எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

நங்கையின் மறவோன்! - கதை திரி (ரீரன்)

Status
Not open for further replies.

Shalini shalu

Moderator
வணக்கம் நண்பர்களே!

இங்கு "நங்கையின் மறவோன்!" கதையின் ரீரன் பதிவுகள் வரும்.
 
அத்தியாயம் 1

தன் அறையில் குறுக்கும், நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தாள் பெண்ணவள்.

எல்லாம் நாளைப் போய்ச் சேரப் போகும் வேலையைப் பற்றிய யோசனை தான்.

"மௌனா! இன்டர்வியூ அட்டெண்ட் பண்ணிட்டு வெய்ட் பண்ணிட்டு இப்படி பதட்டப்பட்றதுல நியாயம் இருக்கு. வேலையே கன்ஃபார்ம் ஆகிருச்சு.இன்னும் கொலுசு சத்தம் கேட்குறா மாதிரி டங் டங்ன்னு நடக்காதடி. தலை வலிக்குது"

தலை வலி தந்த எரிச்சலில் குரலை உயர்த்தித் தோழியை அதட்டினாள் அகதா.

"என்ன அகி! நீயே இப்படி பேசற? முதல் நாள் வேலை, நர்வஸா இருக்குடி"

சினுங்கிக் கொண்டே பதிலளித்தாள் மௌனா.

"அப்படித்தான் முதல்ல இருக்கும் டி. ஆனால் போகப் போக பிடிச்சிரும். அதுவுமில்லாமல் உனக்குப் பிடிச்ச வேலை வேற. சோ, நர்வஸ் ஆகாம ஃபர்ஸ்ட் டே எப்படி ஃபேஸ் பண்ணலாம்னு யோசி"

சின்னதாக அறிவுரை தந்த அகதா உணவைச் சமைக்கப் போனாள்.

"ஆமால்ல! நமக்குப் பிடிச்ச வேலை.அதைச் செய்ய எதுக்கு இவ்ளோ பதட்டப்பட்றோம்"

சற்றுத் தெளிந்தவள், கிச்சனுக்குப் போய்,
"அகி…! சோ ஸ்வீட் தாங்க்யூ" என்று தோழியிடம் நன்றி கூறினாள்.

அடுத்த நாள் வேலைக்குக் கிளம்பியவளுக்கு,

"ஆல் தி பெஸ்ட் மௌனா!"

புன்னகை ததும்பும் குரலில் தனக்கு வாழ்த்துச் சொல்லிய அகதாவைப் பார்த்து,

"தாங்க்யூ அகி" என்று புன்னகைத்தாள் மௌனா.

பிரம்மாண்டமான அந்த ஹோட்டலின் வரவேற்பறையில், தனக்கான வேலை காத்துக் கொண்டிருக்க, அதை ஆசையுடன் ரசித்தவாறே சென்று தனக்காக வைக்கப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்தாள் மௌனா.

அந்த நேரம் பார்த்து, அந்த தங்கும் விடுதியின் முதலாளி உள்ளே வந்தான்.

வந்தவன் நேரே அறைக்குச் செல்லாமல்,
"மிஸ்…" என்று அவளது பெயர் தெரியாததால், கேள்விக் குறியாக நோக்கினான்.

"மௌனா சார்" வெடவெடத்த போதும், பதில் சொன்னாள்.

"ம்ம்.மிஸ்.மௌனா.நியூ ஜாய்னி தான?"

கேள்வி கேட்டுக் கொண்டே, பார்வையால் அவளது கண்களைத் துளைத்தான்.

"எஸ் சார்"

"மேனேஜர் செலக்ட் பண்ணினாலும் உன்னோட சர்டிபிகேட்டை மறுபடியும் செக் பண்றேன்"

அதை அவளிடம் சொல்லாமல் கூட அவனால் செய்திருக்க முடியும். எதனால் தெரிவித்தான்? என்பது விளங்கவில்லை அவளுக்கு.

'அதைச் செக் செய்துட்டு என்ன சொல்லப் போறாரோ?'

அவளுடைய அத்தனைச் சான்றிதழ்களும் சரியானவையே! அப்படி இருந்தாலும் இவனைப் பார்த்ததும் உள்ளே உதறல் எடுத்தது. இதில் சான்றிதழ்கள் அவனால் சரிபார்க்கப்பட உள்ளது எனவும், மிரண்டு போனாள் மௌனா.

அவன் எப்போதோ அலுவலகத்தினுள்ளே போய் விட்டான்.
அவளுக்குத் தான் நிலை கொள்ளவில்லை.

"இதுக்கு இவரே என்னை இண்டர்வியூ செய்து எடுத்து இருக்கலாம்"

புலம்பித் தள்ளியவாறே இருந்தாள்.

தன்னுடைய அறைக்குள் வந்து,நாற்காலியில் அமர்ந்தவன் கணினியைக் கூட திறக்கவில்லை.
அதற்குள், மஹதனுக்கு அழைப்பு வந்தது.

"ஹலோ"

"மஹத்!! திஸ் இஸ் முக்தா. உங்களை மீட் பண்ணனும்? ஆஃபீஸூக்கு வர்றேன்"

"வெய்ட் முக்தா. நான் இப்போது தான் ஆஃபீஸூக்கு வந்தேன்" என்று சொல்லும் போதே குறுக்கிட்டு,

"இல்லை ப்ளீஸ். உன்னைப் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு. நான் இப்போ தான் வெளிநாட்டில் இருந்து வந்திருக்கேன். உன்னை மீட் பண்ணனும்னு இங்க வந்ததில் இருந்து துடிச்சிட்டு இருக்கேன்"


அவனைப் பார்த்தே ஆக வேண்டும் என செல்பேசியை அணைத்து விட்டு,அவனைப் பார்க்க கிளம்பினாள் முக்தா.

அவள் வருவதற்குள், மௌனாவின் வேலையைப் பற்றிக் காண்போம்.

ஃப்ரண்ட் ஆஃபீஸ் ரிசப்ஷனிஸ்ட் தான் தற் சமயத்தில், மஹதனுடைய தங்கும் விடுதியில் அவள் பார்க்கப் போகும் வேலை.

புதிதாக வேலைக்குச் சேர்த்திருப்பதால்,இனி தான் இங்கிருப்பவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டி இருந்தது மௌனாவிற்கு.

தந்தையும், தாயும் ஊரில் இருக்க, இவள் மட்டும் வேலைக்காக இங்கே வந்திருந்தாள்.

தனியாக வீடு எடுத்துத் தன்னுடன் பள்ளியில் பயின்ற அகதாவுடன் தான் தங்கி இருக்கிறாள்.

அவளுக்குக் குறும்புத்தனம் தேவைக்கேற்ப இருந்தாலும்,சில நேரங்களில் பொறுப்பும் தலை தூக்கும்.

சொன்னது போலவே, மௌனாவின் சான்றிதழ்களைச் சரி பார்க்கத் தொடங்கி இருந்தான் மஹதன்.

அந்த நேரம் பார்த்து, அலுவலகத்திற்கு, வேண்டாத விருந்தாளியாக, வந்து சேர்ந்தாள் முக்தா.

ரிசப்ஷனில் நிற்கும் போது, மலர்ந்த முகத்துடன் இருக்க வேண்டும் என்பதால், மௌனா தன்னுடைய ட்ரேட் மார்க் புன்னகையில் மிளிர்ந்தாள்.

முதல் நாள் வேலை என்று உள்ளுக்குள் பதட்டம் கொண்டாலும், சான்றிதழ்களைப் பார்க்கும், மஹதன் என்ன சொல்வானோ? என்று இருந்தாலும் தன் வேலையைச் செவ்வனே செய்ய வேண்டும் என்பதே அவளது தலையாயக் கடமையாக இருந்தது.

மௌனாவின் சான்றிதழ்களைச் சரி பார்த்து மூடி வைத்தவன்,
"குட் க்ரேட்ஸ் தான்" என்று சொல்லிக் கொண்டான்.


முக்தா தன்னுடைய காரை அலுவலகத்தின் முன்னால் நிறுத்தி விட்டு, உள்ளே வந்தாள்.

தான் செய்திருந்த அலங்காரத்தில் , முக்தாவும் ஜொலித்துக் கொண்டு இருந்தாள் தான்!

ஆனால் அவ்வாறு ஜொலித்த முகமோ, மௌனாவைப் பார்த்ததும் விகாரமாக மாறியது.

மௌனா தன்னை விட அழகாகத் தெரிவது ஏனோ முக்தாவிற்குப் பிடிக்கவில்லை.

ரிசப்ஷனில் வந்து நின்று தன்னை கூரிய விழிகளால் ஆராயும் இந்தப் பெண் யாரென்று பார்த்துக் கொண்டே,
"குட் மார்னிங் மேம்.வெல்கம் டூ அவர் ஹோட்டல்! ஹவ் கேன் ஐ ஹெல்ப் யூ மேம்?" (காலை வணக்கம் மேம். எங்கள் விடுதிக்குத் தங்களை வரவேற்கிறேன்! உங்களுக்கு நான் எவ்வாறு உதவி செய்ய வேண்டும்?) என்று பணிவாகக் கேட்டாள் மௌனா.

அவளது பணிவை ஏற்காது, அலட்டலான விழிகளுடன், அலட்சியமானக் குரலில்,
"மஹதனைப் பார்க்கனும்" என்றாள் முக்தா.

"அப்பாயிண்ட்மெண்ட் இருக்கா மேம்?"

"நான் அவனோட ஃப்ரண்ட். அப்பாயிண்ட்மெண்ட் தேவையில்லைன்னு நினைக்கிறேன்" என்று பேசியவளிடம்,

"ஜஸ்ட் வெய்ட் மேம்" என்று மஹதனை இண்டர்காமில் அழைத்தாள் மௌனா.

தன்னிடம் அதற்கு அனுமதி கேட்காமல், முதலாளியை அழைத்தது சத்தியமாக முக்தாவிற்குப் பிடிக்கவில்லை,

அது மட்டும் இல்லாமல், மஹதன் தன்னைப் பார்க்க வர வேண்டாம் என்று கூறிய பிறகு, வம்படியாக 'வந்தே தீருவேன்' என வந்திருப்பவளை நிச்சயமாக அவன் வரவேற்க மாட்டான்.

"ஹலோ"

"சார்! உங்களைப் பார்க்க ஒரு பொண்ணு வந்திருக்காங்க"அவனிடம் கூறிவிட்டு,

" உங்கப் பேர் மேம்?" என்று வந்தவளைக் கேட்டாள் மௌனா.

"முக்தா!!!"

மஹதனே கோபத்தில் அவளது பெயரை உச்சரிக்கவும், தெரிந்த பெண் தான் போலும்,

"சார் அவங்களை உள்ளே அனுப்பவா?" என்று கேட்டாள்.

"வேண்டாம்.அப்படியே வீட்டுக்குக் கிளம்ப சொல்லிடு" என்று அழைப்பைத் துண்டித்து விட்டான் மஹதன்.

தெரிந்தவள் தான் ஆனால் பிடித்தமானவள் இல்லை போல!

மௌனா அவன் கூறியதை முக்தாவிடம் தெரிவிக்க, அவள் கொதித்து எழுந்து விட்டாள்.

"அவன் என்மேல் கோபமா இருக்கான். அதனால் தான் அப்படி பேசிட்டான். நான் உள்ளேப் போய்ப் பேசிக்கிறேன்"

இவளுடைய பேச்சைக் காதில் வாங்கப் போவதில்லை என்று தெரிந்தாலும், தன்னால் ஆன மட்டும் அவளைத் தடுக்க எண்ணினாள் மௌனா.

"மேம் ப்ளீஸ்! சார் உங்களுக்கு பர்மிஷன் குடுக்கல. இது ரொம்ப தப்பு" என்று புரிய வைக்க முயன்றாள்.

ஆனால் முக்தாவிற்கோ, இந்த வாய்ப்பை விட்டால், வேறு வழியில்லை என்று அவளைத் தள்ளி விடக் கூடத் தயாராக இருந்தாள்.

"வழியை விடு. இல்லன்னா நடக்கறதே வேற"

எச்சரிக்கை விடுத்துக் கொண்டிருந்த முக்தாவின் குரல் கொடுத்தச் சத்தத்தில் அலுவலகத்தில் இருப்பவர்கள் ஸ்தம்பித்துப் போயினர்.

பிறகு விஷயம் மஹதனுக்குத் தெரியாமல் இருந்து விடுமா?

இங்கு நடந்த களேபரத்தை அவனுக்கு ஊழியர் ஒருவர் தெரிவிக்கவும்,முக்தாவின் மீதிருந்த கடுப்பை அவளிடம் நேரடியாகக் காட்டி விட எண்ணி, அவ்விடத்திற்கு விரைந்தான் மஹதன்.

அதற்குள் முக்தா தள்ளி விட்டதால், மௌனாவின் தலைக் கதவில் இடித்து விட்டது.

சரியாக மஹதன் கதவைத் திறக்க வரும் போது மௌனாவின் தலையில் இருந்து வடிந்த குருதியைக் கண்டான்.

வேகமாக பணியாளரை அழைத்தவன்,
"ஃபர்ஸ்ட் எய்ட் எடுத்துட்டு வந்து ட்ரீட் பண்ணுங்க. சீக்கிரம்!" என்று துரிதமாக செயல்பட்டவன்,

பயத்தில் வெலவெலத்துப் போய் நின்றிருந்த முக்தாவிடம்,
"என்ன செய்திருக்க முக்தா?" அடிக்குரலில் சீறினான் மஹதன்.

ஏற்கனவே அழையாமல் வந்து விட்டோம், இதில் இந்த செயல் வேறு. அவளைப் படுகுழியில் தள்ளப் போகிறது என்ற அச்சம் உள்ளம் எங்கும் பரவித் தகித்தது.

"சொல்லு?"

அவன் வார்த்தைகள் சீறிப் பாய்ந்து கொண்டு இருந்ததை அமைதியாகப் பார்த்துக் கொண்டு இருந்தாள் மௌனா.

"சாரி…மஹத்.." மன்னிப்பைக் கூட ஏனோ தானோ என்று கேட்டவளை பார்வையாலேயே எரித்துக் கொண்டு இருந்தான் மஹதன்.

"என்னைத் தள்ளி விட்டியா? எங்கிட்ட சாரி கேக்குற! அந்தப் பொண்ணுக் கிட்டப் போய் சாரி கேளு"

ஆத்திரத்தில் கூறினாலும் சரியானதைக் கூறினான்.

"அவகிட்டயா?" முணுமுணுத்தவாறே மௌனாவின் அருகில் சென்றாள் முக்தா.

தலையில் பிளாஸ்திரி முளைத்திருக்க, முக்தாவைப் பார்வையிலேயே தடுத்து நிறுத்திய மௌனா,
"இங்க நான் வேலைக்குச் சேர்ந்து இருக்கேன் சார்.இவங்க உங்களுக்கு என்ன ரிலேஷன்னுத் தெரியாது. அதே மாதிரி உங்களோட பர்சனல் விஷயத்தில் தலையிட்ற உரிமையும் எனக்கில்லை. எல்லாத்துக்கும் முக்கியமாக, எனக்கு இப்படி தலையில் அடிபட்ற அளவுக்கு இவங்களை நான் எதுவும் ஹர்ட் பண்ணல.ஆனால் இவங்க கொஞ்சம் கூட, சென்ஸே இல்லாமல், எனக்குக் காயம் வரவழைச்சு இருக்காங்க " என்று பேசியவள்,

ஐந்து நொடிகள் மூச்சு வாங்கி விட்டு,

"இவங்க மேல நான் கம்ப்ளைண்ட் கொடுத்தாலும் ஈசியா வெளியே வந்துருவாங்க. ஆனால் இதற்கான விலை அவங்கத் தந்து தான் ஆகனும்" என்றாள்.

அதற்குள் முக்தாவோ,
"தர்றேன்.பணம் தான கேட்கப் போற?" என்று இளக்காரம் அவளது பேச்சில் அதிகமாகவே தென்பட்டது.

"இதையே எத்தனை நாளைக்குச் சொல்லுவீங்க மேம்.எனக்கு உங்கப் பணம் வேண்டாம்" அவளிடம் கூறிவிட்டு,

"இவங்க மேல என்னால் தான் கம்ப்ளைண்ட் கொடுக்க முடியாது. கொடுத்தாலும் பிரயோஜனம் இல்லை. அவங்க உங்களோட ரிலேடிவ் தானே? எனக்காக நீங்க கம்ப்ளைண்ட் ஃபைல் பண்றீங்களா சார்?"

என்று நிமிர்வாக கேட்டு விட்டு, உச்சபட்ச அதிர்ச்சியில் தடுக்கி விழுபவளைப் போல நின்றிருந்த முக்தாவையும் , ஆச்சரியத்தில் இருந்த மற்ற அலுவலக ஊழியர்களையும் கண்டு கொள்ளாமல், மஹதனைப் பார்த்துக் கொண்டு, அவனுடைய பதிலுக்காகக் காத்திருந்தாள் மௌனா.

- தொடரும்
 
அத்தியாயம் 2

கைகளைக் கட்டிக் கொண்டு நின்றிருந்த மௌனாவைப் பார்த்து சுற்றி உள்ளவர்கள் பிரம்மித்துப் போயினர்.

முக்தாவின் முகமோ பலமாக இருண்டு போயிருந்தது.

பரிதாபகரமாக நின்று கொண்டு இருந்தாலும், அவளுடைய கண்களும், மனதும் மௌனாவை எரித்துச் சாம்பலாக்கும் உட்ச நிலையில் இருந்தது.

அனைத்திற்கும் மேலாக, மஹதனோ ஆச்சரியத்தின் விளிம்பில் இருந்தான்.

தன்னிடம் வேலை பார்ப்பவர்கள் என்ன அவமானப்படுத்தினாலும், வேலைக்காக அதைப் பொறுத்துக் கொள்வர். ஆனால் இவளோ, முக்தா தனக்குச் செய்த குற்றத்திற்குத் தண்டனை கிடைக்க வேண்டும் என்று புகார் அளிக்கக் கேட்கிறாள். அதுவும் முக்தாவின் பணபலத்தைக் கருத்தில் கொண்டு, தன்னையே புகாரளிக்குமாறு கேட்டுக் கொண்டு , தன் முன்னே நிற்கிறாளே!

"சார்! உங்களைத் தான் கேட்கிறேன்! கம்ப்ளைண்ட் கொடுக்கிறீர்களா?"மிடுக்காகக் கேட்டவளிடம் மஹதன் பதில் சொல்வதற்குள்,

முந்திக் கொண்ட முக்தா,

" ஏய்! என்ன? தெரியாமல் பண்ணதுக்கு ஓவரா சீன் போட்டு, மஹதனையும் ஏற்றி விட்டுட்டு இருக்க? உனக்கு எவ்வளவு திமிர் இருக்கனும் "

ஆத்திரத்தில் அடங்காது கத்தினாள்.

"திமிரா? எனக்கா மேடம்? உங்களோட திமிரால் தான் எனக்கு இந்த நிலைமை! இதுக்கு மேல உங்ககிட்ட பேச எனக்கு இஷ்டம் இல்லை" என்ற மௌனா திகைத்து நின்ற மஹதனிடம் பார்வையைச் செலுத்தினாள்.

"ம்ம்! முக்தா நான் இங்கே உன்னை வர வேண்டாம்னு சொல்லியும் வந்திருக்க, அது மட்டுமில்லாமல், என்னோட ஸ்டாஃப்க்கு ப்ளட் வர்ற அளவுக்கு காயத்தை ஏற்படுத்தி இருக்க. இதுக்கு உன்னோட எக்ஸ்ப்ளனேஷன் என்ன?"

அவள் இப்போதாவது தன் தவறை மனதார உணர்கிறாளா? என்ற நம்பிக்கையில் கேட்டான் மஹதன்.

அவனுடைய கேள்வியோ தன்னைத் திக்குமுக்காட வைத்ததால், இப்போதே இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று நினைத்தவளோ,

"நான் தான் சாரி கேட்கிறேன்னு சொல்லிட்டேனே மஹத். அப்படி இல்லையா! பணம் கொடுக்கவும் தயார். அந்தப் பொண்ணுக்கு இரண்டில் என்ன வேணும்னு கேட்டு சொல்லு"

தன் நிலையிலிருந்து இறங்கி வந்து விட்டாளாம்!

"உங்கிட்ட இனிமேல் பேசறதே வேஸ்ட். நான் கம்ப்ளைண்ட் ஃபைல் பண்ணத் தயார் மௌனா"

தானும் அவளுக்குச் சளைத்தவன் இல்லை என்பதை காண்பித்தான் மஹதன்.

இப்போது மௌனாவின் பார்வை மஹதனை வியப்பாக ஏறிட்டது.

"மஹத்…!"

அவமானத்திலும், பயத்திலும் முகம் வெளிறிய நிலையில் கிறீச்சிட்டாள் முக்தா.

"ஆமாம் முக்தா. நீ செஞ்சது தப்பு, அதைவிட பேசின விஷயங்கள் ரொம்ப தப்பு.வேற வழியில்லை. கெட் ரெடி"

இப்போது முக்தாவின் கோபமெல்லாம் மஹதனின் புறம் திரும்பியது.

"இவ சொல்றதை எல்லாம் கேட்கனும்னு உனக்கென்ன தலையெழுத்தா மஹத்? உன்னால முடிஞ்சா இவளைக் கன்ட்ரோல் பண்ண முடியும்.ஆனால் நீயே கம்ப்ளைண்ட் கொடுக்க சம்மதம் சொல்லி இருக்க? வாட் இஸ் திஸ் மஹத்?"

இப்போது வாய் திறந்தாள் மௌனா.

"ஹலோ மேடம்! கன்ட்ரோல் பண்றதுக்கு அவருக்கு என் மேல எந்த உரிமையும் இல்லை. அப்பறம் எனக்கு உங்க ட்ராமாவைப் பார்க்க கொஞ்சம் கூட பிடிக்கல.இன்னைக்குத் தான் முதல் நாள் ஆஃபீஸ்ல ஜாயின் பண்ணேன்.ஒரு ரத்தக் காயம் கிஃப்ட் ஆக கிடைச்சிருச்சு. நீங்க எங்க டைம் வேஸ்ட் பண்ணாதீங்க" என்று மஹதனிடம் திரும்பியவள்,

"சார்! இவங்களைக் கூப்பிட்டுட்டு சீக்கிரம் வாங்க. கம்ப்ளைண்ட் கொடுத்துட்டு நான் வேலையைப் பாக்கனும்.ஏற்கனவே என்னோட ஒரு நாள் வேலையில் பாதி நாள் இவங்களால் வேஸ்ட் ஆயிடுச்சு"

அவள் கூறியதைக் கேட்ட மஹதனோ அதற்குப் பிறகு, பேச ஒன்றும் இல்லாததால், முக்தாவிடம்,
"வந்து காரில் ஏறி முக்தா.எனக்கும் முக்கியமான வேலைகள் நிறைய இருக்கு"என்று கோபமாக கூறினான்.

" ப்ளீஸ் மஹத்!!"

மிகவும் இறங்கிப் போய்க் கெஞ்சினாள் முக்தா. பின்னே, இந்தியா வந்திறங்கியதுமே, காவல் நிலையத்திற்குப் போனாள் என்பது தெரிந்தால், இவளது தந்தையின் அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதே அவளைக் கதி கலங்க வைத்தது.

தனக்கு நேர்ந்த இந்தப் பரிதாப நிலையால் , மனம் வெதும்பிப் போன முக்தா,காரில் ஏறப் போவதற்கு முன்னால்,
"அப்பா கிட்ட பேசனும் மஹத். நான் போலீஸ் ஸ்டேஷன்ல இருக்கிறது தெரிஞ்சா தான, ஜாமீனில் எடுக்க வருவார்" என்று கண்ணீருடன் கேட்டாள்.

அதிலும் மனமிரங்காத மஹதன்,
"நான் சொல்லிக்கிறேன். அங்கே போன பிறகு அதைப் பார்த்துக்கலாம்"என்று அவள் ஏறியதும், மௌனாவும் உடன் ஏறிக் கொள்ள, காரைக் காவல் நிலையத்தை நோக்கிச் செலுத்தினான்.

அவனுக்குள்ளும் எரிமலை வெடித்துக் கொண்டு தான் இருந்தது. இந்த மாதிரி எந்த ஒரு நிலையும் தனக்கு ஏற்பட்டதில்லையே!

முக்தாவோ உடல் எங்கும் அவமானம் பரவிட , கண்களை மூடிக் கொண்டாள்.

அவளை இந்நிலைக்கு ஆளாக்கிய மௌனாவோ, அடுத்து என்ன நடக்கும்? என்ற ஐயம் கொஞ்சம் கூட இல்லாமல், சாலையை வெறித்தாள்.

கால் மணி நேரத்தில் காவல் நிலையத்தை அடைந்திருந்தனர்.
அதன் வாயிலைக் கூட மிதிக்கப் பிடிக்காதவள் போல், முகம் அடிபட்டுப் போய் அப்படியே அமர்ந்திருக்கும் முக்தாவை இறங்கும் படி சைகை செய்தான் மஹதன்.

பின்னிருக்கையில் இருந்து வந்த மௌனாவோ முக்தாவையும், மஹதனையும் பார்த்து,
"ப்ச்" என்று சலிப்புடன் கூறினாள்.

அதைக் கண்ணுற்ற மஹதனோ,
"இறங்கு முக்தா" கடுமையான குரலில் கூறினான்.

மௌனாவின் சலிப்பு அவனைக் கேலி செய்ததைப் போல், தோன்றிற்று.

முக்தாவும் வேறு வழியின்றி இறங்கவும், மூவரும் காவல் நிலையத்திற்குள் சென்றனர்.

அங்கிருந்த காவலதிகாரியிடம்,
"வணக்கம் சார்! இவர் இந்தப் பொண்ணு மேல் கம்ப்ளைண்ட் கொடுக்க வந்திருக்கார்" என்று மௌனாவே பேச ஆரம்பித்து விட்டாள்.

அந்த அதிகாரி மஹதனைப் பார்த்ததும், "சார் நீங்க.. மிஸ்டர் மஹதன் தான?" என்று அவனை நன்றாக அடையாளம் கண்டு கொண்டதைப் போல கேட்டார்.

இருக்காதா பின்னே? அவன் தான் பார் போற்றும் கோட்ஸ்வரன் ஆயிற்றே! அப்படிப்பட்டவன் இங்கே, இந்நிலையில் நிற்கிறான் என்பதே அந்த அதிகாரிக்கு அதிர்ச்சியைத் தந்தது.

" எஸ் சார். இவங்க மிஸ். மௌனா. என்னோட ஸ்டாஃப். கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி மிஸ். முக்தா இவங்களோட தலையில் காயத்தை ஏற்படுத்திட்டாங்க.அதைப் பார்த்த நான் மௌனாவுக்காக கம்ப்ளைண்ட் கொடுக்கிறேன்.உடனே ஆக்ஷன் எடுங்க"

குனிந்த தலை நிமிராமல் நிற்கும் முக்தாவைப் பார்த்துக் காவலதிகாரி, அதற்கு நேர்மாறாக, தலை நிமிர்ந்து நின்றிருக்கும் மௌனாவையும் பார்த்தார்.

அவளது நெற்றியில் இருந்தப் பிளாஸ்திரியைப் பார்த்து விட்டு,
"ம்ம்.ஓகே சார். கம்ப்ளைண்ட் எழுதிக் கொடுங்க" என் சொல்லவும்,

அவர் கொடுத்த வெள்ளைத் தாளில் நாற்காலியில் அமர்ந்து, புகாரை எழுத ஆரம்பித்து விட்டான் மஹதன்.

எஃப் ஐ ஆர் (FIR) ரெடி பண்றேன்" என துரிதமாகத் தயார் செய்தார்.

தன்னை இந்தளவிற்கு இழிவுபடுத்திய இவ்விருவரையும் என்னவெல்லாம் செய்யலாம்? என்று திட்டம் போட்டாள் முக்தா.

அதற்குள், "எஃப் ஐ ஆர் ரெடி சார். சைன் பண்ணுங்க" என்கவும்,

மஹதனோ உடனே அதில் கையெழுத்திட்டான்.

இதைப் பார்த்ததும் 'பணம் இருக்கிறது' என்ற ஒரே காரணத்திற்காக தன்னைக் காயப்படுத்தியதைக் கூட ஒரு பொருட்டே இல்லை என தெனாவட்டாகப் பேசிய பெண்ணிற்கு உரிய தண்டனைக் கிடைக்கப் போகிறது என மௌனாவிற்கோ நிம்மதியாக இருந்தது.

இப்போதாவது தன் செல்பேசியை உபயோகப்படுத்தலாமா? என்பதாக மஹதனையும், செல்பேசியையும் மாறி மாறிப் பார்த்தாள் முக்தா.

"நானே கால் பண்ணி சொல்றேன்" என்று முக்தாவின் தந்தைக்கு அழைத்தான் மஹதன்.

அழைத்து வெகு நேரம் ஆகியும் அவர் ஏற்கவில்லை. எனவே,
"அங்கிள் கால் அட்டெண்ட் பண்ணல" என்று கூற, வெறுப்பை உமிழும் பார்வையால் மௌனாவைப் பார்த்தாள் முக்தா.

ஆனால் உடனே பார்வையைச் சரி செய்து கொண்டு,
"மௌனா! இவ்ளோ தூரம் வந்தாச்சு. கம்ப்ளைண்ட் ஃபைல் ஆகிருச்சு. கொஞ்ச நேரம் செல்லில் (cell) கண்டிப்பாக இருக்கேன். அதுக்கப்புறம் என்னை ஜாமீன்ல எடுக்கச் சொல்லி மஹதன்கிட்ட சொல்லு!" என்று அவளிடம் பரிதவிப்புடன் புலம்பினாள்.

அவளைத் கூர்மையாகப் பார்த்தவள்,
மஹதனிடம்,
"தாங்க்ஸ் சார். உங்களோட ஸ்டேட்டஸைக் கூட நினைச்சுப் பார்க்காமல், நான் கேட்டேன்றதுக்காக, நியாயமாக நடந்துக்கிட்டீங்க" என்று மனதார நன்றி சொன்னாள் மௌனா.

அந்த நன்றியை ஏற்றுக் கொள்ளப் போவதாக இல்லை போலும் அவன்!

"நோ நீட் (No need - தேவையில்லை)"

என்று அவளது நன்றியை ஏற்காமல் , மறுத்து விட்டான் மஹதன்.

பெருமூச்செறிந்தவாறே,
"ஒரு மணி நேரம் கழிச்சு இந்தக் கேஸை வாபஸ் வாங்கிடுங்க சார்" என்றாள் மௌனா.

"ஹேய்!!! என்ன!! தப்புப் பண்ணியது நான் இல்லன்னாலும், உனக்காக ஸ்டேஷன் வரைக்கும் வந்து கம்ப்ளைண்ட் கொடுத்தா, என் பொறுமையை ரொம்ப சோதிச்சுப் பாக்குற? இதுக்கு மேல நீ எங்கிட்ட எதையும் கேட்க ரைட்ஸ் இல்லை. ஒழுங்கா ஆஃபீஸூக்கு வந்து வேலையைப் பாரு"

அவனும் தான் எவ்வளவு நேரம் பொறுத்துப் போவான்.

மௌனாவைப் பொரிந்து தள்ளியவன் திரும்பிப் பார்க்காமல், காரில் ஏறிச் சென்று விட்டான் மஹதன்.

"ஓவர் ஆக்ட் பண்ணி என்னை இந்த நிலைமைக்குக் கொண்டு வந்து விட்டுட்டல்ல! அதுவும் இனி நான் மஹதனைப் பார்த்துப் பேச முடியாத அளவுக்குப் பண்ணிட்ட. உனக்கு இருக்குடி"

அங்கேயே அமர்ந்திருந்த முக்தாவோ, வார்த்தைகளை வஞ்சனை இன்றி பிரயோகித்தாள்.

அதைக் கேட்கப் பிடிக்காமலும், நேரம் போவதாலும் அங்கிருந்து அகன்றாள் மௌனா.

காரில் போகும் போது, மஹதனுக்குக் கால் வந்தது. முக்தாவின் தந்தை தான் அவன் அழைத்ததைப் பார்த்து விட்டு இப்போது கூப்பிட்டு இருக்கிறார்.

"ஹலோ மஹத். என்னப்பா கால் பண்ணி இருக்க?"

"ஆமாம் அங்கிள். முக்தா போலீஸ் ஸ்டேஷன்ல இருக்கா. போய் ஜாமீனில் எடுத்துட்டு வாங்க" என்று கூறியதைக் கேட்டதும்,

"என்னது!!! எப்படி நடந்துச்சு மஹத்?"
நெஞ்சு வலியே வரும் போலிருந்தது அவருக்கு.

"இப்போ லாயரைக் கூப்பிட்டுட்டு ஸ்டேஷன் போங்க அங்கிள்.
ஈவ்னிங் வீட்ல பேசுவோம்"

செல்லை அணைத்து விட்டு, அலுவலகத்தினுள் நுழைந்து கொண்டான் மஹதன்.

பிறகென்ன, மௌனா காவல் நிலையத்தில் இருந்து கிளம்பி, ஆட்டோ பிடித்து அலுவலகம் போகும் நேரத்தில், முக்தாவின் தந்தை நீலகண்டன் அடித்துப் பிடித்துக் அங்கே வந்தார்.அவருடன் வக்கீலும் வந்திருந்தார்.

அவரும் சமுதாயத்தில் பெரும் புள்ளி என்பதால், மஹதனைப் போலவே இவருக்கும் நல்ல வரவேற்பும் , மதிப்பும் கிடைத்தது.

"நீலகண்டன் சார்! நீங்க திடீரென இங்கே வந்திருக்கீங்க? என்ன விஷயம் சார்?"

அவர் கேட்டுக் கொண்டு இருக்கும் போதே, முக்தாவும் சற்று முன்னர் தான் தந்தையின் பெயரைக் கூறி எதாவது முயற்சித்துப் பார்ப்போமா? என்று நினைத்திருந்தாள். அதற்குள் தந்தையே பிரசன்னம் ஆனதில், அவளது கண்ணீர்த் துளிகள் கன்னங்களை அடைந்தது.

"அப்பா!"

கலங்கிய குரலில் தன்னை அழைத்த மகளைப் பார்த்ததும், நீலகண்டனுக்கு அதிர்வு ஏற்பட்டது.

"முகி... உனக்கு எப்படி இந்த நிலைமை? யாரு மஹதனா? அவன் தான் எனக்குக் கால் செய்து விஷயத்தைச் சொன்னான்" என்று மகளை ஆதரவாகத் தோளில் சாய்த்துக் கொண்டார்.

"இல்ல அப்பா. ஆனால் அவனும் ஒரு காரணம் தான். என்னை இந்த நிலைமைக்குக் கொண்டு வந்தது ஒரு பொண்ணு. விஷயத்தை நான் வீட்டுக்குப் போய் சொல்றேன். ப்ளீஸ் இப்போ என்னை ஜாமீனில் எடுங்கள் அப்பா. இங்கே இருக்க எனக்குப் பிடிக்கல"

கண்ணீரில் கரைந்து கொண்டிருந்த மகளிடம்,
"அழாத முகி. நான் இப்போவே உன்னை வீட்டுக்குக் கூப்பிட்டுப் போறேன்"
என்று அதிகாரியிடம் வந்தார்.

"சார்! இவங்க உங்கப் பொண்ணா?" இவர்களது பேச்சைக் கேட்டு தெரிந்து கொண்டார் போலும்!

"ஆமாம் ஆஃபீஸர். இவள் என்னோட பொண்ணு முக்தா. ஜாமீனில் எடுக்கனும்"

வக்கீலையும் அறிமுகப்படுத்தினார் நீலகண்டன்.

அதிகாரி தயக்கத்துடன், "மஹதன் சார் கம்ப்ளைண்ட் கொடுத்து இருக்கார் சார்" என்கவும்,

"ஓஹோ! அவர் தான் என்கிட்ட இன்ஃபார்ம் செய்து இங்கே வரச் சொன்னார்" இறுகிய குரலில் சொன்னார் நீலகண்டன்.

அவனே புகாரளித்து விட்டு, தனக்கும் கால் செய்திருக்கிறானே! என்று அவரது மனம் குமுறியது.

பிறகு, "டவுட் ஆக இருந்தா கால் பண்ணித் தர்றேன். கேளுங்க" என்று சொல்ல,

"இல்லை வேண்டாம் சார்"

அடுத்த நிமிடமே முக்தாவிற்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

காரில் ஏறியதும், "அப்பா!" என்று தன் தோளில் முகம் புதைத்துக் கொண்டு கதறி அழுத மகளைச் சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து வந்தார் நீலகண்டன்.

வெளிநாட்டில் தங்கிப் படித்ததாலும், மாதக் கணக்கில் இங்கே வராததாலும் அவளை ஒரு விழா ஏற்பாடு செய்து அனைவருக்கும் அறிமுகம் செய்து வைக்க எண்ணினார். ஆனால் அவர் கணக்குத் தவறி, நிகழ்ந்ததோ வேறாக இருந்தது.

அலுவலகத்திற்குள் முன்னர் நடந்த சச்சரவின் தடமே இல்லாதது போல் இருந்தது.

மௌனாவும் இந்தப் பிரச்சனையை மறந்து விட்டு, வேலையைத் தொடர்ந்தாள்.

- தொடரும்
 
அத்தியாயம் 3

கண்களிலிருந்து வழிந்து கொண்டு இருந்த கண்ணீர்த் துளிகளைப் பார்க்கவே அவளுக்கு அருவருப்பாக இருந்தது.



இந்தியா வந்ததுமே தன்னை இந்தளவிற்கு அழச் செய்தவர்களை மன்னிக்கப் போவதில்லை என்று கருவிக் கொண்டாள் முக்தா.



தோளில் முகம் புதைந்திருந்த மகளிடம், "என்ன ஆச்சுடா? போலீஸ் ஸ்டேஷன் போகிற அளவுக்கு என்னப் பிரச்சினை?" அவளின் நிலை புரிந்து அழுத்திக் கேட்காமல், அமைதியான முகத்துடன் வினவினார் நீலகண்டன்.



ஏற்கனவே பயத்தில் வெளிறிப் போயிருந்தவள், தந்தையின் இந்தக் கேள்வியில், முற்றிலும் துவண்டு போனாள் முக்தா.



"கேட்கிறேன்ல சொல்லுமா?"



மீண்டும் கேட்டவரைப் பார்த்து,

கண்கள் சிவக்க,



" நான் மஹதனைப் பார்த்து ரொம்ப நாள் ஆச்சுன்னு உங்களுக்கே தெரியும்ல அப்பா? ஆசை ஆசையாக கால் செய்து மீட் பண்ணலாமான்னு ஆஃபீஸூக்கு வரவா என்று கேட்டேன். வேணாம்னு சொன்னான்.இருந்தாலும் என்னால் அவனைப் பார்க்காமல் இருக்க முடியல. ஆஃபீஸ்ல போய் வெய்ட் பண்ணிப் பாக்கலாம்னு போனேன்ப்பா.அங்கே இருந்த ரிசப்ஷனிஸ்ட் என்கிட்ட ரூட் (Rude - முரட்டுத்தனமாக) நடந்துக்கிட்டா. நான் அதுல எனக்குப் கோபம் வந்துடுச்சு. அவளைத் தள்ளி விட்டுட்டேன்"



தான் கூறியதை நம்பும் பாவனை அவர் முகத்தில் உள்ளதா? என்று தந்தையின் முகத்தை ஆராய்ந்தாள் முக்தா.




நீலகண்டனோ அவள் பேசுவதை உன்னிப்பாக கேட்டுக் கொண்டு இருந்தார்.



அசட்டுத் தைரியத்துடன், மேலும் கூறத் தொடங்கினாள்.



"பாவம் தலையில் அடிபட்டு ப்ளட் வந்துடுச்சு. நானும் சாரி கேட்டேன், பணம் தர்றேன்னு சொன்னேன். எதுக்குமே அவ வழிக்கு வரல அப்பா.வேற ஆப்ஷனும் எனக்கு இல்லைப்பா. ஆனால், அவ என் மேல் கம்ப்ளைண்ட் கொடுக்கிற அளவுக்குப் போகப் போறான்னு நினைச்சேப் பார்க்கலப்பா. அது கூட பரவாயில்லை. அவளை இதுக்கு முன்னாடி எனக்குத் தெரியாது. ஆனா…"



அடுத்துச் சொல்வதற்குள் முக்தாவிற்குத் தொண்டை அடைத்தது.



"அழாமல் மேலே சொல்லும்மா" என்று கண்களைத் துடைத்து விட்டார் அவளது தந்தை.



"ஆனால்… மஹத்! அவன் அங்கே வந்ததும், இவளுக்குச் சப்போர்ட் செய்து பேசினான்ப்பா.அவளுக்கு அவ்ளோ இன்ஃப்ளூயன்ஸ் இல்லன்னு, மஹத்தைக் கம்ப்ளைண்ட் கொடுக்கச் சொன்னா. அவன் முடியாதுன்னு தானே மறுத்து இருக்கனும்?" என்று அவரிடம் கேள்வி கேட்டாள்.



'ஆமாம்' என்று சொல்லும் விதமாக தலையசைத்தார்.



"அவனும் அதற்குச் சம்மதிச்சான். உங்களுக்குக் கால் பண்ணனும்னு சொன்ன அப்போ கூட அவனே இன்ஃபார்ம் பண்றேன்னு சொல்லிட்டான்.அதுக்கப்புறம், அவனோட கார்லயே எங்க ரெண்டு பேரையும் போலீஸ் ஸ்டேஷனுக்குக் கூப்பிட்டுப் போனான்.அங்கேயும் என்னைப் பேச விடாமல், கம்ப்ளைண்ட் ஃபைல் பண்ணி…"



சொல்லி முடித்ததும், கதறி அழுது விட்டாள் முக்தா.



"அழாத முக்தா.. ஒன்னும் இல்லை.. சரியா!" முடிந்த வரை பலமிழந்து போன மகளைத் தேற்றினார் நீலகண்டன்.



"எனக்கு மஹதன் தான் கால் செய்து, ஸ்டேஷனுக்கு வக்கீலோட வர சொன்னான். ஈவ்னிங் வீட்டுக்கு வந்து நடந்ததைச் சொல்றேன் என்றும் சொல்லி இருக்கான்ம்மா" என்று குழப்பமாக கூறினார் தந்தை.



"அவன் எனக்குத் துரோகம் செய்துட்டான் அப்பா! எவ்ளோ கெஞ்சினேன் தெரியுமா? அவ கூட சேர்ந்துட்டு, அவ சொல்றதை எல்லாம் கேட்டுட்டு என்னை இப்படி அழ வச்சுட்டான் அப்பா" என்று புலம்பிக் கண்ணீர் வடித்தாள் முக்தா.



நீலகண்டனுக்கு இன்னும் குழப்பம் நீங்கவில்லை. தன் அலுவலகத்தில் பணிபுரியும் பெண்ணிற்காக இவற்றையெல்லாம் செய்தவன், தனக்கு எதற்காக கால் செய்து மகளைப் பற்றிக் கூறினான்?



"அவன் எதுக்கு அந்தப் பொண்ணுக்குச் சப்போர்ட் பண்ணனும் முக்தா? அவனுக்கு அவ்ளோ முக்கியமான பொண்ணா?"



"இல்லைப்பா.அவ இன்றைக்குத் தான் வேலைக்கே சேர்ந்திருக்கா"



நீலகண்டனுக்கோ மகள் எப்போது வெளிநாட்டில் இருந்து வருவாள்? அவளுக்கு மஹதனை மணம் செய்து வைக்கலாம் என்ற எண்ணம் இருந்ததே!



இப்போது அதற்கு வழியே இல்லை என்பது போல், இந்நிகழ்வு நடந்திருக்க,



"வீட்டுக்குப் போகலாம்ப்பா"



சோர்ந்து போயிருந்தவளின் குரல் கேட்டு, மகளை வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.



தாய் இல்லாதப் பெண் தன் மனப் பாரங்களைத் தந்தையிடம் இறக்கி வைத்து விட்டு, உறக்கத்திற்காக ஏங்கிய விழிகளுக்கு ஓய்வு கொடுத்தாள் முக்தா.



எண்ணங்களுக்குள் சிக்கிக் கொண்டிருந்த நீலகண்டனோ, மாலை மஹதனின் வரவிற்காகக் காத்திருந்தார்.



அறைக்குள் சென்ற மஹதனும் சரி, வெளியே வரவேற்பில் வேலை பார்த்துக் கொண்டு இருந்த மௌனாவும் சரி முந்தைய நிகழ்வை தங்களது மனதிற்குள்ளேயே போட்டு புதைத்து விட்டனர்.



அதன் பிறகு, முக்தாவை இருவரும் மறந்து விட்டனர். அவள் செய்த காரியத்திற்கும் தண்டனை வழங்கப்பட்டது. பின்னர் அவளைப் பற்றி நினைப்பது தவறு என்று உணர்ந்திருந்தனர்.



மாலையில், வேலை நேரம் முடிந்ததும், அங்கிருந்து வெளியேறி,

வீட்டை அடைந்தாள் மௌனா.



அகதாவும் அப்போது தான் வந்திருக்கச் சாவி கொண்டு திறந்த சமயம்,

"அகி! நீயும் வந்துட்டியா?" என்று அவளிடம் பேச்சுக் கொடுத்தாள்.



பூட்டைத் திறந்த அகதா, "வந்துட்டேன் மௌனா.வா உள்ளே போகலாம்" என உள்ளே சென்றவளது கண்களுக்கு மௌனாவின் நெற்றியில் ஒட்டி இருந்த பிளாஸ்திரி தெளிவாகத் தெரிந்தது.



"இதென்னப் பிளாஸ்திரி ஒட்டியிருக்க மௌனா? என்னாச்சு?"



சந்தோஷமாக காலையில் வேலைக்குச் சென்ற தோழிக்குக் காயம் ஏற்பட்டிருப்பதைக் கண்டு அகதா திடுக்கிட்டாள்.



"இதுவா அகி? நான் எவ்ளோ எக்ஸைட் ஆகி இருந்தேன்னு நீ காலையில் பார்த்தியே! அதே போல, ஆஃபீஸூம் பார்க்க சூப்பரா இருந்துச்சு. கியூரியோசிட்டி வேற! இது நடக்கலை என்றால் தான் ஆச்சரியம் அகி" என்று தோழியிடம் தன் போக்கில் கதைக் கட்டி விட்டாள் மௌனா.



அவள் பொய் தான் சொன்னாள்! ஏனெனில், முக்தா விஷயம் தன்னுடனேயே போகட்டும், அகதாவிற்குத் தெரிய வேண்டாம் என நினைத்தாள் மௌனா.



"நீ இருக்கியே! அப்படி என்ன கண்ணு, மண்ணுத் தெரியாத எக்ஸைட்மெண்ட் மௌனா? இனியும் இப்படி காயத்தைக் கொண்டு வராத"



அகதா திட்டியதைச் சமர்த்தாகக் கேட்டுக் கொண்டாள் மௌனா.



அவளுக்கு எது உண்மை? எது பொய்? என்று தெரியாதல்லவா? அதனால், பத்திரமாக இருக்க வேண்டும் என்று பலமுறை அறிவுறுத்தினாள் அகதா.



இருவரும் தங்களது உடை மாற்றிக் கொண்டு, தேநீர் பருகினர்.



அதே சமயத்தில், தன் வீட்டிற்குள் நுழைந்ததும், ஆசையாக மகனை வரவேற்றார் கௌசல்யா.



"வா மஹதா!" என்று அவனது சோர்வைக் கண்டு, தலை கோதி விட்டார்.



"ம்மா ! இன்னைக்கு முக்தா ஆஃபீஸூக்கு வந்தா" என்று நடந்தவற்றை விவரித்தான்.



"அச்சோ! இந்த முக்தா ஏன் இப்படி இருக்கா? எவ்ளோ தைரியம் பாரு" என்று முக்தாவைக் கரித்துக் கொட்டினார் கௌசல்யா.



"உன் ஸ்டாஃப் அந்தப் பொண்ணுப் பேர் என்ன சொன்னா?"



"மௌனா. அந்தப் பொண்ணுக்குத் துணிச்சல் அதிகம் தான்" என்று மஹதன் கூறவும்,



"துணிச்சல் இல்லை மஹதா. செல்ஃப் ரெஸ்பெக்ட். வந்த வேலையை மட்டும் பார்க்கனும் என்றும், அதை டிஸ்டர்ப் செய்தா என்னப் பண்ணனும் என்றும் நல்லா தெரிஞ்சு வச்சிருக்கா" என்று மௌனாவைப் பாராட்டினார் தாய்.



மென் புன்னகை புரிந்தான் மஹதன்.



"நீலகண்டன் சார் என்ன சொல்லப் போறாரோ? மகளுக்கு இப்படி ஆனதை அவரால் ஏற்றுக் கொள்ளவே முடியாதே!" என்று கூறினார் கௌசல்யா.



"அவருக்கு நான் இன்ஃபார்ம் பண்ணிட்டு வந்துட்டேன் மா. அதுக்கப்புறம் கான்டேக்ட் பண்ணல. இப்போ வீட்டுக்குப் போய் எல்லாத்தையும் விவரமாக சொல்லனும்" என்க,



"ஏற்கனவே தாயில்லாதப் பொண்ணுன்னு உருகுவார். இப்போ சொல்லவே வேண்டாம்"



அவரால் மகனுக்கு எதுவும் சங்கடம் நேர்ந்து விடுமோ! என்று தாய் உள்ளம் பதறியது.



"அதுக்காக அவளோட இஷ்டத்துக்கு எல்லாம் என்னால் ஆட முடியாதே அம்மா.அந்தப் பொண்ணுக் கேட்கிறதைச் செய்யாமல் இருந்திருந்தா, ஸ்டாஃப்ஸ் மத்தியில் என் கௌரவம் என்னாகுறது?" என்று பொருமினான் மஹதன்.



"அவர்கிட்ட பொறுமையாகப் பேசு மஹதா" அறிவுரை கூறியதை ஏற்றுக் கொண்டவன்,



"சரி அம்மா. நான் தயாராகிட்டு, நீலகண்டன் சாரைப் பார்த்துட்டு வர்றேன்" என்று எழுந்து சென்றான்.



அவன் போனதும், கௌசல்யா தன் கணவர் திருமூர்த்திக்குக் கால் செய்து அனைத்தையும் ஒப்புவித்தார்.



நீலகண்டனின் பங்களாவின் நுழைவு வாயிலில் தன் காரை நிறுத்தி, இறங்கி உள்ளே வந்தான்.



மஹதன் அவருக்கு நன்றாகத் தெரிந்தவன் என்பதால், காவலாளியும் உள்ளே அனுமதித்து விட்டு, முதலாளியிடம் தகவலும் தெரிவித்தான்.



வீட்டினுள் அடியெடுத்து வைத்தவனை மருந்துக்கும் முகத்தில் புன்னகை இல்லாது, வரவேற்றார் நீலகண்டன்.



"வா மஹத். உட்கார்"



அதிலேயே அவரது


மனநிலையைப் புரிந்து கொண்டான் மஹதன்.



"அங்கிள்! காலையில்…" என்று அவன் விவரிப்பதற்குள்,



கை நீட்டித் தடுத்தவர், "தெரியும் மஹத். பொண்ணு எல்லாம் சொல்லிட்டா" என்றார் நீலகண்டன்.



"நான் செஞ்சது தப்புன்னு நினைக்கிறீங்களா?"



"இல்லைன்னு சொல்ல மாட்டேன் மஹத். ஆனால் அவளை விட உன் ஸ்டாஃப் ரொம்ப முக்கியமாகப் போய்ட்டாளா?" என்று ஆதங்கத்துடன் வினவினார்.



"இதில் முக்கியம்ன்னு எதுவும் இல்லை அங்கிள். முக்தா நடந்துக்கிட்டது அப்படி!" புரிய வைக்க முயன்றான் மஹதன்.



"அப்படி என்னப்பா என் பொண்ணு நடந்துக்கிட்டா? உன்னைப் பார்க்க ஆசையாக வந்தா, அவளை வர விடாமல் தடுத்தது அந்தப் பொண்ணு தான். தெரியாமல் நடந்ததுக்கு என் பொண்ணை இப்படி அசிங்கப்படுத்திட்டீங்களே!" என்று கொதித்தார் நீலகண்டன்.



"நான் முக்தாவை ஆஃபீஸூக்கு வர வேண்டாம்னு முன்னாடியே சொல்லியிருந்தேன் அங்கிள்"



"நீ வர வேண்டாம்னு சொன்னாலும், அவளுக்கு உன்னைப் பார்க்க அவ்ளோ ஆசை மஹத்! அங்கே இருந்து வர்றதுக்கு முன்னாடி இருந்தே உன்னைப் பார்க்கிறதுக்காக சீக்கிரமாக வர்றேன்னு சொன்னா. அப்படி உன்மேல் இவ்வளவு அன்பு வச்சிருக்கிறப் பொண்ணை அசிங்கப்படுத்திட்டல்ல?"



அவரோ புரியாமல், திரும்பத் திரும்ப மஹதன் அவளை அசிங்கப்படுத்தி விட்டதாக கூறிக் கொண்டே இருந்தார்.



"அந்த ஆசையை இனிமேல் வச்சுக்க வேண்டாம்னு சொல்லுங்க அங்கிள்.எனக்கு முக்தா மேல் எந்த காதலும், அபிப்பிராயமும் இல்லை"



என்று சமாதானம் பேச வந்தவனோ, பட்டென்று அவரது முகத்திற்கு நேராகத் தன் மனதிலிருந்ததை வெளிப்படுத்தி விட்டான் மஹதன்.




அப்போது, தன் அறையிலிருந்து வந்த முக்தாவிற்கு இவன் பேசியதாக கேட்டு, இதயம் வெடித்துச் சிதறியது போலானது.



கட்டுக்கடங்காத ஆத்திரம் சூழ்ந்து கொள்ள, ரௌத்திரமாக அவன் முன்னால் போய் நின்றாள்.



அவள் வந்ததைக் கண்டு நீலகண்டனும், மஹதனும் திகைப்படைந்தனர்.



"என்னம்மோ அவ உன் கிட்ட வேலைப் பார்க்குறவ தான், அதுக்கு மேல எந்தப் பர்சனலும் இல்லைன்ற மாதிரி பேசின! இப்போ ஏன்டா அவளோட நடந்தப் பிரச்சினையில் என்னை வேண்டாம்னு சொல்ற?"



ஆங்காரமாக கேட்டவளை, உறுத்து விழித்த மஹதன், "நான் சொன்னதுக்கும், அவளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தேவையில்லாமல் அவளை இழுக்காத. நான் எப்பவோ காலையில் நடந்ததை மறந்துட்டேன். உங்க அப்பாவுக்குச் சொல்லித் தெளிவுபடுத்தத் தான் மறுபடியும் ஒரே ஒரு தடவை இதை விவரிச்சேன்.அவர் என்னமோ நீ என்னை நினைச்சு எப்பவும் ஏங்ககிட்டு இருக்கிறா மாதிரி சொல்லவும், தேவையில்லாத ஆசைகளை உருவாக்கிக்க வேண்டாமே என்று தான் அவர்கிட்ட என்னோட விருப்பத்தைச் சொன்னேன். உங்கிட்டயும் சொல்றேன். என்கிட்ட இருந்து தள்ளி இரு முக்தா"



எத்தனை நாட்கள் இதை இப்படியே விட்டு வைத்திருக்க முடியும் என்று, முக்தாவிடம் நேரடியாகத் தன் மனதிலிருந்ததைக் கூறி விட்டான் மஹதன்.



அதைக் கேட்டதும், ஏற்கனவே அதிர்ச்சி பாதி, ஆத்திரம் பாதியில் இருந்தவளோ, இப்போது முழுமையாக கோபத்தில் எரிந்து கொண்டிருந்தாள்.



"ஆமாம்.உன்னை நினைச்சு தினமும் உருகிக் கொண்டு தான் இருக்கேன். இப்போதும் அது மாறாது. அதை உனக்குப் புரிய வைக்கவும் முயற்சி பண்ணேன். ஆனால் நீ என்னைக் கண்டுக்கக் கூட மாட்டேங்குற!"



மகளை அடக்க வழியின்றி, ஸ்தம்பித்துப் போனார் நீலகண்டன்.



அவள் கேட்பதும் நியாயம் தானே? என்ற எண்ணமும் அவருக்கு இருந்தது அதனாலேயே அமைதியாக நின்றார்.



"இப்படி பேசாத முக்தா. உனக்குன்னு சுயமரியாதை இருக்கனும். நான் வேண்டாம்னு வெளிப்படையாகச் சொன்ன பிறகும் என்னதிது?" என்று தன்மையாகப் பேச முயற்சித்தான்.



"சுயமரியாதை! ஓஹோ!! காலையில் பார்த்தோமே ! அந்த மௌனாவா? அவ நடந்துக்கிட்டது உனக்குப் பிடிச்சுப் போச்சு போலயே? அவளை மாதிரி நான் மாறனுமா? " என்று உரக்கக் கத்தினாள் முக்தா.



தந்தையின் முன்னால் எவ்வளவோ கட்டுப்பாட்டில் இருந்தவள், கத்திக் கூச்சல் போடவும்,



"இப்படி கத்தாத முகி. உடம்புக்கு ஏதாவது வந்துடப் போகுது" என்று அந்த நிலையிலும் மகளின் மீது பரிவு காட்டினார் நீலகண்டன்.



"மன்னிச்சிருங்க அப்பா" என்று கூறிய முக்தாவிடம்,



"நான் தான் விசாரிச்சிட்டு இருந்தேன்ல! அதுக்குள்ள நீ ஏன் வந்துக் கத்தி உடம்பைக் கெடுத்துக்கிற? போய் அமைதியாக உட்கார்" என்று வலியுறுத்தினார்.



இவர்களது நாடகம் மஹதனுக்கு எரிச்சலைக் கொடுத்தது போலும்!



அவனும் எவ்வளவு தான் பொறுமையாகப் பேசுவான்! அதுவும் அந்தப் பெண்ணை இவனுடன் சேர்த்து வைத்துப் பேசிக் கொண்டு இருக்கிறாள்! தவறு அவள் மீது ஒப்புக் கொள்ளும் மனப்பான்மை கூட இல்லை எனும் போது, வேறென்ன தான் முக்தாவிடம் அவனால் எதிர்பார்க்க முடியும்?



நீள் சாய்விருக்கையில், அமர்ந்த முக்தா உஷ்ணப் பார்வையுடன் மஹதனைப் பார்த்தாள்.



"நீ சொல்லு மஹத்! ஏன் உனக்கு என் பொண்ணைப் பிடிக்கல?" என்று கேட்டார்.



"முதல்ல உங்கப் பொண்ணுக் கேட்டதுக்குப் பதில் சொல்லிடறேன் அங்கிள். அதில் உங்களுக்கும் தெளிவு கிடைக்கும் " என்று முக்தாவிடம் திரும்பி,



"நீ மௌனாவாகவோ, இல்லை வேற யார் மாதிரியும் மாறனும்னு நான் சொல்லல. எனக்கு உன் மேல எந்த காதலும் இல்லை. கல்யாணம் செய்துக்கத் தோணல.அதைத் தான் சொன்னேன்.அந்தப் பிரச்சினை நடக்கிறதுக்கு முன்னாடியே இது தான் என் முடிவாக இருந்துச்சு.இப்போதும் அதே முடிவு தான். இதில் அந்தப் பொண்ணைச் சும்மா, சும்மா உள்ளே இழுக்காத முக்தா"



"அப்போ நீ அந்த மௌனாவை லவ் பண்றியா?"



அவளால் மௌனாவை இழுக்காமல் இருக்கவும் முடியவில்லை. மஹதனுக்கோ பொறுமை எல்லை கடந்திருந்தது.



"உன் கேள்விக்கும், உன்னோட அப்பாவோட கேள்விக்கும் பதில் கிடைச்சிடுச்சு. அத்தோடு இதெல்லாம் முடிஞ்சு போச்சு. வேற பெண்ணை நான் லவ் பண்றதோ, இல்லையோ அது உங்க கவலை இல்லைன்னு நினைக்கிறேன்"



என்று எழுந்தவன்,



"இனிமேலும் உங்கப் பொண்ணுக்காக எங்கிட்ட நியாயம் கேட்டு வராதீங்க அங்கிள்"



நீலகண்டனிடம் அர்த்தத்துடன் கூறி விருட்டென்று வெளியேறி விட்டான் மஹதன்.



சாதாரணமாக நடந்தேறிய விஷயம், அதை எவ்வளவு முடியுமோ, அவ்வளவு ஊதிப் பெரிதாக்கி வைத்து விட்டாள் முக்தா.



இப்போது மஹதனிடம் கேட்ட கேள்விகளை முற்றும் தவிர்த்து விட்டு, சமரசம் ஆகி இருந்தாலே அவனும் இவளுடனான திருமணத்தை நினைத்துப் பார்த்திருப்பான். ஆனால், முக்தாவே தனக்குக் கேடு வரவழைத்துக் கொண்டாள்.



மஹதனும் பொட்டில் அடித்தாற் போல், அவளை மறுத்து விட்டான்.



"அவன் அந்த மௌனாவைக் கல்யாணம் செய்யப் போறானா அப்பா?"



இந்தக் கேள்வியில், ஒட்டு மொத்தமாக செயலற்றுப் போனது போல் உறைந்து நின்றார் நீலகண்டன்.



அவர் அடுத்து செய்ய நினைத்துக் காரியம் தான் உச்சபட்ச வேண்டாத வேலை!



மணி எட்டு என காட்டவும்,

"வீட்டுக்குக் கால் செய்துட்டு வர்றேன் அகி" என்று செல்பேசியில் தன் தாய்க்கு அழைத்தாள்.



"ஹலோ மௌனா"



அன்னபூரணியின் குரலில் தவிப்பும், உற்சாகமும் ஒருங்கே இருந்தது.



"அம்மா!" இவளும் குதூகலத்துடன் பேசினாள்.



"காலையில் தான் பேசினோம் ஆனாலும் என்னோட பொண்ணை ரொம்ப மிஸ் பண்றேன்டா" என்ற பாசமிகு தாயை நினைத்துப் பெருமிதம் கொண்டாள் மகள்.



"தானும் உங்களை ரொம்பவே மிஸ் பண்றேன்மா"



"சரி டா. வேலைக்குப் போன அனுபவத்தைச் சொல்லு?"



முதல் நாள் இரவே வேலைக்குச் செல்வதைப் பற்றி தாயிடமும், தந்தையிடமும் கூறி இருந்தாள் மௌனா.



அவர்கள் இருவரும் மகளுக்கு ஆசி வழங்கினர்.



அதை இப்போது பகிர்ந்து கொள்ளத் தான் அழைத்து இருந்தாள்.



"சூப்பர் அனுபவம் அம்மா!"



அவளது கை அனிச்சையாக நெற்றியிலிருந்த பிளாஸ்திரியைத் தடவிக் கொண்டது.



தொடர்ந்து, "வேலையும், பிடிச்சிருக்கு. அந்த இடமும் ரொம்ப பிடிச்சிருக்கும்மா" என்று மகிழ்ச்சியுடன் கூறினாள்.



எங்கே இந்த வேலை மகளுக்கு அமையாதோ! என்று பரிதவித்திருந்தவர் மௌனாவின் பதிலில் சற்றே நிம்மதி அடைந்தார்.



"உங்க முதலாளியை மீட் பண்ணுனியா?"



அன்னபூரணியின் கேள்வியோ மௌனாவிற்கு சிரிப்பை வரவழைத்தது.



தன் முதலாளியைச் சந்தித்த தருணத்தை நினைவு கூர்ந்து விட்டாள் போலும்!



"பார்த்தேன் அம்மா. ரொம்ப நல்ல டைப். தன்னிடம் வேலை பார்க்கிறவங்களுக்கு என்னப் பிரச்சினை என்றாலும் தயங்காமல் உதவி செய்வார்"



தாயிடம் காட்டிக் கொள்ளாதவாறு, சிரிக்க மிகவும் பிரயத்தனப்பட்டாள் மௌனா.



"நல்ல முதலாளி போலவே! இப்போ தான் நிம்மதியாக இருக்கு மௌனா"



அவர் அகமகிழ்ந்து போகவும்,



"நீங்களும், அப்பாவும் இனிமேல் என் வேலையைப் பற்றி கவலையேப்படாதீங்க அம்மா" என்று ஆறுதலாக கூறினாள்.



"அப்பா எங்கே? அவர்கிட்டயும் பேசனுமே?"



"கொஞ்ச நேரம் முன்னாடி தான் வெளியே கிளம்பினார். வர லேட் ஆகும். காலையில் சீக்கிரமாக உனக்குக் கால் செய்து பேச சொல்றேன்"



"சரிங்க அம்மா"



"அகதா என்னப் பண்றா? ரெண்டு பேரும் சாப்பிட்டீங்களா?" என்று விசாரித்தார் அன்னபூரணி.



" அவளும் நானும் இப்போ தான் சமையலை முடிச்சோம் அம்மா. சாப்பிடனும்" என்கவும்,



"அப்படியா? சரிடா. போய் சாப்பிடு.நான் இன்னொரு நாள் கால் பண்றேன்" என்று அவர் அழைப்பை வைக்கவும், அகதாவிடம் சென்றாள் மௌனா.



"அம்மா என்ன சொன்னாங்க?" என உணவுப் பாத்திரங்களை அடுக்கினாள் அகதா.



"வேலையைப் பற்றி விசாரிச்சாங்க. உன்னைப் பத்திக் கேட்டுங்க" என்று பேசிக் கொண்டே உண்டு முடித்தனர்.



மகனுக்காக காத்திருந்த கௌசல்யாவோ, அவன் உள்ளே வந்ததுமே,



" நீலகண்டன் சார் என்ன தான் சொன்னார் மஹதா?" என்று கேட்டார்.



"அவரும், அவர் பொண்ணும் பேசினதைச் சொல்றேன்மா"



என்று மொத்தமாக கொட்டினான் மஹதன்.



கௌசல்யாவிற்கோ முகம் அஷ்ட கோணலானது.




"வெறும் ஒரே நாளில் பார்த்தப் பெண்ணைப் பற்றி என்னவெல்லாம் பேசி இருக்காங்க! நீ சொன்னது தான் சரி மஹதா. அதுக்கப்புறம் முக்தாவோட தலையெழுத்து. நீ வந்து சாப்பிடு" என்று அவரும் நிம்மதியே அடைந்தார்.



"இவ்வளவு நடந்திருக்கு அந்த மௌனா ஆஃபீஸில் சாயங்காலம் வரை வேலைப் பார்த்துட்டுத் தான் போயிருக்கா. அப்போ நாளைக்கும் வேலைக்கு வந்துருவா போலிருக்கு"



அவனுக்குத் தன்னைப் பற்றிய ஆச்சரியங்களை ஆராயத் தந்து விட்டு, நிம்மதியாக நித்திரை கொண்டிருந்தாள் மௌனா.



மறுநாள் காலையோ, அவளுக்குப் பெரும் கலவரத்தையும், தலைவலியையும் கொடுக்கத் தயாராகி இருந்தது.


- தொடரும்
 
அத்தியாயம் 4


மௌனா எழுந்து தயாராவதற்குள் அகதா கிளம்பி இருந்தாள்.



"ஏய் அகி! இவ்ளோ சீக்கிரம் கிளம்புற?"

என்று வியப்படைந்தாள் மௌனா.



"ஆமாம் மௌனா. இன்றைக்குச் சீக்கிரம் வர சொல்லிட்டாங்க. உனக்கு ஃப்ளாஸ்க்ல டீ இருக்கு. காலைச் சாப்பாடு ரெடி. நான் போய்ட்டு வர்றேன்" என்று கூறிவிட்டு சென்றாள்.



அகதா ஒரு மென்பொருள் பொறியாளர். அவளுக்கு முக்கியமான ப்ராஜெக்ட் வேலை இருந்ததால், காலை விரைவாகவே எழுந்து அலுவலகம் சென்று விட்டாள்.



தேநீரைச் சுவைத்தவள், நேற்றைய பரபரப்பு இன்று இல்லாது, மெதுவாகவே கிளம்பினாள்.



குளிக்கச் செல்வதற்கு முன்னர் நெற்றிக் காலத்தைப் பரிசோதித்துப் பார்த்தாள் மௌனா.



பிரித்துப் பார்த்தவுடன் காயத்தில் இரத்தக் கசிவு தென்படாததால், பிளாஸ்திரியைக் குப்பையில் போட்டு விட்டாள்.



ஆனால் இலேசாகத் தழும்பு இருந்தது. அதைப் பார்க்கவும்,

"முக்தா உன்னோட கிஃப்ட் தான் இது!" என்று சொல்லிக் குளித்து முடித்தாள்.





இங்கே, மஹதனோ , "நான் பேசியது எதுவுமே தப்பு இல்லை அம்மா. முக்தாவுக்கும், அவளோட அப்பாவுக்கும் சரியாகப் புரிய வச்சுட்டேன். எந்த கனவும் காணக் கூடாது தான? முக்தாவோ திரும்பத் திரும்ப மௌனாவை லவ் பண்றியா? கல்யாணம் பண்ணப் போறியா? என்று கேட்டு இம்சைப் பண்ணினா! நான் ரொம்ப பொறுமைசாலி கிடையாதே அம்மா! ஒரு தடவை சொன்னால் சொன்னது தான்" என்று காரசாரமாக விவாதித்துக் கொண்டு இருந்தான்.



கௌசல்யா, "சரி தான் மஹதா! ஆனால் நீ ஏன் கடுமையாக நடந்துக்கிற? நீலகண்டன் சார் உன் அப்பாவோட பிஸினஸ் பார்ட்னர். அப்படி இருக்கும் போது, அவங்க ரெண்டு பேருக்கும் மோதல் ஏற்படுமே! அதை நினைச்சுப் பார்த்தியா?" என்று வருத்தத்துடன் கூறினார்.



அவருக்கும் முக்தாவின் நடவடிக்கை மகிழ்ச்சியைத் தரவில்லை தான்! அதற்காக நீலகண்டனிடம் தங்கள் மகன் நடந்து கொண்ட முறை சரியல்ல என்று அவருக்குத் தோன்றியது.



நீலகண்டன் தங்கள் குடும்பத்திற்கு நல்ல நண்பரும் கூட. நேற்றே கணவனிடம் இது பற்றி கூறி இருந்தார். இன்று மதியம் திருமூர்த்தியும் தாயகம் திரும்ப இருக்கிறார்.



அவருக்கும் இதில் அதிருப்தி இருப்பதில் ஆச்சரியம் இல்லை.



ஏனெனில், நீலகண்டனும், அவரும் நல்ல நண்பர்கள். தொழில் பாதிக்காத வகையில், தங்களுக்குள் எந்தவித பூசல்களோ இல்லாமல், சீராக நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.



அப்படியிருக்கும் போது, தங்களது பிள்ளைகளால் இருவருக்குமே தர்ம சங்கட நிலை ஏற்படும் என்று தானே கணவர் நினைப்பார் என கௌசல்யாவிற்குத் தோன்றியது.



அதை மஹதனிடம் சொல்லவும்,

"முக்தாவோட முட்டாள்தனத்திற்கு நான் பலியாக விரும்பல அம்மா. நீலகண்டன் அங்கிள் கிட்ட சொல்லிட்டேன். இனி அவராச்சு, அவரோட பொண்ணாச்சு. நான் ஆஃபீஸூக்குப் போய்ட்டு வர்றேன்" என்று அவன் சென்று விட, கௌசல்யாவிற்கோ கணவனின் நிலையை அறிந்து கொள்ள மனம் திண்டாடியது.



மௌனா என்னும் அப்பெண்ணைப் பாராட்டியதும் கௌசல்யா தான்.ஏனெனில் அவளது செய்கைப் பாராட்டத்தக்கது தான். ஆனால், குடும்பம், நண்பர்கள் மற்றும் தொழில் என்று வரும் போது, சுயநலத்தின் பிடியில் சிக்கிக் கொள்வது இயற்கையே!



கௌசல்யா இப்போது அந்த நிலையில் தான் இருக்கிறார்.விஷயம் தீவிரமாகி விடுவதற்குள் அனைத்தையும் சீர்படுத்த வேண்டும் என்று நினைத்தார்.



மௌனாவை இனியும் வேலைக்கு வைத்திருக்க வேண்டாம் என்று மகனிடம் வலியுறுத்த எண்ணினார்.



அவளுக்குமே இவர்களால் ஆபத்து வருவதற்கு வாய்ப்புள்ளது தானே?



இவர் இங்கு திட்டங்கள் தீட்டிக் கொண்டு இருக்க, மஹதனின் தந்தை திருமூர்த்தியோ முந்தைய நாள் விஷயம் கேள்விப்பட்டதிலிருந்து, இன்னும் நண்பன் தனக்கு அழைக்கவில்லையே? என்று துணுக்குற்றார்.



அலுவலக விஷயமாக வெளிநாடு சென்றிருந்தவர், வேலையை முடிக்கும் தருவாயில்,

மனைவித் தனக்கு அழைத்துப் பேசியதைக் கேட்டு, திகைத்திருந்தார் திருமூர்த்தி.



நீலகண்டனும், அவரது மகளும் சாமானியர்கள் அல்ல.இவ்விஷயத்தை அப்படியே விட்டு விடும் அளவிற்குப் பெருந்தன்மையானவர்களும் கிடையாது.



தான் இந்தியா சென்று சேர்ந்ததும், ஒரு பெரிய பூகம்பமே வெடிக்கப் போகிறது என்று மட்டும் அவருக்கு உறுதியாக தெரிந்தது.



வீடு செல்லும் நேரம் வரைக்கும், நீலகண்டனையும், முக்தாவையும் எப்படியெல்லாம் சமாதானப்படுத்தலாம் என்று மனதிற்குள் ஒத்திகைப் பார்த்துக் கொண்டிருந்தார் திருமூர்த்தி.



தனக்கு இப்படியொரு சிக்கலை ஏற்படுத்தி விட்டானே! என்று மகன் மீது கோபமும், வருத்தமும் ஏற்பட்டது.



தன் பணியில் இருந்த மௌனாவிற்கோ, ஒரு அசௌகரியம் தோன்றியது. அது எதனால் என்று அவளால் கண்டறிய இயலவில்லை.



அப்போது மஹதன் அலுவலகத்தை அடைந்திருந்தான்.



வழக்கமான நேரத்தை விட விரைவாக வந்தவனைக் கண்ட காவலாளி சலாமிட்டுக் கொண்டே, அவன் கார் உள்ளே செல்ல அனுமதித்தான்.



அசௌகரிய உணர்வையும் தாண்டி, வேலையில் முனைப்பாக இருந்தாள் மௌனா.



அவனைப் பற்றி நினைத்துக் கொண்டு இருக்கும் போதே, அங்கு வந்தான் மஹதன்.



'நினைச்சதும் வந்து நிக்குறான்!' பெருமூச்செறிந்தவாறே, நிமிர்ந்து அவனைப் பார்த்து,

"குட் மார்னிங் சார்!" என்று புன்னகைத்தாள் மௌனா.



அவன் குளிர் கண்ணாடி எதையும் அணிந்திருக்கவில்லை. அதனால், லேசர் பார்வை கொண்டு, மௌனாவின் நெற்றிக் காயத்தை ஆராய்ந்தான் மஹதன்.



தனக்குப் பதில் வணக்கம் சொல்லாமல், நெற்றியைக் கூரிய விழிகளால் வருடியவனைத் திகைத்து நோக்கினாள் பெண்ணவள்.



அவள் திகைப்பில், தன் இதழ்களில் மென் புன்னகையைப் படர விட்டவன்,

"பிளாஸ்திரியை எடுத்துட்ட, அதுதான் காயம் சரி ஆகிருச்சு போல என்று பார்த்தேன். வேறொன்னும் இல்லை" என தன் பார்வையின் நோக்கத்திற்கு விளக்கம் கொடுத்தான் மஹதன்.



திகைப்பைச் சமாளித்துக் கொண்டவள்,

"ஓஹ்! நன்றி சார்" என்று சிக்கித் திணறினாள் மௌனா.



"குட் மார்னிங்" கூறி விட்டு, உள்ளே செல்ல, திகைப்பில் பெரிதாக விரிந்தது அவளது விலோசனங்கள்.



மௌனாவின் திகைப்பு நிறைந்தப் பாவனையையும், ஐந்து நிமிடத்திற்கு முன்னர் உள்ளே போன மஹதனையும் கண்டு கொண்ட நீலகண்டனோ, இறுகிய முகத்தை சிரமப்பட்டு மாற்றிக் கொண்டு, மௌனாவிடம் வந்தார்.



அவர் உள்ளே வந்ததுமே, மஹதனுக்குச் செய்தி சென்று விட்டது.



வாயிற்காவலாளியிடம் , அவன் தான் மறுபடியும் முக்தாவோ, நீலகண்டனோ அலுவலகத்திற்குள் நுழைந்தால், தனக்கு உடனடியாகத் தெரிவிக்குமாறு கட்டளை இட்டிருந்தான்.



அதேபோல் செய்தி வந்து சேர்ந்ததும், முக்தாவின் வருகை அன்று நடந்ததைப் போல், எந்த அசம்பாவிதமும் நடந்தேறக் கூடாது என மௌனாவிடம் விரைந்தான்.



அதற்குள்,

" வணக்கம்மா.உன் பேர் தான மௌனா?" என்று அவளிடம் தன்மையாக வினவினார் நீலகண்டன்.



விலுக்கென்று நிமிர்ந்து பார்த்தவள், இந்த ஊரில் தன்னைப் பற்றித் தெரிந்தவர்கள் மிகக் குறைவே! அப்படி இருக்க, இவர் தன் பெயரை இத்தனை உரிமையாகக் கூறி, அழைக்கிறாரே? என ஸ்தம்பித்தாள் மௌனா.



"சொல்லும்மா?" என்று மறுபடியும் கேட்க,



"ஆமாம் சார். என்னோட பேர் தான் மௌனா"



அதற்குப் பிறகு என்ன கூறுவதென்று தெரியாமல் நின்றாள்.



நீலகண்டனே, "நான் முக்தாவோட அப்பா ம்மா. அவ உங்கிட்ட நேற்று ரொம்ப முரட்டுத்தனமாக

நடந்துக்கிட்டா. அதுக்கு என்னோட வருத்தத்தைத் தெரிவிச்சுக்கிறேன்" என்று உண்மையாகவே வருந்துபவர் போல பேசினார்.



அவர் வயதின் பொருட்டு,

"பரவாயில்லை சார்" என்று பெருந்தன்மையுடன் கூறினாள்.



அந்த இடத்தை அடைந்திருந்த மஹதனோ,

"அங்கிள்!" நீலகண்டனைச் சற்று உரக்க அழைத்தான்.



தூக்கி வாரிப் போட்டவாறே திரும்பினர் இருவரும்.



முக்கியமானதைப் பேசி முடிக்கும் முன்பே, இடையூறு செய்த மஹதனைப் பார்த்து முகம் சுருங்கினார் நீலகண்டன்.



'அப்பாடா!' என ஆசுவாசமடைந்தாள் மௌனா.



"வா மஹத்" என்று அவனது அலுவலகத்திலேயே மஹதனை வரவேற்றார் என்றால் அது நகைப்பிற்குரிய விஷயம் தானே!



"வந்துட்டேனே அங்கிள்.நீங்க வந்த காரணம்?" என்று புருவம் உயர்த்திக் கேட்டான் மஹதன்.



நீலகண்டனின் அசட்டுப் பார்வையும், வியர்த்த முகமும் சொல்லாதவற்றையா அவரது வாய் கூறப் போகிறது?



இருந்தாலும் பதில் வேண்டி நின்றான் மஹதன்.



'நேத்துப் பொண்ணு, இன்றைக்கு அப்பா!' என்று நொந்து கொண்டாள் மௌனா.



அவளது வேலை தானே பாதிக்கிறது!



"மஹத்! இந்தப் பெண்ணைப் பார்த்துட்டு மன்னிப்புக் கேட்கலாம்னு வந்தேன். நீயும் நேத்து வீட்ல மௌனாவைப் பற்றி சொன்னியே! என்ன ஒரு தைரியமான பொண்ணு! வாழ்த்திட்டும் போகலாம்ன்னு வந்தேன்" என்று ஒருவாறு சமாளித்து முடித்தார் நீலகண்டன்.



அவர் சொன்னதைக் கேட்ட மௌனாவோ, 'என்னைப் பற்றி ஊரில் உள்ள எல்லாரிடமும் அள்ளித் தெளித்து இருக்கிறார்' என்று உள்ளுக்குள் புகைந்தாள்.



"சொல்லிட்டீங்களா? இனிமேல் தான் சொல்லனுமா?"



அவன் கேட்டதும், மௌனாவை ஒரு கணம் பார்த்தவர்,

"சொல்லிட்டேன் மஹத்! அந்தப் பெண்ணுக்கும் ரொம்ப நல்ல மனசு. உடனே மன்னிச்சுட்டா"



வார்த்தைக்கு வார்த்தை தன்னைப் புகழ்ந்து பேசிக் கொண்டு இருக்கும் இவரைப் பார்க்கையில் மௌனாவிற்குள் கிலி பரவியது.



தான் ஏதாவது பாராட்டும் வகையில் செய்திருந்தால் கூட, இப்படி புகழ்வதில் நியாயம் உள்ளது. அதுவும் இல்லாமல், இவருடைய மகளின் நிலைக்குத் தெரிந்தோ, தெரியாமலோ நான் காரணமாகி விட்டேன். அது நன்றாகவே தெரிந்திருந்தவர் தன்னை வானளவிற்குப் புகழ்ந்தால், ஐயம் ஏற்படும் தானே!



எதுவுமே சரியில்லை என்று அவனுக்குத் தோன்றிற்று.



நீலகண்டன் வந்த நோக்கமும் இதுவாக இருக்காது. எனவே, தந்தையும், மகளும் இவளைப் பழிவாங்க நினைக்கிறார்களோ? என்று தானே மஹதனுக்குச் சந்தேகம் எழும்.



அதனால்,"அப்பறம் என்ன? கிளம்ப வேண்டியது தான அங்கிள்?"



அவரை அங்கிருந்து அப்புறப்படுத்துவதில் முனைந்தான் மஹதன்.



"இதோ கிளம்பிட்டேன் மஹத். மௌனா உன்னோட அப்பா, அம்மாவை விசாரிச்சதாக சொல்லு ம்மா. நான் வர்றேன்" என்று அவளது குடும்பத்தை அவளுக்கே ஞாபகப்படுத்தி விட்டுப் போனார்.



உறைந்து போன மௌனா,

"சார் உங்க கூட தனியாகப் பேசனும்" என்று மஹதனிடம் கேட்டாள்.



"என் ஆஃபீஸ் ரூமுக்கு வா"



என்றவனைத் தொடர்ந்தாள்.



உள்ளே தனக்கு எதிராக அமர்ந்திருந்த மௌனாவை,

"என்ன?" என்று ஒற்றை வார்த்தையில் கேட்டான் மஹதன்.



"சார்! நான் வேலைப் பார்க்கத் தான் வந்தேன். நேற்று நடந்தது அப்போவே முடிஞ்சு போச்சு. அவங்களுக்கு என் மேல இவ்ளோ வன்மம் இருக்கக் கூடாது. அதுவும் இல்லாம நீங்க வேற என்னைப் பத்தி அவர்கிட்ட ஏதோ சொல்லி இருக்கீங்க! இப்போ தேவையில்லாமல் என்னோட குடும்பத்தை விசாரிச்சுட்டுப் போறார்.உங்களை யார் சார் என்னைப் பற்றி அவர்கிட்ட சொல்லச் சொன்னது?"



இப்போதும் கூட துளி பயம் இல்லாமல் தன்னை நேருக்கு நேராக நின்று கேள்வி கேட்கும் இவளது துணிச்சலை மஹதனால் ரசிக்காமலும், பாராட்டாமல் இருக்க முடியுமா என்ன?



ஆனாலும் விஷயம் தீவிரமானது என்பதால் அவளை அலைக்கழிக்கச் செய்யாமல்,

"அப்பாவையும் , பொண்ணையும் சமாதானப்படுத்தப் போனா முக்தா நான் உன்னைக் காதலிக்கிறேன்னு நினைச்சுட்டு, வாய்க்கு வந்ததைச் சொல்லிக் கத்துறா! உன்னைப் பற்றிப் பேசனும்னு எனக்கு எந்த உள் நோக்கமும் இல்லை. அவளுக்குப் புரியுற மாதிரி சொல்லவும் ட்ரை பண்ணேன்.முடியவே இல்லை. இதில் நானா ஒன்னும் உன்னை எங்கள் பேச்சில் இழுக்கல!"

- தொடரும்
 
அத்தியாயம் 5

கிட்டத்தட்ட ஆவேசமான குரலில் தான் பேசினான் மஹதன்.

முக்தாவும், இவளும் இந்த விஷயத்தில் ஒரே மாதிரியாக இருப்பது மஹதனுக்கு எரிச்சலையே கொடுத்தது.

ஆடிப் போய் உட்கார்ந்திருந்த மௌனாவோ, அவனது வார்த்தைகள் தந்த வீரியத்தில் பேச்சற்று, தளர்ந்திருந்தாள்.

மௌனாவின் நிலையைக் கண்ணுற்ற மஹதன்,
"தண்ணீர் குடி" என்று தம்ளரை நீட்டினான்.

அவனது குரலில் தான் நிகழ்காலம் புரிந்தது மௌனாவிற்கு.

கண்கள் தன் ஒளியை இழந்தது போல், வாடிக் கிடந்தவள்,
"வேண்டாம் சார். அவங்களுக்கு என்ன பதில் சொன்னீங்க?" என்று மட்டும் வினவினாள்.

தம்ளரை எடுத்த இடத்தில் வைத்தவன்,
"நான் உன்னைக் காதலிக்கவும் இல்லை, கல்யாணம் பண்ணிக்கவும் ஆசைப்படலைன்னு தெளிவாக சொல்லிட்டேன்" என்று விளக்கமளித்தான் மஹதன்.

தான் பயந்தது போல் ஒன்றும் நடக்கவில்லை என்று அவனை ஏறிட்டவள்,
"நான் இங்கே வேலையைப் பார்க்க வந்தா, அதைத் தவிர எல்லாமே நடக்குது. இப்படி பிரஷரோட இந்த வேலையை நான் பார்க்கனுமா சார்? ரிசைன் பண்ணலாம்னு முடிவெடுத்து இருக்கேன்"

பிரம்மிப்பின் மறு பெயர் தான் மௌனாவோ! அப்படித் தான் எண்ணினான் மஹதன்.

"எனக்கும், உனக்கும் இடையில் எந்த பிரச்சனையும் இல்லை. அவங்க என்னோட ஃபேமிலி மெம்பர்ஸ் கூட இல்லை. அப்படி இருக்கும் போது நீ வேலையை விட்றதுங்கிறது நல்ல விஷயமாகத் தோனல" என்று கூறினான் மஹதன்.

"இல்லை சார். இனிமேல் நீங்களும், அவங்களும் சேர மாட்டீங்கன்னு இல்லையே! முக்தாவும், அவங்களோட அப்பாவும் பேசியதை வச்சுப் பார்க்கும் போது, உங்களை நல்லா தெரிஞ்சவங்களா இருக்காங்க. அவங்களை எதிர்த்து எனக்கு உதவி செய்து இருக்கீங்க. இப்போ வரைக்கும் வந்திருக்கிற இந்தப் பிரச்சினை, இன்னும் சில நாட்களில் தொடர வாய்ப்பு நிறையவே இருக்கு சார். அப்போதும் நீங்க எனக்குச் சப்போர்ட் பண்ணுவீங்க என்று உறுதியாகச் சொல்ல முடியாது இல்லையா!"

தர்க்க ரீதியாக பேசினாள் மௌனா.

இந்த சம்பவத்தைத் தனக்குச் சாதகமாக்கிக் கொள்ள நிறைய வழிகள் இருந்தும், வேலையை விட்டு நிற்கிறேன் என்பவளது சுயமரியாதையை இனிமேலும் கூறு போட்டு, ஆராய்ந்துப் பார்க்க மஹதனுக்கு மனம் வரவில்லை.

"சரி. போய் இராஜினாமா கடிதத்தைத் தயார் செய்து கொண்டு வா" என்று சொன்னவுடன் தான் நிம்மதியாக மூச்சு விட்டாள் மௌனா.

"நன்றி சார்" என வெளியேறியவள், இராஜினாமா கடிதத்தைத் தட்டச்சு செய்ய ஆரம்பித்தாள்.

அந்த தங்கும் விடுதியில், மௌனா மட்டும் தான் தற்போது வேலையில் இருக்கிறாள்.

சேர்ந்த முதல் நாளே இரத்தக் காயம், இரண்டாம் நாள் வேலையை இராஜினாமா செய்யப் போகிறோம்! என்ன ஒரு புதுவிதமான அனுபவம் இது! என்று கடிதத்தை எடுத்துக் கொண்டு, மீண்டும் மஹதனைச் சந்தித்தாள் மௌனா.

"உன்னோட வேலையை நீ எப்படி செய்ற என்று கூட நான் பார்க்கல. சம்பளமும் வாங்காமல், இரண்டாவது நாளே ரிசைன் பண்ற! இதுக்கு ஒரு வகையில் காரணம் நான் தான? என்னோட வேற ஹோட்டலில் வேலைப் பார்க்க உனக்குச் சம்மதமா?"

அவளை விட்டு விடக் கூடாது என மனம் அலை பாய்ந்தது. அதற்கு அவளுடைய நேர்மையும், துணிச்சலும் தான் முதலாக இருந்தது.

உடனே மறுத்து விட்டாள் மௌனா.

"உங்க சம்பந்தப்பட்ட எதுவுமே எனக்கு வேண்டாம் சார்.நான் இங்க வேலைக்குச் சேரலாம்னு எடுத்த முடிவை நினைத்து வருத்தப்பட்றேன்.என்னோட முடிவு சரியாக இல்லைன்னு நினைக்கிறது இது தான் எனக்கு முதல் தடவையும் கூட சார்" என்றதும்,

எங்கிருந்து தான் சினம் துளிர்த்ததோ மஹதனுக்கு,

சாதாரணமாக மௌனா அந்த வேலையும் வேண்டாமென்று மறுத்திருந்தால் கூட, மௌனாவை விட்டிருப்பானோ?

"ஓஹோ! என் சம்பந்தப்பட்டது எதுவுமே உனக்கு வேண்டாம்ல!"

அவள் கூறியது புரியாதவன் போல் கேட்டான்.

"வேண்டாம் சார்" என்று தன் மறுப்பைத் தெளிவாகத் தெரிவித்தாள் மௌனா.

"இந்தா உன்னோட சர்டிஃபிகேட்ஸ். எடுத்துட்டுப் போய்ட்டே இரு" என அவளது இராஜினாமா கடிதத்தைப் பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டான் மஹதன்.

திரும்பிப் பார்க்காமல் நடையைக் கட்டினாள் மௌனா.

உடனே தன் காரியதரிசிக்கு அழைத்து,
"உடனே நம்ம ஹோட்டலுக்குப் புதுசா ஒரு ஃப்ரண்ட் ஆஃபீஸ் ரிசப்ஷனிஸ்ட் வேணும்னுப் நியூஸ் பேப்பரில் விளம்பரம் கொடுங்கள்" என்று கூறி விட்டு, மௌனாவின் இராஜினாமா கடிதத்தை வெறித்துப் பார்க்கலானான் மஹதன்.

அங்கே இருந்து வெளி வந்ததும், சீராக மூச்சு விட்டுக் கொண்ட மௌனா, இந்நேரம் அகதாவும் வீட்டில் இருக்க மாட்டாள் எனவே,
வேறு எங்காவது செல்ல நினைத்தாள் மௌனா.

பூங்கா ஒன்று தென்படவும் அங்கு அமர்ந்து கொண்டு, செல்பேசியில் எப்போதும் சேமித்து வைத்திருக்கும் கார்ட்டூன்களைப் பார்க்க ஆரம்பித்து விட்டாள் மௌனா.

மாலை முகம் கடுக்க வீட்டிற்கு வந்த கணவனைப் பார்த்ததும் கௌசல்யாவின் வதனமும் கலக்கத்தைத் தத்தெடுத்துக் கொண்டது.

'நான் ஒரு முட்டாள்! உடனே கால் செய்து சொன்னேன் பாரு' என்று தன்னைத் திட்டிக் கொண்டார் கௌசல்யா.

"ஏங்க?" என்று திருமூர்த்தியை மெலிதான குரலில் அழைத்துப் பார்த்தார் மனைவி.

அவரோ, "ம்ம்… என்ன கௌசி இது?"

அவரது வார்த்தைகளில் ஆதங்கம் மட்டுமே நிறைந்திருந்தது.

வந்தவுடனேயே கணவர் இப்படி ஆரம்பிப்பார் என்று கௌசல்யா எதிர்பார்க்கவில்லை.

"அவங்க தான் தவறா நடந்துக்கிட்டாங்க. நம்மப் பையன் மேல எந்தத் தப்பும் இல்லைங்க" என்று மகனுக்காகப் பரிந்து பேசினார்.

"தப்பு யார் மேலேயோ இருந்துட்டுப் போகட்டும் கௌசி. நீலகண்டன் கிட்ட அப்படி பேசினது முறையே இல்லை. நான் ஊர்ல இருந்திருந்தால் கூட பரவாயில்லை.விஷயம் கேள்விப்பட்டதும், தலையைப் பிய்க்காத குறையாக கிளம்பி வர்றேன். மஹதனுக்கு ஏன் இந்த வேலை?" என்று மகனைக் குறை கூறினார் திருமூர்த்தி.

இடைவெளி விட்டு,
"அவன் என்னைப் பற்றி என்ன நினைப்பான்? பார்ட்னர்ஸிப்பை மறந்து விட வேண்டியது தான்!"
என்று ஏமாற்றமாக கூறினார்.

அவருக்குச் சரி, தப்பு பற்றிய கவலை எதற்கு? நண்பனுடைய எதிர் வேலை என்னவாக இருக்கும் என்று தான் பரிதவித்தார் திருமூர்த்தி.

இவரிடம் மறைமுகமாக தன் மகளுக்கு மஹதனைச் திருமணம் செய்து, வைக்க கேட்டுக் கொண்டு இருந்தார் நீலகண்டன்.

அதைப் பற்றிய முடிவு எடுப்பதற்குள், இந்த நிகழ்வுச் சம்மட்டியால் அடித்தது போல், அவருக்கு அதிர்ச்சியைக் காண்பித்து விட்டது.

" மஹதன் வந்ததும், அவன் கிட்ட, அந்தப் பொண்ணை உடனே வேலையில் இருந்து நீக்கச் சொல்லு கௌசி" என்று தீர்க்கமாக கூறினார் திருமூர்த்தி.

"அதுக்கு அவசியமே இல்லை அப்பா. அவ இராஜினாமா பண்ணிட்டுப் போய்ட்டா"

என்றவாறே உள்ளே வந்தான் மஹதன்.

வீட்டிற்குப் போவதற்குள் மௌனாவிற்குத் தந்தையிடம் பேச மனம் துடித்தது.

அகதா வர இன்னும் ஒரு மணி நேரம் இருக்கிறது என்பதால், நேரத்தை விரயம் செய்யாமல், உடனே அவளது தந்தை சுதாகருக்கு அழைத்து விட்டாள்.

இதே சமயத்தில்,
" உங்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை அப்பா?" என்று நீலகண்டனிடம் பொங்கிக் கொண்டிருந்தாள் முக்தா.

மௌனாவைச் சந்தித்து விட்டு வந்ததும், அவசரக் குடுக்கையாக மகளிடம் அனைத்தையும் ஒப்புவித்திருந்தார்.

அதற்குத் தான் முக்தா இப்போது கோபத்தில் அர்ச்சித்துக் கொண்டு இருக்கிறாள்.

"நிதானமாகக் கேளு முக்தா" என மகளுக்கு வலியுறுத்தினார் நீலகண்டன்.

"நிதானமாகக் கேட்கிற மாதிரியாக நீங்கப் பண்ணிட்டு வந்து இருக்கீங்க? என்னைப் பொறுமையாக இருக்கச் சொல்லிட்டு, அவளுக்கு மறைமுகமாக பயத்தை உண்டு பண்ணிட்டு வந்திருக்கீங்க" என தந்தையின் தவறைச் சுட்டிக் காட்டினாள் முக்தா.

"நீ தான் எங்கிட்ட அப்படி புலம்புனியே? மஹதன் அவளைக் கல்யாணம் செய்துக்கப் போறானா என்று கேட்டியே! அதுக்கப்புறமும் என்னால சும்மா இருக்க முடியல முகி!" என்று ஆற்றாமையுடன் கூறினார் நீலகண்டன்.

"அதுக்கு இப்படியா பண்ணுவீங்க? அதுவும் மஹதனுக்கு முன்னாடியே மிரட்டி இருக்கீங்க! அவனுக்கு அது புரியாமல் இருந்திருக்கும்னு நினைக்கிறீங்களா அப்பா?"

தன்னால் ஆரம்பித்து வைக்கப்பட்ட பிரச்சினை, இப்படி உருவெடுத்து விட்டதை நினைத்தும், மஹதனை நினைத்தும் முக்தாவிற்கு உலகமே இருண்டு போனது.

"என்கிட்ட பிடிக்கலைன்னுப் பட்டுன்னு சொன்னான், இருந்தாலும் எப்படியாவது சமாளிச்சு, சமாதானப்படுத்தலாம்ன்னு கனவு கண்டேனே அப்பா! என்னை இப்படி ஒரு சிக்கலில் மாட்டி விட்டுட்டீங்களே! மஹதனும் சும்மா இருக்க மாட்டானே! உங்களோட நானும் கூட்டு சேர்ந்து தான் அவளை மிரட்டச் சொன்னேன்னு நினைப்பானே!"

இப்போது தான் நீலகண்டனுக்குமே வீரியம் புரிந்தது.

அவரிடம் கத்தி விட்டு, ஓய்ந்து போய் அறைக்குள் அடைந்து கொண்டாள் முக்தா.

இவ்விஷயத்தை ஆறப் போட, அவருக்கு இருந்த ஒரே துருப்புச்சீட்டு தன் நண்பனும், கம்பெனிப் பார்ட்னருமான மஹதனின் தந்தை திருமூர்த்தி.

- தொடரும்
 
Status
Not open for further replies.
Top