எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

வேதம் - 03

admin

Administrator
Staff member

அத்தியாயம் - 3

"வெள்ளைத் தாமரை பூவில் இருப்பாள்​

வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்​

கொள்ளை இன்பம் குலவு கவிதை​

கூறு பாவலர் உள்ளத்திலிருப்பாள்.."​

தேனூறும் பைந்தமிழ், நாவில் தோத்திரமாகச் சுழல, அவள் ஒரு தொடை வீணையின் சுரக்காயைத் தாங்க, பாவையின் விரல்கள் நரம்பியற்றி நாதமிசைக்க, ககனம் கண்ட காந்தர்வ கன்னிகை இசையோடு அசைந்தாடினாள்.​

வெண்ணிறத்தில் இளஞ்சிவப்பு பார்டர் வைத்து அதே நேரத்தில் சிறு எம்பிராய்டிங் வேலைப்பாடுகள் செய்யப்பட்ட சாதாரண காட்டன் புடவை, கார்கூந்தல் கரு நாகமென மார்பு தழுவி, அவள் மடியில் மஞ்சம் கொள்ள, குடை போன்ற இமைகள் ஒவ்வொரு மெட்டுக்கும் தாளமிட, செவ்விதழின் பிளவில் அந்தச் சோழனின் வெண் கொற்றக்குடைதனில் வீற்றிருக்கும் வெள்ளை முத்துப்போல் மின்னிய வெண் முத்துப் பற்கள் அவள் இதழோடு நா தொட, மூக்கில் ஒற்றைக்கல் மூக்குத்தி, மங்கிய பொன் நிறத்தில் சிறு காதணி, இசை மீட்டும் அந்த சுந்தரியின் கரங்களில் நான்கே கண்ணாடி வளையல்கள் அசைபோட, அடடா என்ன அழகு. அவள் பிரம்மனின் படைப்பா? இல்லை.. பார்த்து பார்த்து செதுக்கி வைத்த சிலையா? படைத்தவன் மகா ரசிகனே!​

அவள் பெயர் சாத்விகா. தன் பெயரின் பொருளை நிதமும் சுமக்கும் சாந்தமும், அன்பும், பொறுமையும் கொண்ட கலைமகள். எதிர்பார்ப்புக்கள் இல்லாத ஏந்திழை. பிறப்பிலேயே அனாதை என்னும் முகவரி பெற்றவள், வாழ்விலோ பரிதாபமான பக்கங்களை சுமந்து நடமாடும் ஒரு சுகமான சிலுவையவள்.​

தாய் தகப்பனற்ற அவளை, ஒரு காலத்தில் கடவுளின் கருணையால் தாங்கியது இப்போது அவள் அமர்ந்து பாடிக் கொண்டிருக்கும் அன்பு இல்லம். இங்கு அன்புக்குப் பஞ்சமில்லை. ஆனால் ஆகாரத்துக்கு பிறர் தஞ்சம் நாட வேண்டிய நிலையுண்டு. கானம் இசைத்து முடித்தவள் வீணையை உச்சி முகர்ந்து கீழே வைத்த மறுகணம், அவள் இசையில் லயித்திருந்த அந்த இல்லத்தின் தலைவி லட்சுமி அம்மாள், அவளை நாடி வந்து ஒரு வார்த்தை கூட பேசாது அவள் நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டார்.​

“சாத்விகா! அந்த சரஸ்வதி தாய் உன்னில் நிறைவா இருக்கிறாங்க. இசை என்பது ஒருவனை தபஸ்வியாக்கும் ஆழ்ந்த தியானம். அதை எப்போது எல்லாம் நீ பாடுறியோ அப்போ எல்லாம் மனதார ஒரு அமைதியை நான் உணர்கிறேன்டா. இந்த ஆசிரமத்தில் எத்தனையோ குழந்தைகள் தன் எதிர்காலக் கனவைத் தேடி வெளியே போய் இருக்கிறார்கள். அவர்கள் பலர் இங்கே திரும்பி வருவதில்லை. நானும் அவர்கள் துன்பத்தோடு இங்கே மீண்டும் வர வேண்டும் என நினைத்ததே இல்லை. ஆனால், அதில் நீ சிறிது விதிவிலக்கானவள் நேரம் கிடைக்கும் போதெல்லாம் இங்கே வந்து இந்தப் பிள்ளைகளின் தனிமையைப் போக்க முனைவதும், அவர்களோடு மகிழ்ச்சியாக நேரம் செலவழிப்பதும் பார்க்கும் பொழுது, உன்னை நன்றாக வளர்த்துள்ளேன்னு நினைக்க வைக்கிறடா.."​

அவள் செவ்விதழ் சிந்திய அழகான சாந்தம் நிறைந்த புன்னகையில், அந்த 22 வயது பருவ மங்கையைப் பார்த்து, அனுபவம் வாய்ந்த பெண்மணியோ அயர்ந்து தான் போனார்.​

“அம்மா எப்படி நான் இங்கே வராமல் இருப்பது. என் முகவரி இதுதானே. எனக்கும் இவங்களை விட்டால் ஏது உறவு? நான் கலைவாணியா, கலைமகளோ அதெல்லாம் தெரியலம்மா. ஆனா என்றைக்கும் உங்கள் அன்பு சாத்விகா தான். கேள்விக்குறியான என்னோட வாழ்வை மீட்டு அடைக்கலம் கொடுத்தவங்க நீங்க. நான் வளர்ந்து, திரிந்து, சிரித்து, மகிழ்ந்த என் வீடு இதுதான்மா!"​

அங்கு வளர்ந்த பிள்ளைகளில், லட்சுமி அம்மாளுக்கு சாத்விகா மீது அலாதியான பிரியம் உண்டு. எந்த நிலையிலும் தன் சௌகரியத்தை என்னாது, பிறர் நலம் நாடும் அவள் தன்னலமற்ற குணமாகட்டும், தனக்கானதை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளும் அவள் அன்பாகட்டும் அவருக்கு என்றுமே அவள் ஸ்பெஷல்தான்.​

“கண்ணம்மா உன் இந்த தாழ்மையான குணம் தான், உன்னை மற்றவர்களிலிருந்து பிரித்துக் காண்பிப்பது. உன் நல்ல மனதிற்கு, மிகவும் நன்றாக இருப்படா. ஆனால், இந்த அம்மாவின் கட்டளை! நீ இங்க இனி அடிக்கடி வருவதை தவிர்த்துக்கொள். எனக்கு தெரியும், நீ இப்பொழுது புது வேலையில் சேர்ந்துட்ட. என் ஒரு வார்த்தையை நம்பி உனக்கு வேலை கொடுத்தவருக்கு, நீ கண்டிப்பா உண்மையாக இருக்கணும். அது தான் நீ எனக்கு செய்யும் உபகாரம். உனக்கான நேரம் மிகக்குறைவு. ஆக அதை உனக்காகவே பயனுள்ளதாக மாற்றிக் கொள் சாத்வி"​

மென்னகை சிந்தியவள்,​

“அதுல என்னம்மா? இங்க வருவதில் எனக்கு முழுக்க முழுக்க மன நிம்மதியே. ஏதோ நமக்குச் சொந்தமான இடத்தில் இருப்பது போல நான் உணர்வது இங்க மட்டுமே!"​

“எனக்கு புரியுது கண்ணம்மா. ஆனால் என்னால் உன்னை தொடர்ந்து இங்க வைத்துக் கொள்ள முடியல்லைடா. உன்னை இந்த ஆசிரமம் வளர்த்து விட்டு விட்டது. உன்னை மேலும் இங்க வைத்திருந்தால், உனக்கான இடத்தில் இருக்க இடமின்றி தவிக்கும் ஒரு பச்சிளம் குழந்தைக்கு இடமில்லாமச் சென்று விடும்டா. இங்கு இருக்கும் சட்ட திட்டத்தை நான் மதிக்கிறேன் என்பதைவிட, அதைப் பின்பற்றுவதால் இங்கே உள்ள அத்தனை பிள்ளைகளையும் என் குழந்தைகளாக காண்கிறேன் என்பதே சரி."​

“உங்களைப் புரியாமலா,, அம்மா?"​

“ஹா.. ஹா.. அது சரிடா சாத்திவி எப்படி இருக்குது உன் புது கம்பெனி, ஏ.ஜே இன்டஸ்ட்ரியும், உன் முதலாளியும்?"​

முகம் மலர...​

“உங்களுக்கு தெரியாததாம்மா? நான் வேலை செய்றது நம்ம ஜனனிமா கம்பெனியில் தானே? அக்கண்யன் சார் கடுமையானவர் தான். பட் என்னில் மிக அன்பான மனிதர். என்னை ரொம்ப நல்லா நடத்துறாங்க. அங்க நான் மிகவும் பாதுகாப்பா உணர்றேன்."​

“ஹம்.. எனக்குத் தெரியும் சாத்வி. அதனால் தான், உன் படிப்பு முடிந்ததும் ஜனனி கிட்ட பேசினேன். இங்கிருக்கும் பிள்ளைகளில் நீ மிகவும் சாந்தமும், பயந்த குணமும் கொண்டவள். என்ன தான் உன்னைத் தனியாக இயங்க வெளியே அனுப்பினாலும், திருமண வயதில் இருக்கும் பெண் பிள்ளையை வெளியே அனுமதிக்கும் ஒரு தாயின் மனநிலையில்தான், நான் இருந்தேன்.​

உன்னுடையது மட்டுமில்லடா இந்த ஆசிரமத்தில் இருக்கும் அத்தனை பிள்ளைகளின் கல்வியும் திருமதி.ஜனனி அக்கண்யனின் சார்பில் தான் இத்தனை வருடம் இயங்குகிறது. அதுவே உனக்காக உதவி வேண்டி, அவரை நாடிப் போகக் காரணம்.​

நான் நன்கு அறிவேன் சாத்வி. ஏனோ ஜனனிக்கு உன் மீது சிறுவயதில் இருந்து அதிக நாட்டம் உண்டு. அதனாலயே தயங்காது என் கோரிக்கையை ஏற்றுக் கொண்டாங்க!"​

“அவங்க ஒரு வெள்ளை மனம் படைத்த தேவதை. எனக்கும் அவங்கள ரொம்பப் பிடிக்கும். அது மட்டுமில்ல, அவங்க என்னிடம்.. என் உயிரையே கேட்டாலும் கொடுப்பேன். ஏனென்றால் இன்று நான் வாழும் வாழ்க்கை அவங்க போட்ட தானம் தானே!"​

விழி நீர் கசிய உணர்ச்சிவசப்பட்டு உரைத்த அவள் அறிவாளா? அன்றோரு நாள்.. அஸ்தினாபுரம் அவையில் வாக்கில் கட்டுண்ட கங்கையின் மைந்தனின் நிலைதனை, தன் வாழ்வில் ஒரு பொழுதில் கண்டு சிலையாக சமைந்து நிற்பாள் என்று.​

“சரி கண்ணம்மா! உனக்கு ஆஃபிஸுக்கு டைம் ஆகிட்டது. இப்போ கிளம்பினால் தான் சரியாக இருக்கும்."​

“ஆமாம் அம்மா. இன்னைக்கு ஆஃபீஸுக்கு போகணும் தான். ஆனால் அதற்கு முதல் ஜனனிமா வீட்டிற்கு வந்து விட்டு போகச் சொல்லி இருக்கிறாங்க. இன்னைக்கு அவங்க வீட்டில் ஹோமமாம். என்னைக் கண்டிப்பாகக் கலந்து கொள்ளச் சொன்னாங்க"​

என்றவள் ஆசிரமத்தில் அனைவரிடமும் விடைபெற்று தன் ஆருயிர் தோழியான ரம்யாவோடு அவ்விடம் விட்டு நீங்கினாள். போகும் வழி எங்கும் அவளையே பார்த்துக் கொண்டு வந்த ரம்யாவை நோக்கி,​

“என்னடி அப்படி பார்க்கிற?"​

“உண்மையிலயே நீ ஒரு புரியாத வேதம்டி. உன்னைப் புரிந்து கொள்ளவே முடியல்லை. எப்படி உன்னால் மட்டும் இப்படி இருக்க முடியுது?"​

“அப்படி நான் என்ன செய்துட்டேனு நீ சொல்ற?"​

“பின்ன என்னடி? மனுஷனாப் பொறந்தா கொஞ்சமாவது எதிலாவது ஆசை வேணும். உனக்கு அப்படி ஒன்னு இருப்பதாகவே தோனல. எப்படி.. உன்னால எதிலும் எதிர்பார்ப்பே இல்லாம இருக்க முடியுது?"​

“ரம்யா உனக்கு ஒன்னு தெரியுமா? எதிர்பார்ப்பு ஏமாற்றத்தை தரும். அதை விட கிடைப்பதில் மகிழ்வது சாலச்சிறந்தது. இது எல்லாத்தையும் விட தனக்கென ஒன்னு இருந்தால் தானே, எதிர்பார்க்க முடியும், ஏமாந்து போக முடியும்? எனக்குத் தான் ஒன்னுமே இல்லையே!"​

எனச் சாதாரணமாக உரைத்தவளின் வார்த்தையைக் கேட்டவளோ, கலங்கிப் போனாள். அவளைப் பொறுத்தவரை அது அவள் வாழ்வின் நிதர்சனத்தைக் காட்டும் வார்த்தைகள். ஆனால் அருகில் இருப்பவளுக்கோ, தன் தோழியின் அநாதரவு நிலையையும், பெண்ணவள் வாழ்வில் கொண்ட துயரங்களையும், சுமந்த வார்த்தையாகத் தோன்றியது. தன் ஆருயிர்த் தோழியின் கரங்களை இறுகப் பற்றிக் கொண்ட ரம்யாவின் நிலை உணர்ந்த சாத்வியும், அவள் கைகளை தட்டிக் கொடுத்து.​

“என்னடி அப்செட் ஆகிட்டியா?"​

“அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல, சாத்வி. உன்னை ஃப்ரெண்ட்டா அடைய நான் கொடுத்து வைத்திருக்கணும்."​

இப்படி பேசியபடியே அவர்கள் பயணம் ஜனனியின் வீட்டை வந்தடைந்தது. எப்பொழுதும் அந்த வீட்டுக்குள் வரும் பொழுது சாத்விக்குள் தோன்றும் அதே படபடப்பும், ஒரு அசௌகரியத் தன்மையும், ஏனோ அந்த இடத்திற்கு நுழைய தான் தகுதியற்றவள் என்ற எண்ணமும், அவளை இன்றும் வாட்டி வதைத்தது.​

“என்ன சாத்வி?"​

“இல்லையே!"​

“என்ன இல்லையே?" ரம்யா புருவம் உயர்த்த,​

“அது.."​

“ஹூம்.. நான் உன்ன அடிக்கடி நீ இங்கு வரும் பொழுதெல்லாம் கவனித்திருக்கேன். இப்படித் தான் ரெஸ்ட்லஸ்சா இருக்க..."​

“அஅ.. அதெல்லாம் ஒன்னுமில்லையே!"​

“டார்லிங்கு உள்ளதை உள்ளபடி சொல்லும், உன் பளிங்கு முகமே சொல்லுதே! ஏதோ இருக்குதுனு. இதோ என் கையை பிடித்திருக்க உன் உள்ளங்கை எப்படி வேர்த்து இருக்கிறதுனு பார். ஏன்.. இந்த வீட்டைப் பார்த்தா மட்டும் நீ பயப்படுற?"​

சிறிது தயங்கியவாறே கமறிய குரலில்.​

“நாம ஒருத்தங்க கிட்ட தானம் எடுத்து சாப்பிட்டா, மறுமுறை அவங்களைப் பார்க்கும் போது நன்றியுணர்வு மட்டுமில்ல, அவங்களிடம் தானம் பெற்று சாப்பிட்ட நம்ம நிலைமையே அந்த இடத்தில் ஒரு தாழ்வு மனப்பான்மையை உண்டாக்கும். அதுக்காக இவங்களை பிழை சொல்லல்லடி. நான் இங்கு வரும் போதெல்லாம் அதை உணர்ந்து இருக்கிறேன்டி!"​

“என்னடி, இப்படி பேசுற? நீதானே சொன்ன நான் எதிர்பார்ப்பில்லாதவள்னு. பிறகு என்ன அப்படியே இருக்க வேண்டியதுதானே. சும்மா கண்டதை நினைத்து மனசை குழப்பிக் கொள்ளாதே. செய்த சிலை பிழைத்ததுனா, அது சிற்பியின் பிழை தானேயொழிய, சிலையின் பிழையில்ல!"​

“ஹூம்.."​

“என்னடி சலிச்சிக்கிற? என்னைக்காவது ஒரு நாள் உனக்கான ராஜகுமாரன் இந்த மாளிகையில இருந்து கூட வந்து, உன்னைத் தாங்கிக் கொள்ளலாம்."​

என்று ரம்யா கூறிய கணம், ததாஸ்து சொன்ன தேவதைகளின் குரல்கள் இருவரின் செவியிலும் விழவில்லை.​

“ஹம்.. சரி சரி, வா உள்ளே போகலாம்." என்றவள் கண்டிப்பும் கேலியுமாக, தயங்கியவள் கையைப் பிடித்து அழைத்துச் சென்றாள்.​

உள்ளே நுழைந்ததும் அவர்களை எதிர்கொண்ட ஜனனியோ, சாத்வியைக் காணும் பொழுதெல்லாம், தன் மனதுக்குள் தோன்றும் எண்ண அலைகளை கட்டுப்படுத்த முடியாது இன்றும் அதை நினைத்துக்கொண்டாள்.​

‘இந்தப் பெண் தான் எத்தனை அழகு. தேவதை பிள்ளையே தவழ்ந்து வருகிறது போல எத்தனை மென்மையாக நிலத்துக்கு வலிக்காது நடந்து வருகிறாள். ஏன் கடவுளே! என் குடும்பத்தில் இதுபோல ஒரு இன்னொரு குணவதியை சேர்க்காது விட்டு விட்டீங்க. இவள் மட்டும் என் சர்வாக்கு..'​

அதற்கு மேல் அதைப் பற்றி நினைக்கப் பிடிக்காதவளாக,​

“அட வாம்மா சாத்வி, வா ரம்யாமா, இரண்டு பேரும் எப்படி இருக்கீங்க?"​

“நல்லா இருக்கோம்மா. நீங்க எப்படி இருக்கீங்க?"​

“எனக்கு என்னடா? சௌக்கியமா இருக்கேன். அது சரி சாத்வி, உனக்கு இப்பதான் இங்க வர வழி தெரிஞ்சதா? உனக்கு எத்தனை முறை சொல்லியிருக்கிறேன். அடிக்கடி வந்து போன்னு. அதுவும் இன்னைக்கு பூஜைனு தெரிந்தும், லேட்டாதான் வருகிறாய்!"​

“அது.. அதுமா.."​

பயந்தவள் நாவோ மேலண்ணத்தில் ஒட்டிக் கொள்ள,​

பதில் சொல்லத் திணறியவளைப் பார்த்து புன்னகைத்த ஜனனியின் அழகான சிரிப்பில், ஒரு கணம் மயங்கி மறுகணம் தெளிந்து அவளை நோக்கி தன்னையுமறியாமல்,​

“உங்களோட இந்த சிரிப்பு ரொம்ப அழகா இருக்குமா!"​

“ஹா.. ஹா..!" என்ற கம்பீரச் சிரிப்பில் சிறிது பயந்து தான் போனாள்,​

அந்த சுந்தரி. சாத்வியின் பயந்த முகம் கண்ட ஜனனியோ,​

“அத்தான், இப்படியா திடீர்னு சிரிக்கிறது? இங்கே பாருங்கள்! சாத்வியோட முகம் பயத்தில் வெளிறிட்டது."​

“அட என்னம்மா சாத்வி? உன் ஜனனிமாவை விட நான் அவ்வளவு மோசமாகவா இருக்கிறேன். என் சிரிப்பு என்ன கேட்பதற்கு அவ்வளவு நாராசமாக இருக்குது?"​

“அய்யோ! அப்படியெல்லாம் இல்லை சார். நா.. ன் நான் சும்மாதான்.."​

“அது சரி வாசலிலயே நின்னுட்டு எங்களோட பேசப் போறியா? வாங்க உள்ளே போலாம்."​

என்று இருவரையும் அழைத்துக்கொண்டு உள்ளே சென்றாள். பின்பு சிறிது நேரத்தில் பூஜை நிறைவடைய, காலை ஆகாரம் பரிமாறப்பட்டது. ரம்யா உணவுண்ண, சாத்வி உணவைத் தவிர்த்து விட்டாள்.​

காரணம் கேட்ட ஜனனியிடம்,​

“இல்லம்மா. இன்று இங்க வர வேண்டி உள்ளத மறந்துட்டு, ஹாஸ்டல்ல எனக்கான சாப்பாட ரூமில எடுத்து வைக்கச் சொல்லிட்டேன். இங்க சாப்பிட்டா அதை சாப்பிட முடியாது. அந்தச் சாப்பாடும் வேஸ்ட் ஆகிவிடும். சாரிமா. இன்னொரு நாள் வந்து கண்டிப்பாக சாப்பிடுறேன்."​

“சரிடா கண்ணம்மா" என்றவர் மீண்டும் அவளிடம்.​

“இப்போ ஹாஸ்டல் போயிட்டு தான், ஆஃபீஸ் போவியா?"​

“ஆமாம்மா."​

“அப்போ, உங்க சார்க்கு சாப்பாடு அனுப்பும் பொழுது, உனக்கும் ரம்யாவுக்கும் சேர்த்து இன்னைக்கு மதிய உணவு அனுப்புறேன்."​

என்ற வார்த்தையில் பெண்ணவள் விழிதனில் சிறிது நீர் மிதக்கவே செய்தது.​

அக்கண்யன் எனும் அசகாயசூரனின் இதயத்துக்கு இனியவள், பணக்கார சாம்ராஜ்யத்தின் மகாராணி, ஐந்து முத்துக்களை ஈன்ற மாதரசி, குடும்பத்துக்கு உள்ளேயும் வெளியேயும் அனைவராலும் புகழப்படும் மென்மையான பெண். ஆனால், தன் நிலையில் சிறிதும் கர்வம் இன்றி, அவர் உதித்த எளிமையான வார்த்தைகளில் சிறியவள் விரும்பியே நெகிழ்ந்து நின்றாள்.​

மெலிதாக தலையை ஆட்டியவள், வாழ்வின் வயிற்றுப் பசியை இதுவரை யாரும் முனைப்போடு போக்க முயன்றதில்லை. பாலூட்ட அன்னை இருந்தாளா, அல்லது அவள் பசியறிய அன்னை இருந்தாளா என்று இரண்டையும் அறியாதவள். தனக்காக அன்னமிட நினைக்கும் இந்தப் பெண்ணின் மாண்பில், மங்கையவள் மயங்கி நின்றாள்.​

“என்ன சாத்விகா, அப்படியே நின்னுட்ட?"​

“அது ஒன்னும் இல்லைமா. எனக்கு நேரம் ஆகிட்டது நான் போயிட்டு வாரேன்."​

“சரிடா கண்ணம்மா. நேரம் கிடைக்கும்போது வா."​

“சரிமா." அவள் கிளம்பவும்.​

“என்ன பேபி? போகும் சாத்விய இப்படி கண்ணசைக்காம பார்த்துக் கொண்டிருக்கிற?"​

“அத்தான் அந்தப் பெண்ணை பார்த்தீங்களா, எத்தனை மென்மை. அவளைப் பார்க்கும் போதெல்லாம் ஏனோ என்னை அறியாமல் என் மனம் அடிச்சுக் கொள்ளுது. சாப்பாடு வேண்டாம் என்கிறதக் கூட எவ்வளவு அழகாக மறுத்தால்னு பார்த்தீங்களா?"​

“ஆமாம் பேபி, நானும் கவனிச்சேன். ரொம்ப நல்ல பெண். அவள் எதிர்காலத்திற்கு நாமும் அவளுக்குத் துணையாக இருக்கணும்."​

“கண்டிப்பா அத்தான்."​

என்றவள் மனதுக்குள் பல எண்ண அலைகள். உன்னை அறியாதவனா நான், என எண்ணம் கொண்ட அவள் மணாளனோ,​

“வேண்டாம் பேபி. அதை எல்லாம் நினைக்காத, சரி வராது. அவ வெகுளிப்பெண் பேபி!" குரல் இறுக்கமாக வர..​

“எனக்கு புரிது அத்தான். என்ன இருந்தாலும் தாய் மனம். அதுதான் இப்படி எண்ணத் தோனுது."​

என்றவள் ஆழ்ந்து ஒரு பெரு மூச்சை வெளியிட்டு...​

“அத்தான் சர்வா?"​

“வருவான்..!"​

இங்கு ஜனனி இல்லத்தில் இருந்து புறப்பட்டவர்கள் நேராக வந்தது கொழும்பு மத்திய பிரதேசத்தில் அமைந்திருக்கும் பெண்கள் விடுதிக்கு. அது சற்றே நடுத்தர வசதிகளோடு கூடிய விடுதி. காலை ஆகாரம், இரவு ஆகாரம் இரண்டும் உண்டு. அதில் முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு என இரு பிரிவுகள் உண்டு. முதல் வகுப்பை தேர்வு செய்பவர்களுக்கு விசேட உணவுகள் சற்றே கூடிய கட்டணத்திலும், இரண்டாம் வகுப்பில் உள்ளவர்களுக்கு மிகச்சாதாரணமான உணவு குறைந்த கட்டணத்திலும் வழங்கப்படும். ரம்யா கொழுப்பு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்தில் அறிமுகமான நெருங்கிய தோழி.​

கல்லூரிப் படிப்பை முடித்துக் கொண்டவர்கள் ஒரே கம்பெனியில் வேலைக்கு அனுமதிக்கப்பட, ரம்யா தன் சொந்த ஊரான கண்டியிலிருந்து வேலைக்கென வந்து இங்கே இவளோடு தங்கிக் கொண்டாள். ஆனால் வசதியான குடும்பத்தை சேர்ந்த பெண்ணான ரம்யாவுக்கு சாத்வியின் எளிமை மிகவும் பிடித்துவிட்டது.​

“டி.. என்னடி உனக்கு இந்த ஹாஸ்டல் சாப்பாட்ட சாப்பிடுறதுல அவ்வளவு ஆசையா என்ன? தினமும் இங்கயே சாப்பிட வேணும்னு தலையெழுத்தாடி. அங்கயே சாப்பிட்டு இருக்கலாம் தானே. நான் சாப்பிடலையா என்ன? ரொம்ப ருசியாக வேறு இருந்தது."​

“அதுக்கு என்ன ரம்யா? அதான் நமக்கும் மதியத்துக்கு அனுப்புறதா சொன்னாங்களே அப்போ சாப்பிட்டா ஆகாதா."​

“அதுக்குனு இன்றைக்கும் உனக்கு கொடுக்கப்படும் சிகப்பரிசி சோற்றையும், தேங்காய் சம்பலையும் சாப்பிடனும்னு தலையெழுத்தாடீ. என்னமோ நம்ம ஹாஸ்டல்ல தினமும் ஒரு மேனுவை ஃபலோ பண்ணுவது போலதான் சலிச்சிக்கு.ற"​

துளி சிரிப்பை உதிர்த்தவள், அலுவலகத்துக்கு தன்னை தயார் செய்துகொண்டு அவளுக்காக வைக்கப்பட்டிருக்கும் உணவு கோப்பையை மூடியிருந்த ப்ளேட்டை சற்று அகற்றிப் பார்த்தாள். அதில் துருவிய தேங்காயில் செய்திருந்த சம்பலும், உள்நாட்டில் விளைந்த குத்தரிசி சாதமும், ஒரு குழம்பும், ஒரு துண்டு ஊறுகாயும் இருந்தது. சிறிது பழுதடைந்த மணம் வீசிக் கொண்டிருந்த சம்பலை கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாது அதை மட்டும் எடுத்து குப்பையில் போட்டவள்,​

சோற்றில் சிறிது குழம்பு இட்டு நன்றாக பிசைந்து அருகில் இருந்த ஊறுகாயோடு அருந்தத் தொடங்கினாள்.​

அதைப் பார்த்துக்கொண்டிருந்த ரம்யாவோ அதீத கோபத்தோடு பொறிந்து கொண்டிருந்தாள்.​

“அடியே அறிவு கெட்டவளே! அது தான் கெட்டுபோன மனம் அடிக்குதே. அதைப் பேசாமல் கொட்ட வேண்டியதுதானே. ஒருவேளை கடையில் சாப்பிட்டால் ஆகாதா, இப்படி அழுகியதை எல்லாம் சாப்பிட்டு நோயை இழுத்துக் கொள்ள வேண்டுமா? என் சாப்பாட்ட தந்தாலும், இல்லை ரம்யா, ஒரு நாள் பழகிவிட்டா நாக்கு அந்த டேஸ்ட்டையே கேட்கும்னு மறுத்துவிடுறது. இல்லைனா என்னையே கன்வின்ஸ் செய்து விடுறது.​

சரிதான், உன்னை டிஸ்டர்ப் செய்யக் கூடாதுனு பார்த்தா இப்படி எதையாவது அப்பப்போ செய்து வைக்கிற. ஒரு வேளை சாப்பாட்டை வீசினால் தான் என்னடி?"​

என்று ஆதங்கமாகக் கேட்டவளை அமைதியாகப் பார்த்தவள், மிக நிதானமாக உணவு உண்ட இடத்தை துப்புரவு செய்துவிட்டு, தன் கை கால்களை கழுவிக் கொண்டு,​

 

admin

Administrator
Staff member

“ரம்யா இந்த உணவு எனக்கானது. இதை வீசுறதில் ஒன்னும் முழுகிடுறதில்லை தான். ஆனால் யுத்தத்தில் செல்லடிபட்டு வன்னியில நான் தங்கியிருந்த அனாதை இல்லத்தில் உறவுகளை இழந்து ஐந்து வயது சிறுமியாக சுற்றிக்கொண்டிருந்த போது..​

ஒருவேளை உணவுக்காக ஒவ்வொரு வீடு வீடாக தட்டிக் கையேந்தியது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. ஒரு பருக்கை சோறுக்காக ஒரு நாள் முழுவதும் வயிற்றில் ஈரத் துணியை கட்டிக் கொண்டு அலைந்திருக்கிறேன். ஆம் இந்த உணவில் ஒரு பகுதி கெட்டுவிட்டது தான் ஆனால் எனக்கொன்றும் இது புதிதில்லைடி. நான் மூன்று நேரமும் கெட்டுப்போன உணவுகளை குப்பையிலிருந்து எடுத்துண்டு என் பசியை ஆற்றிக் கொண்ட நாட்களும் உண்டு. அப்போது என்னை ஆதரிக்க யாரும் இல்லை. என்னைப் போன்ற பல ஈழத் தாயின் பிள்ளைகள் யுத்தத்தால் மாண்டு போன சமயமது. அந்த ஐந்து வயதில் என்னால் யாரிடம் போய் உதவி கேட்க முடியும்? எனக்கு யாரைத் தெரியும்?​

உனக்கொன்று தெரியுமா ரம்யா? நான் தங்கியிருந்த வன்னி ஆசிரமத்தில் செல்லடி பட்டதில் பல பிள்ளைகள் இறந்து போனாங்க. அந்த சமயம் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது நான் அணிந்திருந்த ஆடைகளிலும் தீப்பற்றிக் கொண்டது. எங்கள் ஆசிரமத்தில் வேலை செய்யும் முதிய பெண்மணி, தன் உடம்பில் ரத்தம் ஒழுக ஒழுக தீப்பற்றிய என் ஆடையை அகற்றிய பின் தான் உயிர் இழந்தாங்க. அப்போது நான் என் அருகில் இறந்து கிடந்த ஒரு அக்காவின் ட்ரெஸ்சை தான் கழட்டிப் போட்டுக்கொண்டேன். இந்த வறுமையும் வலியும் எனக்கு ஒன்றும் புதிதில்லைடி.​

ஏன் இங்க கொழுப்பு ஆசிரமத்துக்கு வந்த பின்பும் எத்தனை நாள் ஒரு பிடி சோற்றுக்கு நான் ஒரு நாள் முழுவதும் வாசலையே பார்த்துக் கொண்டு காத்திருப்பேனு தெரியுமா? யாராவது விருந்தினர்கள் வரமாட்டாங்களா ஒரு வேளையாவது சுடு சோறு உண்ண மாட்டோமானு. என்னால் அதையெல்லாம் மறக்க முடியாது ரம்யா.​

நீ கூட அடிக்கடி ஏன்டீ மூன்று வேளை சாப்பாடும் நேரத்துக்கு சாப்பிட்டு விடுகிற ஒரு வேலையை கூட ஸ்கிப் பண்ணுவதில்லைனு என்னை கிண்டல் செய்வியே. அது ஏன்னு தெரியுமா? எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து ஒரு முழு நாளில் மூன்று வேளையும் உணவு உண்டதே மிக அரிது. வறுமையில் கொடிது இளமையில் ஏழ்மை! அதை முழுதாக வாழ்வில் அனுபவித்தவள் நான்.​

பசி! ஹம்.. அதை நன்கு உணர்ந்ததால தான் எந்த வேலையும் உணவு உண்ணாது இருப்பதே இல்லை. ஏனோ.. மீண்டும் அந்தப் பசியை அனுபவித்து விடுவனோனு ஒரு பயம்!"​

அவள் கூறியதைக் கேட்டுக் கொண்டு இருந்தவள் தாவி அணைத்து “ஐயோ..ஆ.. சத்தியமா முடியல சாத்வி. ரொம்ப வலிக்குதுடி! நீ உன் வேதனையச் சொல்ல சொல்ல தாங்க முடியல. எப்படி இத்தனை ரணத்தை அனுபவித்த பின்னும், அதை சாதாரணமாகச் சொல்கிற?"​

என விடாது கதறியவளை அணைத்து ஆறுதல் படுத்துவதற்குள், சாத்வி படாதபாடு பட்டுவிட்டாள்.​

“சொல்லாத! மறுபடியும் இதை சொல்லாத. என்னால் தாங்க முடியலடி. நான் ஏதோ சாதாரண விஷயம்னு இத்தனை நாள் உன்னை கேலி செய்தேன். ஆனால் உன் ரணம் பெரிது. அதன் வடுவும் பெரிது. என்னை மன்னிச்சுடுடி. நான் கண்டிப்பா இனி உணவு விஷயத்தில இதை ஃபாலோ செய்வேண்டி. ப்ராமிஸ் உணவை நான் வீசவும் மாட்டேன்டி. ஐ அம் வெரி சாரிடி"​

“அச்சோ! என்ன ரம்யா இது? சின்னப் பிள்ளை மாதிரி? உனக்கு ஒன்னு தெரியுமா? உன்னை நான் சந்தித்த நாளிலிருந்து, சிரிக்காத நாளே இல்லை. என்னை அதிகமாய் சிரிக்க வைத்தவள், நீ தான். நீயே அழலாமா?"​

“போடி இப்படியே சொல்லிக் கொண்டுரு"​

தோழியின் மனநிலையை மாற்றும் பொருட்டு,​

“சரி, சரி வா கிளம்பு. ஆஃபீஸுக்கு போகலாம் சாயங்காலம் அப்போதுதான் சீக்கிரமே வரமுடியும். இல்லைனா, இன்னைக்கும் வார்டன்ட்ட திட்டு தான் வாங்கணும்."​

என்றவள் தன் தோழி சகிதம் ஆஃபிஸுக்குப் புறப்பட்டாள். இங்கே பெண்ணவளோ ஒருபிடி அன்னத்தையும் அமிர்தமாக எண்ண,​

அவள் மனதைக் கவரப் போகும் மாயவனோ உணவை ருசிக்கவோ, புசிக்கவோ அல்லாது மொத்தத்தையும் குப்பைக்கு இரையாக்கி, காமம் எனும் சொர்க்கத்தில் மூழ்கி இருந்தான்.​

ஆனால் அவன் வாழ்வை காதலெனும் வர்ணம் மாற்றி அமைக்கும் வேளையில் அவன் முற்கால நிந்தனைகள், எதிரியாக மாறி அந்த வித்தகனுக்கும் சித்தம் துடிக்க வைக்கும்.​

வேதம் சொல்லும் வேல் விழியால் வினை களைவாளா? அல்ல வெறுப்பாளா? தொடரும் கர்மாவை உலகில் வெல்பவன் யார்?​

 

santhinagaraj

Well-known member
சாத்விக்காவோட வறுமையை படிக்கும் போது ரொம்ப கஷ்டமா இருக்கு 😔
இப்படிப்பட்ட அமைதியும் கஷ்டமும் நிறைந்த ஒரு பொண்ணுக்கு அப்படிப்பட்ட கர்வமும் திமிரும் அடங்கிய ஒருவன் ஜோடியா இவர்கள் வாழ்க்கை எப்படி இருக்க போகுது??
 

admin

Administrator
Staff member
சாத்விக்காவோட வறுமையை படிக்கும் போது ரொம்ப கஷ்டமா இருக்கு 😔
இப்படிப்பட்ட அமைதியும் கஷ்டமும் நிறைந்த ஒரு பொண்ணுக்கு அப்படிப்பட்ட கர்வமும் திமிரும் அடங்கிய ஒருவன் ஜோடியா இவர்கள் வாழ்க்கை எப்படி இருக்க போகுது??
காதலுக்கு சில பக்கங்கள் உண்டுகா அது பதில் சொல்லும் இந்த கதைல..
 

shasri

Member
Sathvika romba arumaiyana character ❤❤ avai appavay sonnaga kodithinum kodithu illamail varumai nu thats true tha illa 😔 sathvi paavam romba kasta patturuka padikavay kastama iruku sis 🥺🥺
 

admin

Administrator
Staff member
Sathvika romba arumaiyana character ❤❤ avai appavay sonnaga kodithinum kodithu illamail varumai nu thats true tha illa 😔 sathvi paavam romba kasta patturuka padikavay kastama iruku sis 🥺🥺
அவளோட எல்லா கேள்விக்கும் பதில் உண்டு
 
Top