எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மோகப் பொற்கொடியே மூழ்காத தாமரையே

kalaisree

Moderator
அத்தியாயம்-01

வெளுத்துப்போன மஞ்சள் நிற பலகையில் பஞ்சவர்ணபுரம் என்ற கருநிற எழுத்துக்கள் உதிர்ந்து போய் அந்த ஊரின் நிலையைப் பறைசாற்றியது.

பேருக்கு தார் ரோடு என்று இருக்க,நூறு மீட்டருக்கு ஒரு முறை குண்டும் குழியும் தங்கள் வருகையை பறைசாற்றியது.

அந்த உயர்தரக் கார் மேடு பள்ளங்களை அனாசியமாகக் கடந்தது.

ஆனால், காரை செலுத்திக் கொண்டிருந்தவனின் வதனமோ ஒவ்வொரு ஏற்ற இறக்கங்களுக்கும் கோபத்தில் சிவந்தது.

ஸ்டேரிங் வீலினை பற்றி இருந்தக் கரத்தின் அழுத்தத்தை கூட்டினான்.

மேலும் இரண்டு கிலோ மீட்டருக்கு இவ்விதமானப் பயணமே தொடர அதற்கு மேல் முடியாமல், "அம்மா என்ன கண்றாவி ரோடு இது " என்று எரிச்சலுடன் சிடுசிடுத்தான் .

தென்னிந்தியாவின் புகழ்பெற்ற இயக்குனர் ஆத்ரேயன்.

ஆறடி உயரம், தேவையற்ற சதைகள் இல்லாதக் கட்டுக்கோப்பான தேகம்.

நெற்றியில் அலை என புரளும் கேசத்தை ஜெல் வைத்து அடக்கி இருந்தான்.

கரு நாவல் பழ நிற சர்ட் அவனின் மாநிறத்தை இன்னும் எடுப்பாகக் காட்டியது.

அளவான மீசை தாடி. கருப்பு நிற பிரேம் உடன் கூடிய கண் கண்ணாடி.

வசீகரமான முகம் என அவன் இயக்கும் திரைப்பட ஹீரோவிற்கு சளைக்காமல் மிளிர்ந்தான்.

தென்னிந்தியாவின் வெற்றி இயக்குனரில் ஒருவராக கடந்த ஐந்து வருடங்களாக உள்ளான்.

வருடம் இரண்டு படங்கள் கண்டிப்பாக வந்து விடும். ஆக்சன் மசாலா படங்களில் பின்னி எடுப்பவன் உணர்வுகளுடன் கூடிய காதல் கதைகளில் கண்ணீரை வரவழைத்து விடுவான்.

ஒரே மாதிரியான கதைகளை செய்யாமல் முரணான கதைகளையும் தேர்ந்தெடுத்து அதை வெற்றி படமாக மாற்றும் திறமை கொண்டவன்.

திரைக்கு வந்து இரண்டே வருடத்தில் தேசிய விருதைப் பெற்றப் பெருமையும் இவனை சாரும்.

தெலுங்கு மற்றும் தமிழில் பெரும் புகழை பெற்ற இயக்குனர்களில் ஒருவன்.

முன்னணி நடிகர்களே இவனின் கதைக்காக காத்துள்ளனர்.

முதல் படம் மட்டுமே தந்தையின் புரொடக்ஷன் மூலம் உருவானது. மற்ற அனைத்துமே அவன் திறமையை தேடி வந்த வாய்ப்புகள்.

அதை சரியாகப் பயன்படுத்தி இப்போது திரைத்துறையில் கொடிகட்டி பறக்கிறான்.

குறித்த நேரத்தில் படத்தை முடித்து கொடுப்பதிலும் வல்லவன்.

படத்திற்காக கடுமையாக வேலை பார்ப்பவன். படம் முடிந்ததும்,ஒரு மாதம் முழுக்க ஓய்வை எடுத்துக் கொள்வான்.

அந்த நேரத்திலே அவனுக்கு அடுத்த கதைக்கானக் கருவும் கிடைத்து விடும்.

அடுத்த கதைக்கான அனைத்தையும் இறுதி பத்து நாட்களில் முடித்து விடுவான்.

முதல் 10 நாட்கள் முழுக்க முழுக்க அவனுக்கான ஓய்வு நாட்கள்.

அந்த நாளில் தான் அவனின் தாய் அன்னபூரணி அவனை மொட்டை காட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.அந்த கோபம் குறையாமல் தாயிடம் காட்டினான்.

"அதுக்கு நான் என்ன பா பண்ணுவேன்" என்று அவன் எரிச்சலுக்கு முற்றிலும் மாறான சாந்தமான குரலில் பதில் அளித்தத் தாயை இயன்றவரை முறைத்து தள்ளினான்.

பாதையில் கண்களைப் பதித்தவன்.

எரிச்சலுடனே, " ராத்திரி தூக்கம் இல்லாமல் ஒழுங்கான சாப்பாடு இல்லாமல் இராப்பகலா கஷ்டப்பட்டு,இப்போதான் ஒரு மாசம் ரெஸ்ட் கிடைச்சிருக்கு.அதில் ஒரு நாளை கூட முழுசா அனுபவிக்க விடாமல் இப்படி ஒரு மொட்டை காட்டுக்கு கூட்டிட்டு வந்து இருக்கீங்க. இது நியாயமா? "என்றதும்,

அவர் முகத்தை பாவமாக வைத்து கொள்ள இன்னும் எரிச்சலுடன், " சிக்னல் இல்லை, சரியான ரோடு இல்லை, ஒன்றரை மணி நேர டிராவலில் ஒரு பெட்டிக் கடை கூட இல்லை "

" இந்த ஊரை தான் பொன்விளைகிற பூமி, எங்க ஊரு மாதிரி வருமானு அப்பா கிட்ட ஃபிலிம் ஓட்டிட்டு இருந்தீங்களா?"என்று எரிச்சலுடன் நக்கல் அடித்தான்.

" கோபப்படாதே டா".

" கோபப்படாமல் என்ன பண்ண சொல்றீங்க" என்று அதற்கும் எரிந்து விழ,

அவரிடம் இருந்து சத்தம் வரவில்லை என்றதும் திரும்பிப் பார்க்க, கண்கள் கலங்க அவர் அமர்ந்திருப்பதை கண்டதும் பெருமூச்சுடன் சாந்தமான குரலில், மாம் என்று அழைக்கவே அதற்காகவே காத்திருந்தது போல்,

" ஒரு வருஷம் சரியா 365 நாளும் சென்னை தான். அதை தாண்டி எங்காவது போய் இருக்கேனா. ஃபாரின் சூட்டிங் எல்லாம் நீ கூப்பிட்ட போதும் வரலை. ஏன்? " என தலைசிறந்த இயக்குநர் இடமே அவன் தாய் ரீல் ஓட்ட ஆரம்பிக்க,

கண்களை சுருக்கி அவரை ஆராய்ச்சியுடன் பார்த்துக் கொண்டே "ஏன் "என்றான்.

"உங்க அப்பா இறந்த இந்த ஐந்து வருஷத்தில் எங்கேயும் வெளியே போக பிடிக்கலை. நான் உண்டு என் கேட்டரிங் பிசினஸ் உண்டுன்னு இருக்கேன்"

"அப்படிப்பட்ட நான்.. க்கும்... நான் ஆசைப்பட்டு கேட்ட ஒரே விஷயம் என்ன தங்கமா வைரமா.. ஒரே ஒரு தடவை பொறந்த ஊருக்கு போகணும்.அதுவும் எதுக்காக கேட்டேன் சும்மா சுத்தவா. என் தம்பி பொண்ணு கல்யாணத்தை பார்க்கணும்னு தானே... அவன் கூட பேசியே பல வருஷம் ஆச்சு. சரி பழையக் கதை எல்லாம் எதுக்கு".

" எங்க வீட்டு கடைக் குட்டி அவன்கிட்ட பேசியே பல வருஷம் ஆச்சு.அவன் பொண்ணு கல்யாணத்தைப் பார்க்க ஒரு ரெண்டு நாள், ஒரு ரெண்டு நாள் மட்டும் உன்னால் ஒதுக்க முடியலயில்லை" என்று மூக்கை சிந்த ஆரம்பிக்க,

அவருடையது அப்பட்டமான நடிப்பு என்று தெரிந்த போதிலும் மறுத்து பேச முடியாமல் "சரி ம்மா புலம்பாதீங்க" என்று தன் வாதத்திலிருந்து பின்வாங்கினான்.

மற்றவரிடம் பேசுவது போல் கறாராகப் பதில் அளிக்க முடியாமல், தாய் பாசம் கட்டி போட்டது.

மௌனமாக காரை ஓட்ட ஓரளவு ஊர் வந்ததும், அன்னபூரணி கார் கண்ணாடியை திறக்க மகனின் உஷ்ண பெருமூச்சு புரிந்தாலும்,

" ஈஈ ஊர்வாசத்தை சுவாசிக்கணும்டா. எத்தனை வருஷம் ஆச்சு" என்று சிறுபிள்ளை என பல்லை காட்டியவரிடம், கோபப்பட முடியாமல் அவன் பாதையில் கவனத்தை செலுத்த,

சில நிமிடங்களிலே காதினருகே அணுகுண்டு வெடிப்பு ஏற்பட்டது போல், இரைச்சலுடன் ஸ்பீக்கரில் இருந்து பாடல் கேட்க,மகனின் கோபம் புரிந்து ஜன்னலை ஏற்றி இருந்தார்.

"என்ன லூசு தனம் இது" என்று அவன் பொரிய,' சமாளிச்சுட்டோம்னு நினைச்சோமே' என்று எண்ணியபடி முகத்தை பாவமாக வைத்துக் கொண்டவர்.

" விடுடா ஊர் கல்யாணம் இல்லை. அப்படி தான் இருக்கும் "என்றதும், அவன் முறைக்க அவர் சிரிக்க, அவரை மேலே கடிய மனம் இல்லாமல் எரிச்சலுடன் காரை செலுத்தியவனுக்கு தலைவலியே வந்து விட்டது.

கடுப்புடனே பந்தல் இடப்பட்டிருந்த அந்த மண்டபத்தின் முன் காரை நிறுத்தினான்.

கதவை திறந்ததும் பாடல் காதின் செவிப்பறையை அதிரசெய்ய எரிச்சலுடன் நிமிர்ந்தவன்.

'என்னடா எய்ட்டீன்ஸ்க்கு வந்துட்டோமா?' என்று எண்ணும் அளவு அத்தனை பழைய மண்டபமும், திருமண அலங்காரமும்.

சலிப்புடன் தலையாட்டி கொண்டவன். தாயும் அந்த சத்தத்தை தாங்க முடியாமல் காதை மூடியப்படி இறங்குவதை கண்டு மெல்லிய சிரிப்புடன், அவர் கரங்களை பற்றியப்படி மண்டபத்திற்குள் நுழைந்தான்.

வரவேற்பவர்களின் பேச்சு சத்தம் கூட கேட்காத அளவு ஸ்பீக்கர் ஒலிக்கவே மண்டபத்தில் பார்வையை சுழற்றினான்.

50 அல்லது 60 பிளாஸ்டிக் சேர்கள் போடப்பட்டு அதில் அனைவரும் அமர்ந்திருக்க எதிரே, நடுநாயகமாக மணமேடை அமைக்கப்பட்டு ஓமக் குண்டம் எரிந்து கொண்டிருந்தது. ஐயர் மந்திரத்தை ஓதிக் கொண்டிருந்தார்.

வலப்புறம் நாதஸ்வரம் மற்றும் மேளம் வாசிப்பவர்கள் தங்களின் பணியை செய்வெனே செய்து கொண்டிருக்க,அந்த மொத்தக் காட்சிகளும் பாரதிராஜாவின் படங்களை தான் நினைவு படுத்தியது.

என்ன அப்படங்களை பார்க்கும் போது வரும் இதம் வராமல், இப்போது தலைவலி வந்தது.

கோபத்துடன் இன்னும் மண்டபத்தில் பார்வையை சுழற்ற,பழைய செட்டப்புடன் இருவர் ஒலியின் அளவை கூட்டுவதும் குறைப்பதுமாக அமர்ந்திருந்தனர்.

அழுத்தமாக அவர்களைப் பார்த்திருக்க, அவன் விழிவீச்சை உணர்ந்தது போல் திரும்பியவர்கள்.

அவன் சத்தத்தை குறைக்கும் படி சைகை காட்டவும் அவனின் முறைப்பையும் தோரணையும் கண்டு பயத்துடன் பாடலை நிறுத்தினர்.

தாயைக் காண அவர் உறவுகளுடன் ஐக்கியமாகிவிட்டதைக் கண்டு, ஒரு பெருமூச்சுடன் மேல் பட்டனை கழட்டி விட்டவாறு மண்டபத்தில் முன் இருக்கையில் அமர்ந்து கொண்டான்.

டக் டக் என்ற சத்தத்தில் நிமிர்ந்து பார்க்க எப்பொழுது வேண்டும் என்றாலும் உயிரை விடும் நிலையில் சீலிங் ஃபேன் மெதுவாக சுற்றிக் கொண்டிருந்தது.

கடுப்புடன் பல்லை கடித்தவன். தனது மொபைலை எடுத்துக் கொண்டான்.

படத்திற்கான கதை தோன்றியதுமே மொபைலில் அல்லது கையடக்க நோட்டில் குறித்து வைத்துக் கொள்வான்.

திருமணத்தில் கவனத்தை செலுத்த விருப்பமில்லை என்பதால், இப்பொழுது தயார் செய்து வைத்த தனது திரைக்கதையை சரி பார்க்க ஆரம்பித்தான்.

அடுத்த சில நிமிடத்திலே அதில் ஒன்றிப் போனான்.

சுற்றிலும் நடக்கும் கூச்சல், குழப்பம், காற்று இல்லாத அறை, உஷ்ணத்தை தெறிக்கும் காற்று எதையும் கண்டுகொள்ளாமல் முழு கவனமும் திரைக்கதையின் திருத்தங்களை மேற்கொள்வதில் படிந்தது.

"கண்ணா" என்ற சத்தத்துடன் தோளை உலுக்கிய தாயின் செயலில் தான் உணர்வு பெற்று, " என்ன மா" என்றப்படி நிமிர்ந்தான்.

அவனிடம் மஞ்சள் தாலியை கொடுத்து "இந்த டா" என்க,

" மாம் எனக்கு இந்த ஃபார்மாலிட்டிஸ் எல்லாம் பிடிக்காது. நீங்களே தாலி எடுத்து குடுங்க " என்று விட்டு மீண்டும் அவன் போனில் முழ்க போக,

"கண்ணா விளையாடாதே. ஒழுங்கா இந்த தாலியை பொண்ணு கழுத்தில் கட்டு "என்றதும் விக்கித்து போனான்.

"அம்மா" என்று அதிர்ந்து போய் அழைக்க," எதுவும் பேசக்கூடாது.இப்பவே இந்த தாலியை திகழ் கழுத்தில் கட்டு" என்றார் அடமாக.

"திகழா" என்ற முணுமுணுப்புடன் மேடையை பார்க்க தலைகுனிந்தபடி கழுத்தில் மாலையுடன் ஒடிசலாக ஒரு பெண் அமர்ந்திருக்க, அவளின் அருகில் அன்னபூரணியின் தம்பி அம்மையப்பன் சட்டை கிழிய நின்றிருந்தார்.

'இதெல்லாம் எந்த நேரத்தில் நடந்தது' என்று எரிச்சலுடன் நெற்றியை பிடித்துக் கொண்டவனுக்கு திருமணம் செய்யும் எண்ணம் சிறிதும் இல்லை.

எனவே, " மாம் பி சீரியஸ். நான் டைரக்ட் பண்ற படத்தில் கூட இந்த மாதிரி சீன்ஸ் எல்லாம் வரலை. என் வாழ்க்கையிலும் வர வச்சடாதீங்க. ஐ அம் நாட் இன்ட்ரஸ்ட் இன் மேரேஜ்" என்று திட்டவட்டமாக மறுத்தான்.

" டேய் கண்ணா. அம்மா வாக்கு கொடுத்துட்டேன். ஒழுங்கா வந்து தாலி கட்டு இல்லைனா" என்றதும்,

"போதும். எமோஷனல் ட்ராமா எல்லாம் பண்ணாதீங்க" என்று அவர் பேச்சை கத்திரித்தான்.

"முதலில் இந்த தாலியை எங்கே எடுத்தீங்களோ.அங்கேயே வெச்சுட்டு ஒழுங்கா என்கூட வாங்க. போலாம். இங்கே வந்து உங்களுக்கு மூளை குழம்பிடுச்சு" என்று எரிச்சலுடன் படப்படத்தான்.

" ஆமாடா ஆமா. நான் பைத்தியம் தான். ஆனால் உன்னை பெத்தவ நான் தானே. ஒழுங்கா வந்து தாலி கட்டு. இல்லைனா இந்த அம்மாவை பிணமா தான் பார்ப்ப".

"அம்மா சம்பந்தம் இல்லாமல் பேசி தொலையாதீங்க. கடுப்பாகுது"என்று எரிச்சலுடன் கத்த, உடனே அவன் கையைப் பற்றியவர்.

" தப்புதான் உன் மனநிலை புரியுது. ஆனால் வேற வழியில்லை. வாழ்வா சாவான்னு தம்பி குடும்பமே தவிக்குது. மாமாவை ரொம்ப அசிங்க படுத்திட்டாங்க. இப்போ திகழுக்கு கல்யாணம் நடக்கலைன்னா, இன்னும் அசிங்கமா போய்டும். அம்மா உன்கிட்ட இனிமேல் எதுவும் கேட்க மாட்டேன் இது மட்டும் பண்ணுடா கண்ணா ப்ளீஸ்டா. காலா நினைச்சுக்கறேன் டா " என்று கையை அழுத்தமாக பற்ற, அம்மா என்ற சத்துடன் கையை உதறியவன்.

சுற்றிலும் பார்வையை பதித்தான்.

அனைவரின் கவனமும் தங்கள் இருவரின் மீது இருப்பது, இன்னும் எரிச்சலை தந்தது.

"என்னதான் பிரச்சனை".

"அதெல்லாம் பேசுறதுக்கு நேரமில்லை முதலில் தாலியை கட்டுடா. முகூர்த்த நேரம் முடிய போகுது".

" மாம் கடுப்பை கிளப்பாதீங்க. ஒழுங்கா என்ன நடந்ததுன்னு சொல்லுங்க ".

" ஃப்ளாஷ் பேக் போக நேரமில்லை கண்ணா. முதலில் தாலியை கட்டு. அப்பறம் பொறுமையா சொல்றேன். இப்பயும் உன் மனசு மாறலைன்னா சொல்லு காலில் விழறேன்" என்று அவர் முன்னேற,

எரிச்சலுடன் அவர் கையில் இருந்த தாலியை பற்றியவன்.

" அநியாயத்துக்கு ஆக்டிங் பண்றீங்க மா.வொஸ்ட் ஆக்டிங் ஆனால்..." என நெற்றியில் அறைந்து கொண்டவன்.கோபத்துடன் மணமேடை ஏறினான்.

அம்மையப்பன் நன்றியுடன் அவன் கையைப் பற்ற போக, "எங்க அம்மாவுக்காக மட்டும் தான்".

அவரின் கையை உதறி கொண்டு மனையில் அமர வர,"தம்பி செருப்பு போட்டுட்டு உக்காரக்கூடாது" என்ற அர்ச்சகரின் குரலில் இன்னும் கடுப்பு ஏற, செருப்பை உதறி தள்ளி விட்டு அமர்ந்தான்.

அருகில் அமர்ந்து இருந்தவளோ விட்டால் அக்னியில் தலையை கொடுத்து விடுவாள் போல், அந்த அளவு குனிந்து இருந்தாள்.

அதில் இன்னும் எரிச்சல் பெருக,

"இன்னும் கொஞ்சம் தலையை தள்ளு அப்படியே தலை பொசுங்கி போகட்டும். அட ச்சி. ஒழுங்கா உட்காரு" என்று எரிந்து விழுந்தான்.

ஐயர் மந்திரத்தை நிறுத்திவிட்டு அவனை அதிர்ந்து பார்க்க, " உனக்கு என்னய்யா ஒழுங்கா ஓது " என்று அவரின் மீதும் கோபத்தைக் காட்டினான்.


கலிகாலம் என்று நொந்து கொண்ட படி, "மாங்கல்யம் தரணம் பண்ணுங்கோ கெட்டிமேளம் கெட்டிமேளம்" என்றதும் கையில் இருந்த தாலியை அவள் கழுத்தின் அருகில் கொண்டு சென்றவன்.

" இப்பயாவது நிமிர போறியா இல்லை. மாட்டுக்கு மூக்கணா கயிறு கட்டுற மாதிரி தான் கட்டணுமா " என்று பற்கள் இடையே வார்த்தைகளைக் கடித்து துப்ப, கலங்கிய விழிகளுடன் அவனை ஏறிட்டு பார்த்தாள்.

கல்யாண மேக்கப் என ஐந்து கோட்டிங் பெயிண்டை வாரி இரைத்து அவள் உண்மையான அழகை மறைத்து இருக்க,கண்களிலும் உதட்டிலும் பூசி இருந்த அழகு சாதன பொருட்களோ தன் உயிரை விட்டிருந்ததில் அவன் திகைத்து,

"காஞ்சூரிங் பேய்க்கே டஃப் கொடுக்க போல" என்று அவளிடமே கூற, அதிர்ந்து அவனைப் பார்க்க தாலியை கட்டப் போனவன்.

"உனக்கு விருப்பமா இல்லையா" என்று கடுப்புடன் கேட்டான்.

"வாழவே வழியில்லாதவளுக்கு தேர்ந்தெடுக்கிற உரிமை இல்லை" என்று அவள் விரக்தியாக மொழிய,

" அப்ப சரி "என்றப்படி அவள் கழுத்தில் மூன்று முடிச்சுட்டு தன்னவளாக்கி கொண்டான்.




 
அத்தியாயம்-02

தாலி கட்டி முடித்ததுமே மனையை விட்டு எழுந்தவன்.

" யோவ் ஐயரே.இனி ஏதாவது சடங்குன்னு சொன்னால் வாயிலே குத்துவேன் "என்று மிரட்டி விட்டு, தாயை தேட அம்மையப்பனின் அருகில் நின்றிருந்தார்.

மண மேடையை விட்டு இறங்கியவன்.

இன்னும் அப்படியே அமர்ந்திருக்கும் பெண்ணை கண்டு," ஒய் மண பொண்ணே மாப்ள நான் இங்க இருக்கேன். அங்கே என்ன பூஜை பண்ணிட்டு இருக்க.எழுந்து வா" என அதட்டினான்.

தாய் அருகில் நெருங்கி, " இதுக்கு மேலே ஒரு நிமிஷம் கூட இங்கே இருக்க முடியாது. ஒழுங்கா கிளம்பலாம்".

" டேய் கண்ணா சாப்பிட்டு தம்பி வீட்டுக்கு போனதும் உடனே கிளம்பிடலாம்.ப்ளீஸ்டா" என்று மெல்லிய குரலில் மன்றாட,

"கண்ணா கண்ணா இனி எதுவுமே கேக்க மாட்டேன்.இதை மட்டும் செஞ்சு கொடுடா " அன்னபூரணி கூறியது போலவே சொன்னவன்.

"இந்த மாதிரி சொன்ன என் அற்புத தாயை பார்த்தீங்களா மா" என்று எரிச்சலுடன் வார்த்தைகளை கடித்து துப்ப,

" சரி நான் எதுவும் உன்னை கேக்கலை. அதே நேரத்தில் என்னை கூப்பிடாத. நீ கிளம்பு " என்று முகத்தை தூக்கி வைத்து கொள்ள, அவர் செயலில் எரிச்சல் அடைந்தவன்.

" கடுப்பாகுது ம்மா" எனத் தலையை அழுத்த கோதியப்படி தன் அருகில் நின்றிருந்த பெண்ணை பார்த்து,'இவ வேற ' என்று எண்ணியவன்.

ஒரு பெருமூச்சுடன், "வாங்க சாப்பிட போலாம்" என கடுப்புடன் நடக்க, அவனின் கரம் அழுத்தமாக பற்றப்படவே சோர்வுடன் "என்னம்மா" என்றான்.

" கோபத்தை சாப்பாட்டில் காட்டாத டா" என்றார் மன்றாடும் குரலில்.

"ம்மா நாலு மணி நேரம் பச்ச தண்ணி கூட பல்லில் படாமல் வந்திருக்கேன். பசி வயிறை கிள்ளுது. நீங்க கடுப்பேத்தாமல் வாங்க "என்று விட்டு முதல் பந்தியில் அமர்ந்தான்.

மண்டபம், அலங்காரம்,மணப்பெண்ணே இப்படி இருக்க உணவு எப்படி இருக்குமோ என்று நினைக்கும் போதிலே வாழை இலை போடப்பட்டது.

சிட்டிகை அளவு ஊறுகாய், குழந்தையின் உள்ளங்கை அளவு வடை அப்பளம் சாதம் காய்கறிகள் போட்ட சாம்பார் ஊற்றப்பட்டது.

'இன்னைக்கு உனக்கு வாச்சது இதுதாண்டா ' என்று மணப்பெண்ணையும் உணவையும் பார்த்தபடி ஒரு வாய் வைத்தவன். அதன் சுவையில் அசந்தான்.

'நல்லா தான்டா இருக்கு' என்று எண்ணிய படியே வைத்த உணவை உண்ண ஆரம்பிக்க,சார் போட்டோ என்று வந்தவனை கண்டு கடுப்பில் முறைத்தவன்.

"இவ்ளோ நேரம் எங்கடா இருந்த. ஒழுங்கா ஓடிப் போய்டு.எரும சரியா சாப்பிடுற நேரத்துக்கு வந்து இம்சை பண்ணிட்டு இருக்கான் "என்று மிரட்டியதில்,அவன் தன் குட்டி கேமராவை எடுத்துக்கொண்டு ஓடி இருந்தான்.

"டேய் கண்ணா பொண்ணுக்கு ஒரு வாய் ஊட்டி விடுறா "என்றதும் அப்பளத்தை கொறித்தப் படி தாயை முறைக்க, அவரோ உடனே இலையில் தலையை நுழைத்து கொண்டார்.

மணப்பெண்ணை பார்க்க, கரங்கள் உணவில் அலைபாய்ந்தது.

"ஹலோ மேடம்" என்றதும் அவள் அதிர்ந்து பார்க்க, "முதலில் இந்த முழியை மாத்து. என்னமோ உன்னை ரேப் பண்ண வர மாதிரி ரியாக்சன் கொடுக்கிற".

அதில் இன்னும் அவள் அதிர, "உன்னோட முடியல. நாலு மணி நேரம் டிராவல். நடுவில் எல்லாம் வண்டி நிறுத்த மாட்டேன். பசி தாங்குவியா ஒழுங்கா சாப்பிடு" என்றவன். அதன் பிறகு அவள் புறம் திரும்பவே இல்லை. தன் உணவில் தான் கவனத்தை செலுத்தினான்.

திகழும் ஒரு பெருமூச்சுடன் இலையில் இருந்த உணவை மட்டும் முடித்தாள்.

உணவை ஒரு வழியாக முடித்து மண்டபத்தின் வாயிலிற்கு வந்தனர்.

அவன் தாயின் இறைஞ்சலான பார்வையை கண்டு வேறு வழியில்லாமல் அம்மையப்பன் வீட்டிற்கு அவனின் காரில் சென்றனர்.

மண்டபத்தின் நிலையை விட வீடு மோசமாக இருந்தது.

கூடத்தில் கல்யாண ஜமக்காளம் விரிக்கப்பட்டு இரண்டு பிளாஸ்டிக் சேர்கள் போடப்பட்டிருக்க,அதில் அமர்ந்தவன்.

அருகில் அமர்ந்த தாயிடம், " பத்து நிமிஷம் தான் அதுக்கு மேல் ஏதாவது டிராமா பண்ணீங்க.கடுப்பாகி ரெண்டு பேரையும் விட்டுட்டு போயிடுவேன்" என்று காதில் சன்னமாக எச்சரித்தான்.

பத்து நிமிடங்களுக்கு மேல் தங்க முடியாத அளவில் தான் வீடும், அம்மையப்பனின் மனைவி மந்தாகினியின் முகம் இருந்தது.

மந்தாகினியை ஒட்டி கொண்டு அவளின் மகளும் இருக்க, ஏதோ சரி இல்லாததை கண்டு கொண்டார்.

"மாது வந்தவங்களுக்கு காபி பலகாரம் எடுத்து வை"என்று வீட்டாளாக அம்மையப்பன் உபசரித்தார்.

"அதெல்லாம் வேண்டாம். இப்போ தானே சாப்பிட்டோம்.தண்ணி மட்டும் கொடுங்க "என்று அங்கு இருக்க பிடிக்காமல் பேச்சைக் கத்தரித்தான்.

அதில் அவர் முகம் சுருங்கி போக, மந்தாகினி ஆத்ரேயாவை முறைத்தார்.

அதை அவன் கவனிக்கவில்லை என்றாலும் அன்னபூரணி கண்டு கொண்டார்.

தண்ணீர் எடுத்து வந்து கொடுத்த தோரணையும் சரியில்லை.

அதில், அவருக்கும் அங்கே இருக்க பிடிக்காமல் போகவே,"திகழை ரெடியாக சொல்லுங்க. கிளம்பறோம் " என்றார்.

"என்ன அக்கா.இருந்து தங்கிட்டு போங்களேன்" என்று அம்மையப்பன் தயக்கத்துடன் மறுக்க,

"இல்லை அப்பு திடீர்னு ஏதேதோ ஆகிடுச்சு.சூழ்நிலை கொஞ்சம் சுமுகமாகட்டும்.அப்பறம் மேற்கொண்டு பேசலாம் "என்றதும், மறுக்க மனம் இருந்தாலும் சூழ்நிலை இல்லாததால் மௌனமானார்.

ஆத்ரேயனுக்கு அங்கு இருக்கவே பிடிக்கவில்லை.

அவன் நிலை முள்ளில் அமர வைக்கப்பட்டது போல் இருந்தது.

இப்பொழுதே கிளம்பி சென்றால் தேவலாம் என்று இருக்கவே,"மா அவளை ரெடி ஆயிட்டு வர சொல்லுங்க" என்று மறுபடியும் காதில் பொறுமையற்று ஓதினான்.

சூழ்நிலையை புரிந்தவரும் மந்தாகினியை பார்க்க, அவரோ ஏற்கனவே திகழை அங்கிருந்த ஒற்றை அறைக்கு அழைத்துச் சென்றிருந்தார்.

அவர் அழைத்து சென்ற தோரணையே சரியில்லை.

மண்டபத்தை விட மோசமாக ஃபேன் சுற்ற, அதன் புழுக்கம் தாங்க முடியாமல் எழுந்தான்.

அம்மையப்பனும் எழ,அவரை வித்தியாசமாக பார்த்தப்படி வெளியே நின்று கொண்டான்.

இடைவெளியே இல்லாமல் வீடுகள் கட்டப்பட்டிருந்தது.

ஆங்காங்கே தலைகள் தெரிய அனைவரின் பார்வையும் தன் மீது இருப்பதை உணர்ந்தவன். கண்டு கொள்ளவில்லை.

நிமிடங்கள் கழிய, " கிளம்பலாமா?" என்று திரும்பியவன்.தாயுடன் வந்த பெண்ணை புரியாமல் பார்த்தப்படி சுற்றிலும் பார்வையை சுழல விட்டவன்.

"எங்கம்மா அவ ".

" யாரைடா கேட்கிற" என்று புரியாமல் வினாவினர்.

தன் தாயின் கையில் உள்ள லக்கேஜை கண்டு அவர் கையில் இருந்த பெட்டியை வாங்கியபடி, "நீ எதுக்கு தூக்குற அவ எங்க" என்றான் மீண்டும்.

"அடேய் யாரடா கேக்குற" என்று அவர் நொந்து போய் வினாவ, " ஹ உன் தம்பி பெத்த தகரம்..சாரி தங்கம்".

அதில் பொய்யாக அவனை முறைத்தவர்.

" நக்கல் டா உனக்கு. இதுதான் உன் பொண்டாட்டி " என்க, மேக்கப்பை கலைத்துவிட்டு, பச்சை வண்ண பட்டுப்புடவை உடுத்தி அளவான அழகுடன் இருந்தவளை தலை முதல் கால் வரை அளந்தவன்.

"பரவாயில்ல. பேய் மாதிரி எல்லாம் இல்லை. ஓரளவுக்கு பார்க்கற மாதிரி தான் இருக்கு.இனி மேக்கப் பக்கமே போயிடாத" என்றவன்.

அவள் கையில் இருந்த பெட்டியையும் வாங்கி கொண்டு முன்னேறினான்.

" இருடா சொல்லிட்டு போவோம் "என்றதும் பெருமூச்சுடன் அப்படியே நின்றான்.

"நீ அவன் பக்கத்தில் நில்லு " என்று மருமகளை தன் மகன் அருகில் நிறுத்திவிட்டு,

அவர் கொல்லைப்புறம் செல்ல கணவனுக்கும் மனைவிக்கும் காரசாரமாக உரையாடல் நடந்து கொண்டிருந்தது.

அவர்களின் விவாதத்தை கேட்க விரும்பாமல் தொண்டையை செரும, இருவரும் பட்டென்று வார்த்தையாடலை நிறுத்தினர்.

அம்மையப்பன் தயக்கத்துடன் அவரை ஏறிட, மந்தாகினி யாருக்கு வந்த விருந்தோ என்று அலட்சியமாக நின்று இருந்தார்.

"அப்போ கிளம்பறோம் பா" என்றதும் தமக்கை அருகில் வந்தவர்.

அவர் கைகளை பற்றி கொண்டு," இந்த உதவியை என்னைக்கும் மறக்க மாட்டேன் அக்கா. என் பொண்ணு உங்க பொறுப்பு. பொண்ணை கல்யாணம் பண்ணி கொடுத்து இருக்கேன்.ஆனால் யாரோ மாதிரி வழி அனுப்ப வேண்டியதா இருக்கு. என்னால் எதுவும் செய்ய முடியலை. என் நிலைமை அப்படி" என்றார் வருத்தத்துடன்.

"ஏண்டா பெரிய ஐயா கொடுத்த வீட்டை கூட வித்துட்டு இந்த மாதிரி வீட்டில் இருக்க" என்றார் வருத்தம் கலந்த கோபத்துடன்.

தம்பியின் மீது கட்டுக்கடங்காத கோபம். கிட்டத்தட்ட தொடர்பு அறுந்து 25 வருடங்கள் ஆயிற்று.

சொந்தங்களுக்கு விருப்பமில்லாத செயலை செய்தாலும் ஏதோ சொந்த ஊரில் நலமாக இருப்பான் என்று பார்த்தால் சொத்துக்களை இழந்து கடன் சூழ்ந்த நிலையில் தம்பி இருக்கிறானே என்று ஒரு பக்கம் வருத்தமும்,மறுபக்கம் அடங்காத கோபமும் பெருகியது.

அதுவும் திகழை திருமணம் முடிக்க நினைத்தவன் எப்பேர்பட்ட சூழ்நிலை கைதி ஆக்கிவிட்டு சென்றிருக்கிறான்.

அனைத்தும் தம்பியின் முட்டாள்தனமான செயல்களால் தான் என்று புரிந்தாலும் அவனை எண்ணி பரிதாபமே மிஞ்சியது.

"மா போலாம்" என்று மீண்டும் மகன் அழைக்கவே, பற்றி இருந்த கரத்தில் அழுத்தத்தை கொடுத்து,

"திகழ் என்னோட பொறுப்பு அவளை பத்தி கவலையை விடுங்க. கடன் எல்லாம் அடைத்து விட்டு நல்ல வாழுற வழியைப் பாருங்க" என்று இருவருக்கும் பொதுவாகவே கூறிவிட்டு அங்கிருந்து அகன்றவருக்கு மனம் எல்லாம் யோசனை.

" போலாம் எவ்வளவு நேரம் தான் வெயிட் பண்றது" என்று கடிந்து விட்டு அவன் முன்னேற, மற்றதை மறந்து திகழின் கரங்களை ஆதரவாக பிடித்துக் கொள்ள உற்றுத்துணை என அவளும் அவர் கரங்களைப் பற்றிக் கொண்டாள்.

டிக்கியை திறந்து லக்கேஜ்களை தூக்கி எறிந்தவன்.டிரைவர் இருக்கையில் அமர்ந்து கொண்டான்.

தாயிற்காக முன்னிறுக்கை கதவை திறக்க,வந்து அமர்ந்ததோ அவன் சற்று நேரம் முன்பு தாலி கட்டிய மணவாட்டி.

தாய் பின் இருக்கையில் அமர்வதை கண்டு, "மா என்ன இது.ஒழுங்கா வந்து முன்னால் உட்காருங்க" என்று அதட்டலாக கூற, திகழ் அவன் கத்தலில் உடல் தூக்கி போட அதிர்வுடன் அவனை பார்த்தாள்.

கோபத்துடன் அவள் புறம் திரும்பியவன் "ஒழுங்கா போய் பின்னால் உட்காரு".

அதில் ஒரு விசும்பலுடன் அவள் கதவை திறக்க போக," திகழ் நகரதே" என்று அன்னபூரணியின் குரல் கட்டளையாக ஒலித்தது.

அதில் ஆத்ரேயன் தாயையும் அவளையும் ஒருசேர முறைக்க,இருவருக்கும் நடுவில் மாட்டிக் கொண்டு புரியாமல் விழித்தாள்.

" கண்ணா இனி உன் பொண்டாட்டி தான் உன்கூட உக்காருவா ".

"மா கோபத்தை ஏத்தாதீங்க. வரும்போது என் கூட ஒண்ணா தானே வந்தீங்க.ஒழுங்கா வந்து முன்னால் உட்காருங்க"

"அதெல்லாம் உனக்கு கல்யாணம் ஆகுறதுக்கு முன்னால. இப்போ உனக்கு கல்யாணம் ஆயிடுச்சு. உன்னோட மொத்த அட்டென்ஷனும் உன் பொண்டாட்டி மேல தான் இருக்கணும்".

" மா அதெல்லாம் எனக்கு தெரியாது ஒழுங்கா வந்து உட்காருங்க".

"டேய் உன் அப்பா கூட கார்ல போகும்போது நான் எங்கடா உக்காருவேன்".

"ஆமா முன் சீட்டில் தானே உக்காருவீங்க. அதேதான் இப்பயும் சொல்றேன். வந்து முன்னால் உக்காருங்க" என்று அவனுக்கான பாயிண்டை பிடிக்க,அவன் தாயோ ஒரு படி மேலே சென்று,

" அதேதான் கண்ணா. புருஷன் கார் ஓட்டும் போது பொண்டாட்டி தான் பக்கத்தில் உக்காரனும். குழந்தையா இருந்தாலும் பின்னால் தான். காரணம் பொண்டாட்டிக்கு தான் முன்னுரிமை. முன்னிறுக்கை. இப்போ உனக்கு பொண்டாட்டி வந்தாச்சு. வாயை மூடிட்டு ஓட்டுடா" என்று விட்டு அவர் உண்ட மயக்கத்தில் கண்களை மூடி, தளர்வாக சாய்ந்து அமர்ந்து கொண்டார்.

" ரெண்டு மணி நேரத்தில் ஒரு மனுஷனுக்கு இப்படி ஒரு மாற்றம் " என்று சலித்தபடியே காரை இயக்கினான்.

திகழ் பார்வையோ வீட்டின் வாசலை நோக்கியது.அது வெறுமையாக இருக்கவே இதழ்களில் விரக்தி புன்னகை.




 
அத்தியாயம்-03

அந்த ஊரைத் திரும்பி கூட பாராமல் காரை உயர் வேகத்தில் சென்னையை நோக்கி செலுத்தினான்.

நாலரை மணி நேர நீண்ட பயணம். வழியில் எங்கும் நிறுத்தவில்லை.

அன்னபூரணி தூங்கியது,ஆத்ரேயனுக்கு வசதியாகப் போயிற்று.

நடுவில் ஒரு கணம் கூட மனைவியின் மீது பார்வையை ஆணவன் செலுத்தவில்லை.

அவ்வ போது அன்னபூரணியை மட்டும் பார்த்துக் கொண்டான்.

திகழ் முட்ட முட்ட முழித்தப் படி அமர்ந்து இருந்தாள்.

களைப்பின் காரணமாக உடல் ஓய்விற்கு கெஞ்சினாலும் மனதின் அலைபுறுதல் மற்றும் முன்னிருக்கையில் அமர்ந்து கொண்டே உறங்குவது, காரை ஓட்டுபவனுக்கு உறக்கத்தை வரவழைக்கும் என்பதால் தூங்காமல் விழித்திருந்தாள்.

கார் சென்னையில் அவர்களின் பீச் ஹவுஸின் முன் நின்றது.

அப்பொழுதுதான் கண்விழித்த அன்னபூரணி, " கண்ணா இங்கே எதுக்கு வந்திருக்கோம் "என்று புரியாமல் வினாவினார்.

சிறு மௌனத்திற்கு பிறகு, "கொஞ்ச நாள் இங்கே இருக்கலாம்" என்றான் முடிவாக.

" விளையாடுறியா பா. கல்யாணம் முடிஞ்சு நம்ம வீட்டுக்குப் போகாமல் இங்கே எதுக்கு. கல்யாணம்தான் அவசரகதியில் நடந்தது. திகழ் முறையாக நம்ம வீட்டுக்குள் நுழையணும்னு ஆசைப்படுறேன். ஆனால் நீ பீச் ஹவுஸிற்கு கூட்டி வந்திருக்க. இதெல்லாம் நல்லா இல்லை பா" என்று தன் பிடித்தமின்மையைக் காட்டினார்

"அம்மா ப்ளீஸ். சென்டிமென்ட்னு சொல்லிப் படுத்தாதீங்க.இப்போ வீட்டுக்கு போனால் நியூஸ் ஸ்ப்ரேட் ஆகிடும்".

"ஏன்டா நீ என்ன பெரிய ஹீரோவா டைரக்டர் தானே. என்ன பெருசா நியூஸ் ஸ்ப்ரேட் ஆக போகுது. அப்படியே ஆனாலும் இப்போ அதில் என்ன குறை. கல்யாணமானது மத்தவங்களுக்கு தெரிய வேண்டாமா?.என்ன முடிவில் இருக்க நீ" என்று படபடத்தார்.

மனமோ பலவிதமாகக் கற்பனை செய்தது. திகழை தன் மகன் மறுத்து விடுவானோ என்று இதயம் முரசு கொட்ட ஆரம்பித்தது.

அவர் கூற்றில்," அம்மா மூச்சு விடாமல் பேசாதீங்க " என்று அவரைக் கடித்தவன் .

பெருமூச்சுடன் தன் மனைவியை பார்க்க, அவளோ யாருக்கோ வந்த விருந்துப் போல் வெளியில் பார்வையை பதித்திருந்தாள்.

அதில், அவளை ஆழ்ந்து நோக்கி விட்டு,"மா எனக்கு கொஞ்சம் டைம் தேவை" என்றான்.

"அது இல்லை டா " என்று மேலே கூற வந்தவரை தடுத்தவன்.

" அந்த வீட்டில் வேலைக்காரங்க செக்யூரிட்டிஸ் இருப்பாங்க. நேரடியா எதுவும் கேட்கவில்லை என்றாலும் பார்வை நம்ப மேல் தான் இருக்கும். யாராவது நியூசுக்கு சொல்லவும் சான்ஸ் இருக்கு. அதெல்லாம் பேஸ் பண்ண இப்போ என்னால் முடியாது. நான் செம டயர்டா இருக்கேன்"

"என்னை கொஞ்சம் யோசிக்க விடுங்க. ப்ளீஸ் இதுக்கு மேல் ஆர்கியூ பண்ணாதீங்க மா "என்று அவன் இறுதியில் கோபத்துடன் முடிக்கவும், அதற்கு மேல் அன்னபூரணி பேசவில்லை.

ஆத்ரேயன் அடங்கும் ஒரே இடம் தாய் என்றாலும் அதற்கும் அளவு உண்டு.

இன்று தன் மகனை அதிகம் படுத்தி விட்டோம் என்பதை உணர்ந்தவருக்கு அவன் பொறுமையின்மை புரிய,தயக்கத்துடன் திகழை பார்க்க அவள் இயல்பாக தான் இருந்தாள்.

ஆனாலும் மனம் கேட்காமல்," திகழ் உனக்கு ஓகேவா " என்றதும் புரியாமல் விழித்தாள்.

அவள் நினைப்பதா நடக்கிறது. வாழ்க்கை கூட்டி செல்லும் திசையில் பயணிக்கிறாள்.இப்பொழுது மட்டும் என்ன கருத்து சொல்ல என்று அவள் மௌனம் காக்க,

"மா அவளே புதுசா இப்போ தான் வந்திருக்காள். அவள் கிட்ட கேட்டால் என்ன தெரியும். நீங்க தான் கூட இருக்க போறீங்க.பார்த்துக்கோங்க" என்று விட்டு அவன் வீட்டிற்குள் நுழைய, செக்யூரிட்டி பயணப் பொதிகளை எடுத்துக்கொண்டார்.

திகழின் கரம் பற்றி அழைத்து வந்த அன்னபூரணிக்கு அனைத்தும் சீராக நடந்து விட வேண்டுமே என்ற எண்ணம் பெரிதாக இருக்க, மனம் கேட்காமல், அவளை பூஜை அறைக்கு அழைத்துச் சென்றார்.

ஆரத்தி எடுத்து முறையாக உபசரித்து மகன் கைப்பற்றி வரவேண்டிய மருமகள் தனியாக வருவது மனதை சங்கடப்படுத்தியது.

மஞ்சள் நிற விளக்கு ஒளியில் சிவலிங்கம் காட்சி அளிக்கவே, மனம் சிறிது சமன்பட, " எல்லாம் நல்லா நடக்கணும்னு வேண்டிகிட்டு விளக்கு ஏற்றுமா " என்று தீப்பெட்டியை கையில் கொடுத்தார்.

அவளின் இஷ்ட தெய்வம் தான். ஆனால் இப்பொழுது மனம் வெறுமையாக இருக்க வேண்ட தோன்றாமல் அன்னபூரணியின் கூற்றுக்கு இணங்க, கண்களை மட்டும் மூடி திறந்தவள்.

நிர்மலமான மனத்துடன் விளக்கு ஏற்றினாள்.

விளக்கு பிரகாசமாக எரியவும் அன்னபூரணியின் இதழ்களில் புன்னகை பரவியது.

"அம்மா ஐயா சொன்ன பொருள் எல்லாம் வாங்கிட்டு வந்துட்டேன்" என்ற செக்யூரிட்டியின் குரலில் திரும்ப, ஒரு வாரத்திற்கு தேவையான
மளிகை பொருட்கள் காய்கறிகள் அவர் கையில் இருக்கவும்,

"வெச்சிட்டு போங்க".

" இப்போ சமைக்க முடியாது.நான் ஆர்டர் பண்ணி விடுறேன் ப்ரஷ் ஆகிவிட்டு சாப்பிடு திகழ் " என்றவர்.

ஒரு அறையை காட்ட, அவள் தயக்கத்துடன் நின்றாள்.

"என்னம்மா" என்று பரிவுடன் வினாவ," டிரஸ் மாத்தணும்" என்றாள் சங்கடமாக.

அவளின் பெட்டியை தேட விருந்தினர் அறை வெளியே வைக்கப்பட்டு இருக்கவும்,சங்கடமாக எச்சில் கூட்டி விழுங்கிக் கொண்டவர்.

"இதோ இங்கே இருக்கு மா" என்று அவரே எடுத்து அவள் கையில் கொடுத்தார்.

தனக்கு அளிக்கப்பட்ட அறைக்குள் சென்று முதலில் குளித்து உடை மாற்றியவள். ஆளுயர கண்ணாடியில் தெரிந்த தன் பிம்பத்தை கண்டு பெருமூச்சு விட்டாள்.

"வாழ்க்கை எதை நோக்கி என்னை இழுத்துட்டு போகுதுனே தெரியலை. எப்பவும் நான் கேட்கிறது தைரியத்தை மட்டும் தான். அந்த தைரியத்தை என்னை இழக்க வச்சிடாதீங்க" என மனதிற்குள் உறுதி எடுத்துக் கொண்டவள்.

தலைவாரி பொட்டை மட்டும் வைத்துக் கொண்டு வெளியே வந்தாள்.

டைனிங் ஹாலில் ஆத்ரேயன் உண்டு கொண்டிருந்தான். அதில் இன்னும் தயக்கம் உண்டாக அப்படியே நின்று விட்டாள்

பரிமாறிக் கொண்டிருந்த அன்னபூரணி அவளை கவனித்து,"ஏன் மா நின்னுட்ட. வந்து உட்காரு" என ஆத்ரேயன் அருகே இருக்கையை காட்ட,

அதில் தாயை ஒரு கணம் பார்த்து விட்டு உணவில் கவனத்தை செலுத்தினான்.

தயக்கத்துடன் அமர்ந்து அளவான உணவுடன் எழுந்து விட்டவளை கண்டு, " அவ்வளவுதானா. போதுமா" என்று அன்னபூரணி ஆச்சரியமாக வினாவ,

" இல்லை அத்தை பழகிடுச்சு. இதுவே போதும் "என்றவளை இப்போது ஆத்ரேயன் வித்தியாசமாக பார்த்தான்.

கை அலம்பிவிட்டு அவள் தயக்கமாக நிற்க," திகழ் இது உன் புருஷன் சுயமா சம்பாதிச்சு வாங்குன வீடு. தயக்கம் இல்லாமல் இரு " மகனுக்கும் கேட்கட்டும் என்று சத்தமாகவே கூற, அதில் திகழ் சங்கடமாக நெளிந்தான்.

ஆத்ரேயன் தாயை அழுத்தமாக பார்த்தபடி தனது அறைக்கு சென்று அடைந்தான்.

" ஏன் அத்தை " என்று சங்கடமாக அவள் கேட்க, "அதெல்லாம் அவன் ஒன்னும் நினைக்க மாட்டான். நீ போய் தூங்கி ரெஸ்ட் எடு இல்லை. துணைக்கு வரவா "என்றதும்,

" இல்ல அத்தை. தனியா படுத்து பழக்கம் தான்" என்று புன்னகையுடன் கூறியவள். தனக்காக ஒதுக்கப்பட்ட அறைக்கு சென்றாள்.

மீண்டும் சிவலிங்கத்தை நோக்கியவர்.எல்லாம் சீராக மாற வேண்டும் என்று வேண்டிய படியே மற்ற வேலைகளை கவனித்தார்.

ஆத்ரேயன் முதல் மூன்று படங்களுக்கான சம்பளத்தை வைத்து தான் இந்த பீச் ஹவுசினை தனது விருப்பத்திற்கு ஏற்றபடி கட்டினான்.

முழுக்க முழுக்க அவனின் உழைப்பு என்பதால் இந்த வீடு எப்பொழுதுமே அவனுக்கு பிடித்தம் மற்றும் உணர்வுடன் கலந்தது.

மகன் பெரிய வீட்டிற்கு அழைத்து செல்லாமல் இங்கு வந்ததற்குக் கோபம் கொள்ளாமல் அவர் இருந்ததற்கு கூட காரணம் அதுதான்.

பலவிதமான யோசனைகள் அடுத்து என்ன என்று எதிர்காலம் பற்றிய கேள்வி என்று பலவித குழப்பங்கள் மூவரின் முன்னால் இருந்தாலும்,உண்ட உணவின் காரணமாக உறக்கம் கண்ணை சுழற்ற முதலில் நித்ரா தேவியை சரணடைந்தனர்.

மதியம் மூன்று மணிக்கு படுத்தவள். ஆறு மணிக்கு தயாராகிய வெளியே வர அன்னபூரணி இரவு உணவுக்கு தேவையானவற்றை செய்து கொண்டிருந்தார்.

" நானும் ஹெல்ப் பண்ணவா" என்றதும் காய்கறிகளை கொடுக்க, வேகத்துடன் அதே நேரம் நேர்த்தியாக வெட்டியவளை ஆச்சரியமாக பார்த்தவர்.

அவளிடம் பேச்சை கொடுக்க, திகழும் மற்றதை நினைக்காமல் அவர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்தாள்.

சமையலும் விரைவாக முடிந்தது.

சமைத்த உணவுகளை டைனிங் டேபிளில் வைத்து விட்டு அங்கிருந்த சோபாவில் அமர்ந்து விட்டக் கதைகளைப் பேச ஆரம்பித்தனர்.

மணி ஒன்பதை கடக்க, "வா மா சாப்பிடலாம்" என்றதும் அவள் தயக்கமாக ஆத்ரேயன் அறைப்பக்கம் பார்வையை பதிக்க, அன்னபூரணிக்கு மனம் நிறைந்தது.

" அவனே எழுந்து வருவான். தூக்கத்துக்கு நடுவில் எழுப்பினால் கத்துவான். அவனுக்கு காத்திருந்தால் வேலைக்கு ஆகாது. நேரத்திற்கு சாப்பிடணும் இல்லனா அதுக்கும் சண்டைதான் போடுவான்".

அவளும் தயக்கம் நீங்க, இருவரும் உண்டு முடித்தனர்.

உணவை முடித்ததும் அறைக்கு போக போனவளை தடுத்து ஒரு புத்தகத்தை தந்து அமர வைத்துக் கொண்டார்.

சில நிமிடங்கள் கடக்க, புத்தகத்தின் பக்கங்களை திருப்பியவள்.ஒரு பெருமூச்சுடன், "அத்தை ஏதாவது என்கிட்ட பேசணுமா?".

அவளிடம் பேசுவதற்காகக் காத்திருந்தவர்.

அசட்டு சிரிப்பு சிரிக்க,"சொல்லுங்க அத்தை என்கிட்ட என்ன தயக்கம் " என்றாள் இதமாக,

அதில் தைரியம் வரப்பெற்றவர்.

"இந்த கல்யாணம் எதிர்பார்க்காமல் நடந்ததுதான். உன் விருப்பம் கேட்காமல் திடீரென முடிவெடுத்து எல்லாம் செஞ்சுட்டோம். அந்த நிலையில் என் தம்பியை அப்படி பார்க்க முடியலை. அவன் மேல் வருத்தம் இருந்தாலும் சபை முன்னால் கூனிக் குறுகி நின்ன போது பார்க்க முடியலை".

"கௌரவத்தை காப்பாத்திக்க உன் மனசில் இருந்த எதிர்பார்ப்புகளை கொன்னுட்டோமா, அந்தப் பையனை பற்றி நல்லவிதமா யாரும் சொல்லலை இருந்தாலும் உன் மனசில் ஏதாவது எண்ணம் இருந்ததாம்மா "என்று மறைமுகமாக அவளுக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையின் மீது விருப்பம் இருந்ததா என்று கேட்டார்.

இப்பொழுது அவள் வாழ்க்கையோடு மகனின் வாழ்க்கையும் பிணைந்து விட்டது.எனவே, அச்சத்துடன் வினாவினார்.

அவர் மகனின் வாழ்க்கையும் முக்கியமல்லவா.

சில கணங்கள் மௌனத்தில் கழிய," அந்த மாதிரி எந்த எண்ணமும் இதுவரை யார் மேலும் வந்ததில்லை அத்தை. நடக்க இருந்த கல்யாணம் என்னோட விருப்பம் இல்லை. அப்பா சூழ்நிலை கல்யாணம் பண்ணிக்க சொன்னார் சம்மதிச்சேன். மத்தபடி எந்த எண்ணமும் இல்லை " என்று அவள் தெளிவாக விளக்கவும்,அன்னபூரணியின் மனம் லேசானது.

ஒப்பனை இல்லாத ஓவியமாக இருந்த பெண்ணவளை வாஞ்சையாக பார்த்தவர்.இருவரின் வாழ்க்கையும் மலர செய்யுங்கள் என இறைவனிடம் வேண்டிக் கொண்டார்.




 
அத்தியாயம்-04

பால்கனி வழியாக வீசிய மெல்லியப் பனி காற்று ஆணவனை உணர்வடைய செய்தது.

நீண்ட நேரமாக லேப்டாப்பில் மூழ்கி இருப்பது புரிய, கழுத்தை தேய்த்தவாறு நிமிர்ந்தவன்.

தான் எழுதியக் கதையை சேமித்து விட்டு லேப்டாப்பை மூடினான்.

காலையிலிருந்து நோட்புக்கில் குறிப்புகளை எழுதுவதும், திருப்தியாக இருந்தவற்றை லேப்டாப்பில் பதிவேற்றுவதும் முழுக்க தன் பணியில் மூழ்கிப் போனான்.

நோட்பேடில் எழுதியதில் பிடிக்காததை தூர கிழித்து போட்டதில்,அவன் அமர்ந்திருந்த இடத்தை சுற்றிலும் சுருண்ட காகிதங்களாக கிடக்க, வேலையாட்களை அழைக்காமல் தானே அதனை எடுத்துப் பத்திரப்படுத்திக் கொண்டான் .

இன்றைய மனநிலைமைக்கு வேண்டாம் என்று தூக்கிப் போட்டாலும், எதிர்காலத்தில் உதவும் என்று எப்பொழுதுமே தான் எழுதிய குறிப்புகளை சேகரித்து வைப்பான்.

சோம்பலாக இருக்கவே ஒரு காபி குடித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்ற, உடனே சமையலறை இன்டர்காமிற்கு தொடர்பு கொண்டான்.

மறுபுறம் அழைப்பு எடுக்கப்பட்டாலும் மௌனம்.

அதை கருத்தில் கொள்ளாமல், "ஸ்ட்ராங்கா ஒரு காபி" என்று விட்டு வைக்க, அடுத்து பத்து நிமிடத்தில் கதவு மெல்லிதாக தட்டப்பட்டது.

" கம்மிங்" என்றபடி எழுந்தவன்.

காபி கப்புடன் நின்றிருந்த தன் திடீர் மனைவியை கண்டு ஒற்றைப் புருவத்தை கேள்வியாக உயர்த்தினான்.

அப்பொழுதுதான், அவள் வாசலிலே நிற்பது கண்டு வார்த்தைகள் இன்றி தலையை மட்டும் உள்ளே வா என்று அசைத்தான்.

அவள் உள் நுழைவதைக் கண்டு வேறு புறம் திரும்பி கொண்டவன். சோம்பல் முறித்தான்.

காபியை மேசையில் வைத்துவிட்டு அங்கிருந்து அகல பார்த்தவளைக் கண்டு, " நில்லு " என்றான்.

ஒரு வாரம் சவரம் செய்யப்படாத தாடியை தேய்த்தவாறு அவளை தலை முதல் கால் வரை பார்வையால் அளவெடுத்தான்.

சந்தன நிறப்புடவை அணிந்து மெல்லிய தங்க நகைகளுடன் பளிச்சென்று இருந்தாள். நீண்ட கூந்தலை மல்லி சரம் மறைத்தது.

அனைத்திற்கும் மேலாக அவன் கட்டிய தாலி மஞ்சள் நிறத்தில் பளிச்சென்று பல்லைக் காட்டியது.

அதை முறைத்தபடி அவளை நோக்கி வந்தவன், சிறு இடைவெளி விட்டு நின்று கொண்டான்.

அவளோ அவன் அருகில் வந்ததுமே தலை குனிந்து கொண்டாள்.

தொண்டையை செருமியபடி அவள் முகத்தில் பார்வையை நிலைக்க விட, அவள் இன்னும் தரை பார்த்துக் கொண்டிருப்பதை கண்டு ஒரு பெருமூச்சுடன்,

" எனக்கு இந்த மேரேஜ், கமிட்மெண்டில் சுத்தமா விருப்பமில்லை " என்று சுற்றி வளைக்காமல் நேரடியாக விஷயத்திற்கு வந்தான்.

அவளிடம் அவன் எதிர்பார்த்த மாற்றங்கள் எதுவும் இல்லை.

அப்படியே அவள் முகம் மாறாமல் நின்று இருக்க, கடுப்புடன், " திரும்ப சொல்ல வைக்காதே.எனக்கு இந்த கல்யாணத்தில் சுத்தமா விருப்பம் இல்லை. ஏத்துக்கவும் முடியாது இங்க இருக்கிறதே மூச்சு முட்டுது. என்ன புரியுதா" என்று அதட்டலாக கேட்க, தலை மட்டும் மெல்ல அசைந்தது.

எந்தவித உணர்வுகளும் இல்லாமல் சிலை போல் இருப்பவளை அழுத்தமாகப் பார்க்க,

அவளும் அவனை கடுப்பேற்றியது போதும் என்று எண்ணியது போல் அவனைப் பார்த்தாள்.

அப்பார்வையில்,'இப்போது என்ன' என்ற பாவனை மட்டும் தான் இருந்தது.

'எங்க அம்மாவை விட,இவ ரொம்ப என்னை டார்ச்சர் பண்ணுவா போலயே' என்று எண்ணியவன்.

" வந்து சேர்வதெல்லாம் இப்படியே இருக்கு" என்று வாய்க்குள் முணுமுணுத்தும் கொண்டான்.

அதற்கும் அதே அப்பாவி பாவனை தான்.

"காட் இந்த ரியாக்ஷன மாத்து" என்று அவன் கோபத்துடன் அதட்டினான்.

அவளோ," இப்போ நான் என்ன பண்ணனும்" என்று அவன் அதட்டலால் சிறிதும் பாதிப்பு இல்லாத சாந்தமான குரலில் கேட்க,

"என்ன பண்ணணுமா. தாயே நீ எதுவுமே பண்ண வேண்டாம்.கல்யாணம்னு என் தலையில் மிளகாய் அரைத்தது வரை போதும். என் அம்மா பிளான் எல்லாம் எனக்கு நல்லா தெரியும். அவங்க கூட கூட்டு சேர்ந்து என்னை நெருங்க முயற்சி பண்ணா சாவடிச்சிடுவேன். புருஷன் என்று அட்வான்டேஜ் எடுத்தினால் பல்லை கழட்டி கையில் கொடுத்துடுவேன். உன்னை தலைகீழாகக் கட்டிப்போட்டு அடிச்சாலும் உன் புருஷன் நான் என்பதை யார்கிட்டயும் சொல்லக்கூடாது. என் பேரை நீ எங்கேயுமே யூஸ் பண்ண கூடாது" என்றான் கட்டளையாக.

அவளோ எதனையோ யோசிப்பதை கண்டு, " என்ன புரியுதா" என்றான் இன்னும் சத்தமாக,

" அதில்லை உங்க பேர் என்ன "என்று அவன் முகம் பார்த்து கேட்க,

" என்ன சொல்ற என் பெயர் உனக்கு தெரியாதா..... சும்மா ஆக்டிங்...."என்று நக்கலாக கூறிக்கொண்டு வந்தவன்.

அவள் முகம் தெளிவில்லாமல் இருப்பதைக் கண்டு, " என்ன உண்மையா... என் பேரு கூட உனக்கு தெரியாதா? " என்று அதிர்ச்சியுடன் கேட்டிருந்தான்.

அவளோ முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு, இல்லை என்று தலையசைத்தாள்.

ஓ காட் என்ற தலையை அழுத்த பற்றி கொண்டு அவளைப் பார்க்க,அவள் இன்னும் யோசிப்பதை கண்டு இப்பொழுது என்ன குண்டு வரப் போகிறதோ என்று பார்க்க,

"உங்க அம்மா நீங்க ஏதோ படம் எடுப்பீங்கன்னு சொன்னாங்க.போட்டோ ஸ்டுடியோ வச்சிருக்கீங்களா? "என்று கேட்டதில்,இடப்பக்க நெஞ்சை அழுத்தமாக பற்றி கொண்டவன்.

"ஒழுங்காக இங்கே இருந்து போ... போடி" என்று கத்த, "இல்லை காபி " என்ற அவள் தயங்க," உங்க அப்பன் அம்மையப்பன் தலையில் ஊத்து போடி முதலில் நீ" என்று அவள் கையை பற்றி தர தரவென்று இழுத்து வந்தவன்.

அறையின் வெளியே தள்ளிவிட்டு கதவை சத்தத்துடன் சாற்றி இருந்தான்.

திகழ் ஒன்றும் புரியாமல் மூடிய கதவை பார்த்தபடி கீழே வர, அவளுக்காகவே காத்திருந்த அன்னபூரணி, "என்ன ஓகேவா "என்று அவள் கை பிடித்தபடி ஆர்வமாக கேட்க,

அவன் தந்த அதிர்விலிருந்து விலகாமல்," என்ன அத்தை கேக்குறீங்க "என்று புரியாமல் திகழ் வினாவ,

"அடியே காபியை கையில் கொடுத்து பக்கம் பக்கமா வசனம் சொல்லிக் கொடுத்தேனே.எதுவும் ஞாபகம் இல்லையா" என்றதும் அவள் புரியாமல் விழிக்க,

"சரியான மக்கு பொண்ணா இருக்க. நான் உனக்கு பண்ணிவிட்ட அலங்காரத்துக்கும் இந்த மல்லிகை பூவுக்கும் நான் சொல்லிக் கொடுத்த டயலாக்கை யூஸ் பண்ணி இருந்தால்,அவன் இந்த நேரம் உன்னை சுவிட்சர்லாந்துக்கு கூட்டி போயிருப்பான்" என்று புலம்பியவர்.

"எங்க பெத்ததும் தத்தியா இருக்கு, அதை கட்டிக்கிட்டதும் தவக்களையா இருக்கே "என்று ஒரு புறம் புலம்பினார்.

அவரை புரியாமல் அவள் பார்த்துக் கொண்டிருக்கும்போது ஜீன்ஸ் டி-ஷர்ட் அணிந்து கையில் ட்ராலி பேக் உடன் ஆத்ரேயன் மாடிப்படி இறங்கி வந்தான்.

மகன் வரும் கோலம் கண்டு மருமகள் புறம் திரும்பி ," அடி கள்ளி என்கிட்டே சொல்லலை பாரு. என்ன வெக்கமா. இருக்கட்டும் இருக்கட்டும் புதுசா கல்யாணம் ஆனவங்க தானே.எக்ஸ்ட்ரா நாலு பிட்டு போட்டியா. இவ்வளவு வேகமா வரான் "என்று காலை தரையில் தேய்த்தபடி நகம் கடிக்க,

வந்த ஆத்ரேயன் தாயின் பாவனையில்," என்னம்மா ஆச்சு வயிற்றுக்கு சேராதது ஏதாவது சாப்பிட்டீங்களா" என்றதும்,

அன்னபூரணி, "போடா படவா.எப்பவும் விளையாட்டு தான் "என்றார் வெட்கம் கலந்த புன்னகையுடன்.

அதில் கடுப்புடன் தாயையும் மனைவியையும் பார்க்க, அன்னபூரணியே,"சரி சரி போய் உன்னோட பெட்டியை எடுத்துட்டு வா" என்று அவளை பிடித்து தள்ள,

" குட் டிஷ்யூஷன் நான் வரதுக்குள்ள இவளை பேக் பண்ணி அனுப்பி வைங்க" என்று விட்டு அவன் ட்ராலி பேக்கை நகர்த்த அதனை எட்டி பிடித்த அன்னபூரணி, " மருமகள் வரவரையும் வெயிட் பண்ணுடா" என்று சலுகையாக கடிந்தார்.

"அவள் வரும் வரை நான் எதுக்கு வெயிட் பண்ணனும். நான் என்னோட கார் எடுத்துட்டு போறேன். அவளை டிரைவர் கூட அனுப்பி வைங்க"

"டேய் பைத்தியமா டா நீ.ஹனிமூன் சேர்ந்துதானே போகணும். நீ ஒரு காரில் அவ ஒரு காரில் என்ன டா இது. கேட்க நல்லாவா இருக்கு" என்று அவனை கடிந்தவர்.

மருமகள் அப்படியே நிற்பதைக் கண்டு, " நீ என்ன அப்படியே நிக்கிற.போய் உன்னோட டிரெஸை பேக் பண்ணி எடுத்துட்டு வா" என்றார்.

அவள் இறைஞ்சலுடன் அன்னபூரணியை பார்க்க, மருமகள் மகனுக்காக பயப்படுகிறாளோ என்று எண்ணி, "அப்பப்ப அவங்க அப்பா புத்தி வந்துரும். நீ போ "என்று சமாதானப்படுத்த அதில் பல்லை கடித்தவன்.

"அம்மா இதுக்கு மேலே முடியாது இட்ஸ் என்ஃப். அவளை பேக் பண்ணி அனுப்புவீங்களோ இல்லை நாலா மடிச்சு உங்க முந்தாணியில் சுருட்டி வைப்பீங்களோ .அது உங்க பிரச்சனை.எனக்கு நாளையிலிருந்து ஷூட்டிங்.நான் அதை கவனிக்க போறேன். இன்னும் ரெண்டு மாசத்துக்கு என்னை காண்டாக்ட் பண்ணாதீங்க. நானே டைம் கிடைக்கும்போது கூப்பிடுறேன்" என்று விட்டு நகர பார்க்க, இன்னும் அழுத்தமாக அவன் ட்ராலி பேக்கை பற்றிக் கொண்டார்.

அதில் அவன் அழுத்தமாக தாயை பார்க்கவும், "டேய் கண்ணா என்னடா சொல்ற. இன்னும் ஷூட்டிங் ஆரம்பிக்க நாள் இருக்கே" என்று அவன் கோபம் உணர்ந்து இறைஞ்சலுடன் கேட்டார்.

" போதும். நான் ரிலாக்சேஷன்காக லீவு எடுத்ததும் போதும். நீங்க என் தலையை உருட்டினதும் போதும்" என்று விட்டு திரும்பியும் பாராமல் அவன் செல்ல,

அன்னை மகன் உரையாடலை பார்த்துக் கொண்டிருந்தவளின் கைப்பற்றி இழுத்து கொண்டு மகனின் பின்னால் ஓடினார்.

இப்பொழுது மூவருமே வீட்டிற்கு வெளியே வந்து விட்டனர்.

பேக்கை டிக்கியில் போட்டு விட்டு முன்னால் வர அவனின் தாயோ கதவை மறைத்தபடி நிற்பதை கண்டு," டென்ஷன் படுத்தாதீங்க. நகருங்க "

"டேய் டேய். நான் என்ன வேணும்னா பண்ணினேன் "

"இல்லை நான் வேண்டாம்னு பண்ணீங்க "என்று கடுப்புடன் மொழிய,

" சூழ்நிலை கண்ணா " என்று அவர் மேலே விளக்க வர, "உங்க சூழ்நிலையும் வேண்டாம் சுண்டக்காவும் வேண்டாம் முதலில் வழி விடுங்க" என்றான் கோவமாக.

" மறுபடியும் என்னை தனியா விட்டுட்டு போறியா" என்று பாவம் போல் கேட்க,

கண்ணில் மாட்டி இருந்த கூலரை கழட்டி டி -ஷர்டில் மாட்டியவன்.

" அதுதான் இல்லாத தகிடுதத்தம் பண்ணி மருமகளை கூட்டி வந்துட்டீங்களே.அதான் என் பொண்டாட்டி.... உங்களை பார்த்துக்க இருக்காளே போதாதா" என்று அவன் நக்கல் மிகுந்த குரலில் கேட்க,

"கண்ணா இப்போ தான் கல்யாணம் ஆகியிருக்கு.அதுக்குள்ள தனியா போகணுமா " என்று விளையாட்டு தனத்தை விட்டு விட்டு அவர் இயல்பான வருத்தத்துடன் கேட்க, அவரின் அந்த குரலுக்கு இளகி கோபத்தை தள்ளி வைத்துவிட்டு,

" மா என்னை போட்டு பிரஷர் பண்ணாதீங்க... ஐ நீட் டைம். இந்த வீட்டில் அது கிடைக்காது. நான் யோசிக்கணும் என்னை கொஞ்ச நாள் ஃப்ரீயா விடுங்க. அப்புறம் தனியா எல்லாம் விட்டுட்டு போகலை. இப்போ உங்களை பார்த்துக்க உங்க மருமகள் இருக்கா. என்ன பார்த்துப்ப தானே" என்று கேள்வியை திகழை நோக்கி செலுத்த, வேகத்துடன் தலையை ஆட்டினாள்.

இவளோட என்று மனதிற்குள் அவளை கடிந்து கொண்டவன்.

தாயைப் பார்க்க அவர் கலக்கத்துடன் தன்னை பார்ப்பதை கண்டு "அம்மா மறுபடியும் ஆரம்பிக்காதீங்க "என்று அவர் தோளில் கையை போட்டுக் கொண்டவன்.

"புரொடக்சனில் இருந்து நேத்து தான் கால் வந்தது.அடுத்த இரண்டு மாதத்தில் ஷூட்டிங் எல்லாத்தையும் முடிக்க ப்ரஷர்.
மூணு மாசம் என்னை விடுங்க" என்றான் அழுத்தமாக.

அன்னபூரணியும் அதற்கு மேல் முரண்டு பிடிக்காமல் நகர காரில் ஏறியவன்.

தாய்க்கு கையைக் காட்டி விட்டு அருகில் இருந்தவளை பார்க்க,அவளோ அன்னபூரணி சமாதானம் செய்து கொண்டிருந்தாள்.

'நல்லா அமைஞ்சிருக்காங்க' என்று எண்ணியபடிக் காரை செலுத்தினான்.

 
அத்தியாயம்-05

"என்ன இன்னைக்கு சார் உக்கிரமாக இருக்கார் போல," என்ற சத்யனின் கேள்விக்கு அவனை முறைத்த விமல்,

"ஏண்டா, நீ வேற. இன்னைக்கு எடுத்த நாலு சீனையும் கேன்சல் பண்ணிட்டாரு. சீன் நல்லா இல்லைன்னு ஒரே திட்டு. இன்னைக்கு மிட்நைட் ஆனாலும் ஷூட் முடியாது போல," என்று புலம்பலுடன் தன் மனப் புழுக்கத்தையும் வெளிப்படுத்தினான்.

ஆத்ரேயனின் அசிஸ்டன்ட் டைரக்டரில் ஒருவனான விமல்.

"ஷாட்டிற்கு எல்லாம் ரெடியா?" என்ற ஆத்ரேயனின் குரலில் ஏற்கனவே விரைந்து செயல்பட்டுக் கொண்டிருந்த புரொடக்‌ஷன் டீம் இன்னும் தங்களின் வேகத்தை அதிகரித்தனர்.

நாயகிக்கான டயலாக் பேப்பரை வைத்துக் கொண்டிருந்த விமலோ, ஏமாற்றத்துடன் அதனைப் பார்த்தான்.

தெலுங்கில் பிரபல நடிகை. தமிழ் ஒழுங்காக வராமல் அவனின் உயிரை எடுத்துக் கொண்டிருந்தாள்.

ஏதோ நடிப்பு நன்றாக இருப்பதால் ஆத்ரேயன் அவளின் இந்தக் குறையை கண்டுகொள்ளாமல் இருக்கிறான்.

ஆனால், இன்று இருக்கும் கடுப்பிற்கு எப்படியும் நாயகியின் மீது வரும் கோபத்தை தன் மீதுதான் இறக்குவான் என்ற எச்சரிக்கை உணர்வு எழுந்ததில், நாயகியிடம் ஐம்பதாவது முறையாக டயலாக் பேப்பரை வாசித்துக் காட்டினான்.

"ஷாட்... கேமரா... ரோலிங்... ஆக்‌ஷன்!" என்ற ஆத்ரேகனின் குரல் ஒலித்ததும், ஒட்டுமொத்த டீமும் அமைதியாகிவிட்டது.

கேமராவும் காட்சிகளை உள்வாங்கிக் கொண்டது. நாயகி உருக்கமான வார்த்தைகளால் நாயகனுக்குத் தன் காதலைத் தெரிவித்துக் கொண்டிருந்தாள்.

கதையில் இது மிக முக்கியமான காட்சி. நாயகிக்கு நீண்ட உரையாடலைக் கொண்ட ஒரே பகுதி இதுதான்.

அனைவரின் முழு கவனமும் நாயகி மற்றும் நாயகனின் மீது இருக்க, ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருக்கும்போது, "கட்!" என்ற கர்ஜனையில் அனைவரின் கவனமும் அவன் மீது குவிந்தது.

"விமல்!" என்று உச்சபட்ச சத்தத்துடன் அவன் அழைக்க, பதறிக்கொண்டு ஓடி வந்தவன் மீது அழுத்தமாகப் பார்வையை பதித்தான்.

"சார், டயலாக் எல்லாம் மறுபடியும் ஒரு தடவை சொல்லித் தரேன். சாரி சார்," என்றவன் பதற்றத்துடன், நாயகி செய்த தவறுகளைச் சுட்டிக்காட்டினான்.

கோபத்துடன் நெற்றியைத் தேய்த்துக் கொண்ட ஆத்ரேயன், காபியை வரவழைத்துப் பருகினான்.

ஐந்து நிமிடத்தில் மீண்டும் காட்சிக்கான செட் அமைக்கப்பட்டு, கேமரா ஓட ஆரம்பித்தது.

இம்முறையும் கதாநாயகி சாந்தவி மீண்டும் சொதப்ப, கோபம் எல்லையைக் கடந்தது.

"இது எத்தனாவது ஷாட்? என்ன பிரச்சனை உங்களுக்கு?" என்று ஆத்ரேயன் நேரடியாக அவளிடமே சத்தமிட,

"சார், டப்பிங்கில் மாத்திக்கலாமே. அவ்வளவுதான் வருது சார்," என்று குழைந்த குரலில் கூறினாள். நாயகிக்கு குடையையும் ஃபேனையையும் பிடித்துக் கொண்டிருந்த நபரை ஆத்ரேயன் முறைத்ததில் அப்படியே விலகினான்.

அவளை அழுத்தமாக பார்த்தபடி,, "அவ்வளவுதான் முடியுமென்றால் இங்கே நடிக்க வந்திருக்கக்கூடாது! டைரக்டர் சொல்வதை உள்வாங்கி நடிக்க முடியவில்லை என்றால், எதற்கு இந்தப் படத்தில் வந்தே ஆகணும்னு பிரஷர் போடணும்? எங்க தலையை உருட்ட வந்துடுவீங்க?. அடுத்த ஷார்ட் ஒழுங்கா வரலைன்னா..." என்று கிட்டத்தட்ட மிரட்டி விட்டு, அவன் கேரவனுக்குள் புகுந்து கொள்ள, சாந்தவிக்கு முகம் கருத்தது.

சாந்தவியின் மேக்கப் ஆர்டிஸ்ட் சாதனா தன் அலங்காரப் பொருட்களுடன் வரவும், தரையை கோபத்துடன் உதைத்துவிட்டுக் கேரவனுக்குள் புகுந்துகொண்டாள்.

"இன்னைக்கு நடு ராத்திரி வரை ஷூட்டிங் இருக்கும் போலயே," என்று நொந்தபடி புரொடக்‌ஷனைச் சேர்ந்தவர்கள் வேலைகளைக் கவனிக்க ஆரம்பித்தனர்.

நாயகிக்கான கேரவேனில் கொதித்து போய் அமர்ந்திருந்தவளின் கன்னத்தில் ரோஸ் பவுடரை சாதனா பூசிக் கொண்டிருந்தாள்.

"கோபத்தை விடு,மா" என்று அவளின் தாயான ஜெயா சமாதானப்படுத்த,

"மாம், ஓவரா பேசுறான். எல்லார் முன்னாடியும் எவ்வளவு அசிங்கப்படுத்திட்டான் தெரியுமா? இதுக்காகவா புரொடியூசர் சொன்னதெல்லாம் செஞ்சேன்?" என்று தெலுங்கில் கோபத்துடன் கீச்சுக்குரலில் அவள் கத்த,

"அமைதியா இருடி" என்று மகளை அதட்டிவிட்டு சாதனாவை வெளியேற்றினார்.

"அம்மு, நான் சொல்றதக் கேளு. தெலுங்கிலும் தமிழிலும் உன்னோட மார்க்கெட் ரொம்ப டவுன் ஆயிடுச்சு. இருக்கிற ஒரே ஆப்ஷன், ஆத்ரேயன் பண்ற படத்தில் நடிச்சு மறுபடியும் மார்க்கெட்டை வரவைக்கிறது, இல்லைன்னா, அவர் பொண்டாட்டியாகி லைஃப்ல செட்டில் ஆகுறது."

"மா, சும்மா பக்கத்தில் டவுட் கேட்கப் போனாலும் வல்லுன்னு எரிஞ்சு விழறவன், அவன் என்னை கல்யாணம் பண்ணிப்பானா?" என்று பூசிக் கொண்டிருந்த லிப்ஸ்டிக்கைத் தூர வீசி விட்டு தாயிடம் எகிற ,

"முதலில் இந்தக் கோபத்தைக் கட்டுப்படுத்து!" என்று மிரட்டியவர்,

குரலைத் தாழ்த்திக்கொண்டு, "இந்த புரொடியூசரை கைக்குள் கொண்டுவர எவ்வளவு கஷ்டப்பட்டோம். இதுதான் நமக்கான இறுதி வாய்ப்பு. அதை ஒழுங்கா பயன்படுத்திப் பிழைக்கப் பார், சாந்தவி. ஒரு தடவை சினிமாவில் விழுந்தால் மறுபடியும் வரவே முடியாது," என்று கூறி அவள் தோளில் அழுத்தம் கொடுத்துவிட்டு அங்கிருந்து அவர் வெளியேறினார்.

கண்ணாடியில் தெரியும் தன் முகத்தையும் உடலையும் கண்டவளின் இதழ்களில் கர்வப் புன்னகை ஒட்டிக்கொண்டது.

'தன்னுடைய அழகுக்கும் இளமைக்கும் விழமலா போய்விடுவான்' என்று எண்ணியவள். கர்வமாக சிரித்துக் கொண்டாள்.

மீண்டும் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட, இம்முறை சாந்தவி தவறு இல்லாமல் செய்து முடிக்க, ஒட்டுமொத்த ஷூட்டிங் ஸ்பாட்டும் ஆசுவாசம் அடைந்தது.

அவர்கள் எதிர்பார்த்ததுக்கு மேலே அவள் நடித்திருக்க, ஆத்ரேயனிடமிருந்து ஒரு தலையசைப்பும், "நெக்ஸ்ட் ஷாட் ரெடி பண்ணுங்க," என்ற கட்டளையும் மட்டுமே வந்தது.

சாந்தவி "இந்த ஷூட்டிங் முடிவதற்குள் உன்னை என் வசப்படுத்துகிறேன்," என்று சபதம் எடுத்துக் கொண்டாள்.

"நாளை காலை 3 மணிக்கு அனைவரும் தயாராக இருக்க வேண்டும்," என்று மைக்கில் அறிவுறுத்திவிட்டு ஆத்ரேயன் அங்கிருந்து அகல, அப்பொழுதுதான் மொத்த ஷூட்டிங் ஸ்பாட்டும் நிதானத்திற்கு வந்தது.

அனைத்தையும் பேக் பண்ணி எடுத்து வைத்து, வேலைகளை முடிக்கவே 11 மணியைக் கடந்திருந்தது.

ஆத்ரேயன் தனக்காக ஒதுக்கப்பட்ட ஹோட்டலுக்கு வந்தவன் குளித்துவிட்டு உறக்கத்தைத் தழுவினான்.

அடுத்த நாள் இன்னும் பரபரப்பாக ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்டது.

மூன்று மணி நேரத் தொடர் படப்பிடிப்புக்குப் பிறகு அனைவருக்கும் ஓய்வு கிடைக்க, காலை காபியும் சிற்றுண்டியும் வழங்கப்பட்டது.

ஆத்ரேயனும் காபியைக் குடித்துவிட்டு, "யாரு கேட்டரிங்?" என்றான்.

"புரொடியூசரோட மச்சான் சார்," என்றதுமே அவனுக்குப் புரிந்து போயிற்று.

அந்தக் காபியை ஒதுக்கிவிட்டு மீண்டும் வேலைகளைக் கவனிக்க ஆரம்பித்தான்.

மதியம் ஒரு மணி போல் மதிய உணவு இடைவேளை விட, உணவுகள் வந்த பாடு இல்லை.

"என்ன ஆச்சு?" என்று ஆத்ரேயன் புரொடக்ஷன் மேனேஜர் இடம் வினாவ சத்யனோ,

, "அவர் கால் பண்ணா எடுக்கவே இல்லை சார்," என்றதும்,

உடனே வேறு ஒரு ஹோட்டலில் அனைவருக்கும் ஆன உணவுகளை ஆர்டர் செய்தான்.

300 பேருக்கான உணவு என்பதால், ஒரே ஹோட்டலில் ஆர்டர் செய்ய முடியாமல் இரண்டு மூன்று ஹோட்டல்களில் கலந்து ஆர்டர் செய்தனர்.

புரொடியூசருக்கு உடனே கால் செய்து நடக்கும் குளறுபடிகளைக் கூற, சில நிமிட யோசனைக்குப் பிறகு, "உங்களுக்கு ஏதாவது ஆப்ஷன் இருந்தால் சொல்லுங்க சார், கேட்டரிங் மாத்திடலாம்," என்றார்.

"இதெல்லாம் உங்க சாய்ஸ். என்னோட ஸ்டாப்ஸ் இதனால் பாதிக்கப்படக்கூடாது. எதுவா இருந்தாலும் சீக்கிரம் ரெடி பண்ணுங்க," என்று ஆத்ரேயன் அழுத்தமாக கூறிவிட்டு வைத்தான்.

இரவு ஷூட்டிங் முடிய ஒரு மணி ஆக, களைப்புடன் ஹோட்டலுக்கு வந்தவன், ஒரு குளியலை போட்டுவிட்டு அலைபேசியை எடுக்க, அவன் தாயிடமிருந்து ஏகப்பட்ட அழைப்புகள்.

அவரின் அழைப்புக்கான காரணம் புரிந்தது.

சென்னை வந்து இதோடு 10 நாட்கள் ஆகிறது. முதல் ஒரு மாதம் வட இந்தியாவில் ஷூட்டிங் இருந்தது.

இப்பொழுதோ சென்னையில் இருக்கும் செட்டில்தான் படப்பிடிப்புகள் எல்லாம் காட்சியாக்கப்பட்டு கொண்டிருக்கிறது.

தாயும் மனைவியும் அவன் கிளம்பிய அடுத்த இரண்டு நாட்களில் பீச் ஹவுஸில் இருந்து தங்கள் வீட்டிற்கு சென்று விட்டார்கள் என்பதும் புரிந்தது.

ஆனாலும் கேட்டுக்கொள்ளவில்லை; அவனின் தாயும் இதைப் பற்றி பேசவில்லை.

வாரத்திற்கு இரண்டு முறை "என்ன செய்கிறார்கள்" என்பதை மட்டும் கேட்டுவிட்டு வைத்து விடுவான்.

அன்னபூரணியும் அதற்கு மேல் பேச முயற்சிக்கவில்லை. அது ஒரு மாதிரி உறுத்தினாலும், வேலை பழுவில் அதனைப் புறந்தள்ளிவிட்டான்.

இப்போதும், சென்னை வந்தும் வீட்டிற்கு செல்ல மனம் இல்லாமல் ஹோட்டல் அறையிலே தங்கி இருக்கிறான்.

அதைப்பற்றி மேலும் சிந்திக்காமல் லேப்டாப்புடன் ஐக்கியமாகி விட்டான்.

இரண்டு நாட்கள் தொடர் இரவு ஷூட்டிங் என்பதால் அடுத்த இரண்டு நாட்கள் பகலில் மட்டும் இருக்குமாறு பார்த்துக் கொண்டான்.

காலை 9:00 மணிக்கு ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட, அவன் எதிர்பார்த்ததை விட காட்சிகள் அனைத்தும் வேகமாகவும் எடுக்கப்பட்டது. சிறப்பாகவும் வந்தது.

சாந்தவியின் காட்சிகள் கூட அவள் சிறப்பாக செய்து விடவே, அடுத்தடுத்த காட்சிகளில் கவனத்தை செலுத்தினான்.

அவனிடமிருந்து ஏதாவது பாராட்டு வரும் என்று எதிர்பார்த்தவள் சோர்ந்து போனாள்.

11 மணிக்கு பிரேக் விடப்பட, காபியும் சிற்றுண்டிகளும் பரிமாறப்பட்டது.

கேரவனில் அமர்ந்திருந்த ஆத்ரேயனுக்கு காஃபி வர, அதை எடுத்து ஒரு மிடறு பருகியவன்,

"நைஸ்!" என்று மெச்சிக்கொண்டபடி முழுவதையும் குடித்துவிட்டு ஷூட்டிங்கை ஆரம்பித்தான்.

திவாகர், கதையின் நாயகன். வளர்ந்து வரும் கதாநாயகன். நடித்த ஐந்து படங்களும் வெற்றியைப் பெற்று அவனுக்கு நல்ல மதிப்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றுத் தந்தன.

ஆத்ரேயனின் இயக்கத்தில் அடுத்த படம் என்றதும் இன்னும் ரசிகர்களும் சினிமா விமர்சகர்களும் இப்படத்திற்கு ஆர்வத்தை காட்டி வருகின்றனர்.

"திவாகர், இன்னும் ஃபேசியல் எக்ஸ்பிரஷன் காட்டலாம். எதோ ஹோல்ட் பண்ணிட்டு இருக்க மாதிரி இருக்கு. பி ரிலாக்ஸ்," என்றவன்.

பின்னணியில் நின்று கொண்டிருந்த துணை கதாபாத்திரங்களையும் திருத்த, லைட்டிங்கை சரிபார்க்க, கேமராவில் பதிவாகும் காட்சிகள் அவனது விருப்பத்திற்கு ஏற்ப இருக்கிறதா என்று அனைத்தையும் பார்த்து, கேமரா மேன் உடன் உரையாடி அனைத்தையும் சரி செய்து ஷூட்டிங்கை மீண்டும் ஆரம்பித்தான்.

அடுத்து நான்கு மணி நேரம் இடைவிடாமல் காட்சிகள் படமாக்கப்பட்டது. லைட்டிங் பார்த்துக் கொண்டிருந்தவர்களும் சோர்ந்து போயினர்.

இறுதியில் ஆத்ரேயன் நினைத்த அளவு காட்சிகள் படமாக்கப்பட்டதும் தான் அனைவரையும் கவனித்தான்.

"காய்ஸ், லஞ்ச் முடிச்சுட்டு பேக்கப் பண்ணிக்கலாம்," என்றதும் அனைவர் முகத்திலும் அத்தனை ஆசுவாசம்.

"நாளைக்கு 5:00 ஓ கிளாக் ஷூட்டிங். சோ என்ஜாய் யுவர் மீல்ஸ்," என்று விட்டு நகர்ந்தவனின் கண்ணில் "அன்னபூரணி கேட்டரிங்" என்ற வார்த்தைகள் விழ, தன் பின்னால் வந்த அசிஸ்டன்ட் விமலைப் பார்க்க,

"ஆமா சார், மேம் கிட்டத் தான் ஆர்டர் கொடுத்திருக்காங்க," என்றதும் தலையசைத்தான்.

ஏற்கனவே சில புரொடக்‌ஷனுக்குத் தாய் கேட்டரிங் வழங்கிக் கொண்டிருப்பது தெரியும் என்பதால் சாதாரணமாகவே இருந்தான்.

அவனுக்கு உணவு எடுத்து வந்து விமல் கேரவனில் கொடுக்க, "நீயும் உட்கார்ந்து சாப்பிடு," என்று விட்டு உணவை சுவைத்தவன்,

"சம்திங் டிஃபரண்ட்," என்று முணுமுணுக்க, அருகில் இருந்த விமல் "என்ன சார்?" என்றான்.

"ஒன்னுமில்ல," என்று விட்டு உணவை காலி செய்தான்.

கேரவனிலிருந்து வேறு உடை மாற்றிவிட்டு வெளியே வந்தவன். உணவுப் பாத்திரங்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்த பணியாட்களிடம் பேசிக் கொண்டிருந்த தன் மனைவியை ஆச்சரியம் விலகாமல் பார்த்தான்.

"இவ எங்க இங்கே?" என்று வாய்க்குள் முணுமுணுக்க, அவனின் பின்னோடு வந்த விமல், "பூரணி கேட்டரிங் மேனேஜர் சார். உங்களுக்கு தெரியாததா?" என்றான்.

"ஆமா, தெரியாதுதான்," என்று விட்டு அவளை நோக்கி சென்றான்.
 
அத்தியாயம்-06

"மேம் சார் உங்களைப் பார்க்கணும்னு சொன்னார் " என்று நடிகர் திவாகரின் அசிஸ்டன்ட் கூற ,சம்மதமாக தலையசைத்தவள்.

ஆத்ரேயன் அவளை நெருங்கும் முன் அங்கிருந்து அகன்றாள் .

"ஓ காட் இவளுக்கு இருக்கு வெச்சிக்கிறேன்" என்று எரிச்சலில் முணுமுணுக்க,அவனை பின் தொடர்ந்து வந்த விமலுக்கு இது கேட்டு விட ,"ஐயோ சார்" என்று அலறி இருந்தான் .

அதில் கடுப்புடன் அவன் புறம் திரும்பியவன் .

"உனக்கு என்ன டா " என்று அதட்ட ,சார் என்று விமல் அவனை அதிர்ச்சியுடன் அழைக்கவும் தான், கத்தியது புரிந்தது .

உடனே தன் கோபத்தை கட்டுப்படுத்தியவன். "இப்போ என்ன போய் வேலையை கவனி .போ ஸ்கிரிப்ட் பேப்பரை சாந்தவி கிட்ட கொடுத்து எக்ஸ்ப்ளைன் பண்ணு. நாளைக்கு சின்ன மிஸ்டேக் கூட வரக்கூடாது" என்று ஏவ ,

"சார் பேக்கப் சொல்லிட்டீகளே" என்றான் பாவமாக.

"ஏன் பேக்கப் சொன்னால் வேலை செய்யமாட்டியா?" என்று அதற்கும் எகிற ,

"ஐயோ சார் அப்படியெல்லாம் இல்லை "என்றவன். ஆத்ரேயன் மேலும் கூறும் முன் அங்கிருந்து அகன்றான் .

ஆத்ரேயன் பார்வை செட்டை வட்டமிட்டது .உணவு நேரம் என்பதால் தங்கள் குழுக்களுடன் அவர்களுக்கு என்று ஒதுக்கப் பட்ட இடத்தில் அமர்ந்து உணவு உண்டு கொண்டு இருந்தனர் .

"சார் சார்" என்று கூவியப் படி விமல் வர,என்ன என்று சலிப்புடன் அவனை ஏறிட்டான் .

"சார் சாந்தவி மேம் கிட்ட டயலாக் பேப்பர் கொடுத்து எஸ்பிளான் பண்ணினேன் .அவங்களுக்குப் புரியலையாம் .உங்களைப் பார்க்கணும் சொன்னாங்க " என்று மேல் மூச்சு வாங்க கூறினான் .

"பச் விமல் .இங்கே வர சொல்லு .எல்லாம் நானே தான் சொல்லனுமா?.சின்ன விஷயத்தை கூட ஹாண்டில் பண்ண முடியாதுன்னா எனக்கு எதுக்கு அசிஸ்டன்ட் "என்று கடுகடுத்தான்.

அவனின் குற்றச்சாட்டை தாங்கமுடியாமல் ,"சார் நான் பலதடவை எஸ்பிளேன் பண்ணிட்டேன்.உங்களை மீட் பண்ணக் கேட்டப் போது கூட இங்கதான் வர சொன்னேன். ஆனால்,பேக்கப் பண்ணும் போது டஸ்ட் வரும் எனக்கு அலர்ஜி. டைரக்டர் சாரை வர சொல்லுன்னு மறுத்துட்டாங்க "என்றான் பாவமாக .

ஓ என்றப் படி தாடையை தேய்த்தவன் .அசையாமல் நின்று விட ,விமலுக்கு இப்போ என்ன செய்ய என்ற மனநிலைமை தான் .

"சாப்பாடு எல்லாம் ஓகே வா" என்று மௌனம் களைந்துக் கேள்வி கேட்க ,'இதெல்லாம் இவர் கண்டுக்க மாட்டாரே 'என்று எண்ணினாலும்,

"உங்க கேட்டரிங் ஆச்சே.அதில் என்ன சார் குறை " என்று விமல் சிலாகித்து கூற ,

ஆத்ரேயன் கேள்வியாக ஒற்றை புருவம் உயர்த்திய விதத்தில் பயந்து போனான்.

"சார் உண்மையா தான் சார் "என்றான் அழாக் குறையாக,

"என்னோட மெனு சொல்லிட்டீயா?".

"எஸ் சார்".

"பழைய மெனு வேண்டாம்".

"ஓ மெனு மாத்தணுமா சார் .ஓகே நீங்க சொல்லுங்க நான் மிஸ்.திகழ் கிட்ட இன்போர்ம் பண்றேன் ".

"மிஸ்.." என்று இவ்வார்த்தையை மட்டும் இழுக்க ,

"சார்" என்று புரியாமல் விமல் மீண்டும் கேள்வியாக அவன் முகம் பார்க்க ,மிஸ் என்று அழுத்தமாக அவன் அவ்வார்த்தைகளை உச்சரிக்கப் புரிந்தது.

"ஓ..அவங்க பேர் மிஸ்.திகழினி அம்மையப்பன் சார்"

"சௌண்ட்ஸ் குட் இதையே பெல்லொவ் பண்ணிக்க சொல்லு" என்று விட்டு ஆத்ரேயன் அங்கு இருந்து நகர ,'ங்கே' என்று விழித்தப் படி ,விமல் நின்று விட்டான் .

திவாகரின் கேரவனில்,திகழ் அவன் கூற மெனுவை குறித்து கொண்டு ,அங்கு இருந்து விலக ,திவாகர் போகும் அவளையே பார்த்து கொண்டு இருப்பதைக் கண்ட அவன் ஸ்டைலிஸ்ட் சார் என்றான் நமட்டுச் சிரிப்புடன்.

"பல்லைக் காட்டாமல் வேலையை பார்" என்று அவனை அதட்டினான் .

"என்ன மேம் எல்லாம் முடிச்சுதா "என்று கேட்டரிங் சூப்பர்வைசர் சந்தான மூர்த்தி கேட்க,

"இல்லை சார் இன்னும் டைரக்டர், ஹீரோயினி கிட்ட மெனு வாங்கணும் "என்று தன்னிடமிருந்தக் கையடக்க நோட் பேட்டை பார்த்தபடி கூறினாள்.

"பார்த்தீங்களா ராம். முன்னெல்லாம் என்னென்ன வேணும்னு மெனு மட்டும் தான் வரும். இப்போ என்னன்னா ஒவ்வொன்றுக்கும் நாம போய் பார்க்கிறதா இருக்கு" என்று தன் சக ஊழியரிடம் சலித்துக் கொண்டார்.

"அட ஏன் பா.இது எவ்வளவு பெரிய ப்ரொடெக்ஷன் தெரியுமா. அதிலிலும் புரொடியூசர், மேடம் கிட்டையே ஷூட்டிங் நடக்க போற 30 நாளும் நீங்க தான் பார்த்துக்கணும்னு ரிக்வெஸ்ட் பண்ணி இருக்காங்க. அதனால் தான் இவ்ளோ கவனிப்பு" என்ற தங்களுக்குள் பேசிக்கொள்ள,அதை காதில் வாங்கிய படி அங்கிருந்து அகன்று ஹீரோயின் கேரவனிற்கு வந்தாள்.

சாந்தவியின் அசிஸ்டன்ட் இடம் அனுமதி கேட்டு காத்திருக்க, "ஐந்து நிமிடம் கழித்து உள்ளே செல் " என்று விட்டு அவளோ அவசர வேலை என்று அங்கிருந்து சென்றாள்.

கை கட்டிய படி நின்று கொண்டவள். செட்டை ஆச்சரியமாக பார்த்தாள்.

இதுவரை ஷூட்டிங் என்ற ஒன்றை பார்த்ததே இல்லை. இப்பொழுது ஆர்வத்துடன் பார்த்தவள் நேரம் கடந்து விட்டதை உணர்ந்து கதவை தட்ட உள்ளிருந்து எந்த சத்தமும் இல்லை.

மீண்டும் ஒருமுறை கதவை தட்டி விட்டு திறக்க, அங்கிருந்த ஒற்றை சோபாவில் கையில் ஒரு மாத இதழைப் புரட்டியபடி ஆத்ரேயன் அமர்ந்திருந்தான்.

சத்தம் கேட்டு அவன் நிமிரவும் அவன் முன் சாந்தவி கவர்ச்சிகரமான உடையில் வந்து நின்றாள்.

" பாருங்க சார் எவ்வளவு லூசா இருக்குன்னு.இதை தான் காஸ்ட்யூம் என்று கொடுத்து கண்டிப்பா போடணும்னு உங்க காஸ்டியூம் டிசைனர் சொல்றார். கேட்டால் டைரக்டர் இதைத்தான் அக்சப்ட் பண்ணி இருக்காருன்னு கண்டிக்கிறார். நீங்களே சொல்லுங்க இந்த ட்ரெஸ் எப்படி நான் போடுவேன்" என்று உடலை வளைத்த கொண்டே குழைந்த குரலில் கேட்டாள்.

அதில் முகம் சுளித்து வேறுபுறம் திரும்பியவனின் பார்வையில் திகழ் விழிந்தாள்.

'இவ எதுக்கு இங்கே வந்தாள்' என்று அவளைக் கேள்வியாக பார்த்தான்.

திகழ் பளிங்கு தேகத்துடன் மின்னிக்கொண்டிருந்த சாந்தவியை ஆச்சரியமாக பார்த்தாள்.

ஆத்ரேயன் பார்வை வேறு புறம் இருப்பதை உணர்ந்து திரும்பியவள். திகழை கண்டு அதிர்ந்தாள்.

"யூ இடியட் யாரை கேட்டு உள்ளே வந்த" என்று கத்தியப் படி,ஓவர் கோட்டை போட்டு தன் உடலை மறைத்துக் கொண்டாள்.

அவள் சத்தத்தில் தெளிந்து, "சாரி மேம் உங்க அசிஸ்டன்ட் தான் பைவ் மினிட்ஸ் கழிச்சு உள்ளே போக சொன்னாங்க. நான் டோர் நாக் பண்ணேன்" என்றதும்,

" யூ இடியட்" என்று அவள் கத்தப் போக,"விடுங்க" என்றவன் அவளை அழுத்தத்துடன் பார்த்தான்.

அதில் சாந்தவியின் இதழ்கள் கப் என்று மூடிக்கொண்டது.

திகழை தலை முதல் கால் வரை அலட்சியமாக பார்த்தப்படி, "என்ன வேணும்" என்று கேட்க,

" பூரணி கேட்டரிங் மேனேஜர் மெனு கேட்க வந்தேன்" என்றதும் தனக்காக உணவை கூற அனைத்தையும் குறித்துக் கொண்டவள்.

"டைரக்டர் உங்களதும் சொல்றீங்களா "என்றதில், சில கணங்கள் அவள் முகத்தை ஆழ்ந்து பார்த்துவிட்டு எழுந்தபடியே, " தேவையில்லை என் வீட்டில் இருந்து எனக்கு சாப்பாடு வரும்" என்று கூறியவன் அங்கிருந்து விலக பார்க்க,

" இந்த டிரஸ்" என்று சாந்தவி மீண்டும் கீச்சுக் குரலில் ராகம் இழுக்கவும்,

"நான் இந்த டிரஸ் ஓகே பண்ணலை. கரணும் என்னோட மூவியில் இந்த மாதிரி டிரஸ் எல்லாம் கொடுக்க மாட்டார். நான் அவர்கிட்ட பேசுறேன்" என்றதும்,

தன் குட்டு வெளிப்படும் என்ற பயத்தில், "அதெல்லாம் தேவையில்லை நான் அவர்கிட்ட பேசுகிறேன்" என்றவளை விசித்திரமாக பார்த்துவிட்டு,

அவன் திரும்ப அதற்குள் திகழ் அங்கிருந்து சென்று இருந்தாள்.

மூடிய கதவை பார்த்தவன் தன் அருகில் நெருங்கியவளை பார்வையால் தள்ளி நிறுத்தினான்.

" ஏதாவது டவுட்னா விமல் கிட்ட கேளுங்க " என்று அழுத்தமாக கூறிவிட்டு வெளியேற, கேட்டரிங் வேன் கேட்டை தாண்டி சென்று கொண்டிருந்தது.

செட் பிராப்பர்ட்டியை அனைவரும் எடுத்து வைத்துக் கொண்டிருக்க," விமல் எல்லாத்தையும் மேனேஜ் பண்ணிப்பியா" என கேட்டான்.

விமலோ, " சார் நான் பார்த்துக்கிறேன் " என்றான்.

அதில் தலையசைத்து அங்கிருந்து விடை பெற, சாந்தவி தாயோ மகளை வாட்டி எடுத்து விட்டார்.

நேரே தனது வீட்டிற்கு வந்தவன்.

தாய் சோபாவில் அமர்ந்து ஹெட் போனில் ஏதோ பாட்டு கேட்டுக் கொண்டிருப்பதை கண்டு கடுப்புடன் அவர் ஹெட்செட்டைப் பறித்தான்.

"வாங்க வாங்க. பார்த்து ரொம்ப நாள் ஆச்சு "என்று இயல்பு போல் நக்கலாக அவர் அழைத்ததில் கடுப்புடன் முறைத்தவன்.

"எங்க அவ " என்றான் அதட்டலாக.

"எவ" என்று அவன் அதட்டலுக்கு பணியாத குரலில் வினாவ, தாயின் முகத்தில் இருந்த அமைதியில் நிலை பெற்றான்.

தன் மீது கோபத்தில் உள்ளார். வைத்து செய்ய பார்க்கிறார் என்பது புரிய, அதற்கு மடங்க கூடாது என அழுத்தமாக நின்றிருந்தவன்.

"எங்க உங்க மருமக".

"ஏன் இந்த நேரம் உனக்கு தெரிஞ்சிருக்குமே " என்று அதைவிட அலட்சியமாக அவர் பதில் அளிக்க,

"மாம் எதுக்கு இந்த வேலையெல்லாம் அவள் கிட்ட கொடுக்குறீங்க.அதுவும் ஸ்ட்ரைட்டா மேனேஜர் வேலை.இதெல்லாம் உங்களுக்கே ஓவரா இல்லை" என்றான் ஆதங்கமாக.

" எனக்கு அப்புறம் அவதானே வாரிசு "என்றதில் மா என்று அலறி இருந்தாள்.

" உங்களுக்கு பைத்தியம் பிடிச்சிருச்சு".

" என்னடா" என்று சலிப்பாக அவர் கேட்க,தாய் வேண்டுமென்றே தன்னிடம் வார்த்தை ஆடுகிறார் என்பதை புரிந்தவன்.

"மாலா அக்கா ஒரு காபி" என்று சத்தமாக கேட்டான்.

தாயிடம் பேசுவது வீண் என சோபாவில் அவன் அமர, அவரோ மீண்டும் ஹெட் செட்டை போட்டுக் கொண்டு பாட்டு கேட்க,

"திமிர் எல்லாமே திமிர் " என்று வாய்க்குள் முணுமுணுத்தவன்.

காபியை பருகி விட்டு, காத்திருக்க நேரம் தான் கடந்ததே தவிர அவனின் திடீர் மனைவி வந்தது போல் தெரியவில்லை.

அதில் தாயை கடுப்புடன் முறைத்து விட்டு மேலே தன் அறைக்கு செல்ல, அங்கு பெண்ணவளின் பிரசன்னம் நன்கு தெரிந்தது.

இந்த அம்மாவை என்று கடுப்புடன் பல்லை கடித்தவன்.

தனது அலமாரியை திறக்க அதில் பாதிக்கு பாதி அவளின் உடைகள் வீற்றிருந்தது.

அதில் உடல் பற்றி ஏரிய, கோபத்துடன் அவள் உடைகளைக் கலைத்துவிட்டு தன்னுடைய உடையை எடுத்துக் கொண்டு குளியல் அறைக்குள் நுழைந்தான்.

குளித்துவிட்டு தலையைத் துவட்டியப்படி அவன் வெளியே வந்த போது உடைகளை கலைந்து கொண்டு இருந்த மனைவி கண்ணில் பட, "ஏய்" என்று அலறி இருந்தான்.

அதில் அவளும் பதட்டத்துடன் புடவையை தன்னுடலில் சுற்றிக் கொண்டவள்.

அவனை அதிர்வுடன் நோக்க, " ஹே லூசு இங்கே என்ன பண்ற ஒழுங்கா வெளியே போ" என்று அவளை மிரட்ட, இப்படியே வா என்று தன்னை குனிந்து பார்த்தவள். அவனை இறைஞ்சல் உடன் நோக்க,

"ஒரே இம்சையா போச்சு" என்று வாய் விட்டே புலம்பியபடி அறையை விட்டு அவன் வெளியேற போக, " ஐயோ நில்லுங்க" என்று பதட்டத்துடன் அவனை நிறுத்தினாள்.

"இப்போ என்னடி" என்று எரிச்சலுடன் அவள் புறம் திரும்பியவன்.

காற்றின் காரணமாக விலகிய புடவையின் வழியே தெரிந்த வெற்று கைகளைப் பார்த்து வேறு புறம் திரும்பி கொள்ள," நீங்க.... நீங்க டிரஸ் பண்ணலையா" என்றாள் தரைப் பார்த்தபடி.

அப்பொழுதுதான் வெறும் டவலுடன் நிற்பது புரிந்தது.

அதில் முகத்தில் மொத்த ரத்த ஓட்டமும் பாய, அவளை உறுத்து பார்க்க,அவளோ தலை குனிந்து படி வேறெங்கோ பார்வையை பதித்து இருந்தாள்.

அதில் கடுப்புடன் அலுவல் அறைக்கு சென்று கதவை அடித்து சாற்றினான்.

அதில் உடல் தூக்கி வாரி போட,தன் உடைகளுடன் வேகமாக சென்று குளியல் அறைக்குள் நுழைந்து கொண்டாள்.

 
அத்தியாயம்-07

"அம்மா " என்ற கத்தலுடன் வந்து நின்றவனை நிதானமாக ஏறிட்டு பார்த்தவரின் செய்கையில் கடுப்பாகி போனவன்.

" அவ என் ரூமில் என்ன பண்றா" என்றான் எரிச்சலுடன்.

" எவ? " என்று கேள்வியாக அவனைப் பார்க்க,

"அதன் உங்க ஆஸ்தான மருமக" என்றான் சிடுசிடுப்புடன்.

"அதான் நீயே சொல்லிட்டியே. என்னோட மருமகள்னு. அப்படின்னா என் மகனோட பொண்டாட்டி தானே. அவளை மகன் ரூமில் விடுறது தானே நியாயம்" என்று தத்துவம் பேசியவரைக் கண்டு முறைக்க மட்டுமே அவனால் முடிந்தது.

"என்ன இது. தலையைக்கூட ஒழுங்கா துவட்டாமல் வந்து நிக்கிற" என்று மற்றதை விடுத்து, அவனிடம் அக்கறையாகக் கடிந்தார்.

"எல்லாம் நீங்க பண்ணி வச்ச வேலைதான்" என்று முணுமுணுத்தப் படி சோபாவில் அமர்ந்து கொள்ள, திகழ் நிதானமாகப் படி இறங்கி வந்தாள்.

தயக்கத்துடன் அன்னபூரணி அருகில் நிற்க, "ஏன்டா நின்னுட்டு இருக்க. போய் உட்காரு" என்று ஆத்ரேயன் அருகில் உள்ள இருக்கையை சுட்டிக்காட்ட, அவன் முறைப்பில்,

" கிச்சனில் வேலை இருக்கு. வறேன் அத்தை " என்று விட்டு அவள் செல்ல போக, " அவனோட டயட் ஃபுட் கொண்டு வாடா" என்று அன்னபூரணி குரல் கொடுக்க, தலையசைத்தவள். ஓடியே விட்டாள்.

" ஷூட்டிங் எல்லாம் எப்படி போச்சு " என்று அவர் கேட்கவும் மற்றதை மறந்து அவரிடம் இயல்பாக பேசியவனுக்கு சிறு குறுகுறுப்பு.

ஏதோ யோசனையில் அப்படியே அமர்ந்து விட, " கண்ணா வா சாப்பிடலாம் " என்ற தாயின் குரலுக்கு தலையசைத்தவன்.

டைனிங் டேபிளில் அமர, இரண்டு சப்பாத்தி காய்கறிகளுடன் ரோல் செய்யப்பட்டு இருக்க,வேக வைத்த முட்டை, ஃப்ரஷ் ஜூஸ் அழகாக அவன் முன் பரிமாறப்பட்டது.

ஒருவாய் உண்டதுமே புரிந்தது.

தாயின் சமையலும் அல்ல. சமையல் அம்மாவின் சமையலும் இல்லை என்றதும் நிமிர்ந்து பார்க்க,

அன்னபூரணியின் கேள்விகளுக்கு பதில் அளித்தபடி உண்டு கொண்டிருந்தவளின் இதழ் கடையோரம் மெல்லிய புன் சிரிப்பு.

பெருமூச்சுடன் தன் உணவை முடித்துவிட்டு தன்னறைக்கு சென்றவன்.படுக்க மனம் இல்லாமல் அலுவலக அறையில் நுழைந்து கொண்டான்.

ஏனோ அவன் அறையே அன்னியமாகி போனது போல் ஒரு பிம்பம்.

அதை யோசித்தபடி சில நிமிடங்கள் கழிய தன் எண்ணப் போக்கை கண்டு நொந்து கொண்டவன்.

படம் முடியும் தருவாயில் இருக்கும்போது அதில் கவனத்தை செலுத்துவோம் என்று தனது மேக் புக் உடன் மூழ்கி போனான்.

அனைத்தையும் சரிபார்க்க நேரமும் அதில் கழிந்தது. கழுத்தைத் தேய்த்தபடி எழுந்தான்.

உறக்கமும் வந்திருக்க,சோம்பல் முறித்தவாறு வந்து பெட்டில் விழுந்தவனுக்கு,அதன் பிறகு தான் திகழின் ஞாபகமே வந்து பதறி கொண்டு எழுந்தான்.

டேபிள் லம்பின் ஒளி மட்டுமே இருக்க விடிவிளக்கை போட்டவன்.சுற்றிலும் தேட,அவள் இருப்பதற்கான சுவடே தெரியவில்லை.

"எங்கே போன இவ" என்று வாய் விட்டே புலம்பிய படி பெட்டை விட்டு எழுந்தவன் பாதம் தரையில் படாமல், திகழின் இடையில் பட பதறி கொண்டு அவன் காலை எடுக்கவும் திகழ் வேகமாக எழவும் சரியாக இருந்தது.

அப்பொழுதுதான் அவள் படுத்திருக்கும் இடத்தைப் பார்த்தான்.

தரையில் மெத்தை விரித்து அதில் படுத்து இருந்தாள்.

எதுவும் பதில் பேசாமல் அவள் அப்படியே அமர்ந்திருப்பதைக் கண்டு, நெற்றியை பிடித்துக் கொண்டவன்.

"அப்போ நீ பெட்டில் தூங்குறது இல்லையா" என்று ஆச்சரியத்துடன் வினாவ,

அவளோ இல்லை என்று மௌனமாக தலையசைக்க, இதற்கு என்ன கூறுவது என்று புரியாமல் அவன் விழிக்கும் போதே,

"வேற ஏதாவது வேணுமா" என்றாள். அதில் அவன் புரியாமல் பார்க்க,

"ஏதாவது வேணுமா?" என்று மீண்டும் மெல்லிய குரலில் அவள் கேட்கவும்,

" அப்படி என்ன கிடைக்கும்" என்றவனின் பேச்சில் சிறு கள்ளத்தனம் புகுந்து கொண்டது.

அதை உணராதவள். " காபி டீ ஏதாவது" என்று அவன் சிவந்தக் கண்களைப் பார்த்தபடி கேட்க,

தேவையில்லை என்றதும், திகழ் தலையசைத்து விட்டு, போர்வையை போர்த்திக் கொண்டு படுத்து விட்டாள்.

அவளை சில கணங்கள் வெறித்தவன். டேபிள் லாம்பை அணைத்து விட்டு படுத்தான். மனதில் அவளின் செய்கைகள் குழப்பத்தை உண்டு பண்ணியது.

அடுத்த நாள் அவன் விழித்து பார்க்கும்போது பெண்ணவளும் இல்லை.அவள் படுத்திருந்த மெத்தையும் அங்கு இல்லை.

சோம்பல் முறித்தவாறு எழுந்தவன்.லேம்ப் டேபிளில் இருந்த கிரீன் டீயை கண்டு,மெச்சதலாக ஒற்றைப் புருவம் உயர்த்தினான்.

தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வந்தவன். கிரீன் டீயுடன் பால்கனி கதவை திறந்ததும் முகத்தில் விழுந்த நீர் திவளைகளில் பச் என்றபடி கண்ணை மூடி திறக்க,

"சாரி உங்களை கவனிக்கலை" என்றவளின் பதட்டமான விளக்கத்தில் அவளை நன்றாக பார்த்தான்.

குளித்து முடித்து, ஈரம் சொட்டும் அவளின் கார்கூந்தலை வெயிலில் உலர்த்திக்கொண்டு இருந்தாள்.

அவன் இமைக்காமல் பார்க்கவும் அங்கிருந்து விரைந்து திகழ் செல்ல, "டிரையர் யூஸ் பண்ணிக்கலாம் இல்லை" என்றான். பால்கனி கம்பியில் சாய்ந்த படி.

அவளின் வேகநடை அதில் நின்றது. முகத்தை மட்டும் அவன் பக்கம் திருப்பி, " பழக்கம் இல்லை" என்று விட்டு செல்ல,யோசனையாகப் பார்த்தவனின் கை சுட்டதில் நினைவுக்குத் திரும்பினான்.

"ரொம்ப வித்தியாசமா இருக்கா" என்று முணுமுணுத்தவன். அந்த இளங்காலைப் பொழுதை ரசித்தபடி கிரீன் டீயை முடித்தவன்.

டீ டேபிளில் அவன் படிக்கும் மேகசினும், செய்தித்தாளும் இருக்கவே, அதில் ஆழ்ந்து போனவன்.நேரமாவதை உணர்ந்து குளிக்க சென்றவன். எச்சரிக்கையாக உடைமாற்றி விட்டே வந்தான்.

திகிழ் இருப்பதற்கான சுவடே இல்லாமல் இருக்கவும்,விமலுக்கு அழைத்தான்.

எதிர்புறம் அழைப்பு எடுக்கப்பட்டதும் மெல்லிய சாம்பிராணியின் வாசம் நாசியில் ஏற, திரும்பிப் பார்க்க அவள் தான் அறைக்கு சாம்பிராணி போட்டுவிட்டு அவனைக் கண்டதும், தயக்கத்தோடு உடனே வெளியேறி இருந்தாள்.

"சார் சார்" என்று விடாமல் ஒலித்த விமலின் குரலில், "என்னடா உனக்கு பிரச்சனை. எதுக்கு கத்திட்டு இருக்க " என்று கடிய,எதிர்ப்புறம் இருந்தவனோ புரியாமல் விழித்தான்.

"சார்" என்று அதிர்ந்து போய் அவன் அழைக்கவும் தான், " பச் மூவிக்கான கவர் பிக் புதுசு வேணும்" என்றான் கட்டளையாக.

" சார் ஏற்கனவே எடுத்து ரிலீஸ் ஆக ரெடியா இருக்கே " என்றவன் பெரும் தயக்கத்துடன் கூற,

"நோ,நான் வேற மாதிரி யோசிச்சு இருக்கேன் ப்ரொடியூசர் கிட்ட அப்பாயின்மென்ட் வாங்கு. அப்படியே ஸ்டைலிஷ் கரன் கிட்டையும்".

எப்பொழுதும் போல் ஆத்ரேயனின் திட்டம் எதுவென்று புரியாமல் குழம்பி மண்டையை பிய்த்துக் கொண்டாலும், அவன் கூறுவதை செய்ய ஆயத்தமானான்.

தயாராகி கீழே வந்த ஆத்ரேயன் புறப்பட்டு தயாராகி நின்றிருந்த திகழை, கண்டு கேள்வியாக புருவம் உயர்த்த, தாயின் குரலில் அவரின் மீது கவனத்தைப் பதித்தான்.

" ஆர்டர் டெலிவரி ஆகி அவங்க ஓகே சொன்ன உடனே பேமெண்ட் வாங்கிடு திகழ். பேர்தான் பெத்த கம்பெனி. ஆர்டர் டெலிவரி ஆனா உடனே பேமெண்ட் போடுவதே இல்லை.ஒன் வீக் கழிச்சு நாமளே கேட்டால் மட்டும் தான் பேமென்ட் போடுறாங்க. வார்னிங்கும் கொடுத்தாச்சு. இதுதான் லாஸ்ட் டைம் இப்பவும் பேமென்ட் டிலே பண்ணினால் கண்டிப்பாக அவங்க ஆர்டரை எடுக்கவே கூடாது.ஆள் இருப்பாங்க இருந்தாலும் நீ கூட போறது நல்லது டா " என்றார்.

திகழும் சிரத்தையாகக் கேட்டுக் கொண்டாள்.

தொண்டையை செரும்பியப்படி வந்து அமர்ந்தவனை, இருவருமே கண்டு கொள்ளவில்லை.

அதில் முறைப்புடன் இருவரையும் பார்க்க முதலில் நிமிர்ந்த அன்னபூரணி, "சாப்பாடு எடுத்து வைக்கவா கண்ணா ".

அவருக்கு பதில் அளிக்காமல் திகழை பார்க்க,அதை உணர்ந்து,"நீ இப்போதைக்கு இந்த வேலையை மட்டும் முடிச்சிடுடா. அப்படியா கண்ணாக்கு சாப்பாடு வை. நான் பூஜையை முடிச்சிட்டு வரேன்" என்று நாசுக்காக அங்கிருந்து விலக,

தயங்கினாலும் அவனுக்கு பரிமாறியவள்.

அப்படியே நின்று இருக்க, " சாப்பிடுற ஐடியா இல்லையா" என்றவன் கேள்வியில் அவனை புரியாமல் பார்த்தாள்.

" இப்போ கிளம்பனும் தானே. சாப்பிடு" என்று விட்டு அவன் உணவில் கவனத்தை செலுத்த,அவனை விட்டு ஐந்து இருக்கைகள் தள்ளி அமர்ந்து உணவை போட்டுக்கொண்டு உண்ண ஆரம்பித்தவளையும், தங்களுக்கு இடையே இருந்த இடைவெளியும் கண்டு புருவம் சுருக்கியவன்.

தன் அருகில் அமர்ந்த தாயைக் கடுப்புடன் நோக்கினான்.

அவன் பார்வையில், " என்ன கண்ணா சட்னி வேணுமா " என்று அவன் புறம் கிண்ணத்தை நகர்த்த பற்களை கடித்தவன்.

அந்த சட்னியையும் தட்டில் போட்டு உண்ண ஆரம்பித்தவனுக்கு தாயையும்,அவர் தன் தலையில் கட்டிய திகழையும் எண்ணி கோபம் பெருக்கெடுத்தது.

அதே கடுகடுப்புடன் உண்டு விட்டு எழுந்தவன். "உங்க அருமை மருமகளோட போன் நம்பர் வேணும்" என்றான் சத்தமாக.

"மருமக போன் நம்பர் கூட இன்னும் வாங்காமல் இருக்கியே. என்ன டைரக்டரோ போ" என்றதில்,

" இப்போ எதுக்கு இதை இழுக்குறீங்க" என்று அவன் கடுப்புடன் கடிய, அதைக் கண்டுகொள்ளாமல்,

"திகழ் உன் புருஷன் போன் நம்பர் உன்கிட்ட இருக்கு தானே" என்றதும் அவள் தலையசைக்க, பார் என்று அவர் முகத்தை தூக்கியதில் திகழை முறைத்தான்.

அதில் அவள் தலை குனிந்து கொண்டதில் இன்னும் கோபம் அதிகரிக்க தலையை அழுத்தக் கோதி கொண்டவன்.

தலைகுனிந்து நின்றிருந்தவளை பார்த்தபடி,"லஞ்ச் என்னோட ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு கொண்டு வந்து தர, ஸ்னாக்ஸும் ஆளுங்க கிட்ட கொடுத்து அனுப்பி விடு. நைட் சூட்டிங் முடியலன்னா டிரைவர் கிட்ட சாப்பாடு கொடுத்து விடு" என்று கூறியவன்.

தாயிடம் தலையசைத்துடன் விடை பெற, அன்னபூரணி இதழ்களில் திருப்தி புன்னகை உருவாக, திகழ், ' என்ன இது' என்ற பதறிப் போய் தன் மாமியாரை நோக்கினாள்.

"பொண்டாட்டி கையில் சாப்பிடணும்னு ஆசைபடுறான். என் தங்கம். ஒரே நாளில் அவனை மாத்திட்டியே.உன் கை பக்குவம் மறக்குமா, நாக்கில் அப்படியே ஒட்டிக்கிச்சு போல. இதுதான் சந்தர்ப்பம் அவனை உன் கைக்குள் போட்டுக்கோ திகழு " என்று அவளை தோளோடு அணைத்து சந்தோஷத்துடன் கூறிவிட்டு செல்ல,

ஆத்ரேயனிடம் ஓட்டிய ரீலை, தன்னிடமும் ஓட்டிய மாமியாரை அசந்து போய் பார்த்தாள்.

அவன் குரலில் இருந்த கடுகடுப்பை பொருட்படுத்தாமல்,ஏதோ ஆசையாக கேட்டது போல் கூறிய மாமியாரை எண்ணி சிரிப்பும் வந்தது.
 
அத்தியாயம்-08

அவ்விடத்தில் புழுதி பறந்து கொண்டிருக்க, நடன கலைஞர்களும், கதையின் நாயகன் நாயகியும் ஒலிக்கும் பாடலுக்கு ஏற்ப, அசைவுகளை வேகத்துடன் செய்து கொண்டிருந்தனர்.

அவை அனைத்தையும் கேமரா மெல்ல உள்வாங்கிக் கொள்ள, அதனை மிஞ்சும் கூர்மையுடன் ஆத்ரேயன் விழிகள் நுணுக்கமாக அனைத்தையும் சரிபார்த்துக் கொண்டிருந்தது.

கட் என்றவனின் கட்டளையில் மூச்சு வாங்க நின்ற நாயகி சாந்தவியோ, புழுதி பறக்கும் அவ்விடத்தை கண்டு முகம் சுழித்தவாறு உடனே கேரவனிற்குள் நுழைந்து கொள்ள,

' ஐயோ இன்னும் சூட் இருக்கு.இந்த அம்மா வேற உள்ளே போயிடுச்சே. சார் பார்த்தால் நான் காலி' என்ற உள்மன அலறலுடன் விமல் பதறிக் கொண்டு சாந்தவியின் கேரவனிற்கு ஓடினான்.

கதவை தட்டியும் திறக்கப்படாமல் இருக்க பயத்துடன் ஆத்ரேயனை நோக்க, அவனோ எடுத்த காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருக்க ஆசுவாசமடைந்தப்படி கேரவனை தட்டினான் .

ஷூட்டிங் நடக்கும்போது கேரவன் செல்ல அனுமதியில்லை. ஓய்வு நேரம் மட்டுமே கேரவன் பயன்படுத்த வேண்டும் என்பது ஆத்ரேயனின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எழுதப்படாத சட்டம்.

"ஷாட் ஓகே ரவி. கண்டினியூ பண்ணலாம்" என்று ஆத்ரேயன் கூறியதும்,டான்ஸ் மாஸ்டர் ரவிவர்மன் தனது குழுவை மீண்டும் சீராக அவ்விடத்தில் நிற்க வைத்தவன்.

அப்பொழுதுதான் சாந்தவி இல்லாமல் இருப்பதை கண்டு தனது அசிஸ்டன்ட் இலக்கியாவை அழைக்க, அவன் கேட்பதற்கு முன்பே, " பிரஷ் ஆயிட்டு வரேன்னு போயிருக்காங்க சார்" என்றாள்.

"சரி ஓகே.அவங்க வருவதற்குள் ஃபீமேல் டான்சர்ஸ் ஸ்டெப்ஸ் ரீகால் பண்ணிடு" என்றவன். நாயகனிடம் அவனுக்கான பகுதியையும் விளக்கினான்.

இன்றோடு இந்த படத்தில் உள்ள அனைத்து பாடல்களின் நடன காட்சிகளும் முடிகிறது. எனவே இன்னும் கவனமாக அனைத்தையும் கவனித்தான்.

நாயகனிடம் அவனுக்கான அசைவுகளை கூறி, தனது நடன குழுவையும் சீராக நிற்க வைத்து விட்டு சரிபார்த்தவன்.

ஆத்ரேயனிடம், " சூட் போகலாம் " என்று கூற,

ஆத்ரேயனும் மைக்கில், "ஓகே பொசிஷன் "என்றவன்.

அப்பொழுதுதான் சாந்தவி இல்லாமல் இருப்பதை உணர்ந்து,விமலைத் தேட "அய்யோ பாக்குறாரே" என்று பதறியவன்.விடாமல் கேரவன் கதவினை தட்டினான்.

" ஏன் மேன் விடாமல் கதவை தட்டிட்டு இருக்க இடியட்" என்று எகிறிக் கொண்டு வந்தவளைக் கண்டு உள்ளுக்குள் கோபம் வந்தாலும், அதனை அடி மனதில் புதைத்து விட்டு, " மேம் ஷாட்டுக்கு எல்லாம் ரெடி பண்ணியாச்சு".

" அதுக்கு இப்போ என்ன" என்று தெனாவெட்டாக அவள் கேட்டதில்,

கடுப்பான மனதை மறைத்துக் கொண்டு, " சார் இன்னைக்கு இந்த சாங் ஷூட்டிங் முடிக்கணும்னு சொல்லி இருக்கார். உங்களையும் பொசிஷனுக்கு வர சொன்னார் " என்றான்.,

சந்தாவியும் மற்றதை விடுத்து அவனை கவர வேண்டும் என்பதில் முகத்தை சீர் செய்து கொண்டே, கூந்தலை சிலிப்பி கொண்டு சென்றாள்.

விமலோ,' எல்லாம் தலையெழுத்து' என்று நொந்து கொண்டான்.

படப்பிடிப்பும் ஆரம்பிக்கப்பட, அனைத்தும் சீராக சென்று கொண்டிருக்க திரையை விட்டு ஆத்ரேயன் கண்கள் கடிகாரத்தில் பதிந்தது.

கேமராமேன் ஆர்வின் துலுக், " ஆர் யூ ஓகே" என்று மெல்லிய குரலில் கேட்க,

"யா ஐ அம் குட்" என்றான்.

' அப்படி நலமாக இருப்பது போல் தெரியவில்லையே' என்ற பாவனையில் அவர் ஆத்ரேயனை பார்க்க,

"அட கேமராவை பாருங்க சார். உங்களோட ஆங்கிள் தானே முக்கியம் " என்று மரியாதை கலந்த கிண்டலுடன் கூறினான்.

அத்தனை சீனியர் அவர். இயக்குனர் ஆவதற்கு முன்பே அவர் கேமரா கோணங்களின் மீது அத்தனை பிரமிப்பும்,ஆசையும்.

அதனால்தான் அவனின் பாதி படங்களில் அவர்தான் கேமரா மேன்.

"என்னோட ஆங்கிளுக்கு சரிசமமா உன்னோட பார்வையும் இருக்கணும். பட்,கவனம் இங்கே இல்ல போலவே " என்று விட்டு அவர் கேமரா திரையை வெறித்தார்.

எப்படியும் இந்த ஷாட் கட் ஆகப் போகிறது என்று தெரியும். ஆனால் ஆத்ரேயன் எதுவும் கூறாமல் இருந்தது தான் அவருக்கு ஆச்சரியம்.

அவன் தொழில் நுணுக்கங்களை கண்டவர் ஆயிற்றே. அவன் கண்களில் சிறு தவறும் அகப்பட்டு விடும். இப்பொழுது அப்படியே இருக்கவும் தான் அவர் வினாவியது .

உணர்வு பெற்று திரையை நோக்கியவன். சில நிமிடங்களிலே கட் என்று கர்ஜனையாக கூற,அதானே பார்த்தேன் என்று கேமராமேன் தன்னுடைய இருக்கையில் தளர்வாக அமர்ந்தார்.

"வாட் தி ஹெல் சாந்தவி.ஸ்டெப்ஸ் எல்லாம் நான் சிங்கில் போயிட்டு இருக்கு" என்றதுமே டான்ஸ் மாஸ்டர் இலக்கியாவை பார்க்க,

அவளும் தலையசைத்து விட்டு மீண்டும் சாந்தவிக்கு பயிற்சிகளை அளிக்க ஆரம்பித்தார்.

சாந்தவி சரி என்றதும் மீண்டும் அனைவரும் சீராக கேமராவின் கோணமும் சரியாக அமைக்கப்பட்டதும், ஆக்சன் என்றான்.

பாடல் மெல்லிய சத்தத்தில் ஒலிக்க பட மீண்டும் ஆத்ரேயனிடம் இடம் இருந்து கட் என்ற சத்தம்.

சாந்தவியை அழுத்தமாக பார்க்க, அவளோ அவனைப் பார்ப்பதும் தரையை பார்ப்பதுமாக இருக்க,

"ரிகர்சலுக்கு போகலையா" என்றான் கோபத்துடன்.

சாந்தவி, "அது கொஞ்சம் வேலையில்" என்று தடுமாற,

"சரியான மண்ணாந்தை" என்று வாய்க்குள் முணுமுணுக்க, கேமராமேன் சிரிக்கவும்,

" ஏன் சார் நீங்களும்" என்றவன். உடனே இலகுவானான்.

கடினமான ஸ்டெப்புகள் இருக்கவும் தான் ரிகர்சலுக்கு நாயகன் நாயகியை போகக் கூறினான்.

அவள் போகவில்லை என்பதில் இதற்கு மேல் என்ன பண்ண, எப்படியும் பயிற்சி தான் அளிக்க வேண்டும்.

'திட்டினால் மட்டும் திருந்தும் ஜென்மமா 'என்று பல்லை கடித்து பொறுத்துக் கொண்டவன்.

அவள் மீது பெரிதாகக் கவனத்தை செலுத்தாமல்," இலக்கியா ட்ரைனிங் குடுங்க" என்று விட்டு தளர்வாக அமர்ந்தான்.

"லஞ்ச் டைம் ஆயிடுச்சு இல்ல "என்று யோசித்தவாறு," ஓகே லன்ச் பிரேக் விட்டுருங்க".

அதனை விமலும் புரொடக்ஷனை சார்ந்த சத்யனும் அறிவிக்க, ஆத்ரேயனோ, " இன்னும் அரை மணி நேரத்திற்குள் தயாராக இருக்க வேண்டும்" என்று இலக்கியாவிடம் கட்டளையாக கூற,

அங்கிருந்த ஒரு அறைக்கு சாந்தவியை அழைத்து சென்று பயிற்சி அளிக்க ஆரம்பித்தாள்.

டான்ஸ் மாஸ்டரை அழைத்து, " என்ன சார் ரிகர்சலுக்கு வரலைன்னா சொல்லி இருக்கலாம் இல்லை ".

"ரிகர்சலுக்கு வந்தாலும் கொஞ்ச நேரம் இருந்துட்டு போயிடறாங்க சார். சொல்றதை கேக்குறது இல்லை. ஸ்டெப்ஸ் மேலோட்டமா போட்டுட்டு ஓகே எனக்கு பிக்கப் ஆயிடுச்சுன்னு கிளம்பிடறாங்க " என்றார் சலிப்புடன்.

"ஸ்டாங் ரெக்கமண்டேஷன் இல்ல" என்று விமல் நடுவில் புகுந்து கூற, அவனை முறைத்த ஆத்ரேயன்.

" ரெக்கமண்டேஷனில் இன்னும் ரெண்டு படம் கிடைக்குமா. அப்புறம் ஃபீல்ட் அவுட் தான். அதனால் வயிறு எரியாமல் போய் வேலையை கவனி" என்று அதட்ட,

விமலோ 'மனதில் இருந்ததை அப்படியே கண்டுபிடித்து விட்டானே' என்று எண்ணிக் நொந்தபடி அங்கிருந்து அகன்றான்.

டான்ஸ் மாஸ்டரை பார்க்க, " லஞ்சுக்கு அப்புறம் நான் ரெடி பண்ணிடுறேன்" என்றவாறு அவர் செல்ல, தனது கேரவன் வெளியே போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்தான்.

கடிகாரத்தை பார்த்தவன் விரல்கள் தொடையில் தாளம் இட்டது.

அன்னபூரணி கேட்டரிங்கில் இருந்து வந்த உணவுகளை தான் பணியாளர்கள் உண்டு கொண்டிருந்தனர்.

அதில் அவன் பற்களை கடிக்க, அவர்களின் கேட்டரிங் கார் வர அவனின் கவனம் அங்கு சென்றது.

அதிலிருந்து இறங்கிய திகழோ உணவு கூடையுடன் அவன் அருகே வந்தவள்.

"டைம் ஆயிடுச்சா உங்க லஞ்ச் டைமிங் எனக்கு சரியா தெரியல.சாரி "என்று விட்டு எங்கு உணவு பரிமாற என்று புரியாமல் விழிக்க,

"உள்ளே செட் பண்ணு" என்று கேரவனை காட்டவும் அவள் நுழைய, சிலரின் தலைகள் ஆச்சரியத்துடன் இதனை பார்த்தது.

"என்னடா புதுசா சாருக்கு சாப்பாடு எல்லாம் வருது.அதுவும் பொண்ணு கையில் "என்று புரொடக்ஷன் டீமை சார்ந்த சத்யன் ஆவலுடன் விமலிடம் வினாவ,

அவனுக்கும் அதே எண்ணம் தான். வீட்டு சாப்பாடாக இருந்தாலும் சரி ஹோட்டலில் ஆர்டர் பண்ணுவதாக இருந்தாலும் சரி, அவை அனைத்தும் விமலின் வேலை தான்.

இன்று பன்னெண்டு மணி அளவில் கேட்கும்போது கூட," சாப்பாடு வரும் "என்று கூற விமலும் அதனை பெரிதாக எடுக்கவில்லை.

ஆனால் இப்பொழுது வந்த திகழை கண்டு சிறு யோசனை தான்.

இருந்தாலும் தனது குருவை விட்டு தர மனமில்லாமல்," டேய் அவங்க கேட்டரிங் மேனேஜர். பூரணி மேம் கொடுத்து அனுப்பி இருப்பாங்க" என்று விட்டு அதைப் பற்றி பேச மனம் இல்லாமல் அமைதியாக உண்டு விட்டு எழுந்தான்.

செட்டை ஒரு பார்வை பார்த்துவிட்டு ஆத்ரேயன் கேரவனிற்குள் நுழைய, டேபிளில் கொண்டு வந்த உணவுகளை சீராக அடுக்கிக் கொண்டிருந்தாள்.

கை கழுவி விட்டு அமர்ந்தவன். தன் முன் வாழை இலையில் பரப்பப்பட்டிருந்த உணவைக் கண்டு," நான் டயட் ஃபுட் தானே கேட்டேன்".

"இல்லையே அத்தை கிட்ட கேட்கும் போது அவங்க தான் இதெல்லாம் செய்ய சொன்னாங்க" என்ற சிறு பதட்டத்துடன் கூறியவள், சில கண தயக்கத்திற்கு பிறகு,

" வேற ஏதாவது அரேஞ்ச் பண்ணிவா ".

அதில் மணியை பார்க்க, நேரம் கடந்து இருக்கவே," வேண்டாம். இதுவே ஓகே. ஆனால், அளவாக வை ".

ஆனால், அவள் பரிமாறிய வகைகளில் இலை நிறைந்தது.

அதில் அவளைப் பார்க்க திகழ் தரையை பார்த்தபடி இருப்பதை கண்டு பெருமூச்சுடன்,

"இப்படியே நின்னுட்டே இருக்க போறியா உட்கார்" என்று தன் அருகில் இருந்த இருக்கையை காட்டினான்.

வேறு இருக்கைகள் இல்லை எனவும் அமர்ந்தாள்.

சாதத்தில் குழம்பை பிசைந்தவாறு, "நீ சாப்டியா" என்றதும் ஏதோ கனவில் இருந்து மீண்டவள் போல் புரியாமல் அவனைப் பார்த்ததில் பாவமாய் போயிற்று.

' ஏதோ ஒரு மாதிரி இருக்கிறாளே' என்று எண்ணியபடி, " நீ சாப்பிட்டியா "என்று மீண்டும் கேட்டான்.

"ம்ம்ம் "

உணவை வாயில் வைத்ததுமே எங்கோ சாப்பிட்ட உணர்வு தான்.

போதும் என்று முதலில் கூறியவன். இலைகள் இருந்ததை மொத்தமும் காலி செய்ய, மீண்டும் சாதம் வைத்து வத்த குழம்பு ஊற்றினாள்.

ஒருவாய் உண்டதுமே கண்டு கொண்டான்.

"ஏய் நம்ம கல்யாணத்தில் சாப்பிட்ட சாப்பாடு டேஸ்ட் தானே இது" என்று விட்டு அவளை பார்க்க,

திகழோ," ஆமாம் நான்தான் சமைச்சேன் "என்றதும் புரை ஏறியது.

அதில் பதறி அவன் தலையில் தட்டி தண்ணீர் கொடுக்கவும், பருகியவன்.

சிறுது நிதானித்து,"என்ன உன் கல்யாணத்துக்கு சமைச்சியா" என்றான் விலகாத ஆச்சரியத்துடன்.

"ஆமா".

"ஏய் உனக்கு தானே கல்யாணம் நீயே சமைச்சியா" என்று அதிர்ச்சி நீங்காமல் வினவா,

" ம்ம்.நான் எங்க ஊர்ல சின்னதா கேட்டரிங் பிசினஸ் பண்ணிட்டு இருந்தேன். கல்யாணத்திற்கும் ஆளுங்களை வரவைத்து நானே தான் சமைச்சேன்".

"ஆமா நீ என்ன படிச்சிருக்க" என்று உணவை உண்டபடி, அவளின் தகவல்களையும் கேட்க,

"பிஎஸ்சி".

"ஓ சமைக்க பிடிக்குமா".

"தெரியலை. ஆனால் சமைக்க வரும்" என்றாள் அமைதியான குரலில்.

'இது என்ன பதில்' என்பது போல் பார்த்தாலும், அதற்கு மேல் கேட்கவில்லை.

இலையில் இருந்த உணவும் காலியாக,பார்த்து பார்த்து பரிமாறினாள்.

உடை நிறத்திற்கு ஏற்ப அணிந்திருந்த சிவப்பு நிற கண்ணாடி வளையல் மெல்ல குலுங்க,அவள் ஒவ்வொரு உணவாக இலையில் வைக்கும் போது, பார்க்க அழகாக இருந்தது.

' கை அழகா இருக்கே ' என்ற எண்ணம் தோன்றி மறைந்தது.

உண்டு முடித்ததும் அவன் கை கழுவி விட்டு அமர, அனைத்தையும் அப்புறப்படுத்தி ஒவ்வொன்றாகக் கூடையில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.

" ஸ்நாக்ஸ்க்கு என்ன கொடுத்து விடட்டும்".

"எங்கே இதுக்கே வயிறு ஃபுல். நைட் சாப்பாடு எனக்கு வேண்டாம்"என்றவன் அவளின் கழுத்தை யோசனையாக பார்த்துவிட்டு,"தாலி எங்கே" என்றான்.

அதில் அவள் கைகள் வேலை நிறுத்தம் செய்ய, உணர்வுகள் அற்று அவனைப் பார்த்தாள்.

இந்தப் பார்வைக்கு என்ன அர்த்தம் என்று அவன் அவளை ஆழ்ந்து பார்க்கும் போது கேரவனை திறந்து கொண்டு சாந்தவி வந்தாள்.
 
அத்தியாயம்-09

கதவைத் தட்டாமல் திறந்து கொண்டு வந்தவளைக் கண்டவனின் விழிகளில் கடுமை ஏறியது.

அதில் கோபத்துடன்,"வாட் " என்றான்.

ஆத்ரேயன் குரலில் இருந்த காட்டத்தில் திகைத்து விழித்த சாந்தவி.

அவன் அழுத்தமான பார்வையில்,"ஷாட் ரெடி நானும். ஆனால் உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்" என்றவளுக்கு உள்ளே பயத்தில் தடதடத்தாலும், வெளியில் மயக்கும் பார்வை பார்த்திருந்தாள்.

"வெளியே வெயிட் பண்ணுங்க. பேசலாம்" என்றவனின் பார்வை தற்போது திகழை பார்க்க,அவளோ கேரவன் கதவின் முன் வழி விடாமல் நின்று இருந்த சாந்தவியை ஆவலாக பார்த்து இருந்தாள்.

அதில் பற்களைக் கடித்தவன்.

" சாந்தவி" என்றதில் அவள் புரியாமல் விழிக்க திகழை பார்த்துவிட்டு தன்னையும் கதவையும் பார்த்ததும் புரிய, அதில் அவள் வெண்மை தேகம் உடனே செந்நிறம் பூசிக் கொண்டது.

ஆனாலும் அப்பொழுது தான் திகழை பார்ப்பது போல அலட்சியமான முக சுழிப்புடன், குதிகால் செருப்பு டக் டக் ஓசை எழுப்ப தரை அதிரும்படி வெளியேறியவள்.

கதவை அடித்து சாற்ற, மொத்த செட்டின் கவனமும் கேரவன் மீது இருக்கும் என்பதை உணர்ந்து பற்களை கடித்தவன். உள்ளுக்குள் அவளை அர்ச்சித்தான்.

அதே கோபத்துடன் திகழின் புறம் திரும்ப அவள் அப்படியே நின்று இருப்பதை கண்டு, "என்ன என் வாயை பார்த்துட்டு இருக்க. கிளம்பு" என்றதும், அவளும் திரும்பியும் பாராமல் சென்றாள்.

இடையில் பேச வந்த இலக்கியாவை சிறிதும் மதிக்காமல் கேரவனிற்குள் நுழைந்து கொண்ட சாந்தவிக்கு உள்ளம் எரிமலையாக கொதித்தது.

கோபத்தைக் குறைக்க முயற்சிக்க அது முடியாமல் போகவே,"மாம் என்ன ஆட்டிட்யூட் காட்டுகிறான் தெரியுமா? சரியான கல்லு" என்று ஆரம்பித்தவள். விடாமல் அவனை கரித்து கொட்டினாள்.

சமாதானப்படுத்த பார்த்த அவள் தாயின் வார்த்தைகள் எதுவும் செவிகளில் ஏறவில்லை. அத்தனை ஆங்காரத்துடன் கத்திக் கொண்டிருந்தாள்.

தன் அழகையும் தன்னையும் மதிக்காதவன் தனக்கு வேண்டவே வேண்டாம் என்று இறுதியில் கூறியதில் வேகத்துடன் அவள் கன்னத்தில் அறைந்திருந்தார்.

" மாம் " என்றாள் அதிர்வுடன்.

பேச வந்தவளைத் தடுத்து விட்டு போனை அவள் முன்னீட்ட,அதை வாங்கி படித்தவளுக்கு வலி எல்லாம் தூர ஓடியது.

" என்ன இது".

"நம்ம கட்ட வேண்டிய கடன் ஒரு கோடி"

இது எப்படி வந்தது எல்லாம் சாந்தவி கேட்கவில்லை.

அவள் தானே அத்தனை செலவும் செய்திருந்தாள்.

கையில் பட வாய்ப்புகள் இல்லாத போதும் வெளிநாடுகளுக்கு செல்வது அங்கிருக்கும் பிரபலமான காஸ்மெட்டிக்ஸ் வாங்குவது,அழகை மேம்படுத்திக் கொள்ள சிகிச்சைகள் மேற்கொள்வது என்று அவள் அழகை காப்பாற்றவே, பல லட்சங்களை தண்ணீராய் வாரி இறைத்திருந்தாள்.

அனைத்தும் கிரெடிட் கார்டின் உபாயம் .

வட்டியே பல லட்சங்களாய் உருமாறி இருந்தது.

இறுதி ஆறு மாதத்தில் ஒரு பட வாய்ப்பு கூட வரவில்லை. ஆத்ரேயனின் படத்திற்கு வரவே எத்தனை தகிடுதிட்டங்கள்.

இந்த படத்திற்கு அவளின் சம்பளம் பத்து லட்சம் தான்.

தன் நிலைமை புரிந்ததும் கோபம் எல்லாம் கரைந்து போய் நெற்றியில் கை வைத்து அமர்ந்து விட, " இதுக்கு தான் சொல்றேன். கொஞ்சம் வாயை அடக்கி எதையாவது பண்ணி அந்த ஆத்ரேயனை கைக்குள்ளப் போடுடி ".

" எனக்கு மட்டும் ஆசை இல்லையா.அவன் எதுக்குமே படிய மாட்டேங்கிறான்" என்றவளின் குரலில் அத்தனை சிடுசிடுப்பு.

அதில் தொண்டையை செரும்பிக்கொண்ட அவள் தாயோ, " நம்ம டான்ஸ் மாஸ்டர் இன்னைக்கு பார்ட்டி தராரு. அவர் அசிஸ்டன்ட் கிட்ட போட்டு வாங்கிட்டேன்." என்று ராகமாக இழுத்துக் கூறினார்.

"மாம் அதுக்கெல்லாம் என்னால் போக முடியாது. பப்பில் இன்னொரு பார்ட்டி இருக்கு ".

"அடியே மக்கு ஆத்ரேயனும் வரான். நான் எல்லாம் பிளான் பண்ணிட்டேன். சரியா நடந்தால் அவன் உனக்கு தான்.இந்த கடனையும் அடைச்சிடலாம். அப்புறம் சுகபோக வாழ்க்கை தான். யோசிச்சு பாரு "என்று மனதைக் கலைக்க,

அதற்குள் இலக்கியா வந்து ஷாட் ரெடி என்று அழைக்கவும்,அங்கு சென்றாள்.

ஆத்ரேயனை பார்க்கவே அவ்வளவு கடுப்பு எறியது.

அவன் ஒவ்வொரு முறையும், தன்னை மட்டம் தட்டுவதும், அசிங்கப்படுத்துவதும், வெறியேற்றியது.

அதற்காகவாவது திருமணம் செய்து அவனை தன் காலடியில் வைக்க வேண்டும் என்று வன்மத்துடன் எண்ணி கொண்டாள்.

படத்திற்கான இறுதி கட்ட நடன காட்சிகளும் முடிய, டான்ஸ் மாஸ்டர் அதை கொண்டாடும் விதமாக பார்ட்டிக்கு அழைப்பு விடுத்தார்.

" கண்டிப்பா இந்த சாங் ஹிட் அடிக்கும் " என்ற கேமராமேன் ஆர்வின் துலுக்கின் வார்த்தைகளில் உள்ளம் குளிர்ந்த போன டான்ஸ் மாஸ்டர் ரவிவர்மன் ,அவர் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினான்.

" கண்டிப்பா நீங்களும் பார்ட்டிக்கு வரணும் " என்றார்.

" சாரி. என்னால் வர முடியாது. அதான் ஹார்ட் ஆப் தி செட் ஆத்ரேயன் இருக்காரு இல்லை " என்று அவனைப் பார்க்க,

"போகலைனா நெக்ஸ்ட் படத்துக்கு தான் கொரியோகிராப் பண்ண மாட்டாரே" என்று ரவிவர்மன் தோள் தட்டி கூற, தெரிந்தால் சரி என்று ரவிவர்மன் கெத்து காட்டினார்.

படபிடிப்பு நிறைவடையவும் ஆத்ரேயன் உடனே வீட்டிற்கு செல்ல,அவன் மனைவியோ கண்களில் சிக்கவில்லை.

நேற்று போல் இன்றும் அவன் தாய் காதில் ஹெட் செட் உடன் பாடல்கள் கேட்டுக்கொண்டு இருக்க, பெருமூச்சுடன் அவரை பார்த்துவிட்டு தன்னறைக்கு சென்றான்.

தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வந்தவன். தாயின் அருகில் அமர அப்பொழுதுதான் பார்த்தது போல்,

"என்னப்பா சாப்பிடுறியா" என்று வினாவ, அவர் கேள்விக்கு பதில் அளிக்காமல் விழிகளை நால்புறமும் அவன் சுழற்ற, அதில் அவரின் இதழ் கடையோரம் புன்னகை பூத்தது.

"பொறுப்பெல்லாம் ஒப்படிச்சிட்டு ஜாலியா இருக்கீங்க போலயே" என்றதும்,

" எனக்கு 52 வயசு. ரிட்டயர்மென்ட் எடுத்துக்கறதில் தப்பு ஒன்னும் இல்லையே" என்று அவர் கூறிய தோரணையில் சிரித்தவன்.

" நீங்க இருக்கீங்களே" என்று விட்டு, "எங்கே உங்க திடீர் மருமகளை காணோம்".

'ஓ நீ அப்படியே வரியா' என்று மகனை நக்கலாக பார்த்தபடி,

" அதான் சொன்னனே ரிட்டயர்மென்ட் எடுத்துட்டேன். அப்படின்னா என் பொறுப்புகளை யார் பார்த்துக்கணும் அதுக்கு உடமைப்பட்டவங்க தானே பார்த்துக்கணும் " என்றதும்,

அவர் கூற்றில் வாய் விட்டே சிரித்தவன்." அப்போ முடிவே பண்ணிட்டீங்க " என்றான்.

"என்ன முடிவு? " என்று வினாவினார் .ஒன்றும் தெரியாதது போல்.

"அதான் உங்க திடீர் மருமகளுக்கு பொறுப்புகளை ஒப்படைகிறது தான்"

அதில் அவர் முகத்தில் இருந்த இலகு தன்மை சற்றென்று விலகியது.

"கண்ணா சும்மா சும்மா திடீர் மருமகன்னு சொல்லாதே, அவ உன் பொண்டாட்டி. இது கடவுள் போட்ட முடிச்சு"என்றார் வேகத்துடன்.

" கடவுள் போட்ட முடிச்சா. நீங்க செஞ்ச சதி" என்று அவருக்கு குறையாத கோவத்துடன் வார்த்தைகளை விட, இப்பொழுது அன்னபூரணி அமைதி காத்தார்.

அதில் அவன் தான் தளர்ந்து போய், "மா நான் அப்படி மீன் பண்ணலை" என்றதும்,

" புரியுது " என்றவருக்கு இப்பொழுது மனதில் கலக்கம் புகுந்துக் கொண்டது.

அதை அதிகரிக்க விரும்பாமல், தவிர்ப்பது போல் வந்த திகழை கண்டதும் மற்றதை மறந்து, " வாடா ம்மா. போய் ஃபிரஷ் ஆயிட்டு வா .காபி சொல்றேன்"

அதற்கு மௌனமாக தலையசைத்தவள்.

ஆத்ரேயனை கண்டு சிறிது தயக்கம் ஏற்பட்டாலும், " வாக்கிங் போகலையா நீங்க" என்றாள்.

"அதெல்லாம் முடிச்சிட்டு தான் வந்து உட்காந்து இருக்கேன் ".

மதியம் உணவை முடித்தாரா என்று கேட்டுவிட்டு, தனதறைக்கு சென்றாள்.

உடையை மாற்றி விட்டு வர, காபியும் வந்தது.மூவரும் அதை பருக, ஆத்ரேயன் பார்வை மொத்தமும் திகழ் மீதுதான்.

அவன் விழிகளில் வினா தேங்கி நின்றது.

ஆனாலும் கேட்காமல் மௌனமாக இருக்க அன்னபூரணியே," என்னடா மா மறுபடியும் புடவையில் வந்திருக்க".

"அது ஒரு பார்ட்டிக்கு ஃபுட் நம்ம கேட்டரிங் ல இருந்து அரேஞ்ச் பண்ணி இருக்காங்க.பைவ் ஸ்டார் ஹோட்டல் நான் போய் செட் பண்ணனும்" என்றதும் அன்னபூரணியின் முகம் யோசனையில் சுருங்கியது.

"ரெண்டு நாளைக்கு முன்னால் தான் ஆர்டர் வந்தது. நான் உங்ககிட்ட சொல்லிருந்தேன்" என்று விட்டு மற்ற விவரங்களை கூற,

"ஆமாம் மறந்தே போயிட்டேன். பாரு" என்றவர். மருமகளை மெச்சதலாக பார்த்துவிட்டு மகன் புறம் திரும்பினார்..

" கண்ணா உன் படத்தோட டான்ஸ் மாஸ்டர் தான் பார்ட்டி தராரு.மூன் மெரிட் ஹோட்டலில் "

"ஏன் அந்த ஹோட்டலில் சாப்பாடு நல்லா இருக்குமே" என்றவனை இரு பெண்களும் முறைத்தனர்.

"அந்த ஹோட்டலை விட்டுட்டு நம்ம கிட்ட வராங்கன்னா நம்ம சாப்பாடு இன்னும் சூப்பர்ன்னு அர்த்தம்" என்றவர்.

"ஆமாம். இன்னைக்கு டிரைவர் வரலையே எப்படி போவ " என்றார் திகழிடம்.

" கேப் புக் பண்ணிடுறேன் த்தை " என்றதும்,

" அதெல்லாம் வேண்டாம். வர லேட் நைட் ஆகிடும் கேப் நம்ப முடியாது" என்று யோசித்தவர்.

"ஆமா நீயும் எங்கேயே பார்ட்டிக்கு போறேன்னு சொன்னியே எங்கே " என்றவர்.

அப்பொழுது தான்," ஆமா உன் படத்தோட டான்ஸ் மாஸ்டர் தானே. அப்போ ரெண்டு பேரும் சேர்ந்து போயிட்டு வந்துருங்க " என்றதும்,ஆத்ரேயன் சம்மதமாக தலை அசைக்க,

திகழோ அதற்கு முன், " வேண்டாம் நான் கேப் புக் பண்ணி போகிறேன் அத்தை" என்று கூற, ஆத்ரேயன் அவளை உறுத்து விழித்தான்.

அன்னபூரணி, " மூச் சொல்றேன் இல்லை. இந்த டைம்ல எப்படி போறது. ஆதியோட போயிட்டு வந்துரு "

ஆத்ரேயனை திரும்பிப் பார்க்க அவன் முகத்தில் இருந்த கோபத்தை உணர்ந்து பேச்சின் திசையை மாற்ற எண்ணி,

" ஆனாலும் உன்னை காக்கா பிடிக்கறதுக்கு
தான் உங்களோட ப்ரோடக்ஷன் சாப்பாடு, கேட்டரிங் ஆர்டரெல்லாம் எனக்கு வருது. அத்தனை பயமுறுத்தி வச்சிருக்கீயா " என்று அவர் கூறியதும் அவரை முறைத்தவன்.

" நீங்க இருக்கீங்களே" என்று நொந்தபடித் தயாராக மேலே சென்றான்.

திகழும் பார்ட்டி உணவு தயாராகி விட்டதா என்று சரி பார்த்துவிட்டு, வேறு ஆர்டர்களின் நிலையையும் சரி பார்த்துக் கொண்டிருக்க ஆத்ரேயனும் வந்தான்

இருவரும் அவரிடம் கூறிவிட்டு செல்ல, ஜோடியாக அவர்களைப் பார்த்தவருக்கு கண் நிறைந்தது.

காரில் எங்கு ஏறுவது என்று தெரியாமல் அவள் ஒரு நிமிடம் தடுமாற, " நான் உனக்கு டிரைவர் வேலை எல்லாம் பார்க்க முடியாது" என்று விட்டு அவன் டிரைவர் இருக்கையில் அமர்ந்து கொள்ள,

இதனை என்னவென்று எடுத்துக் கொள்வது என்று அவள் புரியாமல் விழிக்கும் போதே, " உங்கிட்ட ஒன்னு ஒன்னும் சொல்லனுமா" என்றான் முன் பக்க கதவை திறந்து விட்டப்படி.

'புரிந்தால் தானே விளங்குவதற்கு' என்று எண்ணியபடி முன்னிருக்கையில் அமர்ந்தவள்.கதவை மூட,அவன் காரை இயக்கினான்.

மிதமான வேகத்தில் கார் செல்ல திகழின் பார்வையோ சாலையின் மீது இருந்தது.

சில நிமிட பயணத்திற்கு பிறகு ஆள் அரவம் மற்ற அச்சாலையின் ஓரம் காரை அவன் ஓரம் கட்டவும், புரியாமல் பார்க்க,

" உனக்கு ஏதாவது என்கிட்ட சொல்லனுமா?" என்று கூர்மையுடன் அவளைப் பார்த்தபடி வினாவினான்.

இல்லையென்று அவள் தலையசைக்க, ஸ்டீரிங் வீலில் தாளமிட்டு கொண்டிருந்த விரல்களின் வேகம் இன்னும் அதிகரித்தது.

" நீ என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ற" என்றான் வாய் விட்டே.

அதுக்கு என்னவென்று கூட கேட்காமல் அமைதியாக முகம் பார்த்து இருப்பவள். தலையில் வலிக்க நாலு கொட்டினால் என்ன என்று அளவு கோபம் வந்தது.

"நீ எப்பவும் இப்படி தானா" என்றான் எரிச்சலுடன்.

அவள் குழப்பத்துடன், " புரியலையே" என்றதும்.

"அதுதான் சைலன்டா மூஞ்சில பீலிங்ஸ் இல்லாமல், யாருக்கோ என்னமோ என்று எதிலும் ஒட்டாமல் ஒரு மாதிரி டிஃபரண்டா இருக்க. சிரிக்கும்போது கூட ஏதோ ஒட்ட வச்ச மாதிரி இருக்கு. ஒரு உண்மையான எக்ஸ்பிரஷனே உன் முகத்தில் இல்லை "என்றான் இயக்குனர் பார்வையில்.

அதற்கும் அவளிடம் மௌனம்.

"மிஷின் மாதிரி.ப்ரோக்ராம் பண்ணி வச்ச மாதிரி இருக்க.முகத்தில் பயம் தெரியலை சந்தோஷம் தெரியலை சிரிப்பும் தெரியலை. நீ நார்மலாவே இப்படி தானா " என்று மனதில் இத்தனை நாள் உறுத்தி கொண்டிருந்ததைக் கேட்டு விட்டான்.

கல்யாணம், அதன் பிறகான காலங்கள் என எதிலுமே அவளை அவன் எண்ணியது இல்லை.

ஆனால் வீட்டுக்கு வந்து இருந்த இந்த இரண்டு நாட்களிலே அவள் உணர்ச்சியற்ற முகம் அவனைக் குழப்பி இருந்தது.

இப்பொழுதும் மனைவி என்ற அக்கறை, பாசம் என்றெல்லாம் இல்லை.

'ஏன் இப்படி ஏதோ மாதிரி இருக்கிறாள். எப்பொழுதும் இப்படியா இல்லை திருமணம் ஆனதால் இப்படி இந்த வாழ்க்கை அவளுக்கு பிடிக்கவில்லையா' என பலவித குழப்பங்கள்.

அதை அவளிடம் மறைக்காமல் கேட்க, அதற்கு அவள் அளித்த பதிலில், 'அப்படியே இங்கே அவளை இறக்கிவிட்டு போய்விடலாமா ' என்று நினைத்தவன். கொலைவெறி உடன் முறைத்தான்.

 
அத்தியாயம்-10

"ஆமா"என்றாள்.

"என்ன சொன்ன. புரியலை " என்றவனுக்கு அவளைப் பற்றி புரியவில்லை தான்.

"இல்லை நீ இப்படி இருப்பது நார்மலான்னு கேட்டீங்களே.அதுக்கு பதில் " என்று விளக்கமாக அவன் கேள்வியை ஞாபகப்படுத்த, அட லூசே என்ற அவளைப் பார்க்க,

அதற்கும் அவள் அமைதியாக இருக்க, நிதானம் மெல்ல அகலும் போல் இருந்தது.

"நான் இவ்ளோ நேரம் மூச்சு கொடுத்து பேசினதுக்கு உன்னோட ஆன்சர் இவ்ளோ தானா" என்றதற்கு,

இன்னும் மேலாக ஒரு தலையசைப்பு மட்டும் கிடைக்க, இவளை அப்படியே இறக்கி விட்டு போய்விடலாமா என்று தோன்றவே, ஸ்டேரிங் வீலை அழுத்தமாக தட்டி விட்டுக் காரை கிளப்பினான்.

திகழ் மண்டையைக் காய வைத்தாள்.

புரிந்து பேசுகிறாளா இல்லை வேண்டுமென்றே கடுப்பேற்றுகிறளா என்ற யோசனை தோன்றவே, சந்தேகத்துடன் அவளை பார்க்க, அவளோ முன்புற ரோட்டை வெறித்தப்படி அமர்ந்திருந்தாள்.

'என்ன பெண் இவள்' என்ற எண்ணம் தான் வந்தது.

அவனுக்கே இப்பொழுது குழப்பம் ஆகிவிட்டது. இவளை எந்தவிதத்தில் அணுகுவது என்று புரியாமல் யோசித்தவன்.

அதன்பிறகு தான் நான் எதற்கு இவளைப் பற்றி கவனிக்க வேண்டும்.

இந்த மாதிரி கேள்விகளை கேட்டு மூக்கறுப்பட வேண்டும்,எனக்கு என்ன தேவை, பாவம் போல் இருந்தது கேட்டேன் அவளே நன்றாக இருக்கிறேன் என்ற பிறகு எதற்கு தேவையில்லாத வேலை என்ற முடிவுக்கு வந்தான்.

அதில் மனது லேசாக தோள்களை குலுக்கிப்படி காரை மிதமான வேகத்தில் செலுத்த, பார்ட்டி நடக்கும் ஹோட்டலும் வந்தது.

பார்க்கிங்கில் காரை விட்டவன்.

அவள் இறங்குகிறாளா இல்லையா என்பதை கூட பார்க்காமல் அப்படியே கிளம்பி விட, திகழ் அதை கருத்தில் கொள்ளாமல் தனது வேலையைக் கவனிக்க சென்றாள்.

பார்ட்டி ஹாலிற்குள் நுழைந்ததும் டான்ஸ் மாஸ்டர் ரவிவர்மன் இவனை வரவேற்க புன்னகையுடன் அவர்களிடம் பேச, அதன் பிறகு படத்தின் நாயகன் திவாகர்,நாயகி இன்னும் டெக்னீசியன், ப்ரொடியூசர் கூட வந்து விடவே அவர் அதில் கவனமாக, ஆத்ரேயன் அங்கிருக்கும் இருக்கையில் அமர்ந்து கொண்டான்.

பொதுவாக இந்த மாதிரி பார்ட்டிக்கு வர மாட்டான் என்றாலும் சில குறிப்பிட்ட நபர்கள் அழைக்கும் போது வராமல் இருக்க முடியாது.

வெளி பார்வைக்கு சக்சஸ் மீட் போல் இருந்தாலும் உள்ளே பல முடிவுகள் எடுக்கப்பட்டு, புது படத்திற்கான குழு அமைக்கப்படும் என்பதால் கட்டாயம் வரவேண்டிய சூழ்நிலை.

ப்ரொடியூசர் பிரசாந்த் வர அவரிடமும் பேசிவிட்டு தளர்வாக அமர்ந்தவனின் பார்வை கேட்டரிங் ஏரியாவை நோட்டமிட்டது.

பணியாளர்கள் கேட்டரிங் சீருடை உடன் வந்து உணவுகளை எடுத்து வைக்க ஆரம்பித்தப் போதிலும், பெண்ணவள் இருப்பதற்கான சுவடு தெரியவில்லை.

" ஹாய் ஆத்ரேயன் " என்ற கீச்சு குரலில் பார்வையை தன் முன் நின்றவளின் மீது பதித்தான்.

சிவப்பு நிற பார்ட்டி கவுனில், கண்ணைப் பறிக்கும் அழகுடன் சாந்தவி நின்றிருந்தாள்.

அவளின் மீது கவனத்தை செலுத்தாமல்,"எஸ்" என்றான் தண்ணீரை பருகிய படி,

"ஷால் வி டான்ஸ்" என்று பளபளக்கும் கரத்தை அவன் முன்னீட்டியவள். டான்சிங் ப்ளோரை காட்ட,அங்கு ஏற்கனவே கையில் மது உடன் நிறைய பேர் ஆடிக் கொண்டிருந்தனர்.

அவளை கூர்மையாகப் பார்த்தபடியே, "நாட் இன்ட்ரெஸ்டேட்" என்றவன்.

அங்கிருந்து எழுந்து காஸ்ட்யூம் டிசைனர் கரணிடம் சென்று பேச ஆரம்பிக்கவும், அவனைக் கண்டு பற்களை கடித்தவள்.

'உன்னை அப்படியே விட மாட்டேன் நான் யார்னு காட்றேன் ஆத்ரேயன் ' என்று பற்களை கடித்த படி அவனிடம் செல்ல,

நடுவில் அவளின் முன் ப்ரொடியூசர் பிரசாந்த் வந்து 32 பற்களை காட்டிப் புன்னகைக்கவும்,

'இவனா! இவனை வேற சமாளிக்கணுமா' என்று உள்ளுக்குள் கடுகடுப்பு எழுந்தாலும்,மோகனப் புன்னகையுடன் அவரை பார்த்தவள்.

ஹலோ சார் என்று நயமாக பேசினாள்.

ஏதோ பெரிய நகைச்சுவை கூறியது போல் வெடி சிரிப்பு சிரித்தபடி அவளிடம் பேச, சாந்தவியின் பார்வையோ ஆத்ரேயனின் மீதுதான் மொய்த்தது.

" ஹே கோழி தானா வந்து சிக்குதே.என்ஜாய் பண்ண வேண்டியதுதானே" என்றபடி வந்த திவாகரை கண்டு உள்ளுக்குள் கோபம் கிளர்ந்தாலும், முகத்தில் காட்டாமல் பதில் பேசாமல் நின்றான்.

"ஓ சாருக்கு தெரு தெருவா சுத்துற கோழி எல்லாம் பிடிக்காது போலயே "என்றவனின் வார்த்தைகள் எல்லை மீறுவதை உணர்ந்த கரண்,

" திவா பிஹேவ் யுவர்செல்ப்" என்று எச்சரித்தபடி,அவனை பிடித்து நிறுத்தினார்.

" அட கரண் நாம இப்போ என்ன சாரோட ஷூட்டிங் ஸ்பாட்டிலா இருக்கோம். பார்ட்டி மேன் இதில் கூட என்ஜாய் பண்ணலைனா எப்படி " என்றவனின் வாய் இன்று அடங்குவது போல் இல்லாமல் பேசிக்கொண்டே போனது.

அதில் பூட்டி இருந்த ஆத்ரேயன் உதடுகள் திறந்தது.

"கண்ட இடத்தில் வாய் வைக்க எனக்கு பிடிக்காது திவாகர் ஐ ஹவ் மை ஸ்டாண்டர்ட்ஸ்.நௌ யு ஸ்டே அவே ப்ரேம் மீ " என்ற எச்சரிப்புடன் அங்கிருந்து அகன்றான்.

அதை புரிந்து கொள்ளாமல், " ஓ என்ன ஆத்ரேயன் பிரெஷா எதிர்பார்க்கிறீர்களோ" என்றவனைக் கண்டு, பொறுமை விலக, ஷர்டின் கையை மேலே ஏற்றியவாறு திரும்பியவன்.

அவனை நோக்கி முன்னேற, கரணோ திவாகரை பிடித்தபடி, " அவன் குடிச்சி இருக்கான் அதனால் தான்.ப்ளீஸ் டோன்ட் மேக் எனி சீன். நான் ஹேண்டில் பண்ணிக்கிறேன் நீ போ. ப்ளீஸ் " என்றதில் வெறுப்புடன் திவாகரை நோக்க,

"ஆத்ரேயன் ரவிவர்மன் கூப்பிடுறான் பாரு" என்று அவனை திசை திருப்ப பார்க்க அந்த முயற்சி புரிந்தது போல்,தலையை அசைத்தபடி அங்கிருந்து நகர,

" அட பச்சைக்கிளி" என்ற திவாகரின் வார்த்தைகளில் சலிப்புடன் அவனைப் பார்த்த விட்டு, அவன் பார்வை போகும் திசையையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு அலட்சியமாக திரும்பியவன்.

ஒரு அடிதான் எடுத்து வைத்திருப்பான். உடனே, திவாகரின் பார்வை சென்ற இடத்தை நோக்கினான்.

அடர் பச்சை நிற மெல்லிய டிசைனர் புடவையில் திகழ் உணவு பரிமாறும் சப்ளையர் இடத்தில் நின்று இருந்தாள்.

அவளை அங்கு கண்ட நொடி அத்தனை கோபம் வந்தது.

பைவ் ஸ்டார் பார்ட்டிகளில் சப்ளை செய்யும் பெண்களுக்கு இந்த மாதிரி உடை கொடுப்பது ஒன்றுதான்.

அதுவும் அன்னபூரணியின் கேட்டரிங் என்பதால் நாகரீகமாகவே இந்த உடைகள் இருக்கும் என்றாலும், திகழ் அணிந்திருந்த புடவை அவள் உடல் வடிவை அப்பட்டமாக எடுத்துக்காட்டி அவளின் அழகை இன்னும் மெருகேற்றியது.

திவாகரின் பார்வை அவள் மீது இருப்பதை உணர்ந்து பற்களைக் கடித்தவன்.

கோபத்துடன் அங்கு பார்த்தபடி இருக்க, "ட்ரிங்க்ஸ் எடுத்துக்கலையா" என்றப்படி வந்த ரவிவர்மனை கண்டு முகத்தை இயல்பாக்கி கொண்டான்.

அவனின் கையில் ரவிவர்மன் ஒரு மது குவளையை கொடுக்க, அதை வாங்கி அப்படியே வைத்துக் கொண்டான்.

சோசியல் டிரிங்கர் தான். ஏதோ ஒரு சிப், ரெண்டு சிப் மட்டும் அடிப்பான்.

இப்போது இருக்கும் மனநிலைமைக்கு அதை தொட பிடிக்காமல் அப்படியே வைத்திருக்க,ரவிவர்மன் அடுத்த ப்ராஜெக்ட் பற்றி கூறிக் கொண்டிருத்தார்.

அவனுக்கு உபயோகமுள்ள தகவல்கள் தான். ஆனால் அதை கூட கேட்க முடியாத அளவு அவனின் பார்வை இருந்தது.

சில நிமிடம் பொறுத்தவன்.

" எக்ஸ்கியூஸ் மீ " என்று விட்டு, கையில் இருந்த மது டம்ளரை அங்கிருந்த மேஜையில் வைத்து, உணவு பரிமாறும் இடத்திற்கு சென்றான்.

பஃபே சிஸ்டம் தான். தட்டை எடுத்தவன் பரிமாற வந்தவர்களை தடுத்துவிட்டு நேர திகழிடம் சென்று தட்டை நீட்டினான்

காலியாக இருந்த தட்டை குழப்பமாக பார்த்தாள்.

அவள் ஊற்றுவது குழம்பு. இது என்ன என்று புரியாமல் நிமிர, "பேக் யார்ட்க்கு இப்பவே வா" என்றவன். தட்டை அவள் முன் போட்டுவிட்டு, வேக நடையுடன் சென்றான்.

அவன் அழைத்ததும் செல்லாமல் பொறுப்பை சப்ளையரிடம் ஒப்படைத்துவிட்டு அங்கிருந்து சென்றாள்.

மெல்லிய வெளிச்சத்துடன் யாருமற்று இருந்த அந்த பகுதியை யோசனையுடன் பார்த்தவாறு, உள்நுழைய அவளுக்காகவே காத்திருந்தவன்.

" உனக்கு என்ன பைத்தியமா" என்று எடுத்ததும் பொரிய ஆரம்பித்தான்.

அதற்கு,"என்ன ஆச்சு சார் " என்று நிதானமாக கேட்டவளைக் கண்டு பற்களை கடித்தவன்.

"நீ இந்த டிரஸ்ஸில் சப்ளை பண்ற இடத்தில் என்ன பண்ற. என்ன அவசியம் வந்தது" என்று எகிற,

"அது சப்ளை பண்ற ரெண்டு பொண்ணுங்க வரலை" என்று தயக்கத்தோடு கூற,

"அதுக்கு உடனே இதை மாட்டிட்டு வந்து சப்ளை பண்ற இடத்தில் நிற்பியா. ஆர் யூ மேட்" என்றவனுக்கு கோபம் அடங்கிய பாடில்லை.

அவள் மௌனமாக இருக்க, " சப்ளையர் இல்லைனா ப்ராப்ளம் இல்லை. கை இருக்கு எடுத்து போட்டு அவனுங்க திம்பாங்க.நீ மேனேஜர் வேலை மட்டும் பார்த்தால் போதும்" என்றான் அடக்கப்பட்ட கோபத்துடன்.

அதற்கு பதில் எதுவும் கூறாமல் சம்மதமாக தலையசைத்து விட்டு, அங்கிருந்து அகல போனவளின் கரத்தை அழுத்தமாக பற்றியவன்.

"உன் மேல் உள்ள அக்கறையில், நம்ப ரெண்டு பேருக்கு இடையில் இருக்கிற உறவால் கோவத்தில் இதை நான் சொன்னேன்னு நினைத்து அட்வான்டேஜ் எடுத்துக்காதே".

அவளிடம் கோபப்பட்ட பிறகு தான் எந்த உரிமையில் கோவப்பட்டோம் என்று தன்னையே கடிந்து கொண்டவன்.

அவள் இதை மனதில் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று எச்சரிக்கும் விதமாக படபடத்தான்.

அதற்கு நிதானமாக திரும்பி அவனை பார்த்தவள்." நமக்குள்ள என்ன சார் உறவு " என்று எதிர் கேள்வி கேட்டாள்.

அவளின் கேள்வியில் ஒரு நொடி திணறி தான் போனான்.

" என்ன என்கிட்ட ப்ளே பண்ண பார்க்கறியா?. இதுக்கெல்லாம் நான் மடிய மாட்டேன் " என்றான் வரவழைக்கப்பட்ட அழுத்தத்துடன்.

"இல்லை.நீங்க எனக்கு யாருமே இல்லை. எந்த உறவும் இல்லை.நான் அப்படி உங்களை நினைக்கவும் இல்லை" என்றப்படி புன்னகைத்தவள்.

நாசுக்காக அவன் கரங்களில் சிக்கி இருந்த, தன் கரத்தையும் உருவி கொண்டாள்.

அவள் பதிலில் வாயடைத்துப் போனவனுக்கு இதயத்தில் ஏதோ ஒன்று பிசைந்தது.











 
அத்தியாயம்-11

அவள் சென்ற திசையைப் பார்த்தபடி நின்று இருந்தவன். உணர்வு பெற்று மீண்டும் பார்ட்டி ஹாலுக்கு வந்தான்.

முகத்தில் இருந்த இலகு தன்மை தற்போது முற்றிலும் அகன்று இருந்தது .

இறுக்கிப்பிடித்த கோர்ட்டை கழட்டி அருகில் இருந்த மேசையில் வீசியவன்.

நெற்றியை அழுத்தமாக பற்றிக்கொள்ள,அவன் முன் மதுக்கோப்பை நீட்டப்பட, யோசிக்காமல் அதனை எடுத்து பருகி இருந்தான் .

மீண்டும் மது நீட்டப்பட பார்வை தன்னை போல் கேட்டரிங் ஏரியாவை வெறித்தது .

திகழ் தற்போது உடையை மாற்றி இருந்தாள்.வேலைகளை மும்முரமாக கவனித்துக் கொண்டிருந்தவளின் பார்வை நிமிடங்கள் கடந்த பிறகும் அவன் மீது விழவில்லை.

மீண்டும் மது அவன் முன் நீட்ட படவும், புருவம் யோசனையில் சுருங்கியது.

"நோ நீட்" என்று வெயிட்டரை அழுத்தமாக பார்த்தபடி கூற, ஏற்கனவே பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்த வெயிட்டர் ஆத்ரேயன் பார்வையில் பயந்து அங்கிருந்து தடுமாற்றத்துடன் அகன்றான்.

இருக்கும் கோபத்தில் வெயிட்டரின் பதட்டத்தையும்,நடுக்கத்தையும் ஆத்ரேயன் கவனிக்காமல் போனான்.

"இன்னும் புட் எடுத்துக்கலை போல" என்று ரவிவர்மன் கேட்க, அதற்கு பதில் அளிக்காமல் இருப்பவனைக் கண்டு கொள்ளாமல் அவ்வழி சென்ற திகழை கண்டு அழைத்தார்.

புன்னகையுடன்,"சொல்லுங்க சார்" என்றாள்.

" இஃப் யு டோன்ட் மைண்ட். சாருக்கு ஃபுட் கொண்டு வந்து தரீங்களா? " என்று அவர் கேட்கவே,

சம்மதமாக தலையசைத்து விட்டு உணவு எடுக்க செல்ல,” ரொம்ப நல்ல பொண்ணு” என்றார் அவளைப் பார்த்தபடி,

அதில் ஆத்ரேயன் ஆச்சரியமாக ரவிவர்மனை பார்க்க, "பாப்பாவோட பர்த்டே பார்ட்டிக்கும் உங்க கேட்டரிங் தான். இவங்க தான் ஆர்கனைஸ் பண்ணி கொடுத்தாங்க.
சோ ஸ்வீட். பாப்பா நல்லா இவங்க கூட ஒட்டிக்கிட்டா. உங்க அம்மா அவங்களை மாதிரியே ஆட்களை தான் வேலைக்கும் எடுக்குறாங்க. கிளவர் லேடி " என்று அவன் தாயையும் சீலாகித்து கூறினார்.

"ஆமா என் மூளையை பிச்சி தின்கிற ராட்சசியை என் தலையில் கட்ற அளவுக்கு அவங்க கிளவர்தான் " என்று கடுகடுப்புடன் மொழிந்தவனின் பார்வை மொத்தமும் திகழினி மீதுதான்.

"ஹே சொல்லவே இல்லை. பொண்ணு பிக்ஸ் ஆயிடுச்சா.நீ மட்டும் தான் எலிஜிபிள் பேச்சிலராக இருந்த. இப்ப உனக்கும் ஆப்பா" என்று அவன் தோள் தட்டி கிண்டலாக கூற, அப்போதுதான் தான் பேசியதை உணர்ந்து நெற்றியை அழுத்தமாக பற்றி கொண்டான்.

"நத்திங்" என்று விட்டு ஆத்ரேயன் மௌனமாக, அதைப் பற்றி மேலே பேச விருப்பமில்லை என்பதை உணர்ந்த ரவிவர்மனும்,

"இதில் என்ன இருக்கு மேன். சில்" என்று அப்பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்க, அதே நேரத்தில் திகழும் உணவு தட்டுடன் வந்தாள்.

உணவு தட்டை கண்டதும் ரவி வர்மன் முகத்தில் அதிருப்தி ஏற்பட்டது .

"என்ன மிஸ் திகழ். ரெண்டு சப்பாத்தியும் வெஜ் சேலட் மட்டுமா "என்று அதிருப்தியாக கேட்டவர்.

பிளேட்டை எடுத்து கொண்டு போக சொல்ல,"நோ இதுதான் நான் நைட் சாப்பிடுவேன்.இட்ஸ் ஓகே" என்று அவள் கையில் இருந்த பிளேட்டை வாங்கி அவன் உண்ண ஆரம்பிக்கவும்,

" ஓ அப்படியா.ஓகே கேரி ஆன்" என்றவர்.

திகழிடமும், " கொஞ்சம் கூட இருந்து பார்த்துக்கோங்க" என்று கூறிவிட்டு, மற்ற விருந்தினரைக் கவனிக்க சென்றார்.

தட்டை பார்த்து,மீண்டும் ஒரு சப்பாத்தி எடுத்து வந்து வைக்க, அவளின் கையை தட்டி விட்டான்.

சப்பாத்தி புல் தரையில் விழ,அதை எடுத்து
அப்புறப்படுத்தி விட்டு அவள் மற்ற வேலைகளை கவனிக்க ஆரம்பிக்க, தன் செயலுக்கு சிறிதும் அதிருப்தியை காட்டாத அவள் முகத்தைக் கண்டு கோபம் வந்தது

தலை வேறு மெல்ல வலிக்க ஆரம்பித்தது.

பின்னந்தலையில் ஏதோ நரம்பு சுண்டி இழுப்பது போல் இருக்க, அழுத்தமாக பற்றி கொண்டான். உணவும் குமட்டவே அதை அப்படியே வைத்துவிட்டு எழுந்தான்.

கால் தரையில் படாத மாதிரி ஒரு உணர்வு ஏற்பட்டது. உடலின் பாரமே தெரியாமல் ஏதோ மிதப்பது போல் உணர்ந்தான்.

மொத்த உடலும் பஞ்சு போல் இலகுவாக தோன்றினாலும், கால்களை எடுத்து வைக்க தெரியவில்லை.

கால்களை நகர்த்துகிறோமா என்று கூட புரியாத ஒரு நிலையில் உடலின் கட்டுப்பாட்டை முழுவதும் இழந்தது போல் தள்ளாடியபடி நடந்தான்.

ஒரு வழியாக வாஷ்பேசனை அடைந்தவன்.

முதலில் கைகளை கழுவி விட்டு, முகத்தை தண்ணீரால் விடாமல் அடித்து கழுவினான்.

சட்டை தண்ணீரால் நனைத்தது. எதிரே தெரியும் கண்ணாடியில் தெரிந்த அவனின் பிம்பமே மங்கலாக தான் கண்களுக்கு புலப்பட்டது.

தலையை உலுக்கி நினைவுக்கு கொண்டு வர பார்க்க, இன்னும் தள்ளாட்டம் தான் அதிகரித்தது.

ஒற்றை விரல் கொண்டு நெற்றி பொட்டில் அழுத்தத்தை தந்தவனுக்கு தான் பருகிய மதுவில் தான் ஏதோ ஒன்று கலந்திருப்பதை உணர்ந்து கொண்டான்.

எப்பொழுதும் கவனமாக இருப்பவனின் நிதானம் இன்று ஆட்டம் கண்டு விட்டது.

பின்னந்தலையை அழுத்தமாக தட்டி கொண்டவனின் பார்வை திகழை தான் தேடியது.

"எனி ஹெல்ப்" என்ற வார்த்தைகளில் கடுப்புடன் திரும்பியவனின் பார்வை மங்கலாக தெரிந்தாலும், எதிரே இருப்பது சாந்தவி என்பதை குரலில் உணர்ந்தான்.

"நோ நீட்" என்று மறுத்து விட்டு தள்ளாடத்துடன் அகல போக, தடுமாறியவனைத் தன் தோளில் சாய்த்து கொண்டாள்.

"கோ அவே" என்றவனின் வார்த்தைகள் தற்போது குழறலாக தான் வெளி வந்தது,

அதில் தற்போது சாந்தவியின் இதழ்களில் வெற்றி புன்னகை.கையில் அந்த நட்சத்திர ஓட்டலில் அவர்களுக்காக புக் செய்யப்பட்ட பிரத்தியேகமான அறையின் சாவி மின்னியது.

"காம் டவுன் ஆத்ரேயன் இந்த நைட்டை உங்களுக்கு மறக்க முடியாத நைட்டா மாத்தறேன். ஜஸ்ட் சில் " என்றவளின் மோகக் குரல். அவன் காதுகளில் பாம்பின் சீறலாக ஒலித்தது.

கரங்களும் கால்களும் தன்னுடைய மொத்த வலுவையும் இழந்தது போல் உணர்ந்தான்.

அவளை உச்சகட்ட பலத்துடன் தள்ளியபோதிலும் கை கால் காற்றில் மெல்ல தான் அசைந்தது.

உள்நாக்கினை அழுத்தமாகக் கடித்து உணர்வுக்கு வர முயற்சிக்க, அதில் தோல்வியே கண்டான்.

பார்வை மங்கலாக இருந்த போதும் கண்ணில் அகப்பட்ட நீல நிறத்தை நோக்கி அவன் உடலை திருப்ப, அவன் உடலின் எடையை தாங்க முடியாமல் சாந்தவி தடுமாறி விழ, அவள் கையை மிதித்து விட்டு தள்ளாட்டத்துடன் அவன் முன்னேறினான்.

அவனின் கையோடு ஓட்டல் ரூமின் சாவியும் சென்றது.

"ப்ளடி***" என்று ஆத்ரேயனை திட்டியபடி அவசரமாக எழுந்தவள்.

தன்னை யாரும் பார்த்து விட்டார்களா என்று எச்சரிக்கையாக சுற்றிலும் பார்வையை ஓட்டிவிட்டு, ஆத்ரேயனை தேட அவன் தடுமாற்றத்துடன் செல்வதைக் கண்டு அங்கு விரைந்தாள்.

திடீரென்று தன் மீது விழுந்தவனை கண்டு பதறி போய் அவனை தன்னை விட்டு விலக்கப் பார்க்க," என்னை யாரும் இல்லாத இடத்திற்கு கூட்டிட்டு போ" என்றவனின் குரல் தெளிவற்று ஒலித்தது.

திகழுக்கு அவன் பேச்சே புரியவில்லை.

முதலில் அவனை விலக்குவதில் கவனமாக இருந்தவளுக்கு அவன் தள்ளாட்டம் புரிய, "குடிச்சீங்களா?" என்று ஒருவித பிடித்தமில்லாதக் குரலில் கேட்டாள்.

" நோ இது அது மாதிரி இல்லை. ஐ நோ மை லிமிட்" என்று அப்பொழுதும் அவள் கேள்விக்கு பதில் அளித்தான்.

அவன் நிற்கவே சிரமப்படுவதைத் தன் உடலின் மீது அழுத்தும் பாரத்தில் உணர்ந்தவள்.

பதறிப்போய் சுற்றிலும் பார்த்தாள்.

ரவிவர்மனை உதவிக்கு அழைக்கப் பார்க்க, அதில் மறுப்பாக தலையசைத்தவன்.

"என்னை இங்கிருந்து முதலில் கூட்டிட்டு போ" என்று அவள் கரத்தில் அழுத்தத்தை தர, தன் கையில் மின்னிய அந்த கார்டை யோசனையாக பார்த்தவள்.

ஒரு பெருமூச்சுடன் அவனை ஹோட்டலுக்குள் அழைத்து சென்றாள்.

இவர்கள் செல்வதைக் கண்டு ஒன்றும் செய்ய முடியாமல் கால்களை தரையில் உதைத்து கொண்டு அங்கிருந்து சாந்தவி அகன்றாள்.

நள்ளிரவுக்கு மேலான அந்த பொழுதினில் ஹோட்டல் மொத்தமும் வெறிச்சோடி காணப்பட்டது.

அது திகழுக்கு வசதியாக போக,லிப்ட்டில் அவனை ஒரு பக்கம் சாய்வாக நிற்க வைத்தவளுக்கு மூச்சு வாங்கியது.

அந்த கீகார்டில் புளோர் நம்பர்,ரூம் நம்பர் இருக்க, அதைப் பார்த்து அவ்வறைக்கு ஆத்ரேயனை அழைத்து வந்தவள்.கதவை திறந்ததும் ஆச்சரியப்பட்டுப் போனாள்.

முழுக்க சந்தனம் மற்றும் வெள்ளையால் மிளிர்ந்தது அந்த சொகுசு அறை.

ஒரு சிறு தூசு கூட இல்லாமல் அறை பளபளத்தது. அதை ரசிக்க முடியாத அளவு ஆத்ரேயனின் பாரம் உடலில் அழுத்தவே தடுமாறிக் கொண்டே அவனை அழைத்து வந்தவள்.

ஆளை விழுங்கும் அந்த மெத்தையில் அவனை தள்ளிவிட்டு, அப்படியே தரையில் அமர்ந்து கொண்டாள்.

நெற்றியில் வழிந்த வியர்வையை துடைத்தவளுக்கு அடுத்து என்ன செய்வது என்று புரியவில்லை.

ஒரு பெருமூச்சுடன் எழுந்து ஆத்ரேயனை பார்க்க,ஏதோ புலம்பியபடி இருந்தான்

முகம் எல்லாம் வியர்த்து வழிந்தது.

அறையோ குளிர்ந்து போயிருக்கும்போது, 'இவருக்கு என்ன இப்படி வியர்க்குது' என்று எண்ணிய படியே, மெல்ல அவனை நெருங்கி நெற்றியை துடைத்தவளின் வளைக்கரம் அவனின் கரத்தில் அழுத்தமாக சிக்குண்டது.

அதில் பதறி, "சார் " என்று அழைத்தபடி தன் கரங்களை அவன் பிடியிலிருந்து விலகிக் கொள்ள பார்க்க, இன்னும் கரத்தில் அழுத்தத்தைக் கூட்டினான்.

அவன் அழுத்தம் அதிகரிக்கவும் மெல்லிய வலியை உணர ஆரம்பித்தாள்.

"ஆத்ரேயன்" என்று சத்தமாக அழைக்க மெல்ல கண்களை திறந்தான்.

அவனின் விழி மொத்தமும் ரத்த சிவப்பாக இருந்தது.

அதில் என்னவென்று சூதாரிக்கும் முன்னே, மற்றொரு கரம் கொண்டு குனிந்திருந்தவளின் இடையை வளைத்து தன் கீழ் கொண்டு வந்தவன்.

அவளை ஆழ்ந்து பார்க்க பயந்து போனாள். அவனின் இன்னொரு கரத்தில் சிக்கி இருந்த அவளின் கரம் மெத்தையில் நெறிப்பட ஆரம்பித்தது.

அவன் பிடியிலிருந்து விலக பார்க்க இன்னும் அழுத்தமாக தன் கரத்தை அவள் இடையில் படர விடவும் நடுங்கிப் போனாள்.

கண்கள் கலங்கப் பார்த்தவள்.

"என்னை விடுங்க.ப்ளீஸ்" என்று கத்தியபடி,அவனிடமிருந்து விடுபட போராடினாள்.

அவள் மீது தன் மொத்த பாரத்தையும் போட்டு படுத்திருந்தவன். சற்றென்று விளங்கி தள்ளாட்டத்துடன் எழுந்து நிற்கவும் பயந்து போய் உடனே எழுந்து அமர்ந்தாள்.

ஷர்ட்டின் பட்டனை ஒவ்வொன்றாக அவன் கழட்டவும்,திகழோ பதறிப் போய், உருண்டு பிரண்டு அந்த மெத்தையில் இருந்து இறங்கினாள்.

அவனோ சர்ட்டை தூர வீசிவிட்டு," என்னை பாத்ரூம் கூட்டிட்டு போ" என்றான்.

அவனை நெருங்கவே அத்தனை பயமாக இருக்க," இல்லை..மாட்டேன்" என்று அங்கிருந்த சுவரில் சாய்ந்தப் படி பதிலை மட்டும் அளித்தாள்.

தடுமாற்றத்துடன் நின்றிருந்தவன் குரல் வந்த திசையில் விழி உயர்த்தி பார்த்தான். மங்கலாக தெரிந்தவளைக் கண்டு ஒற்றை கை நீட்டி அழைத்தான்.

அந்த சிவந்த கண்களில் இருந்த இயலாமை. பயத்தையும் மீறி அவளை நெருங்க வைத்தது.

உள்ளுக்குள் பயம் இருந்தாலும் அதை காட்ட முடியாத சூழ்நிலை.

அதில் நடுங்கியபடி அவனை நெருங்க உடனே அழுத்தமாக அவள் கரத்தை பற்றி இருந்தான்.

அதில் திரட்டி இருந்த தைரியம் மொத்தமும் வடிய, " விடுங்க.விடுங்க" என்று அவன் கரங்களை விடாமல் குத்தி தன் கரங்களை அவன் பிடியிலிருந்து விலக்க பார்க்க,

அவன் பிடி இன்னும் இறுக்கமாவதை உணர்ந்து அப்படியே அவன் கையை கடித்து இருந்தாள்.

அதில் கையை உதறிக் கொண்டவன் தடுமாறி அங்கிருந்த பெட்டில் விழ, திகழ் விட்டால் போதும் என்று அங்கிருந்து ஓட போக,

"லூசு என்னை பாத்ரூமில் கொண்டு போய் விடு. ஐ காண்ட் கண்ட்ரோல். என்னால் நிற்க முடியலை" என்று கத்தியபடி எழுந்தவன். அப்படியே தரையில் விழுந்தான்.

அவன் வார்த்தைகள் முழுதாக மூளைக்கு சென்றடையவே, சில நிமிடங்கள் பிடித்தது.

கதவை திறக்கப் போனவள். அப்படியே அதன் மீது சாய்ந்து நின்றாள்.

பார்வை தரையில் கிடந்த ஆத்ரேயன் மீது விழுந்தது

பயம் ஒரு பக்கம் இருந்தாலும் அவனை அப்படியே விட்டு செல்ல மனமும் இல்லை.

அவன் தன்னிடம் உதவி கேட்டு வந்ததும் நினைவு வர இடுப்பில் புடவையை சொருகி கொண்டு நெருங்கினாள்.

அவனைத் தொட பயமாக இருந்தாலும் தன்னிடம் அத்துமீறி நடந்தால் கால்களுக்கு இடையே பலமாக உதைத்து விட்டு விலகி விடலாம் என்று முடிவெடுத்துக் கொண்ட பிறகு தான் சிறிது ஆசுவாசமடைந்தாள்.

அவனைத் தூக்கி நிலையாக நிறுத்துவதற்குள் மீண்டும் உடல் வியர்வையால் குளித்தது.

அதன் பிறகு அவனும் ஒத்துழைக்க ஒரு வழியாக பாத்ரூம் வந்து அவனை விட்டவள்

சவரை திறக்க சிலுசிலுப்பான தண்ணீர் அவன் தலையில் இறங்க ஏய் என்று கத்த, "குளிச்சிட்டு வாங்க.நான் வெயிட் பண்றேன்" என்றவள். ஓடியே இருந்தாள்.

மீண்டும் வாயில் கதவின் அருகே வந்த பிறகுதான் அவளின் ஓட்டமே நின்றது.

மூச்சு வாங்கியது ஏசி அறையில் இருப்பது போலவே இல்லை. ஏதோ பாலைவனத்தில் நிற்பது போல் வியர்வை அருவியாக ஊற்றியது.

அதில் கதவில் அப்படியே சாய்ந்து கொண்டாள்.

குளியலறையில் டொம் என்ற சத்தம் கேட்டதும் மற்றதெல்லாம் மறந்து, அங்கு விரைந்தவள்.

பாத்ரூம் கதவின் மீது கையை வைத்ததும் உள்ளே செல்லலாமா வேண்டாமா என்ற யோசனை.

சத்தம் அதிகரிக்கவும் அவ்வோசனையும் தகர்ந்தது.

டாய்லெட் சீட்டின் மீது அமர்ந்திருந்தவன் கையில் ஹெல்த் ஃபௌசெட் இருந்தது.

அதனை தான் சுவற்றில் தட்டியப்படி இருந்தான்.

தலை முழுவதும் சொட்ட சொட்ட ஈரமாக இருக்க,தரையே ஈரமாக இருந்தது.

அதில் ஆசுவாசம் பிறக்க," நீங்க ஓகேவா" என்று கேட்க அவனிடமிருந்து பதிலே இல்லை.

" சார் சார் " என்று அழைத்துப் பார்த்த போதிலும் நிமிரவே இல்லை.

வேறு வழியில்லாமல், "ஆத்ரேயன் நீங்க ஓகேவா" என்று சத்தமாக கேட்க விலுக்கென்று நிமிர்ந்தவனின் கூர்மையான கண்கள் அவளை துளை போட்டது.

அதில் பாதத்தை பின் வைத்தவள் 'அப்படியே ஓடி விடலாமா' என்று யோசிக்க,

"பசிக்குது" என்றவனின் வார்த்தைக்கு, " நான் ஆர்டர் பண்றேன்" என்றபடி அங்கிருந்த பாத்ரோப் எடுத்து அவன் கையில் கொடுக்க, வாங்காமல் அப்படியே அமர்ந்திருக்கவும்,

" இங்க பாருங்க ஆத்ரேயன். என்னால் உங்க டிரஸ் எல்லாம் மாத்தி விட முடியாது இல்லை. ப்ளீஸ் டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வாங்க. நான் உங்களுக்கு சாப்ட ஆர்டர் பண்றேன் " என்று கூற,

சம்மதமாக அவன் தலை அசைத்து பாத்ரோப் வாங்கவும் நிம்மதியுடன் வெளியே வந்தவள். உணவையும் ஆர்டர் செய்தாள்.

உடைகளை கலைந்து பாத்ரோப் கட்டிக்கொண்டு அவன் வெளியே வர, சூடான சூப் தயாராக இருந்தது.

இப்பொழுதும் தள்ளாட்டம் நிற்கவில்லை என்றாலும் முன்பு இருந்ததற்கு இப்பொழுது ஓரளவு தேவலாம் போல் இருந்தது.

"இப்போதைக்கு அவசரத்துக்கு இதுதான் கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க. இட்லி ஆர்டர் பண்ணி இருக்கேன் ஒரு டென் மினிட்ஸ்ல வந்துரும் " என்று அவள் கூறி முடிக்கும் முன்பே சுட சுட சூப்பை பருகி இருந்தான்.

"ஐயோ அது சூடு " என்று அவள் பதற, அவனோ அதை உணராமல் முழுவதும் காலி செய்து இருந்தான்.

சூப் பௌவலை எட்டி பார்த்துவிட்டு "போதையில் ஒன்னும் தெரியலை போல எப்படியோ வயிறு நிறைந்தால் சரிதான் " என்று அவள் வாய் விட்டேக் கூற, அவனோ ஏப்பத்துடன் மொத்தத்தையும் வாந்தி எடுத்திருந்தான்.

பதறிப்போய் அவனை தாங்கி பிடித்தவள். மீண்டும் கை வலிக்க வலிக்க குளியல் அறைக்குள் அவனை அழைத்துச் சென்று குளிச்சிட்டு வாங்க என்று கூறி விட்டு வெளியேறியவள்.

அவன் வாந்தி எடுத்திருந்த இடத்தை பார்த்து மலைத்தாள்.வெயிட்டர்களை கூப்பிட்டால் சுத்தம் செய்வார்கள் இருந்தாலும் மனமில்லாமல் அவளே அவ்விடத்தை சுத்தம் செய்ய ஆரம்பித்தாள்.

கைகளையும் கழுவி விட்டு குளியலறையை தயக்கத்துடன் தட்டி விட்டு திறக்க,வேறொரு பாத்ரோப் அணிந்து சுவற்றில் சாய்ந்து இருந்தான்.

'அப்படி என்ன குடி' என்று உள்ளுக்குள் அவனை கரித்து கொட்டியபடி, கை தாங்கலாக அழைத்து வந்து இரண்டு இட்லிகளை மட்டும் சட்னி சாம்பார் எதுவும் இல்லாமல் கொடுத்தவள்.

அவன் உண்டு முடிக்கவும் சிறிது தண்ணீரையும், லெமன் ஜூஸ் அளித்தாள்.

உடனே சாயப் போனவனை சிறிது நேரம் அப்படியே பிடித்து வைத்தாள்.

சில நிமிடங்களில் கைகளை எடுக்க அப்படியே பெட்டில் சாய்ந்தவனை பார்த்தவள். உடனே பார்வையை விளக்கிக் கொண்டாள்.

ஏனோ கண்கள் கலங்கும் போல இருந்தாலும் வேறு வழி இல்லாமல் போர்வையை அவன் உடல் முழுவதும் போர்த்தி விட்டவள்.

அப்படியே தரையில் அமர்ந்தவள்.உடல் மனம் முழுவதும் இந்த இரண்டு மணி நேரத்தில் மொத்தமாக களைத்து போயிருந்தது.

கண் இமையில் தேங்கியிருந்த கண்ணீர் விழவா என்று போட்டி போட்டுக்கொண்டு நிற்க, கன்னம் தொடாமல் அதை துடைத்து எடுத்தவள்.

கால்களில் முகம் புதைத்து கொண்டாள்.
 
அத்தியாயம்-12

முடிவே இல்லாதப் பள்ளத்தில் விழுவது போலான உணர்வில் திடுக்கிட்டு கண்விழித்தவன். உடனே எழுந்தமர்ந்தான்.

அடுத்த நொடி பின்னந்தலையில் இரும்பு குண்டைக் கட்டியது போலான பாரம். அதன் கணம், தாங்க முடியாமல் மீண்டும் தலையணையில் விழுந்தான்.

கண்ணில் எல்லாம் எரிச்சல்.

அதில் புரண்டு படுத்தவன். அரைகுறையாக கண்விழிக்க, இருக்கும் அறை குழப்பத்தை உண்டு பண்ணியது.

பின்னந்தலையை பற்றியப் படி எழுந்தவன்.

சுற்றிலும் பார்வையை ஓட்ட ஹோட்டல் அறையில் இருப்பது புரிய கண்களை அழுத்தமாக மூடிக்கொண்டவனின் மனமெங்கும் நேற்றைய இரவின் நினைவு ஓட்டம் தான்.

நடந்த அனைத்தும் நினைவு வர, " சாந்தவி "என்று கோபத்துடன் உச்சரிக்க,பற்கள் நறநறவென்று அரைப்பட்டது.

அதில் இன்னும் தலை வலி அதிகம் எடுக்க, பச் என்று வலியுடன் தலையைப் பற்றி கொண்டான்.

உதடெல்லாம் காய்ந்து போயிருக்க, நாவால் எச்சில் செய்ய, மொத்த வாயும் வறண்டு போயிருந்தது.

அதில் அசதியாக பெருமூச்சு விட்டவன். நினைவு வந்து, பார்வையை பரபரப்பாக அறை எங்கும் சுழல விட்டான்.

அவன் தேடுவது கிடைக்காமல் போக ஒரு நொடி தளர்ந்தவன்.

அடுத்த நிமிடமே கட்டிலில் உருண்டு மறுபக்கம் பார்க்க,அவனை ஏமாற்றாமல் திகழ் கட்டில் கால் மாட்டில் சாய்த்தபடி,கால்கள் இடையே முகத்தை புதைத்துவாறு அமர்ந்தபடியே உறங்கி இருந்தாள்.

அவள் முகம் பக்கவாட்டாக தெரிய கண்களின் ஓரம் வழிந்த கண்ணீரின் தடம் கூட,அவனின் பார்வைக்கு புலப்பட்டது.

அதில் ஒரு பெரும் மூச்சுடன் நிமிர்ந்தவன். பின்னந்தலையை அழுத்தமாக வருடி கொண்டான்.

நிமிடங்கள் நகர, மெல்லத் தொண்டையை செரும, அவளிடம் இருந்து எவ்வித அசைவும் இல்லை.

டேபிளில் இருந்த வாட்டர் பாட்டிலைத் தட்டி விட, திடுக்கிட்டு நிமிர்ந்தவள்.

கட்டிலில் அவளைப் பார்த்தபடி அமர்ந்திருந்தவனைக் கண்டு பதறி எழ, கால்கள் தள்ளாடியது.

அதில் தடுமாறினாள். பெட்டை பற்றி நின்று பயத்துடன் ஆத்ரேயனை நோக்கினாள்.

உணர்ச்சிகள் காட்டாமல் இறுகிப் போயிருந்த அவன் முகத்தைக் கண்டு நா எழ மறுத்தது.

ஆனாலும் அதை தாண்டி அவன் புருவ சுழிப்பில் மற்றதை மறந்து, ரூம் இன்டர்காமில் இஞ்சி டீ ஆர்டர் செய்தாள்.

பிறகு தயக்கத்துடன் அவனைநோக்கி," ஏதாவது வேணுமா?.."என்றாள்.

அதற்கு வார்த்தைகள் இன்றி அவன் இல்லை என்று தலையசைக்க, அதன் பிறகு பேசாமல் அப்படியே நின்று கொண்டாள்.

அவ்வப்போது அவனைப் பார்க்க,அவன் பார்வை எதிரே தெரியும் சுவரின் மீது தான் இருந்தது.

இமைக்காத அவன் பார்வையில் ஏதோ யோசனையில் இருப்பது புரிய, அதை கலைக்காமல் அமைதி காத்தாள்.

சில நிமிடங்களில் ஆர்டர் செய்த டீயும் வர அதனுடன் தலைவலி மாத்திரையும் இருந்தது.

அவற்றை ஆத்ரேயனிடம் அளிக்க, அதை வாங்காமல், " டேபிளில் வை" என்று விட்டு மெல்ல தள்ளாடியபடி அவன் பாத்ரூம் செல்ல,அப்படியே ஒதுங்கி நின்று கொண்டாள்.

நேற்று இரவின் தாக்கம் இன்னும் அகலாமல் இருக்க, ஆத்ரேயன் அருகாமை ஒருவித பயத்தையும் அசௌகரியத்தையும் உண்டாக்கியது.

கொட்டும் சவரில் நின்றவனின் உடல் உஷ்ணம் குறைந்தாலும்,மனதின் வெண்மை சிறிதும் குறையாமல் இருந்தது.

கதவு தட்டும் ஒலியில் சவரை நிறுத்தியவன்.

ஹாங்கரை பார்க்க அது காலியாக இருக்கவே, முகம் நொடியில் மாறியது.

நேற்று இரவு நடந்ததும் நினைவு வர, அதில் நெற்றியைப் பிடித்துக் கொண்டான்.

அவளை அழைக்க மனமில்லை என்றாலும் வேறு வழி இல்லாமல், சிறிது கதவை திறந்து, "ரூம் சர்வீஸ்க்கு கால் பண்ணி பிரஷ் டவல் கொண்டு வர சொல்லு " என்று கூறும்போதே,

கதவின் இடைவெளியில், அவளின் வளைக்கரம் புக, ஒரு நொடி தயங்கி பின்னடைந்தான்.

அவள் கரத்தில் இருந்த பாத் ரோப்பையும் டவலையும் கண்டு கண்களை இறுகமூடி திறந்தவன்.

அவற்றை எடுத்ததும் உடனே அவள் கரத்தை விலக்கிக்கொள்ள, கொலுசு சத்தத்தில் அவள் அகலுவதும் புரிய, கதவை மூடி அதிலே தலையை சாய்த்தவனுக்கு ஒருவித அவமான உணர்வு பிடுங்கி தின்றது.

ஒருவாறு சமாளித்தபடி தயாராகி வெளியே வர, சூடான இஞ்சி டீயை நீட்டினாள்.

கனத்த தலைக்கு அது அமிர்தமாக உள்ளே இறங்க, அதை பருகி முடித்ததும் உடனே தலைவலிக்கான மாத்திரையை அளித்தாள்.

அதனை விழுங்கியவன்.அப்படியே சோபாவில் சாய்ந்து கண்மூடி கொண்டான்.

அவளின் அசைவுகள் இன்டெர்காமில் மெல்லிய குரலில் பேசுவது என அனைத்தும் புரிந்தாலும், ஏனோ அவளிடம் நேரடியாக பேசவும் அவளைக் காணவும் அவன் தயாராக இல்லை.

காலிங் பெல் சத்தத்திலும் கண்களை திறக்கவில்லை.

சாப்பிடலாமே என்றவளின் குரலில் மெல்ல கண்களை திறந்தவனுக்கு இப்பொழுது கண் எரிச்சல் நீங்கி இருந்தது. தலைவலியும் மட்டுபட்டிருந்தது.

அவன் முகம் தெளிந்திருப்பதை கண்டு திருப்தி பட்டு கொண்டவள். உணவை பரிமாற எதுவும் பேசாமல் உண்டான்.

மருந்துக்கும் அவள் உண்டாளா என்று கேட்கவும் இல்லை. சேர்ந்து உண் என்று கூறவும் இல்லை.

திகழினியும் அதை எதிர்பார்த்தது போல இல்லை.

அவன் உண்டதும் திகழ் எழுந்து கொள்ள, " நான் கிளம்புறேன்" என்று விட்டு அவள் அங்கிருந்து அகல கதவை திறக்கும் இறுதி நொடியில், " டிராப் பண்ணவா? "என்று மனம் இறங்கி கேட்டான்.

"இன்னைக்கு உங்களுக்கு முக்கியமான ஷூட்டிங் இருக்கிறதா கால். 10 மணிக்கு ஸ்பாட்டில் இருக்கணும்னு மெசேஜும் வந்தது. இப்பவே டைம் ஒன்பது" என்றதும்,

அவன் அவளை கூர்மையாக பார்க்க, " விடாமல் கால் வந்துட்டே இருந்தது அதனால்தான், சாரி.உங்க வீட்டு சர்வெண்ட்ன்னு தான் பேசினேன்" என்று சேர்த்து கூற,கரங்களை இறுக மூடிக்கொண்டான்.

அவன் எதுவும் பேசாமல் இருப்பதைக் கண்டு ஒரு தலையசைத்துடன் வெளியேற கதவை திறக்க, "வீட்டுக்கு போய் ரெடி ஆகிட்டு ஷூட்டிங் ஸ்பாட் வந்துரு. அப்போ அப்போ காபி, டீ வேணும். இந்த டீ குடிச்ச மாதிரியே இல்லை" என்று கூறியவனை ஆச்சரியமாகப் பார்த்தாள்.

'பைவ் ஸ்டார் ஓட்டல் டீ உனக்கு குடிச்ச மாதிரி இல்லையா?' என்ற கேள்வி அதில் பொதிந்திருந்தது.

அதையெல்லாம் அவன் கருத்தில் கொள்ளாமல், அணிந்திருந்த பாத் ரோப்பை கழட்ட போக, பதறிக்கொண்டு அங்கிருந்து வெளியேறினாள்.

அவள் கதவை மூடியதும் அப்படியே மெத்தையில் சாய்ந்தான்.

சில நிமிட அமைதிக்கு பிறகு எழுந்தவனின் முகம் முற்றிலும் இயல்பாக மாறி இருந்தது.

ஹோட்டலின் மேனேஜரை அழைத்து தன் உடையின் அளவை கூறி ரூமிற்கே தருவித்து தயாராகி ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்றான்.

படத்தின் முக்கிய காட்சிகளை இன்று தான் படப்பிடிக்கப்பட போகிறது.

படத்தின் கிளைமாக்ஸ் முன் 20 நிமிட காட்சிகள் தான் அத்தனை முக்கியம்.

இங்கு இரண்டு நாள் ஷூட்டிங்கை முடித்துவிட்டு அடுத்த பதினைந்து நாட்களும் கொல்லிமலை காட்டில்தான் படப்பிடிப்பு.

காட்சிகளும் அதிகம் என்பதால் பரபரப்பாக யூனிட் இயங்கிக் கொண்டிருந்தது.

அனைத்தையும் கூர்மையாகப் பார்த்தபடி வந்தவன். அவன் கேரவனின் முன்பே போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்தான்.

அவன் வந்ததுமே இனிப்பை கண்ட ஈயைப் போல் விமல் வந்து,

" சார் என்ன ஆச்சு
உங்க போன் ரீச் பண்ணினால் உங்க சர்வன்ட் தான் எடுத்துப் பேசினாங்க. ப்ரொடியூசர் வேற உங்ககிட்ட டிஸ்கஸ் பண்ணனும்னு சொல்லிட்டு இருந்தாரு " என்று படபடப்பாக கூறி கொண்டே வந்தவன்.

ஆத்ரேயனின் உக்கிர பார்வையில் அப்படியே வாயை மூடிக்கொண்டான்.

"சார்" என்று உதறலுடன் அழைக்க, " ஸ்பாட்டெல்லாம் ரெடியா.ஆர்ட்டிஸ்ட் எல்லாரும் வந்துட்டாங்களா? " என்று கேள்வி கேட்க,

"ஆல் ஓகே சார். நீங்க ஓகே சொன்னால் டேக் போயிடுலாம்" என்று விரைப்பாக கூறினான்.

இருக்கையை விட்டு எழுந்தவன் தயாராகிய ஸ்பாட்டை ஆராய்ச்சியாக பார்த்துவிட்டு கேமராமேன் இடம் வர, அவர் அவன் பார்க்கும் வகையில் வழிவிட்டு நின்றார்.

கேமரா கோணங்களும் சரியாக இருக்க அவர் அருகிலே ஒரு சேர் போட்டு அமர்ந்து கொண்டவன்.

தலையசைக்க, சாந்தவியோ தயங்கியபடி வந்தாள்.

அவளை பார்த்ததும் அவனின் உடல் கோபத்தில் உஷ்ணம் ஆனது.உள்ளுக்குள் கொதித்தது. அது சம்பந்தப்பட்ட சாந்தவிக்கும் புரிந்தது.

அவளை முறைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தவனின் நாசியில் பன்னீர் ரோஜா மணம் எற,அதில் திரும்பி பார்க்க, கருப்பு மற்றும் மஞ்சள் நிற காட்டன் புடவையில் திகழினி வந்து கொண்டிருந்தாள்.

அவள் பார்வை போடப்பட்டிருந்த செட் மற்றும் அங்கிருந்த கருவிகள் மீது தான் இருந்தது. அனைத்தையும் அவதரித்தவாறு மெல்ல வந்தாள்.

ஆத்ரேயனிடமிருந்து எந்த கட்டளையும் வராமல் போனதில் அனைவரின் கவனமும் அவன் மீது இருக்க, அவனின் கவனம் குவிந்திருந்த திகழினியின் மீதும் மற்றவர்களின் கவனம் விழுந்தது.

அதில் சிலர் தங்களுக்குள் முணுமுணுக்க ஆத்ரேயனின் கூர் காதுகளில் அந்த சலசலப்பு விழுந்தாலும் கருத்தில் கொள்ளவில்லை.

திகழ் பார்வை ஆத்ரேயன் மீது பட்டதும், ஆக்சன் என்று மைக்கே இல்லாமல் அவன் கர்ஜிக்க, மொத்த பேரின் கவனமும் சாந்தவி மற்றும் துணை கதாபாத்திரங்களின் மீது திரும்பியது .

அவன் குரலில் திகழுக்கு உடல் தூக்கி வாரி போட, ஷூட்டிங் பார்க்கும் படியாக ஓரமாக நின்று கொண்டாள்.

தன் அருகில் இருந்தவர்களின் பார்வை தன் மீது படிப்பதை உணர்ந்தாலும் ஷூட்டிங் கவனிக்கும் பரப்பரத்தில் அவள் அதைப் பொறுப்படுத்தவில்லை.

துணை கதாபாத்திரமான 4 ஆண்கள் சாந்தினியை துரத்த, அவளோ படப்பிடிப்பிற்காக அமைக்கப்பட்ட பச்சை நிற ஸ்கிரீனால் ஆன பலகையில் ஏறி நின்றாள்.

பச்சை நிற மேட் போடப்பட்ட அந்த பலகை கிராபிக்ஸின் மூலம் பாறையாக உருமாறும்.

அந்த அமைப்பு பத்தடி உயரம் கொண்டது.

அதன் மீது ஏறியவளை துரத்தி வந்த நால்வரும் அவளை பிடிக்க போக, அங்கிருந்து கீழே குதிக்க கீழே அவளுக்காக விரிக்கப்பட்ட மேட்டில் விழுந்தாள்.

அனைத்தையும் சரியான கோணத்தில் கேமராமேன் உள்வாங்கிக் கொள்ள, சாந்தவியும் பயம் அகன்று சீன் ஓகேவா என்பது போல் ஆத்ரேயனை நோக்க,

"ரீடேக் " என்று சத்தமாக அவன் கூற,மீண்டும் அந்த காட்சி படமாக்கப்பட்டது.

இரண்டு ஐந்து பத்து என்று டேக்குகள் போய்க்கொண்டே இருந்ததே தவிர, ஆத்ரேயனிடம் சம்மதம் கிடைக்கவே இல்லை.

பத்தடியில் இருந்து மெத்தையில் முதல் ஐந்து தடவை விழும் போது தெரியாதது அடுத்தடுத்து என்று வரும்போது உடல் வலிக்க ஆரம்பிக்க, சாந்தவி முகம் வாடிப்போனது.

அவள் வலி அப்பாட்டமாக அங்கிருக்கும் அனைவருக்கும் தெரிய,பயத்துடன் ஆத்ரேயனை நோக்கினர்.

சாந்தவிகோ வலியில் அழுகையே வந்துவிட்டது.

மலைபோல் அவனை நம்பி விட்டாள்.

ஷூட்டிங் ஸ்பாட்டில் அவன் கோபத்தை காட்ட மாட்டான் என்று நினைத்திருந்தாள்.

ஆனால் இப்பொழுது ஷூட்டிங் ஸ்பாட்டில் தன்னை வைத்து செய்கிறானே என நொந்து போய் அவனை பார்க்க, அவன் முகத்தில் சிறிதும் இளக்கம் இல்லை.

கண்களில் இருந்த கோபம் அவனை பார்க்கவே பயம் கொள்ள செய்தது.

காலை மதியம் ஆகி மதிய உணவுக்கான இடைவெளி நேரமும் வந்து விட்டது.இன்னும் அதே காட்சிகள் தான் மீண்டும் மீண்டும் படம் பிடிக்கப்பட்டு கொண்டிருந்தது.

திகழினியோ உறைந்து போய் ஆத்ரேயனை பயத்துடன் பார்த்தாள்.

அவன் முகத்தில் உடல் மொழியில் எந்த வித்தியாசமும் இல்லாமல் இயல்பாக இருப்பதாக காட்டிக் கொண்டாலும்,
ஏனோ அவன் மனதின் எண்ணம் புரிந்தது போல், இவள் உடல் நடுங்கியது.

சாந்தனி முகத்தில் இருந்த களைப்பு ஆடைகளின் சீரற்ற தன்மை என்று எதையும் கண்டும் கூட அவளுக்கு டச்சப் கூட செய்ய அவகாசம் தராமல் மீண்டும் மீண்டும் டேக்குகள் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்க,அனைவருக்கும் சந்தேகமே வந்து விட்டது.

அனைவரும் ஆத்ரேயனைப் பயத்துடனும் நடுக்கத்துடனும் பார்த்துக் கொண்டிருக்க,

" லஞ்ச் முடிச்சிட்டு வாங்க ஷூட்டிங்கை கண்டினியூ பண்ணிக்கலாம் " என்றபடி ஆத்ரேயன் எழுந்தான்.

நேரே திகழ் புறம் வர அங்கிருந்த மரத்தில் சாய்ந்து இருந்தவள்.உடனே அட்டேஷனில் நின்றாள்.

"சாப்பாடு ரெடியா" என்று சட்டையின் கையை மேலே ஏற்றிவிட்டவாறு கேட்டவன்.

அவள் பதிலளிக்கும் முன் அங்கிருந்து அகல, அடித்து பிடித்து அவன் பின்னே ஓடினாள்.

சாந்தினியின் மீது கவனத்தில் இருந்தவர்கள் தற்போது ஆத்ரேயனையும் திகழையும் கண்டு தங்களுக்குள் முணுமுணுத்துக் கொண்டனர்.

மொத்த செட்டும் அதைப்பற்றி முணுமுணுத்துக் கொண்டிருக்க, விமலோ பதறி கொண்டு, " சார்" என்ற அலறலுடன் கேரவன் கதவை தட்டி விட்டு உள்ளே நுழையும் போது,

திகழினியின் காலை பிடித்தபடி ஆத்ரேயன் இருக்க,வந்த வேகத்தில் அப்படியே அங்கிருந்த சுவரில் சாய்ந்தவன் கண்கள் தெறித்து விடுவது போல் பெரிதானது.

"சார்" என்றான் காற்றாகி போன குரலில்.

விமலை ஒரு பொருட்டாகவே கண்டு கொள்ளாமல், "இப்ப கால் ஓகேவா? "என்றவனிடம் தலையை சம்மதமாக ஆட்டியவள்.

உடனே காலை அவனிடம் இருந்து உறுவி கொண்டாள்.

ஒன்றுமே நடக்காதது மாதிரி எழுந்த ஆத்ரேயன்," என்னடா" என்க, விமலின் விழிகள் திகழை தயக்கத்துடன் நோக்கியது

"என்னன்னு கேட்டேனே விமல் " என்று அழுத்தமாக ஆத்ரேயன் கேட்கவும்,' இவர் புரிந்து தான் பேசுகிறாரா' என்று எண்ணியவன்.

" இவங்க... இல்லை... மேம்... " என்று தடுமாற,

" அதனால என்ன சொல்லு "என்றான்.

'அட என்னடா நடக்குது' என்று நொந்த விமல்.

தனது டேப்பை அவன் பக்கம் திருப்ப, "ஏன் வாயில் சொல்ல மாட்டியா?" என்று அதட்டினாலும், திரையை பார்த்தவன் அலட்சியமாக தோளை குலுக்கி கொண்டான்.

தன் காலணியை அணிந்தவாறு எழுந்த திகழ் பார்வையில் திரையில் இருந்த காட்சி தெரிய பதறி கொண்டு மீண்டும் சோபாவில் விழுந்தாள்.

இருவரும் கட்டி பிடித்த படி ஹோட்டல் ரூமிற்குள் செல்வது போலான புகைப்படம்.

அதன் கீழ் பிரபல இயக்குனரின் ரகசிய காதலி என்று கொட்டை எழுத்தில் எழுதப்பட்டிருக்க பார்த்தவளுக்கு தலைசுற்றி போனது.


 
அத்தியாயம்-13

'ஐயோ என்ன இது' என்று பதறிப் போய் திகழ் வாயில் கை வைத்து கொள்ள,

"சார்... நேத்து ஏதோ பொண்ணு கூட நீங்க ஹோட்டல் ரூம்குள்ள போற மாதிரி போட்டோ லீக் ஆகி இருக்கு" என்று பதட்டத்திலும் பரபரப்பிலும் மூச்சு வாங்க விமல் கூறினான்.

ஆத்ரேயன் மின்னும் திரையை மீண்டும் நோக்க,அதில் திகழ் முகம் தெளிவாக தெரியாமல் இருப்பதில் தாடையை தேய்த்தவாறு, " இது யாருன்னு? " என்று ஆத்ரேயன் கேள்வியை முடிக்கும் முன்னே,

" கிராபிக்ஸ் போல சார். இது மார்ஃபிங்னு உங்க அபிஷியல் பேஜில் போஸ்ட் போட்டடலாம். டெக்ஸ்ட் கூட ரெடி. போட்றவா சார் " என்றவனை மேலும் கீழும் பார்த்த ஆத்ரேயன்.

" படம் பண்ணனும்னு உனக்கு ரொம்ப வருஷ ஆசை இல்ல. புரொடியூசர் கிட்டயும் ஹீரோ கிட்டயும் கதை சொல்லிட்டு இருக்க போல " என்று வினவா,

'தான் செய்த செயலுக்கு பாராட்டி ஏதாவது வாய்ப்பை அறிமுகப்படுத்தப் போறாரா 'என்று ஆவலுடன் விமல் ஆம் என்று கூற,

அவன் எண்ணத்தில் மண்ணள்ளி கொட்டுவது போல், "கஷ்டம் தான்" என்று தலையசைத்தவாறு கூறியவன்.

" சாப்பாடு போடுற ஐடியா இருக்கா இல்லையா? " என்று திகழிடம் திருப்பி நக்கலாக கேட்க, அவளோ,'மனசாட்சி உனக்கு இருக்கா டா ' என்ற பொறுமலுடன் அவனைப் பார்த்து வைத்தாள்.

அதற்கு சிறிதும் அசராமல் அவன் பார்வையை தொடர, ஒரு பெருமூச்சுடன் எழுந்தவள்.

கேரியரில் இருந்த உணவை டேபிளில் எடுத்து வைக்க,

விமலோ, " சார் போஸ்ட் போட்றவா?" என்றான் ஒன்றும் புரியாத பாவனையில் .

" தேவை இல்லை. அது கிராபிக்ஸும் இல்லை " என்று விட்டு டேபிளில் அமர்ந்து கொள்ள, ஓ என்று இயல்பாக கூறியவன்.

அதன் பிறகே ஆத்ரேயன் கூறிய அர்த்தம் புரிந்து, " சார்" என்றான் கூவலாக,

"நீ ஏண்டா என் பொண்டாட்டி மாதிரி ரியாக்சன் கொடுக்கிற "என்றவன் பார்வை தனக்கு பரிமாறிக் கொண்டிருந்த பெண்ணவளின் மீது அழுத்தமாக பாய, அவளோ காரியமே கண்ணாக உணவை அவனுக்கு உணவை வைத்து கொண்டிருந்தாள்.

முகமோ முழுவதும் சிந்தனை வயப்பட்டு இருந்தது.

இடையில் அவன் பார்வையை தடை செய்யும் விதமாக,விமல் " சார்" என்றான் கிட்டத்தட்ட அழும் குரலில்.

"உனக்கு அந்த போட்டோவில் இருக்குற பொண்ணு யாருன்னு தெரியுதா? " என்று வினாவியப் படி உணவை வாயில் வைக்க, திகழோ விக்கித்து போய் விமலை பார்த்தாள்.

" எல்லா இடத்திலும் சர்ச் பண்ணி பார்த்துட்டேன் சார். யாருன்னே தெரியலை " என்று அந்த புகைப்படத்தை ஜூம் செய்து பார்த்தவாறு சோர்வாக பதிலளித்தான்.

"நேத்து பார்ட்டிக்கு வந்திருந்தால் கண்டிப்பா கண்டுபிடிச்சு இருப்பேன் சார் "என்று விரைப்பாக கூற,

" க்கும்" எனத் தொண்டையை செருமியப்படி, " போய் அடுத்த ஷாட்டுக்கு ஏற்பாட்டை கவனி" என்று விட்டு உணவை தொடர,

"சார் இந்த இஷ்யூ" என்று தலை சொறிந்த படி வினாவ,

"டேய் ஒவ்வொரு போட்டோக்கும் போஸ்ட் போட்டுட்டு இருப்பாங்களா? முதலில் போய் வேலையை பாருடா " என்று உண்ணுவதை நிறுத்திவிட்டு கத்த,

மூச்சை இழுத்து கொண்ட விமல் அடித்து பிடித்து அவ்விடத்தில் இருந்து ஓடினான்.

தன் நண்பன் சத்யனிடம் சென்ற பிறகு தான் இழுத்த மூச்சினை விட்டான்.

"டேய் முடியலை டா. மறுபடியும் என் ஊருக்கே போய்டுறேன் " என்று அவன் தோள் சாய்ந்து கதற, சத்யன் அவனைத் தேற்றினான்.

விமல் அவ்விடத்தை விட்டு அகன்றதுமே டேபிளை பற்றாக பிடித்துக் கொண்டவள் முகம் மொத்தமும் கலங்கி போனது.

"அதான் முகம் தெரியலையே அப்புறம் என்ன. அப்படியே தெரிஞ்சால் மட்டும் இப்போ என்ன?" என்று அக்கறை காட்டாத குரலில் கூற,

" உங்களுக்கு பிரச்சனை இல்லை. ஆனால் எனக்கு பிரச்சனை தான் " என்றாள் தீர்க்கமாக.

அதில் உண்ணுவதை நிறுத்திவிட்டு அவளை அழுத்தமாகப் பார்க்க சிறிதும் தயங்காமல், " உங்களுக்கு இந்த கிசுகிசுப்பு புதுசு இல்லாமல் இருக்கலாம். ஆனால் எனக்கு அப்படி இல்லை "

" அது சரி" என்றவன் முழுவதையும் உண்டு விட்டு எழுந்தான்.

" நீயும் சாப்பிட்டு கிளம்பு" என்று விட்டு வெளியேற,உண்ண மனமில்லாமல் அனைத்தையும் பேக் செய்தவள்.

அங்கு இருக்க பிடிக்காமல் உடனே வெளியேற, தனது காட்சிக்காக தயாராகி வெளியே வந்த அப்படத்தின் கதாநாயகனான திவாகர் தன்னை தாண்டி சென்றவளை அழுத்தமாக பார்த்தான்.

சார் என்று அவன் ஸ்டைலிஷ் பவ்யமாக அழைக்க, கோணல் சிரிப்புடன் அவன் புறம் திரும்பியவன். சில கட்டளைகளை பிறப்பிக்க சம்மதமாக அந்த ஸ்டைலிஷும் தலையசைத்தான்.

மாலை வரை சாந்தவியை சுற்றலில் வைத்துவிட்டு இரவு 11 மணிக்கு தான் அவளின் டேக்கை ஓகே செய்தான்.

இடையில் திவாகருக்கான காட்சியும் படம் பிடிக்கப்பட்டது.

இரவு அவன் பார்ட்டியில் அத்துமீறி பேசியது நினைவு வந்தாலும், அதை ஆத்ரேயன் வேலையில் காட்டவில்லை.

இன்று நடந்ததற்கு ஈடு கட்டும் விதமாக அடுத்த நாள் காலை 3:00 மணிக்கு ஷூட்டிங் நடைபெற வேண்டும் என்று வேலைகளை மலை என குவித்து விட்டு செல்ல, அனைவரும் நொந்து போயினர்.

'இனி தூங்க எங்கே நேரம் ' என்று அப்பொழுதே வேலைகளை புரொடக்சன் டீம் ஆரம்பிக்க, ஷூட்டிங் ஸ்பாட்டே பரபரப்பாக செயல்பட்டது.

உடல் களைத்து சோர்வுடன் தன் கேரவனை அடைந்த சாந்தவி முகமோ வெஞ்சனத்தில் சிவந்து போனது.

*****

விடிவிளக்கு மட்டும் ஒளிர்ந்த ஹாலை தாண்டி தாயின் அறைக்கதவை திறந்து பார்க்க, அவரோ உறக்கத்தில் இருப்பதைக் கண்டு தன் அறை சென்றான்.

அவனை தேட வைக்காமல்,ஸ்டடி டேபிளில் அமர்ந்து டைரி எழுதிக் கொண்டிருந்தவளைக் கண்டு அப்படியே கதவில் சாய்ந்தப் படி நின்று விட்டான்.

சில கணத்திலே அவன் வரவை உணர்ந்து எழுந்தவள்.

தான் எப்பொழுதும் படுக்கும் மெத்தையில் வந்து அமர்ந்து கொண்டாள்.

ஒற்றைப் புருவம் உயர்த்தியப்படி அவளைப் பார்த்தவன்.

அவள் கவனம் கையில் இருக்கும் டைரியில் இருப்பதை கண்டு,கதவை தாளிட்டவன்.

சட்டையின் முதல் இரண்டு பட்டனைக் கழட்டி விட்டவாறு, அவளுக்கு எதிரே போடப்பட்ட இருந்த ஒற்றை சோபாவில் அப்படியே தளர்வாக அமர்ந்தப்படி, அவளையே ஆழ்ந்து பார்த்தான்.

அவன் பார்வையை உணர்ந்தது போல் டைரியில் இருந்து தலையை நிமிர்த்தியவள் அவன் சிவந்த விழிகளை கண்டு எழுந்தாள்.

எதுவும் பேசாமல் மௌனமாக அறையை விட்டு வெளியேற, அப்படியே சோபாவில் கண்மூடி தலை சாய்த்து கொண்டான்.

கண்ணாடி வளையலின் உரசல் சத்தத்தில் கண்விழிக்க, சுட சுட ஆவி பறக்க பால் சேர்க்காத இஞ்சி டீயை அவன் முன்னே நீட்டினாள்.

" நான் ஒன்னும் குடிக்கலை " என்றான் அறிவிப்பாக.

"தெரியும். ஆனால், தலைவலிக்கும் இது கேட்கும் ".

அதில் எதுவும் பேசாமல் வாங்கி ஒரு மிடறு பருகியவன். கண்களை அப்படியே மூடிக்கொண்டான்.

டீயின் மணம் நாசியில் ஏறி மொத்த புலனையும் விழிப்படைய செய்தது.

நாவில் உணர்ந்த வெதுவெதுப்பான சூடும் இஞ்சியின் காரமும் உடலை சோர்வில் இருந்து தட்டி எழுப்பியது.

அதனுடன் மிதமாக வந்த ஏலக்காயின் வாசம்.

"ஹேவன்லி ஃபீலிங் " என்று அவன் வாய் தன்னை அறியாமல் முணுமுணுத்தது.

"வேற ஏதாவது வேணுமா" என்ற அவள் கேள்வியில் விழி மலர்த்தியவன்.

" ஏன் எப்போ பார்த்தாலும் ஏதாவது வேணுமா, வேணுமானு கேட்டுட்டு இருக்க" என்று வம்பு இழுக்கும் தொணியில் கேட்க,

" பழக்க தோஷமா இருக்கலாம்" என்றவாறு மெத்தையை நோக்கி நடைப் போட்டாள்.

"பழக்க தோஷமா?" என்று கேள்வியாக நிறுத்த,

" ஹோட்டலில் வெயிட்டிரஸா வேலை பார்த்து இருக்கேன்" என்று அவளின் மெத்தையை சரி செய்தபடி கூற,

" வாட்.கேட்டரிங் பிசினஸ் தானே உங்க ஊரில் பண்ண" என்று கேட்டவனின் மூளைக்குள் வண்டாக பல கேள்விகள் படையெடுத்தது.

"அது லாஸ்ட் ஒரு வருஷமா தான். அதற்கு முன்னே மூணு வருஷம் பெங்களூரில் இருக்கும் ஒரு 5 ஸ்டார் ஹோட்டலில் வெய்ட்ரஸா வேலை பார்த்தேன். அங்கே தான் ஃபாரின் குசின்ஸ் பத்தி நிறையக் கத்துக்கிட்டேன்".

அதில் ஆத்ரேயனுக்கு இருந்த இதமான மனநிலை அப்படியே மாறிப்போனது.

ஒரு மாதிரி மனம் பிசைய, "ஊரில் உங்க அப்பா நல்ல செல்வாக்கான ஆள் தானே. நீ ஏன்?" என்று அப்படியே கேள்வியாக நிறுத்தினான்.

"நான் பத்தாவது படிக்கும்போது எல்லாம் கடனில் மூழ்கிடுச்சு. நான் காலேஜ் வரை போனதே பெரிய விஷயம் தான்." என்று உணர்வுகள் காட்டாதக் குரலில் கூறியவள்.

அதன் பிறகு தான் தெளிந்து, அவனைப் பாராமல் மறுபக்கம் திரும்பி படுத்து கொண்டாள்.

ஏனோ ஒருவித கணம் அங்கு சூழ்ந்து கொள்ள, அதைக் கடக்க முடியாமல் மௌனம் காத்தான்.

நேரம் கடக்க,அப்படியே சோபாவில் தலை சாய்த்தவன் உறங்கிப் போனான்.

விடாமல் ஒலித்த கைபேசி அழைப்பில் உணர்வு பெற்றவன்.

கண் திறவாமல் பாக்கெட்டில் இருந்த போனை ஏற்று காதிற்கு கொடுக்க, "சூட்டிங்கிற்கு எல்லாம் ரெடி சார்.நீங்க வந்துட்டீங்கன்னா ஆரம்பிச்சுடலாம் "என்ற விமலின் குரலில் தான் திரையை பார்த்தான்.

இரண்டரை மணி தான் ஆகியிருந்தது.

ஒழுங்கான தூக்கமும் இல்லை. ஓய்வெடுக்க நேரமில்லை.

குளித்து தயாராகி வெளியே வந்ததும் தான் பெண்ணவளைக் கண்டான்.

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவளின் முகத்தில் வலியின் சாயல் எதையோ நினைத்து உறக்கத்திலும் மருகுகிறாள் என்பது புரிய,

ஏசியின் குளுமையை அதிகப்படுத்தி, விடிவிளக்கையும் அணைத்து விட்டு அங்கிருந்து சென்றான்.


 
அத்தியாயம்-14

சார் சார் என்று அழைத்துப் பார்த்து ஓய்ந்து போன விமல், "ஆத்ரேயன்... சார்" என்று இப்பொழுது சத்தமாக அழைத்தான்.

அதில் ஐபேடில் இருந்து தலையை நிமிர்த்தியவன்.

என்ன என்ற வினா, தொனிக்கும் வகையில் ஒற்றை புருவத்தை உயர்த்த, 'இவரோட' என்று மனதிற்குள் நொந்தபடி, "சார் அந்த போட்டோ இஸ்யூ " என்று தடுமாற்றத்துடன் கூற வர, விமலின் பேச்சில் இடையிட்டு,

"அதை ஃப்ரீயா விடு" என்று உடனே அந்தச் செய்தியைக் கண்டுகொள்ளாப் பாவனையில் மொழிந்தான்.

'அட என்னடா இவர் கூட ஒரே ரோதனையா போச்சு 'என்று உள்ளுக்குள் நொந்து கொண்ட விமலுக்கு அப்பிரச்சனையை இயல்பாகக் கடக்கும் நிலையைத் தாண்டி விட்டதை எவ்வாறு விளக்குவது என்ற ஆயாசம்.

இதில் சாந்தவி செய்யும் பிரச்சனையை கூறுவதில் வேறு பயம்.

ஏன் எதற்கு என்று தெரியாமல் நேற்று சாந்தவியை போட்டு படுத்திய பாட்டில் அவள் இப்பொழுது செய்வதை கேட்டால் இன்னும் எந்த எல்லைக்கு செல்வாரோ என்ற குழப்பத்தில் ஆழ்ந்தான்.

சரி முதலில் போட்டோ பிரச்சனையை கூறலாம் என்று ஆரம்பித்தால்,இப்படி முட்டுக்கட்டை போடுகிறாரே என்று கோபம் வேறு ஒரு பக்கம் வந்தது.

கண்டு கொள்ளாமல் இருக்கும் அளவுக்கு சோசியல் மீடியாவில் அப்படி ஒன்றும் விஷயம் அமிழ்ந்து போகவில்லை.

கமெண்ட் செக்சன் இப்பொழுது வரை தீப்பிடித்து எரிந்து கொண்டு தான் இருக்கிறது.

இதில் கருத்து கூறுவதற்கு சீரியல் நடிகர்கள் ஏற்கனவே ஆத்ரேயனிடம் வாய்ப்பு மறுக்கப்பட்ட நாயகர்கள், நாயகிகள் சிலர்.

திடீரான முளைத்த காளான்கள் போல் தோன்றி ஆத்ரேயனுக்கு எதிராக கமெண்ட்களை வழங்கி,தங்களின் இருப்பை காட்டி,அதன் மூலம் பிரபலமாக முயன்று கொண்டிருக்கின்றனர்.

இதில் தாங்கள் எல்லாம் பிரபலம் என்று கூறிக்கொள்ளும் இன்ஸ்டாகிராம் யூடுப் இன்புலியன்சர்களும் ஆத்ரேயனுக்கு எதிராக வீடியோக்களை பதிப்பித்திருக்கின்றனர்.

அதெல்லாம் எண்ணும் போதே தலைசுற்றியது.

" என் முகத்தை பார்க்க தான் வேலையெல்லாம் விட்டுட்டு வந்து நிக்கிறியா " என்றவனின் எரிச்சலான குரலில் உணர்வு பெற்ற விமல், " சார் "என்றான் நொந்து போன குரலில்.

"உனக்கு இப்ப என்னதான்டா பிரச்சனை" என்று பொறுமையற்ற குரலில் கடிய,

கேரவன் கதவு தட்டப்பட, அனுமதி கொடுத்ததும், அன்னபூரணி கேட்டரிங்கில் வேலை பார்க்கும் முத்து ஆத்ரேயனுக்கான காபி உடன் வந்து நின்றான்.

அவனை கேள்வியாக பார்த்தப்படி, " திகழ் கொண்டு வரலையா? " என்று விமலிடம் கேட்க,

'அடேய் என்ன வேலை பார்க்க வந்தவனை, என்ன வேலை டா பார்க்க வைக்கிறீங்க' என்று உள்ளுக்குள் மைண்ட் வாய்ஸ் மணி அடிக்க,

" காபி யார் கொடுத்தால் என்ன சார்.." என்று வெளியில் நயந்தபடியே கூறிய விமல் ஆத்ரேயனின் அழுத்தமான முறைப்பில் அப்படியே வார்த்தைகளை முழுங்கிக்கொண்டான்.

அவனை கண்டுகொள்ளாமல் ஆத்ரேயன் உடனே மொபைலை எடுத்து திகழுக்கு, "காபி எங்கே?" என்று மெசேஜ் போட்டான்.

சென்னையின் பிரபல துணிக்கடை உரிமையாளரின் பேத்தி பிறந்தநாள் விழாவிற்கு உணவு அன்னபூரணி கேட்டரிங் தான் .

பிரம்மாண்டமான அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தன் பணியை கவனித்துக் கொண்டிருந்தவள்.ஆத்ரேயனின் செய்தியில் குழம்பிப் போனாள்.

தன் எதிரே நின்றிருந்தவர்களிடம் அனுமதி கேட்டு விட்டு, அங்கிருந்து அகன்று நெற்றியை பற்றி கொண்டவளுக்கு தலை சுற்றியது.

இத்தனை நேரம் தன்னிடம் வம்பு இழுத்துக் கொண்டிருந்தவர்களை நோக்க, அவர்களின் பார்வையோ தன் மீது இருப்பதைக் கண்டு அசட்டு சிரிப்பு சிரித்தபடியே அவர்கள் பார்வை படா தூரத்திற்கு வந்தாள்.

மீண்டும் மெசேஜ் சத்தத்தில் போனில் கவனத்தை பதிக்க ஆத்ரேயன் தான் மீண்டும் செய்தியை அனுப்பி இருந்தான்.

'இவரோட முடியல' என்ற நொந்து கொண்டவளுக்கு, அவனுக்கு பதில் அனுப்பும் எண்ணமில்லை.

அத்தனை கோபம் அவன் மீது.

அந்த புகைப்படம் இத்தனை தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கவே இல்லை.

அதிலிலும் இவ்வளவு நேரம் தன்னிடம் வம்பு வளர்த்தவர்களை எண்ணும் போதே கோபம் வந்தது.

அனைவரும் உயர்மட்ட ஆட்கள் தான்.


ஆனாலும் அன்னபூரணி கேட்டரிங் மேனேஜர் என்றதுமே ஆத்ரேயனை பற்றியும் அந்தப் புகைப்படத்தை பற்றியும் அவளிடமே அத்தனை கேட்டு, வாயை பிடுங்க முடியுமா என்று முயன்றவர்களைக் கண்டு அயர்ந்தாள்.

அப்படி என்ன இதை தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஒரு பக்கம் கோபமும், மறுபக்கம் ச்சீ என்ற உணர்வும்.

ஆத்ரேயன் செல்வாக்கிற்கு அந்த புகைப்படத்தை நீக்கி இருப்பான் என்று பார்த்தால் கண்டுகொள்ளாமல் இருக்கிறானே என்று அவன் மீது ஆற்றாமை.

அந்தப் புகைப்படத்திற்கு பயந்தே தன்னை யாராவது கண்டு கொள்வார்களோ என்று பயந்து புடவையை தவிர்த்து சல்வார் அணிந்து கொண்டாள்.

வெளிர் நீல நிற முத்துக்கள் பதிக்கப்பட்ட சல்வார் அவள் நிறத்தையும் வனப்பையும் இன்னும் கூட்டி காட்டியது.

பார்ட்டி என்பதால் சிறிது சிரத்தை எடுத்து தன்னை அலங்கரித்து இருந்தாள்.

கொண்டை போட பயந்து நெருக்கமாக பின்னி முன்னால் போட்டு இருக்க,நீண்ட கூந்தல் ஒய்யாரமாக அவளை அலங்கரித்தது.

ஒற்றை ரோஜா அவள் வட்ட வடிவ முகத்தை ஓவியம் என மாற்றி இருந்தது. மிதமான அலங்காரத்தில் அப்சரஸ் ஆக ஜொலித்தாள்.

நெற்றியில் மோதிய கூந்தலை காதின் பின் சொருகியவாறு, "முத்து அண்ணா கிட்ட சொல்லிட்டு தான் வந்தேன். இந்த டைம் உங்களுக்கு காபி வந்து இருக்குமே" என்று பதிலைத் தட்டி விட்டாள்.

"சார் சாந்தவி மேடம் ஷூட்டிங் வரமாட்டேன்னு சொல்லிட்டு இருக்காங்க" என்று இதற்காகவது ஏதாவது உணர்ச்சிகளை காட்டு என்பது போல் ஆத்ரேயன் முகம் பார்த்து விமல் கூற,

ஆணவனோ அசராமல் மெசேஜ் சத்தத்தில் போனில் கவனத்தை பதித்தான்.

அதில் விமல் நொந்தே போய் விட்டான்.'அட போங்கடா உங்களோட முடியாது' என்று அவன் தோல்வியை ஒப்புக்கொண்ட பாவனையில் நின்று கொண்டான்.

அவள் பதிலில் பற்களைக் கடித்த ஆத்ரேயன் உடனே அழைப்பு விடுத்தான்.

விடாமல் ஒலித்த அலைபேசியை கண்டு, வேறு வழியில்லாமல் திகழ் அழைப்பை ஏற்க, அவள் பேசக்கூட காத்திராமல்,

"அந்த கன்றாவியெல்லாம் எனக்கு வேண்டாம்.நீ வந்து போட்டுக் கொடு "என்று அடமாக வந்த பதிலில் பெருமூச்சு விட்டுக் கொண்டவள்.

" இப்போ நான் ஒரு பார்ட்டி ஆர்டரில் இருக்கேனே. எப்படி விட்டு வர" என்று அவள் தயங்க,

"என்னமோ நீ தான் தாங்கி பிடிக்கிற மாதிரி சொல்ற.இந்த மூணு மாசமா தானே கவனிக்கிற எங்க அம்மா முப்பது வருஷமா இந்த வேலையை பார்க்கிறாங்க".

"அவங்க கூட அப்பா கூப்பிட்டு போகாமல் இருந்ததில்லை.அதெல்லாம் ஆளுங்க பார்த்துப்பாங்க. சாக்கு சொல்லாமல் இன்னும் அரை மணி நேரத்தில் நீ இங்க இருக்கணும்" என்று விட்டு தொடர்பை துண்டிக்க,

எரிச்சல் எழுந்தாலும் வேறு வழி இல்லாமல் பார்ட்டி அளிப்பவர்களிடம் கூறிவிட்டு, வேலையும் பொறுப்பான ஆளிடம் ஒப்படைத்தவள்.

உடனே, அன்னபூரணிக்கு தயக்கத்துடன் கூற,'இதை விட வேற என்ன வேலை' என்பது போல் உடனே செல் என்று உற்சாகத்துடன் கூறி அவர் வைக்க, சில நிமிடங்களில் காரும் வர அதில் ஏறிப் புறப்பட்டாள்.

சார் என்று முத்துவும் விமலும் ஒரு சேர அழைக்க, " நீ காபி கொண்டு போ
நீ போய் ஷூட்டிங் வேலையை கவனி " என்று இருவருக்கும் ஒரே நேரத்தில் வேலையை கொடுத்துவிட்டு, ஐபேடில் அவன் கவனமாக, முத்து வெளியேறினாலும் விமல் அவன் முகம் பார்த்த படியே நின்றிருந்தான்.

"வாங்குற நாலாயிரத்தையும் என்னை பார்ப்பதற்கு கமிஷனா புடுங்க போறேன் பாரு டா" என்று விமலை தடாலடியாக மிரட்ட,

விமலோ அசராமல் அப்படியே நின்று இருக்க, " வேலையை கவனிப்பியா இல்லையா?. உனக்கு என்னதான் பிரச்சனை" என்று சலித்து போன குரலில் ஆத்ரேயன் கேட்க,

"சார் சாந்தவி மேடம் கேர்வேனில் இருந்துட்டு ஷூட்டிங்க்கு வர மாட்டேன்னு சொல்லிட்டாங்க " என்று தாள மாட்டாத குரலில் கூற,

"அவளை வர சொல்லு" என்றதும்,

"அவங்க எங்கேயும் வர முடியாத சூழ்நிலையில் இருக்கிறதா சொல்லி அவங்க அம்மா என்னை சாந்தவி மேடமை பார்க்க கூட அலோ பண்ணலை. சாரி சார்"

அதற்கு," நானே கவனிக்கிறேன்" என்று கூறிவிட்டு ஆத்ரேயன் செல்ல,மூச்சு முட்ட கூறியதற்கு இவ்வளவுதான் எதிர்வினையா என்று தன்னையே நொந்து கொண்டப்படி வேலைகளைக் கவனிக்க ஆரம்பித்தான்.

இவனுக்காகவே வழி மீது விழி வைத்து காத்துக் கொண்டிருந்த சாந்தவியின் தாய் ஜெயாவோ, " வாங்க தம்பி சாந்தவிக்கு உடம்பு சரியில்லை" என்று மூக்கால் அழ,

"அப்படின்னா வீட்டிலே இருக்க வேண்டியதுதானே. எதுக்கு கேரவனுக்கு தண்டமா வாடகையை அதிகப்படுத்துறீங்க "என்றவனை அதிர்ந்து போய் பார்த்தார்.

" டைரக்டர் சார்" என்று அவர் தடுமாற்றத்துடன் அழைக்க, கிளம்புங்க என்று அவன் முடிவாக கூறியதில் உடனே கேரவன் கதவு திறக்கப்பட்டு சாந்தவி வந்தாள்.

அவளை பொருட்டாத மதிக்காத பார்வையுடன் நோக்க, உடலில் மிளகாய் சாந்தை பூசியது போல் எரிந்தது.

எத்தனை முக்கியமான காட்சிகள் அதுவும் அவளும் இருக்கிறாள் அதுவும் முக்கியமான இடங்களில்.அப்பொழுதும் சிறிதும் இறங்கி வராமல்,' எத்தனை திமிரு இவனுக்கு ' என்று உள்ளுக்குள் பொரும்பியவள்.

"ஆத்ரேயன் எனக்கு உடம்பு முடியலை சரியாகும் வரை சூட்டிங் வரமாட்டேன்" என்று அவனை மிரட்டும் தொணியில் பேச,

" ஃபைன். கிளம்பு. படத்தில் நடிக்கிறவங்களுக்கு தான் கேரவன் உனக்கு இனிமேல் இல்லை" என்றதும் இருவரும் அதிர்ந்தனர்.

அவர்களின் அதிர்வை சிறிதும் பொறுப்பெடுத்தாமல், " நீ இருந்தாலும் இல்லை என்றாலும் ஷூட்டிங் நடக்கும். நீ இல்லாமலே இந்த படத்தை முடிக்க எனக்கு தெரியும்" என்றதும், நோ வே என்று கத்தி இருந்தாள்.

அதில் மற்றவர்களின் கவனம் இங்கு பாய அதை கருத்தில் கொள்ளாதவன்.

இறங்கி இருந்த கண்ணாடியை மேலே ஏற்றியவாறு, "இந்த ஆத்ரேயனை என்னன்னு நினைச்ச. யு வில் சீ" என்று விட்டு நகர,

"நோ எனக்கு உடம்பு இப்போ ஓகே "என்றதும் இதழ்களில் இகழ்ச்சி புன்னகை நன்றாகவே தவிழ, முகம் கூட திருப்பாமல் சம்மதமாக தலையசைத்து விட்டு அவன் செல்ல,

கால்களை தரையில் உதைத்தப்படி மீண்டும் கேரவனிற்குள் சென்று தயாராக ஆரம்பித்தவளுக்கு மீண்டும் மீண்டும் அவனிடம் தோற்பது அவமானத்தை தந்தது.

செட் அனைத்தும் தயாராக இருக்க அதை பார்வையிட்டபடியே வந்தவனின் கவனம் வாயிலில் நுழைந்த பெண்ணை கண்டு ஒற்றைப் புருவம் மேல் ஏறியது.

நுழைந்ததும் அவனை கண்டு கொண்டவள்.

அங்கு அமைக்கப்பட்டிருக்கும் மினி கிச்சனிற்கு சென்று காபித் தயாரித்து அவன் கையில் திணிக்க, மொத்த பேரின் கவனமும் இங்குதான் குமிழ்ந்திருந்தது.

காபியை வாங்கியதும்,"மதியத்துக்கு என்ன சமையல் " என்றதில் அவனை முறைக்க முயன்று அது முடியாமல் போக,"என்ன வேணும்" என்றாள்.

"என்ன இன்னைக்கு பெயிண்ட்டை கரெக்டா அடிச்சு இருக்க போல ".

அதில் புரியாமல் அவனை நிமிர்ந்து பார்க்க, அவள் பார்வைக்கு பதில் அளிக்காமல் காபியை அவளைப் பார்த்தபடியே பருக ஆரம்பித்தான்.

அது அசௌகரியத்தை தர, அங்கிருந்து நகர போக," காபி கப்பை அம்மையப்பனா வந்து வாங்குவான் " என்றதும் அவனை முறைத்தபடி நின்று கொண்டாள்.

காபியை குடித்து முடிக்கும் வரை அவன் எதிரே இருக்க, ஆத்ரேயனின் பார்வை மட்டுமல்லாமல் மொத்த செட்டின் பார்வையும் அவள் மீது தான் இருக்க நொந்து போனாள்.

அவள் கையில் காபி கப்பை திணித்தவாறு, "லஞ்ச் ஹேவியா இருக்க வேண்டாம்" என்று விட்டு அங்கிருந்து செல்ல, திவாகரின் பார்வை நடக்கும் அனைத்தையும் கூர்மையுடன் உள்வாங்கிக் கொண்டது.

கிளம்பலாம் என்று நினைத்தவளின் முன் வந்து நின்றவனை புரியாமல் பார்க்க, "ஹீரோ சார் உங்களை கூப்பிடுகிறார்"என்க, அதில் சம்மதமாக தலையசைத்து திவாகரை பார்க்க சென்றாள்.

சூட்டிங் சீராக நடக்க,இன்று சாந்தவி காட்சிகளை முதலில் முடிய,அவளோ உடனே கிளம்பி விட்டாள்.

அதை கண்டுகொள்ளாமல் திவாகர் மற்றும் துணை கதாபாத்திரங்களுக்கான காட்சிகளை எடுக்க ஆரம்பித்தேன்.

மதிய உணவு நேரம் ஆக, கேட்டரிங் வேனும் அதனுடன் காரும் வர லஞ்ச் பிரேக் விட்டான்.

வாய்க்குள் முனங்கியபடி வந்த விமலின் கையைப் பிடித்து இழுத்து வந்த சத்யன்," என்னடா நடக்குது இங்கே " என்று வாயை பிடுங்க பார்க்க,

" கடுப்பில் இருக்கேன். நீ வெறுப்பு ஏத்தினா கடிச்சு வச்சுருவேன். வாயை மூடிட்டு போடா" என்று கத்தியதில் சத்யனின் வாய் இறுக மூடிக்கொண்டது.

"ஏய் என் டயட் புட் எங்கே" என்றவனின் கத்தலை காதிலே வாங்கிக் கொள்ளாத பாவனையுடன் பரிமாறியவள்.

"இது அதைவிட ஹெல்தி சாப்பிடுங்க "என்று விட்டு சாதத்தையும் ஆவியில் வேக வைத்த காய்கறிகள், காரம் அதிகம் இல்லாத குழம்பு என்று வைக்க,

" இதெல்லாம் எனக்கு வேண்டாம்"என்று அவன் தட்டை தள்ளி வைக்க,

"காலை,நைட் பிரட் டோஸ்ட் சப்பாத்தி,சேலட். மதியம் ஆவது கொஞ்சம் சாதம் எடுத்துக்கலாம் இல்ல" என்று அன்னபூரணி கூறியதை மனதில் வைத்துக்கொண்டு அவனிடம் கூறியவள்.

"நீங்க சாப்பிட்டு தான் ஆகணும். டேஸ்ட் பண்ணி பாருங்க பிடிக்கலைன்னா நான் வேற ரெடி பண்ணி தரேன்"என்றாள்.

"என்ன திடீர்னு" அதற்கு பதில் அளிக்காமல்,

" பைவ் மினிட்ஸ் வந்துடறேன் " என்று கூறியவள்.அவனுக்கு அருகிலே தேவையானதை எடுக்கும் வகையாக வைத்துவிட்டு அவள் வெளியேற,

'இவளை' என்று கோபம் கொண்டாலும் அவள் பரிமாறியதை உண்டான்.

திவாகரின் கேரவனிற்குள் நுழைந்ததும் ஆர்ப்பாட்டமாக அவன் வரவேற்க, ஒரு கேரியரை அவன் மேஜையில் வைத்தவள்.

"லஞ்ச் சார்" என்று விட்டு வெளியேற போக, " அட அதுக்குள்ள என்ன அவசரம் வாங்க. உட்காருங்க " என்று அவன் வரவேற்க மறுக்க முடியாமல் அமர்ந்தாள்.






 
அத்தியாயம்-15

"நைஸ் அவுட் பிட். யூ லுக் கார்ஜியஸ்" என்று ரசனை மிக்க குரலில் மொழிந்தவனை புரியாமல் பார்த்த திகழ் உடனே எழுந்தாள்.

"ஹே சில் ஜஸ்ட் ஒரு காம்ப்ளிமென்ட் தானே" என்று திவாகர் அவள் வேகத்தை கண்டு கூற,

" நத்திங் சார். எங்க கேட்டரிங் லன்ச் எப்படி இருக்குன்னு மறக்காமல் கமேண்ட் குடுங்க. சூப்பர்வைசர் முத்து இருக்காரு. அவரை காண்டாக்ட் பண்ணுங்க உங்களுக்கு தேவையானது அவர் செய்வார்.இட்ஸ் பிளேஷர் மீட்டிங் " என்று தொழில் முறையாக கூறியவள்.

ஒட்டவைத்தப் புன்னகையுடன் அங்கிருந்து செல்ல போக அவளின் பின்னோடு அவனும் வர, நடையின் வேகத்தை அதிகப்படுத்தினாள்.

கேரவன் கதவில் சாய்ந்து நின்றவாறு செல்பவளை ஆழ்ந்து நோக்கியவன்.

கேமராவின் பின் நின்று இருந்த ஆத்ரேயனை கண்டு நக்கலாக புன்னகைக்க,ஆத்ரேயன் பார்வையும் செல்லும் பெண்ணின் மீது படிந்து அடுத்த நிமிடமே திவாகரின் மீது கூர்மையுடன் பாய, நடிகன் அல்லவா உடனே முகபாவனையை பவ்யமாக மாற்றி கொண்டான்.

ஒரு தலையசைத்துடன் கேரவனிற்குள் நுழைந்து கொள்ள, இடுங்கும் விழியுடன் செல்பவளை நோக்கினான்.

"இந்த ஷாட் 20 செகண்ட்ஸ் அவசியமா ஆத்ரேயா. ஏற்கனவே அடிக்கடி காட்டின சிலை தானே மறுபடியும் எதுக்கு சிலையை மட்டும் போக்கஸ் பண்ணனும்" என்று கேமரா மேன் கேட்க,

அவன் பதில் பேசாமல் இருப்பதை கவனிக்காமல், " இதற்கு ஹீரோ ஹீரோயினை பத்து செகண்ட் கட்டலாம் ஆர் கிளைமாக்ஸ்ல யூஸ் பண்ணிகலாமே,யூ நோ தி வேல்யு ஆஃப் தி செகண்ட் இன் அ மூவி, டோன்ட் யு?”"

"யா எக்ஸாக்ட்லி.பட் இந்த ஷாட் ஒர்த்" என்றான் கேமரா திரையில் தெரிந்த சிலையை பார்த்தபடியே,

அது ஏற்றுக்கொள்ளும் படியாக இல்லாமல் இருந்தாலும் அரைகுறையாக தலை அசைக்க, அதற்குள் அடுத்த சாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட காட்சிகள் ஆரம்பமானது.

திவாகர் சிலையை கையில் ஏந்திய படி ஆர்வத்துடன் அதனை நோக்கியவன். அதைத் தொட வந்தவனை முறைக்க, கட் என்று அப்படியே அந்த காட்சிகளை நிறுத்திய ஆத்ரேயன்

" ஃபீல் பத்தலை " அதற்கு திவாகர் எங்கோ பார்த்தபடி இருக்க,

"திவா உன் கவனம் எங்கே இருக்கு. ஃபீல் இட் மேன்" என்றான் அதட்டலாக.

"பட் நீ என்ன சொன்னாயோ அதை தான் எக்ஸாக்ட்டா பண்ணிட்டு இருக்கேன் "என்று திவாகர் காரணம் சொல்ல.

" நான் சொன்னதை பண்ணியா? நோ. அந்த ஃபீலை நீ உள்வாங்கவே இல்லை" என்று குற்றம் சாட்டியவன் ஒரு பெருமூச்சுடன்,

" நீ அடிக்கடி பார்த்து சலிச்ச ஒரு பொருள் தான் ஆனால் அதில் ஒரு தேடலை நீ கண்டுபிடிக்கிற.இட் சேன்ஜ் யுவர் ஓல் ஒப்பீனியன். உனக்கு சொந்தமாக உன் கை கெட்டும் தூரத்தில் இருந்ததை நீ கண்டுக்கவே இல்லை. ஆனால் இன்னொருத்தன் அதை நெருங்க நினைக்கிறேன்.நீ என்ன பண்ணுவ" என்று ஆழ்ந்த குரலில் வினாவ,

அவன் பார்வையில் தடுமாறிய திவாகர் தொண்டையை செருமியபடி,

"அது... அதை...என்கிட்ட தக்க வச்சிக்கணும்னு நினைப்பேன். அவன் நெருங்காமல் ஃபைட் பண்ணுவேன்" என்று தனக்கு புரிந்த அளவில் திவாகரன் கூற,

" நோ. அவனுக்கு முன்னால் நீ அது என்னன்னு தெரிஞ்சுக்கணும். சில விஷயங்கள் தானாவே வரணும்.அதை அடையனும்னு ஆசைப்படக்கூடாது ஒரு கலைஞனா நீ அதை ஆராயணும். அதுக்கு குறுக்க ஒருத்தன் அபகரிக்கணும் அதை அழிக்கணும்னு வரும்போது எவ்வளவு கோபம் வரணும்" என்றவனின் பார்வை திவாகரை தீயாக எரித்தது ,

ஆனால் அவன் கூற்று திவாகரை ஏதோ செய்ய கையில் இருந்த செம்பு சிலையைப் பார்த்தவாறு," இது மேலே எனக்கு காதலா "என்று அவன் முன் தூக்கி காட்டி வினாவினான்.

பார்வை ஆத்ரேயனை ஆராய்ந்தது.

" நோ கலைஞனா அது மேல இருக்குற இன்ட்ரஸ்ட் "என்று கூறி முடிக்க, கேமராமேனோ கைத்தட்டி,

"ஐ காட் இட் மேன்" என்று ஆர்ப்பாட்டமாக சிரிக்க, அதற்கு ஆத்ரேயன் புன்சிரிப்புடன் தோள் குலுக்க கொள்ள,

திவாகர் தன் கையில் இருந்த சிலையையும்,ஆத்ரேயனையும் யோசனையாகப் பார்த்தவாறு தலையசைத்தவன்.

அவன் கூறிய உணர்வுகளை உள்வாங்கிக் கொண்டு நடித்தான்.

பல டேக்குகளுக்கு பிறகு ஓரளவு சமாதானமாகி ஆத்ரேயன் ஒப்புக்கொண்டான்.

செட்டில் எடுக்க வேண்டிய அனைத்து காட்சிகளையும் முடித்து கிளம்பும்போது இரவு 12 மணி ஆகி இருந்தது.

அனைவர் முகத்திலும் களைப்பின் மிச்சம் தெரிய அதை பார்த்தவாறு," இந்த செட்டில் இதுதான் லாஸ்ட் டே. இனி 15 டேஸ் கொல்லிமலையில் தான். நாளைக்கு எல்லாம் ரெடியா இருங்க" என்று விட்டு அங்கிருந்து செல்ல, விமல் மற்ற வேலைகளைக் கவனித்தான்.

ஆத்ரேயன் வீட்டிற்கு செல்லும்போது மணி ஒன்று.

சத்தம் செய்யாமல் தன் அறைக் கதவை திறக்க, அவன் திடீர் சரிபாதியோ இன்னும் உறங்காமல் அவன் டேபிளில் அமர்ந்து ஏதோ எழுதி கொண்டு இருந்தாள்.

கதவு திறக்கும் சத்தத்தில் உடனே நிமிர்ந்தவள். எழுதியதை மூடி வைத்தவாறு மீண்டும் அவளின் மெத்தைக்கு செல்ல போக,

" வெயிட்" என்று விட்டு அவன் குளியல் அறைக்குள் சென்று மறைய,அங்கிருந்த ஒற்றை சோஃபாவில் அமர்ந்து அவனுக்காக காத்திருந்தாள்.

குளித்து உடை மாற்றி வந்தவன். ஒரு இருக்கையை எடுத்து அவள் முன் போட்டு அமர எழ போனவள். அவன் கை அசைவில் அப்படியே அமர்ந்தாள்.

"ஓகே உனக்கு என்ன வேணும்" என்று அவன் ஆரம்பிக்க, புரியாமல் பார்த்து வைத்தாள்.

எப்பொழுதும் அவள் தான் என்ன வேண்டும் என்ற கேட்பாள்.

அதில் அவன் கேட்பதை செய்யும் பாவனை இருக்கும்.ஆனால்,இவனின் குரலில் உறுதி இருந்தது.

"என....க்கு எனக்கு என்ன. எதுவும் வேண்டாமே" என்று தயக்கத்துடன் கூறினாள்.

"ஜஸ்ட் டெல் மீ " என்றவனின் குரலில் இப்பொழுது அழுத்தம் கூடியிருந்தது.

அதில் அவள் முகத்தில் குழப்பம் படர்ந்தது.இதற்கு என்ன பதில் கூறுவது என்று புரியாமல் அவனையே கேள்வியாக நோக்க,

" இது என்னோட ரூம் ஆனால் இப்போ அப்படி இல்ல. என்னோட டிரெஸ்ஸிங் ரூம், என்னோட பாத்ரூம் எதுவும் இப்ப என்னோடது இல்லை ".

"கதவு திறந்தால் எப்பவும் நீ இருக்க. பால்கனிக்கு போனால் அங்கேயும் நீ இருக்க. இந்த பார்த்தும் பார்க்காத மாதிரி எல்லாம் என்னால் ஸ்கிப் பண்ணிட்டு போக முடியாது. ஒரு கான்ஷியஸ் இருந்துகிட்டே இருக்கு"

"உங்களுக்கு தொந்தரவா இருக்கேனா" என்று குன்றிய குரலில் கேட்க,

" நாட் லைக் தட்.பட் இட் ஃபில்ஸ் டிஃபரன்ட் நீ உன் வேலையை கவனிக்கிற. நான் என் வேலையை பார்க்கிறேன்.இப்படியே தான் இருக்குமா? என்று விட்டு அவன் அழுத்தமாக பார்த்தான்.

அதில் ஆத்ரேயனை புரியாமல் பார்த்தவளுக்கு என்ன பதில் கூறுவது என்று தெரியவில்லை.

கனத்த மௌனம் அவர்கள் இடையே கவ்விக்கொள்ள, காற்றுக்கும் வலிக்காத குரலில், " நான் வேற ரூமுக்கு ஷிப்ட் ஆகவா?" என்றாள்.

"அப்போ நீ என் வீட்டில் இருப்ப,டைனிங் டேபிளில் இருப்ப,கிச்சனில் இருப்ப" என்று பட்டென்று பதில் அளித்தான்.

அதில் திருத்திருத்தவள்.

"வேற என்ன.. "என்று தடுமாற அவள் படபடக்கும் விழிகளையும்,யோசனையில் பற்களைக் கடித்தபடி இருந்த இதழ்களையும் பார்த்தவன்.

"யோசி இதுக்கு என்ன சொல்யூஷன்னு யோசிச்சு சொல்லு" என்று விட்டு அவளின் தூங்கா இரவை இன்னும் சிறிது நேரம் நீடித்து விட்டு, அவன் ஆழ்ந்த நித்திரையை அடைந்தான்.

அடுத்த நாள் காலை எழுந்து பார்க்கும் போது பெண்ணவள் இருப்பதற்கான சுவடே இல்லை.

"ஒருவேளை காலி பண்ணிட்டு பக்கத்து ரூம் ஷிப்ட் ஆயிட்டாளா?" என்று யோசித்தபடியே, தயாராகி கீழே வந்தனான்.

" வா கண்ணா இப்போ தான் விமல் சொன்னான். கொல்லிமலையில் ஷூட்டிங்காம்.எப்போ கிளம்பற" என்ற கேள்விக்கு பதில் அளித்தவன்.

தன் முன் சூடாக நீட்டப்பட்ட கிரீன் டீயை பெற்றுக் கொண்டு அவளை அழுத்தமாக பார்த்தபடி தாயின் மீது கவனத்தை செலுத்தினான்.

"கொல்லிமலை போகணும்னு எனக்கு ரொம்ப ஆசை.அங்கே இருக்குற ஈஸ்வரன் கோயில் ரொம்ப பிரசித்தி பெற்றதாம். எங்கே எங்கையோ போயிருக்கேன். ஆனால் கொல்லிமலைக்கு போனதே இல்லை "என்று சிரிப்புடன் கூற,

" அப்போ வாங்க போலாம் " என்றவனை ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக பார்த்தார்.

"நான் எதுக்கு அப்படியே வந்தாலும், வேலை இருக்குன்னு நீ ஓடிடுவ, நான் தனியா கொட்ட கொட்ட முழிச்சிட்டு இருக்கணும். அட போடா " என்று சலித்துக் கொண்டார்.

" நீங்க ஏன் தனியா முழிக்கணும் உங்களுக்கு தான் துணைக்கு ஆள் இருக்கே "என்று அடி கண்ணால்
திகழை பார்த்தபடி கூறியவன்.

கிரீன் டீயை பருக, தண்ணீரை குடித்துக் கொண்டிருந்தவள்.சற்றென்று புரையேற அவனைப் பார்த்தாள்.

அதில் அன்னபூரணியின் கவனம் அவள் மீது பட," பார்த்து குடிமா" என்றவர்.

உடனே மகன் கூற்று புரிய, " ஆமால்ல உனக்கு ஓகே தானே மா. போலாம் டா. நீயும் வந்ததில் இருந்து எங்கேயுமே போகலை " என்று மருமகளின் கன்னத்தை வாஞ்சையாக தடவியவாறு கேட்க,

"இல்லை அத்தை பார்ட்டிக்கு ஆர்டர் வந்து இருக்கு. அப்புறம் புது ப்ரோடுக்ஷன் ஹவுஸ்ல இருந்து ஆர்டர் வந்திருக்கு எல்லாம் பார்க்கணுமே " என்று தயக்கத்துடன் வேலையை காரணம் காட்டி மறுக்க,

"அட நாம இல்லைன்னாலும் அதெல்லாம் வேலை தாராளமா நடக்கும் திகழ் மா"

அவள் மௌனமாக இருக்க, தளர்வாக சோபாவில் சாய்ந்த படி கால்களை அவன் நீட்ட, எதிரே அமர்ந்திருந்தவளின் பாதம் மீது அவன் கால்கள் பட டக்கென்று காலை உள் இழுத்துக்கொண்டாள்.

அவனை ஒருவித பரிதவிப்போடும், கோபத்துடனும் முறைக்க ஒற்றைக்கண்ணை சிமிட்டியவன்.

கண்ணாடியை மேல் ஏற்றி விட்டப்படி, "ரெடியா இருங்க" என்று விட்டு அவள் மறுப்பை சட்டையே செய்யாமல் செல்ல, அன்னபூரணியின் சொல்லுக்கிணங்க, வேறு வழியின்றி திகழும் தயாராகி வந்தாள்.

மாலை கொல்லிமலைக்கு குடும்பம் சகிதமாக ஆத்ரேயன் புறப்பட்டான்.
 
அத்தியாயம்-16

எழுபதற்கும் மேற்பட்ட முடிவிலியாய் நீண்டு இருக்கும் கொண்டை ஊசி வளைவுகளில் ஆத்ரேயனின் கார் மிதமான வேகத்தில் பயணித்தது.

இதமாய் முகத்தில் மூழ்கிய காற்றில் திகழின் உடல் சிலிர்க்க, உடனே கார் கண்ணாடியை மேலே ஏற்றி விட்டாள்.

" ஃபீல் தி நேச்சர்" என்று ஆழ்ந்த குரலில் மொழிந்தவன்.

அவள் பக்க கார் கண்ணாடியை மீண்டும் கீழ் இறக்கினான்.

அதில் ஒரு நொடி திகைத்தவள் வளைந்து செல்லும் பாதையையும் சுற்றி எங்கும் காணப்பட்ட ஓங்கி உயர்ந்த மரங்களையும் கண்டு, அதில் ஆழ்ந்து போனாள்.

உணர்ச்சிகள் இல்லாமல் கண்களில் மட்டும் ரசிப்பு தன்மையுடன் பதுமை என அமர்ந்திருந்தவளை பொருள் விளங்கா வண்ணம் பார்த்தவன்.

பின்னிருக்கையில் இருந்த தாயை நோக்க அவரோ வசதியாக தலையணை சகிதம் ஆழ்ந்த சயனத்தில் இருந்தார்.

மா என்று பற்கள் இடையே வார்த்தைகளை முணு முணுத்தவன். "நல்லா கொல்லி மலையை ரசிக்கிறீங்க போங்க" என்று கிண்டலாக தாயை நொந்து கொண்டான்.

1 3/4 மணி நேர பயணத்தில் மலை உச்சியில் மொத்த இயற்கை காட்சிகளையும் கண்களில் நிரப்பிக் கொள்ளும் படியாக அமைக்கப்பட்ட காட்டேஜில் தன் குடும்பத்துடன் வந்து இறங்கினான்.

அடிவாரத்தை விட சிறிது குளிர்ச்சியுடன் இருந்த அவ்விடத்தை ரசித்தபடி இறங்கிய அன்னபூரணி,

" கண்ணா சும்மா சொல்ல கூடாது ரொம்ப நல்லா இருக்கு"
என்று சீலாகிப்பாக கூறியவரின் கைகளில் இருந்த பெட்டியை வாங்கிய ஆத்ரேயன்,

" சுத்தி பாருங்க இன்னும் நல்லா இருக்கும்" என்றான்.

"ஆமா ஆமா கண்டிப்பா பாக்கணும்" என்று ரசிப்புடன் கூறியபடி அவர் முன்னேற, தன் பின்னால் வந்தவளின் கையில் இருந்த பெட்டியையும் வாங்கிக் கொண்டு அவளோடு நடந்தான்.

சில வினாடிகளில் நடையை துரிதப்படுத்தி அன்னபூரணி உடன் இணைந்து கொண்டவளை, ஒற்றைப் புருவம் உயர்த்தியபடி பார்த்தவனின் இதழ் கடையோரம் நக்கலாக வளைந்தது.

சோபாவில் தளர்வாக அமர்ந்திருந்தவரிடம், "மா கிளம்புறேன் நல்லா ரெஸ்ட் எடுங்க" என்று கூறியவன்.

தன்னை பார்த்தபடி நின்று இருந்தவளிடம் ஒரு தலையசைத்துடன் விடைப் பெற்றான்.

மொத்த பட குழுவும் அவர்களுக்கு என புக் செய்யப்பட்ட விடுதிக்கு வந்து இறங்கினர்.

மரங்களால் நிறைந்த மலைகளும் இதமான கால நிலையும் மனதை கொள்ளை கொண்டாலும் வேலையில் கவனத்தை செலுத்தி கொண்டிருந்த விமலின் மனதில் ஆத்ரேயனின் செயல்கள் தான் அணிவகுத்து நின்றது.

'புதுசு புதுசா பண்றாரு. மனுஷன் என்ன நினைக்கிறார்னு புரியலையே. இவரை சமாளிக்கிறதில் என் மொத்த எனர்ஜியும் போகுது.இதில் வேலையை கத்துக்கிட்டு,எப்போ படம் பண்ணி நேஷனல் அவார்ட் வாங்க ' என்று ஆயாசமாக எண்ணிக் கொண்டிருக்கும்போது,

" என்னடா. சார் தனி காட்டேஜ் எடுத்து தங்கறராம். ஏதாவது நியூஸ் தெரியுமா?. நீதான் சாருக்கு ஆல் இன் ஆல் ஆச்சே " என்று சத்யன் ஆவலுடன் வினாவ,

ஏற்கனவே கோபத்தில் இருந்த விமலுக்கு இன்னும் எரிச்சல் மேலிட்டது.

எப்பொழுதும் பட குழுவோடு தான் தங்குவான் தயாரிப்பாளர் தயார் செய்திருக்கும் எதையும் மறுக்காமல் எங்கு இருந்தாலும் தங்கிக் கொள்வான்.

வசதியே இல்லாத இடங்களுக்கு செல்லும்போது கூட படக்குழுவோடு தான் வருவான்.

உயர்வு தாழ்வு என்று பார்க்க மாட்டான். உணவு விஷயத்தில் மட்டுமே ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து சில நேரம் வெளியில் வாங்குவான்.

அதுவும் விமல் தான் ஆர்டர் செய்து கொடுப்பான்.ஆனால் இப்பொழுது நடப்பது எதுவும் அவனுக்கே புரியாமல் இருக்கும்போது, இதில் சத்யன் கேள்வி எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றியது போல் இருக்க,

"வாயை மூடிட்டு கிளம்புடா. பன்னாட "என்று அவனைக் கத்தி விட்டு அங்கிருந்து வேகமாக சென்றான்.

அவன் கத்தலில் ஒரு நொடி அதிர்ந்து போன சத்யன் சுற்றிலும் பார்க்க, தங்களை யாரும் கவனிக்காததைக் கண்டு சட்டை காலரை சரி செய்தவாறு அங்கிருந்து அகன்றான்.

ஆத்ரேயன் அங்கு வர கேமராமேன், விமல், ஆர்ட் டைரக்டர் அவரின் அசிஸ்டன்ட் என ஐவர் குழுவாக, அடுத்த நாள் படப்பிடிப்புக்கு தோதான இடங்களை பார்த்துவிட்டு நாளை எடுக்கப் போகும் காட்சிகளையும் விவாதித்தனர்.

விமல் ஆத்ரேயனைத் தவிர மற்றவர் கிளம்ப, விடை பெற தயங்கியபடி நின்ற விமலை கண்ட ஆத்ரேயன் தன் கண்ணாடியை சரி செய்தபடி," எனி டவுட்ஸ்" என்றான்.

அவனிடம் கேட்க வேண்டி பல சந்தேகங்கள் படப்பிடிப்பு சார்ந்து இருந்த போதிலும், " ஏன் சார் எங்களோட ஸ்டே பண்ணலை " என்றவனை மேலும் கீழும் பார்த்த ஆத்ரேயன், " ஃபேமிலியோட வந்து இருக்கேன்" என்று விட்டு அங்கிருந்து செல்ல,

"ஐயோ கேட்க வேண்டிய டவுட் விட்டுட்டேன் சார் நில்லுங்க" என்று கத்தி பின்னால் ஓடிய போதிலும் எட்டிப் பிடிக்க முடியாமல் சோர்ந்து போனான்.

சூரியன் மறைந்து மெல்ல இருள் அவ்விடத்தை விழுங்க தொடங்க அந்த நேரத்தை ரசித்தபடி நின்றிருந்தவளின் மனதில் நீண்ட நெடும் காலத்திற்குப் பிறகு அமைதியில் நிறைந்திருந்தது.

அவ்வமைதியை கிழிக்கும் சத்தத்துடன் ஆத்ரேயனின் கார் வந்து அவள் முன் நிற்க,திடுக்கிட்டு பின் நகர்ந்தாள்.

"என்ன மாலை நேர கனவா?" என்றவனை கண்டு இல்லை என்று தலையசைத்தவள்.எதுவும் பேசாமல் அப்படியே நிற்க,

" அம்மா எங்க?" என்றதும்,

" இங்கே இருக்கேன் கண்ணா" என்று வீட்டின் உள்ளிருந்து சத்தம் வர, " ஸ்ட்ராங்கா காபி" என்றப்படி வீட்டிற்குள் சென்றான்.

அவளோ கிச்சன் சென்றாள்.

அன்னபூரணி கொல்லிமலையை பற்றி அவர் கேள்விப்பட்ட விஷயங்களை அணிவகுத்து கொண்டிருக்க, அதைக் கேட்டபடியே மற்ற இருவரும் காபியை முடித்தனர்.

" ஓகே மாம் நான் ரெஸ்ட் எடுக்கிறேன் டிஸ்டர்ப் பண்ணாதீங்க" என்று அவன் அறை செல்ல," நீயும் ரெஸ்ட் எடுக்கிறதுனா போ மா" என்று மகன் சென்ற அறையை கைகாட்டியதும்,

" இல்ல வேண்டாம்" என்று மறுத்துவிட்டு சுற்றிலும் பார்வையை ஓட்டினாள்.

முழுக்க மரத்தில் கட்டப்பட்ட வீடு அது.

அளவான மற்றும் நேர்த்தியான கிச்சன். இரண்டு படுக்கை அறைகள். பின்பக்கம் பால்கனி போன்ற அமைப்புடன், அமர எதுவாக இரு நாற்காலி போடப்பட்டு இருந்தது.

ஒற்றை சோபா இரண்டு நாற்காலி போடப்பட்டு நேர்த்தியாக அமைக்கப்பட்ட ஹால் அதன் வலப்பக்கம் நான்கு பேர் அமர்ந்து உண்ணும் வகையாக டைனிங் டேபிள் போடப்பட்டு இருந்தது.

அதை கண்டதும் பெருமூச்சு எழ அன்னபூரணியோ தன் பதிலிற்காக காத்திருப்பது உணர்ந்து,

"இல்லை நான் இப்போ தூங்கினா நைட்டு தூங்க முடியாது. நைட் டின்னர் என்ன செய்ய" என்றதும்,

அவரோ, " அட டூர் வந்திருக்கோம் நல்லா ரிலாக்ஸா இருக்கிறதை விட்டுட்டு மறுபடியும் கிச்சனுக்குள்ள அடைய போறியா?. சமைக்க ஒருத்தரை ஏற்பாடு பண்ணி இருக்கிறதா சொன்னான். இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்துருவாரு அவர்கிட்ட மெனு சொல்லிக்கலாம் விடு" என்க,

"ஐயோ!அப்போ இப்ப நான் என்ன பண்றது" என்று அவள் முழிக்க அன்னபூரணியோ பழங்கதைகள் பேசவும் அதைக் கேட்டபடி அப்படியே ஆசுவாசமாக அமர்ந்து கொண்டாள்.

அடுத்த நாள் விடியலில் அலாரம் சத்தத்தில் ஆத்ரேயன் உறக்கம் களைந்து சோம்பல் முறித்தவாறு எழுந்தான்.

தன் எதிரில் உள்ள சுவரில் சாய்ந்து அமர்ந்தபடி உறங்கிக் கொண்டிருப்பவளை கண்டு புரியாமல் விழித்தவன்.

அடுத்த நொடி புரிந்து, " சில்லி கேர்ள் "என்று முணுமுணுத்த படி தோளை குலுக்கி கொண்டவன்.

உடையுடன் குளியல் அறையில் நுழைந்து கொண்டான்.

தன்னை சுத்தப்படுத்தி உடைமாற்றி தலையை துவட்டியபடி வெளியே வந்தவன்.

இன்னும் உறக்கத்தில் இருப்பவளை ஆழ்ந்து நோக்கியவாறு ட்ரெஸ்ஸிங் டேபிள் முன் போடப்பட்ட குஷன் இருக்கையை எடுத்து வந்து அவள் முன் போட்டு அமர்ந்து கொண்டான் .

அவள் கண் விழிக்க அப்படியே காத்திருந்தான்.

திகழ் உள்ளுணர்வினால் உறக்கம் நீங்கி கண்விழித்தாள்.

கூசும் கழுத்தை பிடித்தபடி நிமிர்ந்தவள். எதிரில் இருந்தவனை கண்டு பயத்தில் அம்மா என்ற அலறி இருந்தாள்.

" மூச் சத்தம் வெளியே வரக்கூடாது" என்று வாயில் கை வைத்து அவன் எச்சரிக்க, அவன் பார்வையில் இருந்த அழுத்தத்தில் அப்படியே வாயை மூடி கொண்டாள்.

" பெட்டுக்கும் நீ தூங்கற இந்த இடத்திற்கும் இடையில் ஏதாவது இரும்பு சுவர் கட்டி வச்சிருக்கியா?" என்றவனை,

அவள் புரியாமல் பார்க்க, அதை கண்டுகொள்ளாமல், " இல்லை இந்த டிஸ்டன்ஸ் கண்ணுக்கு பார்க்க முடியாத தூரமா?" என்று கண்களால் அவ்விடத்தை அளந்து விட்டு அவளைக் கண்டு ஒற்றைப் புருவம் உயர்த்த, அவளோ மௌனத்தையே பதிலாக அளித்தாள்.

"சொல்லு கேர்ள்" என்ற அவள் நெற்றியில் ஆள்காட்டி விரலை வைத்து அழுத்த,

"என்ன.. எனக்கு புரியலையே" என்று தடுமாறி கூற,

"இந்த பம்மலுக்கு குண்ணும் குறைச்சல் இல்ல. என்னோட ஒரே ரூமில் தங்க இருக்கிற தைரியம் பெட்டில் படுக்கிற அப்போ இல்லையா?".

"இல்ல பெட்டில் படுத்தால் உன் மேல பாஞ்சுடுவானா?" என்றவனின் கேள்வியில் பதறிப் போய் எழப் பார்க்க, இரு பக்கமும் காலை வைத்து அணை கட்டினான். அவன் கால்களிடையே அவள் சிக்கி கொள்ள, இப்பொழுது பயம் நீங்கி அவனை முறைப்போடு பார்த்தாள்.

அதை சட்டை செய்யாமல், "நான் கேட்ட கேள்விக்கான பதில் இன்னும் வரலை" என்று அவள் பக்கம் சற்று குனிய,

"ஏன் இப்படி பண்றீங்க "என்று பதறிப்போய் அவனை மார்பில் கை வைத்து தள்ள, கால்களும் சுவரில் இருக்க அவள் தள்ளியதில் பிடிமானம் இல்லாமல் பின்னால் விழுந்தான்.

திகழே இதனை எதிர்பார்க்காமல் அதிர்ந்து எழ, இரவு முழுக்க ஒரே இடத்தில் அமர்ந்தபடியே உறங்கி இருந்ததில் கால்கள் மறுத்து போய் தள்ளாடியவளை தன் கை சிறையில் கொண்டு வந்தவன்.

அவள் தாடையை அழுத்தமாக பற்றி தன்னை பார்க்க செய்தான். அவன் விழிகளில் விரவி இருந்த கோபத்தில்," சாரி" என்றவளின் வார்த்தைகள் அவன் கொடுத்த அழுத்தத்தில் அப்படியே நின்றது.

"சில்லி கேர்ள்" என்றவனின் சீறலான குரல் பெண்ணவளின் செவி மடலை அதிர செய்தது.

" இன்னையிலிருந்து பெட்டில் என்னோட நீ படுக்கற. தட்ஸ் சிட் " என்று அழுத்தமாக அவள் கண்கள் பார்த்து மொழிந்தவன்.

அவளை விட தள்ளாடி கீழே சரிந்தாள்.

தாடை வலித்தது. அவன் பிடியில் மொத்தமாக இருந்தது புரிய எச்சில் கூட்டி விழுங்கி பயத்துடன் அவனைப் பார்க்க, தன் கண் கண்ணாடி துடைத்தபடி அவளை அழுத்தமாக பார்த்தவன்.

"உன்னை ரொம்ப அண்டர்எஸ்டிமேட் பண்ணிட்டேன். அத கரெக்ட் பண்றேன்" என்று கண்ணாடியே அணிந்தவாறு அங்கிருந்து செல்ல நொந்து போய் அப்படியே சுவரில் சாய்ந்தாள்.





 
அத்தியாயம்-17

"திகழ் ஆத்ரேயன் உன்கிட்ட சொல்லிட்டு போனனா மா" என்றவர்.

பதில் இல்லாமல் போக, "திகழ் "என்று அழைக்க,அவளோ அப்படியே நின்று இருப்பதை கண்டு அவள் தோள்
தொட,

அவளோ "அய்யோ" என்ற அலறலுடன் பின்னடைய,அதைக் கண்டு அன்னபூரணி பயந்து போனார்.

"அத்தை பார்த்து" என்று தடுமாறிய அவரை தாங்கிக் கொண்டாள்.

"அட! என்ன ஆச்சு உனக்கு" என்றவருக்கு மூச்சு வாங்கியது.

அதை கண்டு தன்னையே உள்ளுக்குள் கடிந்து கொண்டவள்.

"சாரி அத்தை ஏதோ ஒரு நினைப்பில் கத்திட்டேன் "என்றவாறு தண்ணீரை அவருக்கு அளிக்க,அதை பருகியவாறு திகழின் முகம் நோக்கினார்.

உடனே அதிர்ந்து,"என்னம்மா இது.கண்ணம் ஏன் ஒரு மாதிரி சிவந்து போயிருக்கு" என்று பதறிப் போய் அவள் கண்ணம் பற்றி ஆராய,

"அது ஒன்னும் இல்லை அத்தை" என்று மறுக்க,

" இல்லையே ஏதோ தடிப்பா சிவந்து போய் இருக்கு. நேத்து கூட நல்லா தானே இருந்த, என்ன ஆச்சு".

"தெரியலை ஏதோ அலர்ஜி போல. ஆனால் சரியாகிடும். வலி கூட இல்ல "என்று தன் கன்னத்தை ஆராய்ந்த அவரின் கரத்தை பற்றி நிறுத்தியவாறு கூறினாள்.

"டாக்டர் பார்க்கலாமா?" என்றவரை சமாளித்து அனுப்பியவள்.

கண்ணாடியில் தன் முகம் பார்க்க தாடையில் லேசாக சிவந்து கன்றி போய் இருந்தது.

அதை தொட்டதும் வலி எடுக்க, பெருமூச்சு விட்டுக் கொண்டாள்.

சார் என்று அழைத்தபடி வந்த விமல் அவன் அமைதியில், " டேக் ஓகேவா சார் "என்று சத்தமாக அவன் காதை நோக்கி கத்த,

" ஏன்டா காது கிட்ட வந்து இப்படி கத்தற "என்று அலுப்பாக கேட்டவன்.

பதிவு செய்யப்பட்டக் காட்சிகளை பார்த்துவிட்டு," ஓகே தான் ஒரு சின்ன பிரேக்
எடுத்துக்க சொல்லு. ஆர்ட்டிஸ்ட்டை டச் அப் பண்ணிக்க சொல்லு திவாகருக்கு மட்டும் வேண்டாம். லைட்டா ஸ்வெட்டிங் அவனுக்கு இருக்கட்டும். நெக்ஸ்ட் சீனுக்கு பிராப்பர்ட்டிஸ் செட் பண்ணிட்டு, என்னை கூப்பிடு " என்றவன்.

பாதம் தொட்ட நீரை கடந்து மறுக்கரை வந்தான்.

அவன் எதிரே அரப்பளி நீர்வீழ்ச்சி சத்தத்தோடு பாய்ந்து கொண்டிருந்தது.

அதை பார்த்தவாறு இடுப்பில் உணர்ந்த வலியில் மெல்ல முதுகை வருடிவிட்டப்படி, " உனக்கு இருக்குடி இன்னைக்கு" என்று உள்ளுக்குள் கருவிக் கொண்டான்.

காட்சிகள் அனைத்தும் சரியாக எடுக்கப்பட இன்று எடுக்க வேண்டியது காலை நேர காட்சிகள் என்பதால் நான்கு மணி அளவில் பேக்கப் செய்யப்பட்டது.

கண்ணாடியை சரி செய்தபடி இன்று எடுக்கப்பட்ட காட்சிகளைப் பற்றி கேமராமேனிடம் சிறிது நேரம் விவாதித்தவன்.

அவனுக்காக காத்திருந்த விமலை கண்டு, " உன்னோட முடியலை டா.இப்போ என்ன" என்றான்.

அதில் இன்னும் அவன் மௌனமாக, "தொண்டையில் சிக்கியிருக்கிறதை சொல்லி தொலைடா" என்றதும், "சாந்தவி மேம் இன்னும் வரலை சார் " இன்று உதறியப்படி கூறினான்.

அதில் ஆத்ரேயன் கேள்வியாக ஒற்றைப் புருவம் உயர்த்த, விமலோ எச்சில் கூட்டி விழுங்கியபடி, " நாளைக்கு மார்னிங் ஃபஸ்ட் சூட்டே அவங்களுடையது தான்.நான் போன் ட்ரை பண்ணேன். பட், ரீச் ஆகலை" என்று தட்டு தடுமாறி கூறியவன்.

இதை முன்பே கவனிக்காமல் விட்டதற்கு தன்னை திட்டுவாரோ என்று பயந்து நடுங்க,

"ஓகே இதை நான் பார்த்துக்கிறேன். நாளைக்கு சூட்டில் எந்த சேஞ்சஸும் இல்லை. நான் வரும் முன்னே ஷாட் எடுக்க எல்லாம் ரெடியா இருக்கணும். காட் இட் " என்று விட்டு அவன் அங்கிருந்து செல்ல, அவனை ஆச்சரியமாக நோக்கியவன்.

எப்படியோ தனக்கு திட்டுவிழவில்லை என்ற ஆசுவாசத்தில் அங்கிருந்து சென்றான்.

சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து நேரே வீட்டிற்கு செல்ல, அவன் தாயோ சோபாவில் கோபமாக அமர்ந்திருந்தார்.

"என்னாச்சு?. மாமியாரும் மருமகளும் சண்டை போட்டுக்கிட்டீங்களா என்ன "என்று என்ற படி அவர் அருகில் அமர்ந்து தோளில் கை போட, அவன் கையை தட்டிவிட்டவர்.

"என்னை என்னன்னு சொல்லி கூட்டிட்டு வந்த கண்ணா, இப்போ என்ன பண்ணிட்டு இருக்க. பார்த்தியா வேலை வந்ததும் எங்களை எல்லாம் மறந்துட்ட".

"நேத்து வந்ததும் வேலை இருக்குனு கிளம்பிட்ட. இன்னைக்கு சொல்லாமல் கொள்ளாமல் போயிட்ட" என்று அவர் குறைப்பட்டுக்கொள்ள, ஆத்ரேயன் பார்வையோ தன்னை போல் திகழை தேடியது.

அவளும் வாகாக கிச்சன் வாயிலில் தலை குனிந்த படி நின்றிருக்க,

"இப்போ என்ன உங்க ரெண்டு பேருக்கும் சுத்தி பாக்கணும். அவ்வளவு தானே வாங்க கிளம்பலாம்" என்றவனை கண்டு திகழ் திகைத்துப் பார்க்க, அவளை கண்டு ஒற்றைக்கண்ணை சிமிட்டியவன்.

கெட் ரெடி என்றப் படி பிரஷ்ஷாக அவன் அறைக்கு செல்ல,

"திகழ் போய் நீயும் ரெடியாகிட்டு வா" என்ற அன்னபூரணி அப்படியே நிற்க, வேறு வழி இல்லாமல் அறைக்குள் நுழைய, அவன் அவள் பாதையை அடைத்தவாறு முன்வந்து நின்றான்.

அதில் பயந்து திகழ் பின்னடைய,

" ஓ அவ்வளவு விவரமா நீ" என்றவன்.

அவளை நோக்கி ஒரு எட்டு எடுத்து வைப்பது போல் முன்னேற, பயந்து மீண்டும் அவள் பின்னடைய, " அப்படி எதை காப்பாத்திக்க இப்படி ஓடுறன்னு நானும் தெரிஞ்சிக்கிறேன் "என்றவனின் பார்வையில் கள்ளத்தனம் வகைத்தொகை இல்லாமல் சேர்ந்து கொண்டது.

அதைப் புரிந்து திகைத்து அவள் விழிக்க," 5 மினிட்ஸ் தான் உனக்கு டைம் இப்படியே நின்னுட்டு இருந்தேனா விட்டுட்டு கிளம்பிடுவேன்" என்றதும் அவள் முகத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் போக,

" உங்க ரெண்டு பேரையும் தான் சொன்னேன்" என்றதும் உடனே அவசரமாக தயாராக செல்ல, "ஓ என் மம்மி தான் உன்னோட வீக் பாயிண்ட்டா பாயிண்ட் நோட்டட்" என்று உள்ளுக்குள் குறித்துக்கொண்டபடி ஹாலில் காத்திருக்க, இருவரும் தயாராகி வந்ததும்,அவன் எழ இருவரும் அவனை பின் தொடர்ந்தனர்.

எப்பொழுதும் போல் டிரைவர் இருக்கையில் ஆளுக்கு முன்பாக அமராமல் முன் இருக்கை கதவை பெண்ணவளுக்காக திறந்து வைத்து காத்திருக்க,

'தேறிட்ட மகனே' என்று மகனை மெச்சிக்கொண்டபடி பின்னிருக்கையில் அமர்ந்து கொள்ள,திகழ் நகராமல் அப்படியே நின்று இருப்பவனை கண்டு தயக்கத்துடன் நிற்க,

"ஏன் நிக்கிற. ஏறுடா" என்ற அன்னபூரணியின் வார்த்தைகளில் வேறு வழியில்லாமல் அவனைக் கடந்து இருக்கையில் அமர்ந்தாள்.

அவன் விழிவீச்சு உள்ளுக்குள்ள ஏதோ செய்தது. அது கோபத்துடன் தன்மீது படர்வது போன்ற ஒரு எண்ணம். அத்துடன் இன்னும் ஒரு உணர்வும் கலந்து இருக்க அது புரியாமல் குழம்பிப் போனாள்.

"ஜஸ்ட் ரிலாக்ஸ்" என்றவனின் சீறலான குரலில் பயந்து போய் கண்ணாடியோடு ஒட்டிக்கொண்டாள்.

"சீட் பெல்ட் போடலையே. சென்னை மாதிரி இல்ல இங்க கம்பல்சரி சீட் பெல்ட் போடணும்" என்றவனின் கரம் அவளின் கன்னத்தை பட்டும் படாமல் உரசி சீட் பெல்ட் எடுத்து இழுத்து மாட்ட,

அதில் அவனை அதிர்ந்து போய் பார்க்க இரு முகங்களுக்கும் இடையில் சிறு இடைவெளி மட்டுமே இருந்தது.

இருவரின் மூச்சுக்காற்றும் ஒன்றோடு ஒன்று போட்டியிட்டுக் கொண்டிருக்க அவளை அழுத்தமாகப் பார்த்தவன்.

" இது ஜஸ்ட் பிகினிங் தான்" என்றவனின் வார்த்தைகளில் இருந்த பொருள் புரியாமல் அவனை மேற்கொண்டு பார்க்கவும் முடியாமல் பார்வையை வெளிப்புறம் பதித்தாள்.

"கோவிலா கண்ணா" என்று வினாவியவரின் குரலில் துள்ளலும் சேர்ந்து கொண்டது.

அதில் புன்னகைத்தபடி அவன் இறங்க,கார் கதவை திறக்க பார்த்தவள்.

அது முடியாமல் போக, அன்னபூரணியை பார்க்க அவரோ இறங்கி இருந்தார்.

' என்ன இது' என்று பார்க்க கார் கதவு திறக்கப்படவே எதிரில் நின்று இருந்த ஆத்ரேயனை கண்டு எச்சில் கூட்டி விழுங்கிக் கொண்டாள்.

" இறங்குற ஐடியா இல்லையா? " என்று அவள் பக்கம் குனிந்து கிசுகிசுக்க,உடனே அவனை விட்டு பின் அடைந்தாள்.

அதில் எள்ளலாக சிரித்தபடி அவன் கார் கதவை நன்றாக திறந்து வைக்க, அடித்து பிடித்து இறங்கியவள். அன்னபூரணையுடன் இணைந்து கொண்டாள்.

"இதில் ரொம்ப விவரம் தான்" என்று முணுமுணுத்த படி காரை பூட்டிவிட்டு அவர்களை பின்தொடர்ந்தான்.

எட்டுக்கை அம்மன் கோயில் கொல்லி மலையின் காவல் தெய்வம்.

கொல்லிப்பாவை என்றும் அழைக்கப்படும் இத்தெய்வம் இந்த புனிதமான மலையை காப்பதாக ஒரு நம்பிக்கை உண்டு.

கோயிலுக்குள் நுழைந்ததும் அம்மனின் ஆதிக்கம் தெரிந்தது.

வெகு எளிமையாக இருந்த அந்த கோயிலில் அத்தனை நேர்மறையான வாசம்.

இவ்வளவு நேரம் படபடத்த திகழின் இதயம் அப்படியே அமைதி அடைந்தது.

ஒரு வித தெளிவும் நம்பிக்கையும் மனதில் இதம் சேர்க்க மற்றதை மறந்து அந்த தாயை நம்பிக்கையுடன் வணங்கினாள்.

பல ஆண்டுகளாக காணாமல் போயிருந்த தெய்வ நம்பிக்கை ஊற்றாகப் பெறுக கண்களில் மெல்ல கண்ணீர் கசிய அந்த தாயை இமைக்காமல் பார்த்தபடி இருந்தவளின் கரங்கள் கூப்பி இருந்தது.

மனதிற்குள் தைரியத்தை கொடு என்ற வேண்டுதல் மட்டுமே நிறைந்திருந்தது.

ஆத்ரேயனுக்குமே ஒரு வித பாசிட்டிவ் வைப் அங்கு கிடைக்க,அந்த இடத்தை உள்வாங்கியப் படி நின்றிருந்தான்.

நிதானமாக வணங்கிவிட்டு இருவரும் அமர, ஆத்ரேயன் அங்கு சுற்றிப் பார்த்தபடி இருந்தான்.

சில நிமிடங்களில், "ஒரு வியூ பாயிண்ட் இருக்கு போலாமா?" என்றதும்,

" அதுக்கு தான் டா வெயிட் பண்ணிட்டு இருக்கோம். வா போலாம் "என்று அன்னபூரணி கூறியதும் சிரிப்புடன் முன்னேற, இப்பொழுதும் கார்கதவை அவளுக்கு திறந்து வைத்தான்.

அதில் ஒருவித சங்கோஜம் அவளை ஆட்கொள்ள, அதில் தடுமாறிப் போனாள்.

அந்த யோசனையிலே இருந்தவள். கார் நின்றதையும் கவனிக்கவில்லை.

" மகாராணிக்காக ரொம்ப நேரமா வெயிட் பண்ணிட்டு இருக்கேன்.கொஞ்சம் இறங்கனீங்கனா,நல்லா இருக்கும் "என்றவனின் கிண்டல் குரலில் அடித்துப் பிடித்து இறங்கி ஓட பார்த்தவள்.

அங்கு அன்னபூரணி இல்லாமல் இருப்பதை கண்டு, ஐயோ என்ற உணர்வுடன் அவனை நோக்க,

"ஷால் வீ" என்று அவள் முன் ஒற்றைக் கரம் இல்லை என்ற பெரிதான தலையசைப்புடன் அங்கிருந்து வேகமாக ஓட, ஆத்ரேயனின் சிரிப்பு சத்தம் அவள் செவிகளை நிறைத்தது.

"இது கூட நல்லா தான் இருக்கு "என்றப்படி பின்னந்தலையை கோதியப்படி அவன் முன்னேறனான்.

சீகு வியூ பாயிண்ட்.

மாலை சூரியன் மலைகளின் கீழ் மறைவதை அங்கிருந்து பார்க்க அத்தனை அழகாக இருந்தது.

மூவரும் சூரியன் மறையும் வரை அந்த நிகழ்வை பார்த்துவிட்டு,இரவு உணவையும் வெளியில் முடித்துவிட்டு வீட்டிற்கு வர அன்னபூரணி களைப்பில் உறங்க சென்று விட ஹாலில் இருவரும் தனித்து விடப்பட்டனர்.

"உங்களுக்காக வெயிட்டிங் மகாராணி "என்று விட்டு அவன் செல்ல என்ன செய்வது என்று புரியாமல் விழித்தாள்.

தயங்கியபடியே அறைக்குள் வர, கட்டிலில் கால் ஆட்டியபடி ஒய்யாரமாக அமர்ந்திருந்தவன்.

" வாங்க உங்களுக்காக தான் இந்த ப்ளேஸ் மொத்தமும் வெயிட்டிங் "என்று மெத்தையை தட்டி அவளை அழைக்க,

"நீங்க... நீங்க வேணும்னே பண்றீங்க " என்று சிறுபிள்ளை என குற்றம் சாட்டினாள்.

"என்ன" என்று புரியாதது போல் அவன் வினாவ,

இப்பொழுது தயக்கம் நீங்கி, " ஆமாம். பயமுறுத்த என்னை டீஸ் பண்ண இப்படி பண்றீங்க" என்றாள் கண்டுபிடித்த தோரணையில்.

"ஓ அப்போ நீங்க பயந்துட்டீங்க " என்று கைகட்டியபடி ஒற்றை புருவம் உயர்த்தி அழுத்தமாக அவன் கேட்க,

"ப்ளீஸ் ஏன் இப்படி... இதெல்லாம் வேண்டாமே முன்னே மாதிரியே இருங்களேன்" என்றாள் மன்றாடும் குரலில்.

"முன்ன மாறினா "

"நான் ஒரு ஒருத்தி இருப்பதையே கண்டுக்காமல் தெரியாமல்..." என்று விளக்க முடியாமல் அவனை உதவிக்கு பார்வையால் அழைக்க,

கை பிசைந்தப் படி தவிப்புடன் பார்ப்பவளைக் கண்டு சிரிப்பு வந்தாலும் அதை காட்டிக் கொள்ளாமல்,

" ஆனால் நீ எனக்கு நல்லா தெரியறயே. அஞ்சரை அடியில் இவ்ளோ பெரிய உருவம் இருப்பது எப்படி கண்ணுக்கு தெரியாத மாதிரி பிகேவ் பண்ண ".

பேசிய படியே அவள் முன் நிற்க,இம்முறை பின்னடையாமல் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

" அட தைரியம் வந்துருச்சு போலயே" என்று அவன் இன்னும் அவளை நெருங்க அப்பொழுதும் அப்படியே நின்று இருந்தாள்.

"எனக்கு புரியுது "என்று சன்னமான குரலில் முணுமுணுத்தாள்.

"என்ன புரியுது" என்று அவள் பதிலை கேள்வியாக மாற்ற,

"நான்.. நான் விலகி போறது உங்களை ஏதோ ஒரு விதத்தில் ட்ரிகர் பண்ணிடுச்சு அதில் கோபம் ஆயிட்டீங்க.அதனால் என்னை பழி வாங்க எப்படி பண்றீங்க "

ஓ என்றபடி அவன் உடல் வளைத்து சோம்பல் முறிக்க, அப்பொழுதும் அவள் அப்படியே அவன் முகம் பார்த்து நின்று இருக்க,

" ரொம்ப தெளிவு தான். மேபி இருக்கலாம் ஆனால்" என்று அவன் அப்படியே நிறுத்த படபடப்புடன் அவனை பார்த்தாள்.

"ஓ.அப்போ நான் பக்கத்தில் வந்தால் ஓட மாட்டியா" என்று அவள் முகம் பார்க்கும் வண்ணம் குனிந்து கேட்க, அவள் அப்படியே நின்று இருந்தாள். இருவரின் விழிகளும் ஒன்றோடு ஒன்று மோதி கொண்டது

அவள் மீது எழுந்த சுகந்தம் அவன் நாசியில் மோதும் வண்ணம் நெருங்கி இருக்க, அவன் மூச்சு காற்றின் வெப்பத்தை பெண்ணவளும் உணர ஒரு மாதிரி மூச்சு முட்டுவது போல் இருக்க உடனே பின்னடைந்தாள்.

படபடப்புடன் அவனைப் பார்க்க, "பைவ் செகண்ட்ஸ் கூட தாக்கு பிடிக்கலை" என்று நக்கலாக அவன் குற்றம் சாட்ட, பெருமூச்சு வாங்க அவனை பார்த்தவளுக்கு அந்த உணர்வுகள் ஒருவித தடுமாற்றத்தை தர, அங்கிருந்த அகல பார்த்தவளின் கரத்தை அழுத்தமாக பற்றினான்.

அதில் அதிர்ந்து போய் அவனை பார்க்க அந்த விழிகளில் முன்பு தெரிந்த பயம் இல்லாமல் ஒருவித அதிர்வும் பதட்டமும் இருக்க, "நல்ல மாற்றம் தான் ஆனால்.." என்று வார்த்தைகளை இழுத்தவனின் பார்வை கட்டிலில் நிலைபெற்றது.
 
அத்தியாயம்-18

அடிக்கடி பின்னங்கழுத்தை பிடித்தபடி இருந்த ஆத்ரேயனிடம் வந்த விமல், "என்ன ஆச்சு சார் " என்றான்.

" தலை வலிக்குது சூடா ஸ்ட்ராங்கா ஒரு காபி சொல்லு" என்றதும்,விமலும் அதை தருவிக்க அங்கிருந்து அகல போக,

"வெயிட்.ம்ம்ம் ஒரு பக்கமா படுத்து பிடிச்சுகிச்சு போலே. ஸ்பிரே எடுத்துட்டு வா " என்று மணிக்கட்டை அழுத்தியவாறு கூறினான்.

"சார் பெட் சரியில்லையா?" என்று விமல் அக்கறையாக கேட்க, "என் வாய்க்கு வாஸ்து சரி இல்லை.மூடிட்டு சொன்ன வேலையை செய்டா" என்று ஆத்ரேயன் எகிற,வாயை மூடிக்கொண்டு விமல் அங்கிருந்து அகன்றான்.

அவளை பெட்டில் படுக்க வைத்த தன் மடத்தனத்தை நொந்து கொண்டான்.

நேற்று இரவை எண்ணிப் பார்த்தான்.

அவன் பார்வைக்கு சில கணம் தயங்கி நின்றவள். வேறு வழியில்லாமல் உடைமாற்றி படுத்து விட்டாள்.

வெற்றி புன்னகையுடன் அவனும் படுக்க, சில நிமிடம் நெளிந்த படி அவள் இருந்ததில் ஆத்ரேயனுக்கு சந்தோஷம் எட்டிப் பார்த்தது.

பிறகு அவளிடம் அசைவே இல்லாமல் போக, ஆச்சரியத்துடன் அவளை நோக்க ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.

நடிக்கிறாளோ என்று எண்ணம் இருந்தாலும், அவளிடம் எவ்வித அசைவும் இல்லாமல் சீரான மூச்சுடன் உறங்கி இருக்க அப்படியே படுத்தான்.

அப்பொழுதுதான் ஒரு பெண்ணின் அருகில் படுத்திருப்பது புரிய ஒரு மாதிரி ஆனது. ஷூட்டிங் ஸ்பாட்டில் கூட பெண்களை அருகில் அண்ட விடாமல் தவிர்ப்பவன்.

பெரிதாக பெண்கள் மீது நாட்டம் எழுந்ததில்லை.

அவன் இருக்கும் சினி ஃபீல்டில் அதில் இருக்கும் வெளி பூச்சுகளும்,மாயங்களும் சூழ்ச்சிகளும் நன்கு புரிந்ததால் ஏனோ பெண்கள் அனைவரும் மினுமினுக்கும் தோல் கொண்ட விஷ பாம்புகள் போல தோன்ற, அறவே அவர்களை வெறுத்து ஒதுக்கினான்.

அதனால்தான் திகழை திருமணம் செய்த போதிலும் கூட பெரிதாக அவள் மீது நாட்டம் இருந்ததில்லை.

ஆனால், இப்பொழுது ஒரே மெத்தையில் படுத்து இருப்பது வித்தியாசமாகவும், வேறுவித உணர்வுகளையும் மெல்ல தட்டி எழுப்புவது போல் இருக்க உடனே குப்புற படுத்து கொண்டான்.

படுக்கையை இதுவரை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதவனுக்கு திகழின் அரவம் உறக்கத்தை அண்ட விடாமல் செய்தது.

அவள் சுவாசமும் தன்னை நெருங்காதவாறு கட்டிலின் விளிம்பில் அப்படியே படுத்தவன். பெரும் போராட்டத்திற்குப் பிறகே உறக்கத்தை அடைந்தான்.

காலை விழிக்கும்போது உடலின் வலப்பக்கம் முழுவதும் மரத்துப் போய் இருந்தது

பயிற்சி செய்து ரத்த ஓட்டத்தை கரங்களுக்கு கொடுத்து ஒருவாறு சரி செய்திருந்தாலும் இன்னும் மணிக்கட்டும், கழுத்து வலியும் நீங்கவில்லை .

அதில் பச் என்று சலித்தபடி அவனுக்காக போடப்பட்ட பிளாஸ்டிக் சேரில் தளர்வாக அமர்ந்த,சில நிமிடங்களில் ஷூட்டிங் ஸ்பாட்டே பரபரப்பானது.

"மாதவி மேம் டா" என்ற செட் அசிஸ்டன்ட் ஒருவனின் ஆரவார குரலில் திரும்ப திரையுலகின் ஜொலிக்கும் நட்சத்திரமான மாதவி ஆத்ரேயனை நோக்கி வர, புன்னகையுடன் எழுந்து கை கொடுக்க அவளோ மெல்ல அணைத்து விடுவித்தாள்.

மரியாதை நிமித்தமாக அவனும் அணைத்து, "தேங்க்ஸ் ஃபார் கம்மிங் " என்றான்.

"இட்ஸ் பிளஷர் ஆப்பர்சூனிட்டி ஃபார் மீ ஆத்ரேயன். நான் தான் உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லணும்" என்று முத்துப்பற்கள் மின்ன வசீகரமாக புன்னகைத்தவளை, ஒட்டு மொத்த செட்டும் வாயை பிளந்து பார்த்தனர்.

ஆத்ரேயன் "விமல்" என்றதும் வாயை பிளந்தபடி மாதவியை பார்த்துக் கொண்டிருந்தவன்.

" சொல்லுங்க சார்" என்று இளித்தப்படி கேட்டான்.

அதில் அவனை முறைத்து பார்த்தவன்.

தொண்டையை செரும, " சொல்லுங்க சார்" என்று உடனே தன் தொணியை மாற்றிக் கொண்டு விரைப்பாக கேட்க,

அவனை அலுப்பாக கண்ட ஆத்ரேயன், " உனக்கு மாதவியோட சீன்ஸ் அண்ட் மாதவிக்கான டயலாக் பேப்பர் மெயில் பண்ணி இருக்கேன்.அதை டிக்டேட் பண்ணு "

"ஆனால் மேம்க்கு நம்ம படத்தில் என்ன ரோல் சார்" என்று திகைத்துப் போய் கேட்டான். இச்செய்தி அவனுக்கு புதிதல்லவா.

" வளவன் கேரக்டரை தூக்கிட்டு செம்மின்ற கேரக்டர் ஆட் பண்ணிட்டேன். டாப் ஆக்ட்ரஸ் கெஸ்ட் ரோலில் வருது நம்ம படத்துக்கு இன்னும் பலம் தானே. சர்ப்ரைஸ் எலமெண்டா இருக்கட்டும்.விஷயம் வெளியே போகாமல் பார்த்துக்கோ "

"ஆனால் வளவன் கேரக்டர்" என்று குழம்பிப்போய் அப்படியே கேள்வியை நிறுத்தினான்.

இப்பொழுது எடுக்கப் போகும் சார்ட்டில் சாந்தவிக்கான பகுதி தானே அதிகமாக இருக்கும்.

அதில் தற்போது பல மொழிகளில் வளர்ந்து வரும் பிரபலமான நடிகைக்கு எந்தப் பகுதியை கொடுக்கப் போகிறார் என்று குழம்பிப் போய் பார்த்தான்.

" சாந்தவிக்கு கொடுத்த சில போசன்ஸ் மாதவிக்கு நான் ரீபிளேஸ் பண்ணிட்டேன் .இப்பொழுது எடுக்கப் போகும் கிளைமாக்ஸ்ல மாதவி திவாகர் போர்ஷன் அதிகப்படுத்தி இருக்கேன்
கண்டிப்பா இது ஒர்க் அவுட் ஆகும்" என்று கூற, மாதவி புன்னகையுடன் அதனை கேட்க, ஆச்சரியமாக பார்த்த விமலுக்கு மெல்ல விஷயம் பிடிபட்டது.

அதில் ஆத்ரேயனை பிரமிப்பாக பார்க்க,"உனக்கு சேஞ்ச் பண்ண ஸ்கிரிப்ட் அனுப்பி வெச்சேனே. நீ பார்க்கலையா?" என்று பாக்கெட்டில் கரம் விட்டபடி கூர்மையாக கேட்க,

" புது இடம், கிளைமேட் சேஞ்ச் அதான் சார் ஒரு ரவுண்ட் அடிச்சுட்டு தூங்கிட்டேன்" என்று நெளிந்தபடி சாக்குக் கூறியவன்.

மாதவி இருப்பதை உணர்ந்து நாக்கை கடித்துக் கொண்டு,"சாரி சார்.பத்து நிமிஷத்தில் ஷாட் எடுக்க எல்லாம் ரெடியா இருக்கும் சார் "என்று விரைப்பாக கூறிவிட்டு அவன் தொலைந்து போக,

"இன்ட்ரஸ்டிங் கை" என்று மாதவி சிரிப்புடன் கூற, "இரிடேட்டிங் கை கொஞ்ச நேரத்தில் நீயே தெரிஞ்சிப்ப" என்று விட்டு மற்ற வேலைகளை கவனிக்க செல்ல,

மாதவிக்கான சீன் எடுப்பதற்கு தேவையான அனைத்தும் தயார் செய்ய,மாதவி சர்வ அலங்காரத்துடன் உரிய இடத்தில் நிற்க படப்பிடிப்பு தொடங்கும் நேரத்தில்,

" என்னாச்சு" என்று பதறி கொண்டு வந்து சாந்தவி நின்றாள்.

அவள் பார்வையோ செட்டில் தயாராகி நின்று இருந்த மாதவியை எரிக்க, மாதவி அலட்சியமாகத் தலையை திருப்பிக் கொண்டாள்.

அதில் உடலோடு உள்ளமும் எறிய ஆத்ரேயனை விடைக்காக நோக்கினாள்..

"என்ன வேணும் "என்று ஒன்றும் நடக்காத குரலில் அவன் கேட்க, "என்னாச்சு?. இன்னைக்கு எனக்கான ஷூட்டிங் நடந்திருக்கணும். ஆனால், எப்படி" என்று கத்தினாள்.

"அஸ் எ டைரக்டர். எப்படி வேணா ஸ்கிரிப்டை நான் சேஞ்ச் பண்ணுவேன் கதையோட வெற்றிக்காக," என்றான் அலட்டல் இல்லாத குரலில்,

" ஆனால் ஆனால்... " என்று படபடத்தவள். "இருங்க ப்ரொடியூசர் கிட்ட பேசுறேன் ".

"பேசு உன்னை ரெகமெண்ட் பண்ணது புரொடியூசர் தான். அவர் ரெகமெண்ட் பண்ணும்போது சொன்னது 20 நிமிஷ ஸ்கிரீன் பிரசன்ஸ். ஒரு குத்து பாட்டு கண்டிப்பா இருக்கணும்னு.தட்ஸ் இட் "

"படத்தோட மார்க்கெட்டிங் அண்ட் அவரோட லாபத்திற்காக ஓகே சொன்னேன். பட்... நோட் தட் பாயிண்ட் என்னோட டைரக்டர் எத்திக்ஸ்காக உன்னை வெறும் குத்துப்பாட்டுக்கு மட்டுமில்லாமல் நடிப்பதற்கு ஒரு ஸ்பேஸ் கொடுத்தேன்
அதை நீ யூஸ் பண்ணிப்பேன்ன்னு பார்த்தேன். பட்.... யூ கிராஸ் ஆல் யுவர் லிமிட்ஸ்".

" நீ இல்லைனா இந்த படம் அப்படியே ஸ்டாப் ஆயிடும் என்ற நினைப்போ அதுவும் இந்த ஆத்ரேயன் கிட்ட. நோ..நெவர் டார்ஸ்
மீ "என்று சீறலான குரலில் அவன் மிரட்ட,

அவன் முகத்தில் அந்த கோபமே தெரியாமல் குரலில் அத்தனை கோபத்தையும் கொட்டியதில் விக்கித்து போய் நின்றாள்.

இருக்கும் வாய்ப்பும் பறி போய்விடும் என்ற பயத்தில்," அப்போ நான் படத்தில் இனி வரவே முடியாதா? " என்று ராகம் இழுத்து கீச்சு குரலில் மொழிந்தவளை தோளைக் குலுக்கி அலட்சியமாகப் பார்த்தவன்.

" டைம்க்கு வரலைனா ரீபிளேஸ் பண்ணிட்டே இருப்பேன்" என்று விட்டு ஸ்கிரீன் பேப்பரை கையில் திணித்தான்.

அவமானம் பிடுங்கி திங்க,அதை அனுபவிக்க கூட முடியாமல் அடுத்தடுத்த காட்சிகள் மாதவியை வைத்து எடுக்கப்பட, சில நிமிடங்களில் கைதட்டும் சத்தமும் கேட்க காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போல் காந்தியது.

ஆத்ரேயா என்று வலியுடன் ஆங்காரமாக கத்தியவளைத் தாங்கிக்கொண்ட ஜெயாவை பிடித்து தள்ளி விட்டாள்.

இருவர் மட்டும் அவ்விடத்தில் இருக்க ஜெயாவோ, " என்னடி பண்ற பைத்தியமா பிடிச்சு இருக்கு ".

"ஆமா பைத்தியம் தான். இந்த பைத்தியம் அந்த ஆத்ரேயனை கொன்னா தான் தெளியும்" என்று வெறியுடன் பேப்பரை கசக்கி தூர வீச,

"அடியே இருக்கும் வாய்ப்பைக் கோட்டை விட்டுராதடி" என்ற ஜெயா ஸீன் பேப்பரை எடுக்க போக, அவர் கையை பிடித்து தடுத்தவள்.

ஏய் என்ற கர்ஜனையுடன் அவர் கழுத்தை பற்றப் போய், இறுதி நொடியில் ச்சி என்று உதறி தள்ளினாள்.

" கோட்டை விடுறேனா இல்லை கோட்டையை பிடித்து ராணி ஆகிறேன்னா பார்க்க தானே போற" என்று ஆங்காரம் மிக்க மொழிந்தவள்.தரை அதிர நடந்து சென்றாள்.

அனைத்தையும் உள்ளுக்குள் புதைத்தவள். ஸ்டைலிஷ் செய்த மேக்கப் கொடுத்த காஸ்ட்யூம் போட்டுக் கொண்டு வந்து நின்றாள்.

அவள் வந்ததும் உடனே அவளுக்கான சீன் தரப்பட, உள்ளுக்குள் வெறி எழுந்தாலும் வெளியே தன் கதாபாத்திரத்துக்கு பொருத்தமாக சாந்தமான நடிப்பை வெளிப்படுத்த, ஒரே டேக்கில் அவளுக்கான அன்றைய காட்சிகள் முடிக்கப்பட்டது.

திரைப்படத்திற்கான காஸ்ட்டிமை கூட மாற்றாமல் தனது காரில் ஏற, வேகத்துடன் கார்ப் புறப்பட்டது.

அவ்விடத்தை விட்டு அகன்றதும் அடிவயிற்றில் இருந்து பெரும் கேவல் எழ சத்தமிட்டு அழ ஆரம்பித்தாள்.

"அவனை ஏதாவது பண்ணியே ஆகணும்" என்று வெறியுடன் கூறியவள்.

எதிரே ஆத்ரேயன் இருப்பது போல் அவன் கழுத்தை நெரிப்பது போல் கரங்களைக் கொண்டு செல்ல, ஜெயா அப்படியே பயந்து ஒடுங்கிப் போனார்.

******
ஷூட்டிங் பரபரப்பாக அடுத்த ஒரு வாரம் நடைபெற, ஆத்ரேயன் கைவலி கழுத்து வலியுடன் சூட்டிங்கில் பங்கேற்றான்.

அன்றைய நாள் ஷூட்டிங்கும் முடிந்து நடு இரவில் வந்து மெத்தையில் சரிந்தான்.

அடுத்த நாள் காலையில் தயாராகி, " சாரி டைம் ஆயிடுச்சு.வாங்க போலாம் "என்று கையில் வாட்சைக் கட்டியபடி வந்தவன்.

தயாராகி நின்ற தாயையும் தாரத்தையும் கண்டு முன்னேற,

" பரவால்ல வேண்டாம் விடு. நீயே நைட் எத்தனை மணிக்கு வந்தேன்னு தெரியல".

" நைட்டு 12 மணி ஆகிடுச்சு அத்தை "என்று சன்ன குரலில் திகழ் மொழிந்தாள்.

அதில் ஆச்சரியமாக அவன் பார்வை அவள் மீது படிந்தது.

'நான் வரும்போது குறட்டை விட்டு தூங்கிட்டு இருந்தாளே. எப்போ என்னை கவனிச்சா' என்று யோசிக்க அன்னபூர்ணி சமாதானம் அடைந்து," போலாம் பா" என்றபடி நகர, காருக்கு சென்றனர்.

ஆத்ரேயனோ திகழைப் பார்த்தபடி யோசனையில் காரை எடுக்க பொறுத்து பொறுத்து பார்த்த அன்னபூரணி ஒரு நிலைக்கு மேல் முடியாமல்,

"கொஞ்சம் பாதையிலும் கண்ணை வச்சு ஓட்டு கண்ணா " என்க, அப்போதுதான் அவளைப் பார்த்தபடி இருப்பதை உணர்ந்து பாதையில் கவனத்தை செலுத்தினான்.

இருவரையும் ஆகாய கங்கைக்கு அழைத்து வந்திருந்தான்.

கொல்லி மலையின் இதயத்தில் ஆர்ப்பரிக்கும் பேரருவி.

வானுயர்ந்த மலைகளின் உச்சியிலிருந்து, அடர்ந்த மரங்களின் பசுமைக்கிடையே, ஒரு வெள்ளி நூலென தன் பயணத்தைத் தொடங்குகிறது ஆகாய கங்கை.

பாறைகளில் மோதி, சிதறி, மூலிகைகளின் மணம் கலந்து, அது கீழே விழும் காட்சி, விண்ணிலிருந்து கங்கை நதியே நேரடியாக இறங்கி வருவதைப் போன்ற ஒரு பிரம்மையை ஏற்படுத்தும்.

அதனால்தான் 'ஆகாய கங்கை' என்று பெயர் வந்ததோ என்னவோ.

சுமார் 1300 படிகளைக் கடந்து அதன் அருகே செல்லும்போது, அதன் பேரிரைச்சல் ஒரு மந்திரம் போல செவிகளில் ஒலித்தது.

மூச்சு வாங்க நடந்து வந்த அன்னபூரணிக்கு களைப்பு தற்காலிகமாக விடைபெற்றது.

ஆகாய கங்கை ஒரு தேவலோக அழகியைப் போல காட்சியளித்தாள். அருவியாக தெரியாமல் கொல்லி மலையின் ஆன்மா போல் காட்சி அளித்தாள்.

300 அடி உயரத்தில் இருந்து நீர் பாறையில் கொட்டிக் கொண்டிருக்க பார்க்க அத்தனை அழகாக இருந்தது.

ஏதோ ஆகாயத்திலிருந்து தண்ணீர் இறங்குவது போல் இருக்க, வாயை பிளந்தபடி பார்க்கும் தாயை கண்டு சிரிப்புடன் அவரை தாங்கிக் கொண்டான்.

அவன் மனைவியும் ஆசையுடன் அருவியை பார்த்தபடி இருந்தாள்.

அப்போதுதான் சுற்றிலும் யாரும் இல்லாமல் தாங்கள் மூவர் மட்டும் இருப்பதை கண்டு அன்னபூரணி என்னவென்று வினாவ,

"ஒரு மணி நேரத்திற்கு ஸ்பெஷல் பர்மிஷன்" என்று கண்ணை சிமிட்ட,

'உன்னை வைத்துக்கொண்டு' என்று சலித்தாலும் அனைவரும் இருக்கும் போது ஆத்ரேயனை யாராவது ஒருவர் கண்டு கொண்டாலும் பிரச்சனைதான் என்ற நிதர்சனம் புரிய, புன்னகையுடன் தண்ணீருக்கு சென்றார்.

அவர் செல்ல உதவி செய்தவன். திகழ் தனியே வருவதை கண்டு அவளுக்கும் கை கொடுக்க, "இல்லை பரவால்ல " என்று மறுத்தவளின் கையை வம்படியாக பிடித்துக் கொண்டு இருவரையும் மிதமான தண்ணீர் கொட்டும் இடத்திற்கு அழைத்து வந்தான்.

ஆகாய கங்கை கொட்டும் இடத்திற்கு இன்னும் மேலே ஏற வேண்டும்.

அந்த அருவியில் இருந்து வழிந்த தண்ணீர் சத்தத்துடன் ஓடிக்கொண்டிருக்க அங்கிருந்த ஒரு பாறையில் அவரை அமர வைத்தவன்.

"வாங்கமா.முதலில் உங்களை கொண்டு போய் விடுறேன்".

"ஏதே. முடியவே முடியாது. கயிறை பிடிச்செல்லாம் ஏறணும். வயசான காலத்தில் விழுந்து வாரினால் அவ்வளவுதான். எனக்கு இந்த தண்ணியே போதும். குளுகுளுன்னு நல்லா இருக்கு" என்று மறுத்தவர்.

"திகழை கூட்டிட்டு போ" என்றதும் இல்ல வேண்டாம் என்று அவள் மறுக்கும் முன்பே அவள் கைப்பிடித்து இழுத்து சென்றான்.

கால் வைக்கும் பாறைகள் எல்லாம் வழுக்க,பயத்தில் அவன் புஜத்தைப் பற்றி கொண்டாள்.

"இல்லை. வேண்டாம்" என்று சன்ன குரலில் மறுக்க,

"அப்புறம் கூழாங்கல் பொறுக்க வா வந்த. அட வா" என்று அதட்டியவன். அவள் கையில் அழுத்தத்தை கொடுத்து இழுத்து சென்றான்.

கயிறையும் அவனையும் பற்றி கொண்டு ஒரு வழியாக தண்ணீர் கொட்டும் இடத்திற்கு வந்து சேர்ந்தாள்.

காதை கிழிக்கும் தண்ணீர் கொட்டும் சத்தம், மேலே சிறு கல்லுகள் பட்டது போல் மோதிய நீர்திவலைகளைக் கண்டு பயந்தாள்.

அட வா என்று கொட்டும் அருவியின் அடியில் அவளை நிறுத்தி, இறுக்கமாக பிடித்துக் கொண்டான்.

ஜல்லி தலையில் கொட்டுவது போன்ற உணர்வில் காதை பொத்திக்கொண்டு அவன் மீது சாய, காலை அழுத்தமாக ஊன்றி தன்னை சமாளித்தவன்.

தன் மார்பில் தலை சாய்ந்து இருப்பவளை கண்டு ஒரு நொடி தடுமாறினான்.

" ஏதோ பண்றா இது சரி இல்லை" என்று அவளை தன்னை விட்டு விலக்கி நிறுத்த,அருவியின் அபிஷேகத்தில் கோவில் சிற்பமாய் நின்று இருந்தவளைக் கண்டு எச்சில் கூட்டி விழுங்கி கொண்டான்.

அவள் அவன் விலகியதும் அருவியில் இருந்து வெளியேற," ஓய். ஏன் ஓடுற" என்றான்.

"மூச்சு முட்டுது " என்றவளின் மார்பு வேகமாக ஏறி இறங்கியது.

அவள் மூச்சு வாங்குவதை கண்டு, "எனக்கும் லைட்டா அப்படித்தான் இருக்கு "என்றவன்.

மீண்டும் அருவிக்குள் சென்று, அவளையும் பிடித்து தன்னோடு இழுத்துக் கொண்டான்.

மீண்டும் வெளியே செல்லப் போனவளை இறுக்கமாக அவன் பிடித்துக் கொள்ள, அவனைப் பார்க்க முடியாத அளவு தலையில் தண்ணீர் கொட்ட,அப்படியே அவன் மார்பில் தலை சாய்ந்து நின்று கொண்டாள்.

ஓரளவு அந்த அழுத்தம் பழக்கப்பட ஏதோ கொட்டுவது போல் இருந்த உணர்வு இதமாக மாற அதை ஆழ்ந்த அனுபவித்தாள். அருவி நீர் உடலை லேசாக்கியது.

போதும் என்று அவன் வெளியே இழுக்கும்போதுதான் உணர்வு பெற்று வந்தாள்.

"நல்லா இருக்கு" என்று சாரல் காற்றில் உடல் நடுங்க மொழிந்தவளை ஆழ்ந்து நோக்கியவாறு,"ஆமா நல்லா தான் இருக்கு" என்றான். பார்வை அவளை ஆராய்ந்தது.

ஈர உடையுடனே மீண்டும் கீழே வந்து,அறப்பளீஸ்வரரை தரிசித்தனர்.

அருவில் குளித்த களைப்பில் அன்னபூரணி காரிலே உறங்கிவிட, அவரை கை தாங்கலாக அழைத்து சென்று அவர் அறையில் படுக்க வைத்தவன்.

தன் அறைக்கு வரும்போது அவன் மனையாளும் உடையை மாற்றி படுத்திருந்தாள்.

உடலில் களைப்பு எஞ்சியிருந்தாலும் உறக்கம் வராமல் அவளை பார்த்தபடி படுத்திருந்தவன். விளிம்பை தாண்டி நடுமெத்தைக்கு வந்திருந்தான்.

தலையணையில் பதிந்திருந்த திகழின் சுண்டு விரல் அவனின் கன்னத்தை உரசியும் உரசாமலும் இருக்க, திகழின் மூச்சுக்காற்று ரிதமாக அவன் செவிகளில் ஒலித்து கொண்டிருந்தது.
 
அத்தியாயம்-19

மரங்களும் காடுகளும் சூழ்ந்து இருந்த அப்பகுதி, நடக்கும் சூட்டிங்கினால் பரபரப்பாகக் காணப்பட்டது.

உள்ளூர் மக்கள் சிலரும் வந்து ஷூட்டிங்கை ஆவலுடன் பார்க்க, தொந்தரவு தராத வகையில் இருக்குமாறு கூறி அனுமதிக்கப்பட்டனர்.

இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நெருங்க, ஆத்ரேயன் கொதிநிலையில் இருந்தான்.

சிறு சிறு தவறுக்கும் சரமாரியாக திட்டு விழுந்தது.

அதில் விமல் தான் அதிகம் நொந்து போனான்.

சூட்டிங் பார்க்க வந்த அன்னபூரணி, " ஏன் கண்ணா இவ்வளவு டென்ஷன் கத்தாமல் இருப்பா" என்றதும் அவன் உக்கிரமாக முறைத்ததில், அது சரி என்று அங்கிருந்து நழுவி, முடிந்த அளவு மகனை விட்டு தள்ளி அமர்ந்து கொண்டார்.

இதில் ஒரே காட்சிகள் பலமுறை எடுக்கப்பட அலுப்பாகயிருந்தது.

' பேசாமல் கைட் கூட அனுப்புறேன்னு சொல்லும் போதே போய் இருக்கலாம்.குடும்பமா வந்து தனித்தனியா போறது எல்லாம் சரியா வராதுன்னு சொன்ன, என் வாயில் வேப்பப்பூ துவையலை தான் வைக்கணும்' என்று அலுத்து கொண்டார்.

திகழ் மேக் அப் ஆர்ட்டிஸ்ட் சாதனா கேட்கும் கேள்விகளுக்குப் பதில் அளித்துக் கொண்டிருந்தாள்.

முதலில் ஷூட்டிங் பார்க்க ஆவலாக தான் வந்தாள்.

வந்ததும் பார்த்த ஆத்ரேயனின் கோப முகமும், எடுக்கப்பட்ட காட்சிகளே மீண்டும் மீண்டும் எடுக்கப்பட்டதில் ஏன் தான் வந்தோம் என்ற எண்ணமே வந்து விட்டது.

ஷூட்டிங்கை பார்க்க அலுப்பாக இருக்க அவ்விடத்தை நோட்டமிட ஆரம்பிக்க, சாதனா நடிக்கும் நடிகர்களுக்கு மேக்கப் போட்டுக்கொண்டு இருக்க அதை பார்த்தபடி நின்று விட்டாள்.

அவளைக் கவனித்த சாதனா, "ஹாய்! நீங்கள் அன்னபூரணி கேட்டரிங் மேனேஜர்
தானே?" என்று ஆவலாகக் கேட்க, புன்னகையுடன் தலையசைத்த திகழை உடனே அந்த அழகுக்கலை நிபுணருக்கு பிடித்துப் போனது

பொதுவாக ஆரம்பித்த உரையாடல் பின் சரளமாக சாதனாவால் மாற்றப்பட்டது.

இருவரும் இயல்பாக பேசிக் கொண்டிருக்க," வாவ் சர்ப்ரைஸ் " என்ற ஆச்சரிய குரலில் இரு பெண்களும் திரும்ப திவாகர் புன் சிரிப்புடன் திகழை பார்த்தப் படி வந்தான்.

அவனைக் கண்டதும் சாதனா முகம் மாறியது.

"உங்க கேட்டரிங் டேஸ்ட் இங்க வரவே இல்லை.நெக்ஸ்ட் டைம் கதை கேட்கும் முன்பே உங்க கேட்டரிங் அதுவும் நீங்க சூப்பர்வைஸ் பண்ற ஆர்டரான்னு கன்ஃபார்ம் பண்ணிட்டு தான் மூவி சைன் பண்ண போறேன். அந்த அளவு உங்க சமையலால் என்னை உங்க கண்ட்ரோலுக்கு கொண்டு வந்துட்டீங்க " என்று புகழ்ந்து கூற,

சாதனா, 'விளங்கிடும் பம்பர கட்ட மண்டையா 'என்று முணுமுணுக்க, அதில் திகழ் அவளை ஆச்சரியமாக பார்க்க,

' கேட்டுடுச்சா ' என்று அதிர்ந்து போய் இதழ் அசைக்க ஆம் என்று திகழ் தலை அசைத்ததில்,

'ஜோலி முடிஞ்சது' என்று எண்ணும்போது அவளை அழைக்கும் குரல் கேட்க, வரேன் என்று விட்டு தப்பித்தோம் பிழைத்தோம் என்று அங்கிருந்து அகன்றாள்.

திகழும் விடைபெறும் முகமாக தலையசைத்து அகல பார்க்க," எவ்வளவு பெரிய காம்ப்ளிமென்ட் கொடுத்து இருக்கேன்.ஒன்னும் சொல்லாமல் போறீங்களே. நியாயமா?" என்று கிட்டத்தட்ட அவள் வழியை மறித்தப்படி வந்து கேட்டதில் தடுமாறி பின்னடைந்தாள்.

உடனே சமாளித்துக்கொண்டு, " உங்களுக்கு எங்க கேட்டரிங் சாப்பாடு பிடிச்சதில் சந்தோஷம்" என்று விட்டு திரும்ப 'அட அவ்வளவுதானா' என்று ஏமாற்றத்துடன் அவள் முன் வந்து நின்றான்.

அதில் திவாகரை புரியாமல் பார்க்க, "சும்மா காம்ப்ளிமென்ட் மட்டும் கொடுத்தால் போதாதே. என்னை மாதிரி கலைஞன் இன்னொரு கலைஞனை ஊக்குவிக்கணும்" என்று விட்டு தன் பின் பாக்கெட்டில் சொருகி வைத்திருந்த ரோஜாவை எடுத்து அவள் முன் நீட்டி,

"என்னோட சின்ன காம்ப்லீமென்ட்" என்றான்.

" நோ. பரவால்ல தேங்க்ஸ்" என்று மறுத்தவளின் கையில் வம்படியாக அவன் திணித்ததில் உள்ளங்கையை முள் பதம் பார்த்த அதே நேரத்தில்,

"இடியட்ஸ் காபி மண்ணு மாதிரி இருக்கு.ஒரு காபி கூட ஒழுங்கா கிடைக்காத. இப்பவே ஸ்ட்ராங்கா எனக்கு ஒரு காபி வந்தே ஆகணும்" என்று மைக்கில் ஆத்ரேயன் கத்திய கத்தலில் மரக்கிளையில் அமர்ந்து இருந்த பறவைகள் தெறித்து ஓட, உடனே விமல் 10 நிமிட இடைவெளியை அறிவித்தான்.

டென்டில் வந்து அமர்ந்த ஆத்ரேயனுக்கு ஆவி துடித்தது.

கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் காலில் பலமாக குத்தி கொண்டவன். ஷூ அணிந்த பாதத்தை விடாமல் தரையில் தட்டியபடி இருந்தான்.

"சில் எதுக்கு இவ்வளவு கோபம்" என்ற படி காபியை நீட்டிய மாதவியை கண்டு முகத்தை சட்டென்று மாற்றியவன்.

" ஓ தேங்க்ஸ்" என்று காபி கப்பை வாங்கி கீழே வைத்துவிட்டு, " ஷாட்க்கு ரெடி ஆகு மாதவி. இப்போ மேக்கப் ஆரம்பிச்சாதான் 20 மினிட்ஸ்ல முடியும்" என்று கூற, மாதவியும் அவன் குடிக்காமல் வைத்த காபியை பார்த்தபடி அங்கிருந்து அகன்றாள்.

சில நிமிடங்களில் கோபத்துடன் வெளியே வர, ஓ சாரி என்று மோதிய திகழை அழுத்தமாக பார்த்தபடி அவன் நிற்க,

" அத்தை காரில் இருக்காங்க கிளம்பறோம்ன்னு சொல்லிட்டு வர சொன்னாங்க" என்று விட்டு அவன் முகம் பார்க்க அவன் பார்வையோ, அவள் தோளில் மாட்டியிருந்த ஹேண்ட்பேக்கில் பதிந்து இருந்தது.

சிவப்பு நிற ஒற்றை ரோஜா பல்லை காட்டியபடி முன் நீட்டிக் கொண்டிருக்க, "கிளம்பவா" என்றவளைப் பார்த்தபடியே அவள் ஹேண்ட்பேக்கை அவன் கழட்ட, எதுவும் வாதம் செய்யாமல் அதனை கொடுத்தவள்.

அவனைப் பார்த்தபடி நிற்க ஹேண்ட்பேக்கில் இருந்த பூவை எடுத்தான்.

அவளை பார்க்க ஒன்றும் கூறாமல் அப்படியே நின்று இருந்தாள்.

அருகில் மா என்ற சத்தத்தில் திரும்ப ஆட்டுக் கூட்டங்களை இருவர் ஓட்டிக்கொண்டு செல்ல ஒன்று, இரண்டு இவர்கள் பக்கமும் வந்துவிட்டது.

தன்னிடம் கத்திக் கொண்டே வந்த ஆட்டின் வாயில் அந்த ரோஜாவை திணிக்க, அதுவோ அதை கவ்விக்கொண்டு ஓடியது.

அதில் அதிர்ந்து ஓடும் ஆட்டையும் ஆத்ரேயனையும் பார்க்க,அவளை அழுத்தமாக பார்த்தபடி அருகில் நெருங்கியவன்.

"உன்கிட்ட இருந்தால் காஞ்சி கருவாடா தான் போகும். அதுக்கு ஆட்டுக்காவது யூஸ் ஆகட்டுமே. அதுமட்டுமில்லாமல்,உன்கிட்ட இருக்கிறதை விட அந்த ஆடு கிட்ட இருக்கிறது நல்லா தானே இருக்கு.பர்பெக்ட்டான இடம் அதுதான் " என்றவன்.

மீண்டும் அவள் தோளில் கைப்பையை மாட்டிவிட்டு அவள் இடக்கையில் இருந்த பிளாஸ்கை கேள்வியாக பார்க்க,

" இல்லை காபி சூடு இந்த கிளைமேட்டுக்கு ஒத்துக்காது.அது மட்டும் இல்லாமல் காலைல இருந்து மூணு காஃபி குடிச்சிட்டீங்க" என்றதும்,

"என்னை கவனிச்சியா?" என்றவனின் குரல் மொத்தமும் மாறி இருந்தது. இத்தனை நேரம் இருந்த இறுக்கம் தளர்ந்து இயல்பாக அவன் கேட்க,

"ம்ம் பார்த்தேனே.இதில் அதிகம் டிகாஷன் கலக்காத இஞ்சி டீ இருக்கு. குடிச்சிட்டு வேலையை பாருங்க " என்று அவன் முன்னீட்ட,

"என் காம்ப்ளிமென்ட் வேண்டாமா?" என்று அதை ஊற்றி அவன் பருக, திகழும் மௌனமாக காத்திருந்தாள்.

"இன்னும் கூட இருக்கு போலயே" என்று மீண்டும் கப்பில் ஊற்ற போக," போதும் ரொம்பவும் குடிக்க கூடாது" என்று வாங்கி மூடி போட்டு மீண்டும் அவன் கையில் திணிக்க,

அதை வாங்கிய படி, " டீ ரொம்ப சுமாரா தான் இருக்கு" என்ற விட்டு அவன் அங்கிருந்து செல்ல, திகழும் அதை பெரிதாக கண்டுகொள்ளாமல் அங்கிருந்து அகன்றாள்.

நடக்கும் கூத்தை கவனித்த ஜெயா உடனே ஓடி சென்று அனைத்தையும் மகளிடம் ஒப்புவிக்க, உண்மையா என்றவளுக்கு நடந்ததை ஜீரணிக்கவே முடியவில்லை.

தாய் ஒன்றுக்கு நன்காக கூறுகிறாரா என்று அவரை கேள்வியாக பார்த்தவள்.

நடப்பதை ஊன்றி கவனித்தாள்.

மீண்டும் மூன்று நாட்கள் பரபரப்பாக ஷூட்டிங்கில் கழிந்தது.அந்த மூன்று நாட்களும் அன்னபூரணியும் வர உடன் இலவச இணைப்பாக திகழும் வரவே, அவளின் மீது மொத்த கவனமும் திரும்பியது.

அவ்வப்போது படியும் ஆத்ரேயனின் பார்வையும் கிளம்பும் முன், இருவரும் சிறிது நேரம் தனிமையில் சந்தித்து பேசுவதும் கேள்வியை எழுப்ப,ஊன்றி கவனித்தவளுக்கு கிடைத்த விடையில் வன்மமாக சிரித்துக் கொண்டாள்.

***

"நாளைக்கு தான் லாஸ்ட் டே. ஷூட்டிங்கும் ஈவினிங் ஓட முடியுது. ஒரு சின்ன பார்ட்டி இருக்கு என்ஜாய் காய்ஸ்" என்று புரொடக்ஷனை சார்ந்த சத்யன் அறிவிக்க, ஆவியில் வெந்து கொண்டிருந்த இட்லியின் மீது சட்னி ஊற்றப்பட்டது போல் அனைவரும் குளிர்ந்து போயினர்.

சத்யனும் புரொடக்ஷனை சார்ந்தவர்களும் அன்னபூரணியை நாளை பார்ட்டிக்கு அழைக்க,

" ஐயோ என்னால் வர முடியாது பா. லேட் நைட் எல்லாம் கஷ்டம் " என்று மறுக்க,

"ஒரு பத்து நிமிஷமாவது வந்துட்டு போங்களேன்" என்றதும் அருகில் இருந்த திகழினியை கண்டு,

" திகழ் வந்துருவா. நான் வந்தால் என்ன அவள் வந்தால் என்ன" என்றதும், திகழ் சங்கடமாக உணர மற்றவர்களும் திகழை முறையாக அழைக்க அரைகுறையாக தலையசைத்தாள்.

கூறியது போலவே ஷூட்டிங் வெற்றிகரமாக முடிக்கப்பட, அந்த இடத்திலே கொண்டாட்டங்களையும் ஆரம்பித்தனர்.

ஒரு வழியாக பேக்கப் செய்து அனைவரும் தங்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு சென்று ஓய்வெடுத்து விட்டு வர,

பத்து மணிக்கு ஆரம்பித்தது பார்ட்டி.

அடர் கருப்பு நிற ஸ்லீவ்லெஸ் கவுனில் வந்து நின்ற சாந்தவியின் கண்களில் அத்தனை நிறைவு.

சாதனாவிடம் பேசிக் கொண்டிருந்த திகழையும், பொறுப்பாளர்களிடம் உரையாடிக் கொண்டிருந்த ஆத்ரேயனையும் வன்மமிக்க பார்த்தவள்.

பாடல் ஒலிக்கப்பட்டதும் டான்சிங் போரில் வளைவு நெளிவுடன் நடனமாட ஆரம்பித்தாள்.

அடுத்தடுத்த பாட்டுகளும் போட பட சாதனாவோ வர மறுத்த திகழிடம்," கூட்டத்தோடு ஆடினால் தான் உண்டு. இந்த மாதிரி சான்ஸ் எல்லாம் இனி கிடைக்காது. கிடைக்கும்போதே என்ஜாய் பண்ணிக்கணும் " என்று பிடித்து கூட்டத்திற்குள் இழுக்க,

முதலில் தடுமாறியவள்.பிறகு போடும் பாடல்கள் ஏற்ப மெல்ல அசைவுகளை வெளிப்படுத்த ஆரம்பித்தாள்.

"நல்லா ஆடுற ஏன் கூச்சப்படுற" என்று உற்சாக படுத்த இருவரும் சேர்ந்து ஆடினர்.

புன்னகையுடன் ஆடிக்கொண்டிருந்தவளின் கரம் பற்றி இழுக்கப்பட பயத்தில் கத்த போனவளின் வாயை இறுக்கமாக முடிய கரங்களின் சொந்தக்காரனை புரியாமல் பார்க்க மறைவான இடத்திற்கு வந்ததும்,

" உன் குர்தி ஜிப் கழண்டு இருக்கு பார்க்கலையா?".

என்ன என்று பதறிப் போய் முதுகை ஆராய்ந்தவள். ஜிப் மேலே போகாமல் சண்டி தனம் செய்தத்தில் அதனுடன் போராடிக் கொண்டிருந்தவளை பார்த்தவன்.

"எத்தனை படத்தில் பார்த்து இருக்கேன். சேம் கான்செப்ட். திரும்பு "என்று அலட்சியமாக கூறியபடி, அவள் கையை விலக்கிவிட்டு ஜிப்பின் மீது கை வைத்தவன். மூச்சை அடைத்துப் போனான்.

நடு முதுகில் இருந்த கருப்பு நிற மச்சம் அந்த மெல்லிய விளக்கு ஒளியிலும் அப்பட்டமாக தெரிய, அவன் ஆள்காட்டி விரல் அதில் வட்டமிட பதறி போய் திகழ் திரும்பும் முன் ஜிப்பை முழுவதுமாக மாட்டியவன்.

"என்ன " என்று அதட்டலாக கேட்க, அவள் பார்வையில் இருந்த குற்றச்சாட்டில் அவள் விழிகளை சந்திக்க முடியாமல் இப்போது தடுமாறி வேறு பக்கம் திரும்பிக்கொண்டான்,.

"தேங்க்ஸ் சார் " என அந்த சாரில் அழுத்தத்தை கூட்டியபடி கூறியவள்.

அங்கிருந்து விலக போக,சட்டென்று அவள் கைப்பிடிக்க மீண்டும் அதே பார்வையை செலுத்தியதில்,

" என்னமோ நான் தப்பு பண்ற மாதிரி ஆட்டிட்யூட் காட்டுற. இந்த ஆட்டிட்யூட் எல்லாம் என்கிட்ட வேணாம் " என்று அதட்டலாக மிரட்ட,

" சரி " என்று உடனே ஒப்புக்கொண்டவள். அவன் பிடியிலிருந்து தன் கையை உருவிக்கொள்ள பார்க்க,

" ஏய் என்ன " என்று அவளை நெருங்க அவன் விழிகளை நேருக்கு நேராக சந்தித்தவள்.

"இப்போ நீங்க வேணும்னே பண்ணலை, கோபப்பட்டு சீண்ட என்னை நெருங்கலை. என்னை சீண்டனும்னு நினைக்கிற உங்க ஈகோ கண்ணில் தெரியலை " என்று திகழ் உறுதியாகக் கூறியதில், அவன் பிடி தளர்ந்தது.

அதற்கும் முன்பே அவன் பிடியில் இருந்த தன் கையை உதறி கொண்டு அங்கிருந்து அகன்றாள்.

ஆள் அரவமற்ற இடத்திற்கு வந்தவளின் மனம் அத்தனை பாரமாக இருந்தது.

'என்ன வாழ்க்கை இது' என்று கண்ணீர்
வடித்தவளின் வாய் அழுத்தமாக பின் இருந்து மூடப்பட, அவளின் திமிறல் போராட்டம் அனைத்தையும் அந்த கரிய நிற உருவம் முறியடித்து பெண்ணவளை தூக்கிக்கொண்டு ஹோட்டலின் பின்பக்கம் நிறுத்தி இருந்த வேனில் கிடத்தியது.

அடுத்த நிமிடமே, அந்த வேன் உயிர் வேகத்துடன் இருண்டக் கானகத்திற்குள் பாய்ந்தது.

 

அத்தியாயம்-20

அவள் சென்றதும் தலையை அழுத்த கோதி கொண்டே, மார்பில் கை வைத்தபடி நின்று விட்டான்.

இருளை வெறித்தபடி இருந்தவன்.

உடனே அலட்சியமாக தோளை குலுக்கிக்கொண்டு," நான் என்ன பண்ணேன். ஜஸ்ட் கைபட்டதற்கு ஓவர் ரியாக் பண்றா. அப்படியே பட்டால் தான் என்ன தப்பு. நான் என்ன யாரோவா? சில்லி கேர்ள் " என்று அவள் எதிரே இருப்பது போல் வாய்விட்டு கூறியவன்.

மீண்டும் பார்ட்டி நடக்கும் இடத்திற்கு சென்றான்.

மற்றவர்களிடம் பேச பிடிக்காமல் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தபடி நடக்கும் பார்ட்டியை காணும்படி அமர்ந்து கொண்டான்.

அவன் மீது வந்து விழுந்த சாந்தவியை எரிச்சலுடன் பார்த்தவாறு உடனே அவளை விட்டு அகன்றான்.

கையில் இருந்த மது கோப்பையை அவன் புறம் நீட்டி, " கங்கிராஜுலேசன் ஆத்ரேயன். உங்களோட கிரீடத்தில் இன்னொரு வைரக்கல் சேர போகுது" என்று ஆங்கிலத்தில் பாராட்டலாக மொழிய,

அவள் கூறியது கேட்காதப் பாவனையில் ஷர்ட்டின் காலரை சரி செய்தவாறு வேறுபுறம் அவன் பார்வையை திருப்பிக் கொள்ள,பற்றி இருந்த மது கோப்பையில் அழுத்தத்தை கூட்டியவள்.

இதழ்களில் புன்னகையை வழிய விட்டபடி, "ஆத்ரேயன் உங்களோட அடுத்த மூவியில் எனக்கு சான்ஸ் வேணும்" என்றாள் சட்டமாக.

அவன் பார்த்த பார்வையில் இருந்த இளக்காரத்தை சிறிதும் கண்டு கொள்ளாமல் ஒய்யாரமாக அமர்ந்தவள்.

" உங்களுக்கு தேவையானதெல்லாம் நான் செய்ய தயார்" என்றவளின் விரல் அவன் தோள் மீது படும் முன்பே எழுந்தவன்.

கோர்ட்டை சரி செய்து கொண்டு, "கனவில் கூட இன்னொரு படமும், நானும் கிடைப்பேன்னு நினைக்கவே நினைக்காதே" என்று எச்சரித்தான்.

" வாட் யூ மீன்" என்று எரிச்சலுடன் அவள் கத்த, காதை குடைந்தப்படி.

" என் படம் மட்டும் இல்லை இனி இண்டஸ்ட்ரியில் எந்த படத்தையும் உன்னால் சைன் பண்ண முடியாது" என்றவனின் பார்வை அனலை கக்கியது.

" ஆத்ரேயன் நோ" என்றப்படி அவனை நெருங்கி செல்ல, அவளை சட்டை செய்யாமல் அங்கிருந்து அகன்றவனை விடாமல் துரத்தியவள்.

யாரும் இல்லாத இடத்திற்கு வந்ததும், அவன் கைகளைப் பிடித்து தடுத்தாள்.

" எல்லாரும் இருந்ததால்தானே இந்த நல்லவன் வேஷம்.இங்கே தான் யாரும் இல்லையே. என்னையும் நீ முழுசா நம்பலாம்" என்று அவனை கட்டி அணைக்க போக, அடுத்த நொடி காதில் வாரி இறைத்த இசை மழை அப்படியே நிசப்தமாக மாறியது.

தலையும் கிறுகிறுக்க அத்தனை பலமாக அறைந்தவனை நம்ப முடியாமல் பார்த்தாள்.

" ஸ்டே அவே ஃபிரம் மீ" என்று கண்கள் சிவக்க மிரட்டி விட்டு அவன் அங்கிருந்து செல்ல,சென்றவனை காதில் கேட்க முடியாத வார்த்தைகளால் திட்டியவள்.

தலை சுற்றவே தாக்கு பிடிக்க முடியாமல் தன் டிரைவரை அழைத்து அவன் உதவியுடன் காரில் ஏறி கொண்டாள்.

நிதானத்திற்கு வரவே அத்தனை நேரம் எடுத்தது.

கண்களில் வெறி மின்ன,திகழை அடைத்து வைத்திருக்கும் இடத்திற்கு வண்டியை விட சொன்னாள்.

எரிச்சல் உடன் மீண்டும் பார்ட்டி ஹால் வந்தவனின் கண்கள் திகழை தேடியது.

பார்வைக்கு அகப்படாமல் போனவளை
மனதுக்குள் திட்டியபடி டான்சிங் ப்ளோர் சென்றவள்.வெயிட்டரிடம் கூறி சாதனாவை வரவழைத்தான்.

"திகழ் " என்று அவன் கேள்வியாக நிறுத்த,

" நீங்கதானே சார் கூட்டிட்டு போனீங்க " என்ற சாதனாவின் பதிலில் தொண்டையை செரும்பிக் கொண்டவன்.

" நோ. அதைக் கேட்கலை " என்று நெற்றியை தேய்த்தபடி,

" ஐ மீன் அப்புறம் வரலையா? " என்க, "இல்லையே" என்று அவளும் தேட ஆரம்பிக்க,

"இட்ஸ் ஓகே. நான் பார்த்துக்கறேன்" என்று அவளை அனுப்பி வைத்தவன்.

மீண்டும் அனைத்து இடங்களிலும் திகழை தேடி பார்த்துவிட்டு இறுதியில் விமல் இடம் வந்து கேட்க, திகழ் பார்ட்டி நடக்கும் இடத்திலே இல்லை என்பது புரிய, உடனே மேனேஜரை அழைத்து விவரம் கூறி சிசிடிவியை பார்க்க வந்து விட்டனர்.

திகழை ஆத்ரேயேன் இழுத்துக் கொண்டு செல்வதை கண்டு வாயைப் பிளந்த விமல் சார் என்றான் அதிர்வுடன்.

"மூடிட்டு சொன்ன வேலையை மட்டும் கவனி " என்று அவன் எரிந்து விழுந்ததில் திரையின் மீது பார்வையை செலுத்தினாலும் உள்ளுக்குள் ஒரு திடுக்கிடல் உண்டானது.

அதே நேரத்தில் இத்தனை ஆண்டுகள் பணியாற்றிய அனுபவத்தில் ஆத்ரேயன் மீது நம்பிக்கையும் இருக்க, தடுமாறிப் போனான்.

ஆத்ரேயன் அழைத்து சென்றது மட்டுமே பதிவாகி இருக்க, திகழ் மீண்டும் வந்தது போலவே தெரியவில்லை.

ஆத்ரேயன் பார்வை கூர்மையானது ஒவ்வொரு கேமராவிலும் பதிவான காட்சிகளை ஊன்றி கவனித்தான்.

பார்க்கிங் ஏரியாவை பார்க்க, அங்கிருந்த கார்களுக்கு சம்பந்தமே இல்லாமல் இருந்த கருப்பு வேனை கண்டு அதை ஆராய, மாலை நேரமே வந்த வேன் நீண்ட நேரமாக அங்கு தான் இருந்தது.

அதன் பின்பக்கம் புற்களால் மறைந்திருக்க,மேனேஜர் இடம் கேட்க அவர்களுக்கும் அந்த வேனைப் பற்றி எந்த தகவலும் தெரியவில்லை.

சந்தேகம் இன்னும் வலுப்பெற,தாங்கள் இருவரும் இருந்த நேரத்தை அனுமானித்து கூறி, பதிவான அக்காட்சிகளை பார்த்தான்.

திகழ் தன்னை விட்டு சென்ற சில நிமிடங்களில் திடீரென்று வேனின் ஹெட் லைட்டுகள் உயிர் பெற,அதில் கவனம் கூட மின்னல் விரைவுடன் வேன் கானகத்தை நோக்கி செல்வதை கண்டு, அதன் எண்ணைப் பார்க்க முயற்சித்தான்.

அது தெரியாமல் போகவே உடனே போலீசிற்கு அழைத்து விட்டான்.

கார் சென்ற பாதையில் போலீஸ் உடன் இணைந்து சென்று கொண்டிருந்தவனின் பின் கழுத்து மொத்தமும் வியர்வையில் நனைந்து இருந்தது.

****

கனத்த இமைகளை மெல்ல திறக்க கும்மிருட்டே அவள் பார்வையை வரவேற்றது.

கண்களை மூடி திறக்க அப்பொழுதும் வெளிச்சம் புலப்படாமல் கருமை மட்டுமே இருக்க பயந்து போனாள்.

கைகள் முதுகின் பின்னால் கட்டப்பட்டு இருக்க, கால்களை உணரவே முடியவில்லை. தொண்டையும் வறண்டு போய் இருந்தது.

அதில் இதழ்களை ஈரம் செய்ய பார்க்க வாயும் துணியால் கட்டப்பட்டு இருப்பது புரிய, கண்களை இறுக்க மூடி திறந்தவள்.

ஆழ்ந்த மூச்சுகளை எடுத்து தன்னை நிதானத்திற்கு கொண்டு வர முயற்சித்தாள்.

கைகளில் தட்டுப்பட்ட தரையை உணர பார்க்க, மரம் போல் இருக்க கால்களை அசைக்க பார்த்தாள்.

கால்கள் மொத்தமும் மறுத்துப் போனதை உணர்ந்து மெல்ல மெல்ல அசைத்து உணர்வுக்கு கொண்டு வர பார்க்க, அக்கணத்தில் கதவு திறக்கப்படவும் அப்படியே கண் மூடியபடி அசைவற்று படுத்து கொண்டாள்.

தள்ளாடியபடி வந்த பெண் உருவமும், அதனை தொடர்ந்து வந்த தன்னை கடத்திய கருமை நிற உருவமும் மங்கலாக தெரிய,உடனே விளக்குகள் பளிச்சிட்ட கண்களை முழுவதுமாக மூடிக்கொண்டாள்.

அந்த கண நேரத்தில் தெரிந்த சாந்தவியின் முகம் கண்டு அதிர்ந்தாள்.

" நான் சொன்ன டோசில் தானே மருந்தை கலந்த" என்ற கேள்விக்கு அந்த உருவம் ஆம் என்று தலையசைக்க, "குட் " என்றவள்.

"உன்னோட சர்ப்ரைஸ் ரெடி" என்று வெளியே பார்த்து குரல் கொடுக்க, வந்து நின்ற திவாகரை கண்டு இன்னும் அதிர்ந்து போன திகழ் உடனே கண்களை மூடி கொண்டாள்.

முகம் மாறாமல் காப்பது பெரும் பாடானது.

குழப்பியப் படி வந்தவன் திகைத்து விட்டான்.

"ஏய் என்ன இது. இவளை எதுக்கு கட்டி வச்சிருக்க " என்று திவாகர் புரியாமல் கேட்க,

"சொன்னேனே உன்னோட சர்ப்ரைஸ்" என்றதும்,

" என்ன?. என்னோட சர்ப்ரைஸா" என்றான் குழப்பத்துடன்,

" உனக்கு இவள் மேலே ஒரு கண்ணுன்னு எனக்கு தெரியும்" என்று கள்ளமாக கண் சிமிட்ட,

திவாகர் தரையில் படுத்திருந்தவளை பார்த்தவாறு குனிய, "ஏய் நாங்க போற வரையாவது வெயிட் பண்ணு மேன்".

"நோ பழம் தானா கனிஞ்சு வரணும். அதை அடிச்ச பறிக்கிற ஆள் நான் கிடையாது "என்றவன்.

திகழின் கைக்கட்டை மெல்ல தளர்த்த ஆரம்பிக்க," இடியட்" என்ற சாந்தவியின் கோப கத்தலில் அவளை பார்த்தான்.

"இவ்ளோ ரிஸ்க் எடுத்து அவளை கடத்துனது ஜஸ்ட் உனக்காக நினைச்சியா? ஆத்ரேயனை எனக்கு பழி வாங்கணும்" என்றவளை குழப்பமாக பார்க்க, அவள் கண்களிலோ அனல் கூடியது.

"ஆத்ரேயனுக்கும் இவ மேல ஒரு கண்ணு" என்றாள் வெறுப்புடன்.

"யா. ஐ நோ " என்றவன் மதுவை பருகியப்படி சாந்தவியை நோக்கி கண் சிமிட்டினான்.

" அவ்ளோ அப்பட்டமா தெரியுது. ஆனால் என்கிட்ட என்னமோ உத்தமன் வேஷம் போட்டுட்டு இருக்கான். பிளாட்டி பிச்" என்று ஆத்ரேயனை கெட்ட வார்த்தையில் அர்ச்சித்தவள்.

" இவ என்ன அவ்வளவு அழகா? வெங்காயம் மாதிரி இருக்கா. இவளை பார்த்து ஜொள்ளு ஊத்துறான்.அவனுடைய டேஸ்ட் எவ்வளவு மட்டமா இருக்கு" என்று தன் மன அழுக்கை கொட்ட,அதில் திவாகர் ஆர்ப்பாட்டமாக சிரித்தான்.

" நீ அழகி தான் ஒத்துக்குறேன். ஆனால் இவள் அழகு இல்லைன்னு சொல்லாதே. சச் எ டிவைன் பியூட்டி" என்றவனின் விழிகளில் மெல்ல சிவப்பு ஏறியது.

" அதுதானே அழகான கிளி மாதிரி பொண்ணுங்க இருந்தாலும், நீங்க குரங்குங்க கிட்ட தானே ஓடுறீங்க. வேஸ்ட் ஃபேல்லோஸ் ".

அதற்கு தோளை குலுக்கி கொண்டவன்.

மீதமிருந்த மதுவை வாயில் சரித்துக் கொள்ள சாந்தவியோ தங்களுக்கு காவலாக நின்றிருந்தவன். கையில் பணக்கட்டை கொடுத்து அனுப்பி வைத்தாள்.

வழிந்த மதுவை துடைத்த படி, "இதில் நான் என்ன பண்ணனும்".

"ஐ நோ என்னால் தனியா இவளை இங்கே வச்சிருக்க முடியாது. ஐ நீட் ஹெல்ப். உனக்கு இங்க பிராப்பர்ட்டி இருக்கிறதா கேள்விப்பட்டேன். இவளை அங்கே வெச்சிருக்கணும். அந்த நேரத்தில் நீ என்னமோ பண்ணிக்கோ"

"ஏய் வெயிட், நான் ஹீரோ மா வில்லன் வேலை பார்க்க சொல்ற"

"யாரு நீ ஹீரோவா. நீ உன் கூட நடிக்கிற ஆக்டர்ஸ் கூட என்ன பண்றன்னு எனக்கு தெரியாதா? ஷூட்டிங் ஆரம்பிக்கிறதுக்கு முன்னால் நீ கூப்பிட்டதும் வந்தது எதுக்குன்னு நினைக்கிற. நான் கேட்கும் போது என் தேவையை ஃபுல்ஃபில் பண்ணுவன்னு தான்.ஈவன் வீடியோ கூட என்கிட்ட இருக்கு"

திவாகரின் முகம் அப்படியே மாறியது.

அவளை உறுத்து கோபத்துடன் முறைக்க, " உனக்கும் இதில் லாபம் தான் யோசி".

சட்டை பையில் இருந்த சிகரெட்டை பற்ற வைத்து பிடித்து இழுத்தவன்.

ஒரு முழு சீக்ரெட் முடிந்ததும், " என் லாபத்தை விடு. உனக்கு இதில் என்ன லாபம் ".

"அவன் பார்க்கற பார்வையிலே தெரியுது மொத்தமா விழுந்துட்டான். அவன் கிட்ட இருந்து எனக்கு பணம் வேணும். என்னை பீல்ட் அவுட் பண்றன்னு சொல்லிட்டு இருக்கான் கண்டிப்பா பண்ணுவான். ஆனால் அதற்குள் என் பேங்க் அக்கவுண்ட்டை நிரப்பனும்".

மீண்டும் ஒரு சிகரெட்ரை பற்ற வைத்த படி,"எவ்வளவு கேட்க போற",

அவள் கூறிய 15 கோடி என்பதில் சிகரெட்டை கீழே தவற விட்டான்,

" ஜஸ்ட் அவன் அம்மா கேட்டரிங்கில் ஒர்க் பண்ற பொண்ணுக்கு 15 கோடி தருவானா?. உன் மூளையில் ஏதாவது இருக்கா இல்லையா ஆர் யூ மேட் " என்று திவாகர் இளக்காரமாக கேட்க,

"தரணும். தந்து தான் ஆகணும்" என்றவள் சிலகண மௌனத்திற்கு பிறகு, " கண்டிப்பா தருவான் "என்று உறுதியாக கூறினாள்.

"ஹொவ்?" என்ற திவாகரின் குரலில் நம்பிக்கையே இல்லை.பைத்தியத்தை பார்ப்பது போல் சாந்தவியை பார்த்தான்.

" குடுப்பான். கொடுக்கலைன்னாலும் பிரச்சினை இல்லை. அவங்க கிட்ட இருந்து எப்படி வாங்கணும்னு எனக்கு தெரியும். என்னை அவமானப் படுத்தின அவனை லேசில் விடமாட்டேன். என் ப்ளான் படி கரெக்டா நடந்தால் ஆத்ரேயன் நாளைக்கு ரேப் கேசில் உள்ள போவான்" என்றாள் வஞ்சத்துடன்.

"அய்யோ என்ன தான் பிளான் பண்ற" என்று தலையை பிய்த்துக் கொள்ளாத குறையாக திவாகர் கேட்டான்.

" இவளை நைட் ஃபுல்லா உன்னோட காட்டேஜில் வச்சுக்கோ. காலையில நாலு மணிக்கு நான் சொல்ற பிளேசில் இவளை ஆப் நியூடா போடு.மத்த வேலை எல்லாம் நான் பாத்துக்குறேன்" .

அதில் திவாகர் அவளை அசந்து போய் பார்க்க, " என்ன புரியலையா?. தாயின் கீழ் வேலை செய்யும் பெண்ணின் கற்பை சூறையாடிய பிரபல இயக்குனர் ஆத்ரேயன்னு நியூஸ் வந்து இருக்கும்".

" என்னை இண்டஸ்ட்ரியில் இருந்து தூக்குறேன்னு சொன்னவனோட கேரியரை மொத்தமா நாஸ்தி பண்றேன் " என்று வன்மம் மிக்க மொழிந்தாள்.

"ஏய் ஆத்ரேயன் கிட்ட வச்சுக்க போறியா? பைத்தியமா உனக்கு. அதுவும் நீ சொல்றதெல்லாம் கேட்கும்போது "என்றவனுக்கு அவள் கூற்றில் போதை இறங்க, பயத்துடன் கேட்டான்.

" அவன் யாருன்னு எனக்கு காட்டிட்டான் நான் யாருன்னு காட்ட வேண்டாமா? " என்று வெறியுடன் கேட்டவளை கண்டு தலையில் அடித்துக் கொண்டவன்.

"இடியட். நீ என்னமோ பண்ணிட்டு போ . எதுக்கு இதில் என்னை இழுத்த ".

" நீயும் தான் அவள் பின்னால் ஜொள் விட்டுட்டு இருந்த" என்று இளக்காரமாக மொழிந்தவளை முறைத்து தள்ளியவன்.

"ஏதோ ஒரு நைட்டுக்கு ஆசைப்பட்டேன். அதுக்காக. இதெல்லாம் எனக்கு செட் ஆகாது நீ என்னமோ பண்ணு" என்று வெளியேற பார்க்க,

" நம்ம வீடியோ மட்டும் இல்லாமல் இன்னும் சில பொண்ணுங்களோட நீ இருந்த வீடியோவும் என்கிட்ட இருக்கு " என்று மிரட்டியவளைக் கோபத்துடன் பார்க்க,

" என்னை ஏதாவது செய்யணும்னு கனவில் கூட நினைச்சுடாதே. வீடியோஸ் எல்லாம் சேஃபா இருக்கு. எனக்கு ஏதாவது ஆனால் எனக்கு முதல் நீதான் மீடியா கிட்ட சிக்குவ ".

" அப்புறம் ஷாட் கேமரா ஆக்சன் சொன்னால் கம்பிக்கு பின்னால் தான் நடிக்கணும் ".

அதில் தலையை பிய்த்துக் கொள்ளாத குறையாக நடைபோட்டவன்.

"ஓகே நான் பண்றேன்" என்று திகழை நோக்கி செல்ல, ஏற்கனவே அவிழ்த்திருந்த கயிற்றை திவாகரின் முகத்தில் வீசிவிட்டு அவன் கைக்கு அகப்படும் முன்பே வேகத்துடன் எழுந்தவள்.

அவனை சாந்தவியை நோக்கி தள்ளி விட்டு கதவை திறந்து கொண்டு அந்த அடர் கானகத்தில், மை இருட்டில் குளிரையும் பொருட்படுத்தாமல் ஓடினாள்.

 
அத்தியாயம்-21

அவர்களிடம் இருந்து தப்பிக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளால் கண்மூடித்தனமாக ஓடியவள்.

ஒரு நிலைக்கு மேல் முடியாமல் மூச்சு வாங்கத் தள்ளாடி விழுந்தாள்.

செருப்பு அணியாத கால்களை கற்கள் பதம் பார்த்து வலியை உண்டாக்கியது.

அம்மா என்ற முனங்களுடன் எழுந்தமர்ந்தவள். நாள்புறமும் பார்வையை பதட்டத்துடன் சுழற்றினாள்.

அவர்கள் இருவரும் தன்னை பின்தொடர்ந்து வராததில் ஆசுவாசமடைந்து பெருமூச்சு விடுவதற்குள் தூரத்தில் விளக்கு வெளிச்சம் தெரிய, பதறி கொண்டு மீண்டும் ஓடினாள்.

உடை அங்கிருக்கும் புற்களில் மாட்டிக் கிழி பட,அதை பொருட்படுத்தாமல் ஓடினாள்.

ஒரு நிலைக்கு மேல் முடியாமல் ஒரு பாறையில் சாய்ந்தாள்..

நிலவு மட்டுமே அந்த கானகத்தில் வெளிச்சமாக இருக்க, அருகில் இருக்கும் மரங்களின் அசைவு கூட பயத்தை ஏற்படுத்தியது.

கால் பாதம் வேறு வலியை ஏற்படுத்த தள்ளாடி அமர்ந்து பாதத்தை பார்க்க, பிசு பிசுப்பாக கைகளில் ரத்தம் ஒட்டியது.

ஏற்கனவே கிழிந்த ஆடையின் கீழ் பகுதியை இன்னும் கிழித்து, குத்தி இருந்த முள்ளை பற்களைக் கடித்து கொண்டு நீக்கி காலுக்கு கட்டிட்டாள்.

மயக்க மருந்தின் தாக்கத்திலும் மூச்சு வாங்கி ஓடி வந்ததிலும் தொண்டை வறண்டு தண்ணீருக்கு ஏங்கியது.

குளிரும் உடலை துளைக்க கை, கால்களை குறுக்கிக் கொண்டு படுத்தவள். அப்படியே அந்த பாறையோடு ஒன்றிப்போனாள்.

*****

" ப்ளீஸ் சொன்னால் கேளுங்க ஆத்ரேயன். இனிமேல் பாரஸ்ட் டிபார்ட்மெண்ட் வந்தால்தான் நம்மால் மூவ் பண்ண முடியும் "என்று காவல் அதிகாரி குமார் உறுதியாக கூறினார்.

"நோ அந்த வேனை கண்டுபிடிச்சே ஆகணும். அவங்க எப்போ வருவாங்களோ? அதுக்குள்ள அவளுக்கு ஏதாவது ஆயிடுச்சுன்னா " என்று கடுகடுத்தவனிடம்,

"ப்ளீஸ் எங்க ரூல்ஸ் புரிஞ்சுக்கோங்க. ஃபாரஸ்ட் குள்ள டிபார்ட்மென்ட் ஆளுங்க இல்லாமல் நுழைய முடியாது. ப்ளீஸ் வெயிட் பண்ணுங்க " என்று எடுத்து கூற,

விமலும், "சார் வெயிட் பண்றது தவிர வேற வழியில்லை" என்றான் தணிந்த குரலில்.

ஆத்ரேயன் மனம் அமைதி கொள்ளவில்லை.கோபத்துடன் நின்று கொண்டான்.

வேன் எந்த பக்கம் சென்றது என்று தெரியாமல் ஓரளவு தோராயமாக வேன் சென்ற திசையில் வந்து விட்டாலும் அதற்கு மேலே கானகத்திற்குள் செல்ல வேண்டும்.

அதற்கு வனத்துறையின் அனுமதி வேண்டும்.அது இல்லாமல் செல்ல முடியாது என்று காவல் அதிகாரி திட்டவட்டமாக மறுத்தார்.

அதில் பெருமூச்சு விட்டுக் கொண்டு அப்படியே நடை போட ஆரம்பிக்க, அரை மணி நேரம் கழித்து ஃபாரஸ்ட் ஆபிஸர் வந்தார்.

வந்தவரிடம் குமார் அனைத்தையும் விளக்கிக் கூற, "ஓகே மிஸ்டர் ஆத்ரேயன். உங்க நிலைமை புரியுது. பட்,இப்போ நம்ம காட்டுக்குள் போக முடியாது" என்றதும்,

" ஏன் நீங்க வந்தால் போகலாம்னு சொன்னாரே" என்று அவன் படபடக்க,

" உங்க பதட்டம் புரியுது. ஆனால் நைட்டில் சர்ச் பண்றது ரொம்ப ரிஸ்க். அதுமட்டுமில்லாமல் நம்மளால் கண்டுபிடிக்கவும் முடியாது. பெட்டர் ஏர்லி மார்னிங் அவங்களைத் தேட ஆரம்பிச்சிடலாம் " என்று அவனிடம் எடுத்துக் கூற, ஆத்ரேயனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

' இன்னும் 5 மணி நேரம் அவளை யார் என்று தெரியாதவரிடம் விட்டு வைப்பதா அதற்குள் ' என்று நினைத்தே பார்க்க முடியாமல், " நோ இப்பவே சர்ச் பண்ணி ஆகணும்" என்று வம்படியாக மொழிந்தான்.

அவரோ அணிந்திருந்த தொப்பியை கழட்டியவாறு, " சார் சொன்னால் புரிஞ்சுக்கோங்க 200 கிலோமீட்டருக்கு மேல ஃபாரஸ்ட் தான்.அப்படியே 50 கிலோமீட்டர் குள்ள அந்த வேன் இருந்தாலும் இந்த டைம்ல தேட முடியாது. பிராக்டிகலி இட்ஸ் இம்பாசிபிள். நம்ம கிட்ட இருக்குற மேன் ஷோர்ஸ், ஏகுமெண்ட்ஸ் வச்சு நைட்டில் எல்லாம் தேடவே முடியாது. ரிசெர்வ் பாரஸ்ட் நைட் டைமில் சேர்ச் பண்றது எல்லாம் கடலில் குண்டூசியை போட்டுட்டு தேடுற கதை தான் ".

" என்னால் முடிந்தது காலைல அஞ்சு மணிக்கு என்னோட போர்ஸ் ஓட வருவதுதான். மொத்த ஃபாரஸ்ட்டையும் கவர் பண்ற அளவுக்கு மேன் ஷோர்ஸ் ஓட வரேன். இப்போதைக்கு வாட்சிங் டவரில் இருக்கற எங்க காட்ஸ் கிட்ட ரவுண்ட்ஸ் போகும்போது எக்ஸ்ட்ரா ஒரு ரெண்டு கிலோமீட்டர் தேட சொல்றேன். ஏதாவது வித்தியாசமா இருந்துச்சுன்னா இன்பார்ம் பண்ணுவாங்க. நாங்க ஆக்சன் எடுக்க தயாரா இருக்கோம்.பட் இப்போ ஃபாரஸ்ட்குள்ள போக முடியாது" என்று திட்டவட்டமாக கூற, ஆத்ரேயன் எவ்வளவோ பேசி பார்த்தும் வேலைக்காகவில்லை.

அவர்கள் கூறும் காரணங்கள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளும் படியாக,சட்டத்திற்கு உட்பட்டதாக இருந்தாலும் திகழ் என்று வரும் போது இந்த காரணங்கள் எல்லாம் சாக்கு போல் தெரிந்தது.

அதனால் மனம் ஒப்புக்கொள்ளாமல் போக தளர்ந்து போய் அமர்ந்தவன். சுற்றிலும் பார்வையை ஓட்டினான்.

இருபுறமும் காடும் நடுவில் தார் சாலை இருக்க அந்த இரவு இயற்கை அழகை அச்சுறுத்தலாக காட்டியது.

விமல் வந்து, "சார்" என்று அழைக்க தளர்ந்து போய் இருந்தவனைக் கண்டு உள்ளம் உருகியது.

"இங்கே இருக்கக்கூடாதுன்னு சொல்றாங்க" என்றதும் வேகத்துடன் ஏன் என்று பாரஸ்ட் ஆபீஸ்ரிடம் கேட்க," சார் கரடி
,சிறுத்தை எல்லாம் நடமாடுற இடம் உங்களுக்கு இங்கே அலோர்ட் இல்லை ".

" நோ இங்கிருந்து நான் போக மாட்டேன் "என்று ஆத்ரேயன் உறுதியாக கூற,

" என்ன சார் இது" என்று காவல் அதிகாரி குமாரை பார்த்து கேட்க, " பார்த்து ஏதாவது பண்ணி விடுங்க சார். பெரிய இடம் "என்க, அவரோ சலித்துக் கொண்டு,

"இரண்டு கிலோமீட்டர் தள்ளி எங்களோட பாட்ரோல் கேம்ப் இருக்கு.அங்க தங்கிக்கோங்க.ப்ளீஸ்" என்றதும் வேறு வழி இல்லாமல் அங்கு சென்றான்.

உடன் பாரஸ்ட் கார்ட் காவலாக இருக்க சலித்தபடி அமர்ந்தவனுக்கு,அங்கு இருக்கும் பொறுமை இல்லை.

மற்றவர்கள் ஆத்ரேயனிடம் கூறிவிட்டு செல்ல, விமல் ஆத்ரேயன் மற்றும் வன காவலர் மட்டுமே இருக்க, ஆணவனின் பார்வை சுவற்றில் இருந்த மேப்பில் பதிந்தது.

மொத்த கொல்லிமலையின் வழித்தடங்களும் அதில் குறிக்கப்பட்டிருந்தது.

அதன் அடியில் போடப்பட்ட மர டேபிளில், சோல்டர் பேக், டார்ச் வீச்சருவாளும் இருக்க, விமலை அழைத்தவன்.

அவன் காதில் முணுமுணுக்க,

" ஐயோ வேண்டாம் சார்.ரிஸ்க் கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுவோம் " என்று பயத்துடன் கூறினான்.

"நான் சொல்றதை மட்டும் செய் விமல்" என்று கட்டளையாக கூற, பதில் பேச முடியாமல் திகைத்தவன்.

வேறு வழியில்லாமல் அங்கிருந்த வன காவலரிடம் , " சார் ரெஸ்ட் ரூம் போகணும் கொஞ்சம் துணைக்கு வரீங்களா? " என்றதும் அவனை மேலும் கீழும் பார்த்து விட்டு அழைத்துச் சென்றார்.

அந்த இடைவெளியை பயன்படுத்திக் கொண்டு அங்கிருந்ததை எடுத்துக் கொண்டு காட்டை நோக்கி ஆத்ரேயன் சென்றான்.

******

" ஐயோ வசமா மாட்டப் போறோம். எப்படி அவ தப்பிச்சா " என்று போதையுடன் திவாகர் புலம்ப,

" எல்லாம் உன்னால் தாண்டா" என்று வெறியுடன் கூறியவளைக் கண்டு நொந்து போனான்.

திகழை தேட ஆரம்பித்ததில் இருந்து இதே வார்த்தைகள் தான் மாறி மாறி ஒலித்துக் கொண்டிருக்கிறது. சலிக்காமல் திட்டிக்கொண்டே வந்தாள்.

"நான் சொன்ன அளவில் மயக்க மருந்து கொடுத்து இருந்தால் நாளைக்கு காலையில தான் கண் விழிச்சிருப்பாள். நல்லா சொதப்பி வச்சிட்டான் இந்த காட்டான்" என்று தன்னுடன் வந்த அடியாளை திட்டியவள்.

" அதுக்கு மேலே நீ அவ கை கட்ட அவிழ்த்து விட்டு, ஐயோ" என்று திவாகரையும் குதறி வைத்தவள்.

திகழ் தப்பி ஓடியதை ஜீரணிக்க முடியாமல் வெந்து போனாள்.

" அவ மட்டும் ஆத்ரேயன் கையில் கிடைச்சால் நம்ம வண்டவாளம் தண்டவாளம் ஏறிடும்.வேற வழியே இல்லை விடிவதற்குள் அவள் நம்ம கைக்கு வந்தே ஆகணும்".

"மயக்க மருந்து எல்லாம் தேவையில்லை அவள் கை காலை உடைத்தாவது என் கண்ணு முன்னால் கொண்டு வந்தே தீரனும். இல்லை நீ உயிரோட இருக்க மாட்ட" என்று திகழை கடத்தியவனிடம் கட்டளையாக கூற, அவனோ தீப்பந்தத்துடன் ஒற்றையாளாக தேட சென்றான்.

" ஏய் ஏய் துணைக்கு இருந்தவனும் எங்கே நம்மளை தனியா விட்டுட்டு போறான் "என்று பதறி கொண்டு திவாகர் கேட்க,

"நம்ம ரெண்டு பேரால் எல்லாம் இந்த இருட்டுக்குள்ள அந்த நாயை தேட முடியாது அவன் கொண்டு வருவான்".

"அவன் எப்படி" என்று புரியாமல் கேட்க, " இந்த காடு அவனுக்கு அத்துபடி. விடியும் போது அவள் நம்ப கையில் இருப்பாள்" என்றாள் உறுதியுடன்.

******

டார்ச் பயன்படுத்தாமல் முதல் 15 நிமிடம் அந்த மரங்கள் ஊடே நடந்தவன். திகழின் பெயரை சத்தமிட்டு அழைத்தபடியே டார்ச் ஒளியின் உதவியுடன் அவளை தேட ஆரம்பித்தான்.

நேரங்கள் தான் கடந்ததே தவிர பெண்ணவள் இருப்பதற்கான சுவடே இல்லாமல் இருந்தது.

நடுநடுவே சிறு சிறு விலங்குகள் பூச்சிகள் அவன் பாதையின் இடையில் வர, அதனை கண்டு கொள்ளாமல் மேலே முன்னேறினான்.

கால்களும் வலி எடுக்க, " திகழ்" என்ற கத்தலுடன் ஒரு பாறையில் சாய்ந்தவன். அப்படியே தளர்ந்த அமர்ந்தான்.

நிலவையும் மேகங்கள் மூடி இருக்க இருட்டாக இருந்த அந்த பகுதியில் டார்ச்சின் உபாயத்தால் மட்டுமே வெளிச்சம் பரவியது.

" எங்கடி போன" என்று வாய் விட்டே புலம்பியவன்.தளர்ந்து பாறையில் சாய்ந்து அமர்ந்தான்.

தீனமாக வந்த ஒலியில் உடனே உயிர் பெற்றான்.

திகழ் என்ற கத்தலுடன் நால்புறமும் டார்ச் விளக்கை ஒளிர விட, சத்தம் மிக தீனமாக தன் பின்னால் வருவதை உணர்ந்து திரும்பி பார்க்க,பெரும் பாறை மட்டுமே இருக்க அதனை சுற்றிக்கொண்டு சென்றான்.

தளர்ந்து போய் விழுந்து கிடந்தவளை கண்டு திகழ் என்ற கத்தலுடன் அவளைத் தூக்க, அரைக்கண்ணால் அவனை பார்த்தவள்.

வலிக்கும் தொண்டையை பொருட்படுத்தாமல்,"அது.... அந்த.. சாந்தவி..திவா..." என்ற வார்த்தைகள் முற்றுப்பெறும் முன்பே காற்று கூட புகா வண்ணம் இறுக்கி அணைத்து இருந்தான்.

 
அத்தியாயம்-22

குளிரில் நடுங்கி போய் இருந்தவளுக்கு அவன் இறுகிய அணைப்பு இதமாக இருக்க, நன்றாக ஒட்டிக்கொண்டாள்.

சில நிமிடங்கள் கடக்க, "தண்ணி வேணும் "என்று அவள் தீனமாக கூறியதில் நெற்றில் கை வைத்துக் கொண்டவன்.

உடனே ஞாபகம் வந்து, "வெயிட் இங்கேயே இரு. வரேன்" என்று விட்டு எழுந்தவனின் கரத்தை பயத்துடன் திகழ் பற்றிக்கொள்ள, அவள் கை அத்தனை குளிர்ச்சியாக இருந்தது.

"சரி என்னோட வா" என்று அவளைப் பிடித்து தூக்க, "இல்ல நான் நடக்கிறேன்" என்று மறுத்தவளை சட்டை செய்யாமல் தூக்கிக்கொண்டு பாறையின் மறு புறம் வந்தவன்.

தான் கொண்டு வந்த பேக்கை திறக்க பஸ்ட் எய்ட் கிட், இரண்டு லிட்டர் வாட்டர் கேன் பிஸ்கட், ஜெர்கின் குட்டி டார்ச் லைட் சிறு கத்தி, போர்வை என்று இருக்க ஆசுவாசமாக உணர்ந்தவன்.

அதிலிருந்த தண்ணீரை அவளுக்கு பருகக் கொடுத்தான்.

உடன் பிஸ்கட்டையும் பிரித்து தர,அதை உண்ட பிறகு தான் சிறிது சமன் அடைந்தாள்.

"என்ன நடந்ததுனா " என்று திகழ் கூற வரும்போது பெரும் மின்னல் மின்னி மறைய, இடி சத்தமும் காதை பிளந்தது.

"ஓ காட் மழை வரப்போகுது.இங்கே இருக்கிறது பாதுகாப்பு இல்லை".

" உன்னால் நடக்க முடியுமா? " என்று ஆத்ரேயன் கேட்க,ஆம் என்று திகழ் கூற,

அவள் பாதத்தை பிடிக்க போக, உடனே பின் இழுத்து கொண்டவள்.

"என்ன பண்றீங்க " என்று படபடப்புடன் கேட்டாள்.

" ஏன் உன் காலை கடிச்சு சாப்பிட போறேன்னா? ப்ச் ஒழுங்கா குடு "என்று அவள் காலை இழுத்து அதனை பார்த்தவன். உடனே தன் ஷூவை கழட்டினான்.

"இந்த காலோட எல்லாம் நடக்க முடியாது. என்னுடைய ஷூவை போட்டுக்கோ " என்று கொடுக்க, " இல்லை உங்களுக்கு " என்று அவள் தயங்க,

"அந்த ஆனியன் எல்லாம் எனக்கு தெரியும். நீ போடு இல்லை மாட்டி விடவா" என்று அவன் சிடுசிடுக்க, திகழும் ஷூவை போட்டுக்கொள்ள மெல்ல மழை தூவ ஆரம்பித்தது.

" சீக்கிரம் வா " என்று அவளை இழுத்துக் கொண்டு சென்றான்.

பத்து நிமிட இடைவிடாத நடைக்கு பிறகு, முடியலை என்று மூச்சு வாங்க திகழ்கூற அவளை திரும்பி பார்த்தவன்.

"அவ்வளவுதான் வந்துட்டோம்" என்று கூறும்போதே சடசடவென்று மழை கொட்டியது.

"உள்ள போ" என்று அவளை அந்த குகைக்குள் தள்ளிவிட்டு தானும் உள்ள நுழைந்தவன்.

மேலே முன்னேற போனவளை கைபிடித்து தடுத்து , "ஒரு நிமிஷம் இரு" என்று விட்டு குகையை பார்க்க, "ஓரளவு நல்ல கண்டிஷன்ல தான் இருக்கு போ"என்றான்.

இருவரும் பாறையில் சாய்ந்து அமர்ந்து கொண்டனர். வெளியில் மழை கொட்டி தீர்த்தது.

சாரலும் மெலிதாக வீச ஏற்கனவே குளிரில்
நடுங்கிக் கொண்டிருந்தவளுக்கு இந்த மழைக்காற்று உடலை வெடவெடக்க செய்தது.

அவளுடன் வரும்போது பொறுக்கி வைத்த சில மர துண்டுகளை போட்டு தீப்பெட்டியின் உதவியுடன் நெருப்பை பற்ற வைத்தான்.

"இனி நீ குளிர் காயலாம் " என்று கூறியவனை நன்றியுடன் பார்த்தவள். கைகளை தீயின் புறம் காட்ட, வெப்பம் கைகளை சுட்டது. அது குளிருக்கு இதமாக இருந்தது.

அந்த வெளிச்சத்தில் அவள் கைகளில் இருந்த கீரல்களை கண்டு, "என்ன இது" என்று அவள் கையைப் பிடித்து ஆராய்ந்த படி கேட்க, "முள்ளு கிழிச்சிடுச்சு போல".

முள் கீறி ரத்தம் காய்ந்து போயிருக்க பையில் இருந்து முதல் உதவி பெட்டியில் இருந்த மருந்துகளை பயன்படுத்தி இரத்தத்தை துடைத்து சுத்தம் செய்து மருந்து பூசினான்.

அவள் கால்களில் இருந்து ஷூவை கழட்டி அதற்கும் மருந்திட போக," வேண்டாம் நானே பண்ணிக்கிறேனே " என்று சங்கடத்துடன் மறுத்தவளை அவன் சட்டை செய்யவே இல்லை.

பாதத்திலும் மருந்து இட்டான். அவள் உடையில் ஒட்டி இருந்த முட்களை மெல்ல எடுத்தான்.

அவள் கழுத்தில் இருந்த காயத்தை கண்டு, அதைத்தொட, " இது கீழே விழும்போது ஏதோ கிழிச்சிடுச்சு".

மருந்திட்ட பஞ்சை அந்த காயத்தில் வைக்க ஸ்ஸ் என்று வலியுடன் முணங்கியவள். கண்களை இருக்க மூடி தலைகுனிந்து கொண்டாள்.

அதில் காயம் சரியாக தெரியாமல் போகவே அவளை நெருங்கி சுத்தம் செய்தவன் கவனம் அவள் தோளில் வழிந்த கயிற்றில் பதிய, மெல்ல அதனை எடுத்து வெளியே போட அவன் கட்டிய தாலி அவள் மார்பில் வந்து விழுந்தது.

அந்த உணர்வில் உடனே கண் திறந்தவள்.

தன் மார்பில் கிடந்த தாலியை எடுத்து மீண்டும் உடையின் உள்ளே போட போக,"ஏன் இவ்வளவு ட்ரை பண்றேன். ஃப்ரீயா விடு.அதை ஏன் உள்ளே போட்டு மூச்சு அடைக்க வைக்கிற".

அவன் கூற்றில் புரியாமல் பார்க்க அவன் பார்வையோ மாங்கல்யம் கோர்த்த அந்த மஞ்சள் சரடில் அழுத்தமாகப் பதிந்து இருந்தது.

அதில் அவன் முகம் பார்க்காமல் திரும்பி அமர்ந்து கொண்டவள். நடுங்கிய கைகளை நெருப்பின் அனலில் காட்டினாள்.

அவன் பார்வை மொத்தமும் தன் மீது இருப்பதை உணர்ந்தாலும் திரும்பியும் பார்க்கவில்லை.

ஓரளவு குளிர் நீங்கியதும் கால்களில் முகம் புதைத்து கொண்டவள்.

பாறையில் தலை சாய்த்து கண் மூடினாள்.

உடனே போர்வையை அவளுக்கு போர்த்தி விட, "இல்லை வேண்டாம் " என்றபடி நிமிர, அவன் முகம் நெருக்கத்தில் இருக்கவே எச்சில் கூட்டி விழுங்கிக் கொண்டாள்.

அவன் பார்வையில், தேங்க்ஸ் என்ற முணுமுணுத்த படி அவன் கைகளை போர்வையில் இருந்து விலக்கிவிட்டு இன்னும் தள்ளி அமர்ந்து கொண்டாள்.

தங்களுக்கு இடையே இருந்த இடைவெளியை கண்டு அவனும் அவளை பார்த்தபடி பாறையில் சாய்ந்து கொண்டான்.

அடுத்த சில நிமிடங்கள் விடாமல் கொட்டி தீர்த்த மழை மெல்ல தூறலாக மாறியது.

கையில் ஏதோ ஊர்வது போன்ற உணர்வில் கண் திறந்தவள். பயந்துக் கத்த,என்னாச்சு என்று அருகில் வந்தவனின் மார்பில் தலை சாய்த்தவள் பாம்பு என்று பயத்துடன் கூற,

ஆத்ரேயன் அங்கிருந்த பாம்பை கண்டு,"ஓ நீயும் எங்களோட ரெஸ்ட் எடுக்க வந்துட்டியா? " என்று அதனுடன் பேச்சுவார்த்தை நடத்த,

"ஐயோ வாங்க போகலாம்" என்று கை பிடித்து இழுத்தவளை, "அட இரு" என்று தடுத்துவிட்டு பாம்பின் வாலை இலாவகரமாக பிடித்து தூக்க,அது சீறிக்கொண்டு வந்தது.

"ஐயோ அதை எதுக்கு தூக்குனீங்க. கீழே போடுங்க" என்று அவள் கத்த, "ஸ்ஸ் சத்தம் போடாத" என்று அதட்டி விட்டு,

சுவரில் சாய்த்து வைத்த குச்சியை எடுத்தவன். பாம்பின் தலை அதில் இருக்குமாறு வைத்து,

" நான் இதை விட்டுட்டு வரேன். பத்திரமா இங்கேயே இரு " என்று விட்டுப் போக பார்க்க,

"ஐயோ அதை அப்படியே தூக்கி போடுங்க. அதோட எங்கே போறீங்க " என்று பதறியபடி அவனை தடுத்தாள்.

" மறுபடியும் தூங்க உனக்கு கம்பெனி கொடுக்கும் பரவால்லயா " என்று கூறிவிட்டு அவன் செல்ல, பயந்து போனாள்.

அவன் அந்த தூறலில் மெல்ல மறைய திகழ் குகையின் வாயிலை பார்த்தவாறு அமர்ந்து கொண்டாள்.

அங்கு இருக்கவே மூச்சு முட்ட ஆத்ரேயன் வந்தால் போதும் என்ற நிலையில் இருக்கும்போது வாயிலில் காலடி சத்தம் கேட்க,

" வந்துட்டீங்களா?.பயந்தே போயிட்டேன் "என்றவளின் வார்த்தைகள் அப்படியே நிற்க,

ஆ என்ற கத்தல் சத்தத்தோடு குகையின் மூலையில் போய் விழுந்தாள்.

மொத்த உடலும் அந்த காட்டன் தந்த அறையில் செயலற்று போனது போல் இருக்க கை கால்களும் நடுங்கியது.

கண்களோ மெல்ல சொருக ஆரம்பிக்க தலையை உலுக்கி கொண்டவள்.

"ப்ளீஸ் என்னை விட்ரு" என்று கூறும் போதே அவளை அப்படியே தூக்கி தோளில் இட்டுக்கொண்டு அவன் வெளியே செல்ல தன் மொத்த சக்தியையும் திரட்டி ஆத்ரேயா என்று அவள் கத்த,

'போனில் சிக்னல் கிடைக்குமா'என்று பார்த்துக் கொண்டிருந்தவன்.

திகழின் கத்தலில் பதறி கொண்டு குகைக்கு வரும்போது அவள் இருக்கும் அரவமே இல்லை.

" ஓ ஷிட் " என்று நெற்றியில் அறைந்து கொண்டவன்.

பேகை மாட்டிகொண்டு டார்ச் லைட் சகிதம் திகழ் என்ற கத்தலுடன் அவளை தேடி ஓடினான்.

ஒரு நிலைக்கு மேல் முடியாமல் தடுமாறி அமர்ந்தவன். தலையை அழுத்தமாக பிடித்துக் கொண்டான்.

கண்கள் வேறு கலங்கும் போல் இருக்க தரையை கோபத்துடன் குத்தினான்.

மெல்ல பெருமூச்சு எடுத்து தன்னை நிதானம் படுத்த பார்த்தான்.

கண்களை இறுக்க மூடி சுற்றுப்புறத்தை உள்வாங்கியவன். உடனே நிமிர்ந்தான் தூரத்தில் சிறு வெளிச்சம் கண்ணில் பட அதனை நோக்கி ஓடினான்.

****

"சொன்ன மாதிரி கொண்டு வந்துட்டானே "என்று திவாகர் ஆர்ப்பரிக்க, சாந்தவியோ மயங்கி கிடந்தவளை கண்டு, "குட்.திவா நீ உடனே இவளை உன்னோட இடத்திற்கு கூட்டிட்டு போ.".

"ஏய் இப்பவும் சொல்றேன் ரிஸ்க் மாதிரி தெரியுது. வேண்டாம்" என்று திவாகர் பின் வாங்க பார்க்க, அவனை முறைத்தாள்.

"பயந்து நடுங்காதே"என்று கூறிவிட்டு திகழை பார்த்தவள்.

"அது என்ன தாலியா?" என்று திவாகரிடம் கேட்க,அவனோ புரியாமல் விழிக்க,

"அவள் கழுத்தை பாருடா" என்ற அவள் பரபரக்க, ' மரியாதை மொத்தமும் போச்சு' என்று நொந்தபடி அவள் கழுத்தில் இருந்த மாங்கல்யத்தை பார்த்தவன்.

" ஓ கல்யாணமான பொண்ணா? "என்று அலட்சியமாக கூற,

"டேய் கல்யாணம் ஆன பொண்ணு மேல ஆத்ரேயன் கண்ணு வச்சிருக்கான். இது வெளியே தெரிந்தாலும் அவனுக்கு அசிங்கம் தானே " மொத்தமாக ஆத்ரேயனை பழிவாங்கும் எண்ணத்தில் யோசித்தாள்.

"கல்யாணம் ஆனால் என்ன.பார்க்க அழகா இருக்கால்ல" என்று வழிந்தவனை காரி உமிழ்ந்தவள்.

"என்னமோ பண்ணிக்கோ. ஆனால் இப்போ உன் இடத்துக்கு கூட்டிட்டு போ" என்று கூறிக் கொண்டிருக்கும் போது திகழ் கண் விழித்தாள்.

இவர்களை கண்டு அமர்ந்த படியே பின் அடைந்தாள்.

"சோ நாங்க தான் கடத்தினோம் என்று உனக்கு தெரிஞ்சிருக்கு" என்று கூறியப்படி சாந்தவி திகழ் அருகில் வர,

திவாகர், " என்ன சொல்ற" என்று பயத்துடன் கேட்க,

"எந்திரிச்சதும் பயந்து போனாலே தவிர நாமதான் என்று அதிர்ச்சி அடையலை. சோ அப்பவே அவளுக்கு முழிப்பு வந்துடுச்சு. நடிச்சிருக்கா" என்று திகழை அறைந்தாள்.

"ஐயோ போச்சு இவளுக்கு தெரிஞ்சிருச்சு இப்ப என்ன பண்றது" என்ற திவாகருக்கு மீண்டும் ஒரு பெண் விஷயத்தில் தலையிட்டால் தன் சினிமா வாழ்க்கை என்ன ஆகுமோ என்று பயம் பிடித்துக் கொண்டது.

அக்கேள்வியை சட்டை செய்யாத சாந்தினி,"இதை கட்டினவன் யாரு" என்று திகழின் தாலியை பிடித்து கேட்க,

அதை அவள் கைகளில் இருந்து பிடுங்கி தன்னுடைக்குள் போட்டுக் கொண்டாள்.

"ஓ தாலி சென்டிமென்ட். நம்ப தான் முடியலை. அந்த ஏமாந்தவன் எங்க இருக்கான். உன் பின்னால் திவாகர் ஆத்ரேயன் சுத்தறது தெரியுமா உன் புருஷனுக்கு "என்று வஞ்சத்துடன் கேட்டாள்.

திகழ் பதட்டத்துடன் இதழ்களைக் கடித்துக் கொள்ள," ஹீரோ,டைரக்டர்ன்னு ரெண்டு பேரும் உன் பின்னால் ஜொள் ஊத்துறாங்கன்னு ரொம்ப சந்தோஷப்படாதே. இந்த காட்டிலே உன் வாழ்க்கை முடிய போகுது" என்று வன்மமாக கூறினாள்.

"திகழை கொலை பண்ண போறியா?" என்று கேட்ட திவாகருக்கு அப்படியும் பண்ணி விடலாமா என்ற எண்ணமும் வந்தது.

"கொலை வேற பண்றாங்க. என் பிளான் மொத்தமும் சொதப்பிடிச்சு எல்லாம் இவளால்" என்று கோபத்துடன் திகழை அறைந்தாள்.

"மருது இந்த காட்டில் தான் இருக்கான் அவன் இடத்துக்கு எந்த போலீஸாலும் போக முடியாது" என்று திவாகரிடம் கூறியவள்.

"இனி நீ இவளை உன் கூட வச்சுக்கோ "என்று காட்டானிடம் கூற அவனும் சம்மதமாக தலையசைத்தான்.

"என்ன... என்ன நீ சொல்ற" என்று திவாகர் முற்றிலும் குழம்பி கேட்க,

"இவளை பணயமா வச்சு ஆத்ரேயன் கிட்ட காசு வாங்க போறேன். ஆனால் இவள் அவன் கைக்கு போக மாட்டான். இவளுக்கு நம்ம தான் கடத்தனும்னு தெரிஞ்சிருச்சு விட்டால் எப்படியும் சொல்லிடுவா அது ரிஸ்க்"

"அப்போ கொன்னுடலாம்" என்ற திவாகரை கண்டு, " உன்கிட்ட உஷாரா இருக்கணும் போல சைக்கிள் கேப்ல கொல்ல சொல்லற" என்றவள்.

" அதெல்லாம் பண்ண முடியாது மருது இந்த காட்டில் தான் வாழுறான். இவளை அவன் கிட்ட விட்டுட்டு போகலாம்".

"நல்ல பிளான் தான்" என்றவன்.

"அதுக்கு முன்னால் ஒரு தடவை" என்று திகழை நோக்கி சொல்ல,

"இந்த நிலைமையிலும் உனக்கு இது தேவையா?"என்று சாந்தவி சத்தமிட,

"இருக்கிற டென்ஷனுக்கு கண்டிப்பா தேவை.மொட்டுனு நெனச்சேன் அது மலர்ந்திருச்சு இல்லை" என்றவன்.

திகழை வலுக்கட்டாயமாக தூக்க, அவளோ திமிறி அவன் பிடியிலிருந்து வெளியேற பார்த்தாள்.

"எனக்கு தானா கனியற பழங்களை தான் பிடிக்கும்.ஆனால் முரண்டு பிடிச்சால் அடிச்சு பழுக்க வைக்கவும் தெரியும் " என்றவனின் முகம் மொத்தமும் மாறி போனது.

அவள் கையை பற்றி இருந்த பிடியும் இறுக, " காப்பாத்துங்க " என்று கத்த உடனே அவள் வாயை மூடியவன்.

அப்படியே அவளை இழுத்துக் கொண்டு புதர்களின் பின்னால் சென்றான்.

"உனக்கு இதில் ஏதாவது வருத்தமா?" என்று காட்டானிடம் சாந்தவி கேட்க அவனோ வேறு யோசனையில் இருந்தான்.

" என்ன ஆச்சு " என்க, " இல்லை இந்த பொண்ணு கூட வேற யாரோ இருந்த மாதிரி இருந்தது" என்றதும் பதறி போனாள்.

" என்ன சொல்ற நீ" என்று படபடப்புடன் கேட்க,

"ஆமாம் நெருப்பு மூட்டி இருந்தது. அந்த பொண்ணு மேல் போர்வையும் இருந்தது"

"யாராக இருக்கும் " என்று பதறியவள்.

" டேய் திவா வா. இங்கே நாம இல்லாமல் வேற யாரோ கூட இருக்காங்க. உடனே நம்ப இங்கிருந்து போகணும்" என்று வேகத்துடன் கூறிக் கொண்டிருக்கும்போது, காட்டான் பின்னந்தலையில் பட்ட அடியில் மயங்கி சரிந்தான்.

அவன் தரையில் விழுந்ததும் ரத்தம் மண்ணை நனைத்தது.











 
அத்தியாயம்-23

தரையில் வழிந்த ரத்தத்தை பயத்துடன் பார்த்தபடி சாந்தவி நிமிர,கையில் இரும்புராடுடன் ருத்ரமூர்த்தியாக நின்றிருந்த ஆத்ரேயனை கண்டு சர்வமும் அடங்கியது.

கண்கள் சிவக்க அவன் பார்த்த பார்வையில் அப்பொழுதே ஆவி உடலை விட்டு போனது போலானது.பயத்துடன் நடுங்கி மெல்ல பின்னடைந்தாள்.

ராடை அவள் பக்கம் நீட்டி, "எத்தனை தடவை சொன்னேன். கேக்க மாட்ட இல்ல. ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்ட" என்று வெறியுடன் கூறியவன். விரைந்து புதரின் அருகில் சென்றான்.

திகழின் கைகளை இறுக்கமாக பிடித்தபடி அவள் புறம் குனிந்தவனின் காலிலே இரும்பு ராடை மொத்த வேகத்துடன் இறக்க, அவன் கத்தல் சத்தம் அந்த இருண்ட கானகம் எங்கும் எதிரொலித்தது.

"ஆர் யூ ஓகே" என்று பதட்டத்துடன் திகழின் கைபிடித்து தூக்க, தலைமுடி கலைந்து கண்கள் சிவக்க தள்ளாடியபடி எழுந்தவள்.

ஒரு பெரும் கேவலுடன் அப்படியே தளர்ந்து போய் அமர்ந்தாள்.

அடுத்த நொடி கால்கள் இடையே முகத்தை புதைத்தப்படி சத்தமிட்டு கதறி அழுதாள்.

அவள் அழுகையில் கண்களை இறுக்க மமூடி திறந்தவன். கத்திக்கொண்டிருந்த திவாகரின் முட்டி காலில் மீண்டும் அடிக்க அவனோ உயிர் போனது போல் கத்தினான்.

உடனே அவன் தொண்டையில் காலை வைத்து அழுத்தி,

"மூச் சத்தம் வந்தால் கத்த உயிர் இருக்காது " என்று எச்சரிக்க, திவாகரோ காலின் அழுத்தம் தாங்க முடியாமல் கத்தலை நிறுத்தியவனுக்கு ஏற்பட்ட வலியை பொறுக்க முடியவில்லை.

ஆத்ரேயனின் கால் விலகியதும் உருண்டு புரண்டு வலியில் கத்தாமல் இருக்க அரும்பாடு பட்டான்.

இப்பொழுது திகழின் அழுகை மட்டுமே ஒலித்துக் கொண்டிருக்க, "இப்போ எதுக்கு அழுதுட்டு இருக்க.எந்திரி " என்று அவள் கை பிடித்து இழுத்து தன்னோடு அணைத்து கொண்டவன்.

மெல்ல அழைத்து வெளியே வர சாந்தவியோ உயிரை கையில் பிடித்துக் கொண்டு நின்று இருந்தாள்.

அவன் பார்வையில் இருந்த வெறுப்பிலும், கோபத்திலும் நடுங்கிய உடல் வெடவெடத்தது.

அதே நேரத்தில் சுற்றி டார்ச்சின் ஒளி வீச சாந்தவி பதறி கொண்டு திரும்ப விமல், " சார்" என்று பதறி கொண்டு அங்கு வந்தவன்.

திகழை கண்டு, "மேம் ஒகே தானே" என்று கேட்க ஆத்ரேயன் தலையசைக்க,வனத்துறை அதிகாரியும் காவல்துறையினரும் அங்கு சூழ்ந்தனர்.

"ஏன் சார் இப்படி. எவ்ளோ ரிஸ்க்கு தெரியுமா? " என்று வனத்துறை அதிகாரி அதிருப்தியுடன் கேட்க,

"இவனுங்க கிட்ட அப்படியே விட சொல்றீங்களா?" என்று இருக்கும் கோபத்தில் எகிறவே அவரின் முகம் சுண்டி போனது.

அவன் கத்தலில் பதறி விலகியவளை தன்னோடு இன்னும் அணைத்து கொண்டவன்.

இன்ஸ்பெக்டர் குமார் சாந்தவி திவாகரை கைது செய்ய போக, சாந்தவியோ," எனக்கெல்லாம் எதுவும் தெரியாது. இதெல்லாம் அவனோட வேலை" என்று திவாகரையும், காட்டானையும் கை காட்ட,

"ஷெட் அப்" என்ற ஆத்ரேயனின் கர்ஜுனையில் வாயில் கை வைத்து கொண்டு அப்படியே நின்று கொண்டாள்.

இன்ஸ்பெக்டர் குமாரிடம்," கேஸ் பைல் பண்ண வேண்டாம்" என்று ஆத்ரேயன் கூற,மொத்த பேரும் அவனை அதிர்வுடன் பார்த்தனர்.

வனத்துறை அதிகாரி ஒரு படி மேலே சென்று, "என்ன சார் இதுக்கு தான் இவ்வளவு ரிஸ்க் எடுத்து வந்ததா?. இதெல்லாம் ரொம்ப ஓவர் என்ன இருந்தாலும் உங்க பணக்கார புத்தியை காட்றீங்க இல்ல" என்று தன் ஆதங்கத்தை கொட்ட,

" ஆமா திகழ் பேரு இந்த கேஸ் வருவதில் எனக்கு விருப்பம் இல்லை. இதை நான் எப்படி ஹாண்டில் பண்ணணுமோ அப்படி பண்ணிக்கிறேன் " என்று அவன் உறுதியாக மறுக்க,வனத்துறை அதிகாரி கோபம் கொள்ள,

குமார், " விடுங்க சார் இது இப்படி தான் முடியும்னு எனக்கு அப்பவே தெரியும்." என்று முணுமுணுக்க, அதில் கடுப்புடன் இன்ஸ்பெக்டரை பார்த்தவர்.

"அப்போ நீயே ஹேண்டில் பண்ணிக்கோ. இனிமேல் என் டிவிஷன் குள்ள உன் கேஸ் வரவே கூடாது" என்று கடிந்துவிட்டு அவர் அங்கிருந்து செல்ல,

குமார் அவர் கோபத்தை பெரிது படுத்தாமல் வேறு யோசனையில் இருந்தார்.

' பதிவு செய்யாத கேசில் அடுத்து என்ன செய்ய ' என்று புரியாமல் விழித்தவர்.

பிறகு ஆத்ரேயனிடம் இவர்கள் மூவரையும் என்ன செய்வது என்று கேட்க, அவன் கூறிய பதிலில், மலைத்துப் போனவர்.

வேறு வழி இல்லாமல் சம்மதமாக தலையை அசைத்து விட்டு காட்டானை தூக்கிக்கொண்டு தன் படையுடன் புறப்பட்டார்.

சாந்தவியும் திவாகரும் அங்கேயே விடப்பட, "எங்களை யாராவது கூட்டிட்டு போங்க" என்று சாந்தவி பதற, அவளை யாரும் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.

விமல் எடுத்து வந்த காரில் திகழுடன் ஆத்ரேயன் கிளம்பினான்.

காட்டேஜுக்கு வந்ததும் திகழை அழைத்துக் கொண்டவன்.

விமலிடம், " இந்த விஷயம் எங்கேயும் லீக்காக கூடாது. நாளைக்கு மார்னிங் மொத்த க்ரூவும் இங்கே இருந்து கிளம்பி இருக்கணும்".

"சார் அப்போ சாந்தவியும் திவாகரும்" என்று விமல் தயக்கத்துடன் வினாவ,

" ஆம்புலன்ஸ் அனுப்பிவிடு" என்று விட்டு அவன் உள்ளே செல்ல,' இவர் என்ன பிளான் பண்றாருன்னு புரியமாட்டேங்குது 'என்று எண்ணினாலும் ஆத்ரேயன் கூறியதை செய்து முடித்து, தனது தங்கும் இடத்திற்கு சென்றான்.

சத்தம் இல்லாமல் தங்கள் அறைக்கு பெண்ணவளை அழைத்து வந்ததும், " போய் குளி" என்று அவளை அனுப்பி வைத்தவன்.

உடனே கிச்சன் சென்று பார்க்க, ஹாட் பாக்ஸில் அவர்களுக்கான உணவு ஆறிப் போய் இருந்தது.அதை சூடு படுத்தி எடுத்து வந்தான்.

குளித்து முடித்து வேறு உடைக்கு மாறி வந்தவளை திருப்தியாக பார்த்தவன்.

"வந்து சாப்பிடு" என்றதும், "இல்லை வேண்டாமே" என்றவளின் வார்த்தைகள் அவன் முறைப்பில் அப்படியே நிற்க, எதுவும் பேசாமல் அமர்ந்து உண்டாள்.

மருந்தை பூச வந்தவனை கண்டு மௌனமாக தலை குனிந்து கொள்ள, அவள் காயங்களுக்கு மருந்துட்டு ஒரு மாத்திரையும் அளிக்க அதனை போட்டுக் கொண்டாள்.

பிறகு தானும் உண்டு விட்டு இருந்த பாத்திரங்களை எடுத்து கிச்சன் சிங்கில் போட்டு விட்டு வந்தவன்.

கட்டிலின் மூலையில் சுருண்டு கிடந்தவளை கண்டு விளக்கை அணைக்க,உடனே அவள் எழுந்து அமரும் அரவம் கேட்டு மீண்டும் விளக்கை ஒளிரவிட்டவன்.

" என்ன ஆச்சு" என்க,

" லைட் இருக்கட்டுமே" என்றாள் தயக்கத்துடன்.

சம்மதமாக தலையசைத்து விட்டு அவனும் மறுபுறம் வந்து படுத்துக்கொள்ள,விட்டத்தை பார்த்தபடி படுத்திருந்தவளை
கண்களில் நிரப்பி கொண்ட படி உறக்கத்தை தழுவினான்.

சில நிமிடங்களில் அருகில் உணர்ந்த அரவத்தில் விழிக்க உடலை குறுக்கிகொண்டு முகம் எல்லாம் வியர்த்து வழிய, ஏதோ முனகியபடி இருந்தவளை உலுக்க, திடுக்கிட்டு கண் விழித்தவளிடம் தண்ணீரை கொடுத்தான்.

அதனை பருகியவள்.சங்கடத்துடன் அவனைப் பார்த்தாள்.

"என்னாச்சு" என்றதும், "ஏதோ கெட்ட கனவு" என்றாள் மடியில் கைகளை கோர்த்தப்படி,

அவனோ அதற்கு எதுவும் கூறாமல் அவளைப் பார்த்தபடி இருக்க சங்கடமாக தலை நிமிர்ந்தவள்.

மின்னல் வெட்டி அடுத்த நொடி கேட்ட இடி சத்தத்தில் உடல் நடுங்க பதறிக்கொண்டு அவனை நெருங்கி இருந்தாள்.

அத்தனை இறுக்கமாக அவள் அணைத்து இருக்க,உடலோ நடுங்கியது.

அவனும் அவள் முதுகை ஆதரவாக தட்டி விட்டவனின் கை அப்படியே நின்றது.

மீண்டும் மீண்டும் மின்னல் ஒளியும் இடி ஓசையும் விடாமல் கேட்டு அதனைத் தொடர்ந்து பெரும் சத்தத்துடன் மழைக் கொட்டி தீர்க்க, மெலிதாக திகழிடம் இருந்து விசும்பல் சத்தம் வந்தது.

தன் மார்பில் புதைந்திருந்த அவளின் முகம் பற்றி தன்னை பார்க்க செய்தவன்

" என்னாச்சு? " என்க,

" பயமா இருக்கு" என்றாள் அழும் குரலில்,

மூச்சு விடுவதற்கே சிரமப்படுவது போல் நெஞ்சுக்குழி ஏறி இறங்க, அவள் முகத்தை தன் மார்போடு அழுத்த பதித்து,இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.

இருவருக்கும் இடையே காற்று கூட புக முடியாத இடைவெளி.

அவன் கரங்கள் அழுத்தத்தோடு அவள் முதுகில் அலைபாய்ந்தது.

அவள் பின்னங்கழுத்தைப் பற்றி தன்னை பார்க்க செய்ய கண்களை மூடி இருந்தவள். இதழ்கள் துடித்துக் கொண்டிருக்க,

அதனை மெல்ல தன் இதழ் கொண்டு தீண்டினான்.

அதில் பெண்ணவள் உடல் உதற,இன்னும் தன்னோடு இறுக்கமாக அணைத்துக் கொண்டவன்.

தன் இதழ் அணைப்பை இன்னும் அழுத்தமாக்கினான்.

நொடிகளா? நிமிடங்களா? என்று புரியாத கணங்கள் கடந்து, அவள் இதழை விட்டுப் பிரிந்ததும் பெருமூச்சு ஒன்று அவளிடம்.

மெல்ல அவன் இதழ்கள் வியர்த்திருந்த அவள் கழுத்தில் இறங்கியது.

கழுத்தில் இருந்த காயம் வலியை ஏற்படுத்தியிருக்கும் போல் சன்னமாக அவளிடம் இருந்து முனங்கல் வர, மீண்டும் அவள் இதழ்களை சிறை செய்தான்.

கரங்கள் அவள் அணிந்திருந்த குர்தியின் உள் நுழைந்து அவள் வெற்று முதுகை உணர ஆரம்பிக்க, கூச்சத்தில் பெண்ணவள் அவளிடம் இருந்து விலக பார்க்க,அவள் கண்ணம் பற்றி தன்னை பார்க்க செய்தவன்.

"பிடிக்கலையா" என்றான்.

"தெரியலை" என்று நடுக்கத்துடன் கூறியவளின் விழிகளை ஆழ்ந்து பார்த்தவன்.

மீண்டும் இதழ் முத்தத்தை தொடர்ந்து அவளை தன் அணைப்பின் கீழ் கொண்டு வந்தான்.

அவன் இதழ் தீண்டல் உடல் எங்கும் பயணிக்க கூச்சத்திலும் தவிப்பிலும் அவளுடல் தூக்கி வாரி போட்டது.

அவை அனைத்தையும் தன் திண்டல்களால் நிறுத்தியவனின் விரல்களும் இதழ்களும் செய்த செயலில் அவள் உடல் சிவந்து போனது.

பயத்தில் நடுங்கிய உடல் இப்பொழுது புதுவித உணர்விலும், கூச்சத்திலும் நடுங்க அவன் இட்டு செல்லும் உலகிற்கு தடுமாற்றத்துடன் பயணித்தாள்.

அவர்களின் இணைவிற்கு இடியோசையும், மழை சாரலும் சாட்சியாக மாற,மொத்தமாக பெண்ணவளை ஆக்கிரமித்து தன்னை அவளுள் கலந்து முழுமை பெற்றான்.

வெளியே அடிக்கும் அடை மழைக்கு எதிராக மெல்லிசையாக அவன் அவளுள் கலக்க, நீண்ட நேரம் சங்கீதம் தொடர்ந்தது.

வெப்ப மூச்சுகளும் வியர்வை துளிகளும் அவர்கள் சங்கமத்திற்கு சாட்சியாக, பெண்ணவளின் கொலுசொலி சத்தம் நின்று நிறைவை பறைசாற்றியது.

மெத்தையில் விழுந்தவன் அவளை தன்னோடு சேர்த்தணைக்க, அவளோ ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.

மூச்சு வாங்க சிறிது நேரம் படுத்து கிடந்தவன். தூர கிடந்த போர்வையை இருவருக்கும் போர்த்தி விட்டு மெல்ல கண்ணயர்ந்தான்.

விடாமல் ஒலித்த அலைபேசி சத்தத்தில் கண் திறந்தவன். உறக்க கலக்கத்தோடு போனை எடுத்து பார்த்தான்.

விமல் தான் விடாமல் அழைத்து கொண்டிருந்தான்.

" நானே கூப்பிடுறேன் இடியட்" என்று அவன் பேச கூட அனுமதிக்காமல் கத்தி விட்டு, அழைப்பை துண்டித்தவன். திரையைப் பார்க்க மணி 12:40 என்று காட்டியது.

உடனே பக்கத்தில் பார்க்க பெண்ணவள் இருப்பதற்கான சுவடே தெரியவில்லை.

அதில் உடனே குளித்து தயாராகி வெளியே வர, அன்னபூரணி ஹால் சோபாவில் அமர்ந்திருந்தார்.

"ம்மா" என்று அழைத்தபடி வந்தவனின் பார்வை கிச்சனை நோட்டமிட்டது.

" என்னாச்சுப்பா? ரெண்டு பேரும் நைட் ரொம்ப லேட்டா வந்தீங்களா?" என்றதும் நிதானித்தவன்.

" ஆமா ம்மா கொஞ்சம் பார்ட்டி முடிய லேட்டாயிடுச்சு" என்றான்.

"ஓ சரி திகழ் தூங்கிட்டு இருக்காளா? உனக்கு காபியா இல்லை டிபனே சாப்பிடுறியா?" என்றதும், வீட்டை சுற்றி தேடிய பார்வை அப்படியே நின்றது.

தாயை அதிர்வுடன் நோக்கியவன்.

" திகழை நீங்க பார்க்கலையா?. அவள் இங்கே இல்லையா?"

"என்னப்பா சொல்ற. நான் காலை ஏழு மணியில் இருந்து ஹால்ல தான் உட்கார்ந்து இருக்கேன். திகழ் தூங்கிட்டு இருப்பான்னு நினைச்சேன்" என்று அவர் பதற,உடனே நிதானித்தான்.

"ஒன்னும் இல்லை மா நான் பார்க்கறேன்" என்று வேகமாக ரூமிற்குள் சென்றவன்.

பாத்ரூம் பால்கனி என அனைத்து இடத்தையும் பார்த்துவிட்டு அவள் இல்லை என்றதும்,' எங்கடி போய் தொலைஞ்ச' என்று அவளை மனதில் வறுத்தெடுத்தபடி போனை பாக்கெட்டில் இட்டுக்கொண்டு வெளியே வந்தான்.

"என்ன கண்ணா திகழ் இல்லையா?" என்று பயந்து போய் அவர் கேட்க

" அட உங்க மருமக பக்கத்தில் தான் போய் இருக்காள். மெசேஜ் பண்ணி இருக்கா எனக்கு கேமராமேன் கூட ஒரு முக்கியமான டிஸ்கஷன் இருக்கு. ஜஸ்ட் 10 மினிட்ஸ் தான் அதை முடிச்சிட்டு உங்க மருமகளையும் பிக்கப் பண்ணிக்கிறேன். அப்படியே ஒரு சின்ன வாக்கும் போயிட்டு வரோம். நீங்க கால் வலின்னு சொல்லுவீங்க. நாளைக்கு கிளம்பனும்.சோ நல்லா நீங்க ரெஸ்ட் எடுங்க " என்று இடைவிடாமல் அவருக்கு சந்தேகமே எழாத வண்ணம்,கூறிவிட்டு வெளியே வந்தவன்.

உடனே காரை ஏறி விரைந்து செலுத்தினான்.
 
அத்தியாயம்-24

இடைவிடாத தேடல் இறுதியில் எட்டு கை காளியம்மன் கோயிலில் முற்றுப்பெற்றது.

தாங்கள் சென்ற அனைத்து இடங்களுக்கும் சென்று சல்லடையிட்டவன். திகழை கண்டுபிடிக்க முடியாத இறுக்கத்தில் இறுதியில் ஏதோ ஒரு உந்துதலில் இக்கோயிலை வந்து அடைந்தான்.

கார் கதவை திறந்ததும் வந்து மோதிய காற்று ஏதோ ஆசுவாசத்தை தர, ஏதோ ஒரு நம்பிக்கையுடன் கோயிலுக்குள் நுழைய,கொள்ளிபாவை அம்மனோ கோபத்துடன் காட்சி அளித்தாலும் அவனை இரட்சிப்பது போல் அக்கணம் தோன்ற, மனம் சிறிது சமன்பட்டது.

அவர் கைகளில் அடைக்கலமான இன்னொரு பாவையை கண்டதும் அம்மனுக்கு மானசீகமாக நன்றியை தெரிவித்தான்.

ஒரு மூலையில் தூணில் தலை சாய்த்து கண்மூடி அமர்ந்திருந்த திகழை கண்டு பற்களை கடித்தவன்.உடனே அவளிடம் விரைந்தான்.

அவள் கை பிடித்து தூக்கப் பதறி கொண்டு கண் திறந்தவள்.

ஆத்ரேயனை கண்டு பயம் நீங்கி, தலை குனிந்து கொண்டாள்.

அதில் கோபத்துடன் அவள் கண்ணம் பற்றி தன்னைப் பார்க்க செய்தவன்.

அதன் பிறகே தாங்கள் இருக்கும் இடம் உணர்ந்து அவள் கைகளை பற்றி இழுத்து கொண்டு வெளியேறினான்.

காரின் முன்னிருக்கையில் அவளை கிடத்திவிட்டு வண்டியில் ஏறி உயிர்பிக்க, எதுவும் பேசாமல் மௌனமாக அமர்ந்து கொண்டாள்.

கானகத்தின் நடுவே சத்தத்தோடு ஓடிக் கொண்டிருந்த அருவியின் கரையில் இருவர் மட்டுமே இருக்க," எப்படி கோயிலுக்கு போன? " என்று நீண்ட நேர மௌனத்தை கலைந்து விட்டு வினாவினான்.

"அது காட்டேஜ் விட்டு கீழே வந்ததும் லோக்கல் பஸ் வந்தது. ஒரு மன அமைதிக்காக வந்தேன் சாரி" என்றவளை கொல்லும் வெறி ஏற்பட, அவளை முறைத்து தள்ளியவன்.

"எத்தனை மணிக்கு கிளம்புன" என்றான் அடக்கப்பட்ட கோபத்துடன்,

"ஆறு மணிக்கு" என்று முணுமுணுத்தாள்.

"சோ நீ தூங்கவே இல்லை".

"இல்லை" என்றவள் அப்படியே தயங்கி நிறுத்தினாள்.

என்னவென்று கூறுவது என்று தோன்ற மௌனமாக தலை குனிந்து கொள்ள,

"எதுவும் பேசாமல் தலை குனிஞ்சுட்டா அதுக்கப்புறம் உன்கிட்ட எந்த கேள்வியும் கேட்க கூடாதுயில்ல.என்ன பிரச்சனை எதுக்கு சொல்லாமல் போன".

அதற்கும் அவள் பதிலளிக்காமல் அப்படியே நின்று இருக்க," என்னை பிடிக்கலையா? நேத்து நைட் பிடிக்கலையா? " என்று அவள் தடுமாற்றம் உணர்ந்து நேரடியாகவே வினாவினான்.

" ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க "என்று சங்கடமாக அவள் தவித்து அவன் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தயங்கி மறுக,

"நோ. ஐ நீட் ஆன்சர்".

"ஐயோ போதும். ப்ளீஸ் " என்று காதை பொத்திக்கொண்டு அவள் அழுக, அவளின் மௌன கண்ணீர் ஆர்ப்பரிக்கும் அருவியை விட சத்தமாக காதுக்குள் ஒலிக்கவே, அவள் கைகளை எடுத்து தன் கைக்குள் அடக்கிக் கொண்டவன்.

"சொன்னேனே. ஐ நீட் ஆன்சர்.என்ன ஆச்சு" என மென்மையான குரலில் கேட்க,

"முதலில் உங்களுக்கு என்ன ஆச்சு ஏன் இப்படி எல்லாம் நடந்துக்கிறீங்க" என்று அவனை விட்டு விலக பார்க்க,

"ஓ நேத்து நைட் கேக்குறியா?" என்று அவன் இலகுவாக கூறியதில், உடனே அவனை விட்டு விலகி முகம் காட்டாமல் திரும்பி நின்று கொண்டாள்.

அவன் பேச வர அதற்குள், "இதில் உங்க மேலே தப்பு இல்லை" என்றவளை கண்டு மெச்சுதலாக புருவம் ஏற்றியவன்.

"தெரிஞ்சா சரிதான்" என்று கூற, அவன் வார்த்தைகளை முடிக்கும் முன்னே, "என் மேல தான் தப்பு" என்றாள்.

"வாட் யூ மீன்" என்றவனின் குரல் எச்சரிப்பாக ஒலிக்க அது புரியாமல்,

"நான் தான் பயத்தில் உங்களை நெருங்கிட்டேன்.அது.. இட் ஹாப்பென்ஸ் " என்று தெளிவாக கூறுவதாக அவள் விளக்கியதில்,

பற்களை கடித்தவன், "போலாம்" என்று விட்டு முன்னேற, "இல்ல..நான்" என்று அவள் விளக்க வர, அவனோ நிற்காமல் காரை அடைந்திருந்தான்.

கலங்கிய கண்களை துடைத்துக் கொண்டு அவளும் காரில் அமர்ந்து, ஆத்ரேயனை கேள்வியாக பார்க்க, அவனோ இவளின் புறம் பார்வையை திருப்பவில்லை.

வீட்டிற்கு வந்ததும் அவளை விட, ஹாலில் இவர்களுக்காக காத்திருந்த அன்னபூரணி ஆசுவாசம் அடைவதை கண்டு தாய்க்கும் ஏதோ சந்தேகம் வந்ததை உணர்ந்து உருகியது.

அதில் இப்பொழுதே கிளம்பலாம் என்ற எண்ணத்தை ஒத்திவைத்து விட்டு, " ஒரு வாக்கிங் போலாமா" என்று இயல்பாக அழைக்க,

" அடப் போடா கால் வலி பின்னி எடுக்கிறது. நாளைக்கு காலையிலே வேற ஊருக்கு கிளம்பனும். நான் போய் ரெஸ்ட் எடுக்கப் போறேன்" என்றவர்.

"திகழ் சாப்பிட்டியாமா?" என்று அவளின் கண்ணம் பற்றி கேட்க, திருத்திருத்தவள், ம்ம் என்று மௌனமாக கூற,

உணவு தட்டை அவளுக்கு ஆத்ரேயன் நீட்டினான்.

"அட சாப்பாடு கூட வாங்கி கொடுக்கலையா நீ. ரொம்ப கஞ்சன் ஆயிட்டே வர கண்ணா" என்று அவர் கிண்டலாக கூற,

"அதை உங்க மருமக கிட்ட கேளுங்க. வீட்டில் தான் போய் சாப்பிடுவேன்னு அடம் பிடிச்சு வந்தது. உங்க மருமக தான் " என்று அவன் திகழை கோர்த்து விட வேறு வழியில்லாமல் உணவை வாங்கினாள்.

சில நிமிடங்களில் தட்டு காலியாக மீண்டும் உணவை பரிமாறினான்.

வீட்டில் இருக்கும்போது அல்லது உடம்பு சரி இல்லை என்றால் இதெல்லாம் ஆத்ரேயன் செய்வான் தான் என்றாலும் திகழுக்கு செய்வதை கண்டு மகிழ்ந்தவர்.

அவர்களுக்கு தனிமை கொடுக்க வேண்டி உடனே எழுந்தார்.

" நான் போய் ரெஸ்ட் எடுக்கிறேன். சாப்பிட்டு படுமா" என்று விட்டு அவர் செல்ல,

வாயில் உள்ள உணவு அப்படியே நிற்க 'தனியா விட்டுட்டு போயிட்டாரே' என்ற பயத்துடன் ஆத்ரேயனை பார்க்க,

"நான் ஒன்னும் உன்னை முழுங்கிட மாட்டேன். பயப்படாமல் சாப்பிடு" என்றவன் அவளை விட்டு விலகி அமர்ந்து கொண்டான்.

அதன் பிறகு உணவு உள்ளே செல்ல அத்தனை சிரமமாக மாறியது.

ஏனோ கண்களும் கலங்கும் போல் இருக்க, தலை குனிந்து கொண்டவளிடம் தண்ணீரை நீட்டினான்.

அதில் அழுகை பெருக வாயில் வைத்த உணவு உடன், " சாரி.எனக்கு தெரியல" என்று குழம்பி போய் கூறினாள்.

"இதை நான் என்னன்னு எடுக்க.ஒண்ணும் புரியலை. சாப்பிட்டு வா " என்று விட்டு அவன் அறைக்குள் சென்று விட, அவளோ கை கழுவி விட்டு அறைக்குள் நுழைந்து தயக்கத்துடன் நிற்க கட்டிலில் படுத்திருந்தவன்.

உடனே எழுந்து,"சரி நீ படு. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு".

தயாராகி விட்டு, " கதவை வெளிய லாக் பண்ணிட்டு போக தேவை இருக்காது இல்ல " அதில் அவனை அடிபட்ட பார்வை பார்த்தவள்.

"நான் எங்கேயும் போகலை "என்றாள்.

"எங்க வேணா போ.ஆனால், சொல்லிட்டு போ" என்று அவளுக்கு ஒரு குட்டை வைத்து விட்டு அவன் அங்கிருந்து செல்ல, தளர்ந்து போய் அமர்ந்தவள். அப்படியே மெத்தையில் சாய்ந்து உறங்கிப் போனாள்.

விமல் உடன் மொத்த பட குழுவும் கிளம்பி இருக்க,ஆர்ப்பரிக்கும் அருவியின் கரையில் அமர்ந்து நேரத்தை ஓட்டியவன். இரவு நிலவொளி புவியை ஆக்கிரமித்த பிறகு வீட்டிற்கு சென்றான்.

அவன் வரும் நேரம் அப்போதுதான் உறங்க போன அன்னபூரணி, " என்ன கண்ணா நாளைக்கு காலையில் கிளம்பனும். இவ்ளோ லேட்டா வர, சாப்டியா? " என்றதும்,

" சாப்பிட்டேன்" என்று விட்டு அவன் அறைக்குள் செல்ல,'ரெண்டு பேருக்கும் என்ன ஆச்சு. ஏதோ சரியில்ல போலையே 'என்று எண்ணியபடியே உறங்க சென்றார்.

கட்டிலில் திரு திருவென்று விழித்தபடி இருந்தளை பார்த்தபடி அவன் கடிகாரத்தை கழட்ட, என்ன பேசுவது என்று தெரியாமல் அவனைப் பார்ப்பதும் தலைக் குனிவதுமாக இருந்தவளை அவன் கண்டு கொள்ளவே இல்லை.

அப்படியே குளியல் அறை சென்று குளித்து வேருடை மாறி வந்தவன்.

மறுபக்கம் படுத்துக் கொள்ள அவள் அப்படியே அமர்ந்திருப்பதை கண்டு, "பயப்படாதே. நான் வெறி பிடிச்சு உன் மேல் பாய்ச்சிட மாட்டேன். பயப்படாமல் நீ தூங்கலாம்".

"இல்லை.நான் அப்படி நினைக்கலை" என்று தவிப்புடன் அவள் மறுக்க,

" பின்னே எப்படி நினைப்ப",

" உங்க மேலே தப்பு இல்லை " என்றதும் இருந்த பொறுமை விலகும் போல் இருந்தது.

"பேசுற வார்த்தை குண்டூசியா குத்தும்னு முன்னே டயலாக் எல்லாம் எழுதி இருக்கேன் ஆனால் அது எப்படி இருக்கும்ன்னு. இப்போ தான் தெரியுது".

"நேத்து நான் ஒன்னும் நீ நெருங்கினதால் டெம்ட் ஆகி வெறி புடிச்சு உன் மேலே பாயவும் இல்ல. அது என்னன்னு உனக்கு புரியவும் புரியாது" என்று விட்டு அவன் அவளுக்கு முதுகு காட்டி திரும்பி படுத்துக்கொள்ள,

அதில் அசைவற்று போனாள்.

மனதில் பலவித கேள்விகள் எதற்கும் விடையில்லாமல் போக அந்த இரவு உறங்காத இரவாகி போனது.

அதிகாலை ஆணவன் விழிக்கும் போது அவள் குளித்து தயாராகி இருக்க, அவனும் தயாராகி வந்ததும் அன்னபூரணி உடன் மூவரும் மீண்டும் சென்னை புறப்பட்டனர்.

இடைவிடாத பயணம் அனைத்திலும் ஆத்ரேயன் மௌனமாக இருந்தாலும், இருவருக்கும் தேவையான அனைத்தையும் செய்தான்.

சென்னை வந்து இறங்கியதும் வேலை அவனை இழுத்துக் கொள்ள,அதில் மூழ்கி போக, திகழும் தன்னுடைய வேலைகளை கவனிக்க நாட்கள் சீராக சென்றது.

தன் அலுவல் அறையில் வேலைகளை கவனித்துக் கொண்டு இருந்தவன்.

சார் என்ற குரலில் நிமிர்த்தான்.

கண்ணாடியை கழட்டியப்படி, " சாருக்கு இப்போ தான் லீவ் முடிஞ்சதா" என்று நக்கலாக கேட்க,

"சார்" என்று அவன் இழுத்தத்தில்,

"சொந்த ஊருக்கு தான் போனியா, இல்ல நார்த் இந்தியா பக்கம் ஏதாவது போயிட்டு வந்துட்டியா?" என்று ஆத்ரேயன் கேட்டதில்,

அவன் கிண்டலைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல்,"சார் தப்பா எடுத்துக்காதீங்க"

"டேய் உன்னோட முடியலை " என்று ஆத்ரேயன் சலிக்க,

"ஐயோ சார் இந்தாங்க" என்று ஒரு பத்திரிகையை அவன் முன்னீட்ட,

"கல்யாணமா?" என்று வினவா,

" இல்லை" என்று அவன் தலையாட்டியதில் பத்திரிகையை பார்க்க அவனுடையதுதான்.

ரிசப்ஷன் இன்விடேஷன் இருக்க, ஆத்ரேயன் கேள்வியாக பார்க்க,

"சார் கல்யாணம் அஞ்சு நாளைக்கு முன்னாடியே முடிஞ்சிடுச்சு".

" வாழ்த்துக்கள்" என்று அதனை பற்றி மேலே கேட்காமல், மற்ற வேலைகளை கவனிக்க ஆரம்பிக்க,

" சார் தப்பா எடுத்துக்காதீங்க. அம்மாக்கு உடம்பு சரி இல்லன்னு தான் போனேன்.ஆனால் பிடிச்சு கல்யாணத்தை முடிச்சிட்டாங்க சார் ".

அதில் சட்டென்று நிமிர்ந்து,'உனக்குமா டா "
'என்று ஆச்சரியத்துடன் நோக்க,

" தெரியும் சார். நீங்க நம்ப மாட்டீங்கன்னு " என்று பாவமாக அவன் மொழிய,

"இல்லை நம்புறேன்" என்று கூறிய ஆத்ரேயனை ஆச்சரியமாக பார்த்தவன்.

தன்னை நம்பாமல் நக்கல் செய்கிறாரோ என்ற எண்ணத்தில், " உண்மையா தான் சார். படம் பண்ணின அப்புறம் தான் கல்யாணம்னு சொல்லி இருந்தேன்.நீ எப்போ படம் பண்றது அப்படின்னு கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க சார்" என்று பாவமாக கூறினான்.

அதில் சிரிப்பும் எழ, " ஹாப்பி மேரேஜ் லைப் மேன்" என்று தோள் தட்டி வாழ்த்து கூறியவன்.

பத்திரிக்கையில் இருந்த தேதியை பார்த்துவிட்டு, " உன்னோட ரிசப்ஷனுக்கு என்னோட ஸ்சேடுலில் ஒரு டைமிங் அலாட் பண்ணி வச்சிடு ".

சார் என்று அவன் பாவமாக இழுக்க,

" இந்த ராகம் போட்டுக்கிட்டே சார் என்று கூப்பிடுவதை எப்போ தான் விடப் போறியோ தெரியலை. போய் வேலையை கவனி" என்று கூறி அனுப்பினான்.

ஒரு வித மயக்கத்துடனும், ஆர்ப்பரிப்புடனும் விமல் வேலையை கவனித்துக் கொண்டிருக்க,அவன் முகத்தில் தெரிந்த பாவனையில் ஆத்ரேயனுக்கு சிரிப்பு வந்தது.

இடையிடையே போன் கால்கள் வேறு.

சத்தம் இல்லாத முணுமுணுப்பான பேச்சுகள்.

போனுடன் விமல் ஒதுங்கும் போதெல்லாம் அவன் கோபத்துடன் ஒற்றைப் புருவத்தை உயர்த்த, " சார் வைஃப் சார்" என்று வழிந்தவனை கண்டு, அட ச்சீ போடா என்று துரத்தி விட்டவன்.

மீண்டும் அவன் அரை மணி நேரம், ஒரு மணி நேரம் கழித்து ரூம் வரும்போது முறைத்து தள்ளினான்.

சரியாக 7:00 மணிக்கு, " வீட்டுக்கு கிளம்பவா சார்" என்றவனை ஆச்சரியம் பொங்க பார்த்தவன்.

" மிரட்டி கல்யாணம் பண்ணி வச்சாங்கன்னு சொன்ன " என்று ஞாபகப்படுத்த,

அது என்று இழுத்தப்படி தலையை சொரிந்தவனை பார்க்க முடியாமல்,

" ஒழுங்கா கிளம்பு டா "என்று அனுப்பி வைத்தான்.

வேலைகளை கவனித்தாலும் மனதின் ஓரம் திகழின் எண்ணங்கள் ஊர்வலமாய் போனது.

அதே நேரத்தில் வீட்டிற்கு செல்ல மனம் இல்லாமல் இரவு தன் ஆபீஸ்லே தங்கிக் கொள்வதாக தாயிற்கு போனில் அழைத்து கூற,

" சரிப்பா. ஆனால் திகழ் ஒரு ஆர்டருக்காக ஸ்நோ டாப் ரெசார்ட் போய் இருக்காள். அவளை மட்டும் கொஞ்சம் பிக்கப் பண்ணி வீட்டில் விட்டுடேன். உன் ஆபீஸ் பக்கத்தில் தான் அந்த ஹோட்டல் இருக்கு" என்றதும் சரிமா என்று வைத்தவன்.

பைலை புரட்டி புரட்டி பார்த்துவிட்டு அதில் கவனம் செலுத்த முடியாமல் போனதில் உடனே எழுந்தான்.

ஹோட்டலில் காரை பார்க் செய்துவிட்டு பார்ட்டி ஹாலிற்குள் அவன் நுழையும் போது திகழ் புன் சிரிப்புடன் ஒரு ஆணவனிடம் பேசிக் கொண்டிருக்க, அடிவயிறு தீயாக காந்தியது.
 
அத்தியாயம்-25

திகழ் அந்த இளைஞனிடம் பேசுவது கூட அவனுக்கு பெரிதாக தெரியவில்லை. ஆனால், அவள் முகத்தில் இருந்த சிரிப்பு.

அது அவனிடம் வெளிப்படுவது சுத்தமாக பிடிக்கவில்லை.

சில கணங்கள் கூட பொறுக்க முடியாமல் உடனே அவர்களை நெருங்கியவன்.

"போலாமா?"என்று திகழை நோக்கி கேட்க, ஆத்ரேயனை அங்கு எதிர்பாராமல் விழித்தவள்.தன் எதிரே இருந்தவனை கண்டு தயங்க,

" கேட்டேனே போலாமான்னு" என்று மறுபடியும் வினா தொடுத்தவன். அவள் கைகளைப் பற்ற வர,

"ஓ ஹலோ மிஸ்டர் ஆத்ரேயன் இட்ஸ் நைஸ் டு மீட் யூ. ஐ ஆம் வினய்.வி கே என்டர்பிரைசஸ் ஓட எம்டி. " என்று எதிரே இருந்தவனே தன்னை அறிமுகப்படுத்தக் கொள்ள கைகளை நீட்ட,திகழை பற்ற போன கரம் வேறு வழியில்லாமல் அவன் கையை பற்றி குலுக்கியது.

"புது படம் ஷூட்டிங் முடிஞ்சதுன்னு கேள்விப்பட்டேன். இகர்லி வெயிட்டிங்".

" ஓகே " என்றவன் திகழை,'போலாமா? ' என்பது போல் நோக்க,ஆத்ரேயனின் அழைப்பை புரியாமல் பார்த்த வினய்,

"திகழ் உங்க?" என்று கேள்வியாக நிறுத்த,

"திகழா.. ஓ " என்ற ஆத்ரேயன் பேச்சு புரியாமல் வினய் விழிக்க,

திகழ் நடுவில் புகுந்து, "ஓகே வினய் கிளம்புறேன்" என்று விடைபெறும் முகமாக கூற,

" பட் இன்னும் பார்ட்டி முடியவில்லையே. அவசியம் கிளம்பனுமா திகழ்" என்றவன்.

ஆத்ரேயனிடம் திருப்பி, " எங்க கம்பெனியோட 25 த் அனிவர்சரி செலிப்ரேஷன். நீங்களும் ஜாயின் பண்ணிக்கலாமே " என்று அழைப்பு விடுத்தான்.

அதில் இன்னும் கடுப்பு ஏற, "நாங்க ஆர்டர் எடுக்கற பார்ட்டியில் நாங்களே கெஸ்ட்டா கலந்துகிறது இல்லை. எனி வே தேங்க்ஸ் ஃபார் ஹஸ்கிங்" என்று பற்களைக் கடித்தப்படி கூற,

வினய் அவன் பாவனையும் பேச்சுக்கும் இருக்கும் வித்தியாசத்தில் புரியாமல் விழிக்க,

" ஓகே வினய் பை " என்று அவன் கை பிடித்துக் குலுக்க அவள் கரம் நீட்ட, வினயோ சிரிப்புடன் தோழமையாக அணைத்து விடுவித்தான்.

அதில் ஆத்ரேயன் கோபம் கொண்டு உடனே அங்கிருந்து வெளியேறினான்.

அதில் ஆத்ரேயனை தொடர்ந்து பின்னால் கிட்டத்தட்ட ஓடினாள்.

மூச்சு வாங்க பார்க்கிங் வந்தவள்.காரின் மீது சாய்ந்தபடி நின்று இருந்தவனைக் கண்டு தயங்க, " ஏறு" என்றான் அவளின் முகம் பார்க்காமல்,

அவள் காரில் ஏறி அமர்ந்ததும் மறுபக்கம் வந்து ஏறியவன். கதவை அடித்து சாற்றிய வேகத்தில் உடல் அதிர்ந்தது.

காரும் அவன் கைகளில் வேகம் எடுக்க, "ப்ளீஸ் கொஞ்சம் ஸ்லோ பண்ணுங்களேன்" என்றாள் அவன் வேகத்தில் பயம் கொண்டு,

அவனோ காதில் வாங்காத பாவனையில் இன்னும் வேகம் எடுக்க,அந்த நள்ளிரவில் யாரும் மற்ற சாலையில் அவன் கரங்களில் கார் பாய்ந்தது.

"ப்ளீஸ் எனக்கு பயமா இருக்கு".

அதற்கு ஹாரனை அவன் இடைவிடாமல் அடிக்க, அந்த வேகம் ஏதோ செய்ய,

"இல்லேன்னா கார் ஸ்டாப் பண்ணுங்க நான் இறங்கிறேன் "என்றதும் சடன் பிரேக் போட்டு நிறுத்தினான்.

டேஷ்போர்ட்டில் இடிக்கப் போனவளை கரம் கொடுத்து தடுக்க, அவன் கரங்கள் வயிற்றிலும் மார்பிலும் படர்ந்து இருப்பதை உணர்ந்து தட்டிவிட்டாள்.

அதில் அவன் கைகளை இறுக்கமாக மூடிக்கொள்ள, முகமும் அழுத்தமாக மாறியது.

பயத்தில் உடல் தடுமாற சீட் பெல்ட் விலக்கிவிட்டு காரை திறக்க போனவளின் கையை அழுத்தமாக பற்றி இழுத்தவன்.

" என்னடி உனக்கு பிரச்சனை" என்று அவள் கன்னம் பற்றி அழுத்தமாக கேட்க,

"முதலில் உங்களுக்கு என்ன பிரச்சனை.ஏன் இப்படி நடந்துக்கிறீங்க" என்று அவன் கையை தட்டி விட பார்க்க,

"நீதான் பிரச்சனை நீ இப்படி இருப்பதில் தான் பிரச்சனை " என்று ஆங்காரமாக கத்தினான்.

" நான் எப்படி இருக்கேன்" என்று தடுமாற்றத்துடன் அவள் அழும் குரலில் கேட்க,

"அவன்கிட்ட பேசும் போது மட்டும் சவுண்ட் நல்லா வருது. என்கிட்ட மட்டும் ஏன் இப்படி பம்பற. என்னை பார்த்தால் உனக்கு எப்படி இருக்கு ".

"அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை விடுங்க" என்று அவன் கைகளை விலக்க பார்க்க,இன்னும் கன்னத்தில் அழுத்தத்தை கூட்டி தன் அருகே இழுத்தவன்.

" என்ன தாண்டி உனக்கு பிரச்சனை" என்று வெறுத்துப்போன குரலில் வினாவினான்.

" எனக்கு என்ன.நான் நல்லா தான் இருக்கேன் " என்று தலை குனிந்தபடி கூறியவளை தன்னை பார்க்க செய்தவன்.

"நான் நல்லா இல்லையே" என்றான்.

அவன் விழிகளில் இருந்த கேள்வி கோபம் அனைத்தும் புரிந்தது போல் அவள் தலை குனிந்து கொள்ள, அதில் சலிப்பாக அவள் கன்னத்தை விட்டவன்.

போடி என்று விரக்தியாக கூறிவிட்டு காரை திறந்து கொண்டு நடக்க,

சில நிமிடங்கள் காத்திருந்தவள். அவன் வராமல் போக பதறி கொண்டு கார் கதவை திறந்து கொண்டு வெளியேற, ஆர்ப்பரிக்கும் கடலோசை காதில் ஒலிக்க, ஆத்ரேயன் தூரத்தில் கடற்கரையில் அலை பாதத்தில் மோத, வானத்தில் அரை நிலவு காட்சியளிக்க அதனைப் பார்த்தபடி நின்றிருந்தான்.

புடவை தடுக்க ஒரு வழியாக அவனை வந்து சேர்ந்தவள். தயக்கத்துடன் அப்படியே நின்றாள்.

அவன் உடல் இறுக நின்றிருந்த தோரணை ஏதோ செய்ய, மெல்லத் தொண்டையை செரும்ப, அவனோ அசையவே இல்லை.

அவன் தோள் தொட நீண்ட கரங்களை அப்படியே பின்னெடுத்துக் கொண்டவள். சார் என்றாள்.

அதற்கும் அவனிடமிருந்து எதிர்வினை இல்லாமல் போகவே,மீண்டும் சார் என்று சத்தத்துடன் அழைக்க, கண நேரத்தில் மணலில் அவனோடு சேர்ந்து விழுந்து இருந்தாள்.

சரிவான மணலில் உருண்டு கீழே வர அலை அவர்களை முத்தமிட்டு சென்றது.

அதில் மொத்தமாக இருவரும் நனைந்து போயிருக்க, அவனை விட்டு பிரிந்து எழுந்தவள்.

" என்னதான் உங்களுக்கு வேணும் " என்றாள் மூச்சு வாங்க,

ஈரம் சிந்தும் அவள் மேனியை பார்த்தபடி மெல்ல எழுந்தவன்.

அவள் விழிகளை நேருக்கு நேர் நோக்கியபடி, "அவனை என்னன்னு கூப்பிட்ட "என்று வினாவினான்.

அதில் ஒன்றும் புரியாமல் அவள் விழிக்க,"அதுதான் ஹோட்டலில் பேசிட்டு இருந்தியே. அந்த சுரக்கா மண்டையன் அவனை என்னன்னு கூப்பிட்ட".

"இப்ப எதுக்கு அது" என்றவளின் இதழின் மீது ஆள்காட்டி விரலை வைத்து, "ஸ்ஸ் கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு" என்று விட்டு விரலை எடுக்க,

"வினய்" என்றாள் மெதுவாக. ஆத்ரேயனின் கோபம் அவனின் பேச்சை கேள்வி எதுவும் புரியாமல் குழம்பி போய் நின்று இருந்தாள்.

"அவன் உனக்கு வினய், நான் வந்து சாரா வாவ்" என்று விட்டு மீண்டும் அவன் நிலவை வெறிக்க,

"என்ன பேசுறீங்க நீங்க " என்றவள். அவன் வேகமாக திரும்பியதில் வார்த்தைகள் அப்படியே நின்றது.

அவளை அழுத்தமாக பார்த்தபடி அவன் அப்படியே நிற்க, குளிர் காற்று அவர்களை நோக்கி வீசி உடலை சில்லிட செய்தது.

அவன் பார்வை பேச்சு கோபம் அனைத்தையும் அறிந்து கொள்ளும் வேகத்தில், "என்னதான் வேணும் உங்களுக்கு" என்று தவிப்புடன் கேட்க,

அவன் விழிகளோ அவளை தான் ஊடுருவியது.

இதழ்களில் மொய்த்த அவன் பார்வையும் அதில் உள்ள பொருளும் அவளை தடுமாற செய்ய, உடனே முகத்தை திருப்பிக் கொள்ள அதில் விரக்தியாக புன்னகைத்தான்.

தலையை அழுத்தக் கோதியவாறு கிளம்பலாம் என்று விட்டு, அவன் மணலில் நடக்க மறுத்து பேசாமல் மௌனமாக பின்தொடர்ந்தவளை உணர்ந்தவன்.

கையில் இருந்த ஷுவினை அப்படியே போட்டுவிட்டு திரும்பி முதுகில் மோதியவளின் பின்னங்கழுத்தை அழுத்தமாக பற்றி தன்னை பார்க்க செய்ய அதில் தடுமாறி விழ போனவள்.

அவன் தோள்களை பற்றி கொண்டு திகைத்து அவனை பார்க்க,அடுத்த கணம் தன் இதழ்களை அழுத்தமாக அவள் இதழ்களில் பதித்தவன் கரங்கள் அவள் இடையிலும் பின்னங்கழுத்திலும் அழுத்தத்தை கூட்டியது.

அதில் திகைத்து விழி விரித்தவள். அவனை தள்ளி விட பார்க்க, உடனே அவளை விட்டு பிரிந்தவன்.

"கேடி உனக்கு எல்லாம் புரியுது.புரியாத மாதிரியே நல்ல ஆக்டிங்"

அதில் அவள் முகம் திருப்பிக் கொள்ள,"ஒன்னு தலையை குனியறது இல்லைனா முகத்தை திருப்பிக்கிறது. உன்னோட கஷ்டம் டி "என்று ஏக்க பெருமூச்சுடன் அவள் கண்ணத்தை வருடிவிட, அவன் கரத்தை தட்டி விட்டு அவள் அகல பார்க்க,

உடனே அவள் கரம் பற்றி நிறுத்தினான்.

" இனி என்னை சார்ன்னு கூப்பிடுவ?"என்று வினாவ, அவளோ அவன் கையை விலக்கிவிட்டு வேகத்துடன் காரை நோக்கி செல்ல,' கூப்பிட மாட்டா'என்று உள்ளுக்குள் சொல்லிக் கொண்டவன்.

மனதில் இருந்த இதம் சில நிமிடங்களிலே அகன்றது.

ஒரு வித அழுத்தம் சூழ்ந்து கொள்ள, அதே நிலையில் காரை எடுக்க, திகழ் எப்பொழுதும் போல் உணர்ச்சியற்ற பதுமையாக அமர்ந்திருந்தாள்.

****

குளித்து உடைமாற்றி தலை துவட்டியபடி வந்தவன். அவளின் மெத்தையில் தலைத் துவட்டியபடி அமர்ந்திருப்பதைக் கண்டு,

"இப்பவும் இந்த பெட்டை தான் யூஸ் பண்ண போறியா?" என்றான்.

அவன் கேள்விக்கு பதில் அளிக்காமல் அவள் அப்படியே அமர்ந்திருக்க, "கொழுப்பு கூடிப் போச்சுடி உனக்கு" என்று விட்டு அவன் கட்டிலில் படுத்துக் கொண்டான்.

விளக்கு அவளுக்காக ஒளிர்ந்தப்படி இருந்தது.

கட்டிலின் இடப்பக்கத் தரையில் மெத்தையை விரித்து அவள் படுத்திருக்க, அவன் எப்பொழுதும் கட்டிலின் வலப்புறம் படுப்பான்.

இப்பொழுது உருண்டு இடப்பக்கம் வர அவளோ கண்மூடி படுத்திருந்தாள்.ஆனால் உறங்கவில்லை என்பது புரிய,

'என்ன தாண்டி உனக்கு பிரச்சனை' என்று உள்ளுக்குள் நொந்தபடி கண்மூடியவனாலும் உறங்க முடியவில்லை.

கொல்லிமலை விட்டு வந்த இத்தனை நாட்களில் எடிட்டர் வீட்டிலும்,ஆபீசிலும் தான் அவன் பெரும்பான்மையான இரவுகள் கழிந்தது.

உறக்கம் என்பது இந்த கடந்த 15 நாட்களும் அரைகுறையாக தான் இருந்தது.

புரண்டு புரண்டு பார்த்து உறக்கம் அண்டாமல் போகவே அந்த குட்டி மெத்தையில் சுருண்டு கிடந்தவளை கண்டபடியே இருந்தவன்.

அப்படியே மெல்ல கீழ் இறங்கி அவள் மெத்தையில் படுக்க, அவளிடம் அசைவில்லை என்றதும் தைரியம் வந்தது.

ஆம் தைரியம் தான். அழுது கத்தினால் கூட ஏதாவது செய்து சமாதானப்படுத்தலாம் உணர்ச்சியற்று ஏதோ போல் பார்ப்பவளை கண்டு போராடும் தைரியம் இல்லை தான்.

அவளை மெல்ல அணைக்க மெல்லிய சலனம் அவள் உடலில் உணர்ந்தான்.

"உனக்கும் தூக்கம் வரலையா?" என்று மெல்லிய குரலில் முணுமுணுக்க, அவளிடம் அசைவே இல்லை.

அதில் இன்னும் அவளை நெருங்கிப் படுத்து கண் மூடினான். சில நிமிடங்கள் கழித்து கண் திறந்தவள்.தன் இடுப்பில் படர்ந்து இருந்த அவன் கைகளை கண்டு கலங்கும் கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டாள்.

அடுத்த நாள் சூர்ய வெளிச்சம் முகத்தில் பட அடித்து பிடித்து எழுந்தவன்.

மெத்தையில் தான் மட்டும் கிடப்பதை கண்டு மணியை பார்க்க அது ஒன்பது என்று காட்டவும் நெற்றியை பிடித்துக் கொண்டான்.

இன்று முக்கியமான எடிட்டிங் உள்ளது?ஒன்பது மணிக்கு அவன் எடிட்டர் ஆபீஸில் இருந்திருக்க வேண்டும்.

"ஓ காட் இவ்ளோ நேரம் தூங்கிட்டேனா" என்று முணுமுணுத்தவன். பரபரப்பாக குளியலறைக்குள் நுழைந்து அவசர குளியலுடன் தலையை துவட்டியபடி வெளியே வந்தான்.

"இவ ஏதோ தூக்க மாத்திரை வச்சிருக்காள். இன்னைக்கு முக்கியமான எடிட்டிங் ஒர்க் இருக்கு. அதைக் கூட மறக்கும் அளவுக்கு நல்லா தூங்க வச்சுட்டா" என்று அவளை கடித்த படி அறையை விட்டு வேகமாக வெளியே வர,

அவன் மீது மோதி விடப்போனவளை பற்றி நிறுத்தியவன்.

" டைமாச்சு. நான் கிளம்புறேன்" என்று அவளை அணைத்து விடுவித்து நெற்றிலும் அழுத்தமாக முத்தமிட்டு விட்டு செல்ல,அவன் அணைப்பிலும், முத்தத்திலும் அதிர்ந்து நின்றவள்.

அருகில் நின்றிருந்த அன்னபூரணியை பார்க்க அவரோ வாயை பிளந்தபடி இருவரையும் பார்த்தவர். முகம் புன்னகையில் மலர்ந்தது.

 
அத்தியாயம்-26

கையில் காபியை ஏந்தி கொண்டு கடிக்காரத்தை பார்த்த விமல் அது 12 என்று காட்ட கண்டு அதிர்ந்தான். ஹார்ட் அட்டாக் வந்தது போல் இருந்தது.

அலைபேசியை பார்க்கவும் பயமாக இருக்க, நொந்தப்படி நின்றிருந்தான்.

" இன்னும் காபி கொண்டு வராமல் என்னடா பண்ற " என்ற ஆத்ரேயனின் கத்தல் சத்தத்தில் அலறி அடித்துக் கொண்டு அவன் முன் போய் நிற்க,

"இடியட் காபி எடுத்துட்டு வர உனக்கு இவ்ளோ நேரமா?" என்று கடிந்துவிட்டு இன்று டப்பிங் மற்றும் எடிட்டிங் செய்யப்பட்ட பகுதிகளைப் பார்த்து முடித்தான்.

கண்களைத் தேய்த்துக்கொண்டு சோம்பல் முறித்தவன். முகம் கழுவி விட்டு வந்து காபியை எடுக்க, " சார் ஒன்னு கேட்கலாமா? "என்று விமல் பம்பலுடன் வினாவ,

" உனக்கு கேள்வி இல்லன்னா தானே ஆச்சரியம்.கேளு" என்று விட்டு ஆத்ரேயன் காபியை பருக,

"சூட்டிங் வேகமா மூணு மாசத்திற்குள் முடிச்சிட்டாலும் எடிட்டிங் டப்பிங் தனித்தனியா பண்ணி கொஞ்சம் ரிலாக்ஸா தானே போஸ்ட் ப்ரொடக்ஷன் ஒர்க் எல்லாம் போகும். ஏன் இந்த மூவிக்கு இவ்வளவு அவசரம். சாந்தவி, திவாகர் ரெண்டு பேருக்குமே டப்பிங் ஆர்ட்டிஸ்ட் போட்டுட்டீங்க. ரெண்டு பேரையும் காண்டாக்ட் பண்ணவும் முடியலை. அவங்க இல்லாமல் பிரமோஷன்,ஆடியோ லான்ச் இதெல்லாம் எப்படி சார்.முதலில் அவங்களுக்கு என்ன ஆச்சு".

அதற்கு ஆத்ரேயன் பதிலளிப்பான் என்று காத்திருக்க,அவனோ "எத்தனை கேள்வி" என்று சலிப்பது போல் கூறியவன்.

அதற்கான பதிலை மொழியவில்லை.

காத்திருந்து சோர்ந்த விமல், " சார்" என்று அழைக்க, " என்ன தான்டா உனக்கு வேணும்" என்று அலுப்பாக கேட்டான்.

எப்படியும் தான் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்க மாட்டார் என்று புரிந்து போய், " டைம் பன்னெண்டு ஆச்சு சார் " என்று இழுவையாக கூறினான்.

"சோ?".

'இவர் புரிந்து தான் பேசுகிறாரா' என்று உள்ளுக்குள் நொந்தபடி," வைஃப் வெயிட் பண்ணுவாங்க சார்.ஏற்கனவே 100 மிஸ்டு கால் தாண்டிடுச்சு.இனியும் எடுக்கலைன்னா கோவிச்சுப்பாங்க".

" ஓ உனக்கு கல்யாணம் ஆயிடுச்சு இல்ல" என்று அப்போதுதான் நினைவு வந்து கேட்க,'அடப்பாவி சாரே' என்று அதிர்ந்து போய் நோக்கினான்.

"ஏன் உன் ஒர்க் ஷட்டில் பத்தி சொன்னது இல்லையா?. லேட் நைட் ஷூட்டிங் இருக்கும்போதும் இப்படி தான் பர்மிஷன் கேட்டு என் முன்னால் தலையை சொறிஞ்சிட்டு வந்து நிற்பியா " என்று ஆத்ரேயன் கோவத்துடன் கேள்வி எழுப்ப,

' அட பாவப்பட்டு அனுப்பிவிடுவார் என்று பார்த்தால், இவர் என்ன இப்படி கேட்கிறார் ' என்று மனதிற்குள் நினைத்தபடி, "சார் அதுக்கு இல்லை.இன்னும் மூணு நாளில் ரிசப்ஷன் இருக்கு".

" ஓ ரிசப்ஷன் சொல்லி இருந்த இல்ல" என்று அதையும் மறந்துவிட்டு கேட்டவனை கண்டு கதறும் நிலைக்கு விமல் செல்ல,

"ஏன் உன் வைஃப் அடிக்கவா போறாங்க.ஏன் பயந்து நடுங்கற "என்றப்படி எழ,

"அட. அடிச்சா திட்டுனா கூட பரவால்ல சார். கோச்சிட்டு பேச மாட்ட " என்றான் சோகமாக.

"நல்லதுன்னு உன் வேலையை கவனிக்க வேண்டியது தானே".

அதில்," சார்" என்று அதிர்ந்து அழைத்தான்.

"குடும்பத்தில் கும்மி அடிச்சு விட்ருவீங்க போல இப்படி பேசினால் அவ்வளவுதான்.அம்மா வீட்டுக்கு டைரக்டா கிளம்பிடுவா "

"நிம்மதின்னு விட வேண்டியது தானே".

" ஐயோ சார் கல்யாணம் ஆகி இன்னும் ஒரு மாசம் கூட முழுசா முடியலை "என்று அழுதே விட்டான்.

"அட ச்சி போடா" என்று விட்டு ஆத்ரேயன் கிளம்ப, " உங்களுக்கு கல்யாணம் ஆனால் தெரியும் சார்" என்று கன்னத்தை துடைத்தபடி கத்த,

" எல்லாம் தெரியுது போடா " என்று நொந்து போய் காரில் ஏறியவனுக்கு ஏதோ மூச்சை அடிக்கும் போல் இருந்தது.

காரை எடுக்க மனம் இல்லாமல் வெளியே வெறிக்க, விமலோ வீடியோ காலில் அவன் மனைவியிடம் ஏதோ பேசியபடி கேப்பிற்காக காத்திருந்தான்.

முதலில் ஏதோ கோபப்படுவதும் பிறகு அவன் கெஞ்சுவதும் இறுதியில் திரையை நோக்கி முத்தமிடுவதை கண்டு, ஆத்ரேயன் வண்டியை விட்டு இறங்கி கதவை அடித்து சாற்ற, அந்த சத்தத்தில் ஆத்ரேயன் இன்னும் செல்லாததை உணர்ந்து விமல் சார் என்று அவன் அருகில் வர,

" காரில் ஏறு.நானே வீட்டில் உன்னை டிராப் பண்றேன் "

"வேணாம் சார் கேப் புக் பண்ணிட்டேன் வந்துரும் " என்று அவன் மறுக்க,அதற்குள் அவன் மனைவியின் சத்தம் கேட்க,

"ஏறு.உன் சத்தத்தில் தெரு நாய் எல்லாம் பயந்து ஓடுது" என்றதும்,

விமல் ஏறிக்கொள்ள வீடியோ அழைப்பு ஆடியோ கால் ஆக மாற, "அப்புறம் பேசுறேன் வை" என்று அவன் கூறுவதும், அதற்கு எதிர்ப்புறம் ஏதோ சொல்லுவதும் என்று பேச்சு விமல் வீடு வரும் வரை நீண்டது.

" சாரி சார்.சாரி சார்" என்று சங்கடமாக விமல் கூறியப்படி இறங்க, அவன் வீட்டின் விளக்குகள் ஒளிர ஆரம்பிக்க முதலாளியாவது மண்ணாவது என்று திரும்பியும் பாராமல் வீட்டிற்கு சென்றான்.

அவன் மனைவி வெளியே வந்ததும் பாய்ந்து அணைத்து கொண்டு அப்படியே அவளை தூக்கி செல்வதை கண்டு முகத்தை திருப்பிக் கொள்ள, அந்த ரோட்டில் நாய் கூட ஜோடியாக சென்று கொண்டிருந்தது.

'என்னை தவிர எல்லாரும் நல்லா இருக்காங்க போல' என்று எண்ணியப்படி காரை வீட்டிற்கு விட்டான்.

தாயை முதலில் பார்த்துவிட்டு தன்னறை வந்தான்.

தரையில் விரிக்கப்பட்ட மெத்தையில் உடலைக் குறுக்கிக் கொண்டு உறங்கிக் கொண்டிருப்பவளைக் கண்டு அவளிடம் செல்லப் போனவன். பிறகு மனதை மாற்றிக்கொண்டு கட்டிலில் சரிந்தான்.


*****

" திகழ் சொன்ன கேளுமா"

"இல்லத்தை வேண்டாமே "என்று திகழ் வெகுவாக தயங்க,

அங்கு வந்த ஆத்ரேயனிடம்," கண்ணா நீயாவது சொல்லு" என்றவரை புரியாமல் பார்த்தவன்.

"என்ன சொல்லணும்" என்றான்.

"அட ஆமாயில்ல" என்று நெற்றியில் கை வைத்துக் கொண்டார்.

"என்ன ஆமா என்ன இல்லை " என்று அவனும் கூற, அவனை முறைத்தார்.

" சில் மா சும்மா விளையாட்டுக்கு ".

அவன் கிண்டலை கண்டு கொள்ளாமல்,"சரி விமல் இன்வைட் பண்ணி இருக்கானே என்ன பண்ண போற " என்றார்.

" என்ன பண்ண போறனா ரிசப்ஷனுக்கு போயிட்டு வருவேன்" என்ற அவனை அவர் கூர்மையாக பார்க்க,

" மாம் செக் ரெடி பண்ணிட்டேன்" .

" அதெல்லாம் வேண்டாம்" என்று முடிவாக மறுத்தார்.

" என்ன த்ரீ லேக்ஸ்யில் இன்னும் ஒரு ஜீரோ ஆட் பண்ணிடவா" என்று கிண்டலாக கேட்டபடி அவன் அமர,

"கண்ணா விளையாடாதே. முன்னே மாதிரி இல்லை. நீயும் குடும்பஸ்தன் ஆயிட்ட".

அதில் ஆத்ரேயன்," ஆமா" என்று பெருமூச்சுடன் திகழை பார்க்க, அவளோ எப்பொழுதும் போல் தலைகுனிந்து இருந்தாள்.

' இவளோட' என்று எண்ணும்போதே அவன் தாடை பற்றி தன்னை பார்க்க செய்தவர்.

"தாம்பூலத்தில் விமலுக்கும் அவன் பொண்டாட்டிக்கும் டிரெஸ்ஸும் எடுத்து நகை வச்சு தம்பதி சகிதமா கொடுத்துட்டு வாங்க".

"ஓகே பண்ணிடலாம் " என்று அவனும் கூற திகழ்புறம் திரும்பிய அன்னபூரணி,

" நீ போய் ரெடி ஆயிட்டு வா" என்று அனுப்ப அவளும் மறுவார்த்தை பேசாமல் அங்கிருந்து அகன்றாள்.

"எங்கே வெளியே போறீங்களா?" என்று கேட்டவனை கண்டு உள்ளம் ஏதோ பதறியது.

" கண்ணா சந்தோஷமா தானே இருக்க" என்று கேட்டவரை புரியாமல் பார்த்தவன்.

"எனக்கென்ன ஹாப்பியா தான் இருக்கேன்" என்றான்.

அவன் கண்ணின் கீழ் மெலிதாக வர ஆரம்பித்த கருவளையத்தை கவலையாக பார்த்தபடி, " ஏதோ மனசுக்கு சரியா படலை கண்ணா "

"மா நீங்க ரொம்ப யோசிக்கிறீங்க" என்ரறு அவன் அந்த பேச்சை கத்தரிக்கப் பார்க்க,

"இல்லப்பா" என்றவர். மகனுக்கு இதைப் பற்றி பேசுவது பிடிக்கவில்லை என்பதை புரிந்து, " திகழும் நீயும் ரிசப்ஷனுக்கு போயிட்டு வாங்க " என்று கூறினார்.

"உங்களுக்கும் தான் இன்வைட் வந்து இருக்கு. நீங்களும் வாங்க.என்ன ஆச்சு "என்றதும்,

"இல்லை. என் அசோசியேஷன் மீட்டிங் இருக்கு. கண்டிப்பா நான் போய் தான் ஆகணும். மீட்டிங் முடிந்ததும் கூட நான் வந்துருவேன்.என்னை பத்தி யோசிக்காதே.இப்போ ரிசப்ஷனுக்கு தேவையான டிரெஸ்சும் நகையும் திகழுக்கு எடுத்துக் கொடு.அப்படியே உனக்கும் டிரஸ் வாங்கிக்கோ "

அவர் ஏதோ யோசனையுடன் அப்படியே இருக்க, " என்ன உங்க மனசை போட்டு அழுத்ததோ அதை தெளிவா பேசுங்கமா". என்றதும்,

"கண்ணா திகிழ் விஷயத்தில் என்னதான் பண்ணலாம்னு இருக்க" என்றதும் அவன் புரியாமல் பார்க்க,

" வெளி பார்வைக்கு திகழ் என் சொந்தக்கார பொண்ணாக தான் இன்னும் தெரியறா " என்ற அவரின் வார்த்தைகள் அவனை குற்றம் சாட்டியது.

" திகழ் உன் பொண்டாட்டிடா" என்ற அவர் தளர்ந்த குரலில் கூற,

தன் தாயை போட்டு உலுக்கி,'அவகிட்ட இதை போய் சொல்லுங்க' என்று கத்தலாம் போலிருக்க, அந்த எண்ணத்தை உள்ளுக்குள் புதைத்தப் படி, மௌனியானான்.

"ஏன் கண்ணா இப்படி ஓடிட்டு இருக்க வீட்டுக்கு எப்போ வர, போறேன்னு கூட தெரியலை. அவுட்டோர் ஷூட்டிங்ல கூட கால் பண்ணியாவது பேசுவ. இப்போ நீ என்ன பண்றன்னு தெரியலை. எல்லாம் சரியா இருக்குன்னு நினைக்கும் போது அப்படி இல்லன்னும் நினைக்க வைக்கிற. எதுமே எனக்கு சரியா படலை. ஏனோ மனசு படபடப்பாவே இருக்கு. ஏதோ தப்பா நடக்க போற மாதிரியே தோணுது " என்று பதற,அவரை ஆசுவாசமாக அணைத்தவன்.

" மா ரொம்ப யோசிக்கிறீங்க. இந்த படம் ரிலீஸ் ஆகறதுக்காக தான் இப்படி ஓடிட்டு இருக்கேன். மத்தபடி ஒரு பிரச்சனையும் இல்லை ".

"அதுக்கு என்ன அவசியம்" என்று அதிலிலும் அவர் ஒரு கேள்வியை எழுப்ப,

" மா இதெல்லாம் ரொம்ப ஓவர்.இதுதான் என் வேலை. தெரியாத மாதிரி கேக்குறீங்க" என்றதும், அவர் அழுத்தமாக பார்க்கவும்,

"ம்மா ஒரு கமிட்மெண்ட் மூணு மாசத்திற்குள் முடிக்கணும். அதைவிட சீக்கிரம் முடிச்சு படத்தை ரிலீஸ் பண்றது இன்னும் பெட்டர். அதுக்கு நான் ஓடி தான் ஆகணும்" என்று உறுதியாக கூறினான்.

"போஸ்ட் ப்ரோடுக்ஷன் வொர்க் இவ்வளவு பாஸ்ட்டா எந்த படத்துக்கும் நீ பண்ணுனதில்லையே கண்ணா. எப்பவும் உன்னோட படம் இயர் ஸ்டார்டிங்ல தானே ரிலீஸ் ஆகும். இப்போ என்ன அவசரம் இன்னும் ஆறு மாசம் டைம் இருக்கே. நீ ஆரம்பத்தில் சொன்னது கூட பொங்கல் ரிலீஸ் தானே".

நோ என்று உள்ளுக்குள் எண்ணியவன்.

" மா இதை பத்தி பேசாதீங்க" என்று முடிவாக கூறினான்.

" சரி உன்னோட வேலையை பத்தி பேசலை. வாழ்க்கையை பத்தி பேசலாமா?".

"ஏன் ரெண்டுத்துக்கும் என்ன இப்போ.ரொம்ப சகஜோதியா தானே இருக்கு" என்று சிரிப்புடன் ஆத்ரேயன் கூற,

"இந்த கிண்டலுக்கு ஒன்னும் கொறச்சல் இல்லை. அவ நீ கட்டின தாலியை தான் இன்னும் போட்டுட்டு இருக்கா "என்றார் கோபத்துடன்.

'அதையாவது போட்டு இருக்கான்னு நான் சந்தோஷப்படுறேன்.அதுவும் உங்களுக்கு பொறுக்கலையா?' என்ற கேள்வியுடன் தாயைப் பார்க்க,

அவரோ அழுக ஆரம்பித்து விட," ஐயோ என்னம்மா ஆச்சு"என்றவன்.அவர் அழுகையை நிறுத்தாமல் போனதில்,

"நான் அப்படி எந்திரிச்சு போயிடுவேன். டென்ஷன் படுத்திட்டு இருக்காதீங்க. முதலில் அழுகையை நிறுத்துங்க" என்று அதட்ட, அது அவரிடம் வேலை செய்தது.

"ரெண்டு பேரும் உங்க மனசில் என்னதான் நினைச்சுட்டு இருக்கீங்களோ தெரியலை. தாலி பிரிச்சு கோர்ப்பதைப் பற்றி அவகிட்ட கேட்டால் வாயவே திறக்க மாட்டேங்குற. நீ என்னன்னா யாருக்கோ வந்த விருந்து மாதிரி இருக்க.என்னதான் நெனச்சிட்டு இருக்கீங்க ரெண்டு பேரும்".

"ஓ தாலி பிரிச்சு கோர்க்கணுமா?" என்று வாய்விட்டு அவன் கேட்க,

" பின்னே, கல்யாணம் ஆகி நாலு மாசம் ஆகுது. இன்னும் தாலி பிரிச்சு கோர்க்கலை. கல்யாணத்தை பத்தி வெளியே சொல்லலை.என்ன ஐடியாவில் தான் இருக்க".

"திகழை உன் பொண்டாட்டின்னு வெளியே சொல்லுவியா மாட்டியா" என்று வினாவியவர்.

அவன் அமைதி காக்கவும்," ஏதோ ஒரு இக்கட்டில் உன் சம்பந்தம் கேட்காமல் தாலி கட்ட சொல்லிட்டேன் தான். அதுக்காக இப்படியே இருந்து எனக்கு தண்டனை கொடுக்க போறியா கண்ணா " என்று உடைந்து போய் அவர் கேட்க,

" மா என்னமா பேசுறீங்க" என்றவனுக்கு ஒரு பக்கம் பக்கம் பக்கமாக பேசும் தாயும், மறுபக்கம் ஒன்றுமே பேசாத மனைவியும் தலை சுற்ற வைத்தனர்.

"பின்னே நீ என்னமோ பண்ணிக்கோன்னு அப்படியே விடனுமா?".

" நாலு மாசம் நான் பொறுத்து இருந்தது போதும். முதலில் படம் பண்ணனும்னு சொன்ன ஷூட்டிங் முடியட்டும்ன்னு காத்திருந்தால் இப்ப எடிட்டிங் இருக்கு டப்பிங் இருக்குன்னு ஓடற. அப்புறம் படம் ரிலீஸ் என்று ஓடுவ. அதுக்கப்புறம் மறுபடியும் ஒரு புது படத்தை கொண்டு வந்துருவ. அப்புறம்,உங்க கல்யாணம் வாழ்க்கை என்னடா ஆகறது" என்று மித மிஞ்சிய வருத்தத்தில் கேட்டார்.

"மா ஒரு நாலு மாசத்துக்கு என்னால் வேற எதை பத்தியும் யோசிக்க முடியாது "என்று தளர்ந்து போய் அவன் கூற,

"சரி ஒன்னும் வேண்டாம். ஒரு கோவிலில் பூஜை முடிச்சுட்டு தாலி மட்டும் பிரிச்சு கோர்த்திடலாம்.உன் மனசுக்கு தெரியுமில்ல. அதைக் கட்டினது நீன்னு".

"மா... என்னமோ நான் அவளை விட்டுட்டு ஓடுற மாதிரி ரொம்ப பேசுறீங்க ".

அவன் வாயிலே ஒரு அடியை போட்டவர்.

" சும்மா பேச்சுக்கு கூட அப்படி சொல்லாத. நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து ரொம்ப வருஷம் வாழனும்" என்று கண் கலங்கியவரை தோளோடு அணைத்தவன்.

" கண்டிப்பா மா" என்று ஆத்ரேயன் கூறிய அதே வேளையில் அவன் அறையில் தன் கையில் இருந்த ஃப்லைட் டிக்கெட்டையும், அப்பாயின்மென்ட் ஆர்டரையும் யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்த திகழுக்கு இன்னும் ஐந்து நாட்களில் இங்கிருந்து இருவரின் சம்மதத்துடன் சென்று விட முடியுமா? என்ற கேள்வி உள்ளுக்குள் உறுத்தியது.

அடுத்த கணமே கண்டிப்பாக சென்று தான் ஆக வேண்டும் என்று உறுதியாக முடிவெடுத்தவள்.

அன்னபூரணி அழைக்கும் சத்தம் கேட்கவே அவசரமாக தலையணைக்கடியில் அதனை வைத்து விட்டு, கீழே சென்றாள்.

 
அத்தியாயம்-27

ஒவ்வொரு புடைவையும் கண்ணை கவர அதில் எதை தேர்ந்தெடுப்பது என்று புரியாமல் விழித்துக் கொண்டு இருந்த திகழை நீண்ட நேரமாக பார்த்தவன்.

அவளை அங்கிருந்த இருக்கையில் அமர வைத்துவிட்டு தான் பார்வையிட ஆரம்பித்தான்.

அனைத்தும் ரோஜா மற்றும் சிவப்பு நிற காம்பினேஷனில் இருக்க, "வேற கலர்ஸ் காட்டுங்க "என்றான்.

" இல்லை அவங்க ஸ்கின் டோனுக்கு இந்த கலர் எல்லாம் நல்லா இருக்கும் " என்று சேல்ஸ்மேன் கூற,

கேமராவின் வழியே வர்ண கலவைகளை பார்ப்பவனுக்கா தெரியாது அவளுக்கு எந்த நிறம் எடுப்பாக இருக்கும் என்று.

அதில் கிண்டலாக சிரித்தபடி, " டார்க் கிரீன் கலர் சேரி.பாடரில் கோல்டு ஜரிகை ஒர்க் இருக்கணும்.மத்தபடி பிளைனா வேணும் ".

"ஆனால் அவங்க ரிசப்ஷன்னு சொன்னாங்களே" என்று அவன் தயங்க,

" எடு மேன்" என்றான். அவன் பார்வையில் இருந்த கட்டளையில் சேல்ஸ்மேன் பச்சை நிறங்களை கொண்ட புடவைகளை எடுத்து போட்டான்.

நீண்ட நேர வேட்டைக்கு பிறகு ஒரு புடவையை எடுத்து அவள் முன் நீட்ட,அது கண்ணை பறித்தது.

அதிக ஆடம்பரம் இல்லாமல் இருந்த அந்த புடவை ஏனோ திகழுக்கும் பிடித்து விட, சம்மதமாக தலையசைத்தாள்.

" கட்டி விடவா சார்" என்று வந்த சேல்ஸ் கேர்ள் இடம் ஆத்ரேயன் தலையசைக்க வேண்டாமே என்ற திகழை சேல்ஸ் கேர்ளிடம் ஒப்படைத்து விட்டு இருக்கையில் அமர்ந்து கொண்டான்.

நேர்த்தியாக அவள் சுடிதார் மீது கட்டி கண்ணாடியில் அவளை காட்ட,திகழின் சரும நிறத்திற்கு அத்தனை அழகாக இருந்தது.

கண்ணாடியில் இருந்து பார்வையை விலக்க முடியாமல் அவள் அந்த புடவையையும், தன்னையும் பார்த்துக் கொண்டிருக்க,

" பிடிச்சிருக்கா? "என்ற குரலில் பட்டென்று திரும்பியவள்.

அருகில் நின்றிருந்த ஆத்ரேயனை கண்டு சம்பந்தமாக தலையசைக்க,

"ஒகே பில் இட்" என்று சேல்ஸ்மேன் இடம் கூறிவிட்டு அவளை அழைத்துக்கொண்டு அதே கடையில் வேறு ப்ளோரில் இருந்த நகை கடைக்கு அழைத்து சென்றான்.

"நகை எல்லாம் எதுக்கு" என்று அவள் தயங்க,

"போட்டுக்க தான்" என்ற படி அவளை இழுத்து கொண்டு திருமண செட்டுகள் இருக்கும் பகுதிக்கு வந்தான்.

பச்சை நிற கற்கள் பதித்த ஆன்டிக் மாடல் ஆரம் கம்பல் வளையல் என்று அனைத்தையும் அவனேத் தேர்ந்தெடுக்க,வெறும் பார்வையாளராக அமர்ந்து கொண்டாள்.

பில்லிங் கவுண்டர் வந்ததும் அவள் கையில் கார்டை கொடுத்துவிட்டு," வேற ஏதாவது இருந்தாலும் பாரு. ஒரு முக்கியமான கால் பேசிட்டு வரேன் "என்றவன். தாலிக்கொடி செக்ஷனுக்கு சென்றான்.

தன் கையோடு வரைந்து வைத்திருந்ததை கொடுத்து அதே டிசைனில் சில மாற்றங்களுடன் தாலி கொடி ஆர்டர் செய்தவன்.

" எத்தனை நாளில் கிடைக்கும்" என்று வினாவ,

"10 டேஸ் ஆகும் சார்" என்று ஊழியர் கூற மறுப்பாக தலையசைத்தான்.

"ஓகே சார். ஒரு வாரத்தில் கொடுத்து விடுகிறோம்" என்றான்.

"நோ எனக்கு சண்டே ஈவினிங் 7 ஓ கிளாக் வேணும்".

"சார் மூன்று நாள் கூட இல்லை. கஷ்டம் சார்" என்று சங்கடமாக அவர் நிலைமையை விளக்க,

"எக்ஸ்ட்ரா சார்ஜ் பண்ணிக்கோங்க மேன். ஆனால், நீட்டா பெஸ்ட்டா எனக்கு வேணும்" என்று உறுதியாக அதே பிடியில் நின்றான்.

அதில் மேனேஜரை அழைத்து பேசி அவர் ஒப்புக்கொள்ள,இன்னும் மூன்று நாளில் கிடைத்து விடும் என்றதும் புன்னகைத்தான்.

உடன் இன்னொரு நகையையும் வாங்கி அதை தன் கோர்ட்டிற்குள் பத்திரப்படுத்திக் கொண்டான்.

*****

"என்ன திகழ் இன்னும் அவனை காணோம் "என்றபடி கதவை திறந்தவர்.

அழகிய சிலை என நின்றிருந்த மருமகளை கண்டு இமைக்க மறந்தார்.

பச்சை நிற புடவையில் அதற்கு தோதான நகையில். மிளிர்ந்த திகழை கண்டு நெட்டி முறித்தவர்.

"அவ்ளோ அழகா இருக்க டா. என் கண்ணே பட்டுடும் போல இருக்கு" என்று உள்ளம் நிறைந்த மகிழ்வுடன் பாராட்டினார்.

அதில் மெலிதாக அவள் புன்னகைக்க, "ஆமா கண்ணா எங்க தான் போனான்" என்றதும் அவளுக்கும் தெரியாததால் மௌனம் காக்க, "வந்துட்டேன்" என்றவனின் கையில் கிப்ட் டிராப் செய்யப்பட்ட பெட்டி இருந்தது.

"ஓஓ விமலுக்கு கிப்டா " என்றதும்,

" அவனுக்கு கிப்ட்டா" என்ற மகனை கோபத்துடன் பார்க்க,"மா அவன் கிப்டெல்லாம் காரில் ஏற்கனவே வெச்சாச்சு.இது என்னோட ஸ்பெஷல் பர்சனுக்கான கிப்ட்" என்றவனின் பார்வை திகழை தொட்டு மீள, அவளோ அவன் புறம் பார்வையை திருப்பவே இல்லை.

ஏனோ உள்ளுக்குள் பெரும் தடுமாற்றத்தில் உழன்று கொண்டு இருந்தாள்.

அதில் நெற்றி வியர்க்க அதை துடைத்தபடி நிமிர்ந்தவள். ஆத்ரேயனின் பார்வையில் ஸ்தம்பித்தாள்.

இருவரின் பார்வை பரிமாற்றத்தை கவனித்த அன்னபூரணி," பத்திரமா போயிட்டு வாங்க.நானும் மீட்டிங்கிற்கு கிளம்புறேன்" என்று அவர் விடை பெற இருவரும் தனித்து விடப்பட்டனர்.

"இந்த கிப்ட் யாருக்கு என்று கேட்க மாட்டியா" என்றவனைக் கண்டு புரியாமல் விழித்தவள்.

"அது" என்று பேச வர,அவள் கன்னத்தில் கை வைத்தவன். "மேக்கப் வாட்டர் ப்ரூஃப்பா" என்றான் அவள் இதழ்களை பார்த்தபடி..

" முக்கியமா லிப்ஸ்டிக்" என்று விட்டு இதழ்களை மெல்ல வருட, அவளுக்கே மூச்சு முட்டியது.

உடனே அவன் மார்பில் கை வைத்து தள்ளியவள்.

"இல்லை " என்று மொட்டையாக கூறிவிட்டு, "வெளியே வெயிட் பண்றேன் "என்று உடனே அங்கிருந்து வெளியேறினாள்.

ஆத்ரேயனோ கையில் இருந்த பாக்ஸை ஆசையுடன் நோக்கி விட்டு, படுக்கையில் வைத்தவன். தானும் உடைமாற்றி வந்தான்.

அவள் புடவை நிறத்தில் ஆனா அதே நிற சட்டை. உடன் பிளாக் கோட் சூட் அணிந்து தயாராகி வர, ஏதோ யோசனையுடன் அமர்ந்து இருந்தவளைப் பார்த்தபடியே காரை எடுத்தான்.

ரிசப்ஷன் நடக்கும் மண்டபத்தை அடைந்ததும் காரை அவன் ஓரம் கட்ட,

" என்னாச்சு" என்று திரும்பியவளின் கண்ணத்தை தன் கைக்குள் ஏந்தி கொண்டான்.

"லிப்ஸ்டிக் வாட்டர் ப்ரூஃப் தானே. இத்தனை தடவை நீ எச்சி பண்ணியும் லிப்ஸ்டிக் கலையவே இல்லையே" என்று விஷமமாக அவன் கூற,அவள் விழிகள் தடுமாறி இதழ்கள் நடுங்கியது.

"சில். ஏதோ ஒரு பதட்டத்திலே இருக்க. என்ன ஆச்சு. இல்லை ஏதாவது வேணுமா? என்று அவள் கன்னத்தில் அழுத்தம் கொடுக்க,கண்களை இருக்க முடி திறந்தவள்.

தன் கன்னத்தில் பதிந்திருந்த அவன் கரத்தின் மீது தன் கரத்தை பதிக்க, ஆச்சரியத்துடன் திகழை பார்த்தான்.

"உங்களுக்கு என் கிட்ட இருந்து என்ன வேணும்? " என்றாள் அழுத்தத்துடன்.

நொடியும் தாமதிக்காமல்," நீதான் வேணும். மொத்தமா " என்றவன் விழிகளில் உறுதி இருந்தது.

அதில் கலங்கும் கண்களை கட்டுப்படுத்திக்கொண்டு, "எப்போ வரை "என்றாள்.

"ஏய் என்ன பேசுற" என்றவன்.

பேச்சு போகும் திசை பிடிக்காமல் கைகளை விலக்கிக் கொள்ள பார்க்க, அவள் கன்னத்தில் இருந்த அவன் கையை அசைக்க முடியவில்லை.அத்தனை உறுதியாக அவள் பிடித்து இருக்க,

"பைத்தியம் மாதிரி பேசி என்கிட்ட அடி வாங்க போற" என்று எச்சரிக்கும் விதமாக கூற,

"என்னோட தேவை எப்பவும் யாருக்கும் நிரந்தரமா இருந்ததில்லை" என்று வலியுடன் அவள் கூற,

"வாட் யூ மீன் " என்றவனுக்கு அவள் பேச்சு புரியவும் இல்லை. பிடிக்கவும் இல்லை.

"எத்தனை நாள் நான் உங்களுக்கு தேவைப்படுவேன்".

"அறைஞ்சேன்னா தெரியும்.போடி "என்று அவள் கன்னத்தில் பதிந்திருந்த கையை உதறிவிட்டு காரை விட்டு வெளியேறியவன்.

இறுக்கிப்பிடித்த டையை தளர்த்திக் கொண்டான்.

பாக்கெட்டில் இருந்த வைர மோதரம் அவனை பார்த்து சிரிப்பது போல் இருக்க,அதை இறுக்கப் பற்றி கொண்டான்.

கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

ஏன் எதற்கு இவ்வாறு பேசுகிறாள் செய்கிறாள் என்று புரியாமல் ஒவ்வொரு முறையும் குழம்பி நிற்பது கோபத்தை கிளப்பியது.

மண்டபத்தில் கசிந்த பாடல் நிதர்சனத்தை உரைக்க,முகத்தை சீர் செய்து கொண்டவன்.

அவள் பக்கம் வந்து கார்க் கதவை திறக்க தலை குனிந்து அமர்ந்து இருந்தாள்.

' இதில் ஒன்னும் குறை இல்லை' என்று எண்ணிக் கொண்டவன்.

"ரிசப்ஷன் முடியட்டும் வா" என்றான்.

அவளும் மறுத்து கூறாமல் அவனுடன் வர,
வெளியே முகத்தை சாதாரணமாக வைத்துக் கொண்டாலும் உள்ளுக்குள் அவளின் பேச்சு, செய்கை அனைத்தும் சூட்டை கிளப்பி இருந்தது.

மண்டபத்திற்குள் நுழைந்ததுமே சார் என்ற விமலின் குரலில் நிமிர மேடையில் நின்றபடியே கூவிக்கொண்டிருந்தான்.

அதில் சிறிது இலக்குவானவன்.

'இவனோட முடியலடா' என்று கோபம் விலகி அலுத்தப்படி மேடை ஏற, யாரோ ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்த அவன் மனைவி கவிதாவை அப்படியே இழுத்து வந்து," சார் வைஃப் " என்றதும் சட்டென்று சிரித்து விட்டான்.

"நீங்க தான் ஆத்ரேயன் சாரா.உங்களை பத்தி தான் நிறைய நேரம் பேசிட்டு இருப்பார். உங்களை மாதிரியே படம் பண்ணி நேஷனல் அவார்ட் வாங்கனும்னு தான் அவர் ஆசை " என்று ஆத்ரேயனை பார்த்த பூரிப்பில் கவிதாவும் பேச, இருவரையும் கண்டவனுக்கு மனம் நிறைந்தது.

இருவரின் கோர்த்த கரங்களும் ஒருவரை பற்றி மற்றவர் பேசும் போது கண்களில் தெரிந்த மின்னலும், புன்னகையும் பார்க்க அத்தனை அழகாக இருந்தது.

தன் அருகே இருந்தவளை நோக்க அவளோ ஒட்ட வைத்த புன்னகையுடன் நின்று இருந்தாள்.

அப்போதுதான் திகழை கவனித்த கவிதா,
" உங்க வைஃபா சார்.ரொம்ப அழகா இருக்காங்க.ஜோடி பொருத்தம் பிரமாதம்" என்று வாயை விட விமலோ மனைவியை அடக்க பார்த்து முடியாமல் போனதில் காலை மிதிக்க, "ஏன் மாமா " என்று அவள் கத்த,

"அடியே சாருக்கு இன்னும் கல்யாணம் ஆகலை. இவங்க சாரோட ரிலேட்டிவ்".

"ஓ சாரி சார்" என்று உடனே கவிதா மன்னிப்பை வேண்ட, இருந்த இதம் மீண்டும் காணாமல் போனது.

"நோ நீட்" என்றவன்.

திகழுடன் இணைந்து இருவருக்கும் பரிசை வழங்கி விட்டு விலக, " கல்யாணம் பண்ணிக்க போறவங்க போல மாமா " என்றதும் விமலுக்கும் அதே எண்ணம் தான்.

பாட்டு, நடனம் சொந்தங்களின் கலாட்டா என்று ரிஷப்ஷன் உயிர்ப்புடன் இருக்க,சிறிது நேரம் அங்கிருந்து விட்டு விடை பெற்றனர்.

காரை எடுத்த முதல் சில நிமிடங்கள் அங்கு அமைதியே வீற்றிருக்க, அதன் கணம் தாங்க முடியாமல் கார் கண்ணாடியை இறக்கி விட்டான்.

வெளியே வீசிய காற்று உள்ளே இருந்த புழுக்கத்தை சரி செய்ததோ என்னவோ நினைவுகளை ஓரம் கட்ட வைத்தது.

கடற்காற்று அழுத்தமாக வீச காரை நிறுத்தியவன்.இறங்கி நடக்க திகழ் அப்படியே அமர்ந்திருந்தாள்.

அவள் உள்ளங்கை வியர்த்துப் போயிருந்தது. உள்ளுக்குள் ஒரு போராட்டமே நடக்க வெடித்து சிதற காத்திருக்கும் எரிமலை போலானது அவளின் நிலை.

அவள் தன்னை தொடராத கோபத்தில் மீண்டும் வந்தவன்.

அவள் பக்க கதவை திறந்த அதில் பயந்து போய் அவள் பார்த்ததில், ஆத்ரேயனிடம் பெருமூச்சு வெளியானது.

"பட்டுப்புடவை அப்புறம் உன்னோட வாட்டர் ப்ரூப் மேக்கபையும் அழிக்க மாட்டேன் வா "என்று அழைக்க கலங்கிய கண்களுடன் தலை குனிந்தபடியே அவன் பின்னே சென்றான்.

இன்று முழு நிலவு காட்சி அளிக்க, கடல் ஆர்ப்பாட்டத்துடன் தன் அலைகளை கரையோடு மோதி விளையாடிக் கொண்டிருந்தது.

"இந்த அமைதி,இந்த கடல், இந்த நிலவு எனக்கு ரொம்ப பிடிக்கும்.ஆனால் இப்போ ரசிக்கிற மனநிலை இல்லை.இப்போ உன்கிட்ட இதை சொல்ல கூடாதுன்னு நினைச்சேன்".

" பட் ஐ காண்ட்" என்ற ஆத்ரேயனின் ஆழ்ந்த குரலில் புரியாமல் நிமிர, அவள் முன் மண்டியிட்டு அமர்ந்தவனின் கையில் இருந்த மோதிரத்தை கண்டு பின் அடைந்தாள்.

மொத்த உடலும் மின்சாரம் தாக்கியது போல் அதிர்ந்தது. இதயமோ வேகமாக துடித்தது.

"ஷாக் ஆக மாட்டேன். இது நான் எதிர்பார்த்ததுதான் " என்று இயல்பாகவே அதனை எடுத்துக் கொண்டவன். தன் கையில் இருந்த மோதிரத்தை பார்த்து விட்டு எழுந்தான்.

மீண்டும் அதை பாக்கெட்டிலே போட்டுக்கொண்டு அப்படியே நிலவை வெறித்தபடி அவன் நிற்க,மெல்லிய விசும்பல் சத்தம் அவளிடம் வந்த போதிலும் அவன் திரும்பிப் பார்க்கவில்லை.

நிமிடங்கள் பல கடக்க, " போலாம்" என்று விட்டு அவன் முன்னேற, "சாரி" என்றாள் தழுதழுப்பான குரலில்.

" நீயே வச்சுக்கோ.அது எதையும் சரி பண்ணாது" என்று விட்டு அவன் முன்னேற,அவனை பின்தொடர்ந்த திகழுக்கு ஏதோ காலில் இரும்பு குண்டை கட்டியது போல் இருந்தது.

வீட்டை அடையும் போது இருவரின் நிலையும் அந்தோ பரிதாபம் தான்.

உடலும் மனமும் தளர்ந்து போய் வீட்டிற்குள் நுழைந்தனர்.

அறைக்குள் நுழைந்ததும் அவன் குளியல் அறை சென்றுவிட தன் மெத்தையில் கிடந்த கிப்ட் பாக்ஸை கண்டு புரியாமல் அதை கைகளில் ஏந்தியவள்.

ஆத்ரேயன் வரும்போது வாங்கி வந்தது தானே அது தனக்காக என்று புரிந்ததும் உள்ளம் கனத்தது.

நடும் கரங்களால் அதை பிரித்தாள்.

உள்ளே இருந்த தாலியை கண்டு, அப்படியே தளர்ந்து போய் அமர்ந்தாள்.

கால்கள் இடையே முகத்தை புதைத்து கொண்டவளுக்கு தன் சிறுவயது முதல் இப்பொழுது வரை அனைத்தும் காட்சிகளாக வர நடுங்கிப் போனாள்.

மொத்தமாக தோற்றுப்போன உணர்வில் உடல் தளர்ந்து போனது.

உடல் நடுங்க அமர்ந்திருந்தவளை புரியாமல் பார்த்தவன்.அவன் தோள் தொட உடனே இறுக்கமாக அவனை அணைத்து கொண்டாள்.

" என்னாச்சு" என்றவனின் வெற்று மார்பில் அழுத்தமாக தன் முகத்தை புதைத்துக் கொண்டவளின் இதழ்கள் நடுங்கியது.

சில நிமிடங்கள் அப்படியே நின்று இருந்தவன்.

" நீ பண்றது உனக்கே நியாயமா இருக்கா. என்னை பாவம்னே நினைக்க மாட்டியாடி" என்ற ஆத்ரேயனின் கரம் அவள் இடுப்பை சுற்றி படர்ந்தது இருக்கிறது.

அதில் இன்னும் அவள் அழுத்தமாக அணைக்க, அவள் கூந்தலில் இருந்து வந்த மல்லி வாசமும் அவள் வாசமும் அவனை கிறங்கடிக்க, உடனே தலையை உலுக்கி கொண்டவன்.

"ஒன்னும் வேணாம். முதலில் நகரு டி.அட நகரு" என்று அவளை தன்னிடமிருந்து பிரிக்க பார்க்க,மறுத்து தலையசைத்தவள்.

மீண்டும் அவனை இருக்க அணைத்துக் கொண்டதில் இருவரும் மெத்தையில் விழுந்தனர்.

அவள் கீழ இருக்க,அவன் மேல் விழுந்து கிடந்தான்.

கண் மூடி அணைத்து கிடத்தவளை அருகில்,அதுவும் சர்வ அலங்காரத்தில் கண்டவனுக்கு உள்ளுக்குள் ஆயிரம் உணர்வுகள் வெடித்தாலும் இருக்கும் நிலையை உணர்ந்து,அவள் கரங்களை விலக்க பார்த்தான்.

இன்னும் அழுத்தமாக அவன் மார்பில் புதைந்து கொண்டதில், " இதுக்கு மேலே முடியாது" என்றவன்.

தன் மார்பில் புதைந்திருந்தவள் கழுத்தை பற்றி தன்னை பார்க்க செய்ய,அவள் தவிப்புடன் பார்க்கும் போது அழுத்தமாக அவள் இதழ்களை சிறை செய்தவனின் கரங்கள் அவள் உடலில் அலைமோதியது.

அவனின் ஒவ்வொரு அணைப்பிற்கும் முத்தத்திற்கும் தன் அணைப்பின் வேகத்தை அவள் கூட்ட, அவளில் தெளியாத மயக்கத்தில் தெரிந்தே விழுந்தான்.

பட்டுப் புடவை கசங்கி தூர கிடக்க, தன்னோடு ஒட்டி கொண்டு படுத்திருந்தவளின் கேசத்தை கோதி கொடுத்தவன்.

கட்டிலின் தலை மாட்டில் மாட்டி இருந்த தன் கோர்ட்டை எடுக்க, அதில் தலையணை தூர போய் விழுந்தது.

அதைக் கண்டு கொள்ளாமல், கோர்ட் பாக்கெட்டில் இருந்த மோதிரத்தை எடுத்தவன்.

' எப்படியும் முழிச்சிருந்தால் நோ தான் சொல்லப்போற, நீ தூங்கும்போதே போட்டு விடுறேன்' என்றபடி அவள் இடகர மோதிர விரலில் அணிவித்தவன்.

அழுத்தமாக இதழ் பதிக்க, அதில் தன்னோடு ஒட்டிக்கொண்டவளை அவனும் இறுக்க அணைத்து கொண்டான்.

'என்ன தாண்டி உனக்கு பிரச்சனை ஏன் இப்படி இருக்க. சொன்னால்தானே தெரியும்' என்று மனதோடு உரையாடியவன்

அப்போதுதான் மெத்தையில் இருந்த பேப்பரை பார்த்தான்.

" இது என்ன" என்று படுத்தபடியே அதனை எடுத்தவன். அதில் இருந்த ஃபிளைட் டிக்கெட் கண்டு எழுந்தான்.

புரியாமல் மீண்டும் அவ்விடத்தை பார்க்க இன்னும் ஒரு மஞ்சள் நிற பைல் இருக்க அதை திறந்தான்.

அதில் இருந்த அப்பாயின்மென்ட் லெட்டர், தங்கும் விடுதிக்கான அட்ரஸ் அதன் ரெசிப்ட் அனைத்தையும் கண்டவன்.

பிளைட் டேட்டை பார்க்க நாளை என்று இருக்கவும் அதை தூக்கி வீசினான்.

கோபத்தில் தலையை அழுத்தக் கோதி கொண்டவன்.

ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பவளை என்ன செய்வதென்று புரியாமல் கத்தவும் கூட முடியாமல் உடனே ஆடையை அணிந்து கொண்டு வெளியேறினான்.






 
அத்தியாயம்-28

ஏசி அறையிலும்கூட முகம் வியர்த்து வழிய, மூச்சை அடைக்கும் உணர்வில் திடீரென எழுந்தவள்.

பெருமூச்சுடன் தன் அருகே பார்க்க,ஆத்ரேயன் இல்லாமல் இருப்பதை கண்டு குழம்பினாள்.

உடனே குளியலறை சென்று தன்னை சுத்தப்படுத்தி உடைமாற்றி வந்தவள்.

அறையின் மூலையில் காற்றில் படபடத்த காகிதத்தை கண்டு சர்வமும் அடங்கியது.

இதயம் அதிவேகமாகத் துடிக்க மெத்தையை பார்க்க, அதுவோ கலைந்து அலங்கோலமாக கிடந்தது.

அதில் கண்களை இறுக்க மூடி திறந்தவள். மூலையில் கிடந்த பிளைட் டிக்கெட் அப்பாயின்மென்ட் லெட்டர் அனைத்தையும் எடுத்து மீண்டும் அந்த கவரிலே போட்டவள்.

உடனே ஆத்ரேயன் எண்ணிற்கு அழைப்பு விடுத்தாள்.

முழு ரிங் சென்று அழைப்பு துண்டிக்கப்பட்டுவிட, மீண்டும் மீண்டும் அழைத்தும் எதிர்ப்புறம் அவன் எடுக்கவே இல்லை.

"ஏன் கடவுளே நான் நினைக்கிறதை எனக்கு தர மாட்டேங்கறீங்க. இது... இது அப்படியே முடிஞ்சிடும்னு நினைச்சேன்" என்று வாய்விட்டே புலம்பியவள்.

வேறு வழி இல்லாமல் டிரைவரை அழைக்க,அவரும் திகழ் குரலில் இருந்த பதட்டத்தைக் கண்டு உடனே வருவதாக கூறி வைத்தார்.

அதில் சிறிது சமன் அடைந்தவள்.அறையை விட்டு வெளியேறி அன்னபூரணி அறைக்கு வந்தாள்.

கதவை திறந்து பார்க்க, அவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்.

அதைக் கண்டு நிம்மதியுடன் வெளியே வந்து டிரைவருக்காக காத்திருக்க,சில நிமிடங்களில் வந்தவர்.

"எங்கம்மா போகணும் " என்று கேட்டதும் தான் நிதர்சனம் புரிந்தது.

ஆத்ரேயன் எங்கு சென்றிருப்பான் என்று புரியாமல் குழம்பியவள்.

" வண்டி எடுங்க.நான் சொல்றேன்" என்று மட்டும் கூறி காரில் ஏற, அவரும் மறுப்பேச்சு பேசாமல் வண்டியை எடுத்தார்.

கார் அவர்களின் ஏரியாவை விட்டு வெளியே வந்ததும் வேகம் குறைய, "பீச் போங்கண்ணா" என்றாள்.


அங்கு ஆத்ரேயனின் காரை பார்த்ததும் தான் மூச்சே வந்தது.

" நீங்க கிளம்புங்க" என்றதும் ஆத்ரேயனின் வண்டியை பார்த்துவிட்டு அவரும் சென்றார்.

தூரத்தில் புள்ளியாக தெரிந்தவனை நோக்கி ஓட்டம் எடுத்தாள்.

மூச்சு வாங்க அவன் முன் நின்றவளின் கண்கள் கலங்கி இருக்க, "ஏங்க" என்று அழைத்தவளை உறுத்து விழித்தான்.

அந்தப் பார்வையில் இருந்த கேள்வியை எதிர்கொள்ள முடியாமல் அவள் தலை குனிய, அவனோ மீண்டும் நிலவை வெறிக்க ஆரம்பித்தான்.

" இல்லை.நான் போகலை" என்று கூறும்போதே அவள் குரலில் வலி சேர,

"உனக்கு என்ன வேணும் " என்று அழுத்தமாக அவன் கேட்டான்.

அதில் தவிப்புடன் அவனைப் பார்க்க," கல்யாணம் முடிஞ்சு அடுத்த நிமிஷத்தில் உன்கிட்ட கேட்டு இருக்கணும்.ரொம்ப லேட் பண்ணிட்டேன். நான் என்னை பத்தியே யோசிச்சிட்டு இருந்துட்டேன்.இப்போ சொல்லு. என்ன வேணும் ".

அதற்கு பதில் பேசாமல் சில கணங்கள் அமைதியில் கழிய,"எனக்கான அடையாளம் வேணும். எனக்காக வாழனும்"என்றாள்.

அதை அவள் கூறும் போது அவள் குரலில் அத்தனை வலி தேங்கி இருந்தது.


அவள் கூற்று புரியாமல் பார்த்தான்.

" என்னோட அஞ்சு வயசில் முடிஞ்சிடுச்சு எனக்கான வாழ்க்கை.அதுக்கப்புறம் இப்போ வரை ஏன் வாழறேன்னு எனக்கு புரியவே இல்லை".

அவள் குரலில் இருந்த விரக்தியில், " திகழ்" என்று அழைத்தபடி அவன் அருகே வர, ஆத்ரேயனை விட்டு விலகியவள். நிலவை பார்த்தப்படி தன் கடந்த காலங்களை கூற ஆரம்பித்தாள்.

செல்வாக்கான குடும்பத்தில் பிறந்த அம்மையப்பன் குடும்பத்தில் இளையவர். அவர் அனைவருக்கும் செல்லம்.இளைய பிள்ளை என்று பொறுப்புகள் எதுவும் தர மாட்டார்கள்.

அதனால் கஷ்டம் எதுவும் தெரியாமல் தன்தோன்றித்தனமாக சுற்றிக்கொண்டு, இருக்கும் பணத்தை கரைத்துக் கொண்டிருந்தார்.

கண் கெட்ட பிறகு சூர்ய நமஸ்காரம் என்பது போல் அவரை இந்த மாதிரி வளர்த்து விட்ட தங்களை நொந்து கொள்ளாமல்,இப்படியே இருந்தால் ஆகாது.

திருமணம் முடிந்தால் மகன் திருந்தி விடுவான் என்று தவறான முடிவை எடுத்து, ஏழை குடும்பத்தில் பிறந்த வசந்தியை திருமணம் செய்து வைத்தனர்.

திருமணம் நடந்து அம்மையப்பனின் குணம் மாறவில்லை. வசந்தி தான் பொறுத்துக் கொண்டு தங்கள் குடும்ப வாழ்க்கையை சீராகக் கொண்டு சென்றார்.

வீட்டில் இளையவரான இவருக்கு திருமணம் முடிந்து இருக்க மூத்தவர் மூவருக்கும் திருமணம் ஆகாமல் இருப்பதை ஊரார் சுட்டி காட்ட, ஒன்றன்பின் ஒன்றாக திருமணம் நடந்தது.

அண்ணன்கள் தம்பிக்கும் தம்பி மனைவிக்கும் பார்ப்பது போல் வரும் மனைவிகளும் பார்ப்பார்களா? என்ன?.

அவர்கள் பார்வைக்கு அம்மையப்பனும் வசந்தியும் வேண்டாத சுமையாகி போயினர்.

அப்போது வசந்தியும் கருவுற்றிருக்க, அம்மையப்பன் ஒரு பெரும் தொகையைச் சூதாடி இழந்ததை அறிந்து, குடும்பத்தில் அண்ணிகள் ஆட்டம் ஆடிவிட்டனர்.


' இனி சொத்து எதுவும் தர முடியாது, வீட்டில் வைத்திருந்தால் இருக்கும் சொத்துக்களும் போய்விடும்' என்று அவர்கள் போட்ட சண்டையில் வசந்தி கூனிக்குறுகிப் போனார்.

கெடுதலிலும் நன்மையாக அப்பொழுது தான் தன்னிலை வீட்டில் தெரிய அம்மையப்பன் இனிமேல் தவறு செய்யமாட்டேன் என்று கூற,

பொறுப்பு வரட்டும் என்று தனியாக வைக்க முடிவெடுத்தனர்.

ஆனால் தந்தை வழி சொத்தில் பங்கு கிடையவே கிடையாது என்று அண்ணிகள் கூறிவிட,

அம்மையப்பனின் தாயோ தன் வழி சொத்தை கொடுக்க முன் வந்தார்.

'தாய் சொத்து மகளுக்குத்தான்' என்ற பேச்சு வந்தபோது, இரு அக்காக்களும் தங்கையும் விட்டுக்கொடுக்க, ஐந்து ஏக்கர் நிலமும் தோப்புவீடும் அம்மையப்பன் வசமானது.

அம்மையப்பனிடமும் மாற்றம் வர, தங்கள் உழைப்பை போட்டதில் நிலமும் செழித்து வளர ஓரளவு சமநிலை பெற்றனர்.

மகள் பிறந்ததும் அம்மையப்பன் முழுவதுமாக குடியையும் சூதாட்டத்தையும் விட்டுவிட்டு குடும்பத்தைப் பார்க்க, எளிமையான, ஆனால் நிறைவான வாழ்க்கையைத்தான் அம்மையப்பனும், வசந்தியும் வாழ்ந்தனர்.

ஒற்றைப் பெண் செல்வமான திகழ் அவர்கள் குட்டி குடும்பத்தின் உயிர்நாடியாகி போனாள். அவளின் சிரிப்பு சத்தம் அவ்வீட்டின் செல்வமானது.

அனைத்தும் நன்றாகவே சென்றது அவருக்கு மந்தாகினியின் பழக்கம் ஏற்படும் வரை.

எங்கே எப்போது ஆரம்பித்தது என்று அறியும் முன்பே அவர்கள் உறவு பற்றி ஊரில் விஷயம் கசிந்து விட, அறிவுரை கூற வந்த அண்ணன்கள் அண்ணிகளிடம் எடுத்தெறிந்து பேசி விரட்ட,சகோதரிகளையும் வெட்டி விட்டார்.


விஷயம் கேள்விப்பட்ட அன்னபூரணி கோபம் கொண்டு அவரிடம் பேசவில்லை.

அதன் பிறகு வசந்திக்கும் அம்மையப்பனுக்கும் இடையே அடிக்கடி சண்டை, தகராறு என்று இறுதியில் அடிதடி வரை போக, காரணம் தெரியாத பெண் சிட்டோ கதறி அழும்.

அவள் அழுகையை கண்டு அம்மையப்பன் சலித்தபடி வெளியே குடிக்க சென்றுவிட வசந்தியோ அவளை கட்டிக்கொண்டு கதறி அழுவார்.

தாயின் அழுகைக்கு என்ன காரணம் என்று புரியாமல் விழிப்பாள்.

இப்படியே நாட்கள் கழிய,தந்தையும் ஒரு பெண்ணும் மாலையும் கழுத்துமாக வந்து நிற்பதைக் கண்டு திகழ் குழப்பத்துடன் விழிக்க, வசந்தி கதறி அழுது மயங்கிச் சரிந்தார்.


அந்த கணங்களை இப்பொழுது நினைத்தாலும் திகழுக்கு உடல் தூக்கி வாரி போடும்.

அன்றே வீட்டை விட்டு வெளியேறி காட்டு வேலை பார்த்து தன் மகளை வளர்த்தார்.

உணவுக்கே பஞ்சம் ஆக்கிப் போன நாட்கள் அது.


பள்ளியில் போடும் மதிய உணவே அவளுக்கு திருப்தியான உணவாக உணரும் அளவிற்கு காலை மதியமும் வெறும் கஞ்சி சாப்பாடு தான்.

ஆறு மாதங்கள் தொடர்ந்த அந்த வாழ்க்கையில், அவளுக்கு தாயின் அணைப்பில் நிம்மதியான உறக்கம் மட்டுமே கிடைத்தது.

அந்த வாழ்க்கைக்கும் முடிவு வந்தது.ஒரு நாள் வயலில் மயங்கி விழுந்த வசந்தி திரும்ப எழவே இல்லை.

அம்மையப்பன் கணவனாக சடங்குகள் செய்ய, திகழின் பொறுப்பு மீண்டும் அம்மையப்பன் வசமானது.

நிம்மதியான உறக்கம் இல்லாத நாட்கள் என்றால் அதைக் கூறலாம்.

மந்தாகினி வெறுப்பை முழுவதுமாகக் கக்க, அம்மையப்பன் கண்டும் காணாமல் தன் வேலைகளைக் கவனிக்க, திகழுக்கு நெருப்பில் நின்ற நாட்கள்.


அவளுடன் பள்ளிக்கு வரும் பிள்ளைகள் மாலை விளையாடுவதும் பள்ளி பாடங்கள் செய்வதும் என்று இருக்க, அதற்கு அப்படியே எதிராக திகழுக்கு வாழ்க்கை அமைந்தது.

அடுப்புக்கு விறகுகளை பொறுக்குவது, காட்டு வேலைகளை செய்வது, வீட்டிலும் வந்து சிற்றண்ணைக்கு சமையல் வேலையில் உதவுவது என்று அவளின் நேரங்கள் மொத்தமும் அதிலே சென்றது.

சரியான உறக்கம், உணவு இல்லாமல் இருந்து உடல் நிலை கெட்டு கிடக்க போது மந்தாகினி கருவுற்றார்.

அதில் மொத்த வீட்டு வேலையும் அவள் தலையில் விடிந்தது.

பள்ளிக்கும் முழுக்கு போட்டு வீட்டு வேலை, காட்டு வேலை பார்ப்பது ஆடுகளை மேய்ப்பது என்று அவள் வாழ்க்கை நகர, பள்ளியின் தலைமை ஆசிரியர் சத்தம் போட்டு ஏதோ பள்ளிக்கு வர வைத்தார்.

சிறு வயதிலே அதிகமான பொறுப்புகளும், மந்தாகினியின் கடும் சொற்களும் அவளை உணர்ச்சியற்ற பொம்மையாக்கியது.

சதா திட்டு அந்தத் திட்டை கேட்க நிமிர்ந்தால் கூட தலையில் கொட்டு விழும்.


தலைகுனிந்து இருக்கவே பழக்கப்படுத்தி விட்டனர்.

பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதி வந்தவள். வீட்டின் வெளியே குடிபோதையில் வாந்தி எடுத்துக் கொண்டிருந்த தந்தையை கண்டு பயந்து நடுங்கினாள்.

ஏற்கனவே தீயாக காயும் சிற்றன்னை இப்பொழுது அம்மையப்பன் செயலுக்கும் தன்னை தான் வாட்டி எடுப்பார் என்று பயந்து நடுங்க, அவள் எண்ணியது போல தான் நடந்தது.

அவளது கோபம் மொத்தத்தையும் திகழின் மீது காட்ட, அவளுக்கு இரவுகள் உறங்காத நாட்களாகின.

அவளின் தலைமை ஆசிரியர் வாங்கி கொடுத்த நோட்டின் இறுதிப் பக்கங்கள் அவள் அனுபவிக்கும் வலிகளை சுமந்து நிற்கும்.

படிப்பிற்கு முழுக்கு போட்டு விட்டு வேலைக்கு செல் என்று மந்தாகினி அவளை போட்டு படுத்த, கெஞ்சி கூத்தாடியே தன் படிப்பைத் தொடர்ந்தாள்.

பள்ளி முடிந்ததும் அருகில் மிக்சர் போடும் ஃபேக்ட்ரியில் வேலைக்கு சேர்ந்தாள்.

தயாரித்த மிக்சரை அளவு பார்த்து ஒட்டி அடுக்குவது வேலை. வார சம்பளம் முழுவதையும் வந்து மந்தாகினி வாங்கி செல்வார்.

அதில் ஏதோ அவள் படிப்பை அவர் கண்டுகொள்ளாமல் இருக்க பன்னிரண்டாவதும் முடித்தாள்.

அரசு கல்லூரியில் பிஎஸ்சி படிக்க வாய்ப்புக் கிடைக்க, ஏதோ அதிசயமாக அவளை எதுவும் கூறாமல் அனுப்பினார்.

பன்னிரண்டாம் வகுப்பு முடித்ததால் கணக்கு எழுதும் வேலையும் கிடைக்க, மிக்சர் கவர் போடும் வேலையுடன் அந்த சம்பளமும் சேர்ந்தது.

அதையும் மந்தாகினி வாங்கிக் கொள்வார்.

காலையில் எழுந்ததும் வீட்டு வேலை கல்லூரிக்கு செல்வது மாலை வந்ததும் மிக்சர் போடும் வேலை இரவு வீடு வந்ததும் இருக்கும் வேலைகளை முடித்துவிட்டு அரைகுறையாக அவர்கள் வைத்திருக்கும் உணவை உண்டு விட்டு படுப்பது.இதுதான் அவளின் வாழ்க்கையாக இருந்தது.

கல்லூரியின் இறுதி ஆண்டு செல்லும்போதுதான் மனதில் புது ஆசை பிறந்தது.

இன்னும் ஆறு மாதத்தில் படிப்பு முடித்ததும் வேலை கிடைத்துவிடும். தனக்கான ஒரு அடையாளத்தை உருவாக்க வேண்டும் என்று ஆசையுடன் காத்திருந்தவளின் நினைப்பில் மண்ணள்ளி கொட்டுவது போல் ,

பெங்களூரில் மூன்று வருட காண்ட்ராக்டில் அவளை ஹோட்டல் வேலையில் சேர்த்திருந்தார்.

கல்லூரி விட்டு வந்த அவளின் கையில் பேக்கை கொடுத்து கங்கா என்றவருடன் இரவு ட்ரெய்னுக்கு செல் என்று அனுப்ப பார்த்தவரை முதன் முதலில் எதிர்த்து கேட்டாள்.

அதற்கு அவள் உடலை புண்ணாக்கும் சவுக்கடிகளோடு, மனதை வதைக்கும் வார்த்தைகளும் அமிலமாய் உமிழ்ந்தனர்.

அதன் பிறகு நான்கு வருடம் அவர்களின் கையில் பேசா பதுமையாக, அவர்கள் ஆட்டுவிக்கும் பொம்மலாட்ட பொம்மையாக மாறிப்போனாள்.
 
அத்தியாயம்-29

"இல்லை நான் போக மாட்டேன். இங்கே எனக்கு படிப்பு இருக்கு "என்ற வார்த்தைகளை முழுதாக கூட பெண்ணவள் முடிக்கவில்லை.

அதற்குள் கோபம் கொண்டு, "அடியே வீணாப்போனவளே என்னையே எதிர்த்து பேசுறியா?. நாக்கை துண்டா வெட்டி போட்டுருவேன். உன் அப்பன் வீட்டு மேல கடன் வாங்கி அது மூழ்கற நிலைமைக்கு வந்துடுச்சு.எனக்கும் என் பொண்ணுக்கும் இருக்கிற ஒரே பிடிப்பு இந்த வீடுதான். இதையும் விட்டால் நீயும் தாண்டி கழுதை நடுத்தெருவில் நிக்கணும்" என்று கோபத்துடன் இறைந்தவர்.

"ஒழுங்கா இந்த வேலைக்கு போ. தெண்டமா பூமிக்கு பாரமா இருப்பதற்கு இதையாவது செஞ்சு தொலை" என்று மிரட்டலாக கூறினார்.

"இல்லை. எனக்கு படிக்கணும்" என்று சன்ன குரலில் தலை குனிந்தபடியே கூற,

"கிழிப்ப உன்னை காலேஜ் அனுப்புனதே தப்பா போச்சு.என்னடி வாய் ரொம்ப நீளுது" என்றவர்.

அவள் தலையில் பலமாக கொட்ட அப்படியே தரையில் சரிந்தவள். கால்களிடையே முகத்தை புதைத்துக் கொண்டாள்.

பெரும் கேவலொன்று வெடிக்க, " சத்தம் வெளியே வந்தது. மொக்கி விட்றுவேன். " என்று அவர் மிரட்ட, அப்படியே வாயில் கை வைத்து அழுகையை அடக்கி கொண்டாள்.

"சனியனே. உன் அம்மா போனதும் நீயும் போய் தொலைய வேண்டியதுதானே. என் தலையில் ஏற உக்காந்துட்டு உயிரை வாங்குற. நான் என்ன பாவம் பண்ணினேனோ. இவனைக் கட்டிக்கிட்டு என் வாழ்க்கையே போச்சு" என்று தலையில் அடித்துக் கொண்டு அழுதவர்.

கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தவளை கண்டு இறங்கிய கோபம் மேலும் ஏறி,

"அடியே ஒண்ணுக்கும் உதவாமல், யாருக்கும் பயன்படாமல் இப்படி மண்ணு மாதிரி தான் இருப்பியா?. இனியும் தண்டமா உன்னை எங்க வீட்டில் வச்சுட்டு இருக்க முடியாது.உனக்கும் எங்களை விட்டால் யாருடி இருக்கா?. ஒழுங்கா அந்த வேலையில் சேர்ந்து கடனை அடைக்க பாரு",

" என் படிப்பு" என்று தேம்பலுடன் அவள் கேட்க.

" அடியே நானும் பார்க்கறேன். அவ்ளோ ஏத்தமா உனக்கு. இங்க நானும் என் பொண்ணு காட்டு வேலைக்கு போய் சோறு தின்னுட்டு இருக்கோம்.உனக்கு படிப்பு கேட்குதாடி" என்று அருகில் இருந்த கட்டையை தூக்கி, அவள் மீது வீச அது பலமாக தோள்பட்டையை பதம் பார்த்தது.

வலி உயிர் போய் கத்த அதற்கும் திட்டும் கொட்டும் விழுந்தது.

" வீட்டில் ஒப்பாரி வைத்து தொலையாத. படிச்சு மட்டும் நீ என்ன கிழிக்க போற. உன்னை வளர்த்து விட்டதே தப்பு. தண்டம் ஒரு தேவைக்கும் உதவாமல் மண்ணு மாறியே கிட" என்று புலம்பி விட்டு ஒரு மூலையில் அமர்ந்து அழுதவர்.

இடையிடையே திகழை கரித்துக் கொட்டினார்.

" இந்த நாயை வளர்த்து விட்டதற்கு என்னை செருப்பால்தான் அடிக்கணும். இத்தனை நாள் சோறு போட்ட நன்றியும் இல்லை. உன்னை எல்லாம் அப்பவே வீட்டை விட்டு துரத்தி இருக்கணும் டி. மூணு வேளை சோறு துணிமணி கிடைச்ச திமிரில் ஆடுற".

" உன்னை வீட்டில் வைத்து தரித்திரம் பிடிச்சு தான் இப்படி இருக்கோம்.எல்லாம் போச்சு. நடுவீதியில் தான் வந்து நிக்கணும் தரித்திரம் புடிச்ச கழுதை".

" ஆத்தா செத்து அனாதையா கிடந்த நாயிற்கு இடம் கொடுத்ததற்கு இப்போ உன் புத்திய காட்டிட்ட இல்ல. நன்றி கெட்டவளே".

என்று திகழை வாய்க்கு வந்தபடி திட்டிக் கொண்டிருக்க,

" அடியே தெரு வர சத்தம் கேட்கிறது ஏன் இப்படி கத்தற " என்று தள்ளாடியபடி வந்த அம்மையப்பனை கண்டு வெறி கூடியது.

"எல்லாம் உன்னால் தாண்டா. இப்போ வீடு மூழ்கி போக போகுது".

" வீணா போய் நீ குடிச்சு கடன் பட்டதுக்கு நானும் என் பெண்ணும் தெருவில் நிற்கனுமாடா .இதில் உன் பொண்ணு வேலைக்கு போய் உன் கடனை அடைக்க மாட்டாளாம். அதுவும் சரிதானே துப்பு கெட்ட நீ இருக்கும் போது அவ எதுக்கு அடைக்கணும்னு நினைப்பா. நீ
எல்லாம் ஒரு ஆம்பளையா" என்று கேட்டதும்,

அம்மையப்பனுக்கு கோபம் சுள்ளேன்று ஏறியது.

"ஏய் வாயை மூடு டி" என்று ஆங்காரமாக கத்திக் கொண்டே அடிக்க வந்தார்.

"அதை பொண்ணு கிட்ட சொல்லு. ஊர் பார்த்து சிரிக்கும் முன்னால் வேலைக்கு இவளை அனுப்பலை. நடுவீதியில தான் நிக்கணும் "

"இவ வேலைக்கு போக வாங்குன அட்வான்ஸ் பணதில் தான் கடங்காரன் கேட்ட வட்டி கொடுத்து அனுப்பி இருக்கேன். இவ மட்டும் இப்போ வேலைக்கு போகலை" என்று நாக்கை கடித்து கொண்டு மந்தாகினி வரவும்,

அம்மையப்பன் வேகத்துடன் மகளிடம் திரும்பினார்.

"நீ கிளம்பு" என்று பெட்டியை தூக்கி அவள் பக்கம் போட, " இல்லை படிக்கணும்" என்று திகழ் கூறியதும் சப் என்ற சத்தத்துடன் அறை விழுந்தது.

"ஏத்தம் கூடிப்போய் எதிர்த்து எதிர்த்து பேசிட்டு இருக்கீங்களா?" என்று ஆணவம் ஏறி அகங்காரத்தில் கத்தியவர். சுவரில் மாட்டி இருந்த சாட்டையை எடுத்து அடித்தார்.

திகழ் அலறல் சத்தத்தில் வீடு அதிர்ந்தது.

மந்தாகினி கூட இதனை எதிர்பார்க்கவில்லை. மீண்டும் மீண்டும் சாட்டையால் அடிக்க,அப்படியே உடலை குறுக்கிக்கொண்டு சுருண்டு படுத்தாள்.

சாட்டையை தூர போட்டவர். " நான் வரும்போது நீ வீட்டில் இருக்கக் கூடாது ஒழுங்கா வேலைக்கு போ. நன்றி கெட்டதுங்க.ஒரு தேவைக்கும் பயன்படுறதில்லை. நானே தான் இதுங்களுக்கு வடிச்சு கொட்டனும்" என்று மூவரையும் சாடிவிட்டு தள்ளாட்டத்துடன் சென்றார்.

பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்தவளை கண்டு, " அடியே" என்று தோளை தொட்டு உலுக்க பதறி கொண்டு எழுந்தவள்.ஒரு மூலையில் அப்படியே சுருண்டு அமர்ந்து கொள்ள,

"ஏண்டி உன்னை வேலைக்கு அனுப்பிட்டு நாங்க மட்டும் என்ன சுகபோக வாழ்க்கையா வாழ போறோம். நான் இந்த வயலிலும் காட்டிலும் தான் வேலை பார்க்கணும்".

" அப்படியே நீ படிச்சு முடிச்சு மட்டும் என்னத்த கிழிக்க போற".

"இத்தனை நாள் சோறு போட்ட உன் அப்பனுக்கு ஆவது உபயோகமா இரு" என்று அதிசயத்திலும் அதிசயமாக பொறுமையாக கூறி,கையில் துணிப்பையை திணிக்க தள்ளாட்டத்துடன் எழுந்தாள்.

"இங்க பாரு ஹோட்டல் சூப்பர்வைசரா என் பெரியம்மா பொண்ணு வேலை பார்க்குறா. வேலைக்கு தான் நான் அனுப்புறேன் வேற எதுக்கும் இல்லை ஏதாவது தகுடுதத்தம் பண்ணுனா அசிங்கமாய் போய்டும்".

"ஒழுங்கா வேலையை மட்டும் கவனி" என்று கூறும் போதே மந்தாகினியின் பெரியம்மா பெண் கங்கா வந்தாள்.

"எல்லா விவரமும் சொல்லிவிட்ட தானே" என்று பட்டும் படாமல் கேட்க, ஆம் என்று தலை அசைத்த மந்தாகினி, " கொஞ்சம் சூதானமா வச்சி இரு "என்றார்.

உடலிலும் மனதிலும் வலியை சுமந்து கொண்டு பேருந்தில் ஏறினாள்.

ஏழு மணி நேர பயணத்திற்கு பிறகு பெங்களூரை அடையும்போது உடல் அனலாய் கொதித்தது.

நகரின் பிரதான இடத்தில் இருக்கும் பைவ் ஸ்டார் ஓட்டல்.

வெளிப்பார்வைக்கு எத்தனை அலங்காரமாக பிரம்மாண்டமாக காட்சியளித்ததோ அவை அனைத்திற்கும் காரணம் உள்ளுக்குள் இருந்த பணியாளர்களின் உழைப்பு சக்கையாக உறிஞ்சப்பட்டது தான்.

அவளின் காய்ச்சல் கண்டுகொள்ளப்படாமல் போனது. உடல் சோர்விலும் காய்ச்சலிலும் முதல் நாள் வேலை ஆரம்பமானது.

காலை ஐந்து மணிக்கு ஆரம்பிக்கும் வேலை இரவு 12 மணிக்கே முடிந்தது.

மொழி வேறுபாடு, உடல்நிலை குறைவு இடைவிடாத வேலை என்று அத்தனை கொடூரமாக அந்த நாள் சென்றது.

அவள் வந்து ஒரு நாள் முழுவதுமாக முடிந்த பிறகும் யாரும் அவளுக்கு அழைக்கவில்லை.

கங்கா எதற்கெடுத்தாலும் எரிந்து விழுந்தார். அவரை மட்டுமே தெரிந்த திகழுக்கு அவரின் கோப முகம் இன்னும் அவளை ஒதுங்கி போக வைத்தது.

நாட்கள் மாதமாக கடந்தது.

மொழியை கற்றுக்கொண்டாள். ஆனால் யாரிடமும் பழக முயற்சிக்கவில்லை.

அதற்கான நேரமும் இல்லை. பல மாதங்கள் கடந்த பிறகு தான் காங்காவின் வேலையும் தன்னிடம் ஒப்படைக்கப் படுவதை உணர்ந்தாள்.

ஞாயிற்றுக்கிழமை கூட ஓய்வில்லாத வேலை.

ரூம் கிளீனிங்கில் இருந்து ரெஸ்டாரண்டில் கஸ்டமர் உண்ட எச்சில் தட்டில் எடுப்பது வரை அத்தனை வேலையும் செய்தாள்.

அந்த ஹோட்டலில் அவளிடம் பேச முயற்சித்த ஒரே நபர் ஜோசப் தான்.55 வயதான அவர். கிச்சனில் செஃப்.

ஏனோ அமைதியுடன் உணர்ச்சியற்ற பதுமையாக இருப்பவள் மீது பாவம் பட்டு அவ்வப்போது விசாரிப்பவர். மீதமான ஏதாவது ஒரு உணவு பொருளை கொடுப்பார்.

அவர் கேட்கும் கேள்விகளுக்கு மட்டும் வாய் திறந்து பதிலளிப்பாள்.

கிச்சனில் அனைத்தையும் சுத்தப்படுத்தி முடித்துவிட்டு சிறிது நேரம் அமர்ந்திருப்பாள்.

தன் ஷிப்ட் முடித்து வரும் ஜோசப்பும் சிறிது நேரம் அவளுக்கு துணையாக நின்று இருப்பார்.

அப்போது பலவகை நாடுகளின் உணவுகளைப் பற்றி அவர் விவரிப்பதை அமைதியாக கேட்டுக் கொண்டிருப்பாள்.

கிச்சன் மூடும் முன் அந்த உணவின் சமைக்கும் முறையை செய்து காண்பிப்பார்.

ஏனோ அதில் ஆர்வம் கொண்டு நேரம் ஆனாலும் பரவாயில்லை என்று ஜோசப்போடு அவர் செய்வதை பார்த்துக் கொண்டு இருப்பாள்.அவளுக்கு இருக்கும் ஒரே பொழுதுபோக்கு அது மட்டும் தான்.

அந்த ஹோட்டலை விட்டு வெளியே செல்ல அனுமதி இல்லை.

தேவையான பொருட்களை கங்காவே வாங்கி தர, அவளின் நாட்கள் அந்த ஹோட்டலிலும் அவளுக்கான அறையிலுமே கழிந்தது.

பண்டிகை நாட்களில் ஹோட்டல் புக்கிங் அதிகமாகும் என்பதால் காண்ட்ராக்டில் வந்த பணியாளர்களுக்கு விடுப்பு கிடையாது.

மிக மிக நீண்ட மூன்று வருடங்கள்.

அங்கு இருந்த அடிமட்ட வேலையில் இருந்து உயர் தர உணவுகளை சமைக்கும் முறை வரை அனைத்தையும் கற்று வாழவே விருப்பம் இல்லாமல் மீண்டும் ஊர் திரும்பினாள்.

மீண்டும் ஊர் திரும்புகிறோம் என்ற பூரிப்பு சிறிதும் இல்லை.

தலை குனிந்தபடியே வீட்டிற்குள் வந்தவள். அம்மையப்பன் தன்முன் நிற்பது உணர்ந்து நின்றாள்.

"வா மா" என்று தழுதழுத்த குரலில் வரவேற்றார்.

அதற்கு மௌனமாக தலையசைத்து விட்டு அவள் நகர, மந்தாகினியும் அவரின் பின் கீர்த்தனாவும் அமைதியாக நின்று கொண்டனர்.

அவளிடம் நலம் விசாரிப்பும் இல்லை.

குளித்து உடைமாற்றி வந்தவள். இயல்பாக எப்பொழுதும் போல் சமையலை கவனிக்க ஆரம்பித்தாள்.

" ஏன் வந்ததும் சமையல் கட்டுல நிக்கற. நான் ஏதோ உன்னை கொடுமை படுத்துற மாதிரி மத்தவங்க நினைக்கணுமா" என்று மந்தாகினி கடுகடுத்தார்.

அதில் அம்மையப்பன் முறைக்கவும் அப்படியே வாயை அடக்கி கொண்டார்.ஏதோ இந்த மூன்று ஆண்டுகளாக அம்மையப்பன் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கிறார்.

வயல் வேலை பார்த்து ஓரளவு கடனையும் அடைத்தார்.

திகழ் வருவது தெரிந்தாலும் சமைக்கவில்லை.

சமைக்கவில்லை என்பதை விட சமையலுக்கான நேரம் ஆகவில்லை. எப்போதும் செய்வது போல் தானே சமைக்கப் போகிறோம் என்ற அசால்டில் விட்டு விட்டார்.

இப்பொழுது திகழ் சமையல் அறைக்குள் நுழைந்து கொள்ள வேலை மிச்சம் என்று அமைதியாக நின்று கொண்டார்.

மீண்டும் வீட்டின் வேலை,வயல் வேலை என்று நாட்கள் சென்றது.

களை பறித்துக் கொண்டிருந்தவளிடம் வந்த அம்மையப்பன் தொண்டையை செரும, எதுவும் பேசாமல் அவர் முன் தலை குனிந்து நின்றாள்.

"அப்பா மேல கோவமா?" என்றவரை புரியாமல் பார்த்தார். அதில் அந்த மனிதர் அடிபட்டு தான் போனார்.

இத்தனை நாட்கள் தன் மகளுக்கு என்ன செய்தோம் என்று புரிந்தது.

அதில் பெருமூச்சு விட்டுக் கொண்டவர்.

" காலேஜில் பேசிட்டேன் கடைசி பரிட்சை மட்டும் இப்போ வர ஏப்ரலில் எழுதிக்கலாம்னு சொன்னாங்க. எழுதுறியா "என்றதும் அந்த கண்களில் வந்த பிரகாசத்தில் செருப்படிப்பட்டது போலானது.

"ஏதோ புத்தி கெட்டு போய் பண்ணிட்டேன். தப்புதான்" என்று விட்டு மௌனம் காக்க,திகழ் அதை காதிலே விழாத தோரணையில் நின்று இருந்தாள்.

"வீட்டிலே அடைப்பட்டு கிடக்காத. வயல் வேலை எல்லாம் நான் பாத்துக்குறேன். வேற ஏதாவது செய்ய ஆசை இருந்தால் பண்ணு" என்றதும் அவளுக்கு உதித்தது கேட்டரிங் பிசினஸ் தான்.

கிராமத்தில் ஓடாது என்று புரிந்தாலும் தனக்கு நன்றாக தெரிந்ததை செய்வோம் என்று ஆரம்பித்தது.

ஃபேக்டரிக்கு செல்லும் ஆண்களுக்கு கலவை சாதம், பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்களுக்கு வடை போண்டா பஜ்ஜி போன்ற தின்பண்டங்கள், கட்டிட,வயல் வேலைகளுக்கு செல்பவர்களுக்கு டீ என்று ஓரளவு கையை கடிக்காமல் வருமானத்துடன் அவளின் கேட்டரிங் பிசினஸ் சென்றது.

அவளின் கை மணத்திற்காக கல்யாணத்திற்கான உணவு ஆர்டர்களும் கிடைக்க, உடன் இரண்டு பெண்களுடன் அதையும் எடுத்து செய்தாள்.

"அடியே இந்தாடி " என்றழைத்த சித்தியை கண்டு அவர் முன் சென்று நின்றாள்.

" இங்க பாரு உன் அப்பன் என்னமோ பெருசா பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி கிழிக்கிறேன்னு வரன் பார்த்துட்டு இருக்கான்"

" அப்படியே கிடப்பனு நினைச்சேன் பரவால்லை புத்தி வந்து உன் அப்பன் மாப்பிள்ளை பார்க்கிறானே. எங்களால் எல்லாம் படிச்சு உத்தியோகத்தில் இருப்பவனைக் கட்டி வைக்க முடியாது.பவுனா சேர்த்து வச்சிருக்கோம். உன் அப்பன் பார்க்குற வரனை சரின்னு சொல்லி கல்யாணம் முடிக்கிற வேலைய பாரு. இன்னும் எங்க தலையிலே உட்கார்ந்து இருக்க மாட்டேன்னு நினைக்கிறேன் " என்றவர் பேச்சு அத்தோடு முடிந்தது என்று சென்றார்,

அதற்கும் கூட எதுமே அவள் கூறவில்லை அமைதியாக வேலைகளை கவனித்தாள்.

இரவு ஒரு போட்டோவை அவர் தர,அதை சீண்டி கூட பார்க்காமல் கேள்வியாக அவரை நோக்கினார்.

"பையன் படிக்கலை. காட்டு வேலை தான் பார்க்கிறான். ஆனால் உழைப்பாளி.விசாரிச்சிட்டேன்.உனக்கு சரியா?".

அதற்கு திகழ் தலையசைத்து விட்டு படுக்க சென்ற விட, அம்மையப்பனுக்கு தான் தவறிய இடங்கள் எல்லாம் வலிக்க வலிக்க புரிந்தது.

இனிமேலாவது அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்து தர வேண்டும் என்று நினைத்துக் கொண்டார்.

கயிற்று கட்டலில் படுத்தவருக்கு கடந்த காலம் வலியை தந்தது.திகழ் சென்ற பிறகுதான் அவள் எத்தனை தன் குடும்பத்தை தாங்கியுள்ளாள் என்பதே புரிந்தது.

கடன் தொல்லையாலும், ஊரில் யாரும் மதிக்காததாலும் மெல்ல மெல்ல நிதர்சனம் புரிந்தது.

குடியும் உதறித்தனமாக சுற்றுவதை நிறுத்திவிட்டு மெல்ல வயலில் வேலை செய்ய ஆரம்பித்தார்.

இன்னும் கடன் இருக்கிறது தான். ஆனாலும் இன்னும் திகழே தங்களை தாங்குவதே எண்ணி உள்ளுக்குள் நொந்து போனார்.

இனிமேலும் தன் மகளை கஷ்டப்படுத்தாமல் அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்து தருவோம் என்று மனதில் உறுதி கொண்டார்.

கடன் வாங்கியே திருமணம் நடத்த மந்தாகினி அதுக்கு முகத்தை திருப்பிக் கொள்ள, அம்மையப்பனோ தன் மகளுக்கு திருமணத்தையாவது சரியாக செய்வோம் என்று தன்னால் முடிந்த அளவுக்கு திருமண ஏற்பாடுகளை கவனித்தார்.

உடன் பிறந்தவர்கள் அனைவருக்கும் பத்திரிகை வைத்தாலும் யாரும் வருவதற்கு தயாராகயில்லை என்பது அவர்களின் முகபாவணையில் புரிந்தது.

அன்னபூரணி நினைவு வர, உடனே அவருக்கு பத்திரிக்கையை போஸ்டர் அனுப்பி விட்டார்.

வரமாட்டார் என்று நினைக்கும் போது வந்தது அத்தனை நிம்மதியாக இருந்தது.

"இந்தப் பாவியை மன்னிச்சிட்ட இல்ல அது போதும் தாயே" என்று கைகளைப் பிடித்துக் கொண்டு கண்ணீர் விட்டவரை கண்ட அன்னபூரணிக்கு உள்ளுக்குள் வருத்தம் தான்.

எத்தனை சந்தோஷமாக இருந்தான். அத்தனையும் கெடுத்துக் கொண்டானே என்று உள்ளுக்குள் வருந்தினார்.

அப்பொழுது வாயிலில் கூச்சல் சத்தம் கேட்கவே அங்கு சென்றனர்.

தலைவிரி கோலமாக கைக்குழந்தையுடன் ஒரு பெண் அழுது கொண்டே செல்வது தெரிய, "என்ன நடக்குது இங்கே" என்று அம்மையப்பன் சத்தமிட்டார்.

"முத்துவோட பொண்டாட்டி " என்று அவர்களுக்குள்ளே கிசு கிசுத்து கொள்ள, அன்னபூரணிக்கோ ஒன்றும் புரியவில்லை.

"என்ன சொல்றாங்க இவங்க" என்று வினாவியப் படி திரும்பிய அன்னபூரணி நெஞ்சை பிடித்துக் கொண்டு நின்று இருந்த தம்பியை கண்டு,

"அப்பு என்னாச்சு" என்று பதற, மாப்பிள்ளை என்று அழைத்தபடி அவர் மணமகன் அறைக்குள் சென்று விட, அன்னபூரணியும் பின்னால் விரைந்தார்.

"என்னப்பா ஏதோ ஒரு பொண்ணு பொண்டாட்டி உன் குழந்தைன்னு வந்து நிக்குது" என்று தடதடக்கும் இதயத்தோடு கேட்டார்.

"அதை விடுங்க" என்ற மணமகன் தாயை பரிதவிப்புடன் பார்த்தார்.

அன்னபூரணிக்கு விஷயம் பிடிப்பட்டுவிட்டது.

"ஒழுங்கா என்னனு சொல்றீங்களா? இல்லையா " என்று மிரட்டியதும்,

" என்ன ஊர் உலகத்தில் நடக்காததா. ஏன் உன் தம்பி பண்ணததா" என்று வார்த்தைகள் முற்ற அன்னபூரணியும், "என்ன சொல்றாங்க இவங்க",

"தெரியல விசாரிச்ச வரையும் இந்த பொண்ணு பத்தி எல்லாம் எதுவும் தெரியலையே " என்று பரிதவிப்புடன் கூறினார்.

"இப்ப என்ன அந்த பொண்ணுக்கும் முத்துக்கும் ஆறு மாசத்துக்கு முன்னாடியே எல்லாம் முடிஞ்சிடுச்சு. மாசத்துக்கு அஞ்சு பத்து கொடுத்தால் வரமாட்டா " என்று அசால்டாக மணமகன் தந்தை கூற,

"என்ன இப்படி எல்லாம் பேசுறீங்க" என்று கோபத்துடன் கேட்க, வாதம் முற்றி அம்மையப்பன் முத்துவின் சட்டையை பிடிக்க, பதிலுக்கு அவன் பிடிக்க தளர்ந்து போய் விழுந்தார்.

சட்டை கிழிந்து அமர்ந்திருந்த தம்பியை கண்டு நொந்து போனவர்.
வேறு வழியே இல்லாமல் தன் மகனை நெருங்கினார்.

திருமணம் நின்ற அடுத்த கணமே, " அடியே இவளே.எங்க தலையில் ஏறி உக்காந்து இன்னும் எவ்வளவு காலம் தான் பாரமா தொங்க போற. ஒரு விடிவே இதற்கு இல்லையா?. எங்காவது போய் தொலைடி.யாருக்குமே உபயோகம் இல்லாமல் பாரமா இருந்து எங்க உசுர வாங்குற" என்று அவள் தலையில் கொட்ட, தலை குனிந்தபடி மௌனமாக கண்ணீர் வடித்தாள்.

சில நிமிடங்களில் அழுது கொண்டிருந்தவளின் கழுத்தில் மீண்டும் மாலையிடப்பட்டு, மணமேடையில் அமர வைக்கப்பட்டாள்.

மீண்டும் ஒரு முறை வேண்டாத பாரமாகிப் போனாள்.
 
அத்தியாயம்-30

பேச்சற்ற கனத்த அமைதியில், அலையோசை மட்டுமே அங்கு ஒலியானது..

ஆத்ரேயன் இதனை ஓரளவு எதிர்பார்த்தான் தான்.

ஆனால்,இத்தனை ஆழமாக காயப்பட்டு இருப்பாள் என்று நினைக்கவில்லை.

அதிர்வுடன் திகழை நோக்க, "இங்கு என்னோட தேவை ரொம்ப ரொம்ப குறுகியது. அவங்க தேவையை தீர்க்கணும் அவ்வளவுதான்.அந்த தேவை தீர்ந்ததும்,நான் தேவை இல்லாத குப்பையாகிடுவேன்" என்றவள் விரக்தியாக சிரிக்க,

" நான் இதை எதிர்பார்க்கலை " என்று கூறியவன்.அவளை தன்னோடு இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.

அந்த வலிகளில் இருந்து அவளைக் காப்பது போல் அத்தனை இறுக்கமான அணைப்பு.

திருப்பி எல்லாம் அவள் அணைக்கவில்லை. அப்படியே நின்று இருந்தாள்.

அவன் அணைப்பு மூச்சை முட்டியதில் நிமிர்ந்து பார்க்க, " என்னடா" என்றபடி அவளின் தலையை ஆதரவாகக் கோதி கொடுத்தான்.

" எனக்கு புரியலை. நான் எந்த மாதிரி ஒரு வாழ்க்கையை வாழ்கிறேன் என்று. என் கூட இருக்கிறவங்களுக்கு நான் ஒரு கஷ்டம். எனக்கு ரொம்ப குழப்பமா இருக்கு" என்று அவள் கண்ணீர் சிந்த,

"ஏய் அழாத. உனக்கு ஒன்னும் இல்லை எல்லாம் சரியாகிவிடும்" என்று ஆதரவாக கூறிப்படி,அவள் முகத்தை தன் மார்போடு புதைத்து கொண்டான்.

" நானும் ஒவ்வொரு தடவையும் இப்படி தான் நினைச்சுப்பேன்" என்றவளை அவன் புரியாமல் குனிந்து பார்த்தான்.

" அவங்க அடிக்கும் போதும்,திட்டும்போதும் என்னை படிக்க வேணாம்னு சொல்லும் போதும், என்னை பெங்களூருக்கு வேலைக்கு அனுப்பும் போதும், கல்யாணம்னு சொல்லும் போதும், உங்களை கல்யாணம் பண்ணும் போதும்".

"இங்கே யாருக்கும் நான் தேவை இல்லை. ஒருத்தரோட வாழ்க்கையில் தேவையே இல்லாமல் நான் திணிக்கப்படுகிறேன். அதில் அவங்க கோவத்தை தானே கட்டுவாங்க.அதனால் நான் எதையும் எதிர்பார்க்க மாட்டேன்".

"என்னடி பேசற. அதை எல்லாம் விடு " என்று அவள் பேச்சை தடுத்தான்.

இத்தனை நாட்கள் பேசவில்லை என்று மருகியவன். இப்பொழுது அவள் பேசுவதை தாங்கும் மனம் இல்லாமல் நிறுத்தினான்.

ஆனால்,இத்தனை நாளும் மௌனத்தையே பதிலாக கொண்டவள் மனம் இன்று வெடித்து சிதறியது.

தன் கன்னத்தில் படிந்து இருந்த அவன் கையை விலக்கியப்படி,

" என் வாழ்க்கையில் நான் எல்லாருக்கும் பாரமா தான் இருக்கேன். ஏதோ ஒரு விதத்தில் என்னால் அவங்க பாதிக்கப்படுறாங்க.அதிலும் ரொம்ப முக்கியமா உங்களுக்கு".

" யார்னே தெரியாத என்னை உங்களை மாதிரி ஒருத்தருக்கு கல்யாணம் பண்ணனும்னு கட்டாயப்படுத்தும் போது, நீங்க எவ்ளோ கஷ்டப்பட்டு இருப்பீங்கன்னு புரியுது" என்று உணர்வுகள் காட்டாத குரலில் மொழிந்தாள்.

"ஏய் அப்படி எல்லாம் இல்லை. இதை விடு " என்று அந்தப் பேச்சை கத்தரிக்கப் பார்த்தான்.

அதில் மறுப்பாக தலையசைத்தவள்.

"எனக்கு தெரியும் பிடிக்காத ஒரு விஷயத்தைக் கட்டாயப்படுத்தும் போது எப்படி இருக்கும்னு. அதை நான் பலமுறை அனுபவிச்சு இருக்கேன். அப்படி நினைப்பவள் எப்படி உங்களுக்கு கஷ்டத்தை கொடுப்பேன்".

ஏனோ அப்பேச்சின் திசை விபரீதமாக திரும்புவது போல் தோன்ற," போதும் போலாம்" என்று அவன் அங்கிருந்து அவளை இழுத்துச் செல்ல,

" நோ முடியலை.மூச்சு முட்டுது ஆத்ரேயா" என்றவளை மீண்டும் அவன் இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.

ஏனோ இதயம் படபடத்தது.

"எனக்கு இந்த ஒட்டுண்ணி வாழ்க்கை மூச்சு அடைக்குது வேண்டாம். என்னை பரிதாபமா, சுமையா பார்க்கிற வாழ்க்கை எனக்கு வேண்டாம்".

" பேசாதேன்னு சொல்றேன் இல்லடி" என்று அதட்டியவன்.

அவள் முகத்தில் இருந்த வலியை கண்டு, ப்ளீஸ் என்று மறுப்பாக தலையசைத்த படி,அவள் தோளில் முகம் புதைத்தான்.

"என்னை ஒருத்தர் கட்டாயம் படுத்தும்போது ரொம்ப கஷ்டமா இருக்கும்.அப்புறம் வேற வழியில்லாமல் ஏத்துப்பேன். அதே மனநிலை தான் உங்களுக்கு".

"வாயை பொளக்க போறேன் பாரு.அமைதியா இருடி. நீ சொல்றது எனக்கு புரியலை. புரியவும் வேண்டாம் அமைதியா மட்டும் இரு".

"இல்லை நான் என்னவா இருக்கேன்னு எனக்கு புரியலை. உங்களுக்கு பாரமா இருக்க கூடாது.யாருக்குமே பாரமா இருக்கக்கூடாது நான் நினைக்கிறேன்".

"உன்னை பாரமா யார் நினைச்சா" என்று அவன் எகிறி கொண்டு வர, அவளோ அசராமல் நின்று இருந்தாள்.

" ஸ்டாக்ஹோம் சின்ட்ரோம் கேள்விப்பட்டு இருக்கீங்களா?. அதில் கடத்தப்பட்டு அந்த கடத்தல் காரனோட ரொம்ப நாள் இருக்கும்போது அவங்களோட நல்ல பக்கங்களை தேட ஆரம்பிச்சுடுவோமாம். ஒரு சில நேர்மறை குணங்களை பார்க்கும்போது அவங்க மேல ஒரு சாஃப்ட் கார்னர் வரும். அது மாதிரி தான் நானும் உங்களுக்கு" என்றவள் விளக்கம் வேம்பு போல் கசந்தது.

"ஏய் பேசாதே?" என்று கோவத்துடன் அவள் கழுத்தை அழுத்தமாக பற்றியவன்.

தளர்ந்து போய், "ப்ளீஸ் பேசாதடி " என்று அவள் நெற்றியோடு நெற்றி முட்டினான்.

மற்றவரின் மூச்சுக்காற்றின் கீதம் மட்டுமே காதில் கேட்கும் அளவு நெருங்கி நின்று இருக்க,

" உங்களைக் கட்டாயப்படுத்தி என்னை கல்யாணம் பண்ணி வச்சாங்க " என்று செய்தியாக கூறியவளைக் கோபத்துடன் பார்த்தவன்.

"அதை தான் விடேன்டி. இப்பதான் எல்லாம் சரியாயிடுச்சு இல்ல".

" இல்லை சரி ஆகலை. இப்பயும் அதே கட்டாயம் தான் ஆனால் என்னை.. இது இது என்னை.. சத்தியமா சொல்ல தெரியலை " என்று அழுதவள்.

" எனக்கு எனக்கு எதுவும் வேண்டாம். எனக்கு நான் தனியா இருக்கணும். யாருக்கும் பாரமாக, யாரோட வாழ்க்கையிலும் திணிக்கப்பட்ட ஒரு விஷயமாகவும் நான் இருக்க வேண்டாம்".

"எனக்கான ஒரு அடையாளம் வேணும். அதை நோக்கி ஓடனும். எனக்கு உண்மையா என்னதான் வேணும்னு தெரியணும். எனக்காக வாழற வாழ்க்கை எப்படி இருக்கணும்னு தெரியணும். சுதந்திரமா ஒரு முடிவை எடுக்கணும். அந்த வாழ்க்கை எப்படி இருக்கணும்னு நான் பார்க்கணும்" என்று தவிப்புடன் கூறியவள்.இறைஞ்சலுடன் அவனைப் பார்க்க,

ஆத்ரேயன் தொண்டையில் முள் சிக்கிக் கொண்டது போல் தவித்தான்.

ஆழ்ந்த மூச்சுகள் மட்டுமே ஆத்ரேயனிடம் இருந்து வந்தது.கண்களை இறுக்க மூடி திறந்தவன்.

தலையை அழுத்தக் கோதி கொண்டான்.நெற்றியை இறுக்கமாக பற்றி கொண்டு தவிப்புடன் அவளை பார்த்தவன்.

அவள் கன்னத்தை தன் கைகளில் ஏந்தி கொண்டு தன்னைப் பார்க்க செய்தான்.

இருவரின் விழிகளும் நீர் படலம் நிறைந்திருக்க, பார்வையால் மற்றொருவருக்குள் ஊடுருவினர்.

"உனக்கு என்ன வேணும்னாலும் பண்ணு. ஆனால் என் கூட இருந்து. நம்ப லைப் நல்லா ஆயிடுச்சு. நான் உன்னை நல்லா பார்த்துப்பேன். எனக்கு தெரியலை. நீ இல்லாமல் எப்படி டி நான்" என்று அவன் தவிக்க,

அதில் கண்மூடி விசும்பினாள்.

அவன் தவிப்பான முகத்தை கண்டு தாங்க முடியாமல் அவனை இறுக்க அணைத்தவள்.

" உங்க கூடயே நான் இருக்கேன்" என்று உறுதியாக கூற, ஆசுவாசம் அடைந்தான்.

பல நிமிட அணைப்பு, சில நிமிட ஆறுதல் என்று மீண்டும் வீட்டிற்கு வந்தனர்.

இன்னும் விடிய நேரம் இருக்க கட்டிலில் ஒருவர் அணைப்பில் மற்றொருவர் சுருண்டனர்.

அவள் அயர்ந்து உறங்கி விட, ஆத்ரேயன் மனமெங்கும் பலவித யோசனை.

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவளை பார்க்க அவள் முகத்தில் சோர்வு கொட்டி கிடந்தது.

அயர்ந்து போய் கிடந்தவளின் கேசம் கோதியப்படி அந்த இரவை கழித்தான்.

வெளிச்சம் முகத்தில் பட யோசனையுடன் தயாராகி வந்தவன். திகழ் கண்விழிக்கக் காத்திருந்தான்.

உறக்கம் களைந்து எழுந்தவள். தன்னை பார்த்தபடி அமர்ந்திருப்பவனைக் கண்டு மெல்ல புன்னகைக்க, அவளின் கண்ணம் தாங்கி தன்னைப் பார்க்க செய்தான்.

"உன்கிட்ட கேட்காத ஒரு விஷயம். இப்போ தெரிஞ்சுக்கணும்னு ஆசைப்படுறேன்".

என்ன என்று புரியாமல் அவள் விழிக்க "உனக்கு என்னை பிடிக்குமா?" என்று அவள் முகத்தை ஆராய்ந்தப் படி கேட்டான்.

அதில் கணம் கூட தாமதிக்காமல், "எனக்காக நடுராத்திரி காட்டுக்குள் தனியாளா வந்து என்னை காப்பாத்தி இருக்கீங்க. எனக்காக யாருமே இந்த மாதிரி தன் உயிரை கணக்கில் கொள்ளாமல் நான் முக்கியம்னு வந்ததில்லை. ஆனால் நீங்க வந்தீங்க" என்று தன் கன்னத்தில் படிந்திருந்த அவன் கரத்தின் மீது மென்மையாக அழுத்தம் தந்தபடி புன்னகையுடன் கூறியவள்.

" உங்களை எப்படி பிடிக்காமல் போகும் எனக்கு " என்று ஆத்ரேயன் கண்கள் பார்த்து அவள் உரைக்க, மெல்ல அவள் நெற்றியில் தன் நெற்றியை பதித்தான்.

" உங்களுக்கும் அப்போ தான் என்னை பிடிச்சதா? " என்றவள் கேள்வியில் ஆச்சரியமாக அவளைப் பார்த்தான்.

"உனக்கு எப்படி" என்று கேள்வியாக நிறுத்த,

" உங்க கண்ணில் எனக்கான தவிப்பு. என்னை பார்த்ததும் வந்த சந்தோஷத்தை உணர்ந்தேன் ".

அதில் அவள் நெற்றியில் அழுத்தமாக இதழ் பதித்தவன்.

" ஆமா நீ காணோம் என்று தெரிந்த நொடியே என் மைண்ட் ஸ்ட்ரக் ஆயிடுச்சு. இந்த மாதிரி ஒரு உணர்வை அனுபவிச்சதே இல்லை உன்ன தாண்டி எதுவும் இல்லன்னு ஏனோ அப்போ தோணுச்சு. நீ என் கைக்குள் இருந்தால் போதும்னு ஒரு எண்ணம்" என்றவன் புன்னகைக்க, மெல்ல அவன் தோள் சாய்ந்தாள்.

அவளை தன்னோடு அணைத்துக் கொண்டாள்.

"தேங்க்ஸ்" என்றவளை அவன் புரியாமல் பார்க்க," நீங்க பண்றதுக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை. என்னால் முடிந்தது நன்றி மட்டும்தான்" என்று விட்டு மீண்டும் அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள்.

அதில் அவன் இதயம் படபடக்க,குனிந்து அவள் நெற்றியில் இதழ் பதித்தவன்.

" ஒரு இடத்திற்கு போகணும் வா" என்று கூற அவளும் தயாராக சென்றாள்.

அதற்குள் அனைத்தையும் தயார் செய்து கார் டிக்கியில் வைத்தவன்.

திகழ் வந்ததும் காரை எடுத்தான்.

அவன் இடக்கரம் திகழின் கையோடு இறுகப் பிணைந்து இருந்தது.

"ஏனோ என் கற்பனைகளை பிக் ஸ்கிரீன்ல பார்க்க எனக்கு ரொம்ப விருப்பம். நீயும் பார்க்கணும்னு விரும்புகிறேன் " என்றதும் அவள் புரியாமல் பார்க்க,வண்டி தியேட்டரின் முன் வந்து நின்றது.

"உங்க மூவி பார்க்க போறோம் மா" என்று கேட்டவளின் குரலில் உற்சாகம் தொற்றிக் கொள்ள, அதில் அவளை ஆச்சரியமாக பார்த்தான்.

"இதுவரை உங்க மூவிஸ் நான் பார்த்ததே இல்லை " என்றவள்.," சாரி நான் பெருசா படமே பார்த்ததில்லை "என்றதும்,

" இன்னும் நல்லதா போச்சு " என்றவன்.அவளை தோளோடு அணைத்து கொண்டான்.

யாருமற்ற திரையரங்குக்குள் அவளை அழைத்துச் செல்ல, புரியாமல் ஆத்ரேயனைப் பார்த்தாள்.

"நமக்கான ஸ்பெஷல் ஷோ. நாம் மட்டும் தான்".

அதில் அவன் கரங்களை இறுக்கமாக பற்றிக்கொள்ள, திரை நன்றாக தெரியும் படியான சீட்டில் அமர்ந்தனர்.

படமும் ஆரம்பிக்கப்பட இயல்பாக பார்த்துக் கொண்டிருந்தவள்.அப்படியே படத்தில் மூழ்கிப் போனாள்.

தன் வாழ்க்கையை நினைத்தே பெரிதாக அழாதவள்.

அந்த படத்தை பார்த்து கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் வடித்தாள்.

இறுதி காட்சிகளை ஏனோ ஏற்றுக்கொள்ளவே முடியாமல் அவள் சத்தமிட்டு அழுக, அவளை அப்படியே அணைத்துக் கொண்டான்.

அவனிடமிருந்து ஆவேசமாக பிரிந்தவள்.

" ஏன் அவங்க ரெண்டு பேரையும் பிரிச்சீங்க. எவ்வளவு நல்ல கப்பிள்ஸ். நீங்க இப்படி பண்ணி இருக்க கூடாது.இதை என்னால் ஏத்துக்கவே முடியாது" என்று கண்ணீர் விட்டபடி அவன் தோளில் அடிகளைப் பரிசாக தந்த அவளை அப்படியே தோளோடு அணைத்து கொண்டவன்.

" அநியாயம் பண்றடி நீ "என்று விட்டு,

" ஆனாலும் பார்க்க க்யூட்டா இருக்கு" என்று அவளிதழில் மெல்ல இதழ் பதிக்க, உடனே அவனை தன்னிடம் இருந்து தள்ளிவிட்டவள்.

கோபத்துடன் முறைக்க நுனி மூக்கு சிவந்து கலங்கிய கண்களுடன் தன்னை பார்ப்பவளின் கண்ணம் பற்றி, "ஜஸ்ட் ரிலாக்ஸ்.இது மூவி தான்".

"ஆனாலும் ஏத்துக்க முடியலையே.ரெண்டு பேருக்கும் அவ்ளோ காதல். ஆனாலும் பிரிச்சிட்டிங்க " என்று அவள் கோபித்துக் கொள்ள,

ஆத்ரேயன் கீழ் இறங்கிய கண் கண்ணாடியை மேலே ஏற்றி விட்டபடி, " வா போலாம்" என்று எழுந்து அவளுக்கு கை கொடுக்க,கோபித்துக் கொண்டு அவன் கையை விலக்கி விட்டு அவள் முன் செல்ல, சிரிப்புடன் அவளைப் பின்தொடர்ந்தான்.

கோபம் குறையாமல் முகத்தை தூக்கி வைத்த படி வந்தவளை கண்டு காரை ஓரம் கட்டினான்.

" இங்க என்னை பாரு" என்று அவள் கன்னம் பற்ற, உடனே கையை அவள் தட்டி விடவும் சிரிப்புடன் அவளின் சீட் பெல்ட் விலகியவன்.

புரியாமல் பார்த்தவளை அப்படியே தூக்கி தன் மடியில் அமர்த்தி கொண்டான்.

அதில் திகைத்து தடுமாறி அவன் மீதே சரிந்தவள். பிடிப்பிற்காக அவன் தோள்களைப் பற்றி கொண்டாள்.

"என்ன பண்றீங்க " என்று காற்றாகி போன குரலில் அவள் கேட்க,

"அளவுக்கு அதிகமான காதல் இருந்தாலும் அவர்கள் பாதை வேற,அவங்க சந்தோஷம் சேர்ந்திருப்பது என்றாலும் நிம்மதி கிடைக்கும்னு நினைக்கிறியா?அவங்களோட ஆசையை தூக்கி போட்டுட்டு ரெண்டு பேரால் சந்தோஷமா வாழ முடியாது ".

"அப்புறம் சேர்ந்ததற்கான அர்த்தமே இல்லாமல் போகுமே" என்றவனின் கூற்றில் இருந்த உண்மை புரிந்தது.

அத்தனை காதலை வைத்துக் கொண்டு ஒருவரின் கனவுகளுக்காக இன்னொருவர் தன் கனவை இழப்பது போலான கதை அமைப்பை அவன் படமாக்கி இருந்தான்.

காதலா கனவா என்ற வினாவில் இறுதியில் கனவே வென்று, இருவரும் அவரவர் பாதையில் பிரிந்து போவது போலான கதை அமைப்பு.

"அட்லீஸ்ட் ரெண்டு பேரும் அச்சீவ் பண்ண அப்புறம் ஆவது சேர்த்து இருக்கலாம் இல்ல "என்று இறுதி வாய்ப்பாக அதனைக் கேட்க,

" சில கதைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் கமா போட்டாதான் ஹிட் ஆகும்" என்று கண் சிமிட்டி கூறியவனை முறைக்க கூட முடியவில்லை.

ஏதோ மனம் கனக்க,அவள் அப்படியே இருக்க, மீண்டும் அவளை சீட்டில் அமர வைத்தவன். காரை எடுத்தான்.

கார் நின்ற பிறகும் கவனம் இல்லாமல் அவள் ஏதோ ஒரு சிந்தையில் ஆழ்ந்திருந்தாள்.

அவளைப் பார்த்து சிரித்தபடி கார் டிக்கியில் இருந்த பெட்டியை உருட்டி கொண்டு வந்தவன்.

" மகாராணி இறங்க மாட்டீங்களா? " என்று கார் கதவை திறந்து வைத்த படி கூறவும், உணர்வு பெற்று நிமிர்ந்தவள்.

எதிரே இருந்த விமான நிலையத்தை புரியாமல் பார்த்தாள்.

தன் முன் கைநீட்டியவனின் கையோடு தன் கையை கோர்த்துக் கொண்டவள்.

அவனை கேள்வியாக பார்க்க, வா என்று தலையசைக்கவும் அவனோடு ஒட்டிக்கொண்டாள்.

உள் நுழைவதற்கான வாயிலுக்கு வந்ததும் தன் கையில் இருந்தப் பெட்டியை அவள் பக்கம் தள்ளியவன்.

"ஹேப்பி ஜெர்னி" என்றான்.

"இல்லை. எனக்கு புரியலை" என்று தடதடக்கும் இதயத்தோடு கேட்டவளிடம் புன்னகையை சிந்தியவன்.

அவள் நெற்றியில் அழுத்தமாக இதழ் பதித்தான்.

"மறுபடியும் உன் வாழ்க்கையில் ஒரு கட்டாயப் பிணைப்பு வேண்டாம்".

அதில் நடுக்கத்துடன்,"ஆத்ரேயா" என்று திகழ் அழைக்க, "ப்ளீஸ் அப்படி கூப்பிடாதடி.நொறுங்கியே போயிடுவேன்" என்று கரகரத்த குரலில் கூறியவன். தொண்டையை செருமிக் கொண்டான்.

பெருமூச்சு ஒன்றை எடுத்துக்கொண்டு,"இப்போ நீ என்னோட இருந்தால் நல்லா இருக்கும். ஆனால் உனக்கு முழுமையான சந்தோஷமும், நிம்மதியும் கிடைக்காது.எனக்கு நீ நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் இருக்கணும். என்னோட கதைக்கு நான் இப்போ கமா வைக்கிறேன். நீ உன்னோட கதையை பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பி" என்றவன்.

அவள் கையில் அழுத்தம் தந்து விட்டு அங்கிருந்து அகல,"ஆத்ரேயா" என்றவளின் கத்தலில் அப்படியே நின்றான்.

" தேங்க்ஸ் எல்லாத்துக்கும்" என்றவளின் வார்த்தைகளைக் கேட்டு இதழ்களில் புன்னகை உருவாக, திரும்பாமல் கையை மட்டும் அசைத்து விட்டு சென்றவன்.

காரை எடுத்தான். யாரும் மற்ற சாலையில் காரை நிறுத்தி, அப்படியே ஸ்டேரிங் வீலில் சாய்ந்தவனின் கண்களின் ஓரம் கண்ணீர் துளி வழிந்தது.



 
அத்தியாயம்-31

"யு டன் ய குட் ஜாப் கேர்ள்" என்று ஆர்ப்பாட்டத்துடன் கூறியப்படி வந்த ஜோசப்பை கண்டு, திகழ் புன்னகைத்தாள்.

அவளின் நயனங்கள் பார்ட்டி நடக்கும் ஹாலை நோட்டமிட்டது.

அத்தனை நேர்த்தியாக அந்த ஆடம்பர பார்ட்டி ஆரம்பித்து முடிந்திருந்தது.

இந்த நான்கு மாதங்களில் கிடைத்த பெரும் வாய்ப்பு.

அதை அழகாக பயன்படுத்தி தங்கள் திறமையை நிரூபித்ததற்கு நல்ல பலன் கிடைத்திருந்தது.

அவர்கள் கம்பெனியின் அடுத்த மீட்டிங்கும் இங்குதான் நடைபெறும் என்பது அவர்கள் பேச்சிலே புரிய, ஜோசப்பிற்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.

பணியாட்கள் அனைத்தையும் சுத்தப்படுத்திவிட்டு செல்ல,வெறுமையான ஹாலில் ஜோசப்பும் திகழும் மட்டும் அமர்ந்திருந்தனர்.

திகழினி போட்ட காபி இருவரின் கையிலும் வீற்றிருந்தது.

அதை பருகியப்படி, " உன்னை இப்படி பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு திகழ் " என்றார்.

" இப்படி ஒரு வாய்ப்பை கொடுத்த உங்களுக்கு தான், நான் கடமைப்பட்டு இருக்கேன்" என்று உளமாறக் கூறினாள்.

"இந்த நன்றியை எப்போ தான் விடப் போற. ஏதோ அன்னியமாக காட்டுது.இது உன் திறமைக்கு கிடைத்த வாய்ப்பு திகழ். யூ டீசர்வ் இட். நீயும் ஒன் ஆஃப் த பார்ட்னர் தான்" என்றதும், அவள் உடனே மறுப்பாக தலையசைத்தாள்.

" இந்த ஹோட்டலோட மதிப்பு பல கோடி. இதில் நான் கொடுத்த அஞ்சு லட்சம் எந்த மூலைக்கு " என்று அவர் கூற்றை மறுத்தாள்.

"ஆறு மாசத்துக்கு முன்னால் இந்த ஓட்டல் என் கைக்கு வரும்போது ஒண்ணுமே இல்லாமல் இருந்தது. இட்ஸ் நத்திங். நம்பிக்கை மட்டும் தான் ஒட்டிட்டு இருந்தது திகழ்" என்று அந்த கணத்தை இப்பொழுது அனுபவிப்பது போல் மௌனம் காத்தவர்.

"ரிட்டையர் ஆக போற வயசில் இந்த பொறுப்பு எதற்குன்னு என் மகன் கூட கேட்டான். பட் என் சின்ன வயசு ஆசை. என் முப்பது வயசில் முடியாததை 60 வயசில் ஆவது பண்ணனும்னு ".

"நீ மட்டும் இல்லைனா இந்த அளவுக்கு நம்மளுக்கு சக்சஸ் கிடைச்சிருக்காது.உன்னோட மொத்த உழைப்பை இந்த ஓட்டலில் போட்டு இருக்க. ஐ அம் ப்ரவுட் ஆப் யூ".

"நீ எப்படி எல்லாம் தன்னம்பிக்கையா இருக்கணும்னு நினைச்சேனோ,அதே மாதிரி இருக்க. அதற்கு நானும் ஒரு பங்கா இருக்கேன்னு நினைக்கும் போது சந்தோஷமா இருக்கு "என்று பெருமிதத்துடன் மொழிந்தார்.

அதில் அவள் புன்னகைக்க," பட் இந்த சைலன்ஸ் மட்டும் போகலை. நம்ம கஸ்டமர்,ஒர்க்கர்ஸ் கிட்ட எல்லாம் நல்லா பேசுற. மற்ற நேரம் ஏன் அமைதியா இருக்க.ஸ்பீக் அவுட் திகழ். வந்ததிலிருந்து பெருசா வெளியவும் போகலை. இந்த உலகத்தில் பார்க்க எத்தனையோ விஷயங்கள் கொட்டிக் கிடக்கு. ஜஸ்ட் கோ"என்று விட்டு அவர் விடை பெற,

எழுந்தவள். ஐந்தாவது மாடியில் இருந்து இரவில் மூழ்கியிருந்த பெங்களூர் நகரத்தை கண்ணாடியின் வழியாக பார்த்தாள்.

அவளின் பிரதிபலிப்பும் கண்ணாடியில் மங்கலாக தெரிந்தது.

ஏற்றி போடப்பட்ட கொண்டை மிதமான அலங்காரம், நேர்த்தியாக கட்டப்பட்ட புடவை, காலர் வைத்த பிளவுஸ் கண்களில் புதிதாக குடி கொண்ட நிமிர்வும்,அமைதியும் அவளை வைரமாக மிளிர செய்தது.

இமைக்காமல் தன் பிம்பத்தை பார்த்தவள்.ஒரு பெருமூச்சுடன் பார்ட்டி ஹால் விட்டு வெளி வர,செக்யூரிட்டி தலை குனிந்து வணக்கம் செலுத்தினார்.

அதை ஏற்றபடி, தனக்காக ஒதுக்கப்பட்ட அறைக்கு சென்றாள்.

ஆறு அடுக்குகளைக் கொண்ட 5 நட்சத்திர விடுதி.அதில் இறுதி தளத்தில் தான் திகழ் தங்கி இருக்கிறாள்.

தன் அறைக்கு வந்ததும் குளித்து உடை மாற்றியவள். பால்கனி செல்ல அரை நிலவு வானில் வீற்றிருந்தது.

பால்கனி கம்பிகளை இறுக்க பிடிக்க, அவள் கையில் இருந்த வைர மோதிரம் அந்த இரவிலும் பிரகாசித்தது.

அதை சிறிது நேரம் வெறித்துவிட்டு, வானை நோக்க, அரை நிலவு அவள் கண்களை விலக்கவிடவில்லை.

******

நள்ளிரவு வேளையில் மஞ்சள் நிற ஒளி அறையெங்கும் சன்னமாக ஒளிர ,டொம் டொம் என்ற சத்தம் விடாமல் கேட்டது.

நேரம் செல்ல செல்ல சத்தத்தின் அளவு அதிகரிக்க, இறுதியில் தொப் என்று ஓசையுடன் அது கீழே விழுந்ததில், ஆத்ரேயன் சலித்தபடி தன் கையுரையை தூக்கி வீசினான்.

அவன் குத்திய பஞ்சிங் பேக் இரண்டாக பிளந்து தரையில் கிடந்தது.

மொத்த உடலும் வியர்வையில் நனைந்திருக்க, தோள் வரை படர்ந்து இருந்த கேசத்தை கோதியபடி நிமிர்ந்தான்.

தாடி முகத்தை முக்காவாசி மறைத்திருந்தது. அதையும் வலக்கரத்தால் நீவியவாறு வெளியே வர,அவன் உடல் கடும் உடற்பயிற்சியினால் இன்னும் இறுக்கத்துடன் காணப்பட்டது.

படிக்கட்டு தேகத்தில் அரும்பிய வியர்வை, சூரிய ஒளியில் பட்ட பனி துளி போல் பிரகாசித்தது.

முகத்தை பூத்துவலையால் துவட்டியபடி பால்கனி கதவை திறந்தான்.

சில்லென்ற குளிர் காற்று முகத்தில் மோத, அவன் பார்வையோ வானில் பிரகாசித்த அரை நிலவை வெறித்தது.

*******

சார் என்றபடி வீட்டிற்குள் நுழைந்தவனை முறைத்து தள்ளிய அன்னபூரணி.

"ஓ துரை வீட்டுக்கு வந்து இருக்காரா?" என்று விரக்தியாக கேட்டார்.

"எஸ் மேம் " என்று அவன் சங்கடமாக பதில் அளிக்க, மகனின் செயலில் மனம் நொந்து போனார்.

"சரி அதை விடு. கவிதா எப்படி இருக்கா. செக்கப் எல்லாம் கரெக்டா கூட்டிட்டு போறியா?. இல்லை உன்னோட முதலாளி மாதிரி பொறுப்பில்லாமல் இருக்கியா?" என்று அவர் குற்றம் சாட்ட,

அவர் கூற்றை தாங்கிக் கொள்ள முடியாமல், " மேடம் சாரை பத்தி தான் உங்களுக்கு தெரியுமே. " என்றதும்,

' அப்படிதான் நினைச்சேன்' என்று மனதிற்குள் எண்ணிக்கொண்டு டைனிங் டேபிளில் அமர்ந்தவர்.

விமலையும் அழைக்க, மறுத்துவிட்டு ஆத்ரேயனின் அலுவல் அறைக்குள் சென்று அவன் கொடுத்த வேலைகளை செய்ய ஆரம்பித்தான்.

அதில் யோசனையோடு அப்படியே அவர் அமர்ந்திருக்க,மகனின் காலடி சத்தத்தில் திரும்பினார்.

படிக்கட்டில் இறங்கி வந்தவனைக் கண்டு உள்ளம் பதறியது.

கட்டுக்கோப்பாக வைத்திருப்பவனின் உடல், இப்போது உடற்பயிற்சியினால் படிக்கட்டு தேகமாக மாறி இருந்தது.

தோளோடு தவிழும் கேசம் முகத்தை மறைத்த தாடி,கண்களில் கருப்பு நிற கூலிங் கிளாஸ் என்று வந்த மகனை கண்டு பெருமூச்சு எழுந்தது.

ஆனால் அடுத்த நொடியே மனதை இறுக்கமாக்கி அலட்சியமாக திரும்பிக்கொண்டார்.

அவன் டைனிங் டேபிளில் அமர்ந்ததும் உணவு பரிமாறப்பட இரண்டு வாய் வைத்ததும்,உடனே எழுந்து கொண்டான்.

காபியுடன் பணியாள் வர, " நான் காபி குடிக்கிறது இல்லை. ப்ரோட்டீன் ஷேக் கொண்டு வாங்க ".

அதில் அவர் மன்னிப்பை வேண்டி விட்டு மீண்டும் அவன் கூறியதை எடுத்து வர செல்ல,

"காபி குடிக்கிறது இல்லையா? அட,உன் பொண்டாட்டி கை மணம் இல்லை என்று அதை சீண்டி பார்க்கலைன்னு சொல்லு. உள்ள சாப்பாடும் இறங்காது. வெந்ததும் வேகாததும் தான் இப்போ உள்ளே போகுது" என்று நக்கலாகக் கூறியவரை உறுத்து விழித்தான்.

"என்ன முறைக்கிற. உண்மையை தானே சொன்னேன் " என்று கோபத்துடன் மொழிய, விமல் வரவும் கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் அங்கிருந்து அகன்றார்.

பணியாளர் கொண்டு வந்த புரோட்டின் ஷேக்கை கண்டுகொள்ளாமல் அவன் வெளியேற, விமலும் தனக்கு வந்த காபியை ஏக்கமாக பார்த்துவிட்டு ஆத்ரேயனை பின் தொடர்ந்தான்.

ஆத்ரேயன் காரை எடுக்க விமலோ சார் என்று ராகமாக அழைத்தான்.

"வாட்".

"இல்லை மேம் கோபமா இருந்தாங்களே "என்றதும் நத்திங் என்று ஒற்றை வார்த்தையில் பதில் அளித்தவனை கண்டு சோர்ந்து போனான்.

ஏனோ முதல் மூன்று மாதங்கள் எடிட்டிங் போஸ்ட் ப்ரொடக்ஷன் ஒர்க் என்று அத்தனை தீயாக உழைத்திருந்தான்.

அவன் உறங்குகிறானா?,உண்ணுகிறானா ?என்று புரியாத அளவு விமல் குழம்பிப் போனான்.

அனைத்தும் முடிந்து அவன் ஓய்வான் என்று பார்த்தால், உடனே ஆடியோ லான்ச் மிக மிக பிரம்மாண்டமாக நடந்தி முடித்து இருந்தான்.

அதனிலும் சக்கர நாற்காலியில் வந்த திவாகரை அவன் அருகில் இருந்து கவனித்துக் கொண்டதெல்லாம் பல க் க்ளிப்புகளாக சோசியல் மீடியாவில் ஓடிக்கொண்டிருக்கிறது.

நடக்கும் அனைத்தையும் கண்டு,'என்ன எது' என்று ஒன்றும் புரியாமல் விமல் குழம்பிப் போனான்.

ஆத்ரேயன் முகத்தை கேள்வியாக பார்த்தப்படி இருந்தான்.

இதே பழைய ஆத்ரேயனாக இருந்தால்," என்னடா உன் மண்டைக்குள்ள ஓடுது" என்று உலுக்கி இருப்பான்.

இப்பொழுது எதைப் பற்றியும் கண்டுகொள்ளாமல் அவன் அப்படியே இருக்க, சோர்ந்து போனவன்.

" சார் பெங்களூரில் ஹோட்டல் எல்லாம் புக் பண்ணிட்டேன்" என்றான் தகவலாக.

படம் கன்னட மொழியிலும் வெளியிடுவதால் பட ப்ரோமோஷனலுக்காக ஐந்து நட்சத்திர ஹோட்டலில் அந்த மாநில ஊடகவியலுக்காக மீட்டிங் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

" ஓகே பைன் ஃபிலைட் டீடைல் சென்ட் பண்ணு" என்றவன்.

படத்தை வெளியிடுவதற்கான வேலைகளில் ஈடுபட ஆரம்பித்தான்.

இரவு 12 மணிக்கு பெங்களூருக்கான பிளைட்டில் ஏறி இருந்தனர்.

விடியக் காலையில் அவர்களுக்காக புக் செய்யப்பட்ட ஐந்து நட்சத்திர விடுதிக்கு வந்தனர்.

அதிகாலையிலும் மலர்ந்த முகத்துடன் நின்றிருந்த ஓட்டல் வரவேற்பு பெண் நம்மவர்களை புன்னகையுடன் வரவேற்று அவர்கள் அளித்த விபரங்களை சரிபார்த்தாள்.

அவர்களுக்கு புக் செய்யப்பட்ட ரூமின் சாவியுடன் வேறொரு பெண் முன் செல்ல,அவளை இரு ஆண்களும் பின்தொடர்ந்தனர்.

நடக்கும்போதே ஓட்டலின் விவரங்கள், தங்குபவர்களுக்கு கொடுக்கப்படும் சலுகைகள் பற்றி சுருக்கமாக விளக்கினாள்.

மூவரும் லிப்ட்டிற்காக காத்திருந்தனர்.

அதிகாலை தான் ஆனாலும் இரண்டு லிப்ட்டுமே இயக்கத்தில் இருந்தது.

அவர்கள் இடப்புற லிப்டின் முன் காத்திருக்க, ஆத்ரேயன் பார்வை அருகில் இருந்த லிப்டில் படிய, அது மெல்ல கதவை திறக்கவும் அங்கு அகல,

அதற்குள் பணிப்பெண், "சார் லிப்ட் ஓபன் ஆயிடுச்சு வாங்க" என்று அழைக்கவும் அங்கு சென்றான்.

வலப்புற லிப்டில் இருந்து வந்த திகழ் தன் கையில் இருந்த நோட்டை சரி பார்த்தபடி இவர்கள் லிப்ட் பக்கம் வர, திகழ் கடக்கும்போது லிப்ட் தன் கதவை மூடி இருந்தது.

தன் கையில் இருந்த நோட்டை மூடியபடி, நிமிர்ந்தவள். ஒரு வித உணர்வில் லிப்டின் கதவை வெறித்தபடி நின்று விட்டாள்.

 
அத்தியாயம்-32

"மேம் பார்ட்டி ஹால் அரேஞ்ச் பண்ணிட்டோம். நீங்க ஒன்ஸ் செக் பண்ணிட்டீங்கன்னா? அப்டேட் பண்ணிடுவேன்" என்று கன்னடத்தில் கூறிய ஹவுஸ்கீப்பிங் ஸ்டாஃபை கண்டு தலையசைத்தவள்.

ஐந்தாம் தளத்தில் இருக்கும் பார்ட்டி ஹாலை பார்வையிட்டாள்.

புருவம் யோசனையில் சுருங்க, "ஸ்டேஜ் ரொம்ப எம்டியா இருக்கே. என்ன ஈவென்ட்".

" மூவி மீட் மேம். அவங்களே பேனர் கொண்டு வந்து அரேஞ்ச் பண்ணிக்கிறதா சொல்லி இருக்காங்க" என்றதும்,

"ஓகே பைன். மீட் ஸ்டார்ட் ஆக்குற டைம் எனக்கு ரிமைண்ட் பண்ணுங்க. வந்து பார்த்துட்டு போறேன்" என்றவள்.

ஹோட்டல் மொத்தத்தையும் பார்வையிட சென்றாள்.

****

" சார் ஒரு காபி ஆவது குடிச்சிட்டு போலாமே" என்று நொந்து போய் விமல் கேட்க, தன் வேக நடையை நிறுத்தியவன். கேபிடேரியாவை கண்டு,

" போயிட்டு அஞ்சு நிமிஷத்துல வா " என்று விட்டு அவன் அறைக்கு செல்ல,

'முன்னே ஒரு நாளைக்கு நாலஞ்சு காபி உள்ள தள்ளுவார். இப்ப காஃபியை சீண்டறதே இல்ல. என்னையும் குடிக்க விட மாட்டேங்குறாரு' என நொந்து போய் நினைத்துக் கொண்டவன். காபியை பருக சென்றான்.

அறைக்குள் தயாராகி கொண்டிருந்த ஆத்ரேயனின் அறை கதவை தட்டி விட்டு உள் நுழைந்த விமல், " சார் ஃபிலிம் இன்ஸ்டிடியூட் பைனல் இயர் ஸ்டுடென்ட்ஸ் வராதா இருந்தது.இப்போ கொஞ்சம் டிலே ஆகும்னு அவங்க ஸ்டாப் சொல்றாங்க. என்ன பண்ணலாம்".

" டைம்க்கு இப்போ வராதது அவங்க தப்பு நோ நீட். பிரஸ்மீட் மட்டும் முடிச்சிட்டு சென்னை கிளம்பலாம் " என்றான் முடிவாக.

"சார் இது எக்ஸ்ட்ரா படத்திற்கு ப்ரமோஷன் தானே " என்று விமல் தயங்க,

"டூ வாட் ஐ சே விமல்" என்று ஆத்ரேயன் கட்டளையாக கூறியதும்,மறுக்க முடியாமல் அந்த இன்ஸ்டிடியூட்டின் ஆசிரியருக்கு அழைப்பை விடுக்க,அழைப்பு போய்க் கொண்டிருந்ததே தவிர எடுக்கவில்லை.

' சரி அவங்களே கால் பண்ணும்போது பார்த்துக்கலாம்' என எண்ணியவன்,வேலையை கவனிக்க பிரஸ்மீட்டும் ஆரம்பமானது.

மியூசிக் டைரக்டர், ஆத்ரேயன், படத்தில் நடித்த கன்னட நடிகர் என்று பிரஸ்மீட் நன்றாகவே சென்றது.

சர்ச்சையான கேள்விகள் வந்தாலும், அதை ஆத்ரேயன் கண்டு கொள்ள இல்லை. பதிலும் அளிக்கவில்லை.

திவாகர் வராதது ஒரு பிரச்சனையாக கேட்கப்பட அவனுக்கு காலில் அடிபட்டதை சாக்காக கூறினான்.

சாந்தவி எந்த பட ப்ரோமோஷனிலும் பங்கேற்காததால் அந்த விஷயம் அமிழ்ந்து போனது.

பிரஸ் மீட் நல்ல முறையில் முடிய அனைவரும் கலைய ஆரம்பிக்க, அறையை திறந்து கொண்டு வந்த திகழ்,

வெளியேற வந்தவர்களைக் கண்டு, "ஓ சாரி" என்று மன்னிப்பை வேண்டி விட்டு வழி விட அவர்கள் வெளியேறினர்.

ஸ்டேஜ் அருகே சென்றவள். தனக்கு முதுகு காட்டி நின்று இருந்தவனிடம், " சாரி சார். மீட்டிங் நடக்கும் முன்னே க்ரேட் பண்ண முடியலை. நான் திகழினி.டிவிஷன் மேனேஜர். ஐ நீட் யுவர் ரிவ்யூ சார். உங்களுக்கு ஏதாவது கம்ப்ளைன்ட் இருந்தால் சொல்லுங்க "என்று ஆங்கிலத்தில் கேட்க,

நோ என்ற படி திரும்பியவன். அவளை ஊடுருவும் பார்வை பார்த்து வைக்க, திகழுக்கு இதயமே நின்று விட்டது.

இதயம் படபடக்க ஆத்ரேயா என்று சன்னமாக முணுமுணுக்க, அதை அழுத்தமாக பார்த்தபடி, "ஒரு காஃபி ஸ்ட்ராங்கா" என்று விட்டு அவன் அங்கிருந்து அகன்றான்.

' என்ன சாருக்கு காபியா.. அட' என்று ஆச்சரியத்துடன் வந்த விமல் திகழை கண்டு திகைத்தான்.

அடுத்த நிமிடமே, "எப்படி இருக்கீங்க மேம்" என்று நலம் விசாரிக்க,

" நா.. நான் "என்று தடுமாறியவள்.

" அவர் எப்படி இருக்காரு" என்று தவிப்புடன் வினாவினாள்.

"எவரு?" என்று அவன் எதிர் கேள்வி கேட்டதில் ஆத்ரேயன் சென்ற திசையை அவள் பார்க்க, மண்டையில் பல்பு எரிந்தது.

" ரொம்ப பரபரப்பா இருக்காரு" என்றதும், புரியாமல் விழித்தவள். உடனே, "அத்தை எப்படி இருக்காங்க" என்றாள்.

" எல்லாரும் நல்லா இருக்கோம்.நீங்க எப்படி இங்கே ".

அதில் தொண்டையை செரும்பிக் கொண்டப்படி,"ஜாப் ட்ரை பண்ணேன். கிடைச்சது வந்துட்டேன் "என்றவளின் குரல் குற்ற உணர்வில் தவித்தது.

"ஓஓ " என்று விட்டு அப்படியே விமல் நிற்க,

" சரி அவர் ரூம் நம்பர் என்ன " என்று வினா தொடுத்தவள்.உடனே வார்த்தையை முழுங்கியபடி, "சரி நானே பாத்துக்கிறேன் "என்று விட்டு பரபரப்பாக செல்ல,

"கவி நீ சொன்னது கரெக்ட் தான் டி.அடியே கவி" என்று கத்தியபடியே போனை எடுத்து மனைவிக்கு அழைக்க, நாற்காலிகளை ஒதுக்கி வைத்துக் கொண்டிருந்த ஊழியர்கள் விமலை ஒரு மாதிரியாக பார்த்துவிட்டு வேலையை தொடர்ந்தனர்.

கிச்சனுக்குள் வந்த திகழை பணியாட்கள் புரியாமல் பார்க்க, " காபி" என்றதும்,

"போடுறோம் மேம்" என்று அவர்கள் வேகம் காட்ட, " இல்ல நானே போட்டுக்கிறேன்" என்று அவர்களை நகர்த்தி விட்டு ஆத்ரேயன் விரும்பும் பக்குவத்தில் காபியை போட்டு பிளாஸ்கில் எடுத்துக் கொண்டவள்.

ஒரு பெருமூச்சுடன் அவன் இருக்கும் தளத்திற்கு வந்தாள்.

அவன் தங்கியிருந்த அறைக்கு முன் வந்து நின்றவளுக்கு எக்கச்சக்கமான தயக்கம்.

ஏனோ இதயம் படபடத்தது.ஒருவித உணர்வுகளின் கலவையாகி போனாள்.

கதவை தட்ட உயர்ந்த கரங்கள் அப்படியே நிற்க, அதே நேரத்தில் கதவு திறக்கப்பட்டது.

அவன் தன் முன் நீட்டப்பட்ட கரத்தை புரியாமல் பார்த்தபடி அவளை நோக்க, "காபி" என்றாள் திக்கி திணறி.

அதில் தலையசைத்தவன்.அவளுக்கு வழி விட்டுவிட்டு மீண்டும் பால்கனியில் சென்று நின்று கொள்ள, அங்கிருந்த காபி கப்பில் பிளாஸ்கில் இருந்த காபியை ஊற்றியவள்.

நடுங்கும் கரங்களுடன் அவனை நெருங்கினாள்.

அவனோ எதுவும் பேசாமல் காபியை வாங்கி பருக," எப்படி இருக்கீங்க?" என்று சன்ன குரலில் வினாவினாள்.

"பார்த்தா தெரியலை" என்றவன்.சிலகண அமைதிக்கு பிறகு, " ஐ அம் குட்" என்று பதிலளித்தான்.

முகத்தை அவள் பக்கம் திருப்பவே இல்லை. பார்வை வெளியே வெறித்தது.

அங்கிருந்த கதவில் சாய்ந்தவள் .பெருமூச்சு விட்டுக் கொண்டாள்.

தோளில் புரண்ட கேசம், அடர்ந்த மீசை தாடி கட்டுடலை இறுக்கி காட்டும் சட்டை என இருந்தவனை இமைக்காமல் பார்த்தாள்.

"யாரோ மாதிரி இருக்கீங்க" என்று அறியாமலே வார்த்தைகள் வந்து விழுந்தது.

அதில் புரியாமல் அவள் புறம் திரும்பி ஒற்றைப் புருவம் உயர்த்த, அதில் கீழ் உதட்டை அழுத்தமாக கடித்துக் கொண்டு மறுபக்கம் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

" பட் நீ அப்படியே தான் இருக்க "என்றான் பொருள் விளங்கா பாவனையில்.

அதில் மிதமாக தொண்டையை செருமிக்கொண்டு," அத்தை என்னை பத்தி ஏதாவது கேட்டாங்களா?".

" ம்ம்ம். பட் புரிஞ்சுட்டாங்க".

அதன் பிறகு மௌனம் ஆட்சிக் கொள்ள, "நான்" என்று அவள் மேலே பேச வரும் முன் அவளை நெருங்கினான்.

இருவருக்கும் இடையே சிறு இடைவெளி மட்டுமே இருக்க, பால்கனியில் வீசிய காற்று பெண்ணவளின் முகத்தில் மோதி கூந்தலை பறக்க செய்தது.

காற்றோடு வந்த மற்றவரின் வாசனையை நாசி உணர்ந்து உள்ளெழுத்துக் கொள்ள அதில் ஒருவித சிலிர்ப்பு இருவருக்கும் உண்டானது.

விழிகள் நான்கும் பலவிதப் பரிபாஷையை பரிமாறிக் கொள்ள,இதழ்களோ ஒருவித ஆர்ப்பரிப்பில் இருந்தது.

அவன் விழி வீச்சில் நிதானம் இழந்து,பெண்ணவளின் கரங்கள் மேலோங்கி அவனை தொடும் கணத்தில் காலிங் பெல் அடிக்க, திகழின் நீட்டியக் கரத்தில் காலி கப்பை திணித்தவன்.

அவளை விட்டு விலகி கதவை திறக்க செல்ல, துடிக்கும் இதயத்தை கட்டுப்படுத்த முடியாமல் தவித்துப் போனவளுக்கு கண்கள் மெல்ல கலங்கியது.

எதிரே வந்து நின்ற விமலை கொல்லும் வெறியுடன் முறைத்த ஆத்ரேயனை கண்டு' சார் என்ன பாசமா பாக்குறாரு 'என்று எண்ணிக்கொண்டவன்.

தனக்கு நேர் எதிராக தெரிந்த திகழை கண்டு, 'பூஜை வேலை கரடியா வந்துட்டோமோ' என்று நொந்து போய், "சார்" என்று ராகம் போட்டான்.

" ஃபிலிம் இன்ஸ்டியூட் ஸ்டுடென்ட்ஸ் வந்து வெயிட் பண்ணிட்டு இருக்காங்க. அதை சொல்ல தான் வந்தேன் " என்றான் பாவமாக.

" நாளைக்கு அவங்களுக்கு ஒரு மீட் அரேஞ்ச் பண்ணு" என்று கூறியவனின் பார்வை தற்போது பெண்ணவளை மொய்த்தது.

அவளும் இங்கு தான் பார்வையை பதித்து இருந்தாள்.

விமல் ஆத்ரேயன் எண்ணம் புரிந்து, "கண்டிப்பா சார்" என்ற உரத்த குரலில் விரைப்பாக கூற, அதில் திகழ் கவனம் களைந்து உடனே வெளியேறினாள்.

போகும் அவளை பார்த்து விட்டு அப்படியே விமலை பார்க்க,' அய்யய்யோ பாக்குறாரே பாக்குறாரே' என்று உள்ளுக்குள் அலறியவன்.

"சார் அந்த ஸ்டுடென்ட்ஸ் கிட்ட இன்பார்ம் பண்றேன்" என்று உடனே ஜூட் விட்டான்.

அதில் சலிப்பாக தலையசைத்துக் கொண்டவன்.

கேசத்தை அழுத்த கோதியபடி மீண்டும் பால்கனி வந்து நின்றவன்.மனம் யோசனையில் ஆழ்ந்தது.

வேலையெல்லாம் முடித்து தன் அறைக்கு வந்தவள். அப்படியே கதவின் மீது சாய்ந்து நின்றாள்.

நெஞ்சம் வேகத்துடன் மேல் ஏறி கீழ் இறங்கியது.

இதழ்கள் ஆத்ரேயா என்று சன்னமாக முணுமுணுக்க, உறக்கத்தில் இருந்தவன்.பதறிக் கொண்டு எழுந்தான்.

***

அடுத்த நாள் காலையே ஹோட்டலில் இருந்த மசாஜ் சென்டருக்கு விமலையும் இழுத்துச் சென்றவன்.

அங்கு நேரத்தை போக்கினான்.

பிறகு ஸ்விம்மிங் ஃபூலில் நேரத்தை ஓட்டி விட்டு பஃபே சிஸ்ட உணவை உண்டவன்.

ஹோட்டலில் இருந்த இன்டோர் கேம்ஸை விமலை இழுத்துக் கொண்டு விளையாட என்று முழுக்க ஹோட்டலில் ஆத்ரேயன் அன்று உலாவ,திகழின் பார்வை மொத்தமும் ஆத்ரேயன் மீதுதான்.

ஆனால் ஆணவன் பார்வை சற்றும் அவள் மீது படரவில்லை.

ஆத்ரேயன் பார்க்காதது இன்னும் அதிகம் திகழை பார்க்க வைத்தது.

அவன் போகும் திசையெல்லாம் பெண்ணவளின் விழிகளும் தொடர்ந்தது.

நடக்கப் போகும் ஈவன்டிற்காக பார்த்து பார்த்து ஹாலை அலங்கரித்தாள்.

அதைவிட தன்னை கவனமாக அலங்கரித்துக் கொண்டாள்.

லாவண்டர் நிற புடவையை நேர்த்தியாக கட்டி,அதற்கு தோதாக முத்துக்களால் ஆன அணிகலன் அணிந்தவள்.

கூந்தலை விரித்து விட்டாள். அது அழகாக அவள் நடக்கும் போது முதுகிலும் தோளிலும் ஊஞ்சல் ஆடியது.

புன்னகை மற்றும் எதிர்பார்ப்புடன் நுழைந்தவள். கல்லூரி மாணவிகள் சூழ வாய் கொள்ள சிரிப்புடன் நின்றிருந்த ஆத்ரேயனை கண்டு நின்றாள்.

அந்த பெண்களின் கண்களில் இருந்த ஆர்வமும் எதிர்பார்ப்பும் ஆத்ரேயனை நெருங்கி நின்ற விதமும், நெருப்பே இல்லாமல் சூட்டை கிளப்பியது.






 
அத்தியாயம்-33

"இதுதான் மூவி ப்ரோமோஷனா" என்று இதழுக்குள் முணுமுணுத்தவள். தவிப்புடன் ஆத்ரேயனை நோக்கினாள்.

அவன் பார்வையோ பெண்ணவளின் மீது விழவேயில்லை.

கல்லூரி பெண்கள் கேட்கும் கேள்விகளுக்கு சிரிப்புடன் பதிலளிப்பதில் அவன் கவனம் இருக்க, விமல் தான் மற்ற ஏற்பாடுகளை கவனித்து கொண்டு இருந்தான்.

"விமல் மீட்டை ஆரம்பிக்கலாம்" என்று மைக்கில் அறிவிக்க, அனைவரும் இருக்கையில் அமர, மேடையில் இலகுவாக அமர்ந்த ஆத்ரேயன் தற்போதாவது தன்னை காண்பான் என்று பார்க்க ம்ம்க்கும் திரும்பியும் பார்க்கவில்லை.

அதில் ஒரு மாதிரி மனம் பிசைய அவனைப் பார்த்தபடியே நின்று விட்டாள்.

மாணவிகளும் மாணவர்களும் ஆத்ரேயனிடம் கேள்விகள் கேட்க ஆரம்பிக்க, எதற்கும் மறுக்காமல் அனைத்திற்கும் பதில் அளித்தான்.

அவர்களும் விளையாட்டுத்தனமாகவே கேள்வி கேட்க, இலகுவாகவே அவர்களிடம் உரையாடினான்.

ஏனோ அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல் அவளின் வேலை அழைக்க மனமே இல்லாமல் ஆத்ரேயனைப் பார்த்தபடியே அவள் வெளியேறினாள்.

அடுத்த கணம் அவனின் பார்வை வாயில் புறம் திரும்ப,மாணவர்களின் கேள்வியில் முயன்று கவனத்தை அங்கு பதித்தான்.

வேலைகள் அத்தனை இருந்தாலும் நடுநடுவே வந்து ஆத்ரேயனை பார்த்து விட்டே சென்றாள்.

அவனின் புன்னகை முகம் வாடவே இல்லை.

ஒருவித சோர்வடனே வேலைகளை முடித்து விட்டு மீண்டும் வர,மாணவர்கள் ஒவ்வொருவராக வெளியேறிக் கொண்டிருக்க தளர்வுடன் உள் நுழைந்தாள்.

மாணவர்கள் அனைவரும் வெளியேறி இருக்க மாணவிகள் ஆத்ரேயனை சூழ்ந்து கொண்டு செல்பி எடுப்பதும் ஆட்டோகிராப் வாங்குவதுமாக இருக்க, அதற்கு மேல் அதை காண முடியாமல், பால்கனியில் சென்று அடைந்து கொண்டாள்.

பால் நிலவு தன் ஒளியை பூமிக்கு தந்து கொண்டிருக்கும், ஏகாந்த பொழுதில் சோகப்பதுமையாக நின்றிருந்தவளின் கரங்களில் கண்ணாடி குவளை வீற்றிருந்தது.

ஏனோ அவர்களின் சிரிப்பு சத்தம் இப்போதும் கேட்பது போல் இருக்க,கையில் இருந்ததை முழுவதும் பருகி விட்டு வைத்தவள்.

தொண்டை லேசாக எரியவும் பச்சென்று சலித்துக் கொண்டான்.

மேலும், அந்த எரிச்சலை கருத்தில் கொள்ளாமல் நிலவை வெறித்தபடி நின்று கொண்டாள்.

வேகத்துடன் வீசிய காற்றோடு கலந்து வந்த நறுமணத்தில் கண்களை இறுக்க மூடி திறந்தவள்.

அந்த வாசத்தை நன்றாக உள்ளெழுத்து, நுரையீரலுக்குள் நிரப்பி கொண்டாள்.

"கிளம்பலையா?" என்ற அவனின் கேள்விக்கு பதில் அளிக்காமல் அப்படியே நின்று இருக்க, " உன்னை தான் திகழ்" என்றான்.

"என் பேரு கூட ஞாபகம் இருக்கு போல" என்றவளை ஆச்சரியம் பொங்க பார்த்தவன்.

கைகளை கட்டிக்கொண்டு, " இன்னும் நிறைய ஞாபகம் இருக்கு" என்று இலகுவாக கூறியவன். உடனே தொண்டையை செரும்பி கொண்டு,

"டைம் ஆச்சு ரூம் போ" என்று விட்டு அங்கிருந்து செல்ல பார்க்க, அவன் கரங்களை அழுத்தமாக பற்றி நிறுத்தினாள்.

" என்ன" என்று அவன் ஒற்றை புருவம் உயர்த்தி வினாவ,

"நீங்கதான் சொல்லணும். ஏன் யாரோ மாதிரி. இப்படி" என்று அவள் இழுக்க,

அதில் பெருமூச்சு விட்டுக் கொண்டவன்.

"நல்லா டாப் ஸ்பீட்ல போயிட்டு இருக்க இப்போ எதுக்கு ஸ்பீட் பிரேக்கர் மாதிரி நான்" என்றவன்.

மனதிற்குள்,' மீண்டும் யு டர்ன் போட்டு வரவெச்சுடுவேன்னு பயமா இருக்கு டி ' எண்ணி கொண்டான்.

உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வந்து, அவள் விழிகளை ஊடுருவியவாறு,

"ஐ அம் ரியலி ஹேப்பி ஃபார் யூ. நான் நினைச்சதை விட நீ ஸ்மார்ட். அன்ட் யூ டீசர்வ் இட். அதனால் உன் கரியரில் போகஸ் பண்ணு" என்று உறுதியான குரலில் கூறினான்.

"ஆனால் எனக்கு அது போதாது போலையே" என்று அவன் விழிகளை ஊடுருவியவாறு திகழ் கேட்க,அவள் கேள்வி புரியாமல்,

"வேற என்ன வேணும்".

"நீங்கதான் வேணும்.மொத்தமா" என்று நொடியும் யோசிக்காமல் அவள் பதிலளித்து விட்டு அவனை நெருங்க,

நாசியில் ஏறிய வாசத்தில் குழப்பத்துடன் அவள் நின்றிருந்த இடத்தை பார்க்க, அங்கிருந்த கண்ணாடி குவளையை எடுத்து முகர்ந்து பார்த்தவன்.

"சரக்கு அடிச்சியாடி"
என்று உச்சகட்ட அதிர்வுடன் கேட்டான்.

" பச்" என்று சலித்தபடி அவனை நெருங்க,அவள் நெற்றியில் ஆள்காட்டி விரலை வைத்து தன்னை விட்டு தள்ளி நிறுத்தினான்.

" என்ன இது" என்று கோபத்துடன் கேட்க,

"வந்த ஸ்டூடன்ட்ஸ் யாரோ மிக்ஸ் பண்ணி இருக்காங்க" நான் கவனமில்லாமல் குடிச்சிட்டேன்" என்று சாதாரணமாக கூற,

"வாட் ஒரு மேனேஜரா இருந்துட்டு, இவ்வளவு கேர்லெஸ்ஸா இருக்க. என்ன இது" என்று அவன் கடுப்புடன் கத்த,

" எப்பவும் கவனமாதான் இருப்பேன். இந்த மாதிரி எப்பயாவது நடக்கும் தான்.ஆனால், இன்னைக்கு கவனம் மொத்தமும் சிதறிடிச்சு" என்ற அவளின் பார்வை அதற்கு காரணமானவன் முகத்தில் மொய்த்தது.

" அடியே நார்மலா என்னைக்காவது ஒரு நாள் இப்படி பார்த்து இருக்கியா "என்று வாய்விட்டு புலம்பியவன்.வா என்று அவளை அழைத்துச் செல்ல பார்க்க, அவன் பிடியில் இருந்த கையை உதறிவிட்டு கொத்தாக அவன் சட்டை காலரை பற்றியதில் தடுமாறி அவள் பக்கம் குனிந்தான்.

திகழின் தள்ளாட்டத்தில் அவளைத் தாங்கிய அவன் கரங்கள் இடுப்பை சுற்றி படர்ந்து வெற்றிடையில் தன் இருப்பை இறுக்கமாக்கிக் கொண்டது.

விழிகள் இரண்டும் ஆர்ப்பரிப்புடன் இணைந்து கவ்வி கொள்ள,

"இன்னைக்கு முழுக்க இந்த லிப்சில் சிரிப்பு மறையவே இல்ல. ரொம்ப பிசியாவே இருந்தீங்க. என்ன பார்க்க கூட நேரம் இல்லாமல்" என்று அவள் அடுக்கிக் கொண்டே போக,

உடனே அவளை விட்டு விலகினான்.

திகழ் தள்ளாடிக்கொண்டே அங்கிருந்த கதவில் சாயவும் பதறிக்கொண்டு அவளை பிடிக்க வர,

" ஐ அம் ஓகே" என்று அவன் கரங்களை விலக்கி விட்டு சிரித்தாள்.

"திகழ் சொன்னால் கேளு. வா போலாம்" என்றதும் மறுப்பாக தலையசைத்தவள்.

" என்ன ப்ரூஃப் பண்ண இப்படி எல்லாம் பண்றீங்க " என்று லேசான குழறலுடன் கேட்டாள்

"என்ன பேசுற" என்று புரியாமல் அவன் வினவா,

" பெவி குயிக் போட்டு ஒட்ட வச்ச மாதிரி ஒரு சிரிப்பு. என் முன்னால் நீங்க நல்லா இருக்கேன் என்று காட்டுறீங்களா? எனக்கு குற்ற உணர்ச்சி வரக்கூடாதுன்னு, இந்த வாழ்க்கையை நான் இன்னும் நல்லா கொண்டு போகணும்னு நினைக்கிறங்க போல " என்று அவள் அடுக்கியதில் அசந்து போனான்.

ஒரு பெரும் விக்கல் வர அதில் தள்ளாடியவளை தன் தோளோடு சேர்த்தணைக்க,அவன் மார்பில் தன் தலை சாய்த்தாள்.

நிமிர்ந்து அவன் முகம் பார்த்து மோகனமாக புன்னகைத்தவள்.

அவன் தாடியில் கரத்தை உலவ விட, மொத்த மேனியும் சிலிர்த்ததில் உடலை உதிறி கொண்டவன்.

'வெரி டேஞ்சரஸ் இவளை இப்படியே விடக்கூடாது' என்று மனதிற்குள் போராடியபடி,அவளை கொத்தாக அள்ளிக்கொண்டு நடக்க, கிண்கிணியாக சிரித்தபடி அவன் தோள்களில் தன் கரத்தை மாலையாக ஈட்டு கொண்டாள்.

ஆத்ரேயா என்று அவள் முணுமுணுக்க நடையை நிறுத்தினான்.

அவள் இடையில் இருந்த கரத்தின் அழுத்தத்தை கூட்டிக்கொண்டு கண்களை இறுக்க மூடி திறந்தவன்.

தலையை உலுக்கிக் கொண்டு அவள் அறை முன் நின்றான்.

கீ என்று அவன் சன்னமாக முணுமுணுக்க,இதோ என்று இடுப்பில் சொருகி இருந்த கீ கார்டை அவன் முன் நீட்டியவள்.

அவன் கரங்களில் தவிழ்ந்தபடியே கதவை திறக்க,

ஒருவித தள்ளாட்டத்துடன் அவள் பெட்டில் அமர வைத்தவன்.

" நீ பிரெஷ் ஆயிட்டு தூங்குறியா?" என்று வினவா,

தலைகுனிந்தபடி அசைவில்லாமல் இருந்தவளை கண்டு, " திகழ். ஆர் யூ ஓகே" என்று அவள் தோளை உலுக்கியபடி கேட்ட, அடுத்த நொடி மெத்தையில் விழுந்து இருந்தான்.அவனின் மீது கொடி எனப் படர்ந்தாள்.

ஆத்ரேயா என்று சொன்ன குரலில் திகழ் அழைக்க அவளின் பின்னங்கழுத்தை அழுத்தமாக பற்றியவனின் மறுக்கரம் அவள் இடையை இறுக்கிக் கொண்டது.

இருவரின் மூச்சுக்காற்றும் ஒன்றோடு ஒன்று கலக்க இரு இதழ்களுக்கும் இடையே நூலிடை இடைவெளி இருக்கும் போது அவளை அப்படியே சுருட்டி மெத்தையில் தள்ளியவன்.

உடனே எழுந்து தலையை அழுத்தக் கோதி கொண்டான்.

"நோ. நீ ஃப்ரஷ் ஆயிட்டு தூங்கு. இல்லனா அப்படியே தூங்கு.ஆனால் என்னை விடு" என்றவன். இறுதியில் முடியலை என்ற முணுமுணுப்புடன் அங்கிருந்து அகல பார்க்க,

"நான் வேண்டாமா? " என்று கேட்டவளை நிமிர்ந்து பார்க்கும் சக்தியற்று கரங்களை இறுக்கமூடி கொண்டவன்.

"நல்லா தூங்கி எந்திரி. எல்லாம் சரியாகிவிடும் " என்று அவள் முகம் பார்க்காமல் கூறினான்.

" உங்களை விட்டு வந்ததில் இருந்து, நிம்மதியா எப்போ தூங்குனேன்னு எனக்கு ஞாபகமே இல்லை".

அதில் படபடக்கும் இதயத்துடன் அவளை பார்க்க கலங்கிய கண்களுடன் அமர்ந்திருந்தாள்.

"நீங்க.. நீங்க இல்லாமல் " என்ற வார்த்தைகளை முடிக்கும் முன்பு அழுகை வந்ததில் தொண்டை வலி எடுக்க எச்சில் கூட்டி முழுங்கி கொண்டவள்.

" ஐ ரியலி மிஸ் யூ.உங்களை இந்த அளவுக்கு தேடுவேன்னு எதிர்பார்க்கலை" என்று மெல்லிய விசும்பலுடன் அவள் மொழிய,அதில் ஆத்ரேயனின் மொத்த உடலும் பாரமானது.

கால்களிடையே முகத்தை புதைத்து கொண்டு, விசும்பலுடன் ஏதேதோ புலம்பியபடி அழுக அதற்கு மேல் பொறுக்காமல் அவளை நெருங்கியவன். தன்னோடு அணைத்துக்கொண்டான்.

" உங்களை ரொம்ப தேடுது ஆத்ரேயா" என்ற முனங்கலாக கூறியவளை, இன்னும் தன்னோடு இறுக்கிக் கொள்ள, சில கணங்களில் கண் அயர்ந்தாள்

நீண்ட நேரம் அப்படியே அமர்ந்திருந்தவன். மெல்ல அவளை படுக்கையில் கிடத்தி போர்வையை போர்த்தி விட்டான்.

முகம் இறுகி இருக்க தளர்ந்த நடையுடன் தன்னறை வந்தான்.

தலையை அழுத்த கோதி கொண்டவன்.

விடாமல் நடை பயின்றான்.மனமும் மூளையும் செய்த போராட்டத்தில் மனமே வெல்ல, வேகத்துடன் கதவை திறக்க,

"என்னை விட்டு எங்கே போனீங்க" என்று புலம்பியப் படி வந்து தன் மீது விழுந்தவளை இருக்க அணைத்துக் கொண்டவன்.

அப்படியே தன் உயரத்திற்கு தூக்கி திகழ் இதழ்களை அழுத்தமாக கவ்விக்கொள்ள, அவள் கரங்களோ ஆத்ரேயன் கேசத்தில் அலைபாய்ந்தது.

சுவற்றில் சாய்த்து முத்தத்தை தொடர மூச்சுக்கு ஏங்கிய போதிலும் இருவரின் உயிர் காற்றை ஒருவர் மற்றவருக்கு வழங்கி முத்தத்தை முடிவிலியாய் மாற்றினர்.

இருவரிடமே அதிக வேகம் இருக்க உடைகளோ, மூலைக்கு ஒன்றாக பறந்தது.

ஆணவனின் மீசை தாடி உண்டாக்கிய சுவடுகள் பெண்ணவளின் தேகத்தில் ஓவியமாய் தங்க, அதை சிணுங்கலுடன் ஆராதித்தாள்.

அவள் இதழ்களில் இருந்து ஆத்ரேயா என்ற முனங்கல் வரும்போது எல்லாம் அவன் தன் தடத்தை அவள் மேனியில் பதித்தான்.

அதில் அவள் மொத்தம் மேனியும் அவன் இதழ் எச்சிலில் நனைந்தது.

திகழும் அவனுக்கு சளைக்காமல் அவன் படிக்கட்டு தேகத்தில் கரங்களை அலைபாய விட,

"கொல்றடி "என்றவனின் மோக குரலும்,"ஆத்ரேயா" என்றவளின் தவிப்பான அழைப்பும் அறையில் இசையாக மாற, பெண்ணவளின் தேகம் என்ற பொற்கடலில் ஒற்றைத் தாமரை ஆகி போனான்.

அழுத்தமான இதழ் இணைப்பு இருவரின் நிறைவை பறைசாற்ற, இடைவெளி இல்லா இறுக்கத்துடன் கூடிய அணைப்பில் உறக்கத்தை தழுவினர்.







 
அத்தியாயம்-34

சோம்பல் முறித்தவாறு கண்விழித்தவன். தான் இருக்கும் அறை கண்டு யோசிக்க, நேற்று நடந்த அனைத்தும் நினைவு வர பதறிக்கொண்டு எழுந்தான்.

தலையை கோதி கொண்டவன்.நெற்றியை அழுத்தமாகப் பிடித்துக் கொண்டான்.

"காபி வேணுமா?" என்ற வினாவில் நிமிர திகழ் தான். குளித்து தயாராகி நின்றிருந்தாள்.

இன்று புடவைக்கு பதிலாக பழுப்பு நிற சல்வார் அணிந்திருந்தாள்.

அவள் கழுத்தில் பளிச்சென்று மஞ்சள் கயிறு தெரிய,அதில் எச்சில் கூட்டி விழுங்கிக் கொண்டவன். அவளைப் புரியாமல் பார்த்து வைத்தான்.

பிறகே அவன் அறையெங்கும் பார்வையை ஓட்ட, "உங்க டிரஸ் லாம்ப் டேபிளில் இருக்கு " அவன் தேடுதல் உணர்ந்து கூறினாள்.

அங்கு நோக்க அவன் ஆடைகளை சீராக மடித்து வைத்திருந்தாள்.

நேற்று அது பறந்த வேகத்தை எண்ணி தொண்டையை செரும்பி கொண்டவன்

அப்பொழுதுதான் திகழ் அப்படியே நின்றிருப்பதை கண்டு, அவளை கேள்வியாகப் பார்க்க, " ஃபிரஸ் ஆயிட்டு வாங்க " என்று இயல்பாக கூறியவள்.

அங்கிருந்த ஒற்றை சோபாவில் அவனைப் பார்த்தபடி அமர்ந்து கொண்டாள்.

'க்கும் இவளை புரிஞ்சிக்க பல வருஷம் ஆகும் போல' என்று நொந்தபடி,

"இப்படியே தான் பார்த்துட்டு இருக்க போறியா?" என்றே கேட்டு விட,

அப்பொழுதுதான் புரிந்து முகம் சிவந்தவள்.

"சாரி. க்கும் உங்களுக்கு காபி எடுத்துட்டு வரேன்" என்று அறையை விட்டு வெளியேற, தலையை உலுக்கி கொண்டு குளித்து உடைமாற்றி வந்தான்.

காபியும் வர,எதுவும் பேசாமல் பால்கனியில் நின்று பருகினர்.

அதன் பிறகும் மௌனமாக கழிய, ஆத்ரேயனுக்கு தான் பெரும் அவஸ்தையாக இருந்தது.

" எங்கேயாவது வெளியே கூட்டிட்டு போறீங்களா? " என்று வாய்விட்டு கேட்டவளை அதிசயமாக பார்த்தவனின் தலை சம்மந்தமாக அசைந்தது.

அதில் புன்னகைத்தவளை கைகளில் அள்ளிக் கொள்ளும் வேகம் வர,உடனே பாக்கெட்டில் கைவிட்டுக்கொண்டான்.

இருவரும் ஜோடியாக அறையை விட்டு வெளியே வர, ஐயோ என்று அலறலில் ஒன்று போல் திரும்ப,விமல் தான் வாயில் கை வைத்து கொண்டு இருவரையும் அதிர்ந்து போய் பார்த்திருந்தான்.

" எதுக்கு இப்ப கத்தற" என்ற ஆத்ரேயன் கேள்வியில், " சார் நீங்க ரெண்டு பேர் ஒரே ரூம்லயா? ",

" ஐயோ" என்று மீண்டும் நெஞ்சில் கை வைத்துக் கொண்டு அலற, " இப்போ என்னடா" என்று எரிச்சலுடன் ஆத்ரேயன் கேட்க,

'இனி என்ன கேட்க' என்று நொந்து கொண்டு, ஒன்னும் இல்லை என்ற முணுமுணுப்புடன் அங்கிருந்து சென்றவன்.

உடனே போனை எடுத்து தன் மனைவிக்கு அழைக்க எதிர்ப்புறம் எடுக்கப்பட்டதும் "அடியே கவி " என்று ஒப்பாரி வைத்தான்.

அவன் புலம்பலுக்கு இடையே கூறிய செய்தியில், " அய்யோ இன்னுமா உங்களுக்கு புரியலை " என்று ஆசுவாசத்துடன் அவள் பதிலளிக்க,

"என்னடி சொல்ற.சத்தியமா புரியலை" என மண்டை சூடாகிய கடுப்பில் கடுகடுத்தான்.

"நீங்க சொல்றதெல்லாம் வச்சு பார்க்கும்போது அவங்களுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சு போல " என்றதும் விமலுக்கு மயக்கமே வந்துவிட வராண்டாவில் பொத்தென்று விழுந்தான்.

எதிர்ப்புறம் கவிதா மேலிட்ட வயிற்றை பிடித்துக் கொண்டு கத்த, அவன் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பிய ஹோட்டலின் பணியாளர்கள்,

" என்ன சார் ஆச்சு" என்று கேட்க,

" சூடா ஒரு காபி வேணும்" என்றவனை மேலும் கீழும் பார்த்துவிட்டு கொண்டுவர சென்றனர்.

உடனே மீண்டும் மனைவிக்கு அழைப்பு விடுக்க, அவள் விசாரணைக்கு பதில் அளித்துவிட்டு," ஒன்பது மாசமா அவங்க கூட தான் சுத்துறேன். எனக்கு தெரியாது உனக்கு எப்படி டி தெரிஞ்சது" என்று ஆச்சரியமாக வினாவினான்.

"க்கும். நீங்க சொன்னதை வச்சு கெஸ் பண்ணேன். அவ்வளவுதான் இதை போய் பெருசா பேசிக்கிட்டு" என்றவளின் பேச்சில் நடு மண்டையில் ஆணி அடித்த உணர்வு.

'அப்போ நான் தான் முட்டாளா?'என்று நொந்து போய் அவன் அறைக்குள் முடங்கிக் கொண்டான்.

***

தம்பதிகள் இருவரும் லால்பார்க் தான் வந்திருந்தனர். பலவிதமான மரங்களால் சூழ்ந்திருந்த அந்தப் பகுதி காலை வேளையில் புத்துணர்வை அளித்தாலும், ஆத்ரேயனின் எண்ண புழுக்கத்தை போக்க முடியவில்லை.

நேற்று நடந்ததை யோசித்தபடி அவளுடன் நடக்க, "ஆத்ரேயா" என்ற திகழின் அழைப்பில் திரும்ப,

தன் முன் மண்டியிட்டு அமர்ந்தவளை புரியாமல் பார்க்கும் போதே, அவள் கரங்களில் இருந்த மோதிரத்தை கண்டு "திகழ்" என்றான் காற்றாகிப் போன குரலில்.

"எனக்கு எப்படி சொல்றதுன்னு தெரியலை ஆனால் என் சந்தோஷம் நீங்க தான்.என் முதல் மாத சம்பளம் வந்ததும் வாங்கிட்டேன். எந்த நம்பிக்கையில் என்று தெரியல" என கூறியவளின் கண்களில் அவன் மீதான ஆசை கொட்டிக்கிடக்க,

" என்னை தள்ளாட வைக்கிற டி" என்ற முணுமுணுப்புடன் கரத்தை அவள் புறம் நீட்ட, புன்னகையுடன் மோதிரத்தை அவன் விரலில் போட்டாள்.

அவள் கரங்களைப் பற்றி எழுப்பியவன். பற்றியக் கரத்தை விலக்கவில்லை.

"உண்மையா என்னை உனக்கு பிடிக்குமா?" என்று அப்போதும் ஆச்சரியம் விலகாமல் தன் கைகளில் இருந்த மோதிரத்தை பார்த்தபடி கேட்க,

"உங்க கிட்ட உணர்ந்த பாதுகாப்பையும் நிம்மதியும் இதுவரை யார்கிட்டயும் நான் உணர்ந்ததே இல்லை".

"நைட் பல நேரம் எனக்கு தூக்கம் வருவதே இல்லை. ஏதோ ஒரு யோசனை ஓடிக்கிட்டே இருக்கும்.ஆனால் நீங்க இருந்தால் சட்டுன்னு தூக்கம் வந்துரும்"

"அதை நான் பெங்களூர் வந்ததும் தான் உணர்ந்தேன்" என்றதும் நடையை நிறுத்தியவன்.

கரத்தில் அழுத்தம் தந்ததில் திரும்பி அவள் புரியாமல் பார்க்க, உடனே அவள் கன்னத்தை ஏந்தி கொண்டவன்.

மெல்ல அவள் முகம் நோக்கி குனிய அவன் மார்பில் கை வைத்து தள்ளி, தன்னை விட்டு விலகினாள்.

"வெளியே இருக்கோம் "என்று தலைகுனிந்தபடி வெட்கத்துடன் முணுமுணுக்க, அதில் மொத்தமாக சிதறி போனான்.

இந்த இறுகிய கையணைப்பு ஒருவித
நிறைவை தர,அங்கு இருக்கும் வரை இருவரின் கரங்கள் பிரியவே இல்லை.

காலை உணவை கூட மறந்துவிட்டு ஒருவர் அருகாமையில் மற்றவர் சிலிர்த்தனர்.

புதுவித உணர்வுகளை ஆசையுடன் உள்வாங்கிக் கொண்டனர்.

பார்க்கை விட்டு வெளியே வந்ததும் தான் நேரம் ஆனதையே உணர்ந்து, உணவை முடித்து விட்டு பெங்களூர் பேலஸ் சென்றனர்.

அரண்மனை அதன் வடிவமைப்பிலும் அங்கு இருந்த கலைமிக்க பொருட்களிலும் மிளிர்ந்தது. ஆனால், நம்மவர்களுக்கு அது கண்ணிலும் படவில்லை. கருத்திலும் பதியவில்லை.

இத்தனை நாட்கள் பேசாத கதைகளை மெல்லிய குரலில் பேசியபடி அந்த அரண்மனையில் நடந்தனர்.

ஏதோ அந்த அரண்மனையின் ராஜா ராணி போல் உலா வர, கால்வலியும் தெரியவில்லை. சுற்றுப்புறமும் உரைக்கவில்லை.

கடந்த நான்கு மாதங்களாக நடந்தது எல்லாம் இருவரும் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டனர்.

என்ன பேசினார்கள் என்று பிறகு கேட்டால் திருதிருவென்று முழிப்பர்.

ஏதோ பேச வேண்டும்.தன் இணையின் முகத்தில் வரும் உணர்வுகளை மனதிற்குள் படம் பிடித்துக் கொள்ள வேண்டும்.

அந்த சிரிப்பில் தானும் சிதறி போக வேண்டும் என்ற உணர்வுகள் இருவருக்குள்ளும் அலைமோதியது.

காபி ஷாப்பில் சிறிது நேரம் போக்கிவிட்டு வெளியே வந்ததும், ஆத்ரேயன் திரைப்படத்திற்கு கூட்டி செல்ல,குழந்தையின் உற்சாகம் அவளிடம் தொற்றிக் கொண்டது.

அதிலிலும் குழந்தைகளுக்கான கார்ட்டூன் படத்திற்கு அவன் அழைத்துச் செல்ல ஆர்வத்துடன் அவன் கரங்களை அழுத்தமாக பிடித்துக் கொண்டு அமர்ந்தவளை தன் தோளோடு அணைத்துக் கொண்டான்.

அதில் ஆத்ரேயனை நிமிர்ந்து பார்க்க அவள் படபடக்கும் இமைகளையும் துடிக்கும் இதழ்களையும் கண்டு, நெற்றியில் அழுத்தமாக இதழ் பதித்தவன்.

தன் தோளில் சாய்த்து கொண்டான்.

படத்தை பார்க்கும் போது அவளின் இடைவிடாத சிரிப்பையும், சுருங்கிய புருவத்தையும், மலர்ந்த முகத்தையும் தன் கண்களில் உள்வாங்கிக் கொண்டான்.

காரில் மீண்டும் ஓட்டல் திரும்பும் போது அடிக்கடி அவன் பார்வை திகழின் மீது பட,

" பெங்களூர் டிராபிக் கேர்ஃபுல்லா ஓட்டணும்" என்று சன்ன குரலில் அவள் கூற,

" ரொம்ப புதுசா தெரியற, அழகாகவும் "என்றதும், வெட்கத்தில் அவள் முகத்தை திருப்பிக் கொள்ள,

கொல்றடி என்ற கூறியவனின் கரம், அவள் கையை அழுத்தமாகப் பற்றி கொண்டது.

அவர்கள் தங்கி இருக்கும் ஹோட்டலுக்கு வந்ததும்,மீண்டும் ஒரு காபியை பருகி விட்டு திகழின் அறை வர அவன் அப்படியே வாயிலில் நின்று கொண்டான்.

அதில் திகழ் புரியாமல் பார்க்க," நீ தூங்கு நான் ரூமுக்கு" என்று கூறி முடிக்கும் முன்னே,அவன் சர்ட்டின் காலரை கொத்தாக பற்றி உள்ளிழுத்தவள். உடனே, கதவை அடைத்தாள்.

"என்னை விட்டுப் போகாதீங்க" என்று அவனை அனைத்தப்படி கூற,

"புரியலையா டி உனக்கு" என்றவன். தன் அணைப்பின் இறுக்கத்தை கூட்டினான்.

ஒரு பெருமூச்சுடன் உடனே கரங்களைத் தளர்த்திக் கொண்டவன்.

"அது நேத்து நீ ட்ரிங்க்ஸ் பண்ணி இருந்த" என்றதில் அவனை புரியாமல் பார்க்க, "அதனால் இட் ஹப்பென்ஸ்" என்றவனை விட்டு விலகியவதற்கு தான் இதையே கூறியது நினைவு வர,

கீழ் உதட்டை கடித்துக் கொண்டாள்.

"இதில் உன் மேல் தப்பு இல்லை"

"அச்சோ ப்ளீஸ்" என்று கெஞ்சலுடன் இறைஞ்ச,

" நோ நான் ரீசன் சொன்னேன். இப்பவும் அதே மாதிரியே முடியாது இல்லை " என்று விட்டு அவன் அங்கிருந்து செல்ல திரும்ப,அவனின் முதுகோடு வந்து ஒட்டிக்கொண்டவள். கரம் அவன் மார்பை சுற்றி படர்ந்தது.

அவள் கரத்தின் மேல் தன் கரத்தை பதித்தவன்.

"உன் மேல் தப்பு இல்ல. நான் தான்" என்று அவன் தொடங்கியதில், "அச்சோ போதும் அமைதியா இருங்க" என்று கூச்சத்தில் முகம் சிவந்து அவன் வார்த்தைகளை நிறுத்த பார்த்தாள்.

அவள் கரங்களைப் பற்றி இழுத்து தன் முன்னே கொண்டு வந்தான்.

" அது என்ன அச்சோ" என்று ஒற்றை புருவம் உயர்த்தி அவன் கேட்ட அழகில் மயங்கியவள்.

அவன் கேள்வியில் இதற்கு என்ன கூறுவது என்று புரியாமல் விழித்தவளின் கண்ணம் பற்றி தன் பக்கம் திருப்பி, நெற்றியோடு நெற்றி முட்ட, அவள் அப்படியே கண் மூடினாள்.

"நிதானமா தானே இருக்க" என்று சன்ன குரலில் ஆத்ரேயன் கேட்க,

அதில் "தெரியலை" என்று திகழ் முணுமுணுத்தாள்.

"ஓ அப்போ பிடிக்கலையா?. இட்ஸ் ஓகே " என்று அவன் விலக பார்க்க,

" உங்களுக்கு என்னதான் ஆச்சு " என்று சிணுங்கியவளை கொள்ளைக் கொள்ளையாகப் பிடித்தது.

"பிடிச்சிருக்குனா பிடிச்சிருக்குன்னு சொல்லணும். பிடிக்கலைன்னா பிடிக்கலைன்னு சொல்லணும். தெரியலை என்ற வார்த்தைக்கு எனக்கு அர்த்தம் தெரியலையே "என்றான்.

அவன் வார்த்தைகளில் வெட்கம் பிடுங்கி தின்ன அவனிடமே அடைக்கலம் ஆக, இருவரும் கட்டிலில் அணைத்தப் படி விழுந்தனர்.

" ஏன் உங்களுக்கு தெரியாதா? "

" இது செல்லாது. வாய் விட்டு சொன்னால்தான் நம்புவேன்" என்று அடமாக கூறியவனை கண்டு வெட்கம் பிடுங்கி தின்றது.

" அச்சோ ஏன் இப்படி போட்டு படுத்துறீங்க" என்று வெட்கத்திலும் கூச்சத்திலும் திகழ் உரைக்க,

"நீயும் என்னை படுத்தலாம்" என்றவனின் விழிகள் சொன்ன செய்தியில் அவன் மார்போடு புதைந்து கொண்டாள்.

அதன் பிறகான நேரம் அவர்களுக்கு மட்டுமானது.

இருவரும் பூமியில் பாதம் படாத ஒருவித மாய உலகில் சுற்ற,ப்ரொடியூசர் இடமிருந்து கால் வரவும் நிதர்சனம் புரிந்தது.

ஆத்ரேயன் யோசனையில் அமர்ந்து விட திகழ் தவித்து போனாள்.

விழிகள் கலங்கும் போல் இருக்க, அதை கட்டுப்படுத்தியவாறு தயாராகிக் கொண்டிருந்த ஆத்ரேயன் முகத்தில் பார்வையை பதித்திருந்தாள்.

அதில் பெருமூச்சு விட்டுக் கொண்டவன்.அவளை அப்படியே அள்ளி தன் மடியில் கிடத்தி கொண்டான்.

"இப்படியே பார்த்துட்டு இருந்தால் எப்படி" என்று அவள் கண்ணம் பற்றி கேட்க,

"தெரியலை" என்றவளின் குரல் உடைந்து இருந்தது.

" திகழ் கஷ்டம் தான். ஆனால் வேற வழி இல்லை. நான் கண்டிப்பா போய் தான் ஆகணும். இனி ஒரு மாசத்திற்கு என்னால் நகர முடியாது நீயும் உன் ஜாபில் ஃபோகஸ் பண்ணு".

" ஆத்ரேயா" என்று அழைத்தவளின் இதழில் ஒற்றை விரல் வைத்து தடுத்தவன். மறுப்பாக தலையசைத்தான்.

"இப்போ அப்படி கூப்பிடாதே" என்றவன் பெருமூச்சு விட்டுக் கொள்ள, திகழோ அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.

மீண்டும் வரும் பிரிவு இதயத்தை பாரமாக்கியது.

ஏதோ காற்று பூகா அறையில் அடைத்து வைத்தது போல், உணர்ந்தாள்.

' அவன் இன்றி இனிமேல் இருக்க முடியுமா?' என்ற யோசனையிலே திகழியிருக்க,வழியனுப்ப பார்க்கிங்கே வந்துவிட்டனர்.

விமலுக்கு இவர்கள் இருவரையும் இப்படி பார்க்க தாளவில்லை.

கண்ணீருடன் விடை கொடுத்தவளை பார்த்தபடியே காரில் ஏறியவன். கார் நகரவும் அப்படியே கண் மூடி இருக்கையில் சாய்ந்து கொண்டான்.

திகழ் என்று இதழுக்குள் முணுமுணுத்துக் கொள்ள முன் இருக்கையில் இருந்த படி ஆத்ரேயன் படும் அவஸ்தையை பார்த்தவன்.

அதற்கு மேல் முடியாமல், "ஏன் சார் அவங்களையும் கூட்டிட்டு வந்து இருக்கலாம் இல்லை. ஏன் இப்படி பிரிஞ்சு கஷ்டப்படணும்" என்று ஆதங்கத்தில் கேட்டு விட்டான். அதில் விரக்தியாக சிரித்தவன்.

" அப்படின்னா இதெல்லாம் ஒன்னும் வேண்டான்னு நானும் அவ கூட இருந்து இருக்கணும் இல்ல" என்றதும் சார் என்றான் அதிர்வுடன்.

"எனக்கு என்னோட வேலை கேரியர் எவ்வளவு முக்கியமோ அதே மாதிரி தான் அவளுக்கும் ".

"இது ஒன்னும் நாலு மாசத்தில் உருவானது இல்லை அவளோட 25 வருஷ கனவு. ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டு இப்பதான் தனக்கான ஒரு அடையாளத்தை யாருடைய உதவியும் இல்லாமல் அடைந்திருக்காள். அதெல்லாம் தூக்கி போட்டுட்டு எனக்காக வான்னு நான் எப்படி கூப்பிட முடியும்".

" பெண்களோட கனவுகள் விலைமதிப்பு இல்லாதது விமல்.அதை நமக்காக அவங்க விட்டுக் கொடுத்து போறாங்க என்பதற்காக அதை சாதாரணமாக நினைக்கிற கூடாது" என்று அமைதியான குரலில் மொழிந்தான்.

விமலுக்கு தன் மனைவி பொட்டிக் வைக்க வேண்டும் என்று புன்னகையுடன் கூறியது நினைவு வந்தது.

அதை பல தடவை அவள் கூறியதும், இப்பொழுது கரு உருவானதில் இருந்து அந்த பேச்சு நின்றதும் நினைவு வர, "ஆமா சார் பொண்ணுங்க கனவு விலைமதிப்பு இல்லாததுதான்" என்றவன். கண்மூடி இருக்கையில் சாய்ந்து கொண்டான்.

ஆனால் ஒன்றுமே செய்ய முடியாத இயலாமையில் விமலுக்கு சுருக்கென்று குத்தியது.

அதே நேரத்தில் குழந்தை அவள் இல்லாமல் வளர்வதும் தாங்கள் அவள் இல்லாமல் இருப்பதும் யோசிக்கக்கூட முடியவில்லை.அந்த உண்மை கசப்பாக தொண்டைக் குழியில் இறங்கியது.

அதே நேரத்தில் தன் மனைவியின் கனவுக்காக வலிக்க வலிக்க அவளை விட்டு வரும் ஆத்ரேயனை கண்டு உள்ளம் நிரம்பியது.




 
அத்தியாயம்-35

" கண்ணா நில்லு" என்றவரின் அழுத்தமான அழைப்பில், தடுமாறும் கால்களை நிலை நிறுத்திக் கொண்டு நின்றான்.

அவரை திரும்பியும் பார்க்கவில்லை. கோபத்துடன் அவன் முன் வந்தவர். " என்ன பழக்கம் இது " என்று அதட்டலுடன் கேட்டார்.

" நோ நாட் தட் மச். சக்சஸ் மீட் அப்படியே ஒரு பார்ட்டியும்".

"அதுக்குன்னு குடிப்பியா கண்ணா" என்றவரின் குரல் தழுதழுத்தது.

மா என்று சலித்தபடி நிமிர்ந்தவன். அவர் கண்களில் தேங்கியிருந்த கண்ணீரைக் கண்டு,

" சாரி இனிமேல் இது மாதிரி நடக்காது. ஜஸ்ட் " என்றவன்.

" பச் விடுங்க. நீங்க போய் தூங்குங்க நாளை காலையில் பேசலாம்" என்று கூறிவிட்டு அவன் செல்ல ஒருவித தள்ளாட்டத்துடன் சென்ற மகனை பார்த்தவர்.

"கண்டிப்பா நாளைக்கு பேசணும்" என்று உறுதியுடன் கூறினார்.

தலையை பிடித்தபடி அதிகாலையில் வந்த மகனை கண்டித்துடன் பார்க்க, "என்ன அஞ்சரைக்கு எல்லாம் எழுந்துட்டீங்க இன்னும் தூங்கலாம் இல்ல" என்றபடி அவன் சோபா அமர,குடிக்க இஞ்சி டீயை அளித்தார்.

அதைப் பருகி முடிக்கும் வரை அமைதி காத்தவர். அவன் கப்பை வாங்கி கொள்ள,

"போய் தூங்குங்க எதுக்கு இவ்வளவு சீக்கிரம் எழுந்தீங்க" என்றபடி அவன் வெளியே செல்ல பார்க்க,

"இந்த டைம்க்கு தானே நீ வீட்டில் இருந்து கிளம்புவ. இப்போ விட்டால் உன்னை பார்க்க முடியாதுல்ல.அதனால் தான் உனக்காக வெயிட் பண்றேன்" என்றார் குற்றம் சாட்டும் குரலில்.

அதற்கு அவன் மௌனம் காக்க,

"நேத்து உன் கிட்ட பேசணும்னு சொன்ன தா எனக்கு ஞாபகம். இல்லை குடிச்சதில்" என்று அவர் ஆரம்பித்ததும் மீண்டும் வந்து சோபாவில் அமர்ந்து கொண்டவன்.

" என்னன்னு சொல்லுங்க" என்றான்.

" நீ தான் சொல்லணும்" என்றதும், நெற்றியை பிடித்தபடி,

" சாரி இனிமேல் அப்படி நடக்காது" என்ற மகனை அழுத்தமாக பார்த்தவர்.

"புது படத்துக்கு சைன் பண்ணி இருக்க போல" என்றார் கேள்வியாக, " ஆமாம் "என்றான் ஒற்றை வார்த்தையாக,

" உனக்கு பொண்ணு பார்க்கலாம்னு இருக்கேன்".

"மா" என்று அதிர்வுடன் ஆத்ரேயன் எழ,

" என்ன கண்ணா" என்று சாதாரணமாக அவர் வினாவ,

" புரிஞ்சுதான் பேசுறீங்களா?. எத்தனை தடவை கல்யாணம் பண்ணுவாங்க" என்று சிடுசிடுத்தான்.

"ஏன் பா கோபப்படுற.திகழ்தான் போயிட்டா.இனி அப்படியே உன் வாழ்க்கையை விடுறதா, டைவர்ஸ் பண்ணிட்டு கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தானே"

"தேவையில்லை.எனக்கு திகழே போதும்".

"எனக்கு அது மட்டும் போதாது கண்ணா.நீ சந்தோஷமா பொண்டாட்டி கூட சேர்ந்து வாழணும்".

" அப்படின்னா கொஞ்ச நாள் வெயிட் பண்ணுங்க" என்று கூறிவிட்டு அவன் எழ,

"இன்னும் எத்தனை வருஷம் டா " எனக் கோபத்தில் கத்தியவர்.

" நீங்க பிரிஞ்சு கூட இருங்க.ஆனால், ஏன் பேசாமல் பார்க்காமல் இருக்கீங்க. அப்படி என்ன உங்களை கட்டி போடுது ஏன் இப்படி" என்றவருக்கு அவர்கள் வாழ்க்கை வெறுப்பை தான் தந்தது.

அதிலும் விமல் கூறியதெல்லாம் நெஞ்சை கசக்கி பிழிந்தது.

இத்தனை வலியுடன் பிரிந்து தான் இருக்க வேண்டுமா என்று ஆதங்கம் உருவானது.

அவர் கேள்வியில் விரக்தியாக புன்னகைத்துக் கொண்டவன். எதுவும் பேசாமல் மௌனம் காத்தான்.

'செல்போன் உரையாடல்கள் மட்டும் போதுமா? அவள் குரலை கேட்டால் அல்லது அவள் முகத்தை பார்த்தால் அவளுடனே இருந்து கொள்வோமா' என்ற பயத்தில் அவன் தவிப்பது அவனுக்கு மட்டும் தானே தெரியும்.

" இத பத்தி பேச வேண்டாம்" என்று விட்டு அவன் அகல,

" கண்டிப்பா பேசி தான் ஆகணும். பேச வேண்டிய ஆள் கிட்டயே நான் பேசுறேன்" என்று மொழிந்து விட்டு அவர் அறைக்கு சென்று விட,

சில கணங்கள் பிடித்தது அவர் கூற்று புரிய அதில் பதறிக்கொண்டு,

" மா அவளை நீங்க ஒன்னும் சொல்லக் கூடாது. இது என்னோட முடிவு தான் "என்றவனின் கன்னத்தில் பளார் என்று ஒரு அறையைத் தர அதிர்ந்து போனான்.

" திகழை மருமகளா கொண்டு வந்தது நான் அவளை பார்த்துக்கிட்டது நான். அவளை ஏன்டா நான் குறை சொல்ல போறேன். எதுக்கு நான் குறை சொல்லணும். உன் மேல் தான் நான் கோபப்படனும் ".

"நீங்க வாழ்ற வாழ்க்கையை நினைச்சாவே எனக்கு அவ்ளோ கோபம் வருது. என்கிட்ட பேசாதே".

" சரி கோபப்பட்டுக்கோ.ஆனால் அவள் கிட்ட எதுவும் பேசாதீங்க "

" உன்னை மாறியே என்னையும் இருக்க சொல்றியா?" என்று வெறுப்புடன் கேட்க,

"அவ ஆசைக்கு அப்போ மதிப்பே இல்லையா".

"உன்னை பையனா பெத்ததுக்கு பெருமைப்படுறேன்.ஆனால், ஒரு அம்மாவை எனக்கு கஷ்டமா இருக்குடா".

" அவள் இல்லாமல் நீ நீயவே இல்ல. இவ்வளவு வருத்தி கொண்டு ஏன் இந்த பிரிவு. அதிலிலும் இந்த மூணு மாசம் பித்து பிடித்தவன் மாறி இருக்க, புரியுதா இல்லையா உனக்கு".

என்று அவன் கண்ணம் தாங்கி கலங்கி போய் கேட்க அவனுடல் இறுகியது.

"உங்க ரெண்டு பேருக்கும் காதலும், உங்க கனவு மீதான ஆசையும் சரிசமமா இருக்கு. அது தான் ஒன்னை இழந்துட்டு மற்றது பின்னால் ஓடி உயிர்ப்பே இல்லாமல் இருக்கீங்க"

" இப்படி இருந்தால் உங்க வேலையில் ஜெயிக்கலாம்.பல பேரு உங்களை பார்த்து பெருமைப்படுவாங்க. ஆனால் வாழ்க்கையில் மொத்தமா தோத்துப் போயிடுவீங்க.நாளைக்கு உன் கல்யாண நாள் அதாவது ஞாபகம் இருக்கா" என்றதும் இன்னும் அவன் இறுகிப் போனான்.

அவளை அதிகத்திற்கும் தேடும் தன் உடலையும், மனதையும் கட்டுப்படுத்த முடியாமல் பித்து பிடித்து அலைவது அவனுக்கு தானே தெரியும்.

"நான் உன் அம்மாடா.எனக்கு தெரியாதா?" என்றதும் அவர் தோள்களில் முகம் புதைத்தான்.

"என் கண்ணா" என்று அழுகையுடன் மகனை அவர் அணைக்க, அவர் கழுத்தோரம் சூடான கண்ணீர் இறங்கியது.அதில் தாயுள்ளம் கலங்கி போனது.

*******

"திகழ், திகழ்" என்ற ஜோசப்பின் தொடர் அழைப்பில் கிச்சனில் இருந்த அனைவரும் திரும்பி பார்க்க, பெண்ணவளோ உணவு சமைப்பதில் கவனமாக இருந்தாள்.

திகழினி என்ற அவரின் கத்தலில் பதறிக்கொண்டு அவள் திரும்ப, " உன்கிட்ட பேசணும் வா " என்ற ஜோசப்பின் அழைப்பில் சம்பந்தமாக தலையசைத்தவள்.

"இதை கொண்டு போய் சேர்வ் பண்ணுங்க "என்று பணியாளிடம் கூறிவிட்டு,அவர் அறைக்கு சென்றாள்.

" உட்காரு" என்றதும் அவர் எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்தாள்.

" திகழ் ஒன் வீக் லீவ் எடுத்துக்கோ நல்லா ரெஸ்ட் எடு".

"நோ நீட். எதுக்கு ஐ அம் ஓகே"

" ஓகேவா.. இது ஓகேவா" என்று அவளை சுட்டிக்காட்டியவர்.

கோபத்தை கட்டுப்படுத்தியவாறு, "ஐ நோ உன்னோட ஹஸ்பண்ட் ஆத்ரேயன்னு எனக்கு நல்லா தெரியும்".

அதில் கலங்கிய கண்களுடன் அவரை பார்த்தாள்.

"அவர் போன நாளிலிருந்து இப்போ வரை நீ நார்மலே இல்லை".

"நோ. ஐ அம் ஓகே" என்ற அவளின் வார்த்தைகள் முற்றுப்பெறும் முன் மேசையை தட்டியவர்.

"யுவர் பிசிகல் மெண்டல் ஹெல்த் இஸ் நாட் ஸ்டேபிள் திகிழ் புரியுதா உனக்கு. எதுக்கு இவ்வளவு ஒர்க் பண்ற. எதுக்கு இப்படி உன்னை நீயே வருத்திக்கிற"

"சாப்பிடுறியா இல்லையா".

அவளின் மெலிந்த தேகத்தையும் சோர்ந்த முகத்தையும் பார்க்கவே முடியவில்லை.

" ஹோட்டலில் காண்ட்ராக்ட் வேலை பார்க்கும் போது கூட நல்லா இருந்த. இப்போ ஏன் இப்படி " என்றவருக்கு ஆற்றாமை தாங்க முடியவில்லை.

"என் பொறுப்பில் உன்னை கூட்டிட்டு வந்து நல்லா பார்த்துக்காத மாதிரி இருக்கு" குற்ற உணர்வுடன் அவர் மொழிய,

" ஐயோ அப்படி இல்லை. நல்லா தூங்குறேன். நல்லா சாப்பிடுறேன் உண்மையா" என்று அவள் சத்தியம் செய்யாத குறையாக கூற,

"ஆனால் உன் உடல் நிலையை பார்த்தால் அப்படி தெரியலை".

"என்னதான் பிரச்சனை" என்று மீண்டும் மீண்டும் அவர் கேட்க, அவள் பதில் பேசாமல் மௌனம் காக்க, அவள் அமைதியில் கோபம் கொண்டார்.

"என்கிட்ட ஏன் சொல்ல போற.எல்லாத்தையும் உள்ள போட்டு அப்படியே பூட்டி வச்சுக்கோ.நான்தான் பொண்ணு மாதிரி நினைத்துவிட்டேன் போல" என்று கலங்கிப் போய் அவர் கூற,

"எனக்கு ஆத்ரேயா வேணும்" என்று சன்ன குரலில் கூறியவள்.விசும்ப ஆரம்பித்தாள்.

அதில் திகைத்துப் போனவர்.

"அவருக்கு உன்னை பிடிக்கலையா?. வேணாம்னு சொல்லிட்டாரா?" என்று தவிப்புடன் கேட்க,

"இல்லை அவருக்கும் நான் வேணும். ரொம்ப ரொம்ப வேணும். ஆனால் நான்தான் என் மேல் தான் தப்பு " என்று கண்ணை துடைத்தபடி அவள் கூற, புரியாமல் விழித்தார்.

"ஐயோ என்னதான் பிரச்சனைன்னு சொல்லு திகழ்" என்றதும் அவளும் கூற அனைத்தையும் கேட்டவர்.

"திகழ் இந்த ஹோட்டல் நான் என்னுடைய முப்பதாவது வயசில் ஆசைப்பட்டது.ஆனால், என்னோட 56வது வயதில் தான் அதை என்னால் சாதிக்க முடிந்தது"

"எதனால் என்று உனக்கு தெரியுமா?" அவர் கேள்வியில் அவள் புரியாமல் விழிக்க,

" ஃபேமிலி கமெண்ட். கல்யாணமானதும் குழந்தை அவங்களுக்காக ஓடணும்".

"நல்லா தான் சம்பாதிச்சேன் ஆனால் என் கனவுகளுக்கு அந்த சம்பாத்தியம் பத்தலை".

"என் ஆசைகளை முழுக்கு போட்டுட்டு குடும்பத்திற்காக ஓடினேன்".

அதில் அவரை வியந்து பார்க்க," நான் மட்டும் இப்படின்னு நினைக்கிறாயா?.இங்கே பலபேர் ஆணோ பெண்ணோ தன்னோட குடும்பத்திற்காக தன் ஆசை கனவெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு அவங்களுக்காக தான் ஓடுறாங்க".

" லட்சத்தில் ஒருத்தவங்களுக்கு தான் ரெண்டும் அமையும்" அதில் திகழின் முகம் அப்படியே வாடியது.

அதில் மென்மையாக புன்னகைத்தவர்.

"ஆனால், முயற்சி பண்ணினால் பல பேரால் வாழ்க்கையிலும் தன் கனவிலும் சாதிக்க முடியும்"

" எனக்கு புரியுது. உன்னோட ஹஸ்பண்டோட சம்பாத்தியம் இல்லாமல் நீ முன்னேறனும்னு அவங்க நிழல் இல்லாமல் உனக்கான சுய அடையாளத்தை தேடணும்னு ஆசைப்படுற. ஆனால் கல்யாணம்னு ஒன்னு ஆயிடுச்சுன்னா இங்க நான் நீ என்ற தனியே கிடையாது".

"எப்பவும் டீம் தான். நம்முடையது நமக்காக நாம."

"நீ பட்ட கஷ்டங்களுக்கு கிடைச்ச பலன் தான் உன் ஹஸ்பண்ட். யோசி"

அதில் உடனே எழுந்தவள்.கண்களை துடைத்த படி, " நான் அவர் கிட்ட போறேன்" என்றாள்.

அதில், " தட்ஸ் மை கேர்ள்" என ஆர்ப்பாட்டமாக சிரிக்க,கதவை திறக்கும் முன், "ஆனால் இந்த ஹோட்டலோட மேனேஜர் நான் தான். என்னால் அங்கிருந்தும் மேனேஜ் பண்ண முடியும்".

" அஃப்கோர்ஸ் " என்று நிறைவுடன் அவர் சிரிக்க,

" தேங்க்ஸ் சொல்லணும்னு தோணுது ஆனால் சொல்ல மாட்டேன் " என்று அழுகையுடன் புன்னகைத்து விட்டு அவள் அங்கிருந்து செல்ல, கசிந்த கண்ணீரை துடைத்த படி நிமிர்ந்தவருக்கு அத்தனை சந்தோஷம்.

ஹோட்டலை விட்டு வெளியேறும்போது ஒரு துளி வருத்தம் கூட இல்லை. எங்கிருந்தாலும் தனக்கான இடத்தை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை உருபெற்று இருந்தது.

கைகளில் இருந்த மோதிரத்தை மறுக்கரத்தால் வருடியபடி பயணத்தை தொடர்ந்தாள்.

விமானத்தில் பயணிக்கும் போது கண்ணீர் மற்றும் புன்னகையுடன் இருந்தவளை பணிப்பெண்கள் புரியாமல் பார்த்து, " நீங்க ஓகே தானே ஏதாவது தேவைப்படுதா" என்று ஆதரவாக கேட்க,

"ரொம்ப சந்தோஷமா இருக்கேன். அதனால் தான்" என்று சிரிப்புடன் கூறியவளை வேலை புரியாமல் பார்த்தவர்.

அடுத்த நிமிடமே, " நீங்க நினைக்கிறது நல்லபடியா நடக்க வாழ்த்துக்கள்" என்று கை கொடுத்தார்.

நீண்ட நெடும் மாதங்களுக்கு பிறகு தன் இடம் வந்து சேர்ந்வளுக்கு வாழ்க்கையே வசப்பட்ட உணர்வு.

ஒரு வித உணர்வுகளின் தாக்கத்தில் வீட்டிற்குள் நுழைய ஹாலில் அமர்ந்திருந்த அன்னபூரணியை கண்டு, "அத்தை " என்றதும் நிமிர்ந்த அன்னபூரணி கண்ட காட்சி உண்மைதானா என்று புரியாமல் கண்ணாடியை கழட்டி சுத்தப்படுத்திவிட்டு மாட்டினார்.

அதில் அழுகை பெருக அவரை ஓடி சென்று அணைத்துக் கொண்டாள்.

" சாரி ரொம்ப ரொம்ப சாரி. உங்ககிட்ட சொல்லாமல் போயிருக்க கூடாது. நான் நான் தப்பு. சாரி "என்று மனதார மன்னிப்பு கேட்க, அவளை ஆதரவாக அணைத்தவருக்கு,"இது போதும் நீ திரும்பி வந்துட்டல்ல இது போதும்".

"அழக்கூடாது" என்று அவள் கண்ணத்தை துடைத்து விட்டவர்.

" உன் கனவுக்கு நாங்க உறுதுணையா இருப்போம்" என்றார்.

"தெரியும் " என்ற கண்ணீருடன் அவள் கூறி மீண்டும் அவரை அணைத்து கொண்டாள்.

உடனே நினைவு வந்தது போல், "அய்யோ கண்ணா" என்று அன்னபூரணி பதற அவருக்கு என்னாச்சு என்று அதற்கு மேல் பதறிப் போனாள்.

"கண்ணா உன்னை பாக்கணும்னு போனான்" என்றதும்,

" எங்கே "

ஏர்போர்ட் என்று அவர் கூறியதும் திகழ் முகமே வாடிப்போனது.

" கிளம்பிட்டாரா" என்று ஏமாற்ற குரலில் கேட்க,

" கவலைப்படாதே. பிளைட்டுக்கு இன்னும் டைம் இருக்கு" என்றவர். உடனே, அவனுக்கு விடாமல் அழைக்க எதிர்ப்புறம் எடுக்கப்படவில்லை.

"சரி வா போலாம்"என்று இருவரும் டிரைவரின் துணையுடன் ஏர்போர்ட் செல்ல, ஆத்ரேயன் காத்திருப்போர்க்கான இருக்கையில் அமர்ந்திருந்தான்.

அவளை பார்க்க போகும் மகிழ்ச்சி இருந்தாலும், அவளை அப்படியே அழைத்து வந்து விடுவோமா என்ற கவலையும் எழுந்தது.

இரு பெண்களும் நுழைவாயில் வந்தனர். உள்ளே அவர்கள் அனுமதிக்கப்படாமல் போக, என்ன செய்வது என்று புரியாமல் விழித்துக் கொண்டிருந்தனர்.

கண்ணாடி கதவின் வழியாக அவன் செல்வது புரிய, இப்பொழுதே அவன் கைகளில் சரணடைய வேண்டும் என்ற ஆவலில் இருக்கும் இடம் பொருட்படுத்தாமல் ஆத்ரேயா என்று கத்தினாள். அதில் அவன் அப்படியே நின்றான்.

பிறகு தலையை உலுக்கிக் கொண்டு மீண்டும் உள் செல்ல பார்க்க, மீண்டும் அடித்தொண்டையிலிருந்து கத்தினாள்.

அங்கிருந்த மொத்த பேரும் அவளை தான் பார்த்தனர்.

திகழை ஆச்சரியமாக பார்த்தப்படி தலையை அழுத்தக் கோதி கொண்டவன்
இதழ்கள்," வந்துட்டா எனக்காக" என்று முனுமுனுத்தது.

அங்கிருந்த அநேகம் பேர் அவனை கேள்வியாக பார்க்க, " ஷி இஸ் மை வைஃப்"
என்றவன்.

அடுத்த நொடியே அவளை நோக்கி ஓட, அழுகையுடன் நின்றிருந்தவளை இருக்க அணைத்துக் கொண்டான்.

அன்னபூரணி நிறைவுடன் இவர்களை பார்த்தார்.
 
இறுதி அத்தியாயம்


" உன்னை எவ்வளவு மிஸ் பண்ணேன் தெரியுமா? " என்ற படி அவள் நெற்றியில் அழுத்த இதழ் பதிக்க, அப்படியே அவன் கரங்களில் மயங்கி சரிந்தாள்.

திகழ் என்ற கூவலுடன் அவளை அப்படியே கைகளில் அள்ளிக் கொள்ள, விமான நிலையத்தில் இருந்த மருத்துவக் குழு உடனே வந்து அவளை பரிசோதித்தது.

அவளுக்கு முதலுதவி செய்த செவிலியர், " நீங்க இவங்களுக்கு யாரு? " என்று வினா தொடுக்க,

" அவ ஹஸ்பண்ட்.சொல்லுங்க என்ன ஆச்சு. ஓகே தானே" என்று பதட்டத்துடன் கேட்க,

"அவங்களுக்கு எந்த பிராப்ளமும் இல்லை. ஜஸ்ட் டயர்டால் வந்த மயக்கம். பட் டாக்டர்கிட்ட ஒரு தடவ கன்சல்ட் பண்ணிக்கோங்க" என்று அர்த்தத்தோடு கூற, அவருக்கு நன்றியை தெரிவித்தவன்.

தாயிடம் திரும்பி, " காரில் தானே வந்தீங்க" என்றதும், அவர் பதற்றத்துடன் தலையசைக்க, " சரி ஹாஸ்பிடல் போலாம்" என்று அவளை தூக்கிக்கொண்டு சென்றான்.

இணைந்து விட்டார்கள் என்று மகிழ முடியாமல் இப்படி ஆகிவிட்டதே என்று அனைத்து கடவுளையும் அன்னபூரணி வேண்டிக் கொண்டிருக்க, மருத்துவமனை வந்ததும், திகழ் அனுமதிக்கப்பட்டாள்.

அவளைப் பரிசோதித்து விட்டு வந்த டாக்டரை அவன் பரிதவிப்புடன் பார்க்க, "ஒரு ஸ்கேன் பண்ணி பார்த்துட்டு சொல்றேன்" என்றவரை கண்டு உள்ளமே அதிர்ந்தது.

" என்னாச்சு அவ ஓகே தானே. ப்ளீஸ் சொல்லுங்க" அவர் மௌனத்தில் அவன் கத்த,

"ப்ளீஸ் சார் ஒரு ரெண்டு நிமிஷம் வெயிட் பண்ணுங்க. அப்புறம் உங்களை கூப்பிடுறேன்" என்று விட்டு டாக்டர் உள்ளே செல்ல,அவனோ ஸ்கேன் அறையின் வெளியே பதட்டத்துடன் நின்று இருந்தான்.

நர்ஸ் வந்து அழைக்கவும் பதட்டத்துடன் நுழைந்தவன் காதில் கேட்ட ஒலியில் புரியாமல் நெற்றி சுருக்கியவன்.

கண்கள் கலங்க எதையோ வெறித்துக் கொண்டிருந்த திகழை கண்டு,ஓடிப்போய் அவள் கரங்களைப் பற்றிக் கொண்டான்.

" நீ ஓகே தானே "என்றதும் அழுகையுடன் தலையசைத்தவள்.

அவன் தாடையை பற்றி திருப்பி எதிரே இருந்த திரையை காட்ட, இது இது என்ற வார்த்தை வராமல் அவன் தடுமாறி,

திகழிடம் திரும்பி,"உண்மையா" என்று கேட்க ஆம் என்று தலையசைத்தவளின் நெற்றியில் அழுத்த இதழ் பதித்தான்.

அவர்கள் குழந்தைகள் முக வடிவம் குட்டியாக கருப்பு திரையில் அழகாகத் தெரிந்தது.

" ட்வின்ஸ் வாழ்த்துக்கள்" என்றதும் பெருமூச்சு உடன் அவளின் கரங்களை இறுக்கப்பற்றிக் கொண்டவனின் மேனியே நடுங்கியது.

"ஹார்ட் பீட் கேக்குறீங்களா?"என்றதும் இருவரும் கண்ணீருடன் தலையசைக்க, மெல்ல ஒலிக்கப்பட்ட இரு உயிர்களின் இதயத்துடிப்பு உயிர் கொடுத்தவர்களின் மெய்யில் சிலிர்ப்பை ஏற்படுத்தியது.

" பேபிஸ்க்கு 13 வீக்ஸ். ரெண்டு குழந்தைகளுக்கும் தனித்தனி நஞ்சுக்கொடி.இட்ஸ் குட். ஹெயிட் ஒரு குழந்தை நாலு புள்ளி எட்டு சென்டிமீட்டர்.இன்னொரு குழந்தை அஞ்சு சென்டிமீட்டர் போட்டி போட்டுட்டு வளர்றாங்க" என்று புன்னகையுடன் டாக்டர் கூற, ஆத்ரேயன் பற்றி இருந்த கரத்தில் அழுத்தத்தை அதிகரித்தான்.

" என் டி ஃப்ளூட் கரெக்டா இருக்கு.சோ குழந்தைகளுக்கு எந்த ஜெனிடிக் பிராப்ளமும் இல்ல. இருந்தாலும் ஒரு பிளட் டெஸ்ட் எழுதி தரேன் நாளைக்கு கலெக்ட் பண்ணிக்கலாம் " என்றவர்.

இருவரும் இன்னும் திரையே பார்த்து கொண்டிருப்பதை கண்டு, "வாழ்த்துக்கள் இரண்டு குழந்தைகளுக்கு அப்பா அம்மா ஆகப் போறீங்க".

டிஸ்சுவை திகழுக்கு தர அதனை பெற்றுக் கொண்ட ஆத்ரேயன் அவள் வயிற்றை துடைத்து விட,

"கியூட் கப்புள்ஸ்" என்று அவர்களை ரசித்தபடி தன் இருக்கையில் அமர்ந்தவர்.

அவளின் பரிசோதனை அறிக்கையை எடுத்தார்.

"ஐயன்,கால்சியம் டேப்லட்ஸ் எல்லாம் சாப்பிடுறீங்களா?" என்றதும் அவள் விழித்தாள்.

" ஓ சாப்பிடுறது இல்லையா.பிரக்னன்சி கன்ஃபார்ம் பண்ணதும் ஆரம்பிச்சு இருக்கலாமே " என்றவர்.

"லாஸ்ட் செக்கப் எப்போ போனீங்க" என்க, அதற்கும் அவள் புரியாமல் விழிக்க,

" அப்போ இப்பதான் பேபி கன்ஃபார்ம் பண்றீங்களா" என்று டாக்டர் ஆச்சரியத்துடன் கேட்க, திகழ் ஆத்ரேயனை பார்த்தபடி ஆம் என்று தலையசைத்தாள்.

" ஃபர்ஸ்ட் பிரக்னன்சி. அதுவும் ட்வின்ஸ் வயிறு லைட்டா உங்களுக்கு தெரிய ஆரம்பிச்சிடுச்சு. கவனிக்கலையா? " என்று சிறு ஆச்சரியத்துடன் கேட்க,இல்லை என்றவளை ஆதரவாக அணைத்துக் கொண்டான். தான் இல்லாத பொழுதுகள் அவள் பட்ட கஷ்டங்கள் புரிந்தது.

அவர்கள் இருவரையும் கண்டு சிரித்த மருத்துவர், " வீட்டில் போய் செலிப்ரேஷன் வச்சுக்கோங்க. வீக்கா இருக்காங்க.டேப்லெட் கண்டினியூவா எடுத்துக்கோங்க. நல்ல சத்தான உணவு எடுத்துக்கோங்க.முக்கியமா நல்ல ரெஸ்ட் தேவை. டேக் கேர் யுவர் வைஃப் அண்ட் பேபிஸ் " என்று புன்னகையுடன் அவர் விடை கொடுத்தார்.

பூரித்த முகத்துடன் வந்த இருவரையும் கண்ட அன்னபூரணிக்கு விஷயம் பிடிபட்டுவிட,

"ரொம்ப சந்தோஷமா இருக்குடா.சேருவதற்கே இவ்ளோ நாள் ஆயிடுச்சு. குழந்தை எவ்ளோ நாள் ஆகுமோன்னு இப்பதான் யோசிச்சேன்" என்றவரை ஆத்ரேயன் முறைக்க,

" நீ அதில் கெட்டிக்காரன்னு நிரூபிச்சிட்ட டா " என்றதும் திகழ் வெட்கத்தில் தலை குனிய, "ம்மா நீங்க இருக்கீங்களே" என்றவனின் முகமும் சிவந்தது.

அன்னபூரணியின் அரவணைப்பு அறிவுரைகள் அனைத்தும் முடிந்து இருவரும் அறைக்கு வர,

திகழின் பின்னோடு அணைத்தவனின் கரம் அடிவயிற்றை தாங்கிக்கொண்டது.

"ரொம்ப சந்தோஷமா இருக்கு" என்றவன் அவள் செவி மடலில் அழுத்தமாக முத்தமிட்டான்.

"எனக்கும். ஏனோ வாழ்க்கையோட மொத்த சந்தோஷமும் கிடைச்ச மாதிரி இருக்கு" என்றவளின் இதழ்களை அழுத்தமாக சிறை செய்தான்.

"உன்னை கொஞ்சம் முன்னாலே பார்த்து இருக்கணும். என் கைக்குள்ளே வச்சி இருக்கணும்" என்றவனின் கூற்றில் அவனை அணைத்துக்கொண்டாள்.

இருவரும் மெத்தையில் படுத்ததும் ஆத்ரேயனின் யோசனை முகத்தை கண்டு "என்னாச்சு" என்று வினாவினாள்.

"இல்ல உன் ஒர்க்" என்று கேட்க,

" நான் இருந்தால் தான் அந்த வேலை நடக்கணும் இல்ல. என்னால் இங்கிருந்தே ஹோட்டலையும் கவனிச்சுக்க முடியும்,அத்தையோட கேட்டரிங்கும் பார்த்துக்க முடியும்."

"அதுக்கு ஒன்னே ஒன்னு தான் தேவை " என்று எதிர்பார்ப்புடன் அவன் முகத்தை பார்க்க,

"நான் உன் கூட இருப்பேன் டி " என்றவன். அவள் நெற்றியில் அழுத்தமாக இதழ் பதித்தான்.

அதில் நிம்மதியுடன் கண்மூடியவளின் தலை அவளின் தோள்களில் அழுத்தமாக பதிந்தது.

அன்னபூரணியின் கூற்றில் ரிசெப்ஷன் வைக்கப்பட்டு திருமதி திகழினி ஆத்ரேயன் என்று சமூகத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்டாள்.

ரிசப்ஷனுக்கு மூன்று மாத குழந்தையுடன் வந்த கவிதாவோ, " நான் சொன்னேன்ல. உங்க ஜோடி பொருத்தம் பிரமாதமா இருக்குன்னு. அச்சோ அழகு" என்று ஆர்ப்பரித்தாள்.

அவள் கையில் இருந்த குழந்தையை ஆத்ரேயன் ஏந்தி கொள்ள, திகழ் அதை ஆசையாக பார்ப்பதை கண்டு, " இன்னும் பத்து மாசத்தில் உங்க கையிலும் குழந்தை தவழும்" என நம்பிக்கையுடன் கூறினாள்.

" அதெல்லாம் இன்னும் ஏழு மாசத்திலேயே தவிழ்ந்தரும். ஒன்னுக்கு ரெண்டா" என்று ஆத்ரேயன் முணுமுணுக்க அவன் விலாவில் மெல்ல ஒரு இடி இடித்தவள்.குழந்தையை தன் கைகளில் ஏந்தி கொண்டாள். அந்த அழகிய காட்சி புகைப்படம் ஆனது.

பிரஸ்மீட்டும் வைக்கப்பட, " சார் வீரன் படத்தோட 75 டேஸ் சக்சஸ் இப்போ உங்க மேரேஜ் நியூஸ் சொல்லி இருக்கீங்க. வாழ்த்துக்கள்" என்று பத்திரிகையாளர்கள் ஆர்ப்பரிக்க, திகழை தன் தோளோடு அணைத்துக் கொண்டவன்.

"எங்களுக்கு கல்யாணம் ஆகி ஒரு வருஷம் ஆச்சு. சில கமிட்மெண்ட்ஸ் அதெல்லாம் முடிக்க டைம் ஆயிடுச்சு "
அதில் அவர்களுக்குள் சலசலப்பு எழ, அத்தனையும் அவன் பேச்சில் அடக்கினான்.

" சாந்தவி மேடம் பற்றி வந்த நியூசிற்கு உங்க கருத்து என்ன சார்" என்று ஒரு பத்திரிக்கையாளர் வினா தொடுக்க,

"அவங்க என் படத்தில் நடிச்சாங்க.அதற்கான பேமென்ட் வாங்கிட்டாங்க. ஒரு ஆக்ட்ரஸா அவங்க குட். வேற அவங்களை பத்தி கேக்குறதுக்கு என்கிட்ட என்ன இருக்கு" என்றவனின் கூற்றில் அவர்கள் திருத்திருத்தனர்.

"இல்லை சார் பண மோசடியிலும் ட்ரக் யூஸ் பண்ணுவதிலும் சிக்கி சிங்கப்பூர் ஜெயிலில் இருக்காங்களே உங்க பட ஹீரோயின்".

" அவங்க இதுக்கு முன்னால் எத்தனையோ படம் நடிச்சிருக்கலாம். என் படத்திற்கு பிறகு கூட வேறு படத்தில் கமிட் ஆயிருக்கலாம். என் ஒரு படத்தில் நடிச்சதால் அவங்க என் பட நடிகை ஆகிடுவாங்களா?" என்று அவன் எதிர் கேள்வி எழுப்ப,

" இல்லை திவாகரன் பீல்ட் அவுட் ஆயிட்டாங்களே" என்றதும்,

"சோ வாட். கால் இன்பெக்சன் எடுத்துட்டாங்க.நான் அவருக்கு புக்கே கூட அனுப்பிவிட்டேன்.எங்களுக்குள்ள சீரான நட்பு இருக்கு திவாகருக்கு இது வருத்தமான சூழ்நிலைதான் அவரோட கடைசி படம் என் கூட பண்ணியிருக்கார்.அந்த படமும் சக்ஸஸ் ஆயிருக்கு.அவரோட கால் இழப்புக்கு அவருக்கான என்னால் முடிந்த பரிசு "என்றவனின் முகத்தில் இருந்த அமைதி அவன் கூற்றில் சுத்தமாக தெரியவில்லை.

திகழ் அதிர்ந்து போய் கணவனை பார்த்தாள்.

"முகத்தை மாத்துடி " என்று அவள் காதில் முத்தமிட்டபடி கூற, கேள்வி கேட்பதை விட்டு அவர்களை புகைப்படம் எடுப்பதில் மும்முரமாயினர்.

அடுத்த சில நிமிடங்களிலே அவர்களை அனுப்பி வைத்தான்.

உடனே, "என்னாச்சு அவங்க ரெண்டு பேருக்கும்" என்று வினாவினாள்.

அதற்கு பதில் அளிக்காமல், " ரெண்டு குட்டீஸ் என்ன பண்றாங்க" என்று அவள் அடி வயிற்றில் கரம் வைக்க,

" இன்னும் மூவ்மெண்ட் தெரிய நாளாகும்" என்றாள்.

"இல்லையே ட்வின்ஸ்க்கு சீக்கிரம் தெரியும்னு சொன்னாங்களே" என்றவன் அவள் வயிற்றில் பக்கம் குனிந்து,

" சீக்கிரம் அப்பா கூட புட்பால் விளையாடுவீங்கலாம் ".

அவன் கூறியதன் அர்த்தம் ஐந்து மாதத்தில் புரிந்தது.

நான்காம் மாதத்திலே மெல்லிய அசைவும்,ஐந்தாம் மாதத்தில் அடி உதைகளும் தாராளமாகவே கிடைத்தது.

அதுவும் அவன் கை வைத்து விட்டால் போதும் குழந்தைகள் உருண்டு பிரண்டு விளையாடுவதில் பெண்ணவள் சோர்ந்து போவாள்.

அவனுக்கும், அவளுக்கும் வேலைகள் பல இருந்தாலும் இருவரும் தங்கள் இல்லற வாழ்க்கையின் சுகங்களை சிறிதும் தியாகம் செய்யவில்லை.

ஓய்வு தேவை என்பதால் கணக்கு வழக்குகள், மேற்பார்வை இடுவது மட்டும் பார்த்தபடி அவள் இருக்க, அவள் வேலை செய்யும் பொழுதுகள் அவன் அமைதியாக அமர்ந்திருப்பான்.

இரவு 12 மணிக்கு கூட ஏதாவது ஒரு அழைப்பு வந்து அவன் செல்லும்போது புன்னகையுடன் வழி அனுப்புவாள்.

இருவரும் மற்றவரின் வேலை சுமைகளையும் புரிந்து கொள்ள, வாழ்க்கை வசந்தமானது.

அவர்களின் வாழ்க்கை மேலும் வளர, குழந்தையோ அதைவிட வேகத்துடன் வளர்ந்தது.

வளைகாப்பும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

அம்மையப்பன் மந்தாகினி அவரின் பெண் உடன் ஏதோ விருந்தாளி போல் வந்து விட்டு சென்றனர்.

தன் மடியில் இருந்த அவளின் வீங்கிய கால்களை மெல்ல பிடித்து விட்டவன்.

மறுகரத்தில் தன் படத்திற்கான கதைகளை எழுதிக் கொண்டிருந்தான்.

திகழ் திருமண ஆர்டர்ருக்கான மெனுவை தயார் செய்து கொண்டிருக்க, சுள் என்ற வலியில், ஆத்ரேயா என்று அவள் அலற,

திகழ் என்றவனுக்கு நொடியில் புரிந்துவிட அவளை அள்ளிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றான்.

சில மணி நேரங்கள் கழித்து அவன் இரு தோள்களிலும் அவனின் மகவுகள் ஆக்கிரமித்தது.

" கண்ணா பொண்ணு ஒன்னு பையன் ஒன்னு" என்று சீலாகிப்புடன் கூறியவர்.

பெண் குழந்தையை கைகளில் ஏந்தி கொள்ள,தன் அச்சாக இருந்த மகனின் நெற்றியில் இதழ் பதிக்க அவன் தாடி உண்டாக்கிய உராய்வில் கண்விழித்த அவன் மகனோ ஆத்ரேயனை உறுத்து பார்த்துவிட்டு மீண்டும் கண்ணை மூட,

"ம்மா இவனை பார்த்தீர்களா?"என்று சிறுபிள்ளை என தாய் இடம் குழந்தையை பற்றி புகார் வாசிக்க, " ரொம்ப அழுத்தம் உங்க அப்பா மாதிரி" என்று பேரனை கண்களில் நிரப்பி கொண்டு,

"ஓ அப்போ பொண்டாட்டிக்கு மட்டும் தான் அடங்குவானா " என்று சிரிப்புடன் கூற "படவா" என்று அவனின் தோளில் தட்டியவர்.குழந்தையை வாங்கிக் கொண்டார்.

பெண் குழந்தையோ தந்தையின் அரவணைப்பில் அழகாக துயில் கொள்ள,இரு செல்வங்களை கொடுத்த மனைவியை கொண்டாடி தீர்த்தான்.

இருவரின் கனவுகளும் துணையின் அருகாமையிலும் பக்க பலத்திலும் தடையின்றி நிறைவேறியது.

காதல் மற்றும் குடும்பம் என்ற அஸ்திவாரத்தில் திகழினியின் வெற்றிகள் வானளவு உயர்ந்தது.

வெற்றிகள் அனைத்தும் தன் இணையின் அணைப்பில் கொண்டாடப்பட்டது.

தோல்விகளை தோள் சாய்ந்து தீர்த்துக் கொண்டனர்.

சந்தோஷங்கள் குடும்பம் என்ற கூட்டிற்குள் வரும்போது பல மடங்கானது.

******சுபம் *****
 
Top