எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

22 மார்கண்டேயனின் மனோரஞ்சிதம்

priya pandees

Moderator
அத்தியாயம் 22

வள்ளுவன் இந்தியா வந்திறங்கிய மறுநாளே மார்கண்டேயனுக்கு அழைத்திருக்க, "ஆஃபிஸ் நறுமணந்தில தான்டா போடணும். நீ அங்க வா ப்ளேஸ் பாத்திடலாம்" என்றிருக்க, அவனும் இதோ கிளம்பி வந்திருந்தான்.

அப்படி வந்தவனை தான் மீனம்மா குறுக்கு விசாரணைக்காக நிறுத்தி வைத்திருக்கிறார்.

"என்ன முழிக்கீக? தமிழு தெரியுமா தெரியாதா? அங்கன போய் சொந்த மொழியும் மறந்துட்டோ?"

"மார்க் இல்லையா? இதான அவேன் வீடு? லொகேஷன் இதான் அனுப்பினான்?" என அவன் செல்லையும் எடுத்து சரி பார்க்க,

"அவுக வீடுதேன். உங்கள கண்டதும் நீங்கதேன் அவுக கூட ஃபாரீன்ல இருந்தவுகன்னு நா கண்டுகிட்டேனா இல்லையா? உங்களுக்கு அப்படி என்னைய கண்டுக்க தெரியலையே?"

"ஐயோ சாரிங்க. சொல்லுங்க தெரிஞ்சுக்குறேன். இனி அடிக்கடி பாக்க போறோம் ப்ரெண்ட்ஸ் ஆகிக்கலாம்"

"இங்கன யாரையும் தெரியாதோ? ஆமா உங்களுக்கு பொம்பள ப்ரெண்ட்ஸ் பிடிக்குமா?"

"ஓ நல்லா பிடிக்குமே? வாங்க பழகலாம்" என்றான் பல்லெல்லாம் காண்பித்து.

"உங்க சிரிப்பே சரியில்லையே! அப்புறம் என்னத்துக்கு எங்க ஃபாரீன் சார அங்கனயே போட்டு பூட்டி வச்சீக?" என்றார் கொஞ்சம் முறைப்பாகவே,

"பூட்டி வச்சேனா? பூட்டி வைக்கிற உருவமாங்க அது?"

"மீனம்மா!" என மார்க் வந்துவிட,

"உங்கள அடைச்சு வைக்கலயாமே அப்ப மூணு வருஷமா தவம் பண்ண ஏதும் போய்ட்டீங்களா?" என்றார் மீனம்மா உள்ளிருந்து வந்த மார்க்கிடம்,

"இவனா?மூணு வருஷமா எங்கூடத்தானே இருந்தான். ஒருவேளை வாரா வாரம் போறத கேக்கீங்களோ? இருக்கும்! வெளிய போலாம் கூடவே கிளப்பி கூட்டிட்டு போயி மரம் செடி கொடின்னு தான் பேசிட்டு திரிவான்" என அவனே கேள்வி அவனே பதில் என பேச, தலையிலடித்துக் கொண்டான் மார்க்.

"இவுகளுக்கும் தெரியாதா? அப்ப உங்கள அடைச்சு வச்ச பூதத்த எங்க?"

"பூதத்த தான் அடைச்சு வைப்பாங்க, பூதம் ஏன் இவன அடைச்சு வைக்கணும். நா முனி அடிக்கறதா தான் நினைப்பேன். ஒருவேளை அமெரிக்காவுல முனி இல்லாதனால அது பூதமா இருக்குமோ?" என்றான் வள்ளுவன்.

"டேய் வாய மூடுறீயா நீ"

"முனியா? ஆமா உங்களுக்கு கல்யாணம் ஆச்சா?"

"ஓ! ஒரு தடவ"

"பிள்ளைக?"

"ம்ம் ரெண்டு"

"எப்படி கல்யாணம் ஆனதுமே நீங்களும் பொண்டாட்டிய இங்கன கலட்டி விட்டுட்டு போயிட்டீங்களோ?"

"இல்லங்க. நா போமாட்டேன்னு சொன்னவன எங்கப்பா தான் வம்படியா அனுப்பி வச்சாரு. இப்பவும் பாருங்க வந்து ரெண்டு நாளு அவளையும் பிள்ளைகளையும் கொஞ்சவிடல, பொழப்ப பாருன்னு பத்திவிட்டுட்டாரு"

"ஏன் உங்கப்பா உங்கள இப்படி பிரிச்சு விடுதாரு? பாசமில்லையோ உங்க மேல?"

"சுத்தமா கிடையாதுங்க. கல்யாணமான ரெண்டு நாளுல வேலைக்கு போன்னு பத்திட்டாரு தெரியுமா?"

"பொண்டாட்டியையும் கூட கூட்டிட்டு போ வேண்டியது தான"

"பின்ன? கல்யாணம் ஆன கையோட கூட்டிட்டு போயிட்டேனே. முத பிள்ளையே அங்க தான் பொறந்தான். ஆனா ரெண்டாவது பிள்ளைக்கு அங்கன வச்சு சமாளிக்க முடியல அதான் இங்க அனுப்பிட்டேன். அப்புறம் தான் இந்த நாளு வருஷமா மார்க் கூட தங்கிட்டேன்"

"அப்ப ஒத்துக்கிறீக நீங்க வந்து தங்கித்தான் எங்க புள்ளைய பிரிச்சுவிட்ருக்கீங்க? உங்க பொண்டாட்டி புள்ளைய உங்களுக்கு முக்கியம் மாறி தான அவருக்கும்? நீங்க பேசாமலா இருந்தீக?"

"நா டெய்லி பேசுவேனே? அவன் மட்டும் பேசாமலா இருந்தான் கதவ பூட்டிட்டு மணிகணக்கா பேசுவானே?"

"அது ஆருட்ட பேசுனீக?" என அவர் இவனிடம் திரும்ப,

"ரெண்டு பேரையும் என்ன செய்வேன்னு தெரியாது. வாய மூடுங்கன்னு சொல்ல சொல்ல கேட்க மாட்றீங்க" என அதட்டியவன், "ஆபிஸ்கு இடம் பாக்க தானடா வந்த? முதல்ல அத பாரு" என விரட்ட,

"அடேய் இப்ப கூட உள்ள கூப்பிட்டு உன் ஃபேமிலா இன்ட்ரோ பண்ண மாட்டியா?"

"எங்க புள்ளைய நீங்க என்னத்துக்கு பாக்கணுங்கேன்? அவளே சடவா இருக்கா" என்றார் மீனம்மா.

"என்னங்க நீங்க என்னைய வில்லனாவே ட்ரீட் பண்றீங்க? என்னைய பத்தி என்னடா சொல்லி வச்சுருக்க நீ?" என்றான் வள்ளுவன் இருவரிடமும்.

"நா ஒன்னுமே சொல்லி வைக்கல, மீனம்மாவா தான் உன்ட்ட போட்டு வாங்கிட்ருக்காங்க நீ உளறிட்ருக்க"

"என்னைய எதுக்குடா போட்டு வாங்கணும்?"

"நா மூணு வருஷமா இங்க வராம இருந்தேன்ல லூசு, அத ஏன்னு தெரிஞ்சுக்க தான்"

"என்னடா குழப்புற? நீ ஏன் வராம இருந்தன்னு இந்தா நிக்ற உன்ட்ட கேட்காம இன்னைக்கு வந்த என்ட்ட ஏன்டா கேட்கணும்?"

"அம்புட்டு நம்பிக்கை தான் என் மேல, நீ கேள்வியா கேட்டு உசுர வாங்காம கிளம்புடா யப்பா. உங்க ரெண்டு பேருட்டையும் மூச்ச தொலைக்க முடியல, என் மகன் கண்ணனே பரவாலயாட்டமிருக்கு" என அவனை தள்ளிக்கொண்டு வெளியேற,

"உன் மாமியாராடா அது?" என்றான் வழியில்,

"ஆமா கிட்டத்தட்ட"

"அப்டினா?"

"அப்டிதான். இங்கன தான இருக்க போற மெதுவா தெரிஞ்சுக்கலாம்" என்றுவிட்டான்.

சுரேந்தரின் அப்பா மூலம் தான் ஒரு இடத்தை பார்க்க சொல்லியிருந்தான். இப்போது சென்று பார்த்ததும் பிடித்தது.

"கொஞ்சம் ஆபிஸ் இன்ட்டீரியர் மட்டும் பண்ணா பக்காவா இருக்கும்லடா?" என்ற வள்ளுவனுக்கு தலையசைத்தான் மார்க்.

அதன்பின் அந்த வேலைகள் ஆரம்பித்தன, இரண்டு மாதங்கள் அவர்களுக்கான அலுவலகம் அமைப்பிலேயே கடந்திருந்தது.

அடுத்ததாக இரண்டாவதாக நீதிமன்றத்தில் ஆஜராகும் தினமும் வந்துவிட, இந்த முறை மார்க் மட்டுமே அவன் அம்மாவை அழைத்துச்சென்று மறுபடியும் கேட்டதையே கேட்டு சொன்னவற்றையே திரும்பவும் அழுத்திச் சொல்லி வந்திருந்தனர், மாமாவின் வக்கீல் மறுபடியும் அவருக்காக வாய்தா வாங்கிச் சென்றிருந்தார். அடுத்த ஹியரிங் மூன்று மாதங்கள் தள்ளி வைத்திருந்தனர்.

இதற்குள் இருவரும் பத்து பதினைந்து கம்பெனிகள் நேரிலேயே ஏறி இறங்கினர், இன்ஸ்டா, நௌக்ரி, இன்டீட் போன்றவைகளில் அவர்கள் கம்பெனி பற்றி பதிவேற்றினர். வெப் டிஷைன், லோகோ போன்றவைகளையும் எடுத்து செய்தனர். சிறிய சிறிய வேலைகளையும் விடவில்லை, அதை பார்க்கவென கணினி படித்த பட்டதாரிகள் மூவரை வேலைக்கு எடுத்தனர்.

புதிய ப்ராஜெக்ட்களுக்காக அவர்கள் வேலைபார்த்த அலுவலகம் சென்னையில் உள்ளதிலும் போய் பேசிவிட்டு வந்தனர்.

அவர்களுக்கும் அவன் தனியே ப்ராஜெக்ட் எடுத்து செய்யும் திறமை தெரியுமென்பதால், தனியாராக அவன் செய்வதை ஏற்றுக்கொண்டு கமிஷன் அடிப்படையில் ப்ராஜெக்ட் மாற்றி தந்தனர்.

வள்ளுவன் அவன் குடும்பம் தங்குவதற்கு தனி வீடும் பார்க்க, மார்க் அவனுக்கு பார்த்து கொடுத்தவன், "நமக்கும் பார்க்கணும் மனோ!" என்றான் மனைவியிடம்.

"அண்ணி வேலைக்கு ஜாயின் பண்ணணும். மெட்டரினிட்டி லீவ் முடிஞ்சது அவங்களுக்கு. அவங்க பாப்பாவ பாக்க அம்மாவையும் அப்பாவையும் அவங்க கூட கூப்பிட்டுட்டு இருக்காங்க. அண்ணனுக்கும் அந்த எண்ணம் இருக்கு. அண்ணா, அண்ணி, அம்மா, அப்பா அங்க அண்ணி வேலை பாக்குற ஊர்ல இருக்க வீட்டுக்கு போயிடுவாங்க. மீனம்மா இங்க எனக்கு துணைக்கு. சோ வீடு சும்மா தான் இருக்கும் ஆளில்லாம பூட்டி போட வேணாம், நீ இருந்துக்கோன்னு அண்ணா சொல்றான்" என்றாள், அவள் முன்னவே இதை அவளின் அப்பாவிடம் பேசிவிட்டிருந்தாள்.

"நாம நறுமணந்திலேயே இருக்க போறோம் மனோ. என்ன இருந்தாலும் இது அவங்க வீடு. அண்ட் வரபோக இருப்பாங்க. வந்தா தங்கணும் அவங்க. நா இருக்குறது அவங்களுக்கு அவ்ளோ ஈசினஸ் தராதுல்ல?" என்றான் யோசனையாக,

"நா கேட்டுட்டேன். நாங்க எப்பவாது தானே வருவோம். மாப்பிளைக்கு ஓகேனா இங்கேயே இருக்க சொல்லு. கட்டாயப்படுத்த வேணாம்னு சொல்லிட்டான்"

"சரி அப்ப ஓகே இருப்போம். ரெண்ட் மாதிரி குடுத்தே இருப்போம். நமக்குன்னு ஒரு வீடு வாங்கலாம், அதுக்கு முதல்ல கம்பெனிய மந்திலி ஃப்க்ஸட் இன்கமுக்கு செட் பண்ணிக்குவோம்" என்க,

"பண்ணிக்குவோம் பண்ணிக்குவோம்" என அவள் தலையை உருட்ட, நறுக்கென்று கொட்டினான்.

"இந்தா! எதுக்கு கொட்னீங்க?" என முறைக்க,

"வாங்கின சொத்தையே வச்சுக்க தெரியல, இதுல புதுசா வீடு வாங்குறாங்களாம் கம்பெனி செட் பண்றாங்களாம்னு இப்ப நீ நினைக்கலன்னு சொல்லுடி?" என அவனும் முறைக்க, வாயை வக்கனம் காண்பித்தாள். வந்த சிரிப்பை அதில் மறைத்தாள், நினைத்ததை கண்டு கொண்டானே, சிரிப்பையும் கண்டுவிட்டால் இன்னும் ஆடுவானே என நழுவப் பார்த்தாள்.

சுடிதாரின் துப்பாட்டாவை பிடித்திழுத்து அவளை கைக்குள் கொண்டுவர, "என்ன?" என புருவம் உயர்த்தினாள் மனோ.

"முறைக்குறியா நீ? ப்ளீஸ்டி மனோ, கட்டிபிடிக்குறது கிஸ் பண்றதுலா ரெஸ்டிரிக்ஷன்ல இருந்து ரிமோவ் பண்ணுடி, நாம அடிக்கடி ப்ராசெஸ் பண்ணலாம், இல்லனா எர்ரர் வரும்"

"மூணு வருஷமா அந்த எர்ரர் ஏன் வரல?"

"உடனே அங்க போய் நிக்காதடி. பொண்டாட்டி பக்கத்துல இல்ல எதுவும் தோணல, இப்ப இவ்ளோ பக்கத்துல இருக்கும்போதும் தோண கூடாதுனா எப்படி?"

"என்னது எப்படி?"

"உள்ள பார்ட்ஸ் பங்க்ஷன் ஆக கூடாதுன்னு ஸ்டாப் பண்ணவா முடியும்?"

"ஓ அப்படி? அப்ப எல்லாம் வேலை செய்யுதா?"

"என்ன நீ டவுட்டா கேட்குற? ஆனா நீ இப்டியே போக்கு காட்டினனா துரு புடிச்சுதான் போயிடும், அப்புறம் நீ தான் வருத்தப்படுவ"

"நானா? இல்ல படமாட்டேன். சோ துருபிடிக்கட்டும்"

"ரொம்ப பண்ணாத. நீதான் டவுட்டான இப்ப மாத்துற"

"பொண்டாட்டி பிள்ளைகள தேடாத மனுஷன டவுட்டா கேட்காம?"

"போடி. மறுபடியும் முதல்ல இருந்து வாரா. போ ஒன்னும் வேணாம் போ" என அவள் துப்பாட்டாவை விட,

"சரியான மலைமுழுங்கி மார்கண்டேயன் நீங்க" என அவளே அவன் கன்னத்தில் அழுந்த முத்தமிட, "இந்த முத்தத்துக்கு அப்படியொரு அடைமொழி வேறயா?" என்றவன் மீண்டும் அவளை கைக்குள் கொண்டு வர, அவன் இழுப்பிற்கு அவளே வந்தாள்! அவனே கொடுத்தான், மறந்திருந்த உணர்வுகளை மீட்டெடுப்பவனாக அவளில் மூழ்க,

"ம்மா!" என கத்திக்கொண்டே கண்ணன் ஓடிவர, "ம்மா என் ஜேசிபிய தூக்கிட்டு வந்துட்டான்மா" என கத்திக்கொண்டே அவனை துரத்தி வந்தான் கிருஷ்ணன்.

"சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரங்கொடுக்காத கதை தாண்டா என் கதை" என மார்கண்டேயன் புலம்ப, வாய்விட்டு சிரித்தாள் மனோ.

அம்மா சிரிப்பதை கண்டு, கிருஷ்ணன், கண்ணன் இருவரும் கூட சண்டையை மறந்து அவளை பார்த்து, "என்னம்மா?" என சிரித்தபடி கேட்டு நிற்க,

மார்கண்டேயன், "ஜேசிபிய தேடி வந்தீங்க ரெண்டு பேரும்" என்றவன், "நைட்டும் அட காக்குறாய்ங்க, பகல்லயும் குறுக்க சாடுறானுங்க" என எடுத்துக்கொடுக்க, மனோ முறைக்க, "போடி!" என்றுவிட்டு சிறியவனிடமிருந்து வண்டியை வாங்கி கிருஷ்ணனிடம் கொடுத்துவிட்டு, கண்ணனை தூக்கிபோட்டு பிடித்தபடி வெளியேச் சென்றான்.

மறுமாதத்தில் ஆண்டாள், ஞானம், பாலா, மல்லிகா நால்வரும் கிளம்பிவிட்டனர். கிளம்பும் முன் ஆண்டாள் மகளுக்கு அறிவுரையாக வாரிவழங்க, "ஏத்தா சும்மா கிளம்பு நா பாத்துகிட மாட்டேனா?" என்றார் மீனம்மா.

"இங்க பிரச்சனையே அதான்னு அத்த சொல்ல வர்றாங்க மீனம்மா" என்றான் மார்க்.

அவர்கள் சிரித்தபடி கிளம்பிவிட, இவர்கள் சண்டை எப்போது போல் அமர்க்களப்பட்டது.

"நீங்க மறுபடியும் மூட்ட முடிச்ச கட்டுனா பிள்ளைக்கு நாந்தான் பாதுகாப்பு தெரியும்ல?" என்றார் மீனம்மா.

"நாங்களா கட்ட மாட்டோம் நீங்க கட்டி அனுப்பிவிடாம இருந்தா சரின்னு மார்க் சொல்றான் மீனம்மா" என்றான் வள்ளுவன். கடந்த மாதங்களில் மனோ மார்க் ஒன்றினார்களோ இல்லையோ, மீனம்மாவும் வள்ளுவனும் வெகு சிறப்பாக ஒன்றிவிட்டனர். இருவரையும் சேரவே விடாமல் பார்த்துக்கொள்வது தான் மார்க்கின் முக்கிய வேலையாக சிலநேரங்களில் ஆகிவிடும்.

"இப்ப மட்டும் என்னங்கேன்? வாரத்துல ஏழு நாளு, அதுல மூணு நாளு உங்க புது கம்பெனிக்கு ஆர்டர் எடுக்க வெளியூர் போயிடுதீக, ரெண்டு நாளு அந்த தேனீ வார்ப்ப வார போயிறுதீக, சனி, ஞாயிறு மட்டும் வந்துட்டு போறீக, இங்க அவ கூட இருந்து பாக்றதே நாந்தேன்"

"இப்ப உழைச்சா தான மீனம்மா? நீங்க இருக்க தைரியத்துல தான போய்ட்டு வாரேன் நானும்" என அவர்கள் இருவரும் சேர்ந்த உடனே ஜகா வாங்கிவிட்டான் மார்க்.

"ஆத்தி உடனே மாத்திட்டீக ஃபாரீன் சாரு?" என அவர் அங்கலாய்க்க,

"இப்ப நா மனோ சாரு தான் மீனம்மா"

"அது அப்படிதான் வருதுங்கேன்"

"அத அவள மறக்க விட்றகூடாது உங்களுக்கு?" என மார்க் முறைக்க,

"நா நெனவு சொல்லலனா அவளுக்கு மறந்துருமாக்கும்? அவளே பாவம் அந்த மூணு வருஷம் என்ன பாடு பட்டுட்டா" என்றதும் கும்பிட்டே விட்டான் மார்க்.

"இதான் மீனம்மா உங்கள எனக்கு ரொம்ப பிடிக்குது. அவன் அவனோட வைஃப்கு பயப்படுறத விட உங்களுக்கு பயப்படுறான். அங்க எங்கள ஓடவிடுறான். இங்க நீங்க அவன ஓட விடுறீங்க, இத பாக்கத்தான் நா அடிக்கடி இங்க வரேன் தெரியுமா. யூ சோ ச்சிவீட் மீனம்மா" என அவர் கன்னம் கிள்ளி கொஞ்ச,

அவன் கையை தட்டிவிட்டவர், "இந்த அமெரிக்காவுல இருந்த பழக்கத்துக்கு பொம்பள பிள்ளைய தொடாதீகன்னு சொல்லிருக்கேன்ல. ஒருநேரம் மாறி ஒருநேரம் இருக்க மாட்டேனாக்கும் கைய இறுக்கி முறிச்சுபோடுவேன் பாத்துகிடுங்க" என மிரட்ட,

"பொம்ப பிள்ளையாம்ல? ஏன் பேபின்னு சொல்லுங்களேன் பால் பாட்டில் வாங்கி தாரேன்" என மறுபடியும் அவர் கன்னத்தில் இடித்தான்.

"நானும் சொல்லிக்கிட்டே இருக்கேன்" என அவர் வரிந்துகட்ட,

"வாடா மார்க்" என அவனையும் இழுத்தபடி வெளியேறிவிட்டான்.

"உன் புருஷன்டையும் சொல்லி வை மனோ, அந்த பையன்ட்ட இருந்து தள்ளியே இருக்கட்டும்" என கன்னத்தை துடைக்க,

"என் புருஷன மிரளவிடுறீங்கள்ல அதான் அவர் ஃப்ரெண்டு உங்கள மிரள விடுறாரு. அனுபவிங்க" என அவள் சிரிக்க, அந்த சிரிப்பில் மனம் நிறைந்தார் மீனம்மா.

மார்க் அவன் மாமாவையும் ஓடத்தான் விட்டான், அவரின் ஒரே வருமானம் அந்த தேனீ பண்ணை தான், அதில் அவன் கை வைக்கவும் அவரால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. முதலில் அங்கு வேலைக்கு இருந்தவர் சென்றபோது, 'போடா வேற ஆளா இல்ல?' என சாதாரணமாக நினைத்திருக்க. இல்லை அனுபவம் வாய்ந்தவர்களின் அருமை நான்காம் மாதம் தான் புரிய ஆரம்பித்தது.

அடுத்து வந்த மாதங்களில், தேனீக்கள் பராமரிப்பு சரியாக இல்லாததால் முற்றிலும் குறைந்து பாதி அழிந்துவிட்டிருந்தது. அதில் அனுபவமில்லாத ஆட்களை சேர்த்ததால் தேனீ கொட்டியதில் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்க, அதும் அவர்மேல் கேஸாகியிருந்தது.

ஆனால் மார்க் அந்த தொழிலை நன்கு கற்றுக்கொள்ள ஆரம்பித்திருந்தான். முதலீடு சிறியவை தான் ஆனால் லாபம் அதிகம் தரும் தொழிலாக இருந்தது. முக்கியமாக கலப்படம் இல்லாத தேனாக இவன் விற்க வலியுறுத்த, அதுவே அதிக ரூபாய் என்றாலும் வாங்க குவிந்தனர் மக்கள். அந்த பங்குதாரருக்கு லாபம் பிராதானமாக வந்துவிடுவதால் இவன் தலையீட்டையும் ஏற்றுக்கொண்டனர். அமெரிக்காவில் அவன் நண்பர்களுக்கும் பரிந்துரை செய்ய, அது அடுத்தகட்ட முயற்சிக்கு சென்றது.

வேலைகள் அவனுக்கு சரியாகத்தான் இருந்தது. ஆனால் அவ்வளவு ஓட்டத்திலும் சனி, ஞாயிறுகளை மனைவி மக்களுக்கு என ஒதுக்கிவிட்டான். கார்ப்பரேட் உலகத்தில் இருந்தவர்களுக்கு சனி, ஞாயிறு வேலை ஓடாது அது பல வருட பழக்கம். ஆகவே ஐந்து நாட்கள் இரவு பகல் பார்க்காமல் ஓடினாலும் அந்த இரண்டு நாட்கள், மனோ மடியில் நீட்டி நிமிர்ந்துவிடுவான்.

பிள்ளைகளை இரு நாட்களும் வெளியே அழைத்துச் சென்றுவருவான். மீனம்மாவிடம் வம்பு வளர்ப்பான். மனோவிடம் எதையாவது பேசி வந்தவரை லாபமென இரண்டு அடியோ இல்லை இரண்டு முத்தமோ, கிடைப்பதை வாங்கி கொள்ளும் வழக்கமாக்கி இருந்தான்.

அன்று மனோரஞ்சிதம் மார்கண்டேயனின் ஒன்பதாவது திருமண நாள். தாலி கட்டிய பிறகு அவர்கள் இந்த நாளில் சேர்ந்திருப்பது இதுவே முதல் முறை. அத்தனை வருடமும் கானொளி அழைப்பில் தான் சண்டையோடு அன்றைய நாள் முடிந்திருக்கும். கடந்த மூன்று வருடமும் அதை மறந்தே போயிருந்தாள் மனோ. அவர்களாக சொல்லாமல் அந்த நாளை ஞாபகத்தில் வைத்திருப்பவர் யார்? சம்மந்தபட்ட இருவரும் சொல்லாததால் அதுவும் வாரநாட்களில், வருட நாட்கிளில் ஒன்றாக சென்றுவிட்டிருந்தது அதுவரை. இந்த வருடமும் கூட அவர்கள் அதை பெரிதுபடுத்தி வெளியே சொல்ல முயலவில்லை. ஆனால் தெரிந்துவிட்டிருந்தது.

இத்தனை வருடமாக அதை மறந்திருக்க இந்த வருடம் அதை ஞாபகம் வைத்து முதலில் சாம்பவியிடம் கூறி, அதை பெரிதாக அனைவரிடமும் கொண்டு சேர்த்தது லதா தான்.

மார்கண்டேயன் அவளிடம் பேசுவதே இல்லை. இன்னும் வேலை எதுவும் கிடைக்காததால் கிட்டத்தட்ட ஒரு வருடமாக வீட்டிற்குள் அடைபட்டு தான் கிடக்கிறாள். ஊர்பக்கம் கூட விடாமல் வைத்திருக்கிறான் சுரேந்தர்.

"தம்பி கல்யாண நாள் வருதும்மா. இத்தனை வருஷமா சேர்ந்து இல்லாம இந்த வருஷம் சேர்ந்து இருக்காங்க. அவன குடும்பமா கூப்பிட்டு ஆசிர்வாதம் பண்ணி அனுப்பணும்மா. விருந்தும் வைப்போம்" என பேச,

"ஆமா லதா செய்யலாம்டி. அவளும் இன்னும் இந்த பக்கமே வரல. இப்படி எதாவது நல்ல நாளுக்காவது வந்து போய் இருக்கட்டும்" என்றார் அவரும் ஆர்வமாக.

"ம்ம் முதல்ல என் வீட்டுகாரருக்கு பேசு. மாராவ அமெரிக்காவ விட்டு வராதன்னு சொன்னதுக்கு கோச்சுகிட்டான். அதுல இருந்து இவரும் அவன்கிட்ட பேசவே கூடாதுன்னுட்டாரு. அதனால நீயா கூப்புடுற மாதிரி பேசு" என சொல்லிவிட்டு வைத்திருக்க, அப்படித்தான் அவர்களுக்கான விருந்து நாளாக அன்றைய நாள் ஏற்பாடாகியது.

அன்றைய தினத்தில் அனைவருமே பழூர் செல்ல கிளம்பினர். மணிகண்டனும் சாம்பவியும் எல்லோரையும் அழைத்திருந்தனர்.

"மஞ்ச கயிறு மாத்தி புது கயிறுல தாலிய கோர்த்து மாப்ள கையால கட்டிக்கோ" என ஆண்டாள் புது மஞ்சள் கயிறை கொண்டு நீட்ட,

"எதுக்கும்மா இப்போ?" என சடைத்தாள் மனோ.

"செய்யி மனோ. இதெல்லாம் ஒரு வகைல நம்பிக்கை. நல்லதா நடக்கட்டும் நீயும் உன் புருஷனும் இனினாலும் சேந்தே இருக்கணும்னு வேண்டிக்கிட்டு கட்ட சொல்லு" என சொல்லிவிட,

குளித்து கிளம்பி அவன் வாங்கி தந்த புது புடவையில் அவன் முன் சென்று நின்றாள். இருவரும் கோவில் சென்று வரலாம் என கிளம்பி கொண்டிருந்தனர். இவர்கள் சென்று வந்ததும் எல்லோருமாக பழூர் செல்வதாக ஏற்பாடு.

"ம்ம் நானும் நல்லாதான் செலெக்ட் பண்ணிருக்கேன்ல?" என அவளை மேலிருந்து கீழாக பார்த்து அளவிட்டான்.

"ம்ம் ம்ம். அம்மா புது கயிறு கட்டிக்க சொன்னாங்க. இங்க வச்சே கட்றீங்களா இல்ல கோவில்ல வச்சு கட்டிப்போமா?" என கேட்க,

"நீ ஆசையா கேட்குற மாதிரி இல்லையே? வை?" என்றான்.

"ஒரு வருஷமு இல்லாம எதுக்கு இந்த வருஷம் மட்டும் இத்தன ஏற்பாடு? அப்ப கல்யாண நாளுக்கு வாழ்த்து கூட புருஷன் சேர்ந்திருந்தா தான் கிடைக்கும் போல. எல்லாரும் ஓவரா தான் பண்றாங்க"

"ஆத்தி மூட் மாறுதே!" என அதிர்ந்தவன், "சேரி பிடிச்சுருக்கான்னு சொல்லவே இல்ல நீ?" என கேட்க,

"நல்லாருக்கு"


"இவ்வளவு சோகமா இத நீ சொல்ல தேலையில்ல போடி" என்றதும், சிரித்தவள், "நல்லாருக்கு நிஜமா" என சொல்ல,
 
"சரி இதே சிரிச்ச மூஞ்சியா இரு, டூ மினிட்ஸ் நானும் குளிச்சு கிளம்பி வந்துடுறேன். கயிறு மாத்திறது தானே, உன் இஷ்டம் தான். மாத்தவே வேணாம்னு தோணினாலும் மாத்தாத. பட் நோ மூட் அவுட் டூடே" என்றுவிட்டு செல்ல,

"சார் ப்ளான் தெரியாதாக்கும். ஒன்னுங் கிடையாது போயா" என முனங்கிவிட்டு தான் வெளியே வந்தாள்.

பிள்ளையார் கோவில், கூட்டமில்லாமல் வெகு அமைதியாக மலையோர காற்றுடன் குளிர்ச்சியாக இருந்தது. நால்வரும் வண்டியில் சென்றிரங்க, அங்கு வாசலில் இருந்த பூக்கடையில் அவன் மல்லி வாங்கி தர அதை தலையில் வைத்துக்கொண்டாள். உள்ளே சென்று சாமி தரிசனம் செய்தனர்.

ஒரு சிறிய டப்பாவிலிருந்த அவள் தாலி கோர்த்த கயிறை அவனிடம் நீட்ட, "வேணாம்னு சொன்ன?" என கேட்டபடி வாங்கியவன், வெகு இயல்பாக அவள் கழுத்தில் கட்டிவிட, பிள்ளைகள் இருவரும் பார்த்து நின்றனர்.

"முதல்ல வேணாம்னு நினைச்சேன், சரி கட்டிப்போமேன்னு அப்றம் தோணுச்சு, அதான் வீட்லயே பழைய கயிறுல இருந்தது புது கயிறுக்கு மாத்தி எடுத்துட்டு வந்துட்டேன்" என்றவள், கழுத்தில் கிடந்த பழைய கயிற்றை கழற்றி உண்டியலில் போட்டாள்.

கண்ணன் மட்டுமே, கேள்வி கேட்டபடி வர, கிருஷ்ணனுக்கு வெளியே கடையில் பார்த்த பொம்மை துப்பாக்கி வேண்டும், அதை எப்படி கேட்டு வாங்குவது என்ற தீவிர சிந்தனையில் இருக்க இங்கு நடப்பவை எதுவும் கவனத்தில் இல்லை. முதல் போல் தாத்தாவுடன் இல்லாததால் எதற்கும் அடம்படித்து வாங்க முடிவதில்லை. கூடவே இருப்பதால் மார்க்கண்டேயனும் அதட்டி மிரட்டிவிடுவான். பல நேரங்களில் ஒரிரு அடியும் வைத்திருக்க, இப்போது கொஞ்சம் பயம் வந்து சேட்டை குறைந்திருக்கிறது. அந்த பயம் வெளியே வந்தும் அந்த துப்பாக்கியை கேட்க விடவில்லை.

மனோ மார்க் இருவருக்கும் மனது நிறைவாக இருக்க அப்படியே தான் அவன் வீட்டிற்கு கிளம்பினர். அங்கு வாசலில் ஆரத்தியுடன் நின்றாள் லதா.

 
நல்ல கலகலப்பான பதிவு...முடிவுல லதா நிக்கிறா...கைகலப்பாயிருமா 😝😝😝😝
 
Top