காலையில் கல்லூரிப் பேருந்துக்காகக் காத்து கொண்டிருந்தனர் சாத்விகாவும், பிரணவிகாவும். கார்த்திகா இருவரையும் தனியாகச் செல்ல அனுமதிப்பது அவர்களது பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தகம் வரையில் மட்டும் தான். வேறு எங்குச் சென்றாலும் இருவருக்கும் துணையாகக் கவினோ, கார்த்திகாவோ அல்லது குடும்ப உறுப்பினர்கள் யாரோ ஒருவர் அவர்களுடன் இருப்பார்கள்.
அவர்களைத் தனியாகப் பார்க்க வேண்டுமானால் கல்லூரியிலோ அல்லது காலையில் வீட்டிலிருந்து பேருந்து நிலையம் செல்லும் பாதை மற்றும் மாலை பேருந்து நிலையத்திலிருந்து வீடு செல்லும் பாதையில் மட்டுமே. பேருந்து கூடக் கல்லூரி பேருந்து தான் தனியார் பேருந்தோ அல்லது அரசு பேருந்தோ பயன்படுத்த அனுமதி கிடையாது.
கார்த்திகாவின் இளவயதில் அவளின் தோழியான கவினின் மூத்த மனைவி மஞ்சரியின் கேடுகெட்ட குணத்தால் அனுபவித்த ஒரு கசப்பான அனுபவத்திலிருந்து அவரால் இன்றுவரை வெளிவர முடியாமல், சிறகுவிரித்து பறக்க வேண்டிய இந்த இளங்குருத்துகளின் சிறகை இழுத்து பிடித்துக் கட்டி வைத்துள்ளார்.
இருவரும் அதற்குப் பழகிவிட்டாலும், பிரணவிகா மட்டும் இன்னமும் அந்தக் கட்டை அவிழ்த்துச் சிறகு விரிக்க விடா முயற்சியாக முயன்று கொண்டே இருப்பதன் விளைவு தான் கார்த்திகாவுக்கு அடிக்கடி இரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தி வீட்டில் சிலபல வசவுகளை வாங்கிக் கட்டிக் கொள்வாள்.
அன்றும் அதுபோலப் பேருந்து நிறுத்தகத்தில் கல்லூரி பேருந்துக்காக நிற்க, அவர்களை ஒட்டியபடி வந்து நின்றது ஒரு லேண்ட் ரோவர் கார். அதைப் பார்த்ததும் உள்ளே யார் இருப்பாரெனச் சரியாகக் கணித்த இருவரில் ஒருவர் முகத்தில் குதூகலமும், சந்தோஷமும் வந்ததென்றால், மற்றொருவளிடம் எரிச்சலும், முறைப்பும் வந்தது.
காரின் கண்ணாடி இறக்கப்பட உள்ளிருந்த படியே அழகாய் கைகாட்டினான் விராஜ். அவனுக்கும், சாத்விகாக்கும் இடையே சில காலமாக ஒத்துவராமல் சண்டை வந்து கொண்டே இருந்தது. அதனால் இன்று அவளை நேரில் பார்த்து அவளிடம் பேசிவிடும் நோக்கத்தில் விடியலிலேயே எழுந்து வந்துவிட்டான் அவளைத் தேடி.
“ஹாய்டா” என ஆர்ப்பாட்டமாய் அவனிடம் பேசினாள் பிரணவிகா.
“ஹாய் டார்லி. எப்படி இருக்க?” என்றான் அவனும் சந்தோஷமாக.
“சூப்பர் குட்’டா. உனக்கு எப்படி போகுது?”
“எனக்கென்ன ஜாலியா பெரியப்பா கூடச் சேர்ந்து அரசியல் என்னும் கடல்ல நீச்சல் அடிச்சுட்டு இருக்கேன்”
“வர வர நல்லா பேசுற டா”
“அப்புறம் பேசனும்ல அடுத்து எலெக்ஷன் வரும்போது பிரச்சாரத்துக்கு எல்லாம் பேசனும். அரசியல்வாதிக்கு வாயும், பேச்சும் தான்மா முக்கியம்”
“அது சரி.. ஆனா இன்னும் நீ பேச்சு திறமைய வளர்க்கனுமோடா. பெர்ஃபாமென்ஸ் சரியில்லையே” என சாத்விகாவை பார்த்துக்கொண்டே கூறினாள்.
“உலக புகழ்பெற்ற பேச்சாளர் கூட இந்த சப்ஜெக்ட்ல கொஞ்சம் முட்டி மோதித் தான் ஜெயிக்கனும்.. நானோ கத்து குட்டி.. கத்துக்குவோம்” எனக்கூறி அவளோடு ஹைஃபை அடித்துக் கொண்டான்.
“சரி டார்லி எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணேன்? நான் அவள கூட்டிட்டு போகட்டுமா? கொஞ்சம் தனியா பேசனும்”
“இதுக்கு எதுக்குடா என்கிட்ட பெர்மிஷன் கேட்டுகுற, அவ வந்தா கூட்டிட்டு போ”
“நீ தனியா போய்ப்பியா?”
“அதெல்லாம் போயிடுவேன்”
“இல்ல.. விஹான் இன்னைக்கு காலெஜ் தான் கிளம்பிட்டு இருந்தான், அவன பிக் பண்ணிக்க சொல்லவா?” எனச் சிரித்தபடி அவளை வேண்டுமென்றே கடுப்பேற்றினான்.
“எப்பா சாமி நான் அண்டாட்டிக்கா கண்டம்வரைக்கும் கூடத் தனியாவே போய்ப்பேன். யாரோட தயவும் வேணாம். அதுவும் உன்நொண்ணன் அந்த சிடுமூஞ்சி தயவு வேண்டவே வேண்டாம் டா ராசா” என்று கையெடுத்து கும்பிட்டவள் சாத்விகாவை இழுத்து காரில் அமற வைக்க, அவளோ ஏறமாட்டேன் என அடம்பிடித்தாள்.
காரில் அமர்ந்த படியே எட்டி சாத்விகா கையைப் பிடித்தவன் இழுத்து காரில் அமர வைத்தான் விராஜ். அதற்குள் கல்லூரி பேருந்தும் வரக் காரின் கதவை மூடிவிட்டு,
பிரணவிகா “பஸ் வந்துருச்சு.. நீ பேசிச் சமாதானம் ஆகு.. நான் லீவ் சொல்லிடுறேன்”
சாத்விகா “ஏய் நில்லு கேர்ள் நானும் வரேன்” எனக்கூறி இறங்க போக, அவள் கையை இழுத்து பிடித்துக் கொண்டவன்,
“டார்லி லீவ் எல்லாம் சொல்லாத.. நான் காலெஜ்க்கு கூட்டிட்டு வந்துருவேன்” என விராஜ் கூற,
பிரணவிகா “சரிடி அப்போ நான் கேண்டீன்ல வெயிட் பண்றேன் வந்துரு” எனக்கூறி சிட்டாகப் பறந்து கல்லூரி பேருந்தில் ஏறிக் கொண்டாள்.
இங்குக் காரிலிருந்த சாத்விகாவோ விராஜை தீயாய் முறைத்துக் கொண்டிருந்தாள்.
“ஏண்டி முறைக்கிற?”
“இப்போ எதுக்கு என்னை இப்படி இழுத்துட்டு வர?”
“பேசனும்”
“தேவையில்ல”
“நான் சொல்றத காதுல வாங்குடி”
“முடியாது. நான் சொல்றத நீ செய். அப்புறம் வந்து பேசு”
“ஏண்டி இப்படி படுத்துற?”
“உன் நல்லதுக்கு தான் சொல்றேன்.. நல்லது சொன்னா படுத்துறேனா? அப்ப உன்னைப் படுத்தாத ஒருத்திய பார்த்துக்கோ என்னை விட்டுறு”
“அதையும் நீயே பார்த்துக்கொடேன்” எனக்கூற, எரித்துவிடுவது போலப் பார்த்தாள்.
“உன்னைக் கரெக்ட் பண்ணவே அந்தப் பாடு பட்டேன். இனி எவள போய்த் தேட? காரோட பெர்ஃபாமென்ஸ் எப்படி இருக்கும்னு ஓனருக்கு தெரியாதா?” என அவன் கேட்க,
“நல்ல டிரைவரா பாரு.. கார எப்படி வழிக்குக் கொண்டுவரனும்னு டிரைவருக்குத் தெரியும்”
“ஓனரும் நீயே.. டிரைவரும் நீயே.. கீளீனரும் நீயே..” எனக் கண்ணடிக்க கையிலிருந்த தண்ணிர் பாட்டிலால் அவன் தோளில் அடித்தாள்.
“ஆஹ்.. வலிக்குதுடி”
“வலிக்கட்டும். இந்த வாய் இல்லனா உன்ன நாய் தூக்கிட்டு போயிடும்”
“வாய் ரொம்ப முக்கியம்மா”
“அதான் தெரியுமே! இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்ன வாய் எவ்ளோ முக்கியம்னு லெக்ச்சர் கொடுத்தியே”
“அது தொழிலுக்கு.. ஆனா நமக்கு வேற வேலைக்கு முக்கியம்..” என அவள் உதட்டையே பார்க்க, அவன் கூற வருவது புரிந்து வெட்கம் வேறு வந்து தொலைத்தது அவளுக்கு.
“என் மூஞ்சிய பார்க்காம ரோட்ட பார்த்து வண்டிய ஓட்டு.. இல்ல மொத்தமா போய்டுவோம்”
“ஹோ லூசு.. என்ன பேச்சு இது” எனக்கூறியவனும் அடுத்து அவளிடம் எதுவும் பேசாமல் வண்டியை ஓட்டியவன் கொஞ்சம் தள்ளி நெருக்கடி இல்லாத ஆள் அரவமற்ற ஒரு சாலையில் வண்டியை ஓரங்கட்டி நிறுத்தினான்.
“என்னா நின்னுட்ட?” என அவள் கேட்க,
“பேசிட்டு அப்புறம் போலாம். நீ வேற லூசு மாதிரி பேசிட்ட”
“என்ன பேசனும்?”
“இப்போ எதுக்கு நீ முரண்டு பிடிச்சுட்டு இருக்க?” என்றான்.
“யாரு.. நானு..?” என அவனை முறைத்துக் கொண்டே கேட்டாள் சாத்விகா.
“அப்புறம் நானா?”
“இடக்கு மடக்கா பேசத்தான் கூட்டிட்டு வந்தனா என்னைக் காலேஜ்ல கொண்டு விடு. ஃபஸ்ட் ஹவரே லெக்ச்சர் கிளாஸ் லேட்டா போக முடியாது”
“அதெல்லாம் கரெக்டா கூட்டிட்டு போயிடுவேன் அத விடு. இப்ப ஏன் நீ ஒரு வாரமா என் கால் அட்டன் பண்ற இல்ல?”
“ஏன் அட்டன் பண்ணனும்?”
“சாத்வி ஒழுங்கா பதில் சொல்லு..”
“நிஜமா தான் கேட்குறேன் ஏன் அட்டன் பண்ணனுங்றேன்? நான் சொல்றத காதுல போடாத உன்கிட்ட எதுக்கு பேசனும்?”
“நீ கேட்குறது உனக்கு நியாயமா படுதா?”
“எனக்கு நியாயமா படுறனால தான் கேட்குறேன்”
“எனக்கு நேரமே இல்லடி.. இதுல எங்க நான் படிச்சு.. பாஸ் ஆக?”
“இது ஒரு சாக்கு உனக்கு.. உன்னை யாரு அரசியல் பண்ண சொன்னா? எப்ப பார்த்தாலும் நாலு கரை வேட்டிய கூடக் கூட்டிட்டு அங்கயும், இங்கயுமா சுத்தி ரவுடித்தனம் பண்ற நீ”
“ஏய்! நான் என்னடி ரவுடித்தனம் பண்ணேன்?”
“சும்மா நடிக்காத.. உன்னைப் பத்தி எனக்கா தெரியாது. எல்லாத்தையும் செஞ்சுட்டு என்கிட்டயே சொல்றவன் தான நீ..”
“அதுக்கு பேர் ரவுடித்தனம் இல்லடி. பிரச்சனைய தீர்த்து விடுறது..”
“ஹ்ங்க் கட்டப்பஞ்சாயத்து..” என்றாள் நக்கலாக.
“விட்டா ஒரு சொம்போடு ஆலமரத்தடியில உட்கார்ந்து இருக்கேனு சொல்லுவ போல”
“இல்லனு வேற நீ சொல்லுவியோ?”
“அடியேய்! அரசியல்னா சில பல பஞ்சாயத்து வரத்தான் செய்யும். நம்ம அத சால்வ் பண்ணத்தான் வேணும்.. அதுக்கு நமக்குனு சில ஆட்கள் தேவைப்படும் தான். இதுனால நான் ரவுடி ஆயிடுவேனா?”
“ஆமா ரவுடி தான். நீ இப்படி இருக்கிறது எனக்குப் பிடிக்கல”
“எனக்குப் பிடிச்சிருக்குடி.. ஏன் உனக்குப் புரிய மாட்டிங்குது?”
“சரி.. உன் போக்குக்கே வரேன். நாளைக்கு நான் படிச்சு முடிச்சு உன்னையே கட்டிக்கிறேனு வை.. கல்யாணப் பத்திரிக்கையில சாத்விகா எம்.பி.பி.எஸ்னு போடுவேன்.. நீ என்ன போடுவ? விராஜ் ராகவேந்திரா அரசியல்வாதினு போடுவியா?”
எனக்கேட்க, பற்களை நறநறவெனக் கடித்தான். அடுத்து ஒரு வார்த்தையும் பேசவில்லை. அவன் கையில் கார் உயர் வேகத்தில் பறந்தது.. அடுத்த சில நிமிடங்களில் கல்லூரி பேருந்துக் கல்லூரியை அடையும் முன்னே இவர்களது கார் கல்லூரியை வந்தடைந்தது.
அவனைக் கோபப்படுத்திவிட்டோம் எனத் தெரிந்து தான். ஆனாலும் இப்படி தான் பேசினாலொழிய அவன் விட்ட பட்டப்படிப்பை முடிக்கமாட்டான். அவன் நல்லதுக்காகத் தான் அவளும் பாடுபடுகிறாள்.
ஆம்! விராஜ் பொறியியல் கல்லூரி படிப்பை முடித்து விட்டான் தான் ஆனாலும் சில பாடங்களில் அரியர் இருக்கிறது அதனால் இன்னமும் அவனுக்குப் பட்டம் வழங்கப்படவில்லை. இவன் கல்லூரி முடியவும் நண்பர்களுடன் ஊரைச்சுற்ற கெட்டுவிடக் கூடாது எனச் சிலகாலம் பெரியப்பாவுடன் சேர்த்து விட, இவனோ அரசியலில் மூழ்கி விட்டான். இன்னமும் அந்த அரியர்கள் முடிக்கப்படாமலே உள்ளது.
அதில் அவன் தாய் கவிதாவுக்குமே, அவன் பெரியம்மா கல்பனா மீது கோபம் இருக்கிறது தான். ஆனால் அவரால் வெளிப்படையாக அதைக் காட்டிக் கொள்ள முடியவில்லை. ஏனெனில் விஹான், விராஜை பெற்றதை தவிற வேறொன்றுமே செய்ததில்லை கவிதா. அவர் உண்டு அவர் வேலை உண்டு என இருந்துவிட்டார். அதனால் இன்று வெளிப்படையாக அவரிடம் கோபம் காட்ட முடியாமல் பல்லைக் கடித்துக் கொண்டு இருக்கிறார்.
ஆனால் காதலிப்பவள், அவனோடு வாழ்க்கையை பகிற இருப்பவளுக்கு அவன் இன்னும் பட்டம் வாங்காமல் இருப்பது குறுகுறுப்பாகவே இருக்க, அவனை அரியர் தேர்வுகளை எழுதக்கூறினாள். அவனோ அதைச் செய்யாமல் இருக்க இருவருக்கும் முட்டிக் கொண்டு இருக்கிறது.
கார் கல்லூரி வளாகத்துக்குள் வந்து நின்றுவிட்டது. அவன் எதுவும் பேசவில்லை அமைதியாகவே இருந்தான். அவன் மனம் நோக பேசிவிட்டாள் தான் ஆனால் அவனை அப்படியே விட்டுச் செல்ல மனமும் வரவில்லை. தயங்கியபடியே அவனைப் பார்த்தாள் அவனோ அவளைத் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை முன்னால் பார்த்தபடியே அமர்ந்திருந்தான்.
“வீர்..”
“போயிடுடீ.. கொலை காண்டுல இருக்கேன்”
“வீர்.. சாரி டா”
“போனு சொன்னேன்”
“ரொம்ப பண்ணாத.. நீ இப்படி உர்ருனு போனா என்னால இன்னைக்கு கிளாஸ் அட்டன் பண்ணவே முடியாது”
“கிளம்பு” எனப் பல்லைக் கடித்துக் கூறினான்.
அவனைக் காயப்படுத்திவிட்டது அவளுக்கும் வலி தான். ஆனால் சுகமடைய வேண்டுமெனில் காயத்தைக் கீறி மருத்திடுவது தானே மருத்துவரின் குணம். அதைத்தான் அவள் செய்துள்ளாள். அவளுக்கு அவள் கணவன் ஒரு பட்டப்படிப்பையாவது முடித்திருக்க வேண்டும். பின்னாளில் அவர்களின் குடும்ப தொழில் ஒன்றை பார்த்தால் போதுமென்ற மனநிலை தான். அதற்காகத் தான் இப்போது மல்லுக்கு நிற்கிறாள்.
உண்மையான காதலில் காயப்பட்டவர்களை விடக் காயப்படுத்தியவர்களுக்கு தான் அதிக வலி. அவளும் வேதனையோடு இறங்க போனவளின் கையைப் பிடித்து இழுத்தான். அவன் இழுத்த வேகத்திற்கு அவனை வந்து முட்டினாள். இருவரின் முகமும் அருகருகே இருந்தது.
என்ன? ஏது? என அறியும் முன்பே அவள் இதழோடு தன் இதழைப் பொருத்தினான். முதல் முத்தம் இருவருக்கும். உறவினர்கள் தான், காதலர்கள் தான் ஆனாலும் இதுவரை அவர்கள் எட்ட நின்றே பழகினர். அணைப்பும் இல்லை.. முத்தமும் இல்லை.
இன்று தான் முதல் முத்தம் அதுவும் இதழ்முத்தம். கொஞ்சம் பதறித்தான் போனாள், ஆனாலும் விலக மனம் இல்லை. முதன் முதலாக அவன் தரும் முத்தம் இனிய அனுபவம் அதை அவளும் இழக்க விரும்பவில்லை. அவளும் விரும்பியே அவனுடன் ஒரு இதழ் சங்கமம்.
மென்மையாக இதழும் இதழும் உறச மட்டுமே ஆரம்பமானது ஆனால் அதை முடிக்க மனம் இல்லாமல் அவள் கீழ்ழிதழை இழுத்து சுவைக்க, அவளுக்கு ஆயிரம் பட்டாம்பூச்சி வயிற்றில் பறந்தது.
மருத்துவம் படிப்பவள் தான், ஹார்மோன்களின் வேலை எல்லாம் தெரிந்தவள் தான். ஆனால் அதெல்லாம் தியரி பாடமாக மட்டுமே தெரியும். ஆனால் இன்று அதைச் செய்முறையாக உணர்கிறார். உணர்வுகள் இருவருக்கும் கிளர்ந்து எழுந்தது.
உரசல் சுவைத்தலாகி எப்போது எச்சில் பரிமாற்றம்வரை சென்றதென்றே இருவருக்கும் தெரியவில்லை. உணர்வுகளின் பிடியில் இருந்த இருவரும் கால, நேரம் மறந்தது மட்டுமல்லாமல் இருக்குமிடத்தையும் மறந்துவிட்டனர். அப்போது தொடர்ந்து ஒலித்த ஹார்ன் சத்தத்தில் இருவரும் படாரெனப் பிரிந்தனர்.
திரும்பிப் பார்க்க அருகில் சென்ற காரிலிருந்த விஹான் இருவரையும் முறைத்தபடி செல்ல, அவனோ பின்னந்தலையை கோதிக் கொண்டான். இவளுக்கோ இன்னமும் விஹான் பார்த்தது தெரியாது. அவள் தான் இந்த உலகத்திலேயே இல்லையே அவன் இழுத்து சென்ற வேறொரு கிரகத்தில் அல்லவா இருக்கிறாள்.
மெதுவாக அவளைத் திரும்பிப் பார்க்க, உதடுகள் அவன் செய்த மாயத்தில் சிவந்திருந்தது. முகமெல்லாம் வெட்கத்தில் சிவந்து மேலும் அவன் உணர்வுகளைத் தூண்டும் படியாக இருந்தாள். இருக்குமிடம் கருதி தன்னைத் தானே கட்டுப்படுத்திக் கொண்டு தன்னருகிலிருந்த அவள் தண்ணீர் பாட்டிலை அவளிடம் நீட்டி “முகத்தைக் கழுவிட்டு போடி” எனக்கூற, அங்கிருந்த கண்ணாடியில் தன் முகம் பார்த்தவளுக்கும் வெட்கம் பிடிங்கி தின்றது.
காரிலிருந்த படியே முகத்தை மட்டும் வெளியே நீட்டிக் கழுவிவிட்டு, கண்ணாடியைப் பார்த்து முகத்தைச் சரிசெய்தாலும் உதட்டு சிவப்பு மட்டும் மாறவில்லை. சற்று நேரத்தில் என்னவெல்லாம் செய்து விட்டானென நினைத்துப் போலியாக அவனை முறைத்தாள்.
அந்நேரம் பார்த்துச் சரியாகப் பிரணவிகாவும் பேருந்திலிருந்து இறங்கி இவர்கள் காருக்கு அருகில் வர, சாத்விகா அவனை முறைப்பதைப் பார்த்து “இன்னமும் சமாதானம் ஆகலயா? என்னமோ போங்க. வாடி டைம் ஆச்சு” என அவளை அழைத்துக்கொண்டு சென்றாள்.
சாத்விகாவும் அவனைத் திரும்பி, திரும்பிப் பார்த்தபடி பிரணவிகா இழுப்புக்கு சென்றாள். அவனும் பின்னந்தலையை கோதிக்கொண்டு வண்டியைத் திருப்பிக்கொண்டு சென்றான். தற்காலிகமாக இருவரும் தங்களது சண்டையை விடுத்து இதழ்சண்டையில் ஈடுபட்டாலும் இருவருக்குள்ளும் இடையில் உள்ள சண்டை இன்னமும் அப்படியே தான் இருக்கிறது.