காலையில் தேவாவின் அணைப்பில் கண்விழித்த சாருமதி, ‘இவர் நைட் எப்ப தூங்க வந்தாரு?’ என்ற யோசனையுடன் அவனிடமிருந்து பிரிந்து எழுந்தாள்.
பின் அரவிந்த், வந்தனா வீட்டில் இருப்பது நினைவில் வர வேகமாக குளித்து வெளியே சென்றாள்.
அங்கே சமையலறையில் வந்தனாவும் செல்வராணியும் இருந்தனர். இவளை பார்த்த செல்வராணி, “வா சாரு. காஃபி குடிக்கிறியா? தேவா இன்னும் எழுந்திரிக்கலையா?” என்றபடியே பாலை அடுப்பில் வைத்தார்.
வந்தனாவை பார்க்கவே சாருவிற்கு ஒரு மாதிரி இருக்க அவளை பார்க்காமல், “அவங்க நைட் வேலை பார்த்துட்டு லேட்டா தான் அத்தை தூங்கினாங்க” என்று சொன்னாள்.
அவள் வந்தனாவை தவிர்ப்பதை கவனித்துக்கொண்டே,
“மறுபடி இந்த பையன் ஆரம்பிடிச்சிட்டானா..?” என செல்வராணி கவலையாய் கேட்டார்.
“என்னாச்சு அத்தை?”
“அவன் இப்படி தான்மா நைட், பகல்ன்னு பார்க்காம வேலை பார்த்துட்டு இருப்பான். கொஞ்சநாளா அப்படி இல்லாம இருந்தான். அதான்..” என்று அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே வந்தனா வெளியேற முயன்றாள். “வந்தனா..” என்றார் செல்வராணி கண்டிப்புடன்.
‘அன்னை எதற்கு கண்டிக்கிறார்’ என்று புரிந்தவள் சாருவிடம் சென்று, “நேத்து ஏதோ கோபத்துல அப்படி பேசிட்டேன். சாரி! தப்பா எடுத்துக்காதீங்க சா..அண்ணி” என சாருவென்று அழைக்க வந்தவள் அண்ணி என்று சொல்லிவிட்டு வெளியேறினாள்.
நடப்பது எதையும் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தவள், “என்னாச்சு அத்தை?” என செல்வராணியிடம் கேட்டாள்.
‘ஜெயந்தியைப் பற்றி சாருமதியிடம் அவர் எப்படி குறை கூறுவார்?’ காஃபியை கலந்து அவளிடம் கொடுத்தவர், “அப்புறம் பேசலாம் சாரு..” என்று சமையல் வேலையை கவனிக்க சென்றார். சாருமதியும் காஃபி குடித்துவிட்டு அவருக்கு சமையலில் உதவினாள்.
காலை உணவை தயார் செய்துவிட்டு, “நான் போய் உங்க மகன் முழிச்சிட்டாரானு பார்த்துட்டு வரேன்” என்று சொல்லிவிட்டு அறைக்குள் சென்றாள்.
அங்கே தேவா குளித்துவிட்டு வர, “நைட் எப்ப தூங்குனிங்க?” என்றாள் அவன் மடித்துவைத்த போர்வைகளை அடுக்கிக்கொண்டே.
“ஒரு மணிக்கெல்லாம் தூங்கிட்டேன். ஒரு மெயில் மட்டும் அனுப்பனும்” என்று மீண்டும் மடிக்கணினியை எடுத்தவனை இடுப்பில் கைவைத்து முறைத்தாள்.
“பாருடா, அண்ணாவை கவனிக்கலன்றதும் மதிக்கு கோபம் வருது” என அவளின் மூக்கை திருகியவனிடம், “விளையாடாதீங்க தேவ்! வெளிய வாங்க” என்றாள்.
“அரை மணி நேரத்துல முடிச்சிடுவேன் மதி. ப்ளீஸ்..” என்றவன் வேலை பார்க்க உட்கார்ந்துவிட்டான். அவள் அப்படியே சென்று செல்வராணியிடம் சொல்ல, அவரும் காஃபியுடன் வந்து அவனை அர்ச்சித்து சென்றார்.
அனைவரும் காலை உணவை முடித்துவிட்டு சிறிது நேரம் டிவி பார்த்தனர். செல்வராணி கடைக்கு செல்ல வேண்டும் என்று சொல்ல தேவா அவரை அழைத்து சென்றான்.
வராண்டாவில் அமர்ந்திருந்த அரவிந்திடம் சென்ற சாருமதி, “எதாவது ப்ராப்லமா அண்ணா?” என கேட்டாள்.
அவளை பார்த்து சிரித்தவன், “ஹ்ம்ம். அம்மாவுக்கும் வந்தனாக்கும் சண்டை” என சொல்லி கைகளாலும் முட்டிக்கொள்வதை போல் செய்தான். அவர்களை தேடிவந்த வந்தனா இருவரும் பேசுவதை பார்த்துவிட்டு திரும்பிச் சென்றாள்.
அவன் செய்கையில் சிரித்தவள், “எதுக்கு?” என அவளும் அவனின் பக்கத்தில் அமர்ந்துக் கொண்டாள். அரவிந்தும் அங்கு நடந்ததை சொல்ல தொடங்கினான்.
வந்தனாவிற்கு திருமணம் ஆனதில் இருந்தே அவளை அறியாமல் சாருமதியின் மீது சிறு பொறாமை உணர்வு ஏற்பட்டது. ஆனாலும் அதை வெளிக்காட்டி கொள்ளாமல் அப்படியே இருந்துக் கொண்டாள்.
ஜெயந்தியும் வந்தனா எதாவது தவறாக செய்தாள், “எங்க சாரு சரியா செய்வா..” என சாருமதியின் புராணம் பாட தொடங்கிவிடுவார். வந்தனாவுமே ஓரளவு அமைதியாகதான் இருந்தாள்.
ஆனால் சனிக்கிழமை மாலை கோமதிக்கு கஞ்சி காய்ச்சும் பொழுது உப்பின் அளவு கூடிவிட்டது. ஜெயந்தி, “அவங்களுக்கு பத்தியமா கொடுக்கணும் வந்தனா. இவ்வளவு உப்பை அள்ளி கொட்டிருக்க?” என்று சத்தம் போட்டார்.
கோமதி கூட, “விடு ஜெயா. தெரியாம போட்டிருப்பா. சீக்கிரமே கத்துக்குவா” என வந்தனாவிற்கு சாதகமாக பேசினார்.
வந்தனாவிற்கு சமையல் தெரியாமல் எல்லாம் இல்லை. அவர்கள் வீட்டில் மூவருக்கும் ஒரே மாதிரி சமைத்து உண்பர். அதனால் அது பெரிதாக தெரியவில்லை.
ஆனால், இங்கோ கோமதிக்கு பத்தியமாக செய்யவேண்டும். ஜெயந்திக்கும் குமரேசனிற்கும் ஒன்று! அவளுக்கும் அரவிந்தனிற்கும் ஒன்று என்று சற்று தடுமாறினாள்.
ஜெயந்தி, “அது எப்படி அத்தை? கல்யாணம் ஆகி மூணு மாசம் முடிய போகுது. இன்னுமா நம்ம வீட்டு பழக்க வழக்கம் தெரியாம இருக்கும். இதுவே சாரு இருந்தா சரியா செய்திருப்பா..” என்று எப்பொழுதும் போல் ஆரம்பித்தார்.
“போதும் அத்தை. சும்மா சும்மா அவங்களோட கம்பர் பண்ணாதீங்க.. நானும் ஒன்னொன்னா பழகிட்டு தான இருக்கேன்? எதுக்கெடுத்தலும் அவங்க கூட ஒப்பிட்டு பேசுனா என்ன அர்த்தம்?” அவ்வளவு நாள் மனதில் வைத்து புழுங்கிய வந்தனா ஜெயந்தியிடம் சீறிவிட்டாள்.
அந்நேரம் வந்த குமரேசன் அனைத்தையும் கேட்டு மனைவியையே திட்டினார். ஏற்கனவே மாமியாரும் மருமகளும் பேசிவிட்டதில் அதிர்ந்தவர், கணவரும் பேசிவிட அமைதியாகிவிட்டார்.
“நான் எங்க அம்மா வீட்டுக்கு போறேன்! ரெண்டு நாள் அங்க இருந்திட்டு வரேன்” என்று வந்தனா தீவிரமாக சொன்னாள்.
‘ஐயோயோ இவ போய் சாருவுக்கு எதாவது பிரச்னையை உண்டு பண்ண போறா..’ என்று நினைத்த ஜெயந்தி முழித்துக்கொண்டே கோமதியை பார்த்தார். அவரும் ஜெயந்தியை தான் முறைத்துக் கொண்டிருந்த்தார்.
பின் கோமதி, “நீ அங்க போறதுல எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை வந்தனா. அரவிந்த் வந்ததும் அவன்கிட்ட சொல்லிட்டு கிளம்பு” என்று முடித்தார்.
அரவிந்த், அனைத்தையும் கேட்டவன் தாயை திட்ட முடியாமல் முறைத்துவிட்டு சென்றான். பின் வந்தனாவை தனியாக அனுப்ப மனதில்லாமல் அவனே அழைத்து வந்துவிட்டான்.
அந்தநேர கோபம், ஆற்றாமை என அனைத்தையும் சாருமதியின் மேல் கொட்டிவிட்டாள் வந்தனா. அதற்கு நேற்றிரவே செலவராணியிடம் திட்டும் வாங்கிக்கொண்டாள்.
அரவிந்தன் கூறிய அனைத்தையும் கேட்ட சாருமதி, “நம்ம அம்மாவா அண்ணா?” என்றாள் அதிர்வுடன்.
“நமக்கு தான் அம்மா! ஆனா அவங்க தேவாக்கும் வந்தனாக்கும் மாமியார்! அதான் அந்த பதவியை யூஸ் பண்ணுறாங்க” என்றான் சிரியாமல்.
மாப்பிள்ளையான தேவாவை அன்னை தாங்குவதை கவனித்திருந்த சாருமதி, “ஹ்ம்ம்.. வீட்டு மாப்பிள்ளைக்கு ஒரு மரியாதை! வீட்டு மருமகளுக்கு ஒரு மரியாதை!” என கசப்பான புன்னகையுடன் சொன்னவள் ‘அம்மாகிட்ட இதைப்பற்றி பேசணும்’ என்ற யோசனையுடன் எழுந்துச் சென்றாள்.
பின் மதியவுணவையும் முடித்துவிட்டு வந்தனா, “எனக்கு தூக்கம் வருது” என அறைக்குள் சென்றுவிட்டாள். தேவாவும் அரவிந்தும் கூடத்தில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
செல்வராணி செடியில் பூத்த முல்லை பூக்களை தொடுத்துக் கொண்டிருந்தார். அவரின் அருகில் வந்து அமர்ந்த சாருமதி, “அண்ணா எல்லாத்தையும் சொன்னாங்க அத்தை! நான் வேணும்னா அம்மா கிட்ட பேசட்டுமா?” பூக்களை செல்வராணி தொடுப்பதற்கு ஏற்றவாறு எடுத்துவைத்துக் கொண்டே கேட்டாள்.
“அவங்க சண்டையை அவங்களே பார்த்துப்பாங்க சாரு. நாம தலையிட வேண்டாம்” என்று அவளை கட்டுப்படுத்தியவர்,
“நேத்து வந்தனா சொன்னது தப்பு தான் சாரு. ஆனா உன் முகம் ஏன் நேத்துல இருந்து டல்லா இருக்கு?” என்றார் அவளை கூர்ந்து.
நேற்றிரவில் இருந்து தெளிவில்லாமலும் வந்தனாவை தவிர்த்து கொண்டிருந்தவளையும் கவனித்து பார்த்தவர் வாஞ்சையுடன் கேட்டார்.
“அது.. அத்தை அவங்களால..” என கூறமுடியாமல் திணறியவளின் கையை பிடித்தவர்,
“இருந்தாலும் அத்தை அவங்க கல்யாணத்தால தான நம்ம குடும்பம் சேர்ந்தது” என்றவளை பார்த்தவர்,
“நீ படிச்சி, வேலைக்கு போற, ஒரு சேனல் நடத்துற. நீயே இப்படி குழம்பலாமா சாரு?” என்று கடிந்துக்கொண்டவர்,
“அப்படி பார்க்க போனா உன்னோட அண்ணா அரவிந்த் சம்பந்தத்தையும் தேவா தான் அவனுக்கு தெரிஞ்சவங்க மூலமா கொண்டு வந்தான். அதுக்காக அவங்களால தான் அவங்க கல்யாணம் நடந்ததுன்னு சொல்ல முடியுமா? இங்க இருக்க பாதி கல்யாணம் இன்னொரு கல்யாண வீட்ல தான் முடிவாகும் சாரு”
“இவங்களுக்கு இவங்க தான்! அப்படின்னு கடவுள் முடிவு பண்ணிருந்தா அது எப்படி வேணாலும், யார் தடுத்தாலும் யார் மூலமாவது நடக்கும். நடந்தே தீரும்!” என்று தெளிவாக உரைத்தவர் அவளின் முகத்தை பார்த்து,
“கல்யாணம் பண்ணவங்க நல்லா வாழ்ந்தா ‘என்னால தான் இந்த கல்யாணம் நடந்தது!’ அப்படின்னு பேசுறவங்க, அதே அந்த கல்யாணத்துல எதாவது பிரச்சனை வந்தா துண்டை காணோம் துணியை காணோம்ன்னு முதல் ஆளா ஓடிடுவாங்க” என்றதும் சாருமதி முகத்தில் புன்னகை அரும்பியது.
“ஒரு கல்யாணம் யாரால் நடக்குதுன்னு முக்கியமே இல்லை! கல்யாணம் பண்ணவங்க ஒருத்தருக்கு ஒருத்தர் துணையா வாழ்ந்தா மட்டும் தான் அந்த கல்யாணம் வெற்றியடையும்” என்றார்.
திருமணம் புரிந்து இருபது வருடங்கள் கணவனுடனும், பதிமூன்று வருடங்கள் தனியாகவும் அனைத்தையும் எதிர்கொண்டு வாழ்ந்தவர் சாருமதியின் மனதை எளிதாக கணித்துவிட்டார்.
அவர் சொன்னதை சிறிது நேரம் யோசித்து தெளிந்த சாருமதி அவரை கட்டிப்பிடித்து “தேங்க்ஸ் அத்தை!” என்று சொல்லி ஓடிவிட்டாள்.
அதன் பின் வந்தனாவிடம் தனியாக சென்ற சாருமதி, “நீங்க சொன்னது சரிதான் அண்ணி. எங்க கல்யாணம் நடக்க நீங்களும் ஒரு காரணம் தான். அதுக்காக தேங்க்ஸ்!” என்று ‘நீங்க சொன்னது என்னை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை!’ என சொல்லாமல் சொல்லிவிட்டாள். வந்தனாவின் முகம் தான் கருத்து சிறுத்தது. ‘நாம தான் தேவை இல்லாம பேசிவிட்டோமோ?’ என்று எண்ணினாள்.
‘நாரதர் கலகம் நன்மைக்கே!’ என்பது போல் கோபமாக வந்த வந்தனாவினால் சாருமதியின் மனதில் அவ்வளவு நாள் உருத்திக் கொண்டிருந்த கசடு நீங்கியது.
இரவில் வந்தனா வந்தத்திற்கான காரணத்தை தேவா கேட்ட பொழுது, “அம்மாக்கும் அண்ணிக்கும் எதோ லடாய் போல அதான் இங்க வந்திருந்தாங்க” என்று மட்டும் கூறினாள்.
மறுநாள் அகாடமியில் அப்பொழுது தான் ஒரு வகுப்பு எடுத்துவிட்டு சற்று இளைப்பாறி கொண்டிருந்த சாருமதி அலைபேசியில் ஜெயந்தி அழைத்திருந்ததை பார்த்தாள். அன்னைக்கு மறுபடி அழைத்தவள், “ம்மா நான் ஈவ்னிங் நம்ம வீட்டுக்கு தான் வருவேன். அப்ப பேசுறேன்” என்றாள்.
“மாப்பிள்ளை வருவாரா சாரு?” என்ற கேள்விக்கு, “நான் மட்டும் தான்!” என்று கூறி அழைப்பை துண்டித்தாள்.
மாலையில் வகுப்புகள் அனைத்தையும் முடித்து சாருமதி அவளின் வீட்டிற்கு புறப்பட்டாள். ‘என்னதான் செல்வராணி நாம தலையிட வேண்டாம் என்று சொன்னாலும். சாருவின் மனதிற்கு கேட்கவில்லை!’ எனவே அன்னையை காண புறப்பட்டுவிட்டாள்.
வந்தவளுக்கு காஃபி கொடுத்து உபசரித்த ஜெயந்தி, “உன்னோட நாத்தனார் என்ன சொன்னா சாரு?” என நக்கலாக கேட்டார்.
கோமதி, “இந்தா ஜெயா நீ அடங்க மாட்டியா? இப்ப தான் ஒரு பிரச்சனை முடிஞ்சிருக்கு. அதும் வேலைக்கு போய்ட்டு களைப்பா வந்த புள்ளை கிட்ட என்ன பேசிட்டு இருக்க?” என்று அதட்டினார்.
“அதெல்லாம் இல்லை பாட்டி. எனக்கு இந்த விஷயமே அண்ணா தான் சொன்னான்” என்று பாட்டியிடம் சொன்னவள்,
“அம்மா! நாங்க காலம்முழுக்க ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கணும்! பேசிக்கணும்! அப்படி இருக்கிறப்ப நீங்க ஒப்பிட்டு பேசி தேவை இல்லாம எங்களுக்குள்ள வெறுப்பை வளர்க்காதீங்க” என்று எச்சரித்தாள்.
நேற்று முழுவதும் கோமதி இதையே வெல்வேறு விதமாக சொல்லியிருந்தார். இன்று மகளும் அதையே கூற, ‘நான் மாமியாராகியும் எனக்கு ரெண்டு மாமியார்!’ என்று மனதோடு நினைத்துக்கொண்டார்.
அந்நேரம் வேலைக்கு சென்ற வந்தனா வர, “வாங்க அண்ணி!” என்று வரவேற்ற சாருமதி சிறிது நேரம் அங்கிருந்துவிட்டு கிளம்பினாள்.
அந்த சண்டை, அதன் பிறகு வந்த மனகசப்புகள் என அனைத்தையும் அனைவரும் கடந்து வந்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகியது.
அந்த மாதத்தில் தேவா, சாருமதி தம்பதி ஒருவாரம் அங்கேயும். அரவிந்த், வந்தனா தம்பதி ஓருவாரம் இங்கேயும் என்று வந்து சென்றிருந்தனர்.
அன்று விரைவிலேயே வீட்டிற்கு வந்த தேவா சாருமதியிடம் “வெளிய போகலாமா?” என்று ஆசையுடன் கேட்டான்.
“சாரி தேவ்! நான் இந்த வீடியோ எடிட் பண்ணனும். ப்ளீஸ் நாளைக்கு போகலாம்” என்றதும் அவனுக்கு கோபம் வந்தது.
“நானே என்னைக்காவது தான் சீக்கிரம் வரேன். அப்பவும் நீ உன்னோட சேனலை கட்டிட்டே அழு..” என்று கத்தினான்.
“நாலு லட்ச சப்ஸ்க்ரைபர்ஸ் வந்திருக்காங்க தேவ்! அதுக்காக தான் ஒரு ஷார்ட்ஸ் ரெடி பண்ணிட்டு இருக்கேன். அப்புறம் ஒரு கிவ் அவே அனௌன்ஸ் பண்ணனும். அவ்ளோதான்!” என்றவளை முறைத்துவிட்டு அமர்ந்துக்கொண்டான்.
இரண்டு வாரம் முன்பு கூட தேவா வீட்டிற்கு வர மணி பதினொன்றாகியது. செல்வராணி சாப்பிட்டு படுத்துவிட தேவாவே கதவை திறந்து வந்தான்.
வந்தவன் பார்த்தது அறையில் அமர்ந்து யூடியூப் வீடியோ எடிட் செய்து கொண்டிருந்தவளை தான்! “நீ இன்னும் துங்கலையா?” என தேவா சத்தம் போட,
“இதோ இன்னும் அரைமணி நேரம் தான்! நாளைக்கு காலைல பத்து மணிக்கு போஸ்ட் ஆகுற மாதிரி செய்திட்டு துங்கிடுவேன்”
“என்னமோ பண்ணு” என்று சொல்லிவிட்டு அவன் படுத்துவிட்டான். அவர்களுக்குள் சண்டை என்று வந்தால் இப்போதுவரை யூடியூப்பிற்காக மட்டும் தான் எழுகிறது.
அவன் கத்தியதில் கோபம் வந்தாலும் பொறுமையாக வீடியோ எடிட் செய்துக் கொண்டிருந்தவளை செல்வராணி அழைத்தார்.
“ஹான் வரேன் அத்தை” என்று சொல்லிக்கொண்டே மடிக்கணினியை ஓரமாக வைத்துவிட்டு வெளியே சென்றாள்.
வெளியே அரவிந்தும் வந்தனாவும் இருப்பதை பார்த்த சாருமதி, ‘இப்ப என்ன பிரச்னையோ? போனவாட்டி வந்தப்பவே ரெண்டு வாரம் புலம்ப வெச்சாங்க..’ என்று அவர்களை கலக்கத்துடன் பார்த்தபடியே வரவேற்றாள்.