எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

வேதம் - 08

admin

Administrator
Staff member

அத்தியாயம் - 08​

"ஹா.. ஹா.." சிரிப்பொலியை தொடர்ந்து,​

“சித்தப்பா!" என்ற மழலையின் சிங்காரச் சிணுங்கள் சத்தத்தில், அந்த வீடு நீண்ட நெடிய வருடங்களுக்குப் பின், மகிழ்ச்சியின் எல்லையை தொட்டு, தொட்டு வந்தது. அவன் ஆறடி ராட்சச உருவத்தில், பல பேர் ஒரு அடி தள்ளி நிற்க, அந்த சின்னஞ்சிறு மொட்டு மட்டும் பயமின்றி​

“சித்தப்பா!" எனும் கூச்சலோடு அதிகாலை வேளையில் அன்றைய நாளையே ரம்யமாக்கிக் கொண்டிருந்தாள், ஆத்விக்கின் தவப்புதல்வி ‘ஆக்ரா'​

“இன்னாஃப் பேபி! இன்னைக்கு ப்ளே பண்ணது போதும். போங்க, போய் மம்மி கிட்ட ரெடி ஆகுங்க. ஸ்கூல் போயிட்டு வரலாம். நாளைக்கு சேம் டைம், சித்தப்பா கூட ஒர்க் அவுட் பண்ணலாம்."​

“ஓகே.., ஓகே.. சித்தப்பா!" என்றவள் அவன் தாடியை அழுத்தி இழுத்து விட்டு ஓட..​

“ஸ்.. ஆ..!" என்ற சத்தத்தோடு மெதுவாக தாடியை கோதிக் கொண்டு கைகளை அங்கும் இங்கும் அசைத்து வாம்-அப் பண்ணிக் கொண்டே வீட்டுக்குள் நுழைந்த சர்வேஷை அங்கிருந்தவர்கள் ஒரு நொடி ரசித்துப் பார்க்க மறக்கவில்லை.​

அக்கண்யனுக்கு முன் வந்து அமர்ந்தவன் தாடியை அழுத்த வருடுவதும், யோசிப்பதும், தலையைக் கோதுவதுமாக இருக்க, மகனைப் பார்த்தும் பாராமல் அக்கண்யன் அவனை கவனித்துக் கொண்டிருந்தான்.​

அதே நேரம் சர்வேஷை நெருங்கிய ஜனனி,​

“கண்ணா காபி குடி"​

“தாங்க்ஸ்" என்ற சொல்லோடு எடுத்துக் கொண்டவன் திடீரென,​

“டாட்!" உரத்து அழைக்கவும், நியூஸ் பேப்பரை சற்றே கீழ் இறக்கியவன், என்ன என்பது போல் மகனைப் பார்க்கவே,​

வாய் திறந்து கேட்டால் பதில் கூறுகிறேன் என்று இவனும் அழுத்தமாக இருக்கவுமே, சன்னமான சிரிப்போடு நியூஸ் பேப்பரை ஓரமாக வைத்தவன்,​

“சொல்லு சர்வா! என்ன விஷயம்?"​

மகனும் தந்தையை நோக்கி ஒரு நக்கல் சிரிப்போடு, “நான் இன்னைக்கு ஆஃபீஸ் வரலாம்னு இருக்கேன்."​

அந்த நொடி அங்கிருந்தவர்களின் முகங்கள் வியப்பைக் காட்ட, அக்கண்யன் புருவம் ஒரு முறை ஏறி இறங்கியது.​

“ஓ!" என்ற சொல்லோட மகனை ஆழ்ந்து பார்த்தவன்,​

“உன்னோட கம்பெனிக்கு நீ வர, என்கிட்ட ஏன் அனுமதி கேட்கிற?"​

இதழ் பிரியா புன்னகையோடு​

“எஸ், நான் ஏன் அனுமதி கேட்கணும்? இன்னைக்கு வரப் போறேன் டாட். அதுவும் நம்ம எக்ஸ்போர்ட் கம்பெனிக்கு!"​

என்ற சொல்லோடு மாடி ஏறவுமே,​

“சர்வேஷ்!"​

அக்கண்யனின் அழைப்பில் அவன் நடை நிதானித்து தந்தையை நோக்கி,​

“ஆஃபிஸ் வரும் போது, ஃபார்மல்ல வா!"​

“இஸ் இட்!" புருவத்தை ஏற்றி இறக்கியவன், தடதடவென படி ஏறிச் சென்றான்.​

“என்னங்க அதிசயம் இது. நம்ம சர்வேஷா கம்பெனிக்கு வாரேங்கிறான்!"​

“இதுக்கே இப்படி ஷாக் ஆனா எப்படி பேபி? சுனாமிய அமெரிக்கால இருந்து வாண்டட்டா கூட்டிட்டு வர வச்சவ நீதானே! பின்ன இங்க புயலடிக்குதுனா என்ன அர்த்தம்? இப்பதானே உன் மகன் ஆரம்பித்து இருக்கான், இனி தான் என்னன்னு பார்க்கணும்!"​

“அவனைக் குறை சொல்லவில்லைனா உங்களுக்கு ஆகாது, அத்தான். குழந்தை எவ்வளவு பொறுப்பா இருக்கான்."​

“ஹா.. ஹா.." உரக்கச் சிரித்தவன்,​

“ஜானு பேபி என்ன வேணும்னாலும் சொல்லு! ஆனா.. உன் மகனை குழந்தைனு மட்டும் சொல்லாத. உன் மகன் குழந்தை இல்ல, ராட்சச ராவணன்!" என்றான் கிண்டல் சிரிப்போடு.​

முகம் கொள்ளாப் புன்னகையோடு ஜனனியும்,​

“சாத்வி குட்டி தைரியத்தைப் பாருங்களேன். சட்டுனு சொல்லையும், ஒரு கணம் தவிச்சாலும் சிரிப்பா இருந்துச்சு. என்ன அழகா இருக்கா. அவ கால் வைக்கிற தடம், கொடுத்து வைச்ச இடம்!"​

அவளின் பெருமூச்சில், மனைவி செல்ல இருக்கும் தடமறிந்தவன்,​

“போதும் ஜனனி! சர்வேஷ் ஆஃபீஸ் வரப் போறான். சோ.. அவனுக்காக ப்ரேக்பாஸ்ட் ரெடி பண்ணு."​

இப்படியே நேரம் நகர, ஆத்விக்கும், அக்கண்யனும் எதிர்பார்ப்போடு தம்பிக்காக காத்திருக்கவும், அடிடாஸ் பாட்டம், வைட் கலர் அடிடாஸ் டீசர்ட், ஜெகட், அடிடாஸ் கேன்வஸ் சகிதம் முடியை வாரிய ஆஃப் போனிடல் போட்டு நக்கல் சிரிப்போடு சர்வேஷ் இறங்கி வரவே, வீம்புக்கெனவே இந்த உடையில் வந்திருக்கும் மகனின் தோற்றத்தில், அவனை முடிந்த மட்டும் முறைத்த அக்கண்யன்,​

“இதை.. நான் உன்கிட்ட எதிர்பார்த்து இருக்கணும்"​

“ஓ டேட்! எதையும் எதிர்பார்க்காத நேரம் செய்வது தானே இந்த சர்வேஷ் பழக்கம்!"​

அவனைச் சீண்டி விட்டு வாகனத்தை நோக்கிச் செல்ல, அவர்களும் கம்பெனியை நோக்கிச் சென்றார்கள்.​

ஏஜே கார்மன்ட்ஸ் காலை வேளை சுறுசுறுப்போடு இயங்கிக் கொண்டிருக்க,​

“சாத்வி, மெட்டீரியல் குவாலிட்டி செக் பண்ணிக்க, லாஸ்ட் டைம் மெட்டீரியல்ஸ்ல பேச் விழுந்ததா, ரிட்டன் வந்திருக்கு. சோ.. பார்த்துக்கோடி!"​

“ஓகே ரம்யா. இங்க கொஞ்சம் சூப்பர்வைசிங் பார்க்க இருக்கு. முடிச்சிட்டு ஆஃபீஸ் ரூமுக்கு போகணும்."​

சிறிது நேரத்தில், அவளை நோக்கி வந்த ஆஃபீஸ் பாய்,​

“சாத்விகா அக்கா" அழைக்கவும்.​

“சொல்லுங்க ரவி, என்ன விஷயம்?"​

“சார் உங்கள ரூமுக்கு வரச் சொல்றாரு."​

“ஓ அப்படியா? இதோ வாரேன்."​

கையில் இருந்த வேலையை அருகில் இருந்த பெண்ணிடம் ஒப்படைத்துவிட்டு, எம்டி அறைக் கதவை தட்டி விட்டு அறைக்குள் செல்லவும்,​

ஜீன்ஸ், லாங் டாப் அணிந்திருந்த அவள் ஜீன்ஸ் பாக்கெட்டில் வைத்திருந்த சாத்விகாவின் செல்ஃபோன்...​

“ராட்சச மாமனே​

ராத்திரியின் சூரியனே!​

கோவைப்பழம் போல​

நீ கோபம் கொள்ளாதே!​

உன் ஆறாம் புத்தி​

சேர புத்திதான்!"​

டிரென்டுக்காக வைத்திருந்த ரிங் டோனுடன் அவள் செல்ஃபோன் இசைக்கவே, எம்டி சீட்டில் அலட்சிய தோரணையோடு அமர்ந்திருந்த அவனைக் கண்டவள், ஒளிர்ந்த பாடலில் திகைத்தாள் எனில், அதுவரை நார்மல் மூடில் இருந்தவன் முகம், அப் நார்மல் மூடுக்கு மாற, பொங்கிய சினத்தை எதைக்கொண்டு அடித்து நொறுக்கி அடைப்பது எனும் நிலையில் அமர்ந்திருக்க,​

பதட்டத்தில் பாக்கெட்டில் கைவிட்டு அலை பேசியை எடுத்தவள், தட்டுத்தடுமாறி சத்தத்தை அணைத்து சைலண்டில் போட்டாள்.​

வரவழைத்த சிறு தைரியத்தோடு,​

“சார் என்னை கூப்பிட்டீங்களா? நீங்க வர சொன்னிங்கன்னு சொன்னாங்க."​

“வெல் மிஸ் சாத்விகா! முத, முதல்ல கம்பெனிக்கு வந்திருக்க எம்டிய இப்படித்தான் வெல்கம் பண்ணுவீங்களா? இதுதான் உங்க லோவர் கிளாஸோட நற்பண்புகளோ?"​

அவள் போட்ட அம்பை அவளுக்கே திருப்பிச் செலுத்த, சுறுசுறுவென மூக்கின் நுனியை, தொடப் பார்த்த கோபத்தை இடம் பொருள் ஏவல் கருதி அடக்கிக் கொண்டவள், தன் பிழையும் உண்டெனக் கண்டு..​

“சாரி சார்!" அமைதியாகச் சொல்லவும்,​

வெகு அலட்சியமாக,​

“ஓகே இதுவரைக்கும் நீங்க செஞ்ச வேர்க் எல்லாம் எக்ஸ்பிலைன் பண்ணுங்க. இனி என்ன செய்யணும்னு நான் சொல்றேன்."​

என்றவன் தோரணையாக கால் மீது கால் போட்டு அமர, அவள் ஒவ்வொரு வேலையாக முன்னே அடுக்கி வைக்கப்பட்டிருந்த கோப்புகளை கொண்டு விளக்கவும்,​

வெள்ளை நிற லாங் டேப், நீல நிற ஜீன்ஸ், இரு காதுகளிலும் அழகாக மலர்ந்திருந்த பிளாஸ்டிக் தோடுகள், சின்ன மூக்குத்தி, அவளது சற்றே பெருத்த கீழ் உதடு, பேசும் போது வெட்டி வைத்த ப்ளம்ஸ் பழத்தை போல் சிவந்து பிதுங்கி இருக்க, அசையும் அந்த உதட்டை இழுத்து வைத்து எச்சிலோடு உறிஞ்சி எடுத்தால் என்ன எனும் எண்ணம் அவனுக்குள் வெறியாகக் கிளம்பவே, தன் மனபோகும் போக்கில் அதிர்ந்தவன்,​

மனம் வேண்டாத ஒரு முகத்தை நெஞ்சின் கசப்போடு நினைத்துக் கொள்ள, அந்த முகம் தந்த ஞாபகங்கள், ஸ்பரிசங்களின் நினைவில் தன் உடலை கூறாக அறுத்தெறிந்தால் என்ன எனும் அளவுக்கு, அவன் நெஞ்சம் நெருப்பாகத் தகித்தது.​

நொடிப் பொழுதில் உடல் எல்லாம் அருவருக்க, இத்தனை நாள் தன் சிந்தையை கட்டுப்படுத்த கடைபிடித்த மருத்துவ ஆலோசனை கூட கை கொடுக்கவில்லை. அவன் கொண்ட அதே வருத்தம், அதே வடு, அதே ரணம், அவன் மனநிலையை மாற்றவே, அந்த ஏசி அறையில் முகமெல்லாம் வியர்த்து ஒரு மாதிரி உடல் எல்லாம் லேசாக நடுக்கம் காண, அவனை ஓரவிழியால் கவனித்துக் கொண்டிருந்தவள், அந்த ஆறடி ராட்சச உருவத்துக்குள், அடிபட்ட ஆறு வயதுக் குழந்தையின் தோற்றத்தை பெண்மையின் தாய்மை இனம் கண்டு கொள்ளவே,​

மெதுவான குரலில், “சார், ஆர் யூ ஓகே?"​

“ஹம்.. எ..ஸ் எஸ், ஓகே"​

குரல் இறுக்கமாக வந்தாலும், அவன் முகம் மேலும் வியர்க்கவும்,​

“சார்.. காபி கொண்டு வந்து தரட்டுமா?"​

“நோ வேணா. உன் வேலைய பாரு"​

மனம் கேட்காதவள், கண்ணாடி ஜாருக்குள் இருந்த நீரை எடுத்து,​

“கொஞ்சம் குடிங்க, ஓகே ஆயிடும்."​

கொடுக்கவும் மெதுவாக வாங்கியவன் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு நிமிரவே, பதட்டத்தோடும் பரிதவிப்போடும் தன்னையே பார்த்துக் கொண்டிருந்த சாத்வியின் சாந்தமான முகத்தில் அவனைத் தொலைத்தவன், கொதிக்கும் உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியாது, தனக்கு என்னவோ எனும் எண்ணத்தில் மூழ்கி இருந்த பெண்ணை இழுத்து அணைத்துக் கொண்டான்.​

அவளை இழுத்து அணைத்துக் கொண்டவனின் உடல் லேசாக நடுங்கவும்,​

முதலில் திடீரென்ற அவன் அணைப்பு கோபத்தை கொடுக்க, பின்பு ஒரு வித கூச்சத்தையும், பயத்தையும் உண்டு பண்ண, இறுதியில் ஆறடி உருவத்துக்குள், லேசான ஒரு நடுக்கத்தைக் கண்டு கொண்டவள், தன்னை அறியாமல் அவன் முதுகை மெதுவாக தடவிக் கொடுத்து,​

“ப்ளீஸ்.. டென்ஷன் ஆகாதீங்க. உங்களுக்கு என்னமோ பண்ணுது.. அது ஏன்னு எனக்கு புரியலைங்க. ஆனா.. எதுவா இருந்தாலும் சரியாப் போயிரும். கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கோங்க."​

அவள் விரல்கள் அவன் முதுகை வருட, மேலும், மேலும் அவளை அழுத்தமாக அணைத்துக் கொண்டவன், சாத்விகா மேனியில் எழுந்த வாசத்தை ஆள உறிஞ்சி நுரையீரல் வரை நிரப்பி, அவனுக்குள் இருந்த வேண்டாத குப்பை எண்ணங்களை மெது மெதுவாக கலைக்கும் முயற்சியில் இறங்கச் தொடங்கினான்.​

எத்தனை நேரம் அப்படியே இருந்தார்களோ தெரியவில்லை, அவன் அமர்ந்து இருந்த இருக்கையில் இருந்த படி, சாத்வியை அணைத்த வாறு அவன் மடிக்கு மாற்றி இருந்தான்.​

முதலில் தன்னிலை கலைந்தவள் பதறி, துடித்து விலகவும், அவள் பதட்டத்தில் சர்வேஷ் அவளை நோக்கி வாய் திறந்து பேச நினைக்கவே, கலங்கிய விழிகளோடு..​

“ப்ளீஸ்.. எதுவும் அசிங்கமா பேசிராதீங்க. நீ.ங்க.. நீங்க கொஞ்சம் நேவர்ஸ் ஆயிட்டீங்க.​

எனக்கு ஒன்னும் புரியல. அது தான் என்னை அறியாமல் அப்படி செஞ்சிட்டேன். ப்ளீஸ்.. அன்னைக்கு மாதிரி எதுவும் உங்களை நான் மயக்க பார்க்கிற மீன்ல அசிங்கமா பேசுறாதிங்க!"​

அவள் தேம்பிக் கொண்டே பேசவும்,​

“யூ டேமிட்!" அமர்ந்திருந்த இருக்கையை பின் தள்ளி எழுந்தவன்.​

“என்னைப் பார்த்தா உனக்கு எப்படி தெரியுது. அவ்வளவு அசிங்கமானவன்னா? சாக்கடைக்கும், சந்தனத்துக்கும் வித்தியாசம் தெரியாதவனில்ல. இவதான் பெரிய இவ மாதிரி, எக்ஸ்ப்ளைன் பண்ண வந்துட்டா!" என்றவன் உடல் கோபத்தில் மீண்டும் நடுங்க,​

அவன் தோற்றத்தில் இதுவரை பயம் கொண்டவள், மீண்டும் அவன் உடல் நிலையில் ஏதேனும் தவறு நடந்து விடுமோ என்ற பதட்டத்தில் தைரியத்தை வரவழைத்து கொண்டு அவனை மெதுவாக நெருங்கி,​

“இல்லங்க. நான் அப்படி சொல்லல. நீங்க கோவத்துல ஏதும் பேசிட்டீங்கன்னா, என்னால தாங்க முடியாது. அதான்..! ப்ளீஸ் டென்ஷன் ஆகாதீங்க. உங்களுக்கு உடம்பு முடியலன்னு நினைக்கிறேன்."​

ஏனோ தனக்கான அவள் தவிப்பு இதயத்தில் சில்லென்ற உணர்வை ஏற்படுத்த, அவன் கட்டுப்பாட்டில் அடங்காத அவன் நாவோ,​

“ஆயிரம் பெண்களைக் கடந்து இருந்தாலும் ராவணன் தேசத்துக்கு மண்டோதரி தான் மகாராணியாம். ராவணன் மண்டோதரிக்கு மட்டும் எப்பவுமே ராமன் தான். ராவணனுக்காக மண்டோதரி மட்டும் தான் உடன்கட்டை ஏறுவாளாம். ஏன்னா மரணத்தில் கூட ராவணன் அகம் பிடித்து முன்னேறும் உரிமை மண்டோதரிக்கு மட்டும் தான்!"​

நிறுத்தி, நிதானமாக அவள் முகம் நோக்கி அழுத்தி ஆழமாக வேதாந்தம் கூறியவன், தலையை கோதிக் கொண்டு, அந்த இடம் விட்டு அகல, முதலில் அவன் கூறியதன் பொருள் விளங்காதவள், பொருள் விளங்கிய பின்...​

‘என்ன இவரு இப்படி பேசிட்டு போறார்?'​

சாத்விகா அதிர்ந்து போனாள். அதே நேரம் அவள் இன்னொரு மனமோ,​

‘ரகுவரன் உன்கிட்ட உரிமை எடுத்துக்க நினைக்கும் போது, அவனை உன்னை விட்டு எட்ட நிறுத்தத் தெரிந்த உனக்கு, பல நாள் போஸ்டரில் பார்த்து, ஒரே ஒரு நாள் நேரில் பேசி அறிமுகமான இவருக்கு ஒன்னுனதும், எப்படி உன் தோளில் சாய்கிற உரிமையைக் கொடுத்த சாத்விகா? அந்த அளவுக்கு இந்த ஹல்க் மேல உன் மனம் சாய்ந்திருச்சா?​

இல்ல இல்ல, அப்படி எல்லாம் இல்ல, அது ஏனோ என்னை அறியாமல் நடந்துச்சு'​

உன் மனம் அப்படி சொல்லலையே சாத்விகா. அவர் சொன்ன மாதிரி அவரோட மண்டோதரியா, ராவணன் தேசத்து ராணியா மாறப் போறியா?'​

அவள் இரு மனங்களும் அவளுடனே போராட, காலைப் பொழுதே இப்படி போராட்டமான நேரமாக மாறிவிட்டதில் நொந்து போனவள், அவன் அறையிலிருந்து வெளியேற,​

அவள் வெளியேறவும் லாபியிலிருந்து அவளைப் பார்த்துக் கொண்டே இருந்தவன் மனமோ,​

‘ஏய்! சர்வேஷ்! பொண்ணுங்கள எட்ட நிறுத்தினவன் நீ. பெண் மாயப் பேய்னு சொல்றவன் நீ. ஒரே நாள்ல ஒரு பெண் கிட்ட மனதை கொடுக்க முடியுமா? அவளை யாரு என்னன்னு ஒரு அறிக்கையில் அறிஞ்சவன், உன் காயங்கள் ரணங்களை மறந்து, மறுபடியும் காயப்படப் போறியா?’​

‘நெவர்! ஒருமுறை பாசத்துல, புத்தியிருந்தும் இந்த சர்வேஷ் முட்டாளாப் போயிட்டான். இனியும் அப்படி நடக்க மாட்டேன்!'​

‘அப்படியா அப்போ அவளை விட்டு விலகுறியா? முடியுமா?'​

‘ஹம்.. தெரியலை சாத்விகாவோட நிமிர்வு பிடிச்சிருக்கு'​

 

admin

Administrator
Staff member

‘அப்போ அவளோட நிமிர்வ நேசிக்கப் போறியா, சர்வேஷ்?' என்று மனசாட்சியின் கேள்விக்கு,​

‘அதை, நான் ஏன் உன்கிட்ட சொல்லணும்?'​

என்று மனசாட்சிக்கு திமிர் காட்டியவன், தன் மனநிலையின் கட்டுப்பாட்டுக்கு என அருந்தும் மாத்திரையை எடுத்த பின்னே, சற்றே ஆசுவாசமானான்.​

இப்படியே அன்றைய நாள் கழிய, அன்றிலிருந்து தினமும் சர்வேஷ் வருகை ஆஃபீஸில் வழமையானது. பெரிய வல்லரசான அமெரிக்காவிலேயே தொழிலில் கொடி கட்டிப் பறப்பவனுக்கு, தன் தாய் நாட்டில் தொழிலைப் பார்ப்பது ஒன்றும் அத்தனை கடினமாக இருக்கவில்லை. ஆனால் அவன் மிகக் கடினமானவன். அவனைப் பரிச்சயம் இல்லாதவர்கள் அனுசரித்துப் போவது மிக, மிக கடினமாக இருந்தது.​

தொழிலாளர்களை தட்டிக் கொடுக்கவும், வேலையில் ஒப்பியடிக்க நினைப்பவர்களை கொட்டி வேலை வாங்கவும், சில சமயம் வாய் பேசுவதை விட, கை பேசி காரியத்தை சாதிக்கவும் அஞ்சவில்லை, அந்த அஞ்சா நெஞ்சன். ஆக ஏஜே குரூப்ஸ் எந்த நேரமும் ஃபயர் வேகத்தில் இயங்கிக் கொண்டிருந்தது.​

இளம் வயதினருக்கு ஏற்கனவே அவன் தோற்றத்தில் ஒரு கிரேஸ் என்றால், பலருக்கும் அவன் தோற்றத்தில் ஒரு பயம் இருந்தது உண்மையிலும் உண்மை.​

இலங்கை போன்ற நாட்டில் இந்த குத்துச் சண்டைகள், டபிள்யூ டபிள்யூ எல்லாம் அருகில் அனுபவித்த அனுபவங்கள் மிகக் குறைவு. தொலைக்காட்சியோடு சரியெனும் நிலையில் நேரில் ஒருவன் அதன் பிரதிபலிப்பாக அப்படி ஒரு அகன்ற தோற்றத்தில் இருக்கையில் பலரோ அவனை ஆச்சரியமாகப் பார்த்தனர் என்றால், சிலர் பயத்தோடு பார்த்தனர்.​

என்ன எப்படியோ சாத்விகாவையும் விட்டு வைக்காதவன், அதிகப்படியாகவே அவளை வேலை வாங்குவதை, வழமையாகக் கொண்டு இருந்தான். ஏதேனும் ஃபைலைக் கொண்டு வரச் சொல்வது,​

“முட்டாள்! உன்னை இதையா கொண்டு வரச் சொன்னேன்? நான் கேட்டது மூனு வருஷம் முன்னே உள்ள ஃபைல்!" என்பதும்,​

வழமையாக அமைதியைக் கடைப்பிடிப்பவள் சர்வேஷோடு மட்டும் வாயாடப் பழகி இருந்தாள்.​

“நான் சரியா தான் கொண்டு வந்தேன் சார். நீங்க தெளிவா வருஷத்தைச் சொல்லாம விட்டுட்டீங்க."​

“இப்ப சொல்லிட்டேன் தானே! போ, போய் கொண்டு வா. அண்ட் எப்ப பாரு லிஃப்ட் யூஸ் பண்ணாத, ஸ்டெப்ஸ்ல ஏறி வா. நீ விட்ட பிழைக்கு கம்பெனி லிஃப்ட்ட அடிக்கடி யூஸ் பண்ணி எலக்ட்ரிசிட்டிய வேஸ்ட் பண்ணாத. நாடு இருக்கிற நிலைமைக்கு சேவ் பண்ணிப் பழகு" என்று அவளை வைத்துச் செய்தான்.​

சில சமயம் ஏதேனும் ஒரு ஆண் ஸ்டாஃப் பிழை செய்து விட்டால், இவள் அருகில் இருந்தாலும் பெண்ணொருத்தி நிற்கிறாள் என்ற எண்ணம் சிறிதுமின்றி.. வண்ணம், வண்ணமாக அவன் வாயிலிருந்து வார்த்தைகள் அருவியாகக் கொட்டும். அந்த நேரம் இவள் முகத்தை சுளித்து விட்டால், அருகில் இருந்த நபர் அகன்றதும்,​

“மேடம் முகத்தை சுளிக்கிறீங்க! அப்ப நான் பேசிய வார்த்தையோட மீனிங் ரொம்பவே நல்லா தெரியும் போலவே. எங்க மீனிங்க சொல்லு?"​

“சார்!" அவள் தயங்கினால்,​

“மீனிங் சொல்லுடி! சொல்லிட்டு போ!"​

ஒரு படி மேலே ‘டி' போட்டு உரிமையாக திட்டவே தொடங்கி விடுவான். இவனை மலை என்பதா மடு என்பதா? எண்ணி, அவள் குழம்பாத நிமிடம் இல்லை.​

சில நேரங்களில் அவளில் மயங்கும் அவன் மனதின் மேல், தானே கோபம் கொண்டு சூடு கண்ட பூனையாக அவளை காச்சி எடுக்கவும் தயங்க மாட்டான். அந்த சமயங்களில் பெண்ணோ நொந்து போவாள். ரணமாகக் காய்ந்து தள்ளுவான். மாறும் அவன் குணங்களைப் பகுத்தறியத் தெரியாதவள்,​

இவன் “ராட்சச ராவணனே தான்!" வாய்விட்டு கூறிவிடுவாள்.​

இப்படி தொடர்ந்து மூன்று நாட்களாக, அவளை விட்டு வைக்காது, தன் பழைய காயங்களில் சுழன்று கொண்டிருந்தான். அதுவும் வேலை விஷயமாக வெளிநாடு சென்றிருந்த அரவிந்தனின் வருகை அவன் பழைய அவமானங்களை, புகைப்படம் எடுத்துக் காட்டியது.​

இவள் அருகில் இருக்கும் போது கிடைக்கும் இனிமையான இதமும், விலகிச் செல்கையில் தோன்றும் வெறிக்கும் நடுவில், சிக்கித் தவித்த ஆணின் மனநிலை, சில நாட்களாக அவளை வதைக்கத் தொடங்க, அன்றோ ஜனனியின் அழைப்புக்கு ஏற்ப வீடு வரை வந்தவளை, வாசலில் மடக்கிப் பிடித்தவன், வார்த்தைகளை அம்புகளாக வில்லில் தொடுக்கத் தயாரானான்.​

ஆனால், அன்றைய நாள் அவள் மூலம் தரப்போகும் சில வார்த்தையின் தடங்கள், அவன் வாழ்வில் பதிந்து போன பெண்ணைப் பற்றிய சில எண்ணங்களை மாற்றப் போகும் சிறு பொறியாய் அமைந்து போகப் போவதை தெரியாதவன்..​

ஜனனியின் நலம் விசாரித்துவிட்டு வாயிலை அடைந்தவளை இடை மறித்து,​

“ஏய் நில்லுடி! உனக்கு இங்க என்ன வேலை? ஆஃபிஸ்ல வேலை செய்றவ, என்னத்துக்கு வீட்டுக்கு வர? உன்னைப் போல ஆட்கள் பணக்காரங்க வீட்டுக்குள்ள ஈஸியா நுழைஞ்சுருறீங்க. அது என்ன கொஞ்சம் கூட வெட்கமே இல்லாம, இப்படி அழையா விருந்தாளியா வாரது?​

இந்த வீட்டுக்குனு ஒரு கௌரவம் இருக்கு. அன்னக்காவடிங்க வந்து போக, இது ஒன்னும் சத்திரம் இல்ல, சாத்விகா!"​

வார்த்தைகளை நெருப்பாகக் கக்கியவன் எண்ணவில்லை, அவளைத் தான், தன் வாழ் நாளின் ஆதாரம் எனக் கொண்டாடப் போகிறான் என்று. அந்த நேரம் இவன் விதைத்த வினைப்பயனை உயிர்துடிக்க, அவள் துடிப்பில் அனுபவிப்பான்.​

அவளை மேலிருந்து கீழாக அளவிட்டவன், விடுமுறை தினமெனக் கருதி, அவசர அழைப்பின் பொருட்டு நலிந்த புடவையை, பஸ்ஸின் இடிபாடுகளின் போது, முந்தானை பகுதியில் லேசாக ஏற்பட்ட கிளிஞ்சலை மறைத்து மடித்து பின் குத்தி இருந்தாள்.​

இலங்கையின் வேகாத வெயிலில் பஸ் ஸ்டாண்டிலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்ததால் ஏற்பட்ட களைப்பும், அங்கங்கே அவள் நீண்ட பின்னல் முடிகள் காற்றில் பறக்க, வைத்திருந்த விபூதி அழிந்தும் அழியாமலுமாக கசங்கிய அஜந்தா ஓவியமாக காட்சியளித்தவளை, ஏனோ அன்று அதிகமாகவே அவன் அகம் தன்னை அறியாமல் ரசிக்க, புறமோ வெறுப்பை வார்த்தையாக்கியவன்,​

“லுக்! அவங்க கூப்பிட்டாங்க, இவங்க கூப்பிட்டாங்கனு வெட்கமே இல்லாம இனிமேல் இந்த பக்கம் வராத, புரிதா! நீயும் உன் ட்ரெஸ்சும் பார்க்கவே அசிங்கமாக இருக்கிற. வெள்ளையா இருக்கும் தோலைக்காட்டி இங்கே யாரையும் மயக்கலாமுனு எண்ணத்தோடு இனி இந்த பக்கம் வந்துராத!"​

அவன் கண்ட பெண்களின் முன் அனுபவம் அப்படி. அள்ளித் தெளித்த சுடு சொற்களில் கண்களில் நீர் முட்ட துடித்த சாத்விகாவோ, கண்ணீரை இமை தட்டி உள்ளிழுத்துக் கொண்டு. இரு கைகளையும் அவனை நோக்கிக் கும்பிட்டு.​

“மன்னிச்சுடுங்க சார், உங்க வீட்டுக்கு வந்தது என் பிழை தான். ஆனால் இந்தப் பிழையை ஜனனி அம்மாவிற்காக நான் செய்யத் தயார். ஏன்னா, அவங்களுக்கு நான் பட்ட நன்றிக் கடன் அப்படிப்பட்டது. என் உயிரும் போதாது, அவங்க எனக்குச் செய்ததை ஈடுகட்ட." என்றாள் நிமிர்வோடு.​

நான் யாசகம் பெற்றேன், நீ யாசகம் கொடுத்தாய் என்னும் ஏற்றத்தாழ்வு அந்த நொடி அவளில் இல்லை. நான் பெற்ற யாசகத்திற்கு நேர்மையாக இருக்கிறேன் என்ற நிமிர்வே அவளிடம் விஞ்சி இருந்தது. மங்கையின் நிமிர்வில் சர்வாவின் ஆணவம் தன்னால் அடிபணிந்தது. இதில் விசித்திரம் ஒன்றுமில்லை. ஒழுக்கத்தை உயிராகப் பேணும் ஒவ்வொரு பெண்ணினது நேர்மை குணமும் இது தானே!​

“நான் அன்னக்காவடி தான், உறவுகளற்ற பரதேசி தான்! ஆனால், கண்டிப்பா மானமுள்ள பெண் சார். எத்தனையோ நாள் எச்சில் இலையில் அள்ளி சாப்பிட்டு இருக்கேன்.​

ஆனால், இதுவரையும் எவரின் எச்சில் இலையையும் தட்டிப் பறித்ததில்லை. அப்படிப்பட்ட கீழ் புத்தியும் எனக்கு இல்லை.​

பிறந்ததிலிருந்து இப்ப வர, எனக்கு உறவுகள் கிடையாது. பிறரில் உரிமை எடுக்கும் நிலையிலும் நான் இல்லை. அது போல, மற்றவர்களுடைய உடைமையில் ஆசை கொள்ளும் கீழானவளும் இல்லை.​

ஆமா.. நான் இப்பொழுது ட்ரெஸ் பண்ணி இருக்கும் இந்த சாரி கூட ரொம்பப் பழசு. வெறும் 500 ரூபாய். ஒட்டுப் போட்டு தான் அணிந்திருக்கிறேன். ஆனால் கந்தையையும் கசக்கிக், கட்டுனு எனக்கு சொல்லிக் கொடுத்தாங்களே ஒழிய தேவைக்கு அதிகமாக ஆசை கொள்ளச் சொல்லிக் கொடுக்கல, சார்.​

இந்தப் பணமும் பகட்டும் என்னைக்கும் எனக்கு தேவையில்லை. இதுவரை நான் அனுபவிக்காதது. இனியும் அதற்கான அவசியம் இல்லை. வறுமையின் நிறத்தை என் சிறு வயதிலேயே அணு அணுவாக அனுபவித்தவ நான். என் பாலியப் பருவத்துல, செல்லடி ஓசையிலும், ரத்தம் கசிந்து ஆராக ஓடிய உடல்களுக்கு மத்தியிலும், பிணவறையிலும் கழித்தவள், சார்.​

பசியும் பட்டினியும் எனக்குப் புதுதில்ல சார். ஏன் இந்த வேலை இல்லாட்டியும் என்னால் கண்டிப்பாக தண்ணீரை மட்டும் பருகிக் கொண்டு சிறிது நாட்கள் வாழ முடியும்.​

அந்த வாழ்க்கை முறைக்கு, நான் பழக்கப் பட்டவள் தான் சார்.​

இங்கே நான் வந்தது ஜனனி அம்மாவுக்காக தான். அவங்களுக்காக உங்க இந்த வார்த்தைகளை நான் சகிச்சுட்டுப் போறதுல, குறைந்து போயிற மாட்டேன், சார்.​

ஆனால், எந்தப் பெண்ணையும் பணத்தோடு ஒப்பிடாதீங்க. ஏன்னா பணத்திற்கு விலைபோகும் பெண்மை இந்த பூமியில் அரிது சார். நானும் அந்த இனத்தைச் சேர்ந்தவளும் இல்ல!"​

என்றவள் துளி அமைதிக்குப் பின்,​

“கண்ணகியின் வம்சங்களும் இன்னும் வாழ்ந்து கொண்டு தான் சார் இருக்கு!"​

அதுவரை ஆதங்கம், கோபம், வலி என மாறி, மாறி உணர்ச்சிகளை வெளிப்படுத்தியவள், இறுதியாக அவன் விழிகளை ஆழ நோக்கி,​

“ராட்சச ராவணன்!" என்ற கடைசி விளிப்பை சற்றே அழுந்தக் கூறி விட்டு, விறுவிறுவென கேட்டைத் திறந்து கொண்டு வெளியே சென்றாள்.​

உரைத்த வார்த்தையும், சொல்லிச் சென்ற விஷயமும் அவன் உள்ளத்தை தாக்கியதா? இல்லை, அவன் சுயத்தை இழக்க வைத்ததோ?​

ஏதோ ஒரு தெரியாத புரியாத உணர்வுக்குள் சிக்கித் தவித்த சர்வேஷ், முதல் முறை ஒரு பெண்ணின் வித்தியாசமான பரிணாமத்தில் திகைத்து நின்றான்.​

ஏதோ ஒரு வகையில் அந்தப் பெண்மையின் வைராக்கியம், அவன் ஆண்மையின் திமிரை தலைகுனியச் செய்தது.​

அந்த நொடி சாத்வியை இறுக்கிப் பிடிக்கச் சொல்லி, அவன் மனம் உச்சரித்த அந்த ஆரவாரக் கூச்சலுக்கு, சர்வேஷ் செவி சாய்த்தான். போகும் அவளை விழி அசைக்காது பார்த்தான்.​

அவன் திமிரை வார்த்தை கொண்டு சிலுவையில் ஏற்றி விட்டே சென்று விட்டாள்.​

அவளின் எந்த நிமிர்வில் புருவம் வியப்பில் ஏற முதல் முறை அவளை உற்று நோக்கினானோ, அதே நிமிர்வில் அவளுக்குள் தொலைந்தால் என்ன என்ற கேள்வியை தனக்குள் ஆழமாக வாங்கிக் கொண்டான், சர்வேஷ் அக்கண்யன்.​

புது வேதம் படிக்க, அவன் இதயம் தயாராகி விட்டது. ஆனால், அது மறக்காத ரணங்கள் வலியையும் கொடுக்கும்.​

அதை காதல் சுக வலியாகவும் மாற்றலாம்.​

அவள் கண்ணகியின் வம்சம் என்றாள். ஆனால், இவள் கணவனுக்காக மதுரையை எரித்த கண்ணகியா? இல்லை, பிறர் மனை நாடிய மணவாளனை வேள்வியில் எரிக்கப்போகும் நவீன பத்தினியா?​

படைத்த பிரம்மனே அறிவான்!​

 

shasri

Member
சாத்விய வார்த்தையால வதைக்கிறான் 😔 சாத்வியின் நிமிர்வு பிடிச்சிருக்கு ❤
 

santhinagaraj

Well-known member
வாள் கொண்டு ஏற்படுத்தும் காயத்தை விட வார்த்தை கொண்டு ஏற்படுத்தும் காயம் ரொம்ப பெரியது சர்வேஷ் யாகாவாராயினும் நாகாக்க வேண்டும்
 

admin

Administrator
Staff member
சாத்விய வார்த்தையால வதைக்கிறான் 😔 சாத்வியின் நிமிர்வு பிடிச்சிருக்கு ❤
நன்றி டியர்❤️❤️
 

admin

Administrator
Staff member
வாள் கொண்டு ஏற்படுத்தும் காயத்தை விட வார்த்தை கொண்டு ஏற்படுத்தும் காயம் ரொம்ப பெரியது சர்வேஷ் யாகாவாராயினும் நாகாக்க வேண்டும்
நன்றி அக்கா
 
Top