எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மௌனம் களைவாயா பெண்ணே.. கதையின் முதல் அத்தியாயத்துடன் வந்துவிட்டேன் வாரம் இரண்டு அத்தியாயம் பதிவிடப்படும் படித்துவிட்டு உங்கள் மேலான கருத்துக்களை கூறுங

zeenath

Active member

மௌனம் களைவாயா பெண்ணே​

அத்தியாயம் 1​

சுட்டெரிக்கும் வெயிலில் தன் ஹெல்மட்டை கழட்டி பைக்கில் மாட்டிவிட்டு நிமிர்ந்து பார்த்தவன் கண்களில் விழுந்தது,​

PM COAL INDUSTRY என்று தங்கத்தில் ஜொலித்த பெயரைத் தாங்கி இருந்த மூன்று மாடி கட்டிடம்.​

கட்டிடத்தை அன்னாந்து பார்த்தவன், பெருமூச்சிட்டபடி வேகமாக மின் தூக்கி இருக்கும் இடத்துக்கு நகர்ந்து இரண்டாம் பொத்தனை அழுத்திவிட்டு சாய்ந்து கொண்டான். அங்கிருந்த கண்ணாடியில் தன்னை பார்த்தவன் முடியைக் கைகளால் கோதி சரி செய்து மீசை தாடியையும் தன் கைகள் கொண்டே கீழாகத் தடவி சரி செய்து கொண்டவன். தன் சிவந்த உதடுகளைப் பார்த்துக்கொண்டே கண் சிமிட்டி தன்னை தானே நாடி பிடித்துக் கொஞ்சி,​

" அழகன் டா நீ!"​

எனச் சொல்லிச் சிரிப்பதற்கும், தான் செல்ல வேண்டிய இரண்டாம் தளம் வந்ததற்கான அடையாளமாக மின் தூக்கின் கதவு திறப்பதற்கும் சரியாக இருந்தது.​

பிரகாசமான முகத்துடனும் வாய் நிறைய புன்னகையுடனும்​

"ஹாய் காய்ஸ்.." என்று சத்தமாக அழைத்தபடி ஆரவாரமாக உள் நுழைந்தான் கைகளை அசைத்துக் கொண்டே.​

உள் நுழைந்தவனின் கண்கள் வேகமாக யாரையோ தேட தேடியவர் கிடைக்காத ஏமாற்றத்தில் முகம் பியூஸ் போன பல்பாகச் சுருங்கியது,​

இவனையே பார்த்துக் கொண்டிருந்த ராஜேஷ்,​

" என்ன ராகவ் முகம் திடீர்னு டல் ஆயிடுச்சு? தேடுனவங்க கிடைக்கலையா?"​

என்றான் சிரிப்போடு.​

வேகமாகச் சென்று அவனைக் கழுத்தோடு இறுக்கிப்பிடித்தவன்,​

"தேடுறேன்னு தெரியுது இல்ல, சொல்லு"​

என்றான் அவன் காதின் அருகே குனிந்து,​

"இன்னிக்கு வரல போல டா, நானும் ரெண்டு நாள் வரல, உடம்பு சரியில்லை, காலையில் ஆபீஸ் வந்ததிலிருந்து பார்க்கிறேன் காணோம்"​

என்றான், நண்பனின் கேள்விக்குப் பதிலாக.​

இவர்கள் இங்கு ரகசியமாகப் பேசிக் கொண்டிருக்க, ராகவ்வை பார்த்த ஹேமா,​

"ஹாய் ராகவ்" என கூற,வேகமாக அவள் புறம் திரும்பியவனிடம்,​

"எங்க ரொம்ப நாளா உங்கள ஆள காணோம்?"​

எனக் கேட்ட அவளுக்கு,​

"ஹாய் ஹேமா, எப்படி இருக்கீங்க?​

என அவளை நலம் விசாரித்தபடி, அவளின் கேள்விக்குப் பதிலாக, ‌​

"எங்க என்னை வர விடுறிங்க? வேலையா சொல்லிக் கோயம்புத்தூரிலேயே என்னைக் கட்டிப்போட்டுறீங்க..எல்லாத்தையும் தாண்டி நானும் மாசத்துக்கு ஒரு தடவையாவது வரப் பார்க்கிறேன், எங்க வர விடுறீங்க?"​

என்ற படியே அவளின் மேஜையின் அருகே வந்தான், வந்தவன் மேஜையில் சாய்ந்து கொண்டு இரு கைகளையும் பாக்கெட்டில் விட்டவாறு,அவளைப் பார்த்து,​

"அப்புறம் எப்படி போகுது வேலை எல்லாம்?"எனக் கேட்டபடி​

"எங்க உங்க ஃபிரண்ட காணோம்?"​

எனப் பக்கத்து இருக்கையைக் கண்களால் காட்டிய படியே வினவ,​

" அவ இன்னிக்கு லீவு"என்றவள்,​

"இன்றைக்கு மட்டும் இல்ல, கொஞ்ச நாளைக்கு"​

என்றவளை யோசனையாகப் பார்த்தவன்,​

அவளின் டேபிளில் இருந்த திருமண பத்திரிகை அவனை ஈர்க்க மெதுவாக அதை எடுத்துப் பார்த்தவனுக்கு மின்சாரத்தை தொட்டது போன்ற அதிர்ச்சி.​

இவர்கள் பேசிக் கொண்டிருக்க இவனின் பின்னோடு வந்து நின்ற ராஜேஷ் பார்த்தது ராகவன் கைகளில் இருந்த திருமண பத்திரிக்கையையும் அதிலிருந்து பெயரையும் தான், பார்த்தவனுக்கும் அதிர்ச்சி.​

"என்னடா இது?"​

என அதிர்வாகக் கேட்க, பத்திரிக்கையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவன், மெதுவாகத் தன் விரல் கொண்டு தடவினான் மணமகள் என்ற இடத்தில் இருந்த வினிகா என்ற பெயரை.​

கண்களில் நீர் கட்டிவிட அருகில் நின்றிருந்த நண்பனை ஏறிட்டு பார்த்தவன், ஒன்றும் கூறாமல் பத்திரிகையைக் காட்டி உதட்டைப் பிதுக்க,​

எப்போதும் சிரித்துக் கொண்டும், சிறிது நேரம் வந்தாலும் மொத்த அலுவலகத்தையும் தன் நகைச்சுவையாலும் சிரிப்பாலும், கலாட்டா செய்து சிரிக்க வைக்கும் நண்பனை இப்படிப் பார்க்க முடியவில்லை அவனுக்கு.​

"என்னடா? மனச தளர விடாத? ஒன்றும் முடிஞ்சு போயிடல, நம்ம போய்ப் பேசலாம்"​

என்றவனிடம் வேண்டாம் என்பதாகத் தலையாட்டிய படி, இவனையே யோசனையாகப் பார்த்துக் கொண்டிருந்த ஹேமாவின் மேஜையில் திருமண பத்திரிகையை வைத்து விட்டு, வேகமாக வெளியேறினான் தன் கண்ணீரை யாருக்கும் காட்டாமல் விஜயராகவன்.​

விஜயராகவன்,​

P M COAL INDUSTRY கம்பெனியின் கோயம்புத்தூர் பிரிவில் எக்ஸிக்யூட்டிவாக வேலை பார்க்கிறான் புத்திசாலி கலகலப்பானவன், இவன் இருக்கும் இடம் சிரிப்பால் வெடித்துக் கொண்டே இருக்கும், மிக நல்லவன் தன்னைச் சார்ந்தோர்களிடம் மிகவும் அக்கறை கொண்டவன்.​

இவனின் உற்ற நண்பன் அகிலன் அவனும் இதே ஆபீசில் தான் வேலை பார்க்கிறான் இருவரும் கல்லூரியில் இருந்தே நண்பர்கள்,​

இவனின் இருப்பிடமும் கோவை தான். தந்தை திருவேங்கடம் தனியார் வங்கியில் மேனேஜராக இருக்கிறார் தாய் திலோத்தமை வீட்டு தலைவி இவனுக்கு ஒரு தங்கை வினோதினி கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கிறாள். தாய் வழி தாத்தா மாணிக்கம், அவர் மகன் ராஜசேகர் மருமகள் துளசியோடு வசித்து வருகிறார்.​

தாத்தா வீடு திருப்பூரில் இருக்க சிறுவயதில் பள்ளி விடுமுறையில் பெரும்பாலும் இவர்களின் ஜாகை அங்குத் தான். அப்பாவின் சொந்தமும் சற்று பெரியது தான் ஆனால் அவர் ஒற்றை மகனாக இருக்க தாத்தா பாட்டியின் மறைவுக்கு பின்பு சொந்தங்களின் போக்குவரத்து வெகுவாகக் குறைந்து விட்டது.​

இவனின் தந்தை சற்று அமைதியானவர். தான் உண்டு தன் வங்கி வேலை உண்டு என இருப்பவர். ஆனால் தாய் திலோத்தமாவோ சற்று ஆசைகள் அதிகம் உள்ள பெண்மணி, தன் குடும்பம் உயர்ந்த நிலையில் இருக்க வேண்டும் என்ற சராசரியான அனைத்து பெண்களுக்கும் இருக்கும் ஆசை தான் இவருக்கும். இவரின் ஒரே லட்சியம் சொந்த வீடு கட்ட வேண்டும் என்பதே. அதனால் எவ்வளவு சிக்கனம் பிடிக்க முடியுமோ அவ்வளவு சிக்கனம் பிடித்துக் காசைச் சேமித்துக் கொண்டிருக்கிறார் விரைவில் தனது வீட்டு கனவை நிறைவேற்ற.​

மகளையும் நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்ற ஆசையும் அதற்கான இவரின் திட்டமும் ரகசியமாகவே இருக்கிறது.​

சற்று வாய் துடுக்கானவர் தான் ஆனால் அடிப்படையில் நல்லவர்.​

விஜயராகவன் மாதம் நாற்பது ஆயிரம் சம்பாதிக்கின்றான். அவன் தன் கைச்செலவுக்குப் போக மற்ற அனைத்தையும் அன்னையிடமே கொடுத்து விடுவான். அவரின் வீடு ஆசைக்காக, கணவரும் அப்படியே. வீட்டின் ஹோம் மினிஸ்டர் ஆக இருப்பது திலோத்தமைதான்.​

பணத்தை மிச்சம் பிடித்துச் சேர்த்தாலும் பிள்ளைகளுக்கு வேண்டியதை செய்வதற்கு என்றுமே தவறுவதில்லை.​

வேகமாக வெளியேறிச் சென்ற ராகவ்வை, குழப்பத்தோடும் சந்தேகத்தோடும் பார்த்தது ஹேமா மட்டுமல்ல முழு அலுவலகமும் தான்.மிகுந்த சோகத்தோடு சென்ற ராகவ்வை பின் தொடர்ந்த ராஜேஷ்,​

அங்கிருந்த பால்கனியில் திரும்பி நின்றிருந்தவனின், முதுகு குலுங்குவதிலேயே அவன் அழுகிறான் என்பதை தெரிந்து கொண்ட ராஜேஷ் வேகமாக அவனைப் பின் நின்று அனைத்து கொண்டான்.​

நண்பனின் வரவு உணர்ந்து கண்ணீரை அடக்கிக் கொண்ட ராகவ்,​

"ஓகே மச்சான், ஐ அம் கூல்"​

என்றான் கண்களை எட்டாத புன்னகையுடன்.​

"ஏன் டா? உன்கிட்ட எத்தன தடவை சொன்னேன், அந்தப் பொண்ணு கிட்ட போய்ப் பேசுன்னு, கேட்டியா? சொல்லும்போதெல்லாம் இன்னும் டைம் வரல, வரலைன்னு சொல்லிட்டே இருந்தே, இப்ப மொத்தமா கல்யாண கார்டு கொடுத்துட்டு போயிடுச்சு, இப்ப என்ன பண்ண போற?"​

என்று ஆதங்கமாகக் கேட்டவனிடம்,​

"என்ன பண்ண போறேன்? எனக்கு இன்விடேஷன் வரலையே? வந்தா! நானும் போய் கல்யாணம் அட்டென்ட் பண்ணிட்டு, நல்ல ஒரு சாப்பாடு சாப்பிட்டு வரப் போறேன், மதுரக்காரங்க வேற, சாப்பாடு எல்லாம் வேற மாதிரி தரமா இருக்கும்"​

என்றான் சிரித்துக் கொண்டே.​

நண்பன் தன் துயரத்தை மறைத்துப் பேசிக் கொண்டிருப்பதை கண்டவன் அமைதியாக அவனையே பார்த்துக் கொண்டிருக்க, சிரித்தவனின் சிரிப்பும் மெல்ல மறைந்தது அண்ணாந்து வானத்தைப் பார்த்தவாறு, பெருமூச்சு விட்டவன் திரும்பி நண்பனைப் பார்த்து,​

" என்ன பண்ண சொல்ற? அவ்வளவுதான் நமக்கு வாய்ச்சதுன்னு நினைச்சுட்டு போயிட்டே இருக்க வேண்டியதுதான்.​

நான் விரும்பினதே அவளுக்குத் தெரியல? அதுவும் நல்லது தான்! எந்தக் குழப்பமும் இல்லாம அவ வாழ்க்கையை அவ வாழட்டும்.​

இனிமே இந்த ஆபீஸ்க்கு அவ்வளவா நான் வரமாட்டேன் டா, எதுவா இருந்தாலும் மெயில் போன் கால்ஸ்ல பேசிக்கலாம்"​

என்றபடி வேகமாக வெளியேறிச் செல்லும் நண்பனைத் துயரத்துடன் பார்த்துக்கொண்டிருந்தான் ராஜேஷ்.​

இவர்களின் பின்னோடு வந்த ஹேமா இருவரின் சம்பாஷனைகளை கேட்டு அதிர்ந்து நின்றாள். இவள் வருகை உணர்ந்த ராஜேஷ் திரும்பிப் பார்க்க,​

" என்ன ராஜேஷ்? ராகவ் வினிகாவ லவ் பண்ணாரா?​

"ஆமா சொல்லாமலேயே ஒன் சைடு லவ்"​

என்றான் அவனும்.​

ஏன் சொல்லாம விட்டுட்டாரு,​

"தெய் உட் பி குட் பெர்" என்றாள்.​

"எல்லாம் விதி, வேற என்ன சொல்ல?"​

என்ற படியே அலுவலகத்திற்கு செல்லும் ராஜேஷை தொடர்ந்தாள் ஹேமா.​

 
Top