எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மெல்லினமல்ல வல்லினமே - கதைத்திரி

Selvi_Saran

Moderator

மெல்லினமல்ல வல்லினமே 1​

பதினேழு வருடங்களுக்கு முன்பு​

அந்த இரவு நேரத்தில் பேய் மழை என்பார்களே, அதுபோல மழை விடாமல் பெய்து கொண்டிருந்தது. தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் பகுதியில் இருக்கும் அரசு மருத்துவமனையின் பிரசவ அறையில் ஒரு பெண்ணின் கதறல் கேட்டுக் கொண்டிருந்தது. அந்த மழை இரவு நேரத்தில் ஒரு மருத்துவரும், செவிலியரும் மட்டுமே மருத்துவமனையில் இருந்தனர்.​

“ஷெர்லின், நான் சொன்ன மாதிரி ரெட்டை குழந்தை போல தான் தெரியுது. முதல்லயே ஹெட் குவாட்டர்ஸ் ஹாஸ்பிடலுக்கு அனுப்பியிருக்கணும்” என்று புலம்பினார் மருத்துவர் அம்பிகா.​

“ஆமா டாக்டர், இந்த மழையில லேண்ட்லைன் வேலை செய்யல. போன் பண்ணுனா தானே ஆம்புலன்ஸ் வரவழைச்சு இவளை ஷிஃப்ட் பண்ண முடியும்” என்று கண்ணில் நீர் துளிர்க்க கூறினார் செவிலியர் ஷெர்லின்.​

“ஆனா டாக்டர், எப்படியாவது இவளை காப்பாத்த முயற்சி செய்யுங்க. ப்ளீஸ். இவ என்னோட உயிர் தோழி. ஏற்கனவே வீட்டுல வச்சி பிரசவம் பார்க்குறேன்னு சொல்லி, போன தடவை இவளுக்கு பிறந்த குழந்தை, பிறந்து ரெண்டு நாளுல இறந்துடுச்சி. இந்த முறை இந்த குழந்தையையும், இவளையும் எப்படியாவது காப்பாத்துங்க” என்று மருத்துவரை நோக்கி கை எடுத்து கும்பிட்டார் அவர்.​

“நிச்சயம் நம்மாலான முயற்சியை நாம செய்யலாம். நீ கவலைப் படாதே. ஆனா பிரசவத்துக்கு சேர்த்துட்டு எப்படி தான் மனசாட்சி இல்லாம இவளோட புருஷன் இவளை இப்படி விட்டுட்டு போனானோ? இப்படிப்பட்ட அரக்கனோட உன்னோட தோழி வாழ்ந்து தான் ஆகணுமா?” என்றார் அம்பிகா.​

“அவளுக்கு வேற வழியில்லை டாக்டர். அம்மா அப்பா இல்லை அவளுக்கு. நான் என்னோட வான்னு சொன்னாலும், அதை ஏத்துக்கிற அளவுக்கு அவளுக்கு இன்னும் பக்குவம் வரல. கல்யாணம், புருஷன், குழந்தை இது தான் தன்னோட உலகம்ன்னு நினைச்சிட்டு இருக்கா. இப்படி பொம்பளைங்க இருக்குற வரை, இவ புருஷன் மாதிரி ஆம்பளைங்க திருந்த மாட்டாங்க” என்றார் ஷெர்லின் வருத்தமாக.​

அதற்குள் அந்த கர்ப்பிணிப் பெண்ணின் கதறல் அதிகமாகவே, இருவரின் கவனமும் அவளிடம் திரும்பியது. இருவரும் சேர்ந்து அவளுக்கு தைரியம் கொடுத்து, அதட்டி, மிரட்டி குழந்தைகளை பிரசவிக்க உதவினார்கள். ஒரு வழியாக இரண்டு தேவதைகளை பெற்றெடுத்தார் அவர், கண்ணகி.​

குழந்தைகளை பெற்றெடுத்து கண்களும், உடலும் மயக்கத்திற்கு செல்ல கெஞ்சியது கண்ணகியை. ஆனால் இது அவர் ஓய்வெடுப்பதற்கான நேரம் அல்லவே. சக்தி எல்லாம் திரட்டி, அங்கே குழந்தைகளை சுத்தம் செய்து கொண்டு வந்து தொட்டிலில் கிடத்திய ஷெர்லினை, கையசைத்து தன் அருகில் அழைத்தார்.​

“ஷெர்லி, எனக்கு ஒரு உதவி செய்வியா? இல்ல, உதவி இல்ல. எனக்கு ஒரு வரம் குடுப்பியா?” என்றார் கண்ணகி.​

“உனக்காக நான் என்ன வேணும்னா செய்வேன். உனக்கு தெரியாதா கண்ணு?” என்றார் ஷெர்லின், கண்ணகியின் தலையை வருடியபடி.​

ஆம், ஷெர்லின், கண்ணகி இருவரும் உயிர் தோழிகள். இருவருக்கும் தாய் தகப்பன் உறவினர்கள் என்று யாரும் கிடையாது. இருவரும் ஒன்றாக வளர்ந்தது ஒரு அனாதை ஆசிரமத்தில் தான். ஷெர்லினுக்கு படிப்பு நன்றாக வரவே, அவர் தன் முயற்சியில் மிகுந்த சிரமத்திற்கிடையே செவிலியர் பயிற்சியை நிறைவு செய்து விட்டார். கண்ணகி பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறவே சிரமப்பட, ஆசிரம நிர்வாகி அவரை தையல், கூடை பின்னுதல், சமையல் முதலியவற்றில் பழக்கினார்.​

ஷெர்லினை விட கண்ணகி ஒரு வயது சிறியவர். ஷெர்லின் பள்ளிப்படிப்பை முடித்து விட்டு செவிலியர் பயிற்சிக்காக மூன்று வருடங்கள் வெளியூரில் தங்கியிருந்தார். அவ்வப்போது ஆசிரமத்தில் இருக்கும் போனில் பேசினாலும் பிரிவுத்துயர் இருவரையும் வாட்டியிருந்தது.​

குண்டளப்பட்டியை சேர்ந்த பண்ணையார் ஒருவர், ஆசிரமத்திற்கு மாதம் ஒரு முறை உணவுப் பொருட்கள், அவர் விவசாயத்தில் விளைந்த காய்கறிகள் எல்லாம் அனுப்பி வைப்பது வழக்கம். அந்த பண்ணையாரின் மகன் பழனிவேல் தான் உணவுப் பொருட்களை கொண்டு வருவார். அப்படி வரும்போது கண்ணகியை கண்ட பழனிவேல் அவர் மீது ஆசை கொண்டார்.​

பழனிவேலுக்கு அப்போது முப்பது வயது ஆகியிருந்தது. ஆனால் பழனிவேல், அவருடைய தாயார் காளியம்மாள் இருவரின் குணத்தை அறிந்த, அந்த ஊரார் யாரும் அவருக்கு பெண் தர முன்வரவில்லை. இப்போது கண்ணகியை கண்டதும் அவருக்கு மூளை வேகமாக வேலை செய்தது.​

காளியம்மாளிடம் அவருக்கு தோன்றிய யோசனையை கூறினார் பழனிவேல். அவருக்கும் வேறு வழி இருக்கவில்லை. அவர் உறவிலோ அவர்களின் இனத்திலோ யாரும் பழனிவேலுக்கு பெண் தர போவதில்லை. எனவே இப்படி ஒரு அனாதை பெண்ணை மணந்தால் அவருக்கு எத்தனையோ வகையில் நன்மை தான்.​

ஆசிரம நிர்வாகியிடம், மகனின் விருப்பத்தை மதித்து பெருந்தன்மையாக பெண் கேட்பது போல் காட்டிக் கொண்டனர், தாயும் மகனும். கண்ணகிக்கும் பழனிவேலை பிடித்து தான் இருந்தது. கம்பீரமும், அழகும் நிறைந்த அழகான இளைஞனாக பழனிவேல் அவரை கவர்ந்து தான் இருந்தார்.​

வேகவேகமாக அடுத்த இரண்டு வாரங்களுக்குள் கண்ணகியை திருமணம் செய்து கொண்டார் பழனிவேல்.​

அந்த நேரத்தில் ஷெர்லின் மருத்துவ முகாம் ஒன்றிற்காக மலைப்பாங்கான இடம் ஒன்றுக்கு சென்றிருந்தார். அவர் திரும்பி வந்து ஆசிரமத்திற்கு போன் செய்த போது கண்ணகி திருமணம் முடித்து சென்று விட்டிருந்தார்.​

அதன் பிறகு ஷெர்லினால் கண்ணகியை தொடர்பு கொள்ளவே முடியவில்லை. அவர் ஆசிரமத்தில் கொடுத்து சென்றிருந்த எண்ணிற்கு முயன்றால், அந்த எண் உபயோகத்தில் இல்லை என்று வந்தது. கண்ணகி கொடுத்து விட்டு சென்ற முகவரிக்கு நேரில் சென்றால், அந்த அரண்மனை போன்ற வீட்டின் கேட் அருகில் கூட ஷெர்லினை விட மறுத்தனர். இப்படியே இரண்டு வருடங்கள் கடக்க, ஷெர்லின் இந்த மருத்துவமனைக்கு வந்து ஆறு மாதங்கள் ஆகியிருந்தது.​

கண்ணகி கூறிய செய்திகள் ஷெர்லினின் இதயத்தை நடுங்க செய்தது. கண்ணகியின் புகுந்த வீடு ஒரு நரகக் கூடாரமாக தான் தோன்றியது ஷெர்லினுக்கு.​

அந்த வீட்டில் ஆண்கள் மட்டுமே தெய்வப் பிறவிகள், பெண்கள் எல்லாம் புழுக்களை விடவும் கீழானவர்கள் என்ற எண்ணம் கொண்டிருந்தனர் காளியம்மாளும், பழனிவேலும். பழனிவேலின் தந்தை வேலப்பன் ஒரு அமைதிப் பேர்வழி. நியாயம் தெரிந்தவர். ஆனால் தாயையும் மகனையும் எதிர்க்கும் அளவு தைரியம் கொண்டவர் அல்ல. எனவே மருமகள் வீட்டில் அனுபவிக்கும் கஷ்டங்களை பார்த்தாலும் அவரால் வருந்த மட்டுமே முடிந்தது.​

கண்ணகி அங்கே ஒரு அடிமை போல நடத்தப்பட்டார். இந்த சூழ்நிலையில் அவர் முதன் முதலாக கருவுற்றார். அந்த குக்கிராமத்தில் மருத்துவமனைக்கு சென்று குழந்தை பெற்றுக் கொள்ளும் வழக்கம் அப்போது நடைமுறையில் இல்லை. அதனால் கண்ணகியின் முதல் பெண் குழந்தை வீட்டிலேயே பிறந்தது.​

அதுவரை அவரிடம் சிறு கரிசனையோடு நடந்து கொண்டிருந்த பழனிவேல், பெண் குழந்தை என்று கேள்விப்பட்டதும் மீண்டும் முகம் திருப்பிக் கொண்டார். குழந்தை பிறந்து இரண்டு நாட்கள் சரியாக பால் குடிக்கவே இல்லை. அடுத்த நாள் காய்ச்சலில் விழுந்த அந்தப் பிஞ்சு, உலகத்தை விட்டு சென்று விட்டது.​

கண்ணகி குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தார். ஆனால் காளியம்மாளோ, பழனிவேலோ ஒரு பெண் சிசுவுக்காக, சிறுதுரும்பை கூட அசைக்க மறுத்து விட்டிருந்தனர். அந்த அளவு ஆண் வாரிசு மோகம் அவர்களை மிருகமாக மாற்றி விட்டிருந்தது.​

சில மாதங்கள் கழிந்த நிலையில் மீண்டும் கர்ப்பமானார் கண்ணகி. இந்த முறை அவர் மருத்துவமனையில் தான் குழந்தை பெற்றுக் கொள்வேன், இல்லாவிட்டால் தற்கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார்.​

பிரசவவலி வந்த போது தன் பிடிவாதத்தை கைவிடாமல் மருத்துவமனை வந்து விட்டார். ஆனால் பழனிவேல் அவருடன் மருத்துவமனையில் இருக்க மறுத்து விட்டார். மனைவியை மருத்துவமனையில் விட்டுவிட்டு மறுநாள் வருவதாக கூறிவிட்டு சென்று விட்டார்.​

இரவு நேர பணி என்பதால் மாலை ஆறு மணிக்கு மேல் மருத்துவமனைக்கு வந்த ஷெர்லின், எதிர்பாராமல் கண்ணகியை கண்டார். அதன்பிறகே தோழிகள் இத்தனை நாள் தங்கள் வாழ்வில் நடந்ததை பகிர்ந்து கொண்டனர். ஷெர்லின் இனி தான் திருமணமே செய்து கொள்ளப் போவதில்லை, ஒரு குழந்தையை எடுத்து வளர்க்க போவதாக தெரிவித்தார்.​

கண்ணகி எவ்வளவோ எடுத்து சொல்லியும், அவர் திருமண வாழ்வில் தனக்கு நாட்டமில்லை என்று உறுதியாக கூறிவிட்டார். முதலில் கண்ணகிக்கு வலி இடைவெளி விட்டு வந்ததில் தோழிகளால் இடையூறின்றி பேச முடிந்தது.​

இப்போது குழந்தைகள் பிறந்து, மீண்டும் இரண்டும் பெண் குழந்தைகள் என்றதில் கண்ணகி மிகவும் பயந்து விட்டிருந்தார். இந்தக் குழந்தைகளை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று நினைத்தார்.​

“ஷெர்லி, ஒரு குழந்தையை நீ எடுத்துக்கோ. ப்ளீஸ்” என்று கண்ணீருடன் கெஞ்சினார் கண்ணகி.​

“நானா? நான் எதுக்கு? நீ என்ன சொல்லுற கண்ணு?” என்றார் ஷெர்லின் குரல் நடுங்க.​

“எனக்கு ரெட்டை குழந்தை பிறந்தது யாருக்கும் தெரியாதுடி. நீ எப்படியும் கல்யாணம் செஞ்சிக்க போறதில்ல. யாரோ ஒரு குழந்தையை தத்தெடுத்து தானே வளர்க்க போற? அது என் குழந்தையா இருக்கட்டும். இந்த ரெண்டு குழந்தைல ஒண்ணாவது அந்த நரகத்துல இருந்து தப்பிச்சி, நிம்மதியா வாழனும். ப்ளீஸ். மாட்டேன்னு சொல்லாத”​

ரெட்டை குழந்தைகள் என்பதில் இரண்டு குழந்தைகளும் ஒரே அச்சில் வார்த்தது போல் இருந்தது. கண்ணகியின் பால் நிறத்தை கொண்டு பிறந்திருந்த அந்த பூஞ்சிட்டுக்களை பார்த்துக் கொண்டே இருந்தார் ஷெர்லின்.​

“நான் கண்டிப்பா நல்லா பாத்துப்பேன் கண்ணு. ஆனா ஒரு விஷயம் சொல்றேன். நீ என் பேச்சை ஒரு தடவை கேளேன். உன் புருஷன் வர்றதுக்குள்ள வா. உன்னையும் உன்னோட ரெண்டு குழந்தைகளையும் நான் பார்த்துக்கிறேன். நீ ஏன் அந்த நரகத்துல இருந்து கஷ்டப் படணும்? என்கூட வாடி. நாம யார் கண்ணுலையும் படாம நிம்மதியா வாழலாம்” என்றார் ஷெர்லின்.​

“அது நடக்காது. நான் இங்க இருந்தா ஒரு குழந்தை வாழ்க்கையாவது நல்லா இருக்கும். இதுவே நான் உன்கூட வந்துட்டா அந்த அரக்க கூட்டம் என்னையும் குழந்தைகளையும் சும்மா விடாது. நான் சொல்லுறதை மட்டும் கேளு” என்றார் கண்ணகி.​

ஷெர்லின் ஒத்துக் கொண்டார். இரு பெண்களின் பேச்சையும் கவனித்துக் கொண்டிருந்த மருத்துவர் அம்பிகாவும், அவர்களுக்கு உதவி செய்யவே ஒரு குழந்தையை ஷெர்லின் அவரின் வாழ்வுக்கான அர்த்தமாக ஏற்றுக் கொண்டார்.​

மறுநாள் மருத்துவமனைக்கு வந்த பழனிவேல் இந்த முறையும் பெண் குழந்தை என்ற கோபத்தில், மருத்துவமனை என்றும் பாராமல் கண்ணகியை அடிக்கப் பாய்ந்தார். மருத்துவமனை ஊழியர்கள் அவரை தடுத்து நிறுத்துவதற்குள் ஒரு வழியாகி விட்டனர்.​

ஆனால் அன்றே கண்ணகியை மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு அழைத்து சென்று விட்டார் பழனிவேல். ஷெர்லின் அடுத்த சில நாட்களில் தன் வளர்ப்பு மகளுடன் அந்த ஊரை விட்டே சென்று விட்டிருந்தார்.​

  • தொடரும்….​

இது நான் முதன் முதலில் நேரடியாக சைட்டில் எழுதும் கதை நண்பர்களே. தொடர்ந்து படித்து ஆதரவு அளிக்க கேட்டுக் கொள்கிறேன். கதையைப் பற்றிய தங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.​

 

Selvi_Saran

Moderator

மெல்லினமல்ல வல்லினமே - 2​

இன்று…​

இங்கிலாந்தின் தலை நகரமான லண்டன் மாநகரத்தின் ஒதுக்குப்புறமான பகுதி அது. பின் மதிய வேளையில் அந்த சாலை வெறிச்சோடிக் கிடந்தது. அதில் அந்த சூழலின் அமைதியை கிழித்துக் கொண்டு ஒரு பைக் வந்து கொண்டிருந்தது. சற்று தூரத்தில் ஒரு சிக்னலில் ஒரு கார் மட்டும் நின்று கொண்டிருந்தது.​

திடீரென்று பிரேக் பிடிக்காமல் போகவே அந்த காரின் பின் பகுதியில் இடித்து விட்டு, அதன் பிறகே சற்று தடுமாறி நின்றது அந்த பைக். அடுத்த நொடி காரில் இருந்து இறங்கினான் ஒரு இளைஞன். அவனுடைய தோற்றமும், உயரமும் ராஜகுமாரனை ஒத்திருந்தது. அந்த அளவு அழகும், கம்பீரமும், தேஜஸும் நிறைந்திருந்தது அவனிடம். இங்கிலாந்து பிரஜையைப் போன்று சிவந்த நிறத்துடன் இருந்தான் அவன்.​

கீழே இறங்கியவன் ஆங்கிலத்தில் சரமாரியாக திட்டத் தொடங்கி இருந்தான். டிரைவர் சீட்டிலிருந்து இறங்கியவன் தன் காரின் கதவை திறந்து வைத்துக் கொண்டு கதவுக்கு முன் நின்று தான் திட்டிக் கொண்டிருந்தான். ஆனால் நின்று கொண்டிருந்த அந்த பைக் மீண்டும் உறுமிக் கொண்டு அவன் இரண்டு கால்களுக்கு இடையில் வந்து இடித்து விட்டது. அடுத்த நொடி பைக் சரிந்து அதன் மீது அந்த பைக் காரனும் விழுந்திருந்தான்.​

கார் காரனால் சில நொடிகள் மூச்சு கூட எடுக்க முடியவில்லை. ஆணின் உயிர் நாடியில் பட்ட அடியாகிற்றே! அவன் தன்னை மறந்து கைகள் இரண்டையும் அந்த இடத்தின் மீது வைத்துக் கொண்டு வலியில் துடித்தான்.​

பைக்கோடு கீழே விழுந்ததில், கைமூட்டில் சிராய்த்த காயத்தை தடவிக் கொண்டே தன் ஹெல்மெட்டை கழற்றினாள் ஹரிப்ரியா. சிரமத்துடன் எழுந்தவள் தன் பைக்கையும் தூக்கி நிறுத்தி விட்டு கார் காரனிடம் வந்தாள்.​

ஹரிப்ரியா பதினெட்டு வயது நிரம்பிய பெண். அழகுக்கு இலக்கணமாக அடையாளம் காட்டும் அளவு தோற்றப் பொழிவு கொண்டவள். மெல்லிய உடல் வாகும், பால் வண்ண நிறமும் கொண்டவள். பார்த்த உடனே தென் ஆசியப் பெண் என்பதை உணர்த்தக் கூடிய முக அமைப்பை கொண்டிருந்தாள்.​

“சாரி சார்” என்றாள் வலியில் துடித்துக் கொண்டிருந்த அவனிடம்.​

அப்போது தான் அவளை நிமிர்ந்து பார்த்தவனின் முகத்தில் இன்னும் சினம் கூடிப் போனது. ஒரு பெண் தன்னை இந்த நிலைக்கு ஆளாக்குவதா என்ற அவனின் கர்வம் சிலிர்த்தெழுந்தது. இருந்தும் வலியை மீறி அவனால் வாயை திறந்து அவளை திட்டக் கூட முடியவில்லை.​

அவன் பதில் சொல்ல முடியாமல் முறைப்பதிலேயே அவன் நிலையை புரிந்து கொண்டாள் ஹரிப்ரியா. அவனிடம் ஆங்கிலத்திலேயே பேசத் தொடங்கினாள்.​

“சார் என் மேல கோபப்படுறத விட்டுட்டு முதல்ல குரோவ்(தோப்புக்கரணம்) பண்ணுங்க சார். உங்க பால்ஸ் பெயின் சரி ஆகிரும்” என்றாள் கரிசனையாக.​

அவன் விழிகள் தெறித்து விடும் போல் ஆனது அவள் பேச்சில். ஒரு பெண் இவ்வளவு வெளிப்படையாக பேசுவதா? கடவுளே! அவன் எப்படிப் பட்டவன்? அவனுடைய பரம்பரையும், பாரம்பரியமும் எத்தகையது? அவள் பைக்கின் பின்புறம் இருந்த பெரிய அளவிலான பையே, அவள் ஒரு டெலிவெரி வேலை செய்யும் பெண் என்பதை அவனுக்கு புரிய வைத்திருந்தது. ஒரு சாதாரணப் பெண் தன்னிடம் இவ்வளவு அந்தரங்கமாக பேசுவதா? அவனால் அந்த நேரத்திலும் தன்னுடைய செருக்கை விட முடியவில்லை.​

இருந்தும் முதலில் மூளையையும், பார்வையையும் மங்க செய்யும் இந்த வலியிலிருந்து விடுதலை வேண்டும் அவனுக்கு. எனவே வேறு வழியின்றி அவள் சொன்னது போல் தோப்புக்கரணம் போடுவது போல் நான்கைந்து முறை உட்கார்ந்து எழுந்தான். என்ன அதிசயம் நொடியில் அவன் வலி மாயமாகி விட்டது.​

அடுத்த நொடி அவன் உடல் மொழியே மாறிவிட்டது. நிமிர்ந்து தீவிழி விழித்தான் அவளை.​

“உனக்கு எவ்வளவு தைரியம்? ஒரு பிரேக் இல்லாத பைக்கை எடுத்துட்டு ரோட்டுக்கு வர்றதுக்கு? எடு உன்னோட லைசென்ஸ், அப்புறம் பைக்கோட டாகுமெண்ட் எல்லாம் காண்பி. நான் போலீஸ்ல கம்பளைண்ட் பண்ண போறேன்” என்று கொதித்தான் அவன்.​

அவ்வளவு நேரம் அவன் மீது பரிதாபத்தில் இருந்தவளுக்கு இப்போது பயம் பிடித்துக் கொண்டது. அவளிடம் ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருந்தாலும், போலீஸ் புகார் என்றால் அவளுடைய படிப்பு என்ன ஆகும் என்று பயந்து விட்டாள் அவள்.​

“சார் டாகுமெண்ட் எல்லாம் சரியா தான் சார் இருக்கு. அதோட நான் பைக் எல்லாம் பிராப்பரா தான் மெயின்டைன் பண்ணுறேன். இது ஒரு ஆக்சிடென்ட் சார். என்னை மீறி நடந்த விசயம், இங்க பாருங்க என்னோட பைக் லைசென்ஸ்” என்றவள் தன் மொபைலில் இருந்த லைசென்ஸ், பைக் சம்பந்தப் பட்ட ஆவணங்கள் அனைத்தையும் காண்பித்தாள்.​

அவள் காண்பித்த ஆவணங்களை விட, அவளுடைய கண்கள் அவனிடம் கெஞ்சும் போது காட்டிய அபிநயங்களே அவனை ஈர்த்தது. அவளை இன்னும் கொஞ்சம் அப்படி கெஞ்ச வைக்க எண்ணம் கொண்டவன், சற்று முறுக்கிக் கொள்வது போல் நடித்தான்.​

அவள் மேலும் மேலும் கெஞ்சவும், அதன்பிறகு சற்று இளக்கம் ஏற்பட்டது போல் பாவனை காட்டியவன் “சரி, கம்பளைண்ட் கொடுக்கல. ஆனா என்னோட காருக்கு என்ன டேமேஜ் ஆகியிருக்கோ அதுக்கான நஷ்ட ஈடு கொடுக்கணும்” என்றான் கறாராக.​

அவளும் “சரி சார், நிச்சயமா காம்பன்சேஷன் கொடுத்திருவேன். எவ்வளவுன்னு சொல்லுங்க” என்றாள் உறுதியாக.​

“ஹலோ என்ன ஈஸியா கொடுக்கிறேன்னு சொல்லுற. என்னோட கார் விலை என்ன தெரியுமா ஐம்பதாயிரம் பவுண்ட். அதோட சர்வீஸ் சார்ஜ் மட்டும் எத்தனை பவுண்ட் கட்டுறேன்னு தெரியுமா? அதெல்லாம் உன்னோட கவலை. நான் சர்வீஸ் பண்ண குடுத்துட்டு உனக்கு பில் அனுப்புறேன், கார் ரிட்டர்ன் எடுக்குற அன்னைக்கு நீ எனக்கு புல் அமவுண்ட் பே பண்ணி தான் ஆகணும்” என்றான் கட்டளையாக.​

அவன் பேசப் பேச அவளுக்கு திகிலாக இருந்தது. அவள் இங்கே படிப்பதே இந்த டெலிவரி மற்றும் இன்னும் சில பார்ட் டைம் வேலைகள் மூலம் கிடைக்கும் பணத்தைக் கொண்டு தான். இதில் ஆயிரக் கணக்கான பவுண்ட் கட்டணத் தொகை என்றால் அவளால் என்ன செய்ய முடியும்? அவளுடைய திகைத்த தோற்றம் அவனுக்கு அத்தனை திருப்தியை அளித்தது.​

“ஹலோ மேடம், பதில் சொல்லுங்க” என்றான் நக்கலாக.​

அவளுக்கும் வேறு வழியில்லையே. சோர்வுடன் ‘சரி’ என்று ஒத்துக் கொண்டாள்.​

“நீ சொல்லுறத நான் எப்படி நம்புறது? முதல்ல உன்னை நான் எங்க போய் தேடுறது?” என்றான் அவன்.​

அவள் ஒரு பெருமூச்சுடன் தன் அடையாள அட்டை, தான் படிக்கும் கல்லூரியின் ஐடி கார்ட் ஆகியவற்றை அவனின் மெயிலுக்கு அனுப்பினாள். அவளுடைய மொபைல் எண்ணையும் அவனுக்கு கொடுத்து, அவனுடைய எண்ணையும் பெற்றுக் கொண்டாள்.​

அவனும் அவள் அனுப்பியிருந்த சான்றுகளை எல்லாம் ஒரு முறை ஆராய்ந்து விட்டு, அதன் பிறகே அவளை கிளம்ப விட்டான். அவளும் அவளுக்கு இருந்த அவசரத்தில், அவனுடைய பெயரைக் கூட கேட்காமல் அங்கிருந்து கிளம்பியிருந்தாள்.​

அவள் டெலிவரி செய்ய வேண்டிய நேரம் கடந்து சென்றதில், அந்த வாடிக்கையாளர் அவளுக்கு ரேட்டிங்ஸ் குறைத்து கொடுத்ததோடு, அவளுடைய சர்வீஸ் சரியில்லை என்று புகாரும் கொடுத்து விட்டிருந்தார்.​

அந்த நாள் அவளுக்கு இப்படியே சோதனையாகவே கழிந்தது.​

டெலிவரி வேலை முடிந்த பிறகு மாலை ஆறு மணிக்கு அவள் வேலை செய்யும் பாருக்கு சென்றாள் ஹரி. ஆம், அங்கே அவள் பார்டெண்டராக வேலை செய்கிறாள். அவளுடைய மது கலவையின் சுவை மற்றும் அவள் வேலை செய்யும் நயத்தை பார்ப்பதற்கு என்றே, அந்த பாருக்கு வரும் வாடிக்கையாளர்கள் அதிகம். இங்கே அவளுக்கு கணிசமான வருமானம் வருகிறது.​

அவள் உடன் பணிபுரியும் ஜேக்கப் ஜான்சன் அவளுக்கு முன்பே அங்கு வந்திருந்தான்.​

இவளைக் கண்டதும் “ஹாய் ஹேரி” என்றான் ஜேக்கப்.​

“ஹரி” என்றாள் இவள் முறைப்பாக. ஆனால் அவனால் மாற்றிக் கொள்ள முடியாது என்று அவளுக்கும் தெரியும்.​

இந்த ஊரில் அவள் பெயரை இதுவரை சரியாக உச்சரித்ததே இல்லை எனலாம். ஒன்று ஹேரி அல்லது ஹாரி என்பார்கள். இதில் அவள் இங்கே வேலைக்கு சேர்ந்து ஆறு மாதங்கள் ஆகியிருந்தாலும், ஜேக்கப்பால் அவள் பெயரை சரியாக உச்சரிக்க முடியவில்லை.​

“ஓகே ஹேரி, ஒலிவர் நீ மேக் பண்ணுற விஸ்கி சோர் தான் வேணும்ன்னு உனக்காக காத்திட்டு இருக்கார்” என்று வேலை பக்கம் அவளை திசை திருப்பினான்.​

அவளும் அங்கே பார்க்க அவளுடைய வழக்கமான வாடிக்கையாளர் ஒலிவர், நடனம் ஆடிக் கொண்டே இவளை நோக்கி கை அசைத்தான். இவளும் அவனுக்கு சிறு புன்னகையை கொடுத்து விட்டு, அவன் வழக்கமாக குடிக்கும் விஸ்கி சோர் தயாரிக்க ஆரம்பித்தாள்.​

விஸ்கி சோர் என்பது விஸ்கி, முட்டையின் வெள்ளைக் கரு, எலுமிச்சை சாறு, கொம்மி சிரப், ஐஸ் கட்டிகள் சேர்த்து தயாரிக்கப் படுவது. அதை அவள் தயாரிக்க தொடங்கும் போதே அவளுக்குள் இருக்கும் கலைநயம் வெளிப்பட்டது. அவளுடைய விரல்கள் அந்த கண்ணாடி தம்ளரை சுழற்றும் அழகை பார்க்கவே அத்தனை பிரமிப்பாக இருக்கும். அவள் தயாரித்து முடிக்கும் நேரம் அங்கே வந்தான் ஒலிவர்.​

“தேங்க் யூ பியூட்டி” என்று கூறியபடி பானத்தை வாங்கியவன், அவளுக்கு எதிரில் இருந்த இருக்கையில் அவளை பார்த்த படியே அமர்ந்து விட்டான்.​

அவள் அவனை சலிப்பாக பார்த்தாலும், அடுத்தடுத்த வாடிக்கையாளர்கள் வருகையில் இவனை சற்று மறந்து விட்டாள்.​

வழக்கம் போல் இரவு பதினோரு மணிக்கு மேல் அங்கிருந்து கிளம்பி தான் தங்கி இருக்கும் விடுதிக்கு வந்து சேர்ந்தாள் ஹரிப்ரியா.​

கையேடு வாங்கி வந்திருந்த உணவை விழுங்கி விட்டு, உடை மாற்றி, ஸ்கின் கேர் ரொட்டின் செய்து முடித்து விட்டு படுக்கையில் விழுந்தாள். உடனே அந்த கார்க்காரன் நினைவு வந்தது அவளுக்கு.​

அவனைப் பற்றி யோசித்தவளுக்கு, அப்போது தான் அவன் பெயரை கூட தான் கேட்காதது நினைவுக்கு வந்தது. சரி, அவனுக்கு தானே அவளிடம் பணம் தேவை? அவனாக கூப்பிட்டால் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்தவள், ஒரு குறும்பு புன்னகையுடன் அவன் பெயரை குரோவ்(தோப்புக்கரணம்) என்று தன் போனில் பதிவு செய்து கொண்டாள்.​

  • தொடரும்…​

 

Selvi_Saran

Moderator

மெல்லினமல்ல வல்லினமே 3​

அன்று கல்லூரிக்கு செல்ல வேண்டியிருந்ததால், நேரத்திற்கே எழுந்து விட்டாள் ஹரிப்ரியா. வேகமாக எழுந்தவள் உடைகளை துவைக்க வாஷிங் மெஷினில் போட்டு விட்டு, சமைத்து, தானும் கிளம்பி கல்லூரிக்கு சென்றாள்.​

அவள் படிப்பது டேட்டா என்ஜினீரியங் பட்டப்படிப்பு. அங்கே கல்லூரி வேலை நேரம் வாரத்தில் ஐந்து நாட்கள் தான். அதிலும் ஒரு நாளைக்கு நான்கு மணி நேரங்கள் தான் வகுப்புகள் நடக்கும். எனவே ஹரிப்ரியா கல்லூரி நேரம், அவள் படிக்கும் நேரம் தவிர மீதி இருக்கும் ஓய்வு நேரங்களில், இல்லாத வேலைகளை இழுத்துப் போட்டு செய்து வருமானம் ஈட்டக் கற்றுக் கொண்டிருந்தாள். அதிலும் அவள் நன்றாகப் படிக்கக் கூடிய மாணவி என்பதில், உதவித் தொகையும் தாராளமாகவே அவளுக்கு கிடைத்துக் கொண்டிருந்தது. இந்த காரணங்களால் அவளிடம் செலவுக்கு போக ஓரளவு கணிசமான தொகை கையிருப்பாகவும் இருந்தது.​

அவள் கல்லூரி முடிந்து வெளியில் வந்து மொபைலை எடுத்துப் பார்த்த போது, குரோவ் என்ற எண்ணிலிருந்து இரண்டு தவறிய அழைப்புகள் இருந்தது. உடனே ஒரு பதட்டம் சூழ்ந்து கொண்டது அவளை. திரும்ப அழைக்காவிட்டால் அவனை ஏமாற்ற முயல்வதாக எடுத்துக் கொள்வானோ என்று தோன்றவே தயக்கத்துடன் அழைத்தாள்.​

அழைப்பு முழுதாக சென்று முடியும் நேரத்தில் எடுத்தவன், எடுத்த உடனே பொரியத் தொடங்கி விட்டிருந்தான்.​

“என்ன? கூப்பிட்டா உடனே எடுக்க முடியாதா உன்னால? என்னை ஏமாத்த பார்க்குறியா?” என்றான் கோபமாக.​

“சார், நான் காலேஜ் ஸ்டூடெண்ட் சார். இன்னைக்கு காலேஜ் வந்திருக்கேன். இப்ப தான் கிளாஸ் முடிஞ்சி போன் பார்த்தேன்” என்று மிகவும் தன்மையாக பேசினாள் ஹரி.​

லண்டன் அவள் படிப்பதற்காக வந்து தங்கியிருக்கும் இடம். அவள் இங்கிலாந்து பிரஜை இல்லை. இங்கே அவளுக்கு யாரையும் தெரியாது. தன் முயற்சியில் படிப்பு ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு, வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட நினைக்கும் துணிச்சல் மிகுந்த பெண் அவள். ஆனால் தெரியாத இடத்தில் வம்பு செய்து, எதிலும் மாட்டிக் கொள்ள விருப்பம் இல்லை அவளுக்கு. எனவே மனதில் அந்த ‘குரோவ்’ மீது மிகுந்த கோபம் இருந்தாலும், தவறு அவள் மீது என்பதில் தணிந்து போனாள் அவள். ஆனால் அவள் உண்மையான குணத்தை ‘அந்த அவன்’ அறிய நேரிட்டால்?​

அவள் பேசியதில் அவன் கோபமும் சற்று தணிந்தது.​

எனவே “சரி, உன்னோட நம்பருக்கு கார் டேமேஜூக்கான பில் அனுப்பி வச்சிருக்கேன். பார்த்துட்டு எப்ப அமவுண்ட் செட்டில் பண்ணுறன்னு சொல்லு” என்று சற்று தணிந்த குரலில் கூறி விட்டு போனை வைத்து விட்டான்.​

ஹரி மொபைலை எடுத்து பில்லை பார்த்தவள், சற்று அதிர்ந்து தான் போனாள். அந்த தொகை அவள் ஆறு மாதங்கள் சம்பாதிக்கும் மொத்த சம்பளத்தை சேர்த்து வரக் கூடிய தொகையாக இருந்தது. ஒரு கணம் தலை சுற்றுவது போலானது அவளுக்கு. அவள் இருப்பு வைத்திருக்கும் தொகைக்கும் இதற்கும் ஏணி வைத்தால் கூட எட்டாது. ஆனால் இப்போது அவள் பதில் கூறி தானே ஆக வேண்டும்?​

தன்னை திடப்படுத்திக் கொண்டு அவனுக்கு அழைக்க நினைத்தவள், அந்த பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த உணவு விடுதிக்கு சென்றாள். ஒரு கோல்டு எஸ்ப்ரெஸ்ஸோ வாங்கி நிதானமாக குடித்து முடித்தாள். அதன் பின் ஒரு வழியாக அவனுக்கு அழைத்தாள்.​

“மேடம், அக்கவுண்ட் டீடைல்ஸ் எல்லாம் அனுப்பிட்டேன். ஆனா இன்னும் பணம் வரலையே?” என்றான் அவன், எடுத்ததுமே நக்கலாக.​

“சார், இது என்னோட தகுதிக்கு மீறின பணம், என்னால உடனே அதை குடுக்க முடியாது. எனக்கு கொஞ்சம் டைம் குடுங்க சார், நான் இன்னும் ரெண்டு எக்ஸ்ட்ரா வேலை பார்த்து கூட உங்க பணத்தை கண்டிப்பா கொடுத்துருவேன்” என்றாள் கம்மிய குரலில்.​

இதைக் கூறுவதற்குள் அவளுக்கு மிகவும் அவமானமாக இருந்தது.​

“நான் என்ன உனக்கு கடனா கொடுத்திருக்கேன்? இன்ஸ்டால்மென்ட்ல திருப்பி குடுக்க? நீ பண்ணுனது ஒரு ஆக்சிடென்ட். அதுக்கு இழப்பீடு கொடுக்க போற. இதுக்கெல்லாம் யாரும் டைம் குடுக்க மாட்டாங்க” என்றான் கடினக் குரலில்.​

“சார், நான் இந்த நாட்டு சிட்டிசன் கிடையாது. நான் இங்க படிக்க தான் வந்திருக்கேன். அதுவும் பார்ட் டைம் வேலை பார்த்து தான் அதுக்கான பணமே சம்பாதிக்கிறேன்…” என்று அவள் கூறி முடிப்பதற்குள் அவன் இடைமறித்தான்.​

“ஏன்? உன்னோட பேரன்ட்ஸ் எல்லாம் என்ன செய்யுறாங்க? அவங்க ஏன் உனக்கு படிப்புக்கு உதவி செய்யல?” என்றான்.​

அவனை மீறி இந்தக் கேள்வியை அவன் கேட்டிருந்தான். கேட்ட பிறகு தான் இது தனக்கு சம்பந்தம் இல்லாத கேள்வி என்று அவனுக்கு உரைத்தது.​

அவளுக்கும் இது அவனுக்கு தேவை இல்லாத கேள்வி என்று தோன்ற தான் செய்தது. ஆனால் அவள் பதில் சொல்லாவிட்டால், அவன் காவல் நிலையத்தில் புகார் செய்து விட்டால் என்ன செய்வது, என்ற எண்ணம் தோன்றி அவளை பதில் சொல்ல வைத்தது.​

“அம்மா துபாய்ல இருக்காங்க சார். அவங்க பேச்சை மீறி தான் இங்க படிக்க வந்திருக்கேன். சோ என்னோட செலவை நானே பார்த்துக்கிறதா அவங்ககிட்ட சொல்லிட்டேன். இப்ப நான் பணம் கேட்டா கூட அவங்க கொடுப்பாங்க. ஆனா இந்த பிரச்சினையை சொன்னா பயப்படுவாங்க. அதுக்கு தான் கேக்குறேன். எனக்கு கொஞ்சம் டைம் மட்டும் கொடுங்க, நான் நிச்சயம் உங்க பணத்தை திருப்பி கொடுத்துருவேன்” என்றாள் ஹரிப்ரியா.​

அந்தப் பக்கம் சில நொடிகள் அமைதி மட்டுமே.​

அதன்பின் “நீ சொல்லுறத நான் ஏத்துக்கிறேன். ஆனா நீ வெளிய வேலை பார்த்து என்னோட கடனை கழிக்கிறதை விட என்கிட்ட ஒரு சுலபமான வழி இருக்கு” என்றான் அவன்.​

“சொல்லுங்க சார், நான் என்ன செய்யணும்?”​

“நீ நிறைய இடத்துல பாக்குற பார்ட் டைம் வேலையை விட்டுட்டு, என்னோட கம்பெனில நீ செய்யலாம். அதுக்கு உனக்கு குடுக்குற சேலரில நான் என்னோட கடனை கொஞ்சம் கொஞ்சமா கழிச்சிக்கிறேன்” என்று வலையை விரித்தான் வேடனவன்.​

அது புரியாத புறாவோ, அவன் தனக்கு உண்ண இரை கொடுப்பதாக நினைத்து அவன் தோளில் தொற்றிக் கொண்டது.​

ஆம், அவன் கூறிய யோசனையை அவள் ஏற்றுக் கொண்டாள். அவன் கொடுத்த முகவரியில் மறுநாள் அவனை சந்திப்பதாக கூறிவிட்டு புன்னகையுடன் போனை வைத்தாள்.​

அந்த பழமை மிகுந்த, பெரிய தொட்டிக்கட்டு வீட்டின் நடு முற்றத்தில் இருந்த பெரிய அண்டாவில் நிறைந்திருந்த தண்ணீரில், முகம் கை கால் கழுவிக் கொண்டான் மூக்கேஸ்வரன்.​

கழுவி முடித்து நிமிர்ந்த போது அவனுக்கு துண்டு நீட்டப்பட்டது. அதை யார் கொடுத்தார்கள் என்பதை கூட கவனிக்காமல் வாங்கி முகத்தை துடைத்து, துண்டை வீசி விட்டு வீட்டிற்குள் சென்றான்.​

நேராக அவன் சென்றது அன்னையின் அறைக்கு தான். அவன் சென்று பார்த்த போது அவன் தாய் மீனாட்சி கட்டிலில் படுத்திருந்தார். இவனைக் கண்டதும் அவர் கண்களை துடைத்துக் கொண்டு எழுந்து அமர்ந்தார்.​

மூக்கனின் கழுகுக் கண்களிலிருந்து இந்தக் காட்சி தப்பவில்லை.​

“ஏன் இவ்வளவு நேரம் சாப்பிடல?” என்றான் கூர்மையாக.​

“பசிக்கலப்பா, கொஞ்சம் அசதியா இருந்துச்சி. அது தான் செத்த தலை சாஞ்சேன்” என்றார் அவர் சமாளிப்பாக.​

“இங்க பாருங்கம்மா, நீங்க என்ன தான் அழுதாலும், அடம் பிடிச்சாலும் அந்த ராங்கியை நான் கட்டிக்க மாட்டேன். அதுக்காக இப்படி அழுது, சாப்பிடாம உங்களுக்கு உடம்புக்கு எதுவும் வந்தா, அப்புறம் அவளை என்கிட்ட இருந்து யாரும் காப்பாத்த முடியாது. நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது” என்றான் கோபமாக.​

“அப்பு, நீ பேசுறது சரியில்ல. இதுக்கும் அவளுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இது முழுக்க முழுக்க நானும், சின்னம்மாவும் சேர்ந்து எடுத்த முடிவு. அவங்க வீட்டுல அவங்க பேச்சுக்கு மறுபேச்சு கிடையாது. ஆனா இங்க அப்படியா? என்னோட பேச்சு சபை ஏறுமா?” என்று மீண்டும் கண்ணீர் வடித்தார் மீனாட்சி.​

நீங்கள் அழுதாலும் பரவாயில்லை என்று அன்னையிடம் சொன்ன மூக்கனுக்கோ, அன்னையை அழவைத்துப் பார்க்கும் தெம்பு சுத்தமாக இல்லை. அவர் கண்ணீர் அவனை வெறி பிடிக்க வைத்தது எனலாம்.​

“அழாதீங்கம்மா” என்று அந்த அறையே அதிர கத்தினான்.​

ஆனால் அவர் அவனுக்கே தாயாகிற்றே! சற்றும் அதிராமல் நிதானமாக கண்ணை துடைத்துக் கொண்டு நிமிர்ந்து அவனை பார்த்தார்.​

“நான் சொன்னதுக்கு நீ தான் முடியாதுன்னு சொல்லிட்டியேப்பு. நீ உன் இஷ்டம் போல இரு. நான் உன்னை எதுவும் கேக்க மாட்டேன்” என்றார்.​

அவனுக்குப் புரிந்தது, அன்னை இதை விடப் போவதில்லை என்பது. ஆனால் அவளை நினைத்தாலே அவனுக்கு கசந்து வழிந்தது. அவனுக்கு பெண் என்றால் அடங்கி இருக்க வேண்டும். ஆனால் அன்னை சொல்லும் அவளோ சரியான ராங்கி, திமிர் பிடித்தவள், பொய் சொல்லி, திருடி இன்னுமே சொல்லிக் கொண்டே போகலாம் அவளைப் பற்றி.​

அதற்காக அன்னையின் உடல் நலனை அலட்சியப் படுத்தவும் அவனால் முடியாது. மீனாட்சிக்கு கடுமையான அல்சர் ஏற்பட்டு சென்ற வருடம் மிகுந்த சிரமப்பட்டார். அதன்பின் அவர் உடல்நிலையை தேற்றுவதற்குள் அவன் பட்டபாடு கொஞ்ச நஞ்சம் இல்லை. இப்போதும் ஒருவேளை உணவை அவர் தாமதமாக உண்டு விட்டால், அவருக்கு கடுமையான வலி ஏற்படும்.​

இப்படிப்பட்ட உடலை வைத்துக் கொண்டு சாப்பிட அடம்பிடிப்பவரை அவனால் சமாளிக்க முடியவில்லை. சரி, அன்னைக்காக சம்மதிக்கலாம். அதன்பிறகு அவனுக்கு அவள் அடங்கி நடக்காவிட்டால், அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து விட்டு தான் வீட்டுக்கு வந்தான் அவன்.​

“அம்மா, நான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்கிறேன்” என்றான் மூக்கன்.​

சுவிட்ச் போட்டது போல் மீனாட்சியின் முகம் ஒளிர்ந்தது.​

“அப்பு, நீ நிஜமா தானே சொல்லுற? அம்முவை கல்யாணம் செஞ்சிக்கிறியா?” என்றார் ஆர்வமாக.​

அவர் முகபாவனையில் அவனுக்கு சிரிப்பும் வந்தது. அதே லேசான புன்னகையுடன் ஆமாம் என்பது போல் தலை அசைத்தான்.​

“சரி, அதுதான் உங்களுக்கு பிடிச்ச மாதிரி எல்லாம் நடக்க போகுதே. வாங்க சாப்பிடலாம்”​

“சரிப்பு, சரிப்பு. ஒத்த போனை போட்டு சின்னம்மா கிட்ட பேசிட்டு வரட்டா?”​

“ஒண்ணும் வேணாம். உங்க சின்னம்மாவும் நீங்களும் பேச ஆரம்பிச்சா உச்சிப் பொழுது சாப்பாட்டை, ரவைக்கு தான் சாப்பிடணும். வாங்க, ஒத்த உருண்டையை வயித்துக்குள்ள போட்டுட்டு வந்து அப்புறம் எம்புட்டு வேணா பேசுங்க. அதுதான் இனிமே பேச விசயமா இல்ல?” என்றான் ஒரு மாதிரி குரலில்.​

“அது சரிதான்ப்பு. வா சாப்பிடலாம்” என்றவாறு மகனை அழைத்துக் கொண்டு உணவு கூடத்திற்கு சென்றார் மீனாட்சி.​

  • தொடரும்…​

 

Selvi_Saran

Moderator

மெல்லினமல்ல வல்லினமே 4​

குளோபல் பன்னாட்டு நிறுவனத்தின் தலைமையகத்தின் வரவேற்பு பகுதியில், தனக்கென அளிக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்திருந்தாள் ஹரிப்ரியா. அவள் அன்று அடர் நீல நிறத்தில் ஸ்லீவ்லெஸ் கவுன் அணிந்திருந்தாள். அந்த கவுன் அவளுடைய முட்டி வரை இருந்தது. கழுத்தில் ஒரு மெல்லிய சில்வர் செயின், காதில் பொட்டு போல அதே நிறத்தில் ஒரு கம்மல், ஒரு கையில் சில்வர் நிற வாட்ச் அணிந்திருந்தாள். முகத்தில் லேசான ஒப்பனை, லிப் கிளாஸ் மட்டும் அணிந்து பேரழகியாக அமர்ந்திருந்தாள்.​

அவளை ஒருமுறை பார்த்தவர்கள், மீண்டும் சில நொடிகள் தங்களை மீறி அவளை கவனித்து விட்டே சென்றனர். முதல் நாள் குரோவ் அனுப்பியிருந்த முகவரியைக் கொண்டு, அவன் மெயில் செய்திருந்த லெட்டரையும் எடுத்துக் கொண்டு இங்கே வந்து காத்திருக்கிறாள் அவள்.​

சற்று நேரத்தில் ஒரு பெண் வந்து அவளை அழைத்து சென்றாள். அந்த இருபது மாடி கட்டிடத்தின் இருபதாவது தளத்தை அடைந்தனர் இருவரும். ஒரு பெரிய அறைக்குள் அழைத்து சென்றவள், அங்கே மேசைக்கு எதிரில் கிடந்த இருக்கையில் அமர்ந்து காத்திருக்கும் படி கூறிவிட்டு சென்று விட்டாள்.​

அறையை சுற்றிப் பார்த்தாள் ஹரிப்ரியா. மிகவும் பெரிய அறை அது. ஒருபுறச் சுவரின் அருகில் சில சோபாக்கள் கிடந்தது. ஆங்காங்கு அலமாரிகள், அவற்றில் சில கோப்புகள் இருந்தன. கண்ணாடி மாளிகை என்று கூறும் அளவில் அனைத்து பொருட்களும் கண்ணாடியால் அல்லது கண்ணாடி போன்ற பளபளப்பான கற்கள், மரங்களை கொண்டு செய்யப் பட்டிருந்தது.​

“இப்படியே நாள் முழுக்க கூட பார்த்துட்டே இருப்பியோ?” என்ற குரலில் திடுக்கிட்டு திரும்பினாள் ஹரி.​

அங்கே குரோவ் நின்றிருந்தான். அவன் கண்களில் ஒரு உணர்ச்சியற்ற பாவம் இருந்தது. அவன் அத்தனை கவர்ச்சியாக கோர்ட் சூட் அணிந்து மிகவும் கம்பீரமும், அழகும் கொண்டிருந்தான். இருந்தும் அது எதுவும் ஹரியை கவரவில்லை. அவள் கவனம் முழுவதும் அவன் என்ன சொல்லப் போகிறான் என்பதிலேயே இருந்தது.​

ஆனால் குரோவின் கண்கள் அவளை அப்படி ரசனையாக பார்த்துக் கொண்டிருந்தது. இருந்தும் அதை அவளுக்கு தெரிய விடாமல் பார்த்துக் கொண்டான் அவன்.​

“இல்ல சார், சும்மா தான் பார்த்தேன். என்னோட ஸ்கூல் சர்டிபிகேட், அப்புறம் நான் படிச்ச சில கம்ப்யூட்டர் கோர்ஸ் சர்டிபிகேட்” என்று கையில் இருந்த பைலை அவனிடம் கொடுத்தாள்.​

அவனும் அவன் இருக்கையில் வந்து அமர்ந்து, அவள் கையிலிருந்த பைலை வாங்கிப் பார்வையிட ஆரம்பித்தான். அப்போது தான் ஹரி கவனித்தாள். அவன் மேசையின் மீது ஒரு பெயர் பலகை இருந்தது. அதில் ரகுவீர் தோஷி எம்டி என்று குறிப்பிட்டிருந்தது.​

அவன் இந்த நிறுவனத்தில் ஏதோ ஒரு உயர்ந்த பதவியில் இருக்கிறான் என்று நினைத்திருந்தாள் அவள். ஆனால் இத்தனை பெரிய நிறுவனத்தின் உரிமையாளர் இவனா? அப்படி என்றால் இந்த குளோபல் எம்என்சி கம்பெனி இவனுடையதா? அவளுக்குத் தெரியும், குளோபல் நிறுவனம் உலகம் முழுவதும் பல கிளைகளை கொண்டது. குறிப்பிட்ட ஒரு பொருள் தயாரிக்கும் நிறுவனம் இல்லை அது. அவர்கள் நுழையாத தொழில்களே இல்லை என்ற அளவில் தான், அவர்களின் தொழிலின் எல்லைகள் விரிவடைந்து இருக்கிறது. சாதாரண உப்பிலிருந்து விமான சேவை வரை எல்லா இடத்திலும் குளோபல் என்ற பெயர் உலக மக்களுக்கிடையே பிரசித்தி பெற்றது.​

இவ்வளவு உயரத்தில் இருப்பவனிடமா அன்று அவள் அப்படி நடந்து கொண்டாள்? ஆனால் இவன் சிறிய வயதாக தெரிகிறானே? ஒருவேளை பரம்பரை சொத்தாக இருக்கலாம். சற்று கலக்கத்துடன் அவன் என்ன கூறப் போகிறான் என்று காத்திருந்தாள்.​

அவன் சில நொடிகளில் பைலை அவளிடமே திருப்பி கொடுத்து விட்டான்.​

“நான் கூட காலேஜ் படிக்கிறதா சொல்லவும், உனக்கு பத்தொன்பது அல்லது இருபது வயசு இருக்கும், இதுக்குள்ள கொஞ்சம் டேட்டா நாலெட்ஜ் இருக்கும்னு நினைச்சேன். ஆனா நீ ஒரு பதினேழு வயசு பொண்ணு, காலேஜ் சேர்ந்து கூட ஆறு மாசம் தான் ஆகுது போல?” என்றான் கேள்வியாக.​

“சார் வயசை வச்சி ஒன்னும் முடிவு பண்ணாதீங்க. நான் நல்ல ஹார்ட் ஒர்க்கர். இப்பவே எத்தனை வேலை பார்க்குறேன் தெரியுமா? காலேஜ் மதியம் முடிஞ்சிரும் எனக்கு. ஈவினிங் வரை டெலிவரி பண்ணுவேன், அதுக்கு அப்புறம் பார்ல வேலை செய்யுறேன். வீக் எண்ட்ல பிளவர் ஷாப்ல வேலை பார்க்குறேன். இது போக அப்பப்போ டைம் கிடைச்சா, பேபி சிட்டிங் கூட போவேன்” என்றாள் வேகமாக.​

இந்த இரண்டு நாட்களில் அவளைப் பற்றி ஏற்கனவே விசாரித்து விட்டிருந்தான் ரகுவீர். இப்போது அவள் கூறியதெல்லாம் ஏற்கனவே அவனுக்கு தெரிந்த விஷயங்கள் தான். அவளுக்கான வேலையையும் அவன் இதற்குள் முடிவு செய்து விட்டிருந்தான். இருந்தும் அவளை பேச வைப்பதற்காகவே அவன் அந்த கேள்வியை கேட்டிருந்தான்.​

“இதெல்லாம் ஒரு தகுதியா? பார், பிளவர் ஷாப், பேபி சிட்டிங் எல்லாம் இந்த கம்பெனில வேலை செய்ய எந்த விதத்துல உதவும்?” என்றான் நக்கலாக.​

அவள் முகம் கன்றி விட்டது. என்ன பதில் சொல்வது என்று புரியாமல் உதட்டைக் கடித்துக் கொண்டு அமைதியானாள் அவள்.​

சில நொடிகள் அவளை கூர்மையாகப் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.​

“ஓகே, உன்னோட குவாலிஃபிகேஷனுக்கு இந்த கம்பெனில அசிஸ்டன்ட் வேலை கூட கொடுக்க முடியாது. கிளீனிங் ஸ்டாஃப், பியூன், ஆஃபீஸ் பாய் மாதிரி தான் ஏதாவது வேலை கொடுக்க முடியும். ஆனா அந்த வேலை பார்த்து நீ எந்த வருசம் என்னோட கடனை அடைக்க முடியும்?”​

“எந்த வேலையா இருந்தாலும் பரவாயில்லை சார், நான் கவுரவம் பார்க்க மாட்டேன். நீங்க என்ன வேலை கொடுத்தாலும், நல்லா செய்வேன்” என்றாள் அவள் வேகமாக.​

“சரி, உனக்கு இங்க கம்பெனில பொருத்தமான வேலை எதுவும் இல்ல. உனக்கு வேலை என்னோட வீட்டுல தான். அதோட நீ என் வீட்டுல தான் தங்கணும். உன்னோட படிப்புக்கு தேவையான பணத்தை நானே கொடுப்பேன், நீ படிக்கிற நேரம் போக மத்த நேரம் வேலை பார்த்தா போதும்” என்றான் நிதானமாக.​

ஹரி இப்படி ஒன்றை சுத்தமாக எதிர்பார்க்கவில்லை. அவள் என்ன பதில் சொல்வது என்று புரியாமல் விழித்தாள்.​

“உடனே பதில் சொல்லணும்னு அவசியம் இல்ல. யோசிச்சி நாளைக்கு கூட சொல்லு. வேற ஏதாச்சும் கேக்கணும்னா கேட்டுக்கோ” என்றான் ரகுவீர்.​

சில நொடிகள் யோசித்தாள் ஹரி.​

பின் “உங்க வீட்டுல வேலை கொடுத்தா என்ன வேலை கொடுப்பீங்க? உங்க வீட்டுல எத்தனை பேர் இருக்கீங்க?” என்றாள்.​

மனதில் அவளை மெச்சிக் கொண்டான் ரகுவீர். அதை முகத்தில் காண்பிக்கவில்லை அவன்.​

“என்னோட வீட்டுல நிறைய ஒர்க்கர்ஸ் இருக்குறாங்க. குக்கிங், க்ளீனிங், மெயின்டெனன்ஸ் எல்லாத்துக்கும் ஆள் இருக்கு. எனக்கு பெர்சனல் அசிஸ்டன்ட் மட்டும் தான் இப்ப தேவை. அதாவது என்னோட புட், ஹெல்த், டெய்லி ரொட்டீன் இதெல்லாம் கவனிச்சிக்க தான் ஒரு ஆள் தேவை. இந்த வேலை தான் நீ பார்க்கணும். உனக்கு சேலரி …” என்று ஒரு பெரிய தொகையை கூறினான் ரகுவீர்.​

அந்த சம்பளத் தொகையிலேயே ஹரிப்ரியா விழுந்து விட்டாள். ஆனாலும் அவள் கேட்ட இரண்டாவது கேள்வி?​

“உங்க வீட்டுல….” என்று தயங்கி நிறுத்தினாள்.​

“இங்க பாரு ஹரிப்ரியா, என் வீட்டுல எத்தனை பேர் இருந்தாலும், யார் இருந்தாலும் அது உனக்கு தேவை கிடையாது. என்னோட வீட்டுல இருக்குற பதினோரு செர்வன்ட்ஸ் கூட நீயும் பன்னிரண்டாவது ஆளா சேரப் போற, அவ்வளவு தான். உனக்கு இந்த ஆஃபர் பிடிச்சிருக்கா? இல்லையா? அதை மட்டும் நீ சொன்னா போதும்” என்று முடித்துக் கொண்டான் அவன்.​

அவனுடைய ஹரிப்ரியா என்ற தெளிவான உச்சரிப்பில் அவளுக்கு ஒரு விஷயம் புரிந்தது. அவன் இந்தியாவை சேர்ந்தவன், அவளுக்கு அதை கேட்கவும் தயக்கமாக இருந்தது. நீ இந்தியனா என்று கேட்டால், அது உனக்கு தேவை இல்லாத விசயம் என்று மூக்கை உடைப்பான் என்று புரிந்து, பேசாமல் இருந்து விட்டாள் அவள்.​

“நான் நாளைக்கு சொல்லட்டுமா சார்?” என்றாள்.​

அவன் கண்கள் அத்தனை நேரம் அவளுடைய ஸ்லீவ்லெஸ் கவுனின், தோளில் இருந்த ஒற்றை கயிறு போன்ற ஸ்ட்ராப் மறைத்த இடம் போக, மிகுதி வெளியில் தெரிந்த பால் வண்ண நிற சருமத்தையே பார்த்துக் கொண்டிருந்தது. அதிலும் அவள் கழுத்து எழும்புகள், அதில் அவளுடைய செயின் வளைந்து ஒய்யாரமாக படுத்துக் கொண்டிருப்பது போல் அவனுக்கு தோன்றியது. எச்சில் விழுங்கிக் கொண்டு, உணர்வுகளையும் சேர்த்து மறைத்தான் அவன்.​

“சரி, நாளைக்கே சொல்லு” என்று அமைதியாகக் கூறி அவளை வழியனுப்பி வைத்தான்.​

அவள் சென்றதும் வேகமாக ஜன்னல் அருகில் சென்று, திரைச்சீலையை விலக்கி வெளிக்காற்றை வேகமாக சுவாசித்தான். கழுத்தை இறுக்கி இருந்த டையை தளர்த்தி விட்டான். அவளுடைய அழகு அவனை அந்த அளவுக்கு மூச்சடைக்க செய்திருந்தது.​

இத்தனைக்கும் அவன் இங்கே பார்க்காத பழகாத அழகிகளே இல்லை எனலாம். பழக்கத்துடன் மட்டுமின்றி படுக்கை வரை வந்த, வர தயாராக இருக்கும் பெண்களும் அதில் அடக்கம். ஆனால் ஒரு பதினேழு வயது சிறுமி அவனை இந்த அளவு பாதிக்கிறாள். அவன் நினைத்தால் அந்த பணம் அவனுக்கு ஒன்றுமே இல்லை. அவளை தன் அருகில் வைத்துக் கொள்ளும் ஆசையில் தான் இப்படி எல்லாம் நடந்து கொள்கிறான்.​

ஆனால் இதற்கு எதிர்காலம் இல்லை என்பதும் அவனுக்கு தெரியும். இருந்தும் அவளை நெருங்க நினைக்கும் மனதை அவனால் கட்டுப்படுத்த முடியவில்லை.​

குண்டளப்பட்டி கிராமத்தில்…​

காலை உணவு நேரத்தில் அந்த வீடே பரபரப்பாக இருந்தது. சமையலறையில் சமைத்த உணவு வகைகளை எல்லாம் பரிமாறுவதற்கு ஏதுவாக சிறிய பாத்திரங்களில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தார் கண்ணகி. அவர் எடுத்து வைப்பதை எல்லாம் கவனமாக எடுத்துக் கொண்டு உணவு மேசையில் வைத்துக் கொண்டிருந்தாள் அமுதசுரபி.​

வேலையாள் ஒருத்தி உணவு மேசை, அங்கிருந்த நாற்காலியை எல்லாம் வேகமாக துடைத்துக் கொண்டிருந்தாள்.​

காளியம்மாள் ஹாலில் இருக்கும் சோபாவில் அமர்ந்து வேலையாட்கள், மற்றும் வீட்டுப் பெண்களை விரட்டிக் கொண்டிருந்தார். அவர் முகம் கடுகடுவென்று இருந்தது.​

அவருக்குப் பயந்தே சமயலறையில் இருக்கும் கண்ணகியும், அமுதசுரபியும் வேகமாக வேலைகளை செய்து கொண்டிருந்தனர்.​

வேலப்பன், காளியம்மாள் தம்பதிகளுக்கு ஒரே மகன் பழனிவேல். இவர் மனைவி கண்ணகி. பழனிவேல், கண்ணகிக்கு இரண்டு பிள்ளைகள் அமுதசுரபி, குமரவேல். அமுதா பன்னிரண்டாம் வகுப்பும், குமரன் ஒன்பதாம் வகுப்பும் படிக்கிறார்கள்.​

அந்த வீட்டில் பெண்கள் ஆண்களுக்கு அடிமை என்பது எழுதப்படாத சட்டம். இதனால் அமுதா பெண் என்பதாலேயே ஒரு வேலைக்காரி போல தான் நடத்தப்பட்டாள். அதிகாலையில் எழுந்து வீட்டு வேலை, சமையல் வேலையில் உதவி செய்துவிட்டு ஆண்கள் சாப்பிட்ட பின்பு தான், அவள் பள்ளிக்கு கிளம்பி செல்ல முடியும்.​

மாதத்தில் மூன்று நாட்கள் மட்டும் அவளுக்கு இதில் இருந்து ஓய்வு கிடைக்கும். அந்த நாட்களில் தட்டுமுட்டு சாமான்கள் கிடக்கும் அறையில் தான் அவள் தங்கிக் கொள்ள வேண்டும். இன்னும் அங்கு அவளுக்கு நடக்கும் கொடுமைகளை சொல்லிக் கொண்டே போகலாம்.​

மாடியில் இருந்து இறங்கி வந்து கொண்டிருந்தார் பழனிவேல். மாடியில் ஒரு அறையில் பழனிவேல், கண்ணகியும், மற்றொரு அறையில் குமரவேலும் இருந்தனர். மாடியில் இருக்கும் பல அறைகள் பூட்டி தான் கிடந்தது. விருந்தினர் யாராவது வந்தால் கூட கீழே இருக்கும் விருந்தினர் அறைகளில் தான் தங்கிக் கொள்வார்கள்.​

வேலப்பன், காளியம்மாள் வயது மூப்பின் காரணமாக கீழே இருக்கும் அறைகளில் ஒன்றில் தங்கியிருந்தனர். அமுதாவுக்கு காளியம்மாள் அறைக்கு அருகில் இருக்கும் ஒரு அறை கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் குமரவேலின் அறைக்கும் அமுதாவின் அறைக்கும் இருக்கும் வேறுபாடுகள் அதிகம்.​

குமரவேலின் அறையில் நவீன வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டிருந்தது. அமுதாவின் அறையிலோ அடிப்படை வசதிகள் கூட கிடையாது. இருந்தும் அதைப் பற்றிக் கூட அவள் கவலைப் படுவது இல்லை. ஆனால் காரணமே இல்லாமல் கூட காளியம்மாள் அவளை அடிப்பார், மோசமான வார்த்தைகளால் மனதை காயப் படுத்துவார். அதை அவள் அன்னையோ, தந்தையோ கூட தடுக்க மாட்டார்கள். அது தான் அவளால் தாங்கிக் கொள்ள முடியாமல் இருந்தது.​

எப்போது இந்த நரகத்தில் இருந்து செல்வோம் என்பது தான் அமுதாவின் தினசரி வேண்டுதலாகவே இருக்கிறது. இதில் அவள் வருங்காலக் கணவனும் ஆணாதிக்க சிந்தனை உள்ளவன் என்பதை அவள் அறிந்தால்?​

பழனிவேல் வந்து உணவு மேசையில் அமரவும், அமுதா சமையலறைக்கு சென்று கண்ணகியிடம் தெரிவித்தாள். கண்ணகி கணவருக்கு பரிமாற சென்றார்.​

அமுதா ஹாலில் அமர்ந்திருக்கும் பாட்டியிடமும், அறையில் இருக்கும் தாத்தாவிடமும் சென்று கூறி சாப்பிட அழைத்து வந்தாள். குமரன் இன்னும் தூங்கிக் கொண்டு தான் இருப்பான்.​

உணவு பாதி சாப்பிட்டு முடித்த நேரம் காளியம்மாள் தொடங்கினார்.​

“நேத்து மீனாட்சி போன் போட்டா பழனி” என்றார்.​

பழனிவேல் “மூக்கன் என்ன சொன்னான்?” என்றார்.​

கண்ணகிக்கு இவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதே புரியவில்லை. வேலப்பனுக்கு புரிந்தாலும் இவர்களின் பேச்சு அவருக்கு பிடிக்கவில்லை. அவர் பழமைவாதியாக இருந்தாலும், பள்ளிப்படிப்பை முடிக்காத பேத்திக்கு திருமணம் என்பது அவருக்கு பிடிக்கவில்லை. எனவே மனைவி,மகன் பேச்சை கண்டு கொள்ளாமல் இருந்தார்.​

“அவன் சரின்னு சொல்லிட்டானாம். இனி நாம சொல்லுறது தான். பொட்டைக் கழுதை குத்த வச்சி அஞ்சு வருசம் ஆச்சு. இதுக்கு மேல அவளை வீட்டுல வச்சிருந்தா நம்மள வக்கத்தவங்கன்னு இந்த ஊரே பேசும். அதனால வெரசா அவளை கல்யாணம் முடிச்சி அனுப்பி வச்சிரணும்” என்று குருட்டு நியாயம் பேசினார் அவர்.​

கண்ணகி இது என்ன புது பூகம்பம் என்று திகைத்தார்.​

அமுதசுரபி அப்போது தான் உணவு மேசைக்கு தண்ணீர் கொண்டு வந்தவள், தந்தை மற்றும் பாட்டியின் பேச்சை கேட்டவள், அதிர்ச்சியில் கையிலிருந்த சொம்பை கைதவறி விட்டு விட்டாள். தண்ணீர் சிதறி அந்த தரை முழுக்க ஈரமானது.​

அந்த சத்தத்தில் கோபத்துடன் இவள் புறம் திரும்பினார் காளியம்மாள்.​

  • தொடரும்….​

 
Top