எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

6 நேத்திரனை ஆளும் பௌர்ணமி

priya pandees

Moderator


அத்தியாயம் 6

பௌர்ணமி அவள் கணவனிடம் விவாகரத்து வாங்கிவிடும் நோக்கத்துடன் இங்கிருந்து புறப்பட்டிருக்க, அங்கு அவளை ஆரவாரமாக வரவேற்க காத்திருந்தான் அவள்‌ கணவன் குஹன்.

குஹனுக்கு ரசனை அதிகம். எதையும் ரசித்து உள்வாங்க கூடியவன். இயற்கை, எதிரில் பார்க்கும் மனிதர்கள், உண்ணும் உணவு வகைகள், ஆடைகள், அணிகலன்கள், இப்புடி அனைத்திலும் ரசனை தேட கூடியவன் அவன்.

மற்றவைகளையே அவ்வளவு ரசிக்கிறான் என்றால் மனதுக்கு பிடித்தவளை, தன்னவளை அனைத்தையும் தாண்டி ஏகத்திற்கும் ரசிக்க கூடியவன். ஆனால் வாய்விட்டு அதை பௌர்ணமியிடம் சொல்லிவிட மாட்டான். பெண்கள் பொதுவாக, அழகை வர்ணிக்க வேண்டும் என எதிர்பார்ப்பார்கள். ஆனால் அவன் பௌர்ணமி, "எஸ் ஐ க்நோ!" என பதில் கொடுப்பாள்.

அவன் அதை நன்கு அறிந்ததாலேயே அவளிடம் அவளின் அழகை அதிகம் சொல்லமாட்டான். எப்போதாவது அவனை மீறி மெச்சுதலுடன் பாராட்டுவது தான், அது தான் அவளுக்கும் பிடித்திருந்தது. இப்படி தான் இருவரின் காதல் காலம் எல்லாம் தாமரை இலையும் தண்ணீருமாக ஒட்டாமலே கழிந்திருந்தது. ஆனால் திருமணத்திற்கு பின்னும் அதை அப்படியே தொடர முடியாது தானே?

குஹனும், பௌர்ணமியும் பண்ணும் சேட்டையில் மண்டை காய்ந்திருந்த அஞ்சாநம்பி, அதை இறக்கி வைக்க அவன் மனைவிக்கு காணொளி அழைப்பில் அழைத்துக் கொண்டிருந்தான். அவனுக்கும் திருமணம் ஆகி ஆறு மாதங்கள் தான் ஆகியிருந்தது. பேங்கில் வேலையில் இருக்கிறாள் அவன் மனைவி. கவர்ன்மென்ட் உத்தியோகம் என்பதால் அதிக விடுமுறை எடுக்க முடியாது போக உடன் அழைத்து வரவில்லை.

"என்னங்க இந்நேரம்?" என பாதி தூக்கத்தில் பேசினாள் லதா. இங்கைக்கும் அங்கைக்கும் நாலரை மணி நேரம் வித்தியாசம் வரும்.

"அடிப்பாவி அதுக்குள்ள தூங்கிட்டியா?" அவனுக்கு அங்கே மணி ஒன்பதை தான் நெருங்கி கொண்டிருந்தது.

"அதுக்குள்ளையாவா?" என அவள் முறைத்து பார்க்கவும், திரையின் மேலேயே தெரிந்த இந்திய நேரத்தை பார்த்தான். ஒன்று பத்து என்றது அது.

"சாரி டைம் பாக்கல. பாக்குற மாதிரியா வச்சுருக்காங்க. ஓவர் பிஸி. போட்டு வருத்தெடுக்குறாங்க" என சோகமாக சொல்ல,

"ஏங்க என்னாச்சு?" என்றாள் தூக்கத்தோடயே.

"அத ஆரம்பிச்சா நா விடிய விடிய பேசுவேன் நீ தூங்கிக்க மாட்ட. நாம வேற எதாவது பேசுவோமா?"

"பேசலாம். ஆமா நிஜமாவே டிரைக்டர் சாரும் அந்த நடிகையும் கனெக்ஷன்ல இருக்காங்களா? வெளிநாடு ஷீட்டிங்க்லாம் போனா, இப்படி எல்லாரும் ஆளுக்கொரு பொண்ணோட சுத்துறது சகஜமாமே?" என்றாள் சந்தேகமாக.

"யார கேட்குற?"

"உங்க சினிமா காரங்க எல்லாரையும் தான்"

"இல்ல. என்னைய கேட்குற நீ?"

"ஏன் நீங்க அப்படி தான் பண்றீங்களா அப்போ? இதுக்கு தான் கவெர்ன்மெண்ட் வேலைல இருக்குறவளா தேடுனீங்களோ?" என லதா முறைக்கவும்,

அங்கு சோஃபாவில் சரிந்து படுத்திருந்த அஞ்சாநம்பி எழுந்தே அமர்ந்துவிட்டான். அதிர்ச்சியை உள்வாங்கவே நேரம் பிடித்தது அவனுக்கு.

"என்ன சத்தத்த காணும்?"

"யாருடி இப்படிலாம் சொல்லி குடுத்தது உனக்கு?" என அதிர்வாகவே கேட்க,

"விசாலாட்சி பெரியம்மா தான் சொன்னாங்க. எத கேட்டாலும் தெரியல தெரியலங்குறான், இவன் என் மகன் கூட தான் வேலை பாக்கானா இல்ல அவன்கூட இருக்கேன்னு சொல்லிட்டு ஊர மேய்றானான்னு தெரியல. நா என் புள்ளையவே அவன் பொண்டாட்டி தான் பாத்துக்கணும்னு விட்ருக்கேன். உனக்கும் அதான் சொல்லுதேன். கவனமா இருன்னு சொல்லிட்டு போனாங்க. அவங்க பேசிட்டு போயே ரெண்டு நாள் ஆகல அவங்க மருமக டிவோர்ஸ் கேட்ருக்காக. இப்ப யார நம்ப‌ நானு?"

"இங்க பாரு உனக்கு நா ஒரு பெஸ்ட் அட்வைஸ் இன்னைக்கு சொல்றேன் கேட்டுக்கோ. இந்த உலகமே அழியிற சிட்யுவேஷன் வந்தா கூட அந்த அத்த பேச்ச மட்டும் நம்பிறாத. உப்பு கரைசலுக்கு கூட பெறாத விஷயத்த பெருசா சொல்லுறதுல கில்லாடி"

"அவங்க என் நல்லதுக்கு தான சொல்றாங்க? அதும் பிரிச்சே பாக்காம என் மருமகளுக்கு சொன்னது தேன் உனக்கும்னு பேசுற பெரிய மனுஷிய தப்பு சொல்லுவீங்களா நீங்க? அவங்க இல்லனா நம்ம கல்யாணமே இல்ல தெரிஞ்சுக்கோங்க"

"எது புதுசா கல்யாணம் ஆன பொண்ணுகிட்ட புருஷன நம்பாதன்னு சொல்றதா?" என பல்லை கடித்தான் அவன்.

"நீங்க அப்படி இல்லனா அப்படி இல்லன்னு சொல்லிட்டு போங்க. பெரியம்மாவ பேசாதீங்க"

"அப்படி இருக்கவேன் எதுக்குடி ஒரு மணிக்கு எவகூடவோ குஜாலா இல்லாம உனக்கு கால் பண்ண போறேன்?"

"அப்ப குஹன் அண்ணா அப்படி தானா?"

"அவருக்கு அவரு பொண்டாட்டிய கொஞ்சவே நேரம் இல்லடி"

"கொஞ்சிருந்தா அந்த அண்ணி டிவோர்ஸ் கேட்ருக்க மாட்டாங்களே?"

"இப்படியும் பேசு அப்படியும் பேசு. உனக்கு நாளைக்கு வேலைக்கு போணும்ல போய் தூங்கு நா நாளைக்கு சீக்கிரமா கால் பண்றேன்" என்றான் கடுப்பாகவே.

"சரி நீங்களும் தூங்கி எந்திரிங்க. குட் நைட்" என உடனே வைத்துவிட்டாள்.

"உடனே வச்சுட்டா? இந்த பொம்பளைங்க எல்லாருமே விசாலாட்சி அத்த மாதிரி தானா? இல்ல விசாலாட்சி அத்த மாதிரி தான் எல்லா பொண்ணுங்களுமா? எதுடா உண்மை?" என ஃபோனை திருப்பி அதனாலே தலையில் அடித்து கொண்டு, மீண்டும் சோஃபாவில் சரிந்து, "வேற பேசலாம்னு சொன்னதுக்கு என்னலாம் பேசிட்டா அடங்கப்பா" என புலம்பி கொண்டிருக்க, விசாலாட்சி அந்நேரம் தான் அழைப்பில் வந்தார்.

முதல் அழைப்பு முழுவதும் அடித்து நிற்க, மீண்டும் அழைத்தார்.

"ஆயுசு நூறு இந்த அத்தைக்கு. விடிய விடிய எடுக்கலனாலும் விடமாட்டாங்களே!" என முனுமுனுப்புடன் தான் எடுத்தான்.

"எங்கடா அவன்?" என்றார் அவர் எடுத்ததும்.

"அவர் அவரோட ரூம்ல அத்த. நா என்னோட ரூம்ல இருக்கேன் அத்த"

"தனிதனியா ரூம் போட தான் வெளிநாடு போறீங்களாடா நீங்க?"

"சேர்ந்து ஒரே ரூம்ல இருக்க இவங்க புள்ளையும் நானுமா ஹனிமூன் வந்துருக்கோம்?" என அவன் மறுபடியும் முனங்க,

"என்னத்த முனங்குதவேன்?"

"நடுசாமத்துல எதுக்கு அத்த முழிச்சுருந்து உடம்ப கெடுத்துக்குறீங்க? மாத்திரை போடுவீங்களே இன்னுமா தூங்கல?" என பேச்சை மாற்ற,

"எதுக்கு இந்நேரம் ஃபோன போட்டு என் உசுர வாங்குறன்னு அக்கறையா கேக்கியாக்கும்?" என்றார் அதற்கும்.

"அத்த!"

"என்னைய நிம்மதியா தூங்க விடுதீங்களாடே நீங்க?" என அவர் கத்தி கேட்கவும்,

"கத்தாதடி" என அருகில் படுத்திருந்த விஸ்வநாதர் சொல்லியபடி முறுபுறம் திரும்பி படுத்தார்.

"இவருக்கு என்னன்னு தான் தூக்கம் வேற வருதோ தெரியல" என அவரையும் திட்டிவிட்டு, "உன் சாரு என்ன ப்ளான்ல இருக்காம்னு கேட்டியா நீ?"

"ப்ளானா? பல்லவி வர்றது உங்களுக்கும் தெரிஞ்சுபோச்சா? சிமி மேடம் சொல்லிட்டாங்களா?" என அவனாக உலறிவிட்டு அலற,

"நாசமத்து போக. புதுசா என்னத்த உளறுதவேன்?" என விசாலாட்சியும் அலறி, "அந்த நடிகைக்கும் டிக்கிட் போட்ருக்கானா நா பெத்தவன்? ரெண்டு பேரையும் கூட்டி வச்சு என்னடா பண்ண போறான்?" என நெஞ்சை பிடித்தவாறாக கேட்க,

"அப்ப ப்ளானுன்னு நீங்க அத கேட்கலையா?" என குழப்பமாக கேட்டான் நம்பி.

"நீங்க படம்புடிக்க போனீகளா வேறெதுவும் விளங்காத வேலை பாக்க போனீகளா? முதல்ல அத சொல்லுலே எனக்கு"

"அத்த பல்லவிக்கு தான் நா டிக்கெட் போட்டேன். சிமி மேடமுக்கு சார் தான் டிக்கெட் போட்டாங்க. எனக்கு அது மட்டுந்தான் தெரியும்"

"அப்ப அந்த நடிகை புள்ளைய விரட்டிட்டு திரியுறது நீதானா? இல்ல அவனுக்கு மாமா வேலை எதுவும் பாக்கியாலே? இங்க அழகான புள்ளைய வேற கட்டிகிட்ருக்கியே அந்த புள்ள வாழ்க்கைய‌ யோசிச்சியாலே நீ? அந்த புள்ளைக்கு மட்டும் துரோகம் பண்ணன்னு தெரிஞ்சது விளக்குமாறு பிஞ்சுபோவும்டா. சும்மா விடுவேன்னு நினைக்காத"

"அத்தத்த்தததத!" என மன உளைச்சல் தாங்க முடியாமல் நம்பி கத்திவிட, திடுக்கிட்டு காதிலிருந்து ஃபோனை தள்ளி தூக்கி போட்டுவிட்டு காதை குடைந்தார் விசாலாட்சி. ஃபோன் சென்று விஸ்வநாதரின் காலின் முழியில் நங்கென்று விழ, "ஏட்டி என்னத்த தூக்கி காலுல போடுத. இவளும் தூங்கமாட்டா என்னையும் தூங்க விடமாட்டா" என அவர் வலியில் மெல்ல எழுந்தமர்ந்து காலை தேய்த்து கொடுத்து, அருகில் கிடந்த செல்லையும் எடுத்து விசாலாட்சி மடியில் போட்டுவிட்டு, அதே எரிச்சலோடு, "பேசாம படு. இந்நேரத்துல அவன போட்டு படுத்தாத. காலையில் பேசிக்கலாம்" என அவர் மீண்டும் படுக்க போக,

"நாப்பது வருஷத்துக்கு முன்னவும் இப்படி பேசாம படுத்து தூங்கியிருந்தா இன்னைக்கு நா இப்படி உட்கார்ந்து புலம்ப வேண்டியது வந்துருக்காதுல்ல?" என பல்லை கடித்தார் விசாலாட்சி.

"பேசாம படுடி. அவன் குடும்பத்த அவன் பாப்பான். நீ சொன்னா மட்டும் அவன் தலைகீழ குதிச்சுடுற மாதிரி எதுக்கு லவா கொட்டுத. படு" என்றவர் மறுபடியும் படுத்துவிட, இவர்கள் பேச்சை கேட்டிருந்த அஞ்சாநம்பிக்கு எரிச்சல் கலந்த கோபத்திலும் சிரிப்பு வர பார்த்தது.

"உங்கள சொல்லி என்ன செய்ய" என்றவர் ஃபோனை எடுத்து, "எதுக்குலே அப்படி கத்துன நீ?" என அவனை அரட்ட,

"ஒன்னுமே செய்யாதவன நீங்க மட்டும் பொம்பள பொறுக்கி ரேன்ஜுக்கு பேசுறீங்க? என் பொண்டாட்டி என்னைய சந்தேக போடுற அளவுக்கு பேசி வச்சுருக்கீங்க தெரியுமா?" என்றான் பாவமாக.

"சரி அது அப்றம் பாப்போம். நீ எதுக்கு அந்த பல்லவி புள்ளைக்கு டிக்கெட் போட்ட?"

"சார் தான் போட சொன்னாங்க"

"அவன் சொன்னா கூறு சொல்ல மாட்டியா நீ? தெண்டமா எதுக்கு அவன்கூட இருக்க?"

"இருங்க ஃபோன கொண்டு குடுக்கேன் நீங்களே சொல்லுங்க" என்றவன் விறுவிறுவென நடந்து வெளியே வந்து நான்கு அறை தள்ளியிருந்த குஹன் அறையை தட்டிவிட்டு உள்ளே சென்று, நீல்விருக்கையில் அவனை காணவில்லை என்றதும்,

"சார்!" என உள்ளறை கதவை தட்ட,

மகளை ஒரு பார்வை பார்த்தவன், "வா நம்பி!" என்றான்.

நம்பி உள்ளை தலையை நீட்டி எட்டிப்பார்த்துவிட்டு, நேராக குஹன் அமர்ந்திருந்த பால்கனி சென்று, "அத்த பேசிய ஆகணும்னு அடம்பிடிச்சு லைன்ல வெயிட் பண்றாங்க" என ஃபோனை நீட்டினான்.

"ஐம் டயர்ட் நம்பி. எதுனாலும் காலைல பேசலாம். நீங்களே பேசி வச்சுடுங்க" என்றவன் எழுந்து படுக்கை அருகில் வர,

பின்னரே வந்து, ஃபோனை மெத்தையில் வைத்து விட்டு குஹன் முன் மண்டியிட்டவன், "தயவு செஞ்சு என்ன அவங்கட்ட இருந்து காப்பாத்துங்க சார்" என்க, குஹனுக்கு அப்படியொரு சிரிப்பு அவன் நின்ற நிலையில்.

"ப்ளீஸ் சார்!" என்றான் நம்பி மறுபடியும்.

அவனை பார்த்தவாறே செல்லை எடுத்து காதில் வைத்து, "என்னம்மா வேணும்? தூங்கலையா இன்னும்?" என கேட்க, அவர் அங்கு பொறிய துவங்கிவிட, காதிலிருந்து தள்ளி வைத்துக் கொண்டான்.

அவர் பேசுவது ஃபோனை தாண்டி வெளியிலும் கேட்டது. வார்த்தை மாறாமல் நம்பியை திட்டியது போலவே அவர் பெத்தவனையும் திட்டிக்கொண்டிருந்தார். அவருக்கு அவன் நாற்பது வயது மகனாகலாம் என்றும் அவன் தெரிந்ததில்லை இனி தெரியபோவதுமில்லை.

"அந்த சிலுப்பட்டைய எதுக்குடா இப்ப கிளம்பி வர சொல்லிருக்கியாம்? அவளும் கையெழுத்து வாங்க அங்கேயே வாராளாம்? எங்களலாம் கேட்காம எதையாவது ரெண்டு பேரும் செஞ்சீங்க அப்றம் இந்த விசாலாவ மனுஷியா பாக்க மாட்டீங்க சொல்லிபோட்டேன்"

"கிளம்பிட்டான்னு நிலன் சொல்லிட்டான். நீங்களும் அத சொல்லவா இந்நேரம் கால் பண்ணீங்க?" என மட்டுமே கேட்டான் குஹன்.

"இந்த பசப்புற வேலைய என்ட்டையும் பாக்காதடா நேத்ரா. அந்த நடிகையவும் வர சொல்லிருக்கியாம்? என்ன நினப்புல இருக்க நீயி?"

"அது அஃபிசியல்"

"அப்ப ஏன் உன் பொண்டாட்டியையும் வர சொல்லிருக்க?"

"இது அன்னஃபிசியல்"

"அடேய்! ரெண்டு பேரையும் வரவச்சுருக்கியே ஏன்? இங்க பேசுறவைங்க இன்னும் பேசட்டும்னா?"

"ரெண்டு பேரும் வேற வேற வேலையா வர்றாங்க. புரியாம அவங்கள மாதிரி நீயும் எதையும் பேசக்கூடாது. போன வச்சுட்டு போய் தூங்கு. நா சித்துவயும் கிருத்தியையும் ரிசிவ் பண்ணிட்டு கால் பண்றேன். குட் நைட்" என அவனே பேசி முடித்து வைத்துவிட்டு, "பல்லவி விஷயம்லாம் அஃபிசியல்னு தெரியாதா நம்பி? எத எங்க சொல்லணும்னு படி முதல்ல" என போனை இவனிடம் தூக்கி போட,

பிடித்துக் கொண்டு எழுந்தவன், "இன்னும் சிமி மேடத்துட்ட சொன்னது தெரியாது போல. எஸ்ஸாகிடு நம்பி!" என அமைதியாகவே கிளம்பி விட்டான்.

அங்கு விசாலாட்சி மேலும் சிறிது நேரம் குஹன், பௌர்ணமி, அஞ்சா நம்பி என எல்லோரையும் திட்டிவிட்டு, சிவனே என அமைதியாக தூங்கி கொண்டிருந்த விஸ்வநாதரையும் முதுகில் ரெண்டு அடிபோட்டு எழுப்பி விட்டுவிட்டு விடியும் தருவாயில் தான் லேசாக கண்ணசந்தார்.

அன்றைய நாள் பௌர்ணமிக்கு பயணத்தில் கழிந்தது என்றால், குஹனுக்கு அவன் வேலையில் கழிந்தது. இரண்டு நாள் வேலையையும் சேர்த்து அன்றைய ஒரு நாளில் முடித்திருந்தான்.

'அன்னைக்கு இதே ட்ரெஸ்ஸ வேணாம்னு சொல்லிட்டு இன்னைக்கு ஓகேன்றாரு' என நடிகை முனங்கலும்,

'பொண்டாட்டிய வரவழைக்க ப்ளான் பண்ணாரு அந்த லேடி வரமாட்டேன், உன்னால முடிஞ்சத பாருன்னுருக்கும். அதான் ரெண்டு நாள் பாத்துட்டு மறுபடியும் வேலைய பாக்க வந்துட்டாரு' என நடிகரின் நக்கலும்,

'பொண்டாட்டிய காய்ச்ச முடியாதுன்னு மொத்தமா நம்மள செஞ்சு விடுறாருப்பா இந்த மனுஷன்' என டெக்னீசியன்களும்,

'நல்ல வேலை ரெண்டு நாள் டேலி ஆகிடுச்சு' என தயாரிப்புகள் சங்கமும்,

'எனக்கு தெரியும்டா. அந்த ஆளு தானும் நட்டமாகமாட்டான் மத்தவங்களையும் நட்டமாக விடமாட்டான். அதனால் தான என்ன‌ செஞ்சாலும் பரவால்லன்னு பணிஞ்சு போயிடுறேன். உங்களுக்கும்‌ அதான் சொல்றேன். படம் ஷுட்டிங் முடியுற‌வர கம்முன்னு இருந்துட்டு வரணும். எதாவது வேலைய காட்டி எனக்கு வில்லங்கத்த இழுத்து விட்டீங்கனா. யோசிக்காம உங்கள தூக்கி போட்ருவேன் சொல்லிட்டேன். எனக்கு வேலை தான் முக்கியம்' என ஜெயராமன் வரை ஆளாளுக்கு அவரவர் கருத்தை பகிர்ந்து கொண்டிருந்தனர்.

"நாளைக்கு அடுத்த சாங்க்கான ஃபுல் ரிகெர்சல் முடிச்சுடுங்க. சீ இன்னைக்கு கோப்ரேட் பண்ண மாதிரி அடுத்தடுத்தும் பண்ணணும் கைஸ். நாளை கழிச்சு லாஸ்ட் சாங் ஷுட் வச்சுக்கலாம், பல்லவியும் வந்து ஜாயின் பண்ணிப்பாங்க. அவங்களுக்கு டூ, த்ரி ஸ்டெப்ஸ் தான். தேட் ஷீ கேன் ஈசிலி டன். மேக்ஸிமம் டூ டேய்ஸ்ல முடிச்சுட்டு நாம கிளம்ப பாக்கணும். காட் இட் கைஸ். நவ் பேக்கப்" என தான் அன்றைய நாளை முடித்திருந்தான் குஹன்.

அடுத்தநாள் காலையில்,

"ஹரிணி பாப்பாக்கு இன்னைக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு. எழுந்துக்கோங்க சர்ப்ரைஸ் பார்க்க ரெடி ஆகலாம். குயிக்" என மகளை கொஞ்சி எழுப்பி கொண்டிருந்தான் குஹன்.

அதேநேரம், "சார்!" என வந்து நின்ற நம்பியின் சத்தத்தில், மகளை பாதி தூக்கத்தோடயே தூக்கி சென்று, குளியலறையில் விட்டு, "ப்ரஷ் பண்ணுடா" என்றுவிட்டு வெளியே வந்தான்.

"என்ன நம்பி?"

"நா இங்க இருக்கணுமா இல்ல அங்க ரிகர்சல் ப்ளேஸ் போயிடவா?"

"நீ போ நம்பி. ஐ கேன் மேனேஜ் ஹியர். நாளைக்கு ஷெட்யூல் ஆர்வி(உதவி இயக்குனரில் ஒருவன்) கிட்ட சொல்லிடு, ஸ்பாட் காலைல டென்கு பக்காவா ரெடியா இருக்கணும். ப்ரொடக்ஷன் டீம்லயும் அந்த ஷுட்டிங் ப்ளேஸ் பெர்மிஷனுக்கு அகைன் ரிமைன்டர் குடுக்க சொல்லிடு. அண்ட் பல்லவிக்கான ஸ்டெப்ஸ் ரெகார்ட் பண்ணி அனுப்பிட சொல்லி மாஸ்டர்ட்ட இன்ஃபார்ம் பண்ணிடு. அப்பதான் அவங்களும் ப்ரிப்பேர் ஆகிடுவாங்க"

"ஓகே சார்" என குஹன் கூறிய அனைத்து வேலைகளையும் அவன் கைபேடில் பதிவு செய்து கொண்டு கிளம்பிவிட்டான் அஞ்சாநம்பி.

"ஹரிணி!" என இவன் உள்ளே வந்து மகளுக்கு குரல் கொடுக்க,

"எஸ் ப்பா!" என்றவள் குளித்து பாதி உடையோடு வந்து நிற்க, "பாட்டம் எங்க பாப்பா?" என்றவன் சுற்றி பார்த்து மெத்தை மேல் இருந்ததை எடுத்துக் கொண்டு அவளுக்கு போட்டுவிட வந்து அவள் முன் மண்டியிட்டு அமர்ந்தான்.

"ப்பா ஐம் பிக் கேர்ள் நவ். நானே போடுவேன்" என அவன் கையிலிருந்து வாங்கி கொண்டவளை கண்டு நிமிர்ந்து பார்த்து சிரித்தவன், "ஓகே. லைட் டச்சப் மட்டும் பண்ணணும். ஹெவியா பண்ணாத நாம மீட் பண்ண போற ஆளுக்கு உன் அம்மாவ தெரியும். போட்டு குடுத்துருவான்" என அவள் உச்சியில் முத்தமிட்டு, நகர்ந்து குளிக்க சென்றுவிட்டான்.

'அம்மா!' என்ற மந்திரம் வேலை செய்ய, தலையை முழுவதும் வாரி கிளிப்பில் அடக்கியவள், அவளுக்கான காஸ்மெட்டிக்ஸ் டப்பாவில் இருந்து, ஒரு ஜோடி வளையம் போன்ற கம்மல், அதே போன்றிருக்கும் கை வளையங்கள் மட்டும் எடுத்து மாட்டியவள். குளிருக்கான வேஸலின் க்ரீமை முகம், கை காலில் போட்டுக் கொண்டு மறக்காமல் ஒரு பொட்டையும் வைத்துக்கொண்டு தயாராக அமர்ந்து விட்டாள்.

குளித்து டீசர்டும் சார்ட்ஸுமாக வெளிய வந்தவன், மகளின் அழகில், "மை பேபி டால்" என அவள் கன்னம் கிள்ளி கொஞ்சிக் கொண்டான். அப்பா மட்டும் என்றால் மகள் இஷ்டம் தான் அனைத்தும். அம்மாவும் உண்டு என்றால் அம்மா இஷ்டம் தான் அனைத்தும் என பத்து வயதில் நன்றாக புரிந்து இடத்திற்கு தகுந்தவாறு நடந்து கொள்ளும் இயக்குனரின் மகள் அவள்.

அந்த அறைக்குள்ளேயே இருந்த மற்ற அறைக்குள் சென்றவன், நீல நிறத்தில் சட்டையும், சந்தின நிறத்தில் பேன்டுமாக வெளிய வர, மகள் இருவருக்கும் ஜர்கினை எடுத்துக் கொண்டு தயாராக நின்றாள்.

கீழேயே உணவகம் இருக்க, அதில் சென்று காலை உணவில் அவரவருக்கு பிடித்ததை ஆர்டர் கொடுத்தனர். காலை உணவாக, 'ஸாக்ட்டிஸ் போரிட்ஜ், பேகூன், சாஸேஜஸ்' என இறைச்சி உணவுகளாக வாங்கினர். அதை பார்க்கும்போதே அவன் மனைவி நினைவில் வர அவனுக்கு அவனையும் மீறி சிரிப்பு வெடித்து கிளம்பியது.

மேசை மேல் இருப்பதை கண்டால் இருவரையும் கண்ணாலேயே பொசுக்கி பஸ்பமாக்கிவிடுவாள் என நினைத்தவனுக்கு இன்னுமே சிரிப்பு தான். ஆனால் இருவரும் ரசித்து உண்டுவிட்டு கிளம்பினர்.

"யாரப்பா பாக்க போறோம்?" என செல்லும் வழியில் கேட்ட மகளிடம்,

"இன்னும் கொஞ்ச நேரத்துல தெரிஞ்சுக்கலாம்டா" என்றுவிட்டான். இருவரும் அடுத்த அரைமணி நேரத்தில் விமான நிலையம் வந்து சேர்ந்திருக்க,

"ஃப்லைட்ல ட்ரிப் போறோமா? ட்ரெஸ் பேக் பண்ணி எடுக்கல?" என்றாள் மறுபடியும் ஹரிணி.

"இன்னும் டூ டேய்ஸ் ஷுட்டிங் இருக்குடா அத முடிச்சுட்டு தான் நாம் நம்ம ட்ரிப் போக முடியும்"

"அப்ப யாரும் வர்றாங்களா? ரிசீவ் பண்ண வந்துருக்கோமா?"

"எஸ்" என பேசிக்கொண்டே, காணிகள்(விஸிட்டர்ஸ்) காத்திருக்கும் பகுதி வந்து சேர்ந்தனர்.

அங்கேயே மேலே அடுத்தடுத்து வரும் விமானங்கள் அறிவிப்பை பார்த்தபடி, ஜர்கினை கலட்டி அமரும் இருக்கையின் பின் போட்டுவிட்டு, மகளை ஒரு இருக்கையில் அமர்த்திவிட்டு தானும் அருகிருந்த இருக்கையில் சாய்ந்து அமர்ந்தான்.

"ப்பா யாருப்பா? எனக்கு தெரிஞ்சவங்களா? நா பாத்துருக்கேனா?" என மகள் வரிசையாக கேள்விகளை அடுக்க, முதலில் பதில் கூறிக்கொண்டிருந்தவன், பிறகு எழுந்து சென்று குழந்தைகளுக்கான ஒரு காமிக்ஸ் புக்கும் பெண்ணுமாக வந்து அதை மகளிடம் கொடுத்து அமைதியாக்கிவிட்டான்.

மேலும் அரைமணி நேரம் சென்றிருந்த நிலையில், துபாயில் இருந்து அவன் மனைவி வரும் விமானம் தரையிறங்கியதற்கான அறிவிப்பு வெளியானது. பயணிகள் பெயர் பட்டியலும் மெலே டிஸ்ப்ளே போர்டில் ஒளிர துவங்க, கால்மேல் காலிட்டு நாடியில் கைவைத்து அமர்ந்திருந்தவன் நிதானமாக ஒவ்வொரு பெயராக பார்த்துவர ஆரம்பித்தான்.

"சித்ரா பௌர்ணமி குஹநேத்திரன்" பெயரும் அடுத்தாக கிருத்திக் பெயரும் ஒளிர்ந்து மேல் நகர்ந்து செல்ல, அதை பார்த்தவாறே கை இரண்டையும் மேலே தூக்கி நெடித்து கொடுத்தவன், சட்டையில் மாட்டியிருந்த கூலர்ஸை எடுத்து மாட்டிக் கொண்டு, கை சட்டையை மேலே இழுத்துவிட்டவாறு இன்னும் தளர்ந்து அமர்ந்து கொண்டான்.

அவன் மனைவிக்காக இவ்வாறெல்லாம் அவன் வந்து காத்திருந்ததில்லை. வரவேண்டும் என நினைத்ததுமில்லை. அப்படியே அவன் சென்று காத்திருந்தாலும், "ஏன் எனக்கு தனியா வர தெரியாதுன்னு நீங்களா நினைச்சுப்பீங்களா?" என தான் கேட்பாள் அவள். அது நன்கு தெரியும் அவனுக்கு. அதற்காக அவன் கெத்தை விட்டுவிட கூடாதென்றே அவள் இஷ்டம் போல அனைத்தும் என இதுவரை விட்டுவிட்டிருந்தான்.

அதோ வருகிறாள் அவன் மனைவி, ஒரு கையில் லக்கேஜ் ட்ரோலியும், மறு கையில் தூங்கும் மகனை தோளில் தாங்கியும், பதினான்கு மணிநேரம் பயண களைப்பு முகத்தையும் உடலையும் சோர்வுர செய்திருந்தாலும், நிமிர்ந்து வேக நடையில் தான் வந்து கொண்டிருந்தாள்.

மஞ்சளும், வான்நீலறமும் கலந்த காட்டன் புடவையில், அவன் அம்மா கூறும் சிலுப்பி முடி அவள் நடையில் துள்ளி குதிக்க, நடந்து வந்து கொண்டிருந்தாள். அன்றும் இன்றும் என்றும் அவன் ரசனை குறியவள் தான் அவன் மனைவி.

அவளும் தூரத்திலேயே கண்டு கொண்டிருந்தாள் அவள் கணவனை. அவனது நீல நிற சட்டையே அவனை கண்டு கொள்ள போதுமானதாக இருந்தது. கூலர்ஸ் அணிந்து இவள் வருவதை பார்த்தவாறே திமிராக அமர்ந்திருப்பவனை முறைத்தவாறு தான் நடந்து வந்தாள். அவன் கூலர்ஸின் வழி அவளை ரசித்திருப்பது அவளுக்கு திமிராக தான் தெரிந்தது.

அவள் முறைப்பில் சிரித்தவன், கையை பரபரப்பாக தேய்த்து கொண்டே எழுந்து, "ஹரிணி!" என அருகில் புத்தகத்தில் மும்மரமாக குணிந்திருந்த மகளையும் எழுப்ப, அவள் நிமிரவும், பௌர்ணமியை கை காட்டினான்.

"ம்மா!" என கண்ணை விரித்த மகள், அடுத்த நொடி சிட்டாக பிறந்திருந்தாள் தாயிடம். ஓடி வந்த மகளை ட்ராலியை ஓரம் நகர்த்திவிட்டு ஒரு கையாலேயே அணைத்துக் கொள்ள, மகளும் முடிந்தவரை எட்டி அம்மா கழுத்தை கட்டிக்கொண்டாள். பத்து நாட்கள் கழித்து பார்ப்பதால் பௌர்ணமியும் மகளை உச்சிமுகர்ந்து கண்ணத்தில் முத்தமிட்டாள்.

இதற்குள் அவர்களை நெருங்கி இருந்த குஹனும், மூவரையும் சேர்த்து அணைத்து, கிருத்தி தலையில் முத்தமிட்டு அவனை தன் கைக்கு மாற்றியவாறு, மனைவி காதிலும் அவள் முடியோடு சேர்த்து அழுத்தமாக முத்தமிட்டான். அதில் கூசி சிலிர்த்தாலும் முயன்று தன்னிலை படுத்தினாள் பௌர்ணமி.

பார்ப்பவர்களுக்கு அது சாதாரண வரவேற்பு முத்தம். ஆனால் அவன் மனைவியானவளுக்கு தெரியுமே அந்த முத்தத்தில் கலந்திருக்கும் வெப்பத்தின் பின்னான காரணம். நிமிர்ந்து அவனை கண்ணை உருட்டி அவள் முறைக்க, "என்னடி?" என்றான் இரு புருவம் உயர்த்திய குஹன்.

"ஸ்வீட் சர்ப்ரைஸ் ப்பா" மகள் சொல்ல,

"இல்லடா வெரி ஹாட் சர்ப்ரைஸ்" என்றான் மனைவியை தோளோடு இறுக்கி,

"குஹன்!" என்றவள் அவன் கையை எடுத்து விட்டு, "என்ன புதுசா வரவேற்பு எல்லாம்? கேட்காமலே விடுதலை தரபோறாளேன்னு ஓவர் குஷியோ?" என்றாள் முறைத்து பார்த்து.

"என் பொண்டாட்டி ஆல்வேஸ் ஸ்மார்ட். நீ இத வேணும்னு எதையும் கேட்டு எப்பவாவது மாட்டேன்னு சொல்லிருக்கேனா நான்? ஐம் அட் யுவர் சர்வீஸ் சித்து ஆல்வேஸ்" என்றவனின் வார்த்தையில் உள்ளுக்குள் சுரீர் என்றது அவளுக்கு.
 

Mathykarthy

Well-known member
இவங்க டிவோர்ஸ் பண்றாங்களோ இல்லையோ நம்பிக்கு கிடைச்சிடும் போல 🤣🤣🤣🤣🤣🤣🤣

குஹன் செம.... ரசிக்க வைக்கிறான் 🥰🥰🥰🤗🤗💞💞
 

priya pandees

Moderator
இவங்க டிவோர்ஸ் பண்றாங்களோ இல்லையோ நம்பிக்கு கிடைச்சிடும் போல 🤣🤣🤣🤣🤣🤣🤣

குஹன் செம.... ரசிக்க வைக்கிறான் 🥰🥰🥰🤗🤗💞💞
😂😂 விசாலாட்சி தான் பினாமி அதுல
 
Top