.நிரஞ்சனை பற்றியே யோசித்துக் கொண்டிருந்த வித்யாவிற்கு அவனை அன்று மாலை தனது வீட்டில் பார்த்ததும் ஒரு ஆறுதல். அதே சமயம் அவன் ஏன் இன்னும் பெங்களூரு செல்லவில்லை என்ற கேள்வியும் அவ்வளவு மனதில் எழாமல் இல்லை. மனதில் நினைப்பதை வாய்விட்டு கேட்கும் அளவிற்கு தற்போது சூழ்நிலை சரியாக இல்லை என்பதால் தனக்குள்ளேயே வார்த்தைகளை அதக்கிக் கொண்டாள். விஸ்வம் இன்னும் அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வந்து சேரவில்லை. மதியம் தான் வேலை அதிகம் இருக்கிறது. போய்விட்டு வருகிறேன் என்று சென்றிருக்கிறார். அதிதியை பற்றிய கவலைகள் அவளது பெற்றோரை அன்றாட வேலைகளைக் கூட கவனிக்க விடாமல் தேக்கம் அடையச் செய்திருக்கிறது.
அதியின் மௌனம் அந்த வீட்டில் ஒவ்வொரு கணமும் ஊசி முள்ளாய் பெற்றோரை துளைத்து எடுப்பதை அவள் முழுவதும் புரிந்து கொள்ளவில்லை. சுய பச்சாதாபம்.
நிரஞ்சன் வீட்டிற்கு வரும் சமயம் வித்யா மாலை நேர சிற்றுண்டிக்கு ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தாள். மழை லேசாக தூரல் இன்று பஜ்ஜி போட்டால் நன்றாக இருக்கும் என்று அடுக்களைக்குள் புகுந்து கொண்டாள். நேராக வீட்டிற்குள் நுழைந்தவன் எந்த தயக்கமுமின்றி வித்யாவுடன் போய் நின்றுகொண்டு காய்கறிகளை நறுக்க தொடங்கிவிட்டான். அவன் இங்கு இருக்கும் பொழுதும் அப்படித்தான்.வித்யா அடுக்களையில் தனியாக ஏதாவது வேலை செய்து கொண்டிருந்தால் உள்ளே சென்று அவளுக்கு ஏதேனும் தேவைப்படும் உதவிகளை செய்து விட்டு வருவான். அவன் வீட்டில் அவன் அம்மாவிற்கு செய்த பழக்கம். வித்யாவிற்கு நிரஞ்சனை நிரம்ப பிடிப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.
இன்று வரை தான் ஆண் என்ற கர்வத்தை அவன் காட்டியதில்லை.
சற்று நேரம் அமைதியாக இருந்தவன் மெல்ல தொடங்கினான்...' அதி எங்க அத்த...'
அவன் கேள்வியில் விருட்டென்று நிமிர்ந்து அவனைப் பார்த்தவள் மாடியில தான் இருக்கா. அவ அதிகமா கீழ வர்ரதில்ல '...
இந்த பதில் நிரஞ்சன் எதிர்பார்த்ததுதான். இத்தனை வருடங்களாக அதிதியுடன் நெருங்கிய நண்பனாக இருப்பவனுக்கு தெரியாதா அவளது இயல்பு?
வித்யா சொன்னவற்றிற்கு நிரஞ்சனிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.
வித்யா தான் தொடர்ந்தாள்... நீ இன்னும் பெங்களூரு போகலையா நீரு? இன்னும் எத்தனை நாள் சென்னையில இருக்கிறதா உத்தேசம்? அவள் நிதானமாக கேட்டாலும் அதன் உள்ளே இருக்கும் அர்த்தம் நிரஞ்சனுக்கு புரிந்து தான் இருக்கிறது.
சற்றும் தயங்காமல் நேரடியாகவே பதில் சொன்னான். எங்க இருந்தாலும் வேலைய பாக்க எனக்கு தெரியும் அத்த... இப்ப என் வேலையில் அதியும் ஒண்ணு. என்னால விட முடியாது!
அவன் சொன்ன பதிலில் திகைத்து விழித்தாள் வித்யா. அவள் மனம் பதைபதைத்தது.
“தப்பு நீரு... உங்க அம்மா உன் மேல ரொம்ப நம்பிக்கையும் ஆசையும் வச்சிருக்காங்க. அவங்களுக்காகவாவது நீ உன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கைய யோசிக்கணும்.”
“அப்போ அதிதி வந்திருக்கான்னு என்னை எதுக்கு கூப்பிட்டீங்க அத்த? என்கிட்ட நீங்க என்ன எதிர்பார்க்கிறீங்க?
வித்யா அவனது இந்த நேரடி தாக்குதலில் மலைத்து நின்றாள். இல்ல நீரு... நான் உனக்காகவும் உங்க அம்மாவுக்குமாகத்தான் பேசுறேன்.
அவன் சொன்ன வார்த்தைகளில் நிரஞ்சனுக்கு வெறுமை படர்ந்தது.
‘'அப்போ நாலு வருஷம் முன்னாடி இந்த நிரஞ்சன் உங்க கண்ணுக்கு தெரியலையாத்த?'’
“நீரு... வார்த்தைகளை உதிர்க்காத... உன்னோட கோபம் உன்னோட பெரிய எதிரி.நா சொல்றத உள்வாங்கி பதில் சொல்லு “என்றாள் வித்யா.
நிரஞ்சன் சொல்வதுபோல் அவனை அழைத்து இருக்கக்கூடாது. இப்பொழுது வேறு ஏதும் பேசுவது வித்யாவிற்கு சங்கடம் தான். ஆனால் அவன் கண்களில் அதிதியின் மீதான காதலை கண்டபிறகு வித்யாவிற்கு இது வெளிச்சம் இல்லாத பாதை. நிச்சயம் இந்த காதலுக்கு எதிர்காலம் கிடையாது... தன் பெண்ணை சம்மதிக்க வைத்து மறு திருமணம் செய்விக்க பல காலம் ஆகும். அதுவரை நிரஞ்சன் தனக்கான வாழ்க்கையை அனுபவிக்காமல் காத்திருக்க வேண்டும் என்றோ, நிரஞ்சனின் அம்மா இந்த காதலை ஒப்புக் கொள்வார் என்றோ வித்யாவிற்கு நிச்சயம் இல்லை. அதைவிட மகள் சொல்லியிருக்கும் விஷயங்களை பார்க்கும்போது அவர் மறுமணத்திற்கு ஒப்புக் கொள்ளக் கூடும் என்று கூட வித்யாவிற்கு தோணவில்லை. இவை எல்லாம் நிரஞ்சனிடம் புரிய வைக்க முடியாது. வித்யாவின் தயக்கம் நியாயமானது. அவள் ஒரு பக்கமாக தன் மகளுக்காக மட்டும் யோசிக்காமல் நிரஞ்சன், அவன் அம்மா பற்றி யோசிப்பது சரிதான்!
ஆனால் அவள் நிரஞ்சன்,அவனது மனம் பற்றி யோசிக்க தவறி விட்டாள்.
முதலில் தவற விட்ட தன் காதலை மீண்டும் நிரஞ்சன் விட்டு செல்ல மாட்டான் என்று வித்யாவுக்கு இன்னமும் புரியவில்லை.
நிரஞ்சன் நறுக்கி வைத்த காய்களை வைத்து விட்டு மாடியில் அதிதி அறைக்கு சென்றான். அதி கட்டில் மேல் அமர்ந்து விட்டத்தை வெறித்து பார்த்து கொண்டிருந்தாள். அவள் பார்வையில் இலக்கு இல்லை.
உள்ளே வந்த நிரஞ்சனை அவள் கவனித்திருக்கவில்லை.
பார்த்தவனுக்கு மனது வலித்தது.
ம்க்கும்... லேசான தொண்டை செருமலில் அவனை திரும்பி பார்த்தவளுக்கு சற்றே உடம்பு தூக்கி போட்டது. நிரஞ்சனை இந்த நேரம் அவள் எதிர்பார்க்கவில்லை என்று அவள் உடல் மொழி சொன்னது. ஆனால் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படும் நிலையில் நிரஞ்சன் இல்லை. மெல்ல பேசத்தொடங்கினான் நிரஞ்சன். அவளை பார்த்ததிலிருந்து நேரிடையாக அவன் பேசி இருக்கவில்லை. இன்று அதியிடம் பேசியே தீரவேண்டும் என்ற எண்ணத்தில் நிரஞ்சன். ஆனால் விதியோ... அதன் சதியோ, அதிக்கு இன்று நிரஞ்சனிடம் பேசுவதற்கு ஒன்றுமே இல்லை. முன்பெல்லாம் நிரஞ்சனிடம் கொட்டிவிட ஆயிரம் எண்ணங்கள் முட்டி மோதிக் கொண்டிருந்தது அவள் மனதில். ஆனால் அவற்றையெல்லாம் காது கொடுத்து கேட்பதற்கு நிரஞ்சன் தயாராக இல்லை. அவள் வாழ்க்கையில் தான் இருக்க கூடாது என்று விலகி நின்றான். இன்று அவள் பேசுவதை முழுவதுமாக கேட்டு விட அவன் துடிக்கிறான்.
ஆனால் பேதைக்கு தன் மன ரகசியங்களை அவனிடம் பகிர்ந்து கொள்ள விருப்பமில்லை.
வினயன் நடந்து கொண்ட விதத்தை விட நிரஞ்சன் அவளிடம் காட்டிய பாராமுகம் தான் அவளால் தாங்க முடியவில்லை. உனக்கும் எனக்குமான உறவு இவ்வளவுதானா என்று அவள் பலமுறை யோசித்து இருந்திருக்கிறாள்.
ஒவ்வொரு முறையும் அவனுக்கு ஈமெயில் அனுப்பி விட்டு அனேக நேரங்கள் அவனது ஸ்மைலி பதிலைப் பார்த்து நொந்து போய் இருக்கிறாள். வினயனுடன் திருமணம் ஆன நாள் அன்றில் இருந்தே கணவனுடன் சரியாக பேச முடியவில்லை.பழக முடியவில்லை.அதனால் அதன் பாதிப்பு அவ்வளவுக்கு அவ்வளவு ஆழம் என்று சொல்ல முடியாது.
தோள் கொடுப்பான் தோழன் என்றால் தனக்கு தேவையான நேரத்தில் நிரஞ்சன் ஒதுங்கி நின்றது ஏன்? என்ற கேள்வி விடை தெரியாமல் பல முறை அவளை படுத்தி எடுத்து இருக்கிறது.
இதோ இப்போது அவள் எதிரில் நிரஞ்சன் நின்று கொண்டிருக்கிறான். அவள் ஏதேனும் பேச மாட்டாளா என்று பார்த்துக் கொண்டிருக்கிறான். பேசுவதற்கு ஏதேனும் இருந்தால் தானே?
வெறும் ஒற்றைப் பார்வையில் நிரஞ்சனிடம் என்ன என்று கேட்ட அதியின் கேள்வியை எப்படி கையாள்வது என்று நிரஞ்சனுக்கு புரியவில்லை.
நீ வேறு நான் வேறு என்று தீர்மானமாகச் சொல்லும் அந்த பார்வைக்கு இவன் என்ன பதில் சொல்ல முடியும்...
"எப்படி இருக்க அதி... வந்ததிலிருந்து உன்கிட்ட சரியா பேசவே முடியல. என்றவனை வித்தியாசமாக பார்த்தாள் பெண். பேச்சை மேற்கொண்டு எப்படி வளர்ப்பது என்று அவனுக்கு தெரியவில்லை...அத்தை சூடா பஜ்ஜி போட்டிருக்காங்க... சாப்பிடலாம் கீழ வா, என்றவனிடம் மறுப்பு ஏதும் கூறாமல், “நீங்க கீழே போங்க நிரஞ்சன். நான் கொஞ்ச நேரத்துல வர்றேன்” என்று மரியாதை பன்மையுடன் பேசினாள். அவளது பேச்சும் பாவனையும் அவனுக்கு புரிய வைத்தது அவன் மீதான அவளது கோபத்தை!
லேசாக சிரித்துக் கொண்டான். ‘'இல்ல அதி...நான் வெயிட் பண்றேன் நீ பிரெஷ் ஆகிட்டு வா” 'என்று பிடிவாதமாக அங்கேயே நின்று கொண்டிருந்தான் நிரஞ்சன்.
அதிதி வழக்கம்போல் வேறு எதுவும் பேசிக் கொள்ளவில்லை. நேராக குளியலறைக்குள் புகுந்து கொண்டாள். நிரஞ்சனை பார்த்தவுடன் அவளையும் மீறிக் கொண்டு வெளிவர துடித்த கண்ணீரை இத்தனை நேரம் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டிருந்தாள். இப்போது குளியலறையில் தன்னை கட்டுப்படுத்த முடியவில்லை அவளால். கொஞ்சம் கொஞ்சமாக தன்னை தானே சமாதானம் செய்து கொண்டு முகத்தை கழுவிக்கொண்டு வெளியே வந்தவள் இன்னும் நிரஞ்சன் அங்கேயே ஒரு கதிரையில் அமர்ந்து இருப்பதை கண்டாள். அவனது பிடிவாதம் அவள் அறிந்ததே! முகத்திற்கு லேசாக பவுடர் போட்டுக்கொண்டு கண்ணாடியில் ஒட்டியிருந்த பொட்டை எடுத்து தனது நெற்றியில் வைத்துக்கொண்டு அவனிடம் மீண்டும் எதுவும் பேசாமலே மாடியில் இருந்து கீழே ஹாலுக்கு வந்தாள். விஷ்வம் இன்னமும் கூட வந்திருக்கவில்லை.
நிரஞ்சன் எதற்கும் அஞ்சுவதாக இல்லை. அதிதியின் தட்டில் சூடான பஜ்ஜிகளை வைத்தவன், அதே சூட்டுடன் அவளிடம் பேச ஆரம்பித்தான்.
“ அப்புறம் அதி உன் ஹஸ்பண்ட் என்ன சொல்றாரு?' திரும்ப கோர்ட்டுக்கு எப்ப போகணும் நீ?”
அவனது இந்த எதிர்பாரா கேள்விகளில் வித்யா, அதிதி இருவருக்கும் திகைப்பு. அதி வித்யாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு, நிரஞ்சனிடம் “இதெல்லாம் என்னோட பர்சனல் விஷயம் நிரஞ்சன். நீங்க இத பத்தி எல்லாம் கேட்கிறது எனக்கு பிடிக்கல” என்று விட்டாள். வித்யாவுக்கு தன் மகள் இத்தனை வேகமாக பேசுவாளா என்று இருந்தது. திரும்ப வந்த நாட்களில் அதிதி இப்படியெல்லாம் பேசியதில்லை.
மீண்டும் மீண்டும் அதிதி பெண்ணிற்கு நான் வெளியே வந்து விடுவேன் என்று அவள் கண்ணீரே அவளை மிரட்டியது. அதி ஏன் இப்படி எல்லாம் பேசுகிறாள் என்று நீருவுக்கு தெரியும். ஆனால் தான் ஏன் அப்படியெல்லாம் நடந்து கொண்டேன் என்று விளக்கம் சொல்வதற்கு அவனுக்கு விருப்பமில்லை. உன்னை பலகாலமாக காதலிக்கிறேன் என்று இந்த நிலைமையில் அவளிடம் நிச்சயம் சொல்ல முடியாது. அதனால்தான் அப்படியெல்லாம் நடந்து கொண்டேன்... உன்னை விட்டு விலகி இருப்பதற்காக, உன்னை காதலிப்பதையே மறப்பதற்காக உனக்கு எந்த பதிலும் அனுப்பாமல் எனக்கு நானே கொடுத்துக் கொண்ட தண்டனை என்று இந்த நேரத்தில் அவளிடம் எப்படி சொல்ல முடியும்?
இந்த முறை மௌனம் நிரஞ்சனிடம் ஒட்டிக்கொண்டது. வித்யா இருவருக்குள்ளும் நடக்கும் நாடகத்தை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறாள்.
நிரஞ்சன் சட்டென்று அதிதியிடம் நான் கேட்டதுக்கு நீ இன்னும் பதில் சொல்லவில்லை அதிதி” என்றான். தன் தலையை இடவலமாக ஆட்டி கொண்ட அதிதி, “இதைப்பற்றி எல்லாம் உனக்கு என்ன அக்கறை... இத்தனை வருஷமா நான் என்ன ஆனேன்னு கவலை பட்டியா... இப்பவும் அப்படியே இருக்க வேண்டியதுதானே?” என்று தன் மன ஆதங்கத்தை வார்த்தைகளால் நிரப்பி திருப்பிக் கொடுத்தாள்.
ஆனால், அவளை கொஞ்சம் கொஞ்சமாக இந்த பிரச்சனையிலிருந்து வெளியில் கொண்டு வந்து அவளைத் தன் காலில் நிற்க வைக்க வேண்டும் என்பதில் நிரஞ்சன் தீர்மானமாக இருக்கிறான்.