எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

வேதம் - 06

admin

Administrator
Staff member

அத்தியாயம் - 6​

“என்னம்மா நீங்க? காலையில இருந்து நாலு மணி நேரமா இப்படி பூஜை அறையிலேயே இருக்கிறீங்களே! நல்லாவா இருக்கு, எழுந்து வெளிய வாங்கம்மா."​

மௌனம், நீண்ட மௌனம். நேற்றிலிருந்து ஜனனியிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு, மௌனம் மட்டுமே பதில்.​

“அம்மா!" ஆத்வீக் குரலை உயர்த்தவும்,​

“ஆத்வீக்.!" என்ற அக்கண்யனின் மிரட்டும் குரல் அவனைத் தடை செய்ய,​

“அப்பா!" தந்தையை ஆத்விக் இரஞ்சலாக அழைக்கவே, மனைவியின் மனவோட்டம் புரிந்தவன்,​

“விடு ஆத்விக். அவளுக்கு அதுதான் பிடிச்சி இருக்குனா, அதையே செய்யட்டும்."​

என்றவன் ஜனனியை உறுத்து விழிக்க, கணவனின் பார்வையில் தலை கவிழ்ந்தாள்.​

“அப்பா இப்படி சொன்னா எப்படி? ரெண்டு நாளா அவன் வரமாட்டானானு இவங்க தான் தவம் இருந்தாங்க. ஓகே, வந்ததும் இங்க வரல. நேற்று வருவான்னு நம்புனாங்க. நேற்றும் வரல. பட் இன்னைக்கு கண்டிப்பா வருவான், வருவான் என்ன அங்கிருந்து புறப்பட்டுட்டானு இப்போ தானே வருண் மெசேஜ் செய்தான். இன்னுமே அம்மா இப்படி இருந்தா என்ன அர்த்தம்?"​

“சோ! அதுக்கு என்ன செய்யச் சொல்ற ஆத்விக். அவளும் அவளோட பிடிவாதமும் ஒரு பக்கம்னா, அவள் ரத்தத்தில் இருந்து வந்த அதே பிடிவாதம் தான், அவள் மகன் ரத்தத்தில் இருக்கு.​

நீங்க சொல்லி நான் என்ன வர்றதுன்னு நேற்று அவன் வரல. பட் இன்னைக்கு அவன் வருவான்னு, நம்ம எல்லாருக்கும் தெரியும்!"​

“அதுதான்பா சொல்றேன். வராதவனுக்காக அன்னைக்கு அவ்வளவு பண்ணுனாங்க. இப்போ என்னன்னா காலைல தாத்தாவோட திதி பூஜை முடிந்ததுல இருந்து, பூஜை அறையில வந்து உட்கார்ந்துக்கிட்டு வரமாட்டேன்னு பிடிவாதம் பிடித்தா எப்படி?"​

இலங்கை வரேன் என்று முரண்டு பிடித்தவனை, தந்தை மூர்க்கணாங்கயிறு கட்டி இழுத்து வராத குறையாக அழைத்து வந்திருக்க, தாயோ அசையாது சிலை போல் இருக்கிறார் என்பதில், அவனுக்குப் பெரும் ஆதங்கம்.​

இருக்காதா பின்னே! மூன்றரை ஆண்டுகளுக்குப் பின், சொந்த வீட்டில் கால் பதிக்கும் தமையனுக்காக, உடன் பிறந்தவன் இதயம் துடித்தது. அதும் எப்பேற்பட்ட பிரிவு! நினைக்கவே ஆயாசமாக இருந்தது.​

இவர்கள் இங்கு வழக்காடிக் கொண்டிருக்க, வீட்டு மதிலுக்குள் ரேஞ்ச் ரோவர் ‘கிரீச்' என்ற சத்தத்தோடு நிற்க. உள்ளிருந்தவர்களுக்கு அந்த ஒலி, சர்வேஷ் வந்துட்டான் என்பதைச் சொல்லியது.​

“அம்மா, சர்வா வந்துட்டான். வாங்கம்மா ஆரத்தி எடுக்க."​

ஆத்விக்கின் பரபரப்பான குரலுக்கும், ஜனனி அசையவில்லை. அக்கண்யனோ அழுத்தமாக,​

“ராகவிமா, நீ போய் ஆரத்தி எடு."​

வேதனையோடு தன் அத்தையைப் பார்த்தவள், நேரம் கடத்தாது ஆரத்தி தட்டோடு வாசலை நோக்கி நடக்கத் தொடங்கினாள். நொடிகள் பிந்தினாலும், புயல் கரையைக் கடந்து விடும் என்பதை அறியாதவளா, அவள்.​

சர்வாவை நெருங்கிய ராகவியோ, நீண்ட ஆண்டுகளுக்குப் பின் ஓங்குதாங்கான உருவத்தோடும், உடையைத் தாண்டிப் புடைத்த புஜங்களோடும், தாடி, மீசை, தலை முடியை ஒரு ரப்பர் பேண்டுக்குள் அடக்கிய விதம் என தன் முன் நிற்கும் ராட்சச உருவத்தில், வாயைப் பிளந்து விட்டாள்.​

ராகவி சற்றே ஜாலி பேர்வழி. எதையும் நகைச்சுவையாக எடுத்துக் கொள்ளும் குணமுடையவள். அவளின் இந்தத் தோற்றத்தை கண்ட சர்வா, இதழ் கரையோரம் மெல்லிய புன்னகை பூத்தது. இருப்பினும் இரும்பு உருகாது என்பதைப் போல முகத்தை வைத்துக் கொண்டவன், எங்கோ பார்வையை பதித்துக் கொண்டு,​

“நகருங்க!" என்றான் இறுக்கமாக.​

சட்டென விழியோரம் தேங்கி நின்ற விழி நீர், சர்ரென அவள் கன்னங்களில் இறங்கத் தொடங்கியது.​

எனினும் எதிரே இருந்தவன் முகத்தில் இளக்கம் தெரியவில்லை. ஆனால், ராகவிக்குப் பின்னிருந்த ஆத்விக்கின் முகம் முழுவதும் புன்னகையில் பூத்திருந்தது. மனைவியின் அழுகை தம்பியின் இறுக்கம் எல்லாம் கடந்து, தமையன் வந்து விட்டான் என்ற எண்ணம் மட்டுமே அவனிடம் மிஞ்சி இருக்க.​

“ராகவி, என்ன இது? குழந்தை பிள்ளை மாதிரி அழுதுக்கிட்டு?"​

அவளை அதட்டியவன், கற்பூரத்தை பற்ற வைக்க, அவர்களை ஒரு கையில் தடுத்தவன்..​

“இதுக்கெல்லாம் அவசியம் இல்லை!" அழுத்தமாக மறுக்க,​

“நீ வாய மூடுடா, தடியா!"​

என்ற ராகவியின் குரல் அன்பெனப் பாய்ந்து வர,​

பின் இருந்த ஆத்விக் வாய்விட்டுச் சிரித்தான் என்றால், சர்வேஷ் உக்கிரமாக முறைத்தான்.​

அங்கு அக்கண்யன் வெறும் பார்வையாளர் மட்டுமே. பிறந்ததிலிருந்து பார்த்துக் கொண்டு இருக்கிறானே, வருண் எப்படியோ அப்படியே சர்வேஷூம் ராகவிக்கு. என்ன வருணைக் காட்டிலும், சர்வேஷின் மீது எப்போதுமே ராகவிக்கு ஒரு பயமும், மரியாதையும் இருக்கும்.​

அதே நேரம் அவள் வாய் அவள் சொன்ன பேச்சை என்றும் கேட்பதில்லை. இங்கு இப்படி இருக்க, மூன்று வருடங்கள் கழித்துக் கேட்ட மகன் குரலில் அந்தத் தாய் உள்ளம் துடிக்க, உடம்பெல்லாம் மயிர் கூச்செறிந்து பெற்ற வயிறு துடிதுடிக்க, வியர்வையில் குளித்து மூர்ச்சையாகி விடும் நிலையில்.. பூஜை அறையில் தவம் கிடந்தாள், ஜனனி அக்கண்யன்.​

கவனம் எங்கு இருப்பினும் மனைவியை கவனித்துக் கொண்டிருந்தவன் பார்வையில் இது தப்பவில்லை. ஆனால், சில காயங்களுக்கு வலிக்க, வலிக்க மருந்திட வேண்டியதன் அவசியம் உணர்ந்தவன் அமைதி காக்க,​

“உஷ்!.. போதும் ராகவி! அமைதியா ஆரத்தி எடு."​

“வேண்டாம்னு சொல்றேன்ல"​

வழமையான அவன் உறுமலில் ஆரத்தி தட்டோடு ராகவி இரண்டு எட்டு பின்னே நகர, அவளை இறுக்கிப் பிடித்த ஆத்விக்,​

“நீ எடு. நான் சொல்றேன்ல, நீ எடுடி!"​

அவன் மிக அமைதியான குரலில் அழுத்தமாகக் கூறிட, அந்த தொனியில் தம்பி அமைதி அடைந்தான். விழியில் பெருகிய விழிநீரை துடைக்க மறந்த ராகவி, ஆரத்தி எடுத்து விட்டு திலகமிட எட்ட முனைந்தாள்.​

அவளுக்கு எட்டவும் இல்லை, அவன் குனியவும் இல்லை. கணவனைப் பாவமாக ஒரு பார்வை பார்க்க, ஆத்விக் லேசாக மனைவியை அவன் உயரத்துக்கு தூக்கிப் பிடிக்கவும், சர்வேஷ் சிரித்து விட்டான்.​

அங்கு கல்லாக சமைந்திருந்த பெண் அகலிகையோ, கேட்டும் கேட்காத வண்ணம் மௌனித்திருந்தாள்.​

“தடியா! கொஞ்சம் குனிஞ்சா தான், என்னவாம். கிரீடம் இறங்கிடுமோ?"​

“ஆமா.. கிரீடம் இறங்கிட்டா, தூக்கி மாட்ட முடியாது!"​

அவனும் கிண்டலோடு கூறி விட்டு வீட்டுக்குள் வர, ஆத்விக் சர்வேஷை பாய்ந்து அணைத்துக் கொண்டான். சர்வேஷ் திருப்பி அணைக்கவில்லை. ஆனால், மிக நெகிழ்ந்து போயிருந்தான்.​

தமையனின் உடல் மொழியில் அவனைக் கண்டு கொண்டவன்,​

“நீ ஹக் பண்ணாத, இப்படியே பிடிவாதமா இரு. பட்.. நான் எப்பவும் உனக்கு அண்ணனா தான் இருப்பேன். தடுக்க நினைக்காத ராஸ்கல்!"​

ஆத்விக் வாயை மூடும் முன், அண்ணனை இடையோடு பிடித்து இரண்டடி மேலே தூக்கி இருந்தான்.​

“விடுடா டேய்! கீழ போட்றாதடா விடுடா!"​

“இஸ் இட்?"​

அப்படியே இன்னும் சற்று மேலே தூக்கியவன்..​

“சின்ன வயசுல நீங்க தூக்கும் போது, நான் இப்படி பயப்படலையே! இப்ப என்ன பயமா? 96 கிலோ இருந்து ரெண்டு கிலோ கூடி 98 கிலோ இருக்கேன். உங்களை தூக்க முடியாதா என்ன?" என்றதும்,​

“ஹா.. ஹா.." ஆத்விக் வாய்விட்டுச் சிரிக்க,​

அக்கண்யன் நீண்ட நெடிய வருடங்களுக்குப் பின் பிள்ளைகளின் இணக்கத்தில் நெகழ்ந்து இருந்தான் எனில், ஜனனியோ சிலையென இருந்த தன் நிலையை மாற்றவில்லை. கேலி கிண்டலோடு ஆத்விக்கை சர்வேஷ் இறக்கி விட, ஆத்விகோ அவனை அழுத்தமாகப் பார்த்து,​

“அம்மாடா!" இப்போது சர்வேஷிடம் அழுத்தமான அமைதி.​

“அம்மா சர்வா!" மீண்டும் அவனிடம் அமைதி. “சர்வா!" ஆத்விக் குரல் உயர்த்தவும்,​

அதுவரை சிலையாக இருந்தவள், அமர்ந்த நிலையில் மயங்கிச் சரிந்தாள். மனைவியில் கண் வைத்திருந்த அக்கண்யன்,​

“ஜனனி!" என்ற கூவலோடு அவளை நெருங்கும் முன், சர்வேஷ் சிறுகுழந்தையென தன் தாயைக் கைகளில் ஏந்தியவன், நீண்ட இருக்கையில் கிடத்தி, அவர் தலையை தன் மடியில் ஏந்திக் கொண்டவன்,​

“அண்ணி பாருங்க. அவங்களுக்கு என்ன ஆச்சுன்னு பாருங்க. டாக்டருக்கு தானே படிச்சீங்க? ஒருத்தவங்க மயங்கி விழுந்தா, உடனே ட்ரீட்மென்ட் பண்ணனும்னு தெரியாதா?”​

அவன் உரக்கக் கத்தவும் பதறியவள், மெடிக்கல் கிட்டைக் கொண்டு வர ஓடினாள். அன்னையை நெருங்க நினைத்த ஆத்விக்கை, நெருங்காதே என அக்கண்யன் கண்ணைக் காட்ட, அவனும் அமைதி காத்தான். தான் ஆடாவிட்டாலும் தசையாடும் என்பதைப் போல், அன்னையின் மூர்ச்சையில், மகனின் மூர்ச்சையான உணர்வுகள் உயிர் பெற்றது.​

“அண்ணா, தண்ணிய எடுத்துட்டு வாங்க"​

நீரை லேசாக எடுத்து அவள் முகத்தில் தெளித்தும், மயக்கநிலை கலையாது இருக்க, இப்போது மகன் பதறி விட்டான்.​

“அண்ணி!" அவன் மீண்டும் உரக்கக் கத்தவும், ராகவி பதறி அடித்துக் கொண்டு வந்து தன் அத்தையை பரிசோதித்து விட்டு,​

“பிரஷர் இன்க்ரீஸ் ஆகியிருக்கு, ஆத்விக். ஒரு இன்ஜெக்ஷன் போட்டு விடுவோம். என்கிட்ட அத்தைக்கு தேவைப்படுமேன்னு வாங்கி வச்ச மெடிசின் இருக்கு. இருங்க." என்றவள் ஊசியில் மருந்தை ஏற்ற,​

“அண்ணி, அவங்களுக்கு தான் ஊசி பிடிக்காதுல?"​

“அதுக்குன்னு இப்படியே விடச் சொல்றியா?"​

அது வரையில், தன் அன்னையின் தலையை நெஞ்சோடு அணைத்துப் பிடித்த நிலையை மகன் மாற்றவில்லை. ராகவியோ நொடியில் மருத்துவம் பார்த்து முடிக்க, நீண்ட நேரத்தில் கண்விழித்த ஜனனி கண்டது, தன்னைக் கண்ணிமைக்காது பார்த்துக் கொண்டிருந்த தன் மகனையே. அவன் பரந்த இதயத்திற்குள், தாயோ குருவியாகி மகனில் அடைக்கலமாகி இருக்கும் விந்தையைப், பார்க்க அத்தனை ரம்யமாக இருந்தது. நடுங்கும் விரல்களை மெதுவாகத் தூக்கி, மகன் முகத்தை நடுக்கத்தோடு வருடி, அந்த விரல்களை தன் உதட்டில் ஒத்தி முத்தமிட்டு,​

“கண்ணா அ.. அம்மாஆஆ...” திணறியவள்,​

“இந்த அம்மாவ.. மன்னிப்பியா?"​

அப்படியே அன்னையின் முகத்தை தன் நெஞ்சோடு புதைத்து, அவள் தலையை தன்னோடு பிடித்து இறுக்கி அணைத்துக் கொண்டவன், தாயின் தலை மீது நாடியைப் பதித்து கண்மூடிக் கொண்டான். மகன் வாய் திறந்து பேசாத ஆயிரம் வார்த்தைகளை, அவன் இதயம் அந்தத் தாயிடம் பேசியது. இதயத்தின் பாஷைகளை விடவுமா, அன்னையிடம் மகன் வாய் வழி பேசி விட முடியும்.​

“தெரியல? மன்னிப்பேனா, மறப்பேனா, பேசுவேனா, பேசமாட்டேனான்னு தெரியல? அங்கிருந்த வரைக்கும் எப்படியோ! இனி எதுவுமே தெரியல. உங்களை வெறுக்க முடியுமா, முடியாதா? இல்ல.. அம்மான்னு கூப்பிட முடியுமா, முடியாதா? உங்கள நேசிக்க முடியுமா, முடியாதா? இல்ல.. ஒரு மகனா உங்ககிட்ட உரிமை எடுக்க முடியுமா? முடியாதா? இப்படி எந்தக் கேள்விக்கும் என்கிட்ட பதில் இல்லை. எதையும் கேட்காதீங்க. ஆனா இனியும் உங்களை விட்டு விலகிப் போக மாட்டேன். போகவும் முடியாதுன்னு தோணுது.​

அங்க இருக்கும் போது இருந்த வெறுப்பும், வைராக்கியமும் இதோ இப்படி உங்களைப் பார்த்தா ஒடஞ்சிடும்னு தான், இங்க வராம இருந்தேன். ஆனா.. உங்க புருஷனை வைச்சு அதையும் சாதிச்சிட்டீங்க!"​

அவன் குரல் அழுத்தமாக, இறுக்கமாக, உருக்கமாக மாறி மாறி வந்தாலும், அன்னையின் தலையை மட்டும் நெஞ்சில் இருந்து அகற்ற அனுமதிக்கவில்லை. மேலும் அவனோ,​

“அக்கண்யனோட ரத்தம் எப்படி ஜனனிய வெறுக்கும். முயற்சிக்கிறேன், உங்களை உங்களுக்காக மட்டும் நேசிக்க முயற்சிக்கிறேன். உங்கள.. உங்களுக்காக மட்டும் மன்னிக்க முயற்சிக்கிறேன். உங்களுக்காக மட்டும் மறக்கவும் முயற்சிக்கிறேன்."​

என்றவன் அழுகையில் குலுங்கும் தாயை அணைத்த வண்ணம், தலையை பின்னால் சாய்த்து அமைதி காக்க,​

ஜனனியோ.. மகனின் ஒவ்வொரு வார்த்தையிலும் மீண்டும் மறு ஜனனம் எடுத்தாள். அவன் வார்த்தை கொடுத்த அழுத்தம், அவளை அழ வைத்து, நெகிழ வைத்து, சிரிக்க வைத்து, உணர்வுகளை கொப்பளிக்க வைத்தது. பேச மாட்டானா என்றவன் பேசி விட்டான். தொட மாட்டானா என்ற மகன், தாயைச் சேயென நெஞ்சோடு அணைத்துக் கொண்டான். உருக மாட்டானா என்றவன், உன் உயிர் உருகக் கரைகிறான். இதை விட பெற்ற தாய்க்கு என்ன வேண்டும். மகனின் மறுபுறம் வந்தமர்ந்த அக்கண்யனும், தன் பரந்த கையில் இருவரையும் ஒரு சேர அணைத்து,​

“இனாஃப்! இனி இந்த பேச்சு வேண்டாம். அவ உன் அம்மா, நீ அவனுக்கு மகன். உங்க ரெண்டு பேருக்கும் இடையில யாரும் வர மாட்டாங்க. உங்க ரெண்டு பேருக்கும் எப்போ பழையபடி இருக்கணும்னு தோணுதோ, அப்போ அவளோட சர்வேஷா மாறிக்கோ!"​

இப்படி அத்தனை நேரம் அவர்களுக்குள் நீடித்த மோன நிலையை,​

“அண்ணி!" என்ற பரபரப்பான கவிதாவின் அழைப்பு கலைக்க, ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மன நிலையில் பரபரக்கத் தொடங்க,​

இதை எதிர்பார்த்தேன் எனும் மனநிலையில், அக்கண்யன் ஒருவன் மட்டுமே இருந்தான்.​

இத்தனை நேரம் இருந்த ஒரு இதத்தை கவிதாவின் வருகை அபஸ்வரமாகக் கலைக்க, கவிதா அண்ணி என்ற அழைப்போடு ஜனனியிடம் விரைய, அத்தனை நேரம் தாயை அணைத்துப் பிடித்திருந்தவன், அவர் பிடியை விட்டு விலகி முழு உயரத்துக்கும் நிமிர்ந்து நின்றான். அவன் உடலோ நாண் பூட்டிய வில்லாக விறைத்து நிற்க, ராகவியின் உள்ளம் அடித்துக் கொள்ளத் தொடங்கியது.​

அதற்கு ஏற்ப கவிதா சர்வேஷை நெருங்க, நெருங்க, அவன் வெளுத்த முகம் உக்கிரத்தை படிப்படியாகப் பூசிக் கொண்டது. பார்வையை சிறிதும் தாழ்த்தவோ, விலக்கவோ இல்லாது அவரை உறுத்து விழித்தான்.​

 

admin

Administrator
Staff member

அவனைத் தயக்கமாக ஏறிட்டவர்,​

“சர்வேஷ் கண்ணா!" மெதுவாக அழைக்கவும்,​

இத்தனை வருஷங்களுக்கு பின்னும் ஒற்றை அழைப்பு கொந்தளிக்கும் உணர்வுகளுக்கு உரமூட்டத் தொடங்கவே நிலைமையை சமாளிக்கும் பொருட்டு, தள்ளாடி எழும்பிய ஜனனி,​

“ஆ ஆ.. அண்ணி வாங்க. தனியாவா வந்தீங்க?"​

“இல்லைங்க அண்ணி. டிரைவரோடு தான் வந்தேன்." என்றவரை ஆசுவாசப்படுத்தி அமர வைத்த அவர் ராகவியிடம் கண்ணைக் காட்ட,​

நிலைமையை மாற்றும் பொருட்டு, அவளும் குடிக்க ஆகாரம் கொண்டு வந்து கொடுத்தாள்.​

அது வரையிலும் இறுகிப்போய் நின்றிருந்த அவனில் தன்னிலை மாற்றம் இருக்கவில்லை. காபியை மிடரு, மிடராக விழுங்கிக் குடித்த கவிதாவின் பார்வையும், சர்வாவை விட்டு அகலவில்லை. தாடி முடியோடு இருந்தவனின் ஒரு பக்கம் முழுக்கக் குத்தியிருந்த டேட்டு, அவனை அத்தனை கம்பீரமாகக் காட்டியது.​

‘எப்படிப்பட்டவனை இழந்து விட்டாள்? எப்படி மனசு வந்தது? இதை விடவும் ஒரு நல்ல துணை கிடைத்து விடப் போவதுமில்லை, தானாக அமைவதுமில்லை. மனப் பொருத்தம் முயன்று அமைத்துக் கொள்வது தானே!'​

என்று அவர் ஒரு மனம் வாதிட, இன்னொரு மனமோ,​

‘இல்லை... என் பொண்ணோட வாழ்க்கையை சிறக்க வைக்காமல் விடமாட்டேன். அவளோட சொர்க்கம் இந்த ஆறு அடியில் அடங்கும் மனுஷனுக்குள்ள இருக்கும் போது, எப்படி எம் பொண்ண தனிமையில் தவிக்க விடுவேன்?'​

என்ற தாய் மனம் மீண்டும் தன்னோடே வாதிட, நீண்ட வருடங்கள் கழித்து மறுபடியும் சுயநலமாக யோசிக்க,​

அவர் கோர்க்க நினைப்பது முத்துமாலை இல்லையே! உடைந்த கண்ணாடி சில்லுகள் என்பதை அறியாமல், ஏனோ சர்வா இலங்கை வருகிறான் என்றதும், அவனை நேரில் பார்க்கும் வரை தோன்றாத ஒன்று அவனை நேரில் பார்த்தபோது தாங்கள் இழந்துவிட்ட அதிர்ஷ்டத்தின் வளமை எல்லாம் சேர்ந்து கவிதாவை அலைக்களிக்க, மதி இழந்தவர் சர்வாவிடம்,​

“கண்ணா, இந்த அத்த மேல.. இன்னும் கோவமா இருக்கியா? இந்த அத்தைக்காக மன்னிக்க மாட்டியா? மறந்துடேன் கண்ணா. எல்லாத்தையும் நா.. நான் சரி செய்றேன். மறுபடியும் ஒரே ஒரு வாய்ப்பு கொடு. பழைய மாதிரி எல்லாத்தையும் நான் வழமைக்குக் கொண்டு வரேன். அவ..ளை.., அவளை வர வைக்கிறேன், கண்ணா.​

உன்னை இப்படிப் பார்த்த பிறகு, எப்படி அவ உன்னை வேணான்னு சொல்லுவா? இனிமேட்டு எப்படி அவ உன்னை விட்டுட்டுப் போகலாம். ஒரே ஒரு வாய்ப்பு கொடுக்கலாமே, சர்வா. நா.. நான் உன் மேல படிஞ்சிருக்கிற கறைய, இந்த அத்தை போக்குறேன். உன்னையும், என் பொண்ணையும் இந்த அத்தை மறுபடி சேர்த்துக் காட்டுறேன்.."​

உணர்ச்சி பொங்க அவர் பேசிக்கொண்டே போக.. அங்கிருந்தவர் அத்தனை பேரின் உள்ளமும் உலைக்கலமாகக் கொதிக்கத் தொடங்கியது.​

இருந்தும் அரவிந்தனின் பொருட்டு, அவர்கள் அமைதிக்காக்க, சர்வாவுக்கு அந்த அவசியம் இருக்கவில்லை.​

ரௌத்திரம் பொங்க ஓங்கி ஒரு அடி, முன் இருந்த டேபிளின் கண்ணாடி சுக்குநூறாய் நொருங்கியது. அவன் ஆக்ரோஷத்தில், அவன் மூர்க்கத்தில், நரம்புகள் புடைக்க நின்ற அவன் தோற்றத்தில், கவிதா அதிர்ந்து வாயில் கை வைத்த வண்ணம் பின்னே நகர, கண்கள் இரண்டும் இரத்தமெனச் சிவக்க,​

“ஒரு வார்த்தை, இன்னொரு வார்த்தை நீங்க பேசக்கூடாது. பேசுனீங்க.."​

அத்தனை பேரையும் அழுத்தமாகப் பார்த்தவன்,​

“பேச நீங்க இருக்கமாட்டீங்க!"​

அதே சினத்தோடு ஜனனி புறம் திரும்பி,​

“இனியும் இவங்க சொல்ற மாதிரியோ, இல்ல.. வேற யாராவது உங்க கிட்ட சிம்பதியை கிரியேட் பண்ணி காரியம் சாதிக்க முயன்று, மறுபடியும் என்னைக் கத்தி முனைல நிற்பாட்டுற ஐடியா இருந்தா, இப்பவே சொல்லிருங்க. இல்லைனா, ஜென்மத்துக்கும் உங்க மகன், வாழ்க்கை முழுக்க உங்களுக்கு இல்லாமப் போயிருவான்!"​

“சர்வா!" என்ற தாயின் இறைஞ்சல் சொன்னது, இனி ஒரு முறை அந்தத் தவறை செய்யமாட்டேன் என்று.​

அதே கணம் பயந்தால் காரியமாகாது என்று எண்ணிய கவிதா,​

“எ.. என..எனக்கு புரியுது கண்ணா, உன்னோட வலி, வேதனை, கோபம் எல்லாமே புரியுது. ஒரே ஒரு வாய்ப்பு தாயேன். நான் ஒரு கால் பண்ணாப் போதும், அவ வந்துருவா. என்ன நம்பேன் கண்ணா!"​

அங்கு, அத்தனை பேரின் பார்வையும் முதல் முறையாக அவரை அருவருப்பாக நோக்க, அவர் வருகையை மகனின் மூலம் அறிந்த அரவிந்தன், நொடிப் பொழுதில் மனைவியை அடைந்து ‘பளார்' என ஒரு அறை விட.. ‘அம்மா!' என்ற சத்தத்தோடு கவிதா கீழே விழும் முன், ஒற்றை கையில் அவளை நிமிர்த்தியவர்,​

“இத்தனை வருஷத்துல முதல் முறை உன் மேல கை வச்சிருக்கேன். ஆனா.. ஏன் இதுக்கு முன்ன உன்னை அடிக்காம விட்டேன்னு இப்போ ஃபீல் பண்ணுறேன். நான் காதலிக்கும் போது பார்த்த கவிதா இல்ல, நீ. நான் திருமணம் செய்யும் போது இருந்த என்னோட மனைவி கவிதாவும் இல்ல. நீ ஒரு சுயநலமான தாய். எந்த ஒரு தாயும் தன் பிள்ளையைப் போல இருக்கும் இன்னொரு பிள்ளைக்கு அநியாயம் செய்யமாட்டா! அப்படி செஞ்சா, அந்தத் தாயோட தாய்மையே பொய். நீ உன் மகளுக்காகத் துடிக்கும் போதெல்லாம் உன் தாய்மையை நான் மதிச்சு அமைதியாப் போனேன். இன்னைக்கு உன்னோட தலையைப் பிடித்து ஆட்டுற சுயநலப் பிசாசு, அதே உன் தாய்மையை கீழா பார்க்க வைக்குது.​

உனக்கு கொஞ்சமாவது என் மேல மரியாதை இருந்தா, என்னை மீறிப் பேசக் கூடாது!"​

என்றவர் அரக்கனைப் போல நின்றிருந்த சர்வாவை நெருங்கி, அவன் அடங்கா சிகையை வருடி விட்டவன்,​

“சர்வா! மை டியர் சேம்பியன்!"​

அந்த ஒற்றை உருக்கமான வார்த்தையில் தன் மொத்த பாசத்தையும் கொட்டி விட்டு, மனைவியோடு அந்த இடம் விட்டு அகன்றார்.​

தாயின் செயல், தாயை தந்தை அடித்தது, தந்தையின் உருக்கமான வார்த்தை என மீளா சூழலுக்குள் சிக்கிய ராகவியோ, நொந்து போனாள்.​

அங்கே ஒரு கனத்த சூழ்நிலை உருவாக.. அனைவரையும் ஒரு பார்வை பார்த்தவன், தோளைக் குலுக்கிக் கொண்டு நீண்ட வருடங்களுக்குப் பின், தன் அறையை நோக்கிச் சென்றான்.​

மகனையே அசையாது பார்த்திருந்த ஜனனியை நெருங்கிய அக்கண்யன்,​

“எனக்கு ஜனனம் தர ஒரு ஜனனி போல, இந்த சர்வாவோட வேதங்களுள்ள விந்தை நடக்காமலா போயிரும்?" என்றதோடு மனைவியை கை தாங்கலாக அழைத்துச் செல்ல..​

ஆத்வீக்கும், “ராவி, இதுக்கே இப்படி நின்னா எப்படி? இன்னும் நாம பார்க்க வேண்டியது நிறைய இருக்கு" என்றவன் மனைவியோடு அகன்றான்.​

அதே நேரம் வெள்ளவத்தையில் இருக்கும் ஒரு ரெஸ்டாரண்டில் அமர்ந்திருந்த சாத்வி, கடுகடுவென்ற மனநிலையோடு உள்ளுக்குள் புகைந்த வண்ணம் வெளியே ஒரு தர்ம சங்கடமான நிலையில் அமர்ந்திருந்தாள். அவள் முன் அமர்ந்திருந்த ரகுவரனின் அன்னை, அவளை மேலிருந்து கீழாக ஒரு பார்வை பார்த்து விட்டு,​

“பார்க்க.. அழகா தான் இருக்க. என்ன தாய் தகப்பன் தான் இல்ல. ஹம்.. என்ன பண்றது எங்க மகன் விருப்பம் தானே எங்களுக்குப் பெருசு. ஏதோ ஒன்னு விருப்பிட்டான். அவன் விருப்பத்திற்காக நாங்க சம்மதிக்கிறோம்."​

ஏதோ சகிக்க முடியாததை சகிப்பதை போல் அவர் கூறவும், சாத்வி மேலும் தனக்குள் இறுகிப் போனாள். தாயை வழி அனுப்பி விட்டு ரகுவரன் வரும் வரை அமைதியாக இருந்த சாத்வி, அவன் வந்ததும் இறுகிய குரலில்,​

“இதை நான் உங்ககிட்ட எதிர்பார்க்கல சார். நான் எப்போ உங்களை விரும்புறதா சொன்னேன். உங்க இஷ்டத்துக்கு உங்க அம்மாவைக் கொண்டு வந்து என் முன்னாடி நிறுத்திட்டீங்க. அவங்க ஏதோ நீங்க எனக்கு வாழ்க்கை பிச்சை தர்ற மாதிரி பேசிட்டுப் போறாங்க. நான் அனாதை தான். இல்லைங்கல!​

ஆனா.. அனாதைகளுக்கு தன்மானமோ, சுய கௌரவமோ இருக்கக் கூடாதுன்னு ஏதும் ரூல்ஸ் இருக்கா என்ன?​

எனக்குப் பாவம் பார்த்து வாழ்க்கை தர நீங்க யாரு? என்னைப் பாவம் பார்த்து ஏத்துக்க, உங்க அம்மா யாரு? நல்லா சொல்றேன் கேட்டுக்கோங்க சார்! உங்க மேல எனக்கு எந்த ஒரு ஃபீலிங்ஸும் இல்ல. இனி வரவும் வராது.​

அந்த டைம் கேட்டது கூட, எனக்கு ஒரு வாழ்க்கை துணை வேணும் என்கிற எண்ணம். பிகாஸ் இந்தத் தனிமை ரொம்பக் கொடுமை ஆனது, சார். ரொம்ப வருஷமா.. நான் அனுபவிச்சிட்டு இருக்கேன்.​

அந்த தனிமைக்கான துணை நீங்களா? இல்லை வேறு யாருமானு தெரிஞ்சுக்க வேண்டி இருந்துச்சு. ஆனா... கண்டிப்பா சொல்றேன், அந்த துணை நீங்களா இருக்க வாய்ப்பே இல்லை! இனிமே அந்த ஒரு எண்ணத்தோடு என் பின்னே வராதீங்க."​

முகத்தில் அடித்ததைப் போல பட்டென்று கூறிவிட்டு அவ்விடம் விட்டு அகல, தன்னை நீங்கிச் செல்பவளை, ஆசையாத பார்வை பார்த்தவன்,​

‘எனக்குப் பிடிச்சத எந்த எல்லைக்கும் போய் காரியம் சாதிச்சு அடைஞ்சி தான் பழக்கம், சாத்வீ. எனக்கு உங்களை ரொம்பப் பிடிச்சிருக்கு. இந்த ரகுவரனுக்கு மனைவின்னா அது நீங்கதான். உங்களை எப்படி கைபிடிக்கணும்னு எனக்குத் தெரியும்!'​

அவன் உள்ளம் சாத்தானாக மாற முயற்சிக்க, அங்கே ஒருவனோ, முழு அரக்கனாக மாறி, அவன் சீதையை சிறை செய்யக் காத்திருக்கிறான்.​

 

santhinagaraj

Well-known member
அடேய் சர்வா என்னடா உனக்கு இவ்வளவு கோபம் வருது பாவம் சாத்வி உன்கிட்ட மாட்டி என்ன பாடு படப்போறாளோ 🙄🙄
 

shasri

Member
எவ்வளவு அழகான வரிகள் சர்வேஷ் அவன் அம்மாவிடம் பேசுனது ❣️❣️ உங்களுக்காகனு சொன்னது அருமை 👏👏👏
 

admin

Administrator
Staff member
அடேய் சர்வா என்னடா உனக்கு இவ்வளவு கோபம் வருது பாவம் சாத்வி உன்கிட்ட மாட்டி என்ன பாடு படப்போறாளோ 🙄🙄
அதே தான்கா.. கோபம் வந்தா அவன் லூசு..
 

admin

Administrator
Staff member
எவ்வளவு அழகான வரிகள் சர்வேஷ் அவன் அம்மாவிடம் பேசுனது ❣️❣️ உங்களுக்காகனு சொன்னது அருமை 👏👏👏
நன்றி அன்பே..
 
Top