திருமணம் முடிந்து சிறிது நாளில் சாருமதி சென்று விடுவாள் என அவளின் வீட்டில் அவளுக்கு கவனிப்பு சற்று அதிகமாகவே இருந்தது.
பதினோரு வயதில் தந்தையை இழந்த வந்தனாவிற்கு குமரேசன் சாருவிடம் காட்டும் அன்பும் கவனிப்பும் அவளுக்கான தந்தையின் ஏக்கத்தை தானாகவே வழங்கியது. அந்த ஏக்கமே சாருவின் மீது சிறு பொறாமை உணர்வை துளிர்த்தது.
அன்று நகை கடையில் தேவாவும் சாருமதிக்கு சாதகமாக பேச, வந்தனா எவ்வளவு முயன்றும் சாருமதியின் மீது அவளுக்கு எழும் பொறாமையை அவளால் தவிர்க்க முடியவில்லை. எனவே, சில சமயம் அனைவரும் கூடியிருக்கும் பொழுது தனியாக அறைக்கு வந்துவிடுவாள்.
“எல்லாரும் ஒன்னா இருக்குறப்ப நீ மட்டும் எதுக்கு வந்தனா தனியா இருக்க?” என அரவிந்த் கேட்டாலும் அனைவருடனும் அவளுக்கு சாதாரணமாக பழக வரவில்லை. அந்த வீடும் புதிது! அந்த உறவுகளும் புதிது! என்னும் பொழுது அவர்களுடன் பழகவே வந்தனா திணறி போனாள்.
ஆனால் சாருமதி வந்தனா ஒதுங்கி போனாலும் அவளை அழைத்துக்கொண்டு தான் கல்யாணத்திற்கான ஷாப்பிங்கை செய்தாள்.
தேவாவிற்கு சாருமதியை கேட்ட பொழுது, முதல் ஆளாக சரி சொன்னதை வசதியாக வந்தனா மறந்துவிட்டாள். அவர்களும் தன் உறவுகள் தான். சாருமதி தன் அண்ணி என்று மனதளவில் பதியவைக்க முயன்று கொண்டிருந்தவள், “திருமணமாகி சாருமதி சென்றுவிட்டாள் சரியாகிவிடும்” என்று நினைத்துக் கொண்டாள்.
இதற்கிடையில் அவ்வப்பொழுது வீடியோ காலில் அழைத்து பேசும் தேவா சாருவிடம் வம்பு வளர்த்துவிட்டே வைப்பான். அவனிடம் முறைப்பு காட்டினாலும் தனிமையில் அனைத்தையும் நினைத்து கள்ளத்தனமாக சிரித்துக்கொள்வாள் சாருமதி.
தேவா-சாரு நிச்சயத்துக்கும் திருமணத்திற்கும் இடைப்பட்ட காலங்கள் இப்படியே சென்றது. வந்தனா அவளுடைய புது உறவுகளுடன் பழக போராடிக் கொண்டிருந்தாள் என்றால், சாருமதி அவள் வாழ்க்கையின் புது அத்தியாயத்தை எதிர்பார்த்து காத்திருந்தாள்.
தேவேந்திரன் வெட்ஸ் சாருமதி என்ற தங்கநிற எழுத்துக்களால் மின்னிய பாதகை அந்த வரவேற்பு வாயிலில் வீற்றிருந்தது.
ராயல் ப்ளூ நிறத்தில் கோட் சூட் அணிந்து வெள்ளை நிற சட்டையும் எப்பொழுதும் அவனின் கையில் வீற்றிருக்கும் காப்பும் என ஆண்மைக்கே உரிய கம்பீரத்துடன் நின்றிருந்தான தேவேந்திரன்.
மயில் நீலநிறத்தில் லெஹெங்காவும் அதற்கு ஏற்றதுபோல் நகைகளை அணிந்து வந்தனாவுடன் மேடையேறிய சாருமதி தேவாவின் பக்கம் நின்றுக்கொண்டாள்.
உள்ளுக்குள் அவ்வளவு பதட்டமும் பரபரப்பும் இருந்தாலும் சிரித்த முகமாக அனைவருக்கும் வணக்கம் வைத்தனர்.
அவளின் கையை லெஹங்கவின் துப்பட்டாவின் மறைவில் தேவா பிடிக்க திகைத்த சாரு அவனை திரும்பி பார்த்தாள். அந்த நிகழ்வை அப்படியே புகைப்படம் பிடித்தது கேமரா.
‘என்ன?’ என்னும் விதமாக புருவத்தை உயர்த்தியவனிடம், “ப்ளீஸ் தேவ்! கையை விடுங்க..” என மெல்லிய குரலில் சொன்னதும் தான் விட்டான்.
முன்பு தேவா சுழன்று வேலை பார்த்தது போல் இப்பொழுது அரவிந்த் பார்த்துக் கொண்டிருந்தான். வந்தனாவுமே அவள் அன்னையுடன் உறவினர்களை கவனித்துக் கொண்டிருந்ததாள். சில நேரம் மணமகன் வீடாகவும், சில நேரம் மணமகள் வீடாகவும் வந்தனா மாறி மாறி வலம் வந்தாள்.
இன்னிசை கச்சேரி ஒரு புறம் என்று வரவேற்பு கோலாகலமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.
இரவுணவின் பொழுது தேவாவும் சாருவும் அருகருகில் அமர்த்தபட்டனர்.
“இவ்வளவு தான் சாப்புடுவியா?” என்றான் அவளின் இலையில் அப்படியே இருந்த சாப்பாட்டை பார்த்து.
“லேட் நைட் ஆகிடுச்சே தேவ். எப்பவும் எட்டுக்குள்ள சாப்பிடுவேன். அதான்..”
“ஆனாலும் சாப்பாடை வேஸ்ட் பண்ண கூடாது. முதல்லயே சொல்லிருக்கலாமே?” என சொன்னவன் அவளின் இலையில் இருந்து உரிமையாக தனக்கு வேண்டியதை எடுத்து சாப்பிட்டான்.
“நான் சொன்னேன். அம்மா தான் கேட்கவே இல்லை” என்று குறைப்பட்டவளுடன் சாப்பிட்டுவிட்டு எழுந்து கைகழுவ சென்றான்.
கைகழுவியபின் மருதானியிட்ட கைகளை சாருமதி துடைப்பதை பார்த்துக்கொண்டே பக்கத்தில் நின்றிருந்த அரவிந்தனின் காதில் விழாதவாறு கிசுகிசுப்பாக, “நாளைக்கு நைட் சீக்கிரமாவே நிறைய சாப்பிட்டு தெம்பா இரு மதி!” என்றான் தேவா குறும்பாக.
குப்பென்று மருதானிபோல் வெட்கத்தில் சிவந்தது சாருமதியின் மதிமுகம். சிரிக்கவும் முடியாமல் அவனை முறைக்கவும் முடியாமல் இன்பமான உணர்வுடன் அவளறைக்கு சென்றாள்.
இரவில் அனைத்து கொண்டாட்டங்களும் முடிந்து விடிந்தால் கல்யாணம் என்ற நிலை வந்தது.
பட்டு வேட்டி சட்டையில் ஆணழகனாக முன்னிச்சியில் புரண்ட கேசன், ஒருவாரம் முன்பு மழிக்க பட்ட தாடி என கவர்ச்சியாக இருந்தான், தேவர்களுக்கெல்லாம் அரசன் என்னும் பொருளுடைய நாமத்தை கொண்ட தேவேந்திரன். அவனின் ஒருபுறம் செல்வராணி நிற்க மற்றொரு புறம் வந்தனா நின்றுக் கொண்டாள்.
மாப்பிள்ளையான தேவாவை முறைப்படி அரவிந்த் மோதிரமும் செயினும் அணிவித்தான். அதனை தொடர்ந்து குமரேசன் தேவாவிற்கு மாலை அணிவித்தார். பின் தேவாவின் கைபிடித்து அழைத்து சென்றனர்.
சாருமதியை வந்தனா அழைத்து வந்தாள். சிவப்பு நிற முகூர்த்தப்பட்டில் தங்கநிற சரிகை வைத்து மயில் ஒன்று வருவதுபோல் ஒய்யாரமாக நடந்து வந்தாள் பாவை.
அவளின் வருகையை தான் ஆவலுடன் தேவா பார்த்துக் கொண்டிருந்தான்.
அவனின் அருகில் வந்து அமர்ந்தவளிடம் மாலையை சரி செய்வது போல் குனிந்தவன், “செம்மையா இருக்க டி” என்றான். அதற்கு வெட்க சிரிப்பை மட்டும் சாரு சிந்தினாள்.
வேதங்கள் ஓதி இருவரிடமும் திருமணத்திற்கான சங்கல்பம் பெற்றுவிட்டு பொன் தாலியை தேவாவின் கையில் கொடுத்தார்.
அதனை வாங்கியவன் நொடிபொழுது சாருவின் கண்ணை பார்த்துவிட்டு அவளுக்கு அணிவித்தான். அவன் கைப்பட்டதும் சாருவின் உடல் சிலிர்த்து அடங்க புன்னகையும் கண்ணீருமாக தேவாவின் தாலியை பெற்றுக் கொண்டாள்.
அதனை தொடர்ந்து சாருவின் நெற்றி வகுட்டிலும், தாலியிலும் தேவா குங்குமம் வைத்து நிறைந்த புன்னகையை அவளிடம் வீசினான். பின் அவள் காலின் பஞ்சு விரல்களை பிடித்து மிஞ்சியை அணிவித்தான்.
பெற்றவர்கள் பார்த்த திருமணம் என்றாலும் அந்நொடி தேவாவை மனமுழுக்க மணவாளனாக ஏற்றுக்கொண்டாள் சாருமதி. மனமுழுக்க சாருவின் மேல் விருப்பம் இருக்க தன்னவளாய் தன்னில் சரிபாதியாக ஏற்றுக்கொண்டான் தேவேந்திரன்.
செல்வராணியின் உள்ளம் இப்பொழுது தான் நிறைந்தது. ‘இவ்வளவு நாள் குடும்பத்திற்காக ஓடியவன், இன்றிலிருந்து அவனுக்கான வாழ்க்கையில் சந்தோசமாக வாழட்டும்!’ என வாழ்த்தியது அந்த தாயுள்ளம்.
கோமதி பாட்டியும் கண்கலங்க ஆனந்த கண்ணீருடன் அவர்களை வாழ்த்தினார். சாருமதி பிறந்து கையில் ஏந்தி, ஏகபோக அவளை வளர்த்தத்தில் அவருக்கு தான் பங்கு அதிகம்!
பின் உறவினர்கள் ஒவ்வொருவராக வந்து வாழ்த்த தொடங்கினர்.
மேடையேறிய காந்திமதி பாட்டி இருவரையும் வாழ்த்திவிட்டு, “நான் தான் அன்னைக்கே சொன்னனே சாரு!” என்று அவளின் காதிலும் சொல்லிவிட்டு சென்றார்.
பதறி தேவாவை சாரு பார்க்க, அவன் அரவிந்தனுடன் தீவிரமாக பேசிக் கொண்டிருந்தான். ‘நல்ல வேளை கேட்கலை!’ என்று எண்ணிக்கொண்டாள்.
காலையுணவை முடித்துவிட்டு மறுவீடு சென்றனர். வந்தனா ஆரத்தி எடுக்க அவள் கேட்காமலே தேவா தட்டில் பணத்தை வைத்தான்.
அதனை குறுகுறுவென பார்த்த சாருவிடம், “உனக்கு அன்னைக்கு எவ்வளவு கொடுத்தேனோ அதே தான்” என்றான் குறுநகையுடன்.
வலதுக்காலை எடுத்துவைத்து உள்ளே நுழைந்தவர்கள் பெரியவர்களின் வழிகாட்டுதலின்படி முதலில் விளக்கை ஏற்றி சாமி கும்பிட்டனர்.
பின் மணமக்களுக்கு பாலும் பழமும் வழங்கினர். யாருக்கும் தெரியாமல் நிகழ்ந்த தேவாவின் சில பல சீண்டல்களுடன் அனைத்து சடங்கையும் சாருமதி முடித்தாள்.
“ரெஸ்ட் எடுக்கணும்னா எடுமா” என சாருமதியை அருகில் இருந்த அறைக்கு வந்தனாவுடன் அனுப்பிவைத்தனர்.
“தலையை கலைச்சிடலாமா அண்ணி? ரொம்ப வெயிட்டா இருக்கு” என தலையில் இருந்த பூ அலங்காரத்தை பற்றி சாருமதி கேட்க, “இல்ல இல்ல. மதியம் மறுபடி மண்டபம் தான போகணும். ஈவினிங் கலைக்கலாம்” யோசனையுடன் வந்தனா சொன்னாள்.
அங்கிருந்த சோபாவில் சாய்ந்தமர்ந்தவளின் நாசியை நிறைந்தது முல்லைப்பூவின் வாசம். அருகில் இருந்த ஜன்னல் வழியே பார்க்க, சிறிய தோட்டம் இருந்தது.
அவள் பார்ப்பதை பார்த்த வந்தனா, “நம்ம தோட்டம் தான் அண்ணி. இப்ப வெயில் அடிக்குது இன்னொரு நாள் பார்க்கலாம்” என்றாள்.
சிறுவயதில் இருந்தே அடுக்குமாடி குடியிருப்பில் வளர்ந்த சாருமதிக்கு இந்த தனிவீடும் அதன் பின் உள்ள தோட்டமும் மனதை கவர்ந்தது.
அதன் பின் மண்டபம் சென்று மதியவுணவை முடித்து செல்வராணியை தவிர அனைவரும் சாருமதியின் வீட்டிற்கு சென்றனர்.
இரவில் உணவை முடித்துவிட்டு தேவா சாருவின் அறைக்கு சென்றுவிட்டான். முதலிரவு, மறுவீடு என்று அடுத்த ஒரு வாரம் சாருமதியின் வீட்டில் தான் அவர்களின் ஜாகை.
மனதை மயக்கும் மல்லிகை மொட்டுகளை பரப்பிவைத்து அதன் நடுவில் இதய வடிவில்
பன்னீர் மணம் சிந்தும் ரோஜா இதழ்களை அடுக்கிவைத்து அந்த கட்டிலை அலங்கரித்திருந்தனர்.
பக்கத்தில் இருந்த மேசையை பால், பழங்கள் மற்றும் ஒரு பாட்டிலில் தண்ணீர் நிறைத்திருந்தது.
அதனை பார்த்த தேவாவுக்குள் பல உணர்வுகள் அழிபேரலையாய் எழுந்தது.
அவனுக்கு அனைத்தும் இன்னும் கனவு போல் தான் இருந்தது. தங்கையின் திருமணம் முடிந்து இன்று அவனின் திருமணம், அதுவும் அவன் ஆசைப்பட்ட பெண்ணுடன் என இன்பத்தில் திளைத்தான்.
முதலிரவுக்கு தன் பேத்தியை அலங்காரம் செய்தார் கோமதி. அப்படியே அவளுக்கு சிறு ஆலோசனைகளையும் வழங்க முயன்றவரை சாருமதி முறைத்து தடுத்துவிட்டாள்.
சாருவின் தலையில் மல்லிகை சரத்தை சூடிக் கொண்டிருந்தாள் வந்தனா. அவளின் அருகில் ஜெயந்தி நின்றுக்கொண்டிருந்தார்.
“கோம்ஸ்! எனக்கு ஒரு டவுட்!” என்றாள் சாருமதி. அவள் கேட்க போவதை அறியாத கோமதி, “கேளு சாருக்குட்டி” என அவளின் கன்னத்தை கிள்ளினார்.
பக்கத்திலே நின்ற ஜெயந்தியை பார்த்து கண்ணடித்தவள், “இப்ப நீங்க என்கிட்ட சொல்லவர மாதிரி மாப்பிள்ளை கிட்டயும் சொல்லுவாங்களா?” என்றாள் கண்ணை உருட்டுக்கொண்டே.
“என்னது? புரியுற மாதிரி தெளிவா சொல்லு சாரு” என பேத்தி சொல்வது புரியாமல் கோமதி அதட்ட, ஜெயந்தியும் வந்தனாவும் கூட அவளை தான் கவனித்துக் கொண்டிருந்தனர்.
“அதான் பாட்டி! கால்ல விழுறது. மாப்பிள்ளை மனசு கோணாம நடக்குறதுன்னு இப்ப நீங்க சில ரூல்ஸ் சொல்ல வந்தீங்களே..” என ஒரு நொடி நிறுத்தி அவர்கள் மூவரின் முகத்தையும் பார்த்தவள்,
“அதே மாதிரி மாப்பிள்ளைக்கும் உள்ள போனதும் பாஞ்சிட கூடாது! பொண்டாட்டியை கண்ணாடி மாதிரி கையாளனும்! பூ மாதிரி பார்த்துக்கணும்! எக்ஸட்ரா.. எக்ஸட்ரான்னு ஏதாவது சொல்லுவாங்களான்னு கேட்டேன்” என கைகளை அசைத்து நக்கல் குரலில் சொல்லியதை கேட்டு ஜெயந்தியும் வந்தனாவும் சிரித்துவிட்டனர்.
“ஆத்தாடி ஆத்தா!” என நெஞ்சில் கைவைத்த கோமதி, “என்ன பேச்சு பேசுற? இந்த காலத்து பிள்ளைங்க எப்படிலாம் பேசுறாங்க? நீயும் உன்னோட பொண்ணு பேசுறதை பார்த்து சிரிச்சிட்டு இருக்கியா?” என பேத்தியுடன் மருமகளையும் அதட்டியவர்,
“நேரமாகிடுச்சி அவளை ரூம்க்கு விட்டுட்டு போய் படுங்க” என ஜெயந்தி வந்தனா இருவரிடமும் சொல்லிவிட்டு தன் அறைக்கு சென்றார்.
அருகில் நின்று அனைத்தையும் கேட்ட வந்தனாவிற்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. ‘இருந்தாலும் இவங்களுக்கு இவ்வளவு வாய் ஆகாது!’ என்று மனதோடு நினைத்துக்கொண்டாள்.
“இங்க பேசுன மாதிரி உள்ளயும் போய் எதையாவது சொல்லி தொலைக்காத சாரு. பால்லாம் உள்ளேயே இருக்கு” என அவளை அறைக்குள் அனுப்பிவைத்த ஜெயந்தி, “நீயும் போய் படுமா” என வந்தனாவை அனுப்பிவைத்தார்.
அவர்களிடம் பேசியதை நினைத்து சிரித்துக்கொண்டே சாருமதி அறைக்குள் நுழைந்தாள். சந்தன நிற மென்பட்டுடுத்தி இருதோள்களிலும் மல்லிகை சரம் வழிய முகமுழுக்க புன்னகையுடன் உள்ளே நுழைந்தவளை தான் இமைக்காமல் பார்த்தான் தேவா.
அவள் உள்ளே நுழைந்ததும் அறையில் இருந்த மல்லிகையுடன் அவளின் தலையில் சூடிய மல்லிகையின் மணம் போட்டிபோட்டது. அவளிடம் பேச வேண்டும் என நினைத்தவன் மெல்ல அவளில் தொலைய தொடங்கினான்.
அவனது பார்வையில் சாருவிற்கு நெஞ்சம் தடத்தடத்தது. கதவை தாழ்போட்டுவிட்டு காலின் கொலுசொலி சிணுங்க அவனின் அருகில் வந்தவள் தலைகுனிந்து அமர்ந்தாள்.
“கல்யாணம் தான் முடிஞ்சிடுச்சே மதி! என்னை நிமிர்ந்து நல்..லாவே பார்க்கலாம்” என வார்த்தைக்கு அழுத்தத்தை கொடுத்து தேவா கிண்டலுடன் கூறினான்.
‘அன்று அரவிந்தனின் நிச்சயத்தில் நடந்ததை தான் குறிப்பிடுகிறான்’ என்று புரிந்துக்கொண்டவள் படக்கென்று நிமிர்ந்து படபடக்கும் விழிகளால் அவனை பார்த்தாள்.
தேவாவும் அவளுக்கு சலைக்காமல் பதில் பார்வை பார்த்தான்.
“அப்ப அன்னைக்கு நானும் காந்திமதி பாட்டியும்..” என்றவளால் மேலே பேசமுடியாமல் தயக்கம் வந்து சேர்ந்தது.
‘வெற்று காகிதமாக இருந்த அவன் இதயத்தில், “சரியா பார்க்கலையே பாட்டி!” என்ற சாருவின் பேச்சுதான் காதலேனும் காவியத்திற்கு பிள்ளையார் சுழி போட்டது என்று!’ தேவா சொல்லியிருக்கலாமோ?
‘தன் செயல்களால் அவளுக்கு தன் அன்பை உணர்த்த வேண்டும்! அவளாக தனக்குள் முகிழ்த்த பிரிய பூக்களை உணரவேண்டும்!’ என்று நினைத்தவன், “ஆமா. அன்னைக்கு நீங்க பேசுனதை நான் கேட்டுட்டேன்” என்று மட்டும் கூறினான்.
“அது சும்மா ஜாலிக்கு தான்..”
“ஐயையோ! அதை உண்மைன்னு நம்பி நான் கல்யாணம் பண்ணிட்டேனே!” என்று அலறியவனை முறைத்தவளின் கையை பிடித்து இழுத்து தன் மேல் சரித்துக்கொண்டான்.
தேவாவின் அண்மையிலும், ஆண்மையிலும் சாருமதி திணறினாள். முன் பட்டன் இரண்டும் போடாமல் சட்டையணிந்திருந்த அவனின் மார்பில் விழுந்தவளை அவனின் மூச்சு காற்று தீண்ட மெல்ல அவளின் வசமிழக்க துவங்க கண்ணை இருக்க மூடிக்கொண்டாள்.
“சரியா பார்க்கணும்னு சொல்லிட்டு கண்ணை மூடுறியே மதி?” என அவளின் இமை மீது மென்மையாக இதழ் பதித்தவாறே கேட்டான்.
அந்த முத்தத்தின் மென்மையிலும் உணர்ச்சிகளின் வேகத்திலும் அவளின் உதடு துடித்தது. அதன் துடிப்பினை அடக்க அவளின் இதழை நெருங்கினான் ஆடவன்.
இருவரின் இதழ்களும் இணையும் சமயம் அதனின் இடையே ஆட்காட்டி விரல் வைத்து தடுத்தவள், “நீங்க இன்னும் என்னோட சேனலை சப்ஸ்க்ரைப் பண்ணலையே!” என்று கண்ணைத்திறந்து கேட்டாள்.
“உன்னோட சேனல் என்ன மதி..?” என்று கேட்டவன் அவளின் விரலை நகர்த்திவிட்டு, “இப்ப உன்னையே சப்ஸ்க்ரைப் பண்ணுறேன்” என்றான்.
“என்னையா?” என புரியாமல் விழித்தவளிடம் வசீகர புன்னகையை சிந்தி, “ம்ம்ம். உன்னைதான்!” என்று அவளின் கண்களை பார்த்துக்கொண்டே, “உன்னை சப்ஸ்க்ரைப் பண்ணி.. உன்கிட்ட இருக்க எல்லாத்தையும் தெரிஞ்சிக்கிறேன்” என அவளின் இதழில் அவனது இதழை பொறுத்தியவனின் கரங்கள் அவளின் உடலில் எல்லைமீற துவங்கியது.
அவன் கூறியதை கேட்டவளுக்குள் பல உணர்வுகள் அலையலையாய் எழும்ப அவனின் சிகைக்குள் கரத்தை நுழைத்து இறுக்கிக்கொண்டாள்.
கணவன் தான் என்றாலும் எல்லையற்ற தேவாவின் தொடுகை அவளுக்கு கூச்சத்தை கொடுக்க, அவனின் கையை தடுத்து பிடித்துக் கொண்டவள் தயக்கமும் தவிப்புமாக வெட்கத்துடன் “தேவ்..” என சிணுங்கினாள்.
பாவையவளின் தயக்கத்தை புரிந்துகொண்டவன் மெல்ல மெல்ல முத்தமிட்டு அவளின் கூச்சத்தையும், வெட்கத்தையும் சிதறவைத்து முன்னேறினான்.
இதுவரை அவன் சேமித்துவைத்த அன்பையும் காதலையும் அவளிடம் செயலில் காட்ட தொடங்கியவன் சங்கமத்திற்கான சம்மதம் வேண்டி சாருமதியின் விழியை பார்த்தான்.
விழி வழியே நங்கையும் அவளின் சம்மதத்தை கடத்திவிட, அங்கே புரிதலுடன் ஒரு தாம்பத்தியம் அழகாக அரங்கேற துவங்கியது.
மோகத்தின் உச்சத்தில் திளைத்த மன்னவனோ, “மதி..!” என பிதற்றி சாருமதியிடம் மதி மயங்கினானென்றால்,
இவர்களின் சங்கமத்திற்கு சாட்சியாக சாருவின் கொழுசு மணிகளும் கிண்கிணி நாதமாய் ஒலித்துக் கொண்டிருந்தது.
கூடலின் முடிவில் ‘எங்கே தன்னவளை கஷ்டப்படுத்திவிட்டோமோ?’ என்ற எண்ணத்தில், “ரொம்ப வலிக்குதா மதி? இப்ப எப்படி இருக்கு?” என கைகளால் அவளை வருடியபடி அவளின் கழுத்து வளைவில் முகத்தை வைத்துக் இளைப்பாறிக்கொண்டே கேட்டான்.
மோகத்தின் சூழலில் சிக்கியிருந்த தேவா, “என்ன?” என்று தலையை உயர்த்தி, கண்கள் மூடி வெட்க சிவப்பில் மலர்ந்து விகசித்திருந்தளின் வதனத்தை ரசனையுடன் பார்த்தவன், “இதை மாதிரி ஒரு பாராட்டை எதிர்பார்க்கல டி” என கரகரத்த குரலில் அவளின் காதில் ரகசியம் பேசினான்.
அப்பொழுது தான் அவள் கூறியதை முழுவதுமாக உணர்ந்தவள் கண்களை திறவாமல், “தேவ்..” என்ற சிருங்கார சிணுங்களுடன் போர்வையை ஆடையாக்கி அவனின் நெஞ்சத்தை மஞ்சமாக்கி துயில் கொள்ள தொடங்கினாள்.
அவர்களின் நிலையை பார்த்து வெட்கம் கொண்ட வானத்து மதியும் அவளவனான முகிலனிடம் சென்று மறைந்துக் கொண்டது.