எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

வேதம் - 10

admin

Administrator
Staff member

அத்தியாயம் - 10​

சாத்விகாவுக்கு கால்கள் இரண்டும் லேசாக வலித்தது. எங்கே அசைந்தால் சர்வேஷ் எழும்பி விடுவானோ என்று அமைதி காத்தாள். கீழே அமர்ந்தவாறு, பின் புறம் அப்படியே சாய்ந்தவள், எண்ணமெல்லாம் சற்று நேரத்திற்கு முன் இவள் அடியை அவன் வாங்கியதிலிருந்து சுழன்றது..​

அடித்தவள் துடித்தாள். ஆனால் வாங்கியவன் அவளிடமிருந்து ஏதோ ஒன்று, வலிக்க வேண்டும் என்று நினைத்தான் போலும். அந்த அடி அவனது இதயத்தின் அடி வரை இனித்தது.​

“நீ தானே அடிச்ச. ஆறுதலையும் நீயே சொல்லு!"​

அவளைத் தன் இறுக்கமான அணைப்பில் அடக்க, முதலில் திமிறியவள், பிறகு தடுத்தாள், தன்னிலிருந்து அவனைப் பிரிக்க நினைத்தாள், அசைந்தான் இல்லை அவன்.​

“விடுங்க! காட்டான்! ஹல்க்! மேல வந்து விழுகிறது நீங்க, ஆனா குறை மட்டும் பொம்பளைங்களச் சொல்றது. ஆம்பளைங்க எப்பவுமே சரியா இருக்காங்கனு நினைப்பு தானே?"​

“என்ன ரிவெஞ்சாடி. பரவால்ல எடுத்துக்கோ, எடுத்துக்கோ!" என்றவன் தன் அணைப்பை இறுக்க,​

வலுக்கட்டாயமாக, அவனைத் தன்னில் இருந்து பிரித்தாள். அவளும் அறிவாள். அவன் ஓங்கு தாங்கான உருவத்தை அத்தனை எளிதில் அசைத்து விட முடியாது என்று. இருப்பினும் அவள் அசைக்க முற்படுகிறாள் எனும் போதே, சர்வேஷ் இசைந்து கொடுத்தான்.​

சாத்வி அப்படியே முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு சுவற்றோரம் சரிந்து அமர்ந்தவள், விழிகளை மூடிக் கொண்டு நடந்த நிகழ்வின் தாக்கத்தின் விளைவில், ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்று விட்டாள்.​

எத்தனை நேரம் சர்வா அவளை இமை சிமிட்டாது பார்த்தான் என்று அவனே அறியான். பார்த்தான், பார்த்துக் கொண்டே இருந்தான். ‘கண்கள் இதயத்தின் வாசல்!' என்று கவிஞர் பாடி வைத்ததை உண்மையாக்கினான். ஆடம்பர நங்கைகளில் காணாத அழகை, கலைந்த அந்த அஜந்தா ஓவியத்தில் அணு அணுவாக ரசித்தான். தன்னுள் அவள் வரி வடிவத்தை பொக்கிஷமாக அடக்கி வைத்துக் கொண்டான்.​

அவனுக்கும் தெரியும்! கொட்டும் மழையாக அடித்துச் சாய்த்து விடும் தன் மூர்க்கமும், உணர்வுகளின் போராட்டத்தில் வாள் ஏந்தும் தன் வார்த்தைகளும், அவனை மட்டுமல்ல அவளையும் வதைக்கின்றன.​

ஆனாலும் கட்டுப்படுத்த முடியவில்லை. அவன் கர்வமும், திமிரும் கட்டுப்படவும் விரும்ப வில்லை. அவன் நீண்ட கழுத்து லேசாக வலிக்க, அதை தடவிக்கொண்ட அவனுக்குமே தலை சாய்த்தால் நன்றாக இருக்குமென்று தோன்ற, அந்த ஆறடி உயர மாமிச தோற்றத்தை எதில் சாய்ப்பது. அங்கிருந்த நீள் வடிவ சோபாவில் தலை சாய்த்துப் பார்த்தான் முடியவில்லை. அவன் உயரம் தடைக்கல்லாக இருக்க, எழுந்தவன் கால் நீட்டிப் படுத்திருந்த சாத்வியின் அருகே சென்று, அவள் மடியில் தலை வைத்து படுத்துக்கொள்ள, தளர்ந்த அவன் உடலும் அவள் கால்களுக்குள் விழுந்த வழுவும், உறக்கத்தை கலைக்க எழுந்தவள், தன் மடியில் குழந்தையாக சுருண்டு இருந்தவனை கண்டு திகைப்புற்று,​

“எ..ன்ன என்ன.. பண்றீங்க?"​

அவளுக்கோ மிகுந்த பதற்றம். என்னதான் நேசம் இருந்தாலும், அவன் உயரத்தை அறியாதவள் இல்லயே! தொட முடியா சிகரத்தில் இருப்பவன், அவளோடு தரையில் உறவாடுவதை காதல் கொண்ட மனம் ஏற்கவில்லை.​

“ம்ச்! என்னடி? சும்மா இரு."​

“என்னங்க நீங்க கீழ படுத்துட்டு? உங்க ரெஸ்ட் ரூம்லயாவது போய் தூங்குங்க. அப்படி இல்லையா அந்த சோபால போய் படுத்துக்கோங்க!"​

அவள் விழிகளுக்குள் ஊடுருவி,​

“படுத்ததும் தூக்கம் வாரது வரம்டி. அது எல்லாருக்கும் எல்லா இடத்திலும் கிடைத்து விடாது!"​

துளி மௌனத்துக்குப் பின்,​

“எனக்கு இதோ இங்க.." அவள் மடியை விழிகளால் உணர்த்தி,​

“இங்கே தான் கிடைக்குது. கிடைக்கிறத அனுபவிக்க விடேன்டி!"​

“என்னங்க நீங்க..?"​

படபடப்பு, கூச்சம் தன்னோடு சரிசமமாக தரையோடு அவனும் சயனித்திருப்பதால் ஏற்பட்ட திகைப்பு என, அவள் ஒரு மாதிரி நிலையில்லாது தவிக்க, சாத்வியின் வயிற்றுப்புறம் முகத்தை சரித்த சர்வேஷ், ஒரு கையால் அவள் தொடையை இறுக்கிப் பிடித்தான். அவள் நெளியவும்,​

“அசையாம இரேன்டி!"​

“அசையாமனா எப்படி?"​

அவள் திணறவும்,​

“அப்படி நீ அசையிறப்போ தான், உன்னை ஏதாவது செஞ்சா என்னன்னு தோனுது"​

அவன் நிமிர்ந்து சாத்வியின் பால் முகம் நோக்க, லேசான திகைப்போடு..​

“என்ன என்ன?"​

அவள் திக்கவே..​

“ஹா.. ஹா.." வாய்விட்டே நகைத்தான். அந்த அவன் சிரிப்பை விட, சாத்வியின் கண்களில் தான் எத்தனை ரசனை. பெண் மனம் பாகாக உருகியது. அந்த ஒற்றைப் புன்னகை நிலவோடு உறவாடும் அந்த இராப் பொழுதில், அவள் உயிரோடு உறவாடியது.​

“என்னடி பார்க்கிற?"​

அவன் குரல் மிக, மிக மெதுவாக மயிலிறகால் வருடுவதைப் போல் இதமாக வர, அந்தக் குரலின் ஸ்பரிசம் ஏதோ ஒரு மாய மயக்கத்தை சாத்விக்கு கொடுக்கவும், அதை ஒரு கணம் கண்மூடி ரசித்தவள், மயக்கம் துஞ்சிய விழிகளோடு..​

“இல்ல... நீங்க சிரிக்கும் போது ரொம்ப அழகா இருக்கீங்க.."​

வெண்பற்கள் மின்ன புன்னகைத்தவன்,​

“நான் சிரிப்பேங்கிறது நீ சொல்லி தான் ரொம்ப வருஷத்துக்கு அப்புறமா எனக்கே தெரியுது!"​

ஒரு வார்த்தை உயிரை அசைக்குமா? அந்த ஒற்றை வார்த்தையில் புதைந்திருந்த மர்மம் மட்டுமல்ல. ஏதோ அவன் வாழ்வில் இருந்த தீரா வேதனையும் அவள் உயிரை அசைத்தது.​

தன்னால், அவள் விரல்கள் அடர்ந்த அவன் கேசத்தை வருடிக் கொடுக்க,​

“எதுனாலும் சிரிக்காம இருக்கணுமா என்ன?"​

அவள் விழிகளை பார்த்துக்கொண்டே,​

“தெரியலை. சிரிக்கப் பிடிக்கல. சிரிக்கவும் தோனல. அந்த சிரிப்பு வலிக்கச் செய்யும்கிற நினைப்புல சிரிப்பு வரல."​

அவள் ஒற்றை விரல் மட்டும் உயர்ந்து, அவன் கூர் மூக்கை மேலிருந்து நுனி வரை மெதுவாக வருடிக் கொடுத்தபடி,​

“இனி சிரிங்க! எனக்காக, எனக்காக மட்டும் சிரிங்க. அந்த சிரிப்பு என்னைக்கும் என்னைச் சொல்லிட்டே இருக்கணும்."​

அவள் ஸ்பரிசத்தில், அவன் செத்த உயிரணுவெல்லாம் உயிர் பெற, உடம்பெல்லாம் மயிர்கூச்செறிந்து சிலிர்த்துப் போனான். முதல் முறை, வாழ்க்கையில் முதல் முறை ஒரு பெண்ணின் ஸ்பரிசத்தை உயிர் ஆழம் வரை உயிர்ப்போடு அனுபவிக்கிறான். ஒரு பெண்ணிடம் இவன் சுகம் பெற்றதை விட, இவன் சுகம் கொடுத்தது தான் அதிகம். முதல் முறை வெறும் தொடு உணர்வில் அந்த சுகத்தைப் பெறுகிறான். அவன் கடந்த காலத்தில் புணர்ச்சியின் சுகத்தை கடைசி துளி வரை சுவைத்தவன். அப்படிப்பட்டவனோ ஒரு சிறு பெண்ணின் தொடுகையில் சிலிர்த்து நிற்கிறான். அவன் விழிகளில் கோடி மின்னல்கள். அந்த விழிகளிலிருந்து பார்வையை அசைக்காதவள்,​

“ஏன் அப்படி பார்க்கிறீங்க?”​

மெல்லிய வீணையின் மீட்டலைப் போல் அவள் குரல் அவனுக்குள் சுருதி மீட்ட,​

“ஏன், நான் பார்க்கக் கூடாதா?"​

இருளை கிழித்த அவன் காந்தக் குரலில்..​

“நான் எப்போ அப்படி சொன்னேன்? ஆனா.. நீங்க பார்க்கிறது ஒரு மாதிரி இருக்கு."​

அவளை மென்மையாகப் பார்த்தவன்,​

“தோனுது சாத்வி! முதல் முறை எனக்கே எனக்காக ஒரு வாழ்க்கையை இந்தக் கண்களை பார்த்துக்கிட்டே வாழ்ந்து பார்த்துடணும்னு தோனுது. நான் வாழ உன்னை பார்த்துகிட்டே இருக்கணும் போலத் தோனுது. உன்னோட அந்த கண்ணோரத்திலயாவது உனக்குள்ள தொலைஞ்சு போகணும்னு தோனுது. இப்படி நான் தொலைஞ்சு போக நினைக்கிற ஒருத்தி, தன் ஒத்த விரல எடுத்து என் உடம்புல லேசா, ரொம்ப லேசா ஒரு கீறு கீறினாலும், அது தருகிற சொகத்துல உயிரையே விட்டுறலாம்னு தோனுது. இந்த கண்களுக்குள்ள எனக்காக இருக்க பெயர் தெரியாத அந்த ஒன்னுல, கரைந்து காணாமப் போகணும்னு தோனுது.​

தூக்கத்தை தேடி பல இரவுகள் அலைஞ்சும், என் தூக்கம் இங்க இருக்குன்னு கண்டுபிடிச்சி அதை அடைய முடியாதபடி, சதி செஞ்ச என் அதிர்ஷ்டத்தை சவுக்கால அடிக்கணும்னு தோனுது.​

ராத்திரிகளை வெறுத்த என் பார்வைக்குள்ள பவளமல்லியா, மின்னலா, தூய்மையான நதியா, பாவம் கழுவுற தீர்த்தக்கரையா இரவும் நிலவும் சாட்சியா ஒரு ஜனனம் வேணும்னு தோனுது. இது எல்லாம் நான் பார்க்க நினைக்கிற ஒருத்திக்கிட்ட அவளோட அந்த ஒத்த பார்வையில அவ கண்ணுக்குள்ள இருக்க நிமிர்வுல, எனக்கான மோட்சம் கிடைக்கும்னா, இந்தப் பார்வையை சாகும் வரைக்கும் விடாம பார்த்துக்கிட்டு இருக்கத் தோனுது.."​

என்றதும் துடித்தவள், தன் கையால் அவன் வாயை மூடி “ஹூம்.." மறுப்பாக தலையசைத்தவள்​

“இப்படி நீங்க அபசகுணமாப் பேசினா, என் ஆவி உங்களுக்கு முன்ன கரைஞ்சு போயிருமோனு தோனுது. பேசாதீங்க!"​

என்றதும், அவள் இடைச் சேலையை லேசாக விலக்கியவன், அவள் வயிற்றில் தாடியடர்ந்த தன் முகத்தை ஆழமாக அழுத்தமாக பிணைத்துக் கொண்டான். இப்படி ஒரு மோன நிலையில் இருவரும் காதலை சொல்லிக் கொள்ளாமலேயே, சொர்க்கம் சேர்ந்ததை உணர்ந்தனர்.​

என்ன பேசினார்கள் என்று கேட்டால், ஒற்றை பதில் நேசம், நேசம் மட்டுமே. அவள் இடையில் முகம் புதைத்தவன் இதழ்கள், பெண்ணின் நாபியில் அழுத்த முத்தமிட்டது. ஏனோ வருங்காலத்தில் தன்மகவுகளை தாங்கி தங்க வைக்கப் போகும் பெண்மையின் தாய்மைக்கு, இப்போதே மரியாதை செலுத்த எண்ணினான்!​

மீண்டும், மீண்டும் அவள் நாபியில் முத்தமிட பெண்ணுக்குள் தோன்றிய வெளிப்பூச்சி இல்லாத அந்த இயற்கை மணத்தை நேசமாய், ஆசையாய் சுவாசித்துக் கொண்டே, நீண்ட நெடிய வருடங்களாக அவனை அண்டாத தூக்கத்தை அவள் இடையை இறுக்கி வளைத்துக் கொண்டு துயில் கொண்டான். பெண்ணுக்கோ அந்த புயலின் பிடி வலிக்கத்தான் செய்தது. ஆனால் வெறுக்க நினைக்கவில்லை. நேசமாகப் பார்த்தாள்.​

அவள் அறிவாள்! அவன் அன்போ கடினமானது. அவன் சொல்லோ வன்மையானது. இந்த சில நாளில் அதை துல்லியமாகக் கணித்து விட்டாள். அப்படியே இருந்தவள், லேசாக கால் வலி எடுக்கவும் தூக்கத்தில் கலைந்து, தன் நினைவுகளில் மீண்டவள், இதழ்களில் வாடாத மோகனப் புன்னகை. தன் இடைச் சேலைக்குள் முகம் புதைத்து இறுகிப் போய் தூங்கும் ஆறடி உருவத்தை, தன் கை கொள்ளும் மட்டும் அணைத்துக் கொண்டவள், மீண்டும் நித்திரைக்குச் சென்றாள்.​

இங்கே இருவரும் ஆழ்ந்த நித்திரையில் இருக்க, நாட்டின் நிலமை ராணுவத்தால் மட்டுப் படத்தப்படவும், ஸ்பெஷல் பர்மிஷனை பெற்றுக் கொண்ட அக்கண்யன், ஆத்விக், ஜனனி மூவரும் ஆஃபீஸை நோக்கி வர..​

“என்னங்க?"​

“என்ன பேபி?"​

“சர்வா ஃபோன் ஆன்சர் பண்றான் இல்லங்க. சாத்வி ஃபோனும் ஆஃப்ல இருக்கு"​

“ஜனனி எதுக்கு இப்ப பதட்டப்படுற. அவ தனியா இருந்தா தானே பிரச்சனை. கூடவே சர்வேஷ் இருக்கானே!"​

இதில் எல்லாம் அக்கண்யணுக்கு மகனில் நம்பிக்கை உண்டு. மகன் விரும்பாத பெண்ணை தீண்ட மாட்டான். அதே நேரம் இலங்கைக்கு வந்து தான் சந்தித்த அன்றோடு, அவன் பெண்கள் சகவாசத்தை முடித்துக் கொண்டதையும் நன்கு அறிவான்.​

இங்கு ஆத்விக்கின் மனமோ ஏதோ ஒன்று நடக்கப் போகிறது, அதுவும் நல்லதாக நடக்கப் போகிறது என்றே அறிவுறுத்த மனம் சொல்லும் வேதவாக்கை அமைதியாக கேட்டுக் கொண்டு வந்தான்.​

அப்படியே அவர்கள் மூவரும் ஆஃபீஸுக்குள் நுழைந்து எம்டி கேபினுக்குள் போக, அங்கே கண்ட காட்சியில், பார்த்த விழி பார்த்தபடி சமைந்து இருந்தனர்.​

அவர்கள் மூவருமே கண்டது, சாத்வி தரையில் நன்றாக சாய்ந்தவாறு அமர்ந்திருக்க அவள் இடைச்சேலைக்குள் முகம் புதைத்து தன்னை மறைத்துக் கொண்டு, ஆழ்ந்த தூக்கத்தில் சர்வேஷ் இருக்க, அந்த உறக்கத்திலும் லேசாக அவன் தலையைக் கோதிய வண்ணம் அறை மயக்க நிலையிலிருந்த சாத்வியையும் சர்வேஷையும். அக்கண்யணும், ஆத்வீக்கும் ஒருவரை ஒருவர் யோசனையாக பார்த்துக்கொள்ள, ஜனனியோ கண்களில் பூத்த மின்னலை கணவனுக்கு தெரியாது மறைக்க பெரும்பாடுபட்டாள்.​

மூவரும் ஒரு, ஒரு வகையில் அதிர்ந்திருக்க இதோட விட்டேனா பார் என்பதை போல் சர்வேஷ்..​

“சாத்வி! சாத்வி!"​

தூக்கத்தோட லேசாக அவளை அசைக்கவும்,​

“ஹம்ச்.. ராட்சச ராவணா! தூங்க விட்டா தான் என்னவாம்?" தலையை கோதுவதை நிறுத்தாமல் தூக்கத்தோடு அவள் பதில் கொடுக்கவே.​

“நேத்து பிராக்டீஸ் பண்ணும் போது கழுத்துல லேசா வலிடி. நீ கழுத்த லேசா தடவிக் கொடு. லெஃப்ட் அண்ட் ரைட் இரண்டு பக்கமும் வலிக்குது. அப்படியே பிடிச்சு விடு!"​

தூக்கத்தில் குரல் குழைந்து வர,​

“ராவணா!" அவள் வஞ்சக புகழ்ச்சியோடு அவன் முதுகில் பட்டென்று ஒரு அடி வைத்தவள், தன்விரல் கொண்டு அவன் கழுத்தை குறை தூக்கத்திலும் தடவிக் கொடுத்தாள்.​

இங்கு மூவரும் சொல்ல வார்த்தைகள் இன்றி திகைத்து நிற்க, இரண்டு முறை மடியில் அங்கும் இங்கும் அவன் புரண்டு, புரண்டு படுக்க, சர்வேஷ் முதுகில் மீண்டும் ஒரு அடி வைத்தவள்..​

“ஒரு பக்கமா படுத்தா தான் என்னவாம்? ராத்திரில இருந்து மடிய விடாம பிடிச்சிட்டு தொங்குறீங்க."​

அவள் தூக்கம் கெட்ட கடுப்பில் திட்டவும்​

“ஹம்.. என்னை சுமக்கிறது அவ்வளவு கஷ்டமா இருக்குதா என்ன?"​

“பேச்சு, பேச்சு, இந்த பேச்சு மட்டும் இல்லைனா"​

“இல்லனா?"​

“ஹம்.. எனக்கு பைத்தியம் பிடிச்சுடும்னு தோணுது."​

அதில் அவன் லேசாகப் புன்னகைத்துக் கொண்டே, “கழுத்தை அழுத்தி பிடி..டி வலிக்குது."​

தூக்கம் கலைந்தும் கலையாத நிலையில் இருந்தவள், லேசாக அவன் கழுத்தை அழுத்திப் பிடிக்க,​

“ஒரு கை சும்மா தானே இருக்கு, அப்படியே தலையை கோதிக் கொடு" அவள் இதமாக கோதிக் கொடுக்கவே..​

“ஹெவன்!" அவன் இதழ்கள் மெல்ல முணுமுணுத்தன.​

அவன் இட்ட கட்டளையை செயல்படுத்திய பெண்ணின் இதழ்கள் மீண்டும் “ராட்சச ராவணன்!" மெதுவாக வசை பாட,​

“ஹம்.. ராவணனின் மண்டோதரி!"​

 

admin

Administrator
Staff member

இருவர் இதழ்களில் மலர்ந்த புன்னகையில் ஜனனியோ மகிழ்ச்சியின் உச்சிதனை தொட்டு, தொட்டு வர,​

இதில் கோபம், விருப்பம், தடுமாற்றம் என்று குழப்பி இருந்தது அக்கண்யன் மட்டுமே.​

ஆத்வீக்கின் அகத்தின் மகிழ்ச்சியை சொல்ல வார்த்தைகள் இல்லை. கண்டு கொண்டான். தம்பியின் கொஞ்ச நேரம் குலாவலில், அவள் மீது அவனுக்கு இருக்கும் உரிமையில், அவன் மனதை நன்கு கண்டு கொண்டான். ஒரு பெண்ணோடு அழகிய தாம்பத்தியத்தை திகட்ட திகட்ட வாழ்பவனுக்கு தெரியாதா, இருவரின் மனநிலை.​

இப்படியே இவர்கள் தூக்கத்தை கெடுப்பது போல் அக்கண்யன் தொலைபேசி சத்தமிட,​

அதில் முதலில் கலைந்த சாத்வி, திடுக்கிட்டு முழிக்க..​

அந்த மூவரையும் பார்த்து காற்றுக்கு தவித்த தங்க மீனாகத் துடித்தவள், உடல் பயத்தில் நடுங்கிடவே,​

தன்னை அடை காத்துக் கொண்டிருந்த தன் பெண் பறவையின் உடலில் ஏற்பட்ட மாற்றத்தைக் கண்டவன்,​

அவளில் இருந்து பிரிந்து சாத்வியின் முகம் காண, அக்கினியில் இறங்கிய சீதையின் தோற்றத்தை அவளில் உணர்ந்து, அசையா அவள் விழி செல்லும் பாதையில் அவனும் தன் பார்வையைச் செலுத்த,​

அங்கே இருந்த மூவரைப் பார்த்து, பெரிதாக எதையும் வெளிப்படுத்த வில்லை.​

லேசாக உருவத்தை நெளித்து அசைந்து மெதுவாக, மிக மெதுவாக அவளிலிருந்து எழுந்து கைகளை நெட்டி முறித்துக் கொண்டே குனிந்து அவள் இடையோடு கையிட்டு, சாத்வியை தூக்கி நிறுத்திய சர்வேஷ்,​

“கால உதறுடி. இவ்வளவு நேரம் நான் மடில தானே படுத்து இருந்தேன். கால் பிடிச்சுக்கப் போகுது. இரத்தம் எல்லாம் ஒரே இடத்தில் நின்னுருக்கும், லைட்டா மசல்ஸ ஸ்ரச் பண்ணு!"​

அவளை சரி பண்ணியவன், அவர்கள் மூவரையும் பெரிதாகக் கண்டுகொள்ளாது அவள் ஆடையையும் லேசாக திருத்தி விட்டு, தான் அணிந்திருந்த நைக் ஜோக்கட்டை எடுத்து அவளுக்கு அணிவிக்கப் போக,​

அதுவரையிலும் பேச முடியாத தர்ம சங்கடத்தில் நெளிந்து கொண்டு இருந்தவளுக்கு, அழுகை வரும் போல் இருந்தது.​

இயலாமையோடு அவனை ஒரு பார்வை பார்க்க,​

“மூச்சு! கண்ணுல டேம் கொட்டுனுச்சு தொலச்சிடுவேன்!" என்றவன் அவள் ஜாக்கெட் கிழிந்ததை அவர்கள் கவனிக்க அனுமதிக்க வில்லை.​

ஏனோ அவளை மற்றவர்களின் பார்வையில் இறக்கிக் காட்ட அவன் மனம் விருப்பமில்லை.​

“போடுடி!" அவள் புறம் குனிந்து மெதுவாகவே சாத்வி காதோடு பேசிக் கொண்டிருந்தவன்,​

அந்த நைக் ஜாக்கட்டை (Nike jacket) அணிவித்துவிட்டே, அவர்கள் புறம் திரும்பி ஒன்றும் நடவாதது போல.​

“ஓவ்! வந்துட்டீங்களா? நானே வந்து இருப்பேனே, எதுக்கு நீங்க மூனு பேரும் வந்தீங்க?" நக்கலாகக் கேட்கவும்,​

அக்கண்யன் தன் குத்தீட்டிப் பார்வையால் சர்வேஷை குத்திக் கிழிக்க, அந்தப் பார்வை என்னை ஒன்றும் செய்யவில்லை என்ற பாவனையோடு,​

“ஓகே! நீங்க மூனு பேரும் கிளம்புங்க."​

“நான் சாத்விகாவ ட்ராப் பண்ணுறேன், சர்வா."​

தந்தையின் கடினமான அழைப்பில் சாத்வியின் உடல் தூக்கி வாரிப் போட, அதை ஓரக் கண்ணால் கண்டவன்,​

“நத்திங், நத்திங்.."​

அவள் கையை இறுக்கி பிடித்து தைரியம் அளித்து, தந்தையை பார்த்து மிக அழுத்தமாக,​

“நான் ட்ராப் பண்ணிட்டு வரேன். நீங்க மூனு பேரும் வீட்டுக்குப் போங்க."​

ஆனானப்பட்ட அக்கண்யனே, ஒரு கணம் மகனின் குரலுக்கு அசைந்து கொடுத்தான். அவர்கள் ஆஃபீஸ் வாசலுக்கு வரவும்,​

அங்கே அரசாங்க பாஸ் மூலம் அரசாங்கத்தில் வேலை செய்யும் தன் நண்பனின் உதவியுடன், சாத்வி தனியே ஆஃபீஸில் இருப்பதை அறிந்து கொண்ட ரகுவரனுவும் வந்து சேரவும் சரியாக இருந்தது.​

ரகுவரன் தன் நண்பனோடு உள் நுழைந்து பதட்டத்தோடு முதலில் கவனித்தது, சாத்வியை. இதை இரை தேடும் சர்வேஷ் கூர்விழிகள் சரியாகப் படம் பிடித்தன. ஜனனி அக்கண்யன் ஆத்விக் மூவரும் தலையசைப்போடு அவர்கள் காரில் ஏறிக்கொள்ள,​

சாத்வியை நெருங்கிய ரகுவரன்,​

“சாத்வி, ஆர் யூ ஓகே?"​

“ஹம்.. ஒகே!" என்றாள் மெதுவான குரலில்.​

“நான் ரொம்ப பயந்துட்டேன். ரம்யாவோட ஃப்ரெண்ட் சொல்லித்தான் எனக்கு தெரிஞ்சுச்சு. ஒரு பிரச்சனையும் இல்லையே. ஏதும்னா உரிமையா என்னை கூப்பிடுறதுக்கு என்னவாம்?"​

தன்னுரிமையை நிலை நாட்ட அவன் படபடவென பேசியவன், அவனுக்கு முன் இருப்பவன் சர்வேஷ் அக்கண்யன் என்பதை மறந்து போய், தானாக புலியின் வாயில் சிக்கிக் கொண்டான்.​

“உன்னை ஏன் மிஸ்டர் ரகுவரன் அவ கூப்பிடணும்?"​

அப்போதே நினைவு வந்தவனாக அதிர்ந்தான்,​

“ஐ அம் சாரி சார். நீங்கள் இங்கே இருக்கிறீர்களா?"​

“ஹம்.. நான் நேற்று ராத்திரில இருந்து அவளோட தான் இருக்கேன்."​

உன்னை விட எனக்கே உரிமை அதிகம் என்பதை சொல்லால் அடித்துச் சொல்லி விட்டான். எல்லாமே ஒரு கணம் தான். ரகுவரன் சிரித்துக் கொண்டேன்,​

“ஓவ்! நீங்களும் ஆஃபீஸ்ல மாட்டிக் கிட்டீங்களா சார்"​

சமாளித்து விட்டு..​

“சாத்வி, வாங்க நான் உங்களை ட்ராப் பண்ணுறேன்."​

அவளுக்கோ சுற்றி நடப்பது ஒன்றும் மூளைக்குள் பதியவில்லை. ‘அக்கண்யனின் குடும்பம் தன்னை என்னவென்று நினைத்து இருப்பார்களோ!’ என்றே தனக்குள் கலங்கிப் போனவள் சுற்றத்தை மறக்கத் தொடங்கினாள்.​

ரகுவரன் தன்னோடு வரும்படி அழைத்து அருகில் நெருங்கவுமே சர்வேஷ் மணத்தை நெஞ்சம் எல்லாம் நிரப்பி வைத்துக் கொண்டு இருப்பவளுக்கு அந்நிய ஆணின் மணம் ஒரு ஒவ்வாமையை கொடுக்க, தானாக விலகி சர்வேஷுக்கு பின் தன்னை மறைத்துக் கொண்டாள். அதில் அவன் இதழ்களில் அப்படி ஒரு கர்வப் புன்னகை.​

அதே புன்னகையோடும் திமிர் நிறைந்த கூர் விழிகளோடும் ரகுவரனை குத்திக் கிழித்தவன்,​

“அவளை என்ன விட உரிமையா யாரால பார்த்துக்க முடியும், ஹிம்..? எனக்கு உரிமையானத எனக்கு பார்த்துக்கவும் தெரியும். பாதுகாக்கவும் தெரியும். மிஸ்டர் ரகுவரன்! நீங்க உங்க வேலைய மட்டும் பாருங்க."​

அழுத்திச் சொல்லிவிட்டு, அந்த இடம் விட்டு காரில் ஏறிக்கொள்ள. பயணம் முழுக்க அமைதி என்றால் அமைதி அப்படி ஒரு அமைதி. அவள் ஹாஸ்டல் வாசலில் அவளை இறக்கி விட்டவன், அவள் கதவை திறந்து கொண்டு இறங்கப் போகவே, சாத்விகாவின் கையை பிடித்து நிறுத்தி,​

“என்னடி!" எனவும் கலங்கிய விழிகளோடு,​

“என்னங்க!"​

“அதுதான் என்னன்னு கேட்கிறேன்?"​

“தெரியலையே.."​

“தெரியணும். தெரிஞ்சுக்கணும்டி. நான் ராட்சச ராவணனுனா அவனோட மண்டோதரி நீ! அவனைத் தெரிஞ்சுக்கணும்டி. அவளோட ராட்சசனின் மறைக்கப்பட்ட வலிகளும் ரணங்களும், இருளுக்கும் இரவுக்கும் நிழலுக்கும் நிலவுக்கும் மட்டுமே தெரியும்கிற ஒரு கர்வத்தை உடைத்து, உனக்கே உனக்கு மட்டும் தான் அவன பத்தி எல்லாமே தெரியும்னு திமிரோட தெரிஞ்சுக்கணும்டி!​

அவனோட பலவீனம் உன் கண்களின் ஓரத்தில் தொக்கி நிற்குமே, அந்த கொஞ்சூண்டு நிமிர்வும், திமிரும் தான்னு தெரிஞ்சிக்கணும். இந்த சர்வேஷுக்கு அந்த திமிருலயும் நிமிர்வுலயும் தோற்க ரொம்பவே பிடிக்கும்னு நீ தெரிஞ்சுக்கணும்டி. கண்ணீர்ல கலங்குற இதோ இந்த உன் கண்களை பார்க்கும் போது, இங்க, இங்க.." என்றவன் தன் நெஞ்சை விரல் வைத்து காட்டி​

“இங்க... இந்த ராட்சசனுக்கு வலிக்கும்னு நீ தெரிஞ்சுக்கணும். ஆறடி உருவம், இந்த அஞ்சடி பொண்ணோட கைக்குள் அடைக்கலமாகி ரொம்ப நாள் ஆச்சுன்னு தெரிஞ்சுக்கணும். உன்னோட ராட்சச ராவணனுக்குள்ள ஏகப்பட்ட ரகசியம் இருக்குனு, நீ கண்டிப்பா தெரிஞ்சிக்கணும். இந்த சர்வேஷ், சாத்வி கிட்ட மட்டும் தான் சுயம் தொலைப்பான்னு நீ தெரிஞ்சுக்கணும். அவளோடு சொல்லப்படாத நேசம், இன்னும் மிச்சமீதி இதோ இங்க.." என்றவன் இப்போது அவள் நெஞ்சில் விரல் வைத்துக் காட்டி​

“அங்க பத்திரமா இருக்குனு.. தெரிஞ்சுக்கணும். இந்த சர்வேஷோட கருப்பு பக்கங்கள் ரொம்ப கசப்பானதுனு தெரிஞ்சுக் கணும். இதெல்லாம் தெரிஞ்ச பிறகும், உன்னைச் சேர உன் மனச முழுக்க எனக்கே எனக்காக நீ தருவியானு, நான் கண்டிப்பா தெரிஞ்சிக்கணும். இதெல்லாம் தெரிஞ்சிக்கணும்.."​

கண்கள் கண்ணீரில் மின்ன பாவமாக உதட்டைப் பிதுக்கியவள்,​

இட வலமாக தலையை ஆட்டிக்கொண்டு..​

“தெரியலயே! நீங்க கேட்ட எந்த கேள்விக்கும் பதில் தெரியல. இந்த நொடி ஒரு அகம் புடிச்சவனுக்குள்ள என் மனசு காணாமல் போச்சு. அதை எப்படி கண்டுபிடிக்கணும்னு தெரியல. என்னை வார்த்தையால தேளா கொட்டுற ஒரு கர்வியோட கண்ணுக்குள்ள, நான் எப்படி தொலைந்து போனேன்னு தெரியல. மத்தவங்க கிட்ட வாய் பேசத் தயங்குறவ நான். அப்படி இருக்கும் போது இந்த ஆறடி ஹல்க் கன்னத்துல ரெண்டு அப்பு எப்படி அப்புனேன்னு தெரியவே தெரியல.."​

அவன் கண்களில் அப்படி ஒரு புன்னகை என்றால், கலங்கிய கண்களில் தோன்றிய புன்னகையோடு, அவள் கைகள் அவன் கன்னத்தை மெதுவாக வருடி கொண்டே..​

“இந்த ராவணனை ஏன் நேசிக்க தோணுதுனு தெரியல. அவனுக்குள்ள நான் ஏன் எனக்கான தேடலை தேடுறேன்னே தெரியல. உலகமே யூஎஃப் சேம்பியன்னு பெருமை கொண்டாடுற இந்த கடோத்கஜனோட உடம்புல, அப்பப்ப தோன்றும் நடுக்கம், அவன் கண்கள்ல தோன்றுற கலக்கம், உருவத்தில் தோன்றுகிற ஒரு விறைப்பு, எல்லாம் ஏன்னு தெரியல. அதையெல்லாம் தெரிஞ்சுட்டா, என் மனசு தாங்குமானு தெரியல. முழுசா நம்பிட்டேன்னு மனசு சொல்லுது! அப்படி நம்பிக்கை வச்சா, ஏமாந்து போயிருவனானு தெரியல.​

இந்த பிரகோதன முழுசா நேசி, உன் பெண்மையின் வேர்கள் கூட, அவனை நினைத்தால், நேசத்தால சிலிர்க்கும் அளவு நேசினு மனசு சொல்லிட்டே இருக்கு. என்னைக்கு ஆவது ஒரு நாள் என்னோட நேசம் தோற்றுப் போயிட்டா, அதை தாங்கி சகிச்சுட்டே என் உயிர் இந்த உடம்பிலேயே வாழுமானு தெரியல..!"​

அவ்வளவு தான் தெரியும்! அவளை முரட்டு வேகத்தில் இழுத்து அணைத்தவன்,​

“உனக்கு எதுவும் தெரியாது. என்னை என்னக்காக தெரிஞ்சுக்கோ, தெரிஞ்சுக்கோடி!"​

தன் அணைப்பை இறுக்கிக் கொண்டே..​

“சொல்லு தெரிஞ்சுக்கணுமா?"​

“ஹூம்.."​

மறுப்பாக தலையசைக்க,​

“தெரியல, தெரியல.." என்க சிரித்துக் கொண்டே.​

“தெரிஞ்சுக்கணும்?"​

“என்னடி?"​

“ஆனா... வலிக்கும்னு பயமா இருக்கு. ஆனாலும் ஒரு வலிக்கு இன்னொரு வலி தான் ஆகச் சிறந்த மருந்து. அந்த வலியை எனக்கே எனக்குனு வாங்கிக்கப் போறேன்!"​

“அப்போ சாத்விக்கு, சர்வேஷ் வலியாடி!"​

“ஹூம்.. சர்வேஷ் சாத்விக்கு சுகமான வலி!"​

“அப்போ தெரிஞ்சுக்கிறியா?"​

அவள் சம்மதமாகத் தலையசைக்க, அழுத்தமான ஒரு முத்தம் அவள் நெற்றியில் பதித்தவன்,​

“இதோ இங்க.." அவள் இதழ்களை விரலால் வருடிவிட்டு​

“இங்க ஒரு முத்தம் வலிக்க வலிக்க தந்துட்டேன். ஆனா, இனி தரப்போற இதழ் முத்தம், அந்த இதழ் முத்தத்தை மறந்து போகிற மாதிரி இந்த இதழோடு என் இதழ் சேரும் நேரம் என்னுடைய அந்த இதழ் முத்தத்தை நீ வாழ்க்கைல மறக்கமாட்ட. நம்ம வாழ்க்கையில மறக்காத முதல் முத்தமா இருக்கும், இட்ஸ் மை ப்ராமிஸ்..!"​

இந்த அதிகாலை வேளையில் கீழ்வானின் நிறத்தை அவள் பெண்மேனி பூசிக்கொள்ள, அதில் சர்வேஷின் முகம் மென்மையை தத்தெடுத்து,​

“போ! என்னை நீ முழுசா தெரிஞ்சுக்கோ. தெரிஞ்சுகிட்டு நான் தான் வேணும்னு நீ சொல்ல வேணாம். ஆனா... அப்படி ஒரு நினைப்பு உன் கண் இமை முடி துடிக்கிறதுல நான் கண்டாலுமே, நீயே என்னை வேண்டாம்னு உன்வாய் திறந்தே சொன்னாக் கூட, இந்த சர்வேஷ் உன்னை விட மாட்டான்.​

இது வரை நீ ராமனுக்காக​

காத்திருந்து இருக்கலாம்.​

ஆனால் காத்திருக்கும்​

சீதைக்கெல்லாம்​

ராமன் கிடைப்பதில்ல!​

ராவணனுக்கு சீதைனு​

பிரம்மன் எழுதவில்லை.​

இந்த ராவணனுக்கும்​

இணை சீதையுமில்ல,​

நீயும் ராமனோட சீதையில்லை!​

நீ இந்த ராவணனோட மண்டோதரி..!,"​

அழுத்தமாக அவள் முகம் பார்த்து வேதாந்தம் படித்தவன் மீண்டும் ஒரு நெற்றி முத்தத்தை நுதலில் பதித்து விட்டே போக அனுமதித்தான்.​

செம்புலப் பெயல் நீர் போல வெந்து கிடந்த மனம், அவள் குளிர்மையில் தணிந்தது. அந்த அதிகாலை வேளையில் சூரியனுக்கு இணையான அழகோடு சென்றவளை ரசிக்க இரண்டு கண்கள் போதவில்லை.​

அவளின் அழகை விழிகளில் நிரப்பிக் கொண்டு, மெதுவான தலையசைப்போடு காரை இயக்க, அதுவரை நார்மல் மூடில் இருந்தவன், சிந்தைனையில் மூழ்கிப் போனான்.​

சாத்வியிடம் அவன் பெற்ற சில மணித்தியால தாய்மை போதுமே! தன் தாயை தள்ளி வைத்ததை நினைத்து வருந்த.​

அவள் மடி தந்த சுகம், முன்பொரு காலத்தில் தாய் மடியில் பெற்ற சுகமென உணர்ந்து, அது கை நழுவிப் போன துரதிர்ஷ்டத்தை எண்ணி ஒரு பக்கம் ரணம் என்றால், இன்னோரு புறம் தந்தையை எப்படி கையாள்வது என்ற எண்ணம்.​

உண்மை தெரிந்தால் சாத்வியின் நிலை என்ன? இதிலே நின்று கொண்டிருக்க, அவன் கார் இல்லம் வந்து சேர, சரியாக இருந்தது.​

“அத்தான், சர்வா வந்துட்டான். ஒன்னும் சொல்லிடாதீங்க. ப்ளீஸ்.."​

“ஜானு, இதுல நீ தலையிடாதே. அவன் விளையாட அவ ஒன்னும் பொம்பையில்!ல"​

“அத்தான், அதைத் தான் உங்களுக்கும் சொல்றேன். அவங்க உணர்வுகளை நீங்க ஜட்ஜ் பண்ணாதீங்க. ப்ளீஸ்.. நீங்களா ஒரு முடிவுக்கு வந்துறாதிங்க. சர்வாவோட கோவத்தை நினைச்சா, எனக்கு பதறுது அத்தான்!"​

 

admin

Administrator
Staff member

“ஜனனி!" அக்கண்யன் கடினமாக அழைக்கவும்..​

“அப்பா! அம்மா சொல்றதத் தான் நானும் சொல்லுவேன். நீங்களா ஒரு முடிவுக்கு வராதீங்க. உங்களுக்கு ஒரு ஜனனினா, அவனுக்கு ஒரு சாத்வீனு விதி இருக்கும், ப்ளீஸ்ப்பா!"​

“நீ புரியாமப் பேசாத ஆத்வீக்"​

“அத்தான் எனக்காக. நம்ம சர்வாவுக்காக"​

மனைவி கண்களில் தெரிந்த யாசகத்தில் அக்கண்யனின் உடல் நீண்ட வெகு வருடங்களுக்குப் பின் இறுகிப் போனது.​

“ப்ளீஸ்ப்பா!" மகனும் மனைவியும் சேர்ந்து இறஞ்சவே, அவன் சற்று அமைதியாக,​

உள்ளே நுழைந்த சர்வா, ஒற்றை பார்வையில் நிலமையின் தீவிரத்தை கண்டு கொண்டவன், நேரே ஜனனியை நோக்கிச் சென்று, அன்னையின் முகத்தை மிக ஆழமாகப் பார்த்துக் கொண்டே..​

“அம்மா!"​

ஒற்றை வார்த்தை உயிரைக் கொல்லுமா? கொன்றதே! மூன்று வருடங்கள் கழித்து அம்மா என்றழைத்திருக்கிறான். இதை அவள் முற்றிலும் எதிர்பார்க்கவில்லை. ஐந்து பிள்ளைகளை பெற்ற தாயவள், தன் இளைய மகன் தன்னை அம்மா என்று அழைக்க மாட்டானா என்று தவம் இருந்தவள். தவத்தின் பலனை அடைந்தாள்.​

அவனைத் தாங்கிய அடிவயிற்றில் சுமந்த போது இருந்த கனத்தை அப்போது உணர்ந்தாள். உடல் எல்லாம் பதட்டத்தில் தடதடக்க, நெற்றியின் ஓரத்தில் ஒற்றைத் துளி வியர்வை இறங்கவும், கண்ணெல்லாம் கலங்கி மயக்கம் நிலைக்கு செல்லவே, தாயின் நிலை அறிந்து இறுக்கி கொண்டவன்,​

“தப்பு தான். என் தப்பு தான். என்னோட அம்மாவை யாருக்காகவும், எதுக்காகவும் தள்ளி வச்சுருக்கக் கூடாது. என் தப்பு தான்.​

என் காயத்துக்கு மருந்து தேடி சுயநலமா இப்போ உங்களைத் தேடி வந்து, அம்மானு கூப்பிட்டது தப்புதான்!"​

“சர்வா பேசாத. எதுவும் பேசாத. இது போதும் இந்த அம்மாவுக்கு இது போதும்!"​

இன்னும், இன்னும் ஜனனியை தன் நெஞ்சோடு இறுக்கி அணைத்துக் கொண்டவன், தாய் தலை மீது தன் முகத்தை புதைத்துக் கொண்டு,​

“உங்களை மன்னிக்கணும்னு இதுவரைக்கும் தோணல. அம்மானு கூப்பிடனும்னு தோணல. ஆனால் அவ.."​

அவன் தயங்கி நிறுத்தவே! ஜனனி கேள்வியாக மகன் முகம் நோக்கவும், லேசான கூச்சம் அவன் முகத்தில் தென்பட்டது.​

அதில் மகனின் சோல்டரில் இருந்து ஒரு பக்கக் கைமுழுவதும் வரைந்திருந்த டெட்டுவில் ஒழிந்திருக்கும், தன் பெயரை மெதுவாக வருடிக் கொடுக்க..​

“தெரியுமா அம்மா?"​

“தாய் அறியாத சூழ் உண்டா?"​

அவள் புருவங்கள் பெருமையில் மேலேற,​

“போதும்! இப்ப நீ செல்ல வந்ததை சொல்லு சர்வா!”​

“அம்மா!" அவன் இரு விழி முடித் திறக்கவும்.​

“இதான் நீங்க. இந்த கேரிங் தான் அவ மடியில படுத்து இருக்கும் போது, நான் உணர்ந்ததுன்னு மனசு உங்களுக்காக துடிச்சு, உங்கள தள்ளி வச்சுட்டேனு என்னையே குத்திக் கிழிச்சுருச்சு அம்மா. அம்மாவ மன்னிக்க மாட்டியா சர்வானு அன்னைக்கு கேட்டீங்களே! அந்த குரல் என்னை இருக்க விடல!"​

“இந்த அம்மா கிட்ட விளக்கம் தேவல்ல, சர்வா"​

என்ற சொல்லோடு மகனில் இருந்து நிமிர்ந்தவள், அவன் தாடியடர்ந்த முகத்தை தாய் பசு தன் குட்டியை நாவினால் நக்கி தடவி கொடுப்பதை போல தடவி கொடுத்தவள், அவன் கை கால் தாடை என தன் வளர்ந்த ஓங்கு தாங்கான மகனை தடவிக் கொடுத்தாள்.​

“எஎ..ன்னோட பையன், என்னோட பையன் அரக்கனா? இல்லவே இல்ல அழகன். சாம்பியன்.."​

கண்ணீரில் குரல் தழும்ப மீண்டும் தாயை அணைத்து விடுவித்தான். அனைவரும் நெகிழ்ந்திருந்த தருணம், அவள் நெற்றியில் முத்தமிட்டு,​

“போய் ப்ரஷ் ஆகிட்டு வந்துடறேன்மா."​

மகன் விலகிச் செல்ல நினைக்கவே, அவன் கையை இறுக்கிப் பிடித்தவள்...​

“அம்மா கிட்ட இருந்து ஏதாவது வேணுமா சர்வா?"​

“அம்மா!" அவன் குரல் அதிரவும்,​

“என்னோட சர்வேஷ்க்கு அம்மா எதுவும் தர மாட்டாங்கனு நினைக்கிறியா?"​

அவன் எதையும் வேண்ட நினைக்கவில்லை. ஆனால் தாயோடு ஏற்பட்ட பிணக்கை மறக்க நினைத்தான். அவன் மறுப்பாக தலையசைக்க,​

“ஆனால், இந்த அம்மாவுக்கு தன்னோட பையனுக்கு ஒரு வரம் கொடுக்கணும்னு தோனுது."​

துளி மௌனத்துக்குப் பின்..​

“இந்த அம்மா கிட்ட ஏதும் வேணுனா கேளு, கண்ணா. நீ உனக்காக கேட்கிறது அது எதுவா இருந்தாலும், கண்டிப்பா எனக்காக என் அத்தான் அதை மறுக்காமச் செய்வார்."​

என்றவள் பார்வை கணவனில் அழுத்தமாகப் படிந்து, இதைச் செய்ய வேண்டும் என்ற கட்டளையை இட, அவளை லேசாக முறைந்தாலும் தாய் மகனின் பாசத்தில் நெகிழ்ந்திருந்தவன், மனைவியின் விழி மொழிக்கு அடிபணிந்தான். தந்தை மயங்கும் ஒரே இடம் எதுவென்று அறியாதவனா, அந்த மகன். அதில் தந்தையை நக்கல் பார்வை பார்க்க, மகனை முடிந்த மட்டும் முறைத்தவன், அதைவிட கர்வமாக ‘என் மனைவிக்கு என் மீது இருக்கு நம்பிக்கையை பார்' என ஒரு பார்வை பார்க்கவும், மீண்டும் ஜனனி சர்வாவிடம்..​

“இந்த அம்மாகிட்ட கேளு கண்ணா! கண்டிப்பா வரம் தாரேன்."​

“லைஃப்ல ஒரு முறை பெயிலியர் ஃபேஸ் பண்ணிட்டா, லைஃப்ப மீண்டும் புதுசா அமைச்சுக்க கூடாதுன்னு உங்களுக்கு ஏதாவது இருக்கா?"​

“என்ன பேச்சு பேசுற சர்வா, ஆணும் பெண்ணும் எனக்கு சமம் தான்."​

எந்தவொரு வெளிப்பூச்சும் இல்லாமல் ஒளிவு மறைவு இன்றி..​

“நீ வரம் கேளு. அந்த வரத்தைத் தர வேண்டியது என்னோட கடமை!"​

அவள் மீண்டும் கூறிட, ஆழ மூச்செடுத்து விழிகளை இறுக்க மூடி, தன் கடந்த கால கசடுகளை எல்லாம் அவன் மன ஆழத்தில் அழுத்திக் கொண்டவன், தனக்காக, தான் உயிர் வாழ, உயிர் நேசத்திற்காக ஒரு வரம் வேண்டும் எனும் வெறியுடன்,​

“சாத்விகா!" அவன் ஒற்றை சொல்லில் கூறி விட..​

“சர்வா!" உரத்து அழைத்த ஜனனியின் குரலில் சந்தோஷ அதிர்வுகள்.​

“ஆமாம்" என்று தலை அசைத்தவன்.​

“சாத்விகா! அவ, அவ தான் வேணும். என்னோட காதலியா, மனைவியா எனக்கு எல்லாமுமா. ஆனா.. என்னோட எல்லா கருப்பு பக்கங்களும் தெரிஞ்ச துணைவியா..!"​

தந்தையின் புறம் பார்வையைச் செலுத்தி,​

“உங்களுக்கு ஏதும் அவ கிட்ட சொல்ல தோணுச்சுனா, நீங்க தாராளமா சொல்லுங்க. அவளுக்கு மறைக்காம சொல்ல வேண்டியதை நான் சொல்லிக்கிறேன். அவ எனக்கு மனைவியா வேணும். அதுவும் இன்னும் ஏழே நாளுல, அவ இந்த வீட்டுக்குள்ள மருமகளா கால் எடுத்து வைக்கணும்!"​

அவன் அதிரடியாக சொல்ல,​

“சர்வேஷ்! என்ன இது, அந்தப் பொண்ண நீ நேசிக்கிற வரைக்கும் ஓகே. ஆனால் ஏழு நாளில் எப்படி?"​

“அண்ணா எனக்கு அவ வேணும். இன்னும் ஏழே நாள்ல, சாத்வி இந்த வீட்டுக்கு மருமகளா வந்தாகணும்!"​

“இது என்ன பிடிவாதம் சர்வா!"​

“டேட் எப்போ மேரேஜ் பண்ணாலும், அவளைத் தானே பண்ணிக்கப் போறேன். அதை இன்னும் செவன் டேஸ்ல பண்ணா என்ன?"​

“அப்படி என்னடா செவன் டேஸ்ல நடந்துறப் போகுது?"​

“அது உங்களுக்கு புரியாது டேட். கைல கிடைச்ச புதையல தூர வச்சுக்கிட்டு எப்போ அது தொலைந்து போகும்னு பயத்தோட வாழ்றவனுக்குத் தான், நான் சொல்ற இந்த செவன் டேஸோட அர்த்தமும் அருமையும் புரியும். ஐ நீட் ஹேர், ஐ வாண்ட் ஹேர், ஐ வாண்ட் டு மை செல்ஃப் அவ்வளவுதான்.​

அவளை சீக்கிரம் எனக்குள்ள வச்சுக்கணும்னு தோனுது. இல்லனா... சைக்கோவா ஆகிருவனோனு பயமா இருக்கு!"​

சர்வேஷ் தடுமாற்றத்தோடு முடிக்கும் முன்னே..​

“சர்வா!" அவனை அழைத்த அக்கண்யன் மனதில் மீளா வலி. அந்த வேதனை விழிகளில் பிரதிபலிக்க, மிக, மிக உறுதியோடு,​

“என் மகனுக்காக அவனோட சாத்விகாவ அவனுக்கே மேரேஜ் பண்ணி வைக்கிறேன். பட் சர்வேஷ், அக்கண்யனுக்கு தன் இன்னோரு மகள் சாத்வீயோடு ஒரு வாழ்க்கை வேணும்னா, நீ உன்னை பற்றி முழுசா, எல்லாம் முழுசா.."​

என்றவன் அவனை நெருங்கி...​

“எங்களுக்கு இதுவரைக்கும் மறைக்கப்பட்ட உன்னோட பக்கங்களும் தெரியணும். நீ சொன்ன மாதிரியே, இன்னும் ஏழே நாள்ல அவ சம்மதத்துடன் உன் மேரேஜ் நடக்கும். நடத்திக் கொடுப்பேன்!"​

என்றவனுக்கு இன்னும் வலித்தது.​

மகன் மனதோடு போராடுவது அறிவானே! ஆறடி உயரத்தில் இருக்கும் தன் வீட்டு செம்பியன், உணர்வுகள் போராட்டத்தில் சோர்ந்து கொண்டிருக்கிறான். அவன் மன அழுத்தம், மன வலி, மனப்போராட்டம் எல்லாம் மனைவி மக்கள் தெரிந்து கொண்டது சிலது, தெரியாத பக்கங்கள் ரணமானது.​

மகனின் வலிக்கும் உள்ளுக்குள் தவித்துக் கொண்டிருக்கும் அவன் தனிமைக்கும், வரத்தை தருவதாக வாக்களித்து விட்டான், அந்த நல்ல தந்தை.​

மீண்டும் ஒருமுறை தாயை மனநிம்மதியோடு அணைத்த சர்வேஷ், தன் அறை நோக்கிச் சென்றான்.​

இவன் சுயம் தொலைத்த மாதிரியே இவன் தவறுகளை மன்னித்து அவளும் சுயம் தொலைத்தால், அந்தக் காதலுக்கு கடவுளே சாட்சியாகி ஒரு வாழ்வு வாழலாம். இல்லையேல் சந்தேகம் மட்டுமே சாட்சியாகும். இங்கு காதலே வேதமாக! நேசமே விந்தையாக! ஆட்சியமைக்க, காதல் காலங்கள் ரணங்களோடு காத்திருந்தது.​

 

santhinagaraj

Well-known member
சர்வாவோட கருப்பு பக்கங்கள் தெரிஞ்ச பிறகு சாத்வி என்ன முடிவு எடுக்க போறா?
அது என்ன ஏழு நாளில் கல்யாணம் வைக்கணும்னு சொல்றான் அப்படி என்ன இருக்கு அந்த ஏழு நாள்ல?
 

admin

Administrator
Staff member
சர்வாவோட கருப்பு பக்கங்கள் தெரிஞ்ச பிறகு சாத்வி என்ன முடிவு எடுக்க போறா?
அது என்ன ஏழு நாளில் கல்யாணம் வைக்கணும்னு சொல்றான் அப்படி என்ன இருக்கு அந்த ஏழு நாள்ல?
அவனுக்கு பயம் லேட் ஆனா எங்க மேரேஜ் நடக்காம போயிரும்னு..
 
Top