எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

நெஞ்சே! செல்லாயோ அவனிடம் - கதை திரி

Status
Not open for further replies.

NNK-65

Moderator
நெஞ்சே! செல்லாயோ அவனிடம் கதை இங்கே பதிவிடப்படும். இந்த வருஷத்தோட முடிவிலும் அடுத்த வருஷத்தோட தொடக்கத்திலும் நிற்கிறோம். எல்லாருக்கும் எல்லாமும் நல்லதா அமைய வேண்டும் என்ற வாழ்த்தோடும் நிலாக்காலம் 2 போட்டியில் பங்கேற்று அதை நல்லபடியா முடிக்க வேண்டும் என்ற ஆசையோடு வந்திருக்கும் எனக்கு வாசகர்களின் பேராதரவு கிட்டும் என்ற நம்பிக்கையுடன் விரைவில் கதை பதிவிட தொடங்குகிறேன்.

நன்றி,
இப்படிக்கு
உங்கள் NNK65
 

NNK-65

Moderator
நெஞ்சே! செல்லாயோ அவனிடம்
#NNK65
#tea_time


“இரண்டு நாள் எல்லோடி நான் லீவு எடுத்த காச்சல் எண்டுப்போட்டு… அதுக்குள்ள எங்கடி நீ காதல்ல விழுந்த?”



“எல்லாம் உனக்கு தெரிஞ்ச பெடியன் தான்”



காரணமேயில்லாமல் திரேந்திரன் முகம் அவள் மனக்கண்ணில் நக்கல் சிரிப்போடு தோன்றி மறைய ‘இந்த எளியவன் என்னத்துக்கு என்ர நினைப்பில் வாறான்’ தலை சிலுப்பினாள். அவனை நினைக்க இப்போதும் நல்ல கோபம் வந்தது.



அகப்பக்கனையோடு புஷ்பா வீடெல்லாம் துரத்த, அப்பா வந்தெல்லோ அவளைக் காப்பாற்றியது. அவள் கால் இரண்டும் பழுக்காமல் போனதே அவள் யாருக்கோ செய்த புண்ணியமல்லவா…



“இதுக்குத்தான் சொன்னனான் வகுப்பும் வேணாம் மண்ணும் வேணாம் எண்டு. சொல்லுற பேச்ச கேக்கிறவளா உங்கட மகள்?” ஏச்சோடு ஏச்சாக அப்பாவுக்கும் பேச்சுவிழ, பாவமாக பார்த்தவளை கண்ணை சிமிட்டி ‘பிழைத்து போகட்டும் விடும்’ சமாதானப்படுத்தியது அவர்தான்.



“இப்ப போய் வந்திட்டன் தானே. முடிஞ்சத என்னத்துக்கு கதக்கயல்.”



“வாய திறக்கிறல்ல நீ. சொல்லிப்போட்டன். வீட்ட இருந்திருக்க, ஊராக்கள் ஏத்திக்கொண்டு விடத்தேவலையெல்லா…”



“சும்மா இருங்கோம்மா, வாயக்கிட்டாம. நானென்ன சோட்டப்பட்டா ஏறிக்கு வந்தனான். நான் பாட்டுக்கு ஒருகரையா நின்டவள தெரிஞ்ச பெட்டை எண்டுப்பொட்டு பாவம்பாத்து ஏத்திக்கொண்டு வந்து விட்டவர்.”



“நீ வீட்ட இருந்திருக்க அதுவும் வந்திருக்காதெல்லோ. அதுவும் அரவிந்தன் எண்டாலும் பரவால்ல. இது அவன்ர பெரியம்மாயின்ர மகன். நமக்கு ஆரென்டு தெரியுமா எவடமென்டு தெரியுமா… கூப்பிட்டவன் எண்டா ஏறிக்குவாறனீயா? என்ன புதுப்பழக்கம்”



‘எல்லாம் அவனால வந்தது!’ அப்போதும் அவனைத் தான் கரித்துக் கொட்டிக்கொண்டு நின்றவள் இப்போது அது நினைவுக்கு வரவும் மீண்டும் அவனையே கரித்துக் கொட்டத் தொடங்கியிருந்தாள்.


——————————

நல்ல மழை வெளுத்து வாங்கத்தொடங்கி இருந்தது. இரவிரவாக சிணுங்கி கொண்டுதான் இருக்க, “பேப்பர் கிளாஸ் இருக்குது அம்மா. எக்ஸாமும் வருகிதல்லா. போகலெண்டா சேர் திருப்பி விளங்கப்படுத்தவும் மாட்டினம். கஸ்டமா போகிரும்.”

புஷ்பாவதி “மழை உரக்கும் போல இருக்கு நித்தி, இன்டைக்கொரு நாள் லீவு போட்டா ஒன்டும் குறைஞ்சிபோக மாட்டாய். அடங்கி வீட்ட இரும்” என்றதை காதிலே விழுத்தாமல் தான் புறப்பட்டு வந்திருந்தாள்.



‘ஒரு தரமாவது அம்மா சொல்லுறதை கேக்கவேணும் நித்தி. சொல்பேச்சு கேக்காம பிறகு கனகாட்டு படுறதையே வேலையா வச்சுருக்கிறாய் பாரும். இதுக்கு தான் புஷ்மா வாருவக்கட்டாலேயே சாத்துறவ’ மனசாட்சி வேறு அவளை அன்டைக்கு எண்டு பார்த்து முறைக்க, முகத்தை முழ நீளத்துக்கு நீட்டினாள் நியந்தனா.



பாதி தூரம் கடக்கும் வரை மழை வலுக்கவே இல்லை. நடந்து போகலாம் என்று தான் குடையை பிடித்துக் கொண்டு நடையை எட்டிப்போட்டவள். இப்போது அடித்துப் பெய்ய, ரோட்டெல்லாம் சேறும் சகதியுமாக வெள்ளம் பெருக்கெடுக்க, அதுக்குள் காலை வைக்க நரகல்பட்டு ஒரு கரையாக ஒதுங்கி நின்றாள்.



“மழை பெய்யும் எண்டு தெரியாத சின்ன பபா குஞ்சா நீ?”



“உரக்கும் எண்டு தெரிஞ்சும் யாராவது வருவீனமா. பேப்பர் க்ளாஸ் இருக்கெண்ட படியாலான் வந்தனான். இல்லாட்டி எனக்கென்ன தலைபழுதா, இந்த மழைக்க வந்து அம்புட(மாட்டிக்கொள்ள)”



“வாய் மட்டும் நல்லா இல்லெண்டா நாய் தூக்கிக்கொண்டு ஓடிரும். அது மட்டும்தான் இருக்கு, மேலுக்கு சரக்கொண்டும் இல்ல” சிரித்துக்கொண்டே குட்டியவனை திரும்பி முறைத்தாள் அவள்.



“நான் உங்களிட்ட கேட்டனானா, போக வழியில்லாம நிக்கன். ஏத்திக்கொண்டு போய் விடும் எண்டு. சும்மா என்ர பாட்டுக்கு நின்டவள ‘ஏறு ஏறு’ எண்டு கரச்சல்படுத்தி ஏத்தினது நீங்க” சூடாக திருப்பிக் கொடுத்தவள் ‘இப்ப வந்து மண்டைக்க சரக்கில்லயாம் மண்ணாங்கட்டி இல்லயாம்’ அவனுக்கு கேட்கட்டும் என்றே சத்தமாக முனுமுனுத்தாள்.



அவளை திரும்பி ஒரு பார்வை பார்த்தவன் முன்னால் பார்த்துக்கொண்டு வண்டியை லாவகமாக வேகமெடுத்தான்.



“வீட்டடிய விடத்தேவலை. இஞ்சயே இறக்கி விடுங்கோ. நான் போவன்” அவர்கள் வீடிருக்கும் தெருவுக்குள் கார் நுழைய, அப்போதுதான் மீண்டும் வாயை திறந்தாள் நியந்தனா.



அதை காதிலே வாங்காமல் முன்னேறியவனின் செயலில் “சொல்றனானல்லா. யாரும் பாத்தா பிழையா நினைப்பீனம். இறக்கிவிடுங்கோ… இறக்கி விடுங்கப்பா, ப்ளீஸ் ப்ளீஸ். அம்மா கண்டாபிறகு சாத்துவா” கோபம் மறந்து கெஞ்சியவளை அவன்பொருட்படுத்தவேயில்லை.



சரியாக அவள் வீட்டு கடப்பலடியில் சென்றே காரை நிறுத்தினான். சுறுசுறுவென பொங்கிற்று அவளுக்கு.



‘சரியான மண்டக்கனம் பிடிச்சவன்! வேணுமென்டே செய்றான் எளியவன்’ கடுகடுத்தவள் அவனை முறைத்துக் கொண்டே குடையை விரித்தபடி இறங்க, கார் சத்தம் கேட்டு, மகளை காணாமல் உள்ளுக்கும் வெளியேயும் நடந்து கொண்டிருந்த புஷ்பாவதி அவசரமாக வெளியே வந்தவர் கண்ணில்பட்டதென்னவோ காரில் இருந்து இறங்கிய மகள்தான்.



காரில் இருந்தவனும் அதைக் கண்டுவிட நக்கலாகச் சிரித்தவன் “இஞ்சப்பாரும். கொழும்புல இருந்து இப்பான் வாறனான். ஆவூ எண்டு கத்திறேல்ல விளங்கிச்சோ… சத்தம் வராம அழோனும்” சிரிப்படக்கிய குரலில் சொல்லியவன் காரை ரிவர்ஸ் எடுத்து இந்ராணி வீட்டுக்கு முன் கரையாக நிப்பாட்டினான்.



‘லூசனா இவன்’ என போகிறவனையே பார்த்திருந்து விட்டு உள்ளுக்கு செல்ல திரும்பியவளுக்கு அங்கு கோபமாக முறைத்துக்கொண்டு நின்ற அம்மாவைக் கண்டு எல்லாம் புரிந்து போயிற்று.



‘நாசமா போச்சு’ மானசீகமாக தலையில் கையை வைத்தவள் திரும்பிப் பார்க்க, கொடுப்புக்குள் சிரிப்பை அடக்கிக் கொண்டு திரன் உள்ளே செல்வது விழ ‘சனியன் பிடிச்சவன், என்ன வேலையடா பாத்துப்பொட்டு போயிருக்காய். எளியவன்! என்ர கைல மட்டும் மாட்டினியோ கொத்து பராட்டா போட்டு சாப்பிறன் இரும்’ சினந்தவளுக்கு இன்று எப்பிடியும் அம்மாவின் கையால் அகப்பக்கணை அடியிருக்கிறது என்று புரிந்து போயிற்று.
 
Last edited:

NNK-65

Moderator
அத்தியாயம்01

தேன் மழை தேக்குக்கு நீ தான்
உந்தன் தோள்களில் இடம் தரலாமா
நான் சாயும் தோள் மேல்
வேறாரும் சாய்ந்தாலே தகுமா


மெல்லிய குரலில் பாடிக்கொண்டே கண்ணாடியில் முகத்தை ஒழுங்கு பார்த்த நியனா, அடர்சிவப்பில் இருந்த ஸ்டிக்கர் பொட்டை நெத்தியில் ஒட்டி ஒரு விரலால் அழுத்தினாள். அது நேராக இருக்கிறதா என்று பார்க்க ஒருதரம், சிரிக்கக்க அழகா இருக்கிறனா என்று பார்க்க ஒருதரம், கடைசியில் கையிலெடுத்த ஆரத்தை கழுத்தில் வைத்து அழகு பார்க்க ஒரு தரமென நிமிசத்துக்கு ஒரு தரம் கண்ணாடி பாத்துக்கொண்டிருந்தவளை அசையாமல் படுக்கையில் கிடந்தபடி ரசித்துக் கொண்டிருந்தான் திரேன்.

கண்ணால் ஒருமுறை அலங்காரங்களை அலசி திருப்திப்பட்டுக்கொண்டே ஆரத்தின் கொழுக்கியை பூட்ட முயன்றவள் கண்ணாடியில் தெரிந்தவனை பல்லை கடித்து முறைத்தாள்.

அவன் அசையவில்லை. ‘இஞ்ச முறைக்கிறனான். எரும மாட்டுக்கு மேல மழை பெய்ஞ்ச கணக்குக்கு அசையாம படுக்கிறத பாரன்’ “கொஞ்சம் வந்து பூட்டி விடுங்கோ” நேரமாகிக் கொண்டிருக்கிறதே. வேறு வழியற்று அழைத்தாள். அப்போதாவது அசைந்தானா? ம்ஹூம்…

‘இந்தாள!’ பல்லை கடித்தவளுக்கு நல்ல விசர் வந்திற்று. “கூப்பிட்டுக்கு இருக்கிறனான் எல்லா. கூப்பிட்டா எழும்பிக்கு வரோணும். இப்பிடி படுத்துக்கெடந்துக்கு போஸ் குடுக்கிறேல்ல. என்ன! பிறகு உங்கட ஆக்கள் அதுக்கும் பேசவேணுமோ எனக்கு? அதுதானே உங்கட எண்ணம். பிறகு நல்ல பிள்ளைக்கு என்ர அப்பாக்கும் மத்த ஆக்களுக்கும் முன்னாடி நடிக்கிறது. நான் லூஸ்க்காரி போல எல்லாரும் சொல்றத வாயை பொத்தி கேட்டுக்கொண்டு இருக்கவேணும் என. எல்லாம் என்ர தலைவிதி. போயும் போயும் உங்கள கலியாணம் கட்டவேணும் எண்டிருந்திருக்கு.”

வழக்கம்போல் மூக்கு விடைக்க, முகம் சிவக்க ஆரம்பித்தவளை எப்போது எப்பிடி என தெரியாமலே தன் கையணைவுக்குள் எடுத்திருந்தான் திரேன்.

அவள் விலகவில்லை. சண்டை பிடித்தாலும் அடியே போட்டாலும் அவன் அணைப்புக்குள் அடங்கினால் எல்லாம் பறந்து போய்விடும். ஆனாலும் கெத்தை விட்டு லேசில் சமாதானமாகமாட்டாள். இப்போதும் பொய்க்கு திமிறியவளின் சேலை மறையாத வெற்றிடையில் அவன் உள்ளங்கை அழுந்த, அவளுக்கு சிலிர்த்தது.

கண்ணை மூடி அவன் நெஞ்சில் வாகாக சரிந்துகொண்டு “இப்ப என்னத்துக்கு வந்து கட்டிப்பிடிச்சுக்கு இருக்கிறயல். நான் கேட்டனானா?” உதட்டை சுழித்து சிடுசிடுத்தவள் சாயம் கண்ணாடியில் வெளுத்துக் கொண்டிருந்தது.

அவன் முகமும் அவள் முகமும் அருகருகே தெரிய, சோடி பொருத்தத்தை எப்போதும் போல் ரசித்துக்கொண்டே “ம்ம்! என்ர மனுசிக்கு தேவையோ தெரியாது ஆனா எனக்கு அவள்ர தேவை எப்பவும் தேவை” முனகலாகச் சொன்னவன் கண்கள் இப்போது அவள் கழுத்துக்கு தாவியதில் உதட்டை குவித்து ஊதினான்.

மயிர்க்கால்கள் கூச்செறிய பிடரி மயிர்கள் சிலிர்த்துக்கொண்டு எழுந்துநிற்க, அவளும் கால் பெருவிரலில் நின்றாள். மலைப்பாம்பை போல் அவள் இடுப்பை சுற்றிய கரங்கள் அவள் முந்தானைக்கூடாக மெல்ல முன்னேறி அவளை மயக்கத்துடன் நடுக்கத்துக்கு ஆழ்த்த, திடுமென “விடுங்கோ! ப்ச்! விடுங்கோ என்கிறன் எல்லா. என்ர சாரி எல்லாம் கசங்குது. கஷ்டப்பட்டு உடுத்தினான்” துள்ளி குதித்து அவனிடமிருந்து விலகியவளின் செயலில் அவனை சுற்றியிருந்த மாயவலை பட்டென்று அறுந்தது.

கண்ணால் அவளை முறைத்தான். எப்போதும்போல் அதை கணக்கெடுக்கவில்லை அவள். “உங்களுக்கு இதே வேலையா போயிட்டு!” பட்டென அவன் தோளில் ஒன்று போட்டவள் “டிஸ்டன்ஸ் மெயின்டெயின் பண்ணுங்கோ… கைகால் மேல படாம கொழுக்கியை மட்டும் பூட்டிப்போட்டு வெளியேறங்குங்கோ.” தள்ளி நின்று கையால் இடைவெளியை சுட்டிக்காட்டி கறாராக சொல்ல ‘இதுக்கும்மேல என்னடி டிஸ்டன்ஸ் மெயின்டெயின் பண்றது’ என்றவன் பார்வையோ ஒரு மார்க்கமாக அவளில் மேலிருந்து கீழாக படிய “என்ன லுக்கு? ம்ம். பூட்டுங்கோ” என்றாள் அதட்டலாக.

அவன் முகத்தில் புன்னகை வாடவில்லை. அவள் சொன்னதுபோல் தள்ளிநின்றே கொழுக்கியை பூட்டியவன் விலகி நிற்க, கடைசியாக ஒருதரக்க எல்லாம் சரியாக இருக்கிறதா சாரி கசங்கி இருக்கிறதா என்று பார்த்தவள் கைப்பையை எடுத்துக்கொண்டு வெளிக்கிட்டாள்.

பின்னாலே லேசாக தலையை மட்டும் கோதிக்கொண்டு அவள் அணிந்திருந்த வாடாமல்லி நிறப்புடவைக்கு மேட்சாக அணிந்த முழுக்கை சட்டையின் கையை உயர்த்திவிட்டுக்கொண்டு அறையை பூட்டி சாவியை எடுத்துக்கொண்டு அவளை தொடர்ந்தான்.

காரில் ஏறியதும் நினைவு வந்தவளாக “உதி சாப்பிட்டாளாமா? அப்பாட்ட கேட்டனீங்க” என்றாள் அவனிடம் திரும்பி.

அவளிடம் சின்ன தலையசைப்புடன் காரை வேகமெடுத்தான் அவன். அவன் வேகத்திலே நேரமாகிற்றென்று புரிந்திற்று. அதையே அவனிடம் கேட்கவும் செய்தாள். “நல்லா நேரம் போயிட்டாக்குமா?” தாங்கலாக கேட்க, அவளைத் திரும்பிப் பார்த்தவன் உதட்டில் பெரிய முறுவல்.

“இண்டைக்கு நேத்தா சுணங்கிறனீ? அது காலம் காலமா நடக்கிறதெல்லா… அதால ஆரும் ஒண்டும் நினைக்கமாட்டினம்” என்றவனுக்கு அடக்கேலாமல் சிரிப்புப் பெருகிற்று.

பட்டென்று அவன் சந்தில் ஒன்று போட்டு “போடா மென்டல்!” சுள்ளென்று சினந்தவள் மறுகணமே உதட்டைக் கடித்துக்கொண்டு ஓரக்கண்ணில் அவனை நோட்டமிட்டாள்.

இப்பிடித்தான் அடிக்கடி எதையாவது பேசிவிடுவாள். பிறகு பிறகு அவன் முகத்தை அடிக்கொருதரம் இப்பிடித்தான் பார்த்து வைப்பாள். “இதுவும் பழகிட்டு” அவளை அதிக நேரம் தவிக்கவிட்டுவிடாமல் சிரிப்புடன் சொல்லியவன் வாகனமோட்டுவதிலே கவனமாக இருக்க, உதட்டை வளித்தவள் கோபம் மூள அவனை முறைத்தாள்.

அதன்பிறகு அவன் பக்கம் பார்க்கவும் இல்லை பேசவும் இல்லை. கையை கட்டிக்கொண்டு ரோட்டில் புதினம் பார்த்துக்கொண்டு வர, திரேனின் அலைபேசி அவளின் அப்பாவின் எண்ணை தாங்கி சிணுங்கிற்று. “அப்பா தான். என்ன எண்டு கேளு. வந்துக்கு இருக்கிறம் எண்டு சொல்லு” என்றான், வாகனமோட்டுவதால் அவளிடம் நீட்டிக்கொண்டே லாவகமாக ரவுண்ட் அபோட்டை சுற்றிக்கொண்டு.

“என்னத்துக்கு உங்களுக்கு எடுத்தவர்? எனக்கு எடுத்திருக்கலாம் எல்லா” என்றவாறே ஃபோனை ஸ்பீக்கரில் போட்டு “ஓம் அப்பா சொல்லுங்கோ. வந்துகொண்டு இருக்கிறம்நாங்க.” கதைத்தவாறே கைப்பையில் துளாவி போனை கண்டெடுத்து ‘ப்ச்! சைலெண்டுல கிடக்கு’ அதை எடுத்துவிட்டவள் “என்னப்பா எனக்கும் எடுத்திருக்கிறயல். எல்லாம் ஓக்கே தானே அங்க ஒண்டுமில்லையே?” பதற்றமாகவே கேட்டாள்.

“இல்ல இல்ல. இஞ்ச உதி மண்டபத்தில் ஓடிவிளையாடிக்கு இருந்தவள் கீழ விழுந்திட்டாள் அம்மாச்சி. அம்மாவும் அப்பாவும் வேணுமாம் எண்டு ஒரே கத்து. இப்பதான் அரவிந்த் லொலிபொப் ஒண்டு வாங்கித்தந்து ஆள் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறா. அது முடிய திரும்ப கத்தினாலும் எண்டுப்போட்டு தான் எடுத்தனான். அவசரமில்ல, ரெண்டு பேரும் மெதுவா வாங்கோ” என்று அழைப்பை துண்டித்தார் சிவலோகநாதன். நியனாவின் அப்பா.

அவன் போனையும் மடியிலே வைத்தவள் அதன் முகப்பில் முகம் எல்லாம் சிரிப்புடன் கையில் பூங்கொத்தை வைத்து விளையாடிக்கொண்டிருந்த உதியின் படத்தை வைத்திருந்தவனை தனகும் நோக்கில் கிண்டல் சிரிப்புடன் திரும்பிப்பார்த்தாள்.

“லொக்கை எடுத்துப்போட்டு உள்ளுக்கு பாரு” அவள் எதற்கு திரும்புகிறாள் என்று தெரியாதவனா அவன்? அவளை திரும்பிப் பார்த்து கண்ணால் சிரித்தவன் மீண்டும் முன்னால் திரும்பிக்கொள்ள, ‘க்கும்’ அலட்டியவள் போனை திறந்துபார்க்க, அவன் கையணைவில் சிரித்துக் கொண்டிருந்தாள் அவள்.

நேத்து வரும் வழியில் எடுத்த ஃபோட்டோ. வந்த களைப்பில் அறைக்கு வந்ததும் தூங்கியிருந்தாள் அவள். அவன் அதை ஹோம் ஸ்க்ரீனாக வைத்திருக்க, திரும்பி பக்கவாட்டில் அவனைப் பார்த்தவள் “அதென்ன, உங்களுக்கு அப்பிடியொரு விருப்பம் என்னில?” பதில் வந்தேயாக வேண்டும் என்று கட்டளையிட்டது அவள் குரல்.

காதலுடன் அவளை தழுவி மீண்ட அவன் பார்வையே பதிலாகிற்று அவளுக்கு.

“சிரிப்பழகன் எண்டுற நினைப்போ? கேள்வி கேட்டா பதில் சொல்லோணும். அதைவிட்டுப்போட்டு சிரிக்கிறது. சிரிச்சா கண்ணுக்கு விளங்காத குழி ஒண்டு விழும் அதை காட்டுவம் எண்டுறதுக்காக சிரிக்கிறதோ…” கோபமாக கேட்டவள் தலையில் அடித்துக்கொண்டாள் நினைப்பு வந்து.

‘என்ன’ அவன் ஒற்றை புருவத்தை ஏற்றி இறக்க, “நேத்து உங்களிட்ட சண்டை போட்டல்லோ நான். இனி கதைக்கமாட்டன் எண்டு வேற சொன்னனான். ப்ச்! மறந்துபோய் கதைச்சுக்கு இருக்கிறன்” நெற்றியில் அறைந்தவள் “திரும்பியும் சிரிப்பா” அவனை அதட்டினாள். ‘அய்யோ திரும்பவும் கதைக்கிறனப்பா’ இருவிரலால் வாயை மூடிக்கொண்டு மௌனவிரதம் காத்தவளை காணக்காண அவன் சிரிப்பு குறையவில்லை.

‘சிரிச்சியலோ கண்ணை நோண்டுவன்’ கண்ணால் மிரட்டியும் அவன் அடங்கினான் இல்லை.

‘இந்தாள் ஒரு சொட்டும் சொல்லு கேக்கிறான் இல்லப்பா’ உதியை முறைப்பதுபோல் அவள் அப்பாவையும் முறைத்து கடைசியில் அவள்தான் முகத்தை வேறுபுறம் திருப்பிக்கொள்ள வேண்டியதாகிற்று.

மண்டபத்தை அடையும்வரை அவனோடு பேச என்ன திரும்பக்கூட இல்லை. மண்டபத்துக்கு வந்ததும் அம்மா, அப்பாவை கண்டுவிட்டு கண்ணில் கண்ணீர் டேங்கை திறந்து, ஒரு மூச்சு அழுது செல்லங்கொஞ்சி மீண்டும் ஒரு லொலிபொப்புடன் சமாதானமாகி, விட்ட விளையாட்டை தொடர உதி ஓடிய பின்னும் அவள் அவன் பக்கம் திரும்பினால் இல்லை.

“என்னடியப்பா கடும் முறைப்பா கிடக்கு” போறபோக்கில் கேப்பதைப்போல நின்று கேட்டவனையும் கண்டுகொள்ளவில்லை அவள்.

“ரொம்பத்தான் பண்ணுறாள்” சிரிப்புடனே அவள் கோபத்தையும் ரசித்துக் கொண்டான் அவன்.

‘ரகு வெட்ஸ் நர்மதா’ மண்டபவாசலில் பூ அலங்காரங்களின் நடுவே மிளிர்ந்து கொண்டிருந்தது அன்றைய கதாநாயகர்களின் பெயர்.

ஒன்றுவிட்ட அத்தை மகன் மாமன் மகள் தான் என்றாலும் வந்திருந்த சனத்துக்கு குறைவில்லாமல் மண்டபம் நிரம்பி வழிந்தது. என்னதான் அவள் முறைத்துக் கொண்டிருந்தாலும் கூட்டத்தில் அலம்பல் படாமல் கவனமாக கூட்டிச்செல்ல, வேறுபக்கம் திரும்பிக் கொண்டிருந்தாலும் அவன் காட்டிய வழியில் நடந்தவள் ‘இதுக்கு ஒண்டும் குறைச்சலில்லை. கேக்கிறத செய்யேலா. கேக்காததை பாத்து பாத்து செய்றது’ நொடித்துக் கொண்டாள் தவறாமல்.

இவர்களைக் கண்டதுமே பெரியவர்கள் வாசலுக்கே வந்து வரவேற்றனர்.

“எவ்வளவு நாளாகிற்று என்ன” இன்முகத்துடன் உபசரித்தவர்களிடம் பதிலுக்கு சின்ன தலையசைப்புடன் உள்ளேவர, சற்றுத்தள்ளி “அம்மாட்ட போப்போறன்” அழுது அடம்பிடித்த இளையவனை சமாளிக்க திணறிக்கொண்டிருந்த அரவிந்தன், திரேனை கண்டதும் “தோ பெரியப்பா வாறான், வாங்கோ செல்லம் சொக்கா கேப்பம்” மகனை தூக்கிப்போட்டு பிடித்தவன் கிளுக்கி சிரித்தவன் காதுக்குள் “அம்மாட்ட சொல்லப்போடா சரியோ” டீல் பேசியபடி இவனருகில் வந்ததும் ஒரு கையில் மகன் இருக்க, மறுகையால் அவனை ஆரத்தழுவிக் கொண்டான்.

“எப்பிடியடா இருக்கிறாய்?” முறுவலுடன் கேட்டவன் வயிற்றில் ஓங்கி ஒரு குத்துப்போட்டவன் “விசராடா உனக்கு” வலியோடு சினந்தவனின் தோளில் கைபோட்டு “எப்பிடி இருக்கிறன் நீயே பாரன்” என்றான் அகலவிரிந்த சிரிப்போடு.

“விசரா விசரா இந்தப் பழக்கத்தை இன்னம் விட்டொழிக்க இல்லையாநீ? காணுற நேரம் எல்லாம் குத்திக்குத்தி வயித்தை புண்ணாக்கிறாயடா” சினந்தவன் மறுகணமே மீண்டும் அவனை இறுக்க தழுவியிருந்தான்.

அதற்குள் இவர்கள் வந்ததை கேள்விப்பட்டு விரைந்து வந்த இசைவாணி “நித்தி” பாசமாய் அவளை அணைக்க, கூடவே வந்த மதியும் வாஞ்சையாய் அவள் முகத்தை வருடினாள்.

“வாணிக்கா, மதியக்கா” பதிலுக்கு தானும் அவர்களை கட்டிக்கொண்டவள் அவர்களை கண்டதும் நேற்றைய சண்டை இன்னும் பூதாகரமெடுக்க, சற்று தள்ளி அரவிந்தனோடு கதைத்துக் கொண்டிருந்தவனை கண்ணால் வெட்டிவிட்டு முகத்தை திருப்பிக்கொண்டாள் நியனா.

‘சரியான கூத்து காட்டுறாள்.’ செல்லமாக கொஞ்சிக்கொண்டவன் வேண்டுமென்றே அவளை கண்டுகொள்ளாமல் தவிர்க்க, அவன் தன்னை கவனிக்கிறானா என அடிக்கடி அவன் முகத்தை முகத்தை பார்த்தவள் அவன் தன்னை திரும்பிக்கூட பார்க்கவில்லை என்றதும் கடுப்பாகிப்போயிற்றாள். சுறுசுறுவென கோபம் ஏறிற்று. ‘இந்தாள்ர கொழுப்ப பாரன்’ கருவியவளுக்கு கோபம் மட்டும் குறைந்தபாடில்லை.

அதன்பிறகு வாணி கதைத்ததோ மதி கலியாண பொம்பிளையை பார்க்க கூப்பிட்டதோ எதுவும் காதில் ஏறவில்லை. “நித்தி! கூப்பிறது காதில் விழல்லயா? அப்பிடி என்ன யோசனை” என்ற மதியின் உலுக்கலில் தான் ‘ஹாங்’ என்றபடி நிகழ்வுக்கு திரும்பியவள் “ஒ…ஒண்டுமில்லை மதியக்கா. என்ன கேட்டநீங்க?” என்று கேட்டபடி பொம்பிளையை பாக்கப்போனாள்.

வாணியும் கூடவர “வாணிக்கா எங்க உங்கட குட்டி சுட்டீஸ்? அண்டைக்கு அரவிந்தண்ணாவோட வீட்டுக்கு வந்தவியலை காலில சுடுதண்ணி படாத குறையா அண்ணா அழைச்சுக்கொண்டு போயிட்டார். கட்டாயம் அங்கால பக்கம் வந்தா வீட்டுக்கு வரவேணும்.”

“அதென்ன வாணி மட்டும் ஸ்பெஷல். நாங்களும் இங்கதான் இருக்கிறநாங்க. என்னை கூப்பிடலை பாத்தியோ…”

“அக்கா! அது உங்கட வீடுபோல நீங்க எப்ப எண்டாலும் வந்து போகலாம். கேக்கோணுமா நீங்க?”

“நல்லா நல்ல பிள்ளைக்கு நடிப்பாய்டி” மதி அவள் சொக்கை கிள்ள, வலித்த கன்னத்தை தடவியபடி “அக்கா!!!” என்ற நியனாவின் சிணுங்கல் “அய்யய்யோ அண்ணி!” திடுமென கேட்ட வாணியின் அலறலில் நின்றுபோக, இருவரும் ஒன்றுபோல் வாணியை திரும்பிக் பாக்க, அவளோ நமுட்டுச் சிரிப்புடன் அண்ணிக்கு கண்ணை காட்டினாள்.

மணமகள் அறைக்கு போகும் வழியில் தான் இவ்வளவும் நடந்திருக்க, அந்த பக்கம் ஆண்களே இல்லை. பெண்கள் கூட்டம் போவதும் வருவதுமாக இருக்க, திரேன் வேகநடையில் மேலேறி வந்து கொண்டிருந்தான்.

இருவரின் பார்வையை தொடர்ந்து பார்த்த நியனாவின் முகமே சிவந்திற்று. ‘என்ர மானத்தை வாங்குறதுக்கு எண்டே செய்றார்’ அவள் அவனை கடிந்து முடியவில்லை அருகில் நெருங்கியவனுக்கு கேக்கும் விதமாக “நித்திக்கு கிள்ளிப்போட்டயல் அண்ணி. அங்க அண்ணாக்கு வலிச்சிருக்குமெல்லா…” கிண்டல் சிரிப்போடு கேலி செய்தாள் வாணி.

“வாணிக்கா!” என்றவளின் முறைப்பை பொருட்படுத்தவில்லை அவள். “அப்பிடித்தானே திராண்ணா” என்றிருந்தாள் அருகில் வந்தவனிடமே. மற்ற இருவரும் அறியாமல் கண்ணாலே தன்னை துரத்திக் கொண்டிருந்தவளை குறும்பாக பாத்தவன் “ரூபன் தேடுறவர் வனி” என்க,

“சூப்பர் பவர் என்னவும் உங்களிட்ட இருக்குதோ அண்ணா. கனடாவில் இருக்கிறவர் தேடுறது உங்களுக்கு இங்க விளங்குது என்ன.” என்றவளுக்கு சிரிப்புவர அவனுக்கும் சிரிப்பு வந்திற்று.

“அதுதான் விளங்குது எல்லோ. வெளிக்கிடும்” துரத்தியவனை “இந்த அசிங்கம் தேவையோ அண்ணி. வாங்கோ நாங்க போவம்” பொய்க்கோபம் காட்டியவள் அவன் கேட்ட தனிமையை குடுத்து மதியை இழுத்துக்கொண்டு நகர்ந்திற்றாள்.

முகத்தை வெடுக்கென திருப்பிக்கொண்டு சூடாக நின்றவளை பின்னால் இருந்து அணைத்தவன் அருகில் இருந்த அறைக்குள் புகுந்திருந்தான். கதவில் சாய்ந்து நின்றவனின் மேல் சாய்ந்து கொண்டு படபடவென அவன் நெஞ்சில் குத்தினாள் அவள்.

பேண்ட் பொக்கெட்டில் கைவிட்டு அவளையே பார்த்திருந்தவனை கண்டு அடிப்பதை நிறுத்தியவள் அவன் முகத்துக்கு நேராக விரல் நீட்டி “சொன்னனான் தானே. அங்கால இங்கால போனா வால்பிடிச்சிக்கொண்டு வாறேல்ல எண்டு. பபா குட்டி எண்டுற எண்ணமா. ஆக்கள் பாத்தா என்ன நினைப்பினம்! ப்ச்! என்ர மானமே போகுது.” படபடவென பட்டாசாக பொறிந்தவளை தனக்குள் சிறையெடுத்தவன் “அவனுக்கு அவன்ர மனுசியில சரியான பாசம், காதல், விருப்பம் எண்டு நினைப்பீனம். நினைக்கட்டுமே!” என்றான் உதட்டுக்குள் சிரிப்பை அதக்கி.

“உங்கள!” பல்லை கடித்தவளுக்கு அவனை திட்டவும் வார்த்தை வரவில்லை. சொல்லிச் சொல்லி சலித்தே போயிற்றாள். ‘இன்னும் எப்பிடி சொல்லுறது?’ அவன் கரங்களுக்குள் நின்றவளின் மேல் மூச்சு கீழ் மூச்சில் ஏறி இறங்கிய சேலை மறைத்த மென்மையில் முகம் புதைய குனிந்தவனை தள்ளிவிட்டு “போயா! பின்னால வந்தியோ… கையில் இருக்கிறதை கொண்டு தூக்கி அடிப்பன்” கோபமாக அறையை விட்டு வெளியேறிவிட, அவளை தொடர்ந்து அறையை விட்டு வெளியேறியவன் ஆழ்ந்த மூச்செடுத்து தலையை கோதி “காலையில் இருந்து சோதிக்கிறாள்” முணுமுணுத்துக் கொண்டான்.

வெளியே வந்ததுமே கண்ணால் அவளை தேடி ரெஸ்ட்ரூமுக்குள் நுழைந்தவளை கண்டு சற்று நேரத்திலே வாணியை அங்கு அனுப்பி வைக்க, வெளியில் சத்தம் கேட்டு உள்ளிருந்தபடிக்கே “ஆரு?” என்றவளுக்கு பெருஞ்சிரிப்புடன் “நாந்தான் நாந்தான்” குரல்கொடுத்தாள் வாணி.

‘ஆண்டவா! இந்தாள…’ எதிரில் இருந்த கண்ணாடியிலே தலையை முட்டிக்கொண்டாள்.

கோபம் கோபமாக வந்தது. ஏன்தான் இந்தக் கலியாணத்தை பண்ணித்துலைத்தாளோ? லட்சத்தி பத்தாயிரம் தடவை தனக்குதானே கேட்டு கொண்டாள்.

பரபரவென கைப்பையை திறந்து அதனுள் வைத்திருந்த புகைப்படத்தை வெளியில் எடுத்து உயர்த்திப் பிடித்தாள். பார்க்க பார்க்க கோபம் பொத்துக்கொண்டு வந்தது.

‘அண்டைக்கே இவன்ர மண்டையை உடைச்சிருக்க இண்டைக்கு எனக்கு இந்த நிலமை வந்திருக்குமா? சிரிக்காதயடா. அடிதான் தருவன் இப்ப’ ஆத்திரம் தீருமட்டும் ஃபோட்டோவில் இருந்தவனை திட்டித்தீர்த்தவள் அதற்காகவே மறக்காமல் ஞாபகத்தோடு கைப்பையில் எடுத்து வைத்திருப்பாள். அவளுக்கு கோபம் வருகிற போதெல்லாம் அந்த ஃபோட்டோவும் அதிலிருப்பவனும் தான் வடிகால்.

ஆழ்ந்த மூச்சை இழுத்துவிட்டவள் இப்போது ஓரளவுக்கு சமன்பட்டிருக்க, கவனமாய் ஃபோட்டோவை பத்திரப்படுத்தினாள். முகத்தை லேசாக சீர்படுத்தி வெளியேவர “முடிஞ்சுதா” கேட்டுக்கொண்டே முன்னே நடந்தாள் வாணி.

“சொறி வாணிக்கா. கணக்க நேரம் நிக்க வச்சிட்டேன் என்ன” கேட்டவளை திரும்பி முறைத்தாள். “அடிவாங்காம நட” எனவும் முகத்தை தொங்கப்போட்டவளை நிப்பாட்டி “இப்பிடியே போய் அண்ணாகிட்ட பேச்சு வாங்கித்தர ப்ளான்ல ஏதும் இருக்கிறயா” கேட்கவும் அவளே சொல்லாவிட்டாலும் அவள் முகத்தை பார்த்தே வாணிக்காவை துருவி எடுத்துவிடுவான் என்பதால் அசடு வழிந்தவள் பளீரென்று சிரிக்க, “இதுதான் என்ர நித்திக்கு அழகு. இப்ப வா போவம்” கைபிடித்து அழைத்துச் சென்றாள் வாணி.

அங்கிருந்த அறையில் ஒன்றின் வாசலில் பேத்தியை கையில் வைத்து ஓறாட்டிக்கொண்டிருந்த இந்ராணி மகளை கண்டுவிட்டு “வாணி, இஞ்ச வா பிள்ளை. பூக்குட்டி தேடுறாள்” என்றழைக்க, “எழும்பிட்டாள்போல, நீ போ நித்தி. சின்னக்குட்டியை படுக்கப்போட்டுப்பொட்டு வாறன்” என்ற வாணி இந்ராணியின் கையில் இருந்த மகளை தூக்கிக்கொண்டு அறைக்குள் நுழைந்துவிட, வாசலில் நின்ற இந்ராணியோ நித்தியைத் தான் பார்த்துக் கொண்டிருந்தார்.

அவளுக்கு இப்போது இப்பிடியே போவதா நிற்பதா என்று குழப்பமாயிற்று. அதற்குள் அங்கே அவளை தேடிக்கொண்டு வந்துவிட்டான் திரேன்.

அவள் பார்வை போன திக்கில் நின்ற சித்தியை கண்டுவிட்டு அவரிடம் சென்றவன் “சித்தி” என்க, கண்களே கலங்கிப்போயிற்று இந்ராவுக்கு.

எவ்வளவு நாளாயிற்று! முகத்தை திருப்பிக்கொண்டார் அவர். “என்ன சித்தி சின்னப்பிள்ளைபோல…”

“போடா. கதைக்காத சொல்லிப்போட்டன். உனக்கு இப்பதான் உன்ர சித்தியின்ர நினைப்பு வந்திருக்கு என்ன” உண்மைக்கும் சிறுபிள்ளையாக கோபித்துக்கொண்டவர் “அப்பிடி இல்ல சித்தி” என்றவனின் எந்த சமாதானமும் அவரிடம் எடுபடவில்லை.

“உன்ர மனுசி காத்துக்கிருக்கிறாள், காக்கா குருவி தூக்கிக்கொண்டு ஓடிரும். பின்னால போ” அவனை தள்ளிவிட்டவர் விடுக்கென அறைக்குள் சென்றுவிட, பெருமூச்சுடன் அவளருகில் வந்தவன் முகத்தையே பார்த்திருந்தாள் நியனா.

சில நிமிடங்கள் பொறுத்து “என்ர முகத்தில் என்ன இருக்குதாம் எண்டு என்ர மனுசி இப்பிடி உத்து பாக்கிறாள்.” கேட்டவனுக்கு உதட்டை சுழித்தவள் முன்னுக்கு நடக்க, நமட்டு சிரிப்புடன் “சற்றே நிமிர்ந்தேன் தலை சுற்றி போனேன் ஹ்ம்ம் ஹ்ஹ் ஹ்ம்ம்ஹ்ம்ம்…” ஹம் செய்தான் அவன்.

அதில் நின்று திரும்பிப் பாத்தவள் ‘கண்ணை நோண்டுவன் திரும்படா’ முழியாலே மிரட்டிவிட்டு முயன்றவரை வேகமாக நடந்தாள். அதன்பின் அங்கால் இங்கால் போகும் போதும் வரும் போதும் அவனை முறைப்பதையே வாடிக்கை ஆக்கிற்றாள்.

விளையாடி ஓய்ந்து ஒரு கட்டத்தில் விளையாடிய களைப்பில் அடுத்த பசிவர, சிணுங்கிக்கொண்டு வந்த உதியை கையில் அள்ளிக்கொண்ட திரேன், அவளுக்கு சாப்பிட குடுத்து அழைத்துவர, அப்போதுதான் நல்ல நேரம் என்று தாலி கட்டும் சம்பிரதாயத்துக்கு மாப்பிள்ளை பொம்பிள்ளையை வரச்சொல்லிக் கொண்டிருந்தார் ஐயா.

“இப்பயாவது கூப்பிட்டாரே” சலித்துக் கொண்டான் மகனை இடுப்பில் வைத்திருந்த அரவிந்தன். அவன் பொண்டாட்டி அவன் இருக்கிற திசைக்கே வரவில்லை. கேட்டால் ‘வேலை இருக்குது வேலை இருக்குது’ என்றவள் “கொஞ்ச நேரம் பிள்ளையை வச்சுருந்தா குறைஞ்சா போயிடும்” என்றுவேறு சினந்திருக்க, கடுப்புடன் சுற்றிக் கொண்டிருந்தான் அவன்.

அவன் பொறுமலில் வாய்விட்டு சிரித்த கணவனை தள்ளி நின்று முறைத்துக்கொண்டிருந்தாள் நியனா. ஒரு கணம் அவள் முறைப்பில் மூர்ச்சையாகியவன் மறுகணமே அவளை நோக்கி கண்ணை சிமிட்ட, உர்ரென்று அவனை பார்த்தவள் முகத்தை திருப்பிக்கொண்டாள்.

அவள் பார்வை, அவள் முறைப்பு, அவள் சிடுசிடுப்பு, உதட்டுச் சுழிப்பு இன்றைய நாளின் அவளின் ஒவ்வொரு உணர்வும் அவனுக்கு அன்றைய நாளை தான் நினைவூட்டிற்று.

இதே கலியாண மண்டபத்தில் தான். அச்சு இதே போல்தான்; சரியான கோபத்தில் அவனை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் நியந்தனா. ஏன் அவனும் தான். ஏனென்றால் அவர்களின் முதல் சந்திப்பு அப்படியாகத்தான் அமைந்திருந்தது…
 

NNK-65

Moderator
முதல் அத்தியாயம் பதிவிட்டாச்சு கண்மணீஸ். இதோ கருத்துதிரி :-
வெலெண்டைன்ஸ் டே அதுவுமா எபி போட்டிருக்கேன். உங்க அன்பை அள்ளி அள்ளி தெளிச்சிட்டு போங்க கைஸ்.
 

NNK-65

Moderator
அத்தியாயம்02

மாலை மங்கிய வேளை அது! காலையில் இருந்து வாட்டி எடுத்த சூரியனாரின் வெக்கை தணிந்து மெல்லிய தாலாட்டுப்போல சிலுசிலுவென காற்று வீசிக்கொண்டிருந்தது.

“வாணிக்கா, அரவிந்தண்ணா சொன்னது உண்மையோ?” வீட்டின் பின்பக்கம் வாழை மரங்களும் தென்னை மரங்களும் வரிசையாக நாட்டியிருந்தார்கள். மறுகோடியில் தன் கையாலே பயிரிட்ட பூக்கன்றுகளுக்கு தண்ணீ பாய்ச்சிக் கொண்டிருந்த வாணிக்கு காதில் கேட்ட குரலில் சிரிப்பு மலர்ந்திற்று.

“வாணிக்கா எங்க அத்தை?” இந்ராணியிடம் அவள் கேட்பது காதில் விழ, காதை அவளிலே வைத்து சிரிப்புடன் வேலையை தொடர்ந்தவளுக்கு முன் மூச்சு வாங்க வந்து குதித்த நியந்தனாவுக்கு அப்போது பதினாறு வயது இருக்கும்.

இருபத்திமூன்று வயது வாணிக்கும் அவளுக்கும் இடையே வயது வித்தியாசம் பாராத, அன்பெனும் பாசக்கயிறு மிக வலிமையாகக் கட்டப்பட்டு இருந்தது.
இத்தனைக்கும் இந்ராணி அவளுக்கு சொந்த அத்தையும் இல்லை. வெறும் அயலட்டை உறவுதான். நியந்தனாவுக்கும் வாணிக்கும் ஏற்பட்ட நட்பே நாளடைவில் இரு குடும்பங்களுக்கும் இடையே பிணைப்பை ஏற்படுத்தி இருந்தது.

துரு துருவென ஓரிடத்தில் நில்லாமல் வளைய வரும் அவளை யாருக்குத்தான் பிடிக்காமல் போகும். “வாணி மட்டுமில்ல, இந்தா நித்தியும் எங்கட வீட்டுப்பிள்ளை போலதான்” பெருமையாக அறிமுகப்படுத்துவார் இந்ராணி. அந்தளவில் அவர்களின் குடும்பத்தில் ஒருத்தியாய் இணைந்திருந்தாள்.

“வகுப்பு முடிஞ்சதா நித்தி? அதுக்குள்ள அஞ்சாகிற்றா” முன்னுக்கு நின்றவளை நிமிர்ந்து பார்த்து விசாரித்தாள்.

ஓஎல் படிக்கும் அவளுக்கு ஒவ்வொரு நாளுமே பின்னேர வகுப்புகள் நடைபெறும். இப்போதும் வகுப்பு முடிந்த களை முகத்தில் தெரிய, ஓடி வந்ததில் இடுப்பில் கைகுத்தி மூச்சுவாங்கிக் கொண்டிருந்தாள்.

“ஓமோம். இப்பதான்” பெரிய பெரிய மூச்சுக்களுக்கிடையே சொன்னவள் “நான் கேட்டதுக்கு பதில் வரேல்ல” முகத்தை சுருக்கினாள்.

“என்ன கேட்டனீ” கடைசி பூக்கன்றுக்கும் தண்ணீ பாய்ச்சி முடிய, ஹோர்சை கழற்றி அதனிடத்தில் வைத்தவள் கைகள் இரண்டையும் கழுவிக்கொண்டே கேட்க,

‘அத என்ர வாயால இன்னொரு தரக்க வேற சொல்லோணுமா?’ புறுபுறுத்த மனதை அடக்கேலாமல் “பெரிய்ய்ய கொம்பர், கனடால இருந்து கேட்டு வந்திருக்காராம். உண்மையா?” வேண்டாவெறுப்பாக கேட்டவளுக்கு மனதே ஆறவில்லை.

அவளுக்கு வாணி என்றால் கொள்ளை பிரியம். பிறந்த ஊரை விட்டு திடுதிடுப்பென்று ஒருநாள் யாழ்பாணத்துக்கு குடிவந்தபோது அவளின் உலகமே வெறிச்சோடிப் போயிருந்தது. சோகமே உருவாக தெருவில் நின்று புதினம் பார்த்தவளிடம் “பக்கத்து வீட்டை புதுசா வாடகைக்கு வந்த ஆக்கள் நீங்கதானா?” விசாரிப்புடன் அறிமுகமாகியவள் வாணி.

அப்பிராணியாக தலையை உருட்டியவளை அந்தக் கணமே பிடித்துப்போயிற்று வாணிக்கு. “என்ர பேர் இசைவாணி. வாணி எண்டு எல்லாரும் கூப்பிடுவீனம். இது தான் என்ர வீடு. என்னையும் தேவை எண்டா கேளும், சரியோ” பெரிய பிள்ளையாக சொல்லியவள் “உன்ர பேர்?” எனக்கேட்டு “நியந்தனா” என்றவளை “நித்தி எண்டு கூப்பிடுறனான்” என்று முதல் முறை அழைத்ததும் அவள்தான்.

அதனாலே அவள் என்றால் நியந்தனாக்கு எப்போதுமே ஸ்பெஷல் தான்.

“ஆரு சொன்னது?” அவள் கேட்ட தோரணையில் வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டே கேட்க,

“அதா இப்ப முக்கியம். முதல் நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்கோ!” பிடிவாதமாக முகம் பார்த்திருந்தவளுக்கு நேராக பதில் சொல்லாமல் “பொம்பிளை எண்டு இருந்தா மாப்பிள்ளை கேட்டு வரத்தானடீ செய்வினம்” என்றவள் கன்னங்கள் அவளை மீறியும் மிளிர்ந்திற்று.

“வெக்கப்படுறியலா… அப்ப ஓமெண்டு சொல்லிட்டியல் என்ன!” உறுதிப்படுத்த கேட்டவளுக்கு மனதே விட்டுப்போயிற்று.

“அப்பிடி என்ன அவசரமாம் மாமிக்கு!” முறைப்புடன் சொல்லி முகத்தை தூக்கி வைத்துக்கொள்ள,

“அட! மூக்கு நுனியில் கோபத்தை கட்டி வச்சிருக்கிறயோ. வரவர சட்சட்டென்று கோபப்படுறாயடி நித்தி” நொடியில் அவளின் கோபத்திற்கான காரணத்தை ஊகித்துவிட்ட வாணியின் முகத்தில் பெரிதாக புன்னகை விரிந்திற்று.

அவளும் ஓம் எண்டு சொல்ல இருக்கவில்லையே! திடுதிடுப்பென்று ஒருநாள் ஃபோட்டோவுக்கு சிரித்துக் கொண்டிருந்தவனை காட்டி “ என்ன எண்டு பாத்துப்போட்டு சொல்லு” என்றிருந்தான் அரவிந்தன். அதிலேயே பின்னால் அவன் விபரங்களும் அடங்கியிருக்க, எதற்கென்று புரிந்துபோயிற்று.

“இப்ப என்னத்துக்குடா அவசரமா”

“உனக்கு பிடிக்காம ஒண்டும் நடக்காது. சும்மா பாரு, பிடிச்சிருந்தா மிச்சத்தை பிறகு பாப்பம்” என்றிருந்தான்.

அவன் சொல்லிச்சென்ற பிறகு கையில் இருந்த ஃபோட்டோவில் சிரித்துக்கொண்டிருந்தவனைத் தான் பார்த்தாள். ஏன், எதற்கு என்று தெரியவில்லை. அவன் சிரிப்பு அவளுக்கும் தொற்றிக்கொண்டிற்று.

அடுத்த தடவை அரவிந்தன் வந்து கேட்டபோது “எதுக்கும் ஒருதடவை கதைச்சிப் பாக்கிறன்” என்றிருந்தாள். அதிலே அவள் சம்மதம் தெரிந்துபோக, “இப்போதைக்கு அம்மாட்ட ஒண்டும் சொல்லிப்போடாதே!” என்றான். “ஏன்?” என்றதற்கு “எல்லாம் சொல்லுறன்” என்றவன் வாயே திறக்காமல் இருக்க, பிறகு தான் அவளுக்கு விசயம் தெரிந்தது.

லோகானந்தம்-இந்ராணி தம்பதினருக்கு ஆண்கள் இரண்டும் பெண் ஒன்றுமாக மூன்று பிள்ளைகள். மூத்தவனுக்கு மூன்று வருடங்களுக்கு முன்பே கட்டிக்கொடுத்திருக்க, இளையவன் தங்கைக்கு பாருங்கள் என்று விட்டான்.

இவர்கள் அவசரப்படவும் இல்லை. இசைவாணியை கோயிலில் எங்கோ பார்த்துவிட்டு அவர்களாகவே கேட்டு வர, “தங்கச்சிக்கு நல்ல இடம் ஒண்டுல இருந்து கேட்டு வருகினம் அப்பு” என்றிருந்தார் இந்ராணி. மூத்தவன் சரவணனும் குடும்பத்தோடு வந்திருக்க, இளையவன் அரவிந்தனும் கணவரும் இருக்க, நல்ல சந்தர்ப்பமென உடைத்து சொல்லி விட்டார்.

“இப்ப என்னத்துக்கம்மா அவசரமா பாக்கிறயல். இன்னும் ஒரு இரண்டு வருஷம் போகட்டும். என்ன வாண்டு?” அரவிந்தன் தங்கையை குறுகுறுவென பார்க்க, சரவணனும் அதை ஆமோதித்தான்.

“எனக்கு என்ன அவசரம் இருக்கப் போகுது சொல்லுங்கோ பாப்பம். நல்ல அருமையான வரன். பிக்கல் பிடுங்கல் இல்ல… அவியலாவே கேட்டு வருகினம்.” என்றவருக்கு விசாரித்த வரையில் நல்ல திருப்தியே. நல்ல வரனை தவறவிடக்கூடாது என்கிற பரபரப்பும் கூடவே இருந்தது.

அதுவரை அமைதியாக மனைவி சொல்வதை கேட்டுக் கொண்டிருந்த லோகானந்தம் மெதுவாக தொண்டையை செரும, அதுவே அவர் கதைக்கப்போகிறார் என்றிற்று.

மனைவி மக்களின் கவனம் அவரிடத்தில் திரும்ப, நால்வரையும் மேல்கண்ணால் பார்த்தவர் “இந்த காலத்துல ஆரை நம்புற, ஆரை நம்பக்கூடாதென்டு ஒண்டும் சொல்லுறபடிக்கு இல்லையெல்லோ. எதையும் அவசர அவசரமா செய்யவும் ஏலாது. அதுவும் கலியாண விசயத்தில நாலையும் அலசி ஆராஞ்சிபோட்டு தான் செய்யோனும். ஒண்டும் அவசரம் இல்ல பாப்பம்” என்று தன் கருத்தை முன்வைத்தார்.

கணவரின் பேச்சு அவருக்கும் ஏற்புடையதாக இருந்தாலும் ‘நல்ல வரன்’ கைநழுவி விடுமோ என்று முகமே விழுந்துவிட்டது.

“இப்ப என்னத்துக்கு முகம் சுருங்குது” அரவிந்தன் அம்மா அருகில் வந்தமர்ந்தான்.

“இல்ல தம்பி, நல்ல சம்மந்தம் எண்டு எல்லாரும் சொல்லினம். கோயில் ஐயாட்ட கூட கேட்டனான். நல்ல பெடியனாம் என்டவர். நம்பிக்குடுக்கலாம் என்ற படியால் தான் உடைச்சு சொன்னனான். கலியாணம் எண்டேக்க அப்படி விசாரிக்காம எடுத்தோம் கவுத்தோம் எண்டு செய்யுவேனா…” எப்படியாவது இந்த சம்மந்தத்தை முடித்தே ஆகவேண்டும் என்ற முடிவுக்கு முன்னரே வந்துவிட்டவருக்கு வீட்டினரின் கருத்தை முழுமனதாக ஏற்க முடியவில்லை.

அவரும் ஒன்றும் பேச்சுக்கு சொல்லவும் இல்லை. ஒரே மகளாயிற்றே. அவளுக்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என்ற ஆசையும் அவாவும் அவருக்குள்ளும் இருக்குமல்லவா. அவரே நேரில் சென்று விசாரித்து எல்லாம் திருப்தி என்ற பிறகே வாயை திறந்திருந்தார்.

அப்பா, மகன்கள் மூவரும் ஒருவரையொருவர் பார்க்க, “என்னப்பா யோசிக்கிறயல்? அதான் சொல்றனானல்லா” என்றார், விட்டால் அழுதுவிடுபவர் போல்.

அதற்கு மேல் அடக்க முடியாமல் நொடியில் மூவருக்குமே முறுவல் அரும்பிற்று. அதுவரை தவிப்புடன் இருந்த இந்ராணி குடும்பத்தினரை சந்தேகமாக பார்த்தார்.

“பேர் சாய்ரூபன். வயசு 28. கனடாவில் வேலை. ரெண்டு அக்காக்கள். ரெண்டு பேரும் கலியாணம் முடிச்சிக்கு போய்ட்டீனம். இவர் மனுசியை கட்டிக்கொண்டு ஆறு மாதத்தில் கனடாக்கு எடுக்கயாம். அப்பா ஸ்கூல்ல சேராம். அம்மா…” கடகடவென ஒப்பித்த அரவிந்தனை, கை நீட்டி தடுத்து, அகல கண்களை விரித்து ஆவென்டு வாய் பிளந்து பார்த்தவரோ “கள்ளா!” பட்டென்று முதுகில் ஒன்றை போட்டார். லேசாக சிரிப்பு கூட வந்து விட்டது.

அம்மாவை பார்த்து அவனுக்கும் சிரிப்பு வரும் போலிருக்க, கலகலத்து சிரித்தான் அரவிந்தன்.

அப்பாவும் சரவணனும் சேர, கதிரையில் முழங்கால்களை கட்டிக்கொண்டு இருந்த இசைவாணிக்கும் சிரிப்பை தாண்டிய வெட்கமும் கூச்சமும் போட்டி போட்டுக் கொண்டு முகத்தில் வந்தமர்ந்தது.

“அட அட! வெக்கத்த பாருங்கோவன் வாண்டுக்கு. வேற என்ன அம்மா வேணும். அதுதான் அந்த பக்கமிருந்தே க்ரீன் சிக்னல் வந்துட்டெல்லா. ஆக வேண்டியதை பாருங்கோ” பட்டென்று உடைத்து அவரை உற்சாகபடுத்த, இசைவாணியின் முகத்தை பார்த்தவருக்கு ஆனந்தத்தில் ஒரு துளி கண்ணீர் அரும்பிற்று.

‘என்ர மகள்’ வாஞ்சையுடன் அவளில் படிந்து, நிலைத்து, பின் மீண்டது அவர் விழிகள். கைக்குள்ளயே வைத்து பொத்தி பொத்தி வளர்த்த மகளை இன்னொரு வீட்டுக்கு தாரை வார்த்து குடுக்கும் நேரம் வந்துவிட்டதே.

அவரால் நம்பவே முடியவில்லை. நம்பாமலும் இருக்க முடியவில்லை. கண்களுக்கு இடையில் துளிர்த்திருந்த கண்ணீர் உண்மை தான் என்று சொல்லிற்று.

அதிலும் இப்படியொரு திருப்பத்தை அவர் எதிர்பார்க்கவே இல்லையே!

“எப்படியப்பா” என்றார் கணவரிடமே.

“என்ர மனுசிய எனக்கு தெரியாதா” ஆர்ப்பாட்டமாக சொல்லியவருக்கு, அவர் சொல்லாமல் விடமாட்டார் என புரிந்து போயிற்று.

“தமயந்தி அண்டைக்கு கோலெடுத்திருந்தவள்” என்றதிலே இந்ராவுக்கும் எல்லாமும் புரிந்தது.

அவரின் தோழி தமயந்தியின் கணவரும் இசைவாணிக்கு கேட்டு வந்த பெடியனின் குடும்பமும் ஒரு வகைக்கு நெருங்கிய சொந்தம் தானாம். அதனால் அவளிடம் ‘ஒன்றுக்கு இரண்டு தடவை விசாரித்து சொல்லும்’ என்று இவரே கேட்டிருந்தார். அதற்கு தான் அன்று அழைத்திருக்க வேணும்.

இவர் பாத்ரூமுக்குள் இருந்ததில் “கன நேரமா கோல் வருது. ஆரென்டு பாருங்கப்பா” உள்ளிருந்தே குரல் குடுக்க, லோகானந்தம் எடுத்து பேசியபோது தான் அவள் இதுதான் விசயம் எண்டு சொல்லியிருக்க வேண்டும். அவள் எடுத்தே ஒரு வாரமாகியிருக்கும்.

ஆக அவரைப் போலவே இவர்களும் இந்த ஒரு வாரமாக மாப்பிள்ளை வீட்டாரை பற்றி விசாரித்து, இவர் வாயாலே வரட்டும் என்று கமுக்கமாக காத்திருந்திருக்கிறார்கள். ‘எப்படியோ நல்ல சம்மந்தம் நல்ல படியாக முடிந்தால் போதும்’ என நினைத்துக் கொண்டார்.

இதில் மகளுக்கும் பிடித்திருக்கிறது என்பதில் இரட்டிப்பு சந்தோசம் தான்.

அப்படி ஆரம்பித்தது இதோ இருபக்கமும் எந்த குறையும் இல்லாமல் பொருந்தி வர, இனி மற்ற மற்ற வேலைகளும் சம்பிரதாயங்களும் மட்டுமே பாக்கி இருந்தது. கலியாணம் என்றால் சும்மா அல்லவே!

“வாணிக்கா!” தன் மனவெளியில் மிதந்து கொண்டிருந்தவளை பிடித்து உலுக்கி நிகழ்காலத்துக்கு அழைத்து வந்த நித்தி, “அத்தை கூப்பிடுறா” என்றவள் இப்போதும் உம்மென்றே இருக்கவும் லேசாக சிரித்துக்கொண்டாள்.

இப்போதும் அவனை நினைக்கையில் எழும் சிரிப்புக்கு அணைபோட, நித்தியின் சுரத்தே இல்லாத முகமும் ஒரு காரணமாயிற்று. ‘சும்மாவே ஆள் நல்ல விசரில் இருக்கிறாள்’ என அவள் முகத்தை பார்த்தே கண்டு கொண்டாள்.

“மாப்பிள்ளைக்கு ஃபோனை போட்டு எங்கட வீட்டு சின்னக்குட்டி பிடிச்சிருக்கு எண்டாத்தான் கலியாணம் எண்டு சொல்லிப்போடுவமா நித்தி” அவளை சமாளித்து ஆகவேண்டுமே. அதில் நமட்டுச் சிரிப்புடன் அவளை குறுகுறுவென பார்த்துக்கொண்டே கேட்ட வாணிக்காவை முறைக்க முயன்று தோற்ற நித்தி, அதுதான் சந்தர்ப்பம் என்று “இப்பயே அவருக்கு ஃபோனை போட்டுத்தாங்கோ!” என்று நின்றாள்.

உடனே கேப்பாள் என்று எதிர்பாராதவள் ஒரு நொடி அதிர்ந்து மறுகணமே வாய்விட்டு சிரித்தாள்.

“அடியேய் கள்ளி!” முதுகில் கைபோட்டு உள்ளுக்கு கூட்டிச்சென்றபடி முதுகில் தட்டிய வாணிக்கு “ஆருக்கிட்ட!” சட்டையில் இல்லாத கொலரை தூக்கிவிட்டுகொண்டே ஒற்றை புருவம் உயர்த்திய நித்தி, “அதெல்லாம் லேசில ஆரும் ஏமாத்தேலாதாக்கும்” கொடுப்புக்குள் சிரித்தவள் “நாளைக்கு வருவன். கோலெடுத்து வச்சிருந்தா சரி. இல்லையோ கனடா கொம்பர் எப்பிடி என்ர அக்காவை கனடாக்கு எடுக்கிறார் எண்டுறத நானும் பாக்கிறன்” சவால்விட்டவளுக்கு அவனைப் பாராமலே ஏனோ பிடிக்காமல் போயிற்று.

‘கனடாகார மாப்பிள்ளை எண்ட உடனே பெண்ணை தூக்கி குடுத்திருவோம் எண்டுற எண்ணமாக்கும்’ கடுகடுத்தாள்.

உண்மையில் மாப்பிள்ளை பார்த்தது கூட அவளுக்கு பெரிய விசயமாக படவில்லை. மாப்பிள்ளை கனடா என்பதே அவளின் பிரச்சனைக்கு காரணமாக அமைந்தது. நினைத்த நேரம் இனி அக்காவை பார்க்கேலாதோ என்ற எண்ணமே அவளை கவலைக்குள்ளாக்க, அதுவே இன்னும் சொந்தமேயாகாத அத்தானிடம் திரும்பி அவளை கோபம் கொள்ளவும் வைத்திற்று.

அண்டைக்கு முழுக்க அதே கோபமும் கடுப்புமாக சுற்றிவர, அந்தநாள் முடிந்து மறுநாளும் விடிய, அன்று சனிக்கிழமை.

பள்ளிக்கு தான் விடுமுறையே ஒழிய, காலையில் ஆறுமணிக்கெல்லாம் வகுப்பு ஆரம்பித்திருந்தது.

“இரவில நேரத்துக்கு படுடீ எண்டா கேக்கறேல்ல. இப்ப கும்பகரண்னுக்கு முறை பொடிச்சு போல தூங்குறது. அடியேய் பெட்ட! எழும்படி நேரமாகிட்டு” காலையிலே சுப்ரபாதத்தை தொடங்கியிருந்தார் புஷ்பாவதி. நியந்தனாவின் ஒரே அம்மா. மற்றும்படி அவளுக்கும் அவருக்கும் என்றுமே ஆகாது.

இப்போதும் அவர் குரல் காதிலே கேக்காதளவுக்கு தலையணையில் குப்பறபடுத்து பெட்சீட்டால் இழுத்துப் போர்த்தியிருந்தாள்.

அவளுக்கு பிடிக்குமென்று காலையில் வழக்கமாக எழும்பும் நேரத்துக்கு முதலே எழுந்து இடியப்பம் அவித்து, வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, உறைப்புக்கு பச்சை மிளகாய் ஒண்டும் செத்தல்மிளகாய் ஒண்டும் போட்டு தாளித்து, அது நன்கு வெந்து வந்ததும் இடியப்பத்தை பிய்த்து போட்டு, அதுக்கு மேலால் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி, அளவுக்கு உப்பு, மிளகுத்தூள், மஞ்சள்தூள், கொஞ்சமாய் தலைப்பால் சேர்த்து பிரட்டி சுடச்சுட இடியப்ப கொத்தை இறக்கி எடுத்து சூடு ஆற அவள் தட்டில் போட்டு வைத்தவர் நேரத்தை பார்த்துவிட்டு விறுவிறுவென அவள் அறைக்கு நடந்தார்.

ஒரே இழுவையில் பெட்சீட் கையோடு வர, அதாலயே இரண்டு போட்டார்.

நோகவே இல்லை. ஃபேன் காத்துக்கும் ஜன்னலில் மேல் விளிம்பில் இருந்த இடைவெளியூடாக உள்ளே வந்த குளிர் காத்துக்கும் காலை கையை குறுக்கி கொண்டு சுருண்டவளின் மேல் நல்ல விசர் வந்திற்று.

நேரமாகிற்றோ அதுக்கு வேறு குய்யோ முய்யோ எண்டு அவரிடம் தான் சண்டைக்கு வருவாள். “உடனே எழும்புவமா நாங்க? எழுப்ப வேண்டியது உங்கட கடமை!” வாய் கிழிய வியாக்கியானம் பேசி, அதுக்கு அவர் கோபப்பட்டு கத்தி, பதிலுக்கு அவளும் கத்தி என தினம் ஒரு சண்டை அவர்கள் வீட்டில் நடப்பது வழமையாயிற்று.

அருகிலே இருந்த அவளின் தண்ணீ போத்தலில் இருந்த நீரை கவிழ்த்து ஊற்ற, அடித்துப்பிடித்து எழுந்து அமர்ந்தவளை தரதரவென இழுத்துக்கொண்டு போய் பாத்ரூமுக்குள் தள்ளி பைப்பை திறந்து விட்டர் வெளியே வந்து மாற்று உடையையும் டவலையும் கதவில் போட்டுவிட்டு போக, ‘ஆஊ!’ என்று அலறிக்கொண்டே குளித்து முடித்தவள் பற்கள் டைப்படிக்க நடுங்கிக் கொண்டே வெளியில் வந்தாள்.

“நீங்க எல்லாம் ஒரு தாயா?” விசரில் சீறியவளின் ஆவென்ற வாய்க்குள் இடியப்பக்கொத்தை திணித்தார். எதில் குறையோ இல்லையோ புஷ்பாவதியின் கைப்பக்குவத்துக்கு என்றும் குறை வந்ததில்லை.

அவளுக்கு பிடித்த பதத்தில் அளவான சூட்டில் சுவையாக தொண்டைக்குள் இறங்கிய இடியப்பக்கொத்தை அப்பிடியே விழுங்கினாள்.

அடுத்தடுத்து அவர் வாய்க்குள் அடைக்க, “அம்மா!” சினந்தவளை காதிலே விழுத்தாமல் “கெதியா வெளிக்கிடு. அப்பா கடைக்கு போகேக்க இறக்கிவிட்டுப்போட்டு போவார்.” என்றவர் தீத்தி முடிந்ததும் கணவருக்கும் அவருக்கும் தேத்தண்ணி வைக்க கெட்டிலில் தண்ணீயை நிரப்பி அடிப்பில் ஏற்றினார்.

ஐந்தே முக்கால் என்றால் அங்கால் ஆறுமணி. நேரம் சிறகு முளைத்ததுபோல பறந்துவிடும். அதில் அவசர அவசரமாக வெள்ளை உடுப்பை உடுத்திக்கொண்டு பரபரவென தயாராகி, முகத்துக்கு கொஞ்சமாய் பவுடர் போட்டு கண்ணாடி முன் நின்று சிரித்துப் பார்த்து திருப்தியான பிறகே தலைவாரி அவசர பின்னல்போட்டு கொப்பியும் கையுமாக ஓடிவர, சாய்மனை கதிரையில் தேத்தண்ணியும் கையுமாக சிவலோகநாதனும் அவருக்கு பக்கத்தில் குஷன் கதிரையில் புஷ்பாவதியும் மெல்லிய குரலில் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர்.

‘அவிர தேத்தண்ணி டைம்!’ மெல்லிய சிரிப்போடு அம்மாவையும் அப்பாவையும் பார்த்தவள் “எஹெம் எஹெம்!” லேசாக தொண்டையை செருமினாள்.

“கண்ணம்மா!” இவளைக் கண்டுவிட்டு கைநீட்டி அழைத்தார் நாதன்.

ஈரெட்டில் அப்பாவின் சாய்மனை கதிரையின் கைப்பிடியில் அமர்ந்தவள் அவரின் கையிலிருந்த தேத்தண்ணி கப்பின் கடைசி சொட்டை வாய்க்குள் சரித்தாள். அவள் தேத்தண்ணி குடிக்க பழகியதும் அப்பிடித்தான். அதனாலே என்னவோ இன்றளவும் அந்தப் பழக்கம் மட்டும் மாறவில்லை.

‘அந்த மனுசர நிம்மதியா ஒரு வாய் தேத்தண்ணி குடிக்கவிடமாட்டாள்’ மகளை பார்வையாலே எரித்த புஷ்பா தலையில் அடித்துக்கொண்டு எழுந்து செல்ல, “சரியான பொறாமை பிடிச்ச மனுசிய எங்கிருந்து தான் தேடிப்பிடிச்சு கட்டினியலோ தெரியேல்ல” அப்பாவுக்கு கண்ணை சிமிட்டுவிட்டு சத்தமாக அறிவித்தவளுக்கு குசினிக்குள் இருந்து அகப்பக்கணை பறந்து வந்தது.

“வரவர இவவின்ர போக்கு சரியாப் படயில்ல அப்பா. உங்களுக்கும் என்ன வயசாயிட்டு சொல்லுங்கோ பாப்பம். பேசாம எனக்கொரு சித்தியை பாத்திங்கள் எண்டா எனக்கும் பொழுதுபோகும்… ஒரே இவட மூஞ்சை பாத்து பாத்து அலுத்துப்போயிட்டு” என்றவளின் முன் பத்ரகாளியாக வந்து நின்றார் புஷ்பா.

“ஓமடி, அவருக்கு வயசாகேல்ல. நீ இன்னொண்டு பாத்து கட்டி வை. கதைக்கிறாள் கதை. இவள பெத்ததுக்கு பேசாம ரெண்டு மாட்டை கட்டி வச்சு வளத்திருந்தாலும் பிரயோசனமா போயிருக்கும்.” அவளிடம் எரிந்து விழுந்தவர் “அவள்தான் மண்ணாங்கட்டி கதை கதைக்கிறாள் எண்டால் நீங்களும் அவளை கதைக்கவிட்டு வேடிக்கை பாக்கிறயல் என்ன” நொடியில் மூக்கை உறிஞ்சுக்கொண்டு நாதனிடம் வெடித்தவர் குசினுக்கு திரும்ப, நாதன் மகளை பரிதாபமாய் பார்த்தார்.

காலையில் அவர் செய்ததுக்கு திருப்பிக்குடுத்துவிட்ட நிறைவோடு இல்லாத தூசை தட்டுவதுபோல கையை தட்டிவிட்டவள் “ரெண்டு நிமிசம் டைமப்பா. வெளியில் நிக்கிறன், உங்கட ஆளை சமாதானப்படுத்திப்போட்டு கெதியா வாங்கோ” நேற்று மறதியாய் வெளியில் இருந்த மேசையில் வைத்த கறுப்பு கலர் அட்லஸ் சூட்டி பென்னை கொப்பி மட்டையில் சொருகிக்கொண்டு வெளியில் நடந்தாள்.

அவள் தந்த இரண்டு நிமிடத்தில் புஷ்பாவை குளிர்வித்துவிட்டு வேகமாய் பைக்கை உதைத்து ஸ்டார்ட் செய்த நாதன், நேரே அவளின் வகுப்படிக்கு சென்று இறக்கிவிட்டு கடைக்குப் புறப்பட்டார்.
 
Last edited:

NNK-65

Moderator
இரண்டாவது அத்தியாயம் பதிவிட்டாச்சு கண்மணீஸ்…

இதோ கருத்துதிரி:-

உங்க கருத்துக்களை பகிர்ந்துகோங்க.

பி.கு: வாரத்தில 2 or 3 அப்டேட்ஸ் குடுக்க ட்ரை பண்றேன். முடிஞ்சா சீக்கிரமே வாறன் டியர்ஸ்🥰
 

NNK-65

Moderator
அத்தியாயம் 03):

மரங்களில் தூண் எழுப்பி அதன் மேல் பனை ஓலைகளை வெய்து பந்தல்போட்டிருக்க, வாங்குகளால் நிறைந்திருந்த இரண்டு வகுப்புக்களுக்கு இடையில் தடுப்பாய் பலகை அடித்திருந்தனர். ஒருபக்கம் நாகரட்ணம் சேரின் கணிதவகுப்பும் மற்றப்பக்கம் வேலுப்பிள்ளை அய்யா விஞ்ஞானம் நடத்திக் கொண்டிருப்பார்.

மற்ற மற்ற பாடங்களுக்கு வேறவேற நேரங்கள், சிலதுக்கு வேற இடங்களில் என தொடர்ச்சியாக வகுப்புகளும் பாடங்களும் நடந்து சூடாகிப்போன மூளைகளுக்கு, கும்பலாய் சைக்கிளில் நின்று போகிற வருகிற பெட்டைகளை சைட் அடித்துக்கொண்டும் பட்டப்பேர் வைத்து கூப்பிட்டு தனகிக்கொண்டும் இருந்தனர் பெடியன்கள்.

ரகசிய சிரிப்புடனும் சிலர் முறைப்புடனும் நான் முந்தி நீ முந்தி என இடம்பிடிக்க வகுப்புக்குள் நடந்த பெண்களுக்குள் எதிர்ப்பட்ட வதனியை “தனியா! இஞ்சால(இங்கால) வாடி” இழுத்துக்கொண்டு தங்கள் ஆஸ்தான இடம்நோக்கி நகர்ந்தவர்களை “மதினி மதினி” கூப்பிட்டு உள்ளே போகும் மட்டும் ஏலம்போட, நித்திக்கு சிரிப்போ சிரிப்பென்றால் வதனிக்கு ஆத்திரத்தில் முகம் நன்றாகச் சிவந்து போயிற்று.

ஏற்கனவே வெள்ளைவெளேர் என இருப்பவளுக்கு கோவத்தில் சிவந்த முகம்கூட தனிசோபை குடுத்தது.

“எல்லாம் அந்த புடலங்காயால் வந்தது” நீட்டு நீட்டென்று மற்றவர்களை காட்டிலும் உயரமாக வளர்ந்த ஏஎல் படிக்கும் கனிகீதன் அவன்! இதே வகுப்பில் வைத்துத்தான் அவளை முதன்முதலில் பார்த்தான். அன்று ஆரம்பித்தது வினை.

“அவள் என்ர ஆள்!” அத்தனைபேரும் பார்க்க பகிரங்கமாக அறிவித்தவனின் தலையீடு, அவள் போகும் இடமெல்லாம் தலைவலியாய் ஆயிற்று. குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு ஒரு தரமாவது அவளின் வாயில் விழுந்து எழுவான். தூரத்தில் எங்கேனும் அவனை பார்க்க நேர்ந்தாலோ வேறு தெருவில் புகுந்தேனும் எப்பிடியாவது வீட்டை போய் சேர்ந்திடுவாள். தப்பித்தவறி எதிர்க்க அவனை கண்டாலோ தலை நிமிர்த்தி அவனை பாப்பது என்ன அவன் இருக்கிற திசைக்கு மூச்சைக்கூட விடுவது இல்லை.

“அவள் தான் நாய்க்கு கூட மதிக்கிறாள் இல்லை எல்லா. பிறகும் ஏன்டா ரோசம்கெட்டவன் போல பிறகால திரியிறாய்” அவன் நண்பர்கள் குறைப்பட்டும் சிரித்துக்கொண்டே “பிடிச்சிருக்கே! என்ன செய்யிறது.” என்று ஒரு வரியில் அவர்களின் வாயை அடைத்தவன் இதோ என்றும்போல் இன்றும் அவளின் வாயில் விழுந்து அரைப்பட்டான்.

“அந்த மரமண்டையன் மட்டும் என்ர கையில் கிடைச்சானோ, ஏறிப்போட்டு மிதிக்கிற மிதில ரத்தம் கக்கிச்சாவான்” வந்த விசருக்கு சினந்தவள் கையிலிருந்த பென்னை மூடி மூடி திறக்க, “அது என்ர!” கவனமாய் அவளிடமிருந்து வாங்கி பத்திரப்படுத்தினாள் நித்தி.

முறைப்புடன் திரும்பியவளை “என்ர லக்கி பென்ரி அது. நீ இருக்கிற விசருக்கு உடைச்சிப்போட்டாய் எண்டா…” படபடவென இமைகளை அடித்து ‘உன்ர கோபத்தை குறையேன்!’ சிரித்தே சமாதானம் செய்ய முயன்றவளின் முயற்சி புரிபட, லேசாக சிரிப்பு வந்தாலும் இன்னுமே சூடு தணியாமல் அமர்ந்திருந்தவளை,

“விடடீ, நேர்ல பாக்கேக்க போட்டு கிழிப்பம். இல்லையோ நான் செவில்லயே குடுக்கிறன்” கையை தேய்த்துக்கொண்டே சூளுறைத்தவளை இப்போது நன்றாக திரும்பி முறைத்தாள்.

‘நீ ஒண்டும் கிழிக்க வேணாம் ஆத்தா!’ என்றவள் பார்வையே ‘நீ செஞ்சது வரை காணும்’ சொல்லாமல் சொல்ல, தலைக்கு மேல் கும்பிடு போட்டவளை,

“இறக்குடி முதல, மானத்தை வாங்காத மாடு” அசடு வழிய அதட்டியவள் ஒரு நாள் செய்த காரியத்தில்தான் அவன் பின்தொடரலே அதிகமாயிற்று.

“அவன் பாட்டுக்கு இங்க வாறதோட நிப்பாட்டிருப்பான். நீ ஏசப்போறன், கிழிக்கப்போறன் எண்டு போய் நான் போற வகுப்பில ஆரம்பிச்சு வீட்டு விலாசம் வரை குடுத்துப்போட்டு வந்திருக்கிறாய் மொக்கு!” சிடுசிடுத்தவளுக்கு சிரிப்பும் வந்திற்று.

“சிரிக்காதயடி பல்லை பேப்பன்” எகிறியவளும் இறுதில் சிணுங்கிக்கொண்டே “ஸ்டார்ட்டிங் எல்லாம் நல்லாதான்டி இருந்தது. ஃபினிஷிங் தான் புஷ்பத்தை கண்டு ஆட்டம் கண்டிருச்சு” குறைப்பட்டவள் “அண்டைக்கு மட்டும் அவா வழில வராம இருந்திருக்க, நான் குடுத்த கிழியில் கொத்து பரோட்டா ஆகிருப்பான்.” ‘உண்மைடி’ பாவனையோடு கண்ணை உருட்டி உருட்டி சொல்லியவளை மேலும் கீழும் அவள் பார்த்த பார்வையே ‘கிழிச்சிருப்பாய்’ சொல்லாமல் சொல்லிற்று.

அதில் உடனே “சரிசரி விடடீ. நாளைக்கு சண்டே! அது ஞாபகம் இருக்கெல்லோ…” பேச்சின் போக்கை திசைதிருப்ப சொல்லியவளின் கண்களுமே மின்ன, அதற்கு போட்டியாய் முகமும் விகசித்தது.

ஞாயிறு என்றாலே அவர்களுக்கு கொண்டாட்டம்தான். பகல் சாப்பாட்டை ஒரு பிடிபிடித்துவிட்டு மதியம் ஒன்றுபோல கொமர்ஸ் வகுப்புக்கு வந்தால் மூண்டு மூண்றறைக்கு எல்லாம் முடிந்துவிடும். மூண்டரையில் இருந்து ஐந்து மணி வரை, அவர்களுக்கான நேரம்.

பெரும்பாலும் வதனி வீட்டில் தான் அந்தப்பொழுது கழியும்.

அவள் வீட்டில் சின்னக் குடிசை வீடு ஒண்டும் இருந்தது. கண்ணாள் அவள் அம்மம்மா அங்குதான் இருந்தவர். பார்க்கத்தான் குடிசைவீடு போல இருக்குமே தவிர உள்ளே தண்ணீ, கரண்ட் வசதி எடுத்திருக்க, பிறகு அவளின் அண்ணனின் படிக்கும் அறையாக மாறி, ஞாயிறுகளில் அவர்களின் இரண்டு மணிநேரம் கழியும் இடமும் அதுவென்றாகியது.

அவர்களின் காணி பெரிது என்பதால் நிறைய மரங்கள் வளர்ந்து நிழற்சோலையாக குடைவிரித்து குளுகுளுவென்றே இருக்கும். அதனாலே ஞாயிறு எப்போது வரும் என எதிர்பாத்திருப்பாள் நித்தி.

அங்கேயே மாமரத்தில் மாங்காய்களை பறித்து, தோல் சீவி, வெட்டி, உப்பு, மிளகாய்தூள் போட்டு அவள் அண்ணனின் கொம்பியூட்டரில் புதுப்படமோ அல்லது பார்த்த படத்தையோ பாப்பதும் என அவர்களுக்கு மட்டுமேயான அந்தப்பொழுது குதூகலமாகவே கழியும்.

அதில் வதனியும் அந்த தலைகழண்டவனை புறந்தள்ளி “தார்ரோடு நேத்து புதுபடம் வந்திருக்கு எண்டு பாத்தவன்டி. சத்தம் கேட்டது. நாளைக்கு பாப்பம் சரியோ” குசுகுசுவென தங்களுக்குள் பேசிக்கொள்ள, ரட்ணம் சேர் வரவுமே வகுப்பு அமைதியாகி கவனம் அவரிடம் திரும்பிற்று.

அடுத்த இரண்டு மணித்தியாலங்கள் கணிதத்தோடு மல்லுக்கட்டி அதை ஒருவழியாக ஒப்பேத்தி, பிறகு சயின்ஸ் வகுப்பிலும் நீந்திக்கரையேறிய போது மேலும் முழுதாக இரண்டு மணிநேரங்கள் ஓடியே போயிற்று.

“எவன் இந்த மேத்ஸையும் சயின்ஸையும் கண்டுபிடிச்சவனோ தெரியேல்ல. அவன் மட்டும் இப்ப இருந்திருக்க கூப்பிட்டு வந்து படிடா படி எண்டு மண்டையை பிடிச்சு ஆட்டவேணும். அப்ப விளங்கும் எங்கட கஷ்டம்.” இதோ வகுப்பு முடிந்து அலுத்து களைத்துப்போய் நடந்து வந்த நித்தியின் வாயில் இருந்து உதிர்ந்த நல்முத்துக்கள் தான் இவை.

“அவனுகள் சொர்க்கத்துல சந்தோசமா இருப்பானுகள்டி” அவளுக்கு குறையாமல் நீட்டி முழக்கினாள் வதனி.

பேச்சு அவளோடு இருந்தாலும் கண்கள் என்னவோ வேகமாகச் சுழன்று அந்த தலைகழண்டவன் வரவில்லை என்பதை உள்வாங்கிக்கொண்ட பிறகே இலகுவாகியவள் நிம்மதி பெருமூச்செறிய, “எங்க உன்ர ஆள் வரேல்லையாக்குமா” வேணுமென்றே அவளை சீண்டிய நித்தியோ அவள் கைக்கு அம்பிடாமல் ஓடி, இறுதியில் அவளிடமிருந்து மொத்து வாங்கிவிட்டுத்தான் ஓய்ந்தாள்.

“ஆள்கீள் எண்டியோ பல்லு பறக்கும். விசர்நாய் போல குறைச்சுக்கொண்டு பின்னால வாறவன் எல்லாம் ஒரு ஆள் எண்டுப்போட்டு கதைக்கிறனீ.” மீண்டும் முதுகில் ஒன்று போட, “எருமை எருமை. அதுக்கு ஏன்டி இப்பிடி போட்டு அடிக்கிறாய்.”

“அடிக்காம! இன்னும் நல்லா சாத்துவன் ரோட்டில் நிற்கிறம் எண்டு பாக்கன்”

“அப்ப என்னத்துக்கடி அவனை கண்ணால தேடினனீ” அவள் அடித்தற்காகவே ‘இண்டைக்கு உன்னை விடுறேல்ல’ விடாமல் சீண்டியவளை

“உன்னை உதைக்கப்போறனான்!” பல்லைக் கடித்தாள் வதனி.

“உதையேன் ஆரு வேணாம் எண்டது. என்ன, நாளைக்கு நீ புதுசா சேந்திருக்கிற வகுப்பு அட்ரஸும் உன்ர ஆளுக்கிட்ட போகும். வேற ஒண்டும் சொல்லமாட்டனான்.” சிரிப்புடன் சொல்லியவள் ஒரே ஓட்டமாய் ஓடிவிட, “நித்தி” ஓங்கி தரையில் உதைத்தாள்.

அவள் அதற்குள் வீட்டுக்கே போய் சேர்ந்திருப்பாள் என்று தெரியும். ‘எங்க போனாலும் நாளைக்கு என்னட்ட தானே வருவாய். அப்ப கவனிக்கிறன்!’ கருவிக்கொண்டே வீட்டை போனாள்.

துள்ளல் சிரிப்புடன் நியந்தனா வீட்டுக்கு வந்தபோது மதியத்திற்கான உணவு வேலையில் இருந்தார் புஷ்பாவதி.

சத்தமே இல்லாமல் அறைக்குள் புகுந்தவள் காலையில் அவள் போனபோது இருந்தது போலவே இருந்த அறையை கண்டு ‘அம்மா!’ பல்லை கடித்தாள்.

‘அவேன்ர கோபத்தை காட்டுறாவாக்கும்’ கடகடவென அறையை ஒழுங்கு செய்து, படிக்கும் மேசையில் அமர்ந்து வகுப்பில் நடந்த பாடத்தை ஒரு முறை மீட்டி, வீட்டுப்பாடங்களையும் முடித்து நிமிர்ந்தபோது நேரம் பகல்சாப்பாட்டு நேரத்தை தொட்டிருந்தது.

மீண்டும் ஒரு குளியல்போட்டு உடுப்பு மாற்றி வெளியே வந்தவளுக்கு பசிவேறு கபகபவென வயிற்றைக் கிள்ள, மதிய சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வந்திருந்த அப்பாவிடமே “சோற்றை போட சொல்லுங்கோ அப்பா. செய்யிறது ஒரு வேலை, அதைக்கூட நேரத்துக்கு செய்ய ஏலாதா உங்கட மனுசிக்கு” வழமைபோல அவரை சீண்டிக்கொண்டே பேச்சை ஆரம்பித்த மகளை கதைக்கவிட்டு ரசித்துக் கொண்டிருந்த நாதன் குசினியில் இருந்து சாப்பாட்டு பாத்திரத்துடன் வெளியில் வந்த மனைவியிடம் ‘பிள்ளை பகிடிக்கு கதைக்கிறாள்’ கண்ணாலே இறைஞ்சி சமாதானக்கொடியை பறக்கவிட்டார்.

அதை ஒரு முறைப்பிலே அலட்சியம் செய்திருந்தார் புஷ்பா.

புறுபுறுத்த மனதை அடக்க முடியாமல் டொங் என பாத்திரத்தை மேசையில் வைத்தவர் “வேலைக்கள்ளிக்கு பிள்ளைசட்டாம். இஞ்ச படிக்கிறன் படிக்கிறன் எண்டு என்னத்தை படிச்சு கிழிக்கிறாளோ தெரியாது. வாய் மட்டும் நல்லா நேரத்துக்கு கொட்டிக்கவும் கதைக்கவும் வேலை செய்யும். மற்றும்படி வேற ஒண்டுக்கும் உடம்பு வணங்குறேல்ல”

கொதிப்புடன் அவளை உறுத்து விழித்தவர் “இனி ஒரு தரக்க வாயை திறந்தவளோ… மனுசியா இருக்கமாட்டன் பாருங்கோ!” குடுத்துவிட்டுத்தான் ஓய்ந்தார்.

அதை காதில் விழுத்தினால் அவள் நித்தி இல்லையே…

“இப்ப மட்டும் என்ன மனுசியாவா இருக்கிறா… எப்ப பாத்தாலும் அதட்டலும் உருட்டலும். ஊருக்குள்ள போய் பாக்கச்சொல்லோணும். அவளவளுகளின்ர அம்மாக்கள் எப்பிடி இருக்கினம் எண்டு. ஏன், அத்தையை எடுங்கோ. வாணிக்காவில் எப்பிடி பாசமா இருக்கிறா”

“வாணி, அவள் பிள்ளைடி. நீயும் இருக்கிறியே! எந்த நேரத்தில் பெத்து துலைச்சனோ தெரியாது. எருமைமாட்டை பெத்திருக்கன்”

“ஓமோம்! அதை பெரிய எருமைமாடு சொல்லுது”

நக்கலாக திருப்பிக்குடுத்தவளை கண்ணில் கனலுடன் திரும்பிப்பார்க்க, “எப்பிடி பாத்தாலும் நான் குட்டி எருமைமாடு லிஸ்ட்டில தான் வருவன். அப்ப என்னை பெத்தநீங்க பெரிய எருமை மாடாத்தானே இருக்கோணும். அதைச்சொல்லுறன்” துளிகூட பயமில்லாமல் அலட்டியவளை

“ஒரு நாள் இல்ல ஒரு நாள் இவள்ர வாயை உடைக்கப்போறனான். அண்டைக்கு என்னட்ட ‘புஷ்பா!’ எண்டுக்கு வந்தியலோ வாய் பழுதாகிடும் பாருங்கோ” நாதனிடம் எகிறியவர் விடுக்கென அறைக்குள் போய்விட்டார்.

மனைவி போறதையே பார்த்துக் கொண்டிருந்த நாதனிடம் “அவா அப்பவே போயிட்டா” என்றாள் நித்தி சிரிப்புடன்.

மகளை முறைக்க முயன்று தோற்ற நாதனுக்கும் புன்னகை அரும்பிவிட, “நீயும் ஏன் நித்திம்மா” என்றார், தன் சிரிப்பை காட்டாத முயன்று வரவழைத்த கண்டிப்பு குரலில்.

“நான் என்ன செய்தனான். பசிச்சது. சாப்பாடு போடச்சொன்னனான். அது ஒரு குத்தமா?” அப்பாவியாக இமைகளை சிமிட்டினாள்.

அப்பிடி கேட்பவளிடம் எப்பிடி ஓம் என்பது. பிறந்தபோது கையில் ஏந்திய அதே பால்வடியும் முகம். அச்சு அவரின் அம்மாவின் முகசாடை. பேத்தியை பாராமலே இறைவனடி சேரந்தவரை அச்சில் உரித்து அப்பிடியே வந்து பிறந்த மகளிடம் தன் அம்மாவை பார்த்தவரால் மருந்துக்குக்கூட அவளை கண்டிக்க வாய் வருவதில்லை.

அவளின் உச்சியில் கைவைத்து ஆட்டிவிட்டவர் “என்ர அம்மாம்மா” என்றுவிட்டு எழுந்து கைகழுவப்போனார்.

“என்ன அப்பா சாப்பிடேல்லையா”? என்றவளுக்கு “பிறகு அம்மாவோட சாப்பிடுறன்” கண்ணால் சிரித்துவிட்டுப்போனார் அவர்.

“ம்ம் ம்ம்!” அவருக்கு இசைந்து தலையை ஆட்டியவளுக்கும் சிரிப்பு வந்திற்று. என்ன தான் அப்பா அவளைப் பேசவிட்டு வேடிக்கை பார்த்தாலும் அப்பாக்கு அம்மா என்றால் கொள்ளை இஷ்டம் என்று தெரியாமலில்லையே!

‘வரவர பெரிசுகளின்ர தொல்லை தாங்கலையப்பா’ தனக்குள் குறும்பாய் சொல்லிக்கொண்டே மீதி சோற்றை ஒரே அள்ளில் வாய்க்குள் போட்டுக்கொண்டு ‘வாணிக்கா, தோ நான் வந்துட்டேன்!’ அவள் வீட்டும் இந்ராணி வீட்டுக்கும் பொதுவில் தடுப்பாய் இருக்கும் மதிலால் தாவிக்குதித்து ஏறி மறுபக்கம் வந்திருந்தாள்.

வீட்டில் அணியும் சாதாரண பாவாடை சட்டையில் ஏறுவதற்கு வசதியாக இழுத்து சொருகிய பாவாடையை சரியாக்கிக்கொண்டே கால்கள் தரையில் படாமல் துள்ளலோடு தன் முன் வந்து குதித்தவளை “கொரங்குல இருந்து தான் மனுசர் வந்தாம் எண்டு படிப்பிச்சு தரக்க எல்லாம் நம்பேல்லனான். இப்ப உன்னை பாக்கேக்க அது உண்மையாத்தான் இருக்கும் போலிருக்கு” என கிண்டலில்.

“என்ன நக்கலோ?” உதட்டை சுழித்து கையை அவள் முன் நீட்டிய நித்தியை கேள்வியாக பார்த்தவள் தட்டில் இருந்த அப்போது தான் சுடச்சுட இறக்கிக்கொண்டு வந்த பயத்தம்பணியாரத்தில் ஒன்றை அவளின் நீட்டிய உள்ளங்கையில் வைத்தாள்.

அதன் சூட்டில் “ஆஆஆ” அலறிக்கொண்டே டான்ஸ் ஆடியவள் “வாணிக்கா!” சீறலுடன் பயத்தம்பணியாரத்தை இரு கைகளுக்கும் மாற்றி, உதடு குவித்து ‘ஊஃப் ஊஃப்’ ஊதியவள் சற்று சூடு ஆறவும் தான் நிதானமாகி கையை உதறிக்கொண்டு கதிரையில் அமர்ந்தாள்.

“வரவர மினி புஷ்பா ஆகிக்கொண்டிருக்கிறயல்” குற்றப்பத்திரிகை வாசித்தவள் சூடுபட்டு சிவந்துபோன உள்ளங்கையை விரித்து உதட்டை பிதுக்கினாள். அவளுக்கு உருகிற்று.

“எங்க காட்டுனான் பாக்கிறன்”

“ஒண்டும் தேவையில்லை”

அருகில் வந்தவளின் கையை தட்டிவிட்டவள் கண்ணை சிமிட்டிக்கொண்டே “நோகேல்ல எண்டாலும் நோகுற போல நடிப்பம்நாங்க” ஸ்டைலாக சொல்லியவளின் தலையில் எட்டி குட்டிய வாணிக்கு இப்போது முறைப்போடு “நேத்து என்ன சொன்னனான்?” கேள்வியாக புருவம் உயர்த்த,

“என்ன சொன்னனீ?” அவளைப்போலவே கேட்க

“ப்ச்! அக்கா!” ஒரு காலை தரையில் உதைத்து சிணுங்கவும் “உங்கொக்காதான்டி! சொல்லு என்ன சொன்னனீ” என வாணி, சிரிப்பை அடக்கேலாமல் முகமெல்லாம் நிறைந்துவிட்ட சிரிப்போடு.

“கனடா காத்து கடுமையாத்தான் வீசுதுபோல…”

இடக்காக சொல்லியவள் அப்பிடியே தொனியை மாற்றி “அதான், அந்த கனடா கரடிக்கு போனை போட்டு தரவேணும் எண்டு சொல்லி எல்லா வீட்டை போனனான். மறந்து போயிட்டு என்ன” என்க,

நமட்டுச் சிரிப்புடன் கையில் இருந்த போனை நீட்டியவளுக்கு இப்போது அவள் கனடா கரடியில் கேட்டுக் கொண்டிருப்பவன் என்ன நினைப்பான் என நினைத்து நினைத்து பொங்கிவிட்ட சிரிப்பு அடங்கமாட்டன் என்றிட, பக்கென சிரித்துவிட, மறுமுனையில் விளக்கெண்ணெய் குடித்ததுபோல் விழித்துக் கொண்டிருந்தான் சாய்ரூபன்!

ஆம்! இசைவாணியின் வருங்கால மாப்பிள்ளையே தான்.

‘எதே கனடா கரடியா!’ என்றவன் பார்வையோ எதிரே தெரியும் கண்ணாடியில் படிய, மிதமான காற்றுக்கு அலை அலையாக கலைந்த கேசம் முன்னெற்றியில் புரள, வெளிநாட்டு வாசத்தில் நிறம் மாறினாலும் நம்மூர் முகவெட்டும் சாயலும் அடிக்க, சிரித்தால் கூடவே சேர்ந்து சிரிக்கும் கண்களும் முகமுமாக ஜீன்ஸ் டீசேர்ட்டில் களையாக இருந்தவன் ‘பாக்க அப்பிடி தெரியேல்லயே’ ட்ரிம் செய்திருந்த தாடியை கரம் கொண்டு கழுத்தினூடாக வாரிவிட்டான். பாக்க மட்டும்மில்ல பழகவும் இனிமையானவன் என்பது அவன் கருத்து.

அதிலும் இந்த இருபத்தெட்டு வயதுவரை கட்டை பிரம்மச்சாரியாக இருந்தவன் கலியாண ஆசை வந்து வீட்டிலிருப்பவர்களுக்கு ஓம்பட்ட கையோடே விட்டால் பிடிக்க முடியாது என்று சூட்டோடு சூடாக பொம்பிளை பார்த்து புகைப்படத்தையும் அனுப்பி வைக்க, முதல் பார்வையிலே அவளை சிநேகித்து, அவனின் இசையாக வரித்துக்கொண்டவனின் முதல் பிறந்தநாள் இன்று, அவள் அவன் வாழ்வில் வந்துவிட்டபிறகு.

முதல் வாழ்த்தும் இசைவாணியிடம் இருந்து தான் வந்தது. “இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!” தயக்கமும் கூச்சமும் போட்டிபோட ஒலித்த அவள் குரல் இப்போதும் அவன் காதில் ஒலிக்கிறதே!

அவனுக்கு பன்னிரெண்டு ஆகும்வரை காத்திருந்து வாழ்த்து சொல்லியிருக்க, அதில் முகம் எல்லாம் பூத்துவிட்ட சந்தோசத்தோடு இருந்தவனுக்கு தான் நித்தியின் குரல் அபஸ்வரமாய்.

‘ஆரு?’ முகத்தை உயர்த்தி சைகையாலே அவள் கேக்க, ‘பிடி’ என அவள் கையில் திணித்தாள் வாணி.

“அக்கா!” என்றவளின் குரலை காதில் வாங்காமல் வெறும் தட்டை எடுத்துக்கொண்டு அவள் வீட்டுக்குள் போய்விட, ‘வாணிக்கா’ பல்லைக்கடித்தாள் நித்தி.

கையில் இருந்த ஃபோன் வேறு அழைப்பில் தான் இருக்கிறன் எனச் சொல்லும்விதமாக நிமிசங்கள் ஓடப் பாக்க, திரையில் ‘ரூபன்’ என்ற பெயர் மின்னிக் கொண்டிருந்தது.

‘ஆரெண்டும் தெரியேல்ல, சரி எதுக்கும் சொல்லுவம்’ என நினைத்து காதில் வைத்தவள் “ஹலோ” என்றதுதான் தாமதம் “ஆரு, நான் கனடா கரடியோ? அதை உள்ளூர் கரடி நீர் சொல்லுறீர்! அதும் என்ர மனுசிட்ட. இரும், அடுத்த ஃப்ளைட்டிலே ஊருக்கு வாறனான்” என்ற குரல், மெய்யாகவே அதட்டுவது போல் ஒலிக்க, பட்டென காதில் இருந்த போனை இழுத்தெடுத்தவள் வாயை பொத்திக்கொண்டாள்.

எல்லாம் ஒரு நிமிடம்தான். அவளின் இயல்பான குணம் தலைதூக்க, “வாறதுக்கும் போறதுக்கும் ஒரே நாளில் புக் பண்ணுங்கோ!” என்றவள் முகமெல்லாம் குறும்பு புன்னகை.

ஒருநொடி விழித்தவன் மறுநொடி இதழ்விரித்தான். ‘ஆஹ்ஹாஹ்ஹா!’ சத்தம் வராமல் சிரித்தவனின் உடல் குலுங்கிற்று அதிர்வில்.

‘சரியான சேட்டைபிடிச்சவள்!’ வாணி சொல்லியதை வைத்தும் இப்போது அவளின் பேச்சைக்கேட்டும் முடிவுக்கே வந்திருந்தான் ரூபன்.

“தைரியந்தான்!” பொய்யாக மெச்சியவனுக்கு “அது பிறப்பிலே வந்தது” இடக்காக சொல்லியவள் “கனடாக்கு எல்லாம் அது கிடையாது. இருந்திருக்க நேர்ல வந்து பொம்பிளை கேட்டிருக்க தெரிஞ்சிருக்கும் இந்த நித்தி ஆரெண்டு!”

“ஓமோம். கையோட புஷ்பா சித்தியை கூட்டிக்கொண்டு வந்திருக்க இன்னம் நல்லாருந்திருக்கும்” அவளுக்கு சளைக்காமல் கிண்டல் தொனிக்க கூறியவனை கண்டு பல்லைக் கடித்தாள்.

‘வாணிக்கா!’ தரையில் உதைத்தவள் ‘எல்லாத்தையும் ஒப்பிச்சிருக்கிறா…’ கோபமூச்செறிந்தாள்.

“அதுக்கெல்லாம் பயப்பிட்டு நிப்பன் எண்டு நினைச்சா அது உங்கட பிழை.” கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை எனச் சாதிக்க

“ப்பாஹ்! அங்க ஃபயரடிக்கிறது இங்க வரைக்கும் அனலடிக்கிறதே” டீசர்ட்டை இழுத்து விட்டு ‘ஸ்ப்பா’ ஊதியவனின் செயலில் கொதித்துப்போய் இங்கும் அங்கும் நடக்க,

“என்னடி கதைச்சியா?” கேட்டுக்கொண்டே சன்ன சிரிப்புடன் திரும்பி வந்த வாணிக்காவில் அவை ஒட்டுமொத்தமாக திரும்பி “நல்லாப் பிடிச்சிருக்கிறயல் ஆளை. சரியான குதர்க்கக்காராள்! பிடியுங்கோ உங்கட ஃபோனை. நீங்களாச்சு உங்கட கனடா கரடியாச்சு என்னை ஆள விடுங்கோ!” அவள் கையை இழுத்து டப் என ஃபோனை வைத்தவள் விலுக்கென முகத்தை திருப்பிக்கொண்டு நடக்க, “என்ன எண்டு சொல்லிப்போட்டு போடி” என்றதற்கு நடை நிற்க திரும்பி “அதை உங்கட கனடாட்டயே கேளும்.” வெடித்தவள் விறுவிறு என சென்று மறைந்திருந்தாள்.

“என்ன சொன்னநீங்க, ஆள் சரியான கோபத்தில் போறாள்?” ஃபோனை காதுக்கு குடுத்தவள் கேக்க, எப்போது அவள் கதைப்பாள் என்றே காத்திருந்தவன் உல்லாசமாய் இருக்கையில் சாய்ந்து அமர்ந்து அதன் பிறகு கதைத்தது எல்லாம் அவர்களுக்கான அந்தரங்களே!

என்ன கதைத்தீர்கள் எனக்கேட்டால் நிச்சயம் இருவரும் முழிக்கத்தான் செய்வினம். கொள்ளை சிரிப்பும் கொஞ்சம் வெட்கமும் நிறைய கனவுகளுமாக விரைவில் கலியாண வாழ்க்கைக்குள் அடியெடுக்கப் போகிறவர்களின் நேரம் அப்படியே நீண்டுபோயிற்று. அங்கு அவன் தூக்கத்தில் சொக்கி விழுந்தபிறகு தான் இங்கு அழைப்பு துண்டிக்கப்பட்டது.

ஒருபக்கம் அவர்களின் நெருக்கங்கள் நீள, இன்னொரு பக்கம் கலியாண சடங்குகளும் துரிதகதியில் ஆரம்பமாயிற்று.

கலியாணத்துக்கு ஒரு மாதமே இருக்க, இரு குடும்பங்களும் கலியாண உடுப்புகள் எடுக்க கொழும்புக்கு புறப்பட்டனர்.



மூன்றாவது எபி போட்டாச்சு. போன எபிக்கு கருத்து தெரிவித்த எல்லோருக்கும் நன்றி🥰

இதற்கும் உங்கள் கருத்துகளை பகிர்ந்துகோங்க
 
Last edited:

NNK-65

Moderator
அத்தியாயம் 04):

“நீயும் வாவன் நித்தி. எனக்கும் பொழுதுபோகும் நீயும் கொழும்பை சுத்திப்பாத்த மாதிரியும் இருக்கும்” மேல் கண்ணால் அவளைப் பார்த்துக்கொண்டே, கொழும்புக்குச் சென்று உடுத்துவதற்கு ஏதுவான உடைகளை அடுக்கிக் கொண்டிருந்த வாணி, கட்டிலில் குப்பறபடுத்து காலாட்டிக்கொண்டே கதைப்புத்தகத்தில் ஆழ்ந்திருந்தவளிடம் கேட்டாள்.

“ம்ம் ம்ம்!” என்றவள் பிறகு “ம்ஹூம்!!” என வேகமாய் அவள் கேட்டதை உள்வாங்கி மறுப்பாக தலையசைத்துக்கொண்டு.

“சும்மாவே புஷ்பம் எப்படா சான்ஸ் கிடைக்கும் என்னை குதறுவம் எண்டு காத்திருக்கிறா. நானே போய் விழுந்து வாங்கிக்கட்டுறதா? மாட்டேன்ப்பா” அப்பாவி போலவே சொல்ல, “போடி” கையிலெடுத்த சீப்பை விசிறியடித்தாள்.

லாவகமாக அவள் எறியில் இருந்து தப்பி எழும்பி அமர்ந்தவள் “படிக்கிறது நிறைய இருக்கு வாணிக்கா. எப்பிடியும் உங்கட கலியாண துண்டுக்க படிக்கேலாது. மெனக்கெட்டு படிச்சாலும் அது மண்டைக்கு ஏறப்போறதில்ல எண்டுறது வேற விசயம்.“
சிரிப்புடன் சொல்லியவள் பிறகு சீரியஸாகவே “அதுக்கும் சேர்த்து இப்பயே படிக்கவேணும். இந்தத்தடவை இல்லாட்டி என்ன பிறகு இன்னொரு தரம் போவம்” என்றாள் உற்சாகமாக.

அதற்குமேல் அவளும் ஒண்டும் சொல்லவில்லை. ஆனால் நித்தியா அப்பிடியே விடுவாள்?

“அதுவும் இல்லாம கனடா காத்து பலமா அடிச்சா இந்த நித்தி ஒரு ஓரமா குந்திக்கு இருக்கிறதும் ஒராளுக்கு விளங்காது எல்லோ” என்றவளுக்கு முகமெல்லாம் துளிர்விட்ட சிரிப்பில் அப்பிடியே அள்ளிக்கொள்ளும் அழகுதான்.

“அழகுநீ நித்தி!” எட்டி கன்னம் கிள்ளிய வாணிக்கு அழகிய வெட்கச்சிரிப்புடன் இதழ் நெளிய கண் மூடி திறந்தவள் “சரிசரி, பகிடி கதைச்சது காணும். முதல் உங்கட வேலையை முடிப்பம் வாங்க” என வாணியின் முறைப்பை பொருட்படுத்தாமல் அவளும் சேர்ந்து மிச்ச துணிகளை மடிக்க, வேலையும் விரைவாகவே முடிந்திற்று.

வலசரியாக கடைசி உடுப்பை மடித்து பேக்கினை பூட்ட கையெடுக்கையில் மெல்லிய சத்தத்தில் அதிர்ந்தது வாணியின் பேசி!

கனவெல்லாம் நீ தானே
விழியே உனக்கே உயிரானேன்
நினைவெல்லாம் நீ தானே

கலையாத யுகம் சுகம் தானே…” ஒரு முறை முழுதாக அடித்து ஓய்ந்து இதோ நிக்கப்போகிறன் என்ற நொடியில் தான் கட்டிலில் கலைந்து கிடந்த உடுப்புகளுக்கு அடியில் ஒளித்திருந்து கண்ணாமூச்சி ஆடிய கைப்பேசி கைக்கு தட்டுப்பட, “இதோ இருக்கு” என்று எடுத்த நித்தியின் முகம் அப்படியே கடுகடுத்திற்று.

க்ர்ர்! பல்லை நறநறத்தவள் வேண்டாவெறுப்பாக நீட்டிய தோரணையே அவள் நிலையைச் சொல்ல, அவனுக்கென ப்ரத்தியேகமாக அவள் பார்த்துப்பார்த்து வைத்த ரிங்டோன் அல்லவா? ஆர் என தெரியாமல் இருக்குமா!

வாணியோ எடுக்கத்துடிக்கும் நெஞ்சத்திற்கும் எதிரில் இருக்கும் நித்திக்கும் இடையே அல்லாட, நித்தியோ குமுறிக் கொண்டிருந்தாள்.

முன்னைப்போல் வாணியுடன் செலவழிக்கும் நேரம் இப்போதெல்லாம் வெகுவாக குறைய, அதையெல்லாம் அவனுக்கானதாய் எடுத்துக் கொண்டிருந்தான் கனடாக்காரன். அவளுக்கு சும்மாவே நாள்தோறும் வகுப்பும் பாடமுமாக கிடைப்பதே சொற்பநேரம். அதிலும் அவன் குறுக்கே கட்டையை போடுகிறானே என கொதித்துப்போனாள்.

‘நான் இருக்கேக்க சரியா மூக்கு வியர்க்குமே கனடாக்கு! இப்பவே அக்காட்ட கதைக்க விடுறார் இல்ல. கலியாணம் முடிஞ்சதோ வாணிக்காவை மறந்திட வேண்டியதுதான்’ அவள் மனம் அறிவுறுத்த, ‘கனடாட்ட பேர்மிஷன் வாங்கித்தான் அக்காட்ட கதைக்கோணும் எண்டுற நிலமை வந்திடுமோ…’ நினைப்பு எங்கெங்கோ செல்ல, தலையை உலுக்கி அந்நினைப்பையே உதறித்தள்ளினாள். அடுத்த அழைப்பிற்கு பட்டென இணைப்பை ஏற்று காதில் வைத்ததும் என்னவோ நித்தியே.

“இஞ்ச பாருங்கோ, சும்மா சும்மா கோலெடுத்து டிஸ்டர்ப் பண்ணிக்கொண்டு இருக்கிறேல்ல. வாணிக்கா இப்ப பிஸியா இருக்கிறா, பிறகு எடுங்கோ” இங்கு வாணி தடுப்பதற்குள் சொல்லிவிட,

“ஆ…! ஹல்லோ உள்ளூர்க்கரடி! நீங்களா மேடம். எங்க கனநாளா ஆளை காணேல்ல எண்டு பாத்தனான். இந்த வந்துட்டாவே டிஸ்டர்பன்ஸ்”

காதிலிருந்த போனை கையிலெடுத்து அவனை முறைப்பதாக நினைத்து அதனை முறைக்க, ‘பரலோகத்தில் இருக்கும் எம் பரமபிதாவே! என் பொறுமையை சோதியாதீரும்’ மூச்சை வேகமாக இழுத்துவிட்டாள்.

“வரவர ஓவரா தான் போறீங்க கனடா! எப்பிடி இருந்தாலும் இங்கதான் வரோணும். மறந்திடாதீங்க.”

கடுப்பாகிப் போயிற்று அவளுக்கு. அதிலும் அவசர அவசரமாக கட்டிலில் இருந்த உடுப்புகளை ஒரு கரையாக ஒதுக்கி, பரபரவென முகம் கழுவி துடைத்து நொடியில் லேசான ஒப்பனைகளுடன் கண்முன்னே காட்சிதந்த வாணிக்காவில் அது இன்னுமே அதிகமாக ‘அவவுக்கு இனி நாம கண்ணுக்கு விளங்கமாட்டமே!’ சலிப்புடன் கோபமாக அறையிலிருந்து வெளியேறியவள் தேத்தண்ணியும் கையுமாக இந்ராணி எதிர்ப்பட, தட்டில் இருந்த கப்பை லாவகமாக தன் கைக்கு இடம்மாற்றி, ஒரே கெழியில் தொண்டைக்குள் ஊற்றி இருந்தாள்.

“அது மாமாவின்ரடி” என்றவரை காதிலே ஏற்றாமல்.

சுட்டெரித்துக் கொண்டு தொண்டையால் நழுவிச்சென்ற தேத்தண்ணியின் சூட்டில் உள்ளக்கொதிப்பு சற்றே மட்டுப்பட, டொங் என வெறும் கப்பை தட்டில் வைத்தவள் விடுவிடுவென்று வெளியேற, “என்னடியப்பா சரியான கோபத்தில் இருக்கிறாய்” என இந்ராணி, அவளின் சிறுபிள்ளை செயலில் சிரிப்பேற.

அதைக் கேட்டுக்கொண்டே உள்ளே வந்த அரவிந்தனும் “ஓய், சின்ன வாண்டு. எப்ப வந்தனீ” கேட்டுக்கொண்டே உள்ளுக்கு வந்தவனுக்கு அவள் சொல்லியது தெளிவாய் காதில் விழ சிரிப்பு வந்திற்று.

‘மாப்பிள்ளையாம் மாப்பிள்ளை. ஊருலகம் கண்டறியாத மாப்பிள்ளையை கேட்டு வச்சுப்போட்டு நல்லா கேக்குறா பாரு கேள்வி’

“நான் நல்ல சந்தோசத்தில் தான் இருக்கிறன், பாருங்கோ” முப்பத்திரெண்டு பல்லையும் ஈயென இளித்து காண்பித்தவள் இருந்த விசருக்கு அரவிந்தனையும் முறைத்துவிட்டே வேகமாக வெளியேறிற்றாள்.

அதுவே ஆள் நல்ல கோபத்தில் தான் இருக்கிறாள் என்றிற்று. “என்னவாம்?” அவள் போகிற திக்கில் பார்த்துக்கொண்டே சிரிப்புடன் கேட்ட மகனுக்கு உதட்டை பிதுக்கியவர் ‘வாணி வரட்டும் கேப்பம்’ என நினைத்துக்கொண்டு “உனக்கும் தேத்தண்ணி ஊத்தட்டா தம்பி” கேள்விக்கு அவனின் ‘ஓம்’ என்ற தலையசைப்பை குறித்துக்கொண்டு தேத்தண்ணிக்கு குசினுக்குள் நுழைந்தார்.

அவர்களின் தேத்தண்ணி நேரம் முடிந்து இரவுச்சாப்பாட்டு நேரமும் கடக்க, “அவன்ர ஃபோனுக்கு என்ன நடந்ததோ தெரியேல்ல அம்மா. அவனைப்போலவே கூத்துக்காட்டுது. நீங்க அங்க போறதுக்கு இடையில் பிடிக்கப் பாக்கிறன்” ஃபோனும் கையுமாக சொன்ன அரவிந்தனில் கண்டனத்துடன் பார்வை வீசி,

“அவனுக்கும் என்ன அலுவலோ தெரியாதே தம்பி!” அருகில் கணவரும் இருக்கிறபடியால் அக்கா மகனை விட்டுக்கொடுக்காமல் அவசரமாகச் சொல்லிய இந்ராணி “ஒண்டும் அவசரமில்ல, நீ பொறுமையா எடு. போய்ச்சேரக்க எப்பிடியும் விடிஞ்சிரும் எல்லா, அவன் வராட்டி என்ன! எங்களுக்கு வடிவா தெரியுமே அட்ரஸ்.” என்றும் சேர்த்துச்சொல்ல, லோகானந்தமும் அதை ஆமோதித்தார்.

அன்றிரவே இந்ராணி குடும்பம் வேன் ஒன்று புக் பண்ணி கொழும்புக்கு புறப்பட, மாப்பிள்ளை வீட்டாக்களும் அவர்களின் வேனிலே வந்துவிடுவதாகச் சொல்ல, மூண்டு நாள் பயணமாக, தேவையான அனைத்து சாமான்களையும் ஒன்றுவிடாமல் அங்கேயே வாங்கி முடித்துவிட்டு திருப்தியுடன் திரும்பி வந்தனர்.

வந்த களை தீரும் முன்பே கையோடு கோவில் ஐயாவிடம் பொன்னுருக்கலுக்கு நாள் குறித்த அடுத்த இரண்டாவது நாள் சாய்ரூபன் தாய்நாட்டில் வந்திறங்கினான்.

அடுத்து என்ன? மளமளவென கலியாணத்துக்கு தேதி குறிக்கப்பட்டு இதோ விடிந்தால் கலியாணம் என்கிற நிலையில் பெரும் பரபரப்புடன் இருந்தது கலியாணவீடு.

வாசலை அடைத்து பெரிதாக பந்தல்போட்டு, பந்தல் முழுக்க சீரியல்பல்புகள் இரவைப் பகல்பொழுதாக்கிக் கொண்டிருந்தது.

வெளியூர் உறவுச்சனங்களில் முக்காவாசிப்பேர் அண்டைக்கே வந்திறங்கி இருக்க, வீடே ஒரே கசகச என்று இருந்தது. அதோடு அயலட்டை உறவுகளும் வாணியின் மிகநெருங்கிய தோழிகள் மற்றும் அவர்கள்பக்க உறவுகள் கலியாண பொம்பிளையை பார்க்கவென பின்னேரம் இருந்தே ஒவ்வொருவராக வருவதும் போவதுமாக இருக்க, இப்போது தான் மெள்ள மெள்ள கலைந்திருந்தது சனம்.

அதிலே வெகுவாக தளர்ந்திருந்த வாணியை கண்டுவிட்டு “அதுதான் நாளைக்கு பாக்கப்போயினம் எல்லா. இண்டைக்கே என்னத்துக்கு உடுப்புடுத்தி நடநடந்து வருகிதுகளோ தெரியேல்ல!” சத்தமாக சொல்லிட்டார் நாகம்மாள். இந்ராணியின் பெரியம்மா உறவில் இருந்தவர்.

அப்போது தான் பொம்பிளை பார்க்கவென வீட்டுக்குள் வந்தவர்களுக்கு முகத்தில் அடிப்பதைப்போல சொல்லிய நாகம்மாளின் பேச்சும் அதற்கு அமைதிகாத்த இந்ராணியின் செயலும் மிகுந்த அவமானமாய் போயிற்று. வந்த வேகத்திலே சொல்லிக்கொண்டு விடைபெற, அப்போதுதான் சற்றேனும் ஓய்வுகிடைத்தது நீட்டி நிமிர்ந்து அமர.

பரபரவென வீட்டை ஒழுங்குபடுத்தி, தங்கிவிட்ட உறவுகளுக்கு சாப்பாட்டுக்கு ஆர்டர் குடுத்திருக்க அரவிந்தன் வரவழைத்ததும் எல்லாருமாக பாய் விரித்து அங்கேயே ஒன்றாகச் சாப்பிட்டுவிட்டு சிலர் அவிடத்திலே கெழிந்திருந்தனர்.

மற்றவர்கள் அறைக்குள் அடைய, கீழிருந்த அறையில் ஒன்றில், வயது போகப்போக ஒவ்வொரு வருத்தமாக வந்திருக்க காலை கையை நீட்டி நிமிர்த்தி வசதியாக கட்டிலில் சரிந்திருந்த நாகம்மாள் “இந்ரா, ஒருக்கா வந்திட்டு போ.” என,

“என்ன பெரியம்மா!” உள்ளே வந்தவருக்கு கண்ணை காட்டவும் தலையில் தட்டிக்கொண்டார் இந்ரா.

வந்தவர்களுக்கு காட்டவென கட்டிலில் பரத்தி இருந்த உடுப்புகளை மளமளவென்று மடித்து ஒரு கரையாக்கியவரிடம் “நகைநட்டு, பொம்பிளை உடுத்துற உடுப்பு, சாமான்செட்டெல்லாம் எடுத்து வச்சிட்டினமா எண்டு இன்னம் ஒருதரக்க பாரும் இந்ரா. பிறகு அங்க போனங்காட்டியும் அதில்ல இதில்ல எண்டு அலம்பல் படுறேல்ல” வயதில் மூத்தவராக நாகம்மாள் அறிவுறுத்த,

‘சரியான கறார் மனுசி!’ பெரியம்மாவை எண்ணி சன்ன சிரிப்புடனே “எல்லாம் எடுத்து வச்சிட்டினம் பெரியம்மா. நான் சொல்லச்சொல்ல மதி தான் எடுத்து வச்சவள். நானும் ஒருதரக்க சரிபாத்தனான். எல்லாம் சரியா இருக்கு” பதில் சொல்லிக்கொண்டே கலியாண பட்டை மடிப்பு கலையாமல் அதை வேறையாக ஒருபக்கம் எடுத்து வைத்தார்.

“அப்பிடியே அந்த வெத்திலை பெட்டியை எடுத்துத் தா, இந்ரா.”

“இன்னம் இந்த பழக்கத்தை விடேல்ல என்ன!” சிறு முறைப்புடனே எடுத்துத்தரவும், குழந்தையாய் சின்ன சிரிப்பு அவரிடம்.

பக்குவமாக மடித்து வாய்க்குள் போட்டுக்கொண்டே “மூத்தவன்ட பிள்ள அழுதுக்கு இருந்தவளல்லா. போய்ட்டீனமா”

“ஓமோம். புது ஆக்கள கண்டா அவவுக்கு கரச்சல்போல. காலையில் இருந்து சரியான கத்து. மதியையும் இருக்கவிடேல்ல. இனி இஞ்சையும் ஒரு வேலையும் இல்ல, எல்லாத்துக்கும் ஆக்கள் இருக்கினம்தானே எண்டு மூத்தவனையும் கூட அனுப்பி வச்சனான்”

சரவணனின் இளைய மாமியார் மகளின் வீடு அவர்கள் வீட்டிலிருந்து கால்மணிநேர நடைதூரத்தில் இருக்க, மதி தான் அங்க போவம் எண்டு கிளப்பி இருந்தாள்.

இந்ராணிக்கு அது ஒரு குறையாகவே இருந்தபோதும் எதையும் வெளிப்படையாக சொல்லிக்கொள்ளவில்லை அவர். வந்த நேரத்தில் இருந்தே தொட்டதுக்கும் சிணுங்கிக் கொண்டிருந்த பேத்தியை கண்டவராயிற்றே. அதனால் மகனையும் கூடவே அனுப்பி வைத்தார்.

அவன் தயங்கியதற்கும் “இங்க அரவிந்தன் இருக்கிறான். அப்பா இருக்கிறார். வந்த ஆக்களும் இருக்கினம் எல்லா. நீ அவளுக்கு துணையா கூடப்போ. ஆத்திர அவசரத்துக்கு அவள் போகேக்க பிள்ளையை வச்சிக்கொண்டு அவள் தனியா என்ன செய்யிற?”

எப்போதாவது வரும் பேத்தியை அனுப்ப மனமே இல்லாமல் அனுப்பி வைத்தவரின் மனக்குறை அவர் முகத்திலே தெரிய, “கலியாண பொம்பிளை எங்க? நேரத்துக்கு தூங்க போயிட்டாளா” பேச்சை திசை திருப்பிட்டார் நாகம்மாள்.

“ஓம் பெரியம்மா. கனக்க நேரம் கதையடிச்சுக்கொண்டு இருக்காம தூங்க சொல்லிப்போட்டு தான் வந்தனான்” ஒருவழியாக நாளைக்கு உடுத்தும் உடுப்புகளை வேறாகவும் மற்றது மடித்ததை அலுமாரியிலும் அடுக்கி முடித்து இந்ராணி நிமிர,

“கூட ஆரு இருக்கினம் இந்ரா!” கேட்டவருக்கு “புஷ்பாயின்ர மகள் பெரியம்மா. எங்கட பக்கத்து வீட்டு பெட்டை. நல்ல மாதிரி. மூத்தவன்ர கலியாணத்து துண்டுக்கையும் வந்து நின்டவள் எல்லா. மதியக்கா, வாணியக்கா எண்டு சுத்தி சுத்தி வருகிறவள். வாணிக்கும் அவளெண்டா கனகாட்டு இல்லாம இருக்கும் எண்டவள்” அவருக்கு நியாபகம் இருக்குமோ தெரியாது என விலாவரியாக.

“ஆரு, நம்முட நாதன்ர மகளா?” என,
மெல்லிய சிரிப்பு வந்திற்று இந்ராணிக்கு.

“நல்ல ஞாபகசக்தி தான் என்ன பெரியம்மா” இந்ராணிக்கு உண்மையில் இன்றளவும் அவரளவுக்கு ஆக்களை நினைவு வைத்திருப்பதில் தடுமாற்றம் தான். கலியாண பத்திரிகை குடுக்க பெயர் எழுதுகையில் கூட பகிடி செய்திருந்தானே மகன்.

அதில் பெருமிதத்தோடு “அப்ப அப்பவே சொல்லிருக்கலாம் எல்லா. நான் வேலை மெனக்கெட்டு விளக்கியிருக்க தேவையில்லையே” சிரிப்புடனே குறைபட்டுக்கொள்ள, தானும் சிரித்துக்கொண்டவருக்கு கண்ணைக் கட்டியது.

“நான் கெழியிறனான். நீயும் வேலையெல்லாம் முடிச்சிக்கு நேரத்தோட படுத்து எழும்பு.” கட்டையை சாய்த்தார்.

புயலடித்து ஓய்ந்ததைப் போலிருக்க, “நீங்க வடிவா படுத்து எழும்புங்கோ பெரியம்மா” எரிந்து கொண்டிருந்த விளக்கை அணைத்து, கதவை சாத்தி விட்டு வெளியேவந்த இந்ராணி, காலையில் இருந்து நிற்க நேரமில்லாமல் சுழண்டதில் உடம்பு ஓய்வுக்கு கெஞ்ச, வாயில் கையை வைத்து நாசுக்காக கொட்டாவியை வெளியேற்றினார்.

நேரத்தை ஒருமுறை பார்த்துக்கொண்டு நிலத்தில் பெரிய பாய் விரித்து ஆங்காங்கே ஆழ்ந்த நித்திரையில் இருந்த உறவுச்சனங்களுக்கு சத்தம்காட்டாமல் வெளிக்கி நடந்தவர் மகனை தேடி கண்ணில் வலம்வந்தார்.

வெளியே பந்தலின் கீழ் வரிசையாக கதிரைகள் போட்டிருக்க, அதில் ஒருபக்கம் லோகானந்தம் அவர் செட்டோடு அளவளாவிக் கொண்டிருக்க, மறுகோடியில் இளவட்டங்கள். ஸ்பீக்கரில் புதுப்பாடல்கள் அதிர்ந்த வண்ணம் இருந்தது.

கூட்டத்தில் அரவிந்தனை கண்டுவிட்டு “தம்பி, அரவிந்தா!” அங்கிருந்தே அழைக்க, பாட்டு சத்தத்தில் காதில் விழவில்லை.

“டேய் மச்சான், மாமி கூப்பிடுறவா போல இருக்கு” என்று சுதன் தான் அவரை கண்டுவிட்டு.

“அம்மாவா! இந்நேரத்துக்கு தூங்காம என்ன செய்றாவாம்? கண்ணேரம் சொல்லிப்போட்டு எல்லா வந்தனான்.” சத்தமும் இல்லாமல் வாய்க்குள் என்றும்மில்லாமல் முனகிக்கொண்டே எழுந்து “என்னம்மா, இன்னும் தூங்க இல்லையா?” அதையே அவரிடம் கேட்டுக்கொண்டு அருகில் வர,

“நான் தூங்குறது இருக்கட்டும், நீ இன்னும் தூங்காம என்ன செய்றாய் தம்பி? காலம எழும்பி வெளிக்கிடனும் எல்லா. இப்ப படுத்தாத்தானே சரியா இருக்கும்.” மெல்லிய குரலில் என்றாலும் சொன்னவர் குரலில் காரமிருந்தது.

சின்ன சிரிப்பில் எளிதில் அவரை சமாளித்து “தூங்கத்தான் தூங்கத்தான். தூங்காம என்ன செய்ய! ஒவ்வொருத்தனும் வேலை, வெளிநாடு எண்டு இருந்தவன்கள் நான் கூப்பிட்டன் எண்டதுக்காக இவ்வளவு தூரம் வந்திருக்கிறான்கள். வந்தவனுகளோட கதைச்சிக்கிருக்கிறேல்லயா (கதைச்சிக்கு இருக்கிற இல்லையா) வாறன் நீங்க போங்கோ.” இடையில் கதைக்க வந்தவரை பேசவிடாமல் முடித்தவன், இன்னும் அசையாமல் இருந்தவரிடம் “இப்ப என்னம்மா” என்று சத்தமில்லா சிரிப்புடன் அவரைப்போலே நின்றுகொண்டு.

“படவா!” அவன் பாவனையில் எழுந்த சிரிப்பில் தோளில் ஒண்டை போட்டவர்

“குசினிக்க கீழ இருக்கிற வாளி ஒண்டுக்குள்ள பலூடா கலந்தது இருக்கு. தேவை எண்டா கப்புகளும் அவடத்தயே கழுவி கவுத்து வெச்சிருக்கினம். ஊத்தி குடியுங்கோ. அப்பாக்கு, இன்னேரம் முழிச்சிக்கு இருக்கிறவருக்கு தேத்தண்ணி தேவைப்படும். என்ன எண்டு பாத்து செஞ்சி குடும்” என்றார்.

பின் ஞாபகம் வந்தவராக பேசவாயெடுத்தவரை முந்திக்கொண்டு “சொன்னது நினைப்பு இருக்கெல்லோ. காலையில் மாப்பிள்ளை வீட்டாக்கள் நேரத்துக்கே வருவினமாம் தம்பி. நீயும் அண்ணனுமாத்தான் வாற ஆக்களை வரவேற்கவேணும். மறந்திடப்போடா… காலையில் கெதியில் வெளிக்கிட்டு கொண்டுபோய் மண்டபத்தில நிக்கவேணும். அண்ணன்ட்டையும் எடுத்துச்சொல்லு” அவரைப்போலவே குரலில் ஏற்ற இறக்கத்துடன்.

வெளிக்காட்டாவிடினும் மனதில் அந்தரிப்பை சுமந்திருந்தவரின் சுமையே இறங்கிற்று மகனின் செயலிலும் பாவனைகளிலும்.

அவனே தொடர்ந்து, “இந்த வீட்டில ஆம்பிள்ளையல் எண்டு என்னத்துக்கு நாங்க இருக்கிறம். ஆ? ஒரு குறையும் இல்லாம எல்லாம் சரியா நடக்கும் சரியோ. போங்கோ. ஒண்டுக்கும் யோசிக்காம படுத்து எழும்புங்கோ!” அவரின் தோள்கள் இரண்டிலும் உள்ளங்கை வைத்து அழுத்தம் குடுத்தவன் கண்ணிலும் அதைக் காண்பிக்க, முற்றாக மனது நிறைந்திற்று இந்ராணிக்கு.

அதை காட்டிக்கொள்ளாமல் “நீ, நீ நினைச்சபடிக்கு தான் எல்லாம் நடக்கோணும் எண்டு நினைக்கப்போடா தம்பி. அம்மா சொல்லுறன் எண்டா கொஞ்சம் கேக்கவேணும். நாளைக்கு ஒரு குறையும் ஆரும் சொல்லிடப்போடா. பாத்துக்கொள்ளும்” நடந்தபடிக்கே கறாராகச் சொல்லியவரை “வரவர புஷ்பா அத்தைபோலவே கதைக்கப் பழகிறயல் அம்மா!” வாயெல்லாம் சிரிப்புடன் நித்தியை போலவே சொல்லிக்காட்டியவனை “படவா ராஸ்கோல்! மேலுக்குத்தான் இருக்கிறாள். கேட்டவளோ உன்ர வாயை கிழிச்சி தோரணம் கட்டிட்டு தான் மறுவேலை பாப்பாள். நாளைக்கு கலியாணமும் அதுவுமா வாயை புண்ணாக்காத தம்பி!” என்றவருக்கு நித்தியை நினைத்ததில் எழுந்த சிரிப்பு மொத்தமாக வியாபித்து முகமெல்லாம் ஜொலிக்க, அங்கு அவளோ சிடுசிடுவென்று சினம் மொத்தத்தையும் குத்தகைக்கு எடுத்து முகத்தில் கட்டிக்கொண்டு, தலையை பிடித்து அமர்ந்திருந்தாள்.

‘தலை வலிக்குதுடா! தலை வலிக்குதே!’ வடிவேலுவின் குரல் தான் மண்டைக்குள் குறுக்கும் மறுக்குமாய் ஓடியது.

சன்னக்குரலில் வெட்கம் நிறைந்துவிட்ட முகத்துடன் நடந்தே தரையை தேய்த்துக் கொண்டிருந்த வாணி, நிமிசத்துக்கு ஒருதரம் அவளை கிண்கிணியாய் சிரிக்க வைத்த மறுமுனையில் இருந்த கனடாக்காரன் என இருவருமே அவளை கடுப்பேற்றிக் கொண்டிருந்தனர்.

போதாக்குறைக்கு பொழுதைபோக்கவென கையிலெடுத்த முத்துலட்சுமி ராகவன் அம்மாவின் ‘கை தொட்ட கள்வனே’ ரமணனும் மாளவிகாவும் ஆத்தங்கரை, காபி, ஊடல் என்று தன்பங்குக்கு இம்சிக்க, ‘அத்தே!’ பல்லைக் கடித்தாள் நித்தி.

முதலாம் தவணை பரீட்சை அன்றோடு முடிந்து ஒரு வாரம் லீவும் தந்திருக்க, படித்த களைப்புக்கு அவள் பாட்டுக்கு வீட்டில் நிம்மதியாக படுத்துத் தூங்கியிருப்பாள்.

‘வாணி, நித்திக்குட்டிய இரவுக்கு கூட படுக்க வரட்டாம் என்டவள் புஷ்பா’ என்று இந்ராணியே நேரில் வந்து அழைத்திருந்தார்.

அவள் கேட்டிருக்க சர்வ நிச்சயமாக மறுப்புத்தான். இந்ராணி வந்து கூப்பிடவும் வேறு வழியில்லாமல் அனுப்பி வைத்திருக்க, அவளுமே ‘இண்டைக்கு ஒரு நாள் தான். நாளைக்கு வாணிக்கா கலியாணம் முடிச்சிக்கு போயிடுவா’ என்ற நிஜம் தாக்க, அம்மா சம்மதம் தெரிவித்ததுமே ஓடி வந்திருக்க, இதுக்கு வந்திருக்கவே தேவையில்லை என இப்போது நொந்து கொண்டாள்.

‘நீ ஓடி வந்த வேகத்துக்கு…’ அதை நினைத்து நினைத்து ஆத்திரப்பட்டுப் போனாள்.

‘தேவைதான் உனக்கு! கனடாக்காரனையும் அவேன்ர மனுசியையும் தெரிஞ்சிருந்தும் வந்தனீ எல்லா’ தனக்குத்தானே குட்டிக்கொள்ள, என்ன பிரயோசனம்? மேலும் அரைமணித்தியாலம் போன பிறகுதான் ஒருவழியாக, கோலை துண்டிக்கும் கட்டத்துக்கே வந்திருந்தார்கள் நாளை கலியாணம் முடிக்கப்போகிற சோடி.

அப்போதும் “நீங்களே வையுங்கோ ரூபன், நீங்கதானே எடுத்தனீங்க” நாளை கலியாணம், நாளை இதேநேரம் அவனோடு என்கிற நினைவில் எழுந்த வெட்கத்தில் குரலை தளைத்துச் சொல்லிக்கொண்டிருந்தாள் வாணி.

மறுபக்கம் அவன் என்ன சொன்னானோ? அந்தியில் சிவக்கும் வானமாய் அவள் முகம் அப்படியே சிவந்து போயிற்று. காதோரம் செம்மையேற, துடிக்கும் உதடுகளை பற்களால் கடித்துக்கொண்டு கால் பெருவிரலால் நிலத்தில் கோலம்போட்டவள் “போங்க ரூபன்” அழகாய்ச் சிணுங்கினாள்.

அந்தச் செல்லச் சிணுங்கலே மீண்டும் முதலிலிருந்து ஆரம்பிக்க போகிறதென சொல்லாமல் சொல்லிற்று.

அதற்குமேல் பொறுமை இழந்து “ஆராவது ஒருத்தர் வச்சு துலையுங்கோவன். எனக்கு நித்திரை வந்திட்டு” சத்தமாக அறிவித்த நியந்தனாவின் குரலுக்கு மேலாக “இதுக்கு தான் இவள வரச்சொன்னனி எல்லா” மக்களிடம் கோபமே படாத இந்ராணி வந்த விசருக்கு வார்த்தை தடித்து வந்துவிழ, எதிரே முழுக்கோபத்துடன் நின்றிருந்தார்.


நான்காவது எபி போட்டாச்சு. படிச்சிட்டு உங்க கருத்துகளை பகிர்ந்துகோங்க. போன எபிக்கு கருத்து சொன்ன எல்லாருக்கும் நன்றி

 
Last edited:

NNK-65

Moderator
அத்தியாயம்05):

இசைவாணியின் கலியாணநாள்...

அந்தக் காலைவேளையும் அழகாகவே விடிந்திருக்க, விடியக்காலமையே மண்டபத்துக்கு வந்து விட்டனர் இருபக்க முக்கிய சொந்தங்களும்.

யாழின் நல்ல பெரிய திருமண மண்டபம் என்றபடியால் வந்திருந்த உற்றார் உறவினர்கள், சுற்றத்தார், அயலட்டை மனிதர்கள், நண்பர்கள் என நல்ல சனம்! ஆயிரம் பேருக்காவது சொல்லியிருப்பினம் போல. நேரம் போகப்போக ஒவ்வொரு ஆக்களாக வந்திறங்கிக்கொண்டே இருந்தனர்.

மண்டபம் முழுக்க வெள்ளையில் சிகப்புநிற துணியால் போவ் வைத்து அலங்கரித்த கதிரைகள் வரிசையாக போடப்பட்டிருக்க, வந்தவர்களை சிறுகுறை இல்லாமல் நல்ல முறையில் உபசரித்து மண்டபத்துக்குள்ளே அனுப்பி வைத்தே களைத்துப் போயினர் வீட்டு ஆம்பிளைகள்.

கல்யாண சாப்பாட்டுக்கும் அங்கேயே மேல்தளத்தில் ஒழுங்கு செய்திருக்க, பந்திக்கும் கூட்டம் முண்டியடித்துக் கொண்டிருந்தது.

ஆருக்கும் ஓய்வாகவோ கொஞ்சம் இருந்து எழும்புவம் என்று நினைக்கக் கூட நேரமிருக்கவில்லை. தலைக்கு மேல் வேலை குவிந்திருக்க, பெரும் பரபரப்பாகவே இருந்தது மண்டபம்.

“நித்தி, இஞ்ச வா தங்கம்!” சோளியை இரு கைகளிலும் அள்ளிக்கொண்டு வேகநடையில் மணப்பெண் அறை நோக்கிச்சென்றவளை இந்ராணியின் குரல் அவரிடம் இழுத்துவந்தது.

கேள்வியாக முகம் தூக்கி பார்த்தவளுக்கு அவரைக் கண்டதில் எழுந்த அசட்டுச்சிரிப்பு முகம் முழுக்க வியாபிக்க, அதை கண்டு கொண்டவரும் பொய்க்கு அவளை முறைத்தாலும் கையில் மூடி போட்டு மூடியிருந்த பாத்திரத்தை நீட்டினார்.

“கீழ அங்கால இருக்கிற அறையில் ஒண்டுல மதி பிள்ளையை நித்திரையாக்கிறாள். இந்த சாப்பாட்டை கொண்டுபோய் குடுத்திட்டு வா தங்கம்!” என.

வாங்கிக்கொண்டவள் இதோ அறைக்குள் வர, வீறிட்ட குழந்தையை ஓறாட்டியே களைத்திருந்தாள் மதி.

சின்னதோ ‘உன்ர அவசரத்துக்கு தூங்கேலுமா(தூங்க முடியுமா)?’ காலில் சுகமாய் படுத்துக்கிடந்து கண்ணை சிமிட்டி கிளுக்கிச் சிரித்துக்கொண்டிருந்தது.

ஏசவா முடியும்? கலியாணத்திற்கென்று பார்த்துப் பார்த்து உடுத்திய கனமான புடவை வேறு அவளை பதற வைக்க, துணைக்கு ஆரும் இல்லாமல் தவித்திருந்தவளுக்கு ஆபத்பாந்தவளாகத் தெரிந்தாள் அவளுக்கென்ற சிரிப்புடன் உள்ளுக்கு வந்த நித்தி!

‘படுக்கிறாவோ?’ சத்தமில்லாமல் இதழசைத்து கேட்க, ‘ம்ஹூம்!’ என்று சலிப்பாக மதி.

“அட, இன்னம் தூங்காம என்ன செய்யிறாவாம் எங்கட சின்ன மேடம்!” அவளருகில் மண்டியிட்டு அமர்ந்து விரலால், கண்களால், மூக்கால் பாவனை காட்ட, பொக்கை வாய் திறந்து மலர்ந்தது குழந்தை.

“நீங்க சாப்பிடுங்கோ மதியக்கா. நான் எங்கட செல்லத்தை வச்சிருக்கிறன்” லாவகமாக கரத்தில் அள்ளிக்கொள்ள, “கத்தப்போறாள்” என்றதையெல்லாம் காதில் வாங்கவில்லை அவள்.

“கத்துவாவாமோ! என்னட்ட கத்தினா தெரியும் ஓ…” பேச்சு பேச்சாக அவளோடு இருந்தாலும் பார்வை சின்னவளிலே.

“அழுறநீங்க? ம்ம்! என்ர சின்னக்குஞ்சு அத்தைட்ட வந்தபிறகு அழுறதா… அம்மா பொய் சொல்லுறா என்ன?” கொஞ்சிக் கொஞ்சி அவள் கேட்ட தோரணையில் இன்னும் இன்னும் சிரிப்பே!

மதிக்குமே ஆச்சரியமாகிற்று!

“இவள்ர கூத்தை கண்டனீயோ… நேத்து மாமிட்ட கூட போக ஏலாது எண்டவள் உன்னட்ட சத்தமில்லாம இருக்கிறத பாரன்”

நீண்ட நேரம் கால், கை நீட்டி அமர்ந்திருந்ததில் மரத்திருந்த பாதங்களை நீவிவிட்டு மெதுவாக எழுந்து கை கழுவிவர, நித்தியும் நிலாவும் இந்த உலகத்திலே இல்லை. அவர்களின் தனி உலகில் சஞ்சரிக்க, அவர்களில் ஒரு கண் வைத்தே உணவை முடித்தாள்.

மீண்டும் அவள் கை கழுவி, வாயை துடைத்துக்கொண்டு வந்தபோது உறக்கத்துக்கு சொக்கிக் கொண்டிருந்தது குழந்தை.

“எப்பிடி நித்தி?”

“ரகசியத்தை வெளியில் சொல்லுறேல்ல!”

மெல்லிய குரலில் கண்ணை சிமிட்டி சொன்னவளை வாஞ்சையாக பார்க்க, அதற்குள் உறங்கியே விட்டவளை அசைக்காமல் படுக்கையில் கிடத்தி நிமிர, “எவ்வளவு நேரம் பாடுபட்டனான்” சத்தமில்லா பெருமூச்சை வெளியேற்றி நித்தியை பார்க்க,

அவளோ “நான் கலியாண பொம்பிளையை பாத்திட்டு வாறன்!” சொல்லிக்கொண்டு மீண்டும் சோளியை கையில் பிடித்துக்கொண்டு துள்ளல் நடையில் ஓடியவளின் வேகம் அப்பிடியே நின்றுபோயிற்று எதிரில் வந்தவனைக்கண்டு!

அங்கே, மணப்பெண் அறையில் உச்சாதிபாதம் வரை அன்றைய நாளுக்கேயான பதட்டமும் இனிமையான நடுக்கமும் சூழ, இனிய மயக்கத்தில் முகத்தில் வெட்கமும் கூச்சமும் போட்டிபோட, அலங்காரம் முடிந்து அமர்ந்திருந்தாள் இசைவாணி.

ஆர் ஆரோ வருவதும் போவதுமாக இருக்க, அவள் கவனமெல்லாம் ‘நித்தி வரேல்லயா?’ என்றதிலே.

“நல்ல வடிவா இருக்கிறாயடி வாணி”

என ஒன்றுவிட்ட அக்காவின் குரலுக்கு அழகாய் வெட்கப்பட்டவளின் கன்னம் கிள்ளிய சசி,

“இரு சித்தியை கூட்டிக்கொண்டு வாறன்”

“சித்தி, இங்க கொஞ்சம் வாங்கோவன்” என்றழைத்துக்கொண்டு வந்து நிற்க; அவளின் இடுப்பில் ஒய்யாரமாக அமர்ந்திருந்து புதினம் பார்த்த ஓவியாவை “அம்மம்மாட்ட வாங்கோ குஞ்சு” கைகள் இரண்டையும் அவளிடம் நீட்டிக்கொண்டே, சசியை கேள்வியாக பார்த்தார் இந்ராணி.

“நீங்க வாங்கோவன் சொல்லுறன்” அவள், வாயை திறக்காமல் வந்தால் ஆயிற்று என்று நிற்க, “என்னடியப்பா… அப்பிடி என்ன தலைபோகிற விசயம்” என்றவருக்கும் குறுகுறுப்பு உண்டாக, வாயை திறந்தாளில்லை அவள்.

“சரிதா, நீ போய் இரடி வாறன்” கதைத்துக் கொண்டிருந்த பெண்மணியை அனுப்பி விட்டு அவள் பிறகால் செல்ல, மணமகள் அலங்காரத்தில் தலை நிறைய பூச்சூடி பொன்னும் தங்கமும், கலியாணத்துக்கென்று பார்த்துப் பார்த்து தேர்ந்தெடுத்த கூரைப்புடவையில் கலியாணப் பொம்பிளைக்கேயுரிய சர்வ லட்சணத்துடனும் அழகாய் அமர்ந்திருந்த மகளைக் கண்டதில் நேற்றைய கோபம்கூட நெருப்பில் பட்ட பனித்துளியாய் கரைந்து போயிற்று.

கண்கள் பனிக்க, வாஞ்சையுடன் மகளைப் பார்த்தார் இந்ராணி. ‘என்ர மகள்’ மனம் பூரித்துப்போயிற்று.

மகளின் கலியாணத்தில் ஒரு குறை இருக்கக்கூடாது என்பதில் மிகுந்த கவனத்துடன் இருந்தார் இந்ராணி. மகனோடு கதைத்துவிட்டு தூங்கும் மகளை பார்க்கப் போனவருக்கு உண்மையில் நல்ல விசர் வந்திற்று. அவர் ஒரு சிறுகுறை எதிலும் இருந்துவிடக்கூடாது என நினைத்திருக்க, கலியாண பொம்பிளை நேரத்துக்கு தூங்காமல் இருந்தால்? அதுவும் ஒன்றுக்கு இரண்டு தடவை படித்து படித்து சொல்லிவிட்டு எல்லா வந்தவர்.

நித்தி மட்டும் இல்லையோ மகளுக்கு இன்னும் இரண்டு சேர்த்து குடுத்திருப்பார்.

அவளொருத்தி இருக்கிறவரை முடியுமா?

“அவே என்ர ஏகபோகசொத்தாக்கும். வேற ஆரும் ஒரு சொல் சொல்ல விடமாட்டன் ஓ…” அவளைப் பெற்றவரிடமே சண்டைக்குச் செல்ல, மறுமுனையில் கேட்டுக்கொண்டு இருந்தவனுக்கு ‘என்னட்டையும் வரப்போறாள்’ என்றுதான் தோணிற்று

இந்ராணியை சமாளித்து அனுப்பியதும் அங்கு அவனுமே “ஆள் விட்டா என்னட்டையும் சண்டைக்கு வருவாவாயிருக்கும்.” சிரிப்பு இழையோட சொல்ல, அவளுக்கும் நித்தியை பார்க்க சிரிப்பே!

“என்ன இளிப்பு வேண்டிருக்கு. அவே திரும்பியும் வந்திடபோறா. படுப்பம் வாங்கோ!” பெரிய மனுசியாக அதட்டல்போட,

கேட்டுக்கொண்டிருந்தவன் “நாளைய நாளை எதிர்பார்த்திருக்கன்!” குரலாலே அவளுக்கு குறுகுறுப்பு ஏற்றிவிட்டு இலவச இணைப்பாக தன் பரிசையும் வழங்கிவிட்டே கோலை கட் பண்ண, காதோரம் சூடாக மோதிய மூச்சுக்காற்றின் வெம்மையில் தகித்தே கண்ணயர்ந்த பெண்மை இப்போதும் அதை எண்ணிச் சிவந்துபோனாள்.

இந்ராணிக்கு மகளை இந்தக் கோலத்தில் கண்டதில் எல்லாம் வடிந்து ஆனந்தம் மட்டுமே மிச்சமாயிற்று.

கண்ணில் கசிந்த ஆனந்தக் கண்ணீருடன் “என்ர கண்ணே பட்டுடும் அம்மாச்சி” சுத்திப்போட்டவர், உறவினர் யாரோ அழைப்பதாக சின்ன வாண்டு ஒன்று வந்து கூப்பிடவும்,

“சசி, அவளுக்கு கூடவே இரு” அவர் வெளியேற, அம்மா போகவும் தான் இழுத்துப் பிடித்த மூச்சை விட்டாள் வாணி.

நேற்றையக் கோபம் அம்மாவுக்கு இருக்குமோ என்கிற பதட்டம் வடிந்து, மீண்டும் கலியாண குறுகுறுப்பு வந்து ஒட்டிக்கொண்டிற்று.

சற்று நேரத்திலேயே ஐயா அழைக்க, இதோ சுபநேர சுபமுகூர்த்தத்தில் உற்றமும் சொந்தமும் இருவீட்டு பெரியவர்களும் மனங்கனிய வாழ்த்தி அர்ச்சதை தூவ, சாய்ரூபனின் கையால் மணமாலை சூடி, அவனின் திருமதியாக புதிய வாழ்க்கைக்குள் அடி எடுத்து வைத்தாள் இசைவாணி!

இதுவரை நேரில் பார்க்காமல் போனில் மட்டுமே பேசிக்கொண்டிருந்த இருவருக்கும் ஒருவரின் நெருக்கம் மற்றவருக்கு அவஸ்தையையும் பதற்றத்தையும் பரவசத்தையும் ஒருவித இன்பத்தையும் பரப்ப, இருவரின் இதழ்களும் ஒருங்கே புன்னகைத்துக் கொண்டது.

“வடிவா இருக்கிறயல் மிசஸ் ரூபன்” அவன் மெல்லிய குரல் அவள் காதோரம் பட்டும் படாமல் ஒலித்ததில் தேகமெங்கும் சிலிர்த்து மென்நடுக்கம் ஓடி முகம் குப்பென சிவந்து விட, உதட்டை கடித்தவள் பார்த்தும் பாராமல் அவனை பார்த்திட்டிருந்தாள்.

அவளைக் கண்டுகொண்டவன் முகமெங்கிலும் முறுவல் விரிந்திற்று.

“இப்ப நிமிர்ந்து பாக்கலாம், மணிக்கணக்கா கதைக்கலாம். ஆரும் ஒன்டும் சொல்லமாட்டினம். லைசன்ஸ் வாங்கிட்டம் எல்லா” கண்ணோடு கண்பார்த்து குறும்பாக கண்களை சிமிட்டியவன் “முக்கியமான ஒண்டை மறந்திட்டமே” என்க,

‘என்ன’ என விழி தூக்கி பார்த்தவளிடம் புன்னகை துலங்க “எங்க அவா, என்ர பரம எதிரி?” கேட்கவும் அவன் கேட்ட விதத்தில் பக்கென வெடித்த சிரிப்பை அடக்கிக்கொண்டு மாலை மறைவில் அவன் கையில் கிள்ளினாள் வாணி.

“ஸ்ஸ்ஸ்!” வலித்த இடத்தை தடவிக்கொடுத்து “என்னடியப்பா இப்பிடியா கிள்ளி வைப்பாய்” உரிமையாய் அவளிடம் கோபிக்க, அதில் பிரதிபலித்த நெருக்கத்தில் இன்னுமே வெட்கச்சிதறல்கள்.

நாணத்தில் முகம் மினுங்க, கண்ணெல்லாம் நித்தி எங்க போனாள்? என கூட்டத்தில் தேடிற்று.

அவள் எங்கே போக? அங்கே தான் இருந்தாள். அவள் இருக்கிற சூட்டுக்கு எண்ணெய் இல்லாமல் கடுகை போட்டாலும் வெடிக்குமாக இருக்கும்.

சுறுசுறுவென ஏறிய விசரில் விட்டால் கண்ணாலேயே எரித்து சாம்பல் ஆக்கிடுபவள்போல் கண்ணுக்கு எதிரே தெரிந்த உருவத்தை ஓய்வில்லாமல் முறைத்துக் கொண்டிருந்தாளே!

மங்கள வாத்தியம் இசைத்தவர்களை வாசல்வரை சென்று அரவிந்தன் வழியனுப்பி வைத்துவிட்டு வர, ஸ்பீக்கரில் சினிமா பாடல்களின் ஆட்சி!

ஒரு பாட்டு முடிந்து அடுத்ததாக “கனா காண்கிறேன் கனா காண்கிறேன் கண்ணாளனே ஒரே மேடையில்
ஒரே பந்தலில் இருவருமே…
” இசைக்க, அவளுக்கு விருப்பமான பாட்டாயிற்றே!

ஞாயிறுகளில் வதனி வீட்டை போகிறன் என இந்தப்படத்தை மாறி மாறி எத்தனை தரம்(தடவை) பார்த்திருக்கிறாள் என கணக்கில்லை.

அதுவும் கிளைமேக்ஸில் அழுது அழுது “லவ்வர்ஸை பிரிக்கிற அம்மாக்கள் நல்லாவே இருக்கமாட்டினம்டியோய்” மூக்குறுஞ்சிக் கொண்டேனும் பார்க்காமல் விட்டதில்லையே அவள்.

இப்போதோ அந்த பாட்டைக்கூட கேட்க விருப்பமற்று இருந்தவளின் கவனம் எல்லாம் அவன் மீதே!

சலசலவென ஓய்வில்லாமல் கேட்டுக் கொண்டிருந்த பேச்சுக்குரல்களோ, ஓடிப்பிடித்து விளையாடிய சின்னப்பிள்ளைகள், ஒவ்வொரு தடவை ஓடும்போதும் அவளை இடித்துவிட்டு பாவமாய் பாப்பதுபோல் அடித்த லூட்டிகளோ, நகையும் நட்டுமாய் எடுப்புக்காட்டிக்கொண்டு நடமாடித்திரிந்த பெட்டைகளோ, திருட்டுத்தனமாக தள்ளி நின்று அவளையும் ஒரு மனுசியாக மதித்து சைட் அடித்த பெடியன்களோ, இத்தனைக்கும் மேலாக ஃபோட்டோவுக்கு எழுந்து நிண்டபடி இவளைக் கண்டு ‘மேடைக்கு வாவன் நித்தி’ கண்ணாலயே அழைப்பு விடுத்த வாணிக்காவோ எதுவுமே அவளின் புழுங்கிக் கொண்டிருந்த மனதை ஆற்றுப்படுத்தவில்லை.

எல்லாம் ஆரால்? அதோ தள்ளி நின்று அரவிந்தண்ணாவிடம் சிரித்து சிரித்து கதைத்துக்கொண்டிருக்கும் விசரனால்!

அவளுக்கு வருகிற ஆத்திரத்துக்கு எழுந்துவந்து சப்பென்று ஒன்று விட்டிருப்பாள். அதை தெரிந்தோ என்னவோ புஷ்பாவதியம்மாள் மகளின் கையை பிடித்தவர் விட்டவரில்லை.

அவளின் அசைவில் “அதுதான் போய் பராக்கு பாத்திட்டு வந்தனீ எல்லா. காலை கையை வச்சிக்கு ஒரெடத்தில இரு” அதட்டல் போட, அதுவேறு அவளை இன்னுமே சினமூட்டிற்று.

“அம்மா!” கோபமாய்ச் சிணுங்க, அதை கணக்கில் எடுக்கவில்லை அவர்.

‘ஆக்களுக்க வச்சி சண்டித்தனம் காட்டமாட்டன் எண்டு ஆகத்தான் துள்ளுறா’ புறுபுறுத்தவள் கவனம் ஈர்க்கும் விசையாக அவனிடமே திரும்பிற்று.

நிச்சயம் பிடித்தத்தால் இல்லை. முதல்முதலில் அவனை பார்த்தது இப்போதும் நல்ல நினைவு இருக்கிறதே அவளுக்கு. அதில் கண்ணை சுருக்கி ஓரக்கண்ணில் அவனை முறைப்பதையே வாடிக்கையாக்கிற்றாள்.

அன்றைக்கு குறையாத சூட்டோடு மனதுக்குள்ளயே அவனை கிழித்துத் தோரணம்கட்டி, பஞ்ச் பேக்கை குத்துவதுபோல் குத்தத் தொடங்கியும் இருந்தாள்.

ஒரு கட்டத்தில் கையை மடக்கி உதடு குவித்து ஊதியவளின் மனது ‘எண்டைக்கு என்ர கையில மாட்டிறியோ மவனே அண்டைக்கு இருக்கடா உனக்கு!’ கோபாவேசமாய் கருவிக்கொண்டது.

குறுகுறுவென தன்னை தொடரும் பார்வையை உணர்ந்தே இருந்தான் அவன். கண்கள் ஒரு முறை மண்டபத்தை வலம் வந்திற்று.

மண்டபம் எங்கும் நிறைந்திருந்த மிதமான காற்றுக்கு நெற்றியில் தவழ்ந்த கேசத்தை கோதிக்கொண்டே பார்வையை சுழற்றியவனை “என்ன பாக்கிறாய்?” அவன் பார்வையை தொடர்ந்த அரவிந்தின் குரலில் குறையாமல் இருந்த சூட்டில் அவன் முகத்தில் அடக்கப்பட்ட புன்னகை!

இரவு தான் கொழும்பில் இருந்து வெளிக்கிட்டிருந்தான். எட்டு மணிநேர இடைவிடாத ஓட்டம். உடல் களைத்து ஓய்வுக்கு கெஞ்சியபோதும் பேருக்கு சற்றுநேரம் இளைப்பாறிவிட்டு கெதியிலே தயாராகி வந்திருந்தான்.

வந்த களை தீரும் முன்னே கிளம்பி வந்தவனை இன்னுமே களைப்பேற்றி இருந்தது அரவிந்தின் கோபச்சூடு.

எவ்வளவு நேரம் தான் அவனும் சமாளிப்பது. அவனோ ‘விட்டால் உன்னை பிளந்து கட்டுவேன்’ என ஏறுப்பட்டுக் கொண்டிருக்க, அதன் விளைவு அவன் என்ன கதைத்தாலும் ‘என்னவும் கதை!’ என சிரித்தே வெறுப்பேற்றிக் கொண்டிருந்தான் அவன்.

——————

“மச்சி, இந்தா. முதல் இந்த பெப்ஸியை அடி!” சில்லென்றிருந்த சோடாவை சுதன் அவன் கையில் திணிக்க,

வாங்கி சரசரவென தொண்டையில் சரித்த அரவிந்தன், அம்மா தன்னிடம் தரவில்லையே தவிர தானாக எடுத்துக்கொண்ட கலியாண பொறுப்புகளில் மிகவும் அலமலந்திருந்தான்.

தொண்டைக்குள் இறங்கிய பானமா இல்லை ‘நான் உனக்கு துணையாக நிப்பன்!’ என்று கூட நின்ற நண்பனின் அருகாமையா?

நிச்சயம் இரண்டில் ஒன்று அவனை சற்றே ஆற்றுப்படுத்த, மேடையில் அன்யோன்னியமாக சிரித்துக் கதைத்துக் கொண்டிருந்த வாணியும் ரூபனும் அதை முற்றாக களைந்திருந்தனர்.

இருவரின் முகங்களில் இருந்த புன்னகையே அவர்கள் மிகுந்த நிறைவோடு திருமண வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைத்திட்டார்கள் என்று உணர்த்திற்று. அதுவே நிறைவையும் தந்திற்று.

திருமண தம்பதியர்களுக்கு அடுத்தடுத்த சடங்குகளும் ஆரம்பமாக, ஆனந்தக் கண்ணீருடன் வாணியை வெறித்திருந்த அம்மாவை சமாதானப்படுத்தி மற்ற வேலைகளில் திருப்பியவன் அவாவை அனுப்பிவிட்டு அப்பாவை அண்ணனை தேட, இருவரும் அவர்களின் வியாபார சங்க உறுப்பினர்கள் வந்தவர்களிடம் கதைத்துக் கொண்டிருந்தனர்.

ஒருமுறை மண்டபத்தை வலம் வந்து திருப்திப்பட்டு சுதனை பார்க்க, “எல்லாம் நல்லபடியா முடிஞ்சதுடா. ஒரு செட்டை சாப்பாட்டுக்கு அனுப்பி வச்சிருக்கினம். மற்ற செட்டை ஃபோட்டோக்கு அனுப்புவம்”

அடுத்த நிகழ்வுகளைக் குறித்து பேச்சு நடத்தி முடிக்கையில் நினைவு வந்தவனாக “எங்க உன்ர கொச்சான் வரேல்லயா” என்றான் அரவிந்தன்.

வேண்டுமென்றே தான் கேட்டான். சுதனும் ஒரு வகைக்கு அவர்களின் தூரத்து உறவினன்தான். அவனுக்கும் சிரிப்பு வந்திற்று.

அவன் பார்வை அரவிந்தனுக்கு பின்னால் போக “கேக்கிறனான் எங்க அங்கால பாக்கிறாய்…” என்க, குரலில் ஏகத்துக்கும் கோபம் நிரம்பி வழிந்திற்று.

அவன் வரவில்லை. அவ்வளவு சொல்லியும் வரவில்லையே என்ற எண்ணமே கோபத்தை கிளப்ப போதுமாகிற்று. வாணிக்கு திருமணம் முற்றாகிய கையோடு அழைத்து விபரம் சொல்லியிருந்தவன் “ஒருக்கா ஊருக்கு வந்திட்டு போடா” என்றும் சேர்த்தே.

“டைம் கிடைச்சா வாறன்” சொல்லியவன் எட்டியும் பார்க்கவில்லை. பிறகும் ‘அம்மா, அப்பா, வாணி எல்லாம் கொழும்புக்கு வருகினம்’ என்றதை சொல்ல அழைத்து கோலை எடுக்காதவன் பேரில் நல்ல விசரில் இருக்க, திருப்பி அவனே எடுத்து வேலையாக இருந்தனான் என்ற எந்த சமாதானத்தையும் காதுகுடுத்து கேட்கவே இல்லை.

இவ்வளவு ஏன் வாணிக்கு பரிசென அனுப்பிய பார்சலோடு அவனுக்கும் உடுப்பு அனுப்பி வைக்க, ‘உன்னட்ட கேட்டனானா. வந்திட்டான் பெரிய பருப்பு போல உடுப்பனுப்பி வைக்க’ வொய்ஸ் மேசேஜில் கிழித்திருந்தான்.

ஒரு நிமிசத்துக்குள் எல்லாம் படம் போல ஓட, சிடுசிடுவென்று இருந்தவன் முதுகில் உணர்ந்த குறுகுறுப்பில் பின்னால் திரும்பிப் பார்க்க முதல் தோளில் பதிந்த கரத்தில் அது யாரென விளங்கிற்று.

இருந்தும் காட்டிக்கொள்ளாமல் கைகளைக் கட்டிக்கொண்டு நின்றவனையும் பின்னால் முகம் முழுக்க சிரிப்புடன் நின்றவனையும் மாறி மாறி பார்த்த சுதன் “அவன் அப்பயே வந்தவன் மச்சி. நீ மேடையில் வேலையா இருந்தனீ எல்லா. அதுதான் தொந்தரவு செய்ய வேணாம் எண்டு சஜயனோட வந்தாக்களை சாப்பிட அனுப்பி வச்சுக் கொண்டிருந்தவன்” என்க, ஆவும் இவும் இல்லை.

“உன்னட்டான் கதைக்கிறனான்.”

“கேக்குது கேக்குது” அவன் அசட்டையில் சுதன் முறைக்க,

“திரா, எப்பயடா வந்தனீ?” என்றான் அங்கு வந்த சரவணன்.

“இப்பயாலும் வந்தானே” தம்பியின் இடக்கில் “அரவிந்தா!”, “மச்சி!” சரவணனும் சுதனும் ஒன்றுபோல் அதட்ட,

கணக்கெடுக்காமல் வேண்டாவெறுப்பாக திரும்பி தன் முகம் பார்த்தவனின் வயிற்றில் கையை மடக்கி ஓங்கி ஒரு குத்து விட்டிருந்தான் திரேந்திரன்.

“விசராடா உனக்கு” சட்டையின் கசங்கலை நீவிவிட்டுக் கொண்டே வலியில் முகம் சுணங்க சீற,

“நீ எல்லாம் ஜிம்பாடி எண்டு வெளியில சொல்லிடாதயடா, மானம் போயிடும்! என்ர ஒரு குத்துக்கு தாங்கேலாம கிடக்கிறனீ”

நமுட்டுச் சிரிப்போடு முகம் முழுக்க விரிந்த நகைப்போடு வேணுமெண்டே தனகியவன் சரவணனிடம் திரும்பி “கண்ணேரம் வந்தனான் சரண்ணா. எல்லாரும் வேலையா இருந்தநீங்க. அதுதான் சஜயனோடு சாப்பிட வந்தாக்களை கவனிச்சிக்கொண்டு அங்க இருந்தன்”

“சரிசரி. வாணிய போய்ப் பாக்கேல்லையோ. நேத்தெல்லாம் தேடிக்கொண்டு இருந்தவள். முதல் அவளை போய்ப்பாரு…” அவன் தோளை தட்டிவிட்டு சரவணன் நகர,

“அவர் வலு(மிகவும்) பிஸியான ஆளெல்லா. இப்பசரி வந்ததே பெரும் விளக்கம்” அவனுக்கு கேக்கட்டும் என்றே சத்தமாக சொன்னவனை சுதன் முறைக்க “சும்மா சும்மா முறைச்சியோ மண்டையை உடைப்பன்” அவனுக்கும் விழுந்தது.

இருவரையும் கையெடுத்து கும்பிட்டு “அவனாச்சு நீயாச்சு. கட்டிக்கு பிரளுங்கோ அடிச்சிக்கு சாவுங்கோ. என்ர தலையை விடும்” அவன் செல்ல, ஒருவரையொருவர் முறைத்துக் கொண்டிருந்த இருவருக்குமே ஒரு கட்டத்துக்கு மேல் சிரிப்படக்கேலாமல் போயிற்று.

சிரிப்பின் இடையே “உன்ன எப்ப வரச்சொன்னனான்” சினந்தவனை “சுவிஸுக்கு போற வேலை ஒண்டுடா. ஒரு தரக்க அம்மா, அக்காவ பாத்திட்டு வந்தபோலயும் இருக்குமெண்டு மெனக்கெட்டுக்கு இருந்தனான். அதுல ஓடித்திரிஞ்சதில உசும்பேலாம (அசையமுடியாமல்) போயிட்டு.” கதைத்து கதைத்தே ஒரு வழியாக அரவிந்தனை சமாதானப்படுத்தி எடுப்பதற்குள் பெண்டு கழண்டிற்று.

இந்ராணி, லோகானந்தம் மற்றும் அவர்கள்பக்க உறவுகள் அவனைக் கண்டுவிட்டு ஒவ்வொருவராக நலன் விசாரிக்கவர, சின்ன தலையசைப்புடன் இரண்டொரு வார்த்தையில் பேசிக்கொண்டிருந்தவனை தான் தூரத்தில் இருந்தே முறைத்துக் கொண்டிருந்தாள் நியந்தனா.



ஐந்தாவது எபி போட்டாச்சு. மறக்காம உங்க கமெண்ட்ஸ் ஷேர் பண்ணுங்க🥰

 
Last edited:

NNK-65

Moderator
அத்தியாயம் 06

அரவிந்தனுக்கும் அவனுக்கும் ஒத்த வயதுதான். ஓரிரு மாத வித்தியாசம் என்றதில் இருவருக்கும் இடையே மிகுந்த ஒட்டு.

இந்ராணியின் உடன்பிறந்த அக்கா நாதவேணியின் கடைக்குட்டி. வவுனியாவில் பிறந்தாலும் பெரும்பாலும் வளர்ந்தது படித்தது எல்லாமே யாழில் தான். சித்தி வீட்டையே இருந்ததால் அவர்களின் நெருக்கமும் அதிகம்.

ஏஎலில் வணிக பிரிவு எடுத்து அங்கையே படிப்பை தொடர்ந்தவன் நல்ல பெறுபேறுகள் பெற்ற கையோடு மேற்படிப்புக்கென கொழும்பில் தங்கிவிட, படிப்பை முடித்த கையோடு ஒரு நல்ல கொம்பனியில் வேலை பார்த்தவன் ஏதோ ஒரு உந்துதலில் தொடங்கியது தான் சொந்த தொழில்.

தற்போது ‘திரேன் எண்டர்ப்ரைஸ் பிரைவேட் லிமிடெட்’ மேலும் விஸ்தரித்துக் கொண்டிருக்கிறான்.

“உனக்கு கதைக்க சொல்லியா தரோணும். கதைச்சு கதைச்சு மயக்கிறதில பிஎச்டி முடிச்சவன் எல்லாநீ” அவனை உண்டில்லை ஆக்காமல் லேசில் சமாதானமாகிப்போன தன்னிலே கோபம்வர, கிடைக்கிற நேரத்தில் அவனிடம் இப்படித்தான் காய்ந்துகொண்டிருந்தான் அரவிந்தன்.

இப்போதும் மங்கள வாத்தியம் இசைத்தவர்களை வழியனுப்பி வைத்துவிட்டு வந்தவன் இவனைக் கண்டதில் சினக்க, கன்னம் குழிய சிரித்தே அவனை வெறுப்பேற்றியவனை,

“சிரிக்காதயடா. மூக்க உடைப்பன்” எகிறினான்.

‘முடிஞ்சா உடையன் பாப்பம்’ கண்ணால் சிரித்தான் அவன்.

“ஆக்கள் இருக்கினம் எண்டு பாக்கன் இல்லையோ…” அடிக்குரலில் பல்லைக் கடிக்க, ‘இன்னொருக்கா இவன மலையிறக்கேலாது’ என்றுணர்த்திற்று அவன் ஏழாம்அறிவு.

கவனமாக அவனை திசை திருப்பிவிட்டு, சிரிப்பினூடே வெகு நேரமாக தன்னை துளைக்கும் பார்வையில் போகிற போக்கில் பாப்பதைப்போல மீண்டும் ஒருதடவை மண்டபத்தை சுற்றி பார்வையால் அலசினான் திரேந்திரன்.

எல்லாரும் அவரவர் வேலையை பாப்பது போலத்தான் இருந்திற்று. ஆனாலும் தன்னை தொடரும் பார்வையை உணர்ந்தவனுக்கு ஆரென்று தான் புலனாகவில்லை.

‘ஆரெடா அது?’ மனதுக்குள் உண்டாகிவிட்ட குறுகுறுப்பில் மீண்டும் ஒரு தரம் விழிகளால் வலம் வர திருப்பியவனை “நானும் பாக்கிறன் ஆர தேடுறாய்” ஒரு மார்க்கமாய் மேலிருந்து கீழ் அவனை பார்த்தபடி விழியை திருப்பியவன் திருப்பிய வேகத்தில் கண்ணை அகல விரித்தான்.

“இஞ்சப்பாரடா. இந்த வாண்டு எப்ப வந்தவள்? நான் காணேல்லையே” கேள்வியும் அவனே பதிலும் அவனேயாக

“அப்ப இவளத்தான் பாத்தனீயா? ஹா ஹா… எண்டாலும் மச்சி உன்ர செலெக்சன் நல்லாத்தான் இருக்கடா.” பாராட்டுதலாய் அவன் தோளில் தட்டினான் அரவிந்தன்.

“என்ன விசர்கதை கதைக்கிறாய்? ஆரு அவள்? செலெக்சனாம் செலெக்சன். மண்ணாங்கட்டி.” பட்டென அவன் கையை தட்டிவிட்டு சுள்ளென்று சினந்தவனுக்கு இந்தப் பேச்சு கொஞ்சமும் பிடிக்கவில்லை எண்டதை அவன் முகமே காட்டிக்கொடுத்திற்று.

அவன் முகத்தை ஆழ்ந்து நோக்க, புருவத்தை உயர்த்தினான் திரேந்திரன்.

“என்னத்தை உத்து பாக்கிறாய்?” அவன் பார்வையில் உண்டான சிரிப்பு தொண்டைக்குள் நிற்க.

மீண்டும் அதே பார்வை!

“டேய், என்ன எண்டு சொல்லன்டா”

மீண்டும் அதே பார்வை!

“உன்ர மண்டையை பேக்கப்போறனான் இப்ப”

“இது நீயில்லயேடா… சிரிச்சிக்கு விளக்கம் சொல்லியிருக்க நம்பிருப்பன். பச்சக்கள்ளா! என்னடா ஓடுது? என்னட்ட என்னத்த மறைக்கிறனீ… ஒண்டுமில்லை எண்டயோ மண்டையை உடைப்பன்”

அவன் முகமும் அதிலிருந்த கோபமும் தான் சொன்னதும் உதட்டோரம் எழுந்த சிரிப்பும் வேறுகதை சொல்ல புரிந்ததை உணர்ந்ததும் “சிக்கிட்டியா. ஆள் ஆரு? சொல்லன் கேப்பம்” என்றவனுக்கு படு குஷியாகிற்று.

அவனை சீண்ட அந்தளவும் போதுமாக இருக்க “சொல்லப்போறியா இல்லையா” படுத்தியெடுத்து விட்டான்.

“முதல் நீ சொல்லு? வனிக்கு எடுத்துத்தந்தது அவளிட்ட எப்பிடி போச்சுது” கைளை கட்டிக்கொண்டு அசையாமல் பார்க்க,

‘கண்டுபிடிச்சிட்டான்!’ கவனமாய் பேச்சை அவன்பக்கம் திருப்பியும் எமகாதகன் கண்டுகொண்டது மட்டுமில்லாமல் கேள்வியும் எழுப்பியதில் சமாளிக்க முயன்றான்.

“சமாளிக்க பாக்காத சொல்லிப்போட்டன். வனிக்கு எண்டு பாத்து பாத்து எடுத்து அனுப்பினான். அவளிட்ட எப்பிடி”

அடர்ந்த ஊதாவில் குந்தன் மற்றும் முத்துக்கள் பதித்த சோளியும் வெளிர்மஞ்சளில் மெல்லிய நெட்வலை போல துப்பட்டாவும் மிகவும் கவரவே கலியாணமாகப் போகிற வாணிக்கு பரிசாக அனுப்பி வைத்திருந்தான்.

ஆவலும் ஆசையுமாக பார்சலை பிரித்தவளின் முகம் சுருங்கிப்போயிற்று. “என்ர மூஞ்சிக்கு இந்தக் கலர் வடிவாவே இருக்காதுடா. உனக்கு தெரியாதா எனக்கு இந்த கலர் பிடிக்கிறேல்ல எண்டு. எனக்கு வேணாம்!” பிடிவாதமாக மறுத்தவளை அவனும் ஒண்டும் சொல்லவில்லை.

அவனுமே அப்போது அவனில் கோபமாக இருக்க, “என்னவோ செய்!” என்றுவிட்டான்.

இப்போது அவனிடம் என்ன சொல்ல என தடுமாறினாலும் சொல்லிவிட, “விடு. அவளுக்கு பிடிக்கேல்ல எண்டா என்ன செய்யிறது” அதை சாதாரணமாக எடுக்க, இவனுக்குத்தான் சங்கடமாயிற்று.

“ஆனா உன்ர செலெக்சன் வேற லெவல்டா. அண்டைக்கு நானும் கோபத்தில அவளிட்ட ஒண்டும் சொல்ல இல்ல. அவள்ர மட்டமான ரசனை தான் ஊருக்கே தெரியுமே. அவளை விட்டுப்போட்டு நித்திய பாத்தியோ… அவளுக்கெண்டே அளவெடுத்து தச்சதுபோல நல்ல வடிவா இருக்கு” என்றவன் பார்வை நியந்தனாவில் நிலைக்க,

“இந்த சின்னவாண்டு அசையாம ஒரெடத்தில இருக்கிற ஆளில்லையே” என்றவனை தொடர்ந்து திராவும் பார்க்க, இருவரின் விழுகளும் முட்டிக்கொண்டது.

அவன் அப்போதுதான் அவளையே கவனித்தான். முதலில் அவன் கவனத்தில் பட்டது/பதிந்தது அவள் உடுத்தி இருந்த உடுப்பு தான். பார்த்துப்பார்த்து எடுத்தது அவனாயிற்றே.

இப்போது தான் அதை உடுத்தியிருப்பவளை கவனித்து ‘இவளா!!’ என அவனும் ‘பாக்கிறத பாரன் பனங்கொட்ட தலையன்! போடா போடா’ அவளும் கண்களாலேயே ஒருவரை ஒருவர் குதறிக்கொண்டு குத்துச்சண்டை களத்தில் நிற்கும் வீரர்களாய் சிலிர்த்துக்கொண்டு நின்றனர்.

அதுவரை பேரளவில் மாத்திரம் அறிந்திருந்த இருவரும் முதன் முதலில் பார்த்து கொண்டபோது மாறி மாறி விட்ட வார்த்தைகள் அட்சரம் பிசகாமல் காதில் ஒலிக்க, மின்வெட்டுவதுபோல இருவர் கண்களுக்கு மட்டும் அன்றைய நாள் பின்னணியில் ஓடிமறைந்திற்று.

“அவள் எப்பிடி இருந்தா உனக்கென்ன” திடீரென சினந்தவனை திரும்பிப் பார்த்த அரவிந்தனுக்கு லேசில் சிரிப்படக்கேலாமல் போயிற்று.

நக்கல் தெறிக்க “ஓ… அந்த மேட்டரை மறக்கேல்லையாநீ?” என ‘மேட்டரில்’ அழுத்தம் கொடுக்க

“மேட்டர் கீட்டர் எண்டயோ உன்ர வாயை கிழிச்சி தச்சுவிட்ருவேன்” அடிக்குரலில் சினந்தவனின் கோபத்தில் இன்னுமே சிரிப்பேற, அடக்குவதற்குள் பெரும்பாடாகிப்போயிற்று.

அப்பிடியும் கன்னம் இரண்டும் துடித்து அவன் சிரிப்பை காட்டிக்குடுக்க, ‘அட செத்தப்பயலே!’ அவன் அதட்டியும் அவை அடங்கவில்லையே!

திராவின் முறைப்பில் “நான் சிரிக்கேல்லடா. என்ர வாய் தான் சொல்ல சொல்ல கேக்காம சிரிக்குது. நீயே பாரன்” விடாமல் ஓட்டியவனை ஆரும் பாக்காமல் கும்மாங்குத்து குத்தியவன் “என்ர கையால வாங்கிக்கட்டப்போறாய்” எச்சரிக்க

“சரிசரி விடடா” சமாதானமும் சிரிப்புமாக அவன் தோளில் தட்டி “அதுதான் மேடமும் முறைத்துக்கொண்டு இருக்கிறாவா” அவள் முகம் பார்த்தான்.

“எண்டாலும்டா சின்ன வாண்டு போல இருந்தவள் நீ வாங்கித்தந்த உடுப்பில் உண்மைக்கும் நல்ல பெரிய மனுசிபோல நல்ல வடிவா இருக்கிறாள் பாரு” என்றவன் முகம் கனிந்திற்று.

அவனுக்கு வாணி வேறு அவள் வேறு இல்லையே. பக்கத்து வீட்டுக்கு குடிவந்து வாணியும் அவளும் நல்ல ஒட்டு ஆகியதில் இருந்தே அவளும் அவர்கள் வீட்டுப்பிள்ளையாகிற்றாள். துருதுருவென குறும்பும் சீண்டலுமாக புன்னகை தேயாமல் வளைய வரும் அவளில் மிகுந்த பிரியம் அவர்களுக்கு.

அவள் குடும்பமும் விதிவிலக்கல்ல. எளிமையான குடும்பம் அவளுடையது. சிவலோகநாதனும் சரி புஷ்பாவதியும் சரி அல்லுசில்லு அலம்பல் இல்லாத அருமையான மனிதர்கள். அயலட்டை என்றாலும் அளவோடு பழகும் குணம் பிடித்துப்போனதில் இந்ராணியும் லோகானந்தமும் இன்முகத்துடனே பதிலுக்கு பழகுவார்கள்.

காலப்போக்கில் மெல்லிய நட்புறவும் பெரியவர்களுக்கிடையில் உருவாக பெரியநாள், விசேஷம் என்றால் ஒருவர் மற்றவர் வீட்டில் தலைகாட்டிச் செல்லும் அளவுக்கு நெருங்கி இருந்தார்கள்.

அதையே அரவிந்தன் திராவிடமும் சொல்ல, “உனக்கு தெரியாதது இல்லையேடா. என்னதான் அவள் பக்கத்து வீட்டு பிள்ளை எண்டாலும் நாங்க எங்கட வீட்டுல ஒருத்தியா தான் அவளை பாக்கிறது. அதால நீ ஒண்டுக்கும் யோசிக்காத. வாணி உடுத்தாலும் அவள் உடுத்தாலும் எல்லாம் ஒண்டு தான். வாணிய விட அவளுக்குத் தான் இந்த உடுப்பு வடிவாவும் இருக்கு” தீவிரமாக சொன்னவனை இடைவெட்டி,

“காணும் நிப்பாட்டு உன்ர பாசப் புராணத்தை” கடுப்புடன் சொல்லியவன் அதே கடுப்பு அவளிலும் பிரதிபலிக்க, கண்ணால் அவளை வெட்டினான்.

அவன் பார்வையில் அவளுக்கும் சினம் ஏறிற்று.

‘அன்டைக்கும் இப்பிடித்தான் பாத்தவன்’ இப்போது கையில் என்னையும் கிடைத்தாலும் தூக்கி அடித்துவிடும் வேகத்தில் இருந்தவளை “சண்டிக்குதிரை” அவளுக்கு விளங்கட்டும் என்றே தெளிவாக உச்சரித்தான்.

சுர்ரென ஏறிற்று அவளுக்கு. ‘ஆரு நானா? வந்தனோ உன்ர மண்டையை பிளந்து மாவிலக்கு போடாம விடமாட்டன்டா.’ கண்ணாலயே அவனை எரித்தாள்.

“பாரு, உன்ர பாசமலர் தொங்கச்சி எப்பிடி என்னை முறைக்கிறாள் எண்டு” சின்னப்பிள்ளை கோள் மூட்டுவதுபோல தன்னை இடித்துச் சொன்னவனை “என்னடா, எல்கேஜி பிள்ளை ‘டீச்சர் டீச்சர் இவன் எனக்கு கிள்ளுறான்’ எண்டுற போல கம்ப்ளைண்ட் வாசிக்கிறாய். அவள்தான் சின்னப்பிள்ளத்தனமா முறைக்கிறாள் எண்டால் நீயும் ஏன்டா முறைச்சிக்கு” வியப்பும் சிரிப்புமாய் பார்த்தான் திராவை.

அவன் விழிகளோ சற்றும் சிநேகமில்லாமல் அப்போதும் அவளில் தான் படிந்திருந்தது.

“நீ இண்டைக்கு ஆளே சரியில்லை” அரவிந்தன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே,

“டேய்! இங்க என்னடா செய்றனீங்க? அங்கே க்ரூப் ஃபோட்டோ எடுக்கயாம்; ரெண்டு பேரையும் எங்கேல்லாம் தேடுறது. கெதியா வந்து துலையுங்கோடா” சொன்ன கையோடே சுதன் இழுத்துச்சென்று மேடையேறிவிட்டான்.

“என்னட்ட இருந்து எஸ்கேப் ஆகிட்டம் எண்டு நினைச்சி சந்தோசப்படாத தம்பி. கலியாண பரபரப்பு முடியட்டும். உன்னை பிறகு தனியா கவனிக்க வேண்டிய விதத்தில கவனிக்கிறன்” அவனுக்கு கேக்க சொல்லிவிட்டு நகர, “அதை அப்ப பாப்பம்” என்றான் அவனுமே கண்சிமிட்டல் ஒன்றுடன்.

அவர்கள் குடும்பத்தின் ஒட்டுமொத்த இளையதலைமுறை இளவட்டங்களும், பெரிசிலிருந்து சிறிசுவரை மேடையை ஒருவழியாக்கிக்கொண்டு நின்றிருந்தனர்.

கசகசவென அவர்கள் இட்ட கூச்சலே பெரிதாக மண்டபத்தை அதிரவைத்து மொத்த மண்டபத்தின் கவனத்தையும் அவர்கள்புறம் திருப்பிற்று.

“சைத்தான்புடிச்சவன்களா. எல்லாரும் எங்களைத்தான் பாக்கினம். கொஞ்சத்து வாயை மூடுங்களேன்டா” அதட்டலும் “ஆரு பாத்தா எங்களுக்கு என்ன” பதிலடியுமாக கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட,

அத்தனைக்கு இடையிலும் “அண்ணா, டேய் அண்ணா! நித்தி இருக்கிறாள் பாரு. அவளையும் கூப்பிடு. கண்ணேரம்(நீண்ட நேரம்) கூடி கூப்பிடுறனான் ஆள் வாறவள் இல்லை” வாணியின் குரல் செவியை எட்டியது அரவிந்தனுக்கு மட்டுமல்ல அவன் பக்கத்திலே நிண்ட திராவுக்கும் தான்.

‘கூப்பிடாத’ கண்ணாலே ஆட்சேபிக்க; “நித்தி, டக்கென்டு(அவசரமா) வந்திட்டுப் போ” சத்தமாக அழைத்தே விட்டிருந்தான் அரவிந்தன்.

விருட்டென மேடையை விட்டு இறங்கபாத்தவனை “சீனை போடாதடா” யாருமறியாமல் அடிக்குரலில் தடுக்க, சுடுசுடு மாம்பழம்போல முறுக்கிக்கொண்டு நின்றான் அவன்.

அங்கே புஷ்பாவதிக்கும் வேறுவழியற்று போயிற்று. எல்லாரும் பார்க்க அழைத்தபடியால் மறுக்கேலாமல் திணற, பக்கத்தில் இருந்த நாகம்மாள் வேறு “அதுதான் கூப்பிடீனம் எல்லோ. பிள்ளையை அனுப்பம் புஷ்பா” என்றிட்டார்.

இந்ராணியும் அங்கே வர, அதற்குமேலும் மறுப்பது சரியாகப்படாதே என்பதில் ‘போய்ப்போட்டு வா’ கண்ணாலே அவர் அனுமதி அளிக்க, அதுவரை இருந்த கோபமெல்லாம் அடங்கி ஆவலை அடக்கிக்கொண்டு அம்மாவின் முகத்தை முகத்தை பார்த்திருந்தவளின் முகம் பளீரென்று ஒளிர, சிட்டுக்குருவி ஒண்டு தத்தித்தாவுவது போல்; சோளி தரையில் பட்டு சிக்கிவிடாமலிருக்க இரு கையாலும் உயர்த்திப் பிடித்தபடி துள்ளல் நடையுடன் மேடையேறினாள் நித்தி.

அந்த விசரனும் அங்குதான் இருக்கிறான் என்ற ஒரு குறைதவிர, முகங்கொள்ளா சிரிப்புடன் கவனமாய் அவனை பாப்பதை தவிர்த்து மேடைக்கு ஏற, விதியோ அவன் பக்கத்திலே கொண்டுபோய் நிப்பாட்டிற்று!

‘எனக்கு ஃபோட்டோவே எடுக்க வேணாம்’ விட்டால் திமிறிக்கொண்டு ஓடி விடுபவளாக கோபம் துலங்க பார்வையாலே அவனை வெட்டிவிட்டு அவளும், ‘போயும் போயும் இவளுக்கு பக்கத்தில நிக்கோணும் எண்டிருந்துக்கு பாரேன். இதுக்குத்தான் சொன்னனான்’ கண்ணாலே அரவிந்தனை எரித்துவிட்டு அவளுக்கு குறையாத கோபத்தோடு எங்கோ பார்த்துக்கொண்டு அவனும் நிற்கக் கண்டு ‘ஃபோட்டோக்கு போஸ் குடுக்க சொன்னா எப்பிடி நிக்கிதுகள் பார்!’ தலையில் அடித்துக்கொண்டான் மற்றைய பக்கம் நிண்ட அரவிந்தன்.

அதே பார்வையை அவர்களிடம் செலுத்திய கேமராமேன் “ஊதா சோளி, முகத்தை இங்கால கமராவுக்கு திருப்பும்” நொடிக்கொரு தரம் சொல்லிக் கொண்டிருந்தார்.

“நடுவில பத்துப்பேரை நிப்பாட்டலாம் அளவுக்கு இடம் கிடக்கு. இன்னும் கொஞ்சம் அவவுக்கு பக்கத்தில் வாங்கோ” என அவனையும்.

ஆகமொத்தத்தில் இருவரையும் ஒழுங்காக்கி நிற்கவைத்து ஃபோட்டோ எடுப்பதற்குள் பாவம் அந்த மனுசர் ஒருவழியாகிப்போயிற்றார்.

பக்கத்து பக்கத்தில் தான் நின்றிருந்தனர்.
தோள்கள் உரசிவிடும் தூரம். ஆனாலும் உரசிவிடக்கூடாது என்று கவனத்துடன் இருந்தனர்.
ஒருவரை மற்றவர் பார்வையால் கூட தீண்டவில்லை.
ஆனால் அவள் அணிந்திருந்த துப்பட்டா பலமுறை அவன் முழுக்கை சட்டையின் கைப்பகுதியை தொட்டு தொட்டு திரும்பிக் கொண்டிருந்தது அவள் அனுமதியில்லாமல்.

அடிக்கண்ணால் அதனைப் பாத்தவளுக்குள் மெல்லிய படபடப்பு எழும்பிற்று. அப்பாவை தவிர அந்நிய ஆம்பிள்ளை எண்டு ஆரோடும் இத்தனை நெருக்கத்தில் நின்றிராதவளுக்கு அவன் நெருக்கம் அவன்மேல் இருந்த கோபத்தையும் தாண்டி அந்நேரம் பெண்களுக்கேயான இயல்பான கூச்சத்தை தந்திற்று.

அவனில் உரசிவிடுவோமோ என்ற எண்ணத்திலே அரைவாசி பதற்றமாகிப்போனவளின் உள்ளங்கையும் குளிர்ந்துபோயிற்று.

சில்லிட்ட கரத்தால் துப்பட்டாவை இழுத்தெடுக்க பிரயத்தனம் செய்தவள் சங்கோஜத்தில் நெளிய, ஓரக்கண்ணில் விழுந்த அசைவில் அவளின் சங்கடத்தை உணர்ந்தவனாக பிறர்கவனத்தை கவராமல் மெல்ல நகர்ந்து விலகி நின்றுவிட்டவன் செயலில் அவளை மீறி உதட்டில் முறுவல் அரும்பிற்று.

அது குறையாமலே, அவன் கழுத்துவரையே இருந்தவள் நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள்.

அவள் பார்வையை கவனித்துவிட்டவன் சின்ன தலையசைப்புடன் ‘ஓக்கே?’ என கண்ணால் வினவ, மெல்லிய தலையாட்டலுடன் பதிலுக்கு இமை மூடித் திறந்தாள். அதை அழகாக தனக்குள் உள்வாங்கிக்கொண்டிருந்தது கமரா!



ஆறாவது எபி போட்டாச்சு. மறக்காம கருத்தை பகிர்ந்துக்கோங்க. நன்றி 🥰

 
Last edited:

NNK-65

Moderator
அத்தியாயம் 07):

இந்ராணி வீட்டு மொட்டை மாடியில் காற்று வாங்கிக்கொண்டு நின்றிருந்தான் திரேந்திரன்.

இரவின் குளுமையும், இதோ மழை வரப்போகிறன் எனச் சொல்லிய காலநிலையின் இதமுமாக கண்ணுக்கெட்டும் தூரம் வரை தெரியும் இருளைப் பூசிய வானத்தை வெறுமனே வேடிக்கை பார்த்து நிற்பது கூட அழகாகத் தான் இருந்தது.

இன்னும் ஓரிரு தினங்களில் ‘ஃபுல்மூன்’ வரப்போகிறது என கார்மேகங்களுக்கு இடையே பவனி வந்த நிலா கட்டியம்கூற, தென்னை மரங்களின் கீற்றுகள் எழுப்பிய ஓசையும் கீழே அரவிந்தின் ஃபோனில் இருந்து கசிந்த ‘கண்களால் கண்களில் தாயம் ஆடினாய்…’ பாடலும் இன்னும் அழகாய் அவன் மனத்தை மாற்றியது.

‘பொய் ஒன்றை ஒப்பித்தாய்
ஐயையோ தப்பித்தாய்…
கண்மூடி தேடத்தான்
கனவெங்கும் தித்தித்தாய்…’


அவனும் பாடலோடு சேர்ந்து ஹம் செய்ய, எதிர் வீட்டு மொட்டை மாடிக்கதவு திறந்து மூடும் சத்தம்! அவன் பார்வை அங்கு சென்றது.

நேரம் ஒன்பதைத் தான் தொட்டிருந்தது. ஊர் அடங்கி விட்டதைப்போன்ற பேரமைதி பெரும் நிசப்தமாய் எதிரொலித்தது.

கொழும்பில் இந்நேரம் தான் களைகட்டும். நைட்லைஃப் என்பதன் முழு அர்த்தமும் அங்கு சென்றால் மட்டுமே உயிர்பெறும். தொடர்ந்து அங்கேயே பல வருடங்களை களித்திருந்தவனுக்கு இந்த இரவும் நிழவும் அமைதியும் புதுமையாய் இருந்தது. பிடித்தும் இருந்தது.

வேலை என்று ஓடிய காலத்திலும் சரி தொழில் என்று தொடங்கி அதை நிலைநிறுத்த ஓடிய போதும் சரி, அதை தக்க வைக்க இப்போது ஓடிக்கொண்டிருக்கையிலும் சரி சிறு ஓய்வென்பது அவனாக எடுத்துக்கொண்டதுமில்லை, அதுவாக கிடைத்ததும் இல்லை. அடுத்து என்ன? என்றொரு கேள்வியுடன் தான் அவன் பொழுதுகள் நகரும். தன் மூளைக்கு ஓய்வே கிடையாதா? என அவனே சிந்தித்ததும் உண்டு.

இந்தத் தனிமையும் அமைதியும் எந்த யோசனையும் இல்லாத இந்த மூன்று நாட்களும் சொர்க்கமாகவே கழிந்திற்று.

முன்பு இங்கேதான் இருந்தான், ஆனால் இடையில் போன வருடங்களால் இந்த முறை இங்கே இருப்பது புதிய அனுபவமாகவே இருக்க, அதை மேலும் சுவாரஸ்யமூட்டியது என எண்ணம் ஓடும்போதே அதன் முழு அர்த்தமாய் எதிர் வீட்டு மாடியில் புத்தகமும் கையுமாய் தலைவிரி கோலத்தில் நின்றிருந்தாள் நியந்தனா.

அவளைக் கண்டதும் அவர்களின் முதல் சந்திப்பும் அதைத் தொடர்ந்து கலியாணத்தில் அவளைப் பார்த்ததும் வரிசையாய் நினைவு வர, ‘சண்டக்காரி’ கோபமே இல்லாமல் கோபம்போன்றே சொல்லிக்கொண்டான் திரா.

அவனுக்குமே ஆச்சரியம் தான். அன்றிருந்த கோபத்தில் துளிக்கூட இப்போது இல்லை. வாணியின் கலியாண நாள் ஒன்றே போதுமாய் அவளை விளங்கிக்கொள்ள.

வளவளவென வாய் பேசினாலும் ஒரு இடத்தில் ஓய்ந்து நில்லாமல் பரபரவென ஓடித்திரிந்தது, ரூபனுடன் மல்லுக்கட்டியது, வாணி மறுவீடு போகையில் அழாத குறையாத மனமேயின்றி விடைகொடுத்தது, அவள் அம்மாவுடன் ஏறுப்பட்டது, சித்தியிடம் உரிமையாய் சண்டை போட்டதும் கோபித்ததும் என ஒரு நாளுக்குள் அவ்வளவும் காட்டியவளின் மீதே தான் அவன் கவனம் அவனை அறியாமலே பதிந்திற்று.

நினைக்க அவனுக்கே மூச்சுவாங்கியது. எப்பிடித் தான் இப்பிடி இருக்கிறாளோ? எண்ணி தலையை பெரிதாக உலுக்கி அந்த யோசனையில் இருந்து வெளியே வந்தான்.

‘என்ன டிசைனில் எந்த மெசர்மெண்டில் அளவெடுத்து செஞ்சாங்களோ தெரியேல்ல!’ நினைப்பு போகிற பாதையை நினைத்து தனக்குள் சிரித்துக் கொண்டான்.

சிரிப்பினூடே பார்வையை கூர்மையாக்கி அவள் கையில் இருந்த புத்தகத்தை பார்வையிட முனைய, சரியாக மின்விளக்கு வெளிச்சத்தின் கீழ் அவள் நின்றதனால் அவனால் பார்க்க முடிந்தது.

அதே அவன் பெரிதாக வெளிச்சம் இல்லாத பகுதியில் மொட்டைமாடியை ஒட்டி ஓங்கி வளர்ந்திருந்த தென்னை மரத்தில் சாய்ந்து நிற்க, நிச்சயம் அங்கிருந்து அவளால் அவனைப் பார்க்க முடியாது. அந்த தைரியத்தில் அவளை நன்றாகப் பார்வையிட்டான்.

மேத்ஸோடு மல்லுக்கட்டிக் கொண்டிருந்தாள் நியந்தனா. ‘நாளைக்கு என்னவோ எக்ஸாம் இருக்கு எண்டவள்’ என நினைப்பு அவளைச் சுற்றியே வட்டமிட்டது.

இந்ராணியிடம் தான் சொல்லிக் கொண்டிருந்தாள் காலையில்.

“நாளைக்கு வாணியையும் மாப்பிளையையும் பகல் சாப்பாட்டுக்கு கூப்பிடுவம் என்னப்பா?” கலியாண பரபரப்பு மெல்ல அடங்கி வீடு இயல்புக்கு திரும்பியிருக்க, லோகானந்தத்திடம் பேச்செடுத்திருந்தார் இந்ரா.

காலை உணவாக புட்டும் சம்பலையும் முடித்துக்கொண்டு அரவிந்தனும் அவனும் நாளாந்திரத்தை புரட்டியபடி அங்கு அவர்கள் பேச்சு கேக்கும் தூரத்தில் தேத்தண்ணி குடித்துக் கொண்டிருக்க, லோகானந்தம் வெளியே கிளம்ப தயாராக வந்தமர்ந்திருந்தார்.

சரவணன் முன்பே வெளியே கிளம்பிச் சென்றிருக்க, மதி பிள்ளைக்கு சாப்பாட்டை குடுக்க ஏறி இறங்கிக்கொண்டு இருந்தாள்.

குழந்தையோ புதினம் பார்த்துக்கொண்டு வாயை திறப்பேனா என மல்லுக் கட்டியது. பில்டிங் ப்ளாக்ஸை எடுத்து குடுக்க, அதை வீடெல்லாம் சிதறடித்துக் கொண்டிருந்தாள்.

“சாப்பிடு தங்கம். நாங்க வெளியில போவம் என்ன!” மதி சொன்ன எதற்கும் மசியவில்லையே.

“சாப்பிடுறாள் இல்லையா அம்மாச்சி?” மருமகள் படுகிறபாட்டில் இந்ராணி உணவை கையிலெடுக்க, ஒரு வாய் வாங்கினால் என்றால் அவர்கள் அசருகிற நேரம் பார்த்து அப்பிடியே கக்கி முகமெல்லாம் தேய்த்து ‘ஆ ஊ’ என பொக்கை வாய் திறந்து பெரும் சத்தமிட்டு விளையாடினாள்.

“பசிக்கேல்ல போல பிள்ளை. விடு பிறகு தீத்திப்பாப்பம்”

“காலையில் விளையாடி விளையாடி கொஞ்சமாத்தான் பசியாறினாள். இப்பவும் சாப்பிடேல்ல எண்டா, பிறகு பசிக்குமே.” இளம் தாயாக, பிள்ளை பசியில் வாடி விடுவாளோ என சாப்பாட்டை குடுத்து முடிப்பதிலே மதி கவனமாக இருக்க, அதுவே குழந்தைக்கு எரிச்சலை மூட்டி அவள் சிணுங்க ஆரம்பிக்க, சரியாக அந்த நேரம்தான் நித்தி வீட்டுக்குள் நுழைந்தாள் வகுப்பு முடிந்து வந்து.

அன்று ஆறில் இருந்து எட்டரை வரை ஒரு வகுப்புதான் என்பதால் காலம்பர போய் வந்ததும் நிலாவின் சத்தம் கேட்டே வந்திருந்தாள்.

“தொடங்கிட்டாவோ எங்கட பேபி” என்று வந்தவளின் குரலை இனங்கண்டு குழந்தை அவளை அங்கும் இங்கும் தேடிற்று.

“இஞ்ச பாருங்கோப்பா, நித்திய தேடுறாள் சின்னக்குட்டி” பேத்தியின் சின்ன அசைவைக் கண்டு கணவரிடம் சொல்லி ஆர்ப்பரித்தார் இந்ரா. அவரும் ஆமோதித்து சிரித்துக்கொண்டார், வாஞ்சையாக பேத்தியில் பார்வை நிலைக்க.

ஏன், அரவிந்தன் திராவும் கூட நிலாவையும் அவளை கேட்டுக்கொண்டே உள்ளே வந்த நித்தியையும் சிறு சிரிப்புடன் பார்த்துவிட்டு மீண்டும் கையிலிருந்த பத்திரிகையில் பார்வையை திருப்பினர்.

“பிக்கப்பூ(peekaboo)” இரு கைகளாலும் முகத்தை மூடிக்கொண்டு பூனை நடைபயின்று குழந்தை முன்வந்து குதிக்க, பேபி சிட்டரில் படுத்திருந்தவள் குலுங்கி குலுங்கி சிரித்தாள். குழந்தையின் சிரிப்பில் மற்றர்வர்கள் முகத்திலும் புன்முறுவல் அரும்பிற்று.

“அம்மா சாப்பாடு தாறாவோ பேபிக்கு. உங்களுக்கு வேணாமா செல்லக்குட்டி. அம்மா கரைச்சல் படுத்திறா என்ன. ஒரு டிஷ்யூம் ஒண்டு போடுவமா?” கொஞ்சிக்கொண்டே அவளைக் கையில் அள்ளிக்கொள்ள, மறுகையில் ஸ்பூன்.

ஆர் பழக்கியதோ தெரியவில்லை? ஒரு குழந்தை பெற்றவளைப்போல லாவகமாக, நேர்த்தியுடன் குழந்தையை சிரிக்க வைத்து, எதை எதையோ கதைத்து சாப்பாட்டை குடுத்தே முடித்திருந்தாள்.

“இந்தாங்கோ மதியக்கா, பேபியை துடைச்சி தாங்கோ. நாங்க வெளியில் ஒரு ரவுண்ட் போயிட்டு வாறம்” என நிலாவை நீட்ட, அங்கேயே வைத்து குழந்தையை கழுவி, துடைத்து, புது உடுப்பு மாற்றி, க்ரீம் ஓடிக்லோன் பூசி மணக்க மணக்க நீட்ட, வாசம் பிடித்துக்கொண்டே அவளை கையில் வாங்கிக் கொண்டவள் “நாளைக்கு எனக்கு எக்ஸாம் இருக்குது அத்தே. நீங்க நாளையண்டைக்கு(நாளை மறுநாள்) வாணிக்காவ கூப்பிடுங்கோ” போறபோக்கில் சொல்லிச்சென்றாள்.

அவள் வந்தது, இருந்தது, இவ்வளவு ஏன் குழந்தையோடு குழந்தையாக விளையாடியது, புறப்படுவது வரை அவன் கடைக்கண்ணில் பட்டு கவனத்தை நிறைத்துக்கொள்ள, அந்த நினைப்பில் சத்தமில்லாமல் இப்போதும் அவளை கவனிக்க, மேத்ஸில் அவளுக்கு கடினமாக இருக்கிற பாடம் போலும். அவளின் உடல்மொழியும் முகபாவத்தில் இருந்தும் ஊகித்துக்கொண்டான்.

முதலில் அந்தப் பாடம் புரிகிறதா என மேலோட்டமாக ஒரு முறை அவதானித்தவள் சத்தமாக ஒரு தரம் சொல்லிப்பார்த்துக் கொண்டாள். பிறகு டீச்சராக மாறி மற்றவர்களுக்கு விளங்கப்படுத்துவதைப் போல தனக்குள் பதிய வைத்துக் கொண்டாள். அரைமணி நேரத்திற்கு பிறகு அவள் வந்தது போலே, அதில் கொஞ்சம் மாற்றமாக தெளிந்த முகத்துடன் கீழிறங்கிச் செல்ல, சற்று நேரத்தில் அவனும் வந்து தன்னிடத்தில் படுத்துக்கொண்டான்.

கண்ணை மூட, மூடிய விழிகளுக்குள் தயங்கி தயங்கி இதழில் கோடாய் விரிந்த நகையோடு அவன் முகம் பார்க்கத் தயங்கிய முகம் ஒன்று! எப்போதும் போல் அவன் உறக்கத்தை களவாடிச்சென்றிட, மேலும் ஒரு மணித்தியாலத்துக்கு பிறகே அவன் கண்கள் மூடியது.

அன்று காலையில் இருந்தே புஷ்பாவதியின் வீடு இரண்டுப்பட்டுக் கொண்டிருந்தது.

காலையில் நேரத்துக்கே நாதன் கடை திறக்க போயிருக்க, அண்டைக்கு போயா தினம் என்பதில் பள்ளிக்கும் விடுமுறை. அவராக மகளை எழுப்பவில்லை புஷ்பாவதி. பதினோராம் ஆண்டுக்கு பாஸாகியதில் இருந்து சதா நேரமும் படிப்பு படிப்பு என்று அவளின் நேரத்தை படிப்பே முழுமையாக எடுத்துக்கொள்ள, மற்றநேரம் ட்யூஷன் என ஓடுபவளாயிற்றே. அதில் அவள் எழும்புற நேரத்துக்கு எழும்பட்டும் என தன் வேலைகளை கவனித்தார்.

கழுவும் உடுப்புகள் அழுக்கு கூடை நிறைந்து இருக்க, அதில் முக்கால்வாசி இருந்ததென்னவோ அவளின் உடுப்புகள்தான். “ஒரு வேலை செய்யுறதில்ல” புறுபுறுப்புடனே எடுத்து கழுவப்போட்டார்.

வீட்டின் பின்பக்கம் கிணத்தடியும், இருந்து கழுவ வசதியாக சின்ன திண்டும் உடுப்பு துவைக்க மேடையும் இவர் கேட்டார் என அமைத்து தந்திருந்தார் நாதன்.

உடுப்போடு அங்கேயே அமர்ந்து பரபரவென சாயம் போகிறதை வேறாகவும் மற்றதை மொத்தமாக வாளிக்குள் போட்டு நீர் இறைத்து அதில் இளகப்போட்டார். சாயம் போவதை ஒவ்வொன்றாக சேர்ஃப் எக்ஸலில் நனைத்து எடுத்து கொடியில் காயப்போட்டு, ஊறவைத்த உடுப்பையும் கழுவிப்போட்டு நிமிர்கையில் அரைமணிநேரம் ஓடிற்று.

எழுந்து சின்ன சின்ன வேலைகளை முடித்துக்கொண்டு டீவியை போட்டுக்கொண்டு அமர, அப்போது தான் சோம்பல் முறித்துக்கொண்டு எழுந்து வந்தாள் நியந்தனா.

முட்டிக்கு கீழ் வரை இருந்த சோட்டியில் (நைட்டி) முடியொரு கோலம் அவள் ஒரு கோலமாக, “என்ர பால் தேத்தண்ணி எங்க” கேட்டபடி வந்தவளை ஏறிட்டு முறைத்தார் புஷ்பா.

“கழுத வயசாகிற்று. நேரத்துக்கு எழும்பேலாது, தேத்தண்ணி கேக்குதோ? அதுவும் பால்தேத்தண்ணி. போ, போய் முதல் பல் தேய்ச்சுக்கொண்டு வா.” இருந்த இடத்தை விட்டு அசைவேனா என டீவியில் ஓடிய நாடகத்தில் கண்ணும் கருத்துமாக இவளிடம் குரலை மட்டும் கொடுத்தார்.

“இந்த டீவிய ஒருநாள் இல்ல ஒருநாள் தூக்கிப்போட்டு உடைக்கப்போறனான்”

“அதையாவது உருப்படியா செய். பிறகு வீட்டுல சும்மா குந்திக்கு இருக்க கனகாட்டா இருக்கு எண்டியோ கையை முறிச்சு அடுப்புல வச்சுப்போடுவன்” அசராமல் அவர் திருப்பிக் குடுத்ததில் ‘இண்டைக்கு ஆள் நல்ல மூடில் இல்லை’ என விளங்கிற்று.

மேலும் வம்பு வளர்க்காமல் விசுக் விசுக்கென சத்தம் எழுப்பியபடி பல்லை தேய்த்து முகம் கழுவிவரப் போனவள் தான் போன வேகத்தில் கத்திக்கொண்டு அவர் முன்வந்து குதித்திருந்தாள்.

“நேத்து தேடிப்பிடிச்சு எடுத்து வச்சனான். நாளைக்கு போடோணும் எண்டு மலைக்கு மலையா சொல்லிப்போட்டு என்ன போனன். என்னத்துக்கு அதை எடுத்து கழுவிப்போட்டநீங்க!” மூச்சுவாங்க அவள் ஆடிய ஆட்டத்தில் வீடு ஒரு முறை அதிர்ந்து அடங்கிற்று.

“என்னத்துக்கு இப்ப பே கத்து கத்துறாய்? எதை எங்க வச்சனீ, என்னத்தை கழுவி போட்டனான்” புஷ்பாவும் குரலுயர்த்த,

வெளியே அவர் கழுவிப்போட்டிருந்த ஈர உடுப்பை எடுத்து வந்து அவர் கண்முன் ஆட்டிக்காட்ட, அதுவோ முழுதாக ஈரம் வடியாததில் புள்ளி புள்ளியாய் கோலம் போட்டிருந்தது அவள் வந்த வழிநெடுக.

அதற்கொரு மூச்சு அவர் திட்டித்தீர்க்க, அதைக் காதிலே விழுத்தாமல் “செய்தது பிழை. அதைச் சொன்னா எனக்கு ஏசுவீங்களோ”

“ஊத்த கூடை இருக்கிற இடத்தில உடுத்துற உடுப்பை ஏன் போட்டனீ?” புஷ்பாவும் விடவில்லை.

“பதினாறும் கண்டாச்சு, ஒரு உடுப்பு கழுவ ஏலாது. போட்டிருக்கிற உள்ளுடுப்பு பறிய நான் கழுவிப்போட்டாத்தான் உண்டு. கதைக்க வந்திட்டாள்.”

“அந்தக் கதை தேவை இல்லாதது.”

“எழும்பி வந்தனோ உன்ர வாயை கிழிச்சிவிட்ருவேன். என்ன தேவை இல்லாதது? வரவர வாய்க்கு வாய் கதைக்கிறனீ. ஒரு வேலை ஒழுங்கா செய்ய துப்பில்லை… உடுப்பே இல்லாதவள் போலக் கதைக்காம இருக்கிறத போட்டுக்கு நட பாப்பம்”

பதிலுக்கு அவள் ஏதோ கதைப்பதற்குள் “அன்ட்ரி” என வாசலில் குரல்.

‘அந்தக் கன்ட்ரி இங்க தான் இருக்குது அசைக்கேலாம’ அம்மாவிடம் முறைப்புடன் பார்வை செலுத்தி ‘ஆரடா அது?’ எட்டிப்பார்த்தவள் அடுத்த நொடி ஒரே ஓட்டமாய் ஓடி அறைக்குள் புகுந்து கதவை அடித்துச் சாற்றியிருந்தாள்.

அவள் இருந்ததே செப்பம்! இதில் ஈர உடையை எடுத்து வந்ததில் சோட்டி நனைந்து அது உடம்போடு அப்பிக்கிடக்க, கழுவிய முகம் காயாமல் நீர் திவலைகள் திட்டு திட்டாய் முகமெங்கும் வழிய, தலை முடி கலைந்து நெற்றி கழுத்தில் ஒட்டி அச்சு குறத்தி போல் இருந்தாள்.

‘போச்சு போச்சு. என்ர மானமே போச்சு!’ மூக்கால் அழுதவளுக்கு அவன் தன்னை கவனித்திருப்பான் என்ற எண்ணமே அவமானத்தில் முகமெல்லாம் கன்றிச் சிவக்க செய்திற்று.

‘எம்மோவ்!’ சத்தமில்லாமல் முகத்தை மூடிக்கொண்டு கட்டிலில் விழ, பட்டு விட்ட அவமானத்தில் முகத்தை நிமிர்த்தவே முடியவில்லை. இன்னும் இன்னும் தலையணையில் முகத்தை புதைத்தவள் கண்களுக்குள் தன்னைக் கண்டதும் நக்கலாய் சிரித்து புருவம் உயர்த்திய மொக்கனின் முகமே வந்து வந்து போயிற்று.

‘சும்மாவே எப்ப என்னை நக்கலடிப்பம் எண்டுக்கு இருப்பானே. நீயே அல்வா போல சான்ஸ் குடுத்திட்டியடி நித்தி. மொக்குடி நீயொரு’ நினைத்து நினைத்து காறி துப்பினாள்.

‘இண்டைக்கு அவன்ர மூஞ்சில முழிச்சனோ… ஹூம் ம்ஹூம்! கண்ணால சிரிச்சே என்னை ஒருவழியாக்கி விட்ருவான்’ தலையை உலுக்கிக்கொண்டு எழுந்து அமர்ந்து பூனை நடை பயின்று கதவை திறந்து வெளியில் எட்டிப்பார்க்க, வெறுமனே டீவி ஓடிக்கொண்டிருந்தது.

புஷ்பாவதியை தேட, சமையல் அறைக்குள் என்னவோ செய்து கொண்டிருந்தார்.

மீண்டும் சத்தமில்லாமல் கதவடைத்துக் கொண்டு நகத்தை கடித்து துப்பியவள் ‘அங்கு போவதா? வேண்டாமா?’ என யோசனையில் இறங்கிற்றாள்.

‘வாணிக்காவை பாக்கோணும்’ என்ற எண்ணமே இறுதியில் வென்று இதோ, சாப்பாட்டு மேசையில் அவனுக்கு எதிரில் அமர்ந்து இருந்தாள் நியந்தனா.

கொடுப்புக்குள் சிரித்துக்கொண்டு உணவை உள்ளே தள்ளிக் கொண்டிருந்தான் அவன், எதிரில் திரேந்திரன்.

‘எளியவன் எளியவன்! இப்பிடி பாத்தா எப்பிடியடா நான் சாப்பிடுறது’ வாய்க்குள் வைத்த உணவை மெல்லவும் முடியாமல் அது தொண்டைக்குள் இறங்குவனா என சண்டித்தனம் செய்ய, தட்டை அளைந்து கொண்டிருந்தவளுக்கு குறுகுறுவென தன்னை மொய்க்கும் அவன் பார்வையில் கடுப்பாயிற்று.

தன் வீட்டு வாசலில் நின்றி்ருந்த அவன் காரை கண்டு கண்ணேரம் அதுக்குத்தான் வீட்டை வந்தவனாக்கும் என ஊகித்திருந்தாள்.

இப்போது அவன் பார்வையை உதறித்தள்ளி சகஜமாக இருக்கவும் முடியவில்லை அவளால். பாக்காத போது பாக்கிறதும் பாக்கிற போது பாக்காத போல வேறு எங்கோ பாத்தாலும் அவன் இதழ்களுக்குள் நெளியும் புன்னகை அவளுக்கானதென்று அவளறிவாளே! அதுவே அவளை சகஜமாக இருக்கவிடவில்லை.

முயன்று தன்னை திருப்பிக்கொள்ள முனைந்தாலும் அவை சிக்குப்பட்டு சிதறி சின்னாபின்னமாகி அவனிடமே சென்று சிக்கிக்கொள்ள, இன்று நேற்றா இந்தக் கூத்து அவளுக்குள் நடக்கிறது?

எப்போது வாணிக்காவின் கலியாணத்தில் அவனைப் பார்த்தாளோ அப்போதிருந்தே இந்தக் கூத்துதான். தான் அவனை முறைப்பதற்கேனும் பாப்பது போய் அவன் தன்னை பாக்கிறானா என பார்க்க அவள் பார்வை அவனிடமே தான்.

அதுவும் ஃபோட்டோக்கு மேடை ஏற அவனருகில் நின்றபோது அவன் செய்கையில் உண்டான நல்லிணக்கத்தில் அன்று முழுக்க இன்னும் அதிகமாய் அவள் கவனமெல்லாம் அவனிடமே சென்று நின்றிற்றே!

அவன் ஐந்து முறை இதழ் பிரிய சிரித்ததும் எட்டு முறை பல்லை காட்டாமல் சிரித்ததும் பத்து தரம் தலையை மட்டும் அசைத்ததும் நூறு தடவைக்கும் மேல் கலையாத கேசத்தை இப்பிடியும் அப்பிடியும் கோதியதும் புருவத்தை உயர்த்தியதும் நின்றது நடந்தது அத்தனையும் மனப்பாடமாய் கணக்கில் சேர்ந்தது.

எப்பிடி இந்தளவு நுணுக்கமாய் அவனை கவனித்தாள் என்பது அவளுக்கே கேள்விக்குறி தான்.

‘பைத்தியந்தான் பிடிச்சிருக்கு உனக்கு!’ அன்றிரவு வீட்டை வந்து தன்னைத்தானே அவள் கழுவிக்கழுவி ஊற்றியது தனிக்கதை.

ஆனாலும் கண்களெல்லாம் அவனறியாமல் அவனிடமே சென்று தஞ்சமென அடைந்திற்று. அப்படி இருக்க, எதிரில் அவனை வைத்துக்கொண்டு சாதாரணமாக இருக்க அவளால் எப்பிடி முடியும்?

“நல்லா சாப்பிடுவன் நித்தி. உனக்கும் பிடிக்கும் எண்டு தான் அம்மா செய்தவா. என்னனீ பபா குஞ்சுபோல அளையிறாய்” சாப்பிட்டுக்கொண்டே வாணி ‘சாப்பிடும்’ படி அவளுக்கு கண்ணைக்காட்ட, டக்கென அவனிடம் தான் அவள் கண்கள் சென்று வந்திற்று.

அவன் உதட்டோர நெளிவு இன்னுமே அதிகமாக, கண்ணை உருட்டி வாணிக்காவை முறைக்க,

அந்தப்பக்கம் கனடாக்காரர் “எஹெம்!” எனச் செருமி, ‘இந்த முறைப்பெல்லாம் இனி வேலைக்காகாது’ எனச் சொல்லாமல் சொல்ல, ‘இந்த வந்துட்டார் கனடாகரடி!’ பல்லைக் கடித்த நித்தி, ரூபனை முறைக்கவும் தவறவில்லை.

“அதுதான் என்ர மனுசி சொல்லுறாள் எல்லா. சாப்பிடும் கர…ஹ்ம்ம். நித்தி” ‘மனுசி’ இல் அழுத்தம் குடுத்து வேணுமென்றே கிட்ட,

“சும்மாவே நல்ல விசரில் இருக்கிறன். சொல்லி வையுங்கோ உங்கட மனுசரிட்ட. பிறகு என்னை குத்தம் சொல்லப்போடா ஓ” சன்ன குரலில் வாணியிடம் எகிறியவள் கண்கள் மீண்டும் அவனிடமே செல்ல, ‘சாப்பிடும்’ சின்னப் பிள்ளைக்கு சொல்வதுபோல் கண்ணை காட்டினான் திரேந்திரன்.

‘பெரிய்ய்ய இவர்ர்ர்! அவர் சொன்னா உடனே நாங்க சாப்பிடனுமாக்கும்’ அவன் சொன்னதற்காகவே பாதிச்சாப்பாட்டில் எழும்பிச் செல்லத்தான் எண்ணினாள்.

ஆனால் காலைச்சாப்பாடு சாப்பிடாத வயிறு ‘குய்யோ முய்யோ’ என கத்தி, அவளை ஒரே அமுக்காக அமுக்கி சாப்பாட்டை வயிற்றுக்குள் போட வைத்திட்டுத் தான் விட்டது. இருந்த பசிக்கு ஒரு பிடி பிடித்து விட்டுத்தான் கைகழுவ எழும்பிச் சென்றாள்.

“சோத்து சட்டிய என்னத்துக்கு மாமி உள்ளுக்கு எடுத்து வச்சநீங்க? நித்தி சாப்பிடுறாள் எல்லா. பாருங்கோ, ஆள் பாதியில் எழுந்திட்டா”

‘இஞ்ச, சும்மா இருங்கோவன் ரூபன் அவளை தனகாம’ வாணி கண்ணால் அவனிடம் செய்தியனுப்பியதை கூட சட்டை செய்யாமல் பகடி செய்ய,

“ஒரு நாள் இல்ல ஒருநாள் கனடாகரடிய அடிச்சு துவைச்சு காயப்போடப்போறன்” கடுப்பாகி சத்தமாய் கருவினாள் நித்தி.

அங்கு கையை கழுவிக் கொண்டிருந்த திரேந்திரனுக்கும் அது காதில் விழுந்து சிரிப்பும் வந்திற்று.

வாஷ் பேஷனில் கையை கழுவிக்கொண்டே பின்னால் நின்றவளை கண்ணாடியில் பார்க்க, அவனுக்கு முதுகு காட்டி நின்றவள் பார்வை முறைப்புடன் ரூபனிலே.

‘எப்ப ஆரை வெட்டுவம் குத்துவம் குதறுவம் எண்டுக்கு தான் இருக்கிறது’ சிரிப்புடனே அவன் திரும்ப, சரியாக அவளும் முகத்தை கொணட்டிக் காட்டி திரும்பியவள் முன்னுக்கு வந்து நின்றவனைக் கண்டு ‘ஆத்தி!’ நெஞ்சில் கைவைத்து அதிர்ந்திற்றாள்.

இதயம், தண்டவாள ரயில் தடதடப்பதைப் போல் உச்சஸ்தாதியில் அதிர்ந்திற்று.

‘மலமாடு மலமாடு! முன்னுக்கு வந்து குதிக்கிறத பாரு!’ பல்லை நறநறத்தவள் முகத்தை வெட்டிவிட்டு அந்த சின்ன ஓடையில் அவனை உரசாமல் கை கழுவச் சென்றாள்.

இதயம் இன்னும் தன் அதிர்வை நிறுத்தி இருக்கவில்லையே. ‘த்தூஃப் த்தூஃப்’ நெஞ்சை பிடித்துக்கொண்டவளுக்கு தன்னை நிலைப்படுத்திக்கொள்ள சில நிமிடங்கள் பிடித்திற்று.

பகல் சாப்பாட்டை முடித்ததுமே ஓய்வாக வெளியே திண்ணையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தவர்கள் கடல் கோட்டைக்கு போவம் என முடிவெடுக்க, சின்ன வயதில் எப்போதோ போனது என இளையவர்கள் ஆர்வமாக இந்ராவும் லோகானந்தமும் தாங்கள் வரவில்லை என்று விட்டனர்.

அரவிந்தனும் வருவதாகத் தான் இருந்தான். அவன் நடத்தும் ஜிம்மை விஸ்தரிக்கும் பொருட்டு வேலையில் இறங்கியிருக்க, திடீரென வந்த அழைப்பில் அவன் வெளியே செல்ல வேண்டி இருந்தது.

சரவணனும் வீட்டில் இல்லை. மதி பிள்ளையை வைத்துக்கொண்டு அவளும் வரமாட்டன் என்றிற்றாள். நித்தியோ அத்தனை சம்பாஷணைக்கும் வாயே திறக்கவில்லை. எப்பிடியும் புஷ்பா விடமாட்டார் என தெரியுமே. வீணாக வாயை குடுத்து வாங்கிக்காட்ட விரும்பாமல் கையிலிருந்த நிலாவோடு அவள், அவர்களின் தனி உலகில் இருந்தாள்.

“அப்ப நான் மட்டும் போறதுக்கா கேட்டனான்” எல்லாருமாக போவம் என ஆசையாக கேட்ட வாணி, ஆளுக்கொரு காரணம் சொல்லி தவிர்த்தவர்களை கோபத்தில் முறைத்தாள்.

இந்ரா தான் மகளின் முகவாட்டம் பொறுக்காமல் “திரா, நீயும் கூடபோவன்!” என அவனை கோர்த்துவிட,

“நீயும் வாறாய் நித்தி. எனக்கேலா எண்டு சொன்னியோ தெரியும். புஷ்பா அத்தைட்ட நான் கதைக்கிறனான்” அவளை வாய்திறக்க விடவில்லை வாணி.

“பிறகு போவமே வாணிக்கா” கண்ணால் கெஞ்சி ‘வேணாமே’ என தலையசைத்தவளை, கண்டுகொள்ளாதவள் முதல் வேலையாக புஷ்பா வீட்டை போய் எப்பிடியோ சம்மதமும் வாங்கி இருந்தாள்.

அவர்களுக்கும் இந்ராணி வீட்டில் இருந்து தான் பகல்சாப்பாடு வந்திருந்தது.

நாதனும் சாப்பாட்டுக்கு இடையில் வந்திருக்க, வாணி கேட்டதுமே “பிள்ளைக்கு விருப்பமா அம்மாச்சி?” என்க,

“அவளுக்கு விருப்பம் இல்லாம இருக்குமா மாமா. அத்தை விடுவாவோ எண்டு தான் ஆள் சைலெண்ட் மோடில் இருக்கிறாள்”

“அப்ப கவனமா கூட்டிட்டு போயிட்டு நேரத்துக்கு வரப்பாருங்கோ அம்மாச்சி” என்று அனுமதியளித்திருந்தார்.

மறுத்து கதைக்க வந்த புஷ்பாவை பேசவிடவில்லை அவர். அவள் வெளிக்கிட்டதும் மனைவியை பேசியே கரைத்திட்டார் நாதன்.

“உண்மையா புஷ்பம் சம்மதம் சொல்லிட்டாவோ வாணிக்கா” ஆச்சர்யம் விலகாமல் கேட்டவளின் கையில் நறுக்கென கிள்ள,

“ஸ்ஸ்ஸ்! ப்பா!” வலித்த இடத்தை தேய்த்தவள் காரில் பயணிக்க ஆரம்பித்த நேரத்தில் இருந்தே விதவிதமாக இந்தக் கேள்வி ஒன்றே அவள் வாயில் இருந்து.

“இப்பிடியா கிள்ளுறது. வரவர வன்முறையில் இறங்கிறயல் வாணிக்கா, சேர்க்கை சரியில்லை” திரேந்திரன் காரோட்ட, முன்னிருக்கையில் அமர்ந்திருந்த ரூபனை கடைக்கண்ணால் பார்த்துக்கொண்டே சொன்னாள்.

“ஓமோம்! அதை சொல்லுறது ஆரு எண்டு பாரும் திரா!” ரூபனும் அவளுக்கு சளைத்தவன் இல்லையே.

“ஆகத்தான் கண்டனீங்க”

“கண்டதால தானே சொல்லுறன். கரடிகளுக்கு கூட ரிலேஷன்சிப் வச்சிருந்தா இப்பிடித்தான் ஆகும் எண்டு சொல்லியும் என்ர மனுசி கேக்கிறாள் இல்லையே!”

“அதை பெரிய்ய்ய கரடி நீர் சொல்லுறீர்! எடுங்கோ” உதட்டை சுழித்தவள் இப்போது வாணியின் புறம் திரும்பி “எல்லாத்துக்கும் ஒரு அளவு இருக்கு வாணிக்கா. சொல்லி வையுங்கோ உங்கட மனுசரிட்ட. பிறகு நான் என்ன செய்யுவனோ தெரியாது” நான்காவதாக அவனும் இருந்ததில் ஒருகட்டத்தில் அவள் குரல் தளைந்தே ஒலிக்க,

ரியர்வ்யூவில் அவள் முகத்தை பார்த்தவன் இதழ்களுக்குள் ஒளிர்ந்திருந்த புன்னகை பக்கவாட்டில் அவள் கண்ணில் விழுந்து முயன்று தன்னை அமைதியாக காட்டிக்கொள்ள முயல, அதற்கு விடுவேனா என “கரடிகளின்ர அளவுகள் என்ன எண்டு எங்களுக்கு தெரியாதே. கேட்டுச்சொல்லன் இசை” வம்பிழுத்தான் சாய்ரூபன்.

அவளின் சத்தமில்லா முறைப்பில், வாணியின் “ரூபன்” என்ற குரலுக்குத் தான் கடைசிக்கு அடங்கினான்.

திரேந்திரன் நகைப்பில் “கலியாணம் ஒண்டை முடிச்சிட்டாலே இந்த ஆம்பிளைகளின்ர பாடு இதுதான்!” மெல்லிய குரலில் அவனுக்குக் கேட்க பெருமூச்செறிய, அதற்கும் சன்ன சிரிப்புடனே காரை வேகமெடுத்தான் திரா.

பழகாத வரை யாருடனும் அவன் அதிகம் பேசமாட்டான் என்பதால் உண்ட மயக்கத்தில் சீட்டிலே சரிந்து குட்டித்தூக்கம் போட, வாணிக்கும் நித்திக்கும் இடைப்பட்ட நாட்களை ஈடுகட்ட கதைக்க எவ்வளவோ இருந்ததில் ரூபனின் உறக்கத்திற்கு இடைஞ்சலில்லாமல் குசுகுசுவென கதைத்துக் கொண்டுவர, திரா மௌனமாக காரை ஓட்டிக்கொண்டிருந்தான்.

மெல்லிய சத்தத்தில் பாடல் அவனுக்கு மட்டும் கேட்க போட்டிருந்தானோ? ம்யூசிக் மட்டுமே அதுவும் மிதமாகவே கேட்க, அதை கேட்டுக்கொண்டே ஒரு மணி நேர தூரத்தை அரைமணி நேரத்தில் முடித்து ஹாம்மன் ஹில் ஃபோர்ட்/ கடல்கோட்டை செல்வதற்கான போட்டில் ஏறி அமர்ந்திருந்தனர்.

யாழ்ப்பாண தீபகற்பத்தின் ஊர்காவற்றுறை தீவுக்கும் காரைதீவுக்கும் இடையே சிறிய தீவைச் சுற்றி கட்டப்பட்ட இந்தக் கோட்டையானது மிக நீண்ட வரலாற்றைச் சுமந்திருந்தது.

கடலுக்குள் கடல் காற்றுக்கு உடையும் தலைமுடியும் அதன் இசைவுக்கேற்ப பறக்க, போட்டில் அமர்ந்து பயணம் செய்வது நித்திக்கு இதுதான் முதல் தடவை!

ஒரு குழந்தையின் மனநிலையுடன் தத்தளிக்கும் படகின் அசைவும் அனுபவமும் தரும் அலாதி இன்பத்தில் கண்களுக்கு ஓய்வே தரவில்லை அவள். இமைத்தாளோ என ஐயம் கொள்ள வைத்தாள்.

ரூபனும் வாணியும் கைகோர்த்துக் அருகருகே அமர்ந்திருக்க, நித்தி தனியாக ஒன்றிலும் திரேந்திரன் போட்டை செலுத்திக் கொண்டிருந்தவனுக்கு அருகில் இருந்த சீட்டிலும் அமர்ந்திருந்தான்.

எண்கோண வடிவில் சுற்றிலும் நீர் ஆக்கிரமித்திருக்க, மப்பும் மந்தாரமான அந்த நேரத்துக்கு இதமாய் தழுவி நெளிந்த கடற்றோட்டத்துக்கும் வெய்யிலிலும் நிழலின் குளிர்மை சேர்த்த அழகியலிலும் உள்ளம் கொள்ளை போயிற்று.

போர்த்துகீசியர்களால் கட்டப்பட்டு டச்சுக்காரர்களால் கைப்பற்றப்பட்டு அதன் தனித்துவ பண்புகளால் தக்கவைக்கப்பட்டு இன்றளவும் மிகுந்த கவனத்துடன் பாதுகாக்கப்பட்ட கோட்டை தற்போது சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்கென அதன் தனித்துவம் குன்றாமல் சீரான முறையில் இயங்கிக் கொண்டிருந்தது.

கோட்டையில் கால் பதித்ததுமே வாணியும் ரூபனும் கைகோர்த்த படி வளைத்து வளைத்து ஃபோட்டோ எடுப்பதும் புதிதாக கலியாணமானவர்களுக்கான சீண்டலும் சில்மிஷமுமாக அவர்களின் உலகினில் லயிக்க, தனித்துவிடப்பட்ட நித்திக்கு திரேந்திரனின் துணை தான் கிட்டிற்று.

அவளை ஒரு பார்வை பார்த்தவன் முன்னால் நடக்க, வேறு வழியின்றி அவனைப் பின்தொடர்ந்தாள் நியந்தனா.




ஏழாவது எபி போட்டாச்சு. படிச்சிட்டு உங்க கருத்தை பகிர்ந்துக்கோங்க.
 
Last edited:

NNK-65

Moderator
அத்தியாயம் 08

எண்ணையிட்ட சக்கரம் போல் நாட்கள் வேகமாக ஓடிட்டு. அதற்குள் நான்கு மாதங்கள் நகர்ந்திருந்தது.

அப்போது தான் கண் விழித்திருந்தான் திரேந்திரன். காலைநேர கால நிலைக்கு இதமாக சூடாக வார்த்த இஞ்சித் தேத்தண்ணியை தொண்டைக்குள் நகர்த்தியபடி பால்கெனி சுவரில் இரு கைகளையும் ஊன்றி, இலகுவாக சரிந்திருந்தான். ஒரு கை, வாய்க்கும் சுவருக்கும் நகர்ந்தபடி இருந்தது.

அணிந்திருந்த ஜெர்கினை தாண்டி உள்ளே ஊடுருவிய பழக்கமில்லாத குளிர் மட்டுமே அவனை பாடாய்படுத்தியது, மற்றும்படி மலையகத்தின் கொள்ளை கொள்ளும் அழகு, தூரத்தில் இருந்து பார்த்தபோது மட்டும் இல்லாமல் இங்கு வந்ததில் இன்னுமே அதிகமாய் அவனை கவர்ந்திற்று.

ஆம்! கடந்த மூன்று நாட்களாக நுவரெலியாவில் தான் ஜாகையை தற்காலியமாக இடமாற்றி இருந்தான்.

அவன் இருக்கும் வீட்டைக்கூட நேற்று தான் மொத்தமாக பணம் செலுத்தி, ரெஜிஸ்ட்ரேஷனை முடித்து தன்பேருக்கு மாற்றி இருந்தான்.

இங்கு வீடு விலைக்கு வாங்குவது என்பது குதிரைக்கொம்பு தான். சின்ன சின்ன இடர்பாடுகளை கொண்டே அதன் உரிமையாளர் அவசர தேவை ஒன்றுக்காக மார்க்கெட் விலையை விட குறைந்த விலைக்கு அவனுக்கு கைமாற்ற, ஒரு பார்வையிலே ரெனோவேஷனுக்கு ஆகும் செலவை கணக்கிட்டு அவர் கேட்டதை விடக் குறைத்தே கொடுத்து வாங்கி இருந்தான்.

அவன் வாங்க இருக்கவில்லை. இப்பிடி என பேச்சுவாக்கில் சொல்லியிருக்க, “பேசாம நீ வாங்கிப்போடேன் திரா. இப்ப இல்ல எண்டாலும் ப்யூச்சர்ல யூஸ் ஆகும் தானேடா” கண் சிமிட்டிக்கொண்டு அரவிந்தன் தான் ஐடியா தந்திருந்தான்.

அவன் எதற்கு சொல்கிறான் என தெரியுமே! அவன் கேலியில் சிவந்தவிட்ட முகத்தை மறைக்க தலையை கோதிக்கொண்டான்.

அன்று ஹாம்மன் ஹில் போய்வந்த இரவே பிடித்துக்கொண்டான் அரவிந்தன், சொல்லு விடுறேன் என்று. வாணி கலியாண வேலை முடிந்த அடுத்த இரண்டு நாட்களில் அவனும் ஜிம்மை விஸ்தரிக்கும் பணியை துவங்கியிருக்க, அதற்கு மேலதிகமாக தேவைப்படும் பணத்தைக்கூட லோகானந்தத்திடம் கடனாகவே பெற்றிருந்தான்.

“எப்பிடியும் மூணு மாசத்தில் திருப்பிருவன் அப்பா!” எனச் சொல்லியே கேட்டிருக்க, “என்ன தம்பி கதை இது. அப்பா தாங்கோ எண்டா தரப்போறார்” இந்ராணி சொல்ல, அதையே லோகானந்தம் பார்வையில் வெளிப்படுத்த, இருந்தாலும் மகன் கேட்டபடியே மூன்றுமாத தவணைக்கு குடுத்திருந்தார்.

திராவும் ஒன்றும் சொல்லவில்லை. “வேலையை தொடங்கு. என்னையும் ஹெல்ப் தேவை எண்டா என்னட்ட கேளுடா” என தோளை தட்டிக் கொடுத்திருந்தான்.

அந்த வேலையாக ஓடித்திரிந்தவனுக்கு வாணியின் கலியாணத்தில் வைத்து தான் கண்டுகொண்டதை அவனிடம் கேட்டுத் தெளிவுபடுத்திக்கொள்ள சந்தர்ப்பம் அமையவில்லை என்பதைவிட அதை வெகுகவனமாக தவிர்த்திருந்தான் திரேந்திரன் எனச் சொன்னால் பொருத்தமாக இருக்கும்.

இன்று வசமாக சிக்கிக்கொண்டான். வழக்கத்தை விட நேரத்துடனே பெரு வேலைகள் துரிதகதியில் முடிந்துவிட இரவு நேரத்துக்கே வீடு வந்த அரவிந்தன், காரை பார்க் பண்ணிவிட்டு கையில் சாவியை சுழற்றியபடி படியில் ஏறியவனை ஒரே பிடியாக அமுக்கிப் பிடித்துவிட்டான்.

“ஆரெண்டு சொல்லிப்போறியா இல்லை பெரியம்மாக்கு ஃபோனை போடவா? எது வசதி தம்பி” ஃபோனில் எண்ணை ஒற்றியபடியே நக்கலாக.

அவன் கையிலிருந்த ஃபோனை எட்டிப்பறித்து இதோ மொட்டைமாடிக்கு வந்து சேர்ந்திருந்தான் திரா.

சிலுசிலுவென காற்று சுழன்றடித்ததில் நெற்றியில் புரண்ட சிகையை இருகைகளாலும் வழித்து பின்னால் தள்ளிக்கொண்டு கால்களை அகல விரித்து நின்று ‘உனக்கு இப்ப என்ன வேணும்?’ என்று பார்வை பார்க்க,

ஒரே தாவலில் மொட்டைமாடி சுவரில் இரு கைகளையும் இருபுறமும் ஊன்றிக்கொண்டு அமர்ந்து கால்களை ஆட்டிக்கொண்டே “ஆள் ஆர் எண்டு சொல்லு” என தோளை குலுக்கியபடி.

“ஆகக் கஷ்டமான கேள்வியை கேட்டுப்போட்டு ரியாக்‌ஷன் வேறையா?”

“கதையை மாத்தாதடா தம்பி!”

அவனுக்கும் மறைக்கும் எண்ணம் எல்லாம் இல்லை. ஆனால் தெரியப்படுத்தும் காலம் கனியவில்லை என்றே தனக்குள் வைத்திருந்தவன் ‘கட்டாயம் சொல்லியே ஆகணுமா’ பார்வை வீச,

“கண்ணால கதைச்சது காணும் முதல் மேட்டருக்கு வா” என்ற அரவிந்தனுக்கு ‘மேட்டர்’ என்றதில் எழுந்த சிரிப்பு “எல்லாம் உனக்கு தெரிஞ்ச ஆள் தான்” என்றதும் அப்பிடியே ஆஃப் ஆக, சட்டென கீழிறங்கி அவன் முன்னே வந்து நின்றவன் கண்கள் அவனையும் மீறி பக்கத்து வீட்டை போய்வர, அவன் எண்ணவோட்டத்தை அறிந்து படாரென்று முதுகில் ஒண்டு போட்டிருந்தான் திரா.

“அம்மா!” அலறுடன் முகம் பார்த்தவனை “உன்ர புத்திய செருப்பாலயே அடிப்பன்” சினந்தவன் எட்டி அவன் காலில் உதைத்தான்.

ஒரு காலில் நின்றவனின் மத்த காலிலும் எத்த “டேய்! விசரனாடா நீ? நினைச்சு நினைச்சு அடிக்கிறாய்”

“பின்ன மடிக்க வச்சு கொஞ்சோணுமோ? சின்னப்பிள்ளை அவள். அவளையும் என்னையும் போய்…” ‘ச்சீ’ தலையை உலுக்கிக் கொண்டு “நான் பாத்ததை நீ பாத்திருக்கிறாய் என்ன?” என்று சந்தேகத்துடன்.

“ச்சேசே! நான் அப்பிடிப்பட்டவனாடா தம்பி! நீ பாத்ததால பாத்தன்டா. சத்தியமா வேற ஒண்டுமில்லை” அந்தர்பல்டி அடித்தாலும் “லவ்வ பண்ணாமலே அவளை இப்பிடி பாக்கிறனீ எண்டா லவ்வுறவளை எப்பிடி பாப்பாய்” சிரிக்காமல் கேட்டு வெகு கவனமாய் அவனை விட்டு தள்ளி நிற்க, “அடிங்!” கையோங்கியவன் முறைக்க முடியாமல் தலையை கோதிக்கொண்டு சிரித்து வைத்தான்.

‘நான் பாத்து மட்டும்… அவள் என்னை பாத்திட்டாலும்’ பெருமூச்செறிய,

“என்னடா பெருமூச்செல்லாம் பலமா இருக்கு? அப்ப, அவளிட்ட இன்னும் சொல்லேல்லயா நீ…” என்றவன் மேலும் ஏதோ சொல்லவர

“தயவு செஞ்சு வாயை திறக்காதே, நானே சொல்லிடுறன்” ‘வாயை மூடு’ கட்டை விரலையும் சுட்டுவிரலையும் இணைத்து சைகை காட்டியவன் முன்பு அவன் இருந்த இடத்தில் தாவி ஏறி காலை ஆட்டிக்கொண்டே மேகங்களுக்கு நடுவில் கண்ணாமூச்சி ஆடும் பௌர்ணமி நிலவை ரசனையாக பார்த்துக்கொண்டு “ராதா!” என்றான், பெயருக்கு வலிக்குமோ என.

உடனே ஆர் என தெரியவில்லை எண்டாலும் பிறகு யோசித்துப் பார்த்ததில் “டேய்! அவேன்ர குடும்பத்தில் ஏற்கனவே ரெண்டு சம்மந்தம் முடிச்சாச்சு. இன்னொண்டுக்கு பெரியம்மா ஓம் எண்டு சொல்லுவா எண்டு நினைக்கிறியா” அலறினான் நாதவேணியை அறிந்து.

காரணம் அந்த ராதாவின் குடும்பத்தில் சம்மந்தம் கலக்க அவருக்கு ஆரம்பம் முதலே பெரிதாக ஈடுபாடு இல்லை. அவள் வீட்டாக்களோ பெண் குடுத்து பெண் எடுக்கவே விரும்ப, மகன் கட்டினால் அந்த வீட்டுப்பெண்ணைத்தான் கட்டுவன் என்க, ஆரம்பத்தில் வேணவே வேணாம் என்று அத்தனை முரண்டு பிடித்தார்.

ஆர் பேசியும் பிடி குடுக்கவில்லை. மகளுக்கும் அந்த வீட்டு பெடியனை பிடிக்கவே தான் இளகி வந்தார். அப்போதும் முழுமனதாக இல்லை. இப்போது மூத்த இரு மக்களுக்கும் அங்கேயே பெண் குடுத்து பெண் எடுத்திருக்க, அவர்கள் இருவருமே சுவிஸிலும் நெதர்லாந்திலும் இருக்கினம். அம்மா கூட அக்காவுடனே. குழந்தை பிறப்புக்கென சென்றவர் அங்கேயே இருந்துவிட்டார்.

நாதவேணியின் கணவர் மூன்று மக்களுக்கும் இளம் வயது இருக்கையிலே தவறி இருக்க, பிள்ளைகளே பிடிப்பென இருந்தவர், இவனும் படிப்பதற்கென யாழிலும் கொழும்பிலும் தங்கிவிட, மூத்த மகன் வீட்டுக்கும் மகள் வீட்டுக்கும் என கடந்த ஆறு ஆண்டுகளாக வெளிநாட்டு வாசமே.

“ஒரு தரம் ஊருக்கு வந்திட்டு போங்கோ அம்மா” என்று இவன் சொல்லியும் “அக்காவை தனிய விட்டு வந்து நான் அங்க என்ன செய்யுறது? சொல்லு பாப்பம். பேசாம நீ ஒருக்கா வந்திட்டு போ திரா” என்றிருந்தார். அக்கா மாமாவும் அழைக்க, நெதர்லாந்தில் இருந்து அண்ணனும் கூப்பிட்டுக்கொண்டு தான் இருந்தான்.

முதலில் சுவிஸ் போவதென முடிவு செய்து அதற்கான வேலையிலும் இறங்கியிருக்க, இன்னும் ஒரு மாதத்தில் விசா வருவதாக இருந்தது.

அரவிந்தன் சொன்னதைத் தான் அவனும் யோசித்துக் கொண்டிருந்தான். அவனும் அதை எண்ணித்தானே இன்னும் அவளிடம் கூட மனம் திறக்கவில்லை. இவன் முகம் பார்த்தே “எப்ப சொல்லப்போறாய்” கேட்க,

“சொல்லோணும், என்ன அவசரம்? ஆனா இப்ப இல்லை. சந்தர்ப்பம் அமையட்டும் எண்டு காத்திருக்கன். இங்க தான் பர்ஸ்ட் இயர் படிக்கிறாள். எங்க போவா. பாப்பமே!” என்றான் இலகுவாக.

எல்லாம் சரியாக அமைந்திட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மட்டும் மனத்தில் வியாபிக்க, அமைந்து விடும் என்ற நம்பிக்கையும் அவனை இலகுவாக்கி இருந்தது.

“உன்னை வேணாம் எண்டுடுவாளா என்ன? அம்மாவ மட்டும் சமாளிச்சாச்சரி!” என அரவிந்தனும் அவன் மனமறிந்து இவனை தட்டிக்கொடுக்க, சின்ன புன்னகையுடனே தலையசைத்து ஆமோதித்தான்.

தேத்தண்ணியுடன் நினைவுகளும் அதுபாட்டுக்கு சுற்றுமிடம் எல்லாம் சுற்றி தேத்தண்ணி முடிகையில் அவையும் ஒரு கட்டுக்குள் வந்திருக்க, இடையிடையே எட்டிப்பார்க்க முயன்ற அந்த வாயாடியின் நினைப்பை மட்டும் மிகுந்த கவனத்துடன் தவிர்த்தி்ருந்தான்.

அதுவும் அன்று அரவிந்தன் அவளையும் தன்னையும் இணைத்து கதைத்ததில் அவளை தான் சாதாரணமாக பார்ப்பதை கூட அறவே தவிர்க்கவேண்டும் என்று முடிவெடுத்திருந்தான். மறுநாளே அவனுக்கு கொழும்புக்கு வரும் வேலையும் வர, அதன் பிறகு அசைய முடியாத இறுக்கமே. வேறு எதையும் பற்றி சிந்திக்கக்கூட நேரம் கிடைக்கவில்லை.

இதோ இந்த மூன்று நாட்களாகத் தான் இந்த இலகுத்தன்மையும். நுவரெலியாவின் அழகே அவனை இலகுவாக்கி இருந்தது. பச்சைப்பசேல் என காணும் இடமெல்லாம் கண்ணுக்கு குளிர்ச்சியாய் இறங்க, அருகில் நிற்பவர் கூட தெரியாத புகைமூட்டமாய் பனிமூட்டம் அதன் இன்னுமொரு சிறப்பம்சம்.

அன்று தோட்டத்தொழிலாளர்களை சந்திக்கவேண்டி இருக்க, தயாராகி அவன் காரிலே புறப்பட்டான்.

அவர்களுடன் கலந்துரையாடலை முடித்துக்கொண்டு பகல்சாப்பாட்டையும் அங்கேயே சாப்பிட்டுவிட்டு புறப்பட மாலை நெருங்கிவிட, அதற்குள் வேறு சிறு சிறு வேலைகளையும் முடித்துக்கொண்டான். அவர்களுடன் பேசியதில் அங்கே விலைக்கு வரும் தேயிலை தோட்டத்தைப்பற்றிய செய்தியும் காதுக்கு வர, அதையும் பார்த்துவிட்டே வந்தான்.

அவனுக்கு எப்போதும் ஒரு குறுகிய வட்டத்துக்குள் அடங்கிப் பழக்கமில்லையே! சின்ன ஊசி நூலில் இருந்து வாகன உதிரிப்பாகங்கள், அத்தியவசிய தேவைகளுக்கு பயன்படுத்தும் அத்தனை சாமான்களையும் வெளிநாட்டில் இருந்து மொத்தமாக இறக்குமதி செய்து இலங்கை முழுக்க விநியோகம் செய்து கொண்டிருக்கிறான். இப்போதும் தேயிலை தோட்டத்தை பார்வையிட்டதும் டீ பேக்டரி ஒன்றை தொடங்கினால் என்ன என்ற யோசனையும் ஓட, அது குறித்த சிந்தனை மனதுக்குள் வலம் வர, இரவுணவை வழியில் இருந்த ஹொட்டலில் முடித்துக்கொண்டு யாழ்ப்பாணம் செல்ல லொகேஷனை கூகுள் மேப்பில் தட்டியவன் பயணம் யாழ் நோக்கி!

காலையில் இருந்தே நல்ல மழை வெளுத்து வாங்கத்தொடங்கி இருந்தது.

இரவிரவாக சிணுங்கி கொண்டுதான் இருக்க, “இண்டைக்கு பேப்பர் கிளாஸ் இருக்கு. நீங்க போகோணாம் எண்டதுக்காக எல்லாம் போகாம இருக்கேலாது. அந்த மனுசர் இன்னொருக்கா விளங்கப்படுத்தவும் மாட்டார்.” ஏஎல் பரீட்சைகளுக்கென ஆகஸ்ட் முதல் வாரத்தில் இருந்து விடுமுறை அளிக்கப்பட்டிருக்க, விடுமுறை முடிந்து பள்ளி துவங்கிய நான்கு தினங்களில் பரீட்சை என்பதால் அண்டைக்கு பேப்பர் க்ளாஸுக்கு கட்டாயமாக வரச்சொல்லியிருந்தார் சேர்.

புஷ்பாவதி “மழை உரக்கும் போல இருக்கடி, இண்டைக்கு ஒரு நாள் லீவு போட்டா ஒண்டும் குறைஞ்சிபோக மாட்டாய். சொல்லுறதைக் கொஞ்சம் கேளு” என்றதை காதிலே விழுத்தாமல் பெரிய இவள் போல் குடையை பிடித்துக்கொண்டு நடையை எட்டிப்போட்டிருந்தாள்.

இப்போது பார்த்தால் சடாரென மழை வலுக்க, அந்தப் பக்கமும் போகேலாமல் வந்த வழியால் திரும்பவும் முடியாமல் நடுவில் மாட்டிக்கொண்டு அல்லாட, வானம் வேறு இருக்க இருக்க இரவின் நிறத்தை பூசிக்கொண்டு இப்போதைக்கு நான் வெளிக்கமாட்டன் எனச் சொல்லிக்கொண்டிருந்தது.

‘ஒரு தரமாவது புஷ்பம் சொல்லுறதை கேக்கவேணும்டி நித்தி’ தன்னைத்தானே நொந்து கொண்டாள்.

‘இதுக்குத்தான் அவா அகப்பக்கணையாலயே சாத்துறது. உனக்கு நல்லா வேணும்’ குட்டிக்கொள்ள, அடுத்து என்ன செய்வதென்றே புரியாதநிலை.

மணி ஏழை தான் தொட்டிருக்கிறதா என சந்தேகமே வந்திற்று. கையிலிருந்த புத்தகத்தை நெஞ்சோடு அணைத்துக்கொண்டு குடையை இறுக்கமாகப் பிடித்தபடி நிற்க, முணுமுணுவென பயம் மட்டும் குறையவில்லை.

வெளியே தைரியமாகத் தான் காட்டிக்கொண்டாள். ஆனால் உள்ளூர வியாபித்த அச்சம் நாளாந்தம் பத்திரிகைகளில் காணும் செய்திகள் என அவளை கொஞ்சம் கொஞ்சமாகத் தின்று கொண்டிருந்தது.

விட்டால் பயத்திலே மயங்கி விழுந்திடுவாள் என்ற நிலையில் தான் எங்கிருந்தோ வேகமாக வந்த காரின் ஹெட்லைட் வெளிச்சம் மழையின் ஆக்ரோஷம் தாண்டி அவள் முகத்தில் அறைய, கண்ணை சுருக்கி லேசாக திரும்பி நின்றவளின் முன்பு கிறீச்சிட்டு நின்றது.

இதோ அவள் காரிலும் ஏறி இருக்க, அவன் “மழை வலுக்கும் எண்டும் தெரியாத சின்ன பபா குஞ்சாநீ?” சீறிக்கொண்டிருந்தான் திரேந்திரன்.

ஆரோ எவரோ இந்த மழைக்குள் அகப்பட்டு இருக்கினம் என்று வண்டியை நிறுத்த, நிச்சயம் அவளை எதிர்பார்க்கவில்லை அவன். காற்று வேகமாக அடித்ததில் குடை அவள் கையை மீறி பறந்திருக்க, முழுக்க நனைந்து வெடவெடத்துக் கொண்டு அவள் நின்ற நிலையில் இன்னுமே கோபம்.

“ஏறு” என்றவன் ஒரு அதட்டலுக்கு பயந்து அவசரமாக ஏறி அமர்ந்திருந்தாள்.

நடுக்கம் மட்டும் இன்னும் குறைந்தபாடில்லை. அவள் கையிலிருந்த புத்தகத்தை வாங்கி பின் சீட்டில் போட்டிருந்தான்.

ஏஸியை அணைத்து, துடைக்க டவலை நீட்ட, தயங்கித் தயங்கி வாங்கியவள் முகத்தை, தலையை, கைகளை துடைத்துக்கொண்டு ‘இதை என்ன என்ன செய்ய?’ என்பதுபோல் கையில் வைத்திருந்த டவலையும் அவனையும் மாறி மாறி பார்க்க, “வச்சுக்கிருந்து என்ன செய்ய போறாய்?” என அதையும் பறித்து பின்னால் ஒரு எறி.

புதிதாக அவன் முகத்தில் குடியேறியிருந்த கோபம் முதல் முதலில் அவனைப் பார்த்ததை நினைவூட்ட, “வலுக்கும் எண்டு தெரிஞ்சும் ஆராவது வருவீனமா. பேப்பர் க்ளாஸ் இருக்கு எண்ட படியாலான் வந்தனான். இல்லாட்டி எனக்கென்ன தலைபழுதா? இந்த மழைக்க வந்து அம்புட(மாட்டிக்கொள்ள)” முன்பாதியை வாய்க்குள்ளும் பின்பாதியை சத்தமாகவும் சொல்ல

“வாய் மட்டும் நல்லா இல்லை எண்டா உன்னை எல்லாம் நாய் தூக்கிக்கொண்டு ஓடிரும். அது மட்டும்தான் இருக்கு, மேலுக்கு சரக்கொண்டும் இல்ல” இப்போது சிரித்துக்கொண்டே குட்டியவனை திரும்பி முறைத்தாள் அவள்.

அவன் சிரிப்பில் அவள் இயல்பும் திரும்பி இருந்தது. தன்னை குட்டியவனை அப்பிடியே விட்டால் அவள் நித்தி இல்லையே!

“நான் உங்களிட்ட கேட்டனான். போக வழியில்லாம நிக்கிறன் ஏத்திக்கொண்டு போய் விடும் எண்டு. சும்மா என்ர பாட்டுக்கு நிண்டவள ‘ஏறு ஏறு’ எண்டு கரைச்சல்படுத்தி ஏத்தினது நீங்க!” சூடாக திருப்பிக் கொடுத்தவள் ‘இப்ப வந்து மண்டைக்க சரக்கில்லயாம் மண்ணாங்கட்டி இல்லயாம்’ அவனுக்கு கேட்கட்டும் என்றே சத்தமாக முனுமுனுத்தாள்.

அன்றைக்கே முடிவெடுத்திருந்தாள் அவனை பார்க்கவே கூடாதென்று. அன்று கடல்கோட்டையில் வைத்து அவளை எப்பிடியெல்லாம் ஏய்த்திருந்தான். தனியாக நிற்பதற்கு அவனுடன் போவம் என பின்னால் சென்றதற்கு அவளை வைத்துசெய்ய என்ன செய்யலாமோ அதைக் கச்சிதமாகச் செய்திருந்தானே. கனடாக்கரடியின் முன்னால் வேறு ஒரே அசிங்கமாகப் போயிற்று.

பேயாம்! பூதமாம்! ஆரையோ பலி குடுத்ததால் பின்னேரத்துக்கு மேல் வரும் கன்னிப்பெண்களை அந்தப் பேய் பலி கேக்குமாம்! அடுக்கடுக்காக அவன் சொல்லித் துலைத்ததை அப்பிடியே நம்பிய தன்னை நினைக்க மகா கேவலமாக உணர்ந்திற்றாள் நித்தி.

எச்சிலை விழுங்கிக்கொண்டு சுற்றும் முற்றும் பயப்பார்வை வீசியபடி “உண்மைக்குமா” எனக் கேட்டவளுக்கு அசராமல் ‘ஓம்’ என வேறு தலையை அசைத்திருந்தானே!

இதுவரை இருவரும் சாதாரணமாகக் கூட கதைக்கவில்லை. முதல் தடவை கோபமாக கத்தியதுக்கு பிறகு இப்போது அவனாகத் தான் பேச்சை ஆரம்பித்திருக்க, அதில் தான் அசந்து உண்மையென நம்பிவிட்டாள்.

இப்போதும் அதை நினைக்கையில் ஆத்திரம் எழ, அடிக்கண்ணால் அவனை முறைத்தாள்.

அவள் பார்வை உணர்ந்து கண்கள் சிரிக்க திரும்பிப் பார்த்தவன் அவளுக்கு காட்டாமல் மீண்டும் முன்னால் பார்த்து வண்டியை லாவகமாக வேகமெடுத்தான்.

வெளிய மழைக்கு உள்ளே ஓடிக்கொண்டிருந்த இசை இருவருக்கும் இடையே நிலவிய பெரும் மௌனத்தை நிரப்பிக்கொண்டிருக்க, மழையும் லேசாக ஓயத்துவங்கியது.

கார்மேகங்கள் திரைவிலக்கி வானம் தன்நிறம் பூசி மெல்ல எட்டிப்பார்க்கத் தொடங்கிருந்தான்.

“வீட்டடிய விடத்தேவையில்லை. இவடத்தயே இறக்கி விட்டீங்கள் எண்டா நடந்தே போவன்” அவர்கள் வீடு இருக்கும் தெருவுக்குள் கார் நுழைய, அப்போதுதான் மீண்டும் வாயை திறந்தாள் நியந்தனா.

அவளைக் காதிலே வாங்காமல் முன்னேறியவனை நன்றாக முறைத்தவள் “ப்ச்! அதுதான் சொல்றனான் எல்லா. நீங்க பாட்டுக்கு போனா? நிப்பாட்டுங்கோ முதல். யாரும் பாத்தா பிழையா நினைப்பீனம்.” அடிக்குரலில் சினக்க, மருந்துக்கும் மதிக்கவில்லையே அவளை.

வீட்டை நெருங்க நெருங்க பதற்றமாகியது. சில விசயங்களில் புஷ்பாவதியின் கோபத்தை லேசில் சமாளிக்க ஏலாது. அதை நன்கு அறிந்தவள் “இறக்கி விடுங்கோ… இறக்கி விடுங்கப்பா, ப்ளீஸ் ப்ளீஸ். அம்மா கண்டா பிறகு பேசுவா” கோபம் மறந்து முகம் சுருக்கி கெஞ்சியவள் ஸ்டியரிங்கை பிடித்திருந்த அவன் கைப்பற்றி உலுக்க, இருவருமே அதை உணரவில்லை.

அவள் சொன்னதை அவன் பொருட்டில் கொள்ளவே இல்லை. சரியாக அவள் வீட்டு கடப்பலடியில் சென்று காரை நிப்பாட்டினான். சுறுசுறுவென சீற்றம் பொங்கிற்று அவளுக்கு.

‘சரியான மண்டக்கனம் பிடிச்சவன்!’ கடுகடுத்தவளுக்கு வீட்டு வாசலில் வைத்து அவனோடு தர்க்கம் செய்யும் விருப்பம் இல்லாமல் இறங்க முற்பட, குடையை விரித்தபடி மகளைக் காணாமல் உள்ளுக்கும் வாசலுக்கும் நடந்தே தரையை அளந்து கொண்டிருந்த புஷ்பாவதி கார் சத்தம் கேட்டு வெளியே வந்தவர் கண்ணில் பட்டதென்னவோ காரில் இருந்து இறங்கிய மகள்தான்.

காரில் இருந்தவனும் அவரைக் கண்டுவிட, கதவைப்பிடித்தபடி இறங்கியவளிடம் எட்டி, “இஞ்சப்பார், நுவரெலியாவில் இருந்து இப்ப தான் வாறனான். ரெஸ்ட் வேணும். ஆவூ எண்டு கத்திறேல்ல விளங்கிச்சோ… சத்தம் வராம அழவேணும்” சிரிப்படக்கிய குரலில் சொல்லியவன் விருட்டென காரை ரிவர்ஸ் எடுத்து இந்ராணி வீட்டுக்கு முன் கரையாக நிப்பாட்டினான்.

‘விசரனா இவன்’ போகிறவனையே பார்த்திருந்து விட்டு உள்ளுக்கு செல்ல திரும்பியவளுக்கு அங்கு கோபமாக முறைத்துக் கொண்டு நின்ற அம்மாவைக் கண்டதும் எல்லாம் புரிந்து போயிற்று.

‘நாசமா போச்சு போ’ மானசீகமாக தலையில் கையை வைத்தவள் திரும்பிப் பார்க்க, கொடுப்புக்குள் சிரிப்பை அடக்கிக் கொண்டு அந்த மொக்கன் உள்ளுக்கு செல்வது விழ ‘சனியன் பிடிச்சவன், என்ன வேலையடா பாத்துப்போட்டு போயிருக்கிறாய்? எளியவன்! எளியவன்! என்ர கையில மாட்டினியோ, மவனே கொத்துபரோட்டா போட்டு சாப்பிடுறன் இரும்’ கருவியவளுக்கு இன்று எப்பிடியும் அம்மாவின் கையால் அகப்பக்கணை அடியிருக்கிறது என்று புரிந்து போயிற்று.

நெருங்கிய சொந்தத்தில் இருக்கும் ஆம்பிளைகளோடே அவளை அதிகம் கதைக்கவிட்டதில்லை புஷ்பா. அப்பிடியிருக்க திரேந்திரனோடு ஒன்றாக காரில் வந்தால்…?




எட்டாவது எபி போட்டாச்சு. மறக்காம உங்க கருத்துகளை பகிர்ந்துக்கோங்க🥰

 
Last edited:

NNK-65

Moderator
அத்தியாயம் 09

அன்றைய மழை அவள் வாழ்வில் பெரும் கதகளி ஒன்றை சத்தமில்லாமல் ஆடிவிட்டுச் சென்றிருந்தது. அதை அவளே உணர்ந்திருக்கவில்லை.

“இரண்டு நாள் எல்லோடி நான் லீவு எடுத்தனான் காச்சல் எண்டு… அதுக்குள்ள எங்க கிடந்து வந்து தாக்கிச்சு அந்த எழவு?” சுள்ளென்று அதட்டிய நித்திக்கு மனம் பொருக்கவே இல்லை.

‘நீ இல்ல இல்ல எண்டு சாதிக்கேக்கயே எனக்கு தெரியுமடி பக்கி ஓம் எண்டுக்கு வந்து நிப்பாய் எண்டு’ மிகுந்த கோபத்துடன் கண்ணாலே அவளை முறைத்தாள்.

இரண்டு நாட்களுக்கு பிறகு அன்று தான் பள்ளிக்கு வந்திருந்தாள். மழை வந்து அவளுக்கு காச்சலையும் வரவழைத்து விட்டுப் போயிருக்க, வந்து பார்த்தால் இப்பிடியாம் என்ற செய்தி. வகுப்பு முழுக்கவே பிரசித்தமாகி இருந்தது.

“எல்லாம் உனக்கு தெரிஞ்ச பெடியன் தான்” அவள் முகம் பார்க்கவே சிரமப்பட்டு கைவிரல்களை கோர்ப்பதும் விரிப்பதுமாய் வதனி சின்னக்குரலில் சொல்ல,

காரணமேயில்லாமல் திரேந்திரன் முகம் அவள் மண்டைக்குள் வந்து பிராண்டியது. நக்கல் சிரிப்பொன்றுடன் தோன்றி மறைந்தவனை ‘இந்த எளியவன் என்னத்துக்கு என்ர நினைப்பில் வாறான்’ தலை சிலுப்பி உதறி தள்ளினாள். அவனை நினைக்க இப்போதும் நல்ல கோபம் வந்தது.

அகப்பக்கணையோடு புஷ்பா வீடெல்லாம் துரத்த, அப்பா வந்து எல்லோ அவளைக் காப்பாற்றியது. அவள் கால் இரண்டும் பழுக்காமல் போனதே அவள் யாருக்கோ செய்த புண்ணியமல்லவா…

“இதுக்குத்தான் சொன்னனான் வகுப்பும் வேணாம் மண்ணும் வேணாம் வீட்டை இரு எண்டு. சொல்லுற பேச்சு கேக்கிறவளா உங்கட மகள்?” ஏச்சோடு ஏச்சாக அப்பாவுக்கும் பேச்சுவிழ, பதிலுக்கு எகிற பாய்ந்தவளை கண்ணாலே சமாதானம் செய்து ‘பிழைத்து போகட்டும் விடு கண்ணம்மா’ மகளுக்கு தோதாக தாஜா செய்து அமைதிப்படுத்தியது அவர்தான்.

“இப்ப என்ன, போய் வந்திட்டன் தானே. முடிஞ்சதை என்னத்துக்கு கதைக்கிறயல்.”

“வாயை திறக்கிறேல்ல நீ சொல்லிப்போட்டன். வீட்டை இருந்திருக்க, ஊராக்கள் ஏத்திக்கொண்டு வந்துவிடத் தேவை வந்திருக்குமா…” என்ற புஷ்பாவதிக்கு இன்னுமே ஆத்திரம் அடங்கமறுத்தது.

ஆத்திரமும் கோபமுமாக குஷன் கதிரையில் அமர்ந்திருக்க, அவர் எதிரில் நின்று “நான் என்ன சோட்டப்பட்டா ஏறிக்கொண்டு வந்தன். வெள்ளத்துக்க அம்பிட்டு என்ன செய்யுறது எண்டு விளங்காம நிண்டவள தெரிஞ்ச பெட்டை, மழைக்க நிக்கிறாள் எண்டு பாவம்பாத்து ஏத்திக்கொண்டு வந்து விட்டவர்.” என்றவளை விழி உயர்த்தி தீயாய் முறைக்க

“நீ வீட்டை இருந்திருக்க அதுவும் வந்திருக்காது என்கிறனான். நீ, நான் செஞ்சது பிழையில்லை எண்டுக்கு நிக்கிறது என்னது? கூடக்கூட கதைக்கப்போடா ஓ. அரவிந்தன் எண்டாலும் பரவாயில்லை. இது அவன்ர பெரியம்மாயின்ர மகன். நமக்கு ஆரெண்டு தெரியுமா எவடம் எண்டு தெரியுமா… கூப்பிட்டவன் எண்டா ஏறிக்கு வாறனீயா? என்ன புதுப்பழக்கம்?” ஆடித்தீர்த்து விட்டார்.

என்ன ஒன்று அது இப்போதுவரை ஓய்ந்தபாடு இல்லை.

‘எல்லாம் அவனால வந்தது!’ அப்போதும் அவனைத் தான் கரித்துக் கொட்டினாள். இப்போது அது நினைவுக்கு வரவும் மீண்டும் அவனை கரித்துக் கொட்டத் தொடங்கியிருந்தாள் அண்டைக்கு குறையாமல்.

“அவள்ர மண்டையில் ஒண்டு போடடீ” தலையில் விழுந்த குட்டில் “லூசா நீ” சீறிக்கொண்டு நிகழ்வுக்கு வந்தவளை முறைத்தாள் பக்கத்தில் இருந்த மித்ரா.

“அவளிட்ட கதை கேட்டுப்போட்டு எந்தக் கோட்டையை பிடிக்கப்போனனீ” குறுகுறுவென முகத்தில் வட்டமடித்த பார்வைக்கு “உன்ர பங்களா வாயை மூடு” சைகையால் இரு விரல் அமர்த்தியவள்,

“இவள்ர மண்ணாங்கட்டி கதையை விட்டுப்போட்டு நீ சொல்லு! சொல்லித் துலையடி உன்ர காவியக்காதலை…” வதனியை பார்க்க, எங்கிருந்து வந்ததோ வெக்கம்?

முகம் குழைய, அவள் முகம் பார்க்கவும் கூச்சப்பட்டு கைவிரல்களை வருடியவளை எட்டாவது அதிசயமாகப் பார்ததாள்.

அவளுக்கு தெரிந்த வதனி இவளே இல்லை. எப்பிடி இந்த மாற்றம் என்று நித்திக்கு பிடிபடவும் இல்லை.

“காத்து, கருப்பு எதுவும் அடிச்சதுவோடி தனியா” தனியாகக் கூட்டிச்சென்று வினவ, அவள் தலையில் குட்டிவிட்டுச் செல்ல

“முந்தி எனக்கும் அவனை பிடிக்காம தானடி இருந்தது. உனக்கே தெரியும் எல்லா. இப்ப இப்ப தான் அவன் எவ்வளவு நல்ல பெடியன் எண்டு விளங்கினது.”

“அதெப்பிடி இவ்வளவு காலமும் இல்லாம இப்ப விளங்கினது?”

“குறுக்க குறுக்க கதைக்காதயடி” அவளை அடக்கிவிட்டு

“முன்ன எல்லாம் அவன் பின்னால வந்தா, கிட்டினா கடுப்புத்தான் வாறது. இப்ப அவன் வாறவனா, கதைப்பவனா எண்டு எதிர்பார்க்கத் தொடங்கிட்டன்.” என்றவளுக்கும் தன் மாற்றம் குறித்த வியப்பே! எந்தப் புள்ளியில் இருந்து என்று தெரியாமலே இருவரின் அகங்களும் ஒன்றாய் ஒரு புள்ளியில் இணைந்திருந்தது.

அந்த அவன் கனிகீதன் என்பதே அப்போது தான் விளங்க, “எது அந்த சொறி நாய் கடிச்சவன் போல விசர்ப்பிடிச்சு உனக்கு பின்னால குறைச்சிக்கொண்டு வந்தானே அவனா…” ஒரு காலத்தில் அவள் சொல்லியதுதான். அதையே இப்போது இவள் சொல்லவும் “உன்ர சொத்தையை பேப்பன்” முகத்துக்கு நேரே சீறினாள் வதனி.

அதை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை அவள். ‘பச்சை குழந்தையின்னு பாலூட்டி வளர்த்தேன்,
பாலக் குடிச்சுபுட்டு பாம்பாகக் கொத்துறியேடி’ முழங்கையை நெத்தியில் முட்டுக்கொடுத்து கண்மூடி, இதழ்மடித்து தலையை ஆட்ட, என்னயாம் சோகமா இருக்கிறாவாம்!

அத்தோடு அன்றைக்கு முழுக்கவும் பேசமாட்டன் என முகத்தை வெட்டிக்கொண்டு திரிந்தவளை என்ன செய்தும் சமாதானப்படுத்த முடியவில்லை.

“தெரியாம சொல்லிப்போட்டன், ஏன்டி அதையே பிடிச்சுக்கு தொங்குறாய்?”

“அவன்ர மூஞ்சியும் அவனும். போயும் போயும் அவனுக்காக என்னை பேசுவியா” எனக் கேட்டுக்கேட்டு முறுக்க, “என்ர தப்புத்தான்! கன்னத்தில போடுறன்” மன்னிப்புக் கேட்டதிலே அவள்பாடு போயிற்றுது.

ஒருவழியாக அவளை கெஞ்சிக்கொஞ்சி தாஜா செய்து லஞ்சமாக ஐஸ்பழம் ஒன்றையும் வாங்கி கையில் குடுத்து கரைத்து கதைக்க வைப்பதற்குள் போதும் போதுமென்றாகி இருந்தாள் வதனி.

அத்தோடு விட்டால் அவள் நித்தி இல்லையே!

“அப்ப எவன் உனக்கு பின்னால வந்தாலும் உனக்கு பிடிக்குமாடி தனியா” சீண்ட, ‘இவளே!’ என முறைத்தவள் அவள் பார்வையில் உடனே கன்னத்தில் போட்டுக்கொள்ள ‘அது!’ பார்வை வீசினாள் நித்தி.

அவளுக்கே ‘ஆகத்தான் ஓவரா போறம்’ என்று தோன்றாமலில்லை. ஆனாலும் அவனுக்காக தன்னைப் பேசினாலே என்றதற்காகவே அவளை சீண்ட,

அது அவளுக்கும் புரிந்ததாலயே “இவன் மட்டுமா எனக்கு பின்னால வாறவன்? இல்ல இவனுக்கு முந்தி எந்த பெடியனும் எனக்கு பின்னால வந்ததே இல்லையா. அது எங்களுக்கு தோணுமடி. அவனிட்ட மட்டும் தான் எதிர்பாப்பம். அவன் எங்களிட்ட கதைக்கமாட்டானா? பாக்கமாட்டானா? ஒரு சின்ன சிரிப்பை பிரத்தியேகமாக எங்களுக்கு தரமாட்டானா எண்டு தோணோனும். எனக்கு தோணுச்சி.” என்றவளின் வார்த்தைகளின் பின்னிருக்கும் பிரபஞ்சத்தை ஆளும், அகங்கள் அகம் தொலைந்து அகிலமும் நீயென ஊன் உயிர் உருகி பிணைந்திடும் அம்மெல்லிய உணர்வு வெறும் வாய் வார்த்தையாகவே தோன்றிற்று அவளுக்கு.

“என்னவோ போ. உனக்கு தோணிச்சா சரி விடு. எனக்கெல்லாம் தோணினது எண்டு வையு, அண்டைக்கு தெரியாத்தனமா அந்த மொக்கனோட காருல வந்ததுக்கே இன்னும் பேச்சு முடிஞ்ச பாடில்ல. இதுக்க காதலிச்சன் எண்டா தெரியும்…” என்று சங்கு ஊதுவது போல் செய்து காட்ட, கொல்லென சிரித்தாள் வதனி.

ஆனால் பின்னாளில் அவளிடமே தான் சென்று நிற்கப்போவதும் அவள் தன்னை வாரி அணைத்து தேற்றப்போவதும் காலம் செய்யும் கோலம் அன்றி வேறென்னவோ?

அதற்கு அடுத்துவந்த நாட்கள் இரண்டாம் தவணை பரீட்சையோடும், பரீட்சை முடிய பழையபடி படிப்பு, வகுப்பு என ஒருவித சீராகவே சென்றிற்று.

மேலும் சில நாட்கள் கூடுதலாக கழிந்திருக்க, நாளை மறுநாள் லோகானந்தம் இந்ராணி தம்பதியரின் முப்பதாவது கலியாணநாளென அதைப் பெரியளவில் கொண்டாட திட்டமிட்டனர் அவர்தம் மக்கள் மூவரும்.

“இனிப்போனா எப்ப வருவனோ தெரியாதுடா. நல்ல க்ராண்டா செய்யுவம்” என்ற வாணிக்கு,

“விசா எப்ப வரும் எண்டு சொன்னவரா ரூபன்?” விசாரித்துக்கொண்டே அவளை ஆமோதித்து தலையசைத்தான் அரவிந்தன்.

அண்ணனிடமும் அழைத்து இப்பிடி எனச்சொல்லி ‘என்ன செய்வம்?’ என்று கேட்க, அன்றிரவே சரவணன் குடும்பம் வந்திறங்கி இருந்தனர்.

“என்னப்பு திடீரெண்டு?” என விசாரித்தாலும் பேத்தியை கையில் வாங்கிக்கொள்ள, குறை நித்திரையில் இருந்தவள் முதலில் சிணுங்கினாலும் அப்பம்மா தோளில் வாகாக சரிந்து தூங்கிவிட, “முன்ன நித்திரை கண் எண்டாலும் ஆருட்டயும் இருக்கமாட்டாள். இப்ப கொஞ்சம் பரவாயில்லை என்னம்மா?” மதியிடம் சொல்லி பெருமிதப்பட்டுக் கொண்டார்.

அன்றிரவுச் சாப்பாட்டை குடும்பமாக அனைவரும் இருந்து சாப்பிட, அதுவே மிகுந்த நிறைவாக இருந்திற்று இந்ராணிக்கு. “வாணி போகப்போகிறாள் எண்டுறதை தாங்கேலாம இருக்கு எண்டு தவிச்சுக்கொண்டு இருந்தனான். இண்டைக்கு எல்லாருமா ஒண்டா இருந்து சாப்பிட்டு கலகலத்தது மனசுக்கு நிறைவா இருக்கப்பா” லோகானந்தத்திடம் சொல்லிக்கொண்டார் இரவில்.

நாளை மறுநாள் கலியாணநாள் என்று அவருக்கு நல்லாகவே நினைவு இருக்க, மூத்தவன் குடும்பத்தோடு வந்திருக்க, மகளும் இன்னும் இரண்டு கிழமைக்குள் போய்விடுவாள் என எல்லாம் என்னவோ செய்யப்போகிறார்கள் என தெளிவாக்க, தெரிந்ததுபோல காட்டிக்கொள்ளாமல் இருந்து கொண்டார் லோகானந்தம்.

அவர் நினைத்ததுபோலவே ஞாயிறும் விடிய, பின்னேரம் அப்பா அம்மாவை கோயிலுக்கு அனுப்பிவைத்துவிட, அவர்கள் திரும்பி வந்தபோது வீடு விழாக்கோலம் பூண்டிருந்தது.

இதுபோன்ற நிகழ்வுகளை மேலும் சிறப்பாக்குவதற்கென்றே ‘பார்ட்டீ எல்கே’ என்ற ஈவெண்ட் ப்ளானிங் நிறுவனம் கொழும்பில் இயங்கிக்கொண்டிருக்க, அவர்களை கையோடு அழைத்து வந்திருந்தான் திரேந்திரன்.

அதிகமாக யாரையும் அழைக்காமல் மிக நெருங்கிய சொந்தங்கள், அயலட்டைகள், வாணியின் புகுந்த வீட்டாட்கள், அப்பா அம்மாவின் நெருங்கிய நண்பர்கள் என வெகு சிலரைத் தான் அழைத்திருந்தார்கள். அதுவே கிட்டத்தட்ட ஐம்பது பேர்கிட்ட இருந்தது. இரவுச்சாப்பாட்டுக்கும் ஒருபுறம் ஏற்பாடு நடந்து கொண்டிருந்தது.

அத்தனையும் ஆண்கள் பொறுப்பே! உதவிக்கு வந்த மதி, வாணியை “வந்தாக்களை கவனிக்கிறது மட்டும்தான் பொம்பிளைகளின்ர வேலை” உள்ளேயே விடாமல் அடுப்படிக்கு தடா போட்டனர்.

இரவுக்கு கோழிக்கறியும் இடியப்பத்துக்கு வெளியில் ஆர்டர் குடுத்திருக்க, இன்னொரு பக்கம் பன் பரோட்டா, தேய்காய் சம்பல், கடலைக்கறியும் என குசினி அமளிதுமளிப்பட்டது.

உப்பு, உறைப்பு பாக்கவே பொம்பிளைகளை உள்ளே அனுமதிக்க, “பாக்கத்தானே இருக்கிறம். வாயில வைக்கிற மாதிரி இருக்குமா இல்ல வயித்தால போகிறபோல இருக்குமா எண்டுறத” அவர்கள் அலப்பறை தாளாமல் வாணி கமெண்ட் அடிக்க,

கூடச்சேர்ந்து ஹைபை அடித்த நித்தியை திரேந்திரன் அடிக்கண்ணில் முறைப்பை தேக்கி பார்க்க, பதிலுக்கு அவனை கண்ணாலே வெட்டிவிட்டு நமட்டுச்சிரிப்புடன் வாணியின் தோளில் சலுகையாக சாய்ந்திருந்தாள் நியந்தனா.

பார்க்கவே கூடாதென்று நினைத்திருக்க, தங்களை அறியாமலே ஒருவர் மற்றவரை தங்கள் பக்கம் திருப்பிக் கொண்டிருந்தனர்.

இருவரின் விழிகளும் முறைப்பும் சிரிப்பும் நக்கலும் நையாண்டியுமாய் ஒன்றை ஒன்று சளைக்காமல் மோதிக்கொண்டே இருந்தது.

“நீ வா நித்தி, நாங்க போவம்” வெளியே வந்தவர்களிடம் “மாமாவும் மாமியும் வெளிக்கிட்டாங்களாம் வாணி” என்று மதி வர, பரபரவென ஹாலின் நடுவே போடப்பட்ட வட்டவடிவ மேசையில் டேபிள் க்ளோத் விரித்து பெரிய கேக்கை எடுத்து வந்து வைக்க, வந்திருந்த விருந்தினர்களுக்கும் மெல்லிய வியப்பே!

அவர்களுக்கு பகிர்ந்தளிக்கவென பேப்பர் ப்ளேட்டில் இரண்டு வகை சோட் ஈட்ஸ், லட்டு, அரியதரம், பூந்தி, வாழைப்பழம் என அதுவே ஒரு தொகை. அது முடிய அருந்தக்குடுக்க பலூடா கலந்திருக்க, ஐஸ்கட்டிகளை தட்டிப்போட்டு கப்புகளில் வார்த்தெடுத்து ட்ரேயில் அடுக்கி, பெண்கள் மூவரும் எல்லாருக்கும் பகிர்ந்தளித்துக் கொண்டிருந்தனர்.

கோயிலில் இருந்து வந்தவர்கள் கண்டது கலகலவென கதைத்து சிரித்தபடி அதிர்ந்துகொண்டிருந்த வீட்டைத்தான். உள்ளே நுழைந்ததுமே கைதட்டி ஆர்ப்பரித்து ஆரவாரித்து, கேக்கும் வெட்டச்செய்ய ஆனந்தத்தில் கண்களே கலங்கிற்று. லோகானந்தமும் எதிர்பார்த்தார்தான். ஆனால் இந்தளவில் எதிர்பார்க்கவில்லை.

“எனக்கு நினைப்பே இல்ல. இந்த பிள்ளைகள் அதை ஒரு பெரிய விழாவாவே ஏற்பாடு செய்திருக்கினம். கூப்பிட்டு வந்த எல்லாருக்கும் எங்கட சார்பில் நன்றியை தவிர வேற என்ன சொல்லுறது எண்டும் தெரியேல்ல” உணர்ச்சிவசப்பட்ட இந்ராணியை லோகானந்தம் தோளில் தட்ட, மெள்ள இயல்பாகிற்றார்.

அதன் பின் அவரும் வந்திருந்தவர்களோடு இணைந்துகொள்ள, லோகானந்தமும் தன் நண்பர்களோடு சென்று அமர்ந்தார். இளவட்டங்களோடு வாணி, நித்தி, மதி மூவரும் நிலாவோடு ஐக்கியமாகியிருக்க, அவர்கள் வட்டமாக கதிரை போட்டு அமர்ந்திருந்த மண்டபத்தில், செல்ஃபில் திரேந்திரன் வைத்துவிட்டுச் சென்ற அவன் செல்ஃபோன் மெல்லிசையில் அதிர்ந்திற்று.

“திராண்ணான்ர ஃபோன்!” என வாணி. “அவசர வேலை எண்டு மேல போனவர் மறந்து வச்சுப்போட்டு போயிற்றாராக்கும்” என்க, ஒருமுறை அடித்து ஓய்ந்து மறுபடியும் சிணுங்கிற்று அவள் கைகளில்.

“ஆரோ, என்ன அவசரமோ தெரியேல்ல” என்றவளை மதியும் ஆமோதிக்க, இருவரும் ஒன்றுபோல் நித்தியை பார்க்க, “என்னத்துக்கு என்ன பாக்கிறயல். நான் மாட்டேன்பா. என்ன டார்லிங்?” ‘ம்ஹூம்!’ தலையசைப்புடன் நிலாவைப் பார்த்து ‘ஓம் தானே’ என்க, அவளுக்கு என்ன விளங்கினதோ, குலுங்கிச் சிரித்து அத்தையை ஆதரித்தாள்.

“இவவுக்கு என்ன விளங்கினாம் எண்டுப்போட்டு தலையாட்டுறா” வாணி, மருமகளின் கன்னம் கிள்ள, மதிக்கும் மகளின் பாவனையில் சிரிப்பே.

இரண்டுமுறை அடித்தோய்ந்து மூண்டாவது முறையும் சிணுங்க, டக்கென்று நித்தியின் கையில் திணித்த வாணி, “ஓடு ஓடு கட்டாகுறதுக்குள்ள ஓடிப்போய் குடுத்துப்போட்டு ஓடி வா” என்றிட,

“வேற வேலை இல்லையா எனக்கு! ஏன் உங்கட நொண்ணனுக்கு காது கேக்காதாமா? வந்து எடுத்துக்கு போறதுக்கு என்னயாம்” ‘மாட்டவே மாட்டன்’ என்று நின்று, இறுதியில் வேறுவழியற்று சிடுசிடுப்போடு மாடியேறப்போனவளின் மற்றையக்கையில் அங்கே ட்ரேயில் இருந்த பேப்பர் ப்ளேட்டில் ஒன்றையும் திணித்திருந்தாள் வாணி.

‘வாணிக்கா!’ பல்லைக்கடிக்க, “இனிக் கீழ வருவாரோ தெரியாது. கண்ணேரம் கூடி குசினிக்க இருந்தவர், பசிச்சாலும். குடுத்துப்போட்டு வா, என்ர தங்கம் எல்லா” என்றிட,

‘க்ர்ர்ர்ர்ர்’ பல்லைக்கடித்தவள் தங்தங்கென படி அதிர மேலேறிச் சென்றாள்.

லெப்டொப்பில் யாருடனோ வீடியோ காலில் ஐக்கியமாகி இருந்தவன் மேலே விறாந்தையில் நடந்துகொண்டே கதைத்துக் கொண்டிருக்க, இவளை கவனிக்கவில்லை.

இவளுக்கு அருகில் போவதா வேண்டாமா என்ற குழப்பத்திலே சில நிமிடங்கள் கழிய, அதற்குள் மீண்டும் அலறியது ஃபோன். ‘ஒரு தரம் எடுத்து எடுக்கலேண்டா விடவேண்டியது தானே. தொணதொண எண்டு எத்தின கோல்’ அவளுக்கே விசர் வந்திற்று.

அந்தச் சத்தத்தில் திரும்பிய திரேந்திரன் அவளையும் கையில் ஃபோனையும் கண்டு ஆரென சைகையில் வினவ, வெறும் நம்பர் தான் என்றபடியால் ‘ம்ம்’ உதடு பிதுக்கி தோள்குலுக்கவும்

அழைப்பில் கதைத்துக்கொண்டே அவளருகில் வந்தவன் அவள் கையிலிருந்த ஃபோனை வாங்கி யாரென பார்த்து இங்கே இணைப்பில் இருந்தவர்களிடம் ‘இரண்டு நிமிடம்’ என விரலால் காட்டிவிட்டு ஃபோனை கையிலெடுக்க, இப்போது லெப்டொப் அவள் கைக்கு இடமாறி இருந்தது.

பல்லைக் கடித்தவள் கண்ணாலே அதை எடுக்கும்படி சொல்லி தரையில் காலை உதைக்க, அவளை பொருட்டிலே கொள்ளாமல் இப்போது ஃபோனில் பிஸியாகி இருந்தான் அவன்.

ஒரு கையில் பேப்பர் ப்ளேட். மற்றகை லெப்டொப்பை தாங்கி இருக்க, அவள் விரல்கள் டச்பேடில் உரசுவதும் பின் நகர்வதுமாக டான்ஸ் ஆடிக் கொண்டிருந்தது.

இரு கையும் நீட்டிய படியே இருக்க, பாரம் தாங்காமல் விழுந்திடுமோ என்ற பயத்தில் ஸ்டேடியாக நிக்கோணும் என்ற நினைப்பிலே உடல் தள்ளாட தொடங்க, டான்ஸ் ஆடிக்கொண்டிருந்தவளுக்கு அருகில் சோபா இருந்தும் இருக்கவேண்டும் என்ற எண்ணம் எழவில்லை.

வாய்க்குள் கடுகடுத்துக்கொண்டு அவனையே பார்த்திருக்க, அவள் பார்வையில் திரும்பியவன் நின்றுகொண்டே டான்ஸ் ஆடியவளையும் சோபாவையும் மாறி மாறி பார்க்க, அவன் பார்வை புரியவில்லை.

‘கெதியா முடிச்சுக்கு வராம என்னத்தை பாக்கிறான். எளியவன்! வேணுமெண்டே செய்யுறான்’ கால்வேறு கடுக்க, கால் மாற்றி நின்றுகொண்டாள்.

பார்வை அவனிலே!

வெளிக்காற்றுக்கு நெற்றியில் புரண்ட கேசத்தோடு விரல்கள் நாட்டியமாட, அவன் முகத்தில் நிலைத்த விழிகளை திருப்ப சிரமமாகிற்று. திடுமென பிடிக்கும் மழைபோல அவள் மனத்துக்குள்ளும் பன்னீர்ப்பூக்களாய் மழைக்கால்களின் நடனம்!

அடிவயிற்றுக்குள் சிலந்தி வலைகளின் படரலாய் தளும்பிய ஆர்ப்பரிப்பு நெஞ்சம் முழுக்க பரவ, எச்சிலை கூட்டி விழுங்கியவளின் முகத்தில் முத்து முத்தாய் உணர்வுகளின் தாக்கம் பூவாரம் சூட்டியது வியர்வையின் அரும்புகளாய்…

தனக்குள் என்ன நிகழ்கிறது எனத்தெரியாமலே தன்னைச் சூழ்ந்துகொண்ட மாயவலைக்குள் பிணைந்தவள் பார்வை அந்தக்கணம் அதன் பாதையை சத்தமின்றி மாற்றிற்று பெரும் சோதனையின் முதற்படியாய்!

நண்டூருது நரியூருது போல் மெள்ள மெள்ளமாய் தன்னை நோக்கி வந்து இம்சிக்கும் அவள் பார்வையில் கழுத்தை தேய்த்துக்கொண்டு திரும்பியவன் அசையாத அவள் விழியில் என்ன கண்டானோ? ஒற்றைக் கை அசைத்து அவளை கலைக்க, அசையவில்லை அவள்.

நடந்து அவளருகில் வந்தவன் பேப்பர் ப்ளேட்டில் இருந்து பெற்ரிஸை வாயில் வைத்து கடிக்க, நாசியை மிக நெருக்கமாய் தீண்டிய வாசனையில் சட்டென தரையிறங்கியவள் தன் நினைப்பு போன போக்கில் ‘போயும் போயும் உன்ர டேஸ்ட் இப்பிடியாடி மட்டமாக போகோணும்’ மானசீகமாக தலையில் குட்டிக்கொண்டாள்.

இயல்புக்கு திரும்பியதில் அவள் முகமும் முறைப்பை தத்தெடுத்திருக்க, “கதைச்சு முடிஞ்சு எண்டா முதல் இதை எடுங்கோ. கீழ ஆக்கள் எல்லாம் இருக்கினம். எவ்வளவு நேரம் இங்க நிக்கிறனான்” வெடுக்கென சீற, அதற்குள் வாணியும் மேலேறி வந்துவிட்டாள் அவளைக் காணாமல்.

வந்தவள் அவள் கோலம் கண்டு சிரிக்க, “எல்லாம் உங்களால தான் வாணிக்கா” சினந்தவள் கையிலிருந்து லெப்பை அவன் கைகளில் இடம்மாற்றி, பேப்பர் ப்ளேட்டையும் டீப்போவில் வைத்துவிட்டு உதட்டை சுழித்துக்கொண்டு கீழிறங்கிவிட, “ஏன் திராண்ணா” முறைப்பும் சிரிப்புமாய் கேட்டுவிட்டு வாணியும் பின்னால் சென்றாள்.

நித்தி கீழே வந்தபோது “அத்தை அப்போவே போயிட்டா” என வாணி, சுற்றும் முற்றும் அவள் பார்வை தேடலில்.

இப்போது சில நாட்களாகவே ஆளுக்கு ராகத்தில்லை. முன்பும் ஆஊ என்ற உஷார் இல்லைதான் என்றாலும் இப்போது இன்னுமே! அடிக்கடி சோர்ந்து உக்கார்ந்து விடுவதும், உடல் மெலிவும், காச்சல் கண்ட முகமாக கண்கொண்டு பார்க்க முடியவில்லை புஷ்பாவதியை.

“நான் வரேல்ல நீ போயிற்று வா” மறுத்தவரை “வீட்டுக்க இருந்து முட்டை உட்டது காணும். வெளிக்காத்து பட்டாத்தான் வருத்தம் லேசாகும், பேசாம வாங்கோ” வெடுவெடுத்து விட்டு கையோடு கூட்டி வந்திருந்தாள்.

“தனியா போனவா”

“இல்ல, மாமா தான் வந்து கூட்டிக்கொண்டு போனவர். ஏலாம இருக்காம், படுத்து எழும்பினா சரியாப்போயிடும் எண்டவா” என்ற வாணிக்கும் என்னவோ சரியில்லை என்று தோன்றினாலும் இருக்கும் சூழ்நிலையில் எதையும் கேட்கவில்லை.

அங்கேயே இருந்தாலும் எண்ணம் எல்லாம் புஷ்பாவையே சுற்றிவர, போவதா வேண்டாமா என யோசித்துக் கொண்டிருக்கையிலே மெள்ள மெள்ள அந்தச்சூழல் அவளை தனக்குள் இழுத்துக்கொண்டு கலகலப்பாக்கிவிட, இரவுச்சாப்பாடு தயாராகிற்று என்பதை அறிவிப்பதைப்போல ஹைபிட்சில் பாடலை தெறிக்க விட்டிருந்தான் அரவிந்தன்.

பாட்டும் கூத்தும் கலகலப்புமாக ஜோராக நேரம் கடக்க, புஃபே முறையிலே இரவுணவை ஏற்பாடு செய்திருக்க, அவரவர் அவர்களுக்கு தேவையானதை எடுத்துக்கொள்ள, டெசேர்ட்டாக வட்டிலப்பமும் ஐஸ்க்ரீமும் விநியோகித்தார்கள்.

வாணி, மதியுடனே நித்தியும் உணவை முடிக்க, புதிதாக மனத்தில் புகுந்துவிட்ட உணர்வு அவளை நிலையாக இருக்கவிடவில்லை.

கண்கள் அவளையும் மீறி திரேந்திரனிடமே சென்று நின்றிற்று. முன்புமே அப்பிடித்தான். இப்போது இன்னுமே அதிகமாய் கண்களை பிரித்தெடுக்கவே சிரமப்பட்டுப்போக, அவன் நின்றால், நடந்தால், சிரித்தால், ஏன் அவள் தன்னையே பாக்கிறாள் எனத்தெரிந்து திரும்பிப் பார்த்தபோது கூட அவனையே பார்த்திருந்தாள்.

‘என்ன?’ கண்ணால் கேட்டு புருவத்தை உயர்த்த, தன்னைப்போல் ‘ஒண்டுமில்லை’ என அவள் தலை ஆடிற்று.

எல்லாரும் சாப்பிட்டு கடைசியாகத்தான் ஆண்கள் மூவரும் சாப்பிட அமர, அவர்களே பரிமாறிக்கொண்டு சாப்பிட, வாணி மதியோடு அவளும் அவர்களை பார்வையிடும் தொலைவிலே நின்றிருந்தாள்.

‘என்ன நித்தி?’ அவளுக்கு அவளே கேட்டும் பதில் சொல்லமுடியா குழப்பமே அவளை இன்னும் தடுமாறச்செய்ய, அதில் கூடுதலாய் அவள் கவனிப்புகள் அவன் வசம் அதிகமாயிற்று.

‘ம்ஹூம், இது இது சரியில்ல. என்னவோ நீ வேறொரு உலகத்துக்க நுழைஞ்ச மாதிரி இருக்கடி நித்தி. உனக்கு இது அழகில்ல’ கடிந்து, அவனை பார்க்கவே கூடாதென எடுத்த முடிவுகள் எல்லாம் விளக்கை கண்டதும் ஒட்டிக்கொள்ளும் விட்டில்களின் கதையானது.

தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்தவள் திடுமென கேட்ட இருமல் சத்தத்தில் நிமிர, தன்னைப்போல் அவள் கைகள் தண்ணீ போத்தலை திரேந்திரன் முன்பு நீட்டி இருந்தது.

வாங்கி கடகடவென தொண்டைக்குள் சரித்தவன் அதன்பிறகு தான் தந்தது அவள் என்று கவனித்து போத்தலை காட்டி கண்ணமர்த்தி ‘நன்றி’ சொல்ல, அவள் தலையும் அதை ஏற்றுக்கொண்டதுபோல ஆடிற்று.

அதற்கே நெஞ்சம் படபடத்து வர, கன்னக்கதுப்புகளின் வெக்கத்தின் கோலம் புன்னகையின் பின்னணியில் ஒளிந்தது.

வெளியே முற்றத்தில் தான் இரவுச்சாப்பாட்டுக்கு ஒழுங்கு செய்திருக்க, அவள் இருட்டுக்குள் நின்றதில் அவளின் வெட்கச்சிவப்பு மற்றவர்கள் கண்ணுக்கு தெரியாமலே போயிற்று. ஆனால்… அவளையே கவனித்துக்கொண்டிருந்த இருசோடி விழிகளில் ஒன்று அதை சாதாரணமாகவும் மற்றொன்று யோசனையோடும் கடந்திற்று!



ஒன்பதாவது எபி போட்டாச்சு. உங்க கருத்தை மறக்காம பகிர்ந்துக்கோங்க🥰

 
Status
Not open for further replies.
Top