எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

வேதம் - 17

admin

Administrator
Staff member

அத்தியாயம் - 17​

ஷார்ட்சை அணிந்து விட்டு இடையில் இருந்த டவளை கழட்டி தூர எறிந்தவன், சாத்விகாவை முறைத்துக் கொண்டே வந்து அவள் அருகில் படுத்து, அவள் வெற்று வயிற்றை மெதுவாக வருடிக் கொடுக்கத் தொடங்கினான்.​

“என்ன புருஷ் நீங்க? ஒழுங்காவே சொறியத் தெரியல. கொஞ்சம் இந்தப் பக்கம் சொறிஞ்சு விடுங்களேன் கடிக்குது.”​

அவனோ பதில் பேசவில்லை முறைப்பையும் விடவில்லை. சாத்விகா அரைக் கண்ணில் சர்வேஷை பார்க்க, அதைக் கண்டு கொள்ளாதவன்,​

“ம்ச்!” என்றதோடு மௌனம் சாதிக்க,​

“ஏன்யா! புள்ளதாச்சு பொண்ணு ஆசையா கேட்கிறேன். கொஞ்சம் சொறிஞ்சு விட்டா தான் என்னவாம்?”​

ஸ்ட்ரெச் மார்க் விழுந்த அவள் உப்பிய வயிற்றை, நைட் லாம்பின் வழியாகப் பார்த்தவன், சாத்விகாவை முறைத்துக் கொண்டே லோஷனை வயிற்றில் தடவி விட்டு,​

“ஏன்டி.. நீ அடங்கவே மாட்டியா? வர, வர உனக்கு கொழுப்பும், திமிரும் கூடிக்கிட்டே போகுது. உன்னை யார்டி வயிற்றச் சொறியச் சொன்னது? பாரு.. திட்டு திட்டா சிவந்து இருக்கு. நான் வந்தே தடவி கொடுத்து இருப்பேன்ல, அப்படி என்ன அவசரம்?”​

“யாரோ ஒருத்தர் உன் கண்ணுல கெத்து, கண்ணுல கெத்துன்னு சொல்லிக்கிட்டே தலை குப்புற விழுந்தாறாம். அவரை பார்த்தீர்களா நீங்க? ஏன்னா.. இப்போ அந்த கெத்து திமிரா தெரியுதாம்!”​

அவன் பட்டென்று குனிந்து, அவள் கன்னத்தில் வலிக்கக் கடிக்க,​

“ஸ்ஆஆ.. வலிக்குது புருஷ்!”​

“வலிக்க தான்டி இம்சை கடிச்சேன்!”​

“ஒரு லவ்வர் பாய், பொண்டாட்டிய இப்படித்தான் திட்டுவாங்களா?”​

அதில் அவன் முறைப்பு அதிகமாகி,​

“ஹம்.. நான் ஆன்டி ஹீரோ!”​

“ப்ச்.. இப்போ எதுக்கு புருஷ் முறைப்பு?”​

“முறைக்காம என்ன பண்ணுவாங்க? ஒரு மனுஷன் எத்தனை முறைடி போய் குளிப்பான்?”​

“ஏங்க, இப்படி தான் சத்தமா சொல்றதா? யாராவது கேட்டா என்ன நினைப்பாங்க?”​

“ஆமா, வரவங்க போறவங்க எல்லாம் நம்ம ரூம் வாசல்ல தான் காத வைச்சுகிட்டு இருக்காங்க பாரு.”​

“ம்ச்.. நான் என்ன பண்றது? எத்தனை முறை சொல்லி இருக்கேன் என் பக்கத்துல வரும்போது பெர்ஃப்யும் போட்டுட்டு வராதீங்கன்னு...”​

நுனி மூக்கு சிவக்க அவளை முறைத்துப் பார்த்தவன்,​

“அதுக்குன்னு குளித்தவனை மறுபடி குளிக்க வைப்பியா. அப்படி என்னடி மோசமான பெர்ஃப்யூம் போட்டுட்டேன். நேத்து போலோ(Polo) யூஸ் பண்ணப்போ இதே வேலையைத் தான் செய்த, சோ இன்னைக்கு சீகே(calvin kevin) யூஸ் பண்ணேன் இன்னைக்கும் இப்படி பண்ணிட்ட”​

“நாளைக்கும் இதைவிட நல்ல பிரண்டா நீங்க யூஸ் பண்ணாலும், இப்படி தாங்க பண்ணுவேன்.”​

கடுப்பான பார்வையோடு,​

“ஏன்..டி நீ இப்படி பண்ணிக்கிட்டு இருக்க?”​

அவன் பிடரி முடி தொட்ட கழுத்து வளைவில் மூக்கை நுழைத்தவள், அவன் மேனி வாசத்தை ஆழ்ந்து சுவாசித்துக் கொண்டு,​

“இதோ, இதுக்கு தான்..”​

மீண்டும் அங்கேயே மூக்கை இரு புறமும் புரட்டியவள்,​

“ஹெவன்! இந்த ஃபீல் தான் வேணும். அதுவே பெர்ஃப்யூம் போட்டா, இந்த ஃபீல் கிடைச்சுருமா என்ன?”​

அவளைப் புருவம் சுருக்கிப் பார்க்க,​

“எனக்கு உங்களோட நேச்சுரல் வாசனையை ஸ்மெல் பண்ணனும். இப்படி பர்ஃபியூம் ஸ்மெல் இல்ல. நீங்க பெர்ஃப்யூம் போட்டா உங்களோட ரியல் வாசனை எனக்கு தெரியிறது இல்லங்க. எனக்கு உங்க வாசனை வேணும்னு தோனுச்சு. நம்மோட ஒவ்வொரு இரவும், ஒவ்வொரு ஊடலும், கூடலும் உங்களோட அந்த உண்மையான ஆண் வாசத்தோடு மட்டும் தான் இருக்கணும். அதுல கூட எனக்கு இந்த போலி வேணாம்.”​

அவளை அப்படியே இறுக்கி அணைத்து விடுவித்தவன்,​

“இப்படி எல்லாம் அன்பைக் காட்டாதடி ரொம்ப பயமா இருக்கு. கெட்டியா பிடிச்சுக்கோ! விட்ராதனு மனசு அடிச்சுக்குது! பார்த்து நடடா, அவ உன் மேல வைச்ச அன்பையும், நம்பிக்கையையும் உடைச்சுர்ற மாதிரி எதையும் செஞ்சுறாதன்னு, மூளை அப்பப்ப குத்திக்கிட்டே இருக்கு.”​

அவள் அவனை ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருக்க,​

“என்ன பார்வைடி?”​

“உங்களை ஆழமா பார்த்துகிட்டே இருக்கனும்னு தோனுது புருஷ். என்னன்னு தெரியல, ரொம்ப அழகா இருக்கீங்க.”​

தன் தாடியை வருடிக் கொடுத்தான்,​

“எது இந்த கோலம் அழகா? நான் வேணுனா தாடி மீசையை கம்மி பண்ணிக்கட்டுமா?”​

“நோ!” அழுத்தமாக மறுத்தவள்...​

“அப்படி மட்டும் நீங்க பண்ணவே கூடாது.”​

அவள் மென் விரல்கள் பிடரி முடிக்குள் நுழைந்து சுகமாக வருட, கண் சொக்கி அரை விழியோடு அவளைப் பார்த்தான். அதில் மேலும் வருட.​

“வாவ்! இதான்டி ஹெவன். உன்னோட நக நுனி கூட மேஜிக் பண்ணுது.”​

“அதெல்லாம் ஒரு மேஜிக்கும் இல்ல. உங்களுக்காக ஏங்குற என் மனசும், எனக்காக ஏங்குற உங்க மனசும் தான் காரணம்.”​

சர்வேஷ் சிரித்துக் கொண்டே,​

“சரி, விஷயத்துக்கு வா. ஏன் ஷேவ் பண்ண வேணாம்?”​

“ஏன்னா எனக்கு இதோ இந்த ராவணனைத் தான் பிடிச்சிருக்கு. தாடி மீசையோடு அதுவும் முடியெல்லாம் சேர்த்து போடுவீங்களே ஒரு ஹேர் ஸ்டைல்! எவ்வளவு அழகா இருக்கும் தெரியுமா?”​

“ம்ச்! உனக்கு மட்டும் தான் உன் புருஷன் அழகாத் தெரியுறான். மத்தவங்களுக்கு காட்டான் லுக்ல தான் இருக்கேன்.”​

“நீங்க யாருக்கு எப்படி தெரிஞ்சா எனக்கு என்ன? எனக்காக இப்படியே மாறாம இருங்க.”​

அவள் நெற்றியில் தன் நெற்றியை வைத்து முட்டி முத்தமிட, அதில் சாத்விகாவோ..​

“உண்மைக்குமே, ஏன் இந்த தோற்றம் பிடிச்சிருக்கு தெரியுமா?”​

“ஹூம்..” அவன் மறுப்பாக தலையசைக்க.​

“எந்த தோற்றத்தை பார்த்து நான் ராவணன்னு சொன்னேனோ, அதே தோற்றம். நான் எந்த தோற்றத்தைப் பார்த்து அருகில் வரத் தயங்கினேனோ, அதே தோற்றம். அந்த தயக்கமே என்னை அருகில் வந்து தொட்டுப் பார்க்கத் தூண்டிய தோற்றம். அரக்கன்னு, கர்வின்னு, திமிர் பிடித்தவன்னு, ஈகோ பிடிச்சவன்னு என்னை உங்களுக்கு எதிராக நிமிர வைத்த தோற்றம்.​

இவன் கர்வம் உன்னோட திமிர். இவன் அகங்காரம் உன்னோட நிமிர்வு. இவன் ஆணவம் உன்னோட ஆளுமைன்னு புரிய வச்ச இந்த தோற்றம். அப்படிப்பட்ட இந்த தோற்றம் தான் அப்படியே மாறாமல் எனக்கு வேணும். சொல்லுங்க நீங்க சொன்ன இந்த காட்டான் தோற்றம், எனக்கு பிடிக்காமல் போகுமா என்ன?”​

தன் மனைவி பேசக் கேட்ட சர்வேஷ் எனும் ஆறடி ஆண் மகன் கூசிச் சிலிர்த்தான், மெய் மறந்தான், பரவசமடைந்தான், மௌனியானான்.​

“புருஷ்! இது எப்பேர்ப்பட்ட தோற்றம்னு இப்போ புரியுதா? ரொம்ப பிடிச்சிருக்கு, எனக்கு நீங்க இப்படியே இருக்கணும். நம்ம குழந்தைகளுக்காக வேணும்னா, அதுவும் அவங்க இந்த தாடி மீசையை கம்மி பண்ணிக்கச் சொன்னா, கொஞ்சமே, கொஞ்சம் அவங்களுக்காக பண்ணிக்கலாம்.” என்று பெரிய மனது பண்ணினாள்.​

அதில் சர்வேஷ், “பிடிவாதக்காரிடி நீ?”​

அவன் வஞ்சகப் புகழ்ச்சியில்,​

“யாரு பிடிவாதம், உங்களை விடவுமா? ரெண்டு பெண் குழந்தைங்க வேணும்னு பிடிவாதம் பிடிச்சு சாதிச்சுக்கிட்டவர், என்னை பிடிவாதம்கிறார்!” என்றவள் பெருமையாக தன் வயிற்றை வருடிக் கொடுத்தாள்.​

ஆறு மாத உப்பிய வயிற்றுக்குள், இரண்டு பெண் சிசுகள் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தன.​

“ஹம்.. நான் ஒரு வரம் கேட்டேன், கடவுள் ரெண்டு வரம் தந்துட்டாரு.”​

என்றவன் அவள் வயிற்றை வருடிக் கொண்டே மேலும் முன்னேற..​

சாத்விக்கோ தன்னிடம் அந்தரங்கம் பேசிய கணவனின் கரங்களின் பாஷை புரியாதா என்ன? இசைந்து கொடுத்தாள்.​

இசைந்தவளை அசைய விடையாது பெண்ணுடல் நோகாது, கீற்று காயமும் படாது கையாண்டான். முத்தங்கள் அதிகம் பேசின, அந்த முத்தங்கள் இருவரையும் சுழட்டிக் கொண்டன. தாய்மையில் சிலிர்த்து, சிவந்த அவள் தாராள சொத்துக்களில் களவாடும் திருடனாகி அவளில் முத்துக்குளித்தான். ரசித்து, ருசித்து அவளை பருகியவன், தன்னவளை கையணைப்பில் வைத்துக் கொண்டவன், இந்த வாழ்க்கையே சொர்க்கம் என்று எண்ணினான்.​

அப்போது லேசாய் மூச்சு வாங்கிக் கொண்டே,​

“என்ன புருஷ், அமைதியா இருக்கீங்க?”​

“ஏன்டி இப்படி மூச்சு வாங்குது?”​

“பின்ன ஒன்னுக்கு ரெண்டு குட்டிஸ் இருக்காங்களே. உங்களோட சேட்டையை உடம்பு தாங்குமா என்ன?”​

“சாரிடி நான்..”​

சர்வேஷ் தொடங்கவே அவன் வாயில் கையை வைத்து,​

“என்னோட புருஷ்க்கு வலிக்க வைக்க தெரியும். அதுவும் சுக வலி தானே ஒழிய காட்டுமிராண்டித்தனமா காயங்களை கொடுத்து வலிக்க வைக்கத் தெரியாது!”​

அவள் அறியவில்லை, இந்த எண்ணத்தை அவன் நாளையே மாற்றப் போவதை.​

சர்வாவோ மௌனமாகச் சிரித்து,​

“நாளைக்கு ஒரு ப்ளஸண்ட் டே. என் பொண்டாட்டிக்கு வளைகாப்பு. நம்ம வெட்டிங் சிம்பிளா நடந்துருச்சு. ஆனா, நாளைக்கு நம்ம வெட்டிங் டேய கிராண்டா கொண்டாடுறோம்.”​

அவன் குறும்பாகக் கூறவே, அவளும் சிரித்துக் கொண்டே,​

“வெட்டிங் டேய, வளைகாப்பு அன்னைக்கு கொண்டாடுற கப்பல்ஸ் நாமளா தான் இருப்போம்!”​

“பின்ன நம்மோட எல்லா சந்தோஷத்துலையும் நம்ம குழந்தைங்க இல்லாமலா?”​

அவள் விழிகள் தூக்கத்துக்கு கெஞ்சவுமே, தலையை மெதுவாக வருடிக் கொடுத்தவன், இருவருக்கும் சேர்த்து போர்வை போர்த்திக் கொண்டு,​

“தூங்குடி! ரொம்ப டயர்டா இருக்க. நாளைக்கு காலையில எழும்பணும். ஏர்லி மார்னிங் பார்லர்ல இருந்து வருவாங்க மேக்கப் செய்ய. சோ.. நீ ரெடி ஆகும் போது நான் பிஸியா இருப்பேன். உன்னை வந்து பார்க்க டைம் கிடைக்குமான்னு தெரியாது. ஆனால், என்னுடைய இதயம் இந்த மண்டோதரியை சுற்றி தான் இருக்கும்.”​

அவன் பேசிக் கொண்டு இருக்கவுமே சாத்விகா கண்ணயர்ந்து விட்டாள். அதில் பூத்த புன்னகையோடு அவள் நெற்றியில் துருத்தி நின்ற குட்டி மூக்கில், லேசாய் பிளந்த அவள் உதடுகளில் முத்தமிட்டவன் அவளோட கண்ணயர்ந்தான்.​

விடிகாலை 6 மணி..​

“ஜனனி மெதுவா. எதுக்கு இந்த ஓட்டம்?”​

“என்னத்தான் அப்படி கேட்டுட்டீங்க. நல்ல நேரம் முடிய முதல்ல சாத்விய ஹோட்டலுக்கு கூட்டிட்டு போயிறணும்”​

ஆம், சாத்விகாவின் வளைகாப்பு இலங்கையில் மிகப்பெரிய ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நடைபெறுகிறது. இந்த பிரம்மாண்ட திருவிழாவிற்கு உறவினர்கள், அக்கண்யன், ஆத்விகின் தொழில் துறை நண்பர்கள் மட்டுமின்றி, சர்வேஷின் அழைப்பை ஏற்று சில சினிமா பிரபலங்களும், யூஎஃப் சாம்பியன்ஷிப் வீரர்களும், அவனது தொழில் வட்டங்களும் என பிரபலங்களால் களைகட்ட இருக்கிறது. திருமணத்தை சிறப்பாகச் செய்ய எண்ணாதவன், தன் மகவுகளின் வரவை மனைவியோடு சேர்ந்து உலகமே மெச்சக் கொண்டாட முனைந்தான்.​

ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வளைகாப்பு விழாவும், அதைத்தொடர்ந்து பாரம்பரிய மற்றும் மேற்கத்திய முறைப்படி உணவு உபசாரமும் என இன்றைய விழா களைகட்ட இருக்கிறது. அதற்கே ஜனனி இத்தனை பரபரப்பாக இருக்கிறாள்.​

இப்படி பரபரப்பாக நகர்ந்தவள் சேலை தடுக்கி விழப் போகவும், வலுவாக அவளைத் தாங்கிக் கொண்ட அக்கண்யன்,​

“ஜனனி!” உரத்த குரலில் அதட்டவும்,​

“சரி, சரி, சத்தம் போடாதீங்க அத்தான். இப்போ என்ன நான் நிதானமா வேலை செய்யணும் அவ்வளவுதானே!”​

ஒற்றைப் புருவம் தூக்கி, அவளை அக்கண்யன் பார்க்கவும்,​

“அப்பாவுக்கு மாதிரியே தான் மகனுக்கும் இந்த புருவம் தூக்குற பழக்கம் மட்டும் விடவே மாட்டேங்குது. என்னோட 24 வயசுல எப்படியாப்பட்ட மௌன சாமியாரை பார்த்தேனோ அந்த மௌன சாமியார் இன்னும் தவத்த கலைக்கல்லை!”​

வசீகர சிரிப்போடு அவளை நெருங்கியவன்,​

“அந்த சாமியாரோட தவம் கலைஞ்சு பல வருஷம் ஆயிருச்சுன்னு, அவன் பொண்டாட்டிக்கு தெரியல போலவே!”​

கணவனுக்கு இணையான மலர்ந்த சிரிப்போடு,​

“ஜனனிக்கு தெரியாம அக்கண்யனுக்கு ஒரு ஜனனமா?”​

அவள் பேச்சில் துளிர்த்து நின்ற கர்வத்தில் தன் மீசையை முறுக்கியவன்,​

 

admin

Administrator
Staff member

“போய் சாத்விகாவ அழைச்சிட்டு வா! சர்வேஷ் ஹோட்டலுக்கு போயிட்டான்”​

இப்படியே இவர்கள் நேரம் செல்ல, ஆரவாரத்தோடு ஹோட்டலுக்கு அழைத்து வரப்பட்டாள், சாத்விகா. அதன் பின் ஒப்பனை கலைஞர்கள் அவளின் நேரத்தை களவாடிச் சென்றனர். சரியாக சுப நேரத்தில் அரக்கு நிற பட்டுடுத்தி, வைரத்தால் அலங்கரிக்கப்பட்டு, நீண்ட ஜடை முழுவதும் கெட்டியான மல்லி பூவே சூடி, மலைக்குன்றை போல் குவிந்த வயிற்றை ஒற்றை கையில் தாங்கிப் பிடித்தவளின் மற்றக் கையை ஜனனி தாங்க, மறுபுறம் ராகவி தாங்க அன்ன நடையிட்டு மேடைக்கு வந்தவள், அனைவருக்கும் பொதுவாக வணக்கம் வைத்து அமர்ந்து கொண்டாள்.​

அவள் தூரத்தில் வரும் பொழுதே சர்வேஷ் மனைவியைக் கண்டு கொண்டான்.​

தங்க ஜரிகையில் நெய்யப்பட்ட பட்டோ, உடல் முழுவதும் ஜொலித்த வைரமோ, தலையில் சூடிய மணம் கமழும் மலரோ, தீட்டப்பட்ட அலங்காரமோ எதுவுமே அவள் இதழ்கள் பிரிந்து சிந்திய புன்னகைக்கும், நாணத்தில் சிவந்த கன்னங்களுக்கும், மலர்ந்திருந்த கண்களுக்கும், வெட்க குறுகுறுப்பில் விகசித்திருந்த அவள் முகத்துக்கும் ஈடு இணை இல்லை. அத்தனை கண்ணும் அவள் மீது தான். தன் மனைவி இத்தனை அழகா என்று அந்த கண்களில், அந்த புன்னகையில், பெண்மையின் நளினத்தில், சர்வேஷ் கண்டு கொண்டான்.​

அப்படியே அவனையும் அழைத்து சாத்விகா அருகில் அமர வைத்தனர்.​

காலையில் நெற்றி முத்தத்தோடு தன்னை விட்டு அகன்று சென்றவனை இப்போதுதான் பார்க்கிறாள். வெள்ளையும் அல்லாத ஆஃப் வைட் நிறமும் அல்லாத தங்க நிற பட்டு வேட்டி சட்டையும், மேல் நோக்கி வாரி கழுத்தில் வழிந்த பிடரி முடியும், முறுக்கி விட்ட மீசையும், அவனுக்கு சிரிக்க தெரியும் என காட்டும் இதழ்களை முகத்தோடு மறைக்கும் தாடியும், நெரித்து தடித்த புருவமும், ஒற்றை கையில் வைரக் காப்பு, அடிக்கடி அதை முறுக்கி விடும் அழகும், நெற்றியில் சந்தன கீற்றுமாக, அசரடிக்கும் ஆண்மகனாக தன்னருகே வந்தமர்ந்த கணவனில் இருந்து கண் அகற்றவில்லை சாத்விகா.​

அவள் ஒரு ஆணின் அழகில் மெய்மறந்த முதல் தருணமது. அவன் கண்களின் தேங்கிய கர்வம், மீசையை முறுக்கிய ஆண்மை, நெறித்த புருவத்தில் நிலைத்து நின்ற திமிர், சிந்திய புன்னகையில் ஓர் அடக்கம் என அத்தனை அழகாக இருந்தான். இருவரையும் மனையில் அமர்த்தி சாத்விகாவுக்கு நலங்கு வைத்து முதலில் வேப்பிலை காப்பு அணிவித்து, பின்பு கண்ணாடி காப்பு, அதன் பின்னால் உள்ள சாங்கியங்கள் செய்து ஆரத்தி எடுத்து இனிதே வளைகாப்பு விழாவை ஆரம்பிக்க, அதுவரை அமைதியாக அமர்ந்திருந்தவள், ஒவ்வொருவராக வந்து நலங்கிட்டு கண்ணாடி காப்புடன் வைரமும், தங்கமுமாக வளையல்களை அவள் கையில் நிறைக்கவும்,​

கணவன் புறம் மெதுவாகச் சரிந்தவள்,​

“ராட்சச ராவணா! அள்ளுறீங்க!”​

“என் மண்டோதரி பக்கத்துல இந்த ராவணன் சுமார் தான்.”​

“அப்படி இல்லையே உங்க ட்ரெஸ், ஆட்டிட்டியூட்ல இருக்கும் ஸ்டைல், உங்க பர்சனாலிட்டி எல்லாத்தையும் விட அதிகமா கொஞ்சம் நீட்டிக்கிட்டு நிக்குதே அந்த மூக்கு நுனி அதுகூட சொல்லுதே உங்க அழகை. பிடிச்சிருக்கு, இந்த ராட்சச ராவணனை, தாடி வச்ச என்னோட கேடியை ரொம்ப்ப பிடிச்சிருக்கு.​

அவர் பொண்டாட்டிய பார்க்கும்போது அந்த கண்களில் தோன்றின பிரம்மிப்பு, ஸ்ஸ்ப்பா! அவ்வளவு பிடிச்சிருக்கு!”​

அவள் கண்ணில் ஓர் ஆர்ப்பரிப்பு. குறையாத உற்சாகக் கூச்சலோடு, அவளோ..​

“அடக்கமான அந்த சிரிப்புல இருக்க மென்மையை பிடிச்சிருக்கு. நிமிர்ந்து நிற்கும் இந்த ஆறடி ஆண்மகனோட ஆண்மையின் அழகை ரொம்ப, ரொம்ப பிடிச்சிருக்கு. இதுவரைக்கும் நான் உங்களுக்கு ப்ரொபோஸ் பண்ணுனது இல்ல, புருஷ். பட்.. இப்போ கொஞ்சம் பயமா இருக்கு எங்க என்னோட மேன்லி புருஷனை ப்ரொபோஸ் பண்ணிடுவனோனு...!”​

“அவ்வளவு அகம்!” என்றவன் மீசையை முறுக்க.​

“அவ்வளவு அகம் தான்!” என்றாள். அதே துளி குறையாத திமிரோடு,​

“என் காதல், என்ன அவ்வளவு சீப்பா?”​

“ஓவ்!” அவன் புருவம் தூக்க,​

“பின்ன ஐ லவ் யூங்கிற மூனு வார்த்தையில அடங்கக் கூடியதா, இந்த சாத்விகா சர்வேஷோட லவ்? அந்த மூனு வார்த்தை என் காதலை நிரூபிச்சிருமா என்ன? இல்லைன்னா, அந்த மூனு வார்த்தை தான் என் காதலா? என் காதல் என்ன சர்வ சாதாரணமா? நான் சாத்விகா சர்வேஷ்!”​

அவள் கண்களில் தெரித்த திமிரில்,​

“எனக்கும் பிடிச்சிருக்குடி. முதல் முறை நான் சாத்விகா சர்வேஷ்னு சொன்ன என் பொண்டாட்டியோட உரிமையை. உன்னை விட எனக்கு திமிரு ஜாஸ்திடான்னு சொல்லும் உன் கண்களை. மூனு வார்த்தை என்னோட மூச்சக் கூட தீர்மானிக்காதுன்னு சொல்ற, உன் ஆணவத்தை ரொம்ப பிடிச்சிருக்குடி!”​

“ஹம்.. அது சரி. எல்லாரும் கிஃப்ட் தந்துட்டாங்க. நீங்க ஒன்னுமே தரலையே புருஷ்”​

“நானே..” அவன் ஆரம்பிக்கவும்,​

“உஷ்!” அவனை தடுத்து நிறுத்தியவள்,​

“நானே பெரிய கிஃப்ட், உனக்கு என்னை விட ஒரு கிஃப்ட்டானு மொக்கையா ஆரம்பிக்காதீங்க புருஷ்!”​

அதில் அவன் வாய் விட்டுச் சிரிக்க, கீழே குடும்பம் மட்டுமல்ல வந்திருக்கும் உறவினர்கள், பிரபலங்கள் என தொலைக்காட்சி சேனல்கள் வரை, இந்த அன்யோனியத்தை, காதலை, அவர்கள் முகங்கள் வெளிப்படுத்திய பாவனையை, அந்தச் சிரிப்பை அழகாக உள்வாங்கியது.​

“சிரிக்காதீங்க புருஷ். எங்க என் கிஃப்ட்?”​

“என்னடி அப்படி கேட்கிற? இந்த வளைகாப்புல நீ போட்டு இருக்க அத்தனையும், நான் வாங்கித் தந்த கிஃப்ட் தானே!”​

“மச்.. போயா! பொன்னும், பொருளும் பொண்டாட்டிய சேட்டிஸ்பை பண்ணுங்கிற உங்க ஓல்ட் புருஷன் கான்செப்ட்ட, டிராப் பண்ணா தான் என்னவாம்?”​

அதில் இன்னும் அவன் புன்னகை நீள, மீளாப் புன்னகையோடு,​

“உன்னோட கிஃப்ட் என்னன்னு தெரிஞ்சுக்கணுமா?”​

அவள் ஆர்வமாக அவன் புறம் சற்று அதிகம் சாயவும், இன்னும் அவளை நெருங்கி,​

“வலிக்க வைக்கிறேன். இன்னிக்கு நைட் வலிக்க, வலிக்க வைக்கிறேன்..”​

அதில் வெட்கத்தில் வெந்தாமரை முகம் சிவந்தாள் என்றால், காலம் உடன் சேர்ந்து சிரித்தது.​

இரு ஜோடிக் கண்கள் மட்டும் இந்தக் காட்சியை குரோதத்தோடு நோக்கின.​

அதில் கவிதாவின் மனமோ மகளின் வாழ்க்கையை வாழ்கிறாளே என்று குமைந்தது என்றால்..​

இன்னொரு ஜோடி விழிகளோ, நேரம் வந்து விட்டது என தன்னைத்தானே தேற்றிக்கொண்டு வெளிப்படும் நேரத்தை குறித்துக் கொண்டன.​

அதே நேரம் மேடை நோக்கி எறிய ராகவி,​

“டேய் கொழுந்து!”​

ராகவியை சர்வேஷ் புருவம் சுருக்கிப் பார்க்கவும், நக்கல் சிரிப்போடு,​

“வேறொன்றுமில்லை கொழுந்து உனக்கு கல்யாணம் ஆயிடுச்சாம், குழந்தை பிறக்கப் போகுதாம், நீ பெரிய பையனாம். அதனால உனக்கு மரியாதை கொடுக்கட்டுமாம்!”​

“ஓவ்!” அவன் தாடியைத் தடவவும், ராகவியோ,​

“என்ன.. ஓ! என் புருஷர் ஆடர் போட்டு இருக்காரு. அதனால, தடியால இருந்து கொழுந்துக்கு புரமோட் ஆகலாம்னு நினைக்கிறேன். நீ என்ன நினைக்கிற?”​

“அடிச்சா மூஞ்சி பேந்துக்குமா? இல்ல, ஓங்கி குத்துனா மூஞ்சி பேந்துக்குமானு யோசிக்கிறேன்!”​

அதில் ராகவி அவனை முறைக்க, அவனும் அதே நக்கலோடு,​

“என்ன அமைதியாகிட்டீங்க? ஹம்.. ஓகே சொல்லுங்க. இப்ப எதுக்கு என்னைக் கூப்பிட்டாங்க?”​

“பாரு, உன்னால வந்த விஷயத்தை மறந்துட்டேன். டேய் சும்மா, சும்மா அவளை சிரிக்க வைக்காத!”​

“ஏன்? ஏன்?”​

“ஏன்னா கீழே பாரு. இருக்க ஜனமே உங்கள தான் பார்க்குது. வாயும் வயிறுமா இருக்க பொண்ண, இப்படி மத்தவங்க கண்ணு வைக்கவே கூடாது. ஏதோ இன்னைக்கு நம்ம ஃபங்ஷன்னு பொறுத்துக்கிட்டு இருக்க வேண்டியதா இருக்கு. ரொம்ப சிரிக்க வைக்காத, சிரிக்கும்போது அழகா இருக்கீங்க. எனக்கே பார்த்துகிட்டே இருக்கணும்னு தோனுது.​

அவள் கண்கள் லேசாகக் கலங்கவே, நெகிழ்ந்த சர்வேஷ், அதை முகத்தில் காட்டாது கருவிழிக்குள் மறைத்தவன்..​

“சரி!” என்றான்.​

இப்படி உறவினர்களும் பிரபலங்களும் மேடை வரை வந்து வாழ்த்திவிட்டுப் போக.​

அதே நேரம் அந்த பால் ரூமில் (Ballroom) ஒரு பரபரப்பு. திடீரென வந்திருப்பவர்கள் பரபரப்போடு திரும்புவதும், அருகில் இருப்பவர்களோடு பேசுவதுமாக இருக்க,​

அந்தக் குறுகுறு சத்தத்தில் மனைவியில் இருந்து மீண்ட அவனின் கண்கள், தந்தையை நோக்கித் தேட, அக்கண்யனோ இறுகிப் போயிருந்தான்.​

ஆத்விக் முகமோ ரௌத்திரத்தில் சிவந்து போயிருந்தது. அங்கே ஜனனி முகத்தில் மித மிஞ்சிய வேதனை என்றால், வருணும் அரவிந்தனும் உணர்வு தொலைத்த முகத்தோடு இருக்க, கவிதாவின் முகம் மலர்ந்து கனிந்திருந்தது.​

இத்தனையையும் உள்வாங்கிய அவன் மூளைக்குள் ஒரு அதிர்வு, மனமோ வேண்டாத ஒன்றை அறிவுறுத்த அவன் நாசிகளோ ஒவ்வாமையோடு ஒரு மணத்தை சுவாசிக்க தொடங்கவே நிமிர்ந்து பார்த்தவன், ஆண் அகலிகை ஆனான்.​

ஆறடி சிலை, அசைவின்றி நிலை குத்திய பார்வையோடு பார்த்த இடம் மாறாது இருக்க. அவன் உடல் நடுங்கியது, கூசி கூனி குறுகியது. முகம் கன்றியது. இரு விழிகளில் மித மிஞ்சிய அருவருப்பு.​

நீண்ட மாதங்களுக்குப் பிறகு கணவனின் மாற்றத்தைக் கண்டவள், பார்வை அவன் கண்களை பின் தொடர, அங்கே ஒரு அழகிய மங்கை மேடையை நோக்கி வந்து கொண்டிருந்தாள்.​

வெண் பட்டில் அளவான ஆபரணங்கள் போட்டு செதுக்கி வைத்த தங்க சிலையை போல் மேடையை நெருங்கவே,​

அவள் முக வடிவத்தை வருணில் கண்ட சாத்விகா, தன் ஞாபக எண்ணங்களை தட்டிப் பார்த்து அடையாளம் காணவும்,​

அவளோ நொடியில் அவர்களை நெருங்க, சர்வேஷ் எனும் ஆறடி ஆண் மகன் நிலத்தை தோண்டி உள்ளே புதைந்து கொண்டால் என்னவென்று எண்ணினான்.​

கிட்டத்தட்ட ஒரு வருடமாக சர்வேஷை கண்ட நாள் முதல் சாத்விகா பார்த்து செதுக்கிய அவன் உணர்வுகள் கொஞ்சம், கொஞ்சமாக சிதையத் தொடங்கியது. கைப்பிடியில் வைத்திருந்த அவன் இதயம் அவள் கையை விட்டு நழுவும் உணர்வு.​

அவர்களை நெருங்கிய பெண்ணோ,​

கண்களில் வன்மத்தோடு..​

“ஐ அம் சயத்தா!”​

அவள் தொடங்கும் முன்..​

“சயத்தா அரவிந்தன்! அம் ஐ ரைட்?”​

சாத்விகா அழுத்தி முடித்து வைத்தாள்.​

அவள் விழிகள் வெறியோடும், குரல் நக்கலோடும்..​

“ஓ.. நீங்க?”​

“ஐ அம் சாத்விகா சர்வேஷ். என் புருஷன் பக்கத்துல இவ்வளவு உரிமையா ஒட்டி நின்னும் இந்த கேள்வியை கேட்குறீங்களே! ஆச்சரியமா இருக்கு?”​

சாத்விகாவின் கேள்வியில், தொனித்த நக்கலில் சயத்தாவின் முகம் கறுக்க, இங்கே ஒருவன் இறுகிக் கொண்டிருந்தான்.​

சாத்விகோ அவளோடு தைரியமாக வாயாட நினைத்தாலும், அவள் மனமோ கணவனுக்காகத் துடித்தது. இவள் வருகையை கண்ட முதல் இறுகி விறைத்தவன் தோற்றம், அவமானத்தில் கன்றிய முகம், அருவருப்பில் பூத்த விழிகள், அத்தனையும் சாத்விகா எனும் பெண் சிலையைக் கொல்லாமல் கொன்றது.​

‘இவ்வளவு தானா, என் காதலின் ஆழம்? உன்னை செதுக்கி, செதுக்கி சிலையாக்கிய என் காதல், அவளைக் கண்ட நொடி சிதறுகிறதா?’​

சாத்விகாவின் மனம் ஊமையாக அழ, அவள் மனசாட்சியோ,​

‘எதுக்கு இந்த ஒப்பாரி? என்ன நடந்துச்சுன்னு இப்படி அழுகிற?’​

‘என்ன நடக்கணும்?’​

‘நீ என்ன நினைச்சுக்கிட்டு இருக்க? என் காதலோட வெற்றி ஆறடியில என் பக்கத்துல இருக்க மனுஷனும், அவரு கொடுத்து நான் வாழ்கிற பணக்கார வாழ்க்கையும்னு நினைச்சியா? பைத்தியம்!​

இல்லவே இல்ல, இப்போ கூனி குறுகி போயிருக்க மனுஷனோட தலைய, ஒத்த சொல்லால நிமிர்த்தி வச்சேனே! அதுதான் என் காதலோட வெற்றி.​

அருவருப்பில் தன்னிலை இழந்து ரணத்தோட தவிச்ச மனுஷன, அதன் சுவடு தெரியாம இத்தனை மாசமா வச்சிருந்தேனே, அதுதான் என் காதல்.​

உணர்வுக் குவியலாக தவிச்சி, துடிச்சி, செத்துகிட்டு இருந்த இந்த ராவணனோட பிராணனை இறுக்கிப் பிடிச்சு, அவர் உணர்வுகள் சாத்விங்கிற பெண்ணோட சுண்டு விரலில் இருக்குனு, இத்தனை நாள் கர்வமா ஆட்டி வச்சுக்கிட்டு இருந்தேனே! அதுதான் என்னோட காதல்.​

எல்லாம் அவளைப் பார்த்த உடன் படிப்படியா சரியுதே. என் ஸ்பரிசம் போதும்னு சொன்னவர் கையை என் கைகள் உரசியும், அவரோட உரம் ஏறிய விரல்கள் நடுங்குதே! இதை பார்த்து சத்தெல்லாம் வடிந்து போறத உணர்றேனே! இப்படி என் மனசு என்ன பாடுபடும்?’​

அவள் மனசாட்சியோடும், மனதோடும் வாதாட..​

‘ரிலாக்ஸ், ரிலாக்ஸ்’ தன்னையே ஆசுவாசப் படுத்தியவள் கணவன் கையை இறுகப்பற்றி கொண்டாள்.​

அதில் மனைவியை நோக்கியவன் கண்களில் தெரிந்த அருவெருப்பில், வெறுப்பில், அவமானத்தில் அவள் உணர்வுகள் கொஞ்சம் கொஞ்சமாக சோர்ந்து கொண்டிருந்தன. அவன் கையை இறுக அழுத்தியவள்,​

“ரிலாக்ஸ், ரிலாக்ஸ்” என்றாள் அவன் புறம் நெருங்கி மெதுவாக. கண்ணை மூடித் திறந்த தன்னை ஆசுவாசப்படுத்த முயன்றவனுக்கு முடியவில்லை.​

வந்தவளும் அவன் உணர்வுகளுக்கு அமைதியை கொடுக்க விரும்பவில்லை போலும்..​

“நைஸ் டு மீட் யு சர்வேஷ்! ரொம்ப மேன்லியா மாறிட்டீங்களே. முன்ன இருந்ததை விட அழகா அம்சமா இருக்கிறீங்க. இதோட ரகசியம் ஐ திங்க் உங்க பிராப்ளம் எல்லாம் க்யூர் ஆகிருச்சுன்னு நினைக்கிறேன். எனிவே நாம வீட்ல சந்திக்கலாம்!”​

நக்கலான வார்த்தைகளை வீசி அவள் இறங்கிச் செல்லவே, சர்வேஷ்கோ தன் மூர்க்கத்தை அடக்க வழி தெரியவில்லை. இங்கிருக்கும் அத்தனையையும் அடித்து நொறுக்க வேண்டும் என்ற வெறி உடலெல்லாம் கிளம்பியது.​

எதைக் கொண்டாவது தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்வோமா, வலிக்க வைத்துக் கொள்வோமா, தன் உறுப்புகளை ஒவ்வொன்றாக அறுத்தெறிவோமா இப்படி கொதித்துக் குமுறி தன்னையே வெறுத்துக் கொண்டிருந்தான்.​

அவன் காதுகளில் கேட்ட அவள் நக்கல் குரலில் ‘இன்னுமா நீ வாழ்கிற?’ என்று அவன் மனம் அவனையே எள்ளி நகையாடியது.​

வந்திருக்கும் உறவினர்கள் கருதி, சுற்றம் கருதி, ஒரு முறை தொலைந்த அவன் கௌரவம் மறுமுறை தொலைந்து விடக்கூடாது என்ற வைராக்கியம் கருதி, இதையெல்லாம் விட தன்னருகே விழிகளில் துடிப்பை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் அவன் உயிரானவளின் காதல் உள்ளம் கருதி, வெகுவாக அமைதி காத்தான். முதல் முறை, அவன் வாழ்வில் முடியாத ஒன்றான பொறுமையை, சாத்விகா என்னும் அவன் தேவதைக்காகச் செய்ய முனைந்தான்.​

ஆனால் நேர்மாறாக ஆத்விக் எனும் அமைதியான ஆறடி மனிதனுக்குள், பூகம்பம் வெடிக்கத் தொடங்கியது. தந்தையை அவன் அழுத்தமாக ஒரு பார்வை பார்க்க, அக்கண்யனோ வேதனையோடு காண, அதை விட வேதனையை தன் நண்பனின் முகத்தில் கண்டவன், அவனுக்காக வருந்தச் செய்தான்.​

அதில் மிக அழுத்தமாக தலையை ஆட்டிய ஆத்வீக்...​

“டாட்! இனியும் உங்க ப்ரண்டுக்காக நீங்க பொறுமையா இருக்கத்தான் போறீங்களா? நீங்க இருங்க, என்னால முடியாது. நான் அவ்வளவு சொல்லியும் என்ன தைரியம் இருந்தா, அவ இந்த சிலோன்ல கால் எடுத்து வைப்பா. அவளோட முடிவு என் கையில தான்!”​

“ஆத்விக் அமைதியாக இரு. உன்னோட லைஃப் மட்டும் இல்ல. சாத்வி சர்வேஷோட லைஃப்ம் இதுல இருக்கு. சோ.. உன்னோட கோபத்தை கொஞ்சம் குறை!”​

“அத்து.. ரிலாக்ஸா இருங்களேன்.”​

மனைவியின் வேதனையான விழிகளை அழுத்தமாகப் பார்த்தவன்,​

“நடந்ததெல்லாம் மறந்து போச்சா ராகவி? என்ன தங்கச்சியை கண்ட பாசமோ? திரும்பி வந்த உன் தங்கச்சி, திமிரா இங்கே வந்தது உனக்கு பெருசு இல்ல? ஆனா.. நான் அவளை ஏதாவது செஞ்சுருவேன்கிறது பெருசா இருக்கா? அந்த அளவுக்கு தங்கச்சி பாசம் நெஞ்ச முட்டுதோ?”​

அவன் கடுமையோடு கொஞ்சம் வன்மத்தையும் கலந்து கேட்க, அதில் துடித்த அவளோ,​

“நீங்க என்னை அப்படி சொல்லலாமா, அத்து? நான் அப்படி நினைக்கக் கூடியவளா? நீங்க நான் இல்லையா? நான் நீங்க இல்லையா?”​

அதிக அழுத்தமான பார்வையோடு,​

“இனியும் அவன அரக்கனா மாத்த என்னால முடியாது, ராகவி. அப்படி ஒன்னு நடக்கும்னு தெரிஞ்சா, அதை தடுக்க சர்வேஷோட அண்ணன் இந்த ஆத்விக் அக்கண்யன், என்ன வேணும்னாலும் செய்வான்!”​

அங்கே மகனுக்கு இணையாக சிலையாக மாறிய ஜனனியை, பிடித்துத் தாங்கிய அக்கண்யன், ஆத்விக்கை முடிந்த அளவு சாந்தப்படுத்த முனையும் போதே,​

சயத்தாவோ கவிதாவின் முன் வந்து...​

“என்னை மறந்துட்டீங்களே அம்மா. எப்படி என்னை விட மனசு வந்துச்சு? நான் தான் அம்மா வேணும்னு தேடி வந்து இருக்கேன். என்னோட அம்மாக்கு, இந்த பொண்ணு வேணும்னு தேடி வரத் தோனலையே!”​

“சாயா!” என்ற கதறலோடு சயத்தாவை கட்டிக் கொண்டு கண்ணீர் வடிக்க, அவளும் தாயை தாங்கிக் கொண்டாள்.​

ஆனால் அரவிந்தனும் வருணும் அருகில் செல்ல முயலவில்லை. அதேநேரம் இந்த விழா, அதன் மகிழ்வு குலைந்து விடக்கூடாது என்பதில், அத்தனை பேரும் கவனமாக இருந்தனர்.​

வந்திருந்த உறவுகளுக்கு இது அவலாக மாறியது என்பதும் உண்மைதான். வந்தவர்கள் அத்தனை பேரும் வயிறார உண்டனர், மனதார மகிழ்ந்தனர். ஆனால் சயத்தாவை கண்டவுடன் அவர்கள் பழையவையை நினைத்து தூஷிக்கவும் தயங்கவில்லை.​

அக்கண்யனின் குடும்பத்திற்கு சர்வேஷின் இறுகிய தோற்றம், மணமேடையில் கலங்கிய சாத்விகா, இருவரையும் கண் கொண்டு பார்க்க முடியவில்லை. அத்தனை வேதனைப்பட்டனர்.​

ஆரவாரத்துக்கும் அவச் சொற்களுக்கும் மத்தியில், விழா இனிதே நடைபெற்று முடிய, குடும்பங்கள் அவரவர்கள் இல்லத்திற்குப் போய்ச் சேர்ந்தார்கள். அங்கே அரவிந்தன் வீட்டிலோ பூகம்பமே வெடித்து விட்டது.​

 

admin

Administrator
Staff member

அரவிந்தன் சயத்தாவை உள்ளே அனுமதிக்கவே இல்லை. கணவனின் சொல்லுக்கு அமைதியாகும் கவிதா, அன்றோ மகளுக்காக பேயாக மாறி விட்டாள். இதனால் கணவனின் அன்பின் தகுதிகளை இழந்து கொண்டிருப்பதை அவள் அறியவில்லை.​

“முடிவா, என்ன சொல்றீங்க அர்வி?”​

“அவ இந்த வீட்டுக்குள்ள வரக்கூடாதுன்னு முடிவா சொல்றேன்!”​

“ஏன் வரக்கூடாது? ஏன் வரக்கூடாதுனு கேட்கிறேன்?”​

“மனசாட்சி இல்லையாடி உனக்கு? இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லனா, விருப்பம் இல்லைன்னு எங்கிட்டயோ சர்வேஷ் கிட்டயோ சொல்லி இருக்கணும். அதை விட்டுட்டு கல்யாணம் பண்ணி, ஆறு மாசம் அவனோட வாழ்ந்துட்டு இன்னும் குழந்தை பெத்துக்க முடியல, என் புருஷனுக்கு குழந்தை கொடுக்க தகுதி இல்லை, இன்னொரு ஆம்பளையோட தொடர்பு வச்சிருக்காருனு வாய் கூசாம பிரஸ்மீட் கூட்டி சொல்லி டிவோஸ் வாங்கிட்டுப் போனாளே, அப்ப எங்க போச்சு உன்னோட நியாய தர்மம்?​

நீ ஒரு நல்ல தாயாக இருந்தா, அப்பவே இவளை திருத்தி இருப்ப. ஆனா.. நீ என்ன செஞ்ச? அவளுக்கு இந்த மேரேஜ்ல விருப்பம் இல்லன்னு தெரிஞ்சும், கத்தி முனையில அவனுக்கு கட்டி வச்ச.​

சர்வேஷ்! அவனோட உயரத்தை கொஞ்சம் நினைச்சுப் பார்த்தியா? கோபுரத்தில் இருப்பவன் மேல, இந்த எச்சில் இலை விழுந்தது எவ்வளவு அசிங்கமா போச்சு.​

மூனு வருஷம் என்னோட அகிய அவன் பார்க்கவே இல்லை. ஜனனிய அம்மானு கூப்பிடவே இல்லை. எப்படி, எப்படி எல்லாம் வாழ்ந்தான் தெரியுமா? இன்னைக்கு தான், அவனுக்காக வாழ நினைத்து இருக்கான். அது கூட உனக்கும் உன் பொண்ணுக்கும் பொறுக்கலையா? இவ விஷச் செடி. என் வீட்டை கருவறுக்க வந்த கோடரிக் காம்பு. இந்த வீட்டுக்குள்ள வரக்கூடாது!”​

“அப்பா ப்ளீஸ்.. அமைதியா இருங்க.”​

“என்ன வருண்? உன் தங்கச்சி மேல பாசம் பொத்துக்கிட்டு வருதோ? உன்னை மச்சானு கூப்பிட்டு கேலி கிண்டலோடு இருந்தவன், மூனு வருஷமா மனுசனாவாது மதிச்சு இருக்கானா? இதை நினைத்து நீ எவ்வளவு வருந்தியிருப்ப. அவனை நீ பாஸ்ன்னு கூப்பிடுற ஒவ்வொரு முறையும், நீ எவ்வளவு துடித்து இருப்ப. இதெல்லாம் யாரால இந்த நாயால. இவ, இந்த வீட்டுக்குள்ள வரக் கூடாது!”​

அதில் தோன்றிய ஆங்காரத்தோடு கவிதாவோ,​

“உங்களுக்கு உங்க பிரண்டும் அவர் குடும்பமும் அவ்வளவு முக்கியமா?”​

“ஆமா இன்னைக்கு நானும் நீயும் வாழ்ற இந்த பணக்கார வாழ்க்கை, அவன் போட்டதுனு மறந்துட்டியா?”​

அதில் முகம் கன்றியவள்,​

“முடிவா என்ன சொல்றீங்க?”​

“உன் பொண்ணு இந்த வீட்டுக்குள்ள வரக் கூடாது”​

“அப்போ.. என் முடிவை கேட்டுக்கோங்க. நீங்க கட்டுன தாலியக் கழட்டி உங்க கையில குடுத்துட்டு, என் பொண்ணோட நான் போயிடுவேன். உங்களுக்கு என் பொண்ணு வேணாம்னா, எனக்கு நீங்களும் வேணாம்!”​

அவள் ஆணவமும், அகங்காரமும் சேர்ந்து தன்னிலை இழந்து வார்த்தையை விட்டு விட, அரவிந்தன் உள்ளுக்குள் செத்து விட்டான். ஒற்றை வார்த்தையில் இத்தனை நாள் அவன் கொண்ட காதல், திருமண வாழ்வு, தாம்பத்தியம் எல்லாமே பொய்த்து விட்டது. முகம் கறுத்து வெறித்து நோக்கியவன், அதன் பின் ஒரு வார்த்தை பேசினான் இல்லை.​

“வருண்.. அவளோட உங்க அம்மாவ உள்ள போகச் சொல்லு”​

அந்த வீட்டில் இருக்கும் கெஸ்ட் ரூமுக்குள் போய் தஞ்சம் புகுந்து கொண்டான். மகிழ்வோடு மகளை உள்ளே அழைத்த கவிதா, சீராட்டத் தொடங்கி விட்டாள்.​

கணவன் தானே என்று, அவள் அஜாக்கிரதையில் இத்தனை நாள் காத்த நேசத்தை தொலைத்து விட்டாள்.​

இங்கு அக்கண்யன் இல்லத்திலோ..​

மணி இரவு 7ஐ நெருங்கிய போதும், அன்றைக்கு மழையுடன் கூடிய காலநிலை காரணமாகவோ என்னவோ, மார்கழி குளிரில் அகண்ட ஜன்னலின் வழியே சாரலையும், லேசான வாடைக் காற்றையும் தன் குட்டி நாசி வழியாக சுவாசப்பைகளில் இறக்கிய சாத்விகா, சிசுக்களை சுமந்த வயிற்றினுள் நிரப்பினாள்.​

அந்த இயற்கை அன்னையின் இதம் கூட, பெண்மகள் நெஞ்சில் எரியும் வேதனைத் தீயை அணைக்க வழி செய்யவில்லை. வடுக்களை வரம் வாங்கிப் பிறக்கவில்லை. ஆனால் பல வலிகளை அந்த பிரம்மன் அவள் வாழ்க்கையில் விதைத்துவிட்டான் போலும்.​

விழிநீர் கசிய ஜன்னலின் இரும்புக் கம்பியை ஒரு கரம் பிடிக்க, மறு கரம் தன் பிள்ளை சுமந்த வயிற்றை இதமாய் வருடியது. அக்கணம் தோள் மீது விழுந்த கரத்தின் ஸ்பரிசத்தில் வந்திருப்பது யார் என்பதை அறிந்தவள், தன் அழுத முகத்தை காட்ட விரும்பாது, விரைவாக தன் ஒரு கையால் முகத்தை துடைத்துக் கொண்டு திரும்பினாள்.​

“சாதுமா! இங்கே என்னடா பண்ற? எங்களோடு வந்து கீழே இருக்கலாமே. சாப்பிட்டதும் ரூம்ல இருந்தா எப்படிடா?”​

இன்றைய நாள் கொடுத்த அதிர்வுகளில் களைத்துப் போயிருந்த தன் மருமகளின் தலையைக் கோதிக் கொடுத்தாள், ஜனனி. என்ன தான் தன்னை உள்ளுக்குள் கட்டுப்படுத்திக் கொண்டாலும், என்றுமே தன்னிடம் நிகரில்லா அன்பை வெளிப்படுத்தும் ஜனனியை நிமிர்ந்து பார்த்தவள், சிறிய கேவலோடு அவளை அணைத்துக் கொண்டாள்.​

மருமகள் வேதனையை அறிந்து தானே ஜனனி மேலே வந்தது. நன்கு அறிவாள் இன்றைய நாள் தன் அன்பு புத்திரனால், தீராத வலியை சற்றே அதிகமாகவே பெற்றுக் கொண்டுவிட்டாள் என்று.​

யாருக்கு இந்த நாள் நல்லதாக அமைந்தாலும், தன் வீட்டு குலதெய்வத்திற்கு இந்த நாள் பெரும் வலியை தரப் போவதை அறிந்ததாலே தான், வளைகாப்பு விழா முடிந்து வந்ததிலிருந்து மருமகளை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொண்டாள்.​

நொடிக்கொருதரம் அவளை உண்ண வைப்பதும், ஏதாவது அருந்த வைப்பதுமாக மருமகள் கூடவே சுற்றிக் கொண்டிருக்கிறாள். இதற்கு பின்வரும் அதிர்வுகளைத் தாங்க, அவள் உள்ளத்தில் வலு இருக்க வேண்டும்.​

“என்ன ஜனனிமா, என்னையே பார்த்துக்கிட்டு இருக்கிறீங்க?”​

அவளை நோக்கி மெல்லிய புன்னகை புரிந்த ஜனனி,​

“ஒன்னும் இல்லடா, சாத்வி. உன் ஜனனிமா ஒன்னு சொன்னா கேட்பியாடா?”​

“சொல்லுங்கமா! என் கிட்ட என்ன தயக்கம்?”​

“ஹம்.. அது கண்ணம்மா! என்ன நடந்தாலும் என்ன வந்தாலும், உன் கூடவே நானும் உன் அகிப்பாவும் இருப்போம். எந்த இடத்திலும் உன் தைரியம் தளரக் கூடாது!”​

ஜனனி மெதுவாக நடந்து சென்று அவளை கட்டிலில் அமரச் செய்தாள். மருமகளை பார்க்கப் பார்க்க ஜனனிக்கு உள்ளமெல்லாம் ரணமாக வலித்தது. இரட்டை உயிர்களை சுமந்து கொண்டு சற்றே அதிக எடையுடன் காணப்பட்ட தன் மருமகளை எண்ணி கவலை கொண்டாள். ஒரு நீண்ட பெருமூச்சுடன்,​

“எப்பவும் நான் உனக்கு சொல்வதுதான். எதையும் தீர ஆராயாமல் முடிவெடுக்கக் கூடாதுடா. அதே சமயம் எந்த பிரச்சனையையும் கையாள நிதானமும், பொறுமையும் ரொம்ப தேவை. உனக்கு எப்பேர்பட்ட பிரச்சனை வந்தாலும், உன் கூடவே நாங்க இருப்போம் புரியுதா?​

அதோட ச..ர்வா, சர்வா குணத்துல அவன் அப்பாவ மாதிரி முன் கோபி, முரடன்டா. உனக்கு தெரியாததா என்ன?”​

சற்றே தயங்கி...​

“நம்பிக்கை, ஒரு நல்ல உறவுக்கு அடித்தளம்டா! அதை அவன் அதிகமாக எதிர்பார்ப்பான்.​

அதைப் போல... அந்த உறவுகள் மேலுள்ள நம்பிக்கை, துரோகத்தை வென்றதா இருக்கணும். காதலில் நம்பிக்கை வரம்டா! இதை மட்டும் என்னைக்கும் மறக்காதே!”​

“உங்க பிள்ளைய சந்தேகப்பட்டு விடுவேன்னு நினைக்கிறீங்களா?” என்றவள் குறுஞ்சிரிப்போடு,​

“ஹம்.. மே பி! உங்க பிள்ளைய வேணும்னா நான் சந்தேகப்படலாம். ஆனால்.. என்னைக்கும் என் ராவணனை சந்தேகப்பட மாட்டேன். இது சந்தேகம் இல்லை, ஜனனிமா! வேதனை. அவருக்குள்ளே ஏதோ ஒன்னு இருக்கு. உங்களுக்கும் எனக்கும் தெரியாத ஒன்னு, ஆனா... அகி அப்பாவுக்கு தெரிஞ்ச ஒன்னு!”​

ஜனனியை அழுத்தமாகப் பார்த்துக் கொண்டே,​

“அந்த ஒன்னு, அவரை பல நாள் நிம்மதியா இருக்க விட்டதில்லை. என் மடியில தான் ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் நிம்மதியா தூங்குனேன்னு சொன்னாரு. அப்படி அவர் தூக்கத்தை பறிச்சு துக்கத்தை கொடுத்த ஏதோ ஒன்னுல இருந்து நான் மீட்டு, அவர் உணர்வுகளை என் ஒத்தப்பிடியில வச்சிருந்தேன் நினைச்சேன். ஆனா... அந்தப் பொண்ணப் பார்த்ததும், எல்லாமே சிதைந்து போயிடுச்சு. அது தான் வலிக்குது.​

ஆனாலும், விட்டுற மாட்டேன். உங்க மகனை அவ்வளவு சீக்கிரம் விட்டுறமாட்டேன்.​

ஏன் அவளை பார்த்ததும் உடைந்து போயிட்டீங்கனு கேட்டு அவரை ஒரு பிடி, பிடிக்கலைன்னா, நான் என்ன சர்வேஷ் பொண்டாட்டி?”​

அவள் இரு விழிகளும் நிறைந்து வழிந்தது. அதேநேரம் மருமகள் வார்த்தையின் பிரம்மிப்பில் இருந்து மீண்ட ஜனனி, அவளை இழுத்து அணைத்துக் கொண்டாள்.​

“அன்னைக்கு சொன்னது தான். இது போதும்டா. இது ஒன்னு போதும். என் புள்ள வாழ்றதுக்கு சாட்சியா இந்த அன்பு போதும். அவனை வாழ வச்சுட்ட சாத்விமா. நீ சொன்ன மாதிரியே அவனை விடாத!”​

மருமகள் கன்னத்தை வழித்து முத்தமிட்டு விட்டு, விழிகளை துடைத்துக் கொண்டு கீழே போனாள். என்னதான் சாத்விகா தைரியமாகப் பேசினாலும் உள்ளம் வெதும்பியது. என்னை மறந்து போனாயா? என் நேசத்தை துறக்கத் துணிந்தாயா? அவள் இதயத்தின் ஓலம் அவனை சென்றடையவில்லை போலும்.​

சரியாக நேரம் 12ஐ கடந்தும், அந்த வீட்டில் இருந்த யாருக்கும் துளி துக்கம் இல்லை.​

“நீங்க உள்ள போய் படுங்க. சர்வா வந்தா நான் பாத்துக்கிறேன்.”​

“என்னத்த பார்ப்ப ஆதுமா? வளைகாப்பு முடிஞ்சு அவன் பொண்டாட்டிய பத்திரமா கொண்டு வந்து நம்ம கைல கொடுத்துட்டு போனவன். இன்னும் எங்க போனான்னு தெரியல. அங்க என்னதான் சாத்வி தைரியமாப் பேசினாலும், உடைஞ்சு போயிட்டா! என்னால அவ கதறலை பார்க்க முடியல.”​

“ஜனனி!” அதட்டிய அக்கண்யன்,​

“உன் மகன், கடந்து தான் வரணும். கடந்து வந்தா மட்டும் தான் வாழ்வான். நான் கடந்து வரலையா, ஜனனி. அப்படி கடந்து வந்ததால் தான், நீ கிடைச்ச. அவனும் கடந்து வரட்டும் விடு!”​

எனும் போதே இறுகிய இரும்பாக, விறைத்து வில்லாக உணர்வு தொலைத்த முகத்தோடு, எங்கோ தொலைந்து போயிருந்ததாக எண்ணிய அந்த அரக்கத் தோற்றத்தோடு உள்ளே வந்தவன், யாரையும் கண்ணெடுத்தும் பார்க்கவில்லை. கண்டாலும் அலட்சியம் செய்தான். நேராக மாடிப்படிகளில் ஏறி தன்னதறைக்குள் நுழைந்தான்.​

அக்கண்யனோ, “அவங்க பிரச்சனையை அவங்க பார்த்துப்பாங்க. அதிலும் சாத்வி மேல் எனக்கு நம்பிக்கை இருக்கு, பார்த்துப்பா!” என்றதோடு விலகிச் செல்ல...​

அறைக்குள் நுழைந்தவன்.. கட்டலில் களைத்து, குறுகிப் போய் படுத்திருந்த மனைவியைப் பார்த்தான். லேசாக மடித்த இரு முழங்கால்களுக்கு நடுவே புடைத்த வயிறு, கண்வழியே வடிந்த கண்ணீர், கன்னத்தில் படிந்து காய்ந்து போய் இருந்த கண்ணீர் துளிகளின் தடம், என கலைந்த ஓவியமாக சயனித்து இருப்பவளை வெறித்துப் பார்த்தவன்,​

தன் ஆடைகளை பட்டென்று களைந்து விட்டு, அறையை இருளாக்கினான்.​

கணவனின் வாசத்தை மிக அருகில் தன் நாசிக்குள் மிக ஆழமாக அவள் உணரும் முன்பே, அவளை இறுக்கமாக கட்டி அணைத்தவன், கழுத்து வளைவில் முகம் புதைத்து, அவள் வாசத்தை ஆழ்ந்து சுவாசித்துக் கொண்டே, அவள் ஆடைகளை வன்மையாகக் கலைக்க தொடங்கினான். கலைத்த வேகத்தில் அவள் அங்கங்களில் அவன் விரல்கள் அழுத்தமாக பதியவே,​

“உஷ்.. புருஷ்! என்ன பண்றீங்க?” அவள் அரண்டு அதிர்ந்து கணவனைத் தடுக்க முனையவும், அவள் கழுத்து வளைவில் வன்மையாக மூக்கைப் புதைத்தவன்,​

“வேணும்..”​

“புருஷ்! என்ன பண்றீங்க. என்ன வேணும்? என்னால இந்த நிலைமையில் உங்களோட மல்லு கட்ட முடியல. ஏன் இப்படி திடீர்னு காட்டான் போல நடந்துக்கிறீங்க?”​

“ப்ளீஸ்டி! அரக்கனா மாறி தவிக்கிறேன். என் உணர்வுகளுக்கு இன்னைக்கு ஒரு நாள் நீ வலி நிறைந்த மருந்தாக மாறிடேன். தாங்கிக்க முடியல, சாத்வி. உன்னோட ப்ரசன்ஸ் எனக்கு வேணும். மென்மையா இல்ல, வன்மையா. அந்த வன்மை என்னை சுத்தியே இருக்கணும். அந்த வன்மை என் மேல படிஞ்ச வன்மங்களை மறைக்கணும்.​

முடியலடி! உன்னை விட்டுட்டு தூரம் போய்ப் பார்த்தேன். என்னோட அசிங்கம் அதிகமா துரத்துனுச்சு. நரம்பு புடைக்க கத்திப் பார்த்தேன், அப்பவும் கொதிக்கும் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியல. என்னோட மனசு சொல்லுச்சு, உன்னை தேடிப் போனு. அதுதான் வந்துட்டேன். தாங்கிக்கோ! என்னை வன்மையாக தாங்கிக்கோ!”​

அவளில் தன் ஆளுமையை வன்மையாக செலுத்த,​

“ஸ்ஆஆ.. வலிக்குது! மெதுவா...”​

“எனக்கும் வலிக்கணும். நிறைய காயங்கள் வேணும். அந்த காயத்துல இரத்தம் வரணும். அந்த ரத்தம், நீ தரப் போகும் வலி எல்லாம், உன்னை மட்டுமே ஞாபகப்படுத்திக்கிட்டே இருக்கணும். வேற எதுவுமே எனக்கு தோனக்கூடாது. அப்படி என்னை சுயம் இழக்க வை. உன்னை மட்டுமே நினைக்க வை. இதோ நடுங்குற இந்தக் கையோட நடுக்கத்தை நிறுத்து.​

எனக்குள் முழித்திருக்கும் அரக்கனை நான் விரும்பலை மண்டோதரி, உன்னோட ராவணனை உணரனும்னு நினைக்கிறேன். உணரவை.​

மூர்க்கத்துல் சிலிர்த்திருக்கும் நான் வேணாம். ஒத்த பார்வையில உனக்குள் அடங்குவனே அந்த நான் வேணும். என்னால் என்னையே ரெசிஸ்ட் பண்ண முடியலை. என்னை எனக்கே தாங்கிக்க முடியலை. என் அருவருப்புகளை சகிக்க முடியலை.​

என்னோட மண்டோதரி என்னை மீட்டு எடுத்துட்டான்னு நினைச்சேன். ஆனா.. நான் அரக்கனாவே தான் இருக்கேன். முடியல சாத்வி..”​

சாத்விகா அதிர்ந்து திகைத்தாள். தாயின் அதிர்வை, வயிற்றில் இருந்த சிசுக்களும் உணர்ந்தது போல் தன் அசைவில் வெளிப்படுத்தின. ஆம்.. அதிர்ச்சி தான். துடிக்கும் தன் உணர்வுகளை தன் விழிகளுக்கு பின் மறைக்கும் கர்வி, தன் வலிகளை அடர்ந்த தாடிக்குள் புதைந்திருக்கும் உதட்டில் மறைத்துக் கொள்ளும் அகங்காரன், கண்ணீர் விட்டால் தன் வைராக்கியம் கரைந்து விடும் என நினைக்கும் ஆணவக்காரனின் கண்ணீர் துளிகள், அவள் கழுத்து வளைவில் விழுந்தது. அந்தத் துளிகளின் ஈரம், சாத்வி என்னும் மென் பூவின் இதயத்தில் குருதி வடியச் செய்தது.​

கணவன் அழுகிறான். அவள் கணவன் அழுகிறான். சர்வேஷ் அக்கண்யன் அழுகிறான். ஈரைந்து வருடங்கள் சுமந்த தாயே, சிறு வயதுக்குப் பின், தன் மகன் அழுது கண்டதில்லை. அப்படிப்பட்டவன் அழுகிறான்.​

பெண்ணை ஏன் பூமாதேவி என்கிறார்கள் என்பதை, முதன் முறை அவள் உணர்ந்த தருணமது. தாங்கியது அவள் மென் இதயம். துடித்தது அவள் பொன்மேனி. தளராமல் துணிந்து நின்றது, அவனுக்கான அவள் உணர்வுகள்.​

அவன் காயங்கள் ஆறுமெனில் தான் காயப்படச் சித்தமானாள். மௌனியானாள். துடிக்கும் உணர்வுகளை மனதுக்குள் புதைக்க முனைந்தாள். இதுவரை அணைக்காத அவள் கரங்கள் எழுந்து கணவனை அணைத்தது, ஆதரவாக முதுகை தடவியது. கூடலில் திளைத்து கண் சொருகி தன்னிலை மறைந்த கூடலைக் கண்ட இருவருக்கும், இந்தக் கூடல் வேதனையை தந்தது, கண்ணீரைத் தந்தது, நெஞ்சில் சுமைகளை சுமந்து கொள் என்றது.​

அவள் மௌனியானாள். அவனோ மௌனத்தை உடைத்து எறிந்தான்.​

“அவ தான் என்னை மிருகமாக்குனா. அரக்கனா மாத்துனா. எனக்கு வெளியே இருக்கும் ஆளுமை..”​

நெஞ்சில் கை வைத்துக் காட்டி,​

“உள்ளுக்குள்ளும் இருந்தது. அந்த ஆளுமையை சில்லு சில்லா சிதைச்சிட்டா. அவளைப் பார்க்கும் வரை, என்னுடைய கடந்த காலம், என்னை என்ன செய்து விட முடியும்னு, திமிரா இருந்தேன். அந்த திமிர் உடைந்து போயிருமோனு பயமா இருக்குடி. உன் கண்ணோரத்தில் இருக்கும் நிமிர்வே என்னை கர்வம் கொள்ள வைக்கும். அந்த கர்வம் இன்னைக்கு தொலைஞ்சத நான் உணர்ந்தேன். என்னோட கருப்பு பக்கங்கள் உன்னையும் வேதனைப் பட வைக்கும்னு பயமா இருக்குடி. இந்த பயங்கள் என்னை மூர்க்கனாக்கி, முரடனா மாற்றி தன்னிலை இழக்க வச்சுடுமோன்னு ரொம்ப பயமா இருக்குடி..!”​

தன்னையே அவனுக்குத் தந்து, அவனை தன்னில் மிக நெருக்கமாக அணைத்துக் கொண்டவள்,​

“உங்க கர்வம் கலையாது! ஏன்னா அந்த கர்வத்தின் ஆணிவேர் என்கிட்ட இருக்கே. உங்க ஈகோவ உடைச்ச எனக்கு, உங்களை ஒட்டி நிற்கிற இந்த அசிங்கத்தை உடைக்க முடியாதுன்னு நினைச்சுட்டீங்களா?”​

அவன் செவி சாய்க்க விரும்பும் அவள் குரல், உள்ளத்தை சென்றடைந்ததா தெரியவில்லை. உணர்வுகள் மட்டும் அவள் தந்த இதத்தில் அடங்கிக் திளைத்தது. முதல் முறை அவளை வன்மையாகக் கையாண்டவன், பெண்ணின் பொன் உடலில் காயங்கள் தந்தான். அவனும் பெற்றான்.​

அவள் கூரான நகங்களை கொண்டு தன் நெஞ்சிலே கோடிழுத்து காயங்களை வாங்கிக் கொண்டான். தன் புஜத்தில் அவளை கடிக்க வைத்து, பல் தடங்களை வலித்த அவன் ரணங்களுக்கு மருந்தாக்கினான். வார்த்தையில் வாதாடாதவன், அன்று அதிகம் பேசினான். அவனிடம் வார்த்தையாடுபவள் அன்று மௌனமானாள். மனதின் ஆதங்கம் வார்த்தைகள் ஆகி மனையாளை வதம் செய்ததை, அவன் அறியவில்லை. அறியாது வதம் செய்தவன் அவள் மார்பில் முகம் புதைத்து, தன்னை மறந்து துயில் கொண்டான்.​

தூங்கும் கணவனை வெறித்த பார்வையோடு பார்த்துக் கொண்டிருந்தவளின் உள்ளம், ஊமையாக அழுதது. கண்ணீர் கூட அன்று அவளுக்கு எதிரியாக மாறி, உன்னை ஸ்பரிசிக்க மாட்டேன் என்றது. சாத்விகா கணவன் சிகையை இதமாகக் கோத, அவன் அவள் மார்பில் இன்னும் அழுந்த ஒன்றினான். தூக்கத்திலும் தன் வாசனையில் நேசம் தேடுபவனை எண்ணி, அவள் இதழில் ஓரம் மெல்லிய புன்னகையின் சாரல்.​

அவன் விசித்திரன்.. விந்தையானவன்..​

அவன் சித்தாந்தம் தொலைத்த​

வேதாந்தம்...!​

 

santhinagaraj

Well-known member
இந்த சயத்தா அமைதியா அடங்கி இருக்க சர்வேஷ மறுபடியும் அரக்கனா மாற்றி விடுவா போல.

கவிதா பேசினது ரொம்ப அதிகம்
 
Top