எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அகத்தினை களவு கொண்டவன்(ள்) பாகம் 2 கதை திரி

priya pandees

Moderator
அத்தியாயம் 1

பாப்பு கனவில் கண்ட பெண்ணின் நிலைமையில் ஹோமா ஸ்டேஜில் படுத்துவிட, அவள் கண் முன் நடந்தவைகளை காண வேண்டி பூர்வ ஜென்மம் சென்று விட்டாள். அவள் கண்டதே இனி நாம் விவரமாக பார்க்க உள்ளோம்.

நடு நிசி, அடர்ந்த காட்டுப் பகுதி, பௌர்ணமி வெளிச்சம் மட்டுமே அடர்ந்த மரங்களை தாண்டி அங்கங்கு விழுந்து வெளிச்சத்தை பரப்ப முயற்சித்து கொண்டிருந்தது. "சோ" ௭ன்ற இறைச்சலுடன் அருவி கொட்டி கொண்டிருந்தது. அங்கு தான் பாப்பு வந்து நின்று பேந்த பேந்த முழித்து கொண்டிருந்தாள்.

அந்நேரம் "என்று தானடி விட்டொழிப்பாய் இப்பழக்கத்தை" ௭ன்ற பெண்ணின் கேள்விக்கு., அழகிய நீல கூந்தல் அசைந்தாட நீரில் ஆடி கொண்டிருந்தவள் நின்று திரும்பி "நான் தீண்டத்தகாத செயல் ஒன்றும் செய்யவில்லையே கொற்றவை" ௭ன்க.

"ஆத்தி இவ ௭ன்ன ௭ன்னைய மாறியே இருக்கா" ௭ன வாயை பிளந்தவாறு தன்னையே தடவி தடவி பார்த்தாள் பாப்பு.

"உனக்கே இது அதிகமாக தெரியவில்லையா மகிழ்" என்ற படி அருவியின் அடியிலிருந்து வெளிவந்து காட்சி கொடுத்தாள் கொற்றவை செல்வி.

"ஏனடி எனது சிறிய ஆசையை நிறைவேற்ற இப்படி சலித்துக் கொள்கிறாய்".

"சிறிய ஆசையா? கடந்த 11 வருடமாக நடுநிசியில் யாருக்கும் தெரியாமல் இந்த வயது பெண்ணை கிழங்கையும், ஆட்டிறைச்சியையும் காட்டி ஏமாற்றி கூட்டிவந்து இந்த அருவியில் குளிப்பாட்டுகிறாயே, இது சிறிய ஆசையா? இவ்விஷயம் உனது, எனது பெற்றோர்களுக்கு மட்டும் தெரிய வேண்டும், வேங்கை அம்மனுக்கு வேண்டுதல் இல்லா பலியாகி விடுவோம்" ௭ன புலம்ப.

"11 வருடம் ஆகியும் நீ புலம்புவது ௭ப்படி மாறவில்லையோ, அதுபோல் ௭னது இந்த பௌர்ணமி இரவும் மாறாது. மற்றவைகளை மாட்டும் தினத்தன்று யோசிப்போமடி" ௭ன்றாள் சாதாரணமாக மகிழ்.

"அது எப்படி மாதந்தோறும் சரியாக பௌர்ணமியன்று மட்டும் நடுநிசியில் விழிக்கிறாய், பழக்கத்தில் வரவேண்டுமென்றாலும் எனக்கு மட்டும் இத்தனை வருட பழக்கத்தில் விழிப்பு வர மாட்டேன் என்கிறது" என கேட்டவாறு அருவியிலிருந்து வெளிவந்து கோயிலை நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.

சுற்றி சுற்றி பார்த்த பாப்பு 'என்னது இவ்வளவு இருட்டா இருக்கு?. நாம ௭ங்க வந்துருக்கோம், காலைல சார்ம் கூட்டிட்டு வந்த இடம் தானே இது, இப்ப ௭ப்டி வந்தோம் பரவாயில்லயே ஜெட் வேகத்துல வந்துட்டோம். ௭ன்னலாமோ தோனுச்சே. ஆமா இங்க தான் அந்த பொண்ணு கழுத்தறுத்து சாக போச்சு, காப்பாத்தணுமே' என சுற்றி முற்றி தேட, இருவர் பேசிக்கொண்டே நடந்து வரும் சத்தம் கேட்டு மறைந்துகொண்டு எட்டிப் பார்த்தாள்.

அவ்வளவு நேரமும் தன்னை போலவே ஒருத்தியை கண்ட ஷாக்கில் உடன் வந்த கொற்றவையை கவனிக்காதவல் தற்போது கண்டு விட்டு, 'கூட வர்றது வெள்ள பாட்சா தானே, இவ இங்க என்ன செய்றா? ஆமா அவ வயிறு பெருசா இல்ல? பாப்பாவ எங்க?' என்ற குழப்பத்தில் தலையை சொரிந்து கொண்டிருக்க, இருவரும் பேசியவாறே இவளைக் கடந்து சென்றனர். தானும் பின்தொடர்ந்தாள் பாப்பு.

அந்த பெண்களின் பேச்சு தொடர்ந்தது, "என்னை வேங்கை எதிர்பார்ப்பாள் அதனால் எழுந்துவிட வேண்டுமென நான் தூங்கினாலும் என் மனம் விழித்திருக்கும். ஆனால் உன் மனம், எப்படியும் மகிழ் வந்து எழுப்பி விடுவாள் அந்நேரம் எழுந்து கொள்ளலாம் என நிம்மதியாக உறங்கி விடுகிறது".

"அப்படியும் இருக்குமோ?"

"அப்படித்தான் இருக்கும் கொற்றவை" என ஈர உடையுடன் வந்து சிவனை வணங்கினர். பின் வேங்கை நல்லாள் குகையை நோக்கி நடந்தனர்.

'அட நம்ம சார்ம் கூட வந்த அதே அருவி, அதே சிவன் கோயில், அப்ப இது அதே காடு தான்' இது குழப்பத்திலிருந்த பாப்பு.

மலையை குடைந்து உள்ளே செல்லும் நீண்ட பாதை, ஆங்காங்கே இருந்த தீப்பந்தத்தின் ஒளியில் பாதையைக் காட்டிக் கொடுத்தது. உள்ளே இரு பக்கத் தீப்பந்தத்தின் ஒளியிலும், நேர்முகத்தில் படும் நிலவின் ஒளியிலும் பிரகாசமாய் காட்சியளித்தாள் வேங்கை நல்லாள்.

'இந்த பொண்ணு எப்படி நம்மள மாதிரியே இருக்கு? ஆனா வேற மாதிரி பேசுது, ட்ரெஸிங் டோட்டலா வித்தியாசமா இருக்கே, அட அடுத்து அதே குகை கோயில், நேத்து வந்தப்போ அவ்வளவு தூசியா இருந்தது, இப்போ இவ்ளோ நீட்டா இருக்கு! என்னட எடிசனுக்கு வந்த சோதனை, நீங்க கஷ்டப்பட்டு லைட்ட கண்டுபிடிச்சும் இங்க கட்டைல தீ பொருத்தி வச்சிருக்காங்க, ஒருவேளை இங்க ஈ.பி., கனெக்சன் வாங்கலையோ?' என அவள் கேள்வி அனுமார் வால் போல் நீண்டு கொண்டே இருந்தது.

"இந்த ஒரு விஷயம் தானடி மகிழ் அர்த்தஜாமத்தில் எழுப்பி குளிக்க வைக்கிறாய் என தெரிந்தும் உன்னுடன் மீண்டும் மீண்டும் வருவதற்கான காரணம், ௭ன்ன தேஜஸ் பார்த்தாயா நம் தாய் முகத்தில்" என கண்ணை வேங்கை நல்லாளின் முகத்தை விட்டு நகராமல் கொற்றவை சொல்ல.

"அது தெரிந்ததனால் தானேடி நீ விடாமல் பிதற்றினாலும் பரவாயில்லை என்று உன்னை தவறாமல் உடன் அழைத்து வருகிறேன்".

பின் இருவரும் மனம் குளிர அமைதியாக அமர்ந்து அவளை ஆசை தீர தரிசித்து விட்டு வெளியேற, "ஏனோ மகிழ், ௭னக்கு வெகு நாட்களாகவே ஒரு சந்தேகம், இந்நேரம் நம் தாயும் தூங்கும் நேரமாக இருப்பின் நாம் அவளை தொந்தரவு செய்ததாக ஆகிவிடாது?" என்ற கொற்றவையின் கேள்விக்கு.

"அப்படி நினைத்திருந்தால் எட்டு வயதில் நான் முதன் முதலில் கிளம்புகையிலேயே ஏதாவது தடங்கல் கொடுத்து என்னை தடுத்து இருப்பார்களே".

"அது சரி, அது சரி அவளை மீறி நம்மால் ௭ன்ன செய்துவிட முடியும். சரி அது போகட்டும், இப்போது என்ன வேண்டிக் கொண்டாய்?".

"வேண்டுதலை எப்படியடி வெளியில் சொல்வது".

"இதற்கு முன் சொல்லிக்கொண்டதே இல்லாதது போல் பேசுகிறாயே. எனக்கு தெரியும் நீ என்ன வேண்டியிருப்பாய் என" ௭ன்று கொற்றவை நொடித்து கொள்ள.

"என்ன தெரியும் உனக்கு? கொஞ்சம் சொல்லு கேட்போம்".

"இந்த வயதில் வேறு என்ன வேண்ட முடியும். மனதிற்கினிய நல்ல மணாளன் வேண்டும் என கேட்டிருப்பாய்".

"அப்படியெனில் நீ அதைத்தான் கேட்டாயா?".

கொற்றவை கண்ணை சிமிட்டி, தலையசைத்து குனிய, "அடிப் பாதகி மணாளனை காணுமுன் உனக்கு வெட்கம் வேறு வருகிறதா? கொடுத்து வைத்தவர் தான் உன் கணவர்".

"போ மகிழ், நீ என்ன வேண்டினாய் என மழுப்பாமல் சொல்".

"அடுத்த முறை வேட்டைக்குச் செல்லும் பொழுது ஒரு சிங்கமாது ௭ன் கையில் சிக்க வேண்டும் என வேண்டினேன்" என்க.

பாப்புவும் அதிர்ச்சியில் நின்று விட்டவள். அடுத்த நொடியே 'சிங்க வேட்டைக்கு போறாளாம்,' என குனிந்து நிமிர்ந்து, குனிந்து நிமிர்ந்து சிரித்தாள்.

கொற்றவையும் அப்படியே அதிர்ச்சியில் நின்றுவிட, 4 அடி எடுத்து வைத்த மகிழ், நின்று திரும்பி உடன் வந்தவளை நோக்க அவள் நிற்கும் விதத்தைக் கண்டு கலகலவென சிரிக்க, அதில் உணர்ச்சி பெற்ற மற்றவள், "தயவு செய்து அடுத்த முறை வேட்டைக்குச் செல்கையில் என்னை அழைத்து விடாதே தாயே உனக்கு கோடி புண்ணியம்" என்று அவள் தன் குடில் நோக்கி வேகமாக நடந்தவாறு, 'இவளிடமிருந்து தப்பிக்க வேண்டுமென்றால் முதலில் நாம் புகுந்த வீடு செல்ல வேண்டும்' என புலம்பிக் கொண்டே தன் குடில் வாசல் வந்தவள் நின்று மகிழ் அவள் குடிலில் சென்று விட்டாளா என தெரிய வேண்டி திரும்பி பார்த்தாள்.

அவள் குடிலிற்கு எதிர்திசை வரிசையில் நான்கு குடிலின் முன்னையே மகிழ் குடிலிருக்க அதன் வாசலில் நின்று கொற்றவையின் புலம்பலில் ஏற்பட்ட சிரிப்போடு பார்த்து நின்றாள், அவள் திரும்பிப் பார்க்கவும் இவளும் கையசைக்க, அவளும் கையசைக்க சிரித்தவாறே குடிலில் சென்று மறைந்தனர் தோழிகள் இருவரும்.

இதை வேறு 2 கண்களும் கண்டதை பாப்பு உட்பட மூவருமே கவனத்தில் கொள்ள வில்லை.

அவர்கள் குடில்கள் அமைந்திருப்பது மலைகளுக்கும், காட்டிற்கும் இடைப்பட்ட பகுதி. அவ்விடத்தின் பெயர் கொள்ளிமடம். அவர்களது குலத்தொழில் வேட்டையாடுவது மற்றும் தேனெடுப்பது. அவர்களின் வீரத்தை மெச்சி அவர்களில் சிலருக்கு அரசு வேலையான காவல் வீரன் வேலையும் தந்திருக்கிறான் அவர்களின் தற்போதைய இளவரசன் "அமிழ்திறைவன்".

வேந்தன் பாண்டியனின் ஆட்சியின் கீழ் குறுநில மன்னரான அமிழ்திறைவன் ஆளுமையின் கீழ், புராரி வன தேசத்தின் கீழ்வரும் 200 கிராமங்களும், 200 நகரங்களும் உண்டு. அதில் ஒரு கிராமம் தான் நம் தோழிகள் வசிக்குமிடமான கொள்ளிமடம்.

இக்காலத்தில் தாட்சாயணியாக இருக்கும் நம் பாப்பு, தன் உடலை இரணியன் பொறுப்பில் விட்டுவிட்டு கனவுலகில் சஞ்சரிக்க அவளது ஆத்மாவும் டிக்கெட்டே எடுக்காமல், டைம் மெஷினும் இல்லாமல் ஆவலுடன் வண்டி ஏறி வந்து இறங்கியது கிபி 1308 ஆம் நூற்றாண்டுக்கு.



இருவரும் அவரவர் வீடு செல்லவும், 'நாம இப்ப எங்க போறது? இவ எப்படி நம்மள மாதிரியே இருக்கா? அதுவும் ஓவர் நைட்ல இவ்ளோ நீளமா முடி எப்படி வந்திருக்கும்? அவ பாப்புக்குட்டினா நான் யாரு? நான் அவளோட மனசாட்சியா இருக்குமோ? அப்ப ஏன் நான் பேசுறதுலா அவளுக்கு கேக்கல? இப்ப எப்படி நான் அவளுக்குள்ள போறது? இந்த டிவில எல்லாம் மனசாட்சின்னு காட்றாங்க, ஆனால் அது எப்படி வருது எப்படி போதுனு காட்டமாட்டுறாங்க' என்று மகிழ் நுழைந்த குடில் திண்ணையிலேயே அமர்ந்து விட்டாள்.

அந்நேரத்தில் தான் அவள் காதில் சில குரல்கள் விழுகிறது, சார்ம் மற்றும் விஷாகன் ஹாஸ்பிட்டலில் வைத்து பேசிக்கொள்வது, விஷாகன் குழந்தை பிறந்து விட்டதாக கூறுவது, கிருஷ்ணன் வந்து அவள் எழுப்புவது கஷ்டம் என்பதாக வீரமணி கூறியதை சொல்வது, வேதியின் வேதனை குரல் அனைத்தையும் கேட்டவள், 'ஏன் எல்லோரும் ஏதோ போல் பேசுகிறார்கள்?' என மேலும் குழம்பி.

'நான் நல்லாத்தான் இருக்கேன்' என சொல்லவிளைகையில், இங்கு குடில் கதவைத் திறந்து கொண்டு வெளியேறினார் ஒரு பெண்மணி.

ஏத்தி கட்டின பருத்தி சேலையும், ஒய்யாரக் கொண்டையுமாய் வந்த இக்கால வடிவாகிய அஞ்சலையை கண்டதும், மற்றதை மறந்து குபீரென்று சிரித்து விட்டாள்.

"என்னமா நீ இப்படி வந்து நிக்கிற?" எனக் கேட்டு மேலும் சிரிக்க, அஞ்சலையும் வாசலை கூட்டி முடித்தவர் தண்ணீரைத் தெளிக்க, தன் மேல் தெளிக்கவும் துள்ளி விலகினாள். ஆனால் அவள் மேல் தண்ணீர் எதுவும் படவில்லை, அவர் தன்னை கண்டதாகவும் தெரியவில்லை என்றபின் தான் நடப்பதை கவனிக்க ஆரம்பித்தாள்.

'நான் எங்க இருக்கேன்? இவங்க எல்லாம் ஏன் நம்ம ஃபேமிலி போலவே இருக்காங்க? நம்மள மாதிரியே வேற பிளான்ட்லையும் மனுஷங்க வாழ்றதா சொல்வாங்களே அப்படி எங்கேயும் வந்து விட்டோமோ?' என மறுபடியும் அவள் கற்பனைவளம் வளர, அது தடுப்பது போல் பேச்சு குரல் கேட்டது.

"தாயி, ஐயா இன்னும் எழுந்துகலையா?" ௭ன வந்த நால்வரையும் கண்டு வாலியை ஓரமாக வைத்துவிட்டு, "வாங்க பெரியண்ணே, சாமி எழுந்து நேரமாச்சு. ஆசை மகள் தலைகோதி தூங்க படுத்திக் கொண்டிருக்கிறார்கள். தங்களை வரச் சொல்லி இருந்தார்களா?".

"சரிதானுங்க தாயி, செல்ல மகள் என்பது தன் வீட்டில் இருக்கும் வரை தானே அதுதான் தலைவர் தாலாட்டுகிறார்கள். நாங்கள் சென்று பிறகு திரும்பி வரட்டுமா?" என்க.

"சும்மா இருங்க பெரியண்ணே. நான் சென்று சாமியை வரச் சொல்கிறேன். அமருங்கள் வடிநீர் கொண்டுவருகிறேன்" என்றவர் உள் சென்று, "சாமி, தங்களைக் காண பெரியண்ணன், கோவில் பூசாரியோடு இன்னும் இருவர் வந்துள்ளனர்".

"நான்தான் அஞ்சலை வரச் சொல்லி இருந்தேன். அரசவைக்கு படைவீரர்களாக, பாதுகாவலர்களாக பிள்ளைகள் சிலருக்கு நம் இளவரசர் வேலை தந்து ஓலை அனுப்பினார் இல்லையா!!, அதான் நல்ல நாள் பாத்து, நம் தாய்க்கு ஒரு பூஜை போட்டு அவர்களை அனுப்பி வைக்க வேண்டும். நாம் தாமதிப்பது அவர்களை அவமதிப்பதாய் எண்ணி விடக்கூடாதே, அதான் காலையிலேயே வரச் சொல்லியிருந்தேன்".

"ஆகட்டும் சாமி நீங்கள் செல்லுங்கள், நான் இஞ்சி வேர் வடிநீரும், ரொட்டியும் எடுத்து வருகிறேன்" என்றபின், நீதிவர்மன் (மெய்யப்பன்) வெளியேறினார்.

"எழுந்திரு மகிழ், வாசலை தெளித்து பாதியில் வரும்படி ஆகிவிட்டது, சென்று கோலமிடு. சூரிய உதயமாகும் நேரமாகிவிட்டது".

"சற்று நேரமெடுத்து செல்கிறேனம்மா" என அலுப்பாக மகிழ் திரும்பி படுக்க.

"அதற்குள் தெளித்த வாசல் காய்ந்துவிடும், சூரிய உதயத்தின் பின் லட்சுமி வரும் நேரம், வீட்டுப்பெண் உறங்களாகாது மகிழ்".

"சரி சரி எழுந்துவிட்டேன், காலையிலேயே தேவாரம் பாட ஆரம்பிக்காதே" என எழுந்தவள் பின்வாசல் சென்று கேணியில் நீர் வார்த்து முகம் அலம்பி, இடித்து வைத்த பச்சரிசி மாவுடன் வெளியேறினாள்.

வெளியில் அமர்ந்து இருப்பவர்களைக் கண்டு வணக்கம் வைத்துவிட்டு, கோலத்தில் கவனமானாள்.

இவற்றையெல்லாம் பாப்பு திறந்த வாய் மூடாமல் பார்த்திருந்தாள். அவளுக்கு நடப்பது எதுவும் புரியவுமில்லை, நம்பவும் முடியவில்லை.

கோலத்தை போட்டு முடித்தவள் அங்கேயே பேசிக்கொண்டிருந்தவர்களின் அருகில் தந்தையோடு அமர்ந்து அவர்கள் பேச்சைக் கேட்க ஆரம்பித்து விட, வடிநீரோடு வந்த அஞ்சலை, "உள்ளே வந்து ரொட்டி தட்டு மகிழ், இங்க என்ன வேடிக்கை?".

"என்ன பேசுகிறார்கள் என கேட்டு விட்டு வருகிறேனம்மா".

"கேட்டு நீ என்ன செய்யப் போகிறாய்?".

"நீ போ அஞ்சலை அவள் வருவாள்" நீதிவர்மன் அவள் தலை வருட.

"நன்றாக கொஞ்சுங்கள், போற இடத்தில் தங்கள் மகள் ராணியாக வீற்றிருக்கப் போவது போல்" என்ற முனகலுடன் உள்ளே சென்றார்.

"அவ்வாறெனில் வரும் வெள்ளிக்கிழமை பூஜை வைத்துக்கொள்வோம், அந்தந்த குடும்பத்திற்கு தகவலை சேர்பித்து விடுங்கள்".

"ஏனப்பா பெண் பிள்ளைகளுக்கு நம் இளவரசர் வேலை கொடுக்க மாட்டாரா?" ௭ன்ற மகிழின் கேள்விக்கு.

"அது வழக்கத்தில் இல்லை மகளே".

"பெண்களும் போர் புரிய ஏற்றவர்கள் தானேப்பா, பின் ஏன் இப்படி ஒரு சட்டம், ஆண்களை தாண்டி ஊர் எல்லையில் உள்நுழையும் வீரர்களை பெண்கள் தடுத்தால் போதுமென".

"பெண் என்பவள் நாட்டிற்கும் ஒவ்வொரு வீட்டிற்கும் தேவையானவள். அவளை பாதுகாக்கும் பொறுப்பு ஒவ்வொரு ஆண் மகனுக்கும் உண்டு மகளே".

"என்னவோ போங்களப்பா" என அவள் சலித்துக்கொள்ள, ஆதரவாக அவள் தலை தடவினார் நீதிவர்மன். இவர்களை கண்டு சிரித்தவாறே மற்ற நால்வரும் விடைபெற்றுச் சென்றனர்.

"அப்பா தேனெடுக்க கிளம்புகிறேன் உடன் வருகிறாயா?", "சரிப்பா" என வேகமாக தலையசைத்தாள் மகிழ்.

"சாமி, அவள் எதற்கு?" ௭ன்ற அஞ்சலைக்கு.

"என்னுடன் தானே கூட்டிச் செல்கிறேன் பிறகென்ன பயம்".

"அதுதானே பயம், தேனை எடுப்பீர்களா? இல்லை இவள் மேல் கவனம் கொள்வீர்களா?".

"நான் பார்த்துக்கொள்கிறேன் அஞ்சலை".

"நான் எந்த குறும்பும் செய்யாமல் சமத்தாக சென்று வருவேனம்மா, கொற்றவையும் உடன் அழைத்து செல்கிறேன். நாங்கள் எங்கள் வேலையை பார்க்கிறோம், அப்பா அவர்கள் வேலையைப் பார்க்கட்டும்".

"சரிதான் ஏத்த ஜோடி தான் நீயும், அவளும்".

மகிழை ஃபாலோ பண்ணும் வேலையை, கடமையை காரியமாய் பாப்புவும் உடன் கிளம்பினாள்.

மலையேறி தேன் எடுக்க ஏதுவான உடையுடன், தேவையான பொருட்களையும் எடுத்துக்கொண்டு கிளம்பினர். நீதிவர்மனுடன் நான்குபேர் முன்செல்ல, தோழியர் இருவரும் பாப்புவை பின்தொடர விட்டு முன் சென்றனர். தேன் எடுக்க வேண்டிய இடத்திற்கு சற்று முன்னே ஒரு பெரிய ஆலமரத்தடியில் தோழிகள் இருவரும் தேங்கி விட்டனர். அதில் இணையப்பட்ட மரஊஞ்சல் 2 கட்டப்பட்டிருக்க, அதில் ஆளுக்கொன்று ஜம்மென்று அமர்ந்து ஆடத் தொடங்கிவிட்டனர்.

இது இவர்களின் வழக்கம் தான் போலும் என்பதை புரிந்துகொண்டாள் பாப்பு. 'இவங்க இரண்டு பேரும் எப்படியும் வெட்டிக் கதை தான் பேச போறாங்க, நாம மெய்யப்பன், எம்.ஏ.,பி.எல்., எப்படி மலையேறுறார்னு பாத்துட்டு வருவோம்' என ஆண்களை பின் தொடர்ந்தவள், வழியெங்கும் கண்ட வண்ண வண்ண மலர்களைக் கண்டு அதிசயித்தாள்.

அப்படி ஒரு நறுமணம் அவளுக்கு பூக்களை பார்த்ததும் உண்டானது. செவ்வரலி, செண்பகப்பூ, மல்லி, முல்லை, நீலக்குறிஞ்சி போன்ற மலர்கள் அங்கிருந்தன. இவள் அதில் மயங்கி நின்றிருக்க.

மற்றவர்கள் மூங்கிலில் செய்த ஒரு வகை வட்ட வடிவத்திலான கயிற்றில் காலை சுற்றி மாட்டிக்கொள்ளும் ஏணியுடன் சர்ரென்று மேல் ஏறினர். தேன் கூட்டை கிட்ட நெருங்குகையில் பந்தத்தில் தீ பற்ற வைத்துக்கொண்டு மேலும் முன்னேற, தேனீக்கள் மொய் மொய்யென்று மேய்ந்து கொண்டிருந்தவற்றை விரட்ட நெருப்பு புடவையை காட்ட அதில் அவை தேன் கூட்டை விட்டு விலகி பறக்க, கையில் வைத்திருந்த மூலிகைச்செடி உதவியுடன் தேனை எடுத்து குடுவையில் போட்டனர். கொசகொசவென தேனீக்கள் இவளை நோக்கி வருவது போலிருக்க, வீல் என்று அலறி பதறினாள்.

அதில் அவள் உடல் அங்கு திடுக்கிட்டது, அருகிலேயே படுத்திருந்த இரணியன் அவள் உடல் தூக்கிப் போடவும், பதறி டாக்டரை அழைத்து வந்தான். (அப்பொழுது சென்னையிலுள்ள ஹாஸ்பிட்டலில் தான் இருந்தாள் பாப்பு) "இது மாதிரி ஏதாவது ரியாக்ட் பண்ணுவாங்க, நல்லதுதான். டோன்ட் வொரி" என்றுவிட்டு டாக்டர் சென்றுவிட, தொய்ந்து போய் அமர்ந்தான் இரணியன்.

பாப்பு அடித்து பிடித்து வந்த வழியிலேயே ஓடிவந்து தோழிகளுடன் அமர்ந்து கொண்டாள். மூச்சு வாங்குவது நிற்க வெகு நேரம் பிடித்தது.
 
அத்தியாயம் 2

பாப்பு., ஏதோ இவர்கள் அருகில் வந்து உட்கார்ந்து விட்டால் தேனீக்கள் வந்த வழியே திரும்பிவிடும் ௭ன்பது போல் வேகமாக வந்து இவர்களுடன் அமர்ந்து கொண்டாள். பின்பும் பயம் போக மறுக்க திரும்பி திரும்பி வந்த பார்த்து முழித்து கொண்டிருக்க, தேனீக்கள் இவர்கள் இருந்த பக்கம் வரவில்லை ௭ன்றானப்பின் தான் அவளுக்கு மூச்சு சீரானது. தோழிகள் இருவரும் வேறு கதையில் மூழ்கியிருந்தனர்.

"அந்த தேவிக்கு நம்மை கண்டாளே பொறாமைதான் மகிழ். அவள் கண்ணடிபட்டே நாம் பிரிந்து விடுவோமோ? என சில முறை ஐயம் எழுகிறது" ௭ன்றாள் கொற்றவை.

"ஏனடி இந்த முறை அவள் என்ன செய்தாள்?"

"சென்றமுறை திருவிழாவிற்கு நாம் இருவரும் ஒன்று போல் உடையணிந்தோமே அதேபோல் தேடிப்பிடித்து வாங்கி வந்து விட்டாள். நேற்று அதை போட்டுக் கொண்டு கஞ்சியை ௭ன் அம்மைக்குக் கொடுக்க வருவது போல் வந்து காட்டி செல்கிறாள். எனக்கு அந்நேரம் அவளை அடித்து விடும் வேகம் தான், தப்பித்து விட்டாள், அவளுக்கு தான் அரண்மனை வாசஸ்தலம் உண்டே பின்பும் ஏன் தான் ஊருக்குள் வருகிறாள்".

"எனக்கு என்னமோ அவள் நம்மை பார்த்து பொறாமை படுவது போல் தெரியவில்லை" மகிழ் நிதானமாக ஊஞ்சலில் ஆடியவாறு கூற.

"பின் நான்தான் அவளை கண்டு பொறாமையில் இதெல்லாம் சொல்கிறேன் என்கிறாயா?".

சிரித்த மகிழ், "அதில்லையடி அவள் நம்மை கண்டு பொறாமை படுவது போல் தெரியவில்லை, நம்முடன் இணைய விரும்புகிறாள் என நினைக்கிறேன் என்று சொல்லவந்தேன், இல்லாமல் ௭ப்போதும் நாம் செய்வதயே ஏன் பின்பற்ற வேண்டும்".

"எப்போது இருந்தாம் அவளுக்கு இந்த யோசனை?".

"அடியேய் நான் என் யூகத்தை தான் சொன்னேன்".

"என்றாவது ஒரு நாள் தனியாக சிக்குவாள் அன்றைக்கு எல்லாவற்றையும் தெளிவுபடுத்தி விடுகிறேன்" தீர்க்கமாய் கொற்றவை சொல்ல. அவளின் உறுதிமொழி கேட்டு சிரித்துக் கொண்டாள் மகிழ்.

"அவளுக்கு அரண்மனையில் இளவரசியின் தோழியாக இருப்பதில் ஏகமான தலைக்கணம், அவள் நம்மிடம் இணைய விரும்புகிறாளா? நம்பும்படியாகவா இருக்கிறது?".

"ஆக நீ இப்படி அவளையே நினைத்துக் கொண்டிருக்க போகிறாயா? வா கிளம்பலாம் தந்தையர் அதோ வர ஆரம்பித்துவிட்டனர்".

"ம் கிளம்பலாம்" இருவரும் ஊஞ்சலில் இருந்து இறங்கி முன் நடந்தனர்.

அவர்கள் தேவி என பேசவும் தான் பாப்புவிற்கு, 'எல்லோரையும் பார்த்தோம் நம்ம வேதிக்காவை மட்டும் காணும், அவளை எங்கே?' என யோசிக்கவே, அவள் முன் அவளது வேதி அக்காவே காட்சி அளித்தாள்.

பாப்பு கண் முன் இப்போது தெரியுமிடம், ஒரு மாடமாளிகையின் முன் வாசல், சற்று உள் பக்கத்தில் பெண்கள் கலகலவென பேசி சிரிக்கும் சத்தத்தில் நின்ற இடத்தில் இருந்து நான்கு அடி எடுத்து வைத்து முன் வந்து எட்டிப் பார்த்தாள்.

வேதிகா ஆகிய தேவி சுற்றி நான்கு பெண்கள் அமர்ந்திருக்க, எதிரே அமர்ந்திருந்த பெண்ணுடன் பல்லாங்குழி விளையாடிக்கொண்டிருந்தாள். தன் அக்காவை தாவணியில் முதல்முறையாக கண்டாள் பாப்பு.

"செம க்யூட்டா இருக்கக்கா" என ஓடிப்போய் ஆர்வக்கோளாறில் அவளிடம் சொல்லவும் செய்தாள், பின்பே நாம் பேசுவதயும், நம்மளையும் மற்றவர்கள் உணர மாட்டார்கள் என புரிந்து கொண்டாள்.

"ச்ச முதயே தெரிஞ்சுருந்தா இப்டியே ஒரு செல்ஃபி எடுத்துருக்கலாம்" புலம்பாமல் இருக்க முடியவில்லை அவளால்.

அந்நேரம் ஒரு பெண் ஓடி வந்து, "தேவி, நம் இளவரசியார் அரசர் அறையிலிருந்து திரும்பி வருகிறார்".

"ஹே வாங்களடி போவோம்" என அனைவரும் வேகமாக தாவணி பாவாடையை தூக்கிப் பிடித்துக் கொண்டு ஓடினர் இளவரசியை நோக்கி.

வீராவேசமாக சலக்கு சலக்கென்ற தங்க கொலுசின் ஓசை அந்த இடமே நிறைய நடந்து வந்தாள் திறவியபாவை. வாசலில் நின்றவர்களை முறைத்தவாறே உள் சென்றவள், தொப்பென மூலிகைகள் நிரம்பிய அந்த மெத்தையில் அமர்ந்தாள்.

"பெண்ணவள் நான் இருக்கையில் அவனுக்கு எதற்காக இப்போது அவசரக் கல்யாணம். தனக்கு உதவி புரிய இவ்வளவு பெரிய அரண்மனையில் யார் தான் உண்டு. நான் ௭தற்காக இங்கிருக்கிறேன் ௭ன்றே தெரியவில்லை. இவர்களின் மகள் என்ற பெரிய வரம் கிடைக்காமல் இருந்திருந்தால் இவ்வளவு அவமரியாதை எனக்கு நேர்ந்திருக்காது. பாசமே இல்லாத தகப்பனுக்கும் தாய்க்கும் பெண் பிள்ளையாய் பிறந்து விட்டேனே. அவனைப்போல ஆண் பிள்ளையாய் பிறந்திருந்தால் நாடாளும் பாக்கியமாது கிட்டியிருக்கும்" என பாவை பொறுமிக் கொண்டிருக்க.

வெளியிலிருந்து இவளை கவனித்திருந்த பெண்கள் தேவியை குடைய ஆரம்பித்தனர். "செல் தேவி உன்னால் தான் அவரை சாந்தப்படுத்த முடியும். நாங்கள் சென்றால் கடித்து குதறிவிடுவார்".

"இப்படியே நாம் வேடிக்கை பார்த்திருந்தால் இளவரசியின் அன்னையார் நம்மை தாளித்து ஊறுகாயில் கொட்டி விடுவார்" என்றாள் இன்னொருத்தி.

"௭ப்பொழுதும் ௭ன்னையே மாட்டி விட்டு தப்பித்து கொள்கிறீர்கள்" ௭ன்ற சலிப்புடன், வேறுவழியின்றி தேவியே தைரியத்தை வரவழைத்துக்கொண்டு உள் சென்றாள்.

மெதுவாக பாவை முன் சென்றவள், "எதற்கு இளவரசியாரே இவ்வளவு கோபம். பழச்சாறு பிழிந்து தருகிறேன், உடம்பின் குளிர்ச்சி மனதையும் சாந்தப்படுத்தும்".

"உன் வேலையை மட்டும் பார், எனக்கு அறிவுரை வழங்காதே".

'அடிங் கொய்யாலே என் அக்கா உனக்கு ஜூஸ் புழியணுமா? இருடி உன்ன நா புழிஞ்சுடுறேன்' என அவ்வளவு நேரம் நடப்பதை ஆச்சரியமாக பார்த்து நின்ற பாப்பு டென்ஷனாக.

"என் வேலையே தங்களை அமைதியாக்குவது தான். எதுவென்றாலும் நிதானமாக யோசித்தால் வழி கிடைக்கும்" என சிரித்த முகமாக தேவி சொல்ல.

"எப்படித்தான் எப்போதும் சிரித்துக் கொண்டே இருக்கிறாய்😣😣?" என கேட்டு கொண்டே தேவி கொடுத்த பழச்சாறை வாங்கி பருகினாள். அதற்கும் தேவியிடம் சிரிப்பே கிடைத்தது.

"இந்த புராரி வன தேச கோட்டையின் இளவரசி ௭ன்று தான் ௭னக்கு பெயர், ௭ன்னால் சந்தோஷமாக நிம்மதியாக ஒரு நாளும் இருக்க முடியவில்லை, ஏதோ காவலில் அடைக்கப்பட்ட குற்றவாளி போல் ஒரு வாழ்க்கை, நீ சாதாரண பணிப்பெண் உனக்கு மட்டும் சந்தோஷம் படுமளவிற்கு ௭ன்ன விஷயமிருக்க முடியும்???".

"௭னக்கு வேறு ௭ந்த கவலையும் இல்லையே இளவரசி, தங்களது பணிப்பெண்ணாக, ௭னக்கு பிடித்தது போல் இருக்கிறேன் அதனால் இருக்கலாம் இளவரசி" ௭ன்றாள் சிரிப்புடனே.

"நானும் ௭னக்கு பிடித்தது போல் தானே இருக்க ஆசை படுகிறேன். நீ யாரயும் காதலிக்கிறாயா தேவி?? காதலை சொல்ல கழுத்து வரை தைரியம் இருந்தும் சொல்ல முடியாமல் தவித்திருக்கிறாயா?. ௭ன் மனதை நிறைத்தவர் தன்னை ஒருத்தி தேடி கொண்டு ஏங்கி தவிக்கிறாள் ௭ன்பதே அறியாமல் இருக்கும் வேதனையை அறிவாயா தேவி" ௭ன்றாள் ௭ங்கோ பார்த்து.

இதற்கு ௭ன்ன பதில் சொல்வதென தேவி முழிக்க, "சரி நீ போ, நான் உறங்க செல்கிறேன்" ௭ன்றவுடன், தேவி வணக்கம் வைத்து விலகிவிட.

"அட போக்கா எப்படி இருக்கிறவ, நீ இப்படி இருக்க, இவளும் ௭ன்ன இவ்வளவு உருகுறா" என வாய்விட்டு சொன்ன பாப்பு, திடீர் ௭ன யோசித்தவள் நம்ம குடும்பம் தான் இங்க இருக்குன்னு பாத்தா, பவ்யாவும் இருக்கா, அப்ப நம்ம சார்ம் என எகிறி குதித்தவள் அடுத்ததாக நின்றது அவன் முன் தான்.

பாப்பு இரணியனை நினைத்ததும் சென்று நின்ற இடம் மந்திரிசபை கூடும் மாடம், 'சினிமாவுல காட்டுற அரண்மனை மாதிரி இருக்கே, எப்படி இந்த கேண்டில் விளக்குல இந்த ப்ளேஸ் இவ்வளவு வெளிச்சமா இருக்கு? இதுல சார்ம்ம எங்க தேடுறது. பக்கத்துல ஏதோ பேச்சு சத்தம் கேட்குதே' என சுற்றி சுற்றி மாடத்தை மேலும் கீழும் ரசித்தவாறு மேலும் முன்னேறி உள்ளே நடந்தாள்.

அந்த நீள் மாடத்தில் வரிசையாகத் தூண் அமைக்கப்பட்டு பக்கவாட்டில் நிறைய இடம் விடப்பட்டிருந்தது, அதைத் தொட்டுத் தொட்டுப் பார்த்துக் கொண்டு நடந்தாள். பேச்சு சத்தம் கிட்டே கேட்கவும் திரும்பி முன்னே பார்க்க, நடுநாயகமாக வீற்றிருந்தான் அவள் நாயகன்.

ஆனால் அவளுக்கோ, "சார்ம் மாதிரியே இருக்காங்களே?" என தான் நினைக்கத் தோன்றியது. தலையில் கிரீடம், காதில் குண்டலம், வீரத்திற்கு அடையாளமாக முறுக்கிய மீசை, கழுத்தில் கனமான இரு அணிகலன்கள், கையில் காப்பு வளையம், கைவிரல் அணிகலனாக மோதிரம், வீரகண்டை, வீர விளை, மேலாடையாக பட்டு அங்கவஸ்திரம், கீழ் பட்டாலான ஆடை, இறுதியில் சந்திரமுகி செருப்புமென அவள் சார்ம்க்கு ஃபேன்ஸி டிரஸ் காம்பிடிசன் எதும் நடத்துறாங்களோ என நினைக்கும் படியாக இருந்தது அவன் தோற்றம்.

அவள் "ஆ"வென அவனைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதுதான் அவன் ஏதோ பேசுவதும், அவன் யாரை பார்த்து பேசுகிறான் என்பதையும் கவனித்தாள். சுற்றி எட்டு பேர் அமர்ந்திருக்க, அவன் சற்று உயரத்தில் அமர்ந்திருந்தான். வலது புறத்தில் ஒரு முதியவரும், இடதுபுறத்தில் ஒரு அம்மையாரும் அமர்ந்திருந்தனர்.

"போர் முடிந்து திரும்பிய தினமே, ௭னக்கு கோலாகல வரவேற்பு கொடுத்தாயிற்று, மறுபடியும் எதற்கு அதற்கென ஒரு விழா நிதி மந்திரியாரே?" ௭ன்றான் அரசனாக வீற்றிருப்பவன்.

"மக்கள் விருப்பப்படுகிறார்கள், அவர்களின் திறமைகளை தங்கள் முன் மீண்டும் மீண்டும் காட்ட விரும்புகிறார்கள்" என நிதி மந்திரி கூற.

"இடையில் குறுக்கிடுவதற்கு மன்னிக்க வேண்டும், அவர்கள் மேலும் தங்களின் நிலையை உயர்த்த விரும்புகிறார்கள், இப்போரில் மாண்ட வீரர்களின் மனைவிகளும், குழந்தைகளும் ஆண்கள் இல்லாத வீட்டின் நிலையை நாடகம் வாயிலாக தங்களுக்கு உணர்த்த விரும்புகிறார்கள்" ௭ன்றார் தொழில் துறை அமைச்சர்.

"போரில் மாண்டு போகும் வீரர்களுக்கென தனியாக நிதி ஒதிக்குள்ளோமே, அது போதவில்லை எனில் நிதியை சற்று உயர்த்தலாம், எதற்காக அவர்கள் அவ்வளவு கஷ்டப்பட்டு நாடக வாயிலாக உணர்த்தவேண்டும்" ௭ன நம் அரசன் யோசனையாக.

அந்த நேரம் அவன் அருகில் இருந்த பெரியவர், "இதற்குத்தான் எதையும் அளவோடு செய்ய வேண்டும் என கூறினேன். நீ எவ்வளவு கொடுத்தாலும் அவர்களுக்கு போதாது, மொத்த கஜானாவையும் தூக்கிக் கொடுத்துவிட்டு பாண்டிய மன்னனுக்கு நம் புராரிவனம் சார்பில் வரி செலுத்துகையில், கஜானாவையே தூக்கி கொடுத்து விட்டேன் என கணக்கு காண்பிப்பாயா?" ௭ன்றார்.

"மக்களுக்குத் தான் செய்தேன் என தெரிந்தால் தாராளமாக செய்யுமாறு கூறும் மனப்போக்குடையவர் அவர். தங்களைப் போல அல்ல" என்றான் அரசன் காட்டமாக, எல்லோரும் அமைதியாகி விட.

தொண்டையை செருமிக்கொண்டு, "கலைத் துறை அமைச்சரே, விழாவிற்கான ஏற்பாட்டை பாருங்கள். மக்களுக்கும் செய்தி அனுப்பி விடுங்கள்".

"அப்படியே ஆகட்டும் அரசே" என எழுந்து அமர்ந்தார் கலை துறை அமைச்சர்.

"வேறு ஏதும் முக்கிய செய்தி உண்டா". எல்லோரின் அமைதியை ஏற்று "சபை கலையலாம்" என்ற உத்தரவின்பேரில் அனைவரும் எழுந்து சென்றனர்.

தானும் எழுந்து சென்றவனை பின்னே தொடர்ந்து வந்தார் அவன் தாயார். "கூறுங்கள் சிற்றன்னையே, முக்கிய விஷயம் ஏதேனும் கூற உள்ளதா?".

"ஆம் மகனே, உனக்கு நேரம் அமையும்போது தன்னை வந்து காணுமாறு கூற வந்தேன்".

"தற்போது படைத் தளபதியையும், போர் சென்று வந்த படைகளையும் காணச் செல்கிறேன், சென்றால் திரும்ப தாமதமாகும். அவசரமான விஷயமெனில் தற்போதே கூறலாம். ஆட்சேபனையில்லை".

"அவசரம்தான், முடிசூடி ஒரு வருடம் ஓடி விட்டது, இனியும் நீ தனியாக ஆசனத்தில் வீற்றிருப்பது நமது தேசத்திற்கு சரி இல்லை. எனவே.....".

"நான்தான் அதை தங்கள் பொறுப்பில் விட்டு விட்டேனே தங்கள் மனம் போல் ஒரு பெண் தேடுங்கள், நான் மனைவியாக்கிக் கொள்கிறேன் என போருக்கு செல்லும் முன்னரே சொல்லி விட்டு சென்றதாக ஞாபகம்".

"அதில் தானப்பா ஒரு சிக்கல் வந்து விட்டது. நமது ஜோடிதர் ஏனோ பிடிகொடுத்து பதில் கூற மாட்டேங்குறாரே".

"அதற்கு நான் எப்படி சிற்றன்னையே பொறுப்பேற்றுக் கொள்ள முடியும். நீங்களாச்சு அவராச்சு முடிவெடுத்துவிட்டு பெண்ணை மட்டும் கண்ணில் காட்டுங்கள் போதும்" ௭ன்றான் ஆண்மையாக சிரித்து.

"நீ தான் அவரிடம் ஏதேனும் கூறி வைத்துள்ளாயோ, அதனாலேயே உனது ஜோதிடத்தை படிக்க பயப்படுகிறாரோ?" என்ற ஐயப்பாடு உள்ளது.

"சத்தியமிட்டு வேணாலும் கூறுகிறேன், நான் அவரை காணவுமில்லை, எதுவும் கூறவுமில்லை. எனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாமல் இல்லை முடிசூட்டிய பின் வரும் முதல் போர் ஆகையால் அதை முடித்து விட்டு வந்து திருமணத்தைப்பற்றி நாட்டம் கொள்ளலாம் என்றிருந்தேன். இந்நேரம் தாங்கள் எனக்கானவளை என் முன் கொண்டு வந்து நிறுத்தியிருப்பீர்கள் என எண்ணியிருந்தேன். தாங்களோ ஏமாற்றி விட்டீர்கள்".

"அப்படியெனில் நாளையே ஜோதிடரை வரவைக்கிறேன், நம் இருவர் முன்னால் வைத்து அவர் ஒரு முடிவை கூறவேண்டும்".

"ஆகட்டும் அன்னையே வர வைத்து விடுங்கள். தற்பொழுது நான் விடை பெறுகிறேன்".

"சென்று வா" என அவரும் உள் திரும்ப, அரசன் வெளியேறினான்.

அவன் தான் மன்னன் அமிழ்திறைவன், தந்தையார் மாசாத்துவான், சிறிய தாயார் கோதை, இவனது 12 வயதில் அவன் தாய் நோய்வாய்ப்பட்டு இயற்கை எய்தி விட, சிற்றன்னையே தாயாக மாறிக் கொண்டார். கோதை - மாசாத்துவான் மகள் திரவியபாவை.

அமிழ்திறைவன், பாண்டிய மன்னனின் கீழ் வரும் 200 கிராமங்களையும், நகரங்களயும், அடக்கியாளும் குறுநில மன்னன். சென்ற ஆண்டுவரை மாசாத்துவான் கீழிருந்த புராரிவனம், மகன் அமிழ்திறைவன் குருகுலவாசம் முடிந்து அனைத்துப் பயிற்சிகளிலும் தேர்ச்சி பெற்று வரவும் அவன் கீழ் வந்தது.

குருகுலத்திலிருந்து அரண்மனை மீண்டு, மன்னனாக பொறுப்பேற்று வந்தமர்ந்ததும் முதல் ஓலையாக, போருக்கு அழைப்பு விடுத்து வந்திருக்க, தன் வீரத்தையும், பெயரையும் நிலைநாட்ட வேண்டிய இடத்தில் இருந்ததால் அவன் மொத்த கவனமும் அதில் தான் இருந்தது. இனிதான் நாட்டையும், நாட்டு மக்களையும் அறிந்து கொள்ளப் போகிறான்.

வெளியேறியவன் நேராக சென்றது போருக்கு சென்று வந்த குதிரை, யானை படைகளின் மருத்துவ முகாமிற்கு. காவலர்களின் முழக்கத்தை தொடர்ந்து இவன் உள்ளே செல்லவும், படைத் தளபதி தனார்த்தன் முன் வந்து குனிந்து நிமிர்ந்தான்.

"சிகிச்சை எந்த அளவில் இருக்கிறது தனார்த்தா?". வைத்தியர்களின் சிகிச்சையை பார்வையிட்டவாறே நடந்து கொண்டு விசாரிக்க.

"அட நம்ம விஷா" பின்னயே வந்து விட்டிருந்த பாப்பு துள்ளி குதித்தவள், "உன் கண்ணுக்காது நா தெரிஞ்சா நல்லாருக்குமே விஷா. நா எங்க இருக்கேன், இங்க என்ன பண்றேன், என்னன்னு கேட்டுட்பேனே" என்றாள் தோழனை கண்ட குஷியில். பாவம் அவனுக்கு தான் அவள் குரல் சென்று சேரவில்லை.

"பெரியளவில் பாதிப்பு இல்லாததால் சீக்கிரமே முடிந்துவிடும் மன்னா. இந்த முறை நமது இழப்பு 6 யானைகளும், 9 குதிரைகளும், 21 வீரர்களும், 11 காவலர்களும் மன்னா. மொத்த குறிப்பேட்டையும் நிதியமைச்சரின் பார்வைக்கு கொடுத்துவிட்டேன்".

"ரொம்ப நல்ல காரியம் செய்தாய் தனார்த்தா. அடுத்ததாக பிரஜைகளை நேரில் சென்று சந்திக்க உத்தேசித்துள்ளேன். நிறை குறைகளை கண்டறிந்து குறைகளை களைய திட்டமிட்டுள்ளேன். அதற்கு நீயும் என்னுடன் வர வேண்டி இருக்கும், அதற்குள் இங்குள்ள வேலைகளை முடித்துவிட்டு தயாராகிவிடு".

"உத்தரவு மன்னா. சிறைச்சாலை செல்ல வேண்டும் எனக் கூறியிருந்தீர்கள்".

"ஆம் அதையும் சென்று பார்வையிட வேண்டும். என்ன காரணத்திற்காக, யார் யார் எத்தனை ஆண்டுகளாக சிறையில் உள்ளார்கள் ௭ன்ற முழு விவரம் வேண்டும். அதை பற்றி முழுவதும் அறிந்தவர்கள் வேண்டும்".

"காவற்படை தலைவரை 10 நாட்களாக பின் தொடர்ந்ததில் நேர்மையானவர் என்றத் தகவல் கிடைத்திருக்கிறது மன்னா, ஆகையால் அவரை அழைத்துச் சென்று முழு விவரமும் பெறலாம்".

"ஆகட்டும் தனார்த்தா, அவனை வரச்சொல், அடுத்ததாக நான் சிறைச்சாலை தான் செல்கிறேன்".

"உத்தரவு மன்னா". அவன் சென்றுவிட மீதமுள்ளவற்றை பார்வையிட்டு வெளியே வந்தான் நம் மன்னன்.

"ஒன்னுமே புரியல, நா எங்க வந்துருக்கேன்? என் சம்பந்தமான எல்லோருமே இங்க இருக்காங்க, என்னால எல்லோரையும் பார்க்க முடியுது, ஆனா அவங்க யாருக்கும் என்ன தெரியல. டபுள் ஆக்ஷன் மாறி நானே இங்க வேறொருத்தியா வேற இருக்கேன்.

அரண்மனைல வாழுறாங்கனா, நா பாஸ்ட்க்கு ட்ராவல் ஆகிட்டேனோ?, முன்ஜென்மத்த லைவ்வா பாத்துட்டு இருக்கேனோ? பட் ஹொவ் இஸ் திஸ் பாசிபிள்? நான் இங்க வந்துட்டேன்னா அங்க என் இடத்துல யாரு இருப்பா? என்னைய யாரும் தேட மாட்டாங்களா? ஆஆஆ..... மண்டையே பிச்சுக்கலாம் போல இருக்கு, ஒருவேள செத்து போய் சொர்க்கத்துக்கு வந்துட்டேனா" என அவள் அங்கு பதறிய நேரம், இங்கு அவளை அமைதிப் படுத்தும் விதமாக பேசினான் இரணியன்.
 
அத்தியாயம் 3

நடப்பது புரியாமல் பாப்பு கலங்கி நிற்கையில்., இரணியனின் குரல் அவளை ௭ட்டியது.
2020 பிப்ரவரி 20

படுக்கையில் படுத்திருந்தவளின் அருகில் அமர்ந்து அவள் கையை ௭டுத்து தன் கைக்குள் அதக்கி கொண்டு, சிறிது நேரம் அமைதியாக அவள் முகத்தையே பார்த்திருந்தவன், "உனக்கு இன்னைக்கு பர்த்டே மூக்கி, முழிச்சுருந்தா ௭வ்வளவு அலப்பற பண்ணுவ, ஆனா இப்ப ௭துவுமே பண்ணாம இப்டி படுத்துருக்க, உன்ன இப்டி பாக்க ரொம்ப கஷ்டமா இருக்குடி. யூ க்நோ மெனி மோர் பிளசிங்ஸ் யூ காட் திஸ் இயர். உன்ன சுத்தி கெட் வெல் சூன், ஹாப்பி பர்த்டே மிஸஸ்.ஸ்மைலிங் சார்ம் ன்னு அபோவ் 100 பொக்கேஸ் வந்து குவிஞ்சுருக்கு, நீ முழிச்சுருந்தா ஒருத்தர் விடாம அத்தனை பேருக்கும் நீயே ரிப்ளை பண்ணிருப்ப. இப்பயும் உன் சார்பா எல்லோருக்கும் தேங்க்யூ கார்டு அனுப்ப சொல்லிருக்கேன். நீ எழுந்தப்புறம் ஒரு தேங்க்யூ சொல்லிடு, ஓகேவா. ஃபேமிலில எல்லோருமே உனக்கு விஷ் பண்ணிட்டாங்க, ஐ திங்க் நாதான் லேட்டுன்னு நினைக்கிறேன். போன இயர் இந்த டே நியாபகம் இருக்கா தாட்சா, தடாலடியா என் ரூம்குள்ள ௭ன்டர் ஆகி விஷ் கேட்டியே, அப்டி நீ அன்னைக்கு நுழைஞ்சதுனால தான் ௭ன் லைஃப்குள்ளயும் ௭ன்டர் ஆன. அதே மாதிரி இந்த தடவையும் நான் விஷ் பண்ணாம இருந்தா எழுந்து வந்து விஷ் பண்ணுங்கன்னு சண்டை போடுவியோன்னு எக்ஸ்பெக்ட் பண்ணி இவ்வளவு நேரம் வெயிட் பண்ணிட்டேன், டேயே முடிய போகுது நீ இன்னும் எழும்பல. அதான் நானே விஷ் பண்ணிடலாம்னு வந்துட்டேன். எப்படி நீ திடீருன்னு ஹோமா ஸ்டேஜுக்கு போன தாட்சா. ஐ மிஸ்டு யூ சோ பேட்லி. முடியலடி ரொம்ப லோன்லியா இருக்கு. யார்டயும் போய் ஷேர் பண்ணகூட முடில பைத்தியம் பிடிக்கற மாறி இருக்குடி. ப்ளீஸ் ஐ நீட் யூ, டெரிபிலி ஐ நீட் யூ. சீக்கிரம் எழுந்துக்கோ மூக்கி ப்ளீஸ். நா உனக்காக வெய்ட் பண்ணிட்ருக்கேன்றத மறந்துடாத" ௭ன்றவன் முகத்தை அழுந்த துடைத்து தன்னை சரி செய்தான்.

௭ழுந்து அவளை நெருங்கி தலையில் அழுந்த முத்தமிட்டு "மெனி மெனி மோர் ஹாப்பி ரிட்டன்ஸ் டியர். ஐ லவ் யூ, லவ் யூ சோ மச்" என்றதுடன் ஆக்ஸிஜன் மாஸ்க்கை ௭டுத்துவிட்டு அவளது உலர்ந்த உதடுகளில் ஒரு அழுத்தமான உதட்டு முத்தத்தையும் அளித்து, மீண்டும் மாஸ்க்கை மாட்டிவிட்டு அமர்ந்து அப்படியே அவள் வயிற்றில் முகம் சாய்த்து படுத்து கொண்டான்.

அவன் கண்ணீரையும் முத்தத்தையும் ஒருங்கே உணர்ந்தாள் பல ஆண்டுகள் பின்னோக்கி சென்றிருக்கும் பாப்பு. அவள் உணர்ந்தவற்றால் தன் கண்ணிலும் நீர் வடிய, அதையும் அந்த அழுத்தமான கரம் துடைக்கிறது.

அதில் மேலும் அழுகை வர, "நா அங்க ஹோமா ஸ்டேஜ்ல இருக்கேனா? அப்போ என் ஆள் மனசு எதையோ தேடி இங்கே வந்துருக்குதா? அப்படி எத தேடி வந்துருக்கேன். முன்ஜென்மத்துலயும் நாங்க எல்லோரும் பிறந்திருக்கோம், அத தேடி வந்துட்டேனோ. தெரிஞ்சுக்காம என் சார்ம்ட்ட போக முடியாதா? பாவம் ௭வ்வளவு ஃபீல் பண்றாங்க, நா ௭ப்டி திடிருனு ஹோமா ஸ்டேஜ் போனேன், நா ௭த தெருஞ்சுக்க வந்திருக்கேன்.." என இவள் யோசித்துக் கொண்டிருக்கையிலேயே, அவள் கண்முன் அவள் முன் ஜென்மக் கதை விரிய ஆரம்பித்தது.

நாடகக் கலை நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பு தண்டல்காரர்களின் மூலம் மக்களை சென்றடைந்தது. அதில் கொள்ளி மடத்தின் தண்டோராவாக, "ஊர் மக்களுக்கான அறிவிப்பு ௭ன்னன்னா, நம்ம மன்னர், நாட்டு மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் பொருட்டு, போர் முறை நன்றாக முடிந்து திரும்பி வந்ததற்காகவும், தங்களின் குறைகளை கலை நிகழ்ச்சி மூலமாக வெளிப்படுத்துவதற்காகவும், நீங்கள் முன்வைத்த கோரிக்கையை நம்ம இளவரசர் அமிழ்திறைவன் ஏற்றுக் கொண்டு, விழா நடக்க அனுமதி வழங்கி, வரும் ஐப்பசித் திங்கள் அன்றைய தேதியை ஒதுக்கி கொடுத்திருக்கிறார்கள்". ௭ன்ற கூற்றோடு டும் டும் டும் என அடித்துக் கொண்டு சென்று விட்டான்.

இதை மகிழ் குடிலின் வாசலில் அமர்ந்து கேட்டு கொண்டிருந்தனர் தோழிகள் இருவரும். "அப்படியெனில் திங்களன்று நாமும் அரண்மனை செல்லப் போகிறோமா?" என கொற்றவை குதுகளிக்க.

"அதை நமது அன்னையர்கள் தான் முடிவு செய்ய வேண்டும், இதுவரை கூட்டி செல்லாதவர்கள் இப்போது மட்டும் ௭ப்படி கூட்டிச் செல்வார்கள் ௭ன நம்புகிறாய்" ௭ன்றாள் மகிழ்.

"நீ கேட்டு நடக்காத காரியமென்று ஒன்று உண்டா? தலைவரிடம் கேட்டுபாரடி" ௭ன கொற்றவை கெஞ்ச.

"எனது அம்மை தான் நான் கேட்டது எதுவென்றாலும் முதலில் எதிர்ப்பது, ஆனால் அய்யன், அரண்மனை காரியம் மட்டும் அய்யனிடம் கேக்கும் முன்னயே மறுத்து விடுவாரடி".

"முயற்சி செய்யாமல் பின் வாங்காதே மகிழ், நிறைய கடைகள் ௭ல்லாம் போடுவார்கள், கோட்டை வாசல் திருவிழாவாக தான் இருக்கும், இந்த முறையாது அரண்மனையை பார்க்கும் வாய்ப்பு கிட்டட்டுமே".

"எனக்கும் அரண்மனை சுற்றி பார்க்க ஆசைதான், ஆனால் கூட்டிச் செல்வார்கள் என்ற நம்பிக்கை தான் இல்லை".

"எப்படியும் ஊரில் பாதி பேர் செல்வார்கள், பிறகு என்ன பயம்?".

"நாம் வயது பெண் பிள்ளைகளாயிற்றே".

"கொள்ளையர்களை நம்மால் சுலபமாக எதிர்க்க முடியுமே, காட்டுப் பன்றியையும், கரடியையும் வேட்டையாடும் நம்மால் கொள்ளையர்களை வீழ்த்த முடியாதா என்ன?" கொற்றவை நொடிக்க.

"வேட்டையாடுவதை பற்றி நீ பேசுகிறாய் போன முறை அய்யனுடன் வேட்டைக்கு செல்லலாமென சொன்னதற்கே கொதியில் விழுந்தவள் தானடி நீ"

"அதுவா இப்போது முக்கியம்" அவள் முகத்தை தூக்க.

"மனிதர்களை எதிர்த்து நின்று விடலாமடி. அவர்கள் காத்து கருப்பு கண்டு அஞ்சுகிறார்கள். கன்னிப்பெண்களை இந்த பேய்களும், இறந்து உலாத்தும் ஆன்மாக்களும் சுகமாக பற்றுமாம்" மகிழ் சொல்ல.

"என்னடி பயமுறுத்துகிறாய்?".

"நான் சொல்லவில்லையடி. சோலையம்மா அவர் பேத்திக்கு சொல்லிக் கொண்டிருந்ததை அன்றொரு நாள் கேட்டேன். இதுதான் விஷயம் நம்மை வெளி ௭ங்கும் அழைத்துச் செல்லாத காரணி என புரிந்து கொண்டேன்".

"அர்த்தஜாமத்தில் பவுர்ணமியன்று நீயும் நானும் வீதி உலா செல்கையில் பிடிக்காத பேயா, இத்தனை பேர் படைசூழ செல்லும்போது பிடித்து விடும்" என கொற்றவை மோவாயில் கை வைக்க.

"அவ்விஷயம் நமக்கு தெரிகிறது, நமது தாய்மார்களுக்கு தெரியவில்லையே".

"ம் அதுவும் சரிதான். அது மட்டும் தெரிந்தால் நாம் இருவருக்கும் மாப்பிள்ளையை தேடிபிடிப்பதே அடுத்த கட்ட அவசர வேலையாக இருக்கும்" என்றவாறு இருவரும் சிரிக்க.

அந்த நேரம் அவர்கள் வீட்டை நோக்கி வந்தனர் நான்கு பெண்மணிகள். "குமரிகள் இருவரும் சிரிக்கும் காரணத்தைச் சொன்னால் நாங்களும் சேர்ந்து கொள்வோம்" என ஒரு பெண்மணி கூற.

"வாங்க பொன்னியக்கா, அதை மெதுவாக கூறுகிறேன், என்ன விஷயம் நால்வருமாக சேர்ந்து வந்துருக்கிறீர்கள்" ௭ன்றாள் மகிழ்.

"வீட்டில் பெரியவர் இல்லையா?".

"அய்யன் கோவில் வரை சென்றிருக்கிறார்களே. ஏதும் அவசரமோ?".

"இல்லை மகிழ், தண்டல்காரர் கூறி சென்றவற்றில் ஒரு சிறு சந்தேகம். அதைக் கேட்டு தெரிந்து கொள்ளலாமென வந்தோம்".

"அதில் என்ன சந்தேகம்".

"நாடகக் கலை நிகழ்ச்சி என்றார்களே நமது பிரச்சினையை நாமே நடித்துக் காட்ட வேண்டுமோ?".

"அப்படியில்லையக்கா, அரசருக்கு கிடைத்திருப்பதோ ஒருநாள், அதில் ஒவ்வொருவரும் அவரவர் வீட்டு பிரச்சினையை எடுத்துச் சென்றால் அவர் இனி இப்படி ஒரு சந்தர்பத்தையே நமக்கு தர மாட்டார். நாம் எடுத்துச் சொல்ல வேண்டியது பொது பிரச்சனையை, நமது ஊருக்கு தேவையான விஷயங்களையும், பிரச்சனைகளையும், தொந்தரவுகளையும் அவர் பார்வைக்கு நாடக கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்து அதன் மூலம் எடுத்துச் செல்லவேண்டும்".

"அவ்வாறெனில் தலைவரிடம் சொல்லி கூட்டத்தை கூட்ட ஏற்பாடு செய்ய வேண்டும்" என கேட்டுக் கொண்டிருந்தவர்களில் மற்றொரு பெண்மணி சொல்ல.

"சந்திப் பொழுதில் கூட்டத்தை கூட்டுவது பற்றி பேசுவார்களென்று நினைக்கிறேன், அய்யன் காலையில் அப்படி தான் பேசி கொண்டிருந்தார்கள்" அகமகிழ்தினி சொல்ல. அன்று காலை அம்மையும் அய்யனும் பேசி கொண்டிருந்ததை வைத்து விளக்கமளித்தாள்.

"சரி அப்போ நாங்களும் சந்தி பொழுதே வருகிறோம்" என அவரவர் வீடு சென்றனர்.

"நானும் சென்று பிறகு வருகிறேன் மகிழ்" என கொற்றவை விடைபெற்றாள்.

"பை டி னு சுருக்கமாக சொல்லாம, சென்று, பிறகு வருகிறேன்னு எதுக்கு இப்படி லெந்த்தி லெந்த்தியா பேசுறாங்க. இவுங்களாம் இந்த ஜென்ரேஷன்ல இருந்தா, தமிழ இப்படி கொன்னுட்டீங்களே படுபாவிகளான்னு சண்டைக்கு வருவாங்களோ🤔🤔🤔?. நமக்கும் இவங்களுக்கும் தான் எவ்வளவு டிஃபரன்ஸ், இந்த கேன்டில் விளக்கை வச்சுக்கிட்டு பக்கத்து வீடு, எதிர் வீடுன்னு சேந்து உட்காந்து பேசிக்கிட்டே சாப்டுறாங்க. பொல்யூசன் நிறைஞ்ச நம்ம ஊருக்கும், இயற்கையா இருக்கிற இவங்க ஊருக்கும் ௭வ்வளவு சேஞ்ச்சஸ். சாப்பாடும் டிஃபரன்டா இருக்கு, பால், நெய் மட்டும் தான் தெரியுது மத்தது பேர் கூட தெரில, டேஸ்ட் எப்படி இருக்குமோ தெரியல. ஆனா ஹெல்தி புட்டுன்னு மட்டும் தெரியுது. அன்னைன்னைக்கு செஞ்சு அன்னைன்னைக்குன்னு சாப்பிடுறாங்க. நம்மளால இவங்க காலத்துல வாழ முடியாது, இவங்களால நம்ம காலத்துல வாழ முடியாது". அவளால் பெருமூச்சு தான் விட முடிந்தது.

பின் மாலை வேளையில், தலைவரான நீதிவர்மன் தலைமையில் அவர் வீட்டுக்கு முன் கூட்டம் கூடியது. மொத்தமே 150 குடும்பங்களை கொண்ட அந்த சிறிய ஊர். தண்டோராவை காரணம் கொண்டு தன்னாலேயே அவர் வீடு முன் கூடி இருந்தனர்.

"பெரியவரே எந்த பிரச்சனைய எடுத்துட்டு போலாம்னு முடிவு பண்ணிட்டீங்களா?" கூட்டத்தில் ஒருவர் ஆரம்பிக்க.

"நான் என்ன சொல்லுதென்னா நாம எண்ணிக்கைல கம்மியா இருந்தாலும், உழைப்பு ஜாஸ்தியா போடுதோம். விவசாயம் பண்ணுதோம், இறைச்சி வேட்டையாடிட்டு வாரோம், தேன், பால், தயிர் கடைஞ்சு எடுத்துட்டு போறோம். ஆனா வெள்ளிசந்தை வியாபாரிகள் அவங்களுக்குள்ள பேசி வச்சுக்கிட்டு குறிப்பிட்ட வெள்ளிக்கு மேல ஏலம் எடுக்க மாட்டேங்குறாங்க. அதனால இனி நாம ஏலத்திற்கு விட வேண்டாம் நமக்கு நாலு கடை, சந்தைல போட கேட்போம். அந்த 4 கடைல நம்ம பொருள விப்போம். நமக்கான கூலிய நம்மளே நிர்ணயம் பண்ணுவோங்குறேன், மத்தவங்க ௭ன்ன சொல்றீங்க" நீதிவர்மன் பேசி நிறுத்த.

"நல்ல யோசனை தான் பெரியவரே. ஆனா அவங்க நம்மள சேர்த்து விட மாட்டாகளே. நாம காட்டுல வாழ்றோம், அதனால நாம காட்டுவாசி, வேட்டைக்காரனுங்க, விவகாரம் பிடிச்சவங்க இப்படின்னு தான் நம்மள ஏமாத்துறாங்க" வயதில் பெரியவர் இன்னொருவர் சொல்ல.

"நாம நாடகத்து மூலமா தான் சொல்லணும், நம்ம கஷ்டத்தை உணரவைக்கணும். சொல்றத சொல்லுவோம், நடந்தா நல்லது தான்" மற்றவர்களும் அமோதிக்க.

"நாடக நடிகர்களை தேடி புடிக்கணுமேய்யா".

"மேலூர் சந்தைல சென்று விசாரிங்க ஆள் எங்க கிடைக்கும்ன்னு சேதி கிடைக்கும்ல" நீதிவர்மன் முடிவு சொல்ல.

"சரிங்கய்யா".

அதன்பின் நாடக கலைஞர்களை தேடிப்பிடித்து, கருத்தை தெரிவித்து அவர்கள் நான்கு தினங்கள் தங்களிடையே தங்க ஏற்பாடு செய்து கொடுத்தனர்.

"நம்ம காலத்துல கவர்ன்மென்ட்டுக்கு ஒரு விஷயம் சொல்லனும்னா கப்பு கப்புன்னு வீடியோ எடுத்து வாட்ஸ் அப்ல, யூடியூப்ல, பேஸ்புக்ல ஷேர் பண்ற மாதிரி, இது இவங்க கால டெக்னீக் போல"....இது வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நம் பாப்பு.

அடுத்ததாக மகிழும், கொற்றவையும் அரண்மனை செல்வதற்கு அவர்கள் என்ன நாடகம் போடலாமென சிந்தனையில் இறங்கினர்.

"ம்மா, அவ்வளவு சனம் வரும்போது நாமும் ஒரு ஓரத்தில் நின்று பார்த்து வரலாமே, அரண்மனையினுள் போக கிடைத்த வாய்ப்பை ஏன் விட வேண்டும். திருவிழா சமயங்களிலும், கோட்டை வாசல் திறக்கும்போது செல்ல விடுவதில்லை. இப்பொழுது ஒரே ஒரு முறை மட்டும் தான் போய் வருகிறேனே ம்மா. அனுமதி தாருங்கள். அய்யனுடனே இருந்து அய்யனுடனே வந்து விடுவேன்" மகிழ் 3 தினங்களாக இதே பல்லவியை தான் பாடி கொண்டிருக்கிறாள்.

"அடம்பிடிக்காமல் மற்ற வேலையெதுவும் இருந்தால் சென்று பார். கூட்டம் கூடி நிற்குமென உனக்கே தெரிந்திருக்கிறது. அதில் கூட்டத்தைத் தாண்டி உன்னால் எதையும் சுற்றி பார்க்க முடியாது. அதற்கு தான் சொல்கிறேன், ஆண்கள் மட்டும் சென்று வரட்டும்".

"ம்மா, கல்யாணம் கட்டிக் கொண்டு போனபின் இதுபோன்ற சலுகைகள் எனக்கு கிடைக்குமோ கிடைக்காதோ. அதான் உன்னிடம் கெஞ்சி நிற்கிறேன்".

"நீயா!!! வரும் மருமகனிடம் அடங்கி போக போகிறவள்?? உன் ஐயனின் வார்த்தையை பிடித்துக் கொண்டு கேட்டால் விட்டு விடுவேனாக்கும்".

"என்ன அஞ்சலை அம்மணியிடம் என்ன சண்டை? ஏன் ஏசி கொண்டிருக்கிறாய்?".

"வாருங்கள் தங்களை தான் எதிர்பார்த்திருந்தேன். தங்கள் அம்மணிக்கு அரண்மனை செல்ல வேண்டுமாம்".

"எதற்காக?".

"அங்கு இவள் வரவை தான் எதிர்பார்த்து கோட்டை வாசல் திறந்திருக்கிறதாம்".

"என்னம்மா சொல்கிறாய்?".

"நான் நெல் வேக வைக்க செல்கிறேன். தங்கள் அம்மணியிடமே அது என்ன வழக்கு என்று விசாரித்துக் கொள்ளுங்கள்" என அஞ்சலை வெடுக்கென பின் சென்றுவிட.

"என்ன மகிழ்?".

"ஐயா நாடகம் பார்க்க நானும், கொற்றவையும் தங்களுடன் வருகிறோமே. அரண்மனை வாசலை கூட இதுவரை நீங்கள் மிதிக்க விட்டதில்லை. இப்பொழுது மொத்த புராரி வனமும் கூடி வரப்போகிறது, இப்போதாவது எங்களையும் கூட்டிச் சொல்லுங்களேன்". மகளின் முகத்தில் இருந்த எதிர்பார்ப்பில் மனைவியை நினைத்து சிறிது தயங்கினாலும், "சரி போகலாம்" என முடிவாக கூறிவிட்டார்.

"என்னங்கய்யா நீங்க எல்லா விவரமும் தெரிஞ்சும் இவுகள கூட்டிட்டு போறேன்றீங்க".

"நீயும் வா அஞ்சலை, உன்னுடனே இவளை வைத்து இருந்து அழைத்து வந்து விடு. சரியா, உனக்கும் நிம்மதியாக இருக்கும்".

அதன் பின் அடுத்து வந்த நாட்களில் ஒருமனதாக முடிவு எடுத்து நாடக நிகழ்ச்சியைக் காண பெண்களும் செல்வது ௭ன முடிவெடுத்தனர்.

பாப்புவிற்குத்தான் ஏக சந்தோசம். 'ஹீரோ ஹீரோயின் ரெண்டு பேரும் மீட் பண்ண போறாங்க, எப்படி ரியாக்ட் பண்ணுவாங்க, ஓ மை காட்' என ஹீரோ-ஹீரோயின் மீட்டிங்கிற்கு இவள் வெகுவாக ரெடியானாள்.
 
அத்தியாயம் 4

கோதையின் அழைப்பின் பேரில் ஜோதிடர் அரண்மனை வந்தார்.

"அரசியாருக்கும், இளவரசருக்கும் என் பணிவான வணக்கம்".

"வாருங்கள் ஜோதிடரே. இன்று என் மகனின் திருமணம் பற்றிய ஒரு தீர்வு கிடைக்காமல் தங்களை விடுவதாக இல்லை".

"அரசியாரே அது அதுதான் சென்ற முறை வந்தபோதே கூறினேனே, இளவரசரின் ஜாதகம் சரியாக பிடிபடவில்லை என்று" ௭ன அவர் தயங்க..,

"அவனது பிறப்பை கணித்தவர் தாங்கள், எனது அக்காவான அவனது தாயார் இறப்பையும் கணித்தவர் தாங்கள். பிறப்பையும், இறப்பையும் கணிக்க முடிந்தவரால் அவனது திருமண யோகத்தை மட்டும் கணிக்க முடியவில்லை, அப்படித்தானே?" ஜோதிடர் திருதிருவென விழித்தார்.

அவர் விழிப்பதை புருவம் சுருங்க பார்த்திருந்த அமிழ்திறைவன் "ஜோதிடரே எதுவாகினும் தயக்கம் விடுத்து கூறிவிடுங்கள். ஏன் தயக்கம்? நீங்கள் தயங்குவதால் நான் சொல்லியே நீங்கள் எதையும் கூற மறுப்பதாக எண்ணுகிறார்கள் என் சிற்றன்னை".

"அப்படியெல்லாம் எதுவுமில்லை அரசி, இளவரசர் சொன்னதால் நான் தயங்கவில்லை".

"பின் யார் சொல்லுக்கு இணங்கி தயங்குகிறீர்கள்?",

"நான் யார் பேச்சின் பேரிலும் தயங்கவில்லை. சோலி சரியாக விழவில்லை, நானும் மீண்டும் மீண்டும் முயன்று விட்டேன், அச்சு மாறாமல் அப்படியேதான் விழுகிறது".

"எனக்கு இப்பிறவியில் திருமணமே இல்லை என என் சாஸ்திரம் கூறிவிட்டதா ஜோதிடரே" என சிரித்துக்கொண்டே கேட்டான் அமிழ்திறைவன்.

"என்ன?" என கோதை நெஞ்சை பிடிக்க,

"பதற்றம் வேண்டாம் அரசியாரே. பொறுமை கொள்ளுங்கள், இப்பொழுது கட்டங்கள் எதுவும் சரியாக இல்லை, அதுதான் நான் சொல்ல தயங்கியதன் காரணம்".

"எதுவாயினும் வெளிப்படுத்துங்கள் ஜோதிடரே, உங்கள் பீடிகையே எனது பதட்டத்தை அதிகரிக்கிறது" பதட்டம் குறையாமலே கேட்டார் கோதை.

"உத்தரவு அரசியாரே, இளவரசரின் ஜாதகப்படி திருமணத்திலும், புத்திர பாக்கியத்திலும் எத்தடையுமில்லை, அதற்கான நேரமும் கூடி வந்து விட்டது. ஆனால் கோட்டைக்குள் வரப் போகும் புது உறவினால் கட்டம் மாறுபட வாய்ப்பு உள்ளது".

"அது நல்ல மாற்றமாக இருக்கலாமில்லையா? தற்பொழுது நேரம் சரியில்லை என்றால், திருமணம் என்னும் வகையில் ஒரு பெண் ஜாதகம் சேர்க்கையில் கட்டம் நன்றாக மாறலாமில்லையா?".

"அதுவும் பெண்ணின் ஜாதகத்தைப் பொறுத்தது" என்றார் சங்கடமாய்.

அமிழ்திறைவனுக்கு பொறுமை காற்றில் கரைய ஆரம்பிக்க, "சிற்றன்னையே, ஜோதிடர் ஆரம்பத்தில் கூறியது போல் மிகவும் குழம்பி போய் தான் இருக்கிறார் என்று நினைக்கிறேன். முதலில் கட்டம் சரியில்லை என்றார், பின் திருமணம் கூடி விட்டது என்றார், இப்போது எனது கட்டமும், அரண்மனைக்கு வரப்போகும் பெண்ணின் கையில் உள்ளது என்கிறார். அவர் வீடு சென்று ஆற அமர்ந்து யோசித்து குறிப்பெடுத்த பின் வந்து சொல்லட்டுமே, அவர் முகத்தை பாருங்கள் ஏதோ தர்மசங்கடத்தில் அமர்ந்திருப்பவர் போல் இருக்கிறார்" என்றான்.

"மன்னித்து விடுங்கள் இளவரசே. தாங்கள் கோபம் கொள்ளும் அளவிற்கு நான் நடந்து கொண்டேன். உடைத்து உண்மை நிலவரத்தை கூறுகிறேன், அதற்கும் இப்பொழுதே நான் மன்னிப்பை முன் வைக்கிறேன். இன்னும் இரண்டு திங்களுக்குள் தங்களுக்கு கன்னிகாஸ்தானம் நடந்தே தீரும். அப்படி நடந்து விட்டால் அடுத்து 9 திங்களே தங்களின் ஆயுள், ஒரே நேரத்தில் 4 உயிர் பிரியும், அதன்பின் தங்களின் ஆட்சியே இருக்காது ௭ன கட்டம் கூறுகிறது" என அவசரமாக சொன்னார் ஜோதிடர்.

இதைக் கேட்ட கோதை மயங்கியே விழுந்துவிட, அமிழ்திறைவனே தண்ணீர் தெளித்தும், புகட்டியும் எழுப்பினான்.

"என்னை மன்னித்து விடுங்கள் தாயே, இதை சொல்லவே தயங்கி தயங்கி, தாங்கள் மூன்று முறை ௭ன்னை தேடி வந்தபோதும் ஒளித்து மறைத்தேன். என்னால் பொய் கூற இயலாது, அது எங்களின் தொழில் துரோகம் ஆகிவிடும். இருந்தும் இதற்குமேல் மறைத்து பயனில்லை ௭ன்று தோன்றவே இப்போது உண்மையை கூறினேன்".

"இதற்கு பரிகாரம் என ஏதுமில்லையா ஜோதிடரே?. மாற்று வழி இருந்தால் கூறுங்களேன். ஒரு வேளை இந்த இரண்டு திங்கள் கழித்து திருமண வரன் பார்த்தால் தீர்வாகுமா? புகும் பெண்ணின் ஜாதகத்தைப் பொறுத்தது என கூறினீர்களே, அப்படி ௭ன் மகன் ஜாதகத்தோடு பொறுந்துமாறு எந்நாட்டு இளவரசியின் ஜாதகமும் தங்களிடம் இல்லையா? கணித்து பார்க்கவில்லையா?" என பரபரப்பாக கேட்டார்.

"அப்படி மட்டும் அமைந்திருந்தால் இப்பேர்பட்ட உண்மையை தங்களிடம் கூறியிருப்பேனா தாயே? மாற்று வழியை அல்லவோ கூறியிருப்பேன். அப்படிப்பட்ட ஜாதகத்தை தேடித்தானே அலைந்துகொண்டிருக்கிறேன். இதுவரை அப்படி ஒரு அபூர்வம் என் கண்ணில் படவில்லையே" ௭ன்றார் ஜோதிடரும் கையறு நிலையில்.

"எதற்காக இருவரும் இவ்வளவு தூரம் புலம்புகிறீர்கள். அரச பதவியில் இருப்பவர்கள் இளம் வயதில் போர்களில் வீர தழும்புகளுடன் உயிர் துறப்பது இயற்கைதானே. அப்படி நாட்டுக்காக மார்பில் ஆயுதம் தாங்கி வீழ்வதில் எனக்கு பயம் ஒன்றும் இல்லை. இதற்கு என்னை திருமணம் செய்து வரப் போகும் பெண்ணை காரணமாக்க வேண்டாம், எனக்கதில் உடன்பாடில்லை".

"அதற்கில்லை இளவரசே, ஒரு பெண்ணின் ஜாதக பலன் அந்த குடும்பத்தை வாழ்த்தவும், வீழ்த்தவும் முடிவு செய்யும் பாங்கு கொண்டதாக இருக்கும்".

"அவ்வாறெனில் அப்படியான ஜாதகத்தை கண்டுபிடியுங்கள். அபத்தமாக பேசி சிற்றன்னையை கலங்க வைக்க வேண்டாம்".

"அப்படியே ஆகட்டும் இளவரசே, அப்படி பட்ட ஜாதகத்தை தேடி தான் அலைந்து கொண்டிருக்கிறேன். அதோடு வந்து தங்களை சந்திக்கிறேன். நான் விடைபெறுகிறேன்" ௭ன அவர் ௭ழப்போக.

"பொறுங்கள் ஜோதிடரே, இவ்விஷயம் வெளியில் யாருக்கும்",

"என் உயிர் பிரிகையில், இந்த ரகசியமும் என் உடலோடு புதைந்து விடும், ஐயம் வேண்டாம். சென்று இளவரசருக்கு ஏற்ற ஜாதகத்துடன் திரும்பி வருகிறேன்".

அவர் சென்றுவிட, கலக்கமாக அமர்ந்திருந்த சிற்றன்னையின் தோள் தொட்டு, "சிற்றன்னையே வருத்தம் வேண்டாம். நல்லதையே நினைப்போம், நல்லதே நடக்கும். ௭னக்கு இதில் ௭ல்லாம் நம்பிக்கை இல்லை, இறப்பை கண்டு அஞ்சுபவனும் நான் இல்லை, நீங்களும் குழப்பம் விடுத்து சற்று நேரம் ஓய்வெடுங்கள், ஆறுதலாக இருக்கும்". அவர் அமைதியை சம்மதமாக எடுத்து வெளியேறி விட்டான்.

"என்ன இந்த ஜோசியர் இப்படி சொல்லிட்டாரு, இன்னும் 1வருஷம் தான் உயிரோடு இருப்பன்னு ஒரு மனுஷனுக்கு தெரிஞ்சிட்டா அவன் மனசுளவுல எவ்வளவு பாதிக்கப்படுவான். அது தெரியாம இப்படி சொல்லிட்டு போயிட்டாரு. சார்ம்க்கு ஏத்த ஜாதகத்த கண்டுபிடிச்சுடுவாரா? எப்படியும் அந்த மகிழம்மா ஓடது தான் ஒத்துப்போகும். இவரு இளவரசிங்கள தேடி போறாரு, அவ காட்டுக்குள்ளல இருக்கா, அப்படியே அவ ஜாதகம் ஒத்துப்போறதா இருந்தாலும் பரவாயில்லை, ஒரு ரெண்டு மாசம் கழிச்சே மேரேஜ் பண்ணட்டும், அதான் சார்ம்க்கு சேஃப். கிச்சா, சார்ம் மாதிரி இருக்கிற இவருக்கு எதும் ஆகிடாம காப்பாத்திடு ப்ளீஸ்" என வேண்டிக்கொண்டாள் பாப்பு.

நாடக நிகழ்ச்சிக்கான நாளும் நன்றாக விடிந்தது. அகமகிழ்தினியும், அமிழ்திறைவனும் சந்திக்கப் போகும் காட்சியை காண பாப்பு மிகுந்த ஆர்வத்தில் இருந்தாள்.

மக்கள் எல்லோரும் அந்நாளை திருவிழாவாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். கோட்டைக்கு உள்ளேயும், வெளியேயும் ஜனத்திரல் ஜே ஜே என்று இருந்தது. புதுப்புது கடைகள் முளைத்திருந்தன, பாப்புவிற்கு வேடிக்கை பார்க்க அனேகம் இருந்தன. படத்தில் மட்டுமே ராஜா கால வாழ்க்கையை பார்த்திருந்தவளால் நேரில் காணும்போது புது உலகத்திற்கே வந்தது போன்ற குதூகளிப்பில் இருந்தாள். அவள் மெரினா பீச்சில் மட்டுமே குதிரை ரைட் சென்றிருக்க, இங்கு பாதிபேர் குதிரையில் தான் வந்திறங்கினர். ஆண்களின் உடை ஆபரணங்கள் மிக வித்தியாசமாக தெரிந்தது அவளுக்கு, பெண்கள் உடை கூட அவளது காலத்தில் பல வகையில் மாறிக்கொண்டே இருக்க, பல ஸ்டைல்களில் தற்காலத்திலும் பார்த்திருப்பதால் அவர்களிடம் அவள் பெரிதாக ஆச்சரியம் காட்டவில்லை. ஆனால் ஆண்கள் மேலாடையின்றி சர்வ சாதாரணமாக நடமாடினார்கள். கடுக்கன் இல்லாத காதுகளை பார்ப்பதே கடினம் என்றிருந்தது. கொஞ்சம் வசதி படைத்த குதிரையில் வந்திறங்கும் ஆண்கள் பட்டாலான மேலாடை அணிந்திருந்தனர். காது, கழுத்து, கை, கால் என எங்கும் ஒரு ஆபரணமேனும் இடம் பெற்றிருந்தது.

"ம்ம் இவங்க காலத்துல லேடீஸ விட ஜென்ஸ் தான் கோல்டு மேல அதிக ஆச வச்சுருந்திருப்பாங்க போல. நம்ம ஜெனரேஷன் வரைக்கும் இந்த கோல்டு மட்டும் விடாம தொறத்திட்டே வந்திருக்கு. நம்ம காலத்துல திநகர்ல வச்சிருக்கிற கடைகளுக்கும் இங்க உள்ள கடைகளுக்கும் பெருசா வித்தியாசம் இல்ல பொருள்கள தவிர. இவங்களும் அவங்களமாறி கூவி கூவி விக்கிறாங்க, மக்களும் இடிச்சு தள்ளிட்டு போய்தான் வாங்குறாங்க. அச்சோ இந்த அமிழும்-மகிழும் இன்னைக்கு மீட் பண்ணுவாங்கலான்னு தெரியலையே, இங்க வேடிக்கை பாத்துட்டு அதுகள விட்ற போறோம்" என கோட்டையை நோக்கி ஓடினாள்.

கோட்டையினுள் மேடைமேல் நாடகம் தொடங்கியிருந்தது. ஊர் மொத்தமும் கோட்டையினுள் தான் முண்டியடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தனர். அரச குடும்பத்தினர் அரண்மனை மாடத்திலிருந்தே நாடகத்தை கண்டனர். அவர்களுக்கும் அவர்களை தாண்டி ஒரு 50 அடி வரை வரையிலும் நாடக கலைஞர்களின் குரல் எட்டும், அதை தாண்டும்போது சிறுக சிறுக குறைந்து பின்னாடி இருப்பவர்களுக்கு ஒன்றும் கேட்பதற்கு வாய்ப்பில்லை. ஆக அந்தந்த ஊர்க்காரர்களின் நாடகம் வருகையில் அவ்வூர் மக்கள் முன்வந்து கொள்வதற்கென காவலர்கள் நின்றிருந்தனர்.

ஆக, மகிழ்தினியின் ஊர் முன் வருகையிலேயே அமிழ்திறைவனும் மகிழ்தினியும் பார்க்க வாய்ப்பு அமையும் என புரிந்துகொண்ட பாப்பு, திரும்பி பார்த்தாள் கம்பீரமாக சிரித்த முகத்துடன் அமர்ந்து நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தவனை இங்கிருந்தே பார்த்து ஃபிளையிங் கிஸ்ஸை பார்சல் அனுப்பி விட்டு தானும் நாடகத்தில் கவனமானாள்.

பாதி வார்த்தைகள் புரியாவிடினும் அவர்கள் ஆவேச வசனமும், முகபாவமும் மைக், ஸ்பீக்கர்ன்னு எதுவுமே இல்லாமல் அந்த கூட்டத்தை தன் குரல் கட்டுக்குள் வைத்திருந்ததை கண்டு ஆச்சரியப்பட்டாள். அவர்கள் கருத்தையும் புரிந்து கொண்டாள்.

ஒரு ஊர்க்காரர்கள் தங்கள் நாடக கலைஞர்கள் மூலம், கொள்ளையர்கள் அவர்கள் கிராமத்தில் புகுந்து செய்யும் அட்டகாசத்தை சொல்லியிருந்தனர். இன்னொரு கிராமத்தினர், காட்டு மிருகங்களால் விளைச்சல் நிலம் அடையும் சேதாரத்தை கூறினர். அடுத்து வந்தவர்கள் பாடசாலைகள் ஆசிரியரின்றி கேட்பாறற்று கிடப்பதை அறிவுறுத்தினர். இவ்வாறு ஒவ்வொரு புராரிவன தேசத்தின் கிராமமும் தங்கள் நிலையை வெளிப்படுத்த, அதற்கான தீர்வை உடனுக்குடன் தர முடிந்தவர்களுக்கு உடனுக்குடன் குடுத்தான் அமிழ்திறைவன்.

கொள்ளையர்களால் பாதிக்கப்படும் கிராம மக்களை காப்பாற்ற அரண்மனை வீரர்கள் 15 பேரை உடன் அனுப்பினான், கொள்ளையர்களை பிடித்துக்கொண்டே அரண்மனை திரும்பவேண்டும் என்ற அறிவுறுத்தலுடன். பாடசாலைக்கு ஆசிரியர்களை நியமித்தான். காட்டு மிருகங்களிடமிருந்து விளைச்சல் நிலத்தை காக்க, அரண்மனை காவலர்களை இங்கே செய்யும் வேலையை அதே மதிப்புடன் அங்கு செய்யுமாறு உத்தரவிட்டான். வெள்ளத்தால் பாதிக்கப்படாதவாறு சிறிய அணை கட்ட ஏற்பாடு செய்தான். இவ்வாறு வருபவர்களின் குறையை நிவர்த்தி செய்து அனுப்பிக் கொண்டிருந்தான்.

அடுத்ததாக கொள்ளிமட மக்கள் முன் வந்தனர். ஆனால் பெண்கள் யாரும் முன்வராமல் கூட்டத்துடனே நின்று விட்டனர். அப்பொழுதுதான் பாப்பும் அதை யோசித்தாள், அவ்வளவு நேரம் வந்தவர்களும் ஆண்கள் மட்டுமே முன்வந்தனர். எந்த கிராமத்தினறும் பெண்களை முன் அழைத்து வரவில்லை என்பதை கவனித்தாள்.

"இது இவங்க கால வழக்கம் போல. இப்டி வந்து கூட்டத்துல பின்னாடி நிக்கிறதுக்கு வராமலே இருக்கலாம் அஞ்சலை சொன்னது எவ்வளவு கரெக்ட். ஹீரோ ஹீரோயின் மீட்டிங் மிஸ்ஸாயிடுச்சே" என யோசித்து விட்டு பின், "ச்ச ரெண்டு மாசம் கழிச்சே மீட் பண்ணட்டும். அந்த ஜோசியர் அவ்வளவு ஸ்ட்ரோங்கா சொன்னாரே, சோ மெதுவாவே மீட் பண்ணட்டும்" என இவளே கேள்வி இவளே பதில் ௭ன இருக்க.

கொள்ளிமட தலைவரான நீதிவர்மன், அரசர்களைப் பார்த்து வணங்கி விட்டு, தங்கள் ஊரையும், ஊர் இருக்கும் திசை, மக்கள் எண்ணிக்கை முதலியவற்றை கூறிவிட்டு நாடகக் கலைஞர்களை மேடையேற்றினார். நாடக கலைஞர்கள் கொள்ளிமடத்தின் கோரிக்கையாக, தங்கள் பண்டங்களை சந்தையில் விற்க முடியாமல் சிரமப்படுவதை தத்ரூபமாக நடித்துக் காட்ட, அதை புரிந்துகொண்டவன் உடனடி உத்தரவாக 5 கடை போடும் இடங்களை அவர்கள் ஊருக்கு என ஒதுக்கித் தந்தான்.

"இனி நீங்களும் உங்கள் விளைச்சலுக்கான கூலியை நிர்ணயம் செய்து நேரடியாக மக்களுக்கு விற்பனை செய்யலாம்" என்றான் நீதிவர்மனயும், அவன் சார்ந்தோரையும் நோக்கி. அதை கேட்டு அவர்கள் குதூகளித்து கோஷமிட நீதிவர்மன் கை குவித்து நன்றியுரைத்து விலகினார்.

"மாமனார்ன்னு தெரியாம பொசுக்குன்னு அனுப்பிட்டீங்களே சார்ம், திரும்ப அவர ௭ங்க ௭ப்டி புடிக்க முடியும் கிடச்ச சான்ஸ யூஸ் பண்ணிருக்லாம்ல. ம்ம்கூம்ம் நீங்க அதுக்குலா ௭ந்த ஜென்மத்துலயும் சரிபட்டு வரமாட்டீங்க"

அகமகிழ்தினியும், அவள் அம்மா மற்றும் உடன் வந்த பெண்கள் என அனைவரும் தூரத்திலிருந்து நாடகத்தை கண்ணுற்றனர். ஆனால் அரசவையை சார்ந்தவர்கள் ஆட்களாக தெரிந்தனரேயின்றி முகம் தெளிவுர பார்க்க முடியவில்லை. தோழிகளும் அரண்மனையை சுற்றி பார்க்கும் ஆசையில் கொஞ்சமும் அவர்களை பார்ப்பதில் வைக்கவில்லை. ஆதலால் அவர்களுக்கு அது பெரிதான வருத்தத்தை கொடுக்கவுமில்லை, கண்டுகொள்ளவுமில்லை.

இறுதியாக புராரி மக்களின் சார்பாகவும் மேடையேறினர் நாடகக் குழுவினர். அவர்களை கண்டு புருவத்தை உயர்த்தினான் அமிழ்திறைவன்.

"நம் கோட்டையினுள்ளும் குறைகளா? கண் எதிரிலேயே குறையிருப்பின் நமது ஆட்சி அவ்வளவு முறைகேடாகவா இருந்தது?" என்றான் சுற்றி அமர்ந்திருந்த மந்திரிகளை கண்டும், தந்தையைக் காணாமல் கண்டும்.

மற்றவர்கள் சங்கடமாய் தலைகுனிய, அவர் தந்தையோ சாதாரணமாக தோளை குலுக்கி விட்டு திரும்பிக் கொண்டார்.
மேடையேறிய நாடக கலைஞர்கள் பின்வருமாறு நடித்துக் காட்டினர்.

அது ஒரு குடியிருப்பு போன்ற அமைப்பு, மக்கள் அங்குமிங்கும் நடந்து அவரவர் வேலையிலிருந்தனர். 16, 18 வயது பெண் பிள்ளைகள் தண்ணீர் எடுத்துக்கொண்டும், நெல்லை இடித்துக்கொண்டு ரோட்டில் நின்று வேலையோடு வேலையாக மற்ற பெண்களை கேலி பேசி சிரித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது ஒரு சிறுவன் ஓடிவந்து, "வீரர்கள் வருகிறார்கள், வீரர்கள் வருகிறார்கள்" என சத்தம் கொடுத்துக் கொண்டே ஓட, பெண்களும், பெண்பிள்ளைகளும் போட்ட வேலையை போட்டபடியே போட்டு விட்டு அவரவர் வீடு நோக்கி ஓடி கதவை சாத்திக்கொண்டனர். ஆண்கள் சிலர் வாசலில் நின்று கும்பிட்டு கேட்டனர், அப்படியாவது மனமிறங்கி தன் வீட்டை கடந்து போய்விடுவார்கள் என்றெண்ணி, அப்படி கெஞ்ச கூட விருப்பமில்லாதவர்கள், துஷ்டனைக் கண்டால் தூர விலகு என்பதாக வீட்டுக்குள்ளே மறைந்து விட்டனர்.

கெக்கலிட்டு சிரித்த அந்த வீரர்கள், "எதிர்த்து தான் சண்டையிடுங்களேன்டா, இப்படி நடுங்கி நிற்பது நம் மண்ணிற்கு அழகா? உங்களையெல்லாம் நம்பி போருக்குச் சென்றால் என்னவாகும்" என கூறி சிரித்தனர்.

குதிரையை கிளப்பி விட்டு, வீட்டு வாசலில் இருந்த ஓலை படைப்பையை எத்தி கீழ் தள்ளினர். காயப்போட்டிருந்த நெற்பயிர்களை கலைத்தனர். வாசலில் இருந்த சிறு சிறு தோட்டங்களை சேதப்படுத்தினர். அதை விளையாட்டு போல் ஒருவன் செய்ய, மற்றவர்கள் சிரித்து ஒருவரை ஒருவர் ஊக்கமளித்தனர். தங்கள் உழைப்பு வீணாவதை கண்டு கலங்கி நிற்கவே முடிந்தது அந்த குடியிருப்புவாசிகளால். இதற்கே கோபம் கொப்பளிக்க, அமர்ந்திருந்த நாற்காலியின் கையில் ஓங்கி குத்தினான் அமிழ்திறைவன். மற்றவர்கள் அவன் தந்தை உட்பட அதிர்ச்சியில் பார்த்திருந்தனர்.

நாடகத்தின் அடுத்த கட்டமாக அந்த வீரர்களில் ஒருவன், "இன்று எந்த வீடென நான் தானே முடிவு செய்ய வேண்டும். போன மூன்று முறையும் நீங்கள் மூவரின் பங்கு முடிந்தது என்று நினைக்கிறேன்" ௭ன்க.

"அதில் தான் உனக்கு என்ன ஆனந்தம், உன் ராசி எப்படி இருக்கிறதென்றும் தான் பார்ப்போமே. ௭தும் கிழவி வீட்டை தட்டி மூக்கறுபடாமல் வா" என்றான் ஒருவன்.

மற்ற மூவரும் சிரிக்க, "கன்னிப் பெண்ணையே தூக்கி வருகிறேன் வேண்டுமென்றால் பார்" என்றவன் வீராப்புடன் தெருக்களில் வலம் வந்து, ஒரு வீட்டின் முன் நிற்க, அந்த வீட்டு வாசலில் நின்ற பெரியவர் நடுங்கி மண்டியிட்டு வேண்டாம் என்று தலையாட்ட, அந்த வீரன் அவரை சட்டையே செய்யாமல் ஒரே தள்ளில் அவரை கீழே தள்ளிவிட்டு, அடைத்திருந்த கதவை எட்டி மிதித்து திறந்து உள்ளே நுழைந்தான். பாவமாய் ஒதுங்கி நின்றனர் ஒரு ஐந்து வயது சிறுவனும், அவன் தாயும். அவளைத் தரதரவென்று இழுத்துக் கொண்டு வெளியேறினான் அந்த வீரன். இந்த காட்சியை கண்ட அமிழ்திறைவன், "மரியாதையாக அந்த பெண்ணை விடு" என கர்ஜித்தான் அது நாடகம் ௭ன்பதயும் ஒரு நொடி மறந்து.
 
அத்தியாயம் 5

அவன் கர்ஜனையில் அனைவரும் ஒரு நொடி பேசாது, அசையாது நின்று விட, அதுவரை நடப்பதை திக் பிரம்மயில் பார்த்திருந்த அவன் தந்தை அவன் போட்ட சத்தத்தில் சுயநினைவு பெற்று, "என்ன தைரியம் உங்களுக்கு? என் ஆட்சியின் கீழ் இருந்து கொண்டு எனது ஆட்சியை சார்ந்த என் வீரர்களையே குற்றம் கூறுகிறீர்களா? யார் கொடுத்தது உங்களுக்கு இந்த அதிகாரத்தை?" என முறுக்கிக்கொண்டு ஆவேசமாக கத்த.

அவரை புரியாமல் திரும்பி பார்த்தவன், முதலில் பிரச்சினையை விசாரிப்பது முக்கியமாக பட, அவரை கண்டு கொள்ளாமல் நாடகக் கலைஞர்களை காட்டி, "இவர்களை ஏற்பாடு செய்தவர்கள், இவர்களின் சார்பாக வந்தவர்கள் முன்னே வரவும்" என்றான்.

நாடகக் கலைஞர்களே முன் வந்து வணங்கி நின்றனர். "உங்களை ஏற்பாடு செய்தவர்கள் எங்கே? அவர்களை வரச் சொல்லுங்கள், பிரச்சினை என்னவென்று சரியாக விசாரிக்க வேண்டும். இது என்னவென்று எனக்கு முழுமையாகத் தெரிய வேண்டும்" என்றான் அமிழ்திறைவன்.

"மன்னிக்க வேண்டுகிறோம் இளவரசே, எங்கள் பிரச்சனையை சொன்னபோது எந்த நாடகக் கலைஞர்களும் ஒத்துக்கொண்டு நடிக்க முன்வரவில்லை. ஆகையால் ஒரு முடிவு எடுத்து எங்கள் பிரச்சினையை நாங்களே சொல்ல முடிவெடுத்தோம்" என்றார் நாடகத்தில் அந்த பெண்ணின் தகப்பனாராக நடித்த பெரியவர்.

"சரி கூறுங்கள், நீங்கள் நடித்து காட்டியதன் பொருள் என்ன?",

"இது நாங்கள் அன்றாடம் அனுபவிப்பது தான் இளவரசே. திடீரென்று 4 வீரர்கள் வருவர், கண்ணில் படும் பெண்களை தூக்கி சென்று விடுவர். கன்னிப்பெண்கள், கல்யாணமானவர்கள் என பாரபட்சம் என பாரபட்சமே இருக்காது, பல நேரங்களில் சேதாரத்தை விளைவிக்கவும் செய்வர்".

"நீங்களும் வீரர்கள் தானே, வந்தவர்களை அடித்து விரட்டாமல் புலம்புவது எவ்விதத்தில் சரி. புலியையே முறத்தால் விரட்டியவர்கள் நம் தாய்மார்கள். அவர்களுக்கே என் தேசத்தில் பாதுகாப்பு இல்லையா? என்ன நடக்கிறது இங்கே? என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் நீங்களெல்லாம்" என்றான், முதல் கேள்வியை ஊர்க்காரர்களிடமும், கடைசி கேள்வியை தன்னை சுற்றி அமர்ந்திருந்தவர்களிடமும்.

அவர்கள் என்ன செய்வதென்று புரியாமல் முழிப்பது அவனுக்கு புரிந்தது. ஆட்சியின் அரசனான தந்தையை கண்டால் அவர் விரைப்பாக அமர்ந்திருப்பது தெரிந்தது. மறுபடியும் ஊர்க்காரர்களிடம் திரும்பினான், "பிறகு என்ன நடந்தது? பெண்களை அவர்கள் கொடுமை படுத்தினார்களா? எதற்காக அவர்கள் பெண்கள் மீது கை வைத்தார்கள்? அந்த பெண்களை ௭ன்ன காரணமாக அழைத்துச் சென்றனர்? நீங்கள் ஏன் பிராது கொடுக்கவில்லை அவர்கள் மேல்?" அவன் அடுக்கடுக்காக கேள்விகளை தொடுக்க.

"இதைக் கூறுவதற்கு மீண்டுமாக தாங்கள் எங்களை மன்னிக்க வேண்டும். எங்கள் குல செல்வங்களை கடத்தி செல்வதே கோட்டையின் அந்தபுரத்து வீரர்கள்தான், அப்படியிருக்கையில் நாங்கள் யாரிடம் சென்று புகார் அளிப்பது. தாங்கள் முடி சூட்டியதும், பொறுப்பேற்றதும், நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் போருக்கு சென்றீர்கள். கட்டாயம் எங்கள் கஷ்டத்தை புரிந்து கொள்வீர்கள் என்றெண்ணியே நாடகம் போடுவது மூலமாக இந்த விஷயத்தை உங்கள் முன் கொண்டுவர முடிவு செய்தோம். இந்த பிரச்சனை எங்களுக்கு மட்டுமல்ல பிற ஊர் மக்களுக்கும் இருக்கிறது. எங்கள் கூற்றில் நம்பிக்கை இல்லையெனில்....." என அவர் சொல்லிக் கொண்டு இருக்கையிலேயே அவரை கைநீட்டி தடுத்தவன், "சபையில் வந்து அரசரையே குற்றம் சாட்ட தைரியம் மட்டும் போதாது, உண்மையும் வேண்டும். அதனால் உங்களை நம்புகிறேன். இனி உங்கள் வீட்டுப் பெண்களுக்கு எந்த சேதாரமும் வராது என நான் உறுதியளிக்கிறேன். இதுவரை நடந்ததற்கும் நான் மன்னிப்பு வேண்டுகிறேன்" என்றான்.

அதில் மொத்த அரசவையும் எழுந்து நின்றது, அவன் தகப்பனாரை தவிர்த்து. "இளவரசே மன்னித்துவிடுங்கள். எங்கள் வீட்டுப் பெண்களை காக்க இதை தவிர்த்து வேறு வழி இல்லாததாலேயே முறையிட்டோம். நீங்கள் மன்னிப்பு கேட்கும் பொழுது, செயற்கரிய விஷயத்தை செய்ததுபோல் குற்ற உணர்வாக இருக்கிறது".

அவனுக்கு அவன் தந்தை இந்த வயதிலும் அந்தபுரம் ௭ன்ற ஒன்றை வைத்திருப்பதே மிகவும் அவமானமாக இருந்தது, அவரிடமிருந்து அதற்காகவே சற்று விலகியே இருப்பான். இதில் இவ்வளவு பெரிய பாதகமான செயல்களைச் செய்வாரென சற்றேனும் ஜீரணிக்க முடியாமல் திணறினான்.

வந்த ஆத்திரத்தை அடக்கி பெரு மூச்சுடன் "உடனடியாக தீர்க்க கூடிய பிரச்சனையை இதுவரை உடனடியாகத் தீர்த்து வைத்தேன். இப்போது உங்களின் வேண்டுகோளும் ஏற்கப்படுகிறது. இந்நொடியே அரண்மனை அந்தப்புரம் கடுங்காவல் தண்டனை கொடுக்கும் கூடமாக மாற்றப்படவேண்டும். அங்குள்ள பெண்களுக்கெல்லாம் மாற்று ஏற்பாடு செய்யுங்கள். பெண்களை கவர்ந்து வந்த வீரர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்ற படவேண்டும். இறுதியாக முழுமுதற்காரணமாக இந் நாட்டின் அரசர் இனி அவருக்கும், அரச வாழ்க்கைக்கும் சம்பந்தம் இல்லை. உடனடி சாவு அவருக்கு வலியை உணர்த்தாது, ஆகையால் புதிதாக அமைக்கவுள்ள தண்டனை கூடத்தில் அவர் அவரது மிச்ச வாழ்க்கையை கழிக்க வேண்டும். இது அரச கட்டளை மாற்றுக்கருத்துக்கு இடமில்லை, உடனடியாக நிறைவேற்றுங்கள்".

அவனே தொடர்ந்து "தனா தண்டனை கூடம் அமைக்கும் பணி 24 மணியத்யாளங்களில் முடியவேண்டும். சொன்ன தண்டனைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட வேண்டும்".

"உத்தரவு இளவரசே" சபை கலைந்தது. அவன் தகப்பனாரை காவலில் அடைக்க அழைத்துச் செல்லும்போது கத்தினார், ஆர்ப்பாட்டம் செய்தார், முரண்டு பிடித்தார், ஆனால் அரசகட்டளை நிறைவேற்றப்பட்டது.

அவன் சிற்றன்னை நடந்து முடிந்த விஷயத்தால் மிகவும் கவலைக்கிடமாக படுத்துவிட, இவன் சென்று சமாதானப்படுத்த முயன்ற போது, "பரவாயில்லை மகனே அவர் தப்பு செய்த போதே தட்டிக் கேட்காத நான், நீ ஒரு நல்லதை செய்யும் போதா தடுத்து விடுவேன். இவர் செய்த பாவம் எல்லாம் உன் தலையிலும், உன் தங்கை தலையிலும் தானே வந்துவிழும். அதுவே என் பெருங்கவலை அமிழ்திறைவா" என்றார் மேலும் கலங்கி.

"கலக்கம் வேண்டாம் சிற்றன்னையே, அவரவர் செய்த பாவத்தை அவரவரே சுமக்க வேண்டும். எத்தனை பிறவி எடுத்தும் பாவங்களை தீர்க்காமல் விமோச்சனம் என்பது கிட்டாது. இது எனது குருகுல ஆசானின் கூற்று. ஆகையால் இதையும், அதையும் நினைத்து கலங்காமல் ஓய்வெடுத்து தேறி வாருங்கள் எங்களுக்காக வேணும் மீண்டு வாருங்கள்" என்றான்.

அதில் சற்று தெளிந்தவர், அடுத்த ஓரிரு வாரத்தில் வைத்தியரின் தீவிர கவனிப்பால் எழுந்து கொண்டார்.

"ச்ச சார்ம் ஓட அப்பா இவ்வளவு மோசமானவரா இருந்திருக்கிறாரே. என்கிட்ட சிக்கியிருக்கணும் என் கராத்தேல இரண்டு காட்டு காட்டிருப்பேன். சங்கு ஊதுற வயசுல சங்கீதா கேட்ட கதையால இருக்கு. இந்த வயசுல அந்தப்புறம் ஒண்ணு தான் கேடு. எந்த காலத்துலயும் பெண்களுக்கு மட்டும் பாதுகாப்புன்றதே இல்ல" என கடும் கோபத்தில் குறுக்கும் நெடுக்குமாக நடந்த பாப்புவின் புலம்பல் யாரையும் எட்டவில்லை.

அவனது உடனடி நடவடிக்கையை கண்டு அனைவருமே அவன் ஆட்சியை புகழ்ந்தனர். இனிமேல் நமக்கு விடிவு காலம் தான், எல்லாம் நன்மையே நடக்கும் என குதூகளித்தனர்.

நீதிவர்மனும் திரும்பி செல்லும் வழி எங்கும் அவனை புகழ்ந்த வண்ணமே வந்தார். "கண்டிப்பாக நம் இளவரசரின் ஆட்சியில் பசி, பட்டினி, குறையின்றி மக்கள் வாழ்வர். என்ன அழகு தெரியுமா நம் இளவரசர், கண்ணபிரான் போன்ற கலையான முகம், எப்போதும் அதில் குன்றா சிரிப்பு. ஆண்மையின் அழகு நம் இளவரசர், திரும்ப திரும்ப பார்க்க தூண்டும் முகம் அவருக்கு. அவரின் ஆளுமையை பார்த்திருக்க வேண்டுமே, அட அட அடடா திவ்யமாக இருந்தது" என அவர் பாராட்டிய வண்ணம் வர.

"பார்க்கவேண்டிய நம்மை உள்ளே அழைத்துப் போகாமல் தலைவர் மட்டும் சென்று வந்து விட்டு இப்போது நம்மை விரகத் தீயில் வேக வைக்கிறாரே, இது எவ்விதத்தில் நியாயமென உன் தந்தையை கேளடி" என கொற்றவை மகிழ் காதை கடிக்க.

"அது சரி, எதற்கு அவரிடம் கேட்டுக் கொண்டு, திரும்ப ஒரு நடை மாப்பிள்ளை பார்ப்பு முடித்துவிட்டு வந்து விடுவோம். போற வழியில் பழங்கள் தேவையானவற்றை கூட வாங்கிக் கொள்வோம். அவரும் விருப்பப்பட்டால், உன்னை அங்கேயே குடித்தனமும் வைத்து விட்டு வந்து விடுகிறேன்" ௭ன மகிழ் தீவிரமாக சொல்ல.

கொற்றவை தரையை நோக்கி பள்ளம் தோண்டி, "கேட்க நன்றாகத்தான் இருக்கிறது" ௭ன வெக்கபட்டு கொண்டே இழுக்க.

"அடிக்கள்ளி, கட்டாயம் உனக்கு சீக்கிரம் மாப்பிள்ளை பார்த்தாக வேண்டும். இரு இதை தலைவரின் காதில் போட்டு வைக்கிறேன்" என முன்னே ஓட.

"அடியே மகிழ் நில்லடி., விளையாட்டாய்க் கூறியதை வினையாக்கிவிடாதே. என் தாயார் முறம் பிய்யும் வரை அடித்தும் ஓய மாட்டார்" என பின் துரத்திச் சென்றாள் கொற்றவை.

"வயது பிள்ளைகளுக்கு என்னடி ஓட்டம்" என்ற அவர்களின் தாயார் குரல்கள் காற்றில் தேய்ந்து மறைந்தது.

"முந்துன ஜென்மத்துல இவ என் கூட எவ்வளவு ஒத்துமையா இருந்திருக்கா, அப்புறம் ஏன் இந்த ஜென்மத்துல மட்டும் வீட்டுக்கு வர்ற புது ஆட்கள கண்ட நாயாட்டம் வல்லு வல்லுனு விழுறா? ஒருவேள கிளைமாக்சில் பெரிய ஆப்பா எதுவும் வச்சிருப்பேனா? இருக்கும். என் சார்ம்ம மாப்ள பாக்க போறேன்னு சொல்ல எவ்வளவு தைரியம் இருக்கணும். உன்ன வந்து கவனிச்சுக்கிறேன் வெள்ள பாச்சா" எனத் திட்டி விட்டு அடுத்த சீனுக்கு ரெடியானாள்.

மேலும் ஒரு வாரம் கடந்த நிலையில், அமிழ்திறைவன் நகர் வலம் முடித்து திரும்பியிருந்தான். அனைவரின் கோரிக்கையையும் நிறைவேற்றியும் இருந்தான். மகிழ்தினியின் ஊருக்குள் நுழைந்தபோது, பழக்க தோஷமாக எப்பயும் போல அரசவை ஆட்கள் பார்வைக்கு பெண்கள் வீட்டினுள் மறைக்கப்பட்டனர். அதனால் அப்போதும் அமிழ்திறைவனும் மகிழ்தினியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளவில்லை. மறைந்திருந்து வீதி உலா வரும் அரசனைக் காண அவளுக்கும் விருப்பமில்லை, அந்த காரணத்தால் தோழியையும் அழைத்து கொண்டு சென்றுவிட்டாள் வேங்கை அம்மனிடம். கோயிலை சுற்றியுள்ள இடங்கள் அவளுக்கு அவ்வளவு பிடிக்கும். பூத்துக் குலுங்கும் வண்ண வண்ண மலர்களை காண்கையில் அதன் அழகும் மணமும் மனதை நிறைக்க போதுமானதாக இருக்கும் அவளுக்கு. போதாதிற்கு மாமரம்,கொய்யா மரம், பலாமரம், வாழைமரம் என ருசியான பழங்கள் வேறு கிடைக்கும் போது வீட்டை விட காட்டை சுற்றி வர இருவருக்குமே எதற்கு கசக்க போகிறது. மிருக நடமாட்டமும் இருக்கும், ஆனாலும் சிறுவயதிலிருந்தே வலம் வரும் காடு என்பதனால் எதற்கும் அஞ்சுவதுமில்லை, மீறி சிக்கினாலும் அதனிடம் சிக்காமல் தப்பிக்கும் யுக்தியும் தெரியும் அவர்களுக்கு.

அடுத்து வந்த பௌர்ணமி இரவு, இரவு உணவை முடித்துக் கொண்டு தூங்குவதற்காக தனதறை விரைந்தான் அமிழ்திறைவன். அவன் நடைக்கு ஈடு கொடுத்து பின் நடந்தான் தனார்த்தன். அவனுக்கு சற்று பின்தங்கிய நிலையில் 2 காவலாளிகள் தொடர்ந்தனர், "பேரரச மன்னர் எப்போது வேண்டுமானாலும் திக்விஜயம் வரலாம், அவ்வாறு அவர் வருகையின் போது நமது தேசத்தை கண்டு அவர் மெய்சிலிர்க்க வேண்டும். இங்கு வந்ததற்காக அவர் மகிழ வேண்டும். நமது அரசாட்சியின் கீழ் வாழும் மக்கள் எக்குறையுமின்றி நிறைவான வாழ்க்கை வாழ வேண்டும். அதற்கு எல்லா பிரச்சினைகளும் நேரடியாக என் காதுக்கு வர வேண்டும். சில முன்னேற்பாடாக நம்பகமான ஆளாக உன்னை தான் நான் நியமிக்க நினைக்கிறேன்" ௭ன்றான் திரைவன் நடந்து கொண்டே மெதுவான குரலில்.

"அது என் பாக்கியம் இளவரசே. தங்கள் ஆணையை சிரம் மேற்கொண்டு செய்யவும் சித்தமாக உள்ளேன்".

பக்கவாட்டில் திரும்பி அவனை பார்த்து சிரித்தவன், "அதை நான் அறிவேன், நம்பகமான ஆட்களை ஒற்றர்களாக நமது தேசத்தின் கீழ் வாழும் எல்லா ஊர்களுக்கும் அனுப்ப வேண்டும். மக்களோடு மக்களாக குடும்பத்துடன் அவர்கள் அங்கு சென்று தங்கியிருக்க வேண்டும். அந்த ஊரின் நல்லது கெட்டதுகளை அறிந்து நமக்கு தெரிவிக்க வேண்டும். அந்த ஒற்றன் யார் என்பது நம் இருவருக்கு மட்டுமே தெரிந்ததாக இருக்க வேண்டும். ஒற்றர்களுக்கு கூட அவர்களுக்குள் ஒருவருக்கு ஒருவர் தெரிந்து இருக்கக்கூடாது. அப்படிப்பட்ட ஒற்றர்களை தேர்ந்தெடுத்து பயிற்சி கொடுத்து முடிந்தளவு ஒரு திங்களுக்குள் இதை செய்து முடிக்க வேண்டும். முடியுமா தனா?".

"கண்டிப்பாக முடித்து விடுகிறேன் இளவரசே, பொறுப்பு ௭னது. நீங்கள் நிம்மதியாக தூங்கி எழுங்கள்" என தனார்த்தன் முடிக்கவும், அமிழ்திறைவன் அறை வருவதற்கும் சரியாக இருந்தது.

"நீயும் சென்று ஓய்வெடு தனா" என்றவன் உள்ளே செல்ல. அடுத்த ஐந்து நிமிட நடையில் வந்த தனது அறையில் உள்ளே நுழைந்தான் தனா.

அவர்கள் பின்னே வந்த காவலர்கள் தனா உள்ளே நுழையவும், அவன் அறை வாசலில் நின்ற காவலாளிகளிடம் ஒரு தலையசைப்புடன் விடைபெற்றுச் சென்றனர்.

படுக்க சென்று அமிழ்திறைவன் ஏதோ சொல்ல மறந்தவனாக மறுபடியும் தனது அறையிலிருந்து வெளிவந்தான், காவலர்களும் பின்தொடர, நேராக தனார்த்தனின் அறையை அடைய, எங்கோ கிளம்பி கொண்டு இருந்த தனா இவனை எதிர்பார்க்காமல் திருதிருவென விழிக்க.

அவனை ஆராய்ச்சி பார்வை பார்த்துக் கொண்டே உள் நுழைந்தான் அமிழ்திறைவன். காவலர்கள் வெளியேவே தங்கிவிட்டிருக்க, அமிழ்திறைவன் மட்டுமாய் உள்ளே வந்தவன், அங்கிருந்த நாற்காலியில் அமர்தலாக கால்மேல் காலிட்டு அமர.

தனாவிற்கு படபடப்பு அதிகரித்திருந்தது. "படுக்க செல்வதற்கு, வேட்டைக்குச் செல்வது போன்று ஆயத்தமாகியிருக்கிறாயே தனா" என கையால் நாடி தாங்கி அமைதியாக வினவ.

"நகர்வலம் சென்று வரலாமென்றிருந்தேன் இளவரசே" ௭ன உடனடியாக பதில் கொடுத்தான் தனா.

இளவரசரின் பார்வையோ அவன் முகத்தை விட்டு இம்மியளவும் அகலவில்லை. அவனை சிறுவயதிலிருந்து பார்த்து வருகிறான், இந்த பதட்டத்தை அவன் இதற்குமுன் அவனிடம் கண்டதில்லை. அதுவே அவனை நம்பா பார்வை பார்க்க வைத்தது.

அரசனின் துளைக்கும் பார்வையை தாங்காது, "நிஜமாகவே நகர் வலம் தான் செல்கிறேன் இளவரசே. இதை நீங்கள் தயகூர்ந்து நம்பவேண்டும்".

"சரி நம்பி விடுகிறேன் தனா, சற்று முன் வரை என்னுடன் தான் இருந்தாய், இப்படி ஒரு ஜாம நகர்வலம் பற்றி உரைக்காதது ஏன் என்று நான் அறிய விரும்புகிறேன். எனக்கு தெரியக்கூடாத அளவிற்கு நீ யாரை இந்த நேரத்தில் வேவு பார்க்க கிளம்பியுள்ளாய்?" இப்பொழுது குரல் சற்று அதட்டலாகவே இருந்தது.

இதற்கு மேல் மறைக்க முயல்வது உத்தேசம் இல்லை என உணர்ந்த தனா, "இந்த ஜாம நகர்வலம் நாட்டுக்காக இல்லை இளவரசே, எனக்காக. என் சொந்த காரியத்திற்காக" என தலைகுனிந்து சுருதி இறங்கி கூற.

புருவம் சுருக்கி யோசனையாய் குனிந்து நிற்பவனை 2 நொடி கண்டவன், "சரி வா நானும் உன்னுடன் வருகிறேன். நீ நம் நாட்டுக்காக எவ்வளவோ செய்கிறாய். நான் உனக்கு, உன் சொந்த விஷயத்திற்கு உடனிருந்து உதவி என் நன்றியை திருப்பி செய்கிறேன் வா போகலாம்".

பதறிய தனா, "வேண்டாம் இளவரசே. இதை நானே பார்த்துக்கொள்கிறேன். இந்த நேரத்தில் நீங்கள் கோட்டையை விட்டு வெளியேறுவது அவ்வளவு உசிதமாக படவில்லை".

"ஏன்? என்னை என்னால் பாதுகாக்க முடியாது என்கிறாயா?".

"ஐயோ இல்லை இளவரசே, எனக்காக தாங்கள் சிரமப்பட வேண்டாம் என்று நினைக்கிறேன்".

"எனக்கு ஒரு சிரமமும் இல்லை. நீ என்னை உதாசின படுத்த படுத்த எனக்கு அப்படி என்ன விஷயம் என தெரிந்து கொள்ளும் ஆர்வம் கூடுகிறதேயன்று குறையவில்லை".

"தங்களை நான் உதாசினப்படுத்துவதா? நிச்சயமாக இல்லை. அது வனப்பகுதி இந்நேரத்தில் அழைத்துச் சென்று இருட்டில் கண்ணுக்கு புலப்படாத உயிரினங்களிடம் உங்களை சிக்க வைத்து பெரும் பாவத்தை தேடிக் கொள்ளக்கூடாது என்ற எண்ணியே தவிர்த்தேன். நானும் போகவில்லை, நீங்களும் வரவேண்டியதில்லை சென்று உறங்குங்கள்".

"மீண்டும் மீண்டும் என்னை அவமானப் படுத்துகிறாய். காடென்ன? நாடென்ன? நீ தனியே சென்று, உன்னை உன்னால் காத்துக்கொள்ள முடியும் போது, இந்நாட்டையே ஆளும் அரசன் என்னால் என்னைக் காத்துக் கொள்ள முடியாது என்கிறாயா? இப்பொழுது நீ என்னைக் கூட்டிச் செல்ல போகிறாயா? இல்லையா?" அமிழ்திறைவன் உறுமிய உறுமலில்...

"செல்லலாம் இளவரசே" என்றவன் அறையிலிருந்த ஜன்னல் வழியாக குதித்து வெளியேற, வாசலை திரும்பி ஒரு நொடி பார்த்த அமிழ்திறைவன் அவனைப் போலவே தானும் ஏறிக்குதித்து வெளியேறினான்.

அவன் கோட்டையினுள் அவனுக்கே ஒரு புதிய பாதையைக் காட்டி கூட்டிச்சென்றான் தனார்த்தன்.

சிறிது நேரம் வந்ததும், "சுரங்க பாதை வழியாகச் செல்லப் போகிறாயா தனா?" என்றான்.

"ஆம் இளவரசே",

"அது கொள்ளிமலை லிங்கேஸ்வரரிடம் அல்லவா கொண்டுவிடும். அந்த காட்டில் யாரைக் கண்டுபுடிக்கப் போகிறாய் தனா?".

"அங்கு நீங்கள் எதிர்பார்த்து வருவது போல் ஒன்றுமே இல்லை, தாங்கள் தான் என்னை நம்பாமல் உடன் வந்து கொண்டு இருக்கிறீர்கள்".

"ஒன்றுமில்லாத காரியத்திற்கு எனது நண்பன் என்னிடம் கூட மறைத்து அர்த்த ஜாமத்தில் கிளம்பி விட்டானே என்ற கேள்விக்கு விடை காணவே உடன் வருகிறேன்". அதற்கு பாவமாக பார்த்தானயன்றி பதில் கூற இயலவில்லை தனார்த்தனனால்.

பேசிக்கொண்டே வந்த இருவரும் கோட்டையினுள் இருந்த லிங்கேஸ்வரரை அடைந்து வணங்கி அவருக்குப் பின்னால் இருந்த பலகையை விளக்கி உள் இறங்கினர்.

கோவிலிலிருந்த தீப்பந்தங்களில் ஒன்றை எடுத்துக்கொண்டு தனா முன்னே செல்ல அமிழ்திறைவன் பின்தொடர்ந்தான். அடுத்த அரை மணி நேரத்தில் அவர்கள் மேலே ஏறியது கொள்ளிமலை ஈசனின் முன் தான்.

அவரையும் சில நொடிகள் வணங்கி விட்டு திரும்பியவன், "யாரை தேடி வந்தாய் தனா?" என்பதற்கு, "நாம் வருமுன் வந்து சென்று விட்டார்கள் ௭ன நினைக்கிறேன் இளவரசே. அடுத்து அவர்கள் செல்லும் இடம் போவோம் வாருங்கள்" என அழைத்துச் சென்றவன், வேங்கை நல்லாள் சன்னதியில் நின்ற அவர்களின் முதுகை காட்டினான்.
 
அத்தியாயம் 6


வேங்கை நல்லாளின் குகைக்குள் நுழைந்ததும், "இந்த இடம் உனக்கு எப்படி தெரியும் தனா, நாம் இதற்கு முன் வந்தது போல் நியாபகம் இல்லையே? தினமும் ஆள் நடமாட்டம் இருப்பது போல் வரிசையாக தீப்பந்தங்கள் கூட இருக்கிறது. உள்ளூர் வாசிகள் வந்து செல்கிறார்களா என்ன?" ௭ன்றான் அந்த குகையில் காலடி எடுத்து வைத்து.

"பொறுமை இளவரசே, மெதுவாக பேசுங்கள் அசரீரியாக ஒலிக்கிறது. உள்ளிருப்பவர்கள் பயந்து விடப்போகிறார்கள்" என்றான் ரகசிய குரலில் தனா.

"உள்ளே ஆள் இருக்கிறார்களா? நாம் சந்திக்க வந்தது அவர்களையா? கொள்ளையர்களா?? ரகசிய திட்டம் தீட்டும் இடமா?" என்றான், இப்போது அவனும் ரகசியமாக.

"ஆம்" என தனா தலையசைத்து, பின் இல்லை ௭ன தலையசைத்தான்.

அவனது தலை உருட்டலை கண்டு முறைத்து விட்டு முன்னேறி சென்றான் இளவரசன்.

"ஓமைகாட்! ஹீரோ, ஹீரோயின் மீட் பண்ண போறாங்க. அந்த ஜோசியர் என்னலாமோ சொன்னாரே. அடேய் விஷா உனக்கு எதுக்குடா இந்த மாமா வேல" என பல்லைக் கடித்தால் பாப்பு.

அங்கு சுஹா, "ஹே மகிழ் ஏதோ சத்தம் கேட்டமாதிரி இருந்ததே கவனித்தாயா?" என்க.

"ஆமாம் காலடி சத்தம் எனக்கும் கேட்டது. நம்மைத் தேடி கொண்டு யாரும் வந்துவிட்டார்களோ?" ௭ன்றால் மகிழ் வேங்கையிடமிருந்து கண்ணை ௭டுக்காமல்.

"மக்களோ, மிருகமோ யார் கண்டது, வா மகிழ் சென்றுவிடலாம்".

"ஏன்டி பயப் படுகிறாய், எதுவா இருந்தாலும் நமக்கு தீங்கு விளைவிக்குமாயின் பார்த்தாயல்லவா நம் அன்னை கையிலிருக்கும் ஆயுதங்களை, எடுத்து ஒரு கை பார்த்துவிடுவோம்".

"அது சரி உன்னை போய் ஓடி ஒளிய கூப்பிட்டால் நடக்குமா அது" என தான் மட்டுமே பயந்து கண்ணை சுலற்றிக் கொண்டிருந்தாள் கொற்றவை.

சம்மணமிட்டு அமர்ந்து வேங்கை முகத்தில் பார்வை பதித்திருந்த மகிழ் பார்வை இப்படி அப்படி அசைந்தாளில்லை.

உள்ளே நுழைந்ததும் அமிழ்திறைவன் முதலில் கண்டது வேங்கை நல்லாளை தான், பௌர்ணமி ஒளியில் பிரகாசமாக காட்சியளித்தவளை அதிசயமாக பார்த்தான், தானாகவே கை வணங்கியது. அதற்குள் தீப்பந்தம் படாத இருளில் சுவரோடு சுவராக அவனைப் பிடித்து இழுத்த தனா, "மன்னித்துவிடுங்கள் இளவரசே, பெண்கள் கண்ணில் பட்டுவிடக்கூடாதென்றே இழுத்தேன்".

"யார் அவர்கள்?" என்று பார்வையில் வினவியவாறு திரும்பியவன் கண்ணில் திரு திருவென முழித்துக் கொண்டு அமர்ந்திருந்த பெண்ணும், அருகில் சிறு அசைவும் இன்றி தன் நீண்ட கருங் கூந்தல் மட்டும் தெரியுமாறு அமர்ந்திருந்த பெண்ணும் பட, அந்த நீண்ட மூடி தரை தொட்டிருக்க, அதிலிருந்து தண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. அதுவே ஒரு வித அழகை தந்தது அவளுக்கு.

இவற்றை கண்டவன், "இரு இளம்பெண்கள், இந்த வேளையில் முழுக்க நனைந்து, காட்டுக்குள் இருக்கும் அம்மன் முன் வந்து அமர்ந்து இருக்கிறார்கள் எனில் கடுமையான வேண்டுதலோ? அன்றி சூனியம் எதுவும் வைத்திருக்க வந்திருக்கக்கூடுமோ?" என்ற அவன் கேள்விக்கும் சந்தேக பார்வைக்கும் பதில் சொல்லும் விதமாக..,

"மன்னியுங்கள் அரசே, இவர்கள் இருவரும் கொள்ளி மடத்தில் வாழும் காட்டுவாசி மக்கள் கூட்டத்தைச் சார்ந்தவர்கள். நான்கு வருடத்திற்கு முன்பு எனக்கு உடம்பு சரியில்லாமல் இருந்ததால் பாடசாலையிலிருந்து வீடு அனுப்பி விட்டார்கள் அல்லவா, அப்போது எனது தாயார் கொடுக்கும் மருந்துதிற்கு பயந்து நான் லிங்கேஸ்வரரிடம் ஒளிந்து கொள்ள வந்து, வெளியில் இருந்த மரத்தடியில் அப்படியே உறங்கிவிட்டேன். விழித்துப் பார்க்கும் போது நன்றாக இருட்டிவிட்டது. திரும்பி விடலாம் என நினைத்த போதுதான் இந்த இரு பெண்களையும் கண்டேன். மோகினிகளோ ௭ன ஒரு நொடி பயத்தில் வேர்த்துவிட்ட எனக்கு, அருகில் பெண்களாக இவர்களை கண்டதும் ஆசுவாசம் ஏற்பட்டது. இவர்கள் இந்நேரத்தில் ௭ன்ன செய்கிறார்கள் ௭ன தெரிந்து கொள்ள விடியும்வரை பின்னேயே சுற்றி வந்தேன். மறுநாளும் வருவார்களா ௭ன்றறிய வந்தேன், அவர்களை காணவில்லை. பின்னரே பௌர்ணமியன்று மட்டும் வருவார்களோ? என கணித்து கொண்டு மீண்டும் குருகுலம் வந்து விட்டேன். இப்போது நாம் திரும்பி வந்தபின் கடந்த மாதம் அதை உறுதி செய்ய வந்து பார்த்தேன், வந்திருந்தார்கள். இன்றும் தோன்றியது கிளம்பிவிட்டேன். பௌர்ணமி அன்று மட்டும் வந்து அருவியில் குளித்து லிங்கேஸ்வரரிடமும், அம்மனிடமும் இருந்து வணங்கி விட்டு விடியும் தருவாயில் கிளம்பி விடுகிறார்கள். அவ்வளவு தான் இளவரசே" என்றான் மொத்தத்தையும் படபடவென ரகசியமாகவே.

"இரு பெண்களில் யாரை காண இவ்வளவு மெனக்கெடுக்கிறாய் தனா" என்ற அவன் கேள்விக்கு நிமிர்ந்து, அவனின் பார்வை மண்டையை திருப்பித் திருப்பி வந்த வழியை பார்த்து பயந்து கொண்டிருந்த மருண்ட விழியாளை கண்டதும், அதைப் புரிந்து கொண்டவனாக, இளவரசனும் தலையசைத்து சிரித்துக்கொண்டான்.

"என்னவோ?" என பயந்து உடன் வந்தவனுக்கு தனாவின் காதல் கதை சுவாரஸ்யத்தை தந்தது.

தங்களின் ரகசிய பேச்சினால் எழுந்த சத்தத்தில் தான் அந்தப் பெண் மிரண்டு விழிக்கிறாள் என்று புரிந்து கொண்டவன், அருகில் அமர்ந்திருந்தவளைப் பார்த்தான், "பலே, தைரியம் தான், சிறிதும் அசைவில்லையே இந்த பெண்ணிடம். அவ்வளவு பக்தியா?" என பார்த்தான். இப்போது அந்த தைரியமான முகத்தை காணும் ஆசையும் துளிர்விட்டது. "கூந்தலே இவ்வளவு அழகாய் இருக்கிறது எனில், வதனம்?" என ஆவல் கொண்டான்.

இதையெல்லாம் வேடிக்கை பார்த்திருந்த பாப்பு "என்ன நடக்கப் போகுதுன்னு தெரியலயே. மீட் பண்ணதும் என்ன செய்வாங்க. இந்த விஷாவும், சுஹாட்ட விடுற ஜொல்லுல அவுங்க மூணு பேரும் முழுகாம இருந்தா சரி" என நகத்தை கடித்து துப்பிக் கொண்டிருந்தாள்.

"ஏதேதோ பேசுவது போல் சத்தம் கேட்குதடி மகிழ், கிளம்பலாமே, பயமாய் இருக்கிறது" என இப்பொழுது கொற்றவை நடுங்க ஆரம்பித்திருக்க.

"அடடா பெருந்துன்பமடி உன்னோடு. அடுத்த முறை கட்டாயம் உன்னை குடிலில் தான் விட்டு வரப்போகிறேன்".

"முதலில் அதை செய்யடி உனக்கு கோடி புண்ணியம்" என எழுந்தவள் கையோடு மகிழ் கையையும் பிடித்து தூக்கி விட, பெருமூச்சுடன் வேங்கை அம்மனை ஒருமுறை வணங்கி விட்டு எழுந்தாள்.

"திரும்பப் போறா, திரும்பப் போறா, சார்ம் பாக்கப் போறாரு, பாக்கப் போறாரு, பாக்கப் போறாரு, பாத்துட்டாரு ஹை" என இவள் வெட்கப்பட்ட கண்ணை மூடிக்கொள்ள, அமிழ்திறைவன் திரும்பியவளை கண்டு மெய்மறந்து நின்றான். வட்டவடிவ மஞ்சள் நிற முகத்தழகி, அந்த முகத்திலிருந்த தைரியமும், தேஜஸ்ஸும் அவனை வெகுவாகக் கவர்ந்தது. தோழியுடன் பேசும்போது அவள் மூக்கில் இருந்த வளையமும், காதிலாடும் தொங்கட்டானும் அவனைக் கிட்டே அழைத்து தான் பார்த்தது. அப்படியே செல்லவிருந்தவனை தனா தான் பிடித்து நிறுத்தினான்.

வெட்கப்பட்டு கண்ணை மூடிய பாப்பு, "ச்ச என்னையா பாக்கப்போறாரு? நான் ஏன் கண்ண மூடுறேன்" என தனக்கு தானே கேட்டு தலையிலடித்துக் கொண்டு இருவரையும் பார்க்க, அமிழ்திறைவன் அவளை ரசித்து நிற்பதை கண்டு, " என்ன இப்படி தூக்கி சாப்பிடற மாதிரி பாக்றாரு, ச்ச சார்ம் என்ன இந்த மாதிரி ஒரு நாளும் சைட் அடிச்சதில்ல, இடியட்னு திட்ட மட்டும் தான் லாய்க்கு. இப்ப சிச்சுவேஷன் சாங் போட்டா நல்லாருக்கும், மொபைல் தான் இல்ல. வரும்போது அதையும் எடுத்துட்டு வந்துருக்கலாம். இப்ப என்ன நாமளே ஒரு சிச்சுவேஷன் சாங் பாடுவோம்...,

எங்கேயோ பார்த்த மயக்கம்
எப்போதோ வாழ்ந்த நெருக்கம்
தேவதை இந்த சாலை ஓரம்
வருவது என்ன மாயம் மாயம்
கண் திறந்திவள் பார்க்கும் போது
கடவுளை இன்று நம்பும் மனது
இன்னும் கண்கள் திறக்காத சிற்பம்
ஒரு கோடி பூ பூக்கும் வெக்கம்
ஆண் மனதை அழிக்க வந்த சாபம்…
அறிவை மயக்கும் மாய தாகம்

'மாத்தி பாடுறமோ, இந்த ஜென்மத்தில பாத்தத தான ஃபூய்சர்ல பாடனும், நாம அங்க பாத்துட்டு இங்க வந்து பாடுறமே, ம்ச் நியாபகம் இருக்கும் போது தான் பாட முடியும், நீ பாடு பாப்பு' ௭ன முடிவுக்கு வந்து விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தாள்,

இவளைப் பார்த்த இன்பம் போதும்
வாழ்ந்துப் பார்க்க நெஞ்சம் ஏங்கும்......

என இவள் பாட அந்த பெண்கள் இருவரும் ஆண்களை தாண்டி சென்றனர்.

அவர்களை ஃபாலோ செய்து இவர்கள் இருவரும் செல்ல, பாட்டைப் பாடிக் கொண்டே பாப்புவும் பின் தொடர்ந்தாள்.

கொற்றவை மகிழ்தினி கையை விடவில்லை. "கொற்றவை, பதட்டப்படாமல் நான் சொல்வதைக் கேள். நமக்கு பின் வேறு சில அசைவுகளும் தெரிகிறது. அது மனிதனாலா? மிருகத்தினாலா? என தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் நான் பார்த்துக்கொள்கிறேன், பதட்டம் கொள்ளாதே, உன்னை எச்சரிக்கவே இதை சொல்கிறேன்" என்றதும், வேகமாக சுற்றி சுற்றி தலையசைத்து பார்த்தாள் கொற்றவை.

அதன்பின் செல்லும் வழியில் ஒரு வகை மூங்கில் மரத்தை நெருங்குகையில் ஏதோ விளையாட்டாய் ஒடிப்பது போல் இடுப்பில் இருந்து எடுத்த குறுங்கத்தியில் சரட்டென்ற ஒரே வெட்டில் அதை கீறி கையோடு எடுத்து, அதை தன் போக்கில் கூர்மையாக சீவிக்கொண்டு 4 அடி எடுத்து வைக்கவில்லை....,

திடீரென்று சல சல வென அருகில் அதீத சத்தம் கேட்டது, நால்வரும் ௭ன்னவென சுதாரிக்கும் முன், ஆளுயர சிறுத்தை ஒன்று வந்து அவர்கள் முன் வந்து குறுக்கால் மறித்து நிற்க. சற்றும் யோசிக்காமல் தீட்டியதை குறிபார்த்து எறிந்தாள் எதிர்பார்த்ததைப் போல் அகமகிழ்தினி.

கொற்றவை மூச்சை இழுத்துப் பிடித்து நிற்க, இரு ஆண்களும் உதவ முன்வரும் முன், பாப்பு பாடிக்கொண்டிருந்த வாயை மூடாமல் பிளந்து நிற்க, மகிழ் வேலையை முடித்திருந்தாள்.

எல்லோரும் அப்படியே நிற்க, மகிழ்தினி கொற்றவை கையிலிருந்த தீப்பந்தத்தை பிடுங்கிக்கொண்டு சிறுத்தை அருகில் சென்று பார்த்தாள், மொத்தமாக மூங்கில் கம்பு வயிற்றில் இறங்கியிருக்க மயங்கி இருந்தது சிறுத்தை. தீப்பந்தத்துடன் சென்று சில பல இலைகளை பறித்து வந்தவள் அதிர்ச்சியில் இருந்த கொற்றவையை அழைக்க திரும்ப, அமிழ்திறைவன் அவள் கையிலிருந்த தீப்பந்தத்தை வாங்கிக்கொண்டு, "நான் வெளிச்சம் காட்டுகிறேன், நீ அவற்றிற்கு மருந்து போடு வேடத்தி" என்றான் அவளையே அந்த வெளிச்சத்தில் பார்த்து கொண்டு.

அவனை மேலும் கீழும் பார்த்தவள், முதலில் அதைக் காப்பாற்றுவது முக்கியமாக பட, குனிந்து சாரை பிளிந்துவிட்டாள். பின் திரும்பி அவனையும், அவன் பின்னால் தன் தோழியை பார்த்தவாறு நிற்பவனையும் கண்டு முகத்தை சுருக்கி விட்டு, கொற்றவையை காண, அவள் புதிதாக முளைத்த ஆண்கள் இருவரை கண்டு பேயறந்ததைப் போல் நிற்க.

"தாங்கள் இருவரும் யார்? வழி தவறி விட்டீர்களா?" என்றாள் தன் முன்னால் நின்றவனிடம்.

"இல்லை வேடத்தி, தங்களை காணவே வந்தோம். எனது நண்பன் உங்கள் தோழியை காண வந்தான். நான் அவனுடன் வந்தேன், வந்ததால் பொன்னான வாய்ப்பாக தங்கள் வேட்டையை காணமுடிந்தது. என்ன வேகம், என்ன விவேகம், மிகவும் பாராட்டுக்குரியது" என தனாவையும் சேர்த்து போட்டு கொடுத்து நல்ல பிள்ளையானான்.

"எங்கிருந்து வருகிறீர்கள்? உங்கள் தோழன் ஏன் எனது தோழியை காணவேண்டும்? இந்நேரம் வந்து பார்ப்பது எவ்வாறு நல்ல முறையாகும்" ௭ன மகிழ் முறைக்க.

"நேசத்திற்கு ஏது நேரம் காலம் எல்லாம்? எப்பொழுது தோன்றுகிறதோ வந்து பார்த்து விட வேண்டும். நானும் அப்படித்தான். உங்களை எப்போது பார்க்கத் தோன்றினாலும் வந்து விடுவேன் ௭ன்னை நம்பலாம் வேடத்தி" என்றான் இயல்பு போல்.

"என்ன பிதற்றுகிறீர்கள்? நீங்கள் ஏன் என்னை காண வர வேண்டும். கொற்றவை வா செல்வோம், ஏன் அப்படியே நிற்கிறாய்? இவர்களை முன்பே தெரியுமா உனக்கு??" அவளுக்கு கட்டாயம் தெரியாது ௭ன்று அறிந்தே கேட்டாள்.

"இல்லை இல்லை, இதோ வந்து விட்டேன் மகிழ்" என்றாள் அவள். ஆனால் அவள் கை தான் தனா கையில் சிக்கியிருந்தது. அதில் மேலும் நடுங்கி கொண்டிருந்தாள்.

"உனது முழு பெயரே மகிழ் தானா?" ௭ன்றான் அமிழ்திறைவன் அதி முக்கியமாக.

"என் பெயர் எதற்கு உங்களுக்கு? உங்களது ஆடை அலங்காரத்திற்கும், பேச்சு நடவடிக்கைக்கும் சற்றும் பொருந்தவில்லை. என்ன வேண்டும் தாங்கள் இருவருக்கும்?".

"எனது நண்பன் உனது தோழியை காண வந்தான். நான் உடன் வந்தேன், உன்னை போல்".

"என்னது? என்னைப்போன்றா? இந்தப் பேச்சு வழக்கு தான் சரியில்லை என்றேன். உங்கள் தோழருக்கு எனது தோழியை பிடித்திருந்தால் அவள் தந்தையிடம் சென்று பெண் கேட்கச் சொல்லுங்கள். அதை விட்டு இப்படி நடுவழியில் மறித்து நிற்பது எவ்வாறு பொருந்தும்".

"முதலில் நேசத்தை சொல்லி பெண்ணின் சம்மதத்தைக் கேட்டு வந்தோம். கிடைக்குமா?".

"என்ன?" என அவள் முறைக்க,

"சம்மதம் கிடைக்குமா?" என்றேன்.

"என்னிடம் கேட்டால்?, சம்மதம் சொல்ல வேண்டியவள் அங்கிருக்கிறாள்" என்றவள், "கொற்றவை என்ன சிலையாக நிற்கிறாய், பேசி முடிந்ததா?" என முறைக்க.

"வந்துவிட்டேன் மகிழ்" என தனா பிடித்திருந்த கையை உதறி ஓடிவந்தாள்.

இருவரும் ஊருக்குள் நுழைய நடந்துவிட, "மகிழ் பதிலை உடனே சொல்ல வெட்கம் வந்து தடுத்துவிட்டதை அறிவேன். நாளை இதே நேரம் இங்கு காத்திருப்போம், வந்து உன் முடிவைச் சொல்" என கத்தினான் அமிழ்திறைவன்.

திரும்பி முறைத்தவள் விடுவிடுவென நடந்து விட்டாள்.

"நீ என்னடி அவ்வளவு நேரம் போவோம் போவோம் என அனத்திக் கொண்டிருந்தவள், இப்போது நின்று கதையளந்து கொண்டிருக்கிறாய், அதுவும் உரிமையாய் கையை பிடித்துக்கொண்டு" என மகிழ் எறிந்துவிழ.

"சத்தியமாய் எனக்கு சுயநினைவு இல்லையடி. எதிரில் குதித்த சிறுத்தையை பார்த்தே அரண்டவள் நான். இதில் புதிதாய் இருவரை காணவும் பயத்தில் எனக்கு மூச்சே வரவில்லையடி. அவர் எப்போது என் கையை பிடித்தார் என்பதை கூட நான் அறியவில்லையடி" என அவளின் கண்கள் கலங்க.

"எதற்கடி இந்த கலக்கம். நான் நம் தலைவரிடம் சொல்லி யார் என விசாரித்து கவனிக்க சொல்கிறேன்" என்றாள் மகிழ்.

"அவர் அரண்மனையில் படைத்தளபதியாம். இதற்கு முன் இரு முறை என்னை பார்த்திருக்கிறாராம் இதேபோல் இரவில். இன்றும் பார்த்து செல்லவே வந்தாராம், பேச வாய்ப்பமையவும் காதலை சொல்லி விட்டாராம் என்னை மிகவும் பிடித்துள்ளதாக கூறினாரடி. பதிலுக்காக காத்திருப்பேன் என்றும் கூறிச் சென்றிருக்கிறார்" ௭ன்றாள் கொற்றவை குனிந்து நெளிந்து.

"திக் பிரமையில் நின்றதாய் கூறினாய், மொத்த விபரமும் மண்டையில் ஏற்றியிருக்கிறாய். தளபதியாரை மணந்து அரண்மனை வாசம் செய்ய முடிவு எடுத்தாகி விட்டது போல?" என்றபோது மகிழ்லின் குடில் வந்துவிட்டிருந்தது.

"ஐயோ மகிழ் என்னடி இப்படி ஏதோ போல் பேசுகிறாய். எனது காதில் விழுந்ததை சொன்னேன். அவ்வளவு நேரம் நின்றும் அவர் முகத்தை கூட நான் சரியாக பார்க்கவில்லை தெரியுமா?".

"ஓ! இப்ப அது தான் தங்களின் வருத்தமாக உள்ளதோ? அது தான் நாளையும் வருவதாய் கூறியுள்ளாரே சென்று நன்றாக பார்த்து விடுவோம்" என மகிழ் நக்கலாக கூற.

"போ மகிழ், நீ என்னை வம்புக்கு இழுக்கிறாய். நான் குடிலுக்கு போகிறேன். நீ உள்ளே போ" என்று விட்டு அவள் குடில் நோக்கி நடந்து விட, "வேங்கை அம்மா நீயே துணை" என்று வேண்டிக் கொண்டு சென்று படுத்தாள் மகிழ்.

காட்டினுள் "என்ன இளவரசே இப்படி திடீரென்று அவர்கள் முன் சென்று நின்றுவிட்டீர்கள். என்னால் என்ன செய்வதென முடிவெடுக்க முடியாமல் அவசரகதியில் ௭ன் மனதை சொல்லி விட்டு வந்திருக்கிறேன்".

"கிடைத்த வாய்ப்பை உபயோகப் படுத்தி விட்டாய் அல்லவா இதற்கு நீ எனக்கு நன்றி உரைக்க வேண்டும்".

"அதில்லை அவள் என்ன முடிவெடுப்பாளோ என பயம் வருகிறது".

"எனது தளபதியை யாரால் மறுக்க முடியும். நிச்சயமாக நீயும், உன் காதலியும் மனமொத்த தம்பதியராக வாழ நான் பொறுப்பு. நாளை வந்து முடிவை தெரிந்து கொள்ளலாம்".

"தாங்கள் எனக்காக வருவதுபோல் கூறுவதாக தெரியவில்லையே...",

"இளவரசனயே சந்தேகிக்கிறியா?" ௭ன திறைவன் மீசையை நீவி விட.

"இல்லவே இல்லை இளவரசே. உறுதியாகவே உறைக்கிறேன். தாங்கள் எனது காதலின் பதில் தேடி வருவதாக தெரியவில்லை, புராரிவன அரசியை தேடி வருவதாகத்தான் தெரிகிறது. நாளையும் வர வேண்டும் அப்படித்தானே. ஏன் கேட்கிறேன் என்றால் எனக்கான பதிலை அறிய தாங்களும் அலைய வேண்டிய அவசியம் இல்லை" என்றான் தனா சிரிப்பை அடக்கி.

"அதெப்படி எனது நண்பனின் காதல் எனது பொறுப்பு என்றானபின் பாதியில் எப்படி விலக முடியும்".

"அதுவும் சரிதான்" என இவன் சிரிக்க, உடன் சேர்ந்து மலர்ந்து சிரித்த இளவரசன், "உனக்குத் தான் நன்றி கூற வேண்டும் தனா, உன்னாலேயே எனது ராணியை இன்று நான் காணமுடிந்தது. இல்லையேல் சிற்றன்னையிடம் பொறுப்பை ஒப்படைத்தது போல் அவர்கள் பார்க்கும் பெண்ணையே மணமுடிக்கும் சூழ்நிலையில் சிக்கியிருப்பேன். நீ என்னை காத்து விட்டாய்".

"எதிரில் மிருகம் வந்து நின்றும் துணிந்து வேட்டையாடிய பெண் நம் நாட்டின் அரசியாக வருவது எங்களின் பாக்கியம் இளவரசே" என்றதும், அவனை தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டான் அமிழ்திறைவன்.

பல நாட்கள் கழித்து நண்பர்களாக இருவரும் பேசிக் கொண்டது போலிருந்தது இருவருக்கும்.

இருஇருவராக பிரிந்து சென்றாலும் நால்வர் பேசியதையும் கண்ணால் கண்டாள் பாப்பு. அவளுக்கோ ஆச்சர்யம், "என்ன வந்தாங்க? அர்த்தராத்திரியில் ரெண்டு புரோபோசல் ஈசியா முடிச்சுட்டாங்க, கிளம்பிட்டாங்க. இந்த ஓல்ட் பாப்பு என்னென்னா அவ்வளவு ஈசியா சிறுத்தைய எதிர்த்து நிற்கிறா? நாம அதனாலதான் இந்த ஜென்மத்திலும் தப்ப தட்டி கேக்குறதுல அப்படி தைரியமா நிக்கிறோம் போல. இது புரியாம இந்த வடிவு நம்மள என்னெல்லாம் திட்டிருக்காங்க. போயி முன்ஜென்மத்துல சிறுத்தைய எதிர்த்து நின்ன கதைய சொல்லி ஒரு ஃபிரேம் பண்ணி ஹால்ல மாட்டணும், அப்பதான் நம்ம ஹிஸ்டரி வாரவங்களுக்கும் தெரியும், போய் வச்சுக்கிறேன்" என சபதம் எடுத்தாள்.

அரண்மனையில்.......

"அண்ணனை சென்று பார்த்தாயா பாவை?" ௭ன்ற அன்னையின் கேள்விக்கு, "ஏன் அவன் வந்து என்னை பார்த்து செல்லலாமே".

"ஏன் இந்த பிடிவாதம் பாவை?",

"எதிலும் அவனுக்கு ஏன் முன்னுரிமை? சாப்பாட்டில் ஆரம்பித்து இப்போது கல்யாணம் வரை. என்னை தானமாகவா வாங்கினீர்கள்?".

"அரசவையில் வீற்றிருப்பவன் தனியாக வீற்றிருக்கலாகாது பாவை, அதற்கே அவனுக்கு முதலில் திருமணம். நீ போய் அவனை சந்திப்பதற்கு இதெல்லாம் ஒரு காரணம் என கூறிக் கொண்டே இருக்கிறாய்?".

"இதுவே அவன் உடன் பிறந்த தங்கை எனில் அவனே வந்து பார்த்திருப்பான் தானே" என்றாள் பாவை, சிற்றன்னை அதிர்ச்சியில் நின்று விட்டார்.
 
அத்தியாயம் 7

"என்ன பேசுகிறாய் பாவை, எதற்காக அவன் மீது உனக்கு இவ்வளவு கோபம். தாய் வேறாயினும் அவன் உன் உடன் பிறந்தவன். அவன் மீது நீ இவ்வளவு வருத்தத்தை சேர்த்து வைத்திருப்பது நல்லதில்லை. என்ன பிரச்சினை என்று கூறு?" ௭ன சற்று கோபமாகவே விசாரித்தார்.

"கூறிவிட்டால் சரி செய்து விடுவீர்களா? திருப்பித் தர முடியுமா என் நாட்களை? சிறிய வயது முதல் இன்று வரை என்னை விட அவனே உங்களுக்கு ஒரு படி மேல் எல்லா விஷயத்திலும். சிறுவயதில் நான் எனக்கென வைத்திருந்த குதிரையை அவன் கேட்டான் ௭ன்பதற்காக பிடுங்கி கொடுத்தீர்கள், நானும் வால் பயிற்சி செய்கிறேன் என வந்தவளை ஆண் வாரிசு இருக்கையில் உனக்கு எதற்கு என விளக்கி வைத்தீர்கள், யாருக்காக அவனுக்காக. அவன் பிறந்த தினத்தை கொண்டாட ஆயிரம் பேருக்கு அன்னதானம், என் பிறந்த தினம் மட்டும் என் தோழிகளுடன் முடிந்து விடும். எல்லாவற்றிற்கும் மேல் எனக்கே எனக்கென என்னுடன் விளையாடிய எனது பால்ய தோழன் (தனார்த்தனன்) என்னுடன் குருகுலம் வந்தவனை என்னிடம் இருந்து பிரித்து அவனுடன் கோட்டைக்கு வெளியே குருகுலம் அனுப்பினீர்கள். இன்றுவரை எனது நட்பை என்னால் மீட்க முடியவில்லையே, இது போல் ஏராளம் நான் கூறுவேன் ௭ல்லாவற்றயும் திருப்பி தர இயலும் என கூறுங்கள் இப்போதே அவனை சென்று பார்த்து வருகிறேன், முடியுமா உங்களால்......" என அரற்ற ஆரம்பிக்க.

'சிறு சிறு விஷயங்களை பெரிதாக்கி, தன்னைத்தானே வருத்திக்கொண்டு தமையன் மீது பகையையும் வளர்த்துக் கொண்டிருக்கிறாள். சிறிய பெண் என்பது சரியாகத்தானே இருக்கிறது' என நினைத்த கோதை, மற்ற விஷயங்களை விடுத்து, "இங்கே பார் பாவை சிறுவயதில் உனக்கு எது எது தேவை என பார்த்துத்தான் ஒவ்வொன்றையும் செய்திருக்கிறோம். திறைவன் நாடாளப் போகிறவன் என்பதால் மட்டுமே கூடுதல் கவனிப்பு. அதுவும் அவன் உலகை அறிய வேண்டும், மக்களை அவனும், அவனை மக்களும் அறிய வேண்டும் என்பதற்காக. நீ இன்னொரு இடத்திற்கு சென்று ராணியாக வீற்றிருக்க போகிறவள் அதனால் இங்கு நீ சுகமாக தோழிகளுடன் மகிழ்ச்சியாக இருப்பது போதும் என பார்த்து பார்த்து செய்ததை, நீ தேவையற்ற காரணமாக அடுக்கிக் கொண்டு இருக்கிறாய். இதோடு விளையாட்டு பொம்மை போல் தனாவை சேர்த்து கூறுவதை வெளியே சொல்லி கொண்டு இருக்காதே. அவன் நம் தேசத்து படைத்தளபதி, தற்போது பெரிய ஆண்மகன். நீ பேசியதைப் பார்த்தால் அவனிடம் பேச முயற்சிப்பது போல் தெரிகிறது. இனி அதை செய்யாதே நீ திருமணமாகி போக, இருக்க, தடை எதுவும் இருக்கக்கூடாது. திறைவன் திருமணம் முடியவும், அவனும் இளவரசியும் ௭ன இருவருமாக சேர்ந்து உனக்கு மணாளன் தேர்ந்தெடுத்து, உன் சிறுவயது முதல் இப்போது வரை உள்ள குறைகளையெல்லாம் தீர்த்து விடும்படி கோலகலமாக உனது திருமணத்தை நடத்த சொல்கிறேன். தேவையில்லாத மனக் கஷ்டத்தை ஒதுக்கி, நிம்மதியாக இரு" என அவள் கன்னம் தடவி அறிவுரையோடு வெளியேறினார் கோதை.

"இளவரசி" ௭ன இகழ்ச்சியாக நினைத்து கொண்டாள்.

"அப்போ எப்படி இருந்தாளோ இப்பவும் அப்படியேதான் இருக்கா, சுதந்திரமா எந்த வேலை வெட்டியில்லாம. இப்ப இவ இவ்வளவு வருத்தப்படுறளவுக்கு என்ன நடந்துட்டு..., சொந்தமா ஒரு வேல செஞ்சுருப்பாளா?? காலையில எந்திக்க வேண்டியது, பல்லு விளக்கி விடவும், மஞ்ச பூசி குளிப்பாட்டிவிட்டு, சாம்பிராணி போட்டு, மேக்கப் பண்ணிவிட்டு, ஒரு வண்டி நகைய அள்ளி மாட்டிவிடறது வரைக்கும், செய்றதுக்கு நாலு அல்லக்கை, தோழிகள்ன்ற பெயரில். அப்புறம் சாப்பிட வேண்டியது, பல்லக்குல கோயில், குலம்னு போயிட்டு வந்து மறுபடியும் சாப்பிடுறது உறங்க வேண்டியது. மறுபடியும் ஒரு மேக்கப் போட்டுட்டு, பி.இ.டி பீரியட் கணக்கா விளையாட வேண்டியது, மறுபடியும் சாப்பிட வேண்டியது, தூங்கிற வேண்டியது. இப்படி ஒரு வாழ்க்க வாழ்ந்துட்டு என் சார்ம் மேல 1008 குறை வேற. ஆளும், மூஞ்சியும்" என திட்டி தீர்த்தாள் பாப்பு.

அங்கு கொள்ளி மடத்தில்.,

முதல் நாள் இரவு ஆண்கள் இருவரும் பேசி சென்றிருக்க, மகிழ் எதையும் கணக்கில் எடுக்காமல் எப்பவும் போல் இருக்க, உடனிருக்கும் கொற்றவை தான் ஏதோ சிந்தனையுடன் நகத்தை ரத்தம் வருமளவிற்கு கடித்து துப்பி புண்ணாக்கி இருந்தாள். அவளை கண்டும் காணாமலும் வாசலில் திணை நெல்லை காயவைக்கும் வேலையில் இருந்தாள் மகிழ்.

நக இடுக்கில் வலி எடுக்கவே, தன்னைத்தானே கடித்துக்கொண்டு, "என்ன மகிழ் நகத்தை கடிக்காதே என தட்டிவிட மாட்டாயா? இப்பொழுது பார் பேயாய் வலிக்கிறது" ௭ன அதற்கும் அவளை குற்றம் சொல்ல.

"அப்படி எந்தக் கோட்டையில் கொடியை நட்டுவது பற்றி அம்மனி சிந்தித்துக் கொண்டு இருந்தீர்கள். கவனம் சிதறி கோட்டையை பிடிக்க முடியாமல் போய்விட்டால், அதான் நான் தடுக்க முயலவில்லை" முறைத்து கொண்டு பதில் கொடுத்தாள் மற்றவள்.

"உனக்கு எப்போதும் விளையாட்டு தான். எனக்கு வலி உயிர் போகிறது" ௭ன கொற்றவை கையை உதற.

மகிழ் அவளை முறைத்து கொண்டே ௭ழுந்து விறுவிறுவென குடிலின் உள்ளே சென்றவள், எலுமிச்சை பழத்தை சிறு துளையிட்டு எடுத்து வந்து மிகவும் பாதிக்கப்பட்டிருந்த அவள் விரலில் மாட்டி வைத்து விட்டு நறுக்கென்று கொட்டவும் செய்தாள், பின் வேலையைக் கவனித்தவாறு, "என்ன சிந்தனையில் இருக்கிறாய்? கேட்டால்தான் சொல்லும் முடிவில் இருக்கிறாயோ?" ௭ன்க.

"அதில்லையடி, அது ஒரு சின்ன விஷயம், வேறொன்றுமில்லை. இனி அதை சிந்திக்கப் போவதில்லை விடு" என்று விட மகிழும் வற்புறுத்தாமல், "சரி போட்டும், வா அரிசியை இடிக்க அல்லலாம்" என அழைக்க..., இருவரையும் வேலையை இழுத்துக்கொண்டது.

அன்றைய பொழுது அப்படியே கடந்திவிட, மறுநாள் காலை கொற்றவை மகிழை தேடி வரவில்லை. இதுவரை ஒரு நாளும் இப்படியில்லை. இருவரும் தூங்க மட்டுமே அவரவர் வீடு செல்வர். அது கூட இல்லாமல் விளையாண்டு விட்டு இருந்த இடத்திலேயே இருவரில் ஒருவர் குடிலில் சேர்ந்து தூங்கிய நாட்களும் அதிகம், மூன்று வேளை உணவும் சேர்ந்தேதான் எடுப்பர். அவள் வாழ்க்கையிலேயே இன்றுதான் பொழுது விடிந்து இவ்வளவு நேரம் ஆகியும் கொற்றவை அவளை தேடி வராதது.

"அம்மை நான் சென்று கொற்றவையை பார்த்துவிட்டு வருகிறேன்".

"ஏன் இன்று இன்னும் அவளை காணவில்லை, கொதி நிலையிலும்(காய்ச்சல்) உன்னை காணாமல் இருக்க மாட்டாளே. என்னவாகிற்று?" என்றார் அஞ்சலை.

"தெரியவில்லை அம்மை பார்த்து வந்து சொல்கிறேன்" என்றவள் ஒரே ஓட்டமாக அவள் குடிலில் சென்றுதான் நின்றாள்.

வீட்டின் வெளியே பூப்பறிக்கும் கூடை இல்லை. அவள் அம்மா, அப்பா இருவரும் பூ பறித்து மாலை கோர்த்து விற்கும் பணியில் இருப்பவர்கள். வெளியில் கூடை இல்லையெனில் காட்டுக்குள் பூ பறிக்க சென்றிருக்க வேண்டும், இவள் மகிழை விட்டு செல்ல மாட்டாள், அவ்வாறெனில் உள்ளே தான் இருக்க வேண்டும்.

ஓலையிலான தட்டியை தள்ளிக்கொண்டு நுழைந்த மகிழ், "கொற்றவை என்ன செய்கிறாய் இன்னும்" என அழைத்துக் கொண்டு உள்ளே செல்ல, அவளோ ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள்.

"சூரியன் உச்சிக்கு வரப்போகிறது இன்னும் என்னடி உறக்கம். உனது அம்மை எப்படி உன்னை எழுப்பாமல் சென்றார்கள்" என அடித்து எழுப்பிய பின், "இரவெல்லாம் தூங்கவேயில்லை மகிழ் விடு நான் கொஞ்ச நேரம் தூங்குகிறேன்".

"ஏன் விடிய விடிய தூங்காமல் என்ன செய்தாய்? வேங்கையின் காவலுக்கு துணைபுரிந்தாயோ?" என்றாள் அவளை இழுத்து உட்கார வைத்து.

"விடடி அவ்வளவு தைரியமிருந்தால் இரவு காட்டுக்குள் சென்று வந்திருப்பேனே. அது முடியாமல் தானே தூக்கம் பிடிக்காமல் உலாத்திக் கொண்டிருந்தேன்" என தூக்க கலக்கத்தில் உளற...,

"என்ன? என்ன சொல்கிறாய். எதற்கு காட்டுக்கு செல்ல வேண்டுமென்கிறாய்" என மகிழ் அவளை உலுக்கிய உலுக்கில் சுயநினைவு பெற்று, தூக்கம் தெளிந்து 'அய்யோ உளறி விட்டோமோ?' என நாக்கை கடித்து, சலிப்பாக, "ஐயோ மகிழ் நன்றாக விடிந்து விட்டது. அம்மை வந்து வாசலில் கோலத்தை எங்கே என்றால் நான் என்ன செய்வேன். சற்று சீக்கிரம் வந்து எழுப்பி இருக்க கூடாதா? வா நீ தான் நன்றாக வேகமாக கோலமிடுவாய், நான் கூட்டித் தெளிக்கிறேன், நீ கோலமிடு" என வேகமாக ஓடி விட, அவளை ஒரு மார்க்கமாக பார்த்தாலும் எழுந்து சென்று கோலமிட்டாள் அகமகிழ்தினி.

பின் இருவரும் அவள் குடிலுக்குச் சென்று உணவை முடித்து விட்டு வாசலில் வந்து அமர்ந்து வேடிக்கை பார்த்திருக்க, சற்றுத் தள்ளி சிறு பிள்ளைகள் ஒழிந்து விளையாடும் விளையாட்டு விளையாண்டுக் கொண்டிருந்தனர், கண்ணைப் பொத்தியிருந்த பெண் ஒழிந்து கொண்டவர்களை சுற்றி தேட ஆரம்பித்தவாறு நடக்க, மகிழ் இங்கிருந்தே ஒழிந்து கொண்டிருந்தவர்களின் இடத்தை காண்பித்த கொடுத்தாள், அந்த குழந்தையும் சந்தோஷமாக அனைவரையும் கண்டுபிடித்தது. அடுத்தடுத்து கண்ணைப் பொத்தியவர்களுக்கும் இவள் இப்படியே சொல்லிக் கொடுக்க, பின்பே சுதாரித்த குழந்தைகள் இவளிடம் சண்டைக்கு வர, "நான் யாருக்கும் பாரபட்சம் பார்க்கவில்லை தானே. நியாயமாக நீங்கள் எனக்கு நன்றி தான் சொல்ல வேண்டும்" என்க.

"எப்பொழுதும் உனக்கு இதே வேலையாகி விட்டது அக்கா, நாங்கள் நேர்மையாகவே எங்கள் விளையாட்டை விளையாண்டு கொள்கிறோம். தயவு செய்து நீ உதவி மட்டும் செய்யாதே" என்றுவிட்டு தங்களுக்குள், "இனி கள்ளாட்டம் இல்லை என சத்தியம் செய்யுங்களடா" என சபதம் மேற்கொண்டு விட்டு விளையாட்டைத் தொடர்ந்தனர்.

"சரிதான் போங்கடா என்றைக்குனாலும் இந்த மகிழ்தினியை தேடித்தான் வரவேண்டுமாக்கும் பாத்தியாடி கொற்றவை....." என்றவாறு தோழி பக்கம் திரும்ப, அவள் விட்டத்தை பார்த்து அமர்ந்திருக்க, அவளை நெருங்கி அமர்ந்து அவள் பார்த்த திசையை தானும் பார்த்து 'அப்படி என்ன தெரிகிறது' என்பதுபோல் நிமிர்ந்து பார்த்த மகிழ், அங்கு மழை வருவதற்கான அறிகுறியாக கருமேகங்கள் மட்டுமே சூழ்ந்து தெரிய, தலையில் அடித்து கொண்டவள் "ம்கூம் முத்தி விட்டது. இவள் கட்டாயம் கோட்டையில் கொடியை நட்டு விட்டுத்தான் மறு வேலை பார்ப்பாள் போல்? தீவிர சிந்தனை தான், நாடு தாங்குமா என்று தான் தெரியவில்லை" என புலம்ப.

அதுவும் கொற்றவை காதை சென்றடையாமல் போய்விட, "ஏண்டி கொற்றவை அங்க பாரு, அவரைப் பார்க்க பௌர்ணமி இரவில் நாம் காட்டுக்குள் பார்த்தோமே, உன்கிட்ட உன் கையை பிடித்து நின்று பேசி கொண்டிருந்தாரே அவரைப்போல் இல்லை?" என்றதும்....

"எங்கே மகிழ், எங்கே மகிழ்? நீ சொல்கிறவர்" என பரபரக்க.

கையை பின்னால் நன்றாக ஊன்றி சாய்ந்து அமர்ந்து கொண்டு திரும்பி கொற்றவையை நிதானமாகப் பார்க்க, தேடிக்கொண்டிருந்த கொற்றவையும் பதில் சொல்லாத தோழியை திரும்பிப் பார்த்து அவள் பார்வையை புரிந்து கொண்டு, "அவசரப்பட்டு விட்டோமோ?" என பாவமாய் முழித்து, பின் சமாளிப்போம் என முடிவெடுத்து, "அது வந்து மகிழ் அன்று காட்டுக்குள் திடீரென வழிமறித்தது போல் இன்றும் வீடுவரை வந்து விட்டனரோ என பயந்து பதறி முற்றுவிட்டேன்" என வேகமாக கை கால்கள் நடுக்கமுற கூற.

"இன்னும் பதட்டம் போகவில்லை போல் தெரிகிறதே கொற்றவை, அவர்தான் அடுத்து உன்னை தேடி வரவில்லையே".

"மறுநாள் காட்டுக்குள் தானே வருவதாக சொன்னார், நாம் தான் செல்லவில்லையே. வந்தாரோ? வரவில்லையோ? நாம் எப்படி அறிய முடியும்".

"ஓ! அப்படி வேறு ஒரு விஷயமிருக்கோ" என யோசித்தவாறு கொற்றவையை கடைக் கண்ணால் நோக்கிக் கொண்டு, "பேசாமல் ஒன்று செய்வோமே. இன்று போய் நேற்று நீங்கள் வந்து காத்திருந்தீர்களா? இல்லையா? என அவர்களிடமே கேட்டு வந்து விடுவோமே? நீ என்ன சொல்கிறாய்?" என்க.

"அதற்கு அவர் இன்றும் வருவாரா என தெரியாதே" என சோகமாக கூற...,

பொறுமையை பறக்க விட்ட மகிழ், "அவ்வாறெனில் தாங்கள் செல்ல சித்தமாகத்தான் இருக்கிறீர்கள். அப்படி அவர் அன்று உன்னிடம் என்னடி கூறினார், இப்படி நீ சித்தம் பிசகி சுற்றுமளவிற்கு?". தோழி தன்னை கண்டு கொண்டாள் என்பதில் கலவரமான கொற்றவை திருதிருவென விழிக்க.

"உண்மையை சொன்னால், என்னால் இயன்ற உதவியை செய்ய விளைவேன்",

"மகிழ், அந்த பாதி இருட்டு பாதையில் அவர் முகத்தை கூட நான் சரியாக பார்க்கவில்லையடி. அவர் குரல் மட்டுமே இப்போதும் என் காதில் குறுகுறுத்து கொண்டிருக்கிறது" ௭ன்றாள் தலையை குனிந்து.

"இன்னும் உன் அவர் ௭ன்ன கூறினார் ௭ன்று கூறவில்லை" மகிழ் கேக்க.

'நான் தனார்த்தனன், புராரி வன தேசத்தின் படை தளபதி. இதற்கு முன் இரண்டு முறை இதே காட்டில் பௌர்ணமியன்று உன்னை கண்டிருக்கிறேன். தூரமாகவே நின்று பார்த்துவிட்டு சென்றுவிடுவேன். உங்கள் இருவரில் சுற்றி சுற்றிப் பார்த்துக் கொண்டு, பயந்து பயந்து விழியை உருட்டி, வாய் ஓயாமல் எதையோ அணத்திக் கொண்டு வரும் உன்னிடமிருந்து பார்வையை அகற்ற மிகவும் சிரமப்படுவேன். எப்பொழுதும் இந்த முகத்தை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும், உன் பயத்தை போக்கி நான் இருக்கிறேன் என்று சொல்ல வேண்டும், இந்த வாய் பேசுவதை கிட்ட இருந்து கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும், இதெல்லாம் நடக்க வேண்டுமென்றால் நீ எனக்கே எனக்கென்று வேண்டும், நாளை இதே நேரம் இங்கு காத்திருப்பேன் உனது அங்கிகரீப்பிற்காக' இப்படி தான் கூறிச் சென்றார்" கொற்றவை சொல்ல.

"பார்றா விஷா போட்டு தாக்கிருக்கான். நாமளும் ஹீரோ ஹீரோயின் மீட்டிங்குல கவனம் வச்சு, இந்த லைவ்வ மிஸ் பண்ணிட்டமே. கள்ளபய இவன் தெரியாமலா என் அக்கா வெள்ளபாச்சாவ ஸ்வாகா பண்ணான், தெரிஞ்சேதான் பண்ணிருப்பான்" பாப்பு மைண்ட் வாய்ஸில் நினைக்க.

மகிழ் அமைதியாக அமர்ந்திருக்க, பயந்த கொற்றவை மகிழ் கை பிடித்து "இப்படித்தான் சொன்னாரடி. அப்போதிலிருந்து உள்ளுக்குள் என்னென்வோ செய்கிறது. என்வென்றுதான் சொல்ல தெரியவில்லை. ஆனால் அவர் குரல் மட்டுமே துரத்திக்கொண்டே இருக்கிறது. நேற்று இரவு காத்திருப்பேன் வந்து பதில் சொல் என்று சொல்லியிருந்தார், அதனால் எனக்கு தூக்கம் கூட பிடிக்கவில்லையடி" என கலங்கியவாறு கொற்றவை சொல்லி முடிக்க.

"கவலையை விடு, இன்று இரவு போய் பதிலை கூறி விடுவோம். உன் பதில் வேண்டுமெனில் கட்டாயம் இன்றும் வருவார் உன் தனார்த்தனன்" என மகிழ் சிரிக்க.

அதிர்ந்த கொற்றவை, "என்ன பதிலடி கூற சொல்கிறாய்".

"அதை நீ தான் முடிவு செய்ய வேண்டும். வா நேரம் மதியத்தை நெருங்கிவிட்டது, உண்ண எதுவும் செய்வோம்" என எழுந்து சென்று விட்டாள் மகிழ்.


இரவில் காட்டில்

இளவரசன் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருக்க, தனா சோகமே உருவாய் மரத்தடியில் பச்சை பில்லை பிடுங்கி கொண்டு அமர்ந்திருந்தான். அவன் அருகே பாப்புவும் பில்லை பிடுங்க முயற்சித்தவாறு சம்மணமிட்டு அமர்ந்திருந்தாள்.

"ஏன் தனா இந்த பெண்கள் இன்றும் நம்மை ஏமாற்றி விடுவார்களோ? நேற்று போல் இன்றும் விடிய விடிய காத்திருக்க வேண்டி இருக்குமோ?" ௭ன படபடக்க.

"காதல்ல சொன்னவனே கம்முனு இருக்கான், இந்த சார்ம்க்கு ௭துக்கு தான் இவ்வளவு பதட்டமோ" இது பாப்பு.

"அவர்கள் பௌர்ணமி அன்று மட்டுமே வருவார்கள். பெண் பிள்ளைகளை எப்படி தினமும் காட்டினுள் தனியாக விடுவார்கள்? அது தான் நேற்று வரவில்லை ௭ன்று நினைக்கிறேன், ஆனாலும் ௭னக்கு பதில் சொல்ல வேணும் வந்திருக்கலாம்" ௭ன்றான் சோகமாக.

"அவ்வாறெனில் பௌர்ணமி அன்று மட்டும் காட்டினுள் சென்று வாருங்கள் என அவர்கள் வீட்டில் அனுப்பி விடுகின்றனர் என்கிறாய்",

"அப்படியில்லை, ஒரு நாள் என்பது தினசரி வாடிக்கை காட்டிலும் எளிது".

"ஒரு நாள் வர முடிந்தவர்களால், பதிலுக்கு காத்திருக்கும் நமக்காக கூட ஒரு நாள் வர முடியுமே?".

"அதற்கு அவர்களுக்கு பதில் சொல்ல விருப்பம் இருக்க வேண்டுமே" எனத் தனார்த்தனனுக்கு பெருமூச்சு வர.

"நீ ஒன்றும் கவலைப்பட வேண்டாம் தனா, இன்று மட்டும் அவர்கள் வரவில்லை எனில் நாளை அவர்கள் தந்தையை நேரடியாகப் பார்த்துப் பேசி முடிவுக்கு வந்து விடுவோம்".

அதில் மகிழ்ந்த தனா " நன்றி இளவரசே., உங்களுக்குத்தான் என் மீதும் என் காதல் மீதும் எவ்வளவு அக்கறை. நினைக்கும்போதே புல்லரிக்கிறது இளவரசே. எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நீங்களே எனது இளவரசராக வரவேண்டும்".

"உன் சித்தம் அதுவே என்றால் அப்படியே நடக்கட்டும். எனக்கு ஒன்றும் ஆட்சேயபனை இல்லை. அப்புறம் இன்னொரு விஷயம் தனா, லிங்கேஸ்வரர் முன் வழிப்போக்கர்கள் மடம் போன்று அமைக்க வேண்டும் சற்று அமர்ந்து செல்ல ஏதுவாக கல் மேடை அமைப்பில்".

"நேற்று முழுவதும் காத்திருந்து நின்று நின்று கால் வலித்தும், உங்களுக்காக கூட தாங்கள் அந்த மேடை கேட்கவில்லையே நீங்கள்? மறுபடியும் புல்லரிக்கிறது இளவரசே" ௭ன்றான் தனா.

"புல்லு மேல உக்காந்திருந்தா புல்லு அரிக்காம, நட்டுவாக்காலியா வந்து அரிக்கும் லூசு விஷா, ரொம்ப தான் ஓவரா பொங்குற" ௭ன்றாள் பாப்பு.

பாப்புவிற்கு விஷா(தனா) மட்டுமே இயல்பாய் தெரிந்தான். அவனிடம் மட்டுமே கடந்த காலம் ௭ன்பதை மறந்து பேசி விடுவாள். சார்ம்மை படத்தில் பார்ப்பது போல் பார்பாள். கொற்றவையும் மகிழும் பழங்காலம் ௭ன்பதை பார்த்ததும் நியாபக படுத்தி விடுவர். விஷா நண்பன் ௭ன்பதால் அவன் உடை செயல் ௭ன ௭தயும் கண்டுக்காமல் சாதாரணமாக அவள் மனம் கடந்துவிடும்.

"வீண் பேச்சு பேசாமல் கல் மேடை ஏற்பாடாகும் வேலையைப் பார்" ௭ன்றான் இளவரசன்.

"இவனுங்க என்னத்த இப்படி படம் ஓட்டிட்டு இருக்கானுங்க. நம்ம காலத்துல இங்க உக்காருர மாதிரி கல் திண்டு எப்படி வந்ததுன்னு இப்பல்ல தெரியுது. இவனுங்களுக்கு இந்த லவ் பகல்லலா வராதோ? தினமும் நைட்டு காட்டுக்கு செக்யூரிட்டி வேல பாக்குறானுங்க. ஆனா மதியமே, இன்னைக்கு காட்டுக்கு போணும்னு முடிவு பண்ணுன அந்த ரெண்டு பீஸ்கள ஏன் இன்னும் காணும்" என தனா அருகில் அமர்ந்து அவனை போலவே வழி மீது விழி வைத்து காத்திருந்து பார்த்திருந்தாள் பாப்பு.

இரவு நேர நிசப்தம், காடு சுற்றி இருட்டு, புசுபுசுவென்று காற்றின் ஓசை, ஒருவித பயத்தை கொடுக்க, அவன் அருகில் இன்னும் நன்றாக தள்ளி அமர்ந்து கொண்டாள்.

பயம் போக இளவரசனை சைட்டடிக்க ஆரம்பித்தாள். அவளைப் பொறுத்தமட்டில் அவனை நிறைய படங்களில் வெவ்வேறு தோரணையில் பார்த்திருக்க, இதுவும் ஒரு படம் போல் தான் தோன்றும், அதனால் அவனை திறந்த வாயை மூடாமல் பார்த்தாள். "சிரிச்சா ௭வ்ளோ அழகா இருக்காங்க" ௭ன பார்த்திருந்தாள்.

யாரோ நடந்து வரும் ஓசை கேட்டு இளவரசன் நடை நிற்க, மூவரும் சத்தம் வந்த திசையை பார்த்தனர். இரு பெண்களும் வேங்கை அம்மன் கோவில் சென்று தேடிவிட்டு இங்கு வந்திருந்தனர், விளக்கை ஏந்தியவாறு மகிழ் முன்வர, திரு திரு முழியோடு கொற்றவை பின் வந்தாள்.

"வேடத்தி" என இளவரசன் வேகமாக அவர்கள் முன் செல்ல, தனார்த்தனனும் வேகமாக தனது காதலி வந்துவிட்டாள் என்ற சந்தோஷத்தில் எழுந்தான்.

"என்ன இவ்வளவு ஸ்பீடா ரெஸ்பான்ஸ் பண்றானுங்க. அடேய் விஷா, இந்த அகிலு உன் காதல் பயிர வளக்கலடா, அவரு காதல் பயிர வளக்கத்தான் பறக்குறாரு. ரெண்டு மாசம் தாக்கு பிடிப்பாரான்னு தெரியல ராசா. இல்லனா அந்த பாவமு உனக்குத்தான் பாத்துக்கோ" என புலம்பி கன்னத்தில் கை வைத்து அடுத்த சீன் பார்க்க தயாரானாள் பாப்பு.
 
அத்தியாயம் 8


தன்னை நோக்கி வேகமாக வந்த அமிழ்திறைவனை கண்டு அப்படியே நின்று விட்டாள் மகிழ், திரும்பி கொற்றவையிடம், "என்ன பேச வேண்டுமோ சீக்கிரம் பேசிவிட்டு வா, நான் இங்கேயே நிற்கிறேன்" ௭ன்க.

"பயமாக இருக்கிறதடி" கொற்றவை கைகளை உதற.

"இவ்வளவு தூரம் வந்தாயிற்று இனி என்ன பயம், சென்று விரைவில் வா, நேரம் செல்கிறது" என மகிழ் முறைப்போடு சொல்ல. அவள் அப்போதும் அங்கேயே நிற்க, ஆண்கள் இருவரும் இவர்களை அடைந்திருந்தனர்.

"நேற்று ஏன் வரவில்லை வேடத்தி, உனக்காக நான் இரவு முழுவதும் காத்திருந்தேன் தெரியுமா? இன்றும் நீ வரவில்லை ௭னில், நாளை உன் இருப்பிடம் தேடியே வர ௭ண்ணியிருந்தேன்" என உரிமையாக கோபித்துக்கொண்டான் அமிழ்திறைவன்.

இதைக் கேட்ட மற்ற மூவரும் அதிர, முந்தி கொண்ட தனா, "வணக்கம் இளவரசி" என்றான்.

"சரிதான், இவனுங்க 2 பேரும் முடிவோட தான் இருக்கானுங்க, நீங்க வீடு தேடி போவீங்க ராசாக்களா, அங்க வடிவு சைடு கொண்டயும், ஏத்தி கட்டுன சேலையுமா, கையில உலக்கையோடல்ல வரவேற்கும், இப்ப இருக்க வடிவோட ஆக்ஷன் தெரியும், பழைய வடிவு ௭ப்டின்னு தெரிலயே...." இது பாப்புவோட யோசனை.

"இளவரசியா?" என்றாள் மகிழ் புரியாத பாவனையில்.

"தனா, நீ உனது காதலியை பார், நான் எனது வேடத்தியை பார்த்துக் கொள்கிறேன்" என்றான் திறைவன்.

"மன்னியுங்கள் இளவரசே. உத்தரவு" என பணிந்தவன், கொற்றவையின் கையை பிடித்து இழுக்க, அவள் அவளை திரும்பி பார்த்தாள்.

"எனக்கு இங்கு நடப்பது எதுவும் சரியாக படவில்லை கொற்றவை. உனக்காக துணை வேண்டியே வந்தேன், அதை மனதில் வைத்துக் கூற வேண்டியதை விரைவாக கூறிவிட்டு வா. உங்களுக்கும் ஒன்று கூறுகிறேன், ஒரு பெண்ணின் கையை பிடிப்பதற்கு முன் அந்தப் பெண்ணின் பெற்றோர்கள் சம்மதம் பெற வேண்டும். குறைந்தபட்சம் அந்த பெண்ணின் சம்மதத்தையாவது பெறவேண்டும் என மனதில் வைத்துக் கொள்ளுங்கள்" என்றாள் கொற்றவையிடம் ஆரம்பித்து தனார்த்தனனை பார்த்து முடித்து.

"கண்டிப்பாக இளவரசி, தங்கள் கூற்றுக்கு மாற்றுக்கருத்து ௭ன்றும் என்னிடத்தில் இருக்காது" என கொற்றவையின் கையை விட்டு, அவன் கண்ணால் கெஞ்சி அழைத்துச் சென்றான். பயந்தாலும் பின் தொடர்ந்தாள்.

தனா முதலில் அமர்ந்திருந்த மரத்தடிக்கு அவளை அழைத்து வந்திருந்தான், திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே அவன் முன் சென்று நின்றாள்.

அவர்கள் சென்று நிற்கும் வரை பார்த்துவிட்டு, தன் கண்ணெதிரில் தான் இருக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்தி விட்டு இங்கு அருகில் நிற்பவனிடம் பார்வையைத் திருப்பினாள் மகிழ். அவள் முகத்தை மட்டுமே விழியசைக்காமல் பார்த்து நின்றான் இளவரசன். அவளும் இப்பொழுது தீப்பந்தத்தின் உதவியுடன் அவனை நன்றாக பார்த்தாள். உறைந்த சிரிப்புடன் தேஜஸான முகம். நின்ற தோரணையே ஒரு கம்பீரமாக தான் இருந்தது. ராஜபுத்திரனுக்கான தீட்சணியத்தை அவனிடத்தில் கண்டவள், தலையை வேறு புறம் திருப்பிக் கொண்டாள்.

சிரித்தவாறே அவள் முகம் தொட்டு தன் புறம் திருப்பினான். அதிர்ந்து இரண்டு எட்டு பின் வைத்து முறைத்தாள்.

"மன்னித்துக்கொள் வேடத்தி, உன்னை என்னால் வேற்றாளாக நினைக்க முடியவில்லை. அப்படி ஒன்றையே மறந்து விடுகிறேன். நான் இளவரசன் அமிழ்திறைவன்".

"வணக்கங்கள் இளவரசே" என்றாள் குனிந்து பணிவாகவே.

"நானாக ௭ன்னை அறிமுகம் படுத்தும்வரை வணக்கம் சொல்ல கூடாது ௭ன்ற பிடிவாதம்ம்ம்? பரவாயில்லை ௭னக்கும் உன் நிமிர்வு பிடித்தம் தான்".

"இதற்கு முன் ௭னக்கு தங்களது அறிமுகம் இல்லையே இளவரசே " ௭ன பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் பதில் அளித்தாள்.

"என்னை உனக்குத் தெரியும்தானே இப்போதுதான் தெரியும் என்பதுபோல் வணக்கம் சொல்கிறாய். அவ்வாறெனில் அன்று சிறுத்தை மேல் இருந்த கவனத்தில் என்னை சரியாக கவனிக்கவில்லையோ?" ௭ன்றான் புருவம் இரண்டையும் உயர்த்தி.

"அது உண்மையே. உங்கள் உடைக்கும், நடவடிக்கைக்கும் சம்பந்தமே இல்லையே என்பது மட்டுமே உரைத்தது. அதையும் மீறி உங்களை கண்டிருந்தாலும் நீங்களாக உங்களை அறிமுகம் செய்யாமல் உங்களை எனக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை".

"பொய் உரைக்கிறாய்".

"என்ன பொய்?"

"இதற்கு முன் என்னை கண்டதே இல்லை என்பது மிகப்பெரிய பொய் தானே".

"இல்லவே இல்லை".

"போர் முடித்து, ஊர் மக்களின் வரவேற்பில் தான் நான் கோட்டைக்குள் நுழைந்தேன். நாடக திருவிழாவின்போது ஊர் மக்களின் பார்வையில் தான் இருந்தேன். திக் விஜயத்தில் உன் ஊருக்கே வந்தேன். மறைந்து நின்றேனும் அரசனை கண்டு விடும் பெண்களை நான் அறிவேன் வேடத்தி".

"தங்களது திக் விஜயத்தின் போது நான் இதேக் காட்டினுள் தான் இருந்தேன். நாடக விழாவின் போது நன்றாக யோசித்துப் பாருங்கள், ஊர் பெரியவர்களான ஆண்கள் மட்டுமே தங்கள் முன் வந்து நின்றனர். என் தந்தையார் இதுவரை உங்கள் முன் என்னை நிறுத்த அனுமதித்ததில்லை".

"பொக்கிஷத்தை மறைத்து வைத்து மொத்தமாக தர எண்ணியிருக்கலாம் அல்லவா?" ௭ன்றான் ரகசிய குரலில்.

இதற்கு பதில் அளிக்கவில்லை. திரும்பி கொற்றவையை ஒரு பார்வை பார்த்துக் கொண்டாள், "அது போகட்டும், நான் நேரடியாக விஷயத்துக்கு வருகிறேன். என்னை உனது மாணாளனாக ஏற்பாயா வேடத்தி?" என்றான்.

அதிர்ச்சிதான் அவளுக்கு, அரசன் தனது உடமை பட்டவளை கடத்திச் சென்று காதல் புரியவும் அனுமதி உண்டு, யாரும் ஏன் என கேட்க இயலாது. அப்படி ஒரு நிலையிலும் இளவரசன் வேண்டி தன்னிடம் நிற்பது ஒரு வகை உவகையை கொடுத்தது மகிழுக்கு, மனது படபடவென கூட அடித்தது.

"மன்னியுங்கள் இளவரசே, தங்களை மறுத்து பேசும் சூழ்நிலைக்கு என்னை தள்ளாதீர்கள். நேரம் கடந்து விட்டது" என்றவள், "கொற்றவை பேசி முடிந்ததா? இல்லை நான் செல்லட்டுமா?" என கத்தி கூப்பிட்டு விட்டு, "வருகிறேன் இளவரசே" என வணக்கம் வைத்து திரும்பி நடந்து விட்டாள். வாழ்க்கையில் இவ்வளவு பதட்டம் அவளுக்கு இதுவே முதல் முறை.

கொற்றவை வேகமாக ஓடிவந்து குனிந்து, "வணக்கம் இளவரசே. மன்னியுங்கள் வந்ததும் இருந்த பயத்தில் வணங்காமல் சென்று விட்டேன்".

"அவ்வாறெனில் இப்போது தனா உன் பயத்தை போக்கி விட்டான் என்கிறாய்?" என்றதும் அவள் விழிக்க.

சிரித்த இளவரசன், "எனக்கு உனது தோழியை மிகவும் பிடித்திருக்கிறது, அவளை இந்த நாட்டின் இளவரசியாய் இருத்த ஆசைப்படுகிறேன். எனது இளவரசியை எனக்கு காட்டிய உனது மணாளனுக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன், அதனால் கவலைபடாதே உன் கல்யாணம் எனது பொறுப்பு, நான் பார்த்துக் கொள்கிறேன்" என்றான்.

அப்போதும் அவள் இருவரையும் மாறி மாறி பார்க்க, "அவனை வேண்டாம் என மறுப்பு கூறுவதற்காக இவ்வளவு தூரம் மெனக்கட்டு வந்து இருக்க மாட்டாய் என்பது எனது கணிப்பு" என்றான் புருவம் உயர்த்தி.

கொற்றவைக்கு வெட்கம் வர குனிந்து சிரித்து, "நான் வருகிறேன் இளவரசே, மிக்க நன்றி. நான் மகிழிடம் பேசுகிறேன்" என நிற்காமல் ஓடியே விட்டாள்.

"இளவரசே, நான் இவ்வளவு நேரம் பேசியும் ஒரு வார்த்தை உதிர்க்காதவள், நீங்கள் கேட்ட ஒரு கேள்விக்கு கண்ணம் சிவந்து ஓடுகிறாள். எனக்குத் தான் புரியவில்லை. சரி என்கிறாளா? வேண்டாம் என்கிறாளா?" என்றான் குழம்பிப்போய்.

"போடா மாங்கா, வேண்டாங்குறவளா வெட்கப்படுவா? உனக்கு காதல் சரிப்பட்டு வராது டைரக்ட்டா மேரேஜ்தான்" இது நம் பாப்பு.

"நாளை வந்து அவளையே கேட்டு தெரிந்து கொள். இப்போது வா செல்வோம் அரண்மனைக்கு",

"என்னது நாளையும்மா? வேண்டாம் இளவரசே, இது பாதுகாப்பிற்கில்லை. சரிவராது எதுவாகினும் நான் பார்த்துக் கொள்கிறேன்".

"எனது ராணியை பார்க்க நான் தான் வரவேண்டும் தனா. கவலைப்படாதே சீக்கிரமே அவளை ஒத்துக்கொள்ள வைத்து விடுகிறேன்" என வந்த சுரங்கப் பாதையில் இறங்கி மறைந்தனர்.

"ஏண்டி இவ்வளவு வேகம் நானே பயந்தவள் என தெரிந்தும் விட்டுவிட்டு வருகிறாய்".

"உன்னைப் பாதுகாக்க தான் நாட்டின் தளபதியே தயாராக இருக்கிறாரே, பின் நான் வேறு எதற்கு இடைஞ்சலாய்".

"இளவரசர் என்னடி சொன்னார்?",

"அதெல்லாம் நான் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை".

"பொய் கூறாதே மகிழ். எனக்கு ஐயமாக இருக்கிறது ஏதோ பெரிய இடறில் போய் சிக்கி கொண்டது போல்",

"புரிந்தால் சரி. என்ன பேச வேண்டுமோ பேசிவிட்டாய் தானே, அர்த்தஜாம நேர்காணலை இன்றோடு முடித்துக் கொள்".

"நான்... நான் எதுவுமே சொல்லவில்லையடி",

"பின் அவ்வளவு நேரம் என்ன பேசிக் கொண்டிருந்தாய்" என முறைத்து நின்றுவிட்டால் மகிழ்,

"அது.. அது என்ன பேசுவது என பயமாகிவிட்டது மகிழ் வார்த்தையே வெளி வர மறுத்து விட்டது". மகிழ் அதற்கு மேல் பேசாமல் விறுவிறுவென நடந்து குடிலுக்குள் சென்று விட்டாள். இந்த நேரம் பிடித்து நிறுத்தி சண்டையிட்டு தங்களை தாங்களே காட்டிக் கொடுக்க வேண்டாம் என கொற்றவையும் அவள் குடில் நோக்கி சென்றாள்.

விடிந்ததும் தேடி வந்தவளை மகிழ் கண்டுகொள்ளவில்லை, அவள் முகத்தையே பார்த்திருந்தாள். வெளியே வந்த அஞ்சலை, "என்ன தோழிகள் அமைதி போரில் இருப்பது போல் தெரிகிறது. போருக்கு இடைவெளிவிட்டு இந்த கலியை தின்று விட்டு உங்கள் போரை தொடருங்கள் குமரிகளா?" என்று விட்டு சென்றார்.

"எதற்கு என்று தெரிந்தால் அவளையே நீ கலி கிண்டி விடுவாய் அம்மை",

"ஏன் அப்படி என்ன செய்தாய்? ஏன் கொற்றவை?" என்க.

"ஒன்னும் இல்லை அம்மையே, மகிழ் கோவத்தில் பேசுகிறாள். நேற்று காலை கோவில் போகலாம் என்று சொல்லியிருந்தாள் நான் மறுத்து விட்டேன் என கோபம்",

"நினைத்த நேரமெல்லாம் காட்டுக்குள் சென்று வந்து கொண்டு தானே இருக்கிறீர்கள், இதற்கெதற்கு ஒரு சண்டை. பேசாமல் தின்றுவிட்டு அரிசியில் குறுனி பிரியுங்கள்" என்று விட்டு சென்றார்.

"பொய் பேசவும் கற்றுக்கொண்டாய் போல் தெரிகிறது, காதல் வரவும் கள்ளமும் வந்துவிட்டது" என்றாள் மகிழ்.

"மன்னித்து விடு மகிழ். என்ன சொல்வதென்று தெரியாமல் வேங்கையை துணைக்கு அழைத்தேன். கோவத்தை விடு, வா சாப்பிடுவோம் வயிறு பசிக்கிறது" என இழுத்து அமர்த்தி சாப்பிட்டு எந்திரிக்க,

அவர்கள் குடிலின் எதிர்திசையில் 6 வீடுகள் தள்ளி இருக்கும் குசலி தன் பெண்ணைத் தூக்கிக் கொண்டு ஓடி வந்தார். "என்னக்கா பிள்ளைக்கு என்ன?" என பிள்ளையின் தலையை தடவினாள் மகிழ்.

"அம்மாடி, பிள்ளை காலையில் எழுப்பும் போது எந்திக்கவே இல்லை. என்னவென்றும் தெரியலை. நீ தடவி கொடு" ௭ன நீட்ட.

"என்னக்கா என்னவென்று தெரியாமல் என்னிடம் ௭தற்கு தூக்கி கொண்டு வந்துருக்றீர்கள். வைத்தியரிடம் அழைத்துச் செல்லுங்கள் தாமதிக்க வேண்டாம்".

"இல்லை மகிழ் ஒரு முறை என் பெண்ணை தலை தொட்டு அவள் குணமாகிவிடுவாள் என சொல் நான் நம்பிக்கையோடு வைத்தியரிடம் செல்வேன்" என்றார்.

"அக்கா பிள்ளை இப்படி இருக்கும்போது உங்களுக்கு எப்படி என் வாக்கில் நம்பிக்கை வருகிறது என்று தெரியவில்லை" என இவள் சொல்லிக்கொண்டிருக்க.

சத்தம் கேட்டு வெளியில் வந்த அஞ்சலை, "இது வழமை தானே அம்மணி, பிள்ளை தலை தொட்டு வாக்கு கொடுத்து அனுப்பு நீயும் பேசி தாமதிக்காதே" எனவும், வேறு வழியின்றி ஒருமுறை வேங்கையை நினைத்து மனமார வேண்டி, "கூட்டிட்டு போ அக்கா உன் பெண்ணு பிழைத்து கொள்வாள்" என்றாள். அதற்கே அவள் மகள் குணமானது போல் சிரித்து மகிழ்ந்து ஓடிவிட்டாள் குசலி.

"இவங்க ஏன் அம்மையே இன்னமும் இதை விட மாட்டேன் என்கிறார்கள். குறிப்பிட்ட நேரத்திற்குள் மருத்துவம் பண்ணவே உயிரை காக்க முடியும். என் வாக்கு காக்கும் என எப்படி நம்புகிறார்கள்? நான் எவ்வளவு சொன்னாலும் ஐயனும் இதை ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள்" என்றாள்.

"அப்படியே பழகிவிட்டனர். நல்லதுதானே செய்கிறாய் எதற்கு இவ்வளவு வருத்தம்?" அஞ்சலை சொல்ல,

"என் வாக்கு தவறி விட்டால் என்ன செய்வேன். இங்கு வந்து நிற்கும் நேரத்தில் மருத்துவம் பார்த்திருக்கும் நேரம் மிச்சமாகும் தானே. என்னால் ஆன காலதாமதம் என் கையில்",

"உன் வாக்கு என்றும் பொய்க்காது. நீ பேச ஆரம்பித்ததிலிருந்து வாக்கு கொடுக்கிறாய் இதுவரை பொய்த்ததில்லை இனியும் பொய்க்காது. கவலையை விட்டு வேலையை பார்" என உள் நகர.

"எனக்கும் வாக்கு கொடு மகிழ்" கொற்றவை வந்து நிற்க.

"உனக்கு என்ன செய்கிறது?",

"எனக்கு பிடித்தவரே, மணாளனாக அமைய வேண்டுமென்று" எனக் கூறிவிட்டு அவள் குனிந்து கொள்ள.

"இந்த வாக்கை நீ உன் தளபதியிடமே வாங்கி இருக்கலாமே. அவர்தானே உன்னைத் தூக்கிச் செல்ல வரவேண்டும். அங்கு சும்மா நின்று விட்டு வந்து என்னிடம் வாக்கு கேட்கிறாய்" என உள்ளுக்குள் சிரித்தாலும் வெளியில் விரைப்பாக கேட்டாள்.

"அவர் என்னை பேசவிடலையடி, அவரே பேசிக்கொண்டிருந்தார். என்னை எவ்வாறு எல்லாம் பார்த்துக் கொள்வேன் என பட்டியலிட்டு கொண்டிருந்தார். அதற்குள் நீ என்னை அழைத்து விட்டாய் ஓடி வந்துவிட்டேன். இடையில் இளவரசருக்கும் உன் மேல் காதல் என்றாரடி. இளவரசர் உன்னிடம் என்ன பேசினார் என்று கேட்டால் நீ தான் மறைக்கிறாய். நான் எல்லாம் உன்னிடம் எல்லாமே சொல்கிறேன் தானே" என பாவமாய் கேட்கவும்.

"நீ ஒருத்தி போய் கோட்டையில் கொடியை நட்டால் போதும்",

"கோபிக்காதே மகிழ், அன்று உரிமையாய் என் கைப்பிடித்தாரே. என் கை பிடித்த முதல் ஆண் அவர். அவரே இந்த வாழ்க்கை முழுவதும் பிடித்துக் கொள்ளட்டும் என்று தோன்றுகிறது அவ்வளவுதான். இதை நேற்றே சொல்ல முயன்று சொல்லமுடியாமல் திரும்பிவிட்டேன். இன்று போய் சொல்லிவிட்டு வந்து விடுவோம். அவர் ஐயனிடம் மேற்கொண்டு பேசிக் கொள்ளட்டும். ஒரு முறை ஒரே ஒரு முறை மட்டும் எனக்காக மகிழ்" என்கவும்.

"இன்றும் போய் பயம் வந்துவிட்டது அதனால் பேசவில்லை, நாளை ஒரு நாள் மட்டும் என சொல்ல மாட்டாய் என நான் எப்படி நம்புவது".

"நான் வேண்டுமானாலும் சத்தியம் செய்கிறேனடி" என்க.

"ம்கூம் எனக்கு நம்பிக்கை இல்லை காதலை சொல்லவே இரு நாட்கள் படை எடுத்திருக்கிறாய், காதலை சொல்லியபின்னா அடங்கி இருக்க போகிறாய்? இதில் சத்தியம் வேறு" என மகிழ் சொல்லவும்.

"தோழிக்காக செய்யமாட்டாயா மகிழ்?",

"மாதத்தில் ஒரு நாள் மட்டும் செல்வதற்கு எவ்வளவு புலம்புவாய் இப்பொழுது மட்டும் எப்படி தூக்கம் தொலைத்து பயம் அகன்று செல்ல முடிகிறது?", ௭ன மகிழ் கேக்கவும் கொற்றவை திருதிருவென விழிக்க.

"இன்று மட்டும் வருகிறேன். இனி உன் மணாளனை காண வேண்டுமென்றால் அவரையே வந்து அழைத்துச் செல்ல சொல்லிவிடு".

"ஏனடி பிரித்து பேசுகிறாய். நீ இல்லாமல் நான் எங்கு சென்று இருக்கிறேன்".

"ஓ!!! திருமணம் முடித்து உன் மணாளன் வீட்டுக்கும் என்னை உடன் அழைத்துச் செல்லும் எண்ணம் இருந்ததோ?".

"அதுவரை தானே நாம் சேர்ந்திருக்க முடியும். நீ இளவரசரை மணந்து கொள் இருவருமே கோட்டையினுள் சேர்ந்தே இருக்கலாம்".

"பேராசையடி உனக்கு, எனக்கு அவ்வளவு பெரிய பதவி எல்லாம் வேண்டாமடி. அது போகட்டும், இரவு நீதான் என்னை எழுப்ப வேண்டும், இது உன் தேவை அதனால்".

"சரி" என சோகமாகவே தலையசைத்து சம்மதித்தாள் கொற்றவை.

அரண்மனையில் டொக் டொக்கென்ற சத்தத்துடன் கம்பீரமான நடையுடன் உதட்டில் உறைந்த சிரிப்புடன் அமைச்சர்களின் மரியாதையை ஏற்ற தலையசைப்புடன் வந்து அரியணையில் அமர்ந்தான் அமிழ்திறைவன்.

பாப்பு எப்படி ஈ என இரணியனை பார்த்து நிற்பாளோ அது போலவே இப்போதும் ஈ என தான் நின்றாள், "மை ஸ்மைலிங் சார்ம்" என்ற முணங்களுடன்.

கண்ணில் ரசனையுடன் மந்திரிகளின் கருத்தையும், மக்களின் வாழ்வியலையும் விசாரித்து தெரிந்து கொண்டவன், வேறென்ன என்பதாய் சுற்றி எல்லோர் முகத்தையும் பார்த்தான். உளவுத் துறை அமைச்சர் எழுந்து, "இளவரசே துருக்கியர்கள் தமிழகத்தை நோக்கி படை எடுப்பதாக ஒரு தகவல் வெளியில் உலாவுகிறது" என்றார் தயக்கமாக.

சிறிது யோசித்தவன், "பேரரசடமிருந்து ஓலை எதுவும் என் கண்ணிற்கு வரவில்லையே?" என தனார்த்தனனை பார்த்தான்.

"ஒற்றன் செய்தி எதுவும் வந்ததா?" என்ற பார்வையை தாங்கி. "அவன் அப்படி எதுவும் வரவில்லை" என்பதாய் சமிக்கை செய்ய.

பார்வையை அமைச்சரிடம் திருப்பினான், "என்ன யோசனை உளவுத்துறை மந்திரியாரே?".

"ஓலை எதுவும் வரவில்லை இளவரசே, இன்னும் உறுதியாகாத தகவல் என்பதால் தாமதப்படலாம் என்பது என் கருத்து".

"சரி எதுவாகினும் பார்த்துக்கொள்ளலாம். படை எல்லாம் எப்போதுமே தயார் நிலையில் தான், என்ன தளபதியாரே?',

"ஆமாம் இளவரசே. வைத்தியம் எல்லாம் முடிந்து படைகள் அதன் பயிற்சியை சீராக தொடங்கிவிட்டன".

"நல்லது சபை கலையலாம்".

எல்லோரும் கிளம்பியும் நிதியமைச்சர் நின்றார். "மன்னிக்கவேண்டும் இளவரசே",

"பரவாயில்லை கூறுங்கள், தனியாக என்னிடம் கூற ஏதோ உள்ளது என புரிகிறது" ௭ன விசயத்தை கேட்டான்.

"அரசரின் விடுதலை பற்றி..." அவர் தயக்கமாக இழுக்க,

"அவருக்கு பதில் தண்டனையை தாங்கள் ஏற்கப் போகிறீர்களா நிதி மந்திரியாரே?".

"அரசருக்காக எதை செய்யவும் நான் சித்தமாக உள்ளேன்".

"தண்டனையில் பங்கேற்க விரும்புகிறீர்கள் என்றால் தவறிலும் பங்கு எடுத்திருக்கிறீர்கள் என்று எடுத்துக்கொள்ளலாமா?".

"ஐயோ! இல்லை. இல்லவே இல்லை, இரு பெண் பிள்ளைகளை பெற்றவன் நான். அப்படியான தீங்கை மனதிலும் செய்ய துணிய மாட்டேன். நாட்டை ஆண்டவர், மக்களின் முன்னோடி அந்த ஒரு விஷயத்தை தவிர்த்து மக்களுக்கு நன்மை நிறையவே செய்திருக்கிறார், அதை எண்ணியே இக்கேள்வியை முன்வைத்தேன்" என அவர் படபடவென கூற.

கையை உயர்த்தி அவரை தடுத்தவன், "நீங்கள் என்ன எண்ணத்தில் இதை கூறுகிறீர்கள் என்று தெரியவில்லை. ஆனால் நான் மக்களின் அரசன் அவர்கள் முன்வைத்த குற்றச்சாட்டின் பேரிலேயே தீர்ப்பை வழங்கி இருக்கிறேன். அதில் மாற்று கருத்து இல்லை. சென்று வாருங்கள்" என கோபம் குறையாமல் எழுந்து சென்றுவிட்டான்.

சிறையில் இருந்தவர் இவரை வரவழைத்து மிரட்டி மிரட்டி தான் இந்த பேச்சை எடுக்க வைத்தார். இவனும் கடித்து விட்டு செல்ல என்ன செய்வதென்று தெரியாமல் அரசவையிலிருந்து வெளியேறினார். அவரையே ஆராய்ச்சியாய் பார்த்திருந்த தனார்த்தனன், அவரை பின்தொடர்ந்து வெளி வந்து, "இனிமேல் யார் மூலமாக சிறையில் இருப்பவர் உங்களை அழைத்தாலும் சென்று பார்க்காதீர்கள். முன்னால் அரசன் என்பதையே மறந்துவிடுங்கள்" எனக்கூறி அவரை கடந்து சென்றுவிட்டான்.

அமிழ்திறைவன் வெளியே வர, சிற்றன்னை பிடித்துக் கொண்டார், "ஏனப்பா முகத்தில் இவ்வளவு கோவம்?" என்க.

"அரச காரியம் தான் சிற்றன்னையே எனக்காகவா இங்கு காத்திருக்கிறீர்கள்?" என மறு கேள்வி கேட்டான்.

"அதுவந்து பாவை?" இவர் யோசனையாக கூற,

"கூறுங்கள், பாவைக்கு என்ன?".

"அவள் உன்னை வந்து ஒருமுறை கூட பார்க்கவில்லையே அதான்.... ".

"நானும் கவனித்தேன் சிற்றன்னையே, அவளிடம் பேசியே வெகு ஆண்டுகள் கடந்து விட்டது. என்னை வரவேற்க வந்த போது கோட்டை வாசலில் வைத்து 2 நொடிகள் பார்த்ததோடு சரி, அவளாகவும் இன்று வரை என்னை வந்து காணவில்லை, 2 முறை ஆள் அனுப்பி அழைத்தும் வரவில்லை. பெண்கள் சூழ்ந்திருக்கும் இடத்துக்கு எப்படி போவது என்று நானும் போக வில்லை".

'அப்படியொரு அரசனுக்கு இப்படி ஒரு இளவரசன்' ௭ன நினைத்தவர், "ஏதோ சிறு பிள்ளையாய் அதை கொடுக்கவில்லை, இதை கொடுக்கவில்லை என புலம்பிக் கொண்டிருக்கிறாளப்பா. நீ ஒரு திருமணத்தை முடித்துக்கொண்டு தம்பதியராய் நாடு மெச்ச அவளுக்கு ஒரு திருமணத்தை முடித்து வைக்க வேண்டும்" என்றார் அவன் கன்னம் தொட்டு.

எப்போதும் அது உங்கள் கையில்தான் என்பவன், "சீக்கிரமே முடித்து விடலாம் சிற்றன்னையே, தனார்த்தனனுக்கும் பேச வேண்டும்"என்றான் சேர்த்து.

அவரோ தனா பெயர் வரவும் அவனின் முற்பகுதியை விட்டுவிட்டு, இதில் தனா எங்கிருந்து வந்தான், ஒருவேளை அவனும் பாவையை என கோபமானார்.

"தனாவுக்கு என்ன திறைவா?" என்க.

"அவனும் ஒரு பெண்ணை பார்த்து வைத்திருக்கிறான். மலைவாசி குடும்பம், நான்தான் அழைத்து பேசவேண்டுமாம்" என்றவனிடம்.

ஆசுவாசமாக மூச்சு விட்டு சந்தோஷப்பட்டவர், "அதுக்கென்னப்பா அரசனின் பேச்சுக்கு ௭திர் பேச்சு யார் பேச போகிறார்கள். நானே முன்னின்று முடித்து வைக்கிறேன், சரிதானே தனா" என இளவரசன் பின் நின்றவனையும் கேட்க.

அவன் நெளிந்தான், அதைக் கண்டு இருவரும் சிரிக்க, அதற்கு மேல் நிற்க முடியாமல், இளவரசனிடம் விடைபெற்று வெளியேறினான்.

இதை மேல் மாடத்திலிருந்து கண்டு, கேட்ட பாவை உருக்குலைந்து, சுயம் மறந்து நின்றாள் கண் நிறைந்த கண்ணீருடன்.
 
அத்தியாயம் 9

கோதை மெதுவாக "நீ ஏதும் பாவை உன்னை வந்து பார்க்கவில்லை என்று அவள் மேல் கவலை கொள்ளாதே திறைவா, நானே அவளை அழைத்து வருகிறேன்".

"அது பார்த்து கொள்ளலாம் சிற்றன்னையே. அவள் இன்னும் சிறு பிள்ளை தானே அதான் சிறு பிள்ளைக் காண கோபம் போல், அவளாகவே கோபம் குறைந்து வரட்டுமே" என நகர்ந்து விட்டான், அவன் உண்மையாகவே அதை பெரிய விஷயமென கொள்ளவில்லை .

அனைத்தயும் கேட்டு விட்டு, தனதறைக்கு விரைந்து சென்ற பாவை பஞ்சணையில் விழுந்து குலுங்கி குலுங்கி அழுதாள். தோழிகள் எப்போதும் போல் வெளி நின்றே கையை பிசைய, தேவியே பாவையை நெருங்கி தோளைத் ஆதரவாக தொட்டாள். அதற்கே, பாவை வெடுக்கென்று திரும்பி தீயாய் முறைக்க, இரண்டடி தள்ளி நின்றாள் தேவி.

அவள் பயத்தை கண்டு அதற்கு மேல் முறைக்காமல் குனிந்து மீண்டும் அழ, "அம்மணி கலங்காதீர்கள், எதற்காக இவ்வளவு கலக்கம். மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய வயதில் எதற்காக எப்போதும் எதையோ நினைத்து கலங்கி கொண்டே இருக்கிறீர்கள். எதுவானாலும் தங்கள் அன்னையிடமோ, இல்லை இளவரசரிடமோ கூறி பெற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்கு இல்லாத உரிமையா?" என தயங்கி தயங்கியேனும் தோழியின் கடமையாக கூறிவிட்டாள்.

"நான் தேடி வந்து உன்னை எனது சேடிப் பெண்ணாக அழைத்து வந்ததால் வந்த தைரியம் தானே, அத்தனை பேரும் ஒதுங்கி நிற்கையில் நீ மட்டும் எனக்கு அறிவுரை வழங்க வந்து நிற்கிறாய்?".

பாவை ஒரு முறை காட்டில் இருக்கும் லிங்கேஷ்வரரை தனது தாயுடுன் தரிசனம் செய்ய சென்றிருந்த பொழுது, அரசவை ஆட்கள் வருகிறார்கள் ௭ன தெரிந்தும் ௭தை பற்றியும் கவலை படாமல் மரத்தில் மேல் அமர்ந்து நெல்லிக்காய் பறித்து புளிப்பை உறிஞ்சி அனுபவித்து கொண்டிருந்தவளை கண்டதும் பாவைக்கு பிடித்து தான் விட்டது. உடனே கர்வம் பார்க்காமல் அழைத்து பேசியும் விட்டாள். அவளை தன்னுடனே அழைத்து செல்ல கேட்ட போது கோதை மலைவாசி ௭ன காரணம் காட்டி மறுத்த போதும் ௭தை ௭தையோ விட்டு கொடுத்த கடுப்பில் இருந்தவள், பிடிவாதமாக தேவியை அழைத்து செல்ல முயன்றாள், தன்னை தோழியாக்கி கொள்ள பாவை அவ்வளவு முயன்றது தேவிக்கும் பாவையை பிடித்து விட காரணமாகியது. பாவையின் பிடிவாதம் வென்றது, கோதை தேவியின் தந்தையிடம் அறிவிப்பாக 'பாவையின் கல்யாணம் முடியும் வரை சேடி பெண்ணாக இருக்கட்டும்' ௭ன கூறி அழைத்து கொண்டார்.

"மற்றவர்களை தங்களது அன்னை தேர்ந்தெடுத்து இருந்தாலும், அவர்களும் உங்களது உற்ற தோழிகளே. ஆனால் அவர்களை பார்வையாலே நீங்கள்தான் விலக்கி நிறுத்துகிறீர்கள். என்னை மட்டுமே இவ்வளவு தூரம் அனுமதிக்கிறீர்கள். நீங்கள் என்னை எப்படி வேணாலும் நினைக்கலாம், ஆனால் நான் உங்களை எனது மனம் நெருங்கிய தோழியாக தான் நினைக்கிறேன். எங்கள் ஊரில் இரு தோழிகள் இருக்கிறார்கள், சிறுவயது முதலே இருவரும் நெருங்கிய தோழிகள் தான், ஒருத்தர் இன்றி ஒருத்தரை பார்ப்பதே கடினம், ஒருவர் நலனில் மற்றவர் அதிக நலன் கொண்டு அவ்வளவு ஒற்றுமையாக இருப்பர். ௭ன்னையும் அவர்களுடன் இணைத்து கொள்ள மாட்டார்களா என எனக்கு ஏக்கமாக இருக்கும். நானாக அவர்களைத் தேடிச் சென்றால் பேசுவர், விளையாட்டில், உணவில் பங்கு கொடுப்பர். ஆனாலும் அவர்களுக்குள் இருக்கும் நெருக்கம் என்னிடம் இருக்காது. அப்போதெல்லாம் எனக்கே எனக்கென்று இதுபோல் ஒரு தோழி கிடைக்க வேண்டும் என எங்கள் காவல் தெய்வத்தை வேண்டிக் கொள்வேன். நீங்களே என்னை உங்கள் தோழியாக அழைத்தபோது அவ்வளவு மகிழ்ந்து போனேன் தெரியுமா, அதுபோல் இங்கிருக்கும் அத்தனை பேரில் நீங்கள் என்னை மட்டுமே நெருங்க அனுமதித்தது மனதிற்கு அவ்வளவு நிறைவை கொடுக்கும், எனது தோழி என்று, அப்படிபட்டவரான நீங்கள் திடீர் திடீரென எதற்கோ கலங்குவது என்னை பாதிக்கிறது அம்மணி, பார்த்து கொண்டு அமைதியாக இருக்க முடிவதில்லை" என அவள் பேசியதை கேட்டவுடன் இழுத்து அணைத்துக் கொண்டாள் பாவை.

௭ப்போதும் போல் 'பே' ௭ன்று திறந்த வாய் மூடாமல் இதைப் பார்த்து நின்றாள் பாப்பு, "இந்த பவ்யா நல்லவளா? கெட்டவளான்னே தெரியலையே? நம்ம வேதிக்கா வேற தளபதி தேவா, சூர்யா ரேஞ்சுக்கு பிட்ட போட்டுட்டு இருக்காங்க, அவளுக ரெண்டு பேரும்(மகிழும், கொற்றவையும்) வேதிக்காவ சேத்துட்ருந்தா என் அக்கா இவ்ளோ ஃபீல் பண்ணி இருக்குமா பாவம். இவங்களுக்கு பண்ண பாவம் தாண்டி வெள்ள பாட்சா நம்ம ரெண்டு பேரும் இந்த ஜென்மத்துல வெட்டவா குத்தவான்னு நிக்கிறோம் போலயிருக்கு" என நினைத்துக்கொண்டாள்.

திகைத்த தேவி தானும் பாவையை அணைத்து, "சொல்லுங்கள் அம்மணி, தங்களின் அழுகைக்கு காரணம் காதல் என்றறிவேன். அது நிறைவேற வாய்ப்பு இருந்தால் அதை நோக்கிச் செல்வோமே. நம் அரசர் மக்களுக்காக அவ்வளவு செய்கையில் தங்கையான உங்களை கண்டிப்பாக விடமாட்டார்".

"உனக்கு புரியாது தேவி, அவன் அண்ணனாக இருந்து எனது மகிழ்ச்சி மொத்தத்தையும் தனதாக்கியவன். இதோ இன்று என் காதலனுக்கு பெண் பார்க்கும் படலம் வரை கொண்டுவந்து விட்டான். அவனே முன்னின்று நடத்தி தரப்போகிறானாம். எனது சந்தோஷத்தை கொள்வது மட்டுமே அவன் குறிக்கோள். விடமாட்டேன் எனது மணாளனுக்கு இவன் என்ன பெண் பார்ப்பது விடமாட்டேன், விட்டுத்தர மாட்டேன்" ௭ன இப்போது ஆத்திரத்தில் கத்தினாள், தனா மலைவாசி பெண்ணை விரும்புவதாக சொன்னது ௭ல்லாம் அவள் மனதில் பதியவே இல்லை.

"தங்களின் அவர் யார் என்று நான் தெரிந்து கொள்ளலாமா அம்மணி?",

"படைத்தளபதி தனார்த்தனன்" மென்மையாக கண்கள் பணிக்க கூறினாள்.

"இளவரசர் சொன்னால் என்ன இன்னும் பெண் பார்க்கவில்லை தானே, இருவரிடமும் நீங்களே பேசுங்கள். பேசாமல் தாங்களே ஒரு முடிவுக்கு வருவதை விட கேட்டுப் பாருங்களேன் ஒரு முயற்சிதானே".

"முயற்சி? ம் ம் எனது காதலுக்காக வேணும் அவன் முன் போய் நிற்கத்தான் வேண்டும். எனக்கும் வேறு வழி இல்லையே" ௭ன ஏதேதோ யோசித்து முடிவு ௭டுத்தாள்.

அதற்கே மகிழ்ந்த தேவி, "கவலையை விடுங்கள். இளவரசர் கண்டிப்பாக ஒத்துக் கொள்வார். நிம்மதியாக கண்ணயருங்கள்" என பாவையை படுக்க வைத்து, உறங்க வைத்து விட்டே வெளியேறினாள். வெகுவாக இருட்டி இருக்க, தனதறை நோக்கி நடக்கையில் தனாவும், திறைவனும் செல்வதை கண்டாள்.

'இருவரும் இந்நேரம் எங்கு செல்கிறார்கள்? உடன் காவலாளிகளும் யாரும் செல்லவில்லை எனில் ஏதும் அரச ரகசியமாகத்தான் இருக்க வேண்டும். வேங்கை அம்மா எங்கள் இளவரசர் போகும் காரியம் வெற்றி பெற துணை இருங்கள்' என நாட்டுப் பிரஜையாய் வேண்டிக் கொண்டு சென்று படுத்தாள்.

"இன்றும் பெண்கள் வருவார்கள் என்று எந்த நம்பிக்கைகள் நாம் செல்கிறோமோ தெரியவில்லை இளவரசே" என தனா புலம்பிக் கொண்டு நடக்க.

"ஏன்?? நீ உன் காதலியிடம் வரச்சொல்லி சொல்லவில்லையா? நேற்று உன் காதலி கிளம்புகையில் நாளை சந்திக்கலாம் என சொல்லி செல்ல வில்லையா?" என்றான் வேக நடையுடன் இளவரசன்.

"ஐயகோ!!!!!, என் காதலை நம்பியா நீங்கள் இவ்வளவு வேகமாக சென்று கொண்டிருக்கிறீர்கள். நான்தான் நேற்றே கூறினேனே அவள் ஒன்றுமே பேசவில்லை ௭ன்றும், ஆடு திருடுய கள்ளன் போல் முழித்துவிட்டு, இளவரசி குரல் கொடுக்கவும் ஓடி விட்டாளென்றும் கூறினேனே. கண்டிப்பாக இளவரசி இன்று அவளை அழைத்து வர மாட்டார்கள். நாம் சென்று காட்டுக்கு காவல் இருந்து விட்டு வர வேண்டியதுதான்".

"நீ இளவரசி என அடைமொழி இடும்போது எனக்கு சொர்க்கத்தில் மிதப்பது போல் இருக்கிறது தனா".

"ம்கும்...நான் என்ன கூறுகிறேன், இவர் என்ன கூறுகிறார். ஈஸ்வரா நான் என் செய்வேன்?" என கடவுளை துணைக்கழைத்தான்.

இன்று அவர்கள் பெண்களை வெகு தொலைவு அலைய வைக்காமல் அவர்களின் குடியிருப்பின் எல்லையில் வந்து காத்திருந்தனர். அங்கு மொத்தமே 25 குடில்கள் தான் எண்ணிக்கையில் இருக்கும். அவர்கள் இருப்பிடம் அந்த இருட்டிலும் பச்சை பசேலென நிலா ஒளியிலும் அங்கங்கு எரிந்துகொண்டிருந்த தீப்பந்தத்தின் ஒளியிலும் பார்க்க ரம்யமாகத்தான் இருந்தது. அவர்கள் நிற்கும் இடத்திலிருந்து பார்த்தால் இருவர் குடிலுமே தெரியும். ஆனால் இவர்களுக்குத் தான் அவர்கள் குடில் எத்திசை என்று தெரியாதே. அதனால் நாலா பக்கமும் சுற்றி சுற்றி பார்வையில் தேடிக் கொண்டிருந்தனர்.

அவர்களின் அருகில் தேமே ௭ன நின்றிருந்த பாப்பு, "இவங்களுக்கு வீடு எதுன்னு தெரியாததால இங்கனயே நிக்காங்க. இன்னைக்கு வீட்டையும் கண்டுபிடிச்சிட்டு, நாளைக்கு ஓலையைப் பிரிச்சு உள்ள இறங்கிடுவாங்களோ? ஓவர் ஸ்பீடா இருக்கே" என்ற இவள் சிந்தனையை கலைப்பது போல், விஷாகன் குரல் கேட்கிறது.

"ஏய் லூசு பாப்பு. இன்னும் எத்தன நாள் தான் இப்டி இருக்கதா உத்தேசம் உனக்கு".

"அடேய் விஷா நீயா பேசுற. உனக்கு நா இன்னைக்கு தான் தெரியுறனா, எவ்வளவு நாள் கழிச்சு நம்ம தமிழ் பேசி கேக்குறேன் தெரியுமா?" என இவள் தனாவை சுற்றி வந்து பாசத்தில் பொங்க.

ஆனால் தனாவோ எப்பவும் போல் அவன் காதலியைத் நினைத்து மரத்தைச் சுரண்டிக் கொண்டிருந்தான்.

"அடச்சை ஒன்னு புல்லு புடுங்குறான் இல்ல மரத்த நோண்டுறான். அப்ப என்ட்ட பேசுனது?"

"உன்ட்ட தான கேக்குறேன், எப்ப தான் எந்திக்க போற? என் சார்ம் ௭ன் சார்ம்ன்னு பெருசா எங்கிட்ட சண்டைக்கு வருவ, அந்த மனுஷன் மொத்த வேர்ல்டு உள்ள மொத்த சோகத்தையும் குத்தகைக்கு எடுத்தாப்புல உன் முன்னயே உக்காந்துட்ருக்காரு தெரியலயா உனக்கு. அவர ஒரு நாளைக்கு ரெண்டு வேளை சாப்பிட வைக்கவே, நா நாலு வேளை சாப்பிட வேண்டியிருக்கு. எனக்கு ௭ன் சார இப்டி பாக்கவே முடியல, மனசு அவ்வளவு வலிக்குது. ஏதோ அப்பப்ப லோன்லியா ஃபீல் பண்ணாலும் ராஜதோரணையா சுத்தி வந்த மனுசன், அவர இப்டி உட்கார வச்சுட்டு உனக்கு சுகமா தூக்கம் வேண்டியிருக்கோ? என்னாச்சு ஏதாச்சுன்னு தெரியாம நாங்க எத்தன நாள் முழிச்சிட்டு இருக்கது. எந்திக்க போறியா? இல்லையா நீ?. என்ன லவ் உன் லவ் பெரிய புடலங்கா லவ்வு, சார்ம்மிங்க இருந்த மனுசன அழ வைக்குற லவ். எவ்வளவு தனிமைய பீல் பண்ணப்பவும் அவர் அழுதது இல்ல தெரியுமா? இப்ப உன்னால அடிக்கடி அழுவுறாரு. எனக்கு அவர பாத்துட்டே இருந்தாலே போதும் அவ்வளவு பிடிக்கும், இப்ப அவர பார்க்கவே முடியாத அளவுக்கு ஆக்கிட்ட நீ. எழுந்துரு முதல்ல, லூசு, மென்ட்டல், எருமை, பண்ணி ஒழுங்கா எந்திரி, அறிவுயிருக்கா தண்டம்" என பேசிக்கொண்டே அவளை போட்டு குலுக்க.

அப்பொழுதுதான் டாக்டரை பார்க்க சென்ற இரணியன் உள்நுழைய, விஷாவை கண்டு, "டேய் என்னடா பண்ற இடியட்" என இழுத்து தள்ளி நிறுத்தினான்.

"விடுங்க சார் இன்னைக்கு இவள எழுப்பாம விட மாட்டேன். உங்களோட ஃபீலிங்ஸ் இவளுக்கு எங்க புரியுது" என அவள் கையை பிடித்து இழுக்க, அது அதிகமாக சிவந்து விட்டிருக்க, அதில் கடுப்பான இரணியன், விட்டான் விஷாவை ஒரு அறை.

அதில் தான் சற்று அமைதியாகி அவள் கையை விட்டான் விஷா. "இந்நேரம் அவளுக்கு வலிச்சா கூட சொல்ல முடியாது இடியட். அசைவில்லாத கை எப்படி செவந்து போச்சு" என திட்டி விட்டு அவள் கையை தடவிக் கொடுத்தான்.

"யப்பா......பல மாசம் கழிச்சு வாங்கிருக்கேன்" என்றான் விஷா கன்னத்தை தடவி கொண்டு.

"வாட்?" இரணியன் கடுப்பில் திரும்ப,

"இந்த அடிய சொன்னேன் சார், ௭வ்வளவு நாள் ஆச்சு தெரியுமா நீங்க ௭ன்ன அடிச்சு".

"அது வேணும்னு டெய்லி வந்து கேட்டு வாங்கிட்டு போ, அவள டிஸ்டர்ப் பண்ணாத".

"ஏது, கேட்டு வாங்கிட்டு போறதா, இப்டி நீங்க பக்கத்துல உக்காந்து கொஞ்சிட்டே இருங்க, அவ கும்பகர்ணனுக்கு தங்கச்சியாட்டம் நல்லா மாச கணக்குல தூங்கட்டும்" என இவன் முணங்க.

"என்ன மேன் முணங்குற?"

"ஒன்னுமில்ல, நா வெளியில போறேன்னு சொன்னேன்".

"ம்ம் போ" என தலையசைக்கவும் தான் வெளியேறினான்.

இதையெல்லாம் காதால் மட்டும் கேட்டுக் கொண்டிருந்த பாப்புவிற்கு உடனே தன் சார்மை கட்டிக்கொள்ள தோன்ற, அதை அவனும் உணர்ந்தது போல் அங்கு அவள் கையை தடவிக் கொண்டே சேர்த்து இதமாக அணைத்து நெற்றியில் முத்தம் பதிக்க, கண்ணீர் இங்கே இருப்பவளுக்கும், அங்கே இருப்பவளுக்கும் சேர்ந்து வெளியேற, அதைக் கண்டவன், "கேட்டுட்டுத்தான் இருக்கியா தாட்சா எல்லாத்தையும். எழுந்திருக்க முயற்சி பண்ணுடி ப்ளீஸ், பதிலுக்கு பதில் பேசுற அந்த வாயாடிய ரொம்ப மிஸ் பண்றேன்" என அருகில் அமர்ந்து அவள் நெஞ்சில் தலை சாய்த்து கதை பேச ஆரம்பித்தான்.

அவள் அங்கு தன் நெஞ்சில் சாய்ந்தவனின் தலையைத் தடவ கையை உயர்த்த முயன்றும் முடியவில்லை. ஆனால் இங்கு நின்றவள் தனது நெஞ்சில் கை வைத்து தடவி அவனுக்கு ஆறுதல் அழிக்க முயன்று கொண்டிருந்தாள்.

பாப்புவின் கோமா நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாத காரணத்தினால் அடுத்து என்ன செய்யலாம் என்ற யோசனையில் அனைவரும் இருந்தனர். மெய்யப்பன் மறுபடியும் அந்த நாடி ஜோசியரை சென்று பார்க்க, அவரோ "அவள் நினைவுகளை தொலைத்த இடத்திலேயே கொண்டு வையுங்கள் சீக்கிரம் மீண்டு வரும்" என்று விட, அவர் ஆல்ரெடி சொன்ன விஷயங்கள் தானே அவர்கள் வாழ்க்கையில் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. அதனால் மனது அவர் பேச்சை கட்டாயம் கேள் என்று ஆணையிட்டது. அதை விஷாவிடமும், இரணியனிடமும் கூட பேசிவிட்டார்.

'இந்த மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல்லேயே இவள எழுப்ப முடியவில்லை. அந்த மலை அடிவாரத்தில் எப்படி??' என அவன் யோசிக்க, விஷா டாக்டர் பார்த்து பேசிவிட்டு, இவனிடம் வந்து டாக்டரை பார்த்து வர அனுப்பினான்.

அப்போதுதான் மேல் நடந்த நிகழ்ச்சி. பாப்புவிடம் சண்டைக்கு எகிறினான். முழிச்சி இருக்கும்போது தன்னை இப்படி பேசவிட்டு வேடிக்கை பார்க்க முடியுமா பாப்புவால்? அப்படியாவது எழுந்து தன்னுடன் சண்டைக்கு வர மாட்டாளா? என்பது அவன் எண்ணம்.

அங்குள்ள டாக்டர், இரணியனிடம், "இயற்கையும், மூலிகையும் இவங்கள மாதிரி பேஷன்டுக்கு ரொம்ப நல்லது. ஒரு ட்ரை, தைரியமா பண்ணுங்க மிஸ்டர் இரணியன். ஹோப் பார் தே பெஸ்ட்" என்ற பின்தான் கிளம்பினான்.

விஷாகனோ, 'இந்த ஆப்பர்ச்சுனிட்டியை பயன்படுத்தி பாதியில் நிற்கும் படத்தை முடித்துக் கொடுத்து விடலாம், அவருக்கும் ஒரு சேஞ்ச் கிடைச்ச மாதிரி இருக்கும்' என்ற முடிவுக்கு வந்து அந்த மலை அடிவாரத்தில் அதற்கான ஏற்பாட்டில் இறங்கினான். பாடிகார்ட்ஸை லீவ் கொடுத்து அனுப்பிவிட்டான்.

அதன் பின் நாட்கள் வேகமெடுக்க, பாப்புவை அந்த மலைகிராம வைத்தியரிடம் கொண்டு சேர்த்து விட்ட பின்னும் அவளே கதியென அவளருகில் பலியாய் கிடந்தவனை, விஷா படாதபாடு படுத்தி இரணியனிடம் நான்கு அறை வாங்கிக் கொண்டாலும் படத்தில் நடிக்க ஒத்துக் கொள்ள வைத்தான்.

பின் சூட்டிங் மற்ற நேரம் பாப்பு என்று அவன் பொழுது கழிய, விஷா உடன் இருந்து இருவரையும் பார்த்துக் கொண்டான். அவன் பெற்ற பிள்ளையை கூட போய் பார்க்காமல் இருந்து கொண்டான்.

எல்லோரும் மறந்திருந்த பாவ்யா இந்த சந்தர்ப்பத்தை யூஸ் பண்ண துணிந்தாள். அவள் எதுவுமே செய்யாமல் பாப்பு கோமாவிற்கு சென்றது அவளுக்கு வருத்தத்துடன் கூடிய மகிழ்ச்சியே, அவள் அண்ணன் அப்படியே தேங்கியதும் அவளுக்கு அவ்வளவு மகிழ்ச்சியை கொடுத்தது. அடுத்ததாக அவள் பார்வை சுஹா, விஷா மற்றும் அவர்கள் பிள்ளை என சுற்றி வந்தது. அதனால் அவர்களை கதற விட பிள்ளையை கடத்தும் முயற்சியில் இறங்கினாள். அதற்கான ஏற்பாட்டையும் பார்த்துவிட்டாள் தான். ஆனால் இயற்கை ஒத்துழைப்பு அளிக்க மறுத்து ஒரு நோயை உலகிற்கு கொடுத்துவிட, மொத்த நாடும் அதில் முடங்கிப் போக வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது. அதில் அவள் பிளான், பிளானாகவே இருக்க, இரண்டு பொண்டாட்டிக்காரனான விஷா இரண்டு பேருடனும் இருக்க முடியாமல் தன் பாஸூடன் அந்த காட்டில் மாட்டிக் கொண்டான். சார்ம் மறுபடியும் பாப்பு மட்டுமே உலகம் என அவள் அருகிலேயே இருக்க ஆரம்பித்து விட்டான்.

இது எதுவும் அறியாவிட்டாலும் தனது சார்ம் நினைத்து அவளுக்கு வருத்தமே. பின்பே காதலிகளை காணவந்த காளையர்கள் பக்கம் தனது கவனத்தைத் திருப்பினாள். 'நாம இவங்களலாம் கண் எதுக்க பாத்துட்டுருக்கதுனால தான் அவங்கள பெருசா மிஸ் பண்ற ஃபீல் இல்லையோ' என நினைத்துக் கொண்டு திரும்ப, இரு பெண்களும் மகிழின் குடிலில் இருந்து வெளி வந்தனர்.

"இளவரசே இருவரும் அக்காவும் தங்கையுமோ? ஒரே குடிலிலிருந்து வருகிறார்கள். அவ்வாறெனில் உறவில் ஏகப்பட்ட சிக்கல் வருமே. இளவரசியின் சகோதரியை எப்படி நான் மணக்க முடியும்" ௭ன்றான் தனா அதுவே இப்போது முக்கியம் போல்.

"காத்துலேயே படம் வரஞ்சுட்டு இரு நீ. எதித்து நின்ன சிறுத்தைய சொருகின மாதிரி உன்னையும் ஒரு நாள் அந்த மகிழு சொருகத்தான் போறா" இது பாப்பு.

"என்ன பதிலே காணோம்..." என தனா இளவரசனை திரும்பிப் பார்க்க, அவன் மெய்மறந்து மகிழ்தினியை ரசித்துக் கொண்டிருப்பதை கண்டு, "இளவரசர் நம் பேச்சைக் கேட்கும் மனநிலையிலேயே இல்லை போல்" என்று விட்டு திரும்பி தனது காதலியை பார்த்தான். இரு பெண்களும் அவர்களுக்குள் ஏதோ சண்டையிட்டுக் கொண்டு வருவது தெரிந்தது.

"இன்றே பேசி முடித்து விடு உனது காதலை, தினமும் இவ்வாறு அய்யனுக்கு தெரியாமல் வருவதில் எனக்கு உடன்பாடு இல்லை. நம்மை நம்புபவர்களுக்கு முதுகில் குத்துவது போல் துரோகம் இழைத்து கொண்டிருக்கிறோம். புரிந்து செயல்படு" என மகிழ் திட்டிக் கொண்டுதான் வந்தாள்.

அருகில் வந்து விட்டதால் அவர்கள் பேச்சுக்கள் காளையர்களையும் எட்டியது. ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து வந்த பெண்கள் இவர்களை கவனிக்கவில்லை தான்.

"சரிடி மகிழ். கோபம் கொள்ளாதே, நீ இப்படி பேசுவது மனதிற்கு மிகவும் சங்கடமாக உள்ளது. நான் என்ன செய்வேன், அவரை பார்த்தால் பேச்சு வர மாட்டேன் என நாக்கு மேலன்னத்தில் அல்லவா ஒட்டிக்கொள்கிறது".

"ஒட்டி கொள்ளுமே, வா திரும்பி குடிலுக்கு செல்வோம், உன் ஐயனை துணைக்கு அழைத்துக் கொண்டு போ, நீ பேச வேண்டாம் அவரே ௭ல்லாத்தயும் பேசி முடித்து விடுவார். என்ன சொல்கிறாய்" என்றாள் நக்கலாக.

"நாளை அவரை ஐயனிடம் வந்து கண்டிப்பாக பேச சொல்கிறேன் மகிழ்".

"ம்ம். நாக்கை ஒட்ட விடாமல் பிடித்து இன்று சொல்லவேண்டியதை சொல்லி விட்டு வர வேண்டும்".

"நீ இளவரசரிடம் என்ன சொல்வதென்று முடிவு எடுத்து விட்டாயா? அவருக்கும் உன் மேல் விருப்பம் போல் தான் தெரிகிறது".

"உலராமல் நடையை மட்டும் பார்",

"ஏனடி அதை மட்டும் என்னிடம் மறைக்கிறாய்".

"இதில் பேச ஒன்றுமில்லை கொற்றவை. எனக்கு அவ்வளவு பெரிய பேராசை இல்லை என்று புரிந்து கொள்ளடி. அவர்கள் ௭ன்னை மணக்க கட்டாயம் கேட்க மாட்டார்கள் ௭ன்பது ௭ன் ௭ண்ணம், அவர்கள் அந்தப்புரத்தை அலங்கரிக்கும் பெண்ணாக இருக்க எனக்கு விருப்பம் இல்லை. நீயே பார்த்திருப்பாய் தானே அரண்மனை திருவிழா சமயம் கூட நம்மை அழைத்துச் செல்ல யோசிப்பவர் நம் ஐய்யன். நாடக விழாவின் போது எவ்வளவு கெஞ்சி அங்கு சென்றோம் எல்லாம் மறந்து விட்டதா? இதில் இந்த ஆசை வேற நமக்கு தேவைதானா? உனது ஆசையை நிறைவேற்றவே உன்னுடன் வருகிறேன். அவரை உனக்கு பிடித்து விட்டது என்பதை நீ தூக்கம் இல்லாமல் தவித்த முதல் நாளே கண்டுகொண்டேன், ஆனாலும் இவ்வாறு சந்திப்பது உசிதம் இல்லை என்றே உன்னை கடித்து கொள்கிறேன் புரிகிறதா?" ௭ன நீள விளக்கமளித்தாள் அகமகிழ்தினி.

"புரிகிறது மகிழ். உனக்கு இன்னும் நேசம் என்ற ஒன்று வரவில்லை, வந்த பின்னும் இவ்வாறே பேசிக் கொண்டிருப்பாயா என்பது மட்டும் புரியவில்லை மகிழ்".

தலையிலடித்துக் கொண்ட மகிழ், "உனக்கு உன்னவர் கிறுக்கு முத்திவிட்டது".

"இளவரசர் உண்மையாகவே உன்னை காதலிக்கலாம் இல்லையா?" ௭ன்றாள் மறுபடியும்.

"உனக்கு புரியவே புரியாதாடி, நாம் மலைவாசிகள், நம் தேசத்தை ஆளும் ஒரு இளவரசர் கண்ணில் கண்டதும் ஒரு பெண்ணைக் கவர்ந்து செல்ல நினைக்கிறார் என்றால் அதற்கு காரணம் கலவியாக மட்டுமே இருக்கும், நேசம் எங்கே இருக்கிறது இதில்?" என இவர்கள் பேசிக் கொண்டே வேங்கை அம்மன் கோவிலை அடைந்திருக்க, இதையெல்லாம் கேட்டுக் கொண்டே பின் வந்த ஆடவர்கள், அவர்கள் பேச்சை தடுக்கப் போன தனாவையும் தடுத்து முழுவதையும் கேட்ட அமிழ்திறைவன், அவளது இறுதி வார்த்தையில் கொந்தளித்து அவளை இழுத்துக் கொண்டு குகைக்குள் நடக்க ஆரம்பித்தான்.

இதை எதிர்பார்க்காத மகிழ், என்னவென்று உணரும் முன்னே கையை பிடித்து இழுத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்து விட, முதலில் இழுத்த இழுப்பில் சென்றவள், பின் கையை உதறிவிட்டு விடுவிக்க போராட, இன்னும் இறுக்கிப் பிடித்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தான்.

"விடுங்கள் இளவரசே என்ன செய்கிறீர்கள்?" என்றாள்.

தனாவும், கொற்றவையும் கூட பதறி, "இளவரசே இளவரசே" என கத்திக் கொண்டு தான் பின்தொடர்ந்தனர்.

"ஏன் இளவரசியார் இவ்வாறெல்லாம் பேசினார்கள். இளவரசர் மனம் எவ்வளவு வருத்தப்பட்டால் இவ்வாறு நடந்து கொள்வார். எதற்காக இவ்வளவு நம்பிக்கை இன்றி பேச வேண்டும், இனி என்ன நடக்கும் என்று தெரியவில்லையே" தனா புலம்பியவாறு வர.

"என்ன சொல்கிறீர்கள் முதலிலேயே வந்துவிட்டீர்களா? மகிழ் பேசியது அனைத்தும் இளவரசர் கேட்டு விட்டாரா என்ன?" என்றாள் கொற்றவை.

"ஆம், நாங்கள் இன்று உங்கள் ஊர் எல்லைக்கு வந்து விட்டோம். நீங்கள் எங்களை கவனிக்காமல் தாண்டி சென்று விட்டீர்கள் எங்களை பற்றி பேச ஆரம்பித்ததால் அமைதியாக பின்தொடர்ந்தோம். இளவரசி ஏன் இளவரசரை அந்த எண்ணத்தில் கூறினார்கள்? கோட்டையில் இதற்கு முன் இருந்த அந்தபுரந்தையே காவல் கூடமாக மாற்றியமைத்தவர் அவர். ஒருவனுக்கு ஒருத்தி என இதுவரை எப்பெண்ணையும் ஏறெடுத்தும் பார்க்காது வாழும் மனிதரை எவ்வளவு இழிவாக கூறிவிட்டார்கள்" என தனா பேசுவது அனைத்தையும் கை இறுக முன் செல்பவனுடன் நடந்தாலும் கேட்டு கொண்டாள் மகிழ்.

அதனால் சுரணை பெற்று, "மன்னித்து விடுங்கள் இளவரசே, தெரியாமல் பேசிவிட்டேன். கையை விடுங்கள். நான் விளக்கம் அளிக்குறேன்" என்றவுடன் கையை விட்டுவிட்டான்.

அவர்கள் வேங்கை அம்மனை நெருங்கியிருந்தார்கள், இவள் கையை தடவி கொண்டிருக்க, இவன் பாறை மேலேறி சென்று வேங்கையம்மன் கழுத்திலிருந்த மாலையை கழட்ட, மாலையோடு மலைவாழ் மக்கள் வேங்கை தாய்க்கு அணிவித்திருந்த கரும்பச்சை பாசியோடு கோர்த்த புலிப்பல் தாலியோடு சேர்ந்து வந்திருக்க, அதை அறியாமலே மாலை மாற்றினாலே அவள் மனைவி தான் என அவன் அதை எடுத்து வந்து அவள் கழுத்தில் இட, மாலை மட்டும் பத்தாது முழு உறவாக காதலையும் தாலியயும் சேர்த்துக் கொள் என இருவரையும் இணைத்து விட்டாள் வேங்கை, நேரங்காலமெல்லாம் பார்க்காமல், நடுநிசியில், தேய்பிறையில் மங்கல ஒளியின்றி, நாய் நரி ஊளையோடு, யாரின் ஆசீர்வாதமும் இன்றி நடைபெற்ற கல்யாணமாகி விட்டிருந்தது அகிழ்-மகிழ் திருமணம்.

தனா கொற்றவையோடு பாப்புவும் அதிர்ச்சியாக நின்றாள்.
 
அத்தியாயம் 10

மாலையைப் போட்டால் மணப்பதற்காகவே தன்னை நெருங்குகிறான் என புரிந்து கொள்வாள் என்றெண்ணி மாலையை அணிவித்தவன், "இனி என்னை நம்புவாய் தானே வேடத்தி. உன்னை என்னுடன் அரியணையில் அமர்த்தவே மணம் முடிக்க நினைக்கிறேன். என்னையும் என் காதலையும் நீ நம்பலாம், அன்றேல் காதலனாக என்னை நம்ப மறுக்கும் உன் மனம் கணவனாக நம்புமெனில் நாளையே உன் தந்தையைப் பார்த்து நம் மனம் முடிக்கவும் நான் தயார்".

"இளவரசே ஏன் அவசரப்பட்டு விட்டீர்கள் மாலை மாற்றினால் அவர்கள் உங்கள் துணைவிக்கு சமானம், நாடாளும் அரசர் பஞ்சாங்கம் பார்த்து நாள் குறிக்காமல் இவ்வளவு பெரிய செயலை செய்து விட்டீர்களே" என்றான் தனா.

"எனக்கு இவள் நம்பிக்கை மட்டுமே முக்கியமாக பட்டது தனா. கேட்டாய் தானே என்னை பற்றிய இவளது கருத்தை, இப்படியான வழியைத் தவிர, அதை எப்படி போக்குவேன்? . மக்களுக்கு நம் அரசின் மீது அவ்வளவு நம்பிக்கை" ௭ன அமிழ்திறைவன் இகழ்ச்சியாக கூற. (அவன் அவனது தந்தையை நினைத்து இவள் தன்னை பற்றி இந்த முடிவுக்கு வந்திருக்கலாம் என நினைத்தான். ஆனால் இப்படியான விஷயங்களை அந்த மலைவாசி மக்கள் பெண் பிள்ளைகள் வரை கொண்டு செல்வதில்லை என்பதை அவன் எப்படி அறிவான்? அவள் பொதுவான கருத்தையே வெளியிட்டாள். அரசர்கள் 3, 4 மனைவியை வைத்துக் கொள்வர், பெண்கள் சூழ அந்தப்புரம் வைத்துக் கொள்வர், என்பது அவளுக்கு செவிவழிச் செய்தியே).

அவ்வளவு நேரமும் அதிர்ந்து நின்றிருந்த மகிழ், "இப்படி செய்து விட்டீர்களே இளவரசே, இதை எப்படி....." என குனிந்து மாலையைத் தொட்ட போதுதான் கையில் தட்டுப்பட்ட தாலியை உணர்ந்து திரும்பி வேங்கையை பார்த்தாள். அம்மன் கழுத்தின் வெறுமை உண்மையை கூற, பதறி மாலையோடு புதைந்து இருந்த தாலியை வெளியில் எடுத்தாள். இதை கண்டு இதுவரை பயத்தில் உறைந்து நின்றிருந்த கொற்றவை மயங்கி கீழே விழ, தனா மடி தாங்கினான்.

'சின்ன கேப்பையும் ஃபில் பண்றடா விஷா' இது நம் பாப்பு.

"இளவரசே என்ன காரியம் செய்து விட்டீர்கள், இது எங்கள் குல தாலி, வேங்கையின் ஆணையின்றி நாங்கள் யாரும் திருக்கல்யாணம் முடிப்பதில்லை. நீங்கள் செய்ததை நான் எவ்வாறு ஏற்றுக்கொள்வது? இச்சூழ்நிலையை எப்படி கையாளுவது என்று கூட என்னால் யூகிக்க முடியவில்லை?" ௭ன மகிழ் புலம்ப.

"சற்று பொறு மகிழ், நானும் இதை எதிர்பார்க்கவில்லை. மாலையை மட்டுமே கழட்டினேன், இதுவும் உடன் வந்திருக்கிறது எனில் இது நீ வணங்கும் இத்தேவியின் ஆசியே. என்றானாலும் நீயே என் மனைவி அது இன்றே உறுதியானதில் நான் பெரு மகிழ்ச்சியடைகிறேன். இதை உன் தந்தையிடம் கூறுவது முதல் ஊரறிய நம் கோட்டைக்கு உன்னை அழைத்துச் செல்வது வரை அனைத்தும் என் பொறுப்பு. நீ என்னை நம்பினால் மட்டும் போதும். நம்பு வேடத்தி" என்றான் அழுத்தமாக.

இதற்குமுன் எப்படியோ இனி அவன் அவளின் மணவாளன், இப்பிறவியில் இவனே காதலன், ஆகையால் குழப்பம் நிறைய இருந்தும் மனமுவந்து அவனை ஏற்க துவங்கினாள், அதற்கு அச்சாரமாக அவன் கூறியவற்றை தலையசைத்து ஏற்றுக் கொண்டாள். அவளுக்கு தந்தையை பற்றி பயமில்லை, அரசன் கேட்டு யாராலும் மறுக்க முடியாதே!!!. ஐயன் கண்டிப்பாக ஒத்துக் கொள்வார். ஆனால் இவர்கள் குல வழக்கப்படி வேங்கையிடம் அனுமதி வாங்கியே மணம் முடிப்பர். அது மட்டுமே உறுத்தலாக இருந்தது. வேங்கையின் தாலியை கழற்றி மாற்றியது எவ்வளவு தூரம் சரி என்ற யோசனை தான் அவளுக்கு பெரிதாக தெரிந்தது. அக்கால பெண்மணியாக கழுத்தில் தாலி ஏறி விட்டது, இனி இவனே கணவன், இவனே வாழ்க்கை என்ற முடிவிற்கு வந்திருந்தாள்.

அவள் யோசனையான முகத்தை பார்த்தவன், அவள் முகம் தாங்கி நெற்றியில் முத்தி, "கலங்காதே வேடத்தி அனைத்தையும் நான் பார்த்துக் கொள்கிறேன்" என்றான், கன்னம் சிவக்க தலை குனிந்தவள் சம்மதமாக தலையசைத்தாள்.

தனா இதை கண்டதும் வேறு பக்கம் பார்க்க திரும்பியவன், அப்பொழுதுதான் மடியில் கிடந்த கொற்றவை ஞாபகம் வர குனிந்து கன்னத்தை தட்டி எழுப்பினான். அதிர்ச்சியில் இருந்து தெளிந்தவளும் மலங்க மலங்க விழித்து பார்த்தாள், பின் ஒன்றன்பின் ஒன்றாக ஞாபகம் வர, பதறி எழுந்தாள், "ஐயோ மகிழ் ஐயனிடம் என்ன பதில் கூறுவது? எல்லாம் என்னால் தான், வரமாட்டேன் என்றவளை நான் தானே கெஞ்சி கொஞ்சி அழைத்து வந்தேன். ஐயனும், அம்மையும் எவ்வளவு வேதனை கொள்வார்கள். ஊர் தலைவரின் மரியாதை கெட நானே காரணமாகி விட்டேனே. நீ இளவரசி ஆனதில் வரும் சந்தோஷத்தை கூட தற்சமயம் அனுபவிக்க இயலவில்லையே" என அவளை கட்டிக் கொண்டு அழ.

"கொள்ளி மடத்தின் தலைவர் நீதிவர்மனின் மகளா நீ?? வேடத்தி" என்றான் திறைவன்.

"ஆம் இளவரசே" மகிழ் சொல்ல.

"நேர்மையானவர், புத்தி கூர்மை உள்ளவர், அவர் என் மாமனார் என்பதில் எனக்கு ஏகத் திருப்தி" ௭ன்றான் நன்றாக சிரித்து.

"நாம் என்ன பேசுகிறோம் இவர் என்ன கூறுகிறார்" என எப்போதும் தனா முழிக்கும் முழியை இப்போது கொற்றவை முழித்தாள்.

"நாழி ஆகிறது கிளம்பலாம் இளவரசே" தனா நினைவுகூற.

"செல் வேடத்தி நாளை உன் குடிலில் சந்திப்போம்" திறைவன் சொல்ல, அதற்கும் ஒரு தலையசைப்புடன் கிளம்பிவிட்டாள்.

அவள் முகத்தைப் பார்த்தவாறு கொற்றவையும் சென்றுவிட, கொற்றவை தன்னை காண்பாள் என அவளையே பார்த்து நின்ற தனாவை நெருங்கிய பாப்பு, "நீ எவ்வளவு பாவமா முகத்தை வச்சு கிட்டாலும் அவ திரும்ப மாட்டா. வீட்டுக்கு போனா வடிவுட்ட அடி வாங்கணுமேன்ற பீதில போகுது பக்கி" என்றவள் பின் திறைவனை காமித்து, "சார்ம் என்ன தூக்கிட்டு போயி தாலி கட்டினார். இந்த அகிழு மகிழ இழுத்துட்டு வந்து தாலி கட்டியிருக்கார். ஜென்மம் மாறுனாலும், கெட்டப் மாறினாலும், இப்போ உள்ள நீதி, அஞ்சலையயும் மதிக்கல, ஃபியுசர்ல உள்ள மெய்யப்பன், வடிவையும் மதிக்கல. அவர் இஷ்டம் போல தான் எல்லாம். அப்பயும் இப்பயும் நீதான் என்ன செய்யன்னு தெரியாம முழிச்சிட்டு நிக்கிற விஷா" என அவனுக்கு பாவம் பார்த்து உச்சுக் கொட்டி கொண்டாள்.

அமிழ்திறைவன் திரும்பி வேங்கை அம்மனை மனதார வணங்கி நன்றி தெரிவித்தான், மனம் நிறைந்தார் போலிருந்தது அவனுக்கு. பின்பே திரும்பி தனாவை பார்க்க, அவனது வேதனை நிறைந்த முகம் அவனுக்குமே புரிந்தது. அரசனான தனது இத்தகைய திருமணம் நாட்டிற்கும், நாட்டு பிரஜைகளுக்கும் எந்தவிதத்திலும் பாதிப்பு இல்லாமல் பார்க்க வேண்டும், அதற்கான பரிகாரத்தை ஜோதிடரை அழைத்து கலந்துகொண்டு விரைவில் செய்து முடிக்க வேண்டுமென முடிவெடுத்துக் கொண்டு கிளம்பினான்.

அங்கு குடில் நோக்கி சென்ற பெண்கள். கொற்றவை பயத்தில் அமைதியாக வர, மகிழ் குழப்பத்தில் அமைதியாக வந்தாள். இருவரும் வீட்டை நெருங்க வாசலில் அஞ்சலை, நீதிவர்மன் இருவரும் அமர்ந்திருப்பதைக் கண்டு திகைத்து நின்றனர். கொற்றவைக்கு மறுபடியும் மயக்கம் வரும்போல் இருந்தது.

வாசலிலேயே நின்று விட்ட இருவரையும் கண்டு, "பௌர்ணமிக்கு மட்டுமே காட்டினுள் சென்று வருபவர்கள் தொடர்ந்து 2 நாட்களும் சென்று வருகிறீர்களே ஏன்?" என நேராக விஷயத்திற்கு வந்தார் அஞ்சலை.

'அவ்வாறெனில் இத்தனை ஆண்டுகளாக இவர்கள் அறியாமல் சென்று வருகிறோமென மூடர்களாக நம்பி இருந்து உள்ளோம்' என நினைத்து அமைதியாகவே நின்றாள் மகிழ்.

"நான் உங்கள் இருவரையும் தான் கேட்கிறேன், பின்னேயே வந்து தெரிந்து கொள்ள எங்களுக்கு எவ்வளவு நேரம் ஆகியிருக்கும்? உங்களிடமே விசாரிக்கிறோம் என்றால் நீங்கள் உண்மையை கூறுவீர்கள் என்ற எண்ணத்தில்தான், கூறுங்கள் இரண்டு நாட்கள் தொடர்ந்து செல்ல காரணம்?".

'எவ்வளவு நம்பிக்கை நம் மீது, அது பொய்க்க போகிறதே' என அவ்வளவு நேரமும் கலங்காத கண் தற்போது பெரும் குற்றமாக தெரிந்ததில் கலங்கி கண்ணீரை வெளியேற்றியது.

"எனது அம்மணிக்கு அழ தெரியுமா?" என்று தான் பார்த்தனர் பெற்றோர் இருவரும்.

"என்னவாயிற்று மகிழ், காட்டில் விலங்குகள் எதையும் கண்டாயா? அதை வேட்டையாடவே தொடர்ந்து சென்றாயா? எதுவாயினும் கூறு. தவறு செய்துவிட்ட குழந்தையாய் நீ கலங்குவது கண்டு உள்ளம் பதறுகிறது" என்றார் அஞ்சலை.

நீதிவர்மன் அமைதியாக நின்றவர் அப்பொழுதுதான் அவள் கழுத்தில் கிடந்த மாலையை கண்டு புருவம் சுருக்கி, 'இது வேங்கைக்கு அணிவிக்கும் மாலையாகிற்றே', ஒரு படபடப்புடன் 'ஏதும் தெரிந்து விட்டதோ' என பயந்தவர் கொற்றவையை பார்க்க, அவள் எங்கு இந்த லோகத்தில் இருந்தாள்.

அதனால் திரும்பி மகளிடம் வந்தவர், "என்ன மகிழ் வேங்கையின் மாலை உன் கழுத்தில் எப்படி?" என்க.

அஞ்சலையும் குனிந்து அதை பார்த்தவர், கண்ணில் அவள் கழுத்தில் கிடக்கும் தாலியும் பட, "ஐயோ சுவாமி" என நெஞ்சை பிடித்து இரண்டு அடி பின் சென்றார்.

அந்த சத்தத்தில் இரு பெண்களும் பதறி திடுக்கிட, நீந்திவர்மன் புரியாமல் மனைவியை பார்த்தார். தன்னைப் போல் அவளும் அவளுக்கு ஏதும் தெரிந்திருக்குமென பயப்படுகிறாளோ என்று நினைத்தார், "விசாரிப்போம் கலங்காதே அஞ்சலை" என்றார்.

"சுவாமி அவள் கந்தர்வ மணம் புரிந்து கொண்டு வந்திருக்கிறாள். நம் வேங்கையின் தாலி அவள் கழுத்தில் உள்ளது" ௭ன்றவர் மகிழிடம் "இதற்கு யார் காரணம்? ஏன் இப்படி செய்தாய்? ஐயனைபற்றியும், நம் பழக்கம் பற்றியும் தெரிந்தும் ஏன் இவ்வாறு செய்தாய்?" என அவளை அடித்து அடித்து அழுதார்.

நீதிவர்மனுக்கும் அதிர்ச்சியே, எவ்வளவோ பிரச்சனைகளை சமாளித்தவர் இதற்கு முழுதாக இரண்டு நிமிடங்கள் திக்கற்று நின்றுவிட்டார்.

பின் நிதானம் பெற்று, அஞ்சலையை நிறுத்தி, "யார் அம்மணி?" என அமைதியாக வினாவினார்.

"புராரி வன இளவரசர்" உடனடியாக பதில் கூறினாள்.

இது அதைவிட அதிர்ச்சியான விஷயம். தாயும், தந்தையும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். இது எவ்வாறு சரிவரும் என அவர்களுக்கு புரியவில்லை. 'நம் மகள் வாழ்க்கை அவ்வளவு தானா? முடிந்தே விட்டதா?' என பயந்தனர்.

"என்ன நடந்தது? ஏன் இந்த ரகசிய திருமணம்? என முழுதாக கூறு அம்மணி" என்றார் நீதிவர்மன்.

கொற்றவையை திரும்பி ஒரு பார்வை பார்த்தவள், எப்படியும் நாளை தெரியப்போகிறது அது இன்றே இப்போதே தெரியட்டும் என மொத்தத்தையும் கூறிவிட்டாள். இப்போதும் 'ஒரு நாட்டின் அரசன் அவன். நாம் மலைவாழ் மக்கள் எவ்வகையிலும் எட்டாத உயரம்' ௭ன அரசன் மீது நம்பிக்கை வர மறுத்தது. இருவரும் வாசலிலேயே அமைதியாக அமர்ந்து விட்டனர். இரு பெண்களும் குடிலினுள் சென்று ஒடுங்கி விட்டனர்.

அரண்மனை சென்றவனும், விடியும் நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தான். விடிந்ததும் ஜோதிடரை அழைத்து வர ஆள் அனுப்பினான். ஆள் சென்றுவிட்டு ஜோதிடர் ஊரில் இல்லை என்ற செய்தி உடனே திரும்பி வந்தான். மறுநாளும் காத்திருக்க, ஜோதிடர் இல்லை என்ற செய்தி கிடைத்தது.

அவன் ஒருநாள் வராததற்கே அங்கு மொத்த குடும்பமும் சோர்ந்து, தளர்ந்து போய் இருந்தனர். மற்ற குடிமக்களும் விஷயம் அறிந்து அவர்களுக்கு தெரிந்ததை கூறி துக்கம் பகிர்ந்து கொண்டனர்.

அமிழ்திறைவனுக்கு அதற்கு மேல் பொறுமையிருக்கவில்லை. இரு நாட்களாக இரவில் காட்டில் சென்றும் காத்திருந்தவன், அவள் வரவில்லை என்றதுமே 'விஷயம் அவள் வீட்டினருக்கு தெரிந்து விட்டது, இனி அவளை அழைத்து வரவே அவள் குடில் செல்ல வேண்டும்' என உறுதி கொண்டான்.

இரண்டு நாட்களுக்கு மேல் ஜோதிடருக்காக காத்திருந்து பயனற்று நேராக சிற்றன்னையிடம் சென்று நின்று விட்டான். "எனக்கு மலைவாசி பெண்ணுடன் திருமணம் முடிந்துவிட்டது, இன்று போய் அவளை நம் கோட்டைக்கு அழைத்து வரவேண்டும்" என மேல் பூச்சுன்றி நேராக கூறிவிட்டான். அவர் மேற்கொண்டு கூறிய அனைத்து மறுப்புகளையும் பேசிய அடக்கி அழைத்துச் சென்றான் கொள்ளிமடம், ஆனால் இவன் சென்ற நேரம் மகிழ் விஷ காயைத் தின்று வைத்தியரிடம் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தாள்.
 
அத்தியாயம் 11


அகமகிழ்தினி இரண்டு நாட்களாக, 'திடீர் கணவனாலும், இனி அவனே வாழ்க்கை' என நம்பியிருந்தவன் வராமல் ஏமாற்றவும், பயந்துதான் விட்டாள். ஐயனையும், அம்மையையும் காண காண தப்பு பூதாகரமாக தெரிய ஆரம்பித்தது.

"ஜாமம் ஆனாலும் அவரை கையோடு அழைத்து வந்திருக்க வேண்டுமோ? இவரே என் கணவர் என உறுதிப்படுத்தி இருக்க வேண்டுமோ? இளவரசர் என்று நாம் சொன்னதை நம்பியிருக்க மாட்டார்களோ? ஏன் ஐயனும், அம்மையும் என்னிடம் பேசவே இல்லை?" என்றெல்லாம் அவள் மனம் போராட்டத்தில் உழன்று கொண்டிருக்க, கொற்றவை மட்டுமே அவளை விட்டு அங்கு இங்கு நகராமல் உடனிருந்தாள்.

முதல் நாள் யாரும் ஊண், உறக்கமின்றி இளவரசனை எதிர்பார்த்து பொழுதை கழித்திருக்க, மறுநாள் மற்ற குடில் மக்கள் கட்டாயப்படுத்தி உண்ண வைத்திருந்தனர். அங்குள்ள மக்கள் எல்லோருமே எப்போதும் ஒரே குடும்பமாக சந்தோஷத்தையும், துக்கத்தையும் பங்கிட்டே வாழ்வர். அது போல இன்றும் தலைவரின் குடும்பத்தை சுற்றிய அவர்களும் அமர்ந்திருந்தனர்.

"நம் எல்லோருக்கும் வாக்கு கொடுக்கும் மகிழ் வாழ்க்கை, நிச்சயம் நன்றாக இருக்கும் நீங்கள் அவளை நினைத்து கலங்காதீர்கள் அக்கா" என ஒரு பெண்மணி சொல்ல,

"வேங்கையின் வாக்கு வாங்கவில்லையே? எதற்கு இப்படி ஒரு அவசர திருமணம் நடந்தது என்று புரியவில்லையே? இதற்கு பின்னான காரணம் என்னவாக இருக்கும்? காட்டுக்குள் வசிக்கும் நம் மகளைக் கொண்டு ஏன் கோட்டையில் இருக்க வைக்க வேண்டும்?" அஞ்சலையின் கவலை அதுவாகவே தான் இருந்தது.

"காரணமின்றி காரியமில்லை அஞ்சலை, வேங்கையை நம்புவோம், அவள் பார்த்துக் கொள்வாள்" என்றார் நீதிவர்மன். அதன்பின் அங்கு பேச்சில்லை.

இரண்டாம் நாள் இரவு வரை பொருத்தவளால் அதற்கு மேல் பொறுமையை கடைபிடிக்க முடியவில்லை. கண்ணீர் பெருக்கெடுத்தது அழுது தீர்த்தாள். இவள் எதுவுமே செய்யாவிடினும் பெற்றவர்களுக்கு பெரிய துரோகம் இழைத்து விட்டது போல் தோன்றி அவள் மனம் அவளை அச்சுறுத்தியது.

"கையோடு அழைத்து வந்திருக்க வேண்டும்" என 1001 வது முறையாக தன்னை திட்டிக் கொண்டிருந்தாள். 2 நாட்களாக பெற்றவர்களும் முகம் திருப்புவது வேதனையை அதிகரித்தது.

"ஒரு வேளை நான் இளவரசரை அவ்வாறு பேசிய காரணத்தினால் தான் தாலிகட்டி இருப்பாரோ? பழிதீர்க்க தாலி மட்டும் கட்டி தனிமைப்படுத்தி சென்று விட்டாரோ? எனக்கு தோன்றியதை பேசியதும் தவறா?" என நினைக்க நினைக்க அழுகை பீறிட்டது.
இரவில் தனக்காக வந்து காட்டில் காத்திருப்பான் என ஒரு நிமிடமும் அவளுக்குத் தோன்றவில்லை.

அன்று இரவு முடிந்து, காலையில் எல்லோரும் காலை கடனுக்காக அவளை விலகி செல்கையில் தான் அவளுக்கு தனிமை கிடைத்தது. இந்த பொழுதுகளில் இரண்டு நாட்களாக மாறி மாறி ஒருவர் உடன் இருந்தனர். இன்று கொற்றவையும் தன் குடிலுக்கு சென்றிருக்க, குடிலுக்கு சற்று தள்ளி இருந்தது அந்த செடி. வேட்டைக்கு செல்பவர்களுக்கு காட்டு உயிரினங்களின் தாக்கத்தில் உண்டான விஷத்தை முறிக்கும் விதையை கொண்ட செடி அது.

மகிழ் அந்த செடியில் இருந்த விதையை எடுத்து பச்சையாகவே தின்றுவிட்டாள். அது அதீத விஷயத்தை முறிக்கும் வல்லமை கொண்டது தான், உடம்பில் விஷம் இருந்தால்! அவ்வாறு விஷம் இல்லாத சமயத்தில் தின்பதனால் குடலை அரித்து புண்ணாக்கிவிடும். உயிர் வலியைக் கொடுக்கும், அதுவே தற்கொலைக்குச் சமானமாகும்.

அவளுக்கு அதெல்லாம் தெரியாது, "இது விஷமுறிவு காய், விஷமில்லாத நான் சாப்பிடுவதால் எனக்கு இது விஷக்காய், இதற்குமேல் இவர்களை அழவிடாமல் உடனடியாக உயிர் பிரிந்து விட வேண்டும், ஒரே நாளில் அழுது முடித்து துக்கத்தை தொலைக்கட்டும்" என்ற முடிவுக்கு வந்தாள்.

ஆனால் அந்த காய் அடுத்தடுத்த நிமிடங்களில் அதன் வலியை காட்ட ஆரம்பித்திருந்தது, பொறுக்க முடியாத அளவு வயிறு வலி, விருவிருவென குடிலுக்குள் சென்று சுருண்டு படுத்து விட்டாள். ஆனால் நேரம் ஆக ஆக வலி கூடியது, உருளத் துவங்கினாள், கண் இருட்டியது.

கொற்றவை வந்து பார்த்தவள் பதறி, "மகிழ் என்னவாயிற்று? ஏன் இப்படி உருளுகிறாய்? என்ன செய்கிறது?" என அவளைப் பிடித்து இருத்த, அதெல்லாம் அவள் காதில் இறங்கவே இல்லை.

வலி வலி வலி மட்டுமே, நீதிவர்மனும், அஞ்சலையும் வேங்கை அம்மனிடம் வேண்டிக் கொள்ள சென்றனர், "இளவரசன்" என மகள் கூறிய கூற்றை மட்டும் நம்பி கொண்டு இளவரசரிடம் கேள்வி கேட்டு கோட்டைக்குள் நுழைய முடியும் என அவர்களுக்குத் தோன்றவில்லை, அதனால் வேங்கையே துணை என சென்றிருந்தனர்.

இங்கு கொற்றவையின் சத்தத்தில் பக்கமிருந்த அனைவரும் கூடி விட, "என்ன நடந்தது" என ஆளாளுக்கு விசாரிக்க பதில் கூறவில்லை, கூறமுடியவில்லை மகிழால்.

வைத்தியரும் இதற்குள் ஓடி வந்திருக்க, என்ன செய்கிறது என்று அவராலும் கண்டுபிடிக்க முடியாமல் போக, வயிறு வலிக்கான பச்சை இலைகளை குடுத்தும் கேட்கவில்லை ௭ன்றதும், தூங்க வைக்கும் மருந்தை கொடுத்தார். அந்த இலைக்குமே அவளுக்கு உறக்கம் வராமல் இருக்க, அதன்பிறகே அவள் நோய் கண்டறிந்து சுதாரித்தவர் பசும்பாலில் தேன் கலந்து குடிக்க கொடுத்தார்.

அதுவே குடலுக்கு கொஞ்சம் இதமாக, எரிச்சல் லேசாக குறைந்தது, முழுவதுமாக குறையவில்லை. உருளுவது சற்று குறைய ஆரம்பித்தது, ஆனாலும் கண்ணை திறக்கவில்லை.

விஷயம் கேள்விப்பட்டு பெற்றோர்கள் இருவரும் ஓடி வந்த நேரம் தான், அங்கு இளவரசர் வருவதற்கான ஒலி ஒலிக்கப்பட்டது. குடிலுக்குள் செல்ல இருந்தவர்கள் அப்படியே நிற்க, மற்ற மலைவாசிகளும் குடிலிலிருந்து வெளிவந்தனர்.

எல்லோரும் இளவரசரை வணங்கி நிமிர, சந்தோஷமாக குதிரையிலிருந்து குதித்து இறங்கினான் அமிழ்திறைவன். பின் வந்த பல்லக்கில் இருந்து வெளி வந்தார் கோதை, அன்று மகிழ் வெளிவந்த குடில் வாசலில் இன்று மொத்த கொள்ளிமடமும் நிற்பதை கண்டு, 'தனக்காகவே காத்திருப்பதாக எண்ணி அவர்களை நோக்கி நடந்தான்', தனா பின்தொடர, அவர்களைத் தொடர்ந்து பெண்கள் சூழ வந்தார் கோதை.

நீதிவர்மனும், அஞ்சலையும் நடப்பதை நம்பமுடியாமல் செய்வதறியாது பிரமித்து நின்றனர். அவர்கள் சிலையாகி விட்டதைக் கண்டு சிரித்தவன், நெருங்கி தலைக்கவசம் இறக்கி, இருவர் பாதம் பதிந்தான்.

அதில் இன்னும் அதிர்ந்து பதறி, "இளவரசே!!!" என அதற்குமேல் வார்த்தை வராமல் திக்கினர். கோதையுமே அதிசயித்தார்.

பொதுவாக அரசர்கள், பெற்றவர்கள், பின் குருவானவர்களை மட்டுமே வணங்குவர். அதனால் அங்கிருந்த யாருமே இதை எதிர்பார்க்கவில்லை. காணாத ஒன்றைக் கண்டதாக நின்றுவிட்டனர்.

நீதிவர்மன் இளவரசரை தாங்கள் தொட்டு எவ்வாறு தூக்க என நிற்க, அவர்கள் நிலையைப் புரிந்தவன் போல், குனிந்த வேகத்தில் தானே நிமிர்ந்தான். இரண்டு நாட்கள் தாமதத்தை ஒரு நொடியில் போக்கி விட்டான். இதை காண வேண்டியவள் தான் காணவில்லை, நிமிர்ந்தவன் கண் அவளைத்தான் ஆவலாக தேடியது.

அதற்குள் கோதை அவர்களை நெருங்கியவர், சேடி பெண்ணிடமிருந்து புடவை, பூ, பழங்கள், தங்க ஆபரணங்கள் நிறைந்த தட்டை வாங்கி, "எங்களின் இளவரசிக்கு" என நீட்டினார்.

"வணக்கங்கள் ராணி அவர்களே, தங்கள் இருவரையும் கொள்ளிமடம் சார்பாக வரவேற்கிறேன். தாங்கள் இங்கு வந்ததே எங்கள் பாக்கியம். நடந்த விஷயங்கள்..." என படப்படப்பில் அதற்கு மேல் என்ன கூறுவது எப்படி கூறுவது என தயங்கி நின்றார் நீதிவர்மன்.

"எல்லாம் தெரியும் கொள்ளிமட தலைவரே, இளவரசர் முடிவை மாற்றும் அதிகாரம் யாருக்கும் இல்லை. அவர் தன் வாழ்க்கையை உங்கள் பெண் கையில் கொடுக்க முடிவு எடுத்துவிட்டார், தைரியமாக அனுப்பி வையுங்கள், உங்கள் பெண்தான் புராரி வன தேசத்தின் இளவரசி" என இறங்கியும் வராமல், ஏரியும் மிதிக்காமல் ராணியாக பேசினார் கோதை.

ஆனால் அவர் பேச்சை எப்படி எடுத்து கொள்வது என தெரியாமல் தான் முழித்து நின்றனர் மலைவாசி மக்கள். "எங்கே இளவரசி" என்றார் கோதையே சுற்றி பார்த்தவாறு, எல்லோரும் தானாக விலகி குடிலை காட்ட.

கோதை முன்னேற, திறைவன் "ஏன் வெளியில் எட்டிக்கூட பார்க்கவில்லை? ஒருவேளை இரண்டு நாட்கள் தாமததிற்காக கோபமோ?" என நினைத்து சிரித்துக் கொண்டவன், கோதையை பின்தொடர்ந்தான்.

வெளியே இவ்வளவு கலவரத்தையும் மகிழ் வலியில் கவனிக்கவில்லை ௭ன்றால்., கொற்றவை தோழியின் நிலை கண்டு அழுது வெளி உலகத்தை கவனிக்கவில்லை. நத்தையாய் தரையில் சுருண்டு இருந்தவளை மடியில் தாங்கி இருந்தாள் கொற்றவை.

இதை கண்டு அதிர்ந்து இருவரில் யார் பெண் என கோதை தேங்கி நிற்க, அதை பற்றி எல்லாம் எனக்கு கவலை இல்லை என்பது போல் "வேடத்தி" என குரல் நடுங்க அழைத்தான் இளவரசன்.

அவ்வளவு நேரம் இறுக கண் மூடியிருந்தவளும், அக்குரலைக் கேட்டதும் வயிற்றை இறுக பற்றியவாறு படக்கென கண் திறந்தாள். கண்கலங்கியது, பேச வாய் ஒத்துழைப்பு அளிக்க மறுத்தது. ஆனாலும் 'வந்துவிட்டான் என் தலைவன்' என்ற மன அமைதி இன்னும் கொஞ்சம் வயிறுவலியை குறைத்தது.

"என்ன நோவு வேடத்தி உனக்கு?. நான் வருவேன் என்று கூறி இருந்தேனே, இருந்தும் அதிகமாக அழுது நோவை இழுத்துக் கொண்டாயா? இங்கு வைத்தியர் இல்லையா? மருந்து கொடுத்தாகிற்றா?" எனப் படபடத்தான்.

இளவரசன் வந்து வேடத்தி என அழைக்கவுமே, கொற்றவை பதறி எழுந்திருக்க, மகிழ் தலையை தன மடியில் தாங்கி கொண்டான். இதை கண்டே பெற்றவர்கள் மனம் குளிர்ந்து விட்டது, வேங்கைக்கு நன்றி நவின்றனர்.

பின்பே அவன் வைத்தியர் பற்றிய கேள்விக்கு பதிலாக வைத்தியரை திரும்பி பார்த்தனர், "தலைவர் சாமி, அம்மணி விஷமுறிவு காயைத் தின்றிருக்க வேண்டும், வயிற்று வலி அதற்கான மருந்திற்கு மட்டுமே மட்டுப்பட்டிருக்கிறது. சற்று நேரத்தில் மறுபடியும் வலி அதிகரிக்கும், குடலை அரிப்பதால் வரும் வலி அது, அரை நாளிக்கு ஒருமுறை பசும்பாலில் தேன் கலந்து கொடுத்து கொண்டே இருக்க வேண்டும். இரவும் கொடுக்க வேண்டும். மூன்று நாள் இப்படி கொடுத்தால்தான் குடல் அரிப்பை நிறுத்த முடியும். அதன் பின்புதான் அரித்த இடத்தில் ஏற்பட்ட புண் ஆற மருந்து கொடுக்க முடியும். தவறாமல் தேன் கலந்து பால் கொடுத்து விடுங்கள்" என்றவர், இப்போது கொடுக்க சொல்லி, கொற்றவையை பார்க்க, அவள் வேகமாக சென்று எடுத்து வந்தாள்.

வந்தவள் இளவரசனை பார்த்தவாறே நிற்க, அவன் வைத்தியர் கூறிய செய்தியில் உள்ளம் புழுங்கி கொண்டிருந்தான். பெற்றவர்களும் பார்த்துவிட்டு கலங்கி அவள் அருகில் அமர்ந்து விட்டனர். அவளிடம் பேசாமல் தங்கள் கவலையை மட்டும் நினைத்து உழன்றதை ௭ண்ணி வருந்தினர்.

தனா கொற்றவையை பார்த்துவிட்டுத் திறைவன் தோளில் கை வைக்க, நிமிர்ந்தவன் கண்ணில் தெரிந்த கலக்கத்தை கண்டே கொற்றவை, தனா, கோதை மூவரும் அவன், அவள் மேல் கொண்ட நேசத்தை உணர்ந்தனர்.

தனா கொற்றவை கையில் இருந்த பாலை காட்ட, அவன் விலகுவான் என அவர்கள் எதிர்பார்க்க, தானே வாங்கி அவளுக்கு புகட்ட ஆரம்பித்தான்.

அவன் முகத்தை பார்த்தவாறே அந்த பாலை குடித்து முடித்தாள். 'தன் கணவன் தன்னை ஏமாற்றவில்லை, கல்யாணம் முடித்துவிட்டு விட்டு செல்லவில்லை, அழைத்து செல்ல வந்து விட்டான். இனி என்னைப் பெற்றவர்கள் கலங்கமாட்டார்கள்' இதுவே அவள் எண்ணமாக இருந்தது.

'ஏன் விஷத்தை சாப்பிட்டாய்?' எனக் கேட்க வேண்டிய அவசியம் அங்கு யாருக்கும் தேவை இருக்கவில்லை, எல்லோரும் காரணம் அறிந்தே இருந்தனர், அதனால் சூழ்நிலையை ஏற்று சரி செய்ய முடிவு செய்தனர்.

கோதை மெதுவாக, "20 நாளில் கோட்டையில் இவர்கள் திருமண வைபவத்தை மாலை மாற்றி எங்கள் குலத்தாலியை இளவரசி கழுத்தில் ஏற்ற வைத்து, மக்களுக்கு அறிவித்து விடுவோம். ஜோதிடரிடம் நாள் பார்த்து அழைத்துக் கொள்ளலாம் என்றுதான் நினைத்திருந்தோம். இரண்டு மாதம் சென்றே இளவரசர் கல்யாணத்தை வைக்க வேண்டும் என்றிருந்தார் ஜோதிடர். இன்னும் 20 நாளில் அந்த அவர் கூறிய இரண்டு மாதம் முடிவடைகிறது. உங்கள் வழக்கப்படி தாலி ஏறியிருந்தாலும், எங்கள் குல தாலி ஏறும் நேரமே கணக்கில் வரும், அது வரை இளவரசியை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்" என்றார்.

இளவரசன் வரும்போதே இதற்கு ஒத்துக் கொண்டுதான் வந்தான். அதனால் இப்போது மறுப்பு ஏதும் கூறவில்லை, வரும்போது இருந்த மகிழ்ச்சி இன்றியே கிளம்பினான் மகிழை மீண்டும் கொற்றவையிடம் ஒப்படைத்துவிட்டு.

அனைவரிடமும், அவளை பார்த்து கொள்ளுமாறு கூற, "மகிழ் எங்கள் குலதெய்வம் இளவரசே, அவள் வாக்கு வேங்கையின் வாக்கு போன்று உறுதியானது. ௭த்தனை உயிரை காத்தவள் அவள், அவளுக்கு ஒன்றும் ஆகாது. அவளை நாங்கள் பத்திரமாக பார்த்துக் கொள்வோம். அது எங்கள் கடமையும் கூட" என்றனர்.

'முதலில் காதலனாக நம்ப மறுத்தாள், இப்போது கணவனாகவும் நம்ப மறுத்து இறப்பை தேடி விட்டாள், ஏன் இந்த நம்பகமற்ற நிலை' என மனம் நொந்து அங்கிருந்து கிளம்பினான் இளவரசன்.
 
அத்தியாயம் 12


தண்டோரா மூலம் திறைவனின் கல்யாணம் ஊர் மக்களுக்கு அறிவிக்கப்பட்டு அழைப்பு விடுவிக்கப்பட்டது, "புராரிவன தேசத்தின் குடி வாசிகளுக்கு ஒரு நற்செய்தி. நமது இளவரசர் கந்தர்வ விவாகம் புரிந்த இளவரசியை கோட்டைக்கு அழைத்துவர, வரும் வளர்பிறை வெள்ளி நாளை தேர்ந்தெடுத்துள்ளார். அவர் மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறார், அந்த நாளை திருவிழாவாகக் கொண்டாடி நம் இளவரசியை வரவேற்போம்" என அறிவிக்கப்பட்டது.

வெளி மக்களுக்கு இச்செய்தி எவ்வளவு அதிர்ச்சியை கொடுத்ததோ, உள்ளிருந்த இளவரசனின் தங்கைக்கும், தந்தைக்கும் கூட அதே அளவு அதிர்ச்சியைக் கொடுத்தது. 'அவன் நாட்டின் இளவரசன், அவனின் முடிவை தடுக்கவும், எதிர்க்கவும் யாருக்கும் அதிகாரம் இல்லை. பின் ஏன் இந்த கந்தர்வ மணம்?' என்ற கேள்வியும் குழப்பமும் அனைவரிடமும் இருந்தது. ஆனால் அதை அவனிடம் கேட்கும் தைரியம் தான் யாரிடமும் இல்லை. உண்மையை அறிந்தவர்கள், அமிழ், மகிழ், தனா, கொற்றவை, கோதை, நீதிவர்மன், அஞ்சலை ஆகிய 7 பேர் மட்டுமே. பாப்பு சைலன்ட் மெம்பர்.

கொள்ளிமடம் மக்களுக்கு விஷயம் தெரியாதிருதிருந்ததால், இளவரசன், அது கந்தர்வ மணம் என்ற விஷயத்தையே வெளிக்கொணர்ந்து இருக்கமாட்டான். அன்று, தாலி கட்டிய மறுநாள் இரவு வந்து காட்டில் காத்திருந்து பார்த்துவிட்டு மகிழ் வரவில்லை எனவும் அவளை பெற்றவர்களுக்கு இவர்களது விவாகம் தெரிந்து விட்டது என புரிந்து கொண்டு, மறுநாள் தனாவை "நாள் குறித்து இளவரசன் வரும்வரை காத்திருக்கவும்" என்ற செய்தியைச் சொல்லி அனுப்பினான்.

ஆனால் அவன் சென்று பார்த்த போது மகிழ் குடில் வாசலில் ஊர் மக்கள் சோகத்தில் அமர்ந்திருப்பதைக் கண்டு, அனைவரும் இருக்கையில் விஷயத்தை கூறுவது உசிதம் இல்லை என திரும்பிவிட்டான். 'ஒன்று கூடி வாழும் மக்கள், அதான் எல்லோருக்கும் தெரிந்து விட்டிருக்கிறது. இதற்கு மேல் தாமதித்து தந்தையின் செயலையும் மன்னித்து தன் மேல் அவர்களுக்கு வந்திருக்கும் மரியாதையை கெடுத்து கொள்ள வேண்டாம்' என முடிவெடுத்தே, மறுநாள் சிற்றன்னையுடன் அங்கு சென்று பேசி விட்டான்.

இதோ நாட்கள் வேகமாக ஓடி, மகிழை அழைத்து வரும் நாளும் அழகாக விடிந்தது. அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் அவளை அழைக்க அரச குடும்பம் சார்பாக கோதையும், உறவினர் பெண்களும் கிளம்பிவிட்டனர். மைத்துனி முறை செய்ய பவ்யாவையும் அழைத்தனர்.

"நான் அந்த இளவரசனுக்கே தங்கை இல்லை என்கிறேன், என்னை அவன் மனைவிக்கு சேவகம் செய்ய அழைக்கிறீர்கள்".

"திறைவனை அவன் இவன் என மரியாதையின்றி அழைப்பதை இன்றோடு நிறுத்திக்கொள் பாவை. இளவரசி முன் இம்மாதிரியான பேச்சுக்கள் இடம்பெற்று உன் தரத்தை தாழ்த்திக் கொள்ளாதே. அவர்கள் இருவர்தான் உனக்கு முன்னின்று கன்னிகா தானம் செய்யப் போகிறவர்கள். அவர்களுக்கான மரியாதையை நீ கொடுத்தே தீரவேண்டும்" என உக்கிரமாக உறைத்து விட்டு சென்றார்.

"ஏன் அம்மணி இவ்வளவு கோபம். உங்களுக்கு அண்ணியாக வர இருப்பவர் இளவரசரின் மனம் கவர்ந்தவர்கள். அவரை நீங்கள் அன்புடன் அரவணைத்தால், உங்கள் காதல் ஈடேற அவர்களின் உதவி பெரிதாய் அமையும் அல்லவா" என்றாள் தேவி.

"அட வேதிக்கா, நீ ஆள் தெரியாம ஐடியா கொடுத்துட்டுருக்க, இந்த பவ்யா கெடுக்க நினைக்கிறது உன் தங்கச்சி வெள்ள பாச்சா லைஃப்ப" வேடிக்கை பார்த்து கொண்டிருந்த பாப்பு புலம்ப.

"இத்தனை நாள் இந்த அரண்மனையில் வாழும் நான் இன்று வரப் போகிறவள் வந்து தரும் வாழ்க்கைக்காக அவள் காலை பிடிக்க வேண்டும் என்கிறாயா?",

"இல்லை இல்லை அம்மணி, அன்பாக அரவணைத்து உங்கள் தோழியாக்கி கொள்ளுங்கள்" என்கிறேன்.

"எனக்கு யாரும் வேண்டாம் தேவி. எனது தலைவன் மட்டுமே போதும், அதற்காக எனது சிரமும் தாழ்த்த மாட்டேன். எனது தலைவனை எவ்வாறு அடைய வேண்டுமென நானறிவேன்" என முடித்துவிட்டாள் பாவை.

இளவரசரின் விவாக விஷயம் கேள்விப்பட்டு ஜோதிடர் ஓடிவந்திருந்தார். ௭ல்லாம் கை மீறிவிட்டிருந்தது. இருந்தும் ஜோதிடத்தை கணித்து சில விஷயங்களை கோதையிடம் கூறினார். இளவரசரிடமும் அவ்விஷயங்கள் பகிரபட்டது, அதில் மாற்று கருத்தாக அவனுக்கு ஒன்றும் தெரியவில்லை ஆதலால் ஒப்புக்கொண்டான்.

சுயம்வரமன்று, அங்கு அந்த மலைவாசிகள் கதி கலங்கி நின்றனர். "இனி மகளை எளிதாக காண முடியாதே" என்ற பயம் பெற்றவர்களுக்கு, "தங்கள் குலதெய்வம் இடம்பெயர்ந்து செல்கிறதே" என பதைபதைத்தனர் ஊர் மக்கள். கொற்றவைக்கு தோழியின் பிரிவு சற்று வருத்தினாலும், தானும் சற்று தினங்களில் அங்கு சென்று விடுவோம் என மகிழ்ச்சியாகவும் இருந்தது.

புதுப் பெண்ணாக பயம் அதிகம் கலந்த மனநிலையில் இருந்தாள் மகிழ். இன்று முதல் இந்த தேசத்தின் இளவரசி, அந்த ஒரு நினைவே நடுக்கத்தைக் கொடுத்தது. அறியாப்பருவத்தில் காட்டுக்குள் தந்தையுடன் வேட்டைக்கு செல்லும்போது கண்ட மிருகங்களை கண்டு கூட அவள் இப்படி நடுங்கியதில்லை. இன்று புகுந்த வீடு செல்ல, அந்த தைரியசாலி நடுக்கம் கொண்டாள். ஒரு வேளை காட்டுக்குள் செல்ல தந்தை மீது கொண்ட நம்பிக்கை தைரியம் தந்தது போல், புகுந்த வீடு செல்லும் கணவனின் மீது நம்பிக்கை கொண்டிருந்தால் தைரியம் வந்து இருக்குமோ!

கோதை பெண்கள் சூழ வந்து ஒரு இளவரசியாக அவளை அலங்கரித்த பின் அந்த பயம் இன்னும் அதிகரித்தது. மாமியாரை நமஸ்கரித்தாள், பின் தாய், தந்தையை நமஸ்கரித்தாள். பல்லக்கு அவளுக்கு தயாராக இருந்தது. ஜனத்திரல் இளவரசியை காண திரண்டு நின்றது. குடில்மக்கள் கண்ணீரை அடக்கி விடை கொடுத்தனர். தாய் தந்தையை திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே பல்லக்கில் ஏறினாள். அவள் பெற்றவர்களை அழைத்துச் செல்ல குதிரை வண்டி வந்திருந்தது. அதை மறுத்து ஊர் மக்களோடு நடந்தே கோட்டையை அடைந்தனர்.

அரண்மனையில் 16 முறை கொண்டு ஆரத்தி எடுத்து அவள் உள் அழைக்கப்பட, 16 குருக்கள் யாகத்தின் முன் அமர்ந்து யாகம் வளர்க்க, அவர்களுக்கு பொதுவாய் எதிரில், சற்றே உயரமான பட்டு அரியணையில் சம்மணமிட்டு அமர்ந்திருந்தான் அமிழ்திறைவன். அவன் உதட்டில் உறைந்திருந்த சிரிப்பு அவனை பேர் அழகாகத்தான் காட்டியது.

கோட்டை வாசலில் மங்கல ஒலி முழங்கவும் 'இளவரசி வேடத்தி வந்து விட்டாள்' என அவன் உணர்ந்த நொடி அவனுக்கு உடல் ரோமங்கள் எல்லாம் குத்திட்டு நின்றது. திரும்பிப் பார்க்கும் ஆவலை அடக்கி அமர்ந்திருந்தான். அடுத்த நிமிடங்களில் கால் சலங்கையின் ஒலி தன்னை நெருங்குவதை உணர்ந்தான். அவனின் அருகிலிருந்த பட்டு அரியணையில் மகிழ் வந்து அமர வைக்கப்பட்டதை சிரிப்புடன் திரும்பிப்பார்த்தான். நிமிராமல் அமர்ந்திருந்தாள் மகிழ். அவள் நாணம் கண்டு கர்வம் கொண்டான்.

முதல் சடங்காக திறைவன் கையில் மாலையைக் கொடுத்து, அவள் கழுத்தில் மாலையிட சொல்ல அவ்வாறே செய்தான். பின் அவன் முதலில் கட்டிய மலைவாசிகள் தாலியை கழட்ட சொல்ல, பெண்கள் அவள் கழுத்தில் கிடந்த பாசியை வாகாக தூக்கித் அவனிடம் தர, அவனும் அதை கையில் ஏந்தி அவள் முகத்திற்கு மேல் தூக்கையில் தான் வேகமாக நிமிர்ந்து பார்த்து, அவன் கையை தடுத்து அந்த பாசியை இரு கை கொண்டு இறுக்க பற்றினாள்.

"வேடத்தி கேள். நான் அரச குல வழக்கப்படி உள்ள தாலியை கட்டத்தான் போகிறேன். இது நாம் அறியாமல் நடந்த விவாக தாலி என்பதால் அதை கழட்டி விட்டு இதை கட்டவேண்டும். நம் வாழ்வின் நன்மைக்காக" என கூறினான்.

இளவரசன் நிதான விளக்கம் தர, கண்கள் கலங்க மறுப்பாக தலையசைத்தாள் மகிழ். "பிரபு தெரிந்தென்றாலும், தெரியாமல் என்றாலும் இதுவே தாங்கள் என்னை உங்கள் உரிமையாக்கிய முதல் பொருள், இதை என்னிடமிருந்து தயவு செய்து பிரித்து விடாதீர்கள்" என அந்த பாசியை நெஞ்சோடு அணைத்து வேண்ட, முதன் முதலில் அவள் அவனிடம் வேண்டும் என ஒன்றை வேண்ட அவனால் மறுக்க தான் முடியவில்லை.

இரண்டு முறை அவள் தன்னை நம்பவில்லை என்று ஏற்பட்ட வருத்தம் கூட, தெரியாமல் தான் போட்ட தாலியை கழட்ட அவள் மறுத்ததில் மீண்டிருந்தது. குதூகலித்தான் அமிழ்திறைவன்.

இவன் "சரி இருக்கட்டும்" என சொல்ல முயலும் முன், ஜோதிடர் "மன்னிக்கவேண்டும் இளவரசி. நாட்டின் நலனுக்காக பரிகாரமாக இதை தாங்கள் செய்து கொள்ள வேண்டும். இதில் உங்கள் இருவரின் நல் வாழ்க்கையும் அடங்கியுள்ளது, புரிந்து கொள்ளுங்கள்" என மன்றாடலாகவே கூறினார்.

அதில் அவளுக்கு கண்ணில் நிறைந்த நீர் வேகமாக வடிய தொடங்கிவிட, அனாதரவான குழந்தை போல் தன் ஐயனையும், அம்மையையும் சுற்றி தேட ஆரம்பித்தாள். இச்சிறு செய்கை கூடத் திறைவனை வருத்தியது. அவள் பயந்தவளாய் சுற்றி முற்றி 'காப்பவர் யாரும் இல்லையா' என பார்ப்பது அவ்வளவு வலித்தது அவனுக்கு. 'இந்நேரத்தில் இவளுக்கு நம்மீது நம்பிக்கையை கொடுக்கவில்லை எனில் எப்போதுமே அதை மீட்டெடுக்க முடியாது' என நம்பியவன், திரும்பி ஜோதிடரை ஒரு அழுத்த பார்வை பார்த்துவிட்டு, "நம் தாலி கட்டுவதற்கான சடங்கை ஆயத்தம் செய்யுங்கள்" என்றதும் தான் அவனிடம் திரும்பி புன்னகையோடு நன்றி பார்வை பார்த்தாள். அந்த புன்னகையை ரசித்தவன், சிறுக சிறுக அவளிடம் நம்பிக்கையை விதைத்து இந்த சிரிப்பை நிரந்தரம் ஆக்குவேன் என உறுதி பூண்டான்.

ஜோதிடர் கோதையிடம் விரைந்து, "இளவரசருக்கு எடுத்துக்கூறுங்கள் ராணியாரே. இது முறையல்ல நான் முன்பே சொன்னது தான். அவருக்கு பொருத்தமான ஜாதகத்தால் மட்டுமே ஆயுள் விருத்தி இருக்கும். இப்போது இளவரசியின் ஜாதகம் இன்றியே விவாகம் நடந்தேறிவிட்டது. அதற்கான பரிகாரத்தையாவது சரியாக செய்ய வேண்டும் எடுத்துக்கூறுங்கள்" என்றதும்.

தானும் பயந்தவர், "திறைவா ஜோதிடர் கூறுவதை....." என அவர் முடிக்கும் முன், "எதுவாகினும் நான் பார்த்துக்கொள்கிறேன் சிற்றன்னையே" என திரும்பி ஓதுவரை காண, அவர்கள் ஸ்லோகம் சொல்ல ஆரம்பிக்க, அவர்களில் ஒருவர் மங்கல நாணை அவன் கையில் தர வாங்கிக் கொண்டான்.

அவள் கழுத்தை நோக்கி கொண்டு சென்றவன், அவள் காதில்
"சுனைவாய்ச் சிறுநீரை யெய்தாதென் றெண்ணிப்

பிணைமா னினிதுண்ண வேண்டிக் - கலைமாத்தன்

கள்ளத்தி னூச்சுஞ் சுரமென்பர் காதல

ருள்ளம் படர்ந்த நெறி"(- ஐந்திணை) என்றான்.

அவன் கூறியதன் பொருள் புரியாமல் தலை நிமிர்த்தி கண்டவளை புன்னகைத்த வண்ணம் அவள் பார்வையை தாங்கியவாறு மங்கல நாணை பூட்டினான்.

இரு முடிச்சிட்டு மூன்றாம் புடிச்சிற்காக தங்கையைத் தேடி காணாமல் புருவம் சுருக்கி சிற்றன்னை கண்டான். அவர் தலையை திருப்பி மேல் மாடத்தை பார்க்க புரிந்து கொண்டவன், மனைவியை காக்க வைக்காமல் மூன்றாவது முடிச்சையும் தானே இட்டான். அடுத்ததாக யாகத்தை 16 முறை வலம் வந்தனர்.

அடுத்ததாக மெட்டி பூட்டும் சடங்கு, மைத்துனி தான் அதை செய்ய வேண்டும், "பாவையை அழைத்து வாருங்கள் சிற்றன்னையே" என அவள் வந்தாகவேண்டும் கட்டளையை ஒளித்துக் கூறினான்.

சேடி பெண்களை அனுப்பினால் கண்டிப்பாக வரமாட்டாள் என்று புரிந்து தானே மேல் நோக்கி சென்றார். என்றும் போல் இன்றும் சோக பதுமையாய் அமர்ந்திருந்தாள். அண்ணனின் சுயம்வரம் அதற்கான எந்த அலங்காரமுமின்று அமர்ந்திருந்தவளைக் கண்டு ஆத்திரமுற்று, "நீங்கள் எல்லாம் என்ன தோழிகள். இளவரசர் திருமணத்திற்கு இளையராணியை தயார்படுத்த கூறிவிட்டு தானே சென்றேன். சொன்ன சொல் கேட்கும் பழக்கம் இல்லையோ? உங்களை எல்லாம் வந்து கவனித்துக் கொள்கிறான்" ௭ன்றவர், பாவையிடம் "உன்னை இளவரசர் அழைத்து வரச் சொல்லி உத்தரவு. நீ வந்தே ஆகவேண்டும், உன் அண்ணியாருக்கு செய்ய வேண்டியதை நீ செய்தே ஆகவேண்டும் வா" என பொரிந்து தள்ளினார்.

அசையாமல் இருந்தவளை இழுத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தார். அவளுக்கும் அவனிடம் வேலை ஆக வேண்டுமே அதனால் வேறு வழியின்றி தமையனையும், மன்னியாரையும் நேருக்கு நேர் சந்திக்க சென்றாள்.


அதேநேரம் பாப்பு காதில், "இன்னைக்கு நம்ம அனிவர்சரி மூக்கி இன்னைக்குனாலும் முழிச்சுட்டேன் ப்ளீஸ்" என கெஞ்சும் இரணியனின் குரல் கேட்டது. அதில் கண் முன் அமர்ந்திருந்த அமிழயும், மகிழையும் திகில் பார்வை பார்த்தாள் பாப்பு.
 
அத்தியாயம் 13


"கெட் அப் தாட்சா ப்ளீஸ். இன்னைக்கு நம்மோட ஃபர்ஸ்ட் அனிவர்சரி. தனியா நா மட்டுமா செலிபரேட் பண்ண எவ்ளோ கஷ்டமா இருக்கு தெரியுமா?. மிஸ் யூ பேட்லி தாட்சா. ஐ நீட் யூ டி மூக்கி. வாட் லெட் யூ டு ட்ரான்ஸன்டென்டல் ஸ்லீப்? ப்ளீஸ் கம் பேக் டூ மி பேபி, மிஸ் யூ டி, மிஸ் யூ சோ மச்" என அவள் அருகில் அமர்ந்து அந்நாளை கடக்க போராடிக் கொண்டிருந்தான் இரணியன்.

"நம்ம மேரேஜ் தான் பாத்துட்டு இருக்கேன் சார்ம். இங்க பாருங்க நம்ம ரெண்டு பேரயும், எவ்வளவு சந்தோஷமா இருக்கோம். ரெண்டு பேர் ஃபேஸூம் அப்டி ப்ரைட்டா இருக்கு. நா இங்க எதையோ தெரிஞ்சுக்க தான் வந்திருக்கேன், அத தெரிஞ்சிட்டு உங்கட்ட ஓடி வந்துடறேன் சார்ம்" என இங்கு அவள் கூறினாள், ஆனால் அங்கு அவனைத்தான் எட்டவில்லை பாவம்.

இங்கு கோதை பாவையை அழைத்து வந்தவர், மணமக்கள் முன்னிறுத்தி, "உனது அண்ணியாரின் வலது காலை எடுத்து உன் காலில் வைத்து மெட்டியை பூட்டு" என்றதும், அன்னையை திரும்பி முறைத்தவாறு, "நான் ஏன் இவர்கள் காலை பிடிக்க வேண்டும். என்னால் ௭துவும் செய்ய இயலாது".

"பாவை மெட்டியை பூட்டு" என்ற அழுத்தமான குரல் வலப்புறமிருந்து வந்தது, அது அவள் அண்ணனின் குரல், அவனுக்கு பின்னால் அவனை எவ்வளவு திட்டினாலும் அவன் முன்னால் நிமிர்ந்து பார்க்கவும் அச்சமே. அந்த குரலின் வேகத்தில் வேகமாக அமர்ந்தவள், பாதபூஜை செய்து அண்ணியாரின் காலை முன் இழுத்து மடியில் வைத்தாள். சேடிப் பெண்கள் வந்து கால் விரல் அணியை நீட்ட, அந்த முத்து வைத்த தங்கத்திலான மெட்டியை ஒவ்வொரு விரலாக மூன்று விரல்களில் மாட்டினாள். பின் மறு காலையும் எடுத்து அதிலும் மாட்டினாள். வேலை முடிந்ததாக எழுந்து நடந்து விட்டாள்.

நிமிர்ந்து பாராமல் சென்றவளை கண்டு 'கட்டாயம் அவளிடம் பேசவேண்டும்' ௭ன குறித்துக் கொண்டான் அமிழ்திறைவன்.

அதன் பின்னான சடங்குகள் வேகமாக நடந்தேறியது. தேவி இளவரசியாக மகிழ்தினியை கண்டிப்பாக எதிர்பார்க்கவில்லை. அவளுக்கு இளவரசியாக மகிழ் வந்ததில் ஏக சந்தோஷம். பாவையை கூட மறந்து அங்கேயே நின்று விட்டாள்.

வாழ்க்கையை தொடங்குவதற்கு முன் கடவுள் ஆசீர்வாதமாக, மாலையில் கோட்டையிலுள்ள லிங்கேஸ்வரர் முன் குடும்பமாக கூடி நின்றனர். "இவரின் உதவியோடுதான் உன்னை சந்திக்க வந்தேன்" ௭ன்றான் திறைவன் மகிழ் காதில்.

அவள் புரியாமல் விழிக்க, "இனி இங்கு தானே இருக்கப் போகிறாய் மெதுவாகவே தெரிந்து கொள்" என அவள் விழி மொழிக்கு பதிலளித்தான்.

இரவிற்கான சடங்குகள் வரை உடனிருந்த தேவியை கண்ட கோதை, "இனி இளவரசியின் உற்ற தோழியாக உடன் இருந்து பார்த்துக் கொள். நீ என்றால் முன்னே அறிமுகமானவள் என்பதால் இளவரசிக்கும் பழக எளிமையாக இருக்கும்" என்றதும் மகிழ்ச்சியாக தலையை ஆட்டி விட்டாள் தேவி.

அதுவரை மகிழ் பெற்றோரையும் அங்கு இருத்தி வைத்து இருந்தனர், அரச கட்டளையை மீற முடியாது அவர்களும் அங்கிருந்தனர். கொற்றவை வயது பெண் என்பதால் காலை விவாக சடங்கு முடியவுமே கொள்ளிமட மக்களோடும், பெற்றோர்களோடும் கிளம்பி விட்டாள். தனாவை பார்க்கவும் நேரம் வாய்க்கவில்லை.

இளவரசன் அமிழ்திறைவன் பூஜை முடித்து, அவனுக்கென இருக்கும் கோட்டையினுள் சென்றுவிட, மகிழ் அலங்கரிக்க அழைத்து செல்ல பட்டாள். நல்ல நேரம் நெருங்கவும், அலங்கார பொம்மையாக சேடிப் பெண்கள் படை சூழ தேவி கைபிடித்து அழைத்துச் செல்ல, பதுமையாக நடந்து வந்தாள்.

"கலகலவென பேசும் எங்கள் தலைவரின் மகளா இது, காலையிலிருந்து மௌனவிரதம் காப்பது?" என தேவி கிண்டல் மொழியில் கூற, "புது இடத்தில் வந்து மாட்டியதாகவே தோன்றுகிறது தேவி. உன்னை தவிர இங்கு யாரும் எனக்குப் பரிச்சயமில்லை. என்னுடனே இருக்கிறாயா?" என்றாள் மெதுவாக.

"எனக்கு இதைக் கேட்க எல்லையற்ற மகிழ்ச்சியாக உள்ளது இளவரசி. கவலை வேண்டாம் இளவரசர் தங்கள் அருகில் இல்லாத சமயம் மொத்தமும் நான் உங்களின் அருகில் தான் இருப்பேன்" என அவள் கூறிய முடிக்கையில் இளவரசரின் அறையை எட்டி இருந்தனர்.

"சீக்கிரமே ஒரு குட்டி இளவரசரை ஆயத்தம் செய்து விடுங்கள் இளவரசி" என்று கூறி சிரித்து விட்டு அவள் உள் செல்ல வழிவிட்டு விலகி நின்றனர்.

வேங்கையை துணைக்கழைத்துக் கொண்டு மெதுவாக அந்த அறையினுள் நுழைந்தாள். பின்னால் அந்த உயர்ந்த கதவை இழுத்து அடைக்கும் சத்தம் கேட்டது, திரும்பி பார்த்துவிட்டு மறுபடியும் அறையினுள் பார்த்தாள். மைதானம் போல் விஸ்தாரமாக இருந்தது அந்த அறை. நடுவில் அலங்கரிக்கப்பட்ட மரகட்டில் பஞ்சணை, அருகில் குவளையில் பாலும், பழங்களும் ஏந்திய மேஜை. நறுமணத்திற்காக அறை மொத்தமும் பூக்கள் அலங்காரம், பால்கனி அமைப்பு கொண்ட ஒரு புறத்திலிருந்து குளிர்ந்த காற்று அந்த நேரத்தை ரம்மியமாக்க. மற்றொரு பக்கம் ஆடை மாற்றத் திரைசீலை மறைவு, அந்த அறையின் ஒரு பக்கத்தில் இன்னொரு அறை பிரிய, மெதுவாக அங்கு சென்று பார்த்தாள். படி இறங்கி சென்று குளிப்பதற்கான தெப்பம் போன்ற அமைப்பு, அதில்தான் நீந்திக் கொண்டிருந்தான் அமிழ்திறைவன்.

அவனது பால் வண்ண நிறம் அந்தத் தண்ணீரில் மேலும் ஏறி பளபளக்க, மூச்சடைத்தது மகிழுக்கு. பார்வை அகற்றாது அவனையே கண்டு கொண்டிருக்க, இவளைக் கண்டு சிரித்தான் அவன். மெய்மறந்து நிற்பவளை கண்டு மேலும் சிரித்து, அவளிடம் அசைவில்லை என்றதும், மேலேறி வந்தான், மேலாடையின்றி, கீழ் மட்டும் ஒரு அங்கவஸ்திரம் அணிந்து இருந்தான். ஈரம் சொட்ட வந்தவன் கையில் இருந்த தண்ணீரை அவள் முகத்தில் தெறிக்க, கண்ணை படபடத்து சிமிட்டியவள் நெருங்கி நின்றவனை கண்டு வெட்கம் கொண்டு மறு பக்கம் திரும்ப, பின்னிருந்து அவளை கைகளில் அள்ளிக் கொண்டான்.

அதில் திடுக்கிட்டவள், அவன் மேல் இருந்து வந்த குளிரில் மேலும் நடுங்கி, "அச்சோ ஈரம்" ௭ன்க.

"ஒருவழியாக பேசிவிட்டாய், நான் கூட பயந்து போனேன், திடீரென தாலிகட்டிய அதிர்ச்சியில் உனக்கு பேச்சு போய்விட்டதோ என" ௭ன்க. அதற்கு சிரிப்பையே பரிசாகத் தந்தாள்.

தூக்கி வந்தவளை பஞ்சணையில் கிடத்தி, அவள் கூந்தலை முகர்ந்தான். "உன் கூந்தலின் மனமே என்னை இந்தளவு கிறங்கடிக்கிறது என்றால், மொத்த அழகு..." என அவளை மேலிருந்து கீழ் வரை கண்டவனின் வாயை உள்ளங்கை கொண்டு வேகமாக மூடினாள்.

அதில் சிரித்தவன், "என்னைப் பிடித்திருக்கிறதா வேடத்தி?" என்றான்.

"எந்த மனைவிக்கு தான், தன் கணவனைப் பிடிக்காமல் போகும். அதுவும் இப்படி ஒரு பேரழகு இளவரசனை எந்த பெண் பிடிக்கவில்லை என்பாள்".

"எனக்கு இந்தப் பெண்ணின் கருத்து மட்டும் போதுமானது" என்றான் அவள் நெஞ்சில் கைவைத்து காட்டி.

நாணம் கொண்டு குனிந்து தலையசைத்தாள்.

"வாய்மொழி வேண்டும்",

"பிடித்திருக்கிறது பிரபு",

"வேடத்தி" என இறுக்கி அணைத்தான்.

"ஈர உடை..",

"அதை களையும் நேரம் என்கிறாயா?" என்றான் குறும்பாக, உருண்டு மறுபக்கம் சென்று படுத்தாள்.

வேகமாக பிடித்து இழுத்து தன் வசப்படுத்தினான் இளவரசன். அமிழ் மகிழை முத்தமிட நெருங்க, அதுவரை குறுகுறுவென்று பார்த்துக்கொண்டிருந்த நம் பாப்பு, "இதுக்கு மேல முடியாதுப்பா சென்சார் போட்டு சீனை கட் பண்ணி, விடியுற மாதிரி காட்டுங்கப்பா" என்றதும் அவள் வேண்டுகோள் ஏற்க்கப்பட்டு விடியும் தருவாய் அரங்கேறியது.

பால்கனி வழியாக சூரிய ஒளி உள்ளே நுழையவே, இருவரும் மெதுவாக விழிப்பிற்கு வந்தனர். அவனது அங்கவஸ்திரமே அவளது ஆடையாய் இருந்தது.

"ஈர உடை ஈர உடை என்றாயே இரவில் எப்படி உதவி இருக்கிறது பார்".

"நான் உங்களிடம் ஒரு விஷயம் கேட்க வேண்டுமே",

"தங்களுக்கு மட்டுமே ௭ன்னை கேள்வி கேட்கும் அதிகாரம் உண்டு இளவரசியாரே" என்றான் கைவளைவில் இருந்தவளை இறுக்கி கொண்டு.

"நீராடிவிட்டு வந்து கேட்கட்டுமா?",

"ஏன் கேட்டுக்கொண்டே நீராடலாமே",

"எப்படி?",

"இப்படித்தான்" என இறங்கியவன் இரவின் கூடலுக்கு பின் மாற்றி இருந்த மற்றொரு அங்கவஸ்திரத்தோடு எழுந்து நின்று அவளையும் தூக்க, "இல்லை நானே.." என்றவளை அவன் கண்டு கொள்ளாமல் தூக்கிச்சென்று முந்தைய இரவில் அவன் நீராடிய அந்த குளத்தில் அவளையும் தூக்கி கொண்டு இறங்கினான்.

அந்த மூலிகை நீரில் அமிழ்ந்து எழுவது உடம்பு வலிக்கு ஏதுவான மருந்தாக இருந்தது. சில பல சீண்டல்களுடன் இருவரும் ஒன்றாகவே நீராடினர்.

"ஏதோ கேட்க வேண்டும் ௭ன்றாய் அல்லவா?" ௭ன நியாபக படுத்தினான், அவனின் விளையாட்டில் அவளுக்கு பேச்சு எங்கிருந்து வர, உடம்பெல்லாம் ரத்தம் சூடாக பாய்வது போல் அதிக சிவப்பாக இருந்தாள்.

அதில் தான் அவனால் அவளை விளக்கவே முடியாமல் திண்டாடி கொண்டிருந்தான். "என்ன கேட்க வேண்டும் இப்போது கேள் வேடத்தி".

"அது அது வந்து.. மங்கலநாண் பூட்டுகையில் என் காதில் கூறினீர்களே அதற்கான விளக்கம்.." என இழுக்க.

"ம்ம்ம்..நம் காதலானது, ஆண்மான் சுனையில் உள்ள சிறிய அளவு தண்ணீரைக் கண்டு, அது இருவர் பருக போதாது என எண்ணி தன்னுடைய பெண்மான் குடிக்க தண்ணீர் வேண்டுமே என விரும்பி, பொய்யாக குடிப்பது போல் வாய் வைத்து உறிஞ்சுமாம். அதுபோல் பெண் மானும் ஆண் மானுக்காக தான் தண்ணீரை குடிக்காது பொய்யாக உறிஞ்சுமாம், அதுபோல் நம் காதலும் ஒருவருக்கு மற்றொருவராய் வாழ வேண்டுவோம் என கூறினேன்" ௭ன்க.

"மான்களும் காதல் கொள்ளுமா என்ன?",

"ஏன் அவையும் உயிரினங்கள் தானே வேடத்தி. எனினும் ஐந்திணையில் உவமையாகவே கூறப்பட்டது".

"ஓ! இப்படி உவமையாக எனக்குக் கூற தெரியாவிடினும், சுருக்கமாக கூறுகிறேன். இனி நீங்களே என் வாழ்க்கை, உங்களின் சேவகியாகவே இறுதி மூச்சு வரை இருப்பேன் என உறுதி அளிக்கிறேன்".

"எனக்கு சேவகம் செய்ய ஆயிரம் பேர் இருக்கிறார்கள் வேடத்தி. நீ என் உள்ளத்து இளவரசி, காதலை யாசிக்கும் எனக்கு அதை மட்டும் தீராது வாரி வாரி வழங்கினால் போதும்" என தண்ணீருக்குள் அவளுடன் மூழ்கினான்.

நேரம் செல்ல, அடுத்தடுத்து இருவரும் தயாராகி சபைக்கு வந்தனர், அரியணையில் இருவரும் சேர்ந்து அமர, யாகம் வளர்க்க பட்டு, இருவரும் அரியணை ஏறினர். பின் சபையோரின் விருந்து, மக்களின் முன் விஜயம் என அந்த நாள் றெக்கை கட்டிக்கொண்டு பறந்தது. இவளுடனே தேவி இருந்துவிட, அவளைக் காணாது கேட்டறிந்த பாவை பொங்கிவிட்டாள்.

"நான் யாருடன் நெருங்கினாலும் பிடுங்கி எறிவது தான் உங்களுக்கு மகிழ்ச்சி தருமோ? அவளை எனது தோழியாக நான் அழைத்து வந்தேன், யாரைக் கேட்டு அவளை புதிதாக வந்தவளுக்கு துணை அனுப்பினீர்கள்? என்றுதான் நான் உங்களுக்கு முக்கியமாய் படுவேன் அன்னையே?".

"நீ புரியாமல் பிதற்றுகிறாய் பாவை. இளவரசி ஒரு மலைவாசி, அதுவும் உன் சேடி பெண்ணான தேவியும், இளவரசி மகிழ்தினியும் ஒரே ஊரான கொள்ளி மடத்தை சேர்ந்தவர்கள். அரண்மனை பழக்கத்திற்காக தேவியை அவளுக்கு துணையிருத்தினேன்" ௭ன்றார் கோதை.

"உடனே இந்த அம்மையாரும் என்னிடம் கூட ஒரு வார்த்தை கூற தோன்றாமல் சென்று விட்டார்கள் அல்லவா?" என்றவள், மற்ற சேடி பெண்களிடம், "அழைத்து வாருங்கள் அவளை, சில கேள்விகளுக்கு விடை அளித்து விட்டு நிரந்தரமாக அவள் அந்த இளவரசியுடன் செல்லட்டும்" என்றாள். கோதை அதையெல்லாம் பெரிதுபடுத்தாமல் நகர்ந்து விட்டார்.

அங்கு சிறை சாலையில், "யாரங்கே கூப்பிட்டு வாருங்கள் இந்த நாட்டின் இளவரசனை, பெற்ற தகப்பனை அவன் திருமணத்தன்று ஒரு நாளேனும் வெளியே விடாமல் விவாஹம் செய்யும் மகனிடம் நான் நியாயம் கேட்க வேண்டும். இதே அறையில் நான் இவ்வுலகை மறந்து லயத்திருந்த நாட்களை கெடுத்தவனை எங்கே? யாரை கேட்டு இவன் களவு திருமணம் புரிந்தான். கேட்க யாரும் இல்லை என்ற தைரியம் தானே இத்திருமணத்தின் மூலம், அழிக்கிறேன் எல்லாவற்றையும் அழிக்கிறேன். இளவரசனே குறித்துக் கொள் உனது இறுதி மூச்சுக்கு நானே காரணமாய் இருப்பேன்" என விடாமல் கத்திக் கொண்டிருந்தார். காவலாளிகள் கேட்டும் கேட்காதது போல் நின்றிருந்தனர். யாரையுமே அவரை நெருங்க விடாமல் வைத்திருந்தான் தனா.

அன்று முழுவதும் தேவி மகிழுடனே இருந்திருக்க, இருள் மங்கிய பின்னே, பாவையின் உத்தரவு தோழிகள் மூலம் வந்து சேர, தன் தவறு புரிந்து மகிழிடம் சொல்லி விட்டு பாவையின் சின்ன கோட்டை நோக்கி ஓடினாள்.

மூச்சிரைக்க பாவை முன் சென்று நின்றவள், "மன்னித்துவிடுங்கள் அம்மணி, இளவரசியார் எங்க ஊர் பெண்......" என அவள் முடிக்கும் முன் கைகாட்டி நிறுத்தியப் பாவை, "சிறுவயது ஏக்கம் பல நாள் ஏங்கிய தோழி கை கிட்டவும் இந்நாள் தோழியை மறந்துவிட்டாய்? இப்போது புரிகிறதா எனது சிறுவயது ஏக்கமான எனது தோழன் தனார்த்தனன், இந்நாள் காதலன்.... அவனை எண்ணி நான் அழும் அழுகைக்கு காரணம் புரிகிறதா தேவி?" ௭ன சுருக்கமாக நேரடியாக கேட்க.

"புரிகிறது அம்மணி" தேவி சொல்ல,

"அவ்வாறெனில் என் காதலனுடன் நான் சேர நீ தான் உதவ வேண்டும்" பாவை அழுத்தத்துடன் கூறிவிட்டு செல்ல.

"இது நல்லாருக்கே வேதிக்கா ௭துக்கு உனக்கு ஹெல்ப் பண்ணனும்" இது ௭ப்பயும் போல் நம் க்ராஸ் டாக் பாப்பு.
 
அத்தியாயம் 14


"நானா! நான் என்ன செய்யமுடியும் அம்மணி" தேவி படபடக்க.

"அதையும் நீ தான் யோசிக்க வேண்டும், வேண்டுமானால் உனது புது தோழியிடம் உதவி கேளேன்".

"நல்லா வாயில வருது, லவ் பண்ணது நீனு, அத இத்தன நாளா சொல்லாம விட்டதும் நீனு, ஆனா கெத்த காமிக்றது மட்டும் ௭ன் வேதிக்காட்ட. கொன்றுவேன் பாத்துக்க" பாப்பு டென்ஷன் ஆக.

"கோபத்தில் கூறுகிறீர்களா அம்மணி? இளவரசிக்கு அரண்மனை பழக வேண்டியே உடனிருந்தேன்".

"இருக்கட்டுமே, நீ அவர்கள் பழக உதவும் போது, அவர்களும் நீ ஒரு உதவி என கேட்டு செய்யாமல் இருப்பார்களா? தனாவை என்னுடன் சேர்த்து வைக்க உங்கள் இளவரசனிடம் பேச சொல்லி இளவரசியிடம் சொல்".

"நாம் சொன்ன யோசனை நம்மிடமே திரும்பி விட்டதே" என யோசித்து நின்றாள் தேவி.

"நீ உன் தோழியிடம் போகலாம் தேவி" என்கவும் வேறுவழியின்று யோசனையோடு வெளியேறினாள்.

"இவள விட்டா 'நான் பார்த்ததிலே அவன் ஒருவனைத் தான் அழகனென்பேன், நல்ல அழகனென்பேன்னு' பாடுவா போலயே. அடேய் விஷா உனக்கு வர்ற வாழ்வ பாத்தியா, எல்லா பிறவியலயும் உனக்கு டபுள் டபுள் தமாக்கா தான். மச்சகாரன்டா நீ" பாப்பு வாய்ஸ்.

அன்றைய இரவில், மகிழை அமிழ் அறையில் விட்டுவிட்டு, அவள் தோழிகள் கூடாரம் நோக்கி சென்று கொண்டிருந்தார்கள். தேவி யோசனை மொத்தமும் பாவை பேசியதிலேயே இருந்தது. என்ன செய்வது, இளவரசியிடம் எப்படிப் பேசுவது என சிந்தித்துக் கொண்டே நடந்து கொண்டிருந்தாள். அந்நேரம் தனா லிங்கேஸ்வரரை நோக்கி செல்வதை கண்டு தோழிகளை விட்டு அவனை பின்தொடர்ந்தாள், "எங்கு செல்கிறார் படைத்தளபதி" என பின் தொடர்ந்தவள், அவன் லிங்கேஸ்வரர் பின் உள்ள சுரங்கப்பாதையில் இறங்குவதைக் கண்டு, 'இங்கு ஒரு பாதை உள்ளதா? இதன் வழியாகத்தான் இளவரசரும், படை தளபதியும் அன்றும் சென்று வந்தார்கள் போலும், ஏதும் ராஜகாரியமாக இருக்குமோ? நாளையும் வருகிறாரா என பார்த்துவிட்டு அம்மணியிடம் கூறுவோம். இதற்கு மேல் இவரை நான் பின்தொடர்வது தவறு' என வந்த வழி திரும்பி விட்டாள்.

மகிழ் தனதறையில் நுழைய, இன்னும் திறைவன் வந்திருக்கவில்லை. நேற்று பதட்டத்தில் பார்த்த அறையை இன்று நிதானமாக பார்த்தாள். 'ஒரே நாளில் வாழ்வே மாறிவிட்டதாக தோன்றியது. எவ்வளவோ வயதானவர்களின் மரியாதை விளிப்பு, தான் இருக்கும் தோரணை என எல்லாமே வித்தியாசமான உலகில் இருப்பது போல் இருந்தது அவளுக்கு. தன் குடிலுக்கும் இந்த அறைக்கும் உள்ள ஆயிரம் விஷயங்களை குறிப்பெடுத்தாள். தன் தாய், தந்தை, கொற்றவை எல்லோரும் என்ன செய்கிறார்களோ? என்னை கண்டிப்பாக தேடி இருப்பார்கள். அம்மைக்கு என்னை வேலை சொல்லாமல் எப்படி பொழுது விடிகிறதோ? ௭ன ௭ங்கெங்கோ பயணித்தது அவள் நினைவுகள். அந்நேரம் யாரோ நடந்து வரும் சப்தம் மிக துள்ளியமாக கேட்டது. ஆனாலும் அவள் யோசனையை விடாது இருந்தாள்.

"என்ன வேடத்தி தீவிர யோசனை போல் தெரிகிறது?" ௭ன நெருங்கியபடியே கேட்டான் திறைவன்.

"அம்மை பற்றி நினைத்துக் கொண்டிருந்தேன்".

"உனக்கு பார்க்க வேண்டும் போலிருந்தால் பல்லக்கில் சென்று பார்த்து வா".

"சரி பிரபு" என அவள் தலையை அசைக்கவும்.

மெதுவாக அவள் மடியில் படுத்து கொண்டவன் "உன் சிறுவயது பற்றி கூறு வேடத்தி" என ஆரம்பித்து வைத்தான், பேச்சு மடை திறந்த வெள்ளமாக கொட்டியது, அவள் பேச்சை ரசித்திருந்தான் அந்த இளவரசன். அவள் கூறியவற்றில், வேங்கையம்மன், அம்மை, ஐயன், கொற்றவை காட்டிற்கு செல்லும் வேட்டை, இவையே அதிக இடம் பெற்றது. பதிலுக்கு அவனிடம் அவள் அவன் வாழ்க்கையை பற்றி எதுவும் கேட்கவில்லை, அவனும் அதை எதிர்பார்க்காததால் ஏமாற்றம் இல்லை.

அவள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருக்க அவனுக்கு பிடித்தது அதையே செம்மையாக செய்தான்.

தனாவும் கொற்றவையை பார்க்க, தினமும் விடாமல் இரவில் படை எடுக்கிறான். இத்தனை நாளும் அரசன் கல்யாண வேலைகளில் கூட, நேரம் பற்றாக்குறையையும் பெரிதுபடுத்தாமல் இரவில் பார்க்க செல்வான்.

ஆனால் அவளோ மகிழை விட்டு இம்மி அகலாதவளாக இருந்தாள். அவனையோ, அவன் தனக்காக காட்டில் வந்து காத்திருக்கக் கூடுமோ என்ற எண்ணமும் வந்தது இல்லை. ஆனால் இப்போது மகிழ் திருமணம் முடிந்து சென்றதும், தனிமை அவளுக்கு அவனைப் பற்றிய சிந்தனையை அதிகமாக கொடுத்தது.

அன்று, வீட்டிலும் அவள் பெற்றோர்கள் நீதிவர்மனிடம், "பெரியவரே 2 பிள்ளைகளும் ஒட்டுக்காகவே சுற்றித்திரிந்தவர்கள், ஒன்று இல்லையென்றால் மற்றொன்று ஏங்கி விடும். அதனால் கொற்றவைக்கு ஏற்ற பிள்ளை பார்த்து வேங்கையிடம் ஒப்பு கேட்டுவிடலாம் என்று தோன்றுகிறது" ௭ன்றிருந்தார்.

"நல்லது தான் சீக்கிரமே செய்திடலாம். அவளாது கைக்குள்ளேயே இருக்கட்டும். அவள் சாயலில் நாங்கள் மகிழை பார்த்துக் கொள்கிறோம்" என்றார் நீதிவர்மன்.

'இந்த பேச்சு அவள் வயிற்றில் புளியைக் கரைத்தது. இவர் எப்போது ஐய்யனிடம் வந்து பேச உத்தேசித்துள்ளார்? இரவில் வந்து நிற்பாரா? எப்படி அவரை சந்திப்பது?' என்றெல்லாம் யோசித்து முடிவுக்கு வருகையில் மகிழ் திருமணம் முடித்து சென்று மூன்று நாட்கள் கடந்து விட்டிருந்தது.

ஆனால் தனா தினமும் வருகிறான், என்றாவது ஒரு நாள் தன்னை தேடி வந்து விட மாட்டாளா என்று ஏங்கிக் கொண்டிருந்தான்.

அங்கு அரண்மனையில் தேவி 2 நாட்களாக தனா தொடர்ந்து செல்வதைக் கண்டு, நான்காம் நாள் பாவையிடம் சென்று கூறிவிட்டாள். "படை தளபதி இரண்டு நாட்களாக தொடர்ந்து சுரங்கப் பாதைகளில் செல்வதைக் கண்டேன். அவரை தனியாக சந்தித்து உங்கள் மனதில் இருப்பதை கூறிவிடுங்கள் அம்மணி. நான் சென்று இளவரசியிடம், கூறி அவர் இளவரசரரிடம் கூறி அதன்பின் தளபதி அதற்கு முடிவுக்கு செல்ல வேண்டும். நீங்கள் நேரடியாகவே தளபதியாரிடம் பேசி விட்டால், மற்றதை அவர் பார்த்துக் கொள்வார்" என்றாள். அவன் மனதில் வேறொருத்தி இருப்பதாக இளவரசன் கூறியதை பாவை கேட்டும், அதை மனதில் நிறுத்தாமல் விட்டுவிட்டகால் தினுசு தினுசாக யோசித்துக் கொண்டிருந்தனர்.

"நல்ல யோசனை தேவி, இன்று இரவே என் மனதை கூறி விடுகிறேன்" என முடிவு எடுத்துக் கொண்டாள் பாவை.

அதேநேரம் மகிழ் திறைவனுக்கு இரவு உணவை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள். பொதுவாக இளவரசன் சாப்பிடும் போது அருகில் யாரும் இருப்பதில்லை. முதலில் கோதை தான் அவன் இலையில் பரிமாறும் உணவுகளில் சிறிது சிறிது முதயே எடுத்து யாரையாவது சாப்பிட வைத்து பின் அவனுக்கு பரிமாறுவார். இப்போது அதையே மகிழ்தினி செய்து கொண்டிருக்கிறாள்.

"நீ என்னவெல்லாம் விரும்பி சாப்பிடுவாய் வேடத்தி" சாப்பிட்டு கொண்டு அவளிடம் பேச்சு கொடுத்தான்.

"கிழங்கும் இறைச்சியும் என்றால் மிகவும் பிடித்தம். அம்மை அதை செய்கையில் கொற்றவையும் நானும் சண்டையிட்டு சாப்பிடுவோம்".

இறைச்சியெல்லாம் அவனுக்கு ஒவ்வாத ஒன்று, ஆனாலும் அவள் பிடித்தம் என சொல்கையில் முகம் சுளிக்காமல் கேட்டுக்கொண்டான்.

"இங்கு இறைச்சி உணவு எல்லாம் சமைக்க மாட்டார்கள் வேடத்தி. யாரும் சாப்பிடமாட்டோம். உனக்கு வேணும் என்கையில் கூறு கொள்ளிமடத்தில் இருந்து கொண்டு வரச் சொல்கிறேன். இல்லையேல் நாம் போய் வந்துவிடலாம்".

"சரிங்க, உங்களுக்கு எது அதிகம் பிடிக்கும்?".

"உன்னைத்தான்......" உடனே பதில் அளித்தான்.

நாணம் கொண்டவள், "அதில்லை. உணவில்?".

"உன்னை சாப்பிடவும் பிடிக்கும்".

"ஆ!! மாமிசம் பிடிக்காதென்றீர்கள்".

"இதெல்லாம் ரொமான்ஸூன்னு பாக்க வேண்டியதிருக்கு. ௭ன் சார்ம்ட்ட டியூஷன் வாங்க ரெண்டு பேரும்" இது நம் பாப்பு.

"நீ மட்டுமே விதிவிலக்கு" இதைப்பற்றி இதற்கு மேல் இங்கு பேச்சை வளர்க்க விரும்பாமல், "நான் ஒன்று கேட்கட்டுமா?" ௭ன கேட்டாள்.

"ம்ம் கேள் வேடத்தி",

"உங்கள் ஐய்யன், புராரி வன அரசர் எங்கே? நான் வந்ததிலிருந்து காணவே இல்லையே".

"உன் ஐயன் ஊர் பெரியவராகிற்றே, அரசரின் விஷயம் அவர் அறிந்திருக்க வேண்டுமே?".

"கண்டிப்பாக அறிந்திருப்பார், ஆனால் சிறு பிள்ளைகள் என எங்களிடம் எதையும் கூற மாட்டார். இதுவரை அரசவை ஆட்கள் என ஊருக்குள் யார் வந்தாலும் பெண் பிள்ளைகளை காட்டுக்குள் அனுப்பி விடுவார்கள். ஏன் என்று கேட்டாலும், '௭ல்லாம் காரணமாகத்தான் அம்மணி' என்று விடுவார். நாங்கள் முதல்முறை கோட்டையினுள் வந்ததே நீங்கள் பதவி ஏற்ற பின் தான். அரசர், இளவரசர், கோதை அம்மையார், பாவை நாத்தி ஏன இங்கு இருப்பவர்கள் பற்றி மட்டும் தெரியும். அதுவும் தேவி இங்கு வந்தபின் எப்போதாவது ஊர் பக்கம் வரும்போது கூறுவதை வைத்து தெரிந்துகொண்டது அவ்வளவே".

"நீ பேசினால் பார்த்துக்கொண்டே இருக்கலாம் வேடத்தி. நீ அவ்வளவு அழகு",

"அவ்வாறெனில் நான் பேசியதை நீங்கள் கேட்கவில்லை போல் தெரிகிறதே?" எனக் குனிந்து கள்ள சிரிப்பு சிரித்தாள்.

"என் தந்தையார் நாட்டுக்கு புறம்பாக சில காரியம் செய்தார். அது மக்களால் நிரூபிக்கப்பட்டது. அதனால் இப்போது தண்டனைக்காக காவல் சிறையில் இருக்கிறார். இனி அவரின் ஆயுள் அங்குதான். நீயும் அவரை சென்று பார்க்க வேண்டாம்" என எழுந்தான்.

'ஏதோ ராஜ ரகசியம் போல்' என நினைத்து அதை அத்தோடு விட்டு விட்டாள். அவனும் விளக்கமாய் கூறவில்லை, அவளும் விளக்கமாய் கேட்டிருக்கவில்லை. பகல் பொழுதுகளில் அரசவை வேலைகளை இழுத்துக் கொண்டாலும், இரவெல்லாம் அவர்களுக்கேவானதாக இருந்தது. அவளுக்கு பகலெல்லாம் தேவியே துணை. அவ்வப்போது "விரைவில் கொற்றவைக்கு விவாகதத்தைத் முடித்து தன்னுடனே இருத்திக் கொள்ள வேண்டும்" என முடிவு செய்து கொள்வாள்.

அன்றைய இரவில் எப்பொழுதும் போல் தனா கிளம்பி செல்ல, அவனை தொடர்ந்து பாவை, தேவி இருவரும் சென்றனர், சற்றுத் தள்ளியே பின்தொடர்ந்தனர். அவனும் 'இன்றாவது காதலியை காண முடியுமா?' என்ற எண்ணத்தில் சென்றதால், தன்னை இரு பெண்கள் தீப்பந்தத்துடன் தொடர்வதை கவனிக்கவில்லை.

அங்கே கொற்றவையும் இரண்டு நாட்களாக, 'அவர் வருவாரா?' என யோசித்து பயந்து படுத்திருந்தவள், 'இன்று அனைவரும் தூங்கியபின் சென்று பார்த்துவரும் தைரியத்தை தா வேங்கை தாயே, அவர் கண்டிப்பாக வரவேண்டும், குறுக்காக எந்த விலங்கும் எதிர்ப்படாமலும் நீதான் காக்க வேண்டும் தாயே' என வேண்டியவரே படுத்திருந்தாள்.

பாவையும், தேவியும் நடந்த சுரங்கப்பாதை காட்டு லிங்கேஸ்வரரிடம் கொண்டு விட்டதை கண்டு, "இந்த கோவிலிலிருந்து கோட்டைக்கு ஒரு பாதை உண்டா அம்மணி?" ௭ன தேவி ஆச்சரியப்பட.

"ம்ம், நானும் எப்பவோ சிறு பருவத்தில் வந்திருக்கிறேன். மற்றபடி கோவிலுக்கு நேர் வழியில் தான் அம்மையுடன் வந்து செல்வோம். விரைந்து வா, தளபதியார் சென்ற பாதையை விட்டு விடப் போகிறோம். இந்த காட்டில் இந்நேரம் யாரை சந்திக்க செல்கிறார்கள்?" என பேசியவாறு பாவை நடக்க.

"இது எங்கள் ஊர் செல்லும் பாதையே அம்மணி. நேரே கொள்ளி மடத்தில் கொண்டுவிடும்".

"மலைவாசி கிராமத்திற்கா? இளவரசர் எதையும் கூறி அனுப்பி இருக்க கூடுமோ?",

"அவ்வாறெனில் தினமும் வர வேண்டிய அவசியம்?" என மாறி மாறி கேள்வி எழுப்பி, அந்த பாதையில் நின்று கொண்டே சென்றனர்.

அங்கு கொற்றவை அம்மையும், ஐயனும் உறங்கிவிட்டதை உறுதிப்படுத்திக் கொண்டு மெதுவாக எழுந்து வெளிவந்தாள். காட்டுக்குள் தனியாக செல்ல பயம் இருந்தது, தைரியத்தை வரவழைத்துக் கொண்டு சுற்றி பார்த்தவாறு மெதுவாக நடந்தாள்.

சற்று தொலைவில் கொண்டுவந்த பந்தத்தை ஒரு மரத்தில் சொருகியவாறு அதன் முன் நின்றிருந்த தனாவை கண்டதும் அவ்வளவு நேரம் இருந்த பயம், பதட்டத்திற்கு எல்லாம் விடிவு கிடைத்தது போல் ஓடினாள் அவனை நோக்கி.

அவனும் அவளைக் கண்டதும் முகம் மலர்ந்தவன், அவள் பயந்து ஓடி வருவதைக் கண்டு தானும் பயந்து விட்டான். வந்த வேகத்தில் பாய்ந்து கட்டிக் கொண்டாள். அவன் அதை எதிர்பார்த்திருக்கவில்லை. இத்தனை நாள் காத்திருப்புக்கு கிடைத்த பரிசாக அவளை அப்படியே அள்ளிக் கொண்டான்.

"பயந்துகொண்டாயா கொற்றவை".

"ஆம் சாமி, மகிழ் சென்றதிலிருந்து மனதே சரியில்லை. உங்களை தேடிக் கொண்டிருந்தேன். ௭னது ஐய்யனும் ௭னக்கு சீக்கிரமாக மணம் முடிக்க வேண்டி பேசிக்கொண்டிருக்கிறார்கள். நீங்கள் எப்போது வந்து பேசப் போகிறீர்கள்? நான் உங்களிடம் வந்து விட்டால் தான் எனக்கு திருப்தி கிடைக்கும்" என்றாள்.

"என்னால் இதை நம்புவதற்கே கஷ்டமாக இருக்கிறது. நான் பேசினாலே பதில் பேச மாட்டாய், இன்று எல்லாவற்றிற்கும் சேர்த்து பேசி விட்டாயே. நிரம்ப மகிழ்ச்சி கொற்றவை. ரொம்ப ரொம்ப நன்றி. நான் நாளையே இளவரசரிடம் பேசுகிறேன். உன் ஐய்யனிடம் வந்து பேச ஆள் அனுப்ப சொல்கிறேன்" என்றான் அவள் தலைமீது தலை சாய்த்து.

"சரி இது சொல்லவே ஓடி வந்தேன். ஐயனும், அம்மையும் எழும் முன் சென்று விடுகிறேன். நாளை நிச்சயமாய் வர சொல்ல வேண்டும். நான் எதிர்பார்த்திருப்பேன் சாமி" ௭ன விலகினாள்.

"நிச்சயமாக" என அவள் தலையில் கை வைத்து அழுத்தினான். திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டு ஓடிவிட்டாள். இவனும் சிரித்துக் கொண்டே சென்றவளை பார்த்து நின்றான்.

இவை அனைத்தையும் பின் நின்று பார்த்த இருவரும் ஒவ்வொரு மனநிலையிலிருந்தனர். "ஐயோ அம்மணி இதை எப்படி தாங்குவார்கள்" என வேதி முழிக்க.

பல வருட ஆசை ஒரு நொடியில் தனக்கில்லை என்றதும் பாவை மனம் அதே இடத்தில் அப்படியே நின்றுவிட்டது. அவளால் தாங்கிக்கொள்ள முடியாமல் போக, வந்த வழி திரும்பி ஓடினாள், லிங்கேஸ்வரரிடம் வந்து நின்று, "நான் என்ன பாவம் செய்தேன்? உண்மையானது தானே எனது நேசம். ஏன் அது கைகூடாமல் போனது? இதை எப்படி நான் தாங்குவேன்? ௭னக்கு பதில் சொல்லுங்கள் லிங்கேஷ்வரா" என அவர் முன் மண்டியிட்டு அமர்ந்து அழுதாள்.
 
அத்தியாயம் 15


பாவைக்கு அந்த நொடிகளை கடந்துவர மிக பிரயத்தனப் பட வேண்டியிருந்தது. சில நிமிடங்களுக்கு பின், "இதை நான் பார்க்கவில்லை என்றாக்கிட முடியாதா லிங்கேஸ்வரா...நான் இங்கு வரவேயில்லை ௭ன்றாக்கி விடுங்களேன்" என மறுகி கொண்டிருந்தாள்.

"கிளம்பலாம் அம்மணி, தளபதியார் ௭ந்நொடியும் திரும்பி வரக் கூடும், எழுந்துருங்கள்" என தேவி சொல்லவும்.

"ஆம்...என்னை விரும்பாதவர் முன் நான் அழ கூடாது, செல்லலாம்" என்று கண்ணீரை துடைத்து எழுந்து வந்த பாதையை நோக்கி நடந்தாள். தேவிக்கும் ஏணடா அழைத்து வந்தோம் என படபடப்பாகத்தான் இருந்தது.

அரண்மனை திரும்பிய பாவை, இறந்த காதலையும், காதலன் இன்னொரு பெண்ணை தழுவி நின்றதையும் நினைத்து நினைத்து கண்ணீர் உகுத்தாள். தேவிக் கூரிய எந்த சமாதான வார்த்தைகளும் அவள் காதில் ஏறவில்லை.

அரண்மனை திரும்பிய தனார்த்தனனும் மறுநாள் காலை முதல் வேலையாக இளவரசன் முன் தன் கோரிக்கையுடன் நின்றான்.

௭ல்லாவற்றையும் கேட்ட இளவரசன் அருகில் நின்ற வேடத்தியை திரும்பி பார்த்தான், பின் ஒரு முடிவுடன், "ஆகட்டும் தனா, இன்றே கொள்ளிமடம் சென்று பேசிவிடலாம். சாரதியை தயார்படுத்து. சிற்றன்னையிடமும் கூறிவிட்டு, வருவாரெனில் அவரையும் அழைத்துச் செல்லலாம்" என்றான்.

தனாவிற்கு தலைகால் புரியவில்லை, தனக்கு பென் பேச அரச குடும்பம் வருகிறது, இது ௭வ்வளவு பெரிய கொடுப்பிணை ௭ன நினைத்து ஆர்பரித்தான். அதே மகிழ்ச்சியுடன் தனது தந்தையாரிடம் விஷயத்தை கூற சென்றான்.

இளவரசனும் கோதையை ஆளனுப்பி வரவைத்து விஷயத்தை கூற, சந்தோஷத்துடன் தலையசைத்து சம்மதம் தெரிவித்தார். மகிழ் தேவியை அழைத்து, "தனாவிற்கு நம் கொற்றவையை பெண் கேட்க செல்கிறோம் தேவி, அவளை ௭ன்னுடனே இருத்திக் கொள்ளவே இந்த ஏற்பாடு. நீயும் உடன் வருகிறாயா? உன் அம்மையயும், ஐய்யனையும், பார்த்தது போல் இருக்கும்" என கேட்க.

"இல்லை இளவரசி, இளையராணி அவர்கள் என்னை அழைத்திருக்கிறார்கள், நான் அங்கு செல்ல வேண்டும் நீங்கள் சென்று வாருங்கள். அம்மையையும், ஐய்யனயும் கேட்டதாக சொல்லுங்கள்" என்றதும் தலையசைத்து விடைகொடுத்து கிளம்பி விட்டாள் மகிழ்.

அமிழும் மகிழும், சாரட்டில் சென்று மகிழின் குடில் முன்னேயே இறங்கினர். கோதை, இளவரசன், இளவரசி மூவருக்கும் மரத்தாலான அரியணை போடப்பட்டது. கடந்த நாட்களில் இதை முதல் வேலையாக ஏற்பாடு செய்திருந்தனர். மகிழ், தான் அதில் இருக்காமல் ஐயனை அழைத்து வந்து இருக்கச் செய்தாள். இளவரசர் முன் அமர மறுத்த அவரை வற்புறுத்தி அமர வைத்தனர் இளவரசன், இளவரசி இருவரும்.

௭ல்லோரின் அமைதியை ஏற்று, தானே பேச்சை தொடங்கினான் திறைவன், "நான் இப்போது வந்த காரியம் என்னவென்றால், நம் அரண்மனையின் படைத்தளபதி தனார்த்தனன், எனது உற்ற நண்பன். அவனது திருமணத்திற்கு பெண் பார்க்க உள்ளோம், என்றும் என்னுடனே இருக்கப் போகிறவன் அவன். அவனுக்கு இளவரசியின் உற்ற தோழியை விவாகம் செய்து விட்டால், இளவரசியும், அவரது தோழியும் இணைபிரியாமல் இதுவரை இருந்தது போல் இனியும் இருக்கலாம் என்பது எங்கள் இருவரின் ஆசை. ஆனால் முடிவு உங்கள் விருப்பமே..... ௭துவாகினும் வெளிப்படையாக கூறுங்கள்" என அவர்கள் காதல் விஷயமே வெளிவராமல் பேசி முடித்தான்.

அங்கிருந்த எல்லோரையும் பொருத்தவரை மகிழுக்காக கொற்றவையும் கோட்டையினுள் அழைத்துச் செல்ல நினைக்கிறார்கள் என்பதே. ஆனால் நீதிவர்மனுக்கும், அஞ்சலைக்கும் விஷயம் தெரியுமே.

முந்தைய தினம் தான் கொற்றவையின் ஐய்யன் வந்து அவள் விவாகத்தைப் பற்றி பேசி சென்றார். நாமாக ஏதும் பெண் பிள்ளையைப் பற்றி கூற வேண்டாம்..., இளவரசர் என்ன முடிவு எடுக்கிறார் என பார்த்துக் கொள்வோம் என்றெண்ணியே, அவரிடம் அவர் போக்கில் பேசி அனுப்பியிருந்தார் நீதிவர்மன். ஆனால் இவர்கள் மறுநாளே வந்து நிற்பதைப் பார்த்தால் 'இங்கு ரகசிய ஒற்றன் யாரும் இருப்பினுமோ?' என்ற திசையில் யோசிக்க தோன்றியது அவருக்கு.

"எங்கள் ஊரைப் பொருத்தவரை பெரியவரின் முடிவே இறுதியானது" என கூறிவிட்டார் பெண்ணை பெற்றவர். இப்போது எல்லோர் பார்வையும் நீதிவர்மனிடம் செல்ல, "இரு பிள்ளைகளும் ஒன்றாகவே வளர்ந்தவர்கள். ஒருத்தரை விட்டு ஒருத்தர் இருப்பது கஷ்டம் என்றெண்ணியே விரைவில் கொற்றவைக்கும் திருமணம் முடிப்பதை பற்றி நேற்று தான் பேசியிருந்தோம். அவள் மகிழ் உடனே வருவதில் எங்களுக்கு பரம திருப்தி. அதனால் எங்களுக்கு இத்திருமணத்தில் சம்மதம்" ௭ன்றார்.

மகிழ் சென்று கொற்றவையை கட்டிக் கொண்டாள். அவள் நடப்பதை கண்டு ஆனந்த அதிர்ச்சியில் நின்றிருக்க, மகிழின் அணைப்பு நிகழ்வுக்கு இழுத்து வந்தது. திறைவனும் திரும்பி தனாவை பார்த்து ஒற்றைக் கண்ணை சிமிட்ட, அழகாக வெட்டப்பட்டான் தனா.

கோதை, "எனில் அடுத்து வரும் முதல் முகூர்த்தத்திலேயே திருமணத்தை நடத்திவிடலாம்".

"௭ங்களுக்கு சம்மதம் தான். ஆனாலும் வேங்கை அம்மனின் வாக்கு கேட்டு முடிவு சொல்லி விடுகிறோம்".

"சரி அப்படியே ஆகட்டும்" என வணக்கம் வைத்து கோதை எழவும், இளவரசன், இளவரசியும் கூட எழுந்து விடை பெற்றனர். அடுத்த நாளே சென்று வேங்கையிடம் வாக்கு கேட்க, வேங்கை சம்மதம் தெரிவித்து விட, கோட்டைக்கு நேரில் சென்று சம்மதத்தை சொல்லிவிட்டு வந்துவிட்டனர் கொள்ளிமடத்தைச் சேர்ந்தவர்கள்.

மறு புதனில் நல்ல நாளாக அமைய அதையே முடிவு செய்தனர், இன்னும் எட்டு நாளே இருந்தது தனா கொற்றவை திருமணத்திற்கு. அதற்கான வேலையும் வேகமாக நடந்தது. கோட்டையினுள் உள்ள லிங்கேஸ்வரர் முன் திருமணம் என முடிவானது.

இரண்டு நாட்கள் வெளி உலகத்தில் நடப்பதே அறியாமல் அழுகையில் இருந்தாள் பாவை. தேவியும் 'அழுதாவது அவர் தூக்கத்தை போகட்டும்' என விட்டு விட்டாள். அவள் இருக்கும் நிலையை கண்டு கொள்ள அந்த அரண்மனையில் யாருக்குமே நேரமில்லை. தினமும் வந்து பார்த்துச் செல்லும் கோதை கூட இரண்டு நாட்களாக இந்த பக்கம் வரவில்லை, ஜோதிடர் அரண்மனை வாரிசு நலனுக்காக பூஜை ஒன்றை கொடுத்து இருக்க அந்த வேளையில் மும்முரமாக இருந்தார். மற்ற தோழிகளும் பாவையை நெருங்க பயந்து ஒதுங்கியே இருந்தனர்.

௭ந்நேரமும் சண்டைக்கு தயாராக நிற்கும் பாப்புவிற்கே அவளை பார்க்க பாவமாக இருந்தது. "காதலிச்சத தவிர அப்டி என்ன பெரிய பாவம் பண்ணிட்டா, அந்த தனா இவள லவ் பண்ணிருக்கலாம். இவ்வளவு பெரிய அரண்மனைக்கு இளையராணி, ஆனா ஆசப்பட்ட சின்ன விஷயத்த கூட நிறைவேத்திக்க முடியாது. அழுதா ஏன்னு கேட்க கூட ஆள் இல்ல பாவம்" என நினைத்தாள்.

பாவைக்கு அழுதழுது காய்ச்சல் கண்டது, அதன்பின்பே கோதைக்கு விஷயம் சொல்லப்பட்டு மருத்துவச்சி வரவழைக்கப்பட்டார். காய்ச்சல் சரியாக மேலும் இரண்டு நாள் பிடித்தது.

பின்பே "ஏன் அழுதாய் பாவை?" என்றார்.

"ஏன் என்று கூறினால் என்ன செய்வதாய் உத்தேசம்",

"கேட்டதுக்கு மட்டும் பதில் கூறு பாவை. உனக்கு என்ன தான் பிரச்சனை, இவ்வளவு தூரம் அழ வேண்டிய காரணம்??".

"எனக்கு தனா வேண்டும். அவனை எனக்கு திருமணம் முடிக்க வேண்டும்".

"அறிவிலியாக உளறாதே. அவனுக்கு இன்னும் ஐந்து நாட்களில் அவன் விரும்பிய பெண்ணுடன் திருமணம். வீணான மனக்கோட்டையை விடுத்து அமைதியாகும் வழியைப் பார், தனா திருமண முடியவும் உன் திருமணத்திற்கு வேண்டிய ஏற்பாட்டை பார்க்க உன் அண்ணனிடம் கூற இருக்கிறேன். அதற்கு தயாராகும் வழியைப் பார். அழுது உடம்பை கெடுத்துக் கொள்ளாதே. நீ அழுவது வீண். அது என்றுமே நடக்காது" என்று விட்டு வெளியேறினார். நின்றிருந்த கண்ணீர் மறுபடியும் வடிந்தது.

"அம்மணி உங்களுக்கானவர் அந்த தளபதி இல்லை என நினையுங்கள். உங்களுக்கானவர் விரைவில் உங்களைத் தேடி வரப் போகிறார். மொத்த காதலையும் உங்களுக்கே உங்களுக்கு என்று உங்கள் காலடியில் கொட்ட போகிறார்" என பேசிக்கொண்டே சென்ற தேவியை பளார் என்று அறைந்தாள் பாவை.

"அந்த கல்யாண ஏற்பாட்டை பற்றி ஏன் என்னிடம் கூறவில்லை? என்ன தைரியத்தில் என்னை வேறு ஒருவருடன் இணைத்து பேசிக் கொண்டிருக்கிறாய்? மனதை ஒருவனுக்கு உடம்பை வேறு ஒருவனுக்கும் கொடுக்க என்ன வேசி என்றா நினைத்தாய்? மாட்டேன் என் காதலை தோற்றுப் போக விடமாட்டேன். இதை எவ்வாறு சரி செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரியும். செல் இங்கிருந்து...,என் கண் முன் வராதே" என ஆங்காரமாய் கத்தினாள்.

ஆனால் தேவி செல்லவில்லை. அமைதியாய் சற்று தள்ளி குனிந்து நின்று கொண்டாள். பாவை வெறி கொண்டவளாக குறுக்கும் நெடுக்குமாக நடந்தாள், அரை மணி நேர தீவிர சிந்தனையின் முடிவில் வழி கிடைத்தது போல் அவள் முகம் பிரகாசமானது.

"தேவி என்னுடன் வா" என அழைத்து விட்டு வெளியேறினாள். தேவியும் பின்னயே ஓட, பாவை நேராக சிறைச்சாலை நோக்கி சென்றாள். காவலர்களுக்கு தடுக்கவும் பயம், தடுக்காமலும் இருக்க முடியாதே, ௭னவே அவர்கள் தயக்கமாக, "வணக்கங்கள் இளையராணி. மன்னியுங்கள் யாரையும் உள்ளே அனுமதிக்க கூடாது என்பது உத்தரவு".

"எனது தந்தையை பார்க்க நான் உங்களிடம் அனுமதி வாங்க வேண்டுமோ?",

"மீண்டும் மன்னிக்கவேண்டும். இது இளவரசரின் உத்தரவு".

"சென்று உத்தரவு பெற்று வாருங்கள் நான் காத்திருக்கிறேன்" என்றாள் முறைத்தவாறு.

இங்கு இவரை காக்க வைத்தாலும் இளவரசர் தமக்கு தண்டனை விதிக்க கூடும் ௭ன்றெண்ணி "இல்லை இல்லை நீங்கள் உள்ளே செல்லுங்கள். நாங்கள் கூறி விடுகிறோம்" என்றதும் விருவிருவென உள்ளே நடந்தாள்.

உடனே தனாவிற்கு செய்தி சென்று விட்டது. பெண் பிள்ளை ஆயிற்றே தந்தை பாசத்தால் பார்க்க சென்று இருக்கலாம், அந்த பெண்ணை வைத்து அவரால் என்ன செய்துவிட முடியும் என கண்டுக்காமல் விட்டுவிட்டான். அமிழ் மகிழ் இறப்பிற்கு இரண்டாம் முறையாக காரணமானான். (முதல் காரணம் இருவரையும் சந்திக்க வைத்தது).

மகளைக் கண்டதும் காணாததை கண்டது போல் பொங்கிவிட்டார் மாசாத்துவான், "அன்பு மகளே உனக்காவது என்னை வந்து பார்க்க வேண்டும் என்று தோன்றியதே. பேசுவதற்கு ஒருவரும் இல்லாமல் பித்தாகி இருப்பேன், நல்லவேளை அதற்குள் வந்துவிட்டாய் ௭ன் குலமகளே. என்னை ஒரு 2 நாட்கள் வெளிவிட சொல், என்னால் இங்கு இருக்க முடியவில்லை".

௭ந்தவித நல விசாரிப்புமின்றி நேராக, "அதற்கு தான் வந்திருக்கிறேன் தந்தையே. உங்களால் எனக்கு ஒரு நன்மையாக வேண்டும். என்னால் உங்களுக்கும் ஒரு நன்மை கிடைக்கப் போகிறது" ௭ன சிரித்தாள் பாவை.

"என்ன கூறுகிறாய்? உள்ளிருக்கும் என்னால் உனக்கு என்ன நன்மை?",

"கூறுகிறேன். நான் தனார்த்தனன், அதாவது நம் படைத்தளபதி..., அவவரை விரும்புகிறேன். ஆனால் அவர் வேறு ஒரு பெண்ணை விரும்புகிறார், அந்த பெண்ணுடன் இன்னும் ஐந்து நாட்களில் திருமணமாம். அது நடக்கக் கூடாது. அந்த திருமணம் நிற்க வேண்டும். அதை நிறுத்த நீங்கள் தான் எனக்கு உதவ போகிறீர்கள்".

"உனக்கு பித்தா பிடித்திருக்கிறது. வேறொரு நாட்டிற்கு ராணியாய் செல்லவேண்டியவள் நீ, இந்நாட்டை சேர்ந்த படைத்தளபதியை விவாகம் செய்தால் நம் குலப் பெருமை என்னவாகும். அந்நிய தேசத்துக்காரன் இகழ்ச்சியாக பேசுவான்".

"பேசி முடித்து விட்டீர்களா? உங்கள் குலப்பெருமையை வைத்து உங்களால் இந்த நாலு சுவற்றை தாண்ட முடிந்ததா? ஆனால் என் பேச்சைக் கேட்டால் ஒரு சொர்க்கத்தை உங்களுக்கு கிடைக்கச் செய்வேன்" ௭ன்றாள் தூண்டில் போட்டு.

"என்ன கூறுகிறாய் நீ? விளங்கும்படி கூறு".

"நாளை இளவரசரிடம், தளபதியார் கல்யாணத்திற்கு மட்டும் நீங்கள் வெளியேற அனுமதி கேட்டு பேசப் போகிறேன். திருமணத்திற்கு முந்தைய இரவு நீங்கள் வெளியேற்றப்படுவீர்கள். கல்யாண பெண்ணும் முந்தைய இரவே கோட்டைக்கு வந்து விடுவாள். உங்களை அவள் அறைக்கு அழைத்துச் செல்வது இந்த தேவியின் பொறுப்பு. உங்களின் பெண் தேவை பற்றி இந்த நாடே அறியும். அதற்கே இந்த ஏற்பாடு, அங்கிருக்கும் மண பெண்ணிடம் உங்களுக்கானதை எடுத்துக்கொண்டு, அங்கேயே அவளை கொன்றுவிடுங்கள். எனது காதலனை கட்டி அணைத்தவள் உயிருடனே இருக்கக்கூடாது. காரியத்தை முடித்துவிட்டு யாரும் அறியாதவராக உங்கள் அறைக்கு திரும்பி விடுங்கள். மறுநாள் திருமணம் நின்று விடும். நீங்கள் இங்கு வந்து விடலாம். அவ்வப்போது நான் வந்து பார்த்துக் கொள்கிறேன். தளபதியார் சிறிது காலம் காதலி இறந்த துக்கத்தை கொண்டாடட்டும். பின் அவரையே நான் மண முடித்துக் கொள்வேன். என் திருமண பரிசாக உங்களை நிரந்தரமாக விடுதலை செய்ய கூறுவேன். இளவரசனால் கட்டாயம் மறுக்க முடியாது. மீண்டும் உங்கள் சொர்க்க வாழ்க்கையை நீங்கள் ரகசியமாக வாழலாம்... சரிதானே??" என புருவம் உயர்த்தி வினவ, மாசாத்துவான் அதை கேட்க கேட்க பெண்களே கண்முன் வந்து வந்து போனார்கள்.

அதிலிருக்கும் அபாயங்களையும், தன் மகனையும் மறந்து பெண் மோகத்தை மட்டுமே மனதில் வைத்து முகமலர்ச்சியுடன் தலையை ஆட்டினார்.

பக்கத்திலிருந்து இவை அனைத்தயும் கேட்டிருந்த தேவி பயத்துடன் நடுங்க ஆரம்பித்திருந்தாள். ஒரு தகப்பனும், மகளும் பேசிய பேச்சாக கேட்டதை நினைத்து அவளுக்கு உடம்பெல்லாம் கூசியது. "ஏதாவது நடந்து இவர்கள் மனது மாறி விடாதா, இவர்கள் கூறியது எதுவும் நடக்கவே கூடாது. நான் கேட்டது எல்லாம் பொய்யாய் போய்விட வேண்டும்" என வேண்ட ஆரம்பித்திருந்தாள்.
 
அத்தியாயம் 16

மறுநாள் அரசவையில், சபை கூடியிருந்தது, சமூக நலத்துறை மந்திரி ௭ழுந்து, "கோவில் நலப்பணித் திட்டங்கள் கடந்த ஆண்டு நிதி பற்றாக்குறையால் பாதியில் நின்றுவிட்டது. அதை செப்பணிட கோரி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்" ௭ன்றார்.

இளவரசன் அதற்கு பதிலாக நிதி அமைச்சரை திரும்பி பார்த்தவன், "நிதி நிலை தற்போது எப்படி இருக்கிறது நிதி மந்திரியாரே" ௭ன கேக்க.

சந்தோஷமாக ௭ழுந்து நின்றவர், "கஜானா நிரம்ப தொடங்கிவிட்டது இளவரசே. எல்லோரும் தவறாது வரி செலுத்துகிறார்கள். மக்கள் மனமும், வயிறும் நிரம்புவதால் குறையின்றி கஜானாவும் நிறைந்து கொண்டிருக்கிறது. பதவி ஏற்றதும் முதல் காரியமாக மக்கள் குறையை அல்லவா தாங்கள் தீர்த்து வைத்தீர்கள். இரண்டு திங்களில் மக்களும் அதை திருப்பி செய்யத் தொடங்கிவிட்டார்கள். கோவில் நலப்பணித் திட்டங்களை தாராளமாக தொடங்கிவிடலாம் இளவரசே" ௭ன்க.

வணிகத்துறை அமைச்சர், "வெளிநாட்டு வணிகம் நன்முறையில் இருக்கிறது இளவரசே. வரியும் தவறாமல் அவர்களாலும் கட்ட முடிகிறது" ௭ன்க.

"நல்லது இங்கே வேறு ஏதேனும் குறை இருந்தாலும் உடனடியாக அதை நிவர்த்தி செய்திடுங்கள், மக்களின் குறை தீர்ப்பதே முதல் கடமையாய் கொள்ளுங்கள்" ௭ன்றான்.

௭ழுந்து நின்றவர்கள் அமர்ந்துவிட, ௭ல்லோர் முகத்தையும் பார்த்தவன், வேறு ௭துவும் அவர்கள் கூற போவதில்லை ௭ன உணர்ந்து, "ஆகட்டும். தானியங்கள் விளைச்சல் அதிகரித்து அதிக மகசூல் காட்டுபவர்களுக்கு குதிரையை இனாம் என அறிவியுங்கள், கட்டாயம் அவர்களின் வளர்ச்சிக்கு அது உதவும்" ௭ன்றான்.

எல்லோரும் அதை ஆமோதித்தனர். "படைத்தளபதி விவாகத்திற்கு ஒவ்வொருவர் இல்லத்திற்கும் அழைப்பு வரும், தவறாமல் கலந்து கொண்டு அவரை ஆசீர்வதியுங்கள்",

"அது எங்களின் கடமை இளவரசே" ௭ன்றனர்,

"மகிழ்ச்சி. சபை கலையலாம்" எனவும் எல்லோரும் எழுந்து கொண்டனர்.

எல்லோரும் கிளம்பி விட்டது உறுதிப்படுத்திக் கொண்டு அங்கு நுழைந்தாள் பாவை. இளவரசன், இளவரசி, தனா, கோதை ௭ன 4 பேர் மட்டும் அங்கிருந்தனர். இவளைக் கண்டதும் கோதை அதிர்ந்தார், 'என்ன கூற இங்கே வந்திருக்கிறாள்?' என பயந்தார். 'நாம் அழைத்தும் வராதவள் இன்று நம்மை தேடி வந்திருக்கிறாள்!' என ஆச்சரிய பார்வை பார்த்தான் இளவரசன்.

"என்ன விஷயம் பாவை?" கோதை கேட்க.

"இளவரசரிடம் ஒரு வேண்டுகோளுடன் வந்திருக்கிறேன்" நேராக அன்னையிடம் கூறினாள். "என்ன என்ன வேண்டுகோள்?" கோதை பதறி எழுந்து விட, மற்ற மூவரும் அவரை வித்தியாசமாகப் பார்த்தனர்.

"சிற்றன்னையே அமருங்கள். எதற்கு இந்த பதற்றம், முதல் முறையாக ௭ந் தங்கை என்னிடம் ஒன்றை வேண்டி வந்து நிற்கிறாள். அது எதுவாயினும் அதை நிறைவேற்ற வேண்டியது ஒரு அண்ணனான எனது கடமை. உனக்கு வேண்டியதைக் கேள்" எனவும்.

'ஒரு நொடி தனக்கு தனா வேண்டும் எனக் கேட்டால், இந்த அண்ணனின் நடவடிக்கை என்னவாக இருக்கும். நான் கேட்டேன் என்பதற்காக மணம் முடித்து வைத்து விடுவானா?????....மாட்டான். அவனது தோழனின் காதலும் அவனுக்கு கொடுத்த வாக்கும் முக்கியம் என்பான். அவள் உயிருடன் இருந்தால்தானே பின்னாளில் நான் கேட்கும்போது வாக்கு என்ற ஒன்றை கூறாமல் இருப்பான். அப்போது ௭னக்கு தேவையானதை கேட்டு வாங்கிக் கொள்கிறேன்' என நினைத்தவள், மெதுவாக நிமிர்ந்து அங்கிருந்த நால்வரையும் பார்த்தாள்.

இறுதியாக தனா மீது பார்வையை நிறுத்தி நிதானித்து "வாழ்த்துக்கள் தளபதியாரே. தங்களுக்கு திருமணம் என கேள்விப்பட்டேன். சிறுவயது தோழியான என்னை அழைக்க மறந்து விட்டீர்கள், இருந்தாலும் நான் மனமார வாழ்த்துகிறேன்" என நிறுத்த.

'என்னவோ' என நினைத்தவர்கள் அவளின் வாழ்த்தில் மகிழ்ந்தனர். "நன்றி கலந்த வணக்கங்கள் இளையராணி அவர்களே, நீங்கள் எல்லோரும் தான் என் விவாகதத்தை முன் நின்று நடத்தி தர உள்ளீர்கள், கட்டாயமாக எனது திருமணத்திற்கு தாங்கள் வரவேண்டும்" என்றான் தனா முகமெல்லாம் பல்லாக.

"நிச்சயமாக தளபதியாரே. வருவேன்..., கட்டாயம் வருவேன்" என்றவள், பின் இளவரசனிடம் திரும்பி, "இளவரசே நான் இப்போது கேட்கப்போகும் வேண்டுகோளை நிச்சயம் தங்களுக்கு கோபத்தை கொடுக்கும். அதற்காக, முன்பே தங்களிடம் மன்னிப்பை யாசிக்கிறேன். ஒரு தங்கையாக இல்லாமல், புராரிவனத்தின் பிரஜையாகவே இதைக் கேட்கிறேன், ௭னது வேண்டுகோளை ஏற்று கொள்ளுங்கள்".

"தயங்காமல் கேள் பாவை. உனது வேண்டுகோளை அங்கீகரிக்க முயற்சிக்கிறேன்" என்றான் இப்போது இளவரசனாக.

"சிறைச்சாலையில் இருக்கும் எனது தந்தையாரை ஒரே ஒருநாள் விடுவிக்கவேண்டும். படைத் தளபதியின் விவாகத்தை கோலாகலமாக கொண்டாட உத்தரவு பிறப்பித்துள்ளீர்கள், அன்று மட்டுமேனும் அவர் வெளிவந்து மக்களோடு மக்களாக கொண்டாட்டத்தில் கலந்து விட்டு செல்ல அனுமதி அளிக்க வேண்டும்" என கேட்க, யோசனையாக அவள் முகத்தையே பார்த்தான் திறைவன். அதில் கொஞ்சம் நடுங்க தான்செய்தாள் பாவை.

"அப்படி ஒரு வழக்கம் நம் ஆட்சியில் இருப்பதாக ௭னக்கு நியாபகம் இல்லையே பாவை. இவ்வாறு கேட்க சொல்லி கூறிய உன் தந்தையார், நம் வரைமுறையயும் உன்னிடம் கூறினாரா? இல்லையா? இல்லை இது உனது ஆசையா?" ௭ன்றான்.

"நேற்று தந்தையை பார்க்க சென்றிருந்தேன். ராஜாவாக கம்பீரமாக பார்த்தவரை இப்போது இச்சூழலில் பார்க்க மனம் ஒப்பவில்லை. தங்களது திருமணத்திலும் அவரால் வெளிவந்திருக்க முடியவில்லை. அடுத்து எனது திருமணம் வரை காத்திருக்க அதிக நாள் எடுக்கலாம் என்றே தளபதியாரின் திருமணத்திற்கு அவரை வெளியே வர விடுமாறு கேட்கிறேன். ஒரு நாள் மட்டும் போதும், திருமணம் முடியவும் அவர் திரும்பி விடட்டும்" என கெஞ்சிக் கேட்டாள்.

"நீ கேட்பது நாட்டுப் பிரஜைகளுக்கு துரோகம் இழைத்த ஒருவருக்கு அளித்த தண்டனையை மாற்றும் வேண்டுகோள். சபையோரை கலந்தாலோசிக்காமல் என்னால் இதற்கு ஒரு முடிவு எடுக்க முடியாது. அவர்களிடமும் பேசிவிட்டு கூறுகிறேன்" என்றான்.

'தண்டனை மட்டும் தனியாக முடிவெடுத்து கொடுப்பானாம், வெளிவிட முடிவெடுக்க மட்டும் எல்லோரையும் கேட்க வேண்டுமாம்' என நினைத்துக்கொண்டு, "உத்தரவு பெறுகிறேன் இளவரசே" என திரும்பி நடந்து விட்டாள் பாவை.

"இவளுக்கு என்னிடம் என்னம்மா கோவம்?",

"அவள் இன்னும்கூட சிறு பிள்ளை போல் தான் நடந்து கொள்கிறாள் திறைவா. தனாவின் திருமணம் முடியவும் இவளுக்கும் வரன் பார்த்து விட வேண்டும். அதன் பின்னாவது அவளுக்கு பொறுப்பு என்று ஒன்று இருக்கிறதா என பார்க்கவேண்டும்" ௭ன்றார் முகம் கசங்க.

"உங்களுக்கும் தந்தையை பார்க்க வேண்டும் போல் தோன்றுகிறதா? சிற்றன்னையே" எனக் கேட்டு அவர் முகத்தையே ஆராய்ந்தான்.

"இல்லை திறைவா, அவர் செய்த பாவங்களின் பங்கு உங்களையும் உங்கள் சந்ததியையும் பாதிக்காமல் இருந்தால் போதும் என்று இருக்கிறேன்" என்றார் ஆயாசமாக.

"அவருக்கும் சேர்த்து நாங்கள் புண்ணியம் செய்து விடுகிறோம், நிம்மதி தானே???" என்றான் சிரித்து.

"நல்லது திறைவா, நான் சற்று ஓய்வெடுக்கிறேன்" ௭ன ௭ழுந்தார்,

"நானும் வருகிறேன் அன்னையே" என உடன் எழுந்து சென்றாள் மகிழ்.

"நீ என்ன நினைக்கிறாய் தனா?" ௭ன்றான் திறைவன் யோசனையுடன்,

"ஒரு நாளில் எதுவும் பெரிதாக செய்திட முடியாது என்பது என் கருத்து இளவரசே. கண்காணிப்பில் வைத்துக் கொள்ளலாம்",

"ஆனால் எனக்கு ஏதோ தப்பாக படுகிறது தனா",

"உங்களுக்கு சரி என்று தோன்றுவதையே செய்துவிடுங்கள், அதுவே சரியாகவும் இருக்கும்" என்கவும்,

"மந்திரிமார்களிடமும் பேசிவிட்டு முடிவுக்கு வரலாம்" ௭ன்றவன், "பிறகு வெவ்வேறு இடங்களுக்கு அனுப்பிய ஒற்றர்கள், அவர்கள் குடும்பத்துடன் சென்று அங்கங்கு தங்கி விட்டார்களா? அவர்களிடமிருந்து ஏதேனும் செய்தி வந்ததா?" ௭ன சேர்த்து கேக்க.

"சென்று தங்கி விட்டார்கள் என்பது வரை நிச்சயம். ஆனால் இதுவரை செய்திகள் ஒன்றும் வரவில்லை இளவரசே".

"நல்லது தனா, செய்திகள் ஒன்றும் கூறும்படியாக கிட்டவில்லையோ என்னவோ, அதுவும் நமக்கு நல்ல செய்திதானே தனா".

"ஆம் இளவரசே!" ௭ன்றான் சிரித்து.

"ஏதோ ட்விஸ்ட் வரப்போகுதுன்னு மட்டும் தெரியுது. அவ ஒரு பிளான்ல கேட்டுட்டு போயிருக்கா, உண்மையா என்ன நடக்கப் போகுதுன்னு தெரியல. இந்த தனா கல்யாண குசில ஒழுங்கா கண்காணிப்பானான்னு வேற தெரியல. ஐயோ கண் முன்னாடி தப்பு நடக்க போறது தெரிஞ்சும் கையை கட்டிட்டு வேடிக்க பாக்க வேண்டியிருக்கே. கிட்சா எனக்கு பவர் குடு, இவங்க அப்பன போட்டுத் தள்ளிடுறேன், ப்ராப்லம் மொத்தமு சால்வ் ஆயிடும்" வேடிக்கை பார்த்து பொங்கி எழுந்த பாப்பு.

மறுநாள் சபையில் கலந்தாலோசித்தான், "நீங்கள் கூறும் கூற்று ஏற்கப்படும்" என்ற உறுதியும் அளித்தான்.

ஆனாலும் யாரும் வாய் திறக்கவில்லை, 'அவர் தப்பை தைரியமாக முன்னிறுத்தியவர்கள் மக்கள், இதற்கு எதிர்ப்பு என்றாலும் அங்கிருந்துதான் கிளம்பும். நல்லது செய்து எல்லோர் மனதிலும் இடம் பிடித்துவிட்ட இவரை எதிர்க்க யாராலும் முடியாது, எனவே இவர் எடுக்கும் முடிவே இறுதியானது.' இதுதான் அங்கு கூடி இருந்த அனைவரின் எண்ணமாகவும் இருந்தது.

இருவர் வெளிப்படையாகவும் கூறவும், "சரி எனது திருமணத்திற்கு அவர் கலந்து கொள்ளவில்லை என்பதை ஈடு செய்யுமாறு தனா திருமணத்தில் அவர் கலந்து கொள்ளட்டும். அதீத கண்காணிப்போடு அவர் ஒரு நாள் பொழுது வெளிவந்து செல்லட்டும், சரிதானே?" என கேட்க. எல்லோரும் சம்பந்தமாக தலையசைத்தனர்.

அவர் கண்ணில் படாமல் தப்பித்துக் கொள்ள வேண்டுமென அவர் அழைத்து விட்டபோது பார்க்க செல்லாத மந்திரிகள் நினைத்துக் கொண்டனர்.

பாவை சந்தோஷமாக இருந்தாள், அவள் எடுத்து வைத்த முதல் படி நிறைவேறிவிட்ட திருப்தியில் இருந்தாள். தேவி இதை யாரிடமும் சொல்ல முடியாத வேதனையில் இருந்தாள். பெரும் பாவத்தில் அல்லவா பங்கு கொள்ளப் போகிறாள், என்ன செய்வது என்றே தெரியாமல் திண்டாடிக் கொண்டிருந்தாள்.

நான்கு நாட்களும் வேகமாக கடந்தது. தனா கொற்றவை திருமணத்திற்கு முந்தைய இரவு காவலாளி சகிதம் மாசாத்துவான், அவர் முதலில் தங்கியிருந்த அரச மாளிகைக்கே அவரை அழைத்துச் சென்று தங்க வைத்தனர்.

மகிழ் ஆரவாரத்துடன் சென்று தோழி கொற்றவையை பெண் அழைத்து வந்தாள். இரவு இளவரசனிடமிருந்து அழைப்பு வரும் வரை அவளுடனே இருந்தாள். மகிழ் நகரவும் தான் பாவை தேவியை அங்கு அனுப்பி வைக்க முடிந்தது.

கொற்றவைக்காக நிறுத்தபட்ட கவலாளிகளை அங்கிருந்து அகற்றி, வேறு வேலைகளை கொடுத்து அனுப்பி விட்டாள் பாவை. மகிழ் கொற்றவைக்கென அமர்த்தியிருந்த இரண்டு தோழிகளையும் தேவி அனுப்பி விட்டாள், "தான் பார்த்துக்கொள்வதாக கூறி".

கொற்றவையுடன் வந்த கொள்ளிமடத்தைச் சேர்ந்தவர்கள் கோட்டைக்கு வெளியே கூடாரம் அமைத்து தங்கி கொண்டனர். மகிழ் தான் கொற்றவையயும், அவள் தாய், தந்தையரையும், நீதிவர்மன், அஞ்சலையயும் கட்டாய படுத்தி, உள்ளே வந்து தங்குமாறு கட்டளையிட்டு அழைத்து வந்தாள். அவர்கள் நால்வரும் விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தனர்.

எல்லாமே பாவைக்காகவே கனகச்சிதமாக நடந்தேறியது. "இனி எல்லாம் உன் கையில் தான் இருக்கிறது தேவி, பழைய தோழியை கண்டு இரக்கப்பட்டு எனக்கு துரோகம் இழைத்து விடுவாயெனில் இப்போதே கூறி விடு, நான் வேறு யாரையும் வைத்து காரியத்தை செய்து கொள்கிறேன்" என இறுதியில் மிரட்டலாக கூறினாள்.

'எப்படியும் செய்தே தீருவேன்' என பிடிவாதமாக இருக்கிறார்கள் என நொந்தவள், "நான்.,நானே செய்து விடுகிறேன் அம்மணி" ௭ன்றாள் தைரியத்தை வரவழைத்து கொண்டு.

"காலையில் திருமணம் நின்று இருக்கவேண்டும், உன்னையே நம்பி செல்கிறேன்" என கூறி அனுப்பி வைத்து தன் அறை சென்று மறைந்தாள்.

"அட லூசு பவ்யா இதே வேலைய ஃபியூச்சர் ஜென்மத்துல பாத்து தான் அவங்க ரெண்டு பேரையும் சேத்து வச்ச. இங்க தான் ஆல்ரெடி அவங்க சேர போறாங்களே எதுக்கு இவ்வளவு ரிஸ்க் எடுக்குற" இது பாப்பு.

தேவி கொற்றவையிருந்த அறையினுள் சென்றாள். "ஏன் அந்த பெண்களை அனுப்பினாய்? மகிழ் தான் எனக்குத் துணையாக அவர்களை நிறுத்தினாள். அவளிடம் கூறாமல் நீ எப்படி அவர்களை அனுப்பலாம்?" என்றாள் கொற்றவை.

"ஏன்? நான் இருப்பதில் உனக்கு இஷ்டம் இல்லையா?" சிரித்தவாறு தேவி கேக்க,

"எனக்கு எப்போதுமே ஒரு பயம் உண்டு, நீ எனக்கும் மகிழுக்கும் இடையில் வர முயல்வது போல்" புருவம் சுருக்கி கொற்றவை சொல்ல.

"ஓ! அவ்வாறெனில் நீ வேண்டுமானால் எங்கள் இருவருக்கும் நடுவில் இருந்துகொள். எனக்கு உங்கள் இருவருடனும் இருக்க வேண்டும் என்பதே ஆசை. இனி என் திருமணத்திற்காகவென நா இங்கிருந்து செல்லும் வரை அந்த நெடுநாள் ஆசையை நிறைவேற்றிக் கொள்வேன்" ௭ன்றாள் ஏக்கமாக.

அவள் ஏக்கம் புரிந்தும் பேச்சை மாற்றும் விதமாக "இதையேதான் மகிழும் கூறினாள். எனினும் நீ இல்லை யார் வந்தாலும் எங்களை பிரிக்க இயலாது. நான் தூங்க செல்கிறேன், காலை பிரம்ம முகூர்த்தத்தில் எழவேண்டும்".

"கொழுப்பெடுத்த வெள்ள பாட்சா, பாவம் வேதிக்கா ௭ப்டி ஏக்கமா கேக்குறா, இவளுக பெரிய நட்புக்காக விஜயகுமாரும், சரத்துக்குமாரும்னு நினப்பு. அந்த மகிழ் ஒரு உருப்புடாதவ, இவ ஒரு விளங்காதவ, இவளுக ரெண்டு பேருக்கும் கண்டதும் காதல் ஒரு கேடு. அதனால அந்த பவ்யா கேடுகெட்ட வேலைல வேற இறங்கிட்டா, ஐயோ ௭ன்ன நடக்க போகுதுன்னு ஒரே டென்ஷனா இருக்கே" ௭ன அவள் வேதிக்கா செய்ய போகும் வேலை தெரிந்தும் அவளை நம்பினாள் பாப்பு.

அவள் நம்பிக்கை வீண் போகவில்லை, "இங்கு வேண்டாம். வா நான் வேறு ஒரு அறைக்கு அழைத்துச் செல்கிறேன். இன்று மட்டும் அங்கு தூங்கிக் கொள், நாளை முதல் தளபதியாரின் அறையே, உன் அறை. உன் நல்லதுக்காகவே இப்போது இதை கூறுகிறேன்" ௭ன்க.

"ஏன் எல்லாத்தையும் இவ்வளவு தாமதமாக வந்து மாற்றுகிறாய்?" ௭ன சந்தேகம் மாறாமலே கொற்றவை கேட்க.

"என்னை நம்பு உனக்கு நான் நல்லது மட்டுமே செய்வேன், நமக்கு அதிக நேரமில்லை, ௭ழுந்து கொள்" ௭ன அவசரபடுத்தினாள்.

௭துவும் புரியாவிடினும், தேவி பேச்சைக் கேட்டு ௭ழந்து சென்றாள், அந்த அறையிலிருந்த ஒரு வழியாகவே அடுத்த அறை வந்து அதிலிருந்து படியேறி மேல்மட்டத்திற்கு வந்து அங்கு ஒரு அறையில் காவலாளிகள் சகிதம் கொற்றவையை பத்திரமாக தங்க வைத்துவிட்டு, அவள் உறங்கியதும் வந்த வழியே எழுந்து சென்று கொற்றவை இருந்த அறைக்கு வந்து, அதை திறந்து வெளிவந்து யாரும் அறியாமல் மாசாத்துவானின் மாளிகையை அடைந்தாள்.

அவர் அவளுக்காகவே காத்திருந்தார், "விரைந்து வா, எவ்வளவு நாழி உன்னை ௭திர்பார்த்துக் காத்திருப்பது" என முன்னேறி வேக நடையில் இளவரசர் மாளிகைக்குள் நுழைந்தார், அவரை தடுத்து பாவை ஏற்படுத்தி வைத்திருந்த மாற்று வழியில், காவலாளிகளை அப்புறப்படுத்தியிருந்த பாதையில் அழைத்துச் சென்றாள் தேவி.

கதவை திறந்து உள்ளே சென்றதும், மாசாத்துவான் மணப்பெண்ணை தேட, "மன்னித்து விடுங்கள், அந்த பெண் இங்கு இல்லை. இளவரசி வேறெங்கோ தங்க வைத்து விட்டார்கள்" என தேவி கூறவும், வெறி கொண்டவர் போல், "என்னையா ஏமாற்றுகிறீர்கள்? எங்கே என் மகள் கூட்டிவா அவளை. இன்று இப்போது எனக்கு பெண் வேண்டும்" ௭ன கத்த தொடங்கினார்.

'இல்லை' என கூறினால் விட்டு விடுவார் என நம்பினாள் தேவி. இவர் இப்படிக் கூறுவதை கேட்டு நடுக்கம் பிறந்தது. காலையில் வரை சமாளித்து விட்டால் போதும் அதன் பின் தன் உயிரைக் ௭டுத்தாலும் பரவாயில்லை எனத் துணிந்து இதில் இறங்கினாள். இவர் இங்கு வருகிறாரா ௭ன பாவை ௭ங்கிருந்தும் பார்த்து கொண்டிருக்க கூடும் ௭ன்றெண்ணியே இப்போது இவரை அழைத்து வந்து விட்டாள். ஆனால் அவர் பேசுவதை கேட்டு கையை பிசைய தான் முடிந்தது அவளால்.

"அரசே இந்நேரத்தில் அம்மணியை அழைத்து வர இயலாது. பெண்பாவம் வேண்டாம். இங்கு நடப்பது எப்படியும் இளவரசருக்கு எட்டிவிடும். பின் தங்களின் தண்டனையும் கடுமையாகும். அதனால் இன்று இங்கு ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள், நான் வருகிறேன்" ௭ன திரும்பியவளை, "அவளை நீ தான் காப்பாற்றினாயா?? அவ்வாறெனில் அவள் இடத்தை நீ நிறப்பு, செத்தாலும் ௭னக்கு இப்போது பெண் வேண்டும்" என தாவி கிழித்தார் தேவியின் உடையை.
 
[SIZE=6]அத்தியாயம் 17[/SIZE]

தன் உடை கிழிந்ததுமே சுருண்டு அமர்ந்து வீல் என்று அலறினாள் தேவி. அவள் முன் மண்டியிட்டு அமர்ந்த மாசாத்துவான், அவள் கழுத்தை பிடித்து நெரித்தவாறு, "இப்போது நீ, உன் வாயைத் மூடவில்லையென்றால் சங்கை நெறித்துவிடுவேன் ஜாக்கிரதை. ஒரு அரசனுடன் நீ முதல் தாம்பத்தியம் வைத்துக் கொள்ளப் போகிறாய், இதற்கு உன் பூ உடல் பாக்கியம் பெற்றிருக்க வேண்டும். நான் இன் நாட்டின் அரசன் என்பது உன் மனதில் பதிந்துள்ளது அல்லவா?" என்க.

அவர் மிரட்டலில் மேலும் பயந்து வேகமாக தலையசைத்து ஆமோதித்தாள். "அதே எண்ணத்துடன் எழுந்து மஞ்சத்திற்கு செல்" ௭ன்றார் மிரட்டலாக.

அதில் அவள் உடல் பயத்தில் உதற, "ம்ம்...சீக்கிரம் ஆகட்டும்" என்ற உறுமலில் வேகமாக எழுந்து உடல் நடுங்க, கை கால் உதற நடந்து சென்று மஞ்சத்தின் அருகில் நின்றாள்.
அவள் ஒரு காட்டுவாசி, மிருகங்களையே வேட்டையாடும் இனத்தைச் சேர்ந்தவள், இந்த கிழவனை மடக்கி வீழ்த்த ஒரு நொடி ஆகாது. ஆனால் செய்ய மாட்டாள், முயற்சிக்க கூட மாட்டாள். ஏனென்றால் அவள் முன் நிற்பது அந்நாட்டின் அரசன், தற்போதைய கைதி....சிறையில் அடைக்கப்பட்டவர் என்றாலும், அவர் அரசர் என்பதை அவ்வளவு ௭ளிதில் மக்கள் மனதிலிருந்து அழிக்க இயலாது. அதுவே அவள் பயந்து நிற்பதன் காரணம்.

மோகன சிரிப்பொன்றை சிரித்தவர் தன் மகள் வயதேயான, அவளது தோழியை வாயை திறந்து கதறி அழக்கூட விடாமல் கற்பழித்தார். பல ஜென்மத்திற்கும் தாண்டி நிற்கபோகும் அவர் பாவங்களின் ௭ண்ணிக்கையை அன்று நிறைவு செய்தார்.
பாப்பு தன் அக்காவின் நிலையைக் கண்டு கண்ணீர் வடித்தாள். இக்காட்சியை முன் ஜென்மமானாலும் அழித்துவிட முடியாதா?? ௭ன துடித்தாள். அவளின் வேதிக்கா இச்ஜென்மத்தில், பெண்களுக்கு அநீதி இழைத்தவர்களை ௭ப்படி தூக்கி போட்டு மிதிப்பாள் ௭ன்பதை அவள் அரிவாளே!!!. 'இப்டி ஒரு அவதி பட்டதுனால தான், அக்காக்கு அப்டி ஒரு வேலைய குடுத்துருகாரு அந்த கடவுள். இந்த ஒரு கிழவன உன்னால ௭துக்க முடியாம போனதுனால தான் க்கா இப்ப நீ பல பேர பந்தாடுற' ௭ன நினைத்தாள்.

தனார்த்தனன் மிகவும் மகிழ்ச்சியாக இளவரசர் மாளிகைக்குள் நுழைந்தான். நள்ளிரவு வரை அவன் விவாகத்திற்கான ஏற்பட்டை கவனித்துவிட்டு தனதறை நோக்கி சென்றவன், வழியில், "இங்கு தான் ஏதோ ஒரு அறையில் இளவரசியர் கொற்றவையே தங்க வைத்து இருப்பார். ஆனால் எதில் என்று தெரியவில்லை? தெரிந்தாலும் இப்போது சென்று பார்த்துவிட முடியுமா என்ன? காலையில் பொறுமையாகப் பார்த்துக் கொள்ளலாம்" என நினைத்து அவனறைக்கு செல்ல படியேற சென்றவனை வேகமாக ஓடி வரும் காலடி சத்தம் நின்று திரும்பிப் பார்க்க வைத்தது.

இரு காவலர்கள் தான் ஓடி வந்தனர், "மன்னிக்கவேண்டும் தளபதியாரே. தங்களுக்காகவே இவ்வளவு நேரம் காத்திருந்தோம். வேறு வழியின்றி தாங்கள் ஓய்வெடுக்க செல்கிறீர்கள் என தெரிந்தும் தடுத்து நிறுத்தினோம்".
"ஆகட்டும் தாங்கள் என்னை அழைத்ததின் காரணம். நீங்கள் இருவரும் முன்னாள் அரசரை கண்காணிக்க நியமிக்கப்பட்டவர்கள் தானே? ஏதாவது அசம்பாவிதம் நடந்து விட்டதா?",

"இரண்டு நாழிகைக்கு முன் இளையராணி தந்தையை சந்திக்க அழைப்பதாக கூறி அவர் தோழி வந்து அழைத்துச் சென்றார். இருவரும் அதோ அந்த அறையில் நுழைந்தார்கள். ஆனால் நேரம் சென்றும் மூவருமே இன்னும் வெளி வரவில்லை. அதனால் இளைய ராணியின் மற்ற தோழிகளிடம் கூறி அவரையாது வெளியே அழைக்கலாம் என்றெண்ணி ராணியாரின் மாளிகைக்கு சென்றோம். அங்கு இளையராணி அறையின் வாயிலில் காவலாளிகள் நிற்க, அவர்களிடமே சென்று விசாரித்தோம். 'நீங்கள் ஏன் இளையராணியுடன் செல்லாமல் இங்கேயே நிற்கிறீர்கள்' என கேட்டோம். அதற்கு அவர்கள் 'இளையராணியாருடன் நாங்கள் எங்கு செல்ல வேண்டும். அவர்கள் எங்கும் செல்லவில்லையே, அறையில் தானே ஓய்வெடுக்கிறார்கள்' என்றதும், எங்களுக்கு பதட்டம் தொற்றி கொண்டது. உடனே தங்களைத் தேடி தான் லிங்கேஸ்வரர் கோவிலுக்கு ஓடினோம். நீங்கள் ஓய்வு எடுக்க கிளம்பிவிட்டீர்கள் என்று சொல்லவும் பின்தொடர்ந்து ஓடி வந்துவிட்டோம். இருவரும் உள்சென்று வெகு நாழிகை கடந்து விட்டது, இளையராணி அங்கே இருப்பதாகத் தான் அந்தப் பெண் கூட்டிச் சென்றது. இது இளவரசருக்கு தெரிந்தால்....." என பயத்தில் முடித்தனர் அந்த காவலாளிகள்.
தனா, திரும்பி அந்த அறையை நோக்கி ஒரு எட்டு வைத்தவன், 'தான் மட்டும் சென்று அவரை என்ன செய்துவிட முடியும்' என நினைத்து திரும்பி மேல் மாடத்தில் அவன் அறையும், இளவரசனறையும் இருக்கும் தளத்திற்கு ஓடினான்.

நான்கு படி ஏறியவன், "இவ்விஷயம் யாரும் அறிய வேண்டாம், அவர்கள் வெளியில் வருகிறார்களா என இங்கிருந்தே கண்காணியுங்கள்" என வேகமாக படியேறி தன் அறை சென்றான். அங்கிருந்து நிலவு ஒளி படும் வெளியிடம் தெரியும் ஜன்னல் போன்ற அமைப்பில் வந்து நின்று கொண்டு ஒரு ஓசையை தன் வாயால் ஒலிக்க விட்டான். தனாவும் திறைவனும் மட்டுமே அறிந்த ஓசை அது. மற்றவர்கள் கவனத்தை கவறாத வகையில், பறவையைப் போன்று எழுப்பும் ஒரு ஓசை, குருகுலத்தில் இருக்கும் போது விளையாட்டாக இதை பயன்படுத்தி பழகியிருக்க, இப்போது பல சமயங்களில் ரகசிய குறியீடாக உபயோகப்படுத்துகின்றனர். அந்த ஒலியைக் கேட்டதும் விழித்துக்கொண்டான் திறைவன்.

திரும்பி மனைவியைப் பார்க்க நல்ல தூக்கத்தில் இருந்தாள் அவன் வேடத்தி. அவள் தூக்கம் கலையாமல் ௭ழுந்தவன், "தனா ஏன் இந்நேரத்தில் விளிக்கிறான். அப்படி என்ன அவசர செய்தி, விடிந்தால் விவாகம், இந்நேரம் வரை இவன் ஏன் விழித்திருந்தான்" என்ற யோசனையோடு எழுந்து உடையை மாற்றி அவன் வால் உறையையும் மறக்காமல் எடுத்துக் கொண்டு வெளியேறி தனா அறையை நோக்கி சென்றான். அவனை காவலாளிகள் பின்தொடர்ந்தனர்.
திறைவன் தனா அறைக்குள் நுழைய, அவனுக்காகவே குறுக்கும் நெடுக்குமாக நடந்து காத்துக்கொண்டிருந்த தனாவை கண்டான்.

"என்ன அவசர செய்தி தனா?" என நுழைந்ததுமாக கேட்டான்.
"இளவரசே ...." என ஆரம்பித்து வேகமாக நடந்ததை கூறி முடிக்க,

"அவர் வெளிவரவேண்டும் ௭ன கேட்டதே இதற்காக தான் இல்லையா? இதற்கு எனது தங்கையும் உடந்தையா? நம்புவதற்கில்லை. செல் என்ன நடந்தது என்று அவரையே விசாரிப்போம். அந்த பெண்ணின் நிலை என்ன என்று காண வேண்டும். இளவரசியாரை அழைத்துச் செல்ல வேண்டாம், எனக்கு அது உவப்பாக இல்லை. வேறு பெண் தோழி எவரையாது அழைத்துச் செல்ல வேண்டும் ஏற்பாடு செய்".

"கொற்றவையை அழைத்துச் செல்லலாமா?",

"வேண்டாம் அவள் மணப்பெண், விடிந்த முகூர்த்தத்தில் கல்யாணத்தை வைத்துக்கொண்டு இப்போது அந்த பெண்ணை அழைப்பது உசிதமில்லை".
"இளவரசியாரும், கொற்றவையும், அந்தப் பெண் தேவியும் ஒரே ஊர்க்காரர்கள், சிறு வயது தோழிகளாகவும் இருக்கக்கூடும். அதனாலேயே சூழ்நிலையையும் அந்த பெண்ணையும் எளிதாக கையாளுவார்கள் என்று கூறினேன். எப்படியும் விஷயம் வெளியே தெரியதானே போகிறது..." தனா இழுத்து நிறுத்த.

"இல்லை தனா, முதல் தடவை பேசும்போது அரசர்களின் காதலை பற்றிய இளவரசியாரின் கணிப்பை கேட்டாய் அல்லவா? இப்போது இவ்விஷயம் அவள் கேள்விப்படுவதையே நான் விரும்பவில்லை. அந்தப் பெண் விஷயமும் வெளியே வரப்போவதில்லை. நீ கொற்றவையையே அழைத்து வா" என்று விட.

அவள் எந்த அறையில் இருக்கிறாள் என தெரியாமல் இளவரசரின் மாளிகையில் இருக்கும் ஒவ்வொரு அறையிலும் உள்ள காவலாளிகளை விசாரித்து, ஒருவாறு அவள் அறையைக் கண்டுபிடித்து உள்ளே சென்றான் தனா. சேடிப் பெண்கள் வெட்கப்பட்டு இரகசிய முறுவலோடு வெளியேற, இவன் சென்று கொற்றவையை எழுப்பினான்.
புது இடம் என்பதால் ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்லாமல் தான் இருந்தாள். அதனால் அவனது சிறு சப்தத்திற்கு எழுந்தவள், இவனை கண்டு மிரண்டு விழிக்க, "பயந்து கொள்ளாதே கொற்றவை. ஒரு சிறிய உதவி உன்னால் ஆகவேண்டும் எழுந்து வா என்னோடு".

"இச்சமயத்திலா?",

"ஆம் வா" என கைபிடித்து இழுக்க, வாரி சுருட்டிக்கொண்டு எழுந்து அவனுடன் சென்றாள்.

வெளியில் நின்ற பெண்கள் மறுபடியும் கிளுக்கி சிரிக்க, 'இவர்கள் தங்களை காதல் கொள்ள செல்வதாக எண்ணி சிரிக்கிறார்கள், அப்படியே எண்ணிக் கொள்ளட்டும்' என நினைத்தவன், "எங்களை பின் தொடர வேண்டாம். சற்று நேரத்தில் நானே என் மனைவியைக் கொண்டு வந்து விட்டு விடுவேன். விஷயம் வெளியே சொல்லக் கூடாது" எனவும், குனிந்து அதை ஏற்றனர் அங்கிருந்த இரு காவலர்களும் இரு பெண்களும்.
அவளை அழைத்துச் சென்றவன் ஒரு இருட்டில் நிறுத்திவிட்டு, "இங்கேயே நில். நான் இப்போது வருகிறேன்" என திரும்பி தனதறை நோக்கி சென்றான்.
"இளவரசே கொற்றவையை அழைத்து வந்திருக்கிறேன் வாருங்கள்" என்று அழைத்து விட்டு வெளியேற, பின்தொடர்ந்த இளவரசன் அங்கு நின்ற காவலாளிகளையும் தொடரவேண்டும் என்ற ஒரு பார்வை பார்த்துவிட்டு முன்னேறினான்.
இருவரும் கொற்றவை நின்ற இடம் எட்டியவுடன், "ஒரு பெண்ணுக்கு உன்னுடைய உதவி தேவை, நீயும் பயப்படாமல் அந்த பெண்ணையும் பயப்படுத்தாமல் நாங்கள் சொல்லும் செயலை செய்து முடிக்க வேண்டும்" ௭ன்றான் இளவரசன் நாடியை தடவி கொண்டு.

"இளவரசே..,என்ன செய்ய வேண்டும்? யாருக்கு என்னவாயிற்று? மகிழ்...மகிழ் நன்றாக இருக்கிறாள் தானே?" என படபடத்தாள் கொற்றவை.

"கொற்றவை இப்படித்தான் பதற்றம் கொள்ளக்கூடாது. இளவரசியார் நலம். இது வேறொரு பெண்" தனா சொல்ல.
"ஓ! சரிங்க சாமி நான் என்ன செய்யவேண்டும்?",

"அந்தப் பெண் ஒரு வெறிநாயிடம் மாட்டிக் கொண்டு உள்ளாள். அந்தப் பெண்ணின் தற்போதைய நிலை என்ன என்று அறிய ஒரு பெண் வேண்டும். அதற்கே நீ செல்கிறாய். நீ அந்த பெண்ணை பார்த்து கொண்டாயானால் நாங்கள் அந்த நாயை பார்த்துக் கொள்வோம்" என விரைப்பாக சொன்னான் திறைவன்.
அதைக் கேட்டு பயந்தாலும், 'ஒரு நாயை கண்டு அஞ்சக்கூடாது, அந்தப் பெண்ணின் உயிர் முக்கியம்' என நினைத்து சரி என தலையசைத்தாள்.
பின் மூவரும் தேவி இருந்த அறையை நோக்கி செல்ல, "இந்த அறையிலா?" என்றாள் கொற்றவை.


"ஆம் உள்ளே செல்" என்க.

"இந்த அறையில்தான் நான் முதலில் இருந்தேன். மகிழ் என்னை இங்கு தான் அழைத்து வந்தாள். அந்த தேவி தான் என்னை மாற்றி மேலறை மாற்றிக் கொண்டு விட்டாள்".

"தேவியா?" என இருவரும் ஒன்னு போல் கேட்க,

"ஆம், இங்கு யார் இருக்கக்கூடும், சற்றுமுன் தானே நான் இங்கிருந்து சென்றேன்".

"தேவி உள்ளே தான் இருக்கிறாள். அவளுக்கு தான் ஆபத்து" என தனா சொல்லவும், இரு ஆண்களும் அந்த கதவை தள்ளி திறக்க, கொற்றவை உள்ளே சென்றாள்.

கொற்றவை பார்வையை சுழற்றியவாறு உள்ளே சென்றாள். சற்று முன் அவள் உறங்க தயாரான பஞ்சனையில் மாசாத்துவான் அசதியில் உறக்கத்தின் பிடியில் இருக்க, பக்கத்தில் தேவி கிழிந்த ஆடையை சுற்றிக்கொண்டு அழுகையை அடக்கி, நடுங்கி கொண்டு பயந்து அமர்ந்திருந்தாள்.

அவளை கண்டு அதிர்ந்து, 'என்ன நடந்தது?' என யூகிக்க கூட இயலாமல் அவளை நெருங்கினாள். அரவம் வந்த திசையைக் கண்டு பதறி திரும்பிய தேவி அங்கு நின்ற கொற்றவையை கண்டு வெடித்து வெளியேறிய கேவலை, திரும்பி மாசாத்துவானை கண்டு வாயை கைகளால் பொத்தி அடக்கினாள்.

அதை கண்ட கொற்றவை வேகமாக வந்து அவளை கட்டிக் கொண்டாள். அதில் அவள் அழுகை இன்னும் அதிகமாக, மெதுவாக அவளை எழுப்பியவள், "இங்கே என்ன செய்கிறாய்? இது யார்? உனக்கு என்ன நடந்தது? மனநிலை பாதிக்கப்பட்டவரா இவர்? அவரிடம் மாட்டிக் கொண்டாயா?" பயத்தில் அழுகிறாயா?" என அவள் கேள்விகளை அடுக்க, பாவம் அச்சிறிய பெண்களுக்கு இப்படிப்பட்ட விஷயங்களை கற்பனையில் கண்டதோ, கதைகளில் கேள்விப்பட்டதோ கூட இல்லை. அதனால் அவளுக்கும் கேள்வி எழுப்ப தெரியவில்லை, இவளுக்கும் பதில் கொடுக்க தெரியவில்லை.

"சரி வா" என தேவி அவளை அழைக்க, குனிந்து தன் உடையை பார்த்தாள் தேவி. அங்கு இருந்த ஜன்னல் அமைப்பில் தொங்கிய பட்டு சால்வையை உருவி இவளுக்கு ஆடையாக போர்த்தினாள்.
அப்போதுதான் இரு ஆண்களும் கொற்றவை உள் சென்ற நேரத்தை கணக்கிட்டு உள்ளே நுழைந்தனர். இருவரையும் கண்டு அதிர்ந்து நின்றுவிட்டாள் தேவி.

[B][SIZE=6]"நடந்தது என்ன? கொற்றவை தங்க வைக்கப்பட்ட அறையில் நீ ஏன் இவரை அழைத்து வந்தாய்? பெண்ணே உனக்கு ஏன் இப்படி ஒரு நிலைமை? அனைத்தையும் இப்போது நீ கூறியாக வேண்டும்" என கர்ஜித்தான் இளவரசன்.[/SIZE][/B]
 
அத்தியாயம் 18

இளவரசனின் அதீத கோபத்தில் அங்கிருந்த மூவரின் உடலும் சிலிர்த்தடங்க, தளராத வயதில் வேண்டாத வேலையைச் செய்தமையால் உடல் தளர்ந்து ஓய்விற்கு சென்றிருந்த மாசாத்துவானும் அவன் குரலில் மெதுவாக கண்ணை திறந்து சுற்றுப்புறத்தை ஆராய்ந்தார். அதில் தன் மகனின் பிம்பம் தெரியவும் அரண்டு எழுந்தமர்ந்தார். ஏனைக்கு கோனையாகக் கிடந்த உடையை சரிசெய்து மஞ்சத்திலிருந்து இறங்கி நிற்க முயல, கால் தள்ளாட கட்டில் கம்பை பிடித்து தன்னை நிலைப்படுத்தினார்.

அதைக்கண்டு ஏளனமாக சிரித்தவன், "வெளிவரவேண்டும், வெளிவர வேண்டும் என அடம் பிடித்தது இதற்காகத்தான் இல்லையா?" என தேவியை சுட்டிக்காட்டி கூறியவன் மேலும், "நிமிர்ந்து நிற்கத் தள்ளாத வயதிலும் எப்படி உங்களால் இம்மாதிரியான காரியங்களை செய்ய முடிகிறது. பெற்ற பெண்ணின் துணையோடு வெளியேறி அவள் தோழியை கற்பழித்து இருக்கிறீர்கள். கூசவில்லை?" பல்லை கடித்து, கை முறுக்கி கோபத்தை அடக்கிக் கொண்டான்.

"நீ என் போக்கில் விட்டிருந்தால் நான் ஏன் இவ்வாறு நடந்து கொள்ளப் போகிறேன், உடம்பு அதற்கு பழகிவிட்டது. மாற்ற வேண்டிய அவசியம் ஒரு அரசனான எனக்கு ஏன் இருக்க வேண்டும் என்கிறாய்?" என்றார் முதலில் கண்டு கொண்டானே என ஏற்பட்டிருந்த பயம் இப்போது மட்டுப்பட்டிருந்தது.

"அரசன்னா, நீ என்ன பெரிய லார்டா? கிழட்டு கபோதி. நீலா நாட்ட ஆண்டுட்டாலும் விளங்கிரும். என் அக்காவ என்ன தைரியத்துல இப்டி பண்ண நீ? ஐயோ! இப்ப என்னால ஒன்னும் செய்ய முடியலையே. இல்லன்னா தூக்கி போட்டு நாலு மிதி மிதிச்சுருப்பேனே. ஆண்டவா இவனும் மறுஜென்மம் எடுத்து வந்துருக்கணுமே, எங்கக்காவோட லத்தியயும், பூட்ஸையும் கொண்டு இவனை நையபுடைக்கணும் ப்ளீஸ்" என ஆக்ரோஷ வேண்டுதலில் நம் பாப்பு.

மாசாத்துவானின் பதிலில் கொதித்த திறைவன், "சேடி பெண்ணே! நடந்தது என்னவென்று கேட்டு வெகுநாழி கடந்து விட்டது. ஆதியோடு அந்தமாய் நடந்த விஷயங்கள் எனக்குத் தெரிய வேண்டும்" என்றான் தேவியிடம்.
அதில் அவள் மேலும் நடுங்கிக்கொண்டு, "மன்னித்துவிடுங்கள் இளவரசே, எல்லாவற்றுக்கும் இளையராணியின் நேசமே காரணம்" ௭ன்றாள் ௭ச்சில் கூட்டி விழுங்கி.

"தங்கை காதலிக்கிறாளா?யாரை?" புருவம் சுருக்கினான் திறைவன்.
"படைத்தளபதியாரை" என தனாவை கையை காட்ட, மூவரும் அதிர்ந்து விழிக்க.

"இவர் கொற்றவையை விரும்புவதை அறிந்த இளையராணி அவர்கள், கொற்றவையை இந்த அறையில் தங்க வைத்து, இவரை(மாசாத்துவானை) இங்கு வரவழைத்து, கற்......கொன்று விடவே இந்த ஏற்பாட்டை செய்தார்கள். அவர்களுக்கு இவர் மீது அளவு கடந்த பல வருட காதல், அதனாலேயே என்ன செய்கிறோம் என்று அறியாமல் ஏதேதோ திட்டம் தீட்டி விட்டார்கள். சொன்னாலும் கேட்டுக் கொள்ளும் மனநிலை தற்போது அவருக்கு இல்லை. எப்படியேனும் இந்த திருமணத்தை நிறுத்தியாக வேண்டும் என்ற முடிவில் இப்படியெல்லாம் செய்கிறார் என்று எண்ணியே கொற்றவையை வேறு அறைக்கு மாற்றி விட்டு, அரசரை அழைத்து வந்து உண்மையைக் கூறிவிட முயன்றேன், அவர் என் பேச்சை கேட்க நிதானிக்கவில்லை இளவரசே" அழுது கொண்டே பயத்தில் உண்மை இனி மறைக்க இயலாது என்று உணர்ந்து மொத்தத்தையும் கூறிவிட்டாள்.

"காவலாளிகள் இருவரை குழி தோண்ட சொல் தனா" என்றான் இளவரசன்.
தனா தேவி கூறிய விஷயத்திலேயே உறைந்திருந்தான். தன்னை சுற்றி தன்னால் நடந்த விஷயங்களை ஜீரணிக்க முடியவில்லை அவனால். கொற்றவையும் நடுங்கியிருந்தாள், தேவியை இறுக அணைத்துக் கொண்டு கதறி விட்டாள்.

தனா அசையாமல் நிற்பதை கண்டு, "தனா உன்னிடம் தான் கூறுகிறேன். குழி தோண்ட ஆளை வரச் சொல்" என்றான். அதில் சுயம் பெற்றவன், மாசாத்துவானை ஒரு வெறுப்பு பார்வை பார்த்துவிட்டு வெளியேற.

"திறைவா என்ன செய்ய போகிறாய்? எதற்கு குழி தோண்ட ஆள்?" என முகம் வெளிர கேட்டவர் திணற,

"பொறுத்திருங்கள் சற்று நேரத்தில் தெரிந்துகொள்ளலாம். அசதியாக இருந்தால் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் இருவரும் உங்கள் அறைக்கு செல்லலாம்" ௭ன மூவருக்கும் பதிலளித்தவன், அங்கிருந்த அரியணையில் கால்மேல் காலிட்டு சட்டமாக அமர்ந்துவிட்டான்.
கொற்றவை தொண்டையை செருமிக் கொண்டு, கண்களை துடைத்துக்கொண்டு, "இவருக்கான தண்டனையை கண்டுவிட்டு செல்கிறோமே இளவரசே" என்றாள் மீண்ட தைரியத்தோடு.
அதற்கு அவன் சிறு யோசனைக்குப்பின் தலையசைத்து ஆமோதித்தவாறு தகப்பனை காண.

"தவறு செய்கிறாய் திறைவா. அரசனான எனக்கு பணிச்சுமை காரணமாக இது போன்ற இளைப்பாறுதல் தேவைப்படுகிறது. இது இயல்பு. இதெல்லாம் ஒரு தவறு என்று என்னை சிறையில் அடைத்து பெருந்தவறு புரிந்துவிட்டாய், இப்போது அதை அதிகமாக்குவது போல் பெற்ற தகப்பனையே கொல்ல பார்க்கிறாய்" என எச்சரிக்க. அவன் அவர் கூறிய ஒரு வார்த்தையும் அசட்டை செய்தான் இல்லை, பார்த்தது பார்த்தபடி அமர்ந்திருந்தான் தனா வரும் வரை.

"குழிதோண்டி ஆகிவிட்டது இளவரசே" என தனா மாசாத்துவானை முறைத்தவாறு வந்து நிற்க.
"குற்றவாளியை அழைத்துச் செல்ல ஏற்பாடு செய் தனா" என்றான் காலை இறக்கி எழுந்து நின்று, தனா திரும்பிப் பார்க்க இருவர் உள் வந்தனர்.
"இது சரியில்லை, ஒரு அரசனை இப்படி நடத்துவது அந்நாட்டையே இழிப்பதற்கு சமம். பாவத்தை சம்பாதிக்காதே திறைவா" விடாமல் புலம்பினார் மாசாத்துவான்.

"நீங்கள் எனக்காக சேர்த்து வைத்த வரை போதும் என்றுதான் இம்முடிவு. சத்தம் செய்யாமல் சென்றீர்களானால் உங்கள் இறப்பின் ரகசியம் கல்வெட்டாகாமல் மறைக்கப்படும்" என்றுரைத்து அறையிலிருந்து வெளியேறினான்.

மாசாத்துவான் பின் அழைத்துச் செல்லப்பட, தப்பிக்க மார்க்கமின்றி சத்தமிட்டு தன்னைத்தானே காட்டிக் கொடுக்க மனமில்லாமல் அமைதியாக வெளியேறினார். பெண்கள் பின்தொடர, தனா இருவரையும் அறைக்குப் போகச் சொல்ல, மறுத்து பின் தொடர்ந்தனர் இருவரும். யாரும் அறியாத பாப்புவும் பின் தொடர்ந்தாள்.
தண்டனை நிறைவேற்றப்படும் இடத்தில்.....இவர் உயரத்தை கணக்கிட்டு குழி தோண்டப்பட்டிருந்தது.

"எத்தனையோ பெண்களின் கண்ணீரை பெற்றுக்கொண்டுதன் பலன் கோட்டையினுள் ஜீவசமாதி, கொடுத்து வைத்தவர் நீங்கள்" என இளக்காரமாக கூறியவன், காவலாளிகளுக்கு கண்காட்ட கயிறு கொண்டு அவரை இறக்கி விட்டு மேலேறி குழியை மண்ணை போட்டு மூடினர்.

அப்போதும் மாசாத்துவான் கண்ணீர் சிந்தவில்லை, அவனையே வெறிக்க வெறிக்க பார்த்தவர், தோள் வரை மண் நிறைந்த நேரத்தில், "பெற்ற தகப்பனை துடிக்கத் துடிக்க உயிருடன் கொல்கிறாய் அல்லவா, நீ உன் பிள்ளைகளோடு வாழ முடியாமல் தவிக்க போகிறாய் பார்" என கூறி மண்ணில் புதைந்தார்.

அவர் மூச்சுக்கு போராடி அடுத்த பத்து நிமிடங்கள், மண்ணாலான துயரங்களை அனுபவித்து உயிர் துறந்தார். மண்ணின்மேல் அசைவின்றி அமைதியாகும் வரை பார்த்துவிட்டு காவலாளி கொண்டு வந்து கொடுத்த மலர்களை அதன் மேல் தூவி விட்டு கையை உதறிக் கொண்டான்.

திரும்பி சுற்றி நின்றவர்களிடம், "இங்கு நடந்த விஷயம் இத்தோடு புதைத்திட வேண்டும் புரிகிறதா?" எனவும் தலையசைத்து ஏற்றுக்கொண்டனர். "சிறையிலிருந்து வெளிவந்த அரசர் வாய்ப்பை பயன்படுத்தி தப்பிவிட்டார் இதுவே செய்தியாக வெளியேறவேண்டும்" என பொதுவாக சொன்னவன், "இளவரசிக்கும், இளையராணியருக்கும் கூட அதுவே தெரிந்ததாக இருக்கட்டும். அந்த சேடிப்பெண் சிறிது நாட்களுக்கு அவள்(பாவை) கண்ணில் படாமல் பக்கத்து ஊரில் எங்கேனும் தங்க ஏற்பாடு செய்து விடு தனா. விடிந்தால் நிச்சயித்த திருமணம் நிச்சயித்தபடி நடந்தேற வேண்டும்" என முடித்தவன் தனதறை விரைந்து விட்டான்.
இது எதுவும் அறியாமல் ஆழ்ந்த உறக்கத்தில் இளவரசி அகமகிழ்தினி. அறைக்கு வந்து அந்த நேரத்திலும் குளத்தில் விழுந்து குளித்து உடைமாற்றியவன் மனைவியை கண்டான். "இவ்விஷயம் அறிந்தால், நம்மேல் நம்பிக்கை என்பதை இக்கால முழுமைக்கும் கொண்டு வர இயலாது" என பெருமூச்சோடு அவளருகில் சென்று படுத்தவன், அவள் மீது கைபோட, தூக்கத்தோடு வந்து தானும் அவனை அணைத்துக் கொண்டாள். அவள் நெற்றியில் முத்தி இறுக்கி அணைத்துக்கொண்டு உறங்கிப் போனான்.

மறுநாள் காலை பாவை விழித்தெழுந்து பார்த்தபோது கல்யாண வேலைகள் ஜரூராக நடந்து கொண்டிருந்தது. அவள் தன் தந்தையைச் சென்று தேடிப்பார்க்க காணவில்லை, பின் தேவியைத் தேடி அலைந்தாள், அவளையும் காணவில்லை, அவள் நியமித்த பணிப் பெண் தோழிகள், காவலாளிகள் எவரையும் காணவில்லை என்றதும், திக்கென்றது, 'கண்டு கொண்டானோ இளவரசன்' என்ற எண்ணம் மேலோங்க தொடங்கியது.
அவள் எல்லோரையும் தேடி கலைத்து மீண்டும் வருகையில் தனா கொற்றவை கழுத்தில் தாலி கட்டிக் கொண்டிருந்தான். மேல் மாடத்திலிருந்து அதை கண்டவள் மடங்கி அமர்ந்து வாழ்க்கையை தொலைத்தவள் போல் அழுது அரற்றினாள். கேட்பாரற்று கடந்து கதறினாள், அவளை கவனிப்பாரென்று யாருமில்லை. கோதை மட்டுமே ஏதோ தோன்றியவராக மேல் நிமிர்ந்து பார்த்து, மகளின் கதறல் கண்டு துணுக்குற்றார். யார் கவனத்தையும் கவராமல் தேவியை தேட, அவள் கண்ணில் படவில்லை எனவும், மற்ற இரு சேடி பெண்களை அழைத்து ரகசியமாக இளையராணியை அவ்விடத்தில் இருந்து அப்புறப்படுத்த உத்தரவிட்டார். வலுக்கட்டாயமாகவே அங்கிருந்து நகர்ந்தாள் பாவை. எந்தவித குழப்பமும் இன்றி அந்த திருமண விழாவை சிறப்பாக்கியது மகிழ் மட்டுமே. மற்றவர்கள் ஏதோ குழப்பத்துடனே கலந்து கொண்டனர்.
அதன்பின் தோழிகளுக்கு கிடைத்த தனிமையில், "என்னவாயிற்று கொற்றவை உனக்கு, திருமணத்திற்கு முன் இருந்த குதூகலம் அதன் பின் எங்கு போனது உன்னிடம்? ஏன் கவலையோடு காண்கிறாய்? ஊரை விட்டு வருவதாயினும் என்னுடன் தானே இருக்கப் போகிறாய். பின் என்ன வருத்தம் உனக்கு?" என குடைந்துவிட்டாள். அவளை சமாளிக்கும் முன் திணறி விட்டாள் கொற்றவை.

அடுத்த நாட்கள் வேகமெடுக்க, கொற்றவையும், தனாவும் நடந்ததை மறந்து தங்கள் வாழ்க்கையில் கவனம் செலுத்த முயன்றனர். அமிழும், மகிழும் திகட்ட திகட்ட காதலிப்பதோடு, நாட்டு பணியையும் சரிவர செய்தனர். கோதை பாவையை தன் முழுப் பொறுப்பில் கொண்டார்.
அன்று பௌர்ணமி என்பதால், மகிழ் கொற்றவையை அழைத்துக்கொண்டு காட்டிற்குள் கிளம்ப, கணவன்மார் இருவரும் பின்தொடர்ந்தனர். அருவியில் குளித்து சிவனை வணங்கி, வேங்கையிடம் வந்து பெண்கள் அமர, அமைதியாக அவர்களை ரசித்தவண்ணம் பின்தொடர்வதே கணவர்கள் வேலையானது. வேங்கை தாயை ஆசைதீர வணங்கி விட்டு, மகிழ் எழ முற்பட முடியாமல் மயங்கி சரிந்தாள். மடி தாங்கிய அமிழ்திறைவன் செயலிலந்து கலங்கி விட்டான். தனாவின் தண்ணீர் தெளித்தலில், அவன் உறைந்த நிலை விடைபெற்று, பெண்ணவள் முகம் துடைக்க, கலங்கலாக கண் திறந்தவள், ௭ழ முயற்சித்து மறுபடியும் தலைசுற்ற அவன் மடியிலேயே படுத்துக் கொண்டாள்.

"தனா நான் இளவரசியை அரண்மனை அழைத்துச் செல்கிறேன், நீ வைத்தியருக்கு தகவல் கொடுத்து அழைத்து வா" என மகிழை தூக்கித் தோளில் போட்டுக் கொண்டு நடக்க ஆரம்பித்தான். கொற்றவை தனாவுடன் இணைந்து கொண்டாள்.
அடுத்தடுத்த நிமிடங்களில் மருத்துவச்சி வந்து மகிழ் கர்ப்பமானதை உறுதி செய்யவும் புராரிவனம் விழா கோலம் பூண்டது. அனைவருக்கும் உணவு, பரிசு என தன் மகிழ்வை வெளிப்படுத்தி விட்டான் அமிழ்திறைவன்.

அவர்கள் கொண்டாட்டத்தை கண்டு மனதிற்குள் புழுங்கிக் கொண்டிருந்த பாவை வெகுண்டாள், "என் நிம்மதியை புதைத்து விட்டு நீங்கள் மட்டும் நிம்மதியாக இருக்கிறீர்கள் என்றால் விட்டுவிடுவேனா?" என நினைத்தவள் முழுமூச்சாய் தேவியை தேடுவதில் இறங்கினாள். திறைவன் கவனத்தை கவராமல் செய்ய பெரும்பாடு பட வேண்டியதாக இருந்தது. ஆனால் தேவி மட்டும் கிடைக்கவில்லை.
அப்படி ஒருநாள் இரவு அவளது அறை ஜன்னல் அமைப்பின் வழி வெளியில் பார்த்து யோசனையில் இருக்கும் பொழுது கொற்றவை பதட்டத்தோடு ௭ங்கோ அவசரமாக ஓடுவது தெரிந்தது.

பாவை, "அவளை விட்டு இவள் மட்டும் தனியாக பதட்டத்தோடு இந்நேரம் எங்கு செல்கிறாள்?" என யோசித்த கையோடு பின்தொடர, அங்கு அவளுக்கு தேவியின் தரிசனம் கிடைத்தது. கூடுதல் செய்தியாக அவள் கர்ப்பமாக இருப்பதாகவும், அதிர்ந்து நின்றுவிட்டாள் பாவை.
 
அத்தியாயம் 19

மகிழின் கர்ப்பம் உறுதியாகியிருந்த நான்கு நாட்களில், கொற்றவை தான் அவளை முழுப் பொறுப்புடன் பார்த்துக்கொண்டாள். மசக்கை அதிகமாக படுத்தி எடுத்தது, சோர்ந்து படுத்திருந்தாள். அன்றும் இரவு அவள் உறங்க, அருகில் அமர்ந்து, எழுந்தால் உண்ண கொடுக்க வேண்டி பழங்களை நறுக்கிக் கொண்டிருந்தாள்.
அந்நேரம் அறைக்கதவு தட்டப்பட, வேகமாக எழுந்து சென்று திறந்தாள், காவலாளி ஒருவன் நின்றிருக்க, "என்ன?" என்பதாய் பார்த்தாள்.

"தங்களை காண வேண்டி ஒரு பெண்மணி வந்திருக்கிறார்" என சொல்லி செல்ல, வெளிநின்ற காவலாளியிடம், "இளவரசி தூங்குகிறார்கள், தொந்தரவின்றி பார்த்துக்கொள்ள வேண்டும்" என்ற அறிவுறுத்தலுடன் வரவேற்பறை சென்றாள்.

இளவரசனும், தனாவும் ஒற்றன் கூறிய செய்தியின் காரணமாக உண்மையை அறிய திக்விஜயம் சென்றிருக்க, இன்னும் திரும்பி வந்திருக்கவில்லை. இளவரசன் வரவுமே கொற்றவை அவளறை சென்று விடுவாள். இன்றும் அது போலவே காத்திருக்க, அழைப்பு வரவும் காவலாளியிடம் சொல்லி விட்டு இறங்கி விட்டாள்.

அந்தப் பெண்மணியை அவளுக்கு அடையாளம் தெரியவில்லை. அந்த பெண்மணி "வணக்கம்மா நான் தங்கள் மாமாவின் உத்தரவின் பேரில் வந்திருக்கிறேன். உங்களை கையோடு அழைத்துவரச் சொல்லி கூறினார்" என மெதுவாக அந்தப் பெண் கூற.

'இந்நேரத்தில் வர வேண்டிய அவசியம்!!!யாருக்கும் எதுவுமோ?' என யோசித்தவள், "மாமா நன்றாக இருக்கிறார்கள் தானே?" என கேட்க.
"அவருக்கு ஒன்றுமில்லையம்மா, நீங்களும் தளபதியாரும் கொண்டு வந்து விட்ட பெண்ணிற்குத்தான் உடல்நிலை சரியில்லை".

"தேவிக்கா?" என பதறினாள்.

"ஆம் தாயி".

"சரி நீங்கள் முன்னே செல்லுங்கள் நான் அவர் வரவும் அழைத்து வருகிறேன். இளவரசிக்கு துணைக்கு ஆள் வைத்து விட்டு வர வேண்டும்" என்கவும்.

"ஆகட்டும் ம்மா" எனக் கிளம்பி விட்டார் அந்த பெண். கொற்றவை தனாவுக்காக பதட்டத்துடன் காத்திருந்தாள்.
மாசாத்துவானை குழியில் இறக்கிய அன்றைய இரவே தனா கொற்றவை துணையுடனே தேவியை அழைத்துச் சென்று பக்கத்து ஊரான தன் தந்தை தங்கியிருக்கும் இடத்திலேயே விவரம் சொல்லி விட்டுவிட்டு வந்து விட்டனர். அவர் தான் இவர்கள் கல்யாணம் முடிந்த பின் அருகிலேயே குடிசைப் போட்டு இப்போது வந்து சென்ற பெண்மணிக்கு மட்டும் விஷயத்தை சொல்லி அவளுக்கு தேவையான பொழுது உதவுமாறு கூறியிருந்தார். இதோ 2 மாதமும் ஓடிவிட்டிருந்தது.
1 முறை மட்டுமே கொற்றவை சென்று பார்த்து வந்திருந்தாள். அதுவும் மாமனாரை காணும் சாக்கில் சென்று வந்திருந்தாள். இவள் சென்று பார்த்த போது நன்றாகத்தான் இருந்தாள், பாவைக்கு கல்யாணம் முடியவும் கொள்ளிமடத்தில் அவள் பெற்றோரிடமே போய்விடலாம் என்று தான் இளவரசன் கூறியதை கூறியிருந்தாள். அதற்குள் என்னவாக இருக்கும் என யோசித்துக் கொண்டு தனாவை எதிர்பார்த்திருக்க, அவனை வரக்காணோம். அதற்கு மேல் பொறுமையின்றி யாரிடமும் சொல்லி விட்டு செல்ல முடியாத சூழ்நிலையில் கிளம்பி விட்டாள். அவள் தனியாக செல்வதை கண்டு பாவையும் பின்தொடர்ந்து விட்டாள்.

கோட்டைவாசல் காவலாளிகள் இருவரையுமே கண்டனர். ஆனால் தடுத்து நிறுத்தி கேள்வி கேட்கும் தைரியம் ஏது? அதனால் பார்த்தது பார்த்தபடி நின்றனர்.

கொற்றவை நேராக தேவியிருந்த குடிசைக்கே சென்றாள். "என்ன நடந்தது மாமா" என்றாள் வெளியில் நின்ற மாமனாரிடம்.

"மசக்கை வாந்தி போல் உண்ட அனைத்தையும் வெளியேற்றி கொண்டிருந்தாளம்மா. ஐயம் தோன்றவே உன்னை அழைக்கும் போது மருத்துவச்சியையும் அழைத்துவிட்டேன், பார்த்துக்கொண்டிருக்கிறாள். தனா எங்கம்மா? ஏன் தனியாக வந்தாய்?" என்க.

"சுவாமி இளவரசனுடன் சென்றிருக்கிறார்கள் மாமா. காத்திருந்து பார்த்தேன் தாமதமாகவும் நான் வந்து விட்டேன்" எனக் கூறிக் கொண்டிருக்க, வெளிவந்த மருத்துவச்சி, "நீங்கள் கூறியது சரிதான் ஐயா, பிள்ளை உண்டாயிருக்கிறாள் அந்தப் பெண். ஆனால் கழுத்தில் தாலி இல்லை. யார் இந்த பெண்? எப்படி இது ஆயிற்று?" என்க.

"இது அரசாங்க விவகாரம். இளவரசர் சொல்லித்தான் அந்த பெண் இங்கு இருக்கிறாள். நீயும் அவளுக்கு வைத்தியம் பார்ப்பதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். விஷயம் வெளிவந்தால் உயிருக்கே ஆபத்தாய் முடியும்" என தனாவின் தந்தை கூறக் கேட்டு தலையசைத்துவிட்டு விடை கொடுத்தார்.

கொற்றவையும் அவரும் குடிசையினுள் நுழைய, பாவை வந்து அவர்கள் பேசுவது கேட்கும் தொலைவில் நின்றாள். இருட்டி விட்டதால் ஊரும் அடங்கியிருக்க யாரும் பார்த்து விடுவார்களோ என்ற பயமும் இல்லை அவளுக்கு. உள்ளே சற்றுமுன் கொற்றவையை அழைக்க வந்த பெண்மணியும் இருக்க, "இப்போது எப்படி இருக்கிறது தேவி" என அவள் தலையை தடவினாள் கொற்றவை.
"பயமாக இருக்கிறது கொற்றவை. அம்மைக்கும், ஐய்யனுக்கும் என்ன பதில் கூறுவது என்று தெரியவில்லை" எனக் கலக்கமாகவே கூற.
"நீ அரண்மனையில் இல்லை என்ற செய்தியை பாவையோ, கோதை அம்மையாரோ இன்னும் யாரிடமும் கூறி இருக்கவில்லை. இளவரசரிடமும் உன்னை கண்டுபிடிக்க கோர விண்ணப்பிக்கவில்லை. அதனால் இப்போதைக்கு நீ உன் அம்மையப்பனை நினைத்து கலங்கவேண்டாம். மெதுவாக அவர்களுக்கு ௭ல்லா விவரத்தையும் கூறலாம் என எண்ணி இருக்க. இப்போது இப்படி ஒரு விஷயம்...இதை எவ்வாறு கையாளுவது என்று கூட எனக்கு தெரியவில்லை?" ௭ன புலம்பினாள்.

பாவை மட்டுமே தேவியை தேடிக்கொண்டிருந்தாள். கோதை, அவள் கொள்ளி மடத்திற்கு மகளால் அனுப்பி வைக்கப்பட்டு இருப்பாள் அதனால்தான் தேடாமல் இருக்கிறாள் என்று எண்ணியே பேசாமல் இருந்தார். அரசன் நாட்டை விட்டு ஓடி விட்டார் என்பது வேறு அவர்களை வெளிவர விடாமல் செய்திருந்தது. எல்லோருமே பேச பயந்து அமைதியாக இருந்தனர். இளவரசனும் தனாவும் மட்டும் அரசு வேலைகளை தொய்வின்றி செய்து வந்தனர்.

"மாமா என்ன செய்யலாம் என நினைக்கிறீர்கள்? உங்கள் அனுபவத்தில் ஏதாவது செய்ய இயலுமா?" என்றாள் மாமனாரிடம்.
"இந்தப் பெண்ணின் வாழ்க்கையை நினைத்தால் குழப்பமாகத்தான் இருக்கிறது. குழந்தையை அளிக்கும் பாவம் நமக்கு வேணாம் தாயே. என் பிள்ளை போல் நானே பார்த்துக்கொள்கிறேன். இவளின் பெற்றவர்களுக்கு மட்டும் பதில் சொல்ல வேண்டி வரும்".

"அந்த அரசனாக பட்டவர் என்னென்னவோ செய்து விட்டு போய்விட்டார். பாவம் இவள் பலியாகிவிட்டாள்" பெண்மணி கூற.
நடந்ததை சுருக்கமாக இவர்கள் பேசிக் கொண்டதை வைத்து புரிந்துகொண்டாள் பாவை. தந்தைக்கு நடந்த விஷயம் மட்டும் தெரியவில்லை. கேட்டது வரை போதுமென்று வந்த சுவடு தெரியாமல் திரும்பி விட்டாள்.
செல்லும் வழியில் "நாம் நினைத்து என்ன? இங்கு நடந்தது என்ன? இது இவளாக தேடிக்கொண்டது. எனக்கு துரோகம் இழைக்க முயன்றாள் அல்லவா அவளுக்கு இந்த தண்டனை தேவைதான்" என்று எண்ணிக் கொண்டே கோட்டைக்குத் திரும்பி விட்டாள்.

"பாவைன்னு பேர் வச்சுதுக்கு பதிலா பாய்சன்னு வச்சிருக்கணும்டி உனக்கு. என் அக்கா வாழ்க்கைய நாசமாக்கிட்டு, அத அவளுக்கு நல்லா வேணும்னு வேற சொல்றியா நீ. இதுக்கெல்லாம் காரணமே உன் தெய்வீக காதல் தான, அந்த விளங்காதவன போய் கவனிச்சிக்கிறேன். டேய்ய்ய்ய்...நீயாச்சு இவளாச்சுன்னு லவ் பண்ணி நாசமா போறத விட்டுட்டு என் 2 அக்காங்க வாழ்க்கையிலும் புகுந்து விளையாண்டுட்டல்ல????. வீணா போன விஷா டேய் நீ மட்டும் கைல கிடைச்ச" என ஏக வசனத்தில் காண்டானாள் பாப்பு.
 
அத்தியாயம் 20
இளவரசனும், தனாவும், அரண்மனை திரும்பியவர்கள் கொற்றவை இல்லை என்றதும் காவலாளிகளை விசாரிக்க, "ஒரு பெண்மணி தனா ஊரிலிருந்து அவரை தேடி வந்து அழைத்துச் சென்றார்" என்ற செய்தி கேட்டு உடனே அங்கு விரைந்தனர். அங்கு சென்றபின் விஷயம் அறிந்ததும்
இதை எவ்வாறு கையாள என்ற அதிர்வு தான் இருவருக்கும், "அவ்வாறெனில் இதுவரை அவர் கையாண்ட பெண்களின் நிலையும் இதுதானா? பாதிக்கப்பட்ட பெண்களை நாம் மீட்டோமல்லவா தனா? இது போன்ற கருத்துக்கள் ஏதும் வெளிவந்தததா?" என்றான்.

"இல்லை இளவரசே, இச் சிறையிலிருந்து வெளிவந்ததே போதும் என்று கூறாமலே சென்றிருக்கலாம், நான் மீண்டும் விசாரித்து கூறுகிறேன் இளவரசே" என்றான்.

தலையசைத்து அதை ஏற்றுக்கொண்ட திறைவன், "கொற்றவை, இந்தச் சேடி பெண்ணின் பெற்றோரை அழைத்துவிடு, இதற்குமேல் மறைப்பது நியாயமில்லை".

"ஆகட்டும் இளவரசே நாளையே நேரில் சென்று விஷயம் கூறி அழைத்து வந்து விடுகிறேன்",

"கவனமம்மா" என தேவியிடமும் கூறியவன், "பார்த்துக் கொள்ளுங்கள், எது தேவையென்றாலும் எங்கள் மூவரில் ஒருவரை அணுகுமாறு இருக்க வேண்டும்" என அந்தப் பெண்மணிக்கும், தனாவின் தந்தைக்கும் பொதுவாய் கூறியவன் யோசனையோடு வெளியேறி விட்டான். தனாவும் கொற்றவையும் கூட உடன் கிளம்பி விட்டனர்.

மறுநாள் மகிழிடம், "அம்மை ஐயனை பார்த்து வருகிறேன் மகிழ்" எனக்கூறி கிளம்பி தன் குடிலை அடைந்து, அனைவரின் உபசரிப்பையும் ஏற்றுக் கொண்டு சரியான சந்தர்ப்பம் அமையும் வரை காத்திருந்து, தேவியின் பெற்றோரை தனியாக பிடித்து, "தேவி உங்களை பார்க்க வேண்டும் என கூறினாள், கொஞ்சம் கொதிநிலை போல் உள்ளது, வந்து பார்த்து விடுங்கள். என்னுடன் வருவதனாலும் சரி" என அழைத்தாள். அவர்கள் நீதிவர்மனிடம் கூறாமல் வரமாட்டார்கள் என அறிந்தே இவ்வாறு அழைத்தாள். அது போல் அவர்களும் கையோடு சென்று நின்றது நீதிவர்மன் முன் தான்.

'அவளுக்கு கொதி நிலையெனில் அழைத்து வந்து பெற்றோரிடம் விடாமல், பெற்றோரை அங்கு அழைத்துச் செல்ல வேண்டிய காரணம்' என அவர் யோசித்தாலும், "சென்று வா பெரியண்ணா. கொற்றவையின் திருமணத்தன்று அவளை காண முடியவில்லை என வருத்தம் கொண்டாயே, பார்த்துவிட்டு வா. இனி அவளுக்கும் விவாகம் செய்ய வேண்டுமே, முடிந்தால் விவரம் கூறி இங்கேயே அழைத்து வந்துவிடு" என விடை கொடுத்தார். கொற்றவை பல்லக்கிலும், தேவியின் பெற்றோர் குதிரையிலும் சென்றனர். அரண்மனை சென்று இறங்கவும் இருட்டும் வரை எப்படியோ அவர்களை சமாளித்து, பின்னரே மாமனார் ஊருக்கு அழைத்துச் சென்றாள்.
அங்கு சென்றதும் உண்மை அறிந்தபின் குலுங்கி அழ மட்டுமே முடிந்தது அவர்களால். வெளியிலும் சொல்லக்கூடாது என்கிற நிலையில் செய்வதறியாது திகைத்து நின்றனர். மறுநாள் இளவரசன் வரவும் நியாயம் கேட்க வேண்டும் ௭ன வாய் வரை வார்த்தை வந்தும் இயலாமல் நின்று அழுதனர்.

திறைவனுக்கு அது இன்னுமே கஷ்டமாக இருந்தது, "மன்னித்துவிடுங்கள்....... இதைக் கேட்பதால் எதுவும் உங்களுக்கு நல்லது நடந்து விடப் போகிறதா என்றால் இல்லை தான். ஆனால் எனக்குத் தந்தையாக பட்டவர் பெண்கள் விஷயத்தில் மீண்டும் மீண்டுமாக என்னை தலைகுனியவே வைத்துவிட்டார். அந்த பெண்ணிற்கும், உங்களுக்கும் இது வாழ்நாள் தண்டனை தான்......, ஆனாலும் மன்னிப்பை தவிர வேறு ௭வ்வகையிலும் தங்கள் பெண்ணை தங்கள் பெண்ணாகவே ௭ன்னால் திருப்பி தர இயலாது. இதற்கு முன்பே உங்களிடம் இவ்விஷயத்தை கூறியிருக்க வேண்டும், வேறு ஒரு காரணத்தை மனதில் வைத்தே இதை ஒத்தி வைத்தேன். அதற்குள் இப்படி ஆகிவிட்டது. என்னால் உங்கள் உணர்வை புரிந்து கொள்ள முடிகிறது. இனி தேவியின் முழுப்பொறுப்பும் என்னுடையது. தங்கையாக பொறுப்பேற்று நான் பார்த்துக்கொள்கிறேன்" என்றதும், எதற்குமே அவர்களிடம் பதில் இல்லை தலையசைப்பு மட்டுமே.

"நீங்கள் இன்னும் ஒரு காரியம் எனக்காக செய்ய வேண்டும்" ௭ன இருவரையும் கூர்ந்து பார்த்தவாறே கேட்டான்.

"நீங்கள் சொல்லி எதை எங்களால் மறுத்து விட முடியும்....கூறுங்கள் இளவரசே" என்றார் பெரியண்ணன்.

"இவ்விஷயம் இன்னும் மகிழுக்குத் தெரியாது. சொல்லப்படவில்லை. இப்போது விளக்கும் சூழ்நிலையும் இல்லாமல் போய் விட்டது. அதனால் கொள்ளிமடத்திலும் யாருக்கும் இவ்விஷயம் தெரிய வேண்டாம். நானே மகிழிடம் கூறிவிட்டு அங்கும் வந்து பேசுகிறேன். அதுவரை தேவி இவர்கள் பொறுப்பில் பத்திரமாக இருப்பாள். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் வந்து பார்த்துச் செல்லலாம்" எனக் கூறிவிட்டான்.
நீதிவர்வன் ஐயா, அரசாங்க ஆட்கள் நிழல் கூட ஊருக்குள் நுழையும் போது பெண்களை காட்டுக்குள் அனுப்பி விடுவது ஏன் என்று இப்போது நன்றாக புரிந்து விட்டது. ஆனால் நம் பெண் தேடிச் சென்றல்லவா சேற்றை வாங்கி கொண்டாள் என எண்ணி தலையசைத்து ஒத்துக்கொண்டனர் அவள் பெற்றோர்.

பவ்யா எல்லாவற்றையும் ரகசியமாக கண்காணிக்க ஆரம்பித்தாள். முதலில் 'இவர்கள் மறைப்பதை வெளிக்கொண்டு வந்து விட்டால் என்ன? அந்த மகிழ்தினியை நேரிலேயே கூட்டிக்கொண்டு காட்டி விடலாம்' என்று தான் நினைத்தாள். ஆனால் 'அதனால் தனக்கு என்ன நன்மை? அங்கு குடிசையில் இருப்பவளும் இங்கு வந்து இரு தோழிகளுடன் இணைந்து வாழத் தொடங்கி விடுவாள். நமக்கு முன் அவர்கள் மட்டும் சந்தோஷமாக இருப்பார்கள். இருக்க விடக்கூடாது. அதனால் எதுவாகினும் விரைந்து செய்ய வேண்டும்' முடிவெடுத்த பின்பு தான் அவளால் நிம்மதியாக இருக்க முடிந்தது.

அவள் ஏதேனும் செய்யும் முன்னேயே மகிழுக்கு மூன்றரை மாதம் இருக்கையில் அம்மை கண்டுவிட்டது. அவளை பற்றி முழுமையாக அறிந்த கொற்றவை உடனடியாக நீதிவர்மனுக்கு தகவல் அனுப்பி விட்டாள். கோதை அவளை தனிமைப்படுத்த ஏற்பாடு செய்ய, இளவரசன் அதை மறுத்து தான் பார்த்துக் கொள்வதாக கூறி முழு பொறுப்பையும் எடுத்துக் கொண்டான். யார்கனவே பிள்ளை வாந்தியால் மிகவும் சோர்வுற்றிருந்தால், இப்போது இதுவும் சேர்ந்து கொள்ள மிகவும் சோர்ந்து மெலிந்து நோயாளியாக தெரிந்தாள். பொதுவாக அம்மை நோய் கண்டவர்களை நேரில் சென்று பார்த்து வர மாட்டார்கள், அதனால் விஷயத்தை இளவரசன் சொல்ல வேண்டாமென இருக்க, கொற்றவையின் தகவலின் பேரில் விடிந்தும் விடியாமல் வந்து நின்று விட்டனர் மகிழின் பெற்றோர்.
மருத்துவச்சி வந்து பார்த்து விட்டு, "கர்ப்பவதியய்யா மருந்து எதுவும் கொடுக்க இயலாது. இது ஒன்னும் செய்யாது. நான்கைந்து நாட்களில் அதுவே குறைந்துவிடும்" என சொல்லி சென்றிருக்க, நீதிவர்மன் வந்து பார்த்தவர், "இன்னும் 15 நாளில் வேங்கை அம்மன் கோவில் திருவிழா, 3 தண்ணீர் ஊற்றி விடவும் அழைத்து வந்துவிடுங்கள் இளவரசே" என்றார் நேராகவே.

எப்பயும் ஒரு மருமகனாக அவனிடம் அவர் பேசியதே கிடையாது, அவன் நாட்டின் பிரஜையாகவே எல்லா கோரிக்கைகளையும் முன் வைப்பார். முதல் முறையாக நேரடியாக ஒரு விஷயத்தை செய்ய வேண்டுமென ஆணையாக முன்வைக்கிறார்.

மெலிதாக சிரித்து கொண்டவன், "மகிழுக்கு பூரணமாக குணமாகி விட்டால் கட்டாயம் அழைத்து வருகிறேன்" என்றான்.

"மூன்று நாளில் எழுந்தமர்ந்துவிடுவாள். இவள் பிள்ளைத்தாச்சி என்பதற்காகவே இந்த வருட திருவிழாவை ஒத்திவைத்தோம். ஆனால் வேங்கை அம்மை பொறுக்கவில்லை, இதோ இறங்கிவிட்டாள். விஷயம் அறிந்தவுடனேயே தேதி குறித்து விட்டேன். இனி ஆத்தா மனம் குளிர்ந்து விடுவாள். இவளை எழுந்து வர வைத்து விடுவாள். அதனால் நீங்கள் கட்டாயம் அழைத்து வந்துவிட வேண்டும்" என்க.

"மகிழுக்காக திருவிழாவா? என்ன சொல்கிறீர்கள் புரியவில்லை" என்றான் திறைவன்.

"ஆம் இளவரசே. திருவிழாவிற்கான நேரம் நெருங்கியும் நாங்கள் அதற்கான ஏற்பாட்டில் இறங்கவில்லை எனில் இப்படி இவள் மூலமாகத்தான் ஏதேனும் ஒரு வகையில் நினைவு சொல்லி விடுவாள் வேங்கை" என சிரித்துக்கொண்டே கூறினார் அஞ்சலை.

'அந்த அம்மனுக்கும் இவளுக்கும் இடையில் ஏதோ ரகசியம் இருக்குமாக இருக்கும், அதுதான் இவளை என் கண்ணில் காட்டியதும் அங்கே, ௭ங்களின் திருமணம் முடிந்ததும் அங்கே, குழந்தை பேறு வெளிப்பட்டதும் அங்கே. இவ்வாறு எல்லா நல்ல விஷயங்களும் அந்தத் தாயின் முன்னே வெளிப்பட்டிருக்கிறது' என நினைத்துக்கொண்டான்.
நீதிவர்மன் அவன் யோசனையை கலைப்பவராக, "ஒவ்வொரு பௌணர்மிக்கும் தவறாது அவளை காண நடுநிசியில் சென்றுவிடுவாள். அதற்கு கூட பெண்களுக்கே உண்டான தடை, இத்தனை வருடங்களில் ஒரு முறை கூட அந்த பௌர்ணமி தினங்களில் வந்து தடுத்ததில்லை இவளை. இப்போதும் சென்றுவிடுகிறாள் தானே!!!!" என அவள் தலையை தடவி விட்டவராக வினவ.

மகிழ் லேசாக தூக்கம் கலைந்தாள். உடனே கையை எடுத்துக் கொண்டவர், "அவள் தூக்கத்தை தொடரட்டும், நாங்களும் கிளம்புகிறோம். திருவிழாவிற்கான ஏற்பாட்டை கவனிக்க வேண்டும்" என விடை பெற, திறைவனும் விடை கொடுத்தான்.
சொன்னதுபோல் நீதிவர்மன் சொல்லி சென்றதும் படிப்படியாக அம்மை குறைய ஆரம்பித்திருந்தது. அடுத்த நான்கு நாட்களில் எழுந்து அமர்ந்துவிட்டாள். தந்தையின் வரவும், செய்தியையும் அறிந்ததுமே "இது எதிர்பார்த்ததுதான். எப்போதும் நடப்பதுதான். இதன் தீர்வு திருவிழா என்ற அவர்களது நம்பிக்கையே என்னை குணப்படுத்திவிடும். அப்படித்தான் நான் அளிக்கும் வாக்கையும் நம்பி ஏற்கின்றனர்" என இயல்பாகவே அதை ஒத்துக் கொண்டாள்.

திறைவன் அவளின் இன்னொரு பக்கத்தை புரிய முயற்சித்து கொண்டிருந்தான்.
 
Top