எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

பாவை கைப்பாவையோ? - கதை திரி

Status
Not open for further replies.

NNK18

Moderator
eiYWZKY16145.jpg

Screenshot_20231231-183156_Google.jpg

Screenshot_20231231-182705_Google.jpg


அத்தியாயம் 1



அந்த வீட்டின் கதவு பாதி திறந்திருக்க, கதவிற்கு நேரெதிரே திருப்பி போடப்பட்டிருந்த நீள்சாய்விருக்கையின் விளிம்பிலிருந்து இரு பாதங்கள் மட்டும் தொங்கிக் கொண்டிருந்ததை பார்த்தபடியே உள்ளே நுழைந்தாள் கீர்த்தி.



“அடியேய் சோம்பேறி, கதவை மூடிக்கோன்னு சொல்லிட்டு தான போனேன்? அதைக் கூட பண்ணாம என்ன பண்ணிட்டு இருக்க?” என்று கேட்டபடியே வாங்கி வந்திருந்த காய்கறிகளை குளிர்சாதனப்பெட்டிக்குள் அடுக்கினாள் கீர்த்தி.



அதற்கும் எந்த பதிலும் வராமல் போக, “ப்ச் ஆரபி, உன்னை தான் கேட்குறேன்.” என்று சலித்தபடி நீள்சாய்விருக்கைக்கு அருகே வந்தாள் கீர்த்தி.



ஆரபியோ, ‘யாருக்கு என்ன விருந்தோ’ என்ற மனநிலையில், அவளின் அலைபேசியுடன் ஐக்கியமாகி இருந்தாள்.



அதில் எரிச்சலான கீர்த்தியோ, அவளின் அலைபேசியை பறிக்க, அப்போது தான் நிகழ்விற்கு வந்ததை போல, “கீர்த்தும்மா இன்னுமா நீ கடைக்கு கிளம்பல?” என்று ஆரபி வினவ, அவளை மேலும் முறைத்த கீர்த்தியோ, “நான் கடைக்கு போயிட்டே வந்துட்டேன் எருமை. சுத்தி என்ன நடக்குதுன்னே தெரியாம, அப்படி எதுல தான் மூழ்கி இருப்பியோ?” என்றாள்.



“ஹ்ம்ம், புகழ்ங்கிற போதையில தான் மூழ்கிட்டேன் கீர்த்து.” என்று ஆரபி கண்ணடிக்க, “க்கும், ஒரு ஓட்டை கதையை எழுதிட்டு, அதுக்கு நாலு பேரு ‘நைஸ்’னு கமெண்ட் பண்ணதுல, உனக்கு புகழ் வந்துடுச்சாமா?” என்று தோழியை கேலி செய்தபடி அவளருகே அமர்ந்தாள் கீர்த்தி.



“ஷு, பொறாமை டி உனக்கு! பாரு, நீயும் தான் ஆஃபிஸ்ல ஓடா தேயுற அளவுக்கு வேலை பார்க்குற. என்னைக்காவது உன் மேனேஜர் பாராட்டியிருக்காரா? இங்க பாரு, ஒரே கதை... அதை இன்னும் முடிக்க கூட இல்ல, அதுக்குள்ள எத்தனை கமெண்ட்ஸ்? இந்த ஸ்பீட்ல போனா, இன்னும் அஞ்சு வருஷத்துல என்னை நீ ‘புக் சைனிங் செரிமனி’ல தான் பார்ப்ப கீர்த்து.” என்று தூங்கி எழுந்து கழுவப்படாத எண்ணெய் படிந்த முகம் மினுமினுக்க கூறினாள் ஆரபி.



“எதே, ‘புக் சைனிங் செரிமனி’யா? கொஞ்சமாச்சும் ரியாலிட்டிக்கு வாடி. அதுவும் இந்த காப்பி கதைக்கு எல்லாம் அவ்ளோ சீன் இல்ல.” என்று கீர்த்தி கூறியதும் பொங்கி விட்டாள் ஆரபி.



“காப்பி கதையா? எவ்ளோ தைரியம் இருந்தா காப்பி கதைன்னு சொல்லுவ? உனக்கு தெரியுமா, மொத்தமே ஏழு ஸ்டோரி லைன் தான் இருக்கு! அதை தான் மாத்தி மாத்தி எழுதணும்.” என்று மூக்கு விடைக்க பேசிய ஆரபியோ, “வந்துட்டா காப்பி கதை பால் கதைன்னு!” என்று முணுமுணுக்க, அவளை பார்த்து சிரித்த கீர்த்தியோ, “ஸ்டோரி லைன் காப்பின்னா பரவால, இங்க ஸ்டோரியே காப்பியா இருந்தா என்ன பண்றது?” என்று மேலும் சீண்டினாள்.



“அப்படி என்ன பெருசா காப்பி அடிச்சுட்டேன்?” என்று ஆரபி வினவ, “பணக்கார ஹீரோ, பாவப்பட்ட ஹீரோயின், சித்தி கொடுமை, தங்கச்சி பொறாமை – இதெல்லாம் சிண்டரெல்லா கதைல வரது தான? இதையே எத்தனை வருஷமா படிக்க?” என்றாள் கீர்த்தி.



“நீ இப்போ என்ன பண்ணிட்டு இருக்க தெரியுமா? என்னை மட்டுமில்ல ஒரு ஜெனரையே குறை சொல்ற!” என்று ஆரபி உதட்டை பிதுக்க, “சரி, உன் கதைல நீ என்ன புதுசா பண்ணியிருக்க சொல்லு பார்ப்போம்.” என்றாள் கீர்த்தி.



“என்ன இப்படி கேட்டுட்ட? என் கதையில வர வில்லி கேரக்டரை எப்படி செதுக்கி இருக்கேன் பார்த்தியா? யாரா இருந்தாலும் அவளைப் பத்தி படிக்கிறப்போ ஆட்டோமேட்டிக்கா வெறுப்பு வந்துடும். நீ வேணும்னா கமெண்ட்ல பாரேன், முக்கால்வாசி பேரு அவளை திட்டியிருப்பாங்க. இதுவே, அந்த கேரக்டருக்கு கிடைச்ச மிகப்பெரிய வெற்றி தான?” என்று பெருமையாக பேசினாள் ஆரபி.



“அந்த பணக்கார கேரக்டரா? இல்ல தெரியாம தான் கேட்குறேன், வில்லின்னா, அவ பணக்காரியா இருக்கணும்; பிடிவாதம் பிடிச்சவளா இருக்கணும்; பொறாமை படுறவளா இருக்கணும்; முக்கியமா, ஹீரோக்கு பிடிக்கலைன்னாலும் அவன் பின்னாடி சுத்தணும் – இப்படி தான் கேரக்டர் டிசைன் பண்ணுவீங்களா? இதுலயிருந்து என்ன சொல்ல வரீங்க? பணக்காரியா இருந்தா, அவளுக்கு இந்த குணாதிசயங்கள் தான் இருக்கணுமா?” என்று கீர்த்தி கேட்க, “கூல் கூல் கீர்த்தும்மா, எதுக்கு இவ்ளோ பொங்குற? ஆஃப்டரால் வில்லி தான? அதுவுமில்லாம, ஒரு ஃபிக்ஷனல் கேரக்டருக்கு இவ்ளோ பொங்க கூடாது கீர்த்தி.” என்று தோழியை சமாதானப்படுத்தினாள் ஆரபி.



“ப்ச், ஆஃப்டரால் ஃபிக்ஷனல் கேரக்டர்னு இல்ல ஆரபி. நிறைய மக்களோட மெண்டாலிட்டி இப்படி தான் இருக்கு. ஒரு பொண்ணு பையனை துரத்தி துரத்தி லவ் பண்ணா, ஆட்டிட்யூட் காமிச்சா, அவ வில்லி. அதையே பையன் பண்ணா, அவன் ஆன்டி-ஹீரோ! என்ன லாஜிக்கோ?” என்று கீர்த்தி புலம்ப, “அட கீர்த்தி, ஃபிக்ஷனல் கதைக்கெல்லாம் லாஜிக் பார்க்காத. கதை படிக்கிற அந்த கொஞ்ச நேரம், அந்த உலகத்துக்குள்ள போனோமா, கதையை படிச்சு முடிச்சதும் அந்த உலகத்தை மொத்தமா மறந்து ரியாலிட்டிக்கு வந்தோமான்னு இருக்கணும். ரெண்டையும் போட்டு கன்ஃப்யூஸ் பண்ணா, இப்படி தான் புலம்பிட்டு இருக்கணும்.” என்று விளக்கம் கூறினாள் ஆரபி.



சில நொடிகள் மௌனத்தில் கழிய, “மேடம், இப்படியே உட்கார்ந்திருந்தா பிரேக்-ஃபாஸ்ட் அதுவா ரெடியாகுமா?” என்று ஆரபி வினவ, “என்னை சொல்றதுக்கு முன்னாடி, நீ போய் பல்லை விளக்கு டி சோம்பேறி.” என்றபடியே எழுந்து சமையலறைக்கு சென்றாள் கீர்த்தி.



“நாங்க சோம்பேறியாவே இருந்துக்குறோம். நீங்க சுறுசுறுப்பா வேலையை பாருங்க பிஸி-பி!” என்று உதட்டை சுழித்தபடி ஆரபி அவளின் அறைக்குள் செல்ல, சமையலறையிலிருந்தே, “அடியேய் குங்பூ பேன்டா, முதல்ல உன் மூஞ்சியை கண்ணாடில பாரு டி, எப்படி இருக்குன்னு.” என்று கேலி செய்தாள் கீர்த்தி.



ஆரபியும் கண்ணாடி முன் நின்று முகத்தை பார்க்க, அவள் அனுமதியில்லாமலேயே அவளின் எழுத்துக்கள் அவள் எண்ணத்தில் வந்து போயின.




*****



திருத்தப்பட்ட புருவம், அடர்ந்த இமைகளை கொண்ட நயனங்கள், சிறிய மூக்கு, கவர்ச்சியான இதழ்கள், மினுமினுக்கும் கன்னம் என்று கட்டிலில் ஆழ்ந்த சயனத்தில் இருந்த பைரவியின் முகவடிவை அளந்து கொண்டிருந்தாள் வைஷ்ணவி.



அப்போது சட்டென்று கண்விழித்த பைரவியோ எதிரிலிருந்த வைஷ்ணவியை பார்த்து, “இடியட், எத்தனை முறை சொல்லியிருக்கேன், காலைல உன் மூஞ்சியை எனக்கு காட்டக்கூடாதுன்னு? உன் மூஞ்சியை பார்த்தா, நான் போற வேலை முடியுமா? போச்சு, இன்னைக்கு முக்கியமான கான்டிராக்ட் வேற சைன் பண்ணனும். உன் மூஞ்சில வேற முழிச்சுருக்கேன், இனி அந்த காரியம் உருப்பட்ட மாதிரி தான்.” என்று கோபத்தில் பொரிந்து கொண்டிருந்தாள்.



அதைக் கேட்ட வைஷ்ணவியோ உணர்ச்சி துடைத்த முகத்துடன், “சாரி அக்கா...” என்று முடிக்க கூட இல்லை, “யாருக்கு யாரு அக்கா? நீயே ஒரு லோ கிளாஸ்! உனக்கு நான் அக்காவா?” என்று பைரவி கத்திக் கொண்டிருக்கும் போதே உள்ளே நுழைந்தார், பைரவியின் அன்னை லாவண்யா.



“பேபிம்மா, மார்னிங்கே எதுக்கு இப்படி கத்திட்டு இருக்க? இப்படி டென்ஷனானா, உன் ‘பியூட்டி ஸ்லீப்’ எல்லாம் வேஸ்ட்டாகிடுமே ஸ்வீட்டி!” என்று லாவண்யா கூற, “ஹெல் வித் இட் மாம். இவளை யாரு என் ரூமுக்கு வர சொன்னது?” என்று பைரவி கத்த, அப்போது தான் அவரின் வளர்ப்பு ‘மகளான’ வைஷ்ணவியை பார்த்தார் லாவண்யா.



“ஹே, நீ பேபி ரூம்ல என்ன பண்ற?” என்று லாவண்யா கேட்க, “க்ரீன் டீ குடுக்க வந்தேன் சித்தி.” என்றாள் வைஷ்ணவி அமைதியாக.



முகத்தை சுழித்தபடி அவளை பார்த்த லாவண்யாவோ பைரவியிடம் திரும்பி, “ப்ச் பேபிம்மா, அதுக்கு எதுக்கு இப்படி கோபப்படுற? அவ உனக்கு வேலை தான செய்யுறா?” என்று வைஷ்ணவியை ‘வேலைக்காரி’யாக்கி விட, மனதிற்குள் மரித்தாலும் வெளியே எவ்வித உணர்வையும் வெளிப்படுத்தவில்லை வைஷ்ணவி.



அவளுக்கு தான் இது பழகிய ஒன்றாகிற்றே!



சிறு வயதில் தாய் இறந்து, அவளை பார்த்துக்கொள்ள வேண்டி அவளின் தந்தை லாவண்யாவை மணக்க, அதன் விளைவு, இதோ இப்போது சொந்த வீட்டிலேயே ‘வேலைக்காரி’யாக மாறியிருக்கிறாள்!



தன் இருபது வருட வாழ்வை இருபதே வினாடிகளில் அலசி அது தந்த காயத்தை கண்ணீரில் மறைத்த வைஷ்ணவி, அதற்கு மேல் அங்கு நின்று தாய் – மகள் உரையாடலை கவனிக்க தெம்பில்லாதவளாக, ஒரு அவசர ‘சாரி’யை உதிர்த்து விட்டு, விருட்டென்று அங்கிருந்து சென்றாள்.




செல்லும் அவளையே பார்த்துக் கொண்டிருந்த பைரவியோ, “மாம், எனக்கு இவளைப் பார்த்தாலே எரிச்சலா இருக்கு மாம். என்னதான் என்கிட்ட எல்லாமே இருந்தாலும், ஏனோ இவளைப் பார்க்குறப்போ எல்லாம், ஏதோ என் கைவிட்டு போற மாதிரியே ஒரு ஃபீலிங்.” என்று பைரவி கூற, “ச்சு, அவளெல்லாம் உனக்கு மேட்ச்சே இல்ல பேபிம்மா. அவளை விட்டுத்தள்ளு. இன்னைக்கு நீ ஆர்யனை பார்க்க போற தான? போ சீக்கிரம் போய் கிளம்பு பார்ப்போம். இரு இரு, உன் முகம் பாரு அதுக்குள்ள வாடிப்போயிடுச்சு. இதுக்கு தான், கோபப்படாதன்னு சொல்றது. நீ வா, நான் மசாஜ் பண்ணி விடுறேன்.” என்றார் லாவண்யா.



அவரை கட்டிக்கொண்ட பைரவியோ, “யூ ஆர் தி பெஸ்ட் மாம்.” என்றாள்.



*****



“ச்சு, இப்போ எதுக்கு அந்த வில்லியை பத்தி யோசிச்சேன்?” என்று கண்ணாடியில் தன் முகத்தை பார்த்துக் கொண்டே தனக்குத்தானே கேட்டுக் கொண்டாள் ஆரபி.



சிறிது நேரத்தில் என்ன நினைத்தாளோ, “ஹ்ம்ம், என் கதைல வர வில்லியே, பளபளன்னு முகத்தை வச்சுருக்கா. அவளை உருவாக்கின நானு, இப்படி எண்ணெய் வழிஞ்ச முகத்தோட இருக்கேன்!” என்று வாய்விட்டு கூறியபடி, தன் முகத்தை திருப்பி திருப்பி பார்த்துக் கொண்டவள், பல நாட்களாக அவளின் அலமாறியில் உறங்கிக் கொண்டிருந்த ஃபேஸ் மாஸ்க்கை எடுக்க, சரியாக அதே நேரம், “தோசை ரெடி டி பேன்டா!” என்று கீர்த்தி குரல் கொடுத்தாள்.



கையிலிருந்த மாஸ்க்கை ஒரு பார்வை பார்த்த ஆரபியோ, “தோசை ஆறிப்போனா நல்லா இருக்காது.” என்று ஒரு காரணத்தை கூறிவிட்டு, அவளின் தலையாய கடமையை நிறைவேற்ற சென்று விட்டாள்.




*****



“ஆரு… ஆரு… ஆரு…” என்று அந்த உணவகமே அதிரும் அளவிற்கு கேட்ட கூச்சலில் அங்கிருந்த ஓரிருவரின் பார்வை சத்தத்தை உருவாக்கிய பெண்களை பார்த்து, வெவ்வேறு எதிர்வினைகளை கொடுத்தாலும், அதை மதிக்காமல், தங்கள் உலகத்தில் களிப்புற்றிருந்தனர் தோழிகள்.



“ம்ச், மெதுவா எருமைங்களா, எல்லாரும் நம்மள தான் முறைச்சுட்டு இருக்காங்க.” என்று கீர்த்தி கூறினாலும், மற்றவர்கள் கண்டு கொண்டால் தானே!



“ஆமா ஆரு, இதென்ன திடீர் டிரீட்? உனக்கு வேலை கிடைச்சுடுச்சா?” என்று தோழிகளுள் ஒருத்தி கேட்க, “க்கும், கிடைச்சுட்டாலும்! மேடம் இன்டர்வியூ அட்டெண்ட் பண்ணா தான?” என்று சலித்துக் கொண்டாள் கீர்த்தி.



“ஏன் இன்டர்வியூ அட்டெண்ட் பண்ணல?” என்ற கேள்விக்கு பதில் சொல்லாமல் ஆரபி மௌனம் காக்க, “ஹ்ம்ம், மேடம் முழு நேர எழுத்தாளராக போறாங்களாம்!” என்று கீர்த்தியே பதிலை கூற, கேள்வி கேட்டவளுக்கோ புரையேறியது.



அதற்கு ஏதோ கூற வர, தோழிகளை இடையிட்ட ஆரபியோ, “எடுத்ததும் நெகட்டிவ்வா ஏதாவது பேசுனீங்க, டிரீட் கிடையாதுன்னு உங்களையே பில் செட்டில் பண்ண சொல்லிடுவேன்.” என்று மிரட்ட, அதன்பிறகு வாய் திறப்பார்களா என்ன?



பேச்சு அப்படியே வேறு பாதைக்கு தாவியது!



“சரி, எதுக்கு இந்த டிரீட்?” என்று மீண்டும் அதே கேள்விக்கு வர, “ஹ்ம்ம், வெற்றிகரமா எனக்குன்னு பார்த்த பத்தாவது மாப்பிள்ளையை ரிஜக்ட் பண்ணிட்டேன். அதுக்கு தான் டிரீட்.” என்று கூறிய ஆரபி, அவளுக்கு முன்னிருந்த முலாம்பழச்சாறை வாய்க்குள் சரித்துக் கொள்ள, கீர்த்தி தான் தலையிலடித்துக் கொண்டாள்.



“இவ ஏன் தான் இப்படி பண்றாளோ தெரியல கீர்த்தி. பார்க்குற எல்லா மாப்பிள்ளையையும் வேண்டாம்னு சொல்றா! சரி, அவளுக்கு பிடிச்ச மாதிரி பார்க்கலாம்னா, அதுக்கும் வாயை திறக்க மாட்டிங்குறா! இவளை கரை சேர்க்குறதுக்குள்ள என்னை ஒருவழி பண்ணிடுவா போல! ஏதோ, அங்க உன்கூட இருக்குறதால தான், நான் ஊர்ல கொஞ்சமாச்சும் நிம்மதியா இருக்கேன்!” என்று சற்று முன்னர் ஆரபியின் அன்னை அலைபேசியில் புலம்பியது இப்போது கீர்த்திக்கு நினைவு வந்தது



தோழியின் எதிர்காலத்தை எண்ணி கவலை கொண்டவளாக, “என்னதான் டி உன் பிளான்? வேலைக்கும் போக மாட்டிங்குற, கல்யாணமும் பண்ண மாட்டிங்குற! என்னதான் உன் எதிர்கால திட்டம்?” என்று கேட்டாள் கீர்த்தி.



“ம்ம்ம், வேலை, கல்யாணம் – இதெல்லாம் எல்லாரும் பண்றது தான? அதுல என்ன புதுசா எக்ஸைட்மெண்ட் இருக்கு? எனக்கு அட்வென்ட்சரஸான வாழ்க்கை வாழனும். பேரு, புகழ் கிடைக்கணும்.” என்று ஆசையில் கண்கள் விரிய கூறிய ஆரபியை, ‘இதெல்லாம் எங்க போய் முடியப்போகுதோ!’ என்னும் வகையில் பார்த்தாள் கீர்த்தி.




*****



ஒருவழியாக ஆரபியின் ‘டிரீட்’ முடிந்து வீட்டிற்கு திரும்பினர் தோழிகள் இருவரும்.



இதில், எப்போதும் இல்லாமல், புதிதாக முயற்சிக்க வேண்டும் என்ற ஆசையில் ஆரபி சிறிது மது அருந்தியிருக்க, போதையில் உளறும் அவளை சமாளிக்க போதும் போதும் என்றானது கீர்த்திக்கு!



“ப்ச், இப்போ எதுக்கு டி லேப்டாப் எடுக்குற?” என்று கீர்த்தி அதட்ட, “கீர்த்து, கதையை முடிக்க ஒரு வாரம் தான் இருக்கு. இன்னும் கிளைமாக்ஸ் பாக்கி இருக்கே. அதை இப்போவே முடிக்கணும்.” என்று கையில் மடிக்கணினியுடன் தட்டுத்தடுமாறிய ஆரபியை படுக்கையில் அமர வைத்தாள் கீர்த்தி.



“கீர்த்து, உனக்கு ஒண்ணு தெரியுமா? உன்னை வச்சு தான் என் ஹீரோயினை நான் டிசைன் பண்ணியிருக்கேன். கவலைப்படாத, உனக்கும் ஹீரோக்கும் இடையில வர வில்லியை கொன்னு, உன்னை ஹீரோவோட சேர்த்து வச்சுடுவேன்.” என்ற ஆரபியை சரியாக படுக்க வைத்த கீர்த்தியோ, “எனக்கு வில்லின்னா அது நீதான் டி. எப்படி என்னை படுத்துற பாரு!” என்று கூறிவிட்டு அவளறைக்கு சென்று விட்டாள்.



நடு இரவில் திடீரென்று ஆரபிக்கு விழிப்பு தட்ட, என்ன நினைத்தாளோ சொருகும் கண்களை கட்டுப்படுத்திக் கொண்டு, மடிக்கணினியை திறந்து கதையின் முடிவுரையை எழுத ஆரம்பித்து விட்டாள்.




*****



“யூ பாஸ்***, எவ்ளோ தைரியம் இருந்தா என்னை வேண்டாம்னு சொல்லிட்டு அந்த வேலைக்காரியை கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு சொல்லுவ? அண்ட் யூ பி**, எனக்கு அப்போவே தெரியும், என்னோடதை நீ பறிச்சுட்டு போயிடுவன்னு… நோ நோ, இந்த பைரவி எதுலயும் தோற்கக்கூடாது. என்னை இந்தளவு படுத்துன உங்க ரெண்டு பேரையும் சும்மா விடமாட்டேன்.” என்று கத்திய பைரவி, அருகே இருந்த கண்ணாடி போத்தல்களை உடைக்க, அது அவளின் கையை கீறி குருதியை வழியச் செய்தது.



பெருகி வழியும் இரத்தத்தை கண்டு கொள்ளாமல், எதிரே இருந்த இருவரை நோக்கி பைரவி செல்ல, அவளை தடுக்க வந்தார்…



*****



“ஹையோ, இந்த வில்லியோட அம்மா பேரு என்னன்னு மறந்துடுச்சே!” என்று தூக்கத்தில் புலம்பியபடி, முன்னிருந்த பக்கங்களை மேல்நோக்கி நகர்த்தினாள்.



அந்த பக்கங்கள் நகர நகர அவளின் இமைகள் மெல்ல மூட ஆரம்பித்தன. சில நொடிகளில் அவளின் கைகள் தொய்ந்து விழ, கண்களும் முழுதாக மூடிக் கொள்ள, முடிவுரையை முழுதாக முடிக்காமலேயே உறக்கத்தில் ஆழ்ந்தாள் பாவை.




தொடரும்...


கதைக்கான உங்க கருத்துகளை கீழ இருக்கும் கருத்து திரியில் பகிருங்க.


 

NNK18

Moderator
Screenshot_20231231-183011_Google.jpg

Screenshot_20231231-182851_Chrome.jpg


அத்தியாயம் 2



ஏதோ வித்தியாசமான உணர்வு தோன்ற மெல்ல கண்களை திறந்தாள் ஆரபி. அப்படி விழித்ததும் முதலில் அவள் கண்களை நிறைத்தது வெள்ளை நிற மேற்கூரையும், நடுவில் பெரிதாக நீல நிறத்தில் தொங்கிக் கொண்டிருந்த அலங்கார விளக்கும் தான்.



‘என்னடா இது? வழக்கமா இப்படியெல்லாம் கனவு வராதே நமக்கு!’ என்று யோசித்தபடியே மெல்ல எழ, அவளின் பார்வை அந்த அறையை வட்டமடித்தது.



எங்கும் பணத்தின் செழுமை காட்சியளிக்க, அவற்றை எல்லாம் வாயை பிளந்து பார்த்துக் கொண்டிருந்தாள் ஆரபி.



சுற்றி இருந்தவற்றை வியந்து பார்த்தபடியே கட்டிலை விட்டு இறங்க முற்பட, அங்கு அவளுக்கான காலணி கூட தயாராக வைக்கப்பட்டிருந்தது.



‘என்னடா எது, திரைல பார்த்தது எல்லாம் தரைல இருக்கு!’ என்று ஒருவித உற்சாகத்துடனே அறையை சுற்றி வந்தாள்.



அங்கிருந்த பொருட்களை எல்லாம் தொட்டு தடவி மகிழ்ந்தவளை தன்னை நோக்கி இழுத்தது அந்த ஆளுயர கண்ணாடி.



அதன் அழகில் கவரப்பட்டவளாக அருகில் சென்றவள், அதில் தெரிந்த அவளின் பிம்பத்தை கண்டு அதிசயித்து தான் போனாள்.



ஊதா வண்ண மெல்லிய இரவு உடை அவள் முட்டி வரை மட்டுமே தொட்டிருக்க, அதை தாண்டி தெரிந்த ‘வேக்சிங்’ செய்யப்பட்ட வெண்ணிற கால்களை விட்டு அவளின் கண்கள் அகலவே சில நொடிப்பொழுதானது.



அதன்பிறகு அவளின் பார்வை தலையிலிருந்து கால்வரை பயணித்து அவளிடமிருந்த மாற்றங்களை கணக்கெடுத்துக் கொண்டிருந்தது.



திருத்தப்பட்ட புருவத்திலிருந்து, அலங்காரம் செய்யப்பட்டிருந்த நகம் வரை அத்தனையையும் பிரமிப்பாக பார்த்தவள், “நானா இது? கனவுல இவ்ளோ அழகா தெரிவேனா என்ன? இதுவரை இவ்ளோ அழகா என்னை நானே பார்த்தது இல்லையே! ஹையோ, இப்போ முழிச்சா இதெல்லாம் போயிடுமே!” என்று வாய்விட்டே புலம்பினாள் ஆரபி.



அப்போது அந்த அறையின் கதவு திறக்கும் சத்தம் கேட்க, ஆரபி திரும்பி யாரென்று பார்க்க, உள்ளே நுழைந்தாள் அவள்.



“அட கீர்த்து, நீயுமா என் கனவுல வர?” என்று ஆரபி கேட்கவும், “சாரி அக்… மேம்… நீங்க தூங்கிட்டு இருப்பீங்கன்னு தான் வந்தேன். சாரி…” என்று எதிரிலிருந்தவள் கூறவும் சரியாக இருந்தது.



“என்னது மேமா?” என்று ஆரபி குழம்பும் போதே, “பேபிம்மா…” என்று இன்னொரு குரல் கதவின் புறம் கேட்க, ‘இதை எங்கேயோ கேள்விப்பட்டிருக்கோமே!’ என்ற எண்ணத்துடன் வாசலை பார்த்தாள் ஆரபி.



புதிதாக உள்ளே நுழைந்த மத்திய வயதுடைய பெண்மணியோ, மற்றவளை பார்த்து, “ஹே, நீ என்ன இங்க பண்ற? பேபிம்மா தான், உன்னை பார்க்க கூடாதுன்னு சொல்லியிருக்கா தான? சுயபுத்தி இல்லைன்னா பரவால்ல, சொல்புத்தி கூட கிடையாதா உனக்கு? அவ்ளோ தத்தியா நீ?” என்று வசவுகளை வாரி வழங்கிக் கொண்டிருந்தார்.



ஒருபக்கம் கீர்த்தி திட்டு வாங்குவது வருத்தமாக இருந்தாலும், ‘பேபிம்மா’, ‘பார்க்கக் கூடாது’ போன்றவை ஆரபிக்கு குழப்பத்தை வரவழைத்தது.



சில நொடிகளிலேயே தன் குழப்பத்திற்கான தெளிவை பெற்று விட்டாலும், அது தந்த விடை ஆரபிக்கு தலையை சுற்ற வைத்தது.



அதன் காரணமாக, “நோ..” என்று அவள் கத்த, “அச்சோ பேபிம்மா, நீ டென்ஷனாகாத. இனி, இந்த வேலைக்காரி உன் ரூம் பக்கம் எட்டிக்கூட பார்க்காம நான் பார்த்துக்குறேன். நீ ஸ்ட்ரெஸாகாத பேபிம்மா.” என்று ஆரபியின் தலை கோதினார் லாவண்யா!



ஆம், ஆரபி இப்போது இருப்பது அவளின் கதைக்குள்! அதுவும், அவளின் வில்லி ‘பைரவி’யாக!



லாவண்யாவையும் வைஷ்ணவியாக நிற்கும் தன் தோழி கீர்த்தியையும் ஒரு பார்வை பார்த்தவள், என்ன சொல்வதென்று தெரியாமல் முழிக்க, அதீத அதிர்ச்சி அவளை மயங்கச் செய்தது.



அப்போதும், “ஹையோ பேபிம்மா, உனக்கு என்னடா ஆச்சு? அடியேய் வேலைக்காரி, எல்லாம் உன்னால தான்! போ, போய் டாக்டரை வர சொல்லு. சீக்கிரம் போ!” என்று லாவண்யா அவரின் கீச்சுக்குரலில் கத்தியதையும் கேட்டவாறே தான் மயங்கினாள் ஆரபி.



சில மணி நேர உறக்கத்திற்கு பிறகு கொட்டாவி விட்டவாறே எழுந்தாள் ஆரபி. ஆனால், எதிரிலிருந்த லாவண்யாவை பார்த்ததும் விட்ட அதிர்ச்சி மீண்டும் தொற்றிக் கொள்ள, ‘அச்சோ, அப்போ இது கனவில்லையா?’ என்று பயப்பட ஆரம்பித்தாள்.



“பேபிம்மா, இப்போ எப்படி டா இருக்கு? ச்சு, உனக்கு இப்படியானதும் நான் எவ்ளோ பதறிட்டேன் தெரியுமா?” என்று இடைவெளியே விடாமல் லாவண்யா பேசிக் கொண்டே போக, “ப்ச், இப்படி பேசிட்டே இருந்தா அவ எப்படி ரெஸ்ட் எடுப்பா?” என்று கரகரப்பான குரல் அருகில் கேட்டது.



அந்த புதிய நபரை பார்த்த ஆரபியோ, ‘ஓஹ், இவரு தான் வில்லியோட அப்பா பார்த்தசாரதியோ?’ என்று தோன்றியது.



ஆரபி அவரை பார்த்தபோது, அவரும் அவளை தான் கூர்ப்பார்வை பார்த்துக் கொண்டிருந்தார்.



‘இப்போ இவரு எதுக்கு என்னை குற்றவாளி மாதிரி பார்க்குறாரு?’ என்று ஆரபி யோசிக்கும்போதே, “டேக் கேர்.” என்ற வார்த்தைகளை வேண்டாவெறுப்பாக உதிர்த்து விட்டு வெளியேறி விட்டார் அவர்.



“ம்ச், இந்த மனுஷனுக்கு நம்ம மேல கொஞ்சம் கூட பாசமே இல்ல பேபிம்மா. க்கும், சொத்துக்காக பார்க்க வேண்டியதா இருக்கு! இல்லன்னா, எப்பவோ டைவர்ஸ் பண்ணியிருப்பேன்.” என்று லாவண்யா புலம்ப ஆரம்பிக்க, தலை வலித்தது ஆரபிக்கு.



பாவம், அவளும் எத்தனையை தான் ஒரே நேரத்தில் தாங்குவாள். தவிர, அவளுக்கு என்ன நடக்கிறது என்று யோசிக்க அவகாசம் தேவைப்பட்டது.



எனவே, “எனக்கு ரெஸ்ட் எடுக்கணும்.” என்று மெல்லிய குரலில் கூற, “நீ படு பேபிம்மா. நான் உனக்கு துணைக்கு இருக்கேன்.” என்று லாவண்யா கூற, ‘ஹையோ, இந்த அம்மா வெளிய போனா தேவலை!’ என்று தான் தோன்றியது ஆரபிக்கு.



அவளின் வேண்டுதலுக்கு கடவுள் செவி சாய்த்தார் போலும், ஏதோ அழைப்பு வர, ‘லேடீஸ் கிளப்’ ஆட்களுடன் பேச லாவண்யாவும் வெளியேறி விட்டார்.



அதன்பிறகு தான் ஆரபி நிதானத்திற்கு வந்தாள்.



“இங்க என்னதான் நடக்குது? நான் எப்படி என் கதைக்குள்ள வந்தேன்? வந்தது தான் வந்தேன், ஹீரோயினா வராம போயும் போயும் வில்லியாவா வரணும்?” என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டாள் ஆரபி.



அதற்கு அவளின் மனமோ, ‘நீ கீர்த்தியை தான ஹீரோயினா யோசிச்சுருந்த! அப்போ எப்படி ஹீரோயினா வருவ? அதுவுமில்லாம, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கண்ணாடியை பார்த்து, ‘நானா – இவ்ளோ அழகா’ன்னு பூரிச்சுட்டு, இப்போ போயும் போயும் வில்லியா?’ என்று கேலி செய்து சிரித்தது.



“என் பொழப்பு இங்க சிரிப்பா சிரிக்குது!” என்று ஆரபி வாய்விட்டு புலம்ப, அப்போது கதவருகே ஏதோ சத்தம் கேட்டது.



‘ஹையோ, திரும்பவும் அந்த லொடலொட அம்மாவா?’ என்று பயந்து போன ஆரபி எங்கு சென்று மறையலாம் என்று சுற்றிலும் இடம் தேட, அவளின் தேடுதலை கலைப்பது போல, “மேம் ஜூஸ்.” என்ற மெல்லிய குரல் கேட்டது.



“உஃப் தப்பிச்சேன்.” என்று பெருமூச்சு விட்டவள், சத்தம் வந்த திசையை நோக்கி செல்ல, அங்கு வைஷ்ணவி கையில் குவளையுடன் தலை குனிந்து நின்றிருந்தாள்.



ஆரபிக்கு பசியெடுக்க ஆரம்பித்ததால், அதை வாங்கியவள், ஒரே மூச்சில் குடித்துவிட்டு மீண்டும் குவளையை வைஷ்ணவியிடம் தந்து, “தேங்க்ஸ்.” என்று கூற, வைஷ்ணவியோ காணாததை கண்டது போல அதிர்ந்து ஆரபியை பார்த்தாள்.



‘இவ எதுக்கு என்னை ஏலியன் மாதிரி பார்க்குறா?’ என்று ஆரபி புருவம் சுருக்க, எங்கு அவள் திட்டப் போகிறாளோ என்று பயந்து போய் ஓடி விட்டாள் வைஷ்ணவி.



‘ச்சு, இப்போ எப்படி இங்கயிருந்து திரும்ப ரியாலிட்டிக்கு போறது?’ என்று தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருந்த ஆரபிக்கு சிறிது நேரம் கழித்து அதற்கான தீர்வு கிடைத்தது போல தோன்றியது.



‘கதை முடிஞ்சதும் ரியாலிட்டிக்கு திரும்புற மாதிரி இருக்குமோ? எஸ் எஸ், அதே தான்!’ என்று அவளே ஒன்றை நினைத்து குதூகலித்தவள், மேலும், “கதை முடியனும்னா, ஹீரோ – ஹீரோயின் சேரணும். அப்பறம் வில்லி சாகணும்.” என்று சொல்லிக் கொண்டே போனவள், இறுதி வரியில் திகைத்து, “எதே? நான் சாகணுமா?” என்று நெஞ்சில் கைவைத்து கொண்டாள்.



“இல்ல இல்ல அப்படி நடக்கக் கூடாது! நான்... நான் இங்க செத்தா, எப்படி வெளிய போறது?” என்று மண்டையை போட்டு குழப்பிக் கொண்டவள், சில நொடிகளில் அதற்கும் தீர்வு கண்டாள்.



“நான் தான் வில்லி சாகுறதை எழுதவே இல்லையே! சோ, அது முடிவு இல்ல. கதையோட முடிவை நான் இங்கயிருந்தே மாத்த போறேன். தப்பு செஞ்சா சாகணுமா என்ன? திருந்தி நல்ல மனுஷியா வாழவும் செய்யலாமே!” என்று தனக்குத்தானே சமாதானம் கூறிக் கொள்ள, அவளின் மனமோ காறி உமிழாத குறையாக கேள்வி கேட்டது.



‘அது சரி, நீயா ஒரு முடிவுக்கு வரியே, இதுபடி எதுவும் நடக்கலைன்னா என்ன செய்வ?’ என்று அவளின் மனம் கேட்ட கேள்விக்கு, “எப்போ பார்த்தாலும் நெக்டிவ்வாவே யோசிக்காத. இனிமே, இந்த வில்லியை எப்படி திருத்துறேன்னு மட்டும் பாரு.” என்று அதை தலையில் தட்டி அனுப்பியவள், தனக்கும் சமாதானம் கூறிக் கொண்டாள்.



மீண்டும் கண்ணாடியில் தன் பிம்பத்தை பார்த்தவள், என்ன நினைத்தாளோ, தலையை குலுக்கிக் கொண்டு, “முதல்ல குளிக்கணும்!” என்று அலமாரியை திறந்தாள்.



அங்கு விதவிதமாக ரகரகமாக குவிக்கப் பட்டிருந்த ஆடைகளை கண்டவளின் வாய் மீண்டும் பிளக்க, அவளின் மனமோ, ‘என்ன, இதை பார்த்ததும் இங்கேயே இருந்துடலாமேன்னு தோணுதா?’ என்று ஆசை காட்டியது.



அதற்கு தன்னால் அவளின் தலை ஆமென்று அசைந்தாலும், அடுத்த நொடியே, “ச்சேச்சே, டிரெஸுக்காக என் வாழ்க்கையையே பணயம் வைக்குறதா?” என்று கூறினாலும், அவளின் பார்வை அந்த உடைகளை மொய்ப்பதை நிறுத்தவில்லை.



‘ச்சு, ஆரு கண்ட்ரோல்!’ என்று கூறிக் கொண்டவள், கண்களை மூடி ஒரு உடையை எடுத்தபடி குளியலறைக்குள் நுழைந்தாள்.



அவளின் நிஜ உலக அறையை உள்ளடக்கி விடுமளவிற்கு பெரிதாக இருந்த அந்த குளியலறையையும், நடுவில் வீற்றிருந்த குளியல் தொட்டியையும் பார்த்தவளின் மனம் மீண்டும் நிழலுக்கும் நிஜத்திற்கும் இடையே தள்ளாட, மிகவும் கடினப்பட்டு ஆசையை அடக்கியபடி தயாராகி கீழே வந்தாள்.



‘உஃப், இங்க இருக்க எல்லா பொருளும் நம்மை டெம்ப்ட் பண்ணுதே! இதுல இருந்து தப்பிச்சு வீட்டுக்கு போறதுக்கான மனஉறுதியை நீதான் தரணும் கடவுளே!’ என்று உடனடி வேண்டுதலை அவள் வைக்க, அவளின் மனஉறுதியை கலைப்பதற்காக அவளை சந்திக்க வந்து கொண்டிருந்தான் அவன்!



கீழே உணவு மேஜைக்கு ஆரபி வர, அங்கு லாவண்யா இருப்பதை பார்த்து, ‘அச்சோ, இந்த லொடலொட அம்மா இங்க தான் இருக்காங்களா?’ என்று நொந்தபடியே வந்தமர்ந்தாள் ஆரபி.



“பேபிம்மா, உனக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.” என்றபடி அவளுக்கான உணவை பரிமாறினார் லாவண்யா.



அதை பார்த்ததும் கண்கள் இரண்டும் வெளியே வந்துவிடும் அளவிற்கு அதிர்ந்தாள் ஆரபி.



காரணம் அவளுக்கு முன்னிருந்தது, பச்சை காய்கறி சாலடும், க்ரீன் டீயும்!



அவளின் மனமோ, கீர்த்தி செய்து கொடுக்கும் நெய் ஒழுகும் பொங்கலையும், எண்ணையில் பொறித்த பூரியையும் மனக்கண்ணில் காட்டி சீண்ட, தன் நேரத்தை எண்ணி நொந்தபடியே சாப்பிட ஆரம்பித்தாள் ஆரபி.



அவள் ஒருவாய் எடுத்து வைக்கும் போது, “பேபிம்மா, இன்னைக்கு ஆர்யன் கூட உனக்கு மீட்டிங் இருக்குல. நீ இந்த நேரத்துல வெளிய போக வேண்டாம்னு ஆர்யனை இங்க வர சொல்லிட்டேன்.” என்று லாவண்யா கூற, புரையேறியது ஆரபிக்கு.



“ம்ச், நான் உன் நல்லதுக்கு தான பண்ணுவேன். இதுக்கு போய் கோபப்படலாமா?” என்று அவள் இருக்கும் மனநிலை தெரியாமல் லாவண்யா பேச, ‘அட உங்க எண்ணத்துல தீயை வைக்க! உங்களையே சமாளிக்க முடியாம தலையால தண்ணி குடிக்கிறேன். இதுல இன்னொரு கேரக்டரா?’ என்று மனதிற்குள் பொருமினாள் ஆரபி.



“இந்த ஒருமுறை அட்ஜஸ்ட் பண்ணிக்கோ பேபிம்மா. உனக்கான டிரெஸ் எல்லாம் நானே எடுத்து வச்சுட்டேன். எனக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு. இல்லன்னா, நானே உன்னை ரெடி பண்ணுவேன்.” என்று லாவண்யா கூறிக் கொண்டிருக்க, ‘நல்லவேளை!’ என்று எண்ணிக் கொண்டாள் ஆரபி.



ஒருவழியாக லாவண்யா அங்கிருந்து கிளம்ப, பாத்திரங்களை எடுத்து வைக்க வந்த வைஷ்ணவியை நிறுத்திய ஆரபியோ, “கீர்... க்கும், வைஷ்ணவி, ஒரு ஹெல்ப், எனக்கு பொங்கல் சாப்பிடணும் போல இருக்கு. செஞ்சு தரியா?” என்று கண்களை சுருக்கி ஆரபி கேட்க, மீண்டும் அவளை நோக்கி ஒரு ‘ஏலியன்’ பார்வையை வீசினாள் வைஷ்ணவி.



அதில் சுதாரித்த ஆரபியோ, “க்கும், இப்போ எனக்கு பொங்கல் சாப்பிடணும்.” என்று அதிகாரமாக கூற, “இதோ... இப்போ செய்யுறேன்.” என்று ஓடினாள் வைஷ்ணவி.



அதன்பிறகென்ன, வைஷ்ணவி செய்து கொடுத்த பொங்கலை வெளுத்து வாங்கிய ஆரபி, ஏப்பம் விட்டுக் கொண்டே, “ஆமா வைஷ்ணவி, அது யாரு ஆர்யன்?” என்று கேட்க, ‘என்னதான் ஆச்சு?’ என்பது போல ஆரபியை பார்த்து வைத்த வைஷ்ணவியோ, “அவரு தான் உங்களுக்கு பார்த்திருக்க மாப்பிள்ளை.” என்றாள்.



‘அடச்சைக், என் ஹீரோல அவன்!’ என்று மானசீகமாக தலையிலடித்துக் கொண்டவள், அவனை எதிர்கொள்ள தயாராக ஆரம்பித்தாள்.



‘ஆரு, இது தான் உனக்கான சான்ஸ். நீ உயிரோட இருக்கணும்னா, இனிமே எடுத்து வைக்கிற ஒவ்வொரு ஸ்டெப்பும் கேர்ஃபுல்லா எடுத்து வைக்கணும். இனிமே, உன் ஃபோகஸ் எல்லாம், ஆர்யனையும் வைஷ்ணவியையும் சேர்த்து வைக்குறதுலையும், அவங்க கிட்ட உன்னை நல்லவளா காட்டிக்குறதுலையும் தான் இருக்கணும்.’ என்று தனக்குத்தானே உறுபோட்டுக் கொண்டவள், தன் பிம்பத்தை மீண்டும் ஒருமுறை கண்ணாடியில் பார்த்து திருப்தியானதும் கீழே வந்தாள்.



எப்போதும் செய்யும் அலங்காரம் இல்லாமல், சாதாரணமாக அவள் இருப்பதை பார்த்த வைஷ்ணவி, ஏனென்று கேட்க துடித்தாலும், இதற்கு முன்னர் ஏற்பட்ட வடுக்களின் காரணமாக அமைதியாக சென்று விட்டாள்.



வீட்டிற்குள் இருப்பது ஆரபிக்கு பதற்றத்தை கொடுக்க, மெல்ல நடந்த வெளியே இருந்த தோட்டத்திற்குள் சென்றாள்.



பூத்துக் குலுங்கும் மலர்களும், மெல்லிய காற்றும் அவளை சற்று நிதானத்திற்கு அழைத்து வர, ‘ஆர்யன் வருவான்; என்னை பிடிக்கலைன்னு சொல்லுவான். அதுக்கு, நானும் ஓகே நம்ம ஃபிரெண்ட்ஸா இருப்போம்னு சொல்லி, ஒரு நல்ல ரிலேஷன்ஷிப்பை உருவாக்கணும். இது தான், இன்னைக்கான டாஸ்க்.’ என்று மனதிற்குள் ஒத்திகை பார்த்துக் கொண்டிருக்கும் போதே, அவள் பின்னே, “எக்ஸ்யூஸ் மீ.” என்ற கணீர் குரல் கேட்டது.



அந்த குரலே அவளை சுழலுக்குள் தள்ளி விட போதுமானதாக இருக்க, எதிரிலிருந்தவனின் பிம்பமோ ‘பச்சக்கென்று’ மனதிற்குள் ஒட்டிக் கொள்ளும் அளவிற்கு இருந்தால், அவளும் என்னதான் செய்வாள்?



சாதாரண பெண்ணால், ஆசைக்கு எத்தனை தூரம் அணைக்கட்ட முடியும்?



‘ச்சு, ரியாலிட்டியாவது மண்ணாங்கட்டியாவது!’ என்று ஆரபி முடிவெடுத்து விட்டால்?



தொடரும்...


கதைக்கான உங்க கருத்துகளை கீழ இருக்க கருத்து திரியில் பகிருங்க...


 

NNK18

Moderator
InShot_20240104_072201014.jpg


அத்தியாயம் 3



ஆரபி மனதிற்குள் பல திட்டங்களை போட்டுக் கொண்டிருக்க, அவற்றை நொறுக்கவென்றே வந்து சேர்ந்தான் அவன்.



அவனின், “எக்ஸ்யூஸ் மீ!” என்ற இரு சொற்களே மங்கையின் மனதை அசைத்து பார்க்கும் வல்லமை பெற்றது என்றால் அது மிகையாகாது!



திடீரென்று பின்னால் கேட்ட குரலில் ஒருசேர பதறியும் மயங்கியும் போன ஆரபி மெல்ல திரும்பி பார்க்க, காலை நேர சூரியனின் கதிர்கள் அவன் முகத்தை மறைக்க, அகன்ற தோள்களும், அவளை மிஞ்சிய உயரமும் மட்டுமே முதலில் அவளின் கண்களில் பட்டது.



அதே நேரம், சூரியக்கதிர்கள் அவள் கண்களையும் கூசச்செய்ய, அவன் தோற்றத்தை முழுதாக பார்க்க முடியாத சலிப்பிலோ என்னவோ, “ப்ச்…” என்ற சொல்லுடன் கண்களை மூடிக் கொண்டாள் ஆரபி.



அடுத்த நொடியே, அவளுக்கும் சூரியனுக்கும் நடுவே ஏதோ மறைத்துக் கொண்டிருப்பது போல இருக்க, மீண்டும் மெல்ல கண்களை திறந்து பார்த்தாள்.



அவனே தான் அங்கு ஒரு புதிய கிரகணத்தையே நிகழ்த்தி இருந்தான்!



பின்னணியில் ஆதவனின் செங்கதிர்கள் அலங்கரிக்க, நடுவில் தெரிந்த அவனின் முகத்தையே இமைக்க மறந்து பார்த்திருந்தாள் ஆரபி.



‘வாவ், வாட் அ சைட்! இது மாதிரி ஹீரோ என்ட்ரி எல்லாம் படத்துல தான பார்த்திருக்கேன்! இப்போ எனக்கே எனக்குன்னு நடக்குறப்போ… ஹையோ, ஒரே குஷியா இருக்கே!’ என்று அவள் மனதிற்குள் மத்தளம் வாசிக்க, ‘எல்லாம் ஓகே தான். ஆனா, இந்த ஹீரோ என்ட்ரி உனக்கு இல்ல, ஹீரோயினுக்கு. நீதான் வில்லியாச்சே!’ என்று அவளின் திருத்தியது அவளின் மனம்.



அதில், அத்தனை நேரம் வானில் பறந்து கொண்டிருந்தவளின் சிறகுகள் வெட்டப்பட்டதை போல உணர்ந்தவள், சட்டென்று தன்னை சுற்றியிருந்த மாயவலையிலிருந்து வெளியே வர, அதே சமயம் எதிரிலிருந்தவனுக்கும் பொறுமை பறந்திருந்தது.



“ஹலோ, ஆர் யூ ஆல்ரைட்?” என்று வேண்டா வெறுப்பாக அவன் வினவ, அதற்குள் தன்னை சமன்படுத்திக் கொண்டவள், “ம்…க்கும்… ஐ’ம் ஓகே.” என்று கூறினாள்.



“அதான, நீ எப்படி நல்லா இல்லாமா இருப்ப?” என்று முணுமுணுத்தவன், கையிலிருந்த பூங்கொத்தை அவளின் கைகளில் திணித்து விட்டு அங்கிருந்து செல்ல எத்தனிக்க, அத்தனை நேரம் அவனை ரசித்ததெல்லாம் பின்னோக்கி சென்றுவிட, “ஹலோ…” என்று செல்லும் அவனை அழைத்தாள் ஆரபி.



அதில் அவனும் நடை சட்டென்று நிற்க, அந்த வேகத்திற்கு சற்றும் சம்பந்தம் இல்லாதவாறு, மெதுவாக திரும்பியவனோ, இரு புருவங்களையும் சுருக்கி அவளை பார்த்தவாறு, “ஆர்யன்... ஆர்யன் மகாதேவ்!” என்றான்.



இரு புருவங்களுக்கு இடையே நெற்றிக்கண் மட்டும் இருந்திருந்தால், அந்த மகாதேவனை போல எரித்திருப்பான் போலும்!



அவனின் பார்வை உள்ளுக்குள் குளிர் பரவச்செய்தாலும், தலையை குலுக்கிக் கொண்டு, “ஆஹான், அப்பா பேரை சேர்த்து சொல்றதுல அவ்ளோ கர்வமா?” என்று கேலியாக வினவினாள்.



சற்று இடைவேளை விட்டிருந்தாலும், ஆர்யனின் விழிகள் வெளிப்படுத்திய கோபத்தில் பொசுங்கி இருப்பாளோ என்னவோ. நல்லவேளையாக உடனே, “சரி, உங்க ஆசையை ஏன் கெடுப்பானேன். மிஸ்டர். ஆர்யன் மகாதேவ்… தேவ் குரூப்ஸோட ஒரே வாரிசு. நோ நோ, அப்படி சொல்லக் கூடாது! இப்போ கடன்ல மூழ்கியிருக்க தேவ் குரூப்ஸோட ஒரே வாரிசு – இப்போ சரியா?” என்றாள்.



ஆர்யனின் முகம் அவள் கூறியதைக் கேட்டு கருத்துப் போக, ஆரபியோ மனதிற்குள், ‘யாருக்கிட்ட? இந்த கதையோட ஆத்தர்டா நானு!’ என்று மானசீகமாக காலரை தூக்கி விட்டுக் கொண்டாள்.



‘க்கும், அவனையும் கூட நீ தான் உருவாக்குன, மறந்துட்டியா?’ என்று அவளின் மனம் இப்போது அவளை கேலி செய்ய, ‘ப்ச், சும்மா இரு.’ என்று அதனுடன் வாதிட்டவள், அடுத்த நொடியே, ‘ஆனாலும், என்னன்னு இவனை எழுதினேன்னு தெரியல. என்னையே இன்சல்ட் பண்றான்!’ என்ற அலசலில் ஈடுபட்டிருந்தாள் ஆரபி.



அந்த சில நிமிடங்களில் ஆர்யனும் தன்னை நிதானப்படுத்திக் கொண்டு, “இப்போ என்ன வேணும்?” என்று அவளை நோக்காமல், வேறெங்கோ பார்த்துக் கொண்டு வினவினான்.



‘பார்றா!’ என்று உதட்டை வளைத்தவள், அவன் பார்வை சென்ற இடத்தை நோக்க, அங்கு வைஷ்ணவி தான் செடிக்கு பின்னர் மறைந்தும் மறையாமலும், இவர்களை பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.



அதைக் கண்டதும் ஆரபியின் ஆசிரிய மூளை வேலை செய்ய, அவனிடம் சற்று முன் போட்ட சண்டையை தற்காலிகமாக மறந்தவளாக, நட்பு கரத்தை நீட்ட முயன்றாள்.



“ஆர்யன், உங்களுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்ல தான? நம்ம ரெண்டு ஃபேமிலிக்கு இடையே இருக்க பிசினஸ் ப்ரொபோசல் கெட்டுப் போடக்கூடாதுன்னு உங்க அப்பா ஃபோர்ஸ் பண்ணதால தான, நீங்க கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டீங்க?” என்று ஆரபி கேட்க, ஆர்யனோ அவளை திகைப்புடன் பார்த்தான்.



“எப்படி இது உனக்கு தெரியும்?” என்று ஆர்யன் அதிர்ச்சி மறைந்த ஆராய்ச்சி பார்வையுடன் கேட்க, ‘ஏன்னா, அந்த பிளாட்டை யோசிச்சதே நான் தான!’ என்று உள்ளுக்குள் பெருமை பட்டவளாக, “இது கூட கண்டுபிடிக்க முடியலைன்னா, எப்படி பிஸினஸை சக்ஸஸ்ஃபுல்லா நடத்த முடியும்?” என்று சிறு சிரிப்புடன் கூறினாள் ஆரபி. அவளின், அதாவது பைரவியின் பெருமையை சொல்லாமல் சொல்கிறாளாமாம்!



அதற்கு எதுவும் பேசாமல் அமைதியாக அவன் நிற்க, ‘க்கும், எக்ஸ்ட்ராவா பேசுனா முத்தா உதிர்ந்திடும்!’ என்று நினைத்தவள், மீண்டும் ஒருமுறை அவன் பாத்திர வடிவமைப்பை எண்ணி தன்னைத்தானே திட்டிக் கொண்டாள்.



“இப்படி அமைதியா இருந்த என்ன அர்த்தம்? மௌனம் சம்மதம்னு எடுத்துக்கவா?” என்று அவனை சீண்ட, இப்போதும் அவள் மீது ஆராய்ச்சி பார்வையை செலுத்தினான் ஆர்யன்.



அவன் கேட்டறிந்த பைரவிக்கும், இப்போது நேரில் பார்க்கும் பைரவிக்கும் பல வித்தியாசங்கள் இருந்தனவே!



இதுவரை, அவளை நேரில் பார்த்திராததால் மட்டுமே சந்தேகத்துடன் நிறுத்திக் கொண்டான். இல்லையென்றால், உறுதியாக இவள் பைரவி இல்லை என்பதை கூறியிருப்பான்.



“ஹ்ம்ம், நீங்க இப்படி என்னை வச்ச கண்ணு எடுக்காம பார்க்குறதை பார்த்தா, எனக்கு கிடைச்ச தகவல் தான் தப்பு போலவே!” என்று ஆரபி அவன் எண்ணம் அறியாமல் பேச, இப்போது தன் கைகளை கட்டியபடி, அவளை நேராக பார்க்க ஆரம்பித்து விட்டான்.



அவளை தலையிலிருந்து கால்வரை அவன் பார்க்க, அத்தனை நேரமிருந்த விளையாட்டு காணாமல் போய், ‘ஹையோ, தேவையில்லாம பேசி மாட்டிக்கிட்டோமோ? இவன் எதுக்கு இப்படி பார்க்குறான்? நார்மலா, பொண்ணுங்களை எல்லாம் இப்படி பார்க்க மாட்டானே!’ என்று பதறினாள் ஆரபி.



“கரெக்ட்!” என்று அவன் சொல்ல, திடீரென்று அவன் கூறியதைக் கேட்ட ஆரபி திடுக்கிட்டு, என்ன என்பது போல அவனைப் பார்க்க, அவனோ அவளை மூச்சு படும் தூரத்தில் நெருங்கி, மீண்டும் முகவடிவை பார்வையால் அளந்து விட்டு, “பொண்ணுங்களை இப்படி பார்க்க மாட்டேன் தான். ஆனா, நீதான் பொண்ணே இல்லையே!” என்று அவள் காதில் கூறிவிட்டு விலகினான்.



முதலில், அவன் நெருக்கத்தில் அவளின் இதயம் வெளியே எகிறி குதித்துவிடும் போல துடிக்க, அவனை தள்ளிவிடக் கூட இயலாமல் கையறு நிலையில் கங்களை மூடி நின்றிருந்தவளுக்கு, காதில் படும் அவனின் மூச்சுக்காற்று அடுத்த அவஸ்தையை ஏற்படுத்தியது.



ஆனால், அவை எல்லாம் அவனின் இறுதி வரியை கேட்கும் வரையில் தான்!



அவன் அவளை ‘பொண்ணே இல்ல’ என்று கூறிவிட்டு விலகியதும், கோபத்துடன் கண்களை திறந்தவள், “யூ… யூ…” என்று என்ன சொல்வதென்று தெரியாமல் தயங்கி தடுமாறினாள்.



கதையாக இருந்தால் இணையத்தில் தேடியாவது சில கெட்ட வார்த்தைகளை பேச வைத்திருப்பாள். ஆனால், இங்கு சூழலே வேறாக இருந்தே. நன்றாக தெரிந்த கெட்ட வார்த்தைகள் கூட அவசரத்திற்கு ஞாபகம் வராமல் போனது. முன்னே பின்னே உபயோகப்படுத்தி இருந்தால் தானே!



அவளை கேலியாக பார்த்தவன், “எஸ், உன்னை எனக்கு பிடிக்கல. அழகு மட்டும் இருந்தா போதும், யாரு வேணாலும் பின்னாடி வருவாங்கன்னு சொன்னியாமே!” என்று அவளை மீண்டும் நெருங்கியவன், அவள் முகத்தை சுட்டிக்காட்டி, “இதெல்லாம் இன்னும் எத்தனை நாளைக்கு வரும்? பணத்தை வச்சு கூட நிரந்தர அழகை வாங்கிட முடியாது தெரியுமா? எனக்கு ஒருத்தரை பிடிக்கணும்னா, அவங்க மனசு அழகா இருக்கணும். ஆனா, உன் மனசு…” என்று இழுத்தவன், உதட்டை பிதுக்கியபடி, “உலகத்துல இருக்க எல்லா அழுக்கும் அதுல தான் இருக்கு. இப்போ சொல்றேன், நீயே இந்த கல்யாணத்தை நிறுத்திடு. இல்ல, அதுக்கப்பறம் உனக்குன்னு ஒரு வாழ்க்கையே இருக்காது.” என்றவன், குளிர் கண்ணாடியை மாட்டியவாறே அங்கிருந்து கிளம்பினான்.



‘ச்சு, தப்பு பண்ணிட்டேன். இவனுக்கு எதுக்கு இவ்ளோ பெரிய டையலாக் குடுத்தேன்! அதுவும், நேர்ல கேட்குறப்போ, சில இடமெல்லாம் எனக்கே க்ரிஞ்சா தெரியுதே!’ என்று ஆரபி உள்ளுக்குள் புலம்பிக் கொண்டிருக்கும் வேளையில், சொடக்கிட்டு அவளை அழைத்த ஆர்யன், “இதுவரை உன்னை கண்டுக்காததால, நீ பண்ணதெல்லாம் தெரியாதுன்னு நினைச்சுக்காத. ஆதாரத்தோட பிடிக்கணும்னு தான் காத்திட்டு இருக்கேன். சோ, லாஸ்ட் வார்னிங். நீயே என்கிட்ட வந்து சிக்கிடாத!” என்று கூறிவிட்டு சென்று விட்டான்.



“எப்பா சாமி, ஒருவழியா போயிட்டான். இன்ஸ்டால்மெண்ட்ல லெக்க்ஷர் எடுத்தே கொன்னுடுவான் போல. இவன்கிட்ட இப்போ இதெல்லாம் யாரு கேட்டா? பிடிக்கலைன்னா, பிடிக்கலன்னு சொல்லிட்டு போக வேண்டியது தான? ச்சு, இந்த எபியை படிச்ச எத்தனை பேரு இப்படி நினைச்சுருப்பாங்களோ?” என்று புலம்பிய ஆரபி, அப்போது தான் அவன் இறுதியாக கூறியதை யோசித்து பார்த்தாள்.



‘என்ன ஆதாரம்? எதை பிடிக்க போறான்?’ என்று யோசித்த ஆரபி, அவள் எழுதிய கதையை மீண்டும் மனதிற்குள் ஓட்டிப் பார்த்தாள்.



அவளின் ஞாபகத்திறனின் உபயத்தில் சில நொடிகளுக்கு பின்பே, அவள் எழுதி வைத்த சம்பவம் நினைவிற்கு வந்தது!



“அடக்கடவுளே, அவனை கொலை செய்ய வில்லி தான் ஆளை அனுப்பினான்னு தெரிஞ்சுருச்சா? ஆனா, கதையில அப்படி நான் எழுதலையே.” என்று வாய்விட்டு யோசித்தபடியே, தோட்டத்திலிருந்து வீட்டிற்குள் செல்ல முற்பட, அங்கு ஏதோ கனவுலகில் சஞ்சரித்தது போல நின்றிருந்தாள் வைஷ்ணவி.



‘இவளுக்கு என்னாச்சு?’ என்று எண்ணியபடி வைஷ்ணவியின் தோளை ஆரபி தட்ட, அதில் பதறி விழித்த வைஷ்ணவியோ, “நா… நான் எதுவும் பார்க்கல அக்… மேம்.” என்று தடுமாற, “ஷ், நான் என்ன பேயா பூதமா? எப்போ பார்த்தாலும் பயந்துட்டு! எதுக்கு இப்படி நடு வழில நின்னுட்டே கனவு கண்டுட்டு இருக்க?” என்று கேட்டுவிட்டு அவளை தாண்டி ஆரபி சென்று விட, அவள் பின்னே ஓடிய வைஷ்ணவியோ, “உங்களை தேடி யாரோ வந்திருக்காங்க.” என்று கூறினாள்.



“ஷப்பா, இப்போ தான் ரெண்டு பேரை சமாளிச்சேன். இப்போ யாருன்னு தெரியலையே!” என்று வாய்விட்டு புலம்பியபடி வீட்டிற்குள் சென்றாள்.



நடுகூடத்தில், முடியெல்லாம் விதவிதமாக வண்ணமடித்தபடி ஒருவன் அமர்ந்திருக்க, ‘யாரு இந்த கலர் குருவி மண்டையன்?’ என்று யோசித்தபடி உள்ளே நுழைந்தாள் ஆரபி.



அவளைப் பார்த்ததும் அந்த கலர் குருவிக்கு என்ன தோன்றியதோ, பாய்ந்து வர, அவனிடமிருந்து தப்பிக்க ஆரபி ஓட, அவளை அவன் துரத்த, சில நொடிகளில் அந்த கூடமே போர்க்களமானது.



ஒரு கட்டத்தில், அவன் அவளை பிடித்துவிட, ஆரபிக்கு பதற்றத்தில் என்ன செய்வதென்று தெரியாமல், அருகிலிருந்த பூ ஜாடியை எடுத்து அவன் தலையிலேயே அடித்து விட்டாள்.



அதில் அந்த கலர் குருவி தலையன் மயங்கி விட, வைஷ்ணவியோ பயத்தில், “ஹையோ, கொலை!” என்று கத்தி விட்டாள்.



“அடியேய் லூசு! நீயே என்னை போலீஸ் கிட்ட பிடிச்சு குடுத்துடுவ போல! மயங்கி தான் போயிருக்கான். கொஞ்சம் கத்தாம இரு.” என்ற ஆரபி, மீண்டும் வைஷ்ணவியிடம், “ஆமா, யாரு இவன்? எதுக்கு என்னை வெறி பிடிச்ச மாதிரி துரத்துறான்?” என்று கேட்டாள்.



இம்முறை, வைஷ்ணவியும் ஆரபியை சந்தேகமாக பார்க்க, “அது… இன்னைக்கு காலைல நடந்த கலாட்டால, பழசெல்லாம் கொஞ்சம் மறந்துடுச்சு.” என்று சமாளித்தாள் ஆரபி.



படிக்காத பேதையான வைஷ்ணவியும் அதை நம்பி விட்டாள். இல்லையென்றாலும், பைரவி கூறியவற்றை எதிர்த்து கேட்கும் அளவிற்கு அவளுக்கு தைரியமும் இல்லை.



அப்போதும் வைஷ்ணவி தயங்குவதை பார்த்த ஆரபி சற்று யோசிக்க, அவளின் மூளையிலும் மணியடிக்க ஆரம்பித்தது.



‘நோ நோ, அதை மட்டும் சொல்லாத.’ என்று ஆரபி வேண்டிக் கொண்டிருக்கும் போதே, “இவரு தான் உங்க லிவ்வின் பார்ட்னர் விஷ்வக்.” என்று உண்மையை போட்டுடைத்தாள் வைஷ்ணவி.



தொடரும்...


கதைக்கான உங்க கருத்துகளை கீழ இருக்க கருத்து திரியில் பகிருங்க.
 

NNK18

Moderator

InShot_20240104_072012597.jpg


அத்தியாயம் 4



அவளின் கைங்கர்யத்தால் மயங்கிக் கிடந்தவனை பார்த்த ஆரபி, “யாரு இவன்?” என்று வைஷ்ணவியிடம் வினவ, அவளோ சில நொடி தயக்கத்திற்கு பின்னர், “இவரு தான் உங்க லிவ்வின் பார்ட்னர் விஷ்வக்.” என்று கூற, தலையே சுற்றியது ஆரபிக்கு.



அங்கிருந்த நீள்சாய்விருக்கையில் அவள் பொத்தென்று அமர, ‘இன்னைக்கு என்னாச்சு இவங்களுக்கு?’ என்ற கேள்வி வைஷ்ணவிக்குள் எழுந்தாலும், அதை பின்னுக்கு தள்ளிவிட்டு, ஆரபிக்கு தண்ணீர் கொடுத்து சிறிது ஆசுவாசப்படுத்தினாள்.



அதெல்லாம் ஆரபியின் கவனத்திற்கு வரவே இல்லை. அவள் தான் தனக்குத்தானே பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தாளே!



‘கருமம், எந்த நேரத்துல இப்படியெல்லாம் யோசிச்சேனோ? இப்போ எனக்கே ஆப்பா வந்துருக்கு!’ என்று எண்ணியவள், இந்த அற்புத எண்ணத்தை கதையாக வடித்த தருணத்திற்கு மானசீகமாக பயணப்பட்டாள்.




*****



“பையூ..” என்று அழைத்துக் கொண்டே உள்ளே நுழைந்த விஷ்வக்கை தடுத்த பைரவியோ கோபத்துடன், “என் பேரை சொல்லி கூப்பிடாதன்னு உனக்கு எத்தனை முறை சொல்றது விஷு?” என்ற கத்த, “ஷ், சாரி சாரி பேபிம்மா. ஏதோ அவசரத்துல வந்துடுச்சு. இந்த ஒரு முறை உன் விஷுவை மன்னிக்க மாட்டியா?” என்று குழைந்தான் விஷ்வக்.



அப்போதும் உடனே இறங்கி வராதவள், “என்னாச்சு? எதுக்கு இந்த அவசரம்?” என்று முகத்தை தூக்கி வைத்துக் கொண்டே வினவ, “ப்ச், கம்மிங் வீக்கெண்ட் பிசினஸ் டிரிப்புக்கு ஆஸ்திரேலியா போறேன் பேபிம்மா.” என்று சோகமாக கூறினான் விஷ்வக்.



“நல்ல விஷயம் தான? போயிட்டு வா.” என்று பைரவி சாதாரணமாக கூற, “பேபிம்மா, இந்த வீக்கெண்ட் என்ன நாள்னு மறந்துட்டியா? நம்மளோட ஃபர்ஸ்ட் இயர் அனிவர்சரி. அதுக்காக நான் எவ்ளோ பிளான் வச்சுருந்தேன் தெரியுமா?” என்று அவளை உரசிக் கொண்டே பேசினான் விஷ்வக்.



“ப்ச், இந்த பைத்தியக்காரத்தனத்தை எல்லாம் தூக்கிட்டு வராத விஷு. நம்ம என்ன கல்யாணமா பண்ணிக்கிட்டோம், அனிவர்சரி கொண்டாட? நம்ம பிசிக்கல் நீட்ஸுக்காக பழகினோம். அதை லிவ்வின்னு கூட நான் சொல்ல மாட்டேன். இதுல, அனிவர்சரி ஒன்னு தான் கேடு!” என்று தன் வேலைகளை பார்த்துக் கொண்டே கூறினாள் பைரவி.



“ஓஹ், அப்போ நான் உனக்கு அலுத்துப் போயிட்டேனா? அதுக்கு தான் அவனை பிடிக்க பிளான் போடுறியா?” என்று விஷ்வக் அத்தனை நேரமிருந்த குழைவு இல்லாமல் குதர்க்கமாக வினவ, அவனை திரும்பி பார்த்து முறைத்த பைரவியோ, “தாட் இஸ் மை பெர்சனல். யூ டோன்ட் ஹாவ் எனி ரைட்ஸ் டூ ஸ்பீட் அபவுட் இட். உன் லிமிட் எதுவோ அதுக்குள்ள இரு. தேவையில்லாத விஷயத்துக்குள்ள மூக்கை நுழைச்சா, ஒட்ட வெட்டிடுவேன்.” என்று பல்லைக் கடித்துக் கொண்டே அவனை எச்சரித்துவிட்டு, அங்கிருந்து நகர, “ச்சீ, பொண்ணாடி நீ? என்னை நல்லா யூஸ் பண்ணிட்டு, என்னை விட பணக்காரனை பார்த்ததும் என்னை தூக்கி போட்டுட்டேல!” என்று மேலும் கத்தினான் விஷ்வக்.



“ச்சு, என்னமோ ஓருடல் ஈருயிரா காதலிச்சவன் மாதிரி பினாத்திட்டு இருக்காத.” என்று சலிப்புடன் தலையை வருடியவள், “உனக்கு எவ்ளோ வேணுமோ என் பி.ஏ கிட்ட வாங்கிட்டு போ.” என்று அத்துடன் அவனுடனான பேச்சுவார்த்தை முடிந்தது போல அங்கிருந்து செல்ல, அவன் அவளை திட்டுவதை நிறுத்திய பாடில்லை.



*****



‘ச்சே, கொஞ்சம் யோசிச்சு எழுதியிருக்கலாமோ?’



‘க்கும், நானே இதுல வந்து மாட்டிப்பேன்னு கனவா கண்டேன்? வில்லிக்கான நெகட்டிவ் ஷேட் ஸ்ட்ராங்கா இருக்கணும்னு நினைச்சது ஒரு குத்தமா?’ என்று ஆரபி தனக்குள்ளேயே பேசிக் கொண்டிருக்கும் போது, அன்று கீர்த்தி கேலியாக கூறியவையும் நினைவுக்கு வந்தது.




*****



“ஏண்டி, வில்லின்னா இவ்ளோ கேவலமாவா இருக்கணும்? அதுசரி, இதுவே ஒரு பையன் பண்ணியிருந்தா ஆன்டி-ஹீரோன்னு சொல்லியிருப்பீங்க!” என்று கீர்த்தி தலையிலடித்துக் கொள்ள, “அங்க இல்ல, வாயில அடி வாயில அடி!” என்று கேலி செய்தாள் ஆரபி.



“க்கும், நல்லா கிண்டலடிடி. என்னைக்காவது ஒருநாள், அந்த வில்லியே வந்து சட்டையை பிடிச்சு, எதுக்கு இப்படி எழுதுனன்னு கேட்கப்போறா?” என்று கீர்த்தி கூற, “இதுக்கு தான், நிறைய ஃபேன்டஸி கதை படிக்கக் கூடாதுன்னு சொல்றது கீர்த்தும்மா, பாரு என்ன சொல்றதுன்னு தெரியாம உளறிட்டு இருக்க!” என்று அதற்கும் கேலி செய்தாள் ஆரபி.




*****



“க்கும், எந்த நேரத்துல வாய் வச்சியோ, இப்போ நானே வசமா சிக்கிக்கிட்டேன்!” என்று ஆரபி வாய்விட்டு புலம்ப, அவளை மெல்ல உசுப்பிய வைஷ்ணவியோ, மிரட்சியாக பார்த்தாள்.



“இப்போ என்ன?” என்று சோர்வுடன் ஆரபி கேட்க, “உங்களுக்கு எதுவும் அடிப்பட்டிருக்கா?” என்று தயங்கி தயங்கி கேட்டாள் வைஷ்ணவி.



ஆரபியோ ஒரு பெருமூச்சுடன், “அடியெல்லாம் படல. ஆனா, நீ நினைக்கிற மாதிரி கொஞ்ச நேரத்துல பைத்தியம் பிடிச்சுடும் போல!” என்று கூற, “ஐயையோ! நான் அப்படியெல்லாம் எதுவும் நினைக்கல.” என்று வைஷ்ணவி பதற, “அட பதட்டத்துக்கு பொறந்தவளே, உன்னால எனக்கும் இந்த சின்ன வயசுல ஹார்ட் அட்டாக் வந்துடும் போல! ஹ்ம்ம், உன்னை சொல்லி தப்பில்ல. அப்பாவி ஹீரோயின் தான் வேணும்னு படைச்சேன்ல, என்னை சொல்லணும்!” என்று வெளிப்படையாகவே தலையில் அடித்துக் கொண்டாள்.



“நீங்க என்ன சொல்றீங்கன்னு புரியல. ஆனா, என்னை திட்டுறீங்கன்னு மட்டும் புரியுது!” என்று வைஷ்ணவி குழப்பத்துடன் கூற, “அதுவாச்சும் புரியுதே. சரி, இந்த பாடியை என்ன பண்ண?” என்று விஷ்வக்கை சுட்டிக்காட்ட, “என்ன பாடியா?” என்று அதற்கும் ஒருமுறை அலறினாள் வைஷ்ணவி.



“ஷப்பா, ஒரு ஃப்லோல சொல்லிட்டேன் தாயே. இன்னொரு முறை இப்படி கத்துன, மண்டைலயே கொட்டிடுவேன்.” என்று மிரட்டிவிட்டு, தன் கையிலிருந்த தண்ணீர் போத்தலை அப்படியே விஷ்வக்கின் முகத்தில் கவிழ்த்தாள்.



அதில் அவனும் மெல்ல கண்விழித்தவன், “பேபிம்மா…” என்று கத்த, ‘கருமம், இந்த லூசு கூட்டத்துக்குள்ள வந்து சிக்கிக்கிட்டேனே!’ என்று ஆரபி புலம்ப, ‘எக்ஸ்க்யூஸ் மீ, அந்த லூசு கூட்டத்தை உருவாக்குனதே நீதான்.’ என்று பதில் கூறியது அவளின் மனது.



இப்படி ஆரபி தனக்குள்ளே போராடிக் கொண்டிருக்க விஷ்வக்கோ பெரிய கதையையே கட்டிக் கொண்டிருந்தான். இதில் மாட்டிக் கொண்டு விழித்தது என்னவோ வைஷ்ணவி தான்.



“… அதான் பேபிம்மா அன்னைக்கு கோபமா பேசிட்டேன். இனி, நீ எப்படி சொல்றியோ அப்படியே இருப்பேனாம். என்னை மட்டும் கழட்டி விட்டுடாத பேபிம்மா. இப்போ என்ன, அவனை கல்யாணம் பண்ணனுமா, பண்ணு. இப்போ இருக்க மாதிரியே அப்போவும் இருப்போம்.” என்று பிதற்றிபடி ஆரபியின் கரத்தை பற்ற, அத்தனை நேரமிருந்த பொறுமை(!!!) பறந்து போனது அவளுக்கு.



“அடிங் கலர் குருவி தலையா! குழப்பத்துல கொஞ்ச நேரம் அமைதியா இருந்தா, கேப் கிடைச்சுதுன்னு கண்டதையும் பேசுவியா? எவ்ளோ தைரியம் இருந்தா கள்ளத்தொடர்பு வச்சுக்கலாம்னு கேட்ப? அதுவும் என்னை!” என்று கத்தியபடி, கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் அவன் மீது விட்டெரிந்தாள் ஆரபி.



மீண்டும் ஒரு ஓட்டப்பந்தயம் அங்கு நடைபெற, அதை தடுக்க இயலாமல் கையறுநிலையில் வைஷ்ணவி இருக்க, “இங்க என்ன சத்தம்?” என்று கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தார் லாவண்யா.



‘ஹையோ, அடுத்ததா? ஒரே நேரத்துல எத்தனையை தான் சமாளிப்பேன்!’ என்று ஆரபி விழி பிதுங்கி நிற்க, “பேபிம்மா, என்னடா ஆச்சு உனக்கு?” என்று ஆரம்பித்து, “இதுக்கு தான் இவனை எல்லாம் வீட்டுக்குள்ள சேர்க்கக்கூடாதுன்னு அப்போவே சொன்னேன். நம்ம பழக்கமெல்லாம் நம்ம கிளாஸ் ஆளுங்களோட இருக்கணும் பேபிம்மா. க்கும், என்னதான் பிசினஸ்-வுமனா இருந்தாலும், இதுல இன்னும் பேபி தான் நீ!” என்று பலகட்ட அறிவுரைகளை வழங்கிய லாவண்யா, பைரவிக்கென்று நியமிக்கப்பட்ட பாதுகாவலர்களை அழைத்து, “இது தான் நீங்க என் பொண்ணை பார்த்துக்குற லட்சணமா?” என்று திட்டி விஷ்வக்கையும் வெளியேற்றி, கிட்டத்தட்ட பம்பரமாகவே சுழன்றார் லாவண்யா.



அது எதற்கும் தலையை கூட நிமிர்த்தவில்லை ஆரபி.



“ஹே, நீ இங்க என்ன வேடிக்கை பார்த்துட்டு இருக்க? போ போய் ஜில்லுன்னு ஜூஸ் எடுத்துட்டு வா.” என்று வைஷ்ணவியையும் அங்கிருந்து அப்புறப்படுத்தியவர், “பேபிம்மா, ஆர்யன் வந்தானா? என்ன சொன்னான்?” என்று ஆர்வமாக விசாரிக்க ஆரம்பித்து விட்டார் லாவண்யா.



‘ஹையோ, இப்போ என்ன சொல்றது?’ என்று யோசித்த ஆரபிக்கு சட்டென்று அந்த யோசனை தோன்ற, இதற்கு பைரவி தான் சரிபடுவாள் என்று எண்ணிவிட்டு, தன்னைத்தானே பைரவி உருவகப்படுத்திக் கொண்டு, “மாம்…” என்று லாவண்யாவை நோக்கி திரும்பினாள்.



“சொல்லு பேபிம்மா. எல்லாம் நல்லபடியா போச்சா? என்ன பேசுனீங்க ரெண்டு பேரும்? எனித்திங் ரொமான்டிக்?” என்று கண்ணடித்து லாவண்யா கேட்க, ‘ஐயோ ஐயோ ஐயோ!’ என்று தலையில் அடிக்க தோன்றியது ஆரபிக்கு.



இருப்பினும், கிடைத்த வாய்ப்பை வீணடிக்க விரும்பாமல், “ப்ச் மாம், அவனும் அவனோட ஆட்டிட்யூடும்! அவனோட எல்லாம் ஒரு நிமிஷம் கூட என்னால இருக்க முடியாது. பெட்டர் இதோட கல்யாண பேச்சை நிறுத்திக்கலாம் மாம்.” என்று அவ்வபோது ஓரவிழிகளால் லாவண்யாவை பார்த்தபடியே கூறினாள் ஆரபி.



அதைக் கேட்டு பதறிய லாவண்யாவோ, “என்ன பேபிம்மா சொல்ற? அவனோட அந்த ஆட்டிட்யூட் தான் பிடிச்சுருக்குன்னு அன்னைக்கு சொன்ன?” என்று கேட்க, “அப்படியா சொன்னேன்…” என்று முணுமுணுத்த ஆரபியோ, “அது மத்தவங்க கிட்ட காட்டுனப்போ பிடிச்சுது. ஆனா, என்கிட்டயே ஆட்டிட்யூட் காட்டுவானா அவன்?” என்று எதிர்கேள்வி கேட்டாள்.



“ம்ச், பேபிம்மா இதெல்லாம் பார்த்தா முடியுமா? அவங்க பிசினஸ் இப்போ நலிஞ்சு போயிருந்தாலும், பரம்பரை சொத்து நிறைய இருக்கு. நம்மகிட்ட இருக்க பணத்தோட அந்த சொத்தும் சேர்ந்தா, நம்ம லெவலே வேற!” என்றெல்லாம் லாவண்யா கூற, “ம்ச், எனக்கு அவனோட செட்டாகலன்னு சொல்லிட்டு இருக்கேன், நீங்க என்னடான்னா, பணம் பரம்பரைன்னு கிளாஸ் எடுத்துட்டு இருக்கீங்க!” என்று சிடுசிடுத்தாள் ஆரபி.



“எல்லாம் கல்யாணமானா சரியாகிடும் பேபிம்மா.” என்று லாவண்யா கூற, ‘அட தாய்க்கிழவி, நான் எழுதாத டையலாக் எல்லாம் சொல்லிட்டு இருக்கியா? அதுவும் அரதப்பழசான இத்துப்போன டையலாக்!’ என்று நினைக்க மட்டுமே முடிந்தது ஆரபியால்.



கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் தொண்டை தண்ணீர் வற்ற வற்ற பேசினாலும் ஒரு பயனும் இல்லை. லாவண்யா தன் பிடியில் இருக்க, ‘எப்பா சாமி, இதுக்கு மேல முடியாது. இந்த பூமர் ஆண்ட்டி கிட்ட பேசுறதுக்கு பதிலா, அந்த ஃபோர்ஹெட் ஐக்காரன் கிட்டயே பேசிடலாம்.’ என்று எண்ணியவளாக அறைக்கு சென்றாள்.



அது அத்தனை சுலபமா என்ன?




*****



ஏதோ யோசனையில் இருந்த ஆர்யனை ஓரக்கண்ணால் பார்த்தபடியே வாகனத்தை செலுத்தினான் வசந்த், ஆர்யனின் நண்பன் மற்றும் பி.ஏ.



அதை கண்டு கொண்ட ஆர்யனும், “வசந்த், பைரவியை பத்தின பேக்ரவுண்ட் செக் யாரு பண்ணா?” என்று வினவ, வசந்த்தும் குழப்பமான முகபாவத்துடன், “எப்பவும் நமக்கு பண்ற பிரைவேட் டிடெக்டிவ் தான். ஏன் டா?” என்றான்.



“ம்ம்ம், அவங்களை நம்புறதா வேண்டாமான்னு யோசிச்சுட்டு இருக்கேன்.” என்று ஆர்யன் கூற, “டேய் என்னடா சொல்ற? கிட்டத்தட்ட அஞ்சு வருஷமா நமக்கு வேலை பார்த்துட்டு இருக்காங்க. இதுவரை, ஒருமுறை கூட அவங்க குடுத்த தகவல் தவறுனதே இல்ல.” என்று வசந்த் அவர்களுக்கு வக்காலத்து வாங்கினான்.



“இந்த முறை தவறி இருக்கோன்னு தான் சொல்றேன்.” என்ற ஆர்யனை பார்த்த வசந்த் வாகனத்தை ஓரமாக நிறுத்தி, “நீ சரியில்ல. இதுக்கு தான் அவளை பார்க்க போகாதன்னு சொன்னேன்.” என்றான்.



அத்தனை நேரமிருந்த இலகு பாவம் மாறி இறுக்கம் அந்த இடத்தை அடைத்துக் கொள்ள, “வாட் டூ யூ மீன் வசந்த்?” என்று அடிக்குரலில் சீறினான் ஆர்யன்.



“எல்லாம் நீ நினைக்கிற மீனிங் தான். எவ்ளோ தைரியம் இருந்தா, உன்னை கொலை செய்ய ஆட்களை அனுப்புனதோட இல்லாம, உன்னை வாழ்க்கையையே பணயமா வைக்க பிளான் போட்டுட்டு, இப்போ எதுவுமே தெரியாத மாதிரி உன்னை கல்யாணம் பண்ணிக்க நினைப்பா! ஷீ இஸ் அ மேனிப்புலேட்டிவ் பி**” என்று வசந்த் கூற, “ப்ச்…” என்று முகத்தை சுழித்தான் ஆர்யன்.



‘க்கும், சொன்னதுக்கே இப்படியா?’ என்பது போல பார்த்த வசந்த்தோ, “எனக்கு ஒண்ணு தான் புரியல. இவளைப் போய் எப்படி உங்க அப்பா சூஸ் பண்ணாரு?” என்று வினவ, இப்போது ஆர்யனின் முகம் மேலும் இறுகி, விட்டால் வெடித்து விடும் நிலைக்கு சென்றது.



“எல்லாம் பணத்துக்காக தான்! பையனை பணயம் வைக்கிற அளவுக்கு பணப்பேய் அவரை பிடிச்சு ஆட்டுவிக்குது.” என்றவனின் குரலில் மறைக்க முயன்றும் வருத்தம் எட்டிப் பார்த்தது.



“அம்மா கிட்ட சொல்லி பார்த்தியா?” என்று வசந்த் வினவ, ஆர்யனோ ஒரு பெருமூச்சுடன், “கேட்கிற நிலைமைல அவங்களும் இல்ல, சொல்ற நிலைமைல நானும் இல்ல. விடு என் தலைல என்ன எழுதியிருக்கோ அது தான நடக்கும்!” என்று விரக்தியாக கூறினான் ஆர்யன்.



“ப்ச், என்னன்னாலும் அவளைப் போய்…” என்று ஆரம்பித்த வசந்த்தை இடைவெட்டிய ஆர்யன், “ஹுஹும், திரும்ப ஒருமுறை பேக்ரவுண்ட் செக் பண்ண சொல்லு வசந்த். ஏதோ தப்பா இருக்குன்னு என் உள்ளுணர்வு சொல்லுது.” என்றான்.



அவன் மனக்கண்ணில், “நீங்க இப்படி என்னை வச்ச கண்ணு எடுக்காம பார்க்குறதை பார்த்தா, எனக்கு கிடைச்ச தகவல் தான் தப்பு போலவே!” என்று அவள் சீண்டியது காட்சியாக வந்து, அவன் உள்ளுணர்வை நம்ப தூண்டியது.



மேலும், அவனுக்கும் அவன் தந்தைக்கும் நடந்த பேச்சுவார்த்தை - வசந்த்தை தவிர வேறு யாருக்கும் பகிரப்படாத விஷயம் அவளுக்கு எப்படி தெர்ந்தது என்ற கேள்வியும், அவள் விஷயத்தை கிளற போதுமானதாக இருந்தது.



அவன் பார்ப்பது ஆரபியை, விசாரிப்பது பைரவியை. இதில், எத்தனை முறை சோதனை செய்தாலும், கிடைக்கும் தகவல்கள் முரணாக தானே இருக்கும்!




தொடரும்...



கதைக்கான உங்க கருத்துகளை கீழ இருக்க கருத்து திரியில் பகிருங்க.

 

NNK18

Moderator
InShot_20240104_072443031.jpg



அத்தியாயம் 5



அன்றைய பொழுதை மேலும் சிக்கலாக்கி, தானும் நொந்து நூடில்ஸாக விரும்பாத காரணத்தினால், ஆரபி அறைக்குள்ளேயே அடைந்து கொண்டாள்.



இடையில், வைஷ்ணவியை அழைத்து இரவுணவை அறைக்கே கொண்டு வரவைத்து உண்டு முடிக்க, அதைக் கண்ட லாவண்யாவோ, ‘ஹ்ம்ம், கோபம் வந்தா, இந்த பொண்ணை புரிஞ்சுக்கவே முடியுறதில்ல.’ என்று அவராகவே நினைத்துக் கொள்ள, அந்த நாள் அத்துடன் நிறைவு பெற்றது.



மறுநாள், ஆரபி அவளின் வழக்கப்படி ஒன்பது மணிக்கு எழ, “என்ன பேபிம்மா, என்னைக்கும் இல்லாம இன்னைக்கு இவ்ளோ நேரம் தூங்கியிருக்க?” என்று லாவண்யாவின் குரல் சுப்ரபாதமாக ஒலிக்க, ‘ச்சு, காலைல எழுந்ததுமா?’ என்று நொந்தபடியே, அவருக்கு பதில் சொல்லாமல், குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.



“பேபிம்மா, நீ என் மேல எவ்ளோ வேணும்னாலும் கோபப்பட்டுக்கோ. ஆனா, உன் கல்யாணம் ஆர்யனோட தான்.” என்ற லாவண்யா சிறிது இடைவெளி விட்டு, “சரி, அதெல்லாம் அப்பறம் பேசிக்கலாம். சீக்கிரம் ரெடியாகி வா. உன் அப்பா அப்போவே ஆஃபிஸ் போயிட்டாரு. ஏற்கனவே, நேத்து நீ ஆஃபிஸ் போகல. அங்க அவரு என்னென்ன பண்ணி வச்சுருக்காருன்னு தெரியல. என்று புலம்பியபடி லாவண்யா செல்ல, குளியலறைக்குள் ஆரபியின் நிலை தான் பரிதாபமாக இருந்தது.



‘வேலைக்கு போக பிடிக்கலைன்னு தான ரைட்டர்னு சொல்லிட்டு சுத்திட்டு இருந்தேன். இப்போ திரும்ப ஆஃபிஸ் போகனுமா? கடவுளே, உனக்கு என்மேல அப்படி என்ன காண்டு?’ என்று இம்முறை கடவுளை திட்டியபடி குளித்து முடித்தாள்.



அங்கிருந்த உயர்ரக குளியலங்கியை அணிந்து கொண்டு வெளியே வந்தவளின் கண்கள் கட்டிலில் வைக்கப்பட்டிருந்த உடையில் பதிந்தது. வெள்ளை நிற கையில்லா சட்டையும், அதன் மீது மெல்லிய வெண்ணிற சாட்டின் மேலங்கியும், கருப்பு நிற முட்டி வரையிலான பாவாடையும் இருந்தது.



“ஹ்ம்ம், இதுல எல்லாம் குறையே இல்ல. அந்த பூமர் பேச்சை குறைச்சுக்கிட்டா தேவலாம்!” என்றபடி வேகவேகமாக கிளம்ப ஆரம்பித்தாள்.



என்னதான் வேகமாக கிளம்பினாலும், பைரவியின் ஒப்பனை பொருட்களை எல்லாம் ஆராய்ந்து அணிந்து கொள்ளவே முழுதாக முக்கால் மணி நேரம் தேவைப்பட்டது. அவற்றுள் சிலவற்றை ஆரபி பார்த்ததே இல்லை என்னும்போது இந்த காலதாமதம் தவிர்க்க முடியாதது தானே!



ஒருவழியாக ஆரபி அறையிலிருந்து வெளியே வர, உணவு மேஜையில் அமர்ந்திருந்த லாவண்யாவில் ஆரம்பித்து, அருகிலிருந்த பார்த்தசாரதி, சமையலறையிலிருந்து எட்டிப்பார்த்த வைஷ்ணவி வரை அனைவரின் பார்வையும் அவள் மீது இருப்பதைக் கண்டு சிறிது பதற்றம் கொண்டாள் ஆரபி.



எனினும், வெளியில் அதைக் காட்டிக் கொள்ளாமல் வந்தமர, “பேபிம்மா, இன்னைக்கு நீ வித்தியாசமா இருக்கியே!” என்று லாவண்யா கேட்டுவிட, “அதுக்கு என்ன இப்போ? என் மூஞ்சி எப்படி இருக்கணும்னு கூட நான் முடிவெடுக்க கூடாதா?” என்று எரிந்து விழுவது போல சமாளித்தாள் ஆரபி.



‘ஷப்பா, இந்த வில்லியா இருக்குறதுல இது ஒண்ணு தான் பெனிஃபிட்!’ என்று உள்ளுக்குள் தன் சமாளிப்பை எண்ணி பாராட்டியும் கொண்டாள்.



“உன் பொண்ணு தான, ஆளை மாத்துற மாதிரி முகத்தையும் மாத்துவா.” என்று பார்த்தசாரதி குத்திக்காட்டி பேச, ஆரபிக்கு கோபமெல்லாம் வரவில்லை.



மாறாக, ‘அட, இந்த டையலாக் நல்லா இருக்கே!’ என்று அந்த வசனத்தில் தான் அவளின் கவனம் இருந்தது.



“என் பொண்ணை குறை சொல்லணும்னா வந்துடுவீங்களே! அவளைப் பத்தி உங்களுக்கு அக்கறையே இல்ல, அப்பறம் எந்த உரிமைல அவளை பேசுறீங்க?” என்று லாவண்யா கணவரின் மீது பாய, “ஹ்ம்ம், பிசினஸ்ல ஆரம்பிச்சு பரம்பரை சொத்து வரை என் வாரிசுன்னு அவ பேரு தான இருக்கு! அந்த உரிமைல தான் பேசுறேன்.” என்றார் பார்த்தசாரதி.



“பின்ன, என் பேபிம்மா பேரு இல்லாம, அந்த வேலைக்காரி பேரா இருக்கும்.” என்று லாவண்யா கூற, கோபம் கொண்ட பார்த்தசாரதியோ, சாப்பிட்டுக் கொண்டிருந்த தட்டை தட்டி விட, அது கீழே விழுந்து உடைந்து போனது.



‘க்கும், இத்தனை வருஷம் சும்மா இருந்துட்டு, இப்போ கோபம் வந்து என்ன பிரயோஜனம்? ஆனா, இப்படி நம்ம எழுதின கதையை லைவ்வா பார்க்குறதும் நல்லா தான் இருக்குல.’ என்று பார்வையாளரின் மனநிலையில் இருந்த ஆரபியோ, சண்டையிடும் இருவரையும் கண்டு கொள்ளாமல், வைஷ்ணவியை அழைத்தாள்.



என்றும் இல்லாத திருநாளாக இன்று தன்னை அழைத்த பைரவி முன்பு குனிந்த தலை நிமிராமல் வந்து நின்றாள் வைஷ்ணவி. அவளின் பயம் அவளுக்கு!



“எனக்கு தலைவலியா இருக்கு. சோ, என்னோட நீயும் ஆஃபிஸ் வர.” என்று ஆரபி கூற, “அவ எதுக்கு ஆஃபிஸுக்கு எல்லாம்?” என்று முகத்தை சுழித்தார் லாவண்யா.



“ஹ்ம்ம், ஏற்கனவே இருக்க தலைவலிக்கு துணையா இருக்க!” என்று விட்டு ஆரபி வெளியே சென்றுவிட, “ப்ச், என்னமோ ஆச்சு இவளுக்கு!” என்று ஒருபக்கம் லாவண்யா புலம்ப, பார்த்தசாரதியோ யோசனையுடன் வெளியே செல்பவளை பார்த்துக் கொண்டிருந்தார்.



*****



அந்த உயர்ரக மகிழுந்தின் பின்னிருக்கையில் ஆரபியும் வைஷ்ணவியும் அமர்ந்திருந்தனர்.



ஆரபி, வெளியே வேடிக்கை பார்த்தபடி இருக்க, வைஷ்ணவி நொடிக்கு ஒருமுறை தன்னருகே அமர்ந்திருந்த பைரவியாகிய ஆரபியை பார்த்தபடி இருந்தாள்.



“நான் என்ன அவ்ளோ அழகாவா இருக்கேன்? இப்படி அடிக்கடி பார்த்துட்டு இருக்க?” என்று திரும்பி பார்க்காமலேயே ஆரபி வினவ, அதில் பதறிய வைஷ்ணவியோ, “இ…இல்ல இல்ல… நா…ன் பார்..க்கல.” என்று திணறினாள்.



இப்போது அவள் புறம் திரும்பி அமர்ந்த ஆரபியோ, “ஆஹான், நீ என்னை பார்க்கல?” என்று ஒற்றை புருவத்தை உயர்த்தி கேட்க, வைஷ்ணவியோ நிமிர்ந்து அவளை பார்த்துவிட்டு மீண்டும் கீழே குனிந்து கொண்டாள்.



“இதோ இப்போ கூட என்னை சைட்டடிச்ச தான?” என்று ஆரபி கேலியாக வினவ, “ஹையோ, நான் அந்த மாதிரி பொண்ணு இல்ல.” என்ற வைஷ்ணவிக்கு முகமே சுருங்கி விட்டது.



“அட லூசு பொண்ணே!” என்று ஆரபி வாய்விட்டு சிரிக்க, அவள் இப்படி சிரித்து பார்த்திடாத வைஷ்ணவியோ திறந்த வாய் மூடாமல் அவளை பார்த்தபடி, “சிரிச்சா நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க அக்… மேம்.” என்று கூறிவிட்டு, பின் சுதாரித்து நிறுத்தி விட்டாள்.



“தேங்க்ஸ்! அதென்ன மேம். சும்மா பேரு சொல்லியே கூப்பிடு.” என்று ஆரபி யோசிக்காமல் கூறிவிட, அதில் திகைத்த வைஷ்ணவியோ, “உங்களுக்கு தான் பேரு சொல்லி கூப்பிட்டா பிடிக்காதே.” என்று தயங்கியபடி கூறினாள்.



“ஏன் பிடிக்காது? கூப்பிடுறதுக்கு தான பேரு இருக்கு. ஆர…” என்று ஆரம்பித்த ஆரபிக்கு அப்போது தான் அவள் இருக்கும் சூழல் நினைவுக்கு வந்தது.



‘ச்சு, ஆரு, சொதப்பாத!’ என்று சுதாரித்துக் கொண்டு, “அதாவது, பைரவி தான பிடிக்காது. நீ ஏன் ‘ரபி’ன்னு கூப்பிடக்கூடாது?” என்று சமாளித்தாள் ஆரபி.



‘ரபியா? ஷார்ட்டான்னு வச்சுக்கிட்டாலும் ரவின்னு தான வரும்?’ என்று வைஷ்ணவி யோசிக்க, “என்ன?” என்று சாதாரணமாக தான் கேட்டாள் ஆரபி. அதற்கே பதறி, யோசித்ததை கூட கிடப்பில் போட்டுவிட்டு, “பேரு நல்லா இருக்கே… ர…பி.” என்றாள் வைஷ்ணவி.



அதில் சிரித்த ஆரபியோ, “சோ இன்னொசென்ட்.” என்றபடி திரும்பிக் கொண்டாள்.



ஏனோ, வைஷ்ணவியிடம் பாராமுகம் காட்ட முடியவில்லை ஆரபியால். அவள் முகம் கீர்த்தியை பிரதிபலித்தது தான் காரணமோ?



இங்கு வைஷ்ணவிக்கோ, நடப்பது கனவா நிஜமா என்ற சந்தேகம். இப்படி தன்னிடம் பைரவி சிரித்து பேசுவாள் என்று யாராவது சொல்லியிருந்தால், அவளின் தயக்கத்தையும் மீறி அவர்களை கண்டபடி திட்டியிருப்பாள் அந்த சாது!



ஆனால், இப்போது அவள் கண்முன்னே நடக்கிறதே! நடப்பவை மகிழ்ச்சியான நிகழ்வாக இருந்தாலும், இது நீடிக்குமா, இல்லை இதற்கு பின்னர் ஏதேனும் காரணம் இருக்குமா – போன்ற கேள்விகளும் அவள் தலையை குடைந்து கொண்டு தான் இருந்தன.



இப்படி இருவேறு மனநிலைகளுடன் அந்த பலமாடி அடுக்குகள் கொண்ட கட்டிடத்திற்கு முன்னே வந்து நின்றது அவர்களின் வாகனம்.



வைஷ்ணவிக்கு அது தான் முதல் முறை என்பதால் ‘பே’வென்று சுற்றிலும் பார்த்துக் கொண்டிருந்தாள் என்றால், அவளுக்கு சற்றும் குறையாத திகைப்பும் ஆச்சரியமும் ஆரபியிடமும் வெளிப்பட்டது.



‘பரவாலையே, நம்ம கூட நல்லா தான் கற்பனை பண்ணியிருக்கோம்.’ என்று அதற்கும் தன்னை பாராட்டியபடியே, தன்னுடன் வந்த ஜீவனை மறந்துவிட்டு முன்னே சென்றாள். வைஷ்ணவியோ, இன்னும் தன் ஆச்சரியத்திலிருந்து வெளிவராமல் அங்கேயே நின்றாள்.



ஆரபி உள்ளே நுழைய, அங்கிருந்த அனைவரும் அவளுக்கு எழுந்து மரியாதை செய்ய, இதற்கு முன்னர் இதையெல்லாம் அனுபவித்திடாத ஆரபிக்கு சிறிது கூச்சமாக இருந்தது. மேலும், இவை எல்லாம் அவளுக்கு அல்ல, அவர்கள் பயப்படும் பைரவிக்கு என்றும் தெரிந்தே இருந்ததால், அவற்றை எல்லாம் கண்டு கொள்ளாமல், விட்டால் போதுமென்று மின்தூக்கி பக்கம் விரைந்தாள்.



எப்படியோ வழி கண்டுபிடித்து மின்தூக்கி இருக்கும் இடத்திற்கு வந்து சேர, சரியாக அதே சமயம் அதன் கதவுகள் மூட, ஆரபி வேகமாக அதை திறக்கும் பொத்தான்களை அழுத்தினாள்.



யாராவது தன்னை பார்த்து விட்டார்களா என்று திரும்பி பார்த்தபடி மின்தூக்கி பக்கம் அவள் திரும்ப, அங்கு அவளை மேலிருந்து கீழ் ஆராய்ச்சி பார்வை பார்த்தபடி நின்றிருந்தான் ஆர்யன்!



‘ஹையோ! பேய் கிட்டயிருந்து தப்பிச்சு, பூதத்துக்கிட்ட மாட்டிக்கிட்டேன் போலயே!’ என்று ஆரபி திகைக்க, வெகு நேரமாக அவள் தயங்கி நிற்பதை கண் சுருங்க பார்த்தவன், கேலிப் புன்னகையுடன், “நீ இப்படி என்னை வச்ச கண்ணு எடுக்காம பார்க்குறதை பார்த்தா, எனக்கு கிடைச்ச தகவல் உண்மை தான் போலவே!” என்று அவளைப் போலவே கூறினான்.



“உண்மையா? என்ன உண்மை?” என்று ஆரபி பதற, மின்தூக்கியின் கதவுகள் மூடாதவாறு இருகைகளையும் வைத்து தடுத்தபடி உள்ளிருந்தபடியே தலையை மட்டும் அவள் புறம் நீட்டி அவளை நெருங்கி, “நீ என்னை பார்த்ததும் மயங்கிட்டியாமே!” என்றான்.



அவன் அவளருகே வந்தபோது விட மறந்த மூச்சை, அவன் சொன்னதைக் கேட்டதும் தான் விட்டாள், அது அவன் முகத்தை தாக்க, இருவரிடையே சொல்லப்படாத ஏதோ பரிமாறப்பட்ட உணர்வு இருவருக்குமே தோன்றினாலும், அதை பெரிதாக எடுக்கவில்லை இருவருமே.



ஆனால், இக்காட்சியை பார்த்த ஒரு ஜோடி கண்களோ கலங்கிப் போயின!



“ஹலோ, நீங்க என்ன பெரிய மன்மத…” என்று ஆரம்பித்த ஆரபி, அவன் முறைப்பை கண்டதும், “க்கும், அழகுன்னு நினைப்போ? உங்களை விட அழகானவங்களை எல்லாம் நான் பார்த்திருக்கேன்.” என்று சொல்ல வேண்டுமென்று ஏதோ சொல்லி வைக்க, “ஓஹ், நான் அழகா இல்லன்னா, என்னை கல்யாணம் பண்ணனும்னு எதுக்கு துடிக்கிற?” என்று வினவினான் ஆர்யன்.



‘ஆஹா, நம்ம பாயிண்டுக்கு வரான் பையன். எப்படியாவது இந்த லிஃப்ட் டிராவலுக்குள்ள அவனே கல்யாணத்தை நிறுத்துற மாதிரி பண்ணிடனும்.’ என்று எண்ணியபடி, அவனை தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தவள், “அதே தான் நானும் சொல்றேன். எதுக்கு இந்த கல்யாணம்? சோ, நீங்களே நிறுத்திடுங்க.” என்றாள் ஆரபி.



அவள் அப்படி கூறுவாள் என்று எதிர்பார்க்காத ஆர்யனோ, ஒருநொடி குழம்பி தான் போனான்.



‘நோ, இவ வேற எதுக்கோ பிளான் பண்றா!’ என்று அவன் மூளை எடுத்துரைக்க, “ஓஹ், நான் கல்யாணத்தை நிறுத்தினா, அதை காரணமா வச்சு எங்க கம்பெனி பார்ட்னர்ஷிப்பை உடைக்கலாம்னு புது பிளானா? ஆனா, இப்படி செய்யுறதுக்கு, எதுக்கு அதை சாக்கா வச்சு கல்யாண ஏற்பாட்டை ஆரம்பிக்கணும்?” என்றான் ஆர்யன்.



“நோ நோ, ஐ ப்ராமிஸ், நம்ம கல்யாணம் நின்னாலும், பிசினஸ்ல எந்த பாதிப்பும் வராது.” என்று ஆரபி உடனடியாக சத்தியம் செய்ய, மீண்டும் அவளருகே வந்து அவள் கண்களை உற்று நோக்கிய ஆர்யனோ, “ஹுஹும், எனக்கு நம்பிக்கை இல்ல. நானெல்லாம் கல்யாணத்தை நிறுத்த மாட்டேன்.” என்றான்.



‘அச்சோ, இவன் ஈஸியா ஒத்துப்பான்னு பார்த்தா, இப்படி பின்வாங்குறானே!’ என்று நொந்த ஆரபியோ, தன்னருகே நின்றவனை நிமிர்ந்து பார்க்க, அவன் பார்வை இப்போதும் அவளை துளையிடுவது போல தான் இருந்தது.



‘என்ன பார்வை டா இது!’ என்று மலைத்த ஆரபியோ, தன் மனம் செல்லும் வழியை உணர்ந்து தலையை குலுக்கிக் கொண்டு, “ப்ச், நான் உங்களுக்கு செட்டாக மாட்டேன்.” என்று கூறினாள் மனமே இல்லாமல்!



அதுவரை அவள் வெளிப்படுத்திய உணர்வுகளையும் பாவங்களையும் இன்ச் இன்ச்சாக அளந்து கொண்டிருந்தவனோ, அவளை அவனருகே இழுத்து, “அப்படியா சொல்ற? வா செக் பண்ணி பார்த்துடுவோம்.” என்று அவர்களின் பிம்பங்களை பிரதிபலித்துக் கொண்டிருந்தது ஆளுயர கண்ணாடியை நோக்கி திருப்பினான்.



ஆறடி உயரமும், அதற்கேற்ற உடல்வாகுடன் அவனும், அவனுள்ளே பொதிந்து விடுபவள் போல குட்டியாக அவளும் இருக்க, “நீங்களே பாருங்க, நம்ம மேட்ச்சே இல்ல.” என்று காரணம் கண்டுபிடித்த உற்சாகம் இருந்தாலும், கொஞ்சம் சுருதி குறைந்தே இருந்தது ஆரபியின் குரலில்.



அவனோ அவன் உயரத்தை குறுக்கிக் கொண்டு, அவள் தோள்வளைவில் அவன் முகம் இருக்குமாறு குனிந்து, “இப்போ ஓகேவா?” என்று கேட்க, அதே சமயம் அந்த மின்தூக்கியின் கதவு திறந்தது.



வெளியே, அவனுக்காக காத்திருந்த வசந்த்தும், அவளுக்காக காத்திருந்த வைஷ்ணவியும் இந்த காட்சியை பார்த்து அதிர்ச்சியில் வாய் பிளந்து நின்றனர்.



அவர்கள் மட்டுமல்ல ஆரபியும் தான்!



தொடரும்...


கதைக்கான உங்க கருத்துகளை கீழே இருக்கும் கருத்து திரியில் பகிருங்க.


 

NNK18

Moderator
InShot_20240110_175025741.jpg


அத்தியாயம் 6



ஆர்யன் சட்டென்று அவளை நெருங்குவான் என்று எதிர்பார்க்காத ஆரபி திகைத்து நிற்க, அவனோ ஒரு படி கீழே இறங்கி, அவளின் தோள் வளைவில் நாடியை பதிக்க, ஆரபி வேறொரு உலகத்திற்கே சென்று விட்டாள் என்று தான் கூற வேண்டும்!



சரியாக அதே சமயம், மின்தூக்கியின் கதவு திறக்கப்பட, அந்த சத்தத்தில் தான் சுற்று புறம் உணர்ந்து, நிகழ்விற்கு வந்தாள் ஆரபி.



உடனே, தானிருக்கும் நிலை உணர்ந்து அவசரமாக மின்தூக்கியிலிருந்து வெளியே செல்ல விழைய, அவளின் கூந்தலுக்கு அவனை விட்டு பிரிய மனமில்லை போலும்.



பாவையின் கற்றை கூந்தல், ஆணவனின் சட்டை பொத்தானில் சிக்கிக் கொண்டு, விலகியவளை மறுபடியும் அவனுடன் கட்டிப்போட்டது.



ஆரபி, பதற்றத்தில் சிக்கியிருந்த கூந்தலை பிய்த்து எடுக்க முயல, அவளின் செய்கையை தடுத்தவாறே, “ப்ச், பொறுமைங்கிற வார்த்தையாவது தெரியுமா உனக்கு?” என்று ஆர்யன் வினவ, அவன் முகத்தை பார்க்காமல், “க்கும், இதை சொல்றதுக்கு பதிலா செயல்ல காட்டலாம்.” என்றாள்.



சட்டென்று அவன் சட்டை பொத்தானை கழட்டி ஆரபியின் கூந்தலுக்கு விடை கொடுக்க, அவளோ எதிரே தெரிந்த அவனது பரந்த மார்பை பார்த்து மூச்சு விட மறந்தவளாக தேங்கி நின்றாள்.



இரண்டொரு நொடிகள் அதே நிலையில் கழிய, “உனக்கு என்னை பிடிச்சுருக்குன்னு தெரியும். அதுக்காக இப்படி காணாததை கண்ட மாதிரி நிற்கணும்னு அவசியம் இல்ல.” என்று அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் அவன் கூற, அதில் சுயமடைந்தவள், “ச்சீ!” என்ற புருவச்சுழிப்புடன் அங்கிருந்து நகர்ந்தாள்.



இத்தனை நேரம் அவர்கள் காட்டிய இலவச படத்தை மற்ற இரு ஜீவன்கள் அதிர்ச்சியாக பார்த்துக் கொண்டிருக்க, அவர்களை எல்லாம் கண்டு கொள்ளாமல் கடந்து வேகமாக அவளின் அறைக்கு சென்று விட்டாள் ஆரபி.



அதற்கு மேல், அங்கு வேலை இல்லை என்பதால் வைஷ்ணவியும் திரும்பி திரும்பி பார்த்தபடி ஆரபி சென்ற வழியில் செல்ல, வசந்த்தோ ஆர்யனை முறைத்துக் கொண்டே இருந்தான்.



அதை ஆர்யன் கண்டு கொண்டால் தானே!



ஆரபி சென்ற திசையையே யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தவனின் இதழோரம் மட்டும் சிரிப்பில் விரிந்திருந்தது.



நண்பன் தன்னை கண்டு கொள்ளவில்லை என்பதை தாமதமாக புரிந்து கொண்ட வசந்த்தோ, “டேய், அவ போய் அரை மணி நேரம் ஆகுதுடா. கொஞ்சமாச்சும் என்னை பாரு டா.” என்று புலம்பலை ஆரம்பித்தவன், “இதுக்கு தான் அவளோட தனியா இருக்காதன்னு சொல்றது. எதுக்கும் அசைஞ்சு கொடுக்காத இரும்பு நெஞ்சம் கொண்ட என் நண்பனை, இப்படி மாத்திட்டாளே!” என்று முடிக்க, அத்தனை நேரம் பார்க்காத வசந்த்தை முறைத்தான் ஆர்யன்.



“முறைச்சா மட்டும் எல்லாம் பொய்யாகிடுமா? நான் தான் பார்த்தேனே, ரெண்டு பேரும் இவ்ளோ நெருக்கமா இருந்ததை!” என்று அவனை முட்டிக் கொண்டி வசந்த் நிற்க, “ச்சீ, தள்ளிப்போ.” என்று ஆர்யன் அவனை விட்டு விலக, “ஓஹோ, அவ கூட மட்டும் நெருக்கமா நிற்ப, என்னை தள்ளிப் போக சொல்லுவியா?” என்று மீண்டும் ஆர்யனை வசந்த் நெருங்க, அங்கு ஒரு குட்டி தள்ளுமுள்ளு ஏற்பட்டது.



“வசந்த், பிஹேவ் யுவர்செல்ஃப். யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க?” என்று சொல்லியபடியே ஆர்யன் திரும்ப, அங்கு இருவரையும் அதிர்ச்சியாக பார்த்துக் கொண்டிருந்தனர் ஆரபியும் வைஷ்ணவியும்.



பெண்கள் இருவரும் பாதை தெரியாமல் வந்த வழியே மீண்டும் வரும் வேளையில் தான், ஆண்கள் இருவரையும் இப்படி பார்க்க நேரிட்டது!



அவர்களின் பார்வையே அவர்களின் எண்ணவோட்டத்தை பிரதிபலிக்க, விளக்கம் கொடுக்க போன வசந்த்தை சட்டையை பற்றி நிறுத்திய ஆர்யனோ, “நீ ஒன்னும் பிடுங்க வேண்டாம்.” என்று அடிக்குரலில் சீறியவாறு கையோடு அழைத்துக் கொண்டு சென்று விட்டான்.



இப்போது, செல்லும் அவனை பார்ப்பது அவளின் முறையாகிற்று.



‘இது என்ன எனக்கே தெரியாம ஒரு கனெக்ஷனா இருக்கும்?’ என்று யோசித்தபடி மீண்டும் அறை தேடும் படலத்தை தொடர்ந்தாள் ஆரபி.



*****



சற்று முன்னர் இருந்த இலகு பாவனை முற்றிலும் தொலைத்தவனாக அமர்ந்திருந்தான் ஆர்யன்.



அவனுக்கு முன், அவனைப் போலவே இறுகி காணப்பட்டார் பார்த்தசாரதி.



“என்ன முடிவெடுத்துருக்க ஆர்யா? நான் தேவ் கிட்ட எவ்ளோவோ பேசிப் பார்த்துட்டேன். ஆனா, அவன் என் பேச்சை காது கொடுத்து கேட்குற நிலைமைல இல்ல. அட்லீஸ்ட், நீயாவது கேளேன்.” என்றார் பார்த்தசாரதி.



ஆர்யனோ ஒரு பெருமூச்சுடன், “இது பிசினஸ் மீட்டிங்னு நினைச்சேன். இதை பத்தி தான் பேச போறீங்கன்னு தெரிஞ்சுருந்தா, நான் வந்துருக்கவே மாட்டேன்.” என்று கூறிவிட்டு எழ முற்பட, “நீயும் பிசினஸ்னு பார்த்து உன் வாழ்க்கையை கோட்டை விட்டுடாத ஆர்யா.” என்றவரின் குரல் வருத்தத்தில் தோய்ந்து வெளிவந்தது.



அதில் சற்று நிதானமான ஆர்யனோ, “இதை நீங்க சொல்றது தான் ரொம்ப வேடிக்கையா இருக்கு அங்கிள்.” என்று கேலியாக சொன்னவன், “உங்க ரெண்டு பேரோட சுயநலமும் அவசரமும் ரெண்டு பேரோட வாழ்க்கையை பாதிச்சுருக்கு. இதோ, இப்போ என் வாழ்க்கையும் என் அப்பாவோட சுயநலத்துக்காக பணயம் வைக்கப்படுது.” என்றான்.



“ப்ச் ஆர்யா, இன்னைக்கு நீ எந்த சூழ்நிலைல இருக்கியோ, அதே சூழ்நிலைல தான் நான் அன்னைக்கு இருந்தேன். நான் பண்ண அதே தப்பை நீயும் பண்ணிடாதன்னு தான் சொல்றேன்.” என்றார் பார்த்தசாரதி.



“கண்டிப்பா நீங்க பண்ண தப்பை, நான் பண்ண மாட்டேன். இந்த கல்யாணம் நடந்தாலும், என் வாழ்க்கையை எப்படி சீர்படுத்திக்கணும்னு எனக்கு தெரியும்.” என்று ஆர்யன் கூற, அவன் வாக்கியத்தை கேட்ட மற்ற இருவரும் ஆச்சரியமாக அவனை பார்த்தனர்.



‘இவன் என்ன கல்யாணத்துக்கு ரெடியாகிட்டானா?’ என்ற கேள்வியுடன் வசந்த் ஆர்யனை பார்க்க, அதை கேட்கவே செய்தார் பார்த்தசாரதி.



“வேறென்ன செய்ய சொல்றீங்க? உங்க பொண்ணு தான், கல்யாணம் பண்ணா தான் பார்ட்னர்ஷிப்னு சொல்லிட்டாங்களே.” என்று கூறிய ஆர்யனோ, அவள் திருமணம் வேண்டாம் என்று மறுத்ததை கூறவில்லை!



“ஆர்யா, பார்ட்னர்ஷிப் பத்தி யோசிக்காத. அதை நான் பார்த்துக்குறேன்.” என்று பார்த்தசாரதி கூற, “ஓஹ், உங்களுக்கு இங்க இன்னும் பவர் இருக்குன்னு நம்புறீங்களா?” என்று கேலியாக வினவினான் ஆர்யன்.



அதில் அவர் தலை குனிய, ஆர்யனோ ஒரு பெருமூச்சு விட்டு தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான். இல்லையென்றால், இத்தனை நாட்கள் மனதில் அடைத்து வைத்த கோபத்தை அவரை நோக்கி கேள்விக்கணைகளாக தொடுத்திருப்பான்.



“இது என் வாழ்க்கை, என் முடிவு.” என்று ஆர்யன் கூற, “ஆர்யா, நான் இவ்ளோ தூரம் சொல்றது எதுக்குன்னு உனக்கு புரியலையா? பைரவி உனக்கு செட்டாக மாட்டா ஆர்யா. ப்ச், அவளெல்லாம் பொண்ணே இல்ல.” என்று வெறுப்புடன் கூறினார் பார்த்தசாரதி.



அதில் அவன் கட்டுப்பாடுகள் தகர்த்தெறியப்பட, “அவ இப்படி இருக்க யாரு காரணம்? நீங்களும் உங்க அருமை மனைவியும் தான்!” என்றான் ஆர்யன். ‘அங்கிள்’ என்ற தூர அழைப்பு தூரம் போனது.



“பிசினஸ் பின்னாடி நீங்களும், பணம் பின்னாடி உங்க மனைவியும் ஓடுனீங்க. விளைவு, ஒருத்தி அகங்காரத்தோட மறு உறுவமாவும், இன்னொருத்தி முதுகெலும்பே இல்லாத கோழையாவும் வளர்ந்துருக்காங்க. ஆனா, உங்க மனைவியை இந்த விஷயத்தில் பாராட்டலாம். என்னதான் பணத்துக்கு பின்னாடி போனாலும், அவங்க பொண்ணை தனியா விடாம, அவளையும் அதே வழில கூட்டிட்டு போயிருக்காங்க.” என்று ஒவ்வொரு வார்த்தைகளையும் பார்த்தசாரதியின் நெஞ்சை தாக்கும் வல்லமை பெற்றதாக இறக்கினான் ஆர்யன்.



மனிதரால் நிமிரவே முடியவில்லை! அவன் கூறிய ஒவ்வொன்றும் சத்திய வார்த்தைகள் ஆகிற்றே!



அப்போதும் பார்த்தசாரதி, “பைரவி வேண்டாம் ஆர்யா. வைஷ்ணவியை…” என்று கூறிக் கொண்டிருக்கும் போதே இடைவெட்டிய ஆர்யன், “ஓஹ், இன்னொரு பிசினஸ் டீலா? சரி சொல்லுங்க, பைரவியை விட வைஷ்ணவி எப்படி பெட்டர்?” என்று கிண்டலாக கேட்டவன், இடைவெளி விட்டு, “அதை சொல்லக் கூட, அவளைப் பத்தி உங்களுக்கு தெரியாதுல!” என்று முடிக்க, பார்த்தசாரதிக்கோ, ‘ஏன்டா வைஷ்ணவியை இழுத்தோம்!’ என்றானது.



“நீங்க உங்க வீட்டு பொண்ணுங்களை விற்பனை பொருளா பாருங்க, அவங்க வாழ்க்கையை பணயமா வைங்க, அது உங்க பாடு! என் வாழ்க்கையை எப்படி கொண்டு போகணும்னு நான் தான் முடிவு செய்வேன். திரும்ப இப்படி ஒரு அல்பத்தனமான டிஸ்கனுக்கு எல்லாம் என்னை கூப்பிடாதீங்க.” என்று கத்திவிட்டு ஆர்யன் வெளியே சென்றுவிட, வசந்த்தோ பார்த்தசாரதியை ஒரு பார்வை பார்த்துவிட்டு, வேகமாக ஆர்யனை பின்தொடர்ந்தான்.



“டேய், நில்லு டா.” என்று கத்தியபடியே வந்த வசந்த், ஆர்யனை தடுத்து நிறுத்த, “திரும்ப இவரோட எல்லாம் மீட்டிங்னு என்னை கூட்டிட்டு வந்துடாத.” என்று அவனிடமும் கூறினான் ஆர்யன்.



“ப்ச், அதை விடு. நீ உன் மனசுல என்னதான் நினைச்சுட்டு இருக்க? அவளை கல்யாணம் பண்றதா முடிவே எடுத்துட்டியா?” என்று வசந்த் படபடக்க, அத்தனை நேரமிருந்த கடுப்பு காணாமல் போய், நமுட்டுச் சிரிப்புடன், “ஆமா.” என்றான் ஆர்யன்.



“வாட் தி ஹெல்! டேய், என்னடா சொல்ற? அவளை போய் எப்படி? மச்சான், அவ ஏற்கனவே ஒருத்தனோட லிவ்வின்ல இருந்தவ டா.” என்று இன்னும் எதை கூறினால் ஆர்யன் தன் முடிவிலிருந்து பின்வாங்குவான் என்று யோசித்துக் கொண்டிருக்க, “சோ வாட்?” என்று இரண்டே சொற்களில் வசந்த்தை கிட்டத்தட்ட மூர்ச்சை அடைய செய்தான் ஆர்யன்.



ஆர்யன் கூறியதைக் கேட்ட வசந்த் அதே இடத்தில் நிலைத்து நின்று விட, அவனைக் கண்ட ஆர்யனோ நமுட்டுச் சிரிப்புடன் முன்னே நகர்ந்தான்.



இருநொடிகளுக்கு பின்பே நிகழ்விற்கு வந்த வசந்த் மீண்டும் ஆர்யன் பின்னே ஓடியபடி, “மச்சான், இப்போ ஏதோ சொன்ன, ஆனா, எனக்கு அது வேற மாதிரி கேட்டுருக்கு போல.” என்று தன் கேட்கும் திறனையே சந்தேகப்பட, “உனக்கு சரியா தான் கேட்டுச்சு. அவளோட பாஸ்ட் எனக்கு தேவையில்ல. இதே, அவ இடத்துல ஒரு பையன் இருந்து, என் இடத்துல ஒரு பொண்ணு இருந்துருந்தா, அந்த பொண்ணை கன்வின்ஸ் பண்ணி கல்யாணம் பண்ணி வச்சுருப்பீங்கள? அதே மாதிரின்னு நினைச்சுக்குறேன்.” என்றான் ஆர்யன்.



இதில் வசந்த்தின் நிலை தான் பரிதாபமாக மாறியது. ‘இப்போ இது சரின்னு சொல்றானா, தப்புன்னு சொல்றானா?’ என்று ஆரம்பக்கட்ட குழப்பம் மறந்து, அதனிடத்தை வேறொரு குழப்பம் சூழ்ந்து கொண்டது.



*****



ஐந்து நிமிட தேடுதலுக்கு பின்னர், ஒருவழியாக பைரவியின் அறையை கண்டு பிடித்து விட்டாள் ஆரபி.



இதில், தன்னை வால் பிடித்துக் கொண்டு வரும் வைஷ்ணவியிடம், “நேத்து ஆஃபிஸ் வராததால ரவுண்ட்ஸ் போறேன்.” என்று நொண்டி சாக்கு வேறு கூறினாள். வைஷ்ணவியும் வேறு யோசனையில் இருந்ததால், எதுவும் கேட்கவில்லை.



வீட்டிலிருந்த அறை போலவே விஸ்தாரமாக இருந்தது அலுவலக அறை. ஆயினும், முதல் நாளிலிருந்து பிரம்மாண்டங்களை பார்த்து பழகியதாலோ, இல்லை ‘வேலை’ செய்யும் இடம் என்பதாலோ, ஆரபிக்கு இந்த அறை வியப்பையோ மகிழ்வையோ தரவில்லை.



மாறாக, ‘யார் வந்து என்ன கேள்வி கேட்பார்களோ?’ என்ற பயம் தான் உள்ளுக்குள் ஏற்பட்டது.



அதை மறைக்க எண்ணிய ஆரபி கணினியை போட்டு பாடாய் படுத்த, வைஷ்ணவிக்கு தான் என்ன செய்வது என்று தெரியாமல் போனது.



ஆரபியை பார்ப்பதும் தரையை பார்ப்பதுமாக வைஷ்ணவி இருக்க, அவளை பார்க்கவும் பாவமாக இருந்தது ஆரபிக்கு.



வீட்டில் இருந்தால், லாவண்யா ஏதாவது சொல்லிக் கொண்டிருப்பார் என்று தான் வைஷ்ணவியை அலுவலகம் அழைத்து வந்திருந்தாள் ஆரபி. எழுதும் போது இல்லாத பரிவு, உடன் வாழும் போது வந்து விட்டது போலும்!



“வைஷ்ணவி, தலை வலிக்குது. காஃபி போட்டு எடுத்துட்டு வரியா?” என்று ஆரபி கேட்க, வெகு நேரமாக என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த வைஷ்ணவியும் சந்தோஷமாகவே எழுந்து, சற்று தள்ளி இருந்த பேன்டரி பக்கம் சென்றாள்.



அவள் செல்வதை ஒரு பெருமூச்சுடன் பார்த்த ஆரபி, பின் தன் பார்வையை மீண்டும் கணினி பக்கம் திருப்பி, அதிலிருந்த கோப்புகளை புரிந்தும் புரியாமலும் பார்த்துக் கொண்டிருக்க, அவளின் மனமோ, ‘இப்போ நீ என்ன பண்ணிட்டு இருக்கன்னு தெரியுதா?’ என்று கேள்வி கேட்டது.



‘அட ஆமா, நான் எதுக்கு இப்போ செமஸ்டர் எக்சாமுக்கு முதல் நாள் படிக்கிற மாதிரி, இதை பார்த்துட்டு இருக்கேன்!’ என்று மானசீகமாக தலையிலடித்துக் கொண்டாள்.



‘ம்ச் ஆரு, நம்மகிட்ட ரொம்ப நாள் எல்லாம் இல்ல. தாய்க்கிழவி கிட்ட என்ன சொன்னாலும், வேலைக்கு ஆகாது. இந்த ஃபோர்ஹெட் ஐக்காரன் கிட்ட சொல்லலாம்னு பார்த்தா, வித்தியாசமா பிஹேவ் பண்றான். அவனோட இந்த மாற்றத்துக்கு காரணம் என்னவா இருக்கும்?’ என்று அவளே கேள்வி கேட்டு, ‘என்னவா இருந்தா என்ன? அவன் உன்னை வச்சு விளையாடுறான் ஆரு. நீயும், அவன் செய்யுறதுக்கு எல்லாம் ஒன்னும் சொல்லாம இருக்க!’ என்று பதிலும் சொல்லிக் கொண்டாள்.



‘க்கும், என்ன செய்ய? அழகா வேற இருந்து தொலைக்குறான்.’ என்று எண்ணியவள், அடுத்த நொடியே, ‘ச்சு, நோ நோ, நீ அவனை படைச்ச க்ரியேட்டர். உன் படைப்பை பார்த்து நீயே ஜொள்ளு விட்டா, இந்த உலகம் என்ன நினைக்கும்? ஸ்டெடியா இரு ஆரு. நீ ஒரு ரைட்டர், அவன் உன் கேரக்டர்! இப்படி தான் இருக்கணும் உங்க ரிலேஷன்ஷிப். வீணா, அவனை சைட்டச்சுட்டு இருக்காம, கல்யாணத்தை எப்படி நிறுத்தலாம்னு பாரு.’ என்று தானே அறிவுரையும் கூறிக் கொண்டாள்.



அப்போது கையில் குளம்பியுடன் வந்த வைஷ்ணவியோ, “ரபி, ஏன் இப்படி தலையை ஆட்டிட்டு இருக்கீங்க? ரொம்ப தலை வலிக்குதா?” என்று கேட்க, ஏனோ அந்த கேள்வி ஆரபிக்கு அந்த நொடி தேவையாக இருந்தது.



இரு நாட்களாக, யாரும் இல்லாமல் தனித்து விட்டதை போல உணர்ந்தவளுக்கு வைஷ்ணவியின் இந்த பரிவு தேவைப்பட்டது.



என்னதான் லாவண்யாவின் அன்பில் நனைந்தாலும், அந்த அன்பு தனக்கானதல்ல என்று தள்ளி வைத்தவளுக்கு, வைஷ்ணவியின் இந்த சிறு செய்கை தேவையாக இருந்தது.



காரணம், அவளில் கீர்த்தியை பார்த்ததாலோ? ஆரபிக்கே வெளிச்சம்!



வைஷ்ணவியை பார்த்து லேசாக சிரித்த ஆரபி, “ஹ்ம்ம் லைட்டா தலை வலிக்குது.” என்றவள், “எல்லாம் அவனால!” என்று முணுமுணுத்தபடி, வைஷ்ணவி கொடுத்த குளம்பியை கையில் வாங்கிக் கொண்டு, அவளை பார்க்க, வைஷ்ணவியின் முகமோ பளபளத்தது.



“ஹே வைஷு, நீ என்ன திடீர்னு ஜொலிக்கிற?” என்று ஆரபி கேட்க, அதில் பதறிய வைஷ்ணவி, “ஒன்னுமில்ல.” என்று கூறிவிட்டு அங்கிருந்து ஓடி விட்டாள்.



ஒரு பெருமூச்சுடன், வைஷ்ணவி கொடுத்த குளம்பியை பருகிய ஆரபிக்கு, திடீரென்று அந்த விபரீத எண்ணம் உண்டாக, வேகவேகமாக வெளியே சென்றவள், வாகன தரிப்பிடத்தில் நின்று விவாதித்துக் கொண்டிருந்த ஆர்யனிடம், “நாம ஏன் டேட்டிங் போகக் கூடாது?” என்று கேட்டாள்.



தொடரும்...




கதைக்கான உங்க கருத்துகளை கீழே இருக்கும் கருத்து திரியில் பகிருங்க.
 
Status
Not open for further replies.
Top