எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

manjam 19

subageetha

Moderator
Manjam 19

அன்று மாலை நிரஞ்சன் அதிதியின் வீட்டில் கழித்துவிட்டு இரவு தனது ஹோட்டல் அறைக்கு வந்தவனுக்கு அதியின் முகமாறுதல் மீண்டும் மனதில் நிழலாடியது. நிரஞ்சன் அவர்கள் வீட்டில் தங்குவான் என்று எதிர்பார்த்திருந்தாள் அதிதி. ஆனால் நிரஞ்சன் 'நான் கிளம்புகிறேன்' என்றதும் வித்யாவும் சரி என்று விட அதி பெண்ணால் வாயை திறந்து எதுவும் சொல்ல முடியவில்லை.

அவள் வாயை திறந்து பேசவில்லை என்றாலும் அதிதியின் கண்கள் பேசிய பாஷை நிரஞ்சனுக்கு புரியாமல் இல்லை. ஆனாலும் அவள் தன் மனதின் எண்ணங்களை தனது வாயை திறந்து சொல்ல வேண்டும் என்று அவன் விரும்புகிறான். எத்தனை காலத்திற்கு தான் அவள் தன்னை தனக்குள்ளேயே மறைத்து வைத்திருக்க முடியும்?

உலகம் போகும் போக்கில், ஆண் பெண் என்ற பேதமில்லாமல் ஒவ்வொருவரும் தனக்கு வேண்டியவற்றை வாயை திறந்து சொன்னால் தான் தேவைகள் நிறைவேற்றப்படுகிறது.


இன்றைய நிலையில் இருந்து அவள் வெளியே வருவதற்கு அவளின் வார்த்தைகள் மிக முக்கியம். அந்த வார்த்தைகளை வெளிப்படுத்துவதற்கு தைரியமும் தன்னம்பிக்கையும் அவசியம். அவள் தனது உணர்ச்சிகளின் வடிகாலாய் என்னை தேர்ந்தெடுத்து இருப்பாளாயின், அதை நான் வரவேற்கிறேன் என்று நினைத்து கொண்டான் மனதில்.


அதிக்கு அடுத்த மாதம் கோர்ட் செல்ல வேண்டும். ஆனால் வினய் இருக்கும் நிலையில் அது சாத்தியம் இல்லை. ஏதோ மனதினுள் கணக்கிட்ட வனாக நிரஞ்சன் அடுத்த நாள் விடிகாலையிலேயே புறப்பட்டு பெங்களூர் கிளம்பிச் சென்று விட்டான்.


பெங்களூருக்கு போய் சேர்ந்த பின்னர்தான் தன் அம்மாவிற்கும் வித்யாவிற்கும் அழைத்து விவரத்தை சொன்னான். மேலும் வித்யாவிடம் அதிதியாக கேட்கும்வரை தான இங்கு வந்துவிட்டதை அவளிடம் தெரிவிக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டான். வித்யாவின் மனதுள் இது எதற்காக என்ற கேள்வி எழுந்தாலும் அவன் கேட்டதை வித்யா மறுக்கவில்லை.

நிரஞ்சனின் அம்மாவுக்கோ நீரு ஏன் இங்கு வந்தான், எதற்கு இந்த திடீர் பெங்களூரு பயணம் என்று யோசனை வந்தாலும் மகன் அதிதியிடம் நெருங்காமல் இருந்தால் தேவலை எனும் எண்ணம் தோன்றவே, அமைதியாகிவிட்டார். ஏனோ நிரஞ்சனின் அம்மாவுக்கு அதிதி- நிரஞ்சன் என்று நினைத்தால் வயிறு கலங்கியது. இருவரும் மாலையும் கழுத்துமாக நிற்பது போன்ற ஒரு மாயத் தோற்றம். யாரிடம் சொல்லி ஆறுதல் தேடுவது என்று தெரியவில்லை.

நிரஞ்சன் அவன் அம்மாவை புரிந்து கொண்டதை விட வித்யா அதிகம் புரிந்து கொண்டதால்தான் முடிந்தவரை விதியை மாற்ற பார்க்கிறாள்.


இரண்டு நாள் மௌனமாக நிரஞ்சன் வருவாள் என்று எதிர்பார்த்திருந்த அதிதி அவன் வராமலே போக, சற்றே தவித்துப் போனாள். அன்று இரவில் கிளம்பி போனவன், அடுத்தநாள் வருவானோ என்றால் இல்லை. இதோ அதோ என்று குட்டி போட்ட பூனை போல அது அறையில் உள்ள பால்கனிக்கும் கட்டிலுக்குமாக சுற்றி , அதிசயமாக தன் அறைக்குள் இருந்து வெளியே வந்து ஹாலில் சோஃபாவில் அமர்ந்து வாசலையே பார்க்க தொடங்கி விட்டாள். ஆனாலும் வாய் திறந்து யாரிடமும் எதுவும் கேட்டாள் இல்லை.


இரண்டு நாட்களுக்கு பிறகு அவளது எதிர்பார்ப்பும் வடிய தொடங்கிவிட்டது. பழையபடி தனது அறைக்குள்ளேயே அவளது நாட்கள் கழிய தொடங்கிவிட்டது.

நடுவில் இரண்டு முறை விநய் அவளுக்கு அழைத்து பேச முயற்சி செய்தான். தனது அலைபேசியை அவள் எடுக்கவில்லை. வீட்டில் உள்ள லேண்ட்லைன் முயற்சி செய்து பார்த்தால் விஸ்வம் அவனை கடுமையாக திட்டி வைத்துவிட்டார்.


இப்போது இருக்கும் நிலையில் அதி தன்னுடன் இருந்தால் பரவாயில்லை என்று அவன் மனம் யோசித்தது. ஆனால் என்ன தைரியத்தில் இதை எதிர்பார்க்கிறேன் என்றோ இதில் நியாயம் என்று ஏதாவது இருக்கிறதா என்றெல்லாம் அவனுக்கு புரியவில்லை. சுயநலம் அவன் கண்களுக்கு கருப்பு பட்டையை அழுந்த கட்டிவிட்டிருக்கிறது.


நடாலி வாரம் இரண்டு முறை வினயனுடன் அலுவலக ரீதியாக பேசுகிறாள். 15 நாட்களில் இரண்டு முறை தனிப்பட்ட முறையில் அவர்களுக்குள் பேச்சு. வினய் கை கொஞ்சம் சரியானதால் அலுவலக வேலையை ஆரம்பித்து விட்டான். இல்லாவிட்டால் வேலை பறிபோய்விடும் என்ற பயம் அவன் மனதில் நிற்கிறது. அப்படி ஒன்று நிகழ்ந்தால் நடாலி கூட அவனுக்காக எதுவும் செய்ய இயலாது.


கடைசியாக அவளுடன் பேசும்போது வார்த்தைகளில் ஒரு அந்நியத் தன்மையை இவன் உணர்ந்தான். கலவையான எண்ணங்கள் அவனை வளியாய் சுழற்றியது.


அவள், அலுவலக ரீதியாக சான் பிரான்சிஸ்கோ செல்லப் போவதாக தெரிவித்தாள். தனக்கு பதவி உயர்வு கிடைத்திருப்பதை பற்றி அவள் ஒன்றும் தெரிவிக்கவில்லை.. அதைப்பற்றி வினய் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் எதுவுமில்லை என்பது அவளுக்கு.


ஆனால் இரண்டொரு நாட்களில் வினய் வேறு ஒருவருக்கு ரிப்போர்ட் செய்ய

வேண்டுமென்று மெயில் வழியாக தெரியவர விநய் மனதிற்குள் நொறுங்கி போனான். அந்த வேறு நபர் வேறு யாரும் இல்லை. இவனது நண்பன் ராகுல் தான். தனக்கு கிடைக்க வேண்டிய பதவி உயர்வு வேறு ஒருவருக்கு கிடைத்தது வேறு வினயன் மனதில் பலத்த அடியாக விழுந்தது. நடாலி இடமிருந்து வேறு எந்த தகவலும் இல்லை.


அவளுடன் கொண்ட உறவைப்பற்றி இவன் மனம் எண்ணி எண்ணி ஏக்கம் கொண்டது. அவள் தன்னை துச்சமென மதித்து தன்னைப் பற்றி எந்த விளக்கங்களும் தராமல் சென்றுவிட்டாள் என்பது அவனால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. நிதர்சனத்தை ஏற்க முடியாமல் தவித்தான்.

உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சோர்வு அடைந்திருக்கும் இந்த நிலையில் அவனது மனம் அதிதியை தேடியதில் வியப்பேதுமில்லை.


அதே சமயம் நடாலியுடன் தொடர்பு கொள்வதற்கும் பிரயாசை பட்டான். ஆனால் பலன் ஒன்றும் இல்லை. இவனுடன் வழக்கம்போல் தான் அவள் பேசினாள். ஆனால் நிச்சயம் அந்த பேச்சு அந்தரங்கம் சார்ந்ததாக இல்லை.

இனி அவள் தன்னிடம் வரப்போவது இல்லை என்பது அவனுக்கு தீர்மானமாக தெரிந்தது. ஆனால் இங்கிருந்து கொண்டு எந்த முயற்சியும் செய்ய முடியாது. முதலில் அமெரிக்கா செல்ல வேண்டும். பிறகு தான் எல்லாவற்றையும் கவனிக்க முடியும் என்று தன்னை கொஞ்சம் போல் சமாதானம் செய்துகொண்டான்.


நிரஞ்சன் வித்யாவிற்கு தினமும் போன் செய்து பேசிக் கொள்கிறான். அதனைப் பற்றி ஏதாவது கேட்டாளா என்று தெரிந்து கொள்வதற்கு அவனுக்கு விருப்பம். ஆனால் அதி வாயை திறக்கவில்லை. முதலில் அவள் தன்னை தேடினாள்.இப்போது மீண்டும் கூட்டுப்புழு ஆகிவிட்டாள் என்பதை கேட்பதற்கே நிரஞ்சனுக்கு தாங்கவில்லை.உடனே சென்னை செல்ல வேணுமாய் அவனது மனம் பரபரக்க என்ன செய்வது என்று தெரியாமல் வீட்டிற்கு வந்தும் கூட அலுவலக வேலையில் தன்னை நுழைத்துக் கொண்டு விட்டான்.


ஆனால் அவனை மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கிறாள் சுமனா என்பது அவன் மனதில் கொஞ்சம் கூட எட்டவில்லை. அவளுக்கு சி. ஏ பரீட்சை நேரமாதலால் அலுவலகத்திற்கு அதிகமாய் அவள் வரவில்லை. நிரஞ்சன் வேறு பரீட்சையில் தேறா விட்டால் திருமணம் பற்றி யோசிப்பதற்கு கூட இஷ்டமில்லை என்று சொல்லிவிட்டான். அதனால் அவளது தலையில் பாரம் கூடிய உணர்வு!


எண்ணம் முழுவதும் நிரஞ்சன் ஆக்கிரமிப்பு செய்து இருந்தாலும் வேறு வழியின்றி தனது மனதை செலுத்தி படிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் சுமனா. ஆனால் குறைந்தபட்சம் நிரஞ்சன் தனக்கு போன் செய்தாவது பேசுவான் என்று நினைத்திருந்தவளுக்கோ கிடைத்தது பெரிய ஏமாற்றம். அவளின்

அலைப்புறுதலை வீட்டில் அவள் பெற்றோர் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். நிரஞ்சனின் ஒட்டாத இந்தத் தன்மை சுமனாவின் பெற்றோருக்கு இந்த திருமணம் பற்றிய சந்தேகத்தை எழுப்பினாலும் இந்த நேரத்தில் இது பற்றி எல்லாம் பேச வேண்டாம் என்று அமைதி காத்தார்கள். பொதுவாக காதலிப்பவர்கள் தினமும் ஒருமுறை கூட அழைத்து பேசாமல் இருப்பார்கள்?


நிரஞ்சன் அப்படித்தான் இருந்தான்.

சுமனாவின் அப்பா நிரஞ்சன் இருவரும் சந்தித்து பேசும் நேரத்தில் கூட நிரஞ்சன்' தான் 'சுமனாவை காதலிக்கிறேன் என்று ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை.

ஆனால் நிரஞ்சனை சுமனாவின் அப்பாவிற்கு வெகுவாய் பிடித்துவிட்டது.

அவனைப் பிடிக்காமல் போவதற்கும் காரணம் ஏதுமில்லை.


ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் சுமனாவே நிரஞ்சனுக்கு அழைத்து விட்டாள். ஆனால் அவன் வழக்கம் போல எதிலும் பட்டுக் கொள்ளாமல் தான் பேசினான்.படிப்பை பற்றி விசாரித்தான்.அவள் எப்படி படித்து கொண்டிருக்கிறாள் என்று கேட்டு தெரிந்து கொண்டான். அவன் உரையாடலில் கொஞ்சம்கூட காதல் இல்லை. வெறும் அக்கறை மட்டுமே! பெண்ணுக்குள் எதிர்பார்த்தது எதிலோ ஏமாந்த உணர்வு.


இந்த உணர்விலிருந்து எப்படி வெளிவருவது என்று அவளுக்கு புரியவில்லை. பெருமூச்சை வெளியிட்டு படிப்பைத் தொடர்ந்தாள். அவளுக்கு வேறு வழியும் இருக்கவில்லை. நிரஞ்சனின் முக்கியமான கண்டிஷன் அவள் தேர்வில் பாஸ் ஆக வேண்டும்.

அது ஒன்று தான் அவனை அடைவதற்கான வழி.

ஆர்யன் தினமும் சுமனாவுக்கு அழைத்து பேசினான். தன் இருப்பை அவளுக்கு ஞாபகப்படுத்திக் கொண்டே இருந்தான். அவளுக்கு தேவையான நேரத்தில் பாடங்களில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் அதை சொல்லிக் கொடுக்க அவள் வீட்டுக்கு வந்தான்.இதையும் சுமனாவின் பெற்றோர் பார்த்து கொண்டுதான் இருக்கிறார்கள். அவளுக்கு புரியாத விஷயங்கள் அவள் பெற்றோருக்கு புரிகிறது. ஆனால் பெண்ணின் விருப்பம் வேறு ஒரு இடத்தில் என்று பேசாமல் இருந்து விட்டார்கள். ஆரியன் பார்ப்பதற்கு அழகன் பேசுவதற்கு இனியன். நன்றாக படிப்பவன். சுமனாவுக்கும் அவனுக்கும் வயது இடைவெளி அதிகமில்லை. அவனும் சிஏ முடித்துவிட்டால் நல்ல வேலையில் சேர்ந்து விடுவான். அவன் நடத்தையில் இருந்து அவன் குடும்ப பின்னணி புரிகிறது.

ஆனால் சுமனாவின் மனம் இவனிடம் ஈடுபடாமல், எப்போதும் சற்றும் இளகாமல் கெடுபிடி காமிக்கும் நிரஞ்சனிடம் எப்படி... ஈடுபட்டது என்பது அவளது பெற்றோருக்கு புரியவில்லை.



இரு மாதங்கள் முடிந்து விட்டது.வினயன் மருத்துவமனைக்கு ரெவியூவுக்கு சென்று வந்தான். கோர்ட்டிற்கு வர முடியாத சூழ்நிலை என்று வாய்தா வாங்கினான். மருத்துவ பின்னணியின் காரணமாக அவன் வாதம் எடுபட்டது. அதிதிக்கு தான் புரியவில்லை அவனுக்கு என்ன பிரச்சனை என்று. அவள் கொஞ்சம் குழம்பினாலும், வித்யா அவளை அதை பற்றி யோசிக்க வேண்டாம் என்று விட்டாள்.

நிரஞ்சனுக்கோ அதிதியை பார்க்க வேண்டுமென்ற வெறியே ஏற்பட்டுவிட்டது. ஆனால் அவளிடம் இருந்து எந்த பிரதிபலிப்பும் இல்லை எனும்போது தான் அங்கே செல்வது அவளுக்கு தொந்தரவாக இருக்கும் என்று வேறு யோசனை.


வித்யாவோ அதிதியிடம் இருந்து எந்த மாற்றமும் இல்லை. அவள் யாரிடமும் பேசாமல் பெரும்பாலும் தனது அறையிலேயே கழிக்கிறாள் என்று நிரஞ்சனிடம் வருத்தத்துடன் தெரிவிக்க, இதற்கு மேல் பொறுமை காக்க முடியாது என்று நிரஞ்சன் அன்று இரவே சென்னை கிளம்பி விட்டான். கிளம்பும் முன் தன் அம்மாவிடம் எப்பொழுது வேண்டுமானாலும் பெங்களூர் வர வேண்டியது இருக்கும். தயாராக இருங்கள் என்றான். தானே காரை ஓட்டிக்கொண்டு சென்னை வந்தவன் விடிகாலை நேரம் நேரே சென்றது அதிதி வீட்டுக்கு தான். தான் விலகி இருப்பது அதிதியை தன்னுடன் சேர்த்து வைக்காது. பெண்ணின் மனதை மெல்ல தான் மாற்ற வேண்டும் என்று யோசித்து கொஞ்ச நாட்கள் சென்னையில் இருந்து பணி புரிய விரும்புவதாக கேட்டுக்கொள்ள, அவனது சென்னை ஜாகை ஆரம்பம். பழையபடி அதிதி வீட்டு மாடியில் வாசம்.


திரும்ப செல்லும் பொழுது அதிதியுடன்தான் செல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் இங்க வந்து இருக்கிறான். அதிதி அவன் எடுக்கும் முடிவுகளுக்கு ஒத்துக் கொள்வாளா?

வித்யாவும் விஸ்வமும் இவன் முடிவுக்கு கட்டுப்பட முடியுமா?அதிதி பற்றி இவ்வளவு யோசிக்கும் நிரஞ்சன் தன் அம்மா இதற்கு ஒத்துக் கொள்வாளா என்று இன்னும் யோசிக்க தொடங்கவில்லை... இதெல்லாம் சென்று எங்கு முடியுமோ!
 
Top