுந்து பாத்-ரோப் சுற்றிக்கொண்டு வந்தவள் பிராண்ட்டடு பளாசோ, சாலீட் கிராப் டாப் அணிந்து அதன் மேல் முழு கோர்ட் போலான ஃபிரண்ட் டை கெதர்டு ஸ்ரக்கை அணிந்தாள்.

சிகை அலங்காரக் கருவி (hair straightener & curler) உதவியுடன் தன் இடுப்பளவு சிகையை சுகந்திரமாக, அலை அலையாக, அழகாக முதுகிலும் தோளிலும் படறவிட்டாள். பால் வண்ணத்திலிருக்கும் முகத்திற்கு மேலும் இரண்டு மூன்று அடுக்குக்கு அலங்காரம் இட்டவள் உதட்டுக்கும் சாயமிட்டாள். அலங்கார மேஜை மீதுள்ள ஒமேகா (omega brand) கடிகாரத்தை எடுத்துக் கைகளில் அணிந்தாள். அது எப்படியும் ஐந்து லட்சங்களை விழுங்கியிருக்கும்.

தனக்கு தேவையான பொருட்களுடன் டெபிட்கார்ட் மற்றும் பணத்தையும் எடுத்து அவளது மல்பெரி (mulberry brand) கைப்பையில் வைத்தாள். அதன் மதிப்பும் லட்சத்தைத் தொடும். மீண்டும் ஒருமுறை கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்டவள் சார்சரில் இருந்த தனது ஆப்பிள் ஐபோனை எடுத்துக்கொண்டு தனது அறையை விட்டு வெளியேறிக் கீழ்தளத்திற்கு வந்தாள்.

கீழே வந்தவளை யாருமற்ற வரவேற்பறையும், உணவு உண்ணும் அறையும் வறவேற்றது. அவள் டைனிங் ஹாலை அடைந்தவுடன் அவசர அவசரமாக வந்த வேலையாளி சூடாகத் தயாரிக்கப்பட்ட சான்வெஜ்ஜை தக்காளி ஸாசுடன் பரிமாறினாள். தட்டையும் அவளையும் ஒருமுறை பார்த்தவள் ஒன்னும் பேசாது அதைச் சாப்பிட்டு முடித்தவுடன் வேளையாளி அவளிடம் “பாப்பா மேடம் உங்களை ரூம்க்கு வரசொன்னாங்க” எனக்கூற அவள் முகத்தில் வந்த உணர்வுக்குப் பேர் தான் தெரியவில்லை.

ஆனாலும் அவள் சொன்னதை தட்டாது செவிசாய்த்தவள் தன் தாயைத் தேடி அவரின் அறைக்குச் சென்றவள், கதவைத் தட்டிவிட்டு அவரின் அனுமதிக்காகக் காத்திருக்க, எந்தச் சத்தமும் இல்லாதுபோக மீண்டும் கதவைத் தட்டவும் தான் அனுமதிகிடைக்க, கதவைத் திறந்து உள்ளே சென்றாள் திவி.

திவி சுதாகர் - சுபத்ராவின் ஒற்றை வாரிசு. சுதாகர் அவரின் கொள்ளு தாத்தாவின் காலத்திலேயே அவரின் சொந்த ஊரை விட்டுக் கோத்தகிரிக்கு புலம்பெயர்ந்தவர்கள். அப்போவே சொந்த ஊரில் உள்ள சொத்தை எல்லாம் விற்று இங்குச் சொந்தமாக வீடு, நிலம், தேயிலை தேட்டம் எல்லாம் வாங்கி விவசாயம் பார்த்தார். வழி வழியாக வந்த அவரின் தலைமுறையினரும் அவரின் தொழிலை எடுத்து நடத்தி அதை விரிவுபடுத்தினர்.

அது இன்று பல தேயிலை எஸ்டேட்கள், பழத் தோட்டங்களுடனான ஃபாம்ஹவுஸ்கள், தேயிலை தொழிற்சாலை, நறுமண எண்ணைய், வாசனை திரவியம் மற்றும் தைலம் தொழிற்சாலை, ஹேம் மேட் சாக்லெட் மற்றும் வர்க்கி தொழிற்சாலை, பேக்கரீஸ், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு எஸ்போர்ட் கம்பெனி, நீலகிரியில் தங்களது அனைத்து தயாரிப்புகளும் மொத்த விலையில் ஏஜெண்ட் மூலமாக நடைபெறுகிறது. ஊட்டியில் பொட்டானிக்கல் கார்டன் அருகில் அவர்களுக்குச் சொந்தமான நவீன ஷாப்பில் காம்ப்பிளக்ஸில் தங்களது அனைத்து தாயாரிப்புகளும் சில்லரை வியாபாரம் என்று நீலகிரியின் முக்கிய தொழில் அதிபராக சுதாகர் இருக்கிறார்.

பணம் பணத்தோடு சேரும் எனப் பொன்மொழிக்கினங்க சுதாகரும் நீலகிரின் முக்கிய புள்ளியின் ஒற்றை மகளைப் பார்த்துப் பிடித்துபோய் பெற்றோர் மூலமாகத் தன் மனைவியாக்கிக் கொண்டார். தனக்கும் தன் தொழிலுக்கும் உதவியாக இருப்பாரென நம்பினார் ஆனால் அது தான் அவர் சறுக்கிய இடம்.

சுபத்ரா இயற்கையாகக் கொள்ளை அழகுடன் சகல செளபாக்கியத்துடன் (born with silver spoon) பிறந்தவர். சிறுவயதிலேயே தாயை பறிகொடுத்து தன் தந்தை வழி அத்தையிடமே வளந்தார். அவரும் தன் தம்பி மகளைத் தன் பிள்ளைகளோடு பிள்ளையாக நல்ல விதமாக நல்லது கெட்டது எல்லாம் சொல்லி எளிமையாக வளர்த்தார்.

சுபத்ராவுக்கு அத்தை மகள் லீலாவுடன் அதிக ஒட்டுதல். லீலா அன்னைக்கு தப்பிப்பிறந்த பேராசை, ஊதாரி குணம் கொண்டவள். சிறுவயதிலிருந்தே இருந்த குணம். தன் ஆடம்பரமான அதிகபடியான தேவைகளைச் சுபத்ரா மூலமாகத் தன் மாமனிடம் பெற்றுக்கொள்வாள். வெள்ளந்தியான சுபத்ரா கொஞ்சம் கொஞ்சமாக லீலாவின் பிடியில் வந்துவிட்டாள். சுபத்ராவின் குணத்தையே லீலா தனக்கேற்றார் போல் மாற்றிவிட்டாள்.

சுபத்ராவை தன் அண்ணனுக்கே மணந்து என்றுமே சுபத்ராவை தன் கைபாவையாக மாற்ற நினைக்க, சுபத்ராவுக்கோ அப்பா காட்டிய சுதாகரை மிகவும் பிடித்துவிட்டது. சுதாகரை மணந்தாலும் சுபத்ரா லீலாவின் கைப்பொம்மை தான். லீலா அவளின் ஆடம்பர வாழ்வை சுபத்ரா மூலமாக இன்று வரை வாழ்ந்து வருகிறாள். அதன் விளைவு சுபத்ராவின் குணம் எதிலும் ஹைகிளாஸ், பார்ட்டி, லேடீஸ் கிளப் என ஒவ்வொரு நாளும் பணத்தை தண்ணீராகச் செலவழித்து வருகிறார். காதலித்து மணந்த சுதாகரும் மனைவி மனம்நோகக் கூடாதென அவரும் கேட்கக் கேட்கப் பணத்தை கொட்டுகிறார்.


அவள் சொத்துகளுக்கும் சேர்ந்து சுதாகர் பொருப்பில் வர, இன்னும் தீவிரமாக உழைக்க ஆரம்பித்தார் சுதாகர். தொழில் தொழில் தொழில் தான் அவருக்கு. நிற்க நேரமின்றி மனைவி மகளுடன் கூட நேரம் செலவிடாமல் கடமையே கண்ணென உழைத்து உழைத்து மனைவி எவ்வளவு அழித்தாலும் இன்னும் பத்து தலைமுறைக்குச் சொத்து சேர்த்து வைத்துள்ளார்.

சொத்தை மட்டுமே சேர்த்த அவர் தன் சொந்தத்தைப் பார்க்காமல் விட்டதன் விளைவு சுபத்ரா அடுத்த சுபத்ராவாக திவியை உருவாக்குகிறார். மகளுக்குப் பிறந்தது முதல் அவள் உபயோகிக்கும் ஒவ்வொரு பொருளும் ஆடம்பரமாக (luxury) தான் வாங்கி கொடுப்பார். மகள் அவளாக விரும்பிக் கேட்டாலும் கூட விலை குறைவான பொருள் அவளுக்குக் கிடைக்காது. அவள் உடுத்தும் உடையிலிருந்து உபயோகிக்கும் அனைத்தும் சுபத்ரா பார்த்துப் பார்த்துக் காசைத் தண்ணீராக இறைத்து வாங்கியது.

உண்ணும் உணவிலும் கூட சுபத்ராவின் தலையீடுதான். திவிக்கு எப்போவும் சுபத்ரா தான் மெனு கொடுப்பார். அவளின் நண்பர்கள் கூட சுபத்ரா விரும்பியவர்கள் மட்டுமே. சுபத்ராவுக்கு யாரை பிடிக்கும்? அனைத்தும் அவரைப் போலப் பணக்கார ஊதாரிகள். திவிக்கு தேவையான அனைத்தும் செய்தாலும் திவிக்கு தேவையான பாசம், அரவணைப்பு எதுவும் கொடுத்ததில்லை சுபத்ராவும் சுதாகரும், பணத்தை தவிற. ஆக இப்போ ஒரு மினி சுபத்ரா திவியின் வடிவில்.

காலம் கடந்து இதை உணர்ந்தார் சுதாகர். அதன் பின்னே மகளை நல்வழிப் படுத்துவதற்காக நெறுங்க நினைக்க, திவி யாரையும் அவளின் பழக்கவழத்தில் மூக்கை நுழைக்க அனுமதிக்கவில்லை. வளர வளர அவள் கேட்டும்போது பணம் கொடுக்க மட்டுமே பெற்றோர். அதை அவள் என்ன செய்கிறாள், எங்குச் செல்கிறாள். யாருடன் இருக்கிறாளென எதுவுமே பெற்றோருக்குத் தெரியப்படுத்த மாட்டாள்.

திவி எப்போது வீட்டிற்கு வருகிறாள், எங்குச் செல்கிறாள் எதுவுமே யாருக்கும் சொல்லமாட்டாள். காலை உணவு மட்டுமே வீட்டில், அதுவும் சுபத்ராவின் கட்டாயத்தால் மற்றபடி காலையில் செல்பவள் இரவு தான் வருவாள். அவளிடம் பேச வேண்டுமென்றால் இப்படி சாப்பிட வரும்போது வேளையாள் மூலம் தெரியப்படுத்த வேண்டும், அல்லது வாட்ஸாப்பில் குறுந்தகவல் அனுப்ப வேண்டும். அப்போதும் கூட அவள் தான் சுபத்ரா இருக்குமிடம் சென்று பேசுவாள் அதுவும் ஓரிரு வார்த்தைக்கு மேல் இருக்காது.

ஆனால் தந்தையிடம் மட்டும் கொஞ்சம் ஒட்டுதல் காட்டுவாள். தினமும் காலைத் தந்தையை சந்திக்காமல் எங்கும் செல்வதில்லை. வீட்டில் இருந்தால் வீட்டிலே பார்த்துவிடுவாள், இல்லையென்றால் அலுவலகம் சென்று பார்த்துவிட்டுத் தான் செல்வாள். அதுவும் பணம் வாங்கவா பாசமாகவா என அவளுக்கு மட்டும் தான் வெளிச்சம்.

மகளின் இந்தப் போக்கை மாற்ற முடியாமல் மகளின் மீதுள்ள பாசத்தால் மினி சுபத்ராவுக்கான மினி சுதாகர் தேடும் பணியில் இறங்கி விட்டார் சுதாகர்.

இன்று சுபத்ரா தன்னை பார்க்க வருமாறு கூறவும் அவளைச் சந்திக்க வந்துள்ளாள்.

“மீ கூப்பிட்டிங்களா??”

“ஆமாடா. உன்ன மீட் பண்ணவே முடியலடா அதான்.”

“நீங்க வீட்டிலேயே இல்லயே மீ அப்புறம் என்னை எப்படி பார்க்க முடியும்??”

“திவிபேபி மம்மி கொஞ்சம் பிஸிடா”

“ஓ.கே சொல்லுங்க.”

“திவிபேபி டேடி உனக்கு அலையன்ஸ் பார்க்கனும் சொன்னார். எனக்கு நம்ம லீலா பையன் ராகுல் தான் உனக்கு மேட்ச் ஆவானு தோனுது. நீ என்ன நினைக்கிற??”

“நாட் இன்ரஸ்டடு” எனப் பட்டுனு சொல்லிவிட்டாள்.

“என்னடா இப்படி சொல்லுற… உங்க டேடி அவர போலவே பார்ப்பார்… ஆனா ராகுல் தான் உன்ன போலப் பார்ட்டி, கிளப்னு எல்லாத்துக்கும் உன்கூட வந்து உன்கூட டைம் ஸ்பெண்ட் பண்ணுவான்”

“மீ… அல்ரெடி ஐ டோல்டு யூ… ஐம் நாட் இன்ரஸ்ட்டு… நாட் ஒன்லி ராகுல்… ஐ நீட் டைம்… நொவ் ஐம் நாட் ரெடி ஃபார் மேரேஜ்.”

“நீ ராகுல் கூடக் கொஞ்சம் டைம் ஸ்பெண்ட் பண்ணி பாரு… கண்டிப்பா உனக்குப் பிடிக்கும்”

“5 மினிட்ஸ் வேஸ்ட்… லீவ் இட்… எனிதிங் எல்ஸ்” எனக் கேட்டவாரே அறையை விட்டு வெளியேறியவள் வீட்டில் உபயோகிக்கும் செறுப்பை மாற்றுவிட்டு டியூன் லண்டன் (dune london) பிராண்ட் செறுப்பை மாற்றிக் கொண்டு தனது அஸ்டன் மார்டின் (aston martin DBX) காரினை எடுத்துக்கொண்டு பறந்தாள்.

வீட்டில் கடமைதவறிய சுதாகர் தொழிலில் புலி. அவரைக் கண்டாலே அலுவலகமே அலறும். சிறுத்தைபோல வேகம் அவர் வேகத்துக்கு அவருடன் போகக்கூடிய ஒரே ஆள் அவரின் பி.ஏ அக்னீஸ்வர் தான். சுதாகரின் வலது கை, இடது கை எல்லாம். சுதாகர் எள் என்றால் எண்ணெய்யாக நிற்பவன். அலுவலக ஊழியர்களிடமிருந்து அழகாக வேலை வாங்கக்கூடியவன். குணத்திலும் செயலிலும் சுதாகரை ஒட்டியவன்.

அவனின் புத்திக்கூர்மையால் சுதாகருக்கு பல நன்மைகள் நிகழ்ந்துள்ளது. அவனது சமயோஜனை திறனால் பல இக்கட்டான சூழ்நிலையிலிருந்து சுதாகரை காத்திருக்கிறான். மினி சுதாகராகவே இருக்கும் அக்னீயை மருமகனாக மாற்றும் எண்ணத்துடன் அவனை இன்னும் இன்னும் தீவிரமாகக் கண்கானித்து தகவல் திரட்டுகிறார் சுதாகர்.

தாயின் அறையிலிருந்து வெளியேறியவள் அடுத்து சென்றது தந்தையின் அலுவலகத்துக்கு. இங்கு எந்த அனுமதியுமின்றி தந்தையின் அறைக்கதவை தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தவளை பார்த்ததும் கண்டுகொண்டார் மகளின் கோபத்தை.

“என்னடா குட்டிமா… இவ்ளோ கோபம்”

“உங்க சுபி மனசுல என்ன நினைச்சிட்டு இருக்காங்க? எனக்கு வரக் கோபத்துக்கு நல்லா நாலு வார்த்தை கேட்டிருப்பேன், ஆனா அதுக்கு கூட அவங்க வொர்த் இல்ல”

“மம்மி டா, அவ ஒன்னுமே தெரியாத வெகுளி டா, எல்லாம் அந்த லீலா ஆட்டி வைக்கிறது, பாவம் டா மம்மி”

“அந்த வெகுளி தான் லீலா பையன் ராகுல் கூட என்ன டேட் பண்ண சொல்றாங்க”

“வாட்?”

“ம்ம், அவன நான் மேரேஜ் பண்ணிக்கனுமாம், அதுக்காக அவன் கூட நான் பழகிப் பார்க்கவாம்”

“ராகுலயா!”

“பார்க்குற பொண்ணையெல்லாம் படுக்கைக்குக் கூப்பிடுற பொறுக்கிகூட நான் பழகிப் பார்க்கனுமாம்”

“டேடி அப்படி விட்டிடுவேனா? நமக்கேத்த பையனா நான் உனக்குப் பார்க்குறேன் குட்டிமா”

“இனஃப் டேட். எனக்கு இப்போ மேரேஜ் பண்ணிக்கிற ஐடியாவே இல்ல. எனக்கு, திரும்பச் சொல்றேன் நல்லா கேளுங்க, எனக்கு ஏத்த பையன நான் பார்குற வரை இந்தக் கல்யாணம் கன்றாவி எல்லாம் என் காதுலயே கேட்கக் கூடாது” என ‘எனக்கு’ என்பதில் அதிக அழுத்தம் கொடுத்துத் தந்தையிடம் கூறிவிட்டு அறையை விட்டு வெளியேறினாள்.

அவள் வெளியேறியதும் சுதாகருக்கு தலையே சுற்றுவது போல் இருந்தது. லீலாவின் ஆட்டம் அங்க தொட்டு, இங்க தொட்டு மகளின் வாழ்க்கையை சூறையாடும் அளவுக்கு வந்து விட்டது. இனியும் தாமதிக்காது உடனே அக்னீயை பற்றிய அனைத்து தகவல்களையும் சேகரிக்க வேண்டுமென நினைத்தார்.

சுதாகர் தனக்கேற்ற மருமகனாக அக்னீயை தேர்ந்தெடுக்க, சுபத்ராவோ லீலாவின் ஆலோசனையில் ராகுலை மாப்பிள்ளையாக்க நினைக்கிறார். யார் யாருக்கு மாலையிடப் போகிறார்கள் எனப் பார்க்கலாம். ராகுலிடம் திவி மாட்டப் போறாளா? இல்ல திவியிடம் அக்னீ சிக்க போறானா?
 
Last edited:

Lufa Novels

Moderator

யாரோ அவன்?? யாரோ இவள்??

அத்தியாயம் 2

d3kUhPuf8bEzUXI33pLIbvXw53o5DiiMhVyb9QkJ0DgPML322703kSMpOke6U6lSTjM7YxDvbbzZCkEZvsErc1jxAJyYsBBo4xD5UpPUcd-PK7P9hWT6QTjMonfYEd0BMKvb8d4JPcgRNXbn0tDERhxGDcqOOkQM33SEQKNGOpwf98dT3YCGpjWcEmmEeQ

கோத்தகிரிக்கு மிக அருகில் உள்ள ஊர் அரவேணு, அதிலிருந்து கேத்தரின் நீர்வீழ்ச்சிக்கு செல்லும் பாதையில் உள்ள சிறுகிராமம் தான் மூன்ரோடு. அந்தப் பகுதிக்கு அருகில் சில காட்சிமுனைகளும், ரிசார்ட்டுகளும் உள்ளது. அந்தப் பகுதி தேயிலைத் தோட்டங்களால் நிறைந்திருக்கும் அழகான பகுதி.

அங்குச் சர்வ சாதாரணமாகப் பல காட்டெருமைகள் பகல் நேரத்திலும் திரியும். சில சமயம் இரவு அல்லது அதிகாலை வேலைகளில் கரடிகள் கூட அருகில் உள்ள விநாயகர் கோவிலில் ஊற்றப்பட்ட எண்ணெயைக் குடிக்க வரும். ஏன் சிறுத்தை நடமாட்டம் கூட அவ்வப்போது நிகழும். குரங்குகள் சொல்லவே வேண்டாம் அட்டகாசம் செய்யும்.

அந்த அழகிய பகுதியில் மலைப்பிரதேசத்திற்கே உண்டான அழகான வளைவுக்கருகே இருந்தது அந்த இரண்டு மாடிக் கட்டிடம். அதன் பால்கெனியிலிருந்து பார்த்தாலே இரவு நேரங்களில் மேட்டுப்பாளையம் தெரியுமளவு ஊள்ள அழகான காட்சிமுனையில் அமைந்துள்ளது அந்த வீடு. பெரிதும் அல்லாது சிறிதும் அல்லாது அளவான வீடு. வீட்டைச் சுற்றிலும் பாதுகாப்புக்கு பக்கவாட்டு சுவற்றுடன் இரண்டு கார்கள் நிற்குமளவு இடத்துடன் அமைந்திருந்தது. ஆனால் கார் தான் இல்லை ஒரு பைக்கும் ஒரு ஸ்கூட்டி மட்டுமே.

மனம் பாரமாக இருக்கும் சமயங்களில் அந்தப் பால்கெனியில் நின்று அந்த இயற்கை அழகினை இரசிக்க ஆரம்பித்தால் மனதின் பாரம் எந்தமூலைக்கு செல்லும் என்றே நமக்குத் தெரியாது. அந்த அளவுக்கு அருமையான இடம். அந்த இடத்திலிருந்து தான் மலைகளின் அரசியின் அழகில் லயித்துப் பல நாட்களைக் கடந்திருக்கிறாள் அந்த வீட்டின் இளவரசி.

அவளுக்கு அந்த வீடு தான் சொர்க்கம். உலகின் எந்த அதிசயத்தில் கொண்டு விட்டாலும் அவள் மனம் அதில் லயிக்காது. அவள் ஊனோடும் உயிரோடும் கலந்திருக்கும் ஒரே இடம் அந்த வீடு தான். அந்த வீடு முழுவதும் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். அங்கு எந்த எதிர்மறை எண்ணமும் இல்லை முழுக்க முழுக்க நேர்மறை எண்ணங்கள் தான்.

“மாலினி மாலினி” எனச் சத்தமிட்ட படியே வந்தார் கிருஷ்ணன்.

மாலினி “இங்க தாங்க இருக்கேன்… சொல்லுங்க… பச்சபுள்ளயாட்டம் கத்திட்டே இருக்கீங்க”

“இந்தா காபி கப்…”

“இதுக்கா இந்தக் கத்து கத்துனிங்க…” என முறைத்த மாலினியை பார்த்துச் சிரித்தவர் தொடந்து

“மீனுகுட்டி என்ன பண்றா?”

“இன்னைக்கு அவ முதல் நாள் வேலைக்குப் போறா தான, அதான் கிளம்பிட்டு இருக்கா”

“இன்னைக்கு என்ன டிபன்”

“உளுந்தங்களி”

“முதல் நாள் வேலைக்குப் போறா பூரி பண்ணிருக்கலாம்ல”

“முதல் நாள் வேலைக்குப் போறது அவளா? இல்ல நீங்களா? நல்லா எண்ணெய் பலகாரமா கேக்குது உங்களுக்கு? இந்த மாசம் பீபி எவ்ளோனு தெரியும்ல” எனக் கூறவும் முகத்தைத் தெங்கப்போட்டார் கிருஷ்ணன்.

“ஆசையா இருந்தது… அதான்…”

“சரி மூஞ்சிய அப்படி வைக்காதிங்க… பார்க்கச் சகிக்கல… அடுத்தவாரம் உங்க பிறந்தநாள் வருதுல அன்னைக்கு பண்ணித்தரேன். இப்போ நாட்டுசர்க்கரை தீர்ந்து போச்சு, போய் வாங்கிட்டு வாங்க”

“நேத்தே சொல்லிருக்கலாம்ல வரும்போது குன்னூரிலே வாங்கிட்டு வந்திருப்பேன். இங்க அநியாய விலை” எனக் கூறினாலும் பையை எடுத்துக்கொண்டு வாங்க கிளப்பிவிட்டார்.

அவருக்குத் தான் தெரியுமே மகளுக்கு உளுந்தங்களிக்கு நாட்டு சர்க்கரை என்றால் மிகவும் பிடிக்குமென்று.

கிருஷ்ணன் குன்னூரில் பிரபலமான ஆடிட்டர். பல தொழிலதிபர்களுக்கு ஆடிட்டராக இருக்கிறார். கிருஷ்ணனுக்கு சமூகசேவையில் ஈடுபாடு அதிகம் அதனால் குன்னூரில் ஆதரவற்ற இல்லம் ஒன்றையும் நடத்துகிறார். நல்ல மனிதர்களும், வருமான வரியைக் குறைப்பதற்காக சில தொழிலதிபர்களும் கொடுக்கும் நன்கொடையை பெற்று இதை நடத்துகிறார்.

சில நேரங்களில் நன்கொடை அளவு குறையும்போது தன் சொந்த பணத்தையும் அதிலேயே போட்டு விடுகிறார். அதில் மாலினிக்கு சிறு வருத்தம் இருக்கத்தான் செய்கிறது ஆனால் தானும் அதுபோல ஒரு ஆசிரமத்தில் வளர்ந்த பெண் என்பதால் அதைக் கண்டும் காணாமல் இருக்கிறார்.

தன்னிடமும் இல்லாதபோது வேறு இடங்களில் நன்கொடைகளைச் சேகரிக்கும்போது அதீத பதட்டம் அடைந்து இரத்த அழுத்தத்தை இழுத்துக்கொண்டார். அதனால் தான் வீட்டில் அவருக்கு உணவில் அவ்வளவு கட்டுப்பாடு.

கடைக்குச் செல்ல வந்தவர் பைக்கை எடுக்க அது ஸ்டார்ட் ஆகவில்லை, அதில் எரிச்சலுற்றவர் உள்ளே வந்து மகளின் ஸ்கூட்டி சாவியை எடுத்துக்கொண்டு கடைக்குச் சென்று பொருளை வாங்கி வந்தார்.

அழகான காட்டன் சுடிதாரில், அடுத்தவர்களைக் கவராத வண்ணம் மிதமான ஒப்பனையில், கையில் ஒரு சிறிய கைப்பையுடன், தன் அலையலையான சிகையை ஒற்றை கிளிப்பில் அடக்கி, அதிகாரமாக அல்லாது ஆளுமையான வந்தவளை இமைக்க மறந்து பார்த்துக்கொண்டிருந்தார் கிருஷ்ணன்.

“வாயில கொசு போகப் போகுது” என மாலினி கிண்டல் செய்தபடியே மகளுக்குச் சாப்பாடு தட்டை எடுத்து வைத்தார்.

“என் பொண்ணு அவ்ளோ அழகுடி… பார்க்க ரெண்டு கண்ணு பத்தாது” எனக் கூற அப்பாவைப் பார்த்துச் சிரித்தாள் மீனா.

மீனா பள்ளிக்கல்வியை ஊட்டியில் முடித்தவள் கோயம்புத்தூரில் அவளது இளங்கலையும்(BBA) முதுகலையும்(MBA) முடித்துப் பல்கலைக்கழக முதல் தரவரிசைப் பெற்றாள். அதன் விளைவாகக் கல்லூரி வளாக நேர்காணல்(campus interview) மூலமாகப் பிரபல வங்கியில் மேலாலராக நேரடியாக எந்த முன் அனுபவமும் இன்றி தேர்வாகினாள். வேலையிடத்தினை மட்டும் அப்பாவின் உதவியால் சொந்த ஊருக்கே மாற்றிக்கொண்டாள்.

“அப்பா நீங்கச் சொல்றது எல்லாம் எனக்கே கூச்சமா இருக்குப்பா… அடக்கி வாசிங்க”

“ஆமா உனக்கு முதல்ல சுத்திப்போடனும் உங்கப்பா கண்ணே விழும் உனக்கு” என மாலினி கூற சிரித்தவள் தொடர்ந்து

“மா டிரஸ் எப்படி இருக்கு?” எனக்கேட்க

“உனக்கென்னடா அழகா இருக்கு… நீ போட்டதால தான் இந்த டிரஸ்கே அழகு” என மாலினியிடம் கேட்ட கேள்விக்குக் கிருஷ்ணன் பதில் கூற அம்மாவும் மகளும் அவரை முறைக்க வாய் விட்டுச் சிரித்தார் அந்தப் பாசமான அப்பா.

“டிபன் என்னம்மா?”

“உனக்குப் பிடித்த உளுந்தக்களி தான்” மாலினி கூறினார்.

“வாவ். சூப்பர் மா… லேட் ஆகுது வேகமா தாங்க” எனக் கூற அனைவரும் அமர்ந்து ஒன்றாகச் சிரித்து பேசியபடியே காலை உணவினை முடித்து அவர்களிடம் விடைப்பெற்று கிளம்பியவள் ஸ்கூட்டி சாவியை தேடினாள்.

“அம்மா ஸ்கூட்டி சாவிய எங்கம்மா?”

“அப்பாட்ட கேளுடா” எனக் கிச்சனை ஒதுக்கியபடியே பதில் கூறியவர் அவசரமாக மகளுக்குக் கட்டிவைத்த மதிய சாப்பாடு அடங்கிய பையை எடுத்துக்கொண்டு வந்தார். அதற்குள் சத்தம் கேட்டு அறையிலிருந்து வந்தவர் தன் சட்டையில் உள்ள சாவியை தர

“உங்க பைக்குக்கு என்னாச்சுப்பா?”

“அது ஸ்டார்ட் ஆகலமா… போகும்போது தள்ளிட்டுபோய் ஸாப் ல விடனும்”

“அது சரி இங்கிருந்து அரவேணு வரை தள்ளிக்கிட்டு போகவா? மெக்கானிக் பையன் கிட்ட சொன்ன அவன் வந்து எடுத்துட்டு போயிடுவான். நீங்க வாங்க உங்களை விட்டுட்டு போறேன்.” எனக் கூறினாள். இருவருக்கும் வேலை குன்னூரில் தான்.

“உனக்கு லேட் ஆகுதுடா நீ கிளம்பு நான் போய்க்கிறேன்.”

“அவ கூடக் கிளப்புங்க நீங்க. நானும் மறந்துட்டேன் பைக் ரிபேர்னு” என மாலினியும் வற்புறுத்தவும் அப்பாவும் மகளும் குன்னூரை நோக்கிப் பயணித்தனர்.


இங்குச் சுதாகரோ காலையில் திவி சொல்லிச் சென்றதையே சிந்தித்துக் கொண்டு இருந்தார். அவர் கோபம் முழுக்க முழுக்க லீலா மேல இருந்ததே தவிற தன் மனைவிமேல் அவருக்கு எந்தக் கோபமும் இல்லை.

அந்தளவுக்கு தன் மனைவிமேல் காதலுற்றுள்ளார் அவர், ஆனால் அவர் மனைவியோ அடுத்தவர் கைபாவையாக இருக்கின்றார். தன் மனைவி அதீத ஆடம்பரமாக வாழ்ந்து, பணத்தை கண்டமேணிக்கு செலவு செய்தாலும், ஒரு நாளும் அவர் அதற்கு மறுப்போ, ஆட்சேபனையோ சொல்லவில்லை. ஏன் குழந்தை பிறந்ததிலிருந்து குழந்தையைக்கூட கவணிக்காமல் தான் இருந்தார். அப்போதும் கூட அவர் மனைவியைக் குறைகூறவில்லை.

ஆம் திவி பிறந்ததிலிருந்து திவியை வளர்த்தது சுதாகரின் தாய் லட்சுமி தான். அவர் இருக்கும் வரை திவிக்கு பாசத்துக்கு பாதகம் இல்லாமல் பார்த்துக்கொண்டார். ஆனால் அவர் மறைவுக்கு பின்னரே தாய் ஒருபக்கமும், தந்தை ஒரு பக்கமுமாய் ஓடத் தனித்து விடப்பட்டாள் திவி.

சுபத்ரா மீது கொண்ட காதலால் அவரை இதுவரையும் ஒருவார்த்தை கோபமாகப் பேசியதில்லை. இன்றும் அவர் காதல் மனது மற்றவர்களைத் தான் குறை கூறுகின்றதே தவிற மனைவியைச் சொல்லவும் இல்லை, மனைவியை இந்தளவுக்கு விட்டுவிட்ட தன் தவறையும் உணரவில்லை.

கிருஷ்ணன் ஒருவகையான பாசமான அப்பா என்றால், இவரும் அவருக்குக் குறைந்தவர் இல்லை. தன் மொத்த பாசமும் திவிக்கு மட்டுமேயென அடுத்ததாகக் குழந்தை கூடப் பெற்றுக்கொள்ளாமல் அவள் மட்டும் போதும் என அவளுக்காக மட்டுமே இருப்பவர்.

என்ன பாசத்தை மகள் அருகிலிருந்து அதை அவளுக்குக் கொடுக்காமல் மகளுக்காக இரவு பகல் பாராமல் சொத்து சேர்ப்பது தான் பாசம் என்றிருக்கிறார். கல்லூரிக்காலம் வரையிலும் மகள் விடுதியிலேயே இருந்ததால் இங்கு வரும் ஒருசில நாட்களில் மகளின் பழக்கவழக்கங்களில் உள்ள வித்தியாசத்தை அவர் கவணிக்கவில்லை. இந்தக் கொஞ்ச நாளில் மகளின் நடவடிக்கைகளில் சுபத்ராவின் குணாதீசியங்கள் அதீதமாகத் தெரிய ஆரம்பிக்கவும் தான், எங்கே மகள் வாழ்க்கை என்னாகுமோ என அவளைத் தன்னைப் போல் ஒருவனிடம் ஒப்படைக்க நினைக்கிறார்.

ஆனால் அதற்குள் சுபத்ரா மூலமாக மகளின் வாழ்க்கைக்குள் நுழைய நினைக்கும் லீலாவின் மீது கொலைவெறியே வந்தது. இப்போது அவருக்கு இருக்கும் கோபத்திற்கு லீலா மட்டும் அவர் கையில் சிக்கினாள் சட்டினிதான்.

மனைவியின் தேர்வுத் தவறு என மட்டும் அந்தக் காதல் கணவருக்குத் தெரிந்திருந்ததால், மனைவின் ஆசையா அல்லது மகளின் வாழ்வா எனும் கட்டத்தில் காதலை பாசம் வென்றது. கூடிய சீக்கிரத்தில் அக்னீயின் குடும்பத்தகவல்களை திரட்ட வேண்டும் என எண்ணினார். அவருக்கு வெகுநாட்களாகவே அக்னீ தான் தன் மகளுக்கும், தன் தொழிலுக்கும் சரியான ஆள் எனத் தோன்றிக் கொண்டே இருக்கிறது. ஆனால் மகள் அதற்கு ஒப்புக்கொள்வாளா??

யோசனையோடே இருந்தவர் கதவு தட்டும் ஓசைக்குக் கூடச் செவிசாய்க்காமல் அவருக்குள்ளே குழம்பிக்கொண்டிருந்தார். மகளை ராகுலிடமிருந்து காத்து அக்னீயிடம் ஒப்படைக்கும் வரை அந்தத் தகப்பனின் மனதில் வேறு சிந்தனை இருக்காது.

அவர் எண்ணத்தின் நாயகனே கதவைப் பலமாகத் தட்ட, அதில் திடுக்கிட்டவர் அவர் எண்ணங்களைத் தற்சமயம் ஒதுக்கிவிட்டு மீண்டும் தொழிலதிபராக மாறினார்.

“யெஸ். கம்மின்” என ஆளுமையாகக் கூற கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தான் அக்னீ.

“கொடேஷன் பேப்பர்ஸ் ஸார். எல்லாம் செக் பண்ணிட்டேன் கரெக்ட்டா இருக்கு. நீங்களும் பார்த்துட்டு லாஸ்ட்டுல அமொண்ட் மட்டும் ஃபில் பண்ணி சைன் பண்ணிட்டா அனுப்பிடலாம்”

“ஹம்ம் கொடு” எனப் பேப்பர்ஸ்ஸை வாங்கிக் கொண்டவர் அக்னீ இன்னும் வெளியேறாமல் நிற்கவும்

“எதாவது செல்லனுமா அக்னீ?”

“அது… அது வந்து ஸார் ஒரு திரீ டேஸ் லீவ் வேணும்… ஊருக்குப் போகனும்”

“எப்போ”

“வீக் எண்டு பக்கத்துல இருந்தா சேர்ந்தாப்புல போய்ட்டு வந்திருவேன் ஸார். அதான் மண்டே டூ வெனஸ்டே லீவ் வேணும்”

“எதுவும் விசேஷமா அக்னீ?”

“இல்ல சார். வீட்டில கூப்பிட்டே இருக்காங்க… அதான்”

“ஓகே போய்ட்டு வா. ஆனா அதுக்கு முன்னாடி இந்த வேலையெல்லாம் முடிச்சுடனும். நீ இல்லாதப்போ உன் வேலைய மிஸ்டர் டேவிட் கிட்ட ஒப்படைச்சுட்டு அவருக்கு இன்ஸ்ரக்ஸன்ஸ் சொல்லிட்டு கிளம்பு”

“ஓகே ஸார்”

“எப்போ கிளம்பப்போற அக்னீ”

“சேட்டர்டே நைட் ஸார்”

“ஓகே. கேரியான்” எனக்கூறவும் அவ்விடத்தை விட்டு நகர்ந்தான் அக்னீ.

அவன் செல்லவும் சுதாகர் முதலில் அழைத்தது ஒரு துப்பறியும் அலுவலகத்திற்கு. அக்னீயை பின் தொடர்ந்து கண்காணித்து அவனின் பழக்கவழக்கம், குடும்பத் தகவல் மற்றும் குடும்ப பின்னனியை ஆராய்ந்து கூறுமாறு பணித்தார். மகளின் வாழ்க்கையில் எந்தத் தவறும் நடக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தவர், அதில் சம்பந்தப்பட்ட இருவருக்கும் சம்மதமா என்பதையும் பார்ப்பாரா?

அதே நேரம் இங்கு மீனாவும் கிருஷ்ணனும் அன்னை இல்லத்துற்குள் நுழைந்தனர். மீனா வருவதைக் காணவும் அங்குள்ள குட்டி வாண்டுகள் அனைத்தும் மீனாவை சூழ்ந்து கொண்டனர். அங்குள்ள குழந்தைகளுக்கு மீனா என்றால் உயிர். அவளும் இங்கிருந்தால் அவளின் முக்கால்வாசி நேரம் அவர்களுடன் தான் கழிப்பாள்.

அவர்களுடன் இருக்கும்போது மீனாவும் குழந்தையாகவே மாறிப்போவாள். அவர்களுக்கு ஈடுகொடுத்து விளையாடுவதும், கதை சொல்வதும், பாடல் பாட கற்றுக் கொடுப்பதும், பாடங்களில் உள்ள சந்தேகங்களைப் புரியும் படி சொல்லிக் கொடுப்பது என அந்த வாண்டுகளின் நாயகி அவள்.

அவள் இங்கு வந்தால் அங்குள்ள பெரியவர்களுக்கும் ஆனந்தமே. அவளை அவர்களின் சொந்த பேத்தியாக, மகளாகத் தான் நினைப்பார்கள். அவளின் அன்பான குணம், இனிமையான பேச்சு மற்றும் ஆளுமையான சிந்தனை அனைத்தும் அவர்களைக் கவரும். அவள் வந்தால் அவள் குரலில் ஒரு பாடலையாவது அவர்களுக்குப் பாடிக்காட்டாமல் விடமாட்டார்கள். ஆம் சிறு வயதிலிருந்தே கர்நாடக இசை பயின்றவள் மீனா.

ஆனால் இன்று கிருஷ்ணனை விடுவதற்காகவே அவள் வந்தது. இவர்களுடன் நேரம் செலவிட இன்று அவளிடம் கால அவகாசம் இல்லை. இன்று முதல் நாள் வேலைக்குச் சேர இருக்கிறாள். முதல் நாளே தாமதமாகச் செல்ல விருப்பமில்லை, அலுவலகத்திற்கு வேற நேரமாகவும் மீனா அவர்களிடம் மாலை வந்து அனைவரையும் சந்திப்பதாகக் கூறியவள், அவர்களிடமிருந்து விடைப்பெற்று வங்கிக்குச் சென்றாள்.

முதன் முறையாக வங்கி மேலாளர் அறையில் அவள் பெயர் பலகையைத் தாங்கிய மேஜையுடன் கூடிய உருட்டல் நாற்காலியில் சென்று அமர்ந்த அந்த நொடி அவள் எப்படி உணர்ந்தாளென வார்த்தையால் வடிக்க இயலாது. தனக்கென ஒரு வேலை, தன் சொந்த சம்பாத்தியம், தனக்கான ஒரு அடையாளம் என அவளை அவளே செதுக்கி கொள்ள தனக்கு கிடைத்த வாய்ப்பினை விடாமல் பிடித்துக் கொண்டாள்.

அதன் விளைவு இன்று ஒரு வங்கியையே நிர்வகிக்கும் பொறுப்பேற்றிருக்கிறாள். வேளைக்கான கடிதம் வந்தபிறகு சில
பல பயிற்சிகளுக்குப் பிறகு இன்று தனியாக இந்த வங்கியை நிர்வகிக்க வந்துவிட்டாள். முதன் முதலாகப் பதவியேற்று வங்கி பணியாளர்கள் அனைவரையும் அழைத்து அறிமுகப்படுத்திக் கொண்டு, வேலை விஷயமான அறிவுறுத்தல்களையும் அதிகாரமாக அல்லாது மிக மிக ஆளுமையாக கூறினாள். அதை யாரலும் புறக்கணிக்க முடியாத அளவுக்கு இருந்தது அவளது திட்டங்கள் அனைத்தும்.

பணியாளர்களிடமும் கடின முகம் காட்டாமல், இளகுவாக அவளை அணுகும்படி இருந்தது அவள் பேச்சுகளும், நடத்தைகளும். கூறவேண்டிய அனைத்தையும் கூறிய பின் தான் மேலாளராகப் பதவியேற்றதற்காகவும், தன் மகிழ்ச்சியை அவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்காகவும், அவர்களுக்கு இனிப்பு வழங்கி அவர்களுடன் அவளுக்கான அணுகுமுறைகளை சுலபமாக்கினாள்.

அவள் காலையில் சொன்னதை போலவே மாலை அங்கு சென்று அவர்களுக்கும் இனிப்பு வழங்கி அவர்களின் மகிழ்ச்சியை அதிகரித்து, அவளின் மகிழ்ச்சியையும் பெருக்கிக் கொண்டாள் மீனா.

யார் இந்த மீனா? இவளுக்கும் திவி அக்னீக்கும் என்ன சம்பந்தம்? யாருடைய வாழ்வை இவள் மாற்றப் போகிறாள்? இவளால் நேரப்போவது நன்மையா?தீமையா? கதையில் என்னுடன் தொடர்ந்து பயணித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
 
Last edited:

Lufa Novels

Moderator

யாரோ அவன்?? யாரோ இவள்??​

அத்தியாயம் 3​

7KfOlMACfeyf5XsUbzPzznmeoXvZ2CvW6LgGkm60kocB1_WPnTgjRBn9-sDyOo-Z4oCgV2LGqxtFk7L079B0iXGG6iBve0vygAs0QZNMzY8yn2YSxXXZn708LJRBP8tBuFHFmZEFWJ3kdbzQzZGVgO9jLn37OVLsKu65qstXpEI68CFGbA_FIil4f2EOTg


மதுரைக்கு அருகில் உள்ள ஊர் திருமங்கலம், அதற்கு மிக அருகில் உள்ள சின்னக் கிராமம் தான் சுங்குராம்பட்டி. அது தான் அக்னீயின் சொந்த ஊர். அழகான காலை நேரத்தில், திருமங்கலத்திற்கும் சுங்குராம்பட்டிக்கும் இடையில் உள்ள அந்த மிகப்பெரிய கல்யாண மண்டபத்தில், திருமணத்திற்கான அனைத்து வேலைகளும் தடபுடலாக நடந்து கொண்டிருந்தது.

பாண்டிய நாட்டு மண்ணின் மைந்தன் அக்னீயின் தந்தை பெயரும் பாண்டியன். குடும்பத்திற்காக உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்தவர், இன்று வெள்ளை வேட்டி சட்டையும், மனநிம்மதியுமாக திருமணத்திற்கு வருபவர்களை வரவேற்றுக் கொண்டிருந்தார்.

மறுபுறம் அக்னீயின் தாய் ஜெயந்தி திருமணத்திற்கு தேவையான அனைத்து பொருட்களும் இருக்கின்றனவா? எனச் சரிசெய்து விடுபட்ட பொருட்களைப் பட்டியலிட்டு கொண்டிருந்தார். அவர் அருகில் நின்றிருந்தான் அக்னீயின் தம்பி அருண் குமரன். தேவையான பொருட்களை எல்லாம் வாங்கி வரும் பொறுப்பு அவனுடையது தானே. பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் விடலைப்பையன்.

மண்டபத்தில் சமையல் கூடத்தில் உணவுகள் தயாராகிவிட்டதா? அனைத்தும் சுவையாக இருக்கிறதா? திருமணத்திற்கு வரும் அனைவருக்கும் போதுமானதாக இருக்குமா? என ஒவ்வொன்றையும் பார்த்துக்கொண்டிருந்தான் அக்னீயின் அண்ணண் ஆதித்யன். 26 வயதான கட்டிளம் காளை. அவனை மட்டுமே சுற்றி சுற்றி வருகிறாள் நந்தினி. அவனின் அத்தை பெத்த ரத்தினம்.

“உனக்கு வேற சோலிக்கழுத இருந்தா போய்ப் பாருடி, என்னையவே வட்டமடிக்கிற”

“க்கூம், அரசனை சுத்தாம, புருஷன சுத்துனு எங்க பாட்டி சொல்லிருக்கு”

“அப்பத்தா கெழவி” எனப் பற்களைக் கடிக்க,

“உனக்குப் பின்னாடி பொறந்ததுகளுக்கு எல்லா கலியாணம் ஆகுது. உனக்கென்ன கேடு? எதாவது வியாதி இருக்கா? சொல்லித் தொலையேன்”

“போயிறுடீ எதாவது சொல்லிடப் போறேன்”

“இல்ல தான! வா ஓடிப்போயிருவோம்”

“அடிங்க” என மிரட்டி அவள் அடுத்து வாயத்திறக்கும் முன், அருகிலிருந்த பிரட் ஹல்வாவை அவள் வாயில் திணித்தான்.

“நல்லா அல்வா கொடுக்குற! உன்ன அப்புறம் பார்த்துகிறேன்” என ஹல்வாவை வாயில் கொதக்கியபடியே பேசிச் சென்றவள், அவளின் உயிர்த்தோழியான மகேஷ்வரியை பார்த்துவிட்டு அவளிடம் விரைந்தாள்.

மகேஷ்வரி அக்னீயின் முதல் தங்கை. 20 வயதான இவளுக்கு, 18 வயது வந்ததும் அந்த ஊரிலேயே உள்ள ராஜசேகருக்கு மணமுடித்து வைத்தார் பாண்டியன். இன்று அவளுக்கு 1 வயதில் ஒரு பையன் இருக்கிறான். முகமுழுவதும் புன்னகையுடன் கணவனருகில் பட்டுபுடவை, நகையென அலங்கார பொம்மைபோல நின்றிருந்தாள்.

பட்டுப் புடவை சரசரக்க, மாலையும் கழுத்துமாக, திருமணக் கோலத்தில் மேடை ஏறிக்கொண்டிருந்தாள் அக்னீயின் இரண்டாம் தங்கை மஹாலட்சுமி. தாய் தகப்பனிடம் ஆசிர்வாதம் வாங்கி மணமேடையில் அமர்ந்தாள் மஹா.

கீழே ஆதித்யன், அக்னீஸ்வரன், அருண் குமரன் மூவரும் ஒன்றுபோல் வேஷ்டி சட்டை அணிந்து, உடன்பிறந்தவளின் திருமணத்தைப் பார்த்துக் கொண்டிருக்க, அருகில் உள்ள ஒரு பெரியவர் அக்னீயிடம்,

“ஏம்பா அக்கினி! அடுத்து உங்கலியாணமா? இல்ல உங்கண்ணனுக்கா? ஆனாலும் கெட்டிக்காரன்யா நீயி! புடிச்சாலும் புடிச்ச புளியங்கொம்பா பாத்து புடிச்சுருக்க! ஓனரு பொண்ணு! கோடில சொத்து! வாழ்வுதே பாண்டியே மவனுக்கு!” என்று கூற திடுக்கிட்டு எழுந்தான் அக்னீ.

எழுந்தவனுக்கு முதலில் தான் எங்கு இருக்கிறோம் எனப் புரியவே சில நொடிகள் தேவைப்பட்டது. அதன் பிறகே தான் கண்டது அனைத்தும் கனவு, தான் இன்னும் கோத்தகிரியில் தான் இருக்கிறோம் எனப் புரிந்தது. தன் தலையில் தட்டியபடி “இது என்ன இப்படியொரு கனவு? அதுவும் அந்த அடங்காப் பிடாரியா? எப்பா! அக்னீ நீ தப்பிச்சடா! அது வெறும் கனவு தான்” எனப் புலம்பிய படியே குளியலறையில் புகுந்தான். அக்கனவை நிஜமாக்க ஒரு குழு அவனைப் பற்றின தகவலைச் சேகரிக்கிறது. அவர்களோடு சேர்ந்து நாமும் சேகரிப்போம் அக்னீயைப் பற்றி.

“அக்னீ 24 வயதான இளைஞன். பள்ளி படிப்பைத் திருமங்கலத்தில் முடித்தவன், மதுரையில் பி.பி.ஏ முடித்தவுடன், சுதாகரின் கம்பெனியில் அவருக்குத் தனி உதவியாளர்(P.A) பதவிக்கான நேர்காணலுக்கு விண்ணப்பித்து, அவனின் தகுதியால் தேர்வாகி அவரிடம் 4 வருடங்களாக வேலையில் இருக்கிறான். கோத்தகிரிக்கு அருகில் கட்டபெட்டு என்னும் கிராமத்தில், இங்கு வந்தபிறகு தனக்கு கிடைத்த நண்பன் ஒருவன் வீட்டு மாடியில் உள்ள, ஒற்றை படுக்கை அறையில் வாடகைக்கு இருக்கிறான்.

தன் தகுதியை வளர்த்து, இன்னும் உயர வேண்டுமெனத் தொலைதூரக் கல்வியில் எம்.பி.ஏ விண்ணப்பித்துப் படிக்க ஆரம்பித்திருக்கிறான். இங்கு வேலைப் பார்த்துக் கொண்டே படித்து, தன் திறமையை வளர்த்துக் கொள்கிறான். மேலும் வங்கி மற்றும் அரசு வேலைக்கான அனைத்து பரீட்சைகளையும் எழுதுகிறான்” இது தான் அக்னீயின் தனிப்பட்ட தகவலாகச் சுதாகருக்கு வந்தது அவரின் குழுவினரிடமிருந்து. சுதாகர் மேலும் அக்னீயின் குடும்பத்தகவலை சேகரிக்கும் பணியில் அவர்களை முடுக்கிவிட்டார்.

“அக்னீயின் குடும்பத்தின் ஆணிவேரே அவனின் அப்பத்தா ராசம்மாள் தாத்தா ஈஸ்வரன் தான். அவர்களுக்கு நான்கு பிள்ளைகள் முதலில் அக்னீயின் தந்தை பாண்டியன் அவருக்குத் தந்தையின் தொழிலான விவசாயமே தொழில். அவரின் மனைவி ஜெயந்தி, அவர்களுக்கு ஐந்து குழந்தைகள் முறையே ஆதித்தன், அக்னீஸ்வரன், மகேஷ்வரி, மஹாலட்சுமி மற்றும் அருண் குமரன்.

அக்னீ பிறக்கும் முன்பே தாத்தா இறந்து விடத் தாத்தாவின் பெயரை அக்னீக்கு வைத்துவிட்டனர். அவனும் தாத்தாவைப் போலக் கம்பீரமானவன். தன் கணவரைப் போலவே அக்னீ அச்சு அசலாக இருப்பதால் அப்பத்தாவுக்கு அக்னீ மீது தனி பிரியம்.

அப்பத்தாவின் இரண்டாவது மகன் செழியன் காவல்துறை அதிகாரி. அவரின் மனைவி கார்த்திகா. மகன் வெற்றி (அக்னீ வயது) மகள் கயல் (அருண் வயது).

மூன்றாவது கங்கா அவரின் கணவர் முத்து, திருமங்கலத்தில் மரக்கடை வைத்துள்ளார். இரு மகள்கள் நந்தினி (மகேஷ்வரி வயது) யாழினி (மஹா வயது).

கடைசி மகள் கெளரி. அவரின் கணவர் சந்தோஷ் இருவரும் பள்ளி ஆசிரியர்கள். காதல் திருமணம் புரிந்தவர்கள், இவர்களுக்கு இரட்டை குழந்தைகள் ஶ்ரீநிதி, ஶ்ரீநிவாஸ் இருவரும் இரண்டாம் வகுப்பு படிக்கிறார்கள்.

அக்னீயின் அண்ணன் ஆதித்யன், வயது 26, கப்பலூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் தற்காலிக வேலை செய்கிறான். சம்பளம் குறைவு தான். நிரந்தர வேலையாக இருந்தால் அதிக சம்பளம் கிடைக்கும். அவனுக்குத் தான் நந்தினியெனச் சிறுவயதிலிருந்தே அப்பத்தா நந்தினியின் மனதில் ஆசையை விதைத்துவிட்டது. ஆனால் வருமானம் குறைவான இடத்தில் பெண்ணைக் கொடுக்க முத்து முன்வரவில்லை.

அக்னீயின் முதல் தங்கை மகேஷ்வரி 12வது முடித்தவுடன் அவளை அந்த ஊரிலேயே உள்ள ராஜசேகர் என்பவருக்கு மணமுடித்து வைத்தார்கள். ஆனால் அவளின் குடும்பம் மொத்தமும் பணப்பேய்கள். என்னேரமும் பாண்டியனிடம் பணம் வசூலிப்பதே அவர்களின் வேலை. இப்போது தனியாக ஒரு தொழிலில் முதலீடு செய்ய வேண்டுமென 10லட்சம் கேட்டுச் சண்டை பிடிக்கின்றனர்.

பொறுத்து பொறுத்து பார்த்த மகேஷ்வரி கணவரிடம் கோபித்துக் கொண்டு அப்பா வீடு வந்து ஒரு மாதம் ஆகிறது. மஹா பனிரெண்டாம் வகுப்பும் அருண் குமரன் பத்தாம் வகுப்பும் படிக்கின்றனர்.” என்ற தகவல் அனைத்தும் சுதாகருக்கு வந்தது. ‘ஆகப் பணத்தை தவிற வேற எந்தப் பிரச்சனையும் இல்லை’ என்பதை மனதில் குறித்துக் கொண்டார் சுதாகர். இந்தத் தகவல்கள் அனைத்தும் அக்னீயின் வாழ்வை எப்படி மாற்றப் போகிறதோ?

மகளுக்கு ஏற்ற மருமகனை தேடும் பணியில் இறங்கிய சுதாகர் மகள் என்ன செய்கிறாளெனக் கண்காணித்திருக்க வேண்டுமோ? அவளோ யாரும் அறியா புதிராய் அல்லவா இருக்கிறாள். என்றும் போல இன்றும் யாரிடமும் சொல்லாமல் எங்குச் சென்றாளென யாருக்கும் தெரியாது. தெரியாது என்பதை விட யாரும் அதைத் தெரிந்து கொள்ளவோ, அறிந்து கொள்ளவோ முற்படவில்லை எனத்தான் கூற வேண்டும்.

கிட்டத்தட்ட 300 கிலோமீட்டர் தூரத்திலிருந்து தகவல் சேகரிக்க தெரிந்தவருக்கு, ஊட்டியில் தன் மகள் எங்கிருக்கிறாள்? என்ன செய்கிறாள்? என்பதை கண்காணிக்க முடியாதா? ஆனால் அவர் விரும்பவில்லை. அவளின் சுகந்திரத்தில் மூக்கை நுழைக்கவும் விரும்பவில்லை.

அதனால் அவள், அவளே ராஜா! அவளே மந்திரி! எனத் தனிக்காட்டு ராணியாக அவள் நாட்களைத் தன் விருப்பம்போல வாழ்கிறாள். கேட்கக் கேட்கப் பணம் கொடுக்கத் தாய் தகப்பன் இருக்கும்போது அவள் எவ்வாறு இருப்பாள்? ஆட்டமும், பாட்டமும், கொண்டாட்டமாகச் செல்கிறது அவளின் வாழ்க்கை.

அக்னீயை பற்றி அவன் பரம்பரையை பற்றியே ஆராய்ந்து தகவல்களைச் சேகரிக்க, இது எதுவும் அறியாத அக்னீ அவரிடமே நாள் முழுவதும் வேலை பார்த்துக்கொண்டிருந்தான். மாலை அனைத்து வேலைகளையும் முடித்து வீட்டுக்குச் சென்றவனை வரவேற்றது அவனின் அண்ணனின் கைபேசியின் அழைப்பொழி.

அக்னீ “சொல்லுடா”

ஆதி “அக்னீ அப்பாவுக்கு முடியலடா. ஆஸ்பத்திரிக்கும் வர மாட்டேங்கிறார்” எனக்கூற அவனுக்குக் கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை.

அக்னீ “என்னாச்சுடா நல்லாதான இருந்தாரு. காலையில கூடப் பேசினேன்”

ஆதி “நல்லாத்தேன் இருக்காரு, ஆனா அடிக்கடி படபடனு வருதுனு சொல்லுறாரு”

அக்னீ “ஏண்டா?”

ஆதி “பிரஷர் கூட இருக்கு போலடா. எல்லாம் இந்த மகி(மகேஷ்வரி) குடும்பம் பண்ற வேலை தான். பாவம் அவருக்கு ரொம்ப கொடச்சல கொடுக்குராய்ங்க”

அக்னீ “அவேன்லாம் ஒரு மனுஷன்னு, அவேனுக்கு பொண்ண கொடுத்தோம் பாரு, வேணும்டா நமக்கு”

ஆதி “அதச்சொல்லு. அப்பவே நான் வேணாமுனு சொன்னேன், கேட்டாரா! வீடு வாசல் இருக்கு, கவர்மெண்ட் பஸ் கண்டெக்டர்னு, கண்ண மூடிக்கிட்டு கட்டி வட்டுச்சார்”

அக்னீ “எல்லாம் நம்ம தப்புத்தேன், அவேன நாலு சாத்து சாத்திவிடுவோன்னாலும் அப்பா விடமாட்றார். காசு கொடுக்காதீங்கனு சொன்னாலும் மக வாழ்க்கனு எப்புட்டு கொடுத்துருக்காரோ தெரியல! சரி நான் வந்தபிறகு எல்லாரும் உக்காந்து பேசி முடிச்சுவிடுவோம் இந்த மகி பஞ்சாயத்த”

ஆதி “அவளுக்கும் இனியனுக்கும் (மகி மகன்) வேற காய்ச்சல். அவய்களையும் இப்ப தான் ஆஸ்பத்திரி கூட்டிட்டு போய்ட்டு வந்தேன்”

அக்னீ “அவேன கட்டிட்டு சீப்படுது இந்தபுள்ள. நான் சாய்ங்காலம் ஐஞ்சு மணிக்குப் பொறப்படுறேன், எப்படியும் அங்கன வர நைட் 2ஆயிரும் திருமங்கலம் பஸ் ஸ்டாண்டு வந்துரு. மதுரையை தாண்டவும் உனக்குப் போனடிக்கிறேன்”

ஆதி “சரிடா, சூதானமா வா”

அக்னீ “சரிடா” எனக்கூறவும் அழைப்பு துண்டிக்கப்பட்டது.

அன்று சனிக்கிழமை காலையிலேயே அக்னீ அலுவலகம் சென்று அவன் முடிக்க வேண்டிய வேலையெல்லாம் முடித்து விட்டு, அவன் திரும்பி வரும் வரை இங்கு என்னென்ன வேலை செய்யனும் என அனைத்தையும் டேவிட்டிடம் கூறிவிட்டு மாலை 4 மணிக்கெல்லாம் சுதாகரிடம் சொல்லிவிட்டு கிளம்பினான்.

வீட்டிற்கு வரும் போதே ஊருக்குச் செல்லும்போது கொண்டு செல்வதற்காகத் தேயிலை, வர்க்கி, தைலம், சாக்லெட் என எல்லாவற்றையும் வாங்கியவன், வீடு வந்து தனக்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் எடுத்துவைத்து கிளம்பிவிட்டான் தன் ஊரைத்தேடி.

கோத்தகிரியிலிருந்து மதுரைக்கு மதியம் 1:15 அல்லது 2:15 க்கு நேரடி பஸ் இருக்கு அதை விட்டால் பஸ் மாறி மாறித்தான் செல்ல வேண்டும். கோத்தகிரியிலிருந்து மேட்டுப்பாளையம் சென்றவன், அங்கிருந்து திருப்பூர் சென்று மதுரை பஸ்ஸை பிடித்தான். ஆரப்பாளையம் வந்து இறங்க இரவு 1:30 ஆகிவிட்டது. அங்கிருந்து திருமங்கலம் பஸ்ஸை பிடித்தவுடன் ஆதித்யனுக்கு அழைத்துச் சொல்லிவிட்டான்.

ஆதித்யன் பஸ் ஸ்டாண்டை வந்தடைய பஸ்ஸூம் வந்தது. அக்னீயை அழைத்துக்கொண்டு ஆதித்யன் அவனின் ஆக்டீவாவில் செல்ல அவனைக் கடந்து சென்றது வெற்றியின் பஜாஜ் பல்சர்.

வெற்றியை இந்த நேரத்தில் காணவும் “டேய் வெற்றி” எனச் சத்தமாக அழைத்தான் ஆதித்யன். நல்லிரவு நிசப்தமான நேரத்தில் ஆதித்யன் அழைத்து நன்றாகவே வெற்றிக்குக் கேட்க வண்டியை ஓரங்கட்டினான் வெற்றி.

வெற்றி “அண்ணே”

ஆதி “என்னடா இந்நேரத்துல சுத்துற”

வெற்றி “இல்லண்ணே, நம்ம சுரேஷு கோயம்புத்தூர்ல இருந்து வரான். பிக்கப் பண்ண வரச் சொன்னான்ணே அதான் பஸ் ஸ்டாண்டுக்கு போறேன்”

ஆதி “சரிடா பாத்து சூதானாமா வா, நாங்க முன்ன போறோம்” எனக்கூறி வண்டியை ஓட்டினான் ஆதித்யன்.

அக்னீ “ஊருக்கு வந்ததும் இவேன் மூஞ்சுல முழிச்சுருக்கேன், போற வரைக்கும் ஒன்னுமே உருப்படாது” என அக்னீ கடுப்பாகக் கூற

ஆதி “உனக்கும் அவேனுக்கும் ஏண்டா ஆகவே மாட்டுது, எப்போவும் முட்டிட்டே திரியுறீங்க, 12 வரைக்கும் ஒன்னாத தானடா படிச்சீங்க”

அக்னீ “ஒன்னா படிச்சோம், ஆனா ஒத்துமையா படிக்கல, அப்போலருந்தே ஆகாது”

ஆதி “என்னமோ போடா! கயல் மேல இருக்குற பாசம் இவேன் மேலயும் வைச்சா என்ன? எதுக்கு நீயும் அவேகிட்ட முறைக்குற? அவேன் தான் முரட்டு பையன், உனக்கென்னடா?”

அக்னீ “செட் ஆகலடா, விடு” எனப் பேசிக்கொண்டே வீட்டை அடைந்தனர் இருவரும். இவர்களுக்காக மொத்த குடும்பமும் காத்திருந்தது. அக்னீ உள்ளே நுழைந்ததும் பண்டியன் ஜெயந்தியிடம்,

“ஜெயா போய்த் தோசை ஊத்துமா” எனக்கூற,

அக்னீ “இல்லமா நான் சாப்டேன், ஏன் எல்லாரும் தூக்கத்த கெடுத்துட்டு உக்காந்திருக்கீங்க? தூங்க வேண்டியது தான? காலையில பாக்கலாம்ல” எனக்கூறியவன், அப்பத்தா படுக்குமிடம் பார்த்து,

“பாத்தீங்களா என் ராசுக்குட்டிய! எவேன் வந்தாயென்ன வரலனாயென்னனு தூக்கத்துக்கு மருவாதி கொடுத்துத் தூங்குறத” எனக் கூறி வம்பிழுக்க,

“எய்யா ராசா! என்னய்யா அப்பத்தாள அப்புடி நினச்சுபுட்ட?” எனப் படுக்கையிலிருந்து எழுந்தார்.

மஹா “கெழவி தூங்கலயா நீயி? காலையில தூக்கமில்ல செரிக்கலனு சொல்லு, அப்புறம் இருக்கு உனக்கு” எனக்கூற,

“அடிப்போடி கூறுகெட்டவளே! யெராசா வரும்போது தூக்கமென்ன வேண்டிகிடக்கு!” என இழுக்க,

“நாங்களும் உன்பேரன் தான்” எனக் கூறினான் அருண் குமரன்.

“உன்னையெல்லாம் பெறவே வேணாமுன்னு இவகிடக்க சொன்னே! கேட்டாளா! இந்தா கேக்குறபாரு கேளுவி” எனக்கூற அப்பாதாவை முறைத்த அருண்.

“அண்ணே போனதுக்கப்புறம் அருணு, அருணு வா, உன் மண்டைய பொலக்குறேன்” எனக்கூற அனைவரும் கலகலத்து சிரிக்க, அப்பத்தா மடியிலயே தலையை வைத்துப்படுத்தான் அக்னீ. அதைப் பார்த்த அருண் ஆதித்யனிடம்,

“யெண்ணே! இந்தக் கெழவி என்னைக்காது நம்மள இப்படி மடியில போட்டுருக்குமா?” எனக்கேட்க,

“எல்லாம் ஈஸ்வரன்ற பேருக்குள்ள மகிமடா! தாத்தேன் பேரு! அதே கெழவி அவேன மட்டும் உருவி உருவி வளக்குது”

“ஒருநாளைக்கு இருக்கு இந்தக் கெழவிக்கு” என அப்பத்தாவிடம் வம்பு செய்துகொண்டே அனைவரும் அந்தப் பழமையான வீட்டில் ஆளுக்கொரு திசையில் படுத்தனர்.
 
Last edited:

Lufa Novels

Moderator

யாரோ அவன்?? யாரோ இவள்??​

அத்தியாயம் 4​

Wz3IhKHfkDZNL-cql6vi0CvoCpX9wRb6mUbCwM4taul9_FNruSyOSfgQtYsnVBMKU1ZqEDp9CnKQjs5KSFmak4wn1S9gKKrWIX-HBSD6S85FFAEjv8OXoT12nqkYuQkXRNWgfjJzen6x1g02fI52sa8



அக்னீயின் வீடு தரைத்தளம் மட்டுமே கொண்ட கிராமத்து வீடு. வீட்டில் முகவாயில் வலது புறம் ஒரு பெரிய திண்ணை, இடது புறம் மாடிக்குச் செல்லும் படிக்கட்டு. இதைத் தாண்டித்தான் வீட்டின் கதவே.

வீட்டில் நுழைந்ததும் ஒரு பெரிய முகப்புக்கூடம் கிட்டத்தட்ட ஒரு சிறிய பார்ட்டிஹால் அளவில் இருக்கும். அதுதான் அந்த வீட்டினரின் டைனிங்ஹால், பெட் ரூம், ப்ளே ரூம், தியேட்டர் எல்லாமே. அதற்கு அடுத்தாக ஒரு ஒற்றைப் படுக்கையறை அதனருகிலேயே பின்னாடி அடுப்படிக்கு செல்லும் பாதை, அது சற்று அகளமாக இருக்க அதில் ஒற்றைப்படுக்கை கட்டிலைப்போட்டு அதை அப்பத்தா ரூம்மாக மாற்றிவிட்டனர்.

அப்பத்தா ரூம் வழியாகச் சென்றால் பெரிய சமையலறை. சமைத்து அங்கேயே அமர்ந்து சாப்பிடும் அளவுக்குப் பெரிய சமையலறை. அதனிலுள்ளேயே தனியாக ஸ்டோர் ரூம் மாதிரி ஒரு குட்டி ரூமும் இருக்கும்.

அதன் பிறகு பெரிய முத்தம் மழைக்காலத்தில் வீட்டிற்கு வெளியவே போகாமல் மழையில் விளையாடலாம். வெயிலில் பொருட்களைக் காயப்போடலாம். வீட்டிற்கு வெளிச்சத்தை கொடுக்கும் பகுதி.

அதைத் தாண்டினால் குளியலறை, கழிப்பறை, கிணற்றடியென எல்லாம் இருக்கும். அதற்கும் பின் பெரிய கொல்லைப்புறம். அதில் வீட்டிற்கு தேவையான சில பல செடிகள், மரங்கள், கொடிகள் என முறையாகப் பராமரித்து வளர்த்து வருகிறார் பாண்டியன். பாரம்பரியமான பெரிய வீடு தான், ஆனால் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த பழமையான வீடு.

இரவு மஹா, மகி இருவரும் இனியனை போட்டுப் படுக்கையறையில் தூங்க, மீதி உள்ள அனைவரும் அவரவர் இருந்த இடத்திலேயே தலையணையை போட்டு அப்படி அப்படியே தூங்கிவிட்டனர். காலையில் எப்போதும் போல முதலில் எழுந்த ஜெயந்தி அவரது அன்றாட வேலைகளைக் கவனிக்க சென்றுவிட, பாண்டியனும் வீட்டிற்கு பின்புறத் தோட்டத்துக்குச் சென்றுவிட்டார்.

அப்பத்தாவும் காலை எழுத்தவுடன் மகனுக்கு உதவியாகத் தோட்டத்துக்குச் சென்று, அன்று வீட்டிற்கு தேவையான பொருட்களைச் செடியிலிருந்து பறித்ததுக் கொண்டிருந்தது. இனியன் அழுது எழும்ப மஹா, மகியும் எழுந்து அவரவர் வேலையைக் கவனிக்க, அண்ணன் தம்பி மூவரும் தூங்கிக் கொண்டிருந்தனர்.

ஜெயந்தி “ஆதி! எழுந்திரிப்பா”

ஆதி “என்னம்மா! ஞாயித்து கெழம தானமா! எதுக்கு உசுப்புற?”

ஜெயந்தி “அதாண்டா உசுப்புனேன்! போய்க் கறி வாங்கிட்டு வா”

ஆதி “அப்பா தான போவாரு, இன்னைக்கென்ன என்ன உசுப்புற?”

ஜெயந்தி “அவருக்கு முடியல, இனிமேல் அவர வேல ஏவாத, என்கிட்ட சொல்லுனு, நேத்திக்கு நீதானடா சொன்ன” எனக் கூறவும் துயில்களைந்து எழுந்து சென்றான் தன்னை சுத்தப்படுத்துவதற்காக.

அப்போது ஆர்ப்பாட்டமாய் வீட்டிற்குள் நுழைந்த நந்தினி, தூங்கிக்கொண்டிருந்த அக்னீ, அருணை பார்த்து, “தடிமாடுகளா! இன்னும் என்னடா ஒறக்கம்? எந்திங்கடா” எனக் கூற,

“அடி எடுபெட்ட சிறுக்கி! யார பார்த்து மருவாதி இல்லாம பேசுற? கொண்ட முடிய புடுச்சு ஆஞ்சு புடுவே ஆமா!” என அப்பத்தா திட்டிக்கொண்டே தோட்டத்துல இருந்து வர அக்னீ, அருண், மஹா, மகி எல்லோரும் வாய மூடிச் சிரித்தனர்.

“எதே! இந்தச் சுண்டானுக்கும் நா மருவாதி கொடுக்கணுமா?” என அருணைக் காட்டிக் கேட்க,

“அது என்னாத்துக்கு? நான் மருவாதி கொடுக்கச் சொன்னது யே ராசாக்கு” என அப்பத்தா கூற,

‘நான் செவனேனு தானடா இருந்தேன், யாரு வம்பு தும்புக்காவது போனேனா? மருவாத மருவாதனு யே மருவாதய நாரடிச்சுட்டீங்களேடா!’ என அருண் மனதிற்குள் புலம்ப,

“நான் ஆதி மாமாவ எத்தன தடவ வாடா, போடானு சொல்லிருக்கேன், அப்பயெல்லாம் இந்த வாய வாடகைக்கு விட்டுருந்தியா அம்மாச்சி?”

“அது உன் உரிமை, நா உள்ளார வரமாட்டேன், ஆனா நீ, யே ராசாவுக்கு மருவாதி கொடுத்துதே ஆவணும். ஆமா சொல்லிபுட்டேன்” என்று கூறிய அப்பத்தா தொடர்ந்து,

“ஆமா! நீ என்னத்துக்குடி விடிஞ்சும் விடியாம இங்கன வந்தவ?” எனக்கேட்க,

“அத்த! கறி எடுக்கப் போகும்போது எங்களுக்கும் ஐநூறுரூவாக்கு கறி எடுத்துட்டு வரச் சொல்லுவீங்களாம். இந்தாங்க காசு” என அப்பத்தாவின் கேள்விக்கு ஜெயந்தியிடம் பதில் கூறினாள் நந்தினி.

“அடியாத்தே! உங்கம்மா ஆட்டுக்கறியெல்லாம் எடுப்பாளா? பாலாப்போன கோழி கறியதான வாங்குவா?” என அப்பத்தா கேட்க,

“அப்பாவோட ஃபிரண்டு யாரோ மதிய சாப்பாட்டுக்கு வாராங்க, அதான்” எனக்கூற,

“விருந்தாளி வரும்போது ஐநூறு ஓவாக்கு கறி எடுத்து, நீங்கயெல்லாம் சட்டிய மோந்து பாக்கவா?” எனக் கூறிய அப்பத்தா ஆதியிடம்,

“ஓரு கிலோவா எடுத்துக் கொண்டு போய்க் கொடுடா. கழுத தின்னுபுட்டு போகட்டும்” எனக்கூற, நந்தினிக்கு கோவம் தான் வந்தது.

“கொடுத்த காசுக்கு மட்டும் வாங்குனா போதும் மாமா. ஊறுகாய தொட்டு கூட நாங்க கஞ்சு குடிப்போம். உங்க காசு எங்களுக்கு வேணாம்” என வெடுக்கென்று கூறிவிட்டு சிட்டாகப் பறந்து விட்டாள்.

அப்பத்தா “சிறுக்கிக்கு கோவத்த பாரு! இப்ப என்னத்த சொல்லிபுட்டேனு இப்படி சிலுப்பிட்டு போறா சிலுப்பட்ட! வரட்டும் அப்புறம் அவளுக்கு வச்சுக்குறேன் கச்சேரி”

ஆதி “நீயும் சும்மாவே இருக்க மாட்டியா அப்பத்தா? அவள என்னதுக்கு வம்பிழுக்குற?”

அப்பத்தா “அப்புறம் என்னடா, அவ அப்பக்காரன் எம்பேரனுக்கு பொண்ணு கொடுக்க இப்புட்டு ரோசிக்கிறான்! ஈத்த பிசிநாரிப்பய. அவேன மாதிரி இருந்தா நாமளும் இன்னும் நாலு இடம் வாங்கிப் போட்டுருக்கலாம்” எனக்கூற,

ஆதி “விடு அப்பத்தா! விதினு ஒன்னு இருக்குல அது படி தான் நடக்கும்” என விரக்தியாகக் கூறிச் சென்றான். போகும் அண்ணனையே வருத்தத்துடன் பார்த்துக்கொண்டிருந்தான் அக்னீ.

‘இந்தக் காதல் மனுஷன என்னெல்லாம் பண்ணுது? எப்படி இருந்த அண்ணன், இப்படி அவமேல கிறுக்கு பிடிச்சு அலையுது. இப்படியொரு உணர்வு நமக்கு ஒருத்தி மேலயும் வரலயே! மேனுஃபேக்சர் டிஃபீட் போல! எனக்கான ஒருத்தி எங்க இருக்காளோ? நானும் அவ மேல பைத்தியமா திரிவேனா?’ என நினைத்துச் சிரித்துக்கொள்ள, அவனுக்கான ஒருத்தியானு தெரியாது, ஆனா அவனைப் பித்துக் கொள்ள வைப்பவளோ அன்னை இல்லத்தில்,

“திருமகனே! திருமகனே!
நீ ஒரு நாழிகைப் பாராய்!
வெண்ணிறப் புரவியில் வந்தவனே!
வேல்விழி மொழிகள் கேளாய்!

அற்றைத் திங்கள் அந்நிலவில்,
கொற்றப் போய்கை ஆடுகையில்,
ஒற்றப்பார்வை பார்த்தவனும் நீயா!

மங்கை மான்விழி அம்புகள்
என் மார் துளைத்ததென்ன!
பாண்டி நாடனைக் கண்டு என்
உடல் பசலை கொண்டதென்ன!

நிலாவிலே பார்த்தவண்ணம்,
கனாவிலே தோன்றும் இன்னும்!
நிலாவிலே பார்த்தவண்ணம்,
கனாவிலே தோன்றும் இன்னும்!
இளைத்தேன்! துடித்தேன்! பொறுக்கவில்லை!
இடையினில் மேகலை இருக்கவில்லை!”

எனப் பாண்டி நாட்டு மன்னன் யாரென்றே தெரியாமல், அவனை எண்ணி உருகி உருகி பாடிக் கொண்டிருந்தாள்.

“அக்னி! அக்னி!” என அக்னியின் நண்பர்கள் அவனைத் தேடி அவன் வீட்டு வாசலில் சத்தமிட்டுக் கொண்டிருந்தார்கள்.

மஹா “என்னங்கடா! இன்னைக்கு தான் எங்கண்ணன் வந்தது, அதுக்குள்ள வந்துடீங்க, உங்களுக்கு வேற சோலியே இல்லையா?” என அக்னீயின் நண்பன் கல்யாணை பார்த்து முறைத்தவாறே கேட்க,

சிவா “உங்க நொண்ணே மட்டும் அண்ணே நாங்க என்ன தக்காளி தொக்கா?” எனக்கேட்க,

மஹா “எங்கண்ணேன் கண்ணியமானவன், உங்கள மாதிரி நண்பன் தங்கச்சிய சைட்டடிக்க மாட்டீயான். உங்களுக்கு இந்த மரியாதையே போதும், எங்கண்ணனுக்கு மட்டும் தெரிஞ்சது” எனக் கல்யாணை பார்த்து முறைத்துக் கொண்டே கூற,

சிவா “எம்மா உடன்பிறப்பே! குதூகலமா இருக்கிற நட்புல கும்மியடிச்சுடாத! எல்லாம் உன்னால தாண்டா” என மஹாவிடம் ஆரம்பித்துக் கல்யாணிடம் முடித்தான்.

கல்யாண் “அப்புடியா? உங்கண்ணன் கிட்ட சொல்லப் போறீயா? பார்த்தா அப்புடி தெரியலயே! நான் வேணா சொல்லவா? உன் தங்கச்சி நோட்டுல என் ஃபோட்டா இருக்கு, என்னானுகேளுணு?” எனக்கூற மஹா நகத்தைக் கடித்து வெட்கத்தை அடக்க,

சிவா “இது எப்படா நடந்தது? அப்போ நான் தான் அவுட்டா?” எனக்கேட்க,

மஹா “எங்கண்ணே வராது, போங்கடா அங்குட்டு” எனக்கூறி வீட்டிற்குள் ஓடினாள்.

கல்யாண் “வாடா! அவேன அப்புறமா வந்து பார்ப்போம்”

சிவா “இப்போ நீ அவேன பாக்க வந்தியா? இல்ல இவள பாக்க வந்தியா?”

கல்யாண் “ம்ம்ம் அது ரகசியம்டி மாப்புள!”

சிவா “சரிதாண்டா! என்னமோ போ, அவனுக்குத் தெரிஞ்சு ஏலரய கூட்டாம இருந்தா செரி”

கல்யாண் “அதெல்லாம் ஒன்னும் ஆவாது”

சிவா “அதெப்படிடா அம்புட்டு திகிரியமா சொல்ற?”

கல்யாண் “அதான் சொல்றோம்ல விடுடா” எனப் பேசிக் கொண்டே சென்றனர்.

உள்ளே சென்ற மஹாவிற்கு வெட்கமும், குற்ற உணர்வும் ஒருசேர வரக் கலங்கிய முகத்துடன் உள்ளே செல்ல,

அக்னீ “மஹா! சிவா சத்தம் கேட்டுச்சு, வந்தானா?” எனக் குளித்து முடித்துத் தலையைத் துவட்டிக் கொண்டே கேட்க,

மஹா “ஆமாண்ணே வந்தாய்ங்க, நீ வர மாட்டனு சொல்லிப் பத்திவிட்டுட்டேன்”

அக்னீ “ஏம்ல! அவனுகள பார்த்தே ரொம்ப நாளாச்சு”

மஹா “ஆமா, நீயே ரொம்ப நாள் கழிச்சு இப்பத்தே வந்துருக்க, அவேங்க உடனே இழுத்துட்டு போயிடுவாய்ங்க, அதே பத்திவிட்டுட்டேன்” எனக்கூற மஹா தலையில் செல்லமாகக் கொட்டிவிட்டு சென்றான் அக்னீ.

அக்னீ வெளியே செல்லப்போக கயல் வீட்டிற்குள் வந்தாள், கைகளில் நாவல் பழத்தோடு.

அக்னீ “கயல் குட்டி எப்படிடா இருக்க?”

கயல் “சூப்பரா இருக்கேண்ணே! இந்தா நவாப்பழம், உனக்குப் பிடிக்கும்ல அதேன் அப்பா வாங்கிட்டு வந்தாங்க”

அக்னீ “சித்தப்பா வாங்கிட்டு வந்துச்சா! நான் கூட உங்கூடபிறந்த கொரங்கு மரத்துல பறிச்சுச்சுனு நினைச்சேன்” எனக்கூற அவளும் கைகளால் வாயை முடி சிரித்தவள்,

கயல் “அந்தக் குரங்குக்கு மரத்துக்கு மரம் தாவத்தான் தெரியும், ஒன்னுத்துக்கும் ஒதவாது” எனக் கூறிச்சிரிக்க,

அருண் “ஓய் வெற்றியண்ணன பத்தி லத்தடிச்ச குட்டச்சி ஒரே மிதி”

கயல் “போடா கொத்தவரங்கா! அந்தக் கொரங்க சொன்னா இந்தக் கொரங்குக்கு கோவம் வருது” எனக்கூறி அக்னீயுடன் ஹைஃபை அடித்துக்கொண்டாள்.

அருண் “வெற்றியண்ணே எனக்குப் பைக்கெல்லாம் ஓட்டக் கத்துக்குடுக்குது, அத லந்த கொடுத்தீங்க காண்டாயிருவேன்” எனக்கூற,

அக்னீ “போடா சொம்புதூக்கி! அவேன் ஒரு ஆளுனு அவேகிட்ட பைக் ஓட்டக் கத்துகிறீயாக்கும், எங்கனயாவது போயி உன்ன மல்லாத்திவிடப் போறீயான் பாரு”

அருண் “போண்ணே! உனக்கும், இந்தக் குட்டச்சிக்கும் வெற்றி அண்ணன கொறை சொல்றதே வேல. இரண்டு பேரும் பட்டறைய போடுங்க, நான் அப்பீட்டாகுறேன்” எனக்கூறி தன் நண்பர்களுடன் சென்றான் அருண்.

ஜெயந்தி “வா கயலு! சாப்புடுறீயா? கறிக்கொழம்பு, இட்லி இருக்கு. உனக்குத்தே புடிக்குமே சாப்புடு” எனக்கூற கயலும் எந்தவித அலட்டலுமின்றி மூன்று இட்லிகளை கறிக்கொழம்புடன் உள்ளே அமுக்கினாள்.

கோத்தகிரியில் திவி வீடே ஒரே சிரிப்பும், கும்மாளமுமாக, பாட்டைச் சத்தமாகப் போட்டுக் குதூகலமா இருந்தது. ‘சண்டே அதுமா கொஞ்சம் தூங்க விடுறாங்களா? ஒரே சத்தம். சைக்’ என மனதில் புலம்பியபடியே எழுந்து குளிக்கச் சென்றார் சுதாகர்.

அவர் குளித்து முடித்து வெளியே வர அங்குச் சுபத்ராவுடன் அமர்ந்து கலகலத்துக் கொண்டிருந்தனர் லீலாவும் அவர் மகன் ராகுலும். அவர்கள் இருவரையும் காணவும், சுதாகருக்கு இரத்த அழுத்தம் தான் எகிறியது. மனைவி உடனிருக்கையில் ஒன்றும் பேசயியலாது, அமைதியாகச் சென்று தொலைக்காட்சி பெட்டியில் செய்திச் சேனலை மாத்தினார்.

அவரின் இச்செயல் பிடிக்கவில்லை என்பதை அப்பட்டமாக முகத்தில் காட்டினர் லீலாவும் அவரின் மகனும், ஆனால் சுதாகரிடம் பேச முடியாமல் மனதிற்குள் அவரை வறுத்துக்கொண்டு, வாய்மொழியாக மட்டும் “அண்ணா நல்லா இருக்கீங்களா?” எனக் கேட்டார் லீலா.

சுதாகரோ செய்தியை மும்மரமாகக் கவனிப்பது போல அவரைத் தவிர்த்தார். அதில் அவமானமாக உணர்ந்து சுபத்ராவை ஒரு பார்வை பார்க்க, சுபத்ரா “சுதா! லீலா கூப்பிடுறா பாருங்க” எனக் கூற,

சுதாகர் “என்ன சுபிமா?”

சுபத்ரா “லீலா நீங்க எப்படி இருக்கீங்கனு கேட்டா?”

சுதாகர் “நல்லா இருக்கேன் மா. இனியும் நல்லா இருக்கனும்னு நினைக்கிறேன்” என முன்னதை சத்தமாகவும் பின்னதை முனங்கலாகவும் கூறினார்.

லீலா சம்பிரதாயத்திற்காகப் பேசியவர் பின்பு அவரைக் கண்டுகொள்ளவில்லை. ராகுல் அதற்காகக் கூட அவரிடம் பேச முற்படவில்லை. இருவரின் பேச்சு முழுவதும் சுபத்ராவிடம் மட்டுமே.

அந்நேரம் வெளியே செல்வதற்காகத் தயாராகி வந்தாள் திவி. வீட்டில் இருப்பவர்களைப் பார்த்ததும் அவள் முகம் அப்பட்டமாக அசூசையை காட்டியது. யாரையும் கண்டுகொள்ளாமல் தகப்பனிடம் வந்தமர்ந்தவள், அவரிடம் மட்டுமே பேசினாள்.

ராகுலும் அவளைத் தன் பக்கம் திசைதிருப்பப் பல முயற்சிகள் செய்தும் பயன் இல்லாமல், தானே அவளிடம் பேச்சைக் கொடுத்தான். ஆனால் அவளோ திருப்பி அவனுக்கு அவளது டிரேட்மார்க் திமிரைத்தான் பரிசளித்தாள்.

அதையும் சட்டை செய்யாமல் மேலும் பேச்சை வளர்க்க அவளது பதில் பேச்சில் முழுக்க முழுக்க ஆணவமும், அகந்தையும் தான் நிறைந்திருந்தது. வார்த்தைக்கு வார்த்தை அவளது பணத்திமிரையும், மமதையும் தான் வெளிப்படுத்தினாள்.

ராகுலோ மனதிற்குள் ‘எல்லாம் பணத்திமிர், உன்ன கழுத்துல தாலிய கட்டி உன்னோட திமிர அடக்கல நான் ராகுல் இல்லடி’ என நினைத்துக் கொண்டான். ஆனால் அவளோ ‘நீயெல்லாம் எனக்கு ஒரு ஆளா? என் கால் செறுப்பாகக் கூட உன்ன மதிக்கமாட்டேன்’ என்னும் விதமாக அவனிடம் நடந்து கொண்டாள்.

இங்கோ கயல் சாப்பிட்டவுடன் அவளுக்காக வாங்கிய டார்க் சாக்லெட்களை அவளிடம் கொடுத்தான் அக்னீ.

கயல் “வாவ்! தங்க்ஸ்ணே!”

அக்னீ “நீ ஒருத்திதே டார்க் சாக்லெட் சாபுடுற நம்ம வீட்டில, மத்தது அப்புட்டும் மில்க் சாக்லெட் தான். அதான் உன்பங்க ஆட்டைய போடாம விட்டு வச்சிருக்காய்ங்க”

கயல் “எம்பங்க எடுத்தாய்ங்க அப்புறம் இருக்கு”

அப்பத்தா “கயலு, எப்ப வந்த? உங்காத்தா என்ன பண்றா?”

கயல் “சமைக்குது அப்பத்தா”

அப்பத்தா “ஆமா அண்டாகட்டி ஆக்குறா! சோத்தமட்டும் வடிச்சுபுட்டு, அவேண்ட வெஞ்சனத்துக்கு கடைல வாங்கிட்டு வரச் சொல்லுவா! ஊருல இல்லாத சிறுக்கினு இவள கட்டிவச்சதுக்கு எம்மவே கடசாப்பாடா திண்ணு உடம்ப கொடுத்துகிறீயான்”

கயல் “உந்தம்பி மவ தான, நீயே போய்ச் சொல்றது”

அப்பத்தா “எதுக்குடியம்மா! ஊருல போற மாரியாத்தா எம்மேல ஏறாத்தான கதையா, என்ன விட்டுபோட்டு எம்மவனே ஏறுவா உக்காத்தாகாரி”

கயல் “உம்மருமக உன்ன போலத்தானே அப்பத்தா இருக்கும்” எனக்கூறியவள் ஒரே ஓட்டமாக ஓடிவிட்டாள்.

அப்பத்தா “கத்திரிக்காய்க்கு கைக்கால் மொளச்ச மாதிரி இருந்துட்டு என்னா பேச்சு பேசுறா! வரட்டும் அவ நாக்க இழுத்து அம்மில தேய்க்கிறேன்”

அக்னீ “விடு ராசுக்குட்டி! எதுக்கு கோவப்படுற, கயலு உண்மையத்தான சொன்னா விடு” எனக் கூறிச்சிரிக்க

அப்பத்தா “போ ராசா! அந்தக் கழுதைகளோடு சேர்ந்து நீயும் லந்தக்குடுக்குற”

அக்னீ “சரி சரி ராசுக்குட்டி! போனவாரம் தைலம் கேட்டில வாங்கிட்டு வந்தேன். இந்தா” எனப் பாட்டி தேவையான, பாட்டி வாயடைக்கூடிய பொருளை நீட்டவும், மற்றது மறந்து தைலத்துடன் ஐக்கியமானது அப்பத்தா.

இப்படி கலகலப்பான குடும்பத்தில், அக்னீ மாலையிடப் போகும் பெண்ணால் வரப்போகும் மாற்றம் என்னவோ!
 

Lufa Novels

Moderator

யாரோ அவன்?? யாரோ இவள்??​

அத்தியாயம் 5​


gc2GzNuOby0-2Uj9iLXinJ8eqTKLNJnx6RJOC1-NEat_StRz-BtnQXHpltp-ewgDz1BYtJE1tULQ7eEsv2MO07Ve8FCsfMppHGjQrMlbd38gI_vgtHsv-xrCtBJKp1OVlNCPhjeY38u4xwY693mYO7s

அக்னீ கோத்தகிரிக்கு திரும்பி ஒருவாரம் ஆயிற்று. இன்று அவன் கணக்குகளைச் சரிபார்த்துக் கொண்டிருந்தான். அதில் சாக்லெட் வரவு செலவில் மட்டும் இருபத்தைந்தாயிரம் ரூபாய் குறைவாக இருக்கவும், கணக்காளரிடம் விசாரிக்க அவருக்கு அலைபேசியில் தொடர்பு கொண்டான்.

கணக்காளர் “ஹலோ”

அக்னீ “வணக்கம் சார், நான் அக்னீ. இப்போ தான் அக்கவுண்ட்ஸ் பார்த்தேன், அக்கவுண்ட்ல டுவண்டிஃபைவ் தவுஸண்ஸ் ஸாட்டேஜ் ஆகுது”

கணக்காளர் “இல்லையே சார். சரியாத்தான் இருந்தது”

அக்னீ “இப்போ தான் பார்த்தேன், ஆனா கணக்கு இடிக்கிது சார்”

கணக்காளர் “சார், உங்களுக்கு இப்போ ஒரு ஸ்டேட்மெண்ட் அனுப்பிருக்கேன் பாருங்க, அதுல கரெக்டா தான் இருக்கு. செக் பண்ணிட்டு சொல்லுங்க”

அக்னீ “ஒகே சார். பார்த்துட்டு சொல்றேன்”

அவர் அனுப்பிய கணக்கைப் பார்த்தபோது கணக்கு சரியாக இருந்தது. அப்போ தன்னிடம் உள்ள கணக்கில் என்ன விடுபட்டிருக்கு என ஆராய்ந்தபோது அவரின் லெஜ்ஜரில் திவிமேடம் என்று எழுதி அதில் இருபத்தைந்தாயிரம் ரூபாய் கிரிடிட் பண்ணியிருந்தது, இவனுக்கு வந்ததில் அது விடுபட்டிருந்தது.

‘என்ன புதுசா இப்போ அக்கெண்ட்டில அவங்க பேர் போட்டுக் கிரிடிட் பண்ணிருக்காங்க? எப்பவும் நான் தான அவங்களுக்கு செக் எழுதிக் கொடுப்பேன். இப்படியெல்லாம் கணக்கில் பெயர் வராதே’ என நினைத்தவன் மீண்டும் கணக்காளரை நாடினான்.

கணக்காளர் “ஹலோ அக்னீ சார். பார்த்துடிங்களா?”

அக்னீ “ஹ்ம்ம் பார்த்துட்டேன் சார். திவிமேடம்னு போட்டு டுவண்டிஃபைவ் தவுஸண்ஸ் கிரிடிட் பண்ணிருக்கீங்க, பட் எனக்குக் கொடுத்த சப்-லெஜ்ஜரில் அது மிஸ்ஸிங். இப்போ ஆட் பண்ணிட்டேன்”

கணக்காளர் “அச்சோ ஸாரி சார். அது பிரீவியஸ்ஸா போட்ட லெஜ்ஜர் மாத்தி செண்ட் பண்ணிட்டேன் போல. ரியலி ஸாரி”

அக்னீ “இட்ஸ் ஒகே சார். பட் எதுக்கு அவங்க பேர போட்டுக் கிரிடிட் பண்ணிருக்கீங்க?”

கணக்காளர் “சார், அது மேடம் பார்ட்டிக்குனு சொல்லி ஊட்டிக் கடையிலிருந்து டுவண்டிஃபைவ் தவுஸண்ஸ் ரூபீஸ்க்கு ஹோம்மேட் சாக்லெட்ஸ் வாங்கிருக்காங்க, அத அக்கவுண்ட்ஸ்ல எழுதிக்கோனு சொல்லிட்டாங்க, ஸார் கிட்ட கேட்டேன் அவர் மேடம் பேர போட்டுக் கிரிடிட் பண்ணி அக்கவுண்ஸ்ஸ முடிக்கச் சொல்லிட்டாங்க. உங்களுக்கு அனுப்பினது அந்த ஃபைல் தான். அதுக்கு அப்புறம் தான் சேஞ் பண்ணினேன்”

அக்னீ “ஓகே சார்” எனப் போனை வைத்தவனுக்கு அவ்வளவு ஆத்திரமாக வந்தது திவி மேல. ‘ஒரு பொண்ணு எவ்வளவு செலவு செய்யுறது? பணமிருக்கு என்றால் எப்படி வேணாலும் இருக்கலாமா? எப்போ பாரு பார்ட்டி, கிளப். இன்னொரு வீட்டுக்கு வாழப்போற பொண்ணு இப்படி ஊதாரியா இருந்தா குடும்பம் எப்படி உருப்படும்?

அது சரி, தாய போலப் பிள்ள நூல போலச் சேலனு சும்மாவா சொன்னாங்க? அம்மாவும், பொண்ணும் இப்படி செலவழிக்க, இந்த மனுஷன் மாடா உழைக்கிறான்’ எனத் திவாகரை எண்ணி வருந்தியவனுக்கு அம்மா, மகள்மீது அவ்வளவு கோபம்.

‘யாரு என்ன பண்ணா எனக்கென்ன? எனக்கேன் இவர்கள் செலவு செய்வது இவ்வளவு எரிச்சலை கொடுக்குது? பணமிருப்பவர்கள் செலவு செய்கிறார்கள் எனக்கு என்ன வந்தது’ என நினைக்க அவன் மனம் அதற்கான காரணத்தை ஞாபகப்படுத்தியது.

தன் குடும்பம் இந்தப் பணப்பற்றாக்குறையால் பல இன்னல்களைச் சந்திக்க, இப்படி இருக்கும் பணத்தை வீண்விரயம் செய்பவர்களைப் பார்க்கும்போது அவனது இயலாமை எரிச்சலாக வெளிப்படுகிறது. ஆம், தற்போது அக்னீயின் குடும்பம் பொருளாதார சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளது. அவன் மனது ஒருவாரத்திற்கு முன் பயணப்பட்டது.

அக்னீ ஊரில் இருக்கும்போது ஒருநாள் மதிய உணவிற்கு பிறகு குடும்பம் மொத்தமும் ஒன்றாகக் கூடியிருந்தது. அப்போது அக்னீ ஆரம்பித்தான்.

அக்னீ “அப்பா! உங்களுக்கு உடம்புக்கு என்ன பண்ணுது? அடிக்கடி படபடனு வருதுனு அண்ணே சொல்றான், என்ன செய்யுதுபா?”

பாண்டியன் “ஒன்னுமில்லடா காலம்பெற பிரசர் மாத்திரை போட மறந்திருப்பேன். அதான் வேறொன்னுமில்ல”

அக்னீ “என்னப்பா? இதெல்லாம் மறத்துகிட்டு, உடம்ப பாத்திக்கோங்கப்பா”

பாண்டியன் “ஹ்ம்ம் உங்களுக்கெல்லாம் ஒரு நல்லது கெட்டது பண்ணல, ஒருத்திய தான் கரையேத்திருக்கே, அதுக்கே முழிபிதுங்குது. முன்ன மாதிரி வேலையும் பாக்கமுடியிதில்ல”

ஆதி “உடம்ப வருத்திக்கிடாதீங்கபா! நாங்க பாத்துக்குறோம். முடிஞ்சா பாருங்க இல்லனா விட்டுறுங்க”

பாண்டியன் “நானும் சும்மா இருந்தா குடும்பம் ஓடனுமே!”

ஆதி “கட்சிக்காரர் ஒருத்தர்கிட்ட சொல்லிருக்கேன்பா, பெர்மனண்ட் வேலைக்குச் சிபாரிசுக்கு. எப்படியும் இந்தத் தடவை கிடைச்சிடும். அப்போ சம்பளமும் ஜாஸ்தியாயிடும்”

அக்னீ “என் வேலைக்கு இப்பவே அதிக சம்பளம் தான் கொடுக்குறாரு எங்க முதலாளி, இதுக்கு மேலயும் கேட்க முடியாது. இந்தத் தடவ பேங்க் எக்ஸாமும் நல்லாத்தான் எழுதியிருக்கேன், அது கிடைக்கனும்னு குலசாமிக்கிட்ட வேண்டிக்கோங்க. நானும் அண்ணனும் வீட்ட பாத்துக்கிறோம் நீங்க ரெஸ்ட் எடுங்கப்பா”

அப்பத்தா “ஏல எண்ணா நடக்குது இங்க?”

அக்னீ “வீட்டு பிரச்சனை தான் அப்பத்தா”

அப்பத்தா “அதாம்ல ஏன் பெரசனை? பாண்டியா நீ சொல்லு”

பாண்டியன் “இல்லமா அது வந்து”

அப்பத்தா “என்னப்பா இழுக்குற” எனக் கேட்கப் பாண்டியன் ஒன்றும் பேசாமல் தலைகுணிந்த படியிருக்க,

அப்பத்தா “வயலுல நல்ல வெளைச்சலு, தென்னந்தோப்பு குத்தகை காசு வந்திருக்கும், கடைவாடகை வந்திருக்கும், இவேங்க இரண்டு பேரு சம்பளமும் வந்திருக்கும், அப்புறம் என்னத்துக்கு பத்தாகொற வருது?” இப்பவும் பாண்டியன் மெளனம் சாதிக்க,

மகி “எல்லாம் என்னாலதான்” என முகத்தை மூடி அழுதாள். அனைவரும் அவளை திரும்பிப் பார்க்க அக்னீ எதிர்பார்த்த பூனைக்குட்டி வெளியே வந்தது.

அப்பத்தா “என்னடி சொல்றவ, உருப்படியா சொல்லு”

மகி “என் குடும்பம் மொத்தமும் அப்பா இரத்தத்த உறியுது. கட்டிக் கொடுத்துல இருந்து அது இதுனு வாராவாரம் எதாவது காரணம் சொல்லி எவ்வீட்டாளுங்க அப்பாகிட்ட காச பறிச்சாய்ங்க. மாசமானப்போ வளைகாப்புக்கு ரெண்டுலட்சம் தந்தாதான் பேறுகாலத்துக்கு விடுவோம், இல்லானா விட மாட்டோம்னு பிரச்சனை பண்ணி அந்தத் தடவ நெல்லுக்காச ஆட்டைய போட்டுட்டாய்ங்க. அதுவும் போக இனியனுக்கு மொட்ட, காதுகுத்துனு அப்பாகிட்ட இருந்து பணமா வாங்குறாய்ங்க.

ரெண்டு மாசத்துக்கு மின்னாடி எம்புருஷன் வேலையில இருக்கும்போது, பணத்தை கையாடல் பண்ணி பிடிபட்டுட்டான். அது போலீஸ் கேஸாசி, உள்ளபோயி, அப்பாவும், சித்தப்பாவும் தான் யாருக்கும் தெரியாமல் தோப்பு குத்தகைகாச வச்சு வெளியே கொண்டுவந்து அப்புட்டு கடனையும் அடைச்சாங்க.

அத திருப்பிகேட்க உம்மருமகன தான வெளியே கொண்டுவந்த, திருப்பியெல்லாம் தரமுடியாதுனு எம்மாமியாக்காரி வியாக்கானம் பேசுறா. போலீஸ் கேஸானதுல இப்போ வேலையும் போச்சு” என்றவள் தலையிலடித்து அழுது மேலும் தொடந்தாள்.

“வேல போயிடுச்சுனு தொழில் தொடங்க பத்துலட்சம் வேணுமுன்னு அப்பாகிட்ட வாங்கிட்டு வரசொல்லி இராவும் பகலும் என்ன அறியா அறிக்கிறீயான். அதான் போடா நீயும் உன்வாழ்க்கையுமுனு வந்துட்டேன்” எனக்கூறி அழுதவள், அவள் மாமியார் கொடுமைகளையும் முதன்முறையாகப் பிறந்தவீட்டினரிடம் கூறினாள்.

அனைவருக்கும் என்னடா இது கிணறு வெட்டப் பூதம் கிளம்பின கதையா இருக்குனு தான் தோன்றிருக்கும். பாண்டியன் மகன்கள் மூவரும், மகியின் கணவன் மேலும், அவன் வீட்டர்கள் மேலும், அவ்வளவு கோபத்திலிருந்தனர். ஜெயந்தியும், மஹாவும் மகியை கட்டிப்பிடித்து அழ, அப்பத்தா முந்தானையை இழுத்து சொறுகி சண்டைக்கு ரெடியானது.

அப்பத்தா “எந்திரிடி இவளே! அந்தச் சீமசித்தராங்கி இப்பூட்டு கொடுமபடுத்திருக்கா அப்பூட்டையுமா சகிச்சுகிட்ட? நாங்களாம் என்ன செத்தாபோயிட்டோம்? இல்ல கட்டிக்கொடுத்ததும் அவ்வளவுதானு தலமுழுகுறவங்களா? இன்னைக்கு உம்மாமியாக்காரிய நாரடிக்கல நான் ராசம்மா இல்லடி. வயசாயிடுச்சு வீட்டுல மொடங்கிட்டானு, வாயில்லாப்பூச்சிக்கு நாதியில்லனு நினைச்சுட்டாளா? வாடி எங்கூட” எனப் பேத்தியை இழுத்துக்கொண்டு சென்றது.

அங்கு மகிவீட்டில் அப்பத்தா கம்பீரமாக நுழைய அப்பத்தாக்கு அரணாக, நான்முக சிங்கமாக, நான்கு பேரன்களும் நின்றனர் வெற்றியும் சேர்ந்து. பாண்டியன் செழியனுக்கு தகவல் சொல்லிவிட்டு வந்தார், அதற்குள் அப்பத்தா அங்குள்ள ஆட்களை எல்லாம் வார்த்தையால் சுழற்றியடித்தது. பேத்தியின் வாழ்வுக்காகக் கிழட்டு பெண் சிங்கமாய் கர்ஜித்தது, யாராலும் எதிர்த்து வாயாட முடியவில்லை.

கடைசியாக “கொமறுனு இல்லாம வாக்கப்பட்டாச்சு, மலடுனு இல்லாம புள்ளய பெத்தாச்சு! இனி எம்பேத்தியா இங்கன வரமாட்டா. அவபுருஷன் தப்பை உணந்து, பொஞ்சாதி வேணுமுனு நினைச்சா, அவே வரட்டும். அதுவரை எம்பேத்தியாளுக்கு நாங்க இருக்கோம், அவே வரலனாலும் எங்களுக்கு அவேன எப்படி வரவைக்கனுமுனு தெரியும்” என்றவர் பேத்தியை அழைத்துக்கொண்டு வீடு திரும்பினார்.

அன்றைக்கு நடந்ததை நினைத்தால் இன்றைக்கும் அக்னீக்கு சிலிர்க்கும். தன் அப்பத்தாவின் கம்பீரம் என்றைக்கும் போல இன்றைக்கும் அவனுக்கு வியப்பைத்தரும். இந்த வருடம் மஹாவும் பன்னிரெண்டாம் வகுப்பு முடிப்பதால், அவளைக் கல்லூரியில் சேர்க்க வேண்டும், அருண் பத்து முடிப்பதால் அவனையும் வேறு நல்ல பள்ளியில் சேர்க்க வேண்டும்.

பல பொறுப்புகள் தலைமேல் உள்ளதை அக்னீயும் உணர்ந்து தான் இருக்கிறான். அதனால் தானோ என்னவோ, அம்மாவும் மகளும் செய்யும் வீண்விரயத்தைப் பார்க்கும்போது அவனுக்கு அவனையும் மீறிக் கோபம் வருகிறது.

அக்னீ அவனறையில் அமர்ந்து அவனது வேலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தான். திவாகரின் முக்கால்வாசி வேலையை அக்னீயே முடித்துவிடுவான், அவருக்குக் கையொப்பமிடும் வேலைமட்டுமே இருக்கும். எந்தப் பிழைகளும் இல்லாமல் அவர் பார்வைக்கு வரும் ஃபைல்களை அவனே முழுவதும் சரிசெய்து விடுவான். அன்றும் அதுபோலப் பார்க்கும் போது பங்குதாரர் கையெப்பமிடும் இடத்தில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் திவியின் கையெப்பம் விடுபட்டிருந்தது.

ஒரு சைன் ஒழுங்கா பண்ணத் தெரியல, என்னத்த படிச்சு மண்ணள்ளிப் போட்டாளோ! ஆட்டம் பாட்டத்துக்கு மட்டும் தான் லாயக்கு. இவளுக்கு இம்பூட்டு சொத்து! அத கணக்கா பாக்கவாது தெரியுமா இவளுக்கு?’ ஏனென்றே தெரியாமல் திவி மீது அவனுக்கு எரிச்சல் தான் வந்தது. திவியின் கையெழுத்து விஷயமாகத் திவாகரை அழைத்தான் அக்னீ.

திவாகர் “ஹலோ சொல்லு அக்னீ”

அக்னீ “சார்! ஷேர் ஹோல்டர் ஸிக்னேசர் பிளேஸ்ல ஒரு இடத்தில மட்டும் திவிமேடம் ஸைன் மிஸ்ஸிங் சார்”

திவாகர் “ஓ அப்படியா! சரி அக்னீ, திவிய ஆபீஸ் வரச் சொல்றேன். ஸைன் வாங்கிக்கோ”

அக்னீ “ஓகே சார்” என அழைப்பை அணைத்தான்.

திவாகருக்கு அந்தப் பேப்பர்ஸ் எவ்வளவு அவசரமாகத் தேவை என்பது தெரியுமாதலால், உடனடியாகத் திவிக்கு அழைத்தார்.

“ஹலோ டாட்”

“குட்டிமா! உன்னோட ஸைன் ஒன்னு அவசரமா தேவைப்படுது, ஆபீஸ்க்கு போய்ப் போட்டுறுமா”

“என்ன டேட் விளையாடுறீங்களா? நான் இப்போ கோத்தகிரியில இல்ல. தள்ளி இருக்கேன். உடனேலாம் போக முடியாது. நாளைக்கு காலையில வாங்கிக்க சொல்லுங்க”

“இல்லடா குட்டிமா! அவசரமா தேவை. இல்லனா அப்பா உன்ன டிஸ்டர்ப் பண்ணுவேனா?”

“என்ன வேல பாக்குறான் உங்க பி.ஏ? லாஸ்ட் மினிட்ல தான் ஸைன் வாங்குவானா? முன்னாடி என்ன பண்ணான்? வாங்குற சம்பளத்து ஒழுங்கா வேலை பார்க்க முடியாதாமா?” எனக்கேட்க சிரித்தவர்,

“அவன் கரெக்டா தான் வேல பாக்குறான், உன்கிட்ட ஸைன் முன்னாடியே வாங்கிட்டான், ஆனா நீதான் அதுல ஒரு இடத்தில மட்டும் போட மறந்துட்ட” எனக்கூற கொஞ்சம் கூடத் தடுமாற்றமின்றி சரளமாக,

“நான் போடலனா அது என்னோட மிஸ்டேக் இல்ல டேட், அத சரியா செக் பண்ணாம போனான் பாருங்க அவனோட மிஸ்டேக்”

“சரிடா ஏதோ தப்பு நடந்துபோச்சு, இப்போ ஆபீஸ் போடாமா பீளீஸ், அப்பாகாக”

“நோ வே. நான் இப்போ குன்னூரில வெலிங்டன் கிளப்ல இருக்கேன் டாட். அவசரம்னா அவன வந்து வாங்கிக்க சொல்லுங்க”

“சரிடா நான் அவன வந்து வாங்கிக்க சொல்றேன்”

“ஓகே டாட். அவன செக்கூரிட்டி கிட்ட இன்பார்ம் பண்ண சொல்லுங்க, நான் போய்ப் போட்டுக்குடுக்குறேன்”

“சரிடா குட்டிம்மா” என அழைப்பைத் துண்டிட்டதவர், அதை அப்படியே அக்னீயிடம் கூறினார்.

அக்னீக்கோ ஆத்திரமாக வந்தது. ‘ஏன் இங்க வந்து போடமாட்டாங்களோ மேடம்! இதே, பணம் வேணுமுனா மட்டும், இங்க விடிஞ்சும் விடியாமலும் வருவா! கிளப்’ல தண்ணிய போட்டுட்டு தள்ளாடிட்டு இருப்பா, அதா மேடமுக்கு வரமுடியல. சீ என்ன பழக்கமோ!’ என நினைத்தவன், அவளை மனதிற்குள் வறுத்துக்கொண்டே அவளிருக்குமிடம் சென்றான்.

கிளப்பிற்கு வந்தவன், செக்கூரிட்டியிடம் அவளை அழைக்குமாறு கூறி, வெயிட்டிங் பிளேஸில் காத்திருந்தான்.

‘எவ்வளவு நேரம் ஆகுது? அப்படி என்ன தான் பண்றாளோ? எல்லாம் பணத்திமிரு! இவள கட்டிக்க போறவன் என்னாப்பாடு படப் போறானோ! இவளுக்கெல்லாம் அந்த ராகுல் தான் கரெக்ட்டு. அவன கட்டினாதேன் இவ கொட்டமடங்கும்’ என அவளை மனதிற்குள் அவ்வளவு அர்ச்சனை செய்துகொண்டிருந்தான்.

முட்டிக்குச் சற்று கீழிறங்கிய கேப்ரீ பேண்ட்டும், டீசர்ட்டும் போட்டு, முடியைப் போனிடெயில் போட்டு அளவான ஒப்பனையுடன் டீசெண்ட்டாகத் தான் வந்தாள். ஆனால் அக்னீ இருந்த கோபத்திற்கு அதுவும் தப்பாகத் தான் பட்டது. ‘ஆளும் டிரெஸ்ஸும் பாரு, வயசுபொண்ணு மாதிரியா டிரெஸ் பண்றா? சினிமா ஹீரேயின் மாதிரி தான் போடுறது’ என அவளின் உடையைக்கூட தவறாகத்தான் நினைத்தான்.

வந்தவளும் கையெழுத்து போட்டுவிட்டு “ஒழுங்கா செக் பண்ணக்கூட முடியாதா? ரெடிகுலஸ்” என அவனைத் திட்டிவிட்டு சென்றாள்.

இருவரும் எதிரும் புதிருமாக இருக்க, இவர்களைச் சேர்க்க நினைக்கும் சுதாகரின் முயற்சி கைக்கூடுமா?
 

Lufa Novels

Moderator

யாரோ அவன்?? யாரோ இவள்??​

அத்தியாயம் 6​

8-51Td1z5hXk4rgxGB2B5XOgMQqQqfEKReMgKqNRDWNSeyvr54upXFrnSXMxGkjcNsUpZlhwuh-E8o3zcQqcrcU9NxmJ2io51XHHaQ3deMn8M-ztIcIopacZiHR8WXiJ0MSPdyZf3isfqSWLjMxPLzE



அழகே! அழகே! எதுவும் அழகே!
அன்பின் விழியில் எல்லாம் அழகே!
மழை மட்டுமா அழகு? சுடும் வெயில் கூட ஒரு அழகு!
மலர் மட்டுமா அழகு? விழும் இலை கூட ஒரு அழகு!
புன்னகை வீசிடும் பார்வைகள் அழகு!
வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு!
நன்மைக்குச் சொல்லிடும் பொய்களும் அழகு!
உண்மையில் அதுதான் மெய்யாய் அழகு!
கமதனிச ரிரிச
கமதனிச கரிச

குயில் இசை அது பாடிட, ஸ்வர வரிசைகள் தேவையா?
மயில் நடனங்கள் ஆடிட, ஜதி ஒலிகளும் தேவையா?
நதி நடந்து சென்றிட, வழி துணை தான் தேவையா?
கடல் அலை அது பேசிட, மொழி இலக்கணம் தேவையா?
இயற்கையோடு இணைந்தால், உலகம் முழுதும் அழகு!
கவலை யாவும் மறந்தால், இந்த வாழ்க்கை முழுதும் அழகு!
கமதனிச ரிரிச
அழகே! அழகே! எதுவும் அழகே!

என அன்னை இல்லத்து அழகே அழகைப் பற்றி அழகாய் பாடிக்கொண்டிருந்தது, அதன் அழகில் அங்குள்ளவர்கள் அழகுக்கு கட்டுப்பட்டது போல அழகாய் ரசித்துக்கொண்டிருந்தனர்.

மீனா சிறுவயதிலிருந்தே பாட்டு, பரதம் எல்லாம் கற்றவள். உண்மையிலுமே அவள் பாடல் குயில் இசை போலவும், அவள் நடனம் மயில் நடனம் போலவும் தான் இருக்கும். அதன் அழகு பார்ப்பவர்களின் கண்களையும், மனதையும் கவரும். கண்மூடி ரசித்தால் அவள் குரல் மனதின் அடியாழத்தை தொடும்.

கண்களை மூடி அவள் பாடுவதை ரசித்துக் கொண்டிருந்தனர் அங்குள்ள பெரியர்கள். சிறுவர்கள் அவள் பாடுவதை வாய்பிளந்து பார்த்துக்கொண்டிருந்தனர். அவள் பாடி முடித்துச் சிறுவர்களின் கரகோசை எழுந்த பின்பும் கூடப் பெரியவர்கள் அவள் குரலிலேயே மெய்மறந்து அமர்ந்திருந்தனர்.

அவள் பாடி முடித்ததும், சிறுவர்கள் அவர்களின் நாயகியை இழுத்துக்கொண்டு அவர்களின் ஆஸ்தான இடமான விளையாட்டு மைதானத்துக்கு இழுத்துச் சென்றனர். அங்கு அனைவருடனும் விளையாடிக் களைத்து அனைவரையும் அமர்த்தித் தானும் அமர்ந்து கதைகளைக் கூற ஆரம்பித்தாள்.

வானத்து தேவதைகள் இறக்கையோடு, வெள்ளை நிற உடையணிந்து கைகளை ஆட்டி ஆட்டிக் கதை சொல்வது போலத்தான் இருந்தது, அவள் கதை சொல்லும்போது. குழந்தைகளுக்காகத் தான் வாங்கிவந்த சாக்லெட்களை கொடுத்து, அவர்கள் மகிழ்ச்சியில் தானும் மகிழ்ந்தாள் மீனா.

அங்குள்ள அனைவரும் சிம்ம சொப்பனமாகவே திகழ்ந்தாள் மீனா. அவளைக் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்த கிருஷ்ணன், ‘இன்னைக்கு இல்ல என்னைக்குமே என்பொண்ணு எனக்குத் தேவதையாவே தான் தெரியுறா. மாலினி கிட்ட சொல்லி இன்னைக்கு சுத்தி போடச் சொல்லனும்’ என நினைத்தார்.

அவர் நினைத்த மறுநொடியே, அங்குள்ள வள்ளியம்மா வந்து அவர் நினைத்ததை நிறைவேற்றினார்.

மீனா “என்ன வள்ளியம்மா? இதெல்லாம்?”

“இல்ல கண்ணு, என் கண்ணே இன்னைக்கு உனக்குப் பட்டுறுக்குமோனு இருந்தது. அதான் உனக்கு ஒன்னுமாகக் கூடாதுல. நீ சந்தோஷமா பல வருஷம், புள்ள குட்டியோடு வாழனும்” எனக்கூற வாய்விட்டுச் சிரித்த மீனா,

“எனக்குக் கல்யாணமே ஆகல, அதுக்குள்ள நீங்க என் பிள்ள வரை போய்ட்டீங்க, ரொம்ப ஃபாஸ்ட் வள்ளியம்மா நீங்க”

“என் வாய் முகூர்த்தம் பலிக்குதா, இல்லையானு பாரு. இந்த வருஷம் தனியா இருக்க நீ, அடுத்த வருஷம் உன் மனசுக்கு பிடிச்சவனோட இங்க இருப்ப பாரு”

“மனசுக்கு பிடிச்சவனா? இவ்ளோ நாளா இல்லாம இப்போ தான் பிடிக்கப் போகுதா? அதெல்லாம் இல்ல வள்ளியம்மா, இன்னும் கொஞ்ச நாளைக்கு உங்களோட எல்லாம் சந்தோஷமா இருக்கனும் வேற எதிலயும் நான் மாட்ட விரும்பல”

“அப்படியெல்லாம் சொல்லாத கண்ணு, உன்ன புருஷன், புள்ளைகளோடு பாக்கனும் தான் நாங்க இன்னும் உசுரோடயே இருக்குகோம்”

“பெரிய வார்த்தையெல்லாம் எல்லம் சொல்லாதீங்க வள்ளியம்மா. நான் கல்யாணம் பண்றதுல தான் உங்களுக்கு எல்லாம் சந்தோஷம்னா நான் கண்டிப்பா பண்ணிப்பேன். ஆனால்” என அவள்கூற தூரத்திலிருந்த கிருஷ்ணனின் கண்களில் ஒளி வீசியது.

“ஆனால்? என்ன ஆனால்? கண்ணாலம் கட்டிப்பேனு நீ சொன்னதே போதும்”

“சொல்றத முழுசா கேளுங்க வள்ளியம்மா. ஆனால் கொஞ்ச நாள் கழிச்சு. எங்கள போலவே இந்த அன்னை இல்லத்த விரும்புற ஒருத்தன் கூடத்தான் என் கல்யாணம் நடக்கும்”

“அதெல்லாம் எங்க ராணிக்கு வர ராசா, சொக்கத்தங்கமா தான் இருப்பாரு, எங்க ராணிய தலைமேல வச்சுத்தான் தாங்குவாரு”

“அட போங்க வள்ளியம்மா, என்னையே நீங்க வெட்கப்பட வைக்கிறீங்க, நான் போறேன்” எனக்கூறி தகப்பன் இருக்குமிடம் சென்றாள்.

மகள் தன்னை நோக்கி வருவதைக் கண்ட கிருஷ்ணன், பார்வையை அவளிடமிருந்து திருப்பி இங்கு நடந்ததை கவணிக்காது போலத் தன் வேலையைப் பார்க்க ஆரம்பித்தார்.

கிருஷ்ணனிடம் வந்தவள் “ஹாய் பா” எனக்கூறி அங்கிருந்த ஒரு ஃபைலை எடுத்துக்கொண்டு அமர்ந்தாள்.

கிருஷ்ணன் “அது முடிச்சுட்டேன் டா”

மீனா “நான் தான் நேத்தே சொன்னேனே நான் வந்து முடிச்சு தரேன். ரொம்ப வொர்க் பண்ணாதீங்கனு. ஏம்ப்பா?

“இல்லடா இந்த மன்ந்த் சேல்ஸ் கம்மியாத்தான் இருந்தது, சோ முடிச்சுட்டேன்”

“ஹ்ம்ம் சரிப்பா. வேற இருக்கா?”

“ஆமாடா திவி குருப்ஸ் ஒப் கம்பெனி வொர்க்ஸ் நேத்து தான் வந்தது. நீ வேணா அத பாரேன்” எனக்கூற தந்தையை முறைத்தவள்,

“ஏம்ப்பா? முன்னாடியே கொடுக்கமாட்டாங்களா? லாஸ்ட் டைம்’ல பிரஸர் பண்றமாதிரி தான் வருமா அந்தக் கம்பெனில? நெக்ஸ்ட் மன்ந்த் லேட்டா கொடுத்தா வேற ஆடிட்டர பார்க்கச் சொல்லுங்க. அவங்களால நம்ம ஹெல்த் ஸ்பாயில் பண்ண முடியாது”

“சரிடா நீ சொன்னா சரித்தான். நெக்ஸ்ட் டைம் ஸ்ரிட்டா சொல்லிடலாம். டீல் ஒகே. இப்போ அப்பாக்கு ஹெல்ப் பண்ணுடா” எனக்கூற அதுக்கு அப்புறம் நேரத்தை வீணாக்காமல் கட கடவென வேலையைப் பார்க்க ஆரம்பித்தாள்.

கிருஷ்ணன் “சாரிடா வீக்டேஸ்ல பேங்க் வொர்க், வீக்கெண்டு கூட உன்ன ஃப்ரியா விடாம டார்ச்சர் பண்றேனா?”

“அப்பா” எனக் கோபமாக அவரை அடுத்து பேசாமல் தடுத்தவள், வேலையில் கண்ணாக இருந்தாள்.

மீனா அன்னை இல்லத்திற்கான வங்கிக்கணக்கில் தனது முதல் மாத வருமானத்தில் தன் தேவைக்குப் போக மீதியை அப்படியே ஆன்லைன் மூலமாக அனுப்பியிருந்தாள். அதைப் பார்த்த கிருஷ்ணன்,

“மீனும்மா என்னடா இது சம்பளத்த அப்படியே போட்டுவிட்டுறுக்க?”

“அப்பா இது என்னுடைய சொத்த சம்பாத்தியம், அதை நல்ல விஷயத்துக்காகக் கொடுக்குறதில தான் என்னோட சந்தோஷம் இருக்கு”

“இல்லடா, அதுக்காக இவ்வளவா? எங்களிடம் கொடுக்க வேண்டாம், உன்னிடமே இருக்கட்டுமுனு சொன்னது உனக்கான சேவிங்ஸ்ஸா இது இருக்குமேனு தான்”

“இது தான் என்னோட சேவிங்ஸ். பாருங்க, இங்க எத்தனை பேரைச் சேர்த்துருக்கேன் எனக்காகப் பிரே பண்ண, அவங்க பிரேயர்ஸ் மட்டும் தான் எனக்கான செவிங்ஸ்பா”

“இல்லடா இது உன் மம்மிக்கு தெரிஞ்சா?”

“நீங்க மம்மிக்கு பயப்படுபவர் தானே! நம்பிட்டேன்”

“உனக்குனு கொஞ்சம் வச்சிக்கடா”

“எனக்கென்னப்பா தேவை, எல்லாமே நீங்களும் அம்மாவும் செய்றீங்க, வீட்டுக்கு நானா காசு கொடுக்குறேன். என் மனநிம்மதிக்கு இங்க கொடுக்கிறேனே! விடுங்கப்பா”

“சரிடா, ஆனா உனக்கு என்ன தேவைனாலும் அப்பாட்ட கேளு உனக்கு அனுப்பிவிடுறேன்”

“அப்பா உங்க பொண்ணு பேங்க் மேனேஜர், என்கிட்ட பணம் இருக்குப்பா”

“சரிடா லேட் ஆச்சு இன்னைக்கு மதியம் ஊட்டிக்கு போகனும், வீட்டுக்குக் கிளம்புவோமா அங்க போய்ச் சாப்பிட்டுக்கலாம்”

“சரிப்பா நானும் ஊட்டிக்கு வரேன் உங்க கூட”

“எதுவும் வேலை இருக்காடா?”

“ஆமாப்பா கொஞ்சம் ஸ்வீட்ஸூம், சாக்லெட்ஸூம் பசங்களுக்கு வாங்கனும்”

“இப்போதானடா வாங்கி கொடுத்த?”

“அது வேலைக்கு ஜாய்ன் பண்ணதுக்கு, இது ஃபஸ்ட் மன்ந்த் சேலரி வாங்கினதுக்கு”

“அதுசரி. அதுக்கு எதுக்கு நீ அலையுற நீ கொடுத்த பணத்துல நானே வாங்கிட்டு வந்திடுறேன்”

“வேண்டாம்பா நானே வந்து வாங்கித்தாரேன்”

“டி.எம்’ல வாங்க போறீயா?”

“ஆமாம்பா”

“சரிடா அப்போ நான் அங்க விட்டுட்டு என் வேலைக்குப் போறேன், திரும்பி வரும்போது சேர்தே போலாம்”

“இல்லப்பா, நான் பர்சேஸ் முடிக்கவும் வீட்டுக்குக் கிளம்பிடுவேன்பா. நீங்க வேலைய முடிச்சுட்டு வாங்க”

“சரிடா. பார்த்துப் போ வீட்டுக்கு” என மீனாவை விட்டுச் சென்றார் கிருஷ்ணன். அவளும் தனக்கு தேவையானவற்றை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு சென்றாள்.

இங்கு அக்னீயும் ஊட்டிக் காம்பிளக்ஸ்ஸில் தான் இருந்தான் அங்குள்ள வேளைகளை பார்ப்பதற்காக வந்திருந்தான். அங்குக் கடைகளைப் பார்வையிட்டுக் கொண்டிருக்கும்போது வாசலில் ஒரு கார் சீறிக்கொண்டு வந்து நின்றது. அவனும் ‘யாருடா கடை வாசலில் பார்க் பண்றதுனு’ திட்டுவதற்காக வெளியில் வரக் காரிலிருந்து அரேபியன் குதிரைப் போல வந்திருங்கினாள் திவி.

கருப்பு நிறத்தில் இடுப்பு வரையில் உள்ள மேலாடையும் வெந்தயநிறத்தில் முட்டிவரைக்குமான ஒரு குட்டைப்பாவடையும் கணுக்காலுக்கும் மேல் பூட்ஸ் போன்ற ஒரு காலணியும் கண்களில் கூலிங்கிளாலுமாகக் கடைக்குள் நுழைந்தாள்.

வந்ததும் தனக்கு தேவையான அனைத்து பொருட்களையும் அங்குள்ள பொருப்பாளரிடம் பட்டியலிட்டவள் அனைத்தையும் தன் காரில் ஏற்றமாறு கூறிக் கொண்டிருந்தாள். அப்போது அக்னீக்கு திவாகரிடமிருந்து அழைப்பு வந்தது.

“குட்டீவினிங் சார்”

“அக்னீ, திவி அங்க வந்தா அவ கேட்கிறதை கொடுத்துவிடு, அப்புறம் இரண்டு லட்சத்துக்கு ஒரு செக்கும் கொடுப்பா”

“ஓ.கே சார்” எனக் கூறி போனை வைக்கும் சமயம் கடையில் வேலைச் செய்யும் ஒரு பையனைத் திவி பளாரெனக் கண்ணத்தில் அறைந்திருந்தாள். பின் அவனைச் சட்டையைப் பிடித்து இழுத்து கடையின் வெளியே தள்ளிவிட்டு அக்னீயிடம்

“அவனுக்குச் சம்பளத்த செட்டில் பண்ணு. இனிமே அவன் கடைப்பக்கம் வரவே கூடாது” எனக் கட்டளையிட்டவாறு திவாகரின் அறையை நோக்கிச் சென்றாள்.

அக்னீ அந்தப் பையனிடம் சென்று “என்னடா என்ன பண்ண?” எனக் கேட்க அவன் “ஒன்னும் செய்யலனே பொருளைத் தூக்கிட்டு வரும்போது தெரியாம லைட்டா இடிச்சிருச்சி, அதான்” எனக்கூற அக்னீக்கோ அவ்வளவு கோபம்.

‘தெரியாமல் நடந்ததுக்கு அனைவரின் முன்னிலையிலும் ஒரு பையனை இப்படியா அசிங்கப்படுத்துவது எல்லாம் பணம் இருக்கும் திமிர் தான்’ என நினைத்தவன் திவாகர் சொன்னபடி செக்கும் எழுதி அவளிடம் கொடுத்தான்.

அதை வாங்கியவள் அக்னீயிடம் “கடையில வேலைக்கு ஆள் சேர்க்குறது நீதான. ஒழுக்கமான ஆள சேர்க்கமாட்டீயா? ஆளு சேர்த்திருக்கான் பாரு, இனி கடைக்கு வரும்போது மரியாத குறையா எதாவது நடந்தது, அவனோட சேர்த்து உன் சீட்டும் கிழிஞ்சிடும். மைண்ட்டிட்” எனத் திட்டி விட்டுச் சென்றாள்.

அக்னீக்கோ அவளைத் திரும்பக் கண்ணங்கண்ணமாக அறையும் அளவுக்குக் கோபம். “இவ எல்லாம் பொண்ணு மாதிரியா நடந்துகிறா? பொண்ணுனு சொல்லவே லாயக்கில்ல. இவள கட்டிக்கிட்டு எவன் சீரழிய போறானோ? ஆண்டவனே! இவளுக்கு வரபோற புருஷன், இவ திமிற எல்லாம் அடக்குறவனா இருக்கனும்” எனக் கடவுளிடம் விண்ணப்பம் வைக்கத்தான் முடியும். அவளின் உயரத்திற்கு அக்னீயால் அவளை என்ன செய்ய முடியும்?

அக்னீ அன்று முழுவதுமே கோபமாகவே இருந்தான். இரவு வீட்டுக்கு வந்தும் சாப்பிடும்போது கூட அவனுக்குத் திவி திட்டியது தான் மனதில் நின்றது. கோபத்தில் அவனால் சாப்பிடவும் கூட முடியாமல் போகப் பாதியிலேயே எழுத்துவிட்டான். அதன் காரணமாக இரவில் தலைவலியில் கொண்டு வந்து விட்டது.

தூக்கமும் வராமல் மனம் இறுக்கமாக இருக்கவும் வீட்டுக்கு அலைபேசியில் அழைத்து அனைவரிடம் பேசினான். நாளைக்கு மஹாவிற்கு பணிரெண்டாம் வகுப்புத் தேர்வு முடிவு வெளியாவதால் அவளுக்கும் தைரியம் கூறி வாழ்த்திவிட்டு மனது லேசாகவும் தான் உறக்கத்தை தழுவினான்.

பத்து பொருத்தமும் பக்காவாகப் பொருந்தும் அக்னீயும் மீனாவும் சந்திப்பார்களா? இல்ல எலியும் பூனையுமாக, ஒருவரை ஒருவர் பிடிக்காமலிருக்கும் அக்னீயும் திவியும் இணைவார்களா?
 

Lufa Novels

Moderator

யாரோ அவன்?? யாரோ இவள்??​

அத்தியாயம் 7​

5Zv9tCJKoZIF7IUUeAN3HPNDrNkBMCV1BnAMj8XLi_ZL67Z5SfIkID6qOpOoXqUAqcG1WeKqRQITMoTFwIzbEmtRjrM-S5bSNrcPzFR-TOlo0nZdXceZougE_8jTHAV3ESsevrwEMBXdDM4YWbn2phI


அன்று ஞாயிற்று கிழமை, கோத்தகிரியில் இதமான வானிழை வெயிலும் அல்ல, பனியும் அல்ல, மழையும் அல்ல. லேசான சாரலும் குளிர்ந்த காற்றும் போட்டி போட்டு வானிழையை இதமாக்கி கொண்டிருந்தது. இந்த வானிழையில் சிறிது நேரம் நடந்தால் மனதில் உள்ள வெம்மை போய் இதமான புன்னகையும், புத்துணர்ச்சியும் கிடைக்கும்.

திவிக்கு அந்த வானிழையில் நடைபயணம் செய்ய மிகவும் பிடிக்கும். காலையிலேயே நடைப்பயணம் சென்று அந்த இதமான வானிழையை இரசித்துவிட்டு அதே இதமான மனநிலையில் வீட்டுக்கு வந்தவள், வீட்டு வேலையாளியிடம் “தேவி! சூடா ஒரு மசாலாசாய்” என்று கூறிக்கொண்டே வீட்டினுள் நுழைய அங்கு சட்டமாக லீலாவும், ராகுலும் அமர்ந்திருந்தனர்.

அன்று திவாகரும் ஒரு மீட்டிங்க்காக மைசூர் சென்றிருந்தார். லீலாவும் ராகுலும் சுபத்ராவுடன் பேசி சிரிந்துக் கொண்டிருந்தனர். திவி வருவதை காணவும் ராகுல் “ஹாய் திவி”

திவி “ஹாய்” என கூறிவிட்டு டீ குடிப்பதற்காக அமர்ந்தாள்.

லீலா “என்ன திவி! இன்னைக்கு என்ன பிளான்”

திவி “என்ன பிளான்? ஒன்னுமில்ல”

லீலா “இல்ல நீ இன்னைக்கு எங்கயும் வெளியே பார்டிக்கு எதுவும் போறீயா?”

திவி “ஏன் நீங்களும் கூட வரப்போறீங்களா?” என நக்கலாக கேட்டாள்.

லீலா “இல்ல உனக்கு எதுவும் பிளான் இருந்தா, இன்னைக்கு ராகுல் உன்கூட கம்பெனிக்கு வரேன்னான்” என்று கூற திவியின் முகம் கோபத்தில் சிவந்தது.

திவி “ஏன்? உங்க மகன் டெய்லி ஒரு பார்ல விழுந்து கிடக்குறானாம். டெய்லி வீட்டுக்கு கூட்டிட்டு வரும் ஆள் இன்னைக்கு லீவா? என்னை அந்த வேலைக்கு அப்பாய்ண்ட் பண்றீங்க. நான் அந்த வேலையெல்லாம் பார்க்குறதில்ல” என படுநக்கலாக கூறினாள்.

லீலாவிற்கும் ராகுலுக்கும் அவ்வளவு கோபமாக தான் இருந்தது. லீலா ஆட்சேபனையாக சுபத்ராவை பார்க்க,

சுபத்ரா “திவி அப்படியெல்லாம் பேசாத. நீ தனியா போறதா இருந்தா உனக்கு ராகுல் கம்பெனி கொடுப்பான்ல. அதான் லீலா சொன்னா. நீ ஏன் இப்படி பேசுற? லீலா கிட்ட சாரி கேளு”

திவி “எனக்கு யார் துணையும் தேவையில்லை. என்னோட பிரைவசில யாரையும் நான் நுழைய விடமாட்டேன், அண்டு எனக்கு யார் கிட்டயும் சாரி கேட்டு பழக்கமுமில்ல, கேட்கவும் மாட்டேன்” எனக்கூறிக் கொண்டிருக்கும் போதே அவள் கேட்ட டீ வரவும் அதில் மும்பரமானாள்.

ராகுல் “சாரியெல்லாம் எதுக்கு ஆண்டி. திவி இன்னைக்கு என்னோட பார்டி இருக்கு, அதுக்கு இன்வைட் பண்ணத்தான் வந்தேன், பட் மம்மி அத கரெக்ட்டா கன்வே பண்ணல. இப்போ சொல்லு இன்னைக்கு என் பார்ட்டிக்கு வருவீயா?”

திவி “நோ. ஐ அம் வெரி டயர்டு. டுடே ஐ அம் கோயிங் டூ டேக் அ கம்ப்லீட் ரெஸ்ட்” என முகத்தில் அடித்தார் போல பதில் கூற ஆத்திரமாக வந்த போதும் அதை முகத்தில் காட்டாமல், சிரமமெடுத்து சிரித்த முகமாக வைத்தான் ராகுல்.

ராகுல் “இட்ஸ் ஓ.கே பிளான் சேன்ஞ் பண்ணிடலாம். இன்னொரு நாள் உனக்கு நான் பார்ட்டி கொடுக்குறேன். ஆனால் இன்னைக்கு ஃபுல்’லாக நான் இங்க தான் உன்னோட டைம் ஸ்பெண்ட் பண்ண போறேன்.

திவி “அஸ் யுவர் விஷ்” என தோளை குலுக்கிவிட்டு தன் அறைக்கு குளிக்க சென்றாள். குளித்து முடித்து காலை உணவிற்கு வந்தவள், சாப்பிட்டு மீண்டும் தம் அறையிலேயே தஞ்சம்புக ராகுலுக்கு எரிச்சலாக இருந்தது. அவன் லீலாவின் காதை கடிக்க,

லீலா “சுபத்ரா! ராகுலும் திவியும் பேசி பழகினாதான நல்லா இருக்கும். திவியும் ரூம்லயே இருக்கா. இங்க வந்தாலும் புள்ளைங்க நம்ம முன்னாடி என்ன பேச முடியும்? அவங்க தனியா பேசட்டுமே! திவியும் ராகுல் ரூம்க்கு வந்து பேசுவான் தான் ரூம்லயே இருக்கு. இவன் அங்க போய் திவிகூட பேசிட்டு இருக்கட்டுமே” எனக்கூற சுபத்ராவும் ராகுலை திவியின் அறைக்கு அனுப்பிவைத்தாள்.

கதவு தட்டும் ஓசைக்கேட்டு கதைவை திறந்த திவி, அங்கு ராகுலை காணவும் திடுக்கிட்டு சில நொடிகள் அதிர்ச்சியில் அசையாமல் நிற்க, அதை பயன்படுத்திக்கொண்டவன் முன்னேறி திவியின் அறையில் நுழைந்தான்.

“ஹலோ மிஸ்டர்! என்ன திறந்த வீட்டிக்குள்ள எதோ நுழைந்த மாதிரி என்னோட பெர்மிஸன் இல்லாம உள்ள வரீங்க. கோ அவுட்” எனக் கோபமாகக் கூற,

“கூல் திவி. கண்ட்ரோல் யுவர்செல்ஃப். நம்ம இரண்டு பேரும் எப்போ பாரு எலியும் பூனையுமா இருக்கோம்ல. அதான் கொஞ்ச நேரம் நம்ம பேசி, பழகி, ஃபிரண்ட்ஸ் ஆகலாம்”

“கோ அவுட் மேன். என் ரூம்குள்ள யாரும் வரது எனக்கு பிடிக்காது”

“கூல். கல்யாணத்துக்கு பிறகு நமக்கு ஒரே ரூம் தான்”

“இதோ பாரு. நான் உன்ன கல்யாணம் பண்ணிப்பேனு மனசுல ஆசைய வளர்க்காத. அது ஒருபோதும் நடக்காது”

“திவி! வொய் அர் யூ டெல்லிங் லைக் திஸ். வீ ஆர் லுக்கிங் அ பியூட்டிஃபுல் கப்பிள். நம்ம பேரண்ட்ஸூம் ஓ.கே சொல்லியாச்சு. அப்புறம் என்ன?”

“சுபத்ரா ஓ.கே சொன்னா, நீ சுபத்ராவ கட்டிக்கோ. ஐ அம் நாட் இன்ரஸ்ட்”

“திவி!” என அவன் கோபத்தில் பற்களை கடித்து மறுநொடியே “விளையாடாதடா” என முகத்தை சிரித்தபடி வைத்து கொண்டு கூறியபடியே சென்று டீ.வி யை இயக்கினான்.

திவிக்கோ ‘இவன என்ன பண்றது? என்ன பேசினாலும் அசிங்கப்பட்டு போகாம, நம்ம உயிர வாங்குறானே! சீ என்ன ஜென்மமோ’ என நினைக்க டீ.வியில் அறைகுறை ஆடையுடன் சில பெண்கள்,

“என் செல்லப்பேரு ஆப்பிள்…
நீ சைசா கடிச்சுக்கோ…
என் சொந்த ஊரு ஊட்டி…
என்ன ஸ்வெட்டெர் போட்டுக்கோ…” எனப்பாடி ஆடிக்கொண்டிருக்க ராகுலோ “ஐ அம் ரெடி டு வியர் மை சுவட்டர்” என திவியை நோக்கி கைகளை நீட்ட, திவிக்கு வந்த ஆத்திரத்தில் அந்த 42” எல்.ஈ.டி டீவியை இழுத்து தரையில் போட்டு சுக்கு சுக்காக்கினாள்.

அதில் அதிர்ந்த ராகுல் “திவி” எனக்கத்த, சத்தம் கேட்டு லீலாவும், சுபத்ராவும் உள்ளே வரவும் சரியாக இருந்தது.

“கெட் அவுட் ஆல் ஆஃப் யூ” என கத்தினாள் திவி.

சுபத்ரா “திவி என்னாச்சு? ஏன் டீ.வியை உடச்ச? நீ இப்படி பண்ண மாட்டியே? என்னாச்சு உனக்கு?”

“யூ… ஐ ஹேட் யூ தே கோர்” என தலையை பற்றிக் கொண்டு கத்தியதில் பயந்த சுபத்ரா, அனைவரையும் இழுத்துக் கொண்டு அறையை விட்டு வெளியேறி உடனே சுதாகருக்கு அழைத்துவிட்டார். தகவல் அறிந்த சுதாகர், மைசூரிலிருந்து மசினகுடி வழியாக அந்த அபாயகரமான கொண்டைஊசி வளைவுகள் கொண்ட பாதையில் நான்கு மணிநேர பயணத்தை மூன்றே மணிநேரத்தில் அசூர வேகத்தில் வந்து மகளை அடைந்தார்.

“டேட்! மம்மி பண்றது டூ மச். இன்னைக்கு அந்த ராகுல என்னோட ரூம்க்கு அனுப்பி வைக்கிறாங்க. நா.. நா ரொம்ப பயந்துட்டேன் டேட். பட் அத வெளியில காட்டாம கோபப்படுற போல ரியாக்ட் பண்ணிட்டேன். அவங்க கிட்ட நீங்க தெளிவா பேசிடுங்க டேட். என்னால அந்த ராகுல… சத்தியமா முடியாது டேட்” என தகப்பன் மடியில் தலை வைத்து படுத்தபடி விசும்பிக் கொண்டே கூற, அந்த தகப்பனுக்கு உயிர்வலி தான்.

“நீ வொரி பண்ணாதடா குட்டிமா, அப்பா இருக்கேன் இனி அந்த ராகுல் உன் பக்கமே வர மாட்டான். மம்மிகிட்ட நான் சமயம் பார்த்து பேசிடுறேன்.”

“ஓ.கே டேட் பட் சீக்கிரம் இதுக்கு எல்லாம் ஒரு முடிவு கட்டுங்க. இல்ல நான் இந்த வீட்டை விட்டு மொத்தமா கிளம்பிடுவேன்”

“அப்படியெல்லாம் சொல்லாதடா. எனக்கு உன்னை விட்டா யாரு இருக்கா? கிவ் மீ சம் டைம். நான் இதுக்கு எல்லாம் ஒரு ஏற்பாடு பண்ணிட்டேன். மம்மிய கன்வின்ஸ் பண்ணிட்டா பிராப்ளம் சால்வ்டு”

“என்ன பண்றதா இருந்தாலும் க்விக்கா பண்ணுங்க”

“ஓ.கே டா. டேக் ரெஸ்ட். டீவி சேன்ஞ்ச் பண்ண ஆள் வர சொல்றேன்”

“ஓ.கே டேட். எனக்கும் மைண்ட் அப்சட்டா இருக்கு, கொஞ்சம் தனியா இருக்கனும் நான் இன்னைக்கு நைட் வர மாட்டேன், நாளைக்கு நைட் தான் வருவேன். அதுக்குள்ள மாத்திடுங்க” என்றவள் ஹாலில் அமர்ந்து அவளுடன் பேச காத்திருக்கும் சுபத்ராவிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் வெளியில் சென்றுவிட்டாள். பின்னாலே வந்த சுதாகரிடம்,

“என்ன சுதா! இவ இப்படி போறா?”

“சுபிமா உனக்கு நீ என்னா தப்பு பண்றனு புரியுதா? என்னால உன்கிட்ட ஹாஸ்ஸாவும் பேச முடியல. திவிக்கு ராகுல பிடிக்கல. நீ ஏன் கம்ப்பல் பண்ற அவள?”

“சுதா! ராகுல் அவளுக்கு ப்ர்ஃபெக்ட் மேட்ச். எனக்கு லீலாகூட சம்பந்தம் பண்ணனும்னு ஆசையா இருக்கு சுதா”

“சரி உன் ஆசை சரிதான்னு வச்சுக்கலாம், ஆனா திவிக்கு ராகுல பிடிக்கனுமேமா! வாழ போறது அவங்க தானே!”

“அதெல்லாம் பிடிக்கும், இவ தான் அடமெண்ட்டா ராகுல் கூட பேசாமயே அவன அவாய்ட் பண்றா. ராகுல் ஸச் அ ஸ்வீட் ஹை. அவன் கூட பேசி பார்த்தா அவளுக்கு பிடிக்கும்”

“அவ தான் பேசவே விருப்பப்படலயே!”

“உங்களுக்கும் பிடிக்கலனு சொல்லுங்க. அப்பாவுக்கும் பொண்ணுக்கும் என் ஆசைய பத்தி என்னைக்கு கவலைப்பட்டீங்க” என கண்ணைக்கசக்க ஆரம்பித்ததும்

“சுபிமா இப்ப எதுக்கு அழற? நான் என்ன சொன்னேன்? அவ ஆசைப்பட்டா நான் ஏன் வேணாம்னு சொல்ல போறேன்?”

“அப்போ அவ ஓ.கே சொன்னா உங்களுக்கு ஓ.கே வா?”

“அவளுக்கு என்ன பிடிக்குமோ அதான் நடக்கும்”

“அப்போ ஓ.கே நான் அவகிட்ட புரியவச்சுக்கிறேன்”

‘இரண்டு பேரும் பேசினா பூகம்பம் தான் வரும். இதுல யாரு யார கன்வின்ஸ் பண்ண! இதுக்கு எல்லாம் முடிவு கட்ட நான் சீக்கரம் மதுரைக்கு போனும்’ என நினைத்து மனைவிடம் சரி சரி என மண்டையை ஆட்டி விட்டு சென்றார்.

அக்னீக்கு அன்று ஆபீஸ் லீவ். அவன் நண்பர்களுடன் அன்று சினிமாவுக்கு போவதற்காக பேசிவைத்திருந்தான். அதற்காக கிளம்பிக்கொண்டிருக்கும் போது சுதாகரின் அழைப்பு வந்தது.

“ஹலோ சார்”

“அக்னீ! திவி ரூம்க்கு ஒரு டீவி ஆடர் பண்ணு. நாளைக்கு காலையில வந்து மாட்ட சொல்லு”

“ஓ.கே சார். பட் ஒன் ஸ்மால் இன்ஃபர்மேஸன், மேடம் ரூம் டீவிக்கு இன்னும் வாரண்டி இருக்கு. ரிப்பேர்னா அவங்க சரி பண்ணி கொடுத்துடுவாங்க”

“ரிப்பேர்னா சரி பண்ணிடலாம், ஆனா இவ கோபத்துல இழுத்து போட்டு உடச்சிருக்கா. அதுக்கு நம்ம வாரண்டிய யூஸ் பண்ண முடியாதே. நீ ஆடர் பண்ணிடு”

“ஓ.கே சார்” என அழைப்பை வைத்தவனுக்கு சரியான எரிச்சல். ‘ஞாயிற்று கிழமை கூட நிம்மதியா இருக்க முடியாது, அவனுங்க கிட்ட வேற படத்துக்கு வரேன்னு சொல்லிட்டேன். சை! ஒரு பொட்டபுள்ளைக்கு இப்படியா கோபம் வரும்? காசு இருக்குனு திமிறுல எல்லாத்தையும் போட்டு உடக்கிறது’ என அவளை வண்டை வண்டையாக திட்டிக் கொண்டே கடைக்கு சென்று டீவியை ஆடர் செய்து, காலையில் டெலிவரி பண்ணுமாறு கூறியவன் எவ்வளவு வேகமாக வந்தும் படம் ஆரம்பித்த பிறகு தான் தியேட்டருக்குள் நுழைந்தான்.

தியேட்டருக்குள் அக்னீ அவன் நண்பர்களுடன் அமர்ந்த வரிசையின் முன் தான் மீனா மாலினி, கிருஷ்ணனுடன் அமர்ந்து படம் பார்த்துக் கொண்டிருந்தாள், இல்லை இல்லை படத்தை ரசித்து, அனுபவித்து, தாய் தகப்பனுடன் சேர்ந்து விசிலடிக்காத குறையாய் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அக்னீயின் நண்பர்களோ படத்தை விட பாவையைத் தான் ரசித்துக் கொண்டிருந்தனர்.

“டேய் அக்னீ! முன்னாடி பாரு உங்க ஆடிட்டர் குடும்பத்தோட படம் பார்த்துட்டு இருக்கார்” என அக்னீயின் நண்பன் கூற அக்னீயின் கண்களில் பட்டார் கிருஷ்ணன்.

“ஆமாம் டா. இப்போ தான் பார்த்தேன்”

“அவர பார்த்தையா அவர் பொண்ணையும் பார்த்தயா?”

“டேய்! நல்லா தெரிஞ்சவர்டா. அவர் பொண்ணைப்போய்… போடா டேய்”

“நீ வேணா அவர பாரு நாங்க அவர் பொண்ண பார்த்துக்குறோம். என்னா அழகு! எவனுக்கு கொடுத்து வச்சிருக்கோ! க்யூட் டா” என அவளை வர்ணிக்க அக்னீ தப்பித் தவறி கூட அவளின் பக்கம் கண்களை திருப்பவில்லை.

“டேய் அடி வாங்க போற பாரு. ஒழுங்கா படத்த பாரு”

“டேய் படம் பார்க்க வந்ததே திரிஷாக்காக. அந்த திரிஷாவ விட இந்த” எனறவன் “ஆமா அந்த பொண்ணு பேர் என்னடா”

“ஹ்ம்ம் திவ்யா”

“திவ்யாவா. ரைமிங் கூட மேட்ச் ஆகுது திரிஷா இல்லனா திவ்யா” எனக்கூற

“டேய் நானும் சும்மா ரைமிங்க்காக தான் சொன்னேன் டா, எனக்கு அவர தவிற அவங்க யாரையும் தெரியாது”

“அது சரி ஆனா பொண்ணு திவ்யமா இருக்கா” எனக்கூற அக்னீக்கு திவியின் நினைப்பு வந்து எரிச்சலைத்தான் தந்தது. பின் அக்னீ நண்பனின் தொடர் போதனையில் அப்படி என்ன அந்த பொண்ணுகிட்ட ஸ்பெஸல் என திவியின் நினைப்பை மாற்ற மீனாவின் பக்கம் பார்வையை திருப்ப அவனுக்கு அவளின் முதுகுபுறமே தெரிந்தது ஆனாலும் அவள் தாய் தந்தையுடன் சேர்ந்து அந்த படத்தை ரசிப்பதை அவனும் ரசிக்க ஆரம்பித்தான்.

அக்னீக்கு மீனாவின் முகத்தை பார்க்கும் ஆவல் வந்து அவள் புறமாக அசைந்து அவளைப் பார்க்க முயலும் போது அவனைக் கிருஷ்ணன் பார்த்துவிட்டார். ஆனால் அவருக்கு இருட்டில் அக்னீயை அடையாளம் காணமுடியாமல் மகளை மற்ற ஆண்களிடமிருந்து காக்கும் யுத்தியாக அவனை பார்த்து முறைத்துவிட்டு திரும்பினார்.

அக்னீக்கோ அது மிகவும் அவமானமாக போய்விட்டது. “அய்யோ டேய்! அவர் நான் பார்த்ததை பார்த்துட்டு முறைச்சாரு டா, என்ன நினைச்சிருப்பார் என்னை பத்தி, இனிமேல் எப்படி அவர ஃபேஸ் பண்றது?” என நண்பனிடன் புலம்ப,

“டேய் இருட்டுல நீ யாருனே அவருக்கு தெரியாது டா. படம் முடிஞ்சதும் அவர் கண்ணுல படாம எஸ்கேப் ஆயிடலாம். ஒன்னும் நினைக்காத படத்தை பாரு”

“என்னமோ போடா! நான் பாட்டுக்கு இருந்தேன் என்ன இப்படி மாட்டி விட்டுட்ட”

“சைட் அடிக்க சொன்னா, பொண்ண கடத்துற மாதிரி பார்த்தா? காட்டான்”

“கொன்றுவேண்டா உன்னை” என்றவன் அதற்கு அப்புறம் தப்பித் தவறி கூட மீனாவின் பக்கம் திரும்பவில்லை.

அவன் மீனாவை பார்த்திருக்கலாமோ! இன்று அவளை பார்க்காமல் போனதற்காக பின்னாளில் அவன் வருந்தப்போவது உறுதி. அப்படி பார்த்திருந்தால் பின்னாளில் அவன் வாழ்வில் அவனால் நடக்க போகும் குழப்பங்களை அவனே தவிர்த்திருக்கலாம். ஆனால் இனி அவன் மீனாவை பார்க்கும்படியான ஒரு சந்தர்பமே அவனுக்கு அமைய போவதில்லை!
 

Lufa Novels

Moderator

யாரோ அவன்?? யாரோ இவள்??​

அத்தியாயம் 8​

2ve3Eopi6kTCOW8iOnWqvpI6E8YbyVYMn78cCkpOx8gkOuAAMGCCvqaWYnKvxdT4YCC3vm6a24iGGoymisWAuqHIbg_qClAKOnJLeiB89URwNh8o6KbCXFSRHu1kDacpTV8bDlVrlyRKMgW7vzj3WSo


கோடைக்காலத்தின் முடிவில், பின் இரவுகளில் புழுக்கம் மாறி, விடியல் நேரத்தில் குளுகுளுப்பான வானிலையில், சுகமான நித்திரையை தழுவும் நேரம், பகலவன் தன் வேலையைச் சிரத்தையாக நிறைவேற்றக் கீழ்வானத்தை சிவக்க வைத்து, கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறி முழுவதுமாக வந்து கிழக்கு வெளுத்த நேரம் மஹாவும் உறக்கம் விடுத்து எழுந்தாள்.

“என்னடி இன்னைக்கு அதிசயமா காலங்காத்தால எந்திரிச்சுட்ட”

“தூக்கம் வரல அப்பத்தா”

“ஏனாம். நேத்திக்கு தான் என்ன மார்க்கு வருமுனு பயத்துல ஒருபயல தூங்க விடல. அதே நல்ல மார்க்கு தான வாங்கியிருக்க பொறவு என்னத்து இன்னைக்கும் வினசபடுற”

“ஒன்னுமில்ல அப்பத்தா” என்றவளுக்கு அவளது டாக்டர் கனவு கனவாய் போய்விட்டதே என்ற கவலை. நல்ல மதிப்பெண் தான் எடுத்திருக்கிறாள். நீட் தேர்வுக்கும் பதிவு செய்து இருக்கிறாள் தான். ஆனால் வீட்டின் பொருளாதாரம் தான் இப்போதைக்கு அவளின் கவலை. அது தான் அவளால் நிம்மதியான உறக்கத்தை தழுவ விடாமல் அவளை வாட்டுகிறது.

அவளின் சிறுவயதிலிருந்தே அவள் கனவு, லட்சியம் எல்லாம் டாக்டர் தான். சிறுவயதில் விளையாடும் போதும் கூட அவள் டாக்டர் விளையாட்டு தான் விளையாடுவாள். ஒரு குச்சியை வைத்துக்கொண்டு அனைவருக்கும் மருத்துவம் பார்ப்பாள். அந்த அளவுக்குப் பித்து பிடித்து அழைந்தாள்.

ஆனால் அதை விளையாட்டாக நினைக்காமல் நிஜவாழ்விலும் அந்தக் கனவை நோக்கி ஓடினாள். படிப்பதை நேசித்துப் படித்தாள். தனியார் பள்ளியில் தமிழ்வழி கல்வி தான் படித்துப் பத்தாம் வகுப்பில் முதல் மாணவியாக வந்து பதினென்றாம் வகுப்பில் கணிதம் கூட எடுக்காமல் அறிவியல் பாடம் எடுத்து அதிலும் இப்போது முதல் மதிப்பெண் எடுத்திருக்கிறாள்.

குடும்பத்திற்கும் அதிக சுமையைக் கொடுக்கக்கூடாது என யோசித்தவள் மருத்துவம் சம்பந்தப்பட்ட செவிலியர் படிப்பாவது எடுத்துப் படிக்கலாம் என்னும் முடிவுவை நேற்றைய இரவே எடுத்துவிட்டாள். என்ன தான் முடிவெடுத்துவிட்டாலும் கனவு கைகூடாமல் போன வலி இருக்கும் தானே, அதான் அவளின் இன்றைய சுணக்கத்திற்கான காரணம்.

அப்பத்தாவிடம் ஒன்னுமில்லையெனக் கூறியவள் காலையிலேயே குளித்து வீட்டு வாசலில் கோலமிட்டுக் கொண்டிருந்தாள்.

அவளின் அருகில் நின்ற கல்யாண் “ஹக்கூம்” எனத் தொண்டையை கனைக்க, மஹா ‘எவண்டா அது’ என நிமிர்ந்து பார்க்கக் கல்யாண் கையில் ஒரு புது கைபேசி அட்டைப்பொட்டியுடன் இருந்தது. அவன் அதை மஹாவை நோக்கிக் காட்ட,

“இந்தாபாரு இந்த வேலையெல்லாம் என்கிட்ட வேணாம். ஒழுங்கா போயிடு” எனப் பதட்டத்தோடு வீட்டை உள்ளே பார்த்துக்கொண்டே கூற,

“அம்மா தாயே! இத நான் ஒன்னும் உனக்கு வாங்கி தரல, உங்கண்ணே தான் வாங்கி கொடுக்கச் சொன்னான்”

“பொய் சொல்லாத. நான் அண்ணே கிட்ட கேட்டுகிறேன்”

“முதல இதபுடி. உங்கண்ணே கிட்ட அப்புறம் கேளு. நான் மொபைல வச்சிட்டு உன்கிட்ட பேசுறத எவனாவது எங்கம்மாட்ட போட்டுவிட்டா, எங்கம்மா என் தோள உறிச்சு உப்புகண்டம் போட்டுறும்” என மஹாவின் கைகளில் திணித்து விட்டுச் சென்றான்.

“டேய் நில்லுடா” எனக் கத்த “உங்கண்ணே தான் கொடுக்கச் சொன்னீயான், வேணாமுன்ன தா, என்னோட போனும் பழசா ஆயிடுச்சு, நான் வச்சிக்குறேன்” என்றவாறே அடுத்த சந்தில் நுழைந்து காணாமல் போனான்.

மஹா போனுடன் வீட்டிற்குள் சென்றவளை முதலில் எதிர்கொண்டது ஆதித்யன் தான்.

“என்ன மஹா இது?”

“தெரியலண்ணே! அக்னீ அண்ணே வாங்கி கொடுக்கச் சொல்லுச்சுன்னு அண்ணே பிரண்டு கல்யாண் வந்து கொடுத்துட்டு போனாங்க”

“அடங்கமாட்டான் அவேன். நான் தான் படிக்குற புள்ளைக்கு வாங்கி கொடுக்காதனு நேத்தே சொன்னேன், நான் முடியாதுன்னு சொல்லவும் அவன விட்டு வாங்கி கொடுத்துட்டானா?” என்றபடியே அக்னீக்கு அழைத்தான்.

அக்னீ “ஹலோ”

“டேய் நான் தான் நேத்தே மஹாவுக்கு இப்போ போன் வேணாமுன்னு சொன்னேன்ல, அப்புறம் ஏண்டா உன் கூட்டாளிப்பய கிட்ட சொல்லி வாங்கி கொடுக்கச் சொன்ன?”

“ஆதி! காலேஜ் போகப்போற புள்ளடா அதுக்கு தேவைப்படும். ஒவ்வொரு தடவையும் நீ எப்படா வருவனு உன் போனையே எதிர்பார்க்க முடியுமா? அதுவுமில்லாம தனியா பஸ்ஸில போகும்போது போன் இருந்தா அதுக்கு பாதுகாப்பா, உதவியா இருக்கும் டா”

“அதுக்கில்லாடா இப்ப எல்லாம் உலகம் கெட்டுகிடக்கு. அதான் கண்ட கழுதையும் அதுல வருதே! படிக்குற புள்ளையை நாமளே போன கொடுத்துக் கெடுக்கனுமானு தான் பார்த்தேன்”

“மஹா நல்ல புள்ளடா”

“நான் மஹாக்கு பயப்படல, நம்ம கூடக் கடைசியா ஒன்னு பொறந்திருக்கே! அதுக்கு தான் பயப்புடுறேன். வீட்டில போன் இருந்தா அவன் அத நோண்டிடே இருப்பான்”

“மஹா கிட்ட ஸ்டிரிட்டா சொல்லிடலாம் அவன் கைக்குப் போன் போகக்கூடாதுனு. நீ மஹா கிட்ட கொடு”

“என்னமோ போ” என்றவன் போனை மஹாவிடம் கொடுக்க,

“அண்ணே!”

“என்னடா ஹேப்பியா? ரொம்ப நாளா கேட்ட இப்போ வாங்கி கொடுத்துட்டேன். ஆனா இனி தான் டா கவனமா இருக்கனும். படிப்புக்கு உபயோகமா இருக்கனும் தான் வாங்கினேன், அதுவே உன் படிப்ப கெடுக்கக் கூடாது”

“சரிண்ணே”

“சின்னவன் கைல குடுக்காத. படிப்புக்குத் தேவையானத பார்க்கனும்னு பிளான் பண்ணி கேட்பான். எதுவா இருந்தாலும் நீயே செஞ்சுகொடு”

“சரிண்ணே”

“சரிடா நான் ஈவினிங் ஃபிரியாய்டு பேசுறேன், நிறையா பேசனும். அண்ணே கிட்ட சொல்லிச் சிம்கார்டு வாங்கிக்கோ”

“சரிண்ணே. வாங்கிட்டு என்னோட நம்பர்ல இருந்து உனக்குத் தான் ஃபஸ்ட் போன் பண்ணுவேன்” எனக்கூற சிரித்துக் கொண்டவன் “சரிடா” என அழைப்பைத் துண்டித்தான்.

இங்கு லீலாவின் வீட்டில்

“டேய் ராகுல்! என்னடா பண்ற உன்னால ஒருத்திய கரெக்ட் முடியாதா?”

“அம்மா என்ன யாருண்ணு நினைச்சா? நான் ஒரு பொண்ண வேணும்னு நினைச்சா மறுநிமிஷம் அவ என் மடியில”

“கிழிச்ச. அவ உன்ன மனுஷனா கூட மதிக்க மாட்றா. அவ மட்டும் வேறொருத்தனுக்கு பொண்டாட்டியா ஆகிட்டா, சுபத்ராகிட்ட நாம சுரண்ட முடியாது. அப்புறம் எவளும் உன் மடியில வரமாட்டா பார்த்துக்கோ. அவ பணத்துல தான் நீ ஆடுற ஞாபகமிருக்கட்டும். நீ இப்படியே ஜாலியா இருக்கனும்னா அவள மடக்க வழி என்னானு யோசி”

“ஆடுற மாட்ட ஆடிக்கறக்கலாம், பாடுற மாட்ட பாடிக்கறக்கலாம். ஆனா இந்த சண்டித்தனம் பண்ற மாட்ட சண்டித்தனம் பண்ணித்தான் மடக்கனும் போல”

“டேய் ரேப்பு கீப்பு பண்ணித் தொலைக்காதடா, அப்புறம் சுதாகர் நம்மள ஜென்மத்துக்கும் ஜெயில களி திங்க வட்சிருவான்”

“முடியுற வரை முயற்சி பண்றேன் அவள மடக்க, முடியலா கடைசி அத தான் பண்ண போறேன். அட்லீஸ்ட் அதாவது மிஞ்சட்டுமே அவ பின்னாடி சுத்துனதுக்கு”

“டேய் லூசுப்பயலே! இப்படியெல்லாம் யோசிக்காதடா. பொதுவா பொண்ணுங்க கஷ்டத்துல இருக்கும்போது உதவி பண்றவங்க கிட்ட மடங்கிடும், இல்ல எதாவது சிம்ப்பதி கிரியேட் பண்ணா மடக்கிடும். நீ அப்படி எதாவது பிளான் பண்ணுடா”

“அவள பார்த்தா சிம்ப்பதிக்கு மடங்குற ஆளாவாத் தெரியுறா? அதுவும் போக என்மேல அவளுக்குச் சிம்ப்பதி வருமாக்கும்?”

“அப்போ எதாவது உதவி பண்ணி பிரண்ட் ஆகி அப்படியே மடக்க டிரை பண்ணு”

“எதாவது உதவி பண்ணி பண்ணலாம்னா என்ன பண்றது? அவ கிட்ட இல்லாதா காசா? என்ன பண்றது?”

“என்னமாவது பண்ணுடா இல்லை நீ உங்கப்பன் நடத்துற ஓட்டப் பேக்டரிக்கு போ. நான் ஐஞ்சுக்கும் பத்துக்கும் அவர் கைய பார்த்துட்டு உக்கார்ந்திருக்கேன்”

“மம்மி! நான் யோசிக்கிறேன். என்ன டென்சன் பண்ணாம போ”

“போடா டேய்” என்றவள் அவள் வேலையைப் பார்க்கச் சென்று விட்டாள். தீவிர யோசனையில் இருந்தவனின் மட்டமான மூளைக்குள் ஏதோ ஒரு குதர்க்கமான ஐடியா உதிக்க உற்சாகமாக எழுந்து சென்றான்.

அக்னீ காலையிலேயே அலுவலகம் வந்துவிட்டான். வந்ததும் அவன் அன்று பார்க்க வேண்டிய அனைத்து பைல்களையும் சரிப்பார்த்து திவாகர் அறையில் வைத்துவிட்டு வந்தான். அவன் வரும்போது அவன் கைப்பேசி அடித்து ஓய்ந்தது. அவன் எடுத்துப் பார்க்கையில் வந்தது புது நம்பர்.

“யாருனு தெரியல. சரி அடுத்து வந்தா பார்ப்போம்” என வேலையில் கவனம் செலுத்த அப்போது தான் அவனுக்கு மஹாவிடம் புதுசிம் வாங்க சொன்னது ஞாபகம் வந்தது. பின் அவனே அந்த நம்பருக்கு தொடர்பு கொள்ளலாமெனக் கைபேசியை கையில் எடுக்க மீண்டும் அதே நம்பரிலிருந்து அழைப்பு.

“மஹாம்மா! அதுக்குள்ள சிம் வாங்கிட்டியா” எனக் குரலில் அன்பொழுக கேட்டவன், பதிலை எதிர்ப்பார்க்காமல் அவனே தொடர்ந்தான்.

“மஹாம்மா! அண்ணே திரும்பத் திரும்பச் சொல்றேன்னு நினைக்காத. இப்ப நீ சின்னபிள்ளையும் இல்ல. போன்ல தெரியாதவங்க கூடப் பேசாத, சோசியல் மீடியால கவனமா இரு, போட்டோஸ் அப்லோட் பண்ணாத, மொபைல் உனக்கு வாங்கி கொடுத்தது நல்ல விஷயத்துக்காகத் தான், அதுனால நீ பாதமாறிட கூடாது. உனக்கே தெரியும் வீட்டிலுள்ளவங்க எல்லாரையும் மீறித் தான் வாங்கி கொடுத்தேன். எனக்கு நல்ல பேரு எடுத்துக் கொடுக்கனும். சரியாடா. அண்ணே எப்பவும் உனக்கு நல்லது தான் நினைப்பேன். காலேஜ் போகப் போற, நாழு பசங்க வந்து பேசுவாங்க தான், நாம தான் கவனமா இருக்கனும். எல்லாப் பசங்களும் நல்லவங்க இல்ல, எல்லாரும் கெட்டவங்களும் இல்ல, நாம தான் பார்த்துப் பழகணும். பசங்க கூடப் பேசாதனு சொல்லல ஆனா எல்லாப் பசங்களும் உன் அண்ணன் இல்லனு ஞாபகம் வச்சிக்கோ” என மூச்சுவிடாமல் பேசிக் கொண்டே போனான். அந்தப் பக்கமிருந்து தொண்டையை செறுமி,

“அண்ணனா இருந்திருக்கலாம். இல்ல உங்களைப் போல ஒரு அண்ணன் கூட நானும் பொறந்திருக்கலாம்” என ஒரு குயிலிசை போல ஒரு பெண்ணின் குரல் ஏக்கத்தோடு இருந்தது.

அக்னீக்கு அந்தக் குரல், அதிலிருந்த ஏக்கம் எல்லாம் அவனைக் கேட்காமலே அவனின் மனதில் சென்று உக்கார்ந்தது. அதன் தாக்கத்தில்,

“யார் மா பேசுறது?” என அக்னீ கேட்க, இப்போது அவன் குரலில் தன் தங்கையிடம் பேசும் குரல் சுத்தமாக இல்லை. அது ஒரு விதமான ஆறுதலலிக்கும் குரல், அந்தக் குரலில் கேட்கும்போது கேட்கும் கேள்விக்குப் பதிலலிக்கத்தான் தூண்டியது அவளை,

“நான் மீனா”

“நீங்க யாருனு தெரியல. ராங் நம்பர்” எனப் போனை வைக்கபோனான். அதற்குள்,

“ஹலோ! ஹலோ! நான் தாங்க.. பேங்க் மேனேஜர். லோன் அமொவுண்ட் இன்னும் கட்டல, அதான் கால் பண்ணேன்” என அவள் கூறியதும்,

“என்ன விளையாடுறீங்களா? நான் யார் கிட்டயும் லோன் வாங்கல” எனக் கடுமையான குரலில் கூறினான்.

‘என்ன வாய்ஸ்டா இது, நிமிஷத்து நிமிஷம் வித்தியாசமா இருக்கு’ என எண்ணியவள்,

“ஹலோ மிஸ்டர் சுரேஷ்! போன வாரம் தான் உங்களை வார்ன் பண்ணோம். இந்த வீக் கண்டிப்பா கட்டிடுவேனு சொன்னீங்க, இப்போ என்ன இப்படி பேசீறீங்க, நாங்க போலீஸ் கம்லைண்ட் கொடுக்க வேண்டிவரும். மைண்ட் டிட்” என அவளும் குரலில் கடினமேற்றி பேசினாள்.

“ஹலோ மிஸ் ஆர் மிஸஸ் மீனா. நான் சுரேஷ் கிடையாது. நான் நார் கிட்டயும் லோன் வாங்கவும் கிடையாது”

“இல்லையே இந்த நம்பர் தானே” என அவள் இழுக்க,

“என்னோட நம்பர கொடுத்து உங்கள ஏமாத்திட்டு போய்ட்டானானு பாருங்க. சத்தியமா நான் சுரேஷ் இல்ல”

“ஓஹ். ஸாரி சார். இந்த மாதிரி எப்பவும் ஆனதில்ல. ஒன்ஸ் அகென் ஸாரி சார் உங்களை டிஸ்டர்ப் பண்ணதுக்கு” எனக் குரலில் சுரத்தே இல்லாமல் கூறியவள் போனை வைத்துவிட்டாள்.

அக்னீக்கு தான் அந்தக் குரல் மனதை குடைந்தது. ‘பாவம் பேங்க் மேனேஜர்னு சொல்லுச்சு. இப்படியா ஏமாறும். எவ்ளோ பணமோ தெரியல’ என இவன் தான் புலம்பித் தவித்தான்.

மீனாவின் குரல் அக்னீயின் மனதிலும், அக்னீயின் குரல் மீனாவின் மனதிலும் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தி அவர்கள் மனதில் ஒரு பொறியைத் தூண்டிவிட்டது. இந்தப் பொறி அவர்களின் வாழ்வை எந்தத் திசையை நோக்கி இழுத்துச் செல்லப் போகிறதோ??
 

Lufa Novels

Moderator

யாரோ அவன்?? யாரோ இவள்??​

அத்தியாயம் 9​

v8QeCbssu50Cky_UvUu5u38vmP14m4tmCYkBabLbJh3EIvwIRCpe8bYVRds9wYwVliwOCAH2Y9aMOVi_FPE4A-0qDn2DWZhG1D2_h0aOgN8LLOzpppVvJ-xnRefaGGjWigEy8Ee_o7TqYwgSixNpuaA


அன்று ஞாயிற்று கிழமை. ஞாயிறு
வந்தால் திவி வாழ்வில் மட்டும் ஞாயிறுடன் சனியும் சேர்ந்துக் கொள்ளும் போல. அவளது நெறுங்கிய தோழி ஒருத்திக்கு திருமணம். அதனால் அவள் அன்று அவளின் நண்பர்கள் அனைவருக்கும் பேச்சுலர்ஸ் பார்ட்டி வைத்திருந்தாள். அந்தப் பார்ட்டிக்கு திவிக்கும் கட்டாய அழைப்பு வந்திருந்தது. அதனால் மாலை போலக் கிளம்பி பார்ட்டிக்கு சென்றிருந்தாள்.

அவளின் நேரமோ அல்லது ராகுலின் சூழ்ச்சியோ அந்த ஹோட்டலுக்கு அவனும் சென்றிருந்தான். அவனை அங்குக் கண்டதும் திவிக்கு அந்தப் பார்ட்டியில் இருக்கவே பிடிக்கவில்லை. ஆனால் தோழியின் தொடர் வற்புறுத்தலால் தான் அங்கு இருந்தாள்.

ராகுலோ அவள் அருகிலேயே தான் இருந்தான். பார்பவர்களுக்கு என்னமோ இவர்கள் தான் திருமண ஜோடியோ என்று நினைக்கும் அளவிற்கு அவளுடனே தான் திரிந்தான்.

பார்ட்டியில் பஃபே சாப்பாட்டுடன், தனியாக ஒரு இடத்தில் மதுபானங்களும் வழங்கப்பட்டது. மறுபுறம் டி.ஜே பாட்டு போட்டு நடமாடிக் கொண்டிருந்தனர் இளசுகள்.

இடையில் ராகுலும் எங்கோ சென்றுவிட, விட்டது சனியன் என்று திவி தன் நண்பர்களுடன் ஐக்கியமாகிவிட்டாள். அவள் கிளம்பும் நேரம் சரியாக ராகுலும் வந்துவிட, அவளின் கையைப் பிடித்து நடனமாடும் இடத்திற்கு வந்து விட்டான்.

அங்கிருந்த அவளின் நண்பர்களோ திவி ராகுல், திவி ராகுல் எனக் கோஷம் பாட, அவளால் அவனை படக்கென விடவும் முடியாமல், அவன் இழுப்புக்கு சென்று அவனுடன் சேர்ந்து நடமாடிக் கொண்டிருந்தாள். அவனிடமிருந்து வந்த மதுவாடை அவன் போதையில் இருக்கிறான் என்பதை அடித்துக் கூறியது.

நடனமாடும் அனைத்து ஸ்டெப்புகளும் அவனுடன் அவளை இழுத்து இழுத்து அணைத்தபடி ஆடினான் அவன். கைகளை அவளின் இடுப்பில் தாரளாமாக உலவவிட்டான். அவளும் அவனிடமிருந்து நாசுக்காக விடுபட முயன்றாள், ஆனால் அவன் முரட்டு பிடியாக அவளைப் பிடித்து வைத்திருந்தான்.

அவளுக்கோ அவனின் அருகாமையும், தொடுதலும் அருவருப்பையும், ஒவ்வாமையும் தந்து அவளைக் கோபத்தின் உச்சிக்கு அழைத்துச் சென்றது. மனம் விரும்பாத நிலையில் கணவனாகவே இருந்தாலும் அவன் தொடுகை பெண்ணுக்குப் பிடிக்காது. இதில் அவனை அவளுக்குச் சுத்தமாகப் பிடிக்காது, அப்படியிருக்கும்போது அவனது தொடுகை எப்படி இருக்கும்.

அவ்வளவு நேரமும் சபை மரியாதைக்காக அவனுடன் நின்றவள் இனியும் பொறுக்க முடியாது என அவளது மொத்தப் பலத்தையும் உபயோகித்து தள்ள முயன்றும் அவளால் விடுபட முடியவில்லை. கடைசியில் குனிவது போல வளைந்து அவன் கைகளில் பற்தடம் பதிவது போல அழுத்தமாகக் கடித்தாள். அந்த வலியில் அவன் கைகள் தளர்ந்தபோது அவனிடமிருந்து விடைப்பெற்று ஹோட்டலிருந்து வெளியேறினாள்.

அவளது நண்பர்களும் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்தில் அவளைக் கவனிக்கவில்லை. விடு விடுவென ஹோட்டலிருந்து வெளிவந்து தன்னுடைய காரை எடுக்க, கார் ஸ்டார்ட் ஆகவில்லை. இதில் ராகுலின் கைவண்ணம் அடங்கியிருந்தது. அவளும் தன்னால் ஆன மட்டும் முயற்சித்துப் பார்த்துவிட்டுக் கார் இயங்கவில்லை எனவும் தந்தைக்கு தொடர்பு கொண்டாள்.

“டேட். வேர் ஆர் யூ?”

“ஒரு முக்கியமான விஷயமா மதுரைக்கு போரேன் டா. மேட்டுப்பாளையம் கிட்ட போய்ட்டு இருக்கேன். என்ன டா குட்டிமா?”

“நான் சுவிதா பார்ட்டிக்கு வந்தேன் டேட், வந்த இடத்தில கார் ஸ்டார்ட் ஆகல”

“ஓஹ் ஷிட் இன்னைக்கு சண்டே வேற, எந்த டிரைவரும் இல்ல. நான் வேணா அக்னீய வரச் சொல்லவாடா. அவன் கூடப் போறீயா?”

“எதாவது பண்ணுங்க டேட். டிஸ்கஸ்டிங் இங்க இருக்கவே பிடிக்கல. அவ அந்த ராகுலயும் இன்வைட் பண்ணிருக்கா போல”

“ஒஹ். எதுவும் பிரச்சனை இல்லைலடா. இரு அக்னீய உடனே வரச் சொல்றேன்” எனறவர் அழைப்பைத் துண்டித்து அக்னீக்கு அழைத்தார்.

“ஹலோ சார்”

“அக்னீ! திவி எதோ பார்ட்டிக்குன்போன இடத்துல கார் ஸ்டார்ட் ஆகலயாம். நீ கொஞ்சம் பிக் பண்ணி வீட்டுல டிராப் பண்ணிடு” எனக்கூறி அவள் லொகேஷனையும் ஷேர் செய்தார்.

அக்னீக்கு அவளை அழைத்து வருவது சுத்தமாகப் பிடிக்கவில்லை, ஆனால் திவாகரிடம் மறுத்துப் பேச விரும்பாமல் எவ்வளவு தாமதமாகக் கிளம்ப முடியுமோ அவ்வளவு தாமதிப்போம். காத்துகிடக்கட்டும் அவ எனப் பொறுமையாகச் செல்ல முடிவடுத்து பொறுமையாகக் கிளம்பினான்.

திவாகரும் மகளுக்கு அழைத்து அக்னீ வருவான், அதுவரை பத்திரமா இரும்மா எனக்கூறி அவரது பயணத்தை மேற்கொண்டார். அக்னீ மற்றும் திவியின் பயணத்தைச் சேர்த்துவைப்பதற்காக மதுரையை நோக்கிய அந்தப் பயணம் சிறப்பாக அமையுமா??

திவியும் காரின் அருகே நின்றுகொண்டிருந்தாள், அங்கும் வந்துவிட்டான் ராகுல்.

“திவி!” எனக்கத்த, அவள் பதிலைத் தராமல் காரில் சாய்ந்து போனை நோண்டிக்கொண்டிருந்தாள். அதில் அவன் பொறுமை எங்கோ பறக்க,

“ஏன் என்ன கடிச்ச?” என்றான் பற்களைக் கடித்தபடி, அவள் அதற்கும் பதிலளித்தாளில்லை.

“பதில் சொல்லுடி திமிர் பிடிச்சவளே!” என ஒருமையில் திட்ட,

“பல்ல பேத்துடுவேன். ஒழுங்கு மரியாதையா பேசு” என இவள் கத்தினாள்.

“உனக்கென்னடி மரியாதை. கொஞ்சம் அழகும், பணமும் இருக்குனு ரொம்ப ஆடுறடி. உன்னைக் கல்யாணம் பண்ணி உன் திமிர அடக்குறேனா இல்லயானு பாருடீ” என அவன் அவளின் கைகளைப் பிடித்து இழுக்க, பளாரென அவனை அறைந்திருந்தாள். அதில் கோபமுற்றவன் அவள் கழுத்தில் கையை வைத்து நெறித்துத் தள்ளிக் கொண்டே, அவனது கீழ்தரமான எண்ணங்களைக் கீழ்தரமான வார்த்தைகளால் அவளிடம் கொட்டினான்.

அவன் கழுத்தை நெறித்ததில் பலமாக வலியெடுக்கவும், அவனிடமிருந்து திமிறி வெளியேறியவள், அவன் அவளைத் தனியாக ஆள் அறவமற்ற இருட்டான இடத்தை நோக்கி நகர்த்தியதை கூட அறியாமல், கோபத்தின் உச்சியிலிருந்தவள்,

“நாயே நீ எல்லாம் ஆம்பிள்ளையா? ஒரு பொண்ணு கிட்ட என்ன பேசனும்னு தெரியாது? சீ!” என முகத்தில் அருவருப்பை காட்டி பேச, அவள் முகவாயை அழுத்தமாகப் பிடித்தவன்,

“யார பார்த்துடி ஆம்பிள்ளையானு கேட்குற? டெய்லி ஒருத்திகிட்ட நான் ஆம்பிள்ளைனு நிரூபிக்கிறேன். இன்னைக்கு உன்கிட்ட நிரூபிச்சுக் காட்டுறேன்” என அவளை அங்கிருந்த புல்வெளியில் தள்ள முயன்றான்.

அவனது தாக்குதல்களைச் சமாளித்து தன்னை நிலைப்படுத்திக் கொண்டு,

“ஒஹ். என்ன கீழ தள்ளி, என்மேல பாஞ்சு, நீ ஆம்பிள்ளைனு சொல்லிக்க ஒரு ஆயுதம் வைத்திருப்பீயே அதை வச்சு என்னை தாக்கிட்டா நீ அம்பிள்ளையாடா? பொறுக்கி நாயே”

“ஆமாம்டி. அத தான் பண்ண போறேன். அதுக்கப்புறம் உன்ன எவன் கட்டுவான்? உன் அப்பனை என் காழுல விழவச்சு, அப்புறம் உன் கழுத்துல ஒரு தாலி கட்டி, ஆயுசுக்கும் உன்ன வதைக்குறேண்டி” எனக்கூற பெருங்குரலெடுத்து சிரித்தவள்,

“ஒஹ். என்னோட கற்பு என் இரண்டு காலுக்கிடையில் இருக்குனு நினைச்சுட்டு அழுதுட்டு திரிவேனு நினைச்சியா? என் கற்பு இங்க இருக்கு” என நெஞ்சை தொட்டு காண்பித்தவள் தொடர்ந்து,

“இப்ப நீ என்ன தொட்டாலும், காலையில ஹால்பிடல் போய் என்னை சுத்தம் பண்ணிக்கிட்டு, வெறிநாய் கடிக்கு மருந்தும் போட்டுகுவேன். அப்புறம் உனக்கு நரகம்னா என்னனு காட்டுவாடா இந்த திவி” என்றவள் தனது மொத்த பலத்தையும் திரட்டி அவனைக் கீழே தள்ளி விட்டுத் தனது நண்பர்கள் இருக்கிமிடம் விரைந்தாள்.

அவனுக்குத் தனது திட்டம் சொதப்பியது ஒருபுறம் எரிச்சலை தந்தாலும், அவள் தள்ளிக் கீழே விழுந்ததில் அவன் தலையில் பலமான அடிப்பட அந்த வலியில் அங்கிருந்து கிளம்பிவிட்டான்.

உள்ளே வந்த திவி திவாகருக்கு அழைத்து,

“டேட்! உடனே.. உடனே இங்க வாங்க. எந்த வேலையா இருந்தாலும் அப்புறம் பார்த்துக்கலாம். அப்புறம் இன்னும் உங்க பி.ஏ வரல அவன முதல்ல வரச் சொல்லுங்க” எனக்கூற தலையும் புரியாமல், வாலும் புரியாமல் மீண்டும் கோத்தகிரியை நோக்கிப் பயணிக்கத் தொடங்கினார். அக்னீயை அழைத்து விரைவாகச் செல்லச் சொல்லவும் மறக்கவில்லை.

அவர் அழைக்கும் போதே கிட்டதட்ட நெறுங்கிவிட்ட அக்னீ இன்னும் இரண்டு நிமிஷத்தில் சென்றுவிடுவேன் எனக்கூறவும் தான் அமைதியடைந்தார். அவளது நண்பர்களும் ஒவ்வொருவாராக விடைபெறக் கல்யாண பெண்ணும் மாப்பிள்ளையும் மட்டுமே அவளுக்குத் துணையாக அவளுடன் காரின் அருகில் நின்று பேசிக் கொண்டிருந்தனர்.

“நீ ஏண்டி அந்த ராகுல இன்வைட் பண்ணின” என திவி கேட்டேவிட்டாள். ஆனால் இன்னமும் அவள் இங்கு நடந்ததை கூறவில்லை.

“நான் எங்க இன்வைட் பண்ணேன். அவன் உன்கூட தான வந்தான். நீ தான் அவன கூட்டிட்டு வந்த” என அவள் கூற,

“இல்ல சுவி! நான் அவன கூட்டிட்டு வரல, நீயும் இன்வைட் பண்ணலனா அவன் வேணும்னே பிளான் பண்ணி வந்திருக்கிறான்” எனக்கூறியவள் அவன் செய்ததை அவர்களிடம் கூறினாள்.

மணமக்கள் இருவரும் கொந்தளித்து போயினர். நம்ம பார்ட்டிக்கு வந்து நம்ம கிட்டயே இந்த நாய் வாலாட்டிருக்கு என அவர்கள் இருவரும் போலீஸ் கம்ப்ளைண்ட் கொடுக்கலாம் எனக்கூற,

“இல்ல டேட்கிட்ட சொல்லி என்ன பண்ணலாம்னு யோசிக்கனும். இனி அவன் என் பக்கமே வராத மாதிரி யோசிக்கனும்” எனக் கூறிக் கொண்டிருக்கும் போதே அக்னீ வந்து சேர, திவி இருந்த மனநிலையில், கோபத்தில் அக்னீ வந்தவுடன் அவனைக் காய்ச்சி எடுத்துவிட்டாள்.

அக்னீக்கு ‘இப்படியே அவளை விட்டுவிட்டு போனாள் தான் என்ன?’ என எண்ணுமளவிற்கு வந்தவன், திவாகருக்காகப் பொறுத்துக் கொண்டு அவளை அழைத்துக் கொண்டு தன் இருசக்கர வாகனத்தில் சென்றான்.

அவளை இறக்கி விட்டுவிட்டு அக்னீ சென்றுவிட, வீட்டிற்குள் சென்றவள் உடையைக் கூட மாற்றாமல் திவாகருக்காக ஹாலிலேயே காத்திருந்தாள். அப்போதென அங்கு வந்த சுபத்ரா அவளிடம்,

“திவி பார்ட்டி எப்படி இருந்தது?”

“ஹம்ம்”

“ராகுல உன்கூட பார்ட்டி அட்டென் பண்ண சொன்னேனே? வந்தானா? பேசிப் பார்த்தியா? அவன புடிக்குது தான?” எனக்கேட்க, திவிக்கு வந்த ஆத்திரத்தில் தன் அருகில் தான் குடித்துவிட்டு வைத்திருந்த காபி கப் தரையில் சுக்கு சுக்காகக் கிடந்தது. அதில் சுபத்ரா அதிர்ந்து நிற்க,

“நீ எல்லாம் அம்மாவா? சொல்லு நீ எல்லாம் ஒரு அம்மாவா? உன்ன அம்மானு சொல்லவே எனக்கு அருவருப்பா இருக்கு. நான் பிறந்ததும் ஒரு மூணு மாசமாவது எனக்குப் பால் கொடுத்துயா? இல்ல நான் தவழ்ந்தத பார்த்தியா? நான் தத்தி தத்தி நடந்து கீழ விழுந்தப்ப தூக்கிவிட்டியா? ஒரு நாளாவது உன் கையால சாப்பாடு ஊட்டினியா? நான் என்ன படிக்கிறேன் எப்படி படிக்கிறேனு பார்த்திருக்கியா? எனக்கு என்ன பிடிக்கும், பிடிக்காது, தெரியும், தெரியாதுனு உனக்குத் தெரியுமா? விலங்கு கூடக் குறிப்பிட்ட காலம்வரை குட்டிய பாதுகாக்கும் நீ என்னைக்காவது என்ன பார்த்துகிட்டயா? உனக்கு உன் சந்தோஷம் மட்டும் தான் பெருசா இருந்தது. இப்போ வந்துட்டா மாப்பிள்ளை பார்க்க? போயிடு நான் இருக்க கோபத்துக்கு உன்ன என்ன பண்ணுவேனே எனக்கு தெரியாது” எனக் காத்து கத்து கத்திவிட்டு மயங்கி விழுந்தாள்.

அவள் மயங்கும் நேரம் சரியாகத் திவாகர் வந்து அவளைத் தாங்கிப் பிடித்தார். கேட்டில் நுழையும் போதே திவியின் சத்தம் கேட்டு விட அரக்கப்பரக்க ஓடி வந்தவர் திவி பேசிய அனைத்தையும் கேட்டுகொண்டே தான் வந்தார். ஆனால் அவர் வருவதற்குள் திவி மயங்கி விட்டாள். சுபத்ரா அலங்கமலங்க விழித்துக் கொண்டு நின்றார்.

திவாகர் உடனே மருத்துவரை அழைத்தார். மருத்துவரும் வந்து சோதித்துவிட்டு அதீத மன அழுத்தம் காரணமாக வந்த மயக்கம் தான் வேறொன்றுமில்லை என் கூறவும் திவாகர் முதன் முறையாகத் தன் மனைவியைத் தீயாய் முறைத்தார்.

பின் மனைவிடம் வந்தவர், இத்தனை வருஷ திருமண வாழ்க்கையில உன்கிட்ட எனக்காக நான் ஒன்னுமே கேட்டதில்லை. இப்போ முதன் முறையா ஒன்னே ஒன்னு தான் கேட்குறேன். என்பொண்ணு வாழ்க்கையை என்கிட்ட கொடுத்திடு. அவளுக்கு நான் நல்ல பையனைப் பார்த்திருக்கேன். லீலா, ராகுல் பிரென்ஷிப் எல்லாம் உன்னோட வச்சிக்கோ இனிமேல் அவங்க யாரும் நம்ம வீட்டுக்கு வரக் கூடாது என அழுத்தமாகப் பேசிக் கொண்டிருக்கும் போதே திவி எழுந்துவிட்டாள்.

“டேட்” என ஈனசுரத்தில் அழைக்க, மகளிடம் விரைந்தார்.

“என்னடா குட்டிமா? என்ன நடந்தது?” எனக்கேட்க, சுபத்ராவை பார்த்துவிட்டவள் மீண்டும் டென்சனாகி,

“இந்த லேடி என்ன பண்ணிருக்குனு தெரியுமா டேடி? பார்ட்டிக்கு ராகுல அனுப்பிருக்கு. அவன் அங்க வந்து என்ன பண்ணானு தெரியுமா டேடி? அவன்.. அவன்.. என்கிட்ட த..தப்பா நடக்க டிரை பண்ணினான். அவன் கிட்ட இருந்து தப்பிச்சு வந்திருக்கேன் டேட்” எனக்கூற அதிர்ந்து நின்றனர் அந்தத் தாயும் தகப்பனும்.

“இந்த லேடியால நான் என்னோட வாழ்க்கையில நிறைய இழந்திருக்கேன். ஆனாலும் பெத்த தாயினு தான் இதுவரை பொறுத்து போனேன், இனிமேல் முடியாது இனி இந்த லேடி என் கண் முன்னாடி வரவே கூடாது. இந்த லேடிய பார்த்தாலே எனக்கு என்ன கண்ட்ரோல் பண்ண முடியல” எனக் கண்களை இறுக மூடவும் அடிபட்ட பார்வை பார்த்தவாறு அறையை விட்டு வெளியேறினார் சுபத்ரா.

“அப்புறம் பிளீஸ் டேட் திரும்பக் கல்யாணம் அதுஇதுனு நீங்க ஆரம்பிக்காதிங்க. என்னால முடியல”

“அதுக்காகக் கல்யாணம் பண்ணாம இருக்க முடியாதே மா”

“ஏன் முடியாது. என்கிட்ட என்ன இல்ல. இத்தனை வருஷமா நான் எப்படி இருந்தேனோ அப்படியே இனியும் இருந்துக்கிறேன். எனக்குப் புதுசா யாரும் வேண்டாம்”

“அப்படி சொல்லாதடா குட்டிமா. அந்த அந்த வயசுல செய்யுற செஞ்சுடனும். ராகுல் மாதிரி எல்லாப் பசங்களும் இருக்க மாட்டாங்கடா”

“என்னால முடியல டேட். நான் ரொம்ப டயர்டு ஆயிட்டேன். அட்லீஸ்ட் ஐ வாண்ட் சிக்ஸ் மன்ந்த். அப்புறம் என் மைண்ட் எப்படி இருக்கோ பார்த்துக்கலாம்”

“ஓ.கே டா. ஆஃப்டர் சிக்ஸ் மன்ந்த் நான் சொல்றத நீ கேட்கனும். உனக்கு யாரயாவது பிடிச்சாலும் ஓ.கே தான். ஆனா கல்யாணம் பண்ணிக்கனும்” என மகளின் தலையைத் தடவினார்.

“சரிடா. லேட் நைட் ஆச்சு. தூங்கு வெளிய போகாத. எங்க போறதா இருந்தாலும் மானிங் போ” எனக்கூறினார். ஏனெனில் மகள் மன அமைதியை தேடி வெளியில் செல்வாளென அந்தத் தகப்பனுக்கு தெரியும்.

“ஓ.கே டேட்” என்றவளும் தகப்பனின் வருடலில் மெல்ல உறக்கத்தை தழுவ, கண்களில் வந்த கண்ணீரை துடைத்துக் கொண்டே மகளின் அறைக் கதவை அடைத்துவிட்டு சென்றார்.

திவியின் இளமைப் பருவத்தில் அவளுக்கு என்ன நேர்ந்தது?? அவளிடம் உள்ள இரகசியம் என்ன??
 

Lufa Novels

Moderator

யாரோ அவன்?? யாரோ இவள்??​

அத்தியாயம் 10​

68pSxWltFJBqN7GRHl0GYaDfdjWWPaCfjetXBCcb3eW3nmvbthcdw0_JCxq3QJ3GrqAacxKNQtg9jLN0hbsxzu9F-LDy63MuDqtcp5dKPtjE1RJ2HwvjnIsmbPd-BqwSXHUn2e0IDz4shpeQubNfOAI


அதிகாலை நேரம் இரவில் பொழிந்த பனி இன்னும் இலைகளின் மேல் முத்துபோல் ஜொலித்து சூரியனைக் கண்டும் உருகி கரையாமல் இன்னுமே இலைகளின் மேல் உறவாடிக் கொண்டிருந்தது.

சாலையில் நடக்கும் மக்களின் மூச்சுக் காற்றுக்கூட மூக்கிலும் வாயிலும் வெண்புகையாக வெளியேறிக் கொண்டிருக்க, குளிர்ந்த காற்று உடலில் ஊசிபோல் துளைத்தது.

எட்டிப்பிடிக்கும் தூரத்தில் வெண்பஞ்சு மேகங்கள் ஊர்வலம் போக, குளிருக்கு இதமாக ஆங்காங்கே டீக்கடையில் மக்கள் தேநீர் அருந்திக் கொண்டிருந்தனர்.

அக்னீ அவ்வழியே தான் காலைநேர நடைப்பயிற்சி முடித்துவிட்டு தன் வீட்டிற்கு வந்து கொண்டிந்தான். ஏனோ அவனுக்கு அன்று போனில் பேசிய வங்கி அதிகாரியான மீனாவின் ஞாபகமாகவே இருந்தது.

அவள் தேடிய அந்த நபர் கிடைத்தானா? தன்னுடைய மொபைல் நம்பரை மாற்றிக் கொடுத்துவிட்டு சென்றானே அவனை அந்தப் பெண் கண்டுபிடித்தாளா? அல்லது பணப்பிரச்சனையில் சிக்கினாளா? என அவனின் எண்ணவோட்டம் எல்லாம் அவளைச் சுற்றித்தான் இருந்தது.

அவனிடம் அவள் பேசிய கைப்பேசி எண் இருக்கிறது தான், ஆனால் அனாவசியமாக ஒரு பெண்ணுக்கு அழைத்துப் பேச அவனுக்குத் தயக்கமாகவும் இருந்தது. அவன் நல்ல எண்ணத்தில் தான் அவளுக்கு அழைத்து விசாரிக்க நினைத்தான், ஆனால் அவள் அதைத் தவறாகப் புரிந்து கொள்வாளோ என அவனுக்குத் தயக்கமாக இருந்தது.

அன்று காலையில் எழும்போதே அவன் கனவில் ஏதோ ஒரு பெண் தன் உடமையை இழந்து தவிப்பது போலான கனவுடன் தான் எழுந்தான். அதனால் தானோ என்னவோ அவனுக்கு அந்தப் பெண்ணின் ஞாபகமாவே இருந்தது.

அவனும் வீட்டிற்கு வந்து கிளம்பி அலுவலகத்திற்கும் வந்துவிட்டான், அவன் கைகள் கைபேசியில் அவளது எண்ணை எடுக்கவும் பின் அழைக்காமல் வைப்பதுமாகவே இருந்தான். கடைசியில் ‘வேண்டாம் படித்த பெண் தான் எப்படியும் சமாளித்து அவனைக் கண்டுபிடித்திருப்பாள்’ என எண்ணி அவளுக்கு அழைக்கும் எண்ணத்தைக் கைவிட்டான். அவளது எண்ணை அவனது கைபேசியில் சேமித்து வைக்கவும் மறக்கவில்லை, அதன் பின் அவன் அவளை அழைக்கவும் இல்லை, வேலையில் மட்டுமே கவனத்தை திருப்பினான்.

திவி அந்த பார்ட்டி சம்பவத்திற்கு பிறகு சுபத்ராவிடம் ஒரு வார்த்தைக்கூட இன்று வரை பேசவில்லை. சுதாகரும் மகள் வீட்டில் இருக்கும் நேரம் தானும் வீட்டிலிருந்து மகளைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொண்டார். இதை அவர் திவியின் சிறுவயதிலிருந்தே செய்திருக்கலாம். ஆனால் காலம் கடந்த ஞானோதயம்.

அன்று தந்தையும் மகளும் அமர்ந்து குளிருக்கு இதமாக லெமன் டீ குடித்துக்கொண்டே டீவில் செய்தி பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு சுபத்ரா வந்து அமர, திவி எழுந்து அவளது அறைக்குச் செல்ல முயன்றாள்.

ஆனால் சுபத்ராவோ மகளின் கைகளைப் பிடித்து அவளிடம் பேச வேண்டுமெனக் கூறினார். பிறந்தது முதல் தன் அன்னையின் ஸ்பரிசத்தை அறியாதவள், அன்னையின் தொடுதலில் தன் இழப்பு பூதாகரமாகத் தெரிய அவள் கைகளை உதறி ஆக்ரோஷமாகக் கத்தினாள்.

“என்ன சுபத்ரா மேடம், என்ன எல்லாம் தொடுறீங்க… இது உங்களுக்கு செட் ஆகாதே”

“தி.. திவி” எனத் திக்கித்திணற,

“ஒரு அம்மாவோட ஸ்பரிசம் எப்படி இருக்கும்னு எனக்குத் தெரியாது. ஆனா இன்னைக்கு நீ என் கைய பிடிக்கும்போது என் உடம்பு தீயா எறியுது” எனக்கூற சுபத்ரா கண்களில் வந்தே இராத கண்ணீர் இன்று முதன் முதலாக வந்தது. மகளின் வார்த்தைகளால் வாயடைத்து போய் நிற்க, அப்போது தான் ஒரு முக்கியமான அலுவலக கோப்பை சுதாகரிடம் கொடுப்பதற்காகத் திவியின் வீட்டிற்கு வந்தான் அக்னீ.

திவியோ இங்குக் கோபத்தில் அவள் அன்னையை வார்த்தை என்னும் வாள் கொண்டு அன்னையை குத்திக் குதறிக் கொண்டிருந்தாள். கடைசியில் அவன் வரும்போது தன் அன்னையைப் பார்த்து,

“என் கையைத் தொட கூட உனக்கு உரிமை இல்ல. நான் திவி. தி கிரேட் பிஸ்னஸ்மேன் சுதாகரோட பொண்ணு மட்டும் தான். எனக்கு நீ யாருமே இல்ல. இனி என்ன தொடுறதோ, இல்ல என்கிட்ட பேச முயற்சியோ பண்ணாத” எனக் கத்தியவள், அங்கு ஹாலில் இருந்த பொருட்களை எல்லாம் தள்ளிவிட்டு உடைத்தாள். சுதாகர் அவளைக் கட்டுப்படுத்த படாத பாடு படும்போது, அவள் மீண்டும் மயங்கிச் சரிந்தாள். சுதாகரும் மேல் மூச்சு கீழ் மூச்சி வாங்க, கைக்கால் நடுக்கத்துடன் மகளை எழுப்ப முயன்றார்.

முதல் தடவை மகள் மயங்கும்போது கூடத் தைரியமாக ஒத்த ஆளாக மகளைத் தூக்கி, அவள் அறையில் படுக்க வைத்தார். ஆனால் இன்று, மீண்டும் மீண்டும் தன் ஒற்றை மகளின் உடலும் மனமும் நோகவும், தன் பலத்தை இழந்தார் போல் படபடத்தார்.

அந்நேரம் வந்த அக்னியை பார்த்தவர் அவனை அழைத்து, அவன் உதவியுடன் மகளின் முகத்தில் தண்ணீரைத் தெளிக்க, அவளிடம் ஒரு அசைவும் இல்லை.

“அக்னீ! திவிய தூக்குப்பா. ஹாஸ்பிடல் போலாம்” எனத் திவாகர் கூற,

‘என்னது இவளை நான் தூக்குறதா! பெத்த ஆத்தா கைய பிடிச்சதுக்கே அந்தக் கத்து கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணினா! இவள நான் தொட்டு தூக்கினா அவ்ளோ தான். எங்காத்தாளுக்கு என்ன பிள்ளை இல்லாம ஆக்கிடுவா’ என நினைத்தவன் தயங்கி நிற்க, அவனைத் தூக்குமாறு மீண்டும் கூற வேறு வழி இல்லாமல் அவளைத் தூக்கிக் கொண்டு காரை நோக்கிச் சென்றான்.

அவளைப் பின் இருக்கையில் படுக்க வைக்கச் சுபத்ரா அவள் அருகில் அமர வந்தார். வந்தவரைத் தடுத்த சுதாகர்,

“நீ வீட்டிலேயே இரு” என இறுகிய குரலில் கூறிவிட்டு மகளின் அருகில் அமர்ந்தவர், அக்னீயை காரை எடுக்கச் சொல்லி ஹாஸ்பிடல் சென்றனர்.

மீண்டும் சோதித்த மருத்துவர் முதலில் கூறியதையே தான் கூறினார். அதிகம் கோபப்படாமல் இருக்குமாறு வலியுறுத்தினார். வேறு ஒன்றுமில்லையெனக் கூறி வீட்டிற்கு அனுப்பிவைத்தார். மீண்டும் அக்னீயே அவர்களை வீட்டில் விட்டு விட்டுச் சுதாகரிடம் கூறிவிட்டுக் கிளம்பினான்.

மாலை வீட்டிற்கு வந்தவனின் கைகள் தாமாகவே ‘மீனா’ என அவன் சேமித்து வைத்த எண்ணைத்தான் தேடியது. மீண்டும் மீண்டும் யோசித்தவன் ‘ஆனது ஆச்சு அந்தப் பொண்ணு என்ன யோசிச்சா நமக்கு என்ன, ஒரு தடவை என்னாச்சுனு மட்டும் கேட்டுட்டா மனசு ஆறிடும்’ என அவள் எண்ணுக்கு அழைத்தான்.

அவளோ அன்னை இல்லத்தில் அனைவருடனும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தாள். அவர்கள் அவளைப் பாடச் சொல்லிக் கொண்டிருந்தனர். அவளும் தன் மொபைலில் அவள் பாட நினைக்கும் பாடலின் வரிகளைக் கூகுலின் உதவியுடன் தேடி பாட ஆரம்பிக்கும்போது புதியாய் ஒரு நம்பரிலிருந்து அழைப்பு வர அதைக் கட் செய்துவிட்டு பாட ஆரம்பித்தாள்.

மலர்கள் கேட்டேன்
வனமே தந்தனை

தண்ணீர் கேட்டேன்
அமிர்தம் தந்தனை

எதை நான் கேட்பின் ஆ ஆ ஆ
எதை நான் கேட்பின்
உனையே தருவாய்
எதை நான் கேட்பின்
உனையே தருவாய்

காட்டில் தொலைந்தேன்
வழியாய் வந்தனை

இருளில் தொலைந்தேன்
ஒளியாய் வந்தனை

எதனில் தொலைந்தால்…
எதனில் தொலைந்தால்
நீயே வருவாய்

மலர்கள் கேட்டேன்
வனமே தந்தனை
தண்ணீர் கேட்டேன்
அமிர்தம் தந்தனை

பள்ளம் வீழ்ந்தேன்
சிகரம் சேர்தனை

வெள்ளம் வீழ்ந்தேன்
கரையில் சேர்ந்தனை

எதனில் வீழ்ந்தால்…
எதனில் வீழ்ந்தால்
உன்னிடம் சேர்ப்பாய்

மலர்கள் கேட்டேன்
வனமே தந்தனை
தண்ணீர் கேட்டேன்
அமிர்தம் தந்தனை

என அவளின் காந்தக்குரலில் பாட அனைத்தையும் கேட்டு மெய்மறந்து படுக்கையில் கண்மூடி படுத்திருந்தான் அக்னீ. ஆம்! அவள் அழைப்பைக் கட் செய்வதாக நினைத்து அழைப்பை ஏற்றுவிட்டாள். இங்கு அக்னீயோ என்ன பேசுவது? எப்படி தொடங்குவது எனத் தயங்கிய வேலையில் ‘மலர்கள் கேட்டேன்’ என அவள் மனதை மயக்கும் குரலில் பாட இங்கு அக்னீயின் மனமோ அந்த குரலுக்குக் கட்டுப்பட்டு, வாயடைத்து நின்றது.

அவள் பாடி முடித்தபின் மொபைலைப் பார்க்க அவ்வளவு நேரமும் அழைப்பிலேயே இருக்க, ‘அய்யோ ஆன் பன்னிட்டேனா’ என நினைத்தவள்,

“ஹலோ! யார் பேசுறது” எனக்கேட்க

“நா.. நா..” எனத் திக்கித் திணறினான் அக்னீ.

“நீ… நீ.. நீங்க தான் யாரு” என அவள் அவனை போலத் திக்கி திக்கிப்பேசி கிண்டல் பண்ணுவது போல கேட்டுச் சிரிக்க,

“நான் தான் ராங்கால். சுரேஷ்னு நினைச்சு எனக்குப் போன் பண்ணீங்களே!”

“அட ஆமா! நம்ம ராங்கால் சுரேஷ். என்னங்க என்ன வேணும்?”

“இல்ல என் நம்பர கொடுத்து ஏமாத்தினானே, அவன கண்டுபிடிச்சாச்சா?”

“ஹ்ம்ம் அது ஒரு பெரிய கதை சார். அவன் சரியான ஃபோர்ஜரி. முன்னாடி கொடுத்த நம்பரை மாத்திட்டான், கடனும் கட்டல அப்புறம் அவனை வீட்டுக்குப் போய்க் கண்டுபிடிச்சு கூட்டிட்டு வந்தாங்க.. நீங்கப் போன வாரத்துல குன்னூர் பேங்க் வந்திருப்பீங்க போல, அன்னைக்கு தான் அவனையும் பேங்க் வெர்க்கர்ஸ் கூட்டிட்டு வந்தாங்க. அன்னைக்கு மிரட்டி ஒழுங்கா பணத்த கட்டுனு வார்ன் பண்ணிட்டு அவன் கிட்ட லெட்டர் எழுதி வாங்கினாங்க, அப்போ நம்பர் எழுதச் சொல்ல, பக்கத்துல நீங்கப் பார்ம்ல ஃபில் பண்ண நம்பரை பார்த்து அத எழுதி வச்சிருக்கான். ஃபிராடு. அப்புறம் திரும்ப அவனைக் கூப்பிட்டு அவன் வைஃப்பையும் கூப்பிட்டு ஆறு மாசத்துல பணத்த கட்டனும் இல்ல போலீஸ் கம்ளைண்ட் பண்ணுவோம்னு எழுதி வாங்கிருக்கேன்.” எனக்கூறினாள்.

“எனக்கும் அதாங்க மனசுல ஓடுச்சு. என்ன பண்ணீங்கனு அதான் கால் பண்ணேன்”

“ரொம்ப நன்றிங்க… எனக்காக இவ்ளோ யோசிச்சதுக்கு”

“நன்றி எல்லாம் எதுக்கு? இன்னைக்கு கால் பண்ணதால தான் ஒரு அழகான பாடல் கேட்க முடிஞ்சது. ரொம்ப அழகான வாய்ஸ் உங்களுக்கு. அப்படியே எங்கயோ கொண்டு போகுது”

“அய்யோ! தங்க்ஸ்ங்க”

“இனிமே கவனமா இருங்க” எனக்கூறி அழைப்பை அணைத்தான்.

அவளின் குரலில் கேட்ட பாடலின் இசை மனதை கவர, தனது மொபைலில் அந்தப் பாடலைத் தேடி ஒலிக்கச் செய்தான். அவன் மனதில் மீனாவின் குரல் தான் கேட்டது.

ஆயிற்று நாட்கள் மாதங்களாக ஆனால் அக்னீயின் மனதிலிருந்து அந்தத் தேன்குரல் இன்னும் மறக்கவில்லை. மீண்டும் அவளிடம் பேசத் துடித்த மனதை அவனே கடிவாளமிட்டு கட்டி வைத்தான். என்ன பேசுவது? இதுவரை எந்தப் பெண்ணிடமும் இப்படி தாமாகச் சென்று காரணம் இல்லாமல் பேசியதில்லை.

அவள் முதல் நாள் பேசும்போது கூட அவனிடம் நறுக்குதெறித்தார் போல் அவனின் கேள்விக்கு மட்டும் தான் பதிலைக் கூறினாள். தாமாக அவள் அவனிடம் எதுவுமே பேசவில்லை. அப்படியிருக்கும்போது மீண்டும் தானாக அவளிடம் பேச அக்னீக்கும் மனம் வரவில்லை.

அன்று மஹாவிற்கு நீட் தேர்வு நாள். அவள் டாக்டர் கனவைத் தான் வீட்டிற்காகத் தியாகம் செய்தாளே! அதனால் தேர்வுக்குப் படிக்காமலிருக்க, அக்னீ தான் அவளை அதட்டி படி, தேர்வு எழுது, பிறகு வருவதை பார்த்துக் கொள்ளலாமென அவளைப் படிக்கச் சொன்னான்.

அவளுக்குச் செண்டர் திருச்சியில் போடப்பட்டது. நேற்றே ஆதி அவளை அழைத்துசென்றான் இரவு ஆதியின் நண்பன் ஒருவன் வீட்டில் தங்கி, காலையில் அங்கிருந்து தேர்வுமையத்திற்கு செல்வதாக ஏற்பாடு. அதனால் காலையில் அழைத்து வாழ்த்து கூறி அனுப்பிவைத்தான்.

மஹாவின் நீட் தேர்வு ஞாபகம் வரும் போதே பொதுத்தேர்வு முடிவுக்கு மறுநாள் தான் முதன் முதலாக அவளிடம் பேசியதும் அவனுக்கு ஞாபகம் வந்தது. ‘தினமும் ஒரு தடவையாவது நான் உன்னை நினைச்சிடுறேன், ஆனால் உனக்கு என் ஞாபகம் கூட இருக்காது இல்ல மீனா. ஏன் என் பேரக் கூட நீ இன்னும் கேட்கல, நீயா கேட்குற வரைக்கும் நானும் சொல்லமாட்டேன் போ. நான் தான் உன்ன நினைக்குறேன்… ஏன்னு தான் தெரியல…’ என மனதோடு புலம்பியவாறு அவன் வேலைகளைச் செய்தான்.

வேலையின் நடுவில் அவனுக்கு மீனாவின் பெயரைத் தாங்கிய அழைப்பு வர, அக்னீக்கு தான் இன்ப அதிர்ச்சியாக இருந்தது.

“ஹலோ மீனா! வாட் அ சர்பிரைஸ். கால் எல்லாம் பண்ணிருக்கீங்க”

“சாரி சார். என்னோட நம்பர் உங்க கிட்ட இருக்கா கரெக்டா கண்டுபிடிச்சுட்டிங்க”

“சேவ் பண்ணிருந்தேன்” என்றான்.

“ஓ… நான் சேவ் பண்ண மறந்துட்டேன். இன்னைக்கு பண்ணிடுறேன். நம்பர் சேவ் பண்ணவர் ஒரு கால் கூட பண்ணல” எனக்கூறவும் தன் நம்பரை அவள் சேவ் பண்ணாதது அவனுக்குச் சுணக்கமாகத் தான் இருந்தது.

“நான் எப்படிங்க பண்றது, நீங்கத் தப்பா நினைச்சுட்டா?”

“அதுவும் சரி தான். நானும் பொதுவா யார் கிட்டயும் பேசமாட்டேன்” என அவள் கூறியதும் தனக்கு மட்டும் அவள் அழைத்தது குதூகலமாகவும் இருந்தது அவன் மனது.

“அப்புறம் தீடீரென அதிகாரியின் கவனம் என்மேல் வரக்காரணம்” எனக் கேலியாகக் கேட்க,

“ஹ்ம்ம் சொல்ல வந்ததே மறந்துட்டேன் பாருங்க… அந்தப் பிராடு சுரேஷ் பணத்தை செட்டில் பண்ணிட்டான். நீங்க அன்னைக்கு என்னாச்சுனு கேட்டீங்கள, அதான் அந்த பைல்’ல உங்க நம்பர் இருந்ததா, பார்த்ததும் உங்களுக்குக் கால் பண்ணேன்”

“ஹம்ம் சரிங்க” என்றான் சுரத்தே இல்லாமல்.

“என்னாச்சு? திடீர்னு டல்லா பேசுறீங்க?”

“இல்ல. தப்பா நினைக்காதீங்க. இனிமேல் நாம பேசப் போறதும் இல்ல. அதான் உன்மையை சொல்லிடலாம்னு. தப்பான எண்ணத்தில இல்ல ஆனா உங்களைத் தினமும் நான் ஒரு தடவையாவது நினைச்சிடுவேன். ஆனா உங்களுக்கு என் ஞாபகம் கூட, பைல்’ல என் நம்பரை பார்த்ததும் தான் வந்துச்சுனு சொல்லும்போது கொஞ்சம் கஷ்டமாகிடுச்சு”

“அய்யோ சாரி சார். நீங்க இவ்ளோ சென்ஸிடிவா இருப்பீங்கனு தெரியாது. நிஜமா சாரி. இன்னைக்கே இப்பவே நம்பர சேவ் பண்றேன், இப்பத்தில இருந்து நம்ம பிரண்ட்ஸ். ஓ.கே வா?”

“எப்படி சேவ் பண்ண போறீங்க. என் பேரு தெரியுமா?”

“சுரேஷ்ஷ்ஷ்ஷ்….” என்று அவள் இழுத்து பற்களைக் கடிக்க,

“இதான். நீங்க ஒன் டைம் சொன்ன உங்க பேர நான் ஞாபகம் வச்சிருக்கேன். ஆனா நீங்க என் பேர கூடக் தெரிஞ்சுக்கல”

“ஹலோ மிஸ்டர். என்ன ரொம்ப பேசுறீங்க. நான் என் பேர நானா சொன்னேன். நீங்கச் சொன்னீங்களா? என்னமோ காலேஜ் பொண்ணுங்க பசங்க கிட்ட இருந்து பேர மறைக்கிற மாதிரி மறச்சுட்டு என்ன பிளேம் பண்றீங்க… இப்ப சொல்றேன் கேட்டுக்கோங்க… உங்க காலண்டர்ல குறிச்சு வச்சுக்கோங்க… உங்க பேர நீங்களே சொல்லாமல் நானே கண்டுபிடிக்கிறேன். அதுவரை நீங்க ராங்கால் ஆகவே இருங்க” என அண்ணாமலை ரஜினி ஸ்டைலில் கூற அக்னீ வாய்விட்டுச் சிரித்தான்.

“உங்க வாய்ஸ் நல்லா இருக்கு, யுனிக் வாய்ஸ். அந்த வாய்ஸ்ல நீங்கச் சிரிக்கிறது கூட நல்லா இருக்கு” என அவள் கூற அவனின் சிரிப்பு மேலும் விரிந்தது.

“ஓ.கே கவுண்டவுன் ஸ்டார்ட். எப்போ என் பேர கண்டுபிடிக்கிறீங்கனு பாக்குறேன். ஒரு வேல கண்டுபிடிக்காம தோத்துட்டா?”

“ஹ்ம்ம் நீங்க என்ன கேட்டாலும் வாங்கி தரேன்”

“டீல்”

“யெஸ் டீல்” எனப் பேசிக் கொண்டே இருந்தனர். அன்றிலிருந்து இருவருக்கும் நடுவில் ஒரு நட்பு இலையோடிக் கொண்டே இருந்தது.

இவர்களின் நட்பு நட்பாகவே தொடருமா? இல்ல நட்பு காதலாய் மாறுமா?
 

Lufa Novels

Moderator

யாரோ அவன்?? யாரோ இவள்??​

அத்தியாயம் 11​


A-ReTp5BtgVZRYQ91NNaN9CLayiquc8WDXpfEdIA4zSgxk1t74pD4m57TOwfx0Yr0t4IaE_1oFGIiIR4QAKRn75BnMOjHfO1U2MrqRSWVToxSqeRHe0eRL9gpJ2PRuv_NTQoeqqFa4_5jc4yPUMo2ew


இரண்டு மாதங்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் கழிந்தது அக்னீக்கும் மீனாவுக்கும். காலங்கள் சிலரை மறக்கச் செய்துவிடும் ஆனால் ஒரு சிலரின் அன்பு காலத்தையே மறக்கச் செய்துவிடும். இவர்களின் அன்பும் காலத்தையே மறக்கச் செய்து, தேய்கின்ற நாட்கள் எல்லாம் அவர்களிடையே நெறுக்கத்தை ஏற்படுத்தியது. இரு மாதங்களில் அவர்கள் இருவரும் நல்ல நண்பர்களுக்கும் மேல் பழகியிருந்தனர்.

எப்படி எனக் கேட்டால் இருவருக்கும் பதிலில்லை. அக்னீயும் அவளிடம் பழகும்போது இவ்வளவு இயல்பாக ஒரு பெண்ணுடன் பழகுவான் என்பது அவனுக்கே ஆச்சர்யம் தான்.

மீனா சொல்லவே தேவையில்லை, அவள் தெரியாதவர்களிடம் அதிகம் பழகும் பழக்கமில்லாதவள். ஏன் அவள் அக்னீயிடமே ஆரம்பத்தில் காரணம் இல்லாமல் பேசவில்லையே! அக்னீயாய் தான் அவளிடம் பேச்சை வளர்த்தான்.

ஆனால் இன்று அவர்களைப் பார்க்கும்போது நான்கு மாதங்கள் முன்பு தான் பழக்கமானவர்கள் எனக் கூறினாள் நம்பமாட்டார்கள். மீனாவின் நாட்களின் ஆரம்பமும், முடிவும் தொலைபேசியில் தான்.

அக்னீயை கேட்டால் ‘பாதி தூக்கத்தில் எழுந்து தாயை தேடும் குழந்தைபோல, நானும் கண் விழித்ததும் தேடுகிறேன் உன்னை என் தொலைபேசியில்’ எனக் கவிதையே பாடிவிடுவான்.

மீனாவின் தொலைபேசியில் டிங்னு சத்தம் கேட்க எட்டிப் பார்த்தால் “மை கிரைம் பாட்னர்” என்ற பெயரில் குறுஞ்செய்தி வந்தது. சிரிப்புடன் அதைத் திறக்க,

“மீனா! நான் ஊருக்குக் கிளம்பிட்டேன். போய்ட்டு கால் பண்றேன்” என அக்னீயிடமிருந்து வந்து தகவல்.

“ஓ.கே பாட்னர். ஃபிரி’யா இருக்கும்போது கால் பண்ணுங்க” எனக் குறுஞ்செய்தி அனுப்பிவிட்டாள்.

அவன் பஸ்ஸில் ஏறியதும் தான் அதைப் பார்த்தான், பதிலுக்குஜ் கட்டைவிரல் உயர்த்திய இமோஜியை அனுப்பிவிட்டு தன் பயணத்தைத் தொடந்தான்.

ஆனால் அவன் நினைவு முழுவதும் மீனாவைச் சுற்றியே வந்தது. தனக்குள் சிரித்துக் கொண்டவன்

‘என்னை என்ன பண்ணின மீனா? பூவைக் கண்ட வண்டுபோல என்னோட நினைப்பு பூராம் உன்மேல தான் இருக்கு. என் மனசுல உக்கார்ந்து என்னமோ பண்ற நீ. உன்ன நினைக்காம நிமிஷம் கூட என்னால முடியல. என்கூட நட்பா பழகிட்டு இருக்குற உன்கிட்ட எப்படி சொல்வேன் நான் உன்ன மனசில நினைச்சுட்டு இருக்கேனு.

நட்பா பழகிட்டு இப்படி சொல்றயேனு நீ நினைச்சா என்னால தாங்க முடியாது மீனா. அதுக்காக என் மனசில உள்ளதை உன்கிட்ட சொல்லாமலும் இருக்க முடியல. இதுவரை என்ன பத்தின எந்த விஷயத்தையும், ஏன் என்னோட பேர கூட நான் உன்கிட்ட சொல்லல. ஆனா நீ உன்னோட எல்லா விஷயத்தையும் நண்பனா என்னோட ஷேர் பண்ணிருக்க. உன்னோட நம்பிக்கையை உடைக்காம இருக்கனுதான் தோனுது அதுக்காக மனச மறைக்க முடியாதில்ல.

நான் திரும்பி ஊருக்கு வந்து உன்னை நேரில மீட் பண்றேன். என் மனச உங்கிட்ட சொல்றேன். உனக்கும் என்ன பிடிக்கும் தான் நினைக்குறேன்.

நீ எப்படி இருப்ப மீனா? நீ கிருஷ்ணன் சார் பொண்ணுனு சொன்னதுல இருந்து எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு மீனா. அன்னைக்கு தியேட்டர்ல பக்கத்துலயே உன்ன பார்த்துட்டு உன் முகத்த பார்க்காம விட்டுடேனு.

என்ன உனக்குப் பிடிக்கும் தான மீனா? இல்ல வெறும் நட்புனு சொல்லிடுவியா?’ என வழி நெடுகிலும் மீனாவின் நினைப்புடன் தான் ஊருக்குச் சென்றான்.

காலையில் சாப்பாடு முடிந்தவுடன் மஹாவுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தான் அக்னீ. அன்று நீட் தேர்வின் முடிவுகள் வரும் என அவர்களும் ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருந்தனர். அக்னீ எதிர்பார்த்தது போல மஹா நீட்டிலும் நல்ல மதிப்பெண்களே எடுத்திருந்தாள்.

நீட் தேர்வில் 720 மதிப்பெண்களுக்கு 543 மதிப்பெண் எடுத்திருந்தாள். மதில்மேல் பூனை நிலை தான் அரசுக் கல்லூரியில் இடம் கிடைப்பதற்கு. ஒருவேலை அரசுக் கல்லூரியில் கிடைத்தால் கட்டணம் அதிகமிருக்காது, மிஞ்சினால வருடத்திற்கு பதினைந்தாயிரம் தான் கல்விக் கட்டணம் வரும், இதற செலவுகள் விடுதி, சாப்பாடு எல்லாம் தனியாக வரும். மொத்தமாகவே சேர்த்து பார்த்தாலும் வருடத்திற்கு ஒரு லட்சத்தில் முடித்து விடலாம்.

ஆனால் அரசுக் கல்லூரி கிடைக்காமல் தனியார் கல்லூரியில் கவர்மெண்ட் கோட்டாவில் சேர்ந்தால் கல்லூரியைப் பொறுத்து கட்டணம் வரும். குறைந்த பட்சமாகப் பார்த்தாலும் வருடத்திற்கு ஏழு முதல் எட்டு லட்சத்தைத் தொடும்.

மஹா “அண்ணே எம்.பி.பி.எஸ் எல்லாம் வேண்டாம்ணே. நான் பி.எஸ்.சி நர்ஸிங் எடுத்துப் படிக்கிறேன்” எனக்கூற அதிர்வுடன் திரும்பிப் பார்த்தான்.

“என்ன சொல்ற மஹாம்மா! எவ்ளோ நல்ல மார்க் வாங்கியிருக்க, அவனவன் நீட்'ல பாஸ் ஆகுறதுக்கே தலைகீழா நிக்கிறானுங்க. நீ என்னடானா இவ்ளோ நல்ல மார்க் வாங்கிட்டு இப்படி பேசுற”

“இல்லண்ணே கவர்மெண்ட் காலேஜ் கிடைக்குமானு தெரியல, கிடைச்சாகும் கூட வருஷத்துக்கு ஒரு லட்சம் ஆகும்”

“நீ ஏன் அத எல்லாம் யோசிக்கிற? அடுத்து கவுன்சிலிங் அப்ளை பண்ற வேலையை மட்டும் பாரு. மத்தத நான் பார்த்துக்கிறேன்”

“இல்லண்ணே! கவுன்சிலிங் அப்ளை பண்றதுக்கு கூட நாம ஒருலட்சம் ரீஃபண்டபிள் டெபாஸிட் பண்ணனும். கூடவே ஆயிரம் ரூபாயும் கட்டனும்”

“தெரியும்டா”

“சீட் அலாட் ஆனா டியூஷன் பீஸ் மொத்தமும் கட்டனும். அலாட் ஆகி நாம சேரலனா இந்த ஒரு லட்சமும் ஃபைன்'ல போகும் டியூஷன் பீஸூம் ஃபைன் கட்டனும்”

“தெரியும் டா. இப்போதைக்கு ஒரு லட்சம் ரெடி பண்ணிட்டு தான் வந்திருக்கேன். கவுன்சிலிங் வரதுக்கு முன்னாடி மொத்த பணமும் ரெடி பண்ணிடுவேன்”

“அண்ணே!” எனக் கேவலுடன் அக்னீயை கட்டிபிடித்து அழுதுவிட்டாள்.

அக்னீ இந்த ஒரு லட்சமும் சுதாகரிடம் தான் வாங்கியிருந்தான். சுதாகரும் அக்னீயின் குடும்ப பொருளாதார சிக்கலைப் பயன்படுத்தி, அவனை அவர் வலைக்குள் சிக்க வைப்பதற்காக அவனுக்கு அனைத்து பொருளாதார உதவியும் செய்கிறார். அவனிடம் “வேறு எங்கும் பணம் கடனாகப் பெற்று மாட்டிக்காத அக்னீ! உன் தங்கச்சி படிப்புக்கு நான் உதவி பண்றேன், பின்னாடி உன்னால குடுக்க முடியும்போது கொடு” என அவனிடம் கூறியிருக்கவே, அக்னீ தன் தங்கையை அவளின் விருப்பப்படிப்பு படிப்பதற்காகச் சேர்க்க வந்திருக்கிறான்.

அண்ணனும் தங்கையுமாகக் கவுன்சிலிங்க்கு ரெஜிஸ்டர் செய்தனர். பின்னர் வீட்டுக்கு வந்த அருணிடம் “என்னடா எப்படி போகுது ஸ்கூல்” என அக்னீ கேட்க,

“அது எங்க போகுது.. நான்தேன் தெனமும் அங்க போரேன்” என நக்கலாகப் பதில் கூற அக்னீ அவனை இழுத்து அவன் முதுகில் விளையாட்டாக அடிக்க,

“விடுணே! உன் உலக்கையை வச்சு அடிச்சா என்னால தாங்க முடியாது. நானே பச்சபுள்ள” எனக்கூற,

“ஆமா எருமமாடு மாடு மாதிரி இருந்துட்டு பச்சபுள்ளையாம்” எனக்கூறிக்கொண்டே கயல் வீட்டுக்குள் வந்தவள், பள்ளியில் அவன் செய்யும் அனைத்து அட்டகாசத்தையும் அக்னீயிடம் புட்டு புட்டு வைத்தாள்.

“இதுக்குத்தேன் இந்தக் குட்டச்சி இல்லாத இடமா பாத்து சேரனும்னு தலபாடா அடிச்சேன், கேட்டியாமா” என அவன் ஜெயந்தியையும் உள்ளே இழுத்தான்.

இடைப்பட்ட நாட்களில் அருணுக்கும், கயலுக்கும் பத்தாம் வகுப்பு ரிசல்ட் வந்தது. கயல் நல்ல மதிப்பெண் எடுத்துப் பதினெண்றாம் வகுப்பில் கணினி பிரிவில் சேர்ந்தாள்.

அருணும் எப்படியோ குட்டிகரணம் அடித்து 360 மார்க் வாங்க, செழியன் அவனைக் கயலுக்கு துணையாக இருக்கும் எனச் சொல்லி அவளுடனே அவளது வகுப்பில் சேர்த்துவிட்டார். அவனும் என்னால் முடியாது, நான் பாலிடெக்னிக் தான் போவேன் எனகூற செழியன் தான் மிரட்டிச் சேர்த்துவிட்டார், அதற்கு ஜெயந்தி தான் முழு ஆதரவு. அதான் அவன் ஜெயந்தியை உள்ளே இழுத்தது.

அக்னீ “அவ இருக்குறதால தான் உன் வண்டவாளம் தண்டவாளம் ஏறி வீட்டுக்கு வருது” என இன்னும் அவனை இரண்டடி அடிக்க, கயலும் தன் பங்குக்கு அக்னீயுடன் சேர்ந்து அடித்தாள் அவளைக் குட்டச்சி என்றதற்காக.

“என்னங்கடா ஆளாளுக்கு அடிக்கிறீங்க ஒரு பச்சமண்ண” என முதுகை நெளித்தவாறு கூறியவன், இருடீ உன்ன உன் வண்டவாளத்த நான் சொல்றேன் என்றவன்,

“இந்த குட்டச்சி ஒரு ஆளுனு எங்க கிளாஸ்ல புதுசா சேர்ந்தவன் இவளுக்கு லெட்டர் குடுத்தாண்ணே! இவளும் அத வாங்கினா” எனக்கூற கயல் பயத்தில் கைகள் நடுங்கியவாறு,

“அது லவ் லெட்டர்னு தெரியாதுண்ணே” என்றாள் சத்தத்தைக் குறைத்து,

“ஆமா தெரியாது. சின்னப் பப்பா வாய்ல வெரல வச்சா கடிக்க தெரியாது. அவன் குடுத்தானாம் இவ வாங்கினாளாம்” என நன்றாக வீட்டில் அவளை மாட்டிவிட்டான்.

“கயலு என்ன இது?” என ஜெயந்தி அதிர்ச்சியாகி கேட்க,

“பெரியம்மா! அவன் புதுசா சேந்தவன். நோட்ஸ் கேட்டானு குடுத்தேன், திருப்பித் தரும்போது அதில லெட்டர் வச்சு கொடுப்பானு எதிர்பார்க்கல”

“அப்புறம் என்னாச்சு” என மஹா கேட்க,

“அவேன கவனிக்கிற விதத்துல கவனிச்சாச்சு” என அருண் கூறினான்.

“அதுக்கு தான் சித்தப்பா உன்ன அவளுக்குத் துணையா சேர்த்துவிட்டார். இப்ப காலம் கெட்டுக்கிடக்குல” எனக்கூறியவன் கயலிடம்,

“கவனமா இரு கயலு” எனப் பத்திரம் கூறிவிட்டு முகம் கழுவ உள்ளே சென்றான்.

“நல்ல வேலடி அப்பத்தா தூங்குது, அது மட்டும் கேட்டுச்சோ, இன்னைக்கு உனக்குக் கச்சேரி வச்சிருக்கும்” என மஹா கூற,

“எல்லாம் இந்தத் தடிமாடால வந்தது” என அருண் மண்டையில் நறுக்கென்று கொட்டிவிட்டு ஓட அவளைத் துரத்திக்கொண்டே அருணும் அவள் பின்னாளே ஓடினான்.

அப்போது மகியும், இனியனும் தூங்கி எழுந்து வர ஜெயந்தி அனைவருக்கும் தேநீர் கலக்க சென்றவர் தேநீருடன் சூடான பஜ்ஜியும் கொண்டு வரக் குடும்பம் அனைவரும் ஒன்று கூடியிருந்தனர். கூடவே கயலும் இருந்தாள்.

அனைவரும் சாப்பிடவும் ஜெயந்தி “கயலு இந்தா இத வெற்றிக்குக் கொண்டு போய்க் கொடு, அவனும் சூடா சாப்பிடட்டும்” என அவனுக்கும் கொடுக்க,

“ஆமா துரை கலெக்டரு.. அவருக்கு எல்லாம் தேடி போய்க் கொடுக்கனும்..” என அக்னீ கூற அப்பத்தாவும் அவனுக்கு ஆதரவாகப் பேசும் போது வெற்றி வந்துவிட்டான். வந்தவனுக்கு அக்னீயை பார்த்ததும் அதிர்ச்சி தான். அக்னீ வரும் வேலையில் பொதுவாக வெற்றி இங்கு வருவதில்லை. ஆனால் இன்று அக்னீ வந்த விஷயம் அவனுக்குத் தெரியாததால் தான் வந்துவிட்டான்.

வந்ததும் அக்னீ அவனைப் பற்றிப் பேசியது கோபத்தை கொடுக்க அப்படியே திரும்பப் போனவனை பாண்டியன் தான் தடுத்து உள்ளே வரச் சென்னார். அப்பத்தாளை முறைத்தவாறு அமர்ந்து தேநீரைக் குடித்தவன், மஹாவிடம் கவுன்சிலிங் பத்தி கேட்க, அக்னீயுடன் சேர்ந்து முடித்துவிட்டதாகக் கூறவும், “சரி” எனத் தானும் வீட்டிற்கு கிளம்பினான்.

செல்லும்போது வெற்றி அக்னீயை முறைக்க, அக்னீ வெற்றியை முறைக்க, புதிதாய் பார்ப்பவர்களுக்கு அக்னீ நட்சத்திரம் பிரபு, கார்த்திக் போலதான் இருக்கும். சிறு வயதிலிருந்தே அவர்களை இப்படியே பார்த்த வீட்டினருக்கு இது சர்வ சாதாரணம் தான் என்பது போல இருந்தனர்.

அப்போது சரியாக அக்னீயின் மொபைலில்

“மீனம்மா… அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே..

அம்மம்மா.. முதல் பார்வையிலே
சொன்ன வார்த்தையில் தான் ஒரு காவியமே..

சின்னச் சின்ன ஊடல்களும்..
சின்னச் சின்ன மோதல்களும்..
மின்னல் போல வந்து வந்து போகும்..

மோதல் வந்து ஊடல் வந்து
முட்டிக் கொண்டபோதும்
இங்குக் காதல் மட்டும் காயமின்றி வாழும்..

இது மாதங்கள் நாட்கள் செல்ல.. ஆ…

நிறம் மாறிடும் பூக்கள் அல்ல.. ஆ...

மீனம்மா…”

என மீனாவின் அழைப்பிற்கான பிரத்யேக ஒலியாய் இந்தப் பாடல் ஒலிக்க, வெற்றியை முறைப்பதை விட்டுவிட்டு புன்னைகையுடன் செல்பில் இருந்த மொபைலை எடுத்துக் கொண்டு வெளியேற, வெற்றி ஜெயந்தியுடம்,

“பெரியம்மா அந்த மீனம்மா யாருனு உங்க புள்ள கிட்ட கேளுங்க.. ஆளு சரியில்ல” என அக்னீயை போட்டுக்கொடுத்து விட்டுச் சென்றான்.

அக்னீ மீனாவிடம் பேசிவிட்டு வர ஜெயந்தி அவனைப் பிடித்துக் கொண்டார்.

“அக்னீ யாருப்பா அந்த மீனம்மா? ஆதிக்கு தான் நான் பொண்ணு பார்க்க முடியாமபோச்சு. உனக்கு நான் தான் பொண்ணுபார்த்து கட்டிவைக்கனும் நினைச்சுட்டு இருக்கேன், எதாவது மலசாதி பொண்ண கூட்டிட்டு வந்து என்ன ஏமாத்திடாத” என மூக்கைசிந்தி அழத் தாயாரானார். அப்பத்தா மனதிலும் அதான் ஓடியது ஜெயந்தி சொல்லிவிட்டார் இவர் வாய் மொழியால் சொல்லவில்லை அவ்வளவே, ஆனால் அப்பத்தாவின் கண்கள் கூறிய செய்தியும் அதுவே.

“அம்மா! அந்த நாய் ஏதோ போட்டுவிட்டு போகுது, அத புடிச்சுக்கிட்டு நீ வருத்தப்பட்டுகிட்டு இருக்க. அப்படியெல்லாம் ஒன்னுமில்ல மா” எனத் தாய்க்கும், தாய் போல் பார்க்கும் அப்பத்தாவுக்கும் சேர்த்தே கூறினான், மனதிற்ககுள் வெற்றியை வறுத்தப்படியே.

வெற்றி மீனாவிடம் மனம் திறப்பானா?? அல்லது தாயிடம் கூறியதற்காக மனதில் துளிர்விட்ட காதலை முளையிலேயே கிள்ளி எறிவானா??
 

Lufa Novels

Moderator

யாரோ அவன்?? யாரோ இவள்??​

அத்தியாயம் 12​


BpRkW0VTkvNA-cvRueUE1oSxGYwkwBm3pT01nmJBc8mRAA5-90dUrcSNzkeI-uoGALG0QS4_vO18vWQj7AD0kjNzLjFTsTUuv12F_egxoUYj1obitxfppuHQeLa7qgU6NZ8WBpB3o4g7VLwVrqz84X4


“அவனோடு பேசும்போது..
அதுபோல வார்த்தை ஏது..
உன் தூரமும்.. என் தூரமும்..
கண்கள் காணாமல்..

பனித்துளி விழுவதால்..
அணையாது தீபம்..
தொலைவிலே கிடைத்ததே..
எனக்கான யாவும்..

அவனோடு பேசும்போது..
அதுபோல வார்த்தை ஏது..
உன் தூரமும்.. என் தூரமும்..
கண்கள் காணாமல்..”

என அக்னீயின் அழைப்பிற்கான பாடல் ஒழிக்க, தலைவனை இழந்த தலைவிபோல் பசலை நோயால் வாடிவள், தன் சோர்வையும் மீறி வந்து போனை எடுத்தாள்.

“ஹலோ பாட்னர்” எனக்கூற அவளின் குரலிலேயே அவளைக் கண்டுகொண்டவன்,

“என்ன மீனா உடம்புக்கு முடியலயா?” எனக்கேட்டான்.

“ஆமாம் பாட்னர். வைரல் பீவர். இப்போ தான் அப்பாகூட ஹாஸ்பிடல் போய்ட்டு வந்தேன்”

“பார்த்துப் பத்திரமா இரு மீனா. டேப்லட்ஸ் போட்டியா”

“ஹ்ம்ம் அம்மா இப்போ தான் கஞ்சி வைச்சு குடுத்தாங்க. சாப்பிட்டு டேப்லட்ஸூம் போட்டுட்டேன்”

“சரி மீனா அப்போ ரெஸ்ட் எடு”

“இல்ல தூக்கம் வரல பாட்னர்”

“தூங்கு மீனா. அப்போ தான் உடம்பு சரியாகும். நானும் இன்னைக்கு ஊருக்குக் கிளம்பிட்டேன். நாளைக்கு அங்க வந்திடுவேன். அங்க வந்திட்டு கூப்பிடுறேன். பாய் மீனா. டேக் கேர்” எனக்கூறவும் போனை வைத்தவள்,

“லூசு! ஊருக்குப் போனா என்கிட்ட சரியாவே பேசமாட்டான். இங்க இருந்தா மட்டும் மணிக்கணக்கா பேசுவான். உடம்புக்கு முடியாததே இவனையே நினைச்சுட்டு இருக்கிறதால தானு இவனுக்கு எப்போதான் புரியுமோ! மரமண்டைக்கு சொல்லாம ஒன்னும் புரியாது. முதல்ல ஊருக்கு வரட்டும் அவன் கிட்ட என் மனசில உள்ளதை சொன்னாத்தான் எனக்கு நிம்மதியா இருக்கும்.

“என்ன ஏத்துப்ப தான பாட்னர். உன்ன பத்தி எதுவுமே தெரியாம நான் எப்படி உன்ன லவ் பண்ணேனு இன்னுமே எனக்குத் தெரியல டா. என் லைப்ல இப்படி ஒன்னு நடக்கும்னு நான் நினைச்சுக்கூட பார்த்ததில்ல.

இந்த நாலு மாசத்துல என் லைப் இவ்ளோ கலர்ஃபுல்லா, ஹாப்பியா மாத்திட்ட. இந்த மாதிரி முன்ன எப்பவும் இருந்ததில்ல. என்னோட சேஞ்ச் எனக்கே புதுசா தெரியுது. உன்ன எப்போ பாப்பேனு இருக்கு. சீக்கரமா வா பாட்னர். உன்ன பாக்கனும்” எனத் தனக்குத் தானே புலம்பிக் கொண்டிருக்க கிருஷ்ணன் அனைத்தையும் கேட்டுவிட்டார்.

அது அறியாமல் அவள் காய்ச்சலிலும், காதல் மயக்கத்திலும் பிதற்றிக் கொண்டே கண்ணயர்ந்தாள்.

கிருஷ்ணன் “மாலினி இங்க வா” என வேலைப் பார்த்துக் கொண்டிருந்தவரை அழைத்து மீனா புலம்பியது அனைத்தையும் கூறினார்.

“அவ மனசுக்கு பிடிச்சிருந்தா சரிதாங்க, ஆனா அதுக்காக யாரு என்னனே தெரியாம எப்படிங்க? ஏன் மீனா இப்படி ஆயிட்டா?”

“காதலுக்கு கண்ணில்ல மாலு” என அவர் மனைவியை மையலாகப் பார்க்க, வந்த வெட்கத்தை அடக்கிய மாலினி,

“பொண்ணுக்கு மாப்பிள்ள பார்க்குற நேரத்துல கிழவனுக்குப் பார்வைய பாரு” எனக் கிருஷ்ணனை கிள்ளினவர்,

“சரி இப்போ என்ன பண்றது? அத பாருங்க”

“இரு அவ தூங்கிட்டாளானு பார்த்துட்டு வாரேன்” என்று மீனாவின் அறைக்குச் சென்றவர், திரும்பி வரும்போது கையில் மீனாவின் போனுடன் வந்தார்.

“அவ போன எதுக்கு எடுத்தீங்க”

“இரு மாலினி, அந்தப் பையன் நம்பர எடுக்கலாம்” எனக்கூறி கடைசியாக மீனா பேசிய நம்பரை தன் மொபைலில் சேமித்துக் கொண்டார்.

பின் வாட்ஸப்பை திறந்து அவளின் கிரைம் பாட்னர் மீனாவுக்கு அனுப்பிய குறுந்தகவல்களை ஆராய்ந்தபோது அதில் தப்பாகவோ, காதல் வசனங்களோ, பிக்கப் லைன்ஸோ எதுவுமே இல்லை.

நல்ல நட்பு உரையாடல்கள் மட்டுமே இருக்க கிருஷ்ணனுக்கு மனதில் அவளின் கிரைம் பாட்னர் இடம்பெற்று விட்டான்.

“அந்தப் பையன் அந்த மாதிரி ஒன்னுமே பேசல மாலினி, மீனா தான் அந்தப் பையன மனசில நினைச்சுட்டு இருக்கா போல”

“என்னங்க சொல்றீங்க, இவ தான் விரும்புறாளா? அந்தப் பையன் மறுத்துட்டா இவளால தாங்க முடியாதே! அய்யோ கடவுளே! ஏன் என் பொண்ண இப்படி சோதிக்கிற? அவ விருப்பம் இப்படியா இருக்கனும். எல்லாம் நல்ல படியா நடக்கணும் கடவுளே!” என மாலினி கடவுளிடம் ஒப்படைத்தார் தன் மகளின் நிம்மதியை.

கிருஷ்ணன் மனதில் ‘அந்தப் போன் நம்பர் யாருடையதுனு முதலில் கண்டுபிடிக்கனும். பிறகு அந்தபையன் நல்லவனானு பார்க்கனும்’ என வரிசையாக வலம் வந்து கொண்டுருந்தது.

அவரின் போனில் ட்ரூக்காலர் ஆப்பில் நம்பரை டைப் பண்ண “அக்னீஸ்வரன்” என அக்னீயின் பேரைக் காட்ட கிருஷ்ணனின் புருவம் முடிச்சிட்டது.

‘டி.எம் அக்னீயா இருக்குமோ?’ என அவரின் உள்ளே பல கேள்விகள், படாரென எழுந்து யாருக்கோ அழைத்த கிருஷ்ணன் அக்னீயின் போன் நம்பரைக் கேட்டார்.

இரண்டு நிமிடத்தில் அனுப்புவதாக அவர் கூற, அந்த இரண்டு நிமிடமும் திக் திக் நிமிடங்கள் தான். இரண்டு நிமிடத்தில் அனுப்புவதாகக் கூறியவர் ஒரே நிமிடத்தில் அனுப்ப கிருஷ்ணனின் மொபைலில் அக்னீயின் எண் வந்தது.

அக்னீயின் எண்ணோடு மீனாவின் கிரைம் பாட்னர் எண்ணை ஒப்பிட்டுப் பார்க்க, கிருஷ்ணனின் இரத்த அழுத்தம் எகிறிக்குதித்தது. இரண்டும் ஒரே எண்.

சிறிது நேரம் கழித்து முதலில் அழைத்த நபருக்கே தொடர்பு கொண்டு அவரைச் சந்திக்க வேண்டுமெனக் கூறினார். பின் அந்த நபர் கூறிய இடத்திற்கு, அந்த இரவில் சென்றவர், திரும்பி வரும்போது நிறைவான மனநிலையில் சந்தோஷமாக வந்தார்.

மறுநாள் காலையில் மீனாவுக்கு காய்சலும் கொஞ்சம் சரியாகி இருந்தது. ஆனாலும் வங்கிக்கு விடுப்பு கூறியவள் சோர்வாக அமர்ந்தாள்.

மணியும் 11 ஆகியிருக்க அவளின் பாட்னரிடமிருந்து இன்னமும் அழைப்பு வரவில்லை. அதில் சுணங்கினாலும் அவளே அழைத்தாள். ஆனால் அவனோ எடுக்காமல் “ஐ ஆம் இன் மீட்டிங்” என்ற மெஜேஜை அனுப்பிட்டிருந்தான்.

அவளும் அவனின் போனை எதிர்பார்த்துக் காத்திருக்க, மாலை வந்தும் அவனிடமிருந்து எந்தச் செய்தியும் வரவில்லை. மாலையில் விட்ட காய்ச்சல் வரும் போல இருக்கவும் படுக்கையில் போய்ப் படுத்தாள்.

அவள் படுத்த சிறிது நேரத்திலே அவனது அழைப்பிற்கான பாடல் அவள் அழைபேசியில் இசைக்க, வந்த காய்ச்சல் எங்குப் போனது என்று தான் தெரியவில்லை. துள்ளிக் குதித்துக் கொண்டு போனை எடுத்தாள்.

“ஹலோ பாட்னர்” என்றாள் ஆர்வமாக,

“உடம்பு எப்படி இருக்கு மீனா. ஃபீவர் சரியாடுச்சா?”

“பரவாயில்ல. காலையில இருந்து ஏன் கால் பண்ணல”

“கொஞ்சம் வேலையில இருந்தேன் மீனா”

“உங்க கிட்ட முக்கியமான விஷயம் சொல்லனும்”

“நானும் உங்கிட்ட முக்கியமான ஒரு விஷயம் சொல்லனும் மீனா”

“நேரில மீட் பண்ணலாமா?” என இருவரும் ஒன்றாகக் கேட்க, இருவரும் வாய்விட்டுச் சிரித்தனர்.

“நாளைக்கு நான் குன்னூர் வருவேன், அங்கயே மீட் பண்ணலாமா?”

“ஹ்ம்ம் நாளைக்கு நானும் பேங்க் போயிடுவேன். ஈவினிங் மீட் பண்ணலாம்”

“மீனா நிஜமா அந்த பேங்க்’ல தான் வேல பாக்குறியா? உன்ன பார்க்கலாம்னு அங்க நான் பல தடவை வந்தேன். ஆனால் நீ யாருனே தெரியல. அங்க உள்ள லேடீஸ் ஸ்டாப் நிறைய பேர நீயா இருக்குமோனு நினைச்சு பக்கத்துல போய்ப் பேர கேட்டுருக்கேன். உன் பேருல யாருமே இல்ல. உன் பேர சொல்லிக் கேட்கவும் தயக்கமா இருந்தது, வெர்க்கிங் பிளேஸ்ல உன்ன யாரும் தப்பா நினைச்சிடுவாங்களோனு கேட்கமாட்டேன்”

“ஸ்டாஃப்ஸ் கிட்ட என்ன தேடினா நான் எப்படி கிடைப்பேன். நான் மேனேஜர் பாட்னர். நீங்க டிரக்ட்டா மேனேஜர் ரூம்க்கு வந்திருந்தா எப்பவோ மீட் பண்ணிருக்கலாம். இல்ல பேங்க்கு வந்தப்ப எனக்குக் கால் ப்ண்ணிருக்கலாம்”

“அட ஆமால. நீ மேனேஜர்னு அன்னைக்கு சொன்னில, நான் மறந்துட்டேன் மீனா” என்றவன் தொடர்ந்து,

“சரி நாளைக்கு ஈவினிங் 4 மணிக்கு எங்க ஆபீஸ் பார்ட்டி இருக்கு என்னோட கெஸ்ட்டா வரீயா? ஆனா உங்கப்பாவுக்கு எங்க ஆபீஸ்ல நிறைய பேர தெரிஞ்சுருக்க வாய்ப்பிருக்கு. இல்ல நாளான்னைக்கு மீட் பண்ணுவோமா?”

“என்ன உங்க கெஸ்டா கூட்டிட்டு போரதுல உங்களுக்கு ஒ.கே’ன்னா எனக்கும் ஓ.கே தான்”

“ஓ.கே நான் 4 மணிக்கு உன்ன பேங்கல பிக்கப் பண்ணிக்கவா?”

“ஓ.கே. கால் பண்ணுங்க நான் வெளியில வரேன்”

“என்னோடு பைக்ல வருவ தான?”

“ஹம்ம் யோசிச்சு சொல்றேன். நான் பொதுவா பிளைட் தவிற வேற எந்த வெகிக்கில்ஸ்லயும் ஏறதுல்ல” எனச் சிரித்தாள்.

“வருவ தான? என்கிட்ட கார் எல்லாம் இல்ல. நான் மிடில் கிளாஸ்”

“பாட்னர். நாளைக்கு மீட் பண்ணலாம். ஓ.கே” எனப் பாட்னரில் ஒரு அழுத்தம் கொடுத்துக் கூறினாள்.

இருவரும் நிறைவான மனநிலையில் உறக்கத்தை தழுவினர்.

மறுநாள் காலை இருவருக்கும் அழகாய் உதயமானது, ஆனால் அந்த நாளின் முடிவில் அந்த அழகு இருக்குமா என்பது விதியின் வசமே. இல்லையில்லை அக்னீயின் வசமே என்று கூறவேண்டுமோ!

காலையில் எழுந்ததும் அக்னீ அவனது அலுவலகத்திற்கு அவசர அவசரமாகச் சென்றான். ஏனெனில் கைநழுவி போக இருந்த பத்து கோடி மதிப்பிலான பிஸ்னஸ் அக்னீயின் திறமையால் திவாகருக்கு கிடைத்தது.

அந்த வெற்றியைக் கொண்டாடுவதற்கு ஆபிஸில் அனைவருக்கும் இன்னைக்கு ஈவினிங் குன்னூரில் உள்ள ஹோட்டல் விவேக்கில் பார்ட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் அத்தனை பொறுப்பும் அவன் கைகளில் தான் இருக்கு.

அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு மதியம் போல வீடு திரும்பினான். சிறிது நேர ஓய்விற்கு பிறகு அழகான பார்மல் உடையில் ரெடியாகி குன்னூர் சென்றான், அங்கு அனைத்து ஏற்பாடும் சரியாக் இருக்கிறதா எனக் கவனிப்பதற்காக.

இங்கு மீனாவோ காலையில் எழுந்ததிலிருந்து என்ன உடை அணிவது என்ற குழப்பத்தில் அவள் வாட்ரோபில் உள்ள துணிகள் அனைத்தையும் மெத்தையில் கடைப்பரப்பி தேடி தேடி பல உடைகளைப் போடுவதும், அதை மாற்றுவதுமாக இருந்தாள்.

கடைசியில் மாலினி வந்தவர் “என்ன மீனா? என்னாச்சு? இப்படி துணிய எல்லாம் எடுத்துப் போட்டு என்ன பண்ற?”

“அம்மா! முதன் முதலா ஒரு பிரண்ட் கூட ஒரு பார்ட்டிக்கு போறேன்மா. என்ன டிரெஸ் போடுறது?”

“இதுக்கா இந்த அலும்பல். நீ என்ன போட்டாலும் அழகா இருக்கும்” என்றவர் ஒரு அழகான டிரெஸ்ஸை அவளுக்குச் செலக்ட் செய்து கொடுத்தார். “இத போடு அழகா இருப்ப” எனக்கூறிச் சென்றார்.

வெள்ளை நிற அனார்க்கலி டாப்பில் கீழே இரண்டு பாடர் முதலில் பச்சை வண்ண பட்டுப் பாடரும் அதன் கீழே பெரிய அடர் ரோஜா நிற பட்டுப் பாடரும் வைத்து முதுகில் பச்சை மற்றும் ரோஜா நிறத்தில் ரோஜா போலவே லக்கன் வைத்து, தைத்து போட்டதா அல்லது போட்டு அவளுக்கேற்றபடி தைத்ததா எனத் தெரியாவாறு இருந்த அந்த அழகான சுடிதாரில், ரோஜா நிற பட்டுத் துப்பட்டாவை ஒருபக்கமாகப் போட்டுப் பின்செய்தாள்.

பின் கண்ணாடியில் ஆயிரம் முறை இந்தப்பக்கமும், அந்தப்பக்கமும் திரும்பித் திரும்பிப் பார்த்து அவளுக்கே கொஞ்சம் திருப்தி ஏற்படவும் தான் அறையை விட்டு வெளியே வந்தாள். அவள் இவ்வாறு நடப்பது இதுவே முதல்தடவை.

தேவதைபோலக் கிளம்பி வந்த மகளைப் பார்த்த கிருஷ்ணன் “அழகா இருக்கடா மீனாகுட்டி” என்று கூறினார்.

“அப்பா முக்கியமான விஷயமா போறேன். நான் நினைச்ச மாதிரி நல்லபடியா நடந்தா, முதல்ல அத உங்க கிட்டத்தான் சொல்வேன். போற காரியம் நல்லா நடக்க எனக்கு பிளஸ் பண்ணுங்கப்பா”

“நல்லதே நடக்கும் டா குட்டிமா. என்னைக்கும் இந்த அப்பா உனக்குத் துணையா இருப்பான்றத மட்டும் மறந்துடாத”

“சரிப்பா கிளம்புறேன்” என்றவள் மாலினியிடம் கூற வர அவர் பூஜையறையிலிருந்து வந்தவர், மகள் தலையில் குங்குமம் வைத்துவிட்டார். அவரிடமும் கூறிவிட்டு கிளம்பினாள்.

இங்கு ராகுலோ ஜாமின் வாங்கி வெளியே வந்திருந்தான். ஆம் திவாகர் அவனுக்கு எதிராகத் திவியை உள்ளே இழுக்காமல் தனது டி.எஸ்.பி நண்பன் ஒருவரின் மூலம் வேறொரு கேஸில் உள்ளே தள்ளியிருந்தார். லீலா ஒரு வக்கீலைப் பிடித்து மகனை ஜாமினில் வெளியே கொண்டுவந்தார்.

ஜாமினில் வந்தவனுக்கு ஒரே வேலை ஹாஸ்பிடலிருந்து வந்த திவியின் ஒவ்வொரு அசைவையும் கண்காணிப்பது மட்டுமே. சிறுத்தை என்றுமே தனது புள்ளியை மாற்றிக் கொள்ளாது அதுபோல் தான் லீலாவும் ராகுலும். இருவரும் திவியை பலிவாங்க சரியான சந்தர்ப்பத்திற்கு காத்திருந்தனர்.

ஆனால் திவியோ திவாகரின் நம்பிக்கையைப் பெற்ற ஒருவரின் பாதுகாப்பில் நிம்மதியாக இருக்கிறாள். சுபத்ராவை பார்க்கும்போதெல்லாம் திவியின் இரத்த அழுத்தம் தாறுமாறாக எகிறுவதால் அவளின் மன அழுத்தம் குறைவதற்காகத் தான் இந்த ஏற்பாடு.

திவி எங்கே இருக்கிறாள்?? மீனாவும் அக்னீயும் சந்திப்பார்களா?? அவர்களின் காதலை பரிமாறிக் கொள்வார்களா?? அக்னீ என்ன செய்யப் போகிறான்??
 

Lufa Novels

Moderator

யாரோ அவன்?? யாரோ இவள்??​

அத்தியாயம் 13​

sNgC21MJ45zOoGyUKZxw94xBMlc16TwuKEC5cBdYFAvid8pQt6iXbOTc69zyvQqazBHS_jL-YcBdeE0C3cI80KdYm8es9r41DeLaRDkUbpcwljezt0TVfFinpjHGgo2fA7XTw-aNWXUbPbFIpDJ6O9s



யாருமில்லா உலகினில்..
நீயும் நானும் மட்டுமே!

உனக்கும் எனக்குமிடையேயான கிஇடைவெளியில்..
அன்பு மட்டுமே வியாபித்திருக்க!

முடி நரைத்து.. நரம்பு புடைத்து..
தள்ளாடும் வயதில்
உன்கையை நானும்..
என்கையை நீயும்..
பிடித்து நடக்கையிலும்..
காதலை மட்டுமே சுவாசித்து!

உன் மடியில் நான்…
கடைசியாய் காதலை சுவாசித்து…
மீளாத்துயில் கொள்ள வேண்டும் என் கண்மணியே!

எனத் தேடித் தேடி வாங்கிய ஒரு கார்டில் எழுதி, ஊட்டியிலேயே வளர்ந்தவளுக்கு ஒற்றை ஊட்டி ரோஜாவும் வாங்கி அதில் வைத்து அவளுக்குக் கொடுப்பதற்காகப் பார்த்துப் பார்த்துத் தயார் செய்தான்.

பார்ட்டி முடிந்து அவளிடம் தனியாகத் தன் மனதை திறந்து காட்டுவதற்காக அதைத் தன் பைக்கிலேயே பாதுகாப்பாக வைத்துவிட்டு தன் வேலைகளைச் செய்தான்.

பார்ட்டிக்கு வரும் அனைவருக்குமான சாப்பாட்டை, பஃபே முறையில் தயார் செய்யச் சொல்லிருந்தான். அதை அனைத்தையும் சரியாக உள்ளதா என ருசிபார்த்து உறுதி படுத்தினான்.

மீட்டிங்காலில் ஸ்டேஜில் சுதாகருக்காகத் தனி இருக்கையை அழகாகத் தயார்செய்து, அவர் விருந்தினரிடம் பேசுவதற்கான மைக் எல்லாம் தயார் செய்தான்.

டின்னர் ஓபன்கார்டனில் என்பதால் அங்கு சேர், டேபிள் என அனைத்தும் சரியாக இருக்குமா என அனைத்தையும் சரிபார்த்துக் கொண்டிருந்தான்.

விருந்தினர்கள் வந்ததும் கொடுக்க வெல்கம்டிரிங்க் எல்லாம் ஏற்பாடு செய்ய நேரம் சரியாக இருந்தது.

‘சரி இப்போ கிளம்பினா மீனாவ கூட்டிட்டு வர நேரம் சரியாக இருக்கும்’ என நினைத்தவன் தன் உடைகளைச் சரிசெய்து கொண்டிருக்கும் போதே, ஒவ்வொரு விருந்தினராக வர ஆரம்பித்தனர்.

‘ஐய்யோ! எல்லாரும் வர ஆரம்பிச்சுட்டாங்க. இங்க வந்தவங்கள வெல்கம் பண்ணனுமே!’ எனப் பதட்டம் அடைந்தவன் கடைசியாக ‘டேவிட் சார் வந்தால் அவரிடம் இந்தப் பொறுப்பை விட்டுவிட்டு மீனாவை கூப்பிட்டு வரலாம்’ என எண்ணி ஆவலுடன் டேவிட்டை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான்.

அந்நேரம் சரியாகச் சுதாகரிடமிருந்து அக்னீக்கு கால் வந்தது.

“சார்”

“அக்னீ! இப்போ ரொம்ப இம்பார்ட்டெண்டா நான் மைசூர் போகனும். நான் பார்ட்டி அட்டன் பண்ண முடியாது. சோ திவிய அட்டன் பண்ண சொல்லிருக்கேன். அவ வருவா, கடைசி வரை அவ கூடவே இரு. அவளுக்கு அங்க யாரையும் தெரியாது. இது தான் ஃபஸ்ட் இந்த மாதிரி அஃபிஷியல் பார்ட்டி அவ அட்டன் பண்றது. என்னா பண்ணனும்னு அவ கூடவே இருந்து கைடு பண்ணு. இன்னும் பத்து நிமிஷத்தில் அவ வந்திடுவா” என அக்னீயை பேசக் கூட விடாமல் முழுவதுமாகக் கூறி போனை வைத்துவிட்டார்.

‘சுத்தம். இனி அவளுக்குக் கைடு வேல பார்த்தா எப்படி மீனாவ கூப்பிட போறது? அப்படியே கூட்டிட்டு வந்தாலும் இவ கூடவே இருந்தா மீனாவுக்கு கஷ்டமாகிடுமே’ என்ன பண்றது என யோசித்தவன் மீனாவுக்கு கால் செய்தான்.

“ஹலோ பார்டனர். வந்துட்டிங்களா? நான் வர…” எனக் கூறிக் கொண்டிருக்கும் போதே

“மீனா சாரி. இன்னைக்கு நான் உன்ன பார்ட்டிக்கு கூட்டிட்டு போக வர முடியாது. ரியலி சாரி. அன்பார்சுனேட்லி ஐ ஸ்டக் வித் அனதர் ஜாப்(unfortunately i stuck with another job)”

“இட்ஸ் ஓ.கே பாட்னர். எனக்கும் இங்க வேற வேலை வந்துருச்சு. நோ பிராப்ளம் நாம நாளைக்கு ஈவினிங் சிம்ஸ் பார்க்ல மீட் பண்ணலாம்”

“ஒ.கே மீனா. பட் நான் இன்னைக்கு உன்னை மீட் பண்ணிடுவோம்னு ரொம்ப எஸ்ஸைட்டா இருந்தேன். சாரி மீனா”

“நானும் தான். டுடே பேட் லக் பார் அஸ்”

“நாளைக்கு குட்லக் ஆ மாத்திடலாம்”

“சுயர்”

“பாய் மீனா. வேலை இருக்கு”

“ஓ.கே பாட்னர்”

அக்னீக்கு மனம் முழுவதும் ஏமாற்றம். இன்னைக்கு அவளைப் பார்த்துவிடுவோம், அவளிடம் தன் காதலை சொல்லிவிடுவோம் என மிகவும் ஆவலாக இருந்தான். அவனின் நினைப்பில் கூடை கூடையாக மண் அள்ளிப் போட்டுவிட்டார் சுதாகர்.

அது கூடப் பரவாயில்லை அக்னீக்கு திவியை கண்டாளே ஆகாது. அவளும் அவனை ஒரு பொருட்டாக மதிக்கமாட்டாள். இந்நிலையில் இன்று பார்ட்டியில் அவளுக்குத் தான் கம்பெனி கொடுக்கனுமா? இதில் தான் சொல்லிக் கொடுத்து அதுமாதிரி இவ நடந்துக்குவாளாக்கும்? என எண்ணியவன்,

“அடக்கம்னா என்னானு கேட்பா… பொறுமை எந்தக் கடையில கிடைக்கும்னு கேட்பா… அதக்கூட விடு மரியாதைக்கு அர்த்தமே தெரியாது… இவ எப்படி வெர்க்கஸ் கிட்ட பொலைட்டா பேசுவா?

இன்னைக்கு எவனெல்லாம் கண்ணம் வீங்கி வீட்டுக்குப் போகப் போறானோ? அதுல நான் முதல் ஆள இருந்தாக்கூட ஆச்சிரியப் படுறதுக்கில்ல.. ஆத்தா மீனாட்சி இந்த ராட்சசிக்கிட்ட இருந்து எப்படியாவது உன் பிள்ளையைக் காப்பாத்திடும்மா” என வடிவேல் மாடுலேசனில் புலம்ப ஆரம்பித்தான் அக்னீ.

அலுவலகத்தில் சுதாகருக்கு அடுத்தபடியாக அனைவரையும் கண்ணிமையில் ஆட்டுவைக்கும் அக்னீ, சுதாகரிடம் கூடத் தைரியமாகத் தான் இருப்பான். ஏனெனில் அவன் வேலையில் அவன் சுத்தமாக இருப்பான் அதனால் சுதாகரிடம் கூட நிமிர்வுடனேயே பேசுவான்.

சுதாகருக்கே சில சமயம் யோசனை வழங்குவான் அக்னீ. இந்தப் பிராஜட் சுதாகருக்கு கிடைத்தது கூட அக்னீயின் சமயோஜித புத்தியால் தான். கடந்த இரு பிராஜட்டுகளும் சுதாகர் கையிலிருந்து நூழிலையில் தப்பிப்போனது.

ஆகவே இந்தத் தடவை அனைத்து பேப்பர்ஸூம் ஆபிஸில் ரெடி செய்துவிட்டு, தன் மெயிலில் மாற்றிக் கொண்டவன், தன் மெபைலின் மூலம் டெண்டர் அமெவுண்ட்டை மற்றும் மாற்றி அவனின் மெயில் மூலமே அந்தக் கம்பெனிக்கு அனுப்பிவைத்தான்.

சரியாக இவர்களின் போட்டி கம்பெனி இவர்கள் முன்பு கோட் செய்த அமெண்ட்டை விட ஆயிரம் ரூபாய் மட்டும் குறைவாகக் கோட் செய்திருக்க, அக்னீ இன்னும் குறைவாகக் கோட் செய்து அனுப்பியதால் சுதாகருக்கு இந்தப் பிராஜக்ட் கிடைத்தது.

ஆகக் கம்பெனியில் கருப்பு ஆடு உள்ளது அல்லது கம்பெனியின் சிஸ்டம் ட்ராக் செய்யப்படுகிறது எனச் சந்தேகித்து, இன்றைக்கு கம்பெனியில் சுதாகர் தலைமையில் சிறந்த ஹேக்கர்ஸ் உதவியுடன் சிஸ்டம் அனைத்தையும் சோதிக்க சிஸ்டத்தில் எந்த பிரச்சனையும் இல்லையென அறிந்து கொண்டனர்.

இனி கம்பெனியில் உள்ள கருப்பாடு யாரு என்பதைத் தான் கண்டுபிடிக்க வேண்டும் என அக்னீயும் சுதாகரும் திட்டமிட்டனர். இவர்களின் அலுவலகத்தில் ஏற்கனவே இருக்கும் சிசிடிவி கேமராக்களின் கண்ணிலே மண்ணைத்தூவும் கருப்பாட்டை கண்காணிக்க மேலும் சில கேமராகளும் ரகசியமாகப் பொறுத்தப்பட்டது.

அத்துடன் அக்னீயை மாலை பார்ட்டி ஏற்பாட்டைக் கவனிக்கும் படி அனுப்பிவைத்தவர், அனைவரையும் இன்னும் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என எண்ணியவர், சிலரை அலுவலகத்திற்கு வரவழைத்தார்.

சிஸ்டத்தில் வெர்க்கர்ஸ் என்ன செய்கிறார்கள் என்பதை கண்காணிக்கும் படியான சாப்ட்வேர்களை பொறுத்தும் வேலை இப்போது சுதாகர் தலைமையில் நடைபெறுகிறது அக்னிக்கும் தெரியாமல். அதனால் தான் சுதாகர் இன்று பார்ட்டியில் கலந்து கொள்ள முடியாமல் போனதன் காரணம்.

அக்னீயும் அங்கு வந்த அனைவரையும் உபசரித்து மீட்டிங்ஹாலில் அமர்த்தினான். கிட்டத்தட்ட அனைவரும் வந்துவிட்டனர் அக்னீ எதிர்பார்த்த டேவிட் மற்றும் திவியை தவிற. அவனும் வந்தவர்களுக்கு வெல்கம் டிரிங்ஸ் கொடுக்கச்சொல்லி விட்டு ஹோட்டல் எண்ட்ரன்ஸ்ஸை பார்த்த படியே நின்றிருந்தான்.

அப்போது அந்த ஹோட்டலுக்குள் நுழைந்தது ஒரு கார். அதிலிருந்து இறங்கினாள் திவி. அவளை இறக்கிவிட்டவனும் வந்த வேகத்தில் கிளம்பிவிட்டான். அவள் அந்தக் கார் சென்றவுடன் ஹோட்டலை திரும்பிப் பார்க்க அங்கு நின்றிருந்தான் அக்னீ.

அக்னீயோ ஃபீரீஸ் மோடில் நின்றிருந்தான். ஏனெனில் இது அவன் பார்த்த திவி இல்லையே! அவன் பார்த்த திவி அவனைப் பொறுத்தவரை அறையும் குறையுமாகத் திரிபவள். ஆனால் இன்று வந்தவளோ அழகான சுடிதாரில் வந்திருக்கிறாள்.

இவளுக்கு இந்த மாதிரியெல்லாம் உடையணிய தெரியுமா? எப்பவும் முட்டிக்கும் மேலுள்ள குட்டி கவுன் அல்லது முட்டி வரைக்குமான கேப்ரீ பேண்ட், ஸ்லீவ்லஸ், இடுப்பு தெரியுமாறு கிராப்டாப் இதுபோலத் தான போடுவாள்.

ஆனால் இன்று அழகான சுடிதாரில், அடக்கமான மேக்கப்பில், சாந்தமான முகத்துடன் வந்தவளை இமைக்க மறந்து பார்த்துக்கொண்டிருந்தான்.
அவனருகில் வந்தவள்,

“தூங்கி எழுந்துட்டா உள்ள போலாமா?” என்றால் பற்களைக் கடித்தபடி, அவளுக்கு அவன்
தன்னை சைட்டடிப்பது போல் தான் இருந்தது.

கனவிலிருந்து விழித்தார் போல் விழித்தவன் “போகலாம் மேம்” எனக்கூறி அவளை மீட்டிங் ஹாலுக்கு அழைத்துச் சென்றான்.

அவள் மீட்டிங் ஹாலில் உள்ளே நுழைந்ததும் அனைவரும் எழுந்து நின்று வணக்கம் வைக்க, அதைச் சிறு தலையசைப்பில் கடந்து சென்று அவளுக்கான சீட்டில் சென்று அமர்ந்தாள்.

பின் அக்னீ தான் வெல்கம் ஸ்பீச் கொடுத்தான். பிறகு அவளைப் பேச அழைக்க,

“Good evening guys. Dad has gone to Mysore for unexpected important work. So I've come here. I’m very happy about this success. I expect more and more success from you guys. Let's enjoy the party.

மாலை வணக்கம் நண்பர்களே. அப்பா எதிர்பாராத முக்கியமான வேலையாக மைசூர் சென்றிருக்கிறார். அதனால் நான் இங்கு வந்துள்ளேன். இந்த வெற்றியில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். உங்களிடமிருந்து மேலும் மேலும் வெற்றியை எதிர்பார்க்கிறேன். பார்ட்டியை ரசிப்போம்” என வலவலக்காமல் அழகாகத் தன் ஆளுமையான குரலில் பேசிவிட்டு மீண்டும் தன் இடத்தில் வந்து அமர்ந்தாள்.

பின் அக்னீ ஏற்கனவே தயார் செய்த 15 நிமிட பிரசண்டேஷனை அங்குள்ள புரஜெக்டரில் ஓடவிட்டான். ஆனால் அதை அவள் ஏறிட்டும் பார்க்கவில்லை, அவள் அவளின் போனுடன் ஐக்கியமாகி விட்டாள்.

அக்னீயும் அதை ஓடவிட்டு தன் இருக்கையில் வந்து அமர, மீனாவிடமிருந்து வந்தது மெஜேஜ்.

“பாட்னர் உங்க வேலை முடிஞ்சதா?”

“இல்ல மீனா. இப்போ தான் ஸ்டார்ட் ஆகிடுக்கு பார்ட்டி”

“நானும் இங்க ஒரு பார்ட்டிக்கு தான் வந்தேன் பார்ட்னர். அப்பாவோட பார்ட்டி அவர் மைசூர் போயிருக்கார். அதனால நான் வந்தேன்” அக்னீக்கு எங்கோ பொறி தட்டியது.

“பார்ட்டி எங்க நடக்குது மீனா” என அனுப்பிவிட்டு திவியையே கூர்ந்து நோக்கினான்.

“ஹோட்டல் விவேக். நீங்க எங்க இருக்கீங்க?” என்றாள். அக்னீக்கு திவி தான் மீனாவோ எனச் சந்தேகம் வலுத்தது.

“சத்யா ஹோட்டல்” என்று மாற்றிக் கூறியவன் “உனக்கு எப்போ முடியும் மீனா” எனக் கேட்டான்.

“பிரண்டேஷன் எல்லாம் முடிஞ்சது. டின்னர் மட்டும் தான். நான் இப்போ கூட வரலாம் பாட்னர். நான் பிரீ தான். நீங்க பிரீ’னா பிக்கப் பண்ணிக்கங்க”

அதே சமயம் தான் இங்கும் அக்னீ போட்ட பிரண்டேஷனும் முடிந்தது. அவனது சந்தேகம் நிமிஷத்திற்கு நிமிஷம் வலுப்பெற்றது. தற்சமயம் அதை ஒதுக்கிவிட்டு ஸ்டேஜிக்கு சென்றவன் மைக்கில்,

“வெளியே டின்னர் ஏற்பாடு பண்ணிருக்கோம். எல்லாரும் உங்கள் டின்னரை என்ஞாய் பண்ணலாம்” எனக்கூறிவிட்டு திவியிடம் சென்றவன்,

“மேம் வெளியே பஃபே தான் அரேன்ஞ் பண்ணிருக்கோம், அங்க சாப்பிடுறீங்களா இல்ல உள்ள ஹோட்டலுக்குள் சாப்பிடுறீங்களா?”

“இல்ல என் பிரண்ட் வரேன்னு சொன்னாங்க, நான் அவங்க கூடப் போயிடுவேன். எனக்கு டின்னர் வேண்டாம்”

“ஓ.கே மேடம் அவங்க வரும் வரை நானும் இங்கயே வெயிட் பண்றேன்”
எனக்கூற தோள்களைக் உலுக்கினாள். அவன் மீண்டும் தன் இடத்தில் வந்தமர்ந்து மீனாவுக்கு எந்த மெஜேஜூம் செய்யவில்லை சிறிதுநேரம் திவியையே கூர்ந்து கவனித்தான்.

இங்குத் திவி போனை பார்ப்பதும் வைப்பதுமாகவே இருந்தாள். அப்போது அக்னீ மீனாவுக்கு “இன்னும் பார்ட்டி முடியல. இன்னைக்கு பார்க்க முடியாது மீனா” என அனுப்பினான்.

அவன் அனுப்பிய மறுநொடி திவி ஆர்வமாகப் போனைப் பார்த்தவளின் முகம் படாரெனச் சுறுங்கியது. பின் அவள் போனில் ஏதோ டைப் பண்ணுவது போலத் தான் இருந்தது.

அக்னீக்கு மீனாவிடமிருந்து குறுஞ்செய்து “ஓ.கே பாட்னர்” என வந்தது.

“மீனா உங்க அப்பா பேர் என்ன?” என அக்னீ மீனாவிடம் கேட்க இங்குத் திவியின் முகத்தில் சிரிப்பின் சாயல்.

“ஏன் பாட்னர். நான் தான் சொன்னேனே கிருஷ்ணன்” என்று மீனாவிடமிருந்து வந்தது மெஜேஜ்.

“பொய். நீ யாருனு எனக்கு ஒரு கெஸ் இருக்கு. உண்மைய சொல்லு மீனா” என மீனாவுக்கு அனுப்ப, இங்கு திவியின் முகத்தில் ஆச்சிரிய பாவம்.

அக்னீயின் மொபைலில் மீனாவிடமிருந்து வந்தது குறுந்தகவல். அதை ஓபன் செய்ய அதில்,

“I am Divyameena. DM groups of companies president Mr. Sudhakar’s one and only daughter.

நான் திவ்யமீனா. DM குழும நிறுவனங்களின் தலைவர் திரு. சுதாகரின் ஒரே மகள்”
 

Lufa Novels

Moderator

யாரோ அவன்?? யாரோ இவள்??​

அத்தியாயம் 14​

O70DoD1SFldKKc_AwrjbXtLeDM8oQPr86Ts2Zshwvzp6E8VRhAq7KrbysWMCX3CSBni5rC_aTXr2qNDvubdmnN82Xsmj33WrWVp1moaUNFo8sZa-DZFN1Yy388WThNnRJj5-3NFr-6DoT6wU861zTx0


இந்த நிமிடம், இந்த ஷணம் நம்மால் நம் வாழ்வின் சில பக்கங்களை அழிக்க முடியுமென்றால், அக்னீ நிச்சியமாக இன்றைய தினத்தை அவன் வாழ்விலிருந்து அழித்திருப்பான்.

அவன் மனம் என்னும் தரிசு நிலம் மெல்ல மெல்ல திறந்து, அதில் காதலெனும் விதையை விதைத்து, அது வேரூன்றி, மெதுவாய் வளர்ந்து இன்று பூப்பூத்து நந்தவனமாய் மாறி உடலெல்லாம் புத்துணர்ச்சி பெற்று, வதனமெல்லாம் புன்னகைப் பூசி, முகமெல்லாம் பிரகாசமாக்கி இருந்தது.

ஆனால் இன்று அவளின் ஒத்த சொல்லில் அவன் மூளையில் ஏதோ வெடித்து சிதறியது, அவன் இதயமே வெற்றிடமானது போல் இருந்தது. அவன் காதுகளில் ‘ஹோ’ வெனக் கடலின் இறைச்சல், கண்களில் எரிமலையின் ஜூவாலை.

தோற்றுவிட்டோம். படு மோசமாகத் தோற்றுவிட்டோம் என்று அவன் மனம் ஓலமிட்டது. தன்னை ஒருத்தி இந்தளவுக்கு ஏமாற்றிவிட்டாள் என்ற நினைப்பு அவனை அந்த நிமிடம் மூச்சு கூட விட முடியாத அளவுக்குத் திணறவைத்தது.

எப்படி இவ்ளோ முட்டாளாக இருந்திருக்கிறோம்? நம்மை எவ்வளவு அழகாக ஏமாற்றியிருக்கிறாள்! அன்னை இல்லம், அநாதைக் குழந்தைகள், கிருஷ்ணன் மகள், பேங்க் ஆபிஷர் என எத்தனை பொய்கள்! அத்தனையும் நம்பியிருக்கிறோம்!

தினமும் பேசினாளே! உயிரை உறுக்குவது போலப் பேசினாளே! தேனொழுக பேசினாளே! மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருந்தாளே! அனைத்தும் ஒரு ராட்சசியின் பொழுதுபோக்குக்காகவா? அது தெரியாமல் நானும் அதில் கரைந்துபோனேனே!

நேரம் காலம் தெரியாமால், வேலைப்பளுவில் உறங்காமல், வீட்டிற்கு பேசும்போது கூட அவசமாக முடித்துவிட்டு அவளுடன் பேசினேனே! குளிரைக் கூட உணறாமல் வெட்டவெளியில் நின்று அவ்வளவு பேசினேனே! அத்தனைக்கும் மேல் அவளுக்குச் சுகமில்லையென நான் சாமி கும்பிட்டேனே! அத்தனையும் ஒன்றும் இல்லாமல் ஆகிவிட்டதே!

என்னிடம் பேசிவிட்டு என் முட்டாள்தனத்தை நினைத்து எப்படி சிரித்தாளோ! தன் நண்பர்களுடன் அமர்ந்து என்னைப் பற்றி என் முட்டாள் தனத்தை எவ்வாறெல்லாம் கேலி செய்தாளோ! தினமும் குடியும் கும்மாளமாக இருப்பவள், குடும்ப குத்துவிளக்கு போல் பேசினாளே அத்தனையும் பொய்யா?

அடக்கம், பணிவு, மரியாதை ஏன் அன்புக்கு அர்த்தம் கூட அறியாதவள், என்னிடம் உறுகி கரைந்தாளே எப்படி? என்னை ஏமாற்றுவதில் அவளுக்கு என்ன லாபம்? என்னைப் பார்த்தும் எந்தச் சலனமும் இல்லாமல் இருக்கிறாள் என்றால் நான் யாரெனத் தெரியாமல் தான் என்னை ஏமாற்றியிருக்கிறாளா?

ஹ்ம்ம் அவளிடம் இருக்கும் விலையுயர்ந்த போனில் வராதும் இருக்குமா? என் எண்ணை வைத்து என்னை என்றோ அவள் கண்டுபிடித்திருக்கலாம். ஆனால் என்னைப் பற்றி ஒன்றும் அறியாதுபோல் பாட்னர் பாட்னர் எனக் கூறியே என்னை ஏமாற்றிவிட்டாளே!

இத்தனை நாளும் அவளை நான் கோபக்காரியாகவும், ஊதாரியாகவும் தான் நினைத்தேன். ஆனால் அவள் என் எண்ணத்திற்கும் அப்பாற்பட்டவளாக அல்லவா இருந்திருக்கிறாள்! என்னை மட்டும் தான் ஏமாற்றுகிறாளா? இல்லை என்னைப் போல் எத்தனை பேரிடம் இவ்வாறு பேசிக் கிறுக்கனாய் அழைய விட்டாளோ?

எதற்காக? ஏன் என்னை ஏமாற்றினாள்? என நினைக்க நினைக்க அவனின் கைமுஷ்டி இருகியது. எத்தனை இரவை இதமான இரவாய் மாற்றினாள்! எவ்வளவு இதமாக மனதில் மழையடிக்க செய்தாள்! அத்தனையும் இனி எனக்கில்லையா?

கையிலிருந்த பொம்மையைத் தவற விட்டுத் தவிக்கும் குழந்தைபோல, அக்னீயின் மனது அவளை இழந்துவிட்டோமென வெயிலிட்ட புழுவாய் துடித்தது. மனதில் யாரோ ஈட்டியை வைத்துக் குத்தி அவனின் நந்தவனத்தை நாசமாக்குவது போல உணர்ந்தான்.

அவனுக்கு தலையைப் பிடித்துக் கொண்டு ‘ஹோ’வெனக் கத்தவேண்டும் போல இருந்தது. தன் கைகளிலிருந்து அவன் மொபைல் தவறுவது கூட உணராமல் இருந்தான் டேவிட் வந்து அழைக்கும் வரை.

“அக்னீ! அக்னீ!” என் அழைக்கத் தூக்கத்திலிருந்து விழிப்பவன் போல் விழித்தான். அவனுக்கு அந்த நிமிடம் உலகமே நின்று பின் இயங்குவது போலத் தான் இருந்தது.

“சார்” என்றான் என்ன பேசுவது எனக்கூட அவனுக்குப் புரியவில்லை.

“பாப்பாக்கு ஃபீவர் அக்னீ. அதான் ஹாஸ்பிடல் போய்ட்டு வர லேட் ஆகிடுச்சு”

“ஹான்”

“வெளியே எல்லாரும் சாப்பிட்டு கிளம்புறாங்க அக்னீ”

“ஹான்”

“அக்னீ என்னாச்சு? ஏன் ஒரு மாதிரி இருக்க?” என அவனை உலுப்ப,

“ஹ்ம்ம் ஒன்னுமில்ல சார். கொஞ்சம் தலவலி”

“சாப்பிட்டியா அக்னீ”

“இ..இல்ல சார்”

“நீ போய்ச் சாப்பிடு, நான் மேடம் கூட இருக்கேன். நான் சாப்பிட்டேன்” என அவராகக் கூற கீழே கிடந்த தன் போனை எடுத்துக் கொண்டு வெளியில் வந்துவிட்டான்.

வெளியில் வந்தவனுக்கு தலையே வெடிப்பதுப்போல் இருந்தது. முகத்தில் நீரைவிட்டு அடித்துக் கழுவினான். தன் சட்டைப் பாக்கெட்டில் அவன் போன் துடித்தது. பார்ட்டி ஆரம்பிக்கும்ப்போது சைலண்டில் போட்டது. எடுத்துப்பார்க்க அவளிடமிருந்து பத்துமுறைக்கு மேல் அழைத்திருந்தாள்.

போனை உயிர்பித்து காதில் வைத்தான்.

“ஹலோ பாட்னர்? என்னாச்சு ஏன் போனை எடுக்கல?”

“மேடம்”

“பா… பாட்னர்”

“மேடம் நீங்க எதுக்காக என்கிட்ட பழகினீங்கனு தெரியல. ஆனா இனி எனக்குப் போன் பண்ணாதீங்க மேடம்” என அடக்கப்பட்ட கோபத்தில் கூறினான்.

“பாட்னர்” என்றவளுக்கு வார்த்தைகள் வரவில்லை.

“உங்க பொழுதுபோக்குக்கு விளையாடும் பொம்மை இல்ல மேடம் நான். எனக்கு உணர்வுகள் இருக்கு”

“இல்ல பாட்னர் நீங்கத் தப்பா” என்றவளை இடையிட்டவன்,

“நீங்க நினைச்சா எதை வேண்டும்னாலும் செய்யலாம். ஆனால் என்ன நம்பித்தான் மேடம் என் குடும்பம் இருக்கு. என்னால உங்க பின்னாடி கிறுக்கு பிடிச்ச நாயா அழைய முடியாது மேடம்”

“பாட்னர் நான் அப்படி” என்றவளை மீண்டும் தடுத்து,

“இனி என்னை எப்போதும் கூப்பிட வேண்டாம். உங்க விளையாட்டுக்கு வேற பொம்மை வாங்கிக்கோங்க. என்ன விட்டுங்க”

“அய்யோ பாட்னர் என்ன பேச”

“உங்கள பேசவிட்டா நான் கிறுக்கனா மாறிடுவேன். போதும்”

“பாட்னர் ஐ லவ் யூ..” என அந்த ஹாலே கேட்குமாறு கத்தினாள். அங்கிருந்த டேவிட் திரும்பிப் பார்க்க, அவனைச் சட்டை செய்யாமல் அக்னீயுடன் பேச முயன்றாள்.

கசந்த சிரிப்பை உதிர்த்துவிட்டு “என்ன மேடம் பிரண்டா பேசி என்ன கிறுக்காக்கினீங்க, இப்போ நான் தெளிஞ்சதும் காதல்னு சொல்லி என்ன முட்டாளாக்க டிரை பண்றீங்களா? என்னை என்னனு நினைச்சீங்க? காதல்னு சொன்னதும் நாக்க தொங்கப்போட்டுட்டு உங்க பின்னாடியே வாலாட்டிட்டு வருவேன்னா? இனிமேல் என்னிடம் இப்படி எந்த வேலையும் ஆகாது மேடம்” என்றவன் தொடர்ந்து,

“இனிமே எனக்குப் போன் பண்ணாதீங்க, என்னைப் பின் தொடர்ந்து வராதீங்க, இவ்ளோ நாள் என்னை முட்டாளாக்கினது போதும் என்னை நிம்மதியா வாழ விடுங்க. உங்களுக்கான அடுத்த முட்டாள் சீக்கிரமா கிடைச்சுடுவான். குட்பாய்” என்றவன் டேவிட்டை அழைத்து வீட்டிற்கு செல்வதாகக் கூறிவிட்டு மேடம் கிளம்பும் வரை கூட இருக்குமாறு கூறிவிட்டு கிளம்பிவிட்டான்.

பைக்கில் வீட்டை நோக்கி வந்தான் அனால் அவன் போனோ மீண்டும் மீண்டும் துள்ளியது. கோபத்தில் அவள் நம்பரை பிளாக் பண்ணினவன், திரும்ப என்ன நினைத்தானோ! அவன் போன் சிம்மை கழட்டி அதை உடைத்து ஒரு பள்ளத்தில் எறிந்து விட்டான், கூடவே அவளுக்காக வாங்கிய கார்டையும், ரோஜாவையும். அத்தனையும் எறிந்தவன் மனதில் உள்ளவளையும் சேர்த்து எறிந்துவிட்டானா?

திவியோ அவனை மீண்டும் மீண்டும் அழைத்தாள், ஆனால் அது திரும்ப திரும்ப நாட் ரீச்சபிள் என வரவும் பொங்கி வந்த அழுகையை அடக்கிக் கிருஷ்ணனுக்கு அழைத்தாள்.

“ஹலோ மீனுகுட்டி. எல்லாம் சக்ஸஸ்ஸா” என அவர் ஆர்வமுடன் கேட்க,

“அ..அப்..அப்பா.. வா..வாங்க.. ஐ நீட் யூ நெள. ஹோட்டல் விவேக்” என தந்தி போலக் கூறியவள், உயிரற்ற மரமாய் சேரில் அமர்ந்தாள்.

அவள் கூறிய அடுத்த நிமிடம் அவர் வீட்டிலிருந்த திவியின் காரை எடுத்துக்கொண்டு அசூர வேகத்தில் சென்றார். அவர் வரும் வரை டேவிட் தான் அவளைப் பார்த்துக் கொண்டார்.

அவள் நார்மலாக இல்லை என்பதை கணித்த டேவிட் தான், அவளுக்குத் தண்ணீர் கொடுத்து அவளை ஆசுவாசப்படுத்தினார். பதறிப்போய் வந்தார் கிருஷ்ணன். அவரைக் கண்டவுடன் பூனைக்குட்டி போல அவரின் வயிற்றைக்கட்டிக் கொண்டு அழுதாள்.

கிருஷ்ணன் டேவிட்டை சங்கடமாகப் பார்க்க,

“தெரியல சார். யார் கிட்டயோ பேசினாங்க.. ஐ லவ் யூ பாட்னர்னு கத்தினாங்க.. அந்தப் பக்கம் என்னனு தெரியல பதட்டமாயிட்டாங்க..” எனக்கூற,

“பிளீஸ் இதை யார் கிட்டயும் சொ” எனக் கிருஷ்ணன் ஆரம்பிக்கும் போதே டேவிட் “யார் கிட்டயும் சொல்லமாட்டேன் சார். நீங்க மேடமை கூட்டிட்டு கிளம்புங்க, நான் அக்கவுண்ட் முடிச்சுட்டு அப்புறமா கிளம்பிக்கிறேன்” எனக்கூறினார்.

“அக்னீ” எனக் கிருஷ்ணன் கேட்க,

“இங்க தான் இருந்தார் சார். இப்போ தான் உடம்புக்கு முடியலனு என்ன ஃபினிஷ் பண்ணிட்டு வரச் சொல்லிட்டு கிளம்பிட்டார்”

கிருஷ்ணனுக்கு ஒன்றுமே புரிபடவில்லை. முதலில் மகளை அழைத்துக் கொண்டு சென்றாள் போதுமென்றது மனது. அவளை கைத்தாங்களாகக் காருக்கு அழைத்துவந்தார்.

காரில் ஏறியதிலிருந்து திவியின் பார்வை எங்கோ நிலைகுத்தியே இருந்தது. கண்களில் இப்போ துளி நீர் கூட இல்லை. கிருஷ்ணனுக்கு அந்தப் பார்வையே பயமூட்டியது.

வீட்டிற்கு அழைத்துவந்துவிட்டார். அவள் யாரிடமும் எதுவும் பேசவில்லை. அமைதியாகச் சென்று தம் அறையில் அடைந்து கொண்டாள்.

கிருஷ்ணன் சுதாகருக்கு அழைத்து அவரைத் திவியின் நிலையை லேசாகக் கூறி வீட்டுக்கு அழைத்தார். சுதாகரும் மகளைக் காண வந்துவிட்டார். ஆனால் அவள் யாரிடமும் பேசவில்லை. துளி கண்ணீரும் இல்லை. சூனியத்தை வெறித்தது போல அமர்ந்திருந்தாள்.

அவளுக்குத் தூங்குவதற்கு என டாக்டர் கொடுத்த மருந்தை மாலினி கொடுக்க மறுக்காமல் வாங்கி வாயில் போட்டுக் கொண்டவள், அவர் கொடுத்த பாலை தவிர்த்துவிட்டு படுத்துப் போர்வையால் அவளை முழுவதுமாக மறைத்துக் கொண்டாள்.

சிறிதுநேரம் அவளருகில் அமர்ந்திருந்தவர்கள் அவள் சீரான மூச்சுடன் தூங்குவதை உறுதிபடுத்திக் கொண்டு மாலினியை துணைக்கு படுக்கும்படி கூறிவிட்டு கிருஷ்ணனும், சுதாகரும் கீழே வந்தனர்.

சுதாகர் “என்ன நடந்தது கிருஷ்ணன்?”

கிருஷ்ணன் “தெரியல சுதாகர். மீனுமா இன்னைக்கு காலையில அவ்வளவு சந்தோஷமா கிளம்பினா. என்கிட்ட நான் ஒரு முக்கியமான விஷயமா போறேன். அது சக்ஸஸ் ஆச்சுனா உங்க கிட்ட தான் முதல்ல சொல்லுவேனு சொன்னா. ஆனால் இப்போ இப்படி” என அவர் வருத்தமாகக் கூற,

மகள் அவளுடைய சந்தோஷத்தைத் தன்னிடம் கூறாமல் கிருஷ்ணனிடம் கூறுவேன் எனக்கூறியது அவரின் மனதுக்கு சுணக்கத்தை கொடுத்தாலும், கிருஷ்ணனுக்கும், தன் மகளுக்கும் உள்ள பிணைப்பு நன்றாகத் தெரியுமாதலால், தன் வறுத்தத்தை மறைத்துக் கொண்டவர்,

“அப்போ அக்னீய பார்க்கப் போக இருந்தாளோ?” எனக் கேட்டார்.

“நானும் அப்படி நினைச்சு தான் வாழ்த்தி அனுப்பினேன்”

“நான் திவிய எங்க ஆபிஸ் பார்ட்டுக்கு சீப் கெஸ்ட்டா போகச் சொன்னேன். எனக்கு ஆபீஸ்ல வேலை இருந்தது” எனக்கூற,

“அதான் எனக்கும் குழப்பமா இருக்கு” என்றவர் மீண்டும் மீனாவின் அறைக்குச் சென்று அன்று போல் அவளின் கைப்பேசியை எடுத்து அக்னீயுடனான உரையாடலைக் கவனித்தார்.

கடைசியாக மீனா அனுப்பிய தான் சுதாகரின் பொண்ணு என்ற மெஜேஜ்க்கு பிறகு எந்தத் தொடர்பும் இல்லை. அதன் பின் ஒரே ஒரு கால் மட்டும் தான் அட்டன் ஆகி 1:10 நிமிடம் பேசியிருக்கின்றனர். அதன் பின் மீனா அழைத்த எந்த அழைப்பிற்கும் விடையில்லை.

“மீனா என்னத்தான் அப்பானு சொல்லிருக்கா போல, ஆனா அக்னிக்கு மீனா உன் பொண்ணு இப்பத்தான் தெரிஞ்சுருக்கு. அப்போ அதுல தான் ஏதோ பிரச்சனை”

“அப்போ என் பொண்ணு இன்னும் என்னை ஏத்துக்கலயா? உன்னை மட்டும் தான் அப்பாவா நினைக்குறாளா?” எனக்கேட்க கிருஷ்ணனுக்கு சுவற்றில் முட்டிக் கொள்ளலாம் போல இருந்தது.

“அவளுக்கு என்ன பிரச்சனை, அத எப்படி சரிபண்ணனு நான் யோசிச்சா? உனக்கு உன் பிரச்சனை தான் கண்ணுக்குத் தெரியுது. அதுக்கு முதலிருந்தே பொண்ண பார்த்து வளர்த்திருக்கனும்” எனச் சுதாகருக்கு ஒரு கொட்டு வைத்தவர் மீண்டும்,

“எனக்குப் பயமா இருக்கு. மீனுவ இப்படியே விட்டா அவ நிலைமை இன்னும் மோசமா ஆயிடும். இனி அவளை யோசிக்க விடக் கூடாது. எதுவா இருந்தாலும் படாரெனப் பேசி முடிக்கனும். நீ முதல்ல அக்னீ வீட்டுக்குப் போயி சம்பந்தம் பேசி முடி. அவ கல்யாணத்த இப்போ முடிக்காம விட்டுட்டோம் அப்புறம் அவ தெளிவாகிடுவா. அப்புறம் என்னைக்கும் அவளுக்குக் கல்யாணத்த முடிக்க முடியாது”

“அவ சம்மதிப்பாளா?”

“அது என் பொறுப்பு. நான் என்ன பண்ணா என் பொண்ணு சம்மதம் சொல்லுவானு எனக்குத் தெரியும்”

“அவ என் பொண்ணு”

“சுத்தம். உன் பொண்ணு தான், நான் தூக்கிட்டு ஓடல. முதல போய்ப் பேசி முடி”

அவரும் உடனடியாக மதுரைக்கு பிளைட்டை பிடித்தார். அக்னீயின் அப்பாவை நேரில் சந்தித்தார். தான் பேச நினைத்து எல்லாத்தையும் பேசி முடித்தார். அனைத்தும் அக்னீயை விலைபேசுவது போலத்தான்.

கல்யாணத்துக்கு பிறகு வீட்டோட மாப்பிள்ளையாக இருப்பது. அக்னீயின் வீட்டிற்கான பணத்தேவையை பூர்த்திசெய்வது தருவதுவென அனைத்தும் ஒரு பிஸ்னஸ் மேன் பிஸ்னஸ் டீல் பேசுவது போலப் பேசி முடித்துவிட்டு, பாண்டியனின் முடிவுக்காகக் காத்திருந்தார்.

பாண்டியன் “எங்கள தேடி இதுவரை வந்ததுக்கு நன்றி. என் பையன நல்ல பையனா வளர்த்திருக்கேன் நினைக்கும்போது மனசு நிம்மதியா இருக்கு. அப்படியில்லாட்டி ஒரு வேலைக்காரனுக்கு முதலாளி தன் பொண்ணையே தரேனு சொல்லுவாரா?

ஆனால் நீங்கச் சொன்ன எதுக்கும் எங்களுக்குச் சம்மதமில்லை. உங்க பொண்ணு நல்ல பொண்ணாவே இருந்தாலும் கூட இந்தச் சம்பந்தம் எங்களுக்கு வேண்டாம். என்னோட ஆசை என் தங்கச்சி பொண்ணுகளை தான் என் பசங்களுக்கு முடிக்கனும்

உங்க பொண்ணுக்கு சம்மதம் சொன்னால் பணத்துக்காக என் பையன வித்தது போல
ஆகிடும். ஒரு பிள்ளைய வித்து அந்தக் காசுல மத்த பிள்ளைகளைச் சந்தோஷமா பாத்துக்கிறது, அந்தப் பையனோட மாமிசத்த மத்த பிள்ளைகளுக்குக் கொடுக்குறதுக்கு
சமம்.

என்னைக்கும் என் பையன நான் விக்கமாட்டேன். என் தங்கச்சி பொண்ணை வேண்டானாக் கூட என் பையனோட சந்தோஷம் எங்கயோ அங்க தான் பொண்ணு எடுப்பேன். பணத்துக்காக என் பிள்ளையோட சேர்த்து அவன் மனசையும் விக்க நான் தயார இல்லை.

நீங்க உங்களுக்கு வேற நல்ல பீ.ஏ ரெடி பண்ணிக்கோங்க. அதுவரை என் பிள்ளை வேலை பார்ப்பான். அப்புறம் என் பிள்ளை என்கிட்டயே வந்துடட்டும். கஞ்சோ கூலோ ஒத்த குடுசைக்குள்ள என் பிள்ளைகள் ஒத்துமையா இருந்தா போதும்”
 

Lufa Novels

Moderator

யாரோ அவன்?? யாரோ இவள்??​

அத்தியாயம் 15​

nvaqZWOI4axgkfEyPQaITargiRc3Z0lwbd_n6_P3XKHhWs5gZKiffj20x48I4cG53JTfJEUmTWNpk4o8Z_ScqiFrXesqdALkUawz0uboeFrWecq1bt0JmERxa9K-EVa93hoeOjmPaxHonpanc-oS8ns


எங்கே எனது கவிதை…
கனவிலே எழுதி மடித்த கவிதை…
எங்கே எனது கவிதை…
கனவிலே எழுதி மடித்த கவிதை…

மாலை அந்திகளில் மனதின் சந்துகளில்…
தொலைந்த முகத்தை மனம் தேடுதே…
வெயில் தாரொழுகும் நகர வீதிகளில்…
மையல் கொண்டு மலர் வாடுதே…

மேகம் சிந்தும் இரு துளியின் இடைவெளியில்…
துருவித் துருவி உனைத் தேடுதே…
உடையும் நுரைகளிலும் தொலைந்த காதலனை…
உருகி உருகி மனம் தேடுதே…

அழகிய திருமுகம் ஒருதரம் பார்த்தால்…
அமைதியில் நிறைந்திருப்பேன்…
நுனிவிரல் கொண்டு ஒருமுறை தீண்டு…
நூறு முறை பிறந்திருப்பேன்…

எனப்பாடியவள் மேலும் பாடமுடியாமல் அழுது கொண்டே எழுந்து ஓட அங்குள்ள அனைவருக்குமே மனதில் பாரமேறியது.

ஆயிற்று. அக்னீயும் அவன் தந்தையும் திவியை மறுத்துவிட்டு இரு மாதங்கள் ஆயிற்று. அவர்கள் உறவில் எந்த மாற்றமும் இல்லை. தேங்கிக்கிடந்த திவியை கிருஷ்ணனும், மாலினி, சுதாகர் என அத்தனை பேரும் தாங்கினர்.

ஒருவரும் அவளிடம் விளக்கம் கேட்டு அவளைக் காயப்படுத்தவில்லை. அவர்களுக்கே விடை தெரிந்திருக்கும்போது எதற்காகக் கேள்வியென அவளைக் காயப்படுத்தாமல் விட்டுவிட்டனர். ஒருவாரம் கழித்து எழுந்தாள் திவி பழைய திவியாக. மீண்டும்
அவள் மனதை அவளே திடப்படுத்தினாள்.அவளின் பலகீனங்களை அவளே அழித்தாள்.

மீண்டும் பழைய மீனாவாகப் புது பொழிவுடன் அன்னை இல்லத்தையும் சுத்தி வந்தாள். அவர்களுக்கும் அரசல் புரசலாக மீனாவின் காதல் தோல்வி தெரியும். ஆனால் யாரையும் எதுவும் கேட்கக் கூடாது எனக் கிருஷ்ணனின் அறிவுறைப்படி யாரும் எதுவும் கேட்கவில்லை.

ஆனால் இன்று அழுது கொண்டே போனது அனைவரையும் அசைத்துத் தான் பார்த்து. கிருஷ்ணன் தான் மகளை மீண்டும் தன் அலுவலக பணியைச் செய்ய வைத்து அவளின் மனதை திசை திருப்பினார்.

இந்த இடைப்பட்ட மாதத்தில் மஹாவுக்கு கவுன்சிலிங் முடிந்தது. அரசுக்கல்லூரி கிடைக்கவில்லை, மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ் சேர்ந்தாள். வீடு எப்போதும் போல இயல்பாகவே இயங்கியது. பாண்டியனும் திவியின் சம்பந்த விஷயத்தை யாரிமும் பகிரவில்லை அக்னீயைத்தவிற.

அக்னீயோ தன் மனதை இரும்புக்கதவு கொண்டு தான் அடைத்திருந்தான். மீனா யாரெனத் தெரியும் முன்பே அவன் சுதாகரிடம் மஹா படிப்பிற்காகப் பத்து லட்சம் லோன் வாங்கியிருந்தான். லோனை இரு வருடத்தில் திருப்பித் தருவதாகவும், இப்போது வேலையை விடுவதாகவும் கூற அதை மறுத்துவிட்டார் சுதாகர்.

“எனக்கு உன்மேலயோ உங்கப்பா மேலயோ எந்தக் கோபமும் இல்ல அக்னீ. உங்க நிலையில நீங்கச் சரியா இருக்கீங்க, ஆனா நாங்க தான். சரிவிடு. தங்கச்சி படிப்ப பாரு. லோனை சம்பளத்திலேயே கொஞ்சம் கொஞ்சமா பிடிச்சுக்கிறேன், மீதிய உன்னால முடியும் போது கொடு. உன்ன மாதிரி நல்லவன மருமகனா ஆக்கத்தான் துப்பில்லாம தொலச்சுட்டோம். அட்லீஸ்ட் தொழில்லையாவது எனக்கு உதவு. எங்கயும் போக வேண்டாம் இங்கயே இரு” எனக் கூறிவிட்டார். அதனால் அக்னீ அங்கயே வேலை செய்துகொண்டிருந்தான்.

திவியோ வழக்கம் போலவே இயங்க ஆரம்பித்தாள். என்ன சுபத்ராவை வெறுப்பதால் சுதாகர் வீட்டிற்கே போவதில்லை. எப்போதும் இரவு தூங்குவதற்காக மட்டுமாவது வந்து கொண்டிருந்த மகள் இப்போது முழுநேரமும் வராமலிருப்பது சுதாகருக்கு வருத்தம் தான். ஆனால் இப்போது திவியின் மனநிலை அதைவிட மிகவும் முக்கியமானது அவருக்கு.

சுபத்ராவுக்கு திவி வீட்டிற்கு வராததே சில நாட்கள் கழித்து தான் தெரியும். அதுவே தொடர்கதையாகி நாட்கள் நீள நீள சுபத்ரா மகளைப் பற்றிச் சுதாகரிடம் விசாரிக்க “பத்திரமா இருக்கா. நேரம் வரும்போது நானே கூட்டிட்டு வரேன்” என்பதோடு நிறுத்திக் கொண்டார்.

சுபத்ராவும் அதற்கு மேல் எதுவும் கேட்கவில்லை. அவர் எப்போதும் போல அவர் லேடீஸ் கிளப், பார்ட்டி என அவர் உலகம் சுழன்றது. ஒரு தாய்க்கு உண்டான எந்தக் கடமையும் அவர் நிறைவேற்றவில்லை. இப்போதும் அவர் நினைத்திருந்தால் திவியை எப்படியாவது கூட்டிக் கொள்ள முடியும், ஆனால் அவர் அதற்கான முயற்சியை எடுக்கவில்லை.

திவி தன் மனதை யாரிடமும் வெளிப்படுத்தவில்லை. எப்போதும் அழுத்தம் தானே அதனால் அப்படியே இருந்துவிட்டாள். காலையில் எழுவது கிருஷ்ணன் மாலினியுடன் நேரத்தைச் செலவழிப்பது, எப்போதும் போல வேலை, மாலையில் சுதாகரே தினமும் வந்து மகளை பார்த்துவிட்டுச் சென்றார். திவியை தப்பித் தவிறிக்கூட அலுவலகம் பக்கம் வந்துவிடாமல் பார்த்துக் கொண்டார்.

அவர்களுக்கு அவளின் பாட்னர் அக்னீ தான் என்பது தங்களுக்கு தெரிந்ததுபோல அவளுக்கும் தெரியுமென்றே நினைத்தனர். திவிக்கு தெரியாதென்று அவர்களும் நினைக்கவில்லை, ஏன் அக்னியும் கூட நினைக்கவில்லை. வீட்டினருக்கே தெரியும்போது அவளுக்குத் தெரியாமா இருக்குமெனத் தான் அவனும் நினைத்திருந்தான்.

திவியோ அவளின் பாட்னரை மறக்கத் தான் முயற்சி செய்கிறாள் ஆனால் அது தான் முடியவில்லை. இரவிலும் பகலிலும் அவள் அழைக்கக் கூடாது என நினைத்தாலும், ‘அவன் தன் எண்ணை பிளாக் செய்துவிட்டான்’ எனத் தெரிந்தும் மீண்டும் முயற்சி செய்கிறாள். அதுவும் “திஸ் நம்பர் டஸ்நாட் ரீச்சபிள்” என திரும்பித் திரும்பி கூறியே ஓய்ந்துவிட்டது.

அக்னீக்கு ஆறாத காயமாக மனதுக்குள் அவள் ஏமாற்றியது இருந்தது. அவனும் அவளை மறக்கக் கோபம், வெறுப்பு எனப் பல யுக்தியை பயன்படுத்தினாலும் பாதி தூக்கத்தில் திவி கூறிய “ஐ லவ் யூ பாட்னர்” என்ற சொல் அவனைப் பாடாய்படுத்தியது.

ஒரு வருடம் கழித்து

அக்னீயும், சுதாகரும் அன்று ஊட்டியில் உள்ள அலுவலகத்தில் வேலை பார்க்க வந்திருந்தனர். அன்று திவியும் ஊட்டிக்கு வந்திருந்தாள். அன்று அவளது தோழி ஒருத்தியின் பிறந்தநாள் விழாவுக்காகச் சாக்லெட்ஸ் வாங்குவதற்காக.

அக்னீ அவள் கார் கடையின் வாசலில் வரும் போதே பார்த்துவிட்டான். கிட்டத்தட்ட அவன் அவளைப் பார்த்தே ஒன்னேகால் வருடத்திற்கும் மேலிருக்கும். அன்று அவள் காரைப் பார்த்ததும் அவன் மனது எம்பிக் குதித்தது என்னவோ நிஜம் தான்.

காரிலிருந்து இறங்கினாள் திவி. ஒரு முட்டி வரையான டெனிம் ஷார்ட் ஸ்கர்ட்டும், டீசர்ட்டுக்கு மேல் ஒரு டெனிம் கேர்ட்டும் போட்டு ஹைஹீல்ஸ், கூலர்ஸூடன் அவள் இறங்கியபோது, இன்றைய சினிமா ஹீரோயின்களுக்கே டஃப் குடுப்பது போல இருந்தது.

அவளின் உடையைப் பார்த்ததும் அவன் முகம் மீண்டும் சுறுங்கியது. அவனுக்குத் தான் இவளின் நவநாகரீக உடையே பிடிக்காதே! ‘அன்னைக்கு என்னை ஏமாத்தத்தான் அந்தச் சுடிதார். இவள் குணம் என்றும் மாறாது’ என நினைத்து அவன் வேலையைக் கவனிக்க ஆரம்பித்தான்.

அவளும் அவளுக்குத் தேவையான அனைத்தையும் ஊழியர்களிடம் கூறி அதைக் காரில் ஏற்றக்கூறியபோது, கேஷியர் மூலமாகச் சுதாகர் மேலே அலுவலத்தில் உள்ளது தெரிந்து அவரைக் காண மேலே சென்றாள்.

அவள் தான் எப்போதும் சுதாகர் அறையைத் தட்டுவதே கிடையாதே. மேலே வந்தவள் சுதாகர் அறையைப் படாரெனத் திறந்தாள். யார் கதவைத் தட்டாமல் திறப்பது எனக் கோபத்துடன் நிமிர்ந்த சுதாகரின் கோபம், மகளைப் பார்த்ததும் பொங்கிய பாலில் நீரைத் தெளித்தது போல அடங்கியது.

“குட்டிமா” என ஆனந்தமாக அழைத்தவர் அவளிடம் வந்தார்.

“டேட்” என அவளும் அவரை வந்து அணைத்துக் கொண்டாள்.

“என்னடா இந்தப் பக்கம்” என்றவர் அக்னீயையும் திவியையும் அவஸ்தையாகப் பார்த்தார்.

“ஒரு பர்த் பார்ட்டிக்கு போகனும் சாக்லெட்ஸ் வாங்க வந்தேன் டேட்” எனச் சுதாகர் அவளையும், அக்னீயையும் அவஸ்தையாக பார்ப்பதை பார்த்துக் கொண்டே கூறியவள், அக்னீயிடம் திரும்பி,

“ஹலோ எக்ஸ்க்யூஸ் மீ. பெர்சனலா பேசும்போது டீசெண்ட்டா வெளியில போகத் தெரியாதா? ஒவ்வொன்னையும் சொல்லனுமா? கோ அவுட் மேன்” என அக்னீயை பார்த்துக் கூறினாள்.

அக்னீக்கோ முகத்தில் சுடுதண்ணீரை ஊற்றியது போல ஆனது. அவமானமாக நினைத்தான். ‘திமிர் திமிர் எல்லாம் திமிர். எவ்ளோ தூரத்துக்கு அசிங்கப்படுத்துறா?’ என எண்ணிக் கொண்டே வெளியில் சென்றவனுக்கு ஆத்தாமையாக இருந்தது.

‘இவள் குணம் என்றைக்குமே மாறாது. இவளை நினைச்சேன்னு நினைக்கும்போது எனக்கே வெறுப்பா இருக்கு. இவள இந்த மனசும் மறந்து தொலைக்க மாட்டுது’ எனத் தன்னையும் சேர்த்தே திட்டிக்கொண்டிருந்தான்.

“ஏண்டா குட்டிமா அப்படி பேசிட்ட?”

“நீங்கத் தான டேட் அன்கம்ஃபடபிளா அவனைப் பார்த்தீங்க. அதான் வெளியில அனுப்பினேன்”

“பாவம்டா முகம் வாடிப் போச்சு” எனக்கூற வழக்கம்போல
தோளைக் உலுக்கினாள். பின் அவரிடம் பேசிவிட்டுக் கிளம்பினவள் வெளியே அக்னீயை பார்த்து,

“டேட் அனீசியா ஃபீல் பண்ணின மாதிரி இருந்தது. அதான் வெளியில அனுப்பினேன். பேஸிக்மேனர்ஸ் கூட இல்லாம உள்ளயே நிக்கிற. இனிமேலாவது மேனர்ஸ்ஸா பிகேவ் பண்ணு” என அவனை மேலும் திட்டிவிட்டு சென்றாள்.

இந்த நிகழ்வுக்குப் பிறகு மீண்டும் அக்னீ அவளை இன்னும் இன்னும் ஆழமாக வெறுக்க ஆரம்பித்தான். நாட்களும் அது போக்குக்குச் சென்றது. கிருஷ்ணன் தான் திவியின் வாழ்க்கையை எப்படியாவது சரிசெய்ய நினைத்தார்.

காரணம் சுதாகரும் மகளைத் திருமணம் செய்யுமாறு கூறி அவளுக்கு ஏற்றபடி மாப்பிள்ளையைக் கொண்டு வந்து கொண்டே இருந்தார். ஆனால் திவியோ எதற்கும் அசைந்தாளில்லை.

கிருஷ்ணன் மனதிலோ மகள் அக்னீயை தவிற வேறு எவனுடனும் வாழமாட்டாளென்றே தோன்றியது. முதல் தடவை அக்னீயின் தகப்பனிடம் சுதாகரை பேசவிட்டு மொத்தமும் சொதப்பியது. மீண்டும் ஒருதடவை தான் பேசுவோம் என நினைத்துப் பாண்டியனை சந்திக்க சென்றார்.

பாண்டியனிடம் அனைத்தையும் கூறினார். அக்னீயும் திவியும் பேசியது பின் அக்னீ அவளைவிட்டு பிரிந்தது. இன்று திவி யாரையும் திருமண முடிக்காமல் தள்ளிப்போடுவது என அனைத்தையும் கூறினார். சுதாகர் போல அக்னீயை விலை பேசுவது போல எதுவும் பேசவில்லை.

“அக்னீ மனதிலும் மீனா தான் இருக்கா” என மீனா என்ற பெயரைக் கிருஷ்ணன் கூறவுமே பாண்டியன் யோசிக்க ஆரம்பித்தார். அன்று தன் வீட்டில் ‘மீனம்மா’ பாடலின்போது நடந்தவை கண்முன் நிழலாடியது.

“நான் அக்னீயிடம் பேசிவிட்டு சொல்றேன்”

“சந்தோஷம். நல்ல முடிவா சொல்லுவீங்கனு எதிர்பார்க்கிறேன்” எனக் கூறிவிட்டுக் கிளம்பினார்.

அந்த விடுமுறைக்கு அக்னீ வந்தபோது அருண் மெண்டுமென்றே டீவியில் மீனம்மா பாடலைப் போட்டு அக்னீயை வெறுப்பேற்றினான்.

“டேய் இப்போ மாத்த போறீயா என்ன”

“உனக்குத்தான் பிடிக்குமே இந்தப் பாட்டு. ரிங்டோனா வட்சிருந்த. இப்போ என்னண்ணே. அம்மாக்கு பயப்படுறீயா?” என அந்த நாள் எண்ணத்தில் அவனைக் கேலி செய்ய நிஜமாகவே அருணை அடித்துவிட்டான் அக்னீ.

அவனோ பாவமாக அமர்ந்திருந்தான்.
எப்போதும் போல விளையாட்டாக ஆரம்பித்தது வினையாக முடிந்தது. பாண்டியன் அனைத்தையும் பார்த்தவர் அக்னீயை தனியாக அழைத்து,

“அக்னீ அப்பாக்கு இப்போ எல்லாம் உடம்புக்கு முடிய மாட்டீங்குது. உன் மாமாட்ட பேசிச் சீக்கிரம் ஆதி-நந்தினி கல்யாணத்த முடிக்கனும். அப்படியே உனக்கும் சேர்த்து முடிச்சுடலாம்னு பார்க்குறேன். நீ என்னப்பா சொல்ற?”

எனக்கேட்கவும் தான் எவ்வளவு தான் வெறுத்தாலும் திவியின் முகமும் அவளின் குரலுமே நியாபத்தில் வந்து அவன் உதடுகள் “மீனா” என மெளனமாக உச்சரித்தது. அனைத்தையும் பாண்டியன் கவனித்துவிட்டார்.

“வேண்டாம் பா. அண்ணனுக்கு மட்டும் முடிங்க. மஹாக்கு முடிச்சுட்டு அப்புறம் பார்த்துக்கலாம்”

“மஹாக்கு இன்னும் படிப்பு இருக்கு பா. உனக்கு முடிச்சுடலாம்”

“வேண்டாம் பா”

“நம்ம யாழினியையே கேட்போம். இரண்டு பொண்ணும் ஒரே வீட்டிலனா உன் மாமாவும் சம்மதிச்சுடுவார்”

“அப்பா யாழிய நான் அப்படி நினைச்சதே இல்லப்பா. யாழிய போய்.. அவ எனக்கு மஹா மாதிரிப்பா”

“அப்போ வெளியில பாக்கலாம்”

“அய்யோ விடுங்களே நீங்களும் என்ன படுத்தாதீங்க, என்னால முடியல. எனக்குக் கொஞ்சம் டைம் கொடுங்க”

“யாரையும் விரும்புறீயா பா. சொல்லு அங்க பேசுவோம்” எனக்கூற, அக்னீக்கு தொண்டைவரை மீனாவின் பேர் வந்தது. அவன் கஷ்டப்பட்டு அடக்குவதையும் கவனித்தார்.

“நீ உங்க ஓனர் பொண்ணு மீனாவ விரும்புறீயா?”

“அப்பா” என விக்கித்து நின்ற விதமே அவருக்கு அவன் மனதை கூறியது.

“சொல்லுப்பா”

“அவங்க உயரத்துக்கும் நமக்கும் ஆகாது. அதுவும் போக அவ திமிர் பிடிச்சவ”

“ஆனா அந்தப் பொண்ணு உன்ன தான் விரும்புதாமே”

“பொய். அவ டைம்பாஸூக்கு பழகிருக்கா”

“அப்போ நீயும் பழகிருக்க. சரிதான”

“அ..அப்பா. அப்போ அவ யாருனு தெரியாது”

“யாரா இருந்தாலும் பழகினது உண்மைதானே” எனக்கூறவும் தலைகவிழ்ந்து நின்றான்.

“பெண் பாவம் பொல்லாதது. அது குடும்பத்த அழிச்சிடும் அக்னீ”

“இல்லப்பா. நான் அந்தப் பொண்ணுக்கிட்ட காதலிக்கிறேனு கூடச் சொல்லவே இல்ல”

“நீ பேசின தானே? அந்தப் பொண்ணு உன்ன விரும்புச்சி தானே?” எனக்கேட்க அமைதி மட்டுமே அக்னீயுடம்.

“அந்தப் பொண்ணையே பேசி முடிச்சுடுவோம்”

“மாட்டேன். என்னால முடியாது. என்னை வற்புறுத்தாதீங்கப்பா” என்றவன் திரும்பவும் ஊருக்குக் கிளம்பிவிட்டான்.

பாண்டியன் அக்னீ திவியை சேர்த்து வைப்பாரா? அக்னீயும் திவியும் இதற்குச் சம்மதிப்பார்களா?
 

Lufa Novels

Moderator

யாரோ அவன்?? யாரோ இவள்??​

அத்தியாயம் 16​

M928SW7mGSYEDokf6bCDQZgl4-xZlhdGH-rI85zDzOZnn7hT1hfZMjixMZyQ8bpSh0s1pjAV-3EmFvd4dAq81OtREs1KsQ5R_9EzZhAQKAWaAUVI7EWCvURqlcM5mqXuhvUt67CcCZKC6Lpv5oNCCVs


திருமங்கலம் மீனாட்சி சொக்கநாதர் கோயில்

மீனாட்சியம்மன் கோயில் அல்லது மீனாட்சி சொக்கநாதர் கோயில் என்பது தமிழகத்தின் மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் நகரில் அமைந்துள்ள தொன்மையான இந்துக் கோவில் ஆகும். இக்கோயிலில் இறைவி மீனாட்சி அம்மனையும், இறைவன் சொக்கநாதரரையும் வணங்குவார்கள். சிவபெருமானுக்கான கோவில்களில் இந்தக் கோயில் சிறப்புடைய ஒன்றாகக் கருதப்படுகிறது.

சிவபெருமான், மீனாட்சியை மணம் முடிப்பதற்காகக் கயிலையிலிருந்து மதுரை வந்தார். திருமணத்திற்காகத் தேவர்களும், பூதகணங்களும் சிவபெருமானிற்கு முன் மதுரை வந்தடைந்தனர். திருமணத்திற்கான தாலி செய்வதற்காக மதுரை நகரின் 18கிமீ. தெற்கில் உள்ள குண்டாற்றின் கரையோரம் ஒரு இடத்தைத் தெரிவு செய்தனர்.

அதற்கு முன்னர், ஈசனை வழிபட அவர்கள் விரும்பினர். அவர்களது விருப்பத்திற்கு இணங்கி, திருமணத்திற்கு முன்பே தம்பதி சமேதராய் மீனாட்சியுடன் சொக்கநாதரும் காட்சி தந்தார். பின்னர் வந்த இடைக்கால பாண்டியமன்னர்கள், இங்கு சுயம்புவாகக் கிடைத்த லிங்கத்தைக் கொண்டு கிழக்கு நோக்கி இக்கோயிலை எழுப்பினர்.

அங்குத் திருமாங்கல்யம் செய்யப்பட்டதால், அப்பகுதியை தேவர்கள் “திருமாங்கல்யபுரம்” என அழைத்தனர். காலப்போக்கில் “திருமங்கலம்” எனப் பெயர் மாறியது. பிற்காலத்தில் மன்னர்கள் இக்கோவிலைக் கட்டினர்.

அக்கோவிலில் தான் இன்று சொக்கநாதனான அக்னீஸ்வரனுக்கும் மீனாட்சியான திவ்யமீனாவுக்கும் திருமணம் நடைபெறுகிறது கூடவே ஆதி நந்தினி தம்பதியினருக்கும். சுபயோக சுபதினத்தில் நல்ல முகூர்த்த நேரத்தில் இரு ஆண்களும் அவர்களது மனைவிக்குத் தாலி கட்டி அவர்களைத் தங்களது வாழ்வில் இணைத்துக் கொண்டனர்.

கோவிலில் திருமணம் முடிந்து ஒரு பெரிய திருமண மண்டபத்தில் விருந்து வைபோகம் நடைபெற்றது. தம்பதியராய் மேடையில் நின்றவர்களில் ஒரு ஜோடி சந்தோஷத்தில் முகமலர ஜோடியாக விதவிதமாகப் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துக் கொண்டிருந்தனர்.

மற்றொரு ஜோடியோ யார் கல்யாணத்திற்கோ வந்தது போலக் கடனேயென நிற்க, உடனிருந்தவர்கள் தான் இப்படி நில்லு.. அப்படி நில்லு.. சிரி.. என அவர்களை படுத்தி எடுத்தனர்.

கல்யாண தேதி வந்து கண்ணோடு ஒட்டிக்கிச்சு…
பெண் நெஞ்சில் ஆனந்த கூத்தாச்சு…
பாருங்கடி…பொண்ண பாருங்கடி…
வெட்கத்தில் அவ கன்னம் சிவந்திருச்சு…

ஏ இடிச்ச பச்சரிசி.. புடிச்ச மாவிளக்கு..
அரைச்ச சந்தனமும் மணக்க..
மதுரை மல்லிகைப்பூ.. சிரிக்கும் செவ்வந்திப்பூ…
செவந்த குங்குமப்பூ மயக்க…

தை மாசம் வந்துடுச்சு…
கால நேரம் சேந்துடுச்சு…
ஜோடி ஒண்ணா ஆயிடுச்சு…
மேளச்சத்தம் கேட்டுடுச்சு…
மேகம் கருத்துருச்சு…
மாரி மழை பெஞ்சுடுச்சு…
மண்ணில் மணம் ஏறிடுச்சு…
மஞ்சள் நிறம் கூடிடுச்சு…

ஏ நெனச்சக் கனவு ஒண்ணு நெஜமா நடந்திருச்சு..
உன்னோட நான் சேருறது பலிச்சாச்சு..
விதைச்ச விதையும் இங்கு செடியா முளைச்சிருச்சு..
பூவும் இல்ல காயும் இல்ல கனியாச்சு..

என இளசுகளின் நடனம் வேறு மண்டபத்தில் கலைகட்டியது. இவர்களின் ஆட்டத்தில் மணமக்களையும் இழுக்க, ஆதியும் நந்தினியும் கூட சின்ன சின்ன ஸ்டெப்ஸ் போட, அக்னீயும் திவியும் அசையாமல் இருந்தனர்.

மாலை அனைவரும் வீட்டிற்கு வந்தனர். இரு மருமகள்களையும் வீட்டில் விளக்கேற்றிவிட்டு, பாலும் பழமும் கொடுத்தனர். மேலும் சிறிது நேரம் இருந்துவிட்டு ஆதி நந்தினியை மறுவீட்டிற்காக நந்தினி வீட்டிற்கு அனுப்பினர். நாளை மாலை தான் அவர்களைப் பாண்டியன் வீட்டிற்கு அழைத்துவருவார்கள்.

சுதாகர் தன் சொந்தங்களை மதியமே அனுப்பிவைத்திருக்க, இப்போது மனைவியையும், கிருஷ்ணனையும் அழைத்துக் கொண்டு மாலினியை திவிக்கு துணையாக விட்டுவிட்டு கோத்தகிரிக்கு புறப்பட்டனர்.

கண்களில் நீருடன் சுபத்ரா மகளை அணைத்து விடுவிக்க, திவியோ விரைத்தபடியே நின்றிருந்தாள். சுதாகரும் நாளைக்கு அனைவரும் அக்னீ திவியுடன் கோத்தகிரிக்கு வருமாறு அழைப்பு விடுத்துவிட்டு கிளம்பினர். மகளைப் பார்த்த படியே சென்ற சுபத்ராவை பார்க்கும்போது திவியின் நினைவு பின்னோக்கிச் சென்றது.

அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த அக்னீக்கு ஆதியிடமிருந்து வந்தது தொலைபேசி அழைப்பு. அதை எடுத்தவனுக்கு ஆதி கூறிய செய்தியில் பதட்டமடைந்து சுதாகரை நோக்கிச் சென்றவன் அவரிடம்,

“அப்பாக்கு ஹார்ட்அட்டாகாம் நான் கிளம்பனும் சார்” எனக் கூறினான்.

“என்ன சொல்ற அக்னீ. நல்லாத்தான இருந்தார். சரி கிளம்பு” என்றார்.

“சரி சார்” எனக் கிளம்பியவன் கிடைத்த பஸ்ஸை பிடித்து மாலைக்குள் ஹாஸ்பிடல் வந்திருந்தான். மருத்துவரோ நிறைய பிளாக் இருக்கு ஆஞ்சியோ பண்ணனும், ஸ்டண்ட் வைக்கனும் எனக்கூற ஆதி அயர்ந்து போய் அமர்ந்திருந்தான்.

அக்னீ வரவும் ஆதி அனைத்தையும் கூற, எவ்வளவு செலவாகும் என எல்லாம் கேட்டுவிட்டு, மீண்டும் பனத்திற்காகச் சுதாகரைத் தான் அழைத்திருந்தான். அந்நேரம் தன் தன்மானத்தை விட அப்பாவின் உயிரே முக்கியமாகப்பட அவரை அழைத்து உதவிகேட்டான்.

அவரும் தட்டாமல் அவனுக்குத் தேவையான நிதியுதவியை எந்த நிபந்தனையுமின்றி உடனே அனுப்பிவைத்தார். சூழ்நிலையைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்த அவர் நினைக்கவில்லை. உயிரைக் காப்பத்த செய்யும் உதவியாகவே செய்தார்.

ஆபரேஷன் முடிந்து நார்மல் வார்டுக்கு மாத்தி வரவும், தன்னை பார்க்க வந்த முத்துவிடம் ஆதி நந்தினி திருமணத்தை யாசிக்க, உணர்ச்சிவசப்பட்ட முத்துவும் திருமணத்திற்கு சம்மதித்தார். பின் அக்னீயிடமும் திவியை திருமண முடிக்குமாறு வழியுறுத்த அந்நிலையில் தட்டமுடியாமல் சம்மதித்தான்.

அவரைப் பார்க்கவந்த சுதாகர் மற்றும் கிருஷ்ணனிடம் அவர் அக்னீ திவி சம்பந்தத்தை பேசி முடித்தார். அதனால் மூன்று மாதத்தில் இரு ஜோடியினருக்கும் திருமணம் என்று பேசி முடிக்கப்பட்டது.

ஜெயந்தியோ தன் கணவர் உயிரைக் காப்பாத்த தக்க சமயத்தில் திவியுடைய அப்பா உதவியதால், அவரும் திவியை மருமகளாக்க முழுமனதுடம் சம்மதித்தார். ஆனால் அக்னீயை கத்தி முனையில் வைத்துச் சம்மதிக்க வைத்ததால் அப்பத்தாவுக்கு தான் திவியை பார்க்கும் முன்னே பிடிக்காமல் போனது.

பாண்டியனின் சம்மதம் கிடைத்ததும், திவியை எப்படி இதற்கு ஒத்துக் கொள்ள வைக்கவென சுதாகரும் கிருஷ்ணனும் யோசித்தபடியே கோத்தகிரி வந்து சேர்ந்தார். ஆனால் இங்கு அதற்குள் லீலா சுபத்ராவிடம் தன் வேலையைக் காட்டி விட்டார்.

திறமையான வக்கீலை வைத்து ராகுல் மேல போட்ட கேஸை உடைத்து அவனை வெளி கொண்டு வர அவனோ திவியை பலிவாங்குவேன் என அவளைத் தொடர்ந்தான். இப்போ மகன் எதாவது செய்தால் அவனை சுதாகரிடம் இருந்து காப்பாற்ற இயலாது.

அதனால் லீலா தான் அவனைத் தடுத்து இப்போதைக்கு மகனை வெளிநாட்டுக்கு படிப்புக்காக அனுப்பிவிட்டாள். ஆறப்போட்டு திவியை திட்டம் தீட்டி பலிவாங்க நினைத்த லீலா இன்று அதன் முதல் படியை சுபத்ராவிடம் ஆரம்பித்தாள்.

ராகுல் திவியிடம் தப்பாக நடக்க முயன்ற சம்பவத்துக்குப் பிறகு சுபத்ரா லீலாவை முற்றிலுமாகத் தவிர்த்து வந்தார். ஆனால் இன்று லீலா
தானாகவே வந்து சுபத்ராவிடம் நாடகமாடினார்.

“சுபத்ரா! ஏன் என்கிட்ட பேச மாட்ற. ராகுல் பண்ணினதுக்கு நான் எத்தனை தடவ சாரி கேட்டேன். என்னால உன்கூட பேசாம இருக்க முடியல சுபா. பிறந்ததிலிருந்து நாம் ஒரு நாளாவது பார்க்காம பேசாம இருந்திருக்கோமா? ஆனா இப்போ நீ பேசாதது என்னவோ போல இருக்கு” என்றவள் தொடர்ந்து,

“உனக்காக நான் ராகுல் கூட எப்படி சண்டை போட்டேன் தெரியுமா? அவன எப்படி அடிச்சேனு தெரியுமா? அவனோட பேசுறதே இல்ல… எல்லாம் உனக்காகத் தான் சுபா” என அழுக இளகிய மனம் படைத்த சுபத்ராவும் அவள் நடிப்பில் மயங்கித்தான் போனாள்.

“இன்னைக்கும் கூட நீ பேசாம தான் இருக்க. ஆனால் உன் நல்லதை மட்டுமே நினைக்கிற எனக்கு உன் நிலைமையைப் பார்த்தா ரொம்ப பாவமா இருக்கு சுபா” எனக்கூற

“ஏன் எனக்கென்ன? நான் நல்லாத்தான இருக்கேன்”

“என்னத்த நல்லா இருக்க? இந்த ஒரு வருஷமா திவி எங்க இருக்கா தெரியுமா? எங்கண்ணே கிருஷ்ணன் வீட்டில”

திவி பல நாட்களாகியும் வீட்டிற்கு வராமலிருக்க, சுபத்ரா சுதாகரிடம் கேட்டபோது “அவள் வெளியூரில ஒரு கோர்ஸ் படிக்கிறா முடிச்சுட்டு வருவா” எனக் கூறியிருந்தார். ஆனால் இன்று லீலா கூறிய செய்தியில் அதிர்ந்த சுபத்ரா

“என்ன?” எனக் கத்தியே விட்டார்.

“ஆமா அவனையும் அவன் பொண்டாட்டியையும் அம்மா அப்பானு கூப்பிட்டுகிட்டு, அவன் வீட்டில தான் இருக்கா”

“நிஜமாவா?”

“அது மட்டுமில்ல அவ ஏதோ ஒரு பேங்குல கிளர்க்காவோ, பியூனாவோ வேலை பார்க்குறா” என்று அவள் மேனேஜர் என்பது தெரிந்தும் அதை மறைத்துச் சுபத்ராவை தூண்டி விடுவதற்காக அப்படி பேசினாள்.

சுபத்ராவின் முகம் போன போக்கை ரசித்துவிட்டு அவளே மீண்டும்,

“உன் பொண்ணுக்கு வேலைக்குப் போகனும்னு தலையெழுத்தா? அப்படி சம்பாரிச்சு என்ன பண்றா தெரியுமா? அந்த அநாதை மாலினி கிட்டத்தான் கொடுக்குறா” எனச் சுபத்ராவின் மனதில் விஷத்தை ஏற்றினாள்.

கோபமான சுபத்ரா அங்கிருந்து நேராகக் கிருஷ்ணன் வீட்டிற்கு வர அங்குக் கிருஷ்ணன், சுதாகர் திவி மூவரும் பேசிக்கொண்டிருக்க மாலினி அவர்களுக்குத் தேநீர் கொடுத்துக்கொண்டிருந்தார்.

வந்த வேகத்தில் மாலினி கையில் உள்ள தேநீரை தட்டி விட, அனைவரும் அதிர்ந்து பார்க்க, லீலா ஏற்றிவிட்ட விஷத்தை இங்கே கக்கினாள் சுபத்ரா. கோபத்தில் சுதாகர் முதன்முதலாக தன் ஆசை மனைவியை அடிப்பதற்காகக் கையோங்கி விட்டார்.

அவள் வாய்க்கு வந்தபடி கிருஷ்ணனையும் மாலினியையும் பேச, சுதாகருக்கு கோபம் வந்துவிட்டது. தன் மகளை இவ்வளவு தூரம் காத்தவர்கள் ஆச்சே! அவர்கள் இருவரும் இல்லையென்றால் மகள் எங்கோ சிக்கி சின்னாபின்னாகி போயிருப்பாள்.

தன் ஒற்றை வாரிசைத் தங்களது குழந்தைபோலத் தாங்கும் இரு உள்ளங்களைத் தன் மனைவி தவறாகப் பேசியது அவரைத் தாக்க, அடிப்பதற்காகக் கைகளை ஓங்க கிருஷ்ணன் அவர் கைகளைப் பிடித்து அடிக்க விடாமல் தடுத்தார்.

தன் மனதில் உள்ள கேள்விகளைத் தன் மாமன் மகளிடம் ஒவ்வொன்றாகக் கிருஷ்ணன் கேட்க, சுபத்ரா குனிந்த தலை நிமிரவில்லை. அவளின் செய்கையால் திவி பட்ட கஷ்டத்தையும், அவளை மீட்டக் கதையையும் கூற கண்களில் கண்ணீருடன் மகளைப் பார்த்தார்.

“இனியாவது என் கூடப்பிறந்த அந்தக் கழுதை பேச்ச கேட்காமல் ஒழுங்கா இருக்குற வழிய பாரு” எனக் கூற கிருஷ்ணனிடமும் மாலினியிடமும் மன்னிப்பு கேட்டு மகளைப் பாதுகாத்தற்காக நன்றியையும் கூறினார்.

பின் மகளிடம் போக அவளோ அவரைத் தவிர்த்துவிட்டு மேலே செல்லப்பார்த்தாள். அவளையும் தடுத்த கிருஷ்ணன் அவளுக்கும் கொட்டு வைத்தார்.

“உன்ன கவனிச்சுகலனு தவிச்ச, இப்போ அவ வரும்போது நீயும் அதே தான் பண்ற. உனக்குத் தேவையானத நீ தான் போராடி வாங்கனும்” எனக்கூறியவர் அனைவரும் இருக்கும் போதே திருமண பேச்சை ஆரம்பிக்க நினைத்தார்.

“எல்லாரும் நல்லா கேட்டுக்கோங்க, திவியை பெத்த அப்பனும், வளர்த்த அப்பனும் சேர்ந்து அவளுக்கு ஒரு மாப்பிள்ளை பார்த்திருக்கோம். இன்னும் மூனு மாசத்தில அவளுக்குக் கல்யாணம்” எனக்கூற,

“அப்பா! என்ன சொல்றீங்க என்னால முடியாது. எனக்குக் கல்யாணமே வேண்டாம். என்ன விடுங்க”

“கல்யாணம் பண்ணாம என்ன பண்ண போற. என்மேல உனக்குப் பாசம் இருக்கா? இல்லையா? உன்னை வளர்த்தவங்களுக்கும் உன்னைப் பெத்தவங்களுக்கும் நீ காலம் பூரா கண்ணீரை மட்டுமே தான் தரப் போறீயா?”

“அப்பா” என அவரைக் கட்டிப்பிடித்து “என்னால முடியும்னு தோனலப்பா” என அழுதாள்.

“எல்லாம் முடியும். காலம் எல்லா காயத்தையும் மறக்க வைக்கும். நீ நல்லா வாழறத பார்த்தா தான் எங்க சந்தோஷம்” என தலையை வருடினார்.

“மாப்பிள்ளை யாரு” என சுபத்ரா கேட்டார்.

“அக்னீ. சுதாகரோட பி.ஏ” எனக்கூற திவி அவரை நிமிர்ந்து பார்க்க, சுபத்ரா மீண்டும் ஆடினார்.

“இதுக்கு நான் சம்மதிக்க மாட்டேன். என் பொண்ணுக்கு என்னா கொறச்சல். எதுக்கு வேலைக்கார பையனுக்கு கட்டிக் கொடுக்கனும்? நம்ம ஸ்டேஸ்க்கு ஈகுவலான பையன பார்க்க வேண்டியது தானே?” என குதிக்க,

“உன் பொண்ண சந்தோஷமா வச்சுக்க அவனால மட்டும் தான் முடியும். இதுக்கு மேல பிரச்சனை பண்ண, அத்தான பத்தி தெரியும் தானே? என் வாய் பேசாது கை தான் பேசும். உன்ன அடிக்க எனக்கு எல்லா உரிமையும் இருக்கு” என கிருஷ்ணன் கூற அமைதியாக சுதாகரை பார்த்து உதட்டை பிதிக்கியபடி நின்றார்.

சுதாகருக்கு மனைவியை பார்க்க பாவமாக இருந்தது. ‘நாம இப்படியே பாவம் பார்த்து விட்டதால தான் இப்படி ஆயிட்டா. இன்னைக்கு ஒரு நாள் அழட்டும் அப்பத்தான் சரி வருவா’ என்று நினைத்தாலும் கால்கள் தானாக அவளருகில் சென்று ஆறுதலாக அவள் கைகளைப் பற்றியது.

“மூனே மாதத்தில் அவங்க ஊருல கல்யாணம். இங்க கிராண்டா ரிஷப்ஸன் வச்சுக்கலாம். இப்போவே வேலையை ஸ்டார்ட் பண்ணினா தான் சரியா இருக்கும்” எனக் கிருஷ்ணன் கூற,

“அப்பா! என்னால முடியுமானு தெரியலயே” என்றாள் பாவமாக.

“எல்லாம் முடியும். அவன் தான் உனக்கான மருந்து. இதுக்கு மேல நீ மறுத்தா என்ன உயிரோடயே பார்க்க முடியாது” எனக்கூற தன் கைகளால் கிருஷ்ணனின் வாயை மூடியவளிடமிருந்தும் சம்மதமாகத் தலையசைப்பு வந்தது.

அதை எல்லாம் இப்போது நினைத்தவள் தன்னை குனிந்து பார்க்க, தன் கழுத்தில் அவன் முடிச்சிட்ட தாலி. இன்று அவள் திருமதி திவ்யமீனா அக்னீஸ்வரன். ஆழ்ந்த பெறும் மூச்சை வெளியிட்டுத் தாயின் அருகே வந்தவள், அவர் கைகளைப் பற்றிக் கொண்டு,

“பத்திரமா இருப்பேன். பயப்படாம போய்ட்டு வாங்க” எனக்கூற மகளைக் கட்டிப்பிடித்து ஒருமூச்சு அழுதுவிட்டு அவள் பிறைநெற்றியில் முத்தமிட்டுப்புறப்பட, மனைவியைப் பார்த்த அக்னீயின் வாய் “டிராமாக்குயின்” என முனுமுனுத்தது.
 

Lufa Novels

Moderator

யாரோ அவன்?? யாரோ இவள்??​

அத்தியாயம் 17​

GQ0qC3d7qYHTuq7ThsFoYnqcjLenx-bAK3z4qDn9BgyJylVkgjHzXwl_CtpAY-ZGU69doJuyAsnYGGdQ6zMvtk-s5SPaaSUo-zCb6kPqD7J3frmzJB9s4o_WHzbQpAS-vUEI7MqYK1WI-9mCTxPzsS8

திவிக்கு மெல்லிய ஒப்பனை செய்து அழகுப்படுத்திக் கொண்டிருந்தாள் மகி. ஜெயந்தியும் மாலினியும் அடுப்படியில் அவர்களுக்குப் பால் காய்ச்சி எடுத்துக் கொண்டு, திவியை உள்ளே அனுப்ப நல்லநேரம் பார்த்துக் கொண்டிருந்தனர்.

மஹாவையும் யாழினியையும் கயலுடன் செழியன் வீட்டில் தங்குமாறு அனுப்பிவைத்தனர். நல்ல நேரம் இரவு 11:30க்கு மேல் தான் எனவும் அனைவரும் இரவு உணவை முடித்துவிட்டு கிளம்பிவிட்டனர்.

அருணை ஜெயந்தி மொட்டைமாடியில் போய் படுக்கச் சொல்ல இருட்டுக்கு வேண்டும் என மஹாவின் போனை வாங்கிக் கொண்டு அவனும் சென்றுவிட்டார். அப்பத்தாவுக்கும், பாண்டியனுக்கும் இரவு உணவு, மாத்திரை எல்லாம் கொடுக்க அவர்களும் உறங்கிவிட்டனர்.

இரு திருமணம் என்பதால் ரூம் பத்தாது என, இருந்த திண்ணையை அடைத்து அதை ஒரு குட்டி ரூமாக மாற்றிவிட்டனர். அதில் தான் மகி திவியை ரெடி செய்துகொண்டிருந்தாள்.

திவியை அக்னீ இருக்கும் பெரிய அறைக்குள் அனுப்பியதும், மாலினி மகி இனியனை போட்டுச் சின்ன ரூமில் ஐக்கியமாகி விட்டனர். பாண்டியன் அப்பத்தா படுக்குமிடத்திற்கு முன்பாகக் கட்டிலை போட்டுப் படுத்திருக்க அவர் கட்டிலுக்கு கீழே ஜெயந்தி படுத்துவிட்டார்.

அக்னீக்கு இங்கு அக்னீ குட்டத்தின் மீது உட்கார்ந்திருப்பது போலத் தான் இருந்தது. பாண்டியனிடம் தங்களை பற்றிக் கூறி இந்தக் கல்யாணம் பிளான் பண்ணினதே திவி தானென நினைத்திருக்கிறான். இன்று அவளை வார்த்தைகளால் கடித்துக்குதற அவன் காத்திருந்தான்.

ஆனால் உள்ளே வந்தவளோ அவனைக் கொஞ்சம்கூட சட்டைசெய்யாமல், இவ்வளவுநேரம் மகி செய்த அலங்காரத்தைக் கலைக்க ஆரம்பித்தாள். அவளைக் கண்கொண்டு கூடப் பாராமல் அமர்ந்திருந்தவனோ திடீரென அறையில் கேட்கப் பாடலில் ஸ்தம்பித்து நின்றான்.

ஒரு சின்னப் பூத்திரியில்…
ஒளி சிந்தும் ராத்திரியில்…
இந்த மெத்தை மேல் இளம் தத்தைக்கோர் புது வித்தை காட்டிடவா…

ஒரு ஜன்னல் அங்கிருக்கு…
தென்றல் எட்டிப் பார்ப்பதற்கு…
அதை மூடாமல் தாழ் போடாமல்…
எனைத் தொட்டுத் தீண்டுவதா…

மாமங்காரன் தானே… மாலை போட்டு தானே…
மோகம் தீரவே மெதுவாய் மெதுவாய்
தொடலாம்…

மீனம்மா...மழை உன்னை நனைக்கும்… இங்கு எனக்கல்லவா குளிர் காய்ச்சல் வரும்…

அம்மம்மா வெயில் உன்னை அணைத்தால்… இங்கு எனக்கல்லவா உடல் வேர்த்து விடும்…

எனப்பாட இருவரும் மற்றவர் தான் பாடலைப் போட்டது என மாறி மாறி முறைக்கவும், அவளும் போடவில்லையென அக்னீ அறையைச் சுற்றி கண்களைச் சுழற்றினான். அதற்குள்

அன்று காதல் பண்ணியது…
உந்தன் கன்னம் கிள்ளியது…
அடி இப்போதும் நிறம் மாறாமல்…
இந்த நெஞ்சில் நிற்கிறது…

அங்கு பட்டுச் சேலைகளும்…
நகை நட்டும் பாத்திரமும்…
உனைக் கேட்டேனே சண்டை போட்டேனே…
அது கண்ணில் நிற்கிறது…

ஜாதிமல்லிப் பூவே…
தங்க வெண்ணிலாவே…
ஆசை தீரவே பேசலாம்
முதல் நாள் இரவு….

எனப்பாட டேபிளில் உள்ள மஹாவின் புளூடூத் ஸ்பீகரில் பாடல் ஓடுவதை கண்டுபிடித்த அக்னீ

“எங்கப்பன் மகனே! இன்னைக்கு உன்ன கொல்லாம விடமாட்டேன் டா” என அருணை தேடி மாடிக்கு ஓடினான். அவனோ அங்கு பாடலைப் போட்டுவிட்டு விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தான்.

அக்னீ போன வேகத்தில் அருணின் மீது பாய,

“டேய் அண்ணா ஆள மாத்தி என்மேல பாயுற.. உன் ஆளு கீழ ரூம்ல இருக்கு” எனக்கத்த அவனை அடி அடியென அடித்துவிட்டு அவனருகில் மல்லாக்க படுத்தவனுக்கும் சிரிப்பு முட்டிக் கொண்டுவர அவனும் அருணுடன் சேர்ந்து சிரித்தான்.

“திமிருடா உனக்கு”

“சும்மா லுலுலாய்க்கு”

“வயசுக்கேத்த வேலையாடா பண்ற”

“ஹலோ எஜ்ஜூஜ்மி! ஐ ஆம் 17. +12 முடிக்கப் போறேன். என்னப் பார்த்து..” எனப் பொய்யாய் கண்களைக் கசக்க,

“அடிச்சீ நாயே! நடிக்காத டா” என அருண் கையில் இருந்த தலையணையை இழுக்க்.

“அது சரி கீழ போகாம இங்க என்னோட தலகாணிய ஏதுக்குணே புடுங்குற?”

“போகலாம். ஆனா பிடிக்கல”

“அண்ணி பயந்திட போகுதுண்ணே போ”

“அவளா பயப்படுவா? நம்மள எல்லாம் தூக்கி சாப்பிட்டுவா” என்றவன் வாகாய் தலையணை தூக்கி வயற்றில் வைத்துவிட்டு வானத்து நிலவை ரசித்துக்கொண்டிருந்தான்.

“ஹ்ம்ம் கட்டின பொண்டாட்டிய ரசிக்காம, நிலாவ ரசிக்கிறானுங்க… அதான் இந்த 90ஸ் கிட்ஸ்க்கு பொண்ணு கிடைக்க மாட்டீங்கிது” என அக்னீயை கேலி செய்யத் தலையணையை அவன் முகத்தில் வீசிவிட்டு

“அறுந்தவாலு… உனக்கு இருக்குடா பரீட்சை ரிசல்ட் வர அன்னைக்கு” எனக் கூறிவிட்டு கீழே வந்தான்.

அதற்குள் திவியோ சேலையை மாற்றிவிட்டு மாலினி கொடுத்த நைட்டிக்குள் புகுந்தவள், கட்டிலில் படுத்துச் சுகமான நித்திரைக்கு சென்றிருந்தாள்.

அக்னீயும் ஒரு பெட்ஷீட்டை கீழே விரித்து அவள் கைகளில் வைத்திருந்த தலையணையை வெடுக்கென இழுத்து போட்டுப் படுத்தான்.

இன்னொரு ஜோடியோ காதல் கைகூடின சந்தோஷத்தில் காதல் பாடத்துடன் மோகப்பாடத்தையும் சேர்த்து படித்துக் கொண்டிருந்தனர்.

கயலின் வீட்டிலோ கயலுக்கு யாரோ அழுவது போலத் தோன்ற மஹாவிடம்,

“மஹாக்கா உனக்கு எதாவது கேட்குதா” என மெல்லிய சத்தத்தில் கேட்க,

“ஒன்னும் கேட்கல தூங்கு கயல். செம்ம டயர்டா இருக்கு”

“இல்ல மஹாக்கா யாரோ அழுகுற போல” எனச் சொல்லவும் கூர்ந்து கவனித்தவளின் கண்களில் யாழினி தோள்கள் அலுகையில் குலுங்குவது போலத் தெரிந்தது.

“யேய் யாழி” என அழைக்க, அவளோ தூங்குவது போலப் பாவித்து எழவே இல்லை.

“நீ தூங்கலனு தெரியும். எழுந்திரிடி” எனக்கூறவும் எழுந்தவள் முகமெல்லாம் அழுகையில் சிவந்து வீங்கி இருந்தது.

“ஏன் யாழி அழற” எனக்கேட்க அவளை அணைத்துக் கொண்டு இன்னமும் அழுதாள்.

“சொல்லு யாழி. சொன்னாத்தான தெரியும்”

“உனக்குத் தெரியாதாக்கும் எனக்கு அக்னி மாமாவ எவ்ளோ பிடிக்கும்னு உனக்குத் தெரியும் தானே?”

“ஏய்! எப்ப வந்து என்ன பேசுற? அது நார்மலா பிடிக்கும். அதானே”

“இல்லடி நான் மாமாவ விரும்புறேன்”

“ஏய் அக்னீ அண்ணன் உன்ன அப்படியெல்லாம் பாக்கலடி. ஆதி அண்ணன் பார்வை நந்தினி அண்ணி மேல ஒரு ஆர்வத்தோட விழுற போல, என்னைக்குமே அக்னீ ஆண்ணன் உன்ன பார்த்ததேயில்லை. நீயா போட்டு உன்ன குழப்பிக்காத”

“என்னால தாங்க முடியல மஹா. அவர கைநழுவ விட்டுட்டேனு ரொம்ப
கஷ்டமா இருக்கு” எனக்கூற மஹா யாழியை அணைத்து சமாதானம் சொல்லிக் கொண்டிருக்க,

“நாம விரும்பினவங்களை விட நம்மள விரும்பினவங்களை கட்டிக்கங்க யாழி அண்ணி. லைஃப் ரொம்ப ஹாப்பியா இருக்கும்” எனக் கயல் பெரிய மனுஷி போலப் பேசினாள்.

“ஆரம்பிச்சுட்டா நூத்துக்கிழவி” என மஹா கயலை வாற,

“அக்னி அண்ணன் பார்வை யாழி அண்ணி மேலயே படல, ஆனா ஒருத்தன் பார்வை யாழி அண்ணி மேலயே இருக்கு, இத யாருமே பார்க்கமாட்டாங்க. நான் சொன்னா என்னை நூத்துக்கிழிவினு சொல்லவேண்டியது. எல்லாம் காலக்கொடுமைடி கயலு. இந்தத் தத்தி குடும்பத்துல தப்பிப் பிறந்த அப்துல்கலாம் டி நீ” எனத் தன்னைத் தானே அவள் புகழ்ந்து கொள்ள மஹா அவளிடம்,

“அது யாருடி?”

“நான் சொல்லமாட்டேன் பா. நீங்களே கவனிங்க”

“கயலு.. என் செல்லம்ல.. யாருனு சொல்லு.. நாளைக்கு அக்கா உனக்கு ஜிகர்தண்டா வாங்கித் தாரேன்”

“நிஜமா?”

“கண்டிப்பா வாங்கித் தாரேன்”

“எல்லாம் என்கூடப் பிறந்த தடிமாடு தான்” எனக்கூற யாழியின் கண்கள் விரிய, மஹா வாயில் கையை வைத்தாள்.

“அக்னீ அண்ணன் கிட்ட ஏன் முட்டிக்கிட்டு நிக்கிறானு நினைக்குறீங்க, எல்லாம் இந்த அம்மாவுக்குக்காகத் தான்” என யாழியை கைக்காட்டி கூற யாழியோ,

“லூசு மாதிரி பேசாத கயலு” என வெடுக்கெனக் கூறினாள். மஹாவோ கயலைப் பார்த்து,

“எப்புடீறா!!!!” எனக்கேட்க,

“என் எக்ஸ்ரே கண்ணுல யாரும் தப்ப முடியாது மஹாக்கா” எனக்கூறிக் கொண்டே மஹாவ பார்த்து

“கல்யாண மாலை…
கொண்டாடும் பெண்ணே…
என் பாட்டைக் கேளு…
உண்மைகள் சொன்னேன்…”

என மஹாவை பார்த்துப் பாடி கண்ணடிக்க மஹாவுக்கு புரிந்து போனது அவள் தன்னையும் கல்யாணையும் கண்டு கொண்டாளென.

“ஏய்! நிப்பாட்டு. வெற்றிய பத்தி மட்டும் சொல்லு.. சும்மா பீபி’ய ஏத்தாத”

“என்னத்த சொல்ல.. அந்தத் தடிமாடு யாழி அண்ணிய விரும்புது… யாழி அண்ணி அக்னீ அண்ணன பாக்குது… அதுனால தான் அந்தத் தடிமாடு அக்னீ அண்ணன் கூட மல்லுக்கு நிக்குது” எனக்கூற யாழியோ,

“உங்க அண்ணன் என்னைப் பார்த்து முறைக்கத்தான செய்யும். அதுக்கு பயந்துக்கிட்டே நான் உங்க வீட்டுக்கு அதிகமா வரமாட்டேன்” எனக்கூறினாள்.

“அப்புறம்! தான் லவ் பண்ற பொண்ணு, தன்னை விட்டுட்டு தன் அண்ணனைப் பார்த்தா? மடியில வச்சு கொஞ்சுவானா? முறைக்கத்தான் செய்வான்” எனக் கயல் கூற அவளை முறைத்தவாறு திரும்பிப் படுத்துத் தூங்க ஆரம்பித்தாள் யாழி.

“கடைசியா சொல்றேன். நாம விரும்பினவங்களை விட நம்மள விரும்பினவங்களை கட்டிக்கிட்டா லைஃப் ரொம்ப ஹாப்பியா இருக்கும்”
எனக் கயல் கூறினாள்.

“விடு சரியாயிடுவா” என மஹாவும் கூறிவிட்டு மூவரும் படுத்தனர்.

மறுநாள் காலைச் சூரியன் யாருக்கும் காத்திருக்காமல் அவன் வேலையை சரியாகச் செய்தான். காலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்த மாலினி, திவியின் அறைக்கதவை தட்டினார்.

அவளோ தூக்கக் கலக்கத்தில் அப்படியே எழுந்து போய்க் கதவைத் திறக்க, “சீக்கிரம் குழிக்கனும் டா இன்னைக்கு, வா” என அழைத்தவர் கண்களில் அக்னீ தரையில் படுத்திருப்பது தப்பாமல் பட்டது.

அவளும் கதவைச் சாத்திவிட்டு மாலினியுடன் வர, தனியாக இருக்கும்போது திவியிடம்,

“ஏன் மீனுகுட்டி! தம்பி கீழ படுத்திருக்கு”

“தெரியல. நான் தூக்கிட்டேன்” என விட்டேத்தியாகப் பதில் கூறினாள்.

“பழச எல்லாம் மறந்துட்டு, புதுசா தம்பிக்கூட சந்தோஷமா வாழ ஆரம்பிடா” என வாஞ்சையாகத் தலையை தடவ, என்ன சொல்வதென்று தெரியாமல் குளியலறையில் புகுந்தாள்.

“அய்யோ! தண்ணி குளிறுது” எனக் கத்திக் கொண்டே கதவைத் திறந்தாள். ஆனால் உண்மைக்குமே தண்ணீர் குளிரவெல்லாமில்ல. மதுரை வெயிலுக்குக் குளிருமா என்ன? ஆனால் அவள் பிறந்தலிலிருந்து வெந்நீரில் மட்டுமே குளித்தவள், அதனால் சதாரண தண்ணீர் கூடக் குளிருவது போல இருந்தது.

“அம்மா! தண்ணி சில்லுனு இருக்கு. எப்படிக் குளிக்கிறது? ஹீட்டர் கூட இங்க இல்ல” என பாவமாகக் கேட்க, அதற்குள் வெந்நீர் பானையில் வெந்நீருடன் வந்தார் ஜெயந்தி.

“தன்க்ஸ் ஆண்ட்டி” எனக்கூற “அத்தைனு சொல்லுமா” எனச் சிரித்துக் கொண்டே கூறினார்.

அவளும் குளித்து முடிக்க மாலினி தான் அவளுக்குச் சேலையைக் கட்டிவிட்டார்.

“இன்னைக்கும் சேரியா? அம்மா அன்கம்ஃபடபிலா இருக்குமா”

“இன்னைக்கு ஒரு நாள் போடுமா. இது கிராமம்”

“சல்வார் போட்டுகிறேனே. மஹா எல்லாம் கூடச் சல்வார் தான போடுறா”

“நீ புதுப் பொண்ணுடா. நாழு பேர் பார்க்கவருவாங்க” எனக் கூறி கட்டி விட்டார்.

அவள் குளித்துவிட்டு வர அக்னீயையும் அனுப்பிவிட்டார் ஜெயந்தி. திவி குளிக்கப் போகும்போது அமைதியா இருந்த வீடு திரும்பி வரும்போது நிறைந்து வழிந்தது. பாண்டியன் குடும்பன், செழியன் குடும்பம், பாண்டியனின் கடைசி தங்கை கெளரி குடும்பம் என மொத்தமும் இருந்தது.

குளித்து முடித்துச் சாமி கும்பிட்டு வரவும் அப்பத்தா திவியிடம்,

“முதல்நாள் மருமக இனிப்பு செய்யனும். போய் இனிப்பு எதாவது செஞ்சு. டீ போட்டுட்டு வா” எனக்கூற திவியோ,

‘எனக்குப் பண்ணத் தெரியாது’ எனக் கூறவந்தவளின் கைகளில் அழுத்தம் கொடுத்து மாலினி பிடித்தார்.

மாலினி “சரிங்கம்மா! இதோ கொண்டுவருவா” எனக்கூறியவர் திவியை “வா” எனக்கூறி அடுப்படிக்கு இழுத்து சென்றார். கூடவே ஜெயந்தியும் வந்தார்.

“அம்மா எனக்கு ஒன்னும் தெரியாது. நான் எப்படி?” எனக்கேட்க மாலினி சங்கடமாக ஜெயந்தியை பார்த்தார்.

“பரவாயில்லங்க அண்ணி! நம்ம பண்ணிடலாம்” என இருவரும் செய்ய ஆரம்பித்தனர்.

திவியோ அங்கு ஒரு சேரை போட்டு அதில் உக்கார்ந்திருந்தாள். அப்போது அங்கு வந்த அருணோ “அடடா! அண்ணி சூப்பரா சமைக்கீறீங்க!” எனக்கூற,

“வெளியில போய்ச் சொன்ன. இரண்டு நாளைக்கு சாப்பாடு கிடைதாது” என ஜெயந்தி கூற,

“நான் எதுவுமே பார்க்கலயே!” எனக்கூறி வெளியே செல்ல இங்கு வந்தபிறகு முதன் முதலாகச் சிரித்தாள் திவி. அவள் முகத்தை நெட்டி முறித்து “சிரித்தா அழகா இருக்க. எப்பவும் சிரித்த முகத்தோடவே இரு” என ஜெயந்தி கூற ஏனோ திவிக்கு அவரை மிகவும் பிடித்துவிட்டது.

வெளியில் வந்த அருணோ அக்னியின் அருகில் அமர்ந்து, சிரிப்பை அடக்கப் பெரும்பாடு பட்டான்.

“என்னடா! ரொம்ப கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்குற”

“உள்ள போய் உன் பெட்டராஃப் எப்படி சமைக்குறாங்கனு பார்த்துட்டு வாண்ணே!” எனக்கூற அக்னீயோ “ஏன்?” எனக்கேட்டாலும் அவன் கால்கள் தன்னால் அடுப்படியை நோக்கிச் சென்றது.

அங்கோ ஜெயந்தி ஒரு அடுப்பில் டீயை வைத்துவிட்டு மறு அடுப்பில் உளுந்தவடை போட, மாலினியோ மற்றொரு தனி அடுப்பில் கேசரி செய்துகொண்டிருந்தார்.

திவியோ சேரில் ஒரு காலைத் தொங்கவிட்டு, மறுகாலை சேரில் குத்தவைத்து, கையில் முந்திரி டப்பாவுடன் உக்கார்ந்து முந்திரியைச் சாப்பிட்டு கொண்டிருந்தாள்.

அவனோ அவளைப் பார்த்து முறைக்க, அவளோ கையில் உள்ள முந்திரி டப்பாவை அவனை நோக்கிக் காட்டி வேணுமா என ஜாடை செய்ய, மற்ற இருவரும் சங்கடமாகப் பார்த்தனர். தலையில் அடித்துவிட்டு வந்து அருணிடம் அமர்ந்தான்.

“என்ன தடபுடலா புருஷனுக்காக உங்க பொண்டாட்டி செய்றாங்களா?”

“அவளுக்கு அவ வீட்டில கிட்சன் எங்க இருக்கும்னே தெரியாது. வேகமா போகும் போதே நினைச்சேன்” என எரிச்சலாகக் கூற அருணோ வாய்விட்டுச் சிரித்தான்.

அதற்குள் திவி டிரேயில் குட்டி குட்டி பவுளில் சேகரியுடன் வர, ஜெயந்தி டீயும், மாலினி உளுந்தவடையுடனும் வந்து அனைவருக்கும் பரிமாறனர். அனைவரும் புதுமருமகள் சமையலைப் பாராட்டினர்.

அக்னீயோ ‘கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம, வார்டன் போல மத்தவங்கள ஏவி வேலை வாங்கிட்டு, தியாகி மாதிரி நிக்கிறா பாரு டிராமாக்குயுன்’ என மனதில் திட்டித்தீர்த்தான்.
 

Lufa Novels

Moderator

யாரோ அவன்?? யாரோ இவள்??​

அத்தியாயம் 18​

FH3-3viscxcxbd7MG4MxpVcP82KexU5V4m5nvu0-g_Zb3ikqmWCbyjwd27g6inUKYO1eaPIgs7RduUT5i9zzRMc43AyUuktQqXygwH-dZKG0uFT8t2m4n3wEQmrWkISmXq-N19PeXODcFbMHAOfhkmU

அக்னீயின் வீடே பரபரப்பாய் பேக்கிங் வேலைகளைச் செய்து கொண்டிருந்தது. மாலை ஆதி நந்தினியை கூட்டிவந்து விட்டனர். இப்போது அக்னீ திவியின் மறுவீட்டிற்காகக் கோத்தகிரி கிளம்புகின்றனர் அனைவரும்.

அப்பத்தாவும், பாண்டியனும் பயணம் செய்யமுடியாததால் அவர்களுக்குத் துணையாக ஜெயந்தியும் செல்லவில்லை. நந்தினி வீட்டிலும் திருமணம் முடிந்ததும் அப்படியே போட்டுப் போக முடியாதென முத்துவும் கங்காவும் செல்லவில்லை.

மற்ற அனைவரும் செல்கின்றனர், வரமாட்டேன் எனச் சொன்ன வெற்றி கூடக் கிளம்பிவிட்டான் யாழினியும் வருவதால். அக்னீயின் நண்பர்களும் வருவதால் அனைவருக்கும் சேர்த்து மொத்தமாக ஒரு வேன் ஏற்பாடு செய்திருந்தான் அக்னீ.

லேட் நைட் கிளம்பினா விடியும்போது மலையேரலாமென முடிவு செய்திருந்தனர். இரவு பதினென்னை தாண்டும்போது வேன் வந்துவிட அனைவரும் அவரவர் லக்கேஜ்ஜை பின்னால் வைத்துவிட்டு ஜோடிகள் அவரவர் ஜோடியுடன் அமர்ந்தனர். யார் முன்னயும் பேச்சுப் பொருளாக இருக்கப் பிடிக்காமல், அக்னீயும் திவியின் அருகில் தான் அமர்ந்தான்.

மகியின் கணவன் ராஜசேகரை கல்யாணத்திற்கு அக்னீயும், ஆதியும் அழைத்திருந்தனர், அவர்கள் வீட்டினரை தப்பித் தவறியும் அழைக்கவில்லை. அன்று திருமணத்தின் போதும் தங்கை அவனுடனேயே ஒட்டிக் கொண்டே திரிந்ததால் அக்னீ இன்றைக்கும் அவனை அழைத்தான்.

இடைப்பட்ட பிரிவு அவன் மனதிலும் சில மாற்றத்தை ஏற்படுத்தியது என்னமோ உண்மைதான். ஆனால் இன்னமும் அவன் முழுமையாகத் தவறை உணரவில்லை. அதை உணரும் தருவாயில் அவன் மகியை தேடி முழுவதுமாய் வந்துவிடுவான்.

ஜோடிகள் ஒன்றாய் அமர கல்யாணும், வெற்றியும் அவரவர் ஜோடியைக் காணும் வகையில் அமர்ந்து அவர்களைப் பார்த்துக் கொண்டே பயணித்தனர். வேன் கிளம்பியதிலிருந்து பாட்டைப் போட்டுச் சிறுசுகள் ஆடிக் கொண்டே வந்தனர்.

ஆனால் திவி இது எதிலும் லயிக்காமல் அவள் ஒரு தனி உலகத்தில் இருந்தாளென்று தான் சொல்ல வேண்டும். அவளருகில் அக்னீ அமர்ந்ததைக் கூட அவள் கண்டுகொள்ளவில்லை.

இடையில் இயற்கை அழைப்பிற்காகவும், டீ காபி குடிப்பதற்காகவும் நிப்பாட்ட அனைவரும் இறங்கினர். அவரவர்களுக்கு வேண்டியதை வாங்கி குடித்தனர். இவளும் காபியை வாங்கி குடித்துவிட்டு வந்தமர்ந்துவிட்டாள்.

ஆதி நந்தினி இவர்களுக்கு முன் அமர்ந்து கிசுகிசுவெனப் பேசிச் சிரித்து அவர்கள் புதுமணத் தம்பதியினருக்கான இலக்கணத்துடன் பேசிக் கொண்டே வந்தனர். இளசுகள் ஆட்டத்தில் அக்னீயையும் இழுத்து ஆடவைக்க எவ்வளவு கெஞ்சியும் திவி அசைந்தாளில்லை.

மாலினி மூலமாக அனைவருக்கும் திவி டான்ஸர் மற்றும் சிங்கர் என்று தெரியும். ஆடத்தான் வரல அட்லீஸ்ட் பாடவாது செய்யுங்க அண்ணியென அருணும் கயலும் அவளை நச்சரிக்க பாட ஆரம்பித்தாள் திவி.

மாா்கழித் திங்களல்லவா!
மதிகொஞ்சும் நாளல்லவா! இது கண்ணன் வரும் பொழுதல்லவா!

ஒருமுறை உனது
திருமுகம் பாா்த்தால் விடை
பெறும் உயிரல்லவா!

இதயம் இதயம் எரிகின்றதே!
இறங்கிய கண்ணீா் அணைக்கின்றதே!

உள்ளங்கையில் ஒழுகும் நீா்போல்
என்னுயிரும் கரைவதென்ன!

இருவரும் ஒருமுறை காண்போமா? இல்லை
நீ மட்டும் என்னுடல் காண்பாயா?

பணமென்ற ஜோதியில் காதலை
எரித்தது சரியா? பிழையா?
விடை நீ சொல்லய்யா?

மாா்கழித் திங்களல்லவா!
மதிகொஞ்சும் நாளல்லவா! இது
கண்ணன் வரும் பொழுதல்லவா!

ஒருமுறை உனது
திருமுகம் பாா்த்தால் விடை
பெறும் உயிரல்லவா!

வருவாய்! தலைவா!
வாழ்வே வெறும் கனவா!

என உறுக்கமாகப் பாடி முடிக்க அனைவரும் கைதட்டி பாராட்டினர்.

அருண் “அண்ணி லிரிக்ஸ் தப்புண்ணி கலை என்னும் ஜோதினு தான வரும் நீங்க என்ன பணம் என்னும் ஜோதினு மாத்தீட்டீங்க” எனக்கேட்க அக்னீயும் அந்த வரியைக் கவனித்து விட்டுத் தான் அமர்ந்திருந்தான். ஆனால் அவளோ எதுவும் கூறாமல் சிரித்தபடி அமர்ந்துவிட்டாள். ஆனால் அக்னீக்கு அவள் தன்னைத்தான் குத்துகிறாளோ என இருந்தது.

“அருமையான குரல்… செம்ம வாய்ஸ்… என்ன அழகா பாடுறாங்க…” எனப் பலவாறு குரல்கள் வேனிலிருந்து வந்தாலும் திவியின் காதில் அவள் பாட்னரின் பாராட்டே கேட்டது. இவன் கையால் கட்டின தாலிய கழுத்துல வச்சுட்டு அவன நினைக்கிறோமே என்ற நினைப்பு வேற அவளை வாட்டியது.

அந்த கணத்தைத் தாங்க முடியாமல் கண்களை மூடியவள் மீண்டும் தலையை உலுப்பி அதை விரட்ட முயன்றாள். அதில் தோற்று அவன் நினைப்புடனே தூங்கியும் போனாள்.

காலை விடியலில் நேரம் வேன் மேட்டுப்பளையம் கடந்து மலையேற ஆரம்பித்தது. மலைகளின் ராணி அவள் அழகை வஞ்சனையின்றி வாரி வழங்கிக் காட்சி தந்தாள். பச்சைக் கம்பளம் விரித்தது போலப் பசேலென இருந்த மலையின் அழகை ரசித்தபடியே அனைவரும் பயணித்தனர்.

ஒரு மணிநேர மலை பயணத்தின் முடிவில் அனைவரும் திவியின் வீட்டை எட்டினர். அந்த வீட்டைப் பார்த்ததும் அனைவருக்கும் தெரிந்தது அவளின் உயரம். அக்னீயின் முகமோ இறுகி போய் இருந்தது. திருமணம் முடிந்து முதன் முதலாய் வருதால் இருவரையும் சேர்ந்து நிற்க வைத்து ஆராத்தி எடுத்தே உள்ள அழைத்தனர்.

வீட்டிலும், கெஸ்டவுஸிலுமே அத்தனை அறைகள் இருந்தது. அதனால் அனைவருக்கும் அவரவர் தங்கும் அறைகளைக் காட்ட அனைவரும் அங்குச் சென்றனர். மாலினி தான் அனைவரையும் அழைத்துச் சாப்பிட வைத்து அனுப்பினார். அனைவரும் பயணக் கலைப்பு நீங்கத் தூங்கி எழுந்தனர்.

மதியம் அனைவரும் சாப்பிட்டவுடன் பக்கத்தில் எங்கயாவது போகலாம் எனக்கூற, கிருஷ்ணன் தான் அனைவரையும் கேத்தரீன் பால்ஸ் அழைத்துச் சென்றார். அங்குச் சென்று பார்த்துவிட்டு வரும் வழியில் உள்ள கிருஷ்ணன் வீட்டில் தான் அனைவரும் டீ ஸ்னாக்ஸ் சாப்பிட்டு இரவு வீட்டுக்கு வந்தனர். நாளை அக்னீக்கும் திவிக்கும் ரிசப்ஷன்.

காலையில் அனைவரும் கிளம்பி மண்டபத்திற்கு சென்றனர். காலைச் சாப்பாடு முடிந்ததும் திவிக்கு மேக்கப் செய்ய ஆட்கள் வந்தனர். அக்னீயும் மணமகன் அறையில் ரெடியாகினான். இருவரும் ரெடியாகவும் ஸ்டேஜ்க்கு அக்னீயை முதலில் அழைத்து வந்தனர். அழகான ஷர்வானியில் வந்தான் அக்னீ.

சிறிது நேரத்தில் திவியை கூட்டுட்டு வர வானத்து தேவதையே கீழ இறங்கி வந்தது போல அழகாய் வந்தாள். அழகான லெகங்காவில் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் கைவண்ணத்தில் அழகான மெஸிபன் வகையான ஹேர் ஸ்டைலில் முன்னே கொஞ்சம் முடியைக் கர்ல் செய்து சுருட்டி தொங்கவிட்டிருந்தனர். கழுத்தில் ஒரே ஒரு செலபிரைடி டைப்பிலான வைர நெக் செட் அணிந்து வைரத் தோடு, வைர மோதிரம் போட்டு வந்தாள். அதன் மதிப்பு மட்டும் கிட்டத்தட்ட கோடியைத் தொடும்.

அலங்கார லைட்டை விட அவள் அணிந்திருந்த அந்த வைரம் பளபளத்தது. விஷேசத்திற்கு வந்தவர்கள அனைவரும் ஒரு நொடி ஸ்தப்பித்து பார்க்கும் படி அப்ஸரஸாக இருந்தாள். சிம்பிளா சொன்னா பெண்ணே பொறாமைப்படும் பேரழகியாக இருந்தாள் திவி.

ஆனால் திவியின் அழகு கவர வேண்டியவனைக் கவராமல் போனது தான் விதி. அவளருகில் நிற்கக் கூட விருப்பம் இல்லாமல் நின்றான். இருவரும் பொம்மலாட்ட பொம்மைபோல் மற்றவர்கள் சொல்லுக்கு அசைந்த படி இருந்தனர்.

கீழே அமர்திருந்த கயலின் அம்மா கார்த்திகா அவரின் சின்ன நாத்தனார் கெளரியிடம்,

“என்ன கெளரி, சேலை உடுத்தாம தாவணி போட்டுறுக்கு. மாராப்பைக்கூட சரியா போடல”

“அண்ணி இது தான் இப்போ மாடல்”

“என்னத்த மாடல். அத்தனை ஆம்பிள்ளை மத்தியில் மாராப்பு கூட ஒலுங்கா போடாம. இரு நான் போய்ச் சரி பண்ணி விட்டுட்டு வாரேன்” என எழப் போனவரைத் தடுத்த கெளரி

“அண்ணி அந்த டிரெஸ் அப்படித்தான் போடுவாங்க. இதுக்கே இப்படினா உங்க மருமகள் போடும் மத்த டிரெஸை பார்த்தா அவ்வளவு தான்”

“என்னடி சொல்ற”

“நாங்க தங்கின ரூமில் திவியோட ஃபோட்டோ ஆல்பம் இருந்தது. அதில தான் பார்த்தேன் அத்தனையும் மாடல் டிரெஸ் தான். சினிமா ஹீரோயின் மாதிரி இருக்கா. அது தான் மருமகன் பயபுள்ள மயங்கிட்டான்”

“அதுசரி. நான் எல்லாம் என் மகனுக்கு நம்ம ஊர்ல தான் பெண்ணெடுப்பேன்”

“அதுக்கு உங்க மகனார் சம்மதிப்பாரா? எந்நோரமும் பைக்கில திருமங்கலமே கதினு சுத்துறதா நியூஸ் வந்துச்சு”

“அவன் கெடைக்கான் எனக்கு என் அண்ணே மகளை எடுக்கத்தான் கொள்ள ஆசை” எனக்கூற அவர்களுக்குப் பின்புறமாக வந்த கயல்,

“வாய்ப்பில்லை ராஜா!! வாய்ப்பில்லை” எனக்கூறிச் சென்றாள்.

“அய்யோ! இந்தக் கருநாக்குக்காரி வாய வச்சுட்டாளா விளங்கிடும்”

“ஏன் எங்கக்கா மகளெல்லாம் உங்க கண்ணுல தெரியலயா”

“உன்கிட்டக்கூட நான் செட் ஆவேன் ஆனா உங்கக்காவுக்கும் எனக்கும் ஆகாது” எனக்கூற,

“கல்யாணம் பண்றவங்க செட் ஆனா போதும்” எனத் திருப்பிவந்த கயல் மீண்டும் கூற,

“இந்தக் கழுதைய எந்நேரம் தான் பெத்தேனோ”

“சரியா சொல்லனும்னா காலைப் பத்து இருபத்தைந்துக்கு” எனக் கயல் கூற கார்த்திகா திரும்பி முறைப்பதற்குள் கயல் ஓடியேவிட்டாள்.

அவர்களும் மேடையைப் பார்த்தபடி உக்கார்ந்து அவர்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர். “ஸ்டேஜில மீனா தனியாய் இருக்கிறாள். நீங்கக் கூட போய் நில்லுங்கம்மா” என நந்தினி, மகியை மாலினி கூற அவர்கள் இருவரும் மேடை ஏறினர்.

“அடியேய் கெளரி அங்க பாருடி கூத்த” எனக் கார்த்திகா மேடையைக் காட்டி கூற அவர் கண்காட்டிய பக்கம் பார்த்த கெளரிக்கு எதுவும் தவறாகப் படவில்லை.

“அழகா இருக்குல்ல அண்ணி” என அவர்கள் அணிந்திருந்த லெகங்காவைப் பார்த்தப்படி கூறினார்.

“என்னத்த அழகு? இது தேவையா இவளுகளுக்கு? கல்யாணம் ஆனவளுங்க அழகா பட்டுச் சேலைய கட்டாம இவளுகளும் அவள மாதிரி தாவணி போட்டுகிட்டு மினுக்குறாளுக! நம்மூர்ல இப்படியா இருந்தாளுங்க?” எனக்கூறினார்.

இருவரும் அவரவர் கணவரின் அருகிலிருந்து பேசிக் கொண்டிருக்க, “அவளுங்க புருஷனே ஒன்னும் சொல்லல, நமக்கெதுக்கு அண்ணி. போடட்டும் இப்ப போடாம எப்ப போடப் போகுதுங்க”

“அது சரி. நல்லாத்தேன் அக்கா மகளுக்கும் அண்ணே மகளுக்கும் முட்டு கொடுக்குற” எனக்கூறிக் கொண்டிருக்கும் போதே மஹாவும், யாழினியும் அதே போல லெகங்காவில் வரக் கார்த்திகாவுக்கு மயக்கம் வராத குறை தான்.

“இவளுகளுமா போட்டுறுக்காளுங்க. நாலு பேரும் சொல்லிவைச்சு எடுத்திருப்பாளுங்க போல. எனக்கூறிக் கொண்டிருக்கும் போதே கெளரியின் மகளும் அதே போல ஒரு லெகங்காவில் வந்து தன் அம்மாவின் முன்னால் நின்று அங்குமிங்கும் திரும்பித் திரும்பிக் காட்டினாள்.

“ஶ்ரீநிதி உனக்கெப்படி இந்த டிரெஸ்”

“புது அக்கா வாங்கி கொடுத்தாங்க. கயல் அக்காத்தான் மாத்தி விட்டுச்சு” எனக்கூற கார்த்திகாவின் கண் கயலைத் தேடியது. அவரின் கணிப்பைப் பொய்யாக்காமல் அவளும் அதே போல் லெஹங்காவில் வந்தாள்.

“அது சரி வனத்துல உள்ள வானரம் தான் கெட்டதும் இல்லாமல் வனத்தையே கெடுத்துச்சாம். அம்புட்டு கழுதைகளுக்கும் வாங்கி கொடுத்துறுக்காளா!” எனக் கோபமாகக் சொன்னாலும், அவர் மனமும் தன் மகள் அழகை கமுக்கமாக ரசிக்கவே செய்தது.

ஆனாலும் மகளை அழைத்துக் கண்டிக்கவும் தவறவில்லை. அவரிடம் மாட்டிக்கொண்டு உதட்டைப் பிதிக்கி அழுக தயாரானவளை, யாழினி காப்பாத்த வர அவளுக்கும் சேர்த்தே வசவு விழுந்தது. வெற்றி தான் வந்து அம்மாவைச் சமாதானப்படுத்தி இருவரையும் விடுவித்தான்.

அத்தனை பேரையும் ஒன்றன்பின் ஒன்றாகப் பார்க்க அக்னீக்கு விழிகள் விரிந்தது. ‘எப்படி அத்தனை பேரும் ஒன்னுபோல’ என்ற கேள்வி மண்டையைக் குடைந்தாலும், அந்தக் கூட்டத்தில் ஸ்டேஜில் வைத்து யாரிடமும் கேட்காமல் அமைதியாக
இருந்தான்.

ரிஸப்சன் படு கிராண்டாக நடைபெற்றது. மண்டபத்திற்குள்ளே ஏகப்பட்ட ஸ்டால்களை வைத்துப் பஞ்சுமிட்டாய், பாப்கார்ன், ஐஸ்கீரீம், ஹோம்மேட் சாக்லெட்ஸ், ஸ்வீட்பீடா, ஐஸ்கீரீம் ரோல், பானிபூரி, தஹிபூரி, பப்பட் சாட், ஸ்மோக்கிங் பிஸ்கட், பொட்டேடோ டிவிஸ்டர் என அனைத்தையும் இலவசமாக வழங்கிக் கொண்டிருந்தனர்.

மதிய உணவின்போது இரண்டு வகை சூப், இரண்டு வகை சாலட், பத்து வகையான ஸ்டார்டர்ஸ், மெயின் கோர்ஸ்ஸில் மட்டன் பிரியாணி, வெஜ் பிரியாணி, நெய் சாதத்துடன் காலான் கிரேவி, வெஜ்புலாவுடன் ரைத்தா, பன் பரோட்டாவுடன் சிக்கன் குருமா, இடியாப்பத்துடன் ஆட்டுக்கால் பாயா, நாண்க்கு பன்னீர் பட்டர் மசாலா, பாஸ்தா, நூடுல்ஸ், பிரைரைஸ் என வகை வகையான சாப்பாடு பரிமாறப்பட்டது.

இதைத் தவிர டெஸர்ட்க்கு மட்டும் ப்ஃபே முறையில் குலாப்ஜாமுன், ரசமாலாய், ஷாஹிதுக்டா, பல வகையான கீர் என முப்பதுக்கும் மேற்பட்டவை இருந்தது. வந்த அத்தனை பேருக்கும் அவர்கள் வாழ்வில் மறக்க முடியாதபடியான விருந்து தான்.

தன் உயிரான ஒரே மகளின் விஷேசத்து படு கிராண்டாக எல்லா ஏற்பாடும் செய்திருந்தார் சுதாகர். மண்டமே நிறைந்து வழிந்தது. அக்னீக்கும் திவிக்கும் வந்தவர்களிடம் கிப்ட் வாங்கி வைத்துப் போட்டாவுக்கு போஸ் குடுத்தே டயர்ட் ஆகினர்.

ரிசப்ஷன் முடிந்த மாலையே அக்னீ வீட்டினர் அனைவரும் கிளம்பினர். மாலினி தான் ரம்யா, மகி ஜோடியினரை தங்குமாறு பிடித்து வைத்தார். அவர்களும் இளம் ஜோடிகள் தானே இன்னும் இரு நாள் இருந்து விட்டுப் போகட்டும் என்று.

இரு ஜோடிகளையும் அக்னீயுடன் விட்டுவிட்டு வேன் சுங்குராம்பட்டியை நோக்கிப் புறப்பட்டது.
 

Lufa Novels

Moderator

யாரோ அவன்?? யாரோ இவள்??​

அத்தியாயம் 19​

n2BroFY_wq1Ny3I25xu2d4H7rcqMJQiyVHC0WEFx9qbINlSXNRvMh2zbIs01_e-nGXx5-RXZqrbCvEe55j8NNiMMYEkFhgWKYR4sbR0PMsVGQOuZpEv4FImKYXmhWHb6vYHbIa3OO70SrYz-B6jGTXI


காலையில் எழுந்ததிலிருந்து பரபரப்பாகக் கிளம்பினான் அக்னீ. முந்தைய நாளே சுதாகர் அக்னீயிடம் ஒரு முக்கியமான மீட்டிங் ஒன்றுக்கு மைசூருக்கு போக அவனையும் அழைத்திருந்தார், அதனால் தான் பரபரப்பாகக் கிளம்பினான்.

திருமணத்திற்கு பிறகு முதன் முதலாக அலுவலக வேலைக்குச் செல்ல இருக்கிறான். ஆனால் அன்று தன் அண்ணனும், தங்கையும் வேறு இங்கு இருப்பதால் ஒன்றாகச் சுற்றிப்பார்க்கலாமென அழைத்திருந்தனர்.

அவர்களைத் தனியாக விடவும் மனமில்லை. ஆனால் இன்றைய மீட்டிங்கும் மிக முக்கியமானது. இல்லையென்றால் சுதாகரும் அழைத்திருக்க மாட்டார்.

அவர்கள் தனியாக எங்கே போவார்கள், எப்படி சமாளிப்பார்கள் என்ற கவலையும் அவனை ஆட்டிப் படைத்தது. ஏனெனில் அவர்கள் மதுரையைத் தாண்டி எங்கும் சென்று பழக்கமில்லாதவர்கள்.

அதனால் அவனுக்குத் தான் அவர்களுடன் இல்லாவிட்டலும் திவி உடனிருந்தால் நல்லா இருக்கும் என்றே தோன்றிக்
கொண்டிருந்தது. அவளிடம் கேட்போம் என முடிவெடுத்து கண்ணாடியின் முன் அமர்ந்து கிளம்பிக் கொண்டிருந்தவள் முன் சென்றான்.

“உன் கிட்ட ஒன்னு கேட்கனும்” என அவன் கூற அவனின் குரல் அவளின் அடியாளத்தில் புதைக்க விரும்பும் குரலையே தான் அவளுக்கு ஞாபகப்படுத்தியது. சட்னென அவன் குரலை முதன் முதலாகக் கேட்ட நாளை நினைவுபடுத்தியது.

திருமணம் முடிந்த முதல் நாள். காலை மாலினி, ஜெயந்தி உதவியால் சமைக்கும் சம்பிரதாயத்தை முடித்தவள் ஓய்வாக அறையில் அமர்ந்திருந்தாள். நேற்று இரவு பேசாமல் விட்டதை இன்று பேசிடலாமென அவ்வறையில் நுழைந்து தாளிட்டான் அக்னீ.

சட்டென அதிர்ந்து திரும்பியவள் சில நொடிகளில் மீண்டும் பழைய அலட்டலுடன் கட்டிலில் ஒரு ஓரமாகக் கால்நீட்டி அமர்ந்து அவள் மொபைலில் பார்வையைப் பதித்தாள்.

அவளிடம் வந்தவன் கோபமாக “க்கும்” என உறும, அவள் நிமிர்ந்து பார்த்தாள்.

“உன் கிட்ட ஒன்னு கேட்கனும்” எனக்கூற அந்தக் குரலில் அவளுக்குத் தூக்கிவாரிப் போட்டது. சட்டெனச் சுவிட்ச் போட்டது போல எழுந்து நின்றாள். அவன் அருகில் நின்றபோது இவள் படாரென நின்றதில் அவன்மேல் மோதித்தான் நின்றாள். அவளிடமிருந்து வேகமாக விலகியவன்.

“ஒட்டி, உரசி, மயக்கிற வேலையெல்லாம் என்கிட்ட வேண்டாம். இதுக்கெல்லாம் நான் மயங்குற ஆள் இல்ல. உன்கிட்ட காசு இருந்தா பிடிக்காட்டியும் ஒருத்தன வம்பா கிட்டிகிடுவ, இப்படி உரசினதும் நானும் பல்லக் காட்டிடுவேனு நினைச்சியா? உன் டிராமாக்கு எல்லாம் நான் மயங்கமாட்டேன்” என அவன் பேசப் பேச அவளுக்கு மயக்கம் வராத குறை தான்.

ஏனெனில் அவள் கேட்டது அவள் பாட்னரின் குரலல்லவா? அந்தக் குரலுக்குச் சொந்தக்காரனுடன் எத்தனை இரவுகள் பேசியே கழித்திருக்கிறாள். அந்தக் குரலுக்கு மயங்கித் தானே அவள் அவனுடன் பேச ஆரம்பித்தது. இதற்கு முன் பல தடவை அக்னீயின் குரலைக் கேட்டிருக்கிறாள் தான், ஆனால் இன்று ஏன் அக்னீயின் குரல் அவளின் பாட்னரின் குரலை அவளுக்கு ஞாபகப்படுத்துகிறது?

அவ்வளவு எளிதில் மறக்ககூடிய குரலா அது? அவள் தூக்கத்தை கெடுத்த குரலல்லவா? இத்தனை நாளும் கேட்டுவிடமாட்டோமா என ஏங்கவைத்த குரலல்லவா? அவள் உயிர் நாடியெல்லாம் உயிர்பிக்கும் குரலல்லவா?

அவளுக்குப் படபடவென வந்தது. வியர்த்து வழிந்தது. காதில் அவன் குரல் மட்டுமே ஓடியது. அறிமுகமாகும்போது பேசியது முதல், அவளைக் கிண்டலடிக்கும் குரல், ஆறுதலளித்த குரல், அன்பாகப் பேசிய குரல் கடைசியாகக் கோபமாகப் பேசிய குரல் என அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாகக் கேட்டது. மனதை எதோ ஒன்னு தாக்கக் காதுகளில் ஒன்றும் கேட்கவில்லை, கண்களின் கண்ணீர் அவனை மறைந்து இருட்டியது, மறுநொடி மயங்கி அவன் மேலே விழுந்தாள்.

மீண்டும் கண் விழிக்கும்போது மாலினி அவளருகில் அமர்ந்து அவளின் தலையை வருடிக்கொண்டிருந்தார். கண்விழித்ததும் “அக்னீ எங்க?” என அவள் கேட்கவும் மாலினி அவன் வெளியில் சென்று திவி அழைப்பதாகக் கூறி அவனை உள்ளே அனுப்பினார்.

அவன் எதுவும் பேசாமல் நிற்கவும் அவனருகில் சென்றதும் கேட்ட முதல் கேள்வி “என்னை உனக்குத் தெரியுமா? என்கிட்ட பேசிருக்கீயா?” என அவள் கேட்கவும் அவனுக்குக் கொஞ்ச நேரம் முன் அவளைப் பற்றி, அவளின் கரெக்டரைப் பற்றிப் பேசியதற்காகத் தான் கேட்கிறாளெனத் தோன்றியது.

“ஏன் தெரியாது? முதலாளி மகள்… மஹாராணி… தேவி தரிசனம் தான் அடிக்கடி நிகழுமே… தேவிக்கிட்ட சாதாரண ஊழியன் பேச முடியுமா? தேவி மட்டும் தானே வார்த்தை அம்பைக் குறிபார்த்து வீசுவீங்க, அப்புறம் எப்படி ஊழியம் பார்க்க வந்தவங்க உங்க கிட்ட பேச முடியும்” என அவன் கூறவும் அவளுக்குக் குழம்பியது. மீண்டும் தெளிவு படுத்த நினைத்து அவள் அடுத்த கேள்வி கேட்கும் முன் வெளியேறி இருந்தான் அக்னீ.

அவன் வெளியேறவும் மாலினி வந்துவிட்டார், அவருடனே பொழுதைக் கழித்தாள். அங்கு அவளுக்கு அனைவரும் புதுமுகமாகவே இருக்க யாரிடம் என்ன பேசுவது எனத் தெரியாமல் அறையிலேயே இருக்க, அனைவரும் அவளை உள்ளே வந்து பார்த்துவிட்டுச் சென்றனர். அவளுக்கு எதுவுமே மனதில் பதியவில்லை அவளுக்கு அக்னீ தான் தன் பாட்னரா என அறியும் ஆவல் மட்டுமே!

மாலினி மஹாவை திவிக்கு துணையாக இருக்குமாறு கூறிவிட்டு சமையலில் ஜெயந்திக்கு உதவ
சென்றார். மஹாவிடம் என்ன பேசுவது எனத் தெரியாமல் அவளைப் பார்த்துச் சிரித்தாள்.

“அழகா இருக்கீங்க அண்ணி” எனக்கூற அப்பவும் சிரிப்பையே பதிலாகத் தந்தாள்.

“பேசவே மாட்டீங்களா அண்ணி? எல்லாத்துக்கும் சிரிப்பு தானா?”

“இல்லையே பேசுவேனே. ஆனா புதுசா இருக்கீங்கல அதான்”

“பழகிடும் அண்ணி. அண்ணன் கிட்டயாவது பேசுவீங்களா?” எனக்கேட்டு சிரிக்க அதற்கும் சிரிப்பு மட்டும் தான் பதில்.

“கல்யாணத்துக்கு முன்னாடி அண்ணன்கிட்ட உங்க கூடப் பேசனும்னு நான் கேட்டேன். அண்ணணே உங்க கிட்ட பேசினதில்லனு சொல்லிடுச்சு. ஒன்னு தெரியுமா அண்ணீ! அண்ணன் கிட்ட உங்க நம்பர் கூட இல்லனு சொல்லிடுச்சு. இல்லையினா நான் முன்னாடியே உங்க கிட்ட பேசியிருப்பேன்”

“ஹ்ம்ம்” என அவள் கூறியதை மட்டும் கேட்டுக்கொண்டிருந்தாள். தெரிந்தோ தெரியாமயிலோ திவி மனதின் உள்ள கேள்விகளுக்கு அவள் கேளாமலே மஹா மூலமாக ஒரு பதில் கிடைத்துக் கொண்டே இருந்தது.

“இப்போவாது உங்க நம்பர் சொல்லுங்க அண்ணி நான் சேவ் பண்ணிக்கிறேன்” எனக் கேட்கவும் அவளுக்குத் தன் போன் நம்பரைக் கொடுத்து அவளின் நம்பரையும் கேட்டு வாங்கி பதிந்து கொண்டாள். ‘அவளிடமே அக்னீ நம்பரை கேட்போமா? அவள் தப்பா நினைத்தா?’ என யோசித்தாள்.

வீட்டில் உள்ள ஒவ்வொருத்தரின் போன் நம்பரையும் அவர்கள் பேர் சொல்லிக் கூற, இவளும் அவர்கள் யார், என்ன உறவு எனகேட்டு அதன் படி சேமித்துக் கொண்டாள். மஹாவும் அக்னீ நம்பரைக் கூறவில்லை.

பொறுமை முற்றிலும் இழக்க, “உங்க அக்னீ அண்ணன் நம்பர்?” எனக்கேட்க, மஹாவோ ஆச்சிரியமாகப் பார்த்து “இன்னுமா ரெண்டு பேரும் நம்பர் சேஞ்ச் பண்ணிக்கல?” எனக் கேட்க, தலையை மட்டும் இடவலமாக ஆட்ட அவள் அண்ணனின் நம்பரை மொபைலில் தேடினாள்.

அவளையே ஒரு குறுட்டு நம்பிக்கையோடு பார்த்தாள். ஆனால் அவள் கூறிய நம்பரோ இவள் எதிர்பார்த்த நம்பரில்லை. முகம் கூம்பிப் போனது.

“என்ன அண்ணி திடீருனு ஒரு மாதிரி ஆயிட்டீங்க. உடம்புக்கு மறுபடியும் எதுவும் செய்யுதா?” சிறிது நேரம் முன் மயங்கியதை வைத்துப் பாசமாகக் கேட்டாள்.

“இல்ல கொஞ்சம் தாகமா இருக்கு, தண்ணீர் கொண்டுவரீயா?”

“இதோ அண்ணீ” என எழுந்து போகவும் திவிக்கு மீண்டும் ஏமாற்றம்.

‘கடவுளே! உனக்கு நான் என்ன பாவம் பண்ணினேன்? ஏன் என்னை இப்படி படுத்துற? விரும்பினவன கட்டிடும் வாய்ப்பு தான் எனக்குத் தரல, அவன மறக்கவாது விடலாம்ல! இப்படி தினமும் அவன ஞாபகப்படுத்துற மாதிரி அவன் குரலிலே ஒருத்தனோட என்ன கட்டிப்போட்டு வச்சிருக்கீயே! இவன் கூடப் பேசினாலே எனக்கு அவன் ஞாபகம் தானே வரும்! எனக்கு ஏன் இந்தத் தண்டனை?’

எனத் தனக்குள்ளே புலம்பியவளிடம் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள் மஹா. கொஞ்ச தூங்குங்க அண்ணீ என்றாள்.

“புது இடமா தூக்கம் வரல” எனக்கூற

“வேர்க்குதா அண்ணீ?” எனக்கேட்டாள்.
அதற்கும் சிரிப்பு தான் பதில்.

உண்மையிலுமே அவளுக்கு அங்குப் புழுக்கமாக இருந்தது. பிறந்ததிலிருந்து பிரிட்ஜில் உள்ளே இருப்பது போலக் குளு குளுவென இருந்தவள். படிக்கும்போதும் கூடக் கோயம்புத்தூர் வெயிலையே தாங்காமல் தவித்தாளென அவள் தங்கும் விடுதி அறைக்குக் கல்லூரி முதல்வரிடம் அனுமதிபெற்று சுதாகர் தன் சொந்த செலவில் ஏ.சி மாட்டி, கரெண்ட் பில் எனக் கல்லூரி தாளித்த பணத்தையும் மாத மாதம் கட்டினார்.

அவளைக் கொண்டு வந்து மதுரை வெயிலில் வாட்டினாள், அவளும் தான் என்ன செய்வாள் பாவம். அவளுக்குப் பிரிட்ஜிலிருந்து ஓவனுக்குள் புகுந்தது போல இருந்தது. வந்ததிலிருந்து தூக்கமின்மை வேறு அவளைப் பாடாய் படுத்தியது.

படுக்கையில் சரிந்தவள் ‘அக்னீயும் அவளின் பாட்னரும் வேறு வேறு’ எனச் சரியாகத் தப்பாக நினைத்துக் கொண்டு, அவளுக்குள்ளே தவிக்க ஆரம்பித்தாள். மஹா வெளியில் சென்றவள் அங்கிருந்து ஒரு டேபிள் ஃபேனையும் எடுத்து வந்து அவளுக்குப் போட்டு விட்டாள். அதில் காற்று நன்றாக வரக் கண்கள் உறக்கத்தை தழுவியது.

அறைக்குள் வந்த அக்னீயின் கண்களில், இரண்டு ஃபேனின் உதவியால் சொகுசாகத் தூக்கும்
திவியே பட்டாள். அவனுக்குப் பொசு பொசுவெனத் தான் வந்தது, வேண்டுமென்றே டேபிள் ஃபேனை ஆப் செய்தான். மீண்டும் வியர்க்க ஆரம்பித்தது திவிக்கு, தூக்கம் கலைந்து எழுந்து அமர்ந்தாள்.

“மஹாராணிக்கு ஏழு ஃபேன் போட்டாத்தான் தூக்கம் வருமோ? கரண்ட் பில் உங்க அப்பனா வந்து கட்டுவான்?” எனச் சுதாகரையும் இழுத்து ஒருமையில் பேசினான்.

அவனுக்கு கரெண்ட் பில் பத்தியும் கவலையில்லை, சுதாகரை ஒருமையில் பேசவும் விருப்பமில்லை தான். ஆனால் அவளைக் காயப்படுத்துவதற்கே இப்படி பேசியது. சுதாகர் மேல் அக்னீக்கு இன்னமும் மரியாதை இருக்கிறது.

அவனுக்குக் கல்யாணத்தில் விருப்பமில்லை எனக்கூறியதும் அவரும் அதற்கு மேல் பேசவில்லை, தங்கை படிப்பிற்கு, அப்பா மருத்துவத்திற்கு எனப் பண உதவியையும் எந்த நிபந்தனையின்றி செய்தவர் என அவர்மீது தனி மரியாதை வைத்திருக்கிறான். திவிக்கு வேறு மாப்பிள்ளைகளைப் பார்த்த விஷயமும் அக்னீக்கு தெரியும்.

தன் தகப்பனை ஒருமையில் பேசவும் அவளின் உள்ளே உள்ள திவி வெளியே வந்து விட்டாள்.

“Hello! Look at me. You have no right to speak about my dad. If you have a problem with me, deal directly with me. What is your problem Man?

ஹலோ! என்னைப் பார். என் அப்பாவைப் பற்றிப் பேச உனக்கு உரிமை இல்லை. உங்களுக்கு என்னுடன் பிரச்சனை இருந்தால் என்னுடன் நேரடியாகப் பேசுங்கள். உங்களுக்கு என்ன பிரச்சனை”

“நீ. நீ தான் பிரச்சனை. எனக்கு உன்ன பிடிக்கவே இல்ல. கல்யாணம் வேணாம்னு சொன்னவனை எங்கப்பா மூலமா பேசிக் கட்டிக்கிட்டீல, கட்டிக்கிட்டா உன்கூட வாழ்ந்திடுவேனா?”

“வாழப் பிடிக்கலனா டிவேர்ஸ் வாங்கிட்டு போ மேன்”

“போகத்தான் போறேன். ஒரு வருஷம் முடியவும் டிவேர்ஸ் வாங்கிடுவேன். அதுவரை என்ன நெருங்க முயற்சி பண்ணாத”

“ரொம்ப சந்தோஷம்” என்றதும் அறையை விட்டு வெளியேறியவன் தான் அதற்குப் பிறகு அவளிடம் ஒரு வார்த்தையும் பேசவில்லை. சுங்குராம்பட்டியிலிருந்து கிளம்பி கேத்தகிரி வந்தும் இன்று வரை அவளிடம் அவன் பேச வில்லை.

இவளும் அவனிடம் பேச முயற்சி செய்யவில்லை. ஆனால் இன்று அவனாக வந்து “உன்னிடம் பேச வேண்டும்” எனக்கூறியதும் அந்தக் குரல் மீண்டும் மீண்டும் தன்னை இம்சிக்கிறதே! அவன் பேசாமல் இருந்தால் கூட அவள் நிம்மதியாக இருப்பாள் போல.

ஆனால் அவன் குரல் கேட்டால் அவளுக்கு உயிரின் அடி ஆழம் வரை வலிக்கிறது. அந்தக் குரல் அவளை மிகவும் இம்சிக்கிறது. ‘அடேய் தயவு செய்து என் முன்னாடி பேசாத! உன் குரல் என்னைக் கொல்லுது! உயிரோட சாகடிக்குது!’ எனக் கத்தனும் போல இருந்தது.

தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு,

“என்ன?” என்றாள்.

“எனக்கு இன்னைக்கு ஆபீஸில் வேலை இருக்கு”

“அதுக்கு நான் என்ன பண்ண? ஆபீஸ் இருந்தா வேல இருக்கும் தான. இத எதுக்கு என்கிட்ட சொல்ற?”

“ஹ்ம்ம் வேண்டுதல்” என்றான் கடுப்பாக, அவளோ அவனைத் தவிர்த்துத் தன் அலங்காரத்தில் கவனம் செலுத்தினாள்.

“எங்க வீட்டாளுங்க ஊருக்குப் போயிருந்தாலும் போயிருப்பாங்க. அவங்களை நீங்கத் தான இருக்க சொல்லிப் பிடிச்சு வச்சீங்க. வெளியில போகனும்னு அவங்க விருப்பப் படுறாங்க”

“அதுக்கென்னா போயிட்டு வரட்டும்”

“போன்னா! எப்படி போவாங்க? அவங்களுக்கு இங்க ஒன்னும் தெரியாது”

“டிரைவர் கிட்ட சொல்றேன். அவர் எல்லாம் பார்த்துப்பார்”

“ஏன் மஹாராணி எந்தப் பப்புக்கு போறீங்க? அவங்கள கூட்டிட்டு போன உங்க ஸ்டேட்ஸ் குறைஞ்சிடுமோ?”

“ஹ்ம்ம் எந்தப் பப்புனு முடிவு பண்ணல, போய்ட்டு லொகேஷன் ஷேர் பண்றேன்” என்றாள் கடுப்பாக.

“சீ! உன்கிட்ட போய்ச் சொன்னேன் பாரு. என்ன சொல்லனும். டிரைவரையாவது போகச் சொல்லு. உன்கிட்ட போய்க் கேட்க வச்சுட்டான் பாரு அந்தக் கடவுள்” எனப் புலம்ப, தோள்களை உலுக்கியவள் வங்கிக்குப் புறப்பட்டாள்.
 

Lufa Novels

Moderator

யாரோ அவன்?? யாரோ இவள்??​

அத்தியாயம் 20​

ca4XBGd5bsGfXrPKLFtAMSR8H3EtsQQqfgK5e8xUB76XWQ384HXb0kctn_c5c20O2VxsAnDLNlMeGILiTBbYfORr2-iUX0ksXkglK_8tMqM8-2Wqf5iV-7FgWTB47GYL5UWqKqNnHNvrAz8_MyaVnfQ

திவியின் ரிசப்ஷன் முடிந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. ஆதி, மகி ஜோடியினரும் ஊருக்குக் கிளம்பியதும் கிருஷ்ணன் மாலினியும் அவர்கள் வீட்டிற்கு கிளம்பினர்.

சுதாகர் “ஏன் கிருஷ்ணன் அதுக்குள்ள கிளம்புறீங்க? இன்னும் ஒரு வாரம் இருந்து போலாம்ல”

கிருஷ்ணன் “நாங்க இங்க வந்து மூனு வாரம் ஆச்சுப்பா!”

“குட்டிமா நீங்க இருந்தா ஹாப்பியா இருப்பால”

“அவளே அவ ரொடீனுக்கு பழகிட்டா. அவ எப்பயும் போல எங்கள வந்து பார்த்துப்பா”

“ஹ்ம்ம். சரி” என்றவர் சுபத்ராவை அழைக்க, சுபத்ரா மாலினியுடன் வந்தார்.

“சுபா நாங்க கிளம்புறோம். இனிமே நீதான் மக, மருமகன கவனமா பாத்துக்கனும். மாலினி எல்லாம் சொல்லிருப்பா தானே. எதுவும் கேட்கனும்னா அவகிட்ட கால் பண்ணி கேளு. இனிமேலாவது பொறுப்பா இரு. இன்னும் சின்னப் புள்ள இல்ல. அந்தக் கழுதைய வீட்டு பக்கம் சேர்க்காத” என்று மாமன் மகளுக்கு அடுக்கடுக்காய் அறிவுறைகளை அள்ளிக் கொடுத்தார்.

“சரிங்க அத்தான்” என்ற பதில் மட்டும் தான் சுபத்ராவிடம்.

“நாங்க கிளம்புறோம் வர ஞாயிற்று கிழமை பசங்கள எங்க வீட்டிக்கு விருந்துக்கு அனுப்பிவிடு. நான் ஏற்கனவே அவங்க கிட்ட சொல்லிட்டேன்”

“அப்படியா! அவங்க இந்த வாரம் ஊருக்குப் போவாங்கனு நினைச்சேன்”

“இல்ல போகல. மீனாகுட்டிக்கு ஆபிஸ்ல ஆடிட்டிங் இருக்கு. அதனால அவ லீவ் போட முடியாது”

“ஓஹ். சரி அனுப்பிவிடுறேன்” என்றவருக்கு இன்னுமே மகளைப் பற்றிக் கிருஷ்ணனுக்கு தெரிந்தது நமக்குத் தெரியலயேன்ற வருத்தம் இருக்கத்தான் செய்தது.

கிருஷ்ணனும் மாலினியும் சுபத்ராவுக்கு அறிவுறைகளை வழங்கிவிட்டு, சுதாகரிடமும் அக்னீக்கு கொஞ்ச நாள் வேலைப்பளு அதிகம் கொடுக்காமல், அவங்க கேட்குறப்ப லீவ் கொடுத்து ஊருக்கு அனுப்பிவிடுமாறும் கூறிவிட்டு தங்கள் இல்லத்தை நோக்கிச் சென்றனர்.

அக்னீ திவி உறவு எப்போதும் போல டாம் அண்ட் ஜெர்ரி தான். அவன் அவளை வார்த்தைகளால் காயப்படுத்த நினைத்து எதாவது பேசுவான். இவள் அவனை ஒரு பொருட்டாகவே மதிக்கமாட்டாள். இருவரும் அவரவர் வேலையுண்டு அவர்கள் உண்டு எனத் தனித்தனியாக இருந்தனர்.

அன்று ஞாயிற்று கிழமை திவியும், அக்னீயும் கிருஷ்ணன் வீட்டிற்கு விருந்துக்குக் கிளம்பினர். திவி திருமணத்திற்கு பிறகு முதன் முறை விருந்துக்குவெனப் புருஷனுடன் செல்வதால், சுபத்ரா பார்த்துப் பார்த்து அவளுக்கு ஒரு டிசைனர் பிராக் வாங்கியிருந்தார். அதில் அழகாகக் கிளம்பினாள் திவி.

அக்னீயும் கிளம்பி கீழே சுதாகருடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தான். திவி வரவும் இருவரும் கிளம்பினர். திவி அவள் காரில் ஏற, அக்னீ அவன் பைக்கில் ஏறப் போனான்.

“மாப்பிள்ளை எதுக்கு பைக் எடுக்குறீங்க? காருல போங்க” எனக்கூறவும் தயங்கினான் அக்னீ.

சுதாகர் மகளைப் பார்க்க அவள் ஓட்டுநர் இருக்கையில் ஒன்றும் பேசாது அமர்ந்திருந்தவர் அவளுக்குப் பக்கத்து இருக்கையில் உள்ள கதவைத் திறந்துவிட்டாள். சுதாகர் தான் வலுகட்டாயமாக அக்னீயை அவளின் காரில் ஏற்றிவிட்டார்.

சாதாரண வாடகை காரில் மட்டுமே பயணம் செய்தவன், இந்த லக்ஸரி காரில், அவ்வளவு சொகுசு இருந்தும், முள்ளின் மீது இருப்பது போல அசௌகரியமாகத்தான் உணர்ந்தான். அவளோ எதையும் கவனிக்கவும் இல்லை, அவனைத் திரும்பியும் பார்க்கவில்லை. அவள் கைகளில் அந்தக் கார் வலுக்கிக் கொண்டு சென்றது.

10நிமிட பயணத்தில் கிருஷ்ணன் வீட்டிற்குள் நுழைந்தவர்களுக்கு தடபுடலான வரவேற்ப்பு. எளிமையான, அழகான இரட்டை படுக்கையறை கொண்ட வீடு. அவ்வீட்டின் எளிமையே அக்னீயை நிம்மதியாகச் சுவாசிக்க வைத்தது.

காலை 10 மணிபோல வந்ததால் வந்ததும் காலைச் சாப்பாட்டுக்கு அவர்களை அமற வைத்தனர். எளிமையான சாப்பாடு அனைத்தும் அக்னீக்கு பிடித்தது போல. குழிப்பணியாரம் கெட்டிச்சட்னி, ஆப்பம் தேங்காய்ப்பால், இட்லி சாம்பார், சட்னி.

சுதாகர் வீட்டில் இந்தப் பத்து நாட்களாகச் சாப்பிடுகிறானே! அங்கு உள்ள சாப்பாடு தான் அவனுக்குத் தெரியுமே! அனைத்தும் தடபுடலாக, பலவகையில் இருக்கும். ஆனால் அனைத்தும் மேல்தட்டு வர்க்கத்தினர் சாப்பிடும் படி.

அப்படி சாப்பிட்டவள் இதை எப்படி சாப்பிடுவாளென என்ணி நிமிர்ந்து அவளைப் பார்க்க, கிருஷ்ணன் அவளுக்கு ஊட்டிவிட, சொகுசாய் புறாக்குஞ்சு வாயைப் பிளப்பது போலப் பிளந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.

கிருஷ்ணனோ அவர் மகளுடன் தனி உலகத்தில் இருந்தார். மாலினி தான் அக்னீயிடம் அவங்க அப்படித்தான் எனக்கூறி விட்டு, அவன் தட்டில் தீர தீர பண்டங்களை நிறப்பினார். ரொம்ப நாள் கழித்து அக்னீக்கு மனதார சாப்பிட்ட ஃபீல் கிடைத்தது.

சாப்பிட்டு முடிக்கவும் திவியிடம் “அக்னீயை மாடி அறைக்குக் கூட்டிட்டு போ. கொஞ்சம் ஓய்வெடுக்கட்டும்” எனக்கூற, அக்னீ மறுத்துவிட்டு கீழேயே ஹாலில் கிருஷ்ணனுடன் அமர்ந்தான். நன்றாகச் சாப்பிட்டதால் வெகுநேரம் அமர முடியாமல் அக்னீ கண்கள் சொறுகவும், மாலினி வலுக்கட்டாயமாக இருவரையும் மாடிக்கு அனுப்பிவிட்டார்.

மாடி ரூம்க்கு சென்றவன் அறையை பார்த்ததும் திடுக்கிட்டான். ஏனெனில் அது முழுக்க முழுக்க திவியின் அறையாகவே தான் இருந்தது. சுவர் முழுக்க அவளின் புகைப்படமும், கிருஷ்ணன் மாலினியுடன் எடுத்த புகைப்படமாக நிறைந்து வழிந்தது.

அவள் ரூம்மிற்கு வந்ததும் அவனிடம் “இங்க தூங்கு” எனப் படுக்கையைக் காட்டிக் கூறியவள், பால்கெனி கதவைத் திறந்தாள். அங்குக் கண்ட காட்சியில் அக்னீ அசந்து நின்றான். அழகான காட்சிமுனை பார்ப்பதற்கு இரம்மியமாக இருந்தது அங்கு இரண்டு பிளாஸ்டிக் சேரும் ஒரு குட்டி டேபிளும் இருந்தது.

அவள் அதில் சென்று அமர்ந்து, தான் வரும்போதே கையோடு கொண்டுவந்த தேநீரை பருகிக் கொண்டே, இயற்கை அழகையும் சேர்ந்தே பருகினாள். அந்த இயற்கையின் அழகை பார்த்ததும் அக்னீயின் தூக்கம் போன இடம் தெரியவில்லை. அவளுக்கு எதிரிலிருந்த மற்றொரு சேரில் அமர்ந்தான்.

கீழிலிருந்து மேல வரும் போதே திவி தனக்கான தேநீரை ஊற்றி எடுத்துக் கொண்டு வந்தாள், அவனுக்கு அப்போது அது தேவைப்படவில்லை அதனால் அவனும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் இப்போது இந்த இடத்தில் அவனுக்கும் தேநீர் குடித்தால் நன்றாக இருக்குமெனத் தான் தோன்றியது.

அவன் நினைத்த நொடி கதவைத் தட்டி விட்டு உள்ளே வந்தார் கிருஷ்ணன் கையில் ஒரு தேநீர் கப்புடன். அவனுக்குக் கொடுத்துவிட்டு மகளைக் கண்டனப்பார்வைப் பார்த்தார்.

“மீனும்மா என்ன பழக்கம்? உனக்கு மட்டும் எடுத்துட்டு வர? மாப்பிள்ளைக்கு நீதான இங்க கம்ஃபர்ட்டா மாத்தனும்? நீயே அன்கம்ஃபர்ட்டா ஃபீல் பண்ண வைக்கக் கூடாது. வீட்டிலயும் இப்படித்தான் பண்றீயா?”

“சாரிப்பா”

“புரிஞ்சு நடந்துக்கோ” என்றவர் கீழே சென்றுவிட்டார்.

தேநீர் கப்பை வாயில் வைத்தவன் முகம் நொடியில் பிரகாசமாக மாறியது அவனுக்குப் பிடித்த கருப்பட்டிகாபி. தனக்காகத் தான் செய்திருக்கிறாரென நினைத்தான். ஏனெனில் மாலினி திருமணத்தின்போது இரு நாட்கள் தங்கள் வீட்டில் இருந்ததால், தன் அம்மாவின் வேலையாக இருக்கும் என்று நினைத்தான்.

எதிரில் அமர்ந்த திவியைப் பார்க்க, அவள் கண்களை மூடிக் கப்பை மூக்கிற்கு அருகில் கொண்டுசென்று அதன் வாடையை மூக்கில் ஏற்றினாள். அவள் முகம் காட்டும் ஒவ்வொரு உணர்வையும் பார்த்தான். அவள் கண்களைத் திறக்கும்போது அவன் பார்வையை மாற்றிக் கொண்டான்.

ஆனால் அவனுக்குத் தெரியாத ஒன்று இன்று அவன் சாப்பிடும் அனைத்தும் திவியின் பிரியமான பதார்த்தங்கள் என்று. சிறுது நேரம் இருவரும் வெளியில் வேடிக்கை பார்த்தபடி ஒன்றாக அமர்ந்திருந்தாலும் எதுவும் பேசவில்லை. அந்த நேர இதத்தை கெடுக்க இருவரும் விரும்பவில்லை.

நேரம் செல்லச் செல்லக் குளிர் உடலைத் தாக்க மெல்ல எழுந்தான் அக்னீ. ஆனால் அவள் அதை எதையுமே உணரவில்லை போல. அவள் கண்கள் எங்கோ வெறித்திருக்க, வாட்டும் குளிரில் கல்லு போல அமர்ந்திருந்தாள். அப்போதே அவன் கண்டுகொண்டான் இது அவளுக்குப் பழக்கப்பட்ட ஒன்று என.

ஆனாலும் அவளைப்பார்க்க பாவமாகவும் இருந்தது. அவனின் மனதில் உள்ள காதலன் வெளியில் வந்தானோ என்னமோ! அருகில் இருந்த பிளாங்க்கெட்டை எடுத்துக் கொண்டு போய் அவளிடம் நீட்டினான். அவனை வேற்றுக் கிரகவாசி போல் பார்த்தாலும், அவன் கொடுத்ததை வாங்கிக் கொண்டாள்.

அவனும் சென்று படுத்துவிட்டான். பனியில் இருந்ததன் விளைவு உறக்கம் அவனைச் சுகமாய் இழுத்துக்கொண்டது. அவளும் அங்கயே அமர்ந்தபடி உறங்கிவிட்டாள். மதிய உணவுக்குக் கிருஷ்ணன் வந்து அழைத்தபிறகு தான் இருவரும் எழுந்தனர்.

மதிய உணவு தடபுடலாகத் தான் இருந்தது. நடப்பது, பறப்பது, மிதப்பது என அனைத்தும் இருந்தது. மாலினியின் கைப்பக்குவம் அக்னீக்கு மிகவும் பிடித்திருந்தது. உண்மையிலுமே அவன் சாப்பிடுவதை விட சற்று அதிகமாகத் தான் சாப்பிட்டான். சாப்பிட்டு முடிக்கவும் கிருஷ்ணன் அன்னை இல்லத்துக்கு இருவரையும் அழைத்தார்.

சரிப்பா டிரெஸ் சேன்ஞ் பண்ணிட்டு வரேன் என்றவள் மீண்டும் மாடிக்குச் சென்றாள். திரும்பி வரும்போது ஒரு அழகான காட்டன் சுடிதாரில் வேற ஒரு கெட்டப்பில் இருந்தாள். அவனுக்குத் ‘திவியா இது?’ என இருந்தது.

அவனின் பார்வையை பார்த்த மாலினி, “இல்லத்தில இருக்குற பிள்ளைகள், நம்ம வெல்த்திய பார்த்து எப்பவும் ஏக்கப்படக் கூடாதுலப்பா. அதனால் எப்பவும் திவி அங்க போறதா இருந்தா எளிமையான டிரெஸ் தான் போடுவா” என அவன் கேளாமையே கூறினார்.

நால்வரும் அன்னை இல்லத்துக்குத் திவியின் காரில் சென்றனர். அங்குச் சென்றதும் அவளை வந்து பிடித்துக் கொண்டனர் அங்கிருந்த குழந்தைகள். அவளும் அவர்களுடனே ஐக்கியமாகிவிட்டாள்.

அக்னீயையும் கிருஷ்ணன் அனைவருக்கும் அறிமுகப்படுத்தினார். பெரியவர்கள் அனைவரும் அவனை ஆசை தீரக் கொஞ்சி, நல்லா இருக்க கடவுளை வேண்டிவதாகவும் கூறி அவனை ஆசிர்வதித்தனர்.

குழந்தைகளுக்கு திவி கதை சொல்லும் அழகை தன்னை மீறி இரசிக்க ஆரம்பித்தான் அக்னீ. அவள் அவ்வளவு அழகாகக் கைகளை ஆட்டி ஆட்டிக் கதை சொல்லும் பாவனையைப் பார்க்கப் பார்க்க இதயம் துள்ளி வெளிவருவதை அவனால் தடுக்க முடியவில்லை.

குழந்தைகளுக்கு கதை சொல்லி அவரகள் கேட்ட்கும் கேள்விகளுக்கெல்லாம் பதில்கூறிக் களைத்து அமர்ந்தவளை அங்குள்ள பெரியவர்கள் பாட சொல்ல, தன் வீட்டில் மறுத்தது போலச் சிறு மறுப்புக்கூட இல்லாமல் பாடத்தயாரானாள்.

மொழியில்லை மொழியாய்
உன் பேர் சொல்லாமல்…
விழியில்லை விழியாய்
உன் முகம் பார்க்காமல்…

உயிரினில் உனையே
நான் புதைத்தே நின்றேன்…
புரிந்திடும் முன்னே
உனை பிரிந்தேன் அன்பே…
ஏ… ஏ…

தினமும்... கனவில்...
உனை தொலைவில் காண்கிறேன்…
அதனால்... இரவை...
நான் நீள கேட்கிறேன்…

எழுத்து... பிழையால்...
என் கவிதை ஆனதே…
எனக்கே... எதிரி...
என் இதயம் ஆனதே…

மறப்பதில்லை…
நெஞ்சே நெஞ்சே…
ஓ… நெஞ்சே நெஞ்சே…
ஓ… நெஞ்சில்…
இன்னும் நீயடா…

என அழகாய் பாட அங்கிருந்த பெரியவர்கள் மட்டுமில்ல அக்னியுமே விழுந்துவிட்டான் அவளின் குரலில். குரல் மட்டுமில்லை அந்த பாடல் வரிகளும் அவள் அக்னீக்காகவே பாடினாள் என்று தான் அவன் நினைத்தான்.

இன்று காலையிலிருந்தே அக்னி மனதில் உள்ள காதல் கொஞ்ச கொஞ்சமாக வெளிவந்து கொண்டிருந்தது. இப்போது இப்படி தனக்காக உருகி அவள் பாடும் போது எந்த காதலனுக்கு தான் கோபம் குறையாது?

அனைவருக்கும் மாலை காபி, டீயுடன் அன்றைக்கு திவியின் ஸ்பெஷல் டீரீட் என அவர்கள் அனைவருக்கும் மாலை நேர சிறப்பு சிற்றுண்டியாக சிக்கன் பப்ஸ் வழங்கினார்கள்.

சிறியவர்களோ அவனை இழுத்துக்கொண்டு தங்களோடு விளையாட அழைத்தனர். தவிர்க்க முடியாமல் அனைவருடனும் விளையாடாச் சென்றான்.

அனைவரும் ஒருமனதாகக் கிரிக்கெட் விளையாடுவதாக் கூற அக்னீ ஒரு டீமும், திவி ஒரு டீமுமாகப் பிரிந்தனர். நான் மாமா டீம், நான் அக்கா டீம் எனப் பசங்க தாங்களாகவே இரு டீமாகப் பிரிந்தனர்.

டாஸ் போடத் திவி தான் ஜெயித்தாள். அவளோ பவுளிங் செலக்ட் பண்ண, திவி டீம் பவுளிங்க்கு ரெடியானது. அக்னீ டீம் பேட்ஸ்மேன் எல்லாரும் டக் டக் என அவுட்டாக அக்னீ
பேட்டிங்க்கு வந்தான். அவனோ திவி டீம் பவுளர் போடும் பால் அனைத்தையும் ஃபோர், சிக்ஸ் எனப் பறக்க விட திவி டீம் ஒன்னு கூடியது.

அனைவரும் தங்களது மண்டையை மற்றும் ஒட்டி ஒட்டி வைத்து அவனை அவுட்டாக்க திட்டம் தீட்டினர். ஆனால் அவர்கள் திட்டம் ஒன்று கூடப் பலிக்கவில்லை. அவர்கள் போடும் பாலை எல்லாம் தெரிக்க விட்டான்.

திவிக்கோ கோபம் “குட்டி பசங்களுக்கு விட்டுக் கொடுக்குறானா பார். இவன் பெரிய வேல்ட் கப்புக்கு விளையாடுற மாதிரி ஆடுறான்” என்றவன் பவுளிங் போடுபவனிடம் “கொடுடா நான் போடுறேன்” என வாங்கினாள்.

முதல் பால், பாலை இரு கையிலும் தேய்த்து பின் அதைத் தன் உடையில் தேய்த்தாள். பின்னாடி தூரமா நடந்து போனாள். அங்கிருந்து அவனை நோக்கி ஓடிவர அவன் இதயம் தடுமாறி வெளிவந்தது. அவன் கவனம் சிதறியது, அவள் பாலை அவன் சரியாக அடிக்கவில்லை.

திவி டீம் குதூகலமானது. அடுத்த பாலை அதே போல் பின்னால் சென்று அங்கிருந்து ஓடிவந்து போட்டாள், அவளைவிட்டு கண்களை அகற்றமுடியவில்லை அவனால். அவன் பாலை சரியாக அடிக்காமல் விட அது அங்கிருந்த ஸ்டெம்பில் பட்டது.

திவிடீம் “அவுட் அவுட்” எனக் குதூகலித்தது. அனைவரும் சேர்ந்து குத்தாட்டம் ஆடினர். அவன் கண்களோ அவளை விட்டு இன்ச் கூட ஆசையவில்லை.

அடுத்து திவி டீம் ஆட, கிருஷ்ணன் திவியை அழைத்துவிட்டார். அவளோ நீங்கக் கண்டினியூ பண்ணுங்கடா என அவளின் டீம்மிடம் கூறிவிட்டு, கிருஷ்ணன் அறைக்குச் சென்றுவிட்டாள். ஆனால் செல்லும் அவளையே தான் அக்னீ பார்த்துக்கொண்டிருந்தான்.

திவிடீம் பசங்க அனைவரும் நன்றாகவே பேட்டிங் செய்தனர். ஆனாலும் அக்னீயின் ஸ்கோரை பிடிக்க முடியவில்லை. அக்னீ டீம் தான் வென்றது என அக்னீ டீம் ஆர்ப்பாட்டம் செய்தது. திவி டீமோ அக்கா இருந்தா நாங்க தான் ஜெயிச்சிருப்போம், அதனால இது ஒன்னும் வெற்றியில்ல என வாதாடியது.

அனைவரையும் சமாதானப்படுத்திவிட்டு அமர்ந்தவனுக்கு ‘இன்று நான் பார்த்தது என்னோட மீனா தானோ! இது தான் அவள் உண்மையான குணமோ! நான் தான் அவளைத் தவறாகப் புரிந்து கொண்டேனோ? இன்று அவளிடம் அனைத்தையும் தெளிவாகப் பேச வேண்டும். தான் அவளைத் தவறாக நினைத்ததுக்கு சாரி சொல்லனும்’

என நினைத்தவனுக்கு மனமெல்லாம் மீனாவின் மீதான காதல் மீண்டும் பொங்கியது என்று தான் கூற வேண்டும். ‘அப்போ முன்னாடி போனில் பேசிய போது அவள் கூறிய எதுவுமே பொய்யில்லை. கிருஷ்ணனை அப்பாவெனக் கூறியது, வங்கி வேலை, அன்னை இல்லம் பற்றி கூறியது அனைத்தும் உண்மை. நான் தான் அவளை எதுவுமே சொல்லவிடாமல் தடுத்துவிட்டேன்’

அவளிடம் மன்னிப்பு கேட்டு, அவளுடனான காதலை புதுப்பிக்க நினைத்து மனது பூராம் சந்தோஷமாகக் கிருஷ்ணன் அறையை நோக்கி வந்தவன் காதுகளில்

“அப்பா! என்னால இப்படியெல்லாம் நடிக்க முடியாது பா! அவனுக்குப் பிடிச்ச மாதிரி நான் மாறனும்னா வாழ்நாள் முழுசும் அவன் கிட்ட நடிக்கணுமா? எனக்கு இதெல்லாம் பழக்கமே இல்லையே! இது நான் இல்லையே! நீங்கச் சொல்ற போல எல்லாம் என்னால நடிக்க முடியாது! இப்படி நடிச்சு தான் அவன் கூட வாழனும்னா எனக்கு எதுவுமே வேண்டாம்” எனத் திவி கிருஷ்ணன், மாலினியிடம் பேசுவது அவன் காதில் தெளிவாகக் கேட்டது.

“அப்போ இன்னைக்கும் என்னை நடித்துத் தான் ஏமாத்தி இருக்கா இந்த டிராமாகுயின்! இன்னைக்கும் நான் அவளை முட்டாள்போல நம்பியிருக்கேன்! என்னோட எல்லா வீக்னெஸூம் அவள் தெரிஞ்சு வச்சுக்கிட்டு என்ன ஏமாத்துறா! ஏமாத்துக்காரி! இவள போய்த் திரும்பத் திரும்ப நம்பி ஏமார்ந்து தொலைக்கிறீயேடா மடையா!” எனத் தன்னைத்தானே திட்டித் தீர்த்தான்.
 

Lufa Novels

Moderator

யாரோ அவன்?? யாரோ இவள்??​

அத்தியாயம் 21​

WcsrKXwr9aiegOi--Qq06ZhlEhrqcKaklOftdZ3lZSOvYeeZ5DvTpF6hfedKMsyPz8dCS3MmdixgQNMC5Y7Xz5d8m1ubxzSjqc1e4owMafLHhtkL3hJNYyshJBuwM3SRLmK_89EwqKEEqB4ivYM-AIc

அன்னை இல்லம் சென்று வந்ததிலிருந்து அக்னீ திவியிடம் மேலும் மேலும் கோபம் கொண்டு நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவளை வார்த்தைகளால் காயப்படுத்தினான்.

திருமணத்திற்கு பிறகு இங்கு வந்த அக்னீ திவி இருவரும் ஒரே அறையைப் பயன்படுத்தினாலும் படுக்கை தனித்தனி தான். திவியின் அறை அவ்வளவு விஸ்தாரமானது. நடுவில் ஒரு பெரிய படுக்கையறை தாளாரமாக நான்கு பேர் படுக்குமளவு லக்ஸரி பெட்டுடன், டி.வி, டிரெஸ்ஸிங் டேபிள் கொண்டது. அதைத் தான் திவி பயன்படுத்தினாள்.

மெயின் பெட் ரூமிற்கு வலது புறம் தனியாக டிரெஸிங் அறையுடன் கூடிய ஒரு பெரிய குளியறை, ஏழு நட்சத்திர ஹோட்டல் கூடத் தோற்றுவிடும். இடது புறம் ஒரு பிரைவேட் சிங்கிள் பெட்டுடன் கூடிய ஒரு சின்ன அலுவலக அறையும், அதற்கருகில் நான்கு பேர் மட்டும் பார்க்கும்படியான மினி தியேட்டரும் இருந்தது.

பால்கெனியும் அதனை ஒட்டியே ஒரு குட்டி ஜிம்மும் இருந்தது. வந்த முதல் நாளே திவி எப்போதும் போல அவள் படுக்கையில் படுக்க, அந்த அறையைச் சுத்தி சுத்திப் பார்த்தவனுக்கு அலுவலக அறையில் சிங்கிள் பெட் இருக்க அவன் அதைத் தான் இன்று வரை உபயோகித்துக் கொண்டிருக்கிறான்.

அவளோ இவ்வறையில் இன்னொரு ஜீவன் இருப்பது போலயே உணரவில்லை. அவன் அலுவலக அறையைப் பயன்படுத்தவும் திவி அந்த அறைப்பக்கமே செல்வதில்லை. ஆனால் அவனுக்குத் திவி படுக்கையறை வழியே தான் குளியலறை செல்லவேண்டிய சூழல்.

அக்னீ வீட்டிலோ அவர்களை ஊருக்கு வருமாறு அழைப்பு விடுத்துக் கொண்டே இருக்கின்றனர். ஏனெனில் சொந்தபந்தம் அனைவரும் இரு ஜோடிகளுக்கும் சேர்த்து விருந்து கொடுத்திடலாமென அவர்களை அழைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

அக்னீக்கு பிரச்சனையில்லை, சுதாகர் திருமண முடிந்ததுமே சொல்லிவிட்டார் “எப்போ ஊருக்குப் போகனுமென்றாலும் போகலாம்” என்று கூறினார். சுதாகர் அக்னீயை முன்பு போல் வேலைசெய்ய விடுவதில்லை. முக்கால்வாசி வேலை இப்போது டேவிட் தான் செய்கிறார்.

மருமகன் என்றதுமே அக்னீ இருந்த பீ.ஏ போஸ்டை டேவிட்டுக்கு மாற்றியவர் தான் பார்த்த சேர்மன் போஸ்டில் தான் அமரவைத்தார். ஆனால் அக்னீயோ முற்றிலுமாக மறுத்து பீ.ஏ வாகத்தான் தொடருவேன் எனப் பிடிவாதம் பிடிக்க, அக்னீயின் வேலைப் பளுவை டேவிட் மூலம் குறைத்துள்ளார்.

அதனால் அவன் எப்போது வேணாலும் கிளம்பலாம். ஆனால் திவி தான் இழுத்துக் கொண்டே இருக்கிறாள். பேங்கில் வேலை இருக்கு, லீவு போட முடியாது எனக் கூறியே ஒரு மாதத்தை ஓட்டிவிட்டாள்.

பொறுத்து பொறுத்து பார்த்த அக்னீ தனியாக ஊருக்குக் கிளம்ப ரெடியாகவும், சுதாகர் தான் திவியிடம் பேசி அவளை லீவு போட வற்புறுத்தி இவ்வார இறுதியில் இருவரும் சேர்ந்து ஊருக்குச் செல்லுங்கள் என அவனைப் பிடித்து வைத்திருக்கிறார்.

ஏற்கனவே கோபத்தில் இருப்பவனுக்கு இவளின் இச்செயலால் மனதில் மீண்டும் மீண்டும் அவள்மீது கோபம் கனன்றது. அவளோ ஆடிட்டிங் முடிந்துவிட்டால் கிளம்பலாமென நினைக்க, அது இழுத்துக் கொண்டே போனது. ஒரு வழியாக இந்த வாரம் அதை முடித்துவிட்டவள் கிளம்பத் தயாரானாள்.

வெள்ளிக்கிழமை மதியமே திவி வீட்டிற்கு வந்துவிட்டவள் அவனுடன் மூன்று மணிக்கெல்லாம் கிளம்பிவிட்டாள். திவி காரில் தான் இருவரும் பயணித்தனர். ஆனால் இருவருமே பேசிக் கொள்ளவில்லை எப்போதும் போல. அமைதியாகவே தான் வந்தனர்.

திவி கைகளில் கார் வலுக்கிக் கொண்டு சென்றது. மலையில் வண்டியை ஒரு சிறு ஜெர்க்குக் கூட இல்லாமல் ஸ்மூத்தாக ஓட்டினாள். இருபது, முப்பது வேகத்திலேயே ஓட்டினாள், அவள் பிரேக்கை மிதிக்கிறாளா எனக்கூடத் தெரியாத அளவுக்கு மிகத் துள்ளியமாக ஓட்டினாள்.

மனதில் அவளின் மேல் அத்தனை கோபமிருந்தும் அவளின் திறமையை மெச்சாமல் இருக்க முடியவில்லை. சரியாக அரைமணி நேரத்தில் மலையிறங்கியவள் கைகளில் அந்தக் கார் பறக்க ஆரம்பித்தது.

மாலைபோல ஒரு கடையில் நிறுத்தினாள்.

“ரெஸ்ட் ரூம் போறதா இருந்தா போய்ட்டு வந்திடு. அப்படியே எனக்கொரு காபியும் ஆடர் பண்ணிடு” எனக் கூறியவள் தானும் இறங்கி தன்னுடைய அத்தியாவசிய வேலையைப் பார்க்கச் சென்றாள்.

“திமிரப் பாரு! மஹாராணி ஆர்டர் போட நாங்க இவளுக்குச் சேவகம் பண்ணனுமாக்கும். நான் வாங்க மாட்டேன்” என வீம்புக்கு காரில் சாய்ந்து நின்றான் அவள் வரும் வரைக்கும்.

வந்ததும் அவனைப் பார்த்தவள் “காபி வாங்க சொன்னேன் போலயா?” எனக் கேட்க,

“இப்போ நீ என் முதலாளியும் இல்ல, நான் உன் வெர்க்கரும் இல்ல. உனக்கு வேணும்னா போய் வாங்குடீ” அவன் ‘டீ’ எனக்கூறியதும் கோபத்தில் பற்களை நறநறவெனக் கடித்தவள், வெடுக்கெனத் திரும்பிக் கடைக்குச் சென்றாள்.

ஒரு காபியை மட்டும் வாங்கியவள் அதைக் காருக்கு அருகில் கொண்டுவந்தவள், அவனைப் பார்த்துக் கொண்டே காரில் சாய்ந்து நின்று மிடறு மிடறாக ரசித்துக் குடித்தாள்.

‘உனக்கு வேணுமானு கேட்குறாளா பார் ராட்சசி’ என மனதுக்குள் கடிந்தவன், அவள் மேலுள்ள கோபத்தில் காரினுள் சென்று அமர்ந்தான். அவளும் காரினுள் ஏறியவள் “ஹா... என்ன அருமையான காபி… ஹம்ம்” என ரசித்துக் குடித்து முடித்தவள் விருட்டெனக் காரை ஸ்டார்ட் செய்து கிளம்பிவிட்டாள்.

காரின் ஸ்பீடோ நூறைத் தொட்டது, சிங்கிள் ரேட்டில் கூட டக் டக்கென ஓவர்டேக் செய்து பறந்தாள். அவனுக்குத் தான் பதட்டமாக இருந்தது. கொஞ்ச நேரத்தில் ஹைவேயில் இன்னும் வேகத்தை அதிகரித்தாள். நூற்றியிருபதில் வண்டி பறந்தது. அவனுக்கோ பயப்பந்து உருள ஆரம்பித்து அவஸ்தை படுத்தியது.

‘அய்யோ! வீம்பா பாத்ரூம் கூடப் போகாம இருந்துட்டோமே! இப்ப முட்டிட்டு வருதே. இவவேற பைலட் போலப் பறக்குறா” என்று நெளிந்தவன்,

“வண்டியை நிறுத்து” எனக்கூறினான். அவளுக்குத் தெரியும் அவன் எதற்காக வண்டியை நிறுத்தச் சொல்கிறான் என்று, ஆனால் அவளோ காதிலேயே வாங்கமல் வண்டியை ஓட்டினாள்.

“அடியேய் நிறுத்துடீ” எனக்கூற நக்கலாகச் சிரித்துவிட்டு வண்டியின் வேகத்தை இன்னும் அதிகரித்தாள்.

“அடியேய் நிறுத்து. இல்ல வண்டி நாறிடும்” எனக்கூற டக்கெனப் பிரெக் அடிக்க, சீட்டின் முனிக்கு சென்று திரும்பினான் அக்னீ. நல்லவேலை சீட் பெல்ட் போட்டிருந்தான், இல்லை வடிவேலு போலக் காரின் கண்ணாடியை உடைந்து வெளியே வந்துருப்பான். பின் வண்டியை ஓரங்கட்டி நிறுத்தினாள்.

அவளிடம் வாதாட நேரம் இல்லாமல் வண்டியை விட்டு இறங்கியவன் அவசரமாக ஒரு மரத்தை நோக்கி ஓடினான். இவளோ காரில் விழுந்து விழுந்து சிரித்தாள். அவளின் சிரிப்புச் சத்தம் அவன் காதை எட்டி சினத்தை மூட்டியது. திரும்பி வந்தவன் கைகளில் வாட்டர் பாட்டிலை நீட்டினாள். அவனும் வாங்கி கைக்கால்களைக் கழுவிட்டு காரில் ஏறினான்.

“திமிருடீ உனக்கு” எனக் அவன் கத்த, அவள் காது கேளாதவள் போலக் காதில் கையை விட்டு ஆட்டினாள். மீண்டும் வண்டியின் வேகத்தை அதிகரித்தாள்.

“எதுவும் ஃபிளைட்ட பிடிக்கப் போறீயா? எதுக்கு இவ்ளோ ஃபாஸ்டா ஓட்டுற? மெதுவா போடீ” எனக்கூற காதில் வாங்காமல் வண்டியை ஓட்டுவதிலேயே குறியாக இருந்தாள்.

“நிறுத்து டீ. நீ இறங்கு. நான் ஓட்டுறேன்”

“என் வண்டியை யாரும் ஓட்டுறது எனக்குப் பிடிக்காது”

“அப்போ மெதுவா போடீ” எனக்கத்த, வண்டியின் வேகத்தை முற்றிலுமாகக் குறைத்தாள். சைக்கிலில் போறவன் கூட முந்திவிடுவான் போல. அவளைத் தாண்டிச் செல்லும் வண்டிகள் எல்லாம் இவர்களை ஒருமாதிரியாகப் பார்த்தது.

“இப்போ எதுக்குடீ மாட்டுவண்டி ஓட்டுற மாதிரி ஓட்டுற?”

“நீ தானடா மெதுவா போகச் சொன்ன?”

“என்னது ‘டா’ வா?”

“இன்னைக்கு வண்டியில் நீ எத்தனை தடவை 'டீ'ப்போட்ட? அப்ப நானும் அப்படித்தாண்டா பேசுவேன்”

“அம்மா தாயே! மதுர மீனாட்சி! உன்னை ஒன்னுமே சொல்லல. ஊருல போய்ப் போடா வாடானு சொல்லி என் மானத்த வாங்கிடாத. உன் வண்டிய நீ எப்படி வேணுன்னாலும் ஓட்டு. நான் தூங்க போறேன்” என்றவன் கண்களை மூடித் தூங்க முயன்றான்.

அவளும் அதற்கு அப்புறம் அவனிடம் எந்தத் சேட்டையும் செய்யாமல் சீரான வேகத்தில் வண்டியை ஓட்டியவள் இரவு பத்து மணிக்கெல்லாம் வீட்டிற்கு வந்தனர்.

வாசலில் வண்டி சத்தம் கேட்டதும் அனைவரும் எழுந்து அவர்களை வரவேற்க வாசல் வந்தனர். அத்தனை பேரும் வாங்க வாங்க என வரவேற்றனர். இவள் லக்கேஜ் எடுப்பதற்காக பின்னாடி டிக்கியை ஓபன் செய்தவள், என்னமோ நினைத்து மனதுக்குள் சிரித்தவள்,

“டேய் ஈஸ்வர்! பேக்கை இறக்க முடியலடா. ஹெல்ப் பண்ணுடா” எனக் கத்திக் கூற, அனைவரும் அக்னீயையே பார்க்க, அப்பத்தாவோ அவளை கொலைவெறியில் முறைத்தது. (ஈஸ்வர் அவரின் கணவன் பெயரல்லவா!)

‘அய்யோ! ஒன்னும் சொல்லாமல் இருந்திருந்தா கூட அவ பாட்டுக்கு இருந்திருப்பா, டேய் அக்னீ உனக்கு உன் வாய் தாண்டா எதிரி’ என மனதில் நினைத்தவன் அவளிடம் சென்று,

“ஏண்டீ என் மானத்தை வாங்குற?”

“டேய் ஏருமை! பேக்கை தூக்கச் சோன்னா என்னை ஏண்டா தூக்குற? விடுடா!” என வேணும்னே கத்தினாள். அதில் அங்கிருந்த அனைவரும் சிரித்த படியே வீட்டிற்குள் செல்ல, அப்பத்தாவோ முறைத்தபடி சென்றது.

“ஏண்டீ? ஏன்? இன்னைக்கு உனக்கு என்னாச்சு? ஏன் என் மானத்தை வேணும்னே வாங்குற?”

“ஒரு காபி தான வாங்க சொன்னேன். அதுக்கு நீ என்ன பண்ணுன?” எனச் சுள்ளெனக் காய்ந்தவள் தன் பேக்கை எடுத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்றாள் அவனை முறைத்தபடி.

‘ஒரு காபி வாங்க மாட்டேன் சொன்னதுக்கா இந்தப் பாடுப்படுத்துனா ராட்சசி? ஒரு வாரத்துக்கு எவ்வளவு லக்கேஜ் தூக்கிட்டு வந்துருக்கா பாரு? கடை வச்சு நடத்தப்போறா போல?’ என நொந்தவன் மீதி லக்கேஜ்களை எடுத்துக் கொண்டு உள்ளே சென்றான்.

“அம்மா! செம பசி சாப்பாடு எடுத்து வைம்மா” என்றவன் கைக்கால் கழுவ என்றான்.

ஜெயந்தி “நீயும் போய்க் கைக்கால் கழுவிட்டு வாம்மா. சாப்பிடலாம்”

“சரிங்க ஆண்ட்டி” என்றவள் எழுந்து பாத்ரூம் செல்லமுயல,

“அத்தைனு சொல்லுமா” என ஜெயந்தி கூற “அப்படியே கூப்பிட்டு பழகிட்டதால அப்படியே வந்திடுது அத்தை” எனக் கூறினாள்.

இருவரும் வரவும் ஜெயந்தி இட்லியை சாம்பார், சட்னியிடன் பரிமாறினார். திவியோ பிறந்ததிலிருந்து டைனிங் டேபிளில் சாப்பிட்டவளுக்கு தரையில் அமர்ந்து சாப்பிடுவதே போராட்டமாக தான் இருந்தது. கடைசியில் தட்டை கையில் எடுத்து சாப்பிட்டாள். இருவரும் சாப்பிட்டு முடிக்கவும் பாண்டியன் அக்னீயிடம்,

“அக்னீ திருமங்கலத்தில ரூம் போடச் சொன்னேனே பா, போட்டீயா? அங்க போய்த் தூங்கிட்டு காலையில இங்க வாங்க” என்றார்.

வீட்டில் இருந்த பெரிய அறையை ஆதி நந்தினி உபயோகிப்பதால், சின்ன அறை திவிக்கு சௌகரியமாக இருக்காது எனப் பாண்டியன் இப்போதைக்கு திருமங்கலத்தில் ஒரு வாரத்திற்கு ரூம் போடலாம். கொஞ்ச நாளில் மாடியில திவிக்கு தகுந்தாற்போல ஒரு ரூம் கட்டிடலாமென நினைத்திருந்தார்.

“அதெல்லாம் போடலப்பா! இது தான் நம்ம வீடு. இதெல்லாம் தெரிஞ்சு தானே கல்யாணம் பண்ணிக்கிட்டா. இங்க இருக்குறதுல அட்ஜெஸ்ட் பண்ணட்டும்”

திவியோ எதுவும் பேசாமல் அவனையே வெறித்துக்கொண்டிருந்தாள்.

நந்தினி “அக்னீ மாமா! என்ன பேசுற? திவி அவங்க வீட்டில எப்படி இருந்த பொண்ணு? இங்க இருக்குறதே அட்ஜெஸ்ட் பண்ணித்தான். இப்படி பேசாத மாமா” என்றவள் ஆதியிடம்,

“நான் மஹா, மகி கூடக் குட்டி ரூம்ல படுத்திக்கிறேன். நீ அருண் கூட ஹாலில் படுத்துக்கோ மாமா”

“சரிடா” என்றான் ஆதி.

திவி “வேண்டாம் நந்தினி. நீயும் ஆதி ப்ரோவும் எப்பவும் போல உங்க ரூம்ல இருங்க. நான் அட்ஜெஸ்ட் பண்ணிப்பேன்”

அருண் “ஒன்னு பண்ணலாமா? இப்போ மழைக்கூட இல்ல. எல்லாரும் முந்தி ஒன்னா மாடியில படுப்போமே! அதுபோல ஒன்னா மாடியில படுப்போமா?” என்றான் கண்களில் மின்னல் வெட்ட,

அனைவருக்கும் ஆசை வந்துவிட்டது. நந்தினி “அக்னீ மாமா! நீயும் திவியும் எங்க ரூம்ல படுங்க. நாங்க எல்லாரும் மாடிக்குப் போறோம்” எனக்கூறி விட்டு, அனைவரும் அவரவருக்குப் படுக்கையை எடுத்துக் கொண்டு மாடிக்குச் சென்றுவிட்டனர்.

மகி இனியனை ஜெயந்தி அருகில் படுக்க வைத்துவிட்டு அவளும் மேலே சென்றாள். மாடியில் ஐவர் குழு ஒன்றாக அரட்டையில் ஒன்றுகூடியது. அக்னீயை அனைவரும் மிஸ் செய்தனர். ஆனால் திவி வசதியா வளர்ந்த பொண்ணு, இதெல்லாம் அவளுக்குச் செட்டாகாது எனத் திவியையும் அக்னியையும் அவர்கள் அழைக்கவில்லை.

சிறிது நேரத்தில் அக்னீயும் படுக்கையுடன் வந்தான்.

ஆதி “ஏண்டா நீயும் வந்த? கீழ உன் பொண்டாட்டி கூட இரு போ”

“ம்ச்... போடா” என்றவன் அருண் அருகில் தானும் படுத்தான். அருண் திடீரெனச் சிரித்தான்.

“எதுக்குடா இப்படி சிரிக்கிற?” என ஆதி கேட்க,

அருண் “அக்னீ அண்ணே ஃபஸ்ட் நைட் அன்னைக்கே இங்க தான் படுக்க வந்தது. நான் தான் கீழ அனுப்பிவிட்டேன்” எனக்கூற,

ஆதி “அக்னீ எதுவும் பிரச்சனையா?” எனத் தம்பியைப் பரிதவிப்புடன் கேட்க, அனைவரின் கண்களும் அதே பாவத்துடன் இருக்க, அக்னீக்கு தன் வாழ்க்கையை நினைத்துக் கவலைப்படும் உடன்பிறப்புகளை நினைத்து கண்கள் கலங்க, அதை மறைத்துக் கொண்டு அருணை அடித்தான்.

“அன்னைக்கு நானாவாடா மேல வந்தேன்? நீ பண்ணுன சேட்டையால உன்ன அடிக்கத் தானடா வந்தேன்” என்றவன் முதலிரவு அன்னைக்கு அருண் செய்த சேட்டையை அனைவரிடமும் கூற, குடும்பம் மொத்தமும் அவனைக் கும்மியது.

“டேய் ஒரு பச்சபுள்ளைய புள்ளனு பாக்காம அத்தனை பேரும் இப்படி அடிக்கிறீங்களே! உங்களுக்கெல்லாம் தம்பியா பொறந்ததுக்கு” எனப் போலியாய் கண்ணைக் கசக்கினான்.

நந்தினி “இவன் ஃபஸ்ட் நைட்டுக்கு மாயாண்டிகுடும்பம் படத்துல குழாய் கட்டி பாட்டு போடுவாங்கள அது மாதிரி தாண்டாப் போடனும். அதுவும் மருதமலை மாமணியே முருகையானு பக்திப்பாட்டா போட்டு உன் ஃபஸ்ட் நைட்ட கெடுக்குறேனா இல்லையா பார்”

ஆதி “அடியேய்! அந்த அரவேக்காடு தான் வயசுக்கேத்த வேல பாக்காம இருக்குனா, நீயும் அவனுக்குச் சமமா பேசுற பாரு. வயசுக்கு வந்த புள்ளைய வேற பக்கத்துல வச்சுட்டு” என்றவன் அருணை தீயாய் முறைத்தான்.

அதில் பயந்தவன் “தூக்கம் வருது” எனப் போர்வையால் முகத்தை மூடித் தூங்குவது போலப் படுத்துக் கொண்டான். பின் அனைவரும் அவரவர் இடத்தில் படுத்து உறக்கத்தை தழுவினர்.

திவிக்கு இன்று அவ்வளவு தூரம் காரைத் தனியே ஓட்டிவந்த அலுப்பில், கண்கள் தூக்கத்திற்காக ஏங்கினாலும், இங்கிருந்த வெக்கையால் அவளால் தூங்க முடியவில்லை. ரூமில் ஜன்னல் கதவு என அனைத்தையும் திறந்து வைத்தாலும் தூங்க முடியவில்லை. கடைசியில் அவளும் பெட்ஷீட் சகிதம் மாடிக்கு சென்றுவிட்டாள்.

அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தனர் மகி நடுவிலும் அவளுக்கு இருபுறமும் நந்தினி மற்றும் மஹா உறங்கினர். நந்தினி அருகில் ஆதித்யனும் மஹா அருகில் அருணும் அவனுக்கு அருகில் அக்னீயும் படுத்திருக்க அக்னீயின் அருகில் போர்வையையை விரித்து படுத்தாள் திவி.

இரவில் இருளில் பயமும், உடல் அசதியும் சேர அக்னியை ஒட்டிக்கொண்டு உறங்கினாள். தன்னருகில் யாரோ இருப்பதை உணர்ந்த அக்னீ கண்டது, தன்னை நெருங்கி தன்னுடன் ஒட்டிக் கொண்டு உறங்கும் தன் மனைவியை தான்.

தன்னுடன் நெருக்கமாக படுத்திருக்கும் தன் மனைவியைப் பார்த்தவனின் மனம் என்ன நினைக்கிறது என்றே தெரியவில்லை. அவள் மீது காதல் கொண்ட மனதுக்கு குளுகுளுனும் இருக்கு, அவளை வெறுக்கும் மனதுக்கு திகுதிகுன்னும் இருக்கு.

விடியும் வரை அவன் உறங்கவில்லை, அவளையே பார்த்துக் கொண்டு படுத்திருந்தான் அக்னீ. அவளோ மொட்டைமாடி இதமான குளிரில் சுகமாக உறங்கினாள்.

இப்பயனம் அவர்களுக்கிடையே மாற்றம் கொண்டுவருமா? பொறுத்திருந்து பார்ப்போம்.
 

Lufa Novels

Moderator

யாரோ அவன்?? யாரோ இவள்??​

அத்தியாயம் 22​

Jt7Tjp2WMsyAi6ydfsHcud8-Dmw5Zc_zR6z2wDsvzEe9okLSD-qkX4QdK9MRQGB19rnHRCCOhEs5CCWqYT8lWfEIQAl7KyZoBvZofOaLhFaaQtxVbf1sQFm1gf1-2n6No098BIO6alSkncSPn4i0-5A

You are my pumpkin pumpkin
Hello honey bunny…
I am your dumpling dumpling
Hello honey bunny…
Feeling something something
Hello Honey Bunny…
Honey Bunny, toko toko…

How many times lady love had given me missed calls
What to tell you lazy luck no battery at all
Idhar udhar heart punching like a ping pong ball ball ball ball

Tring tring tring…
hello honey bunny…
Feeling something something…
Hello honey bunny…
Feeling something something…
Hello honey bunny, honey bunny toko toko…

laa... laa laa laa laa laa la la…

ஆங்கில பாட்டு தன் வீட்டிலிருந்து சத்தமாக வெளியே வரைக் கேட்க, அக்னீ புருவ முடிச்சுடன் வீட்டிற்குள் வந்தான். சத்தம் பின்னால் முற்றத்திலிருந்து கேட்டது.

அங்குச் சென்று பார்க்க, அவன் அத்தை கௌரியின் பிள்ளைகளான ஶ்ரீநிதி, ஶ்ரீநிவாஸூடன் திவி ஆடிக்கொண்டிருந்தாள். சுத்தி நிறைய குட்டீசும், வீட்டினரும் அமர்ந்து கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர்.

இவர்கள் கூத்தில் ஏற்கனவே எரிச்சலிருந்த அப்பத்தா அக்னீ வரவும்,

“பார்த்தியா ராசா உன் பொண்டாட்டி செய்யுற வேலையை. அவளும், அவ உடுப்பும். பொட்டபுள்ள மாதிரி இருக்காம டங் டங்குனு ஆடிட்டு இருக்கா” எனப் போட்டுக் கொடுத்தது.

அப்பத்தாவிற்கு முதலிலே திவியை அவ்வளவாகப் பிடிக்கவில்லை. இதில் திவி வந்ததிலிருந்து அக்னீயை “ஈஸ்வர் ஈஸ்வர்” என அழைத்து அவனைச் சீண்ட நினைக்க, அப்பத்தாவுக்குத் தான் கடுப்பானது.

தன் கணவனின் அம்சமாகவே பிறந்த பேரனுக்கு அவரின் பேயரையே வைத்து, பொத்திப் பொத்தி வளர்க்கும் அப்பத்தா முன்னாடியே அவனைப் போடா வாடா என்றதுமில்லாது, அவர் கணவர் பேரையே வைத்து இவள் கூப்பிட்டாள் அவருக்குக் காண்டாகாதா? இல்லையா?

அப்பத்தாவும் அவளிடம் ஈஸ்வர் என அழைக்காதேயெனக் கூறியனார் தான். ஆனால் ஜெயந்தி போல மென்மையாகக் கூறியிருந்தாள் அவளும் கேட்டிருப்பாள். ஆனால் அக்னீ போலத் திமிராகச் சொல்ல, ‘நீ என்ன சொல்வது! நான் என்ன கேட்பது!’ என மீண்டும் மீண்டும் அப்படியேத் தான் அழைக்கிறாள்.

ஜெயந்திக்கூட மெதுவாகத் திவியிடம் “அந்த பேரைச் சொல்லாதம்மா” எனக்கூற “சும்மா ஆண்ட்டி! கிரானிய வம்பிழுப்பது ஜாலியா இருக்குல அதான்” என அவரையும் சமாளித்துவிட்டாள்.

சும்மாவே திவி என்றாலே அக்னீக்கு ஆகாது அதில் அவளின் டிரெஸிங் சொல்லவே வேண்டாம். இதில் தன் அப்பத்தா வேறு அவளையும் அவள் உடுப்பையும் பற்றிக் கூறியது எரிச்சலை உண்டாக்கியது. அப்பத்தாவும் பேரனும் இப்படி பேசும் அளவுக்கு அவள் ஒன்றும் முகம் சுளிக்கும் படி போடவில்லை. ஒரு டீசெண்டான டிராக் பேண்டும் டீ ஷர்ட்டும் தான் போட்டிருந்தாள்.

அக்னீ வந்தவுடனே அருண் கையிலிருந்த போனைப் பிடிங்கி பாட்டை நிறுத்திவிட்டு முறைக்க, அனைத்து குட்டீஸூம் அவரவர் வீட்டுக்கு ஓடிவிட்டனர்.

“இந்தா பாரு இது ஒன்னும் பப் கிடையாது, பாட்டைப் போட்டுக் கூத்தடிக்க. இதெல்லாம் உன் வீட்டோட நிறுத்திக்கோ. இது கிராமம், இங்க எப்படி இருக்கனுமோ அப்படி இரு. முதல்ல ஒழுக்கமா டிரெஸ் பண்ணுடி” பல்லைக் கடித்துக் கொண்டு கூறினான்.

வீட்டினர் அனைவருக்கும் வருத்தமாக இருந்தது. அவள் வேண்டுமென்றே ஆடவில்லை, பசங்களுக்கு ஸ்கூல் காம்படீஷனுக்காகத் தான் சொல்லிக் கொடுத்துக்கொண்டிருந்தாள். அனைவரும் திவி கோபப்படுவாளோ என அவளையே பதட்டமாகப் பார்த்தனர்.

அவளோ இதற்கும் எந்த ரியாக்‌ஷனும் கொடுக்கவில்லை. முகத்தில் சிறு சுணக்கம், கண்களில் சிறுதுளி நீர் என எதிர்ப்பார்த்த அக்னீக்கு, புருவம் உயர்த்தி திமிரான ஒரு பார்வையே கிடைக்க, அவளைத் தீயாய் முறைத்து விட்டுப் பாத்ரூம் சென்றான். திரும்பி வந்தனுக்கு மூச்சு முட்டியது.

என்னதான் சுபத்ரா திவிக்கு மேல்தட்டு மாடர்ன் வகை துணிகளை எடுத்தாலும், திவிக்கு எந்த இடத்தில் எந்த வகையான துணிகளைப் போட வேண்டும் என்பதை மாலினி பழக்கியிருக்கிறார். அதனால் இங்கு வரும்போதே அவள் கிராமத்தில் கண்களை உறுத்தாத வகையான துணிகளையே கொண்டுவந்துள்ளாள்.

அக்னீ பேசியது தவறு அவனுக்குப் பதிலடி கொடுக்க நினைத்தவள் தன் துணிகளை ஆராய்ந்தாள். அதில் அவள் நினைத்த மாதிரியான ஒரு டிரெஸ்ஸூம் இல்லை. தேடிப் பிடித்து ஒரு டிரெஸை எடுத்தாள்.

அது கழுத்து கை எதுவுமே இல்லாமல் மார்பிலிருந்து ஆரம்பித்து முட்டி வரைக்குமான ஒரு ஸ்பெகெட்டி டாப். இருபுறமும் ஒரு மெல்லிய கயறால் முன்புறத்தையும் பின்புறத்தையும் இணைத்து இருக்கும். அதன் மேல் டெனிம் கோடும், கீழே லெக்கினும் இருக்கும். இவள் கோட்டும் போடாமல் லெக்கினும் போடாமல் வெறும் டாப் மட்டுமே போட்டு நின்றாள்.

நல்ல வேலையாக வீட்டில் எந்த ஆண்களும் இல்லை அக்னீயைத் தவிற. வீட்டில் இருந்த அருணும் அக்னீ திவியை திட்டவும் வெளியே சென்றுவிட்டான். அப்பத்தாவைத் தவிற அனைவரும் அக்னீ என்ன சொல்வானோ எனப் பதட்டத்தில் இருந்தனர்.

“இந்தா புள்ள என்ன இப்படி உடுப்ப போட்டுட்டு நிக்குற? ஊருல எவனாவது பார்த்தா நாக்குமேல பல்லப்போட்டு அசிங்கமா பேசுவாய்ங்க! வேற உடுப்ப மாத்து” என அப்பத்தா திவியிடம் கத்திக் கொண்டிருக்க, அப்பத்தான் அக்னீ என்ற சிலைக்கு உயிர் வந்தது.

அவளைக் கையைப் பிடித்து அறைக்குள் இழுத்துச் சென்றவன்,

“ஏண்டி இப்படி டிரெஸ் போட்டு என் மானத்த வாங்குற?”

“ஏன்? இதுக்கென்ன? நல்லாத்தான இருக்கு. என்னமோ புதுசா பாக்குற போலப் பாக்குற? நான் எப்பவும் இப்படி தான போடுவேன். இதுல உன் மானம் எங்க போச்சு? நீயா போட்டுறுக்க? நான் தான போட்டுறுக்கேன்”

“இங்க பாரு இது கிராமம். இங்க டீசெண்டா டிரெஸ் பண்ணு. உங்க ஊருல நீ இதுவும் கூட இல்லாம போ. எனக்கென்ன? இங்க எங்களுக்குனு ஒரு மரியாதை இருக்கு”

“ஐ டோண்ட் கேர் அபவுட் தட்”

“சொல்லுறத கேளுடீ. என்ன மிருகமா மாத்தாத” அவள் அவனைக் கண்டுகொள்ளவே இல்லை. அவனுக்குத் தெரிந்து போனது ‘தான் பேசியதுக்கு தான் பழிவாங்குறா. அவகிட்ட இப்போ என்ன பேசினாலும் எடக்கு மடக்காத் தான் பண்ணுவா’ என நினைத்தவன்,

“சரி சாரி. எதோ கோபத்துல உன்ன திட்டிட்டேன். இனிமே உன்னோட டிரெஸிங் பத்தி எதுவும் பேசமாட்டேன். தயவு செய்து வேற டிரெஸ் போடு” என இறங்கி வந்தான்.

“வெளிய போ. சேஞ்ச் பண்ணிட்டு வாரேன்” என்றவள் கோட்டும் லெக்கினும் போட்டு வெளியே வந்தாள்.

இப்படி அக்னீ என்ன பேசினாலும் அதற்கான பதிலடியை சத்தம் இல்லாமல் செய்தாள் திவி. அவனே இனி அவளிடம் வார்த்தைகளை அளந்து, யோசித்து, கவனமாகப் பேச வேண்டும் என நினைக்கும் அளவுக்குச் செய்துவிட்டாள்.

இங்கு வந்ததிலிருந்து தினமும் ஒரு வீட்டிற்கு விருந்துக்குச் சென்று வந்தார்கள் அக்னீ, ஆதி ஜோடிகள். அனைவரையும் ஓரளவுக்கு தெரிந்து கொண்டாள் திவி. ஒரு சிலரைத் தவிர அனைவரும் அவளிடம் பாசமாகப் பேச அவளும் அவர்களுடன் ஒட்டுதல் காட்டினாள்.

காலையில் சீக்கிரமே எழுந்து விட்டாள் திவி. இங்கு வந்ததிலிருந்து உடற்பயிற்சி, நடைபயிற்சியென எதுவும் செய்யவில்லை. அதனால் இன்று நடைபயிற்சி சென்றால் நன்றாக இருக்கும் எனத் தோன்றியது.

“இங்க யாரும் வாக்கிங் எல்லாம் போக மாட்டீங்களா?” என அருணிடம் கேட்க,

“க்கும் துறை எட்டுமணி ஸ்கூலுக்கு ஏழறைக்குத் தான் எந்திரிப்பாரு. குளிப்பானா தொடச்சுப்பானே தெரியல” என அருணின் மானத்தை கூறு போட்டுவிட்டார் ஜெயந்தி.

மஹாவும், அருணும் பள்ளிக் கல்லூரிக்கு அவசரமாகக் கிளம்புவதால் நந்தினியை வாக்கிங் செல்ல அழைக்க அப்போது தான் எழுந்தவள், டயர்டா இருக்கு என வரவில்லை என்றாள்.

மகியை அழைக்க இனியனைப் பார்க்கனும் என அவளும் மறுத்துவிட்டாள். அக்னீ வீட்டில் தான் இருந்தான் ஆனால் இவள் அவனிடம் தான் எதுவுமே பேசுவதில்லையே! அந்நேரம் வெளியில் வெற்றி எங்கோ கிளம்பினான்.

“வெற்றி எங்க போறீங்க?”

“சும்மா வாக்கிங் தான் போறேன்”

“சூப்பர். நானும் வாக்கிங் போனனும் தான் ஒவ்வொருத்தரையா கூப்பிட்டு இருந்தேன். டூமினிட்ஸ் நானும் வரேன் சேர்ந்து போலாம்” என்றவள் உடை மாற்றச் சென்றாள்.

இங்கு அக்னீயோ கடுகடுவென அமர்ந்திருந்தான் ‘எல்லாரையும் கேட்பா, இங்க புருஷன்னு ஒருத்தன் குத்துக்கல்லு போல உக்கார்ந்திருக்கேன், என்னை ஒரு வார்த்த கேட்கல, அந்த நாய் கூட வாக்கிங் போறாளாம். பொறுக்கி பய கூடலாம் இவளுக்குச் சகவாசம்’ என நரம்பு புடைக்க அவளை முறைத்தான்.

ஆனால் அவளோ அவனைத் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. வெற்றியுடன் வாக்கிங் சென்றுவிட்டாள். அவர்கள் சென்று கொஞ்ச நேரம் வீட்டில் இருந்தவனுக்கு வீட்டில் இருக்க முடியாமல் ஆதியின் வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினான் அவர்களைத் தேடி.

எப்படியும் ரோட்டுக்கு தான் போயிருப்பார்கள் என ரோட்டுமுக்கு
வரை வந்தவன் கண்களில் அவர்கள் இருவரும் பேசிக் கொண்டே நடப்பது தெரிந்தது. பைக்கில் அவர்களைத் தாண்டிச் சென்றான்.

“என்னங்க உங்க புருஷர் உங்கள பின்னாடியே ஃபாலோ பண்றாரு போல”

“அப்படியெல்லாம் இருக்காது. எதாவது கடைக்குப் போவான்”

“இந்தப் பக்கம் கடையெல்லாம் இல்லைங்க, காலேஜ், ஸ்கூல் அப்புறம் சின்ன சின்னக் கிராமம் தான் இருக்கு. மெயினுக்கு போகனும்னா அந்தப் பக்கம் போகனும்”

“அப்போ எதுக்கு இந்தப் பக்கம் போறான்?”

“உங்கள என்கிட்ட இருந்து காப்பாத்துறானாம்” எனக்கூற அவள் பக்கெனச் சிரித்துவிட்டாள்.

“ஏனாம்? நீங்க என்ன முழுங்கிடுவீங்களா?”

“அவனுக்கு என்னைக் கண்டாலே ஆகாது” என அவன் கூற, திவிக்கு சுவாரசியமாக இருந்தது. இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே திரும்பினான் அக்னீ.

திவியோ படாரென “பிரெண்ட்ஸ்” எனக் கைகளை நீட்ட, அவனும் அவள் கையைப் பிடித்துக் குலுக்கினான். இதைப் பார்த்த அக்னீ கண்கள் அக்னீகுழம்பாய் இருந்தது. பைக்கை நிறுத்தாமல் சென்றுவிட்டான்.

அவர்கள் இரண்டு நிமிடம் கூட நடந்திருக்க மாட்டார்கள் மீண்டும் அவர்களை முறைத்தவாறே அவர்களைக் கடந்து சென்றான்.

“என்ன வெற்றி உங்க அண்ணன் லூசாய்ட்டானா? ஆமா அவன் உங்களுக்கு அண்ணன் தானே?”

“இரண்டு பேருக்கும் ஒரே வயசு தான். அவன் எனக்கு நாலு மாசம் முன்ன பிறந்தவன் அவ்ளோ தான். ஆனா படிச்சது எல்லாம் ஒரே கிளாஸ்ல தான். அப்போதிருந்து எங்களுக்குள்ள ஒத்துப் போகாது”

“அதுசரி அப்போவே இரண்டு பேருக்கும் கோல்டுவார் ஸ்டார்ட் ஆயிடுச்சா? நான் உங்கள எப்படி கூப்பிடுறது? ஆதி ப்ரோ மாதிரி வெற்றி ப்ரோனு கூப்பிடவா?”

“அட சும்மா பேர் சொல்லியே கூப்பிடுங்க. நோ மோர் ஃபார்மாலிட்டீஸ்”

“ஹ்ம்ம் உங்க ஃபுல் நேம் என்ன?”

“வெற்றிவேல்”

“ஒஹ். இருங்க இப்போ அவன் திரும்பி வரட்டும்” என அவனை எதிர்பார்த்துக்கொண்டே வர மீண்டும் அவன் வந்தான். அக்னீ அருகில் வரும்போது

“வேலன்! யூ ஹேவ் எ நைஸ் நேம் மேன்!” எனக்கூறி அவன் தோளில் அடித்து அக்னீயின் பீ.பியை ஏத்தினாள். அதில் கடுப்பானவன் அவள் அருகில் வண்டியை நிறுத்தி,

“வா வீட்டுக்குப் போலாம். போதும் நடந்தது. அம்மா கூப்பிடுறாங்க”

“ஆண்ட்டி கிட்ட வாக்கிங் போறேனு சொல்லிட்டு தான வந்தேன். நான் வேலன் கூட நடந்தே வீட்டுக்கு வாரேன்”

“அவன் பேரு வெற்றி. நீ அப்படியே கூப்புடு”

“எனக்கு என்ன பிடிச்சிருக்கோ அப்படித் தான் கூப்பிடுவேன். வேலன் உங்களுக்கு இந்த நேம் சொல்லிக் கூப்பிடுறதுல எனி பிராப்ளம்?” என வெற்றியிடம் கண்ணடித்துக் கேட்டாள்.

“நோ பிராப்ளம் மீனுக்குட்டி” என அக்னீயின் தலையில் குண்டைத் தூக்கிப் போட்டான்.

“குட்டி கிட்டின பல்லப் பேத்துடுவேன்”

“ஈஸ்வர். மைண்ட் யுவர் டக்ங். ஹீ இஸ் மை பிரெண்ட்”

“இப்போ நீ என்னோட வருவீயா? மாட்டீயா?”

“யு கோ மேன். நான் என் பிரண்ட் கூட வாரேன்” எனக்கூற, தரையில் காலால் உதைத்துவிட்டு வண்டியை விருட்டென எடுத்துக் கொண்டு போனான். இருவரும் அவனை பார்த்துச் சிரித்துவிட்டு திரும்பி வீட்டை நோக்கி நடந்தனர்.

“உங்க மேல ரொம்ப பொஸஸிவ்வா இருக்கான் போல”

“அப்படியெல்லாம் இல்ல வெற்றி, அவன் என்னையும் உங்கள போலக் காரணமே இல்லாம திட்டுவான்”

“இல்லையேங்க அவன் பொண்ணுங்க கிட்ட ரொம்ப ஸாப்ட்டா தான் பேசுவான்”

“தெரியல. பட் என்கிட்ட அவன் ரூடா தான் பேசுவான்”

“கோபமா இருக்கானோ உங்க மேல?”

“இருக்கலாம். முன்னாடி அவன நான் ரொம்ப திட்டிருக்கேன். அதுக்கு தான் அப்படி இருக்கான் போல”

“சரி பண்ணுங்க. பொண்ணுங்க நினைச்சா முடியாததா?”

“ஏன் நாங்க தான் முயற்சி பண்ணனுமா? பசங்க முயற்சி பண்ணுங்கேன் ஒரு சேஞ்சுக்கு” என்றவள் வழக்கம்போலத் தோளைக் குலுக்கினாள். பின் எதோ ஞாபகம் வந்தவளாக,

“அப்புறம் மயிலே மயிலேனா இறகு போடாது, நாம தான் நமக்கு தேவையானதை போராடி வாங்கனும். இது பொண்ணுகளுக்கு மட்டுமில்ல பசங்களுக்கும் பொருந்தும்” என்றாள் ஒரு மார்கமாக.

இருவரும் வீட்டிற்கு திரும்பி வர வீடே சிரிப்பும் மகிழ்ச்சியுமாக இருந்தது. காலையிலேயே நந்தினி வாந்தி எடுக்க, நாளும் அவளுக்குத் தள்ளிப் போயிருந்தது. ஆதியிடம் அவள் நேற்றே தன் சந்தேகத்தைக் கூறவும் நேற்றே அவன் பிரக்னென்சி கார்ட் வாங்கிவந்திருந்தான்.

இப்போ அதில் பரிசோதிக்க அது அழகாய் இரு சிவப்பு கோட்டைக் காட்டி நந்தினியின் கண்ணங்கள் இரண்டையும் அழகாகச் சிவக்க
வைத்தது.

ஜெயந்தி உடனேயே பாயாசம் செய்து தன் மகிழ்ச்சியை காட்டினார். விஷயம் தெரிந்த இவர்களும் அவர்களுக்கு வாழ்த்தைத் தெரிவித்தனர். அக்னீக்கு சித்தப்பாவான மகிழ்ச்சியில் இவர்கள் மேலுள்ள கோபம் கூடப் பின்னுக்கு சென்றுவிட்டது.

திவியும் மிக்க மகிழ்வுடன் ஜெயந்தி கொடுத்த பாயாசத்தை ருசித்துக் குடிக்கும்போது,

“நீ எப்போ சந்தோஷமான சேதி சொல்லப்போற?” என அப்பத்தா கேட்ட கேள்வியில் ஸ்தம்பித்து நின்றாள்.
 
Top