அரவிந்தன் குடும்பமும் உறவினர்களும் மண்டபத்தின் அருகில் இருந்த விநாயகர் கோவிலுக்கு சென்று வணங்கினர். பின் அங்கிருந்து அப்படியே மாப்பிள்ளை அழைப்பு தொடங்கியது.
பட்டுவேட்டி சட்டையில் ராஜதோரனையுடன் அரவிந்தன் நடந்து வந்தான். அவனுக்கு வலப்புறம் அவனின் பெற்றோரிருக்க, இடப்புறம் பட்டுப்புடவையில் சாருமதி நின்றிருந்தாள்.
அரவிந்தனிற்கு சற்றும் சலைத்தவனில்லை என்றும் விதமாக அமர்த்தலான கம்பீரத்துடன் பட்டுவேட்டி சட்டையில் தேவா நின்றிருந்தான்.
உறவு பெண்கள் ஆரத்தி சுற்றிய பின், மச்சான் முறைப்படி செயின், மோதிரம் அணிவித்து அரவிந்தனை கைபிடித்து உள்ளே அழைத்து சென்றான் தேவா.
தேவா சாருமதியை பார்த்தாலும் அவன் பெரிதாக கண்டுக் கொள்ளவில்லை. ‘நான் தான் அவரை பார்த்துட்டு இருக்கேன். அவருக்கு என்னோட நினைப்பு கூட இல்லை!’ என சலுகையாய் சலித்துக்கொண்ட சாரு முறைப்புடன் திரும்பிக் கொண்டாள்.
மணமகளுக்கான முகூர்த்த புடவையை வந்து வாங்கி சென்ற வந்தனாவின் பின்னே சாருமதியும் சென்றுவிட்டாள். சிறிது நேரத்தில் தோழிகள் சூழ சாருமதியுடன் மணப்பெண்ணிற்குரிய அனைத்து அலங்காரத்துடன் வந்தனா மணமேடை ஏறினாள்.
மணமக்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கண்களில் நிறைத்துக் கொண்டு ரகசிய புன்னகை சிந்திக்கொண்டனர்.
மங்கள மந்திரங்கள் ஓதி வந்தனாவின் கழுத்தில் பொன்னில் உருக்கிய தாலியை அணிவித்த அரவிந்த் அவளை அவனுடைய சரிபாதியாக ஏற்றுக்கொண்டான்.
தாலி வாங்கும் பொழுது வந்தனா, செல்வராணியின் கண்கள் மட்டுமில்லாமல் தேவாவின் கண்களும் கலங்கியதோ? ஆனால், அதனை அப்படியே இமைகளை சிமிட்டி மறைத்துக் கொண்டான் அந்த கள்ளன். அவனின் கண்கலங்கியதை கவனித்த சாருமதிக்கு வியப்பாக இருந்தது.
தேவாவும், செல்வராணியும் சேர்ந்து வந்தனாவின் கைபிடித்துக் கொடுக்க அதனை இறுக பற்றிக்கொண்டான் அரவிந்தன்.
சிறிது நேரம் மேடையில் இருந்த தேவா, மணமக்களை வாழ்த்த உறவினர்கள் மேலே வர தொடங்கவும் கீழே சென்றுவிட்டான்.
தேவா, நேற்றில் இருந்து பம்பரம்போல் சுழன்று வேலை செய்துக் கொண்டிருந்தான். இரவு தூங்கினானா என்பது கேள்விக்குறியே! இதில் அவனுக்கு நாளைக்கு நிச்சயம் என்பது ஒருபுறம் இருந்தது.
காலையுணவை முடித்ததும் மணமக்களுடன் அனைவரும் நேராக அரவிந்தன் வீட்டிற்கு சென்றனர். வாசலில் வைத்து தம்பதியருக்கு ஆரத்தி சுற்றிய சாருமதி, “ம்ம்ம். நல்லா வெயிட்டா போடு ண்ணா?” என அரவிந்தனிடம் பேரம் பேசினாள்.
“அதெல்லாம் முடியாது. உனக்கு இருக்குறது ஒரே ஒரு தங்கச்சி. உன்னோட கல்யாணத்துல எனக்கு ஆரத்திக்கு கூட காசு கொடுக்க மாட்டியா?” என சட்டம் பேசினாள். அரவிந்தின் அருகில் நின்றிருந்த தேவாவும் அவளின் சீண்டலை ரசித்துக் கொண்டிருந்தான். அவனுக்கும் ஒரு முறைப்பை பரிசாகக் கொடுத்தாள்.
அங்கு கூடியிருந்த பெரியவர்களுள் ஒருவர், “அதான் உன்னோட மச்சான் பக்கத்துலேயே இருக்கிறானே அரவிந்தா. அப்புறம் என்ன..? அவன்கிட்டயே வாங்கிக்கொடு. மலையேறனும்னாலும் மச்சான் தயவு வேணும்! இப்ப நீ கல்யாணம் கட்டி வீட்டுக்குள்ள போறதுக்கே உனக்கு அவர் தயவு தேவைப்படுது” என சொல்ல சுற்றியிருந்த அனைவரும் சிரித்துவிட்டனர்.
பின் தேவா கொடுத்த பணத்தை சாருவின் தட்டில் போட்டதும் தான் அவள் வழியை விட்டாள். அனைவரும் உள்ளே சென்றதும் அவளின் காதில், “உன்கிட்ட தனியா பேசணும் மதி” என ஹஸ்கி குரலில் சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டான். சாருவும் சிறு அதிர்வுடன் உள்ளே சென்றாள்.
முதலில் வந்தனாவை விளக்கேற்ற சொல்லி அனைவரும் சாமியை கும்பிட்டனர். பின் மணமக்களுக்கு பாலும் பழமும் கொடுத்தனர். தேவாவும் செல்வராணியும் மணமக்கள் இருவரையும் முறைப்படி மறுவீட்டிற்கு அழைப்பு விடுத்தனர்.
அங்கு மணமக்களுக்கு மட்டுமில்லாமல் தேவா, சாரு இருவருக்கும் கூட தனிமை கிடைக்கவில்லை! சிறிது நேரம் அங்கிருந்துவிட்டு மீண்டும் மதிய உணவிற்கு மண்டபம் தான் அனைவரும் சென்றனர்.
மண்டபம் சென்று மதியவுணவை அனைவரும் முடித்துவிட்டு அங்கிருந்தே மறுவீட்டிற்கு மணப்பெண்ணின் வீடான வந்தனாவின் வீட்டிற்கு செல்வதாக திட்டமிட்டனர். அங்கே தான் அவர்களின் முதலிரவிற்கான ஏற்பாடு செய்யப்படுகிறது.
‘இன்னும் திருமணம் முடியாமல் சாருவை தேவாவின் வீட்டிற்கு அழைத்துச்செல்ல முடியாது!’ என்பதால் அவளை அங்கே மண்டபத்திலே விட்டுச் சென்றனர்.
“அதான் நானிருக்கேனே அக்கா. நம்ம சாருவை நான் பார்த்துக்க மாட்டேனா?” என்று கடிந்துக் கொண்ட காந்திமதியிடம் விட்டுச்சென்றனர் சாருவின் வீட்டினர்.
அப்படி ஒன்றும் மண்டபம் காலியாகவில்லை. மதியம் உணவை முடித்துக்கொண்ட சிலர் ஓய்வெடுக்க அறைக்கு செல்ல, சிலர் ஊர்கதைகளை பேசிக் கொண்டிருந்தனர்.
மறுநாள் தேவா சாருவின் நிச்சயம் முடியும்வரை உறவினர்கள் அனைவரும் அங்கு தங்குவதற்கு தான் ஏற்பாடு செய்யப்பட்டது.
இருபக்க உறவினர்களில் மூத்த பெண்கள் சிலருடன் மணமக்கள் நல்ல நேரம் பார்த்து கிளம்பிவிட்டனர்.
மணமக்கள் கிளம்பியதும் அனைத்து பொருட்களையும் வண்டியில் ஏற்றிய தேவா செல்வராணியிடம் பத்திரம் சொல்லி அனுப்பிவிட்டான். இதோடு அவர்கள் மறுநாள் காலையில் தான் வருவார்கள்.
தன்னறைக்கு சென்றவன், “உன்கிட்ட பேசணும்..” என சாருமதிக்கு செய்தி அனுப்பினான்.
பக்கத்தில் உறவு பெண்களிடம் பேசிக்கொண்டிருந்த காந்திமதியிடம் மேலே அறைக்கு செல்வதாக சொல்லிவிட்டு தேவாவை காணச்சென்றாள்.
மனதில் பதட்டம் இருந்தாலும்
தேவாவின் அறைக்குள்ளே தைரியமாக வந்துவிட்டாள் சாருமதி. “சொல்லுங்க.. என்ன சொல்லணும்?” என்றாள் அவன் முகம் பாராமல்.
அவளின் கோபத்தை பார்த்து சிரித்தவன், “வந்தனா கொஞ்சம் செல்லமா வளர்ந்த பொண்ணு. உங்களை நம்பித்தான் அனுப்புறோம். அவளை நல்லா பார்த்துக்கோ” என்றதும் அவளுக்கு சுர்ர்ரென்று ஏறியது.
“நானே இன்னும் ஒரு மாசத்துல கல்யாணம் ஆகி உங்க வீட்டுக்கு வந்துடுவேன். என்கிட்ட எதுக்கு சொல்லுறீங்க?” என இடக்காக கேட்டாள்.
இன்றுதான் முதல்முறை தேவாவின் முன்பு சேலை அணிந்திருக்கிறாள். அதை பற்றி எதாவது கூறுவான் என்று எதிர்பார்த்தால் அவன் தங்கையை பற்றி கூறியதும் இவளுக்கு பற்றிக்கொண்டு வந்தது.
“இரு! இரு! உன்கிட்ட சொல்லவும் என்கிட்ட விஷயம் இருக்கு” என நமட்டு சிரிப்புடன் அவளை நெருங்கினான்.
நேற்றில் இருந்து ஒரு நல்ல தனயனாக, தமையனாக ஏன்? வந்தனாவை அரவிந்தனிற்கு தாரை வார்த்துக்கொடுக்கும் பொழுது தந்தையாகவும் வலம் வந்தவன் இப்பொழுது காதலனாக அவதரித்தான். கண்களின் வழியே காதலை கடத்திக்கொண்டு அவளை நெருங்கினான்.
‘காதலா?’ ஆம்! அவனே அறியாத காதல். அன்று அரவிந்த்-வந்தனாவின் நிச்சயத்தில், “சரியா பார்க்கலையே பாட்டி” என்று சாருமதி காந்திமதியிடம் கூறியதை கேட்டவனுக்கு, “அப்ப சரியா பார்த்திருந்தா என்ன சொல்லிருப்பா?” என்ற சிந்தனையுடன் அன்றிலிருந்து அவளை சரியாக?! பார்க்க தொடங்கினான்.
அன்று அவள் கூறியது தான் அவளை பார்க்க, அவளிடம் பேச தூண்டியது. மெல்ல அவளின் மேல் அவனையறியாமலே ஈர்ப்பு ஏற்பட்டது. அந்த ஈர்ப்பு மெல்ல கிளைபரப்பி காதலாய் உருமாறியது.
ஆனால் தங்கை வாழ போகும் வீடு என்று அவனின் ஆசைகளை மனதினுள் மறைத்துக் கொண்டவன் வந்தனாவின் திருமணம் முடிந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம் என தள்ளிவைத்துவிட்டான்.
அதற்குள் பெரியவர்களாலே இவர்களின் திருமண பேச்சி தொடங்கியதும் அவனுக்குள் மத்தப்புகள் பூக்கத்தான் செய்தது. இருந்தாலும் தங்கையின் பொருட்டு அனைத்தையும் யோசித்து முடிவெடுத்தான்.
என்ன? அவளின் மேல் அவனுக்கு தோன்றிய காதலை அவளிடம் சொல்லாமல் விட்டுவிட்டான். சாருவை பொறுத்தவரை இது வீட்டில் பார்த்த திருமணம் மட்டுமே!
இன்று தங்கையின் திருமணமும் முடிய, தன்னவளை காதல் கணைகளை தொடுத்து பார்த்துக் கொண்டிருக்கிறான். அவனின் கண்கள் சொன்ன செய்தியில் உறைந்தவள் மெல்ல அவனின் நெருக்கத்தையும் உணர்ந்து பின்னே சென்றாள்.
வெளிர் பச்சை நிற பட்டில் பசுமையாய் காட்சியளித்தவளை வஞ்சனையின்றி ரசித்தவன் அவள் பின்னே செல்ல செல்ல முன்னேறிக்கொண்டே, “இந்த சேலைல நீ ரொம்ப அழகா இருக்க மதி!” என்றான் மென்குரலில்.
‘அவன் பார்க்க வேண்டும்!’ என்று ஆசைகொண்ட மனம் துள்ளி குதிக்க, “தேங்க்ஸ்!” என்றுரைத்தவள் விலக முயன்றாள். அவளின் கைபிடித்து சுவற்றில் சாய்த்தவன் அவளை மேலும் நெருங்கினான்.
அவனின் மூச்சு காற்று முகத்தில் மோத, “தே..தேவ்! என்ன பண்ணுறீங்க?” என திணறியவள் அவளை அறியாமலே முதல்முறை அவனின் பெயரை சுருக்கி அழைத்தாள்.
அதை கண்டுகொண்டவன், “தேவ்! இதுகூட நல்லாருக்கே மதி” என அவளை இருக்கரங்களாலும் சுவற்றோடு சிறைசெய்தான்.
பதட்டத்தில் வேர்க்க துவங்கியவளிடம் நெருங்கி நெற்றியோடு நெற்றிமுட்டியவன் “ஒன்னும் செய்ய மாட்டேன் டி” என அவனின் ஃபோனை எடுத்தவன் இருவரையும் இணைத்து சில பல புகைப்படங்களை எடுத்து தள்ளினான்.
__________
அந்த ஏகாந்த இரவில் நிலாமகள் வானில் பவனி வந்துக்கொண்டிருந்தாள். மண்டபத்தில் இருந்த அனைத்து உறவினர்களும் சாப்பிட்டு படுக்க சென்றனர்.
குமரேசனுக்கு தற்போது புரிந்தது ‘தேவா எதற்கு தனித்தனியாக திருமணம் வைக்க சொன்னான் என்று!’ தேவா இல்லை என்றால் அவரால் தனியாக அனைத்தையும் சமாளிக்க முடிந்திருக்காது. அதனை தேவாவிடமும் சொன்னவர்,
“நீயும் போய் நேரத்தோட படுப்பா. ரெண்டு நாளா ரொம்ப வேலை. நாளைக்கு நீ தான் மாப்பிள்ளை வேற” என்றார் சிரிப்புடன். தேவா சின்ன சிரிப்புடன் தலையசைத்துவிட்டு அறைக்கு சென்றான்.
அன்னையிடம் ஃபோன் பேசிவிட்டு அன்று பகலில் எடுத்த புகைப்படங்களை சாருவிற்கு அனுப்பிவைத்தான். உடனே அவள் பார்த்துவிட்ட அறிகுறி வர, “இன்னும் தூங்கலையா?” என மெசேஜ் அனுப்பினான்.
அவளின் அருகில் பாட்டி படுத்திருப்பதால், “தூங்கிட்டேன்!” என்று மட்டும் அனுப்ப அதன் பிறகு தேவா எதுவும் பேசவில்லை.
அவன் அனுப்பிய புகைப்படத்தில் முதலில் சாருமதி அதிர்ந்து அவனை பார்த்தவாறு புகைப்படம் இருந்தது. அடுத்தது இருவரும் சிரிப்புடன் இருப்பதாக இருந்தது. அப்படியே ஒவ்வொன்றாக பார்த்தாள்.
தேவாவின் காந்த சிரிப்பு அவளை கட்டியிழுத்தது. இரண்டு நாட்கள் அவன் உறங்காமல் ஓடியாடி வேலை பார்த்த களைப்பிருந்தாலும் அந்த புகைப்படத்தில் அவனின் முகத்தில் அவ்வளவு சந்தோசம் நிறைந்தது.
தேவா, சாரு இருவரும் அந்த புகைப்படங்களை பார்த்துக்கொண்டே நாளையின் விடியலை நோக்கியிருந்தனர்.
இங்கே புதுமண தம்பதியருக்கு அவ்விரவு இன்பத்திலும் இளமையின் தேடலில் கழிந்தது.
மறுநாள் காலை அழகாக புலர்ந்தது. விடிந்ததும் அனைவரும் மண்டபத்திற்கு வந்துவிட்டனர்.
முதலில் நிச்சய பத்திரிக்கை வாசித்து இருவீட்டின் பெரியவர்களும் தட்டை மாற்றிக்கொண்டனர். அன்றிலிருந்து சரியாக நாற்பது நாள்கள் கழித்து தேவா-சாருவின் திருமணத்திற்கு நாள் குறித்திருந்தனர்.
அடர் ஊதா நிறத்தில் தங்கநிற சரிகை வைத்த பட்டில் அழகோவியாக சாருமதி மேடை ஏறினாள். தேவாவும் அவளுக்கு இணையான வெளிர் ஊதா நிறத்தில் ஃபோர்மல் சட்டையும் வெள்ளை நிற கால் சாராயும் அணிந்திருந்தான்.
செல்வராணி வந்தனாவின் கையில் நகைகொடுக்க அவளே அதை சாருமதிக்கு அணிவித்துவிட்டாள்.
தேவா சாருவின் கண்களை நேராக சந்தித்து அவளின் தளிர்விரல்களில் மோதிரம் அணிந்தவன் மெல்ல வருடியபடி அவளின் கையை கீழே விட்டான்.
அவன் தொட்ட இடம் குறுகுறுக்க நிமிர்ந்தும் பார்க்காமல் நடுங்கும் விரலால் படபடத்த இதயத்துடன் தேவாவின் கைபிடித்து சாருமதி அவனுக்கு மோதிரம் அணிவித்தாள்.
அவர்களின் நிச்சயம் நல்லபடியாக முடிய, இரண்டுநாட்கள் கழித்து சுற்றியிருந்த உற்றார் உறவினர்கள் களைய தொடங்கினர்.
இரண்டு நாட்களும் தேவாவை கண்ணில் நிறைத்து கருத்தில் நிறுத்தி கனவுலகத்தில் சுற்றிக் கொண்டிருந்தவளிற்கு நிச்சயம் முடிந்து தேவாவை பிரிகையில் மனதில் தானாக ஒரு வெறுமை வந்துவிட்டது.
‘அண்ணனின் கல்யாணத்தால் தான் தங்களின் கல்யாணம்!’ என்ற எண்ணம் பின் சென்று தேவாவுடனான திருமணத்தை ஆவலுடன் எதிர்பார்த்தாள் சாருமதி.
மீண்டும் கல்யாண பரபரப்பில் இருகுடும்பமும் சுற்ற தொடங்கியது.
அன்று சாருமதி கூறியதில் இருந்து திருமணத்திற்கான ஒவ்வொரு வேலையையும் அவளை கேட்டுத்தான் தேவா செய்தான். அப்படியேனும் அவளுக்கு ‘இது அண்ணனின் திருமணத்தால் முடிவான திருமணம்’ என்ற எண்ணத்தை களைய முனைந்தான்.
கல்யாணத்திற்கு தேவையான உடைகளை எடுத்துவிட்டு தாலி எடுக்க அனைவரும் அந்த நகை கடையில் கூடியிருந்தனர்.
செல்வராணிக்கு, ‘அவர்கள் வந்தனாவிற்கு செய்ததை தாங்களும் அப்படியே செய்ய வேண்டும்’ என்ற எண்ணம் இருந்தது. எனவே மிகவும் யோசித்தார்.
“நாங்க செய்த மாதிரியே நீங்களும் செய்யணும்னு இல்லை அண்ணி. உங்க விருப்பம் தான். ஆனா சாருவோட தேவையையும் கேட்டுக்கோங்களேன்!” என ஜெயந்தியும் எடுத்துசொல்ல, சாருவின் விருப்பத்திற்கேற்ப மெல்லிய தாலி செயினை வாங்கினர்.
வீடு திரும்பும் நேரம் தேவாவிடம் தனியாக, “இருந்தாலும் அண்ணா நீ இப்படி அண்ணிக்கு சப்போர்ட் பண்ண கூடாது” என தன் கருத்தை பகிர்ந்துகொண்டே சென்றாள் வந்தனா.
தேவாவிற்கு அது பெரிதாய் தெரியாததால் அப்படியே விட்டுவிட்டான்.
__________
அரவிந்தும் வந்தனாவும் நண்பர்களிடம் பத்திரிக்கை வைக்க வெளியே கிளம்பிக் கொண்டிருந்தனர். அந்நேரம் வீட்டிற்கு வந்த சாருமதியின் முகம் பளிச்சென்று இருந்தது.
வந்தனா அதை கவனித்தாலும் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை. அவளும் இப்படி தானே நிச்சயம் முடித்து கல்யாணம் நடக்கும்வரை மந்திரித்து விட்ட கோழியாக சுற்றியவள்.
“நீயும் வரியா சாரு?” அரவிந்த் கேட்க,
‘கல்யாணம் ஆகிட்டு வைஃப் கூட தனியா போகாம என்னைய கூப்பிடுறானே..’ என அவனை ஒருமாதிரி பார்த்தவள், “நான் வரல ண்ணா” என்றாள்.
“சரி” என்று அவர்கள் சென்றதும் அறைக்கு வந்து ஃபோனை எடுத்து அந்த பாட்டினை தேடிப்பிடித்து கேட்டாள். கேட்க கேட்க அந்த குரலும் பாடல் வரிகளும் அவளை உள்ளிழுக்க ரிபீட் மோடில் போட்டுவிட்டு கண்ணை மூடிக்கொண்டாள்.
மாலையில் அவளின் வாகனம் சிக்னலில் நின்றது. அப்பொழுது அங்கிருந்த டீ கடையில் ஒலித்துக் கொண்டிருந்த பாடல் காற்றில் மிதந்து வந்து அவளின் செவியினை நிறைத்தது. அவள் இதுவரை கேட்டிடாத பாடல். எனவே, கவனமாக அதை குறித்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தாள்.
அந்த பாடல் வரிகளை தேடியெடுத்தவள் அவர்கள் நிச்சயத்தின் பொழுது எடுத்த புகைப்படத்துடன் எடிட் செய்தாள். அதனை தவறாமல் தேவாவிற்கும் அனுப்பிவைத்தாள்.
சிறிதுநேரம் கழித்து அதை பார்த்தவன், அவள் ஆன்லைனில் இருப்பதை பார்த்து வீடியோவில் அழைத்துவிட்டான்.
“டெய்லி ஒரு ரீல்ஸ் எடிட் பண்ணுற எனக்கு இது எடிட் பண்ண ஐஞ்சு நிமிஷம் ஆகாது தேவா..” என சிரிப்புடன் கூறினாள்.
அவனும் சிரித்தவன், “எடிட்ஸ் ஓகே. அது ஏன் அந்த பாட்டு?” என அவளை ஆழ்ந்துப்பார்த்து புருவம் உயர்த்தி கேட்டான்.
என்னவோ அவன் பக்கத்திலே இருப்பதை போல் உணர்ந்து படப்படத்தவள், “சும்மா தான் அந்த பாட்டு பிடிச்சிருந்தது” என்றுவிட்டு பேச்சை மாற்றும்பொருட்டு, “இந்த வீடியோவை என்னோட யூடியூப்ல போடட்டுமா?” என வம்பிழுத்தாள். அதற்கு அவன் அவளை முறைத்து வைத்தான்.
லட்சக்கணக்கில் சப்ஸ்க்ரைபர்களை வைத்திருந்தாலும் அவளின் மனம் அவனது சப்ஸ்க்ரைபை எதிர்பார்த்தது. “நீங்க சப்ஸ்க்ரைப் பண்ணுங்க நான் வீடியோ போட மாட்டேன்” என பேரம் பேசினாள்.
“முடியாது”
“ஓ.. அப்படியா..?” என இழுத்தவள், “நீங்க சபிஸ்கரைப் பண்ணலனா?” ஒருநொடி நிறுத்தி அவனை கூர்ந்துப்பார்த்து, “கல்யாணத்துக்கு அப்புறம் நடக்க வேண்டியது எதுவுமே.. நடக்காது மிஸ்டர் தேவேந்திரன்” என மிதப்பாய் கூறினாள்.
புரியாமல் விழித்தவன் புரிந்தவுடன், “என்ன நடக்க வேண்டியது?” என கண்ணடித்து கேட்டான்.
அவனின் கேள்வியில் அவனை தவிர அறையை சுற்றி பார்த்தவளிற்கு என்ன சொல்வது என தெரியாமல் வெட்கம் வந்தது.
இப்படி பேசவேண்டும் என்று நினைத்து பேசவில்லை தான். ஆனால் பேசியபின் அதற்கு எப்படி எதிர்வினை ஆற்றுவது என சாருமதிக்கு பிடிபடவில்லை.
“முதல்ல இருந்தே நாம பேசிக்கிறப்பலாம் சப்ஸ்க்ரைப் பண்ண சொல்லி கேட்டுட்டே இருக்கிறதை பார்த்து எனக்கே சிரிப்பா இருக்கும். சரி கல்யாணம் அன்னைக்கு சப்ஸ்க்ரைப் பண்ணி உனக்கு சர்ப்ரைஸ் கொடுக்கலாம்னு இருந்தேன். பட் இட்ஸ் ஓகே மதி பார்த்துக்கலாம்” என்று தோளைக் குலுக்கிக்கொண்டான்.
அவன் சொன்னதை கேட்டு திருதிருத்தவளை மந்தகாச புன்னகையுடன் பார்த்தவன், “நடக்க வேண்டியதை எப்படி நடத்திக்கணும்னு எனக்கு தெரியும்!” என கண்ணடித்து அழைப்பை துண்டித்தான்.
ஃபோனை வைத்தவள் கண்ணாடி முன் சென்று, “அறிவிருக்கா மதி! இப்படி உளறி கொட்டி வெச்சிருக்கியே?” என அவளை அவளே பார்த்து திட்டிக்கொண்டாள்.
இருந்தும் அவன் சொல்லிவிட்டு வைத்ததை நினைத்தவளிற்கு இப்பொழுது வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறந்தது.