எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

களவறியா காதலன் நான்

Status
Not open for further replies.
அத்தியாயம் - 1

மாரிக்காலத்தின் முன் இரவு. சூரியன் தன் வேலையை முடிக்க முனைந்து கொண்டிருந்தான். எனினும் குளுமை தன் வேலையை ஆரம்பித்து விட்டிருந்தது.
ஏற்கனவே பெய்த மழையில் குளித்த மரங்கள், தங்கள் இளமையைப் பசுமையாகப் பறை சாற்றிக் கொண்டிருக்க, தென்றல் காதலனுக்குத் தள்ளி நிற்க மனமில்லை போலும், உலர்த்தி விடுகிறேன் என்ற சாக்கில், இயற்கை காதலியவளை, தீண்டி, சீண்டி உறவாடிக் கொண்டிருந்தான். சிலிர்த்துப் போனவள், நீர்த்துளிகளாய் சிதறி, மயிர் கூச்செறிந்தாள்.
அங்கே! கார் மேகங்கள், இப்போது தரை இறங்குவோமா? அல்லது இன்னும் சற்று நேரம் கழித்தா? என அங்கும் இங்குமாக அலைந்தபடி இருந்தன. மீண்டும் ஒரு முறை நீர் தெளிப்பதா? இல்லை... ஊற்றுவதா? எனக் கலந்து, கலைந்து ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தன.
நிழற்குடையின் கீழ் நின்றிருந்தாள், அவள். உயிர் பெற்று வந்த ரவிவர்மனின் சகுந்தலை என! ஓவியப் பெண்ணவளின் கருநிறக் கூந்தல், இருள் நதியாய்! இடைதாண்டி பாய்ந்திருக்க, இருள் நதியில் மிதக்கும் பொன் நிலவென, ஒளி சிந்தும் முகத்துடன், வான்பெற்ற இளநீலத்தைத் தான் பெற்று, அதில் வெண் புள்ளிகள் யாவும் நாங்களும் நட்சத்திரமென மினுக்கிக் கொள்ளும் வண்ணம் இருந்த அந்த வான் நீலத்தில், வெண் சிறு கல் பதித்த அந்த நீலச் சிற்றாடை அணிந்து நின்றவள், வானை உடுக்குமோ, வெண்நிலவு? எனும் ஐயத்திற்கு விடையாக நின்றாள், அந்தப் பெண்ணிலவு!
'அவள்...' என்கிறேனே... ‘நிலவுக்குப் பெயர் எதற்கு?’ 'மதி, சந்திரன் ... ' எனப் பல பெயரிருக்க, அவை வேண்டாம், அவள் பெயரான "ஆராத்தியா"வை, தன் பெயராக மாற்ற, கவிகளிடம் பெளர்ணமி இரவுகளில் கோரிக்கை வைக்கிறான், மதியவன் தன்மதி இழந்து. கவிகள் அவன் கோரிக்கையை ஏற்காததால் தானோ என்னவோ, தண்ணொளி இழந்து தேய்கிறான்.
மதியவன் மயங்கிய அத்திருமுகம், அப்போது சற்றே கலங்கி இருந்ததை, விழியோர பளபளப்பு காட்டித் தர முனைந்தாலும், கண்ணீர் முத்துக்கள் திரளாமல் திரண்டாலும், சிதறாமல் கவனித்துக் கொண்டாள், பாவையவள்!
அங்கிருந்த அனைத்து கண்களும் ஆராத்தியாவை நோக்கி நிற்க, அவர்களின் நோக்கம் அவளானாலும், அவளது நோக்கம் அவர்கள் மேல் திரும்பவில்லை.
காளையர் பலர் ஆராத்தியா எனும் ஆராதனைக்குரிய பெண்ணவளின் கண்ணொளி தன் மீது பட ஏங்கி நிற்க, அவளோ யாரையும் நிமிர்ந்து பார்க்க வில்லை.
சற்று நேரத்திற்கு ஒரு முறை, தன் கை கடிகாரத்தையும், அலை பேசியையும் பார்த்த வண்ணம் இருந்தாள்.
இனியும் காத்திருந்தால், வருணபகவானின் கோபத்திற்கு ஆளாகி விடுவோம் என அஞ்சிய மேகங்கள், ஆலோசனையை விடுத்துத் தங்கள் வேலையைத் துவங்குவதற்கான ஆயத்தங்களில் இறங்கி விட்டிருந்தன.
ஆராவின் அருகில் வந்து நின்றது, அடர் வனங்களில் காணும் கருஞ்சிறுத்தையின் பளபளப்பையும் வேகத்தையும் தன்னில் கொண்ட, அந்த ஜாக்குவார் எனும் வகை வாகனம். அதிலிருந்து இறங்கியவன், அவளது பையை வாங்கிப் பின்னே வைத்து விட்டு வந்தான். அவள் ஏற, கதவை திறந்து வைத்துக் காத்திருந்து, பின் கதவடைத்து முன்பக்கம் சென்று, தானும் ஏறி ஒட்டிச் சென்றான்.
புதிதாக வாங்கிய அலைபேசியில், அழகான எதையாவது என மரங்கள், வானம், சுற்றுபுறம், சுய படம், கண்ணில் கண்டதை எல்லாம் நிழலாக்கிக் கொண்டிருந்த அவன் கண்ணில் விழுந்த ஆராத்தியாவை, விட அவனுக்கு மனமில்லை. ஏனெனில் அவன் அப்படி ஒரு சவால் ஏற்றிருந்தான்.
கடந்த மூன்று ஆண்டுகளாக, கல்லூரியில் சேர்ந்த நாள் முதல் அனைவரின் கனவுகளிலும் நினைவுகளிலும் நிறைந்திருப்பவள் ஆராத்தியா. அமைதியானவள். யாரிடமும் தேவையின்றிப் பேசுவதில்லை. தான் உண்டு தன் வேலை உண்டு என இருப்பவள். எந்தத் தேவையற்ற விஷயத்திற்கும் போவதில்லை. பின்னால் சுற்றுபவர்களைப் பார்வையிலேயே எட்டி நிற்க வைத்து விடுவாள்.
அவளை யாரும் நெருங்க முயன்றதில்லை. முடிந்ததும் இல்லை. பின் எங்கே பேச, பழக? எனவே, பலருக்கு அவள் கனவே. இன்று கடைசி தேர்வு முடிந்து, அனைவரும் விடை பெற்றுச் செல்லும் நாள் என்பதால், ஆராவை செல்பி எனும் சுயமிக்கு அழைக்க, அவள் மறுத்து விட்டாள். இதுவே, குமார் அவளைப் பின்தொடர காரணமாயிற்று.
எந்த விஷயம் பற்றி நமக்குத் தெரியவில்லையோ... மறைக்கப் படுகிறதோ... அதைப் பற்றி நமது ஆர்வம் பெருகிவிடும். அந்த நிலையில், சரி தவறு என்பதைத் தாண்டி விடுகிறது மனம்.
காலையில் கல்லூரிக்கு வந்த குமார், தான், புது அலைபேசி வாங்கியதைக் காட்டி மகிழ, அவனைச் சீண்டிய அவனது நண்பர்கள்,
"டேய்! எல்லாரும் தான் போன் வைச்சிருக்கோம். போஸ்ட் போடறோம்."
"ஆமா டா"
"நம்ம ராஜேஷுக்கு எவ்வளவு லைக்ஸ் நேத்திக்கு மட்டும், ஏன் தெரியும்ல?"
மற்றோருவன், "ஆமா, செம வீடியோடா அது"
"என்னா த்ரில்"
"ஆமா, சூப்பர் டா! மச்சி!" என ராஜேஷை சில நிமிட ஹீரோவாக்க, அதற்கு அந்த முட்டாள் செய்த காரியம் நெஞ்சைப் பதற வைக்கும்.
‘ஆம், வேகமாகச் செல்லும் மின்சார ரயில் கிளம்பி சற்று வேகமெடுத்ததும், ஒடி சென்று ஏறியது மட்டுமன்றி, வெளியே சன்னல் கம்பியை பிடித்தபடி அவன் தொங்கிக் கொண்டும், மின்சாரக் கம்பங்களை தொட்ட படியும், முடி கோதியும், நகர்ந்தும் சாகசம் என சாவுக்கு அருகில் செல்லும் வேலையைச் செய்து பதிவிட்டு, சில நூறு லைக்ஸ் வாங்கியிருக்க.’
இந்தச் சில ‘லைக்ஸ்’காகவும், இந்த நண்பர்களின் சில நிமிட நாயகன் பதவிக்கும் ஆசைப்பட்டு, அதிர்ஷ்டத்தால் பிழைத்த அந்த முட்டாள், இவனைப் பார்த்துச் சிரிக்க, சிலிர்த்த குமாரோ…
"நானும் அது மாதிரி எடுத்து, நாளைக்குப் போடறேன் பாருடா!"
"அது யாருக்கு வேணும்?"
"அதான், ராஜேஷ் ஏற்கனவே போட்டுட்டானே!"
"என்ன செய்யலாம்?" என்பதாய் கண்களைச் சுழற்ற, அதில் விழுந்தாள், படம் எடுக்க மறுத்து ஒதுங்கிய, ஆராத்தியா!
"டேய்! இவள எடுத்துப் போடுறா?" என குமார் கண் சென்ற பாதையைக் கண்ட ராஜேஷ் கூற,
அதை அப்படியே போடுவதில் என்ன தில், நல்ல வித்தியாசமான நிமிடத்திற்குக் காத்திருந்து பின் தொடர்ந்தான்.
ஆராத்தியாவை படம் எடுத்து பதிவேற்றி சாதனையாளனாக முடிவு செய்த குமார், அவளை வெகுநேரமாகப் பின் தொடர்கிறான், அவள் அறியாமல்.
இப்போதும் அவள் நின்றிருந்த நிழற்குடைக்கு எதிர்புறம், சற்று ஒதுக்கமாக நின்று, அனைத்தையும் படமாக்கிக் கொண்டிருந்தவன், ஆராவின் கண்களில் படவில்லை.
விதி மறைத்ததோ? இல்லை…
வினை மறந்ததோ? விளைவிக்கப் போவது என்னவோ?
படம் எடுத்தவன் அறியவில்லையோ? இல்லை, அவனுக்கு அறிவில்லை. ஒருவரை படம் எடுக்க, அவரது அனுமதி பெற வேண்டும் எனும் உணர்வற்றவன், அந்தக் குமார். இவனை விடத் தரம் இறங்கிய மக்களும் இச்சமூகத்தில் மலிந்து கிடக்கின்றனர்.
தங்கள் விருப்பம் போல், விருப்பமற்ற பெண்களை, அவர்களது அங்கங்களைத் தவறாக எடுத்து, இஷ்டம் போல் பதிவு செய்கின்றனர். மாடலிங் எனும் தொழிற்துறையிலேயே மாடலாக வருபவர்களை, அவர்கள் விருப்பமின்றிப் படம் எடுப்பதும், அவர்களுடைய உடல் பாகங்களைத் தவறாகச் சித்தரிப்பதும் குற்றம்.
இயற்கையின் தனிப்பட்ட எழில்களையும், விலங்குகளையும் அவற்றுக்கு உரியவர் அனுமதி இன்றி படம் எடுப்பது, தண்டனைக்கு உரியது. எனில்… உயிரும் மனமும், தனிப்பட்ட விருப்பு வெறுப்பு உள்ள ஒரு பெண்ணை, அனுமதியும் பெறாது, அவளும் அறியாது படம் எடுக்க, அவள் அவன் வளர்க்கும் தாவரமோ, செல்லப் பிராணியோ அல்ல, உயிருள்ள உணர்வுள்ள பெண்.
அந்த உணர்வின்றி..., ஆராத்தியா சற்று படபடப்புடன் இருந்ததையும், அவள் கண்களின் பளபளப்பையும், பதிவு செய்தான், அவன்.
அந்த முன் இரவு, பின்னிரவு போல், மழைக் காலமானதால் இருண்டிருந்தது.
ஆராத்தியா மட்டும் அந்த காரில், கறுப்பு நிற சொகுசு வாகனத்தில் ஒருவன் கதவு திறக்க புன்னகையுடன் ஏறுவதையும், அந்த நெடியவன் இவள் தோள் பிடித்து உள்ளே அமர்த்துவதையும், குனிந்து சீட் பெல்ட் போடுவதையும்… அவளது உடைமைகளை வாங்கி உள்ளே வைத்ததையும், தன் மனதின் வக்கிர கற்பனைகளின் சாயம் பூசி, இஷ்டம் போல் கதை புணைந்து, அதை பதிவேற்றினான். தன் பெருமையை பறையறைந்து அறிவிக்க எண்ணி...!

கயல் கொண்ட விழியின்
வீச்சலையில் தத்தளிக்கிறேன்!
இமையெனும் கரை கொண்டு நீ மூட
முழ்கினேன், முத்தெடுக்க!
மூச்சடக்கத் தேவையில்லை
உன்னில் வீழ்ந்து விட்ட
நாளிகை முதல் மூச்செடுக்கவில்லை
சுவாசப் பைகள்...!
வாழ்ந்திருக்க விழைகிறேன்
கடல் வாழ்வனவாக...!
என் திரைகடல் திரவியம் நீ
காத்திருக்கிறேன்…!
என் காத்திருப்புகளின் பலன்
உன் வார்த்தைகளில்…!













அத்தியாயம் - 2
இளம் பச்சையும் நீலமுமாய் அமைதியாய் சிறு அலைகளுடன் தூரத்தில் தெரிந்த கடல் அனுப்பிய குளிர் காற்றில், கழுத்தில் புரண்ட அந்தப் பொன் வண்ணக் கூந்தல் காற்றில் அசைந்தாட, மார்பில் ஆரத்தையும், கை கங்கணங்களையும், அதன் மஞ்சள் ஒளி பட்டு மின்ன வைத்தான், கதிரவன். கால்சராய் அணிந்திருந்த அவன் பாதங்கள் சேனத்தின் மீது பதிந்திருந்தன.
செம்மண்ணின் நிறத்தை உடலிலும், கால்களின் ஆரம்பத்தில் கரிசல் மண்ணின் நிறத்தையும் கொண்டு, தன் வாலினை இலேசாக அசைத்து நின்ற புரவியின் மீது அமர்திருந்தவனின் பார்வை, சிறிதும் அசையவில்லை.
மலை முகட்டிலிருந்து தன் கழுகுக் கண்களால் கடலும் வானும் இணைவதையும், அதிலிருந்து எழும் மேகப் பொதிகள் வானெங்கும் நிறைவதையும், மேலெழுந்த வெண்பொதிகள் கதிரவனின் தூரிகை பட்டு, பொன்வண்ணமாய் மின்ன... கடலுக்கும் அவன் நின்றிருந்த மலைக்கும் இடையே, விரிந்த இலையுதிர் காட்டுமரங்களின் பின் பகுதி, மஞ்சள் நிறமெனவும் முற்பாதி பச்சையைத் தேக்கி வைத்திருப்பதையும் கண்டனவோ அக்கண்கள். அதில் எந்த உணர்வுமில்லை. எதையும் பிரதிபலிக்கவும் இல்லை அவன் முகம். அது இறுகி இருந்தது.
அவன் தாங்கிய மார்பு கவசங்கள் அவன் நிலையின் உயர்வினைக் காட்டும். அவன் கை வாள், பிரத்தியேகமாக... அரிதான உலோகங்கள் கொண்டு அவனுக்கென உருவாக்கப்பட்டது. அது உறைக்குள் இருந்தாலும், கைப்பிடியும் உறையும் அதன் மதிப்பையும், அதை இடையில் அணிந்திருப்பவன் உயரத்தையும் சொல்லும்.
அவன் போருக்கு என்றே படைக்கப்பட்டவன். பிறந்தவுடன் தாயின் முகமறியும் முன் பிரிக்கப்பட்டு, அழுகையை மறந்து, ஓநாய்களுடன் காட்டில் உயிர் ஜீவிக்கும் முறையறிந்து, தன்னைக் காத்து, பயிற்சியில் எதிர்க்கும் எவனையும் எரித்து, கசையடிகளில் வலி மறந்து, அன்பு தொலைத்து, உறவுகளைத் துறந்து, போரிடும் முறை கற்றவன்.
"போர் எனில் வெற்றி!" அதைத் தவிர வேறு அறியா வீரன் அவன்.
தன் புரவியை வானுயர்ந்த அந்த மலை முகட்டிலிருந்தும் கீழே இறக்கி, நெடிதுயர்ந்த மரங்களடர்ந்த வனம் வழியே, நிதானமாக அப்புரவியைச் செலுத்திக் கொண்டிருந்தான்.
அவன் உணர் புலன்கள் கூர் பெற, சுற்றும் பார்த்துக் கொண்டு சென்றவன் முன், வின்னிலிருந்து இறங்கியது போலத் தோன்றினான், அவ்வரக்கன்.
குதிரையிலிருந்து மேலெழும்பி, அரக்கனை வாள் கொண்டு தாக்கி இருந்தான். அவ்வரக்கனே திடீரெனத் தோன்றியிருக்க, அப்புரவி வீரன், அவனையும் விட வேகமாகச் செயல்பட்டுத் தாக்க, இதை எதிர் பாராத அரக்கன், தாக்கப்பட்ட வேகத்தில் “ஆ…” என மல்லாந்து விமுந்தான்.
கீழே விழுந்ததில் ஆத்திரம் மிக “ஆ......” என அலறியபடி மீண்டும் தாக்க ஓடி வர, புரவி வீரனோ சற்றே நகர, இப்போது கீழே வீழ வேண்டிய அரக்கன், முயன்று தன்னை நிலைநிறுத்த, மரத்தைப் பற்றினான்.
இப்போது கண்கள் ஆத்திரத்தில் செந்தணலெனமாற, அம்மரத்தை வேருடன் பிடுங்கி இவன் மீது வீச…, அதில் தப்பி ஒதுங்கி அருகில் இருந்த பாலத்தின் மீதேறி நின்றிருந்தான், புரவியோன்.
அரக்கன் தன் ஆத்திரம் எல்லையைக் கடக்க... தன் நிலை மறந்து, தன் ஆயுதத்தால் புரவி வீரனை தாக்க முற்பட்டான். காலம் தாழ்த்தாது, தன் வாளில் நெருப்பின் சக்தியேற்றி, தானும் நெருப்புச் சூறாவளியென மேலெழும்பி, அரக்கனை துண்டுகளென மாற்றியிருந்தான் அப்புரவி வீரன்.
சொய்ங்… எனும் ஓசையில், அவ்வரக்கனின் உடல் மறைய, "YOU WON" என ஒளிர்ந்தது, புரவி வீரன் அருகில்.
தனக்கு இன்று இணைய விளையாட்டில் அளிக்கப்பட்ட பணியை முடித்து எழுந்தான், அவன். கணினித் திரையை அணைத்து விட்டு, மின் இணைப்பை நிறுத்தியவன், மீண்டும் நாற்காலியை சரியாக அதனிடத்தில் வைத்தவன், திரும்ப அனைத்தையும் சரி செய்தவன், அவன் அறைக்கதவை திறந்து வரவும், அன்னை அலர்மேல் மங்கை அழைக்கவும் சரியாக இருந்தது.
அதீந்திரன், தமிழகத்திற்கும் யவனத்திற்கும் உள்ள தொடர்பினைக் கூறும் நடமாடும் ஆதாரம் அவன். வெண்கலச் சிலைகளில் கிரேக்க சிற்பிகள் வடித்த காளை பருவ ஆண் உயிர் பெற்று வந்தது போல் இருந்தான்.
(காளை பருவம் என்பது 24 முதல் 36 வயது வரையான ஆண்களைக் குறிக்கும் ஆண்களின் ஏழு நிலை பருவங்களில் ஒன்றாகும். இதைக் காதற் பருவம் என்றும் கூறுவர்)
ஏதேனும் ஒரு யவன இளவரசியும், சோழ அரசனும் இவனின் முன்னோராக இருக்க வேண்டும், என கட்டியம் கூறும், அவனின் இளம்பச்சை நிறக் கண்களும், முறுக்கேறிய உடலும், தினவெடுத்த தோள்களும், காணும் எவரையும் சுயம் இழக்கச் செய்யும் வனப்பினைப் பெற்றவன். வீட்டில் இருப்பதால், இலகுவான ஆடையான அடர் ஆலிவ் பச்சை நிற டீ சர்ட், கருமை நிற சார்ட்ஸ் எனும் அரைக்காற் சட்டையும் அணிந்திருந்தான்.
"அதீப் வாடா…! உன்னைக் கூப்பிடத்தான் வந்தேன். நீயே வந்துட்ட" என்ற தாய்க்கு பதில் கூறாமல் கீழே இறங்கி வந்தவன்,
"செந்தில் அண்ணன் இப்ப வந்துடுவாருல்ல?" எனும் கேள்வியைக் கேட்டபடி, தன் தட்டையும், குவளையில் தண்ணீரையும் நிரப்பிக் கொண்டு, தான் வழக்கமாக அமரும் உணவு மேசையின் இடது புற கடைசி நாற்காலியில் அமர்ந்தான். ரகுநந்தன், அலர் மேல் மங்கை தம்பதியரின் இரண்டாவது மகன், அதீந்திரன்.
மூத்தவன், அதீப்பைவிட ஏழு வயது பெரியவன் புருஷோத்தமன், அவன் மனைவி வைஜெயந்தி! இவர்களின் மகன் ஐந்து வயது அத்வைவ், கூட்டுக் குடும்பமாக வசிக்கின்றனர்.
அப்பா, அண்ணன் இருவரும் குடும்பத் தொழில்களை பார்த்துக் கொள்ள….
அதீப், கணினி விளையாட்டின் மேல் ஆர்வம் கொண்டதால், ஒரு கேம் டெவலப்பராகி இருந்தான். தன் நண்பர்களுடன் இணைந்து X Y எனும் பெயரில், புதிதாக ஒரு கம்பெனியை ஆரம்பித்து, ஆன்லைன் கேம் ஒன்றை உருவாக்கி வருகிறான்.
மங்கை, அவன் தனக்கு பதில் கூறாவிட்டாலும், உணவு மேசையில் அமர்ந்திருப்பதைக் கண்டவர், அதீப்பிற்கு இட்டிலியை வைத்தவாறே…
"இப்ப சாப்பிட்டுட்டு கிளம்பினா சரியா இருக்கும். கிளம்புடா!" என்றார்.
அவனோ, "செந்தில் வருவாரா?" என மீண்டும் அதே கேள்வியைக் கேட்க.
"அவரப் பத்தி இப்ப என்னடா கவலை? யாரோ ஒருத்தர், யாரா இருந்தா என்ன? நீ சாப்பிட்டுக் கிளம்பு!"
“தோசை”
“இப்ப நேரம் இல்லை. இன்னிக்கு ஒரு நாள் மட்டும் அட்ஜஸ்ட் பண்ணிக்கடா" என்றார்.
கையைத் தட்டிலிருந்து எடுத்தவன், திரும்பி அமர்ந்து கொண்டு, “எனக்கு வேண்டாம்!" எனவும், அவன் அருகில் வந்து முடியைக் கோதியவர்,
"டேய் கோபப்படாதப்பா, அம்மா பாவம்ல. அவசரமா கிளம்பறதால இன்னிக்கு மட்டும் சாப்பிடு. நாளைக்கு தக்காளி சட்னி பண்ணித் தரேன்."
"தோசை" என, திரும்பக் கூறிய அவனைப் பார்த்ததும், இனி அவனிடம் பேசிப் பிரயோஜனம் இல்லை எனப் புரிய, தோசைக்குக் கல்லைக் காய வைத்தவர்,
"இந்தத் தோசைல அப்படி என்னதான் இருக்கோ, இதைத் தவிர ஒன்னும் பிடிக்க மாட்டிக்குது. மத்த நாளைக்குப் பரவாயில்லை. இது மாதிரி அவசரத்துக்குக் கூடவா…!" எனப் புலம்பியபடி மாவை குளிர்பதனப் பெட்டியில் இருந்து எடுக்க, பின்னால் வந்து நின்றவன், அவள் கையில் இருந்து மாவுப் பாத்திரத்தை வாங்கிக் கொண்டான்.
"நீங்க போங்க!" என்றவன், தானே அழகாகத் தோசையை ஊற்றிக் கொள்ள, மனம் தாங்காமல்…
"கொடு! நான் ஊத்தி தந்துட்டுப் போறேன்." எனக் கரண்டியை வாங்க முயல,
"நோ நீட் மாம்!" என்றவன், தனது வேலைகளில் கவனமாகிட, அலர்மேல் மங்கை தனது வேலையை கவனிக்கச் சென்றார்.
தனக்கான தோசைகளை வார்த்து எடுத்துக் கொண்டு, தனது இடத்தில் அமர்ந்து கொண்டவன், ஜன்னலின் வழியே வெளியே பார்த்துக் கொண்டு, சாப்பிட்டுக் கொண்டிருக்க,
மங்கை "டேய், அதீப்... நேரமாயிடுச்சி கிளம்புடா!" என்றார் பத்தாவது முறையாக.
"சரிம்மா!" என்றவன் நிதானமாகச் சாப்பிட்டு நேரத்திற்குக் கிளம்பினான்.
விவரனைகளின் விவரிப்புகளுக்கு அப்பாற்பட்டவன்
உன் கற்பனைகளின் காட்சிப்படுத்துலுக்குக் கட்டுபடுவேனோ?
காட்சிகள் என்பன யாவையோ?
காணப்படுவனவோ? இல்லை…
காட்டப்படுவனவோ?
யாவும் நீயே!
காணப்படுவன, காட்டப்படுவன, எவையும்
உனையே காட்சிப்படுத்துதல் கண்டனையோ?
 
Last edited:
அத்தியாயம் - 3

சுற்றிலும் இருட்டு நெடிது வளர்ந்த நிழல் மரங்களிடையே அறியமுடியா பாதை வழியே ஒடிக் கொண்டிருந்தாள், ஆரா. முதலில் தப்பிக்க எண்ணி மெதுவே வந்தவள், கோட்டைச் சுவரென நீண்டிருந்த அந்தச் சுவற்றின் மீதேறி, மெல்ல மறுபுறும் கீழே குதித்தாள். குதித்ததும், எழுந்து ஒடத் துவங்கினாள். அப்போதும் சுற்றும் பார்த்து அந்த இருளிலும், பாதை தேடி ஓடின அவள் கண்கள். அதைப் பின்பற்றின கால்கள் .
சற்று தொலைவினில் கேட்ட அந்தக் குரைப்பின் ஓசை, இப்போது மிக நெருக்கத்தில் கேட்கத் துவங்க, ஓடியதில் வலு குறைந்தவள், மேலும் ஒட இயலாமல் கீழே விழுந்து விட, அவளைச் சுற்றி வலம் வந்தன அவை.

அதன் உயரமும் இருளிலும் இருளாக இருக்கும் கருநிறமும், ஆராவை அச்சுருத்த வியர்வை வழியப் பார்த்திருந்தாள். அதன் பளபளக்கும் விழிகளும், எச்சில் வழிய நாக்கை வெளியே தொங்கவிட்டு நின்றிருந்த விதத்தில், இதயம் துடிப்பதை நிறுத்தி விடுமோ, எனும் பயத்தில் கண்களை இறுக மூடி, நெஞ்சில் கை வைத்துப் பிடித்துக் கொள்ள, அதில் ஒன்று அவள் மீது பாய, அதன் கால் நகங்கள், அவள் மீது பட, அதைத் தள்ளி விட்டாள்.

"ஆ.... அம்மா!" எனும் அலறல் சத்தத்தில் விழித்தெழுந்தாள். சுற்றும் முற்றும் பார்த்துச் சுயம் பெற்றாள், ஆரா. அலறிய சத்தம் கேட்டு எதிரில் மீனா அவள் கீழே கிடந்தாள். அவளின் கூக்குரலில் பேருந்து நின்றிருக்க, அனைவரும் விழித்திருந்தனர். என்னவாயிற்று என்று பார்க்க, தூக்கம் கலைந்த எரிச்சலில், பயணி ஒருவர்,
"ஏம்மா பார்த்து, சொல்லிட்டு கத்துமா. வீட்டுல தூங்கிட்டு இருக்க என் பொண்டாட்டி பிள்ளைகள் எல்லாம் கூட இன்னேரம் முழிச்சிருக்கும்." என்றார்.
முன்னிருக்கைப் பயணிகள் சிலர் அவளைத் தூக்கி விட, மெதுவே எழுந்த மீனா, ஆராவை முறைத்தாள்.

பிறகு அவரிடம் திரும்பி "அரசாங்த்தில் இப்படி ஒரு ஆணை கொடுத்துருக்கறது, இப்பத்தானுங்க தெரியும். விழும் போது உங்ககிட்ட அறிவிப்பு கொடுத்து தான் விழனும்னு. அடுத்த வாட்டி விழும் போது, உங்க பொண்டாட்டிட்ட சொல்லிட்டு விழறேன்." என்றவளை அவர் எரிப்பதைப் போல் பார்த்தவரை, பதில் பார்வை பார்த்தாள்.

இவ்வளவு பிரச்சனையில் குதுகலமான இரு இளைஞர்கள் ஆராவிடம், "உங்களுக்கு ஒன்றும் ஆகவில்லையே?" என விசாரிக்க,
மீனா "ஏலேய்! விழுந்தது நான், விசாரிப்பு அங்கயா?" எனும் மைன்ட் வாய்ஸூடன் முறைத்தாள்.
ஓட்டுநரின் பாசப் பார்வையில், பொம்ளப் புள்ள என்ற பரிதாபம் இன்றி, இவர்களை இறக்கிவிடும் உத்தேசம் தெரிய, சுதாரித்த ஆரா அனைவரிடமும்,

"மன்னித்துக் கொள்ளுங்கள். தூக்கத்தில் தெரியாமல் விழுந்த பயத்தில் தவறு நேர்ந்துவிட்டது." என மன்னிப்பு கோரினாள். அனைவரும் கலைந்து சென்ற பின், மீனா அருகில் அமர்ந்த ஆரா,
"எங்கேயாவது பலமா அடிபட்ருச்சாடி?" எனக் கேட்டாள், அவளை ஆராய்ந்தபடி.

"ரொம்ப விரசா கேட்டுட்ட. இன்னும் அஞ்சாறு நாள் சென்னு (சென்று) கேட்கது தான?" என நொடித்துக் கொண்டவள், இருக்கையின் உள் பகுதிக்கு நகர்ந்தாள். அவர்கள் அமர்ந்திருந்த படுக்கை வசதி கொண்ட பேருந்து, அதன் கீழ்தளத்தில் உள்ள இருவர் படுக்கும் வகையிலான இருக்கையின் சன்னலோரம் அமர்ந்தவள்,

"எரும… நீ திடீர்னு தள்ளிவிட்டதுல பயந்து தான் கத்திட்டேன். பக்கி இப்படியா தள்ளி விடுவ? கேவலமாப் போச்சு!" என்று ஆராவிடம் பொரிய, அவளோ…
"உன்னை எவன்டி என் மேல கையப் போடச் சொன்னது. நானே கனவுல நாயைப் பார்த்து, பயந்து போயிருந்தேன். அந்நேரம் பார்த்து நீ பேய் மாதிரி கைய மேல போடவும், பயத்தில் தள்ளி விட்டுட்டேன்டி." என்ற ஆரா, சில அடிகளைப் பரிசாகப் பெற்றாள்.

இவர்களது விளையாட்டுகளைப் பார்த்தபடி அமர்ந்திருந்த அந்த இளைஞர்களைக் கண்காட்டிய மீனா, ஆராவிடம்,
"இவனுகளுக்கு இருக்கக் குசும்பப் பார்த்தியா? இங்க நான் விழுந்து கிடக்க, உன்கிட்ட வந்து விசாரிக்கானுக." என்றாள்.
"சரி, சரி, விடுடி. பாவம், யாரு பெத்த புள்ளைகளோ? பொழைச்சி போகட்டும். விடிஞ்சிருச்சி பாரு...!" என்றுரைத்த ஆரா, சன்னலை திறந்து வாகாகக் கால் நீட்டி அமர்ந்தாள்.

"ஏய் ஆரா, ஊர் வந்த பிறகு என்னைய எழுப்புடி!" எனக் கூறிவிட்டு, உறக்க தேவதையிடம் மீண்டும் சரண் புகுந்தாள், மீனா.
முதல் நாளிரவு வானக் காதலியவளை நாடி வந்த நிலவுக் காதலன், அவளின் நட்சத்திர ஆடைகளை, விடியலின் கூவலில் தன் இருப்பிடம் நோக்கி விரைகையில், தன்னுடன் எடுத்துச் சென்றதை அறிந்து, அவன் நினைவில் முதலில் கன்னம் சிவந்தாள். சந்திரனவன் செய்கையை எண்ணி முழுவதும் சிவந்து போனாள். தாளாத நாணத்தில், மேகப் போர்வையில் தனை மறைக்க முயல, அது போதாதென உணர்ந்த ஆதவன், அவளுக்கு ஊதா வண்ண ஆடையைத் தன் கிரணக் கையால் வழங்கினான்.

“தெரியுமா?" எனக் குழல் கலைத்து ஆடிய குளிர் காற்றவள், ஆராவின் காதுகளில் இந்தச் செய்தியைக் கூறிவிட்டு, அனைவருக்கும் கூறி அவர்களின் உறவை உலகறியச் செய்யும் எண்ணத்துடன் விரைந்தாள். ஆரா தென்றலவளுக்கு, செவி சாய்க்காமல், ஆதவனை ரசித்திருந்தாள்.

கடலினின்று எழுந்தாலும், மலையிடை வந்தாலும், எதுவும் அற்ற சமவெளியில் தோன்றினாலும், நான் உற்சாகத்தையும், இன்பத்தையும் வழங்குவேன் என மேலெழுந்த கதிரவனை, தகத்தாயம், என அவனை வர்ணித்த பாரதிதாசனின் கவிதையை நினைவுபடுத்திக் கூறியபடி அமர்ந்திருந்தாள்.

மேக்கரை
மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் இருக்கும் மிக அழகிய ஊர். பசுமையது முதலில் வயல் பரவி, பின் தென்னை மரங்களில் தாவி, மலை முழுவதும் விரவி, விண்ணேற வழி உண்டோ? என மேகங்களிடம் உரையாடிக் கொண்டிருக்க, அந்த நவீன ரதம் உள் நுழைந்தது.

அதீந்திரன், அவனை வரவேற்க மிதிலையின் கொடிகள் போல் பசு நெல் சூழ் வயல்கள், பொதிகைத் தென்றலவள் பாட்டிற்கு இசைந்தாடி, இனிய வரவேற்பினை அளித்துக் கொண்டிருந்தன. அதீந்திரன் தன் தேர் நிறுத்தி இறங்கி அதைப் பார்க்க, மங்கை தானும் இறங்கி ரசித்து, தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு வந்து சேர்ந்தனர்.

மேக்கரை அவர்களின் பூர்வீக பூமி. பல வருடங்களுக்கு முன் அவர்கள் தாத்தாவின் காலத்திலேயே, சென்னைக்கு மாறி விட்டிருந்தனர். வருடம் ஒரு முறை, அவர்கள் குல தெய்வம் உச்சினி மகா காளி கோவில் கொடை விழாவிற்கு மட்டுமே வரும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். தங்கள் நிலங்கள் தோப்பு அனைத்தும் குத்தகைக்கு விட்டு விட்டு, வீட்டைப் பாராமரிக்கவும் ஆள் ஏற்பாடு செய்திருந்தனர்.

அதீந்திரன் பத்து வருடங்களுக்குப் பிறகு இப்போது தான் வருகிறான். அவனுக்கு, தன் நடைமுறைகளை மாற்றிக் கொள்ளப் பிடிக்காது,
இது போல் நிகழ்வுகளில் பங்கேற்கவும் விருப்பம் கிடையாது.

இந்த முறை பலவிதமாகக் கூறி, தானும் இருந்து அவனை அழைத்து வந்துள்ளார். எல்லாக் குடும்பங்களிலும் குலதெய்வம் ஒன்று இருக்கும். குலதெய்வம் என்பது பெரும்பாலும் வீரம் நிறைந்த ஆண் அல்லது பெண் தெய்வங்களாகவே இருக்கும்.
உண்மையில் அவர்கள் தெய்வங்களாக மாற்றப்பட்டவர்கள்.

தங்கள் குலத்திற்கு அல்லது அந்த கிராமத்திற்கு வந்த தீமையை வீரம் மற்றும் தங்கள் தியாகத்தால் விரட்டியவர்கள். அவர்கள் இல்லை எனில், தாங்களும் தங்கள் குலமும் இல்லை என்பதை அறிந்தே,

முன்னோர்கள் அவர்களுக்குக் கோயில் எழுப்பி விழா எடுத்து வழிபட்டு, தங்கள் நன்றியை தெரிவித்து, அருளை நாடினர்.
பழங்காலப் பண்ணையார் வீடு அது. முன்புறம் பெரிய வாயிற் கதவுகள் இரும்புக் கம்பிகளால் ஆனவை. அதில் தாமரை வடிவம் பொறிக்கப்பட்டிருந்தது.

செம்பருத்தி, நந்தியாவட்டை மரங்கள் நிற்க, இடது ஒரமாக மகிழுந்து நிறுத்துமிடம் இருந்தது. முன்புறத் தாழ்வாரம், அதன் பின் பெரிய கூடம், இருபுறமும் அறைகள் இருந்தன. அவ்வறைகளில் வெளிப்புறம் மற்றும் பின்புறம் செல்ல இயலும். அதைத் தாண்டி, சிறு கூடமும் அரங்கு, பூஜை அறை, மாடியின் பின்புற வாயிலுக்குச் செல்லும் வழி, இதைத் தொடர்ந்து அடுக்களையும் கொட்டிலும் இருந்தன. பின்புறம் துளசி மாடம் எனப் பெரிய வீடு.

அலர்மேல் மங்கையைத் தொடர்ந்து வந்த அதீந்திரன், "என்னம்மா, இங்க நாட்டாமைகளா இருக்காங்க? அப்பாவையும், அண்ணனையும் காணும், எதுக்கும் நீங்க இந்த நாட்டாமைக்கிட்ட பிராது கொடுத்து தேடச் சொல்லுங்க!" எனக் கூறி, அவர் பதில் கூறும் முன், வைஜெயந்தியைக் காணச் சென்றிருந்தான்.

அலர்மேல் மங்கையும், ரகுநந்தன், புருஷோத்தமன், மற்றும் ஊர் பெரியவர்கள் அமர்ந்திருந்த இடம் நோக்கிச் சென்றார். அனைவரிடமும் வணக்கம் கூறி, சில நல விசாரிப்புகளுக்குப் பின், கோயிலுக்குச் செல்ல, தயாராகச் சென்றார். பின் அனைவரும் கிளம்பி, அன்னையின் ஆலயத்திற்குச் சென்றனர்.

காலை வேளை என்பதால் அதிகக் கூட்டமில்லை என்றாலும், புதிதாகச் சிலர் அவனுடன் பேச முயல, அதீந்திரன் அங்கே இருப்புக் கொள்ளாமல் வெளியே வந்தவன், செந்திலையும் கூட்டிக் கொண்டு, அருகிருந்த அணைக்கட்டிற்குச் சென்றான்.

அங்குச் செல்வது அவன் வழக்கம், அணையிலிருந்து அருவியாய் பரந்து வெளியேறும் நீரினை, நேரம் போவதறியாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

பின் சில குழந்தைகளும் ஆண்களும் குளிப்பதைப் பார்த்தவன், சட்டென்று தன் டீ சர்ட்டை களைந்து, அவர்களைப் போல் உயரமான பகுதியில் இருந்து நீரில் பாய்ந்தான். ஆழம் சென்று மேலெழுந்தவன், குழந்தைகளுக்கு இணையாக நீந்திக் களித்ததில் சத்தமாகச் சிரிக்க, ஏற்கனவே இவனைக் கண்டதில் மயங்கியவர்கள், இப்போது இவன் உடற்கட்டையும், சிரித்து மகிழும் அழகையும், அப்போது தனி ஒளி சிந்தும் முகவடிவையும் கண்ட ஆண்கள்,
ஆணாகப் பிறந்ததையெண்ணி வெறுப்பையும், “எங்கே தம் மனைவியர் தன்னை இனி வேண்டாம் என்றுரைப்பரோ?" எனும் அச்சத்தையும் ஒருங்கே பெற்றனர்.

கன்னியர் நிலையோ கவலைக்கிடமாயிற்று. முதலில் கள்ள விழிப் பார்வையிலும் ஓரவிழிப் பார்வையிலும் அவனைப் பார்த்தவர்கள், அவன் நீராடும் அழகிலும், அவன் சிரிப்பிலும் தன்னைத் தொலைத்து, அவன் ஒற்றை விழியசைவில் பின் செல்லத் தயாராகி நின்றிருந்தும், அதீந்திரன் அவர்கள் புறம் திரும்பவும் இல்லை, ஏறெடுத்துப் பார்க்கவும் இல்லை.

தன் போக்கில் நீந்தி குளித்துக் கொண்டிருந்தவனை நெருங்கிய செந்தில், "தம்பி நேரமாகிடிச்சி…" எனவும், எழுந்து வந்து அவரிடம் இருந்து துண்டை வாங்கித் தலை துவட்டியவன், வீட்டிற்கு வரவும், அனைவரும் மதிய உணவுக்கு வரவும், சரியாக இருந்தது.
உணவு முடிந்ததும், தன் தமையனிடம் தொழில் சம்மந்தமாகப் பேசிக் கொண்டிருந்தவனின் அருகில் ரகுநந்தனும், எதிரில் அலர்மேல் மங்கையும், வைஜெயந்தியும் அமர்ந்தனர்.

ரகுநந்தன் "அதீப்" எனவும்
"என்னப்பா?" என்றவன் பார்வை, ஊஞ்சலின் பின் இருந்த சுவரில் இருந்தது. அவரை நோக்கி இல்லை.

“என்னைப் பாருடா!" என்றதும், ஒரு நொடி அவர் முகம் நோக்கியவன், பின் மீண்டும் பார்வையைச் சுவற்றில் பதித்தான்.

"அதீப், நாளைக்கு என் நண்பன் மாதேஷ்வரனோட பொண்ணுக்குக் கல்யாணம். அதுக்கு நம்ம எல்லாரையும் அழைச்சிருக்கான், இன்னிக்கு கோவில்ல. நீ அங்க இல்லாததால, உன்னைப் பார்க்க முடியவில்லை." எனக் கூறிக்கொண்டிருக்க,

அதீந்திரனோ, "அம்மா, இந்தப் பால் குடம், முளைப்பாரி எல்லாம் இனிதான வரும்?" என்றான்.
"அதீப்" என்ற தந்தையை நோக்கித் திரும்பி,
"7 மணிக்கு தயாரா இருந்தாப் போதுமில்ல?” என்றவனிடம்,
புருஷோத்தமன் "போதும்டா." எனவும்,

“சித்தப்பா... பால்குடம் வருது…" எனத் துள்ளிக் கொண்டு வரவும் சரியாக இருந்தது. வீட்டு மாடியில் நின்று, அதை அகலாத பார்வை பார்த்துக் கொண்டிருந்தான். தள்ளி வரும் போது பார்த்தவன், ஊர்வலம் நெருங்கவும் அறைக்குள் சென்று விட்டான்.


எனை சூழந்தவர்களையும்
சூழ்நிலைகளையும்
நிர்ணயித்து நிர்வகிப்பவன்
உனை சூழ்ச்சிகளின் சுழலில்
சிக்க விடுவேனோ ?
தடுத்தாட்கொள்வாயோ
தகர்ந்து போகும் முன்னே…?

******************
 
அத்தியாயம் - 4

பேருந்தில் இருந்து இறங்கிய ஆராவை அழைத்துச் செல்ல, தயாராக இருந்தார், மாதேஷ்வரன் ஆராத்யாவின் தந்தை.

மாதேஷ்வரனைக் கண்டதும் முகம் மலர அவரிடம் வந்த மீனா, “என்ன பெரியப்பா, நல்லாயிருக்கீங்களா?" என்றதும் ஏதோ யோசனையில் இருந்தவர், மீனாவின் குரலில் தன்னை மீட்டு சிறு புன்னகையுடன்,
“வாம்மா மீனா! நல்லா இருக்கோம். நீ எப்படிமா இருக்க? பரிட்சை எல்லாம் நல்லபடியா எழுதி இருக்கியா?" என்றார்.

“அருமையா எழுதியிருக்கேன், பெரியப்பா!" என்றாள்.
ஆராவும், இவர்கள் பேசுவதைப் பார்த்துக் கொண்டே பேருந்தில் இருந்து உடைமைகளை இறக்கி சரிபார்க்க, மாதேஷ்வரன் ஆராவின் அருகில் இருந்த இரு பெட்டிகளைத் தூக்கியவாறு மீனாவிடம்,

"நீயும் வா தாயி, உங்க வீட்ல வுட்டுருதேன்." என்றவரிடம்,
"பெரியப்பா, அம்மா அப்பா இரண்டு பேரும் ஊர்ல இல்ல... நாளைக்கி தான் வருவாக. இன்னிக்கு ஆரா கூடத் தான்." என்றவள் மீதம் இருந்த பைகளைத் தூக்கி வர, வாகனத்தின் பின்புறத்தில் அனைத்தையும் அடுக்கிய பின், முன்புறம் மாதேஷ்வரனும், பின்புறம் இவர்களும் ஏறிக் கொள்ள, கார் புறப்பட்டது.

தந்தை சற்று கோபமாக இருப்பதாகத் தோன்றியது ஆராவிற்கு, சாதாரணமாக ஒரு விசாரிப்பு கூட இல்லாதது, என்னவோ? ஏதோ? என்ற உள்ளுணர்வை உற்பத்தி செய்து வைத்தது.

ஆராத்தியா, மீனா இருவரும் இளவயது தோழிகள் இருவரும் வெவ்வேறு கல்லூரியில் படிப்பவர்கள், ஒரே ஊர் என்பதால் விடுமுறைகளில் சந்தித்துக் கொள்பவர்கள். இன்று ஒரே பேருந்தில் ஒன்றாக வந்தனர்.
வழியெங்கும் ஆரா மீனாவின் பேச்சிற்கு காதைக் கொடுத்தாலும், ‘தந்தை ஏன் பேசவில்லை. அவரது கோபத்திற்கு என்ன காரணம்?’ என யோசித்தபடி, காரணங்களை மனம் தேடிக் கொண்டிருந்தது.

வீட்டுத் தெருமுனையின் முன் கார் திரும்பவுமே, அன்னை பத்மா, தங்கை வசுதாரிணி இருவரும் வாயிலில் நிற்பதைப் பார்த்து விட்டாள், ஆரா. வாகனம் கேட்டின் முன் நிற்கவும், அவர்கள் இவளிடம் வரவும் சரியாக இருந்தது. இறங்கிய உடன் தாயை அணைத்துக் கொண்டவள், பின் சுற்றும் பார்த்தவள் ஏதோ கேட்க வாய் திறக்கும் முன்,

மாதேஷ்வரன் "எதுவாயிருந்தாலும் வீட்டுக்குள்ள போய்ப் பேசிக்கலாம்." என்ற படி வீட்டுக்குள் போய் விட, அவரைத் தொடர்ந்திருந்தினர் பெண்கள்.

முன் வரவேற்பு அறை தாண்டி கூடத்திற்குள் வந்தவர், அதற்காகவே காத்திருத்தார் போல், உடைமைகளைத் தூக்கி ஒரு பக்கம் போட்டவர், ஆராவின் முகம் நோக்கி,
"இன்னிக்கு உனக்குக் கல்யாணம். அம்மா சொல்றதக் கேட்டு நட!" என்றவர் தனது அறைக்குள் விறுவிறுவெனச் சென்று விட்டார்.

அதிர்ச்சியில் திகைத்து விழித்தவாறு நின்றிருந்தவளைப் பார்த்த தங்கையும் தாயும் வார்த்தைகள் இன்றி, தாங்களும் அவளை வெறித்தபடி பார்த்திருந்தனர். மீனா தான்…
"ஆரா, ஆரா!" என உலுக்கி, அவளைச் சுய நினைவுக்குக் கொண்டு வந்தாள்.

திடீரெனக் கேட்ட செய்தியில் மூளை மரத்துப் போனவள், ‘என்ன கேட்க வேண்டும்? எப்படி எதிர்வினை ஆற்ற வேண்டும் என்பதையும் மறந்திருந்தாள்.’ சற்று நேரம் கழித்து எதைக் கேட்க எனப் புரியாமல்,

"என்னமா இது?" என்று கண்களில் நீர் மல்கக் கேட்டவளை…
"என் ராசாத்தி, ஒன்னுமில்ல தாயி! எல்லாம் நம்ம விதி. இதையெல்லாம் அனுபவிக்கனும்னு தலைல எழுதிட்டியே ஆண்டவா!" எனக் கதறியபடி இறுக அணைத்து கொண்டவர், நிகழ்ந்தவற்றைக் கூறினாள்.

………………….

"ஏய்! பத்மா! அங்க சாமி படத்துக்கு முன்ன ஐயாயிரம் இருக்கு. அறுப்பு மிஷினுக்கு வைச்சிருக்கேன்.

அந்தப் பையன் வந்தாக் குடு, நான் மேலகாட்டுல களை பறிக்க ஆளுகள வரச் சொல்லி இருக்கேன், நேரமாயிட்டு நா வாரேன்." என்றவர் வாசலுக்கு விரையவும், சட்டைப் பையைச் சரிபார்த்தவர், அதில் அலைபேசி இல்லாதது கண்டு,
"ஏ…. பத்மா! அந்தப் போன எடுத்தா, சார்ஜர்ல கிடக்கு!" என்றபடி தனது இரு சக்கர வாகனத்தை இயக்க…

"அப்பா! என்னைய பள்ளிக் கூடத்தில் இறக்கி விட்டுருங்க." என இரட்டை பின்னல் துள்ள, தந்தையின் பின் ஏறிக் கொண்டாள், தாரிணி.

"ஏன்டி பக்கத்துலதான இருக்கு, நடந்து போனா ஆவாதோ?" என்றபடி வந்த பத்மாவிடம் இருந்து போனை வாங்கித் தந்தையின் சட்டை பையில் வைத்தவள்,

"சும்மா சும்மா நடந்தா, கால் கட்டையாகிப் போயிடும்மா. அதான் சேமிச்சு வைக்கறேன்."

"இந்தா வாரேன். உனக்கு வாய் நீளுது!" என்றபடி கையை ஓங்கினார்.

"சீக்கரம் போங்கப்பா, அம்மா அடிக்கவர்றதுக்குள்ள…" என்றவள் பத்மாவிற்குக் கை அசைத்தபடி விடை கூற, மாதேஷ்வரனும் சிரித்த முகமாகவே வண்டியை ஓட்டிச் சென்றார்.

வீட்டுக்குள் நுழையும் போதே "அம்மா… காபி!" என்றபடி வந்த இளைய மகளை,

"வீட்டுக்குள்ள வரும் போதே, அம்மா காபி, அம்மா காபின்னு ஏலம் போடாதடி! போ! போயி கை, கால் முகம் கழுவி ட்ரஸ மாத்து!"

பீடித் தட்டை தள்ளி வைத்துவிட்டு எழுந்தவர், "பொம்பள புள்ளைக ஒன்னுக்கு இரண்டு இருக்குன்னுதான் பேரு, வெந்நீ வைக்கக் கூடத் தெரியாது!"
உடை மாற்றிக் கொண்டே வந்தவள், ஜிப்பைப் போட்டபடி அடுப்படியில் நுழைந்தவள், "சும்மா சொல்லாத! உன் மூத்த மகளுக்குத் தான் தெரியுமே!" எனவும்,

''ஆமா, உங்கக்காதான, கல்யாணத்துக்குச் சொன்னா வளைகாப்புக்கு வருவா, அம்புட்டு வேகம்!" என நொடித்துக் கொண்டவரின் முகம், பெருமிதத்தில் இருந்தது.

"மவளப் பத்தி பேசிறப்படாது, முகமெல்லாம் டாலடிக்குமே!" என்றாள் காபியை குடித்துக் கொண்டே…

"ஆமாடி, போ! போய்ப் படிக்கிற வழியப் பாரு! அந்த உள்ளாற இரண்டாந்தட்ல சேவு இருக்கு எடுத்துக்க." என்றபடி வெளியே வர,
கணவனைப் பார்த்த உடன், மீண்டும் காபி எடுத்து வர உள்ளே சென்றாள்.
தாரிணியோ "ம்மா நானும் NSS ல சேரப் போறேன்." என்றபடி காபியை உறிஞ்சினாள். மகளின் கூற்றைக் கேட்டபடி உள்ளே வந்தார் மாதேஷ்வரன். போகும் போது மலர்ந்து இருந்தவர் முகம், வீடு திரும்பிய போது கறுத்துப் போய்க் கிடந்தது.

இளைய மகளிடம் "ஒன்னும் வேண்டாம். ஒருத்தி சேவை செய்யப் போய் வாங்கிக் குடுத்துருக்க, சிறப்பு போதும்! நீ ஒரு செப்பும் எடுக்க வேண்டாம்." என்றவரின் அருகில் வந்த பத்மா, கையில் காபியை கொடுத்த படி,

"ஏன் எம்மவ சிறப்புக்கு என்ன? நாலு வயசானவுகளுக்கு உதவிதான செய்யப் போயிருக்கா? அதுக்கு எதுக்கு இந்தக் குதி குதிக்கீக?" என்றது தான் தாமதம், காப்பி டம்ளரை விசிறியடித்தவர்,

அவரையும் அரைந்திருந்தார்.
இத்தனை வருடக் காலத்தில், கணவனிடம் சுடு சொல் கூட கேட்டிராதவர், அடி வாங்கியதில் விழிகள் கலங்க நின்று விட்டார். தாரிணியோ, சிலையெனச் சமைந்து போனாள்.

புயலின் சீற்றத்துடன் இருந்தவர், “பொம்பளப் புள்ளைக்குப் படிப்பெல்லாம் வேண்டாம், கட்டி குடுத்துடுவோம்னு அப்பவே சொன்னேனே கேட்டியளா? ஆத்தாளும், மகளுமா சேர்ந்து ஆடினியல்ல!" என்றவர்,
“எம் மக படிக்கா, சமூக சேவை செய்தான்னு பவுசு கொழிச்சல்ல, இல்லயாம், நிதம் ஒருத்தன் கூட ஊர் மேயப் போறான்னு படம் புடிச்சி போட்டுருக்கான்." என்றபடி அலைபேசியில் ஆராவைத் தவறாகச் சித்தரித்து, குமாரால் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த படங்களைக் காண்பித்தார்.

உண்மையில் ஆராவும், அவளது சில தோழிகளும் சில முதியோர் இல்லங்களுக்கு உதவச் செல்ல, ஆசிரம நிர்வாகி ஒரு முறை நல்ல பொருளாதார வசதியுள்ள சில முதியவர்கள் மருத்துவனை, சில பொது இடம், கரண்ட் பில் கட்ட, தனிமையைக் குறைக்க ஆள் இன்றித் தவிக்க, அவர்களுக்கு இவர்கள் சத்தமின்றி உதவி செய்ய ஆரம்பித்தனர்.

பின்பு அவர்களை ஒரு குழுவாக மாற்றி, கணினி இயக்க, அதன் மூலம் பணிகளைச் செய்ய, தங்கள் குழந்தைகள் மற்றும் பேரக் குழந்தைகளுடன் தொடர்பு கொள்ளச் சொல்லி தருவது, வேறு பொழுதுபோக்கு என உதவினர். அப்படி அறிமுகமானவர் சதாசிவம், சிவகாமி தம்பதியர்.

இவர்கள் பத்மாவிற்கு, சுற்று வழிச் சொந்தம். அவர்களின் ஒரே மகன் வெளிநாட்டில் இருக்க, ஆராவைத் தங்கள் பேத்தியாக நினைத்தனர். கல்லூரியின் கடைசி நாள் அன்று பரிட்சை முடிந்து பையுடன் ஊருக்குக் கிளம்ப, தோழிகள் வேறு ஊர் என்பதால் இவளுக்கு முன் சென்றிருக்க, அவளுக்கு சதாசிவத்தின் மகனிடம் இருந்து திடீரென போன் வந்தது.

சதாசிவம் ஏற்கனவே படுக்கையில் இருக்க, தற்போது சிவகாமி கீழே விழுந்து தலையில் அடிப்பட்டு ஆஸ்பத்திரியில் இருப்பதாகவும், தான் வரும் வரை அவர்களைப் பார்த்துக் கொள்ளும் படி கூறியவன், நண்பன் ஒருவனை அனுப்பி வைத்தான். அவனுடன் தான் ஆரா அன்று காரில் போனது. இதைப் பெற்றோர்களிடம் கூறி, அனுமதி பெற்றுத் தான் போனாள்.
"எவனாச்சும் எதையாவது போட்டா, அதை அப்படியே நம்ப முடியுமா? அந்தப் புள்ள, நம்ம கிட்ட சொல்லிட்டுத்தான போச்சி?" என்றார் பத்மா அழுகையினூடே…
மாதேஷ்வரனோ... "ஊர்ல எல்லாப் புள்ளைகளையுமா படம் புடிச்சி போடுதான்? உம் மக ஊர் சுத்தப் போய் தான இவ்வளவும், இவளும் பேசாம வீட்டோட கிடந்திருந்தா, இந்த இம்சையெல்லாம் வருமா? என்னமோ இரண்டெழுத்துத் தெரிஞ்சா போதும்னு வீட்டோட வைச்சிருந்தா, இப்படி கண்ட கண்ட நாயெல்லாம் பேசறத கேட்க வேண்டி இருக்காதுல்ல…"

இதில் ஆவேசம் கொண்டவராய், அவிழ்ந்த கூந்தலை அள்ளி முடிந்தபடி, "பொம்பள புள்ளைக வெளிய தெருவுல போனா இவுனுக இஷ்டத்துக்குப் பேசுவானுவளோ! பேசுற அந்த நாக்க இழுத்து வைச்சி அறுக்கனும்! பேசுவானுகளோ மானாங்கனையா, வாங்க போயி போலீசு ப்ராது கொடுத்து, இவனுகளத் தூக்கி உள்ள வைச்சிட்டுதேன், மறுசோலி!" காளியென நின்றிருக்க,

மாதேஷ்வரனோ முகம் இறுக, “எதுக்கு இப்ப நாலு பேர் பேசரத, பொறவு பேப்பர பார்த்து நாலாயிரம் பேர் பேசுவானுவோ, விசாரிக்கேன்னு நேரம் கெட்ட நேரம் வந்து இம்ச பண்ணுவானுவ! வயசுப் புள்ளைய, அங்க வா! இங்க வான்னு இஷ்டத்துக்குக் கேள்வி கேட்டு திரிக்கவா ? நாளப் பின்ன கல்யாணம் காட்சின்னு வரும் போது, அவனுக்குப் பதில் சொல்லனும். இவுனுக கோர்ட்டு கேஸுன்னு இழுத்தடிக்கறதப் பார்த்தா, கடைசில காசு செலவு பண்ணி, நாமளே கேஸ வாபஸ் வாங்க வேண்டி இருக்கும்."

இது போன்ற சில காரணங்கள் பல கொடுமைகளை வெளியே வர விடாமல் வைத்து இருக்கிறது. சட்டமும் இருக்கிறது, காவலும் இருக்கிறது, நீதியும் இருக்கிறது, பெண்களும் இருக்கின்றனர். கயைமையும் இருக்கிறது. ஒன்றுக்கொன்று தொடர்பின்றி, வலுவின்றி,

“இல்லங்க! நம்ம புள்ள மேல தப்பில்லைன்னு ஊர்ஜிதமாயிடும். அந்தப் பொறுக்கிப் பயலுக்குத் தண்டனை கிடைச்சிடும்." என்றார்.

"அது அப்புறம், ஆனா, ஏற்கனவே பார்த்தவங்க பேசுற பேச்ச, என்ன செய்ய? ஒவ்வொருத்தரையா பார்த்து, எம்மக மேல குத்தமில்லன்னு சொல்ல முடியுமா? இல்ல, போஸ்டர் அடிச்சி ஒட்ட முடியுமா?" என்றவரிடம்,

“எது எப்படின்னாலும், பேசுறவங்க பேசத்தேன் செய்வாக! அதுக்குப் பயந்தா முடியுமா? அவன் செஞ்ச தப்புக்கு என்ன பரிகாரம்?" என்ற பத்மாவை உறுத்தவர்,

"உன் சோலி எதுவோ, அத மட்டும் பாரு! என் மரியாதையை எப்படிக் காப்பாத்திக்கனும், என்ன செய்யனும், என்ன செய்யப்படாதுன்னு நீ ஒன்னும் எனக்கு ரோசனை சொல்லத் தேவையில்லை!" என்றவர்,

“இதைப்பத்தி ஆராவிடம் யாரும் பேசக்கூடாது! ஏன்னா, அவ போன அமத்தி (ஸ்விட்ச் ஆப்) வைச்சிருக்கா! எனக்குத் தெரியாம ஆத்தாளும் மகளும் அவளுக்குச் சொன்னீக!" என எச்சரித்திருத்தவர் உள்ளறைக்குச் சென்று விட,
ஆராவோ ஆஸ்பத்திரிக்கும் வீட்டுக்கும் அலைந்தவள், அணைத்து வைத்த போனை நாடவில்லை. அதற்கு நேரமும் இல்லை. பேருந்திலும் களைப்பு மிகுதியில், ஏறிய உடன் உறங்கி விட்டாள்.

அனைவரும் இருந்த இடத்தை விட்டு நகராமல், அங்கேயே வெகு நேரம் அமர்ந்து விட, விடியும் தருணத்தில் தாயை அணைத்தபடி உறங்க ஆரம்பிக்க,

அறையில் இருந்து வெளியே வந்த மாதேஷ்வரனைக் கண்டதும் விழுந்தடித்து எழுந்து உட்கார, இருவரையும் பார்த்தவர், குளித்து கிளம்பி, ஒரு வார்த்தை பேசாமல் வெளியே சென்றார்.

ராஜேஷை மணமகனாகப் பேசி முடித்தவர், பத்திரிக்கையுடன் வீடு திரும்பினார்.

சாமி அறையில் விளக்கு முன் பத்திரிக்கையை வைத்தவர், பின் வந்து நின்ற மனைவியைப் பார்த்து,
“நாளைக்குக் குல தெய்வம் கோயிலுக்குப் போகனும். வரும் போது உன் அண்ணன் தம்பிக்குப் பத்திரிக்கை வைச்சிடலாம்.” என்றவரிடம், எதைக் கொண்டு பேச்சைத் தொடங்க என எண்ணியவர்,

"என்னங்க இது? ஆராக்கு பையன் யாருன்னு கூடச் சொல்லல?" என பத்மா ஆரம்பிக்க,

"ஏன்? உம் மக நான் பார்த்த பையனக் கட்ட மாட்டாளோ? இந்த விஷயம் ஆராக்கு தெரியக் கூடாது, மீறி தெரிஞ்சாலோ? இந்தக் கல்யாணம் நின்னாலோ? நான் உயிரோட இருக்க மாட்டேன்?" என்றவரிடம், எதுவும் கூற இயலாதவராய் நின்றிருந்தார் பத்மா. மேற்கொண்டு நடக்கும் காரியங்களைக் கவனிக்க அவருக்கு நேரமில்லை, தடுக்க அதிகாரம் இல்லை. அவகாசமும் இல்லை.

இன்று காலை ஆராவை அழைத்து வரக் கிளம்பிய மாதேஷ்வரன், "ஏற்கனவே நான் சொன்னது ஞாபகம் இருக்குல்ல. நீ என்ன செய்வியோ? ஏது செய்வியோ? அவ கழுத்துல இன்னிக்கி தாலி ஏறணும். இல்ல, உன் கழுத்துலருந்து இறங்கிரும்." என்று கங்குகளை இறைத்து விட்டுப் போயிருந்தார்.

அனைத்தையும் கூறி முடித்தவர், "நான் எதைக் கேட்க ? யாரை நோக? என்ன செய்ய? எதைப் பேச? எனக்கு ஒன்னும் புரியலையே, முருகா!" என்றவர்,

சட்டென எழுந்து, "ஆரா, நான் கும்புடுத என் குல தெய்வம் மகமாயி அம்மனா, உன்ன நினைச்சி கேட்கேன். தயவு செய்து இந்தக் கல்யாணத்துக்குச் சரின்னு சொல்லிருமா, தாயி!" எனக் கரம் குவித்து மடியேந்தி நின்றவரை,
"அம்மா...." எனக் கூவலுடன் அணைத்துக் கொண்டாள்.

"உங்களுக்காக யாரை வேணும்னாலும் கட்டிகிறேன்." என்றவளின் கண்ணீர், பத்மாவை நனைத்தது.
மகளைச் சமாதானப்படுத்தியவர், தன்னையும் திடப்படுத்திக் கொண்டு, "இரு, நான் போயி உனக்கு காப்பித் தண்ணி எடுத்தாறேன். இன்னும் கொஞ்ச நேரத்துல, நம்ம பக்கத்து ஆளுக, மாப்பிள்ளை வீட்டுலர்ந்து பொண்ணழைக்கவும் வந்துருவாக!"
"சரிம்மா…" எனச் சோகையாய் சிரித்தவளைக் கண்ட மீனாவும், வசுதாவும் கண்ணீர் வழிய நின்றிருந்தனர்.

சற்று பொறுத்து, “மாப்பிள்ளை யாருடி? ஆள் எப்படி?” என்று சூழ்நிலையை மாற்றிய மீனாவிடம்,
“எல்லாம் அந்த காளியாத்தா மவன்தான், விளக்கு மாத்துக்குப் பேரு பட்டுக் குஞ்சலமாம், அதை மாறி இந்தத் தெருப் பொறுக்கிக்கு, பேரு ரா... சே... சூ....” என நொடித்தாள்.

"ஏய் நம்ம மேலத் தெரு காளியாத்தா மவனா? அவ சின்னத்த முறையில்ல வரும் உங்களுக்கு? அ...வ...னா…" என்ற மீனாவின் இழுவையில், அவனைப் பற்றி அவளுக்கும் தெரியும் என்பது புரிபட,
தாரிணி, "ஆமா, மீனாக்கா! அம்புட்டும் நடிப்பு! எங்களப் பார்த்தா ஒரு வழிசல், ஒரு பேச்சு! யாராச்சும் வந்தா, அப்படியே மாத்தி இன்னோரு சீனப் போட்டுருவான்." எனப் பொரிந்தாள்.

அப்போதுதான் மாப்பிள்ளை யார் என அறிந்தவள், மனம் இற்றுப் போனது. ஊரில் நடந்த பொதுக் கூட்டத்தில், காற்றாலைக்கு நிலம் விற்பது குறித்துப் பேசித் தீர்மானம் எடுத்திருந்தனர். அதன் படி விவசாய நிலங்களை காற்றாலைக்கு விற்கக் கூடாது எனத் தீர்மானம் எடுத்திருந்தனர்.
காற்றாலைகள் விவசாய நிலங்களில் அமைந்தால், அந்த இடம் கான்கீரிட் காடாகும். மீண்டும் எப்போதும் விவசாயம் செய்ய முடியாது. ஏனெனில் அத்தனை உயரம், அதற்கு ஏற்ப கீழே அஸ்திவாரம் எழுப்ப வேண்டும். பின் அந்தக் காற்றாலை ஒப்பந்ததின் படி அமைந்திருந்தாலும், அவை கான்கீரிட் பாலையே அன்றி, மீண்டும் விவசாய பூமி ஆகாது. எனவே தான் அதனைக் கடுமையாக எதிர்த்த மாதேஷ்வரன், மற்றவர்களுக்குப் புரிய வைத்து, தரகர் மற்றும் வேறு சில விவசாயிகளின் எதிர்ப்பினை மீறி அவர்களை ஒன்றிணைத்து, நிலம் காற்றாலைக்கு விற்பதில்லை எனும் தீர்மானத்தை நிறைவேற்றினார்.

அந்தத் தரகர் வேலையைப் பார்த்து விவசாயிகள் மற்றும் நிறுவனங்கள் என இருபுறமும் பணத்தைக் கொள்ளை அடிப்பவர்களில் ஒருவன் இந்த ராஜேஷ். இவரைப் பழிவாங்கும் தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தான். அவனது திருவிளை ஆடல்கள் பல ஊருக்குள் பலருக்குத் தெரியாது.

ஆனால்... அதை அவன் வாய்மொழியாகவே ஒரு முறை கேட்க நேர்ந்தது அவளுக்கு.
ஆராத்தியா கண்ணீரோடு அன்னையின் முகம் பார்த்து, "பேசாம, செத்துறட்டுமாம்மா?" என்றவளை தாய் அதிர்ந்து நோக்க, உள்ளேயிருந்து வந்த மாதேஷ்வரன்…
"இப்ப அது முடியாது. என் கௌரவம் பாழாப் போயிரும். கல்யாணம் முடிஞ்ச அப்புறம் சாவு!" என்றிருந்தார்.

அதற்கு பிறகு இயங்கும் சிலை என மாறிப் போனாள், ஆரா. பெண்ணழைக்க ஆட்கள் வந்ததோ, மண்டபத்தில் நுழைந்தது மணவறைக்கு அழைத்து வரப்பட்டதோ, எதுவும் அவள் மனதில் இல்லை.

பட்டு வேட்டி சட்டை பளபளக்க மந்திரங்களைச் சொல்லிக் கொண்டு இருந்தவன், திருமணத்திற்கு சில நிமிடங்கள் இருக்கையில் மணவறையில் இருந்து எழுந்த ராஜேஷ்,
“இவ கழுத்தில் தாலி கட்ட முடியாது, இவ கூட வாழ முடியாது!" எனக் கூறியிருந்தான். இவரைப் பழிவாங்கும் நேரத்திற்குக் காத்திருந்தவன், தனது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள, அனைவரும் அதிர்ந்து நோக்க, மாதேஷ்வரன் அருகில் ஓடி வந்து,

“என்ன தம்பி இது? நான் அன்னிக்கே உங்க கிட்ட எல்லா விசயத்தையும் சொல்லித் தான கல்யாணம் பேசினேன்." என வினவ,

"அப்ப அது சரியாப் பட்டது. ஆனா, இப்ப யோசிச்சிப் பார்க்கும் போது அது உண்மையா இருக்குமோன்னு தோனுது. நாளைக்கி நாங்க இரண்டு பேரும் போகும் போது, உன் பொண்டாட்டி எவன் கூடயோ போனவளாமேன்னு கேட்டா, நான் என்ன பதில் சொல்ல?" என்றவன்,

“அந்தக் கேள்விக்குப் பதில் சொல்லனும்னா... உங்க நிலத்தை…" எனப் பத்திரங்களை நீட்டியவன், விடையாக அவரது அனைத்து நிலங்களையும் அதற்கு ஈடாக்கி தரக் கேட்டிருந்தான்.

எதை நம்பக் கூடாதோ அதை நம்பினார். யார் உரைப்பதை செவிமடுக்க வேண்டுமோ? அதைத் தான் எனும் நினைவில் தூர நிறுத்தினார். எதையோ கெளரவம் என்றெண்ணி, இப்போது அனைத்தும் இழந்து செய்வதறியாது நின்றிருந்தார்.


சமூக இந்திரர்களின்
தீண்டலில் கல்லாகிப்
போன அகலிகை நான்!
இந்திரர்களின் தலைவன்
உன் வருகையில்
என் விமோசனமோ?
 
Status
Not open for further replies.
Top