எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

வேதம் - 05

admin

Administrator
Staff member

அத்தியாயம் - 05

ஒரு பொன்னந்தி மாலையில்

“சார் கூப்புட்டீங்களா?"​

“எஸ் சாத்விகா."​

என அக்கண்யன் தொனி, வழமை போல இறுக்கமாக வந்தது. தொழில் இடத்தில் அவன் அக்மார்க் தொழிலதிபனே!​

“நாம ஒரு இன்டெர்னஷனல் செம்பியன் ஈவெண்ட் ஒன்னை கோ-ஆர்டினேட் பண்றது தெரியுமா சாத்விகா?"​

“ஆமா, தெரியுமே சார்"​

அவளுக்கு எவ்வாறு தெரியாமல் போகும். ஏஜே குரூப்ஸில் இருக்கும் ஒவ்வொரு கிளைகளிலும் இந்த சாம்பியன்ஷிப்பை பற்றின போஸ்டர்களை கண்டுள்ளாளே. அதிலும் அந்த ஒருவனின் முகம் மட்டும், பெரிதாக தாடிக்குள் மறைந்து இருப்பதை, ஏனோ பயத்தோடு ஒற்றைக் கண்ணை மூடி, மற்ற அரைக் கண்ணில் பார்க்கும் கோமாளி வேலையையும், இந்த ஒரு மாதமாக செய்து கொண்டு தானே வருகிறாள்.​

“எஸ்... அது சம்பந்தமாகத் தான் கூப்பிட்டேன். மிஸ்டர் ரகுவரன் தான், நம் ஈவன்ட் மேனேஜ்மென்ட் குரூப்ட அசிஸ்டன்ட், ஹெட். அவரோட இன்னும் பலர் இணையப் போறாங்க. சோ கொஞ்ச நாளைக்கு இந்த டெக்ஸ்டைல் ஃபீல்டுல இருந்து, அந்த செக்ஷனுக்கு உங்களையும், ரம்யாவையும் சேஞ்ச் பண்றேன்."​

என்றதும், ரம்யா என்னமோ வெகு சாவகாசமாக இருந்தாள். ஆனால், சாத்விகா மிகவும் பதட்டம் அடைந்து விட்டாள். இந்த குத்துச் சண்டை ஒரு முரட்டுத்தனமான மிக்ஸ்மாசிலாஸ் போன்றது என்பதை அவள் அறிவாள். ஏனோ அமைதிப் பேர்வழியான அவளுக்கு, இந்தச் சண்டை மனதில் ஒப்பவில்லை. மேலும் இவர்கள் தொழில் தொகுதிகள் அத்தனையிலும் காட்சியளிக்கும் அந்த ஒற்றை ஆணின் ஆறடி உருவ போஸ்டர் சற்று பீதியைக் கிளப்பியது. அதிலும் ரகுவோடு வேலை என்பதில் பதட்டம் சொல்லாமல் கொள்ளாமல் ஒட்டிக் கொண்டது. அவளுடைய பதட்டத்தை கூர்ந்து பார்த்த அக்கண்யன்,​

“சாத்வி, யூ மஸ்ட் வேர்க்"​

மீண்டும் அழுத்திச் சொல்ல, தன் பதட்டத்தை உள்ளுக்குள் புதைத்தவள்,​

“கண்டிப்பாக சார் செய்கிறோம்."​

“வெல்! மிஸ்டர் ரகு உங்கள கைட் பண்ணுவாரு. அண்ட் உங்களோட நிறைய பேர் இணையப் போறாங்க. ஈவன்ட்ல பார்ட்டிசிபேட் பண்ற காம்படீடர்ஸ், அவங்களோட கோச், அசிஸ்டன்ஸ், அவங்களோட நியூட்ரிஷியன்ஸ், போட்டியாளர்கள் உடைய ஸ்பான்சர்ஸ், அவங்களோட அட்வர்டைஸ்மென்ட் கம்பனீஸ் ஸ்டாப்ஸ், இப்படி அத்தனை பேருக்கும் ஹோட்டல் தாஜ்ல ரூம் புக் பண்ணி இருக்கு. டே டு டே அந்த ஷெட்யூல்ஸ் எல்லாத்தையும் கரெக்டா ஃபாலோ பண்ணிடுங்க. அவங்களுக்கான டயட் ஃபுட் எல்லாம், அவங்க டாக்டர்ஸ் அண்ட் நியூட்ரிஷியன்ஸ் நாலேஜ் இல்லாம பைனலைஸ் ஆகக் கூடாது. ஒரு சின்ன விஷயம் கூட, மே பி அலர்ஜிக் சென்ஸ் இருந்தா, அது மிகப் பெரிய பாதிப்பை நமக்கும், நம்ம கம்பெனிக்கும் கொண்டு வரும். புரியுதா?"​

அக்கண்யனின் கூற்றை மிக சிரத்தையோடு இருவரும் நோட் பண்ணிக் கொண்டார்கள். இலங்கை முழுவதும் இந்தப் பேச்சே பரவலாகிக் கொண்டிருக்கிறது. இதன் முக்கியத்துவத்தை இவர்கள் மட்டும் அறியாது போய் விடுவார்களா? அத்தனை விபரங்களையும் சேகரித்துக் கொண்டு தங்களுக்கான வேலையை அக்கண்யன் ஆலோசனையோடு பெற்றுக்கொண்டு, இருவரும் அறையை விட்டு வெளியேற..​

அதே நேரம் அக்கண்யன்,​

“சாத்வி!" உரக்க அழைக்க, அவன் சத்தத்தில் சட்டெனத் திரும்பி நின்றவளை, தன் குத்தீட்டிப் பார்வையில் நோக்கியவன்,​

“நான் ஏன் உங்கள இந்த டிபார்ட்மெண்ட்ல ஜாயின் பண்ணச் சொன்னேன்னு தெரியுமா?"​

அவள் இல்லை என்று தலையசைக்க,​

“ஜனனி!" என்றான் பதிலாக. அதில் புரிந்தது என்பதைப் போல், சாத்விகா மீண்டும் தலையசைக்க, அவன் மெல்லிய புன்னகையோடு,​

“ஜனனிக்கு நீயும் இந்த ஈவென்ட் மேனேஜ்மென்ட் குரூப்ல இருக்கணும்கிறது முக்கியமான விருப்பம்."​

அவன் துளி அமைதிக்கு பின்.​

“இந்த சாம்பியன்ஷிப்ல கலந்துக்கப் போற மோஸ்ட் வான்டட் கன்டிடெட், ஹட்ரிக் சாம்பியன் சர்வேஷ் அக்கண்யன்."​

அவள் புருவங்கள் இரண்டும் ஆச்சரியத்தில் மேலெல, அந்த குண்டு விழிகள் மேலும் விரிந்தன. அவள் முகத்தில் அப்படி ஒரு ஆச்சரியம். ஆனால் அவள் உள்ளமோ..​

‘அட.. மூஞ்சி மேல தாடி வச்ச அந்த பூச்சாண்டி இவரு மகன் தானோ. அதுதான் ஏஜே கம்பெனியில அவர் ஃபோட்டோவ பெரிய பேனரா வச்சு இருக்காங்களோ. இருந்தாலும் சாரோட அழகுல கொஞ்சம் கம்மிதான்.' என்றது ஒரு மனது.​

இன்னொரு மனமோ.. ‘அதுக்கு, நீ என்ன பண்ணணுங்கிற? அந்த தாடிக்குள்ள மூஞ்சத் தேடுறதே பெரிய விஷயம், அழக எங்கடி தேடுறது?'​

தனக்குத் தானே கவுண்டர் கொடுக்க, அதில் அவள் இதழ்கள் சிரிப்பில் விரிந்தன. அதுவரை சாத்வியை கூர்த்து கவனித்துக் கொண்டிருந்த அக்கண்யன், அவள் தன் மகனை நினைத்து ஏதோ கேலியாக எண்ணுகிறாள் என்பதை அவள் முகத்திலேயே கண்டு கொண்டான்.​

தன்னை அக்கண்யன் கூர்ந்து நோக்குவதில்...​

“அப்போ நான் போகட்டுமா சார்"​

“எஸ், யூ மே"​

அவள் அறையை விட்டுச் சென்றதும், தன் அறையில் உள்ள போஸ்டரில் இருந்த தன் மகன் முகத்தைப் பார்த்தவன்,​

‘இந்த ஆதிவாசி லுக்க ஏதோ கிண்டலா நினைச்சு இருக்கிறாள், வாலுப் பொண்ணு!' என்று நினைத்துக் கொண்டான்.​

அப்படியே நாட்கள் யாருக்கும் காத்து இருக்காமல் கடக்க, கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் முடிவடையும் நிலையில், அத்தனை ஏற்பாடும் பக்காவாக இருந்தது. ரகுவரன் டீமோடு ரம்யாவும், சாத்விகாவும் இணைந்து கொண்டனர்.​

ரம்யாவின் வாய் முகூர்த்தம் பலித்தது என்றே கூறலாம். ஏதோ தன்னுடன் கமிட்மெண்ட் ஆன கேர்ள் ஃப்ரெண்டைப் போல சாத்வியை ரகு அங்கங்கே நடத்தத் தொடங்கியது, அவளுக்குள் எரிச்சலைக் கிளப்பியது.​

அவள் யாரேனும் ஒரு ஆணோடு பேசிக் கொண்டிருந்தால், இல்லையேல் அங்கிருக்கும் கூட்டத்தில் யாரேனும் அவளை ஈர்க்கும்படி இருந்தால், உடனே சாத்வியிடம் உரிமை எடுத்துப் பேசுவது, அருகில் அமர்வது, இவர்கள் உணவு உண்ணும் நேரத்தில் தானும் கலந்து கொள்வது என அத்தனை உபத்திரவத்தையும் கேட்காமல் செய்தவன், தொல்லையாகவே இருந்தான்.​

சாத்வியின் இயல்பு குணம், அமைதியாகக் கடக்க வைத்தது என்றால் ரம்யாவின் வெளிப் படையான குணம், கொதிக்க வைத்தது. காரியம் பெரிதா? வீரியம் பெரிதா? எனப் பார்க்கையில் காரியம் பெரிதென இருவரும் அமைதி காத்தனர்.​

இங்கே அப்படி இருக்கையில்...​

இதோ சர்வேஷ் அக்கண்யன் மூன்றரை வருடங்கள் கழித்து தாய்நாட்டில் காலெடுத்து வைத்தான். 15 வருடங்கள் வெளிநாட்டு வாசத்தில், வெறும் எட்டே மாதத்தை மட்டும் ஒரு காலத்தில் இலங்கையில் கழித்தவன், இதோ மீண்டும் மூன்றரை வருடங்களில் இலங்கை மண்ணில் கால் எடுத்து வைக்கிறான். கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து தன் மெய்க்காப்பாளர்கள் சகீதம் வெளியே வந்தவன், தன் தாய் நாட்டின் வாசத்தை ஆழ இழுத்து சுவாசித்து நெஞ்சாங்கூட்டில் சேகரித்துக் கொண்டான்.​

வேண்டாத நினைவுகள், வேதனை கொடுக்கும் சில நினைவுகள், என இந்த இலங்கை நாடு இதுவரையிலும் அவன் வேதனையின் பக்கத்திற்கு சாட்சியாக இருந்தது.​

இனிமேல் காதலெனும் வேதத்தில் புதிய அத்தியாயம் படிக்கப் போவதை, அவன் அறியான். சர்வேஷ் அக்கண்யன் என்பவன் அரக்கன், அகம்பாவி, திமிர் பிடித்தவன், முரடன் எனும் முத்திரைகள் மட்டுமே அவனை சுற்றி இருந்தவர்கள் அறிந்த உண்மை.​

ஆனால்.. சர்வேஷின் அழகான ஆன்மாவை இது வரையும் எவரும் அறிந்ததில்லை. அதை அறியும் நேரம், இலங்கை மண்ணில் காலெடுத்து வைத்த அந்த நேரமாக அமைந்தது.​

ஏஜே பேலஸ்!​

“ஜனனி, ஏன் இவ்வளவு பதற்றம்?​

நிதானமாகத் தான் வேலை செய்யேன்!"​

“என்னத்தான் நீங்க, அவ்வளவு ஈஸியா சொல்லீட்டீங்க? வர்றது என் சர்வேஷ். எவ்வளவு வருஷத்துக்கு அப்புறம் பார்க்கப் போறேன். ஐந்து பசங்களுக்கு அம்மாவா, இது கூட என் பிள்ளைக்காகச் செய்ய மாட்டானா?"​

“ப்ச்.."​

சலித்துக் கொண்டவன் மீண்டும் பேப்பர் படிக்கத் தொடங்க, அவன் அருகில் வந்தமர்ந்த ஆத்விக்,​

“என்னப்பா... ஒன்னுமே சொல்லாம ஒதுங்கிட்டீங்க போல?"​

மகன் புறம் குனிந்து குரலைத் தாழ்த்தி,​

“பின்ன என்ன செய்யச் சொல்ற ஆது? இங்க வராம இருக்கப் போறவனுக்கு, உங்க அம்மா செய்யறது எல்லாம் பார்க்கிறப்போ, அவன அடித்து கை, கால உடைத்து, தோளுல வைத்து தூக்கிட்டு வந்து உங்க அம்மா காலுல போட்டா என்னனு வெறியா வருது..!"​

“ஹா.. ஹா..!"​

ஆத்விக் வாய்விட்டுச் சிரிக்க, ஜனனியும், ராகவியும், அவனை ஒரு மார்க்கமாகப் பார்த்தார்கள் என்றால், அக்கண்யன் மகனை முறைத்துக் கொண்டு,​

“ஆது!" மிரட்டலாக அழைக்க.​

“அப்பா நீங்க எங்களுக்கு ஹீரோ தான், இருந்தாலும் அந்த மாமிச மலையத் தோளுல தூக்கிட்டு வந்து இங்க போட முடியுமா? இது உங்களுக்கே காமெடியா இல்ல?"​

மகனின் கூற்றில் அவனுமே சிரித்துக் கொண்டு,​

“அவன் சாம்பியன்டா!" என்றவன் மீசை கர்வத்தில் துடித்தது.​

அப்போது அவர்களை நெருங்கிய ராகவி,​

“அத்து நான் ஹாஸ்பிடலுக்கு லீவ் போட்டுட்டு, சர்வேஷ்காக ஸ்வீட் பண்ணிட்டு இருக்கேன். நீங்க என்னன்னா இப்படி வெட்டியா சுத்திட்டு இருக்கீங்களே, உங்களுக்கே நல்லா இருக்கா?"​

“அப்படி என்ன ராகா வித்யாசமா செய்துட்ட? அங்க பல்லு புடுங்கிற வேலைனா, இங்க உன் மாமியாரோட சேர்ந்து, புல்லு புடுங்குற வேலை தானே செய்ற? இதுல, என்னையே குறை சொன்னா எப்படி?"​

“நீங்களும் தேவையில்லாத ஆணி எல்லாம் புடுங்குறதுக்கு என்னை கூட்டுச் சேர்க்க வருவீங்கல்ல அப்ப வச்சுக்கிறேன்!" என்றவள் மாமனாருக்கும் ஒரு முறைப்பை மறக்காது கொடுத்து விட்டே சென்றாள்.​

இப்போது வாய்விட்டுச் சிரிப்பது அக்கண்யன் முறையானது.​

“அப்பாஆஆ.."​

“என்ன இருந்தாலும், என் மருமக ஒரு டாக்டர். அதுவும் பேர் போன டெண்டல்."​

“அதுக்குன்னு என்னைக் கலாய்க்கிறதா?"​

“நீ மட்டும் சும்மாவா?" அவர்கள் இருவரும் விளையாட்டைக் கைவிட்டு, ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொண்டே அமைதியாக இருந்தனர். அந்த அமைதியைக் கலைத்த அக்கண்யன்,​

“ப்ளைட் லேண்ட் ஆயிடுச்சு ஆது."​

“அப்பா!"​

“ஹம்.. வருண் மெசேஜ் பண்ணான். ஒன் வீக் இந்தியால ஸ்டே பண்ணிட்டு வாராங்களாம்."​

அது ஏன் என்பதை அறிந்தவனுக்கு, தமையனின் பழக்க வழக்கம் மிக வேதனையைத் தந்தது.​

“அம்மாவை எப்படிப்பா சமாளிக்கப் போறீங்க?"​

“சமாளிக்கணும், ஆத்விக். சமாளிச்சு தான் ஆகணும். அவ தானே, அவன இங்க வர வைக்கணும்னு பிடிவாதமா இருந்தா? நிஜம் என்ன தெரியுமா? அவளே வேதனைய வர வச்சுக்க தயாராயிட்டா. ஆறடியில... அவளை குத்துயிரும் குறை உயிருமாக்கவே வந்து இறங்கி இருக்கான்!"​

“அப்படி எல்லாம் இருக்காதுப்பா!"​

 

admin

Administrator
Staff member

“உன்னை எப்படி அப்பாவுக்கு முழுசா தெரியுமோ? அது போல அவனையும் தெரியும். தூரம் இருந்தா மட்டும் என்ன? நான் எப்பவும் உங்களுக்கு அப்பா தான்!"​

அதே நேரம் தொலைபேசியில் தமையனை ஆதவ் அழைக்க,​

“ஆதவ் ஃபோன்லப்பா"​

“ஹம்.. பேசு"​

அழைப்பை ஏற்கவும்​

“ஆது அண்ணா, நம்ம சர்வா ஏர்போர்ட்ல லேண்ட் ஆயிட்டானாம். வருண் மெசேஜ் பண்ணி இருக்கான்"​

“இப்போ தாண்டா அப்பாவும் நானும் பேசிட்டு இருக்கோம். நீயும் கரெக்ட் டைம்ல கால் பண்ற!"​

“அண்ணா அம்.. அம்மா"​

அவன் குரல் கம்ம,​

“ஸ்டுப்பிட்! இப்ப என்ன அழ போறியா?"​

“அண்ணா!"​

வார்த்தைகள் இன்றி அண்ணனையே துணைக்கு அழைக்க,​

“விடு ஆதவ்! நடக்கிறது நடந்தே ஆகும். நானும், அப்பாவும் இருக்கோம், முடிஞ்சளவு மேனேஜ் பண்றோம். என்ன? அம்மா தான் டிஸப்பாயின்மென்ட் ஆகுவாங்க. விடிஞ்சதுல இருந்து ராகவியும் அம்மாவும் வீட்டையே ஒரு வழி பண்ணிட்டு இருக்காங்க. இன்னும் ரெண்டு நாள்ல தாத்தாவோட திவசம் வேற வருது. இந்த வருஷம் சர்வேஷ் இருக்கணும்னு, அம்மா ரொம்ப பிரியப்படுறாங்க."​

“என்ன பண்றது, ஆதுண்ணா? இப்ப என்னாலயும் வர முடியாது. நான் ஒரு ஃப்ரீ-மெடிக்கல் கேம்ப்ல இருக்கேன். என்னோட ப்ரெசென்ட் இங்க இல்லனா, இந்த கேம்ப்போட நோக்கம் ஸ்பாயில் ஆயிடுமே!"​

“அதான் நானும், அப்பாவும், அரவிந்த் மாமாவும் இருக்கோமே! முடிஞ்சளவு மேனேஜ் பண்றோம்."​

துளி அமைதிக்குப் பின்..​

“அண்ணா சர்வேஷ் வருவான்னு நினைக்கிறீர்களா?"​

“வாய்ப்பு இல்ல, ஆதவ்"​

“அண்ணா!" என்றவன் குரல் மீண்டும் கமற.​

“விடு மேன், பாத்துக்கலாம். பட் ஏதோ ஒரு நல்லது நடக்கப் போகுதுனு மட்டும் மனசு பேசுது."​

“நடக்கணும் அண்ணா! அவனுக்குக் கண்டிப்பா நல்லது நடக்கணும். ரொம்ப அனுபவிச்சுட்டான்!"​

“சரிடா! நீ வேலையப் பாரு. அப்பப்போ இங்க இருக்க ஸ்டேட்டஸ் என்னன்னு பார்த்து உனக்கு மெசேஜ் பண்றேன். அண்ட் அனி, அனா ரெண்டு பேருக்கும் ரொம்ப பெருசா எக்ஸ்பிளைன் பண்ணாத. கன்சிவா இருக்க பொண்ணுங்க, இதை நினைச்சு ஹெல்த்த ஸ்பாயில் பண்ணிக்காம!"​

“ஹம்.. ஓகே அண்ணா."​

அவன் அழைப்பைத் துண்டிக்கவும் அது வரையிலும் தன் பெரிய மகனை அசையா பார்வை பார்த்துக் கொண்டு இருந்தவன், அவன் நெற்றியில் முத்தமிட்டு தோளில் தட்டிவிட்டி விட்டுச் சென்றான்.​

தந்தையின் ஒற்றை முத்தம் கோடி ரூபா கொடுத்தாலும் ஈடாகாதென்று, பாசத்தில் நனைந்த மகனுக்கு மட்டுமே தெரியும.​

இவர்கள் ஆளுக்கோர் மனநிலையில் இப்படி சஞ்சரித்துக் கொண்டிருக்க, அவர்கள் எண்ணங்களின் நாயகன்..​

“வருண் டிரைவருக்கு கால் பண்ணிட்டியா?"​

“எஸ் பாஸ். வெளிய நிற்கிறாரு."​

“ஓகே!" என்றவன் வந்திருந்த BMW வில் ஏறி அமர, டிரைவர் சீட்டுக்கு அருகில் அமர்ந்திருந்த வருணிடம்,​

“பார்ம் ஹவுஸ் போ!"​

“அதிர்வாக.. “வாட்!" எனவும்.​

“என்னா வாட் மேன்?"​

“இல்ல... உங்களுக்காக வீட்டுல.."​

“வாட் ஐ சே டு யூ, வருண்?"​

அவன் மீண்டும் தயங்க,​

“சொன்னதச் செஞ்சா, என்னோட வரலாம்! இல்ல.. இப்படியே இறங்கிப் போய் சேரு!"​

அதற்குப்பின் அவன் பேசவில்லை. ஆனால் மனம் வேதனையில் அடித்துக் கொண்டது. ‘காலையிலிருந்து எத்தனை மெசேஜ், எத்தனை ஃபோன் கால்? அதிலும் தன் அத்தையின் குரலில் தான் எத்தனை துள்ளல்? இந்த ஏமாற்றத்தை தாங்கிக் கொள்வாரா?' கண்ணாடி வழியே வருணைப் பார்த்துக் கொண்டிருந்தவன்,​

“என்ன வருண் ஃபீல் பண்ற போல?"​

“இல்ல பாஸ் அத்.. அத்தை.."​

அவன் முடிக்கும் முன்,​

“வருண்!" அழுத்தமாக அழைத்தவன்...​

“பெயின் இஸ் காமன். எஸ்! வலிகள் எல்லாருக்கும் பொதுவானது, வருண். அதுக்கு ஆம்பள, பொம்பள, சின்னவங்க, பெரியவங்க வித்யாசம் தெரியாது. பிள்ளைகளுக்காக பெத்தவங்க அழுவது இல்லையா? அது மாதிரி என்னோட வலிக்காக, உன் அத்தை கொஞ்சம் காயப்படட்டுமே!"​

அவன் குரலின் குரூரத்தில் வருணின் உள்ளம் யாருக்காக வருந்துவது எனத் தெரியாது தவிக்க, மேலும் பேச்சு வளர்க்க விரும்பவில்லை. வாகனத்தின் ஜன்னல் வழியே கடந்து போகும் பாதைகளில் சர்வேஷ் பார்வை பதிந்தது.​

பல வருடங்களுக்கு முன் தாய், தந்தையோடு வலம் வந்த சில இடங்கள், அதன் தடங்கள் இன்னும் பசுமையாக அவன் நெஞ்சில் புதைந்து கிடந்தன.​

காத்திருக்காத நேரம் நகர்ந்து செல்ல, அன்று இரவு நேரம் ஏங்கித் தவித்த நெஞ்சங்களுக்கு வேதனை மட்டுமே மிஞ்சியது.​

‘ஒரு கரையில் அழும் அன்னையைத் தேற்றுவதா? தன் குடும்பத்தால் தானே என வேதனையில் வாடி இருக்கும் மனைவியைத் தேற்றுவதா? இரு கைகளில் தலையைத் தாங்கி அமர்ந்திருக்கும் வருணைத் தேற்றுவதா? இல்லை.. தனக்குள் இறுகிப்போய் அமர்ந்திருக்கும் தந்தையைத் தேற்றுவதா?’ எனத் தெரியாது தவித்துப் போனான்.​

“ப்ளீஸ் அம்மா, சாயங்காலத்தில் இருந்து இப்படி அழுதுட்டு இருந்தா, என்ன அர்த்தம்?"​

ஐனனி இயலாமையோடு அவனைப் பார்க்க,​

“என்னம்மா?"​

“எனக்கு புரியாமலா கண்ணா? ஆனா.. புரிய வேண்டியவனுக்குப் புரியலையே. அதற்கு நானும் ஒரு முக்கிய காரணம் தானே. அவன் எத்தனையோ முறை வேண்டாம்னு சொன்னான். நான் தான் கட்டாயமாப் பிடிச்சு வைத்தேன்."​

“நீங்க என்ன கெட்டதாம்மா நினைச்சு செஞ்சீங்க? ஏதோ ஆகிப் போச்சு!"​

ராகவியும் ஜனனி கைகளை பிடித்துக் கொண்டு..​

“அழாதீங்க அத்தை. உங்க கண்ணீருக்கு நாங்களும் ஒரு காரணம்னு நினைக்கும் போது, ரொம்ப வலிக்குது."​

அவள் ஒரு புறம் விசும்ப, வருண் மறுபுறம் மௌனமாக கண்ணீர் வடிக்க,​

தன்னையே நொந்து கொண்ட ஜனனி,​

“எதுக்கு இப்போ, ஆளாளுக்கு உட்கார்ந்து அழுதுட்டு இருக்கீங்க?"​

தன் விழிகளை அழுந்த துடைத்துக் கொண்டு,​

“இப்போ என்ன என் பையன் வரல. அவ்வளவு தானே? வராமலா போயிருவான். இன்னும் ரெண்டு நாள்ல மாமாவோட நினைவு நாள் வருது. அன்னைக்கு என் சர்வா கையால சாம்பிராணி போட்டு படையல் வைப்பேன்!"​

“அத்தை!"​

“நடக்கும் வருண். என்னோட அத்தான் நடத்தி வைப்பாரு!"​

அக்கண்யன் விழுக்கென நிமிர்ந்து ஜனனியை முறைக்க, அந்த விழிகளைத் தானும் சளைக்காது பார்த்தவள்,​

“அமெரிக்கால இருந்து இலங்கைக்கு வர வச்சவருக்கு, கல்கிஸ்ஸைல இருத்து இந்த வீட்டுக்குள்ள வர வைக்க முடியாதா என்ன?"​

“ஹம்.." பெரு மூச்சோடு எழுந்த அக்கண்யன், ஜனனியை நெருங்கி மெதுவாக அவள் கை பிடித்து எழுப்பியவன்,​

“என் பொண்டாட்டியை நான் சமாதானப் படுத்திக்கிறேன் ஆது. நீ வருணையும், ராகவியையும் பாரு!"​

மனைவியோடு படிகளில் ஏறியவன் திரும்பி வருணை அழைத்து,​

“நாளைக்கு காலைல சர்வேஷைப் பார்க்க, நானும் வாரேன்."​

“மாமா அது.." அவன் இழுக்கவும்.​

“ரெடியா இரு, வருண்!" என்றதோடு செல்ல, இன்றைய தினமே அங்கு களைகட்டிய களியாட்டங்களை நினைத்து, வருண் மனதுக்குள் மத்தளம் வாசிக்கத் தொடங்கியது.​

இப்படியே அந்த நாள் கழிய,​

அடுத்த நாள் விடியலில், இலங்கையின் கல்கிஸ்ஸையில் அமைந்திருக்கும் அந்த ஆடம்பர கெஸ்ட் ஹவுஸ், இரவெல்லாம் விண்ணைத்தொடும் வேடிக்கையில் ஆட்டம், பாட்டம், மங்கைகளின் கொஞ்சல் என விடிய விடிய ஓய்வின்றி சலசலக்க, விடியலை நெருங்கும் நாழிகையில் இந்திய பாலிவுட் திரைப்பட நடிகை மாலினியோடு அறைக்குள் நுழைந்த சர்வா விடியும் வரை அந்த மூடப்பட்ட அறையில் இச்சைக்குள் மூழ்கிச் சுகித்திருந்தான்.​

மாலினி, சர்வேஷ் இந்தியா வந்த காலத்தில் பப்பில் அறிமுகமானவள். வெள்ளைகார அழகிகளே கொஞ்சி ஆராதிக்கும் அழகனைக் கண்டு, மாலினி மயங்காமல் இருந்தால் தான் அதிசயம்.​

அதிலும் 96 கிலோ வெயிட்டில் கட்டுமஸ்தான தோற்றத்தில், பிடரி முடி, டேட்டூ என ஆறே முக்கால் உயரத்தில் இருப்பவன் மீது பிரமிப்பே அதிகம். குறுகிய காலத்தில் சினிமாத்துறையில் அவள் ஒன்றும் அத்தனை பிரசித்தம் பெறவில்லை. அப்போது அவளுக்கு அளிக்கப்பட்ட போதனை ‘ஒரு புளியங்கொம்பை பிடித்து முன்னேறு' அதைக் கெட்டியாக பிடித்துக் கொண்டவள், சர்வேஷை பயன்படுத்த நினைத்தாள். அது முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்ட கதை என்பதை அவள் அறியாள்.​

அவன் முரட்டுக் குணம் அறிந்தவள், சர்வேஷ் போன்ற டாப் செலிபிரிட்டியை மிஸ் பண்ணத் தயாராக இல்லை. அவன் பெயரோடு தன் பெயர் இணைத்து பேசப்படுவதை கௌரவமாக எண்ணியவள், சர்வேஷ் எனும் புளியங்கொம்பை பிடித்து கரணம் பாயத் திட்டமிட்டாள். ஆனால், அவன் ஈசனின் ருத்திரத்தை பெயரில் கொண்டவன் என்பதை, அந்த ஆடம்பர பொம்மை மறந்து போனது.​

“ஹாய்! டார்லிங் ஹேவ் அ குட் டே!"​

ஒரு அன்னிய ஆடவனின் அருகில் ஆடையின்றி இருக்கிறோம் என்ற கூச்சம் சிறிதும் இன்றி, சர்வாவின் மார்பு முடிகளை கையால் அளந்த வண்ணம் மையலாகக் கூறினாள். அவனோ.. அவளை அருவருப்புடன் அற்பமாக ஒரு பார்வை பார்த்து,​

“வாட்? ஹேவ்வ குட் டேயா? என்னோட நாள் நல்லதா அமையுது, இல்ல.. அது வில்லங்கமா அமையுது! அதத் தெரிஞ்சிட்டு, நீ என்ன பண்ணப் போற?" என்றான் ஏற்பட்ட அருவருப்பை, சிறிதும் மறைக்காது முகத்தில் காட்டியவாறு.​

‘யம்மா.. முசுடு! என்ன இப்படி பேசுறான்?'​

மாலினி அதிர்ந்தது என்னமோ ஒரு நிமிடம்தான். அந்த ஒரு நிமிட அதிர்வும், தன் அழகின் மீது அவளுக்கிருந்த அலாதியான கர்வம் அடிபட்டதனாலேயே. இலகுவில் தன்னை சமாளித்துக் கொண்டவள்,​

“என்ன சர்வா இப்படி சொல்லிட்டீங்க? உங்களுக்காகத் தானே ஷூட்டிங்னு பொய் சொல்லி, ஸ்ரீலங்கா வரை வந்து, ஒரு ஃபுல் டே உங்களோட டைம் ஸ்பென்ட் பண்ணி இருக்கேன். நேற்று நைட்டை ஹேப்பியா என்னோட ஸ்பென்ட் பண்ண பிறகும், இப்படி சொல்லலாமா?"​

அவள் மயக்கும் குரலில் பேச, அந்த வார்த்தையில், அந்த தொனியில்.. அவன் கொண்ட கோபத்துக்கு அளவே இல்லை. ‘ஏமாற்றம், பொய், துரோகம்' மூன்றே வார்த்தை போதுமே, அவனை அரக்கனாக்க.​

கண்கள் சிவக்க வேண்டாத ஏதோ நினைவுகளை எண்ணி கோபத்தில் நடுங்கும் தன் கட்டுமஸ்தான உடலை கட்டுபடுத்தும் வகையறியாது, தன்னோடு ஒட்டி இருந்தவளை ஒரே அறையாக அறைந்து தள்ளினான்.​

இந்தக் கோபம் அவனின் மிகப் பெரிய பலவீனம். சட்டென்று கை நீட்டி விடுவான். கை நீட்டுவதில் மட்டும் இடம், பொருள், ஏவல் எல்லாம் பார்ப்பது, அவன் அகராதியிலேயே இல்லை. அவன் அடித்த வேகத்தில், தன்னை போர்த்தியிருந்த போர்வையோடு கீழே விழுந்தவள், அவனை அதிர்ந்து பார்த்தாள்.​

அவனோ எதையும் முகத்தில் காட்டாது, டவலை இடுப்பில் கட்டிக் கொண்டே,​

“ஹவ்.. டேர் யூ? என்ன தைரியம் இருந்தால் என்னிடம் இந்த வார்த்தையை சொல்லுவ? உன்னை நான் என்னோட ஒருநாள் இரவு செலவழின்னு சொன்னேனா? உனக்கு என்கிட்ட தேவை இருந்துச்சு, தேடி வந்த!" என்றவன் அவள் உடலை சுட்டிக்காட்டி,​

“எனக்கு இது தேவை.. அக்ஸப்ட் பண்ணிட்டேன்."​

அவளோ செய்வதறியாது, உடனே தன் ஆடைகளை அள்ளிக்கொண்டு குளியலறைக்குள் புகுந்து தன்னை திருத்திக் கொண்டு வெளியே வர, மாலினியை உக்கிரமாக நோக்கி, ஒரு சிகரெட்டை எடுத்து வாயில் பொருத்திக்கொண்டு, அப்போதும் அவளை விடுவதில்லை என்பதை போல,​

“என்ன நினைச்ச, இவன் அமெரிக்கால இருந்து வந்திருக்கிற ஏமாந்த சோணகிரி, ருசி கண்ட பூனை! உடலைக் காட்டி ஏமாற்றி விடலாம்னா?​

உன்னை விட அழகிகளைப் பார்த்தவன்டி இந்த சர்வா. நீ என்ன நினைக்கிறனு எனக்கு நல்லாவே தெரியும்!"​

“ஐய்யோ சர்வா! என் ஸ்டேட்டஸை பார்த்து பொறாமைப்பட்ட யாரோ, உங்க கிட்ட என்னைத் தவறா கதை கட்டி இருக்காங்க. நான் அப்படிபட்ட பொண்ணு இல்ல. உண்மையைச் சொல்ல வேணும்னா, உங்களை விரும்புறேன்."​

“ஏய்!" உறுமியவன்,​

“என்ன சொன்ன, காதலா? அதுவும் உங்கிட்டவா? அதுக்கு அர்த்தம் தெரியுமா, உனக்கு? நான் ஒன்னும் யோக்கியனில்ல! பட் என் பிறப்புக்கு அந்தத் தகுதி இருக்கு மாலினி. லிசன் உன்னோட இந்தப் பருப்பெல்லாம் என்கிட்ட வேகாது. இந்த ஃபீல்டில உன்னோட அழக மட்டுமில்ல இளமையையும் ஆயுதமாக்கிறனு நல்லாவே தெரியும். இந்த சித்து விளையாட்டெல்லாம் என்கிட்ட வேணாம்!"​

அவள் முகத்தில் ஒரு ஹிந்திப் படத்திற்கான பட வாய்ப்பு அக்ரிமெண்ட்டை தூக்கி எறிந்து,​

“இதை எடுத்துக்கிட்டு ஒழுங்கா ஊர் போய்ச் சேரு. இனி உன்னை நான் பார்க்கக்கூடாது, காட் இட்!"​

அவசரமாகத் தலையாட்டியவள், கிடைத்த வரை லாபம் என ஓடி விட்டாள். அதுவரை நேரமும் இழுத்துப் பிடித்த மூச்சை, நிதானமாக வெளியிட்டவன்...​

சப்தமில்லா ஆழிக்குள் அசைந்தாடும் அலைகளை, தன் அறை ஐன்னல் வழியாக நோட்டம் விட்டான்.​

“ச்சே! ஸ்ட்ரஸ் ரிலீவ் பண்றேன், கண்ட கருமத்தை மறக்கிறேனு, வேண்டாத வேலை எல்லாம் செஞ்சு, வர்ற ஒவ்வொருத்திக்கும் தேவையில்லாத எக்ஸ்ப்ளைன் எல்லாம் பண்ண வேண்டி இருக்கு. கருமம்! இன்னையோட இந்தப் பழக்கத்தை விட்டுத் தொலையணும்!"​

வாய் விட்டே புலம்பியவன், இனி வாழ்க்கையில் தீண்டப் போகும் முதலும் கடைசியமான பெண், அவன் மனைவி மட்டுமே! அப்படியே உடல் களைப்பில், தன் பஞ்சு போன்ற மெத்தையில் உடலை சாய்த்துக் கொண்டான்.​

ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தவன் சிகைக்குள், ஒரு முரட்டு கரம் மெதுவாக வருடிக் கொடுக்க, நீண்ட வருடம் கழித்துக் கிடைத்த சுகம், அதோடு கடைசியாக இந்த சுகம் கிடைத்த தினம் இரண்டும் ஞாபகம் வர, படக்கென விழிகளைத் திறந்தவன் இரு விழிகளும் கருஞ்சாந்தாகச் சிவந்திருந்தது. அந்த முகத்தில் ஏகத்துக்கும் உணர்வுகள் அலை பாய,​

“ஹவ் ஆர் யூ சர்வேஷ்!"​

“ப்ப்.. ஃபைன் டேட்"​

தந்தையின் அழுத்தமான குரலை, அலட்சியம் செய்ய முடியவில்லை.​

“கிவ் மீ சம் டைம் டேட்"​

குளியல் அறைக்குள் புகுந்து தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வெளியே வந்த சர்வேஷ், வெறும் ஷார்ட்சை மட்டும் அணிந்து, வெற்றுடலை டவலால் துடைத்துக் கொண்டே வந்தவன் தந்தையிடம்,​

“லிவிங் ஏரியால போய் பேசுவோம் வாங்க." என்றதோடு, தந்தையையும் அழைத்துக் கொண்டு வெளியே சென்று விட்டான்.​

ஏனோ வேற்றுப் பெண்ணோடு சல்லாபித்த அந்தப் படுக்கையில் தந்தையை அமர வைப்பது கூடத் தீண்டாமை எனக் கருதினான். அந்த தீண்டாமையை, தானுமே செய்து பிழைக்கின்றோம் என்று அறிவான்.​

ஆனால், அவன் மனதில் ஆழமாகப் பதிந்த ஒரு தீண்டாமையின் நிகழ்வை ஒழிக்க, அவன் ஓடிய பாதை தான் அங்கே பிழையாகியது. அக்கண்யனோ, தன் முன்னே அமர்ந்திருக்கும் மகனின் நெஞ்சத்தில் பச்சை குத்தியிருந்த அக்கண்யன் என்ற தன் பெயரை கர்வம் பொங்கப் பார்த்துக் கொண்டிருந்தான். தன் மகன் உருவத்தை கண்களுக்குள் உள்வாங்க, உள்வாங்க நெஞ்சம் கர்வத்தில் விம்மித் தணிந்தது.​

ஆண் பிள்ளைகள் இருவரும் ஜனனியில் மிகப் பிரியம்! சர்வேஷூம் அவ்வழியே! ஆனால் ஆதவ் அன்னையை உடும்பாக அப்பிக்கொள்ள, அதில் சர்வேஷுக்கு என்றும் பொறாமை இருக்கும். அதை ஈடுகட்ட அக்கண்யனை, இவன் உடும்பாக அப்பிக் கொள்வான்.​

சர்வேஷுக்கு, அக்கண்யன் என்பவன் பிதா, குரு, ஹீரோ அப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இன்றோ உறவின் நடுவில் பள்ளம் விழுந்துவிட்டது. இருந்தும் நெஞ்சின் ஈரம் காய்ந்து விடுவதில்லை.​

“டேட்!" தகப்பன் பார்வையில் அவன் இரும்பு உள்ளம் உருகியது.​

“அப்பா! சொல்லு சர்வேஷ்!" ஆழ்ந்த குரலில் கடையிதழோரம் புன்னகையில் துடிக்க,​

“அப்பா! ஹூம்ம்.. கொஞ்சம் வயசான ஃபீல். டேட் கொஞ்சம் யூத்தா இருக்கு. அக்கண்யனுக்கு தான் வயசாகாதே!"​

“ஹா.. ஹா..! மை டியர் கிரேசி பாய்!"​

வெகு நாளைக்குப் பின், இருவர் உள்ளமும் லேசாக உணர,​

“ஹெவ் ஆர் யூ டேட்?"​

“எனக்கு என்ன குறை, என் ஜனனி இருக்கும் போது?" அழுத்திச் சொல்ல, அவன் இறுகிப் போனான். அதுவரை இருந்த இலகுத்தன்மை காற்றில் கரைய,​

“சோ.."​

“சோ.. நீ சொல்லு."​

தனக்கே தன் கேள்வியை திருப்பிவிட்ட தந்தையின் சாணக்கியத்தனத்தில், மீண்டும் இதழ் பிரியா புன்னகையே தோன்ற...​

“என்ன வேணும் டேட்?"​

“எப்போ வீட்டுக்கு வார சர்வேஷ்?"​

 

admin

Administrator
Staff member

“யார் வீட்டுக்கு? ஏன் வரணும்?"​

அவனை கண்டனமாக ஓர் பார்வை பார்த்தவன்,​

“நம்ம வீட்டுக்கு நீ வரணும். எங்களுக்காக. ஹம்.. நம்ம வீடு தானே? அப்பா உயிரோட தானே இருக்கேன்!"​

“அப்பாஆஆஆ.." என்று அலறியவன் ஆறடி தேகம், தந்தையின் ஒற்றைச் சொல்லிப் ஆட்டம் காண...​

அக்கண்யனோ விரிந்த புன்னகையுடன்,​

“ஹம்ம்.. இப்போ அப்பா! தமிழ்ல வருதே!"​

‘என்ன மனிதன் இவர்? என்ன வார்த்தை சொல்லி விட்டார்? இதில் கிண்டல் வேறு மான்ஸ்டர். இப்படி பேச முன்ன, கொஞ்சமாவது அம்மாவ யோசிச்சாரா..!'​

‘ஏன் சர்வேஷ்? நீ உன் அம்மாவை நினைச்சியா?' அவன் மனசாட்சி எழுப்பிய கேள்வியில் மௌனமானான்.​

“என்ன சர்வா, எப்போ வார?" தந்தையின் குரல் சிந்தையைக் கலைக்க,​

“ம்ச்.. நான் இங்கே வந்தது சாம்பியின்ஷிப்க்கு. மற்றபடி அதே காயம், வலி, அவமானம் எல்லாம் அப்படியே தான் இருக்கு."​

கண்களை இறுக முடித் திறந்த அக்கண்யன்,​

“வர முடியுமா, முடியாதா சர்வா?" என்றான் விறைப்பாக.​

“டேட்.."​

“ஆன்ஸர் மீ சர்வா!"​

“ஆர் யூ கிட்டிங் மீ டேட்?"​

“ஓகே ஃபைன்! இதையும் கேட்டுக்கோ. நாளைக்கே நீ வீட்டுக்கு வார. ரெண்டு நாள்ல வரப்போற அப்பாவோட நினைவு தினத்துல கலந்துக்குற. இனி அங்க தான் இருக்குற சர்வா."​

அக்கண்யன் குரல் உறுதியாக வர..​

“ஓவ்.. இது ரிக்வஸ்ட்டா, ஆர் ஆடரா?"​

“அது நீ சொல்ற முடிவப் பொறுத்து!"​

“ஓகே ஃபைன், வர முடியாது டேட்." அலட்சியமாக தோள்களைக் குலுக்க,​

அவனுக்கு மேல் நக்கல் சிரிப்போடு...​

“இஸ் இட்? தி கிரேட் பாக்ஸர், ஹட்ரிக் சாம்பியன் சர்வேஷ் அக்கண்யன், ஆர்கனைசிங் சேம்பரோடு கை கலப்பாகி, இந்த வருட யூ எஃப் சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து நீக்கப்பட்டார்னு செய்தி வந்தா, நல்லாவா இருக்கும்!"​

என்று மகன் முகத்தில் அதிர்வலைகளைத் தேடினான்.​

அவன் இரத்தம் அல்லவா? உணர்வுகளை வெளிக்காட்டாது, அதே அலட்சியத்தோடு இருக்க. தன் முழு உயரத்திக்கும் நிமர்ந்து நின்றவன்,​

“சர்வேஷ்! உனக்கு உன் மனசும், மனசுல இருக்க வலியும் பெருசுனா, எனக்கு என் மனைவியும், அவள் மனசுல இருக்க வலியும், ரொம்ப ரொம்பப் பெருசு. மகனையும், மனைவியையும் என்னால வேறு, வேறு தராசில் நிறுத்த முடியாது. எப்பவும்.. என் மனசுல உங்களுக்கு ஒரே தராசு தான். இப்ப சொன்னத அப்பா செய்ய மாட்டேன்னு நினைக்காத!"​

என்ற கண்டனத்தோடு அகன்றவன், மீண்டும் மகன் அருகே வர, என்னவோ என்று மகனும் எழுந்து நின்றான்.​

மகனை நெருங்கிய அக்கண்யனின் “சர்வேஷ்!" என்ற இதயத்தை உலுக்கும் ஆழமான அழைப்பில், சர்வேஷ் என்பவனின் இதயத்தசை ஆட்டம் கண்டது.​

தந்தையின் அழைப்பில் தன் இதயத்தைப் பிடித்து யாரோ உலுக்கி விட்டதைப் போல உணர்ந்தவனுக்கு, வார்த்தைகள் பஞ்சமாகி விட..​

“சர்வா.. அப்பா உன்னத் தொட்டுப் பார்க்கட்டுமா?"​

‘என்ன மாதிரியான கேள்வி இது?’ தந்தையின் இந்தக் கேள்விக்கு முன், தன்னைப் பால் குடி மறவா பாலகன் ஆகவே உணர்ந்தான்.​

“அப்பா!" என்று உருகிப் போய் அழைத்தவன் “ப்ளீஸ்பா.." என்றான் சம்மதமாக.​

மகன் அருகில் நெருங்கி, அவன் சிகையை வருடியவன், தன் நீள விரல்களால் அவன் தாடி, மீசை என வருடி, சிவனின் ருத்ர தாண்டவத்தை சித்திரமாக டேட்டூ வரைந்திருக்கும் ஒரு பக்க தோளிலிருந்து கை வரையிலும் இருந்த அந்த சித்திரத்தின் ஊடாக வருடியவன், அவன் உரம் ஏறிய புஜங்கள், இறுக்கிப் பிடித்த வயிற்று தசை, விம்மிப் புடைத்த மார்புக் கோலங்கள், இடப்புறம் மார்பின் மீது உள்ள தன் பெயரை மிக, மிக மெதுவாக வருடிக் கொண்டிருந்த அக்கண்யன் எனும் கர்வியின் கண்கள், கர்வத்தை தாண்டிக் கலங்கியது.​

சர்வேஷ், தன் உடம்பெல்லாம் மயிர் கூச்செரிய நின்று கொண்டிருந்தான். ஒரு ஆணின் தொடுகையில் காமமும், வக்கிரமும் நிறைந்திருக்கும் என உலகம் பேசிக் கொண்டு இருக்கையில், இங்கே ஒரு ஆண்மகனின் வருடலில், ஈரைந்து மாதம் கருவில் சுமந்த தாயின் கர்ப்பப்பையில் இருக்கும் கதகதப்பை உணர முடிந்தது. இந்த வருடலில் காமம் இல்லை, காழ்ப்புணர்ச்சி இல்லை, வக்கிரம் இல்லை, வஞ்சகம் இல்லை. நேசம்! நேசம் மட்டுமே.​

தன் உயிரணு சதைக் கோலமாக உயிரோவியமாக.. கை, கால் முளைத்து, மீசை முடி என உரமேறிய தேகத்தோடு நின்று கொண்டு இருக்கும் அதிசயத்தை,​

ஆண் எனும் எண்ணத்திற்கு மேல், தகப்பனாக நின்று ஸ்பரிசித்து மகிழ்ந்தான்.​

உலகம் மகனைச் சேம்பியன், வீரன், கதோட்கஜன் எனக் கூப்பிடலாம். அதை விட பெருமை, அதை விட கர்வம், தன் நேசப் புதல்வனை, கரம் கொண்டு வருடி, ஸ்பரிசிக்கையில் அக்கண்யன் பெற்றான்.​

யார் கூறியது? ஆணின் வருடலில் காமமும், கலவியும் உண்டென. அதைத் தாண்டி கருணையும் தாய்மையும் உண்டு என அக்கண்யன் நிரூபித்த நொடி என்றால்.. சிறு குழந்தையாக மாறி தந்தையின் நெஞ்சுக்குள் புகுந்து, அவர் நெஞ்சுக்குழி தரும் கதகதப்பில் பாதுகாப்பாக பதுங்க மாட்டோமா என சர்வேஷ் ஏக்கம் கொண்ட நொடியது.​

உலகம் காதலை தெய்வீகம் என்றால், ஒரு தந்தையின் தாய்மை, அதை விட தெய்வீகம்.​

தன் உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வந்த அக்கண்யன், மீண்டும் மகன் சிகையை வருடிக் கொடுத்து, சன்னமான சிரிப்போடு விடை பெறத் திரும்ப, வளர்ந்த அவன் ஆறடி மகனோ, முதுகோடு தந்தையை இறுக்கி அணைத்துக் கொண்டான்.​

அதில் அக்கண்யனின் இதழ்கள் புன்னகையில் நன்றாக விரிந்தது. அவன் தான் மகனது உள்ளத்தின் நாதம் நன்கு அறிவானே..!​

“வரே வா! தி கிரேட் சாம்பியன், அவங்க அப்பா கிட்ட தாழ்ந்து போறதா?"​

“டாட் என்னை லூஸ்(loose) ஆக்காதீங்க."​

அவன் அணைப்பை இறுக்க.​

“அப்பாவுக்கு வயசு ஆயிடுச்சு, சர்வேஷ். இப்படி இறுக்கிப் பிடிச்சா என்னவாகிறது?" என்றவன் சத்தமாகச் சிரிக்க,​

“அப்பா" என்று சிணுங்கிய அந்த ராட்ஷச மலையோ, அணைப்பை மேலும் இறுக்க,​

“போதும், அப்பாவ விடுடா!"​

சர்வேஷ் அணைப்பை விலக்கவில்லை. சில துளிகளைக் கடந்தவன்..​

“சர்வா" என்று மிக மெதுவாக அழைக்கவும், தன் உணர்வுகளில் மீண்டவன், தந்தையின் முன் வந்து,​

“நாளைக்கு நான் வாரேன். பட் என் இஷ்டம் போல தான் இருப்பேன். என்னை எதுக்காகவும், யாருக்காகவும் கம்பெல் பண்ணவோ போர்ஸ் பண்ணவோ கூடாது. அதைச் செய்னு ரூல் பண்ணவும் கூடாது, தடுக்கவும் கூடாது." என்றான் கடினமாக.​

அக்கண்யன் மாறாப் புன்னகையை வெளிப் படுத்த, தந்தையின் கண்களை கூர்ந்து பார்த்துக் கொண்டே,​

“நான் வேற யாருக்காகவும் வரல. என்னோட டேட்க்காக வாரேன். இதோ இந்தக் கண்கள்ல இருந்த எனக்கான துளி யாசிப்புக்காக வாரேன்.​

எங்க அப்பாவோட ஏக்கமான அழைப்ப சகிக்க முடியாமல் வாரேன். என்னோட அப்பா எனக்காகக் கூட என்கிட்ட ரிக்வெஸ்ட் பண்ணக் கூடாதுங்கிறதுக்காக வாரேன். ஒன்லி, ஒன்லி ஃபார் யூ டேட்!" என்றவன்​

“நினைச்சத சாதித்து விட்டீங்கள்ல! ம்ச்.. இப்படி ஆகும்னு தான் வராம இருந்தேன். எப்படியோ உங்க பொண்டாட்டிக்காக நினைச்சத முடிச்சுட்டீங்க!"​

“ஹா.. ஹா.." உரத்து புன்னகைத்தவன்,​

“மறுபடியும் சொல்றேன். என் மனைவிக்காக மட்டுமில்ல, மகனுக்காகவும். நான் நாளைக்கு வெயிட் பண்றேன். நானும், என் மனைவியும், நம்ம குடும்பமும்!" என்றவன் முகம் கொள்ளாப் புன்னகையோடு விடை பெற,​

எள்ளளவும் தாயை விட்டுக் கொடுக்காத தந்தையின் தாய் மீதான அன்பிலும், காதலிலும் நெகழ்ந்தவன் உள்ளமோ,​

‘மனுஷனா வரணும்னு நினைக்கிறேன்பா. ஆனா, அங்க நான் அரக்கனா ஆகாம இருக்கணும்.'​

என்றெண்ணி மீண்டும் அலை கடலை வெறிக்க, காதலின் வேதங்கள் நிறைய விந்தைகளை நிகழ்த்தக் காத்திருந்தது.​

 

santhinagaraj

Well-known member
வாழ்க்கையில் எப்படிப்பட்ட புயலே வீசி இருந்தாலும் அதை எதிர்கொள்ளாமல் அவன் காயங்களை ஆற்றிக் கொள்வதற்காக சர்வேஷ் தேர்ந்தெடுத்த பாதை மிகவும் தவறாக இருக்கு.
அப்படி என்ன கோபம் சர்வேஷ்க்கு அவன் தாயின் மீது?
 

admin

Administrator
Staff member
வாழ்க்கையில் எப்படிப்பட்ட புயலே வீசி இருந்தாலும் அதை எதிர்கொள்ளாமல் அவன் காயங்களை ஆற்றிக் கொள்வதற்காக சர்வேஷ் தேர்ந்தெடுத்த பாதை மிகவும் தவறாக இருக்கு.
அப்படி என்ன கோபம் சர்வேஷ்க்கு அவன் தாயின் மீது?
அவனோட வலி ஆழமானதா இருக்கலாம் அக்கா
 

shasri

Member
உங்கள் வார்த்தை பிரயோகம் ரொம்ப நல்லா இருக்கு 👏👏👏 அப்பா மகன் உறவு ரொம்ப அழகா சொல்லீருக்கீங்க ❣️❣️❣️
 

admin

Administrator
Staff member
உங்கள் வார்த்தை பிரயோகம் ரொம்ப நல்லா இருக்கு 👏👏👏 அப்பா மகன் உறவு ரொம்ப அழகா சொல்லீருக்கீங்க ❣️❣️❣️
மிக்க நன்றி அன்பே..
 
Top