எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அன்பின் ராகம் (கதை திரி)

Kavisowmi

Well-known member
அன்பின் ராகம்
1
அந்த அதிகாலை வேளையில் எங்கோ தொலைவில் இருந்த கோவிலில் இருந்து கந்தசஷ்டி கவச பாடல் மெலிதாக கசிந்து வந்து கொண்டு இருந்தது. திலகவதி சமையல் அறையில் வேலையில் ஈடுபட்டு இருந்தார்.
ஏற்கனவே சப்பாத்திக்கு மாவு பிசைந்து வைத்திருக்க, குருமா வைப்பதற்காக கேரட், பீன்ஸ் இன்னும் தேவையானதை எடுத்தவர் ஒரு பாத்திரத்தில் வெட்டி காய்கறிகளை போட்டுக்கொண்டு இருக்க,
தன் அறையில் தூக்கம் கலைந்து கண் திறந்தான் ராம், இருபத்தியேழு வயது இளைஞன். சிவந்த நிறம், ஆறடிக்கு சற்றே குறைவான உயரம்,. சிகரெட் பிடிக்காத சிவந்த உதடு, கொஞ்சமாக சுருள் கலந்த தலைமுடி, தொடர் உடற்பயிற்சியின் விளைவாக வந்த தேவைக்கு அதிகமாக சதைபிடுப்பு எங்கும் இல்லாத உடல்வாகு என்றிருந்தான் அவன். எழுந்தவன் கண்களை திறந்து கண்ணாடியில் முகம் பார்த்தபடி நேரம் பார்க்க, வழக்கத்தை விடவும் சற்று தாமதமாக விழித்திருந்தான்.
இன்றைக்கு வாக்கிங் போக முடியாது என நினைத்தவன், முந்திய இரவு யோசித்து கொண்டு இருந்ததை தனது அன்னையிடம் கூற நினைத்தபடி வேகமாக காலை கடன்களை முடித்து, தனது மொபைலை எடுத்துக் கொண்டு தனது அன்னையைத் தேடி சமையல் அறைக்குள் வந்தான்.
அவர் தரையில் அமர்ந்து காய் நறுக்குவதை பார்த்தவன் இவனும் தாயார் அருகில் அமர, “என்ன ராம் இப்பதான் எழுந்தையா?” அப்பா கூட வாக்கிங் போகலையா? காலையிலேயே அம்மாவை தேடி வந்து இருக்கற என்ன விஷயம்?” என விசாரித்தார் அவனது அம்மா திலகவதி.
“அம்மா அது வந்து” என்றபடி வெட்டி வைத்திருந்த கேரட் இரண்டை வாயில் போட்டவன், “அம்மா உன்கிட்ட கொஞ்சம் பேசணும்மா இத அப்பாகிட்ட சொன்னா மொறைபாங்க, நீங்க தான் எனக்கு பதில் சொல்லணும்” என ஆரம்பித்துவிட்டான்.
“பீடிகையெல்லாம் பலமாக இருக்கு, என்ன ஆச்சு?” திலகவதி கேட்க,
“அம்மா இப்ப பார்த்து இருக்கறமே அந்த பொAண்ணு, வேணாம்மா”
“டேய் என்னடா இப்படி சொல்லற? நிச்சயத்துக்கு தேதி குறிச்சிட்டு வந்தாச்சு, இப்ப போய் இப்படி சொல்லற, தப்பு ராம்! அந்த பொண்ணுக்கு என்ன குறை? ரொம்ப அமைதியான பொண்ணு, உன்னோட குணத்துக்கும் அவளுக்கும் நல்லதாகவே பொருத்தி போகும். பார்க்க அவ்வளவு சாந்தமான முகம் அவ்வளவு அழகா இருக்கறா, பொண்ணு இல்லாத வீட்டுக்கு இனி எல்லாமுமா இருக்க போறான்னு ஆசைபட்டா, இப்போ இப்படி வந்து சொல்லற, யாராவது பொண்ண பற்றி தப்பா சொன்னாங்களா?”
“ஐயோ அம்மா அப்படியெல்லாம் எதுவும் இல்லை”
“அப்புறம் என்னடா? இப்படி வந்து சொல்லற”
“அம்மா இந்த வாட்சப் போட்டோ பாரேன்” அவன் தனது மொபைலில் எடுத்துக்காட்ட அங்கு அழகாக இளம்பச்சை சுடிதாரில் சிரித்து கொண்டு இருந்தாள் அவள்.
மொபைலை பார்த்தவர் “எவ்வளவு அழகாக இருக்கறா என்னோட மருமகள் எதுக்கு இந்த போட்டோவை காட்டின?”
“அம்மா ரொம்ப சின்ன பொண்ணா தெரியறா, உங்களுக்கு தெரியலையா?”
“இதுதான் உன்னோட பிரச்சினையா? அவளுக்கு இருபத்தியோரு வயசு முடிய போகுதுடா பார்க்கத்தான் உனக்கு அப்படி தெரியறா, உன்னோட பாட்டி என்னோட மாமியாருக்கு கல்யாணம் ஆகும் போது வயசு என்ன தெரியுமா? வெறும் பதினாலுதான். எனக்கு கல்யாணம் ஆகும் போது அப்பதான் பதினேழு முடிந்து பதினெட்டு தொடங்கிச்சு”
“அம்மா அதுக்கு பேரு கல்யாணம் இல்ல, குழந்தை திருமணம், தப்பு தப்பா சொல்ல கூடாது. அந்த காலத்தில் உங்களுக்கு மட்டும் இல்லை பாட்டியையும் கொடுமை படுத்தி இருக்கறாங்க கல்யாணம் என்கிற பேர்ல, அதில்லமா அந்த பொண்ணுக்கும் எனக்கும் நிறைய வயசு வித்தியாசம் இருக்கற மாதிரி தோணுது”
“ராம் அந்த பொண்ணு கிட்ட பேசுனயா!! அதனால்தான் உனக்கு பிடிக்காமல் போயிடுச்சா உனக்கும் வயசு இதிபத்தியேழுதான் ஆகுது, உன்னை விடவும் ஆறு வயது தான் சின்னவ. இதெல்லாம் ரொம்ப சின்ன விஷயம், நம்ம சந்துருக்கு எப்படி முடிச்சாங்க பார்த்தியா? அவங்க ரெண்டு பேருக்கும் கிட்டத்தட்ட பன்னிரெண்டு வயசு வித்தியாசம். உனக்கு அப்படி பார்க்கலைடா, நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து நின்றா அவ்வளவு பொருத்தமா இருக்கும்”
“அன்றைக்கு வந்தவங்க சொன்னது கவனிச்சியா? அத்தனை பேரும் உங்க ரெண்டு பேரோட பொருத்தத்தைதான் பேசினாங்க, நான் கூட இங்கே வந்ததும் போன் பண்ணி சுற்றி போட சொன்னேன் தெரியுமா?” பேசியபடி கேஸ்டவ்வை பற்ற வைத்து ஒரு புறம் குருமாவிற்கு தாளித்து விட்டவள், அடுத்த அடுப்பில் சப்பாத்தி கல்லை வைக்கவும்,
பிசைந்து வைத்த மாவை உருட்டி சப்பாத்தி போட ஏதுவாக தேய்த்து தந்தபடி “அம்மா” என மறுபடியும் ராம் ஆரம்பித்தான்.
“ராம் இனி பேசினா கோபம் வந்துவிடும், கொஞ்சம் யோசித்து பாரு இத மாதிரி நீயும் என்னுடைய மருமகளும் சமையற்கட்டுல பேசி சிரிச்சிட்டே சமையல் பண்ணினா எவ்வளவு அழகா இருக்கும். நான் ஒரு பக்கம் கனவு கண்டுட்டு இருக்கிறேன். நீ என்னடான்னா வந்து இப்படி சொல்லற. போ போய் ரெடி ஆகிட்டு வா சமையல் வேலை முடிஞ்சது, அப்பாவும் இப்ப வந்திடுவாங்க, என்கிட்ட சொன்னது மாதிரி வேற யார் கிட்டேயும் உளரி வைக்காத, அவங்ககிட்ட சொல்லிட்டோம், அவங்க உறவுக்காரங்ககிட்ட சொல்ல ஆரம்பிச்சுட்டேன்னு நேற்று போன் பண்ணினாங்க, இனி வேண்டாம், பிடிக்கலைன்னு சொன்னா அது அந்த பொண்ணதான் பாதிக்கும் புரியுதா? பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டு இப்ப வேண்டாம்னா பொண்ணு சரியில்லை போல, அதனால்தான் வேண்டாம்ன்னு சொல்லறாங்கன்னு பேச ஆரம்பித்தா கஷ்டம். நம்மால வாழ்ந்ததாகதான் இருக்கணும், யாரும் கெட்டு போனதா சொல்ல கூடாது. என்ன சரியா?”
“ம் சரிம்மா” என்றபடி மாடி ஏறியவனுக்கு இரண்டு நாட்கள் முன்பு பார்த்த அந்த முகம் மனதில் தோன்றியது. சுமித்ரா ஓரளவு உயரம், இடுப்பு வரை நீண்ட தலைமுடி. கண்களில் இவனை பார்த்த போது தோன்றிய சிறு குறும்பில் பார்த்த நொடியே இவனை அவள் அடியோடு சாய்த்திருந்தாள்.
மல்லிகா ராகவேந்தரின் ஒரே தவபுதல்வி. இவர்கள் மொத்தமாக பதினோரு பேர் பார்க்க சென்றிருக்க, அங்கும் அது போல பெண்ணின் நெருங்கிய உறவினர்கள் என பதினைந்து பேருக்கு மேல் இருந்தனர்.
“பொண்ணு ரொம்ப அமைதி. அதிர்ந்து பேச தெரியாது எங்க வீட்டு பொண்ண கட்டிக்க உங்க பையன் கொடுத்து வச்சிருக்கணும்” என்பது போல இவர்கள் காதுபடவே பேசினர்.
திலகவதி பெண்ணை அழைத்து வரவும் இயல்பாக அழைத்து அருகில் அமர்த்தி கொண்டார்.
“என்னமா படிச்சு இருக்கற?” திலகவதி கேட்க, சங்கீதம் போல விழுந்தது அவளது குரல்.
“பிஎஸ்சி பிசிக்ஸ்” என அவள் கூறியது அவ்வளவு இனிமையாக இருந்தது. அதுவரை அவளை நிமிர்ந்து பார்க்க தயங்கிய ராம் அவளை நிமிர்ந்து பார்த்தான்.
மாநிறத்திற்கும் சற்றே கூடுதல் நிறம். ஏனோ இங்கு அழைத்து வந்த கூச்சமோ ஏதோ.
முகம் லேசாக முத்து முத்தான வியர்வையோடு பிங்க் நிறத்தை தத்து எடுத்து இருந்தது.
திலகவதி தன் கைகளுக்குள் அவளது கையை வைத்தபடி “பயப்படாத சுமித்ரா இதெல்லாம் இயல்பாகவே நடக்கற விஷயம்தான், ராம் ரொம்ப நல்லவன், உன்னை பூ மாதிரி பார்த்துப்பான். இங்கே நீ எப்படி இருந்தியோ அதே மாதிரி அங்கேயும் இருக்கலாம். உன்னை கேள்வி கேட்க அங்கே யாருமே கிடையாது”
திலகவதி கேட்ட ஒவ்வொன்றிற்கும் சுமித்ரா பதில் சொல்லச் சொல்ல, தன்னை அறியாமல் அவளது முகத்தை பார்த்து கொண்டு இருந்தான் ராம்.
திலகவதிக்கு கேட்டது வரைக்கும் திருப்தியை தர, நிமிர்ந்து ராமிடம் பிடித்து இருக்கிறதா என கேட்க நினைத்தவர் அவனது முகம் பார்த்தே புரிந்து கொண்டார்.
“எங்களுக்கும் பொண்ண ரொம்ப பிடித்து இருக்கு. ராம் ஏதாவது பொண்ணுகிட்ட பேசறதுன்னா பேசிவிட்டு வா” என்றுவிட்டார்.
ஐந்து நிமிடத்தில் பேச அருகில் இருந்த அறை ஒதுக்கித் தரப்பட, கொஞ்சம் பதட்டதோடு ராமும், அதை விட பதட்டத்தோடு சுமித்ராவும் நின்றிருந்தனர்.
சுமித்ரா சேலையின் முந்தியை திருகியபடி நிற்க, ராமோ பாக்கெட்டில் இருந்த கர்சீப்பை எடுத்து முகத்தில் தோன்றி இருந்த வியர்வையை துடைத்து கொண்டு இருந்தான்.
“என்னை உனக்கு பிடிச்சிருக்குதா?” என இவன் கேட்க, அதே நேரம் அவளும் அதையே கேட்டிருந்தாள். ஒரே நேரத்தில் இரண்டு பேரும் ஒன்றையே கூற இருவர் முகத்திலும் லேசான புன்னகை தோன்றி இருந்தது.
“சுமித்ரா” என மறுபடியும் ஆரம்பித்தவன் ”லேடிஸ் பஸ்ட், என்ன உங்களுக்கு பிடித்து இருக்கா?” என இவன் கேட்க,
பிடித்து இருக்கிறது என்பது போல அவள் தலையாட்டினாள்.
“உங்களோட வாய்ஸ் ரொம்ப நல்லா இருக்குது, பேசறதே பாடற மாதிரி அவ்வளவு இனிமையாக இருக்குது, சோ. தலையாட்டாம பதில் சொல்லுங்க”
“பிடிச்சிருக்கு”
“போதுங்க” என்றபடி வெளியேறி இருந்தான்.
இவன் தந்தை அருகில் போய் நிற்கவும், திலகவதி சுமித்ராவின் தாயார் மல்லிகாவிடம் “எங்களுக்கு பொண்ண பிடிச்சி இருக்கு போய் சீக்கிரம் நல்ல நாள் பார்த்துவிட்டு நிச்சயம் பண்ணிடலாம்” என சொல்லிவிட்டு புறப்பட தயாராகினர்.
“ராம் போகலாமா?”
“சரிமா”
“என்ன சரி? பொண்ணு கிட்ட நம்பர் ஏதாவது வாங்கினயா? நீ நம்பர் கொடுத்தாயா?”
இல்லை என்பது போல அவன் தலையாட்ட,
“இரு நான் வாங்கிட்டு வரேன், இந்த காலத்தில் இப்படியும் பிள்ளைங்க இருக்கதான் செய்யுது. சுமித்ரா போன் நம்பர் தாம்மா, எனக்கு உன்கிட்ட பேசணும்ன்னு தோணினா கூப்பிடுவேன்ல” என நம்பரும் வாங்கி இவனிடம் தந்து இருந்தார்.
அன்று இரவே ‘குட் நைட்’ மெசேஜ் தட்டி விட்டவன், அவளை வாட்ச்சப்லும் இணைத்து இருந்தான். இயல்பாக எதாவது போட்டோ அனுப்பு என இவன் கேட்க, அவள் அனுப்பிய புகைப்படம் பார்த்தவனுக்கு குழப்பம் தோன்றி இருந்தது.
இந்த வார இறுதியில் நிச்சயம் செய்வதாக கூறியிருக்க அவள் அனுப்பி இருந்த புகைப்படத்தில் ஜூன்ஸ் டீசர்ட்டில் பதினைந்து, பதினாறு வயது பெண் போல மிகவும் சிறியவளாக தெரிந்தாள்.
இப்போது தனது தாயாரிடம் பேசவும் கொஞ்சம் திருப்தியாக உணர, வேகமாக குளித்து புறப்பட்டு வெளியே வந்தான். தந்தை டைனிங் ஹாலில் அமர்ந்து சப்பாத்தி சாப்பிட்டு கொண்டு இருக்க, அருகில் சென்று அமர்ந்தான்.
இவனை பார்த்ததும் தட்டில் சாப்பிட திலகவதி எடுத்து வைக்க, தகப்பனார் கிருஷ்ணனோ “ராம் இன்றைக்கு சாயங்காலம் கடைக்கு போகணும், பொண்ணுக்கு சேலையும் அப்படியே மோதிரமும் வாங்கணும். இன்றைக்கு வாங்கிட்டா மத்த வேலை பார்க்க சரியாக இருக்கும் என்ன சொல்லற?” என விசாரித்தார்.
“சரிப்பா”
“என்னவோ போடா, என்ன சொன்னாலும் ஒரே ஓரு வார்த்தையில் பதில் சொல்லற. திலகவதி நான் கிளம்பறேன்” என கிளம்பிப் போனார்.
ராமின் தந்தை அருகிலேயே ஸ்டேஸ்னரி பொருட்களை மொத்த விலைக்கு வாங்கி விற்று கொண்டு இருந்தார். ராம் படித்து முடிக்கவும் ஐந்து கிலோமீட்டர் தொலைவிலேயே அக்கவுண்டன்சி வேலை கிடைக்க, ஆரம்பத்தில் பதினைந்து ஆயிரமாக இருந்த சம்பளம் இப்போது இருபத்தைந்தாக மாறி இருந்தது. சம்பளம் சற்றே குறைவாக தோன்றினாலும் தாய் தந்தையை அருகிலேயே இருந்து பார்க்க வேண்டும் என்பது அவனது ஆசை. அதற்கு ஏற்றாற் போல் வேலையும் அமைய, வாழ்க்கை எந்த ஒரு சிக்கலும் இல்லாமல் நடந்து கொண்டு இருந்தது.
இவன் சாப்பிட்டு முடித்து எழுந்தவன் “அம்மா நானும் ஆபீஸ் கிளம்பறேன்மா”
“சரி ராம். அப்பா சொன்னது ஞாபகம் இருக்குல்ல. சாயங்காலம் கடைக்கு போகணும் சீக்கிரமே வந்துவிடு” என்ன கூறியபடி கதவை அடைத்தவருக்கு,
தனக்கு பின்னால் பாசத்தோடு அணைத்தபடி “எங்க அம்மா குணத்துக்கு இங்க வர்ற பொண்ணுங்க கொடுத்து வச்சி இருக்கணும். லவ் யூ மாம்” என மகன் சொன்னது ஞாபகம் வர, புதிய உறவு வரப்போகும் நாளுக்காக காத்திருக்க ஆரம்பித்தார்.
 
Last edited:

Kavisowmi

Well-known member
2
அர்ஜூனனின் பார்வை இப்படி தான் இருந்து இருக்குமோ? நேர் கொண்ட பார்வை கூடவே இலக்கை விட்டு இங்கும் அங்கும் நகராத குறி விலகாத பார்வை! தொலைவில் தெரிந்த பறவையை தனது டிஎஸ்எல்ஆர் கேமராவில் படம் பிடித்து கொண்டு இருந்தான் குரு.
அவசர தேவைக்கான சில முக்கிய பொருட்கள் இருக்கும் சிறு பேக்கை முதுகில் மாட்டி இருந்தவன், கிட்டத்தட்ட இரண்டு மணி நேரமாக பறவையை படம் பிடிக்க அருகில் இருந்த உயரமான மரத்தின் மேல் படுத்தபடி பார்த்துக் கொண்டு இருந்தான். எதிர்பார்த்த பறவை கிடைக்காவிட்டாலும் இன்று அவனது கேமராவிற்கு நல்ல தீனி கிடைத்து இருந்தது.
குரு!! இவனை பற்றி என்ன சொல்ல?! இன்னும் சில மாதங்களில் இருபத்தி ஆறு வயதை தொடப்போகிற இளைஞன். ஆறடி உயரம். சக மனிதர்களை போல மாநிறம், முகத்தில் எப்போதும் நிரந்தரமாக உறைந்திட்ட சிரிப்பு. கண்களில் பவர் கிளாஸ் உபயம் தொடர்ந்து கம்ப்யூட்டர் பார்த்ததினால். காற்றில் கலைந்தாடும் தலை கேசம். கொஞ்சம் தாடியுண்டு. ஒரு வாரமாக காட்டில் சுற்றுவதினால்! யார் இங்கே பார்க்க போறா, அதுவும் இந்த ஆட்களே இல்லாத காட்டில், இதுவும் ஒரு காரணம்.
ஒரே ஒரு குறிக்கோள்தான் இவனுடையது. வாழ்க்கை வாழ்வதற்கே! அனைத்து ஊர்களையும் சுற்றிப் பார்க்க வேண்டும். இவன் கால்தடம் பாதிக்காத இடம் இருக்க கூடாது. இவனது வீட்டிலும் இவனது விருப்பத்திற்கு தலை சாய்க்க அன்றிலிருந்து இன்றுவரை இவனது வேலையே பொழுது போக்காய் மாறிவிட்டது. கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படித்தது. படிப்பு முடியும் போதே கேம்பஸ்சில் செலக்ட் ஆகி இருக்க, அப்போது ஆரம்பித்தது இந்த ஊர் சுற்றும் படலம்.
முதலில் பதினோரு மாத அக்ரிமெண்ட்டில் வேலை கிடைத்தது சென்னையில்.
அந்த பதினோரு மாதமும் சென்னையின் அவன் கால் பதிக்காத, பார்க்காத இடம் இல்லை எனும் அளவிற்கு சுற்றி இருந்தான். அடுத்தது மும்பை, அங்கு முடியவும் மத்திய பிரதேசம் தற்போது பெங்களுரில் வேலைக்கு செலக்ட் ஆகி இருந்தான். கிடைத்த விடுமுறையை செலவு செய்ய இந்த முறை இந்த காட்டை தேர்வு செய்திருந்தான்.
இவனது ஹாபி போட்டோ எடுப்பது, எடுத்த போட்டோகளை எக்ஷிபிஷன் போல நடத்துவது. அது மட்டும் இல்லாமல் ஸ்கூல், காலேஜ் என்ன அவ்வப்போது இவனது புகைப்படத்தை கண்காட்சியாக வைத்து கொண்டிருந்தான். சிறப்பான புகைப்படத்தை போட்டிகளுக்கும் அனுப்பி வைத்து, அதற்கும் பரிசுகளை வாங்கி கொண்டு இருந்தான்.
தற்சமயம் வந்தது கூட அமெரிக்காவில் நடக்க இருக்கும் புகைபட போட்டியில் கலந்து கொள்ள புகைப்படம் எடுக்கத்தான். அதற்கு இந்த காட்டைத் தேர்வு செய்திருந்தான். இங்கு வந்து முழுதாய் பதினைந்து நாட்கள் முடிந்திருக்க, இன்றோடு புறப்பட்டு விட வேண்டும் அவன்.
இந்த பதினைந்து நாட்களுமே தங்கி இருந்தது அருகில் இருந்த மலைகிராமத்தில். அவர்களோடு நன்றாகவே இந்த நாட்களில் பழகி இருந்தான். எப்போதும் முன் எச்சரிக்கை அதிகம், அதனால் கூடவே அவர்களின் ஒருவனை அழைத்து வந்திருந்தான்.
இவனது முடிவை சொன்னபோது இவனது தாயார் சொன்னது “உன்னோட ஆசைக்கு கொஞ்ச நாள் சுற்றிக்கோ. அதுக்காக உனக்குன்னு எந்த பொறுப்பும் இல்லைன்னு அர்த்தம் இல்லை. உன்னோட பாதுகாப்பு முக்கியம், எங்கே எவ்வளவு தூரம் போனாலும் இங்கே உனக்காக ஒரு குடும்பம் காத்திட்டு இருக்கு அப்படிங்கறத மறக்க கூடாது”
“மாம்! ஏன் இப்படி பேசறிங்க?”
“தப்பா எதுவும் செய்யமாட்டேன்னு நம்பிக்கை இருக்கு குரு, ஆனாலும் சொல்ல வேண்டியது என்னுடைய கடமை இல்லையா?”
“மாம், தப்பா எதுவுமே நடக்காது என்னுடைய கல்யாணம் கூட உங்களுக்கு பிடித்த பெண் கூட தான் நடக்கும். நீங்க கவலையே பட வேண்டாம்” அப்படி ஒவ்வொரு முறையும் சொல்லி வருபவன் தான்.
கொஞ்சம் அம்மா மீது எப்போதுமே உரிமை அதிகம் இவனுக்கு. படித்தது ஹாஸ்டலில் அப்போது இருந்தே விடுமுறைக்கு மட்டுமே வீட்டிற்கு செல்வது.
ஒவ்வொரு முறையும் இவன் விடுமுறை முடிந்து புறப்படுகையில் இவன் தாயார் “நாலு நாள் தங்கறே, ஆனால் அடுத்த தடவை எப்ப வருவேன்னு என்ன ஏங்க வைக்கறடா” என்பார்.
இந்த முறை அவனுடைய குடும்பத்தோடு பேசியே முழுதாய் பதினைந்து நாட்கள் முடிந்து இருந்தது. டவர் இல்லாத காட்டு பகுதி. புறப்பட வேண்டும் என நினைக்கவும் அனைவரது முகமும் கண்முன் வருகிறது.
நேரம் பார்க்க, மாலை நான்கு மணியை நெருங்கிக் கொண்டு இருந்தது. இப்போதே லேசாக பனி விழ ஆரம்பித்து இருக்க, காற்றோடு இலேசாக குளிர ஆரம்பித்து இருந்தது. இன்னும் ஒரு மணி நேரத்தில் இருட்டி விடும் எனப் புரிய, அவனை தாண்டி இரண்டு கிளைகளுக்கு அப்பால் படுத்திருந்தவனைப் பார்த்தான்.
இவனுக்குதான் இந்த காடு அதிசயம், சற்று தொலைவில் படுத்து இருந்தவனுக்கு இல்லை போலும். நீண்ட மரத்தில் குப்புற படுத்தபடி கீழே விழாமல் இருக்க, மரத்தை இருக்கி அணைத்தபடி நல்ல தூக்கத்தில் இருந்தான்.
தனது கையில் இருந்த கேமராவை பாதுகாப்பாக எடுத்து வைத்தவன், சற்றே இறங்கி அவன் இருந்த கிளைக்கு சென்றவன் “டேய் மாறா, எழுந்திரு” என தட்டினான்.
கண்ணை கசக்கியபடி விழித்தவனை “டேய் கீழ விழுந்துடாதே, எலும்பு மிஞ்சாது”
“முடிஞ்சுதுங்களா துரை. போகலாமா?”
“போகலாம், இன்னும் கொஞ்ச நேரத்தில் இருட்டிடும், அப்புறம் இங்கே இருக்கிறது ரிஸ்க்” பேசியபடி இவன் இறங்க, இவனை தொடர்ந்து அவனும் இறங்கினான்.
“என்னா தூக்கம் தூங்கற?“

“அது வந்து துரை பொண்சாதி மாசமா இருக்கறா இல்லையா, ராத்திரி ஆனா காலு நோவுது கை நோவுதுன்னு தூங்க மாட்டேங்கறா. அவ கூடவே முழிச்சி இருக்கிறானா இந்த காற்றுக்கு தூக்கம் வந்திடுது”
‘சரி தான் நீ பாட்டுக்கு என் கூட வந்துட்டே. காலையில் யார் பார்த்துப்பா?”
“அவளோட அம்மா, என்னோட அம்மா ரெண்டு பேரும் பக்கத்தில் தான் சாமி இருக்கறாங்க நல்லா பார்த்துப்பாங்க”
இரண்டு பேரும் பேசியபடி அவன் தங்கி இருந்த கிராமத்தை நோக்கி நடக்கத் துவங்கினர். குரு நடக்க சற்றே திணறினான், மாறனுக்கு அது ஒன்றும் கஷ்டமான காரியமாக தோன்றவில்லை. அசால்டாக வேகமாக நடந்து கொண்டு இருந்தான். நடக்கின்ற அலுப்பு தெரியாமல் இருக்க அவனிடம் பேசியபடி வந்து கொண்டிருந்தான் குரு.
“மாறா, இங்கே விலங்குகளோட நடமாட்டம் கிடையாதா”
“ஏன் அப்படி கேட்கறிங்க? போன மாசம் கூட புலி ஊருக்குள்ள வந்துட்டு போச்சு, அப்புறம் காட்டெருமை அடிக்கடி வரும். யானை சொல்லவே வேண்டாம். அடிக்கடி வரும். நீங்க தான் பார்த்திருக்கறிங்களே”
“பயம் இல்லையா உங்க ஆளுங்களுக்கு? கிட்டத்தட்ட நூறு பேருக்கு மேல இங்கே இருக்கிறிங்க”
“துரை இங்கேயே வாழ்ந்தாச்சு புதுசா எங்கேயும் போய் வாழ முடியாது. இந்த பூமி தான் எங்களோடு, இத விட்டுட்டு எங்கேயும் போக மாட்டோம்”
“இந்த கவர்மெண்ட் உங்களுக்கு எதுவுமே செய்யலையா? இங்கே கரண்ட் இல்லை, தண்ணீர் கூட இங்கே இருக்கற ஓடையில் தான் எடுக்கறிங்க, ரோடு வசதி இல்லை, ஏதாவது வேண்டும்னா மலையவிட்டு இறங்கி தான் போகணும். முக்கியமா ஏதாவது வேணும்னா என்ன செய்விங்க?”
“ரேசன்கார்டு தந்து இருக்கே, அத வாங்க போக கூட திருவிழா மாதிரி போவாங்க மொத்தமா. கீழே போனா டிரக் வரும், அதுல போனம்மின்னா மதியம் போய் சேர்ந்திடலாம். பொருட்களை வாங்கிட்டு அதே டிரக்ல இங்கே வந்தா மறுபடியும் வீட்டு வந்து சேர ராத்திரி
ஆகிடும். அப்புறம் இங்கே விளையற கிழங்கு தான் பாதி நாள் சாப்பாட்டுக்கு”
இவர்கள் பேசியபடியே இருப்பிடத்தை அடைந்து இருந்தனர். தனக்காக ஒதுக்கி இருந்த குடிசை பகுதிக்குள் நுழைந்தவன், நாளை செய்ய வேண்டியதை பட்டியல் இட்டபடி ஏற்கனவே கேமராவில் பதிவு செய்திருந்த படத்தை ஓட விட்டான்.
முதல் படத்தில் பாம்பு தன் இரையை விழுங்கிக் கொண்டிருக்க, அடுத்த படத்திலோ அதே பாம்பை கழுகு கவ்விக்கொண்டு இருந்தது. இயற்கையின் உணவுச் சங்கிலியை இவன் வியந்தபடி இருக்க, மாறன் சாப்பிட கிழங்கு மற்றும் கொஞ்சம் தேனோடு வந்து இருந்தான். இருந்தாங்க துரை இன்றைக்கு சாப்பிட்டு இதுதான்”
“என்ன மாறா, வாசமே தூக்கலா இருக்கு?”
“கிழங்கு தான், அதுல கொஞ்சம் மசாலா போட்டு இருக்கறாங்க. வெறும் கிழங்க இந்த தேன்ல முக்கி சாப்பிட்டால் அவ்வளவு ருசியா இருக்கும். சாப்பிட்டு பாருங்க துரை”
“தேங்க்ஸ், இங்கே உன்னோட அறிமுகம் மட்டும் கிடைக்கலைன்னா ரொம்ப கஷ்டப்பட்டு போய் இருப்பேன்”
“துரை எனக்கு அங்கே இருந்து வர்ற டிரக் ஒட்டற டிரைவர் என்னுடைய நண்பன் அவன் சொன்னா என்ன உதவி வேணும்னாலும் செய்வேன். சாப்பிடுங்கள் உங்க கூட தூங்கற பையனை வரச்சொல்லறேன்”
“உட்காரு மாறா நீயும் சாப்பிடு”
“அங்கே பொண்சாதி சாப்பிடாமல் காத்திட்டு இருப்பா” அவன் வெட்கப்பட்டு சிரிக்க, அவனது முகம் பார்த்தவனுக்கும் சிரிப்பு வந்தது.
எளிய மனிதர்கள் அவர்களது எண்ணமும் எளியது. இவ்வாறு மனதில் நினைத்தவன் “சரி நீ கிளம்பிக்கோ நான் பார்த்துக்கறேன்”
“ஏதாவது ஓன்றுன்னா சத்தம் கொடுங்க, பக்கத்து குடிசையில்தான் இருப்பேன்” இதுவும் இவன் இங்கு வந்த நாளில் இருந்து தினமும் சொல்வது தான். இரவு கூட வீட்டிற்கு இரண்டு பேர் என காட்டு விலங்குகள் வருகிறதா என பார்க்க காவல் காத்துக்கொண்டு இருந்தனர். இவன் இங்கே வந்த அடுத்த நாள் கூட சிறுத்தை புலி நுழையவும், அதை துரத்த விடிய விடிய விழித்திருந்தனர்”
காலையில் புறப்பட ஏதுவாக குரு வைத்திருந்த சிறு பையில் மொத்த பொருட்களையும் அடைக்க ஆரம்பித்தான். ஐந்து மணிக்கு எழுந்து புறப்பட்டால் சரியாக பத்து மணிக்கு டிரக்கில் ஏறிவிடலாம் என நினைத்தபடி, மறுபடியும் கூட ஒரு முறை இதுவரை எடுத்த புகைப்படங்களைப் பார்க்க ஆரம்பித்தான்.
அவனுக்கு பெஸ்ட் என தோன்றுவதை தனது பாக்கெட்டில் இருந்து சிறு டைரியில் குறிப்பெழுதி வைத்து விட்டு நிம்மதியாக கண் மூடினான். ஆனால் விடியற்காலம் நான்கு மணியை தொடும் போதே பரபரப்பு தொற்றி கொண்டது. அந்த நேரத்தில் மாறனின் மனைவிக்கு இடுப்பு வலி துவங்கி இருக்க அவளது சத்தம் கேட்டு கண் விழித்தவன் வேகமாக அருகில் இருந்த அவனது குடுசைக்கு அருகில் சென்றான்.
ஏற்கனவே பலரும் அருகில் கூடி இருக்க அவர்களோடு இவனும் நின்றிருக்க குடிசையின் உள் இருந்து வந்த வயதான பாட்டியோ “கழுத்துல குடல் சிக்கி இருக்கு. பிள்ளை வலி தான், உசிற காப்பாத்தனும்னா டவுன் ஆஸ்பத்திரிக்கு அழைச்சுட்டு போங்க. இனி இந்த உசிரு சாமி கைலதான் இருக்கு” என்றபடி நகர.
நிமிடம் கூட தாமதிக்காமல் வேகவேகமாக வேலையில் ஈடுபட்டனர் அங்கிருந்தவர்கள் இரண்டு பெரிய மூங்கில் எடுத்து வரப்பட்டு அதில் தொட்டில் போல கட்ட நால்வர் ஆளுக்கு ஒரு புறமாக பிடித்து கொள்ள மாறனின் மனைவி வள்ளி அதில் ஏற்றப்பட வேகமாக கீழே இறங்க ஆரம்பித்தனர். கூடவே குருவும் அவர்களோடு இறங்க ஆரம்பித்தான். இதயம் முழுவதும் பயம் அவனது மனதில் அந்த நிமிடம் இருந்தது. கூடவே இந்த அரசாங்கத்தின் மேல் முதல் முதலாக கோபம் வந்தது.
இத்தனை பேர் இருக்கும் இடத்தில் சிறு சுகாதார நிலையம் கூட இல்லாதது வெறுப்பாய் இருந்தது. பாதி தூரம் வரும் போதே தனது நோக்கியா செல் பேசியில் பேட்டரியை போட்டவன் சிக்னல் ஏதாவது கிடைக்கிறதா என்பதை பார்த்தபடி வேகமாக இறங்கினான். எப்போதுமே காடுகளுக்கோ சிக்னல் இல்லாத பகுதிக்கு செல்லும் போது இரண்டு பேட்டரிகளை முழுவதுமாக சார்ஜ் செய்தபடி தனியாக கவரில் போட்டு எடுத்து செல்வது அவனது வழக்கம்.
இன்றும் அது போலவே கொண்டு வந்திருந்தான்.
வள்ளியின் இடைவிடாத சத்தத்தோடு கூடவே “இன்னும் கொஞ்ச தூரம் தான், அழாதே போய்விடலாம்” என்ற சமாதான குரலும் போட்டியிட, சற்றே சிக்னல் கிடைக்கவும் அவசர ஆம்புலன்ஸ் தேவைக்கு போன் செய்தவன் விவரம் கூற உடனே புறப்படுவதாக கூறி இருந்தனர்.
சிறு ஓடையை தாண்டி வரவும் ஆம்புலன்ஸ் வரவும் சரியாக இருக்க, முதலுதவியை முதலில் செய்தவர்கள், நேராக கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்கு வண்டியை வேகமாக விட்டனர். மனைவியின் கூடவே ஏறிய மாறனின் கையில் பாக்கெட்டில் இருந்து மொத்த பணத்தையும் எடுத்து கையில் கொடுத்தவன், “செலவுக்கு வச்சிக்கோ எதுவும் ஆகாது. நான் மறுபடியும் உன்ன வந்து பார்க்கறேன்” என சொல்லவும். அந்த நேரம் மாறனின் கண்களுக்கு குரு கடவுளாகத்தான் தெரிந்தான்.
ஆம்புலன்ஸ் புறப்படவும் அடுத்து வர இருக்கின்ற டிரக்கிற்காக காத்திருக்கும் போது தான் நிறைவாக உணர்ந்தான் குரு. தன்னால் ஆன உதவியை செய்த நிம்மதி மனதில் இருந்தது. யாருமே சாதிக்க முடியாததை தான் மட்டும் தனியாக சாதித்த உணர்வு இருந்தது. இரங்கும் போது இருந்த பரபரப்பு குறைந்து இருக்க, வழியில் இருந்த கல்லில் அமர்ந்தான் கொஞ்சம் ஆசுவாசமாக.
 
Last edited:

Kavisowmi

Well-known member
3
மாலை ஐந்து முப்பதை தொடும் போதே அழைக்க ஆரம்பித்து இருந்தார் திலகவதி. போனை அட்டென் செய்தவனிடம் “புறப்பட்டாச்சா ராம், ஒரு மணி நேரம் முன்னாடியே பர்மிஷன் கேட்க சொன்னேனே. கேட்டதானே நான் இங்கே புறப்பட்டாச்சு, நீயும் நானும் தான் போக போறோம், அப்பாவுக்கு கடையில் வேலை இருக்குன்னு சொன்னாங்க”
“ம், சரிமா, கிளம்புறேன்” தனது சீட்டில் இருந்து எழுந்தவன் சக நண்பர்களை பார்க்க,
அருகில் அமர்ந்து இருந்த நண்பனோ “என்ன அம்மா பிள்ளையை, அம்மா கூப்பிட்டாச்சா?”
“போடா” என்றவன் கையில் கிடைத்த பென்சிலை வீச, அதை அப்படியே கேட்ச் செய்தவன் “ஆல் த பெஸ்ட் ராம்” சத்தமிட, சிரித்தபடி தலையாட்டி விட்டு புறப்பட்டான்.
இவனது ஆபீஸ் செல்வபுரம் பகுதியில் சற்றே உட்புறத்தில் இருந்தது. முதல் மாடி முழுவதும் இவர்களது ஆபீஸிற்காய் தேர்வு செய்து இருந்தனர். தனது ஹெல்மெட்டை தலைக்கு அணிந்தவன் தனது ஹீரோ ஹோண்டாவை உயிர்பித்தான். ராமுடைய நல்ல பழக்கங்களில் ஒன்று தலைகவசம் இல்லாமல் வண்டியை தொட மாட்டான், இன்றும் அது போலவே தனது வீட்டை நோக்கி வண்டியைத் திருப்பினான்.
இவனது வீடு வடகோவை பகுதியில் இருந்தது. ஆரம்பத்தில் இவர்கள் இந்த வீட்டை வாங்கிய பொழுது இவனுக்கு வயது ஐந்து இருக்கலாம். வெகுவாக வீடுகள் இல்லாமல் அமைதியாக இருந்த ஏரியா, தற்சமயம் பெரிய பெரிய கட்டிடங்கள், கடைகள் என வெகுவாக மாறி இருந்தது. இப்போதெல்லாம் இருபத்தி நான்கு மணி நேரமும் வண்டிகளின் ஓயாத சத்தம் காதில் கேட்டுக்கொண்டே இருக்கும்.
மூன்று செண்ட் இடத்தில் முன் புறம் வண்டி நிறுத்த சிறு போர்டிகோ, கூடவே கேட்டின் அருகே ரோஜா செடி சிலதும். மறுபுறத்தில் செம்பருத்தி செடி இருக்க, ரோட்டில் இருந்த பெரிய புங்கை மரம் எப்போதும் குளிர்ந்த காற்றை இவர்களுக்கு பரிசளித்துக் கொண்டு இருந்தது.
கீழே ஹால், கிச்சன், தாய் தந்தைக்கு பெட் ரூம் என கட்டியிருக்க மாடியில் அதே போல பெரிய ஹால் இரண்டு பெட் ரூம் கட்டியிருந்தார்கள். வீட்டின் அருகே வண்டியை நிறுத்தியவன் அழைப்பு மணியை அழுத்தவும் கதவைத் திறந்தவர்,
“வா, வா உனக்காக தான் காத்து இருக்கிறேன். போ போய் டிரஸ்சேஞ்ச் பண்ணிட்டு வா காபி எடுத்து வைக்கிறேன்”
“அம்மா இந்த டிரஸ்சே நல்லாதானே இருக்கு. முகம் கை கால் கழுகினா பத்தாதா?“
“பத்தாதுடா, ஆபீஸ்க்கு போட்ட டிரஸ்ஸோட வருவாயா? நல்லதா போட்டுட்டு வா. சோம்பேறி”
“அம்மா பக்கத்தில் இருக்கற கடைக்கு இது போதாதா?”
“டேய் நாம இப்போ பொண்ணு வீட்டுக்கு போயிட்டு, கடைக்கு போக போறோம்”
“என்னது பொண்ணு வீட்டுக்கா? இப்போ எதுக்கு அங்க போகணும்? துணிக்கடைக்கு தானே போகணும்ன்னு சொன்னிங்க?”
“நிச்சயம்ன்னா சும்மாவா? அந்த பொண்ணுக்கு நம்ம சார்பாக மோதிரம் போடணும்டா அதற்கு அளவு வாங்க வேண்டாமா? சீக்கிரம் கிளம்புடா, ஏதாவது சொல்லிட போறேன். அவனவன் பொண்ண பார்க்க, பேச ஐடியா கிடைக்கலைன்னு சுற்றுவான். இங்கே நானே இவனுக்கு எடுத்து கொடுத்தாலும் புரிஞ்சிக்க மாட்டேங்கறான் தத்தி”
“நடந்துங்க அம்மா நடந்துங்க. அங்கே யாராவது என்னுடைய முகத்தை பார்க்கட்டும் அப்புறம் இருக்கு”
“என்னடா ஓவரா மிரட்டற? அன்றைக்கு எல்லோரும் ஆர்வமா வரப்போகிற மாப்பிள்ளையை வேடிக்கை பார்த்தாங்க, இன்றைக்கு எல்லாம் அங்கே யாருமே இருக்க மாட்டாங்க, பொண்ணும் பொண்ணோட அப்பா அம்மாதான் இருப்பாங்க. போயிட்டு வந்துவிடலாம்” பேசியபடியே கையில் எடுத்து வந்த காபியை இவனது கையில் தர, வாங்கி அருந்தியபடி
“இது வேண்டாத வேலைமா”
“டேய் பேசாமல் கிளம்பற. இவன் டெய்லியும் குட் மானிங் சொல்லவும் குட்நைட் சொல்லத்தான் நம்பர் வாங்கி தந்தேனா“
“அம்மா இத யார் சொன்னாங்க?”
“என்னோட மருமகள்தான். போன் பண்ணி அவள்கிட்ட பேசினேன். உன்னை தெரியும்டா எப்படியும் பேசி இருக்க மாட்டே, எதுக்கும் கேட்டு வைக்கலாம்ன்னு கேட்டா மெசேஜ் பண்ணுவாங்க அத்தை தினமும் காலையில் குட்மானிங் சொல்வாங்க. நைட் குட் நைட் சொல்லுவாங்கன்னு அந்த பிள்ளை சொல்லுது. ஒரு விஷயத்தில் ரெண்டு பேரும் பக்காவா பொருந்தி போறிங்க, ரெண்டு பேருமே ஒன்னா நம்பர் தத்திடா,
புரிய வைக்கறதுக்குள்ள நான் ஒரு வழி ஆகிடுவேன் போல இருக்கு. ஏதோ கல்யாணத்துக்கு முன்னாடி கொஞ்சம் பேசி வாங்கி இருந்தா, கல்யாணத்து அன்றைக்கு பதட்டம் இருக்காது, எடுக்கிற வீடியோ நல்லா வரும்ன்னு நினைச்சா, என்னுடைய பேர பசங்க உங்க ஆல்பம் பார்த்து யாரு இது பாட்டி உர்ன்னு இருக்கறாங்கன்னு கேட்க போறாங்க“
“அம்மா நீ ரொம்ப என்னை ஓட்டற”
“டேய் ஏதாவது சொன்னா உன்னை நீ மாத்திக்க போறியா? இல்லல்ல, அப்புறம் என்ன?
குடிச்சாச்சுன்னா டம்ளரை கொடு, அங்கே போயிட்டு, மறுபடியும் கடைக்கு போயிட்டு வர டைம் ஆகிடும்”
இருவருமே பேசியபடி வண்டியில் ஏற, பெண்ணின் வீட்டை நோக்கி வண்டியை திருப்பினான். பெண்ணின் வீடு வடவள்ளியில் இருந்தது. இவர்கள் வீட்டில் இருந்து ஆறேழு கிலொமீட்டர் தொலைவு.
வண்டியில் போகும்போது “இப்ப போறதுக்கே இப்படி யோசிக்கறையே ராம். நாளைக்கு திருமணம் முடிந்ததும் அடிக்கடி போகணுமே அப்பவும் இப்படி தான் சொல்வாயா? அவளோ அவங்க வீட்டுக்கு ஒரே பொண்ணு. எப்படியும் மாதத்தில் நாலு தடவையாவது போகணும்ன்னு சொல்வா”
“அம்மா அதுக்கு இன்னும் நாள் இருக்கு. அப்ப பார்த்திருக்கலாம்“
“என்னடா பார்க்க போறே? நானும் பார்க்கதானே போறேன்” இருபது நிமிட பிரயாணத்தில் சுமித்ராவின் வீட்டை அடைந்து இருந்தனர் இருவரும்.
ஏற்கனவே போனில் சொல்லி இருந்ததால் இவர்கள் வரவுமே வாசல் வரை வந்து அழைத்து சென்றனர். ஹாலில் அமர்ந்திருக்க, வரவேற்பதற்கு அடையாளமாக முதலில் தண்ணீர் எடுத்து வந்தாள் சுமித்ரா.
அதை இருவருக்கும் தர, அன்று போல அருகில் அமர்த்திக்கொண்டார் திலகவதி.
இரண்டு நிமிடம் போகவும் “அத்தை என்னுடைய ப்ரெண்டுங்க அன்றைக்கு வரும் போது இவங்கள பார்க்கல. பார்க்கணும்ன்னு சொன்னாங்க. வரச்சொல்லவா பக்கத்தில் தான் வீடு, போன் பண்ணினா உடனே வந்துடுவாங்க”
“ம் சொல்லுமா, எப்படியும் பத்து நிமிடமாவது இருப்போமே“
“ஒரு நிமிடம் அத்தை” என்றபடி உள் அறைக்குள் சென்னவள் செல்பேசியில் பேசிவிட்டு வந்து மறுபடியும் அமரவும், சுமித்ராவின் தாயார் மல்லிகா காபி கொடுக்கவும் சரியாக இருந்தது. அடுத்த சில நிமிடத்திலேயே ஓ,வென கத்தியபடி சிறுவர் சிறுமியர் என ஆறு பேர் கொண்ட குழு உள் நுழைந்தார்கள்.
ராமை பார்த்து. அதிலிருந்த சுட்டிதனமான பெண் ஒருத்தி “அங்கிள் நீங்க தான் எங்க அக்காவை கல்யாணம் பண்ணிக்க போறிங்களா?”
அந்த பெண் கேட்கவும் இவனது முகத்தில் லேசாக தோன்றிய புன்னகையோடு ஆமாம் என்பது போல இவன் தலையாட்ட,
“சரி அங்கிள் பார்க்க எங்க அக்கா மாதிரி அழகா இல்லாட்டியும், ஏதோ சுமாராக இருக்கறிங்க. எங்க அக்காவை அடிக்கடி இங்கே கூப்பிட்டுட்டு வருவிங்க தானே”
“ஏய் வாலு பேசாம இரு” என சுமித்ரா கூறவும்,
திலகவதியோ “குழந்தை தானே பேசட்டும் விடு சுமி” என்றவர் “ராம் பதில் சொல்லுடா” என்க,
“அழைச்சிட்டு வருவேன்டா குட்டிமா”
“ஓகே அக்கா , அங்கிள் அழைச்சிட்டெல்லாம் வருவாங்களாம், அங்கிள் நல்லவர் தான், நீ கல்யாணம் பண்ணிக்கோ” எனவும் திலகவதிக்குதான் சிரிப்பை அடக்க முடியவில்லை. “சுமித்ரா இவங்கதான் உன்னோட ப்ரெண்டா?”
“ஆமாம் அத்தை, அன்றைக்கு நீங்க வரும் போது எல்லோரும் ஸ்கூல் போய் இருந்தாங்க அதனால தான் இப்போது வரச்சொன்னேன்”
அதற்குள்ளாக ராகவேந்தரும் வந்திருக்க, சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்து விட்டு அளவு மோதிரம் வாங்கி புறப்பட்டனர்.
வண்டியை ஸ்டார்ட் பண்ணவும் சிரிக்க ஆரம்பித்து இருந்தார் திலகவதி ”என்னுடைய மருமகள் எப்படி குழந்தை தனம் மாறாமல் இருக்கறா?”
“அம்மா அதற்கு தான் வேண்டாம்ன்னு சொன்னேன் நீ கேட்கலை”
“போடா மறுபடியும் அப்படி பேசாத. நீ அந்த சின்ன பசங்க கிட்ட பேசும் போது அவள் உன்னை எப்படி கவனிச்சா தெரியுமா. அவளுக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்குடா”
“அம்மா”
“எப்படியும் இன்னும் கல்யாணத்துக்கு முன்னாடி நாலைஞ்சு தடவை பார்க்க வேண்டியது வரும். நல்லா பேசிக்கோ. போன வாரம் ஒரு கல்யாணத்துக்கு போனமே பொண்ணும் மாப்பிள்ளையும் எப்படி பேசிட்டு இருந்திங்க தெரியுமா? அதுமாதிரி நீ அவளும் உரிமையா பேசிக்கணும்”
அதற்குள்ளாக காந்திபுரம் பகுதியில் உள்ள பிரபல நகைக்கடைக்கு வந்து இருந்தனர். வண்டியை பார்க் செய்தபடி “பொண்ணு இல்லாத வீடுன்னு சொல்லி சொல்லியே உனக்கு பைத்தியம் பிடிக்க போகுது. இப்படி உருகுறீங்க”
“பின்ன இல்லையா? வீட்டுக்கு மூன்று ஆம்பிளைங்க இருக்கறீங்கன்னுதான் பேரு, பாதி நேரம் தனியாகத்தான் இருக்கிறேன். இவள் வந்துட்டா நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து என்னென்ன செய்வோம் தெரியுமா. நிறைய யோசித்து வச்சிருக்கறேன்”
“உங்கள திருத்த முடியாது, வந்து மோதிரம் டிசைன் பாருங்க. கிட்டத்தட்ட பத்துக்கும் மேல் தேர்வு செய்து கடைசியாக ஒன்றை தேர்வு செய்ய. கார்டில் பணம் செலுத்தியவன் போகலாமா எனவும்,
“டேய் எங்கே போகலாமான்னு கேட்கறே ? சேலை எடுக்கணும் அந்த துணிக்கடைக்கு போகலாம் வா. என அழைத்து சென்றவள் அங்கேயும் பல சேலைகளை பார்த்து கொண்டிருக்க,
“அம்மா உனக்கு கூட இப்படி தேடி இருக்க மாட்ட”
“இருடா இது நல்லா இருக்குல்ல” கடைசியாக அழகான மெரூன்கலர் பட்டு கோல்டன் கலர் பார்டர் சேலையை தேர்வு செய்தவர் ‘அது சுமிக்கு அழகா இருக்கும். நிச்சயத்து அன்றைக்கு அவ தனியா தெரியணும் இல்லையா. தேவதை மாதிரி இருக்கணும்டா, அச்சச்சோ மறந்துட்டேன் அளவு ப்ளெவ்ஸ் வாங்கல பேசிட்டே கிளம்பி வந்துவிட்டோம்”
“ம்மா. ஒன்று மட்டும் நிஜம் ,கல்யாணத்துக்கு அப்புறம் இங்கே மாமியாரும் மருமகளும் சேர்ந்து மகனைதான் கொடுமை பண்ண போறிங்க, அது தான் நடக்க போகுது. நல்லா கேட்டுக்கோங்கமா. மறுபடியும் அளவு ப்ளெவ்ஸ் வாங்கிட்டு வரலாம் வான்னு என்னை கூப்பிட கூடாது நான் வரமாட்டேன்”
“ஓவரா பண்ணாத, நீ ஒன்றும் வர வேண்டாம், நான் அப்பாவை அழைச்சிட்டு போய் வாங்கிட்டு வந்துக்கறேன். உனக்கு இருபத்தி ஐந்திலேயே பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணி இருந்தா இந்நேரம் என்னை பாட்டின்னு கூப்பிட பேரனோ, பேத்தியோ இருந்து இருக்கும். நீ தான் கேட்கலை. இப்பவும் இப்படி விருப்பம் இல்லாத மாதிரி நடந்தால் எனக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கு தெரியுமா?”
“ஐயோ அம்மா அழுதுடாதிங்க. எனக்கு அந்த பொண்ண ரொம்ப பிடிச்சிருக்கு
அதுவும் அவளோட ப்ரெண்டுங்க 'கூட்டத்தை ரொம்ப ரொம்ப பிடித்துருக்கு சரியா? நீ வரச் சொன்னா எங்கே கூப்பிட்டாலும் வரேன்”
ராம் எப்போதும் அப்படித்தான் அவனுக்கு அவனுடைய அம்மா வருத்தப்படக்கூடாது. எவ்வளவு தான் அம்மாவோடு கூட கூட பேசினாலும் வருத்தமாக பேசினாள் என்றாள் அவ்வளவு தான் திலவதியுடம் சரண்டர் ஆகி விடுவான். இப்போதும் அதுவே நடந்தது.
பேசியபடியே வீடு வந்திருக்க உள் நுழைந்தவருக்கு தெரியவில்லை, சூழ்நிலை வேறாய் அமைய, தீர்வு இதுதான் என நினைத்து தானே இனி சுமித்ராவை இங்கே அழைத்து வர வேண்டாம் என்று அவரே சொல்வார் என.
 

Kavisowmi

Well-known member
4
கல்லில் அமர்ந்திருந்த குரு சுற்றிலும் பார்க்க, நீண்ட நேர் கோட்டில் பயணித்தது சாலை. அடர்வனம் எனும் அளவிற்கு இரண்டு புறமும் இடைவெளி இல்லாமல் அடைந்திருந்த மரங்கள் கூடவே புதராய் மண்டிக்கிடந்த சிறு செடி, கொடிகள். சூரியனின் வெம்மை தெரியாத அளவிற்கு இதமாய் சற்றே ஈரபதத்தோடு வீசும் காற்று. மனது ஏகத்திற்கு அமைதியாக இருந்தது.
எதை பற்றிய யோசனையும் இல்லாமல் சற்று நேரம் கண்கள் மூடி அமர்ந்தவன் கண்களை திறக்க காற்றின் வேகத்திற்கு கலைந்தாடும் கேசம் எதுவும் அவனுக்கு பொருட்டாக தோன்றவில்லை. கண்கள் தூரமாய் வெறித்திருக்க மூளை வேகமாக செயல் பட்டு கொண்டிருந்தது. அடுத்த பத்து நாட்களுக்கான ப்ளான் அவனது மண்டைக்குள் வரிசையாக வலம் வந்து கொண்டு இருந்தது.
அடுத்தது நேராக இங்கிருந்து இறங்கியதும், அருகில் இருக்கும் ஊரில் இரவு தங்கி விட்டு நேராக பெங்களூர் செல்ல வேண்டும். ஆபீஸை பார்த்து விட்டு தங்குவதற்கு ஏதுவாக இடம் பார்க்க வேண்டும்.
புதிதாக ஒவ்வொரு ஊருக்கும் போகும் போது இவன் சந்திக்கும் முக்கிய பிரச்சினை. இந்த இட பிரச்சனை.
இவனது பாலிசி எலி வளையானாலும் தனி வளை நல்லது. இவனுக்கு மொத்தமாக கூட்டமாக தங்குவது பிடிக்காத விஷயம். ஒவ்வொரு முறையுமே வேலை கிடைப்பது இந்த நிமிடம் வரை சிரமமாக இருந்தது இல்லை. இவனது திறமை உடனே வேலையை தேடித் தந்தது, தங்கும் அறைதான் இவனை ஒவ்வொரு முறையும் ஆட்டம் காண வைக்கும்.
இம்முறை எப்படி சமாளிப்பது? என யோசிக்க எதுவும் நினைவிற்கு வர வில்லை.
வெறித்த பார்வையை, தாவி ஓடிய சிறு முயல் குட்டி கலைத்து விட, அதை பார்க்கவும் அவனை அறியாமல் துரு துரு வென தன்னிடம் வம்பிழுக்கும் பெண்ணின் ஞாபகம் வந்தது.
தனது பேகின் உள் இருந்த தனது அன்ட்ராயிட் போனை எடுத்து உயிர்ப்பித்தான். இந்த இடத்தில் சுத்தமாக மறுபடியும் டவர் இல்லாமல் நெட்ஓர்க் கட் ஆகி இருந்தது. கடைசியாக இவன் இங்கு வருவதற்கு முன்னால் வாட்ச்சப் சாட்டிங்கில் பேசியது. அதை படிக்க படிக்கவே உதட்டில் சிறு சிரிப்பு தோன்றி இருந்தது.
“ஹீரோ ஸார் எங்கே இருக்கறிங்க?”
“அதென்ன எப்ப பாரு இப்படியே கூப்படற” இவனது கேள்வி இப்படியாக தொடர
“உயிரை காப்பாற்றினவங்கள என்ன சொல்லி அழைப்பாங்க நான் கூப்பிடறதுதான் சரி”
“இதையே ஒவ்வொரு முறையும் சொல்லுவாயா? அத விடு இப்போது எங்கே இருக்கற? காலேஜ்லயா? நாளைக்கு லீவு தானே வீட்டுக்கு போகலையா?”
“ஷப்பா ஒரு தடவை தான் தெரியாம தப்பு பண்ணுவாங்க, எப்பவும் இததான் கேட்பிங்களா? பெங்களுரில் இருக்கற காலேஜ்ல நடத்த போகிற ஒர்க்ஷாப்பிற்கு நான் செலக்ட் ஆகி இருக்கறேன், மேக்ஸ் சம்மந்தபட்டது, இன்னும் ஒன் மந்த் அங்கேதான் இருக்க போறேன். இங்கே எங்க காலேஜ்ல இருந்து என் கூட இன்னும் ரெண்டு பொண்ணுங்க வராங்க. பிஸி இனி நீங்களே சாட்டிங் வந்தா கூட நான் வர மாட்டேன்”
“ஆல் த பெஸ்ட். விஷாலி”
“தேங்க்யூ. தேங்க்யூ, இப்ப ஸார் சொல்லுங்க உங்களோடு ப்ளான் என்னன்னு, ஏன்னா கடைசியாக சாட் பண்ணும் மோது வேலைய விடப்போறதா சொன்ன மாதிரி இருந்தது”
“அதெல்லாம் விட்டு வேற வேலையும் கிடைச்சாச்சு. இப்போதைக்கு இன்னும் மூன்று மாதத்தில் நடக்க போகிற சிறந்த புகைபடபோட்டிக்கு நல்ல போட்டோ தேவைபடுதுன்னு கிளம்ப போறேன்”
“பையனா பொறந்தா இது நல்ல பெனிபிட், ஈசியா வெளியே விடறாங்க.
யாருக்கும் பயப்பட வேண்டாம். யார் கிட்டேயும் பர்மிஷனும் கேட்க வேண்டாம்”
“யார்மா சொன்னாங்க? உனக்கு இப்படி ஒரு புரளியை கிளப்பி விட்டது யாரு? அப்படி எதுவும் இல்லை. என்னோட அம்மா சொல்வாங்க எவ்வளவு உயரம் வேணும்னாலும் பற ஆனால் உன்னோட கூடு இங்கே தான் இருக்கு. அதற்கு திரும்பி வந்துடுன்னு, எங்க வேணும்னாலும் போகலாம், ஆனாலும் இங்கேயும் கேட்டுட்டு தான் போகணும். புரிஞ்சுதா”
“நல்லா புரிஞ்சது, கேட்காமல் எங்கேயும் நான் போக மாட்டேன் ஓகே வா? பை”
இவன் மனதில் நினைத்து கொண்டது ‘இவள் குட்டி புயல்தான்’
மொபைலை பார்த்தவனுக்கு புயலை பார்த்த சந்தர்ப்பம் ஞாபகம் வந்தது. இவன் நான்காம் வருடம் இன்ஜினியரிங் படித்த போது நடந்தது. அன்றைய நாளும் புகைப்பட கண்காட்சி ஒன்றை முதல் முதலாக அந்த ஆடிட்டோரியத்தில் நடத்திக்கொண்டு இருந்தான். அவன் மட்டும் அல்ல இன்னும் அவனது நண்பர்கள் பலர் ஏதோ ஒரு ஸ்டாலை போட்டு இருக்க முதல் முதலாக இவனது தொகுப்பை இவனும் அங்கே போட்டிருந்தான்.
இவனது காலேஜ் மட்டும் அல்லாது பிற காலேஜ் ஸ்டூடண்டும் வந்து கொண்டு இருந்தனர். வருபவர்கள் ஒவ்வொருவருக்கும் விளக்கமாக எந்த நாட்டு பறவை, எந்த சீசனுக்கு இங்கே வரும், எந்த இடத்தில் எடுத்தது என தெளிவாக புரியும் படி விளக்கிக் கொண்டு இருந்தான்.
விஷாலியை பார்த்தது அப்போதுதான் முதல் முறை. இவனிடம் கேட்க அவளுக்கு நூறு சந்தேகம் இருந்தது. ஒவ்வொரு போட்டோவையும் எடுத்த இடம் சூழ்நிலை அனைத்தையும் ஆர்வமாக கேட்டுக்கொண்டு இருந்தாள்.
அந்த நாட்களில் இந்த அளவுக்கு சுற்றியது இல்லை. தமிழ் நாட்டில் ஓரளவிற்கு சுற்றி இருந்தான். அங்கிருக்கும் பெஸ்டானது தான் அப்போது இருந்தது.
அனைத்தையும் பார்த்தவள் அந்த வாரம் முழுவதும் கண்காட்சி இருக்க, அடுத்தடுத்த நாட்களிலும் வேறு வேறு நண்பர்களோடு வந்து சென்று கொண்டிருந்தாள்.
அப்போது குரு படித்தது கோவையில் பிரபலமான இன்ஜினியரிங் கல்லூரியில்.
அப்போதே பிடிவாதமாக ஹாஸ்டலில் தங்கி இருந்தான். ‘தனியாக எல்லாம் விட முடியாது எதுவாக இருந்தாலும் இங்கே எங்க கூட இரு’ என தந்தை ஒரு புறம் கூற, இவனது தாய், சகோதரன் இருவருமே ‘இங்கே பக்கத்தில் தானே தூரமாக ஒன்றும் தங்கலையே பார்த்துக்கலாம்ங்க’ என இவனது ஆசைக்கு துணை நின்றதினால் இது சாத்தியமாகி இருந்தது.
நான்கு நாட்களாய் அவளை கவனித்தவன், ஐந்தாவது நாளும் வரவும் இவளை தனியாக அழைத்தவன் “எந்த காலேஜ் நீ? நீ ஏன் தினமும் இங்கே சுத்திகிட்டு இருக்கற?” என கேட்கவும் ஒரு நிமிடம் தயங்கியவள், படபடவென பேச ஆரம்பித்தாள்.
நீண்ட நாட்களாய் தெரிந்த நண்பனை போல் இயல்பாக பேச்சு வந்தது அவளுக்கு. சிறு தயக்கம் கூட இல்லாமல் அவள் பேசவும் இவனுக்குத்தான் அவள் பேசி முடிக்கும் போது தன் மேல் கொஞ்சம் வருத்தமாக இருந்தது.
தான் படிக்கும் காலேஜின் பெயரை சொன்னவள் “தினமும் வேற வேற போட்டோஸ் மாத்தறிங்க. அதுதான் ஒரு ஆர்வத்தில் வரேன். இன்றைக்கும் மாற்றி இருக்கறிங்க.
ஏன் கண்காட்சிதானே அப்போது வரத்தானே செய்வாங்க? உங்களோடு போட்டோஸ் நல்லா இருந்தது, ப்ரெண்டுங்க கிட்டே சொன்னேன், அவங்க பார்க்க ஆசைப்பட்டாங்க, அதில் ஒன்றும் தப்பு இல்லையே? என்னவோ தப்பு பண்ணின மாதிரி கூப்பிட்டு கேட்கறிங்க? நான் உங்களை ஏதாவது டிஸ்டப் பண்ணினேனா? இல்லையே! ஏன் முதல் நாள் தவிர உங்க கிட்ட இதுவரைக்கும் எதுவுமே கேட்க கூட இல்லை, இந்த நான்கு நாளுமே”
“எங்க காலேஜ்ல இருந்தும் இங்கே ஸ்டால் போட்டு இருக்கறாங்க. நானும் இங்கேதான் ஒரு வாரமாக இருக்கிறேன். இந்த நேரம் கூட்டம் கம்மி அதனால சுற்றி பார்த்துவிட்டு இருக்கிறேன். கூடவே யாராவது நானும் வரேன்னு சொன்னா வராதேன்னா சொல்ல முடியும். அதனால அழைச்சிட்டு வரேன்”
“ஓ சாரி எந்த இடத்தில் உங்களோட ஸ்டால் இருக்கு? நானும் வந்து பார்க்கிறேன்”
“வாங்க. உங்கள மாதிரி கூப்பிட்டு ஏன் வந்திங்கன்னு கேட்க எல்லாம் மாட்டேன்”
“அது தான் ஸாரி கேட்டுட்டேனே இனி அத விட்டுடுங்க“
“ஜயோ மரியாதை எல்லாம் வேண்டாம். என்னோட பேரு விஷாலி இனி நீங்களும் நானும் ப்ரெண்ட்ஸ் ஓகே”
இயல்பாக கை குலுக்க அவள் கை நீட்டவும், இவனுமே கை குலுக்கியவன் “ஓகே. நான் குரு, படிக்கறது இன்ஜினியரிங். தற்சமயம் தங்கி இருக்கிறது காலேஜ் ஹாஸ்டலில் தான்”
“நானும் ஹாஸ்டல் தான். ஊரு சென்னை. அப்பா அம்மா ஒரு தம்பி. தம்பிக்கு இப்போது தான் பதிமூன்று வயது ஆகுது. இங்கே கிருஷ்ணம்மாள் காலேஜ் பிகாம், இது ரெண்டாவது வருடம். மேல படிக்கணும் இன்னும் மூன்று வருஷம் இங்கே தான்”
“ஆனால் சென்னையில் இல்லாத காலேஜா இவ்வளவு தூரம் வந்து இருக்கறிங்க”
“எல்லோருக்கும் ஒவ்வொரு கனவு இருக்கும்ல வெளியூரில் தங்கி படிக்கணும்ன்னு, அது மாதிரி எனக்கும். உடனே எல்லாம் ஓகே சொல்லல, அழுது அடம் பிடிச்சு கடைசியாக தான் இங்கே வந்து சேர்ந்தேன். என்னுடைய கஸின் ஒருத்தன் இங்கேதான் படிக்கறான். கடைசியாக அவன் நான் பார்த்துக்கறேன் அனுப்பி விடுங்கன்னு சொல்லவும் சரின்னு சம்மதிச்சாங்க, இங்கே பிரச்சினை எதுவும் இல்லை. லீவு விட்டா வீட்டுக்கு போயிடுவேன். ஜாலியா போயிட்டு இருக்கு லைப். ஊருக்கு போனா தம்பி இருப்பான். ரெண்டு நாள் ஜாலியா அவன்கிட்ட வம்பிழுக்கலாம். மறுபடியும் இங்கே. இப்போதைக்கு ரசித்து வாழறேன்”
“ஓகே நான் வரேன். எந்த இடத்தில் உன்னோட ஸ்டால்?”
“ம். வாங்க அந்த கடைசியில் திரும்பினா ரெண்டாவது எங்களோடது. ஆனால் பார்த்துவிட்டு சிரிக்க கூடாது. ஏன்னா அங்கே இருக்கிறது எல்லாம் குழந்தைங்க ரைம்ஸ் புக்” அவள் சொன்ன விதமே சிரிப்பை தூண்ட,
“அதில்லென்ன சிரிக்க இருக்கு? இப்போது இருக்கற பேரண்ட்ஸ் எல்லோரும் தன்னுடைய குழந்தைக்கு இதெல்லாம் வாங்கி கொடுக்கறாங்களே! இந்த ஐடியா யாரோடது?”
“என்னுடையது தான் ஓரளவுக்கு சேல்ஸ் பண்ணிட்டோம். நீங்களும் வாங்களேன்”
“வரலாமே, ஆனா எதையும் நான் வாங்க மாட்டேன். ஏன்னா இப்போதைக்கு எனக்கு யூஸ் ஆகாதே”
“தெரிஞ்சவங்களுக்கு பக்கத்தில் இருக்கற குழந்தைகளுக்கு கிப்ட் கூட பண்ணலாம்”

“இப்ப தெரியுது எப்படி வேகமாக உங்கோடது காலியாகுதுன்னு, இப்படிதான் பேசி பேசி ஒவ்வொருத்தரோட தலையிலேயும் கட்டறிங்களா?”
“ஹலோ, என்ன அப்படி சொல்லறிங்க வந்து பாருங்க. அதுக்கப்புறம் பேசலாம்”
அடுத்த ஸ்டாலில் இருந்தவனை பார்த்து கொள்ள சொல்லியபடி வா என்றபடி இவன் அவளோடு நடக்க,
அடுத்த திருப்பத்தில் இருந்த ஸ்டாலுக்கு இவனை அழைத்து சென்றாள். அங்கு அழகாக அடுக்கிய குட்டி குட்டி புத்தகங்கள், கூடவே கார்ட்டூன் புத்தகம், கொஞ்சம் கலரிங் புக்ஸ் என குழந்தைகளை கவரும் அனைத்தும் இருந்தது.
கைக்கு கிடைத்த சில புத்தகங்களை பிரித்துப் பார்த்தவன் “சூப்பராக இருக்கு விஷாலி குட் ஐடியா, ஓகே நான் அப்போ கிளம்பறேன்”
“இருங்க இவங்க என்னுடைய ப்ரெண்டு” என அவள் அறிமுகப்படுத்த, சிறிது நேரம் அவர்களிடம் பேசியபிறகு புறப்பட்டான்.
புறப்பட்ட குருவிற்கு கொஞ்சம் ஆச்சர்யம்தான் விஷாலியை நினைத்து. பார்த்த சில நிமிடத்திலேயே நீண்ட நாள் பழகியது போல அவள் இயல்பாக பேசியது ஆச்சர்யமாக இருந்தது. இந்த நான்கு வருடத்தில் அவனது சக கல்லூரி மாணவியர் கூட இன்னும் இவனிடம் இப்படி பேசியதில்லை.
இவனும் இவனது அன்னையிடம் பேசுவான்தான் “லொட லொடன்னு பேசாத போடா. உனக்கு வாயே வலிக்காதா?” என்பார் அவர். ஆனால் இவள் அவனையும் மீறி இருந்தாள்.
அப்போது அவளைப் பற்றி அப்படி நினைத்தவன்தான் ஆனால் அடுத்து சில மாதங்கள் கழித்து பார்க்கும் போது அவளையும் சேர்த்து இழுத்து கொண்டு ஓடிக் கொண்டிருந்தான். தங்களது உயிரை காத்து கொள்ள!
 

Kavisowmi

Well-known member
5
“திலகா, ராம் எங்கே?” கேட்ட தன் கணவனைப் பார்த்த திலகவதிக்கு கொஞ்சம் பயமாகவே இருந்தது. நேற்றிலிருந்தே கொஞ்சம் கோபமாக சுற்றி கொண்டு இருந்தார்.
“இன்னும் குளிச்சிட்டு வரலைங்க, இப்போ வந்திடுவான்”
“ம் சரி இன்னும் நிச்சயத்திற்கு போகும் போது என்னன்ன வேணும்ன்னு லிஸ்ட் போட்டு வச்சிடு, கடைசி நேரத்தில் இது இல்லை, அது இல்லைன்னு சொல்ல கூடாது”
“ம் சரிங்க”
“அப்புறம் நம்ம சுந்தரம் இருக்கான்ல அவன் பொண்ணு வீட்டை பார்க்கணும்ன்னு சொல்லி அட்ரஸ் கேட்டான், குடுத்து இருக்கிறேன்” என்றவரை பார்த்தவள்,
“இபபோ ஏன் கொடுத்திங்க அவரு எங்கே போணாலும் ஏதாவது பிரச்சினையை இழுத்து விடறாரு, இப்ப எதற்காக அங்கே போகணும். நிச்சயத்துக்கு போகும் போது பார்த்தா பத்தாதா?”
“நான் எதை செய்தாலும், நீ என்ன மட்டும் குறை சொல்லு. நீ என்ன செஞ்சு வச்சிருக்கற? முதலில் ராமை கூப்பிடு ரெண்டு பேருக்கும் பயம் விட்டு போச்சு, எனக்கு வர வர மரியாதை இல்லாம போகுது இந்த வீட்ல”
“இப்போ எதுக்கு இவ்வளவு கோபம்? முதல்ல சாப்பிட உட்காருங்க”
“எதையும் பேச விட்டுடாத, சாப்பாடு போட்டு கடைக்கு அனுப்பி வச்சிடு. நான் எதையும் கேட்க கூடாது அப்படி தானே”
“நாங்க என்ன செஞ்சோம் இப்ப எதுக்கு எங்கள திட்டறிங்க?”
கேட்கும்போதே ராமும் இறங்கி வர. ஹாலில் ஒரு புறம் முழுவதும் அடைத்தது போல் இருந்த புகைப்படத்திலேயே கிருஷ்ணனின் கண்கள் நிலைத்து இருந்தது.
“ராம் இன்னும் ரெண்டு நாள்ல நிச்சயம் பண்ண பொண்ணு வீட்டுக்கு போகணும். இப்பவாவது கால்ல சக்கரம் கட்டிட்டு ஊர் சுத்தற உன்னோட தம்பி வருவானா இல்லை வரமாட்டானா? இப்ப அவன் எங்கே இருக்கிறான்?”
“அப்பா அவனுக்குதான் போன்ல டிரை பண்ணிட்டு இருந்தேன். நாட்ரீச்சபில்ன்னு வருதுபா டிரை பண்ணிட்டே இருக்கிறேன் எப்படியும் வந்திடுவான்பா”
“இந்த தடவை எங்கே போறேன்னு சொன்னானா இல்லையா? இந்த வீட்ல யாரு நான் சொல்லறத கேட்கறா? அன்றைக்கே சொன்னேன் அவன வீட்ல இருந்து படிக்க வையின்னு அதையும் கேட்கல, வீட்டுக்கு சொல்லாம சுற்றி பார்க்க போன போதும் எதுவும் அவனை பேச விடலை, கேட்டா என்னுடைய பையன் தப்பு பண்ண மாட்டான்னு பேச வேண்டியது. இப்ப பாரு ரெண்டு பையன்னு எல்லோருக்கும் தெரியும். இன்னோருத்தன் வரலையான்னு கேட்டா என்ன பதில் சொல்லறது?”
“அப்பா ஏதோ காட்டுபக்கம் டவர் இருக்காதுன்னு சொன்னான். வந்திடுவான்பா”
“ஆரம்பத்திலேயே சொன்னேன் உனக்கும் உன்னோட அம்மாவுக்கும். அவன் என்ன கேட்டாலும் சரி சரி சொல்லவச்சு இப்போ இங்கே வந்து நிற்குது? நிச்சயத்துக்கு அவன் வரலைன்னா அப்புறம் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது”
“இப்ப எதுக்கு சத்தம் போடறிங்க? அவன் என்ன வேணும்னா செல்போனே அட்டென் பண்ணாம இருக்கறான். அங்கே என்ன சூழ்நிலையோ? இங்கே உடனே முடிவாகும்ன்னு நினைக்கலையே வந்திடுவான்ங்க”
. “வரணும். வரலைன்னா நீதான் திட்டு வாங்குவ” என்றபடி சாப்பிட அமர்ந்தவர் “ராம் உன்னோட ப்ரெண்டுங்க யாருக்காவது சொல்லறதுன்னா சொல்லிடு”
“ஆபீசில் தான் சொல்லணும்பா சொல்லிடறேன்”
“சரி நான் வரேன்” அவர் புறப்படவும்
“என்னமா ஆச்சு? காலையிலேயே ஏன் இவ்வளவு கோபமாக இருக்கறாங்க?”
. “காலையிலேயே சுந்தரத்தை பார்த்தாங்க போல இருக்கு அதுதான் இப்படி பேசிட்டு போறாங்க. நீ சாப்பிடு ராம். எப்போ குருவை கூப்பிட்ட?”
“நைட்ல இருந்து டிரை பண்ணறேன். எடுக்க மாட்டேங்கறான். பாருங்க ஹால் முழுவதும் சின்னதும் பெருசுமா போட்டோவை மாட்டி வச்சா பார்த்தா கோபம்தானே வரும். வர்ற உறவுக்காரங்களுக்கு என்ன பதில் சொல்லறது. அப்பா சொல்லறதும் சரிதானே”
“நான் என்னடா செய்யறது? சென்னையில் முதலில் வேலை கிடைக்கும் போது என்ன நடந்துச்சு, நீயே யோசித்து பாரு! அங்கே எல்லாம் வேண்டாம்ன்னு எத்தனை முறை சொன்னோம், கேட்டானா? பின்னாடியே சுற்றி போகறதுக்கு ஓகே வாங்கிட்டான்”
அன்றைய நாள் இப்போதும் ஞாபகத்தில் இருந்தது இருவருக்கும்.
வேலைக்கான ஆர்டரை வாங்கி வந்தவனுக்கு முதலில் கிருஷ்ணனிடம் அனுமதி கிடைக்கவில்லை “அங்கெல்லாம் வேண்டாம், இங்கேயே வேற நல்ல வேலையா தேடு” என ஒரே பேச்சில் முடித்து கொண்டு கிளம்பி இருந்தார்.
அன்றைய காலையில் ஆரம்பித்தவன் திலகவதியின் முந்தானையை பிடித்தபடி அலைந்து கொண்டு இருந்தான்.
“குரு ஏண்டா விடிஞ்ச நேரத்தில் இருந்து என் பின்னாடி சுத்தற?”
“அம்மா நீயே சொல்லு, முழுசா ஒரு மணி நேரம் உன்னோட பின்னாடி சுற்ற உனக்கே கோபம் வருது, அதனால தான் கேட்கறேன் இப்ப இருக்கற மாதிரிதான். எப்படி ஹாஸ்டலில் படிச்சேனோ அத மாதிரி நினைச்சுக்கோங்க லீவ் விட்டா இங்கே வந்திடுவேன். ராம் நீயாவது சொல்லேன்”
“எப்ப பாரு அவனை சப்போட்டுக்கு கூப்பிடாதே. இந்த முறை என்னால பேச முடியாது”
“அம்மா நான் தானே உன்னோட செல்ல பையன், இந்த ஒரே ஒரு முறை மட்டும் சம்மதம் வாங்கி தருவீங்களாம், அப்புறம் கேட்கவே மாட்டேன்”
அருகில் அமர்ந்தபடி குருவின் சேட்டைகளை பார்த்து கொண்டு இருந்த ராமிற்கு சிரிப்பை அடக்க முடியவில்லை “அம்மா நம்பாத, அவன் அப்படிதான் ஐஸ் வைப்பான் அப்புறம் நீங்களும் நானும்தான் அப்பாவை சமாளிக்கணும். கோர்த்து விட்டுட்டு இவன் எஸ் ஆகிடுவான், சிக்கிக்க போறது நீங்களும் நானும்தான். வேணும்னா பாருங்க இன்றைக்கு நைட் ஆனாலும் பிடித்து இருக்கற முந்தானையை விட மாட்டான். லாஸ்ட் டயம் ஹாஸ்டலில் தங்க போறதுக்கும் இப்படிதான் கெஞ்சினான். கேட்டா வெளி உலகம் தெரியணும்ன்னு கதை சொல்லுவான். என் மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லையான்னு கேட்பான்”
“மாம் உங்க பையன் வளர்ந்துட்டான்மா, அவனை ஒரு இடத்தில் கட்டிப்போட நினைக்காதிங்க” அவனை போலவே மிமிக்ரி செய்தவன். “குரு கரெக்டா சொன்னேனா உன்னை மாதிரியே?” என கேட்க
“டேய்” என ஆரம்பித்தபடி குரு அவனை துரத்த ஆரம்பித்தான். அவனது கைக்கு அகப்படாமல் போக்கு காட்டியபடி ஓடிக்கொண்டு இருந்தான் ராம்.
ஒருவழியாக ஓடி களைத்து அம்மாவின் அருகில் வந்த குரு “மாம்” என்றபடி மறுபடியும் ஆரம்பித்து இருந்தான் “என்னுடைய செல்ல அம்மால்ல நான் தானே உங்களோட செல்ல பையன்”
“டேய் அப்போ நான் யாரு?”
“பேசாமல் இரேன்டா, மறுபடியும் ஓட வைக்காதே. சொல்ல வர்றதையும் மறக்க வச்சிடுவ போல இருக்கு மாம். சம்பளம் பாருங்க. ஸ்டாட்டிங்கே நாற்பது ஆயிரம்மா! வெளிநாட்டுக்கு போக கூட வாய்ப்பு இருக்கலாம்” கண்களை விரித்தும் சுருக்கியும் விதவிதமான செய்கையில் சிறு பையனை போல் கெஞ்சியவனை பார்க்க சற்றே பாவமாக தான் இருந்தது.
“என்னது வெளிநாட்டுக்கு போறியா?” திகைத்தபடி திலகவதி கேட்க
“ம்மா இல்லை வந்து அது நான் உங்க பையன் இல்லையா? அப்படியெல்லாம் எங்கேயும் போக மாட்டேன். இங்கே மட்டும் வேலை செய்யறதுக்கு அப்பா கிட்ட பேசுங்கமா ப்ளீஸ்”
“டேய். போதும்டா அப்பா வரட்டும் பேசி பார்க்கலாம். நீ அம்மாவை விட்டு நகரு, பாவம் அவங்கள சமைக்க விடு இப்படியா படுத்தி எடுப்ப”
“நீ சொல்லு ராம் நான் போகலாம் தானே இந்த வேலைக்கு?! ம்மா நீயாவது சொல்லு”
“விதவிதமா இப்படி கேட்கற? அப்பா வரட்டும் பேசி பார்க்கறோம்”
இரவு வரவும் வேலை விஷமாக பேச அவரோ வேண்டாம் என்பதிலேயே பிடிவாதமாக இருந்தார் “முழுசா ஆறுமாதம் முடியலை லாஸ்ட் டயம் என்ன பண்ணினான்? நீதான் இரண்டு நாளா சாப்பிடாம தூங்காம அழுதிட்டு இருந்த! நான் இனி அவனை எங்கேயும் விடறதா இல்லை இந்த பேச்சை இத்தோட விடுங்க”
அன்றைய நாள் முடிய அடுத்த நாளில் நேராக கேட்டிருந்தான் குரு தந்தையிடமே “அப்பா எனக்கு ஓகே சொல்லுங்க வேலையில் ஜாயின் பண்ணிட்டா லீவுக்கு வீட்டுக்கு வந்திடுவேன். தினமும் போன் பண்ணுவேன் தப்பா எதுவும் நடந்திருக்க மாட்டேன் நம்புங்கபா”
ராம் தந்தையை பற்றி அறியாத ஒன்றை இவன் சரியாக தெரிந்து வைத்திருந்தான். என்ன தான் மற்றவரிடம் முடியாது என மறுத்தாலும் மகனாய் வந்து கேட்கும் போது அவரால் மறுக்க முடியாது. இதை சரியாக கணித்தவன் நேரடியாக கேட்க,
தயங்கியபடி “சொல்லாமல் எங்கேயும் போக கூடாது. என்கிட்ட சொல்லாட்டி பரவாயில்லை வீட்டில் அம்மா கிட்டேயோ ராம் கிட்டேயோ சொல்லணும். போயிட்டு வா” என்றுவிட்டார்.
முதல் மாத சம்பளத்தில் இவன் ஆசையாய் வாங்கியது இந்த கேமரா, அதுவும் தவணைக்கு தான். அந்த மாதத்தில் வீட்டிற்கு வந்தவன் எடுத்த போட்டோகளைதான் வீடு முழுவதும் மாட்டி இருந்தான். இவன்
அண்ணனோடு எடுத்தது இங்கே ஒன்று மாட்டி இருக்க, அளவில் சிறியதாக ஒன்றை எப்போதும் தனது அறையில் மாட்டி இருந்தான். கூடவே அப்போது ஆரம்பித்தது இந்த தேடுதல் வேட்டை.
தேடி தேடி போட்டோ எடுக்க எந்த இடம் போனாலும் முதலில் ராமிற்கு சொல்லி விடுவான். போகும் இடம் அங்கிருக்கும் சூழ்நிலை மொத்தத்தையும்.
நான்கு வருடம் கடந்திட்ட நிலையில் இப்போது அவனது சுபாவம் ஓரளவிற்கு வீட்டில் புரிந்து கொண்டு இருந்தனர்.
என்றாவது திலகவதி புலம்பும் போது ராம் தான் சமாதானம் செய்வான். “இன்னும் கொஞ்சம் நாள் தான் அவனுக்கென்று குடும்பம் குழந்தை வரும் போது மாறிடுவான் மா. வேணும்னா பாருங்க காட்டு பக்கத்தில் போகாமல் இருக்க போகிற நாளும் வரும். அப்போது சொல்லுவிங்க ராம் சொன்னது மாதிரியே நடந்துக்கறான்னு”
இப்போதும் அதை நினைத்தவன் “அம்மா ஆபீஸ் கிளம்பறேன். குருவோட போனுக்கு டிரைபண்ணி பார்க்கிறேன். நீங்க எதையும் யோசிக்காதிங்க” சொன்னவன் கிளம்பி இருந்தான்.
எப்படியும் போனை அட்டென் செய்வான் என்ற நம்பிக்கை இருந்தது. கொஞ்சமாக ஊர் சுற்றுவதில் ஆர்வம் இருந்தாலும் பொறுப்பு உள்ளவன்தான். இங்கே தேடுவார்கள் என்பதும் தெரியும்தான்.
குரு புறப்பட்டு கிட்டத்தட்ட பதினைந்து நாட்கள் ஆகி இருந்தது. எப்படியும் இன்றோ அல்லது நாளையோ வந்து விடுவான் என நினைத்தவன் மேசேஜ்,வாட்சப்,மெயில் என அனைத்திற்கும் கால் மீ என மேசேஜ் தட்டி விட்டவன் தனது அலுவலகம் நோக்கி வண்டியை திருப்பினான்.
அதே நேரம் சுமித்ரா வீட்டில் வேறு ஒரு பிரச்சினை நடந்து கொண்டு இருந்தது. திலகவதி தன் கணவனிடன் ஏன் சொன்னிங்க என கேட்ட அந்த சுந்தரம் பெண்ணின் வீட்டில் பேசி குழப்பி விட்டு சென்றிருந்தார்.
அவர் போகும் வரை பொறுமையாக இருந்த சுமித்ரா அவர் புறப்பட்டதும் தந்தையிடம் பேசிக்கொண்டு இருந்தாள்.
“அப்பா இப்பவே இப்படி மாற்றி மாற்றி பேசினா எப்படிபா? நீங்க எதுக்கும் இன்னமும் கொஞ்சம் விசாரிங்க நமக்கு இந்த இடம் சரியாக வரும்ன்னு தோணல நிச்சயதார்த்தம் வச்சிக்கலாம்ன்னு பேசிட்டு போனாங்க இப்போ இவர் வந்து வேற மாதிரி பேசறார்? அன்றைக்கு நீங்க தானே சொன்னிங்க மாப்பிள்ளை வீட்ல பெருசா டெளரி கேட்கலை உங்க பொண்ணுக்கு நீங்க ஆசைபடறத செய்ங்க போதும்ன்னு சொன்னாங்கன்னு சொன்னிங்க இவர் வேற மாதிரி சொல்லிட்டு போறார்?”
ஏற்கனவே நகை பற்றிய பேச்சு திலகவதியும் சரி கிருஷ்ணனும் சரி எதுவுமே எடுக்கவில்லை. ஏன் அதை பற்றி யோசிக்க கூட இல்லை. ஆனால் வந்தவர் “அவங்க கேட்டு இருக்க மாட்டாங்க மொத்தமாக அறுபது பவுன் போட்டுடுங்,க ரொக்கப்பணம் இரண்டு லட்சம் கொடுங்க, மாப்பிள்ளைக்கு செயின் மோதிரம் கல்யாணத்துக்கு முந்தய தினம் போடுங்க” என ஒரு லிஸ்ட் கொடுத்து விட்டு சென்றிருந்தார்.
மாற்றி மாற்றி பேசற குடும்பத்தில் நமக்கு சம்பந்தம் வேண்டாம். இந்த கல்யாணம் வேண்டாம்பா என ஒரேடியாக மறுத்துக்கொண்டு இருந்தாள் சுமித்ரா.
 

Kavisowmi

Well-known member
6
குரு இன்னமும் பழைய நினைவில் மூழ்கி இருந்தான் அதே கல்லில் அமர்ந்தபடி.
அன்று குரு மிகுந்த ஆர்வமாக அந்த நாளை எதிர் நோக்கி காத்திருந்தான். அவனுக்கு தெரிந்து முதல் முதலாக வீட்டிற்கு தெரியாமல் நடந்த ஏற்பாடு இது மிகுந்த உற்சாகத்தோடு ஆர்வமும் கூடவே சேர்ந்து இருந்தது.
குரு கூட கொஞ்சமாய் நல்ல பையன்தானோ இது வரை வீட்டிற்கு தெரியாமல் எதுவும் செய்ததில்லை. படிப்பு முடிய இன்னும் இரண்டு செமஸ்டர் இருக்க, இந்த முறை விடுமுறைக்கு வீட்டுக்கு தெரியாமல் இரண்டு நாட்கள் சுற்றி பார்க்க முடிவெடுத்து இருந்தான். அவன் தேர்ந்தெடுத்து இருந்தது தேனி தாண்டி இருந்த வனப்பகுதியை. டிரக்கிங் போக முடிவு எடுத்தவன், அதற்காக ஏற்பாடு செய்து தரும் நிறுவனத்திடம் ஆன்லைனில் புக் செய்து இருந்தான்.
கிட்டத்தட்ட ஏழு ஆயிரம் ரூபாய் கூடவே தேவையானது என கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைத்திருந்தான். ஹாஸ்டலில் உடன் தங்கும் தோழனிடம் அவனது கேமராவை கேட்டிருக்க அதையும் வாங்கி இருந்தான். அந்த காட்டு பகுதியில் குரங்குகள், முயல் என நிறைய விலங்குகள் இருக்கும் என கூறி இருக்க அந்த நாளுக்காக ஆசையாய் காத்திருந்தான்.
படிப்பதற்கு என காலேஜ் விடுமுறை தந்திருக்க இவனோ “அசைமெண்ட் முடிக்கணும் மாம், ரெண்டு நாள் ஆகும். ஞாயிற்றுக்கிழமை இரவுக்குள் வந்து விடுவேன், அப்பா கிட்ட சொல்லிடுங்க” என கூறியிருந்தான்.
ஆனால் ராம் எளிதாக இவனை கண்டு பிடித்திருந்தான். “குரு ஏன் ரெண்டு நாள் லேட்டாகும்ன்னு சொன்ன அம்மா கிட்ட?”
“ராம் அது தான் அசைமெணட்”
“யாருக்கு? என்ன நம்ப சொல்லறையா? கோகுல்கிட்ட கேட்டுட்டேன், வீட்டுக்கு தெரியாம என்ன செய்யற? மெளனமா இருந்தா விட மாட்டேன். அம்மா கிட்ட சொல்லவா?”
“ஏய் வேண்டாம் ஏன்டா நீ வேற?! தெரியாம எதுவும் செய்யல, தேனி பக்கத்தில் டிரக்கிங் ஏரியா இருக்குதுன்னு சுற்றி பார்க்க அழகா இருக்கும்ன்னு நெட்ல பார்த்தேன். போய் பார்க்கலாம்ன்னு ஆன்லைனில் புக் பண்ணி இருக்கறேன்”
“ஏன்டா உனக்கு புத்தி இப்படி போகுது? வீட்டில் சொன்னால் அப்பாவே அழைச்சிட்டு போக போறாங்க எதுக்காக சொல்லாமல் போகணும்?”
“ராம் நான் என்ன குழந்தையா? தெரியாம போவதில் தான் திரில்லிங்கே இருக்கு. உனக்கு சொன்னா புரியாது, ப்ளீஸ் அம்மா கிட்டேயோ அப்பா கிட்டேயோ உளறிடாத ப்ளீஸ் ப்ளீஸ். பணம் கட்டிட்டேன் ராம், போகலைன்னா வேஸ்டு, திரும்ப தர மாட்டாங்க! அவங்க பேஜ்லயே அத மென்சன் பண்ணி இருக்கறாங்க”
“ரெண்டு வருட சேமிப்புடா, ஏழாயிரம் ரூபாய்! திரும்ப வாங்க முடியாது. டேய் லைன்ல தானே இருக்கற?”

“ம் ம் எந்த வெப்சைட்?”
“அது வந்து” என அதனுடைய பெயரை சொன்னவன் “ராம் இவங்க வருஷா வருஷம் நிறைய பேரை அனுப்பி இருக்கறாங்க, கமெண்ட்ஸ்ல இவங்களுக்கு ஃபைவ் ஸ்டார் போட்டு இருக்கறாங்க நீயே படித்து பாரு”
“குரு,அதெல்லாம் டிரிக் அப்படி தான் போடுவாங்க எனக்கு நீ தனியாக போறது பிடிக்கலை”
“டேய் மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்காத! நான் மட்டும் போகலை, என்னோட சேர்த்து கிட்டத்தட்ட நூற்றி இருபது பேர் வராங்க. இங்கே இருந்து மட்டும் இல்லை சென்னை தர்மபுரி மதுரையின்னு எல்லா ஊர்ல இருந்தும் நிறைய அறிமுகம் இல்லாதவங்கள பார்க்க போறேன், பயம் எதுவும் இல்லை. நிறைய முன்னேற்பாடு செஞ்சு இருக்கறாங்க.
நீயே அவங்களோட வெப் பேஜை பாரு வர்றவங்களோட லிஸ்ட் இருக்கு பன்னிரெண்டு வயசு சின்ன பொண்ணு கூட வருது, நீ என்ன நினைச்சு கவலை படற! அது தான் மொபைல் இருக்கே எப்ப வேணும்னாலும் பேசிக்கலாம். நீ ஏன் பயந்துக்கற நான் இங்கே இருந்து கிளம்புன நேரத்தில் இருந்து திரும்பி வர்ற வரைக்கும் ஒன் ஹவருக்கு ஓரு தரம் உனக்கு போன் பண்ணறேன் சரியா? நீ மட்டும் வீட்ல சொல்லாம இருந்தா போதும், புரியுதா? அம்மா கிட்ட ஏதாவது சொல்லிடாத! பாரு ரெண்டு நாள், ரெண்டு நாள்ல உன் முன்னாடி வந்து நிற்க போறேன் ஓகே! ஓகேவா? சொல்லுடா?”
அவனுடேய மெளனம் இவனை கெஞ்ச வைத்து இருந்தது. “ப்ளீஸ் ராம் இந்த ஒரு முறை தான் இனி இத மாதிரி செய்ய மாட்டேன். கடைசி வருஷம்டா ஏதாவது மறக்க முடியாதது மாதிரி செய்யணும்ல்ல? நாலு வருஷம் முடிய போகுது ரொம்ப போரிங்கா போகுதுடா காலேஜ்! அவனவன் எவ்வளவு தப்பு பண்ணறாங்க தெரியுமா? தம் அடிக்கறது தண்ணி அடிக்கறதுன்னு”

“ஓ ஸாருக்கு அதெல்லாம் செய்யலைன்னு வருத்தமா வேற இருக்குதா?” ராம் இப்படி கேட்கவும்

“குரு சொதப்பறையேடா! அண்ணனையே சமாளிக்க முடியலைன்னா அப்பா கிட்டே மாட்டினா அவ்வளவு தான் போல இருக்கு டேய் அண்ணா ஜஸ்ட் நடக்கறது சொன்னேன்டா. நான் அப்படி கிடையாதுன்னு உனக்கு தான் தெரியுமே”

“ம் நான் விசாரிச்சிட்டு எனக்கு திருப்தியாக இருந்தா தான் விடுவேன், சரியா? அப்புறம் பணம் இருக்கா ஏதாவது வேண்டுமா?”
அதெல்லாம் இருக்கு நான் பார்த்துக்கறேன். பணம் கட்டியாச்சுன்ணா, செலவுக்கும் கைல இருக்கு இது போதும். மாதமாதம் தனியாக நீ வேற தர்ற, அப்பாவும் தர்றாங்க அதிகமாக செலவு செய்யறது இல்ல” ஒருவாராக பேசி சம்மதம் வாங்கி இருந்தான்.
பேசிக்கொண்டு இருக்கும் போதே திலகவதி ராமை தாண்டி நடந்தவர் “இன்னும் குரு கூட தான் பேசறையா?”
“ஆமாம்மா” எனவும்
“அது தான் ரெண்டு நாள்ல வந்து நிற்க போகிறான். அப்புறம் எக்ஸாம்மிற்கு போனா போதும்ன்னு தானே சொன்னான். சரி பேசு உங்களுக்குல்ல பேசிக்க நிறைய இருக்கும்” என்றபடி நகர

“சரிடா. பத்து நிமிடம் கழித்து கூப்பிடறேன்” என கட் செய்தவன், அவன் சொல்லியிருந்த அந்த நிறுவனத்தை தேடி அவர்களது பாதுகாப்பு எப்படி என்பதை செக் செய்தான்.

பாதுகாப்பு பெரியதாக செய்தது போல் தெரியவில்லை. வனப்பகுதி என்பதால் அங்கிருக்கும் வனத்துறையினரிடம் அனுமதி வாங்கியே காட்டிற்குள் அனுமதித்தனர். ரயிலில் தேனியில் இருந்து இறங்கவும் காட்டின் முகப்பு வரை அழைத்துச் செல்ல வாகனம் ஏற்பாடு செய்திருந்தனர்.
அதன் பிறகு மலை ஏற வந்திருப்பவர்கள் மொத்தமாகவோ சிறுசிறு குழுக்களாகவோ மலை ஏறியதாக கூறி இருந்தனர். பெரும்பாலும் நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் என சேர்ந்தே புக் செய்து இருப்பதினால் பெரிதாக சிரமம் இருந்ததாக யாரும் குறிப்பிடவில்லை. மொத்தத்தில் நல்ல அனுபவம் என முடித்து இருந்தனர்.
பத்து மணிக்கு மலை ஏற ஆரம்பித்தால் மாலை ஐந்து மணிக்கு மலை உச்சிக்கு சென்று விடலாம். ஏற்கனவே இரவு தங்குவதற்கு கூடாரம் அமைத்து இருக்க, மறுநாள் புறப்பட்டு கீழே இறங்கி வருவதாக ஏற்பாடு செய்து இருந்தது. மதியம் உணவு பாதி வழியிலும், இரவிற்கு மலை உச்சியிலும் ஏற்பாடு அவர்களே செய்திருந்தனர். பெரிதாக எடுத்து செல்வதற்கு தனியாக எதுவும் தேவையில்லை என கூறியிருந்தனர்.
இவர்கள் ஏறுவது சிறு மலை தான் அந்த இடத்தை சுற்றிலுமே அடர்ந்த காட்டு பகுதி தான். இந்த நிறுவனம் வருடத்திற்கு இரண்டு முறை இது போல ஏற்பாடு செய்து அனுப்பிக் கொண்டு இருந்தது. இது வரை எந்த ஒரு கறும் புள்ளியும் இல்லை.
சென்று வந்தவர்கள் அங்கே பார்த்த ஒவ்வொன்றை பற்றியும் அழகாக கமெண்ட் செய்திருக்க ஒவ்வொரு முறையும் சென்று வருபவர்கள் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே இருந்தது.
எழுதி இருந்ததை மொத்தமாக படித்தவனுக்கு திருப்தி வர குருவிற்கு மறுபடியும் அழைத்தவன் “குரு. ஓகேதான் போயிட்டு வா. இது தான் வீட்டுக்கு சொல்லாமல் போறது கடைசியாக இருக்கணும். மறுபடியும் இந்த மாதிரி தப்பு செய்யாதே” என்றபடி கட் செய்ய.
இருவருக்குமே அப்போது தெரியவில்லை முதல் பொய்யிலேயே மாட்டிக் கொள்ள போவது.
அடுத்த நாள் காலை அழகாக விடிய தன்னிடம் இருந்த சிறு பேக்கில் ஒரு செட் உடையை எடுத்து வைத்தவன், கேமரா கூடவே கொஞ்சம் தண்ணீர் கேக் துண்டுகள் இரண்டு என அளவாக எடுத்துக்கொண்டு ஒரு மணி நேரம் முன்னதாக ரயில் நிலையத்தில் காத்திருந்தான்.
சற்று நேரத்திற்கெல்லாம் இவனோடு இன்னோரு குடும்பமும் இவன் அருகில் வந்து நின்றது. ஐந்து வயது குழந்தை ஒன்று அழகாக அவனது அன்னையின் முதுகில் தொற்றியபடி இவனை பார்த்து சிரித்து கொண்டு இருந்தது.
அந்த குழந்தையின் தந்தை இவனை பார்த்து “ஹாய் ப்ரோ நீங்க எந்த ஊருக்கு போறிங்க?”
“ஹாய்” என ஆரம்பித்து “நான் குரு” என அறிமுகப்படுத்தி கொண்டவன் இறங்கும் இடம் சொல்ல, நாங்களும் அங்கே தான் வரோம். ஏற்கனவே போய் இருக்கிறோம் இந்த முறை பொண்ணையும் அழைச்சிட்டு போகலாம்ன்னு இருக்கிறோம். நிறைய குரங்குகள் இருக்கும். முயல் நிறைய பார்க்கலாம்” சற்று நேரத்தில் இருவருமே நண்பர்கள் ஆகி இருந்தனர்.
“பத்து நாள் லீவு அதுதான் குடும்பத்தோடு புறப்பட்டாச்சு. நீ என்ன செய்யற?”
படிக்கிறேன் ப்ரோ” என ஆரம்பித்து பேசிக்கொண்டு இருக்கும் போதே ராம் அழைத்து இருந்தான்.
“சொல்லு ராம்”
“எங்க இருக்கற, புறப்பட்டாச்சா?”
“ரயில்வே ஸ்டேசன் இன்னும் ரயில் வரல கொஞ்ச நேரம் ஆகும்”
“பார்த்து பத்திரமா போயிட்டு வா அடிக்கடி போன் பண்ணு”
“ம்,சரி, நீ வேலைக்கு புறப்பட்டாச்சா? இங்கே இருந்தே நிறைய பேர் வர்றாங்க போல இருக்கு, பயப்படாதே நான் பார்த்துக்கறேன்”
“சரி” என கட் செய்திருந்தான்.

ரயில் வந்து நிற்கவும் இவர்களின் பெட்டியில் ஏற அந்த கப்பாட்மெண்ட் முழுவதுமே அங்கு செல்லும் சுற்றுலா பயணத்திற்காக தனியாக புக் செய்து இருந்தனர். சற்று நேரத்திற்கெல்லாம் ஒருவரை ஒருவர் அறிமுகப்படுத்திக் கொண்டவர்கள் தங்களுக்குள் சலசலப்பாக பேசிக்கொண்டு இருந்தனர்.

தனியாக வந்தது தெரியாத அளவிற்கு அத்தனை பேரிடமும் சற்று நேரத்தில் நட்பு உதயமாகி இருந்தது. புதுமண ஜோடி ஒன்று சற்றே வயதான தம்பதியினர் ஒன்று என கிட்டத்தட்ட பத்து பேர் அங்கேயே சேர்த்து இருந்தனர்.

ரயில் புறப்பட பத்து நிமிடம் இருக்கும் போது கடைசியாக வந்து சேர்ந்தாள் விஷாலி. கொஞ்சம் பெரிய பேக்கோடு இவனின் எதிர் இருக்கையில் அமர்ந்தவள் இவனை பார்த்து “ஹாய் குரு இவங்க எல்லோரும் டிரக்கிங்தான் வர்றாங்களா? பரவாயில்லை போர் அடிக்காது! இங்கேயே இத்தனை பேர்ன்னா, ஸ்பாட்ல இன்னும் நிறைய பேர் இருப்பாங்க” இரண்டு பேரும் சேர்ந்து அழகாய் ப்ளான் போட்டது போல இயல்பாய் பேசத் தொடங்கி இருந்தாள்.
குரு சத்தியமாக இவளை, அதுவும் இந்த இடத்தில் எதிர்பார்க்க வில்லை. கிட்டத்தட்ட பார்த்து மூன்று மாதங்கள் முடிந்து இருந்தது. அவளது முகத்தையே சுத்தமாக மறந்து இருந்தான்.
அவள் கேட்டதிலேயே தெரிந்து விட்டது இவனுக்கு இவன் இங்கே வரப்போவது ஏற்கனவே அவளுக்கு தெரிந்து இருக்கிறது என்று அதனால் தான் புறப்பட்டு வந்தாளோ என்று கூட தோன்றியது.
“உன்மையை சொல்லு நீ என்ன பாலோ பண்ணறையா, இங்கே வர்றது உனக்கு எப்படி தெரியும்?”
“என்ன மறுபடியும் முதல்ல இருந்தா? ரெண்டு நாள் பக்கத்தில் எங்கேயாவது சுற்றி பார்க்க தனியா போகணும்ன்னு தோணிச்சு. இங்கே புக் பண்ணினேன். நீங்க வர்றது எனக்கு தெரியாது உங்களுக்கு நான் வர்றது பிடிக்கலைன்னா என்னால ஒன்றும் செய்ய முடியாது” என்றவள்,
அருகில் அமர்ந்து இருந்த குட்டி பெண்ணிடம் “ஹாய் குட்டி பாப்பா, நான் விஷாலி உங்க பேர் என்ன? என ஆரம்பித்துவிட்டாள்.
“நான் ஓன்னும் பாப்பா இல்லை சுருதி யூகேஜி”
“வாவ் அவ்வளவு பெரிய பொண்ணா நீங்க இவங்க யாரு உன்னோட அப்பா, அம்மாவா?”
“ஆமாம்”
“என்கிட்ட வர்றிங்களா? என்னுடைய மொபைல்ல கார்டூன் படம் வச்சி இருக்கிறேன், நாம ரெண்டு பேரும் சேர்ந்து பார்க்கலாமா?”
“ஓ, பார்க்கலாமே” என இவளின் அருகில் வரவும் இருவருமே கார்டூனில் ஒன்றி இருந்தனர்.
இவன் நிமிர்ந்து விஷாலியை பார்க்க, அவள் சொன்னது பொய் என்பது நன்றாக தெரிந்தது. ‘பணம் கட்டினா அழைச்சிட்டு போக போறாங்க, இதில் இவன் கோபபட எதுவும் இல்லையே, அதுவும் சில தடவை பார்த்து இருந்தவளிடம்’ நினைத்துக் கொண்டவன், அமைதியாக ஜன்னல் இருக்கையில் அமர்ந்து, கையில் வைத்திருந்த ஹெட்செட்டை மாட்டி பிடித்த பாடலை ஓட விட்டு கண்களை மூடிக் கொண்டான்.
புறப்படபோகிற சத்தம் ஸ்பீக்கரில் அலற ரயில் புறப்பட்டது, கூடவே பிரச்சனையும் குருவோடு சேர்ந்து புறப்பட்டது.
 

Kavisowmi

Well-known member
7
மதியம் இரண்டு மணியை தாண்டி இருக்க, மொத்தமாக வந்து இறங்கி இருந்தனர். ஏற்பாடு செய்து தந்து இருந்தவர் நடுவில் நின்று பேசிக்கொண்டு இருந்தார்.
அறுபது பேர் அளவில் வந்திருக்க “நண்பர்களே இன்னமும் பலர் வந்து கொண்டு இருப்பதினால், இந்த நேரத்தில் அங்கு செல்ல முடியாது. அருகில் உள்ள மண்டபத்தை இரவு தங்குவதற்கு ஏற்பாடு செய்துள்ளோம். நாளை காலையில் மலை ஏறத் துவங்கலாம் குழுக்களாக, இப்போது நாம் நேராக மண்டபத்திற்கு செல்லலாம்”
அவர்கள் அனைவரையும் அழைத்து செல்ல, அவர்களோடு குருவும் இணைந்து கொண்டான். மதிய உணவை உண்டு விட்டு வந்திருந்த ஒவ்வொருவரோடும் பேசிக்கொண்டு இருந்தனர். தனது பேக்கை ஒரு ஓரமாக வைத்தவன் கையில் கேமராவோடு அருகில் சுற்றி பார்த்து வர புறப்பட்டு இருந்தான் குரு.
மாலை ஆகவும் இன்னும் நிறைய பேர் இணைத்து இருந்தனர். இவர்களோடு அடுத்த நாள் காலை நான்கு மணிக்கு புறப்படுவதாக முடிவு செய்து இருந்தனர். அடுத்த நாளை பற்றிய ஆளுக்கு ஒரு கனவுகளோடு தூங்கச் சென்றதனர்.
பெண்களுக்கு தனியாக அறை ஒதுக்கி இருக்க வந்திருந்த பெண்களோடு இணைந்து இருந்தாள் விஷாலி.
மூன்று மணிக்கே ஒவ்வொருவரும் புறப்பட்டு தயாராக இருந்தனர்.
“அதிகமாக சுமை எடுத்து செல்ல வேண்டாம். இங்கேயே உங்களுடைய பொருட்களை வச்சிட்டு வரலாம். போயிட்டு வந்த பிறகு இந்த பொருட்களை எடுத்துட்டு போயிடலாம்” என அறிவித்து இருக்க, குரு கேமராவோடு குடிக்க தண்ணீர் மட்டும் எடுத்து கொண்டு புறப்பட்டு இருந்தான்.
ஒவ்வொருவராக வந்து வண்டியில் ஏற குருவோடு இவளும் ஏறி இருந்தாள். நேற்று பார்த்த போது பேசியது, அதற்கு பிறகு அவளிடம் இவன் இது வரை எதுவுமே பேச வில்லை. முதுகில் சுமந்த சிறு பேக்கோடு ஏறி இருந்தாள். இவனின் கண் பார்வை படும் இடத்தில் ரயிலில் பார்த்த அந்த குழந்தையோடு பேசிக் கொண்டிருந்தாள். இவனோடு பேச அவளும் முயற்சிக்கவில்லை.
காட்டின் துவக்கம் வரை அழைத்து சென்றவர்கள் இவர்களை இறக்கி விட்டு செல்ல நால்வர், இருவர், குடும்பமாக மலை ஏற ஆரம்பித்தனர்.
அத்தனை பேரையும் முந்திக்கொண்டு குரு வேகமாக சென்று கொண்டிருந்தான். அவனை விடவும் சற்றே பின் தங்கியபடி மலையின் பாதையில் ஏறிக்கொண்டு இருந்த விஷாலிக்கு சற்றே கோபம்தான்.
மனதிற்குள் திட்டியபடி அவனை பின் தொடர்ந்து கொண்டிருந்தாள். ‘இடியட் இவன் வர்றதா தெரிஞ்சதாலதானே புக் பண்ணினேன். இவன் இப்படி போனா இங்கே யாரையும் தெரியாது. இங்கே வந்தே இருக்க கூடாது’ இவள் இப்படி நினைத்து நடக்க,
ஒரு திருப்பம் தாண்டவும் குருவின் போனிற்கு அழைப்பு வந்தது. அழைத்தது இவனது ஹாஸ்டல் மேட் காலேஜ் மேட் கோகுல்.
“ஹேய் கோகுல் சொல்லுடா, பத்து நிமிடம் தாண்டி கூப்பிட்டு இருந்தா லைனே கிடைச்சு இருக்காது. நல்ல வேளை எனக்கு இப்பவே கூப்பிட்ட”
“குரு ஸாரிடா என்னுடைய கஸின் விஷாலி, அவளும் அங்கே வந்து இருக்கறா கொஞ்சம் அவளை பார்த்துக்கோடா”
“அப்படின்னா நீ சொல்லித்தான் இங்கே வந்தாளா?”
“பார்க்கும் போது உன்னை பற்றியும் சொல்லுவேன். லாஸ்ட் டைம் நீ போறத பற்றி சொல்லி இருந்தேன், அத வச்சு இவளும் புக் பண்ணி இருப்பா போல இருக்கு. ப்ளீஸ்டா திரும்பி வர்ற வரைக்கும் கொஞ்சம் அவளையும் பார்த்துக்கோ, அவளால இன்றைக்கு நான் ஊருக்கு போகல. இங்கே தான் இருக்கிறேன். இப்போ எங்கே இருக்கறா? உன்னோட பக்கத்தில் இருக்கறாளா?”
“இல்லை கொஞ்சம் பின்னாடி வர்றா, ஒரு பேமிலி கூட பேசிக்கொண்டு வர்றா, நான் பார்த்துக்கறேன்” என்றவன் போனை கட் செய்து விட்டு ராமின் நம்பருக்கு போன் செய்தான். ராம் போனை எடுக்கவும்,
“குட் மானிங் ராம்”
தூக்க கலக்கத்தோடு “குட்மானிங், புறப்பட்டாச்சா?”
“ம், மலை ஏற ஆரம்பிச்சாச்சு! இனி டவர் கிடைக்காது, ஸாரி எழுப்பிட்டேனா?”
“அதெல்லாம் இல்லடா எழுந்திருக்கற நேரம்தான், ஆல் த பெஸ்ட் ஜாக்கிரதையா பார்த்து போயிட்டு வா”
“சரிடா” என்றபடி திரும்பி பார்க்க, சற்று தூரத்தில் இவனை பார்த்தபடி வந்து கொண்டு இருந்தாள் விஷாலி.
‘எவ்வளவு தைரியம் முன்ன பின்ன தெரியாதவனை நம்பி இவ்வளவு தூரம் வர்றதுக்கு? அதுவும் வீட்ல சொல்லாமல் வர்றதுக்கு?’ ஒரு மனம் இப்படி நினைக்க, இன்னொரு மனமோ ‘டேய் நீ மட்டும் என்ன பண்ணி வச்சிருக்கற? நீயும் சொல்லாமல்தானே வந்த?’ என இடித்துரைக்க ‘நமக்கெதுக்கு, நாம போகலாம், தேவைபட்டா பார்த்திருக்கலாம், ஒரு வேளை இவளும் நம்மல மாதிரி தானோ?! எதையாவது புதுசா செய்யணும்ன்னு புறப்பட்டு வந்து இருப்பாளோ?’
இப்போதைக்கு இவளுக்கு நம்மளோட உதவி தேவை இல்லை இன்னும் கொஞ்சம் மேல போகவும், அப்போது பார்த்திருக்கலாம் என நினைத்தவன், வேகமாக மேலே ஏறினான்.
பெரிதாக பசுமையாய் எதுவும் இல்லை. சிறுசெடிகள், கொடிகள் காய்ந்துதான் இருந்தது ஒரு வேளை மழை பெய்யும் நாட்களில் பசுமையாக இருந்து இருக்குமோ?
இன்னும் சற்று தூரம் நடந்ததும் ஒன்றையடி பாதை துவங்கி விடும், கிட்டத்தட்ட இரண்டு கிலோமீட்டர் தாண்டியபிறகு மறுபடியும் சற்றே பெரிய பாதை தோன்றும். ஆரம்ப செக்கிங் முடிந்து வந்திருக்க, அடுத்து இந்த இடத்தில் கையெழுத்து போட்டு விட்டு மேலே செல்ல வேண்டும்.
மரங்களுக்கு நடுவே நடக்கும் போது தெரிந்த லேசான குழுமை இந்த பாதையில் நடக்கும் போது தெரியவில்லை. சற்றே சூரியனின் கதிர்கள் கொஞ்சம் உக்கிரமாக மேலே விழுந்து கொண்டு இருந்தது. காய்ந்த புற்கள் கூடவே சிறு சிறு முட்செடிகள். என கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.
முதல் முதலாக ஆசையாக வந்தது சற்றே இப்போது சலிப்பாக இருந்தது
குருவிற்கு. பசுமை எங்கும் குடிகொண்டு இருக்கும் என நினைத்து வர, இங்கேயோ வறண்டு கிடந்தது பூமி. சற்றே வேகமாகவே மலை ஏறிக்கொண்டு இருந்தான். பறவைகள் கூட சற்றே வேகமாக ஒரு புறம் இருந்து மறு பக்கத்தை நோக்கி பறந்து கொண்டு இருந்தது. அதையும் போட்டோ எடுத்தான்.
எதிர்பட்ட மரங்களில் குரங்குகள் ஏறி இறங்கி விளையாடி கொண்டு இருந்தது. அதிலும் ஒரு குரங்கு இன்னொரு குரங்கின் வாலை பிடித்து இழுத்து வம்பிழுக்க அந்த குரங்கு இதை துறத்தி விட மறுபடியும் வாலை பிடித்து இழுக்க பார்க்கவே சிரிப்பாய் இருந்தது குருவிற்கு.
இதை தான் குரங்கு சேஷ்டை என்கிறார்களோ?! என நினைத்தவனுக்கு இவன் ராமிடம் வம்பிழுப்பது நினைவில் வந்தது. சிரித்தபடி ஒரு இடத்தில் நின்றவன் சற்று நேரம் அந்த காட்சியை தான் எடுத்து வந்திருந்த கேமராவில் பதிவு செய்தான்.
அதே நேரம் சென்னையில் இவர்களை அனுப்பி இருந்த நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருந்த திவாகரின் போன் அடித்தவண்ணம் இருந்தது. போனை அட்டென் செய்தவன் “எஸ் திவாகர் பேசறேன் என்ன விஷயம்?”
“ஸார் இங்கே கொஞ்சம் ப்ராபளம் ஆகிடுச்சு, என்ன செய்யறதுன்னு தெரியலை, அதனால தான் உங்களை கூப்பிட்டேன். நீங்க தான் ஏதாவது செய்யணும். இதனால எத்தனை பேருக்கு பதில் சொல்ல போறோம்ன்னு தெரியவில்லை, எனக்கு பயமாக இருக்கு”
“என்ன விஷயம் முதலில் சொல்லு. நீயே பேசினா எனக்கு எப்படி புரியும். முதலில் சொல்லு”
“ஸார் வந்து மலைக்கு அந்த பக்கம் காட்டு தீ எறிஞ்சிட்டு இருக்கு ஒரு வேளை காற்று இந்த பக்கத்தில் திரும்பினா இந்த மலைக்கும் தீ பரவ வாய்ப்பு இருக்கு அப்படின்னு இப்பதான் தகவல் வந்தது. கிட்டத்தட்ட நூற்றி இருபது பேர் அங்கே போய் இருக்கறாங்க எல்லோருமே ஓரளவிற்கு ரிச், பிரச்சினை ஆனா பதில் சொல்ல முடியாது”
“வாட் இவ்வளவு லேட்டா சொன்னா என்ன செய்யறது? இப்போதைக்கு எல்லாரும் பாதி மலையை தாண்டி இருப்பாங்களே. தீ எரிகிறதுன்னா எப்படி மேல விட்டாங்க அங்கேயே நிறுத்தி இருப்பாங்களே, உனக்கு யார் சொன்னாங்க?“
“இப்போது தான் போன் வந்தது. எப்போதும் இருக்கறவர் லீவ்ல போய் இருக்கறாரு. இப்போ செக்போஸ்ட்ல இருக்கறவரு புதுசு செக்போஸ்டில் இருந்தவர் ஒவ்வொருத்தருக்கும் பணம் வாங்கிட்டு உள்ளே விட்டு இருக்கறாரு”
“ஷிட் இது ஒரு சாபக்கேடு எங்கேன்னாலும் காசு வாங்கிட்டு யோசிக்காமல் அனுப்பி வைக்கறது, நீ ஒன்று செய் அங்கே எல்லோரும் போய் இருக்க மாட்டாங்க. எப்படியும் கொஞ்சம் பேராவது பின்னாடி இருப்பாங்க, அவங்கள மட்டுமாவது திரும்ப கூப்பிடுங்கள்” என்றபடி கட் செய்தவன். தனக்கு தெரிந்த அதிகாரிக்கு போன் செய்தான்.
“ஸார் நான் சென்னையில் இருந்து திவாகர் பேசறேன். அங்கே தீ பரவறதா தகவல் வந்து இருக்கு உண்மையா?”
“ஓ ஆனா இப்போ எங்களோட நிறுவனத்தின் சார்பாக கிட்டத்தட்ட நூறு பேருக்கு மேல அந்த மலையில் இருக்கறாங்க”
“வாட் எப்படி விட்டாங்க? போன வாரமே வெயில் அதிகமாக இருக்கு
தீ பிடிக்க வாய்ப்பு இருக்கு, அதனால யாரும் மலைக்கு மேல போகாதிங்கன்னு சொல்லி இருந்தோமே. இப்போது அந்த பகுதியை நோக்கி தான் தீ வேகமாக வந்துவிட்டு இருக்கறதாக தகவல் வந்து இருக்கு”
“இப்போது என்ன செய்யலாம்?”
“என்ன கேட்டா நான் என்ன சொல்ல? இப்போது காட்டில் ஆபீஸர்ஸ் யாரும் இருக்க மாட்டாங்க ரெண்டு நாளைக்கு முன்னாடியே எல்லோரும் கீழே இறங்கியாச்சு”
“பிரச்சினை பெருசு தான் போல இருக்கு, உங்க ஆளுதான் பணத்தை வாங்கிட்டு உள்ளே விட்டு இருக்கறாங்க, இப்போது அங்கே இருக்கறவங்களோட நிலைமை எந்த நேரத்திலேயும் அவங்க இருக்க இடத்திற்கு தீ பரவலாம். கடைசி நேரத்தில் யாருக்கும் தகவலும் சொல்ல முடியாது மீடியாவுக்கு விஷயம் தெரிஞ்சுதுன்னா அவ்வளவு தான். நான் அங்கே கிளம்பி வரேன்”
அவன் அந்த நேரத்தில் அந்த காட்டுப்பகுதியை நோக்கி கிளம்பி இருந்தான்.
இங்கோ தங்களை நோக்கி ஆபத்து வருவதை தெரியாமல் மகிழ்ச்சியாகவே மலையில் ஏறிக்கொண்டு இருந்தனர் வருங்கால தம்பதிகள், குடும்ப உறுப்பினர்கள் இளையவர்கள் என மொத்தமாக பேசியபடி, சிரித்தபடி சில நேரம் சற்று தூரம் ஓடியபடி என!
முன்னதாக சற்றே உயரமான இடத்தில் ஏறிக்கொண்டு நின்ற குரு சுற்றிலும் கேமரா வழியாக கண்களை வைத்து வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான். வேகமாக ஏறி இருந்ததால் தனியாக வந்து கொண்டிருந்தான்.இனி கூடவே யாரையாவது சேர்த்து கொண்டு சற்று மெதுவாக நடக்கலாம் என்ன நினைத்து அந்த இடத்தில் நின்று கொண்டிருந்தான்.
மேலிருந்து கீழ் நோக்கி பார்க்க இரண்டு வளைவு தாண்டி விஷாலி வந்து கொண்டு இருப்பது தெரிந்தது. அதுவும் தனியாக வந்து கொண்டிருந்தாள்.
இவள் ஏன் தனியாக வந்துட்டு இருக்கறா? சேர்த்து தானே வந்துட்டு இருந்தா! என நினைத்தவன், அவளது வருகைக்காக அந்த இடத்தில் அமர்ந்து வரும் வரையில் காத்திருக்க ஆரம்பித்தான். இன்னும் சிறிது தூரம் ஏறியவுடன் பாறைகள் மிகுந்த பகுதி இருந்தது. அதை தாண்டி மறுபடியும் மாலை வரை மலை ஏற வேண்டும்.
நேரம் பார்க்க அப்போதுதான் நான்கு மணியை தொட்டு இருந்தது. கால்கள் இரண்டும் இப்போதே வலி எடுக்க ஆரம்பித்து இருந்தது. அதோடு பசி வேறு.
ஆளுக்கு நான்கு சப்பாத்தி ஒரு சில்வர் காகிதத்தில் தந்து இருந்தனர். சாப்பிட நினைத்தவன், விஷாலிக்காக காத்திருக்க இருந்தான். சிறிது நேரத்தில் விஷாலியின் குரல் கேட்டது. “காப்பாற்றுங்க காப்பாற்றுங்க!” கூடவே ‘ஆ’ என்ற கத்தலோடு “ஹெல்ப் மீ” என வாய்க்கு வந்தபடி கத்திக்கொண்டு இருந்தாள் விஷாலி
விஷாலியின் குரல் கேட்டு. சற்றே அதிர்ச்சி அடைந்தவன் அவளின் சத்தம் வந்த திசை நோக்கி வேகமாக ஓடினான் குரு.
 

Kavisowmi

Well-known member
8
விஷாலியின் குரல் கேட்டு வேகமாக ஓடியவன் எதிர்பட்ட திருப்பத்தில் அவளை பார்க்கவும் அடக்கமுடியாத அளவிற்கு சிரிக்கத் துவங்கி இருந்தான். கையில் வைத்திருந்த லேஸ் பாக்கெட்டை பிடித்து இழுத்தபடி குரங்கு இரண்டு நின்றிருக்க, பயத்தில் இன்னும் வேகமாக கத்திக் கொண்டு இருந்தாள் அவள்.
“ஏய்,விஷாலி கையில் இருக்கறத கீழே போடு, குரங்கு கூட சண்டை போடற! நீ சரியான தைரியசாலி தான்”
“பயமா இருக்கு குரு, போக மாட்டேங்குது” விஷாலியை விட்டு நகர்வதாக இல்லை அவளின் அருகில் நின்றிருந்த குரங்கு.
வேகமாக அருகில் நெருங்கியவன் அவளது கையில் உள்ளதை தட்டி விடவும் கீழே விழுந்ததை எடுத்தபடி குரங்கு நகர “உன்னை யாரு தனியாக வரச்சொன்னது? உன் கூட வந்தவங்க எங்கே?”
“அவங்க வழியில் உட்கார்ந்து வர்றேன்னு சொன்னாங்க. நீ பக்கத்தில்தான் இருக்கற உன் கூட வரலாம்ன்னு கொஞ்சம் வேகமாக வந்தேன்”
“பேக்ல என்ன வச்சு இருக்கற?”
“பார்த்தா சிரிக்க மாட்டிங்கன்னா தரேன்”
“கொடு பார்க்கலாம்” வாங்கியவனுக்கு இன்னும் சிரிப்பு வந்தது. உள்ளே இருந்தது எல்லாமே தின்பண்டங்கள், லேஸ், குர்குரே ,பிஸ்கெட் என வகை வகையாக”
“என்ன இது மினி ஸ்னேக்ஸ் கடையே இருக்குது. பேசாம உன்னோட ப்ரெண்டுங்க கிட்டேயே உன்னை விட்டுவிட்டு வந்து இருக்கலாம்போல இருக்கு, அவங்களோட ஒரு வாரத்திற்கான சாப்பாடு உன்கிட்ட இருக்குது”
“கிண்டல் பண்ணாதிங்க குரு, எனக்கு பசி தாங்க முடியாது. திரும்ப போற வரைக்கும் என்ன செய்யறதாம்? தனியா இருக்கும்போது இது தான் என்னோட துணை”
“அப்புறம் என்ன செய்விங்க, உடம்பு போட்டுட்டேன் மறுபடியும் சாப்பிடாம இருக்கறதா?”
“ஐய எனக்கு அப்படி எதுவுமே கவலை கிடையாது. கிடைச்சு இருக்கறது ஒரு லைப் அத என்ஜாய் பண்ண வேண்டாமா உடம்பு போடறேன் ஒல்லியா இருக்கறேன் இப்படி யோசிக்கற பழக்கம் எனக்கு கிடையவே கிடையாது”
“ம் வித்தியாசமான பொண்ணுதான்” குருவும் இவளோடு பேசியபடி நடக்க இவன் அமர்ந்து இருந்த இடம் வரவும் அதில் அமர்ந்தவன் “இங்கே உட்கார்ந்து சாப்பிடலாம். எனக்கு கூட பசிக்குது. தண்ணீர் கேன் வச்சு இருக்கறதானே?”
“இருக்கே இங்கே சப்பாத்தி மட்டும்தான் தந்தாங்க”
“கவலையை பாரேன். பாதி தூரம்தான் வந்து இருக்கறோம், இன்னும் நிறைய தூரம் போகணும். தப்பான இடத்திற்கு வந்த மாதிரியே தோணுது”
“ஏன் அப்படி சொல்லறிங்க குரு?”
“ரொம்ப வறண்டு இருக்கறதால இப்படி தோணுதோ என்னவோ. இந்த இடம் இந்த நிமிஷம் சுத்தமாக பிடிக்கலை”
“எனக்கும் அப்படிதான் இருக்குது பாரஸ்ட் ஆளுங்களும் யாரும் இருக்கற மாதிரி இல்லை. நாம கத்தி பேசினா நமக்கே எக்கோ அடிக்கும் போல இருக்கு, காற்று வீசினா கூடவே மரத்தோட சத்தம் யாரோ கூப்பிடற மாதிரி பயமாக இருக்கு”
“ஏது விட்டா பெருசா பேய் கதை சொல்லுவ போல இருக்கு”
“ம்,ஆமாம் குரு ஹாஸ்டலில் இப்படி கதை சொல்லி நிறைய பேரை பயமுறுத்தி இருக்கிறேன். என்னுடைய ரூம் மேட் ஆரம்பத்தில் என் கூட தங்க வரமாட்டேன்னு ஒரே அழுகை. இப்போ அவதான் என்னுடைய பெஸ்ட் ப்ரெண்ட் தெரியுமா?”
“சாப்பிடு, சாப்பிட்டதும் நடக்க ஆரம்பிக்கலாம். பொறுமையாக போனால் கூட ஆறுமணிக்கு முன்னாடி போய்விடலாம்”
“அங்கே தங்கறதுக்கு என்ன மாதிரி ஏற்பாடு பண்ணி இருப்பாங்க உங்களுக்கு ஏதாவது தெரியுமா குரு”
“கூடாரம் மாதிரி ஏதாவது இருக்கும், எனக்கும் தெரியலை, இங்கே வந்தபிறகு தான் இன்னும் கொஞ்சம் விசாரித்து இருக்கலாமோன்னு தோணுது. டூ லேட் இனி எதுவும் செய்ய முடியாது. போயிட்டு திரும்ப காலையில் இறங்கிடலாம் மலைய விட்டு, அது வரைக்கும் எதுவும் செய்ய முடியாது”
“ஆமாம் குரு காற்று கூட அனலா அடிக்கிற மாதிரி இருக்கு யோசிக்காமல் வந்திட்டமோன்னு தோணுது. எனிவே வந்தாச்சு எதையும் மாற்ற முடியாது”
“சாப்பிட்டாச்சா கிளம்பலாமா?” குரு எழவும், முன்பு விஷாலி பேசியபடி வந்து கொண்டிருந்த தம்பதியினர் தங்களது ஐந்து வயது குழந்தையோடு இவர்களின் அருகில் வரவும் சரியாக இருந்தது.
“ம் போகலாம் குரு, வேகமாக போகாதே, எங்க கூடவே வாயேன். பேசிட்டே போக நல்லா இருக்கும்” விஷாலி இப்படி சொல்லவும் அவளது முகத்தை பார்த்தவனுக்கு கொஞ்சம் பாவமாகவே இருந்தது. இவன் வருவதை தெரிந்துதானே இவ்வளவு தூரம் புறப்பட்டு வந்து இருக்கிறாள், நினைத்தவன் “சரி இனி சேர்ந்தே போகலாம்” என்றவன் ஒரு கையில் அவளது பேக்கை எடுத்து அவளுக்கு மாட்டியபடி முன்னால் நடக்க ஆரம்பித்தான்.
சற்று நேரத்தில் எல்லாம் கொஞ்சமாக சூழ்நிலை மாற ஆரம்பித்தது. முதலில் சில குரங்குகள் சத்தமிட்டபடி வேகமாக மரத்தில் தாவிக்கொண்டு இருந்தது. அப்போது கூட வரப்போகிற ஆபத்து அவர்களுக்கு புரியவில்லை.
ஐந்து வயது குழந்தையை தோளில் தூக்கி வைத்தபடி குரு முன்னால் நடந்து சென்றிருக்க அவனுக்கு அருகில் விஷாலி நடந்து கொண்டிருந்தாள். சற்று பின்னால் குருவின் தோள் மீது இருந்த குழந்தைக்கு விளையாட்டு காட்டியபடி குழந்தையின் தாய் தந்தையர் வந்து கொண்டு இருந்தனர்.
சுற்றுப்புற மாற்றத்தை முதலில் உணர்ந்தது விஷாலிதான். பறந்து வந்த சாம்பல் துகள் லேசாக வெதுவெதுப்பான சுட்டோடு கையில் பட, ஒரு நிமிடம் தயங்கியவள், நடந்து கொண்டிருந்த பாதையை விட்டு நகர்ந்தவள், மலையின் மேலிருந்து கீழே எட்டிப் பார்க்க, இவர்களை நோக்கி வந்து கொண்டிருந்த நெருப்பை பார்த்தால்.
“குரு இங்கே நெருப்பு” என சத்தமாக கத்தியவளை தொடர்ந்து அருகில் நின்றிருந்த நால்வரும் நெருங்கி பார்க்க.
பார்க்கும் போதே வேகமாக அடித்த காற்றிற்கு ஏற்றாற் போல் சுழன்றபடி தீ வேகமாக பரவிக் கொண்டு இருந்தது. பட் பட்டென வெடித்த மரத்தின் ஓசை கூடவே பறவைகளின் கூக்குரல், இன்னும் கத்தியபடி ஓடிக்கொண்டிருந்த குரங்குகள் கூட்டம், என தெரியவும் ஒரு நிமிடம் நின்றவன் அடுத்த நொடி வேகமாக ஓட ஆரம்பித்தான்.
கூடவே வந்து கொண்டிருந்தவர்களை பார்த்து கத்தியபடி “நெருப்பு இந்த திசையை பார்த்து தான் பரவிக்கிட்டு இருக்குது. எவ்வளவு வேகமாக போக முடியுமோ அவ்வளவு வேகமாக என் கூட வாங்க”
“எங்க போறோம் குரு விஷாலி கேட்டபடி ஓடி வர”
“இன்னும் கொஞ்ச தூரத்தில் பாறைகள் நிறைந்த பகுதி இருக்கு. அங்கே போய்விடலாம், விஷாலி உன்னோட பேக்கை வீசிடு, அத வச்சிக்கிட்டு வேகமாக போக முடியாது” அவன் சொல்லும் வரை அவளுக்கு தெரியவில்லை. வேகமாக கழற்றி வீசியவள் இவனோடு ஓட, அவன் தூக்கிய குழந்தையோடு ஓடினான்.
அவனோடு சேர்ந்து நால்வரும் ஓட காற்றின் வேகத்திற்கு ஏற்றாற்போல்
வேகமாக தீயும் பரவிக் கொண்டு இருந்தது.
“குரு நம்ம கூட வந்தவங்க?” கேட்கும் போதே விஷாலியின் குரலில் அழுகை தெரிந்தது.
“இப்ப யோசிக்க நேரம் இல்லை. வேகமாக ஓடி வா, எங்கேயாவது அவங்கள காப்பாற்றிக்கொள்ள ஏதாவது முயற்சி எடுத்து இருப்பாங்க”
“எப்படி?” என கேட்டவளின் குரலில் இருந்தது அழுகை மட்டுமே. அழுதபடி அந்த இடத்திலேயே நின்றிருந்தாள்.
“விஷாலி பைத்தியமா உனக்கு?” கேட்டவன் அவளது கைகளை பிடித்து இழுத்தபடி வேகமாக ஓடிக் கொண்டு இருந்தான்.
சற்று தூரம் ஓடவும் பாறைகள் பகுதிக்கு வர, வேகமாக குழந்தை, அதன் பெற்றோர், விஷாலி, இவன் என பாறைக்கு நடுவில் இருந்த பகுதிக்கு அழைத்து சென்றவன், அவர்களை அமர வைத்து சுற்றிலும் பார்க்க, கற்களும் பாறைகளுமாக இருந்ததாலோ என்னவோ, அந்த இடத்தில் செடிகளோ காய்ந்த புற்களோ இல்லாமல் வெறுமையாக காணப்பட்டது.
வந்து அமரவும் குழந்தையின் பெற்றோர் குழந்தையை வாங்கிக் கொள்ள விஷாலிதான் நடக்கவிருப்பதை நினைத்து கதறி அழ ஆரம்பித்தாள்.
“விஷாலி அழாதே”
“பயமாக இருக்கு குரு, நான் திரும்பி போவேனா அம்மா அப்பாவுக்கு வந்தது தெரியாது. சொல்லாமல் வந்ததிற்கு கடவுள் எனக்கு தண்டனை தந்துட்டாரு, அம்மா அப்பா எவ்வளவு நம்பினாங்க நான் இல்லாம அவங்க எப்படி இருப்பாங்க?”
“ஏய், லூசா நீ? நீ மட்டுமா இங்கே சிக்கிட்டு இருக்கற? உன்னை மாதிரி இன்னும் நூற்றிஇருபது பேர் இங்கே இப்படி தான் மாட்டிட்டு இருக்கறாங்க. ஏன் நான் மட்டும் சொல்லிட்டா வந்தேன்? சொல்லாம தான் வந்து இருக்கிறேன். ஏதாவது பண்ணலாம் பேசாம இரு”
அடுத்துதடுத்து காற்று வேகமாக வீச. வேகமான காற்றோடு தீயும் தலைக்கு பேல் பறக்க தலையை குனிந்தபடி இறைவனிடம் வேண்டுதலை வைத்தபடி கண்களை மூடி அமர்ந்து இருந்தனர்.
சற்றே காற்று குறையவும் திரும்பி பார்க்க, நெருப்பு மலையின் உயர்ந்த பகுதியை நோக்கி சென்று கொண்டு இருந்தது. விடிய விடிய குழந்தையை தவிர யாரும் தூங்க வில்லை.
மொபைலில் டவரும் இல்லை. யாரையும் தொடர்ப்பு கொள்ளவும் முடியவில்லை. விஷாலிக்கு கூட அழுகை குறைந்து இருந்தது. ஆனால் அந்த இடத்தில் இருந்து எப்படி வெளியேறுவது? அந்த இடத்தை விட்டு நகர்ந்தால் பாதுகாப்பு தானா? எதுவும் தெரியாமல் விழித்து கொண்டு இருந்தனர்.
குருதான் அனைவரையும் தேற்றிக்கொண்டு இருந்தான். “இப்போதைக்கு யார் கிட்டே இருந்தும் உதவியை எதிர்பார்க்க முடியாது. காலையிலேயே வரை வெயிட் பண்ணி ஆகணும். இந்நேரம் இங்கே தீ விபத்து நடந்தது, நாம இத்தனை பேர் வந்தது ஒரளவுக்கு மற்றவங்களுக்கு தெரிந்து இருக்கும். நிச்சயமாக நாளைக்கு நம்மளை தேடி யாராவது வருவாங்க அது வரைக்கும் நாம காத்திருந்துதான் ஆகணும்”
சொன்னவனுக்கு கூட மிகுந்த யோசனைதான். ‘இந்நேரம் மீடியாவிற்கு இங்கு நடந்தது சென்றிருந்தால் வீட்டிற்கும் தெரிந்து இருக்கும். அம்மா அழுதிட்டு இருப்பாங்களோ? ராம் உளறாம இருந்தா நல்லா இருக்கும்’ இப்படி நினைத்தவன் அடுத்த நிமிடமே ‘இந்த ராமோட முகமே கண்ணாடி மாதிரி, முகத்தை பார்த்தா கண்டு பிடிச்சிடுவாங்க, நிச்சயமாக தெரிந்து இருக்கும்’
முதல் முதலில் ஆசைபட்ட இப்ப பாரு, நல்லா சிக்கிக்க போற குரு, நீ வீட்டுக்கு போனால் முதலில் உனக்கு இருக்கு. நல்லா அடி விழப்போகுது இதோட உன்னோட ஹாஸ்டல் வாழ்க்கைக்கு மூடு விழா தான்’
காற்றோடு லேசான அனல் அடிக்க விடிவதற்காக காத்திருந்தனர். ஒவ்வொருவரது மனநிலை ஓவ்வொரு விதமாக இருக்க, அடுத்த நாள் விடியல் லேசான தூறலோடு துவங்கி சற்று நேரத்தில் மழையால வலுத்தது.
மழை விழ ஆரம்பிக்கவும் எழுந்தவன், மற்றவர்களையும் அழைத்தாபடி மெதுவாக மலையை விட்டு கீழே இறங்க ஆரம்பித்தான். மழை துளி விழவும் இப்போது புகையோடு அங்கங்கே எரிந்து கொண்டிருந்த மரங்களில் தீ அணையும் சத்தம் வித்தியாசமாகக் கேட்டு கொண்டு இருந்தது.
கையில் மொபைலை தேட, அது எங்கேயோ விழுந்து காணாமல் போய் இருந்தது. கூட இருந்த யாரிடமும் கூட மொபைல் இல்லை. குரு முதுகில் மாட்டியிருந்த பையில் அவன் நண்பனிடம் அவன் வாங்கி வந்திருந்த கேமரா மட்டும் பத்திரமாக இருந்தது. அந்த ஓட்டம் ஓடி வந்தும் கூட.
விழுந்த சாரலை பொருட்படுத்தாமல் கேமராவை வெளியே எடுத்தவன் இயற்கையின் கோர தாண்டவத்தை படம் பிடிக்க ஆரம்பித்தான்.
அப்போது அவனுக்கு தெரியவில்லை கருகிய மரமும் வழியில் இறந்து கிடந்த முயல்களும் சில குரங்குகள் மட்டுமே பலியாகி இருக்கும் என நினைத்திருக்க, அது பொய் எனும்படி கூற தயாராக இருந்த காட்சி அவனுக்காக காத்திருக்குமென.
கண்களை கேமராவில் ஓட்டியபடி நடக்க ஆரம்பிக்க ஒரு மணி நேரம் நடந்த நிலையில் அடுத்தடுத்த திருப்பம் தெரியவும் கருகிய மரத்தின் மேல் பார்வையை பதித்தபடி வந்தவனுக்கு, சற்றே ஓய்ந்த தோற்றத்தோடு பின்னால் வந்த விஷாலியின் அழுகையோடு கதறல் ஓலி வேறு கூற சற்றென திகைத்துத் திரும்பினான் குரு.
 

Kavisowmi

Well-known member
9
அதே நேரம் ராமின் நிலை வேறாய் இருந்தது வீட்டில் டிவியில் சொன்ன செய்தியை கேட்டவனது முகம் மொத்தமாக மாறி இருந்தது. கண்கள் குளமாக கட்டியிருக்க எப்போது வேண்டுமானாலும் அணை உடையும் என்பது போல நின்றிருந்தான். டிவியில் ஒவ்வொன்றையும் காட்ட காட்ட பதறியபடி நின்று கொண்டு இருந்தான், அந்த இடத்தை விட்டு அகலாமல்.
அனைத்து சேனல்களிலும் பிரதான செய்தியாக திரும்ப திரும்ப இதை மட்டுமே கூறிக்கொண்டு இருந்தனர். முதல் கட்ட அறிக்கையாக காட்டு தீ வேகமாக பரவிக் கொண்டு இருக்கின்றது. அந்த காட்டில் நூற்றி இருபது பேர் வரை சிக்கி இருக்க கூடும் என கூறப்படுகிறது. தற்சமயம் மீட்பு படையினர் உள் நுழைந்து உள்ளனர். இது வரை எந்த தகவலும் ஒருவரை பற்றியும் கிடைக்கவில்லை என வந்தது.
அடுத்து சற்று நேரத்தில் தற்போது கிடைத்த தகவலின் படி என புதிதாக கிடைத்த செய்தி மறுபடியும் கூறிக்கொண்டு இருந்தனர். “காற்றின் வேகத்திற்கு அங்கே அங்கே தீ பிடித்தவண்ணம் உள்ளது. இது வரை சற்று தூரம் ஏறியவர்கள் என இருபத்தி ஐந்து பேர் வரை கீழே இறங்கி உள்ளனர். நூறு பேரின் நிலை என்ன. இது வரையிலும் தெரியவில்லை”
“சம்பவ இடத்தில் இருந்து நமது செய்தியாளர் கூறுவதை கேட்கலாம் வாருங்கள்”
“சொல்லுங்க ராஜேந்திரன் அங்கே சம்பவ இடத்தின் நிலவரம் என்ன? எத்தனை பேர் மாட்டி இருக்க கூடும்? அவர்களின் நிலை என்ன? எத்தனை பேரை காப்பாற்ற முடியும்? அல்லது எல்லோரையும் காப்பாற்ற முடியுமா? சொல்லுங்கள் ராஜேந்திரன்”
“என்ன சொல்ல இந்த நிறுவனம் எப்படி இப்படி ஒரு ஏற்பாட்டை செய்தார்கள் என்பதே ஆச்சர்யமாக உள்ளது சகோதரி, சென்ற வாரமே வெப்பம் அதிகமாக உள்ளது என கூறியிருந்த நிலையில் இவர்களுக்கு மட்டும் எப்படி அனுமதி தந்தார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது”
“அருகில் இருந்தவர்கள் காப்பாற்றபட்டு இருக்கிறார்கள். ஏற்கனவே தீயில் கருகிய மரங்கள் அங்கங்கே வழியை மறைத்தபடி விழுந்து கிடப்பதினால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டு உள்ளதாக கூறியிருக்கிறார்கள். இன்று மதியத்திற்குள் இன்னும் பலரை மீட்க முடியும் என நம்பிக்கை தெரிவித்து உள்ளனர். அருகில் உள்ள கிராமவாசிகளும் தங்களது பங்கிற்கு இவர்களோடு இணைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு உள்ளனர். அடுத்த தகவல் கிடைக்கவும் உங்களிடம் வருகிறேன் சகோதரி நியூஸ் ஒன் தொலைக்காட்சிக்காக உங்கள் ராஜேந்திரன்”
செய்தியை கேட்டு ராம் திகைத்தபடி நின்றிருக்க, கடைக்கு புறப்பட்டு வந்த கிருஷ்ணன் ராமின் முகத்தை பார்க்க அவனது முக மாற்றம் கூடவே கேட்டு கொண்டிருந்த செய்தி எதுவோ புரிவது போல் தோன்ற யோசிக்காமல் “ராம் இங்கே வா, குரு எங்கே?” என்ற கேள்வியை கேட்டிருந்தார்.
கேட்டது தான் தாமதம் நடந்ததை சொல்லி இருந்தான். “எனக்கு பயமாக இருக்குதுபா இப்படி ஆகும்ன்னு தெரியாது”
அடுத்த நொடியே கன்னத்தில் பளார் என அறைந்து இருந்தார். “வேலைக்கு போனா பெரிய மனுசன் ஆகிட்டயா? ஏதா இருந்தாலும் சொல்லணும்ன்னு சொல்லி இருக்கிறேனா இல்லையா?” பேச பேசவே அடுத்த ப்ளாஸ் நியூஸ் ஓலிபரப்பு ஆனது.
“சற்று முன்பு கிடைத்த தகவலின்படி முதல் கட்டமாக பத்து பேரின் உயிரற்ற உடல் தீயில் கருகியபடி கிடைத்துள்ளதாக தெரிவித்து உள்ளனர். சம்பவம் நடந்த இடத்திற்கு சென்றவர்களின் உறவினர்கள் பலர் வந்தவண்ணம் உள்ளனர்”
செய்தியை கேட்டு திலகவதி மயங்கி சரிந்திருந்தார் “குரு குரு” என அனத்தியபடி!
சில நிமிடத்திலேயே வீட்டில் உள்ளவர்கள் கிளம்பி இருந்தனர் குரு சென்றிருந்த மலையை நோக்கி. அழுகை ஓயாமல் திலகவதி பின் இருக்கையில் சாய்ந்திருக்க, அவரை எப்படி சமாதானம் செய்வது என தெரியாமல் ராம் அருகில் இருந்தான் “அம்மா அவனுக்கு எதுவும் ஆகி இருக்காதுமா அழாதிங்க”
“பேசாதடா நீயும் அவன் கூட சேர்ந்துட்டு பொறுப்பில்லாமல் நடந்து இருக்கறல்ல? அவனுக்கு ஏதாவது ஒன்னுன்னா என்னை உயிரோடு பார்க்க முடியாது பார்த்துக்கோ”
“ஏன் மா இப்படி பேசறிங்க? அவன் புத்திசாலி நிச்சயமா மாட்டி இருக்க மாட்டான்” ,
சம்பவ இடத்தை நெருங்கி இருந்தனர். ஏற்கனவே பலர் வந்து காத்திருக்க அவர்களோடு இவர்களும் இணைந்து கொண்டனர். லேசான தீ காயத்தோடு இருப்பவர்களுக்கு அங்கேயே முதலுதவி செய்து அனுப்பிக்கொண்டு இருந்தனர்.
சற்றே ஒதுக்குபுறமாக வந்திருந்த வண்டிகளை போட்டபடி ஏதாவது தகவல் கிடைக்கின்றதா என பலர் காத்திருந்தனர். அவர்களோடு இவர்களும்தான்.
அதிலும் ஒரு பெரியவர் அழுதது கண் கலங்கும்படி இருந்தது “ஐடி ஃபீல்டில வேலை செய்யறா என்னோட பொண்ணு, ரிலாக்சேஸனுக்காக அவங்க ஆபீஸ்ல இங்கே அனுப்பி வச்சு இருக்காங்க, ரெண்டு நாள் தான்பா வந்துடுவேன்னுட்டு வந்தா, ஒரு தகவலும் தெரியவில்லை. நியூஸ் கேட்டு நிமிஷத்தில் இருந்து இங்கே தான் இருக்கிறேன். என்னோட பொண்ணுக்கு எதுவும் ஆகாமல் திரும்ப வந்தா போதும்”
ஒவ்வொன்றையும் பார்க்கும் போது இன்னும் பயமாக இருந்தது ராமிற்கு. திலகவதி இன்னமும் அழுது கொண்டு தான் இருந்தார். சற்று நேரம் பார்த்தவன் தந்தையிடம் சொல்லி விட்டு மீட்புப்பணியினரோடு ராமும் புறப்பட்டு இருந்தான்.
அதே நேரம் காட்டில் விஷாலியின் கத்தலை கேட்டவுடன குரு திரும்பி பார்க்க எதிர்பட்ட காட்சியை பார்த்தபடி பத்தடி பின்னால் அப்படியே நின்றிருந்தாள் அவள். கண்களில் குளமென கண்ணீர்.
அவளின் பார்வை படும் தூரத்தில் தாய் குரங்கு ஒன்று தனது குட்டியை இருக்கி அணைத்தபடி தீயில் கருகி இருந்தது. அதை பார்த்து தான் அழுதுகொண்டு இருந்தாள் இவளது அழுகை கேட்டு நால்வரும் இவளை நெருங்கவும் இவர்கள் நின்றிருந்த இடத்தில் இருந்தது மரம் ஒடிந்து விழவும் சரியாக இருந்தது. சில நிமிடத்தில் நால்வரும் உயிர் தப்பி இருந்தனர்.
குரு முடிவாக சொல்லி விட்டான். இனி போறது நமக்கு பாதுகாப்பு இல்லை இங்கேயே வெயிட் பண்ணலாம். நிச்சயமாக யாராவது வருவாங்க நம்மை காப்பாற்ற. விழுந்த மரம் முழுவதும் பாதையை மறைச்சு இருக்கு, இத எடுக்க நிச்சயம் வனத்துறையினர் அதுற்குடைய உபகரணத்தோட வந்தா தான் முடியும். நாம கொஞ்சம் பாதுகாப்பான இடத்தில் காத்திருக்கலாம்”
“ஒரு வேளை யாருமே வரலைன்னா?” குழந்தையின் தகப்பனார் கேட்க,
“அப்படி இல்லைங்க சார். நிச்சயம் வருவாங்க, ஏன்னா இங்கே வந்தவங்களோட நிலைமை என்னன்னு பதில் சொல்ல வேண்டிய கடமை கவர்மெண்டுக்கும் இருக்கும் தானே, நாமதான் பார்த்தோமே இங்கே வந்தவங்க நிறைய பேர் ஐடி பிப்பில்ஸ், இந்நேரம் நிறைய பேர் தேடி வந்து இருப்பாங்க. நாம இங்கே மாட்டி இருக்கறதால நமக்கு தெரியாம இருக்கு” சொன்னவன் கூடவே இந்நேரம் ‘ராம், அப்பால்லாம் இங்கே வந்து இருப்பாங்க’ மனதிற்குள் சொல்லி கொண்டான்.
மரங்கள் இல்லாத திறந்த வெளியில் ஐவரும் அமர்ந்திருக்க விஷாலி குருவை பார்த்து “குரு வரும் போது சினேக்ஸ் கேட்ட குரங்கு தானே அது அதற்கு இப்படி ஒரு முடிவு வந்து இருக்க வேண்டாம்”
“விஷாலி தொட்டத்திற்கும் அழற முதலில் அழாம உட்காரு, நீ பயபடறது இல்லாம எல்லோரையும் பயப்பட வைக்கிற, வந்த லேசான மழையால பெரும்பாலும் நெருப்பு அணைஞ்சாச்சு, எப்படியும் கீழே இருந்து ஆட்கள் வந்திட்டு இருப்பாங்க இங்கே வந்துட்டா கீழே போயிடலாம். அது வரைக்கும் இங்கே காத்து இருந்து தான் ஆகணும்”
கிட்டத்தட்ட நேற்று ஓட ஆரம்பித்தது இந்த நிமிடம் வரை உயிரை காப்பாற்ற ஓடிக்கொண்டு தான் இருந்தனர். முடிவு தான் என்னவாக இருக்கும் என்பது தெரியாமல் இருக்க, எல்லோருமே சோர்ந்து இருந்தனர். குழந்தை சுருதி தாயின் மடியில் தலை வைத்து தூங்கி இருக்க விழித்திருந்த நால்வருக்கும் அடுத்து என்ன செய்வது என்பது தெரியவில்லை.
பசி ஒரு பக்கம் வயிற்றை கிள்ளிக்கொண்டு இருந்தது. அதிக நேரம் உணவு உண்ணாமல் அமர்ந்து இருப்பதும் அவ்வளவு சரியாக தெரியவில்லை. சற்றே பாதையின் ஓரத்தில் மேலிருந்து குரு கீழே பார்க்க ஆறு ஏழு வளைவு தாண்டி அசைவு தெரிந்தது. பாதையில் விழுந்திருந்த மரங்களை மீட்பு படையினர் வெட்டி எடுத்துக் கொண்டு இருந்தனர்.
“விஷாலி, ப்ரோ ரெண்டு பேரும் இங்கே வாங்க அவங்க வந்தாச்சு, நாம இங்கே இருக்கறத அவங்களுக்கு சொல்லணும்” இவன் அழைத்தான்.
“எப்படி குரு முடியும்?” இரண்டு பேருமே ஆர்வமாக கேட்க
“விஷாலி உன் கிட்ட கர்சீப் இருக்கா?”
“இருக்கு குரு, இருந்தாங்க” என அவள் தர அதே நேரம் குழந்தை சுருதியின் தந்தை வேந்தனும் தன்னுடைய கர்சீப்பை எடுத்து நீட்டினான்.
“எதுக்கு குரு?” ஆர்வம் இரண்டு பேர் முகத்திலும் இருந்தது.
“கீழே இறக்கம் தானே, ஒரு சின்ன கல்லில் இந்த கர்சீப்பை கட்டி அங்கே வேலை செய்யறவங்க மேல படற மாதிரி வீசினா, அவங்க நம்மள பார்த்திட்டா போதுமே, கொஞ்சம் வேகமாக நமக்கு உதவி கிடைக்கும்ல?”
“எஸ் கிடைக்கும், ஆனால் அவ்வளவு தூரம் போகுமா?”
சும்மா ஒன்னுமே முடியாதுன்னு நிக்கறதுக்கு டிரை பண்ணி பார்க்கலாமே” முதலில் விஷாலியின் கைகுட்டையில் சிறு கல்லை கட்டி கீழே வீச அது பாதி தூரத்தில் கல் கழன்டு விழ, கர்சீப் பாதியிலேயே நின்று விட்டது. இவர்கள் எதிர் பார்த்த தூரம் போகவில்லை.
இம்முறை சற்றே பெரிய கல்லில் அடுத்த கர்சீபை இருக்கி கட்டியவர்கள்
விழாது என தெளிவுபடுத்தி விட்டு வேகமாக வீச இம்முறை ஏமாற்ற வில்லை. ஏற்கனவே மரம் வெட்டி அப்புறபடுத்தி கொண்டிருந்தவனின் அருகில் விழ, கைகுட்டையை பார்த்தவன் இயல்பாக உயரத்தை பார்க்க, மேலே குரு கையை ஆட்டிக்கொண்டு இருந்தான். கூடவே இரண்டு பேரும்.
மேலே நின்றிருந்தவர்களுக்கு நிழல் படம் போல் தெரிந்தது இவர்களை காட்டி அவன் அருகில் இருந்தவர்களிடம் சொன்னது. சிறு சிறு பொம்மையாய் காட்சி தர
கீழேயிருந்தவர்கள் இவர்களை நோக்கி கையை ஆட்டி வருகிறோம் என்பது போல செய்கை செய்தனர்.
கொஞ்சமாக ஆசுவாசமாக உணர ஆரம்பித்தனர். இவ்வளவு நேரம் இருந்த பதற்றம் கொஞ்சமாக குறைந்து இருந்தது நால்வருக்கும். உதவி கிடைத்து விடும் என்பதே பெரிய நிம்மதியை தந்தது.
இன்னமும் சுருதி தூங்கிக்கொண்டு இருக்க “ஏன் சிஸ்டர் சுருதி ரொம்ப நேரம் தூங்கறா போல இருக்கு?”
“ஃபீவராக இருக்கு குரு அதுதான் தூங்கறா இங்கே நடந்தது பார்த்து பயந்திட்டா போல இருக்கு”

“விடுங்க சிஸ்டர் இன்னும் எப்படியும் இரண்டு மணி நேரம் தான் நாம கீழே போயிடலாம், இனி பயம் இல்லை”
அவ்வப்போது மேலிருந்து கீழே பார்த்த வண்ணம் இருந்தனர். கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் முடிந்த நிலையில் இவர்கள் இருந்த இடத்தில் மரங்களை அப்புறப்படுத்த வந்து இருந்தனர். அப்புறபடுத்திய அடுத்த நொடி முதலில் வந்தது ராம்.
வேகமாக வந்தவன் குருவை இழுத்து அணைத்திருந்தான். “தேங்க்ஸ் கடவுளே. நிறைய பயந்துட்டேன் குரு, நல்ல வேளை எதுவும் ஆகல, ஏதாவது ஆகி இருந்தா கடைசி வரைக்கும் என்னால குற்ற உணர்ச்சியில் இருந்து வெளியே வந்து இருக்க முடியாது” கண்கள் கூட கலங்கி கண்ணீர் விழவா என கேட்டு நின்றது.
“டேய் ராம் என்ன இது கண்ல தண்ணீர்? இவ்வளவு சின்ன பையனா நீ? அழற சேம் சேம் அப்பா அம்மா எங்கே”
“ம் கீழே இருக்கறாங்க, அம்மா ஓரே அழுகை நேற்றிலிருந்து இன்னும் சாப்பிடல”
“போன் இருக்கா? டவர் இருந்தா பார்த்து கூப்பிட்டு சொல்லிடலாம். அழாமயாவது இருப்பாங்க” குரு சொல்ல
“இதோ இரு கூப்பிட்டு பார்க்கறேன் உன்னோட போன் என்ன ஆச்சு?”
“யாருக்கு தெரியும் எங்க விழுந்திடுச்சுன்னு, ஓடும் போது தவறி விழுந்துடுச்சு போல இருக்கு”
“போகட்டும் விடு, உனக்கு எதுவும் ஆகல, அதுவே போதும்” பேசியபடி போனில் முயற்சி செய்ய
“இல்லைடா லைன் கிடைக்கலை” ராம் கூறவும்
அப்போது மீட்பு பணியில் இருந்தவர்கள் இரண்டு பேர் “ஹலோ நான் சக்தி. இதுக்கும் மேல யாராவது சிக்கி இருக்க வாய்ப்பு இருக்கிறதா?”
“முதல்ல மேல வந்தது நாங்க தான் ஸார். எங்களுக்கு முன்னாடி யாரும் போகல அதனால மேல ஆட்கள் இருக்க வாய்ப்பு இல்லை”
“ஓகே எதுக்கும் நாங்க ஒரு முறை செக் செய்திடறோம் நீங்க கீழே போகலாம், ராம், ராம் தான உங்களோட பேரு? நீங்களும் இவங்க கூட கீழே இறங்கிடுங்க. எங்களுக்கு இன்னும் கொஞ்சம் வேலை இருக்கு, முடிச்சிட்டு வரோம், இப்படியே கொஞ்ச தூரம் போனீங்கன்னா வண்டி நிறுத்தி வச்சி இருக்கிறோம், அதுல போயிடுங்க. ராம் உங்க உதவிக்கு நன்றி” சொன்னவர்கள் வேலையில் ஈடுபட்டனர்.
அடுத்த இரண்டு மணி நேரத்தில் மலையின் அடி வாரத்தை தொட்டு இருந்தனர். இறங்கிய பிறகுதான் தெரிந்தது பாதிப்பு எவ்வளவு பெரியது என்று. நேரில் பார்க்கவும் நிறைய அதிர்ச்சியோடு திகைத்து நின்றனர் அனைவரும்.
 

Kavisowmi

Well-known member
10
கீழே இறங்கி வரவும் அந்த இடமே ஒரே பரபரப்பாக காணப்பட்டது. போலீஸ் ஒருபுறம் வேக வேகமாக கூட்டத்தை அப்புறபடுத்தியபடி இருந்தது. கூடவே மீட்பு குழுவினரால் அழைத்து வரப்பட்டவர்களிடம் விசாரித்து, காயம் பட்டவர்களை உடனுக்குடன் மருத்துவரிடம் அனுப்பி வைத்துக் கொண்டு இருந்தனர்.
மருத்துவர்கள் ஒரு புறம் தீ காயம் பட்டவர்களுக்கு மருத்துவ உதவி செய்து கொண்டிருந்தனர். உயர் சிகிட்சை தேவைப்படுவோரை அங்கிருந்த ஆம்புலன்சில் அருகில் உள்ள மருத்துவ மனைக்கு உடனுக்குடன் அனுப்பி வைத்து கொண்டிருந்தனர்.
இதில் ஓயாது ஒலித்த ஆம்புலன்சின் சத்தம், பதற்றத்தோடு கூடியிருந்த உறவினர்கள், கிராமவாசிகள், வேடிக்கை பார்க்க என ஒரு கூட்டம், அவர்களை விரட்டியபடி போலீசார் என பரபரப்பாகவே இருந்தது.
ஸ்ரெட்சர் தூக்கிய செவிலியர் அவசரகதியாக சுறுசுறுப்பாக இங்கும் அங்கும் ஓடிக்கொண்டு இருந்தனர். மருத்துவர்கள் முதலுதவிக்கு தேவையானதை தயாராக வைத்தபடி காத்திருந்தனர்.
இத்தனையையும் சுற்றி பார்த்தவன் “அண்ணா அப்பா எங்கே??”ராமை பார்த்து கேட்க,
“வண்டியை இங்கே பார்க் பண்ண கூடாதுன்னு சொல்லிட்டாங்க, கொஞ்சம் அந்த பக்கத்தில் போட்டு இருக்கிறேன், அம்மா அழறதால அப்பா அம்மா கூட இருக்கறாங்கன்னு நினைக்கிறேன். வா நாம போகலாம்”
“ராம் இரு இவங்க கிட்ட சொல்லிட்டு வந்திடறேன் என்றவன் விஷாலி நின்றிருந்த திசையை பார்க்க, அதற்கு முன்பு சுருதியும் அவளை சுமந்தபடி அவளது தாய் தந்தை இருவரும் இவனது அருகில் வந்திருந்தனர்.
சுருதி குடும்பத்தினரை கூப்பிட அவர்களது குடும்பம் மொத்தமும் காத்திருக்க சுருதியின் காய்ச்சலுக்கு அங்கேயே மருத்துவம் பார்த்து விட்டு புறப்பட தயாராக இருந்தனர். குருவிடம் வந்தவன் “தேங்க்ஸ் குரு இந்த நாளை மட்டும் இல்லை உன்னையும் மறக்க மாட்டேன். இது என்னோட நம்பர். நாம இன்னொரு நாள் சந்திக்கலாம் வரேன்” என புறப்பட,
சற்று நகர்ந்து விஷாலி நின்றிருந்தாள். அவளை அழைத்து போக கோகுல் முன்னமே வந்து காத்திருந்தான். குருவை பார்த்ததுமே அருகில் வந்தவன் “தேங்க்ஸ்டா இவளுக்கு ஏதாவது ஆகி இருந்தது, இவங்க அப்பா அம்மாவுக்கு பதில் சொல்லி இருக்க முடியாது”
விஷாலியை பார்த்தபடியே “உன்னோட கஸின் கிட்ட சொல்லு, இனி இது மாதிரி பைத்தியகாரதனம் எதுவும் பண்ண கூடாதுன்னு. நீயும் இது மாதிரி காரியத்துக்கு துணை போகாதே, எதா இருந்தாலும் அவளோட அம்மா அப்பாவை அழைச்சிட்டு போக சொல்லு” சொன்னது என்னவோ கோகுலிடம் தான் ஆனால் பார்வை முழுவதும் விஷாலியின் மேலேயே இருந்தது”
இவனுடைய அத்தனை பேச்சுக்கும் தலையை மட்டுமே ஆட்டிக் கொண்டு இருந்தாள்.
“விஷாலி நீ என்ன பண்ண போற?” சட்டென கேட்கவும் பதில் சொல்ல தெரியாமல் விழித்தவளை பார்த்தவன்
“கேட்டது புரியலையா? இப்போது நேரா எங்க போக போற, வீட்டுக்கா இல்லை ஹாஸ்டலுக்கா?”
“ஹாஸ்டலுக்கு தான் போகணும். வீட்டுக்கு இந்த வாரம் வர்றதா சொல்லல, கோகுல் என்ன கூப்பிட்டுட்டு போய் ஹாஸ்டலில் விட்டுடு, அங்கே போய் தங்கிக்கறேன். இந்த வாரம் முடியவும் ஊருக்கு போகலாம்”
“வேண்டாம் நீ வீட்டுக்கு கிளம்பு, ஏற்கனவே பார்த்து பயந்திருக்கற, ரெண்டு நாள் தங்கிவிட்டு ஹாஸ்டல் வந்தா போதும். அம்மா, அப்பா, தம்பி கூட இருக்கும் போது கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கும்”
உண்மை தான் இதுவரை இறந்தவர்கள் பதினேழு பேர். ஒவ்வொருவராக இறக்கிவர அவர்களின் உறவினர்கள் கதறியது இன்னும் கொடுமையாக இருந்தது. இறப்பே வலி நிறைந்தது தானே!
இங்கு நடந்தது மனதை விட்டு அகல நீண்ட நாட்கள் பிடிக்கும், அதுவும் இறப்பின் விளிம்பை பலர் பார்த்து விட்டு வந்திருந்தனர். பலருக்கு லேசான காயம் பட்டு இருந்தது. இதில் காயம் படாமல் இறங்கியவர்கள் இவர்கள் ஐவர் மட்டுமே. இந்த மலையேற்றத்தில் கலந்து கொள்ள நினைத்தவர்கள் அனைவருக்கும் இந்த சம்பவம் ஆயுள்காலம் உள்ள வரை மறக்காது என்பதில் துளி கூட சந்தேகம் கிடையாது.
குரு சொன்னது எதற்கும் மறுப்பு தெரிவிக்கவில்லை விஷாலி. “மிடியா பர்சன் அந்த பக்கமாக நிற்கறாங்க, பே ன்னு வேடிக்கை பார்த்துட்டு பக்கத்தில் போயிடாதே, டிவியில உன்னோட முகம் வந்தா நீ மட்டும் இல்லை கோகுலும் மாட்டிக்குவான்”
கோகுல் வர்றேன்டா, காலேஜில் பார்க்கலாம்” என்றவன் ராமோடு நகர்ந்தான் தாய் தந்தை இருந்த இடத்தை நோக்கி. கூட்டத்தை விலக்கியபடி வண்டி இருக்கும் இடத்தை நெருங்க, ஏற்கனவே இறங்கியதும் போன் செய்து இருந்ததால் திலகவதியின் அழுகை ஓரளவிற்கு கட்டுபட்டு இருந்தது.
குருவை கண்ணில் பார்த்தால் போதும் என்பது போல் பின் இருக்கையில் அமர்ந்து இருந்தார். இவன் வரவும் காரின் வெளியே தொலைவை வெறித்தபடி நின்றிருந்த கிருஷ்ணன் இவனது முகத்தை பார்த்தவர்,
“வண்டியில் ஏறு வீட்டுக்கு போகலாம்” என்றார். அதற்கு மேல் அவனிடம் எதுவும் கேட்கவில்லை. இவன் அமைதியாக பின் புறம் அமர, திலகவதிக்கு அப்போது தான் உயிரே வந்தது.
“குரு உனக்கு எதுவும் ஆகல தானே, ஏன்டா இப்படி செஞ்ச?” என கேட்டபடி மறுபடியும் அழ ஆரம்பித்தார். அழும் போதே மகனின் மேல் மொத்தமாக பார்வையால் ஸ்கேன் செய்திருந்தார். எந்த காயமும் இல்லை என தெரியவும் அங்கே சற்று நேரம் காயம்பட்டவர்களை பார்த்தவர் அல்லவா இன்னும் அழுகை வந்தது.
அதுவும் இறந்தவர்களின் குடும்பத்தார் அழுவதை பார்க்கவும்தான் கிருஷ்ணனும் ராமும் அவரை இங்கு அமர வைத்து காத்திருக்க ஆரம்பித்தனர். ராம் போனில் சொல்லவும் கிருஷ்ணன் திலகவதியிடம் சொல்லியவர், இவர்கள் வருவதற்காக காரின் அருகிலேயே காத்திருந்தார்.
“கடவுளே என்னுடைய மகனை காப்பாற்றிட்ட” என்றபடி திலகவதி திரும்பவும் அழவும் காரில் மறுபுறம் ஏறிய ராம் “ம்மா நிறைய அழுதாச்சு, இனி அழாதிங்க”
அமைதியாக தாயின் அருகில் அமர்ந்த குரு எப்படி சமாதான படுத்துவது என தெரியாமல் ராமை பார்க்க, அவனோ கண் ஜாடையில் மடியில் படுத்துக்கோ என்பது போல ஜாடை காட்ட, தாயின் மடியில் தலை வைத்து படுத்த சில நிமிடத்திலேயே தூங்கி இருந்தான்.
மகன் மடியில் படுத்ததுமே திலகவதியின் அழுகை நின்றிருந்தது. அவனின் தலையை தடவியபடி அவர் அமர்ந்து இருக்க, ராம் தன் தந்தையிடம் “அப்பா அம்மாவும் சாப்பிடலை குருவும் சாப்பிடலை, வழியில் எங்கேயாவது நிற்பாட்டுங்கபா சாப்பிட்டுட்டு போகலாம்” என்றான்.
அடுத்து எதிர்பட்ட ஹோட்டலில் காரை நிறுத்தும் போது குரு நல்ல தூக்கத்தில் இருந்தான்.
“அம்மா அவனை எழுப்புங்கமா”
“வேண்டாம் ராம் தூங்கட்டும் பார்சல் ஏதாவது வாங்கிக்கோ எழுந்தா கொடுத்துக்கலாம்”
“ம்மா உங்களுக்கு”
“எனக்கும் எதுவும் வேண்டாம் இவனை பார்த்ததே போதும்”
அம்மா இருங்க நானே ஏதாவது வாங்கிட்டு வரேன். எப்படியும் கொஞ்ச நேரத்தில் எழுந்து பசிக்கித்துன்னு கேட்பான் அப்போ ரெண்டு பேரும் சாப்பிடுங்க” கிருஷ்ணனும் ராமனும் சாப்பிட்டு விட்டு இருவருக்கும் வாங்கியபடி வண்டியில் ஏறினர்.
இரண்டு மணி நேரம் போல் தூங்கிய குரு விழித்து எழவும் ஓரமாக வண்டியை நிறுத்தி திலகவதியும் அவனுமாக சாப்பிட்டனர். அடுத்து வண்டியை எடுத்தவ கிருஷ்ணன் நேராக தங்களது வீட்டிற்கு வந்த பிறகே வண்டியை நிறுத்தினார்.
இறங்கி கதவை திறந்து விட்டவர் உள்ளே நுழைந்துதான் தெரியும் விழுந்தது அறை பளாரென்று குருவின் கன்னத்தில் ஒன்று.
“என்ன செய்யறிங்க? என குருவை மறைத்தபடி திலகவதியும்,
“தம்பியை அடிக்காதிங்க” என தந்தையை ராமும் மறைத்து நின்றனர்.
“எல்லாம் நீ குடுக்கற செல்லம், இப்போது சொல்லறதுதான் இனி அவன் ஹாஸ்டலில் எல்லாம் தங்க வேண்டாம். இங்கே இருந்தே காலேஜிற்கு போயிட்டு வரட்டும்” என கோபமாக சொல்லி விட்டு தனது அறைக்குள் நுழைந்திருந்தார்.
குரு அமைதியாக ஷோபாவில் அமர்ந்து இருக்க, அருகிலேயே திலகவதியும் அமர்ந்து இருந்தார். ராம் தான் “அம்மா நான் குருவை பார்த்துக்கறேன், நீங்க போய் தூங்குங்க, நேற்றும் நீங்கள் தூங்கலை உடம்புக்கு ஏதாவது ஆகிடப்போகுது”
“ஆமாம்மா போய் தூங்குங்க அப்பா அடிச்சாங்கன்னு எனக்கு கோபம் எல்லாம் இல்லை. அடிக்காமல் இருந்து இருந்தாதான் ஃபீல் பண்ணி இருப்பேன். வீட்டுக்கு வந்ததே போதும்ன்னு இருக்கு, ராம் கூட போய் தூங்கிக்கறேன்” என குரு சொல்லவும் எழுந்து போனார்.
“டேய் வாடா நீயும் மேல ரூம்புக்கு இங்கே உட்கார்ந்து என்ன செய்ய போற எழுந்திரு”
“விட மாட்டியே வரேன், ரொம்ப பயந்திட்டியா? அங்கே வரும் போது பார்த்தேனே பேய் அறைஞ்ச மாதிரில்ல வந்த”
“நீ வேற அப்பா முகத்தை பார்த்தே கண்டு பிடிச்சிட்டாங்க, உன்னோட புண்ணியத்தில் எனக்கும் கன்னத்தில் ஒன்று விழுந்தது. அம்மாவை தான் சமாளிக்க முடியலை”
“ஸாரி டா இப்படி ஆகும்ன்னு நினைக்கலை, எனக்கு போன் வேணும் எப்ப வாங்கி தர்ற?”
“உனக்கில்லாததா? நாளைக்கே வாங்கி தர்றேன். இனி இப்படி எங்கள பயமுறுத்தாதே”
“ஏய் என்ன என்னவோ வேணும்ன்னு போய் சிக்கின மாதிரி சொல்லற? எல்லா இடத்திலேயும் பணம் படுத்தும் பாடு, கவர்மெண்ட் ஆபீஸ்ஸர்ஸ் சரியா இருந்து இருந்தா இப்படி நடந்து இருக்காது”
“ம் ஆனாலும் இது வரைக்கும் இருபது பேர் இறந்ததாக நியூஸ்ஸில் சொல்லி இருக்கறாங்க கிட்டத்தட்ட அதிகமாக காயம் ஆனவங்கன்னு பத்து பேரை சொல்லி இருக்கறாங்க லேசான காயம் பட்டவங்க கணக்கே இல்லை. கேட்கும் போதே பதட்டமா இருக்கு நம்மள மாதிரி தானே ஒவ்வொருத்தரும் துடிச்சு இருப்பாங்க, பொறுப்பில்லாத அரசாங்கமும், கை நீட்டற அதிகாரிங்களும் இருக்கற வரைக்கும் இது மாதிரி அப்பப்போ நடந்துட்டு தான் இருக்கும் யாராலையும் தடுக்க முடியாது, வெறுப்பா இருக்குது குரு”
“டேய் நீ ஏன்டா இப்படி பொங்கற? அமைதியான ராமா இது? ஆத்தாடி எனக்கே பயமா இருக்கு! வா போய் தூங்கலாம். அப்பாவை எப்படி சமாதானம் பண்ணறதுன்னு யோசிச்சா, நீ இப்படி அப்பா முன்னாடி பேசி இன்னும் ஏத்தி விட்டுடாதே, வழக்கம்போல காலையில் அப்பா கால்ல விழுந்திட வேண்டியதுதான் சரியாகிடுவாங்க! சரியாகிடுவாங்கதானே?”
இருவருமே பேசியபடி தூங்க சென்றனர் அடுத்த நாள் மட்டும் அல்ல அதற்கு அடுத்த நாளுமே இவனால் தந்தையோடு பேச முடியவில்லை.
அவருக்கும் தன் மேலேயே வருத்தம் தான். கோபமாக அடித்து விட்டார், ஆனால் அதற்கு பிறகு யோசித்து பார்க்கையில் ஏதாவது ஆகி இருந்தால் என்னவாகி இருக்கும் என்று இப்போதும் யோசிக்க முடியவில்லை.
இரண்டு நாட்கள் முடிந்து இருந்தது. ராம் குருவை அழைத்து சென்று அவனுக்கு பிடித்த மாடலில் போன் வாங்கி தந்திருந்தான்.
குரு முதலில் கோகுலுக்கு போன் செய்தவன் விஷாலி பற்றி விசாரித்துக் கொண்டான். “அவங்க வீட்ல கொண்டு போய் விட்டுவிட்டேன். அவள் தைரியமான பொண்ணு பயம் ஒன்றும் இல்லை” என கூறி இருந்தான் கோகுல். அவன் கூப்பிட்டு முடிக்கவும் அடுத்த பத்தாவது நிமிடத்தில் தெரியாத நம்பரில் இருந்து போன் வந்தது, அழைத்தது விஷாலி.
“என்ன பற்றி விசாரிச்சிங்களாம் பயப்படாதிங்க, இன்னும் அதையே நினைச்சிட்டு இருக்க மாட்டேன். முக்கியமான விஷயம் சொல்லதான் கூப்பிட்டேன். நான் நல்லா யோசித்து ஒரு முடிவுக்கு வந்து இருக்கிறேன்”
“என்ன முடிவு” யோசனையோடு குரு கேட்க,
“நான் என்னுடைய லைப்ல ரெண்டு பேருக்கு மரியாதை கொடுக்க கூடாதுன்னு நினைப்பேன். அதில ஒருத்தரா உன்னை செலக்ட் பண்ணியாச்சு”
“இன்னமும் எனக்கு புரியவில்லை விஷாலி”
“இருடா சொல்லறேன்”
“ஏய் என்ன மரியாதை குறையுது?”
“பதில் சொல்ல விடறையா? அப்ப இரு அந்த ரெண்டு பேர் யாருன்னா ஒன்னு என்னோட ப்யூச்சர் ஹஸ்பெண்ட் இன்னொருத்தர் என்னோட பெஸ்ட் ப்ரெண்ட். உயிர் காப்பான் தோழன் அப்படி தானே சொல்வாங்க? அந்த இடத்தில் உன்னை வைக்க போறேன். இனிமேல் என்கிட்ட நீ மரியாதையை எதிர் பார்க்காதே ஓகே”
“என்ன பேச்சு பேசற? எப்படியோ கூப்பிட்டுகோ, எனக்கு பிரச்சினை இல்லை. ஊருக்கு போய் இதைதான் யோசித்தாயா? உன்னையெல்லாம் என்ன செய்ய? அன்றைக்கு கல்லுக்கு பதிலா உன்னை உருட்டி விட்டு இருக்கணும்”
நான்கு நாட்களை தாண்டி இருக்க இறுக்கம் குறைந்து, நார்மலான நிலைக்கு வர ஆரம்பித்து இருந்தனர். இயல்பாக நடந்த நிகழ்வை கூறி கிண்டல் செய்ய முடிந்தது இருவராலும்.
“அது தான் நடக்கலையே, சோ இனி நீ என்னோட இம்சையை சகிச்சுதான் ஆகணும் வேற வழி இல்லை, இனி நீ ஆயுசுக்கும் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது”
“தெய்வமே போனை வை” அப்போது ஆரம்பித்தது இவர்களது நட்பு படலம், இன்று வரை தொடர்கிறது. அதிகமாக பேசியது இல்லை ஆனாலும் அவள் பற்றியது அனைத்தும் இவனுக்கு தெரியும். அது போல தான் அவளுக்கும் இவனது அனைத்தும் அத்துப்படி.
அதன் பின் கிட்டத்தட்ட இருபது நாட்கள் முடிந்த பிறகு ஹாஸ்டலுக்கு செல்ல அனுமதித்தார் இவனது தந்தை. அதுவும் நூறு கன்டிஷன்களோடு.
“தம்பி என்ன செய்யற?” என்ற சத்தம் கேட்கவும் பழைய நினைவுகளில் இருந்து சட்டென கலைந்தவனுக்கு காலுக்கு அருகில் லேசாக தட்டியவர், கட்டையில் அடிக்கும் சத்தம் கேட்க நிகழ்காலத்திற்கு வந்திருந்தான்.
 

Kavisowmi

Well-known member
11
“மாற்றி மாற்றி பேசற குடும்பத்தில் நமக்கு சம்மந்தம் வேணாம்பா” என ஆணித்தரமாக கூறிய சுமித்ராவை எப்படி சமாளிப்பது என விழித்து கொண்டு இருந்தனர் இருவரும்.
“அப்படி எதுவும் இருக்காது சுமி, நீ தெரியாம பேசற, நாம மறுபடியும் அவங்க கிட்ட பேசலாம். யாரோ சொன்னத வச்சு முடிவு செய்ய கூடாது. அவங்கள பற்றி நிறைய பேர் கிட்ட விசாரிச்சுட்டேன். குறைவாக எதுவுமே இல்லை. பையன் ரொம்ப நல்ல பையன் அதிர்ந்து பேச தெரியாது. அவர் கூட நீ சேர்த்து நின்றால் பார்க்கவே அவ்வளவு அழகாக இருக்கு. அந்த அளவுக்கு ரெண்டு பேருக்கும் பொருத்தம் நல்லா இருக்கு”
“அப்பா பேச்சை மாத்தாதிங்க நான் என்ன சொல்லிட்டு இருக்கறேன் நீங்க எத பேசறிங்க வந்தவர் என்ன சொன்னார்? நகை அதிகமாக கேட்கறாங்க! இப்ப இத கேட்பாங்க அடுத்த முறை அப்படியே மகனுக்கு வண்டி வாங்கி தந்திடுங்கன்னு சொல்வாங்க. அப்படியே டிவி, ப்ரிஜ், வாசிங்மெஷின்னு பட்டியல் போயிட்டே இருக்கும், இப்ப ஆளை விட்டு கேட்பாங்க அப்புறம் நேரடியா கேட்பாங்க, நல்லவேளை இப்பவே இவங்களோட குணம் தெரிஞ்சுதே போதும்பா இந்த இடம் நமக்கு ஒத்து வராது. வேற மாப்பிள்ளை பாருங்க”
“பைத்தியம் மாதிரி உளர கூடாது சுமித்ரா அவங்க நிச்சயத்துக்கு தேவையானதை வாங்கிட்டதா சொல்லி இருக்கறாங்க” தாய் மல்லிகாவின் எந்த சமாதானமும் அவளிடம் எடுபடவில்லை.
“ஓ அந்த தைரியம் தான் இப்படி கேட்க ஆள் அனுப்ப சொல்லிச்சா?” அம்மாவை பார்க்காமல் அப்பாவிடம் திரும்பியவள்
“அப்பா சும்மா சும்மா என்ன சொன்னாலும் தலையாட்ட கூடாது. தெளிவாக பேசிடுங்க நகை அன்றைக்கு பேசினதுதான். அதுக்கு மேல எதுவும் கொடுக்க கூடாது. கல்யாணத்துக்கு செலவு கூட ஆளுக்கு பாதின்னு பேசுங்கள் தாரளமாக கொடுக்கலாம்”
“ஏன் அவங்க பக்கத்தில் இருந்தும் உறவுக்காரங்க வருவாங்க தானே சமையலுக்குன்னு நாம மட்டும் கொடுக்க வேண்டாம், அவர்களையும் கொடுக்க சொல்லுங்க, இப்போது யாரு தனியா பொண்ணு வீட்டுக்காரங்க மட்டும் செலவை ஏற்றுக்கராங்க நிறைய கல்யாணம் இப்போது இப்படி தான் நடக்குது”
“அது மாதிரியே அப்பாவை பேச சொல்லுங்க, இவ்வளவு ஆன பிறகு எல்லா செலவிலேயும் ரெண்டு பேருக்கும் சமமா பிரிச்சுக்கறதா இருந்தா மேற்கொண்டு பேசலாம்ன்னு சொல்லுங்க, இதுக்கு சம்மதம்ன்னா பார்க்கலாம்”
“சுமி நீயா முடிவு பண்ணாத, என்ன நடந்ததுன்னு ஒரு முறை அவங்க கிட்ட ஒரு வார்த்தை கேட்டுக்கலாம், நாமளே முடிவு எடுக்க வேண்டாம். என்ன சொல்லறது புரியுதா? கொஞ்சம் அமைதியாக இரு, எங்களுக்கு இருக்கிறது நீ ஒரே பொண்ணு, ஏதா இருந்தாலும் உனக்கு செய்யாமல் யாருக்கு செய்யாமல் போறோம். கடன் வேணும்னாலும் வாங்கிக்கலாம்”
“எப்படிபா கடன் வாங்கிட்டு எப்படி அடைப்பிங்க உங்களுக்கு வயது ஏறத்தான் செய்யுது இறங்கல நம்ம தகுதிக்கு ஏற்ற மாதிரி பார்த்தா போதும்” இதற்கு மேல் மகளிடம் தர்க்கம் பண்ண விரும்பாத ராகவேந்தர் வெளியில் புறப்பட்டார்.
“அப்படி பேசாதடா கேட்கறவங்க வளர்த்தது சரி இல்லைன்னு சொல்ல போறாங்க ஓரே பொண்ணுன்னு யாராவது செல்லம் கொடுத்து கெடுத்து வச்சி இருக்கறாங்கன்னு பேச போறாங்க தாயார் மல்லிகா இப்படி சொல்லவும் இன்னும் கோபமாக பேச ஆரம்பித்தாள் சுமி.

“இதை தான்மா தப்புன்னு சொல்லறேன். சில விஷயங்களை என்னால எற்றுக்கொள்ள முடியாது, அதுல இதுவும் ஒன்று. குடுத்தா என்னன்னு நீங்க யோசித்தா, அவங்க வாங்கினா என்னன்னு யோசிக்கதானே செய்வாங்க! நீங்க எதுவுமே செய்ய வேண்டாம் நானே பார்த்துக்கறேன்”
“அந்த மாப்பிள்ளை எப்படி திரும்ப இந்த வீட்டு படியை மிதிக்கறாங்கன்னு பார்க்கறேன் மகனே கேட்க வாயே இருக்காது, நீங்க போங்கம்மா, உங்க வேலையை பாருங்க, இதுக்கு மேல நடக்க போறத வேடிக்கை மட்டும் பாருங்க, துண்டை காணோம் துணியை காணோம்ன்னு ஓட வைக்க போறேன் அந்த மாப்பிள்ளையை, எப்படி அப்படி ஒரு அப்பாவி மாதிரி முகத்தை வச்சிட்டு இப்படி கேட்க தோணுது?” முகம் சிவக்க கோபமாக கத்தியவள் வேகமாக தனது அறைக்குள் நுழைந்து கதவை அடைத்து இருந்தாள்.
அறைக்குள் போன பிறகும் கோபம் அடங்கவில்லை சுமித்ராவிற்கு. ‘பேர் மட்டும் ராம்ன்னு வச்சா போதுமா நடந்துக்கறது அப்படியே ஆப்போசிட், நல்ல வேளை இப்பவாவது இவங்களோட சுயரூபம் தெரிஞ்சுதே’
சில நிமிடம் தான் அமைதியாக கட்டிலில் அமர்ந்து யோசித்தவள் சற்றும் தாமதிக்காமல் பார்க்க வரும் போது தந்து சென்றிருந்த ராமின் நம்பருக்கு தனது செல் பேசியில் அழைத்திருந்தாள். முதல் ரிங் முழுவதும் அடித்து நின்றிருக்க மறுபடியும், மறுபடியும் முயற்சி செய்து கொண்டிருந்தாள். ‘ரெண்டு நேரம் மெசேஜ் செஞ்சா இவங்க என்ன கேட்டாலும் ஓகே சொல்லணுமா அந்த அளவுக்கு முட்டாள் மாதிரியா தெரியறோம்?! எவ்வளவு நேரம் ஆனாலும் சரி பேசாமல் போனை வைக்கப் போறது இல்லை’
நான்கு முறை முயற்சி செய்து ஐந்தாவது முறை முயற்சி செய்யும் போது போனை அட்டென் செய்தான் ராம்.
“ஹலோ” என இவனது குரல் கேட்டது தான் தெரியும் பொறிய ஆரம்பித்தாள் இவள்.
“போன் எடுக்க இவ்வளவு நேரமா ஐந்தாவது தடவை கூப்பிடறேன். அப்படி என்ன வேலை செஞ்சிங்க?”
“சுமி தானே இப்ப தான் வேலை விட்டு வந்தேன். பாத்ரூமில் முகம் கழுக போய் இருந்தேன் அது தான் போன் அடிச்சது தெரியலை, ஆமாம் ஏன் கோபமாக பேசற மாதிரி இருக்கு என்ன ஆச்சு?”
“உங்க அம்மாகிட்ட என்ன சொன்னிங்க? பிடிக்கலைன்னா முதலிலேயே சொல்ல வேண்டியதுதானே! எதுக்காக பொய்யா நடிக்கணும்?”
உண்மையிலேயே ஒரு நிமிடம் பயந்திருந்தான் ராம். ‘நாம அம்மாகிட்ட தானே சின்ன பொண்ணா தெரியறா வேண்டாம்ணோம், இது எப்படி இவளுக்கு தெரிஞ்சது? அம்மா அப்படி வெளியே சொல்லற ஆள் கிடையாதே’ மனதில் நினைத்தவன் “சுமி நீ என்ன சொல்லற எனக்கு புரியவில்லை”
“என்ன உங்களுக்கு புரியவில்லை? இங்கே உங்கள் பொண்ணுக்கு நீங்க விருப்ப படறத செய்ங்கன்னு சொல்லிட்டு, பின்னாடியே நகை இவ்வளவு போட சொல்லுங்கன்னு ஆள் அனுப்பினா என்ன சொல்லுவாங்க? பிடிக்கலைன்னா அன்றைக்கே பிடிக்கலைன்னு சொல்லிட்டு போய் இருக்கலாமே மாற்றி மாற்றி பேசினா?”
“ஹலோ என்ன ஓவரா பேசறிங்க நாங்க யாரையும் அங்கே அனுப்பல, அதுவும் நகை கேட்டு வாய்ப்பே இல்லை ஒரு விஷயம் தெரிஞ்சிக்கோங்க எங்க அம்மாவே வரப்போற மருமகளுக்காக ஆளுக்கு இருபது ,இருபது பவுன் சேர்த்து வச்சி இருக்கறாங்க, அப்படி இருக்கும் போது அவங்க ஏன் இப்படி கேட்க போறாங்க? யாரை வேணும்னாலும் குறை சொல்லுங்க எங்க அம்மாவை சொல்லாதிங்க புரியுதா?”
“அம்மாவுக்கு உன்னை ரொம்ப பிடித்து இருக்கு அதனாலதான் பேசாமல் இருக்கிறேன், எங்க சொந்தத்தில் பொண்ணு தர நிறைய பேர் ரெடியா இருக்கறாங்க, அம்மாவுக்கு பார்த்ததும் உன்னை தான் ஏனோ ரொம்ப பிடிச்சி போச்சு, நீ என்னடான்னா இவ்வளவு பேசற!”
“என்ன நான் பொய் சொல்லறது மாதிரி பேசறிங்க? காலையில் வந்தாரே ஒருத்தர் அவர் யாரு? நீங்க அனுப்பாமல் தான் தனியாக வந்தாரா? கேட்டா ஆமாம் கேட்டேன்னு சொல்லுங்க, அத விட்டுட்டு இப்படி பேசாதிங்க”
“யாரு சுந்தரம் அங்கிளா?” ராம் கேட்கவும்,
“பேர் எல்லாம் எனக்கு தெரியாது. ஆனால் நகை அதிகமா வேணும் இது அதுன்னு நிறைய பேசினாரு”
“சுமித்ரா ஏதோ மிஸ் அன்டஸ்டேண்டிங் என்னன்னு பார்க்கறேன்”
“இதோ பாருங்க நீங்க எதையும் பார்க்க வேண்டாம். விருப்பம் இருந்தா தெளிவாக சொல்லுங்க மனசில் ஒன்றை வைத்து வெளியே வேற பேசக்கூடாது. இங்கேயும் அப்பா அம்மா ரெண்டு பேருக்கும் உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு, கடன் வாங்கின்னாலும் அவங்க கேட்கிறது செய்திடலாம்ன்னு பேசிட்டு இருக்கறாங்க அவங்கள கடனாளி ஆக்கறதில் எனக்கு விருப்பம் இல்லை”
“சுமித்ரா நீங்க இவ்வளவு கவலை பட வேண்டிய தேவையே இல்லை. இங்கே உன்னை நிச்சயம் பண்ண புடவை தேவையானத வாங்கி உறவுக்காரங்களுக்கு சொல்ல ஆரம்பிச்சாச்சு, நீ பயப்படற மாதிரி எதுவும் ஆகாது. வேணும்னா மறுபடியும் அம்மாவை அங்கே வரச்சொல்லறேன். நேரடியாக பேசிக்கோங்க, ஏன்னா அம்மாவை பொறுத்தவரைக்கும் யார் கிட்டேயும் நேரத்திற்கு தகுந்த மாதிரி பேசற பழக்கம் கிடையாது”
தெளிவாக இவனது பேச்சை கேட்டவளுக்கு கொஞ்சம் கோபம் குறைந்து இருந்தது. கூடவே கொஞ்சம் குற்ற உணர்ச்சியும் தோன்றி இருந்தது. ஒரு வேளை தப்பு அவங்க பேர்ல இல்லாமல் இருந்தால் தான் பேசியது அதிகபடிதானே. வீட்டில் அம்மாவோடு பேசுவது வேறு சரியாக பேசாத ஒருவனோடு இவ்வளவு நேரம் பேசியது, அதுவும் அவ்வளவு கோபமாக என்பது வேறல்லவா?! இத்தனைக்கும் இவள் பேச பேச தன்மையாகவே பதில் சொல்லி கொண்டு இருந்திருக்கிறான் அவன்.
“ஸாரி நான் வேணும்ன்னு எதுவும் சொல்லல கல்யாணத்துக்கு முன்னாடியே இவ்வளவு பேசுதுன்னு யோசிக்க வேண்டாம்”
“அம்மா எப்பவுமே என்கிட்ட சொல்வாங்க ராம் கொஞ்சம் அமைதி, அவனுக்கு பார்க்கற பொண்ணு அவனுக்கும் சேர்த்து பேசணும்ன்னு, சொன்னது மாதிரியே பார்த்து இருக்கறாங்க. நான் எதுவும் தப்பா நினைக்க மாட்டேன். அப்புறம் உங்க அப்பா அம்மாவுக்கு மட்டும் தான் என்னை பிடிச்சுதா உனக்கு பிடிக்கலையா?”
இப்படி கேட்கவும் “ராம் அம்மா கூப்பிடற மாதிரி இருக்கு நான் வச்சிடறேன்” என கட் செய்திருந்தாள் அவள்.
“வாயாடி” என்ன செல்லமாக கொஞ்சியபடி தாயாரை தேடி சென்றான் ராம். “அம்மா சுந்தரம் அங்கிள் அவரோட வேலையை சரியா செஞ்சிட்டு போய் இருக்கறாரு”
“என்னடா ஆச்சு?” திலகவதி காபியை கலக்கியபடி பேச்சு கொடுக்க நடந்ததை சொல்லவும் “ம்மா எவ்வளவு கோபம் வருது அந்த பொண்ணுக்கு”
“என்னடா பயமா இருக்கா?”
“ஐய்ய அப்படி எல்லாம் எதுவும் இல்லை. எப்படி அந்த பொண்ண எந்த ஆங்கில்ல உங்களுக்கு பிடிச்சதுன்னு யோசிச்சிட்டு இருக்கிறேன்”
“டேய் அந்த பொண்ணும் கொஞ்சம் உன்ன மாதிரி தான். மனதிற்குள் எதையும் வச்சிக்க தெரியாது. விளையாட்டு தனமாவே வளர்ந்து இருக்கறா போல இருக்கு, சின்ன பொண்ணு தானே போக போக சரி ஆகிடுவா, இப்போ என்ன பண்ணலாம் நீ சொல்லு, இருக்கற குழப்பத்தை சரிபண்ணாம அப்படியே விடறது சரியா படலை”
“நீ என் கூட வர்றியா நாளைக்கு சாயங்காலமா இந்த ப்ளவுஸ் வந்துடுச்சு இல்லையா சரியா இருக்கான்னு கேட்டுவிட்டு, அப்படியே இந்த பிரச்சினையையும் முடிச்சிட்டு வந்துவிடலாம்”
“ஆமாம்மா நானும் அதை தான் சொல்லணுன்னு நினைச்சிட்டு வந்தேன். இப்பவே குழப்பத்தோட ஆரம்பித்தால் நல்லா இருக்காது. முதல் கோனல் முற்றும் கோனல் அப்படின்னு ஆகிட கூடாது. நீங்க பார்த்த பொண்ணு, எப்படியும் உங்க கூடதான் பாதி நேரம் இருக்க போறா, ஆரம்பத்திலேயே தப்பான எண்ணம் வந்திடுச்சுனா பின்னாடி மாத்திக்கறது கஷ்டம்”
“சரிடா குருவிற்கு போன் அடிச்சையா அவன் அட்டென் பண்ணினானா?”
“இல்லைமா. டிரை பண்ணிட்டு தான் இருக்கிறேன். எந்த இடத்தில் இருக்கறான்னு கூட தெரியவில்லை. அவனா கூப்பிட்டா தான் தெரியும். எப்படியும் அழைப்பான். நானும் டிரை பண்ணிட்டு தான் இருக்கிறேன்”
“சரிடா நைட்க்கு என்ன டிபன் வேணும்? சப்பாத்தி போட்டுடலாமா?”
“மா எது ஈசியாக இருக்குமோ அதை செய்யுங்க எனக்கு என்ன தந்தாலும் ஓகே தான். குறை சொல்ல மாட்டேன்”
“இந்த விஷயத்தில் அண்ணன், தம்பி ரெண்டு பேரும் ஒரே மாதிரி இருக்கறிங்க, இன்னும் அவன் கூட இருந்தா நான் தான் சமைப்பேன்னு அடம்பிடித்து ரகளை பண்ணி இருப்பான்”
“ஏம்மா குருவை மிஸ் பண்ணறிங்களா? இந்த முறை வந்தா பேசலாமா இனி இங்கேயே வேலை தேடிக்கோன்னு சொன்னா கேட்டுப்பான்மா, அவனுக்கு என்னை விடவும் உங்க மேல பாசம் ஜாஸ்தி”
“அதனால தான்டா அவனோட எல்லா ஆசைக்கும் சரின்னு சொல்லிட்டு இருக்கிறேன். ஊர் ஊரா சுற்றாமல் ஒரு இடத்தில் வேலையில் இருந்தாலே இப்போதைக்கு போதும். ஒரு வருஷத்துக்கு மேல ஒரு இடத்தில் நிற்கிறது இல்லை. நாளைக்கு அவனுக்கும் பொண்ணு தேடும் போது நிச்சயமாக கட்டிக்க போற பொண்ணு யோசிப்பால்ல”
“ம்மா நிறைய யோசிக்கறிங்க கவலையே படாதிங்க இந்த முறை எங்க வேலைக்கு சேர போறானோ அந்த இடத்தில்தான் கடைசி வரைக்கும் வேலை செய்வான் நம்புங்க” ஏதேச்சையாக விழுந்த வார்த்தைகள் தான் அது அப்படியே பலிக்க போவதை அப்போது யாரும் உணரவில்லை.
 

Kavisowmi

Well-known member
12
சத்தம் கேட்டதும் கூடவே அடிக்கும் ஒலி கேட்க, சட்டென கண் திறந்தான் குரு. ஆடு மேய்க்கும் முதியவர் ஒருவர் கையில் வைத்திருந்த கட்டை கொண்டு அவனது காலுக்கு அருகில் தட்டியபடி நின்றார்.
கிட்டத்தட்ட காலுக்கு அருகில் பெரிய கருந்தேள் தனது கொடுக்கை வளைத்தபடி இவனை கொட்டுவதற்கு தயாராக நின்றிருந்தது. சட்டென காலை நகர்த்தியவன் பின் புறம் நகர அமர்ந்து இருந்த கல்லில் இருந்து லேசாக சரிந்தான்.
தேளை அடித்த அந்த காட்டுவாசியோ “பயப்படாத தம்பி அடிச்சிட்டேன். செடிங்க இருக்கற பக்கத்தில் உட்காரும் போது கவனமாக இருக்க வேண்டாமா? இந்த பக்கத்தில் பாம்பே சர்வ சாதாரணமாக நடமாடும் கடிச்சு இருந்தா கஷ்டமா போய் இருக்கும். அதுவும் கருந்தேள் விஷம் ஜாஸ்தி மலை மேலன்னா கூட விஷமுறிவுக்கு கசாயம் மாதிரி ஏதாவது தருவாங்க இங்கே ஆளுங்களும் இல்லை. ஆஸ்பத்திரிக்கு போகணும்னா கூட அரை நாளே ஆகும்”
இவன் சரியும் போதே வழக்கம்போல அவனது மொபைல் செடிகளுக்கு நடுவில் தவறி இருந்தது. அதை அவனும் உணரும் நிலையில் இல்லை. ஏனென்றால் பார்த்த தேளின் சைஸ் அப்படி மிகப்பெரியது சில நேரங்களில் இவனும் பார்த்து இருக்கிறான்தான் அது எல்லாமே அளவில் சிறியது. தேள் கடி கூட வாங்கி இருக்கிறான் பயந்தது எல்லாம் இது வரையிலும் இல்லை ஆனால் இன்று அது அவன் பார்க்கும் போது அவனுக்கு அருகில் நின்றிருந்த தோரணை அப்படி. வளைந்து கொடுக்கை திருப்பி நின்றதே ஒரு ஜான் உயரம் இருந்தது. கடித்து இருந்தால் பயத்திலேயே உயிர் போய் இருக்குமோ என நினைக்கும் அளவில் இருந்தது.
காடு ஒவ்வொரு முறையும் இவனுக்கு புது புது அனுபவங்களை தந்து கொண்டு தான் இருக்கிறது. ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு நினைவு அந்த இடத்தை மறக்க முடியாதபடி ஏதாவது ஒரு நிகழ்வு அவனின் நினைவில் நீங்காத பொக்கிஷமாக சேர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
முதலில் தீ விபத்தில் தப்பித்தான் என்றால் அடுத்து கொஞ்ச நாள் கழித்து சென்ற இடத்தில் நடந்தது வேறு மாதிரி அனுபவம்.
அந்த காட்டில் முதல் முதலாக பாம்பு முட்டையில் இருந்து வெளிவருவதை பார்த்தவன் அதன் அருகில் கேமராவில் படுத்தபடி பாம்பு குட்டிகள் வெளிவருவதை படம் பிடித்துக் கொண்டு இருந்தான். பத்து முட்டைகளுக்கு மேல் இருக்க கவனமெல்லாம் பாம்புகளை படம் பிடிப்பதில் இருக்க, சட்டென கேட்டது மெளிதாக ஷ் என்ற சத்தம் மெதுவாக திரும்பி பார்க்க, ஒரு அடி உயரத்திற்கு உயர்த்தியபடி நல்ல பாம்பு படம் விரித்து இவனை தீண்ட தயாராக நின்று கொண்டு இருந்தது.
அத்துமீறி வந்ததும் இல்லாம என்னோட குழந்தைகள படம் எடுக்கிறாயா என கேட்பது போல சட்டென உருண்டு நகர்ந்திருந்தான். இப்போதும் அந்த விடியோவை பார்த்தால் பாம்பு நின்றிருந்த தோற்றம் கண்முன் வந்து போகும்.
அதற்காக பயந்து எல்லாம் வரவில்லை. படம் எடுத்து நின்ற பாம்பை கூட கேமராவில் சில போட்டோக்களை எடுத்தபிறகே அந்த இடம் விட்டு நகர்ந்தான்.
தெரியாமல் சிக்கியது என்றால் கடைசியாக வால்பாறை தாண்டிய பகுதியில் காட்டு யானையின் அட்டகாசத்தை எடுக்கும் போது யானை துரத்தியது தான். உயிரை கையில் பிடித்த படி ஒடியது அன்று தான்.
இதெல்லாம் ஒரு விதம் எனில் ஒரு இடத்திற்கு செல்லும் போது நடந்தது வேறு மாதிரியான அனுபவம். காட்டில் வழி தெரியாமல் கிட்டத்தட்ட ஒரு நாள் சுற்றியலைந்திருந்தான். இவனை பொறுத்தவரைக்கும் அட்வென்ஜர் யாரும் பெற முடியாத அனுபவம் தனக்கு வேண்டும் அவ்வளவு தான். இது எதுவுமே இவன் வீட்டில் யாரிடமும் சொன்னது கிடையாது. சில சமயம் ராம் கவனித்து கேட்பது உண்டு அவனிடம் மழுப்பலாக ஏதாவது சொல்லி நகர்ந்து விடுவான்.
சொல்வது எல்லாமே அந்த இடம் ரொம்ப சேஃப், பயம் தேவையே இல்லை கூடவே அங்கு இத்தனை மக்கள் வாழறாங்க நான் மட்டும் தனியாக இருக்கப்போவது இல்லை இது மாதிரி தான் சொல்லிவிட்டு வருவது. இந்த காட்டில் பெரிதாக எந்த ஆபத்தும் வரவில்லை என நினைக்க, நியாபகத்தில் வைத்துக்கொள் என்பது போல இந்த சம்பவம் நடந்து இருந்தது.
மனபூர்வமாக மனதில் இருந்து வார்த்தை வந்தது குருவிற்கு “நன்றி பெரியவரே இனி கவனமாக இருக்கிறேன்”
“இதமா வீசுற காற்றுக்கு கண்ணு சொக்கதான் செய்யும் தப்பு இல்லை ஆனாலும் கவனமாக இருக்கணும் இல்லையா இங்கே புலி,யானைகளோட தொந்தரவும் இருக்குது”
அதே நேரம் டிரக்கர் வரும் ஓசை கேட்க “உங்களை எப்பவும் மறக்க மாட்டேன் பெரியவரே” என கூறிவிட்டு புறப்பட்டான். பெரியவரும் தனது ஆடுகளை ஓட்டியபடி நகர்ந்து சென்றார்.
வண்டியில் ஏறியவன் நினைவில் இருந்தது தனது உடைமைகளை எடுத்தபடி நேராக பெங்களூர் செல்ல வேண்டும். அடுத்ததாக வேலைக்கு வரச்சொல்லி இருந்த நிறுவனத்தை பார்க்க வேண்டும், இப்படி தான் மனதில் ஓடிக்கொண்டு இருந்தது.
தனது தாயின் நினைவோ, குடும்பத்தினர் தேடுவார்கள் என்ற நினைவோ எதுவுமே இல்லை. ஏன் போன் பான்ட் பாக்கெட்டில் இருந்து தவறி விழுந்ததும் தெரியவில்லை. இருந்த நோக்கியா சிறிய போன் கூட ஜார்ஜ் இல்லாமல் தூங்கி இருந்தது. இவனது கவனம் முழுவதும் பெங்களூரில் இருந்தது.
வேலைக்கான ஆர்டரை மெயிலில் அனுப்பி இருந்தனர். இவனை செலக்ட் செய்திருப்பதாக கூறி இதுவும் அவனுக்கு ஆச்சரியம் தான். இன்டர்வியூ எதுவும் இல்லை. ஏன் இவனை பார்க்க கூட இல்லை. ஜஸ்ட் இவனது பயோடேட்டாவை அனுப்பி இருந்தான். வேலைக்கு ஏற்கனவே ஆட்கள் தேவை என்பதை அறிந்து கொண்டு

யாராவது விளையாடுகிறார்களா என்ற எண்ணமும் மூளையின் ஓரத்தில் இருந்து கொண்டே இருந்தது. அதை உறுதி செய்வதற்காகவே வேக வேகமாக கிளம்பி இருந்தான்.
அலுவலகம் பிடித்து இருந்தால் பார்த்து விட்டு நேராக கோவை சென்று ஒரு வாரம் தங்கி விட்டு மறுபடியும் பெங்களூரில் வீட்டிற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். பிறகு தனது உடைமைகளை எடுத்து வந்து இங்கு செட் செய்ய வேண்டும்.
ஊர் ஊராக சுற்றுவதாலோ என்னவோ அதிகமாக எதுவுமே வைத்து கொள்வது இல்லை. உடைகள் கூட பீரோ நிறைய வைத்தது இல்லை. ஜூன்ஸ் பேண்ட் பத்து வைத்திருந்தான் பெரும்பாலும் விதவிதமான கலரில் டீசர்ட், கேசுவல் எப்போதாவது. இவனது உயரத்திற்கு இவன் அணியும் உடை இன்னும் இவனை உயரமாக காட்டும்.
அங்கிருந்து உடைமைகளை எடுத்துக்கொண்டு பெங்களூர் பஸ் பிடித்து வர அடுத்த நாள் காலை ஆகி இருந்தது. பெங்களூருக்கு வந்தவனுக்கு அருகில் இருந்த சிறு ஹோட்டலில் தங்குவதற்கு புக் செய்து விட்டு, குளித்து உடை மாற்றி, உணவு உண்டபிறகுதான் போனின் ஞாபகம் வந்தது.
பேக்கில் இருப்பதாக நினைத்து பேக்கில் தேட அங்கும் இல்லை மொத்தத்தையும் கலைத்து தேட போன் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. நெற்றியில் கை வைத்து யோசிக்க கடைசியாக எப்போது போன் எடுத்தோம் என யோசிக்கவும் தேளை பார்த்தபடி பின் புறம் சரிந்தது ஞாபகத்தில் வந்தது.
‘வழக்கம்போல போனை தொலைச்சாச்சு ரைட்டு இனி புதிது தான் வாங்கணும்’
காட்டில் இருந்து கிளம்பி இரண்டு நாட்கள் தாண்டி இருந்தது. மதியம் வரை தூங்கி எழுந்தவன், நேரம் பார்க்க மதியம் இரண்டு மணியை தொட்டு இருந்தது. கீழே ரெஸ்ட்டாரண்ட்டில் உணவு உண்டவன் நேராக கால்டாக்சி புக் செய்து வேலைக்கு அழைத்து இருந்த ஐடி கம்பெனியை நோக்கி வண்டியில் புறப்பட்டான்.
இவனை தேர்வு செய்திருந்த டீம் லீடர் பதவிக்கு கிட்டத்தட்ட என்பது ஆயிரம் சம்பளம் என குறிப்பிட்டிருக்க, நேரில் பார்க்கவில்லை, நேர்காணலும் எதுவுமில்லை. ‘நீங்க ஆபீஸ் வரும் போது இன்டர்வியூ பார்த்து கொள்ளலாம்’ என்பது போல மெயில் வந்திருக்க யாராவது விளையாடுகிறார்களா என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வமே, எதை பற்றியும் யோசிக்காமல் அவனை இங்கு அழைத்து வந்து இருந்தது.
ஏழு மாடி கட்டிடம் இதில் இவன் தேடி வந்த அலுவலகம் ஆறாவது மாடியில் இருந்தது. அருகில் இருந்த லிப்டை பயன் படுத்தி ஆறாவது மாடியில் இறங்கியவுடன், அலுவலகத்தை அடைந்து, அங்கு இருக்கும் ரிஷப்ஷனிஸ்டிடம் தன்னை அறிமுகம் செய்யவும் அடுத்து இருந்த அறையை காட்டினாள் அவள்.
“டூ மினிட் ஸார் பக்கத்து ரூம்ல வெயிட் பண்ணுங்க எங்களோட டீம் லீடர் உங்களை வந்து சந்திப்பார்”
அருகில் இருந்த அறையின் ஷோபாவில் தன்னை பார்க்க வரப்போகும் அந்த நபரைக் காண கொஞ்சம் ஆர்வமாகவே அமர்ந்திருந்தான்
சரியாக ஐந்து நிமிடம் இடைவெளியில் இவனை காண வந்தது கோகுல் இவனது கல்லூரி நண்பன். அவனை பார்த்ததுமே இவனது முகத்தில் அடக்கமுடியாத புன்னகை தோன்றி இருக்க வந்தவனுக்கும் அதே நிலை தான்.
புன்னகையோடு கை குலுக்குவதற்காக அவன் கை நீட்ட, நீட்டிய கரத்தை இழுத்து அணைத்த குரு “டேய் பக்கி நீ இன்னும் உயிரோடுதான் இருக்கறையா?” என கேட்க,

“ஏன் கேட்க மாட்ட இந்த கேள்வியை நான் தான் கேட்கணும். எப்படி இருக்கற? பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு உன்னோட ரெஸ்யூம் பார்த்ததும் எவ்வளவு சந்தோஷப்பட்டேன் தெரியுமா? உனக்காக ரெண்டு நாளா வெய்டிங்”
“நானும் உன்னை இந்த இடத்தில் எதிர் பார்க்கல எப்படி இருக்கற எத்தனை குழந்தைங்க?”
“டேய் போன வருஷம் தான மேரேஜ்க்கு வந்துட்டு போன. அதுக்குள்ள என்னவோ பத்து வருஷம் ஆன மாதிரி கேள்வி கேட்கற?”
“ஓ ஸாரி டா”
“அது போகட்டும் உன்னை கேட்டு ரெண்டு நாளைக்கு முன்னாடி ராம் அண்ணா போன்ல கூப்பிட்டு இருந்தாங்க, உன்னோட போன் என்ன ஆச்சு? அப்பா திட்டினாங்கன்னு ஓடி வந்துட்டியா என்ன? நீ தான் அம்மா செல்லம் ஆச்சே”
“ராமா போன் பண்ணினான்?” குருவிற்கு அப்போதும் சந்தேகம்தான்.
“ஆமாம்டா ஏன் ஷாக் ஆகிற?”
“அவ்வளவு சீக்கிரம் கூப்பிட்ட மாட்டானே, போன் மிஸ் ஆகிடுச்சு, நீ இன்னும் ராம் கூட பேசிட்டு தான் இருக்கிறாயா?”
“டேய் என்ன கொலை குற்றம் பண்ணின மாதிரி கேட்கற? ராம் அண்ணா கூட வாரம் ஒரு முறை பேசிட்டு தான் இருக்கிறேன். குட் நியூஸ் தான். உன்கிட்ட தான் முதலில் சொல்லணும்ன்னு சொன்னாங்க, இந்தா போன் பேசிட்டு குடு, எல்லோரும் போன் கூட குடும்பம் நடத்தினா நீ வேற மாதிரி இருக்கற, போன் தொலைஞ்சிடுச்சின்னா வேற வாங்க மாட்டியா? ஏதாவது அவசரம்னா எப்படி உன்னனை கான்டாக்ட் பண்ணறது?”
“டேய் அடங்குடா, அட்வைஸ் பண்ணாத! ஒரு மாதம் வரைக்கும் போன் இல்லாமல் இருந்து இருக்கிறேன். எதுக்குமே அடிக்ட் ஆக கூடாது. அது போனா இருந்தாலும் சரி வேற எதா இருந்தாலும் சரி”
“அப்பா உன்கிட்ட கேள்வியே கேட்கலை, அப்படியே என் பின்னாடி வா, கேண்டீன் காபி குடிச்சிட்டே பேசலாம். இந்த ஆபீஸ் உனக்கு ஓகே தான?”
“ஏன் பிடிக்கலைனா என்ன செய்ய போற?”
“டேய் குரு இந்த நக்கலுக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை. என்ன அண்ணா நம்பர் மறந்து போச்சா?”
“டேய் பிச்சுடுவேன், பிஸின்னு வருது, வழக்கமா ஒரு ரிங்ல எடுத்துடுவானே. என்ன பண்ணறான்? யார் கிட்டேயும் பேசற டைப்பும் கிடையாது. கோகுல் இந்தா போனை பிடி எனக்கு இப்ப காபி வேண்டாம், அப்படியே வெளியே என் கூட வா, பக்கத்தில் ஏதாவது போன் கடையில் போன் வாங்கிட்டு அப்படியே சிம் ஒன்றும் வாங்கலாம்”
“கோகுல் இங்கே எத்தனை வருஷமா வேலை செய்யற?”
“முதலிலேயே பெங்களூரில்தான் வேலை கிடைச்சுது, இங்கே இந்த ஆபீஸ் மாறி ரெண்டு வருஷம் ஆக போகுது, நீ தான் ஒரு இடத்தில் இருக்காம ஊர் ஊரா சுத்தறதா ப்ரெண்டுங்க சொன்னாங்க, பேசாமல் இனி இங்கேயே செட்டில் ஆகிடு குரு”
“பார்க்கலாம்டா” பேசியபடி இருவரும் வாசலுக்கு வந்திருக்க, எதிர்பட்ட போன் கடையில் லேட்டஸ்ட் மொபைலை வாங்கியவுடன், ஆக்டிவேஷனில் இருந்த சிம்மை மாட்டி மறுபடியும் தாயின் நம்பருக்கு அழைப்பு விடுத்தான் குரு.
 

Kavisowmi

Well-known member
13
அடுத்த நாள் தன் தாயாரிடம் சொன்னது போலவே மாலை சற்று முன்னதாக ராம் வந்திருக்க, சுமித்ராவின் வீட்டை நோக்கி இருவரும் சென்று கொண்டிருந்தனர்.
நேற்று போய் பேசிவிடலாம் எனக்கு முடிவு செய்தவனுக்கு இப்போது கொஞ்சம் தயக்கம் வந்து இருந்தது.
“ம்மா நிச்சயத்துக்கு இன்னும் ரெண்டு நாள் தானே இருக்கு, அப்பவே பேசிக்கலாம் வண்டியை வீட்டுக்கு திருப்பிடவா?”
நேற்று பேசியதோடு சரி அதன் பிறகு வழக்கமான குட்நைட் கூட இவன் சொல்லவில்லை. கொஞ்சம் கோபம் கூட இருந்தது. எப்படி தப்பா யோசிக்கமுடியுது என. ஆனால் ஒன்றை மறந்து விட்டான். இருவரும் பிடித்தது பிடிக்காதது என பட்டியலிட்டு பேசி இருந்தால் இந்நேரம் இது போல சின்ன பிரச்சினை கூட தோன்றி இருக்காது என்பதை.
“ம்மா பதில் சொல்லுங்க”
“ராம் இங்கே இருந்தே கன்னத்தில் வச்சேன்னா இந்த பக்கம் என்ன பார்த்து திரும்பிடுவ, பேச போறது நான்தான், நீ இல்லை. இத பற்றி யோசிக்காமல் வண்டியை ஓட்டு, சரியா பேச கூடவா தயங்குவ? என்ன ராம் இப்படி இருக்கற? பின்னாடி அந்த பொண்ணு கூட எப்படி தான் பேச போகிறாயோ? அந்த பொண்ணு சின்னபசங்க கூட ப்ரெண்ட்லியா இருக்கற பொண்ணு, அப்போ எவ்வளவு பேசுவா நீ என்னடான்னா?”
“அம்மா நேற்று பேசும் போது கொஞ்சம் கோபமாக பேசிவிட்டேன் அதனால்தான் யோசிக்கறேன்”
“யாரு? நீ? அதுவும் கோபமா? சிரிக்க வைக்காத ராம், வண்டியில் உட்கார்ந்து இருக்கும் போது சிரிக்க கூடாதேன்னு பேசாமல் இருக்கிறேன்”
ம்மா மெசேஜ் கூட பண்ணல” ராம் கூறவும் இன்னும் சிரிக்க ஆரம்பித்தார் திலகவதி.
“எது அந்த குட்நைட் மெசேஜா?”
“மா ரொம்ப ஓட்டறிங்க”
“வண்டியை இந்த பக்கத்தில் திருப்பு, கொஞ்சம் ஸ்வீட்டும் பூவும் வாங்கிட்டு போகலாம்”
அருகில் இருந்த அந்த ஸ்வீட் ஸ்டாலில் ஸ்வீட் வாங்கியவர் அந்த கடைக்கு எதிரில் அமர்ந்து இருந்த பூக்கார பெண்மணியிடம் பூவை வாங்கியபடி, “ராம் இப்போ போகலாம்டா”
அடுத்த ஐந்து நிமிடத்தில் சுமித்ராவின் வீட்டுக்கு எதிரில் வண்டியை நிறுத்தி இருந்தான்.
வாசலில் நிற்கவும் மழை லேசாக தூறல் ஆரம்பித்து இருந்தது. கதவின் அருகே சென்ற ராம் லேசாக தட்ட, கதவை திறந்தவர் சுமித்ராவின் தாயார் மல்லிகா. இவர்களை பார்க்கவும் முகம் மலர்ந்தவர் “வாங்க சம்மந்தியம்மா, வாங்க மாப்பிள்ளை, உள்ளே வாங்க”
என வரவேற்றார்.
“சம்மந்திமா சுமியோட ஜாக்கெட் தச்சு வந்திடுச்சு, சரியாக இருக்கான்னு பார்த்துவிட்டு போகலாம்ன்னு வந்தோம். சுமி எங்கே?”
“உட்கார்ங்க, காப்பி வைக்கிறேன். சுமித்ரா பின்னாடி தோட்டத்தில் பூ பறிக்க போறேன்னு போனா, இருங்க போய் வரச்சொல்லறேன்”
“நான் வேணும்ன்னா போய் வரச்சொல்லவா?” ராம் கேட்கவும் திலகவதிக்கு கூட கொஞ்சம் ஆச்சர்யம் தான்.
“போய்விட்டு வாங்க மாப்பிள்ளை நாங்க இங்கே பேசிட்டு இருக்கிறோம்”
“இந்தாங்க சுமித்ரா வந்ததும் இந்த பூவை வச்சு விடுங்க சம்மந்திமா, உறவுகள்னாலே சில நேரம் ஏதாவது பிரச்சினை வந்துடுது, அது மாதிரி தான் நேற்று நடந்ததும். அத மறந்திடுங்க இன்னும் கூட கொஞ்சம் பேசணும் சுமியும் வரட்டும்” திலகவது துவங்க,
“நாங்க எதுவுமே தப்பா நினைக்கலை கல்யாணம்ன்னு வந்தா சின்ன சின்னதா ஏதாவது வந்துட்டு தான் இருக்கும். நாம தான் அனுசரிச்சு போகணும், அது போல தான் இதுவும். எங்களால் முடியாட்டி சொல்லி இருப்போம். இருங்க காபி எடுத்துவிட்டு அப்புறம் பேசலாம்” மல்லிகா சமையல் அறைக்குள் போகவும் திலகவதி அங்கிருக்கும் ஒவ்வொன்றையும் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார்.
சுமித்ராவின் புகைப்படம் ஒன்று ஸ்கூல் யூனிபார்மோடு இரட்டை ஜடை போட்டவளாய் கைகளில் பரிசு கோப்பையை தாங்கியபடி, தாய் தந்தைக்கு நடுவில் நின்றபடி இருந்தது. கொஞ்சம் பழைய காலத்து வீடு, பெரிய வராண்டா அதை தாண்டவும் ஹால், ஹாலின் வழியே செல்வது போல சமையல் அறை, டைனிங்ஹால், எதிர் புறத்தில் இரண்டு படுக்கை அறை, ஹாலின் கடைசியில் பின்புற தோட்டக் கதவு தெரிந்தது.
வீட்டின் அமைப்புதான் சற்றே பழையதாக இருந்தது. உள்ளே அலங்காரம் முழுவதும் தற்போதைய காலத்திற்கு ஏற்றாற் போல் மாற்றி இருந்தனர்.
திலகவதி பார்த்து கொண்டு இருந்தது போதே, காபி டம்ளரோடு மல்லிகா வந்திருந்தார். காபி டம்ளரை திலகவதியின் கையில் தந்தவர், “சுமித்ரா சின்ன பொண்ணு விளையாட்டுதனமாக ஏதாவது பேசி இருந்தா அத மறந்திடுங்க”
“என்ன இப்படி சொல்லறிங்க சுமித்ரா மேல எந்த வருத்தமும் இல்லை. நீங்கள் அத பற்றி யோசிக்கவே வேண்டாம். எங்களுக்கும் விளக்கம் சொல்ல வேண்டிய கடமை இருக்குது இல்லையா? அன்றைக்கு பார்க்க வரும் போதே எல்லா விஷயத்தையும் பேசி இருந்தா இந்த குழப்பம் இப்போது வந்து இருக்காது”
திலகவதி சொல்லவும் என்ன பதில் சொல்வது என தெரியாமல் மல்லிகா அமைதியாக நிற்க. “நீங்க உட்காருங்க பசங்க வந்திடட்டும். வீடு அழகா இருக்கு டெக்ரேஷன் கூட நிறைய செஞ்சு இருக்கறிங்க” என இயல்பாக்க முனைந்தார் திலகவதி.
பேப்பர் பெயிண்டிங், செயற்கை பூக்கள் அலங்காரம் என பார்க்க அழகாகவே இருந்தது. “சுமிக்கு இதெல்லாம் செய்ய பிடிக்கும். எதையாவது செஞ்சுட்டு தான் இருப்பா, புதிது புதிதாக எதையாவது இடம் மாற்றி போட்டுட்டுடே இருப்பா”
“இது நல்ல விஷயம் தானே சம்மந்தி, இப்ப எந்த பொண்ணுங்க வீட்டு வேலை செய்யறாங்க. கைல சின்னதா தூசு கூட படக்கூடாதுன்னு நினைக்கறாங்க”
அதே நேரம் தோட்டத்தில் பனியை விட மென்மையான லேசான சாரல் மேனியில் விழ அந்த குளுமையை அனுபவித்தபடி மல்லிகை செடியின் அருகில் கையில் பிடித்திருந்த கிண்ணத்தில் சில பூக்களை பறித்து நிரப்பியிருந்த சுமித்ரா, விழுந்த மழை துளியை கண்கள் மூடி ரசித்துக் கொண்டு இருந்தாள்.
அன்று பெண் பார்க்க வரும் போது கவனிக்காததை இப்போது கவனித்தான் ராம். சுமித்ராவின் நீளமான பின்னிய கூந்தல் அவளது இடுப்பை தொட்டபடி நீண்டிருந்தது. காற்றிற்கு ஏற்றாற் போல் லேசாக முகத்தில் விழும் சிறு சிறு கூந்தல் முடி கூட கவிதையாக தோன்றியது.
அவளையே வைத்து விழி அகற்றாமல் ரசனையோடு பார்த்து கொண்டு நின்றான் இவன். இரண்டு நிமிடம் முடியவும் தன்னை கூர்ந்து பார்ப்பதாக உள் உணர்வுக்கு தோன்ற இயல்பாக திரும்பி பார்த்தாள் அவள்.
பார்த்ததுமே ஆச்சர்யம் அவள் முகத்தில். தோட்டம் வரை வந்திருக்கிறானே! கூடவே லேசான வெட்கம், ‘கண்களை மூடியபடி நின்றிருந்தோமே, என்ன நினைச்சிருப்பாங்க?!’ என்பது போல.
“மழையில் நனைய பிடிக்குமா சுமி?” ராம் இப்படி கேட்கவும்
“ம் ரொம்ப உங்களுக்கு பிடிக்குமா?”
“நனைய பிடிக்கும்தான், ஆனா இப்போ ரசித்து நனையற இந்த பெண்ணைதான் ரொம்ப பிடிச்சிருக்கு”
“வீட்டுக்குள்ள போகலாம். யாரெல்லாம் வந்திங்க நீங்க மட்டும் தானா?”
“நானும் அம்மாவும் சில விளக்கம் தர வேண்டியது இருக்குதே, உருத்தலோட எந்த உறவும் தொடங்க கூடாது. எங்க உன்னோட ப்ரெண்டுங்க? நான் அவங்க கூட தான் தோட்டத்தில் இருக்கறன்னு நினைச்சிட்டு வந்தேன்”
“இனி தான் வருவாங்க” என்றபடி வீட்டுக்குச் செல்ல திரும்பியவளை பார்த்தபடி
“போன்ல கேட்டதுக்கு இன்னும் பதில் சொல்லல சுமி?”
“என்ன கேட்டிங்க?” சுமித்ரா ராமின் முகம் பார்த்து கேட்க,
“அம்மா அப்பாவுக்கு மட்டும்தான் பிடிக்குமா? உனக்கு பிடிக்காதான்னு கேட்டேனே! இப்போது பதில் சொல்லு” கைகளை கட்டியபடி அவன் நின்றிருந்த தோற்றம் பதில் கேட்காமல் நகர மாட்டான் என்பதை உறைக்க, ஏனோ அது கூட அவளுக்கு பிடித்து இருந்தது.
“கொஞ்சம் பிடிவாதமும் அதிகமோ?” உதட்டில் தோன்றிய சிரிப்போடு சுமித்ரா கேட்க,
“பிடிச்சவங்க கிட்ட மட்டும்” ராமின் முகத்திலும் லேசான சிரிப்பு இருந்தது.
“இங்கையே பேசிட்டு இருந்தா நம்மள தேடி இங்கே வநதுடுவாங்க ரெண்டு அம்மாவும்”
“நானும் இங்கேயே இருக்க போறேன்னு சொல்லலையே, பதில் சொன்னா போயிடலாம், ரெண்டு அம்மாவும் இங்கிதம் தெரிஞ்சவங்க அவ்வளவு சீக்கிரம் இங்கே வர மாட்டாங்க வேணும்னா உண்மையா இல்லையான்னு செக் பண்ணிடலாமா?”
“எப்படியாம்?” கேட்டவளுக்கு இன்னும் சிரிப்பு வந்தது.
“ஒரு அரைமணிநேரம் இப்படியே பேசலாம் நம்மள கூப்பிட வர்றாங்களா இல்லையான்னு பார்க்கலாம்” அவன் இப்படிச் சொல்லவும்,
“சரி தான் நீங்க பெரிய ஆள் தான். நான் இதுக்கு செட் ஆக மாட்டேன். உள்ள வாங்க அங்கே போய் பேசிக்கலாம்” இவனை தாண்டி அவள் நகரப் போகவும், அவளது ஒரு கையை பிடித்து நிறுத்தி இருந்தான்.
“பதில் சொல்லு சுமி”
“என்ன பண்ணறிங்க?” அவள்கேட்கும் போதே கையை விட்டுவிட்டான்.
“ஸாரி ஸாரி சுமி”
“பிடிச்சதால போன் பண்ண, பேச தோணுச்சு, சண்டை போட தோணுச்சு, ஒருத்தரை மனசுக்கு பிடிச்சா அவங்களுக்குன்னு ஒரு பிம்பம் நாமளே உருவாக்கி வச்சிருப்போம். அது பொய்யா போச்சுதுன்னா வருமே அந்த கோபம்தான் அப்போ இருந்தது. அதுதான் போன்ல அப்படி பேசிட்டேன். பதில் போதுமா? வாங்க உள்ளே” சொல்லியவள் வேகமாகவே ஹாலின் உள்ள நுழைந்திருந்தாள்.
அடுத்து வந்த ராமின் முகத்திலும் சரி முதலில் வந்த சுமித்ராவின் முகத்தில் தெரிந்த பூரிப்பும் மலர்ச்சியுமே இரண்டு பெற்றோருக்கும் மகிழ்ச்சியை தந்தது. அன்று போலவே சுமியை அருகில் அழைத்து வைத்து கொண் திலகவதி, வாங்கி வந்த பூவை வைத்து விட்டபடி
“சம்மந்திமா மற்றவர்கள பற்றின கவலை நமக்கு வேண்டாம். நாம இப்பவே பேசிவிடலாம். அன்றைக்கு சொன்னது தான் உங்களால் முடிஞ்சத செய்தா போதும், கல்யாண செலவு கூட ரெண்டு பேரும் பாதி பாதி செலவு செய்தால் போதும். அது போலதான் மண்டப செலவு மணவரை அலங்கார செலவு எல்லாமே ரெண்டு பேரும் பிரிச்சுக்கலாம்.
இதைதான் நிச்சயத்துக்கு வரும் போது பேசணும்ன்னு இருந்தோம். அதுக்குள்ள இந்த மாதிரி குழப்பமாயிடுச்சு. இதுவும் நல்லதற்குதான். பரஸ்பரம் நாம ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்க நல்ல சந்தர்ப்பம். கல்யாணம்ன்னு வரும் போது இப்படி தான் ஆளுக்கு ஒன்று சொல்வாங்க கலைச்சு விட, குழப்பம் பண்ண இப்படி அதையே நினைச்சிட்டு இருக்க கூடாது. திருமணம் முடிஞ்சதுன்னா அப்புறம் யாரும் கருத்து சொல்லறேன்.
இப்படி அப்படின்னு பேசிட்டு வர மாட்டாங்க, நான் சொல்லறது சரிதானே சம்மந்திமா?
சுமி இந்த ப்ளைவுஸ் போட்டு பார்த்துவிட்டு சொல்லுமா அளவு சரியா இருக்குதான்னு நாங்க புறப்படறோம்” என அவர் முடிக்க,
ரவிக்கையை எடுத்தபடி சுமி தனது அறைக்குள் சென்றுவிட்டாள்.
“சுமித்ரா விளையாட்டு போல ஏதாவது பேசி இருந்தா மன்னிச்சிடுங்க” திலகவதியை பார்த்து மல்லிகா கேட்க,
“ஹய்யோ என்னதிது ராமும் சுமியும் என்ன பேசினாங்கன்னு எனக்கு தெரியாது. அது என்னன்னு எனக்கு தெரிஞ்சுக்கவும் வேண்டாம்” அவர் சொல்லிக் கொண்டிருக்கும்பேதே சுமித்ரா வரவும்
“என்னமா ஏதாவது ஆல்டரேஷன் இருக்குதா?” என பேச்சை அந்த பக்கம் திருப்பிவிட்டார்.
“இல்லைங்க அத்தை சரியாக இருக்கு”
“சரிடா புறப்படறோம்” என கூறிவிட்டு புறப்பட்டனர் இருவரும். வண்டியில் போக போக
“ஏன் ராம் அந்த பெண்ணை தான் அவ்வளவு பிடிக்குதே உனக்கு? அப்புறம் ஏன் வரமாட்டேன்னு சொல்லற? பிடிக்கலைன்னு சொல்லிடாதே நான் நம்ப மாட்டேன். தோட்டத்தில் இருந்து வரும் போது பார்த்தேனே உன்னோட முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்ப் அவ்வளவு பிரகாசமாக எரிந்தது”
“ம்மா நான் எப்போது பிடிக்கலைன்னு சொன்னேன். சும்மா சும்மா அவங்க வீட்டுக்கு போறது தான் பிடிக்கலை”
டேய் ஏதாவது சொல்லிட போறேன். இந்த காலத்து பொண்ணுக்கு பாதி நாள் அவங்க வீட்டில் தான் இருக்கணும்ன்னு ஆசை படுவாங்க, வாரத்திற்கு ரெண்டு தடவையாவது போக வேண்டியது வரும் இப்பவே டிரைன் ஆகிக்கோ”
ம்மா எனக்கு நம்ம வீட்டை தவிர வேற எதுவுமே பிடிக்க மாட்டேங்குது எங்கேயும் போகவும் பிடிக்கலை என்ன செய்ய?
“போடா எனக்குன்னு பிறந்து இருக்கற பாரு, இப்படி ஒரு பையன் ஊர் சுத்தற அப்படி ஒரு பையன், குரு இன்னும் ரெண்டு நாள்ல வந்துடுவான்ல?”
“அவனோட ப்ரெண்டுங்க எல்லோர் கிட்டேயும் சொல்லி வச்சி இருக்கிறேன், எப்படியும் வந்திடுவான். மொபைல்ல கையில் இன்னும் எடுக்கல போல இருக்கு சுவிட்ச்ஆப்ன்னு வருதுமா”
அதற்கு பிறகு ராம் பேசியது எல்லாவற்றிற்கும் ம் ம் என்பது மட்டுமே திலகவதியிடம் இருந்து பதிலாய் வந்தது.
ராமிற்கும் திலகவதியின் மனநிலை புரிய அப்போதே முடிவு செய்து விட்டான், இனி இவர் குருவை பற்றி கவலை படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை. அதை செயல் படுத்த குருவின் வருகைக்கு காத்திருக்க ஆரம்பித்தான்.
 

Kavisowmi

Well-known member
14
காலை முதலே பரபரப்பாக இருந்தது ராமின் வீடு. நெருங்கிய உறவினர்கள் மாலை நிச்சய விழாவிற்கு காலையிலேயே வந்து இருந்தனர். திலகவதி காலில் சக்கரம் கட்டியது போல் இங்கும் அங்கும் ஓடி வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.
சுந்தரம் காலையிலேயே வந்தவர் வந்ததுமே ராமிடம் “கிருஷ்ணன் தான் விவரம் இல்லாதவனா இருக்கிறான், நீயாவது விவரமாக பொழைச்சுப்பன்னு பார்த்தா நீயும் அப்படி தான் இருக்கற. நானே போய் இன்னும் கொஞ்சம் நகை சேர்த்து போட சொல்லிட்டு வந்தா அம்மாவும் பையனும் வேண்டாம்ன்னு சொல்லிட்டு வந்து இருக்கறிங்க” என குறைபட்டார்.
“அங்கிள் நாம உழைக்கற காசே மிச்சம் ஆகறது இல்லை, எதுக்கு அடுத்தவங்க
கிட்ட வாங்கணும்?”
“ம் ம். அதுவும் சரிதான், எங்க இந்த குரு பையனை காணோம்?”
“வந்துடுவான் அங்கிள் சாயங்காலம் தானே பொண்ணு வீட்டுக்கு போகணும் அதுக்குள்ள வந்துடுவான்”
என்னவோ இந்த காலத்து பசங்களுக்கு பொறுப்பே இருக்கிறது இல்லை. எனக்கென்னமோ உன்னோட தம்பி வருவான்னு தோணல. வர்றதா இருந்தா இந்நேரம் வந்து இருக்கணுமே. என்ன சொல்லற?”
திலகவதி சரியாக அந்த நேரம் வந்தவர் “நீங்க சாப்பிட வாங்கண்ணா. ராம் உன்னோட ப்ரெண்டுகிட்ட போன்ல பேசணும்ன்னு சொன்னியே பேசிட்டு வா” என அவனை நகர்த்தியவர்,
சற்று நகரவும் “அப்பா எங்கே ராம்? முன்னாடி கேட்கறாங்க”
“இருங்கம்மா பார்த்து அனுப்பி விடறேன்”
“டேய். குருகிட்ட இருந்து போன் ஏதாவது வந்ததா? அப்பா கிட்ட போய் ஏதாவது கேட்கவே பயமாக இருக்கு. குருவை கேட்டு சண்டை போட்டா என்ன செய்ய? இதுக்கு பயந்திட்டே காலையில் இருந்து அவர் கண்ல சிக்காம சுத்திட்டு இருக்கிறேன்”
“ம்மா, அவன் இன்னும் போன் அட்டென் பண்ணல. இப்போது எந்த இடத்தில் இருக்கறான்னும் தெரியவில்லை. அவனோட போனுக்காகதான் வெயிட் பண்ணிட்டு இருக்கிறேன். எப்பவும் இப்படி பண்ண மாட்டான். ஏன் இந்த முறை இப்படி இருக்கறான்னு தெரியலை”
“வேற எதுவும் பிரச்சினை இருக்காதுல்ல ராம்?” கொஞ்சம் கவலையோடு கேட்ட திலகவதியை பார்த்தவன்,
“ம்மா. போகும் போது சொல்லிட்டுதானே போனான். பதினைந்து இருபது நாளைக்கு போன் பண்ண மாட்டேன், அந்த இடத்தில் சிக்னல் கிடைக்காதுன்னு சொன்னானே, அவன் சொன்னது வச்சு பார்த்தா எப்படியும் இன்றைக்கு கூப்பிடுவான். இவ்வளவு சீக்கிரமாக இந்த ஃபங்சனை வச்சி இருக்க வேண்டாம். இந்த நிச்சயதார்த்தம் இன்னும் ஒரு வாரம் கழித்தே வைத்து இருக்கலாம். இவ்வளவு டென்சன் நமக்கு இருந்து இருக்காது. அவனும் இங்கே வந்து பத்து நாள் தங்கிட்டுதான் அடுத்த வேலைக்கு போவேன்னு சொல்லி இருந்தான்”
“அப்படி சொல்லாத. நல்ல விஷயம் நடக்கும் போது மாற்றி பேச கூடாது. தப்பு நம்மளோடது தான். எப்படியும் வந்திடுவான்னு நினைச்சேன். சாயங்காலம் போட்டுக்கறதுக்கு டிரஸ் தச்சு வந்ததே போட்டு பார்த்தாயா?”
“ம்மா. நான் என்ன குழந்தையா?. சரியாக தான் இருக்கும் மூன்று மணிக்கு ரெடி ஆனா போதும் தானே”
“போதும்டா சரி நான் கொஞ்சம் காபி போட்டு வேணும்ங்கறவங்களுக்கு கொடுத்துட்டு வரேன்” என சமையல் அறையை நோக்கி செல்ல இவன் முன் வாசலுக்கு தந்தையை தேடி நகர்ந்தான்.
கிருஷ்ணன் வாசலின் முன்பு உறவினறோடு பேசிக்கொண்டு இருக்க. அருகில் வந்தவன்.
“அப்பா கூப்பிட்டிங்களா?”
“ம். இந்தா டிராவல்ஸ்காரங்களோட நம்பர். போன் பண்ணினா எடுக்கலை, கூப்பிட்டு சாயங்காலம் பொண்ணு வீட்டுக்கு போறதுக்கு டெம்போ டிராவல்ஸ் ஒன்றும், ரெண்டு கார் வேணும்ன்னு சொல்லிடு. நான்கு மணிக்கு முன்னாடி இங்கே வரச்சொல்லிடு. ஏற்கனவே முன்பணம் கொடுத்தாச்சு. இந்தா அதோட பில் அம்மாகிட்ட கொடுத்திடு. குருகிட்ட பேசினயா?”
அப்பா அவன் பெங்களூர் ஆபீஸ்ஸை பார்த்துவிட்டு வர்றதாக சொல்லி இருந்தான்.
“நீ பேசினாயா இல்லையா?”
“இல்லைபா” தலை குனிந்தபடி பதில் சொல்ல,
“இந்த மாதிரி நேரத்தில் கூட இருந்தா எவ்வளவு உதவியா இருக்கும்? நான் சொல்லறத எப்பதான் கேட்க போறானோ?! பாரு பார்த்தா திட்டுவேன்னு காலையில் இருந்து உன்னோட அம்மா கண்ணுக்கு சிக்காமல் சுத்திட்டு இருக்கறா. வர்றவங்க கேட்டா என்ன பதில் சொல்லறது?”
“ஆபீஸ்ல லீவு கிடைக்கலைன்னு சொல்லிடலாம்பா”
“இதுக்கு மட்டும் வேகமாக பதில் வருமே, உன்னோட அம்மா கிட்டேயும் சொல்லி கேட்கறவங்ககிட்ட இந்த பதிலையே சொல்ல சொல்லு. அவன் நேராக வரட்டும் பேசிக்கறேன்”
கிருஷ்ணன் பேசியதற்கு எல்லாமே சரி என தலையாட்டியவன் தனது தாயாரை தேடிச்சென்றான்.
“அம்மா இந்த பில்ல பத்திரமாக வைக்க சொன்னாங்க. தம்பியை பற்றி கேட்டா வேலை லீவு கிடைக்கலைன்னு சொல்ல சொன்னாங்க”
“அதை ஏண்டா இவ்வளவு டல்லா சொல்லற?”
“ம்மா.. குருவை ரொம்ப மிஸ் பண்ணறேன்மா. அவன் இருந்தா இந்த இடம் இப்படியா இருக்கும். ஒரே சத்தமாக, கலகலப்பா. போம்மா நான் தான் தப்பு பண்ணிட்டேன். அப்பவே அவன்கிட்ட பேசிட்டாவது பொண்ணு பொண்ணு பார்க்க போய் இருக்கணும். வந்தா அவனும் வருத்தபடுவான்”
“முதல்ல இருந்து மறுபடியும் ஆரம்பிக்காத, இந்நேரம் வந்து இருக்கணும் தானே. போ வேற வேலை இருந்தா பாரு, மதியம் சாப்பிட்டுவிட்டு ஒரு மணி நேரம் தூங்கி எழுந்திரு. நாலுமணிக்கு கீழே வந்தா போதும்”
“இவன் வேற இவன் மட்டும் தான் மிஸ் பண்ணறானாம். எனக்கு எதுவுமே இல்லை போல இருக்கு. அவன் வரட்டும் ரெண்டு நாளைக்கு பேசாமல் தண்ணி காட்டறேன். போன் பண்ணாம சுற்றினதுக்கு அது தான் தண்டனை”
“யார் நீங்களாமா? வந்து பக்கத்தில் நின்னாலே போதும் எல்லாத்தையும் மறந்திடுவிங்க”
“டேய் அத ஒன்றை வச்சுதானே ரெண்டு பேரும் இப்படி பண்ணிட்டு இருக்கறிங்க. இரு இந்த காபியை முன்னாடி குடுத்திட்டு வரேன். அத்தை வீட்டில் எப்போது வர்றாங்களாம்?” கேட்டபடியே காபியை தட்டில் சுமந்தபடி ஹாலிற்கு வர,
“கிளம்பியாச்சுன்னு போன் பண்ணினாங்கமா. வந்திடுவாங்க”
“இந்தா நீயும் ஒரு டம்ளர் காபி குடி. அப்பாவுக்கு ஒன்று எடுத்துவிட்டு போய் குடு. சாயங்காலம் பொண்ணு வீட்டுக்கு எடுத்துட்டு போகிற பூ பழம் எல்லாம் எடுத்து வைக்கணும். ரெண்டு பேரும் பையனா பிறந்ததிற்கு ஒருத்தன் பெண்ணா பிறந்து இருந்தா நல்லா இருந்து இருக்கும். எனக்கு உதவியா இருக்கும்ல”
“ம்மா. இது அநியாயம் நாங்க எப்போ தனியா உங்களை கஷ்டபட விட்டோம்? எந்த வேலையாக இருந்தாலும் செஞ்சு தருகிறோமே”
அதுவும் உண்மை தான் இரண்டு பேருமே தாயாரை தனியாக எந்த வேலையும் செய்ய விட்டதில்லை. அதிலும் குரு இருந்தால் சமையல் அறையே ரணகளமாக காட்சி தரும். சமைக்க, பாத்திரம் கழுவ என எதையாவது சொல்லிக் கொண்டு போய் நின்றால் போதும். சிரிப்புக்கு பஞ்சம் இருக்காது. அந்த அளவுக்கு பேசிக்கொண்டு இருப்பான்.
“மதியம் தூங்குடா. எழுந்திருக்கும் போது ப்ரெஸ்ஸா தெரிவ”
“ம்மா பகல்ல நான் என்றைக்கு தூங்கி இருக்கறேன்? தூக்கம் எல்லாம் வராது. ஏதாவது செய்யணும்னா சொல்லுங்க”
“சரி என் கூட வா ரூம்பிற்கு, பொண்ணு வீட்டுக்கு எடுத்துட்டு போக பதிமூன்று தட்டு ரெடி பண்ணனும் மேல இருந்து எடுத்துகொடு. ஆபீசில் இருந்து ப்ரெண்டுங்க யாராவது வர்றாங்களா?”
“அப்பா தான் இப்போது எதுவும் சொல்ல வேண்டாம் கல்யாணத்துக்கு பத்திரிகை அடிச்ச பிறகு சொல்லிக்கலாம்ன்னு சொன்னாங்க”
“அதுவும் சரி தான். அப்பா பூ வாங்கிட்டு வந்துட்டாங்களா? வந்தாச்சுன்னா பக்கத்தில் கட்டறதுக்கு கொடுக்கலாம். இன்றைக்கு பார்த்து பூ விலை அதிகம்ன்னு பேசிட்டு இருந்தாங்க”
“அப்பாவும் நானும் தான் சொன்னமே கட்டின பூ வாங்கிக்கலாம்ன்னு நீங்க தான் கேட்கலை”
“டேய். பூ விலை அதிகமா இருக்கு ராம்அம்மா, விலைக்கு வாங்காதிங்க. உதிரி பூ வாங்கி கட்டிக்கலாம். நாங்க கட்டி தரோம்ன்னு சொன்னதே அவங்க தான். அக்கம் பக்கத்தில் இருக்கறவங்களும் வேணும்டா. நாம என்ன தனித்தீவுலயா இருக்கறோம்? நாளைக்கு அவங்க வீட்டு விசேஷத்துக்கு நாம திரும்ப செய்து கொடுக்க தானே போறோம்”
இதுவும் உண்மை திலகவதியின் குணம் அது. இன்னமும் திலகாம்மா என கேட்டு இவருக்கு உதவி செய்ய அங்கே நிறைய உறவுகளை சம்பாதித்து இருந்தார்.
மதியம் இரண்டு மணியை தாண்டவும் பரபரப்பு தொற்றி கொண்டது. வந்திருக்கும் பெண்களுக்கு பூ கொடுத்து, காபி கொடுத்து, எடுத்து செல்ல வேண்டிய பொருட்களை தனியாக எடுத்து வைத்து, கூடவே வரும் போன்களை அட்டென் செய்து, வழி தெரியாதவர்களுக்கு வழி சொல்லி என, திலகவதிக்கு உண்மையில் நிற்க நேரம் இல்லை.
அங்கே மாடியில் ராம் தயாராகிக் கொண்டு இருந்தான். கூடவே குருவின் நம்பருக்கு டயல் செய்ய, வழக்கம் போல சுவிட்ச்ஆப் என திரும்பத் திரும்ப ஒன்றையே சொல்லி கொண்டு இருந்தது அது.
இனி சொன்னாலும் புறப்பட்டு வர முடியாது என தெரிந்தாலும் தகவலாவது சொல்லிவிடலாம் என்ற நப்பாசை. கூடவே இன்னோரு மனமோ, ‘ஒரு வேளை வீட்டுக்கு புறப்பட்டு வந்து கொண்டு இருப்பானோ, வந்தா நல்லா இருக்கும்’ என இப்படியும் ஆசைப்பட்டுக் கொண்டு இருந்தது.
மூன்று மணியை நெருங்கவும் திலகவதி அழைப்பது கேட்டது. “ராம் கிளம்பிட்டன்னா கீழே வா”
தனது அறையில் புறப்பட்டவன் கண்ணாடியில் தனது முகம் பார்க்க,
இளம் சந்தனநிற பேண்ட் நீலநிறத்தில் முழுக்கை சட்டை அவனது நிறத்தை இன்னும் எடுப்பதாக காட்டியது. கடைசியாக தலைமுடியை வாறியவன் திருப்தி ஆகவும் தனது போனில் சுமித்ராவிற்கு அழைப்பு விடுத்தான். இரண்டாவது ரிங்கில் எடுத்தவள் “சொல்லுங்க” என்றபடி அமைதியாக இருக்க,
“இங்கே புறப்பட தயாராகிட்டோம் சுமி”
“ம். ம்.”
“அங்கே எல்லோரும் வந்தாச்சா?”
ம்”
“என்ன கலர் டிரஸ் போட்டு இருக்கற? எது போட்டாலும் உனக்கு அழகாகதான் இருக்கும். அங்கே வந்தே பார்த்துக்கறேன். ப்ரெண்டுங்க எல்லாம் வந்தாச்சா?”
“ம்.. ம்.”
“என்ன ஆச்சு. ஒரே வார்த்தையில் பதில் சொல்லிட்டு இருக்கற?”
“ம்.. அம்மா நிறைய பேருக்கு சொல்லி இருக்கறாங்க. வீடு முழுக்க ஆட்களாக இருக்கறாங்க. உங்களோட போன் வரவும் ஓரே கிண்டல். அது தான்”
“ஓகே ஓகே. நான் வேணும்னா வச்சிடவா?” ராம் கேட்கவும் செகண்ட் கால் வருவதற்கான பிப் ஒலி கேட்டது.
“இல்லை தப்பா நினைச்சுக்க வேண்டாம். உங்களுக்கு போன் வருதா சத்தம் கேட்குது” அதற்குள்ளாக அடுத்த பிப் சத்தம் மறுபடியும் கேட்க,
“ப்ரெண்டுங்க யாராவது வாழ்த்து சொல்ல கூப்பிடுவாங்க இரு யாருன்னு பார்க்கிறேன். போனை வச்சிடவா?”
“ம்.. ம் அவளது சத்தத்தோடு கூடவே தொடர்ந்து சிரிப்பொலி அங்கே அவளின் நிலையை கூற, இவனுக்கும் உதட்டோர புன்னகை உற்பத்தி ஆகி இருந்தது.
உண்மையிலேயே சுமி நிலை வேறாக இருந்தது. அவளுடைய காலேஜ் நண்பிகள் பலர் வந்திருக்க வந்த நேரம் முதலே இவளை கிண்டல் செய்து முகம் சிவக்க வைத்துக்கொண்டு இருந்தனர். இப்போது போன் வரவும்,
“சுமிக்கு தனியா எந்த மேக்கப்பும் தேவையில்லை. முகமே பிங்க் நிறமா மாறி இருக்கு”
“சும்மா இருங்களேன் ப்ளீஸ்” சுமி சொன்னது யாருக்கும் காதில் விழவே இல்லை.
“அதுக்காகவா இவ்வளவு தூரம் வந்தோம்?” சொல்லி முடிக்கவும் அடுத்த சிரிப்பொலி கிளம்பியது.
வீட்டிற்கே அலங்காரம் செய்ய பார்லரில் இருந்து பெண்ணை அழைத்திருக்க, அவருடைய அலங்காரத்தில் தேவதையாக காட்சி தந்தாள். “சவுரி வேண்டாம் சுமித்ரா உங்களோடதே முடி நீளமா இருக்கு” இப்படி அந்த பெண் சொல்லவும். கூட இருந்த தோழி ஒருத்தி,
“ஏய். கண்டு பிடிச்சுட்டேன். சுமியோட இந்த லாங்ஹேர் பார்த்ததும் மாப்பிள்ளை ஸார் ஓகே சொல்லி இருப்பாங்க. கரெக்டா?”
அதே நேரம் அங்கே பெங்களூரில் குரு தனது மொபைலை கட் செய்தவன், ”அண்ணா நம்பர் பிஸின்னு வருதுடா. யார் கிட்டேயும் இவ்வளவு நேரம் பேச மாட்டான். இரு அம்மாவுக்கு கூப்பிட்டு பார்க்கிறேன்”
அடுத்து தாயாருக்கு அழைக்க இரண்டு முறை ரிங் போய் கொண்டு இருந்தது, ஆனால் எடுக்கவில்லை. மறுபடியும் முயற்சி செய்ய, கொஞ்சம் பதட்டம் கூட தோன்றி இருந்தது, முகம் லேசாக வியர்க்க ஆரம்பித்தது குருவிற்கு. எப்போதும் முதல் ரிங்கிலேயே எடுத்து விடுவார்கள் வீட்டில் இரண்டு பேருமே!
“டேய்.. என்ன இது? எதுக்கு உனக்கு இவ்வளவு வேர்க்குது?! மறுபடியும் கூப்பிடு” கோகுல் சொல்லவும்,
இந்த முறை திலகவதி போனை எடுக்க. “ம்மா”
“குரு. குருதானே? இப்போ எங்கடா இருக்கற?”
“பெங்களூரில்மா. ஏன்மா போனை எடுக்கலை வெளியே எங்கேயாவது வந்து இருக்கறிங்களா. ஒரே சத்தமாக இருக்கு?”
“டேய் ரெண்டு நாளைக்கு முன்னாடி வர வேண்டியவன் அங்கே என்ன பண்ணற? இன்றைக்கு ராமோட நிச்சயம்”
“என்னது? இதெல்லாம் டூ மச்மா, ஜாதகம் பார்க்க கொடுக்க போறிங்கன்னு தானே சொன்னிங்க. இப்போ நிச்சயம்னு சொல்லறிங்க? இது சரியில்லை. இப்போது புறப்பட்டா கூட என்னால கலந்துக்க முடியாது”
“என்ன என்னது? எத்தனை போன் செய்ய? இங்கே உன்னோட அபபாகிட்ட ரெண்டு பேராலையும் பதில் சொல்ல முடியலை. நீ அங்கே இருந்து பேசற. முதலில் கிளம்பி வா வீடு நிறைய ஆட்கள் இருக்கறாங்க இன்னும் கொஞ்ச நேரத்தில் புறப்படணும். இது யாரோட நம்பர்? உன்னோட பழைய நம்பர் என்ன ஆச்சு?” கரெக்டான கேள்வியை திலகவதி கேட்க.
“ம்மா போன்ல ப்ராபளம், நான் அங்கே வரேன் பேசிக்கலாம், நீங்கள் அங்கே கவனிங்க. நானும் இப்பவே புறப்படறேன்” கேட்ட செய்தியே மகிழ்ச்சியை தர வேலை, இடம் எல்லாமே இரண்டாம் பட்ஷமாக தெரிய, அத்தனையும் மறந்து தனது நண்பனிடம் சொல்லி விட்டு குரு தன் வீட்டை நோக்கி புறப்பட்டான்.
 

Kavisowmi

Well-known member
15
ராம் கீழே வரவும் ஒவ்வொருவராக புறப்பட்டனர். திலகவதி ராமிடம் “குரு பேசினான்டா. புறப்பட்டு வரானாம்” என் தகவல் சொன்னார்.
அது அப்போதைக்கு நிம்மதியை தர அடுத்த சில நிமிடத்தில் சுமித்ராவின் வீட்டை நோக்கி புறப்பட்டனர்.
அங்கே சுமித்ரா வீட்டிலோ இவர்களை விட ஆரவாரமாக பெரிய கூட்டமே கூடி இருந்தனர். வரவேற்க என அத்தனை குட்டிஸ்களும் வாசலில் நின்றிருந்தனர்.
மல்லிகா ராகவேந்திரர் இன்னும் நெருங்கிய உறவினர்கள் வாசலோடு வரவேற்று அழைத்துச் செல்ல, அனைவருக்கும் வரவேற்பு அறையில் வரிசையாக அமர இருக்கை போட்டு இருந்தனர். நடுநாயகமாக மாப்பிள்ளை அமர அழகான ஷோபா இரண்டு போட்டு இருக்க, ஒன்றில் ராமை அமர வைத்தவர்கள் பெண்ணை அழைத்து வந்தனர்.
வந்திருந்த கூட்டம், கூடவே நண்பர்களின் கேலி என ரத்தம் மொத்தமும் முகத்தில் பாய, பிங்க் நிறத்தில் நின்றிருந்தாள் சுமித்ரா. பெரிய ஜமுக்காளம் விரித்திருக்க கொண்டு வந்த பூ, பழ தட்டுகளை ஒவ்வொருவராக கொண்டு வந்து தர பெற்று கொண்டு நின்றிருந்தாள்.

இள நீலநிறத்தில் கருநீலபார்டரோடு கிட்டத்தட்ட இவனது கலரிலேயே அவளும் உடை அணிந்திருந்தாள். இது இயல்பாகவே இந்த கலர் ஒற்றுமை அமைந்திருக்க பார்த்தவன் கண்கள் அழைத்து வந்த அவளை மட்டுமே பார்த்து கொண்டு இருந்தது.
கொடுத்து முடிக்கவும் எடுத்து வந்திருந்த பட்டு சேலையை அணிவதற்கு உள் அறைக்குள் அழைத்து சென்றனர். இவர்கள் எடுத்து வந்திருந்த மெரூன் பட்டு சேலையை அணிவித்து அழைத்து வந்தவர்கள் ராமின் அருகில் அமர வைக்க, பார்த்த அத்தனை பேருக்கும் அவ்வளவு திருப்தி.
ராமின் அருகில் அமரவும் சற்றே குனிந்து நிலையில் இன்னும் சிவந்திருந்தாள். ராமின் முகத்தில் கூட அங்கங்கே லேசாக வியர்வை முத்துக்கள் பூத்து இருந்தது. கொஞ்சம் பதட்டதோடு, படபடப்பாக.
வயதில் பெரியவர் ஒருவர், “மாப்பிள்ளை பொண்ணுக்கு மோதிரம் போடறதுன்னா போடச் சொல்லுங்க” என்க,
ஏற்கனவே வாங்கி வந்திருந்த மோதிரத்தை ராமும் அவனுக்காக வாங்கியிருந்த மோதிரத்தை சுமித்ராவும் மாற்றி அணிவிக்க, அருகில் இருந்த ஸ்வீட்டை ஊட்டிவிடச் சொல்லவும் எடுத்து ஊட்டி விட்டான்.
“என்ன மாப்பிளை ஒவ்வொன்னும் சொல்லணுமா? சந்தனம் குங்குமம் பொண்ணுக்கு வச்சி விடுங்க. நெற்றி வகிட்டில் குங்குமம் வச்சி விடுங்க. நிச்சயம் முடிஞ்சாலே பாதி கல்யாணம் முடிஞ்ச மாதிரி என்ன சொல்லறிங்க?” கூட்டத்தில் ஒருவர் சொல்ல சுற்றிலும் சிரிப்பலை கிளம்பியது அவர்கள் பேசியது சுமித்ராவை இன்னும் அழகாக்கி இருந்தது.
“சுமித்ராமா இப்போது உன்னோட முறை. மாப்பிள்ளைக்கு நீயும் ஸ்வீட் கொடுத்து சந்தனம் குங்குமம் வச்சி விடும்மா” இப்படி சொல்லவும் அடுத்த சிரிப்பொலி கிளம்பியது. முகம் முழுக்க இரண்டு பேருக்குமே சிவந்து இருந்தது. பார்க்கவே அவ்வளவு அழகாக இருந்தது அந்த நிகழ்வு.
அப்போது கூட சுமித்ராவிடம் பேசிக்கொண்டு இருந்தான் ராம் “சுமித்ரா ஏன் இவ்வளவு நெர்வஸா இருக்கறிங்க? ரிலாக்ஸ்” இதை சொன்ன அவனும் கூட கொஞ்சம் பதட்டத்தோடு காணப்பட்டான். நடந்த நிகழ்வுகளை ஒரு புறம் விடியோ எடுத்தபடி இருக்க. ராமும் தனது மொபைலை தந்திருந்தான் போட்டோ எடுக்க என.
“இல்லை. சுற்றிலும் ஆட்கள் அதிகமா இருக்கறாங்க. அதுதான்” தலை குனிந்தபடி பதில் சொன்னவள் தனது கை குட்டையில் முகம் துடைத்தபடி நின்றிருந்தாள்.
“போதும் பொண்ணு மாப்பிள்ளை உட்காருங்கள். பெரியவங்க ஆசிர்வாதம் பண்ணறதுக்கு வாங்க” என சொல்லவும் ஒவ்வொருவராக இருவருக்கும் சந்தனம் குங்குமம் வைத்து ஆசிர்வாதம் செய்து விட்டு நகர்ந்து கொண்டு இருந்தனர். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் முடிந்து இருந்தது. “சரிபா. பொண்ணு மாப்பிள்ளை இப்படி உட்காருங்க. நாம பேசிடலாமா என்றபடி அதே பெரியவர் மிச்ச விஷயங்களையும் பேசிடலாமா?” என ஆரம்பித்து,
“மாப்பிள்ளை வீட்ல வர்ற செலவு எல்லாத்திலேயும் பாதி பாதியாக பிரிச்சிக்கலாம்ன்னு சொல்லியிருக்கறாங்க. வேற ஏதாவது பேசறதா இருந்தாலும் பேசிட்டுங்க”
“இல்லைங்க, எங்களுக்கு பரிபூரண சம்மதம்” சுமித்ராவின் தகப்பனார் ராகவேந்திரர் கூறவும்,
“சரிப்பா. திருமணத்திற்கு நல்ல நாள் இப்போதே பார்த்திடலாமா. நான் நாலு நல்ல நாள் சொல்லறேன் பொண்ணுக்கு எந்த நாள் தோதுபடும்ன்னு பொண்ணோட அம்மா பார்த்து சொல்லுங்க, காலண்டர் எடுத்துவிட்டு வாங்க” என்றபடி சற்றே நகர்ந்து முன்புற வராண்டாவிற்கு சென்று இருந்தனர். இன்னமும் கூட ஒவ்வொருவராக சுமித்ரா ராமிடம் பேசியபடி தான் இருந்தனர்.
பத்து நிமிடம் முடியவும் மொத்தமாக இவர்கள் இருந்த இடத்திற்கு வந்தவர்கள் “இந்த மாத கடைசியில் ரெண்டு முகூர்த்த நாள் இருக்குது. இத விட்டா இதற்கு பிறகு மூன்றாவது மாதத்தில் தான் நல்ல முகூர்த்தம் இருக்குது. எந்த தேதியில் வைக்கலாம்னு ரெண்டு பேரும் பார்த்து சொல்லுங்க”
கிருஷ்ணனோ “எனக்கு எந்த முகூர்த்தமாக இருந்தாலும் சரிதான் பொண்ணு வீட்ல அவங்களுக்கு எந்த தேதியில் சொல்லறாங்களோ அப்போது பண்ணிடலாம்”
“ராகவேந்திரா நீதான் சொல்லணும். என்ன கேட்டா மாத கடைசியில் வரும் முகூர்த்த தேதி சரியாக இருக்கும். ஏன்னா கல்யாண பத்திரிகை அடிக்க மண்டபம் பார்க்க டைம் வேண்டுமே என்ன சொல்லறிங்க? பொண்ணு கிட்ட கேட்டு சொல்லுங்க”
ராமின் அருகில் நின்றிருந்த திலகவதி சுமித்ராவிடம் “என்ன சுமித்ரா? உனக்கு அந்த தேதி ஓகே தானே? இல்லை தேதியில் மாற்றணுமா?”
அந்த டேட்டே ஓகே தான் அத்தை என அவள் தலையை மட்டும் ஆட்ட,
“சரி இனி என்ன? ரொக்கம் ஏதாவது இப்பவே கொடுக்கறிங்களா இல்லை பிறகா?”
“ஒரு லட்சம் தர இப்போ ரெடியா இருக்கு” மல்லிகாவை எடுத்துட்டு வா என்பது போல தலையாட்ட. உள் அறைக்குள் சென்றவர் எடுத்து வந்து தரவும், அத்தனை பேர் முன்பும் தட்டில் வைத்து தர, இனி இத முறைப்படி எழுதிடலாமா? என கூறி,
“யார்பா ரெண்டு வீட்டோட சார்பில ரெண்டு பேப்பர்ல சொல்லறமாதிரி எழுதுங்க” என ஆரம்பித்தார். இன்னாறது பேரனுக்கும் திலகவதி கிருஷ்ணனின் முத்த புதல்வன் ராமுவிற்கும் தெய்வதிரு இவர்களது பேத்தியும் மல்லிகா ராகவேந்திரர் புதல்வி சுமித்ராவிற்கும் ஆவணி மாதம் இருபத்தி ஆறாம் நாள் திருமணம் செய்ய பெரியோர்களால் நிச்சயக்கியபட்டு முடிவு செய்யப்படுகிறது”
“வாங்க பொண்ணு வீட்டுக்கு சார்பாக ரெண்டு பேரும் பையன் வீட்டு சார்பில் ரெண்டு பேரும் சாட்சி கையெழுத்து போடுங்க ரெண்டு பேரும் ஆளுக்கு ஒன்றை வச்சிக்கோங்க. அவ்வளவுதான் முடிஞ்சதுயா”
அப்போதே நேரம் ஏழு மணியை தொட்டு இருந்தது. அனைவருக்கும் இரவு உணவிற்கு ஏற்பாடு செய்திருக்க. ஒவ்வொருவராக சாப்பிட அழைத்து சென்றனர். கடைசியில் ராம் சுமித்ரா இருவரையும் அமர வைத்து உணவு பரிமாற பட. கூடி இருந்தவர்களின் கிண்டலுக்கு நடுவே இனிதாக அன்றைய நாள் முடிவடைந்து இருந்தது.
இவர்கள் புறப்பட இரவு ஒன்பது மணியை தொட்டு இருந்தது. சாப்பிட்டு முடிக்கவும் சுமியிடம் சொல்லி இருந்தான் ராம் “வீட்டுக்கு போனதும் போன் பண்ணறேன் சுமித்ரா” என சிறு சிறு சலசலப்பு இருந்தாலும் மகிழ்ச்சியோடு நிறைவாகவே தலையாட்டி அனுப்பி வைத்தாள்.
சிலர் நிச்சயம் முடியவும் பெண் வீட்டில் இருந்தபடியே அப்படியே கிளம்பி இருக்க மிச்ச உறவினர்களை அழைத்து கொண்டு ராமின் வீட்டை நோக்கி புறப்பட்டனர். அருகில் இருந்தவர்கள் உறவினர்கள் ஒவ்வொருவராக சொல்லி விட்டு புறப்பட்டு கொண்டிருந்தனர்.
அதில் சிலர் “திலகாம்மா அடுத்த ஆறு மாதத்தில் சின்ன பையனுக்கும் நல்ல பொண்ணா பார்த்து கட்டி வச்சிருங்க” என்றும் சொல்ல,
“ம். செய்யலாம் செய்யலாம். அதுக்கு அவன் சம்மதிக்கணுமே”
“ஏம்மா அப்படி சொல்லறிங்க. ரெண்டு பையன்களும் ராமர் லஷ்மணன் மாதிரி இருக்கறாங்க. உங்கள் பேச்சுக்கு மறு பேச்சு பேச மாட்டாங்க”
“சரி சரி உன்னோட வாய் முகூர்த்தம் அப்படியே பலிக்கட்டும்” என கூறவும்,
“வரோம் மா” என புறப்பட்டு சென்றனர்.
அங்கே சுமித்ரா வீட்டில் உறவினர்கள் அனைவரும் சென்றிருக்க சுமித்ராவின் தாயார் மல்லிகா சுமியிடம் “கட்டியிருக்கும் சேலையை மாற்றிவிட்டு வா சுமி.
தலையை மெதுவாக அவிழ்த்து விடறேன்”
“இதோ வரேன்மா” என்றவள் பத்து நிமிடத்தில் குளித்து உடைமாற்றி வரவும், அருகில் அமர வைத்து தலையை பிரித்து விட்டு ஏற்கனவே தலையில் வைத்திருந்த மல்லிகை சரத்தை எடுத்து விட்டவர் “கொஞ்சமாக வச்சி விடறேன் அத மட்டும் வச்சிக்கோ சுமி”
“ம்.. சரிமா.. டயர்டா இருக்கு. தூக்கம் வருது”
“இரு.. இரு.. திருஷ்டி சுற்றி போடறேன், அப்புறம் போய் தூங்கிக்கோ. ஊரே உங்க பொருத்தம் பற்றி தான் பேசினாங்க”
“பச். என்ன பொருத்தம் இருந்து என்ன மா? எத்தனை விஷயம் மாறினால் என்ன? கல்யாணம்ன்னு வரும் போது, பணம் நகைன்னு கேட்க தானே செய்யறாங்க, கொடுக்கும் போது எதுவுமே சொல்லாமல் வாங்கிக்க தானே செய்யறாங்க”
“நீ ரொக்கம் கொடுத்தத சொல்லறையா? காலகாலமா தொடர்ந்து வர்றதுடா சட்டுன்னு மாறிடாது. இன்னும் நாள் ஆகும். பாரேன் இன்னும் ரெண்டு மூன்று தலைமுறை மாறும் போது இந்த மாதிரி வாங்கறது சுத்தமாக நின்றாலும் நின்றுவிடும்”
“போம்மா. வருங்காலத்தில் பையனுக்கு முதலில் பொண்ணு இருக்கான்னு பார்க்கணும். ஆண்களை விடவும் பெண்களோட பிறப்பு விகிதம் குறைஞ்சிட்டு வர்றதா ஆர்டிகல் சொல்லுது”
“போதுமே உன்கிட்ட பேச முடியுமா?” அப்போது போன் வரவும்.
“யார்டா? மாப்பிள்ளையா?”
“ஆமாம்மா”
“சரி பேசிட்டு தூங்கு. நான் போய் சமையல் கட்டை ஓரம் பண்ணிட்டு வரேன்” என நகரவும்,
“ஹலோ” என்றபடி போனை அட்டென் செய்தாள்.
“சுமி. நான் தான்”
“சொல்லுங்க”
“என்ன பண்ணிட்டு இருக்கற சுமி?”
“தூக்கம் வருது. தூங்க போறேன்”
“ம்.. இங்கேயும் அப்படி தான் செம டயர்ட். இப்ப தான் உறவுக்காரங்க எல்லோரும் கிளம்பி போனாங்க. ஸாரி சுமி. ரொக்கப்பணம் கொடுக்கும் போது உன்னோட முகத்தை பார்த்தேன் உன்னோட முகமே சரி இல்லை. உனக்கு இதெல்லாம் பிடிக்கலைன்னு நினைக்கறேன் என்ன செய்ய? பிடிக்குதோ இல்லையோ சில நேரத்தில் சில விஷயத்தில் அனுசரிச்சு தான் போக வேண்டியதா இருக்கு சில விஷயங்களை மாற்ற முடியறது இல்லை. எல்லாமே கல்யாணம் வரைக்கும் தான். அப்புறம் பாரேன் இன்றைக்கு பேசின யாரும் மறுபடியும் வந்து பேசிட்டு நிற்க மாட்டாங்க”
“அப்போ நகை கேட்கலாம்ன்னு சொல்லறிங்களா?”
“அப்படி கிடையாது சுமி. அம்மாவுக்கு பொண்ணு வீட்ல இருந்து நகை வாங்கறது இஷ்டம் கிடையாது. லாஸ்ட் தடவை ஒரு பொண்ணு பார்த்தாங்க எனக்காக. நான் பார்க்கலை அம்மாவே பார்த்து முடிவு ஆகிற மாதிரி இருந்தது. அம்மா நகை எதுவும் தேவையில்லை உங்கள் பெண் மட்டும் போதும்ன்னு சொன்னாங்க. அங்கே இருந்தவங்க ஆளுக்கு ஒரு மாதிரி பேச ஆரம்பிச்சிட்டாங்க பையனுக்கு ஏதாவது நோய் இருக்கா. அதனால்தான் இப்படி கேட்கறிங்களா அப்படின்னு அம்மா கடுப்பாகி உங்க பொண்ணே வேண்டாம் அப்படின்னு சொல்லிட்டு வந்துட்டாங்க. அதனால உன் விஷயத்தில் எதுவுமே சொல்லல. உங்கள் வீட்ல நகை கம்மியா போட்டா கூட எதுவும் கேட்க மாட்டாங்க, நீ நம்பலாம். ஓகே குட் நைட் சுமித்ரா, நாளைக்கு கூப்படறேன்” என கட் செய்தவன் தாயாரை தேடி கீழே வந்தான்.
அங்கே வெளிகதவு லேசாக திறந்து இருக்க சமையல் அறையில் பாத்திரம் கழுவிக் கொண்டு இருந்தார் திலகவதி. கிருஷ்ணன் தூங்க சென்று இருந்தார். தன் அம்மா கழுவியதை அவரோடு பேசியபடி ஒவ்வொரு பாத்திரமாக எடுத்து அதனதன் இடத்தில் வைக்க துவங்கினான் ராம்.
“போய் தூங்கலாம்ல ராம், நான் பார்த்துக்கறேன்” திலகவதி கூறவும்.
“போங்கமா உங்களுக்கு தூக்கம் வரலையா? நானும் கூட நிற்கறேன். கொஞ்ச நேரம் தானே மணி பதினோன்று ஆக போகுது”
“சொன்னால் கேட்க மாட்ட. இதையெல்லாம் சரியா அடுக்கு” என்றபடி பாத்திரம் கழுவி வைக்க, அதே நேரம் கதவை திறந்தபடி குரு உள் நுழைந்து கொண்டிருந்தான்.
சமையல் அறையில் சத்தம் கேட்கவும் மெதுவாக வந்தவன் வாயில் அருகில் நிற்க, முதலில் பார்த்தது ராம். “குரு” என அவன் அருகில் நகர போகவும்,
“ஷ்” என்றபடி உதட்டில் கை வைத்தவன் இவனை வெளியே வரும் படி ஜாடை காட்ட வாய்க்குள் சிரித்தபடி ராம் வெளியேவர, வேகமாக தனது கண் கண்ணாடியை கழட்டி சட்டைக்குள் வைத்த குரு, ராம் எடுத்து வைத்த பாத்திரத்தை இவன் எடுத்து வைக்கத் துவங்கினான் அமைதியாக.
 

Kavisowmi

Well-known member
16
கிட்டத்தட்ட ஒரே உயரம், உடை கூட ஒன்று போல் அமைந்திருக்க, கண்களின் கண்ணாடி மட்டுமே இருவரையும் சற்றே வேறுபடுத்திக் காட்டியது. குரு அமைதியாக எடுத்து வைத்து கொண்டிருக்க, திரும்பி பார்க்காமலேயே குரல் கொடுத்தார் திலகவதி,
“குரு, வந்தாச்சா?” என.
“ம்மா டூ மச் எப்படி கண்டு பிடிச்சிங்க. திரும்ப கூட இல்லை”
“நான் உன்னோட அம்மாடா. உன்னை எனக்கு தெரியாதா? நீ முன்னாடி கேட் ஓபன் பன்னும் போதே தெரியும். எதுல வந்த?”
“அது. மா வண்டி எதுவும் கிடைக்கவில்லை. ஊட்டிக்கு காய்கறி ஏற்றி வந்த டெம்போல”
“என்ன அவசரம்? பஸ்ல வர வேண்டியது தானே”
“ம்மா. நமக்கு என்ன வேணும் வீட்டுக்கு வரணும் எதில் வந்தா என்ன? எந்த வண்டி கிடைக்குதோ அதில வந்துவிட வேண்டியது தான். அம்மா அத விடுங்க. சாரோட விஷயம் என்னன்னு பார்க்கலாம்”
“என்னடா பார்க்க போற?” ராம் கேட்கவும்
“இருடா சொல்லறேன், பார்த்து ஒரு மாதம் இருக்குமா. அதுக்குள்ள என்ன மேஜிக்மா இது. இங்கே வா”
“என்ன குரு என்ன ஆச்சு?” ராம் கேட்கவும்,
“அம்மா உனக்கு தெரியலையா? இவன் கலராகிட்டே வரான். ஏம்மா பொண்ணுங்களுக்குத்தான மேரேஜ்னா ஒரு அழகு வரும்ன்னு சொல்லுவாங்க? இங்கே அப்படியே ஆப்போசிட்டா இருக்கு. என்ன நடக்கிறது ப்ரோ?”
“டேய் குரு வந்ததும் ஏன் அவன்கிட்ட வம்பு இழுக்கற?” திலகவதி கேட்கவும்
“அதுதானே. ம்மா குரு கிட்ட ரெண்டு நாள் பேசபோறது இல்லைன்னு நீ சொன்னேல்ல, அத செய்மா முதல்ல?”
“போட்டு தர்றியா மகனே, இரு ஒரே நிமிடம். ஏன் சார் போன் பண்ணும் போது பிஸின்னு வந்தது அப்படி யார் கிட்டேங்க சார் கடலை போட்டிங்க?”
“ம்மா. இவனை என்னன்னு கேளு”
“டேய் உங்களோடத நீங்களே பேசி முடிச்சிக்கோங்க. என்ன இதிலே இழுக்க கூடாது. போய் ஹால்ல உட்காருங்க ரெண்டு பேரும் பால் காய்ச்சி எடுத்துட்டு வரேன். குரு சாப்பிட்டயா. ஏதாவது செய்யவா?”
“சாப்பிட்டாச்சுமா. நல்ல கடையில்”
“அடிங்க. காலையில் எனக்கு இத செஞ்சு தாங்க, அத செஞ்சு தாங்க அப்படின்னு சொல்லிட்டு வா முதுகிலேயே வைக்கறேன்”
“மா ரொம்ப டெரரா பேசறிங்க, நீ வா பையா உன்கிட்ட இன்னும் நிறைய கேட்க வேண்டியது இருக்குது, முதல்ல உன்னோட போனை கொடு” என்றவன் ராமின் பாக்கெட்டிலிருந்து கேட்காமலேயே எடுத்து இருந்தான்.
“எதுக்குடா உனக்கு?”
“குடுடா அவசரபடற. அதுவும் போனை தர்றதுக்கு இவ்வளவு யோசிக்கற? ஏதாவது சிக்ரெட் இருக்கா? ஒரு வேளை போன்ல பேசற டைம்மா?”
“குரு, அவன் அப்பவே குட்நைட் சொல்லி இருப்பான். பேசறத பற்றி அவன்கிட்ட கேட்கற?”
“குடுடா போனை” பத்து நிமிட அலைகழிப்பிற்கு பிறகு “இன்றைக்கு ஃபங்சனை போட்டோ எடுத்து இருப்பதானே பார்க்கலாமா?” என கேட்கவும்,
“பார்த்துட்டு தா” என ஹாலில் அமர்ந்தபடி டிவியை ஆன் செய்தான் ராம்.
போட்டோ கேலரிக்குள் நுழைந்தவன் போட்டோக்களை பார்த்தபடி “வாவ், ராம் மோதிரம் கைல வாங்கின பொண்ணு கூட பேசாமல் இருக்கு, உன்னோட முகம் ஏன் இவ்வளவு சிவந்திருக்கு?” இப்படி சொல்லவும்,
ஷோபா ஓரத்தில் இருந்த தலையனையை எடுத்து அடித்தவன் “ஏண்டா கிண்டல் பண்ணறதுக்கு போனை வாங்கி பார்த்து விளையாடறையா இரு” என்றவன் ஷோபாவில் அமர்ந்தவன் மேல் விழவும், .

“அம்மா அடிக்கறான்” என சத்தமிட்டபடி போனோடு குறுகி அமர்ந்திருக்க, கிடைத்த இடத்தில் அடி விழுந்து கொண்டு இருந்தது. “நான் உன்னை எவ்வளவு மிஸ் பண்ணினேன் தெரியுமா?”
“இந்த போட்டோவை பார்த்தா அப்படி தெரியலையே பையா”
“ராம் எழுந்திரு அவன் மேல இருந்து, குரு இந்தா பாலை பிடி குடிச்சிட்டு போய் தூங்குங்க, காலையில் பேசிக்கலாம்”
“நான் நிறைய பேசணும்மா ராம்கிட்ட, பையா அந்த பொண்ணு கிட்ட பேசறையா? எத்தனை முறை பேசுவ ஒரு நாளைக்கு? எத்தனை முறை போய் பார்த்துட்டு வந்து இருக்கற? பொண்ணோட பேர் என்ன? முக்கியமான கேள்வி பொண்ணுக்கு தங்கச்சி யாராவது இருக்கறாங்களா?”
“டேய், ஒரு மார்கமாத்தான் வந்து இருக்கற. அம்மா பேசாமல் இவனுக்கும் பொண்ணு பார்க்க ஆரம்பிச்சுடுங்க. ரொம்ப ஆர்வமாக கேட்கிறான்”
“டேய். சதிகாரா. நான் இன்னும் நிறைய இடம் பார்க்கணும். உன்னோட பையன கூப்பிட்டுட்டு டிரக்கிங் போகணும். அப்புறம் வண்டியில் வச்சி இந்த ஊரையே சுற்றி காட்டணும் அதற்கு முன்னாடி வாய்பே இல்லை, எப்படியும் இன்னும் ஏழு வருஷமாவது ஆகும். ஏய். என்ன அப்படி பார்க்கற? பொய் எல்லாம் இல்லை. நிஜமாக தான் சொல்லறேன் வா ராம் நிஜமாகவே தூக்கம் வருது, உன்னோட ரூம்ல போய் மிச்சத்த பேசிக்கலாம்”
“அங்கே வந்தா சத்தம் இல்லாமல் தூங்கணும் என் கிட்ட வம்பு பண்ண கூடாது”
“காட்பிராமிஸ் வம்பிழுக்க மாட்டேன். அம்மா சாவியை கொடுங்க நான் கேட்டை பூட்டிவிட்டு வரேன்” என சாவியை வாங்கியவன் கேட்டை நோக்கி சென்றான்.
“போ. ராம் தூங்கு நாளைக்கு ஆபீஸ் இருக்குல்ல, காலையில் பேசிக்கலாம்”
“சரிம்மா” என்றவன் “டேய் வா தூங்கலாம்” என அழைத்தபடி முன் செல்ல,
“ராம் நான் வேணும்னா என்னுடைய ரூம்ல தூங்கட்டுமா?”
“முதல்ல என் கூட ரூம்புக்கு வா, அப்புறம் தூங்குவியாம்” கூடவே அழைத்து வந்தவன் அறைக்குள் வரவும் கதவை வேகமாக மூடியபடி “சொல்லு இனியாவது ஒரே இடத்தில் வேலை செய்யற ஐடியா இருக்கா. இல்லையா?”
“ஏய்.. என்ன அங்கே நல்லவன் மாதிரி கூப்பிட்டுட்டு வந்துட்டு, இங்கே வில்லன் மாதிரி பேசற?”
“குரு, அம்மா இதுக்கு மேல வருத்த பட கூடாது. வில்லன் மாதிரி இல்ல வில்லன் தான் சொல்லு”
“என்ன சொல்லணும்?”
“இனி முன்னாடி மாதிரி இஷ்டத்திற்கு வேலையை மாற்ற கூடாது. ஒரு இடம்னா அங்கே தான் தொடர்ந்து வேலை செய்யணும். நீ ஊர் ஊரா சுற்றுவது கூட பெருசா தெரியவில்லை. வேலையை மாற்றி ஊரை மாத்தறது தான் அவங்களுக்கு ரொம்ப கஷ்டபடுத்துது”
“டேய் என்னடா, ஒரே நாள்ல இவ்வளவு பொறுப்பானவனா மாறிட்ட?”
“பேச்சை மாத்தாத கேட்டதுக்கு பதில் சொல்லு”. ராம் கையை கட்டியபடி அவனை பார்த்து கேட்க,
குருவோ கட்டிலில் தலையனையை மடியில் எடுத்து வைத்தபடி “என்ன டா ப்ராமிஸ் பண்ணனும் சொல்லு செய்யறேன்”
“இப்ப சேர்ந்து இருக்கற இடத்தில் தொடர்ந்து வேலை செய்யணும்”
“ஏய் என்ன விளையாடுகிறாயா. இன்னும் ஆபீஸையே ஒழுங்காக பார்க்கலை. அப்புறம் எனக்கு அந்த ஆபீஸ் செட் ஆகுமோ இல்லையோ. அதெல்லாம் பார்த்த பிறகு தான் சொல்ல முடியும்”
“ஏன் உன்னோட ப்ரெண்ட் கோகுல் அங்கே தானே வேலை செய்யறான், அவனுக்கு அந்த ஆபீஸ் செட் ஆகும் போது உனக்கு ஆகாதா?”
“டேய் அவனும் நானும் ஒன்னா? என்னோட திங்கிங் வேற, அவனோடது வேற. எப்படி நீ இப்படி எதிர் பார்க்கற? சரிடா. என்ன தான் பதில் சொல்லணும்ன்னு எதிர் பார்க்கற? ஒகேன்னு சொல்லணுமா? ஓகே போதுமா. இன்னும் என்ன? சரிடா இனி ஒரே இடத்தில் இருக்க பார்க்கிறேன். அப்படி எல்லாம் பார்க்காத, தூங்கலாம் வா”
“நகர்ந்து படு. மேல கால் போட கூடாது” ராம் சொல்லவும்,
“இதுகெல்லாம் கேரண்டி வாரண்டி தர முடியாது. நீ தான கூப்பிட்டுட்டு வந்த. பின்னாடி என்ன குறை சொல்ல கூடாது”
“உன்னோட கஷ்டம்டா. ம்.. வேலை செய்யற இடம் பிடிக்கலைன்னா கஷ்ட பட வேண்டாம் சரியா?”
“ராம் தூங்குடா, என்ன கஷ்டம்? பிடிக்கலைன்னா போடா நீயும் ஆச்சு உன்னோட வேலையும் ஆச்சுன்னு வரப்போறேன். எப்படியும் ஒரு வருஷம் அக்ரீமென்ட் போடுவாங்க பார்க்கலாம்” என்றவன் சற்று நேரத்திற்கெல்லாம் ஆழ்ந்த தூக்கத்திற்கு சென்று இருந்தான்.
இரவு மூன்று மணியை தொட ராம் தண்ணீர் குடிக்க எழுந்தவன், குருவின் முகம் பார்க்க ஆழ்ந்த தூக்கத்திலும் புன்னகைத்தபடி இருந்தான். அருகில் வந்தவன் குருவின் தலை கோதி விடவும் புரண்டு படுத்தபடி குரு “தூங்குடா” என்றான்.
“தூங்கலையா நீ?”
“சத்தம் கேட்டா எழுந்திடுவேன் தெரியாதா? ம்” மறுபடியும் படுத்தவன் தூங்கி இருந்தான்.
“நீ மாறவே இல்லைடா” என்றபடி தூங்க ஆரம்பித்தான் ராம். விடியற்காலை ஐந்து மணியை தொடவும் ராமின் போனில் இருந்து அலாரம் அடிக்க ஆரம்பித்தது.
“கண்களை திறக்காமலேயே ராம் அலாரத்தை ஆப் பண்ணு. இதுக்குதான் உன் கூட தூங்க வர்றது இல்லை”
“ஆப் பண்ணிட்டேன்டா”
“நன்றி பையா. வாக்கிங் போகலையா?” மறுபடியும் புரண்டு படுக்க,
“இல்லைடா”
“குட் இன்னும் கொஞ்ச நேரம் தூங்கு” சொன்னவன் மறுபடியும் தூங்கி இருக்க,
“இவன் தூங்கற கோழி தூக்கத்துக்கு என்ன தூங்க சொல்லறான்” என்றபடி ராம் மறுபடியும் படுக்கையில் படுக்க, மீண்டும் எழும் போது நேரம் எட்டு மணியை தொட்டு இருந்தது.
வேகமாக குளித்து வெளியில் வந்தவன் குருவை எழுப்பி விட்டான் “குரு எழுந்திரு நேரம் ஆச்சு”
“நீ குளிச்சிட்டு எழுப்பி விடு”
“டேய் நான் கிளம்பியாச்சு. எழுந்திரு”
“ம். ஆபீஸ் போகணுமா?” குரு எழுந்தபடி கேட்க.
“இல்லை லீவ்ன்னு மெசேஜ் அனுப்பிட்டேன்” எழுந்து குளித்து வரவும், குருவோடு இருவரும் கீழே வர, ஹாலில் இருந்த ஷோபாவில் திலகவதி அமர்ந்து இருந்தார்.

ராம் குருவிடம் படியில் இறங்கியபடி “பொண்ண பார்க்க வருகிறாயா? அழைச்சிட்டு போறேன்”
“பார்க்கணுமா ப்ரோ?” என இதற்கு குரு கிண்டலாக கேட்க,
“டேய் நீ வர்றலையேன்னு கேட்டா என்னையவே ஓட்டற”
அதென்ன ப்ரோ, கரெக்டா ஆறு மணிக்கு குட் மானிங் மேசேஜ் அனுப்பணுமா? இதற்கு நேரடியா போனை பண்ணி பேசலாமே?”
“டேய். பார்த்துட்டு தான் இருந்தியா? உன்னை..”
“என்னை உன் கூட அழைச்சிட்டு போனா, இப்படி தான் பல்ப் வாங்கணும். இறங்குடா” என்றபடி முன்னாடி நடந்தவனின் தோளில் தொங்கியபடி, பின்னால் படி இறங்கி வந்து கொண்டு இருந்தான் குரு.
இருவரையும் ஒன்றாக பார்த்த திலகவதிக்கு கூட லேசாக தன்னை அறியாமல் கண் கலங்கியது. அந்த நேரம் அவர் மனதில் கடவுளே இந்த ஒற்றுமை கடைசி வரைக்கும் நிலைத்து இருக்கணும் என நினைத்தவர் பார்த்து கொண்டு இருக்க,
குரு “ராம் எடு ஜூட்” என்றவன் வேகமாக படிக்கட்டுகளை இரண்டு இரண்டாக தாவி திலகவதியின் அருகில் வந்ததும் மடியில் படுத்து இருந்தான். “நான் தான் ஃபஸ்ட்” என்றபடி.
“குரு சின்ன குழந்தை மாதிரி என்ன விளையாட்டு, எழுந்திரு அம்மாவுக்கு கால் வலிக்கும்” ராம் சொல்லவும்,
“போடா.. போடா”
“இறங்கு.. குரு இறங்குடா. ஏய்.. அப்பா வராங்கடா”
“எங்கே?” என்றபடி மடியில் இருந்து தரைக்கு இறங்கியவன் தேட,
திலகவதி, “அப்பாவுக்கு இவ்வளவு பயமா? அவங்க காலையிலேயே கடைக்கு போயாச்சு”
“அம்மா குரு வந்தது தெரியுமா?” ராம் கேட்கவும்
“தெரியும், தெரியும். காலையில் எதுவும் பேச வேண்டாம் மதியம் வந்து பேசிக்கறேன்னு போய் இருக்கறாங்க”
“என்னது? எத்தனை நாள் வச்சு பேசுவீங்க, நான் இன்றைக்கே இத முடிக்கணும், அதனால ராம் நாம கடைக்கு போகலாம். கடையில் வச்சி எதுவும் பேச முடியாது அங்கே போய் பார்த்துட்டா வீட்ல வந்துபேச மாட்டாங்க. எப்படி?”
“ப்ராடு வா போகலாம். அழைச்சிட்டு போறேன்”
“டேய் ரெண்டு பேரும் சாப்பிட்டுட்டு போங்க” திலகவதி தட்டில் இட்லியை எடுத்து பரிமாற,
“இதோமா” என்றபடி ராம் அமர்ந்தான். அவனுக்கு அடுத்த இருக்கையில் குரு அமர்ந்த போது சரியாக அந்நேரம் அவனுக்கு போன் வந்தது. அழைப்பது கோகுல் என எண்ணைப் பார்த்ததும் அழைப்பை ஏற்று சொல்லு “கோகுல்”
“டேய் வேலை ஓகேவா. அக்ரிமெண்ட் டைப் பண்ண சொல்லிடவா? கேட்டது புது மொபைலில் என்பதால் சத்தம் தெளிவாக கேட்டது. திரும்பி அவன் ராம்மை பார்க்க, அவன் குருவையேதான் பார்த்துக் கொண்டு இருந்தான்.
“ஓகேடா. இன்னும் ரெண்டு நாள்ல வரேன். வந்ததும் பேசிக்கலாம். அப்புறம் முக்கியமான விஷயம் எனக்கு அங்கே தங்கற மாதிரி வீடு ஒன்று ரெடி பண்ணணும். என்னால யார் கூடவும் தங்க முடியாது, தனி வீடாக வேணும், உன்னால ஏற்பாடு செய்து தர முடியுமா? ரொம்ப நாட்களாக பெங்களூரில் தானே இருக்கற முடியும்தானே?”
“குரு நான் குடியிருக்கற அப்பாட்மெண்டில் கூட வீடு ஒன்று இப்போது தான் காலி ஆகி இருக்கு, நான் கேட்டுட்டு சொல்லவா?”
“கோகுல் ஏமாற்றிடாதே, அங்கே வரும் போது வீடு வேணும்”
“வாடா.. வாடா.. பார்த்துக்கலாம்” எனவும் சிரித்தபடி போனை வைத்தவன் ராமிடம் திரும்பி “இப்ப ஓகே வா? சாப்பிடு ப்ரோ. அப்பா கடைக்கு போயிட்டு அப்படியே உனக்கு பார்த்து இருக்கற பொண்ணையும் பார்த்துவிட்டு வந்துவிடலாம். சரியா?”
“ராம் சுமிய பார்க்க போறியா? இரு ஸ்வீட் ஏதாவது செய்து தரேன் எடுத்துட்டு போங்க” திலகவதி கூறவும்,
“ராம் அம்மாவுக்கு என்ன ஆச்சு? இந்த பொண்ண அவ்வளவு பிடிச்சிருக்கா என்ன?”
“குரு இந்த பொண்ண பார்த்த நாளில் இருந்து அம்மா இப்படி தான் இருக்கறாங்க”
“அம்மா சிரமம் எதுவும் பட வேண்டாம் நாங்களே கடையில் வாங்கிக்கறோம்”
“அவளுக்கு பால்கோவா பிடிக்கும்டா”
“ராம் கேட்டுக்கோ. கிளம்பலாமா?” குரு சொன்னபடி வெளியேறவும்.
“அம்மா மதியம் ஆகிடும் வர. ஏதாவதுன்னா போன் பண்ணுங்க” சொல்லியவனை முன்புறமாக தள்ளியபடி “டேய் கிளம்புடா. அம்மா பார்த்துப்பாங்க” இழுத்துக்கொண்டு புறப்பட்டான் குரு.
 

Kavisowmi

Well-known member
17
வேகமாக முகத்தில் அறையும் காற்று போட்டிருந்த ஹெல்மெட்டை தாண்டி முகத்தில் மோத, என்பதை தாண்டி வேகமாக பறந்து கொண்டு இருந்தது ராமின் ஹிரோஹோண்டா பின் புறத்தில் இருந்த ராம் “டேய் குரு மெதுவா வண்டியை ஓட்டு, எதுக்காக இவ்வளவு வேகம்” இவன் சத்தமிட்டது காற்றோடு காணாமல் போய் இருந்தது.
“டேய் வடவள்ளியில் பொண்ணோட வீடு எந்த இடம் அதமட்டும் சொல்லு”
எதிர் காற்று வேகத்தில் இவன் புறம் திரும்பி கேட்க,
“நீ வண்டியை கொடு நான் ஒட்டறேன். இவ்வளவு வேகமாகவா போவாங்க” என்ற ராமின் வார்த்தைக்கு, குருவின் சிரிப்பே பதிலாய் வந்தது.
“உன் கைல வண்டி தந்தா இன்றைக்கு வீடு போய் சேர மாட்டோம். எவ்வளவு ஸ்லோவா போற?”
டேய் அந்த பக்கத்தில் டிராஃபிக் அதிகம்டா, அதை விட வேகமாக போக முடியாது”
“ஆனால் இங்கே இல்லையே, போகலாம். பயமாக இருந்தா என்னுடைய தோளை பிடிச்சிக்கோ” இப்படி சொல்லவும் வேகமாக அவனது முதுகில் அடி விழுந்தது.
“டேய். அண்ணா இப்போ எல்லாம் அடிக்கடி அடிக்கறடா” கொஞ்சம் அதிகமாக அன்பின் அடையாளம் இந்த அண்ணா என்ற அழைப்பு. அரை மணிநேரம் வர வேண்டிய இடத்தை பதினைந்து நிமிடத்தில் வந்து சேர்ந்து இருந்தனர் இருவரும்.
கேட்டின் அருகிலேயே ஆறு ஏழு சிறுவர்கள் விளையாடிக்கொண்டு இருந்தனர். குரு வண்டியை கேட்டின் அருகே நிறுத்தியவன் கேட்டின் கதவில் கை வைக்கவும்,
“நில்லுங்க நில்லுங்க” என்றபடி முதலில் ஒரு சிறுவன் ஓடி வர, அடுத்தவனோ “ஹேய் நம்ம ராம் அண்ணாடா” என்க,
ராம் தான் முதலில் பேச ஆரம்பித்தான் “என்ன அக்கா கிட்ட போகலையா? இங்கே விளையாடிகிட்டு இருக்கறிங்க”
“அக்காகிட்ட கேட்டுட்டுதான் இங்கே விளையாடறோம். இவங்க யாரு?” குருவை பார்த்து கேட்க,
“என்னோட தம்பி. உள்ள போகலாமா?”
“இல்லை போக கூடாது. அங்கிள் ஆன்ட்டி ரெண்டு பேரும் வெளியே போய் இருக்கறாங்க. எங்களதான் அக்காவால பார்த்துக்க சொல்லி இருக்கறாங்க. அதனால் யாரையும் உள்ளே விட மாட்டோம்” இப்படி சொல்லவும்,
“ப்ரோ, உண்மைய சொல்லு யாரும் இல்லைன்னு தெரிஞ்சு தானே அழைச்சிட்டு வந்தே”
“டேய். நீ வேற ஏன்டா?” ராம் இப்படி சொல்லவும்,
“இரு இந்த குட்டிஸ்களை நான் பார்த்துக்கறேன். யாரையும் விடக்கூடாதா? உங்க அக்காவை கட்டிக்க போகிறவர் இவராவது போகலாமா கூடாதா?”
ஒரு வாண்டு யோசித்தபடி “தெரியலையே. போகலாம் நினைக்கிறேன்”
“வில்லன்களா எங்கடா இருந்து வர்றிங்க?” குரு இப்படி சொல்லவும், ராம் சுமியை போனில் அழைத்து இருந்தான். அழைத்த மறு நொடியே வாசலுக்கு வந்தவள்,
“பசங்களா ரெண்டு பேரையும் உள்ளே விடுங்க” என்றபடி உள் சென்றவளை பார்த்தபடி ராம் நிற்க, குருவோ பசங்களின் பக்கம் முட்டியிட்டு அவர்களின் உயரத்திற்கு அமர்ந்தவன், “எவ்வளவு அருமையா சொன்ன வேலையை செய்யறிங்க? அதுக்கே பரிசு தரணுமே, ப்ரோ நீ உள்ள போ, நான் இவங்க கூட பேசிட்டு வரேன்” என ராமை அனுப்பி வைத்தான்.
ராம் வீட்டிற்குள் நுழைய, குருவோ இங்கே பாருங்க என்னுடைய பாக்கெட்டில் என்ன இருக்குதுன்னு”
கை நிறைய சாக்லேட் எடுத்தவன் “யாருக்கெல்லாம் வேணும்?” என கேட்க,
“அம்மா தெரியாதவங்ககிட்ட சாக்லேட் வாங்க கூடாதுன்னு சொல்லி இருக்கறாங்க. வேண்டாம்” ஒரு வாண்டு பதில் சொல்ல,
“கரெக்ட் ஆனா நான் தான் தெரியுமே. ஆமாம் என்ன விளையாட்டு விளையாடிக்கிட்டு இருந்திங்க?”
“கிரிக்கெட் உங்களுக்கு விளையாட தெரியுமா?”
“ஏதோ கொஞ்சம் கொஞ்சம் நானும் வரவா?”
“ஏமாற்ற கூடாது” என்கின்ற அக்ரிமெண்ட்டோடு குழந்தைகளோடு ஐக்கியமாகி இருந்தான்.
அங்கே சுமித்ரா ராமை பார்த்தவள் வீட்டிற்குள் அழைத்துச் செல்ல, அங்கே இரண்டு சிறுமிகள் பேப்பரில் படம் வரைந்தபடி அமர்ந்து இருந்தனர்.
“சுமித்ரா என்ன நீ எதிர் பார்க்கலையா? தம்பி வந்து இருக்கிறான். உன்னை பார்க்க அழைச்சிட்டு வந்தேன்” சுமித்ரா முழு நீள பாவாடை பாவாடை கலரில் ஒரு டீசர்ட் அணிந்திருந்தாள். இவனை பார்த்ததுமே அருகில் இருந்த ஸ்டோலை கழுத்தில் மாலையாக போட்டபடி,
“முன்னமே சொல்லி இருந்தா அம்மாவை வீட்டில் இருக்க சொல்லி இருப்பேன்”
“இவ்வளவு தானா நானே வரச்சொல்லிடறேன்” சுமித்ராவின் தந்தைக்கு அழைப்பு விடுத்து பேசியவன் “வந்துட்டுதான் இருக்கறாங்களாம். இன்னும் பத்து நிமிடத்தில் இங்கே வந்திடுவிங்களாம். ஓகே வா?”
“காபி எடுத்துட்டு வரேன் உட்காருங்க” என்றபடி சமையல் அறைக்குள் தஞ்சம் அடைந்திருந்தாள். பத்து நிமிடம் கழித்து கையில் காபி டம்ளரோடு வர,
“என்ன பார்த்தாலே பதட்டம் ஆகறிங்க ஏன் சுமி?” கேட்ட ராமிற்கு என்ன பதில் சொல்வது என் தெரியாமல் அவள் திகைத்து நிற்க, அங்கே வெளியிலோ குரு பசங்களோடு கிரிக்கெட்டில் இருந்தான். அவனது நினைவு “அண்ணா பொண்ண பார்க்க ஆசைபட்டான் பேசட்டும்” என்பதாக இருந்தது. சில நிமிடங்கள் தாண்டி இருக்க சுமித்ரா தாய் தந்தை வந்து சேர்ந்தனர்.
முதலில் வாசலில் விளையாடிக்கொண்டு இருந்த குரு இவர்களை பார்த்தவன், “போதும் பசங்களா, இன்னோரு நாள் விளையாடலாம்” என விளையாட்டை முடித்துவிட்டு “நீங்க தானே பொண்ணோட அம்மா அப்பா” என பேசியபடி வர,
“ஆமாம்பா உள்ளே வந்து உட்கார்ந்து இருக்கலாம்ல தம்பி? சின்ன பசங்க கூட விளையாடிகிட்டு இருக்கறிங்க”
“இப்போது எல்லாம் பசங்க ரோட்ல விளையாடறத பார்க்கவே முடியறது இல்லை ஆன்ட்டி, இவங்களை பார்க்கவும் அப்படியே இங்கேயே நின்றிட்டுடேன். வாங்க அங்கிள் போகலாம்” என்றபடி உள் நுழைந்தான்.
“உட்கார்பா காபி எடுத்துட்டு வரேன்” மல்லிகா கூறியபடி சமையல் அறைக்குள் நுழைய,
“தண்ணீர் மட்டும் போதுங்க” என்றவன் “ராம் கிளம்பலாமா? ரெண்டு மணி ஆக போகுது அம்மா சாப்பிடாமல் வெயிட் பண்ணுவாங்க” என சந்திப்பை முடிவுக்கு கொண்டு வர, அடுத்த இரண்டு நிமிடத்திலேயே புறப்பட்டு இருந்தனர் சகோதரர்கள்.
“நீ சுமிய பார்க்கலைடா” சொன்னவனுக்கு
“நீ பார்க்கணும்ன்னு சொன்னதாலே தானே கூட வந்தேன். அது தான் உன்னோட மொபைலில் பார்த்தேனே. வா.. வா.. வீட்டிற்கு போகலாம்” என்றபடி கிளம்பி இருந்தான்.

அங்கே சுமித்ராவிடமோ மல்லிகா “ராமோட தம்பியும் குணத்தில் நல்ல மாதிரி தான் தெரியறான். சின்ன பசங்க கூட சரிசமமாக விளையாடவும் எவ்வளவு பொறுமை வேணும்” இவரது பதிலுக்கு தலையை மட்டுமே ஆட்டினாள் சுமித்ரா.
வீட்டிற்குள் நுழைந்ததுமே “அம்மா பசிக்குது சீக்கிரம் சாப்பிட ஏதாவது எடுத்துட்டு வாங்க” என்றபடி ஷோபாவில் அமர டிவியை ஆன் செய்தபடி நீயூஸ் சேனலை ஓட விட்டான் ராம்.
நேயர்கள் அனைவரையும் திரும்பி பார்க்கிறேன் நிகழ்ச்சிக்கு உங்களை வரவேற்கிறேன் என ஆரம்பித்து முதல் முதலாக இவன் போன அந்த மலையை காட்டியபடி அங்கு நடந்து விபத்தை பற்றி தெளிவாக பேசிக்கொண்டு இருந்தது அந்த நிகழ்ச்சி.
“ராம் சேனல் மாற்று. இத பார்த்தாலே கடுப்பாகுது. இதுல சம்பந்தபட்ட யாருக்கும் தண்டனை கிடைக்கலை. கேஸ் நடந்துட்டே தான் இருக்கும். ஒரு வாரம் பிடித்து ஜெயிலில் வச்சி இருப்பாங்களா அந்த ஆளை? பத்து நாளில் ஜாமினில் வெளியே வந்தாச்சு.
கவர்மெண்ட்ட பொறுத்த வரையில் இறந்தவங்களுக்கு இழப்பீடு தந்ததோட முடிஞ்சு போச்சு அந்த நிறுவனத்தோட லைசென்சை கேன்சல் பண்ணினது தான் அவங்களுக்கு கொடுத்த பெரிய தண்டனை. இதோ இப்போதும் வேற பேர்ல் நடத்திகிட்டுதான் இருக்கறாங்க. கை நீட்டி காசு வாங்கியவர்களுக்கு அதிகபட்ச தண்டனை என்ன தெரியுமா. டிரான்ஸ்பர் ஆடர் அவ்வளவு தான்”
“கடைசி வரைக்கும் கேஸ் மட்டும் தான் நடக்கும் தண்டனை யாருக்கும் கிடைக்காது. ஒரு நாள் அது விபத்து தான்னு கேஸை ஒன்றும் இல்லாமல் பண்ணிடுவாங்க”
“குரு விடுடா. இவ்வளவு கோபம் வேண்டாம்”
“மறக்க முடியலைண்ணா. அங்கே அழுதவங்க இறந்தவங்க முகம் தான் ஞாபகம் வருது. எத்தனை வருஷம் ஆனாலும் அங்கே நடந்தது மறக்காது. எத்தனை உயிர்கள்..”
“குரு அம்மா வராங்க. பேசாதே” என்றபடி பாட்டு சேனலை மாற்றியவன் அமைதியாக சாப்பிட்டான்.
சற்று நேரம் கழியவும் அமைதியாக தனது லாப்டாப்பில் வந்திருந்த மெயிலை செக் செய்தபடி குரு அமர்ந்து இருக்க, கோகுலின் போன் இவனை அழைத்தது.
“டேய் சொல்லுடா வீடு ரெடியா? பார்த்துட்டியா?”
“அதெல்லாம் பார்த்தாச்சு. இருபது ஆயிரம் வாடகை , பெட்ரூம் ஒன்று, சின்ன ஹால் கிச்சன் ஓகே தானே?”
“என்ன விளையாடறையா, வாடகை ஜாஸ்தி. என்ன வாங்கற சம்பளத்தை வாடகைக்கே கொடுக்க சொல்லுவியா?”
“சரி தான் பெங்களூரில் வாடகை இப்படி தான். அப்பாட்மெண்டுக்கு சொந்தகாரர் நம்ம ஊர் பக்கம் அதனால தான் உனக்கு இந்த பேமண்ட். வேற யாராவதா இருந்தா இருபந்தஞ்சு கேட்பாரு, நீ தான் சேர்ந்து தங்க மாட்டேன்னு சொல்லறையே. இங்கே இத மாதிரி எடுத்து பத்து பேர் வரைக்கும் தங்கறாங்க, சில இடத்தில ஆண் பெண் பாகுபாடு கூட பார்க்கறது இல்லை”
“டேய் அதை எதுக்கு என்கிட்ட சொல்லற. பேசிக்கொண்டு இருக்கும் போதே அருகில் அமர்ந்து இருந்த ராம் போனை வாங்கியவன், “கோகுல்” எனவும்,
“சொல்லுங்கணா” என்ற குரல் காதில் கேட்டது.
“அந்த வீட்டையே பாரு. நானும் குரு கூட வரேன். அங்கே நிரந்தரமாக தங்கறமாதிரி ரெடி பண்ணி தந்திடலாம்”
“சரிணா” எனவும் போனை கட் செய்தவன் “எப்போது போவன்னு சொல்லு, நானும் வரேன்”
“டேய் ஏன்டா, ஏன் இப்படி ஆகிட்ட? இன்றைக்கு நைட் கிளம்பிடுவேன். ஆனா ராம்..” என பெயரை ராகமாக குரு இழுக்கும் போதே,
“என்ன சொல்ல போற குரு?”
“அது.. அது வந்து” என லேப்டாப்பை மூடி வைத்தவன் எழுந்து இரண்டடி நகர்ந்தபடி. “நிச்சயம் முடிஞ்சா வெளியே எங்கேயும் போக கூடாதுன்னு சொல்லுவாங்களே.
நீ என் கூட வரேன்னு சொல்லற?”
“டேய் நான் என்ன பொண்ணா?” ராம் கேட்டபடி குருவிடம் “எப்ப பாரு கிண்டல் பண்ணிட்டே இருக்கற நீ காலிடா” என்றபடி துரத்த ஆரம்பிக்க,
“நிஜம்டா நீ வேணும்னா அம்மாகிட்ட கேட்டு பாரு” என்றபடி சமையல் அறையில் இருந்த திலகவதிக்கு பின்புறத்தில் நின்றபடி பதில் சொல்லிக்கொண்டு இருந்தான்.
“ராம்,குரு இப்போது தானே நல்லா பேசிட்டு இருந்திங்க. அதுக்குள்ள துரத்திட்டு இருக்கற? போய் ஒரு பக்கமாக உட்காருங்கள் ரெண்டு பேரும்”
“அம்மா அவன பேசாமல் இருக்க சொல்லுங்க. ஓவரா கலாய்க்கறான்”
“என்ன குரு சொன்னே?”
“அம்மா நீ தானே நிச்சயம் முடிஞ்சா வெளியே விடமாட்டாங்கன்னு சொன்னிங்க. அதை தான் சொன்னேன் அடிக்க வரான்”
“இல்லைமா. வந்தப்போ இருந்து என்கிட்ட இப்படி தான் பேசறான். ஒழுங்கா ரெண்டு அடி வாங்க சொல்லுங்க” இப்போதும் இவன் ஒரு புறம் நகர, இன்னோரு புறம் அவன் நகர்ந்து கொண்டு இருந்தான்.
“எப்படி ப்ரோ. முன்னாடி வந்து குனிந்து நிற்கணுமா? வந்து அடிச்சுக்கோ அப்படின்னு, முடிஞ்சா அடிச்சிக்கோ” குரு ஓட தயாராகவே நிற்க,
“குரு அவன்கிட்ட வம்பு பண்ணாத, போ போய் வேற ஏதாவது வேலை இருந்தா பாரு”
“அம்மா என்கூட பெங்களூருக்கு வரேன்னு சொல்லிட்டு இருக்கிறான்”
“வந்தா கூப்பிட்டுட்டு போ. அவன் எங்கேயாவது போகிறானா? முதல் தடவை வரேன்னு சொல்லி இருக்கிறான், அழைச்சிட்டு போ”
“சரி சரி. அடிக்க கூடாது. நைட்க்கு டிக்கெட் புக் பண்ணனும். டிரைன்ல போகலாமா இல்லை பஸ்ஸா?”
“எப்படி வேணும்னாலும் போகலாம் வா” இரண்டு பேரும் பேசியபடி நகர..
அப்போது தெரியவில்லை ராமிற்கு குருவோடான முதலும் கடைசியுமான பயணம் இது தான் என்பது.
 

Kavisowmi

Well-known member
18

இரண்டாவது மாடியில் இருந்த ஆறாம் எண் வீட்டை திறந்து விட்டபடி, “பிடிச்சிருக்கா பாருங்க ராம் அண்ணா” என கோகுல் காட்ட,
“டேய் தங்க போறது நான்டா. அவனுக்கு சுற்றி காட்டிட்டு இருக்கற”
“போடா நீ கேட்கறமாதிரி வீடு தேடினா இங்கே கிடைக்காது. அண்ணா உங்களுக்கு பிடித்து இருக்கிறதான்னு பார்த்து சொல்லுங்க”
அறை பார்ப்பதற்கு அழகாக இருந்தது. நீளமான ஹால், ஒரு புறம் படுக்கை அறை அதனோடு கூடிய அட்டாச் பாத்ரூம், அடுத்தது கிச்சன். சிம்பிள் அன்ட் நீட் என சொல்லும் அளவில் இருந்தது.
“நல்லா இருக்கு கோகுல், இதுவே போதும். வீட்டுக்கு சொந்தக்காரர் கிட்ட பேசிடலாமா?” ராம் கேட்கும் போதே குரு கோகுலிடம் இடைமறித்தவன்,
“ஏன்டா கோகுல் இங்கே சிங்கிள் ரூம் இல்லையா? இது ரொம்ப பெரியதுடா, எப்படியும் பாதி நாள் ஆபீஸ்ல தான் இருக்க போறோம்”
“முன்னாடி இருந்தாயே அத மாதிரி சின்னதாகவா? இந்த வீடு நல்லா இருக்கு. கோகுல் வா”
“ராம், வீடே காலியாக தெரியும்டா, அங்கே இருந்து வர்றது ஒரு கட்டிலும் சின்ன பிரோவும் தான். மிச்ச இடம் நிறைய இருக்கும். இன்னும் கொஞ்சம் சின்னதாக பார்க்கலாம்”
“இது தான் உன்னோட பிரச்சினையாடா? வேலை செட் ஆகலைன்னா வேலையை மட்டும் இனிமேல் மாற்றிக்கோ. இடத்தை மாற்றாத வீட்டுக்கு என்ன தேவையோ எல்லாமே வாங்கி தந்துவிட்டு தான் கிளம்ப போறேன்”
“ராம் நீ ரொம்ப பண்ணற”
“குரு வரும் போது அம்மா சொல்லித்தான் விட்டாங்க, நீ இதில் தலையிடாதே! கோகுல் அட்வான்ஸ் எவ்வளவுன்னு கேட்டு கொடுத்துவிட்டு வந்துவிடலாம். இவனை பேச விட்டா பேசிட்டே தான் இருப்பான். உன்னோட திங்க்ஸ் எல்லாம் எப்போது வருது குரு?”
“அங்கே காலி பண்ணி அனுப்பிட்டாங்க ராம் இன்றைக்கு வந்துவிடும்”
மூவருமே அதே ப்ளாட்டில் குடியிருந்த வீட்டுக்கு சொந்தக்காரரிடம் அட்வான்ஸ் பேசிக் கொடுத்து விட்டு வர, கோகுல் குருவிடம் பேசிக்கொண்டு இருந்தான்.
“குரு விஷாலிக்கு வீட்ல மாப்பிள்ளை பார்க்கறாங்க. இன்றைக்கு இரவு புறபபடணும்”
“குட் நீயூஸ்டா பாரேன் அந்த குரங்கு என்கிட்ட சொல்லவே இல்லை”
“அவளுக்கே தெரியாதுடா. நல்ல இடமா இருந்தா மேற்கொண்டு விசாரிச்சிக்கலாம்ன்னு சொல்லி இருக்கறாங்க வீட்ல. பையன் யூஎஸ்ல வேலை பார்க்கறான். இவளுக்கு பொருத்தமா இருக்கும்ன்னு நினைக்கறாங்க. பிக்ஸ் ஆச்சுதுன்னா அவளே உனக்கு கூப்பிடுவா. பார் இதுதான் பையனோட போட்டோ அவளுக்கு பொருத்தமாக இருப்பான்ல”
“நல்லா இருக்கறான்டா. முகத்தை பார்த்தா நல்ல மாதிரிதான் தெரியறான்”
“என்னோட ஒய்ஃப் பவிக்கு வேண்டபட்ட குடும்பம், நல்லா தெரியும் அவங்க வீட்ல எல்லோரையும். அப்படியே அங்கே இருக்கற பவித்ராவையும் கூப்பிட்டுட்டு வரணும்”
“அப்போ சிஸ்டர் இங்கே இல்லையா. ஊருக்கு போய் இருக்கறாங்களா?”
“ஆமாம்டா கன்சீவ்வா இருக்கறா, இது நாலாவது மாதம். போய் ஒரு வாரம் ஆகுது, இந்த பில்டிங்கில் ஐந்தாவது மாடியில் என்னுடைய வீடு. இப்போது வருகிறாயா? அழைச்சிட்டு போகிறேன்”
“இன்னொரு நாள் வரேன்டா அண்ணா கூட வீட்டை அரேன்ஜ் பண்ணணும். ஓகே டா தேங்க்ஸ். வீடு பார்த்து தந்ததற்கு”
“குரு என்ன இது புதுசா தேங்க்ஸ் எல்லாம் சொல்லற, அதெல்லாம் தேவை இல்லை. நீ என்கூட பக்கத்தில் இருக்க போறதே எனக்கு பயங்கர சந்தோஷம்” இருவரும் பேசியபடி ரூம்பிற்கு வந்திருக்க,
ராம் கோகுலிடம் “கோகுல் இந்த ஹாலுக்கு ஒரு சின்ன சோபா செட் அப்புறம், டேபில் இன்னும் கொஞ்சம் பாத்திரம் எல்லாம் வாங்கணும்”
“வாங்கிடலாம்ணா. இங்கே பக்கத்திலேயே கடைகள் இருக்கு”
“ராம் அதெல்லாம் வேண்டாம் தேவைபட்டா பிறகு பார்த்துக்கலாம்”
“நீ பேசாத சரியா, எனக்கு தெரியும்” அவனுடைய அனுமதி எதையும் கேட்காமல் தேவையானது என தோன்றுவதை வாங்க ஆரம்பித்தான்.
ஒரு கட்டத்துக்கு மேல் பொறுக்காத குரு “தெய்வமே. இந்தா என்னோட ஏடிஎம் கார்டு. என்ன வாங்கணுமோ வாங்கி வீட்டை நிறைச்சிட்டு போ” என கூறி தந்துவிட்டு நகர்ந்திருந்தான்.
மாலையில் இவனது பொருட்கள் எல்லாம் வந்திருக்க அதை எடுத்து இருவரும் அடுக்க ஆரம்பித்தனர். போட்டோ மட்டுமே ஒரு பெட்டி நிறைய தனியாக வைத்திருந்தான். அனைத்துமே இவர்களது வீட்டில் உள்ளது போன்ற இன்னோரு பிரதி.
ராம் போட்டோவை பார்த்தவன் “நீ இதெல்லாம் எடுத்துட்டு சுற்றுகிற பழக்கத்தை இன்னும் விடலையா?”
“வாய் பேசாதடா எடுத்து மாட்டு”
ஹாலில் நேராக பார்த்தபடி இரண்டு இயற்கை காட்சிகளை மாட்டியவன் நடுவில் இவர்கள் இருவரது புகைப்படத்தை மாட்டினான். அது போலவே பெட்ரூமிலும். இவர்களது புகைப்படம் தாய் தந்தையுடன் இருப்பது என அனைத்தும் மாட்டி விட்டு பார்க்கும் போது இரவு ஒன்பது மணியை தாண்டி இருந்தது. அருகில் இருந்த ஹோட்டலில் இரவு உணவை முடித்தவர்கள் தூங்கி எழும் போது நன்றாக விடிந்து இருந்தது.
காலையிலேயே ராம் கோவைக்கு புறப்பட்டு இருந்தான்.
“குரு கிளம்பறேன்டா. எப்போ வேலைக்கு ஜாயின் பண்ணனும்? ஜாயின் பண்ணிட்டு கூப்பிடு” என புறப்பட்டவனை பஸ் ஏற்றி விட்டவன்,
“வீட்டுக்கு போனதும் போன் பண்ணு ராம். அம்மா அப்பாவை பார்த்துக்கோ, ஏதாவதுன்னா கூப்பிடு” என வழி அனுப்பினான்.
மீண்டுமாய் வந்து வீட்டை திறந்தவன் செய்ய வேலை எதுவும் இல்லாததால் படுக்கையில் படுத்து தூங்கிப் போனான். விழிக்கும் போது மாலையாகி இருந்தது. கட்டிலுக்கு புதிதாக பெட்டும் கூடவே படுக்கை அறையில் சிறு டேபிலும் போட்டிருக்க அவனுக்கே அவனது வீடு அந்நியமாகப் பட்டது.

இது வரையில் குடியிருந்தது எல்லாமே சிறு சிறு அறையில் தான். பெரும்பாலும் செளகர்யம் பார்ப்பது இல்லை.
அன்று மதியமே அழைத்து கோகுல் பேசி இருந்தான் “விஷாலிக்கு ஏற்ற வரன்டா அவளுக்கு மேல படிக்கத்தான் ஆசை அப்படின்னு சொன்னா. இங்கே வந்து படிக்கட்டும் நானே படிக்க வைக்கறேன்னு சொல்லறாரு. ஒகே சொல்லியாச்சுடா, விஷாலி கிட்டையும் பேசியாச்சு. அவளுக்கும் பிடித்து இருக்குதுடா. எப்படியும் சாயங்காலத்துக்குள்ள கூப்பிடுவா என சொல்லி இருக்க, இதோ போனில் அவள் தான் இவனுக்கு அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தாள்.
உடனே அழைப்பை ஏற்றவன் ரொம்ப நேரமாக வெய்டிங் உன்னோட போன்க்காக. சொல்லு எப்படி இருக்கற? பையனை பிடிச்சிருக்கா வாழ்த்துக்கள்”
“ஏய் உனக்கு எப்படி தெரியும். ஓ கோகுல் சொல்லி இருப்பான், மறந்துட்டேன் ரெண்டு பேரும் ஓரே ஆபீஸ்ல தான் குப்பை கொட்ட போறிங்கன்னு கேள்வி பட்டேன்”
“வாயேன் போடற குப்பையை அள்ள ஆள் தேவை இருக்கு”
“போடா போடா. நீ சரியான சிடுமூஞ்சி உன்கிட்ட யாராவது வேலை செய்ய முடியுமா? ஆனா குரு இந்த பையன்கிட்ட பேசினேன். என்ன சொன்னாலும் சரின்னு தலையாட்டறான். யூஎஸ் ல படிக்க அட்மிஷன் வாங்கி தர்றேன்னு சொல்லறான். இந்த மாதிரி பையனை இது வரைக்கும் பார்க்கலைடா”
“அப்புறம் என்ன சந்தோசமாக ஓகே சொல்லிடு . சீக்கிரம் மேரேஜ் பத்திரிக்கையோடு வந்து சேரு”
“ம். வரேன் அப்பா கூட. உங்களோட வீட்டில் கூட அண்ணாவுக்கு ஃபிக்ஸ் ஆகிடுச்சுன்னு கோகுல் சொன்னான். அடுத்ததாக நீயும் சீக்கிரமே செட்டில் ஆகற வழியை பாரு”
“என்ன விஷாலி ஒரே நாள்ல பாட்டி மாதிரி பேசற?”
“போடா நல்லத சொன்னா பாட்டி மாதிரி பேசறேங்கற”
“இப்ப தானே இங்கே ஆபீஸ்ல சேர போறேன், இங்கேயே ஆபீஸ்ல நல்ல பொண்ணா பார்த்து ரூட் விட்டுடலாம்”
“யாரு? நீயா? சரியான சிடுமூஞ்சிடா. அதுகெல்லாம் வாய்ப்பே இல்லை, சரி நான் கேட்கறதுக்கு பதில் சொல்லு. இப்ப இல்லாட்டியும் ஒரு நாள் கல்யாணம் பண்ணதானே போற அப்போ உன்னோட மனைவியை செல்லமா எப்படி கூப்பிடுவ?”
“விஷாலி என்ன இது புது ஆராய்ச்சி?” குருவின் சிரிப்போடு வந்து விழுந்தது வார்த்தைகள்.
“உன் கிட்ட ரொம்ப நாளா கேட்க நினைச்ச கேள்வி, காலேஜ் படிக்கும் போது நிறைய டைம் கேட்க நினைச்ச கேள்வி. அங்கே எல்லாம் மச்சான், மச்சி இப்படி பேசும் போது நீ யார் கிட்டேயும் மரியாதை இல்லாமல் பேசினது இல்லைன்னு கோகுல் சொல்லி இருக்கிறான், அதான் இத கேட்க தோணும், ப்ளீஸ் சொல்லேன்”
“ம்.. சொல்லலாமே. கல்யாணம் ஆக போகிற பொண்ணு இல்லையா, நிச்சயமாக சொல்லறேன். இதற்கப்புறம் என் கூட பேச நேரம் இருக்குமோ இல்லையோ தெரியாது”
“ஏன் அப்படி சொல்லற குரு?”
“பேச யோசிக்கற ராமே போன் பண்ணி பேசறான். நீ நல்லாவே பேசுவ. அதனால சொன்னேன்”
“ஏய். டாபிக் மாத்தாத. சொல்லு”
“வீட்ல அப்பாவுக்கு மரியாதை இல்லாம பேசினா பிடிக்காது. ஏன் எனக்கு தெரிஞ்சு அம்மாவை கூட வாடி போடின்னு அப்பா சொன்னது இல்லை. ஆனால் எனக்கு அப்படி கூப்பிட பிடிக்கும். என்னோட மனைவியாக வருகின்ற பெண் மேல அன்பு அதிகமாகும் போது நான் கூப்பிடறது இப்படிதான் இருக்கும். போதுமா விஷாலி? விஷாலி.
லைன்ல இருக்கறையா? என்ன சத்தத்தைய காணோம்”
“எனக்கு பதில் பேச தெரியலை. எது எப்படியோ இத்தனை ஆசை மனதில் இருக்கறதால நீ சீக்கிரமே கல்யாணம் பண்ணிக்கோ”
“இதென்ன விஷாலி அருள்வாக்கு மாதிரி சொல்லற?”
“இது விஷாலியோட வாக்கு. இப்போ போனை வைக்கிறேன். மறுபடியும் கூப்பிடுவேன்”
அன்றைய நாளின் அடுத்த வேலையாக தனது செல்பபனை எடுத்தவன் அங்கே சுற்றி பார்க்க கூடிய இடங்களை பட்டியல் இட்டுக் கொண்டு இருந்தான். ஒவ்வொரு இடத்தையும் பார்த்தவன் உதட்டில் இருந்து தன்னை அறியாமல் விசில் ஒன்று புறப்பட்டது.
“சுற்றி பார்க்க இடம் நிறைய இருக்கே குரு. எப்படி இத்தனை நாள் இங்கே வராமல் இருந்தோம். ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு இடமா பார்த்தா கூட நிறைய இருக்கே. இனி வரப்போகிற நாட்கள் இன்னும் பிஸியா அழகா கழியும் போல இருக்கே”
அருகில் இருந்த டேபிலில் இருந்த நோட் பேட்டில் வரிசையாக செல்ல கூடிய இடங்களை குறித்து வைக்க ஆரம்பித்தான். அதே நேரம் மாலையில் வீட்டிற்கு வந்த ராம் தனது செல்பேசியில் குருவின் வீட்டை தனது தாயாருக்கு காட்டிக்கொண்டு இருந்தான்.
“அம்மா இப்போது குரு தங்கி இருக்கற வீடு இது. நல்லா இருக்கா? இனி அவனை பற்றிய கவலையை விட்டுடுங்கமா. இனி இங்கே இருந்து வேறபக்கம் போக மாட்டான். அவன்கிட்ட தெளிவாக சொல்லிவிட்டேன். வேலைக்கு போகணும்ன்னு ஆசை இருக்கறவரைக்கும் அங்கே தான் வேலை செய்வான். போர் அடிக்கும் போது இங்கே வேலை தேடிக்க சொல்லி இருக்கிறேன். அவனும் சரின்னு சொல்லி இருக்கிறான்”
வீட்டை பார்த்த திலகவதிக்கு அவ்வளவு திருப்தி. “இத்தனை நாள் அவன் தங்கி இருக்கும் இடம் பார்த்தா குடியிருக்கற எண்ணமே வராது. இந்த வீடு தான் வீடு மாதிரி இருக்கு. இது போதும் ராம்” என்றவர் “நைட்க்கு ஏதாவது செய்யறேன் உட்காரு” என நகர,
ஹாலில் அமர்ந்தவன் கைகள் தானாய் போட்டோ கேலரிக்குள் செல்ல நிச்சய போட்டோவை பார்த்து கொண்டு இருந்தான். ஒவ்வொன்றாக பார்த்து வந்தவன் கடைசியாக அவன் சுமித்ராவுக்கு மோதிரம் அணியும் புகைப்படத்தில் கண்கள் வந்து நிலைத்து நிற்க, முன்தினம் குரு கிண்டல் செய்தது ஞாபகம் வர, தன்னை அறியாமல் “வாலுபையன்டா நீ” என சொல்லியபடி போனை தனியாக எடுத்து வைத்தான்.
இருவேறு இடத்தில் இருவரது கனவுகளும்,ஆசையும் ஏன் மனநிலையும் கூட வேறு வேறாக நினைத்திருக்க, விதியும் தனக்கு பிடித்த விளையாட்டை இவர்களது வாழ்வில், புதிதாய் வேறு விதமாக விளையாடிப்பார்க்க ஆயத்தம் ஆகிக்கொண்டு இருந்தது.
 

Kavisowmi

Well-known member
19

கண்கள் எதிரில் இருந்த கம்ப்யூட்டரில் நிலைத்திருக்க கைகள் இரண்டும் வேகமாக கீ போர்டில் விளையாடி1
க்கொண்டு இருந்தது ஒரே தாள லயத்தில். அடுத்த இருக்கையில் அமர்ந்து இருந்த கோகுல் இவனை சற்று நேரம் பார்த்து கொண்டு இருந்தவன்,
“குரு வாயேன் கேன்டீன் வரை போயிட்டு வரலாம்”

இப்போதும் இவன் புறம் திரும்பாமல் “இன்னும் ரெண்டு நிமிடம் தான் வேலை முடிஞ்சிடும், உன் கூட வரேன்” என கூறியவனை சற்றே ஆச்சரியமாக பார்த்தான். இங்கே இவனோடு சேர்த்து இவனது டீம் மொத்தம் இருபது பேர் இருந்தனர்.
“டேய் இப்ப தெரியுதுடா ஏன் உனக்கு உடனே வேலை கிடைக்கிறதுன்னு இப்போதும் கண்கள் கம்ப்யூட்டரை விட்டு அகலவில்லை. “வேலை செய்ய விடு” என்ற பதில் மட்டுமே இவனிடம் இருந்து வர, போனின் ஓசை மெலிதாக கேட்டது. கையில் எடுத்து பார்த்தவன் அட்டென் செய்தபடி, “சொல்லுடா“என கேட்க, எதிர் முனையில் இருந்து அழைத்தது ராம்.
“குரு மூன்று பத்திரிகை டிசைன் வாட்ஸ்சப்பில் அனுப்பி வைத்து இருக்கிறேன் அதில் ஏதாவது ஒன்று உடனே பார்த்து சொல்லுடா”
“டேய் முக்கியமான வேலையில் இருக்கிறேன் இரு ஒரு நிமிஷம் லைன்லயே இரு” என்றவன் பார்வையிட மூன்றில் இரண்டாவதாக இருந்தது மிகவும் அழகாக இருந்தது. கிட்டத்தட்ட பழைய ராஜாக்கள் காலத்தில் அனுப்பும் ஒலை சுவடி போல இருக்க அதை போட்டு கொடுப்பதற்கு ஒரு குப்பி வடிவிலான பாக்ஸ் ஒன்று என
“ராம் இரண்டாவது இருக்கிறது அழகா இருக்கு அதையே செலக்ட் பண்ணிக்கோ” என்று சொல்லவும்,
“சுமித்ரா கூட அதை தான் செலக்ட் பண்ணினா” என அவனது பதிலுக்கு
“டேய் அப்புறம் ஏண்டா வேலை நேரத்தில் தொந்தரவு பன்ற, பிடிச்சு செலக்ட் பண்ணினா விட வேண்டியது தானே, ஒரு வேளை மாற்றி சொல்லி இருந்தா என்ன செய்து இருப்ப ?”
குருவிற்கு கொஞ்சம் எஸ் கொஞ்சமே கொஞ்சம் பொறாமை இருந்ததோ குருவின் குரலில் ரொம்ப ரொம்ப கூலாக வந்து விழுந்தது ராமின் குரல் “கன்வின்ஸ் பண்ணி இருப்பேன் டா ”
“என்னது ?”இவனது கேள்விக்கு
“சுமித்ரா கிட்ட பேசி நீ செலக்ட் பண்ணினத எடுக்க கன்வின்ஸ் பண்ணி இருப்பேன் இது பெரிய விஷயமா ?”
“ஓகே வைக்கறேன்” என வைத்த அடுத்த நொடி மறுபடியும் அழைத்து இருந்தான். நம்பரை பார்த்தபடி “இப்போ என்னடா ?”
“அது குரு இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை கல்யாணத்துக்கு டிரஸ் எடுக்க போகணும், நீயும் வந்தா நல்லா இருக்கும். ப்ளீஸ்டா ”
“டேய் வேலைக்கு சேர்ந்து பத்து நாள் தான் ஆகி இருக்கு சும்மா சும்மா அங்கே வர முடியாது. நல்ல பையன்ல நீயே செலக்ட் பண்ணிக்கோ ”
“ப்ளீஸ் குரு உனக்கும் எனக்கும் ஒரே மாதிரி எடுக்கணும்ன்னு பேசி இருந்தமே ப்ளீஸ் வாடா”
“என்னுடைய அளவு தான் தெரியும்ல நீயே எடு, எதை எடுத்தாலும் எதுவும் சொல்ல மாட்டேன்” இவன் பேசிக்கொண்டு இருக்க பதிலும் சொல்லவில்லை லைன்னையும் கட் செய்யவில்லை. இரண்டு நிமிடம் பார்த்தவன் “ராம் ஏன்டா? இப்படியே பதில் பேசாமலேயே எல்லாவற்றிற்கும் தலையாட்ட வச்சிடு, நான் வரேன்” என்ன கட் செய்யவும்
“கோகுல் போகலாமா?“ என கேட்கவும் சரியாக இருந்தது. இதற்கு முன்பு செய்த வேலையை விடவும் இந்த வேலை குருவிற்கு மிகவும் பிடித்து இருந்தது. கூடவே டீம் மெம்பர்களும் அதுவும் அருகிலேயே கோகுல் அமர்ந்திருக்க வந்த நாள் முதலாக ரசித்தே செய்து கொண்டு இருந்தான்.
இவர்களது நிறுவனம் அப்ஃ டிசைனிங் செய்வது தற்போது வந்து இருக்கும் வேலை மருத்துகள் சம்பந்தமாக அந்தந்த மருந்து கம்பெனிகள் அவர்களின் மருத்துகள் அதனுடைய நன்மைகள், தீமைகள் பட்டியலிடும் வேலை
மனிதர்கள் உள்ள வரையும் தொடரும் வேலையில்லையா புதிது புதிதாக தோன்றும் தொன்று நோய்கள் அதற்கு புதிதாக தயாரிக்கும் மருந்துகள் அதனுடைய வீரிய தன்மை,சைட் எபெக்ட் என பட்டியல் இட்டு புதிது புதிதாக அப்டேட் செய்வது
இங்கே இணைந்த நாளில் இருந்தே புதிதாக ஒன்றை தினமும் கற்றுக்கொண்டு இருந்தான் குரு இவர்களது டீமில் உள்ள அனைவருமே எப்போதும் பிஸியாகவே இருந்தனர்.
செய்து கொண்டு இருந்த வேலையை ஸேவ் செய்தவன் கம்ப்யூட்டரை அனைத்தபடி “வா” என எழவும்
“அண்ணா என்ன சொல்றாங்க ?”
“கோயம்புத்தூருக்கு வர சொல்றான். சின்ன குழந்தை டா அப்படியே அடம் பிடிச்சா முடியலை பேசாமல் அவனோட கல்யாணத்துக்கு அப்புறமே வேலைக்கு ஜாயின் பண்ணி இருக்கலாம் போல இருக்கு ”
“போயிட்டு வாடா குரு, நீ கூட இருக்கிற மாதிரி வராதுல்ல”
“ம் போகணும், விஷாலியோடது என்ன ஆச்சு,?”
“நிச்சயம் டேட் சொல்லறேன்னு சொல்லி இருக்கறாங்க பவியும் விஷாலி கூடவே செட் ஆகிட்டா, அநேகமா அவளோட நிச்சயம் முடிஞ்சதும் தான் இவளும் வருவா போல இருக்கு ”
“என்ஜாய் பண்ணு கோகுல்”
“போடா தெரிஞ்சே கேட்கற பார்த்தியா, வீட்டுக்கு போகவே பிடிக்கலை எப்போ வருவாண்ணு இருக்கு”
“அதெப்படிடா கல்யாணம் முடியவும் இப்படி மாறிரிங்க ? ஆச்சரியமாக இருக்கு ராம் கூட இப்படி தான் மாறிடுவான்ல ”
“குரு, நீ கூட அப்படி தான் மாறிடுவ ”
கேன்டீன் வந்திருக்க , “என்ன வேணும்?” கேட்டபடி நகர்ந்தான் கோகுல்.
அடுத்தடுத்து அழைத்து குருவை கோயம்புத்தூருக்கு வரவழைத்து இருந்தான் ராம். கோயம்புத்தூர் டவுன்ஹாலில் இருந்தது சென்னை சில்க் ஷோரூம்பிற்கு மணமகள் உட்பட மொத்தமாக வந்து இருந்தனர்.
மூன்றாவது மாடியில் ஆண்கள் பிரிவில் ராமிற்கும் தனக்குமான உடையை தேர்வு செய்து கொண்டிருந்தான் குரு.
குருவிற்கு திலகவதியை நினைத்து ஆச்சர்யமாக இருந்தது. திருமண உடை எடுக்க பெண்ணையும் அழைத்து வர தேவை இல்லை தான். ஆனால் அழைத்து வந்திருந்தார். கூடவே பெண்ணின் தாயார் நெருங்கிய உறவில் இருவர் என பெண் வீட்டாரின் சார்பில் வந்திருக்க இவர்களும் நெருங்கிய உறவினர்கள் இருவர் கூடவே குருவையும் பிடிவாதமாக ராம் இழுத்து வந்து இருந்தான். நேராக வந்தவனை வீட்டில் சிறிது நேரம் கூட நிற்கவிடாமல் கையோடு அழைத்து வந்தவன், உடை தேர்வு செய்ய அவனை மட்டும் தனியாக அனுப்பியிருந்தான்.
“ராம் சுமித்ராவிற்கு கல்யாண சேலை எடுத்ததும் நீ போய் குரு கூட பார்த்து செலக்ட் செஞ்சுக்கோ” எனக் கூறி நகர விடாமல் திலகவதி ராமை அருகில் அமர்ந்து வைத்து இருந்தார்.
“அம்மா சேலையை பற்றி எனக்கு என்ன தெரியும். நீங்களே பார்த்து எடுங்க ”
“டேய் சேலையை பற்றி தெரிய வேண்டாம் கலர் எந்த கலர் அவளுக்கு பொருத்தமாக இருக்குதுன்னு பார்க்க தெரியும் இல்லை. பேசாமல் உட்காரு” ,என்றவர், தனக்கு அடுத்த இருக்கையில் சுமித்ராவை அமர வைத்து பார்த்து கொண்டு இருந்தார்.
விற்பனை பெண் கூட ஒவ்வொன்றாக எடுத்து காட்டிக்கொண்டு இருக்க இவளுக்கு அழகாக இருக்கும் என தேர்வு செய்வது ஒவ்வொன்றையும் ஏதாவது காரணம் சொல்லி நிராகரித்துக் கொண்டிருந்தாள். சற்று நேரம் பார்த்தவன் “அம்மா பிடிச்சத எடுக்க சொல்லுங்க, நான் அந்தப் பக்கம் இருக்கிறேன். எடுத்த பிறகு சொல்லுங்க வந்து பார்க்கிறேன்” என நகரவும், கூடவே சுமியும் எழுந்தவள் இவனுக்கு அருகில் வர
“என்ன சுமித்ரா உனக்கு பிரச்சினை. ஏன் எடுத்து தர்றது எல்லாமே வேண்டாங்கற இன்னும் அதிக விலைக்கு வேணும்னாலும் எடுத்துக்கோ ”
சுமித்ராவின் நிலை சற்றே அந்த நிமிடம் வேறாக இருந்தது. பாதிக்கு பாதி செலவை பகிர்ந்து கொள்வதாக பேசி இருந்தாலும் பணம் பற்றாகுறை காரணமாக தந்தை அலைந்து கொண்டு இருப்பது தெரிந்ததாலோ என்னவோ எதிலும் சற்றே பிடிப்பு குறைந்து இருந்தது.
மனநிலை கூட ஏன் இவ்வளவு சீக்கிரமாக கல்யாணம் வைக்கறாங்க இரண்டு மாதம் மூன்று மாதம் டைம் இருந்தா இப்படி அவசரமாக அலைய தேவையில்லையே என்கின்ற நினைவு வேறு
எடுத்து காட்டிய உடை எதிலும் கண்கள் பதியவில்லை ஏன் ராமின் மேல் கோபம் கூட சற்றே வந்திருந்தது. பிடிக்கலைன்னு சொல்லிட்டு போய் இருந்தா இவ்வளவு பணபிரச்சனை வந்திருக்காதே இன்னும் கொஞ்ச நாள் அம்மா வீட்டிலேயே இருக்கலாமே
கூட்டம் நிறைந்த பகுதியை தாண்டி வந்திருக்க இப்போது தன் மேல் கோபமாக வந்தது சுமித்ராவிற்கு கடை வாசலில் இவளை பார்த்த போது இருந்த மகிழ்ச்சி ராமின் முகத்தில் தற்போது இல்லை இப்போது அவனது முகத்தில் யோசனை மட்டுமே இருந்தது.
எல்லோரையும் டென்சன் பண்ணறோம் என சுமித்ராவிற்கு தோணவும் யோசிக்காமல் ராமின் கைபிடித்தவள் “ஸாரி ”என்ன கூறும் போதே லேசாக கண் கலங்கி இருந்தது.
அதே நேரம் குரு மேல் தளத்தில் தனக்கும் அண்ணனுக்குமானதை தேடித் தேடி தேர்வு செய்து கொண்டிருந்தான். இருவருக்கும் ஒன்று போல என நான்கு உடைகளை தேர்வு செய்திருந்தான். ராமிற்கு சற்றே விலை கூடுதலாக அவனை தனித்து அழகாக காட்ட கூடிய இரண்டு உடைகள் தேர்வு செய்தவன் கீழே ராமை அழைக்க இறங்கி வந்து கொண்டு இருந்தான்.
படிகளில் இறங்கி வரும் போது இவன் பார்த்தது ராமின் கைகளை பற்றிய படி கண்கலங்க சுமித்ரா நின்ற தோற்றத்தையே!
“அண்ணா “ என்றபடி தயங்கி நிற்க
“போ சுமி பிடித்ததை எடு சாயங்காலம் பேசிக்கலாம் வந்திடறேன்” என குரு பின்னால் சென்றிருந்தான்.
“என்ன ஆச்சு ராம்?” என்ற குருவின் கேள்விக்கு
“தெரியலைடா, சரியாகிவிடும்” என்றபடி உடை தேர்வில் ஈடுபட்டான். அன்று இரவே குரு புறப்பட்டு இருந்தான் பெங்களூருக்கு
சுமித்ராவின் அலைபேசிக்கு அழைத்த ராம் “ என்ன குழப்பம் சுமி? ஏன் டிரஸ் எடுக்க வரும் போது அப்படி இருந்த ?”
எப்போதும் போல மனதில் எதையும் மறையாமல் ”ரொம்ப சீக்கிரமாக மேரேஜ் பிக்ஸ் ஆன மாதிரி இருக்கு, மனதிற்குள் ஏதோ பதட்டம், அப்பாவும் பணத்துக்காக கொஞ்சம் அலையறாங்க டைம் எடுத்து செஞ்சு இருக்கலாம் இத மாதிரி ஏதேதோ யோசனை ”
“சுமி முழுதாக பதினெட்டு நாள் தான் இருக்கு, பாதி பேருக்கு பத்திரிக்கை கொடுத்தாச்சு இனிமேல் எதுவும் செய்ய முடியாது புரியுதா? கல்யாண நாளை கூட தள்ளி வைக்க முடியாது. இனி ஏதாவது ஆனால் நான்கு பெரியவங்களும்தான் வருத்த படுவாங்க, இயல்பா இரு, இன்றைக்கு இருந்த மாதிரி வீட்டிலேயும் இருந்தா அம்மா அப்பா வருத்தபட மாட்டாங்களா ?”
“ம் புரியுது ஸாரி ஆனா ஏதோ ஒன்று கொஞ்சம் பதட்டபட வைக்குது உங்களை குறை சொல்லல எப்படின்னு எனக்கு சொல்ல தெரியவில்லை”
“ஸாரி கேட்க வேண்டிய தேவையே இல்லை. நம்ம சுற்றிலும் பரபரப்பாக இருக்கும் போது இத மாதிரி சில நேரம் தோணும், ரிலாக்ஸ்ஸா இரு, இதையும் அதையும் யோசிக்காத பின்னாடி நமக்கு நடுவுல நிறைய ஸ்வீட் மெமரீஸ் கூடவே வரப்போகுது ம் , இப்போ சொல்லு சேலை கலர் பிடிச்சு இருக்கா ?”
“ம் பிடிச்சிருக்கு உங்க கிட்ட பேசின பிறகு கொஞ்சம் பரவாயில்லை. இனி கலகலப்பாக இருக்கிறேன்”
“குட் இது தான் வேணும்” என்றபடி போனை வைக்க சுமித்ராவின் தந்தை கூட அன்று மகிழ்ச்சியான மனநிலையில் வந்து இருந்தார்.
“சுமி இந்தாடா இந்த பணத்தை பிரோவில் வை கேட்ட பக்கம் பணம் கிடைத்துவிட்டது. அடுத்த மாதம் சீட்டு பணம் வரும் வந்ததும் கொடுத்திடலாம் இனி கவலை இல்லை, கல்யாண வேலையை தைரியமாக பார்க்கலாம் ” இப்படி சொன்னவர்
“சுமித்ரா பத்திரிகையில் பேர் எழுத சொல்லி லிஸ்ட் தந்து இருந்தேனே எழுதி வைத்து விட்டாயா?”
“ஆச்சு பா ”
“அந்த மஞ்சள் பையில் எடுத்து வைமா பக்கத்தில் இருக்கறவங்களுக்கு கொடுத்துவிட்டு வந்திடறோம்”
அன்றைய நாளுக்கு பிறகு அடுத்தடுத்து செய்ய சுமித்ராவிற்கு செய்ய நிறைய வேலை இருந்தது. அன்றைய கலக்கம் கூட மறுபடி வரவில்லை அடுத்தடுத்து நாட்கள் வேகமாக நகர அனைவரும் ஆவலாக எதிர் பார்த்த திருமண நாளும் நெருங்கி இருந்தது.
பல நேரங்களில் பெண்களின் உள்ளுணர்வு சொல்வது பொய்பதில்லை, சுமித்ராவின் மனதில் ஆரம்பத்தில் தோன்றிய கலக்கத்திற்கு விளக்கம் இன்னும் சில நாட்களில் தனக்கு மொத்தமாக வரப்போவதை அப்போது அவள் உணரவில்லை.
 
Last edited:

Kavisowmi

Well-known member
20
திருமண நாளிற்கு முதல் நாள் காலையிலேயே குரு வந்திருக்க. வந்த நேரம் முதலே ராமிடம் வம்பிழுத்து கொண்டு இருந்தான். குருவின் மகிழ்ச்சி ரெட்டிப்பாக இருந்தது விஷாலியின் நிச்சயதார்த்தம் ராமின் திருமண நாள் அன்றே முடிவு செய்திருக்க கோகுல் இவனிடம் கூறிவிட்டு சென்னைக்குச் சென்றிருந்தான்.
கோகுல் இவனிடம் “அண்ணா கல்யாணத்துக்கு வர முடியாது குரு. விஷாலியோடது நிச்சயம் இருக்கு. அது முடியவும் ஒரு நாள் பவித்ராவையும் அழைச்சிட்டு உன் கூட வரேன்” என சொல்லி இருந்தான்.
விஷாலியுடமும் வாழ்த்து சொல்லி இருந்தவன் அதே மகிழ்ச்சியோடு இங்கு வந்திருந்தான்.
“குரு அப்பா மண்டபத்துக்கு உன்னை கூப்பிட்டாங்க. இங்கே லேப்டாப்பை எடுத்து வச்சிட்டு அவன்கிட்ட வம்பு பேசிட்டு இருக்கற” திலகவதியின் அழைப்பிற்கு
“அம்மா ஐந்தே நிமிடம் வந்திடறேன்” ராமின் அறையில் அமர்ந்தபடி பதில் சொன்னவன் “டேய் ராம் சீக்கிரம் வா” எவ்வளவு நேரமாக கூப்பிடறேன்.
“திலகவதியோ, கீழே வேலை இருக்குதுடா சீக்கிரம் வந்து சேரு” என இறங்கி இருந்தார்.
“என்ன குரு. இங்கே வந்தும் ஆபீஸ் வேலை பார்க்கறையா?”
“பார்க்கணும் ஆனா இப்போது இல்லை. ஒரு மாதம் கூட ஆகலை எப்படி லீவ் தருவாங்க? இங்கே இருந்தே வேலை செய்யணும். இப்போது வேலை செய்யலை இது உனக்காக. வந்து பாரு”
“என்னடா?”
“இங்கே பாரு இதில் எந்த இடம் உனக்கு பிடிச்சிருக்குன்னு சொல்லு. அங்கே உனக்கு டிக்கெட் போட்டு தர்றேன். உன்னோட ஹனிமூனுக்கு. இது மூனாறு. இந்த இடம் நல்லா இருக்கா? இங்கே டிரெக்கிங்பாயின்ட் ஒன்று இருக்கு. காலையில் போனால் சாயங்காலம் வந்துவிடலாம். செமையா இருக்கும். இது அதிரபள்ளி இதுவும் நல்லா இருக்கும். தங்கறதுக்கு அங்கேயே ரெசார்ட் எடுத்துக்கலாம். மூன்று வேளைக்கும் சாப்பாடு அங்கேயே அவங்க ரெடி பண்ணி தந்திடுவாங்க. சுற்றி பார்க்க நிறைய இடம் இருக்கு ஊட்டி பக்கம் தான் அடிக்கடி போய் இருக்கிறோம். அங்கே போன்னு சொன்னால் நீயே அடிக்க வருவ” . ஒவ்வொரு போட்டோவாக எடுத்து காட்டியபடி இவனிடம் கேட்க,
“ஹனிமூனுக்கு எதுக்கு காட்டை தேடி போகணும்? உனக்கே இது ஓவரா இல்லை”
“அடப்பாவி. அம்மாஞ்சி மாதிரி முகத்தை வச்சிட்டு எப்படி சொல்லிட்ட? இரு அம்மா கிட்ட சொல்லறேன்” எழுந்தவனை படுக்கையில் தள்ளியபடி “ஏன்டா இதெல்லாம்மா சொல்லுவ?” சொல்லியபோதே விளையாட்டாய் இரண்டு அடி முதுகில் விழுந்து இருந்தது.
“ராம் பயந்திட்ட தானே சொல்லிடுவேன்னு, சொல்லல சரியா? நீ இரு நான் மண்டபத்துக்கு கிளம்பறேன். இதுக்கும் மேல லேட் பண்ணினா அப்பாகிட்ட வாங்கி கட்டுவேன்” லாப்டாப்பை மூடி வைத்தவன் “இரண்டு நாள் தான் லீவ் கிடைச்சிருக்கு. நாளைக்கு நைட் கிளம்பணும். நீ அதுக்குள்ள எந்த இடம் போறதுன்னு முடிவு பண்ணி சொல்லிடு”
அப்போது மண்டபத்திற்கு புறப்பட்டவனுக்கு மாலை வரையிலுமே அங்கேயே வேலை சரியாக இருந்தது. பந்தல், அலங்காரம், மணவரை அலங்காரம் என ஒவ்வொன்றையும் கூட இருந்து பார்த்து கொண்டு இருந்தான். இவன் வந்ததால் பாதி வேலை குறைந்து இருந்தது கிருஷ்ணனுக்கு.
சுந்தரம் கூட பரவாயில்லை “நிச்சயம் அன்றைக்கு பண்ணின மாதிரி இருந்திடுவானோ அப்படின்னு பயந்தேன். பரவாயில்லை இவனும் நல்ல பையன்தான். பொறுப்பாக நடந்துக்கறானே”
“நல்லவன்தான் அவனோட வேலை அப்படி. வா வீட்டுக்கு கிளம்பலாம். இனி இங்கே வேலை முடிஞ்சது நைட் வந்தா போதும்” என்றபடி புறப்பட்டனர்.
வீட்டு வாசலுக்கும் வாழை மரத்தோரணம், சீரியல் லைட் என கட்டியிருக்க, பார்ப்பதற்கே அவ்வளவு அழகாக காட்சி தந்தது.
உள் நுழையவும் அங்கே குரு தனது கேமராவில் ராமை விதவிதமாக போட்டோ எடுத்து கொண்டு இருந்தான். வீடு நிறையவும் உறவினர்கள் கூட்டம். சற்று நேரத்தில் முகூர்த்தகால் நடவும் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று வந்தபிறகு மண்டபத்திற்கு செல்ல என வாகனம் ரெடியாக காத்திருந்தது.
ஆறு மணியை தொடும் போது மண்டபம் நோக்கி புறப்பட்டு இருந்தனர் ராமின் குடும்பத்தார் மொத்தமும். மாப்பிள்ளை வரவேற்பு என இருபத்தியோரு பெண்கள் கைகளில் ஆர்த்தி தட்டோடு காத்திருக்க அவர்களுக்கு வாங்கிய பரிசு பொருளை ஆரத்தி எடுத்து முடிக்கவும் ஒவ்வொருவருக்கும் வழங்கி முடித்து உள் செல்லும் போது இரவு ஏழு மணியை தொட்டு இருந்தது.
சற்று நேரத்தில் எல்லாம் மணமகனை முதலில் மேடைக்கு அழைத்து வர அடுத்து சுமித்ராவை அழைத்து வர உறவினர்கள் ஒவ்வொருவராக வாழ்த்து கூற மேடையேறியபடி இருந்தனர்.
வந்தது முதல் ஒவ்வொன்றையும் போட்டோ, விடியோ என அனைத்தையும் ஓரு புறம் பதிவு செய்து கொண்டிருந்தனர். குரு கூட அண்ணனின் நண்பர்கள் அவனின் நண்பர்கள் என வந்தவர்களிடம் பேசிக்கொண்டு இருந்தான்.
சலசலப்பான பேச்சு சத்தம், இதமான இசை கூடவே அருகில் சுமித்ரா. ராம் கூட வேறு உலகத்தில் இருந்தான். நெருங்கிய உறவினர்கள் வரும் போது சுமித்ராவிற்கு அறிமுகபடுத்தியபடி.
அழகாய் நகர்ந்து கொண்டு இருந்தது. ஆரம்ப நாட்களில் பார்த்த சுமித்ராவை விட இப்போது இன்னும் அழகாக மாறியிருந்தாள். அளவான மேக்கப்போடு புன்னகையுடன் பூரிப்புமாக பார்பதற்கு அழகாக இருந்தனர் இருவரும். ராமின் முகபுன்னகைக்கு பொருத்தமாக அவளது முகமும் புன்னகையில் சிவந்து இருந்தது.
குரு முக்கிய நண்பர்கள் வரும் போது மேடைக்கு அழைத்து வந்தவன் ஒவ்வொருவரையும் போட்டோவுக்கு நிற்க சொல்ல, வருபவர்களை வரவேற்க என பம்பரமாக சுற்றி கொண்டு இருந்தான். இரவு பத்து மணியை தாண்டும் வரை மேடையில் நின்று கொண்டு இருக்க இருவரையும் உணவு உண்ண அழைத்து சென்றனர்.
இருவரது குடும்பத்திலும் வரும் முதல் திருமணம் என்பதால் திருமணத்துக்கு முதல் நாள் இரவிலேயே கூட்டம் நிரம்பி வழிந்தது.
உணவு உண்டு வரவேற்பு மறுபடியும் போட்டோ எடுக்க என பதினோருமணியை தாண்டி இருக்க, அப்போது தான் சற்றே ஓய்வாக அமர முடிந்தது.
திலகவதி வந்து “போதும்பா, கொஞ்ச நேரம் தூங்கி எழட்டும் காலையில் கல்யாணத்துக்கு முகம் பார்க்க அழகாக இருக்கணும்ல. காலையில் தூங்க கலக்கமாக இருந்தா நல்லா இருக்காது” என நகர்த்தி இருந்தார்.
சுமித்ராவிடம் “அழகாக இருக்கற சுமி” என கூறியபடி அழைத்து சென்றவர் ராமிடமும் குருவிடமும் “கொஞ்ச நேரம் தூங்குங்க. காலையில் ஐந்து மணிக்கு எழுந்திருக்கணும்” என்றுவிட்டு போனார்.
மணமகன் அறைக்குள் வந்த ராம் சற்றே நகர்ந்து சுமித்ராவிற்கு தான் தனது செல்பேசியில் அழைப்பு விடுத்துக் கொண்டு இருந்தான்.
“சுமித்ரா தூங்கலையா?” அறைக்குள் முழுவதும் தோழிகள் உறவினர்கள் இருக்க. அவனது குரல் கேட்டதும் அட்டென் செய்தவள்,
“இங்கே நிறைய பேர் இருக்கறாங்க ப்ளீஸ் சீக்கிரம் சொல்லுங்க”
சிரித்தபடியே “எனக்கு இன்றைக்கு தூங்கும் வரும்ன்னு தோணலை, உனக்கு எப்படி?”
“அதே நிலைமை தான் இங்கேயும்ன்னு சொல்லணுமா?”
“சொன்னால் சந்தோஷப்படுவேன் சுமி”
அவனது பதிலை கேட்டபடி போனை கட் செய்தவள் வந்து அமர, தாயார் மல்லிகா “கொஞ்சம் நேரம் தூங்கு சுமி மேக்கப் போட ப்யூட்டிசியன் நான்கு மணிக்கு வந்திடுவாங்க” என்றார்.
அமைதியாக படுத்தவளுக்கு தூக்கம் வரவில்லை. மகிழ்ச்சியுடன் கூடிய ஏதோ மன நிறைவில் நேரம் கூட வேகமாக நகர்ந்து இருந்தது.
சற்றே கண் அயர்ந்த வேளையில் எழுப்பி விட. அழகு தேவதையாக அவளை அலங்கரித்திருக்க தோழிகளின் துணையோடு மணவறைக்கு அழைத்து வரப்பட்டாள் சுமித்ரா.
அதை விட அழகாக பட்டு வேஷ்டி பட்டுசட்டையோடு ராம் இவளுக்காய் காத்திருக்க சுபயோக சுப தினத்தில் . அனைவரும் எதிர் பார்த்த அந்த திருமணம் ஆரவாரத்தோடு இனிதாக நடந்து முடிந்தது.
மாங்கல்யத்தை கழுத்தில் அணிந்தவன் நெற்றி வகிட்டில் குங்குமம் இட திருமணத்தின் அடுத்த சடங்காக சுமித்ராவின் கையை ராமின் கையோடு இணைத்தபடி மணவறையை வலம் வந்தனர்.
இவர்களை வாழ்த்த ஒவ்வொருவராக மேடைக்கு வர ஆரம்பித்தனர்.
தாலிகட்டியபோது அருகில் நின்றவன் தான் மறுபடியும் ராமின் அருகில் செல்ல நேரமே கிடைக்கவில்லை குருவிற்கு. உறவினர்கள், இருவரது நண்பர்கள் என வருபவர்களை வரவேற்று உணவு அருந்த அழைத்து செல்ல என சரியாக இருந்தது. சில நேரம் கிருஷ்ணனே இவனை அழைத்து ஒரு சிலரை அறிமுகப்படுத்தி வைத்தார். திலகவதிக்கு உறவினர்கள் ஒவ்வொருவரிடமும் பார்த்து பேசவே சரியாக இருந்தது.
மதியம் கறிவிருந்தோடு மதிய விருந்து நடந்து கொண்டு இருக்க நான்கு மணியை தொடும் போது மணமகளின் இல்லம் அழைத்துச் சென்றனர். மண்டபம் காலி செய்யும் பணி ஒரு புறம் நடந்து கொண்டு இருந்தது. ஆறு மணிக்கு புதுமணத்தம்பதிகள் மாப்பிள்ளை வீட்டுக்கு வருவதாக சொல்லி இருக்க அவர்களை வரவேற்க திலகவதி வீட்டில் காத்திருந்தார்.

ஆறுமணிக்கு மணமக்கள் வரவும் ஆலம் கரைத்து வரவேற்ற திலகவதி பூஜையறையில் விளக்கேற்ற சுமித்ராவை அழைத்து சென்றார் விளக்கேற்றி வரவும் ஹாலில் அமர வைக்க சிறிது நேரம் பேசிக்கொண்டு இருக்க,
குரு பெரிய பானையை எடுத்து வந்தவன் ஹாலின் நடுவில் வைத்து, “ராம் இதோ என்னுடைய கிஃப்ட் ரெண்டு பேருக்கும்” என ஆரம்பித்தவன், பானை நிறைய மஞ்சள் கலந்த நீரோடு பூக்கள் நிறைந்திருக்க,
“ராம் கேம்மோட ரூல்ஸ் சொல்லிடறேன் கேட்டுக்கோங்க ரெண்டு பேரும்” என இவன் ஆரம்பிக்கும் போதே அருகில் அனைவரும் பானையை சுற்றிலும் கூடியிருந்தனர். “இதோ இந்த மோதிரத்தை பானைக்குல் போடுவேன் மூன்று முறை தான் டைம் யார் அதிகமாக எடுக்கறாங்களோ அவங்களுக்கு இந்த மோதிரம் ஓகே வா?”
“உறவு முறையில் ஒருவர் குரு இது நல்லா இருக்கே நாங்களும் விளையாட்டுக்கு வரவா? என கேட்க.
“தாராளமாக வரலாம் மாமா. ஆனால் மறுபடியும் நீங்கள் கல்யாணம் பண்ணிட்டு வரணும். அத்தை ஓகேன்னு சொன்னா எனக்கு பிரச்சினை இல்லை” இவன் சொல்லவும் அனைவரும் சிரிக்க ஆரம்பிக்க,
“உன் கூட சேர்ந்தா கிடைக்கிற இரண்டு வேளை சாப்பாடும் கிடைக்காம பண்ணிடுவ போல இருக்கு” என அவர் சொல்ல மறுபடியும் சிரிப்பு கிளம்ப,
“ராம் இதோ போட போறேன்” என்றவன் மோதிரத்தை போடவும் இருவரும் சிரித்தபடி தேட, மோதிரம் இருவருக்கும் கிடைக்கவில்லை. ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி கையை வெளியே எடுக்க,
“ஸாரி.. ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்திட்டு இருந்திங்களா? நான் மோதிரத்தை இன்னும் போடவே இல்லை. நீங்க ரெண்டு பேரும் போடாமல் இருந்ததை கவனிக்கலை” இப்போது போடறேன் என்ன சற்றே உயர்த்தி போட. முதலில் எடுத்தது சுமித்ரா. மோதிரத்தை எடுத்து காட்ட,
“அடுத்தது யார்ன்னு பார்க்கலாம்” என வாங்கி மறுபடியும் போட இந்த முறை சுமித்ரா தேடவே இல்லை எடுத்தது ராம்.
“ஆளுக்கு ஒரு தடவை எடுத்தாச்சு இது தான் கடைசி இந்த முறை எடுக்கறவங்க தான் வின்னர்” என கூறியபடி போட, சுமித்ராவும் எடுக்கவில்லை ராமும் எடுக்கவில்லை. சற்றே அமைதியாக இருவரும் எடுக்காமல் இருக்க, ராம் எடுத்தவன் சுமித்ராவின் கை பற்றி அவளது கைக்குள் தந்தபடி வெறுங்கையை வெளியில் எடுத்துகாட்ட. சுமித்ரா கைக்குள் இருந்த மோதிரத்தை காட்டினாள்.
“ராம் அண்ணா மோதிரம் அவங்க கிட்ட தான் இருக்கு. இப்போது வின் பண்ணினது அவங்கதான். ஒருத்தருக்கொருத்தர் விட்டு தர்றது வாழ்க்கை இத சொல்லதான் இந்த கேம். விட்டு தந்தவங்க வாழ்க்கையில் தோற்க மாட்டாங்க. இந்தாங்க இது உங்களுக்கான கிஃப்ட்” என குரு இப்போது சிறிய பாக்ஸை நீட்ட, அதில் இன்னோரு மோதிரம் இருந்தது.
“ரெண்டு பேருக்கும் அளவு பார்த்து தான் வாங்கினேன். சரிபார்த்து போட்டுகோங்க” என கூறவும் திலகவதி கிருஷ்ணன் வரவும் சரியாக இருந்தது.
குரு அடுத்து வந்தவர்களை சாப்பிட அழைத்துப் போக, அனைவரும் உணவு உண்டு முடிக்கவும் சுமித்ராவின் தாய் தந்தை இவளை விட்டு விட்டு வீட்டிற்கு புறப்படத் தயார் ஆக, அழ ஆரம்பித்து இருந்தாள் சுமித்ரா.
திலகவதி “சுமித்ரா அழாதேடா அதிக தூரம் இல்லையே, இங்கே இருந்து கிளம்பினா அரைமணி நேரத்தில் வீட்டுக்கு போயிடலாம். அழாதே” என ஒருபுறம் சமாதானபடுத்த,
ராமோ “அழாதே சுமி உனக்கு எப்போ அம்மாவை பார்க்கணும்ன்னு தோணுதோ அப்போ எல்லாம் அழைச்சிட்டு போகிறேன்” என மறு புறம் சமாதானப்படுத்த, அரைமணி நேரம் கடந்த போது அழுகை கொஞ்சமாக நின்று இருந்தது.
அப்போதான் சுமித்ரா அருகில் ராமைப் பார்த்த திலகவதி காலையில் இருந்தே அவன் இன்னமும் பட்டு வேஷ்டி சட்டையை மாற்றாமல் இருப்பதை கவனித்தவர், “போ, ராம் உன்னுடைய அறைக்கு போய் டிரஸ் மாற்றிக்கறதா இருந்தா மாற்றிக்கோ” என அனுப்பிவிட்டு,
சுமித்ரா தாயாரின் வீட்டிற்கு போன போதே உடை மாற்றி இருக்க அவளை சமையலறைக்கு அழைத்து சென்றவர் பேசியபடியே பால் காய்ச்ச ஆரம்பித்தார்.
லேசான குளியலோடு உடை மாற்றி ராம் கீழே வரும் போது குரு முதுகில் சுமந்த பேக்கோடு புறப்பட தயாராக இருந்தான். ராமை பார்த்த குரு வழக்கம்போல கிண்டல் செய்யும் மூடில் இருக்க,
“ப்ரோ, கிட்ட வா” என அழைக்க,
“என்னடா? நீயேன் பேக் மாட்டிட்டு இருக்கற?”
“நாளைக்கு ஆபீஸ்ல முக்கியமான மீட்டிங் இருக்கு, இப்போது கிளம்பி ஆகணும். உன்னோட முகத்தில் இந்த பக்கத்து கன்னத்தில் என்னது?”
“என்னது?” கேட்டபடி ராம் கன்னத்தை துடைக்க,
“இல்லை. லிப்ஸ்டிக் ஒட்டியிருக்கு” குரு சொல்லவும்.
ராம் வேகமாக துடைத்தபடி “இருக்காதே எப்படி?” கொஞ்சம் டென்சனோடு கேட்க,
இப்போது வேகமாக சிரிக்க ஆரம்பித்தவன் “சும்மா சொன்னேன்டா. இவ்வளவு நல்லவனாக இருக்க கூடாது. கேப்ஸ் வெயிடிங்ல இருக்கு. வரேன்டா”
“இன்னும் ரெண்டு நாள் இருப்பேன்னு நினைச்சேன்டா”
“இந்த லீவே கஷ்டப்பட்டு கேட்டு வாங்கி இருக்கிறேன். நேற்று கூட மண்டபத்தில் நைட் தூங்காமல் வேலை செஞ்சிருக்கு கம்பெனி ஒர்க்கை. போயே ஆகணும். அப்பா அம்மாகிட்ட சொல்லிட்டேன். ஆல் த பெஸ்ட்டா தொடங்க போகிற புது வாழ்க்கைக்கு. அங்கே போனதும் கால் பண்ணறேன். அப்பா அம்மாவை பார்த்துக்கோ” என்றபடி புறப்பட்டவன்,
“ஆனாலும் அழகா இருக்கறடா கொஞ்சமாக வெட்கத்தோட இப்போ சிரிச்சயே அந்த சிரிப்பு” என்க
“போடா” என்றபடி ராம் தன் தம்பி முதுகில் கை வைத்துத் தள்ள,
கடைசியாக குரு பார்த்தது ராமின் புன்னகை நிறைந்த முகத்தை மட்டுமே.
 

Kavisowmi

Well-known member
21


திருமணம் முடிந்து அடுத்த நாள் மறுவீட்டு அழைப்பு என அழைத்து சென்றவர்கள் அப்படியே மருதமலை கோவிலுக்கு முதலாவதாக அழைத்து சென்று இருந்தனர். திலகவதி மட்டும் மணமக்கள் கூட வந்திருக்க, கலகலப்பாக நேரம் நகர்ந்து கொண்டு இருந்தது.
ராம் தனது கைக்குள் சுமித்ரா கையை பற்றியபடி படி ஏறிக்கொண்டு இருந்தான். சற்று தொலைவில் இவர்களை தொடர்ந்தபடி சற்றே இடைவெளிவிட்டு வந்து கொண்டு இருந்தனர் மற்றவர்கள்.
பாதி படி ஏறும் போதே சுமித்ராவின் வேகம் குறைந்து இருந்தது். சோர்வாக தெரிய ஆரம்பித்தாள். “என்ன சுமி அவ்வளவு தான் வேகமா? இவ்வளவு மெதுவாக வர்றே. இதற்கு தான் பஸ்ல மேல போயிடலாம்ன்னு சொன்னேன். நீ தான் நடந்து போகலாம்ன்னு கேட்டே”
“நிஜமாகவே கால் வலிக்குதுங்க. ரொம்ப நாள் ஆச்சு. படி ஏறி வந்து. கொஞ்ச நேரம் உட்கார்ந்துட்டு படி ஏறி போகலாமா?”
“நடந்து தான் போகணும்ன்னு கட்டாயம் எதுவும் இல்ல சுமி. உனக்கு ஓகேன்னா சொல்லு நான் உன்னை தூக்கிட்டு போறேன்” சுமித்ராவை பார்த்து ராம் கேட்க,
“என்னது, விளையாடாதிங்க”
“ஏய், நிஜமா சுமி. இது ஒன்னும் புதுசு இல்லை முப்பது வருஷம் முன்னாடி இதே கோவில்ல எனக்கு சித்தப்பா முறை ஆகும், அவரு சித்திக்கு கால் வலிக்கிறது அப்படின்னு தூக்கிட்டே கோவில் வரைக்கும் போனதா இப்பவும் சொல்லுவாங்க. நாம ஏன் அதை மாதிரி ஒரு சாதனையை நடத்தி காட்ட கூடாது. அடுத்ததாக வர்ற நம்மளோட சந்ததிக்கு ஏதாவது மெசேஜ் சொல்லிட்டு போகணும்ல”
“என்ன மெசேஜ் சொல்லுவிங்க?”
“பொண்ணாட்டிக்கு கால் வலிச்சா இடம் பார்க்க தேவையில்லை, தூக்கிட்டே போகலாம்ன்னு” கேட்டபடி கண் சிமிட்டியவனை பார்க்கவும்,
“இத பாருங்கம் இத மாதிரி பேசினா நான் உங்க கூட வரமாட்டேன், நான் அப்படியே அம்மா, அத்தை கூட வரேன். அவனது கைக்குள் இருந்தது தனதுகையை எடுத்துக் கொள்ள முயன்றாள் அவள்.
“ஏய், சும்மா விளையாட்டுக்கு சொன்னேன், அதுக்காக கையை எடுக்காத, இப்படி உட்காரு, பத்து நிமிடம் கழித்து போகலாம்” என அமரவும். அவன் அருகில் அமர்ந்தபடி
“ஷப்பா கொஞ்ச நேரத்தில் எப்படி பயம் காட்டறிங்க?”
“அப்போ, பயந்திட்ட?” சொல்லி சிரித்தவன், “இத்தனை பயம் எதுக்கு சுமி? நான் தானே, அப்படி செய்வேனா?” கேட்டவனை பார்த்தவளுக்கு அந்த நிமிடம் அவனை அவ்வளவு பிடித்தது.
அதிகமாக மனம் விட்டு பேசிக்கொள்ளவில்லை இன்னமும். ஆனாலும் அவனால் எளிதில் இவளிடம் விட்டு தர முடிந்தது. அதே நேரம் இவளது தவறை கூட எளிதாக புரிய வைத்தான்.
இவள் கூட தற்போது யோசித்து கொண்டு இருக்கிறாள். இரண்டு நாட்களில் எப்படி இவனிடம் தனக்கு இவ்வளவு நெருக்கம் வந்தது என.
அன்றைய நாளுக்குப் பின், அடுத்தடுத்து உறவினர்கள் விருந்துக்கு அழைத்திருக்க திலகவதி இருவரையுமே தினமும் எங்காவது அனுப்பிக்கொண்டு இருந்தார். அடுத்த ஞாயிற்றுக்கிழமை வரையிலுமே இருவருக்கும் நேரம் இதிலேயே கழிய திங்கள்கிழமை காலையில் அலுவலகத்திற்கு சென்றிருந்தான் ராம்.
அன்று மாலை “கல்யாணத்துக்கு நீ டிரீட் தரலை. இன்றைக்கு எங்க எல்லோருக்கும் நீ தான் நைட் டின்னர் வாங்கி தரணும்” என நண்பர் ஒருவர் ஆரம்பிக்க மற்றவர்களும் அவனோடு சேர்த்து கொண்டனர்.
“ஒகே, ஒகே, எந்த ஹோட்டல் சொல்லுங்க அழைச்சிட்டு போறேன். அதுக்கு முன்னாடி அம்மா கிட்ட போன் பண்ணி சொல்லிடறேன்” என்றவன் சுமித்ராவை அழைத்து சொல்லிவிட்டு அப்படியே திலகவதியிடமும் சொல்ல,
“லேட் ஆகுமா ராம்?”
“எட்டு மணி ஆகிடும் வந்திடறேன்மா” என்றபடி போனை வைத்தவன் நண்பர்கள் அனைவரையும் ஹோட்டலுக்கு அழைத்து சென்றிருந்தான். அவர்களின் கிண்டலுக்கு நடுவே உணவு உண்டு முடிக்கும் போது இரவு எட்டு மணியை தாண்டி இருந்தது.
செல்வபுரம் சாலையில் இவனது வீட்டை நோக்கி வண்டியை விட இவனோடு கூட இன்னும் இருவர் இவனை தொடர்ந்து வந்தனர்.
சற்று தூரம் வந்து மெயின் ரோட்டை நோக்கி வண்டியை திருப்பவும் கரெண்ட் கட் ஆகி தெருவிளக்குகள் அனையவும் சரியாக இருந்தது. முன்பு நின்றிருந்த பஸ்ஸை தாண்டியவன் சற்றே வேகம் எடுக்க யாருமே எதிர் பாராத சம்பவம் நிமிடத்தில் நடந்து முடிந்திருந்தது.
செல்வபுரம் மெயின் ரோட்டில் புதிதாக நகை கடை ஒன்று துவங்கி இருக்க, கடையை அடைக்கும் போது கொஞ்சமும் யோசிக்காமல் வெண்பூசணியை மெயின் ரோடு என்றும் பாராமல் நடுரோட்டில் உடைத்திருக்க, இதை அறியாத ராம் வேகமாக வண்டியில் வரவும் வண்டியோடு சரிக்கி இருந்தான்.
சற்றே பின்னால் வந்த பஸ் டிரைவர் இதை பார்த்து வண்டியை நிறுத்தும் முன்னமே அவனின் வண்டி அவன் மீதும் ஏறி இறங்கி இருந்தது. இவனை பின் தொடர்ந்து வந்தவர்கள் பதற, சற்று நேரத்தில் ஒரு சிறு கூட்டம் வேகமாக அங்கே கூடி இருந்தனர். பதறியடித்து அவனை வெளியே கொண்டு வர அவனோ அரைமயக்கத்தில் இருந்தான்.
அந்த நேரத்திலும் தாயின் முகம் கண்களில் தெரிய கண்ணீர் வழிந்தபடி, “அம்மா ம்மா தண்ணீர்” இது தான் கடைசியாக அவனது உதடு உச்சரித்தது. அருகில் இருந்தோர் நீர் வாங்கி கொடுக்கும் முன்னமே ஆழ்ந்த மயக்கத்திற்கு சென்றிருந்தான். உடன் வந்தோர் கிடைத்த ஆட்டோவில் இவனை ஏற்றிக்கொண்டு, அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் போது, உயிர் துடிப்பு வெகுவாக குறைந்திருந்தது.
அங்கே அட்மிட் செய்த நொடி இவனது தந்தைக்கு அவர்கள் அழைத்து சொல்லியிருக்க
மொத்த குடும்பமும் கூடியிருந்தனர். ஹாஸ்ப்பிடல் முன்பு வந்த நொடியே சுமித்ரா ஒரு புறம் மயங்கி விழுந்திருந்தாள். ஐசியூவில் அட்மிட் செய்திருந்த ராமின் நிலை கவலைக்கிடமாகவே இருந்தது.
விதிக்கப்பட்ட விதியின் தீர்ப்பை மனிதனால் வெல்ல முடியுமா?

22
மூன்று நாட்கள் தொடர்ந்து ஆபீஸ்ஸில் வேலை இருக்க அன்று மாலை ஆறு மணிக்கு வீட்டிற்குள் நுழைந்த குரு நேராக படுக்கையறையில் தஞ்சம் அடைந்து இருந்தான்.
படுத்த சில நிமிடத்திலேயே ஆழ்ந்த தூக்கத்திற்கு சென்றிருந்தான்.
அழைப்பு மணியோசை காதில் விழ சற்றே சிரமத்தோடு கண் விழித்தவன் கதவை திறக்க, வாசலில் நின்றிருந்தது ராம்.
“டேய் என்னடா அதிசயம் சொல்லாமல் வந்து நிற்கற? உள்ள வா, எப்படி அம்மாவை விட்டுட்டு வந்தே. நம்பவே முடியலை. கனவு மாதிரி இருக்கு” திருமணம் முடிந்தது ஏனோ அவனது கவனத்திற்கு வரவே இல்லை.
இதை கேட்ட ராமின் முகத்தில் லேசான சிரிப்பு மட்டுமே இருந்தது. ஏனோ இன்று அவனது முகத்தில் அவ்வளவு சாந்தம். “ஏன் வரக்கூடாதா?”
“என்ன ராம் இப்படி சொல்லற. உனக்கில்லாததா? என் கூடவே வேணும்னாலும் தங்கிக்கோ வேண்டாம்ன்னு சொல்ல மாட்டேன்”
“தெரியுமே. அதனால தான் உன் கூடவே இருக்க இங்கே புறப்பட்டு வந்துட்டேன்” சொன்னபடி ஹாலில் அமரவும், குருவிற்கு விழிப்பு வரவும் சரியாக இருந்தது. அவன் கண்டது கனவு என்பது போல பிரித்து அறிய முடியவில்லை.
வேகமாக ஹாலை வந்து பார்த்தவன் யாரும் இல்லாததால் வேகமாக கதவை திறந்து வெளியே பார்க்க, அங்கேயும் ராம் வந்ததிற்கான அடையாளம் எதுவும் இல்லை. அந்த நிசப்த்தத்தில் கடிகாரத்தின் டிக், டிக் ஓசை, கூடவே ஃபேன் சுற்றும் ஓசை மட்டுமே கேட்டுக்கொண்டு இருந்தது.
கனவு வந்ததாலோ என்னவோ உடனே பேச வேண்டும் என தோன்றியது. நேராக சென்று மணியை பார்த்தான் பத்துமணியை தாண்டி இருக்க, குருவின் முகம் லேசாக வேர்த்தது அந்த குளிரிலும். தனது போனை எடுத்து தாயாருக்கு அழைப்பு விடுத்தான். இரண்டு முறையுமே போனை எடுக்கவில்லை.
மறுபடியும் மறுபடியும் முயற்சிக்க போனை எடுத்தார். “குரு” என கூப்பிடும் போதே அழுதது போன்ற அவரது குரலை கேட்டவுடன் “ம்மா, ஏன் வாய்ஸ் ஒரு மாதிரி இருக்கு? என்ன ஆச்சு?” இவன் விசாரிக்க,
“குரு ராமிற்கு அக்ஸிடெண்ட் ஆகிடுச்சு. டாக்டர் சரியா பதில் சொல்லல பயமாக இருக்குதுடா”
இவர் இதை சொல்லவும். “அம்மா அப்பா எங்கே? கேட்கும் போதே பதட்டம் இவன் குரலில் வர,
“ஐசியூ முன்னாடி நிற்கறாங்க”
“அம்மா அழாதிங்க அவனுக்கு எதுவும் ஆகாது. நான் புறப்பட்டு வரேன்” என்றவன் அந்த நிமிடமே கோவை வரை செல்ல காரை புக் செய்து புறப்பட்டான்.
தூக்கம் இல்லை. சற்று நேரம் கழித்து போன் செய்ய தாயின் நம்பர் சுவிட்ஆப் என வரவும் இன்னும் பயம் அதிகமாகியது குருவிற்கு. தந்தையின் எண்ணிற்கு அடிக்க அதுவும் எடுக்கப்படவில்லை.
ஆறு மணியை தொடும் போது கோவைக்கு வந்திருந்தான். நேராக
சுந்தரம் நம்பருக்கு அழைக்க, உடனே அட்டென் செய்தவர் “குரு ஹாஸ்ப்பிடல் வேண்டாம் நீ நேராக வீட்டுக்கு வந்துவிடு” என்றார் அவர்.
“அண்ணா”
“அவனுக்கு எதுவும் இல்லை நீ வீட்டுக்கு வந்துவிடு” என்றபடி வைக்கவும் இவனால் எதையுமே யோசிக்க முடியவில்லை. ஒரு வேளை எதுவுமே இல்லை போல இருக்கு. இவங்க பயந்திட்டாங்க. இப்படி நினைத்து அவனது வீட்டிற்கு வண்டியை விட, அடுத்த அதிர்ச்சி அங்கே காத்திருந்தது.
வாசலில் வந்து இறங்கிய போதே தெரிந்து விட்டது வாசலில் கட்டி இருந்து சார்மியானா நடந்ததை உரைக்க, நம்ப முடியாமல் வேகமாக உள் நுழைந்தான். எதுவும் நடக்காதது போல தூங்கும் தோற்றத்தில் இனி எழுந்து வர முடியாத ஆழ்ந்த நித்திரைக்குள் சென்றிருந்தான் ராம்.
அவனது அருகில் அழுதபடி திலகவதி அமர்ந்திருக்க, சற்று தொலையில் கிருஷ்ணன் எதையும் நம்ம முடியாமல் அதிர்ச்சியோடு பார்த்தபடி நின்று கொண்டிருந்தார்.
சுந்தரம் தனது போனில் ஒவ்வொருவருக்கும் அழைத்து சொல்லிக்கொண்டி இருந்தார் இறப்பு செய்தியை.
எதையும் நம்பவே முடியாமல் யாரை தேற்றுவது என தெரியாமல் திலகவதி அருகில் வர, “குரு, கடவுளுக்கு கண்ணே இல்லைடா. அத்தனை கடவுளுக்கும் வேண்டுதல் வச்சேன் மொத்தமாக ஏமாற்றிட்டாருடா” அழுதவரை எப்படி தேற்றுவது என்பது தெரியாமல் தவித்து நின்றான்.
நீண்ட நெடிய கொடிய கனவு போல தொடர்ந்து கொண்டு இருந்தது. யாரை தேற்றுவது யாரை விடுவது எதுவும் தெரியவில்லை குருவிற்கு. அப்போது கூட மனம் ராமை மட்டுமே சுற்றி கொண்டு வந்தது. மனம் முழுக்க ‘எழுந்திருச்சி வந்திடுடா. எல்லாமே விளையாட்டுக்கு, எனக்கு ஒன்றும் இல்லை அப்படின்னு எழுந்து வந்துவிடு’ என கதறிக் கொண்டிருந்தது.
கூட்டம் சேர சேர அழுகை கூட கூடிக்கொண்டே இருந்தது. மதியம் ஆகவும் சாங்கியம் செய்யனும் பொண்ண வரச்சொல்லுங்கள் திலகவதி அம்மா என கூற,
“கடைசியாக முகம் மட்டும் வந்து பார்க்கட்டும், எந்த சாங்கியமும் தேவையில்லை, தாலியை ஏதாவது கோவில் உண்டியலில் போட்டுடலாம். அவள் சின்ன பொண்ணு இதுக்கு மேல எதுவும் செய்ய விட மாட்டேன்” அந்த அழுகையிலும் வார்த்தையில் உறுதி தெரிந்தது திலகவதிக்கு.
கிருஷ்ணன் கூட அதைதான் சொன்னார் இறுதி ஊர்வலம் நடக்க சில நிமிடத்திற்கு முன்னதாக சுமித்ராவை அழைத்து வர அப்போது தான் குரு அவளை பார்த்தான். அழுது வீங்கி போன முகத்தோடு கண்களில் ஜீவன் இல்லாமல் ராமின் முகம் பார்த்தவள்
மயங்கி சரிந்திருந்தாள்.
“நேற்றிலிருந்து இந்த பொண்ணு இப்படி தான் இருக்குது. நைட்டே தூக்கமாத்திரை கொடுத்து தூங்க வைச்சு இருக்கறாங்க. யார் கண்ணு பட்டுதோ இப்படி ஆகிடுச்சி. இனி இந்த பொண்ணோட எதிர் காலம்?” வந்திருந்தவர்களின் பேச்சு குருவின் காதில் விழுந்தது.
வாசலில் கட்டிய வாழைமரத்தோரணம் அவிழ்க்கும் முன்னமே ராமின் இறுதி பயணமும் முடிந்து இருந்தது. மல்லிகா ராகவேந்திரர் கூட பதினாறு நாட்கள் முடியவும் பெண்ணை அழைத்து செல்ல முடிவு செய்திருக்க,
திலகவதி அன்றைய நாளில் ராமின் உடலுக்கு எரியூட்டிவிட்டு வீட்டுக்கு வரும் போதே தனது பதிலை அனைவர் முன்பும் சொல்லி இருந்தார். “சம்மந்தியம்மா. சுமித்ரா என் வீட்டுக்கு வந்த மஹாலஷ்மி அவளை எல்லாம் முடிஞ்சதுன்னு என்னால அனுப்ப முடியாது. நடந்தது விபத்து இத காரணம் வச்சி யாரும் அவளை ராசியில்லாதவன்னோ வேற மாதிரியோ பேச வேண்டாம்”
அப்போது தான் இருவர் பேசியபடி சென்றிருக்க, அதற்கு முற்றுபுள்ளியாய் திலகவதியின் பேச்சு இருந்தது. “உங்கள் பக்கத்து பெரியவங்க கிட்ட கேட்டு சொல்லுங்க. உங்க பொண்ண என்னுடைய ரெண்டாவது பையனுக்கு கட்டி வைக்கிறேன். எப்படியும் என்றைக்கு என்றாலும் சுமித்ராவை கட்டி தரத்தானே போறிங்க. எங்க வீட்டிலே வாழட்டும்”
வந்தவர்கள் மட்டும் அல்ல, குருவுமே திலகவதியின் இந்த முடிவை எதிர் பார்க்க வில்லை.
“வயதில் பெரியவர்கள் கூட அவங்க சொல்லறது தான் சரி. அத மாதிரியே செஞ்சிடுங்க. தெரியாத இடமா கொடுத்துவிட்டு பொண்ணு கண்ணை கசக்கும் போது பார்க்கறதை விட இவங்களுக்கு தரலாம். யோசித்து நல்ல பதிலாக சொல்லுங்க” என மல்லிகாவிடம் கூறி புறப்பட,
ராகவேந்திரர் தம்பதிகளுக்கு கூட இந்த முடிவு ஏற்புடையதாக இருந்தது. பெண்ணின் எதிர் காலம் குறித்த பயம் சற்றே குறைந்திருக்க சுமித்ராவிடம் எப்படி கேட்பது என்ற பயம் நிறைய இருந்தது.
சுமித்ரா பாதி நேரம் மயக்கத்தில் இருக்க, விழிக்கும் நேரம் முழுவதும் அழுகையிலேயே கரைந்து கொண்டு இருந்தாள். முழுதாக பத்து நாட்கள் வசந்தத்தை காட்டியவன் மொத்தமாக ஒரே நாளில் இல்லாமல் போவான் என யாராவது கூறியிருந்தால் நம்பி இருக்க முடியுமா? விடிய விடிய தூங்காமல் இவளிடம் பேசியபடி இருந்தவன், இப்போது அவனின் நினைவில் தூங்காமல் அழுது கொண்டிருக்க விட்டுப் போயிருக்கிறான்.
கோகுல் குருவை பார்க்க வர அவனிடம் “இனி அங்கே வேலைக்கு வரமாட்டேன் அம்மா அப்பா கூட இருக்க போறேன்” என குரு கூறவும்,
“பைத்தியம் மாதிரி பேச கூடாது இழப்பு பெரியதுதான் அதுக்காக அந்த இடத்திலேயே நின்னுட்டு இருப்பியா? நகர்ந்து தான் ஆகணும். அங்கே அக்ரிமெண்ட்ல சைன் போட்டு இருக்கற. அதை யோசித்து பாரு. அக்ரிமெண்ட் முடியற வரைக்கும் அங்கே வேலை செய்யபாரு அதுக்கப்புறம் பார்க்கலாம்” என கூறி சென்று இருந்தான்.
ஒருவாரம் கூட இருக்க ஒரு வாரமுமே ஒவ்வொருவரையும் தேற்றுவது பெரிய சவாலாக இருந்தது. எந்த நேரம் பார்த்தாலும் தூங்காமல் விழித்திருக்கும் தாயார். இவனுக்குமே கண்களில் தூக்கமில்லை.
அடுத்து திலகவதி கிருஷ்ணன் இருவருமே இவனை பெங்களூரில் வேலைக்கு அனுப்பி இருந்தனர். போவதற்கு முன்பு “அம்மா அங்கே என் கூட ரெண்டு பேரும் வந்திடறிங்களா? என்கூட இனிமேல் இருங்க” என இவன் கேட்க திலகவதி ஒட்டுமொத்தமாக மறுத்திருந்தார்.
“அவன் இருந்த இடம்டா, எல்லா இடத்திலேயும் அவனோட நியாபகம் இருக்கு, இங்கே இருந்து எங்கேயும் வர மாட்டேன்”
சுமித்ராவை கூட மூன்றாவது நாள் காரியம் முடியவும் அவளது வீட்டிற்கு அனுப்பி இருந்தனர். “அழுதிட்டே இருக்கறா சம்பந்திமா இடம் மாறினால் கொஞ்சம் மாற்றம் கிடைக்கும்” என
பதினாறு முடியவும் அடுத்த இருபதாவது நாளில் இவர்களுடைய திருமணம் ரெஜிஸ்டர் ஆபிசில் எளிய முறையில் நடத்த முடிவு செய்தனர்.
குருவிடம் தனிமையில் திலகவதி பேசி இருந்தார் “குரு உன்கிட்ட கேட்காமலேயே என்னோட முடிவு சொல்லிவிட்டேன். உனக்கு விருப்பம் இல்லைன்னா வேண்டாம். நான் சொன்னதுக்காக நீ சம்மதிக்கணும்ன்னு அவசியம் இல்லை. அவள் நல்ல பொண்ணு.
பழையமாதிரி சிரிக்க வைக்க உன்னால முடியுமுன்னு நினைச்சேன்”
“அம்மா உங்க விருப்பம் தான் என்னோடது. எப்பவுமே சொல்வேனே எந்த பொண்ணா இருந்தாலும் நீங்க பார்த்து முடிவு செய்யற பொண்ணதான் நான் கல்யாணம் பண்ணிப்பேன்னு. அதுல எந்த மாற்றமும் இல்லை”
“இது போதும்டா. கல்யாணம் முடியவும் நீ இங்கே இருக்க வேண்டாம் பெங்களூருக்கு அவளையும் அழைச்சிட்டு போயிடு, அவளுக்கு இங்கே எப்போது வரத் தோணுதோ அப்போது வந்தால் போதும்” என கூறியிருக்க, எந்த விதமான ஆர்ப்பாட்டமும் இல்லாமல் மொத்தமே பத்து உறுப்பினர்களோடு எளிய முறையில் இவர்களது திருமணம் ரெஜிஸ்டர் ஆபீஸில் நடந்து முடிந்தது.
சுமித்ரா சிறு பார்டர் உடைய சேலை உடுத்தி, நீண்ட பின்னலில் சிறிதளவு பூ வைத்திருந்தாள். இவ்வளவு தான் மொத்த அலங்காரமும். முதல் முதலில் பார்த்ததிற்கும் தற்போதிற்கும் நிறைய வித்தியாசம் இருந்தது. பாதியாய் உடல் மெலிந்து இருந்தாள். குரு பட்டு வேட்டி சட்டை அணிந்திருந்தான்.
இரண்டு சிறுமாலைகள் ஒருவருக்கொருவர் மாற்றிக்கொள்ள, திருமாங்கலயத்தை அங்கேயே அனைவரின் எதிரிலும் அணிவித்தான். தாய் தந்தை கால்களில் அங்கேயே விழவும் வந்தவர்களின் அனைவரது வேண்டுதலுமே அந்த நிமிடத்தில் இருவர் வாழ்வும் நிம்மதி மகிழ்ச்சியோடு நீண்ட காலம் வாழட்டும் என்பதே. திருமணம் முடியவும் அனைவரும் திலகவதியின் இல்லத்திற்கு வந்திருந்தனர்.

வீட்டின் உள் வந்தவன் மாலையை கழட்டி தாயிடம் தந்து விட்டு தனது அறைக்குள் சென்றிருந்தான். மல்லிகா வந்தவர்களுக்கு காபி தர சுமித்ராவிடம் பெரியவர் ஒருவர் “சாமி விளக்கு ஏற்றுமா” என அழைத்து சென்று இருந்தார்.
சற்று நேரம் கழித்து குருவை தேடி திலகவதி அவனது அறைக்கு செல்ல, தலையில் கைகளை வைத்தபடி குனிந்து அமர்ந்து இருந்தான்.
“குரு” என அழைத்தபடி அருகில் அமர்ந்தவர், “எனக்கு ஒரு வாக்கு கொடு”
“சொல்லுங்கமா”
“சுமித்ரா இப்போ உன்னோட மனைவி. அவளை எந்த நேரத்திலேயும் எதுவும் சொல்லி காட்டிட கூடாது. அவள்கிட்ட கொஞ்சம் பொறுத்து போ. கோபத்தை காட்டாதே. அவள் உனக்காக பார்த்த பொண்ணு அப்படி நினைச்சிக்கோ”
“எதுவுமே ஒரே நாளில் மாறிடாது. டைம் எடுக்கும், எனக்கு உன் மேல நம்பிக்கை இருக்கு. சீக்கிரமே ரெண்டு பேரும் திரும்ப வாங்க. என்னை பற்றியோ அப்பாவை பற்றியோ யோசிக்காத. இனி நீங்க வாழப்போகிற வாழ்க்கை தான் எங்களுக்கு நிம்மதியை தரும். அதே மாதிரி தான் சுமியோட அப்பா, அம்மாவுக்கும்”
திலகவதி சொன்னதிற்கு எல்லாம் ம். ம் என்று பதில் சொன்னவன் ஒரு கட்டத்தில் மேல் தாங்க முடியாமல் கதறியிருந்தான்.
“அம்மா அண்ணனுக்கு இப்படி நடந்து இருக்க வேண்டாம். அவனுக்கு சாகற வயசாம்மா? ஈ, எறும்புக்கு கூட எந்த கெடுதலும் பண்ணியது இல்லை. எப்படி மனசு வந்தது? நடுரோட்டில யோசிக்காமல் எப்படி மா பூசனியை உடைக்கறாங்க. அதுவும் அத்தனை வண்டிங்க போற ரோட்டில். இழப்பு அவங்க வீட்டுக்கு வந்தா மட்டும் தானா? மற்றவங்களுக்கு கிடையாதா?
இன்றைக்கு வரைக்கும் அழுதிட்டு இருக்கிறோம். இப்பவும் நடுராத்திரி குரு எழுந்திருன்னு எழுப்பற மாதிரி இருக்குதுமா”
அவன் சொல்ல சொல்ல இவரின் கண்களிலும் கண்ணீர் வழிய. தலைமுடியை மட்டுமே தடவிக்கொடுதாதுக்கொண்டு இருந்தார். சற்று நேரத்தில் எல்லாம் கிருஷ்ணன் வர
“திலகா அங்கே எல்லோரும் கீழே இருக்கறாங்க. சாப்பாடு பார்த்து கொடு. இங்கே அழுதிட்டு இருந்தா எப்படி? அழுதா திரும்ப வந்திடுவாண்ணா சொல்லு நானும் அழறேன். முடிஞ்சதையே பேசுவீங்களா? நீ என்ன குரு சாயங்காலம் உடனே புறப்பட போறேன்னு சொன்ன? முகம் கழுவிட்டு கீழே இறங்கி வந்து சாப்பிடு. புறப்படணும்ல” என கூறியபடி கீழே வந்தார்.
சுந்தரம் கூட திலகவதியிடம் கூறி இருந்தார் “தங்கச்சி உன்னோட முடிவு ரொம்ப நல்ல முடிவு. எனக்கு அவ்வளவு மகிழ்ச்சியா இருக்கு. ரெண்டு பேரும் குழந்தை, குட்டியோட நீண்ட நாள் நல்லா வாழ்வாங்க” என.
அன்று மாலையே சுமித்ராவையும் பெங்களூருக்கு அழைத்துக்கொண்டு புறப்பட்டு இருந்தான் குரு.
பஸ்ஸில் ஜன்னலோர இருக்கையை ஒண்டியபடி சாய்ந்திருந்த சுமித்ராவை பார்த்தவனுக்கு புறப்படும் முன்பு சுமித்ராவின் தாயார் கூறியது ஞாபகம் வந்தது “சிரிப்பும் கலகலப்புமா இருந்த பொண்ணு. இப்ப சிரிக்கறதே இல்லை. இந்த கல்யாணம் கூட மற்றவங்க வர்புறுத்தலுக்காக தான் சம்மதிச்சா, அவளே தெரியாம பேசினாலும் மனதில் எதுவும் வச்சிக்காதிங்க” என்றிருந்தார்.
காலை முதல் இப்போது வரை இவனிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல், ஏன் இவன் புறம் திரும்பி இவனின் முகம் கூட பாராமல் அமர்ந்திருந்தவளை பார்த்த போது ஒரு வழி பயணம் போல இவளுடனான வாழ்க்கை இனி எப்படி இருக்கும் என எதுவும் புரியாமல் குரு அமர்ந்திருக்க, இவர்களை சுமந்தபடி பஸ் சென்று கொண்டு இருந்தது.
 

Kavisowmi

Well-known member
23
பெங்களூரில் இவர்கள் வந்து இறங்கிய போது நேரம் பதினோரு மணியை தொட்டு இருந்தது. கால்டாக்சி புக் செய்து வீடு வரும் போது மேலும் நாற்பத்தியைந்து நிமிடம் தாண்டி இருந்தது. குருவின் கையில் சுமித்ராவின் துணி பேக் சிறியது ஒன்று கையில் இருந்தது அவ்வளவு தான்”இப்போதைக்கு இரண்டு செட் உடை மட்டும் போதும்மா வேணும்ங்கறது நானே வாங்கி கொடுத்துக்கறேன்" என சொல்லி விட்டு வந்திருந்தான்.

லிப்ட்டில் ஏறி இரண்டாவது மாடிக்கு வர வாசல் அருகில் வந்தவன் கதவை திறக்கும் போது தான் முக்கியமான விஷயம் ஞாபகத்துக்கு வந்தது. கதவையும் சுமித்ராவையும் திரும்பி திரும்பி பார்த்தவன் கதவை திறந்ததும் இவளை பார்த்து. ஒரு நிமிஷம் சுமித்ரா இங்கேயே நில்லு வந்திடறேன் என கூறி விட்டு வேகமாக வீட்டுக்குள் நுழைந்து கதவை அடைத்தவன் ஹாலில் பெட்ரூமில் மாட்டியிருந்த ராமின் புகைப்படம் ஒவ்வொன்றையும் கலட்டியவன் எங்கே வைக்கலாம் என்பது போல இடம் தேடி கடைசியில் மேல் இருந்த போட்டோ வைப்பதற்காக வைத்திருந்த பெட்டியில் மொத்தத்தையும் வைத்தவன் நேரம் பார்க்க பத்து நிமிடம் தாண்டி இருந்தது. ஏற்கனவே நிறைய அழுதிருக்கிறாள் என்பது நன்றாக புரிந்தது. திருமணம் முடிந்த போதும் சரி புறப்பட்டு வரும் போதும் சரி வீட்டினரோடு ஒருவரிடமும் எதுவும் பேசவில்லை. அவளது விருப்பம் அங்கே கேட்டார்களா அதுவும் தெரியவில்லை. நிறைய பேரில் வற்புறுத்தலுக்கு பிறகே சம்மதம் சொல்லி இருப்பாள் என்பது ஒரளவு புரிந்தது. இந்த நிமிடம் வரைக்கும் இவன் தான் ஏதாவது சொல்கிறானே தவிர இது வரைக்கும் இவனிடம் ஒரு வார்த்தை பேசினால் இல்லை. இங்கே போட்டோவை பார்த்து இன்னும் அழுதால் எப்படி சமாதானம் செய்வது அதுவும் அவனுக்கு தெரியவில்லை. ஏன் அவளையே அவனுக்கு தெரியவில்லை.

முகம் முழுக்க வேர்த்திருந்தது. வேறு எங்காவது போட்டோ ஏதாவது இருக்கிறதா என தேடியவன் எதுவுமே இல்லை என தோணவும் வேகமாக கதவை திறந்தான்.

அப்போது கூட அவளுக்கு பெரிதாக எதுவும் தோணவில்லை வெளியே நின்றவள் எதிர் புறம் காரிடாரை தாண்டி ஜன்னலுக்கு வெளியே தெரிந்த இருட்டை வெறித்துக்கொண்டிருந்தாள். அவள் நின்றிருந்த தோன்றத்தை பார்க்கவும் இன்னும் மனம் வழித்தது.

உள்ளே வா சுமித்ரா. சொல்லிக்கொண்டு இருக்கும் போதே கோகுல் அவனிடம் வந்திருந்தான். குரு வந்தாச்சா இப்பதான் அம்மா சொன்னாங்க. இன்னும் ரெண்டு பேரும் வீட்டுக்குல போகல தானே.

ஏன்டா . ஏன் கேட்கற . குரு கேட்கவும்.

பவித்ரா இப்ப வந்திடுவா அதுக்கப்புறம் ரெண்டு பேரும் உள்ளே போகலாம் சொல்லிக்கொண்டு இருக்கும் போதே கையில் ஆரத்தி தட்டோடு வந்திருந்தாள். ஸாரி ணா
இப்பதான் சொன்னாங்க எடுத்துவிட்டு வர டைம் ஆகிடுச்சு.
ரெண்டு பேரும் சேர்ந்த மாதிரி நில்லுங்கள் என்றபடி ஆரத்தி சுற்ற ஆரம்பித்தாள்.

என்ன டா இது.

அண்ணா பேச கூடாது முதல் தடவை வர்றிங்க இல்லையா அதனால தான். சுற்றியபடி அப்புறம் தட்டுல காசு போடுங்கண்ணா. இவள் கேட்கவும்
வேகமாக பாக்கெட்டில் தேட பணம் எதுவும் இல்லை. இல்லை என்பது புரியும் போதே சுமித்ரா கையில் இருந்து பர்சை இவனிடம் நீட்டி இருந்தாள். அவளது முகத்தை பார்த்தபடியே பர்சில் இருந்த பணத்தை தட்டில் வைக்கவும்.

இப்ப உள்ளே வாங்க என சொல்லவும். கோகுல் பவித்ராவிடம் பவி இப்போ இத என்ன பண்ணுவ இது ரோட்டில் தானே கொட்டணும். சிரித்து படி கேட்கவும்

ஆமாம்ங்க ரோட்டில் தான் கொட்டணும் இந்தாங்க அப்படியே கொட்டிட்டு வாங்க. அப்பாட்மெண்டில் குடி வந்துவிட்டு கேள்வியை பாருங்க.
இங்கே ஷிங்கில் தான் ஊத்தப்போறேன். நான் கையில் தந்த பை எங்கே?

அச்சச்சோ. அங்கேயே மறந்து வச்சிட்டேன். இரு இதோ எடுத்துவிட்டு வரேன் என அவன் புறப்படவும்.

என்ன டா.

அண்ணா சாப்பிட இட்லி எடுத்து வச்சிருந்தேன் எப்படியும் சரியா சாப்பிட்டு இருக்க மாட்டிங்க இல்லையா . கையில் கொடுத்தேன் அங்கேயே வச்சிட்டு வந்தாச்சு.

இவர்கள் பேசிக்கொண்டு இருக்க இப்போதும் சுமித்ரா வேடிக்கை மட்டுமே பார்த்து கொண்டு இருந்தாள். பவித்ராவே அருகில் சென்று அறிமுகம் செய்து கொண்டாள். சுமித்ரா நான் பவித்ரா கோகுலோட மனைவி இங்கே தான் மேல நான்காவது மாடியில் தங்கி இருக்கிறோம். அவள் சொன்னது எல்லாவற்றுக்கும் ஒரு சிறு தலையசைப்பு மட்டுமே பதிலாக கிடைத்தது.

ஏற்கனவே நடந்ததை விஷாலி மூலம் தெளிவாக தெரிந்திருக்க குருவின் மேல்,அவனின் தாயார் மேல் பத்ராவிற்கு இன்னும் மரியாதை அதிகரித்து இருந்தது. இவர்கள் இருவரும் சாப்பிட்டு முடியும் வரைக்கும் கூட இருந்தவர்கள் புறப்பட்டனர்.

புறப்படும் போதே சுமித்ரா காலையில் வரேன். வீட்டுக்கு ஏதாவது வாங்கணும்னா பக்கத்தில் எங்க போய் வாங்கணும்ன்னு சொல்லி தரேன் என்றபடி கிளம்ப தங்களது அறைக்கு செல்லும் வரையிலுமே பேசாமல் வந்தான் கோகுல்

நீங்க ஏன் பேசாமல் வர்றிங்க.

அந்த பொண்ணு குரு கிட்ட ஒரு வார்த்தை கூட பேசலை பவி இத நீ கவனித்தாயா.

சரியாகிடும்ங்க. அவங்க ஒருத்தருக்கொருத்தர் பேசாட்டி கூட மூன்றாவது ஆள் முன்னாடி விட்டு தரலை அத கவனிச்சிங்களா

என்ன சொல்லற. புரியவில்லை.

ஆரத்தி எடுக்கும் போது உங்க ப்ரெண்டுகிட்ட பணம் இல்லை யோசிக்காமல் ஃபர்ச கொடுத்தது அந்த பொண்ணு இது ஒன்றை போதும் சீக்கிரமே புரிஞ்சிட்டு சேர்ந்து வாழ்வாங்க. உங்களோட ப்ரெண்டு வந்த நாளில் இருந்து அவரை பற்றி தான் பேசறிங்க நல்லவங்கல கடவுள் ரொம்ப நாள் சோதிக்கமாட்டாருங்க.

அவங்க அண்ணா இவனை விடவும் நல்லவங்க தெரியுமா. ஆனால் நடந்தது.

முடிஞ்சு போனத பேச கூடாதுங்க. இத மாதிரி யோசிக்காதிங்க. அவருக்கு விதிக்கபட்ட நாள் அவ்வளவு தான் போல இருக்கு தெரியாம உங்க ப்ரெண்டு முன்னாடி உளரினா கஷ்டம் கோகுலிடம் கூறியவள் வீட்டிற்குள் நுழையவும்

இதுக்குதான் என்கூடவே உன்னை இருக்க சொல்லறது. இதுமாதிரி அப்பப்போ நல்லது சொல்லித்தர ஆள் வேண்டியதா இருக்குல்ல

ஜாடையா ஊருக்கு போகாதேன்னு சொல்லறிங்கலா. வாய்பே இல்லை.
எப்படியும் மாதத்தில் பத்து நாள் ஊருக்கு போவேன். இப்ப தூங்க போகலாமா

என்ன சொன்னாலும் பதில் பேசிடு
சமாதான படுத்த கூட போக மாட்டேன்னு சொல்ல மாட்ட.

சொல்லலாம் ஆனால் சொன்னால் அதையே சொல்லி என்னை விட மாட்டிங்களே

அதே நேரம் தனது லேப்டாப்பை எடுத்து வந்து ஹாலில் இருந்த ஷோபாவில் அமர்ந்தபடி வந்திருந்த மெயிலை செக் செய்தவன் அப்படியே அங்கேயே படுத்து தூங்கியிருந்தான்.
அடுத்த நாள் காலையிலேயே பவித்ரா கோகுலோடு வந்திருந்தாள் ரெடிமேட் மாவை எடுத்து கொண்டு. சற்று நேரம் பேசியவள் அப்புறமா வரேன் சுமித்ரா என புறப்பட்டு இருந்தாள். இவனும் எட்டு மணியை தொடும் போது ஆபீஸ் புறப்பட்டு இருந்தான்.

காலை எழுந்ததுமே சமைக்க தேவையானதை வாங்கி வந்தருந்தான். சுமித்ராவிடமும் பேச இவனுக்கு எதுவும் தடையாக இருக்கவில்லை. போன் நம்பரை அவளுக்கு தந்தவன் புறப்பட்டு இருந்தான். எதாவது அவசரம்னா கூப்பிடு என சொல்லி விட்டு.

இரண்டு பேருமே முக்கியமானவை மறந்து இருந்தனர். இவ்வளவு தூரம் யோசித்து திருமணம் முடித்தவர்கள் இவர்கள் சேர்ந்து வாழவும் அவர்களால் ஆன முயற்சியை செய்வார்கள் என்பதை .

திலகவதி முதலாவதாக அடுத்த நாளே மல்லிகா தம்பதியினரை முதலில் அனுப்பி வைத்திருந்தார். சுமித்ராவின் உடைகளை எடுத்து செல்லும் படி.

குரு மாலை ஆறுமணிக்கு வேகமாக வீட்டிற்கு வந்தவன் சுமித்ரா இன்னும் கொஞ்ச நேரத்தில் அம்மா அப்பா வராங்க என சொன்னது தான் தாமதம். யாரிடமும் தனது கோபத்தை காட்ட முடியாமல் இரண்டு நாட்களாக பேசாமல் இருந்தவளுக்கு சொன்னவன் மேல் மொத்த கோபமும் திரும்பி இருந்தது.

சற்றும் யோசிக்காமல் சட்டையை கொத்தாக பற்றி இருந்தாள். என்ன பார்த்தா உங்க எல்லோருக்கும் எப்படி தெரியுது. உணர்ச்சியே இல்லாத ஜடம்னா இல்லை உங்க கையில் இருக்கற பொம்மையா நான் . ராம் இல்லாட்டி குரு நீ வச்சிக்கோன்னு மாத்தி தர்றதுக்கு. எப்படி இப்படி நடந்துக்க முடியுது. என்ன பண்ணனாலும் தலையாட்டுவேன்னு நினைச்சிங்களா.

சுமித்ரா இப்படி பேசாத. நீ உன் மேல அன்பா இருக்கறவங்க மேல இப்படி பழி போடாத. அவங்க உனக்கு நல்லதுன்னு தோனினதை பண்ணி இருக்கறாங்க.

எது நல்லது. நான் கேட்டேனா. என்னை அப்படியே விட வேண்டியது தானே கடைசியில் அழுது என்ன அவங்க முடிவுக்கு தலையாட்ட வச்சிட்டாங்கல்ல.

என்ன சொல்ல வர்ற. அப்படியே விட்டுடணும்னா. புரியவில்லை கல்யாணம் முடிஞ்சதும் கணவர் இறந்திட்டா அவனோட ஞாபகமாகவே வாழணும்னா. இல்லை ஐநூறு ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடி இருந்ததே அதே மாதிரி அவனோட கூடவே நீயும் உயிரை விட்டுடணும் அப்படியா. சுமித்ரா தேம்பி அழுதுகொண்டே இருக்க. சுமித்ரா காலம் மாறிடுச்சு. இங்கே ஊர்ல, உலகத்தில் நடகாகாத எதுவும் புதுசா இங்கே நடக்கலை. ஊரு பக்கம் தங்களோட வாரிசுக்காக கூட இத மாதிரி திருமணம் நடந்து இருக்கு. சில இடங்களில் சொத்து வெளிய போக கூடாது இத மாதிரி நிறைய

என்னோட அம்மா எங்க ரெண்டு பேரையும் முற்போக்கு சிந்தனையோட தான் வளர்த்து இருக்கறாங்க. ஏன் ஒரு வேளை உனக்கு இத மாதிரி ஆகி இருந்து உனக்கு ஒரு தங்கை இருந்தா நல்ல பையன்ன்னு அண்ணாவுக்கு தந்து இருப்பாங்க தானே. அத மாதிரி நீ நல்ல பொண்ணு அப்படி கூட இந்த மாதிரி முடிவு எடுத்து இருக்கலாம்.

என்ன பொறுத்தவரைக்கும் என்னோட பிறப்பு எப்படி நான் முடிவு பண்ணலையோ அது போல என்னோட திருமணமும் அம்மா, அப்பா முடிவு தான் அப்படி தான் முடிவு செஞ்சிருந்தேன் நீ இல்லை வேற எந்த பெண்ணா இருந்தாலும் சரி ஏன் ஒரு குழந்தையோட அம்மாவாக இருந்தா கூட இந்த பெண் தான் உன்னோட மனைவின்னு சொல்லி இருந்தா மறுத்து பேசி இருக்க மாட்டேன். நமக்கு சட்ட படி திருமணம் முடிஞ்சிடுச்சு அத மாற்ற நினைக்காத. வாழ பழகிக்கோ. ஒரே நாளில் எதுவும் மாறவேண்டாம் இன்னும் நிறைய நாள் இருக்கு. வேண்டும் மட்டும் டைம் எடுத்துக்கோ ஒரு நாள் நீயோ இல்லை நானோ ஒருத்தருக்கு ஒருத்தர் இல்லாம வாழ முடியாது அப்படிங்கற நிலைமை வரும் அப்போது நாம சேர்ந்து வாழலாம் அது வரைக்கும் நடக்கறத இயல்பா எடுத்துக்கோ

இன்னுமே பற்றி இருந்த சட்டையை விடவில்லை சுமித்ரா நடந்தது எல்லாமே கனவு போல இருந்தது ஏற்றுக்கொல்ல மட்டும் மனம் தயாராக இல்லை இனிமேல் இங்கு தான் இவனோடு தங்க வேண்டுமா அதையும் அவளால் யோசிக்க முடியவில்லை.

ராமுடன் நடந்த திருமணத்தை இந்த நிமிடம் வரை அவளால் மறக்க முடியவில்லை. அதற்கு முன்பே இது தான் சரி என்பது போல குருவுடன் வேகவேகமாக திருமணத்தை நடத்தி முடித்து இவனோடு அனுப்பியும் வைத்து இருந்தனர்.

அவ்வளவு நேரம் அவளுக்கு புரிவது போல பேசியவன் அவளது சட்டையை பற்றி இருந்த கையை மெதுவாக பிரித்து விட்டான். அப்புறம் வர்றது உன்னோட அம்மா அப்பா அவங்க உனக்காக வாழறவங்க என்கிட்ட பேசினது மாதிரி தயவு செஞ்சு அவங்க கிட்ட பேசாத. இன்னும் கொஞ்ச நேரத்தில் இங்கே வந்திடுவாங்க. இயல்பா இரு. நிறைய பேசாட்டி கூட பரவாயில்லை
முகத்தை திருப்பாத .

அவன் பேசியதை கேட்டுக்கொண்டு இருந்தவள் அமைதியாக பெட் ரூமிற்கு சென்று கதவடைக்க. பேசியபிறகு தான் குருவிற்கு தெரிந்தது தனது நிலை. கைகளை விரித்து பார்க்க உண்மையிலேயே கை நடுங்கிக் கொண்டு இருந்தது.

இது வரை இவனை இப்படி சட்டையை பிடித்து கேட்பது எல்லாம் இவனது வாழ்வில் நடந்திராதது. கல்லூரியில் படிக்கும் போது கூட ஒரு பார்வையில் பெண்களை நகர்த்தி நிறுத்தினான் தான் ஆனால் இது போன்று இது வரை நடந்தது இல்லை.
சுமித்ரா அவனிடம் அப்படி ஒரு அதிர்வலையை ஏற்படுத்தி சென்றிருந்தாள்.

இசைக்கும் அன்பின் ராகம்.

(குரு பயந்திட்டான்)
 

Kavisowmi

Well-known member
அன்பின் ராகம்_24
அவள் நகர்ந்து சென்று கதவடைக்கவும் பூட்டிய கதவை பார்த்துக்கொண்டே சமையல் அறையை பார்க்க சமைத்ததிற்கான எந்த அடையாளமோ மதியம் இவள் சாப்பிட்டத்திற்கான அடையாளமோ அங்கு இல்லை சுமித்ராவிடம் என்ன கேட்பது? என்ன பேசுவது எதுவுமே தோண்றாமல் நின்றவனை யோசிக்க விடாமல் போன் அழைத்திருந்தது. அழைத்தது சுமித்ராவின் தந்தை இங்கே வந்தாச்சுபா கால்டாக்சி பிடிச்சிட்டோம் இன்னும் பத்து நிமிடத்தில் அங்கே வந்திடுவோம்.
போன் வரவுமே கதவை லேசாக தட்டியவன் அப்பா அம்மா வந்தாச்சு அவர்களை அழைச்சிட்டு வந்துடறேன் என கூறி இறங்கி சென்றிருந்தான். பத்து நிமிடம் இடைவெளியில் இவனோடு கூடவே இருவரும் நலம் விசாரித்தபடி வந்திருந்தனர்.
வந்ததுமே சுமித்ராவை அழைத்தவன் பேசிட்டு இரு வந்திடறேன் என வந்தவர்களுக்கு பேச தனிமை தந்து நகர்ந்து சென்றிருந்தான். இரவு உணவை அருகில் உள்ள கடையில் வாங்கி வரும் போது எட்டு மணியை தாண்டி இருந்தது.
வீட்டிற்குள் நுழையும் போது பார்த்தது மல்லிகாவின் மடியில் தலைவைத்து படுத்திருந்த சுமித்ராவை தான் இவன் வரவும் எழுந்து அமர வாங்கி வந்ததை சுமித்ராவின் கையில் தந்தவன் சாப்பிட ஏதுவாக பரிமாற தட்டை எடுத்து வரவும்.
மல்லிகா தான் வேகமாக இருக்கட்டும் மாப்பிள்ளை நான் எடுத்துவிட்டு வரேன் வாங்கி வந்தார்.
நால்வருமே உணவு உண்டு முடிக்கவும் குரு தனது லேப்டாப் எடுத்து வந்தவன் சிறிது நேரம் வேலை பார்த்தபடி சுமித்ராவின் தாயாரிடம் அத்தை நீங்க சுமித்ரா கூட ரூம்ல தூங்குங்க நானும் மாமாவும் இங்கே ஹாலில் தூங்கிக்கறோம் என்று சொல்லும் போதே மறுத்து கூறியிருந்தார்.
இல்லை மாப்பிள்ளை இங்கே படுத்துக்கறோம் என சொல்லும் போது இவனாலும் எதுவும் கூற முடியவில்லை. சரி என்பது போல தலையாட்டியவன் அவர்களுக்கு தேவையான
பாய்,தலையனை,பெட்ஷிட் எடுத்து தந்து விட்டு தங்களது அறைக்குள் நுழைந்தான்.
இவனை பார்த்ததுமே எழுந்து அமர்ந்தவளை பார்த்து ஸாரி சுமித்ரா இங்கே தான் நான் தூங்கி ஆகணும் வேற வழி இல்லை எப்படியும் பத்து நாள் கழித்து இத மாதிரி ஒரு சூழ்நிலை வரும்ன்னு நினைச்சேன். இங்கே வந்து அடுத்த நாளே இதுமாதிரி ஆகிடுச்சு. ஒரு ஓரமாக தூங்கிக்கறேன் என்றவன் தலையனை ஒன்றை எடுத்து நடுவில் வைத்தவன் கட்டிலில் திரும்பி படுத்திருந்தான்.
ரூம் சிறியது கட்டில், பிரோ ,டேபிள் தாண்டி ஒருவர் மட்டுமே நடக்க இடம் இருந்தது. நான் கீழே தூங்கறேன் என்றோ நீ கீழே தூங்கு என சொல்லவோ வழியில்லை. திகைத்தபடி அவனின் முதுகை பார்த்து அமர்ந்திருக்க.
படுத்துக்கோ சுமித்ரா. கண்களை மூடியபடி இன்னும் ஒரு மாதம் டைம் குடு சுமித்ரா இன்னோரு பெட்ரூம் இருக்கறமாதிரி கொஞ்சம் பெரிய வீடா பார்க்கலாம் என்றவன். கல்யாணம் பண்ணி வச்சவங்க அப்படியே விட்டுடுவாங்கன்னு நினைச்சேன் அடுத்த நாளே வருவாங்கன்னு நினைக்கலை இப்போதைக்கு வேற வழி இல்லை தூங்கு காலையில் எனக்கு ஆபீஸ் இருக்கு என்றபடி இரவு விளக்கை ஒளிர விட்டு படுத்திருந்தான்.
இன்னோரு தலையனையை எடுத்து நடுவில் வைத்தவளுக்கு தூக்கம் சுத்தமாக தொலைந்து இருந்தது. படுததவள் புரண்டு கொண்டே இருக்க
இரண்டு மணி நேரம் கழித்து குரல் கொடுத்தான். புரண்டுட்டே இருக்காத எனக்கு தூக்கம் வராது.
அவன் சொன்னதுமே மொத்தமாக அசையாது படுத்திருந்தாள் நேரம் மட்டும் நகர்ந்து கொண்டு இருந்தது.
ரூம்பில் மாட்டி இருந்த கடிகாரத்தின் ஓசை மட்டும் டிக் டிக் என சத்தமிட்டு நகர்ந்து கொண்டு இருந்தது.
ஒரு மணியை தொடும் போது குரு தூக்கத்தில் தெளிவாக கொஞ்சம் சத்தமாக உளர ஆரம்பித்தான். டேய் அடிக்காத டா. விடு என்றபடி சுருண்டு படுக்க. மொத்தமாக எழுந்து அமர்ந்திருந்தாள். கனவில் யாரோடு விளையாடுகிறான் என்பது தெளிவாக தெரிய அப்போது தான் தெரிந்தது அவனின் இழப்பும் எவ்வளவு பெரியது என்று இன்னமும் கூட கனவில் தான் லயித்திருந்தான் குரு.
எழுந்தவளின் கண்களில் கண்ணீர் வழிய அமர்ந்திருக்க அடுத்த நொடியில் குருவும் எழுந்து அமர்ந்து இருந்தான். என்ன ஆச்சு என்றபடி.
நீ உளர்ற என்றா சொல்ல முடியும். தண்ணீர் வேணும் என்று சுமித்ரா கேட்கவும். அருகில் இருந்த பாட்டிலில் பார்த்தவன் தண்ணீர் காலி இரு எடுத்துவிட்டு வரேன் என எழுந்து சென்றான்.
கதவை திறந்து ஹாலிற்குல் வர சுமித்ராவின் தாய் தந்தை இருவருமே தூங்கவில்லை. விழித்தபடி அமர்ந்து இருந்தனர்.
என்ன மாமா இன்னும் தூங்கலையா.
இல்லை மாப்பிள்ளை புது இடம் இல்லையா தூக்கம் வரமாட்டேங்குது என்ன மாப்பிள்ளை வேணும்
சுமித்ரா தண்ணீர் கேட்டா ரூம்ல தண்ணீர் இல்லை அது தான் எடுத்துவிட்டு போக வந்தேன் சாதாரணமாக சொல்லியபடி சமையல் அறைக்குள் நுழைந்து தண்ணீர் எடுத்து வர. அவன் சொன்னது அந்த நிமிடம் அவர்களுக்கு அவ்வளவு நிம்மதியை தந்தது. எல்லாம் சரியாகிவிடும் என்று நினைத்தபடி தூங்க ஆரம்பித்தனர். காலை ஆறு மணிக்கே சுமித்ரா விழித்தவள் எழுந்து கதவை திறந்து வர அந்நேரத்திற்கே மல்லிகா எழுந்து சமைத்து கொண்டு இருந்தார். இவளை பார்க்கவும் வா சுமி என அழைத்தவர் காபியை எடுத்து இவளது கைகளில் தர. வாங்கியபடி
அம்மா எப்போது எழுந்திங்க
இங்கே குளிர்மா சரியாக தூக்கம் இல்லை. நேரத்தோட எழுந்தாச்சு மாப்பிள்ளை இன்னும் எழுந்திருக்கலையா இந்தா இந்த காபியை கொடுத்துவிட்டு வா என்றபடி தர கைகளில் வாங்கியபடி அறைக்குள் செல்ல அங்கே துணிகளை உலர்த்த சிட் அவுட் போல சிறியதாக கட்டியிருந்த பகுதியில் போன் பேசியபடி நின்றிருந்தான். இவள் எழுந்த நொடியிலேயே அந்த அசைவில் எழுந்தவன் போன் வரவும் பேசியபடி இங்கு நின்றிருந்தான். இவள் உள் நுழையவும் இரு வருகிறேன் என்பது போல கை காட்டியபடி வந்தவன் இவளிடம் வாங்கி விட்டு மறுபடியும் அதே இடத்திற்கு நகர்ந்தான்.
சுமித்ராவிற்கும் நேற்றைய அவனது உளரல் கேட்டபிறகு அவன் மேலும் சற்றே பரிதாபம் தோன்றி இருந்தது. தான் கூட தனது கோபத்தை ஏதாவது ஒரு நேரம் யாரிடமாவது காட்டி விட இந்த நிமிடம் வரை தன்னுடைய இழப்பையோ, தன்னுடைய மனநிலையையோ யாரிடமும் கூறினான் இல்லை. மனதில் அடி ஆழத்தில் இருந்த நிகழ்வு தானே கனவாக வரும் இன்று வரை ராமின் நினைவில் அழுகிறாலே தவிர ராமின் முகம் ஒரு நாள் கூட கனவில் வந்தது இல்லை. இதை யோசித்தபடியே தன் தாயாரிடம் செல்ல.
இங்கே குரு பேசிக்கொண்டு இருந்தது விஷாலியிடம் எழுந்ததுமே முதல் அழைப்பு அவளுடையதாக இருக்க. நடந்ததை கூட ஒரு வரியில் தான் சொல்லி இருந்தான். இவன் தேறும் வரை சற்றே தனிமை தந்தவள் இருவரும் பெங்களூர் வந்தது தெரிந்ததும் இன்று அழைத்து இருந்தாள்.
குரு எனக்கு உன்னோட கல்யாண போட்டோ பார்க்கணும் அனுப்பி வை என கேட்க. நடந்த கலவரத்தில் போட்டோ எதுவுமே இருவரும் இணைந்து எடுத்து கொள்ள வில்லை.
விஷாலி காலையில் என்ன இது? உண்மையை சொல்லவா போட்டோ எதுவுமே இது வரைக்கும் எடுக்கலை.
குரு எப்படி அங்கே ரெஜிஸ்டர் ஆபீஸ்ல கூடவா எடுக்கலை
இல்லை இப்ப எதுக்காக கேட்கற?
கல்யாண போட்டோ வேண்டாம். அதுக்கறம் ஏதாவது எடுத்து இருப்பல்ல
இல்லை விஷாலி. நீ எப்படி இருக்கற. மேரேஜ் எப்போ பிக்ஸ் பண்ணி இருக்கறாங்க.
இன்னும் நாலு மாதம் டைம் இருக்கு குரு அதுக்குல்ல பாஸ்போர்ட், விஸா எல்லாம் எடுக்க டைம் வேண்டுமாம்
ரொம்ப கவலை படற மாதிரி இருக்கு ஒருமாதத்தில் இதெல்லாம் ரெடி பண்ணி தர ஆள் இருக்கு நான் வேணும்னா சொல்லவா.
டேய் நானே எல்லோரையும் விட்டுட்டு அவ்வளவு தூரம் போகணுமான்னு கவலையோடு இருக்கிறேன் நீ வேற
ஏய் அன்றைக்கு தானே மேல படிக்க வைக்கறேன்னு சொல்லறாங்க எனக்கு ஒகேன்னு சொன்ன இப்ப என்னாச்சு?
"உக்களை எல்லோரையும் வாழ்த்துக்கள் விட்டுட்டு போகணுமே கவலையா இருக்குதுடா” நீ பேச்சை மாற்றாத உன்னோட போட்டோ அனுப்பு. இப்போ இந்த நிமிஷம் ஒரு செல்பி எடுத்து அனுப்பு
எதுக்கு?
எதுக்கோ உனக்கு எதுக்கு முதலில் அனுப்பு
சரி அனுப்பி வைக்கிறேன் போனை வைக்கவா அதே இடத்தில் நின்றபடி போட்டோ எடுத்தவன் இவளுக்கு வாட்ஸ்சப்பில் அனுப்பி வைத்தபடி குளிக்க புறப்பட்டான்.
போட்டோ பார்த்த அடுத்த நொடி பவித்ராவை அழைத்து இருந்தாள் பவி அண்ணி கோகுல் என்ன செய்யறான்.
தூங்கறாங்க வைஷூ இனி தான் எழுப்பணும்.
தலையில தண்ணீர் ஊற்றி எழுப்பிட்டு போனை கையில் கொடு.
என்னாச்சு? காலையில் இவ்வளவு கோபம்
குடுங்க அண்ணி சொல்லறேன் கோகுலை தட்டி எழுப்பியவள் போனை அவனது கையில் தந்து விட்டு பேசும்படி கூறியவள் சமையல் அறைக்குள் செல்ல இங்கே விஷாலி கோகுலை விடாது திட்டிக் கொண்டு இருந்தாள். நீ குருவோட ப்ரெண்ட் தானே அவனுக்கு பிரச்சினைன்னா நீ அப்படியே விட்டுடுவியா.
ஏய் விஷாலி எதுக்காக திட்டற சொல்லிட்டு திட்டு எனக்கு புரியவில்லை ஏன் திட்டறன்னே
கல்யாணம் ஆகி ரெண்டு பேரும் ஒரு போட்டோ கூட எடுக்கலையாம் நீ என்ன செய்யற
நான் என்ன செய்யணும் அவன் நேற்று தான் வந்து இருக்கிறான். வந்ததுமே போய் பார்த்தோம் இதோ இன்றைக்கு அந்த பொண்ணோட அம்மா வந்து இருக்கிறதா சொன்னான் அதனால இன்றைக்கு போகலை பவிய அப்புறம் போய் பார்த்துவிட்டு வான்னு சொல்லி இருக்கிறேன்.
எல்லாம் சரி தான் நான் உனக்கு அனுப்பி இருக்கற போட்டோ பாரு
இரு என்றபடி பார்க்க. மூன்று நான்கு புகைப்படம் எல்லாமே குருவுடையது.
குருவோட போட்டோ நல்லா இருக்கு .
கோகுல் எங்க நல்லா இருக்கு கடைசி போட்டோவை பார்த்தியா அவனோட முகத்தில் தெரியறது என்ன? முன்னாடி இருக்கற போட்டோ எல்லாத்திலேயும் முகம் எப்படி இருக்கு கடைசி போட்டோவில் எப்படி இருக்கு எவ்வளவு யோசனையோட, வருத்தமா,கவலையா அவனோட முகம் அப்படி தான் இருக்குமா உனக்கு தெரியாது
தீ விபத்தில் மாட்டினப்போ கூட அவனோட முகம் அவ்வளவு கவலையா இல்லை. நான் நேரில் அவனை பார்த்து இருக்கிறேன்.
காலையிலேயே ஏன் இவ்வளவு பேசற நேற்று பவித்ரா கூட சொன்னா சீக்கிரம் சரியாகிடும்ன்னு கோகுல் சொல்லவும்
இங்கே வந்தாச்சு அப்படிங்கவும் ரொம்ப ஹேப்பியா போன் பண்ணினேன். ஆனால் இரண்டு பேரும் சேர்ந்து ஒரு போட்டோ கூட எடுக்கலைங்கவும் கஷ்டமா இருக்கு.
ஏன் விஷாலி குரு ஏதாவது சொன்னானா?
அதெப்படி சொல்லுவான். அவனோட பிரச்சினையை என்றைக்கு சொல்லி இருக்கிறான். நீ தானே சொன்னே எனக்கு பார்த்து இருக்கற மாப்பிள்ளையை பற்றி அவனும் விசாரிச்சான் அவனுக்கும் பரம திருப்தின்னு எனக்காக யோசிக்கற அவனுக்காக நானும் கொஞ்சம் யோசிக்கணும்ல
சரிடா என்ன பண்ணலாம் அதையும் சொல்லிடு . நன்றாக தூக்கம் கலைந்து இருந்தது கோகுலுக்கு.
எனக்கு தெரியலை நீ ஏதாவது செய்டா என்னவோ நல்லா இருக்கும் போது பேசிட்டு அவனுக்கு பிரச்சினைன்னு தெரியும் போது பேசாமல் இருக்கிறது கஷ்டமா இருக்கு. உன்ன மாதிரி ஓபனா சில விஷயங்களை அவன்கிட்ட பேச முடியாது என்ன தான் ப்ரெண்டா இருந்தாலும் சரி நீ பவி கிட்ட போனை கொடு.
தெய்வமே காவையிலேயே அவள் கிட்ட போனை கொடுத்தா நான் ஆபீஸ் கிளம்ப முடியாது அதனால நீ என்ன பண்ணற நான் கிளம்பினதும் பேசு இப்போ ஃபோனை வைக்கிறேன். புறப்பட்டு வெளியே வரும் போதே குருவை அழைத்தவன் வாடா கேப்ஸ் வர்ற டைம் ஆச்சு புறப்பட்டாச்சா என்றபடி கிளம்பி இருந்தான்.
வாசலை தாண்டும் போது அவனுக்கு புதியதாக ஒரு யோசனை தோன்றி இருந்தது. விஷாலி நீ கேட்ட மாதிரி சேர்த்து இருக்கற போட்டோ நாளைக்கு அனுப்பி வைக்கிறேன். நினைத்தவன் அதற்கான ஆயத்தத்தை போனில் சொல்லியபடி புறப்பட்டான்.
இசைக்கும் அன்பின் ராகம்.
 

Kavisowmi

Well-known member
அன்பின் ராகம்-25
மேலும் மூன்று நாட்கள் முடிந்த பிறகே சுமித்ராவின் பெற்றோர் கோவைக்கு புறப்பட்டு இருந்தனர். ஆனால் சுமித்ரா சரியாக பெற்றவர்கள் இடத்தில் நடந்து கொண்டாளா என கேட்டால் இந்த நிமிடம் வரை குருவிற்கு தெரியாது.
வந்த அன்று மடியில் படுத்து இருந்ததை பார்த்தவன் தான் அதன் பிறகு அவ்வளவு நெருக்கமாக தாயாரிடம் அவள் இருந்து பார்க்க வில்லை. இருந்த மூன்று நாட்களில் அவனுக்கு உதவியது என்ன என்றால் அவள் சரியான நேரத்திற்கு உணவு உண்டாலா என்பதை பற்றிய கவலை இல்லாமல் இருந்தது தான்.
புறப்படும் போது கண் கலங்கியபடி சுமித்ராவின் தாயார் இவனிடம் "அவள் சின்ன பொண்ணு கொஞ்சம் பிடிவாதம் ஜாஸ்தி கோபம் வந்தா எத செய்யாதன்னு சொல்லுவமோ அதை தான் செய்வா படபடன்னு பேசுவா மனதில் எதுவும் இருக்காது பார்த்துக்கோங்க மாப்பிளை" இவனிடம் சொன்னவர் இதே வார்த்தையை சுமித்ராவிடம் வேறு மாதிரி கூறியிருந்தார். பையன் நல்ல பையன் அவன் கூட அனுசரித்து போ சுமித்ரா என கூற சுமித்ராவோ வார்த்தைகளால் விளாசி இருந்தாள்.
"என்னோட விருப்பத்தை கேட்காமதானே முடிவு பண்ணினிங்க இது மேல எதுவும் கேட்காதிங்க என்ன நடந்தாலும் எதுவும் கேட்டு வரக்கூடாது நானும் அதே மாதிரி தான் எனக்கு சரின்னு தோணறதை தான் நான் செய்வேன்” இப்படி சொல்லவும் கொஞ்சம் அழுதபடி தான் புறப்பட்டார்.
குருவும் அவருக்கு தேவையான அளவிற்கு ஆறுதல் சொல்லி ஆனுப்பி இருந்தான். நான் பார்த்துக்கறேன் அத்தை அம்மா பார்த்து முடிவு பண்ணிய திருமணம் தோல்வி ஆக விட மாட்டேன் இந்த வார்த்தை நிறைய நிம்மதியை தந்தது அப்போதைக்கு அவர்களுக்கு. அவர்கள் இருவரையும் பஸ் ஏற்றி விட்டு வீட்டிற்கு திரும்பி இருந்தான்.
முதல் நாளே கூறியிருந்தான் அடுத்தடுத்து ரெண்டு பேர் வீட்டிலேயும் யாராவது வந்திட்டு தான் இருப்பாங்க ஒவ்வொரு தடவையும் இடத்தை மாற்ற முடியாது இங்கே பெட்ரூம்லயே தூங்க பழகிக்கோ என்ன கூறியிருக்க தலையை மட்டும் ஆட்டி சென்றிருந்தாள். இவனிடத்தில் பேச்சு வந்த நாளில் இருந்தே மிகவும் கம்மிதான். இவன் தான் ஏதாவது அவளிடம் கேட்டுக்கொண்டோ,பேசிக்கொண்டோ இருந்தான். அன்றைக்கு காலையில் எழுந்தவன் புறப்பட்டு தயாராக சமைக்கும் எண்ணம் எதுவுமே இல்லாமல் அமர்ந்து இருந்தாள். முந்தய நாள் பஸ் ஏற்றி விட்டுவிட்டு வந்தவன் இவளிடம் "அவ்வளவு சொல்லியும் அம்மாவை அழ வச்சி அணுப்பற", இந்த ஓரு வார்த்தை தான் கூறியிருந்தான் அதுவே அவளுக்கு அவ்வளவு கோபம் அவன் மீது நான் எப்பவும் போல தானே பேசினேன் இவங்க அழுதா இவன் என்னிடம் கேள்வி கேட்பானா? இப்படி நினைத்து அமர்ந்திருக்க.
இவனும் எதுவும் சொல்லாமல் உணவை ஆர்டர் செய்து விட்டு உணவு வரவும் புறப்பட்டு இருந்தான். ரெண்டு வேளைக்கும் இதையே சாப்பிடு நைட்டுக்கு ஏதாவது பார்த்துக்கலாம் என்றபடி புறப்பட.
முதல் முதலாக வாய் திறந்தாள் சுமித்ரா நீங்க சாப்பிடலையா?
பசிக்குது ஆனா டைம் ஆச்சு கேப்ஸ் விட்டா சரி வராது இப்ப கோகுல் வந்திடுவான் நான் கேண்டீன் போய் பார்த்துக்கறேன் என்றபடி நகர்ந்தவன் திரும்ப வந்து தேங்க்ஸ் சாப்பிடலையான்னு கேட்டதிற்கு. கோபம் இருந்தா அத சாப்பாட்டில் காட்டாத அது கிடைக்காமல் நிறைய பேர் இருக்கறாங்க முடிஞ்சமட்டும் வேஸ்ட் பண்ணாத என்றபடி இறங்கி இருந்தான்.
அங்கு ஆபீஸில் அழகான மலர் கொத்து ஓன்று டேபிலில் இருக்க அருகில் இருந்த கோகுலை பார்த்தவன் "டேய் எதுக்குடா என்னோட டேபிள்ல வச்சி இருக்கறாங்க யாரு வச்சது".
மறுபடியும் ஆரம்பிச்சுட்டாங்க இரு விசாரிச்சிட்டு வரேன் என்றவன் எழுந்து நகர இவன் இவனது கம்ப்யூட்டரில் வேலையை தொடர்ந்தான். பத்து நிமிடம் கழித்து வந்தவன் அந்த அறையில் இருந்த இருபத்திற்கும் மேற்பட்டவர்களை பார்த்து ப்ரெண்ட்ஸ் குருவோட பெஸ்ட் ப்ரெண்ட் நான் என்கிட்ட கேட்டு இருக்கலாம் பரவாயில்லை நானே சொல்லிடறேன். குருவிற்கு ஏற்கனவே திருமணம் ஆகிடுச்சு இங்கே யாரோ அவன் மேல ஆர்வமாக இருக்கிறது தெரியுது ஆனாலும் வேண்டாமே.
"ஓ. நோ" ஒரே கோரஸ்ஸாக சத்தமிட
குருவிற்கு கூட சிரிப்பு வந்திருந்தது. இப்போதும் கோகுல் தான் பேசிக்கொண்டு இருந்தான். ஸாரி ப்ரெண்ட்ஸ். கலாய்க்கறிங்கன்னு தெரியுது என்ன செய்ய
அப்போ எங்களுக்கு டிரிட் கிடையாதா
இவ்வளவு தானா வாங்களேன் கேண்டீன் போகலாம். வேண்டாமா ஏதாவது ரெஸ்ட்டாரண்ட் கோகுல் பேசிக்கொண்டு இருக்க குரு சுவாரஸ்யமான கவனித்து கொண்டு இருந்தான்.
கோகுல் ஸார் உங்க மேரேஜ்க்கு டிரிட் கொடுத்ததை மாதிரி கொடுக்கணும்.
குழுவில் ஒரு பெண் சத்தமாக சொல்ல
ஒகே இன்றைக்கு ஆபீஸ் முடியவும் அப்படியே வீட்டுக்கு வாங்க. இப்போது வேலையை பார்க்கலாம் என்றபடி தனது இருக்கையில் அமர
டேய் என்ன இது? "இவங்களுக்கு சாப்பிட ஏதாவது அரேன்ஜ் பண்ணனும்ல்ல அவ்வளவு தூரம் வந்துவிட்டு சும்மாவா அனும்ப முடியும்”
அவங்களே லிஸ்ட் போட்டு தருவாங்க நான் பார்த்துக்கறேன் நீ சுமித்ராகிட்ட மட்டும் கூப்பிட்டு சொல்லிடு நான் பவியையும் அங்கே வந்துவிட சொல்லறேன். மாலை ஐந்து மணிக்கு எல்லோரும் புறப்பட்டு இருந்தனர் குருவின் வீட்டை நோக்கி.
குருவிற்கு தான் பதட்டமாக இருந்தது அங்கே அவள் எப்படி நடந்து கொள்வாள் என சுமித்ராவிடம் ஃபோனில் அழைத்து சொல்லியிருந்தான். சுமித்ரா ஆபீஸ்ல எல்லோரும் வீட்டுக்கு வராங்க. நல்லதா ஏதாவது ஒரு சுடிதாரை போட்டு ரெடியாக இரு என இங்கே வந்த நாளில் இருந்தே இரவு அணியும் பேன்ட் அதற்கு உண்டான டீசர்ட் இதுதான் அவளது உடை சுடிதாரில் அவளை பார்த்தது இல்லை. குளித்தேன் என சொல்வது போல உடையின் நிறம் மட்டுமே மாறியதே தவிர உடையில் எந்த மாற்றமுமில்லை. இவனும் எதுவுமே கண்டு கொள்வது இல்லை. இன்றும் அது போல வந்து நின்றால் என்ன செய்வது அதுவும் மனதில் ஒரு ஓரத்தில் ஓடிக்கொண்டு இருந்தது.
அன்று மாலை புறப்படுவதற்கு சற்று முன்பு தான் அழைத்து பேசியிருந்தான். ஆபீஸ் நண்பர்கள் வருவதை சொன்னவன் அப்படியே திலகவதியையும் ,தந்தையையும் இங்கே வரும்படி அழைத்திருக்க இப்போதைக்கு அங்கே வரப்போவது இல்லை என கூறியிருந்தார். இன்னமும் பேசும் போதே அவரது குரலில் அழுகை எட்டி பார்க்க ம்மா அப்போ நான் அங்கே வரேன் என்றவனை தடுத்து இருந்தார். அந்த பொண்ணு இங்கே வந்தா இன்னும் அழுவா கொஞ்ச நாள் போகட்டும் நான் தேறிடுவேன் தினமுமே சுமியோட அம்மா இங்கே வராங்க என்னை தனியாக விடறது இல்லை உன்னோட அப்பாவும் தான் மதியம் இப்போது வீட்டுக்கு தான் வந்து சாப்பிடறாங்க முன்னாடி மாதிரி இல்லை. எனக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை. அந்த பொண்ண மட்டும் நல்லா பார்த்துக்கோ.
ம்மா நடந்ததை மாற்ற முடியாது எத்தனை நாள் என்னால இங்கே இருக்க முடியும் உங்களை பார்க்காமல் எனக்கு உங்க ஞாபகமாகவே இருக்குமா சாப்பிட்டிங்களா சரியா தூங்கறிங்களா எதுவும் தெரியாமல் இங்கே இருக்கிறது ரொம்ப கொடுமையாக இருக்கு. எனக்கே கோபம் வருது எதுக்காக உங்களை கூட பார்க்க விடாமல் இப்படி ஒரு கல்யாணம் அவசியமான்னு
அப்படி பேசாத குரு எல்லாம் சரியாகிடும், சரியாக்கிட்டு சீக்கிரம் அந்த பெண்ணோட என்னை பார்க்க வா இப்போ நீ கூப்பிட்டா கூட இங்கே வர யோசிப்பா?எனக்கென்ன இங்கே நான் தனியா இல்லையே. இங்கே அப்பா இருக்கறாங்க அங்கம் பக்கத்தில் அத்தனை பேரும் இருக்கறாங்க.
அப்புறம் ஏன்மா அழறிங்க
மறக்க முடியலைடா கூடவே இருப்பானா ஏன் இப்படி ஆச்சு இந்த நிமிஷம் வரைக்கும் யோசிக்கவே முடியவில்லை இந்நேரம் ஆனா வேலை முடிஞ்சு வந்திடுவான். நிறைய பேசுவான் அங்கே அவனோட ஆபீஸ்ல நடந்தது அப்புறம் உன்னை பற்றி நீ பேசின எதையாவது சொல்லி சிரிக்க வைப்பான். சீக்கிரமே போய் சேரற விதி இருந்ததால்தான் அவன் என்னை விட்டு எங்கேயும் நகர்ந்து போகாமல் இருந்தானோ ஏதேதோ சொல்லி அழுதவரை சமாதான படுத்த இவனிடம் வார்த்தை தான் சுத்தமாக இல்லை. ஏதேதோ யோசனையில் இருக்கும் போதே வீடு வந்து இருந்தது.
இவன் கூடவே அத்தனை பேரும் இவனோடு லிப்டில் பயணித்து இவனது அறை வாசலுக்கு வர கதவை தட்டி கதவை திறக்கவும் ஓ. என்ற கூச்சலோடு மொத்தமாக உள்நுழைந்தனர். ஏற்கனவே பவித்ரா முதலில் வந்திருக்க அழகான இளம்பச்சை சுடிதாரோடு இவளை லேசாக அலங்காரம் செய்து நிறுத்தி இருந்தாள். நீண்ட கூந்தலை புது விதமாக பின்னலிட்டு இருக்க புது மாதிரியான தோற்றத்தில் லேசாக உதட்டில் தோன்றிய சிரிப்போடு நின்றிருந்தாள்.
இவர்கள் இருவரையும் அருகருகே நிறுத்தி கழுத்தில் இரண்டு மாலைகளை போட வைத்து ஆளாளுக்கு வாங்கி வந்திருந்த பரிசுப்பொருட்களை இவர்களிடம் தந்து வாழ்த்து கூற அனைத்தையும் ஓரமாக நின்றபடி கோகுல் தனது மொபைலில் படமாக,விடியோவாக எடுத்து கொண்டு இருந்தான்.
வந்திருந்த பாதி பெண்கள் சுமித்ராவிடம் பேசியவர்கள் நீண்ட தலைமுடியை ஆசையாக தொட்டு பார்த்து ஓர்ஜினலா இல்லை சவுரியா என்பது போல இழுத்து பார்த்தது இன்னும் வேடிக்கையாக இருந்தது.
அனைவருமே அதிகபட்சம் சிறிதளவே தலைமுடி வைத்து இருந்தனர் அதை கூட சிலர் லேசாக செம்பலுப்பு நிறத்தில் கலர் செய்து இருந்தனர்.
சற்று நேரத்திற்கு எல்லாம் ஆர்டர் செய்த உணவு வந்திருக்க அனைவருக்கும் எடுத்து பறிமாற என நேரம் வேகமாக கரைந்து கொண்டு இருந்தது. ஏழு மணியை தாண்டும் போது ஒவ்வொருவராக புறப்பட ஆரம்பித்தனர். வந்தது என்னவோ இவர்களது டீம் மட்டும் தான் அதுவே வீடு நிறைய நிறைந்து இருந்தார்கள்.
அத்தனை பேரும் புறப்படவும் கடைசியாக கோகுல் பவித்ரா புறப்பட்டு போகும் போது பத்து மணியை நெருங்கி இருந்தது. அத்தனை பேர் புறப்பட்டயும் முதலில் குரு சுமித்ராவை பார்த்து கூறியது தேங்க்ஸ் என்ற வார்த்தையை தான்.
எதுக்கு என்பது போல ஒரு பார்வை அவ்வளவு தான் சுமித்ரா பார்த்தது.
கொஞ்சம் பயம் வர்றவங்க முன்னாடி எப்படி நடந்துக்குவங்கறத நினைத்து என் மேல் இருக்கற கோபத்தை வந்தவங்க முன்னாடி காட்டிட்டா. அங்கே ஆபீஸ்ல தினமும் பார்க்கணுமே அத நினைத்து.
உன் மேல கோபம் இருந்தா
அத உன்கிட்டேயே நேரடியாக காட்டிடுவேன் எப்பவும் மத்தவங்க முன்னாடி காட்ட மாட்டேன் எங்கம்மாவும் என்ன சரியாக தான் வளர்த்து இருக்கறாங்க. பயப்பட வேண்டாம். எப்பவும் யார் முன்னாடியும் உங்களை விட்டு தர மாட்டேன். சண்டை போட்டாலும் ரெண்டு பேருக்கு மட்டும் தான் தெரியும். சமாதானமும் நம்ம ரெண்டு பேருக்குல்ல மட்டும் தான் யாரையும் நடுவில் வரவிடமாட்டேன்.
அதுக்கும் சேர்ந்து தான் தேங்க்ஸ் அப்புறம் இந்த ஹேர்டைல் உன்னோட முகத்திற்கு அழகா இருக்கு அவன் சொன்னதுமே முகத்தில் இருந்த லேசான சிரிப்பு கூட மொத்தமாக வடிந்து இருந்தது.
எல்லாத்துக்கும் முகத்தை இப்படி வச்சுக்காத நல்லா தானே இருக்குன்னு சொன்னேன் கொஞ்சம் சிரிக்கலாம் சுமி. நாம இங்கே இப்போதைக்கு ரூம்மேட் இங்கே நிறைய பேர் வேலை செய்யறவங்க ஓரே ரூம்லதான் தங்கறாங்க நாம கொஞ்சம் விசித்ரம்
நாம்மலோடது வேற மாதிரி இருந்தாலும் என்ன கொஞ்சம் இயல்பா இருக்க பழகிக்கோ
இப்போது நன்றாக முறைக்க ஆரம்பிக்க குருவோ.
தப்பா எதுவும் சொல்லலையே ப்ரெண்டா நினைச்சிக்கோ. இது ஓகே தான
எனக்கு ஆண் நண்பர்கள் பிடிக்காது.
சுமித்ரா சொல்லவும்
அதுக்காக அண்ணான்னு சொல்ல முடியாதே ம். அவன் கேட்ட துவனியே லேசாக சிரிப்பு வர அதை மறைத்தபடி
திரும்பி நடக்கவும்
சிரிப்பு வந்தா சிரிச்சிடு கஷ்டப்பட்டு ஏன் அதை அடக்கற சொல்லியபடி யோசிக்காமல் அவளது நீள ஜடையை பிடித்து இழுத்து நிறுத்தியிருந்தான். ஜடையை இழுத்ததுமே மொத்த கோபமும் முகத்தில் தெரிய திரும்பி இவனை பார்த்ததிலேயே கையை ஜடையில் இருந்து எடுத்திருந்தான்.
ஸாரி. ஸாரி என்ற படி இவளை பார்க்க கண்கலங்க வேகமாக பெட்ரூம்பிற்குல் நுழைந்து கதவடைத்திருந்தாள். அத்தனை அழுகை சுமிக்கு முதல் முதலில் ராம் கையை பிடித்தது கூடவே ஸாரி கேட்டது ஞாபகம் வர எதைஎதையோ நினைத்து அழுது ஓய்ந்து நேரம் பார்க்க பதினோரு மணியை தாண்டி இருந்தது.
அறைக்குள் நுழைந்து கதவடைக்கவும் உண்மையில் குருவிற்கு ஒன்றுமே புரியவில்லை தலையை கோதிவிட்டவன் என்ன தப்பாச்சு நல்லா தானே பேசிட்டு இருந்தாள் என்பது போல யோசிக்க அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. ஹாலில் இருந்த ஷோபாவில் அமர்ந்தவன் மூடி இருந்த கதவை பார்ந்தபடி அமர்ந்து இருந்தான்.
தொடரும்.
 

Kavisowmi

Well-known member
அன்பின் ராகம்_26
அன்றைக்கு அழுதபடி கதவை அடைத்தவள் பதினோரு மணியை தாண்டிய போது கதவை திறந்து வந்து இவனை பார்க்க அமர்ந்த ஷோபாவில் தலைவைத்து தூங்கி இருந்தான். அவனது உயரத்திற்கு ஷோபா சிறியதாக தெரிய பாதி கால்கள் வெளியில் தொங்கியபடி ,கண்களில் அணிந்திருந்த கண்ணாடியை கலட்டாமல் படுத்திருக்க அப்போதே குளிர ஆரம்பித்து இருந்தது சுமித்ராவிற்கு
தட்டி எழுப்புவதா ?வேண்டாமா என்பது போல இரண்டு நிமிடம் நின்று பார்த்தவள் பெட் ரூம்பிற்குள் சென்று பெட்சீட் ஒன்றை எடுத்து வந்து போர்த்தி விட்டபடி அணிந்து இருந்த கண்ணாடியை கழட்டி கையில் எடுத்தாள் வைப்பதற்கு இடம் தேட எதுவும் தோன்றாமல் கைகளில் எடுத்து சென்றிருந்தாள்.
கட்டிலில் வழக்கம்போல தலையனையை நடுவில் வைத்து படுத்தவள் தூங்கி இருந்தாள் எழுந்தா உள்ளே வந்து தூங்கட்டும் என்பது போல
கதவை திறக்கும் போது விழிப்பு வந்து இருந்தது குருவிற்கு நின்றது பெட்ஷீட் போர்த்தியது கண்ணாடியை கழட்டியது அனைத்தையும் பார்த்தவனுக்கு ஏனோ கண் திறந்து குரல் கொடுக்கவோ,எழுந்து அமரவோ மனம் இல்லை. அப்படியே அசையாமல் படுத்து இருந்தான். நிறைய குழப்பம் அவனுக்குள்,
முதல் முதலாக சுமித்ராவிடம் எப்படி பேசுவது? என்பதே அவனுக்கு அப்போதைய கேள்விக்குறியாக இருந்தது. அடுத்த நாள் சற்று முன்னதாக எழுந்தவள் இவன் எழுவதற்கு முன்பே சமையல் வேலையை முடித்து இருந்தாள்.
குரு எழும் போதே நேரம் ஆகி இருக்க
வேகமாக கிளம்பி கொண்டு இருந்தான். சுமித்ரா சின்ன ஹெல்ப் என சத்தமிட இவன் குரல் கேட்டு வேகமாக வந்தவள் கடைசி நிமிடத்தில் இவன் மீது மோத இருந்து நகர்ந்து நின்றிருந்தாள்.
"ஏன் இவ்வளவு வேகம் நான் கொஞ்சம் பேசணும் அதுக்கு முன்னாடி என்னுடைய கண்ணாடியை எங்கேயோ வச்சிட்டேன் தேடிகொடேன்". இரவு தூங்குவதற்கு முன்பு எடுத்த தீர்மானம் சுமித்ரா பேசாமல் இருந்தால் கூட தான் எதையாவது பேச வேண்டும் என்பது.
உட்காருங்க வரேன் என்றவள் கையில் கண்ணாடி எடுத்து வந்து நீட்ட வாங்கி கொண்டவன் உனக்கு ஃபோர் அடிக்கலையா வீட்டில் இருக்க,நான் பக்கத்தில் இருக்கற கம்ப்யூட்டர் சென்ட்ரல் கேட்டுட்டு வர்றேன் நீ டேலி மாதிரி ஏதாவது கத்துக்கறையா?
எனக்கு டேலி தெரியும்.
மறுபடியும் பல்பா சுமி முதல்ல உனக்கு என்ன தெரியும் எது தெரியாதுன்னு முதலில் சொல்லு.
ஆபீஸ்க்கு போற ஐடியா இல்லையா,சுமித்ரா கேட்க
ஓகே இப்போது கிளம்பறேன் சாயங்காலம் வந்ததும் பேசலாம் என்றபடி புறப்பட எழவும் ஹாலிங்பெல் அடிக்கவும் சரியாக இருந்தது வேகமாக கதவை திறந்து பார்க்க கோகுல் வாசலில் நின்றிருந்தான்.
ஹேய் வாடா உள்ள வா குரு அழைக்கவும் இல்லை டைம் ஆச்சு. இன்றைக்கு பவிக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை சுமித்ரா சிஸ் கொஞ்சம் அவள் கூட போய் இருக்கறிங்களா.
அண்ணா என்ன கேள்வி இது இப்பவே புறப்படறேன்.
தேங்க்ஸ் மா போகலாம் டா.
என்ன ஆச்சு நேற்று நல்லா தானே இருந்தாங்க குரு கேட்டபடி நகர
காலையில் இருந்தே இன்றைக்கு வாமிட் இன்றைக்கு லீவும் எடுக்க முடியாது பவிதான் சுமியை வரச்சொல்லுங்கன்னு சொன்னா பேசியபடியே நகர இவளும் அப்போதே புறப்பட்டு இருந்தாள்.
ஆபீஸ் சென்று அமர்ந்த குருவிற்கு முகம் முழுக்க கொஞ்சம் வீங்கிய தோற்றத்தில் கண்கள் சிவக்க கதவை திறந்தவளின் தோற்றமே கண்களில் நிழலாடியது. என்ன பிடிக்கும் என்ன பிடிக்காது எதுவும் தெரியாமல் எப்படி அவளிடம் பேசுவது. ஏன்? எப்போது அழுவாள் எப்போது சிரிப்பாள் எதுவும் தெரியாமல் யாரிடம் இவளை பற்றி கேட்க ஒன்றும் புரியாமல் தவித்து இருக்க இவனது தடுமாற்றம் அப்படியே வேலையில் பிரதிபளித்தது.
கோகுல் இரண்டு முறை கவனித்தவன் இவனை அழைத்து கொண்டு கேண்டீன் வரை சென்று விட்டு மறுபடியும் அவனது இருக்கையில் அமர வைத்து இருந்தான்.
ஏன்டா? "என்ன ஆச்சு இத்தனை குழப்பம் வேலையில் இது வரைக்கும் உன்னை இப்படி பார்த்தது இல்லை”
ஒன்றும் இல்லைடா போ போய் வேலையை பாரு என்றவன் அதே கவனத்தில் வீடு வர அவளுக்கு பிடிச்சதுன்னு ஏதாவது இல்லாமலா இருக்கும் கண்டு பிடிக்கணும் என நினைத்து வீட்டிற்குள் வந்தவனுக்கு
அன்றே விடை கிடைத்தது அழகாய்.
மாலையில் வீடு வரவும் தனது லேப்டாப்பை எடுத்து அமர்ந்தவன் இவளை தேட இவள் கூட ஹாலின் ஒரு ஓரத்தில் அமர்ந்து பேப்பரில் எதையோ கிறுக்கி கொண்டு இருந்தாள்.
சுமித்ரா கோகுல் வீட்டுக்கு போனதானே பவித்ராவிற்கு இப்ப எப்படி இருக்கு பயபடறமாதிரி எதுவும் இல்லை தானே மெதுவாக பேச்சு கொடுத்தான்.
கையில் இருந்து பேப்பரை மடித்து வைத்தவள் அவங்க மாசமா இருக்கறாங்க எனக்கு தெரியவே இல்லை இன்றைக்கு அங்கே போகவும் தெரிஞ்சது அவங்களுக்கு இது ஐந்தாவது மாதமாம். வயிறே தெரியவில்லை எனக்கே ஆச்சர்யமா போச்சு. சிலருக்கு ஏழு மாதம் ஆன பிறகுதான் தெரியும்ன்னு சொல்லுவாங்க அது உண்மை தான்போல இருக்கு.
ஏன் உனக்கு அது மாதிரி ஆகும் போது எப்படி இருக்குமின்னு பார்க்கலாம் என சொல்ல வந்தவன் அப்படியே உனக்கு சற்று திகைப்போடு தன் எண்ணம் போவதை பார்த்தவனுக்கு கொஞ்சம் பயமாக இருந்தது மனதால எப்போதோ மனைவியாக நினைத்தவன் தான் ஆனால் இன்றைய சூழ்நிலை ஏற்கனவே அழுதுகொண்டு இருப்பவளிடம் இதை கூறினாள் நினைத்தபடி தனது தலையில் லேசாக தட்டியவன்

எனக்கு என்ன?
குரு என்ன உளறிட்டு இருக்கற என அவனுக்கு அவனே மனதிற்குள் திட்டிக்கொண்டவன். அவனுக்கே தெரியாமல் அவளிடம் முழு உரிமை தோன்றி இருந்தது. அது இங்கே வா எனக்கு சின்ன ஹெல்ப் பண்ணு. இந்த போட்டோஸ் பார்த்து நல்லதா செலக்ட் பண்ணி கொடு.
என்ன போட்டோ சுமித்ரா கேட்க
இது அமெரிக்காவில் நடக்க இருக்கற
போட்டிக்காக அனுப்ப வேண்டிய போட்டோ இன்னும் ரெண்டு நாள் தான் டைம் இருக்கு அதுக்குல்ல அணுப்பனும் பார்த்து நல்லதா செலக்ட் பண்ணனும்.
வாவ் இது நீங்க எடுத்ததா இந்த இடத்திற்கு எல்லாம் போய் இருக்கறிங்களா அழகாயிருக்கு. அதுவும் இந்த காடு இந்த போட்டோவுக்கு பக்கத்தில் தண்ணீரெல்லாம் போகுது
ஆர்வமாக ஒவ்வொன்றாக பார்த்து கேட்க,முதல் முதலில் அவளுக்கு பிடித்ததை கண்டு கொண்ட ஆனந்தம் குருவின் கண்களில்.
ஹேய் நல்லா இருக்கா உனக்கு இந்த மாதிரி இடம் பிடிக்குமா? எனக்கும் பிடிக்கும் போகலாமா ரெண்டு பேரும் என் பின்னாடி வருகிறாயா அந்த காட்டோட அமைதி குருவிகளோட சத்தம் கேட்கவே அவ்வளவு நல்லா இருக்கும். ஓகேன்னா சொல்லு நாம கிளம்பலாம் இப்போது இருக்கற ப்ரோக்ராம் பண்ணிட்டா ஒரு வாரம் மாதிரி லீவ் இருக்கும் ரெண்டு பேரும் போயிட்டு வரலாம் எனக்கு நிறைய இடம் தெரியும்.
ஓரே மாதிரியான ரசனை இருவருக்கும் இருக்க இயல்பாக பேச ஆரம்பித்து இருந்தாள். அவனுடைய போட்டோஸ் இருந்ததை எல்லாம் வரிசையாக காட்ட ஆர்வமாக பார்த்து கொண்டு இருந்தாள். அப்படியே அவள் தேர்வு செய்த போட்டோவை போட்டிக்காகவும் அனுப்பி இருந்தான்.
குரு. எட்டு மணியை தாண்டவும் இன்றைக்கு வெளியே போய் சாப்பிடலாமா? என கேட்க
"டிரெஸ்சேன்ஜ் பண்ணனும் வேண்டாம் இங்கே மாவு இருக்கு”
அதை எடுத்து ப்ரீஜ்ஜில் வை , இந்த டிரெஸ்ஸே போதும் மேல என்னுடைய ஜெர்கின் போட்டுக்கோ, இங்கே யாரும் பார்க்க மாட்டாங்க,. அவளையும் கிட்டத்தட்ட இழுத்து கொண்டு புறப்பட்டான்.
இரவு நேர பெங்களூர் நிறைய குளிர்ச்சியாக இருந்தது போட்டிருந்த ஜெர்கின் தாண்டி லேசாக குளிர் இருந்தது குருவிற்கு அது போல எதுவும் இல்லை போல முட்டி வரைக்கும் ஒரு ஷாட்ஸ் ஒரு டீசர்ட் அவ்வளவுதான் அதுவும் இவளிடம் பேசியபடி நடக்க, அந்நேரத்திற்கு கூட பரபரப்பாக இருந்தது ஃப்ரை ரைஸ் போல இருவருக்கும் வாங்கியவன் சாப்பிட்டு முடிக்கவும் அப்படியே அடுத்ததாக இருந்த பெரிய மாலிற்கு இவளை அழைத்து செல்ல, சுமியோ இங்கே எதுக்கு? என்னோட டிரஸ் நல்லா இல்லை.
சுமித்ரா பாதி பேர் இப்படி தான் இருக்கறாங்க வா,வா உனக்கு ஜீன்ஸ் பேண்ட் வாங்கலாம் நாம சுற்றி பார்க்க போனா தேவை இருக்கும்.
எப்பவோ போறதுக்கு இப்ப எடுக்கணுமா?
ஸாரி சொல்ல மறந்துட்டேன் கோகுல் வீக்என்ட் மைசூர்பேலஸ் போகலாம்ன்னு சொன்னான் நாம நாலு பேர் மட்டும் இன்றைக்கு கடைக்கு வரத்தான் சீக்கிரமே வந்தேன் பேசிட்டே அங்கே உட்கார்ந்துட்டோம், அப்படியே சுற்றி பார்க்க பின்னாடி போனாலும் மலை பக்கத்தில் ரொம்ப குளிரும் தானே, குளிர் தாங்கறமாதிரி எடுத்துக்கலாம் என கூறி அழைத்து செல்ல, இவன் அவளை அனுப்பி வைத்தது மாடர்ன் உடைகள் இருக்கும் பிரிவுக்கு எப்படியும் இரண்டு நிமிடத்திற்கு மேல் நிற்கமாட்டாள் உடனே வந்து விடுவாள் என எதிர்பார்த்திருக்க அடுத்த நொடியில் இவனிடம் வந்தவள்,அங்கே பேண்ட் கிளிஞ்சத விக்கறாங்க வேண்டாம் வீட்டுக்கு போகலாம் என கூறவும்,ஹா ஹா என பற்கள் பளிச்சிட சிரித்தவன்
சுமித்ரா இப்போது இதுதான் ஃபேஷன் வெளியே சொல்லிடாத கிளிஞ்ச பேண்ட்ன்னு எல்லோரும் சிரிப்பாங்க,உனக்கு தேவையானதை நான் எடுத்துட்டேன் சரியாக இருக்கான்னு பார்த்து சொல்லு என்றபடி கூற எடுத்ததை பெற்றுக் கொண்டு நடக்க ஆரம்பித்தனர்.
சுமித்ராவிற்கும் கொஞ்சம் ஆச்சர்யமாக இருந்தது நேற்று அவ்வளவு அழுது விட்டு இன்று இவனோடு எதுவும் நடக்காதது போல இங்கு இவனோடு சுற்றிக்கொண்டு இருப்பது, எப்படி இப்படி ஓரு மாற்றம் நடந்தது தனக்குள் யோசித்தபடியே அமைதியாக நடக்க
என்ன ஆச்சு பேசாமல் வர்ற ஏதாவது பேசிட்டு வா உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? இந்த அம்மா நல்ல பொண்ணு கட்டிக்கோன்னு சொன்னாங்க நல்ல பொண்ணுன்னா பேச மாட்டங்களா ஒரு வேளை அதுதான் அர்த்தம்னா!!!இது மட்டும் முதல்ல தெரிஞ்சு இருந்தா இந்த பொண்ணே வேண்டாம்ன்னு எகிறி குதிச்சு ஓடி இருப்பேன்.
நான் பேசமாட்டேன்னு உங்ககிட்ட சொன்னேனா?
"அப்படியா நல்லா பேசுவியா பார்க்கலாம் இப்படியாக அவளை பேசவைத்து கொண்டே வீடு வந்து சேர்ந்திருந்தான்”
அடுத்த நாள் அழகாக விடிந்தது. போகும் போது கேப்ஸ் புக் செய்து விட்டு வரும் போது பஸ்சில் வருவதாக ப்ளான் செய்து இருந்தனர். வாங்கி வந்திருந்த ஜீன்ஸை சுமித்ராவை போட வைத்து அதற்கு மேல் ஜெர்கீனை அணிந்து புறப்பட கோகுல் பவித்ரா கூட கிட்டத்தட்ட ஆளுக்கொரு ஜெர்கினை சுமந்த படி வந்திருந்தனர்.
கையில் இவனது கேமராவை சுமந்தபடி முதலில் உயிரியல் பூங்காவிற்கு சென்றனர். ஏக்கர் கணக்கில் பரந்து விரிந்து கிடந்த பூங்காவை நடந்தபடியே அவ்வப்போது அங்கங்கே நின்று போட்டோ எடுத்து கொண்டு சுற்றி பார்த்து புறப்படும் போது நான்கு மணி ஆகி இருக்க மறுபடியும் மைசூர்பேலஸில் இறங்கி சுற்றி பார்த்து அங்கிருந்த மியூசியம் பார்த்து, லேசாக இருட்டும் வேலையில் ஒளிரும் பேலஸை பார்த்து புறப்படும் போது இரவு ஏழு மணியை தொட்டு இருந்தது.
அருகில் இருந்த பஸ்ஸில் ஏற சுமித்ரா, பவித்ரா ஒரு இருக்கையில் அமர குரு,கோகுல் இரண்டு இருக்கை தாண்டி முன்னாள் அமர்ந்து இருந்தனர். இவர்களின் இருப்பிடம் செல்ல ஒரு மணிநேரம் ஆகும் என தெரியவும் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து குரு கண்களை மூடி இருந்தான் இறங்கும் இடம் வரவும் எழுப்பிவிடு என்றபடி
பவித்ரா நன்றாக சோர்ந்து இருந்தாள். மதியம் சற்று தாமதமாக சாப்பிட்ட உணவு வேறு தொண்டையில்
இருப்பது போல் தோன்ற கொஞ்சம் தலைவழியோடு, வாந்தி வரும் போல் தோன்றவும் சுமித்ராவை பார்த்தவள் சுமி ப்ளீஸ் கொஞ்சம் தலைவலிக்குது கோகுலை இங்கே வரச்சொல்லறையா
நீ குரு கிட்ட போய் உட்கார்ந்துக்கோ.
இரண்டு நாட்களுக்கு முன்பு வாந்தி எடுத்ததை பார்த்தவள் ஆதலால் எதுவும் சொல்லாமல் எழுந்து குருவை நோக்கி சென்றிருந்தாள்.
இவளை பார்க்கவும் கோகுல் எழுந்து வர குருவின் அருகில் வந்தவள் அவனை பார்க்க கிட்டத்தட்ட சீட்டின் முக்கால் பகுதியை அடைத்தபடி சாய்ந்து கண்மூடி அமர்ந்து இருந்தான்.
கோகுல் எழுந்ததை உணர்ந்தவன் ஆள் மாறி அருகில் சுமித்ரா வந்ததை உணரவில்லை கண்கள் மூடி இருக்க எப்படி இவனை நகர சொல்வது என இவள் யோசித்தபடி நிற்க குருவோ,
"டேய் பஸ் புறப்பட்டாச்சு இடத்தில் உட்காரு ஏன் நின்றுகொண்டே வர்ற என்றபடி கொஞ்சமும் யோசிக்காமல் கைக்கு கிடைத்த ஜெர்கினை பிடித்து இழுத்திருந்தான்”
கொஞ்சமும் பேலனஸ் இல்லாமல் மொத்தமாக பூ குவியலாக குருவின் மேல் விழுந்திருந்தாள் சுமித்ரா.
பின் இருக்கையில் பவித்ரா அருகில் அமர்ந்த கோகுல் இவர்களை பார்த்து சிரித்தபடி பவிக்குட்டி இதற்கு தான் ஆசைப்பட்டயா? என கேட்ட
"சூ "சிரிக்காம உட்காருங்கள் பக்கத்தில் உட்காரட்டும்ன்னு அனுப்பி வச்சா உங்க ப்ரெண்டுக்கு வேகம் ஜாஸ்தி, அங்கே திரும்ப கூடாது வந்த சிரிப்பை அடக்கியபடி இவளும் திரும்பி இருந்தாள்.
மேலே வந்து விழவும் வித்தியாசம் தெரிய வேகமாக அவளை நகர்த்தி அமர்த்தியவன் காட் ப்ராமிஸ்,கோகுல்ன்னு நினைத்து தெரியாம இழுத்துட்டேன். நீ பாட்டுக்கு அழுதிடாத நான் ஓரமாக போயிடறேன் என்றபடி நகர்ந்த வேகத்தை பார்த்தவளுக்கு கூட உதட்டில் அழகான புன்னகை தோன்றி இருந்தது. அவள் மனதிற்கு தெரியாமலேயே முதல் முதலாய் நல்ல நண்பனாக சுமியை நெருங்கி இருந்தான் குரு.
தொடரும்.
 

Kavisowmi

Well-known member
அன்பின் ராகம்-27
நாட்கள் வேகமாக நகர்ந்து கொண்டு இருந்தது. இன்றோடு இரண்டு மாதங்கள் முடிந்து இருந்தது சுமித்ரா பெங்களூரிற்கு வந்து, முதல் முதலாக மைசூர் பேலஸ் சுற்றி பார்க்க அழைத்து சென்றவன் வாரம் ஒரு நாள் அருகில் எங்காவது அழைத்து செல்வதை வழக்கமாக வைத்து இருந்தான்.

கூடவே அடுத்த சில நாட்களில் அருகில் இருந்த பிரபலமான கம்ப்யூட்டர் சென்டரில் இவளுக்கு அட்மிஷன் போட அழைத்து சென்றிருந்தான் பிடிவாதமாக "சுமித்ரா உனக்கு டேலி தெரியும்ன்னு சொன்னேல்ல அதனால அனிமேசன் கத்துக்கோ எப்பப்பாரு ஏதாவது வரைஞ்சிட்டு தானே இருக்கற அதை அங்கே செய் உனக்கும் பொழுது போகும்" புதிதுபுதிதாக கத்துகிட்ட நிறைவு கிடைக்கும். இவர்கள் தங்கி இருந்த அப்பாட்மெண்டிற்கு அருகிலேயே இருந்தது அந்த கம்ப்யூட்டர் சென்டர்.

கிளம்பு,கிளம்பு என கிட்டத்தட்ட இழுத்து கொண்டு புறப்பட்டு இருந்தான்.

நீங்க ஆபீஸ் போகணும்ல்ல தப்பிக்க இவள் கேட்க

தெரியும் இப்படி ஏதாவது சொல்வேன்னு தான் இன்றைக்கு ஒரு மணி நேரம் பர்மிஷன் வாங்கிட்டு வந்து இருக்கிறேன். டிமிக்கி கொடுக்க முடியாது. எப்பப்பாரு வீட்ல தனியா இருக்க ஃபோர் அடிக்காது. கொஞ்சம் வெளியேயும் பழகனும்ல்ல

விதவிதமாக மறுத்து பார்க்க கடைசியில் அவன் சொன்னபடியே புறப்பட்டு இருந்தாள். பிடிவாதம் பிடிவாதம் என வாய்க்குல் முனுமுனுத்தபடி கிளம்ப

இருக்கட்டுமே சுமி உன்கிட்ட தானே பிடிக்கறேன் சுமித்ரா எப்போதோ சுமி ஆகி இருந்தாள். அத்தோடு கூட அவளை விட்டுவிட வில்லை. தினமுமே புதிதாக அனிமேஷனில் என்ன கற்றுக்கொண்டாள் என்பதை கூட இவளிடம் கேட்டுக்கொண்டான்.

நாட்கள் அழகாகவே நகர்ந்து கொண்டு இருந்தது. இரண்டு முறை மல்லிகா, ராகவேந்திரர் வந்து சென்று இருந்தனர். இவன் மட்டும் அவர்கள் வந்திருந்த போது இரண்டு முறையும் தாய்,தந்தையை பார்த்து வந்திருந்தான். இன்னமும் சுமித்ராவை கூட அழைத்து செல்லவில்லை. தாயாரிடம் தினமும் இரண்டு முறை போனில் பேசுவதை வழக்கத்தில் வைத்திருந்தான். தந்தையோடு தனியாக அதே போல் பேசிக்கொண்டு இருந்தான். திலகவதி குரலில் கூட அழுகை குறைந்து இருந்தது.

அதற்காக மறந்து விட்டார் என சொல்ல முடியாது மனது ஏற்றுக்கொள்ள பழகி இருந்தது. தனது மகன் மறுபடியும் தனது வீட்டில் பிறப்பான் என்ற நம்பிக்கை நிறைய இருந்தது இதை அப்படியே குருவிடமும் சொல்லி இருந்தார்.

நிச்சயமாக மா அவன் எங்கேயும் போக மாட்டான் மறுபடியும் நம்மகிட்ட வருவான் என இவனும் கூறி இருந்தான். அப்போதைக்கு சமாதான வார்த்தை தான் அதுவே திலகவதியை நிறைய அமைதி கொள்ள வைத்தது.

திலகவதி கூட புதிதாக அங்கே அவர்களது வீட்டிற்கு அருகில் துவங்கி இருந்த நற்பணி மன்றத்திற்கு தமிழ் சொல்லி தர என தினமும் சென்று வருவதாக கூறி இருந்தார். அது கூட காரணமாக இருக்கலாம் என நினைத்துக் கொண்டான் குரு.

பேசும் போதே ஒரு விஷயம் தெளிவாக புரிந்தது குருவிற்கு வீட்டில் உள்ள அனைவருமே குழந்தை எனும் இன்னொரு புது வரவை எதிர் பார்த்து கொண்டு இருப்பது தெரிந்தது. ஆனால் இங்கு ஒரு படி கூட முன்னேறவில்லை. அழைத்து வந்த அன்று போல இல்லாமல் அழுகை மட்டும் அவள் முகத்தில் இல்லாமல் இருந்தது மற்றபடி உறவில் அதே நிலைதான் தொடர்ந்து கொண்டு இருந்தது.

ஆனால் இப்போது முன்பு போல பேசாமல் இருப்பது இல்லை பல நேரங்களில் அருகில் அமர்ந்து அவனோடு ஏதாவது பேசிக்கொண்டு இருப்பாள். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை அருகில் உள்ள பார்க்கில் இவளோடு நடப்பதை வழக்கத்தில் வைத்து இருந்தான். சுமித்ராவிற்கு வேடிக்கை பார்க்க மிகவும் பிடித்து இருந்தது. ஆர்வமாக அவள் பார்ப்பதை பார்க்க வேண்டியே இவளை அழைத்து செல்வான்.

கலர்கலராக ஹேர்கலரிங் செய்து கூட்டமாக சுற்றுவது ஒருபுறம் என்றால் பெண்கள் அழகாக தன்னை மேக்கப் செய்து நடப்பது இன்னோருபுறம் என இவள் ரசிக்க நிறைய இருந்தது. எப்படி இவ்வளவு அழகா மேக்கப் பண்ணறாங்க அவங்களே கலராத்தானே இருக்கறாங்க அப்புறம் எதுக்கு? அந்த நிமிஷ சந்தேகத்தையும் இவனிடம் அப்போதே கேட்டு விடுவாள்.

உனக்கு பிடிச்சா நீயும் போட்டுக்கோ நான் பார்க்கிறேன் எனக்கு ஆட்சேபனை இல்லை என இவன் சொல்ல

எப்ப பாரு கிண்டல் பண்ண கூடாது என அதற்கு முற்றுப்புள்ளி வைத்து அடுத்ததிற்கு தாவி இருப்பாள்.
அங்கிருக்கும் மதுபானகடையை தாண்டும் போது மட்டும் முகம் அஷ்டகோணலுக்கு மாறும். ஆண்,பெண் பேதம் இல்லாமல் வாங்கி செல்வதை பார்க்கும் போது பல நேரங்களில் ஆதங்கத்தில் திட்டிக் கொண்டே வருவாள்.

இவன் கூட வேண்டும் என்றே "உனக்கு வேண்டுமா வாங்கி தரவா என கேட்டு அந்த இடத்திலேயே முதுகில் அடி வாங்கி இருந்தான் பல நேரங்களில் "பல நேரங்களில் அவளின் முகம் காட்டும் பாவனைக்காகவே கேட்டு விட்டு அடிக்க துரத்துகையில் நகர்ந்து ஒடிக் கொண்டு இருந்தான். இந்த விளையாட்டும் குருவிற்கு பிடித்தே இருந்தது.

முதல் முதலாக கோகுல் பவித்ரா வந்ததோடு சரி மறுபடியும் இவர்களோடு வர பவித்ராவின் உடல் நிலை ஒத்துழைக்கவில்லை. பெரும்பாலும் குரு மட்டுமே இவளை அழைத்து கொண்டு சென்று வந்து கொண்டிருந்தான்.

அன்றும் கூட ஒரு வார விடுமுறை நாள் தான் அன்றும் மூன்று மணிக்கே அருகில் இருந்த இடங்களுக்கு அழைத்து சென்றவன் சற்றே முன்னதாக ஐந்து மணிக்கே வீட்டிற்கு அழைத்து வந்து இருந்தான்.

கொஞ்சம் டயர்டா இருக்கு. வீட்டில் போய் கொஞ்ச நேரம் தூங்கலாம் என்பது போல கூறி அழைத்து வந்து இருந்தான். வந்தவன் உடை மாற்றியபடி பார்க்க அருகில் இருந்த சிறிய பால்கனியில் இவள் உலர்த்தி காயப்போட்டு இருந்த உடையில் கிளிப் மாட்டாமல் விட்டிருந்தாள்.

மறதி அதிகமாகிடுச்சி இந்த சுமிக்கு கிளம்பலாம்ன்னு சொன்னா எல்லாத்தையும் மறந்திடறா துணி கீழே விழுந்தா எடுக்கவும் முடியாது என்றபடி அருகில் சென்றவன் கிளிப் டாப்பாவில் இருந்த கிளிப்பை ஒவ்வொன்றாக மாட்டியபடி பார்க்க,கடைசியில் உலர்த்த போட்டிருந்த டவல் ஒன்று கீழே விழ தயாராக சிமெண்டின் திண்டின் நுணியில் சிக்கி இருந்தது.

திரும்பி இவளை பார்க்க ஆள் இருப்பதற்கான அடையாளம் எதுவும் இல்லை. சமையல் அறையில் இருந்து வந்த சத்தம் அங்கே இருக்கிறாள் என உறைக்க லேசாக சிரிப்பு கூட வந்தது குருவிற்கு எப்போது சமையல் அறைக்குள் சென்றாலும் எதையாவது உருட்டுவதையே வழக்கத்தில் வைத்திருந்தாள். பல நேரங்களில் அவளோடு இவனும் இணைந்தே சமையல் அறையில் எதையாவது செய்வதை வழக்கத்தில் வைத்திருந்தான். யூ டியூப்பில் எதையாவது எடுத்து செய்கிறேன் என அருகில் நின்று அவளை வேலை வாங்கி கொண்டு இருப்பான். கலகலப்பாக நகரும் அந்த நாள் மொத்தத்தில் ஏதோ ஓரு வகையில் அவளுக்கு இவனது அருகாமையை பழக்கபடுத்தி இருந்தான் இந்த நாட்களில் அதுவும் அவளை அறியாமலேயே அதை ஏற்றுக்கொள்ளவும் வைத்து இருந்தான். இந்த வகையில் ஓரளவிற்கு வெற்றி தான் அவன் வரையில் இப்போதும் சத்தம் கேட்க

சத்தம் இல்லாமல் வேலை செய்யவே தெரியவில்லை சொன்னா கோபம் வரும் என நினைத்தபடி குனிந்து விழுந்து சிக்கியிருந்த துணியை எடுக்க முயற்சி செய்து கொண்டு இருந்தான். கிட்டத்தட்ட முழு உயரத்திற்கும் குனிந்து முயற்சி செய்து கொண்டிருந்த நுனிகாலில் நின்றபடி குனிந்திருந்தான்.

அப்போதும் கைக்கு சிக்கவில்லை மறுபடியும் நிமிர்ந்து விட்டு முயற்சி செய்ய கையில் இவனுக்கு காபியோடு வந்தவள் பார்த்தது இவனின் விழ தயாராக இருந்தது போல குனிந்திருந்த தோற்றத்தை
முகம் முழுக்க பயம் பரவ வேகமாக அவனின் சட்டையை இழுத்து அவனோடு சேர்த்து இவளும் கிட்டத்தட்ட பெட்ரூம் வாசலில் வந்து விழுந்து இருந்தாள்.

இவன் அவள் மேல் விழுந்தது கூட அவளுக்கு பெரியதாக தெரியவில்லை விழுந்து இருந்தால் என்ன ஆகி இருக்கும் என நினைத்தவள் ஏன் இப்படி செய்யறிங்க? விழுந்தால் என்ன ஆகிறது என கூறும் போதே அழுகை லேசாக எட்டி பார்த்தது. ஒரு நிமிடம் பயந்திட்டேன் தெரியுமா?

இவள் கண் கலங்குவதை பார்க்க முடியாமல் ஏய் உண்மையை சொல்லு தள்ளிவிடத்தானே டிரை பண்ணின என கேட்க மொத்தமாக உடைந்து அழ ஆரம்பித்தாள்.

உண்மையில் பயம் நிறைய இருந்தது நான்கு பெரியவர்களை நினைத்து கூடவே உறவினர்களை நினைத்து இவள் முன்பே சொன்னவர்கள் தானே "நல்ல வேளை அந்த அம்மாவே இப்படி ஒரு முடிவை சொல்லிட்டாங்க வீட்ல இருந்தா இனி கல்யாணத்துக்கு பேசினா கூட தெரிஞ்சவன் வர மாட்டானே ராசி இல்லாத பொண்ணுன்னு பேச ஆரம்பித்தால் கடைசி வரைக்கும் கஷ்டம் தானே. அப்புறம் வர்றது எல்லாம் ரெண்டாத்தாரம், வயசான மாப்பிள்ளை இப்படி தானே கேட்டு வருவாங்க இது போன்ற பேச்சுக்களை வீட்டில் இருந்த போது இவள் இல்லை என நினைத்து பேசி சென்றவர்கள் தானே”

சுமி எனக்கு ஒன்றும் இல்லை ஏன் இவ்வளவு பயம் விழுந்திடுவேன்னு தோனிச்சுன்னா பக்கத்தில் போவேனா என்ன? நீ இவ்வளவு பயப்பட தேவையில்லை இவனது எந்த சமாதானமும் அவளிடம் எடுபடவில்லை.

இவன் சமாதானபடுத்த அழுகை இன்னும் அதிகமாகியதே தவிர குறையவில்லை கூடவே இரண்டு அடி கூட வைத்து இருந்தாள் அழுதபடியே முதல் முதலாக அவளிடம் இருந்து வரும் அன்பின் பிரதிபலிப்பு இதுவும் கூட அவனுக்கு அந்த நிமிடம் பிடித்து இருந்தது.

ஸாரி டி அதுதான் இனி இது போல செய்ய மாட்டேன்னு சொன்னேனே அழாத கஷ்டமா இருக்கு இயல்பாகவே இவனுக்கும் அவளிடம் நெருக்கம் கூடி இருந்தது மனதால்

ஒரு கட்டத்துக்கு மேல் அவளின் அழுகை தாளமுடியாமல் அவளை தன்னோடு இறுக்கமாக அணைத்திருந்திருந்தான் அங்கே காமமோ, காதலோ இல்லை உனக்காக நான் இருக்கிறேன் எப்போதும் அருகிலேயே இருப்பேன் என்பது போன்ற நம்பிக்கை மட்டுமே அந்த அணைப்பில் இருந்தது. தோளோடு தட்டிக்கொடுத்தபடி அழாதே சுமித்ரா எனக்கு ஒன்றும் இல்லை இனி அந்த பக்கமே போக மாட்டேன் ப்ராமிஸ் எதேதோ சொல்லி அவளை முன் அறைக்கு அழைத்து வந்தவன் அவளை அமர வைத்து விட்டு தண்ணீரை எடுத்து வந்து அவளிடம் நீட்டியவன். குடித்து முடிக்கும் வரை பொறுமையாக இருந்து விட்டு அதென்ன இப்படி ஒரு அழுகை ஏன் சுமி கண்ணில் ஏதாவது டேம் இருக்கா என்ன? அவளது மனநிலையை மாற்ற பேச்சுக்கொடுத்துக் கொண்டு இருந்தான்.

அவனை முறைத்தபடியே எழுந்து சென்றவள் முகம் கழுகி வர

உட்காரு இப்படி கொஞ்சம் தைரியமாக இருக்கலாம் இவ்வளவு பயம் தேவையில்லை எப்போதும் நீ இப்படி தானா?

கேட்டவனிடம் எப்படி சொல்வது எதையும் மனதில் வைத்து கொள்ளாமல் நேருக்கு நேராக கேட்டுவிடும் தன் குணம் எங்கே சென்று ஒளிந்து கொண்டது. இப்போது வரையிலும் அதிக ஒட்டுதல் இல்லாமல் தானே இவனிடம் நடந்து கொண்டு இருக்கிறாள். திருமணத்துக்கு முந்தய பேச்சை அப்படியே அவனிடம் சொல்லவா முடியும். தன்னை ராசியில்லாதவள்அதிஷ்டமில்லாதவள்
என்ன கூறியதை அப்படியே அவனுக்கு தெரிந்து ஏதாவது இவளை சொல்லி விட்டால் இப்படி எத்தனையோ மனதில் இருக்க இவள் சற்று முன்பு அவனுக்காக அழுதது அவனது அணைப்பில் இருந்தது எதுவும் அவளது கவனத்திற்கு வரவில்லை.

குருவின் மனதில் அப்போதே முடிவு செய்து கொண்டான் இனி இவள் பயப்படும்படி எதுவும் செய்யக்கூடாது என எக்காரணத்தை கொண்டும் இவளது கண்களில் கண்ணீர் வரவிடக்கூடாது.

ஆனால் அப்போது தெரியவில்லை அவனால் சுமித்ராவிற்கு அருகில் ஆறுதலுக்கு கூட ஆள் இல்லாமல் மொத்தமாக கதறி அழப்போவதையோ, அவள் அழுவதை கூட பார்த்தும் ,ஆறுதல் சொல்ல முடியாமல் தவிக்க விடப்போவதையோ அப்போது அறியவில்லை.

தொடரும்.
 

Kavisowmi

Well-known member
அன்பின் ராகம்-28
மதியம் இரண்டு மணியை தொடும் போது பரபரப்பாக இருந்த ஆபீஸ் நேரத்தில் வேகமாக புறப்பட்டு கொண்டு இருந்தான் கோகுல் அப்படியே குருவை பார்த்தவன் குரு நீயும் கூட வருகிறாயா வீட்டுக்கு, வீட்டில் கெஸ்ட் வந்து இருக்கறாங்க
கெஸ்டா யாரெல்லாம் வந்து இருக்கறாங்க. உன்னோட வீட்டுக்கு வந்து இருந்தா நான் வந்து என்ன செய்ய போறேன். எனக்கு அங்கே யாரையும் தெரியாதேடா வேலை இருக்குது முடிச்சிட்டு எப்போதும் போல கிளம்பிக்கறேனே.
வந்திருக்கறது உனக்கு தெரிஞ்ச ஆள் தான், என்னோட அம்மா,அப்பா, விஷாலி அவங்க அம்மா, அப்பா பவித்ரா வீட்டில் எல்லோரும் வந்து இருக்கிறதா இப்போது தான் பவி போன் பண்ணினா
விஷாலியும் வந்து இருக்கறாளா இரு அப்போ நானும் உன்கூடவே கிளம்பறேன் கல்யாண பத்திரிக்கை எடுத்துட்டு வந்து இருப்பாங்க நீ ஏன் அதுக்கு இவ்வளவு பரபரப்பு ஆகிற,பத்திரிகை கொடுத்துட்டு பார்த்துட்டு போகலாம்ன்னு வந்து இருப்பாங்க வாயாடிய பார்த்து ரொம்ப நாள் ஆச்சு கடைசியா போட்டோ அனுப்புன்னு போன் பண்ணினா அதற்கு பிறகு பேசவே இல்லை முதலில் அவ கிட்ட நிறைய சண்டை போடணும்.
"யாரு நீ நடக்கறத பேசு வா அவள் உன்னையும் அழைச்சிட்டு வரச்சொல்லி தான் எனக்கு போன் பண்ணினா”
இரு கம்ப்யூட்டரை ஆப்ஃ பண்ணிட்டு வரேன் என்றவன் இவனோடு புறப்பட்டு வந்திருந்தான். வீட்டிற்கு செல்ல லிப்டில் ஏறியவன் கோகுல் நீ வீட்டுக்கு போ நான் சுமித்ராவை அழைச்சிட்டு வரேன் என்றபடி வீட்டுக்கு வர இவன் வீட்டிற்கு வந்த பத்தாவது நிமிடத்தில் விஷாலி அவளது தந்தையை அழைத்து கொண்டு வந்திருந்தாள். கூடவே பவித்ரா கோகுல் அவளது குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் வந்திருந்தனர்.
காஃபி போட என சுமித்ரா சமையல் அறைக்குள் சென்றிருக்க சற்று நேரம் பொதுவாக பேசியபிறகு பவித்ரா தான் முதலில் பேச ஆரம்பித்தாள் அண்ணா இன்னும் ரெண்டு நாளில் வளைகாப்பு பண்ணி அழைச்சிட்டு போக வந்து இருக்கறாங்க,அடுத்து விஷாலியோட கல்யாணம் இருக்கு, வளைகாப்பு பண்ண லேட் பண்ணினா அவளோட கல்யாணம் நெருங்கிடும் இந்த ஃபங்சன்,கல்யாணமுன்னு கடைசி நேரம் நிறைய டென்சனா இருக்கும் அதனால இந்த முடிவு எடுத்து இருக்கறாஙக அதுக்காக உங்களை கூப்பிட வந்து இருக்கிறோம்.
ஃபங்சன் எப்போன்னு சொல்லுமா வந்திடறோம்.
நாளைக்கே அண்ணா நல்ல நாள் இத விட்டா இல்லைங்கறாங்க இவங்க என்னோட அம்மா ,அப்பா வந்தவர்களை அறிமுகபடுத்தி விட்டு சுமித்ராவிடம் வந்தவள் சுமி நாளைக்கு வரும் போது சுடிதார் வேண்டாம் சேலை கட்டிட்டு வா உன்னை சேலை கட்டி பார்த்தது இல்லை இவளிடம் கூறிவிட்டு அப்போ நாங்க புறப்படறோம் என அவள் தாய்தந்தை கோகுலின் தாய் தந்தையை அழைத்துக்கொண்டு புறப்பட அடுத்து இருந்தது விஷாலியின் குடும்பத்தினர் மட்டுமே
சொல்லுங்கப்பா எப்போது திருமணம் வச்சி இருக்கறிங்க இந்த வார்த்தையை குரு சொல்லவுமே அவரது கண்கள் லேசாக கலங்கி இருந்தது.
ஏன்பா கண்கலங்கறிங்க பொண்ண தூரமா அனுப்பறோம்ன்னா இப்ப தான் தினம்ம் பேசிக்கொள்ள ஆயிரம் வழி இருக்கே அப்புறம் என்ன?
அதுக்காக இல்லை,இங்கே வர புறப்படும் போது தான் விஷாலி சொன்னா எப்படி பட்ட ஆபத்தில் இருந்து காப்பாற்றி இருக்கற தீ விபத்தை பற்றி சொல்கிறார் என்ன தோனவும்
என்ன என்பது போல விஷாலியை பார்க்க அவளோ நீ தானே எதையும் அப்பா அம்மாகிட்ட மறைக்க கூடாதுன்னு சொல்லுவ அது தான் அப்பாகிட்ட சொல்லிவிட்டேன். அவள் சொல்லி முடிக்கவும்
அதெல்லாம் இல்லபா விஷாலி புத்திசாலி எப்படியும் தப்பிச்சிருப்பா இவன் சொல்லும் போதே,அருகில் இருந்த பையில் இருந்து திருமண பத்திரிக்கை எடுத்தவர் கூடவே இருவருக்கும் எடுத்திருந்த உடையை இவனிடம் தந்தபடி இது சின்ன பரிசு தான் நீ கூப்பிட்ட பாரு அப்பான்னு இத மறுக்க மாட்டேன்னு நினைக்கிறேன் என்றவர் விஷாலியை பார்க்க
விஷாலியோ அப்பா கொஞ்சம் நேரம் பேசிட்டு வரேனே இவங்க கூட. ரொம்ப நாள் ஆச்சு இனி இதுமாதிரி பேச சந்தர்ப்பம் கிடைக்குமோ என்னோவோ
விஷாலி ஏன் அப்படி சொல்லற.
பேசலாம் டா இன்றைக்கு மாதிரி நேர்ல பேச முடியாது இல்லையா அத சொன்னேன் இவள் சொல்லவும்
சரி என இவளை விட்டுவிட்டு புறப்பட்டு இருந்தார்.
சொல்லுங்க புது மாப்பிள்ளை ஸார் எப்படி இருக்கறிங்க. லைப்ஃ எப்படி போகுது. ஏன் நான் போன் பண்ணாட்டி நீயும் கூப்பிடமாட்ட அப்படித்தானே
புது மாப்பிள்ளை எல்லாம் இல்லை கல்யாணம் முடிஞ்சு மூன்று மாதம் ஆகப்போகுது நீ தான் சொல்லனும் புதுப்பொண்ணே இது நான் கேட்க வேண்டிய கேள்வி பேசி எவ்வளவு நாள் ஆச்சு. சொல்லு எப்படி போகுது உன்னோட லைப்ஃ. உன்னவர் என்ன சொல்லறார். தினமும் பேசறையா பாஸ்போர்ட் ,விஷா எல்லாம் ரெடியா
ம் ஆச்சு நாளைக்கு அவங்க வீட்டிலேயும் இங்கே வராங்க.
அவரும் வர்றாரு.
நாளைக்கு அறிமுகபடுத்தறேன்.
பார்டா எவ்வளவு மரியாதை இந்த மரியாதை அங்கே பேசும் போது இப்படியே வருமா டேய் நீ சொல்லு சுமித்ராவை நீ எப்படி கூப்பிடற அன்றைக்கு ஒரு நாள் போன்ல பேசினோமே அது மாதிரியா
ஏய் ஏன் உனக்கு இந்த வேண்டாத ஆராய்ச்சி இங்கே இன்னும் எத்தனை நாள் இருப்பே அத சொல்லு
இந்த வாரம் எல்லாம் இங்கே தான் டேரா, பக்கத்தில் எங்காயாவது போகலாமா வீட்டில் இருக்கற எல்லோருமா
சரிதான் எனக்கு தெரிஞ்சு வளைகாப்பு முடிஞ்சா நேரா ஊருக்கு தான் போவாங்க ஒரு வேளை உங்கள் ஊரில் அப்படி இல்லையோ.
ஓ மறந்துட்டேன் பேசும் போதே போன் அடிக்கவும் நம்பரை பார்த்தவன் கோகுல் கூப்பிடறான் நீ சுமித்ரா கூட பேசிட்டு இரு நான் வந்திடறேன். சற்று தள்ளி அமர்ந்தபடி இவர்களின் பேச்சை கேட்டுக்கொண்டு இருந்தவளுக்கு மெலிதான பொறாமை தோன்றி இருந்தது. அவளிடம் பேசிக்கொண்டு இருக்கும் போது குருவின் முகம் அது காட்டும் பாவனை கண்களில் தெரியும் குறும்பு என மொத்தமாக அவனது முகத்தை மட்டுமே பார்த்துக்கொண்டு இருந்தவள் இவளை போல இவனிடம் தன்னால் பேச முடியவில்லையே ஏன்? யோசித்தபடி இருக்க குரு எழுந்து வெளியேறி இருந்தான். சிறிது நேரம் பேசிய விஷாலியும் கிளம்பி இருந்தாள்.
காலையில் பத்து மணிக்கு வந்திடுங்க சுமித்ரா நான் உங்களுக்காக காத்திட்டு இருப்பேன் என அவள் புறப்பட்டு செல்ல.
இரண்டு மணி நேரம் தாண்டியபோது குரு வந்திருந்தான் கைகளில் இரண்டு கவரை சுமந்தபடி சுமித்ரா இது உனக்கு நாளைக்கு ஃபங்சனுக்கு போட்டுக்க டிரஸ்,சேலை கட்டச் சொல்லி பவித்ரா சொன்னாங்கல்ல புதுசா எடுத்துவிட்டு வந்துவிட்டேன் இத கட்டிக்கோ என்ன தந்து விட்டு மறுபடியும் வெளியேறி இருந்தான்.
அடுத்த நாள் அழகாக விடிந்தது காலை முதலே கோகுல்,குரு இருவருக்குமே வேலை நிறைய இருந்தது முன் தினம் முதல் இப்போது வரையிலுமே வளைகாப்பிற்கு தேவையானதை வாங்க என இரண்டு பேரும் சுற்றிக்கொண்டு இருந்தனர். காலையில் புறப்படும் போதே சொல்லி விட்டு சென்றிருந்தான் சுமித்ராவிடம் புறப்பட்டு இரு வந்து அழைச்சிட்டு போகிறேன் என
இவன் சுமிக்காக தேர்ந்தெடுத்து இருந்தது அழகான டிசைனர் சாரி அதுவும் அவளது நிறத்திற்கு ஏற்றாற் போல் அழகாக இருந்தது. முகத்தில் லேசான பவுடர் சிறு ஸ்டிக்கர் பொட்டு அவ்வளவு தான் மொத்த அலங்காரம்
நீளமான ஜடையை பிண்ணி இருக்க அங்கங்கே அவளது பிண்ணலுக்கு அடங்காமல் துண்டு முடிகள் பறக்க அதுவே அவளது முகத்தை அழகாக காட்டியது.
சரியாக பத்து மணியை நெருங்கும் போது கையில் சிறிய கிப்ட்டோடு இவளை அழைத்து செல்ல வந்திருந்தான். பெட்ரூம்பில் கிளம்பலாம்ங்க என்றபடி வெளியே வந்தவளை பார்த்த போது சிறு திகைப்பு கூட தோன்றி இருந்தது. திருமணத்தின் போதும் சாரி தான் அணிந்திருந்தாள் அப்போது அவளது முகத்தை பார்த்தது கூட சரியாக ஞாபகத்தில் இல்லை. இப்போது புதிதாக பார்ப்பது போல் பார்த்து கொண்டு இருந்தாள். தன்னுடையவள் என்ற எண்ணம் எப்போதோ மனதில் தோன்றி இருக்க பார்வைவை அவளை விட்டு நகர்த்த முடியவில்லை.
இரண்டு நிமிடம் வாசலை மறைத்தபடி நகராமல் நின்றவனை பார்த்து மறுபடியும் அழைத்தாள் என்ன ஆச்சு போகலாமா.
தலையில் பூ வைக்கலை.
"ஒ அதனால தான் இப்படி பார்த்திங்கலா ஒரு நிமிஷம் மறுபடியும் உள்ளே சென்று பூவை தலையில் வைத்தபடி வெளியில் வர, இப்போது போகலாமா அவளது கேள்விக்கு தலையை மட்டுமே பதிலாக அசைத்தான்”
இவர்கள் அங்கே போகவும் சற்று நேரத்தில் ஃபங்சன் துவங்கி இருந்தது. உள்நுழையும் போதே விஷாலி முதலில் இவளை வந்து அழைத்து சென்றிருந்தாள். கோகுலுடைய வீடு இரண்டு பெட்ரூம் சற்று பெரிய ஹால் கிச்சன் என அழகாய் இருந்தது. முதலில் பவித்ராவை பார்க்க என இவளை அருகில் இருந்த பெட்ரூமிற்கு அழைத்து சென்றாள்.
இவளை பார்த்ததுமே அருகில் வந்து லேசாக அணைத்து
விடுவித்தவள், அழகா இருக்கற சுமி ஃபங்சன் முடியவும் சாயங்காலம் புறப்பட்டுடுவேன் நீயும் எனக்கு சீக்கிரமே நல்ல செய்தி சொல்லணும் இது தான் என்னோட ஆசை,என கூறும் போதே
"விஷாலி வேகமாக இவர்களுக்கு அருகில் வந்தவள் பவித்ரா அண்ணி ரெண்டு பேரும் மேச்சிங்,மேச்சிங் இத நீங்க கவனிச்சிங்கலா”
சுமித்ராக்கு கூட ஆச்சர்யம் கூட தானே வந்தோம் என்ன உடை போட்டு இருந்தான் என யோசிக்க எதுவும் கவனத்திற்கு வரவில்லை. உடனே வெளியே சென்று பார்க்க முடியாதபடி பவித்ரா, விஷாலி இருவரும் பேசிக்கொண்டு இருக்க ஆர்வத்தை கிட்டத்தட்ட அடக்கியபடி அங்கே அவர்களோடு நின்றிருந்தாள்.
சற்று நேரத்தில் அழைத்து வந்து இருக்கையில் அமர்ந்து வைத்து முதலில் கோகுலின் தாயாரை வளையலை அணிவிக்க சொல்ல அடுத்தடுத்து வந்து அவளுக்கு அணிவித்து கொண்டிருந்தனர். சுமித்ராவின் கண்கள் முதல் முதலாக குருவை தேடிக்கொண்டு இருந்தது. எப்படி யோசித்தாலும் அவனது உடை அவளது கவனத்தில் வரவில்லை.
சற்று நேரம் இவளை காக்க வைத்தவன் விஷாலியின் தந்தையின் அருகில் அமர்ந்துே புதியவனோடு பேசிக்கொண்டு இருந்தான். இவளது சாரி கலரில் முழுக்கை சட்டை அணிந்திருக்க வேஷ்டி அணிந்திருந்தான் அப்போது தான் சுற்றிலும் இவள் பார்க்க வந்திருந்த ஆண்கள் அனைவருமே வேஷ்டி சட்டை அணிந்திருக்க பெண்கள் புடவையில் இருந்தனர்.
இவளுக்கு அருகில் நின்றிருந்த விஷாலி சுமித்ராவிடம் பவித்ரா அண்ணி நேற்றே ஆர்டர் போட்டுட்டாங்க டிரஸ்கோட் இது தான்னு அங்கே குருகிட்ட பேசிட்டு இருக்கறவரை தான் எனக்கு முடிவு பண்ணி இருக்கறாங்க அவர் தான் மாப்பிள்ளை ஒகே தானே சுமி. இவளிடம் பேசியவள் நகர்ந்து குரு இருக்குமிடம் வந்தாள்.
"குரு உன்னோட சுமித்ரா ரொம்ப நேரமா உன்னை சைட் அடிக்கறா "
அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை. இவன் பேசும் போதே சுமித்ராவும் அருகில் வந்திருந்தாள் "அங்கே வளையல் போட என்னை வரச்சொல்லறாங்க "
போய் போடு சுமி சொன்னவன் மறுபடியும் திரும்பி பேச ஆரம்பிக்க
போட்டோவுக்கு நிற்க உங்களையும் அழைச்சிட்டு வரச் சொல்லறாங்க
இதோ வரேன் விஷாலி பேசிட்டு இரு வந்திடறேன் என கூறியபடி இவளோடு நடக்க ஏற்கனவே உயரம் இவளுக்கு தெரிந்தது தான் இப்போது கட்டியிருந்த வேஷ்டிக்கு இன்னும் உயரமாக தெரிந்தான். பவித்ரா கூட இன்று திருமண் பட்டுடுத்தி தலை நிறைய பூவோடு கழுத்தில் மாலை அணிவித்து கன்னத்தில்,கையில் லேசாக பூசிய சந்தனத்தோடு பார்ப்பதற்கு கவிதை போல அவ்வளவு அழகாக இருந்தாள். குருவோடு பவித்ரா அருகில் செல்ல பவித்ரா இவளை பார்த்தவள் ரெண்டு பேரும் அவ்வளவு அழகாக இருக்கறிங்க.
சுமித்ரா இது போல உங்கள் வீட்டிலேயும் இந்த மாதிரி விஷேசத்தை சீக்கிரமே எதிர் பார்க்கிறேன் இரண்டாவது முறையாக தனது ஆசையை மறுபடியும் கூற சட்டென திரும்பி குருவை பார்க்க அவனும் இவளது முகத்தை தான் பார்த்துக்கொண்டு இருந்தான்.
தொடரும்.
 

Kavisowmi

Well-known member
அன்பின் ராகம்_29
ஃபங்சன் முடிந்து அங்கங்கே அமர்ந்து பேசிக்கொண்டு இருக்க கோகுல் தான் சற்றே முகவாட்டத்தோடு சுற்றி கொண்டு இருந்தான். பவித்ரா சற்று நேரம் அவனை பார்த்தவள் அருகில் அழைத்து ஏன்ங்க ஏன் முகம் இப்படி இருக்கு கொஞ்சம் நார்மலா இருக்கலாம்ல்ல
"போ பவி இவ்வளவு சீக்கிரம் உன்னை அழைச்சிட்டு போவாங்கன்னு நினைக்கலை நீ என்கிட்ட முதல்ல என்ன சொன்ன ஒன்பதாவது மாதம்தான் போவேன்னு சொன்னே இப்பப்பாரு கிளம்பறே "
"என்னங்க இது இதுக்கப்புறம் நாள் நல்லா இல்லை,அப்புறம் விஷாலியோட கல்யாணம் இதெல்லாம் இருக்கே அவங்க காரணத்தை சரியா சொல்லும் போது எப்படி மறுக்க முடியும். இப்போ என்ன போய் நாலு நாள் அங்கே இருந்துவிட்டு மறுபடியும் இங்கே வந்திடறேன் போதுமா அதுக்காக இப்படியா இருப்பிங்க”
"நிஜமா விடுவாங்கலா "
"அதெல்லாம் விடுவாங்க. கொஞ்சம் சிரித்த மாதிரி இருங்க பார்க்க கஷ்டமா இருக்கு”
"இங்கேயும் அங்கேயும் சுற்றி உன்னை கஷ்டப்படுத்திக்காத இங்கே வர வேண்டாம்”கோகுல் அவளை பார்த்து கூற
போறது டிரைன்னுக்கு அதுவும் ஏசி கோச் அப்புறம் என்ன ஸ்டிரைன் பண்ண வேண்டி இருக்கு மாசமா இருக்கற நானே தைரியமாக இருக்கறேன் நீங்க பயபடாதிங்க அடுத்த வாரம் வந்திடுவேன் மறுபடியும் உங்ககிட்ட சொன்ன மாதிரி ஒன்பதாவது மாதம் தான் போவேன் சரியா டிரெஸ் எல்லாம் பேக் பண்ணனும் வந்து ஹெல்ப் பண்ணுங்கள்
இப்போ தானே வந்துடுவேன்னு சொன்னே டிரஸ் பேக் பண்ணனும்ன்னு சொல்லறே.
கடவுளே என்ன ஆச்சு உங்களுக்கு அங்கே ஊர்ல டிரைஸ் எல்லாம் டைட் ஆகிடுச்சு அங்கே இருக்கிறது எதையும் போட முடியாது புரியுதா வாங்க என பெட்ரூம்பிற்குள் நுழைய இவனும் பின்னோடு சென்றான்.
மாலை வரையிலுமே அங்கேயே பேசியபடி இருந்தவர்கள் ஐந்து மணியை தொடும் போது வீட்டுற்கு புறப்பட்டனர். இரண்டு பேரின் மனநிலையும் வேறு வேறு எண்ணத்தில் நிலைந்து இருந்தது. அதனாலோ என்னவோ இருவருமே பேசிக்கொள்ளவில்லை அமைதி மட்டுமே இருவருக்கும் இடையில் நிலைத்து இருந்தது.
பவித்ரா சொன்னதும் இரண்டு பேரும் ஒருவரையோருவர் பார்த்து நின்ற அந்த தோற்றம் தான் இருவருக்குல்லும் ஆழமாக பதிந்து இருந்தது. அந்த மோன நிலை அப்போது மட்டும் அல்ல அன்றைய நாள் முடியும் வரையிலுமே இருந்தது.
அடுத்தடுத்த நாட்கள் சற்றே வேகமாக நகர்ந்ததாக தோன்றியது குருவிற்கு
அந்த வாரம் எதிர்பாராத ப்ரோக்ராம் அமைக்கும் பணி இவர்களது நிறுவனத்திற்கு கிடைக்க அடுத்தடுத்த நாட்கள் வேலை ஓய்வு இல்லாமல் நடந்து கொண்டு இருந்தது. ஆபீஸில் பாதி பேர் ஏன் கோகுல் கூட வீட்டிற்கு வராமல் வேலை செய்து கொண்டு இருந்தான்.
பவித்ராவிடம் கோகுல்
போனில் அழைத்து கூறி இருந்தான் பவி வேலை வந்துடுச்சு வீட்டுக்கே வர முடியலை நீ அங்கேயே இரு அங்கே வந்து உன்னை அழைச்சுக்கறேன் என
குருவின் வேலை நேரமும் வெகுவாக மாறி இருந்தது. தினமுமே இரவு பதினோரு மணியை தாண்டியபோது வீட்டிற்கு வருபவன் காலை ஐந்து மணிக்கே ஓடிக்கொண்டு இருந்தான்.
சுமித்ராவிடம் கூட கூறியிருந்தான் ஸாரி சுமி இன்னும் ஒரு வாரத்திற்கு இப்படி தான் இருக்கும் இந்த ப்ராஃஜெக்ட் முடிஞ்சதுன்னா எப்படியும் நாலு நாள் லீவ் கிடைக்கும் அப்போது பக்கத்தில் எங்கேயாவது அழைச்சிட்டு போகிறேன். ஐடி வேலை சேலரி எப்படி அதிகமாக தர்றாங்கலோ அதே மாதிரி வேலையும் புளிஞ்சு எடுத்திடுவாங்க சில நேரத்தில் நமக்கே கடுப்பா இருக்கும். நீ என்னை எதிர் பார்த்து நைட் சாப்பிடாமல் இருக்காத மேக்சிமம் அங்கேயே சாப்பாடு தந்திடுவாங்க காலையில் எப்போதும் போல கம்ப்யூட்டர் கிளஸிற்கு போ. நான் அடிக்கடி கால் பண்ணறேன் என கூறியபடி புறப்பட்டு இருந்தான்.
காலை எட்டு மணி, மதியம் ஒரு மணி, இரவு எட்டுமணிக்கு என அவ்வப்போது அழைத்து பேசிக் கொண்டு இருந்தான். அந்த வாரம் முடிந்த போது பொத்தமாக ஐந்து நாட்கள் விடுமுறையோடு மகிழ்ச்சியாக வீட்டிற்கு வந்திருந்தான்.
சுமித்ராவிடம் பேசும் போதும் அந்த மகிழ்ச்சி அப்படியே இருந்தது சுமித்ரா இந்த முறை என்னோடு நீயும் புறப்படு ஊருக்கு போயிட்டு வரலாம் மொத்தமாக ஐந்து நாள் லீவ் இருக்கு கோகுலும் சென்னை கிளம்பறான். ஒவ்வொரு தடவையும் உன்னோட அப்பா அம்மா தானே இங்கே வராங்க இந்த முறை நம்ம ரெண்டு பேரும் அங்கே போனா
சந்தோஷபடுவாங்கல்ல டிரையினுக்கு டிக்கெட் புக் பண்ணிடவா இவன் கேட்டுக்கும் போதே வேகமாக மறுத்திருந்தாள்.
இல்லை நான் வரலை நான் இங்கேயே இருக்கிறேன் நீங்க போயிட்டு வாங்க.
"தனியாக இருந்து என்ன பண்ண போறே சுமி என் கூட கிளம்பு”
"நான் நான் வேணும்னா அம்மாவை இங்கேவரச்சொல்லிக்கறேன்”
சொன்னவள் அதற்கு மேல் பேசாமல் தலை குனிந்து இருந்தாள்.
அது தான் ஏன்னு கேட்கிறேன் பதில் சொல்லு சுமி குனிச்சு இருந்தா என்னன்னு எடுத்துக்கறது நீ சொன்னா தான் எனக்கு தெரியும்.
என்ன சொல்லணும் அங்கே வந்தா எல்லோரும் என்னை வித்தியாசமாக பார்ப்பாங்க இப்போது அவளது குரலிலும் கோபம் லேசாக எட்டி பார்த்தது.
என்ன சொல்ல வர்ற எதுக்காக வித்தியாசமா பார்க்கணும்?
பேசறத யோசித்து தான் பேசறையா,,? சொல்லறதோட அர்த்தம் உனக்கு புரியுதா.
என்ன அர்த்தம் புரியணும் அங்கே பக்கத்தில் இருக்கறவங்க என்னை வித்தியாசமாக பார்ப்பாங்க உங்க கூட வந்தா நான் அங்கே வரமாட்டேன் இப்போ மட்டும் இல்லை எப்பவுமே
அவளுடைய அந்த பதில் குருவை உட்சகட்ட கோபத்தை தூண்டி இருந்தது. ஓ என்ன சொல்ல வர்றே உனக்கும் எனக்கும் கல்யாணம் முடிஞ்சாச்சு. உனக்கு ஞாபகம் இருக்கா நீ என் கூடவோ நான் உன் கூடவோ யாருக்கும் தெரியாம ஊரை விட்டு ஓடி வரலை புரியுதா எத்தனை நாள் இங்கேயே ஒளிஞ்சிட்டு இருக்க போறே என்றைக்கு இருந்தாலும் அது தான் நம்மலோட ஊரு அங்கே தான் போய் இருந்தாகணும். எத்தனை நாள் வயசானவங்களை இங்கேயும் அங்கேயுமா அலைக்கழிக்க போறே சொல்லு. அப்படி செஞ்சா உன்னை விடவும் சுயநலவாதி யாரும் இல்லை.
இவன் பேச ஆரம்பிக்கவும் இவனது பேச்சில் இருந்த உண்மை உறைக்க கண்கள் தானாக கலங்க ஆரம்பித்தது. அவளது முகத்தை பார்த்து பேசியவனுக்கு அதுவும் கோபத்தை தர
அழுதேன்னா என்ன பண்ணுவேன்னு தெரியாது சுமி ஒரு விஷயத்தை மனதில் பதியவச்சிக்கோ உனக்கும் எனக்கும் சட்டப்படி திருமணம் முடிஞ்சாச்சு ஊருல இருக்கறவங்களுக்கு பேச ஆயிரம் விஷயம் இருக்கு உன்னையும் என்னையும் கவனிக்கிறது அவங்க வேலை இல்லை. எனக்கு எங்க அம்மா தேர்ந்தெடுத்த பொண்ணு நீ. அதுமட்டும் தான் என் நினைவில் இருக்கு இதற்கு மேல் பேச எதுவும் இல்லை டிக்கெட் போடறேன் நைட் கிளம்பறோம் கொஞ்சம் யோசித்து பாரு ரெண்டு பேரும் அவங்க முன்னாடி போய் நின்றால் அவங்க முகம் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். அத நீயும் நானும் ரசிக்க போகிறோம். நாலு நாளைக்கு தேவையானது என்னென்ன வேண்டுமோ எடுத்து வை. பேச்சு வார்த்தை முடிந்தது என்பது போல தனது லேப்டாப்பை திறந்து வைத்து அமர்ந்து கொண்டான்.
அமர்ந்து இருந்தவனுக்கு கோபம் நிறைய இருந்தது. ஏன் இப்படி இருக்கறா மனசுக்கு தப்புன்னு தோணின எதையும் செய்யலையே ஒவ்வொருத்தரும் இவளுக்கு நல்லதுன்னு தோணினத பார்த்து பார்த்து செய்யும் போது ஏன் இவளுக்கு இப்படி தோணுது எது எப்படி இருந்தாலும் இதை இப்படியே வளர விடக்கூடாது.
அப்போது மட்டும் அல்ல இரவு அவளது பேக்கை சுமந்தபடி இவளோடு டிரைனுக்கு கிளம்பி இருந்தான் கோயம்புத்தூர் வந்து டாக்சி பிடித்து இவளது வீட்டிற்கு வரும் போது வரையில் இவனிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை சுமித்ரா. அத்தனை நாள் அவளிடம் கோபத்தை காட்டாதவனின் கோபம் அவனது பிடிவாதம் இவளை பேசவிடாமல் தடுத்து இருந்தது.
வீட்டின் வாசலில் இறங்கியவுடன் இவளது தாய்தந்தையை பார்க்கும் போது வரையே அந்த கோபம் இருந்தது அவர்களது மகிழ்ச்சியை பார்த்த போதே அவன் மேல் இருந்த கோபம் பாதியாக குறைந்து இருந்தது.
இருவரையும் பார்த்தவுடன் வேகவேகமாக சமையலில் ஈடுபட்டிருந்தார் மல்லிகா. இவளோடு இவள் அறைக்குள் நுழைந்தவன் பதினோருமணிக்கு அம்மாகிட்ட வர்றதா சொல்லி இருக்கிறேன் காலையில் சாப்பிட்டுட்டு கிளம்பறேன் வந்ததும் கிளம்பினா உன்னோட அம்மா அப்பா கஷ்டபடுவாங்க என்றபடி குளிக்க தேவையானதை எடுத்தவன் குழந்தைகளின் சத்தம் கேட்க என்ன உன்னோட ப்ரெண்டுங்க வந்தாச்சு போல இருக்கு அவங்கல பார்த்துவிட்டு வந்து குளிக்கறேன் என நகர்ந்து வெளியேறினான்.
இவன் வாசலுக்கு போகவும் இவனை பார்த்தவர்கள் இவன் அருகில் வர அதில் ஒரு சிறுவன் ஐ சாக்லேட் அங்கிள் எப்படி இருக்கறிங்க எங்களுக்கு சாக்லேட் இல்லையா என கேட்க
அதெப்படி இல்லாமல் போகும் இதோ எப்பவும் போல நிறைய இருக்கே பாக்கெட்டில்
ம் சீக்கிரம் தாங்க அக்காவை பார்க்க போகணும்
இதோ அக்கா குளிக்க போய் இருப்பா எங்க கூட்டமாக புறப்பட்டாச்சு
கிரிக்கெட் விளையாட வர்றிங்களா விளையாடலாம்.
ம் விளையாடலாமே எங்க அன்றைக்கு மாதிரி வாசலிலேயா
ஆமாம் அங்கிள் வாங்க நீங்க எங்க டீம் என ஒருவன் ஆரம்பிக்க அடுத்தவனோ இல்லை எங்க டீம் என சொல்ல
டேய் நீங்களே முடிவு எடுங்கள் என இவன் அமரவும் கடைசியாக பூவா தலையா டாஸ் போட்டு இவனை தேர்ந்தெடுத்தனர். இவன் விளையாட ஆரம்பிக்க அப்போது தான் தலைக்கு குளித்து விட்டு வாசலுக்கு வர சிறுவர்களின் சந்தோஷ கூச்சலோடு இவனின் சத்தமும் கேட்டது. சற்றே நகர்ந்து இவர்களை வேடிக்கை பார்க்க ஏதுவாக நின்றவள் அப்போது தான் யோசித்தாள் எதை பற்றியும் யோசிக்காமல் சிறுவர்களோடு சிறுவனாக விளையாடும் இந்த எளிய குணம் தான் தனது தாய் தந்தையிடம் அவர்கள் கேட்கவும் திருமணத்திற்கு உடனே சம்மதிக்க தலையாட்ட வைத்ததோ இதை நினைத்தபடி அவனை மட்டுமே பார்த்து கொண்டு இருந்தாள்.
சற்று நேரத்தில் உணவு தயாரித்து விட்டு இவர்களை அழைக்க வந்த மல்லிகா கூட மகளின் பார்வை குருவின் மேல் இருப்பதை பார்த்தவர் சத்தமின்றி வீட்டிற்குள் சென்று இருந்தார். பத்து மணியை தாண்டிய போது வீட்டிற்குள் வந்தவன் வேகமாக குளித்து உணவு உண்டு புறப்படும் போது நேரம் பதினோரு மணியை தாண்டி இருந்தது.
சுமித்ராவின் அறையில் இருந்த தனது மொபைலை பாக்கெட்டில் எடுத்து வைத்தபடி சரி நான் புறப்படறேன் சுமி. ஏதாவதுன்னா போன் பண்ணு உடனே வந்திடுவேன் என்ன கூறியபடி புறப்பட சேர்ந்து பார்க்கும் போது தனது தாய் தந்தையின் முகம் மலர்ந்ததை போல தானே குருவின் தாயாரின் முகமும் மலரும் என நினைத்தவள் வாசலுக்கு அருகில் சென்றிருந்த குருவின் கையை பிடித்து நிறுத்தியிருந்தாள்.
பிடித்து இருந்த கையை சற்று ஆச்சர்யத்தோடு பார்த்தவன் என்ன என கேட்க
நானும் உங்கள் கூட வீட்டுக்கு வருகிறேன் என இவள் கூறவும் அப்படியே அவனது முகம் பூவாய் மலர்ந்திருந்தது நிஜமாகவா அம்மா பார்த்தா ரொம்ப சந்தோஷபடுவாங்க என கூறியபடி அழைத்து கொண்டு புறப்பட்டான்.
திலகவதி கூட அவ்வளவு மகிழ்ச்சி இரண்டு பேரும் ஒன்றாக வந்தது. திலகவதியை பார்த்ததுமே சுமித்ரா அணைத்தபடி அழ ஆரம்பித்து இருந்தாள். திலகவதி்யின் கண்களும் லேசாக கலங்கி இருந்தது. இந்த அழுகை மகிழ்ச்சியாக வந்ததா இல்லை வருத்தத்தில் வந்ததா எதுவுமே குருவிற்கு புரியவில்லை. இந்த பொண்ணுங்க எப்போது எதுக்காக அழறாங்கன்னே தெரியலைடா என நினைத்து போதும்மா எதுக்கு இந்த கண்ணீர் அதுதான் வந்திட்டோம்ல்ல
இவன் பேச்சு எல்லாம் திலகவதிக்கு கேட்கவில்லை ஏம்மா இவன் உன்னை திட்டறானா கேட்கவும்
ஆமாம் என்பது போல சுமித்ரா தலையாட்ட.
ம்மா நான் வரலை இந்த விளையாட்டுக்கு ரெண்டு பேரும் சேர்ந்து என்னை அழவைக்க ப்ளான் போடறிங்களா நான் கடைக்கு போய் அப்பாவை பார்த்துட்டு வரேன் பேசிட்டு இருங்க என விலகியிருந்தான்.
குரு திரும்ப வீட்டிற்க்கு வரும் மாலை ஆகி இருந்தது. திலகவதியின் முகமே சொல்லியது இவர்கள் சேர்ந்து வந்தது
அவருக்கு அவ்வளவு மகிழ்ச்சியை தந்து இருந்தது என்பதை
சுமித்ராவிடம் இங்கேயே இருக்கிறாயா இல்லை உன்னோட வீட்டில் கொண்டு போய் விடணுமா என கேட்க
அம்மாகிட்ட கொண்டு போய் விட்டுடுங்க என்ன இவள் சொல்லவும் திலகவதியிடம் சொல்லி விட்டு புறப்பட்டான்.
தாயாரின் மகிழ்ச்சி முகம் இவனையும் வேறு மாதிரி மாற்றி இருந்தது முழுக்க முழுக்க இவளிடம் வம்பிலுக்கும் மனநிலையில் இருந்தான். சுமி நான் செம ஹேப்பியா இருக்கிறேன் நாம ரெண்டு பேரும் நாளைக்கு எங்காவது போகலாம்மா ரெண்டு இடம் முடிவு பண்ணி இருக்கிறேன் எங்க போகலாம்ன்னு சொல்லு
எந்த இடம்
ஒன்று ஊட்டி இன்னொன்று மங்கிபால்ஸ் எங்கே போகலாம். ஆனா முக்கியமான கண்டிசன் ஒன்று இருக்கு அவனது சிரிப்பே ஏதோ விஷமமாக யோசிக்கிறான் என்பதை சொல்ல என்ன என்பதை போல அவனது முகத்தை பார்த்தாள்.
ஊட்டிக்கு போகலாம் கண்டிசன் வெரி சிம்பிள் பெங்களூரில் மாதிரி நடுவில் தலையணை வைக்க கூடாது. இவன் இப்படி சொல்லவும் என்னடா இத்தனை நாள் இல்லாமல் இப்படி பேசுகிறானே என்பது போல பார்க்க முகத்தில் தெரிந்த குறும்பு இவளையும் தொற்றிக் கொண்டது.
அடுத்த இடம்னா
பெருசா ஒன்றும் இல்லை போகும் போது அங்கே சாப்பிட மக்காச்சோளம் விற்பாங்க ஐந்து ஆறு வாங்கி கையில் தந்து அழைச்சிட்டு போவேன்.
சொல்லும் போதே எதையோ நினைத்து சிரிக்க
உண்மையை சொல்லுங்க எதை நினைத்து சிரிக்கறிங்க
கையில் இருக்கற மக்காச்சோளத்தை குரங்கு எப்படி பிடித்து இழுக்கும்ன்னு யோசித்தேன் இப்படி முடியை பிடித்து இழுக்குமோ முன்பு போலவே ஜடையை இழுத்தவனுக்கு கொஞ்சம் பயம் வந்து இருந்தது முன்பு போல அழுதுவிட்டால் என்ன செய்வது என ஆனால் இப்போது இவன் சொன்னதை கேட்டவள் சிரிக்க மட்டுமே செய்தாள் ப்ராடு என்றபடி இவனின் முதுகில் இரண்டு அடி அடித்தபடி இருவருக்கும் நடுவே மாற்றம் இயல்பாக நடக்க ஆரம்பித்து இருந்தது.
தொடரும்.
 

Kavisowmi

Well-known member
அன்பின் ராகம் _30
. இங்கே வந்து மூன்று நாள் முடிந்திருங்க புறப்பட தயாராகிக்கொண்டு இருந்த குரு மாடியறையில் ராமின் அறையை திறந்து அமர்ந்திருந்தான். ராமின் புகைப்படம் அனைத்தையும் அவனது ரூம்பில் கொண்டு வந்து வைத்திருந்தனர். ராம் இருந்தபோது எப்படி இருந்ததோ அதே போல் இப்போதும் களையாமல் அடுக்கியபடி இருக்க . இவனை தொடர்ந்து திலகவதியும் படி ஏறி வந்து இருந்தார்.

இவன் சுமித்ராவை அழைத்து கொண்டு இங்கே வரப் போவதை திலகவதி சொன்னபோதே கிருஷ்ணன் சொல்லிவிட்டார். அந்த பொண்ணு வந்ததுன்னா எக்காரணத்தை கொண்டும் ராமை பற்றிய பேச்சை எடுக்க கூடாது. இறந்தவனை நினைத்து இருக்கறவங்கல கவனிக்காம விட கூடாது என தெளிவாக பதில் சொல்லி விட்டு சென்றிருந்தார்.

ஏற்கனவே ஒவ்வொரு முறை வரும் போதும் மாடி அறைக்குள் செல்ல விடாமல் அப்படியே அணுப்பிஇருக்க
இம்முறை திலகவதியிடம் சொல்லாமல் வந்தவன் அறையை திறந்து இருந்தான்.

திறந்தபோதே ராமோடு இருந்த நாட்கள் மனதில் படமாக விரிய கண்களை மூடி அமர்ந்து இருந்தான். இதோ இந்த இடத்தில் தான் அவனோடு சண்டையிட்டது. இவனுக்கு போக்குகாட்டியபடி ஓடிய இடம் கூட இது தான்.

சட்டென தோன்றிய ஞாபகத்தில் வேகமாக ப்ரோ அடியில் கை வைத்து தேட இவன் அவனிடம் பிடிங்கிய பாலை ஒழித்து வைத்த இடம் அது பால் அப்படியே இருக்க இன்று அவன் இல்லை.

மாடி ஏறி வந்த திலகவதி இவனை பார்த்தவள் குரு என்ன தேடற புறப்படலையா அப்பா புறப்பட்டாச்சான்னு கேட்டு போன் பண்ணினாங்க எழுந்திரு அவனது லேசாக கலங்கிய கண்னை பார்த்தபடி கூற ஏன்மா அவ்வளவு சீக்கிரம் போனான்.
இங்கே இந்த இடத்தை பார்க்கவே முடியலை எப்போதாவது இப்படி ஒரு நிலைமை வரும்ன்னு நினைத்து பார்த்தோமா?

எவ்வளவு அழனுமோ அழுதிடு குரு இனி அழகூடாது. இத மாதிரி உன்னை பார்க்க கூடாதுன்னு தான் இங்கே வரவிடலை.

கடைசியாக இங்கே தான் அவன்கிட்ட பேசினேன்.

போதும் குரு புறப்படு இதற்கு மேல பேசாதே என்னோட மொத்த ஆறுதலும் இப்போதைக்கு நீயும் அந்த பொண்ணும்தான் மறுபடியும் அழறத பார்க்க முடியாது. அப்பா என்கிட்ட சொன்னதுதான் உனக்கும். அவனை நினைத்து உன்னை கவனிக்காம விடக்கூடாது அடிக்கடி வா. தினமும் ஃபோன் பண்ணு. அந்த பொண்ணையும் இங்கே அழைச்சிட்டு வா அவளுக்கு விருப்பம் இருந்தா மட்டும் வற்புறுத்தாத உன்னோட பிடிவாதம் அந்த பொண்ண வருத்த பட வைக்க கூடாது. விருப்பம் இல்லைன்னா கஷ்டப்படுத்தாத எனக்கு நம்பிக்கை இருக்கு உன்மேல அந்த பெண்ண நல்லா வச்சுக்குவேன்னு புறப்படு அங்கே சுமித்ரா ரெடி ஆகி உனக்காக காத்திட்டு இருப்பா

அப்போது புறப்பட்டு வந்தவன் அடுத்தடுத்து வேலை சரியாக இருக்க எங்கேயும் அவனால் செல்ல முடியவில்லை இரண்டு மாதம் தாண்டிய போது விஷாலியின் திருமணத்திற்கு சென்னைக்கு அழைத்து சென்றிருந்தான். முதல் நாள் காலையிலேயே இவளோடு சென்றிருக்க ஏற்கனவே சென்னையில் இருந்த காரணத்தினால் அங்கே இருக்கும் இடங்களுக்கு இவளை அழைத்து கொண்டு சுற்றியவன் மாலை ஐந்து மணியை தொடும் போது மெரினா கடற்கரைக்கு அழைத்து வந்தவன் இவள் கடல் நீரில் விளையாடுவதை பார்த்தபடி சற்று தொலைவில் அமர்ந்து வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தான்.

ஆறு மணியை தொடும் போது எழுந்தவன் சுமி போகலாம் ரூம்பிற்கு போய் டிரஸ்சேன்ஜ் பண்ணிட்டு கிளம்ப சரியா இருக்கும்.

ப்ளீஸ் ப்ளீஸ் இன்னும் ஐந்து நிமிடம் அவள் கண்கள் சுருக்கி கெஞ்சியபடி கேட்டுவிட்டு மறுபடியும் தண்ணீரில் கால் நனைக்க எப்போதும் சுமித்ரா சொல்வது தான் எங்கு அழைத்து சென்றாலுமே புறப்பட சொல்லும் போது கேட்பது

திருந்தவே மாட்டே என்றபடி மேலும் ஐந்து நிமிடம் தாண்டி இவளை அழைத்து கொண்டு புறப்பட்டான்.

மாலை வரவேற்பிற்கு மண்டபத்திற்கு வந்து இருக்க மேடையில் வண்ணகற்கள் பதித்த லெகன்காவில் விஷாலி நின்றிருக்க அருகில் அதே நிறத்தில் ஷர்வானியில் மாப்பிள்ளை சிவா அவளோடு நின்றிருந்தான். கூட்டம் சற்று அதிகமாகவே இருந்தது.

பவித்ராவுக்கு ஒன்பது மாதம் மத்தியில் இருக்க ஒரே இடத்தில் சற்றே சோர்வாக அமர்ந்து இருந்தாள். இங்கே வரவுமே சுமித்ரா அவளோடு இணைந்து கொண்டாள்.

கோகுல் குருவை பார்த்தவன் காலையிலேயே வருவேன்னு எதிர் பார்த்தேன் இப்போது வர்றே விஷாலி சரியான கோபத்தில் இருக்கறா

அவள்கிட்ட பேசினா சரி ஆகிடுவாடா. அப்புறம் உடனே அவங்க யூஎஸ் புறப்படணுமா இல்லை இங்கே இருப்பாங்கலா.

இந்த வாரம் முழுக்க இங்கே தான் அடுத்த வாரம் கிளம்பிடுவாங்க.

பவித்ராவிற்கு எப்போ டெலிவரி டேட் தந்து இருக்கறாங்க வந்ததும் பார்த்தேன் ரொம்ப டயர்டா தெரியறாங்க”

"இன்னும் பத்து நாள் இருக்கு ஒரு இடத்தில் உட்கார்ந்தால் தானே ஓடிக்கிட்டே இருந்தா இப்ப தான் இனி நகரக்கூடாதுன்னு சொல்லி விட்டுட்டு வந்து இருக்கிறேன். நைட் இங்கே தானே தங்குவே இல்லை போகணுமா”

" வந்ததே லேட்டு மதியமே வீட்டுக்கு வரச்சொன்னா எப்படியும் நிறைய பேர் இருப்பாங்க எனக்கு இவளையும் இவளோட அம்மா அப்பா தவிர வேற யாரையும் தெரியாது் அதனால வரலை இனி இங்கே உன்கூட மண்டபத்தில் தான் இருக்க போறேன் இனி போனா அவ்வளவு தான் விஷாலி பேசியே சாகடுச்சிடுவா”

"பயம் இருந்தா சரிதான் வா கோகுலின் முதுகில் தொற்றியபடி பின் தொடர்ந்தான் குரு” அடுத்த நாள் காலை குறிப்பிட்ட நேரத்தில் சுபயோக முகூர்த்தத்தில் சிவா விஷாலியின் கழுத்தில் திருமாங்கல்யம் பூட்டி இருந்தான். வரிசையாக வந்து மேடையில் வாழ்த்து கூற குருவும் சுமித்ராவும் மேடை ஏறியவர்கள் வாழ்த்து கூறியபடி குரு சிவாவிடம் திரும்பியவன் "ப்ரோ நான் சொன்னது மாதிரி செய்ங்க என கூற அவனும் சிரித்தபடி சற்றே வெட்கத்தோடு தலையாட்ட”இதை பார்த்த விஷாலி
டேய் என்ன சொன்ன அவனிடம் என்று கேட்க சொல்மாட்டேன் என்பதுபோல் மறுப்பாக தலையாட்டியவன்.

ப்ரோ சொல்லக்கூடாது இது எங்களுக்குல்ல சீக்ரெட் அவள் அடிச்சு கேட்டாலும் சொல்ல கூடாது என்றபடி சிரித்துக்கொண்டே இறங்கி இருந்தான்.

அன்று பதினோரு மணி வரை மண்டபத்தில் இருந்தவர்கள் அப்படியே பெங்களூரிற்கு வண்டி ஏறி இருந்தனர். வந்ததுமே வழக்கம்போல் வேலை அவனை ஆட்கொண்டு விட ஒன்றை கவனிக்க தவறி இருந்தான்.
சுமித்ராவின் யோசனையை சுமந்தபடி சுற்றிக்கொண்டு இருந்த அந்த தோற்றத்தை

வீட்டிற்கு கூட வந்தபிறகும் லேப்டாப்பைபில் வேலையை தொடர்ந்து கொண்டு இருந்தவன் கண்கள் சற்றே எரிச்சல் ஆக கைகளில் சொடக்கு எடுத்தபடி இவளை பார்க்க அப்போது தான் கவனித்தான். அந்த முகத்தில் இருந்தது கவலையோ,வருத்தமோ அல்ல யோசனை அதுவும் சற்றே ஆழ்ந்த யோசனை இவன் அவளை கவனிபபதை கூட அவளால் உணர முடியவில்லை அந்த அளவிற்கு ஆழ்ந்து இருந்தாள். இரண்டு நிமிடம் அவளை பார்த்தவன் சுமித்ரா,சுமி என அழைக்க இவள் திரும்பி இவனின் முகம் பார்க்கவும் "இங்கே வா உன்கிட்ட கொஞ்சம் பேசணும்".

என்ன சொல்லுங்க என்றபடி அருகில் வர அமர்ந்து இருந்த ஷோபாவில் இவளை பிடித்து அருகில் அமர்த்தியன். அவளது கைகளை தனது கைகளுக்குல் வைத்தபடி
"சொல்லு என்ன பிரச்சினை ஏன் ஒரே யோசனையோடு சுத்தற நேற்றும் கவனிச்சேன் வேலை அவசரத்தில் எதுவும் தோனலை இப்ப பார்க்கும் போது தெரியுது என்ன ஆச்சு"

"அது அது வந்து "

சொன்னாதான் தெரியும் சுமி நீ சொல்லாமல் எனக்கு என்ன தெரியும். இப்போ எல்லாம் நான் என்ன வாங்கி தந்தாலும் நீ வேண்டாண்ணு தான் மறுக்கற அன்றைக்கு சென்னை கடற்கரையில் உனக்கு பிடிச்சமாதிரி வாங்கும் போதும் கூட வேண்டாம்ன்னு சொன்னே

"எனக்கு பார்ட்டைம் வேலை வாங்கி தர்றிங்களா” கேட்டதிற்கு சட்டென யோசிக்காமல் இவனிடம் கேட்டவளை வித்தியாசமான பார்த்தவன்.

வேலைக்கு இப்போது என்ன அவசியம் வந்தது சுமி. என்னுடையது எல்லாமே உனக்கு தானே நான் ஏதாவது உன்கிட்ட கணக்கு கேட்றேனா? இல்லையே அப்புறம் என்ன ஏன் உனக்கு இது மாதிரி தோனுது பணத்தேவை இருக்குதுன்னா ஏடிஎம் ல எடுத்துக்கோ உன்கிட்ட தானே என்னுடைய ஏடிஎம் கார்டு தந்து இருக்கிறேன். எதுவுமே கேட்க மாட்டேன்.

"நான் உங்களுக்கு சொன்னா புரியாது" சொன்னபடி எழப்போனவளை மறுபடியும் அமர வைத்தவன் புரிஞ்சுக்கறேன் சொல்லு

காலையில் கம்ப்யூட்டர் கிளாஸ் போட்டுவிட்டு வந்தா எப்படியும் மதியம் வீட்டுக்கு வந்திடறேன். முன்னாடி பவித்ரா இருந்தாங்க அவங்க இங்கே வருவாங்க இல்லாட்டி நான் அங்கே போவேன் இப்போது சும்மாவே இருக்கறமாதிரி இருக்கு பணத்தேவை எதுவும் எனக்கு இல்லை.

இவ்வளவு தானா நானும் என்னவோ நினைச்சிட்டேன். அதுக்கு எதுக்காக வெளியே வேலைக்கு போகணும் வீட்டில் இருந்தே செய்ய நிறைய வேலை இருக்கு. ரெண்டு நாள் டைம் குடு உனக்கேற்ற வேலையை செலக்ட் பண்ணிட்டு வந்து சொல்லறேன். முதல்ல உனக்கு என்ன தெரியும். எந்த சப்ஜெட் உனக்கு பிடிக்கும்.

கிராஃப்ட் நல்லா செய்வேன். சப்ஜெட்க்னா மேக்ஸ் ரொம்ப பிடிக்கும். ஏன் உங்கள் முகம் இப்படி போகுது.

எனக்கு பிடிக்காத சப்ஜெட்டே மேக்ஸ்தான்.

ப்ளஸ்டூ எத்தனை மார்க் எடுத்திங்க மேக்ஸ்சப்ஜெட்ல கொஞ்சம் ஆர்வமாக கேட்க

தொன்ணிற்றி ரெண்டு இவனது பதில் கேட்கவும் முகத்தை சுறுக்க அவளின் தலையை பிடித்து ஆட்டியபடி

மற்ற சப்ஜெட்டில் எல்லாமே
நைன்டி எய்ட் ,நைன்டி நயன் அந்த மாதிரி

ரேங்க் ஹோல்டறா நீங்க
தெரியாதா? அதெல்லாம் ஒன்றும் யூஸ் இல்லை அந்த நேர சந்தோஷம் மட்டும் தான் நீ சொல்லு மேக்ஸ் தெளிவாக புரியற மாதிரி சொல்லி தர தெரியுமா

"ம் தருவேன்"

இது போதும் சுமி. டியூசன் எடு கைல கம்ப்யூட்டர் இருக்கு அதில் சொல்லி தரலாம் டெய்லி ரெண்டு மணி நேரம் விசாரிச்சுட்டு வந்து சொல்லறேன் வேற என்ன செய்யலாம்ன்னும் யோசிக்கலாம் ஒகே வா. இப்போதைக்கு அவசரமா உனக்கு வேலை தர்றேன் எனக்கு கண்ணு செமையா எரிச்சல் ஆகுது இந்தா இத எனக்கு டைப் பண்ணி தா.

இந்த வேலைக்கு இப்பவே பைசா தர்றேன்.
செஞ்சு தருகிறாயா கொஞ்சம் நேரம்
கண்ணை மூடிட்டு படுக்க போறேன். ஆர்வமாக அருகில் அமர்ந்து அவன் சொன்னதை கேட்டுக் கொண்டவள் அதை போலவே வேலை செய்ய துவங்கினாள்.

கண்களை மூடியபடி ஷோபாவில்
சாய்ந்து அமர்ந்தவன் "டைப்பிங் தப்பு தப்பா அடித்து மறுபடியும் என்ன வேலை செய்ய வைக்க கூடாது" இதை சொல்லும் போதே பட்டென அவனது தோளில் அடி விழுந்தது.

"அது தானே பார்த்தேன் ரெண்டு நாட்களாக அடிக்காமல் சுத்தறேயேன்னு”

அடுத்த நாள் வரும்போதே ஒய்ட் போர்ட்டோடு வந்தவன் ஹாலின் ஒரு மூலையில் மாட்டியபடி கையில் கொண்டு வந்திருந்த புத்தகத்தை இவளிடம் தந்தவன் இது டென்த் மேக்ஸ் புக் எங்க ஒரு சாப்டர் போர்ட்டுல லெசன் எடு பார்க்கலாம்.

வேலை வாங்கி தர்றேன்னு சொன்னிங்க இது என்ன?

மொதல்ல சொன்னது செய்யுமா அப்புறம் உனக்கு வேலை தர்றேன் வேலை எல்லாம் ரெடி முதல்ல எனக்கு புரியுதான்னு பார்க்கலாம் அப்புறம் சொல்கிறேன் நான் பாட்டுக்கு உன்னை ஆஹா ஓஹோன்னு சொல்லி அது தப்பாகிடுச்சுன்னா அதுக்குதான்

ஓவரா ஓட்டாதிங்க அதெல்லாம் நல்லாவே சொல்லி தருவேன் என்றவள் முதல் பேஜ்ஜை பார்த்து நடத்த ஆரம்பிக்க வாவ் அப்படி சொல்லலாம் போல இருந்தது அவளது குரலுக்கு அவள் நடத்துவது ஏதோ சங்கீதம் இசைப்பது போல தோன்ற "கைகளை தட்டியவன் ஒகே வேலை சக்சஸ் வா அருகில் அமர வைத்து ஆன்லைன் டியூசன் தினமும் இரண்டு மணி நேரம் மாத சம்பளம் நாலாயிரம் ரூபாய் இன்றையிலிருந்தே நீ ஆரம்பிக்கலாம். என்னோடது ஒரு கன்டிசன் இருக்கு
அதுக்கு சம்மதிக்கணும் "

என்ன?

"முதல் மாதம் சேலரிய எனக்கு மட்டும் தான் செலவு பண்ணனும். இவன் சொன்னதும் அவளது முகம் பூவாய் மலர்ந்தது”

"ஒகே என்றபடி அமர”

"இரு அவசரப்படாதே இப்போது எடுத்த சாப்டரை மறுபடியும் எடு என்னோட மொபைல்ல விடியோ எடுக்கணும்”

இது எதுக்கு?

"எதுக்கா யூ டியுப்ல உனக்காக ஒரு சேனல் ஆரம்பித்து இருக்கிறேன் சுமி டியூசன் அப்படின்னு இத அங்கே போஸ்ட் பண்ணனும்”

"இதெல்லாம் வேண்டாம் ப்ளீஸ் டியூசன் மட்டும் போதும்" சுமித்ரா இவனிடம் கேட்க

"உன்னோட வாய்ஸ் நல்லா இருக்கு சுமி இதை உன்னால செய்ய முடியும் ரெஸ்பான்ஸ் இல்லையின்னா விட்டுவிடலாம். ஆனால் ரொம்ப சின்ன பொண்ணா தெரியற இந்தா என்னோட கண்ணாடியை போட்டுட்டு
லெசன் எடு பார்க்கலாம் அவனது கிண்டலை உண்மை என நினைத்து அவன் கையில் இருந்து கண்ணாடியை வாங்கியவள் கண்களில் போட முதலில் கண்ணாடி சற்றே பெரியது அடுத்தது கண்ணாடி அணியவும் சுத்தமாக கண் அவளுக்கு தெரியவில்லை”

"கண் வலிக்குது சரியா தெரியலை”

"அறிவாளி அதுக்காக தானே தந்தேன் கண்ணாடியில் பாட்டி மாதிரி இருக்கற" என்றபடி இவன் எழவும் இவனது கிண்டலை புரிந்து கொண்டவள் உங்களை என்றபடி கைகளில் கண்ணாடியை கழட்டியபடி இவனை துறத்தவும் சரியாக இருந்தது.

இசைக்கும் அன்பின் ராகம்.
 

Kavisowmi

Well-known member
அன்பின் ராகம்_31
அன்றைய நாளுக்கு பிறகு நாட்கள் வேகமாக நகர்ந்து கொண்டு இருந்தது போல் தோன்றியது சுமித்ராவிற்கு அடுத்து பதினைந்து நாட்கள் தாண்டி இருக்க பவித்ராவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்து இருந்தது இருவருமே மறுபடியும் சென்னைக்கு சென்று பவித்ராவை பார்த்து விட்டு உடனே திரும்பி இருந்தனர்.

மேலும் இருவருக்கு ஆன்லைனில் டியூசன் எடுத்து கொண்டு இருந்தாள் சுமித்ரா யூடியூப்பில் கூட இவளது அப்டேட் அனைத்தும் நல்ல விதமாக அமைய இரண்டு நாட்களிலேயே ஆயிரம் ஷப்ஸ்கிரைபரை பெற்று அடுத்த இரண்டு மாதத்தில் அதிலிருந்தும் இவளுக்கு வருமானம் வந்து கொண்டு இருந்தது.

பிஸிமாகவே சுற்றி கொண்டு இருந்தாள் அவளது அக்கவுண்ட்டில் கூட கனிசமாக வேகமாக பணம் உயர்ந்து கொண்டு இருந்தது. இவளது கிராப்டை கூட அங்கே யூடியூப் அப்டேட் செய்திருந்தான் அதற்கும் நிறைய கமெண்ட் வந்து கொண்டு இருந்தது.

இவளது அப்டேட்களை பார்த்தபடி சின்ன சின்ன மாறுதல்களை அவ்வப்போது சொல்லி திருந்திகொண்டு இருந்தான். ஒரு நாள் தலையை மறைத்த தொப்பியோடு பாடம் எடுக்க அடுத்த நாள் குச்சியோடு என விதவிதமாக இவளை போர்டில் எடுக்க வைத்து கொண்டு இருந்தான். இதுவும் அவனுக்கு பிடித்தே இருந்தது. அனைத்துமே முடியும் வரை வேடிக்கை பார்ப்பவன் ஆனாலும் சுமி முன்னாடி ஆளே இல்லாம எப்படி பத்து பேருக்கு சொல்லித்தர்ற மாதிரி பில்டப் கொடுக்கற ஏதாவது சொல்லி அவ்வப்போது அடியும் வாங்கிக்கொண்டு இருந்தான்.

இதெல்லாம் ஒரு புறம் இருக்க அவனுக்கு அடுத்த மகிழ்ச்சி செய்தி அன்றைய மெயிலில் வந்து இருந்தது புகைப்பட போட்டிக்கு இவன் அனுப்பி இருந்த புகைப்படம் முதலாம் பரிசுக்கு தேர்வாகி இருக்க பரிசுப்பணம் கிட்டத்தட்ட இந்திய மதிப்பில் ஐம்பது லட்சம் உட்சக்கட்ட மகிழ்ச்சியான செய்தி அவனுக்கு அது அதே மகிழ்ச்சியோடு வந்தவன் சுமித்ராவை தலை உயரத்திற்கு தூக்கி சுற்றியபடி சுமி நான் ஹேப்பியா இருக்கிறேன் என்றபடி ஷோபாவில் இறக்கி விட்ட வன் அருகில் அமர

ஒரு நிமிடம் பயந்திட்டேன் இப்படியா தலைக்கு மேலும் தூக்கி சுற்றுவிங்க என்ன விஷயம் இந்த இடைப்பட்ட நாட்களில் கணவன் என்ற வகையில் நெருங்கா விட்டாலும் நல்ல நண்பனாக அவளிடம் நெருங்கி இருந்தான்.

சுமி நாம அனுப்பின போட்டோ போட்டியில் வின் ஆகி இருக்கு. சொல்லு உனக்கு என்ன வேணும் இன்றைக்கு வாங்கி தரேன்.

வீட்டுக்கு சொல்லிட்டிங்களா அம்மா அப்பா கிட்ட

ஃபஸ்ட் உன்கிட்ட தான் சொல்லணும்ன்னு வந்தேன் இனிதான் ஃபோன் பண்ணனும். அவனது சட்டை பாக்கெட்டில் இருந்த மொபைலை எடுத்து அவன் கையில் தந்தவள் முதலில் அவங்களுக்கு ஃபோன் பண்ணி சொல்லுங்க அதற்கு பிறகு எனக்கு என்ன வாங்கி தர்றதுன்னு யோசிக்கலாம்.

ஐந்தே நிமிடம் வந்திடறேன் என்றபடி ஃபோனோடு நகர தலைக்கு மேல் சுற்றியது ஞாபகத்தில் வர முகம் லேசாக சிவக்க ஆரம்பித்தது. தனது கைகலால் தலையில் தட்டியவள் சந்தோஷத்தில் என்ன செஞ்சோம்ன்னே தெரியாம போறாங்க நீ வேற அதையே யோசிக்கற என்றபடி நகர்ந்து சமையல் அறைக்குள் சென்றிருந்தாள்.

இவள் காஃபி கலந்து எடுத்து வரும் போது பேசி முடித்து கொண்டு அமர கையில் காஃபியை கொடுத்தவள்.

சொல்லியாச்சா

எல்லோர்கிட்டேயும் சொல்லிவிட்டேன் உன்னோட அம்மாவுக்கு பயங்கர சந்தோஷம் பேசும் போது அவங்க குரல்ல தெரியுது. அம்மா,அப்பா கிட்ட இந்த பணத்தை என்ன பண்ணலாம்ன்னு கேட்டு இருக்கிறேன் நாளைக்கு சொல்லறேன்னு சொல்லி இருக்கறாங்க கிளம்பு கிளம்பு இன்றைக்கு வெளியே போகலாம். நமக்கு நைட் டின்னர் வெளியே தான். நல்ல ஹோட்டலுக்கு போறோம் ஏற்கனவே நீ எனக்கு டீரிட் தர்றேன்னு சொன்னது பெண்டிங் இருக்கு இன்றைக்கு நீ எனக்கு தர்ற நான் உனக்கு தர்றேன். குயிக்கா டிரெஸ்சேன்ஜ் பண்ணிட்டு ஓடிவா பார்க்கலாம்.

ஐந்து நட்சத்திர ஓட்டலில் மூன்லைட் டின்னருக்கு ஆர்டர் செய்தவன் இவளையும் அழைத்துக்கொண்டு தனது டேபிளை தேடி அமர்ந்து அரையிருலில் சுற்றிலும் வேடிக்கை பார்த்தபடி அமர்ந்து இருந்த சுமித்ரா,
"இந்த இடமே பிடிக்கலை எப்போதும் போற இடத்திற்கே அழைச்சிட்டு போய் இருக்கலாம்ல”

'அப்போ எனக்கு நீ டீரீட் தர மாட்டே எனக்கு இங்கே தான் வேணும்" குரு கேட்க

"ஒகே ஒகே எனக்கு இடம் வித்தியாசமான இருந்தது அதனால சொன்னேன் நீங்களே எனக்கும் சேர்ந்து ஆர்டர் பண்ணிடுங்க”

அருகில் இருந்த மெனுகார்ட்டில் இவன் ஆர்டர் செய்ய ஒவ்வொன்றாக வரவர இது நல்லாயிருக்கும் டேஸ்ட் பாரு என்ன ஒவ்வொன்றாக அவளுக்கும் தந்து இவனும் உண்டு முடித்து பில் வரும் போது பார்த்தவள் அதே திகைபோடு இவனை நோக்கினாள். பில் மொத்தமாக அப்போதே மூன்று ஆயிரத்தை தாண்டி இருந்தது. இவனின் முகம் பார்த்தவள் என்னது இவ்வளவு பில் நான் வெறும் ரெண்டாயிரம் தான் கையில் எடுத்துவிட்டு வந்தேன். இப்போது என்ன செய்ய வேகமாக இவளை கிளம்பி வந்து இருந்தான் கையில் பணம் எடுத்ததை இவள் பார்க்கவில்லை.

"என்ன இப்படி சொல்லற இன்னும் ஐஸ்கிரீம் வாங்கி தரணும் அதுவேற பாக்கி இருக்கு”

"விளையாடாதிங்க குரு கையில் அவ்வளவு தான் இருக்கு. நான் உங்களுக்கு டிரெஸ் ஒன்று எடுத்து தரணும்ன்னு நினைச்சேன். இங்கே பில்லே இவ்வளவு ஆகிடுச்சு. இங்கே இவ்வளவு காஸ்ட்டிலின்னு எனக்கு தெரியாது”

"ஏய் விட்டா இங்கேயே அழுதிடுவே போல இருக்கு நீ தரவே வேண்டாம் உன்னோடதுல எனக்கு டிரஸ் எடுத்து கொடு நான் கார்டு எடுத்துவிட்டு வந்து இருக்கிறேன் அதில் சுவைஃப்
பண்ணிக்கலாம் ஐஸ்கிரீம் ஆர்டர் பண்ணவா”

வேண்டாம் போகலாம் வெளியே போய் வாங்கிக்கலாம். பில்லை பார்த்து நிஜமாகவே பயந்து இருந்தாள் சுமித்ரா.

எப்படி ரோட்டில் நடத்திட்டு சாப்பிடவா இரு என ஆர்டர் செய்து சாப்பிட்டு முடிக்கவும் அடுத்து இவனுக்கு உடை எடுக்க என அழைத்து சென்று அங்கும் அவளை கலாட்டா செய்து வாங்கி வீடு வரும் போது இரவு பத்து மணியை தாண்டி இருந்தது.

வந்ததுமே பெட்ரூம்பில் புக்ஸ்ஸை எடுத்து கொண்டு அமர்ந்து விட்டாள் சுமித்ரா.

"சுமித்ரா என்ன இது வந்ததுமே புக்கை திறந்து வச்சிட்டு உட்கார்ந்தாச்சு”

"நாளைக்கு எடுக்கப்போற லெசனுக்கு கொஞ்சம் பிரிப்பேர் ஆகணும் ஏன் உங்களுக்கு தூக்கம் வருதா. நான் வேணும்னா ஹாலுக்கு போயிடவா”

"அதெல்லாம் வேண்டாம் கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கலாம்ன்னு நினைச்சேன் நீ பாரு நானும் என்னோட போனில் எதையாவது பார்க்கிறேன் சற்று நகர்ந்து அமர்ந்திருக்க,அன்றைய நாள் அவனுக்கு சற்றே மகிழ்ச்சி அதிகமாக இருக்க தூக்கம் உடனே வரும் என்ற நம்பிக்கை துளி கூட இல்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு கிடைத்திருந்த மகிழ்ச்சியான செய்தி. அதன் பிரதிபலிப்பு அவனது முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது”

சற்று நேரம் அமர்ந்தவன் எழுந்து சென்று பால்கனியின் கதவை திறந்து விட்டபடி அமர்ந்து இருக்க லேசான மழைக்காற்று வீச ஆரம்பித்தது.

சற்று நேரத்தில் எல்லாம் லேசாக தூற ஆரம்பித்து சடசடவென மழை பொழிய சுமித்ராவின் பார்வை மழையிலையே நிலைத்து இருந்தது.
திரும்பி நேரம் பார்க்க இரவு பதினொன்னு கையில் இருந்து புக்ஸை எடுத்து வைத்தவள் அமைதியாக வேடிக்கை பார்க்க குரு கூட மழையை தான் பார்த்து கொண்டு இருந்தான். பத்து வயதில் ராமோடு அவர்களின் வீட்டு மொட்டைமாடியில் கொட்டும் மழையில் புட்பால் விளையாடியது ஞாபகம் வர நினைவுகள் மட்டுமே தற்போது புதையலாக மனதில் நிறைந்திருந்தது.

திரும்பி இவள் முகம் பார்க்க அவளது பார்வையும் மழையில் நிலைத்து இருப்பதை பார்த்தவன் என்ன சுமி யோசனை என கேட்க

"நாம எல்லோரும் குழந்தைகளாகவே இருந்து இருக்கலாம்ல்ல ஏன் வளர்ந்தோம் எத்தனை பிரச்சினை குழந்தைகளாக இருந்தா எந்த கவலையும் இல்லாமல் நினைத்ததை அந்த நேரம் செஞ்சுட்டு ஜாலியா விளையாடிகிட்டு இப்போ அது மாதிரி இருக்க முடியுதா என்ன"?

இப்போ என்ன செய்யனும்.

மழையில் நனைய ஆசையாய் இருக்கு ஆனா முடியாதுல்ல

யார் சொன்னாங்க வாழ்க்கை வாழறதுக்குதான். இந்த நிமிஷம் என்ன தோனுதோ அத சந்தோஷமா செய். ஐம்பது,அறுபது வயசுக்கு அப்புறம் நீயோ,நானோ இத மாதிரி நனைய ஆசைப்பட்டா நம்மளோட உடல் நிலை ஒத்துழைக்காது வா என்றபடி இவளையும் சேர்த்து எழுப்பிக்கொண்டு மழையில் நனைய விட்டான். இவனும் கூட மழையில் நிற்க அடித்து ஊற்றிய மழையில் மகிழ்ச்சியோடு சிரிப்புமாக நனைந்து கொண்டு இருந்தாள்.

நனைந்தபடியே குருவிடம் எப்போது மழை வந்தாலும் நனையனும்ன்னு நினைப்பேன் அம்மா விடவே மாட்டாங்க எப்படியும் அம்மாவுக்கு தெரியாம நனைஞ்சிடுவேன். ஆனால் உடனே சளி பிடிக்கும் காய்ச்சல் உடனே வரும் அதனால திட்டுவாங்க

என்னது உடம்புக்கு ஒத்துக்காதா இத ஏன் முதலில் சொல்லல உள்ளே வா என்றபடி இவன் உள் இழுக்க அவளோ அவனை உள்ளே செல்லவிடாமல் மழையில் இழுத்து விட்டு கொண்டிருந்தாள்.

சுமித்ரா போதும் ரொம்ப நேரம் ஆச்சு காய்ச்சல் வந்தா கஷ்டம் உள்ளே வா என கிட்டத்தட்ட இழுத்து வந்து பாத்ரூம் வாசலில் நிறுத்தியவன் ஓடு டிரஸ் சேன்ஜ் பன்னிட்டு வா. வீட்டுக்கு தெரிஞ்சுது எனக்கு திட்டு விழும் அம்மா கிட்ட என்றபடி காத்திருக்க இவள் வரவுமே இவனும் உடைமாற்றி வந்தவன் சுமித்ரா தலையை நல்லா காயவிடு. டிரையர் போட்டுக்கோ என்றவன் இரு நீ சரியா காயவைக்க மாட்ட நானே போட்டு விடறேன் என டிரையரை கையில் வாங்கியவன் இவளது நீள கூந்தலை பிரித்து விட்டபடி காய வைக்கவும் அவளுக்கு என்ன என்று புரியாத ஓர் நிலை அது போல குருவிற்கு எதுவும் தோன்றவில்லை என்பது போல அவனது கவனம் முழுவதும் நன்றாக கூந்தலை உலர்த்துவதிலேயே இருந்தது. கூடவே சுமித்ரா இந்த மழை வர்றத்துக்கு முன்னாடி சில நேரம் இந்த கருப்பு மேகம் எங்கே போகிறோம்ன்னு தெரியாம வேகமாக ஓடும் பாரு அது மாதி இந்த ஃபேன் காற்றுக்கு வேகமாக முடி பறக்குது நான் வேணும்னா அப்படியே சிக்கெடுத்து தலைபிண்ணி விடவா என கேட்டது தான் தாமதம் முதலில் உங்கள் தலையை காயவைங்க

நான் பார்த்துக்கறேன் என்றபடி இவனை லேசாக தள்ளி விட்டுவிட்டு ஹாலிற்குல் நுழைந்து இருந்தாள்.

நிஜம்மா சுமி என்னோட ரொம்ப நாள் ஆசை உன்னோட நீளமான முடியில் ஜடை பிண்ணி பார்க்கணும்ன்னு இவனது குரலுக்கு நேரம் பாருங்க ஸார் இப்பவே பன்னிரெண்டு ஆகப்போகுது நாளைக்கு ஆபிஸ் லீவா

அங்கே வேலை புளிஞ்சு எடுக்கறாங்க லீவு எடுத்தேன் வேலையை விட்டே தூக்கிடுவாங்க. ஒகே. வா தூங்கலாம் என்றபடி வழக்கம்போல நடுவில் தலையணையை வைத்து விட்டு படுத்து இருந்தான்.

சற்று நேரம் கழித்தே வந்து படுத்திருந்த சுமித்ராவிற்கு தான் தூக்கம் கண்களை விட்டு வெகு தூரம்
சென்று இருந்தது. முதல் முதலாக குருவை பற்றி யோசித்து கொண்டு இருந்தாள். இவனுடனான இந்த வாழ்க்கை தெளிந்த நீரோடை போல சலனமில்லாமல் நகர்ந்து கொண்டு இருந்தது. இவளது முகம் பார்த்தே நிறைய நேரம் இவளது தேவைகளை நிறைவேற்றிக் கொண்டிருந்தான். பலவாராக யோசித்து இவள் தூங்கியபோது விடிய ஆரம்பித்து இருந்தது.

எழுதும் போதே இவளின் தூக்கம் கண்டவன் எழுந்து புறப்பட்டு வரவும் இவளது தூக்கம் தொடர இவளது நெற்றியில் கை வைத்து பார்த்து கொண்டு இருந்தான். நீண்ட நேரம் மழையில் நனைந்தது உடலுக்கு ஒத்துக்கொள்ளவில்லையோ அதனால் தான் இன்னும் எழவில்லை என நினைத்து பார்க்க இவனது கதகதப்பான கையின் தொடுதலில் கண் விழித்தாள்.

"உடம்புக்கு சரியில்லையோ அப்படிங்கற பயத்தில் ஸாரி எழுப்பி விட்டுட்டேனா குட்மானிங் என்ன இவ்வளவு தூக்கம் "

"உன்னை பற்றி யோசிச்சேன் அதனால தூக்கம் வரவில்லை என சொல்லவா முடியும். கொஞ்சம் டயர்டா தெரிஞ்சுது ஸாரி”

"அதுக்கெதுக்கு ஸாரி ஒவ்வொரு நாள் அப்படி தான் இருக்கும் நீ தான் ஓய்வே இல்லாமல் வேலை செஞ்சா "

"யார் நானா அதுவும் ஓய்வே இல்லாம
சுமித்ரா எழுந்தவள் பெட்டில் அமர்ந்தபடி கேட்க "

"ஆமாம் நேற்று கூட ரெபரன்ஸ் எடுக்கன்னு உட்கார்ந்தல்ல அதுவும் கூட மூளைக்கு வேலை தானே அதையே யோசிச்சா டயர் ஆகும் இல்லையா. இரு காபி எடுத்துட்டு வரேன்" என வெளியேற போகும் அவனது முதுகையே கண் இமைக்காமல் பார்த்தபடி இருந்தாள். அன்றைய காலை பொழுது அவளுக்கு மகிழ்ச்சியாக விடிந்ததாக பட்டது அவளுக்கு அதே மகிழ்ச்சியோடு பல் துலக்கி வரவும் இவளுக்காக காபி எடுத்து வரவும் சரியாக இருந்தது.

"லேட் ஆகிடுச்சு சுமித்ரா உனக்கு சாப்பிட ஏதாவது வாங்கி தந்துவிட்டு புறப்படவா "

"அதெல்லாம் வேண்டாம் நான் ஏதாவது சமைச்சுக்கறேன். நீங்க புறப்படுங்க என அவனை மகிழ்ச்சி பொங்க சிரித்தபடி அனுப்பி விட்டவளுக்கு அப்போது தெரியவில்லை",இப்போது இருக்கும் இந்த மனநிலை மாலையில் இரு
க்க போவதில்லை என்பதும் இவனோடு வாக்குவாதத்தில் ஈடுபடபோகிறாள் என்பதும்!!!

இசைக்கும் அன்பின் ராகம்.
 
Top